Jump to content

காவிரி என்பது வெறும் நீரல்ல!


Recommended Posts

காவிரி என்பது வெறும் நீரல்ல!

 

 
cauvery

காவிரிப் படுகைக்கு என்று ஒரு ரசனை. அங்கே சிருங்காரம் சற்றுத் தூக்கலாக இருக்கும். சங்க காலத்திலிருந்து மருத நிலத்தின் அடையாளமே அதுதானே! பேசும்போது சங்கதிகளை அசட்டுத்தனமாகப் பிட்டுவைக்காமல் தொட்டுத்தான் காட்டுவார்கள். தன்னையே குறியாக வைத்ததுபோல் பிறரையும் பேசும் கேலிப்பேச்சு உண்டு. முழுத் தத்துவமாக அது முற்றாவிட்டாலும் அங்கு ஒரு தத்துவமும் உண்டு. சட்டையைக் கழற்றி ஆணியில் மாட்டும் எளிமையில் உடம்பை உதறிவிட்டுப் போவார்கள். “இந்த ஆக்கையைச் சுட்டுப்போட்டால் என்ன?” என்று தன் உடம்பிலிருந்தே விலகி நின்று அதைச் சபித்துக்கொள்வார்கள்.

வயிற்றுக்கு மட்டுமே சோறிட்டு வளர்க்கவில்லை காவிரி. இப்படி ஒரு சிந்தனைக் கலாச்சாரத்தையும் வளர்த்திருந்தது. அது பண்பாட்டுப் படைப்புகளான இலக்கியத்துக்கும், கலைக்கும் ஊற்று. காவிரி சென்றுகொண்டிருக்கும் வறட்சிப் பாதையைப் பார்க்கையில் ஒரு அச்சம் ஏற்படுகிறது. தண்ணீரோடு சேர்த்து இவையெல்லாமும் காணாமல் போய்விடும்?

 

கலாச்சாரப் பிளவு

பேச்சுவாக்கில், “ஆற்றங்கரை மரமும் அரச வாழ்வும்” என்று சொன்னேன். கேட்டுக்கொண்டிருந்தவருக்குப் புரியவில்லை. ஆற்றுப் படுகையை ஆறு அரித்து ஓடும்போது அங்கே இருப்பது அரச மரமானாலும் விழுந்துவிடும். இன்று அரசனாக இருப்பவன் நாளையே அடிமையாகக்கூடும். சொற்கள் புரிந்திருந்தாலும் அவரால் விளங்கிக்கொள்ள முடியாததற்குக் காரணம், சிந்தனைக் கலாச்சாரத்தில் வந்த இடைவெளி. ஆற்றங்கரை அரச மரம் அவர் பிரக்ஞைக்கு அந்நியம்.

சங்க இலக்கியமான நற்றிணைப் பாடல் ஒன்று மருதத்தின் வளத்தைப் பற்றியது. அறுவடை முடிந்தது. தாளை மடக்கி உழுது மறுபடியும் விதைக்க விதை கொண்டுசென்றார்கள். விதைத்துவிட்டு கூடைகளில் மீனைப் பிடித்துக்கொண்டு மீண்டார்கள் என்று பாடல். வழியிலிருந்த குட்டைகளில் மீன் பிடித்தார்கள் என்றுதான் இதைப் புரிந்துகொள்கிறார்கள். வயலிலேயே மீன் கிடப்பதை அன்றைய காவிரிக் காலத்தில் பார்த்திருக்கிறேன். வயலில் மீன் கிடப்பது இன்றைய பிரக்ஞைக்கு எட்டாது. இது கால இடைவெளி அல்ல. தலைமுறை இடைவெளி அல்ல. காவிரி காலத்துத் தலைமுறை, காவிரிக்குப் பிந்தைய காலத்துத் தலைமுறை என்று ஒரு பிரக்ஞைப் பிளவு உருவாகும்.

காவிரிக் கரையில் நகரங்கள் அமைந்தன என்பது பெரிதல்ல. நகரமைப்புக்குள்ளேயே, கட்டிடக் கலைக்குள்ளேயே காவிரி வந்திருந்தது. மதிலைக் காவிரி வருடிக்கொண்டு ஓட கரையில் கட்டுமலையாக இருக்கும் கோயிலடி ரெங்கநாதர் கோயிலைப் போல் இங்கு பல மாடக்கோயில்கள் உண்டு. பெருகிவரும் இடங்களிலும் காவிரியை விட்டு விலகாமலிருக்கும் ஒரு வாஞ்சை.

