Jump to content

இயல்பு மாறாத மலையாள சினிமா... ஓர் அறிமுகம்..! - ‘மலையாள கிளாசிக்’ -


Recommended Posts

இயல்பு மாறாத மலையாள சினிமா... ஓர் அறிமுகம்..! - ‘மலையாள கிளாசிக்’ - பகுதி 1

 
 

மலையாள கிளாசிக்

'விகதகுமாரன்' மலையாளத்தின் முதல் படம் என்று அறிய முடிகிறது. வெளிவந்த ஆண்டு 1928. ஜெ சி டானியல் இயக்குநர். அவர் ஒரு தமிழர். மலையாளிகள் அவரைப் பற்றியும் படம் எடுத்து விட்டார்கள்; பெரும்பாலானோர் பார்த்திருப்போம். பின்னர் வெளிவந்த படங்களின் பட்டியலோ வரலாறோ இந்த கட்டுரைக்கு அவசியம் இல்லாத பட்ஷம் மலையாள சினிமா பொதுவில் எவ்வாறு தோற்றம் தந்தது என்பதை பார்க்கலாம். உத்தேசப்படி, சினிமா வந்ததும் அதில் பங்கு பெறுவதற்கு கலைஞர்கள் முண்டியிருக்க மாட்டார்கள். அதனால் எல்லோருக்கும் தெரிந்த புராணக்கதைகள், நல்லத்தங்காள் போன்ற தொன்மக் கதைகள் படமாக்கப்பட்டன. படம் பிடிப்பதே பெரிய விஷயமாய் இருந்திருக்கும். அதை எடுத்து செய்பவர்கள் எல்லாம் தேவ தூதர்களாய் பட்டிருப்பார்கள். அதை ஒரு மயக்கமான காலம் என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

தெளிவது என்பது தனது தனித்தன்மைக்கு அது வந்து சேருவது என்று பொருள்படும்.

அந்நிய தன்மையோ அல்லது மேடை நாடகமோ அதிகம் இல்லாமல் கேரள மண்ணை மையப்படுத்திய கதைகளின் காலம் ஐம்பதுகளில் தொடங்கி விட்டது. பி பாஸ்கரனும் ராமு காரியத்தும் செய்த நீலக்குயில் ஒரு முழுமையான படம். ராரிச்சன் என்ற பவுரன், நாயர் பிடிச்ச புலிவாலு இவைகள் எல்லாம் மக்களால் கண்டுகளிக்கப்பட்ட படங்கள். வாழ்வை பற்றி சொல்லப் புகுந்தாலும் வெகுசன விருப்பத்துக்கு உவப்பான வடிவில் இவைகள் எடுக்கப்பட்டிருந்தன. அவைகளில் பல்வற்றிலும் கலையம்சமும் கண்டுணர முடிவதாயிருந்தது. சத்யனும் பிரேம் நசீரும் ஷீலாவும் எல்லாம் வந்து விட்டிருந்தார்கள்.

மலையாள கிளாசிக்

செம்மீன் கேரளாவை ஏறிட்டு பார்க்க வைத்த படம்.  

அது தகழி எழுதிய நாவல். பாத்திரங்கள் உயிர் பெற்றிருந்தன. பாடல்கள் எல்லா திக்குகளிலும் ஒலித்தது. மொழி பேதமில்லாமல் சப் டைட்டில்கள் இல்லாமல் சகலரும் படம் பார்த்தார்கள். அது சென்னையிலும் கூட ஹவுஸ் புல் காட்சிகளாய் ஓடின படம். கடலினக்கர போனோரே என்பது இந்தியா முழுவதும் தெரிந்த வரிகளாய் கூட இருக்கும்.

கேசவ தேவின் ஓடையில் நின்னு என்கிற நாவல் சேது மாதவனால் படமாக்கப்பட்டது. பஷீரும், தகழியும், பாறப்புறத்து போன்ற எழுத்தாளர்களுக்கு சினிமாவின் மீது ஒவ்வாமையில்லாமல் இருந்திருக்க வேண்டும். சரியாய் சொன்னால் இலக்கியத்தின் கூடேயே நடக்கிற அளவிற்கு சினிமா தரம் கொண்டிருந்தது. மெல்ல சொல்லியவாறு வந்து முடியும் நேரத்தில் அர நாழிக நேரத்தின் கதை என்னை திடுக்கிட செய்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அதை போலவே பார்கவி நிலையத்தில் வந்த யட்ஷி வின்சென்ட் மாஸ்டரின் கைவண்ணத்தில் மிகவும் சுவாரஸ்யமாயிருந்தாள். இலக்கியம் மட்டுமின்றி சமூக நாடகங்கள் மக்களின் வாழ்வில் இரண்டற பங்குபெற்றிருந்தது. பொதுவாகவே பைங்கிளிக் கதைகளில் கூட குறைந்த பட்ஷ  நம்பிக்கைத்தன்மை இருந்தது. அவைகள் எல்லாம் சேர்ந்த போது திரைப்படங்கள் தங்களை செழுமையூட்டிக் கொண்டன.  மேலும் இந்தியாவின் தெற்கில் தோன்றிய கம்யூனிச அறைகூவல் கேரளத்தில் மட்டுமே அன்று  நிலைகொண்டது. நக்சலிச வெடிப்புகளும் கூட. ஒருவிதமான கொந்தளிப்பு அரசியலில் இன்றும் கூட பங்கு பெறுகிற மக்களின் பரந்த அறிவும் கூட சினிமாவின் விரிவுக்கு காரணமாய் இருந்திருக்க வேண்டும். அப்புறம் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது பற்றின விவரம் அனைவருக்கும் தெரியும்.  

அங்கே நாடகத்தில் சக்கை போடு போட்ட தோப்பில் பாசியின் படைப்புகள் படமாக்கப்பட்டதில் வியப்பில்லை. நீங்கள் என்னே கம்யூனிஸ்ட்டாக்கி, துலாபாரம் மற்றும் பல படங்கள். அதை போலவே தான் பக்கர், அடூர் கோபாலகிருஷ்ணன், அரவிந்தன் போன்ற இயக்குநர்களின் பங்களிப்பு. அடூர் மொத்த இந்தியாவையும் கவர்ந்தவர். எலிப்பத்தாயமும், முகாமுகமும், கதாபுருஷனும் காலத்தில் உறைந்தவர்களை, காலத்தைக் கடந்தவர்களை பற்றி சொன்ன நவீன சினிமாக்கள். அதில் கேரள வரலாற்றின் தீற்றல்கள் இருக்கின்றன. நாட்டின் மொத்த மக்களும் பல விஷயங்களும் புரியாத ஆர்ட் படங்களுக்கு வரவேற்பு கொடுத்தவர்களாய் இருந்திருக்கவே முடியாதென்றாலும் அதை செய்த கலைஞர்கள் எள்ளிநகையாடப்படவில்லை. அரசு விருதுகளை வாரி வழங்கினது போக ஜனங்கள் அவர்களை போற்றத் தெரிந்திருந்தார்கள். வெற்று அறிவுஜீவிகளாக அவர்கள் அந்த மண்ணில் இருந்து அந்நியப்படவில்லை.

ஜான் ஆபிரகாம் பற்றி நூறு கதைகள் சொல்லலாம்.

காதல் இருந்தது. கண்ணீர் பெருக்கினார்கள். பாட்டுக்கள் இருந்தன. விக்குத் தலைகளுடன் நடிகர்கள் பறந்து பறந்து சண்டை போட்டார்கள். அந்த மாதிரிப் படங்கள் எங்கே இல்லாமலிருக்கின்றன? பிரேம் நசீர் கல்லுரிப் பையனாய் ஜெயபாரதியை நோக்கி விசிலடித்த ஒரு படத்தை திக்கென்று நினைத்துக் கொள்கிறேன். இதற்கெல்லாம் சலித்துக் கொள்ளுவதில் அர்த்தமேயில்லை. அதனிடையே அங்கே பரதனால் எழ முடிந்தது. சின்ன சின்னதாய் எத்தனைக் காவியங்கள்? லோகி எழுதி அவர் இயக்கிய தனியாவர்த்தனம் ஓன்று போதாதா?அல்லது எம் டி வாசுதேவன் நாயர் எழுதினதை இயக்கிய தாழ்வாரம் மட்டும் பாருங்கள். ஒவ்வொரு படமும் நமக்கு ஒவ்வொரு உலகை அறிமுகம் செய்பவை. தனியாவர்த்தனம் போலவே அவர் இயக்கிய வெங்கலம் என்கிற படத்தைக் கூட மறுமுறை பார்க்க அஞ்சுபவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட படங்கள்.   

பரதன் என்றால் அடுத்து இவரது பெயரை சொல்லியாக வேண்டும். பரதனின் பல படங்களுக்கு எழுதியவர். மற்றும் பலருக்கும் எழுதி இருக்கிறார். அடிப்படையில் எழுத்தாளர். தன்னை சினிமாவுக்காக குவித்துக் கொண்டார். கதை எழுதின படத்தை இயக்கியவர் யாராக இருந்தாலும் அதில் தன்னை தெரிய வைக்கிற அளவிற்கு தனித்தன்மை இருந்தது முக்கியம். பத்ம ராஜன். அவரது படங்களை அலசி அந்தப் படங்களில் என்றும் உள்ளோடுகிற புதுமையை ஆயிரம் பக்கங்களில் எழுதலாம். கள்ளன் பவித்ரனின் புன்னகையை அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். தூவானத் தும்பிகள் , நமக்கு பார்க்கான் முந்திரித் தோப்புக்கள், அரப்பட்ட கெட்டிய கிராமம் போன்ற படங்களில் எல்லாம் முழுமையாய் கூட போக வேண்டாம், அவற்றின் ஆரம்பங்களே பிரமிப்புண்டாக்கக் கூடியவை. திரைக்கதையின் கூரிய ரகசியங்களில் அவரது கதைகள் ஒளிர்வதை பார்க்க வேண்டும். அப்புறம், சில நாட்கள் முன்பு மரணமைடைந்த ஐ வி சசி எழுத்தாளர்களின் துணையுடன் நூறு படங்களுக்கு மேலே இயக்கியிருக்கிறார். மீண்டும் ஒருமுறை கேரளத்தின் திரை எழுத்தாளர்களை நினைவு கொள்ளும் வண்ணம் பல இயக்குநர்கள் இயங்கியிருக்கிறார்கள். முக்கியமாய் சிபி மலையில். அவருக்கு எழுதிக் கொடுத்தவாறிருந்த லோகிதாதாஸ். 

மலையாள கிளாசிக்

பி பாஸ்கரன், சேதுமாதவன் போன்ற மாஸ்டர்களின் படங்களில் இருந்து விலகி பரதனும் பத்மராஜனும் ஒரு திருப்பம் என்றால் லோகி எழுதின படங்கள் அனைத்தும் வேறு ஒரு தினுசு. நமக்கு தெரிந்த சம்பவங்களில் இருந்து நாம் பார்க்க முடியாத கோணத்தில் அவர் கதை சொல்லும் போது மக்கள் தங்களையே பார்த்து வியப்பில் இருந்திருப்பார்கள் என்று எனக்கு எப்போதும் படும். வரிசையாய் எவ்வளவோ படங்கள். மோகன் லால் வரிசையாய் பண்ணின பல கதாபாத்திரங்களில் முன்னிறுத்தப்பட்ட துயருக்கு கசியாதவர்கள் இருக்க முடியாது. மற்றுமொரு ஜோடி இருந்தது. சத்யன் அந்திக்காடும், ஸ்ரீனிவாசனும். கொஞ்சம் சிரிக்க வேண்டியிருந்தாலும் நடுத்தர வர்கத்தின் அரசியல் சமூக குடும்ப கோணல்களை காட்டிக் கொடுத்தார்கள். கமலா தாஸின் கதைகள் கூட படமாகியிருக்கின்றன.  பாலு மகேந்திரா மலையாள ஸ்டைல்களுக்கு மறுபுறம் நின்று மூன்று படங்கள் செய்தது அந்த மக்களால் இன்றும் நெகிழ்வுடன் நினைத்துக் கொள்ளப்பட்டவாறு இருக்கும். கே ஜி ஜார்ஜும் கதைகளை சொன்னவர் தான். முற்றிலும் காவிய பாவனையில் ஒரு கலைஞனை விஸ்தரித்த வானப் பிரஸ்தம், ஷாஜி என் கருணுடையது.  சூப்பர் ஸ்டார்கள், மார்க்கெட் நடிகைகள் அல்லாமல் லலிதாவும், கவியுர் பொன்னம்மாவும், சுகுமாரியும், பிலோமினாவும் எல்லாம் கதைக்குள்ளிருந்து வந்தவாறிருந்தார்கள்.   சொல்லி வர வேண்டும் என்றால் அந்த மண்ணில் கதைகள் முளைத்து வந்தன. கதைகள், பின்னால் வருபவர்களின் நினைவுகளில் படிந்து கிடந்தன. வரிசையாய் பல இயக்குனர்களை, கதாசிரியர்களை, தொழில்நுட்ப வல்லுநர்களை சொல்லிக் கொண்டே போகலாம். அவர்கள் படத்தில் அவர்களின் மண் இருந்தது. மொழி இருந்தது. வாழ்க்கையும் கலாசாரமும் இருந்தது.

அதெல்லாம் அவர்களுக்கு பெருமையாகவும் இருந்தது. 

இதுவரையில் சரி. இன்று உலகின் முகமும் கேரளத்தின் முகமும் வேறு. யாரும் பிட்டும் கடலையும் பப்படமும் பிரதமனும் பேண விரும்பவில்லை. டைனிங் டேபிளில் பர்கரும் ஆப் பாயிலும் வைக்கிறார்கள். கள்ளுக் கடைகளில் வெறும் குடிகாரர்களே மிச்சமிருக்கிறார்கள்.கல்வியும் வேலைவாய்ப்பும் அசுர வளர்ச்சிகளும் அமைந்து விட முடியாத அந்த நில பரப்பை துறந்து வெளியேறி செல்வது மிகவும் துரிதப்பட்டிருக்கிறது. நிர்ப்பந்தமாயிருக்கிறது. திரைக்கடலோடி திரவியம் தேடுகிற நெருக்கடி மனிதர்களுக்கு நடுவே கொண்டு வரும் பேதங்கள் இப்போது இரண்டு மடங்காயிருக்கின்றன. மனித உறவுகளில் இருந்து நழுவத் துவங்கிய லட்ஷியம் மறைந்து வாழ்வின் முகம் வேறு பாவனைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. உலகம் மாறும் போது, தேசம் மாறும் போது, மாநிலமும் மாறியாக வேண்டுமே. உலகம் நம்மை நெருங்கி வந்தவாறிருக்கும் போது, நாமும் அதை அணைத்துக் கொள்ள முந்தியவாறிருக்கிறோம். நமது சினிமாக்களும் அப்படித்தான் இருக்க முடியும்.

சரியாய் சொன்னால் கொஞ்சம் முதிர்ந்த ஆட்களை விலக்கி விட்டு ஒருவகையில் கேரளா பையன்களின் சினிமாவை துவங்கி விட்டது. நான் முதிர்ந்தவர்கள் என்று வயதானவர்களையோ பையன்கள் என்று இளைஞர்களை இளம்பெண்களை மட்டுமோ குறிப்பிடவில்லை.அப்படிப்பட்ட படங்கள் வரிசையாய் வந்தவாறு இருக்கின்றன. கம்மாட்டிபாடமும், தொண்டி முதலும் திருக்சாட்க்ஷியும் கூட நான் சொல்லுவதில் அடங்குபவை தான்.

ஒரு வசதிக்காக அடுத்த பதிவை, சால்ட் அண்ட் பெப்பரில் இருந்து துவங்குவோம். 

https://cinema.vikatan.com/south-indian-news/119115-malayala-classic-series-episode-1.html

Link to comment
Share on other sites

காட்டுத் 'தீ'யை உண்டாக்கிய சிறு பொறியே இந்த 'சால்ட் அண்ட் பெப்பர்'..! - ‘மலையாள கிளாசிக்’ - பகுதி 2

 
 

மலையாள கிளாசிக்

 

இந்தப் படத்தில் பால கிருஷ்ணன் என்கிற ஒரு கதாபாத்திரம் உண்டு. மானுடவியல் ஆள். தனது குழுவினருடன் ஒரு பகுதியில் பள்ளம் தோண்டி சரித்திரத்தை ஆராய்ந்துகொண்டிருக்கிறார். நான் பெரிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி நோபல் பரிசேகூட வாங்குவேன் என்கிறார். படத்தின் இறுதிப் பகுதியில் குழு மூட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறது. நொந்து போயிருக்கிற ஹீரோவுடன் டீ அருந்தியவாறே ஒன்றும் கிடைக்கவில்லை என்கிறார். பர்சனலாய் தனது இளமை பருவத்தின் காதலைச் சொல்லுகிறார். அப்போது தவறவிட்டவள் போட்ட டீதான் இது, எப்படி இருக்கிறது என்கிறார். அதோ தெரிகிறதே, அதுதான் அவள் வீடு !

 

படிப்பு, பணம், பதவி, வெற்றிகள் எல்லாம் தாண்டி சில விஷயங்கள் உண்டு. அரசு செலவில் பள்ளம் தோண்டி கொஞ்ச காலம் இங்கிருந்து செலவழித்தேன், தோண்டும்போதே ஒன்றும் கிடைக்காது என்று தெரியும் என்றவாறே குழுவினருடன் கிளம்புகிற அவர் இந்தப் படத்தின் மைய நாடி என்று சொல்லலாம். உலகில் ஆயிரம் காதல் கதைகள்- இந்தப் படம் ஏன் நம்மை ஈர்க்கிறது என்றால் இந்த முதிர்ச்சிதான். அது இளமையோடும் பொலிவோடும் இருந்தது.

சால்ட் அண்ட் பெப்பர் ஸ்வேதா மேனன்

ஒரு பள்ளியின் வகுப்பில் ஆசிரியர் சொல்கிறார். நாமெல்லாம் உயிர் வாழ்வதற்காகச் சாப்பிடுகிறோம். இல்லையே சார் என்கிறான் ஒரு சிறுவன். நாம் சாப்பிடுவதற்காகத்தான் உயிர் வாழ்கிறோம். அனைவரும் சிரித்துக்கொண்டிருக்கையில் ஒரு புளியம்பழத்தை வாயில் நுழைத்து அதை அப்படியே வெளியே இழுக்கும்போது வகுப்பே எச்சில் விழுங்குகிறது. கண்கள் அடைத்து அந்த மதுரப் புளிப்பில் கிறங்கியிருக்கிற அச்சிறுவனான காளிதாசனின் முகத்தில்தான் படம் துவங்கி நகரும். அவன் ரசிகன். வளர்ந்து திருமணத்துக்குப் பெண் பார்க்கப் போன இடத்தில்கூட நெய்யப்பம் சுட்ட ஆளைக் கூட்டி வருவதில்தான் அவன் மனம் இருந்திருக்கிறது. பெண்களை அறியாமல் இளமையைக் கடந்துவிட்ட அவனுக்கு அவனைப் போலவே ஒரு பெண்ணின் மீது காதல் வருவதுதான் கதை. அவளும்கூட அவனைக் காதலிக்கிறாள். ஆனால், அந்தப் பெண்ணோடு ஓர் இளம்பெண்ணும், காளிதாசனுடன் ஓர் இளைஞனும் இருக்கிறார்கள். அவர்கள் இவர்கள் இருவரையும் முதலில் பார்க்க விடாமலும் அப்புறம் சேர விடாமலும் தடுப்பது எதற்கு என்பதும், அதை மீறி இவர்கள் எப்படிச் சேர்ந்தார்கள் என்பதும் முடிவு.  

படத்தில் பிரமாண்டமான புனைவுகளோ தத்துவ சிக்கல்களோ கிடையாது. ஆனால், கதைக்குள் நம்மை உள்ளிழுத்து இறுதி வரை அழைத்துச் செல்லும் பாங்கில் நாம் மெய்மறக்கிறோம். முதலில் ஓரிரு படங்கள் வந்திருந்தாலுமே ஒரு மலையாளப் படம் தனது திரைமொழியை இதில் முற்றிலுமாய் மாற்றிக்கொண்டிருந்தது. அதே நேரம் வேறு பல சர்க்கஸ் காட்டி ஒவ்வாமையையும் உருவாக்கவில்லை. ஸ்வேதா மேனன் செய்த மாயா என்கிற பாத்திரம் எங்கேனும் நாம் பார்த்திருக்கக் கூடியவள்தான். தண்ணியடித்து பிட்டாகிக் கண்ணீர் விடும் அவளது தனிமையைத்தான் பார்த்திருக்க முடியாது. ஒரு விசேஷமும் இல்லாத ஏதாவது மொக்கைகூட அவளிடம் வர்றியா என்று கேட்டுவிட முடியும். கல்யாணக் கனவுகளைப் பொசுக்கிப்போட்டுவிட்டு நாக்கின் ருசியில் நாள்களை ஓட்டிக் கொண்டிருக்கும்போதுதான் காளிதாசனின் உறவு  கிடைக்கிறது. எல்லாம் போனில்தான். தாழ்வு மனப்பான்மையால் சந்திப்பதில் சிக்கல்கள் நேர்கின்றன. நான் சொல்ல வருவது, வாலிபம் கடந்த ஒரு பெண்ணின் பதற்றத்தைக் குறி வைத்த படமாய் இருந்தது இது. அதன் கத்திக் குத்துகளை நம்மால் உணர முடிந்தது. அவள் தன்னையே வெறுத்துக்கொள்கிற எல்லையில் திரள்கிற கசப்பை சரியான அளவில் சொல்லி இருந்தார்கள். 

சால்ட் அண்ட் பெப்பர் பாபுராஜ்

அது அப்படித்தான். படத்தில் மனு என்கிற அந்தப் பையனோ மீனாட்சி என்ற அந்தப் பெண்ணோ காதலித்து விடுவதைப்போல காளிதாசனும் மாயாவும் காதலித்து விட முடியாது. நிறைய தயக்கங்கள், நிறைய சந்தேகங்கள். ஆனால், அவர்களுடைய கோப்பைகளில் காதல் நிரம்பும் போது இருவருமே அதன் தாக்குதல்களில் தத்தளிக்கிறார்கள். படத்தில் மிக அருமையான காட்சிகளில் ஓன்று, இவர்கள் இருவருக்குமான லவ் மான்டேஜ். உலகப் போருக்குச் சென்று திரும்பாத தனது காதலனுக்காகக் காத்திருந்து தினம் ஒரு கேக்கை செய்யும் பிரெஞ்சுப்  பெண்ணின் கதையோடு இவர்களுடைய உறவு வலுப்படுவதை ஒரு எடிட்டர் மற்றும் இசையமைப்பாளர் துணை கொண்டு நெறியாளுகை செய்திருப்பதைத் தனியாய் சொல்லலாம். அது ஒரு எபிசோட். பின்னால் சொல்லப் போகிற கதைக்கு அடித்தளமாய் அமைவது. V Saajan எடிட் செய்திருந்தார்.Bijibal, Avial இருவரும் இசையமைத்திருந்தார்கள். படம் பார்க்கிறவர்களை அங்கே கண்ணிமைக்காமல் செய்வதன் மூலமே, சற்றுத் தள்ளி அவர்கள் சந்திக்க முடியாமல் போகும்போது டென்ஷனை முறுக்க முடிகிறது.

இந்தத் தொழில் நுட்பங்களைக் காட்டிலும் நாம் அணைவது வேறு பலவற்றில் என்றுதான் சொல்ல வேண்டும். முக்கியமாய் உணவு. அது எங்கெங்குமாய் பரவியிருந்த ஒரு பாத்திரமாகவே இருந்தது. உயிர் வாழ்வதற்காகச் சாப்பிடுகிறோம் என்கிற எண்ணம் இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம். படம் முடிவதற்குள் பசியை உண்டாக்குகிற வேலையைப் படம் செய்கிறது. அந்த உணவை ரசித்து உண்பவர்களை, அதை சமைப்பவர்களை வியக்க வைக்கிறார்கள். குட்டி தோசையுடன் வந்து சேர்கிற அம்மாவின் அன்பு சொல்லப்பட்டபோது உண்ட, உண்கிற எதற்குமே நினைவுப் பாதைகள் உள்ளன என்று துணுக்குறுகிறோம்.  வாழ்வு உள்ளது. காளிதாசனுடன் இருக்கிற, பாபு என்கிற ஒரு பெண் தன்மையுள்ள சமையல்காரன் நமக்குள் எழுப்புகிற நெகிழ்வுகளைச் சொல்ல சொற்களில்லை. ஓரிரு முறை முகம் காட்டுகிற கல்பனா மற்றும் இதரர் யாருமே கதையின் மீது பாய்ச்சப்படும் வெளிச்சங்கள்தான். 

சால்ட் அண்ட் பெப்பர் லால்

லால் ஒரு அற்புதமான நடிகன். அவரது இடறலான குரலில்தான் எத்தனை துக்கம்? ஸ்வேதா, திரையில் ஓடும் பைங்கிளிக் கதைக்கு வாய் விட்டு சிரித்து, டப்பிங் துவங்கும்போதே தன்னைச் சொல்லி விடுகிறார். ஆசிப் அலியும், மைதிலியும் குறை வைக்கவில்லை. நான் முதலில் சொன்ன பாலகிருஷ்ணன் பாத்திரத்தை செய்தவர் விஜய ராகவன். அடிப்பொளி. அப்புறம் காட்டின் மூப்பன் ஒருவர் இருக்கிறார். நல்ல ஒரு பார்வையும், கொஞ்சம் சிரிப்பும் மட்டும்தான். போதுமானதாயிருந்தது. திலேஷ் போத்தன் ஒரு டைரக்டர் இந்தப் படத்தில். டப்பிங் தியேட்டருக்கு தனது பட காரியமாக வந்துபோய்க்கொண்டிருக்கிறார். மாயாவிடம் ஒரு சில்லறைக் காமம், வளைந்தால் பொட்டலம் கட்டி விடலாம் என்கிற நப்பாசை, அதை அவர் அதகளம் செய்திருக்கிறார்.முக்கியமாய் இறுதிக் காட்சி. இப்படி வந்து போகிறவர்கள்கூட பொருந்தியிருக்கிறார்கள் என்பதை தனியாய் கவனிக்கலாம்.

Syam Pushkaran, Dileesh Nair ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். கச்சிதம். திரைக்கதையின் வழுக்கலில் அவர்களுடைய திறமை துல்லியம். 

Shyju Kahild ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அளவான வேலைதான். ஆயின் எனக்கு ஏதோ ஸ்பானிஷ் படம் பார்க்கிற உணர்வு தோன்றிற்று. இந்த வர்ணங்கள் கேரளப் படங்களுக்கு வந்துவிட்டதா என்கிற பொறாமை முதலில். அது வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அப்புறம் அதில் இருக்கிற பேலன்ஸ் பெரிய விஷயமாய் பட்டது. புதிய தலைமுறையை இந்தப் படம் தொட்டதற்கு ஒளிப்பதிவாளரின் கண்களும் கூட காரணம். வேறு ஒன்றும் சொல்ல வேண்டும், எவ்வளவு எளிமை என்பது இப்போதும் பிரமிப்பாய் இருக்கிறது. 

சால்ட் அண்ட் பெப்பர்

ஆஷிக் அபு பற்றி நான் விவரிக்கப் போவதில்லை.

முதல் காரணம் நான் படத்தைப் பற்றிச் சொன்ன மேன்மைகளை எல்லாம் கொண்டு வந்தவர் அவர். ஆமாம், எல்லாப் புகழும் அவருக்கே. அதைவிட முக்கியமானது வேறொன்று.

 

இன்று கிளாசிக் படங்களின் முகம் மாறி பலரும் பல படிகளில் ஏறி விட்டார்கள். மலையாளப் படங்கள் இன்று பல்வேறு பிரச்னைகளை சொல்கின்றன. பல தரப்பிலும் இருந்து புதுமைகள் திரண்டவாறிருக்கின்றன. இதில் நான் கருதுகிற பையன்களின் சினிமா துவங்கினதற்கு இந்தப் படம் ஒரு வழிகாட்டியாய் இருந்தது. அது சொன்னால் போதுமா. கதாகாலட்சேபம் பண்ணிக்கொண்டிருந்தவர்கள் அது இனி முடியாது என்கிற பயத்தை அடைந்தார்கள். நட்சத்திரங்கள் தங்களுடைய போக்கை, இயக்குநர்களை மாற்றிக்கொள்ள  வேண்டியிருந்தது. புதுப் பையன்களும், பெண்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களுமாய் அலையலையாய் வந்தவாறிருக்கிறார்கள். பக்கத்து மாநிலங்களில் கூட சினிமாவை சீராக்கும் பேச்சு எழுந்திருக்கிறது.  எழும் சிறு பொறிதானே எப்போதும் மிகப் பெரும் தீ. எனவே சால்ட் அண்ட் பெப்பர் என்கிற சிறிய சினிமாவைத் தந்த அவரை, ஆஷிக் அபுவை அணைத்துக்கொள்கிறேன்.

https://cinema.vikatan.com/south-indian-news/119737-malayala-classic-series-episode-2.html

Link to comment
Share on other sites

’அன்னாயும் ரசூலும்'... இது எழுவதும் விழுவதுமான காதலின் அதிசயம்! - மலையாள கிளாசிக் பகுதி 3

 
 

மலையாள கிளாசிக்

 

மலையாளப் படங்களின் மாற்றம் பற்றி சொல்ல வந்தாலும் அதை புள்ளி விவரங்களுடன் ஒரு வரலாறு போல சொல்ல விரும்ப மாட்டேன். கலையை அடுக்கி வைத்து விளக்கக் கூடாது. எனவே 2010 க்கு அப்புறம் வந்த படங்களை சுவாரஸியமாய் அறியும் பொருட்டு வரிசை கலைத்து அங்கேயும் இங்கேயுமாய் சொல்ல முடியும். ஏனென்றால் இப்போது வந்த ’தொண்டி முதலும் திருக்சாட்க்ஷியும்’ ஏன் அத்தனை அற்புதமாயிருந்தது என்கிற கேள்விக்கு பதில் சொல்லும் வண்ணம் சில இயக்குநர்களின் படங்களை முன்னமே சொல்ல வேண்டியிருக்கிறது. அதில் ராஜிவ் ரவி முக்கியமானவர். அவர் இயக்கிய ’அன்னாயும் ரசூலும் புழக்கத்தில் இருந்த சில அடிப்படைகளை தகர்த்த படம். சொல்லப் போனால் சினிமாவின் எல்லைகளை விஸ்தரித்த படம்.

 

ஆஷ்லி என்கிற ஒருவன் தான் பின்னணிக் குரலில் கதை சொல்கிறான். 

மலையாள கிளாசிக்

விடுமுறையில் வந்து ரசூலுக்கு நண்பனாகிற அவன் சொல்லுவது ரசூலைப் பற்றியே. அவன் காதலித்த அன்னாவைப் பற்றியும். ஒரு காதல் கதை என்று சொல்லி விட முடியுமா. ராஜிவ் ரவி அப்படி தன்னைக் குறுக்கிக் கொள்கிறவரில்லை. இதில் எழுவதும் விழுவதுமான வாழ்க்கை இருக்கிறது. மனிதர்களின் வறட்டு பிடிவாதங்கள் மனிதர்களையே பழிவாங்குகிற அல்லாட்டத்தினைப் பற்றின விமர்சனம் இருக்கிறது. சொல்லப்படுவது ஒரு காதல் கதையே தான் என்றே எடுத்துக் கொண்டாலும் அந்தக் காதலில் மூச்சு திணறிப் புரள வேண்டியிருப்பதன் காரணம் மனிதன் தன்னை தேக்கி வைத்து நாறுவதல்லாமல் ஒருபோதும் தன்னை புதுப்பித்துக் கொள்ளாதது தான் என்பது வெளிப்படை.

ரசூல் காசுக்காக மற்றும் நண்பர்களுக்காக சில கோணலான தவறுகளில் பங்கு பெறுகிறான். கார் ஓட்டப் போகிறான். அப்படி ஒரு தருணத்தில் அன்னாவை ஒரு கணம் பார்க்க முடிந்து, ஆஷ்லி இருக்கிற ஊரில் திருவிழாவிலும், அப்புறம் ஆஷ்லியின் எதிர் வீட்டிலுமாய் அவளை முழுமையாய் அறிந்து காதல் கொண்டு அவளை பின்தொடர்கிறான். அவளும் கவனிக்கிறாள். கண்களாலே பேசிக் கொள்ளும் காதல் கனியத் துவங்கி அது தித்திப்பாகிற வரையில் நகர்ந்து வரும் திரைக்கதையில் ஒரு இடறல் இல்லை. திணிக்கப்பட்ட  கட்டுக்கதை இல்லை. அசல் பையன்கள். பெண்கள். குழந்தைகள். அந்தக் காதல் உடனடியாய் பற்றுவதில்லை.

அவள் அவன் தனது விருப்பத்தை சொன்ன பிறகு பதில் சொல்லாமல் நடந்தாலும் அவளுக்குள் ஆசைகள் திரள்வதை காட்சியாலும் இசையாலும் அதை ஒரு துயராகவே சொல்லுகிறார்கள். ஆமாம், பெண்ணை சூழ்ந்திருப்பது ஒரு குடும்பம் மட்டுமில்லை. ஒரு கலாசாரம். பகடையாய் உருட்டப்படவே அவள் ஜீவன் கொண்டிருப்பாள். பின்னர், அன்னா சொல்லுவதெல்லாம் ஒன்றுதான், இது நடக்காது. எனக்கு பயமாய் இருக்கிறது.

ரசூல் முசல்மானாகவும் , அன்னா கிறிஸ்தியாயினியாகவும் பிறந்து விட்டார்களில்லையா.    

மலையாள கிளாசிக்

திருவிழா அடிதடியில் முன்னே நின்ற ஒரு பையனை ரசூல் தாக்க வேண்டி வருகிறது. என்ன செய்வது? அவன் துரதிர்ஷ்ட வசமாய் அன்னாவின் தம்பி. எனினும் அன்னாவை சமாதானப்படுத்த ரசூலால் முடிகிறது. இருவரும் நெருக்கம் கொள்ள போகிற நேரத்தில் தம்பியும் அவனது நண்பர்களுமாய் ரசூலை தாக்குகின்றனர். வேறு வழியின்றி ரசூல் தனது தந்தை வீட்டுக்கு செல்ல, அன்னாவிற்கு திருமண நிச்சயமாகிறது. கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கிற கதை தான். ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை பெற்று விவாகரத்தான பிராஞ்சி, அன்னாவை மணமுடிக்கப் போகிறான். ரசூல் நடைப்பிணமாக பிழைப்பை பார்த்தாலும் அவனுக்குள் இருக்கிற அன்னாவை தண்ணீரில் இறங்கி கண்களைத் திறந்து தனது மனக்கண்ணில் பார்த்தவாறு தினங்களை நகர்த்துகிறான். நண்பர்கள் அவன் சந்தித்து அன்னாவிற்கு நடக்கப் போகிற திருமணத்தைப் பற்றி சொல்லுகிறார்கள். சும்மா சொங்கிக் கொண்டிராமல் விருப்பப்பட்ட பெண்ணை அழைத்து வரத் தெரியாதா என்று முறுக்குகிறார் அவனுடைய அப்பா. அப்படித்தான் என்று கைதட்டுகிற மாதிரி,  பிராஞ்சியின் கண் முன்னாலேயே அவளைக் கடத்திக் கொண்டு வந்து விடுகிறான் ரசூல்.

ஆனால் இருவருக்குமிடையே மதங்கள் இருக்கின்றன. ஒருவர் மற்றவரை மதம் மாற சொல்லும் அழுத்தங்களுக்கு தங்களை இறக்கிக் கொள்ளாமல் ஆத்ம பலத்தோடு இருந்தும் கூட, அது அவர்களை முற்றுகையிடுகிறது. அங்கிருந்தும் ஓடி ஒரு இடத்தில் குடியமர்கிறார்கள். உறவு கொள்கிறார்கள். எல்லோரும் வாழ்கிற சகஜமான ஒரு வாழ்க்கை சந்தோஷமாய் துவங்குகிறது. பொதுவாகவே சிரிப்பை அறியாத அன்னாவின் புன்முறுவலை பார்க்கத் துவங்குகிறோம்.

பதைக்க செய்யும் காட்சிகளை முடித்துக் கொண்டு ஒரு பார்வையாளனை ஆசுவாசம் செய்யும் தருணங்களை  கொண்டு வர ஒரு இயக்குநருக்கு சினிமாவின் சக்தி தெரிய வேண்டும். அது இந்தப் படத்தில் இருக்கிறது. அவர்கள் இருவருடைய பந்தத்துக்கு நாம் பரப்பரக்கிறோம். ஆனால் அடுத்த நிமிடத்தை கூட தனது வசம் வைத்திருக்க முடியாத மனிதனின் கதைகளே விசித்திரமல்லவா. 

இரண்டு வகை படங்கள் உண்டு. அடி முதல் முடி வரை நானே சொல்லி முடிப்பேன் என்கிற பிடிவாதமான படங்கள். நீங்களும் இதில் பங்கு பெறுங்கள் என்று நம்முடன் கைகோத்து நம்முடன் சேர்ந்து பயணிக்கும் படங்கள். முதல் தரப்பு நமக்கு அகம்பாவத்துடன் போதிக்கிறது. இரண்டாம் தரப்பு நல்ல வாய்ப்பிருந்தால் வாழ்வை புரிந்து கொள்ள உதவுகிறது. அப்படி இந்தப் படத்தில் சொல்லி விட்ட சம்பவங்களுக்கு அப்புறமாக நாம் விளங்கிக் கொள்கிற எத்தனையோ காரியங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமாய் காதலர்கள் இருவருடைய மனதையும் நாம் துல்லியமாய் அறிந்து கொண்டு விடுகிறோம். ஒரு உயிர் இன்னொரு உயிரை பற்றிக் கொண்டிருக்கிற இறுதி நிலை அது.

மலையாள கிளாசிக்

எப்போதோ தனது நண்பர்களுடன் விபரீதமான காரியங்களுக்கு கார் ஓட்டப் போனது, இப்போது ரசூலின் தலையில் வந்து பிரச்னையாய் விழுகிறது.

நண்பனை கொன்று விட்டார்கள்.

போலீசார் ரசூலை அழைத்து செல்கிறார்கள்.

அன்னாவையும் குடும்பத்தார்  விட்டு வைக்கவில்லை. அள்ளி செல்கிறார்கள். மீண்டும் பிராஞ்சி திருமணத்துக்கு முன்வந்து அவளை தனது மனைவியாக்கிக் கொள்கிறான். எல்லா சடங்குகளுக்கும் அவள் நின்று கொடுக்கிறாள். எந்த அழிச்சாட்டியத்துக்கும் இறங்கவில்லை. நிறைந்த மௌனம் காக்கிறாள். அவளது முகத்தில் ஓரத்தில் எங்கோ சிறிய புன்னகை கூட இருக்கிறது. அது ஒன்றும் புதியதல்ல, பெரும்பான்மையான திருமணங்களில் நாம் பார்க்கக் கூடிய மணப்பெண்களின் முகம் தான்.

ரசூல் போலீசாரால் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்படுகிறான்.

திக்கோ திசையோ அரவணைப்போ இல்லாத சூழலில் தான் தன்னுடைய அன்னாவை நிர்க்கதியாக நிற்க வைத்து விட்டு வந்து விட்டோம் என்பது தானே அலைக்கழித்துக் கொண்டிருக்கும்?

தப்பிக்கிறான்.

ஓடி வருகிறான்.

வீட்டின் அருகே கூட்டம் கூடியிருக்கிறது.

சேது படம் போல தான். எவ்வளவு எளிமை எல்லாம்? அன்னா தன்னை முடித்துக் கொண்டு விட்டாள்.  

சந்தோஷ் எச்சிகானம் பெரிய எழுத்தாளர். அவர் தான் இந்தப் படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதியிருந்தார். அதை பற்றி சொல்லுவது என்றால் அன்னா மற்றும் ரசூல் அல்லாமல் எத்தனை கதாபாத்திரங்கள். அவைகளின் முகங்கள் நம்மை வியப்பூட்டக் கூடியவை. அவர்களின் வாழ்வுக் கோலங்கள் நம்மை நெகிழ்த்தக் கூடியவை. எந்த பொய்யையும் இட்டு நிரப்பாத, அதே நேரம் உயர எழும்புகிற புனைவுக்கு மந்தம் சேர்த்து விடாத அற்புதமான எழுத்து. ஒரு திரைக்கதை எழுதும் ஆளாய் நான் ஒவ்வொரு சட்டகத்திலும் பிரமித்திருந்தேன் என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும்.

மது நீலகண்டனின் ஒளிப்பதிவு. அது குளுமையாக, கண்ணுக்கு குளிர்ச்சியாக அமைய முடியாது. சீற்றமும் காட்டமும் சிறு அழகுகளின் தொகுப்பாகவும் அவரது வேலை விரிவடைந்தவாறு இருக்கும். அதில் சர்வ நேரமும்  தெறிக்கிற சவாலை பற்றி ஒரு முழுக் கட்டுரை தான் எழுத வேண்டும். அவரது பணியை முழுமை செய்கிறார் எடிட்டர் அஜித் குமார்.

மலையாள கிளாசிக்

ராஜிவ் ரவியை பற்றி என்ன சொல்லுவது?

அவரை ஒரு மலையாள இயக்குநர் என்பது பொருந்தி வராது.
அவரது வெளி உலகமயமானது. அவரது திரைமொழியின் சகஜம் பற்றி சினிமா தெரிந்தவர்கள் வியப்பார்கள். அசலான உணர்வுகளை சினிமாவாக மாற்றும் போது படத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் படைப்பாளியாகவே இருக்கிறவர். அவரது மனப்போக்கு, திரையில் ஆக்ரோஷமான ஒரு நாவல் எழுதுவது போல தான். மற்றும் மக்களின் பக்கத்தில் நிற்க விரும்புகிறவர் என்பதை தனியாய் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். ராஜிவ் ரவி ஒரு சூறாவளி போல இறங்கி மலையாள சினிமாவில் உண்டாக்கின தாக்கத்தை புறக்கணித்து விட்டு எவரும் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாது. தற்காலத்தில் படங்கள் வேறு முகம் கொண்டதற்கு அவர் ஒரு பெரிய காரணம்.

ரசூலாய் பகத் பாசில். அவரை காட்டும் முதல் காட்சியில் போலீசாரோடு நடந்து போகிற அந்த டாப் ஆங்கிள் ஷாட் ஓன்று போதும். அப்புறம்,  ஆண்ட்ரியா சிரிக்க முடியாத துயர் முகத்துடன் கண்களால் தனது ஜீவனை வெளிப்படுத்துவது அறியலாம். என்ன ஒரு நடிகை என்று துணுக்குறாமல் இருக்க முடியாது. இன்னும் பலரும் படம் பார்க்கிறவர்களின் ஏக்கத்தை தூண்டுவதை அறிய முடியும். ஒரே ஒரு முறை வசனம் சொல்லி விட்டுப் போகிறவர்கள் உட்பட.

படத்தின் பாடல்கள் இசை எல்லாம் புத்தம் புதியது.

படத்தின் முடிவை சொல்லவில்லையே?

ரசூல் தனது கூடுகளை உடைத்துக் கொண்டு ஊர் ஊராய் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு உந்துதல் உண்டாகும் நேரத்தில் அவனால் தண்ணீரில் இறங்க முடியும். கண்களை திறக்க முடியும். அவன் தனது உயிராய் அணைந்திருக்கிற அன்னாவை பார்க்க முடியும். எப்போதும் பார்க்க முடியும். அவனது பயணம் தொடர்ந்தவாறிருக்கிறது.

https://cinema.vikatan.com/south-indian-news/120421-a-note-on-annayum-rasoolum-malayala-classic-series-episode-3.html

Link to comment
Share on other sites

கரீம் பாயும் செஃப் பைசலும் உஸ்தாத் ஹோட்டலில் செய்த மேஜிக்! - மலையாள கிளாசிக் - 4

 
 

படம் பார்க்காத ஒரு விவரமுள்ள நண்பன் உஸ்தாத் ஹோட்டல் படம் எப்படி என்று கேட்டால் சற்றும் தாமதிக்காமல் அதை நான் ஒரு உலகப்படம் என்று சொல்லி விட முடியும். தொடங்கும் போதே அந்தப் படத்தின் விரிவு அப்படி. பைசல் படத்தினுடைய ஹீரோவின் பெயர். பைசல் பிறப்பதற்கு முன்னமே அவனது கதை தொடங்கி விடுகிறது என்று மம்முகோயாவின் பின்னணிக் குரலில் அதன் காட்சிகளைப் பார்க்கும் போது நமக்குப் புரியும். அந்த அத்தியாயத்தின் பல மடிப்புகளிலும் வளர்ந்துதான் பைசல் ஒரு நாயகனாகி நமது கண் முன்னால் நிற்பான். சொத்துகளைப் பரிபாலிக்க ஓர் ஆண் பிள்ளை பிறக்கும் என்று அப்பா காத்திருக்க நான்கு பெண்களுக்கு அப்புறம் பிறக்கிறான் பைசல். சகோதரிகளுக்கு நடுவே சமையலறையில் வளர்கிறான். காட்சிகளும் மணமும் சப்தமும் நாவறியும் ருசியுமாய் வாலிபனாகிற பைசல் எம்.பி.ஏ இன்னபிற படிக்காமல் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்க சுவிட்சர்லாந்துக்குப் பறக்கும் போது அவனது மனம் என்னவாயிருக்கும் என்பது நமக்கு விளங்கி விடும். 

மலையாள கிளாசிக்

பைசல் யாருக்குள்ளேயும் நிற்கிற தரத்தில் அந்த உலகத் தன்மை தொடங்கி விடுகிறது என்கிறேன்.

அங்கே அவன் ஒரு பெண்ணிடம் ஈடுபாடு கொண்டு அவளுடன் பிசினஸ் செய்ய பிராக்டிக்கலான திட்டங்கள் வகுத்து அடுத்தகட்டத்தை எப்படி நகர்த்துவது என்கிற நேரத்தில்தான் அக்காள்கள் நான்கு பேரும் சின்னதாய் மோசடி செய்து ஊருக்குத் திரும்ப வைக்கிறார்கள். 

இந்தப் படத்தின் எழுத்தாளர் அஞ்சலி மேனன். 

அரதப் பழசில் ஒண்ணு ரெண்டு மூணு என்று சொல்லாமல் சட்டென்று ஒரு அத்தியாயமாய் திரும்புகிற திரைக்கதையை நாம் இங்கே பார்க்க முடியும். பைசல் விமானத்தை விட்டு இறங்கியவுடன் அவன் கல்யாணம் கட்டப் போகிற மணப்பெண் வீட்டுக்கு அழைத்து செல்லப்படுகிறான். சொந்த ஊருக்குத் திரும்பி ஐந்து நட்சத்திர ஹோட்டலைக் கட்டி அதன் முதலாளியாகப் போகிற ஒரு வாலிபனை வளைக்க போட்டி இருக்காதா? அதிசுந்தரியான சஹானா எதிரே அமர்ந்திருக்கிறாள். படித்தவள். பேசுவதற்கு சங்கோஜமில்லாதவள். `நீ உன் ஹோட்டலை கட்டி முடிக்கும் போது நானே இன்டீரியர் டெக்ரஷனை பார்த்துக் கொள்கிறேனே’ என்று உரிமையுடன் கேட்கவும் செய்கிறாள். 

நான் சமைக்கக் கற்றுக்கொண்டு வந்திருக்கிறேன். ஹோட்டல் மேனேஜ்மென்ட் எதுவும் நோ. செப் என்கிறான் பைசல். 

பைசலின் அப்பா அப்துல் ரசாக்தான் ஒரு சமையல்காரனாக இருந்ததை மறக்க விரும்புபவர். 
பைசலைப் போட்டு அடித்தும் கிள்ளியும் கூச்சலிடுகிறார். `உன்னை இந்தக் கேவலத்தைக் கற்றுக்கொள்ளவா பணம் அனுப்பிப் படிக்க வைத்தேன்’ என்று பொருமுகிறார். இன்றைய நவீன மனிதனின் உயிர் ஆதாரங்களாய் இருக்கும் வங்கிக் கார்டுகளையும் பாஸ்போர்ட்டையும் குழந்தை போல பிடுங்கி வைத்துக் கொள்கிறார். செப் என்ற அடுத்த நிமிடம் அந்தப் பெண் காணாமல் போய் பெரும் சச்சரவு உண்டாகி அபவாதப் பேச்சு கேட்டு வந்த இருவரும் தங்களுடைய பிடிவாதத்தில் நிற்கிறார்கள். லண்டனுக்குச் சென்று தனது காதலியுடன் ரெஸ்டாரன்ட் நடத்த விரும்புகிற பைசல் அப்பனின் அஞ்சு நட்சத்திரச் சோற்றுக்கடை கனவை ஊத்தி மூடி, இரவோடிரவாக வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

மலையாள கிளாசிக்

உஸ்தாத் ஹோட்டல் இப்படியே நகர்ந்து செல்லும் ஒரு கதைதானா என்றால், கிடையாது.

ஏனெனில் உள்ளடுக்குகள் வைத்திருக்காத ஒரு கதை மக்களுக்கு நெருக்கமாவதில்லை.
இந்தியாவில் இந்துக்களை தவிர்த்த சினிமா சொற்பம். முஸ்லிம்களைப் பற்றி என்றால் துழாவ வேண்டும். இருவருக்குள்ளில் பகை வளர்த்து அரசியல் கொழிக்கிறது. முதலில் நாம் ஒருவனை அறிய வேண்டும் என்றால் கூட அவனது வாழ்வு, கலாசாரம் எல்லாவற்றையும் அறிய வேண்டாமா? என்னைப் போலவே அவனுக்கும் சிரிப்புண்டு, அழுகையுண்டு, வலியுண்டு, வாழ்க்கையுண்டு என்கிற படிப்பினை இருந்திருந்தால் யாரால் இந்தப் பிளவை உண்டாக்கியிருக்க முடியும். இப்படத்தில் எல்லோரும் காண்பது வேற்று மத மனிதரையல்ல, சக மனிதரை. அதுதான் கலையின் ஸ்பரிசம். முதலில் அந்த உணர்வை கான்ஷியசாக வைத்திருப்பதாலே இது முழு உலக சினிமாவாய் மாறுகிறது எனலாம். இத்தனைக்கும் இந்தக் கதை நிகழுவதெல்லாம் குறிப்பிட்ட பிராந்தியத்தில்தான். அங்குதான் பைசல் வந்து சேருகிறான். அவனது தாத்தாவிடம். 

உஸ்தாத் ஹோட்டலின் கரீம் பாய்.

அவனை அவர் அறிகிறார்.

மெதுவாக அவரால் அவன் செதுக்கப்படுகிறான். ஏனெனில் பைசலின் முதிர்ந்த கனிந்த இன்னொரு வடிவமே அவனது தாத்தா கரீம் பாய். அவர் உண்மையில் வந்து போகிற ஜனக் கூட்டத்துடன் அசலான வணிகம் செய்து கொண்டிருக்கவில்லை. சாப்பாடு போடுகிற சுகத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். பணியாளர்களின் குடும்பப் பிரச்னைகளை எல்லாம் பார்த்துக் கொள்வதற்காகதான் அந்த நிறுவனமே நடந்துகொண்டிருக்கிறது. பைசல் எடுபிடி வேலை செய்து எச்சில் பிளேட்டை எடுத்து மேஜையைத் துடைத்து லோக்கல் பரோட்டோ போட்டு கேஷில் உட்கார்ந்தாலும் தாத்தாவிடம் பிணக்கு இல்லை. வந்து எள்ளி நகையாடி பொருமி விட்டு செல்லும் தந்தையிடம் இதெல்லாம் ஒரு வித பிராக்டீஸ்தான் என்று சொல்லி அனுப்புகிறான்.

மலையாள கிளாசிக்

தாத்தா, எனது அப்பா ஏன் இப்படி?

நான் அவனது அப்பாவாயிருக்க வேண்டிய நேரத்தில் கற்றுக்கொள்ளும் வேட்கையில் ஊர் சுற்றிக்கொண்டிருந்து விட்டேன் என்று கரீம் பாய் தனது தலைமுறையைத் தெளிவுபடுத்துவது படத்தை வேறு தரத்துக்குக் கொண்டு செல்லுகிறது. உடனடியாய் பைசலின் வெளிநாட்டுக் காதலி ஸ்கிப் ஆவதும் சஹானாவைச் சந்திக்க நேர்ந்து அவளுக்கு நடக்கவிருக்கிற நிச்சயதார்த்தம் பற்றி அறிவதும் ஒரே மூச்சில் நடந்து தாத்தா தனது அந்தக் காலத்துக் காதலைப் பற்றி சொல்லும் போது புகழ் பெற்ற அந்த வரிகள் தாத்தாவினால் சொல்லப்படுகின்றன.

ஒவ்வொரு சுலைமானிலும் ஓர் இத்திரி மொகபத்து.

படம் இதுதான். ஒரு கறுப்பு சாயா போடுவதென்றால் கூட அதில் கொஞ்சமாவது காதல் வேண்டும். வயிறை நிறைக்க எவராலும் முடியும். மனதை நிறைக்கும் போது அதன் பெயர் உணவு. 

