Jump to content

Recommended Posts

ஓனர் - சிறுகதை

சிறுகதை: கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி, ஓவியங்கள்: ஸ்யாம்

 

‘`விகடனுக்கு ஒரு கதை அனுப்பணும்’’

‘`சூப்பர்டா… எப்பக்குள்ள அனுப்பச் சொல்லிக் கேட்ருக்காங்க?’’

இன்றுவரை அவன் அந்தக் கேள்வியை சீரியசாகக் கேட்டானா இல்லை கிண்டலுக்காகக் கேட்டானா என்று தெரியவில்லை.

செய்யும் வேலையில் அவ்வப்போது சிற்சில சாதனைகள் செய்துவந்தாலும், அதற்கான பாராட்டுகள், அங்கீகாரங்கள், கைத்தட்டல்கள் கிடைக்கப்பெற்றாலும், இந்த ஆசை மட்டும் தீரவே இல்லை. ஆனந்த விகடனுக்கு ஒரு கதை அனுப்பணும்.

p46a_1520328265.jpg

இதில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். கதை விகடனில் பிரசுரமாக வேண்டும் என்பதைப் பற்றி அதிகம் சிந்தித்ததில்லை. முதலில் விகடனுக்கு அனுப்ப ஒரு கதை எழுத வேண்டும். இதுதான் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

‘`செமடா. சீக்கிரம் அனுப்பு. செலக்ட் ஆச்சுனா கெத்துதான். அந்த மேட்டரை ஸ்டேட்டஸா போட்டேனு வை, லைக்ஸ் பிச்சுக்கும். அதுக்கப்புறமா ஒரு ரெண்டுமூணு நாள் கழிச்சு புரொஃபைல் பிக்சர் மாத்து. வரலாறு காணாத லைக்ஸ் கிடைக்கும்.’’

இவனுக்குக் கதையைவிட அதுகுறித்த ஃபேஸ்புக் வரவேற்பில்தான் கவனம். யாருக்கு இல்லை? ஆனால், இவன் சொல்லும் கணக்கும் நிஜம்தான். ஃபேஸ்புக்கைப் பற்றிய இவனது கணிப்புகள் பெரும்பாலும் சரியாகவே இருக்கும். எந்தப் போஸ்ட்டை, எந்தப் படத்தை, எந்த நேரத்தில் போட்டால் அதற்கு வரவேற்பு அதிகமாகக் கிடைக்கும் என்பது இவனுக்கு அத்துப்படி.

சரி கதைக்கு வருவோம். எப்படி எழுதினால் சரியாக இருக்கும் என்ற குழப்பத்தில் சில முக்கியமான கதைகளைக் கட்டாயத்தின் பேரில் வாசித்தேன். இப்படித்தான் என்றில்லாமல், எப்படியிருந்தாலும், நன்றாக   இருந்தால்தான் அந்தக் கதை எந்தப் பத்திரிகையிலும் பிரசுரமாகியிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தபின், கதை எழுதுவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளில் இறங்கினேன்.

முதலில், நாலைந்து வலுவான வாக்கியங்களை எழுதத் துவங்கினேன்.

‘அந்தி சாயும் வேளையில், மஞ்சள் வானின் கீழ், முகத்தில் மென்சோகம் ஏந்தியபடி, வாசற்படி ஓரம் காத்திருந்தாள்.’’

அடடா… உரைநடைக் கவிதை! இந்த வாக்கியத்தை எழுதி முடித்தபின், கிட்டத்தட்ட இலக்கியவாதி ஆகிவிட்டதைப் போன்ற ஓர் உணர்வு. என்ன அருமையான நடை, எத்தனை அழகான வார்த்தைத் தேர்ந்தெடுப்பு, என்ன மாதிரியான ஓர் உணர்வுக்கலவை என்று இன்னும் பிரசுரமாகாத அந்த வாக்கியத்தையே படித்துப் படித்துப் பூரிப்படைந்தேன்.

‘அவள் சொன்ன வார்த்தை, அவனின் ஆழ் மனத்தினுள் ஆழப் புகுந்து, தீராத ஆசையின் மேல் ஒரு சிறு கல்லெறிந்து போனது.’

இது அடுத்த வாக்கியம். இந்தக் கட்டத்தில், நான் ஓர் இலக்கியவாதி ஆகிவிட்டிருந்தேன்.

‘கடந்து வந்த பாதைகளில் தென்பட்ட அத்தனை முட்களையும், குத்திய அத்தனை சொற்களையும் ஆற்ற வல்லது அந்த ஒரு நிமிட வாஞ்சை.’

இதை ஏன் விகடனுக்கு அனுப்ப வேண்டும்? புக்கர் போன்ற போட்டிகளுக்கே அனுப்பலாம் என்ற கர்வம் வந்துவிட்டது.

‘ஞாபக அடுக்குகளில் படுத்துப் புரளும் போதெல்லாம், நெருஞ்சி முள்ளாய்க் குத்துகிறது கடந்த காலக் கசப்புகள்.’

புக்கரைத் தாண்டிய விருது என்ன?

இப்படி வாக்கியங்களை வடிவமைத்துக் கொண்டிருந்தபோது, இன்னொரு நண்பனைச் சந்திக்க நேர்ந்தது.

‘என்ன கதைடா எழுதுற?’

‘விகடனுக்குக் கதை எழுதறேன்டா’

‘அதுசரிடா… என்ன கதை எழுதுற... என்ன மேட்டரு?’

ஒரு கணம் ஆடித்தான் போனேன். இவனுக்கு என்ன பதில் சொல்ல. இந்த வாக்கியங்களுக்குப் பின்னால் இருக்கும் உணர்வெழுச்சியை உணர்ந்துகொள்ளும் அளவிற்கு இவனுக்கு இலக்கியம் தெரியுமா? இல்லை, இது ஏற்படுத்தும் அலாதி அனுபவத்தை உணர்ந்துகொள்ளும் அளவிற்கு இவன் வாழ்க்கையைப் படித்திருக்கிறானா?

இல்லை. இல்லவே இல்லை. ஒரு சிறு புன்சிரிப்புடன் அவனை வழியனுப்பி வைத்தேன். ஆனால் அவன் விட்டுச் சென்ற கேள்வியின் எச்சம் இன்னும் எஞ்சியிருந்தது. (அட…இன்னொரு வாக்கியம்!)

கதை. நாம் என்ன கதை எழுதப் போகிறோம். இந்த அத்தனை அற்புதமான வாக்கியங்களையும் இணைக்கப் போகும் அந்தக் கதை எங்கே கிடைக்கப்போகிறது. இந்த வாக்கியங்களைத் தாங்கிக்கொள்ளும் அளவிற்கு அந்தக் கதைக்கு வலுவிருக்குமா, இந்தளவிற்கு அந்தக் கதைக்கு இலக்கியச் செறிவு இருக்குமா தெரியவில்லை. ஆனாலும் அவசரத் தேவை, ஒரு கதை.

‘கதை நம்மைச் சுற்றி இருக்கிறது. கடந்து போகும் மனிதர்களிடம் இருக்கிறது. பார்க்கும் உலகத்தில் இருக்கிறது’ என்று என்றோ சக இலக்கியவாதி ஒருவர் எழுதியதைப் படித்தது நினைவுக்கு வந்தது. கதை தேடும் படலம் துவங்கியது.

