Jump to content

ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே!


Recommended Posts

ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே!

 

 
anadha_puungatru_then_sinthuthe1

 

"ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே'' என்ற தலைப்பில் நான் எழுதிய திரைப்படப் பாடல்கள் பற்றியும் அவற்றை எழுதும்போது நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் அதுபோன்று பல கவிஞர்களுக்கு நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் இந்தக் கட்டுரைத் தொடரில் தொகுத்துச் சொல்ல இருக்கிறேன்.

"ஆனந்தத் தேன்காற்றுத் தாலாட்டுதே
அலைபாயுதே மனம் ஏங்குதே
ஆசைக் காதலிலே''

இந்தப் பாடல் "மணிப்பூர் மாமியார்' என்ற படத்திற்கு நான் எழுதிய பாடல்தான். இதுவும்  பிரபலமான பாடல். ஆனால் படம் வெளிவரவில்லை. பாடல் இசைத்தட்டாக வெளிவந்து பிரபலம் ஆனது. இசைச்சித்தர் சி.எஸ்.ஜெயராமன் பாணியில்  மலேசிய வாசுதேவனும், சைலஜாவும் பாடியது.

1500 பாடல்களுக்குமேல் படங்களில் எழுதியிருக்கிறேன். அதில் நூற்றுக்கு மேற்பட்ட பாடல்கள் மிகவும் பிரபலமானவை. அதனால் இத் தொடரின் மூலம் உங்களுடன் என் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வேன் என்று எண்ணுகிறேன்.


சொற்பொழிவு வாளை சுழற்றத் தெரியாதவன் அரசியல் மேடையை அலங்கரிக்க முடியாது. எழுத்தாயுதங்களை எடுத்தாளத் தெரியாதவன் பத்திரிகைக் களத்தில் பவனி வர முடியாது. மெட்டுக்குப் பாட்டெழுதும் ஆற்றல் இல்லாதவர்கள் திரைப்பாட்டு உலகில் நிலைத்து நிற்க முடியாது. இத்தகு ஆற்றல் ஓரளவு உள்ளவர்களில் நானும் ஒருவன்.

நான் பாட்டுத்தேரில் பவனி வருவதற்குப் பச்சைக்கொடி காட்டியவர் கதாசிரியர் பாலமுருகன். இவர் "பட்டிக்காடா பட்டணமா', "ராமன் எத்தனை ராமனடி', "எங்கள் தங்கராஜா', "வசந்த மாளிகை' போன்ற நடிகர் திலகம் சிவாஜி நடித்த பல படங்களுக்குக் கதை வசனம் எழுதியவர்.

ஆனால் என் தேருக்கான சக்கரங்களை வலிவுள்ளதாக்கி நான் சென்று கொண்டிருந்த ஒற்றையடிப் பாதையை ராஜபாட்டையாக மாற்றிக் கொடுத்தவர் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.

பாலமுருகனும் இயக்குநர் மாதவனும் என்னைப் படத்துறைக்கு அறிமுகப்படுத்தினர். எம்.ஜி.ஆர். அத்துறையில் என்னை வளர்த்துவிட்டார். என் பாட்டுப் பயணச் சந்திப்புகள் பற்றிக் கூறத்தொடங்குமுன் எனது பயணம் எங்கிருந்து ஆரம்பமானது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

ஆண்டுக்குச் சிலமுறையேனும் ஆகாயத்தில் கருமேகங்கள் தென்படுகிறதா என அண்ணாந்து பார்க்கும் மாவட்டம் எங்கள் சிவகங்கை மாவட்டம். சாயம் பூசாமலே உதடுகள் சிவந்திருக்கும் பெண்களைப் போலே வண்ணம் பூசாமலே மண்ணெல்லாம் சிவப்பு மயமாகக் காட்சியளிக்கும் சீமை சிவகங்கைச்சீமை.

அந்தச் சிவகங்கைக்கு அருகில் தீப்பெட்டியை உரசாமலே தீப்பிடித்துக் கொள்ளும் அக்கினிப் பிரதேசங்கள் உண்டு. அதற்குக் கிராமங்கள் என்று பெயர். அங்கே கோடைகாலத்தில் நெருப்புப் பெட்டி தேவையில்லை. காய்ந்த சருகுகளை வெயிலில் போட்டாலே போதும் தானாகத் தீப்பற்றிக் கொள்ளும். அந்த அளவு கந்தக பூமி.

அப்படிப்பட்ட கிராமங்களில் "கடம்பங்குடி' என்பதும் ஒன்று. அங்கே இந்தியத் திருநாட்டில் சுதந்திர தீபம் தோன்றுவதற்கு ஐந்து இளவேனிலுக்கு முன் அவதரித்தவன் நான். என் தாய் பெயர் குஞ்சரம். தந்தை பெயர் சுப்பையா சேர்வை.

சிறுவயதிலேயே கவிதை உணர்வு எனக்குள் இருந்ததை என் எட்டு வயதில் உணர்ந்தேன். என் தம்பி, தங்கைக்கு என் தாய் பாடிய தாலாட்டைக் கேட்டுத்தான் எனக்குக் கவிதை உணர்ச்சியே ஏற்பட்டது.

சிற்றூர்ப் புறங்களில் எழுதப்படிக்கத் தெரியாத தாய்மார்கள் பாடுகிறார்களே தாலாட்டுப் பாடல்கள். அதற்கு இணையான கவிதை இலக்கியங்கள் உலக மொழிகளில் இருக்காது என்பது என் கருத்து.

"மல்லிகையால் தொட்டில் இட்டா
 எம்புள்ளே மேலே
 வண்டுவந்து மொய்க்கு மின்னு
 மாணிக்கத்தால் தொட்டிலிட்டா
 எம் புள்ளையோட
 மேனியெல்லாம் நோகுமின்னு
 வயிரத்திலே தொட்டிலிட்டா
 வானிலுள்ள
 நட்சத்திரம் ஏங்குமின்னு
 நெஞ்சத்திலே தொட்டிலிட்டேன்
 நித்திலமே நீயுறங்கு
 பொன்னே உறங்கு பூமரத்து வண்டுறங்கு
 கண்ணே உறங்கு கானகத்துச் செண்டுறங்கு''
என்று என் தாய் பாடுவார்.

இதைக் கேட்கும் காலத்தில் எனக்கு வயது எட்டு. இதைப்போல நானும் குளத்தைப் பார்க்கையில், அலையைப் பார்க்கையில், கொக்கு, குருவிகளைப் பார்க்கையில் அன்றிலைப் பார்க்கையில் (இன்றைக்கு அன்றில் என்ற பறவை இனமே அழிந்து போய்விட்டது) பனைமரங்களைப் பார்க்கையில் நானே இட்டுக்கட்டி ஏதாவது பாடிக்கொண்டிருப்பேன். இப்படித்தான் சிறுவயதில் பாட்டுணர்ச்சி எனக்கு ஏற்பட்டது.

நான் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது கம்பராமாயணத்தின் சில பாடல்கள் மனப்பாடப் பகுதியாக இருந்தன. அவை படிக்கப் படிக்கச் சுவையாக இருந்தன. இதுவே இப்படிச் சுவை தருமானால் கம்பராமாயணம் முழுவதும் படித்தால் எப்படி இருக்கும் என்று நூலகத்திற்குச் சென்று படிக்கத் தொடங்கி கம்பராமாயணம் முழுவதையும் படித்துவிட்டேன்.

ஆரம்பத்தில் பொருள் தெரிந்து படிக்கவில்லை. சொல்லோசை தரும் இன்பத்தால் ஈர்க்கப்பட்டுப் படித்தேன். அதன் பிறகுதான் பொருளுணர்ந்து படித்தேன். கம்பராமாயணம்,சிலப்பதிகாரம் ஆகிய இலக்கியங்களைப் படித்த பிறகுதான் பாரதியார், பாரதிதாசன் கவிதைகளைப் படிக்கத் தொடங்கினேன்.

என் தாய் பாடிய தாலாட்டுக்குப் பிறகு எனக்குள் கவிதை உணர்வை அதிகம் ஊட்டியது கம்பராமாயணம்தான். அதில் முந்நூறு பாடல்கள் அப்போதே மனப்பாடமாகத் தெரியும்.

நான் திரைப்படங்களுக்குப் பாடல் எழுத வந்தபோது "ஆயிரம் கண்ணுடையாள்' என்ற படத்திற்கு ஒரு தாலாட்டுப் பாடலை என் தாயார் பாடிய கருத்திலே எழுதியிருந்தேன். நாட்டியப் பேரொளி பத்மினி பாடுவதுபோல் அக்காட்சி இடம்பெற்றது.

"வைகைக்கரை மீனாட்சியோ
 வாசல் வந்த காமாட்சியோ
 தெக்குச் சீமைக் காத்து வந்து
 தொட்டில் கட்டித் தாலாட்டுது''

என்று ஆரம்பமாகும். இந்தப் பாடலின் சரணத்திலேதான் என் தாயார் பாடிய கருத்தை இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் போட்ட மெட்டுக்கேற்பக் கொஞ்சம் மாற்றி எழுதினேன்.

"மல்லிகையால் மெத்தையிட்டா
 வண்டுவந்து மொய்க்குமின்னு
 மாணிக்கத்தால் மெத்தையிட்டா
 மேனியெல்லாம் நோகுமின்னு
 வைரங்களால் மெத்தையிட்டா
 நட்சத்திரம் ஏங்குமின்னு
 நெஞ்சத்திலே மெத்தையிட்டேன்
 நீலக்குயில் நீ தூங்கம்மா''
என்று எழுதினேன்.

ஏவி.எம். ஸ்டுடியோவில் உள்ள பாடல் ஒலிப்பதிவுக் கூடத்தில் பாடல் ஒலிப்பதிவு ஆகும்போது டைரக்டர் கே. சங்கர், "தயாரிப்பாளர் ஏதோ வார்த்தையை மாற்றச் சொல்கிறார் என்னவென்று கேள்' என்றார்.

உடனே தயாரிப்பாளர், "படத்தின் முதல் ரீலிலேயே இந்தப் பாடல் வருகிறது. இதுதான் படத்தின் முதல் பாடல். எடுத்த உடனே "நீ தூங்கம்மா'' என்று பாடினால் படமே தூங்கிவிடும். ஆகவே ஆடம்மா, ஓடம்மா என்று மாற்றலாமா' என்றார்.

 

 

"தூங்க வைப்பதற்குத்தான் தாலாட்டுப் பாடல். எழுந்து ஆடவைப்பதற்கு யாராவது தாலாட்டுப் பாடல் பாடுவார்களா? அல்லது ஓடவைப்பதற்குத்தான் பாடுவார்களா?

"தூங்கம்மா என்ற வரி வந்தால் படம் தூங்கிப் போய்விடும் என்கிறீர்கள். ஓடம்மா என்ற வரி வந்தால் தியேட்டரை விட்டுப் படம் சீக்கிரம் ஓடம்மா என்று சொல்வதுபோல் ஆகிவிடாதா?' என்று கேட்டேன்.

"அப்படியென்றால் ஆடம்மா' என்று போடலாமே என்றார். சரி, பணம் போடுபவர் சொல்கிறார். அவர் நம்பிக்கையை ஏன் கெடுக்க வேண்டும் என்று "நீ ஆடம்மா'' என்று மாற்றி எழுதினேன். வாணி ஜெயராம்தான் இந்தப் பாடலைப் பாடினார்.

தயாரிப்பாளர் சென்டிமென்ட்படி படம் தியேட்டரில் அதிக நாள் ஆடியிருக்க வேண்டுமல்லவா? இல்லை. இரண்டே வாரத்தில் பெட்டிக்குள் ஆடிச் சுருண்டு விழுந்துவிட்டது. இதுதான் சினிமா சென்டிமென்ட். எதிலும் ஓரளவிற்குத்தான் சென்டிமென்ட் பார்க்க வேண்டும். இது சினிமாவுக்கு மட்டுமல்ல எல்லாவற்றுக்கும்தான்.

kavignar_muthulingam.jpg

கவிஞர் முத்துலிங்கம்

 

(இன்னும் தவழும்)

 

http://www.dinamani.com

 

Link to comment
Share on other sites

 

ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே- 2!

 

 
anadha_puungatru_then_sinthuthe1

 

சிவகங்கை அரசர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதிவகுப்பு வரை பயின்றேன்.
படிக்கின்ற காலத்திலேயே யாப்பிலக்கணத்தை வழுவறக்கற்று கவிதைகள் எழுதத் தொடங்கினேன். நான் பத்தாம் வகுப்புப் படிக்கும்போது என் முதல் கவிதையை தனது "இலக்கியம்' என்ற கவிதை ஏட்டில் வெளியிட்டு என்னைக் கவிஞனென்று முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் உவமைக் கவிஞர் சுரதாதான். "முகிலே முகிலே கருத்த முகிலே மாமழை பொழியும் மாண்புடை முகிலே'' என்று தொடங்கும் நேரிசை ஆசிரியப்பாதான் நான் எழுதிய முதல் கவிதை.
அந்நாளில் கண்ணதாசன் "தென்றல்' பத்திரிகையில் வெண்பாப் போட்டி நடத்தியதைப்போல் சுரதா, இலக்கியம் என்ற பத்திரிகையில் குறள்வெண்பாப் போட்டி நடத்தினார். அந்தக் குறள்வெண்பாப் போட்டிக்கான கேள்வி இதுதான். பறக்கும் நாவற் பழமெது கூறுக?
"திறக்கின்ற தேன்மலரைத் தேடிவரும் வண்டே
 பறக்கின்ற நாவற் பழம்''
- இது நான் எழுதிய குறள் வெண்பா. இதற்குத்தான் முதல் பரிசு கிடைத்தது.
 இப்படி என் கவிதை ஆற்றலைப் படிக்கின்ற காலத்திலேயே வளர்த்துக் கொண்டேன். படிக்கின்ற காலத்தில் நான் எழுதிய கவிதைகளை "வெண்ணிலா' என்ற பெயரில் படிப்பு முடிந்தபிறகு புத்தகமாகக் கொண்டு வந்தேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்தான் அதற்கு முன்னுரை கொடுத்தார். 1960-இல் இப்புத்தகம் வெளிவந்தது. அப்போது எனக்கு வயது பதினெட்டு.
 1958-இல் "நாடோடி மன்னன்' படம் வெளிவந்த நேரத்தில் அந்தப் படத்தைப் பற்றி கவிஞர் சுரதா வெண்பாப் போட்டி ஒன்றை நடத்தினார். "கனிப் பந்து'' என்ற சொல் அதில் வரவேண்டும் என்று கட்டளை இட்டிருந்தார். நானும் ஒரு வெண்பா அனுப்பினேன்.
 "நாடோடி மன்னன் போல் நல்ல திரைப்படமும்
  ஓடோடி வாரா உயர்தமிழில் - மூடா கேள்
  உண்ண இனிக்கும் கனிப்பந்து நற்படமோ
  எண்ண இனிக்கும் எழில்''
 பத்திரிகையில் இந்த வெண்பா வெளிவந்ததும் நண்பர்கள் எனக்குத் திரைப்பட ஆசையை மூட்டினர். நாடோடி மன்னனைப் பற்றி நீ எழுதியதை எம்.ஜி.ஆர். பார்த்திருப்பார். சுரதாவிடம் சொல்லி எம்.ஜி.ஆரை அறிமுகப்படுத்திக் கொண்டால் நீயும் படத்திற்குப் பாடல் எழுதலாம் என்ற ஆசையை என்னுள் விதைத்தனர்.
 என்னைப் போல் வெண்பா எழுதிய மற்றவர்களும் இதுபோல்தானே நினைத்திருப்பார்கள் என்பதை நானும் நினைத்துப் பார்க்கவில்லை. நண்பர்களும் நினைத்துப் பார்க்கவில்லை. அறிந்தும் அறியாத வயதல்லவா?
 படத்திற்குப் பாடல் எழுதுவது அவ்வளவு சுலபமல்ல என்பது அவர்களுக்கும் தெரியவில்லை. எனக்கும் அப்போது புரியவில்லை. அந்த ஆசையில் சென்னைக்கு ஓடி வந்து இங்கு எதுவும் புரியாததால் மறுநாளே ஊருக்குப் போய்விட்டேன்.
 நடிகர் திலகம் சிவாஜி, பானுமதி நடித்த "அம்பிகாபதி' படம் சிவகங்கையில் வெளியானது. ஒருமுறை அந்தப் படத்தைப் பார்த்த எனக்கு அதில் வரும் இனிமையான பாடல்களுக்காகவே திரும்பத் திரும்பப் பார்க்கும் எண்ணம் ஏற்பட்டது. அப்படிப் பத்துமுறை பார்த்துப் பரவசம் அடைந்தேன்.
 அதற்குமுன் எம்.ஜி.ஆர். நடித்த படங்களைத் தவிர வேறு படங்களைப் பலமுறை பார்க்கும் விருப்பம் ஏற்பட்டதில்லை. ஆனால் அம்பிகாபதி படத்தைப் பாடலுக்காகவும் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை சிவாஜியின் நடிப்பிற்காகவும், வசனத்திற்காகவும் பலமுறை பார்த்தேன்.
 இப்போது வருகிற பல படங்கள் ஒருமுறை கூட முழுதாகப் பார்க்கும் தகுதிகள் இல்லாமல் இருக்கின்றன. அன்றைக்குப் படங்களும் நன்றாக இருந்தன. பாடல்களும் படிப்பினை ஊட்டக் கூடியவையாக இருந்தன.
 அம்பிகாபதி படம்தான் திரைப்படப் பாடல்கள் எழுத வேண்டும் என்று எண்ணத்தை என் மனதில் நெய்யூற்றி வளர்த்தது.
 இத்தகைய எண்ணம் தொடர்கதையானதால் பள்ளி இறுதித் தேர்வில் (எஸ்.எஸ்.எல்.சி) வெற்றி வாய்ப்பை இழந்தேன். அதனால் அக்டோபர் தேர்வு எழுதுவதற்கு மதுரைக்குச் சென்றேன். மறுநாள் தேர்வு, முதல்நாள் இரவு ஒரு பாடல் என் காதில் ஒலித்தது.
 "கண்களின் வெண்ணிலவே - உல்லாசக் காதல் தரும் மதுவே'' என்ற மதுரமான பாடல். அந்நாளில் என்னை மயக்கிய பாடல்களில் அதுவும் ஒன்று.
 விசாரித்தபோது அங்கிருந்தவர்கள் இது டி.ஆர். மகாலிங்கமும் பானுமதியும் பாடிய பாடல் என்றும் கம்பதாசன் இயற்றிய இப்பாடல் "மணிமேகலை' என்ற படத்தில் இடம்பெறுகிறது என்றும் இன்றைக்கே இப்படம் கடைசியென்றும் கூறினார்கள்.
 அதனால் எப்படியும் இன்று படத்தைப் பார்த்து விடுவது என்று தீர்மானித்து மதுரை சிந்தாமணி திரையரங்கில் இரவுக் காட்சியைக் கண்டு களித்தேன்.
 இந்த நினைவிலே இருந்த எனக்கு மறுநாள் எழுத வேண்டிய தேர்வு பற்றிய அக்கறையா வரும்? அதனால் அக்டோபர் தேர்விலும் தோல்வியடைந்தேன். மறுபடியும் ஓர் இலையுதிர் காலத்திற்குப் பிறகு அக்டோபர் கோட்டையை முற்றுகையிட்டு வெற்றித் தேவதைக்கு மாலை சூட்டினேன்.
 அதன்பிறகு தமிழ் வித்துவான் வகுப்பிற்குப் படித்து அதையும் முழுமையாக முடிக்காமல் இடையிலே நிறுத்திவிட்டு உழவுத் தொழிலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
 பல்லாண்டு இடைவெளிக்குப் பிறகு சென்னைப் பட்டணம் என் திருப்பாதங்களை ஏந்தும் பெருமை பெற்றது. பல்வேறு இன்னல்களைச் சந்தித்த பிறகு "முரசொலி' நாளேட்டில் துணையாசிரியர் குழுவில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஏழாண்டுகள் என் எழுத்துத் திறனை முரசொலி சுவீகாரம் எடுத்துக் கொண்டது. அதுதான் சென்னையில் எனக்குத் தங்கும் வீடாகவும் தாய் வீடாகவும் இருந்தது.
 இங்கு பணியாற்றும்போதுதான் திரைப்படக்கதை வசனகர்த்தா பாலமுருகன் அவர்களின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. என்ன ஆனாலும் ஆகட்டும் திரைப்படத்திற்குப் பாடல் எழுதாமல் ஊர் திரும்புவதில்லை என்ற வைராக்கியத்துடன் ஆறாண்டுகள் இதற்காக முயற்சி செய்தேன்.

 

 

திரைப்படத்திற்குப் பாடல் எழுதாமல் ஊர் திரும்புவதில்லை என்ற வைராக்கியத்துடன் ஆறாண்டுகள் முயற்சி செய்தபோதும், பாடல் எழுதுவதற்காக பாலமுருகனைத் தவிர வேறு யாரையும் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு ஏற்படவில்லை.

ஊரில் இருந்து வரும்போது ஒரு நண்பர் கதாசிரியர் டி.என்.பாலுவுக்குக் கடிதம் கொடுத்திருந்தார். அவரிடம் பழகிய பிறகுதான் தெரிந்தது; அவருக்கும் உண்மைக்கும் உள்ள தூரம் சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் என்பது. அதைப் புரிந்துகொண்டு ஒதுங்கிவிட்டேன்.

இலக்கிய உலகில் என் கவிதைப் பூக்கள் மலர்வதற்கு என் சிந்தனை மரத்திற்கு நீர்வார்த்த மழை மேகம் முரசொலி. அப்போதுதான் பல கவியரங்கங்களில் நான் பங்குபெறும் வாய்ப்பையும் பெற்றேன். அதில் கலைஞர் தலைமையில் நடைபெற்ற அண்ணா கவியரங்கம் குறிப்பிடத்தக்கது. அவர் கவியரங்கத்திற்குத் தலைமை தாங்கிய பிறகுதான் கவியரங்கத்திற்குப் பெரும் வரவேற்பும் எழுச்சியும் தமிழ்நாட்டில் ஏற்பட்டது.

கவியரங்கில் கலைஞர் என்னை ஒவ்வொரு முறையும் அறிமுகப்படுத்தும்போது "என் வீடகத்துத் தம்பி மாறன் முரசொலியில் ஏடெடுத்து எழுதுகின்ற இளம்புலவர் முத்துலிங்கம் பாட வருகின்றார் தேனாகப் பாடு தம்பி இருக்கின்றோம் நாங்கள் தும்பி'' என்று அறிமுகப்படுத்துவார். அந்தப் பாராட்டு என்னால் அப்போது மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. கவியரங்கக் கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் கற்றுக் கொண்டது கவிக்கோ அப்துல் ரகுமானிடம்தான். அந்தவகையில் எனக்கு முன்னோடி, வழிகாட்டி அவர்தான். இந்த ஆண்டு "கவிக்கோ'விருது ரூபாய் ஒரு லட்சம் எனக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை சாகித்ய அகாதெமி விருதை விட உயர்வாகக் கருதுகிறேன்.  

ஒருநாள் கதாசிரியர் பாலமுருகனிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. ""டைரக்டர் மாதவனுக்குச் சொந்தமான அருண்பிரசாத் மூவிஸ் சார்பில் ""பொண்ணுக்குத் தங்கமனசு'' என்றொரு படம் எடுக்கிறார்கள். அதற்குப் பாடல் எழுத வேண்டும் என்றார்.

இதைக் கேட்டதும் எனக்கு மகிழ்ச்சி கரைபுரண்டோடவில்லை. காரணம் இதற்கு முன் இவர் இப்படிக் கூறி நான் பாடல் எழுதி பாடல் ஒலிப்பதிவாகாமலே நின்றுவிட்டது. அவர் கதை வசனம் எழுதிய "நிலவே நீ சாட்சி' என்ற படத்திற்கு ஓர் காட்சியைச் சொல்லி அதற்குப் பாடல் எழுதச் சொன்னார். ""காவேரி நதிக்கும் கரையுண்டு - நம் காதலுக்கும் ஒரு கதையுண்டு'' என்ற பல்லவியை எழுதிக் காட்டினேன். ""நன்றாக இருக்கிறது. முழுப்பாடலையும் நீங்களே ஒரு சந்தத்தில் எழுதிவிடுங்கள்'' என்றார், எழுதினேன். அந்தப் பாடலை இயக்குநர் பி. மாதவனிடம் காட்ட நமது படத்தில் கண்ணதாசன்தானே எப்போதும் எழுதுவார். புதுக்கவிஞரை எப்படி அறிமுகப்படுத்துவது என்று மறுத்துவிட்டார்.
 அதன்பிறகு ""பட்டிக்காடா பட்டணமா'' என்ற படத்திற்கு ஒரு காட்சியைச் சொல்லி எழுதச் சொன்னார். அது சிவாஜி பாடும் பாடல் என்றார்.

"ஊரைக் காக்கும் மாரியம்மா
காளியம்மா நீயே உலகமெங்கும்
சஞ்சலங்கள் தீரவேணும் தாயே!
சூரன் குடலைக் கிழிச்சவளே
வீரபத்திர காளி - பகையைத்
தூசியாக மிதிப்பேன் நான்
வீர மறவன் ஜாதி!''

என்ற பாடலை எழுதினேன். இந்தப் பாடலுக்கும் அதே கதிதான். அதனால் பாலமுருகன் வார்த்தை எனக்குப் பரவசம் ஊட்டவில்லை. ஐயமே ஏற்பட்டது.
எந்தவிதச் சலனமும் இல்லாமல் நான் நிற்பதைப் பார்த்து, ""இந்தப் படத்தில் நீங்கள் நிச்சயம் எழுதுகிறீர்கள். உங்கள் பாடல் இல்லாமல் இப்படம் வெளிவராது'' என்று உறுதிபடக் கூறினார்.

"கங்கை, காவிரி, வைகை இம்மூன்று நதிகளுக்குள் யார் உயர்ந்தவர் என்பதில் சண்டை வருவது போலவும் உழவன் அவர்களை அமைதிப்படுத்தி ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் ஓர்  பாடல் எழுதி வாருங்கள்'' என்றார்.

நான் எழுதிச் சென்றேன். பாடலைப் பார்த்த ஜி.கே. வெங்கடேஷ், ""பாடல் நன்றாக இருக்கிறது. ஆனால் எல்லாம் ஒரே தாளத்தில் இருக்கிறது. மூன்று நான்கு பேர் பாடுவதாக வருவதால் மெட்டுக்கள் போட்டு அதற்கு எழுதினால்தான் கேட்க எடுப்பாக இருக்கும். ஆகவே மெட்டுப் போடுகிறோம். அதற்குப் பாடல் எழுதுங்கள்'' என்றார்.

இரண்டு நாள்கள் ஆகியும் பொருத்தமான மெட்டுக்கள் போடவில்லையே என்று டைரக்டர் மாதவன் இசையமைப்பாளரிடம் குறைபட்டுக் கொண்டார். உடனே ஜி.கே. வெங்கடேஷ், ""என் உதவியாளர் நிறைய மெட்டுக்கள் வைத்திருக்கிறார். அவரைப் பாடச் சொல்கிறேன். அந்த மெட்டு உங்களுக்குப் பிடித்திருந்தால் வைத்துக் கொள்ளுங்கள்'' என்றார்.

அந்த உதவியாளர் பாடிக் காட்டினார். "நன்றாக இருக்கிறது. இந்த மெட்டுக்கே எழுதுங்கள்'' என்றார். அப்படி எழுதிய என் முதல் பாடல்,

"தஞ்சா வூருச் சீமையிலே - கண்ணு
தாவிவந்தேன் பொன்னியம்மா
பஞ்சம் தீரப் பூமியிலே - நான்
பாடிவந்த கன்னியம்மா''
- என்று தொடங்கும்.

என் பாட்டுக்கு மெட்டுக் கொடுத்த அந்த உதவியாளர் யார் என்றால் அவர்தான் உலகப்புகழ் பெற்ற இன்றைய இசைஞானி இளையராஜா. ஆனால் அந்தப் படத்தில் அவர் பெயர் வராது. இளையராஜாவும், கங்கை அமரனும் எனக்கு ஏற்கெனவே பழக்கமான நண்பர்கள். அதனால் நான் தங்கியிருந்த அறைக்கே வந்து அந்த மெட்டுக்களைப் பாடிக் காண்பித்து எழுத வைத்தார்கள்.

இந்தப் பாடலைப் பாடியவர்கள் எஸ். ஜானகி, சசிரேகா, பூரணி, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர். நான் எழுதிய முதல் பாடலே மெட்டுக்கு எழுதியதுதான்.