பைசல் கரீம் பாயின் சிபாரிசில் ஸ்டார் ஹோட்டலில் வேலைக்குச் சேருகிறான். சஹானா பைசலை அவமானப்படுத்திய ஆளுடன் கல்யாணத்தை தவிர்த்து விட்டு அவனுடன் வந்து இணைகிறாள். உஸ்தாத் ஹோட்டல் கடனில் இருக்க, வங்கி ஆட்கள் அந்த இடத்தை அபகரித்து யாருக்குத் தாரை வார்க்க சதி செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதறிந்து பைசல் முன்னிற்க உஸ்தாத் ஹோட்டல் தடைகளை எல்லாம் மீறி புது வடிவம் கொள்கிறது. என்ன வந்தும் என்ன நடந்தும் பைசல் இப்போது பிரான்ஸிற்கு கிளம்பத் தயாராகையில் தாத்தா சிறிய ஹார்ட் அட்டாக்கில் படுக்கிறார்.

படம் இந்த இடத்தில் நிற்கிறது.

மலையாள கிளாசிக்

கரீம் தாத்தாவைப் போல பிழைக்கத் தெரியாத ஆளாய் பைசல் இருந்து விட முடியாது என்பது நமக்குத் தெரியும். அதே நேரம், முடியும் தருவாயில் உள்ள  அவரது ஏக்கம் பொருட்படுத்தப்படக் கூடாமல் முடிவது தானா. படுக்கையில் இருக்கிற கரீம் மதுரைக்குச் சென்று பணத்தை கொடுத்து விட்டு வர வேண்டும் என்கிற உதவியை மட்டும் தனது பேரனிடம் கேட்கிறார். ஏற்கெனவே அவர் அவ்வப்போது அந்தப் பணத்தை மதுரைக்கு அனுப்பும் வழக்கம் சொல்லப்பட்டிருந்தாலும், அதற்கான காரணம் பற்றி திரைக்கதை சொல்லாமல் நழுவியிருக்கும்.

கரீம் ஒரு கடிதத்தை கொடுத்து அனுப்புகிறார்.

மதுரையில் பைசல் சந்திக்கிற ஜெயபிரகாஷிடம் பணத்தையும் கடிதத்தையும் கொடுக்கிறான் அவன்.

உங்களிடம் இந்தக் கடிதத்தை கொண்டு வருகிறவன் என் பேரன். அவனுக்கு எப்படி சமைக்க வேண்டும் என்று நான் கற்றுக் கொடுத்திருக்கிறேன். எதற்கு சமைக்க வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக்கொடுங்கள். இதுதான் கடிதத்தின் செய்தி. பைசலுக்கு அந்த மனிதர் ஜெயபிரகாஷ் அதை எப்படிக் கற்றுக் கொடுக்கிறார் என்பதை நான் சொல்லப் போவதில்லை. இம்முறை பார்க்கிற போதும் அந்தக் காட்சிகள் என்னை உலுக்கின. தப்பித் தவறி படம் பார்க்காதவராய் இருந்தால் உங்களையும் உலுக்கும். நம்மை எல்லாம் உலுக்குகிற அது பைசலை மட்டும் அசைக்காமல் இருந்து விடுமா என்ன?
கரீம் பாய் சென்று விட்டார்.

பைசலும் சஹானாவும் உம்மரும் அவரது பிள்ளைகளுமாய் சேர்ந்து ஹோட்டலை திறக்கிறார்கள். வருடங்கள் முடிந்து ஓர் உற்சவ இரவில் உம்மர் என்கிற மம்முகோயா மீடியாவிடம் சொல்லிக்கொண்டிருந்த கதை முடிகிறது. ஹாப்பி எண்ட் ? அதுதான். 

மலையாள கிளாசிக்

சோறுக்கு இருக்கிற அர்த்தத்தை சொல்லி முடித்திருக்கிறார்கள். பைசலின் அப்பா சங்கமத்தில் இருக்கிறார். பைசலின் சகோதரிகளும் கூட துபாயில் பிரியாணி ஹோட்டல் நடத்துகிறார்களாம். பைசலே கூட தனது மனைவியுடன் மீடியாவிற்கு மிகவும் பாந்தமாய் பேட்டி கொடுக்கிறான். தனது தாத்தாவை நினைவு கூருகிறான்.

படத்தின் உருவாக்கத்தில் நான் மிக முக்கியமாய் கருதுவது முதலில் திரைக்கதையைதான். அதற்கு தோதாக எல்லாவற்றையும் வடிவமைத்திருந்தார்கள். உதாரணமாக ஒளிப்பதிவு ஒரு கலாசாரத்தின் வர்ணங்களை, ஒரு பிராந்தியத்தின் ஆத்மாவைக் கொண்டு வந்திருந்தது என்று சொல்ல வேண்டும். இசையும் கூட தனது எல்லைகளை வளைத்தவாறு இருந்தது. படத்தில் நடித்தவர்களைப் பற்றி விவரிக்க வேண்டுமா என்ன, திலகன் ஒருவருடைய அந்தப் புன்னகை போதாதா. அவரது சில சொற்கள் மந்திரம் போல நின்று கொண்டவை. முஸ்லிம் இன மக்களின் கதைகளை கேரள சினிமா முன்னமே சொல்லியிருந்த போதும் அனைவரும் கவனம் கொள்ளும் விதமாய் வந்த படம் இதுவென்று சொல்ல வேண்டும். அந்தத் தேர்வினை செய்ததற்கே இயக்குநரை மெச்சிக் கொள்ள முடியும். அப்புறம் ஒரு நெஞ்சைத் தொடுகிற சித்திரத்தை முழுமை செய்ததற்காக.

இறுதியாக.

 

கரீம் பாய் விட்டு விடுதலையான ஒரு நாடோடியின் மனம் கொண்டவரல்லவா? அவருக்கு இன்னும் இன்னும் ஏதாவது தெரிய வேண்டியது இருக்கக் கூடும். ஏகாந்தமாய் அவர் பாலைகளைக் கடந்து சென்றவாறு இருக்கிறார். கடவுளைத் தேடிப் போகிற யாத்ரீகர்களுக்கான அடுப்புகள் எரிந்தவாறு இருக்கின்றன. வயிற்றைக் குளிரப் பண்ணுகிற மனித தர்மம் அணைந்து போவதில்லை. பயணமும் அலைச்சலும் தொழுகையும் பரவசமுமாய் நீள்கிற நாள்களில் இன்று ஒரு மசூதியில் எத்தனையோ துறவிகளுக்கிடையே அவரும் உட்கார்ந்து பிரியாணியைச் சுவைத்துக்கொண்டிருக்கிறார்.   

https://cinema.vikatan.com/south-indian-news/121137-malayala-classic-series-episode-4-ustad-hotel.html

Link to comment
Share on other sites

'' '22 ஃபீமேல் கோட்டயம்' இது, ஆண்களுக்கான எச்சரிக்கை!" - மலையாள கிளாசிக் பகுதி 5

 

பிரான்ஸில் எழுந்த சினிமாவின் புதிய அலையின் தாக்கத்தை வேறு ஒரு தினுசாகப் புரிந்துகொண்ட கோஷ்டிகள் சில இந்தியாவில் இருந்தன. அவர்கள் புரட்சிக் கருத்துகளைக் கொட்டினார்கள். துச்சாதனம் பண்ணுவதில் சிகரத்தைத் தொட்ட 'தோரகா' என்கிற படத்தைப் பார்க்கும்போது நான் சிறுவன். ஸ்டண்ட் காட்சிகளில் பார்வையாளன் அடி, குத்து என்று உணர்ச்சிவசப்படுவதைப்போல ஒரு பெண்ணைப் பாலியல் வதை புரிகிற காட்சியில் ஜனங்கள் அதை உற்சாகப்படுத்தவே செய்தார்கள் என்று ஒரு நினைவு. குறைந்தபட்சம் முன்னால் வருகிற பந்தய வீரருக்கு இருக்கிற வரவேற்பு மிஸ்டர் துச்சாதனருக்கு இருந்தது. சினிமா மெல்ல மெல்ல தன்னைப் புரிந்துகொண்டே வந்தது என்பதற்கு இந்தப் படம் சாட்சி. கவுடா என்கிற ஒரு காசுள்ள பொறுக்கி செக்ஸ் வைத்துக் கொள்ளலாமா என்று படத்தின் கதாநாயகியைத் தொடும்போது, பார்வையாளர்கள் திடுக்கிட்டார்கள். அது அவர்களுக்கு வெறுப்பாக இருந்தது.

மலையாள கிளாசிக்

 

மாறித்தான் விட்டிருந்தது சினிமாவின் முகம். '22 ஃபீமேல் கோட்டயம்'(22 female kottayam) புதிய உணர்வுகளைத் தோற்றுவித்தது. பெண்ணிய படங்கள் என்றெல்லாம் வகைப்படாத கேரள சினிமாக்களைப் பொறுத்தமட்டில் கதாநாயகி டெசா கே ஆப்ரகாம் புதியதாகவே இருந்தாள். அவளுடைய பழிக்குப் பழி முந்தைய கிளிஷே கிடையாது. அவள் தன்னை நிதானித்து உயர்ந்தெழுவதும், சீற்றம் கொண்டு கதைகளை முடித்து வைப்பதும் ஜனங்களின் ஆசையைப் பூர்த்தி செய்வதாகவே இருந்தன.

டெசா கோட்டயம்காரி (ரீமா கலிங்கல்). நர்சிங் படித்தவள். காதல் அனுபவம் உண்டாகி ஒரு நேரத்தில் அவளுக்குக் கெட்ட பெயரெல்லாம் உண்டாகியிருக்கிறது. தங்கையைத் தவிர எந்த சொந்தமுமில்லை. வெளிநாட்டுக்குக் கிளம்பிச் செல்கிற மும்முரத்தில் டூரிஸ்ட் ஏஜெண்டான சிரிலிடம் பழக நேர்ந்து. அவனை முழுமையாய் நம்பிக் காதலித்து, அவனோடு லிவிங் டூ கெதர் வரைக்கும் அவள் முன்னேறிச் சென்றது தனது கள்ளமற்ற நம்பிக்கையால்தான். அவனில்லாத தருணத்தில் கவுடா வந்து அவளை நாசம் செய்த பிறகும் சிரில் தன்னோடு இருக்கிறான் என்கிற பிடி அவளைத் தம் பிடிக்க வைக்கிறது.

22 ஃபீமேல் கோட்டயம்

அவள் அவனால் மறுபடியும் ஒருமுறை கூட்டிக் கொடுக்கப்படுகிறாள். அது அவளுக்குத் தெரியவந்த பிறகு இந்தப் பழிவாங்கும் கதை துவங்குகிறது. அப்போது அவள் கஞ்சா வழக்கில் சிறைச்சாலையில் இருக்கிறாள்.

எனக்குத் தெரிந்து இந்தப் படத்தின் ஜீவன் முழுக்க அந்த சிறைச்சாலை அத்தியாயத்தில் இருக்கிறது. ரீமா கலிங்கல் அந்த ரோலை எடுத்துக்கொண்டு எவ்வளவு ஆழத்துக்குப் போகிறாரோ, அந்தத் திரைக்கதையும் அவருக்கான வளைவுகளை நகர்த்தியவாறே இருக்கின்றன. அந்தப் பெண்களின் சிறையில் எப்படியும் அழகுப் பதுமைகள் உலவப் போவதில்லை அல்லவா? ரத்தமும் சதையும் கொண்ட பெண்களின் அசல் முகங்கள், அவர்களுடைய கதைகள் டெசாவிற்குப் புதியது. துரோகமும் அநீதியும் செய்த புருஷன்களை அந்தப் பெண்கள் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். அதை நியாயமென்றும் நம்புகிறார்கள். அவர்கள் வேற்றுலகில் இருந்து வந்தவர்கள் அல்ல, அனைவைரையும் நேசிக்கத் தெரிந்த நம் எல்லோரையும்போல இயல்பான பெண்கள்தான். டெசாவிற்கு இருந்த தொட்டால் சிணுங்கித்தனம் தானாய் விலகுகிறது. மெதுவாய் உறுதியைப் படிய வைத்துக்கொண்டே வருகிறாள்.  

நர்ஸாக மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது இவளது பராமரிப்பில் இருந்த முதியவர் ஒருவர், சாகிற நாளுக்காகக் காத்திருந்தார். வாழ்வை மிகவும் நேசிக்கிற ஒரு ஆள் அவர். அவருக்கு டெசாவின் மீது ஒரு தனி அன்பு உண்டு. இறக்கிற நேரத்தில் இவளுக்கு ஒரு பகுதி சொத்தை எழுதி வைத்து ஒரு கடிதம் அனுப்புகிறார். ஜெயிலில் கண்ணீரோடு டெசாவினால் படிக்கப்படுகிற அந்தக் கடிதத்தில், நீ என்ன மாதிரி பெண் தெரியுமா? என்கிற வியப்பு ததும்புகிறது. ஆமாம், இந்த அநீதிகள் எனக்கு நடந்திருக்கக் கூடாது. அப்படி நடந்திருப்பதை ஏற்க முடியாது என்று அவள் உணர்ந்தாக வேண்டிய தருணம்.    

மலையாள கிளாசிக் பகுதி 5 - 22 ஃபீமேல் கோட்டயம்

முக்கியமாக, சுபைதா. தமிழ்ப் பெண். அவள் ஒரு ரவுடியாகத்தான் சித்திரிக்கப்படுகிறாள். புருஷனையும் அவனது உறவினர்களையும் கொன்றுவிட்டு வந்த அவள், கர்ப்பமாகவும் இருக்கிறாள். துவக்கத்தில் கை காலை அமுக்க வேண்டியிருந்தாலும், ஒரு பெண் மற்றொரு பெண்ணைப் புரிந்து கொள்வதாகவே இருந்து சுபைதா மெல்ல டெசாவின் காட்மதர் ஆகிறாள் என்று சொல்ல வேண்டும். அவள் தனது நெருப்பை மற்றவளுக்குள்ளும் பற்ற வைக்கிறாள்.

சுபைதாவின் குழந்தைப் பிறப்பில் பெரும் பங்கு வகித்த டெசாவிற்கு அவள் பல யோசனைகளையும் சொல்கிறாள். சிறிது சிறிதாய் டெசாவினுள்ளே அந்தத் தீ எழுகிறது. கவுடாவும், சிரிலும் அவளைக் கொன்றுவிட்டிருக்க வேண்டும். வெறுமனே எங்கேயாவது வீசி எறிந்து விட்டுக்கூட போயிருக்கலாம். அவளை ஜெயிலில் தள்ளின சூழ்ச்சி வேறு ஒரு வடிவம் எடுத்துக்கொண்டு நின்றுவிட்டது. இனி அவளைத் தடுக்க யாருமில்லை. டெசாவிற்கு எதிர்பார்த்த விடுதலை வந்துவிட்டது.

வெளியே வருகிறாள்.

முதலில் கவுடாவின் கதை முடிக்கப்படுகிறது.

சிரிலையும் அப்படி முடித்திருக்க முடியும். அது அவளுடைய எண்ணமில்லை. அவனைப் பழிவாங்கப் போய் அவனிடம் பிடிபடுகிறாள். பெயரை மாற்றி, ஹேர் ஸ்டைலை மாற்றி, ஒரு கூலிங் கிளாசை வைத்துக்கொண்டு வந்தால் உன்னை எனக்கு அடையாளம் தெரியாதா? என்று அடித்து வீழ்த்துகிறான், சிரில். அவளைக் கொல்வதற்குள் அவள் காட்டுகிற கண்ணீர் அவனைப் பெருமிதம் கொள்ளச்செய்கிறது. உளவியலாகவே தனது முன்னால் அழுகிற பெண்ணைக் காணும்போது ஆண்மை எழுச்சியடைகிறது என்பார்கள். அதுதான். அவனது செருக்கு உயர்கிறது. நீ இல்லாமல் என்னால் முடியவில்லை என்று விம்முகிற அவளை அணைத்துக்கொண்டு, உன்னால் எதுவும் முடியாது செல்லம், ஏனென்றால் நீ வெறும் ஒரு பெண் என்கிறான். அவள் முழுமையாய் தனது கைப்பிடிக்குள் கொண்டு வந்துவிட்டதாகப் படுக்கைக்குக் கொண்டு போகிறான்.

22 ஃபீமேல் கோட்டயம்

மறுநாள் பகலில் எழுந்து அவன் டெசாவுக்கு காலை வணக்கம் சொல்லும்போது அவனது ஆண்குறி நீக்கப்பட்டிருக்கும்.

ஒரு நர்சாக இருந்து தனது வாழ்க்கைக்காக அவள் செய்துகொண்ட மகத்தான காரியம். இனி ஒரு பெண்ணின் முன்னால் அவனால் ஒரு ஆணாக நம்பிக்கையுடன் நிற்கவே முடியாது.

இதற்கு மேலும் படம் தொடர்கிறது.

ஒரு படத்தின் இறுதிக் காட்சியை வர்ணிக்க ஆகாது. அதுவும் மெல்லிய உணர்வுகளால் வேறு ஒரு தரத்துக்கு உயரும் க்ளைமாக்ஸ் பற்றிச் சொல்லவே கூடாது. காரணம், அது நமது அனுபவமாகக் கூடியது. வழக்கமான படங்களில் இருந்து இந்தப் படத்தை தனித்ததாக மாற்றக்கூடிய அளவு வல்லமை கொண்ட காட்சிகளுடன் படம் முடிகிறது என்று சொன்னால் போதுமானது அல்லவா?!. இறுதியில் சிரில் அவளிடம் அதைச் சொல்லத்தான் செய்கிறான்.

டெசா, பெண்ணென்றால் அது நீ தான்!

முன்னமே சொன்னதுபோல, ரீமா கலிங்கல் இந்தப் படத்தின் பொக்கிஷம். அவரது புன்னகை, அவரது துக்கம் அனைத்தும் நம்முள் சுழன்று முடியாதவை. அவரது கீச்சுக் குரலேகூட என்னமாய் வெடிக்கக் கூடியது என்பதைப் பார்க்கலாம். பஹத்துடன் இருக்கும்போது தன்னை அவசரமாகச் சொல்லும் அந்தக் கதாபாத்திரத்தின் நம்பிக்கை, அதன் காதல் ஒளிர்ந்தவாறு இருந்து, பின்னர் கனல் காட்டும்போது எனக்கு ரீமாவை அவ்வளவு வியப்பாயிருந்தது. சியாமா பிரசாத்தின் 'ரித்து' என்கிற படத்தில் முதிர்ந்த அவரை வியப்பதேகூட தவறு என்கிற எண்ணமுமிருந்தது.

Baa வராத டெசாவின் faa வை பஹத் திருத்தும்போது அதை ஏற்றுக்கொள்ளாமல் பிடிவாதம் செய்கிற அவர் முகம் ஒளிர்வதைப் பார்ப்பதற்காகவே இன்னும் ஒருமுறை படம் பார்க்க முடியும். இந்தப் படம் வரும்போது இருந்த பஹத் ஃபாசில் முழுமையாய் அறியப்படாதவர். ஆனால், ஒருவனால் அலட்டியே கொள்ளாமல் இப்படி நடித்துத் தீர்த்துவிட முடியுமா என்பதை சகலரும் துணுக்குற்றார்கள் என்பது நடந்தது. இவ்வளவு காலத்துக்குப் பிறகு அவர் அந்தப் படத்தில் பிரம்மாதமாய் நடித்திருந்தார் என்று சொல்லிக் கொண்டிருப்பது விரயமல்லவா...

பிரதாப் போத்தனின் கவுடா ஒரு முக்கியமான சாதனை. சத்தார் கதாபாத்திரம் அவ்வளவாய் எடுபடவில்லை. எல்லோரையும் காதலிப்பதாகச் சொல்லி அவர் அசடு வழிவதும், படத்தின் ஆளுமைக்குக் கீறல் விழுந்ததுதான்.

அபிலாஷ் எஸ் குமாரும், ஷ்யாம் புஷ்கரனும் திரைக்கதை எழுதியிருந்தார்கள். பகத்தின் மோசடியை பார்வையாளர்களுக்கு எப்போது சொல்வது, டெசாவிற்கு எப்போது அது தெரிய வேண்டும் என்பது சரியாய் வந்தபோதே, அவர்களின் திரைக்கதை வீரியம் கொண்டு விட்டது என்று நினைக்கிறேன். ஒளிப்பதிவில் இடறல்களே இல்லையென்று கவனிக்கலாம். இன்னபிற தொழில்நுட்பங்களில் குரங்குத் தாவுதல்களும் இல்லை.

22 Female Kottayam

மலையாளப் படங்களின் பாடல்கள், இசை இவைகளைப் பற்றியெல்லாம் பின்னர் ஒருநாள் எழுத வேண்டும். பெரும்பான்மையான படங்களில் ஜீவன் இல்லை. இந்தப் படத்தில் தேறியிருக்கிறார்கள் என்பதை மட்டுமே சொல்ல முடியும். ஒரு விசேஷமுமில்லை என்று மட்டுமே படுகிறது. அதிலும், பாவனைகளைக் குறைத்துக் கொள்வது ரொம்ப முக்கியம் என்பதைச் சொல்லியாக வேண்டும். நல்ல படங்கள் இசையால்கூட ஃபோக்கஸ் ஆகாமல் கெட்டு குட்டிச்சுவராவதைப் பார்த்திருக்கிறேன்.

ஆஷிக் அபு இப்படத்தின் இயக்குநர். சமீபத்திய 'மாயாநதி'யைப் பார்த்து வியக்காதவர் இல்லை. எனக்கும் அவ்வளவு பிடித்த படமாக இருந்தது அது. அவர் வளர்ந்து, 'மாயாநதி' அளவுக்கு வந்துசேர இந்தப் படமெல்லாம் முக்கியக் காரணமாக இருந்திருக்கும். தெளிவான பார்வை, அசலான மனித உணர்வு, முதிர்ந்த ஆக்கம். ஆஷிக் அபு இன்னமுமே வளர்ந்த படங்களைத் தருவார் என்பதற்கு இதுவரை வந்த படங்களே சாட்சி.

பின்னணியில் கதை சொல்லி, தனது கதையைச் சொல்லி முடிக்கும்போது ஒரு முழக்கம்போல் இல்லாவிட்டாலும் ஒன்றை சாதாரணமான குரலில் சொல்கிறார். இது ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கைதான். அது சரியே. அவன் தன்னை சரியான இடத்தில் இருத்திக் கொள்ளவே வேண்டும். வேறு வழியே கிடையாது.

https://cinema.vikatan.com/south-indian-news/121833-malayala-classic-series-5-about-22-female-kottayam.html

Link to comment
Share on other sites

ஹரி என்கிற கோணல் மனிதனை நிறுத்தி நம்மை துணுக்குற வைத்த ஃபஹத்..! - மலையாள கிளாசிக் - 6

 
 

நார்த் 24 காதம்

இந்தப் படத்தில் பிரேம்ஜி ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். அவரது மனைவி வட இந்தியப் பெண். வளர்ந்த குழந்தைகூட இருக்கிறது. கதாநாயகி நாராயணியின் சந்தேகத்தை பிரேம்ஜியிடம் கேட்கிறார் நெடுமுடி. நீங்கள் உங்கள் காதலை அவளிடம் எப்படிச் சொன்னீர்கள்? அதற்கு அவன் ``அன்புக்கு ஒரு பாஷையும் கிடையாது, அதை அனுபவத்தில் தான் தெரிந்துகொள்ள வேண்டும்''  என்கிறான். வாழ்க்கையே அப்படித்தான். அதை அனுபவித்து உட்கொள்ளாமல் பிழைத்துப் போவதால் அறிய முடியாது.

மலையாள கிளாசிக்

 

ஹரிக் கிருஷ்ணன் அப்படித்தான். தனது பிழைப்பைப் பார்க்கிறவன். அப்பா, அம்மா, தம்பி, சக மனிதர்கள் யாருமே தேவையில்லை. காலை எழுந்ததில் துவங்கி படுக்கப் போகிறவரை உடலில் தூசு படாமல் சுகாதாரம் பேணுகிறவன். சத்தம் பிடிக்காது, சங்கீதம் பிடிக்காது. ஒரு பட்டியலைப் போட்டுக் கொண்டு அன்றாடங்களை கடந்து செல்லும் அவனுக்கு மனநலம் பற்றிப் பேசிக்கொள்ள ஒரு டாக்டரே உண்டு. தனது சம்பிரதாயங்களை செய்துகொள்ள முடியாது என்கிற நடுக்கத்தால் அவன் வெளியூர்களுக்குச் செல்வதில்லை. ஆனால், திருவனந்தபுரத்துக்குச் சென்றே ஆக வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் வருகிறது என்பதே கதையின் ஆரம்பப் புள்ளி. அவன் தன்னுடைய மூட்டை முடிச்சுகளுடன் இறுக்கமாக புறப்படுகிறான்.

ட்ராவலிங் மூவிஸ் என்பது உலகெங்கிலும் உண்டு. 

சே பயணம் போன மோட்டர் சைக்கிள் டைரீஸ் தொடங்கி வரிசையாய் பல காவியங்கள் இருக்கின்றன.

ஒரு ராட்ஷச லாரியோ, அல்லது ஒரு மீன் பாடி வண்டியோ சாலைகளின் வழியாக ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்வதால் அது ட்ராவலிங் மூவியாக ஆகி விடாது என்பதை முதலில் சொல்லிக்கொள்கிறேன். வழக்கம்போல எதையுமே தப்பாக புரிந்துகொண்டு சர்க்கஸ் காட்டுகிற அபத்தம் தப்பித் தவறி வரவில்லை என்பதற்காகதான் நான் இந்தப் படத்தை தேர்வு செய்தேன். குறிப்பாய் ஹரி சந்திக்கப் போகிற முதல் கதாபாத்திரம் கோபாலன். முதுமைக்கு வந்துவிட்ட ஓய்வில் இருக்கிற ஆசிரியர். நெடுமுடி அந்தப் பாத்திரத்தை செய்திருந்தார்.

மலையாள கிளாசிக்

கிளம்பி விட்ட புகைவண்டியில் கோபாலனுக்கு ஒரு செய்தி வருகிறது. மனைவிக்கு சீரியஸ். பதற்றம் கொள்கிற அவரை நாணி சமாதானம் செய்கிறாள். ஸ்டேஷன் மாஸ்டரிடம் சொல்லி, வருகிற ஸ்டேஷனில் இறங்கிக்கொள்ள ஏற்பாடு செய்கிறாள். அவர் இப்போது கோழிகோட்டுக்குத் திரும்பிச் சென்றாக வேண்டும்.  தள்ளாடுகிற அவருக்கு அவள் உதவி செய்வதென்று தீர்மானிக்கிறாள். இருவரும் இறங்கிச் செல்கிறார்கள். பார்த்திருந்ததைத் தவிர ஒரு உதவியும் செய்யாமல் இருந்த ஹரி அவர் விட்டுச் சென்ற செல்லைப் பார்க்கிறான். போன் அடிக்கிறது. எடுத்து மறுமுனையில் யாரோ எதுவோ சொல்லுவதைக் கேட்டுவிட்டு போனைக் கொடுக்க டிரெயினை விட்டு இறங்குகிறான் ஹரி. பெட்டியும் டிரெயினும் சென்று விடுகிறது. கோபாலனிடம் போனைக் கொடுக்காமல் தயங்கி நிற்கிறான் அவன். வேறு வழியின்றி அவனும் அவர்களுடன் கிளம்பிச் செல்கிறான்.

ஏற்கெனவே பந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சொல்லப் போனால் சக ஊழியர்கள், திருவனந்தபுரத்துக்குச் சென்று சேரும் ஹரி, இந்தப் பொறியில் சிக்குவதற்கு தான் திட்டமிட்டு இந்த நாளில் பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

ஆட்டோவிலும் படகிலும் போலீஸ் வண்டியிலும் ஏன், மந்திரியின் காரில்கூட மூவருமாய் பயணித்து கோபாலனை அவரது வீட்டில் கொண்டு சேர்ப்பதுதான் படத்தின் முழுமையான கதை.

வழியெங்கிலும் விதவிதமான மனிதர்கள்.

அவர்களைப் பற்றின கதைகள்.

நாராயணி என்கிற நாணி முதலில் இருந்தே கோபாலன் மீது இரக்கம் கொண்டுவிட்டாள். தான் சென்று சேர வேண்டியதைப் பொருட்படுத்தாமல் அவரைக் கொண்டு சேர்ப்பதற்கு இறங்கியாயிற்று. அவளுக்கு கிலோ மீட்டர் கணக்கில் நடப்பதிலோ, கள்ளுக்கடையில் மீனும் கப்பையும் சாப்பிடுவதிலோ எந்த இடறலுமில்லை. கடத்தப் பார்க்கிற பையன்களைக்கூட வெளுத்து வாங்கி விட்டு சகஜமாயிருக்கிறாள். அவளுக்குப் புதுமைகளை சாதிப்பதில்  சந்திப்பதில், பயணம் செய்வதில், மனிதர்களுடன் தோழமை கொள்ளுவதில் சந்தோஷமே உண்டு.

மலையாள கிளாசிக்

மாஸ்டரும் அப்படியே. உலகம் தெரிந்தவர். அனுபவங்கள் நிறைந்தவர். செல்லும் வழியில் உதவுகிற மனிதர்களுடன் அவருக்கு ஈடுபாடு உண்டு. அளவளாவிக் கொண்டேயிருக்கிறார். அவருக்கு ஹரியைப் பற்றித் தெரிகிறது. அவனது குற்றம் குறைகளை ஆராயாமல் இயல்போடு அதில் பொருந்திக்கொள்கிறார். 

இவர்கள் இருவருக்கிடையே முட்டி மோதி திணறிக்கொண்டிருக்கிற ஹரி மெதுவாய் அவன் கற்க வேண்டிய பாடங்களை கற்கவே செய்கிறான். வேறு வழியில்லை என்றே சொல்ல வேண்டும். அவனுக்கு காலாற நடந்து பழக்கமில்லை. காலில் செருப்பில்லாமல் சில்லென்ற ஆற்றில் இறங்கி நடந்து பார்த்ததில்லை. இப்போதுதான் சுடச்சுட பிறந்த குழந்தையைக் கையில் ஏந்தி அதன் முகத்தை அந்த முகத்தின் புன்னகையைத் தரிசித்த காரியம் நடந்ததேயில்லை. அதெல்லாம் வேண்டாம், ஒரு இளம்பெண் இத்தனை நெருக்கத்தில் இருந்த அனுபவமே அவனுக்கு இருந்திருக்காது. மேலும், சரியாய் சொல்லி முடிப்பது என்றால் அவன் இயந்திரமாய் இருப்பதில் இருந்து நழுவி இப்போதுதான் மனிதனாக பழகிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறான்.

ஊரை சேரும்போது கோபாலன் தானும் தன் மனைவியும் சந்தித்து மோதல் காதலானதை சொல்கிறார். அரசியல் செயற்பாடுகளில் தலைமறைவு வாழ்க்கையை அவரும் அவரது மனைவியும் மேற்கொண்டபோது இருந்த இடத்தைக் காட்டித் தருகிறார். பின்னொரு காலத்தில் கணவன் மனைவியாக நாங்கள் அங்கேயே வாழ்ந்தோம் என்கிற அவர் அதற்குப் பின்னர் அவளது விருப்பத்தின் பேரில் கட்சி அலுவலகத்துக்காக கொடுத்துவிட்டோம் என்கிறார். போலீஸாரின் அடக்குமுறையில் சிக்கி பலமாய் அடிபட்டதால்தான் தனது மனைவி இப்போதும் உடல் நலமில்லாதவளாய் ஆகிப் போனாள் என்கிற விவரத்தையும் சொல்கிறார். உண்மையில் மாஸ்டரும் இவர்களும் சென்று சேரும்போது ஊரே காத்திருக்கிறது. அவரது மனைவி உயிரோடு இல்லை.

மலையாள கிளாசிக்

கோபாலன் நிலைகுலைந்தாலும் பொறுமையாய் உள்ளே சென்று எடுத்து வந்த செங்கொடியை தனது மனைவியின் சடலத்துக்கு போர்த்தும்போது அந்தத் தம்பதிகள் வாழ்ந்த பொதுவாழ்க்கை நமக்கு முழுவதுமாய் புரிகிறது. அவர்களைப் போன்ற தியாகிகளால் தான் நாம் இன்று பல சலுகைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் கேரளம் இன்று அனுபவிக்கிற சமூக பலன்களுக்கு கோபாலன் மாஸ்டரைப் போன்ற எவ்வளவோ பேர் காரணம். அவரது மனைவியைப் போன்ற உள்ளங்கள் காரணம். அவர்களின் ரத்தத்தைப் பிழிந்து கொண்டு வளமை பெற்ற மண்ணில் தான் கண்ணியம் காக்கிற ஹரியைப் போன்ற தன்னலவாதிகள் தூசு படாத இடத்தில் தன்னை மறைத்துக்கொண்டு அல்டாப்பு காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கவனிக்க வேண்டும், ஹரியைப் போன்ற என்றுதான் சொன்னேன். ஹரி அல்ல. ஹரிக்கு மாஸ்டரின் மனைவி இறந்தது முன்னமே தெரியும். அவனிடம் அந்த போனில் மரணச் செய்தியைதான் சொல்லியிருக்கிறார்கள். போனை அவர்களிடம் கொடுக்காமல் தயங்கியவாறே அவன் இவர்களுடன் வந்தது ஒரு நல்ல மனம் இருந்ததால்தான்.

அது மட்டும் அல்ல, அவனுக்கு இப்போது ஜோதியில் கலக்க தெரிந்துவிட்டது. நாணியுடன் சின்ன ஓட்டலில் தோசை சாப்பிடுகிறான். அவள் கை கழுவுவதற்கு எழுந்துபோன பிறகு அவளைப் போலவே வெகு ரசமாய், சாப்பிட்ட விரல்களை வாய்க்குள் நுழைத்து இழுத்து உணவின் சுவையை அனுபவிக்கிறான். வேறென்ன, இந்த நேரத்தில் இது எதுவுமே கிடைக்காமல் உலர்ந்து போன வயிற்றுடன் தூக்கம் வராமல் எத்தனை பேர் புரண்டு கொண்டிருக்கிறார்களோ? இங்கே நாகரிகமாய் சாப்பிட முண்டுவது ஒரு அநீதியல்லவா?
ஹரி முற்றிலுமாய் தெளிந்துவிட்டான்.

இப்போது இவ்வளவு தெளிவாய் இருக்கிறவனைப் பார்க்கும்போது தான் அவன் வீட்டாருக்கு அவனது மனநலம் மீது ஐயம் வருகிறது.

ஒருவரையும் வதை செய்ய முற்பட மாட்டான் என்பதால் அலுவலகத்தில் எல்லோருக்கும் மகிழ்ச்சி. 

வாழ்வு ஒளி பெற ஆரம்பித்து எல்லாமே மாறிப் போயிருந்தாலும் எதுவோ ஒன்று குறைகிறது. இல்லை, ஒன்றே ஒன்று குறைகிறது. என்ன அது?

ஹரி ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகிறான்.

நாணி வழக்கமாய் ட்ரெய்னில் இருந்து வந்து இறங்கும் நாள் அது.

தவறவில்லை. வந்திருக்கிறாள், புன்னகைக்கிறாள்.

அவன் அவளை நெருங்கிப் போகும்போது படம் முடிகிறது.

மலையாள கிளாசிக்

ஹரியாக ஃபஹத் ஃபாசில். இது ஒரு விநோதமான கதாபாத்திரம். எடுத்துக்கொண்ட அந்தக் கண்ணிய முறுகலை அவர் அசாத்தியமாக கையாள்வதை நம்மால் பார்க்க முடியும். சொல்வதெனில் கதை நகர்ந்துகொண்டிருக்கிற பல இடங்களில் உறுத்துப் பார்த்துக் கொண்டிருப்பது தவிர்த்து அவருக்கு அங்கு வேறு வேலைகூட இல்லை. ஆனால், அவரது அந்த உடல்மொழி? ஒவ்வொரு பிரேமிலும் ஹரி என்கிற கோணல் மனிதனை நிறுத்தி நம்மை துணுக்குற வைக்க அவரால் முடிந்தது. ஒரு கதையை மட்டுமே எடுத்துச் செல்லும் இந்தப் படத்தில் நடிக்க ஃபஹத்தைத் தவிர வேறு யாரும் நடித்திருப்பார்களா தெரியவில்லை, நடித்திருந்தாலும் அது இந்த மாதிரி வந்திருக்காது.

நாணி, நாராயணியாக சுவாதி ரெட்டி. அவர் ஒரு நல்ல நடிகை என்பதைக் கவனிக்காமல் யாரேனும் இருந்திருந்தார்கள் அவர்களுக்கு இந்தப் படம் மிகுந்த வியப்பாயிருக்கும்.

நெடுமுடிவேணு யாவருக்குமே பிடித்தமான நடிகர். 

முழு படத்தையும் தாங்கிக்கொண்டு செல்கிறவர் அவர்தான்.

பிரேம்ஜியிடம் கொச்சைத் தமிழ் பேசுகிற ஒரு இடத்தில் அவரது புன்னகையைப் பார்க்க வேண்டும்.

மலையாள கிளாசிக்

தலைவாசல் விஜய்யும் கீதாவும் முறையே பெற்றோர். தம்பியாக நடித்த ஸ்ரீநாத் பாசி எப்பவுமே அடிபொளி பையன். Memories of machine   குறும்படத்தில் நடித்த kani kasruti யை நல்ல ஒரு கேரக்டரில் பார்த்தபோது சந்தோஷமுண்டாயிற்று. செம்பன் வினோத் வழக்கம் போலவே ஒரு உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் இருக்கிறார். இப்படியே இன்னும் பலரை சொல்ல வேண்டும். பிரேம்ஜி செம்மை. சொன்ன அத்தனை பேரும் சொல்லாமல் விட்ட அத்தனை பேரும் ஒரு நல்ல படத்தின் அங்கமாயிருந்தனர், திணிக்கப்பட்டு பிதுங்காதவர்களாயிருந்தனர் என்பதே முக்கியம்.

ஒளிப்பதிவு- ஜெயேஷ் நாயர்.

எடிட்டிங் – திலீப்.

இசை – கோவிந்த் மேனன், ரெக்ஸ் விஜயன்.

எல்லாமும் ஆடம்பரம் இல்லாமல், அந்தப் படத்துக்கு கச்சிதமான அளவில் இருந்தது. அறிவீனமோ, ஆட்டமோ, கூச்சலோ இல்லை. நீதியுரைகள் மற்றும் இதனால் அறிய வருவது போன்ற போதனைகள் இல்லை. திரைக்கதையில் அதற்கெல்லாம் நேரமே இல்லை என்று தான் கூற வேண்டும். திரைக்கதையை இயக்குநர் தான் எழுதியிருந்தார். தனக்கு என்ன வேண்டுமென்பதும், படத்தில் எது வரவேண்டுமென்பதும் அவர் புரிந்து வைத்திருந்தார். ஏனெனில் இம்மாதிரிப் படங்கள் கொஞ்சம் சறுக்கினாலும் தியேட்டரில் கொட்டாவி நிச்சயம். இது இயக்குநருக்கு முதல் படம் என்பது அவருக்கு அவரே பெருமை சேர்த்த விஷயம்தான். 

கொண்டாப்படவேண்டிய படம் என்று சொல்லலாம். 

 

அல்லது கொஞ்சம் ஏமாந்தால் படம் அல்ல பாடம் என்றும் சொல்லிக்கொள்ளலாம்.

https://cinema.vikatan.com/south-indian-news/122516-malayala-classic-series-episode-6.html

Link to comment
Share on other sites

மலையாள சினிமாவை எழ வைத்த ஐந்து இயக்குநர்களின் ஆந்தாலஜி... ’ஐந்து சுந்தரிகள்’..! - பகுதி 7

 

 

மலையாள கிளாசிக்


 

மலையாளப் படங்களை பற்றின அறிமுகத்துடன் ஆரம்பித்த மலையாள கிளாசிக் தொடரின் முதல் கட்டுரையில் ஒரு வீழ்ச்சியில் இருந்து தான் தற்போதைய மலையாள சினிமா எழுந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படி அது எழுவதற்கு காரணமாயிருந்த பலரில் ஐந்து இயக்குநர்கள் ஐந்து குறும்படங்களை செய்தார்கள். ஐந்து சுந்தரிமார்களைப் பற்றியதாய் இருந்தது அது. நாம் காணக்கூடிய எல்லா சுந்தரிகளையும் அது பிரதிபலிக்க முயன்றதா என்றால் இல்லை. அதே நேரம் ஐந்து பெண் மனங்களை மிக நெருக்கத்தில் பின்தொடர்ந்து சொன்ன கதைகள் எல்லோருக்கும் சென்று சேர்வதாக இருந்தன. ஐந்து திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. பெரிய ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றியிருக்கின்றனர். ஒவ்வொரு கதையும் தனக்கான வர்ணத்தை ஒளியை சத்தத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு முழுமை பெற்றிருக்கிறது என்பதை இம்முறை பார்த்தபோதும் அதன் தளர்ந்து போகாத வீரியத்தின் மூலம் அறிய முடிந்தது.

மலையாள கிளாசிக்

முதலாவது பெண் சேதுலட்சுமி. பள்ளி செல்கிற சிறுமி. குழந்தைகளின் சுதந்திரமும் அவைகளின் சந்தோஷங்களும் அவ்வளவு அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவளது வீடும், பள்ளியும், பள்ளிக்குச் செல்லும் வழிகளும், அவளுடைய வகுப்புத் தோழனுமாய் இருக்கிற நாள்கள் நம்மை நெகிழச் செய்யும். ஆனால், அவர்கள் இருவரும் தங்களை புடைப்படம் எடுத்துக்கொள்ள ஒரு போட்டோ ஸ்டூடியோவுக்கு புறப்படும்போது அதில் ஒரு பொறி இருக்கப்போவது நமக்குத் தெரியும். புதரிலிருந்து இறங்கும் பாம்புபோல அவன் வெளிப்படுகிறான். அவள் குழந்தை, சிறு குழந்தை, ஆனாலும் என்ன, அவளைக்கூட ஒழுக்கத்தின் பெயரால் ஒடுக்க முடியும். ஏனெனில் பெண்ணைப் பற்றின விநோதக் கருத்துகள் கொண்ட நோய் சமூகத்தின் எதிர் விளைவுகளுக்கு பெண்கள் அச்சம் கொள்ள வேண்டியிருக்கிறது. உனது ஆடையற்ற புகைப்படத்தைக் கொண்டு வந்து உனது ஸ்கூலின் சுவரில் ஓட்டலாமா என்று கேட்கிறான். பையனைத் துரத்திவிட்டு சேதுலட்சுமியை வண்டியில் இருத்திக்கொண்டு அவன் காட்டுக்குள் மறையும்போது படம் முடிகிறது. அந்த சிறுவனைப் போல கையாலாகாமல் நாமும் நிற்கிறோம்.

எம் முகுந்தன் எழுதிய சிறுகதை இது.

மலையாள கிளாசிக்

நிவின் பாலி சாண்டோ கிழவன் வேடத்தில் டிசம்பர் 31 அன்று ஒரு வீட்டுக்குள் திருடுவதற்காக இறங்குவதுதான் கதை. அங்கே தனியாய் இருக்கிற பெண்ணைக் கட்டிப்போடுகிறான். திருடுகிறான். சொல்லப் போனால் அவளே விலையுயர்ந்த பொருள்கள் எங்கே இருக்கின்றன என்பதை சொல்லுகிறாள். ஒரு இணக்கம் உருவாகிறது. புது வருடத்தைக் கொண்டாடுகிறார்கள். காதலே உருவாகிறதோ? இல்லை, அவள் அவனைக் கட்டிப் போடுகிறாள். இவன் திருடியதை பிடுங்கிக்கொண்டு விலை மதிப்பு மிக்க பெயின்டிங்கை எடுத்துக்கொண்டு புறப்படுகிறாள். அவள் அந்த வீட்டின் பெண்ணல்ல. திருடிய பொருள்களை விற்று காசாக்கி இரண்டாம் சுந்தரியான இஷா திரும்பும்போது நிவின் அவளுக்கு எதிரே. ஆட்கள் வந்து கதவைத் தட்டும்போது அவன் தனது கயிறுகளை அறுத்துக்கொள்ள அவள்தான் அந்தக் கத்தியை வீசி விட்டுப் போனாள். தனது சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டு நிவின் பைக்கை எடுக்கும்போது அவளும் ஏறி அமர்ந்து கொள்ளுவதுடன் படம் நிறைவடைகிறது.

மலையாள கிளாசிக்

கெளரி காதலித்து திருமணம் செய்துகொண்டவள். வீட்டாருக்கு பயந்து தனது கணவனுடன் ஆளற்ற பிரதேசத்தில் தனி வீட்டில் வாழ்கிறாள். கல்யாணமாகி மூன்று வருடங்களான அந்தத் தம்பதிக்கு இன்று திருமண நாள். எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன. அவன், அந்தக் கணவன் மலையின் மீதிருந்து விழுந்து இறந்தது விபத்தா, தற்கொலையா என்று தெரியாது. ஆனால், இறந்த பின்னும் கார் சப்தம் கேட்டால் சன்னல் திறந்து பார்த்து ஆவியாக காத்திருக்கிறாள் அவள். மூன்றாம் கதையான இதற்கு ஒளிப்பதிவு செய்தவர் ராஜீவ் ரவி என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.

உண்மையிலேயே இந்தத் தொகுப்பில் வேறு ஒரு வடிவம் கொண்டது நான்காவது கதை. சமூகம் என்பது நான்கு பேரானால் அந்த நான்கு பேர்களுக்கும் பெயர்களை வைத்துவிட்டு, படத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு வைக்காமல் விடுகிறார்கள். உண்ணி. ஆர் படத்தின் திரைக்கதை வசனங்களை எழுதியிருந்தார்.  Rare window  வில் அடிபட்டவன் உட்கார்ந்து உலகை பார்க்கிறதை அடிப்படையாய் எடுத்துக் கொண்டு துல்கர் பார்ப்பதுதான் நம்மை சேர்கிற கதை. குள்ளனும் மனைவியும் என்பது டைட்டில். ஆமாம், நான்காம் சுந்தரி எல்லோராலும் குள்ளனின் மனைவி என்றே அழைக்கப்படுகிறாள். அவள் உயரமாகவும் அவன் குள்ளமாகவும் இருப்பதில் அவர்களுக்கல்ல பிரச்னை. அந்த விசித்திரத் தம்பதி தங்களுக்குள் அன்பாக இருந்து கொள்வது எல்லோருக்கும் பெரிய புதிர். இருவரையும் கண்காணித்தவாறு, கிசுகிசுத்தவாறு இருக்கிறது உலகம். வலுவான ஆண் அவளுக்கு தேவைப்படுமா என்று பேசும்போது அவள் கர்ப்பவதியாவது கோபத்தை உண்டாக்குமல்லவா. ஒழுக்கம் பேசி அவர்கள் இருவரையும் குடியிருப்பை விட்டு காலி செய்யச் சொல்லும் அளவுக்குப் போகிறார்கள். ஒருநாள் பிரசவத்துக்குக் கிளம்பிப் போன குள்ளனும் மனைவியும் எங்கே என்பதைக்கூட யாரும் மறந்திருக்கும்போது குள்ளன் கைக்குழந்தையுடன் இறங்குகிறான், மனைவியின் சடலமும் வந்திருக்கிறது.

மலையாள கிளாசிக்

நாள்களுக்கு அப்புறம், எப்போதும் தனது மனைவிக்குக் குடை பிடித்துச் செல்லும் குள்ளன் இப்போது அந்த சிசுவை குடையில் கொண்டு செல்லுகிறான்.

கொட்டுகிற மழை. சிசுவுடன் செல்லும் குள்ளனுக்குப் பக்கத்தில் குடைக்குக் கீழே நிரப்ப முடியாத வெறுமை ஒன்றிருக்கிறது.

இப்போதும்கூட மக்களுக்கு பேசித் திரிய வேறு ஏதேனும் இருக்கும்.

யோக்கியர்களும், கண்ணியமானவர்களுமான அவர்களுக்கு யாராவது கிடைக்காமல் போகப் போவதில்லை.

இறுதியாய் ஆமி.

மலையாள கிளாசிக்

மிகவும் கம்பீரமான கணவனாக பஹத். வியாபாரி. காசு வியாபாரம் இவற்றில் எல்லாம் பெரும் நெருக்கடிகள் இருக்கின்றன. நகரத்துக்கு இரவுப் பயணம் போகிறான். சுந்தரியான அவனது மனைவி ஆமி போனில் பேச்சு கொடுக்கிறாள். பயணம் தானே, யோசித்துப் பதில் சொல்ல சொல்லி ஒரு விடுகதை சொல்கிறாள். தூங்கவில்லையா நீ என்று கணவன் கேட்கிறான். நீங்கள் தூங்காமலிருக்க எனக்குப் பதிலை யோசித்தாவாறிருங்கள் என்கிறாள் அவள். முதல் விடுகதை ஒரு கட்டத்திலும், இரண்டாம் விடுகதை வேறு ஒரு கட்டத்திலும் புரிகிறது. பழக்கமிருந்த ஒரு பெண்ணை எடுத்துக்கொள்ள அமைகிற சந்தர்ப்பத்தை உதறி வருவது உட்பட அவளது குரல் அவனை வழி நடத்திக் காப்பாற்றியவாறு இருக்கிறது. எனினும் வியாபார நஷ்டத்தினால் பொறுமை இழந்து அவளை கடிந்து மரியாதையாய் தூங்குகிற வழியைப் பார் என்று விடுகிறான். பொழுது விடிந்து வீட்டையடைந்ததும் அவள் இரவெல்லாம் தூங்காதிருந்ததை அறிகிறான். அவன் கூட தூங்கப் போகும்போது தூங்கி வழிந்தவாறே இனிமேல் இந்த இரவு வியாபாரம் வேண்டாம் என்கிறாள் ஆமி. ஆமாம், அவனுக்குள் அது ஏற்கெனவே முடிவாகித்தான் இருந்திருக்கும்.

இரவுகள் எத்தனை கவர்ச்சி மிக்கவை என்பதை ஒவ்வொரு பிரேமிலும் வந்திருக்கிறது.

இந்தக் கதையில் ஆமியின் குரல் மட்டும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

சேதுலட்சுமி துவங்கி ஆமி வரை ஐந்தே பெண்கள். ஒரு சினிமாவில் முடிந்த வரை பார்த்திருக்கிறார்கள். ஐந்து க்ளோஸ் அப்ஸ். கொஞ்சம் உண்மைகள், அவ்வளவுதான். கொதிக்கிற இந்தப் பெண்ணியக் காலத்தில் பல கேள்விகள் எழக் கூடும். அவைகளைப் பற்றிய பிரச்னைகளை வேறு ஒரு நேரத்தில் பேசலாம். இம்மட்டிலும் கவனம் கொண்ட ஒரு நிகழ்வு நிகழ்ந்தேறி, அது முடிந்த அளவு சென்று சேர்ந்ததற்கு ஓரளவு காலம் உதவியது. மற்றும் படம் கொண்டிருந்த நல்ல நோக்கத்தை சந்தேகம் கொள்ள ஏதுமில்லை. மேலும், இந்த மாதிரிப் படங்கள் அடுத்து வரிசையாய் வந்தவாறில்லாத போதும் வந்து கொண்டிருக்கிற படங்களில் பெண்களின் கனம் கூடியது உறுதி. உலகம் முழுவதுமே வருகிற மாற்றத்தில் இந்தப் படமும் பங்கு கொண்டது என்று சொல்லலாம்.

மலையாள கிளாசிக்

இயக்குநர்கள் மட்டுமின்றி, இப்படத்தில் பங்குபெற்ற அத்தனை தொழிநுட்பக் கலைஞர்களுமே தங்களுடைய இலக்கைத் தொட்டிருந்தார்கள். சேதுலட்சுமியில் ஒரு கிராமம், இஷாவில் ஒரு வீடு, கௌரியில் ஒரு மலைப் பிரதேசம், குள்ளனின் மனைவியில் ஒரு குடியிருப்பு, ஆமியில் ஒரு இரவு. எதுவுமே மறக்க முடியாதவை. நடித்தவர்களைப் பற்றியும் தனியாய் ஒன்றும் சொல்லுவதற்கில்லை. எல்லாமே கதாபாத்திரங்கள்தான். சுந்தரிகளாக வந்தவர்கள் மனம் நிறைந்தார்கள். அவர்களுடைய பாத்திரங்கள் அவர்களை சுந்தரிகளாக்கின என்பதை தனியாய் சொல்லலாம். சேதுலட்சுமியில் சேதுவாய் நடித்த குழந்தை, அவளது நண்பனாய் செய்த அந்த சோட்டா பையனில் இருந்து ஆரம்பித்து துல்கர், பகத் வரை சிறு நெருடலும் இல்லை. ஒரு படத்துக்கு முகங்களைத் தேர்வு செய்வது என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இதில் கற்றுக்கொள்ள வேண்டும். அதிலும் குள்ளனாய் நடித்த அந்த மனிதரும், அவரது மனைவியும் அந்தக் கதைக்கு எவ்வளவு பொருத்தம்.

படம் முடியும்போது புன்னகைக்க முடிகிறது.

துவங்கும்போது இருந்த அதிர்ச்சியை மெல்ல வடிகட்டியவாறு வந்து மெல்ல மக்களை சந்தோஷப்படுத்தியது ஒருவிதமான வியாபார யுக்தியாக இருந்திருக்கக் கூடும். ஆர்டரில் சேதுலட்சுமி கடைசியில் இருந்திருந்தால் வலிமையாய் பொலிந்திருக்கும் என்கிற நினைப்பு வருவதை தள்ளி நிறுத்த ஆகவில்லை. குழந்தைகள் கிழிக்கப்படுகிற இந்த கொடிய காலத்தில் சேதுவை நினைத்துக்கொண்டே இருக்க வேண்டியது ஒருவிதமான தொந்தரவாய் நம்மைச் சூழ்ந்திருக்க வேண்டும் என்று படுகிறது.

