Jump to content

#தமிழ்தேசியம்: தமிழ்நாட்டின் இன்றைய தேவை என்ன தேசியம்?


Recommended Posts

#தமிழ்தேசியம்: தமிழ்நாட்டின் இன்றைய தேவை என்ன தேசியம்?

 

(தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற முழக்கங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், தமிழ் தேசியம் என்ற கோஷமும் ஓங்கி ஒலிப்பது பல்வேறு காலகட்டங்களில் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களின் தொடர்ச்சியாகவும் அத்தகைய கோஷங்கள் ஒலித்தன. இந்த நிலையில், தமிழ் தேசியம் தொடர்பாக பல்வேறு ஆர்வலர்களின் கருத்துக்கள், இங்கே தொடராக வெளியிடப்படுகின்றன. இது, அந்தத் தொடரின் நான்காவது பாகம். இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

ஒரு பெரியார்-அண்ணா கால தி.(மு).க.காரரின் மகனாகப் பிறந்த காரணத்தால் நான் பல நன்மைகளைப் பெற்றேன் என்று உறுதியாக நினைக்கிறேன். பகுத்தறிவு, சுயமரியாதை, பெண் விடுதலை, மூட நம்பிக்கைக் களைதல் என பல நல்ல சிந்தனைகளை, செயல்பாடுகளைப் பெற அது எனக்கு அச்சாரமாய் அமைந்தது. இவை எல்லாவற்றையும் விட பார்ப்பனீய ஆதிக்கம் எனும் சமூக, கலாசார, பொருளாதார, அரசியல் ஆக்டபசை இனம் கண்டிட, எதிர்த்திட, எடுத்தெறிந்திடவும் பெரிதும் உதவியது.

#தமிழ்தேசியம்: தமிழ்நாட்டின் இன்றைய தேவை என்ன தேசியம்?படத்தின் காப்புரிமைDHILEEPAN RAMAKRISHNAN

இந்த விழிப்புணர்வு அன்றைக்கு கிடைக்காமல் போயிருந்தால், இன்றைக்கு பார்ப்பனர் உயர்ந்தவர், அவர் வணங்கும் தெய்வங்கள் உயர்ந்தவை, அவர் ஓதும் வேதம் உன்னதமானது என்று உளறிக்கொண்டிருந்திருப்பேன். காக்கி நிக்கர் போட்டுக்கொண்டு, மராட்டிய பார்ப்பனர்களின் புகழ் பாடிக் கொண்டிருந்திருப்பேன். மனுதர்ம மடமை, சாதீய வெறி, இனவேற்றுமைச் சதி, அதிகாரத் திமிர், அடக்கியாளும் அகந்தை, முதலாளித்துவ காமம் என கட்டமைக்கப்பட்டிருந்த சமூக ஏற்பாட்டை எந்த விதமான கேள்வியும் இன்றி ஏற்றுக்கொண்டிருப்பேன்.

தீண்டாமை (untouchability), அதைவிடக் கொடுமையான காணாமை (unseeability) போன்றவை இயற்கை விதிகளாகத் தோற்றமளித்திருக்கும். இவை இரண்டையும் விட மோசமானது நம்பாமை (unbelievability) - தங்களால் மட்டுமே சிந்திக்க, செயல்பட, தீர்மானிக்க, நடத்த முடியும்; வேறு யாராலும் தங்களைப் போல் இயங்க முடியாது; மற்றவர்கள் எதிர்ப்பை ஏற்றுக்கொள்ள இயலாது எனும் தான்தோன்றித் தத்துவத்தை தர்க்கரீதியாகப் பார்த்திருக்க மாட்டேன்.

"திராவிடத்தால் வீழ்ந்தோம்" என்று அறிஞர் குணா சொல்வது புரிகிறது என்றாலும், திராவிடத்தால் வாழ்ந்தோம் என்பதையும் மறுப்பதற்கில்லை. காங்கிரஸ் வல்லாதிக்கத்தை எதிர்க்க, பிற்போக்கான சமுதாயத்தைக் கேள்வி கேட்க, அதன் ஏற்பாடுகளை மாற்றியமைக்க பெரியாரியம் உண்மையிலேயே உதவியது.