சுற்றி நடக்கும் அத்தனையையும் கூர்மையாகப் பார்த்தேன். பிறர் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள் என்ற பிரக்ஞையற்று, செய்யும் செயலில் அவ்வளவு தீர்க்கமாக இருந்தேன். காலையில் டீ போடும் மாஸ்டரிலிருந்து, பெட்ரோல் போடும் பையனிலிருந்து, தண்ணீர் போடும் சிறுவனிலிருந்து, சாப்பாடு பரிமாறும் பெரியவரிலிருந்து, போண்டா புரட்டும் ஆளிலிருந்து, மாவுப் பாக்கெட் கட்டும் பெண்ணிலிருந்து என எதுவும், எதுவும் என் பார்வைக்குத் தப்பவில்லை. சொல்லப்போனால், அன்றிலிருந்து நான் வாழ வில்லை. என் வாழ்வை ஆவணப்படுத்திக் கொண்டிருந்தேன்.

ஒரு நாளில் எத்தனை நிகழ்வுகள். டீ மாஸ்டரின் ஒருநாள் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இயந்திரம் போல் இயங்கிக்கொண்டிருந்தார். சார்லி சாப்ளின் ஞாபகம்தான் வந்தது. போண்டா போடுபவன் மாவு பிசைகையில், அவ்வளவு நெற்றிவியர்வையையும் கலந்து பிசைந்ததைப் பார்த்தபின் அந்தக் கடையில் போண்டா சாப்பிடுவதை நிறுத்தினேன். தண்ணீர் போடும் சிறுவன், வேறு இரண்டு மூன்று இடங்களிலும் வேலை செய்கிறான். சொல்லப்போனால் என்னைவிட அதிகமாகவே சம்பாதிக்கிறான். அதற்குமேல் அவனைத் தொடர என் ஈகோ அனுமதிக்கவில்லை. மாவுப் பாக்கெட் விற்கும் அக்காவைப் பின்தொடரப் போய், அவளின் சராசரி ஆணாதிக்கக் கணவனின் சந்தேகப்பார்வைக்குள் அகப்பட்டுக் கொண்டபின் இந்தத் தேடுதல் படலத்தை நிறுத்தினேன்.  யதார்த்தத்தில் இந்த முறை அவ்வளவு உசிதமாக இல்லை.

எல்லா மனிதர்களும் கதைசொல்லிகள்தானே. நேராக அவர்களிடமே கதையைக் கேட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்தேன். பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் பெருமாள் அண்ணன்தான் முதல் போணி.

‘‘அண்ணே, சொல்லுங்கண்ணே… உங்க கதை என்னண்ணே?”

``என் கதையா… அது எதுக்கு உனக்கு?”

``கதை எழுதப் போறேண்ணே… உங்க கதை, கதையா வர்றது எவ்ளோ பெரிய விஷயம்.’’

‘`ஒரு மசிரும் வேணாம். மூடிட்டு போய்ப் பொழப்பப் பாரு. இவரு கதை எழுதறதுக்கு நாங்க பழசக் கிளறி அழணுமோ? டிவில இருந்துதான் முன்னாடி இப்படி சொந்தக் கதையச் சொல்லி அழறதுக்கு ஆள் எடுக்க வந்தானுங்க. இப்ப இவனுங்களும் ஆரம்பிச்சுட்டானுங்க போல’’ என்று திட்டியபடி சென்றார். அவரிடமிருந்து இதை நான் சத்தியமாக எதிர்பார்க்க வில்லை. அன்றிலிருந்து அவர் கதையை நான் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம்?

அதன்பின், ரோட்டில் வடை விற்கும் ரோசி அக்கா, பட்டாசு விற்கும் பாலு அண்ணன், குடித்தபடி நியாயம் பேசும் லதா அக்கா, இரவு ஆட்டோ ஓட்டும் ஆறுமுகம் அண்ணன், பணத்திற்காகப் பெண்களைக் கூட்டிக்கொடுக்கும் பிச்சைமுத்து என என் வாழ்விலும் யாராவது இருக்கிறார்களா என்று சல்லடை போட்டுத் தேடிவிட்டேன். இல்லை. இல்லவே இல்லை. எந்தத் தனித்துவத்துடனும் எவருமே என் வாழ்வில் இல்லையா? அப்படித் தெரிந்த ஒன்றிருவரும்கூட, நான் போய் பேச அமர்ந்தால், மிகவும் மேலோட்டமாக அன்றாட விஷயங்களைப் பேசி உடனே அனுப்பிவிடுகின்றனர். என்னை, அவர்களுள் ஒருவன், ஒரு கதைசொல்லி, ஓர் ஆவணப்படுத்தி (?) என்று புரிய வைக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. எனக்குத் தேவை வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் அவர்களின் கதைதானே.

இப்படி ஒருநாள், சேர்ந்திருந்த குறிப்புகளை அலசிக் கொண்டிருந்தபோதுதான் அந்த வார்த்தையை மீண்டும் எதிர்கொண்டேன்.

‘`என்ன ஓனரு… ஊர்ப்பக்கம் ஆளே காணோம். இங்கயே செட்டில் ஆய்ட்டியோ?’’

திரும்பினால், வாசற்கதவில் மாரி அண்ணன் (மகிழ வேண்டாம். மாரி அண்ணனிடம் எந்தக் கதையும் இல்லை).

சிரிப்பு, வரவேற்பு, குளிக்க சுடுதண்ணி, ஊர்க்கதைகள், 4 இட்லி, ஒரு டீ, கொஞ்சம் புரணி, அரைப் பாக்கெட் சிகரெட், தண்ணி பாட்டில், டாட்டா.

மாரி அண்ணன் ஊருக்குக் கிளம்பியபின் மீண்டும் அந்த வார்த்தையைக் கண்மூடி அசைபோட்டேன். ஓனர். வாழ்க்கையில் நாம் எத்தனை ஓனர்களைச் சந்திக்கிறோம். வீட்டு ஓனர், கடை ஓனர், மில் ஓனர், ஆபீஸ் ஓனர் என்று எத்தனையோ ஓனர்களைச் சந்தித்தாலும், எந்த ஓனரையும் நமக்கு ஏன் பெரிதாகப் பிடிப்பதில்லை? நம்மைவிட அதிகமான பணம், இடம், வீடு, தொழில், சம்பாத்தியம் போன்ற ஏதோவொன்றை வைத்திருப்பதால்தான் ஓனர்களை நமக்குப் பிடிப்பதில்லையோ?

ஆனால், நான் அப்படிப்பட்ட ஓனர் இல்லை. ஆமாம், நானும் ஒரு ஓனர்தான். அப்போது எனக்கென்று எதுவும் சொந்தமாக இல்லை. ஆனாலும் நான் ஓனர்தான். நான் ஓனரான வரலாறு சுவாரஸ்யமானது. சின்னதுதான்!