ஆக,  இளையராஜா இசையில் முதன்முதல் சினிமாவுக்குப் பாடல் எழுதியவன் என்ற பெருமை எனக்கு உண்டு அல்லது என்னுடைய பாடலுக்குத்தான் அவர் முதன்முதல் இசையமைத்தார் என்றும் சொல்லலாம்.

எனது பல்லாண்டுகாலக் கனவு பாலமுருகனால் நிறைவேறியது. அந்தப் பாடலை அந்தக் காலகட்டத்தில் மதுரை ஸ்பெஷல் நாடகக் குழுவினரும் கரகாட்டக்காரர்களும் பாடிப் பாடலுக்கு விளம்பரம் கொடுத்தார்கள்.

இது எனக்கு மட்டும் முதற்படம் அல்ல. நடிகர் விஜயகுமார், டைரக்டர் தேவராஜ் மோகன் ஆகியோருக்கும் இதுதான் முதல் படம். நடிகர் சிவகுமார் கதாநாயகனாக நடித்த முதல் படமும் இதுதான். அதற்குமுன் துணைக் கதாநாயகனாகத்தான் நடித்து வந்தார். இந்தப் படம் வெளிவந்த ஆண்டு 1973.

இந்தப் பாடலைப் பாராட்டி நூற்றுக்கணக்கான கடிதங்கள் அலை ஓசை நாளிதழுக்கு வந்தன. அதைக்கண்ட அந்தப் பத்திரிகை நிறுவனரும் சென்னை மாநகரின் முன்னாள் மேயரும், வழக்குரைஞருமான வேலூர் நாராயணன் தனது பத்திரிகையில் பணியாற்றும் ஒருவர் இத்தனைபேர் பாராட்டத்தக்க பாடலை சினிமாவில் எழுதியிருக்கிறாரே என்று திரைப்படக் கலைஞர்கள் ஜெமினி கணேசன், நகைச்சுவை நடிகர் கே.ஏ. தங்கவேலு குணச்சித்திர நடிகர் எஸ்.வி. சுப்பையா, ஆர்.எஸ். மனோகர், ஏவி.எம். ராஜன் போன்ற பல கலைஞர்களையும் அந்தப் படத்தில் பங்கு பெற்ற கலைஞர்களையும் அழைத்து சென்னை உட்லண்ட்ஸ் ஓட்டலில் தன் சொந்தச் செலவில் எனக்குப் பாராட்டு விழா நடத்தினார். இத்தகைய உயர்ந்த குணம் எந்த முதலாளியிடம் இன்றைக்கு இருக்கிறது?

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே-

 

 
anandha_thenkaTru_4

 

"பொண்ணுக்குத் தங்க மனசு' படம் வெளிவந்த ஓராண்டிற்குள்ளேயே "அலை ஓசை' பத்திரிகையில் இருந்து விலகிவிட்டேன். காரணம் எம்.ஜி.ஆருக்கு எதிர்ப்பான செய்திகளை அது வெளியிடத் தொடங்கியதுதான்.

பத்திரிகைத் துறையை நான் விட்டுவிட்டது எம்.ஜி.ஆருக்குத் தெரியும். ஒருநாள் தியாகராயநகர் ஆற்காடு தெருவிலுள்ள எம்.ஜி.ஆர். அலுவலகத்திற்கு அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். கீழ் அறையிலிருந்து மேல் அறையில் இருக்கும் அவருடன் இண்டர்காமில் பேசினேன். நான் எதுவும் கேட்பதற்கு முன்பே "குஞ்சப்பனிடம் நான் பணம் கொடுக்கிறேன். வாங்கிக் கொள்ளுங்கள்' என்றார் எம்.ஜி.ஆர்.

குஞ்சப்பன் எம்.ஜி.ஆருக்கு மைத்துனர் ஆவார். குஞ்சப்பன் சகோதரியைத்தான் எம்.ஜி.சக்கரபாணி திருமணம் செய்திருந்தார். அதுவும் தவிர எம்.ஜி.ஆர். அலுவலகம் குஞ்சப்பன் நிர்வாகத்தில்தான் இருந்தது. அவருக்கு அடுத்து முத்து என்பவர் இருந்தார்.

எம்.ஜி.ஆர். பணம் தருவதாகச் சொன்னவுடன் "எனக்குப் பணம் வேண்டாம் தலைவரே. அதற்குப் பதில் வேலை கொடுங்கள் அதுபோதும்' என்றேன். வேலையென்று நான் சொன்னது பாட்டெழுதும் வேலையைத்தான். "வேலையை கொடுக்கும்போது கொடுக்கிறேன். இப்போது ஐந்நூறு ரூபாய் குஞ்சப்பனிடம் வாங்கிக் கொள்ளுங்கள்' என்றார். அப்போதும் நான் மறுத்துவிட்டேன்.

அப்போது மட்டுமல்ல எம்.ஜி.ஆரிடம் பழகியவர்களில் கடைசி வரைக்கும் அவரிடம் பணம் கேட்டு வாங்காத கவிஞன் நான் ஒருவனாகத்தான் இருப்பேன்.

பணம் வேண்டாமென்று இண்டர்காமில் நான் சொன்னதும் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருந்துவிட்டு அடிப்பதுபோல் தொலைபேசியை வைத்துவிட்டார். நானும் சென்றுவிட்டேன்.

பிறகு ஒருநாள் அவரைப் பார்ப்பதற்கு அதே அலுவலகம் சென்று நேரில் சந்தித்தபோது அங்கு எஸ்.டி.சோமசுந்தரம், ஜேப்பியார், பாவலர் முத்துசாமி போன்றவர்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் இன்று மறைந்துவிட்டார்கள். நான் உள்ளே நுழைந்ததும் "உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நீங்களாக வாய் திறந்து என்னிடம் கேட்க வேண்டாம். கேட்காமலே செய்வேன்' என்றார். நானும் கேட்கவில்லை.

சிறிது நேரம் அரசியல் சம்பந்தமான சில விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்துவிட்டு நாங்கள் சென்று விட்டோம்.

சில நாள் கழித்து "நல்லதை நாடு கேட்கும்'' என்ற படத் தொடக்கவிழா அழைப்பிதழ் ஒன்றை "தென்னகம்' பத்திரிகை அலுவலகத்திற்குச் சென்றபோது பார்த்தேன். அதில் பாடலாசிரியர் வரிசையில் என் பெயரும் இடம்பெற்றிருந்தது. எம்.ஜி.ஆர். சொன்னதைப்போல் செய்துவிட்டார் என்பதை உணர்ந்தபோது அவர் மீது என் மதிப்பு வானைவிட உயர்ந்துவிட்டது. ஆனால் தயாரிப்பாளருக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் படம் நின்றுவிட்டது.

அதன்பிறகு பல படங்களுக்குப் பாடல்கள் எழுதி சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தமிழக அரசு விருதை 1978 - 79 -ஆம் ஆண்டில் பெற்றேன். பின்னர் கலைமாமணி விருது பெற்றேன். அதன்பிறகு பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றேன்.

பாவேந்தர் விருதை எனக்கு வழங்கும்போது எம்.ஜி.ஆர். என்னைப் பற்றிப் பேசியது என்றும் மறக்க முடியாத ஒன்று. நான் அவரிடம் பணம் வேண்டாம் என்று சொன்னது 1974-ஆம் ஆண்டு. எம்.ஜி.ஆர். எனக்குப் பாரதிதாசன் விருது வழங்கியது 1981-ஆம் ஆண்டு. இடையில் ஏழாண்டு காலம் இடைவெளி.

ஏழாண்டுகள் முன்பு நான் சொன்னதை எம்.ஜி.ஆர். நினைவில் வைத்திருந்து பேசியதுதான் வியப்பு. அவர் முதலமைச்சர். எத்தனையோ நிகழ்ச்சிகளை ஏழாண்டுகளில் சந்தித்திருப்பார். அப்படியிருந்தும் அந்த நிகழ்ச்சியை மறந்துவிடாமல் பேசுகிறார் என்றால் என்னை அவர் மனதில் வைத்திருக்கிறார் என்றுதானே பொருள். என்னைப் பற்றி அவர் பேசியது இதுதான்.

"படத்துறைக்கு வருவதற்கு முன் முத்துலிங்கம் பத்திரிகைத் துறையில் இருந்தார். எந்தப் பத்திரிகையில் அவர் பணியாற்றினாரோ அந்தப் பத்திரிகையிலிருந்து அவர் விலகிவிட்டார். அதனால் சிரமப்படுவாரே என்றெண்ணிக் கொஞ்சம் பணம் தருகிறேன் வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன். பணம் வேண்டாம். அதற்குப் பதில் வேலை கொடுங்கள் என்றார். வேலை கொடுக்கும்போது கொடுக்கிறேன் இப்போது பணம் வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன். அப்போதும் மறுத்துவிட்டார்.

படத்துறையில் என்னிடம் பணம் வாங்காத எழுத்தாளர்கள், கவிஞர்கள் பெரும்பாலும் குறைவு. அதுவும் அவர்கள் கேட்டுத்தான் கொடுத்திருக்கிறேனே தவிர நானாக யாருக்கும் கொடுக்கவில்லை. முத்துலிங்கத்திற்கு மட்டும்தான் நானே வலியக் கொடுக்க முன்வந்தேன். ஆனால் அவர் வாங்க மறுத்துவிட்டார்.

உழைக்காமல் யாரிடத்திலும் இனாமாக எதையும் வாங்கக் கூடாது என்ற தன்மானமுள்ள மனிதராக இருக்கிறார் என்பதை அப்போது புரிந்துகொண்டேன். அதன்பிறகுதான் என்னுடைய படங்களுக்குப் பாடல்கள் எழுத வாய்ப்பளித்தேன்.

பாரதிதாசனும் தன் காலைக் கீழே தான் குனிந்து பார்ப்பதுகூட சுயமரியாதைக் குறைவு என்று கருதுவார் எனச் சொல்வார்கள். அப்படிப்பட்ட தன்மானம் உள்ள கவிஞர் பெயரிலே கொடுக்கக்கூடிய விருதைத் தன்மானமுள்ள கவிஞராகவும், தன்மானமுள்ள மனிதராகவும் விளங்குகின்ற முத்துலிங்கத்திற்குக் கொடுக்காமல் யாருக்குக் கொடுப்பது?'' என்று பேசினார்.

1.5.1981 அன்று என்னைப் பற்றி கலைவாணர் அரங்கில் எம்.ஜி.ஆர். பேசியது மறுநாள் 2.5.1981 தேதியிட்ட தினத்தந்தி இதழில் வெளிவந்தது. மற்ற பத்திரிகையிலும் வந்திருக்கலாம். ஆனால் நான் பார்த்தது தினத்தந்தியில் மட்டும்தான். அந்த ஒரு பத்திரிகை வாங்கும் அளவுக்குத்தான் அன்றைக்கு என்னிடம் காசிருந்தது. இந்த நிகழ்ச்சிகளையெல்லாம் நான் எப்படி மறக்க முடியும்? அதுவும் எம்.ஜி.ஆர். என்னைப் பற்றிப் பேசியதை என்னால் எப்படி நினைவுகூராமல் இருக்க முடியும்?

எம்.ஜி.ஆர். படத்திற்குப் பாடல் எழுதும்போதுதான் எனக்குப் பல வகையான அனுபவங்கள் கிடைத்தன. ஒரு காட்சிக்குப் பொருத்தமான பல்லவியை முதலிலேயே எழுதிவிட்டால் கூட அவர் சரியென்று ஒப்புக்கொள்ள மாட்டார். திரும்பத் திரும்ப எழுதச் சொல்வார்.

இப்படிப் பத்துப் பல்லவிகளாவது எழுதிய பிறகுதான் அதில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பார். சிலநேரங்களில் கடைசியாக எழுதிய பல்லவி நன்றாக இருக்கிறது என்று அதைத் தேர்ந்தெடுப்பார். சில நேரத்தில் முதலில் நாம் என்ன பல்லவி எழுதினோமோ அதுதான் பொருத்தமாக இருக்கிறது என்றும் தேர்ந்தெடுப்பார். ஆனாலும் பத்துப் பல்லவிகளுக்குக் குறையாமல் என்னை எழுதச் சொல்வார்.

யானை தன் குட்டிக்குப் பயிற்சி கொடுப்பதுபோல் எனக்குப் பாடல் எழுதப் பயிற்சி கொடுத்தார். இவரின் ஒரு படத்திற்கு ஒரு பாடல் எழுதி அது ஒலிப்பதிவு ஆகிவிட்டால் பத்துப் படங்களுக்குப் பத்துப்பாடல்கள் எழுதிய அனுபவம் கிடைத்துவிடும்.

(இன்னும் தவழும்)

 

 

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே- 5!  

 

 
kavignar_muthulingam

எம்.ஜி.ஆர். படங்களில் முதலில் பாடல் எழுத அழைக்கப்பட்ட படம் நினைத்ததை முடிப்பவன். இயக்குநர் நீலகண்டன் அழைத்து வரச்சொன்னார் என்று அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் பணியாற்றிய ஒரு நண்பர் வந்து அழைத்தார். அப்போது எனக்கு அம்மை போட்டிருந்தது. அதனால் செல்ல முடியவில்லை. நான் எழுத வேண்டிய பாடலைப் பல கவிஞர்களை எழுதவைத்துச் சரியில்லாமல் கடைசியில் அண்ணன் மருதகாசி எழுதினார். "கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்' என்பதுதான் அந்தப் பாடல்.

எம்.ஜி.ஆர். படத்திற்கு நான் முதலில் பாடல் எழுதிய படம் "உழைக்கும் கரங்கள்'. அந்தப் படத்தின் டைரக்டர் கே. சங்கர். பாடல் எழுத வேண்டிய காட்சியை எனக்கு விளக்கினார்.

ஆடற்கலையரசி ஒருத்தி  ஓர் உத்தமனைக் காதலிக்கிறாள். அதை அவள் அவனிடம் சொல்லவில்லை. ஒருநாள் சொல்ல நினைத்தபோது அவன் வேறொரு பெண்ணுக்கு மாலையிட்டு அவளிடம் வாழ்த்துப் பெற வருகிறான். இதுதான் காட்சி. இதற்குப் பல்லவி எழுதச் சொன்னார்.

எப்போதும் எம்.ஜி.ஆர். படத்திற்குப் பல்லவிகள் மட்டும் எழுதித்தான் மெட்டமைப்பது வழக்கம். சரணத்திற்கு மட்டும் மெட்டுப் போட்டு அதற்குப் பாட்டெழுதுவோம். சில நேரத்தில் பல்லவி உட்பட எல்லாமே மெட்டுக்குத்தான் எழுதவேண்டியிருக்கும். அதனால் எம்.ஜி.ஆர். படத்திற்கு எழுதுகிறோமென்றால் எதற்கும் தயாராயிருக்க வேண்டும்.

இயக்குநர் சங்கர் கூறியதற்கிணங்க அந்தக் காட்சிக்கு நான்கு பல்லவிகள் எழுதினேன். நான்கும் இசையமைப்பாளர் அண்ணன் எம்.எஸ்.விசுவநாதன் முதல் தயாரிப்பாளர் இயக்குநர் வரை அனைவருக்கும் பிடித்திருந்தது. புதிய பாடலாசிரியர் எழுதுவது போல் இல்லை. அனுபவப்பட்டவர் போலல்லவா எழுதுகிறீர்கள் என்று எல்லோரும் பாராட்டினார்கள்.

நான் பாடல் எழுதிக் கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆரிடம் இருந்து ஒரு தொலைபேசி வந்தது. கோவை செழியனின் கம்பெனியான கே.சி.பிலிம்ஸ் மேலாளர் சீனிவாசன் என்பவர் எம்.எஸ். விசுவநாதனிடம் தொலைபேசியைக் கொடுத்து சின்னவர் பேசுகிறார் பேசுங்கள் என்றார். நான் எம்.எஸ்.வி. பக்கத்தில் இருந்ததால் எம்.ஜி.ஆர். பேசுவது எனக்கு நன்றாகக் கேட்டது. முத்துலிங்கம் எப்படி எழுதுகிறார் என்று கேட்டார் எம்.ஜி.ஆர். அதற்கு அண்ணன் எம்.எஸ்.வி. மீட்டரும் சரியாக இருக்கிறது மேட்டரும் சரியாக இருக்கிறது என்றார். உடனே மகிழ்ச்சி மகிழ்ச்சி என்று எம்.ஜி.ஆர். தொலைபேசியை வைத்துவிட்டார்.

நான்கு பல்லவிகளும் நன்றாக இருந்தாலும் ஏதேனும் ஒரு பல்லவிதானே வைக்க வேண்டும் என்பதற்காக,
"ஆண்டவனின் சந்நிதியில் - நான்
அன்றாடம் தேடிவந்தேன்
தேடிவந்து பார்க்கையிலே - ஸ்ரீ
தேவியுடன் அவனிருந்தான்'
என்ற பல்லவி இக்காட்சிக்குப் பொருத்தமாக இருக்கிறது. இதையே வைத்துக் கொள்ளலாம் என்று விசுவநாதன் அண்ணன் கூறினார். அதன்பிறகு சரணத்திற்கு மெட்டுப் போட்டார். அந்த மெட்டுக்கு முழுப் பாடலையும் எழுதிவிட்டேன்.
ஆனால் தயாரிப்பாளர் கோவைசெழியனுக்கும் அவரைப் பார்க்க வந்த மருத்துவக் கல்லூரி மாணவியர் சிலருக்கும்,
"கந்தனுக்கு மாலையிட்டாள்
கானகத்து வள்ளிமயில்
கல்யாணக் கோலத்திலே
கவிதை சொன்னாள் காதல்குயில்'
என்ற பல்லவி பிடித்திருந்தது. ஆகவே இதையே ஒலிப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார்கள். நான் அந்தக் குழுவில் புதியவன் என்பதால் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் கூறியது போலவே இந்தப் பாடலைத்தான் ஒலிப்பதிவு செய்தார்கள்.

அந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்வதற்கு ஐந்து நிமிடங்கள் முன்புவரை பாடகி வாணிஜெயராம் அவர்கள் ஆண்டவனின் சந்நிதியில் என்று தொடங்கும் பாடலை ஒலிப்பதிவு செய்யுங்கள் சார். அந்தப் பாட்டுக்குப் போட்ட இசை, கந்தனுக்கு மாலையிட்டாள் பாட்டுக்குப் போட்ட இசையை விட நன்றாக இருக்கிறது. இதைவிட அதுதான் ஹிட்டாகும் என்று எவ்வளவோ கூறினார்கள்.

தயாரிப்பாளர் தரப்பைச் சேர்ந்தவர்கள், இதைத் தேர்ந்தெடுத்து விட்டோம். மாற்ற வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். அதுதான் ஒலிப்பதிவானது.
எம்.ஜி.ஆர். படத்திற்கு நான் எழுதிய முதற்பாடலை வாணிஜெயராம்தான் பாடினார்.

இப்பாடல் ஓரளவுதான் பிரபலமானது. அண்ணன் விசுவநாதன், வாணிஜெயராம் இருவரும் சொன்னபடி அந்தப் பாடலைப் போட்டிருந்தால் இதைவிட நன்கு பிரபலமாயிருக்கும். ஏனென்றால் அந்தப் பாடலுக்குப் போட்ட டியூனைத்தான் பாலசந்தர் அவர்களது "மன்மதலீலை' என்ற படத்திலே விசுவநாதன் அவர்கள் போட்டு அந்தப் பாடல் பிரபலமாகச் செய்தார். அதுதான்...
"நாதமென்னும் கோயிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றிவைத்த விளக்கினிலே
எண்ணெய்விட நீ கிடைத்தாய்'
என்ற பாடல். இதை எழுதியவர் கண்ணதாசன். இதைப் பாடியவரும் வாணிஜெயராம்தான்.

இதைப் படிக்கும்போது சிலருக்கு ஓர் ஐயம் எழலாம். எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட பாடல்களை எம்.ஜி.ஆர். தானே தேர்ந்தெடுப்பார். இவர் கம்பெனிக்காரர்களே தேர்ந்தெடுத்ததாகக் கூறுகிறாரே எப்படி என்று நினைக்கலாம்.

"பல்லாண்டு வாழ்க' படத்தை முடித்துக் கொடுப்பதில் எம்.ஜி.ஆர். மும்முரமாக இருந்ததால் உங்களுக்குப் பிடித்திருந்தால் அதையே வைத்துக் கொள்ளுங்கள் என்று செழியனிடம் கூறியிருந்தார். செழியனும் தொலைபேசியில் இரண்டு பல்லவியையும் அதற்கான சரணங்களையும் எம்.ஜி.ஆரிடம் வாசித்துக் காட்டி அதில் ஒன்றை வைத்துக் கொள்கிறோம் என்றார். அவரும் சம்மதம் தெரிவித்து விட்டார்.

ஆனால் இரண்டு பாடல்களையும் இசையோடு எம்.ஜி.ஆர். கேட்டிருப்பாரேயானால் அண்ணன் விசுவநாதன் பாராட்டிய பாடலைத்தான் அவர் ஏற்றுக் கொண்டிருப்பார்.

"உழைக்கும் கரங்கள்' படத்தில் இன்னொரு காட்சிக்காக ஒரு பாடல் எழுதினேன். வள்ளி திருமணம் நாடகத்தில், வள்ளி தினைப்புனத்தில் குருவிகளை விரட்டுதல் போல் பாடல் வருமல்லவா? அதைப் போல ஒரு பாடல்.
கன்னி நானொரு பூந்தோட்டம்
காவல் காப்பது மாந்தோட்டம்
வண்ணப் பறவை கிளிக்கூட்டம் - என்
வம்புக்கு வந்தால் திண்டாட்டம்
...........
 இப்பாடலை எல்.ஆர். ஈஸ்வரி பாட ஒலிப்பதிவும் ஆகிவிட்டது. ஆனால் எம்.ஜி.ஆர். இப்பாடலைக் கேட்டுவிட்டு ஆயலோட்டுவது போல் வருகின்ற இப்பாடலில் பொதுக்கருத்துக்கள் எதுவும் வரவில்லை. ஆகவே வேறு டியூன் போட்டு வேறு பாடலை எழுதுங்கள் என்று அவரே சில கருத்துக்களை எழுதி எந்தெந்த வகையில் வரிசைப்படி வரவேண்டும் என்றும் அவர் கைப்படவே பச்சை மையில் எழுதிக் கொடுத்திருந்தார். அதைத் தயாரிப்பாளர் கோவை செழியன் என் வீட்டிற்கு வந்தே கொடுத்தார். "ஊட்டிவரை உறவு', "குமரிக் கோட்டம்' போன்ற பல படங்களையெல்லாம் எடுத்தவர் அவர் என்பது எல்லார்க்கும் தெரியும்.

அதன்பிறகு நான் எழுதி எம்.ஜி.ஆரிடம் ஒப்புதல் பெற்ற பிறகு ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல்தான் படத்தில் இடம் பெற்றது. நடிகை லதா பாடுவதுபோல் வரும் அந்தப் பாடல் இதுதான்.

 

பழத் தோட்டம் என் தோட்டம்
பறவைக்கிங்கே கொண்டாட்டம்
கவணெடுத்தா திண்டாட்டம்
கன்னி நானொரு அம்பாட்டம்
கனிதேடும் குயிலினமே 
கதை சொல்லும் கிளியினமே 
அடுத்தவரின் பொருள் மீது
ஆசை வைக்கக் கூடாது
வேல் சிரிக்குது கண்களிலே
கவண் இருக்குது கைகளிலே
பிழை செய்பவர் மீதினிலே
கல் எறிவேன் குருவிகளே
...........
இந்தப் பாடலை வாணிஜெயராம் பாடினார். இதில் கனிதேடும் குயிலினமே கதை சொல்லும் கிளியினமே என்றொரு வரி வரும். "குயில் என்ன கனிகளையா தின்னும்? கனிதேடும் கிளியினமே! என்று மாற்று'' என்று இயக்குநர் கே.சங்கர் கூறினார்.

(இன்னும் தவழும்)

http://www.dinamani.com/lifestyle/lifestyle-serials/aanandha-thenkaattru-thaalaattuthey/2017/jun/13/ஆனந்தத்-தேன்காற்று-தாலாட்டுதே-5-----கவிஞர்-முத்துலிங்கம்-2719834--2.html

Link to comment
Share on other sites

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே- 6!

 

 
anandha_thenkatru_thalattuthe_6

 

"குயில் என்ன கனிகளையா தின்னும்? கனிதேடும் கிளியினமே என்ற வரிகளை மாற்று'' என்று இயக்குநர் கே.சங்கர் கூறினார். உடனே நான், "பலபேர் குயில் கனி தின்னாது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அது தவறு. உ.வே. சாமிநாத ஐயரின் ஆசிரியரான திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு மாம்பழம் என்றால் மிகவும் பிடிக்கும். அதுபோல் குயிலுக்கும் மாங்கனி என்றால் மிகவும் பிடிக்கும். குயில் விரும்பி உண்ணும் கனிகள் மாங்கனியும், நெல்லிக்கனியும்தான். பறவைகளின் உணவுப் பழக்கம் என்ற நூலில் கூட இது குறிப்பிடப்பட்டிருக்கிறது'' என்றேன்.

"கனிகள் இல்லாத நேரத்தில் எதைத் தின்னும்?'' என்று மடக்கினார். ""மாங்கொழுந்தைத் தின்னும்'' என்றேன். அவர் மலர்ச்சியை முகத்தில் காட்டினார்.
இப்படியெல்லாம் கேட்டால் இவன் என்ன பதில் சொல்வான் என்பதை அறிந்து கொள்ள சில நேரங்களில் இப்படிக் கேள்விக் கொக்கியைப் போட்டு இழுக்கப் பார்ப்பார். சாமர்த்தியமாகப் பதிலுரைத்தால் தட்டிக் கொடுப்பார். இல்லையென்றால் நீ லாயக்கில்லை என்று பட்டென்று சொல்லிவிடுவார். நான் எழுதிப் பிரபலமான பாடல்களில் ஒன்றிரண்டு பாடல்களுக்கு இவரே முதலடியை எடுத்துக் கொடுத்திருக்கிறார். நல்ல தமிழார்வம் உள்ள இயக்குநர்.

புலமைப்பித்தனை முதன்முதல் பாடலாசிரியராக அறிமுகப்படுத்திய இயக்குநரே இவர்தான். பாடல் ஒலிப்பதிவின் போதுதான் எம்.ஜி.ஆரின் அறிமுகம் புலமைப்பித்தனுக்குக் கிடைத்தது. "குடியிருந்த கோயில்' என்ற படத்தில் இடம்பெற்ற "நான் யார்... நீ யார்?' என்ற பாடல்தான் அது.

பாடல்களுக்கான காட்சியைப் படமாக்குவதில் சிறப்புக்குரிய இயக்குநர்களில் கே. சங்கர் குறிப்பிடத்தக்கவர். சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் மறைந்துவிட்டார்.
இவர் இயக்கும் படங்களில் பாடல்கள் எழுதுவதென்றால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வேடிக்கை விளையாட்டாகப் பேசிக் கொண்டே எங்களிடம் வேலை வாங்கிவிடுவார். இவர் இயக்கிய பல படங்களுக்கு நான் பாடல் எழுதியிருக்கிறேன். அதில் எம்.ஜி.ஆர் நடித்த "இன்று போல் என்றும் வாழ்க' என்றொரு படம். அதில் இரண்டு பாடல்கள் எழுதினேன்.

நாகரிகம் என்ற பெயரில் பண்பாட்டைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பாடுவதுபோல ஒரு காட்சி.
பாதை மாறிப் போனவரே
பயணம் எங்கே சொல்லுங்கள்
போதை மீறிப் போனவரே
புத்தியை மாற்றிக் கொள்ளுங்கள்
என்றொரு பல்லவி எழுதி அதற்கு டியூன் பண்ணினோம். எம்.எஸ்.

விசுவநாதனைப் பார்க்க வந்த டைரக்டர் ஸ்ரீதரிடம் காட்சியைச்சொல்லி இந்தப் பல்லவியைச் சொல்லி பாடிக் காட்டினார் எம்.எஸ்.விசுவநாதன். காட்சிக்குப் பொருத்தமாக இருக்கிறது என்று பாராட்டினார் அவர்.