மலையாள கிளாசிக்

 

இந்தப் படத்தில் ஈடுபட்டவர்களைப் பற்றின குறிப்பை இணையத்தில் இருந்து காப்பி பேஸ்ட் செய்கிறேன். இதைத் தவிர்த்து மற்றேதும் வெளிச்சரக்கு இல்லை என்பது உத்திரவாதம்.

https://cinema.vikatan.com/south-indian-news/123214-malayala-classic-series-episode-7-about-5-sundarikal.html

Link to comment
Share on other sites

  • 1 month later...

"படம் முழுக்கப் பரவியிருக்கும் திமிரே, 'நத்தோலி ஒரு செறிய மீனல்லா'வை முக்கியம் ஆக்குகிறது!" - 'மலையாள கிளாசிக்' பகுதி - 8

 
 

வி.கே.பிரகாஷ் நம்பக் கூடியவரே அல்ல. அவ்வளவு விநோதம். எங்கே பாய்வார், எங்கே சரிவார் என்று யாராலும் சொல்ல முடியாது. அவ்வளவு விநோதமான ஆள் என்று கணிக்கிறேன். அப்படி இல்லையென்றாலும் நான் பார்த்தவரையில் அவரது படங்கள் ஒரு தினுசானவை. மலையாளத்தில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி எல்லாவற்றிலும் நுழைந்து வந்திருக்கிறார். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ரகம். செக்கு மாடு கணக்காய் உழலுவது என்கிற பேச்சே கிடையாது. கவனித்துப் பார்த்தால், இந்தமாதிரிக் கதையை இந்தமாதிரிதான் சொல்ல வேண்டும் என்ற இலக்கணங்களை அவர் ஊதித் தள்ளிவிட்டுச் செல்வதை அறிய முடியும். `நத்தோலி ஒரு செறிய மீனல்லா (நெத்திலி ஒரு சிறிய மீன் இல்லை)' - நிச்சயமாகப் புதியது. இதற்கு முன்பு வந்த `திருவனந்தபுரம் லாட்ஜ்' படத்தைவிட வேறொரு கோணத்தில் முக்கியமானது.

மலையாள கிளாசிக்

 

 

`பிரேமன்' பிறந்தபோதே அதில் ஒரு அபத்தம் இருந்தது. `மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' ஓடும் தியேட்டரில் லால் வில்லத்தனம் பண்ணிக் கொண்டிருக்கிற காட்சியில் பிரசவ வலி வந்து தூக்கிச் செல்லப்படுகிற ஒரு பெண்மணிக்கு மகனாய்ப் பிறந்தவன், முறையே படிக்காமல் கற்பனைகளிலிருந்து வளர்ந்துகொண்டிருந்து இறுதியாய் எர்ணாகுளத்தில் ஒரு அப்பார்ட்மென்டுக்கு கார் டேக்கராக வந்து சேர்கிறான் என்பதில் கதை தொடங்குகிறது.

சந்தேகமில்லை, செய்யவேண்டியதெல்லாம் முழுக்க, முழுக்க எடுப்பு வேலைகள்தாம். யாராவது பிரேமா என்று கூப்பிட வேண்டுமில்லையா. ஸ்கூல் பையன்கள்கூட நத்தோலி என்றுதான் அழைக்கிறார்கள். தன்னைத் தானே கூட மதித்துக்கொள்ள முடியாத அந்த இழிவான சூழலில்தான் மேலும் ஒருத்தி வந்து சேர்கிறாள். அதேதான், யாருக்கும் அடங்காத ஒருத்தி. பிரபா தாமஸ் என்பது அவளுடைய பெயர். இவனை எடுத்தவுடன் நாய் போல விரட்டியடிக்க ஆரம்பித்துவிட்டாள். சமாளிக்க முடியவில்லை. பிரேமன் தன்னை வதை செய்கிறவர் அவதிப்படுவதாகக் கற்பனையில் கண்டு சிரித்துக்கொள்வதுண்டு. இன்னும் சொல்லப்போனால், அவன் சினிமாவுக்கு  ஒரு நல்ல கதை எழுத முயற்சி செய்துகொண்டிருக்கிறான். சினிமா தியேட்டரில் பிறந்தவன் அல்லவா? அப்பார்ட்மென்டில் ஒரு பெண்ணை வேறு ஒருவருக்காக உளவு பார்க்கப் போக, பிரபா அவனது கழுத்தைப் பிடிக்கிறாள். நான்கு பேர் கூடி தர்ம அடி அடிக்கிறார்கள். ஆகவே, அவமானத்திலிருந்து எழுந்து வீறு கொள்கிற பிரேமன் பிரபாவைப் பழி வாங்க முடிவு செய்துவிட்டான். கதை வேறு ஒரு திருப்பத்தில் நின்று நிமிர்கிறது.

நத்தோலி ஒரு செறிய மீனல்லா

இந்த உலகம் லேசுப்பட்டதல்ல. நான்கு பேர் எந்தக் கவலையும் இல்லாமல் சவுகரியமாய் வாழ்கிறார்கள் என்றால், நானூறு பேர் பூச்சிகளாக வாயைப் பொத்திக்கொண்டிருக்கும் இடம் தெரியாமல் வாழவேண்டும். ரோட்டுக்கடையில் நான்கு இட்லிக்குப் பட்ஜெட் பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய ஒருத்தனுக்கு முன்னால் யாராவது பீட்சா, பர்கர் சாப்பிடுவார்கள், ஐஸ்க்ரீம் சூப்புவார்கள். ஸ்டேட்டஸ் பார்த்துப் பார்த்து இவனது இடுப்பெலும்பு ரப்பராகவே மாறியிருக்கும். ஆனால், கொள்ளைகள் பெருகிக் கொண்டிருக்கின்றன. பெண்களுக்குப் பாதுகாப்பில்லாமல் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது. உலகத்தை கண்ணியமாயிருக்கச் சொல்லி எவ்வளவு தீவிரமாக உபதேசித்தாலும், மறைவில் ஒரு பகை கொந்தளிப்பதை யாவருமே ஓரளவாவது அறிவோம். பிரேமன் அவளை முற்றுகையிட ஒரே வழிதான் இருந்தது. அது, கதை எழுதி அவளை அதில் ஒரு கதாபாத்திரமாக்கி நாஸ்தி பண்ணுவது. 

அவனது யுத்தம் தொடங்குகிறது.

இதுதான் படத்தின் முக்கியக் கதை.

அவன் இருக்கிற அப்பார்ட்மென்ட்தான் களம். அங்கே இருக்கிறவர்கள்தாம் ஏனைய கதாபாத்திரங்கள். பிரபா திமிருள்ள ஒரு ஹீரோயின். போதுமல்லவா? இப்போது என்ன நடக்க வேண்டும், ஆண்டாண்டு காலமாய் அப்படித் திமிருள்ள பெண்களை அடக்குவதற்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது. அது நடக்கிறது. வீர சூர பராக்கிரமனாக வந்து சேர்ந்துவிடுகிறான் ஒரு ஹீரோ. நரேந்திரன் என்பது அவனுடைய பெயர். அவன் யாருமில்லை, பிரேமன்தான்.

புயலாகவோ, சூறாவளியாகவோ புகுந்து வருகிறான் அவன். அல்லது சிங்கமாகவோ புலியாகவோ நமது விருப்பத்துக்கு உவப்பாக எப்படியும் எடுத்துக் கொள்ளலாம். அவள் இருக்கும் வீடு அவனுடையது, பாருங்கள். அங்கே இருக்கிற சௌந்தர்யா அண்ட் பார்ட்டி டகால்ட்டி பண்ணி இருக்கிறது. அந்தக் கதை எல்லாம் வேண்டாம், கெட் அவுட், வெளியே போ என்கிறான் நரேந்திரன். அவள் திடுக்கிடுகிறாள். முதல் அடி.

நத்தோலி ஒரு செறிய மீனல்லா

இதை எழுதும்போது பிரேமன் அடைகிற சந்தோஷத்தைப் பார்க்க வேண்டும். பழிக்குப் பழி. தொடர்ந்து அவளுக்கு அடிகள். ஒருமுறை அவளைக் கட்டிப்போட்டுகூட வதை செய்கிறான். இறுதியில் அவளது நைட்டியைப் போட்டுக்கொண்டு டிஸ்கோ ஆடும்போது, அவனை அடித்து அவள் கட்டிப்போடுகிறாள். பிறகு அவிழ்த்துவிட்டு அண்ணாந்து பார்த்துக்கொண்டு இலக்கிய வரிகளில் தனக்கு கேன்சர் இருப்பதையும், தான் தினமும் இறந்து கொண்டிருப்பதையும் சொல்கிறாள்.

நரேந்திரன் அப்படியே அவள் மீது பரிதாபம் கொண்டு தன்னை மாற்றிக் கொள்வது ஒரு பெரிய ட்விஸ்ட். அதாவது, அதை எழுதின பிரேமனே எதிர்பார்த்திராத மிகப்பெரிய ட்விஸ்ட். என்ன கன்ட்ரோல் பண்ணினாலும் நரேந்திரன் பிரேமனின் கைப்பிடிக்குள் நிற்பதில்லை. வேறு வழியில்லாமல் பிரேமன் நரேந்திரனையே பழிவாங்க ஆரம்பிக்கிறான். அப்பார்ட்மென்டில் ஒரு சிறுவன் செத்துப் போவதற்கு நரேந்திரன்தான் காரணம் என்று கதை செல்கிறது. இப்போது உண்மையில் பிரேமனால் அவன் துரத்தப்படுகிறான் என்று சொல்ல வேண்டும். கதைக்கு அப்பால் ஓர் அல்ப காரியத்துக்காகப் பிரபாவின் அறையிலிருந்து துரத்தப்பட்ட ஆனி கதைக்குள் கொண்டு வரப்படுகிறாள். நானும் நரேந்திரனும் உனக்குக் காதல் என்றால் என்னவென்று தெரிய நாடகம் போட்டோம் என்று சீறுகிறாள். பிரபா நம்பாமல் விரட்ட, நரேந்திரன் இப்போது எல்லாவற்றையும் படைத்த பிரேமனிடமே நியாயம் கேட்கிறான்.

வெளியே வெறுத்துக்கொண்டு உள்ளுக்குள் நீ அவளைக் காதலித்திருக்கிறாய். அதற்குத்தானே இது எல்லாமும் என்று கேட்கிறான்.

நிலைக் கண்ணாடியில் நானேதான் நரேந்திரன் என்பதும் அவனுக்குப் புரிகிறது.

கலை என்பது தனது வக்கிரத்தைக் கொட்டித் தீர்ப்பது அல்ல. வக்கிரங்களை கொட்டித் தீர்ப்பது என்பதை நாம் பல்வேறு முனைகளில் பல்வேறு டிசைன்களில் செய்துகொண்டிருப்பதுதான், ஆனாலும் அந்த வேலையைச் செய்கிறவன் எப்படிக் கலைஞனாக முடியும். கண்கள் திறக்க, பிரேமன் வேறு திரைக்கதையை எழுத ஆரம்பிக்கிறான்.

கதையில் பிரேமனின் திரைக்கதையை வாங்க வி.கே.பிரகாஷே வர இருக்கிறார். அதற்கான சம்பவங்கள் படத்தில் நடந்திருக்கின்றன. 

நத்தோலி ஒரு செறிய மீனல்லா

படத்தில் உள்ள யாவரும் அவரவர் இடத்தில்தான் இருக்கிறார்கள்.

பிரேமனின் வாழ்க்கையும் வேறு ஒன்றாகத் தோற்றம் கொடுக்கத் தொடங்குகிறது.

பஹத் பாசில்தான் பிரேமன். அவரேதான் நரேந்திரன். படம் தொடங்கும்போது அம்பில் வில்லைப் பூட்டி பட்ஷியை அடிக்கத் தயாராயிருக்கும் அர்ச்சுனனாகக்கூட நடித்திருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் அலட்டிக் கொள்வதேயில்லை. நாம் என்ன செய்கிறோம், என்ன செய்யவேண்டியிருக்கும் என்பது அவருக்குத் தெரிகிறது. நத்தோலி சிறிய மீன் தானா என்று அவர் கேட்கிற கேள்வி எல்லா எளிய மனிதர்களும் தங்களுக்குள் கேட்டுக் கொள்ளக்கூடிய ஒரு கேள்வி தானாய் இருக்கும். அப்படியே பகத் நம்மை பிரதிபலிக்கிறார் இல்லையா, அந்த வியப்பைப் பகிர்ந்து கொள்ளாமல் முடியாது.

கமலினி முகர்ஜி அசாத்தியமான ஒரு ஆர்டிஸ்ட். நமது கொட்டங்கச்சி சினிமாக்களில் அவரை வைத்துக்கொண்டு என்ன செய்வது. எல்லாவற்றிற்குமே அவரது ஒரு பார்வை போதுமானதாக இருக்கிறது. அவை பேசுகின்றன என்றால் க்ளிஷேவாகி விடுமோ? சரி, காதலும் வெறுப்புமான ஒரு பெண்ணை மறக்க முடியவில்லை. மற்றபடி, கொஞ்சமே வந்துவிட்டுச் செல்கிற அழகுப் பதுமையாய் ரீமா. அதாவது, அவ்வளவு சரியாய் அந்தப் பதுமை பாத்திரத்தை செய்து மறைகிறார் என்கிறேன்.

இம்மாதிரிப் படத்தில் அடிப்படையாய் இருந்து தாங்குவது திரைக்கதையாய்தான் இருக்க முடியும். சங்கர் ராமகிருஷ்ணன் அதைச் செய்திருக்கிறார். வெறுமனே வரிசையில் ஒரு கதை சொல்வது நிகழ்ந்திருந்தால், அது மிகச் சாதாரணமாக இருந்திருக்கும். ஆனால், வாழ்வை எள்ளலாகச் சொல்லும் ஒரு குரல் படம் முழுக்க இருக்கிறது. அதற்கு யாரும் வாய் விட்டுச் சிரித்துவிட முடியாது என்பது விசேஷம். அத்தனை கதாபாத்திரங்களிலும் தப்பித் தவறி எங்கேனும் ஏதாவது புனிதப் பூந்தொட்டியை வைக்காமல், நடுநிலைத் தன்மையைப் பேணியிருக்கிறார்கள். அதன் பாடுபொருளைச் சிந்தித்து நிற்கையில் பல எழுத்தாளர்களும் தவறவிடாமல் பார்க்க வேண்டிய திரைக்கதைதான் இது.

ஒளிப்பதிவு, இசை போன்ற எல்லாமுமே கதையின் போக்குக்கு உதவியாய் இருக்கிறது என்பதைத் தாண்டி, சிறப்பாய்ச் சொல்ல ஏதுமில்லை. அதுவே ஒருவேளை படத்திற்குப் பலம் என்று புரிந்துகொள்ள முயல்கிறேன். அப்படித்தான் இருக்க முடியும்.

நத்தோலி ஒரு செறிய மீனல்லா

இயக்குநர் பற்றிச் சொன்னதுதான்.

எடுத்துக் கொள்கிற விஷயங்களை வைத்துக்கொண்டே அவரது வலிமையை அறிய முடியும். அவ்வளவு முதிர்ச்சியோடு கூடிய ஒரு திரைமொழி. கொஞ்சம் அலட்சியமும் இருக்கிறது என்றும் ஒரு குறையாய்க் குறிப்பிடலாம். எது இருந்தாலும், இல்லாமல் போனாலும் படத்தில் ஒருவிதமான திமிர் கண்டிப்பாக இருக்கிறது.

மார்க்கெட்டிலிருந்து கமலி ஆட்டோவில் வந்து சேர்ந்து பொருள்களை இறக்கிக்கொண்டு எவ்வளவு என்று கேட்க, ஆட்டோக்காரர் நாற்பது ரூபாய் என்பார். இருபத்தைந்து ரூபாய் என்று கமலி சொல்லிப் பார்க்க, ஆட்டோக்காரர் மறுக்க, அப்புறம் பேச்சே இல்லை. பொருள்களுடன் ஏறி உட்காரும் கமலி வண்டியை எடுக்கச் சொல்கிறார்.

நீ மறுபடியும் மார்கெட்டிலேயே விட்டுவிடு. நான் அங்கிருந்து வேறொரு ஆட்டோ பிடித்து வந்துகொள்கிறேன்.

இது எவ்விதத்திலும் ஒரு நகைச்சுவைக் காட்சியே அல்ல,

திமிர்.

 

படம் பூராவும் விரவியிருக்கிற இந்தத் திமிருக்காகவே இந்தப் படத்தை ஓரிரு முறைக்கு அதிகம் பார்க்கலாம்.

https://cinema.vikatan.com/south-indian-news/123985-malayala-classic-series-episode-8.html

 

 

"ஞான் ஸ்டீவ் லோபஸ்... இதுதான் நல்ல திரைக்கதை என எந்த லிஸ்டிலும் சேர்க்கலாம்!" - மலையாள கிளாசிக் பகுதி 9

 
 

நாம் நமது குடுவைகளுக்குள் வாழ்கிறோம். பல்வேறு வெளிக் காரியங்களை தொட்டுக் கொள்வதாலோ கலை இலக்கியம் இன்னபிற விஷயங்களில் கீச்சிடுவதாலோ நமக்கு எல்லாம் தெரியும் என்றில்லை. அதிலும், நம்மைச் சுற்றி வேறு ஓர் உலகம் இயங்குவதைக்கூட பல சமயங்களில் அறிவதில்லை. நடுரோட்டில் ஒருவன் கத்தியால் கிழிக்கப்பட்டு தெருவில் கிடந்து சாவதைப் பார்க்க நேர்ந்து, அதைப் பற்றித் தெரிய வேண்டும் என்றால் போலீஸ் எழுதின கதை வசனத்தை எடுத்துக்கொண்டு, அதை உண்மையாக்குகிற நாடகத்துக்குப் பாடுபடுவோம். பெரும்பாலும் உதிரி மக்கள் உழைத்துச் சாகின்றனர். அல்லது குற்றத் தொழில் புரிந்து அடையாளம் அற்று மறைந்து போகின்றனர். நாம் வியர்வையைக் கரைப்பது யாருக்கென்று தெரியாமல் போவதைப்போல, குருதி கொட்டி மடிந்து போவதிலும் அவர்களுக்குத் தெரியாத உண்மைகள் பதுங்கியே இருக்கின்றன. இது ஒரு சுழல். இதற்குள்ளேதான் ஸ்டீவ் சிக்கிக்கொள்கிறான்.

மலையாள கிளாசிக்

 

                                      

அவன் வழக்கமான ஒரு கல்லூரி மாணவன்.
பெரிய விசேஷங்கள் கிடையாது.

பையன்களுடன் குடித்துவிட்டு போலீஸிடம் பிடிபடாமலிருக்க ஓடுகிறான். அவனது தந்தை ஒரு பெரிய போலீஸ் அதிகாரியாய் இருந்தும். அவன் தன்னோடு படிக்கிற பெண் மீது காதல் கொண்டிருப்பதும், பக்கத்து வீட்டுப் பெண்மணியை அவள் அறியாமல் இருக்கும்போது வெறிப்பதும், அவனது வயதில் இயல்பாய் வந்து போகிற சம்பவங்கள்தான். ஆனால், பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒருவனை நடுரோட்டில் வெட்டி வீழ்த்திவிட்டுப் போகிறார்கள் என்பது ஒரு திடுக்கிடலல்லவா? மயங்கி நிற்காமல், அவனை மருத்துவமனையில் சேர்க்கவும் செய்கிறான். போலீஸார் வந்து சேர்கிறார்கள். அவனது அப்பாவும்கூட. எல்லோருடைய உபதேசமும் ஒன்றுதான். 'உனக்கு ஏன் இந்த வேலை? கிளம்பி வீட்டுக்குப் போ!'. ஆனால், அவர்களை மீறி வாக்குமூலம் கொடுத்துவிட்டு, அடையாள அணிவகுப்புக்கும் செல்கிறான். அந்த வரிசையில் கொன்றவன் இல்லை. இருக்க வாய்ப்பில்லை என்கிறார், அனுபவம் மிகுந்த ஓர் அதிகாரி. இதெல்லாம் ரொம்பப் பழைய கதை என்கிறார் அவர்.

ஆனால், அந்தக் கொலைகாரனை ஸ்டீவ் பார்க்கிறான். சேஸ் செய்கிறான்.

ஓர் உள்ளொடுங்கிய கிராமத்துக்குள் இருக்கிற தனது வீட்டுக்குத் திரும்பும் அந்த கொலைகாரனுக்கு, ஹரி என்பது பெயர். ஒரு இடைவெளியில்லாமல் ஓடி ஓடி வேலை செய்கிற மனைவி. சிறிய பெண் குழந்தை ஒன்று. மனைவியும் மகளும் கோவிலுக்குப் போகிற இடைவெளியில் ஸ்டீவ் அவர்களிடம் பிடிபட்டுவிட, அவனையும் ஏற்றிக்கொண்டு ஹரியும் நண்பர்களும் புறப்படுகிறார்கள். வீட்டில் இருக்காதீர்கள், கிளம்புங்கள் என்று அபிப்ராயம் சொல்லப்பட்டிருக்கிறது.

இது ஒரு பயண அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும்.

அந்தக் குற்றவாளிகள் எல்லாம் வேற்றுக் கிரகத்தின் இறக்குமதிகள் அல்ல என்பதை ஸ்டீவின் பார்வை மூலம் நாம் அறிகிறோம்.
ஒருவன் இவனிடம் போனை வாங்கிக்கொண்டு வீடியோ கேம் விளையாடுகிறான்.
ஸ்டீவின் காதலி போன் செய்கிறாள். ஏ.ஆர் ரஹ்மானின் 'அஞ்சலி... அஞ்சலி...' ஒலிக்கிறது.
ஹரியின் மனைவி போன் செய்கிறாள். இளையராஜாவின் 'அஞ்சலி அஞ்சலி...' ஒலிக்கிறது.
என்னை என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்கிறான், ஸ்டீவ்.
அவனை எதுவும் செய்துவிட அவர்களுக்கு உத்தேசமில்லை. 'செக்போஸ்ட் தாண்டியவுடன் உன்னை இறக்கி விடுகிறோம், போய் விடு' என்கிறான், ஹரி. 'இதில் மாட்டிக் கொள்ளாமல் நீ உன் வேலையைப் பார்' - கூட்டத்தில் ஒருவன் சகஜமாய் சொல்கிறான். எங்களுக்குத் தெரிந்த தொழிலைச் செய்து பிழைத்துக்கொள்ள விடுங்கள் என்கிறான். அப்படி அதெல்லாம் நடந்து விடுவதில்லை.

மலையாள கிளாசிக்

இரவு நேரம். ஹோட்டலில் அவர்களுடன் சாப்பிட்டு ஸ்டீவ் கை கழுவ வெளிவந்தபோது, பாம் போடுகிறார்கள். பாதி உயிரோடு இருப்பவரை வெட்டிவிட்டு ஓடுகிறார்கள். கடைசிவரை போராடி சரிகிற ஹரியை இப்போதும் ஸ்டீவ் ஒரு டாக்டரிடம் சேர்த்து, அப்புறம் அப்பாவைக் கூப்பிடுகிறான். ஆம்புலன்ஸ் வருகிறது. போலீஸ் வருகிறது. அப்பா அவனை ஆவேசத்துடன் இழுத்துச் சென்று வீட்டில் தள்ளுகிறார். எதுவும் கேட்காதே என்பது அவருடைய எச்சரிக்கை. அப்புறம் ஹரியைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை.

முதலில் ரோட்டில் வெட்டப்பட்ட ஆளின் அண்ணன் பிரதாப் அவனது காரியத்தை தனது கூட்டத்தாருடன் வெகு அமைதியாய் நடத்தும்போது, அவனிடம் ஸ்டீவ் ஹரி எங்கே என்று கேட்கத்தான் செய்கிறான். இங்கே பெரிய பெரிய ஆட்கள் இருக்கிறார்கள், போலீஸ் இருக்கிறது. அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அது அவர்களுடைய வேலை. நீ பத்திரமாய் வீடு சென்று சேரு மோனே என்று அனுப்பி வைக்கிறான் அவன்.

சொல்லப்போனால், ரவுடிகளான ஹரியும் பிரதாப்பும் அப்பா உள்ளிட்ட போலீஸாரைக் காட்டிலும் இதமாய்தான் நடந்துகொள்கிறார்கள்.
அப்படி இப்படி அவனை சமாதானம் செய்ய முயல்கிற அப்பா, 'எல்லாவற்றையும் கண்டும் காணாமல் இருக்கப் பழகிவிட்டேன், மாற்றிக் கொள்ள வழியில்லை' என்றெல்லாம் சொல்லிப் பார்க்கிறார். அவனது பிடிவாதத்தைச் சகிக்க முடியாமல் எப்படியாவது ஒழி என்று கைவிடுகிறார். இறுதியாய் ஒரு காரியம் பாக்கி இருந்தது. ஹரியின் மனைவி அஞ்சலியைப் பார்த்து ஹரியின் மொபைல், பர்ஸ் போன்றவற்றை ஒப்படைத்து, உன் புருஷன் உயிரோடு இல்லை என்பதைச் சொல்கிறான். துக்கம் பிளக்க திரும்புகிறவன், காதலியைக் கூப்பிட்டு அவளிடம் தனது காதலை சொல்கிறான். இவனைப் புரியாமல் அல்லாடிக் கொண்டிருந்த அவளது கரங்களில் விழ வேண்டும் என்பது தவிர அவனுக்கு இப்போது வேறு நோக்கமே இல்லை.

ராஜீவ் ரவியின் படம்.

ஞான் ஸ்டீவ் லோபஸ்

அவரது மூன்று படங்களில் என்னை முற்றிலுமாய்த் தாக்கியது இந்தப் படம்தான். இதன் திரைக்கதை மலைப்பைக் கொடுத்தது. படம் வரைந்து பாகங்களைக் குறிக்கிற ஸ்பூன் பீடிங் கதை சொல்லல் பாணியை முற்றிலுமாய் தவிர்த்திருந்தார்கள். என்ன மாதிரி துணிச்சல் அது. எல்லாம் சரியாகவே இருக்கிறது என்று காட்டிக்கொள்கிற இந்த உலகுக்காக எவ்வளவு குருதிப் பெருக்கு நிகழ்ந்தவாறு இருக்கிறது. வெளியே யாருக்கும் தெரிந்துவிட முடியாத இந்தக் கள்ள ஆட்டத்தில், அரசியல் அதிகாரம் எல்லாமே யாரை நசுக்கிக் கொண்டிருக்கின்றன? மறைந்து போகிற அந்த மக்களுக்கெல்லாம் கிடைக்கப்போகிற இறுதி நியாயம் என்ன... எதுக்கும் பதில் கிடையாது. திரைக்கதையேகூட கேள்விகளை மட்டுமே வைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்வதைத்தான் பிரமிக்கிறேன். பிரசங்கமோ, அதிகப் பிரசங்கித்தனமோ நல்ல சினிமாக்களுக்குத் தேவைப்படுவதில்லை. சந்தோஷ் ஏச்சிகானமும், கீது மோகன்தாசும், அஜித்குமாரும், ராஜீவ் ரவியும் அப்படி ஒரு நல்ல சினிமா வர சிரத்தை கொண்டு எழுதியிருக்கிறார்கள். இந்த எளிய கதை மொழியைத்தான் நல்ல திரைக்கதை என்று என்னைப் பொறுத்தவரை, நான் எந்த லிஸ்டிலும் சேர்க்கத் தயார் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். முக்கியமாய், காட்பாதர் வகைத் திரைப்படங்களில் சொல்ல வந்ததெல்லாம் தவறியது என்றும், இந்தப் படத்தில்தான் அது துலங்க வைக்கப்பட்டிருக்கிறது என்பதும் உறுதி.

படத்தின் இரவுகள் மிகப் பிரமாண்டமானவை.

சாலைகளின் வாகனப் போக்குவரத்து, துரத்தல்கள் போன்றவைகளில் சினிமா முற்றிலும் அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறது.
முகங்களின் மர்மங்கள் எல்லாமே அற்புதம். ஸ்டீவின் தந்தை முகத்தில் தேங்குகிற உபரி இருளில் எத்தனை அழுத்தம்?
ஒளிப்பதிவாளர் சுதீஷ் பப்பு. பிரமாதம்.
பஹத்தின் தம்பி பர்ஹான் பாசில் ஸ்டீவாக நடித்திருக்கிறார். அவர் அளவுக்கு ஒரு பேர் வாங்கின நடிகன் அந்தக் கதாபாத்திரத்தில் சோபித்திருக்க முடியாது. அத்தனை கச்சிதம். பொருத்தம். நயம். அவரது கண்கள், நடை எல்லாம் நம்மை அவரில் சாய்ந்து கொள்ளத் தூண்டுகிறது. அவருக்குக் காதலியாய் நடித்த பெண்ணை ஒரு நடிகையாய் நினைத்துவிடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்திருக்கிறார்கள். அகானா கிருஷ்ணா தனது முட்டைக் கண்களுடன் தனது காதலனை சீர் திருத்துவதிலேயே இருப்பதுகூட நமக்கு நடப்பதுபோலவே தோன்றுவதற்குக் காரணம், அவருடைய எளிமையான உடல்மொழிதான். அப்புறம், இப்படத்தில் ஓரிரு காட்சிகள் வந்தாலுமே திருவனந்தபுர கொச்சையில் ரெண்டு வார்த்தைகள் பேசி குறுக்கு மறுக்காய் நடந்த அபிஜா சிவகலா. ஹரியின் மனைவி, அந்த சிறிய பெண் குழந்தையின் தாயாய் வந்தவர்தான். என்ன ஒரு நடிகை?

போலீஸ் அதிகாரியாய், ஸ்டீவின் அப்பாவாய் நடித்த அலென்சியரை மறைந்துபோன திலகனாய் பலரும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நண்பர் சுகா முன்னொரு காலத்திலேயே இதைச் சொல்லியிருக்கிறார். அது அப்படியே சரி. புதிர்கள் நிறைந்தவை அந்த முகம். அது எந்த வடிவத்துக்கும் நிறைந்து ததும்பும். அதுபோலவே ஹரியாக அமைதி ததும்ப வந்த அந்த அற்புத நடிகன். சுஜித் சங்கர் அவருடைய பெயர். பின்னால் மகேஷிண்ட பிரதிகாரத்தில் யாருக்கும் அறியப்பட்டார். உண்மையில் அவரை யாருமே கவனிக்கவில்லை என்பது படமே கவனிக்கப்படவில்லை என்பதில் அடங்கும். எல்லாவற்றிலும் மேலாக, விநாயகன். பிரதாப்பாக மிகக்குறைந்த காட்சிகளில். அவருக்கு கண்களில் அன்பு வருமானால் அதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் பாக்கியவான்கள் என்று கற்பூரம் அடித்துச் சொல்லலாம். ரவி அவருடைய அருமையறிந்தவர் என்பது நமக்குத் தெரியும். கம்மாட்டி பாடத்தில் அவர் எந்த நடிகனைத் தாண்டவில்லை என்பதை எப்போதும் கேட்டுக்கொள்ள வேண்டும். வெட்டி சாகடிக்கப்பட்ட தம்பியின் காரியத்தில் தனது ஆட்களுடன் இருக்கிற அந்த மிக சிறியக் காட்சி ஒரு காவியம்போல நினைவில் நிற்பதற்கு விநாயகன் காரணம். 

ஞான் ஸ்டீவ் லோபஸ்

இந்தப் படத்தில் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் மற்றும் பலர் அல்ல என்பது செம்மை.
இசை, பாடல்கள், எடிட்டிங் அனைத்துமே இயக்குநரின் ரசனை சார்ந்தது என்பது புரிகிறது. என்ன ஒரு விஷயத்தை தனியாய் சொல்லி அவரைப் பாராட்டுவது என்பது எனக்கு நழுவுகிறது. என்ன செய்யலாம்? அவர் மேலும் படங்கள் செய்தவாறு இருக்கிறார் என்பது சினிமா மீதே நாம் நம்பிக்கை கொள்ளவேண்டிய விஷயமாக இருக்கிறது என்று சொன்னால் போதும். இனிவரும் காலங்களில் ஐம்பது வருட ரைம்சை ஒப்பிக்காத இந்த மாதிரிப் படங்கள் பெருகும் வேளையில், ராஜீவ் ரவி நன்றியோடு நினைவு கூரப்படுவார்.

 

படத்தின் முடிவில் தனது சிற்றப்பனுடன் ஹரியின் வீடு சென்று திரும்பிக் கொண்டிருக்கிறான் ஸ்டீவ். காத்திருக்கும் காதலியை சந்திப்பது அவனது முதல் திட்டமாயிருக்கலாம். ஒரு பைக்கில் பின் தொடர்கிறவர்களில் ஒருவன் ஸ்டீவின் கழுத்துக்குக் கத்தியை வீசுகிறான்.

https://cinema.vikatan.com/south-indian-news/124555-njan-steve-lopez-malayala-classic-series-episode-9.html

 

 

"ஆமென்... எந்தப் படங்களிலும் முழுமையாய் சாத்தியப்படாத கிளர்ச்சித் தொகுப்பு!" - மலையாள கிளாசிக் பகுதி 10

 
 

Ee. Ma. Yau  படம் வெளிவந்து பார்வையாளர்களின் ஆரவாரத்துடன் கொண்டாட்டமாக  ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தையோ, அங்கமாலி டைரீசையோ உட்கொள்ளும்போது இவற்றின் இயக்குநரை ஆமென் படத்திலேயே அறிந்திருக்க முடியும். ஆமென் ஐ ஓகே என்று சிறு வியப்புடன் கடந்தார்கள். அங்கமாலி படத்தை இப்போதும் விரோதமாய் கருதுவோர் உண்டு. இந்த பட ரிலீஸுக்குப் பிறகு யாராலும் வாய் திறக்க முடியவில்லை. ஒரு இயக்குநர் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிற நெருக்கடிகளைப் பற்றி பேசுவதற்குச் சொல்லவில்லை, அவர் முன்னமே ஆமென் படம் செய்யும்போதே தனது உத்திகளை எடுத்து உபயோகிக்கத் துவங்கியிருந்தார் என்கிறேன்.

ஆமென்

 

"ஞான் ஸ்டீவ் லோபஸ்... இதுதான் நல்ல திரைக்கதை என எந்த லிஸ்டிலும் சேர்க்கலாம்!" - மலையாள கிளாசிக் பகுதி 9

கேரள நிலப்பரப்புக்கு என்றே சில பிரேம்கள் உண்டு. அது இளங்கோவின் காளிதாசனின் காவிய மரபைக் கொண்டது. வர்ணங்களும்கூட அப்படித்தான். அதற்கு இலக்கியத்திலும் பிற கலைகளிலும் சினிமாவிலும் ஒரு நிதானமே உண்டு. நான் அடித்துக் கவுத்துகிற வேறு ஒரு மாதிரியை ஆமென் படத்தில்தான் பார்த்தேன். எல்லாவற்றையும் தலை கீழாக்கியிருந்தார்கள். நம்பகத்தன்மைக்கும் பங்கம் செய்யவில்லை. உறுதியாக அது ஒரு வெற்றிப்படம். வசூலைவிட முக்கியமாய் ஒரு படைப்பாளிக்கு திருப்தியைக் கொடுத்திருக்கும். முதல் வெற்றி அதுதானே? படத்தின் கூறுமுறை மிகவும் செருக்குடன் இருந்தது. முறைப்படி sarcasm என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், அதைப்பற்றி தெரியாத பலரும் அதை மேதாவித்தனமாய் பெனாத்துவதால் தவிர்க்கிறேன். மேலும், படத்தில் விநோதங்கள் நிரம்பியிருந்தன. உரையாடல்கள் நம்மைக் கிள்ளவும், குத்தவும், சிலநேரம் தூக்கிப்போட்டு மிதிக்கவும் செய்தன. கோழிப் பீ ரொம்ப நாறுகிறதே என்கிற கேள்விக்கு, அதன் சாப்பாட்டில் ஸ்பிரே அடித்து வாசமாக மலம் வர வைக்க அவகாசமில்லை என்று வருகிறது பதில்.

பஹத் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயர் சாலமன். அந்தப் பாத்திரம் படத்தின் ஹீரோ என்று சொல்லிவிட முடியாது. கதையில் முக்கியமானவன், அவ்வளவுதான். ஒரு ஊரில் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்குள் பந்தமும் பிரிவினைகளும் இருக்கின்றன. அரவணைத்துக்கொள்வது போலவே அடித்துகொண்டும் இருக்கிறார்கள். ஆயின், பெரும் பாடல் பெற்ற வரலாறுள்ள அந்த ஊரின் சர்ச் அனைத்தையுமே ஆள்கிறது. அல்லது தலைமை ஃபாதர் தனிக்காட்டு ராஜாவாய் ஆண்டு கொண்டிருக்கிறார்.  அவரது இனத்தில் படுகிற காண்ட்ராக்டரின் மகள் சோசன்னாவை சாலமன் காதலிப்பது ஃபாதருக்குப் பிடிக்கவில்லை. ஆனால், பேண்ட்காரர்கள் அவனுக்கு உதவியாய் இருக்கிறார்கள். அந்த பேண்ட் குழுவை சர்ச்தான் வைத்து போஷித்துக் கொண்டிருக்கிறது. அது வேண்டுமா, வேண்டாமா என்பதை ஓட்டெடுத்துத் தீர்மானிப்பது என்பதை அறிவித்து அவர்களை ஒழித்துக்கட்ட முடிவெடுக்கிறார் ஃபாதர்.

சாலமன் கிளாரினெட் வாசிப்பவன். பேரு கேட்ட கிளாரினெட் கலைஞன் எஸ்தப்பனின் மகன். அந்தக் குழுவே அதிகாரத்துக்கு எதிர்ப்பாகத்தான் இருக்கிறது. ஃபாதர் அந்த மாதிரி ஆட்களை விரும்ப முடியாது. குழுவின் தலைவர் லூயிஸ் பாப்பனின் செல்லப் பிள்ளையாய் இருந்தாலும், சாலமனுக்கு சரியான முறையில் கிளாரினெட் வாசிக்க வருவதில்லை. அவனுக்குள் அவனது தகப்பனைப் பற்றி வருகிற ஒரு காட்சி அவனை நடுங்க வைத்துத் தள்ளி நிறுத்துகிறது. இதே குழுவிலிருந்து வெளியேறிப் போன வேறு ஒரு ஆர்ப்பாட்டமான குழு, வருடா வருடம் கோப்பையைத் தட்டிக் கொண்டிருப்பதால்தான் இந்தக் குழுவைக் கலைத்து விடலாம் என்கிற பேச்சு வந்தது. ஆனால், வின்சென்ட் வட்டோலி என்கிற இரண்டாம் கட்ட ஃபாதர் வருகிறான். என்னதான் டிப்டாப்பாக இருப்பதற்குக் கண்டிக்கப்பட்டாலும், ஃபாதருக்கு அடங்கியே இருக்க வேண்டியிருந்தாலும், வின்சென்ட் ஒரே உரைவீச்சில் பேண்ட் குழுவினரை கழட்டிவிடக் கூடாது என்ற பக்கம் பேசி மக்கள் ஆதரவைப் பெற்று, ஃபாதரின் மூக்கையுடைக்கிறான்.

சோசன்னா ஒரு வீராங்கனை. படித்து ஃபாதராகி ஊரான் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளப் போகிறாயா, என்னைக் கட்டி எனக்குப் பிறக்கப்போகிற பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளப் போகிறாயா என்று கேட்டு, தனது பால்ய சிநேகிதனை தனது கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டிருப்பவள். அவளுக்கு வேறு ஒரு மாப்பிள்ளையைத் திருமண நிச்சயம் செய்கிறார்கள். வேறு வழியே இல்லாமல் வின்சென்ட் துணையுடன் காதலர் இருவரும் ஊரைவிட்டு செல்லத் துணிய, அந்த காரியம் ஈடேறவில்லை. பிடிபடுகிறார்கள். பிடிபட்ட சாலமனை உரித்தெடுக்கிறார்கள். அந்தநேரத்தில் பலருக்குமாக நடக்கிற வாக்குவாதத்தில் லூயிஸ் பாப்பன் சாலமன் வெறும் சர்ச்சின் எடுப்பு மட்டுமல்ல, அவன் கிளாரினெட் கலைஞன் என்கிறார். எல்லோரும் நாலாபுறமும் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். பேச்சு முறுகி சாலமனை முன்னிறுத்தி அடுத்த வருடத்துக் கோப்பையை நாங்கள் வாங்குவோம் என்று சவால் விடுகிறார் லூயிஸ்.

ஆமென்

அப்படி இவன் அதை வாங்கினால் அதைத் தருவோம், இதைத் தருவோம், ஏன், காண்ட்ராக்டரின் மகளையே கட்டித் தருவோம் என்று பதில் சவால் வந்து, காண்ட்ராக்டரும் அதெல்லாம் நடக்காது என்கிற துணிச்சலில் அதற்குச் சம்மதிக்கிறார். 

எவ்வளவோ இடையூறுகள்.

எவ்வளவோ சம்பவங்கள்.

சாலமனுக்குள்ளே இருந்த ஒரு அற்புதக் கலைஞனைப் பார்த்தவர் லூயிஸ். பேரு கேட்ட எஸ்தப்பனின் மகனை அவர் நம்புகிறார். அவனுக்குள் இருக்கிற அந்த ஆவேசத்தைக் கொண்டுவர சகலரும் துடிக்கிறார்கள். சோசன்னாவும்தான். அவன் வெற்றி பெற்றானா, இல்லையா என்பது கதை. வெற்றி பெறுகிறான். சோசன்னாவைக் கட்டுகிறான். இதெல்லாம் எப்படி என்பது மிக அழகான காட்சிகளால் உறுமுகிறது படம்.

சர்ச்சை இடித்துக் கட்டுவது என்று ஃபாதர் திட்டமிட்ட காரியம் நடக்கவில்லை.

சாலமன் ஒரு கலைஞன்தான் என்று அறியப்படும்போது, பலருக்கும் மனமாற்றம் வந்திருக்கிறது.

படம் துவங்கும்போது தனது அற்புதத்தைக் காட்டிய புண்ணியாளன்தான், வின்சென்ட் வடிவில் வந்து போனான் என்றும் கதை கூறுகிறது.

படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். முதல் காட்சியே ஒரு வீட்டின் வாசலில் கிப்ட் பாக்ஸை வைப்பதுதான். அதில் மலத்தை வைத்துப் பொதிந்தவன், அந்த வீட்டுக்குள்ளேயே வந்து யார் வைத்திருப்பார்கள் என்று கேட்டு அதை ஊர் சண்டையாய் மாற்றுகிறான். அப்படி நகர்ந்து போகிற கதையில் பலரும் வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களுடைய எல்லா செய்கைகளும் எதிர்பாராததாய் இருக்கின்றன. சாலமனுக்கு எதிராக வாசிக்க வரும் அந்த கள்ளுகுடியனுக்கு அப்படி ஒரு ஆளுமையைக் கொடுத்திருக்கிறார்கள். இப்படத்தில் இருக்கிற அத்தனை மாந்தர்களும் சேருகிற அந்தத் திருவிழா, அந்தப் போட்டி மேடை, அதன் துவக்கம் முடிவு எல்லாம் அப்படியொரு பெப். நம்மைக் கிளர்ச்சியடைய வைக்கிற அந்தத் தொகுப்பு அநேகமாய் இதுபோல வந்த எந்தப் படங்களிலும் முழுமையாய்  சாத்தியப்பட்டிருக்காது. பார்க்கிறவர்களைப் பதற வைத்து வெற்றியடைகிறார்கள்.

இதன் திரைக்கதை அத்தனை கச்சிதம் அல்ல.

வேண்டியது வேண்டாதது எல்லாவற்றையும் சுவாரஸ்யமாக அள்ளி வந்திருக்கிறார்கள்.

மனம்போல் பேசி, மனதாரச் சிரித்து நம்மைக் கொள்ளையிடக் கூடிய உரையாடல்கள். அதில் எந்த சிக்கனமும் இல்லை. ஒழுக்கக் கட்டுப்பாடுகள் இல்லை. அடித்து விடுகிறார்கள். ஒன்றுக்கு திடுக்கிட்டு முடிவதற்குள் அடுத்தது வந்து விடுகிறது. எழுத்தாளர் பி எஸ் ரபீக். 

அநேகமாய் இப்படத்தின் வளவு நெளிவுகளுக்கு முக்கியமான காரணம், நாம் நேரிடுகிற காட்சிகள். கதை சொல்லி நகரும் முறை. படத்தின் ஆத்மாவை அறியாமல் இப்படி ஒரு ஒளிப்பதிவு சாத்தியமில்லை. சிட்டிகைப் போடுவதற்குள் தாவும் காட்சிகளைத் தொகுத்தும்கூட கேரளத்தின் மண் பல நேரத்திலும் தனது ஒயிலைக் காட்டுகிறது. அபிநந்தன் ராமானுஜம் சாலிகிராமம் நபர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவருக்கு இது மிக முக்கியமான படமாக இருக்க வேண்டும்.

படத்தில் பாடல்கள் அதிகம்.

உண்மையில் படத்தின் பல நெருக்கடியான காட்சிகளை மிக எளிமையாய் பாடல்களின் மூலமே நகர்த்தியிருக்கிறார்கள்.

கிளாரினெட் சீறுகிறது. சிதறுகிறது. அழுது கண்ணீர் விடுகிறது. நெஞ்சை அப்படியே அறுத்துத் தள்ளுகிறது. இறுதியில் மூச்சுவிட அவகாசமின்றி முழங்கி கோப்பையை வாங்கிக்கொள்கிறது. லூயிஸ் பாப்பன் தனது சிஷ்யன் அடுத்த தலைமுறைக்கு கலையைக் கொண்டு செல்கிறான் என்கிற திருப்தியுடன் இறக்கும்போது, நான் சலங்கை ஒலியை நினைத்துக்கொண்டேன். கலைகளுக்கு ஒருபோதும் முடிவில்லை என்பதுபோல படத்தில் அந்த இசை நீண்டு வந்தது. ஒரே ஒரு குறை, சத்தமில்லாத காட்சிகள் இன்னமுமே வந்திருக்க வேண்டும். இசையமைப்பாளர் பிரசாந்த் பிள்ளை.

மலையாள கிளாசிக் பகுதி 10

கலாபவன் மணி திலகனைப்போல நடித்த முறை கொஞ்சம் சறுக்கல்தான். அதை அவரே உணர்ந்திருப்பார். ஃபாதராக வந்த ஜாய் மேத்யுவும் போதவில்லை என்று பட்டது. மற்றபடி, படம் முழுக்க நிறைந்திருந்தவர்கள் வெளுத்து வாங்கினார்கள். செம்பனுக்கு அம்மாவாக வந்த அந்த கள்ளுக்கடை பெண்மணி துவங்கி, சாலமனின் சகோதரியாய் வந்தவர் வரை வரிசையாய் சொல்வதற்கு இப்போது அவகாசமில்லை. நாலு வரியில் முடித்துக் கொள்வதல்ல அவர்கள் செய்தது. இந்திரஜித் செம்மை. அவரது தோழியாய் வந்த அந்த பிரான்ஸ் பெண்ணின் புன்னகை மனநிறைவு. சுவாதி ரெட்டியைப் பற்றி தனியாய் தான் ஒரு கட்டுரை எழுத வேண்டும். தனது எதிரிகளிடம் பல முறை சிரித்துக் காட்டுகிறார். ஒருமுறை சாலமனை கை கால் ஒடிக்க வந்த கூலித் தடியனிடம் கொஞ்சலாய் கோழிக் குழம்பை ஊத்தட்டுமா சேட்டா? என்று கேட்டு, அவன் வழியும்போது அவன் தலையில் அதை ஊற்றிவிட்டு அதே கடாயால் அவனை அடித்து பிளாட் பண்ணும் கேரக்டர். அந்தக் கண்கள் அவருக்கு செயல்படுகின்றன. சாலமனிடம் சரசம் செய்யும்போது அதைக் காட்டிலும் உக்கிரம்.

சாலமன் கனவில் நடக்கிறவன் மாதிரி.

அவன் ஒரு இடத்தில் இருப்பதே தெரியாது.

அதை அவர் கொண்டு வந்திருந்தார்.

அந்த மீசை, அவர் உடையை உடுத்தியிருக்கிற விதம், பாங்கு போட்டது போன்ற பார்வை எல்லாமே சரி. சாலமன் என்கிற அவனுக்குள் அவன் எழுந்தவாறிருக்கிற காட்சியில் வீறுகொள்கிற அந்த முகம் மறக்க முடியாது. பஹத்தைப் பற்றி பாராட்டிக் கொண்டிருப்பது வீண் வேலையென்றுதான் எனக்கு எண்ணம்.

Lijo  jose pellisseri இயக்குநர்.

அவருடைய பல பேட்டிகளையும் பார்த்ததில், அவர் எதையும் சீரியஸாக்க முயலவில்லை என்று தெரிகிறது. மோவாயை சொறிந்து அண்ணாந்து கொள்வதில்லை. இதைப் பற்றி யோசித்தேன், இப்படி செய்தேன் என்று கடந்துபோவது ரொம்பவே உறுத்துகிறது. கொஞ்சம் கெத்தாக காட்டிக்கொள்வதில் இவருக்கு என்ன பிரச்னையோ? இருக்கட்டும். மனிதரின் வாழ்வில் தினசரி சந்திக்கிற காரியங்கள் அப்படி ஓன்றும் பிரம்ம சூத்திரமில்லைதான். ஆனால், ஒரு படைப்பாளி அதைப் பார்க்கிற கோணம்தான் அனுபவிக்கிறவனுக்கு வந்து சேர்கிற கலை. முற்றிலும் புதிய ஓன்றுகூட, இருந்தது போலவே பவித்ரமாகவோ, புனிதமாகவோ தொடருமெனில், அதில் என்ன இருக்க முடியும். புதுமைப் பித்தனை மொழி பெயர்க்க முடியாது என்பதை நான் ஒரு பெருமையாய் நினைத்துக்கொள்வது போல லிஜோவின் படங்களை வேறு ஒரு மொழியில் எடுத்துவிட முடியாது என்பதை அவரின் தனித்துவமாய் பார்க்கிறேன்.

 

வரும் வாரத்திலாவது Ee. Ma. Yau பார்த்துவிட வேண்டும்.

https://cinema.vikatan.com/others/cinema-serials/125134-malayala-classic-series-part-10-amen-movie.html

 

 

``முன்னறியிப்பு... மம்முட்டி இதில் செய்தது இந்திரஜாலம்!" - 'மலையாள கிளாசிக்' பகுதி 11

 

புதிய வாழ்க்கை, பழைய வாழ்க்கை அப்படியெல்லாம் இருக்கிறதா? நமக்கு இருப்பது ஒரு வாழ்க்கையல்லவா! அப்புறம், இந்த வாழ்க்கை என்பது என்ன, மரணத்துக்கு முன்னால் ஒரு தத்தளிப்பு. அல்லாமல் வேறு என்ன?

இது ஏதோ தத்துவம் கரைத்துக் குடித்த ஒரு மேதை உதிர்த்த சொற்கள் அல்ல. சொன்னவன் பெயர், ராகவன். டிரைவராகப் பணிபுரிந்தவன். இரண்டு பெண்களைக் கொன்றுவிட்டு ஜெயிலில் இருக்கிறான். இறந்த பெண்களில் ஒருத்தி அவனுடைய மனைவி. இருபது வருடமாய் வெளியே போவதற்குச் சிரத்தையில்லாமல் இங்கேயே தனது வாழ்வைக் கழித்துக்கொண்டிருக்கிறான். விடுதலை பெற்று வெளியேறி நன்றாக இருக்கலாமே? என்ற கேள்விக்கு, இங்கே ஒன்றும் பெரிய குறைகள் கிடையாது என்பது அவனுடைய பதில்.

 

முன்னறியிப்பு

 

நாம் ஒரு கும்பல் வாழ்க்கை வாழ்கிறோம். எல்லோரும் சுமுகமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து போகவேண்டும். அதற்கான விதிகள் இருக்கின்றன. ஏறக்குறைய குளிர் சாதனப் பெட்டிக்குள் வைத்த ஆப்பிள்களைப்போல, அடக்க ஒடுக்கமாய் இருக்கும்வரை நமது பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. நம்மால் சமூகமும் பத்திரப்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த விதிகளை மீறுகிறவர்களை நம்மால் சகிக்க முடியாது. அவர்களை வளைக்க  சட்டமும் தண்டனைகளும் நம்மிடம் உள்ளன. ஆனால், அவர்களால் தான் சமூகம் நெகிழ்வடைந்து வளர்ச்சி பெறுகிறது என்கிற உண்மையைப் பலரும் சொல்லியிருக்கிறார்கள். இதெல்லாம் இந்தப் படத்தில் இல்லையென்றாலும், சமூகத்தை உள்வாங்க எண்ணமில்லாமல் முற்றிலும் வேறு சிந்தனைகள் உள்ளவனாய் இருக்கிறான், ராகவன்.

அவனைத் தேடிவந்து பேசி, அவனை விடுதலையடையச் செய்து வெளியே அழைத்துச் செல்கிறாள், அஞ்சலி.