ஊரில் அப்பா கடை ஒன்றை வைத்திருந்தார். ஐந்து பக்கமும் மரத்தட்டிகளைக் கொண்டு கட்டிய ஒரு கடை. உள்ளேயும் மர அடுக்குகள் தான். பின்னால் ஒரு பெரிய மரத்தட்டி இருக்கும். வலது பக்கம் ஒன்று. இடது பக்கம் ஒன்று. மேலே இருக்கும் மரத்தட்டியில் பல பொருள்கள் தொங்க விடப்பட்டிருக்கும். அப்பா அமர்ந்திருக்கும் இடம் மட்டும் சிமென்ட்டால் கட்டப்பட்டிருக்கும். கடையின் முன்பக்கத்தில் ஒரு தட்டி. கடையில் ஒரு பக்கம் அரிசி, பருப்பு என மளிகைச் சாமான்கள் நிறைந்திருக்கும். அது மளிகைக் கடை. கடையின் வலதுபக்கம், இன்னொரு தட்டியை நிமிர்த்தி வைத்து, பீரோ போல் சுற்றிலும் மூடப்பட்டு அதில் ஜவுளிக் கடை வீற்றிருக்கும். ஜவுளி என்பதால் அந்தத் தட்டி மட்டும் கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும். அந்தப் பெரிய தட்டியில் 50, 60 துணிகள் இருக்கும். ஒரே இடத்தில் இரண்டு கடைகள். இப்போது அதுபோன்ற கடைகளைப் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், அப்போது ஊர்ப்பக்கம் இதுபோன்ற கடைகள் நிறைய இருந்தன. எங்கள் ஊரில் எங்கள் கடை மிகவும் ஃபேமஸ். அர்ச்சுனன் கடை என்றால் மக்களுக்கு அலாதி பிரியம். அப்பா ராசியானவர் என்ற பேச்சு அதற்குக் காரணமாக இருக்கலாம். மூன்று தெருக்கள் சந்திக்கும் முக்கில் இருக்கும் கடை அது. அத்தனை தெருக்களுக்குமான அடையாளமும் எங்கள் கடைதான்.

p46b_1520328280.jpg

கல்யாணத்துக்கோ காதுகுத்துக்கோ, மளிகைச் சாமானோ துணிமணியோ எடுக்கும்போது, ‘என்ன அர்ச்சுனா சும்மா குடுக்கற. ஒரு வார்த்தை வாழ்த்திட்டுக் கொடு’ என்று ஆசையாகக் கேட்பார்கள். அப்பாவும் சிரித்தபடி, ‘நான் வாழ்த்த என்ன இருக்கு. உன் புள்ள எட்டூரு வியக்குற மாதிரி வாழும் பாரு’ என்று வாழ்த்திக் கொடுப்பார். அப்பா மனதார வாழ்த்திக் கொடுப்பாரா இல்லை வியாபாரத்துக்காக வாழ்த்திக் கொடுப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர் வாழ்த்தை எங்கள் ஊர் பெரிதாக நினைத்தது. சொன்னாற்போல் அந்தப் பிள்ளைகளும் ஊர் மெச்சும்படி வாழவே, கடைக்கு நல்ல வியாபாரம் ஆனது. நல்ல நாளைவிட ஊரில் எழவு விழுந்த நாளில் வியாபாரம் இன்னும் ஜோராக நடக்கும். அப்பா மல்லுத்துணிகளைத் தயாராக வைத்திருப்பார். வந்திருப்பவர்கள் முகம் இறுக்கமாக இருந்தாலும், துணி வாங்குகையில் ஓர் ஆர்வம் ஒளிந்திருப்பதை நான் கண்டிருக்கிறேன்.

அப்பா ஆறடி இருப்பார். நன்றாக முறுக்கிய - அதை முறுக்கிய என்றுகூடச் சொல்ல முடியாது - மேல்நோக்கி வளைத்துவிடப்பட்ட மீசை. சரியான உடல்கட்டு. தனியாக உடற்பயிற்சி எல்லாம் கிடையாது. கடை வேலைகள்தான். வீட்டில் இருக்கும்போது வீட்டு வேலைகள் அத்தனையும் இழுத்துப் போட்டுச் செய்வார். உடல் கட்டுமஸ்தாக இருந்தாலும் அப்பாவுக்கு உடம்புக்கு ஏற்றாற்போல் தொப்பையும் இருக்கும். வெளியே இருந்து பார்த்தால் தெரியாது. சட்டையை அவிழ்த்தால்தான் தெரியும். இரவில் படுக்கும்போது, அந்தத் தொப்பைக்கும் மார்புக்கும் இடைப்பட்ட கதகதப்பான வெளியில் நான் நிம்மதியாக உறங்குவேன். இதற்காகவே அப்பாவிடம்தான் தூங்குவேன்.

எல்லோரையும்போல அப்பாவுக்கும் ஒரு குறை இருந்தது. அப்பா கூத்தியாள் வைத்திருந்தார். இது ஊருக்குள் அரசல் புரசலாக அல்ல, வலுவாகவே தெரியும். அப்பாவும் அதை மறைக்க நினைக்கவில்லை. தனக்கு இப்படியொரு உறவு இருக்கிறது என்று வீட்டில் சொன்னதே அப்பாதான். அம்மாவுக்கு அழுவதைத் தவிர எதுவும் தோன்றவில்லை. மூன்று நாள் அழுதுகொண்டே இருந்தாள். அதன்பின் அப்பாவுக்கு எப்போதும்போல் ஊழியம் பார்க்கத் தொடங்கிவிட்டாள். அதற்குப் பின்னும் கூட அம்மாவுக்கும் அப்பாவின் மீதான அன்பும் மரியாதையும் குறைந்ததுபோல் தெரியவில்லை. ஊரிலும் அப்பாவின் மீதான மரியாதையும் ராசியும் குறையவில்லை. சொல்லப்போனால், சிலர் அவரைப் பொறாமையுடன் பார்த்திருக்கின்றனர்.  இதேபோல் ஒரு விஷயத்தை அம்மா செய்திருந்தால் அதை அப்பா எப்படி எதிர்கொண்டிருப்பார் என்று இப்போது யோசித்துப் பார்க்கத் தோன்றுகிறது.

ஊரில் என்னைக் கடைக்காரர் மகன், அர்ச்சுனன் பையன் என்று வெவ்வேறு பெயர்களில் அழைப்பார்கள். ஒருநாள், என் வயது நண்பர்கள் ஐந்தாறு பேர் சேர்ந்து, ஒரு நண்பன் வீட்டுக் கொல்லைப்புறத்தில், தும்பை மரத்தின் கீழ் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தோம். அந்த விளையாட்டு போரடிக்கவே வேறு விளையாட்டிற்குத் தாவ எண்ணி, என்ன விளையாடலாம் என்ற சிந்தனையில் இருந்தபோது, மணியன் சொன்ன ‘டாக்டர் விளையாட்டு’ ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

பெரிய சிக்கலான விளையாட்டெல்லாம் கிடையாது. ஒருவன் டாக்டர். மற்ற அனைவரும் பேஷன்ட்டுகள். ஒவ்வொரு வராக வந்து ஒவ்வொரு குறையாகச் சொல்ல வேண்டும். அவன் அதற்கேற்றாற்போல், துண்டுப் பேப்பரில் ஏதோ எழுதித் தருவான். அதைப் பக்கத்திலிருக்கும் கம்பவுண்டரிடம் காட்டி, அவன் தரும் உதிர்ந்த பூ மாத்திரைகளை வாங்கி வர வேண்டும். சில சமயம் ஊசியும் உண்டு. இப்போது யோசித்தால், சுவாரசிய மற்றதாய்த் தோன்றும் இந்த விளையாட்டை, அப்போது வெகு சுவாரசியமாக்கியது எதுவோ தெரியவில்லை. ஆனால், இதுபோன்ற விளையாட்டுகளை ரசிக்க மனமில்லாமல் ஒதுக்கியபிறகுதான் வாழ்க்கையே சிக்கலாகிப்போனதுபோல் இருக்கிறது.