அங்கங்கே பரந்து நிறைத்துக்கொண்டு இந்தச் சீமையைப் புனல் நாடாக்கிக்கொண்டிருந்தது காவிரி. திராவிட நகரமைப்பின் மையமான கோயில்களில் இருந்து திருமஞ்சன வீதி ஒன்று காவிரிக்குச் செல்லும். இறைவனின் அன்றாட அபிஷேகத்துக்கு காவிரியிலிருந்து தண்ணீர் எடுத்துவருவார்கள்.

 

துலாக் காவிரி

ஆடிப்பெருக்கில் தீர்த்தவாரிக்கு எங்கள் ஊர் பெருமாள் ஆற்றுக்குச் செல்வார். காவிரி வறண்டுவிட்டதால் அண்டாவில் தண்ணீரை வைத்துக்கொண்டு ஆற்றில் தீர்த்தவாரி நடக்கிறது. ஐப்பசியில் காவிரி துலாக் காவிரியாகும். மயிலாடுதுறையில் பெருமாளுக்கும் சிவனுக்கும் துலாக் காவிரி தீர்த்தவாரி பெரிய விழா. இந்த ஆண்டு காவிரியில் வரத்து இல்லாமல் ஆழ்துளைக் கிணற்று தண்ணீரில் ஐப்பசி கடை முழுக்கு நடந்தது. ஸ்ரீரங்கம் பெருமாளுக்கு இந்த மாதத்தில் காவிரியின் அம்மா மண்டப படித்துறையிலிருந்துதான் தீர்த்தம். மற்ற மாதங்களில் அவருக்குத் தீர்த்தம் கொள்ளிடத்திலிருந்து வரும். துலாக் காவிரி என்று ஒரு காவிரி இனி வருமா?

மாசி மகத்தன்று எல்லாக் கோயில்களிலிருந்தும் சுவாமி குளத்துக்கோ காவிரிக்கோ சென்று தீர்த்தவாரி நடக்கும். கெட்டி மேளம் கொட்ட காளை வாகனத்தில் சுவாமி ஆற்றில் இறங்கும்போது மக்கள் காவிரி நீரை வாரி வாரி இரைத்துக்கொள்வார்கள். கங்கையைத் தலையில் மறைத்த சிவன் காவிரியைக் காட்டிக்கொண்டு நிற்பார். இப்போது காவிரியும் மறைந்ததே!

மன்னார்குடி ராஜகோபாலனுக்கு ஆண்டுத் திருவிழாவின் இரண்டாம் நாள் புன்னை மர வாகனம். கோபிகைகளின் ஆடைகளைக் கவர்ந்துகொண்டு வேணுகோபாலனாக சுவாமி புன்னை மரத்தில் இருப்பார். விழா பங்குனி மாதம் நடக்கும். அக்கரையிலிருந்து பாமனி ஆற்றில் இறங்கி சுவாமி இக்கரைக்கு ஏறுவார்.

அவர் ஆற்றில் இறங்கி வரும்போது, “யமுனையில் நடந்த ஜலக்கிரீடையாகவே அது தோன்றும்” என்பார் எங்கள் ஊர் பிரசன்னா பாட்டாச்சாரியார். கோயில் விழாக்களில் காளை வாகனமும் புன்னை மரமும் நிஜமல்ல. காவிரி நீர் நிஜம். காவிரியின் நிஜம் மற்றவற்றையும் அப்போது பற்றிக்கொள்ளும். இனி எல்லாமே கற்பனைதானோ!

தியாகராஜரின் இசை நாடகம் ‘நெளகா சரித்திரம்’. அதில் வரும் கிருஷ்ண லீலை யமுனையில் நடப்பதாகக் கற்பனை. நாடகத்தை இயற்றியவர் காவிரிக் கரையில்தான் வாழ்ந்தார். அதற்கும் மேற்கே வரகூர் நாராயண தீர்த்தரின் கிருஷ்ண லீலா தரங்கிணியில் துவங்கி, மெலட்டூர் பாகவத மேளா, ஊத்துக்காடு வேங்கட கவியின் பாடல்கள், மாயவரம் கோபால கிருஷ்ண பாரதியின் ‘நந்தனார் சரித்திரம்’ வரை காவிரிக் கரையில் பிறந்தவை. காவிரிக் கரையில் இனி கற்பனை பிறக்குமா?