அதன்பின் வேறு இரண்டு பல்லவிகள் எழுதி டியூன் போட்டு எம்.ஜி.ஆரிடம் காட்டினோம். ""பாதை மாறிப் போனவரே என்று சொல்லக்கூடாது. அது அறச்சொல். நான் பாடுவதில் அப்படிப்பட்ட வார்த்தை வரக்கூடாது. கண்ணதாசன் அறச் சொல் விழாமல் எழுதுவார். சோகப் பாடலில் கூட அமங்கலமான வார்த்தை அவரிடம் வராது. அதுபோல் நீ எழுத வேண்டும். இதில் இன்னொரு பல்லவி நன்றாக இருக்கிறது. ஆனால் அது எனக்கு நிறைவாக இல்லை. வேறு எழுது'' என்றார்.

மறுநாள் வேறு சில பல்லவிகள் எழுதி டியூன் போட்டோம். அதில் ஒன்றை மிகவும் நன்றாக இருக்கிறது என்று தேர்ந்தெடுத்தார்.
எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுத்த அந்தப் பாடல்,
அன்புக்கு நானடிமை - தமிழ்ப்
பண்புக்கு நானடிமை - நல்ல
கொள்கைக்கு நானடிமை - தொண்டர்
கூட்டத்தில் நானடிமை
- பல்லவியை எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுத்ததால் எம்.எஸ்.வி. போட்ட சரணத்திற்கான மெட்டிற்குப் பாடலை எழுதி வாருங்கள் காலையில் ரிக்கார்டிங் என்று இயக்குநர் கே.சங்கர் சொல்லிவிட்டார்.

நானும் இரவோடு இரவாக சரணத்தை எழுதி காலையில் வாகினி ஸ்டுடியோவில் இருந்த எம்.எஸ்.வியிடம் காட்டினேன். ""மெட்டுக்குச் சரியாக இருக்கிறது எம்.ஜி.ஆரிடம் காட்டி ஓகே வாங்கி வாருங்கள்'' என்றார்.

அப்போது ஏவி.எம். படப்பிடிப்பு நிலையத்தில் ஒரு படத்திற்கான படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர். இருந்தார். அவரிடம் காட்டிய போது ""சரணம் நான் நினைத்தபடி சரியாக அமையவில்லை. வேறு எழுதிக் கொண்டு வா'' என்றார். மறுபடி வாகினி ஸ்டுடியோ வந்து அண்ணன் விஸ்வநாதன் (ஏ.சி.) அறையில் இருந்து எழுதினேன்.

எப்போதும் ஒரே இடத்தில் இருந்து சிந்தித்தால் எனக்குச் சிந்தனை வராது. பெரும்பாலும் நடந்து கொண்டே யோசிப்பேன். இல்லையென்றால் வீட்டிற்கு வெளியே அல்லது மாடியில் சுருட்டுப் பிடித்தபடியே யோசிப்பேன். நான் எழுதிய பெரும்பாலான பாடல்கள் இப்படித்தான்.

மொழி மாற்றுப் படத்திற்கு எழுதும்போது மட்டும் நான்கு மணி நேரம் ஆனாலும் ஒரே இடத்தில் இருந்துதான் பாட்டெழுதுவேன். நடிக நடிகையரின் வாயசைப்புக்கு ஏற்றாற்போல் அதே நேரத்தில் அந்தக் காட்சிக்கும் தகுந்தாற்போல் எழுதவேண்டுமல்லவா? அதனால் ஒரே இடத்தில் இருந்து டேப் ரிக்கார்டரைப் போட்டு எழுதிக் கொண்டிருப்பேன்.

அண்ணன் விஸ்வநாதனின் கம்போசிங் அறை ஏ.சி. அறை. அதனால் எனக்கும் சிந்தனை வரவில்லை. அதனால் அறைக்கு வெளியே வந்து அங்கு வளர்ந்திருந்த சவுக்கு மரக்கன்றுகளில் ஒன்றைப் பிடித்தபடி யோசித்தேன். எதுவும் தோன்றவில்லை. பிறகு இன்னொரு சவுக்குக் கன்றைப் பிடித்தபடி யோசித்துக் கொண்டிருந்தேன்.
(இன்னும் தவழும்)

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே 7! - கவிஞர் முத்துலிங்கம்

 

 
K7

"அன்புக்கு நானடிமை' பாடலின் சரணத்திற்காக... சவுக்குக் கன்றைப் பிடித்தபடி யோசித்துக் கொண்டிருந்தேன். 

அப்போது, எம்.எஸ்.வி. அறையிலிருந்த தயாரிப்பாளர்  வி.டி. லட்சுமணன் செட்டியார், "முத்துலிங்கம் மரத்தைப் பிடிக்கிறான். மட்டையைப் பிடிக்கிறான் சரணத்தைப் பிடிக்கமாட்டேன் என்கிறானே!'' என்று கிண்டல் செய்தார். அது என் காதில் விழுந்தது.

உடனே அறைக்குள் சென்று, "ஆமாம்... நான் அதை இதைப் பிடிக்கிறவன்தான். எதையும் பிடிக்காதவர்களாகப் பார்த்து உங்களுக்குப் பிடித்த வகையில் பாடலை எழுதிக் கொள்ளுங்கள்'' என்று கோபமாகச் சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டேன்.

உடனே, இயக்குநர் கே.சங்கர் அவர்களும் எம்.எஸ்.வி. அவர்களும் ஓடிவந்து என்னை சமாதானப்படுத்தினர்.

"அந்தக் காலத்தில் எங்களுக்கெல்லாம் நேராத அவமானமா உனக்கு நேர்ந்துவிட்டது. சினிமா உலகில் நமது திறமை வெளியே தெரியாதவரை நான்குபேர் நான்குவிதமாகத்தான் சொல்வார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடாது'' என்று அறிவுரை சொல்லிவிட்டு எம்.எஸ்.விஸ்வநாதன் தன் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி ஒன்றைக் கூறினார்:
எம்.ஜி.ஆர். நடித்த "ஜெனோவா' என்ற படம்தான் நான் முதன்முதல் இசையமைக்க ஒப்பந்தம் ஆன படம். அந்தப் படத்திற்கு ரிக்கார்டிங் செய்வதற்காக ஆர்க்கெஸ்ட்ராவோடு வந்துவிட்டேன். அந்தப் படத்திற்கு இரண்டுபேர் தயாரிப்பாளர்கள். ஒருவர் பெயர் ஈப்பச்சன். இன்னொருவர் பெயர் எஃப். நாகூர். இவர்தான் அந்தப்படத்தின் டைரக்டரும்கூட.

ஸ்டுடியோவிற்கு எம்.ஜி.ஆர். போன் செய்து யார் மியூசிக் டைரக்டர் என்று எஃப். நாகூரிடம் கேட்டிருக்கிறார். எம்.எஸ்.விசுவநாதன் என்று சொல்லியிருக்கிறார்.
இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடுவிடம் ஆர்மோனியம் தூக்கி வைத்துக் கொண்டிருந்தவராயிற்றே அவரா? என்று எம்.ஜி.ஆர் கேட்டிருக்கிறார். ஆமாம் என்றார் நாகூர். அவர் வேண்டாம் வேறு யாரையாவது மியூசிக் டைரக்டராகப் போடுங்கள் என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருக்கிறார்.

உடனே நாகூர் என்னிடம் வருத்தப்பட்டு எம்.ஜி.ஆர். இப்படிச் சொல்கிறார். ஆகவே அடுத்தமுறை வேறொரு படத்திற்கு உங்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம் இப்போது புறப்படுங்கள் என்றார்.

நாங்களும் ஆர்க்கெஸ்ட்ராவை டாக்சியில் ஏற்றிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த தயாரிப்பாளர் ஈப்பச்சன் என்ன ரிக்கார்டிங் முடிந்துவிட்டதா... அதற்குள் புறப்பட்டுவிட்டீர்கள்? என்றார்.

நாங்கள் எம்.ஜி.ஆர். சொன்ன விஷயத்தைச் சொன்னோம். அதற்கு அவர், நான் தயாரிப்பாளரா அவர் தயாரிப்பாளரா வாருங்கள்... என்று ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து தொலைபேசியில் எம்.ஜி.ஆருடன் பேசி என்னை இசையமைக்க வைத்தார்.

என்னுடைய திறமை என்னவென்று தெரிந்தபிறகு எம்.ஜி.ஆர். படங்களுக்கெல்லாம்  பெரும்பாலும் என்னைத்தான் மியூசிக் டைரக்டராகப் போடும்படி 
எம்.ஜி.ஆரே கேட்கும் நிலை உருவானது. சினிமா உலகில் எல்லாம் தெரிந்தவர்களும் உண்டு. அதே நேரத்தில் எதுவும் தெரியாதவர்கள் கூட எல்லாம் தெரிந்தது போலப் பேசுவார்கள். ஆகவே நீ இதையெல்லாம் பொருட்படுத்தக் கூடாது. 

அப்படிப் பொருட்படுத்தினால் சினிமா உலகில் வளரமுடியாது'' என்று கால்மணி நேரம் பல்வேறு நிகழ்ச்சிகளைச் சொல்லி, எம்.எஸ்.வி. அவர்களும்,  இயக்குநர் கே.சங்கர் அவர்களும்  என்னைப் பாடல் எழுத வைத்தனர். எம்.எஸ்.வி சொன்ன நிகழ்ச்சிகளில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய நிகழ்ச்சியும் ஒன்று. அதைப் பிறகு சொல்கிறேன்.

அதன்பிறகு சரணங்களை எழுதி அதை மியூசிக்  டைரக்டரும், டைரக்டரும் ஓ.கே. செய்த பிறகு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆரிடம் காட்டி அவர் சம்மதம் தெரிவித்த பிறகுதான் இப்பாடல் ஒலிப்பதிவானது.

காலை ஒன்பது மணிக்கு ஒலிப்பதிவு ஆகியிருக்க வேண்டிய பாடல் இரவு ஒன்பது மணிக்கு ஜேசுதாஸ் பாட ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அதுவரை ஜேசுதாஸ் அங்கேயே காத்திருந்து பாடினார். இப்போது அப்படியெல்லாம் நடக்குமா?

பாடல் சரியாக வரவில்லையென்றால் மறுநாள் வைத்துக் கொள்ளலாம் என்று எம்.ஜி.ஆரும் சொல்லி விடுவார். அண்ணன் விஸ்வநாதனும் சொல்லிவிடுவார். ஆனால் இந்தப் பாடலைப் பொறுத்தவரை மறுநாளே படிப்பிடிப்பு நடத்தியாக வேண்டும். அதற்கு மறுநாள் எம்.ஜி.ஆர். வேறொரு படத்திற்கு மங்களூர் செல்ல வேண்டும் அதனால்தான் இவ்வளவு அவசரம்.

இந்தப் பாடலைப் பொருத்தவரை எல்லோரும் என்னால் சிரமப்பட்டு விட்டார்கள். இருந்தாலும் பாடல் பிரபலமானதால் எல்லாரும் சிரமத்தை மறந்து மகிழ்ச்சியடைந்தார்கள் தயாரிப்பாளர் உட்பட. எம்.ஜி.ஆர். பட வரலாற்றிலேயே முதல்நாள் பாடலை ஒலிப்பதிவு செய்து மறுநாளே படப்பிடிப்பு நடத்தி முடித்தது இந்தப் பாடலாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன்.

மறுநாள் படப்பிடிப்பு முடிந்து பத்திரிகையாளரைச் சந்தித்தபோது, இந்தப் பாடல் குறிப்பிட்டபடி இன்றைக்குப் படமாக்கப்படுமா என்ற பதற்றமான சூழ்நிலை இருந்தது. நல்லவேளை முத்துலிங்கம் காப்பாற்றிவிட்டார். அவருக்கு என் நன்றி என்று சொல்லுங்கள் என்று எம்.ஜி.ஆர். சொன்னாராம். இதை பத்திரிகையாளர் ராமமூர்த்தி என்னிடம் கூறி மகிழ்ச்சி தெரிவித்தார்.

அன்புக்கு நான் அடிமை என்ற பாடலில் மூன்று சரணங்கள் இருக்கும். அதில் இரண்டாவது சரணம்,
குடிக்கும் நீரை விலைகள் பேசிக்
கொடுக்கும் கூட்டம் அங்கே
இருக்கும் காசைத் தண்ணீர் போலே
இறைக்கும் கூட்டம் இங்கே
ஆடை பாதி ஆளும் பாதி
அறிவும் பாதி ஆனது இங்கே
- என்று வரும்.
ஒருமுறை இந்தப் பாடலைப் பற்றி ஜெயா தொலைக்காட்சியில் பேசிய பாடலாசிரியர் கவிஞர் பிறைசூடன் காசுக்குத் தண்ணீர் வாங்கிக் குடிக்கக் கூடிய நிலை வரும் என்று எண்ணிப் பார்க்க முடியாத காலத்திலேயே தண்ணீரை ஒரு கூட்டம் விலைக்கு விற்கிறது என்று முத்துலிங்கம் எழுதியிருக்கிறார்.

இன்றைக்குத் தண்ணீரை பாட்டிலில் அடைத்து மினரல் வாட்டர் என்று விற்கிறார்கள். கவிஞர்களின் தீர்க்க தரிசனமுள்ள வார்த்தைகள் பொய்க்காது என்பதற்கு இதெல்லாம் ஓர் எடுத்துக்காட்டு என்று கூறினார்.

ஒரு நாள் சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்றபோது தாகம் ஏற்பட்டது. அப்போது மணலைத் தோண்டித் தண்ணீர் எடுத்து வடிகட்டி ஒரு குவளை பத்துக்காசுக்கு விற்பதைக் கண்டேன். அதை வாங்கிக் குடித்த அனுபவம் எனக்கு உண்டு. அதை வைத்துத்தான் குடிக்கும்நீரை விலைகள் பேசிக் கொடுக்கும் கூட்டம் அங்கே என்று எழுதினேன்.

வருங்காலத்தில் மிகப்பெரிய தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் தற்போது தண்ணீர் சிக்கல்தான் பெரிய சிக்கலாக இருக்கிறது.

நமக்கு உரிமையுள்ள தண்ணீரையே கர்நாடகம் கொடுக்க மறுக்கிறது. நான்கு நாட்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்ட போது அமைக்கிறோம் என்று உறுதிசொன்ன மத்திய அரசு ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அமைக்க முடியாது என்று கையை விரித்துவிட்டது.
(இன்னும் தவழும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே! 8 

 

 
0000_aandha_thenkatru_thalatuthe8

 

"இன்று போல் என்றும் வாழ்க' என்ற படத்தில்  "அன்புக்கு நானடிமை' - என்ற பாடலுடன் இன்னொரு பாடலையும் எழுதினேன்.
இது - நாட்டைக் காக்கும்கை
உன் - வீட்டைக் காக்கும்கை
இந்தக்கை நாட்டின் நம்பிக்கை
இது - எதிர்காலத் தாயகத்தின் வாழ்க்கை...
இதுதான் அந்தப் பாடல். இது - எதிர்காலப் பாரதத்தின் வாழ்க்கை என்றுதான் எழுதினேன். பாரதத்தின் என்ற வார்த்தையை நீக்கிவிட்டுத் தாயகத்தின் என்று மாற்றியவர் எம்.ஜி.ஆர்.தான்.

அன்புக்கை இது ஆக்கும்கை - இது
அழிக்கும் கையல்ல
சின்னக்கை ஏர் தூக்கும்கை - இது
திருடும் கையல்ல
நேர்மை காக்கும்கை - நல்ல
நெஞ்சை வாழ்த்தும்கை - இது
ஊழல் நீக்கித் தாழ்வைப் போக்கிப்
பேரெடுக்கும்கை'
இப்படி எல்லா சரணங்களிலும் "கை' "கை' என்றுதான் வரும். நான் எம்.ஜி.ஆர் கையைப் பற்றித்தான் எழுதினேன். ஆனால் இன்று வேறொரு கைக்குப் (காங்கிரஸ்) பிரச்சாரப் பாட்டாக ஆகிவிட்டது.

என்றாலும், அன்புக்கு நானடிமை, இது நாட்டைக் காக்கும் கை என்ற இரண்டு பாடலையும் தான் எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார்.

இப்போது போல அப்போது சி.டி.யோ, கேஸட்டோ இல்லாத காலம். எந்தப் பாடலாக இருந்தாலும் அது சினிமாப் பாடலாக இருந்தாலும், கட்சிப் பாடலாக இருந்தாலும், பக்திப் பாடலாக இருந்தாலும் எல்லாம் கல்கத்தாவுக்கு அனுப்பி இசைத்தட்டாக வெளிவரச் செய்த பிறகுதான் பயன்படுத்துவார்கள். அதற்கான வசதி அப்போது சென்னையில் கிடையாது.

அதனால் கல்கத்தாவுக்கு அனுப்பி ஒரே வாரத்தில் இசைத்தட்டாக வெளிவரச் செய்து தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார். வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார்.

அப்போது அமெரிக்காவிலிருந்து வெளிவந்த "வாஷிங்டன் போஸ்ட்' என்ற பத்திரிகை நான் எழுதிய இந்த இரண்டு பாடல்களையும் குறிப்பிட்டு என்பெயரையும் குறிப்பிட்டு இதைப் போன்ற கவிஞர்கள் எழுதிய கருத்துள்ள பாடல்களைப் பாடி மக்களைக் கவர்ந்து எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தார் என்று எழுதியிருந்தது. டைரக்டர் கே.சங்கர்தான் அந்தப் பத்திரிகையை என்னிடம் காட்டினார்.

படிப்பதற்கு அது மகிழ்ச்சியாக இருந்தாலும் இதைப் போன்ற பாடல்களைப் பாடி நடித்ததால் மட்டும் அவர் ஆட்சிக்கு வரவில்லை. மக்களுக்கு அவர் செய்த நன்மைகள், ஏழை எளியவர்களுக்கு அவர் செய்த உதவிகள், மக்களிடம் அவருக்கிருந்த அணுகுமுறை எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் அவர்மீது வைத்த நம்பிக்கை இதெல்லாம் சேர்ந்துதான் அவரை ஆட்சிக்குக் கொண்டுவந்ததே தவிர இதைப் போன்ற பாடல்களைப் பாடி நடித்ததால் மட்டும் அல்ல.

ஏன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படங்களில் இதைப்போல் நல்ல பாடல்கள் இல்லையா? எத்தனையோ கவிஞர்கள் இதைவிடச் சிறந்த கருத்துள்ள பாடல்களை சிவாஜி படங்களில் எழுதியிருக்கிறார்களே. நான்கூட சிவாஜி படங்களுக்கு எழுதியிருக்கிறேனே. சிவாஜி ஒரு கட்சி கூட ஆரம்பித்தாரே. ஒரு தொகுதியில் கூட அவராலே ஜெயிக்க முடியவில்லையே. அதற்கு என்ன காரணம்?
சினிமா பிரபலம் என்பது வேறு. அரசியலில் வெற்றி பெறுவது என்பது வேறு. எல்லா நடிகர்களும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. எல்லா நடிகையரும் ஜெயலலிதா ஆகிவிடமுடியாது. கதர்ச்சட்டை அணிந்தவர்கள் எல்லாம் காமராஜர் ஆகிவிட முடியுமா?
சினிமா என்பது பிரபலத்திற்கும் விளம்பரத்திற்கும் பயன்படுமே தவிர அதை வைத்து எல்லாரும் ஆட்சியைப் பிடித்துவிட முடியாது.

நான்கு படங்களில் கதாநாயகனாக நடித்து அவை நூறு நாட்கள் ஓடிவிட்டால் எல்லா நடிகர்களும் முதலமைச்சர் கனவில் மிதக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அந்தக் கனவு மாயக் கனவு என்பதை  அவர்கள் உணர வேண்டும்.

கனவு காண்பதற்கும் ஆசைப்படுவதற்கும் ஓர் அளவுண்டு. சேரன் இயக்கிய மாயக் கண்ணாடி படத்தில் நான் ஒரு பாடல் எழுதினேன். அதில் ஒரு சரணத்தில்,
கனவு காணவே பலரும் சொல்கிறார்
கனவு மட்டுமே இளைஞர் காண்கிறார்
திறமை இன்றியே கனவு காண்பவன்
கானல் நீரிலே மீனுக் கலைபவன்'
என்று வரும். அதுபோல் வினைவலியும் தன்வலியும், மாற்றான் வலியும், துணைவலியும் தூக்கிச் செயல்" என்ற வள்ளுவர் கருத்தை மனதில் வைத்துக் கொண்டு ஆட்சிக்கு வரக் கனவு காண்பவர்கள் செயல்பட வேண்டும்.

சாதாரண நாடக நடிகராக எம்.ஜி.ஆர் இருந்தபோது பத்து ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் தர்மத்திற்கு இரண்டு ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவாராம். சினிமாவில் துணை நடிகராக நடித்தபோது நூறு ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் பத்து ரூபாய் தர்மத்திற்கு ஒதுக்கிவிடுவாராம். "மந்திரி குமாரி" படத்தில் கதாநாயகனாக நடித்தபோது அவருக்கு மாதச் சம்பளம் ஆயிரம் ரூபாயாம். அந்த ஆயிரம் ரூபாயில் தர்மத்திற்காக நூறு ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவாராம். அந்தப் படத்திற்கு அவருக்குப் பேசிய மொத்தச் சம்பளம் பத்தாயிரம் ரூபாய்தான்.

அவர் படங்களுக்குப் பாடல் எழுதும்போது எங்களிடம் இதைச் சொல்லி நீங்களும் இப்படி உதவுகின்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் செய்கின்ற தான தர்மங்கள்தான் கடைசிக் காலத்தில் உங்களுடன் நிழல்போல் தொடர்ந்து வரும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.

நான் பொருளாதாரத்தில் பின்தங்கியவன்தான் என்றாலும் அவர் சொன்னதற்கேற்ப என்னாலான முடிந்த உதவிகளை மற்றவர்களுக்குச் செய்துகொண்டுதான் இருக்கிறேன்.

எம்.ஜி.ஆரை நாடி யாரேனும் ஒருவர் உதவி கேட்டுச் சென்றால், இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தி அவர் காதுக்குப் போய்விட்டால் போதும் வந்தவர் வெறுங்கையோடு திரும்பமாட்டார்.

அந்த வகையில் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டுவதில் அன்னையாகவும், அவர்களை மேலேற்றி வைக்கும் திண்ணையாகவும் பலன் தரக்கூடிய தென்னையாகவும் திகழ்ந்தவர் 

எம்.ஜி.ஆர். சுருக்கமாகச் சொன்னால் மனிதப் பறவைகளின் சரணாலயம் அவர்.

எம்.ஜி.ஆரை நம்பியவர்கள் எவரும் கெட்டதும் இல்லை. அவர் வழியில் செல்பவர்கள் தோல்வியைத் தொட்டதும் இல்லை. எல்லாருக்கும் உள்ளங்கையில் இருப்பது ரேகை என்றால் அவர் கையில் இருந்தது ஈகை.

பண்டித ஜவகர்லால் நேருபோல் குடும்பப் பாரம்பரியம் மிக்க தலைவர்கள் இருக்கலாம். காமராஜரைப் போலே உழைப்பால் உயர்ந்த உத்தமத் தலைவர்கள் இருக்கலாம். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப்போல அஞ்சா நெஞ்சம் பெற்ற வீரத் தலைவர்கள் இருக்கலாம். 

அண்ணாவைப் போல, ராஜாஜி போல அறிவாற்றல் மிகுந்த தலைவர்கள் இருக்கலாம். கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் ஜீவானந்தம் போல, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் போல நேர்மையான, எளிமையான தலைவர்கள் இருக்கலாம். கலைஞரைப் போல எதையும் தாங்கும் இதயம் பெற்ற தலைவர்கள் இருக்கலாம்.

ஜெயலலிதாவைப் போல ஆளுமைத் தன்மைமிக்க தலைவர்கள் இருக்கலாம். ஆனால் எம்.ஜி.ஆரைப் போல மனித நேயமுள்ள தலைவர்களை மண்ணுலகில் காண்பது அரிது.
(இன்னும் தவழும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பட்டுக்கோட்டையாரின் "பல்லவி'க்கு மரியாதை!

 

 
aanadha_thenkatru_9

 

ஆனந்தத்  தேன்காற்று தாலாட்டுதே! - 9

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தைப் பற்றி எம்.எஸ். விசுவநாதன் சொன்னதை பிறகு சொல்கிறேன் என்று  எழுதியிருந்தேன். அதை இப்போது சொல்கிறேன்.

விசுவநாதன் - ராமமூர்த்தி இசையில் பட்டுக்கோட்டை எழுதிய முதற்பாடல் "பாசவலை' படத்தில்தான் இடம் பெற்றது. அந்தப் படத்திற்கு இசையமைக்க சேலம் மாடர்ன் தியேட்டர்ஸýக்கு எம்.எஸ்.வி. வந்திருக்கிறார்.

அவரிடம் "பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் என்ற பையன் நன்றாகப் பாடல் எழுதுகிறான். அவன் ஒரு பாட்டை எழுதி வைத்திருக்கிறான். நீங்கள் பாருங்கள் உங்களுக்குப் பிடித்தால் அவனுக்கு வாய்ப்புக் கொடுங்கள்'- என்று மாடர்ன் தியேட்டர்ஸ் மேலாளராக இருந்த சுலைமான் என்பவர் கேட்டுக் கொண்டார்.

புது ஆட்களுக்கெல்லாம் இப்போது வாய்ப்புக் கொடுப்பதற்கு எனக்கு நேரமில்லை. மெட்டுக்குப் பாட்டெழுதி அனுபவப்பட்ட மருதகாசி போன்றவர்களுக்குக் கொடுத்தால்தான் வேலை சுலபமாக முடியும். அதனால் அடுத்தமுறை பார்த்துக் கொள்ளலாம். அந்தப் பையனைப் போகச் சொல்லுங்கள் என்று எம்.எஸ்.வி. கண்டிப்புடன் சொல்லியிருக்கிறார். 

சரி போகச் சொல்கிறேன் இருந்தாலும் இந்தப் பாட்டை ஒருமுறை நீங்கள் பாருங்கள் என்று சுலைமான், பட்டுக்கோட்டையின் பாடலைக் காட்டியிருக்கிறார். அதைப் படித்துப் பார்த்து எம்.எஸ்.வி. ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்துவிட்டாராம். 

இப்படியெல்லாம் கருத்துள்ள பாடல்களை எழுதக் கூடிய கவிஞர்கள் இருக்கிறார்களா? என்று வியப்படைந்த எம்.எஸ்.வி. தன் தலையில் தானே அடித்துக்கொண்டு நல்ல பாடலையும் நல்ல கவிஞனையும் இழக்க இருந்தோமே... என்று வருத்தப்பட்டு கல்யாண சுந்தரத்தை அழைத்துப் பாராட்டி அவர் எழுதிய பாடலுக்கு இசையமைத்தாராம்.

அப்படி அவர் இசையமைத்த அந்தப் பாடல்தான்,
"குட்டி ஆடு தப்பிவந்தா குள்ளநரிக்குச் சொந்தம்
குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்குச் சொந்தம்
தட்டுக்கெட்ட மனிதர்கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்
சட்டப்படி பார்க்கப் போனா எட்டடிதான் சொந்தம்'
என்ற பாடல். முதன்முதல் பட்டுக்கோட்டைக்குப் பிரபலம் தந்த பாடலும் இதுதான். அதன்பிறகு அந்தப் படத்தில் மூன்று பாடல்கள் எழுத வாய்ப்புக் கொடுத்தவரும் எம்.எஸ்.வி.தான்.

அதில் ஒரு பாடலுக்கான காட்சியைச் சொல்ல எம்.எஸ்.வி.யையும், பட்டுக்கோட்டையையும் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் தன்னுடைய அறைக்கு அழைத்தாராம். அவர் அறையில் சுந்தரம் உட்கார்வதற்கு மட்டும்தான் நாற்காலி இருக்குமாம். வேறு நாற்காலி இருக்காதாம். அதே நேரத்தில் பாரதிதாசன், கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் வருவதாக இருந்தால் முன்கூட்டியே இன்னொரு நாற்காலி போட்டிருப்பார்களாம். அவர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் தனக்குமுன் அமர்ந்தால் அது மரியாதைக் குறைவென்று டி.ஆர்.எஸ். கருதியிருப்பாரோ என்னவோ தெரியாது. டி.ஆர். சுந்தரத்தை, டி.ஆர்.எஸ் என்றுதான் சுருக்கமாக மரியாதையாக மற்றவர்கள் அழைப்பார்கள்.