இப்போது விளையாட்டுக்கு வருவோம். வருபவர்களிடம் பேர் என்ன, என்ன வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்பார் டாக்டர். இன்ஜினீயர் மணியன், மேஸ்திரி பாபு, ட்ரெயின் டிரைவர் அப்துல், வாத்தியார் ரகு ஆகியோருக்குப் பிறகு வயிற்று வலியுடன் நான் உள்ளே சென்றேன். அமரச் சொன்ன டாக்டர் என் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, ‘`என்ன வேலை செய்றீங்க?’’ என்று கேட்டார். `‘நான் மளிகைக் கடை ஓனரா இருக்கேன்’’ என்று வயிற்றில் கை வைத்துக்கொண்டு சொன்னேன். டாக்டர் சடுதியில் சிரிக்கத் தொடங்கினான். என்னவென்று புரியாமல் நான் பார்க்க, ‘`பெரிய இந்தக் கடை…ஓனராம்ல... தம்மாத்துண்டு பெட்டிக் கடை...அதுக்கு இவரு ஓனராம் ஓனரு’’ என்று அவன் சொல்ல, மற்றவர்களும் அவனுடன் சேர்ந்து சிரிக்கத் தொடங்கினர். எல்லோரும் சிரிக்கச் சிரிக்க எனக்கு அது என் அப்பாவையே கேவலப்படுத்தியது போலிருந்தது. மேற்கொண்டு அங்கே இருக்கப் பிடிக்காமல், வயிற்று வலியை மறந்து வீட்டுக்கு ஓடி வந்துவிட்டேன்.

‘`சாப்பாடு வைக்கட்டுமாடா?’’

அம்மாவுக்கு பதில் சொல்லாமல் உம்மென்று கொல்லையில் உட்கார்ந்திருந்தேன்.

‘`டேய்… உன்னைத்தான்டா… சாப்பாடு வைக்கட்டா’’

‘`என்னை ஓனர்னு கூப்பிட்டாதான் நான் சாப்பிடுவேன்.’’

அம்மா சிரித்தது மேலும் கோபப்படுத்தியது. அப்பாவின் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக்கொண்டேன். கோபத்தோடேயே தூங்கிவிட்டேன்.

கதவு தட்டப்பட்டுக்கொண்டிருந்த சத்தம் கேட்டு முழித்தேன். எழுந்து அமைதியாகக் கட்டிலில் அமர்ந்திருந்தேன். கதவு மேலும் இரண்டு மூன்று முறை தட்டப்பட்டது. பின் எந்தச் சத்தமும் இல்லை. அதற்குப் பின் சில விநாடிகள் கழித்து அப்பாவின் குரல் கணீரெனக் கேட்டது.

‘`டேய் ஓனரு… வெளிய வாடா’’

சந்தோஷமா, பயமா, எதுவென்று தெரியவில்லை. வேகமாகப் போய் கதவைத் திறந்தேன். என்னையே உற்றுப் பார்த்தபடி அப்பா நின்றுகொண்டிருந்தார். பின்னால் அம்மா, பாட்டி எல்லாம்.

‘`வாங்க ஓனரு… வந்து சாப்புடுங்க.’’

அன்றைக்கு அப்பாவே ஊட்டி விட்டார். என்ன சாப்பாடு என்று தெரியாமல் சாப்பிட்டேன். சாப்பிட்டு வாய் துடைத்து விட்டதும், `‘இனிமே எல்லோரும் அவனை ஓனருன்னுதான் கூப்டணும்’’ என்று பொத்தாம்பொதுவாகச் சொல்லிவிட்டு அப்பா கடைக்குச் சென்றுவிட்டார். ஏன் எதற்கு என்று எதையும் அப்பா கேட்கவில்லை. ஆனால், அதிலிருந்து வீட்டில் எல்லோரும் என்னை ஓனர் என்றுதான் கூப்பிட்டனர். அவர்கள் அதைப் பட்டப்பெயரைப்போல் சிரித்துச் சிரித்துக் கூப்பிட்டாலும் எனக்கு அது ஒரு பெரிய பெருமிதத்தைக் கொடுத்தது. நாளாக நாளாக, சிரிக்காமலேயே அந்தப் பெயரைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். கொஞ்சம் கொஞ்சமாக மாமா, அத்தை, சித்தப்பா, சித்தப்பா பையன்கள், பிறகு பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று தொடங்கி ஊரில் என்னைப் பார்க்கும் அனைவரும் ‘`ஓனர் ஓனர்’’ என்றே கூப்பிட ஆரம்பித்தனர். பட்டப்பெயரைப்போல் வேகமாய்ப் பரவும் விஷயம் ஊரில் எதுவுமில்லை. அடுத்து வந்த நாள்களில் நான் முழுமையாக அனைவருக்கும் ஓனராகிப்போனேன்.

கடையில் அப்பா இருந்தாலும்கூட, ‘`இன்னைக்கு வெங்காயம் என்ன வெல ஓனரே’’ என்று என்னிடம் கேட்க ஆரம்பித்தார்கள். அப்பாவும் சிரித்தபடியே பதில் சொல்லி வியாபாரம் செய்வார். நான் ஓனரான கொஞ்ச நாள்களில், கடையில் வாசல் தட்டியின் மேல், ஒரு பெரிய மரப்பலகையைப் போட்டு, அதன் மேல்பகுதியில் எட்டாகப் பிரித்து, அதில் காய்கறியை வைத்து விற்க ஆரம்பித்தார் அப்பா. உள்ளே அரிசி, பருப்பு போன்றவை இருக்கும். ஜவுளிக் கடையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தம்மாத்துண்டுக் கடை என்று ஏளனம் பேசிய அந்த டாக்டரைப் பார்த்து ‘`இப்ப பாருடா என் கடைய’’ என்று சொல்லவேண்டும்போல் இருந்தது.