ஆடிப்பெருக்கில் புதுத் தம்பதிகள் மண மாலைகளைக் காவிரியில் விடுவதற்கு நீரில்லை. தமிழ் இலக்கியத்தின் புதுநீராடல் பின்னணியில் இதைப் பார்க்க வேண்டும். அப்போது காஞ்சியிலிருந்து, நெல்லையிலிருந்து ராமநாதபுரத்திலிருந்து மக்களைக் காவிரிக் கரை ஈர்த்துக்கொண்டது. இங்கிருப்பவர்களே இன்று வெளியிடங்களுக்குச் சென்றால்தான் பிழைக்கலாமோ?

காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் இங்கு இயற்கைச் சூழலின் வலைப்பின்னல் குலைந்துபோன கோலமாயிற்று. குளம், குட்டைகளில் ஏற்றிவைத்த விளக்காகப் பூக்கும் அல்லி, தாமரை, நீலோத்பலத்தைக் காணவில்லை. சேறே இல்லாதபோது சேற்றில் நடக்கும் உம்பளச்சேரி மாடும் இல்லை என்றானது.

 

வண்டலை விட்டுவிட்டோமே!

அப்போது காவிரியில் வந்தது நீர்மட்டுமல்ல. வளத்தைக் கொடுக்கும் வண்டலும் வந்தது. உச்ச நீதிமன்றம் வழங்கும் நீர் வந்தாலும் வண்டல் வராது. வழியில் வண்டலைத் தடுத்துக்கொள்ளும் அத்தனை அணைகள், தடுப்பணைகள். யாரும் இதைக் கணக்கில்கொள்வதில்லை. டெல்டாவை உருவாக்கியது இந்த வண்டல். இங்கு ஓடும் 36 நதிகளில் 18 கடலை அடையும். மற்றவை வண்டலின் விசிறிப் பரப்பில் சுவர்ந்துவிடும். 26 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள வாய்க்கால்கள் வண்டலைக் கடத்திக் கடத்தி காவிரிக் கரையை உயிர்ப்போடு வைத்திருந்தன.

வண்டல் படிவதால் படுகை உருவாகும், குறைந்து காணாமலும் போகும். படுகையை இடித்தும் சேர்த்தும் இடம் வலமாகப் புரண்டு காவிரி தன் போக்கை மாற்றிக்கொள்ளும். ஆறு புரண்டுவிடுவதால் ஒரே கிராமம் ஆற்றுக்கு இக்கரையிலும் அக்கரையிலுமாக இருப்பதுண்டு. இந்த வண்டல் காவிரிக் கரைக்கு வாலிபத்தின் வனப்பைக் கொடுத்தது. நீருக்கு மேல் வண்டலை வைத்துக்கொண்டால் நம் உரிமையைச் சரியாக வடிவமைக்கிறோம். ஆனால் நாம் நீரை மட்டும்தானே கேட்கிறோம்!

பாசன அமைப்பை அந்தந்தக் கிராமமே பராமரிக்கும் அக்கறையும் இப்போது மறைந்துவிட்டது. வரத்து குறைந்து முறைப்பாசனம் வந்தது. இதனால், ஒவ்வொரு கிராமத்திலும் கடைமடைப் பகுதி ஒன்று உருவாகி அது இளைத்துக்கொண்டிருக்கிறது. நீரின் அளவு குறைந்தது என்பதைவிட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் நாம் அதிகம் அஞ்ச வேண்டியவை இரண்டு உண்டு. ஒரு பெருநகரின் குடிநீர்த் தேவை நதிநீர்ப் பங்கீட்டுக்கு ஒரு அடிப்படையானது ஒன்று. இங்கு நாம் எதிர்பாராத வகையில் ஒரு நியாயவியல் கோட்பாடு உருவாகி அழுத்தமாகியுள்ளது. அந்த நகரின் தேவை அதிகரிக்கும்போதும் இதே கோட்பாடு பின்பற்றப்படுமானால் விளைவு என்ன என்பதை நாம் ஊகிக்கலாம். இரண்டாவது, மனித நாகரிகத்தைப் பற்றியது. ஒரு நீராதாரத்துக்குப் பெருநகரின் குடிநீர்த் தேவையும் விவசாயத் தேவையும் போட்டி. மனித நாகரிகத்தின் வளர்ச்சி பெரு நகரங்களைப் பெருக்கும். இதை நிறுத்தித் திருப்ப முடியாது.