பெரியார் கையாண்ட சில சொற்கள், சிந்தனைகள், கருத்துக்கள், முடிவுகள், நடவடிக்கைகள், சமரசங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாக மாறி இருக்கலாம். காலமும், சூழலும், தேவையும் மாறும்போது, கருத்துக்கள் மாறுவதில் வியப்பேதும் இருக்க முடியாது.

இன்னும் பழைய பெரியாரை, அவரின் பழைய கொள்கைகளை கட்டிக்கொண்டு இழுப்பது தேவையற்றது. பெரியாரிடமிருந்து தேவையானவற்றை எடுத்துக்கொண்டு, தேவையற்றவற்றை விட்டுவிடுவதுதான் அறிவுடைமை.

முன்னாள் தலைவர்கள் இட்ட அஸ்திவாரங்களின் மீது இந்நாளையத் தேவைக்கு ஏற்றாற்போல கட்டிக்கொள்வதுதான் சிறப்பு. இந்தப் படைப்பாற்றலில், புத்தாக்கத்தில் கவனம் செலுத்தவேண்டுமே தவிர, இன்றைய நாளில் நின்று கொண்டு கழிந்த நூற்றாண்டு நிகழ்வுகளை விமர்சிப்பதும், இங்கே நின்றவாறே காலனி ஆதிக்க காலத்து அரசியலை அலசுவதும் நமது தற்போதைய தேவைக்கு பெருமளவில் உதவும் விடயங்களல்ல என்பது என் எண்ணம். வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது, வீண் பேச்சு பேசிக்கொண்டிருப்பது போலவே எனக்குத் தோன்றுகிறது.

அண்ணாபடத்தின் காப்புரிமைGNANAM

பெரியார் கன்னடரா, தமிழரா எனும் விவாதம் எப்படி நமக்கு உதவும் என்பதும் எனக்குப் புரியவில்லை. தமிழரை மட்டும்தான் தலைவராய் ஏற்றுக் கொள்வோம், ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றால், நாம் போற்றுகின்ற புத்தன், ஏசு, நபிகள், மார்க்ஸ், லெனின், காந்தி, அம்பேத்கர் யாருமே தமிழர் அல்லவே. இன்றையச் சூழலில் ஒரே ஒரு தமிழ் தலைவர் வருவார், அவர் ஒரே ஒரு தமிழ் புத்தகம் தருவார், ஒரே ஒரு தமிழ் கொள்கைக் கூறுகளை அருள்வார், நாம் எல்லாம் சுபிட்சத்தை நோக்கி சுகமாக நடப்போம் என்று கனவு காண்பது மடமையிலும் மடமை.

யார் தமிழர்?

இப்போது யார் தமிழர் எனும் கேள்வி எழுகிறது. 'யார் தமிழர்' என்பது 'சுத்தமான தமிழ் எது' என்பது போலவே ஒரு பெரியப் பிரச்சினை. நாங்கள் நாகர்கோவில்காரர்கள், எங்கள் தமிழ்தான் உண்மையான தமிழ் மொழி என்கிறோம். வட தமிழ்நாட்டு மக்கள் "என்னய்யா, மலையாளம் போல பேசுகிறீர்களே" என முகம் சுளிக்கின்றனர்.

சென்னைவாசி பேசுவது தமிழா என்று கோவைக்காரர்கள் குமுறுகிறார்கள். இது போன்ற நிலைதான் தமிழர் யார் என்று வரையறுப்பதிலும் நிலவுகிறது. தமிழ் நாட்டில் வாழ்கிறவர் எல்லோரும் தமிழரா? தமிழ் மொழி பேசுகிறவர் அனைவரும் தமிழரா? வீட்டிலே தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசினாலும், வெளியே வந்து தமிழ் பேசிவிட்டால் போதுமா என்று பல கேள்விகள் எழுகின்றன.