அந்தக் கடைக்குப் பெயரெல்லாம் எதுவும் இல்லை. ஆனால், அப்பா அந்தக் கடையை மிகவும் நேசித்தார் என்பது எனக்குத் தெரிந்திருந்தது. காலையில் நாலரை மணிக்கு எழுந்து, பெரிய மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வந்து, வீட்டிலிருந்து தேவையான ஜவுளியை எடுத்துக்கொண்டு கடைக்குச் செல்வார். கடையை தினமும் கூட்டிப் பெருக்கி, இரண்டடி தள்ளியிருந்து அழகு பார்த்த பின்தான் உள்ளே செல்வார். கடையில் ஒரு சின்ன தூசு கூட இருக்காது. அவ்வளவு சுத்தமாக வைத்திருப்பார். கடைக்கு வாங்கும் ஒவ்வொரு பொருளையும் அப்பா பார்த்துப் பார்த்து வாங்குவார். தக்காளியோ வேறு ஏதோ காய்கறியோ கொஞ்சம் கெட்டிருந்தாலும் வாங்க மாட்டார். ‘`அட பத்தோடு ஒண்ணு. தள்ளி விடு அர்ச்சுனா’’ என்பவர்களிடம் ‘`எனக்கு ஒம்போது விக்குற லாபம் போதுண்ணே’’ என்றுவிடுவார்.

கடையின் மீதும் கடைக்கு வருபவர்கள் மீதும் அப்பாவுக்கு அவ்வளவு பிரியம். ஒரு நெருக்கடியான சமயத்தில், அந்தக் கடையைக் கைமாத்திவிடலாமா என்று வேறு வழியே இல்லாமல் அம்மா கேட்டதற்காக, மூன்று நாள் அம்மாவோடு அப்பா பேசவில்லை. கடையையும் மூன்று நாளாகத் திறக்கவில்லை. எப்படியோ அந்தப் பணத்தை அப்பா ஏற்பாடு செய்துகொடுத்தபின், ஒருநாள் அப்பாவுக்கு முன் எழுந்துபோய் அம்மா கடையைக் கூட்டிப் பெருக்கி சுத்தப்படுத்தி வைத்திருந்தாள். அதற்குப் பின்தான் அப்பா முகத்தில் சிரிப்பு வந்தது. அம்மா எவ்வளவுதான் சொன்னாலும், கடையில் அக்கௌன்ட் வைத்திருந்து பணம் தராதவர்களிடம் அப்பா, பணத்தைச் சீக்கிரம் தருமாறு கேட்டதில்லை.  `‘அவங் கஷ்டத்துல இன்னொன்ன சேக்கச் சொல்றியா’’ என்றவாறு அதைத் தவிர்த்துவிடுவார். என்றைக்காவது ஒருநாள் பெரிய மார்க்கெட்டுக்கு என்னையும் கூட்டிப் போவார். சைக்கிளின் முன் கம்பியில் அமர்ந்துகொண்டு சில்லென்ற காற்று முகத்தில் பட, வேகமான அந்தப் பயண சுகத்தை இன்றுவரை வேறெந்த வாகனத்திலும் அனுபவிக்கவில்லை.

அப்பாவுக்கு என் மேல் அவ்வளவு பிரியம். ஒருநாள், நண்பன் வீட்டில் ஏதோவொரு விளையாட்டுப் பொருளைப் பார்த்து அதை அம்மாவிடம் கேட்டு, அம்மா முடியாதென்று சொல்லிவிட, அடம்பிடித்து அழுதபடியே தூங்கிவிட்டேன். தூக்கத்தில் அந்தப் பொருளின் பெயரைச் சொல்லிப் புலம்பியிருப்பேன்போல. மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்த அப்பா, அதைக் கேட்டுவிட்டு, பெரிய பஸ் ஸ்டாண்டு இருக்கும் இன்னொரு ஊருக்கு சைக்கிளில் சென்று அந்தப் பொருளை வாங்கி வந்திருக்கிறார். நான் கண்முழித்ததும் எதிரில் அதைப் பார்த்து, அம்மாவைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தேன். அப்பா சிரித்தபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தார். கடையில் எவ்வளவு வியாபாரம் இருந்தாலும், மதியம் சாப்பாட்டுக்கு அப்பா எப்படியும் வீட்டுக்கு வந்துவிடுவார். இரவு வீட்டுக்கு வராத நாள்களில் அம்மா அழுதபடி இருப்பாள்.

அப்பா பணம் எண்ணுவது எனக்கு அவ்வளவு பிடிக்கும். ஒவ்வொரு நோட்டாக லேசாகத் தொட்டு, அப்படியே அதைப் பெருவிரலால் பிடித்து வலதுபக்கம் கொண்டு சென்று, வலதுகையில் வைத்துக்கொண்டு, இடது கையில் இருக்கும் அடுத்த நோட்டை இடதுகை கட்டைவிரலால் நெம்பி எண்ண ஆரம்பிப்பார். அப்பா கையில் அதிகமாகக் காசு இருப்பது எனக்கு அதிக சந்தோஷம் தந்திருக்கிறது. அப்பா எப்போதும் காசு எண்ணிக்கொண்டே இருக்கவேண்டும் என்று எனக்கு ஆசையாய் இருக்கும்.

ஒருமுறை, மளிகை சாமான் வாங்க ஓர் ஆள் வந்திருந்தார். ஒவ்வொரு பொருளாய்த் தேர்ந்தெடுத்து வாங்கிக்கொண்டிருந்தார். குள்ளமாக, சிவப்பாக, பெரிய மூக்கோடு வித்தியாசமாய் இருந்ததால் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். நிறைய பொருள்கள் வாங்கினார். நிறைய ரூபாய் வரும் என்று தோன்றியது. அப்பா அந்தப் பணத்தை எண்ணுவதைப் பார்க்க ஆவலாய் இருந்தேன். எல்லாப் பொருள்களையும் அப்பா கட்டி வைத்துக்கொண்டிருக்கும்போது, திடீரென அந்த ஆள் முகம் மாற ஆரம்பித்தது. பையில் அங்கும் இங்கும் கையை விட்டுத் தேடினார். சுற்றிமுற்றிப் பார்த்தார். கீழே குனிந்து தேடினார். பதற்றமாகவே இருந்தார். அப்பா இதையெல்லாம் கவனித்தாரா என்று தெரியவில்லை. மூட்டை கட்டி முடித்தபின், அதை எடுத்துப் பலகை மேல் வைத்தவர், அவரையே பார்த்தார்.

`‘என்னண்ணே… பணத்தைக் காணோமா?’’

அவர் வியர்த்தபடி நின்றுகொண்டிருந்தார்.

‘`பரவால்லண்ணே... எடுத்துட்டுப் போங்க…விசேஷத்துக்கு வாங்கறேன்னு வேற சொன்னீங்க.’’ அந்த ஆளுக்கு இப்போது இன்னும் வியர்த்தது. சில நிமிடம் தயங்கியபடியே நின்று கொண்டிருந்தார். பிறகு பையை எடுத்தபடி வெடுக்கெனப் புறப்பட்டுவிட்டார். அவர் பொய் சொல்கிறார் என்று எனக்குத் தோன்றியபடியே இருந்தது. ஆனால், அதை அப்பாவிடம் சொல்ல தைரியம் வரவில்லை.

பின் வெகுநாள்களுக்குப் பிறகு, நானும் அப்பாவும் பெரிய மார்க்கெட் சென்றிருக்கும்போது, அங்கே இந்த ஆளைப் பார்த்தேன். கையில் மூன்று பைகளுடன் சென்று கொண்டிருந்தார். அவரும் என்னைப் பார்த்து விட்டார். எங்கோ பார்த்த ஞாபகத்தில் நிமிர்ந்தவர், அப்பாவைப் பார்த்ததும் பதற்றமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார். நான் திரும்பித்திரும்பி அவரையே பார்த்துக்கொண்டு வந்தேன். அப்பா அவரைப் பார்த்தாரா இல்லையா என்று தெரியவில்லை.