நாகரிக வளர்ச்சி என்பது விவசாயத்துக்குப் பகைதானா? விவசாய வளர்ச்சி என்றால் ஒரு போகத்தை இரண்டு போகமாக்குவது, அதை மூன்றாக்குவது, ஆண்டுக்கு ஆண்டு உற்பத்தி அதிகமாவது என்ற வளர்ச்சி தொடர்பான நமது மன வரைவு ஒரு உட்பகை. வருமானம் பெருக வேண்டும். ஆனால், விவசாயம் ஆதாயத்துக்காகத்தானா? காவிரி என்பது நீர் மட்டும்தானா!

- தங்க. ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர்,

http://tamil.thehindu.com/opinion/columns/article23487934.ece

Link to comment
Share on other sites

காவிரி டெல்டா: ‘வலியும், வாழ்வும்’ - ஒரு விவசாயியின் துயர் மிகு கதை #GroundReport

 
 

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி வாய்க்கால் மூலம் பாசன வசதிபெறும் பகுதிகளில், தண்ணீர் வராத காலகட்டங்களில் விவசாயம் செய்வது சாத்தியமில்லாமலாகிவருகிறது. ஆழ்துளைக் கிணறுகளுக்கான மின் இணைப்புகள் பெறுவதும் அவ்வளவு சுலபமான காரியமில்லை.

காவிரி டெல்டா: ‘வலியும், வாழ்வும்’ - ஒரு விவசாயியின் துயர் மிகு கதை Image captionவிவசாயி முருகேசன்.

தஞ்சை மாவட்டத்தின் ஒரத்தநாட்டு தாலுகாவில் உள்ளடங்கி அமைந்திருக்கும் கிராமம் பொன்னாப்பூர். இதன் கீழ்ப்பாதியில் அமைந்திருக்கிறது 46 வயது விவசாயியான முருகேசனின் நிலம். கிட்டத்தட்ட 10 ஏக்கர். இப்போது இந்தப் பத்து ஏக்கர் நிலத்திலும் எதையும் விதைக்காமல் காயப்போட்டிருக்கிறார் முருகேசன். 

இவரது நிலம் காவிரி கால்வாய்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களில் ஒன்று. இந்தப் பகுதியில் உள்ள நிலங்களில் ஆங்காங்கே பசுமை தென்பட, இவரது நிலம் காய்ந்துபோய்க் கிடக்கிறது. 

"நீங்கள் பசுமையாய்ப் பார்ப்பதெல்லாம் ஆழ்துளைக் கிணறுகள் உள்ள நிலங்கள். மற்றவர்களின் நிலங்கள் காய்ந்துதான் கிடக்கின்றன" என்கிறார் முருகேசன். 

10 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் முருகேசன் சற்று வசதியான விவசாயிதான். அப்படியானால், ஏன் ஆழ்துளை கிணறு தோண்டவில்லை? "2009ல் 2 லட்ச ரூபாய் செலவழித்து இந்தப் பத்து ஏக்கர் நிலத்திற்கும் பாசனம் செய்யும்வகையில் ஆழ்துளைக் கிணறு ஒன்றைத் தோண்டினேன். ஆனால், இதுவரை மின் இணைப்புக் கிடைக்கவில்லை" என்கிறார் முருகேசன். 

இந்தப் பகுதியில் உள்ள பலருக்கும் இதேபோன்ற நிலைதான்.  விவசாய ஆழ்துளை கிணறுகளுக்கான பம்ப் செட்டுகளுக்கு தமிழகத்தில் மின் இணைப்புப் பெறுவது அவ்வளவு சாதாரணமான காரியமல்ல. ஒருவர் மின் இணைப்புகளுக்காகப் பதிவுசெய்து வைத்தால், கிட்டத்தட்ட பதினைந்தாண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. இந்த காத்திருப்புக் காலம் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடும். 

இது தொடர்பாக தமிழக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது "2000வது ஆண்டில் விண்ணப்பித்தவர்களுக்குத்தான், அதாவது 18 ஆண்டுகளுக்கு முன்பாக விண்ணப்பித்தவர்களுக்குத்தான் இப்போது மின் இணைப்பு வழங்கப்பட்டுவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் எத்தனை இலவச மின் இணைப்புகள் வழங்க வேண்டும் என்பதை அரசுதான் நிர்ணயிக்கும். அதன்படியே இணைப்புகளை வழங்க முடியும்" என்று தெரிவித்தனர். 

