Jump to content

யாழிணையம் 20 ஆவது அகவை


Recommended Posts

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,

மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 19 ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2018) 20 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது.

1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பல்வேறு வளர்ச்சிப் படிகளை தாண்டி வந்துள்ளது. தொடங்கிய சில காலங்களிலேயே மறைந்து போகும் இணையத்தளங்களுக்கு மத்தியில் இருபது ஆண்டுகளாகத் தமிழர்களுக்கென ஒரு இணையத்தளம் தொடர்ந்து இயங்குவது என்பது சாதாரண விடயமல்ல. தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தும், தமிழ் சமூகத்தின் தேவைகளுக்கு முகம்கொடுத்தும் "யாழ் இணையம்" தன்னைத் தொடர்ந்தும் புதுப்பித்துக்கொண்டு வருகின்றது. யாழ் இணைய உறவுகளின் அன்பும், ஆதரவும், தளர்ந்து போகும் நேரங்களில் உற்சாகப்படுத்தும் நல்ல உள்ளங்களும், ஆலோசனைகளை வழங்கி மெருகூட்டும் உறவுகளும்தான் உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களைத் தாங்கும் காலக்கண்ணாடியாக யாழ் இணையம் தனக்கெனதோர் தனித்துவத்துடன் தொடர்ந்தும் மிளிர்வதை  சாத்தியமாக்கியது.

யாழ் கருத்துக்களம் புலம்பெயர்ந்த மூத்த தலைமுறை, இன்றைய தலைமுறை என கைகோர்க்கிற இடம் இது. எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கமிக்கிற இடமும் இதுதான். மாணவர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், பல்வேறு துறைசார்ந்தவர்களும் கூடுகிற இடமும் இதுதான். புதியவர்கள் நம்பிக்கையோடு எழுதப் பழகுகிற பயிற்சிக் கூடமும் இதுதான். தமிழில் விவாதிக்கவும், நட்போடு பழகிடவும், தேடல் கொள்ளவும், பாடல் போடவும், கவிதை, கதை படிக்கவும் கூடிய ஒரு இடம் உண்டென்றால் அது யாழ் கருத்துக்களம்தான். யாழ் கருத்துக்களம் பிற இணையச் செய்திகளினதும், ஆக்கங்களினதும் திரட்டியாக இல்லாது தமிழ் சமூகத்திற்கு தேவையான ஆக்கபூர்வமானதும் தரமானதுமான கருத்தாடல் தளமாக தொடர யாழ் இணைய உறவுகளின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என்பதை இத்தருணத்தில் குறிப்பிட விரும்புகின்றோம்.

யாழ் இணையம் 20 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இந்நாளினைச் சிறப்பிக்கும் முகமாக யாழ் இணைய உறவுகள் பலரும் மிகவும் உற்சாகமாகச் சுயமான ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்துள்ளனர்.  எல்லோருக்கும் பாராட்டுக்களுடன் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கடந்த காலங்களில் கூறியது போன்றே எமது மண்ணோடும், எமது மக்களோடும்  நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம்.


"நாமார்க்கும் குடியல்லோம்"

நன்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.