அண்ணா

தன்னுடைய அடையாளம் பற்றிக் கருத்து தெரிவித்த பாகிஸ்தானிய தலைவர் அப்துல் வாலி கான் பேசும்போது, "நான் கடந்த ஐம்பது வருடங்களாக பாகிஸ்தானியாக இருக்கிறேன், ஐநூறு வருடங்களாக முஸ்லிமாக இருக்கிறேன், ஆனால் ஐயாயிரம் வருடங்களாக பட்டானாக இருக்கிறேன்" என்றார். அதுபோல நாமும் அறுபது வருடங்களாகத்தான் இந்தியராக இருக்கிறோம். ஆனால் ஆறாயிரம் ஆண்டுகளாக தமிழராக வாழ்கிறோம்.

இன சுத்தம் இன்றைய உலகில் சாத்தியமா என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாகரீகத்தோடு இன்னும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளாத பழங்குடிகளில் மட்டும்தான் இன சுத்தமான மக்களை பார்க்க முடியும். நமது தமிழ்க்குடி வந்தவன், போனவன், தங்கியவன், தயங்கி நின்றவன், கடந்து சென்றவன் எல்லாம் ஏறி மேய்ந்து கலப்படமாகிவிட்ட ஒரு சமூகமல்ல என்பது உண்மை.

அமெரிக்காவிலே, ஆஸ்திரேலியாவிலே சிலர் சொல்வது போல நான் 50 சதவீதம் ஐரிஷ், 30 சதவீதம் ஜெர்மன், 20 சதவீதம் பூர்வீகக்குடி என்றெல்லாம் நாம் சொல்வதில்லை, சொல்லத் தேவையும் இல்லை. அதே நேரம் நாமெல்லாருமே 100 சதவீதம் சுத்தமான, கலப்பே இல்லாத அக்மார்க் தமிழர்கள் என்பதற்கும் உத்தரவாதம் கிடையாது. யார் யாரோ இங்கே வந்து நம்மை ஆண்டிருக்கிறார்கள். எவரெவர் வாழ்க்கையில் என்னென்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது.

சுப. உதயகுமார்படத்தின் காப்புரிமைTWITTER

இன சுத்தம் பார்க்கும்போது மாற்று மொழி பேசுகிறவர்; கிறித்தவர், இஸ்லாமியர் போன்ற சிறுபான்மை மதத்தவர்; வேறு இடங்களிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் என எல்லோரும் தள்ளப்பட்டால் வேறு யார்தான் எஞ்சி இருப்பார்கள்? இந்த இன சுத்த சித்தாந்தம் எவ்வளவு ஆபத்தானது, என்னென்ன தீங்குகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை பல நாட்டு வரலாறுகளில் நாம் பார்க்கிறோம்.

அப்படியானால் தமிழகத்தை வேற்று இனத்தவர்களுக்குத் திறந்து விட்டுவிட்டு வேடிக்கை பார்க்க வேண்டுமா? இல்லை. இன சுத்த சித்தாந்தத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

நமது அடையாளத்தை எப்படி அமைத்துக் கொள்வது என்பது மிக முக்கியம். மலையாளிகள், சிங்களர் மீதான வெறுப்பின் மீது, கோபத்தின் மீது கட்டமைப்பதா? அல்லது நமது பண்டைய புராணங்களின் மீது, வரலாற்றுப் பெருமைகளின் மீது, கலாசார குணநலன்களின் மீது ஏற்படுத்திக் கொள்வதா? அல்லது இன்றைய யதார்த்தம், நாளையத் தேவைகளைக் கருத்திற்கொண்டு வடிவமைத்துக் கொள்வதா? இன அடையாளம் ஒரு வளையாத விறைப்பான பாசிசக் கொள்கையாக இருக்க வேண்டுமா அல்லது மென்மையான, மிருதுவான குழுக் குறியீடாகத் திகழ வேண்டுமா?