அஞ்சலி அரக்கல் என்கிற அந்தப் பெண் ஃப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட். இன்னும் திருமணம் ஆகவில்லை. சுதந்திர எண்ணம் உள்ளவள். ஆண்களின் உலகமான பத்திரிகைத்துறையில் தன்னை வலிமையாகவே வைத்துக்கொண்டிருக்கிறாள். அந்த நேரத்தில் பிழைப்புக்கு ஒரு வழியாக ராமமூர்த்தி என்கிறவருக்கு வாழ்க்கை வரலாறு எழுதிக்கொடுக்கிற ஒரு வாய்ப்பு வருகிறது. கோஸ்ட் ரைட்டிங்தான். ராமமூர்த்தி ஜெயில் சூப்பிரடன்ட்டாக இருந்து ஒய்வு பெறப்போகிறவர். அந்த நேரத்தில் அவரது புகழ்பாடும் படைப்பு வெளியாக வேண்டும். அவரைப் பார்க்க வந்த அந்த இடத்தில்தான், அவருக்கு எடுபிடி வேலைகள் செய்கிற ராகவனை அஞ்சலி பார்க்கிறாள். அவர் நகர்ந்துபோன இடைவெளியில் ராகவன் நான் எந்தக் கொலையும் செய்யவில்லை என்று சொல்லிவிட்டுப் போக அஞ்சலி திடுக்கிடுகிறாள்.

ஒரு குறுகுறுப்பு தொடருகிறது.

முன்னறியிப்பு - மம்முட்டி

வாழ்க்கை வரலாறு எழுதுவதற்கான ஆவணங்களை ராமமூர்த்தி அடுக்கி வைத்திருக்கிறார். அஞ்சலிக்கு முன்பணமும் கொடுக்கிறார். இந்தப் புத்தகம் எழுதுவதன் ஒரு பகுதியாக, அஞ்சலி ராகவனை ஜெயிலில் சென்று சந்திப்பதற்கான அனுமதி பெறுகிறாள். ராகவனின் பேச்சுகள் திகைப்பூட்டுகின்றன. அவன் எழுதி வைத்திருக்கிற நோட்டுப் புத்தகத்தை வாங்கி வருகிறாள். அவனது பேச்சைப் போலவே அவனது எழுத்தும் வியப்பை அதிகரிக்கச் செய்கிறது. மற்ற நண்பர்கள் ஊக்குவிக்க, அவள் ராகவனைப் பற்றி ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் கட்டுரை எழுதுகிறாள். பலரால் பாராட்டப்படவே, அவள் தனது வாழ்க்கை புதிய வழியில் செல்வதை உணர்கிறாள்.

மும்பையில் இருந்து ஒரு கார்ப்பரேட் கம்பெனி தொடர்பு கொள்கிறது. பொறுப்பை ஏற்றுக்கொண்டு, ராகவனிடம் உங்களால் ஒரு புத்தகம் எழுத முடியும்  என்று சம்மதிக்க வைக்கும்போது விடுதலை வருகிறது. ஸ்டாராகிவிட்ட ராகவனை சகிக்கமுடியாமல் ராமமூர்த்தி பழிவாங்கியதுதான் அது. ஒரு மனிதன் சிறையில் இருந்து வெளியேறுவது நல்லதுதானே? அஞ்சலி ஒரு லாட்ஜில் ராகவனைத் தங்க வைக்கிறாள். இருந்துகொள்ள வசதிகளும், சாப்பாடும் கிடைத்துவிட்டது. இனி என்ன, ராகவன் எழுத வேண்டும்.

ராகவன் எழுதுவதில்லை என்பதுதான் கதை.

அவளும் எவ்வளவோ முறை சொல்லிப் பார்க்கிறாள். கொஞ்சி, கெஞ்சிப் பார்க்கிறாள். மெல்லக் கோபம் வருகிறது. சத்தமிட்டு சண்டைபோட்டு எழுதவைக்கப் பார்க்கிறாள். பாச்சா பலிக்கவில்லை. கம்பெனி விரட்டுகிறது. சிபாரிசு செய்த நபர் அவமானப்படுத்தி வெளியேறச் சொல்கிறார். அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியாத நிலை. இதற்கிடையே வேறு கம்பெனி பெண் ஒருத்தி, ராகவனின் படைப்புக்காக வளையமிடவே... ராகவனை வேறு தனிமையான ஓர் இடத்துக்கு மாற்றி, எழுத வற்புறுத்துகிறாள்.

முன்னறியிப்பு

அஞ்சலியை எல்லா தரப்பும் நெருக்கடிக்குள்ளாக்கும்போது, அவளைக் கல்யாணம் செய்யப்போகிற சாக்கோ சொன்னபடி, என்ன நடந்தாலும் பரவாயில்லை, விட்டுத் தள்ளி விடலாம் என்கிற மனநிலைக்கு வருகிறாள். சாக்கோவிடம் அவனைப் பார்க்க வருவதாகக் காத்திருக்கச் சொல்லிவிட்டு ராகவனைக் கிளம்பிப் போகச் சொல்கிறாள். அவனது பணம் அவளிடம் இருந்தது, அதைத் திருப்பிக் கொடுத்துவிட்டு ஓடு என்கிறாள்.

அவன் புன்னகையுடன் தான் எழுதி முடித்துவிட்ட படைப்பை அவளிடம் கொடுக்கிறான்.

அவள் அதிர்ந்து அதைப் படித்துக் கொண்டிருக்க, அவன் தனது பொருள்களை எல்லாம் மூட்டை கட்டிக்கொள்கிறான்.

படிக்கப் படிக்க அவளது முகம் மாறுகிறது.

படித்து முடிக்கும்போது ராகவன் அவளுக்கு அருகில் நிற்கிறான்.

எங்கேபோவது என்கிற தவிப்பு இருந்ததில்லையா, ஜெயிலுக்குப் போவதென்று முடிவு செய்துவிட்டேன் என்கிறான்.

அவள் நடுக்கத்துடன் அவனைப் பார்த்துக்கொண்டிருக்க அவன் தனது முதுகுக்குப் பின்னால் மறைத்துப் பிடித்திருந்த இரும்புக் குழாயை அவளது தலைக்கு வீசுகிறான்.

அவளது கதை முடிகிறது.

அவன் எழுதிக்கொடுத்த படைப்பில் இந்தச் சாவு பற்றியும் இருந்திருக்க வேண்டும். 'முன்னறிவிப்பு' இதுதான்.

இப்போதுதான் நாம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேசப்போகிறோம். இந்தப் படத்தின் கதை இதுதானா, இல்லை. கிடையவே கிடையாது என்பது முக்கியம். சொன்ன விஷயங்களில் எல்லாம் சொல்லாத விஷயங்கள் இருந்தன. அல்லது அவை மறைபொருளாக இருந்தன. ராகவன் தனக்கு என்பதாய் ஓர் உலகை சிருஷ்டித்துக் கொண்டிருந்ததையும், அவன் நம்மைப் போன்றவர்களிடமிருந்து விலகி அந்நியப்பட்டிருந்ததையும் யாரும் அறியவில்லை. அஞ்சலி என்கிற மீடியா நபருக்கு தனது நோக்கம் நிறைவேறுவதுதான் முக்கியமாய் இருந்தது. ஆனால், ராகவன் வேறு ஆள். அவனுக்குள் தவிப்புகள் இருந்தன.

மம்முட்டி - முன்னறியிப்பு

அவனுக்கு எழுதுவது தொழில் அல்ல. சாட்டையைச் சொடுக்கி மாட்டை விரட்டுவதுபோல ஒருத்தனை எழுத வைத்துவிட முடியாது.

ஜெயிலுக்கு வெளியே தனக்குச் சென்றுசேர ஓர் இடமில்லை என்ற எண்ணம் கொண்டிருந்த அவனிடம், நான் இருக்கிறேன் என்கிற ஆறுதலைக் கொடுத்தவள் அஞ்சலி. ராகவன் அவளது சொற்களில் படுத்துத் தூங்கினான். மனித கருணையை காதலை அவன் கனவு கண்டிருந்தால், அது குற்றமே கிடையாது. பிறகுதான் தனது வேறு ஒரு முகத்தை அவனுக்குக் காட்டுகிறாள் அவள். நடைமுறை எதார்த்தங்களில் மிகுந்த கண்டிப்புடன் பயணிக்கிற உலகம், அஞ்சலி மூலம் அவனை நெருக்குகிறது. பயப்பட முறுக்குகிறது. அவன் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்வல்ல என்றும், சுதந்திரத்துக்கு எதிராக வழி மறிப்பவைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் ஒரு நியதியைக் கொண்டிருக்கிறான். ஆஸ்துமாவில் துடித்திருந்த மனைவிக்கு விடுதலை கொடுக்கவே அவளை அவன் கொன்றிருக்கிறான். அடுத்ததாய் அவன் வேலை செய்த இடத்தில் அஞ்சலியைப் போலவே அந்த மார்வாடிப் பெண் கனவுகளை விதைத்து அப்புறம் தன் காரியமே பொன் காரியம் என்று கழட்டி விட்டிருக்க வேண்டும். அவளை அதற்காகக் கொன்றிருக்கலாம். அஞ்சலியின் மரணத்தை வைத்துத்தான் நாம் இதை யூகித்துக்கொள்ள வேண்டும்.

ராகவன் அந்நியன். கொஞ்சம் மெர்சோவைப் போன்றவனும்கூட.

அவன் யாரையும் கொலை செய்யவில்லை என்பதே ஒருவிதமான மனநோய் என்றும் கொள்ளலாம்.

இந்தக் கதையை தேர்வுசெய்து அதற்குத் திரைக்கதை, வசனம் எழுதி, அதில் ராகவனாக மம்முட்டி நடித்ததெல்லாம் ஓர் அபூர்வ நிகழ்வு.

ராகவன் தன்னளவில் முழுமை கொண்டவன். அதை மம்முட்டி மிகவும் நயமாக ஊதித்தள்ளினார்.

``நாம் ஒரு சுவிட்சைப் போட்டால், இருட்டு இருக்கிற இடத்தில் வெளிச்சத்தை நிரப்ப ஒரு பல்பினால் முடியும். அதுபோல வெளிச்சம் உள்ள இடத்தில் ஒரு சுவிட்சைத் தட்டினால் இருட்டை உண்டாக்குகிற பல்பைக் கண்டுபிடித்திருக்கிறார்களா?"

``இந்த வெளிச்சம், சத்தியம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஒரேமாதிரி தான். இரண்டையும் இல்லாமல் செய்துவிட முடியாது. வேண்டுமெனில் தடுக்கவோ, மறைத்துப் பிடிக்கவோ செய்யலாம். என்றாலும், அது இல்லாமல் போவதில்லையே? நாம் பார்ப்பதில்லை என்பது மட்டும்தானே இருக்கிறது?"

அவனது கேள்விகள், முடிவுகள் என்பவையெல்லாம் தனித்துத் தனித்துத் தனித்தேயிருந்த அவனுக்கு மட்டுமே சொந்தமானது. அவனை யாரும் பகிர்ந்துகொள்ள முடியாது. இந்தக் கதைக்கு அற்புதமான திரைக்கதையை வசனங்களை எழுதியவர், உண்ணி.ஆர். 'லீலா'வைக் குறுநாவலாகவும், திரைக்கதையாகவும் எழுதியவர். பின்னர் 'ஒழிவு திவசத்தின்ட களி'யின் மூலக்கதை அவரது சிறுகதையே. படத்தின் ஆக்கத்துக்கு சில அடிப்படைகளையும் அவரே உருவாக்கினார். மிகவும் தனித்தன்மை கொண்ட புதிய கூறுமுறை. புதிய பார்வைக் கோணங்கள்கூட. மலையாள சினிமா வேறு பாதைக்குத் திரும்பியதைப் பேசி வருகிறோம், உண்ணியின் இருப்பு குறிப்பிடத்தக்கது.

மம்முட்டி

மம்முட்டி பற்றிச் சொல்லி முடியாது. என்னவெனில், அவர் இதில் செய்தது பெரிய இந்திரஜாலம். எழுது என்று அழிச்சாட்டியமாய் அவருக்குப் பின்னால் நிற்கிற அஞ்சலியை உள்வாங்கியவாறு, ஒரு சொல்லும் சொல்லாமல் தனக்குள் திமிறுகிற அந்த உணர்சிகளைப் பார்க்க வேண்டும். அவரே சொன்னதுபோல, அந்த மௌனம் மௌனமில்லை, அது வீறிடுகிற ஓலம். நன்றாக நடித்தார் போன்ற முனை மழுங்கிய சொற்களில் அவரது காரியத்தைத் திணிக்காமல் நகர்கிறேன். ஒன்று சொல்ல வேண்டும், மம்முட்டி இன்னுமே நாமெல்லாம் அறிந்துகொள்ளவேண்டிய கலைஞன். நடிப்பில் அவர் காட்டுகிற சென்ஸ் மற்ற பலருக்கும் இல்லாதது.

அஞ்சலியாக நடித்தவர், அபர்ணா கோபிநாத். இயக்குநரின் மனைவியும் படத்தின் எடிட்டருமான பீனா பால், அபர்ணாவை சிபாரிசு செய்திருக்கிறார். அது ஒரு கூர்மையான தேர்வு. குறுகலான பல இடங்களில்கூட மேலெழுந்தது அவரது நடிப்பு. சென்னையில் பிறந்தவர். நாடக அனுபவங்கள் உண்டு. படத்தில் இருந்த அத்தனை முகங்களும் படத்தின் முழுமைக்குத் தங்கள் பங்களிப்பைக் கொடுத்திருந்தன.

இசை கதையின் திருப்பங்களில் நாடியைத் தட்டுகிறது.

கதை, ஒளிப்பதிவு, இயக்கம் வேணு.

வேணு தமிழில் பல படங்களில் ஒளிப்பதிவாளராய் பணியாற்றியவர். 'குணா' பற்றிச் சொன்னாலே புரிந்துகொள்ளலாம். வேறு ஒரு தினுசில் சொல்ல வேண்டுமெனில், 'மின்சாரக் கனவு'. மலையாளத்தில் மிகப்பெரிய ரசனையுள்ள இயக்குநர்களோடு பணிபுரிந்தவர். நடிகர், நடிகையரோடும்தான். இருந்தாலும் அவர் இந்தமாதிரி ஒரு படத்தைத் தருவார் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாதென்று கருதுகிறேன். முற்றிலும் ஆழத்தில், நம்மைச் சூழும் இளம் கருமையில் பூடகமும் நுட்பமும் கொண்ட ஒரு சித்திரம் தெளிந்து வந்ததைப் பிரமிக்கிறேன். எதிர்கால சினிமாக்கள் இதுவழி வருமென்பது ஒரு நம்பிக்கை.

படத்தின் துவக்கத்தில் வந்துபோகிற காட்சியொன்று நினைவுக்கு வருகிறது. மம்முட்டி இருக்கிற ஜெயில் அறையில் அவரது தலைக்குமேல் கொல்லப்பட்ட இரண்டு பெண்களின் புகைப்படங்களும் இருக்கும். அவர் அதை அவ்வப்போது பார்த்துக் கொள்வார். அவரது கண்களில் நிறைந்து வழிவது அன்பன்றி வேறென்ன?!. படம் முடியும்போது அந்த இரண்டு புகைப்படங்களுடன் அஞ்சலியின் புகைப்படமும் இருக்கிறது.

ராகவன் தூங்கிக்கொண்டிருக்கிறான்.

https://cinema.vikatan.com/south-indian-news/125719-malayala-classic-series-11-munnariyippu-movie.html

Link to comment
Share on other sites

நன்றி நவீனன். தொடர்ந்தும் இணையுங்கள். இதில் குறிப்பிடப்படும் படங்களை மட்டுமே இப்போது பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

"கன்யகா டாக்கீஸ்... எது புனிதம், எது கேவலம்? படத்தில் பதில் இல்லை. நீங்கள் தேடிக் கண்டடையலாம்!" - 'மலையாள கிளாசிக்' பகுதி 12

 
 

ஷகிலா இன்ன பிறர் நடித்த சாப்ட் போர்ன் படங்கள் ஒரு காலத்தில் பிரமாண்டமான வெகுஜனப் படங்களுடனே மல்லுக்கு நின்று வசூல் அள்ளியது. கேரள சினிமாவினுள் நடந்த அந்த அரசியலுக்குள் நாம் செல்ல வேண்டியதில்லை. ஆனால், வயிற்றுப் பசியைப் போலவே சனங்களைத் துரத்துகிற வல்லமை காமத்துக்கு இருக்கிறது என்பதும், பல காரணங்களால் பாலியல் வறட்சி ஒரு சாபக்கேடாக உயர்ந்து வருகிறது என்பதும் கண்கூடு.

கன்யகா டாக்கீஸ்

 

இத்தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!

அன்றாடம் புரண்டு வருகிற செய்திப் பிரவாகங்களில் நாம் தித்திப்புடன் சப்பு கொட்டுகிற தீமைகள் யாவும் காமத்தின் மறுசுழற்சிதான். எல்லாம் இருந்தாலும், காமத்தைப் புறக்கடை பக்கம் ஒளித்து வைத்துவிட்டு, வரவேற்பறையில் உட்கார்ந்து அதைக் காறித் துப்புகிற நமது இரட்டை வாழ்வு நம்மை மேலும் நெருக்கடிகளுக்குள் தள்ளியவாறு இருக்கிறது. கன்யகா டாக்கீஸ் முடிந்து போகிற ஒரு பிட்டுப் பட தியேட்டரைப் பற்றிய படம். அதேநேரம், அது அந்த கிராமத்தைப் பற்றிய, ஊரை உலகை மனிதர்களைப் பற்றிய படம்.

குய்யாலி என்று அந்த கிராமத்தின் பெயர் குறிப்பிடப்படுகிறது. பனி மேகங்கள் வந்து மூடும் மலைக் கிராமம். ஒரு டீ எஸ்டேட் இருந்து அதை மூடி விட்டிருக்கிறார்கள். அதனால், மக்களின் வாழ்வு சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை. வறுமையும் தரித்திரமும் இருக்கின்றன. கிராமத்தில் பெரும்பான்மை கிறிஸ்துவ மதத்தினர்தான். பாவ புண்ணியங்களை நம்பக்கூடிய அந்த ஊரின் ஒரு கடைக்கோடியில் கன்யகா டாக்கீஸ் இருக்கிறது. அந்தியில் கொஞ்சம் பேர் தனியாகவும் மற்றவருடனும் அமைதியாகவும் முணுமுணுத்தவாறும் காத்திருந்து டிக்கெட் வாங்கிப் படம் பார்த்து, அமைதியாகக் கலைந்து போகின்றனர்.

நடுத்தர வயசு ஆட்களும், கிழவர்களும் வந்துபோகிற அந்த இடத்தில் நிலவுகிற இயலாமையைக் கொண்டு வந்தது, இப்படத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பு. டாக்கீஸ் ஓனர் யாக்கூப். சினிமா எங்கோ ஆகாயத்தின் வழியாக மக்கள் பார்க்கிற இடத்துக்கு வந்து சேருகிற காலத்தில் புரொஜக்டர் வைத்துப் படம் ஓட்டிக்கொண்டிருக்கிறார். பையன்கள் இணையம் வழியாய் எவ்வளவோ சாத்தியங்களை அடைகின்றனர். இந்தமாதிரி காலத்தில் அவர் ஒவ்வொரு வார லாப நஷ்டக் கணக்குகளில் மூச்சைப் பிடித்துக்கொண்டு வீட்டில் உள்ள நகைகளையெல்லாம் தொலைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு மகள் ஓடிப்போனதற்கும், வீட்டில் வெறுமை சூழ்ந்ததற்கும் தனது புருஷன் செய்கிற பாவப் பணிகளே காரணம் என்று நம்புகிற அவருடைய மனைவி, அவரைத் தொடவும்கூட விடுவதில்லை. அவருக்குத் துணையாய் பெருமூச்சுவிட இரண்டு உதவியாளர்கள் இருக்கிறார்கள்.

கன்யகா டாக்கீஸ்

இரவானால் முதலாளியுடன்  கொஞ்சம் குடித்துக்கொண்டு பேசுகிறார்கள். வாழ்க்கை ஒரு பழக்கமாகப் படிந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்... பதினைந்து வருடம், அந்த டாக்கீஸ் அவர்களுடைய வாழ்வாகவே மாறிவிட்டது. இவர்களுடைய கதை ஒரு பக்கமென்றால், ஆன்சி என்கிற முதிர்பெண்ணின் கதையும் இதனுடன் வருகிறது. ஆன்சியின் அப்பா வாட்டசாட்டமான ஒரு குத்துச்சண்டை வீரராக இருந்திருக்கிறார். ஊரையே அடித்துப்போடுகிற பலம் கொண்ட அவருக்கு பூஞ்சையாய் ஒரு மனைவி இருந்து, அவள் அவரை ஆண்டு கொண்டிருந்ததை ஊரே வியந்தவாறு இருந்திருக்கிறது. தெய்வத்துக்கு அசூயை வந்தால் என்ன செய்வது.

மனைவி போனபிறகு அவர் ஒடிந்துவிட்டார். பக்கவாதம் வந்து ஊர்ந்து நடக்கிற நிலை. மகளான ஆன்சிதான் இப்போது அவரைப் பார்த்துக்கொண்டு வருமானமாகவும் இருக்கிறாள். ஹவுஸ் நர்ஸ் வேலை உருவாக்குகிற இயந்திரத்தனத்திலிருந்து விடுதலையடைய அவள் சிறிய ஒரு கனவை வைத்திருந்தாள். அது, சினிமாவில் நடிப்பது! புரோக்கரிடம் போட்டோ கொடுத்து அவனுடன் சென்று ஆட்களைப் பார்த்தால் அவளை டவல் கட்டிக்கொண்டு குளிக்கச் சொல்கிறார்கள். அதுதான் அவள் நடிக்கிற முதல் காட்சி. படத்தில் முகம் வராது.

டைட்டிலுக்கு அப்புறம் கதை துவங்கும்போது, யாக்கூப் - டாக்கீஸை ஒரு சர்ச்சுக்கு எழுதி வைத்துவிட்டு குய்யாலியை விட்டு வெளியேற ஒரு பேருந்தில் ஏறுகிறார். அந்தப் பேருந்துகளில் ஊரார் பலரும் இருக்கின்றனர். அதே பேருந்தில் ஆன்சி இருக்கிறாள். அவளும் இந்த ஊரை விட்டுச் சென்றுகொண்டிருக்கிறாள். இருவருக்கும் நடந்தது என்ன என்றுதான் கதை துவங்கியிருந்தது.

யாக்கூப்புக்கு நஷ்டம் மீது நஷ்டம். முதல் பெண் ஓடிப்போனதையே விழுங்க முடியாமல் இருந்தபோது, இரண்டாவது பெண்ணும் ஓடிப்போகிறாள். அவருடைய மனைவி சாபமிடுவதுபோலக் கதறி அவரை உலுக்கியதோடு அது முடியவில்லை. அவளது மனநிலை ஆட்டம் கண்டு அவரை விட்டு ஒதுங்கிப்போகிறாள். ஓடிப்போன மகள் நிர்வாணமாய் குளத்தில் மிதக்கிறாள். எல்லாம் காமம் காட்டி ஊரை இழுத்த பாவம்தானோ?!. தெய்வம் நின்று கொல்கிறதோ?! யாக்கூப் தனது டாக்கீஸை தெய்வத்தின் சர்ச்சுக்கே அர்ப்பணிப்பாய் எழுதிக் கொடுத்துவிட்டு பேருந்தில் ஏறியிருக்கிறார்.

கன்யகா டாக்கீஸ்

ஆன்சியும் அப்படித்தான். சினிமாவை விட்டு விலகலாம் என்று நகரும்போது, யாராவது நம்பிக்கையூட்டுகிறார்கள். பின்னால் அது துரோகமாகத்தான் இருக்கிறது. நீலப்பட குழுவினரிடமே சிக்கித் தப்பிக்கிறாள். ஒரு நடனக் குழுவில் இணைந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள அதன் தலைமைப் பெண்ணிடம் கெஞ்சிக் கொஞ்சம் ஆசுவாசம் அடைகிற நேரத்தில், நள்ளிரவில் வீட்டின் எதிரே பையன்கள் வந்து கூச்சல் போடுகிறார்கள். அவள் நடித்த பிட்டை அவர்கள் பார்த்திருக்கக் கூடும். மெல்ல ஊர் கூடப் போகிறது. அப்பா ஜஸ்ட் லைக் தட் என்கிற மாதிரி வெறுத்துவிட்டுச் சென்று படுக்கிறார். ஆன்சி டாக்கீஸில் இருந்து சர்ச்சாய் மாறின அந்த இடத்தில் பாதரைக் கண்டு பேசி எங்களுக்கெல்லாம் வாழ்க்கை கிடையாதா என்றுமேகூட கேட்டுவிட்டு இனி இந்த ஊருக்கு நான் வரமாட்டேன் என்று கிளம்பியிருந்தாள். அப்படிதான், அவள் சென்றதும் அவளது அப்பா இறந்து போனார். அவள் எங்கே போனாள் என்பது யாருக்கும் தெரியவில்லை.

ஆன்சி நியாயம் கேட்ட அந்த பாதர் டாக்கீஸ் சர்ச் ஆனதும் அங்கே ஊழியம் செய்வதற்கு வந்தவர். இளைஞர். மதப் பற்றுள்ளவர். விசுவாசி. ஊரைவிட்டு ஒதுங்கிக் காடும் மலையுமான ஊர் அவரை சோர்ந்து போகச் செய்யவில்லை. தன்னம்பிக்கை இருக்கிற அவரை வேறு ஒன்று சூழ்கிறது. ஏதேதோ சப்தங்களைக் கேட்கிறார். கவனித்துப் பார்த்தால், காதில் துல்லியமாகக் கேட்கிறது. பெண்களின் குரல்கள், ஆண்களின் குரலும். அவை சரசம் செய்கின்றன, அழைப்பு விடுக்கின்றன, அபயம் கேட்கின்றன, ஆபாசமான பாடல்களைக்கூட பாடுகின்றன. ஒரு வைதீகன், ஒரு பிரம்மச்சாரி கேட்கக் கூடாதவை அனைத்தையும் அவர் கேட்கிறார்.

பாதிக்கப்படுகிறார். வேலைகளில் குழப்பம் வருகிறது. மனோதத்துவ நிபுணர்கூட போதுமானவராக இல்லை. உடல் நலமே பாதிக்கிறது. இறுதியாக அவர் விசாரித்துக் கொண்டிருந்த யாக்கூப் வந்து சேர்கிறார். இருவருமாக டாக்கீஸ் பொருள்கள் கொஞ்சம் கிடந்து பூட்டி வைத்திருந்த அறையைத் திறக்கிறார்கள். காட்சிகள் வெடிக்கின்றன. சினிமாக்களின் குரல்கள் அவை. மக்களை ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்த மலின சினிமாக்களின் குரல்கள். பாதருக்குக் கிடைத்த தரிசனத்தில் ஆன்சியும்கூட குளித்தாள். உடல்கள், குரல்கள், காமம்.

கன்யகா டாக்கீஸ்

படத்தின் முடிவுக் காட்சியில் பாதர் இடிந்த கோட்டை ஒன்றில் நடந்து அதன் சிதிலங்களைப் பார்க்கிறார்.

அது நமது கருத்துகளின் தோல்வியாய் இருக்கலாம்.

ஒருவேளை இந்த படத்தில் செக்ஸ் படங்கள் செய்கிற ஊழியத்தைத்தான் இப்போது சர்ச் வேறு ஒரு மாதிரி செய்து கொண்டிருக்கிறதோ?

எது புனிதம்? எது கேவலம்?

படத்தில் பதில் கிடையாது. ஒருவேளை நமக்கு அவகாசம் இருப்பின் தேடிக் கண்டடையலாம்.

நான் படம் வெளிவருவதற்கு முன்னால் கேரளத் திரைப்பட விழாவில் பார்த்தேன். பிரமிப்பாயிருந்தது. அதற்கு அடுத்த வருடம் எங்களுடைய ஷீபா அறிமுகம் செய்து, ஷாஜி குமாரை சந்தித்தேன். இந்தக் கதையை சிறுகதையாக எழுதியவர். நான் ஆஹோ ஓஹோ என்று அலட்டிக்கொள்ள அவர் குட்டியாய் ஒரு புன்னகை செய்ததாக நினைவு. அவர் இப்போது பல பெரிய படங்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறார் என்று ஷீபா சொன்னார். நல்லது. கன்யகா டாக்கீஸ் அதன் திரைக்கதையாலும் நின்ற படம். கூட இருவர் எழுதியிருக்கிறார்கள். யாக்கூப் ஒரு கட்டத்தில் ஒருத்தரிடம் நரகத்துக்குப் போகிறேன் என்று பொருமிவிட்டு பேருந்தை விட்டு இறங்கும்போது, அங்கே சேகுவாரா பேனர் ஒன்று பிரேமில் தெரியும். கதவு அடைக்கப்படுகிறது. ஆன்சியின் பக்கத்தில் இருக்கிறவள், ஆன்சியிடம் கேட்கிறாள்.

``எங்கிருந்து வருகிறாய்?"

``கொஞ்சம் தூரத்தில் இருந்து!"

``எங்கே போகிறாய்?"

``கொஞ்சம் தூரத்துக்கு!"

``போகிற இடத்துக்குப் பெயரில்லையா? அங்கேதான் உன் புருஷன் இருக்கிறானா? அவன் என்ன வேலை செய்கிறான்?"

``கொரில்லா யுத்தம்!"

``அவன் பேரென்ன?"

``சே குவாரா!"

அந்த அம்மாவுக்கு எதுவோ தப்பு என்று தெரிகிறது. ஒரு திருப்தியில்லை. சற்று ஆத்திரத்துடன் கேட்கிறாள்.

``அந்த ஊரின் பெயர் என்ன சொன்னாய்?"

``பொலிவியா!"

இந்த டைப் காட்சிகள் பலவற்றைச் சொல்ல முடியும்.  

கன்யகா டாக்கீஸ்

அப்புறம் இப்படி ஒரு பனிவிழும் மலைக் கிராமத்தை எந்தப் படத்திலாவது முழுமையாகப் பார்த்திருக்கிறேனா என்பது சந்தேகம். எவ்வளவு துல்லியம்? எத்தனை ஆன்ம பலம்? எப்படிப்பட்ட நிதானம்? படத்தில் தவறவே விடக்கூடாதது டைட்டில் தருணம். படம் முடிந்த பிறகு மறுபடி ஒருமுறை பார்க்கலாம். அந்த டைட்டிலில் மாட்டு வண்டி நகர முதல் தடவையாய் டாக்கீஸ் காட்டப்படுகிற அந்த ஷாட்டில் இல்லாத துயர் இல்லை. ஒளிப்பதிவாளர், ஷெனாட் ஜலால் (shehnad Jalaal). மிகவும் பொறுப்பெடுத்துச் செய்திருக்கிறார் என்று சொல்வது சரி. இசை போதுமான அளவுக்குக் கச்சிதமாய் இருந்தது. கதை சொல்வதில் எடிட்டரும் செவ்வனே பங்காற்றியிருக்கிறார்.

பாதராக முரளி கோபி. அவருக்கு நடிப்பு சொல்லித் தர வேண்டியதில்லை. எவ்வளவோ தருணங்கள் படத்தில் அவருக்காக இருந்தன. முன்பே சொன்ன மாதிரி alenciar ley lopaz தற்போதைய மலையாள சினிமாவின் மிக முக்கியமான நடிகர். பேசுகிற திறன் கொண்டது அவருடைய முகம். யாக்கூப்பாக வளைய வந்தார். ஆன்சியாக லீனா. கொந்தளிக்கிற முகபாவம் கொண்டவர். மிகவும் தனித்தன்மை வாய்ந்த குரல். எந்த பாத்திரத்திலும் ஆழத்தின் ஆழத்தை நமக்குக் காட்டி விடுவார். ஒரு விதத்தில் லீனாவைப் போன்றவர்களுக்கு மலையாள சினிமா தனி இடத்தை வைத்திருக்கிறது. பெண்களின் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டுவந்து, வெற்றி கொண்டதற்குப் பல்நோக்குத் திறன்களைக் கண்டறிந்து கொள்கிற நுட்பம் காரணம். நாயகன் நாயகிகளுக்கு அப்பால் கொஞ்சம் பொம்மைகளை நிறுத்தி மறையச் செய்வதில் நல்ல சினிமா எப்படிச் சாத்தியம்?

இயக்குநர் மனோஜ்.

யார் எழுதினாலும், யார் எடுத்தாலும் இது அவருடைய மனசில் இருந்த சினிமா என்பது தெளிவு. முழுக்கவே இயக்குநரின் படம். ஒவ்வொரு பிரேமும் ஒவ்வொரு ஐடியாவைக் கொண்டிருக்கிறது என்பதைப் படம் நெடுகப் பார்த்தவாறு இருக்கலாம். தியேட்டர் இருக்கிற அந்த லொக்கேஷனில்கூட ஒரு கதை செயல்படுவது விளையாட்டே அல்ல. அப்புறம் இவ்வளவு அரிதான ஒரு விஷயத்தைத் தேர்வு செய்தது. காமத்தைப் பற்றி பேசுகிற இந்தப் படத்தில் யாராவது ஒரு பெண் கண்ணடிக்கக் கூட இல்லை. ஒருநாள் மலையாள சினிமா எழுதப்படுமெனில், இதோ நான் எழுதுவது போல் அவரை எழுதுவார்கள்.

முதலில் ஷகீலாவில் துவங்கினேன். அவர் பிட்டுப் படங்களில் நடித்தது ஒரு சேவை. அவரிடம் குணச்சித்திரம் காட்டுவதாகக் கொண்டுவந்து செய்ததெல்லாம் ஆபாசம்.

எது உங்களுக்குப் பிடிக்கிறது?

நாம் எந்தப் பக்கம் இருக்கிறோம் என்பதைப் பொறுத்து இந்தப் படம் நமக்குப் பிடிக்கும்.

https://cinema.vikatan.com/others/cinema-serials/126286-malayala-classic-series-part-12-kanyaka-talkies-movie.html

Link to comment
Share on other sites

" ’பிரேமம்’ ஜார்ஜ் அல்ல... மலர் டீச்சரை முதலில் காதலித்தவர்கள் பார்வையாளர்கள்தான்!" - 'மலையாள கிளாசிக்' பகுதி 13

 
 

நீங்கள் ஆணோ, பெண்ணோ ஒரு கூட்டத்தில் இருக்கிறீர்கள். உங்களைச் சுற்றிலும் முகங்கள் இருக்கின்றன. நீங்கள் போகும் வழியெல்லாம் உங்களை இரண்டு விழிகள் வியப்பாகப் பார்த்திருக்கின்றன, விருப்பத்துடன் பருகிக்கொண்டிருக்கின்றன, பார்வை கொண்டு வருடிக்கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்தால் ஒரு தன்னம்பிக்கை வரும். நீங்கள் ஈடுபடுகிற காதல் ஒருபக்கம் அப்படியே இருக்கட்டும். அது தவிர்த்து, அநேகமாய் உங்களுக்கே உங்கள் மீது காதல் வரும். இந்த அனுபவத்தை எப்படி வேறு ஒருவரிடம் பகிர்ந்தால் விளங்காதோ, சினிமாவில் காதல் படங்களும் அப்படித்தான்.

பிரேமம்

 

இத்தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!

அதைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது நாம் சிரித்தாலும் சிரித்து விடுவோம். காதல் கதையைச் சொல்வதற்கு ஒரு வல்லமை வேண்டும். அது இரண்டு நபர்களின் வயதுக் கோளாறு என்பதல்லாமல், அது ஒரு பொது அனுபவமாக மாறவேண்டும். மலையாள சினிமாவில் `பிரேமம்' முதன் முதலாக ஓர் அனுபவமாய்த் திரண்ட படம் என்பதை இந்தமுறை பார்க்கும்போதும் உறுதி செய்துகொண்டேன்.

இது ஓர் ஆச்சர்யம்.

இதை எப்படி நல்ல படமாய் போயிற்று என்று பலருமே அலட்டினார்கள். இதில் என்ன கதை இருக்கிறது என்றார்கள். அப்படிக் கேட்டவர்கள் பலவற்றையும் கவனிக்க விரும்பவில்லை. தங்களுடைய பிடிவாதத்தின் மீது பாய் போட்டுப் படுத்துக்கொண்டவர்களும் இதில் அடக்கம். முதலில் பல கோணங்களிலும் சினிமா என்பது ஒரு கதையைப் பிரசங்கம் செய்வதல்ல. கதாகாலட்சேபம் அல்ல. பிரேமம் எல்லோருக்கும் தெரிந்த கதையை மட்டுமே சொன்னது. ஆனால், அதன் துல்லியம் முக்கியம். சரியான பிரதேசத்தில், சரியான தோரணையில், சரியான மொழியில், சரியான அளவில் அதைச் சொன்னார்கள்.

படத்தைக் காமெடி என்ற டைட்டிலில் வைத்தது அபத்தம். இதில் வருகிற நகைச்சுவை முற்றிலும் வேறுபட்டது. பாத்திரங்கள் பெரும்பாலும் சேஷ்டை செய்ய வேண்டியிருக்கவில்லை. நாம் அந்தத் தருணத்துக்குச் சிரிக்கிறோம். கொஞ்சம் வயசுப் பையன்கள் கொஞ்சமும் வெட்கமின்றி தங்களின் ஆர்வக்கோளாறுகளில் செல்வதை மிகவுமே தள்ளி நின்று முதிர்ச்சியுடன் பேசுகிறது படம். அதேநேரம் கவனிக்க வேண்டியது என்னவெனில், அந்த உலகத்தைத் தாண்டி வெளியே நின்று நாங்கள் சொல்வது என்னவென்றால் என்று ஒருபோதும் போதிக்க முற்படவில்லை.

பிரேமம்

இது ஜார்ஜின் கதை.

ஜார்ஜ் மூன்று பெண்களைக் காதலித்த கதை.

ஜார்ஜ், சம்பு, கோயா நண்பர்கள். உரசல்கள் இருந்தாலும், தங்களுக்குள்ளே புரிகிற ஒரு மனம் மூவரிலும் இருக்க, படத்தின் இறுதிவரை உறுத்தாத நட்பு. பெயர்கள் பிரஞ்ஞையுடன் வைக்கப்பட்டிருந்தாலுமே கேரளத்தில் அந்த தினுசு நட்பு முடிந்தவரையில் சாத்தியம். ஜார்ஜின் பன்னிரண்டாம் வகுப்பு காதல் முதலில் சொல்லப்படுகிறது. அவனுக்கு மேரி ஜார்ஜ் என்கிற சுருட்டைமுடிப் பெண்ணின் மீது ஆவேசமான காதல். விட்டேனா பார் என்று துரத்துகிற இவன், இவனைப்போல பலரும் ஓடுகிற ரேஸில் இருக்கிறார்கள். அவளுக்கு இதில் பெரிய நெருக்கடிகள் இல்லை. யார் கேட்டாலும் பதில் சொல்கிறாள். கொஞ்சம் சிரித்து வைக்க அவளுக்குப் பெரிய ஆட்சேபனை இல்லை. ஏனென்றால், அவள் தெளிவாய் வேறு ஒரு ஜார்ஜைக் காதலிக்கிறாள். இந்த ஜார்ஜிடமே அவனைக் காதலிக்க உதவி கேட்கிறாள்.

ஒருநாள் அந்தக் காதல் சரியான ஒரு சோகப் பாட்டைக்கூட பாட முடியாமல் கலைந்து போகிறது. உலகம் மாறவில்லை. கடலலைகள் உறையவில்லை. கூட இருக்கிறவர்களுமே பொருட்படுத்தவில்லை. அந்தப் பெண் நான்கு பையன்கள் அவளைச் சுற்றி வந்து நெஞ்சிடித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பெட்டிக் கடையில் இருந்த தின்பண்டங்களைப் பார்த்துக்கொண்டிருந்தவள். அவனுமே காதல் கடிதம் எழுதும்போது அம்மாவிடம் மத்தி மீன் வறுவலுக்குக் குரல் கொடுத்தவன்தான்.

காதல் மட்டுமல்ல படிப்பும் போயிருக்கிறது. ஃபெயில் ஆவது என்பது இவ்வளவு பெரிய விஷயம் என்பதே இப்போதுதான் விளங்குகிறது என்கிறான், நண்பன்.

ஆனால், பின்பொரு நாள் மூவருமே கல்லூரிக்கு வந்துவிட்டார்கள். அவர்களைப் பாதித்த மலையாள நடிகர்களின் தாடி இருக்கிறது. சூப்பர் ஸ்டார்களின் உடல்மொழி கை கூடியிருக்கிறது. குடி, புகை, அடிதடி எல்லாமே அவர்களுடைய ஆளுமைகளாக விரிகின்றன. ஜார்ஜ் வகுப்புக்குள் நுழையும்போது பல பெண்களுடைய கண்களும் அவன்மீது இருக்கின்றன என்பதைக் கவனிக்க முடியும். ஆனால், அவன் ஒரு அலட்சியத் திலகம் அல்லவா. தமிழ்ப் பேசுகிற மலர் டீச்சரிடம் எடுத்த உடன் மடக்குகிற ஒரு நெறி இருக்கிறது. அவனால் மீறி விட முடியாத சிரிப்பு. அவனால் தாண்டிக் குதிக்க முடியாத அளவு மென்மையான கேள்விகள். குடித்துவிட்டு வகுப்பிலிருந்து விட்ட மூவரையும்கூட மிகவும் அணைத்துக் கொள்கிற மாதிரி வகுப்பைவிட்டு வெளியேறச் செய்யமுடிகிறது அவளால். கல்லூரி முதல்வரிடமிருந்து நடவடிக்கையில்லாமல் லாகவமாக அவர்களை அவிழ்த்துக் கொண்டுவர அவளால் முடியும்.

Premam - malar

முதலில் மலர் டீச்சரைக் காதலித்துக்கொண்டிருப்பவர்கள் பார்வையாளர்கள்தாம். அவள் ஓகே என்று சொல்வதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவனை அவள் யூகித்தறிகிறாள். கள்ளத்தனமான பார்வைகளில் அவன் தன்னைப் பார்த்தவாறு இருப்பதை அறிகிறாள். அவளுக்கு அவனைப் பிடிக்கிறது என்பதுகூட பார்வையாளர் அடையும் பரவசம் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவர்கள் பிரிவதற்கு முன்னால் கல்லூரியில் ஒரு பெரிய ஈவென்ட்டைத் தொடர்ந்து நடக்க வைத்து, மலர் பேசுகிற கண்களுடன் தனது முறைப் பையனுடன் ஊருக்குக் கிளம்பிப் போகிறாள். பிறகு அவளது நிலைமை வேறு. அவளால் தனது எந்த நினைவுகளையும் தொகுத்துக் கொள்ள முடியாது.

ஒரு கட்டத்தில் அவள் தனது முறைப் பையனை திருமணமும் செய்துகொண்டு விடுகிறாள்.

இது முன்பு போலில்லை.

மிகுந்த வலியும், வேதனையும், எரிகிற நினைவுகளுமாய் தனிமை. இரண்டாம் காதலும் கனவாய் பழங்கதையாய்ப் போகிறது.

பால் பேதமில்லை இதில். இன விருத்திக்கான அடிப்படை. நமது அடிப்படை உணர்வுகளில் பெரும் பாய்ச்சல் நிகழும் பருவத்தில் ஓர் இடைவெளி விழும்போது அது காயமாகவும் தழும்பாகவும் தங்குகிறது. விழுங்கும் அந்த அனுபவம்தான் வாழ்வை அறிந்துகொள்ள உதவுகிறது. இது உலகளாவிய உண்மை என்றில்லாத போதும், ஓர் ஆணுக்குப் பெண்ணை ஒரு பெண்ணுக்கு ஆணை உள்வாங்குகிற சிறிய திறப்பையாவது உண்டாக்குகிறது. நேரடியாய் முதலிரவில் சந்தித்து, மண வாழ்வைத் தொடங்குகிறவர்கள் இல்லையா என்றால், பல கோதாக்களில் இறங்க முடியாத இயலாமையின் விழுப் புண்களையாவது அவர்கள் பெற்றிருப்பார்கள். செலின் ஜார்ஜினுடைய கேக் ஷாப் மூடுகிற நேரத்தில் வந்து கேக் கேட்கிறாள். வேறு யாராவது ஒரு முதியவள் வந்து கேட்டிருந்தால் கொடுத்திருக்கமாட்டார்கள். இவள் கவர்கிறாள். முகத்தைப் பார்த்து மறுக்க முடியாமல் கேக்கைத் தயார் செய்கிறான். அப்பு என்கிற ஒரு வாலிப வயது ஆளுக்குப் பிறந்தநாள்.

தன்னை அறியாமல் கேக்கின்மீது க்ரீமினால் கேள்விக்குறியைப் போட்டுவிட்ட ஜார்ஜ் அப்பு யார் என்று தன்னிச்சையாகக் கேட்கிறான்.

அப்பு செலினின் சகோதரன்தான்.

வேறு ஒரு கேக்கை வாங்கிக்கொண்டு செல்கிற செலினின் பார்வை ஜார்ஜின் மீது நின்றதை, அவன் கவனிக்கும்போது நகர்ந்து கொண்டதைப் பார்த்திருக்கிறோம்.

அவனுக்குள்ளும் ஒன்று நகர்கிறது. பொருட்படுத்தாமல் நகர்கிறான்.

அடுத்தமுறை சந்திப்பில், செலின் தான் யாரென்று சொல்கிறாள். நமக்குள் பழக்கம் உண்டு என்கிறாள். நீ முற்றுகையிட்ட சுருட்டை முடிப் பெண் மேரி ஜார்ஜ் இருந்தாளில்லையா... நான் அவளுடைய தங்கை என்கிறாள். நாம் அவளை கவனித்திருக்கிறோம், ஒரு பொடிசு. மேரிக்கு வால் மாதிரி கூடவே இருந்தவள். சர்ச்சில் பாட்டு பாடிப் பின்னாலே வருவானே, அவனும் வருகிறான் என்று அக்கறையாய் ஈடுபட்டு, வருகிற பையன்களை விமர்சனம் பண்ணிக் கொண்டிருந்தவள். தாமதிக்காமல் நண்பர்களைக் கலந்துகொண்டு ஒரு ப்ரொபோசலுடன் நான் உன் வீட்டுக்கு வரலாமா என்று கேட்க, செலினிடம் கேட்கிற ஒரு சூழல்தான் நீடித்திருந்தது. அவள்  திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண். அடிப்போங்கடி என்று ஒரு விரக்தி வராமல் முடியாதில்லையா!

premam

நண்பர்கள் அதை ஒரு சம்பவமாகவே கருதவிடாமல் அவனை மீட்கும்போது நான் நிச்சயம் செய்யப்பட்டவனுடன் தொடரவா என்று ஜார்ஜிடம் சம்மதம் கேட்கிறாள், செலின். அப்புறம் ஒன்றுமில்லை, கொக்கயினும், தாழ்வு மனப்பான்மையும், மூளை சூடும், சிடுசிடுப்புமான அந்த மாப்பிள்ளையை அவள் உதற, செலினின் மணப் பையனாகிறான் ஜார்ஜ்.

நான் சொல்லிவந்த இந்தக் கதை ஒரு ஸ்டோரி போர்ட் சித்திரங்கள் அளவுக்கும் இல்லை.

ஏனென்றால், முன்னமே சொன்னதுபோல கதைகளில் எல்லாம் என்ன இருக்கிறது?

கணம் தோறும் மூச்சுவிடாமல் பல்வேறு முகங்களின் முணுமுணுப்பு போன்ற உரையாடல்களுடன், சம்பந்தமில்லாத அல்லது புழக்கத்தில் இல்லாத ஷாட்டுகளுடன் நம்முடன் உறவு கொண்டவாறு இருக்கிறது படம். அது நமக்கே நிகழ்வது போன்ற பதபதைப்பை ஏற்படுத்துவதில் வெற்றி பெறுகிறது. பெண் முகங்களைத் தேர்வு செய்ததில் நிவின் பாலி போன்ற நடிகனை நம்முடன் பிணைப்பு ஏற்படுத்துவதில் இருப்பது முன்யோசனையே. அது சிறிது பிசகியிருந்தால், நொறுங்கி இருந்திருக்கும். எடிட்டிங் முன்னிலை வகித்த படம். ஓவர்லாப்புகளில் மேதமையே உண்டு.

பிரேமம் தொடங்கவில்லை எனில், அங்கமாலி டைரீஸ் பழக்கப்பட்டிருக்காது. மலையாள சினிமா பற்றின இந்தத் தொடரில் இன்றைய நல்ல சினிமாவுக்குத் தளம் வைத்த படங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்றால், பிரேமம் அதற்கான முக்கிய இருக்கையை எடுத்துக்கொள்ள வேண்டும். அமர வேண்டும். ஏற்கெனவே சொன்னதுபோல படம் பார்ப்பது ஒரு அனுபவமாய் உணரப்படும் என்பதால், மேலே நாம் விஸ்தரித்த ஒரு கதைகூட அர்த்தமற்றுப் போகும். ஏனெனில், இவற்றின் காட்சிகளின் வீச்சுக்கள் வேறு ஒரு மும்முரம் கொண்டவை.


பிரேமம்

அனுபமா பரமேஸ்வரன் மேரி ஜார்ஜாக வந்தது தற்செயலாய் இருந்திருக்க முடியுமா. இளமைப் பருவத்தின் வெகுளித்தனம் எல்லா கோணங்களிலும் வந்தது போலவே, எல்லா ஆண்களுக்கும் பிடிக்கக்கூடிய முதிர்ச்சியுடன் உச்சரிப்புகளுடன், பார்வையுடன் சாய் பல்லவி இருந்தார். மடோனா செபாஸ்டின் செலினாக!. அவரது இருப்பே போதுமானதாயிருந்தது என்று நினைக்கிறேன்.

குட்டிக் குட்டி பிட்டுக்களின் இணைப்பில் ஒரு தொடர்ச்சி நகர்கிறது என்பதில் ஒருபோதும் அதன் ஆளுமையை, மூடை, வர்ணங்களை இழக்காத ஒளிப்பதிவு. நல்ல பாடல்கள் வீரியமுள்ள நயத்துடன் இருந்தன. அவளு வேண்டறா, இவளு வேண்டறா எல்லாம் அடேங்கப்பா. மாதா, பிதா, குரு, தெய்வம் அப்படி எல்லாம் தானேடா சொல்லி வைக்கப்பட்டிருக்கிறது என்று காலேஜ் பியூனை அடிப்பதாகட்டும், பெட்ரோல் விலையை ஏற்றுவாயா நீ, பாப் மார்லி டி-ஷர்ட் போட்டால் பிடிப்பாயா என்று செலினின் மாப்பிள்ளையைப் பின்னும்போதும் சரி.. பல திசைகளில் முகம் திருப்புகிற எழுத்து. எதிரொலிகள் கேட்டவாறு இருக்கின்றன. எல்லா சொற்களிலும் ஓர் அசைவு இருந்தது.

அல்போன்ஸ் புத்திரன் படத்தின் சர்வ வியாபி.

அடுத்த படத்தில் அவர் மிகவும் கவனம் கொண்டவராய் இருந்தே ஆக வேண்டும். ஏனெனில், இது தற்செயல் என்கிற சந்தேகம் பலருக்கும் உண்டு. அப்படி இருக்க வாய்ப்பே கிடையாது என்று நம்புகிற என்னைப் போன்ற பலரும் மேலும் ஒரு முழுமைக்குக் காத்திருக்கிறோம்.

https://cinema.vikatan.com/south-indian-news/126922-malayala-classic-series-part-13-premam-movie.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

லுக்கா சுப்பி, அப்பட்டமான ஆண்களின் படம்; பெண்கள் தள்ளி வைக்கக்கூடாத படம்..! - மலையாள கிளாசிக் பகுதி 14

 

லுக்கா சுப்பி...

பொதுவாய் நான் யாரும் இந்தப் படம் பற்றி பேசிக் கேட்கவில்லை. மிகவும் தற்செயலாய் ஒருநாள் படத்தின் ட்ரெய்லரைப் பார்த்து படம் பார்த்ததாக ஞாபகம். உண்மையில் நம்ப முடியாத ஒரு வழிக்குச் சென்ற படத்தை மிகவும் வியக்க வேண்டியதாயிற்று. அதுவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் எனக்குப் பிடித்த ஒரு சப்ஜெக்டாக இருந்தது. இது மாதிரியெல்லாம் யாரும் செய்து பார்க்க மாட்டார்கள், அப்படிச் செய்தால் நன்றாக வராது என்றெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தேன். எனது கற்பனையைக் காட்டிலும் உயரத்துக்கு எழும்பியது படம். அது அதன் எல்லையைத் தொட்டது.

லுக்கா சுப்பி, மலையாள கிளாசிக்

 

 

 

 

அடேயப்பா, அப்பட்டமான ஆண்களின் படம் என்று நினைக்கிறேன். இப்போது நிலவுகிற இசங்களின் சரியான அளவு பற்றி எனக்கு இருப்பது வெறும் ஐயங்கள் மட்டுமே. ஒன்றை முழு சைசில் ஜட்ஜ் பண்ண வர மாட்டேன் என்கிறது. ஒன்று சொல்லலாம் என்றும் தோன்றுகிறது. நிச்சயமாய் பெண்கள் தள்ளி வைக்கக் கூடாத படம்.