கால் மணிநேரம் விசுவநாதனையும், பட்டுக்கோட்டையையும் நிற்கவைத்தே பாடல் எழுதுவதற்கான காட்சியை விளக்கியிருக்கிறார் டி.ஆர்.எஸ். உடனே ஒரு தாளை எடுத்து "நீங்கள் சொன்ன காட்சிக்கு இந்தப் பல்லவி பொருத்தமாக இருக்குமா பாருங்கள்' என்று ஒன்றை எழுதிக் காட்டியிருக்கிறார் பட்டுக்கோட்டை. உடனே அழைப்பு மணியை அடித்து இரண்டு இருக்கைகள் கொண்டுவந்து போடச் சொல்லி அவர்களை அமரச் சொன்னாராம் டி.ஆர்.எஸ்.

அறையை விட்டு வெளியே வந்ததும் "என்னய்யா மற்றவர்கள் எழுதாத பல்லவியை நீ எழுதிவிட்டாய். பல்லவியைப் பார்த்ததும் நாற்காலி நமக்குப் போடச் சொன்னாரே. இங்கே ஆஸ்தான கவிஞராக இருக்கக்கூடிய மருதகாசிக்குக் கூட இந்த அளவு மரியாதை கொடுத்ததில்லையே...  அது என்ன பல்லவி?' என்று எம்.எஸ்.வி. கேட்டிருக்கிறார்.
"வேறொன்றும் இல்லை அண்ணா. 

நீண்டநேரமாக நம்மை நிற்கவைத்தும் அவர் அமர்ந்து கொண்டும் பேசினாரல்லவா அது எனக்குக் கோபத்தை உண்டாக்கிவிட்டது. அதனால், மரியாதை கொடுத்து மரியாதை வாங்குங்கள் - மனிதரை மனிதராய் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்' - என்று எழுதிக் காட்டினேன் என்று சொல்லியிருக்கிறார் பட்டுக்கோட்டை.

"அடப்பாவி சினிமா உலகில் முரடன் என்று பெயர் பெற்ற சகலகலாவல்லவரான பி.யு. சின்னப்பாவையே சாட்டையால் அடித்தவராயிற்றே டி.ஆர்.சுந்தரம்.

உன்னைப் போன்றவர்களை ஏன் கூட்டி வந்தாய் என்று என்னைப் போட்டு அடித்தால் நான் என்னய்யா செய்வது? அவ்வளவுதான். இனி மாடர்ன் தியேட்டர்ஸில் நமக்கு இடமில்லை'யென்று பட்டுக்கோட்டையிடம் கோபத்துடனும், வருத்தத்துடனும் சொல்லிக் கொண்டிருந்தாராம் எம்.எஸ்.வி.

இப்படி ஏதாவது இவர்கள் நினைப்பார்கள் என்று எண்ணிய டி.ஆர்.எஸ். அவர்கள் இருந்த இடத்திற்கே வந்து பட்டுக்கோட்டையின் துணிச்சலைப் பாராட்டினாராம். எம்.எஸ்.வி. சொன்ன இந்தச் செய்தியை முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன் "சினிமா எக்ஸ்பிரஸ்'பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். அதன்பிறகு தான் இந்தச் செய்தியே பலருக்குத் தெரியும்.

அதற்குப்பிறகு எழுத வந்தவர்களெல்லாம் அவர்களே நேரில் இருந்து பார்த்ததைப் போல அந்த நிகழ்ச்சியை எழுதத் தொடங்கிவிட்டார்கள். முத்துலிங்கம் எழுதிய கட்டுரையிலிருந்து எடுத்தோம் என்று யாரும் சொன்னதில்லை. "வாமனன்' என்ற எழுத்தாளரைத் தவிர.

கம்யூனிஸ்டுக் கட்சி சார்பில் விவசாயிகள் மாநாட்டுக்காக  "கண்ணின் மணிகள்' என்ற  நாடகம் கோவையில் அந்நாளில் நடைபெற்றது. அதில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் இடம் பெற்றன.

அந்தப் பாடலைப் பற்றியும் அவரைப் பற்றியும் மறைந்த நடிகர் ஓ.ஏ.கே. தேவரும், நகைச்சுவை வசனம் எழுதுவதில் கைதேர்ந்த ஏ. வீரப்பனும், ஏ.எல். நாராயணனிடம் பாராட்டிப் பேசி இவர்தான் அந்தக் கவிஞர் என்று கல்யாணசுந்தரத்தையும் அறிமுகப்படுத்தி வைத்தனர்.

அப்போது ஏ.எல். நாராயணன் "படித்த பெண்' என்ற படத்திற்குக் கதை வசனம் எழுதிக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் நாடகத்திற்காக எழுதிய, பட்டுக்கோட்டையின் பாடல் ஒன்றை இடம் பெறச் செய்து அவரைப் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார்.
(இன்னும் தவழும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்...

 

 
anandha_thenkatru_-10

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே-10

 

அச்சமயம்... ஏ.எல். நாராயணன்  தான் கதை வசனம் எழுதிக் கொண்டிருந்த "படித்த பெண்' என்ற படத்தில் பட்டுக்கோட்டையின் இன்னொரு பாடலையும் சேர்க்க நினைத்தார். அதற்குக் காரணம் அதில் இருந்த "தேனாறு பாயுது செங்கதிரும் சாயுது ஆனாலும் மக்கள் வயிறு காயுது' என்ற வரிகள்தான்.

ஏதோ ஒரு காரணத்தால் இந்தப் பாடல் அதில் சேர்க்கப்படாமல் வேறொரு படத்தில் இடம் பெற்றது. அதற்கும் ஏ.எல். நாராயணன்தான் காரணம். அதைத் தொடர்ந்து பல படக் கம்பெனிகளுக்கு பட்டுக்கோட்டையை ஏ.எல்.என். அழைத்துச் சென்று பாடல் எழுத வாய்ப்புகள் வாங்கிக் கொடுத்தார். பட்டுக்கோட்டையைப் பற்றி பல செய்திகளை ஏ.எல். நாராயணன் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

பட்டுக்கோட்டை பாடல் எழுதும்போது தீப்பெட்டியை வைத்துத் தட்டிக் கொண்டே அதன் தாளத்திற்கேற்ப எழுதுவாராம்.
"மகேஸ்வரி' படத்திற்கு, தான் எழுதிய பாடலொன்றை இசையமைப்பாளர் ஜி. ராமநாதனிடம் தீப்பெட்டியைத் தட்டிக் கொண்டே பட்டுக்கோட்டை பாடிக் காட்டியபோது "என்ன நாராயணா கொலைச் சிந்து பாடுகிறவனையெல்லாம் பாட்டெழுதக் கூட்டி வந்துவிட்டாய்?' என்று ஜி. ராமநாதன் கோபமும் கிண்டலும் தொனிக்கக் கேட்டாராம்.

அப்படிக் கேட்ட ஜி.ராமநாதன்தான் பட்டுக்கோட்டை எப்போது வருவார். பாடல் எழுதி வாங்குவதற்கு என்று காத்திருந்தார்.  அதுதான் காலம். அல்லது விதி. அப்படி அவரிடம் அவர் காத்திருந்து எழுதி வாங்கிய பாடல்தான்,
சங்கத்துப் புலவர் முதல் தங்கத் தோடா பொற்பதக்கம் 
வங்கத்துப் பொன்னாடை பரிசளித்தார் 
எனக் - கிங்கில்லை ஈடெனச் சொல்லிக் களித்தார்-என்ற  பாடல்.
இப்பாடல் இடம் பெற்ற படம் எம்.ஜி.ஆர். நடித்த "சக்கரவர்த்தி திருமகள்'. பாடியவர்கள் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர். 
பின்னால் வரக் கூடிய சில கட்டுரைகளில் பட்டுக்கோட்டை பற்றியும் அவர் பாடல்கள் பற்றியும் சொல்ல இருப்பதால் இந்தச் செய்தியை முன்னோட்டமாக வாசகர்கள் எடுத்துக் 
கொள்ளலாம்.
 * * *
எம்.ஜி.ஆர். படத்திற்கு இரண்டாவதாக நான் எழுதிய படம் "ஊருக்கு உழைப்பவன்.' இது வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்தபடம். இது பெரிய தயாரிப்புக் கம்பெனிகளில் ஒன்று. நடிகர் திலகம் சிவாஜி, பத்மினி நடித்த "உத்தம புத்திரன்' படம் இந்தக் கம்பெனி தயாரித்ததுதான்.

பெரிய கம்பெனி தயாரிக்கின்ற படம். அதனால் நன்றாக எழுது என்று எம்.ஜி.ஆர். என்னிடம் கூறினார். கூறியதோடு மட்டுமல்ல அட்வான்ஸ் ஆயிரம் ரூபாய் உனக்குக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்று என்னிடம் பணம் கொடுத்தார். அப்போது அவர் பக்கத்தில் வித்வான் லட்சுமணன், சித்ரா கிருஷ்ணசாமி ஆகியோர் இருந்தனர். இன்னொருவரும் இருந்தார். அவர் யாரென்று நினைவில் இல்லை.

பாடல் எழுதி ஒலிப்பதிவானவுடன் அந்தக் கம்பெனியில் எனக்குப் பணம் கொடுத்தார்கள். ஏற்கெனவே நீங்கள் கொடுத்துவிட்டீர்களே... நீங்கள் கொடுத்ததாகச் சொல்லி எம்.ஜி.ஆர் கொடுத்தாரே என்றேன். நாங்கள் கொடுக்கவில்லையே என்றார்கள்.

அதன்பிறகுதான், எம்.ஜி.ஆர். கொடுத்தால் நான் வாங்க மறுத்துவிடுவேன் என்பதால் கம்பெனிக்காரர்கள் கொடுத்தார்கள் என்று சொல்லி அவர் தன் பணத்தைக் கொடுத்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். எத்தகைய மாமனிதர் அவர் என்பதை நினைத்து மலைத்துப் போய்விட்டேன். இன்றைக்கு நடிகர்களில் யாரேனும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்களா?

அந்தப் படத்தில் இரண்டு பெண்களுக்குக் கணவராக நடிப்பார் எம்.ஜி.ஆர். கதைப்படி ஒரு பெண்ணுக்குத்தான் அவர் உண்மையான கணவர். இன்னொரு பெண்ணுக்குக் கணவராக நடிக்க வேண்டிய சூழ்நிலை.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் தனக்கும் தன் மனைவிக்கும் பிறந்த தன் சொந்தக் குழந்தை இறந்துவிடுகிறது. அதை எடுத்து அடக்கம் செய்துவிட்டு இன்னொரு பெண்ணுக்குக் கணவனாக நடிக்கிறாரே... அந்தப் பெண் வீட்டுக்கு எம்.ஜி.ஆர் வருகிறார். அப்போது அந்தப் பெண்ணின் குழந்தைக்குப் பிறந்தநாள் விழா நடை
பெறுகிறது.

குழந்தையை வாழ்த்திப் பாட்டுப் பாடச் சொல்கிறார்கள். தன் சொந்தக் குழந்தை இறந்துவிட்டதே அதை நினைத்துப் பாடுவாரா? இந்தக் குழந்தைக்கு வாழ்த்துப் பாடுவாரா? அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அந்தப் பாடல் வருகிறது. இரண்டு குழந்தைக்கும் பொருத்தமாகப் பாடவேண்டும்.

எந்தக் குழந்தைகள் பிறந்த நாள் விழாவானாலும் இந்தப் பாடலை ஒலிபரப்ப வேண்டும். அந்த வகையில் பொருத்தமான முறையில் பாடல் எழுது" என்று கட்டளையிட்டார் எம்.ஜி.ஆர்.

வீனஸ் பிக்சர்ஸ் கம்பெனி சென்னை வடக்கு போக் ரோட்டில் இருந்தது. விசுவநாதன் அண்ணன் டியூன் போட நான் பாடல் எழுதினேன்.
நெஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடலிருக்குது
நினைக்கும்போது பாசமென்னும் அலையடிக்குது
என் - கண்ணுக்குள்ளே குழந்தையென்னும்
மலர் சிரிக்கின்றது
என் - கவிதைக்குள்ளே மழலை ஒன்று
குரல் கொடுக்கின்றது
எது - நடக்கும் எது நடக்காது
இது - எவருக்கும் தெரியாது
எது - கிடைக்கும் எது கிடைக்காது
இது - இறைவனுக்கும் புரியாது'
இதுதான் நான் எழுதிய பல்லவி.
அங்கிருந்த எல்லாருக்கும் இந்தப் பல்லவி பிடித்துவிட்டது. அந்தப் படத்தின் வசனகர்த்தா ஆர்.கே. சண்முகம் பல்லவி பிரமாதம் என்று பாராட்டினார். விசுவநாதன் அண்ணனும் நன்றாக இருக்கிறது என்று தட்டிக் கொடுத்தார்.

என்றாலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு குறைந்தது மூன்று பல்லவியாவது எழுதவேண்டுமல்லவா. ஆனால் ஒரே இடத்தில் இருந்தால் எனக்கு எழுத வராது. அதனால் கொஞ்சத்தூரம் நடந்து யோசித்துக் கொண்டு வருகிறேன். நான் எழுதுகின்ற பல்லவிக்கு டியூன் போடுங்கள் என்று சொல்லிவிட்டு வெளியே சென்றேன். தெற்கு போக் ரோட்டிலுள்ள சிவாஜி வீடு வரையிலும் சென்றுவிட்டுத் திரும்பி வந்தேன்.

அப்படி வந்து கொண்டிருந்தபோது என்னை உரசுவது போல் ஒரு பியட்கார் வந்து நின்றது. திரும்பிப் பார்த்தேன். காருக்குள் கவர்ச்சி வில்லன் கே. கண்ணன், நடிகர் ஐசரிவேலன் ஆகியோர் இருந்தனர்.

இந்த வாரம் "தென்னகம்' பத்திரிகையில் நீங்கள் எழுதிய "பிள்ளைத்தமிழ்' மிக நன்றாக இருந்தது என்று பாவலர் முத்துசாமி பலபடப் புகழ்ந்து எம்.ஜி.ஆரிடம் உங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் என்று நடிகர் ஐசரி வேலன் கூறினார். கண்ணனும் அதை வழி மொழிந்தார்.

எம்.ஜி.ஆரைப் பற்றி எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ், எம்.ஜி.ஆர். உலா, எம்.ஜி.ஆர் அந்தாதி ஆகிய மூன்று சிற்றிலக்கியங்களைப் படைத்த கவிஞன் நான் ஒருவன்தான். வேறு யாரும் இல்லை.

ஐசரி வேலன் அப்படிச் சொன்னவுடன் எனக்குப் பொறி தட்டியதைப் போல் ஓர் எண்ணம் தோன்றியது. நாம் எம்.ஜி.ஆரைப் பிள்ளையாகப் பாவித்து "பிள்ளைத்தமிழ்' இலக்கியம் எழுதுகிறோம். எம்.ஜி.ஆரும் படத்தில் ஒரு பிள்ளைக்காகத்தான் பாடுகிறார். ஆகவே இதையே முதல்வரியாக வைத்து எழுதினால் என்ன என்று எண்ணிய நேரத்திலே என் மூளைக்குள் ஒரு பல்லவி உட்கார்ந்து முரசறைந்தது.

வேகமாகச் சென்று அண்ணன் விசுவநாதனிடம் எழுதிக்காட்டினேன். நன்றாக இருக்கிறது. இதற்கு டியூன் போடுகிறேன். அதற்குள் நீயே ஒரு சரணத்தை யோசித்து எழுது என்றார்.

 
 

வரும்போதே சரணமும் எப்படி எழுத வேண்டும் என்று யோசித்துக் கொண்டு வந்த காரணத்தால் சரணத்தையும் உடனே எழுதிவிட்டேன். அதற்கும் எம்.எஸ்.வி. உடனே மெட்டமைத்துவிட்டார். அந்தப் பாடல் இதுதான்,
"பிள்ளைத்தமிழ் பாடுகிறேன் - ஒரு
பிள்ளைக் காகப் பாடுகிறேன்
மல்லிகைபோல் மனதில் வாழும்
மழலைக் காகப் பாடுகிறேன்        - இது பல்லவி
நீலக்கடல் அலைபோல
நீடூழி நீ வாழ்க
நெஞ்சமெனும் கங்கையிலே
நீராடி நீ வாழ்க
காஞ்சிமன்னன் புகழ்போலே
காவியமாய் நீ வாழ்க
கடவுளுக்கும் கடவுளென
கண்மணியே நீ வாழ்க"
என்று முதல் சரணமும்,  இதுபோல் இன்னொரு சரணமும் எழுதிவிட்டேன்.
இன்னொரு பல்லவியும் எழுதிவிடு. அதற்கும் மெட்டுப் போடுவோம் என்றார் 
எம்.எஸ்.வி.
தேவ லோக வாசலிலே - ஒரு
தெய்வக் குழந்தை நிற்கிறது
பூவில் வாழும் தேவதைகள் - பசும் 
பொன்போல் வாழ்த்துச் சொல்கிறது'
என்று எழுதினேன்.
அதற்கும் மெட்டுப் போட்டவுடன் மறுநாள் சத்யா ஸ்டுடியோவில் "நவரத்தினம்' படத்தில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம் போட்டுக் காண்பித்தோம். அப்போது ஏ.பி. நாகராஜன், நடிகை லதா, ப. நீலகண்டன் ஆகியோர் இருந்தனர்.

பாடலைக் கேட்ட இயக்குநர் ஏ.பி. நாகராஜன் இந்தக் காட்சிக்கு "நெஞ்சுக்குள்ளே அன்பு என்னும் கடலிருக்குது" - என்ற பல்லவி பொருத்தமாக இருக்கிறது என்றார். இயக்குநர் ப. நீலகண்டன் "தேவலோக வாசலிலே' என்ற பல்லவி இரண்டு குழந்தைக்கும் பொருத்தமாக இருக்கிறதே என்றார்.

பாடலைப் போடுவதற்கு முன்பு இந்தப் பாடல் எந்தச் சூழ்நிலையில் வருகிறது என்பதை அவர்களிடம் எம்.ஜி.ஆர் சொல்லிவிட்டுத்தான் பாடலைப் போட்டுக் காண்பித்தார். அதனால் அவர்கள் அந்தக் கருத்தைச் சொன்னார்கள்.

நீங்கள் சொல்வதும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் "பிள்ளைத் தமிழ்பாடுகிறேன்" என்ற பல்லவிதான் பாப்புலராகும். ஆகவே இதையே வைத்துக் கொள்ளலாம் என்று எம்.ஜி.ஆர். சொல்லிவிட்டார்.

அவர் சொன்னதுபோல் இந்தப்பாடல்தான் அதில் பிரபலமானது. அவரைப் போல பாடலைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்கள் யாரும் இருக்கமுடியாது. சினிமாத் துறையில் எல்லா நுணுக்கங்களையும் அறிந்த ஒரே நடிகர் அன்றைக்கு அவர்தான்.
(இன்னும் தவழும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • 1 month later...

உன் பாட்டு என் பெயரில் இருக்கக் கூடாதா?

 

 
anandha_thenkatru-11

 

ஆனந்தத் தேன்காற்று  தாலாட்டுதே-11

"ஊருக்கு உழைப்பவன்' படத்தில் "பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்' என்ற எனது பாடல் புலமைப்பித்தன் பெயரிலும், புலமைப்பித்தன் எழுதிய "அழகெனும் ஓவியம் இங்கே - உனை எழுதிய ரவிவர்மன் எங்கே?' என்ற பாடல் என் பெயரிலும் இசைத் தட்டில் தவறாக இடம் பெற்று விட்டது.  படம் வெளிவந்த நேரத்தில் வீனஸ் பிக்சர்ஸ்" நிறுவனத்திலிருந்து பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்" என்ற பாடல் முத்துலிங்கம் எழுதியது. அவர் பெயரிலேயே அந்தப் பாடலை ஒலிபரப்புங்கள் என்று வானொலி நிலையத்திற்குக் கடிதம் கொடுத்திருந்தார்கள். குறிப்பிட்ட சில காலம் வரை என் பெயரைச் சொன்னார்கள். அதன் பிறகு என் பெயருக்குப் பதிலாக புலமைப்பித்தன் பெயரையும் அவரது பெயரைச் சொல்ல வேண்டிய பாடலில் எனது பெயரையும் தவறாகச் சொல்லிவந்தார்கள். இதை வானொலி நிலையத்தில் கூறி மாற்றச் சொன்னேன். இப்போது எப்படிச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

நான் சிங்கப்பூருக்குச் சென்றபோது அங்கும் இதேபோல் இந்தப் பாடலில் பிரச்னை இருந்தது. என் பெயரை அந்தப் பாட்டில் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர்களும் மாற்றிக் கொண்டார்கள்.

அதுபோல் இளையராஜா இசையில் கே.பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த "உன்னால் முடியும் தம்பி' என்ற படத்தில்,
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது...
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான்விழி மயங்குது...
என்று ஒரு பாடல் நான் எழுதியிருந்தேன். இசைத்தட்டில் கங்கை அமரன் எழுதியது என்று தவறாகப் போடப்பட்டுவிட்டது. கங்கை அமரன் அந்தப் படத்தில் பாடலே எழுதவில்லை. எப்படி அவர் பெயர் அதில் இடம் பெற்றது என்றும் தெரியவில்லை. நானே வானொலி நிலையம் சென்று இசைத்தட்டில் உள்ள தவற்றைத் திருத்தி என் பெயரை எழுதச் சொன்னேன். அதன் பிறகு என் பெயர்தான் சொல்லி வருகிறார்கள். அதற்கு நன்றி.

நான் சிங்கப்பூர் சென்றிருந்தபோது சிங்கப்பூர் வானொலியில் என்னைப் பேட்டியெடுத்தார்கள். அங்கும் இந்தப் பாடல் கங்கை அமரன் பெயரில் இருந்தது. அதையும் அங்கு மாற்றினேன். இப்படிச் சில கவிஞர்கள் பாடல் வேறு சில கவிஞர்கள் பெயரில் இன்னும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது.

இப்படித்தான் சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரித்த "செங்கோட்டை' என்ற படத்தில் வித்யாசாகர் இசையில் "பூமியே பூமியே பூமழை நான் தூவவா' என்றொரு பாடல் எழுதியிருந்தேன். படத்தின் டைட்டிலில் மட்டும் என் பெயர் இருக்கிறது. கேசட்டில் என் பெயரே இல்லை. இது கம்பெனிக்காரர்கள் செய்த தவறு. 

இதுபோல் "குமரிப் பெண்ணின் உள்ளத்திலே' என்ற படத்தில் நான் எழுதிய பாடல் வாலி பெயரிலும் வாலி எழுதிய பாடல் என் பெயரிலும் தவறுதலாக இடம் பெற்றிருக்கிறது. ரிக்கார்டு கம்பெனிக் காரர்களின் கவனக் குறைவுதான் இதற்குக் காரணம்.

மேலும் வாலி எழுதிய பாடல்களைக் கண்ணதாசன் பாடலென்றும் கண்ணதாசனின் பாடல்களை வாலி எழுதியதென்றும் பலர் தவறாகச் சொல்லி வருகிறார்கள்.

வாலி எழுதிய சில பாடல்களைக் கண்ணதாசன் பாடல் என்று பலர் சொல்வது போல் மருதகாசி எழுதிய சில தத்துவப் பாடல்களையும் கண்ணதாசன் எழுதியது என்று சிலர் சிறப்பித்து சில இதழ்களில் எழுதியுள்ளனர். அதில் ஒன்று.
முதல் என்பது தொடக்கம்
முடிவென்பது அடக்கம்
விடைஎன்பது விளக்கம்
விதிஎன்பது என்ன?
உறவென்பது பெருக்கல்
பிரிவென்பது கழித்தல்
வழிஎன்பது வகுத்தல்
வாழ்வென்பது என்ன?
இது "பூவும் பொட்டும்' என்ற படத்தில் மருதகாசி எழுதிய பாடல். இது கண்ணதாசன் எழுதியது என்று ஒரு நண்பர் ஒரு சிற்றிதழில் எழுதியிருந்தார். கண்ணதாசனைத் தவிர வேறு கவிஞர்கள் யாரும் சிறப்பாக எழுத மாட்டார்கள் என்பது அந்த நண்பரின் நம்பிக்கைபோலும்.

பானுமதி, கே.ஏ. தங்கவேலு நடித்த "ரம்பையின் காதல்' என்ற படத்தில் "சமரசம் உலாவும் இடமே... நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே' என்ற தத்துவப் பாடல் மருதகாசி எழுதியது. இது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியதாகத் தவறாக அவர் பாடல் தொகுப்பில் முதல் பதிப்பில் இடம் பெற்றிருந்தது.

"மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏருபூட்டி' - என்ற "மக்களைப் பெற்ற மகராசி' படத்தில் இடம் பெற்ற இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான பாடல். இதை எழுதியவரும் மருதகாசிதான். இதுவும் பட்டுக்கோட்டையின் பாடல் தொகுப்பில் இருந்தது.

நான் சில கூட்டங்களில் இதைப் பற்றிப் பேசியிருக்கிறேன். "சினிமா எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில் எழுதிய கட்டுரையிலும் குறிப்பிட்டிருக்கிறேன். அதற்குப் பிறகு வந்த பதிப்புகளில் அந்தத் தவறு திருத்தப்பட்டிருக்கிறது.

"புதையல்' படத்தில் வருகிற "விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே' என்ற பாடலும் "தங்க மோகனத் தாமரையே' என்ற பாடலும் ஆத்மநாதன் எழுதியது. இது பட்டுக்கோட்டையின் பாடல் தொகுப்பில் முதல் பதிப்பில் இடம் பெற்று அதன் பிறகு திருத்தப்பட்டது.
அதுபோல் "இரும்புத்திரை' என்ற படத்தில் 
ஏரைப் புடிச்சவரும் இங்கிலீசுப் படிச்சவரும்
ஏழை பணக் காரரெல்லாம் ஒண்ணுங்க ஒண்ணுங்க ஒண்ணுங்க 
- இப்ப
எல்லாரும் சமத்துவம் எண்ணுங்க எண்ணுங்க எண்ணுங்க
உள்ள நேரம் டூட்டிக்குமேல் ஒருநிமிஷம் ஆச்சுனாலும்
ஓவர்டைம் கொடுக்கச் சொல்லி ஆர்டரு ஆர்டரு ஆர்டரு 
- இந்த
உளவு நல்லாத் தெரிஞ்சவரு லீடரு லீடரு லீடரு...
என்ற பாடல் கொத்தமங்கலம் சுப்பு எழுதியது. அதுவும் பட்டுக்கோட்டை தொகுப்பில் தவறாக இடம் பெற்றிருந்தது. இப்போது திருத்தப்பட்டுவிட்டது. இதற்கெல்லாம் காரணம் அந்தப் பாடல்களைத் தொகுத்தவர்களின் கவனக் குறைவுதான். வேறெதுவும் இல்லை. 

ஏன், நான் எழுதிய "காஞ்சிப்பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டுவைத்து' என்ற பாடல் வாலி எழுதியதாக "வாலி ஆயிரம்' பாடல் தொகுப்பிலே தவறாக இடம் பெற்றிருக்கிறது. ராஜ் டி.வி. நடத்திய வாலி தலைமையில் நடைபெற்ற ஒரு கவியரங்கில் நான் பாடும்போது  இந்தத் தவற்றைச் சுட்டிக் காட்டினேன். உடனே அண்ணன் வாலி, "உன் பாட்டு என் பெயரில் இருக்கக் கூடாதா?' என்று அவருக்கே உரிய நகைச்சுவை பாணியில் உரிமையோடு கேட்டார்.

நானும் "இருக்கலாம்' என்று சிரித்துக் கொண்டே சொன்னேன். திரைப்படக் கவிஞர்களில் என் குடும்பத்தின் மூத்த அண்ணனாக நான் நெருங்கிப் பழகிய ஒரே கவிஞர் அண்ணன் வாலிதான். அவர் பாடல்களைப் பற்றியெல்லாம் பின்னால் சொல்லவிருக்கிறேன்.