வீட்டில் இருக்கும்போது அப்பா வாய்நிறைய ``ஓனர் ஓனர்’’ என்று அழைத்தபடியே இருப்பார்.

‘ஓனரு... அம்மாட்ட ஒரு காப்பி கேளுங்க…’

‘`என்ன ஓனரே... இன்னைக்கு என்ன சாப்பாடாம்?’’

`‘செடிக்குத் தண்ணி ஊத்துங்க ஓனரே...’’

‘`மாமா வீட்டுக்குப் போய் இந்தக் கறியைக் கொடுத்துட்டு வாங்க ஓனரே’’ என்று எதற்கெடுத்தாலும் ஓனர்தான். நான் ஓனராகவே வாழத் தொடங்கிவிட்டிருந்த காலகட்டம் அது.  ஒருநாள் இரவு கடையைப் பூட்டிவிட்டு அப்பாவுடன் நடந்து வந்துகொண்டிருந்தேன்.

‘`என்ன ஓனரே... தூக்கம் வருதா?’’

`‘இல்லங்கப்பா…’’

p46c_1520328295.jpg

அப்பா  ஏதோ  பேசியபடி  வந்துகொண்டிருந்தார். எதிரில் சாமுண்டி அம்மா அலறியபடி ஓடிவந்து கொண்டிருந்தார். பின்னால் சாமுண்டி ஓர் உலக்கையை எடுத்து அவரைத் துரத்தியபடி வந்துகொண்டிருந்தான். சாமுண்டி கொஞ்சம் மனநலம் பிசகியவன். சரியான குடிகாரன். குடித்ததால் மனநலம் பாதிக்கப்பட்டதா, மனநலம் பிசகியதால் குடிக்கிறானா என்பதெல்லாம் தெரியாது. சாமுண்டி அம்மா கத்தியபடி வந்து அப்பாவின் பின்னால் மூச்சு வாங்கியபடி நின்றுகொண்டார்.

‘`அர்ச்சுனா... காப்பாத்து அர்ச்சுனா…மண்டையப் பொளக்க வர்றான்.’’

நான் அப்பாவின் கையைப் பிடித்தபடியே சாமுண்டியையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பாவின் முன்னால் உலக்கையோடு நின்று கத்தினான் சாமுண்டி.

`‘ஏ… மரியாதையா வெளிய வா… இல்ல மண்டைய உடச்சுருவேன்.’’

‘`டேய் குடிச்சிருக்கியா... வீட்டுக்குப் போடா…காலைல பேசிக்கலாம்.’’

அப்பா அமைதியாக, ஆனால் திடமாக எச்சரிக்கும் தொனியில் சொன்னார்.

`‘நீ தலையிடாத… குடிக்கக் காசு கேட்டா, பெரிசா வியாக்கானம் பேசுறா அவ… இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரியணும்’’ என்றபடி உலக்கையைத் தூக்கியபடி அம்மாவை நோக்கி ஓடிவந்தான் சாமுண்டி. என்னருகே வந்ததும் பயத்தில் நான் முகத்தைத் திருப்பிக்கொண்டேன். ஒரு நொடிதான். என் கையை விடுவித்த அப்பா, சாமுண்டியை ஓங்கி ஓர் அறை விட்டார். உலக்கை பத்தடி தள்ளிப் போய் விழுந்தது. சாமுண்டியின் பேன்ட் நனைந்து உச்சா நாத்தம் அடித்தது.

`‘நீ போம்மா… காலைல பேசிக்கலாம்’’ என்றபடி என் கையை மீண்டும் பிடித்தபடி நடக்க ஆரம்பித்தார்.

‘`என்ன ஓனரே... தூக்கம் போயிருச்சா?’’

நான் பதில் ஏதும் பேசாமல் அமைதியாக வீட்டுக்கு வந்தேன். அதற்குமுன் அப்பா இப்படி அடித்தோ கத்தியோ திட்டியோ நான் பார்த்ததில்லை. அன்றைக்குப் பிறகு, அப்பா என்னை எப்போது ஓனர் என்று கூப்பிட்டாலும் கொஞ்சம் தயக்கமோ பயமோ இருந்துகொண்டே இருந்தது.

பிறகு நான் டென்த், ப்ளஸ் டூ படித்து, வேறு ஊரில் காலேஜில் இடம் கிடைத்து படிக்கச் சென்றேன். இந்த நேரத்தில், கடையில் வியாபாரம் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்தபடி வந்தது. பெரிய பெரிய கடைகள் எங்கள் ஊருக்கு வரத்தொடங்கியிருந்தது. எங்கள் கடையைவிட அங்கே விலை அதிகம்தான் என்றாலும் அத்தனை கூட்டமும் அந்தக் கடைகளுக்குத்தான் சென்றது. ஜவுளிக்கென்று தனியாக இரண்டு மூன்று கடைகள் வந்துவிட்டிருந்தன. எங்கள் கடையின் ஜவுளிப் பிரிவில் முன்புபோல் கூட்டமில்லை.  என்னை பஸ் ஏத்திவிட வந்திருந்தார் அப்பா. தின்பண்டங்கள் இருந்த பையைக் கையில் கொடுத்துவிட்டு, ‘`காசு ஏதாவது தேவைன்னா எழுதிப் போடுங்க ஓனரே… தயங்கிட்டே இருக்காதீங்க’’ என்று அப்பா சிரித்தபடி ரூபாய் நோட்டுகளை எண்ணிக் கையில் தந்தபோது எனக்கு அழுகை வந்தது. நல்லவேளை பஸ் கிளம்பிவிட்டது. வேகமான காற்று கண்ணீரைச் சிதறடிக்க அழுதபடியே சென்றேன்.

அதன்பின், நான் ஊருக்கு வரும் வேளைகளில், எல்லோரும் ``ஓனர் ஓனர்’’ என்று கூப்பிடும்போது, இந்த வயதில் அது பெரும் கூச்சத்தையும் சங்கடத்தையும் கொடுத்தது. இரண்டு மூன்று முறை அதை மாற்றுவதற்கு முயற்சி எடுத்தேன். ஆனால், ஓர் ஊர் முழுவதும் பரவிவிட்ட அந்தப் பெயரை மாற்ற முடியாது என்று தெரிந்தது. இப்போது ஊருக்குப் போகும்போது மட்டும் அந்த ஓனர் என்ற வார்த்தை காதில் விழும். அப்போதெல்லாம் ஏதோ ஒரு வெட்கம் மேலோங்கும். கடை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துகொண்டே வந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். `‘தம்மாத்துண்டுக் கடை’’ என்ற டாக்டரின் ஏளனம் நினைவில் வந்து ஒருமாதிரியான அவமான உணர்வும் தலைதூக்கும்.