துவங்கும்போதே முழு மப்புடன் இருக்கிற ஒரு ஆட்டோ டிரைவர் மீன் கறி, தக்காளி, வெங்காயம் போன்றவற்றை வாங்கிக்கொண்டு, தனிமையில் இருக்கிற ஒரு வீட்டுக்குள் அவற்றைக் கொண்டு வந்து சேர்க்கிறான். வருகிற வழியில் அவன் பபெல்லோ சோல்ஜர்ஸ் பாடுகிறான். சமையல் செய்யப் போகிற ஒரு மாஸ்டர் இருக்கிறார். அவருக்கு உதவியாய் ஒரு பெண்மணி இருக்கிறாள்.  ஏதோ பார்ட்டி நடப்பதை பேசிக்கொள்கிறார்கள். முடிந்தால் இங்கிலீஷ் சரக்கை இரண்டு பெக் ஒதுக்க முடியுமா என்று டிரைவர் கேட்டுக் கிளம்பும்போது கார் வருகிறது. 

காரிலிருந்து இவனும் ஆடிக் கொண்டு இறங்குகிறான். பெயர் ரகு.

லுக்கா சுப்பி

டிரைவரிடம் ரகு முழு போதையில் நல்ல லோக்கல் சரக்கை தருவிக்க முடியுமா என்று அந்த போதையிலும் கேட்கிறான். அவன் பார்க்கலாம் என்று நகர்ந்து செல்ல, ’யாராவது என்னை உள்ளே கொண்டு போய் சேர்க்க முடியுமா’ என்று தள்ளாடுகிறான். மாஸ்டர் கொண்டு சென்று ஹாலில் உட்கார வைக்கிறார். கண் மயங்கி விழிப்பதற்குள் சித்தார்த்தும் அவனது மனைவியும் வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சிறிய மகனும் இருக்கிறான். சித்து ரகுவை எழுப்புகிறான். சில போன் கால்கள், மெசேஜஸ் இவைகளை முடித்துக் கொண்டு அவனும் தண்ணியடிக்கிறான். அப்படி போகிற நேரத்தில் உடனடியாகவே ரபீக்கும் அவனது மனைவி சுஹாராவும் வந்தாயிற்று. பெண்கள் ஒதுங்கிக்கொள்ள ஆண்கள் முழ்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால், பெண்களின் கண்களும் காதுகளும் இவர்களைத்தான் குறி வைத்து கூர்மை கொண்டிருக்கின்றன.

 

 

ஒரு கெட் டு கெதர். ஒரு கல்லூரியில் படித்த நண்பர்கள் கூடியிருக்கிறார்கள் என்பது சுருக்கம். பதினான்கு வருடங்களுக்கு அப்புறம் நடக்கிற முதல் சந்திப்பு.

இன்னும் வர வேண்டியவர்கள் இருக்கிறார்கள்.

கல்லூரியில் சந்தோஷமாக இருந்திருக்கிறார்கள். ஏகப்பட்ட நினைவுகள் இருக்கின்றன. மிகவும் ரொமான்டிக்காக சித்து தான் காதலித்த ராதிகாவை நினைவு கூர்வது அவனது மனைவி ரேவதிக்கு நன்றாகவே கேட்கிறது. அவள் பார்ட்டிக்கு வருவாளா என்பதை ரேவதி சற்று முன்பு தான் கேட்டாள். நல்ல வேளை அவள் இருப்பது எங்கோ தூரதேசம். ரகுவும் ஆனியும் அந்தக் கல்லூரியில் தான் விழுந்து விழுந்து காதலித்து கல்யாணம் செய்துகொண்டார்கள். இரண்டு பேரும் வேலை நிமித்தமாய் பிரிந்து போனில் பேசிக்கூட ஒரு வருடமாயிற்று. அவளிடம் இருந்து பிரியப் போகிறேன் என்கிறான் ரகு. அவள் நன்றாய் இருப்பாள், எனக்கும் சுதந்திரம் வேண்டும் என்கிறான் அவன்.

ரகு கொஞ்ச காலமாகவே குடித்தவாறு இருக்கிறான் என்பது தெளிவு. கவிஞன். வேறு பல தேடல்களுண்டு. உனக்கு ஏற்கெனவே இந்த எக்சிஸ்டென்ஷியலிச வியாதி இருந்தது என்கிறான் சித். அவன் குடித்து மறிவதை முதலில் வந்த ரேவதி விரும்பவில்லை. அப்புறம் வந்த சுஹாரா நேரடியாய் அடிக்கிறாள்.

எனக்கு உங்களைத் தெரியும். இந்த பாட்டெல்லாம் எழுதுகிறவர் தானே?

ஏய், அவன் எழுதுவது கவிதை.

எல்லாம் ஒன்று தான், விடுங்கள். நீங்கள் இந்த பாட்டெழுதுவதற்கு தான் குடிக்கிறீர்களா?

இல்லை. குடிப்பதற்காகத் தான் பாட்டெழுதுகிறேன்!

லுக்கா சுப்பி

அவனை அவளுக்குப் பிடிக்கவில்லை. தனது புருஷன் ரபீக்கிடமே கூட இரண்டே கிளாஸ்தான். அதற்கு மேல் அடித்தால் நான் அப்பாவிடம் சொல்லிவிடுவேன் என்று எச்சரிக்கிறாள். அவன் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் எடுத்த உடனேயே ராவாக மூன்று பெக் அடித்து விட்டு வாழ்கையே வேஸ்ட் என்கிறான். அவன் ஒரு டாக்டர். சித் ராதிகாவைப் பற்றி சொல்லி வருகையில், விரும்பிய பெண் கிடைக்காமல் போனதும் நான் என்னை விற்று விட்டேன் என்கிறான். எனது மனைவிக்கும் அவரது அப்பாவுக்கும் நான் ஒரு அடிமை என்கிறான். அவர் என்னை குனிந்து போ என்றால் தவழ்ந்து போய்க்கொண்டிருக்கிறேன் என்று அவன் சிரிக்க மற்றவர்களும் சேர்ந்து சிரிக்கிறார்கள். ஆனியை ரகு பிரியப் போகிறான் என்பது ரபீக்கிக்குப் பிடிக்கவில்லை. கல்லூரி காலத்தில் ரபீக் அவளிடம் மனதை விட்டிருக்கிறான் என்பது தெரிய வருகிறது. அவள் வாழ்க்கையை நீ எப்படி கெடுக்கப் போகலாம் என்பதில் அடிதடி. 

அந்த நேரத்தில் ஆனி வருகிறாள்.

சமாளிக்கிறார்கள்.

அவளுக்கு ரகுவின் மனநிலை தெரியாது.

அவனை அவள் அரவணைத்துக் கொள்கிற மனப்பான்மையில் தான் இருக்கிறாள். அவன் மீது இப்போதும் அவள் கொண்டிருக்கிற வாத்சல்யம் அலாதியானது. அதுதான் அவனை மூச்சு முட்ட செய்கிறதோ? விட்டு விடுதலையாக சொல்கிறதோ?

குடி மட்டும் தானா பார்ட்டி என்று ஆனி கேட்கிறாள். அவளுமே கூட கொஞ்சமாய் குடிக்கிறவள் தான்.

சித் பாடுகிறான்.

சித் பாடுவான் என்பதே அவனது மனைவி ரேவதிக்கு இப்போது தான் தெரிகிறது. 

இதற்கிடையில் ரகு கேட்ட லோக்கல் சரக்குடன் ஆட்டோ டிரைவர் வந்து அதை அவனிடம் ஒப்படைக்கிறான். மிச்ச காசை வைத்துக்கொள் என்பதை ஏற்கவில்லை. இரண்டு பெக்கை கேட்டு விழுங்கி விட்டு அவன் கிளம்பும்போது ரகு அவனை நில்லு என்கிறான். நீ பென்னி தானே என்று கேட்கிறான். அனைவரும் அவனை அணைத்துக் கொள்கிறார்கள். அவனும் அவர்களுடன் படித்தவன். ஒரு சீரியல் நடிகையைக் கட்டி, அவளின் மீது சந்தேகப்பட்டு, அது அடிதடி கலகமாகி, இறுதியில் வீடு கார் பணம் எல்லாம் ஒழிந்து குடிகாரனாகி இப்போது ஆட்டோ ஓட்டிக் கொண்டிருப்பதை பிற்பாடு அவன் சொல்லுகிறான். 
யாரும் எதிர்பாராவண்ணம் ராதிகா வருகிறாள்.

லுக்கா சுப்பி

இவர்கள் குரூப்பில் அதி முக்கியமான ப்ளேபாயாக இருந்து இன்று கிறிஸ்துவ பாதிரியாய் இருக்கிற சேவியர் அவளுக்கு இந்தப் பார்ட்டியை சொல்லி இருக்கிறான். அவனுக்கு தேவ ஊழியம் நெருக்கடியாய் இடித்தவாறே இருப்பதால் பார்ட்டிக்கு வரவில்லை.

நிலைமைகள் இறுகுகின்றன.

சித் தன்னை மீறி ராதிகாவில் ஈடுபடுவது ரேவதிக்கு துடிக்கிறது. 

இறுதியாய் வெடிக்கிறாள்.

அதன் எதிர்விளைவில் ரகுவும் ஆனியிடம் தனது முடிவை சொல்லுகிறான்.

ராதிகா யாரையும் பார்க்காமல் கிளம்பிச் செல்லுகிறாள்.

பார்ட்டி கந்தலாகி நிற்கும்போது வருகிறான் சேவியர்.

யாரும் சந்தோஷமாயில்லை.

ராதிகா சென்று விட்டாள் என்று தெரிய வருகிறது.

ஏறக்குறைய படம் முடிகிற இடத்துக்கு வந்து விட்டோம். பென்னிக்கு இப்போது ஒரு மனைவியும் குழந்தையும் உண்டு. குடிக்கிற இடம் தேடி வந்து அவனிடம் காசைப் பிடுங்கி செல்கிறாள் அவள். பென்னி அவளைத் திரும்பக் கூட்டி வந்து என்ன சண்டை போட்டாலும் எங்கள் வாழ்க்கை இனிது என்கிறான். வறுமை மட்டுமே இடர், ஈகோ அல்ல என்கிறான். சேவியர் ராதிகாவுக்காக காத்திருக்கிற அவளது புருஷன் ஜான் பற்றி சொல்லுகிறான். அவன் அனுப்பின நெக்லசை எல்லோரும் பார்க்கிறார்கள். ரேவதி என்னை மன்னித்துக்கொள் என்று ராதிகாவுக்கு மெசெஜ் போடுகிறாள். சேவியர் மிக சிறிய அளவில் அன்பைப் பற்றி சொல்கிறான். ரகு ஆனியின் கரத்தைப் பற்ற வேண்டியதாய் இருக்கிறது.

ஹாப்பி எண்ட் என்று சொல்ல முடியுமா.

சந்தேகம் தான். விஷயங்கள் தற்காலிகமாக ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றன.

லுக்கா சுப்பி

நாம் அக்கரை பச்சை உறவுகளுக்காக அலைபாய்கிறோம். அதைப் பற்றின கற்பனைகள் சுகமாகவும் சௌகர்யமாகவும் இருக்கின்றன. தன்னைச் சுற்றி ஒரு துயர் நிலவுவதாக எண்ணிக்கொண்டு நாம் தனிமைக்கு வந்து சேருகிறோம். அது பெரும்பாலும் தன்னைச் சூழ்கிற அன்பை கவனிக்காத ஒரு தனிமை. எப்போதாவது ஒரு வெளிச்சம் தோன்றலாம். மடமை புரிய வரலாம். ஆயினும் அதை போதிக்க முடியாது என்று நினைக்கிறேன். ஏனெனில் வாழ்வு குறைபட்டது. கருத்துகள் நொண்டுகிறவை. இயற்கையில் ஆணும் பெண்ணும் இணைவது இனப் பெருக்கத்துக்கு நோக்கமாயிருக்கலாம். என்றால் திருமணம் என்கிற அமைப்பு எவ்வளவு தூரம் சரியென்று குறைந்த பட்ஷம் எதிர்காலத் தலைமுறை யோசிக்கவே செய்யும். ஒரு ஆணும் பெண்ணும் கரங்களைப் பற்றிக் கொண்டு ஒருவர் முகத்தைப் பார்த்துக்கொண்டு அம்பது வருஷம் வாழ்வதெல்லாம் கொடுமை என்று நினைக்கிறேன். பலரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். மாற்றுவழிகள் ஒரு நேரத்தில் புலப்பட்டு விடக் கூடும்.

சிறிய படம் தான்.

ஆனால், யோசிக்கத் தூண்டியவாறு இருந்தது.

பெண்களின் தரப்பு இல்லையா. இருந்தது, வலுவாய் இருந்தது. நகைகளை விற்று உலகம் சுற்றுவதா என்று வாயில் அடித்துக் கொள்கிற சுஹாரா ஒரு கட்டத்தில் அப்படியே தனது வளையல்களைக் கழற்றி பென்னியின் மனைவிக்கு கொடுக்கிறாள். ஒரு சிறிய சலனம் கூட இல்லாமல். சுஹாராவிற்கு ஒரு கதை இருக்கிறது. அவள் நல்ல கான்வென்டில் முதல் மார்க் வாங்கிக் கொண்டு அற்புதமாக படித்துக் கொண்டிருந்தவள். அவளுடைய அப்பா பத்தாம் வகுப்பில் படிப்பை நிறுத்துகிறார். பெண்களுக்கு அது போதும் என்றிருக்கிறார். அவள் தனது டாக்டர் கனவை சொல்லி அழவே ஒரு டாக்டரை பிடித்து கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். என்ன வினோதமான தீர்ப்பு?

படம் சிறியதாக இருப்பினும் எங்கேயும் சோடையாகாத தெளிவான ஆக்கம். தெளிவான பார்வையே ஒரு திரைக்கதையாய் உருவெடுத்திருந்தது. வசனங்கள் வாழ்வைப் பற்றி அலசுவதாய் விரிந்தன. முரளி கோபி எல்லாவற்றிலும் சுழல்வார், தெரியும். ஜெய சூர்யா தான் ஒரு அற்புதமான நடிகன் என்று நிரூபித்த படம் இது. ரம்யா நம்பீசன், முத்துமணி, அபிஜா போன்ற பெண்களின் கண்கள் படத்தை ஆள்கிறது என்று சொல்ல வேண்டும். எல்லோருடைய பேரையும் சொல்லவில்லை, அத்தனை பேரும் பொருந்திக் கொண்டு நிலைத்தார்கள். ஒளிப்பதிவும், இசையும், எடிட்டிங்கும், மற்ற தொழில்நுட்பங்களும் மாற்றுக் குறைவில்லாமல் இருந்தன. என்னடா இது என்கிற அயர்ச்சி ஒருபோதும் உண்டாகவில்லை.

இயக்குநர் பாராட்டுக்குரியவர்.

குடி உடல் நலத்துக்கு தீங்கு என்று வருகிற பிட்டை அகற்றவே முடியாமல் எல்லா காட்சிகளிலும் மக்கள் குடித்துக்கொண்டிருந்தார்கள், புகைத்துக்கொண்டிருந்தார்கள். பெண்களுமே அதில் பங்கு பெற்றார்கள். பார்க்கிறவர்கள் தான் திணறிக்கொள்ள வேண்டுமேயல்லாது எடுக்கும்போது இயக்குநர்  எதற்கும் அஞ்சியவராய் தெரியவில்லை. ஏனெனில் அவரது நோக்கம், நல்ல வேளையாய் குடியை ஒழிப்பதாக இல்லை.

குடிக்கு சரணடைகிற மன நிலையை க்ளிக் செய்கிறார்.

https://cinema.vikatan.com/south-indian-news/127520-malayala-classic-series-episode-14.html

Link to comment
Share on other sites

"மலையாளப் படங்களின் தற்போதைய வளர்ச்சியில் 'ஆனந்தம்' படத்திற்கும் பங்குண்டு!" - 'மலையாள கிளாசிக்' பகுதி 15

 

``மலையாளப் படங்களின் தற்போதைய வளர்ச்சியில் `ஆனந்தம்' படத்துக்கும் பங்குண்டு!" - `மலையாள கிளாசிக்' பகுதி 15

`ஆனந்தம்' - ஒரு கல்லூரிக் கதையை எடுத்துக்கொண்ட படம் என்று சொல்லலாம்.

யோசித்துப் பார்த்தால் இந்தியா முழுக்க அதற்கு என்று சலித்த டெம்ப்ளேட் இருக்கிறது. குறிப்பிட்ட காலங்களில் தமிழில்கூட அரைத்த மாவை அரைத்துப் புளிப்பு தோசைகளைத் திணித்தார்கள். `சேது'வில் ஏன் வகுப்பறைகள், கேன்டீன், மைதானம் போன்றவை காட்டப்படவில்லை என்று எஸ்.வி.சேகர் கொதித்தார். அந்த அளவுக்கு மக்கள் கல்லூரிப் படங்களின் ஆர்டரை மனப்பாடம் செய்து வைத்திருந்தார்கள். அதிலிருந்து தாண்டிக் குதித்து செய்த படங்களெல்லாம் வெற்றி பெற்றன. குறைந்தபட்சம் சிறு வித்தியாசம் காண்பிக்க முற்பட்ட படங்களை ஜனங்கள் ரசித்தார்கள். `ஆனந்தம்' என்கிற இந்தப் படமேகூட சிறிய ஒரு மாற்றத்தைதான் வைக்கிறது.

ஆனந்தம் - மலையாள கிளாசிக் பகுதி 15

 

 

 

 

படம் தொடங்கிய பத்து நிமிடங்களுக்குள் கதை மாந்தர்கள் கல்லூரியை விட்டு வெளியேறுகிறார்கள். ஓர் உல்லாசப் பயணம். முதலில் ஹம்பி. பின்னர் கோவா. சம்பவங்கள் முழுக்க முழுக்க பொருத்தப்பட்டிருப்பது இந்த இடங்களில்தாம். இஞ்ஜினீயரிங் ஸ்டூடன்ட்ஸ் அவர்களுடைய புராஜெக்டையும் இந்தப் பயணத்தில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உபரி செய்தி.  

நான் இடுக்கியில் இருந்தபோது கட்டப்பன என்கிற ஊரில் இரவுக்காட்சி பார்த்தேன். படம் தொடங்கியதுமே முதல் காட்சி பிடிக்கவில்லை. கிளம்பப் போகிற பேருந்தில் பையன்கள் சரக்கு பாட்டில்களை ஒளித்து வைக்கிறார்கள். அதற்கு இவ்வளவு பில்டப்பா என்று பட்டது. எழுந்து நகர்ந்து விடலாமா என்றுகூட நண்பர்களிடம் கேட்கத் தோன்றியது. ஆனால், போக போக மெதுவாய் நகரும் கதையினுள் சதை பிடிக்கத் தொடங்கியது. மேற்சொன்ன வரியால் படம் முழுக்கக் கதையால் நிரம்பியது என்று கற்பனை செய்துகொள்ளக் கூடாது. படத்தில் பெரிய கதை சொல்லி நம்மை வதைக்கவில்லை என்பதுதான் முக்கிய விசேஷம். எனினும் வர வேண்டியது வந்திருந்தது.

சில யோசனைகள், சில விவாதங்கள் இவற்றுக்குப் பிறகு ஹம்பி, கோவாவுக்குச் செல்ல நிர்வாகம் அனுமதிக்கிறது. மாணவ மாணவிகள் தங்களுக்கே உரிய ஆர்வமிகுதியாலும்  சந்தோஷங்களுடம் கிளம்புகிறார்கள். வருண் தியாவிடம் காதல் சொல்லி ஏமாந்தவன். அக்ஷய் அவளிடம் காதலைச் சொல்லமுடியாமல் தவித்துக் கொண்டிருப்பவன். தவிர்த்துக்கொண்டிருப்பவன் என்றுகூட சொல்லலாம். தியா பேருந்து கிளம்பி நகரும்போது காரில் வந்து வழிமறித்து ஏறிக்கொள்கிறாள். அக்ஷய் பிறவிப்பேறு அடைகிறான். வருண் முகத்தைப் புலிபோல வைத்துக்கொண்டிருக்கிறான். பயணம் தொடங்குகிறது. படத்தின் தொடக்கத்திலிருந்தே ஒரு பெண்தான் இந்தப் பயணக் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறாள். ஒவ்வொருவரைப் பற்றின அறிமுகமும் இருந்தது.

 

 

புட்டி இருக்கிறான். புகைப்படம் எடுக்கத் தெரிந்தவன். ஒரு விதத்தில் நண்பர்களுக்குள்ளே எல்லோருக்குமான பாலம். கௌதம் ஒரு ராக் ஸ்டார். தேவிகா அவனது காதலி. அவனது கூச்சல் பாடல்கள், டீ ஷர்ட்ஸ், தாடி இவற்றுக்காக அவனை ஆராதித்துக் காதலித்துக் கொண்டிருப்பவள். எல்லோருக்கும் சிரித்து, எதையுமே யாரிடமும் பேசாமல், தன் பாட்டிற்கு வரைந்து கொண்டிருக்கிற ஒரு பெண் கதாபாத்திரம் உண்டு. இவர்களை எல்லாம் வழி நடத்துவதற்காக சாக்கோ என்கிற ஆசிரியர் உடன் வந்திருக்கிறார். லவ்லி என்கிற ஆசிரியையும்கூட. இருவரும் பஸ்ஸில் ஆண்களையும் பெண்களையும் தனி தனியாய் உட்கார வைத்தார்கள். பஞ்சையும் நெருப்பையும் பிரித்துத்தானே வைக்க முடியும்?! கண்டிப்பாய் இருக்கிறார்கள்.

ஆனந்தம்

ஹம்பி.

ஒரு காலத்தில் லட்சங்களில் மக்கள் இருந்திருக்கிறார்கள். இப்போது ஆயிரங்களில் கொஞ்சம் மக்களைத் தவிர்த்து வெறுமையாய் கிடக்கிறது. எனினும் கிருஷ்ண தேவராயனின் அந்தக் கலைநகரம் வியப்பூட்டுவதாய் பரந்து விரிந்திருக்க அனைவரும் ஒருவகை கண்ணாமூச்சி ஆடுகிறார்கள். தியா அக்ஷய்க்குப் பல சந்தர்ப்பங்களிலும் நெஞ்சில் பால் வார்க்கிறாள் என்று சொன்னால் போதுமல்லவா. பையன்கள் இரவு நேரத்தில் பாட்டில்களைத் தேடினால் காணவில்லை. பெண்கள் நகர்த்தியிருக்கிறார்கள். எல்லோருமாகக் குடித்துச் சிரித்து ததும்பித் திரும்பி வந்தால், சரியான பொறி. சாக்கோ தனது இறுதித் தீர்ப்பினைச் சொல்கிறார். பயணம் கேன்சல். எல்லாவற்றையும் மூட்டை கட்டுங்கள். நாம் திரும்பித் செல்கிறோம். குடித்துவிட்ட பத்துப் பேரால், யோக்கியமாயிருந்த பத்துப் பேருக்கும் தண்டனையாகிவிட்டது. ஸ்ட்ரிக்ட் சாக்கோவிடம் லவ்லி கணைக்கிறாள்.

உண்மையில் லவ்லியை இந்த நாள்களில் யாரோ பெண் பார்க்க வருவதாக ஒரு ஏற்பாடு இருந்தது. அவள் இந்த டூரை சாக்காக வைத்து எகிறி வந்திருக்கிறாள். இனிமேல் வாய்ப்பில்லை. திரும்பிப் போனால் அந்தப் பையன் பெண் பார்க்க வருவான். அவனுக்குப் பிடித்துப் போகும். கல்யாணத்தைப் பெற்றோர் திணிக்கும்போது அதைத் தடுத்து நிறுத்த முடியாது. கதை முடிந்தாயிற்று.

சாக்கோ கோஷ்டிகளைக் கூப்பிடுகிறார். இந்த ஒரு முறை தவறு செய்தவர்களுக்கு மன்னிப்பு என்கிறார். பயணத்தைத் தொடரப் போகிறோம். விஷயம் சிம்பிள். சாக்கோவுக்கு லவ்லியின் மீது ஒரு விட்ட குறை தொட்ட குறை இருக்கிறது. அவளுக்குமேகூட கொஞ்சம் இருக்கலாம்.

லவ்லியிடம் பொண்ணு பார்க்க வர்ற பையன் அப்படியே போவட்டும், நாம இப்படி கோவா போலாம் என்று அந்தப் பிரச்னையை அவர் முடித்து வைத்ததில் கோவாவை நோக்கிய பயணம் தொடங்குகிறது. கௌதம் மெதுவாய் தேவிகா பக்கத்தில் அமர்ந்துகொண்டு விட்டிருக்கிறான். தியா அருகே அமருவதற்குப் பையன்கள் ஏற்பாடு செய்து கொடுத்ததில் அக்ஷய்க்குத் தியாவிடம் மனம் விட்டுப் பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. ஒரு பொன் தருணம்தான் அவனைப் பொறுத்தவரையில். அவள் அவனது தோள்களில் சாய்ந்து உறங்குகிறாள். சாக்கோவுமே லவ்லியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு விட்டார் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

ஆனந்தம்

தியா அக்ஷயிடம் நீ என்னை லவ் பண்ணவில்லையா என்று கேட்கிறாள். இல்லவே இல்லை என்று தனது ஆண்மைத்தனத்தை நிறுவிவிட்டு அந்த நட்பை உறுதிபடுத்துகிறான்.

ஒரு கட்டத்தில் தனது பயத்தையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஓர் அபாயமான சாகசத்தில் ஈடுபட்டு முடித்து, அந்தப் பெருமிதத்தின் வளைவில் ஒரு சரியான ஆண் பிள்ளையாய் அவனால் ஐ லவ் யூ சொல்ல முடிகிறது. இன்னொரு கட்டத்தில் தியா அவனிடம் என்னை முத்தமிடு என்றே சொல்கிறாள். ஆனால், ஒரு போதை நேரத்தில் நண்பர்களுக்குள் பிணக்குகள் வெடிக்கின்றன.

தியாவே கூட்டம் விட்டு ஒதுங்குகிறாள்.

கோவாவின் பெரிய பார்ட்டியில் இணைந்து கொள்வதாக ஒரு திட்டம் இருந்தது, புது வருடம் பிறந்து வரப்போகிற டிசம்பர் முப்பத்தி ஒன்றாம் தேதி இரவு. எல்லாம் நமத்துப்போனதுபோலக் கிடக்கிறது. புட்டி பையன்களுடன் சமரசம் பேசுகிறான். தனது உளறல்களுக்கு மன்னிப்பு கேட்கிறான். `தில் சாத்தா ஹை' ஷூட்டிங் ஸ்பாட்டில் நண்பர்கள் புகைப்படமெடுத்துக் கொள்கிறார்கள். பெண்களையும் சமாதானம் செய்கிறார்கள். கௌதம் நான் கத்துவது பெற்ற தாய்க்குக்கூட அடுக்காது என்பதை தனது டீமுக்குச் சொல்லிவிட்டு, தாடியை மழித்துவிட்டு தேவகியிடம் நான் இவ்வளவுதான், எனக்கு ஜேசுதாஸ்தான் என்பதை தெளிவுபடுத்தி விடுகிறான். பழைய ஒற்றுமைக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள். வழக்கம் போன்ற க்ளைமாக்ஸ் இடர்களுடன் எல்லோரும் ஒரு புதிய வருட பார்ட்டியை என்ஜாய் செய்கிறார்கள். அதற்கு அக்ஷயின் அண்ணன் உதவியிருக்கிறான். தனியாய் இதைச் சொல்லவே வேண்டும், அண்ணன் நிவின்பாலி.

படம் மீண்டும் கல்லூரியில் முடிகிறது.

ஆனந்தம்

இந்த ஒரு பயணத்தால் வாழ்க்கை வேறு முகம் தரித்துவிடவில்லை. எனினும் எல்லோரிடமும் சில மாற்றங்கள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். இதுவரையில் இந்தக் கதையைச் சொல்லிக்கொண்டு வந்தவள், படத்தில் ஒருபோதும் பேசாத அந்த ஓவியப் பெண்தான். நிவின் பாலி ஓரிடத்தில் சொல்வதுதான். அவனவன் வாழ்க்கையை அவனவன் தீர்மானித்து, அதைக் கொண்டாட்டத்துடன் வாழவேண்டிய அவசியம் இருக்கிறது. மற்றவர்களுக்காக நாம் தியாகம் செய்துகொண்டிருக்கும்போது நாம் இழந்துகொண்டிருப்பது கொஞ்ச நஞ்சமல்ல. உங்கள் வாழ்க்கையின் இந்தத் தருணங்களை எவ்வளவு முயற்சி செய்தாலும் மறுபடைப்பு செய்யமுடியாது.

படம் அல்ல பாடம் என்று இந்தப் படத்தைப் பற்றி சொல்லிவிட முடியாது. பாடம் அல்ல படம்தான்.

படத்தின் தொனியில் நான் முக்கியமாய் கருதியது முகங்களைத்தாம். அவற்றில் உயிர்த்துடிப்பு இருந்தன. நடையுடை பாவனைகள் என்போமே, யூத் மல்லுக்களை கொண்டு வந்திருந்தார்கள். எனினும் வசனங்களின் அணுகுமுறைகளை முற்றிலுமாக மாற்றியிருக்க முடியும். கதைத் தேர்வு அதை நடைமுறைப்படுத்தியதற்கான நோக்கம் யாவுமே ஜருராக இருந்தபோதிலும், நாடகங்களில் கூர்மை வந்திருக்க வேண்டும். எப்படியும் இந்தமாதிரி ஒரு படத்தின் தொடர்ச்சியாகத்தான் இப்போது `பூமரம்' என்கிற படம் வந்தது. அது இந்த வரிசையில் முழுமையாய் வெற்றி பெற்றது என்று சொல்லவேண்டும்.

படத்தில் இசை கவனிக்கத்தக்கதாக இருந்தது. ஒளிப்பதிவாளரின் கண்கள் எல்லாத் துண்டுகளிலும் இருந்தன. கதை சொல்லிக்கொண்டே வருகிற முனைப்பு இறுதி வரையில் கட்டுப்பாட்டுடன் இருந்தது.

ஒன்றைச் சொல்லவேண்டும், நமது சினிமாக்களில் இளைஞர்கள்தாம் நாயகர்கள். அது என்ன சாபக்கேடு என்பதே தெரியவில்லை. எல்லாக் கிழவர்களுமேகூட இளைஞர்களாய் வேடம் போட்டு மக்களை வதை செய்வது ஒருபோதும் நியாயமாய் இல்லை. அவர்கள் காதலிப்பது, மரத்தைச் சுற்றி பாட்டு பாடுவது, அல்லது வெளிநாட்டுத் தெருவில் காதலிக்கு முன்னால் சர்க்கஸ் செய்வது போன்றவற்றைத் தாண்டி காதலை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் நண்பர்களிடம் கருத்துக் கேட்கிற காட்சிகள் எல்லாம் வருகின்றன. இதெல்லாம் குற்றம் என்கிறேன். முறைப்படி இதற்கு எதிரான ஒரு போராட்டம் கிளர்ந்து யாராவது தீக்குளிக்கவே வேண்டும் என்று உள்ளுக்குள் ஒரு ரகசிய ஆசை வந்து விடுகிறது. அந்த அளவில் இந்தப் பையன், பெண்களின் படம் அவர்களுடைய படமாகவே இருந்ததில் சந்தோசம். நிஜமாகவே இந்தமாதிரி படங்களில் ஓர் எழுப்புதல் உண்டு. வாலிப வயோதிக மக்களுக்கு ஒரு புத்துணர்ச்சி கேரன்டி.

ஆனந்தம்

புதிய அடவுகள் இருந்தன. ஹம்பியைச் சுற்றிக் காட்டியதில் ஒரு புத்திசாலித்தனம் இருந்தது போலவே, படமெங்கிலும் அது எல்லாக் காட்சியிலும் இருந்தது. எவ்வளவு பெரிய வெளியாயினும், எத்தனை பேர் குழுமியிருந்தாலும் அதைப் படமாக்குவதில் தெரிந்த சகஜம் மகிழ்ச்சி. இது எல்லாவற்றையும்விட கதைகளை வைத்து விளையாடும் கேரளத்தில் அரை சிட்டிகை கதையை எடுத்துக்கொண்டு நான்கு கோடியில் படமெடுக்கிற துணிச்சல் ஒன்றிருந்தது பாருங்கள், அதைப் பாராட்டவே வேண்டும். அப்புறம் அது வெற்றி பெற்றதற்கும். ஏற்கெனவே இயக்குநர் `தட்டத்தின் மறையத்து' என்கிற புகழ் பெற்ற படத்தை இயக்கியவர். பெயர் கணேஷ் ராஜ்.

இதுவரையில் நடந்தது இருக்கட்டும், கணேஷ் ராஜ் இதைக்காட்டிலும் மேலான ஒரு பாய்ச்சல் நிகழ்த்தக்கூடியவர் என்று நம்புகிறேன். மலையாளப் படங்களின் தற்போதைய வளர்ச்சியில் இவருக்குமே பங்குண்டு என்பது எனது கணிப்பு.

https://cinema.vikatan.com/south-indian-news/128230-malayala-classic-part-15-aanandam-movie.html

Link to comment
Share on other sites

``மகேஷிண்டே பிரதிகாரம்... கதையையே புரியாமல்தான் தமிழில் ரீமேக் செய்தார்கள்!" - `மலையாள கிளாசிக்' பகுதி 16

 

`மலையாள கிளாசிக்' தொடரின் பகுதி - 16 இது. `மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தைப் பற்றிய விரிவான அலசல்.

``மகேஷிண்டே பிரதிகாரம்... கதையையே புரியாமல்தான் தமிழில் ரீமேக் செய்தார்கள்!
 

மகேஷ், ஓர் உள்ளொடுங்கிய கிராமத்தில் தனது அப்பாவுடன் இருக்கிறான். கல்யாணம் போன்ற விசேஷங்களுக்குப் புகைப்படம் எடுக்கிறவன். ஜங்ஷனில் ஒரு கடை இருக்கிறது. அப்புறம் பால்ய காலத்து சிநேகிதியுடன் இப்போதும்கூட தொடர்கிற ஒரு காதல் இருக்கிறது. நாள்கள் அப்படியே சென்றுகொண்டிருக்கும்போது, விதிவசமாய் ஜிம்சன் என்கிறவனுடன் அடிதடி உண்டாகிறது. நாலு பேர் பார்த்திருக்க அவமானகரமான ஒரு தோல்வியால் ஜிம்சனை சுளுக்கெடுக்காமல் காலில் செருப்புப் போடுவதில்லை என்று மகேஷ் சூளுரைக்கிறான் என்பதுதான், `மகேஷிண்டே பிரதிகாரம்' அடிப்படைக் கதை.

மகேஷிண்டே பிரதிகாரம் : மலையாள கிளாசிக் பகுதி 16

 

 

இதற்கு நடுவில் தவிர்க்க முடியாத குடும்பச் சூழலில் அவனது பால்ய காதலி வீட்டில் காட்டின மாப்பிள்ளையைக் கட்ட ஒப்புக்கொண்டு, மகேஷைக் கைவிட்டிருக்கிறாள். ஜிம்சனை அடிக்கலாம் என்று அவனைத் தேடிப்போனால், அவனோ துபாய் சென்று விட்டிருக்கிறான். மகேஷ் செருப்புப் போடாத தன் கால்களை செய்வதறியாது பார்க்கும்போது படத்தின் இடைவேளை வருகிறது.

 

 

எவ்வளவு சுளுவான கதை. ஆனால், அவ்வளவு சுளுவான படம் இல்லை. மிகவும் கைதேர்ந்த கலைஞனால் நெய்யப்பட்டு ஒவ்வோர்  அங்குலமும் பூ வேலைப்பாடுகளால் ஒளிர்கிற திரைக்கதை.

படத்தின் எளிமை வெற்றிக்குக் காரணமாயிற்று என்று எல்லோருக்கும் தெரியும். ஆயினும், படம் எளிமையானது இல்லை. இதை மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் என்பது வேண்டுமென்றேதான். இவ்வளவு முழுமை ஒரு படத்தில் அமைந்து விடுவதில்லை. தமிழில் இதை `நிமிர்' என்ற பெயரில் எடுத்தார்கள். ப்ரியதர்ஷனுக்கு இந்தக் கதையேகூட சரியாகப் புரியவில்லை என்பதை என்னால் உறுதியாய்க் கூறமுடியும்.

மகேஷிண்டே பிரதிகாரம்

முதலில் இந்தக் கதையின் அடிப்படைக் கதாபாத்திரம், இடுக்கி. அது, கேரளாவின் மிகவும் பின்தங்கிய மாவட்டம். மலைப் பிரதேசம். குறைந்த மக்களே இருக்கிறார்கள். உயிர்த்துடிப்புடன் பிழைப்பதற்கு ஆகாத அங்கிருந்து வெளியேறிச் செல்கிறவர்கள் அதிகம். அப்படித்தான் மகேஷின் பால்ய சகி சௌமியா குடும்பத்தார் கேட்ட நிமிடமே கொஞ்சம் கண்ணீரை விட்டுவிட்டுத் தப்பிக்க முடிவெடுக்கிறாள். இங்கேயே இப்படியே இருந்தால் ஆயிற்றா என்று அவளது தந்தை கேட்டதற்குப் பதில் அது. மகேஷேகூட ஒரு சடங்கு வாழ்க்கைதான் வாழ்கிறான். நாம் சலிப்புடன் மேற்கொள்கிற அன்றாடங்கள் அவை. அவற்றில் ஒரு சுவாரஸ்யமும் கிடையாது. ஆயினும் மகேஷுக்கு விதிவசமாய், விபத்துபோல அமைகிற அந்தச் சண்டைதான் அவனைக் கொஞ்சமாவது விழிப்படையவைக்கிறது.

 

 

குளத்திலோ, ஆற்றிலோ, பாத்ரூமிலோ குளிக்கப்போகிற மலையாளி முதலில் தனது செருப்பைத் தேய்த்துக் கழுவாமல் இருக்கமாட்டான். படத்தின் முதல் காட்சியே இதுதான். அது அவனது கான்ஷியஸில் இருக்கும் ஓர் அயிட்டம். சண்டையில் தவறி சவால் வைக்கிறவனுக்குக் குறைந்த பட்சம் புதிதாய் ஒரு வைராக்கியமேனும் கிடைக்கிறது.

உலகில் அநீதி என்பது சரளமாய்ப் புழங்குகிற ஒன்று. அதில் எவ்வளவோ பலவீனமானவர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். அந்த அநீதியை எதிர்கொள்ள ஆகாமல் அல்லது முடித்து வைக்கத் தெம்பில்லாமல் அப்படியே அமுங்கிப் போகிறவர்கள்தானே பெரும்பான்மையினரும்?! படத்தின் இரண்டாம் பகுதியின் தொடக்கமே ஒரு ஹோட்டலில் புரோட்டா சாப்பிடுகிற ஒரு குங்பூ மாஸ்டரிடம் சோனியான ஒருத்தன் தனக்கு வித்தை கற்றுக் கொடுக்கமுடியுமா என்று கேட்பதுதான். அவனுக்கு ஒருத்தனை அடிக்க வேண்டும். பீப் சொல்லட்டுமா என்று கேட்கிறான். பின்னர் மாஸ்டரின் கிளாஸில் தப்பும் தவறுமாய் அடவுகள் செய்யும்போது, நாம் அந்த வரிசையில் மகேஷும் இருக்கிறான் என்பதைப் பார்க்கிறோம்.

இந்தப் படத்தின் இடைவேளைக்கு அப்புறம்தான் அசல் கதை விரிகிறது. ஆனால், படத்தின் தொடக்கத்தில் மகேஷின் அப்பா காணாமல்போய், பின்னர் தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காட்சி மற்றும் அவரது அப்பா மன நோயாளியா என்று தொடர்கிற காட்சிகளில் பிற்பகுதிக்கான விதைகள் இருக்கின்றன. சௌமியா திருமணமாகி அந்த ஊரை விட்டுச் செல்கிறாள். மகேஷ் தன் கஷ்டங்களை முழுங்கிக்கொண்டு நாள்களை ஓட்டும்போது, துபாயிலிருந்து வேலை இழந்த பலரும் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற செய்தியைப் பார்க்கிறான் மகேஷ். ஜிம்சன் வந்திருப்பானோ என்று பார்க்க அவனது வீட்டுக்குச் சென்று டீ குடித்துவிட்டு வெட்டியாய் திரும்பிப் போகிறான். அந்த வீட்டைச் சேர்ந்தவள்தான் ஜிம்சி. ஜிம்சனின் தங்கை. அவள் அவனது கடைக்குப் புகைப்படம் எடுத்துக்கொள்ள வருகிறாள்.

மலையாள கிளாசிக் : பகுதி 16

அவனால் அவள் கேட்ட புகைப்படத்தை எடுத்துக்கொடுக்க முடியவில்லை. அவன் அப்படியெல்லாம் பல விஷயங்கள் உலகத்தில் இருக்கின்றன என்பதை யோசித்தவனல்ல. ஆனால், தனது டார்க் ரூமில் டெவலப் செய்த பிளாக் அண்டு ஒய்ட் போட்டோவைப் பார்த்துக் கொண்டிருக்கிற அப்பாவைப் பார்க்கிறான் மகேஷ். அது அவர் தொலைந்துபோன அன்று தோட்டத்தில் காத்திருந்து கிளி வந்து கூடடையும்போது எடுத்த படம். தருணங்களைப் படம் பிடிக்கிற அறிவை முதன் முதலாக அறிகிறான் அவன். அப்பா எப்போதும் வேடிக்கைப் பார்ப்பதன் ரகசியத்தை அறிகிறான். அவர் மனிதர்கள் எல்லோரும் அழகானவர்கள் என்று சொன்னதற்கு அவருடைய மனசின் கண்களல்லவா காரணம்? அவருக்கு இடுக்கி போரடிக்காது. அவர் தன் பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைத்திருக்க மாட்டார். ஒருமுறை, கடையைத் திறக்கப்போகிறேன் என்ற போது கடை அல்ல ஸ்டுடியோ என்றிருப்பார் ஆணித்தரமாய்.

உங்களுக்கு இந்த மாதிரி எல்லாம் எடுக்க வராதில்லையா என்று கேட்டு விட்டுப் போயிருக்கிறாள், ஜிம்சி. எவ்வளவு அவமானம்? உணவை வாயில் வைத்துக் கொடுக்க முடியும். மென்று க்ச் சொல்லி கேட்கக்கூடாது என்கிறார், அவனது அப்பா. போட்டோகிராபியைக் கற்றுக்கொடுக்க முடியாது, கற்றுக்கொள்ள முடியும் என்கிறார்.

மகேஷ் அவர் எடுத்த அக்காலத்தின் புகைப்படங்களை எல்லாம் பார்க்கிறான். அவற்றில் செயற்கைத்தனம் இல்லை. அல்லது அவற்றில் இயற்கை ஒளியே வேண்டிய அளவில் இருக்கிறது. அவ்வொளியில் பொலிகிற மனிதச் சிரிப்புகளில் அவர்களுடைய மனங்களைக் கொண்டு வந்திருக்கிறார். அவர் வெறும் ஒரு போட்டோகிராபராக மட்டும் தனது வாழ்வைக் கழித்திருக்கவில்லை. நல்ல ரசிகராக இருந்திருக்கிறார். நல்ல கலைஞனாகத் தொழிற்பட்டிருக்கிறார். மகேஷ் மெதுவாகத் தனது தருணங்களை அடையத் தொடங்குகிறான். அது அவனுக்கு உறுத்தலாய் இருந்துவிட்ட ஜிம்சியைப் புகைப்படம் எடுப்பதில் முடிகிறது.

அது ஒரு தருணம், அப்படிக் கிடைத்துவிட்ட ஒரு புன்னகை, அந்தப் படம் ஒரு வார இதழின் அட்டைப் படத்தில் வெளியாகி அவளை சந்தோஷப்படுத்துகிறது. அவன்மீது ஏற்கெனவே சற்று ஈர்ப்பிலிருந்த அவள், அவன்மீது நிறைவு கொள்கிறாள். இருவரும் நெருங்குகிறார்கள். ஜிம்சி, தான் யாரென்று சொல்லத் தயங்கவில்லை.

ஜிம்சன் ஊரிலிருந்து திரும்புகிறான். பாட்டி இறந்திருக்கிறாள். அந்தச் சாவில் ஜிம்சி ஜிம்சனின் கண்களுக்குத் தட்டுப்படாமல் மகேஷை ஒதுக்கிக்கொண்டு சென்று பேசும்போது, மோதல் வேண்டாம் என்கிறாள். அண்ணனை உன்னால் தாங்க முடியாது என்றும் சொல்கிறாள். மகேஷ் நான் இப்போ குங்பூ எல்லாம் முடித்திருக்கிறேன் என்று லைட்டாகச் சொல்லும்போது, அதெல்லாம் ஒரு காமெடி இல்லையா என்று கேட்கிறாள் அவள். என்ன இருக்கிறது. சமாதானம் செய்துகொள்ள வழிகள் இருக்கின்றன. ஒரு புதிய செருப்பை வாங்கிப் போட்டுக் கொள்.

மகேஷிண்டே பிரதிகாரம்

மொத்த ஊரும் அவனது காலையே வெறித்துப் பார்ப்பது அவனுக்கு மட்டும்தானே தெரியும்?

க்ளைமாக்ஸ் வேறு வந்துவிட்டது. அவன் ஜிம்சனை நொறுக்கப் புறப்படுகிறான். ஜிம்சிக்கும் அவளது அம்மாவுக்கும் இந்த ஆண்களுடைய ஈகோக்கள் புரியவில்லை. என்ன பைத்தியக்காரத்தனம் இது.

வெற்றி பெற்ற கையுடன் காலில் புது செருப்பை மாட்டிக்கொண்டு மருத்துவமனையில் படுத்திருக்கிற ஜிம்சனிடம் நானும், உனது தங்கையும் காதலிக்கிறோம், நான் இவளைத் திருமணம் செய்துகொள்ள நினைக்கிறேன், என்ன சொல்கிறாய்... என்று கேட்கும்போது ஒரு வித பாடுமில்லாமல் படம் முடிகிறது.

இடுக்கி போதும். இந்த இடுக்கியில் இருந்துகொண்டே வாழ்வை முழுமையாய்க் காணுகிற எல்லாக் கோணங்களையும் அடைகிறான் மகேஷ். இடுக்கியைப் பற்றிய பாடலுடன் தொடங்கிய படம், அதே பாடலுடன் முடிவடைகிறது.

இடுக்கியை விட்டு வெளியேறிச் சென்ற ஒருவராக இந்தப் படத்தில் சிறிய ஒரு வேடம் செய்திருக்கிறார், திலீஷ் போத்தன். தொண்டிமுதலும் திருக்சாஷியும்கூட இவர் இயக்கிய படம்தான். மலையாளத் திரைப்படங்களில் இவருடைய இரண்டு திரைப்படங்களும் முற்றிலுமே வேறு தினுசானவை. திரைக்கதை பற்றி ஏற்கெனவே சொல்லியாயிற்று, எழுதின காட்சியை நமக்குக் கொண்டு சேர்க்கிற கடினமான வேலையில் அற்புதங்களைக் கலக்குகிறார். வெச்சுச் செய்யுறது என்போமில்லையா, அது.

கல்லூரி விட்டு வீட்டின் பின் வழியாக கிச்சனுக்குள் வந்து சோத்துக்கு அலையும் ஒரு பெண், அது படத்தின் நாயகி. தட்டு நிறைய பலாப்பழத்தை வைத்துக்கொண்டு தின்னுகிற அந்தப் பெண்ணிடம் ஒரு கரம் நீளும்போதுதான், அந்த வீட்டில் மூதாட்டி ஒருத்தி இருக்கிறாள் என்பதை அறிகிறோம். குங்பூ வகுப்பில் மகேஷ் இருப்பதும் அப்படியே. எப்போதுமே ஒருமாதிரியான சந்தேகமாகவே காணப்படுகிற சௌமியா, இறுதியாக மணமகனுடன் கை கழுவ வரும் இடத்தில் மகேஷ் நின்றிருக்கிற இடம், அந்த முறை எல்லாமே நம்மைவிட மலையாளிகளுக்குப் பெரிய திடுக்கிடலாக இருந்திருக்கும். அப்புறம் மகேஷான பஹத்தின் அந்தச் சிரிப்பு. மறக்கவே முடியாது.

ஓரிரு சோகையான படங்கள், அவற்றின் தோல்வி இவற்றுக்குப் பின்னர் பஹத்துக்கு மறுஉயிர் கொடுத்த படம் என்பதாக நினைவு. யோசித்துப் பார்த்தால், பஹத் இந்தப் படத்தில் ஒரு கதாபாத்திரமாக தனது வேலைகளைப் பார்த்துக்கொண்டிருப்பாரேயோழிய, நமக்கு முகம் கொடுக்கிற காட்சிகள் குறைவு. சாவு வீட்டில் பசிக்குமோ என்று சௌமியாவுக்குப் பழங்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் பரபரக்கிற அந்தத் தோட்டத்துக் காட்சியில் காதல் கொள்கிற சராசரிகளின் வேதனைகள் மொத்தத்தையும் எடுத்து வைத்து விடுகிறார். அனுமோளேகூட கதையின் முகம்தான்.

ஜிம்ஸிகூட ஒருவிதமான வலிமையைக் கொண்டிருந்து, பார்ப்பதற்கு சாதாரணமாக வளைய வருவது போலிருக்கும். அந்தப் பெண்ணுக்குத் தனது கதாபாத்திரம் நன்றாகப் புரிந்திருந்தது. இதெல்லாம் முடிந்து, சிறிதாக வந்து சென்ற அனைவருமே முழுமைக்குக் காரணம். அலேன்சியர் லே லோபசை என்னவும் சொல்லிப் பாராட்டலாம். மற்றும் சௌபின் சாகிர் தனது பிரத்யேக மொழி, பிரத்யேகப் பார்வை போட்டு முதலாளியின் பெண்ணைச் சுருட்டுவதல்லாமல் முதலாளியையே சுருட்டுவதும் வேறு ஒரு ஸ்டைலில் வந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர்- shyju khalid

எடிட்டர் – saiju sreedharan

இசை – bijibal.

பஹத் பாசில்

முறைப்படி இவர்கள் எல்லாம் எங்கே இருந்தார்கள் என்று படம் பார்த்து முடிந்த பிறகுதான் யோசிக்க முற்பட்டேன். ஒரு கதை சினிமாவாக இடறலின்றிச் சென்று கொண்டிருப்பதற்கு இவர்கள்தாம் காரணம். அப்படியே அமிழ்ந்திருந்து தங்களுடைய பணியைச் செவ்வனே நிறைவேற்றியிருந்தார்கள். இதில் யாரும் ஒரு பந்தய ஓட்டம் ஓடி தங்களைக் காட்டிக்கொண்டிருக்கலாம். சொல்லப்போனால் இயக்குநரேகூட சின்னத் தில்லாலங்கடிகள் போட்டு, அதிகப் பிரசங்கித்தனம் காட்டிக்கொண்டிருந்தால் வேறு ஒரு பேரை வாங்கிக் கொண்டிருக்க முடியும். நல்ல வேளையாய், அவர் அதைச் செய்யாமல் அடுத்த படம் எடுக்கிற வேலையைப் பார்த்தார்.

கிரிஸ்பின் மகேஷிடம் நான் நேற்று இரவு கிரீடம் படம் பார்த்தேன் என்பான். காலையில் அதன் இரண்டாம் பகுதியான செங்கோல் படத்தையும் போட்டார்கள் என்பான். லால் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டதால் வேலை போயிற்று, காதலி போனாள், ஜெயிலுக்குப் போனார், திரும்பி வந்து மறுபடியும் ரவுடி ஆனார், அப்பா குடிகாரனாகி, அப்புறம் அவர் பிம்பாகவும் ஆனார். தங்கை விபசாரியானாள் என்றெல்லாம் அடுக்கி, அவனை அடித்துவிட்டுத்தான் புது செருப்புப் போடுவாயா என்று கேட்பான். மகேஷ் உறுதியுடன் ஆம் என்று சொல்வான்.

படம் அதுபோல தனது எல்லாப் பகடிகளையும் மீறி உறுதியாய் வாழ்க்கையைப் பற்றி சொல்வதுதான்.

https://cinema.vikatan.com/south-indian-news/128966-malaiyala-classic-series-part-16-maheshinte-prathikaaram-movie.html

Link to comment
Share on other sites

  • 1 month later...

கொதிக்கும் சாம்பாரில் முட்டையைப் போடும் கோழைத்தனம் `கம்மட்டிப்பாடம்' படத்தில் இல்லை!"

 

`மலையாள கிளாசிக்' தொடரின் 17-வது பகுதி. 'கம்மட்டிப்பாடம்' குறித்த கட்டுரை.

கொதிக்கும் சாம்பாரில் முட்டையைப் போடும் கோழைத்தனம் `கம்மட்டிப்பாடம்' படத்தில் இல்லை!
 

சில படைப்புகள் எல்லோருக்கும் உரியதாய் இருக்க முடியாது. ஒன்றைப் படைப்பது பற்றிதான் சொல்கிறேன் என்றாலும், அதற்குள் அதன் வீரியம் அறிந்து நுழைவதற்கே சில தகுதிகள் தேவைப்படுகின்றன. உலகம் எல்லாக் கோணங்களிலும் அனுபவிப்பதற்கான சுக சௌகர்யமான மலர்மஞ்சம்தான் என்று மல்லாந்து விட்டவர்களுக்குப் பல உண்மைகள் இல்லை. அவர்கள் விலக்கப்பட்டவர்கள். அவர்களைத் தாண்டி, அவர்களுடைய சொகுசுகளைத் தாண்டி அடித்து அமர்த்தப்பட்ட எத்தனையோ ஜீவன்களின் ரத்தத்திலும் வியர்வையிலும் இந்தப் பூமி எழுந்திருக்கிறது. கொண்டாடலாம் வா என்கிற அகங்காரமே அறியாமையின் விளைவு. எல்லோருக்கும் பொதுவான சமத்துவத்தை ஓரளவில்கூட பொருட்படுத்தாமல், காலில் போட்டு மிதித்த துரோகங்களில் வெந்து தணிந்த மனித உயிர்களுக்குக் கணக்கில்லை. இந்தப் படம் கேரளாவினுடையது மட்டுமே அல்ல; நூறு நகரங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, `கம்மட்டிப்பாடம்' ஒரு சௌகர்யமான நகரத்தின் கதையைத்தான் சொல்கிறது.