 

இது இப்படியென்றால் பல்லவி மட்டும் ஒரு கவிஞர் எழுதி சரணத்தை வேறொரு கவிஞர் எழுதி கடைசியில் பல்லவி எழுதிய கவிஞர் பெயரிலே வெளிவந்த பாடல்கள் சிலவுண்டு.
"ரத்தக்கண்ணீர்' படத்தில் நடிகை எம்.என்.ராஜம் ஆடுகின்ற காட்சிக்கு ஒரு பாடல்.
ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்
இந்தப் பல்லவியை எழுதியவர் உடுமலை நாராயணகவி. இது இந்தி மெட்டுக்கு எழுதிய பாடல். இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் இசைச் சித்தர் சி.எஸ். ஜெயராமன். பின்னணி இசையமைத்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி.
பல்லவிக்குப் பிறகு சரணம் அவருக்கு சரியாக வரவில்லை. அதனால் மருதகாசியை அழைத்து சரணத்தை எழுத வைத்தார்கள் கவிராயருடைய சம்மதத்துடன்.
சிகரெட்டை ஊதித் தள்ளி
சேர்மீது துள்ளித் துள்ளி
சிநேகிதர் தம்மைக் கிள்ளி
சிரிக்கிறார் ஏதோ சொல்லி
சிங்காரம் பண்ணுறார்
அங்கொரு ரொக்கப்புள்ளி
கல்யாண ஆசையாலே கண்ணைக் கண்ணைக் காட்டுகிறார்...
இப்படி மூன்று சரணங்கள் மருதகாசி எழுதினார். இது நாராயணகவி பெயரில் தான் வரும். அந்த அளவுக்கு அவர்கள் இருவருக்கும் ஒரு ஈடுபாடு.

கவிராயருக்கு மருதகாசி சீடரைப் போன்றவர். அதனால் எதுவாக இருந்தாலும் தான் எழுத வேண்டிய பாடல் சரியாக வரவில்லையென்றால் மருதகாசியைத் தான் எழுத அழைப்பார். இதை மருதகாசி அண்ணன் என்னிடம் சொல்லியிருக்கிறார். இதுபோல் எம்.ஜி.ஆர். பானுமதி நடித்த "அலிபாபாவும் நாற்பது திருடர்களும்' என்ற படத்தில் பாடல் எழுதுவதற்கு மாடர்ன் தியேட்டர்ஸார் உடுமலை நாராயணகவியை அழைத்தபோது, எழுதி டியூன்பண்ண வேண்டிய பாடல் எத்தனை? மெட்டுக்கு எழுத வேண்டிய பாடல் எத்தனையென்று கேட்டிருக்கிறார்.

மாடர்ன் தியேட்டர்ஸில் பெரும்பாலும் இந்திப் பட மெட்டுக்களைத்தான் பயன்படுத்துவார்கள். அதனால் கவிராயர் அப்படிக் கேட்டிருக்கிறார். எழுதி இசையமைக்க வேண்டிய பாடல் இரண்டு. மற்றைய பாடல்கள் எல்லாம் மெட்டுக்குத்தான் எழுத வேண்டியிருக்கும் என்றார்கள். 

மெட்டுக்கு எழுத வேண்டிய பாடல்களை மருதகாசியை வைத்து எழுதுங்கள். எழுதி இசையமைக்க வேண்டிய பாடல்களை நான் எழுதுகிறேன் என்று மருதகாசியையும் கூட்டிப் போயிருக்கிறார். கடைசியில் உடுமலையார் எழுதிய பாடல் அதில் இடம் பெறாமல் எல்லாப் பாடல்களையும் மருதகாசியே எழுதினார். அதில் எல்லாப் பாடல்களுமே பிரபலமான பாடல்கள். இந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் ஏ.எல். நாராயணன். எம்.ஜி.ஆர். படத்திற்கு ஏ.எல். நாராயணன் வசனம் எழுதிய முதல் படம் 
இதுதான்.
(இன்னும் தவழும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இப்படியும் நடக்கும்...

 

 
k13anandha_thenkatru_12

 

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 12

ஒருமுறை கே.ஏ. கிருஷ்ணசாமி நடத்திய "தென்னகம்' பத்திரிகைக்குச் சென்றிருந்தேன். அவர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். அப்போது  அ.தி.மு.க கட்சிப் பத்திரிகையாகத் "தென்னகம்' தான் இருந்தது. 

கே. ஏ. கிருஷ்ணசாமியை சுருக்கமாக கே.ஏ.கே. என்றுதான் சொல்வோம். எப்படி ஆர்.எம்.வீரப்பனை ஆர்.எம்.வீ. என்று சுருக்கமாகச் சொல்கிறோமோ அதுபோல.

எம்.ஜி.ஆர் அ.தி.மு.கவைத் தொடங்கியபோது, இன்றுமுதல் எம்.ஜி.ஆர் புரட்சி நடிகர் அல்லர். புரட்சித் தலைவர். அவரைப் "புரட்சித்தலைவர்' என்றுதான் இனி நாம் அழைக்கவேண்டும் என்றார். அவருக்குப் புரட்சித் தலைவர் என்ற அடைமொழி வந்தது இவரால்தான். அதனால்தான் கே.ஏ.கே. பற்றிக் குறிப்பிட்டேன்.

அந்தப் பத்திரிகைக்கு நான் சென்றிருந்தபோது ஏ.பி. நாகராஜன் கம்பெனியில் இருந்து எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஏ.பி. நாகராஜனின் அசோசியேட் டைரக்டர் சம்பத்குமார் பேசினார்.

"சின்னவரை வைத்து ஒருபடம் பண்ணுகிறோம். படத்திற்கு "நவரத்தினம்' என்று பெயர். சின்னவர் உங்களை வைத்துப் பாடல்கள் எழுதச் சொல்லியிருக்கிறார். கார் அனுப்பட்டுமா? இல்லை கம்பெனிக்கு நீங்களே வருகிறீர்களா?' என்றார். நானே வருகிறேன் என்று சென்றேன். எம்.ஜி.ஆரை சின்னவர் என்று சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் அழைப்பது வழக்கம்.

"லதாவும், சின்னவரும் பாடுவது போல ஒரு காதல் பாடல் எழுதவேண்டும். குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைக்கிறார். இங்கேயே இருந்து எழுதுங்கள்' என்றார் இயக்குநர் ஏ.பி. நாகராஜன். அவரையும் சினிமா உலகில் மரியாதையாக ஏ.பி.என் என்றுதான் அழைப்பார்கள். உடனே நான் ஒரு பல்லவி எழுதினேன்.
கம்பன் பாடாத புதுப்பாட்டு - உன்
கண்கள் பாடுது எனைப் பார்த்து 
கரும்பு வில்லில் கணை தொடுத்து - நீ
காமன் விழாவுக்குக் கொடியேற்று...
இதற்கு குன்னக்குடி அமைத்த இசை அவ்வளவு ஈர்ப்பு இல்லாமல் இருந்தது. உடனே ஏ.பி.என், "படத்திற்குப் பெயர் நவரத்தினம். அதனால் நவரத்தினங்களின் சிறப்பை வைத்து காதல் பாடல் எழுதினால் எப்படியிருக்கும்?' என்றார். நன்றாகத்தான் இருக்கும் அது புதுமையாகவும் இருக்கும் என்றேன்.

"நவரத்தினங்கள் என்னென்ன சொல்லுங்கள். அதைவைத்து எப்படி எழுதுவீர்கள்?' என்றார்.

முத்து, பவளம், மாணிக்கம், வைரம், வைடூரியம், புஷ்பராகம், கோமேதகம், மரகதம், நீலம் இவை நவரத்தினங்கள் என்றேன்.

சிரிப்புக்கு முத்து, விரல் நகத்திற்குப் பவளம், மாணிக்கத்தை உடல் நிறத்திற்கும், வைரம் உறுதியானது என்பதால் நம் காதல் உறுதியானது என்றும் மரகதம் பச்சை நிறமாக இருப்பதால் நம் காதல் என்றும் மாறாமல் பசுமையாக இருக்கும் என்றும், நீலமணியைக் கண்களுக்கும், கருநீலம் என்று கூந்தலுக்கும் சொல்லலாம் என்று ஒவ்வொரு மணியின் சிறப்பைக் கூறினேன்.

உடனே அவர் முகம் மலர்ந்து, "இவையெல்லாம் வரும்படி எழுதுவதற்கு ஏற்ற வகையில் ஒரு பல்லவி எழுதுங்கள் பார்க்கலாம்' என்றார். நவரத்தினம் என்று படத்தின் பெயர் இருப்பதால் இப்படிப் பல்லவி ஆரம்பிக்கலாம் என்று எழுதிக் காட்டினேன்...

ரத்தினம் - நவ
ரத்தினம் - உன்
மேனியெங்கும் மின்னுதே நவரத்தினம்
இத்தினம் - ஒரு
சுபதினம் - இந்த
இன்ப நாளில் பாடுவோம் காதல் மந்திரம்...
இது எப்படி இருக்கிறது என்றேன். "எப்படி இருக்கிறதா? நான் என்ன நினைத்தேனோ... அதை அப்படியே எழுதிவிட்டீர்கள். பிரமாதம்' என்றார். அதன்பிறகு சரணமும் எழுதி டியூன்போட்டு எம்.ஜி.ஆரிடம் காட்டினோம். நன்றாக இருக்கிறது என்றார்.

இரண்டு நாள்கழித்து ஏ.பி. என் கம்பெனிக்கு என்னை அழைத்தார்கள். சென்றேன். "நீங்கள் எழுதிய காதல் பாடலைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது வேறொரு காட்சிக்குப் பாடல் எழுதவேண்டும்' என்று சொல்லிக் காட்சியை விளக்கினார்:
"குடிகாரர்கள் நிறைந்திருக்கும் பகுதியில் தனியே ஒரு பெண் சென்றால் என்னாகும்? எப்படிப்பட்ட நிலையிலும் கோபப்பட்டு, வீட்டைவிட்டு ஒரு பெண் நள்ளிரவில் வெளிவரக் கூடாது. வந்தால் எவ்வளவு மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை விளக்கும் வகையில் பாடல் எழுதவேண்டும்' என்றார்.

அவரே ஒரு குறிப்பும் கொடுத்தார், "மான்கள் ஓடிவரலாம், மயில்கள் ஓடிவரலாம். மங்கைப் பருவமுள்ள பெண் இரவில் வீட்டைவிட்டு ஓடிவரக் கூடாது என்பது போல் பல்லவி எழுதுங்கள்' என்றார். நீங்கள் சொன்னதே நன்றாக இருக்கிறது. அதையே ஆரம்பமாக வைத்துக் கொள்ளலாம் என்று...
மானும் ஓடி வரலாம்
மா நதியும் ஓடி வரலாம்
மங்கை தனியே வரலாமா - தன்
மானம் மறந்து ஓடி வரலாமா..?
என்று வாயால் சொல்லிக் காட்டினேன். 
"இதுவே நன்றாக இருக்கிறது. எழுதுங்கள். சரணத்திற்கு டியூன்போட்டு எழுதிக் கொள்ளலாம்' என்றார்.
நல்ல - பாதையில் எங்குமே போய் வரலாம் 
குடி - போதையில் நடுவே வரலாமா? 
பொறுமையை ஒருகணம் விட்டுவிடலாம் - உயர்
பெண்மையின் தன்மையை விடலாமா?
என்று ஒரு சரணமும் அதுபோல் மேலும் இரண்டு சரணமும் எழுதினேன். எம்.ஜி.ஆர். ஒப்புதலுடன் பாடலும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு அது படமும் ஆக்கப்பட்டது.

ஒரு பெண்ணைத் திருத்த எம்.ஜி.ஆர் குடித்துவிட்டுப் பாடுவதைப்போல இந்தக் காட்சி இருந்ததால் இது எம்.ஜி.ஆர் இமேஜைப் பாதிக்கும் என்று பலர் சொன்னதால் படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். "அந்தப் பாடல்தான் நன்றாக இருக்கிறது. அதை ஏன் நீக்கினீர்கள்?' என்று விநியோகஸ்தர்கள் கேட்க படம் வெளிவந்த இரண்டாவது வாரத்தில் இப்பாடல் காட்சி மீண்டும் சேர்க்கப்பட்டது. ஆனாலும் படம் ஓடவில்லை. அந்தப் பாடலை மீண்டும் வெட்டிவிட்டனர். டூயட் பாடல் ஒன்று இதற்குமுன் எழுதினேனே அந்தப் பாடல் ஒலிப்பதிவே செய்யப்படவில்லை.

"மானும் ஓடிவரலாம் பாடல்' இசைத் தட்டில் இருக்கிறது. படத்தில் சேர்க்கப்படாததால் என் பெயர் படத்தின் டைட்டிலில் இடம் பெறவே இல்லை. ஆனால் இசைத்தட்டில் இடம் பெற்றது எம்.ஜி.ஆர். படங்களில் இப்படியும் நடந்திருக்கிறது.

அதுபோல் ஆஸ்கார் மூவிஸ் சார்பில் எம். பாஸ்கர் தயாரித்து இயக்கிய "தண்டிக்கப்பட்ட நியாயங்கள்' என்ற படத்திற்கு நான் எழுதிய பாடல் அதில் இடம்பெறவில்லை. ஆனாலும் டைட்டிலில் என் பெயர் இடம் பெற்றது. 

அந்தப் பாடல் அதே கம்பெனி தயாரித்த "பெளர்ணமி அலைகள்' என்ற படத்தில் இடம் பெற்றது. சங்கர்கணேஷ் இசையில் வெளிவந்த அந்தப் பாடல்... தேன்பாயும் வேளை - செவ்வான மாலை...  என்று தொடங்கும்.

இப்படித்தான் "கூண்டுக்கிளி' என்ற படத்திற்கு விந்தன் எழுதிய பாடல் அதில் இடம் பெறாமல் "குலேபகாவலி' என்ற படத்தில் இடம் பெற்றது. அந்தப் பாடல்தான் மயக்கும் மாலைப் பொழுதே நீ போபோ... என்ற பாடல். இதை இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி ஒரு விழாவில் குறிப்பிட்ட போதுதான் எல்லாருக்கும் இச்செய்தி தெரிந்தது.

"நவரத்தினம்' படத்திற்கு எழுதிய பாடல்களைப் பற்றி இதுவரை எந்தப் பத்திரிகையிலும் தொலைக்காட்சிகளிலும் இதுவரை நான் குறிப்பிட்டதில்லை. தினமணியில்தான் முதன் முதலில் குறிப்பிடுகிறேன்.
(இன்னும் தவழும்)

 

 

 

திரையுலகம் உணர வேண்டும்!

 

 
0anadha_thenkatru_thalatuthe-_13

 

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே- 13

திரைப்பாடல்களைப் பற்றித் தொடர்ந்து சொல்வதற்கு முன் திரைப்படங்களைப் பற்றிச் சில செய்திகளைச் சொல்லிவிட்டு அதன்பிறகு தொடர்கிறேன். உலகில் இரண்டு துறைகள் வலுவான துறைகள். ஒன்று அரசியல். மற்றொன்று திரைத்துறை. அரசியலில் இறங்குவதற்கு இன்று திரைத்துறைதான் முன்வாசலாக இருக்கிறது. திரைப்படங்கள் மூலம் எதையும் சொன்னால் அது மக்கள் மத்தியில் எளிதாகப் பரவும். மக்கள் மனத்திலும் எளிதாகப் பதியும். அதனால் நன்மைகளும் ஏற்பட்டிருக்கின்றன. தீமைகளும் ஏற்பட்டிருக்கின்றன.

திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் கொள்கைகளைப் பரப்ப திரைப்படத்தை ஒரு கருவியாகத் தேர்ந்தெடுத்தார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். மற்றவர்கள் அதை அலட்சியப்படுத்தினார்கள். அதனால் அவர்கள் தோல்வி பெற்றார்கள்.

இந்தியாவில் முதல் மெüனப்படம் 1913-இல் பம்பாயிலிருந்து வெளிவந்தது. படத்தின் பெயர் "ராஜா ஹரிச்சந்திரா'. இப்படத்தை தாதா சாகிப் பால்கே தயாரித்து இயக்கினார். இவர் பெயரில்தான் "தாதா சாகிப் பால்கே' விருதை மத்திய அரசு வழங்குகிறது.

1916-இல் சென்னையில் "கீசக வதம்' எனும் மெüனப் படம் வெளிவந்தது. தென்னிந்தியாவின் முதல் மெளனப் படம் இதுதான். இப்படத்தை ஆர். நடராஜ முதலியார் என்பவர் தயாரித்தார். சென்னையிலிருந்து 1916 முதல் 1932 வரை 108 மெளனப்படங்கள் வெளிவந்தன.

முதன்முதலில் இந்தியாவில் பேசும்படம் உருவானது 1931-ஆம் ஆண்டு. முதன்முதல் வெளிவந்த பேசும்படம் "ஆலம் ஆரா' என்ற இந்திப் படம்தான்.

இதைத் தயாரித்து வெளியிட்டவர் இரானி என்ற பம்பாய்க்காரர். அதே 1931-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழில் வெளிவந்த பேசும்படம் "காளிதாஸ்'.
இதில் கதாநாயகியாக நடித்த டி.பி. ராஜலட்சுமி தமிழில் பேசுவார். கதாநாயகனாக நடித்த நரசிம்மராவ் தெலுங்கில் பேசுவார். மற்றவர்கள் தங்கள் தாய்மொழியான கன்னடத்திலும், இந்தியிலும் பேசுவார்கள். இது பன்மொழி பேசும் படமாக அமைந்தது.

இதில் தமிழ்ப் பாடல்களை எழுதியவர் பாஸ்கரதாஸ். இவர்தான் தமிழ்த் திரைப்படத்திற்கு முதன்முதல் பாடல் எழுதிய பாடலாசிரியர். இவர் மதுரையைச் சேர்ந்தவர். இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு உறவினர். இவருடைய இயற்பெயர் வெள்ளைச்சாமித் தேவர். பாஸ்கரதாஸ் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். இவர் பாடல்கள் மதுரமாக இருக்கும் என்ற காரணத்தால் "மதுர பாஸ்கரதாஸ்' என்று மக்கள் அடைமொழி கொடுத்து அழைத்தார்கள்.

பாரதியார் பாடல்கள் மக்கள் மத்தியில் பரவுமுன்னே இவரது இசைப்பாடல்கள் மக்கள் மத்தியிலே பரவியிருந்தது என்று கவிஞர் சுரதா சொல்வார். மகாத்மா காந்தி மதுரைக்கு முதன்முதல் வந்தபோது அவரைச் சந்தித்துப் பேசிய முதல் திரைப்படப் பாடலாசிரியர் இவர்தான். இவர் காந்தியைச் சந்திக்கும்போது உடன் இருந்தவர் கவியோகி சுத்தானந்த பாரதியார். அவர்தான், பாஸ்கரதாசைக் காந்திக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

அந்தக் காலத்தில் சுதந்திரக் கனல் தெறிக்கக்கூடிய பாடல்களை விஸ்வநாத தாஸ் நாடக மேடையில் பாடியதாகச் சொல்வார்கள். அப்படி அவர் பாடியதெல்லாம் பாஸ்கரதாஸ் எழுதிய பாடல்களைத்தான்.

"கொக்குப் பறக்குதடி பாப்பா' - "கதர்க் கப்பல் கொடி தோணுதே' என்ற பாடல்களெல்லாம் பாஸ்கரதாஸ் இயற்றியது. அவற்றைத்தான் விஸ்வநாததாஸ் பாடினார். அதற்காக ஆங்கிலேய அரசால் விஸ்வநாததாஸ் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஒற்றைவாடைத் திரையரங்கில் "வள்ளி திருமணம்' நாடகத்தில் கழுகாசலக் காட்சியில் அவர் பாடிக் கொண்டிருந்த போதே உயிர் துறந்தார்.
இன்றைக்கு நூற்றாண்டுக்கு முன்பே தனது வீட்டிற்குத் "தமிழகம்' என்று பெயர் வைத்த தமிழ் உணர்வாளர் பாஸ்கரதாஸ்.

அந்நாளில் எஸ்.ஜி. கிட்டப்பா, கொடுமுடிக் கோகிலம் என்று போற்றப்பட்ட கே.பி. சுந்தரம்பாள் போன்றவர்கள் பாஸ்கரதாஸ் எழுதிய பாடல்களில் பல பாடல்களைப் பாடி  புகழ்பெற்றார்கள். இவரது பாடல்களை அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், எம்.எஸ். சுப்புலட்சுமி போன்றவர்களும் பாடியிருக்கிறார்கள். பாஸ்கரதாஸýம் 1942-இல் மறைந்துவிட்டார்.

இன்றைக்கிருப்பவர்களுக்கு பாஸ்கரதாஸ் என்றால் யாரென்றே தெரியாது. மறைந்த நடிகர் கே. சாரங்கபாணி மணிக்கணக்காக பாஸ்கரதாஸ் பற்றிப் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன்.

1932-ஆம் ஆண்டு வெளிவந்த "காலவரிஷி' என்ற படம்தான் முழுமையாகத் தமிழ்பேசி வெளிவந்த படம். இது பம்மல் சம்பந்த முதலியாரால் முதலில் நாடகமாக எழுதப்பெற்றது. அதன்பிறகுதான் அது பம்பாயில் படமாக்கப்பட்டு தமிழ்நாட்டில் வெளியானது.

1934-ஆம் ஆண்டு எங்கள் சிவகங்கையைச் சேர்ந்த நாராயணன் என்பவர் "சவுண்ட் சிட்டி' என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தைத் தென்னிந்தியாவில் முதன்முதல் சென்னையில் தொடங்கினார். ஆரம்ப காலத்தில் தமிழ்த் திரைப்படங்களின் உயர்வுக்கு வழிகாட்டியவர் இவர்தான். 1939-இல் தனது 39-ஆவது வயதில் அவரும் மறைந்துவிட்டார்.

1936-இல் "மிஸ் கமலா' என்றொரு படம். இதன் கதை வசனம் பாடல்களை எழுதி இயக்கிய முதல் தென்னிந்தியாவின் பெண் இயக்குநர் டி.பி. ராஜலட்சுமி. அது மட்டுமல்ல இவருக்குப் பாடவும் தெரியும். இசையமைக்கவும் தெரியும். "சினிமா ராணி' என்ற பட்டம் பெற்றவர்.

இந்தியாவில் இவருக்கு முன் முதல் பெண் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கியவர் ஜட்டன்பாய் என்பவர். இவருடைய மகள்தான் இந்தித் திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டிய பிரபல இந்தி நடிகை நர்கீஸ்.

1934-இல் 14 படங்களும், 1935-இல் 33 படங்களும், 1936-இல் 45 படங்களும், 1937-இல் 41 படங்களும் தமிழ்நாட்டில் வெளிவந்தன.

1937-இல் வெளிவந்த "பாலாமணி அல்லது பக்காத் திருடன்' என்ற படத்தில்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் முதன்முதல் பாடல்கள் எழுதினார். திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் முதன்முதல் திரைப்படத் துறையில் காலெடுத்து வைத்தவர் பாரதிதாசன்தான்.

1938-இல் அக்கிரகாரத்து அதிசய மனிதர் என்று அண்ணாவால் போற்றப்பட்ட வ. ராமசாமி ஐயங்கார் என்ற "வ. ரா.' கதை வசனம் எழுதித் தயாரித்த "இராமானுஜர்' என்ற படத்திற்கும் பாரதிதாசன் பாடல்கள் எழுதினார். அவர் பாடல் எழுதிய இரண்டாவது படம் அது.

அதற்கடுத்து 1940-இல் அகில உலக நாதசுரச் சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை நடித்த "கவிகாளமேகம்' என்ற படத்திற்கு கதை வசனம் பாடல்கள் எழுதினார்.

பத்திரிகைத் துறையிலிருந்து படத்துறைக்கு நான் வந்ததும் தன்னிடம் இருந்த இருநூறு பழைய தமிழ்ப்பாட்டுப் புத்தகங்களை திருவாரூர் தியாகராசன் என்னிடம் கொடுத்திருந்தார். நானும் அவரும் "அலை ஓசை' பத்திரிகையில் பணியாற்றினோம். அதற்கு முன் ஈ.வெ.கி. சம்பத் நடத்திய "தமிழ்ச்செய்தி' என்ற செய்திப் பத்திரிகையில் அவர் ஆசிரியராக இருந்த போது நான் அங்கு பணியாற்றியவன்.

என் மீதும் என் கவிதை மீதும் மிகுந்த ஈடுபாடுடையவர். அதனால் பழைய பாட்டுப் புத்தகங்களை என்னிடம் அப்படியே தந்துவிட்டார். திருவாரூர் தியாகராசன் என்றால் இன்றைக்குப் பலருக்குத் தெரியுமோ தெரியாதோ "சின்னக் குத்தூசி' என்றால் அனைவருக்கும் தெரியும். திராவிட இயக்க வரலாறுகளை என்னைப் போன்றவர்கள் அவரிடம் இருந்துதான் தெரிந்து கொண்டோம்.

அவர் கொடுத்த பாட்டுப் புத்தகத்தில் "கவி காளமேகம்' என்ற பாட்டுப் புத்தகமும் இருந்தது. அதில் காளமேகப் புலவர் இயற்றிய ஒரு வெண்பாவும் இருந்தது. அந்தப் படத்தை அவர் பார்த்திருந்ததால் அந்த வெண்பாவைப் பற்றிய சுவையான கருத்தையும் அந்தக் காட்சியையும் என்னிடம் சொன்னார். அதே வெண்பாவை சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் ஒரு விழாவில் பேசி அவையோரை ரசிக்க வைத்தார்.

 

கொசு வராமல் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு ஜமீன்தார் கேட்டபோது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொன்னார்கள். காளமேகப் புலவரிடம் கேட்டபோது சிலேடையாக ஒரு வெண்பாப் பாடினார். அது இதுதான்.
ஈரைந்து தேர்ப் பெயரான் ஈன்ற முதல் மகனின் 
தாரத்தை வெளவியவன் தாம் வாழும் - பேரூரில்
வெவ்வழலை வைத்து விரைந்தவனின் தந்தையவன்
இவ்விடத்தில் வந்தால் இரா...
ஈரைந்து என்றால் பத்து. பத்துக்கு சமஸ்கிருதத்தில் தசம். தேர் என்பதற்கு சமஸ்கிருதச் சொல் ரதம். ஆக ஈரைந்து தேர்ப்பெயரான் என்றால் தசரதன். அவனது முதல் மகன் இராமன். அவனுடைய தாரம் சீதை. வெளவியவன் என்றால் கவர்ந்து சென்றவன் என்று பொருள். சீதையைக் கவர்ந்து சென்றவன் யார்? இராவணன்.

அவன் வாழும் பேரூர் இலங்கை. அதில் வெவ்வழலை வைத்தவன் யார்? அநுமான். வெவ்வழல் என்றால் கொடிய நெருப்பு.

அநுமனுடைய தந்தை யார்? வாயு பகவான். வாயு என்றால் காற்று. ஆக காற்று இங்கு வந்தால் கொசுக்கள் வராது. இதுதான் பாட்டின் பொருள்.

இதைச் சொல்வதற்குக் காரணம், அந்நாளில் திரைப்படத்துறையில் தமிழ்ச் சுவையை எப்படியெல்லாம் கொடுத்து மக்களுக்குத் தமிழ் உணர்வை ஊட்டியிருக்கிறார்கள் என்பதை இன்றைய திரையுலகம் உணர்ந்து கொண்டு திருந்த வேண்டும் என்பதற்காகத்தான்.
(இன்னும் தவழும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • 1 month later...

மொழிமாற்றுப் படங்களுக்கு அதிக வரவேற்பு!

 

 
anandha_thenkatru_-14

 

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே-14

உலகத் திரைப்பட வரலாற்றில் 800 படங்களுக்கு மேல் வசனம் எழுதி கின்னஸ்சாதனையை முறியடித்து இமாலயச் சாதனை படைத்தவர் ஆரூர்தாஸ்.  நூற்றுக்கணக்கான மொழி மாற்றுப் படங்களுக்கும் வசனம் எழுதியவர். மொழி மாற்றுப் படத்திலிருந்துதான் நேரடித் தமிழ்ப் படத்திற்கு வசனம் எழுத வந்தார்.

ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் எழுதிய ஒரே வசனகர்த்தா இவர்தான். எம்.ஜி.ஆருக்கு எழுதியவர்கள் சிவாஜிக்கு எழுத மாட்டார்கள். சிவாஜிக்கு எழுதியவர்கள் எம்.ஜி.ஆருக்கு எழுத மாட்டார்கள். ஆனால் இரண்டு மாபெரும் நடிகர்களுமே தங்களுக்கு ஆரூர்தாஸ்தான் வசனம் எழுத வேண்டும் என்று சொன்னார்கள் என்றால் அவர் வசனத்திற்காகக் காத்திருந்தார்கள் என்றால் அதற்கு ஆரூர்தாசின் எழுத்தாற்றல்தான் காரணம்.

இவர் மொழி மாற்றுப் படங்களுக்கு வசனம் எழுதும் கலையை யாரிடம் கற்றுக் கொண்டார் என்றால் தஞ்சை ராமையா தாசிடம். தஞ்சை ராமையா தாசிடம் உதவியாளராகச் சில காலம் இருந்தார். அவர்தான் இவருக்கு ஆரூர்தாஸ் என்று பெயர் வைத்தார். அதன் பிறகு ஏ.எல்.நாராயணனிடம் உதவி வசனகர்த்தாவாக இருந்தார்.