கொஞ்சம் கொஞ்சமாய் பெரும் கம்பெனிகள் காலூன்ற ஆரம்பித்த நேரம் அது. டூரிங் டாக்கீஸ்கள் அழிந்துகொண்டே வந்தன. ஜவ்வு மிட்டாய்கள் காணக்கிடைக்கவில்லை. மிட்டாய் வாட்ச், சர்க்கஸ், பயாஸ்கோப் போன்ற ஒரு காலத்தின் அத்தனை அடையாளங்களும் இப்போது அரிதாகிக்கொண்டே வந்தன. இது ஒவ்வொன்றும் நிகழும்போதும் எனக்கு எங்கள் கடைதான் ஞாபகத்துக்கு வரும். எங்கள் கடையும் எங்கள் காலத்திற்கான அடையாளமோ என்று தோன்றும். ஆனால் அரிசி பருப்பும், துணிமணியும் எந்தக் காலத்திற்கும் தேவைதானே என்ற சமாதானத்தினால், கடைக்கு ஒரு பெரிய பாதிப்பும் இருக்காது என்று மனம் அமைதி கொள்ளும்.

வருடம் முடிந்து ஊருக்குச் சென்றபோது, கடை நொடிந்துதான் போயிருந்தது. ஜவுளிக்கடையெல்லாம் இப்போது இல்லை. வெறும் மளிகைக் கடை மட்டும்தான். அப்பாவின் ராசிக்கு இப்போது என்னாயிற்று என்று தெரியவில்லை. வாசலில் ஒரு ரூபாய் போன் ஒன்றை மாட்டி வைத்திருந்தார் அப்பா. சொல்லப்போனால், அந்தப் போன் பேச மட்டும்தான் கூட்டம் வந்தது என்று நினைக்கிறேன்.
நான் கல்லூரியில் இறுதி வருடம் முடிக்கும்போது செல்போன் வந்தது.

இப்போது நான் ஊருக்குப் போய் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. வேலையில் ஏதாவது ஒன்று சாதித்த பின்தான் ஊருக்குச் செல்ல வேண்டும் என்று ஒரு கங்கணம், அல்லது இந்த வாழ்க்கை தரும் சௌகர்யம் பிடித்திருக்கும் சுயநலமா தெரியவில்லை. அவ்வப்போது வீட்டுக்கு போன் பேசுவதோடு சரி. அதுவும் அம்மாதான் அடிக்கடி போன் செய்து ``சாப்பிட்டியா, இளைச்சுட்டியா’’ என்று கேட்பாள். அப்பாவைப் பற்றிக் கேட்கும்போது அழத்தொடங்கிவிடுவாள். கடையை அந்த வீட்டுக்காரி எழுதி வாங்கிக்கொண்டதாகவும், அவர்கள் அதை இடித்து வேறு ஏதோ கட்டுகிறார்கள் என்றும் சொல்வாள். அப்பா மிகவும் நொடிந்துபோய் உள்ளதாகவும் சொல்வாள்.

ஒருநாள் நடு இரவில் போன். பயத்துடன்தான் போனை எடுத்தேன். அம்மா ஓவென்று அழுகிறாள். பயம் அதிகரிக்க, ‘`என்ன என்ன’’ என்று பதற்றத்துடன் கேட்டபின், விசும்பியபடி ‘`அப்பா குடிச்சுட்டு வந்துருக்காருடா’’ என்றபடி மீண்டும் அழத்தொடங்கினாள். அப்பா சாமுண்டியை அடித்ததுதான் நினைவுக்கு வந்தது.

அதன்பின் அம்மா அப்பாவைப் பற்றி அழுததில்லை. `‘இப்போ பரவாயில்லைடா…மறுபடியும் கடை வைக்க இடம் தேடிட்டு இருக்காரு’’, ‘`இடம் தள்ளிப் போகுதுடா’’ ‘`இன்னொரு கடை வருது… அத வாங்கலாமான்னு பாக்குறாரு’’ என்றே சொல்வாள். நடுவில் சிலமுறை அப்பாவும் பேசியதுண்டு.

`‘நல்லாயிருக்கீங்களா ஓனரே…’’

அதற்குப்பின் அப்பாவின் அந்தத் தடுமாற்றமான குரலைக் கேட்கும் சக்தி எனக்கிருக்காது. எவ்வளவு கம்பீரமான குரலாக இருந்தாலும் ஒருகட்டத்தில் உடைந்துதான் போகிறது. என்னவிதமான இயற்கை அமைப்பு இது?

தொழில், போட்டி, தடைகள், வெற்றிகள் என்று எனது வாழ்வை நோக்கிய போராட்டமே பல வருடங்களை அபகரித்துக்கொண்டது. இப்போது மாரி அண்ணன் வந்துபோன பிறகுதான் அப்பாவைப் பற்றிய நினைவுகள் நெஞ்சு முழுதும் நிறைந்துவிட்டது. அப்பாவைப் பார்க்கப் போகலாமா என்ற எண்ணம் எழுந்தது. அம்மாவுக்கு போன் செய்தால், போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. சரி, உடனே போய்ப் பார்த்துவிட்டு, இரண்டு நாள்களில் வந்துவிடலாம் என்று கிளம்பிவிட்டேன்.

காலை பெரிய பஸ் ஸ்டாண்டு வந்து சேர்ந்தேன். இங்கிருந்து இன்னொரு பஸ் பிடித்து 20 நிமிடங்கள் செல்ல வேண்டும். பஸ் ஸ்டாண்டு கூட நிறைய மாறிவிட்டிருந்தது. கட்டடமாக மாறியிருந்தது. அறிவிப்பு போர்டுகள் டிஜிட்டலில் இருந்தன. 

பஸ் மாறி எங்கள் ஊருக்கே வந்துவிட்டேன். இது நிச்சயம் என் ஊர் அல்ல. என் ஊர் பெயரில் இருக்கும் வேறு ஒரு ஊர். இதுதான் என் மொத்த உணர்வும். பார்க்கும் எல்லாவற்றிலும் மாற்றங்கள். ஒயின் ஷாப், மார்வாடி கடையைத் தவிர அத்தனையும் மாறி விட்டிருந்தது. Survival of the Fittest?

மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பது நமக்குப் புரியும் போது எல்லாமும் மாறிவிட்டிருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாய் ஊரின் அத்தனை மாற்றங்களையும் உள்வாங்கியபடி நடந்துகொண்டிருந்தேன். ஏகப்பட்ட ஏசி ஐவுளிக்கடைகள் வந்துவிட்டன. மல்லுத்துணிக்கெல்லாம் எங்கே போவார்களோ தெரியவில்லை. எங்கள் கடைத்தெருவுக்கு வந்ததும் கால்கள் மெதுவாகின. எங்கள் கடை இருந்த தெருமுனை அப்படியேதான் இருந்தது. அதில் மாறுவதற்கு பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால், எங்கள் கடை இருந்த இடத்தில் ஒரு செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடை இருந்தது. கூடவே ஜெராக்ஸும். கூட்டமாகவும் இருந்தது. கடைக்குள் எட்டிப் பார்க்க முயன்றேன். ஏதும் தெரியவில்லை. முழுக்கக் கட்டடம். மாடியும் இருந்தது. அதில் ஓர் இன்டர்நெட் சென்டர். அதற்கு மேல் அங்கே நிற்கத் தோன்றவில்லை. நகர எத்தனிக்கையில்,
‘`ஏய்… ஓனரு’’ மணியனின் அப்பா.