கம்மட்டிப்பாடம்

 

 

 

நட்பை, காதலை, வன்முறையைச் சொல்லவேண்டும் என்று மாரிலடித்துக்கொண்டு கற்பித்த சம்பவங்களை அடுக்குகிற போலிகள் சொல்லிவிட முடியாத கதை இது. நகர்த்திவிட முடியாத சினிமா இது. வெறுமனே பில்டப் செய்வதாகக் கருத வேண்டாம். ரத்தமும் சதையுமான அசல் மனிதர்களை அறியாத கலை அந்நியப்பட்டு நிற்கிற தூரம் பற்றி கான்ஷியசாகத் தெரிந்தே சொல்கிறேன். இந்தப் படத்தின் பாலனும் கங்காவும் ஒரு திரைக்கதைக்காரனின் மூளையில் உதித்து வந்து வணிக டிஸ்கோ ஆடுகிறவர்கள் அல்ல; ஜேம்ஸ் பாண்டுகள் அல்ல; நமது வசிப்பிடங்களின் மார்பிள் சௌகர்யங்களுக்குக் கீழே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்கள்.

 

 

ராஜீவ் ரவி ஒரு சத்தமுள்ள படத்தை ஆவேசமாகச் சொல்லி அதன் முடிவில் அமைதியாக தனது அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறான். ஏனென்றால் இந்தப் படம் வஞ்சிக்கப்பட்டவர்களைப் பற்றிய உண்மையான ஒரு நினைவு.

ஏதோ நஷ்டங்களுக்குப் பின்னர் கிருஷ்ணனின் குடும்பம் தமது ஊரான கம்மட்டிப்பாடத்துக்கு வந்து சேரும்போது, அவர்களை ஏந்திக்கொண்டு அவர்களுடன் இணைந்து விவசாயம் செய்கிறவர்களாக இருக்கிறார்கள், அந்த தலித் குடும்பத்தினர். கிருஷ்ணனனுக்கு விளையாட்டுத் தோழமையாக, பள்ளித் தோழமையாக அந்த தலித் குடும்பத்தைச் சேர்ந்த கங்கா அமைகிறான். அவனது முறைப்பெண்ணான அனிதாவும் வளர வளர கிருஷ்ணனுக்கு நெருக்கமாகிறாள். பள்ளிக்காலங்கள் எல்லாம் ஒரு வழியாய் சென்றுகொண்டிருந்தாலும், அது திசை மாறுகிற லட்சணங்களையே கொண்டிருந்தது. உருப்படுவதற்குக் கிருஷ்ணன் வெளியேறிப் போயிருக்க வேண்டியவன். அனிதாவால் போகவில்லை. மெள்ள மெள்ள, தியேட்டரில் பிளாக் டிக்கெட் விற்றுக்கொண்டு யாரையும் வன்முறையால் வென்றுவிடக்கூடிய பாலேட்டனிடம் ஈர்ப்பு கொண்டு, அவனது குழுவினரில் ஒருவனாக மாறுகிறான்.

பாலன் கங்காவின் அண்ணன்தான்.

சினிமா டிக்கெட்டை பிளாக்கில் விற்று, கள்ளச்சாராயம் காய்ச்சி, அடிதடி வேலைகள் செய்து ஒரு தினுசான பிழைப்பு. அவனை மாதிரி ஒரு முரட்டு எடுபிடி எவ்வளவோ பேருக்குத் தேவை. ஆசான் என்று அழைக்கப்படுகிற சுரேந்திரன் எல்லாம் அவனைப் போன்றவர்களால்தாம்  வளர்கிறார்கள். என்ன காரியத்துக்காக என்கிற லட்சியமில்லாமல், பிச்சைக் காசுக்காக ஏவுகிற காரியங்களில் எல்லாம் ஈடுபடுகிற பாலன் மற்றும் கிருஷ்ணன் உள்ளிட்ட குழுவினர், தனது சொந்த இனத்தின் மக்களுடைய இடங்களையே அடாவடியாய்ப் பிடுங்கி முதலாளிக்கு வளம் சேர்த்துக் கொடுக்கின்றனர். ஒரு கட்டத்தில் இந்தத் தலைமுறையின் அறியாமையைச் சகித்துக்கொள்ள முடியாமல் பாலனின், கங்காவின் தாத்தா இறக்கிறார். கிருஷ்ணன் அதை கவனித்து பிழைப்பதற்கான மாற்று வழிகள் சொல்கிறான். பாலனுக்கும் அந்த எண்ணம் இருக்கிறது. ஆனால், சுரேந்திரனை அண்டிப் பிழைக்கிற சுமேஷ் என்கிறவனின் விரோதம் மாறாமலே இருந்தது. அவர்களால் பாலன் கொல்லப்படுகிறான்.

 

 

கங்காவுக்குத் தனது முறைப்பெண் அனிதா மீது காதல் இருந்தது. அவள் தன்னைக் காதலிக்கவில்லை என்பதையும், அவள் கிருஷ்ணனை விரும்புகிறாள் என்பதையும் நம்ப விருப்பமில்லாமல், கங்கா மூர்க்கமாயிருக்கிறான். தனக்காக ஒரு போலீஸ்காரனை வெட்டி ஜெயிலுக்குச் சென்று திரும்பிய கிருஷ்ணனை கங்கா வெறித்தனமாக நட்பு பாராட்டினாலும், இவ்விஷயத்தில் பிணக்கு வைக்கிறான். அவளிடம் அதிகாரம் செலுத்துகிறான். பாலன் இறந்ததே கிருஷ்ணனால்தான் என்றுகூட ஒரு பழி இந்த முக்கோணக் காதலால் வருகிறது. பாலனைக் கொன்ற சுமேஷை வீழ்த்திய பிறகு, நண்பர்கள் யாவரும் பிரிந்து போகிறார்கள். காலம் செல்கிறது. மும்பையில் ஒரு உத்தியோகத்தில் இருக்கிற கிருஷ்ணனுக்கு ஒருநாள் ஒரு போன் வருகிறது. கங்காதான் பேசுகிறான். யாரோ தன்னைப் பின்தொடர்கிறார்கள் என்பது அதில் முக்கியமான வரி. அனிதாவை நீ வந்து கூட்டிச் செல் என்பது உபரியாயினும் நெகிழ்வு. அதற்குப் பின்னால் தொடர்புகொள்ள முடியாமல் போகவேதான், அவன் கங்காவைத் தேடிக்கொண்டு இங்கே வருகிறான். பழைய நண்பர்களின் சந்திப்புகளில் கங்காவின் தோற்றுப்போன அவலமான வாழ்க்கை தெரிய வருகிறது. அவன் போன வழி பிடிபடுகிறது.

கம்மட்டிப்பாடம்

கங்காவை முடித்து வைத்தவனை அடைந்து, கிருஷ்ணன் அவனைத் தீர்த்துக் கட்டுவதுதான் படத்தின் இறுதிப் பகுதி.

அடிப்படைக் கதையாய் இவ்வளவு சிறிய கருவை எடுத்துக்கொண்டவர்கள் சொல்ல வந்தது, ஒரு கூட்டம் மக்களின் வாழ்க்கையைப் பற்றி. அவர்கள் சுரண்டப்படுவது பற்றி. அவர்கள் ஒழித்துக்கட்டப்படுவது பற்றி. கங்கா என்கிற காம்ப்ளெக்ஸ் உள்ள மனிதனின் தோல்விக்குப் பின்னால் உள்ள அவலங்களுக்குக் கணக்கில்லை. மண்ணின் மைந்தர்கள் விரட்டப்படுவதெல்லாம் இருக்கட்டும், வளர்ந்துவிட்ட ஒரு நகரம் தன்னை வளர்த்து விட்டவர்களைக் கழித்துக்கட்டுவது இருக்கிறதே... அதைத்தான் முக்கியமாய்ச் சொன்னார்கள். கங்கா இந்த நகரத்துக்குத் தேவையில்லை! அதை அடிக்கோடிட்டு சொல்கிற இந்தப் படம் கங்காவைப் பற்றியது. அவனைப் போன்ற எத்தனையோ மனிதர்களைப் பற்றியது.

இரண்டு அடுக்குகளில் ஃபிளாஷ்பேக்குகளாக விரிகிற இந்தப் படத்தின் திரைக்கதை பிரமாண்டமானது. காட்சிகள் எல்லாம் அசலானவை. சாம்பாரைக் கொதிக்க வைத்து அதில் முட்டையைப் போட்டு விடுகிற மாதிரியான கோழைத்தனம் நிரம்பிய ஒரு பிட்டுகூட படத்தில் கிடையாது. மார்க்கெட்டில் வைத்து ஒரு கராத்தேக்காரனை பாலன் பொளந்துகட்டி முடித்தபிறகு கைதட்டுங்கடா என்று கூச்சலிடுவான். என்ன ஒரு சீன்? பள்ளிப் பருவத்தின் கிருஷ்ணா ஒரு செயினை வாங்கிப் பொதிந்து கொடுக்க அனிதா இது என்ன? என்பாள். உடனடியாக அதைத் தொடர்ந்து வரும் காட்சியைப் பார்க்க வேண்டும். படத்தில் இருக்கிற கத்தி, ரத்தம் வன்முறை எல்லாவற்றுக்குமே ஒரு ரிதம் இருக்கிறது. கதையில் நகரம் பங்கு வகிக்கிறது. ஓடும் ரயில் பாம்புகள், கான்கிரிட் கோபுரங்கள் திரைக்கதையில் இருக்கின்றன. எழுதியவர் பி.பாலச்சந்திரன். அவருடைய எழுத்து முழுக்கவும் திறமைகளை முன்னிறுத்துவது அல்ல. மனதில் தேங்கி கனத்து கோபமாக வெளிப்படுகிற ஒரு கலை சன்னதம்.

மது நீலகண்டன் ஒளிப்பதிவாளர்.

என்ன சொல்வது?

கம்மட்டிப்பாடம் - துல்கர் சல்மான்

திருவிழா நடக்கிற ஒரு கேரள கிராமத்தின் இரவை அப்படியே பார்த்தேன். அமைதியைக்கூட அந்த ஒளிப்பதிவால் காதில் கேட்டேன் என்று சொல்லவேண்டும். பூச்சிகள்போல ரீங்காரமிடுகிற நகரத்தின் படிமத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதற்கு நியாயம் சேர்த்துக்கொண்டே இருக்கிற எடிட்டிங். நெஞ்சை வந்து இடிக்கிற பாடல்கள், இசை. ஒவ்வொன்றாக வளர்த்துவானேன்? எல்லாத் துள்ளியிலும் துள்ளியின் துளிகளிலும் ராஜீவ் ரவியே நிறைந்திருந்தார். மலையாளப் படங்களின் ஐடியாக்கள் வேறு ரகம். அவர் அதைத் தவிர்த்து, தரை மட்டமாக்கி, வேறு ஒரு கோணத்தில் முஷ்டி உயர்த்தியிருக்கிறார். அது முக்கியமானது என்பது இப்போதுதான் நமக்கே தெளிந்திருக்கிறது. கருத்து முழக்கம் பிரசாரம் என்கிற கிளிஷேக்கள் உருவாவதற்கு ஒரு கூறும் இல்லாமல், தனது திரைமொழியை வழிநடத்துகிற திராணி அவர் படங்களுக்கு எப்போதுமே உண்டு.

கம்மட்டிப்பாடம் படமே ஒரு உணர்ச்சிக் கொந்தளிப்பு கொண்டது எனும்போது, படத்தில் நடிப்புக்குத்தான் முதலிடம். பாலனாக வந்தவரின் முதல் படம் என்றார்கள். அது அப்படி ஓர் ஆவேசம் கொண்டிருந்தது. துல்கர் வழியாய் சொல்லப்படுகிற கதையில் அவரது பங்களிப்புகள் நிறைவு. அனிதாவின் எளிமை மிகவும் வியப்பு. மிகவும் சுருங்கிய நேரத்தில் ரத்தினச் சுருக்கமாக முடியும் வசனங்களில் அவருடைய பேசுகிற கண்கள் இருக்கின்றன. அலங்காரத்துக்கு வந்து போகிறவர்களாய் இல்லாத, அத்தனை கதாபாத்திரங்களில் நடித்தவர்களையும் உண்மையில் தனித்தனியாய் பாராட்டிக்கொண்டிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. இளமை, நடுத்தர வயது, முதுமை என்று பல்வேறு கோணங்கள். அதை நிகழ்த்திக்காட்ட பொம்மைகளால் ஆகாது. பாலனின் மனைவியாக நடித்தவர் ஒரு நடை நடந்திருப்பார் ஓர் இடத்தில், அது போதும்.

கங்கா கதாபாத்திரம் பல நுட்பங்கள் கொண்டது.

முதலில் அவனுக்கு தான் அசிங்கமாக இருக்கிறோம் என்பது மறக்காமல் இருக்கிறது. அவனால் அடுத்த காலடியை எடுத்துவைக்க உடனடியாய் முடிவதில்லை. எவ்வளவு தூரம் அவன் தனது நண்பனைக் கொண்டாடுகிறான் என்பதற்கு எல்லையே கிடையாது. அதேநேரம் தொடர்ந்து வருகிற பல்வலியைப்போல ஒரு காதல். அதுவும் நண்பனை விரும்புகிற காதலி. நண்பர்கள் பல வழிகளிலும் பிரிந்து, ஒற்றை யானையைப்போல சுற்றி வருகிற அந்தத் தனிமை உண்டாக்குகிற பயம், வேதனை, மூர்க்கம், குடி. விநாயகன் போல ஒருத்தன் மட்டுமே இதையெல்லாம் செய்யமுடியும். வேறு ஒரு நடிகனை கற்பனை செய்யும்போதேகூட அறுவெறுப்பாய் இருக்கிறது. சும்மாதான் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு, தனது மரண பயத்தையும் சொல்லிவிட்டு, அனிதாவை எடுத்துக்கொள் என்பதில் இருக்கிற கனிவை நான் வாய்விட்டே அழுதேன் என்று சொல்லவேண்டும். ஒன்றுமில்லை, ஒரு படம் முழுக்க அவர் நிகழ்த்திக் காட்டுகிற ஜாக்சன் நடையை என்னவென்று பாராட்டுவது. வசனத்தை விழுங்கிப் பேசுவதில் மார்லன் பிராண்டோவுக்கு ஒரு ஸ்டைல் இருப்பது நமக்குத் தெரியும். விநாயகனுக்கு அதில் ஒரு நாட்டுப்புறத்தன்மையே இருக்கிறது. சிரிப்பில் மறைவாய் களங்கமில்லை. கோபத்துக்குப் பின்னால் டையலமா இல்லை. அரை வசனத்தில் அவனால் ஜனங்களை சிதறடிக்க முடியும். கம்மட்டிப்பாடம் ராஜீவ் ரவியால் உயிர் கொள்கிறது என்றால், விநாயகத்தால் நிறைவு கொள்கிறது.

துல்கர் சல்மான்

கேங்க்ஸ் ஆப் வாசிப்பூர் படத்தை முதல்முறை பார்த்தபோது முதலில் தாக்கியது அதன் சரளம்தான். என்ன இப்படி என்று மலைப்பூட்டியது. படம் எடுப்பதெல்லாம் ஒரு காரியமே இல்லை என்றுகூட தோன்றிவிட்டது. இந்தச் சரளம் இனிமேல் சாத்தியமா என்று தோன்றியவாறு இருந்தபோதுதான், இப்படம் வந்தது. நிஜமாகவே வெண்ணை வழுக்கும் படம். துல்கரை காரும் ஆட்களும் துரத்துகிற ஓர் இரவை இவ்வளவு எளிமையாய் அழகு செய்துவிட முடியுமா. படத்தில் அந்தமாதிரி எவ்வளவோ மினுங்கல்கள் வெட்டியவாறு இருக்கின்றன.

இறுதிக்காட்சியில் உயர்கிற அந்தப் பாடலை எண்ணிக் கொள்கிறேன். அப்பனும் மகனும் தனது இழந்த சொர்க்கங்களைப் பற்றி விதும்பிச் சொல்லி குரல் தேய்ந்து முடியும்போது, நமது மனதில் எழுகிற அந்தத் துயர் ததும்பும் அமைதி பற்றியும். அந்த அமைதியில் அல்லது மனதின் கண்ணீரில் கங்கா புன்னகைத்தவாறு இருக்கிறான். அது, நமது குற்றவுணர்ச்சியைப் பேணியவாறு இருக்கும்.

ஒருவேளை நீதியுணர்ச்சியைக் கூட!

https://cinema.vikatan.com/south-indian-news/130452-malayala-classic-series-part-16-kammattipadam-movie.html

Link to comment
Share on other sites

"அனுராகக் கருக்கின் வெள்ளம்.. ஆண், பெண் பற்றிய படைப்புகள் தொடர்வது இதனால்தான்!" மலையாள கிளாஸிக் பகுதி 18

 

`மலையாள கிளாசிக்' தொடரின் 18-வது பகுதி. `அனுராகக் கருக்கின் வெள்ளம்' படம் குறித்த கட்டுரை.

131158_thumb.jpg
 

உலகம் பெரியது. கோடிக்கணக்கானவர்கள் வாழ்ந்து போகவேண்டிய இந்த பூமியில் கதைகளும்கூட அப்படிக் கொட்டிக் கிடக்கின்றன. இன்ன கதை மட்டுமே சொல்லவேண்டும், அது மட்டுமே கலை என்பதை எந்தத் தரப்பிலிருந்து கூவினாலும், அது மைனாரிட்டியின் முனகல்தான் என்று படுகிறது. ஒரு ஆள் நீலப்படம்தான் எடுக்கத் துணிகிறார் என்றால், அவர் நினைத்ததைக் கொண்டு வந்திருக்கிறாரா என்பதுதான் அவரது சரக்கைப் பற்றின அளவுகோல். மட்டமாய் படுகிற படங்களிலிருந்து விலகுவது அவரவர் விருப்பமாகும் இல்லையா... காதல் படங்களைப் பற்றி பல பொருமல்கள் உள்ளன. அது ஒரு வேஸ்ட் விவகாரம் என்று பலரும் நம்புகிறார்கள். ஆனால், உலகில் எவ்வளவு சொன்னாலும் தீர்க்கப்படாத காரியம் ஆண் பெண் உறவுகளாகத்தான் இருக்கும். ஒரு தேசம் முழுக்க முழுக்க அறிவும் விழிப்பு உணர்ச்சியும் பெற்று புரட்சிகளால் விடுதலையை அடைந்தால்கூட ஆணோ பெண்ணோ தனது இணையின் முன்னால் பேத்தல்களை நிகழ்த்தாமல் தவிர்த்து நகர்ந்து செல்கிற முதிர்ச்சி தெரியுமா என்பது சந்தேகம்தான். எனவே, நான் காதல் கதைகளின் பக்கம். `அனுராகக் கருக்கின் வெள்ளம்' படத்தில் அதற்கான விவாதங்கள் இருக்கின்றன. 

மலையாள கிளாசிக்

 

 

 

அதைவிடவும் சுவாரஸ்யமாய் ஒரு வரியைச் சொல்கிறார்கள். ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ... காதல் எதையாவது ஒன்றைக் கொடுக்காமல் போகாது என்பதுதான் அது. ஒரு மனிதன் தனது பிழைப்புப் பயணத்தில் மூச்சிரைத்துப் போகும்போது ஒரு சங்கீதப் பின்னணி அவசியம். அட்லீஸ்ட் வலிக்கிற கால்களை வருடிக்கொள்ள உட்காரும்போது மனதை மீட்ட வேண்டி வரலாம். அதற்கு ஒரு முகம் வேண்டாமா?

 

 

அபிலாஷ் ஒரு ஆர்க்கிடெக். வழக்கம்போல காசுண்டாக்குகிற ஓட்டத்தில் மிகுந்த குழப்பத்துடன் இருக்கிறான். அவனுக்குக் காதல் இப்போது கசக்கிறது. எலிசபத் என்கிற எலியின் டார்ச்சர். இப்போ நீ எங்க இருக்கே, சாப்பிட்டியா, தூங்கிட்டியா, இன்டர்வியூக்குப் போகலையா, எத்தனாவது படிக்கட்டுல ஏறிகிட்டிருக்க, எனக்கு வயித்து வலி அதனால முத்தம் குடு... போன்றவைகள் அவனுக்கு எரிச்சலை மூட்டுகின்றன. ஒரு காலத்தில் சூடும் சுவையுமாக இருந்த ஒன்று, இப்போது அவனைப் பொறுத்தவரை ஆறி அடங்கிவிட்டது. நண்பர்களும் விட்டுத்தொலை என்றுதான் உபதேசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவள் தனது வீட்டுக்கே வந்து விட்டுப்போன குறும்புகள் எல்லாம் ரசிக்கும்படியாய் இல்லை, டூமச்சாகப் போகிறது என்று நினைக்கிறான். அவளைத் தவிர்த்துக்கொண்டே இருக்கிறான்.

ஒருநாள் பிரேக்கப்கூட சொல்லியாற்று.

அபியின் அப்பா ரகு. போலீஸ் அதிகாரி. ஒருநாள் ஒரு கிராஸிங்கில் தனது மாஜி காதலியைப் பார்த்துவிடுகிறார். மறைந்துபோன நதியாய்  ஒரு காதல் பெருக்கெடுக்கிறது. அவர் அலைக்கழிக்கப்படுகிறார். நண்பனைக் கதை சொல்லிக் கொல்கிறார். அவருக்கு அவளது போன் நம்பர் வேண்டும். அதற்கான முயற்சிகளில் பல குழப்படிகள் நடந்து, அவருக்குக் கிடைப்பது எலியின் நம்பர். அபியுடன் பிரேக்கப் ஆகி, சரக்கெல்லாம் அடித்து பாத்ரூமுக்குள் உட்கார்ந்து ஓவென்று அழுது, ஒருநாள் அபியுடன் சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது இருந்த வீராப்பில், அபியின் அப்பா ரகுவிடம், செல்போனில் நானேதான் உங்கள் அனுராதா என்று சாதித்து விடுகிறாள். ரகு பயங்கர ஹாப்பி. இடைவிடாமல் அவளிடம் கடலை போட்டுக்கொண்டிருக்கிறார்.

 

 

அபிக்கு ஆத்திரம். அவளைக் கட்டுப்படுத்த முடியாது.

எலி அவரிடம் பேசுவதே வேறு.

அனுராகக் கருக்கின் வெள்ளம்

அதன்படி ரகு, வீட்டில் ஒரு பிராப்பர்ட்டி மாதிரி கிடந்து, எந்திரம் போலவே சுழன்று வேலை செய்தவாறிருந்த தனது மனைவி சுமாவை அவர் முதலிலிருந்து பார்க்க ஆரம்பிக்கிறார். மகனையும் மகளையும் திருட்டுத்தனமாகக் கடந்து, வெட்கத்துடன் சொந்த மனைவியை முத்தமிட்டு தாங்க்ஸ் என்கிறார். மசாலா தோசை வாங்கித் தருகிறார். பெட்ரூமில் கர்ணகொடூரமாய் பாடுகிறார். கடைக்குப் போய் வருகிறார். மொத்தத்தில், இல்லறத்தில் மாற்றம். மகன் என்ன செய்கிறான் என்பதிலும் அக்கறை வருகிறது. எலி அவரைத் தலைகீழாக மாற்றியிருக்கிறாள். இதற்கிடையே பிரேக்கப் என்பதை அபியிடமே உறுதி செய்துகொண்டு கிச்சு என்கிற ஒரு அசடு எலியை முற்றுகையிட்டு, அவளிடம் எப்போதும் சாப்பிட்டியா, தூங்கினியா, போய்ச் சேர்ந்துட்டியா கேட்டுக்கொண்டிருக்கிறது. அவள் அவனிடம் மரியாதையாய்தான் நடந்து கொள்கிறாள்.

ஒரு கட்டத்தில் அபி எலியை உணர்ந்தவாறே இருக்கிறான். கிச்சுவை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. அவளே அவனை மணக்க சம்மதித்துவிட்டதாய் கேள்வி. அபி தனது தொழிலில் தெளிவு பெற்று எலியுடன் சேர்ந்து சில இலக்குகளில் பயணிக்கிறான். அவளது நெருக்கம் இப்போது அவனுக்குப் பரவசமாய்த்தானிருக்கிறது. ரகுவின் காதல் பிரச்னை ஒரு முடிவுக்கு வந்து, கடைசியாய் எலி அவரிடம் உண்மையைச் சொல்கிறாள். அவர் நொறுக்கிப் போனாலும், ஆறுதல் செய்ய சுமா இருக்கிறாள் என்பது ரொம்ப முக்கியம்.

கல்யாணத்துக்குச் சென்று எலியைத் தடுத்து நிறுத்தமுடியுமா என்று அபியும் நண்பனும் முயற்சி செய்ததில், போலீஸிடம் வேறு ஒரு காரியத்துக்காகச் சிக்கிக்கொள்கிறார்கள். ரகு அவனை அறைந்த பின்னர் விசாரிக்கிறார். மகனுக்கு எலியின் மீதுள்ள காதல் புரிய, மீண்டும் கல்யாணத்துக்கு விரைகிறார்கள். அது முடிந்துவிட்டது. ரகு கிச்சுவைப் பிடித்து வைத்துக்கொள்ள, அபி எலியிடம் பேசுகிறான். அவளது அன்பை எடுத்துக்கொள்ளாததற்கு எல்லாக் கோணங்களிளிலும் மன்னிப்பு கேட்டுவிட்டு சடாரென மவுத் கிஸ்கூட அடிக்கிறான். அப்பா சொல்லிக் கொடுத்த தந்திரம். ஒரு பெண் ஒரு முத்தத்தில் உருகி, எல்லாம் மறந்து தனது பழைய காதலுக்குத் திரும்ப வாய்ப்பிருக்கிறது இல்லையா? கிச்சு பாவம், அவனுக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. எலி மயங்கித் ததும்ப எல்லாம் இல்லை, பளாரென்று ஓர் அறை வைக்கிறாள். கல்யாணம் நடப்பதற்கு முன்னால் சொல்லியிருந்தால், ஓடி வந்திருப்பேனே? என்று சிறிது அழுதுவிட்டு, அப்புறம் விடை சொல்லிக்கொண்டு அசட்டுச் சிரிப்பு சிரிக்கிற கிச்சுவோடு கிளம்பிச் செல்கிறாள்.

மகனும் அப்பாவும் தத்துவம் பேசிக்கொண்டு திரும்புகிறார்கள்.

இப்போது ஒரு கிராஸிங். மறுபடியும் அனுராதா. அப்பனும் மகனும் துரத்துகிறார்கள். அந்தப் பெண் அனுராதாவே அல்ல. காதலியைப் பற்றின நினைவு லட்சணம் அப்படி இருந்திருக்கிறது. மச்சத்துக்காகத் துரத்தியிருந்திருந்து, இப்போது வெட்கப்படுகிறார். அப்புறமென்ன, திரும்பி வந்து ஓர் ஒதுக்கமான இடத்தில் அவர்கள் இருவரும் காதலைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதுடன் படம் முடிகிறது.

`அனுராகக் கருக்கின் வெள்ளம்' என்றால், காதலின் தேங்காய்த் தண்ணீர் என்று பொருள். இனித்துக் கிடக்கிற தண்ணீர். படத்தின் காட்சிகள் அனைத்துமே சுவாரஸ்யமானவை. 

அனுராகக் கருக்கின் வெள்ளம்

மிகவும் சுளுவான திரைக்கதை. பாத்திரங்களை மிக நேர்த்தியாகக் கையாண்டிருப்பார்கள். பக்ருதீன், சோனி போன்ற நண்பர்களை கதைக்குள் வைத்திருந்தது மிக அழகாக இருந்தது. அவர்களைப் பங்களித்த வைத்த முறை திரைக்கதையின் வளமென்றே சொல்லவேண்டும். உப கதாபாத்திரங்கள் ஒன்றுமே சோடையில்லை. மற்றும் விசேஷங்களுடனும் இருந்தது. எழுதியவர், நவீன் பாஸ்கரன்.

ஒரு சிறிய படம்தானே என்று எந்தத் தொழில் நுட்பங்களிலும் குறை வைத்திருக்கவில்லை. நமக்குப் பிடிக்கக்கூடிய ஒளிப்பதிவு.

வெறுப்பேற்றாத இசை, பாடல்கள்.

நடிப்பைப் பற்றி சொல்லவேண்டுமென்றால், வாய் ஓயாமல் பேசி, சண்டை போட்டு, கதறிக் கூச்சலிட்டு தன்னை ஓர் அசல் பெண்ணாகவே வைத்துக்கொண்டுவிட்ட ரஜீஷா விஜயனைத்தான் முதலில் சொல்லவேண்டும். அவரை மறந்தும் ஒரு பெர்ஃபாமென்ஸ் பண்ணிக்கொண்டிருக்கிற ஒரு நடிகையாய் கொண்டுவிட முடியாது. பெரிய அழகி என்று சொல்லமுடியாத போதும், அவரது நடத்தையால் அவர் உட்கார்ந்து கொள்கிற சிம்மாசனம் பக்கா. சுமாவாக, ரகுவின் மனைவியாக வந்த ஆஷா சரத்தின் புன்னகை அந்தக் குடும்பத்தைத் தாங்கும் பலம். பிஜூ மேனன் தனது ஆகப்பெரிய இறுக்கங்களையெல்லாம் களைந்து ஜோதியில் கலப்பது நடந்தது பல இடங்களிலும்!. அதுவே வியப்புதான். நான் அனுவைக் கட்டுவதற்காகத்தான் போலீஸ் ஆனேன். இல்லையென்றால் மனுஷங்க யாராவது அந்த வேலைக்குப் போவாங்களா என்று கேட்கிற போலீஸாக அவர் பொருத்தமாகவே இருந்தார்.

அபி என்கிற பையன் இன்றைய ஆள். அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள் என்பதில் ஒருவன். அவனுக்கு விடுதலை வேண்டும் என்றிருக்கிறது. ஆனால், எதிலிருந்து விடுதலை என்பது தெரியாது. அந்தக் குழப்பமான இளமையின் துருதுருப்புடன் படபடவென்றிருக்கிற ஒரு கேரக்டரில் ஆசிப் அலி சரியாகவே அமர்ந்திருக்கிறார்.

மணியன் பிள்ளை ராஜு எப்போதே தன்னை நிறுவிக்கொண்ட சீனியர் நடிகர்களில் ஒருவர். அவருக்கு இந்தப் படத்தில் எலியின் அப்பாவாக ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சர்வ சாதாரணமாய் ஊதித் தள்ளுகிறார்.

இவர்கள் எல்லோரையும்விடவும் பக்ருதினாக செய்த சௌபின் சாகிரைப் பற்றித்தான் நிறையச் சொல்லவேண்டும். அநேகமாய் அவர் தனது நகைச்சுவையை, நிகழ்த்திக் காட்டுவதில்லை. அவர் கதாபாத்திரமாக மட்டுமே இருக்கிறார். அப்படி இருந்தே அதன் வேறு விதமான பரிமாணங்களைக் காட்டுவதன் மூலம் மக்களை சிரிக்கத் தூண்டுகிறார். முக்கியமாக, அவருக்கு வருகிற சந்தேகங்கள். கொஞ்சம்கூட அலட்டிக் கொள்வதில்லை. இது மலையாள நகைச்சுவைக்குள் புதிய உத்தி என்றே படுகிறது. இறுதிவரையில் அவருடைய கேரக்டருக்குள்ளிருந்து அவர் கொஞ்சமேகூட நகர்ந்துகொள்வது இல்லை. பின் வரும் காலத்தின் முக்கியமான நடிகராக சௌபின் நிலைக்கப்போகிறார்.

படத்தின் இயக்குநர் காலித் ரஹ்மான். இவருடைய முதல் படம் இது. 

அனுராகக் கருக்கின் வெள்ளம்

ஆனால், மிக முக்கியமான படங்களில் எல்லாம் பலருக்கும் உதவியாகப் பணிபுரிந்திருக்கிறார் என்பதைப் பார்த்தேன். அதன் தொடர்ச்சி இந்தப் படத்திலும்கூட இருக்கிறது. பிரபலங்கள் இப்படத்தின் தயாரிப்பாளராக இருந்திருக்கிறார்கள். எனினும், மேலே மேலே தனது தளங்களை உயர்த்திக்கொள்ள வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கிறது.

பொதுவில் இந்தப் படத்தில் சற்றே ஊன்றி கவனித்தால், கதை மாந்தர்கள் அத்தனைபேரும் தன்னை வழிநடத்திச் செல்கிற அன்பைத்தான் தேடுகிறார்கள். அல்லது அது அருகிலிருப்பது அறியாமல் தேடித் திரிகிறார்கள். படங்களைப் பொறுத்தவரை காதலைச் சொல்வது எனில் இது முக்கியமான பாயின்ட். வாழ்வில் மட்டுமென்ன என்று யோசிக்கலாம். நாம் அப்படித்தானே?. நாம் நமது பக்கமிருந்து நமக்கு என்ன கிடைக்கிறது என்று வேவு பார்த்திருந்து, நமக்கு என்ன கிடைக்கவில்லை என்று கொதித்திருந்து, இன்னது கிடைப்பதாக சந்தோஷித்திருந்து, இப்படி இல்லையே என்று வெறுத்திருந்து  வாழ்ந்து கொண்டிருப்பதெல்லாம் அந்த ஓர் அடிப்படையால்தான்!.

அன்பு பற்றி பிரஸ்தாபிக்கப்படுகிறது. அன்பு பற்றி கொட்டி முழங்கப்படுகிறது. அன்பினால் அன்பினுள் வாழ்வதாகவே கற்பிதம் கொள்கிறோம். ஆனால், அது ஒரு போதும் நம்மோடு முழுமையாய் இருந்ததில்லை என்றும் அப்படி இருந்திருந்தால்கூட அது விலகிச் சென்றவாறே இருக்கிறதென்றுமே நான் நினைக்கிறேன். 

அதனால்தான் ஆண் பெண் பற்றிய படைப்புகள் முடிந்தபாடில்லை!.

https://cinema.vikatan.com/south-indian-news/131158-anuraga-karikkin-vellam-movie-malayala-classic-series-18.html

Link to comment
Share on other sites

``லீலா... படம் வரைந்து பாகங்களைக் குறிப்பதல்ல!" - `மலையாள கிளாசிக்' பகுதி 19

 

`மலையாள கிளாசிக்' தொடரின் 19-வது பகுதி. `லீலா' திரைப்படம் குறித்த விரிவான கட்டுரை.

``லீலா... படம் வரைந்து பாகங்களைக் குறிப்பதல்ல!
 

தாச பாப்பி என்கிற புரோக்கர் சி.கே.பிந்துவை அழைத்து வந்திருக்கிறார். குட்டியப்பன் என்றோ ஒருநாள் விரும்பிய பெண்தான். விபசாரத்துக்குத் தயாரானதும் அழைத்து வரப்பட்டிருக்கிறாள். குட்டியப்பன் அவளை வரவேற்று குத்துவிளக்கை ஏற்றச் செய்து பாயை போடச் சொல்கிறான். விளக்கு தலைமாட்டில் இருக்க, பாயில் படுத்துக்கொண்டு உனது அப்பன் செத்துவிட்டதாக வைத்துக்கொண்டு அழு என்கிறான். கண்களை மூடிக்கொண்டு இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று தூண்டுகிறான். அந்தப் பெண்ணுக்கு ஒன்றும் புரியவில்லை. போலியாக அழ ஆரம்பித்தவள், மெள்ள மெள்ள அதில் இறங்கி அப்புறம் பெருங்குரலெடுத்து ஓவென்று அழுகிறாள். தடுக்கவே முடியாதபடி அழுகிறாள். கொஞ்ச காலம் முன்பு அந்தத் தகப்பன் இறந்ததற்கு அப்புறம்தான் அவள் இந்தக் கேவலமான வேலைக்கு வந்தாள். எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து அழுது தீர்க்கிறாள். குட்டியப்பன் அவளை அணைத்துக்கொண்டு அழுகையை நிறுத்திப் பணம் கொடுத்து அனுப்புகிறான். அவளுக்கு ஒரு வேலையையும்கூட சொல்லி அனுப்புகிறான். `லீலா' படத்தின் டைட்டில் முடிந்த உடன் வருகிற முதல் காட்சி இது.

லீலா

இத்தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!

 

 

உண்மையில் குட்டியப்பனுக்கு என்ன பிரச்னை? பேரு கேட்டவரும் அழகருமாய் இருந்த ஒரு கண்ணியவானுக்குப் பிறந்தவன்தான் இவன். சொத்திருக்கிறது. ஒற்றையாள். கூட ஓர் அத்தையிருக்கிறாள். அவளைக்கூட ஏணி வைத்து மாடிக்கு காப்பி கொண்டு வரச் சொல்லி அவளது கால் உடைவதற்கு இவன் காரணமாய் இருக்கிறான். யாரும் எதிர்பாராத விநோதங்களில் எப்போதுமே ஈடுபடுகிற குட்டியப்பனுக்கு, ஒருநாள் நடுராத்திரியில் ஓர் ஆசை தோன்றி விடுகிறது. பிள்ளேச்சனின் வீட்டைத் தட்டி இரண்டொரு நாள்களில் உடனடியாக ஒரு யானை வேண்டுமென்கிறான். மறுநாள் காலை அவர்கள் யானையைத் தேடிக் கிளம்புகிறார்கள். நடுவே அவன் ஒரு வயதுப் பெண்ணையும்தான் தேடுகிறான்.

 
 

 

படம் இந்த அடிப்படையில்தான் தொடங்குகிறது.

திடுக்கிட வைக்கிற திருப்பங்களோ, வரிசையாய் சென்று முடிகிற ஒரு கதைப் போக்கோ கிடையாது. ஆனால், செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்று சேரும் வரையில் எவ்வளவோ முகங்கள். ஆண்களின், பெண்களின் முகங்கள். விபசாரத்திலும் விபசாரத்துக்குப் பக்கத்திலும் இருக்கிற பெண்கள் பலரும் நமக்குத் தெரிய வருகிறார்கள். ஓரிரு இடங்களில் எதிர்பார்த்த அளவில் பெண்கள் இல்லை. ஓரிடத்தில் யானையின் சொந்தக்காரர் இவனை ஓட விடுகிறார். ஒரு வழியாய் ஒரிஜினல் ஸ்பிரிட்டை ராவாகக் குடிக்கிற ஓர் அறுவை சிகிச்சை டாக்டர் மூலம் ஒரு பெண்ணைப் பற்றி அறிய முடிகிறது. சொந்தத் தகப்பனால் கர்ப்பமாகி அபார்ஷன் முடிந்த ஒருத்தி. அடடா, அவள் மிகச் சரியாய் இருப்பாள் என்று குட்டியப்பன் முடிவு செய்கிறான். அப்பனையும் மகளையும் சந்திக்கிறார்கள். அப்பன் அந்தச் சம்பவத்தை ஒரு விபத்து என்கிறான். இப்போதேகூட அவளைக் கூட்டி கொடுக்க அவன் தயார்தான். எல்லோருமாக வயநாட்டுக்குச் சென்று சேர்கிறார்கள். அங்கேதான் யானை இருக்கிறது.

மலையாள கிளாசிக் பகுதி 19

குடித்து முடித்து சாப்பிடுகிற சோறு அவ்வளவு சுவையாய் இருக்கிறது. அந்தப் பெண்ணிடம் எனது அம்மாவின் கையால் சாப்பிட்டது போலிருக்கிறது என்கிறான் குட்டியப்பன். அவளுக்கு `லீலா' என்று பெயர் சூட்டுகிறான். இரவு நெருங்குகிறது. தன்னை மாப்பிள்ளைபோல அலங்கரித்துக்கொள்கிறான் அவன். லீலாவிடம் தயாராகவில்லையா என்று கேட்க அவள் திகைக்கும்போது சிறு தயக்கமுமில்லாமல் அவளது கன்னத்தில் அறைந்து கிளம்பச் சொல்கிறான், அவளது அப்பன். அவனுக்குப் பணம் செட்டில் பண்ணப்பட்டிருக்கிறது. அந்த ஆளை மூர்க்கமாக விலக்கி நிறுத்தி, லீலாவைக் கரம் பற்றி அழைத்துச் செல்கிறான். யானை அவனது சொந்தக்காரனின் வீட்டுத் தோட்டத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

 

 

இறுதிக் கட்டம்.

ஏற்கெனவே பிள்ளேச்சன் மனம் சரியில்லாமல் இருக்கிறார். அந்தப் பெண்ணின் அபலைத்தன்மை அவரால் தாங்க முடிவதாக இல்லை. அவர் தன் மகளின் ஓர்மையில் துயர் கொண்டு உறைந்திருக்கிறார். ஆளானப்பட்ட கில்லாடியான தாச பாப்பிக்கே திக்கென்று தானிருக்கிறது. லீலாவுடன் வந்து யானையை நெருங்கியவுடன், தான் கண்ட ஒரு கனவைச் சொல்கிறான் குட்டியப்பன். உயரமும் கம்பீரமும் உள்ள ஒரு கொம்பன் யானையை நிற்க வைத்து, அதன் தும்பிக்கையில் சாய்த்து நிற்க வைத்து ஒரு பெண்ணிடம் உறவு கொள்வதாக வந்திருக்கிறது அக்கனவு. அக்கனவை நிறைவேற்றிக்கொள்ள புறப்பட்டு, நீண்ட பயணத்தில் இதோ இப்போது யானையும் லீலாவும் கிடைத்துவிட்டார்கள்!. வா என்று அழைத்துக்கொண்டு லீலாவை அந்த யானையின் தும்பிக்கை மீது சாய்த்து நிறுத்திவிட்டு, அவளை மேலும் கீழும் பார்த்து கன்னங்களை வருடிக் கொடுக்கிறான்.

அவனது கண்களில் காமமே இல்லை.

திரும்பி வருகிறான். வெறுப்புடன் நிற்கிற மற்றவர்களிடம் நாம் இவளை நமது வீட்டுக்குக் கொண்டுபோகலாம் என்கிறான். இவள் இனிமேல் என்னோடுதான் இருப்பாள், நான் இவளைப் பார்த்துக்கொள்வேன் என்கிறான். பிள்ளேச்சன் ஒரே கணத்தில் நிம்மதியாகி, அவனை கை கூப்பித் தொழுகிறார். எங்கோ ஒரு விபசாரி குட்டியப்பனிடம் கேட்டிருக்கிறாள். ரிட்டயர்டு ஆன வேசிகளை கௌரவம் செய்து பொன்னாடை போர்த்திப் பணம் கொடுப்பது இருக்கட்டும். அன்றாடம் தொழிலுக்கு இறங்குகிற ஒரு பெண்ணையாவது ஏதாவது ஓர் ஆண் காப்பாற்றிய வரலாறுண்டா. டாக்டர், லீலாவைப் பற்றிச் சொன்னதும், குட்டியப்பன் தனது மனதுக்குள் லீலாவை தனது மனைவியாக முடிவு செய்திருக்க வேண்டும். அவனது கலவிக் கனவு உண்மையாய் இருக்கலாம். ஆனால், அவன் இதுவரைத் தேடிக்கொண்டிருந்தது தனது மனைவியாய் வரப் போகிறவளைத்தான். அவள் ஒரு விபசாரியாய்கூட இருக்கட்டும்.

லீலா

ஆர்.உண்ணியின் திரைக்கதையில் எழுந்த குட்டியப்பன் மனிதர்களை அறிந்தவன். அவனுக்கு வாழ்வின் மீது உள்ள இளக்காரம் வந்ததே அந்த மனிதர்களால்தாம். அவனுக்கு அவர்களுடைய பகட்டுகளை, போலித்தனங்களை தெரியும். அவர்கள் ஒருபோதும் நிறைவானவர்கள் அல்ல. அவர்களிடம் அவனுக்கு உள்ள உறவு மிகவும் சந்தேகத்திற்கிடமானது. அவனுக்குப் பாட்டும் இலக்கியமும் குடியும் கூத்திகளும், சில சில்லறை தெருவாசிகளும்தாம் ஆறுதலாக இருந்திருக்கிறார்கள். அவன் யாரையும் பொருட்படுத்தாமல் ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறான். உண்மையில் சடங்குகளில் வாழ அவனால் முடியாது. அதனால்தான் யாரோ ஒரு பாவத்தை தனது மனைவியாய் கொள்ள அவனால் முடிந்து விடுகிறது. ஒரு கோழைத்தனமும் அவனிடம் கிடையாது. சரியாய்ச் சொல்ல வேண்டுமெனில், ஆர்.உண்ணி செய்ததில் சார்லி என்கிற கதாபாத்திரத்தைக் காட்டிலும் வியப்பானது, ரத்தமும் சதையுமானது குட்டியப்பன் என்கிற இந்தப் பாத்திரம்.

ஒரு மாத இதழில் இந்தக் கதை தமிழில் வந்தபோது மிகவுமே அசந்துவிட்டேன் எனலாம். நான் சொல்லிப் பலரும் படித்தார்கள். வழக்கம்போல நானும் சிவாவும் இதைப் படமாக எடுத்தால் எப்படி வரும் என்று தொடர்ச்சியாக கதை நினைவில் வரும் போதெல்லாம் பேசியவாறிருந்தோம். ரஞ்சித் உண்ணியுடனே பேசிக்கொண்டிருந்திருக்கிறார். படம் மிகுந்த அக்கறையுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. பிஜு மேனன் திரைக்கதையைத் தெரிந்துதான் நடித்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அவரது பகடிகள் முதிர்ச்சி கொண்டவை. அதற்கு ஏற்ற உடல்வாகும், குரலும், எள்ளலும் மிக அழகாகப் பொருந்துவதைப் பார்க்கலாம். ஒரு தகப்பனைப்போல பல பெண்களிடமும் நடந்து கொள்வதில் இருக்கிற உளவியல் எடுபடுவது அவரால்தான்.

விஜய ராகவன் எப்போதுமே தன்னை நிலை நிறுத்திப் புகுந்து விளையாடுபவர். அவர்தான் பிள்ளேச்சனாய் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது பல தருணங்களில் மறந்து போகிறது. இதைக் காட்டிலும் தன்னை யாரென்றே காட்டிக்கொள்ளாமல் அதிர வைத்தவர், ஜெகதீஷ். அடேங்கப்பா. அந்தக் கீச்சுக் குரல், கோணல் வாயெல்லாம் எங்கே ஓடிப்போய் ஒளிந்ததோ? மனிதர் இருமிக் கொண்டும், துப்பிக் கொண்டும், தூங்கிக் கொண்டும் மனம் முழுக்க காமம் நிரம்பிய ஒரு வக்கிரப் பிறவியாய் அவதாரம் கொண்டு தங்கப்பன் நாயராக வாழ்ந்து தள்ளியிருக்கிறார். நானறிந்து அவரது தீவிர ரசிகர்களெல்லாம் மனம் புழுங்கியிருப்பார்கள். ஒரு நடிகன் என்றால் அவன் இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நான் நெகடிவ் பண்றது இல்ல சார் என்கிற தூய்மைவாதிகள் பலரும் நடிக்க வந்துவிட்ட கொடுமையை நாமெல்லாம் அறியமாட்டோமா, அதனால் சொல்கிறேன். அப்புறம் படம் முழுக்கவும் வருகிற இந்திரன். அப்பாவியாய் இருந்து இதுவரை என்னவெல்லாமோ செய்து முடித்திருக்கிறார். இதிலும்கூட அவருடைய மிக பிரத்யேகமான அந்தச் சிரிப்பு எந்த அளவுக்குப் பயன்பட்டிருக்கிறது என்பதை அறிய வேண்டும்.

லீலா திரைப்படம்

படத்துக்கு வேறு மாதிரி கோணங்களும், வர்ணமும், மூடும் இருந்திருக்கலாம் என்று எனக்கு நினைப்பு. அது தவறாகவும் இருக்கலாம். எடுத்த பொறுப்பை அழகாக நிறைவேற்றியிருக்கிறது ஒளிப்பதிவு. இசை இன்னமுமே கட்டுப்பட்டிருக்க முடியும்.

பொதுவாக இந்திய சினிமாவுக்கு வாய்பாடு வடிவத்திற்குள் தன்னை ஒடுக்கிக்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் உண்டு. படம் வரைந்து பாகங்கள் குறித்தால்தான் ஆயிற்று. ஆனால், இது அதை மீறுகிற ஒரு திரைக்கதை. குரோட்டன்களைப் போல வெட்டி வந்து காட்சிக்கு வைக்க முடியாது. எனவே, நல்ல இயக்குநராக இருந்தாலும் ரஞ்சித் இப்படத்தை இயக்க வந்தது படம் கட்டுக்குள் இருக்க ஒரு காரணமாயிற்று. இன்னும் பரந்த வீச்சுள்ள, சற்றே பித்துத் தன்மை கொண்ட பத்மராஜனைப் போன்ற யாரோ ஓர் ஆள் செய்திருக்க வேண்டிய படம். விநோதங்களை டெமோ செய்து காட்டுவது வேறு. படத்தில் விநோதம் வந்து கூடி இருந்து கொள்வது வேறு. மறுபடியும் சொல்கிறேன், நான் ரஞ்சித்தை குறை சொல்லவே இல்லை. இன்னமும் படத்தை வேறு ஒன்றாகக் கொண்டு வந்திருக்கக் கூடிய தருணம் தவறிப் போயிற்று.

ஆனால், இப்படி ஒரு படத்தைச் செய்தே ஆக போராடி, சொந்தப் பணத்தில் எடுத்து, அந்த நேரத்தில் அவருடன் மோதிய முதலைகளுடன் மல்லுக்கட்டி, மிகுந்த தரத்துடனே ரஞ்சித் இப்படத்தைக் கொண்டு வந்தார். மக்களைப் பார்க்க வைப்பதில் வெற்றி பெற்றார். அதை மனமார பாராட்டாமல் முடியாது.  துணிச்சல் இல்லாமல் இக்கதையைப் படமாக எடுக்கலாம் என்று யோசித்திருக்கவே முடியாது.

அப்புறம், உண்ணி பற்றி அதிகம் எழுதாமல் போனதற்குக் காரணம் அதைத் தொடங்கினால் அவரைப் பாராட்டுவதிலேயே இந்தக் கட்டுரை முடிந்துபோகும் என்பதால்தான். அவரைப் போன்றவர்கள் தொழிற்படும்போது, எல்லா அற்பத்தனங்களையும் இரு என்று பக்கவாட்டில் தள்ளிவிட்டு, சினிமா தனது முகம் மாற்றும் காலம் வரும்.

குட்டியப்பன் நல்லவனா, கெட்டவனா என்பதில் எதுவும் இல்லை. ஆனால், வாழ்வைப் புரிந்துகொண்டு, அதை விளையாட்டாய் செய்யப்போகும் போது சில விபரீதங்கள் உண்டு. வாழ்வின் லீலைகளைத்தான் யாரால் புரிந்து கொள்ள முடியும்? சகாக்களிடம் தனது மனதில் உள்ளதை பகிர்ந்து கொண்டு லீலாவை எடுத்துக்கொள்ள திரும்பி அவளை நோக்கி நகரும்போது, யானை அவளைத் தும்பிக்கையைக் கொண்டு தூக்கி காலில் போட்டு மிதிக்கிறது. அவள் முடிந்துதான் போகிறாள்.

பாருங்கள், குட்டியப்பனைக் காட்டிலும் விநோதம் கொண்டிருக்கிறது வாழ்வு. அது அவனைத் தனியாய் நிறுத்த முடிவு செய்துவிட்டால் என்ன செய்யமுடியும்?

https://cinema.vikatan.com/south-indian-news/131976-malayalam-classic-series-part-19-leela-movie.html

Link to comment
Share on other sites

"ஒழிவுதிவசத்தே களி... நாம் கொலைகாரர்களில்லை என்றுமேகூட ஆறுதல் கொள்ளமுடியுமா?" - மலையாள கிளாசிக் - 20

 

`மலையாள கிளாசிக்' தொடரின் 20-வது பகுதி. `ஒழிவுதிவசத்தே களி' படம் குறித்த விரிவான கட்டுரை.