 

தமிழன், தமிழச்சி என்பவர் யார்? தன்னை தமிழ் மகனாக/மகளாக, தமிழ் கூறும் நல்லுலகின் அங்கமாக உணர்வுபூர்வமாகப் பார்க்கிற, தனது தமிழ் இனத்தின் சிறப்புக்கு, உயர்வுக்கு, விடுதலைக்கு தன்னால் இயன்ற வழிகளில் எல்லாம் உழைக்க முன்வருகிறவரே தமிழன், தமிழச்சி எனக் கொள்ளலாம் என்பது என் எண்ணம்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாப்பிரிக்கா, மலேசியா, பினாங்கு, மொரீஷியஸ் நாடுகளில் ஆங்கிலேயரால் குடியமர்த்தப்பட்ட தமிழர்களின் இன்றையத் தலைமுறையினர், தமிழில் பேசவோ, எழுதவோ முடியாதிருப்பினும், தங்களைத் தமிழர்களாகவே உணர்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வீடுகளில்கூட அந்தந்த நாட்டு மொழிதான் பேசுகிறார்கள். அதனால் அவர்களை தமிழரல்லர் என்று ஒதுக்கிவிட முடியாது. இது தமிழ் பேச, படிக்கத் தெரியாத மூன்றாம் தலைமுறை புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தும்.

எது தமிழ்த் தேசியம்?

முதன் முறையாக சுதந்திர தினத்தில் கொடியேற்றும் வாய்ப்பு முதல்வருக்கு கிடைத்தது - 1969ல் கருணாநிதி கோட்டையில் கொடி ஏற்றுகிறார்படத்தின் காப்புரிமைARUNSUBASUNDARAM Image captionமுதன் முறையாக சுதந்திர தினத்தில் கொடியேற்றும் வாய்ப்பு முதல்வருக்கு கிடைத்தது - 1969ல் கருணாநிதி கோட்டையில் கொடி ஏற்றுகிறார்

இன சுத்தம் இயலாத ஒன்றாகிப் போகும்போது, தமிழகத்தைச் சுற்றி இஸ்ரேல் பாணியில் சுவர் கட்ட முடியாத, கட்டக்கூடாத நிலையில், அரசியல் பூதக்கண்ணாடியை எடுத்துக்கொண்டு அரிய வகைத் தமிழனை தேடுவதற்குப் பதிலாக, நமது பாரம்பரிய வரையறைக்குத்தான் போகவேண்டியிருக்கிறது: "யாதும் ஊரே, யாவரும் கேளிர்!" தமிழ் மண்ணை, தமிழ் வளங்களை, தமிழ் அடையாளத்தை உலகமயமாக்குவதற்கு பதிலாக, உலகை, உலக வளங்களை தமிழ்மயமாக்குவதற்கு முயற்சிப்போம். அதுதான் தமிழ்த் தேசியம். தமிழ் வித்தில் முளைத்தெழுந்து, தமிழ் மண்ணில் வேரூன்றி, தமிழ் மொழியின் சாறெடுத்து, தமிழ் அடையாளத்தை சுவாசித்து வளர்ந்து, தரணியெல்லாம் பரந்து விரிந்து, தன் தண்டமிழ் நிழலில் ஒதுங்குவோர்க்கு காய்கனியும், மாமருந்தும், குளிர்ச்சியும், வளர்ச்சியும் தருகின்ற கற்பகத்தருவே தமிழ்த் தேசியம்.

ஒரு குறிப்பிட்ட தமிழ்த் தேசிய அமைப்போ, குழுவோ, தலைவரோ தேர்ந்து வழங்குவதல்ல தமிழ்த் தேசிய அடையாளம். தனிப்பட்ட மனிதரை சுயமாக தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிப்பதுதான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியம் மேலிருந்துக் கீழே திணிக்கப்படுவதல்ல. கீழிருந்து மேலாகப் பரந்து விரிவது. மதவெறி, இனவெறி, சாதீயம், ஆணாதிக்கம், வயதானோரதிகாரம், வகுப்புவாதம், வல்லாதிக்கம், வன்பசகொடுமை, வன்முறை ஏதுமற்ற சமாதானகரமான சமத்துவ சமுதாயத்தை நிர்மாணிக்க முயல்கிற சித்தாந்தம். தமிழ்த் தேசியம் என்பது எது, யார் உண்மையான தமிழ்த் தேசியவாதி என்பதல்ல பிரச்சினை. தமிழ்த் தேசியம் பேசுகிறவர்களாகிய நாம் எதை அடைய விரும்புகிறோம்? அதுதான் மிக முக்கியம்.