ஏ.எல். நாராயணன் கதை வசனம் எழுதிய "செளபாக்கியவதி' என்ற படத்திற்கு தனக்குப் பதிலாக சில காட்சிகளுக்கு ஆரூர்தாசை வசனம் எழுத வைத்து அவருக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியவர் அவர் தான். ஏ.எல். நாராயணன் தனக்கு உதவியாளராக இவரைச் சேர்த்துக் கொண்ட முதல் படமும் இதுதான்.

அந்தப் படத்தில், தான் எழுதிய பாடல்களில் ஒரு பாடலை முழுமையாக இவரிடம் படித்துக் காட்டி இசையமைப்பதற்கு கொடுத்தனுப்பினார். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். அப்படிப் பட்டுக்கோட்டை கொடுத்தனுப்பிய அந்தப் பாடல்... 
கருவுலகில் உருவாகி மறுஉலகில் வரும் நாளைக்
கண்டறிந்து சொல்வாருண்டு - இந்தத் 
திருவுடலில் குடியிருக்கும் ஈசன் பிரியும் நாளைத் 
தெரிந்தொருவர் சொன்னதுண்டோ...
என்று தொடக்கமாகும்.
ஆரூர்தாஸ் வசனம் எழுதிய மொழி மாற்றுப் படங்களில் ஐம்பத்தைந்து படங்களுக்கு எல்லாப் பாடல்களையும் என்னையே எழுத வைத்து என்னைச் சிறப்பித்தவர் அவர். மொழி மாற்றுப் படங்களுக்கு வரவேற்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டதே இவர் வசனம் எழுதிய பூ வொன்று புயலாகிறது" என்ற படத்திற்குப் பிறகுதான்.

நேரடித் தமிழ்ப்படத்திற்குக் கூட அந்த அளவு வரவேற்பு ஏற்பட்டதில்லை. 1987-இல் இருந்து 1994 வரை ஏழாண்டு காலம் மொழி மாற்றுப் படங்களுக்குத்தான் அதிக அளவு வரவேற்பும் செல்வாக்கும் இருந்தது. வியாபாரமும் அதற்குத் தான் சுறுசுறுப்பாக நடந்தது. மூன்றாண்டு காலம் மொழிமாற்றுப் படங்கள்தான் எனக்குச் சோறுபோட்டது என்றால் மிகையல்ல.

கே.ஏ.வி. கோவிந்தன், மருதபரணி, ரவிசங்கர் போன்ற வசனகர்த்தாக்கள் எழுதிய மொழி மாற்றுப் படங்களுக்கும் பாடல்கள் எழுதியிருக்கிறேன். இதுவரை 120 மொழி மாற்றுப் படங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

மொழிமாற்றுப் படங்களுக்குக் கூட அன்றைக்கு இசை நாடா (கேஸட்) வெளியிட்டார்கள். இப்போது நேரடித் தமிழ்ப்படங்கள் ஒன்றிரண்டைத் தவிர பல படங்களுக்கு இசைக் குறுந்தகடு வெளியிடுவதே இல்லை.

அப்படி வெளியிடாத காரணத்தால் கலைஞர் கதை வசனம் எழுதிய "உளியின் ஓசை' என்ற படத்தில் நான் எழுதிய ஒரு நல்ல பாடல் வானொலியில் கேட்க முடியாமல் போய்விட்டது. கலைஞர் தொலைக்காட்சியில் அந்தப் படம் போட்டால்தான் என் பாடலைக் கேட்க முடியும்.
எத்தனை பாவம் இந்த நடனத்திலே - அவை
அத்தனையும் அறிந்தவர் யார் உலகத்திலே...
என்று தொடக்கமாகும் அந்தப் பாடல். இசையைப் பற்றியும் இசைக் கருவிகளைப் பற்றியும் அதில் குறிப்பிட்டிருப்பேன். இது வரை இப்படி ஒரு நாட்டியப் பாடல் எந்தப் படத்திலும் வந்ததே இல்லை என்று சொல்லும்படி இருந்தது. பாடல்கள் அடங்கிய குறுந்தகடு அந்தப் படத்திற்கு வெளியிட்டிருந்தால் சிறந்த பாடலாசிரியராக அந்த ஆண்டு நான் தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பேன். நான் சொல்வது சரியா தவறா என்பதை நீங்களே அந்தப் பாடலை ஒருமுறை கேட்டால் புரிந்து கொள்வீர்கள். அதே நேரத்தில் அந்தப் படத்தின் இசைக்காக இளையராஜா சிறந்த இசையமைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனோ தெரியவில்லை விடுபட்டுவிட்டது. படமும் ஓடவில்லை.

மொழி மாற்றுப் படங்களுக்குப் பாடல் எழுதும்போது குளோசப் (நெருக்கமான) காட்சிகளுக்கு மட்டுமல்ல லாங்ஷாட்களுக்கும், (தூரக்காட்சி) உதட்டசைவிற்குத் தகுந்தாற்போல் எழுதக் கூடியவன் நான் தான் என்று எல்லா வசனகர்த்தாக்களும், சவுண்ட் இன்ஜினியர்களும் பாராட்டியிருக்கிறார்கள். கவிஞர் வைரமுத்துவும் அப்படித்தான் சிறப்பாக எழுதுவார். இன்னும் சொல்லப் போனால் என்னை விடச் சிறப்பாக எழுதுவார்.

மொழி மாற்றுப் படங்களுக்கு வசனம் - பாடல்கள் எழுதுவதில் தஞ்சை ராமையாதாசிற்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் கம்பதாசன். இவருக்கு ஆங்கிலமும் இந்தியும் நன்றாகத் தெரியும். அது மட்டுமல்ல ஆர்மோனியமும் வாசிப்பார். அதனால் இந்திப் படமெட்டுகளுக்கு வார்த்தைகளைப் போடுவதில் வல்லவராய்த் திகழ்ந்தார். கம்பதாசன் நாடக நடிகராகவும் நாடகங்களுக்கு ஆர்மோனியம் வாசிப்பவராகவும் பணியாற்றியவர். இதுபோல் டி.கே. சுந்தரவாத்தியார் என்ற பாடலாசிரியரும் ஆர்மோனியம் வாசிக்கக் கூடியவர்.

"பானை பிடித்தவள் பாக்கியசாலி' என்ற படத்தில் "புருஷன் வீட்டில் வாழப் போகும் பொண்ணே - தங்கச்சி கண்ணே' என்ற பாடலையும் "உத்தம புத்திரன்' படத்தில் "காத்திருப்பான் கமலக் கண்ணன்' என்ற பாடலையும் கேட்டிருப்பீர்கள். இதைப் போலப் பல பாடல்களை எழுதியவர் டி.கே. சுந்தர வாத்தியார், ஏவி.எம். பட நிறுவனத்தில் ஆஸ்தான பாடலாசிரியராக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

கம்பதாசனைக் கடைசிக் காலத்தில் பார்த்திருக்கிறேனே தவிரப் பழகியதில்லை. நல்ல அழகன். நன்றாகவும் பாடுவார். இவரைப் பற்றி நடிகர் வி.கே. ராமசாமியும் பேராசிரியர் மின்னூர் சீனிவாசனும் நிறையச் சொல்லியிருக்கிறார்கள். "மங்கையர்க்கரசி' படத்தில் கவிஞன் வேடத்திலும் நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் ஒரு பாடலைத் தவிர எல்லாப் பாடல்களையும் இவர்தான் எழுதினார். 1961-இல் "மொகல்-ஏ- ஆஸம்' என்ற இந்திப் படம் தமிழில் "அக்பர்' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. அதற்குப் பிறகு மொழி மாற்றுப் படங்களுக்கு எழுதவில்லை. வசனம் பாடல்களுக்காக ஐம்பதாயிரம் ரூபாய் அந்தக் காலத்திலே வாங்கியவர் அவர்.  மொழி மாற்றுப் படத்திற்கு இவ்வளவு தொகை வாங்கிவர்கள் அந்நாளில் யாருமில்லை.

1953-இல் வெளிவந்த ராஜ்கபூர் நர்கீஸ் நடித்த "அவன்' என்ற படத்திலும் அவர் வசனங்களும் பாடல்களும் அற்புதமாக இருக்கும் "அன்பே வா அழைக்கின்ற தென்றன் மூச்சே' என்ற பாடல் "கண்காணாததும் மனம் கண்டுவிடும்' என்ற பாடல் "கனவுகண்ட காதல் கதை கண்ணீராச்சே' - ஆகிய பாடல்களெல்லாம் மறக்க முடியாத பாடல்கள். அதுபோல் "ஆன்', "பாட்டாளி சபதம்' ஆகிய மொழி மாற்றுப் படங்களுக்கும் வசனம் பாடல்களை எழுதியிருக்கிறார். 

 

பாரதிதாசன், கண்ணதாசன், கலைஞர் போன்றவர்களால் பாராட்டப் பெற்றவர். பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் உறுப்பினர். கட்சிக்காக மேடை முழக்கமிட்டவர். ராம் மனோகர் லோகியா, ஜெயப்பிரகாஷ் நாராயணன் அசோக்மேத்தா போன்ற தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர்.
சூரியனும் ஒரு தொழிலாளி - தினம்
சுற்றும் உலகும் தொழிலாளி
வாரி அலையும் தொழிலாளி - தினம்
வந்திடும் காற்றும் தொழிலாளி...
என்று புதுமையாக அந்த நாளிலே திரைப்படத்திற்குப் பாடல் எழுதியவர். (வாரி என்றால் கடல் என்று பொருள்) இந்தப் பாடல் 1956-இல் வெளிவந்த "நன்னம்பிக்கை' என்ற படத்தில் இடம் பெற்றது. எஸ்.வி. வெங்கட்ராமன் இசையமைத்து அவரே பாடிய பாடல்.
இவரது கவிதைகளும் கூடப் புதுமையாக இருக்கும்.
நதியிளைப் பாறிடக் கடலுமுண்டு - கொடிய
நஞ்சிளைப் பாறிட மருந்துமுண்டு
கதிரிளைப் பாறிட இரவுமுண்டு - எங்கள்
கவலை இளைப்பாற உண்டோ இடம்
கண்இளைப் பாறிடத் தூக்கமுண்டு - அற்பக் 
கழுதை இளைப்பாறத் துறையுமுண்டு
பண்ணிளைப் பாறிடத் தாளமுண்டு - எங்கள்
பசியிளைப் பாறிட உண்டோ இடம்.
இந்தக் கவிதைகளையெல்லாம் மறக்க முடியுமா? புதுமையும் புரட்சியும் நிறைந்த கவிதை.
ஒரு கவியரங்கில் வானத்தைப் பற்றிப் பாடும்போது
காம்பின்றி நின்றிருக்கும் - இனிய
காயாம்பூ வான வானம்
என்றார். இவருடைய தாக்கம் கவிஞர் சுரதாவின் கவிதையிலும் இருக்கும்.  பணத்திற்கு மதிப்புத்தராத படைப்பாளி இவர். முதல் நாள் பத்தாயிரம் ரூபாய் கையில் வைத்திருப்பார். மறுநாள் பத்து ரூபாய் ஒருவரிடம் கடன் கேட்டுக் கொண்டிருப்பார். இருப்பதை அப்படியே யார் கேட்டாலும் கொடுத்துவிடுவார்.

"புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்காக அண்ணா நிதி திரட்டிய போது முதன் முதல் 100 ரூபாய் கொடுத்துப் பெரியார் தொடங்கி வைத்தார். கம்பதாசன் 501 ரூபாய் காசோலை கொடுத்து அதைத் தொடர்ந்து வைத்தார்'என்று கவிஞர் சுரதா என்னிடம் சொல்லியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்று  ஆசிரியர் அண்ணன் திருநாவுக்கரசும், அதை உறுதிப்படுத்தி என்னிடம் கூறினார். அந்த வகையில் மிகச் சிறந்த கவிஞர் கம்பதாசன். மதுப் பழக்கத்தால் மாண்ட கவிஞர்களில் அவரும் ஒருவர்.
(இன்னும் தவழும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

ஸ்ரீதர் கேட்ட விளக்கம்!

 

 
000anantha_thenkatru_-_15

 

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே-15

எம்.ஜி.ஆர். படங்களில் நான் பாடல் எழுதிய ஐந்தாவது படம் "மீனவ நண்பன்'. ஒருநாள் எம்.ஜி.ஆரைப் பார்க்க சத்யா ஸ்டுடியோவிற்குச் சென்றிருந்தேன். அங்கே "மீனவ நண்பன்' படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததும் "இந்தப் படத்தில் எந்தப் பாட்டு நீ எழுதிய பாட்டு?' என்றார்.

"நான் இதில் எழுதவில்லையே' என்றேன். "உன்னை வைத்து எழுதச் சொன்னேனே' என்றார். "யாரும் என்னைக் கூப்பிடவில்லையே' என்றேன்.

உடனே "புரொடக்ஷன் மேனேஜர் ராஜாராமைக் கூப்பிடு' என்றார். அவரும் வந்தார். "முத்துலிங்கத்தை வைத்துப் பாட்டெழுதச் சொன்னேனே ஏன் எழுதவில்லை?' என்றார். "நாங்கள் தேடும்போது அவர் ஊரில் இல்லை' என்று சொல்லிவிட்டார். "ஊரில் இல்லையென்றால் ஏன் என்னிடத்தில் சொல்லவில்லை? ஸ்ரீதர் படம் என்று சலுகை கொடுத்தால் எதையும் என்னிடம் சொல்வதில்லையா? குறிப்பிட்ட நாளில் படம் வெளி வரவேண்டுமா இல்லையா?' என்று கோபமாகக் கேட்டுவிட்டு என்பக்கம் திரும்பி, "சென்னையை விட்டு எங்குபோனாலும் சொல்லிவிட்டுப் போகச் சொன்னேனே ஏன் என்னிடம் சொல்லவில்லை?' என்று என்னிடமும் கோபத்தைக் காட்டினார்.

நான் ஒரு காரணமாக அதை அவரிடம் சொல்லவில்லை. அதனால் பேசாமல் நின்றேன். அவரும் ஏதோ காரணம் இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு, "இப்போதுதான் வந்துவிட்டாரே இவரை வைத்து ஒரு பாடல் எழுதுங்கள். நான் சொன்னதாக டைரக்டரிடம் சொல்லுங்கள்' என்றார்.

உடனே மேனேஜர் ராஜாராம், "நேற்றுத்தான் படத்திற்கான எல்லாப் பாட்டுக்களும் முடிந்துவிட்டன. இனிமேல் டயலாக் சீன்தான் பாக்கி என்று தயாரிப்பாளரும் டைரக்டரும் பேசிக்கொண்டார்கள்' என்றார் அவர்.

"அப்படியா? சரி, "சானா'வையும், டைரக்டரையும் அழைத்து வாருங்கள்' என்றார் எம்.ஜி.ஆர். அவரும் அவர்களை அழைத்து வந்தார்.

"சானா' என்றால் படத்தின் தயாரிப்பாளர் சடையப்பச் செட்டியார். அவரை "சானா' என்றுதான் மரியாதை காரணமாகச் சுருக்கமாக அழைப்பார் எம்.ஜி.ஆர். அந்தப் படத்தின் டைரக்டர் ஸ்ரீதர்.

அவர்களிடம், "இவர்தான் நான் சொன்ன முத்துலிங்கம். இவரை வைத்து ஒரு டிரீம் சாங் போடுங்கள் நன்றாக இருக்கும்' என்று சிரித்த முகத்தோடு கூறினார் எம்.ஜி.ஆர்.

"டிரீம்சாங் போடுவதற்கான சிச்சுவேசன் இல்லையே' என்று சிரித்துக் கொண்டே அவர்களும் கூறினார்கள். 

"டிரீம்சாங்குக்கு என்ன சிச்சுவேசன் வேண்டியிருக்கிறது? சிச்சுவேசன் இல்லாமல் ஒரு சிச்சுவேசனை உருவாக்கிப் போடுவதற்குப் பேர்தான் டிரீம்சாங். வேலை செய்யும்போது, நடக்கும்போது நினைத்துப் பார்ப்பதைப் போல அல்லது வேலைசெய்த களைப்பில் கண்ணயரும் போது கனவு காண்பது போலப் போடுவதுதான் டிரீம்சாங். ரிலாக்சுக்காகப் போடுவதுதானே அது. "அன்பேவா' படத்தில் "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' என்ற பாடல் வருகிறதே அது என்ன சிச்சுவேசன்? ஏன் உங்கள் "உரிமைக்குரல்' படத்தில் போட்டீர்களே "விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே' என்ற பாடல். 

கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடலை வாலி எழுதியதாக என்னிடம் சும்மா சொல்லி அந்தப் பாடலைப் போட்டீர்களே அது என்ன சிச்சுவேசன்? அது மாதிரித்தான் இந்தச் சிச்சுவேசனும். இந்தப் பாட்டுத்தான் உங்கள் படத்திற்கு அடுத்த ஷூட்டிங்' என்று சொல்லிவிட்டு காரில் ஏறிப்போய்விட்டார்.

எம்.ஜி.ஆர். இப்படிச் சொல்லிவிட்ட பிறகு பாட்டு எப்படிப் போடாமல் இருக்கமுடியும்? என்னுடைய பாடலைப் போட வேண்டுமென்பதற்காக எப்படியெல்லாம் அவர்களிடம் விளக்கம் சொன்னார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இதுதான் அவர் என் மீது வைத்திருந்த அக்கறைக்கு எடுத்துக்காட்டு.

அண்ணன் எம்.எஸ்.விசுவநாதன் இசையில் பாடல் எழுத எப்போது உட்கார்ந்தாலும் வாத்தியாரய்யா என் சந்தத்திற்கு எழுதுகிறீர்களா இல்லை உங்கள் சொந்தத்திற்கு எழுதுகிறீர்களா என்று கேட்பார். அண்ணன் நீங்கள் எப்படி எழுதச் சொல்கிறீர்களோ அப்படியே எழுதுகிறேன் என்பேன். உடனே சொந்தத்திற்கு எழுதச் சொல்வார்.

நாம் எழுதுகிற பல்லவி நன்றாக இருந்தால் டியூன் பண்ணுவார். இல்லையென்றால் நான் ஒரு சந்தம் தருகிறேன் அதற்கு எழுதுங்கள் என்பார்.

அதுபோல அன்றைக்கு டைரக்டர் ஸ்ரீதர் பாடலுக்கான காட்சியைச் சொன்னார். அதைக் கேட்டு நானே ஒரு பல்லவி எழுதினேன். அன்றைய நாளில் பாட்டு எழுதும்போது மியூசிக் டைரக்டர், படத்தின் டைரக்டர், உதவி டைரக்டர்கள், தயாரிப்பாளர் என்று எல்லாரும் சூழ இருப்பார்கள். இன்றைக்கு டியூன் கேஸட்டை இசையமைப்பாளர் கொடுத்து விடுகிறார். வீட்டிற்குப் போய்த்தான் எழுதி வருகிறோம்.
அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம் - உன்
அங்கங்களே மன்மதனின் படைக்கலம்
இரவினிலே தீபமாகும் உன்முகம் - நீ
இன்பத்தமிழ்க் கவிதைகளின் இருப்பிடம்"
இதுதான் அந்தக் காட்சிக்கு நான் எழுதிய பல்லவி.
பாட்டைப் பார்த்த டைரக்டர் ஸ்ரீதர், "என்ன முத்துலிங்கம் படைக்களம் என்று எழுதுவதற்குப் பதில் படைக்கலம் என்று தவறாக எழுதியிருக்கிறாய்?'' என்றார். 
நான் முறையாகத் தமிழ் படித்தவன். அதனால் அவர் சொன்னதும் எனக்குக் கோபம் வந்தது. ஏற்கெனவே ஒரு பாட்டு எழுதும்போது கோபப்படக்கூடாது.

கோபப்பட்டால் நாம் வளரமுடியாது என்று அண்ணன் விசுவநாதனும் இயக்குநர் கே. சங்கர் சொன்னதும் நினைவுக்கு வந்தது. அதனால் கோபத்தை அடக்கிக் கொண்டு,
"நீங்கள் சொல்வதுபோல் படைக்களம் என்று போடலாம், படைக்களம் என்றால் போர்க்களத்தைக் குறிக்கும். நான் படைக்கலம் என்று போட்டிருக்கிறேன். படைக்கலம் என்றால் ஆயுதங்களைக் குறிக்கும்'' என்றேன்.

"அவை என்ன ஆயுதங்கள்?'' என்றார். "கண்களை அம்பு என்றும் வேல் என்றும், புருவத்தை வில் என்றும் சொல்வோம். வளைந்த காதுகளை வாள் என்றும் சொல்லலாம்'' என்றேன். உடனே அவர் "இவையா மன்மதன் ஆயுதங்கள்?'' என்று என்னை மடக்கினார்.

"இவையல்ல மன்மதன் ஆயுதங்கள். மா, அசோகு, முல்லை, நீலம், தாமரை ஆகிய ஐந்து மலர்கள் சேர்ந்த ஒரு சரத்தைத்தான் மலர்க்கணை என்று இலக்கியம் கூறும். இதைத் தான் மன்மத பாணமென்றும், ஐங்கணையென்றும் சொல்லுவார்கள். இருந்தாலும் நான் சொன்னது போலவும் வைத்துக் கொள்ளலாமே'' என்றேன்.

"இப்படி எத்தனை பேரிடம் போய் விளக்கம் சொல்வாய். சினிமாப் பாட்டு என்ன பதவுரை, பொழிப்புரை விரிவுரை சொல்லக் கூடிய இடமா? அதனால் படைக்கலம் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு வேறு ஏதாவது எழுது'' என்றார். உடனே அண்ணன் எம்.எஸ். விசுவநாதன் "இல்லை, இல்லை முத்துலிங்கம் நீ எழுதியதில் அங்கங்களே மன்மதனின் படைக்கலம் என்ற வரி மிக நன்றாக இருக்கிறது. அதைமாற்ற வேண்டாம்.  அழகுகளே உன்னிடத்தில் அடைக்கலம் என்று எழுதியிருக்கிறாயே அதில் அடைக்கலம் என்ற வார்த்தையை மாற்றிவிடு. படைக்கலம் என்ற வார்த்தையை மாற்ற வேண்டாம்'' என்றார்.

உடனே நான், "என்னண்ணே நீங்கள் அடைக்கலத்தை மாற்றச் சொல்கிறீர்கள். அவர் படைக்கலத்தை மாற்றச் சொல்கிறார். இரண்டு கலமும் போய்விட்டால் நான் வெறுங்கலமாகவல்லவா இருப்பேன். நீங்கள் ஏன் அடைக்கலம் என்ற வார்த்தையை மாற்றச் சொல்கிறீர்கள்?'' என்றேன்.

"அடைக்கலம் என்றால் யாரோ ஒரு பாதிரியாரைச் சொல்வது மாதிரி இருக்கிறதப்பா.  அதனால் அடைக்கலத்தை மாற்று. விதண்டாவாதம் பண்ணாதே'' என்று கோபமாகக் கூறினார்.

 

"சரி, அப்படியென்றால் இந்தப் பல்லவியே வேண்டாம். நீங்கள் ஒரு சந்தம் கொடுங்கள் அதற்கு நான் எழுதுகிறேன்'' என்றேன். அப்போதுதான் ஸ்ரீதர் முகத்தில் ஒரு மலர்ச்சி தென்பட்டது. அவர் எப்போதும் டியூன் போட்டு எழுதுவதைத்தான் விரும்புவார் என்பதைப் பிறகுதான் தெரிந்து கொண்டேன். அப்படி மெட்டுக்கு எழுதிய அந்தப் பாடல்தான்...
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கையென்று வந்திருக்கும் மலரோ - நீ
மாலை நேரப் பொன்மஞ்சள் நிலவோ...
என்ற பாடல். அந்தப் படத்தின் ஹிட்டான பாடல்களில் முதலிடத்தில் இருக்கும் பாடல் இதுதான். எனக்காக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட பாடல் என்றும் சொல்லலாம். அந்தப் படத்தில் பாடல்கள் எல்லாம் முடிந்துவிட்டது என்று தெரிந்த பிறகும் முத்துலிங்கத்தை வைத்து ஒரு பாட்டு எழுதுங்கள் என்று எம்.ஜி.ஆர். ஏன் சொன்னார்?  

தன்னை நம்பி இருப்பவர்கள் இவர்கள்.  இவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவவேண்டும் என்ற எண்ணம்தான். அதைத்தான் மனிதாபிமானம் என்கிறோம். அந்த மனிதாபிமானம் இருந்த காரணத்தால்தான் மக்கள் மனதில் இன்னும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நாங்களாவது அவருடன் பழகியவர்கள். அவரால் பலன் பெற்றவர்கள். அதனால் நாங்கள் அவரைப் பற்றிப் பேசுகிறோம். எழுதுகிறோம். ஆனால், அவரை நேரில் பார்க்காதவர்கள், எந்த விதமான பலனையும் அடையாத இளைஞர்கள்கூட எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் அல்லது மறைந்த நாளில் எம்.ஜி.ஆர். படத்தை வைத்து மாலை போட்டு வழிபாடு செய்கிறார்கள் என்றால் என்ன பொருள்? அவரது மனித நேயமும் மக்கள் செல்வாக்கும் இன்றைய இளைஞனைக் கூட ஈர்த்து வைத்திருக்கிறது என்பதுதானே பொருள். இந்தச் செல்வாக்கு இவரைத் தவிர எந்த நடிகருக்கு இருக்கிறது?

தமிழ்நாட்டில் மற்ற கட்சிகளைவிட அ.தி.மு.க. பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் எம்.ஜி.ஆர். என்ற பெயரில் இருக்கக்கூடிய மந்திர சக்தியும் அவரது இரட்டை இலைச் சின்னமும்தான். இதை யாரும் மறுக்க முடியாது.    
(இன்னும் தவழும்)

 

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

வசனமா வசன கவிதையா?

 

 
aanantha_thenkatru_16

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே-16
அந்தக் காலத்தில் புதுமையாகவும் புரட்சிகரமாகவும் கவித்துவமாகவும் எழுத்து விதையைத் திரையுலக வயல்களில் தூவிய வசனகர்த்தாக்களில் இளங்கோவன் குறிப்பிடத்தகுந்தவர் ஆவார். இவரது எழுத்து வன்மையை எதிர்க்கும் வன்மை எவரது எழுத்துக்கும் அக்காலத்தில் இருந்ததில்லை. பாகவதர், சின்னப்பா, நடித்த பல படங்களுக்கு வசனம் எழுதியவர். இவருக்குப் பிறகு வந்தவர்கள்தாம் அண்ணா, கலைஞரைப் போன்றவர்கள்.

ஒருமுறை அண்ணாவிடம் கண்ணகி கோவலன் கதையை மீண்டும் படமாக்கவிருக்கிறோம். நீங்கள்தான் அதற்கு வசனம் எழுதவேண்டும் என்று தயாரிப்பாளர் ஒருவர் கேட்ட போது இளங்கோவன் வசனம் எழுதிய கண்ணகி படத்தை ஒருமுறை மீண்டும் பார்க்கவேண்டும் என்றார் அண்ணா.

படத்தைப் பார்த்துவிட்டு இதில் சில காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு இளங்கோவன் வசனங்களை அப்படியே வைத்துக்கொண்டு வேறு நடிகர் நடிகையரை வைத்துப் படமாக்கிக் கொள்ளுங்கள். இதைவிட நான் என்ன எழுதிவிடப் போகிறேன் என்றாராம். அண்ணாவே பாராட்டிய வசனகர்த்தா இளங்கோவன்.

பாகவதரை ஒப்பந்தம் செய்ய வருகிறவர்களிடம், முதலில் வசனத்திற்கு இளங்கோவனையும், இசைக்கு ஜி. ராமநாதனையும், பாடல்களுக்குப் பாபநாசம் சிவனையும் ஒப்பந்தம் செய்துவிட்டு அதன்பிறகு என்னிடம் வாருங்கள் என்பாராம் பாகவதர். 

இளங்கோவன் வெறும் திரைக்கதை வசனகர்த்தா மட்டும் அல்லர். பன்மொழிப் புலமை பெற்றவர். என்னைப் போன்ற ஒன்றும் தெரியாதவனை ஓர் அறைக்குள் தள்ளிக் கதவை மூடிவிட்டு எங்கள் படத்திற்காக இளங்கோவன் உள்ளே வசனம் எழுதிக்கொண்டிருக்கிறார் என்று தயாரிப்பாளர் சொன்னால் போதும், பட வெளியீட்டாளர்கள் அப்போதே, பணத்தைக் கொட்டிக் கொடுத்துவிட்டுப் போய் விடுவார்களாம்.