132643_thumb.jpg
 

சமீபத்தில் `ஒழிவுதிவசத்தே களி'யெல்லாம் ஒரு படமா என்று யாரோ சொல்லியிருந்ததாகப் படித்தேன். உண்மையைச் சொல்லவா. அது படமில்லை. அதில் ஒரு சினிமாவாக நாம் காணக்கூடிய எந்தத் திருவிழா கோலாகலமும் இல்லை. ஒரு வைடு, ஒரு மிட்டு, ஒரு க்ளோசு இல்லை. நமது கண்களைப் பார்த்துக்கொண்டு ஒரு நடிகனோ, நடிகையோ சவால் வைக்கவில்லை, அல்லது உதடு நனைக்கவில்லை. அவர்கள் தாங்கள் கண்டுபிடித்த ஒரு பாஷையில் தங்களிடம் உள்ள ஒரு கதையை தங்களிடம் இருந்த சொற்பக் காசில் படமெடுத்துக் காட்டி பாராட்டுகளை வாங்கிப் போனார்கள். மாற்று சினிமா என்றாலே மேதமையைக் காட்டுவதுதான் என்கிற சுளுவான சூத்திரத்துக்குள் கூட அவர்கள் படுத்துக்கொள்ளவில்லை என்பதைப் பார்க்க வேண்டும். ஆமாம், ஏதாவது நாஸ்டாலஜியா நான்சென்ஸுகளில் கண்ணீர் விட்டுக்கொண்டிருப்பது எல்லாம் பழக்கமாக இருக்கிற ஒரு சில சோம்பலான ரசிகர்களுக்கு இதெல்லாம் படமாகத் தெரியாது. நாமும் இதைப் படமில்லை என்றே சொல்கிறோம். அனுபவம். படத்தில் ஆழ்ந்து இருந்து அனுபவம் கொண்டவாறு இருக்கும்போதுதான் படத்தின் இறுதியில் தாசனைக் கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்கச் செய்து, ஒரு கொலை செய்திருக்கிறோம் என்பதற்குத் திடுக்கிட முடியும்.

கதைப்படி படம் முழுக்க குடி.

அது பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய ஒன்று.

 

 

ஒழிவுதிவசத்தே களி

இத்தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்!

ஒருவன் குடித்துவிட்டு அந்தக் கொடுமையைச் செய்துவிட்டான் என்கிறோம். அதைப்போல குடித்துவிட்டு வார்த்தையை விட்டுவிட்டான் என்பார்கள். அப்படி இல்லை. அந்தக் குற்றத்தைச் செய்வது குடியல்ல. அவனுக்குள்ளே இருப்பதை அது கொண்டு வருகிறது என்பதற்கு மட்டுமே குடிக்குப் பொறுப்பு இருக்க முடியும். குடி ஒரு மீடியம். பெரிய மேதையிலிருந்து தெருவில் சுற்றுகிற யாரோ ஒரு காகிதம் பொறுக்கி வரை நார்மலில் இருந்து அப் நார்மலுக்குச் சென்று தன்னைத்தானே சந்தித்து விட்டு வருகிற சாகசத்துக்கு ஆட்பட்டுதான் திரும்பத் திரும்பக் குடிக்கிறார்கள். அவர்களுக்கே அது தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை. சொல்லப்போனால், இந்த மீடியத்தை எடுத்துக்கொண்டுதான் இப்படத்தின் போக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. நாம் நமது அடியாழத்தில் எவ்வளவோ துடிப்புகளை அமுக்கித் தூங்க வைத்திருக்கிறோம். இப்படத்தில் குடி அப்படித் தூங்கிக் கொண்டிருந்தவற்றைத் தட்டி எழுப்புகிறது.

 

 

கொலை நிகழ்கிறது.

கேரளாவில் தேர்தல் நடக்கிற ஒரு மழைக்கால நாளில் விடுமுறையைக் குடித்துக் கொண்டாட ஐந்து நண்பர்கள் ஒதுங்குகிறார்கள். அந்த இடம் அபாரமான தனிமையைக் கொண்டது. இயற்கை தனது துடிப்புமிக்க அமைதியுடன் புதிராகப் புன்முறுவலிக்கிற ஓர் இடம். பீர் குடிக்க ஆரம்பித்து, குளித்து, கூட்டு செய்வதற்குப் பலாப் பழத்தை வெட்டி, கோழியைப் பிடித்துக் கொன்று, சமையல் வேலையை நடக்கச் செய்து, நண்பர்கள் குடியைத் துவங்குகிறார்கள். பாட்டும், ஜோக்குகளும், விவாதங்களும் நடக்கின்றன. இவர்கள் சந்தோஷத்தை உருவாக்கி அதை அனுபவிப்பதற்கு நடுவே குறைந்தது மூன்று பேருக்காவது கீழே சமையல் செய்துகொண்டிருக்கிற கீதாவின் மீது பிரங்ஞை இருக்கிறது. அவள் அன்று தனது சமையலை முடித்துக் கிளம்பாமல் போயிருந்தால், அந்த விளையாட்டின் மையப் புள்ளியாய் அவளாகத்தான் இருந்திருப்பாள். என்ன விதமான விபரீதங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்பதைக் கற்பனை செய்யக்கூட முடியவில்லை. நல்லவேளையாய் கூட்டத்தில் பெரும் புள்ளியான தர்மனை அறைந்துவிட்டு அவள் மறைந்து போகிறாள்.

 

 

குடியின் போதை ஏறிக்கொண்டே வருகிறது.

பல உண்மைகள் வெளி வந்தவாறு இருக்கின்றன.

Ozhivudivasathe Kali

எந்தப் பெண்ணையும் பலத்தைப் பயன்படுத்தி வசப்படுத்துவதுதான் அசலான ஆண்மகனின் காரியமென்று நாராயணன் சொல்லும்போது, அப்படியெனில் தினமும் உனது மனைவியைக் கற்பழித்துக் கொண்டிருக்கிறாயா? என்று கேட்கிறான், வினயன். முட்டுகிறது. தர்மன் எமர்ஜென்ஸி காலத்தை நியாயப்படுத்தி சொல்லிக்கொண்டிருக்கும்போது, அதை வினயன் மறுப்பது ஒரு வர்க்கப் பிரச்னை. நான் வாங்கிக்கொடுக்கிற எச்சிலைக் குடித்துத் தின்றுவிட்டு என்னையே நீ என்கிறாயா என்று தர்மன் தனது முக்கியத்துவத்தை வெளிப்படுத்திக்கொள்கிறான். கொட்டிக் கொண்டிருக்கிற பேய் மழையில் வினயன் கோபித்துக்கொண்டு கிளம்பும்போது, மற்றவர்கள் சமாதானம் செய்கிறார்கள். நம்பூதிரி சரக்கு வாங்கி வந்திருக்கிறார். அடித்துக்கொண்டு உறுமிக்கொண்டிருந்த நண்பர்கள், ஏதோ ஒரு புள்ளியில் அணைத்துக்கொண்டு கண்ணே மணியே என்று கொஞ்சிக்கொள்கிறார்கள். மறுபடியும் குடிக்கிறார்கள். பலவற்றையும் விவாதிக்கிறார்கள். இறுதியில் பேச்சு மெள்ள சாதி பக்கத்தில் வருகிறது.

படத்தின் இறுதியில் சாகப்போகிற தாசன் பெயரிலேயே ஒரு சுமை இருக்கிறது. அவன் படித்துக்கொண்டு நல்ல உத்தியோகத்திலிருந்து சாதியைக் கடக்க முயல்கிறவன். சந்தடியில்லாத காட்டினுள் உள்ள நீர்நிலையை நெருங்கும்போது முதலில் சந்தோஷத்துடன் கூச்சலிடுபவன் அவன்தான். அவன்தான் அடித்துப் புரண்டு முதலில் குளிக்க ஆரம்பிக்கிறான். அவன்தான் பலாவை வெட்ட மரத்தின் மீது ஏற வேண்டியிருக்கிறது. அவன்தான் இறைச்சிக்கான கோழியைக் கொல்ல வேண்டியிருக்கிறது. குடி விவாதங்களில் சமரசம் செய்வதைத் தவிர்த்து, மற்ற நேரங்களில் எல்லாம் அவன் தொலைக்காட்சியைப் பார்த்தவாறு இருக்கிறான். சூடான அரசியல் விவாதங்கள். அவனுக்கு அரசியல் முக்கியம். இப்போது சாதியைப் பற்றின அந்தப் பேச்சு அவனை மௌனமாக்குகிறது. அவனைச் சரி செய்யும் பொருட்டு அவனை சாந்தப்படுத்தியவாறு அவனிடமே ஒரு பாட்டு பாடு என்று வற்புறுத்துகிறார்கள். அவனுமே பாடுகிறான். அது ஒரு கவிதை.

உலகெங்கும் அடித்து அமர்த்தப்பட்ட கறுப்பு மக்களின் நெஞ்சம் வீறிடும் ஒரு சவால் கவிதை அது.

ஆமாம், அதுவே தலித்தின் கவிதையும்கூட!.

கவிதை முடிந்தவுடன் அனைவரும் பால்கனிக்கு நகர்ந்து செல்கிறார்கள்.

தாசன் மன்னிப்பு கேட்கிறான்.

மலையாள கிளாசிக் பகுதி 20

அப்புறம்தான் எவ்வளவோ உள்ளடுக்குகள் கொண்ட அந்தத் திருடன் - போலீஸ் விளையாட்டு துவங்குகிறது. உடனடியாய் நம்பூதிரி நீதிமானின் இடத்தில் அமர்ந்து கொள்கிறார். தவறுகளுக்குத் தண்டனைகள் உண்டு. ஆனால், தண்டனைகள் வந்துவிடாமல் லஞ்சம் கொடுத்துத் தப்பித்துக் கொள்கிறார்கள். இறுதியாய் திருடனாய் எஞ்சுகிறவன், தாசன்.

இவன் நமது அமைப்பை நொறுக்கப் பார்க்கிற வஞ்சகன். தேசத் துரோகி என்று கூக்குரலிடுகிறார்கள்.

நம்பூதிரி களி கொண்டு தீர்ப்பை வெகு ஆசையுடன் சொல்கிறார். சாகும்வரை அவனைத் தூக்கிலிட்டுக் கொல்லவும்!

தாசனை முற்றுகையிட்டு அவனது கரங்களைக் கட்டி அவனது கழுத்தில் தூக்குக் கயிற்றைப் போடும்போது அவன் அதற்கு மறுப்பு சொல்லிக் கூக்குரலிடும் நியாயங்கள் வெளியே வரவில்லை. இவர்கள் தங்களை மறந்து தங்களுக்குள் இருந்து வெளிவந்தவர்களாக மாறி, பரவச நிலையை எய்தியிருக்கிறார்கள். நடப்பது விளையாட்டா, விபரீதமா என்பதை முடிவெடுக்க ஒருவருமே இல்லை. இறுதியாய் அவன் தாசன்தானே, தாசன் என்பவன் அடிமையல்லவா. அவனது உயிருக்குப் பெரிய மதிப்பை எல்லாம் வைத்துப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டாம். தூக்கிப் போடுங்கடா. தொங்க விடுங்கடா.

தாசன் உடுதுணியெல்லாம் உருவப்பட்டு, அரை நிர்வாணமாக நாக்குத்தள்ளி சடலமாக தொங்கிக் கொண்டிருக்கிறான்.

நாம் நமது திடுக்கிடலை மறைத்துக்கொண்டு அடுத்தகட்டத்துக்குப் போவோம்.

வயநாடு ஓர் அற்புதம். அங்கே மழை பொழிவது என்பது எப்பேர்ப்பட்ட சம்பவம்? அதிலும், வலுவான மழை. வினயனும் தர்மனும் சண்டைபோட்டு சமாதானம் ஆகிற வரை நமக்குக் காட்டப்படும் அந்த ஆக்ரோஷமான மழைக்காகவே படத்தைப் பத்து முறை பார்க்கலாம். அதுபோல பல காட்சிகள் இருக்கின்றன. நாம் வியப்பதற்கு கீதா என்கிற அந்தப் பெண்மணியின் சீற்றம்போல படத்தில் வேறு பலவும் இருக்கின்றன. யாரும் பெரிய பிரபலங்களோ தொழில்முறை நடிகர்களோ இல்லை என்பது பல முறை சொல்லப்பட்டிருப்பதைப் படித்திருப்போம். வெட்டுகளே இல்லாத நீளமான காட்சிகளில்கூட இது நிகழ்த்திக் காட்டுவது என்கிற ஐயமே வரவிடாது, அத்தனை பேரும் தங்களுடைய குண சித்திரங்களை இழந்துவிடாமல் நடித்தவாறே இருந்தார்கள். எந்த நெருக்கடியான வளைவுகள் வந்தபோதிலும், அவர்களுடைய சிறு சிறு உடல் மொழிகள் மறக்கப்படவே இல்லை. தர்மன் என்று ஓர் ஆள் அயோக்கியன் என்றால், அந்த நடிகனே ஒரு பெரிய அயோக்கியனாகப் படுவது படத்தின் பெரிய வெற்றி. கீதாவாக நடித்த அபிஜா சிவகலா ஒரு மகத்தான நடிகை என்பது எனக்கு எப்போதுமான அபிப்ராயம்.

ஒழிவுதிவசத்தே களி

ஒளிப்பதிவு பற்றிச் சொல்வதற்கு, விவரிப்பதற்கு, விதந்தோதுவதற்கு எதுவுமே இல்லை. மிகச் சுருக்கமாய் அதை நான் ஓர் அர்ப்பணிப்பு என்று சொல்ல விரும்புகிறேன். இந்திரஜித் தன்னுடைய படமாகவே எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.

உன்னி.ஆர் எழுதிய சிறுகதை.

`காளி ஆட்டம்' என்கிற சிறு தொகுப்பில் இந்தக் கதை இருக்கிறது. தமிழில் மொழிபெயர்த்தவர், சுகுமாரன். இப்போதுதான் நண்பர் ஜெகா ஜெகதீசன் ஒரு குறிப்பில், `கதையின் க்ளைமாக்ஸில் இருந்த வீரியம் படத்தில் இல்லை' என்றார். எனக்குமே அதில் உடன்பாடுண்டு. ஆனால், ஒன்றை மற்றொன்றாக மறுபடைப்பு செய்வதே அசல் கலைஞனின் வேலை. வேறு ஒரு கோணத்தில் உன்னியை இயக்குநர் சிறப்பு செய்திருக்கிறார் என்று நம்புகிறேன். நண்பரிடம் முடிந்தால் இன்னுமொரு முறை படத்தைப் பார்க்க வேண்டிக்கொள்கிறேன். நான் இப்போதுமே படம் முடிந்தவுடன் உன்னியைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதால், சொல்கிறேன். பல விதத்திலும் அவருக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

அடுத்ததாய், தாசன் அந்தக் கவிதையைச் சொல்லும்போது பின்னணியில் இசை மிக மெதுவாக உறுமுவதைக் கேட்கமுடியும்.

அதைத் தொடர்ந்து நாம் இசையைக்கூட பின்தொடர்ந்து செல்கிறோம்.

பாசில் ஜோசப்புக்கு நன்றி.

முதலில் 1000 பேர் வந்து தங்கிப்போகிற சத்திரம், சாவடி இவற்றில் இருந்தெல்லாம் வெளியேறி, பழக்கங்களை முற்றிலுமாக அறுத்துக்கொண்டு, நான் விரும்பிய சினிமாவை நான் விரும்பும் விதத்தில் எடுப்பது என்கிற தீரம் இருக்கிறது இல்லையா... அதற்கே ஒரு கும்பிடு!. சனல் குமார் சசிதரன் ஓர் அலை. ஓர் ஆரம்பம். நினைத்தால் சாக்லேட் படங்களை எடுத்துக் காசு பார்த்திருக்கலாம். புதிய கரு, புதிய மொழி, புதிய அனுபவம் இவற்றுடன் அவர் பயின்ற படிப்பும் அனுபவமும் படத்தில் இருக்கிறது. அகங்காரம் இருக்கிறது. எல்லாவற்றையும் அணுகிவிடக்கூடிய மன மொழியைப் பலருக்கும் கடத்துகிறார் என்று நினைக்கிறேன். `எஸ்.துர்கா' கூட நமக்கு உண்டாக்கின அலுப்புக்கு, நமது சோம்பேறித்தனம்தான் காரணமாக இருக்கமுடியுமே தவிர, அவருடைய தீவிரத்தன்மைக்கு எந்தக் குறைச்சலும் கிடையாது. அவரது அடுத்த படத்துக்காகப் பல மக்களைப்போல நானும் காத்துக்கொண்டிருக்கிறேன்.

காடு சூழ்ந்த இடத்துக்கு வந்து சேர்ந்து குளிக்கப்போகிற இடத்தின் நிசப்தத் தன்மையை உணர்ந்த உடனேயே தன்னையறியாமல் தர்மன் ஒரு வசனம் சொல்கிறான், அப்போது போதைகூட இல்லை. அது இப்படி வரும்.

எவனையாவது கொன்று முடித்து இங்கே முழ்கடித்தால் கடவுளுக்குக்கூட தெரியாது!.

உள்ளே இருக்கிற மிருகம் எப்போது வெளியேறி வேட்டை நிகழ்த்துமோ, நமக்கு அந்தத் தருணம் எப்போது வாய்த்துவிடுமோ, ஒன்றுமே சொல்வதற்கில்லை. ஆனால், நமக்கான பலி மிருகங்களாய் கொஞ்சம் அடிமைகளையும், பெண்களையும்தாம் தேர்வு செய்து வைத்துக்கொண்டிருக்கிறோம். இன்று வரையில் நாம் கொலைகாரர்களில்லை என்றுமேகூட ஆறுதல் கொண்டு விடலாமா என்பதும் தெரியவில்லை.

https://cinema.vikatan.com/south-indian-news/132643-malayala-classic-series-part20-ozhivudivasathe-kali-movie.html

Link to comment
Share on other sites

``அங்கமாலி டைரீஸ்... அந்தக் குடும்பத்துக்கு இருக்கும் செருக்குதான் சுவாரஸ்யமே!’’ - பகுதி 21

 

`மலையாள கிளாசிக்’ தொடரின் 21 வது பகுதி. `அங்கமாலி டைரீஸ்' படம் குறித்த விரிவான கட்டுரை.

``அங்கமாலி டைரீஸ்... அந்தக் குடும்பத்துக்கு இருக்கும் செருக்குதான் சுவாரஸ்யமே!’’ - பகுதி 21
 

`ஈ மா யு' என்கிற படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் முக்கிய பாத்திரத்தைச் செய்திருந்த செம்பன் வினோத்தான், `அங்கமாலி டைரீஸ்' படத்தை எழுதியவர் என்பதறிந்து வியப்பாக இருந்தது. அதை ஒரு கதை என்றே சொல்லிவிட முடியாது. ஒரு நீண்ட யோசனை, திறனாய்வு மற்றும் ஓரிரு தலைமுறையினரின் உளவியல் என்றெல்லாம் சொல்ல வேண்டும். படத்துக்கு எந்த மாதிரி திரைக்கதை எழுதிக்கொண்டார்கள் என்பதை நாம் அறிய வாய்ப்பில்லை. ஆனால், திரையில் எக்கச்சக்கமாகப் பொருத்தப்பட்ட காட்சிகளால் நமக்கு வந்து சேருகிற வாழ்க்கை, இயக்குநரால் எழுதப்பட்டது. இப்படத்தின் விசேஷமே அதுதான்!. பலருக்கும் விலக்கம் நேர்ந்ததுகூட அதனால்தான். என்ன செய்வது, சினிமா வளர்ந்தவாறு இருக்கும் ஒன்று. அது நம்ம வீட்டுத் தோட்டத்தில் கட்டப்பட்ட மாடு மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லை. படம் பரபரவென்று பறந்தது. இதற்கு முன்னால் வந்த `பிரேமம்' இந்தக் கூறுகளை அறிமுகம் செய்து விலகி இருந்ததைக் கொஞ்சம் நினைவுபடுத்திக்கொள்ளலாம்.

அங்கமாலி டைரீஸ்

 

 

 

படத்தின் கதையைச் சொல்வதற்கு முன்னே வேறு சில விஷயங்கள் இருக்கின்றன. காரணம், படம் கதைக்கு வெளியே பல விஷயங்களைச் சொல்லியவாறு இருக்கிறது. ஒரு மின்னலாய் வந்து விட்டுப்போன ஆளுக்குக்கூட ஒரு மனம் கொடுத்திருப்பார்கள். நாயகனின் அம்மாவுக்கு ஒரு குளோசப் கிடையாது. அதேநேரம் அவர்களைப் பற்றி நாம் முழுமையாய் அறிவோம். படம் தொடங்கும்போது வருகிற தாதா, மலைப்பாம்பின் கறியைச் சாப்பிடுகிறார். அவர் தேவைதானா இந்தக் கதைக்கு? ஆனால், படம் முழுமையடைய அவர் வேண்டியிருந்திருக்கிறார். படத்தில் நடித்த அத்தனைபேரும் புதுமுகங்கள். அது இல்லாமல் நமக்கு உவப்பூட்டக்கூடிய எத்தனையெத்தனை முகங்கள், அதற்கு ஒரு முடிவே இல்லை. இப்படத்தில் நேராகச் சொல்ல ஒரு கதையுண்டு. ஆனால், பக்கவாட்டுகளில் துணுக்குகளாய் வந்து சேருகிற அனைத்துமே அக்கதையின் பல்வேறு திறப்புகளாய் இருந்தவாறிருக்கின்றன.

 

 

வின்சென்ட் பெப்பே ஹீரோ. அவனது கதைதான் இது. அவனுடன் இருக்கிற நண்பர்களின் வாழ்வும் கதைப்போக்காகத் தொடர்கிறது. பெப்புக்கு அம்மா, தங்கை இருக்கிறார்கள். அப்பா தண்டத்துக்கு வெளியூரில் ஒரு காமாசோமா தொழில் பண்ணுகிறார். நடுத்தரக் குடும்பம். அங்கமாலியின் சுவாரஸ்யமே அவர்களுக்கு இருக்கக்கூடிய செருக்குதான். அதுவே பிழைப்புக்கு உதவும். அப்படிச் சிறு வயதிலிருந்தே அந்த ஊரின் கால்பந்தாட்டக் குழுவின் தலைவனும் பயில்வானுமான பாபுஜியின் வீரதீர சாகசங்களுக்கு மயங்கி, அவனைப் பின்தொடர்பவர்களாக இருக்கிறார்கள் பெப்பும் அவன் நண்பர்களும். பையன்களும் ஒரு குரூப் அமைத்துக்கொண்டு வளர்கிறார்கள். குடி, டாவடித்தல் எல்லாம் நடக்கிறது. பீர் பீப் போர்க் எல்லாம் சாப்பிட்டுத் தேறுகிறார்கள். கல்லூரியில் அடிதடி. விழுப்புண்கள். சிறு வயதிலிருந்தே ஆதர்சமான சீமா, பெப்புக்கு இப்போது காதலியாகவும் இருக்கிறாள். அவ்வப்போது முத்தமிட்டுக் கொஞ்சிக்கொள்கிற காதல் கிளிகள்.

பாபுஜி ஒருநாள் கடைத்தெருவில் குத்தப்பட்டு இறக்கிறார்.

அவனைக் கொன்றவர்கள் ரவியும் ராஜனும்.

வாழ்க்கை இப்போது கொஞ்சம் மாறியிருக்கிறது.

அங்கமாலி டைரீஸ்

பள்ளியில் பத்திலும் பன்னிரண்டிலும் எல்லாம் பார்டரில் பாஸ் பண்ணி வந்து, கடைசியாய் கல்லூரியில் கிடைத்த பி.ஏ-வையும் முழுமை செய்யமுடியவில்லை. ஏரியாவில் பெப் கேபிள் டிவி வைத்து சுமாராய் பிழைப்பை ஓட்டிக்கொண்டிருக்கிறான். சக்கி என்கிற ஒரு காதலியுண்டு. அப்படியென்றால், பழைய காதலி என்னவானாள் என்கிற கேள்வி வருகிறதல்லவா... பசையுள்ள இடம் வந்ததும் ஒட்டிக்கொண்டு அவள் தனது சிங்கப்பூர் புருஷனுடன் எஸ்கேப்!. இப்போதைய காதலி சில கோர்ஸுகள் முடித்தவுடன் ஜெர்மனிக்குப் பறக்க வேண்டியவள். பெப்பும் அவளோடு பறந்து அங்கே செட்டிலாக ஒரு விதியிருக்கும் என்று நம்பிக்கொண்டிருக்கிறான். எப்படியும், எல்லாவற்றுக்கும் பணம் வேண்டும். இவனுக்கு என்றில்லை, நண்பர்களுமே அதற்குத்தான் வழி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

 

அங்கமாலி மக்கள் அசைவ ஆள்கள். பன்றி இறைச்சி அங்கே தண்ணீர்போல போகும். பெரிய வணிகமும்கூட!. நண்பர்களுடன் பெப் அதற்கான முயற்சிகளில் இறங்கும்போது ரவியையும், ராஜனையும்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. அவர்களும் அங்கமாலிக்காரர்கள்தாம். தெரிந்த பையன்கள்தாம். பிழைப்புக்குப் பல காரியம் பார்த்தபிறகு, யாரையோ ஒருவரை வலுக்கட்டாயமாகக் கிளம்பச் சொல்லி இந்தத் தொழிலில் வந்து உட்கார்ந்து தங்களை நிலை நிறுத்திக்கொண்டவர்கள். அவர்களிடம் வியாபாரம் படிகிறது. இவர்கள் கடையை ஆரம்பிக்கிறார்கள். வெற்றிகரமாக அது நடக்கவும் செய்கிறது. ஆனால், ரவியுடனும் ராஜனுடனும் மோதவேண்டிய சூழல்கள் உருவாகின்றன. பகை நாட்டு வெடிகுண்டுகளாக வெடிக்கிறது. ஒருவன் கொல்லப்படுகிறான். அதில் பெப்பும் ஓரிரு நண்பர்களும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவருகிறார்கள். கேஸை முடிக்கப் பணம் வேண்டும். நிறைய வேண்டும்.

லிச்சி டேவிட் ஊருக்குத் திரும்பியிருக்கிறாள். படிக்கிற காலத்தில் குடும்பத்துடன் வெளியூருக்குப் போன குடும்பத்தைச் சேர்ந்தவள். இவனைக் காட்டிலும் மூன்று வயது பெரியவள். சக்கிக்கும் இவனுக்குமிடையே இருக்கிற புகைச்சலைத் தீர்த்துவைக்க லிச்சி முயற்சி செய்கிறாள். பெப் சக்கியிடம் சொல்லிவிட்டு வருவது பிரேக்கப். சரிப்பட்டு வராது என்கிறான். கேஸ் அது இது என்றிருக்கிறேன், அவளாவது நிம்மதியாக இருக்கட்டும் என்பது காரணம். சக்கி அவனுடைய வாழ்விலிருந்து வெளியேறிச் செல்கிறாள். ஒரு போலீஸ்காரியை பெப்பின் நண்பன் மணமுடிக்கிற அன்று குடி, சாப்பாடு, நடனம் போன்ற கொண்டாட்டங்களுக்கு அப்புறம், லிச்சியிடம் பேசிக்கொண்டு ரோட்டில் நடக்கிற பெப்பிடம் அவள், `நான் உனக்குப் பெண் பார்க்கட்டுமா?' என்று கேட்கிறாள். நர போதையில் இருக்கிறாள் அவள்.

அவள் பார்ப்பதாய்ச் சொன்ன பெண், அவளேதான்!.

அங்கமாலி டைரீஸ்


நான்கு பக்கமும் உள்ள சந்துகளில் புகுந்து முடிந்தவரை பணம் உண்டாக்குகிறார்கள். சாட்சி சொல்லாதிருக்க ரவிக்கும், ராஜனுக்கும் பணம் கொடுக்கிறார்கள். கொல்லப்பட்ட ஆளின் அம்மாவுக்கும், அவனுடைய உறவினர் பையன்களுக்கும் பணம் கொடுக்கப்படுகிறது. லிச்சி திருமணம் முடிந்த கையோடு ஒரு வாரத்தில் துபாய்க்குச் சென்று தனது வேலையில் இணைந்து கொண்டு விட்டாள். திருவிழா நடக்கிறது. ரவியும், ராஜனும் பெப்பின் வீட்டுக்கு வந்து குடித்து, திருவிழாவைக் களிக்கிறார்கள். கொஞ்சம்பேர் வில்லன்கள் இருக்கிறார்கள். இறந்துபோன பையனின் உறவுக்காரர்கள். அவர்கள் பெப்பைக் கொல்ல முயன்று, அதில் ஒரு நண்பன் இறந்துபோகிறான். கைக்குழந்தையுடன் திருவிழாவில் கலந்துகொள்ள வந்த ரவியும் குத்தப்பட்டு மரணமடைகிறான். 

இவர்களுடைய சாவுக்குப் பின்னர் அங்கமாலி கொஞ்ச நாள்களுக்கு அமைதியாய் இருந்திருக்கும். இப்போது குடி, பன்றி இறைச்சியுடன் வாரத்தின் இறுதி நாள்களை நண்பர்கள் கொண்டாடும்போது எனக்கு அவர்கள் போன் பேசுவதுண்டு என்கிறான் பெப். அவன் இப்போது அவனது மனைவி லிச்சியுடன் துபாயில் இருக்கிறான். செட்டிலாகியாயிற்று. இதற்குமேல் நாகரிகமான கண்ணியமான ஒரு வாழ்க்கையை வாழ முடியுமா என்று அவன் முயற்சி செய்யக்கூடும், இல்லையா?

இது என்ன வெறும் ரவுடிகளின் படம் என்று நினைக்கிறவர்கள் இல்லாமல் போவப் போவதில்லை.

மூன்று வேளை உண்டு, நல்ல உடை உடுத்தி, சீரான கூரைக்குக் கீழே சுகமாய்ப் போர்த்திக்கொண்டு தூங்குகிறவர்களை சினிமா, உச்சி முதல் பாதம் வரை சொல்லி அலுத்து முடிந்துவிட்டது. உலகெங்கிலும் குரல் அமுக்கப்பட்டவர்களின் எழுச்சி நிகழ்ந்தவாறு இருப்பதால், விளிம்பு நிலை மக்களின் வாழ்வு கலையிலும் இலக்கியத்திலும் சினிமாவிலும் மேலெழுந்தவாறு இருக்கிறது. ஒரு ஞாயிற்றுக் கிழமையில்  நாம் சட்டையை மாட்டிக்கொண்டு கடைத்தெருவுக்குப் போனால், சிக்கனோ மட்டனோ கிடைத்துவிடும். பல பொருள்கள் மட்டுமல்ல, எவ்வளவோ வசதிகளைக் காசிருந்தால் கைக்கருகில் கொண்டு வரலாம். ஆனால், நாமறியாத மறுபக்கத்தில் பிழைப்புக்கான அடிதடியுண்டு. சர்க்கஸ் உண்டு. வலுவுள்ளது பிழைத்து, நோஞ்சானாயிருப்பது அப்படியே முழ்கடிக்கப்படுகிற சம்பவங்கள் சர்வ சாதாரணமாய் உண்டு. பட்டினியில் செத்துப்போகிற குழந்தைகளைப் பற்றின செய்திகளை யார் அறிகிறோம், அறிந்தால் என்ன பொருட்படுத்துகிறோம்? நாம் நமது வேலையைப் பார்ப்பதுபோல, அவர்கள் தங்கள் பிழைப்புக்குக் கரணம் போட்டுக் கொண்டிருப்பார்கள். நீதி எந்த ரயிலில் எப்போது வந்து இறங்குமோ, அவர்களைப் பற்றின சினிமாக்கள் வருவதைத் தடுக்க முடியாது. வெறும் டப்பாவைக் காட்டி காசடிக்கிற ஈனப்பயல்கள் எல்லாம்கூட இந்தக் கதைகளையே சொல்ல வருவதைக் கவனியுங்கள்.

அங்கமாலி டைரீஸ்

இதையெல்லாம் படம் பார்த்த கொந்தளிப்பில் நான் அடுக்குவதே தவிர, இப்படத்தில் நியாய தர்மம் எதுவும் பிரசங்கம் செய்யப்படவில்லை. பல காட்சிகளில் நமது மனம் நிறைகிற தருணங்கள் உண்டு. கதைப்படி லிச்சியுடன் பெப் நடந்தான் என்பது லைன். ஆயின் அது என்ன மாதிரி ஒரு காட்சி? வீட்டிலிருந்து பைக்கை எடுத்து தங்கையை ஏற்றிக்கொள்ளப் போகும்போது, இவளைக் கட்டிக் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதே என்று துவங்கி ரோட்டில், தெருவில் அவன் பார்க்கிற காட்சியை எல்லாம் சொல்லிப் போகிற மனப்போக்கைத் தொடர்வது ஒன்று போதும். அதைப்போல டைட்டிலின்போது ஒரு திருவிழா துவங்குவதற்கான சப்தங்களை அரைகுறையாகச் சொல்லும்போதே, நாம் எதற்கோ முனைப்பு கொள்கிறோம். பையன்கள் ஒரு சடலத்தின் கையை உடைக்கிற காட்சியொன்று வருகிறது. அதற்குப் பின்னால் கொஞ்சம் அறம். நான் படித்திருக்கிறேன், மனிதனுக்கு கஷ்டங்கள் வரும்போதுதான் வயது அதிகரிக்கத் துவங்குகிறது என்கிற ஒரு எண்ணவோட்டம் அவ்வளவு பொருத்தமான இடத்தில் வரும். எழுத்தாளனான செம்பன் வினோத்தைக் கட்டியணைத்துக் கொள்ள விரும்புகிறேன்.

எல்லோரும் புதுமுகங்கள் என்பதற்குத் தலைமேல் அடித்து சத்தியம்தான் பண்ணவேண்டும். அசத்தலான பாடல்கள். திடுக்கிட வைக்கிற எடிட்டிங். ஒளிப்பதிவாளர் எங்கேயாவது சரி விடு பாத்துக்கலாம் என்று வழுக்கவே இல்லை. அவர் கட்டி வைத்து கட்டுப்பாட்டுடன் கொண்டு வந்த மூட், இதோ இன்னும் கண்ணில் நிற்கிறது!. `ஈ மா யு' அற்புதமான படம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்படத்தை இயக்கிய லிஜா ஜோஸ்தான் அதையும் செய்தார். அவ்வளவு அற்புதமான படம். அதன் உள்ளடக்கம், போக்கு, மனித உணர்வுகளை எடுத்துவைத்த நோக்கம் அத்தனையுமே பிரமாதம்!. முழுமையான திரைக்கதை கொண்டு நடந்த அந்தப் படம் அது ஒரு முழுமையான சினிமா. நான் அதைக்காட்டிலும் இதைத்தான் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன்.

அங்கமாலி டைரீஸ்

ஏற்றுக்கொள்வதையும், மறுப்பதையும் அவர்களுடைய விருப்பத்துக்கும் விட்டு விடலாம்.

குறைந்தபட்சம் இவ்வளவு ஜனங்களை வைத்துக்கொண்டு அதை நெருடலில்லாமல் கொண்டு சென்ற லிஜோ, இதற்குமேல் எம்மாதிரி எளிமையையும், அல்லது பிரமாண்டத்தையும் கையாள முடியும். தப்பித்தவறி ஓர் அறிவுஜீவி மாதிரி பேசிவிடாத அவருடைய எளிமையில் மக்களின் மீதான நோக்கமொன்று உண்டு. நான் அதைத்தான் விசேஷம் என்று மயங்குகிறேன். நல்ல மனம், அதனால் நல்ல படைப்பு என்பது பல சூத்திரங்களில் ஒன்றாய்கூட இருக்கலாம். ஆனால், ரத்தம் தெறிக்கிற படங்களில்கூட நெகிழ்வைச் சாத்தியப்படுத்த எவ்வளவோ பார்வைகள் விரிவடைந்திருக்க வேண்டும்.   

https://cinema.vikatan.com/south-indian-news/133412-malayala-classic-series-21-angamaly-diaries.html

Link to comment
Share on other sites

’தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’, பெரிய மனதைக் கொண்டிருந்த சாதாரண மனிதர்களின் கதை..! - பகுதி 22

 
 

`மலையாள கிளாசிக்’ தொடரின் 22 வது பகுதி. ’தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’ படம் குறித்த விரிவான கட்டுரை.

’தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’, பெரிய மனதைக் கொண்டிருந்த சாதாரண மனிதர்களின் கதை..! - பகுதி 22
 

`தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்', பிரசாத் ஒரு சாதாரண ஆள். கல்யாண வயது தாண்டி கட்டுவதற்கு ஒரு பெண் கூட கிடைக்காமல் லோல் பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில்தான் ஸ்ரீஜா என்கிற பெண்ணுடன் பிரச்னை வருகிறது. வளராமல் அது பற்றிக்கொள்ளும் தீ போல காதலாகவும் மாறி, வீடுகளை எல்லாம் கலந்துகொள்ளாமல் கல்யாணமும் செய்துகொள்கிறார்கள். நடுத்தரக் குடும்பங்களின் போலி கௌரவம் மற்றும் மடத்தனமான முரட்டுக் கொள்கைகளால் பிரசாத் சற்றே தள்ளி இருக்கிற ஒரு ஊருக்கு விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ள ஸ்ரீஜாவை அழைத்துச் செல்கிறான். அங்கே அவனுக்குக் கொஞ்சம் நிலம் இருக்கிறது. தண்ணீர்ப் பிரச்னை. ஒரு கிணறு தோண்டி விவசாயம் செய்து வாழ்வை சீர் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்தார்கள் இல்லையா, அதில் ஸ்ரீஜாவின் கழுத்தில் இருக்கிற தாலிச்செயினை விற்பதாகவும் இருந்தது. பதினாறு கிராம், விற்றால் ஒரு தொகை கிடைக்கும். சமாளித்துக்கொள்ளலாம். பிரசாத்தும், ஸ்ரீஜாவும் அப்படிக் கிளம்பிப் போகும் போதுதான் ஒரு திருடன் அந்த செயினைக் களவாண்டு விடுகிறான்.

ஓடுகிற பேருந்து. ஸ்ரீஜா சற்றே தூக்கத்தில் இருந்தாள். திருடன் கட்டரால் செயினை வெட்டி முழுமையாய் இழுத்துக்கொள்ளுவதற்குள் ஸ்ரீஜா அதைப் பார்த்துவிட்டாள். கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் அதை விழுங்கவும் செய்து விட்டான். விஷயம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறது. படத்தின் கதை துவங்குவது இங்கேதான். திருடன் செயினை அறுத்து வாயில் போட்டதை ஸ்ரீஜாவைத் தவிர்த்து யாரும் பார்க்கவில்லை. திருடன் மிக உறுதியாய் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொள்ளாமலும் இருக்கிறான். கேஸை எடுத்துக் கொள்ளுவதே தேவையா என்ன தெரியவில்லை என்று போலீஸ் தலையைச் சொறிந்து அச்சமூட்டினாலும், திருடனுக்கு முழுச் சாப்பாடு கொடுத்து காலையில் அவனது வயிற்றிலிருந்து எடுத்து விடலாம் என்று மாற்றிப் பேசுகிறார்கள். ஆனால் இல்லை. இந்தக் கேசைப் பிடித்த விஷயத்தில் போலீஸாருக்கு வேறு சிக்கல்கள் இருக்கின்றன. திருடனைக் கொண்டு சென்று எக்ஸ்ரே எடுத்தபோது அதில் செயின் இருப்பது தெரிய வருகிறது.

தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்

 

 

 

இதுவரை நான் எடுக்கவேயில்லை என்று சாதித்த திருடன் வெகு ஈசியாக, `ஆமாம் அப்படி நடந்துவிட்டது’ என்கிறான். அவ்வப்போது செயினைப் பறிகொடுத்தவர்களை நோக்கி புன்னகைக்கவும் தவறவில்லை.

மறுபடியும் அவனை மலம் கழிக்க உட்கார வைத்து செயினை எடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கையில் இந்த முறை அவன் தப்பித்து ஓடுகிறான். போலீஸாரும் ஊர்க்காரர்களும் துரத்துகிறார்கள்தாம். ஆனால், பிரசாத்தான் இறுதி வரை துரத்துகிறான். பிடிக்கவும் செய்கிறான். அவனைத் தப்பித்துச் செல்ல விடாமல் செய்து, திருடன் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்படுகிறான். அடி, சரியான அடி, பின்னி எடுக்கிறார்கள். செயின் இல்லை. எங்கோ தவறி விட்டது. என்ன அடித்து உதைத்தும் அவனிடமிருந்து ஒன்றும் வரப் போவதில்லை. போலீஸாருக்கு முன்னமே இருந்தது போல வேறு பிரச்னைகள் நெருக்குகின்றன. அவர்கள் பறிமுதல் செய்யாவிட்டாலும் ஒரு செயினை வாங்கி அது கைப்பற்றப்பட்டதாய் கோர்ட்டில் ஒப்படைத்து திருடனைக் கடுமையான முறையில் தண்டிக்க வழி வகை செய்கிறார்கள். அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க பிரசாத்திடமும், ஸ்ரீஜாவிடமும் சால்ஜாப்பு பேசுகிறார்கள்.

 

 

மிகவும் மோசமான ஒரு சூழ்நிலையில் திருமணம். ஆரம்பமே கோளாறு. இன்னும் சொல்லப் போனால் பிரசாத்துக்கும் ஸ்ரீஜாவுக்கும் நடுவே தொலைந்துபோன செயினால் மனக்கசப்பே வந்து விடுகிறது. ஸ்ரீஜாவின் அப்பா இவர்களுக்கு நடந்துவிட்ட அசம்பாவிதங்களைக் கேள்விப்பட்டு போனைப் போட்டு சொந்த மகளிடம் விஷம் கக்குகிறார். எல்லாம் தாண்டி அவர்கள் தங்களுடைய காதலை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். இப்போது போலீஸ் திருடனின் கழுத்தை நெரிக்க உதவி கேட்கும் போது, வாங்கப்பட்ட செயின் இவர்களுக்கே கிடைக்கும் என்றிருந்தாலும்- ``என் செயின் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, இனிமேல் அவனை அடிக்காதீர்கள் “ என்கிறாள் ஸ்ரீஜா. போலீஸும், புருஷனுமே கூட அவநம்பிக்கை காட்டும் போது அவன் திருடன்தான் என்று உறுதியோடிருந்து அவன் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று மோதியவாறு இருந்தவள் இந்த ஸ்ரீஜாதான்.

 

 

தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்

எல்லோருக்கும் தெரியும், இந்தப் படத்தில் திருடனாகப் பாத்திரமேற்றிருந்தவர் ஃபஹத். பிரசாத் மற்றும் ஸ்ரீஜாவின் கதையாக துவங்குகிற இந்தப் படத்தில் ஒரு பக்கவாட்டில் வந்து இறுதியாய்ப் படத்தை முடித்து வைக்கிறவர் அவர்தான். என்றாலுமே இந்தப் படம் அவருடையது அல்ல. அவர்களுடையது. இவரது திருட்டைக் காட்டிலும், திருட்டின் பல்வேறு சாத்தியங்களில் காண்பிக்கப்படுகிற சாகசங்களைக் காட்டிலும் படம் மையம் கொண்டிருந்தது நாதியற்றவர்களாய் இருக்கும்போதும் மன்னிக்கிற பெரிய மனதைக்கொண்டிருந்த சாதாரண மனிதர்களில்தான். அவர்கள் பிற மனிதர்களின் கஷ்டங்களை காது கொடுத்து கேட்கிறார்கள். அனுதாபப்படுகிறார்கள். உதவி செய்ய முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள். அவன் ஒரு திருடனாக இருந்தாலும்தான் என்ன.

இவன் பெயர் பிரசாத் என்பது போல திருடனின் பெயரும் பிரசாத்தான். ஆமாம், திருடர்கள் நம்மிலிருந்துதான் புறப்படுகிறார்களே தவிர்த்து, அவர்கள் வேற்று கிரகங்களிலிருந்து வந்து இறங்கியிருக்க முடியாதே. எப்போதோ அப்பா அம்மா மிஸ்ஸாகி யாருமில்லாத வீட்டில் இருக்கப் பிடிக்காமல் பல ஊர்களுக்குமாகச் சுற்றி வருகிறான். நிரந்தரமாய் ஒன்றில் நிலைக்க முடியவில்லை. அவன் யாரென்றே இல்லை. அடையாள அட்டை கூட இல்லாத ஒருவனை எதையுமே செய்து தொலைத்துக் கட்டிவிட நமது போலீஸ் மட்டுமே போதாதா. சிங்கிளாக உயிர்ப்பிழைப்பு நடத்தி பொருளற்ற வாழ்க்கை நடத்துகிறவன் பரோட்டா அடிப்பது, செயின் திருடுவது எல்லாம் ஒன்றுதான். `என்னடா, நல்ல பசியா, செயினை முழுங்கி விட்டிருக்கிறாய்’ என்கிற போலீஸாரின் நக்கல் கேள்விக்கு, `ஆமாம் சார், பசி தானே எல்லாம்’ என்று பதில் சொல்லுகிறான் அவன்.

அவனுக்கு மற்றவர்களைப் போல் நல்ல வாழ்க்கை ஒன்று அமைந்து வந்தால் அப்படி வாழ வேண்டும் என்கிற ஆசையிருக்கிறது. அவனும் சொந்த ஊருக்குச் சென்று எதையாவது செய்வதற்குதான் இந்த செயினைத் திருடினான். இறுதியில் அதை எங்கே போட்டான் என்பதையும் கூட சொல்லி உரியவரையே அதை எடுத்துக்கொள்ள சொல்லுகிறான். ஒரே ஒரு வேண்டுகோள், கோர்ட்டில் போலீஸாரால் ஒப்படைக்கப்படுகிற செயினை எங்களுடையது அல்ல என்று சொன்னால் போதும். எனது வாழ்நாளில் ஏழு வருடங்கள் வீணாகாது. ஒரு எளிய மனிதனாக அவர்களிடம் அவன் இறைஞ்சுவது அதைத்தான்.

அவர்கள் அதைச் செய்திருக்க மாட்டார்களா என்ன?

இப்படத்தின் கதையைச் சொல்ல முயன்று, சொல்லி முடித்தது சரியாக இப்படத்தின் முழுமையை அல்ல. அது வேறெங்கோ இருக்கிறது. யதார்த்தமும் புனைவும் பின்னிப் பிணைந்த மாயாஜாலத்தைப் படம் பார்த்துதான் உணர வேண்டும். தேர்ந்தெடுத்த கதையை நமக்குள் ஊடுருவி செலுத்த ஒவ்வொரு காட்சியையும் சிருஷ்டித்து அதற்கு சர்வ நிதானமாய் உழைத்திருக்கிறார்கள். திரைக்கதை சஞ்சீவ் பழூர். மிக அற்புதமான மனிதர்களைக் கொண்டு வந்து அவர்களுக்குள் உணர்ச்சிகரமான நாடகங்களை செய்து காட்டிய அவருக்கு நிறைய விருதுகள் இப்படத்திற்காக கிடைத்திருக்கின்றன. ஸ்ரீஜா என்கிற அந்த ஒரு பாத்திரத்தின் மனம் மட்டுமே போதும். அல்லது போலீஸாரின் முகங்களில் அவ்வப்போது வந்து போகிற திருட்டு முகங்கள் போதும்.

தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்

அப்புறம் அந்த நல்ல மனம் கொண்ட பெண்ணைக் கொண்டு வருவதற்கு ஒரு முகத்தைத் தேர்ந்தெடுத்தார்கள் பாருங்கள், அதில் இருக்கிறது கலை. பிரசாத்தாக சுராஜை தேர்ந்துகொண்டதும் அப்படித்தான். ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்டாக வந்தவர். அறிவிப்பாளராக தொடர்ந்தவர். ஒரு நகைச்சுவை நடிகராகவே ஒரு முழு ஜென்மம் பாழ்படாமல் மலையாள சினிமா அவரைக் கண்டுபிடித்தவாறே இருக்கிறது.

அலேன்சியர் லே லோபஸ் தனது எல்லையைத் தொட்ட படம் இது. யாரையும் பேச்சினால் தனது வழிக்குக் கொண்டு வருகிற இரண்டு தருணங்கள் உண்டு. அதில் அவரது லஜ்ஜையில்லாத முகம் நூறு பாவனையில் சுழல்கிறது. 

ஃபஹத் பாசில் தனது பழகின தடங்களை கைவிட்டவாறு இருக்கிறவர். சட்டென்று வேறொன்றுக்கு லாகவமாய்த் தாவிவிடுகிற நுட்பம் அறிந்தவர். எல்லையற்று விரிந்தவாறு இருக்கிற விண்வெளி மாதிரி மனித குணங்கள் பெருகியவாறு இருப்பினும், அவற்றின் மீது ஆழ்ந்த ஆர்வமும் காதலும் இல்லாமல் ஒரு மனிதனுக்குள் புகுந்து அவனைச் செய்து காட்ட முடியாது. லாக்கப்பினுள் இருக்கிற கைதி ஒருவன் வாய் திறப்பதற்குள் அவனை போடா என்னும் போதே படத்தில் அவரது ஆட்டம் துவங்கி விடுகிறது. திருடனுக்கும் சராசரி மனிதனுக்கும் இடைப்பட்ட அந்தப் பாத்திரத்தில் இரண்டுமாக ஒளிர்ந்து விலகுவது எத்தனை முறை நடக்கிறது என்பது மட்டும் பாருங்கள்.

எஸ்.ஐ.யிலிருந்து கடைசியாக வருகிற அதிகாரி வரை மொத்த ஸ்டேஷனுமே ஒரு வியப்புதான். ஒரு கணமாவது திரும்பத் திரும்ப வருகிற முகங்கள் மீது நமக்குச் சலிப்பு வராத வண்ணம் பாத்திரத் தேர்வுகள் பொருத்தம் கொண்டிருந்தன. மிகக் குறைந்த லொகேசன்களிலும் எடுத்துக்கொண்ட கதையைத் திறம்படச் சொல்லுவது என்பது அதைச் சொல்லுகிறவர்களுக்கு சினிமா எவ்வளவு தெரியும் என்பதைப் பொறுத்தது. இக்கதையை காவியம் பண்ணினவர்களில், முதல் தர நாயகர்களில், முக்கியமானவர்களில் முக்கியமானவர் ராஜீவ் ரவி. எளிமையில் ஒளிந்திருக்கக் கூடிய பிரமாண்டம் பற்றி நானெல்லாம் பேசியவாறு இருந்திருக்கிறேன். எவ்வளவோ படங்களை சிலாகித்திருக்கிறேன். இந்தப் படம் அனைத்தையும் கடக்கிறது. ரவி சிரமமானவற்றையும்  நளினமாக்கியிருக்கிறார். அவரது குளோசப் முக சித்திரங்கள் நெடிய கவிதைகள் போன்றவை. படத்தில் புயல் வீசி பறப்பது போன்ற காட்சிகளும் உண்டு. ரவி பறந்திருக்கிறார். எங்கேனும் கடுகளவு இடறல் இருக்காது. வியந்து கொண்டேயிருக்கிறோம், அவர் அடுத்து அடுத்து என்று சென்று கொண்டேயிருக்கிறார்.

படத்தில் பல காட்சிகள் விரைகின்றன. பலவும் நிலைக்கின்றன. மூட் பாலன்ஸ் நீடித்தவாறு இருக்கிறது. கிரண் தாஸ் எடிட் செய்திருக்கிறார். பாடல்கள் வெறும் தொழில்நுட்ப பீத்தலில்லாமல், வெறும் ஸ்டைலில் ஒத்தைக் கால் தூக்காமல் நெஞ்சைத் தொடும் நோக்கம் கொண்டவையாய் இருந்தன. படம் ஒரு திசையில் சென்றுகொண்டிருக்கும் போது இசை கிண்டர் கார்டன் ரைம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிற அவலம் இல்லை. நல்ல முதிர்ச்சி. தெளிவு. பல இடங்களில் இசையே மனங்களைப் பேசியது. வாழ்த்துகள் பிஜிபால். படத்தில் ஷியாம் புஷ்கரனின் பெயரை கிரியேட்டிவ் டைரக்டர் என்று போட்டிருக்கிறார்கள். சரிதான், சரக்கு வலுவாய் இருக்கிற இடத்தில் தாழ்வு மனப்பான்மைகள் இருக்காது. யாருக்கு என்ன நாற்காலியோ அதைக் கொடுத்து விட வேண்டியதுதான். அடித்துப் பிடுங்கி நானே என்பதெல்லாம் நோயாளி மக்களின் திருவிழாவல்லவா.

திலேஷ் போத்தன் கலைப் படங்கள் செய்கிறவர் அல்ல. வெகுஜனப்படங்கள் செய்து அதிரடி காட்ட நினைப்பவர் அல்ல. தனது சினிமா இன்ன வகையைச் சேர்ந்தது என்று அடையாளம் காட்ட விருப்பப்படும் ஓர் ஆளாக கூட அவர் இருக்க மாட்டார். எனினும் தரமாகவும், மக்களை எட்டுவதாகவும் தனது சினிமா இருக்க வேண்டும் என்பதைக் கண்டிப்பாக நினைப்பார். அது எல்லா காலத்துக்குமான வெற்றி பார்முலா என்பதை விட நெஞ்சின் அடியாழத்திலிருந்து சினிமாவை, மக்களை, தனது நாட்டை நேசிக்கிற ஒருவருக்கே அது சாத்தியமாகும்.

சொல்லப் போனால், இது சொல்லி வந்தவற்றை எல்லாம் தாண்டி சர்வ வியாபகமான வாழ்வை நேசிக்கும் சினிமா.

https://cinema.vikatan.com/south-indian-news/134132-malayala-classic-series-episode-22-thondimuthalum-driksakshiyum.html

Link to comment
Share on other sites

``மாயாநதி... ஆஷிக் அபுவின் விஸ்வரூப எழுச்சி!" - மலையாள கிளாசிக் - 23

 

`மலையாள கிளாசிக்' தொடரின் 23-வது பகுதி. `மாயாநதி' திரைப்படம் குறித்த விரிவான அலசல்.

``மாயாநதி... ஆஷிக் அபுவின் விஸ்வரூப எழுச்சி!
 

பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய இறந்த காலமோ, நிகழ் காலமோ இல்லாத மாத்தன் அழைக்கப்படுகிறான். தகிடுதித்த கூட்டத்தில் அவன் ஓர் அடியாள். தமிழ்நாட்டிலிருக்கிற ஓர் இடம்தான், அங்கே தனது சகாக்களுடன் நடக்கப்போகிற பிசினஸுக்காக ஒரு ஹோட்டல் அறையில் காத்திருக்கையில், போலீஸார் புகுகின்றனர். கைகலப்பு உண்டாகிவிட போலீஸார் சுட்டுத் தீர்க்கிறார்கள். நல்லவேளையாய் அந்த நேரம் பாத்ரூமில் உள்ள பாத்டப்பில் படுத்துக்கொண்டு அவன் அபர்ணாவின் போட்டோவைப் பார்த்துக்கொண்டிருந்தான். நழுவி, காரின் சாவியை எடுத்துக்கொண்டு காரை கிளப்பிக்கொண்டு வரும்போது, இடையில் வந்துவிட்ட ஒரு போலீஸ்காரன் செத்துப்போகிறான். அது கொலையல்ல; விபத்து. ஆனால், கொலையாகவே கருதப்படும். பதற்றம் தாங்காமல் காரை விரைவு கூட்டி ஓட்ட, கேரளத்தினுள் நுழைந்து பறக்கிறது கார். மொத்தப் பணமும் காரில்தான் இருக்கிறது. இது, `மாயாநதி' படத்தின் முதல் எபிசோடு.

மாயாநதி

 

 

 

இரண்டாவது எபிசோடு அபர்ணாவுடையது.

அவள் ஒரு படத்தின் ஆடிஷனில் இருக்கிறாள். கதாநாயகி தேர்வுக்கு முடிந்தவரை கேமராவுக்கு முகம் கொடுத்துவிட்டு, தனது தோழியின் ஃபிளாட்டுக்கு வருகிறாள். அவள் நடிகை. இவளைக் காட்டிலும் திறமை குறைந்தவளாயினும், இப்போது ஸ்டாராக இருக்கிறாள். அவளோடு பேசிக்கொண்டிருக்கையில் அம்மாவின் நெருக்குதலான அழைப்பு. அவளது சொல்லைத் தட்டமுடியாமல் அபர்ணா இப்போது ஒரு விழாவில் மேடை அறிவிப்பாளராய்ப் பணிபுரிவது தெரிகிறது. விழா முடிந்து, சாப்பாடு எதுவும் கிடைக்காமல், நடந்து தேடி ஒரு ஹோட்டலில் உணவு வாங்கித் திரும்பும்போது போன் அடிக்கிறது. 

 

 

மாத்தன்தான்.

நான் ஒரு வேலையாக கொச்சினுக்கு வந்திருக்கிறேன், உன்னைப் பார்க்க முடியுமா என்று கேட்கிறான்.

நோ. வாய்ப்பே இல்லை. அது எதற்கு. நான் உன்னை மறந்துவிட்டேன் மாத்தா.

அவள் போனை கட் செய்து திரும்ப அவன் எதிரே நிற்கிறான்.

அவள் அவனைப் பளாரென்று அறைகிறாள்.

மாயாநதி

சொன்னதைச் சொல்லிக்கொண்டு, செய்ததை திரும்பச் செய்துகொண்டிருக்கிற ஒருவிதமான கிளிப்பேச்சு சினிமாக்கள் முடிந்து கொண்டிருக்கின்றன. உலகம் முழுக்கக் கதை சொல்லும் பாணியில் உனக்கு எவ்வளவு தெரியுமோ, அதற்கு அப்புறம் சொல்கிறேன் என்கிற ஒன்றை நடைமுறைப்படுத்தி திரைக்கதையை நவீனமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். `மாயாநதி' முதலில் ஒரு திரைக்கதையின் சினிமா. முழுமையான பொருளில் திரைக்கதை. அதிரடியாகவும், தவளைப் பாய்ச்சல் என்போமில்லையா... அப்படியாகவும், தான் எடுத்துக்கொண்ட கதையைப் படம் முழுக்க தூவி அட அட என்று வியக்கும்படியாக தன்னை அலங்கரித்துக்கொண்டிருக்கிற திரைக்கதை. பழக்கம் இல்லாத பலரும் உள்ளே நுழைய முடியாமல் முறைப்பு கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால், எவ்வளவு நாள்தான் கிண்டர் கார்டன் ஸ்பூன் பீடிங்கை தொடர்ந்து கொண்டிருக்க முடியும். படத்தின் குழுவினர் ஒரு பெரிய நிகழ்வுக்கு ஆசைப்பட்டிருக்கின்றனர். வெற்றி பெற்றிருக்கின்றனர்.

 

 

பளாரென்று அறைந்த அபர்ணா அப்படியே போய்விடுவதில்லை.

அவனோடு நின்று பேசுகிறாள். அறை வரை வந்து சேரும்போது கிளம்பு என்று துரத்துகிறாள். தோழியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது போன் வருகிறது. மாத்தன் கீழேதான் நின்று கொண்டிருக்கிறான். இருவரும் நள்ளிரவுக் கடையில் பூஸ்ட் குடிக்கிறார்கள். இருவரும் கல்லூரிக் காலத்தில் காதலர்களாக இருந்தவர்கள்தாம். மாத்தன் அவளிடம் கொஞ்சம் பணத்தை வாங்கி ஏமாற்ற வேண்டியதாகிவிட்டது. சூழ்நிலை. ஆனால், காதலில் நம்பிக்கை முக்கியம் என்கிறாள் அபர்ணா. அது உன்னிடம் எனக்கு வரவில்லை என்கிறாள். அப்படியாக வெறுத்தும் விரும்பியும் தாங்களே தங்களை வதை செய்துகொள்ளும் காதல் அவர்களுடையது இப்போது.

மாத்தன் தன்னால் ஒருவன் இறந்தான் என்பதை மறக்கமுடியாமல் தவிக்கும்போது, அவனைப் பிடிப்பதற்காக மூன்றுபேர் கொண்ட ஒரு போலீஸ் கோஷ்டி புறப்படுகிறது.

மாத்தன் அவளைக் கொஞ்சம் கொஞ்சம் நெருங்குகிறான். கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்கும்போது வெளியே தள்ளி கதவைப் பூட்டினாலும், அபர்ணா மீது மாத்தனுக்கு நம்பிக்கைதான். அதற்கு ஏற்றார்போல அவளுக்கு இரண்டு நாள் படப்பிடிப்புக்குப் போக வேண்டி வர, அவனையும் அவள் துணைக்கு அழைத்துக் கொள்கிறாள். இருவருக்குள்ளும் இருக்கிற சிநேகம் இவர்களையுமே அறியாமல் பேச வைக்கிறது. நெருங்கச் செய்கிறது. காதலின் சங்கீதம் சுற்றிலும் ஒலிப்பதை இருவரும் அறியவே செய்கிறார்கள். இந்த நேரத்தில் கொச்சினுக்கு மாத்தனை போலீஸார் தேடி வந்திருக்கிறார்கள். மாத்தனின் அபர்ணாவை, விளம்பர போர்டில் பார்க்கவும் செய்கிறார்கள். குழுவின் தலைவர் இளவரசு. இப்போதுதான் திருமணமான இளைஞன் ஹரிஷ், இந்த கேஸுக்காக திருமணமான மறுநாளே கிளம்பி வந்திருக்கிறான்.

மாயாநதி

மாத்தன் அபர்ணாவை மிகவும் நெருங்கி, அது உடலுறவு வரை போகிறது. அந்த உறவு தந்த துணிச்சலில் அவன் கல்யாணத்தைப் பற்றிப் பேசும்போது, துபாய்க்குச் சென்று விடலாம் என்று வற்புறுத்தும்போது, அவள் ஒரு பதில் சொல்கிறாள். அவன் அதற்கு ஒன்று சொல்லப்போக, அவள் மனம் அடிபடுகிறது. அவர்களுடைய நெருக்கத்தை அறிந்துகொண்டுவிட்ட அவளது அம்மா மேலும் காயப்படுத்துகிறாள். மாத்தன் மீது வெறுப்போடு அவள் விலகிச் செல்லும்போதுதான் அவனுக்கு போலீஸார் தன்னை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. கிடைத்த சினிமா வாய்ப்பு பறிபோய், அந்த வாய்ப்பு தோழிக்குக் கிடைத்ததைச் சகிக்காமல் வாழ்வை வெறுக்கும்போது மாத்தன் தான் கிளம்புவதாகவும் ஒரே ஒருமுறை நாளை சந்திக்க வேண்டும் என்பதாகவும் கூறுகிறான். போலீஸ் அபர்ணாவை வளைக்கிறது. அவள் அவனைக் காட்டிக் கொடுக்கிறாள். அவர்கள் வந்து அவனை அழைத்துச் செல்கிறார்கள். அபர்ணா நின்று பார்த்திருக்கிறாள்.

மாயாநதி

மாத்தனை போலீஸ் என்கவுன்டர் பண்ணுகிறார்கள் என்பது மட்டுமல்ல கதை. அபர்ணா காலம் முழுக்க வற்புறுத்தின நம்பிக்கைக்குக் காதலில் என்ன இடம் என்று கேட்கிறார்கள். தனது வாழ்வில் அனுபவங்களின் மூலம் இளவரசு நினைப்பது ஒன்று. இப்போது தான் திருமணமான ஹரிஷ் நினைப்பது ஒன்று. அபர்ணாவின் தோழியான அந்த நடிகையின் பிட்டு தொப்புள் தெரிந்துவிட்டது என்று அவளை அறைந்து, தான் இருக்கிற அரபு தேசத்துக்கு இழுத்துச் செல்லும் அந்த ஆணின் நம்பிக்கை ஒன்று... என்று காதல் ஒரு மாயநதியாய் ஓடுகிறது. யாருமே காதலின் புதிர்களை விளங்கிக் கொண்டவர்களில்லை. ஆனால், உன் காதலி உன்னை வஞ்சித்தாள் என்பதைக் கேட்டபோதிலும், கண்களில் தனது காதலியைக் கண்டவாறு சடலமாய்க் கிடக்கிறான், மாத்தன்.

சொல்லி வந்த திரைக்கதையை எழுதியவர்கள், ஷ்யாம் புஷ்கரனும் திலீஷ் நாயரும் ஆவார்கள். கோடார்ட்டின் பிரத்லஸ் கொஞ்சம் இருக்கிறது என்பதை நண்பர் ஒருவர் கவனப்படுத்தியபோது, நான் மறுக்கவில்லை. எனினும் இது வேறு ஒரு படம்தான். வேறு ஒரு திரைக்கதைதான். அதிலும், படத்தில் வருகிற உரையாடல்களை ஆடாமல் அசையாமல் கவனித்து எவ்வளவு பொறாமைப்பட்டேன் என்பதற்கு எல்லையே இல்லை. எழுதினவர்கள் உண்டாக்கின உயிரை ஒவ்வொரு டெக்னீஷியனும் போஷித்திருக்கிறார்கள். ஊட்டம் கொடுத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளரின் இரவுகளை அப்படியே உச்சி முகரலாம். நான் பல இடங்களில் வெண்ணிற இரவுகளை நினைத்துக் கொண்டேன். எடிட்டரை ஒரு பேட்டியில் பார்த்தேன். பையன். வாடா போடா என்று கூப்பிட்டு விடலாம். சம்பவம் என்ன என்று கேட்டால், அவன் அதற்குப் பதில்கூட சொல்வதில்லை. மழுப்பலுடன் கேள்வியைத் தள்ளிவிட்டு விடுகிறான். ஆனால், செய்திருப்பது என்ன மாதிரி வேலை?

மாத்தனும், அபர்ணாவும் கலவி கொள்ளும்போது புகுந்து வருகிற பாடல் அற்புதம். மற்ற பாடல்களும்கூட மோசமில்லை. இந்தப் படத்தில் பாடல்களே இல்லாமல் இருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும். வேண்டாம், அந்த அளவுக்குப் போகத் தேவையில்லை. படம் முழுக்க விரவியிருந்த இசையும் நம்மை சோர்வுக்குள்ளாக்கவில்லை என்பது முக்கியம். சில இடங்களில் உச்சம் தொடவும் செய்தது.

நாயக நாயகியாய் வந்த இருவருமே ஜில்லென்றிருந்தனர்.

டோவினோ தாமஸ் இந்தப் படத்துக்காக மட்டுமே கட்டுமஸ்தாக தன்னை வைத்துக்கொண்டார் என்று நம்புகிறேன். தொடர்ந்தால், இந்த உடம்பின் விறைப்பு அவரைப் பிளாஸ்டிக்காக மாற்றிவிடும். முகம் மசியாது. மற்றபடி அவ்வளவு கம்பஃபர்டபிளான நடிகன், சந்தேகமில்லை. அதிலும் அவர் காட்டுகிற துக்கப் புன்னகைகள். அபர்ணாவாக வந்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. செம்மை. உண்மையில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் நிறைய உள்ளடுக்குகள் கொண்டது. மாத்தன் சூழ்நிலையால் நம்பிக்கை கொள்ள முடியாதவனாய் இருந்தான், அபர்ணா சென்று சேருவதும் அந்த இடத்துக்குத்தான். அவளது வாழ்வு சிக்கல்கள் நிரம்பியது. எவ்வளவு முதிர்ச்சியோடிருந்தும், அலைபாய்கிறவள். கீழ்படியாமை, தனிமை, பிடிவாதம், பொறாமையேகூட... எல்லாமிருந்தும் அவள் எல்லோரையும் பொருட்படுத்துகிறாள். தனியான தேர்ச்சி இல்லாமல், புரிகிற இலகுத்தன்மை இல்லாமல் ஒரு நடிகை இதற்குள் வாழ்ந்திருக்கவே முடியாது. ஐஸ்வர்யா என்றில்லை, படத்தில் அத்தனைபேருக்கும் அசல் முகத்தைக் கொண்டு வருகிற யோக்கியதைகள் இருந்திருக்கின்றன. தனியாய் ஒருவரைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், இளவரசு என்ன மாதிரி ஒரு நடிகர். எப்படி அவரை சில்லுச் சில்லாக சீரழித்துக்கொண்டிருக்கிறோம். என்கவுன்டருக்கு முன்னால் ரொம்பப் பேசுகிற ஹரிஷை அடக்கிவிட்டு அடிபட்ட மிருகம் போன்ற ஒரு முகத்துடன் பழியைத் தீர்த்துக்கொள்கிற அந்தத் தருணம் எவ்வளவு அரிதானது. நான் செய்வது சரிதானா என்கிற ஐயமும் சோர்வும்கூட அப்போது உள்ளூர இருப்பது தெரியவரும். அவரை நேரில் பாராட்டும்போதுகூட என்னை மறந்து பாராட்டினேன். இன்னொரு முறை பார்த்து... இப்போதும்கூட அப்படித்தான்.

மாயாநதி

இந்தத் தொடரில் மலையாள சினிமாக்களின் வேறுவிதமான முயற்சிகளை செய்து பார்த்துவிட்டவர்களில் முக்கியமானவராக ஆஷிக் அபுவைக் குறிப்பிட்டிருந்தேன். முதல் படமாகக்கூட `சால்ட் அண்டு பெப்பரை'த்தான் எழுதினேன். நடுவில் அவருக்கு ஒன்றிரண்டு படங்கள் நழுவின. இந்தப் படம் ஒரு விஸ்வரூப எழுச்சி. ஒரு செமியான டார்க் லவ் ஸ்டோரி என்று தொடங்கியதை பல்வேறு தடங்களிலும் நகர்த்தி வாழ்வையும் சொல்லிச் செல்கிறார். ஒரு கதையை இவர் அணுகும் தந்திரங்களைப் புரிந்துகொண்டால், படத்தின் உள்ளூர ஓடுகிற கவிதைகளைப் புரிந்துகொள்ளலாம். ஒரு முத்தம் தரவா என்று மாத்தன் கேட்பதும், அதுக்கு இன்னும் ஆவல என்று அவள் சொல்வதுமான காட்சிக்கு முறைப்படி எப்படி ஷாட் வைப்பார்கள். அபு அப்படியே நைசாக கடந்துபோகிற அந்த லாகவத்தைத்தான் ஸ்டைல் என்றெல்லாம் சொல்லிக்கொள்ள வேண்டும். டைரக்டர் டச்.

படம் முடியும் தருவாயில் மூன்று பெண்களுமாக குடித்து முடித்து கதை பேசி, அழுது, பாட்டெல்லாம் பாடினதற்கு அப்புறம் அபர்ணா மாத்தனின் பால்ய கதையைச் சொல்வாள். மாட்டக்கூடாத ஒரு பொறியில் முழுவதுமாய் சிக்கிக்கொண்டால்தான் உயிர்ப்பிழைப்பின் வாதை எவ்வளவு கொடுமையானது என்று தெரியும். சொல்லப்போனால் மாத்தனின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை முழுவதுமாய்ப் புரிந்துகொண்டவள் அபர்ணா ஒருத்திதான். அவள் வேண்டுமென்றே வெறுக்கவில்லை. வேண்டுமென்றே காட்டிக் கொடுக்கவில்லை. என்ன அலையடித்து விலகினாலும், தாங்கள் இருவரும் சேர்ந்துகொள்ள வேண்டியவர்கள் என்று அவள் நம்புகிறாள்.

எப்போதும் போல, என்றாவது ஒருநாள் முதுகுக்குப் பின்னாலிருந்து அவன் அப்பு என்று கூப்பிட்டு விடுவான் என்று காத்திருக்கிறாள்.

https://cinema.vikatan.com/south-indian-news/134747-malayalam-classic-movies-mayaanadhi.html

Link to comment
Share on other sites

``கார்பன்... ஃபஹத் பாசிலின் எதிர்காலப் பெருமை!" - மலையாள கிளாசிக் - பகுதி 24

 

மலையாள கிளாசிக் தொடரின் 24-வது பகுதி. `கார்பன்' படம் குறித்த விரிவான அலசல்.

``கார்பன்... ஃபஹத் பாசிலின் எதிர்காலப் பெருமை!
 

நாம் வாழும் வாழ்க்கை என்ன என்பதை சால்ஜாப்புகளை எல்லாம் தவிர்த்துவிட்டு இறுதிவரை பார்த்தால், அது வெறும் உயிர் பிழைப்பு என்று மிஞ்சுவதைப் பார்க்கலாம். பலரும் ஓடுகிறார்கள். தாவிக் குதிக்கிறார்கள். வேறு பலரும் மற்றவர்களைச் சரித்துத் தள்ளிவிட்டு அவர்கள் முதுகின் மீது ஏறி வானுக்குப் பறக்கிறார்கள். இதையெல்லாம் வேடிக்கை பார்க்கிற கொஞ்சம் பேருக்கு இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ள முடிவதில்லை. குறுக்கு வழிகளைத் தேடுகிறது மனம். எப்படி உடனடியாய் பெரிய ஆளாவது. சிலர் அதிகாரத்தைக் கைப்பற்றி அரசியலில் பிழைக்கிறார்கள். சிலர் இலக்கியத்துக்கு ஒதுங்கி சமூகத்தை வசை பாடுகிறார்கள். என்னைப்போல பலர் சினிமாவில் எச்சில் பிழைப்பு பிழைத்துக் கொண்டிருப்போம். இதற்கெல்லாம்கூட தயாராகாத `கார்பன்' நாயகன் சிபியைப் போன்றவர்கள் கனவு கண்டிருந்து, பிரமைகளுக்குப் பின்னால் ஓடி, ஒரு காலம் நமக்கும் வந்துவிடும் என்று காத்திருக்கிறார்கள்.

மாணிக்கக் கல்லு, மரகதக் கல்லு, சிவப்புப் பாதரசம் என்று அவற்றுக்கு ஒரு புராதானக் கதையைச் சேர்த்துக்கொண்டு, கோடிகளில் பேசித் திரியும் கூட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒரு நவீனக் கவிஞனைக் காட்டிலும் அவர்கள் வீட்டிலிருந்தும் நாட்டிலிருந்தும் அந்நியப்பட்டிருப்பார்கள். அவர்கள் ஒவ்வொரு விடியலையும் எப்படித்தான் நம்பிக்கையோடு தொடங்குகிறார்கள் என்பதையே சொல்லமுடியாது. சிபி மெள்ள மெள்ள தனக்குள் ஊழலைக் கொண்டு வந்து, தன்னைத் தானே வெறுத்துக் கொள்ளும்படியும் மாறி வருகிறான். காரணம், இவன் எத்தனாயிருக்கும்போது இவன் புழங்கும் இடங்களில் உள்ளவர்கள் எத்தனுக்கு எத்தனாக இருப்பார்கள். கடன், அவமானம், தனிமை, பயமுறுத்தும் கனவுகள். கூட இருந்த நண்பர்கள் எல்லாம் செட்டிலாகிக்கொண்டே இருக்க, அப்போதுதான் அவனுக்கு ஒரு விஷயம் அமைகிறது.

மலையாள கிளாசிக் பகுதி 24 - கார்பன்

 

 

 

சின்ன வேலைதான்.

எங்கோ, தூரத்தில் ஒரு காட்டில் பாழடைந்த வீடு ஒன்று ஒரு முதலாளியால் வாங்கப்பட்டிருக்கிறது. அங்கே போய் இருந்து மெதுவாய் அதை ஒரு டூரிஸ்ட் ரிசார்ட்டாக மாற்றவேண்டும். மாதச் சம்பளத்துக்குத்தான் போகிறான். ஏற்கெனவே பல தொன்மங்களுக்கும் மனசு விட்டு விடுகிற அவன், காட்டில் தலக்காணி என்கிற மலையில் இருக்கிற புதையலைப் பற்றிக் கேள்விப்படுகிறான். திப்பு சுல்தானின் படையெடுப்பு நடந்துகொண்டிருந்த காலத்தில் இப்பகுதி ராஜா திருமலை நாயக்கருடன் பேசி, அம்மலையில் 101 மூட்டை தங்கக் காசுகளை ஒளித்து வைத்ததாகப் பேச்சு. யாருமே பயப்படுகிறார்கள்.

 

 

ஆனால், அப்போது பழக்கமான சமீரா, ஸ்டாலின் மற்றும் ஒரு பழங்குடிப் பையனுடன் சிபி அந்தப் புதையலைக் கைப்பற்றப் புறப்பட்டு விடுகிறான். ஒரு கட்டத்துக்கு மேல் பல விஷயங்கள் நகரவே இல்லை. அவன் மீது அக்கறை கொண்ட சமீராகூட இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்கிறாள். அவ்வளவு அபாயமாக இருக்கிறது காடு. 101 மூட்டைகளைச் சுமந்து சென்ற கூலிகளின் தலையை வெட்டி புதையல் ரகசியத்தைக் காப்பாற்ற திட்டம் போட்டிருக்கிறான், மன்னன். அவற்றின் ஆவிகள் யாரையும் அந்தப் புதையலை எடுக்க விடுவதில்லை. அங்கே போனவர்கள் திரும்பி வந்ததில்லை. இப்படி ஒரு கோணத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது.

 

 

ஆயின், சிபி எடுத்த விஷயத்திலிருந்து பின்வாங்கப் போவதில்லை.

பயணத்துக்குப் போகும் முன், சில பொய்களைச் சொல்லி முதலாளியிடம் பணம் வாங்கி, பொருள்கள் வாங்கிக் கிளம்புகையில் சிபி தனது தந்தையை ஜங்கஷனில் பார்த்தான். அம்மாவுக்கு மருந்து வாங்க வந்திருக்கிறார் அவர். அவரது சிரமங்கள் தெரியவர குற்றவுணர்வுடன் நான் இரண்டு நாள்களில் வந்து விடுகிறேன் என்கிறான் சிபி. வீட்டில் வந்து மிரட்டிய ஒரு தாதாவின் கடனை எல்லாம் அவரே அடைத்து முடித்தது தெரிய வருகிறது. இவனால் ஒரு மகனாய் இருக்க முடியாதது நழுவிக்கொண்டே இருந்திருக்கிறது. அந்தத் தகப்பன் நெஞ்சில் நெருப்புடன் பத்துத் தகப்பனின் பொறுப்பிலிருந்தவாறு இருந்திருக்கிறார். இவனுக்குப் பேச ஏதுமில்லை. காரில் ஏறிய கொஞ்சநேரத்தில் சமீரா இந்த ரிசார்ட் பணிக்கு வந்து எவ்வளவு நாளாயிற்று என்று கேட்கிறாள். ஒன்றரை மாதம். இதற்கு முன் என்ன வேலை செய்துகொண்டிருந்தாய் என்பது அவளது அடுத்த கேள்வி.

கார்பன்

என்ன செய்து கொண்டிருந்தேன்?

தனது இறந்த காலம் என்கிற ஒன்றில் எதுவுமேயில்லை.

இது கடைசி. புதையலுடன்தான் திரும்புவது என்பது அவனுக்குள் உறுதியாகிவிட்டது. எல்லோரையும் மறுத்துப் புறப்படுகிற அவனை, காடு முற்றுகையிடுகிறது. தாகம், முள் குத்துகிறது. பசி கண்களின் விளக்கைப் பல முறையும் அணைக்கிறது. அவன் பிரமைகளின் சுவர்களில் முட்டிக்கொண்டு விழுகிறான். ஏற முடியாத உயரத்தில் ஒரு காட்டுப் பழத்துக்கு உள்நாக்கு காய அலைபாயும்போது, அப்பா அம்மா சகோதரி நண்பர்கள் சமீரா அத்தனை பேரும் நினைவுக்கு வருகிறார்கள்.

சமீரா ரசவாதி புத்தகத்தைப் பற்றிக் கேட்டிருந்தாள். அவன் படித்ததில்லை என்றதற்கு, அந்தக் கதையில் ஒருவன் புதையலைத் தேடி புறப்பட்டதைச் சொல்லி, புதையல் புறப்பட்ட இடத்தில்தான் இருந்தது என்பதைச் சொல்லியிருந்தாள். அவன் உறுதியுடன் கிளம்பிய நேரத்தில், தனது காதலைத் தெரிவிக்கிற ஒரு வாய்ப்பாக வேறு ஒன்றும் சொல்லியிருந்தாள். `உயிரைப் பணயம் வைத்து எந்தக் காரியத்தையும் செய்யாதே. அதற்கு ஈடாக இந்த பூமியில் எந்தப் புதையலும் இல்லை!'.

மழை பொழிகிறது.

மல்லாந்து கிடக்கிற சிபியின் நாவும் நெஞ்சும் மனமும் ஆத்மாவும் குளிர்கின்றன. அவனது தலைக்கு மேலே ஓடுகிற மழைத் தண்ணீரில் தங்கக் காசுகள் இருப்பது தெரிகிறது. தமிழ்நாட்டுப் பக்கம் மலை இறங்குகிறான். அவன் புதையலைப் பார்த்தானா, இல்லையா... பார்த்திருந்தால் அது அவனுக்குத் தேவைப்பட்டதா இல்லையா? - இது படத்தின் முடிவு.

காலத்தைக் காட்டிலும் பெரிய ரசவாதி இல்லை.

வேணு அடிப்படையில் ஓர் ஒளிப்பதிவாளர்.

கார்பன் - மலையாள கிளாசிக் 24

மிகப்பெரிய இயக்குநர்களுடன் பணிபுரிந்தவர். அவரது திறமை எப்போதோ நிரூபிக்கப்பட்ட ஒன்று. கமலின் `குணா' அவர் செய்த படம்தான். இதற்கு முன்னால் நானேகூட எழுதிய `முன்னறியிப்பு' படத்தை இயக்கியவர். அவரது இந்த இரண்டு படங்களிலும் பூடகங்கள் உண்டு. அதற்கு வேண்டிய அடர்த்தியும் ஒரு கருமையும் உண்டு. K.U.மோகனன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஏறக்குறைய படத்தின் முதல் ஹீரோ. படத்தைத் தீர்மானித்தவர் அவரே என்றுகூட சொல்லலாம். வேணு அந்தக் காரணத்தின் பின்னால் இருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். எடிட்டர் பீனா பால். ஒரு நீண்ட புதிர். படத்தில் இருளைக் காட்டியோ, அரூபங்களைக் காட்டியோ மலினமான உத்திகளைக் கையாளாத படத்தில் காட்சிப்படி நாம் பலமுறை திடுக்கிடுவோம். அங்கே ஒரு தடவைகூட நெருடல் வராது. அடுக்குகள் அத்தனை பிரங்ஞை கொண்டவைகளாய் இருந்தன. உண்மையில் அட்வான்ஸ் தொழில்நுட்பம் என்பது இதுதான் என்பது பல மரமண்டைகளுக்குப் புரியாது. அசல் தொழில்நுட்பம் என்பதுவுமே இதுதான்.

பாடல்கள் வேறு தினுசில் இருந்தன என்பதைப் பலரும் கவனித்திருப்போம்.

ஒன்றுகூட அட்டை டப்பா இல்லை.

விஷால் பரத்வாஜ் படத்துடன் கூட வந்திருக்கிறார். ஒவ்வொரு பாட்டுமே ஒரு கதையின் அத்தியாயம். அதை உணர்ச்சிகரமாக இயக்குநர் கொண்டு வரும்போது, இசை அதை எடுத்தியங்குகிறது. கடைசிப் பாட்டு எந்தக் கோணத்திலிருந்து கேட்டாலும், அதில் இளையராஜா இருந்தார். அதுவும் மிகவும் நெருக்கத்தில் அந்தரங்கமாய் எனக்காகப் பாடுவதுபோலக் கேட்டது. குரல்கள் சிலிர்ப்பைக் கொண்டு வந்திருந்தன. பின்னணிக்கு வந்தவர், பிஜிப்பால். அவருமே லேசுப்பட்டவர் இல்லை. அநேகமாக நிறைய எழுதியிருக்கிறேன்.

மம்தா மோகன்தாஸ் குறிப்பிடத்தக்க ஒரு நடிகை. அவருக்கு என்று விசித்திரமான புன்னகைகள் உண்டு. `செல்லுலாயிட்' போன்ற படங்களில் சோகமே உருவாகக் காட்டுகிற முகம், அதற்காகவே படைக்கப்பட்டதா என்று நமக்குத் தோன்றி விடுவதைப் போலவே அவர் எந்தப் பாத்திரத்துக்குள் நுழைந்து அமர்ந்து கொண்டாலும் பொருத்தமான முகத்தை எடுத்து வைப்பவர். இதை எந்தப் பாத்திரத்திலும் சோபிப்பார் என்று கிளிஷேவாகச் சொல்லி முடித்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், இது அது இல்லை. மம்தா இந்தப் படத்தில் கொண்டு வந்த விஷயங்கள் அற்புதமானவை. இத்தனை வலிமையான ஒரு பெண்ணை மிக எளிமையாய் வெளிப்படுத்தச் செய்த அந்த விசேஷத்துக்கு வேணுவையும் பாராட்ட வேண்டும்.

நெடுமுடி வேணு, திலேஷ் போத்தனுமெல்லாம் பின்னுகிறார்கள். சௌபின் சாகிர், விஜய ராகவன், அசோகன் எல்லாம் ஓரிரு காட்சிகள்தாம். ஆயின் நாம் காணாத முகம். யானைக்காரியாய் வந்த பிரவீணாகூட ஒருகணமேனும் திடுக்கிட வைத்துப் போனார். அவரது ஒரு நடை போதும். மற்றும் பலரும் நினைவில் நிற்பவர்கள் என்று கொள்ள வேண்டும்.

கார்பன்

ஃபஹத் ஒரு காவியத்தையே சிருஷ்டி செய்து வெற்றி கண்டிருக்கிறார் என்று சொல்லவேண்டும். வழக்கமாக அவர் நடித்தவாறே வந்த கேரக்டர்களுக்கும் இதற்கும் சிறு அளவில் ஒரு நுட்பமான வேறுபாடுதான். ஆனால், அந்த இடைவெளியைத் தாண்டி குதிக்க முடியாமல் பலரும் அதளபாதாளத்தில் வீழ்ந்திருப்பார்கள். ஒரு திரைக்கதையின் ஆத்மாவை அறிந்தவன் மட்டுமே இப்படத்தின் பல காட்சிகளை நிறைவு செய்திருக்க முடியும். யானைக்கும் எனக்கும் ஒரே வயது என்று பிரவீணா சொல்லும்போது, யானையின் மீதிருந்து விலக்கி பக்கவாட்டில் ஒரு பார்வை அந்தப் பெண்மணியைத் தொட்டுத் திரும்புவது போதாது. புதையலைப் பற்றி எதற்கு சொல்லவில்லை என்று கேட்டு சமீராவின் விழிகள் துளைத்த அடுத்த கணத்தில், சமாதானம் சொல்லும்போது அந்தப் பதற்றத்தில் வெளிப்படுவது அவள் மீதிருந்த காதலாயிருக்கும். எந்த நடிகனால் இதையெல்லாம் சாதிக்க முடியும்.

என்ன சொல்வது... இப்படத்தைப் பற்றி, இதில் ஃபஹத் நடித்துத் தீர்த்தது பற்றிப் பெரிதாக யாரும் எழுதியதாகத் தெரியவில்லை. எல்லாத் திசையிலும் நிறைகிற வெற்றுக் கூச்சல்களில் பல கலைஞர்களின் முகங்கள் பனிப்புகையில் மறைந்தவாறு இருக்கின்றன.

ஆனால், எதிர்காலத்தில் ஃபஹத் பெருமைப்பட்டுக் கொள்ளும்படி வேணு ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்.

மனிதர்கள் புதையலை தேடிச் செல்வது புதிய விஷயமா என்ன. உலகெங்கிலும் இதைப் பற்றிப் பல்வேறு தரப்புடன் ஆயிரமாயிரம் படங்கள் வந்திருக்கும். ரசவாதி உட்பட இலக்கியங்களில் அரைத்திருப்பார்கள். எனினும், வேணு முற்றிலும் வேறு நிறமுள்ள ஒரு திரைக்கதையை எழுதி, வேறு துடிப்புள்ள சினிமாவாய் ஒன்றை நிறுத்திவிட்டார். சிபி அடையும் புதையல் என்ன?

நமக்கு அவன் அப்பாவைத் தெரியும். அம்மாவைத் தெரியும். சகோதரியைத் தெரியும். நண்பர்களைத் தெரியும். சகிக்க முடியாத அவனை ஏற்றுக்கொண்டு அவனது வாழ்வுக்காகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவர்கள். தனக்குள் அவனை முழுமையாக எடுத்துக்கொண்டு விட்ட சமீரா ஒருத்தி போதுமே. அவளது காதலின் நிழலில் அவனது வாழ்க்கை முழுமையடையும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

வாழ்வின் புதையல்கள் எல்லாம் நாம் வாழும் வாழ்க்கையிலேயே இருக்கின்றன. வாழ்வு வெறும் உயிர்பிழைப்பல்ல. நாமும் அப்படிப் பிழைத்துக்கொண்டு, மற்றவர் வாழ்வையும் அப்படி இருக்க வைக்கிற நோக்கிலிருந்து விடுபடாத வரையில் நாம் வாழ்கிற இந்த வாழ்க்கையே பீதியுடன் காட்டில் அலைவதுதான்.

https://cinema.vikatan.com/south-indian-news/135381-malayala-classic-series-part-24-carbon-movie.html

Link to comment
Share on other sites

``சுடானி ஃப்ரம் நைஜீரியா... குடல் அழைக்கும் பசியை மறக்க பந்தாட்டம் பழகினவன் கதை!" - மலையாள கிளாசிக் - 25

 
 

மலையாள கிளாசிக் தொடரின் 25-வது பகுதி. `சுடானி ஃப்ரம் நைஜீரியா' படம் குறித்த விரிவான அலசல்.

``சுடானி ஃப்ரம் நைஜீரியா... குடல் அழைக்கும் பசியை மறக்க பந்தாட்டம் பழகினவன் கதை!
 

கேரளாவில் கால் பந்துக்கு ரசிகர்கள் அதிகம். ஒவ்வோர் ஊரிலும் ஒரு மைதானம் அமைந்து விடுவதும், பையன்கள் குழுக்கள் சேர்ந்து விடுவதும், போட்டிகள் நடத்தப்படுவதுமான சூழல் அங்கே தொடர்ந்து வருகிறது. 'சுடானி ஃப்ரம் நைஜீரியா' கால்பந்தாட்டத்தைப் பற்றி பேசுகிற படமில்லை என்றபோதிலும், கதை அங்கிருந்துதான் புறப்படுகிறது. மலப்புறம் ஜில்லாவில், உள்ளுர இருக்கிற கிராமம். அங்கே இருக்கிற ஒரு கால்பந்தாட்டக் குழு. மஜீத்தான் மேனேஜராய் இருந்து அக்குழுவைப் பார்த்துக் கொள்கிறான், போட்டிகளில் ஈடுபடுத்தி எல்லோருக்கும் ஓரளவு பணத்தைக் கொடுக்கிறான். வெளிநாடுகளில் இருந்தும்கூட அவன் நல்ல ஆட்டக்காரர்களைக் கொண்டு வருவதுண்டு. அப்படி நைஜீரியாவிலிருந்து விளையாட வந்த சாமுவேல் என்கிற கருப்பனுக்குக் காலில் அடிபட்டுவிட, அது ஒரு மாதம் ஓய்வு தேவைப்படுகிற சிகிச்சை என்பதால், மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து மஜீத் தனது வீட்டில் வைத்துப் பார்க்கக் கொண்டு வருகிறான். படத்தின் உயிர் இதைச் சுற்றித்தான் சுழல்கிறது.

சுடானி ஃப்ரம் நைஜீரியா

 

 

 

மஜீத்துடன் அவளது உம்மா மட்டுமே இருக்கிறாள். நமது முதல் பார்வையில் அவர்களுடைய கனிவு நமக்குப் பிடிபட்டு விடும். அவர்களைக் கல்யாணம் செய்த இரண்டாம் கணவர் வந்துவிட்டுப் போவது மஜீத்துக்கு இஷ்டமில்லை. அம்மாவிடமேகூட முகம் பார்த்துப் பேசுவதில்லை. ஆனால், அம்மாவின் அன்பு சாமுவேல் என்கிற சுடானிக்குக் கிடைக்கத் தொடங்குகிறது. அம்மாவின் தோழி, அண்டை வீட்டுக்காரி, வேறு ஒரு முதியவளுமாகச் சுடானியைப் பொண்னுபோலப் பார்த்துக்கொள்கிறார்கள். அவனைப் போஷித்து, பசியில்லாமல் பார்த்துக்கொண்டு, பராமரிப்பதில் அவர்களுக்கு முழுமையான மன நிறைவு. அவனது மொழி அவர்களுக்கோ, அவர்களின் மொழி அவனுக்கோ கடுகளவில் சம்பந்தமில்லை. ஆனால், அன்புக்கு எதுதான் அடைக்கும் தாழ். அவனைப் பற்றிய சந்தேகங்களைத் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது, எது என்னவானாலும் அவன் சிரிப்பது மிகவும் அழகாய் இருக்கிறது என்று அவர்கள் மகிழ்ந்து கொள்கிறார்கள். பையன்கள் வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள். புதுமணப் பெண் ஒருத்தி தனது புருஷனுடன் வந்து செல்ஃபி எடுத்துக்கொண்டு போகிறாள். தனது பசுவுடன் வருகிற நாயர் களரி டெமோ செய்து அவனுக்குப் பொழுதுபோக்கு காட்டிவிட்டுப் போகிறார். சுடானி தேறி வருகிறான்.

 

 

இதற்கிடையில் எதிர் குழுவினரிடம் சுடானி ஒரு தொகை வாங்கிவிட்டான் என்பது அறிந்து, மஜீத் வெறுப்படைகிறான். அவனைத் தனது வீட்டுக்குள் இனிமேல் வைத்துக்கொள்ள முடியாது என்று சாமியாடுகிறான். அவனிடமே உனக்குச் சோறு போட்டு, மலம் அள்ளி எறிந்து, தேவையானதை எல்லாம் செய்து கொடுத்தால், எதிரியிடம் காசு வாங்குவாயா.. நீ அவர்களிடமே போய் விடு என்றெல்லாம் முறுக்கிக் கொள்கிறான். ஆனால், கிழவிகள் இருவரும் சம்மதிக்கவில்லை. அவனை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று மஜீத்தை மீறுகிறார்கள். ஒரு கட்டத்தில் மஜீத்துக்குப் புரிகிறது. வருத்தப்படவும் செய்கிறான். அவனைத் தேற்றவும் முடிகிறது. பணப் பிரச்னைகள் எங்கேயும் உள்ளதுதானே. அது மனிதர்களைத் துண்டாடும். அவமானப்படுத்தும். என்ன வந்து என்ன போனாலும், இல்லாதவர்கள்தாம்  இல்லாதவர்களுக்கு ஆறுதலாய் இருக்க முடியும். நாம் நமது சங்கடங்களைப் பங்கு வைத்துக்கொள்ள முடியாதா. சுடானிக்குத் தங்கை ஒருத்தி இருக்கிறாள். 

அவளைப் பார்த்துக்கொள்ள வயதான ஒரு பாட்டி மட்டுமே உண்டு.

நாகரிகமடைந்ததாகக் கூறப்படும் இந்த மனித சமூகத்திலிருந்து தரித்திரமும் வறுமையும் விட்டுப்போகவில்லை. பசித்த குழந்தைகள் அண்ணாந்திருக்கிற வானில்தான், ஏவுகணைகளும் விஞ்ஞானமும் தனது பெருமைகளைப் பீத்திப் போகிறது. உள்நாட்டுப் போரும், பஞ்சமும் மனிதர்களைக் காவு கொண்டிருக்கிற ஒரு நிலப்பரப்பிலிருந்து கிளம்பி வந்தவன், சுடானி. அவன் விளையாடுவது ஹாபியல்ல, விளையாட்டின் மீதிருக்கிற வேட்கை அல்ல, குடல்களிலிருந்து அழைக்கிற பசியை மறக்க பந்தாட்டம் பழகினவன் இப்போது வெறும் காசு கிடைக்கும் என்பதற்காகவே விளையாட வந்திருக்கிறான். இப்படிப் படுத்துக் கிடக்க முடியாது. காசு வேண்டும். ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதையெல்லாம் பெரிய விவரிப்பெல்லாம் தேவைப்படாமல் மஜீத் புரிந்துகொள்கிறான். மற்றும் பலருமே கூட!.

 

 

அரசாங்க வழி சிக்கல்கள் வருகின்றன.

அதை பாடுபட்டுத் தீர்த்துக் கொண்டிருக்கும்போதே, சுடானியின் பாட்டி இறந்துவிட்டாள் என்கிற தகவல்.

சுடானி நான் கிளம்பியே ஆகவேண்டும் என்கிறான். தங்கையைப் பார்த்துக்கொள்ள வேண்டுமில்லையா.

சுடானி ஃப்ரம் நைஜீரியா

இப்படியாக வரும் இடர்களையெல்லாம் தாண்டி மஜீத்தும் அவனது குழுவினரும் அவனை அவனது ஊருக்கு அனுப்பி வைப்பது க்ளைமாக்ஸ்.

மஜீத் ஒரு குழுவினரின் மேனேஜர்தான். அந்தத் தொழிலை சொன்னால் அவனுக்குப் பெண்கூட கொடுக்கமாட்டார்கள். ஒருமுறை சுடானி மஜித்தின் அப்பாவைப் பற்றிப் பேச முயற்சி செய்யும்போது, அம்மாவின் கல்யாணம் முடிந்தபோது தான் தனிமைப்பட்டதைச் சொல்வான் மஜீத். பலரும் கிண்டல் செய்து கூனிக்குறுகி நின்றதைச் சொல்வான். பன்னிரண்டாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பு முடிந்துபோனதற்கு அதுதான் காரணமாய் இருந்திருக்கும். ஃபெயிலாகித்தான் படிப்பை விட்டேன் என்று பார்க்கப்போன பெண்ணிடம் சொல்லும்போது, அவள் ஸாரி என்று அசால்டாக நிராகரிப்பது இன்றும் அந்த அவலம் அவனைத் தொடர்கிறது என்பதைக் குறிக்கிறது. அவனுக்குப் பெரிய வருமானமில்லை. சொல்லக்கூடிய நல்ல வாழ்க்கைகூட இன்னும் அமையவில்லை. ஆனால், எல்லாச் சுமைகளையும் தாங்கிக்கொண்டு அவன் சுடானிக்குப் பயண ஏற்பாடுகள் செய்து அனுப்பி வைக்கிறான். இருவரும் கட்டியணைத்துக் கொள்கிறார்கள்.

அவன் பறந்துவிட்ட பிறகு திரும்புகிற மஜீத், ஒரு ATM முன்னால் செக்யூரிட்டியாய் அமர்ந்து பாதி உறக்கத்தில் இருக்கிற முதியவரிடம் சலாம் அலெக்கும் சொல்கிறான். அவர்தான். இவன் வந்ததுமே, இவனது கோபத்தை உணர்ந்து கொண்டதுமே வீட்டை விட்டுப் புறப்பட்டு விடக் கூடியவர்; தள்ளாத வயதில் இவனுக்காகத் தனிமையாய் இருப்பவர்; இவனால் ஏறிட்டுக்கூடப் பார்க்க முடியாத புறக்கணிப்பைச் சுமந்து கொண்டிருந்தவர்; இவனது இரண்டாம் தகப்பன். சுடானியின் பிரிவு அவனை என்னவோ சிந்திக்க வைத்திருக்கிறது. சுடானியின் பிரிவுக்குக் கலங்கிய உம்மாக்களின் பாசம் அவனது நெஞ்சினுள் குழைந்திருக்க வேண்டும். அவரை வண்டியில் ஏற்றிக்கொள்கிறான். அவரைத் தனது அம்மாவிடம் கொண்டு வந்து ஒப்படைக்கிறான். என்ன வேண்டும் என்று கேட்டு சாப்பிட வையுங்கள் என்று கூறிவிட்டு, ஆசுவாசமாக ஹாலில் அமர்கிறான். படம் முடிகிறது.

இந்தப் படத்தில் சுடானி ஜெயித்துவிடவில்லை, மஜீத் ஜெயித்து விடவில்லை. மனித சிநேகம் பொருள் பெற்றிருக்கிறது. எங்கேயுமே உணர்ச்சிவசப்பட்டு விடாமல் மனிதனின் இயல்பான நெகிழ்வை மிகவும் பெருமிதத்துடன் சொல்லி ஒதுங்கி நிற்கிற படம். ஒரு பெரிய அதிசயம் என்னவென்றால், படத்தில் காதல் இல்லை. இளம்பெண்கள் கூட இல்லை. முன்னமே சொன்னதுதான், ஹீரோவுக்கு ஒரு கல்யாணம்கூட இல்லை. அன்றாடம் நம்முடன் புழங்கக்கூடிய எளிய மனிதர்கள் படமெங்கிலும் இருக்கிறார்கள். உம்மாக்கள். அதைப் பற்றி நான் எவ்வளவு எழுதினாலும் அது அவர்களை சரியாகச் சொன்னதாய் இருக்காது. புன்னகை அரசிகள். நெஞ்சு முழுக்க சிநேகம் கொண்டு நடக்கிற வெறும் அம்மாக்கள். கண்களில் மகனை அள்ளுகிற அதே பெண்மணி, சுடானியையும் அப்படியே எடுத்துக்கொள்கிறாள். சொல்லப்போனால், படம் பார்த்தவர்கள் எல்லோருமே ஒன்றைக் கவனித்திருப்பார்கள். சுடானியின் புன்னகையையும் அவனது மனதையும் அறிந்துகொண்டு, நாமே அவனை அவ்வளவு விரும்புவோம். அப்படி ஒரு தேர்வு. அப்படி ஒரு நடிப்பு. கறுப்பன், பின்னியிருக்கிறான்.

மலையாள கிளாசிக்

பெங்குயின் நடை. தொண்டையை விட்டு வெளியே வரத் தயங்கும் வார்த்தைகள். ஒடுங்கிய கண்களில் சிறிய பயம். மஜித்தின் அப்பாவாக வருகிற அவரது சிறிய சிரிப்பைக் காலமெல்லாம் மறக்க முடியாது. அபாரமான நடிகர். பெரிய இலக்கியவாதிகள் இயக்குநர்களுடன் இருந்திருக்கிறார். பேட்டிகளில் அறிவுப்பூர்வமாகப் பேசுகிறார். வெள்ளந்தியாய் வந்து இருந்து நம்மைக் கசக்கியவர் என்பதை நம்ப முடியவில்லை. நாடக அனுபவங்கள் உள்ளவர். நடிப்பைப் பற்றிய தீர்மானங்கள் உள்ளவர் என்பது வியப்பாகவே உள்ளது. என்ன மாதிரியான கதாபாத்திரம் என்று அவரால் மட்டுமே திரைக்கதையைக் கொண்டாட முடியும்.

சௌபின் ஷாகிர்தான், மஜீத். ஒரு பாத்திரத்தைக் கடந்து அவர் அதிகப் பிரசங்கித்தனம் செய்ததே இல்லை. இன்னும் நோக்கினால், அவர் என்ன தேவையோ அதைச் சொல்லியிருப்பார். ஆனால், அது நகைச்சுவையாக வெடித்து அத்தனைபேரையும் சிரிக்க வைக்கிற அதிசயம் நிகழும். அவருக்கு இணையாக எவரும் இல்லை. ராஜீவ் ரவியின் படத்தில் சட்டென ஓர் அடியாளாய் வந்து காலை உயர்த்தி வீசும்போது, அவரது முகம் அடியாள் தெறிப்புதான். இப்படத்தில் ஓர் அல்ப சொல்ப பந்தாட்டக் குழு மேனேஜர். அதில்தான் எவ்வளவு சரளம். பிடிக்காத தந்தை வீட்டில் இருப்பதைப் பார்த்து பேச்சுலர்ஸ் அறைக்குச் சென்று படுக்கும்போதும் சரி, மறுநாள் வீட்டுக்குள் போக வந்து, அப்படியே பக்கத்து வீட்டுப் பக்கம் சென்று கட்டன் சாயா வாங்கிக் குடிக்கும்போதும் சரி... அந்த சகஜத்தில் அவருக்குள் இருக்கிற நெருடலை எப்படி அறிகிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும். உனக்குப் புரியாது என்பதால்தான் சொன்னேன், எனது திருப்திக்காக என்று சுடானியிடம் சிரித்துவிட்டுப் போகிற காட்சி ஒன்றிருக்கிறது, போதும். ஒரு நடிகனுக்கு அதிகம்.

ஷைஜு கலீத் படத்தின் ஒளிப்பதிவாளர். படத்தின் உள்ளடக்கமான நேர்மையைப் புரிந்துகொண்ட வேலை. எங்கேயும் தனது திறமையை வெளிக்காட்ட மும்முரம் கொள்ளவில்லை. ஜனங்கள் கூடியிருக்கிற கால்பந்தாட்ட மைதானங்களில்கூட படத்தின் பங்கையே முன்வைக்கிறார். பாடல்களும் படத்துடன் பொருந்தியவை. பின்னணி இசை கண்ணியத்துடன் அடங்கியிருந்தது. ஒரு நல்ல படத்தில் எல்லாத் தொழில்நுட்பங்களும் படிந்து அது நல்ல படமாகவே நீடிப்பதற்கு முதலில் இயக்குநரைத்தான் சுட்ட முடியும். வரும் காலத்தில் முக்கியமான ஒரு படைப்பாளியாக இருக்கப்போகிறவர் அவர். சில விஷயங்களைச் சொல்லவேண்டும்.

சுடானி ஃப்ரம் நைஜீரியா

சுரண்டித் தின்பவர்களும், அதிகாரத்துக்கு அலைபவர்களும் மக்களைப் பிளவுபடுத்தும் காலம் இது. மக்கள் தங்களுடைய அடையாளத்துக்காக, ஒருவேளை பாதுகாப்புக்காகவும் குழுக்களாக ஒதுங்கிக்கொள்கின்றனர். எப்போதும் இல்லாத அளவுக்கு துண்டுபட்டுவிட்ட கண்டங்கள் போலான மக்களை விரட்டி வீழ்த்தி, ஜனநாயகத்தைத் தள்ளி நிறுத்துவதன் மூலம் வருகிற விளைச்சலை அறுவடை செய்கிற கூட்டம்தான் மக்களுக்கான நீதிகளைத் தீர்மானிக்கிறது. அப்படிப்பட்ட இந்தக் கொடிய காலத்தில் மனிதனுக்கு மனிதன் ஊரும், உறவும், குடும்பமுமாய் பின்னிப் பிணைந்து வாழ்கிற வாழ்க்கையை எடுத்துச் சொல்லி, தங்களை ஊன்றிக் கொள்கிற பொறுப்பு மக்களுக்குத்தான் உண்டு. இந்தப் படம் அதுதான். இனம், மொழி, மாநிலம், தேசம் என்பதெல்லாம் கற்பிதங்கள் மட்டுமே. யாருமே யாரையும் அன்பு கொள்ள முடியும். அவன் நைஜீரியாவிலிருந்து வந்தவனாய் இருந்தால் என்ன... அவன் கறுப்பனாக இருந்தாலுமென்ன... மலப்புறத்தில் இருக்கக்கூடிய அந்தச் சிறிய முஸ்லிம் கிராமத்து மக்கள் காலம் முழுவதும் மறக்க முடியாத அன்பை ஏந்தியபடி சூடானியைத் தனது நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். இப்படி ஒரு படத்தை, நம்மை சூழ்கிற பிரிவினைக்கு எதிரான கலகம் நிரம்பிய படமாகத்தான் நான் கருதுகிறேன்.

தனது முதல் படமாக இதை எழுதி இயக்கி, நமக்கு வழங்கிய சக்கரியா முஹமதுக்கு நமது அன்பு.

https://cinema.vikatan.com/south-indian-news/136006-malayala-classic-series-part-25-sudani-from-nigeria-movie.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு படத்துக்கும் நல்ல விமர்சனங்கள்.......!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.