பெரியாரையும், திராவிட இயக்கங்களையும் திட்டுவதல்ல தமிழ்த் தேசியம். முக்கிய திராவிடக் கட்சிகளான தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கதை முடிந்துகொண்டிருக்கிறது. ஈழத் தமிழர் இனப்படுகொலை செய்யப்படும்போது, ராஜினாமா கூத்து, உண்ணாவிரத நாடகம் நடத்தியவர் பின்னர் டெசோ மாநாடு நடத்தி அரசியல் வாழ்வை புதுப்பித்துக்கொள்ள முயன்றதைப் பார்த்தோம். "போர் என்றால் சாகத்தான் செய்வார்கள்" என்று திருவாய்மலர்ந்தருளி பாராமுகமாய் சும்மா இருந்த அம்மா தமிழ்த் தேசிய அலை தமிழகத்தில் வீசுவதைப் புரிந்துகொண்டு, பரபரப்பான மூவர் தூக்கு, கட்சத் தீவு, மீனவர் கொலை, சிங்களருக்கு இராணுவப் பயிற்சி போன்ற பிரச்சினைகளைக் கையிலெடுத்துக்கொண்டு கபட நாடகம் ஆடினார். தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுதான் இருக்கிறார்கள். செத்துக் கொண்டிருக்கும் திராவிட அரசியலை தூக்கிக் கொண்டுபோய் புதைத்து விட்டு, இனி தமிழகத்தை தமிழன்தான் ஆள்வான், தமிழச்சிதான் ஆள்வாள் என உறுதி பூணுவதுதான் தமிழ்த் தேசியம்.

போராட்டம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இவன் தெலுங்கன், இவன் கன்னடன், இவள் மலையாளி என்று நாமகரணம் சூட்டுவது தமிழ்த் தேசியமல்ல. "தமிழ் வாழ்க" என நகராட்சிக் கழிப்பறைகளில் எழுதிவைப்பதும் தமிழ்த் தேசியமல்ல. எந்தக் கட்சி ஆட்சிக்கு வருவது, யாரை முதல்வராக்குவது என நமக்குள் அடித்துக் கொள்வதுமல்ல தமிழ்த் தேசியம். தமிழீழப் பிரச்சினை பற்றி பகட்டாகப் பேசுவதும், தலைவர் பிரபாகரன் புகழ் பாடுவதும் தமிழ்த் தேசியமல்ல. அப்படியானால் எதுதான் தமிழ்த் தேசியம்?

தனியொரு தமிழனுக்கு உணவில்லை எனில், ஒட்டுமொத்தத் தமிழினமும் கேவலப்படுவதுதான், கேள்வி கேட்பதுதான், அதை மாற்றி அமைப்பதுதான்

தமிழ்த் தேசியம். பிரிட்டிஷ்காரன் தேயிலைத் தோட்டத்தில் அடிமை வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கூலிக்காரனாக இல்லை இன்றையத் தமிழன் என நமது கூலி அடையாளத்தை தூக்கி எறிவதுதான் தமிழ்த் தேசியம். தமிழ் மக்கள் திரைகடல் ஓடி இனி திரவியம் தேடப் போகவேண்டாம், நம் தமிழ் மண்ணிலேயே தன் மனைவி மக்களுடன் நல்வாழ்வு நடத்தி, பொருளீட்டி, புகழோடு வாழமுடியும் எனச்செய்வதுதான் தமிழ்த் தேசியம்.

"மாதராய் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா" என்ற பாரதியின் கூற்றை நிலை நிறுத்துவது போல, பெண் விடுதலை, விதவை மறுமணம், அம்மா என்றழைத்து தெய்வமாக்காமல் அருமை நண்பராகவும் பெண்ணைப் பார்க்கலாம் எனும் கலாசார மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் தமிழ்த் தேசியம்.