வசனம் எழுதுகின்றவர்கள் பெயரை முதன்முதல் சுவரொட்டிகளில் போட்டது இளங்கோவன் பெயரைத்தான். அந்த அளவு நட்சத்திர அந்தஸ்து பெற்ற எழுத்தாளர் இளங்கோவன்.

இவரது இயற்பெயர் தணிகாசலம். இவர் "தினமணி' பத்திரிகையில் உதவி ஆசிரியராக இருந்தவர். என்பது குறிப்பிடத்தக்கது. எம்.ஜி.ஆர். நடித்த சில படங்களுக்கும் வசனம் எழுதியிருக்கிறார்.

இளங்கோவன் வசனம் எழுதிய பாகவதர் படங்களில் குறிப்பிடத்தகுந்த படம் "சிவகவி'. அதில் ஒருகாட்சி, டி.ஆர். ராஜகுமாரி அரசவை நர்த்தகியாகவும் தியாகராஜபாகவதர் பொய்யாமொழிப் புலவராகவும் நடிப்பார்கள். ராஜகுமாரி பாகவதரை விரும்புவார். இவர் விரும்பமாட்டார். இதைவைத்து சுருக்கமாக ஒரு வசனக் காட்சி.

ராஜகுமாரி : நான் ஆடும்போது அழகாக இல்லையா?
பாகவதர் : பாம்பு படமெடுத்தாடும் போதுகூட அழகாகத்தான் இருக்கிறது!
ராஜகுமாரி : என்னிடம் விஷம் இல்லையே.

பாகவதர் : அஞ்ஞானம் ஆலகால விஷத்தைவிடக் கொடியது.

இப்படித் துணுக்குத் துணுக்குகளாக நறுக்குத் தெரித்தாற் போல் இளங்கோவனது வசன வீச்சு இருக்கும்.

இந்த வசனங்கள் இன்று எத்தனை பேருக்கு நினைவிருக்கும்? ஆனால் அதில் வருகின்ற ஒரு பாடல் எல்லாருக்கும் நினைவில் இருக்கும்.
கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே 
கணிகையர் கண்களே மதன்விடும் வலையே 
நவரசங்களிலும் சிருங்காரமே தலையே
நளின நடையழகிற் கீடேதும் இலையே
புயம் இரண்டும் மூங்கில் தளர்நடை அஞ்சி
புருவம் இடை உடலும் வளையுமே கெஞ்சி
ரசிகத் தன்மையில் தேர்ந்தவள் வஞ்சி
ராகத்தில் சிறந்தது நாட்டைக் குறிஞ்சி
இது மட்டுமல்ல. அந்தப் படத்தில் இடம் பெற்ற சொப்பனவாழ்வில் மகிழ்ந்தே சுப்பிரமண்ய சுவாமி உனை மறந்தேன்" போன்ற பல பாடல்கள் இன்னமும் நம் நெஞ்சைவிட்டு நீங்காத பாடலாக நிற்கின்றன. 

இதுபோல் எம்.ஜி.ஆர். நடித்த "ராஜராஜன்' என்ற படத்தில் ஒரு காட்சி.

அரசகுமாரி ஒருத்தி அரசகுமாரனைக் காதலிப்பாள். அவளது தோழியும் அவனைக் காதலிப்பாள். அரசகுமாரி எப்படியெல்லாம் தன்னை அலங்கரித்துக்கொள்வாளோ அதுபோல் இவளும் தன்னை அலங்கரித்துக் கொண்டு அரசகுமாரனைக் கவர எத்தனிப்பாள். ஆனால் அரசகுமாரியைத் தான் அவன் காதலிக்கிறான் தன்னையல்ல என்பதை உணர்ந்து கொண்டு தனது ஆற்றாமையை அவனிடம் உவமையாக வெளியிடுவாள்.

வானம் நீலநிறமாக இருக்கிறதே என்பதற்காகக் கடலும் தன்னை நீலநிறமாக்கிக் கொண்டது!"

வானம் தன்மீது வெண்மையான மேகங்களை மிதக்கவிட்டுக் கொண்டதே என்பதற்காகக்  கடலும் தனக்கு மேலே வெண்மையான நுரைகளை மிதக்க விட்டுக் கொண்டது!"

வானம் தன்மீது நட்சத்திர முத்துக்களைப் பதித்துக் கொண்டதே என்பதற்காகக் கடலும் தனக்குக் கீழே முத்துக்களை வைத்துக்கொண்டது.
இருந்தாலும் வானம்தான் மேலே இருக்க முடியும். கடல் கீழேதான் இருக்கமுடியும். புரிந்து கொண்டேன் வருகிறேன்." என்று இளங்கோவன் அற்புதமான கவிதை நயம் கலந்த வசனங்களை எழுதியிருப்பார்.

இது வசனமா வசன கவிதையா? வசனத்தைக் கூட அன்றைக்குக் கவிதையைப்போல் எழுதினார்கள். இன்று கவிதையாக எழுத வேண்டிய பாடலைக்கூட வசனத்திலும் சேர்த்தியில்லாமல் எழுதிவிட்டு இசையமைப்பாளர்கள் தயவால் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறோம்.

ராஜராஜன் படத்தில் வருகின்ற இந்தக் கரும்பு வரி வசனங்கள் எத்தனைபேருக்கு நினைவிருக்கும்? ஆனால் அதில் வருகின்ற
நிலவோடு வான் முகில் விளையாடுதே - அந்த
நிலைகண்டு எனதுள்ளம் தடுமாறுதே
- என்ற கு. சா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய பாடல் பலரது நினைவில் இன்னும் இருக்கும். படத்தில் பத்மினி பாடுவதுபோல் இடம் பெற்ற பாடல்.

நாம் பார்க்கும் படத்தில் மற்றைய அம்சங்கள் நம் மனக் கடலில் இருந்து மறதிக்கரையோரம் ஒதுங்கிவிட்டாலும் என்றும் ஒதுங்காமல் நெஞ்சக் கடலுக்குள் நீரோட்டம் போல் ஓடிக் கொண்டிருப்பது பாடல்கள் தான் என்பதை எடுத்துக்காட்டவே இதை விளக்கமாகக் கூறினேன்.

இந்த கு.சா. கிருஷ்ணமூர்த்திதான் எம்.ஆர்.ராதா நடித்த "ரத்தக் கண்ணீர்' படத்தில் வருகிற "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதேன்ப தேது' என்ற பாடலை எழுதியவர்.

இவருடைய பரிந்துரையால்தான் பி.யு. சின்னப்பா, அஞ்சலிதேவி, கண்ணம்பா, நடித்த "மங்கையர்க்கரசி' படத்திற்கு கவிஞர் சுரதா வசனம் எழுதினார். அதில் பெரும்பாலான பாடல்களை கம்பதாசன் எழுதினார். அதில் "காதல் கனிரசமே' என்ற பாடலை மட்டும் கு.சா. கிருஷ்ணமூர்த்தி எழுதினார். இதுதான் அந்தப்படத்தில் மிகவும் பிரபலமான பாடல்.

இவர் எழுதிய நாடகங்களில் "அந்தமான் கைதி' என்ற நாடகம் புகழ்பெற்றது இது திரைப்படமாக வந்தபோது எம்.ஜி.ஆர். தான் கதாநாயகனாக நடித்தார். அவர் சிகரெட் பிடிப்பது போல் நடித்த முதலும் முடிவுமான படமும் இதுதான்.

எம்.ஜி.ஆர் தனது படத்தின் பாடல்களில் அதிக அக்கறை காட்டியது நீண்டகாலம் பாடல் நிலைத்திருக்க வேண்டும் என்பதால்தான். இசையோடு கருத்துகளைச் சொன்னால் இதயத்தில் அது எளிதில் பதியும் என்பதால்தான் பாடல்களில் அவரது தலையீடு அதிகம் இருந்தது. அந்தக் காலத்துத் திரைப்பட நிறுவனங்கள் அனைத்தும், திறமைக்கும், தொழில் நேர்மைக்கும் முதலிடம் கொடுத்தன. தனிமனிதர் என்ற முறையில் திறமைக்கு மதிப்பளித்து வாய்ப்புக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.

 

ஒரு கம்பெனியில் நாம் தான் பாடல் எழுதவேண்டும் என்று சொல்வார்கள். குறிப்பிட்ட நாளில் புரொடக்ஷன் மேனேஜரையும் அனுப்புவார்கள். அவர்கள் தேடுகிற நேரத்தில் நாம் இல்லையென்றால் வேறொரு கவிஞரை அழைத்துச் சென்றுவிடுவார்கள்.

அல்லது தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாம் இல்லையென்றால் இன்னொரு கவிஞரைத் தொலைபேசி மூலம் வரச் சொல்லிவிடுவார்கள்.
இதைத் தவறென்று சொல்ல முடியாது. திரையுலகம் போகும் வேகத்திற்கு இது தவிர்க்க முடியாததும் கூட.

ஆனால் எப்படிப்பட்ட சூழ்நிலை இருந்தாலும் இன்னாரை வைத்துத்தான் இந்தப் பாடல் எழுதவேண்டும் என்று தீர்மானித்துவிட்டால் அதை எழுதவேண்டிய கவிஞர் ஊரில் இல்லாவிட்டாலும் அல்லது அவர் எழுதுவதற்குக் காலதாமதம் ஆனாலும் காத்திருந்து எழுதி வாங்கியவர் இந்தத் திரையுலகில் எம்.ஜி.ஆர். ஒருவர்தான்.

அந்த வகையில் நான் எழுதிய ஒரு பாடலை திரும்பத் திரும்ப எழுத வைத்து ஒரு மாதத்திற்குப் பிறகு ஏற்றுக் கொண்டார். அந்தப் பாடல் இடம்பெற்ற படம் "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்'. 
(இன்னும் தவழும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

சென்சார்போர்டு அதிகாரியைச் சந்தித்தேன்!

 

 
00_anandhath_thenkatru_-17

 

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே- 17

"மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' திரைப்படத்தில், சோழநாட்டுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது பாண்டியநாடு. விடுதலைபெற்ற நாடாக பாண்டிய நாட்டை ஆக்குவதற்குப் பாண்டி நாட்டு மக்களைப் போருக்குத் தயார் செய்வதற்காகப் பல இடங்களில் பாடி மக்களை எழுச்சி கொள்ளச் செய்யவேண்டும் இதுதான் காட்சி. இதற்கேற்பப் பாடல் எழுதவேண்டும்.

மண்ணுலகைக் காக்கும் களம் ஏர்க்களம் - நாட்டின்
மானத்தைக் காக்கும்களம் போர்க்களம்
என்று தொடங்கும் பல்லவியை எழுதி சரணமும் எழுதி டியூன் போட்டு எம்.ஜி.ஆரிடம் காட்டினோம். பாட்டில் கருத்து இருக்கிறது. ஆனால் மெட்டு நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டார்.

விண்ணில் ஆடிவரும் மேகம் பாடிவர
மண்ணில் வாழ்வுவரும் ஏர்முனையில்
வெற்றி தேடிவர வீர மானம் பெற
வேலில் பாட்டெழுது போர் முனையில்
என்றொரு பல்லவி எழுதினேன். இதில் கவித்துவம் இருக்கிறது. நான் நினைப்பது வரவில்லையென்று சொல்லிவிட்டார்.

நான் நினைப்பது வரவில்லையென்றால் என்ன நினைக்கிறார் என்பதை அவர் சொல்ல வேண்டுமல்லவா? சொல்லமாட்டார். அவர் என்ன நினைக்கிறார் என்பதை எவர் புரிந்துகொண்டு எழுதுகிறாரோ அவர்தான் அவரது படத்திற்குத் தொடர்ந்து பாடல் எழுத முடியும். அப்படி எழுதக் கூடியவர்களில் நானும் ஒருவன் என்பதால்தான் அவர் படத்திற்குத் தொடர்ந்தாற் போல் பாடல் எழுத முடிந்தது.

ஏர் நடத்தும் மறவரெல்லாம்
போர்நடத்த வாரீர்
எதிரிகளின் குருதியிலே
பொட்டு வைப்போம் வாரீர்
என்று ஒரு பல்லவி எழுதினேன். இது வன்முறையைத் தூண்டுவதுபோல் இருக்கிறது. வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
அப்போது திரைப்படத் தணிக்கைக் குழு மிகவும் கடுமையாக இருந்த காலம். தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டு இந்திய நாட்டில் நெருக்கடிநிலை அமல்படுத்தப்பட்ட 1975-ஆம் ஆண்டு அது.

கத்தியால் குத்துவதைப்போல் காட்டலாம். ஆனால் ரத்தம் வருவதுபோல் காட்டக் கூடாது. கன்னத்தில் அறைவதுபோல் காட்டலாம். கைவிரல் கன்னத்தில் பதிந்திருப்பது போல் காட்டக்கூடாது. இப்படிக் கடுமையான தணிக்கை முறை இருந்த காலம். அதனால் அந்தப் பல்லவியை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

இப்படி மாற்றி மாற்றி எழுதியதில் ஒருமாதம் ஆகிவிட்டது. பின்னர் மைசூர் அரண்மனையில் படப்பிடிப்புக்காக எம்.ஜி.ஆர். சென்றுவிட்டார்.

அப்போது "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' படப்பிடிப்பு மைசூர் அரண்மனையில் நடந்துகொண்டிருந்தது. கர்நாடக மாநில அரசிடமிருந்து மைசூர் அரண்மனையை மத்திய அரசு எடுத்துக் கொண்ட நேரம் அது.

எம்.ஜி.ஆரின் படப்பிடிப்பிற்காக இரண்டு மாதம் விட்டுக் கொடுத்தது மத்தியஅரசு. அது முடிவதற்கு இன்னும் ஒருவாரம்தான் இருக்கிறது. அதற்குள் நான் எழுதும் பாடல் காட்சியும், பி.எஸ்.வீரப்பாவுடன் எம்.ஜி.ஆர் மோதும் ஒரு சண்டைக் காட்சியும் அங்கு எடுக்க வேண்டும்.

அப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நாள் ஐந்து டியூன்கள் போட்டு வைத்துக்கொண்டு அண்ணன் விசுவநாதன் என்னை அழைத்துப் பாடல் எழுதச் சொன்னார்.
அதில் "கானடா ராகத்தில் அமைந்த பல்லவி நன்றாக இருக்கிறது. இதை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொள்வார்'' என்று கூறினேன்.

எல்லாவற்றையும் எம்.எஸ்.வி. டேப்பில் பதிவு செய்து "நீங்களே மைசூருக்கு இதை எடுத்துச் சென்று அவரிடம் காட்டி அவர் எந்தப் பல்லவியைத் தேர்ந்தெடுக்கிறாரோ அதற்கேற்ப சரணத்தை அவரிடமே எழுதிக் காட்டி ஓ.கே. வாங்கிக் கொண்டு வாருங்கள்''என்று என்னை அனுப்பி வைத்தார்.

நானும் மைசூர் பயணமாகி எம்.ஜி.ஆரிடம் போட்டுக் காட்டிய போது "எல்லாமே நன்றாக நான் நினைத்த கருத்தோடு இருக்கிறது. அதிலும் கடைசியில் வருகிற வீரமுண்டு வெற்றியுண்டு என்ற பல்லவி எல்லாவற்றையும் விட நன்றாக இருக்கிறது'' என்று சொல்லிவிட்டு மூன்று பல்லவியை மட்டும் தேர்ந்தெடுத்து, "இவை எல்லாவற்றையுமே ஒரே பாட்டாக ஆக்கிவிடுங்கள்'' என்றார்.

"ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையில் வேறு தாளத்தில் இருக்கிறதே எப்படி ஒன்றாக்குவது'' என்றேன். அவர் சிரித்துக் கொண்டே  "மாண்டேஜ் சாங் என்று சொல்லு... விசுவநாதனுக்குத் தெரியும்''  என்றார்.

"யாரைப் பாடவைக்கலாம்'' என்றேன். "ஜேசுதாசைப் பாட வையுங்கள்'' என்றார். நான் தயங்கி நின்றேன். என்ன என்று கேட்பது போல் காலைச் சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்த அவர் என்னை நிமிர்ந்து பார்த்தார்.

"ஜேசுதாஸ் குரல் மிக இனிமையாக மென்மையாக இருக்கும். டூயட் பாடலென்றால் பரவாயில்லை. இது எழுச்சியோடு பாட வேண்டிய பாடல். அதனால் டி.எம்.செளந்தரராஜன் பாடினால் நன்றாக இருக்கும்'' என்றேன்.

"விசுவநாதன் அப்படிச் சொல்லிவிட்டாரா?'' என்றார். "விசுவநாதனுக்கு மட்டுமல்ல எங்கள் எல்லோருக்குமே இதுதான் அபிப்பிராயம்'' என்றேன்.

"அப்படியென்றால் மியூசிக் டைரக்டர் எப்படிப் பாடியிருக்கிறாரோ அப்படியே இருக்கவேண்டும். இல்லையென்றால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். வேறு பாடகரை வைத்துத்தான் பாடவைக்க வேண்டியிருக்கும்'' என்றார்.

அப்படிச் சொல்லிவிட்டு, "முதல் சரணத்தில் கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்  என்று இருக்கிறதே நமது கொடிக்குப் பதிலாக என்ன வார்த்தை போடலாம்?'' என்றார். "ஏன்?'' என்றேன்.  "நமது கொடி என்றால் நமது கட்சிக் கொடியென்று நினைத்து சென்சார் கட்பண்ணிவிட்டால் என்ன செய்வது? அதற்குப் பதில் என்ன போடலாம்?'' என்று கேட்டுவிட்டு அவரே "மீன்கொடி என்று மாற்றிக் கொள்'' என்றார்.

உடனே நான் "தானனா' என்று டியூன் இருந்தால் மீன் கொடி என்று போடலாம். "தனனனன' என்று டியூன் இருக்கிறது. அதனால் மகரக் கொடி என்று போட்டுக் கொள்ளலாமா? என்றேன். "போட்டுக் கொள்'' என்றார் எம்.ஜி.ஆர்.

"கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும் என்று நீங்கள் பாடும் போது நமது தோழர்கள், தலைவர் நமது கொடியைப் பற்றிப் பாடுகிறார் என்று எழுச்சியுடன் கைதட்டுவார்கள். மகரக்கொடி பறந்திட வேண்டும் என்று பாடினால் ஏதோ ஒரு காட்சிக்காகப் பாடுகிறார் என்ற எண்ணம்தான் ஏற்படும். ஆகவே, நமது கொடி என்று பாடும்போது உள்ள எழுச்சி மகரக் கொடி என்று பாடும்போது இருக்காதே'' என்றேன்.

"ஆமாம். நீ சொல்வதும் சரிதான். நமது கொடி என்றும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மகரக் கொடி என்றும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நமது கொடியை சென்சார் வெட்டிவிட்டால் மகரக்கொடியை வைத்துக் கொள்ளலாம்'' என்றார். நானும் சரியென்று வந்துவிட்டேன்.

பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு எம்.ஜி.ஆர். பார்வைக்குப் போனபோது "மகரக் கொடி' இல்லாமல் நமது கொடி மட்டும் இருப்பதைப் பார்த்து எம்.எஸ்.வி. அவர்களிடம் இது பற்றிக் கேட்டிருக்கிறார்.

"முத்துலிங்கம் நமது கொடி பறந்திடவேண்டும் என்ற வரியைத்தான் சொன்னார். இதைத்தான் நீங்கள் ஓ.கே. பண்ணினீர்கள் என்றும் சொன்னார். வேறொன்றும் சொல்லவில்லையே'' என்று சொல்லியிருக்கிறார்.
இதைக் கேட்டதும் எம்.ஜி.ஆருக்குக் கோபம் வந்துவிட்டது.

உடனே தியாகராய நகர் அலுவலகத்திற்குத் தொலைபேசியில் பேசி, "முத்துலிங்கத்தை என்னிடம் பேசச் சொல்லுங்கள்'' என்று சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

நானும் அவர் அலுவலகத்திற்குச் சென்று தொலைபேசியில் அவரிடம் பேசினேன். "சொன்னது போல் ஏன் எடுக்கவில்லை "நமது கொடி' தானே இருக்கிறது. "மகரக் கொடி' என்ற வார்த்தையை ஏன் எடுக்கவில்லை?'' என்று கோபமாகக் கேட்டார்.

"தலைவரே அதை சென்சார் வெட்டமாட்டார்கள்'' என்றேன். "உனக்குத் தெரியுமா எனக்குத் தெரியுமா?'' என்றார்.

உடனே நான் "இல்லை தலைவரே மைசூரிலிருந்து நான் வந்ததும் சென்சார்போர்டு அதிகாரியைப் பார்த்தேன். எம்.ஜி.ஆர். இப்படிப் பாடுவது போல ஒரு வரி இருக்கிறது. இதில் ஏதேனும் ஆட்சேபணை இருக்குமா. இருந்தால் சொல்லுங்கள் மாற்றிவிடுகிறோம். எம்.ஜி.ஆர். சார்பிலே இதைக் கேட்கவில்லை.

பாடலாசிரியன் என்ற முறையில் கேட்கிறேன்'' என்றேன்.  "எம்.ஜி.ஆர்தானே பாடுகிறார் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை' என்றார். அதனால்தான் இரண்டு விதமாக எடுக்கவில்லை'' என்றேன். ஒன்றும் சொல்லாமல் தொலைபேசியை வைத்துவிட்டார்.

பிறகு டைரக்டர் கே. சங்கரிடம் இதைப் பற்றிக் கூறி "முத்துலிங்கத்திற்கு நான் ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்று புரிகிறதா? இன்னொரு கவிஞரை எழுத வைத்திருந்தால் நமக்காக இப்படியெல்லாம் போய்க் கேட்பாரா? அவர் கவிஞர் மட்டுமல்ல; என்னுடைய ஆத்மார்த்தமான நண்பர்' என்று சொல்லியிருக்கிறார். இதை டைரக்டர் கே.சங்கரும் மறைந்த நடிகர் ஐசரிவேலனும் என்னிடம் கூறினார்கள். அவரைவிட இருபத்தைந்து வயது இளையவனான என்னை நண்பர் என்று சொன்னார் என்றால் இதைவிட எனக்கென்ன பெருமை வேண்டும்.
(இன்னும் தவழும்)

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

தீர்க்க தரிசனம்!...

 

 

 
000anantha_thenkatru_-_18

 

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே-18:

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்தில் வரும் பாடலுக்காக நான் சென்சார் அதிகாரியைப் பார்த்துக் கேட்டதற்குக் காரணம் ஒன்றுண்டு. "நமது கொடி' என்ற வார்த்தையை சென்சார் வெட்டிவிட்டால் என்ன செய்வது என்று எம்.ஜி.ஆர். என்னிடம் சொன்னபோது ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார்.

"எங்க வீட்டுப் பிள்ளை' படத்திற்கு வாலி எழுதிய ஒரு பாடலை எம்.ஜி.ஆரிடம் காட்டாமலே ஒலிப்பதிவு செய்து விட்டார்களாம். இருந்தாலும் படமாக்கப்படுவதற்கு முன்பு சென்சார் அதிகாரியிடம் காட்டி அபிப்பிராயம் கேட்டார்களாம் கம்பெனியின் பொறுப்பாளர்கள். தயாரிப்பாளர் நாகிரெட்டி, அந்தப் படத்திற்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமி ஆகியோர் உடன் இருந்திருக்கிறார்கள்.

நான் அரசனென்றால்
என் ஆட்சியென்றால் - இங்கு
ஏழைகள் வேதனைப் படமாட்டார்

இதுதான் வாலி அந்தக் காட்சிக்கு எழுதிய பல்லவி, அதை சென்சார் அதிகாரி மாற்றச் சொல்லிவிட்டார். அதன் பின் நாகிரெட்டி அவர்கள் வாலியை அழைத்து வேறு பல்லவி எழுதச் சொல்லியிருக்கிறார்.

எம்.ஜி.ஆரிடம் இந்த விவரத்தைச் சொல்லிவிட்டு அதன்பிறகு எழுதுகிறேன் என்று எம்.ஜி.ஆரைச் சந்தித்து நிகழ்ந்ததைச் சொல்லியிருக்கிறார் வாலி.
""இது ரொம்ப அக்கிரமம்'' என்று எம்.ஜி.ஆர் சொல்லியிருக்கிறார். ""ஆம் அண்ணா. நம்ம படம் என்றால் சென்சார் ரொம்ப அக்கிரமம்தான் செய்கிறார்கள்'' என்று வாலி சொல்ல, ""நான் சென்சாரைச் சொல்லவில்லை வாலி, நீங்கள் எழுதிய வரிகளைத்தான் அக்கிரமம் என்கிறேன்'' என்று எம்.ஜி.ஆர் சொல்லிவிட்டு அவரே விளக்கியிருக்கிறார்.