`‘என்னடா… பேந்தப் பேந்த முழிச்சுட்டிருக்க… ஊரே மாறிப் போயிருக்கோ… இங்கேயே இருந்தா எதுவும் தெரியாது…மெட்ராசுக்குப் போய்ட்டு அஞ்சு வருசத்துக்கு ஒருவாட்டி, பத்து வருசத்துக்கு ஒருவாட்டி வந்தா…’’

`‘நல்லா இருக்கீங்களாப்பா. மணியன் என்ன பண்றான்?’’

‘`அவன் சவுதியில இன்ஜினீயரா இருக்கான். அவனும் இப்படித்தான். வந்தா ஊரையே மொறச்சுப் பாத்துட்டு இருப்பான். என்ன இங்கயே நின்னுட்ட?’’

`‘இல்ல... கடை…’’

‘`ஓ... ஆமாம்ல… நல்ல கடைய்யா இது. உங்கப்பன் கடைக்குப் போனியா?’’

மனதுள் ஏதோ ஒரு பெருமித உணர்வு மீண்டும் தலைதூக்கியது. `அப்பா மறுபடியும் கடை ஆரம்பித்துவிட்டாரா? அம்மா எதுவும் சொல்லவில்லையே. அன்று அம்மா போனில் சொன்ன அந்தக் கடையே கிடைத்துவிட்டதா இல்லை வேற கடையா?’

‘`ஏய்… என்னய்யா யோசிக்கற… உங்கப்பன் கடைக்குப் போனியா?’’

‘`இல்லப்பா... இப்பதான் வர்றேன். கடை எங்க இருக்கு?’’

‘`அட முட்டாப்பயலே… கடையே தெரியாதா உனக்கு. சரியாப்போச்சு போ… நேரா போய், அந்த முக்குக் கோயில் ரோட்டுல வலதுபக்கம் திரும்பு… மூணாவது கடை. நல்ல புள்ளைங்கப்பா’’ என்று பேசியபடி சென்றார். மீண்டும் அப்பாவைப் பார்க்கப்போகும் ஆவலைவிட, மீண்டும் அப்பாவின் கடையைப் பார்க்கப்போகும் ஆவல்தான் அதிகமாக இருந்தது. `என்ன மாதிரியான கடையாக இருக்கும்? எப்படியும் மரக்கடையாக இருக்காது. இருக்கட்டும், என்ன இப்போ? எப்படியிருந்தாலும் எங்கள் கடையின் அழகு வருமா? மளிகைக் கடை மட்டுமா இல்லை ஜவுளிக் கடையும் வைத்திருக்கிறாரா தெரியவில்லையே. இப்போது அப்படியெல்லாம் வைக்க முடியுமா என்ன?’

என்னென்னமோ யோசனைகளோடு கோயில் தெருவில் வலதுபக்கம் திரும்பினேன். ரோட்டை விசாலப்படுத்தியிருந்தார்கள். மூன்றாவது கடை அருகே நின்றேன். ரோட்டின் இருபுறமும் கடைகள் இருந்தன. `இதில் எது அப்பாவின் கடை? இடது பக்கமாக ஒரு பெரிய செல்போன் விற்பனைக் கடை. வலது பக்கமாக ஒரு பெரிய சூப்பர் மார்க்கெட். அப்பா நிச்சயம் செல்போன் கடை வைக்க மாட்டார். வலது பக்கக் கடையாகத்தான் இருக்கும். ஆனால் இவ்வளவு பெரிய சூப்பர் மார்க்கெட் எப்படி? அதுவும் என்னிடம் எதுவும் சொல்லாமல்?’

ஒரு காய்கறி வண்டி வந்து நின்றது. `‘ஏய்… லோடு இறக்கணும், வாங்கப்பா’’ என்ற குரல் கணீரென ஒலித்தது. அப்பாதான். நேரில் இன்னும் அந்தக் குரலின் கம்பீரம் குறையவில்லை. இப்போதெல்லாம் மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறி வாங்குவதில்லைபோல. மீண்டும் அப்பாவை, அப்பாவின் கடையில் பார்க்கப்போகிறேன். வரிசையாய், இரண்டு மூன்று பேர் கருநீலச் சட்டை பேன்ட்டில் படிகளில் இறங்கி ஓடி வந்தார்கள். யூனிஃபார்ம் போல. வேகவேகமாக வெங்காயம், தக்காளி என்று ஒவ்வொரு மூட்டையாக எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.

`‘சீக்கிரம் சீக்கிரம்... அங்க போப்பா’’ அப்பாவின் குரல் வெகு அருகில் கேட்டது. சற்றே தலைதூக்கிப் பார்த்தேன். அதே கருநீலச் சட்டை பேன்ட்டில், கையிலும் பாக்கெட்டிலும் ஏதோ ஒரு பெயர் முத்திரை குத்தப்பட்டிருக்க வேகவேகமாகப் படிகளில் இறங்கி வந்தார் அப்பா.

முட்டை இருந்த ஐந்து ட்ரேக்களை எடுத்துக்கொண்டு வேகமாக உள்ளே சென்றார். அப்படி மெலிந்திருந்தார். தொப்பைகூட இல்லை. ஒட்டிய முகத்தில் மீசை மட்டும் மேல்நோக்கி வளைந்திருந்தது. தொண்டை அடைத்தது. திக்கித்து நின்றிருந்தேன். மீண்டும் ஏதோ பேசியபடி வந்தார் அப்பா. இம்முறை ஒரு பெரிய மூட்டையை எடுத்துப் போனார்.  ஒரு கறுப்பு நிறக் கார் லோடு வண்டியின் அருகே வந்து நின்றது. அதிலிருந்து ஒருவர் இறங்கி அந்த லோடு வண்டியை ஓட்டி வந்தவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்பா வேகமாக அவர் அருகே ஓடிவந்தார். அவர் அப்பாவிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். அப்பா கையிலிருந்த சீட்டைப் பார்த்துப் பார்த்து பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.

உள்ளேயிருந்து ‘`அர்ச்சுனா அர்ச்சுனா’’ என்ற இளவயதுக் குரல் கேட்டது. அப்பா வலதுபுறம் லேசாகத் திரும்பித் திரும்பிக் கடையைப் பார்த்தபடி காரில் வந்த ஆளிடம் பேசியபடி இருந்தார். மூன்றாம் முறை அர்ச்சுனா என்ற குரல் சத்தமாகக் கேட்டபோது, அப்பா இடதுபுறம் திரும்பி, என்னைத் தாண்டிக் கடைக்குள் பார்த்தபடி கத்தினார், ‘`ஐயா… வந்துட்டேன். ஓனர் வந்திருக்காருங்க…’’ அடுத்த பஸ்ஸைப் பிடித்து சென்னை வந்து சேர்ந்துவிட்டேன்.

அப்பா  என்னைப் பார்த்தாரா இல்லையா என்று சத்தியமாகத் தெரியவில்லை.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல கொஞ்சம் படிச்சுட்டு போர் என்று ஒதுக்கக் கூடாது. அப்புறம்தான் கதை தொடங்கி முடிவுவரை பிரளயம்தான்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.