திரைப்படம், தொலைக்காட்சி, சினிமா நடிகர், நடிகைகளிடமிருந்து தமிழ் கலாசாரத்தை மீட்டெடுத்து இயல், இசை, நாடகம் எனும் பாரம்பரிய தளங்களுக்குக் கொண்டு போவதுதான் தமிழ்த் தேசியம். உணர்ச்சி வயப்படுவதும், ஓடிப்போய் உயிரை விடுவதுமான 'எடுத்தேன், கவிழ்த்தேன்' நடவடிக்கைகளைக் கைவிட்டு, "எண்ணித் துணிக கருமம்" என நம் மக்களை மாற்றி செயல்படவைப்பதுதான் தமிழ்த் தேசியம்.

அன்பு, வீரம், கொல்லாமை, நல்லாறு எனும் பல்வேறு மாதிரி தமிழ்க் கோட்பாடுகளை உலகுக்கு எடுத்துச் சொல்லி அவற்றை வளர்த்தெடுப்பதுதான் தமிழ்த் தேசியம். "பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே, வெள்ளைப் பரங்கியரை துரை என்ற காலமும் போச்சே" என்று உரக்கப் பாடி சாதி, மதக் குழுக்களால் யாரும் யாரையும் அடக்கமுடியாதபடி, அதட்டமுடியாதபடி புதிய சமுதாயம் ஒன்றைக் கட்டுவதுதான் தமிழ்த் தேசியம்.

தலைமுறை தலைமுறையாய் அடக்கப்பட்டுக் கிடக்கும் பெண்கள், தலித் மக்கள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள், மீனவர்கள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினரும் தமிழராய் தலைநிமிர்ந்து வாழ வழி செய்வதுதான் தமிழ்த் தேசியம். ஈழத்தில் வதைபடும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கும், உலகெங்குமுள்ள தமிழருக்கும் தோள்கொடுத்து துணை நிற்பதுதான் தமிழ்த் தேசியம்.

வரவறிந்து, திட்டமிட்டு செலவு செய்து, மக்களுக்கு இலவசம் கொடுக்காமல் வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்து, தொழில் வளம் பெருக்கி, விவசாயம் காத்து, வாழ்வாதாரங்கள் போற்றி, எதிர்கால சந்ததிகளுக்கு எம்மண்ணை, நீரை, காற்றை, கடலை, மலைகளை, காடுகளை, மரம் மட்டைகளை காப்பாற்றி விட்டுச் செல்வதுதான் தமிழ்த் தேசியம்.

விஞ்ஞானம், வளர்ச்சி என்ற பெயரில் கூடங்குளம், கல்பாக்கம், நியுட்ரினோ, சிர்கோனியம், ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட் போன்ற ஆபத்தான திட்டங்களைத் திணிப்பதை எதிர்ப்பதுதான் தமிழ்த் தேசியம். நதிநீர்ப் பங்கீடு, தன்னிறைவுத் திட்டங்களில், இந்தியத் தேசியத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் தமிழருக்கு நீதி கிடைக்க, தமிழரின் உரிமை காக்கப் போராடுவதுதான் தமிழ்த் தேசியம்.

"எட்டுத் திக்கும் செல்வோம், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்" என்ற நிலையில் பெருந்தன்மையாக வாழ்ந்தாலும், எங்கள் மீது அந்நிய மொழியை, அரசியலை, வல்லாதிக்கத்தை, அடிமைத்தனத்தை சுமத்த வந்தால் எதிர்த்து நின்று, போராடி, விரட்டியடிப்போம் என்று வீறுகொள்வதுதான் தமிழ்த் தேசியம்.

பச்சைத் தமிழ் தேசியம்

இன்றையப் பன்னாட்டுச் சூழலில், பாரத அரசியலில் நமக்குத் தேவைப்படுவது பச்சைத் தமிழ்த் தேசியம். இந்தச் சொற்றொடர் இரண்டு அர்த்தங்களைத் தருகிறது. ஒன்று, அப்பழுக்கற்ற, கலப்படமற்ற, சமரசமற்ற, உண்மையான தமிழ்த் தேசியம் என்பதைக் குறிக்கிறது. இன்னொன்று 'தமிழ்' தேசியம், 'தமிழர்' தேசியம் போன்ற கொள்கைகளையும் இணைத்து கூடவே பசுமை உணர்வுகளை, விழுமங்களை, கொள்கைகளை, திட்டங்களை உள்ளடக்கியது என்றும் அர்த்தமாகிறது.