காவிரி டெல்டா: ‘வலியும், வாழ்வும்’ - ஒரு விவசாயியின் துயர் மிகு கதைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இப்படி இணைப்புகள் வழங்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பிரதான சாலையிலிருந்து மின் இணைப்பு தேவைப்படும் வயல்வெளிகளுக்கு மின் இணைப்பைக் கொண்டுசெல்வதற்கான கட்டமைப்பை உருவாக்குவது மிகவும் செலவுபிடிக்கும் காரியமாக இருக்கிறது. பல சமயங்களில் மின்சாரத் தூண்களை அமைப்பதற்கு, வழியிலுள்ள விவசாயிகள் ஒப்புக்கொள்வதில்லை.  இதனால் பல சமயங்களில் வழக்குகளைக்கூட சந்திக்க வேண்டியிருக்கிறது என்கிறார்கள் மின்வாரிய அதிகாரிகள். 

10,000, 20,000, 30,000 கொடுத்து விண்ணப்பிக்கும் திட்டங்களும் உடனடியாக மின் இணைப்பைப் பெறுவதற்கான தட்கால் திட்டங்களும் மின்வாரியத்தால் வழங்கப்படுகின்றன. ஆனால், எந்தத் திட்டத்தின் கீழும் உடனடியாக மின் இணைப்பைப் பெற முடியாது என்பதுதான் உண்மை.

காவிரி டெல்டா: ‘வலியும், வாழ்வும்’ - ஒரு விவசாயியின் துயர் மிகு கதை

"சில நாட்களுக்கு முன்பாக தட்கால் திட்டத்தை அறிவித்தார்கள். காலையில் துவங்கி மாலைக்குள் நிறுத்திவிட்டார்கள். எத்தனை பேரால் ஒரு நாளைக்குள் அவ்வளவு பெரிய தொகையைத் திரட்ட முடியும்?" என்று கேட்கிறார் விவசாய சங்கம் ஒன்றைச் சேர்ந்த பாஸ்கர். 

விவசாயிகளின் மின் தேவையைப் பொறுத்து தட்கால் திட்டத்திற்கான கட்டணம் இரண்டரை லட்ச ரூபாயிலிருந்து 3 லட்ச ரூபாய்வரை வசூலிக்கப்படுகிறது. சமீபத்தில் தட்கால் திட்டம் அறிவிக்கப்பட்டபோது, ஏகப்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துவிட்டதால், உடனடியாக திட்டம் நிறுத்தப்பட்டது.

ஏன் ஒரே நாளில் தட்கால் திட்டம் மூடப்பட்டது என மின்வாரிய அதிகாரிகளிடம்கேட்டபோது, "தட்கால் திட்டமே உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் துவங்கப்பட்டது. ஆனால், எங்களால் உடனடியாக வழங்கக்கூடிய அளவைத் தாண்டியும் ஒரே நாளில் விண்ணப்பங்கள் குவிந்துவிட்டன. அதனால்தான் அந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைப் பெறுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது" என்கிறார் மின்வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர். 

தஞ்சாவூரைப் பொறுத்தவரை 1974-75க்கு முன்புவரை ஜூன் மாதத்தில் துவங்கி பிப்ரவரி மாதத் துவக்கம்வரை பாசனக் கால்வாய்களில் தொடர்ந்து நீர் இருக்கும் என்பதால், யாரும் பெரிதாக ஆழ்துளைக் கிணறுகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மேட்டூர் அணை முழுமையாக நிரம்புவது குறைந்து, எல்லா பாசனக் கால்வாய்களுக்கும் நீர் திறக்கும் நடைமுறைக்குப் பதிலாக முறைவைத்து நீர் திறப்பது அறிமுகப்படுத்தப்பட்டது.  

தஞ்சாவூர் பகுதி முழுவதிலும், புதிய டெல்டா பகுதியிலும் விவசாயத்திற்கேற்ற வகையில் தற்போதும் நிலத்தடி நீர் கிடைத்துவருகிறது. ஆனால், 400 அடி வரை ஆழ்துளை கிணறுகளைத் தோண்ட வேண்டியிருக்கிறது என்கிறார்கள் விவசாயிகள். பாசனக் கால்வாய்களில் நீர் திறக்கப்படும் காலம் குறையக்குறைய, நிலத்தடி நீர்மட்டம் மேலும் மேலும் கீழே சென்றுகொண்டிருப்பதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

தற்போது முருகேசன் தன்னுடைய நிலத்தை தரிசாகப் போட்டுவிட்டு, அருகிலுள்ள பாசன வசதியுள்ள 20 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவருகிறார்.  இது எல்லோராலும் முடியும் காரியமில்லை. ஆகவே, நிலமிருந்தும் மின் இணைப்பு இல்லாத விவசாயிகள் பலர், வேறு வேலைகளுக்குச் செல்கின்றனர். 

http://www.bbc.com/tamil/india-43770081

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.