இன்றைய தமிழகத்தினுடைய தேவை தமிழ்ச் சூழல் தேசியம்தான். சூழல் என்பது வெறும் இயற்கை சுற்றுச்சூழலை மட்டும் குறிப்பதல்ல. சமூக, கலாசார, பொருளாதார, அரசியல் ஆக்கங்களும், தாக்கங்களும் கூட பரந்துபட்ட சூழலுக்குள் உட்படுவதால், நமது புத்தாக்கக் கொள்கையும் அகலமானதாய் ஆழமானதாய் இருத்தல் அவசியம்.

பசுமைக் கொள்கை என்பது வெறும் அரசியல் கொள்கையோ அல்லது பொருளாதாரத் திட்டம் மட்டுமோ அல்ல. அது ஓர் ஒருங்கிணைந்த வாழ்க்கை முறை. இயற்கையைப் பேணுதல், சனநாயகம் காத்தல், சமூக நீதி-சமத்துவத்துக்காய் உழைத்தல், வன்முறை தவிர்த்தல், பகிர்ந்தாளுதல், உள்ளூர் பொருளாதாரம் பேணல், பெண் விடுதலை கோரல், சமூகப் பன்மை போற்றல், பொறுப்போடு வாழ்தல், வருங்காலம் கருதல், நீடித்து நிலைத்து நிற்றல் என்பவையே பசுமை விழுமங்கள்.

நாம் எடுத்தாளப்போகும் பச்சைத் தமிழ்த் தேசியம் என்னென்ன திண்மமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என ஒத்தக்கருத்து கொண்டோர் ஒன்றிணைந்து முடிவு செய்யலாம். ஒருசில முக்கியமான விடயங்களை மட்டும் இங்கேக் குறிப்பிட விரும்புகிறேன்: தமிழகம் தண்ணீர் தன்னிறைவு பெறுவது, நிலத் தரகர்களிடமிருந்து விளைநிலங்களைக் காத்துக்கொள்வது, மானாவாரிப் பயிர்களை திட்டமிட்டுப் பயிரிட்டு பரந்து கிடக்கும் தமிழ் மண்ணை அறிவுபூர்வமாக பயன்படுத்துவது, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது, தமிழ்க் கடலை, கடலுணவைக் காப்பது, நம் இயற்கை வளங்களைக் காக்கும் நீடித்த நிலைத்த வளர்ச்சி சித்தாந்தத்தைப் பேணுவது, தமிழினத்தை அச்சுறுத்தும் அணுஉலை மற்றும் மாசுபடுத்தும் பிற உலைகளை, ஆலைகளைத் தடுப்பது, அணு ஆயுதங்களை விரட்டுவது, மென்முறையைப் போற்றி வளர்ப்பது, மது அரக்கனை அழிப்பது, தீண்டாமையை ஒழிப்பது இன்ன பிற.

"செந்தமிழ் நாடெனும் போதினிலே - ஒரு

தேள் வந்து கொட்டுது காதினிலே - எங்கள்

மந்திரிமார் என்ற பேச்சினிலே - கடல்

மண்ணும் சிரிக்குது பீச்சினிலே" என கவிஞர் கண்ணதாசன் வர்ணிக்கும் இன்றையத் தமிழகத்தை மாற்றியமைத்து,

"செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே" என மகாகவி பாரதியார் கனவில் மிளிரும் தமிழகமாக மாற்றியமைப்பதுதான் பச்சைத் தமிழ்த் தேசியம்.

https://www.bbc.com/tamil/india-43816083

Link to comment
Share on other sites

#தமிழ்தேசியம்: திராவிடக் கட்சிகளுக்கு பங்காளியா, பகையாளியா?

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?

#தமிழ்தேசியம்: ‘தமிழ்நாட்டின் உரிமைகளை எப்போது மீட்க முடியும்?’

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.