 

"மாநிலத்திலும் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது. "நான் அரசனென்றால் என் ஆட்சியென்றால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்' என்று நான் பாடினால் இருக்கின்ற இந்த ஆட்சியில் ஏழைகள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தானே அர்த்தம் வரும்? இதை எப்படி சென்சார் அனுமதிப்பார்கள்? ஏன் இந்தப் பாடலை என்னிடம் காட்டவில்லை''யென்று கோபப்பட்டிருக்கிறார். அதன் பிறகு மாற்றி எழுதப்பட்ட பாடல் தான்...
நான் ஆணையிட்டால்
அது நடந்துவிட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
என்ற பாடல்.
இதை விளக்கமாக எம்.ஜி.ஆர். என்னிடம் சொன்ன காரணத்தால் தான் பாடல் ஒலிப்பதிவிற்கு முன்பே நாமும் நாம் எழுதிய பாடலை சென்சார் அதிகாரியிடம் காட்டி சம்மதம் பெற்றால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. அதனால் அப்போது சென்சார் அதிகாரியாக இருந்த ராகவனிடம் காட்டி ஒப்புதல் பெற்றேன். சில ஆண்டுகளுக்கு முன் "துக்ளக்' பத்திரிகையில் "எனக்குள் எம்.ஜி.ஆர்.' என்று வாலி எழுதிய கட்டுரையிலும் இதைக் குறிப்பிட்டிருக்கிறார். அது புத்தகமாகவும் வந்திருக்கிறது.
என்னுடைய இந்தப் பாடல் ஈழத்தமிழர்கள் மிகவும் விரும்பும் பாடல். அவர்கள் விடுதலைப் போராட்டத்திற்கு எழுச்சியை உண்டாக்கிய பாடல் என்று கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர்களே சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக கனடா நாட்டு வானொலியில் பணியாற்றும் ஒரு நண்பர் அடிக்கடி இதைக் கூறுவார். பாடல் இதுதான்.
தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்...
ஒற்றுமையால் பகைவர்களை ஓடவைப்போம்
உழைப்பாலே நம்நாட்டை உயர்த்தி வைப்போம்...
என்று தொடங்கி
கோட்டையிலே நமதுகொடி பறந்திட வேண்டும்
கொள்கைவீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்...
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடைமைச் சமுதாயம் மலர்ந்திட வேண்டும்...
என்று தொடர்ந்து போய்க் கொண்டிருக்கும்.
வீரம் உண்டு வெற்றி உண்டு
விளையாடும் களம் இங்கே உண்டு
வா வா என் தோழா...
என்று வருகின்ற இறுதிச் சரணத்தில்,
பூனைகள் இனம்போலே பதுங்குதல் இழிவாகும்
புலியினம் நீயெனில் பொருதிட வாராய்...
என்றொருவரி வரும். இந்த வரியைச் சொன்னவரே எம்.ஜி.ஆர்.தான். இதற்குப் பதில் வேறொன்று எழுதியிருந்தேன். அதை மாற்றிச் சொல்லி இந்த வரியைச் சொன்னவர் அவர்தான். அவர் சொல்லும் போது "புலியினம் நீயெனில் போருக்கு வாராய்' என்று தான் அவர் சொன்னார்.
""எங்கள் பாண்டிய நாட்டுப் பகுதியில் போருக்கு வா என்று சொல்வதற்குப் பதில் பொருதிப் பார்ப்போம் வா என்று சொல்கிற பழக்கம் உண்டு. அதனால் பொருதிட வாராய் என்று வைத்துக் கொள்ளலாம்'' என்றேன். அவரும் சரியென்று சொல்லிவிட்டார். அதனால் "பொருதிட வாராய்' என்று எழுதினேன்.
விடுதலைப் புலிகளின் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது சில காலம் இலங்கை வானொலியில் இந்தப் பாடலுக்கு இலங்கை அரசு தடை விதித்தது என்று கேள்விப் பட்டேன். இப்போது இல்லை.
நமது அகில இந்திய வானொலியில் தேர்தல் நேரத்தில் இதுபோன்ற எம்.ஜி.ஆர். படப் பாடல்களை ஒலிபரப்புவதில்லை. அதுபோல் தொலைக்காட்சியிலும் அவர் சம்பந்தப்பட்ட படங்களையோ அல்லது அவரை நினைவு கூர்வதுபோல் வருகிற பேட்டிகளையோ ஒளிபரப்புவதில்லை.
இவர்கள் ஒளிபரப்பாவிட்டால் தியேட்டர்
களில் அவர் நடித்த படத்தைப் பார்க்க மாட்டார்களா? அல்லது பிரச்சாரக் கேசட்டுகளில் பாடல்
களைக் கேட்கமாட்டார்களா?
இதைக் கேட்டுத் தான் மக்கள் ஓட்டுப் போடுகிறார்களா என்றால் இல்லை. தேவையில்லாத விதிமுறைகளையெல்லாம் தேவையைப் போல் வைத்துக் கொண்டிருக்கிறது வானொலியும், தொலைக்காட்சியும். நான் தனியார் தொலைக்காட்சியைச் சொல்லவில்லை. சென்னைத் தொலைக்காட்சி அதாவது தூர்தர்ஷனைச் சொல்லுகிறேன். இதை மாற்ற வேண்டும்.
அரசாங்கமே ஒவ்வொரு கட்சிக்கும் இவ்வளவு நேரம் என்று பிரச்சாரத்திற்காக தொலைக்காட்சியில் இடம் ஒதுக்கும் போது, அரசியல் சம்பந்தமுள்ள நடிகர்கள் படங்களை மட்டும் ஏன் தடைசெய்ய வேண்டும்?
இந்தப் படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் எழுதினேன். அதில் ஒன்றுதான் மேற்கண்ட பாடல். அந்தப் பாடலைப் பற்றி ஒரு கூட்டத்தில் அமைச்சர் காளிமுத்து பேசினார். எம்.ஜி.ஆரும் மேடையில் அமர்ந்திருந்தார்.
""கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும் என்று தலைவர் படத்தில் முத்துலிங்கம் பாடல் எழுதியிருந்தார். அவர் எழுதியது போல் கோட்டையிலே நமது கொடிதான் இன்று பறந்து கொண்டிருக்கிறது. கவிஞர்களின் தீர்க்க தரிசனம் பலிக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துகாட்டு'' என்று பேசினார். அவையோர் கையொலி செய்தனர். எம்.ஜி.ஆர். சிரித்தபடி அதை வரவேற்றார். அந்தப் படத்தில் நான் எழுதிய மற்றொரு பாடல்.
வீரமகன் போராட
வெற்றிமகள் பூச்சூட
மானம் ஒரு வாழ்வாக
வாழ்வுநதி தேனாக
முன்னேறுவோம் நம்நாட்டையே
முன்னேற்றுவோம்...
என்ற பாடலும்
மங்கலம் பொங்கும் மணித் தமிழ்நாடு - புகழ்
மணத்தோடு கதிர்போல வாழிய நீடு
சங்கம் கண்ட சரித்திரநாடு - எங்கள்
சந்தனத் தமிழுக்கு வேறேது ஈடு
என்றொரு நாட்டியப் பாடலும் எழுதினேன்.
"அன்புக்கு நானடிமை' என்ற பாடலைப் போலவே "தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை' என்ற பாடலும் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த பாடல். பட விநியோகஸ்தர்களுக்கு இந்தப் பாடலையும், பி.எஸ். வீரப்பாவோடு போடும் சண்டைக் காட்சியையும் மட்டுமே
எம்.ஜி.ஆர். காண்பிக்கச் செய்தார்.

(இன்னும் தவழும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

முதல்வர் நாற்காலிக்கு ஒரு கால் பட்டுக்கோட்டையார்!

 

 
anantha_thenkatru-_19

 

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 19

சில வாரங்களுக்கு முன் நான் எழுதிய கட்டுரையொன்றில், இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் "சக்கரவர்த்தி திருமகள்' படத்திற்காக ஒரு பாடலைப் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திடம் காத்திருந்து எழுதி வாங்கினார் என்று குறிப்பிட்டிருந்தேன்.
அந்தப் பாடல் 
பொறக்கும்போது பொறந்த குணம்
போகப் போக மாறுது - எல்லாம்
இருக்கும் போது பிரிந்த குணம்
இறக்கும் போது சேருது 
- என்ற பாடலாகும்.
"சங்கத்துப் புலவர் முதல் தங்கத் தோடா பொற்பதக்கம் வங்கத்துப் பொன்னாடை பரிசளித்தார்' என்று நான் குறிப்பிட்ட பாடல் பட்டுக்கோட்டை எழுதியதல்ல - உரையாடல் ஆசிரியர் ஏ.எல். நாராயணன் பட்டுக்கோட்டை பற்றி எனக்குச் சொன்ன குறிப்பைத் தேடிப் பார்த்தபோதுதான் நான் எழுதியது தவறென்று புரிந்தது.

அந்தப் பாட்டின் புரட்சிகரமான கருத்துக்களைப் பார்த்தபோது பட்டுக்கோட்டை தான் எழுதியிருப்பார் என்ற நம்பிக்கையில் பல்லாண்டு காலம் மேடைகளில் தவறாகவே சொல்லி வந்திருக்கிறேன் என்பதும் புரிந்தது.

அதைத் தவறென்று தொலைபேசியில் முதன் முதல் என்னிடம் கூறியவர் கவிப்பேரரசு வைரமுத்து. அதற்கடுத்து புதுச்சேரியிலிருந்து பாரதி வசந்தன் என்ற கவிஞரும் தொலைபேசியில் கூறினார். அவர்கள் சந்தேகத்தோடுதான் கூறினார்கள். தீர்மானமாகச் சொல்லவில்லை.

அந்தப் பாடல் பற்றிய விவரங்களைத் தேடிப் பார்த்தபோதுதான், அந்தப் பாடலை எழுதியவர் கிளவுன் சுந்தரம் என்பதை உணர்ந்து கொண்டேன். இந்தக் கிளவுன் சுந்தரம் திரைப்படங்களுக்கு ஒன்பது பாடல்கள் வரை எழுதியிருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

பழைய திரைப்பாடல்களைப் பற்றி எனக்கும் அண்ணன் வாலிக்கும் தெரிந்த அளவுக்கு மற்றவர்களுக்குத் தெரியாது என்ற நினைப்பில் இருந்து விட்டேன். யானைக்கும் அடி சறுக்கும் என்பதை அனுபவத்தில் அறிந்து கொண்டேன். தினமணி வாசகர்கள் எனது தவற்றைப் பொறுத்தருள வேண்டும்.

அதைப் போல மற்றொரு  கட்டுரையில் "அவன்', "பாட்டாளியின் சபதம்',  "ஆன்' ஆகிய மொழி மாற்றுப் படங்களுக்கு வசனம் பாடல்கள் எழுதியவர் கம்பதாசன் என்று குறிப்பிட்டிருந்தேன். இந்த மூன்று படங்களுக்கும் பாடல்கள் மட்டும்தான் கம்பதாசன் எழுதினார். "அவன்' படத்திற்கும் "பாட்டாளியின் சபதம்' படத்திற்கும் வசனம் எழுதியவர் எஸ்.டி. சுந்தரம். "ஆன்' படத்திற்கு வசனம் எழுதியவர் பி.எஸ். ராமையா என்பதையும் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

இதுவரை தமிழ் சினிமாவுக்கு 720 பேர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள் என்றாலும் ஒரு சில கவிஞர்களின் பெயர்தான் எல்லாருக்கும் தெரிந்த பெயராக இருக்கும். அதில் பாபநாசம் சிவன், உடுமலை நாராயணகவி, மருதகாசி, கண்ணதாசன், கம்பதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், தஞ்சை ராமையாதாஸ், சுரதா, கு. மா. பாலசுப்பிரமணியம், வாலி, புலமைப்பித்தன், வைரமுத்து ஆகியோர் குறிப்பிடத்தக்கவராக இருப்பார்கள்.

ஆர்மோனியப் பெட்டிக்கு அழகு தமிழை அறிமுகப்படுத்திய பெருமை கண்ணதாசனுக்கு உண்டென்றால் பாடல்களில் வெடி குண்டுக் கருத்துக்களை வைத்து வீசிய பெருமை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்கே உண்டு.

பட்டுக்கோட்டை என்றதும் அரசியல்வாதிகளுக்கு திராவிடக் கழகத்தைச் சேர்ந்த பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் பெயர் நினைவுக்கு வரும். திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பெயர் நினைவுக்கு வரும். நாட்டைத் திருத்தத் தனது பேச்சைப் பயன்படுத்தியவர் அழகிரிசாமி. சமுதாய சீர்கேட்டைத் திருத்தத் தனது பாட்டைப் பயன்படுத்தியவர் கல்யாணசுந்தரம்.

திரையுலகில் ஐந்தாண்டுக் காலம்தான் பாடல் எழுதினார் என்றாலும் எழுதிய காலம்வரை யாரும் நெருங்க முடியாத பெரும் சூறாவளியாகச் சுற்றிச் சுழன்றடித்தவர் இவர்.

கண்ணதாசனுக்குப் பிறகுதான் பட்டுக்கோட்டை கலையுலகில் புகுந்தார் என்றாலும் தத்துவப் பாடல்களில் கண்ணதாசனுக்கு நிகராக நிமிர்ந்து நின்றவர்.

ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே - அவன்
ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே...

இரைபோடும் மனிதனுக்கே
இரையாகும் வெள்ளாடே...
இதுதான் உலகம் வீண் அநுதாபம் கொண்டுநீ
ஒருநாளும் நம்பிடாதே...
இவை போன்ற எத்தனையோ பாடல்களை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

இலக்கிய உலகில் பாரதியாரும், பாரதிதாசனும் எப்படிப் புரட்சிக் கவிஞர்களாகப் புகழ் பெற்றார்களோ அப்படித் திரைப்பாட்டுலகில் கண்ணதாசனும், பட்டுக்கோட்டையும் எழுச்சிக் கவிஞர்களாகப் புகழ் பெற்றவர்கள்.

கண்ணதாசனுக்கும் பட்டுக்கோட்டைக்கும் ஒற்றுமையும், வேற்றுமையும் உண்டு. இரண்டு பேரும் அசைவப் பிரியர்கள் இதுதான் ஒற்றுமை. பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தவர் கண்ணதாசன். பணத்தைத் தங்கத்தைப் போல் பாதுகாத்தவர் பட்டுக்கோட்டை. பாட்டெழுதி வாங்கிய பணத்தையும் நோட்டெழுதி வாங்கிய பணத்தையும் கொண்டு படம் தயாரித்துக் கடனாளியானவர் கண்ணதாசன். பாட்டுடெழுதி வாங்கிய பணத்தை ஊருக்கனுப்பி தோட்டம் துரவுகள் வாங்கிப் போட்டவர் பட்டுக்கோட்டை. அந்தவகையில் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு செயல்பட்டவர் இவர். திரைப்படக் கவிஞர்களில் பாடல் தொகுப்பு முதலில் இவருக்குத்தான் வெளிவந்தது. அதன்பிறகுதான் கண்ணதாசனுக்குப் பாடல் தொகுப்பு வந்தது.

"கண்ணதாசனும் வாலியும் எனக்கு இரண்டு கண்களென்றால் பட்டுக்கோட்டை எனது நெற்றிக்கண்' என்று கூறினார் இசையமைப்பாளர் அண்ணன் எம்.எஸ். விசுவநாதன்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனபோது, "நான் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு ஒரு கால் பட்டுக்கோட்டையார் என்றும் மற்ற மூன்று கால்கள் வெவ்வேறு கவிஞர்கள்' என்றும் கூறினார். வெவ்வேறு கவிஞர்கள் யார் யார் என்று அவர் கூறவில்லை. வெளிப்படையாகச் சொன்னது பட்டுக்கோட்டை ஒருவரைத்தான்.

திரைப்படத்திற்காக பட்டுக்கோட்டை எழுதியது இருநூற்று நாற்பத்தைந்து பாடல்கள்தான். படத்திற்காக எழுதி படத்தில் வராத பாடல்களையும் சேர்த்துக் கணக்கெடுத்தால் கூட முந்நூற்றுக்கும் குறைவாகத்தான் இருக்கும். மூவாயிரம் பாடல்கள் எழுதியவன் பெறக்கூடிய புகழை முந்நூற்றுக்கும் குறைவான பாடல்களே எழுதி இவர் பெற்றாறென்றால் இவர் பாடல்களில் இருந்த கருத்துக்கள்தான் அதற்குக் காரணம். இத்தனை ஆயிரம் பாடல்கள் எழுதினார் என்பதற்காக ஒரு கவிஞனுக்குப் புகழ் வந்துவிடாது.

சமுதாயம் பலன் பெறத்தக்க கருத்துக்களை எந்த அளவில் சொன்னான் என்பதை வைத்தே ஒரு கவிஞனுக்குப் பெயரும் புகழும் சேரும். சிலர் இவன் இத்தனை புத்தகம் எழுதியிருக்கிறான் என்று கணக்குச் சொல்வார்கள். சரி, என்ன எழுதியிருக்கிறான் என்று பார்த்தால் ஒன்றும் தேறாது. 

பட்டுக்கோட்டைக்கிருந்த சிந்தனைக் கூர்மை பட்டப்படிப்பு படித்தவர்க்கில்லை. படிப்பு வேறு. அறிவு வேறு. பட்டப்படிப்பு படிக்காதவர்கள் தான் அறிவியல் மேதைகளாய் அகிலத் தலைவர்களாய் உலக அளவில் உயர்ந்திருக்கிறார்கள். சுயசிந்தனையாளரான பெரியார் எந்தக் கல்லூரியில் படித்தார்? அவருக்கிணையான சிந்தனையாளர்கள் உலக அளவில் இன்று யாரேனும் இருக்கிறார்களா?

சிலம்புச்செல்வர் ம.பொ.சி. பட்டம் பெற்றவரா? அவரில்லையென்றால் தமிழ்நாட்டின் வடக்கெல்லையை நாம் மீட்டிருக்க முடியாதே.

அதிகம் படித்த அறிவாளி என்பவன் நம்மையும் நமது நாட்டையும் ஏய்ப்பவன். அதிகம் படிக்காத சுயசிந்தனையுள்ள அறிவாளிதான். நாட்டையும் சமுதாயத்தையும் காப்பவன்.

 

படிக்காதவர்களே பாவபுண்ணியம் பார்த்து நடக்கும் பண்புள்ளவர்கள். பட்டுக்கோட்டை இதைப் பாடலிலே சொல்வார்,
எழுதிப் படிச்சு அறியாதவன்தான்
உழுது உழைச்சுச் சோறு போடுறான்
எல்லாம் தெரிஞ்சவன் ஏதேதோ பேசி
நல்லா நாட்டைக் கூறு போடுறான்
அவன் சோறு போடுறான்
இவன் கூறு போடுறான்
என்பார்.
(இன்னும் தவழும்)

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆர். ரசித்த இரண்டு வரிகள்!

 

 
anandha_thenkatru_-_20

 

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே-20

எந்தப் பாடல் எழுதினாலும் அதில் சமுதாயக் கருத்துக்களைப் புகுத்திவிட வேண்டும் என்ற எண்ணம் உடையவர் பட்டுக்கோட்டை. காதல் பாட்டில்கூட விவசாயத் தொழிலாளர்களின் கருத்தைச் சொன்னவர் இவர்தான். எம்.ஜி.ஆர். நடித்த "நாடோடி மன்னன்' படத்தில் அவர் எழுதிய, சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி சோம்பல் இல்லாமல் ஏர் நடத்தி...
- என்ற பாடலே இதற்கு எடுத்துக்காட்டு. இந்தப் பாடல் கூட படத்திற்காக நேரடியாக எழுதவில்லை. "ஜனசக்தி' பத்திரிகையில் வெளிவந்திருந்த கவிதையைப் படித்துப் பார்த்த ஆர்.எம். வீரப்பன், எம்.ஜி.ஆரிடம் சொல்லி, பட்டுக்கோட்டையை வரவழைத்து அதில் சில மாற்றங்களைச் செய்து, இசையமைப்பாளர் எஸ்.எம். சுப்பையாநாயுடுவிடம் கொடுத்து இசையமைக்கச் செய்து படத்தில் இடம்பெறச் செய்தார். இந்தப் படம்தான் எம்.ஜி.ஆருக்கும் பட்டுக்கோட்டைக்கும் முதல் சந்திப்பை ஏற்படுத்தி தந்தது.

அந்தப் பாட்டுக்குப் பிறகு தான் "தூங்காதே தம்பி தூங்காதே - நீ சோம்பேறி என்ற பெயர் வாங்காதே' என்ற பாடலையும் "மானைத் தேடி மச்சான் வரப் போறான்' என்ற பாடலையும் நாடோடி மன்னனில் எழுதினார்.

காதல் பாட்டில் கூட இத்தகைய பாட்டாளி மக்களின் கருத்தை எம்.ஜி.ஆர். என்பதால் ஏற்றுக் கொண்டார். இன்றைக்கு அதுபோல் காதல் பாட்டில் இதைப் போன்ற கருத்துக்களைச் சொன்னால் தயாரிப்பாளரோ, இயக்குநரோ அல்லது இசையமைப்பாளரோ ஏற்றுக் கொள்வார்களா? கிளுகிளுப்பு உண்டாகக் கூடிய வகையிலே எழுதுங்கள் என்பார்கள். நான் கூட ஒரு பாட்டில் இதைப் போன்ற கருத்துக்களை எழுதியபோது வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டார்கள்.

இலக்கிய வாதிகள் மேடைகளில் பேசுவதற்காகக் கண்ணதாசன் வரிகளைத் தேடிக் கொண்டிருந்த போது ஆலைத் தொழிலாளர்களும் விவசாயத் தொழிலாளர்களும் அன்றாடம் மனப்பாடம் செய்து கொண்டிருந்தது பட்டுக்கோட்டையின் பாடல்களைத்தான்.

கண்ணதாசன் தமிழ் கவிதைத் தமிழ். பட்டுக்கோட்டையின் தமிழ் பாட்டாளித் தமிழ். கண்ணதாசன் பாடல் கவிதை மனங்களுக்குக் கற்கண்டு.

பட்டுக்கோட்டையின் பாடல் ஆதிக்க மனங்களுக்கு வெடிகுண்டு. கண்ணதாசன் பாடல் தாலாட்டு என்றால் பட்டுக்கோட்டையின் பாடல் அதிர்வேட்டு.

சுருக்கமாகச் சொன்னால் கண்ணதாசன் பாடல்களில் இருந்தது வனப்பு; பட்டுக்கோட்டையின் பாடலில் இருந்தது நெருப்பு. அதனால்தான் சாகாமல் அவன் பாடல்கள் வாழ்கின்றன.

மதுவுடைமைக் கொள்கை மலிந்திருந்த திரையுலகில் பொதுவுடைமைக் கொள்கையைப் புகுத்திய பெருங்கவிஞன் அவன்தான். ஏன் இவனுக்கு முன்பு சமுதாயக் கருத்துக்களை காதல் பாடல்களில் யாரும் சொல்லவில்லையா என்றால் சொல்லியிருக்கிறார்கள்.

அதில் மருதகாசி, லட்சுமணதாஸ் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். எடுத்துக்காட்டுக்கு ஏதேனும் ஒன்றைச் சொல்ல வேண்டுமென்றால் மருதகாசி எழுதிய ஒரு பாடலைச் சொல்லலாம்.

மழைபெய்து கொண்டிருக்கிறது. கதாநாயகியும் கதாநாயகனும் இருக்கின்ற வீடு கூரை வீடு. அந்தக் கூரை ஓரிடத்தில் பிய்ந்திருக்கிறது. அதன்வழியே மழைத்துளி சொட்டுச் சொட்டாகச் சிந்துகின்றது. வெளியே இடியுடன் கூடியமழை கொட்டிக் கொண்டிருக்கிறது. இதைவைத்து மருதகாசி அற்புதமாக எழுதியிருப்பார்.
ஆண் :- மழை - சொட்டுச் சொட்டுன்னு
சொட்டுது பாரு இங்கே
கஷ்டப்படும் ஏழை சிந்தும்
நெத்தி வேர்வை போல - அவன்
கஞ்சிக் காகக் கலங்கிவிடும்
கண்ணீர்த் துளியைப் போலே - மழை
சொட்டுச் சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
பெண் :- முட்டாப் பயலே மூளை இருக்கா
என்று ஏழைமேலே
துட்டுப் படைத்த சீமான் அள்ளிக்
கொட்டுற வார்த்தை போலே - மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு அங்கே...
இதுவும் காதல் பாடல்தான். 1960-இல் வெளிவந்த "ஆடவந்த தெய்வம்' என்ற படத்தில் டி.ஆர். மகாலிங்கமும், பி. சுசீலாவும் பாடியது. படத்தில் டி.ஆர். மகாலிங்கமும், அஞ்சலி தேவியும் பாடுவது போல்காட்சி இருக்கும். இப்படிப் பல காதல் பாடல்களை சமுதாயப் பார்வையும் மருதகாசி போன்றோர் எழுதி இருந்தாலும் அதில் முழுக்க முழுக்க வெற்றி பெற்றவர் பட்டுக்கோட்டைதான்.

நானும், அண்மையில் மறைந்த கவிஞர் நா. காமராசனும் எம்.ஜி.ஆரை ஒருமுறை சந்தித்தபோது பட்டுக் கோட்டையின் பாடல்களைச் சிறப்பித்து எங்களிடம் பேசினார். அதில் ஒரு பாடலை மிகவும் பாராட்டிக் கூறினார். "சக்கரவர்த்தித் திருமகள்' படத்தில் இடம்பெற்ற நான் சென்ற கட்டுரையில் குறிப்பிட்ட "பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது' என்ற பாடலைத்தான் அவரும் குறிப்பிட்டார். அதில் சரணத்தில் வருகிற இரண்டுவரி தனக்கு ரொம்பப் பிடிக்குமென்றும் கூறினார். அந்தச் சரணம் இதுதான்.
கால நிலையை மறந்து  சிலது
கம்பையும் கொம்பையும் நீட்டுது - புலியின்
கடுங்கோபம் தெரிஞ்சிருந்தும்
வாலைப்புடிச்சு ஆட்டுது - வாழ்வின்
கணக்குப் புரியாமே ஒண்ணு
காசை எண்ணிப் பூட்டுது - ஆனா
காதோரம் நரைச்ச முடி
கதை முடிவைக் காட்டுது...
இதில் கடைசி இரண்டு வரிகள் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடிக்கும். பட்டுக்கோட்டை தன் கைப்பட எழுதிய கடிதங்களையும் சில பாடல்
களையும் ஏ.எல். நாராயணன் என்னிடம் காட்டியிருக்கிறார். இவர் எழுத்துக்களில் பிழையிருக்கலாம். ஆனால் எண்ணங்களில் பிழையிருந்ததில்லை.

தஞ்சையில் நடந்த எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் இவரைப் பாடு பொருளாக வைத்து கவியரங்கம் ஒன்றை நடத்தச் செய்தவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. நான்தான் பட்டுக்கோட்டையைப் பற்றி பாடினேன்.

எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது அவர் இருந்திருந்தால் பல சிறப்புகளை எம்.ஜி.ஆர் அளித்திருப்பார். எம்.ஜி.ஆரைப் போல் கவிஞர்களை எழுத்தாளர்களைப் போற்றியவர் யாரும் கிடையாது. முதன்முதல் "ராஜராஜன் விருது' என்ற பெயரில் ஒரு லட்ச ரூபாய் விருதை அளித்தவர் அவர்தான்.

மிகச் சிறந்த எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் இந்த விருதை யாருக்கு அளிக்கலாம் என்று ஆலோசித்தபோது அன்றைய நிதியமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் அப்போது எழுதிக் கொண்டிருந்த ஒரு எழுத்தாளர் பெயரைக் கூறினார்.

உடனே எம்.ஜி.ஆர். நீங்கள் சொல்லக்கூடிய எழுத்தாளர் இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார். இன்னும் பல வருடங்கள் தொடர்ந்து எழுதுவார். ஆகவே அடுத்த ஆண்டு அல்லது அதற்கு அடுத்த ஆண்டுகூடக் கொடுக்கலாம்.

ஆனால் எழுதிப் பல சாதனைகள் புரிந்து வயது முதிர்ச்சியின் காரணமாக எழுதமுடியாமல் இருப்பார்களே பல எழுத்தாளர்கள்; அவர்களில் யாருக்காவதுதான் இதைக் கொடுக்கவேண்டும். யாருக்குக் கொடுக்கலாம் என்று எம்.ஜி.ஆர் கேட்ட போது நாவலர் பேசாமல் இருந்தார்.

உடனே எம்.ஜி.ஆர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், பல காப்பியங்கள், கவிதைகள் படைத்தவரும் "விக்டர் ஹியூகோ' என்ற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய ஒரு கதையை மொழிபெயர்த்து "ஏழைபடும் பாடு" என்ற திரைப்படமாக வெளிவருவதற்குக் காரணமாகவும் அமைந்த கவியோகி சுத்தானந்த பாரதியாருக்கு அந்த விருதை வழங்கலாம் என்று கூறி அதன்படி அந்த விருதை அவருக்கு வழங்கினார். 

சுத்தானந்த பாரதியாருக்கு ராஜராஜன் விருது கொடுத்ததன் மூலம் முதிர்ந்த எழுத்தாளர்களையும் சிறப்பித்தவர் எம்.ஜி.ஆர் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். 

எல்லாருக்கும் காலம்தான் பாடம் கற்பிக்கும். காலத்தை விடச் சிறந்த ஆசிரியன் எவனும் இருக்க முடியாது. ஆனாலும் சிலர் வரப்போவதை அறியாமல் பணத்தை மூட்டைகட்டி வைக்கிறார்கள். சிலர் பினாமி பெயரிலே சொத்துக்களை எழுதி வைக்கிறார்கள். அவையெல்லாம் திரும்ப அவர்களுக்குக் கிடைக்குமா என்றால் அதற்கும் பட்டுக்கோட்டை பாடல்தான் பதில் சொல்கிறது.
ஆடி ஓடிப் பொருளைத் தேடி
அவனும் திங்காமே பதுக்கி வைப்பான்
அதிலே இதிலே பணத்தைச் சேர்த்து
வெளியிடப் பயந்து மறைச்சு வைப்பான்
அண்ணன் தம்பி பெண்டாட்டி பிள்ளை
ஆருக்கும் சொல்லாமே பொதச்சு வைப்பான்
ஆகக் கடைசியில் குழியைத் தோண்டி
அவனையும் ஒருத்தன் பொதச்சு வைப்பான்...
1959-இல் வெளிவந்த "கண்திறந்தது' என்ற படத்தில் இடம்பெற்ற அவரது பாடல். இன்றைய லஞ்ச லாவண்ய ஊழல் அரசியல்வாதிகள் இதைக் கொஞ்சம் சிந்திக்கக் கூடாதா?
(இன்னும் தவழும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

மாஞ்சோலைக் கிளிதானோ? மான்தானோ?

 

 
anandha_thenkatru-_21

 

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -21

எம்.ஜி.ஆர். படங்களுக்கு மட்டுமே பாடல்கள் எழுதிக் கொண்டிருந்த நான், வெளிப்படங்களுக்கு முதலில் எழுதிய படம் "கிழக்கே போகும் ரயில்'. இளையராஜா இசையில் அதிகாரப் பூர்வமாக முதலில் எழுதிய படமும் இதுதான்.

எம்.எஸ்.வி. அவர்களுக்குப் பிறகு திரையிசையில் புது மலர்ச்சியைப் புயல்வேகத்தில் ஏற்படுத்திக் காட்டியவர் இளையராஜா.

இவருடைய இசையில் தான் முதன்முதலில் இசைக் கருவிகள் புதுவிதமான நூதன ஒலி எழுப்பியதைக் கேட்டுப் பிரமித்தோம். பின்னணி இசைக்குத் தனித்
தன்மையை ஏற்படுத்திக் கொடுத்தவர் இவர்தான்.

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களின் நகைச்சுவைக் காட்சிகளைச் சேர்த்து ஓடாத படங்களைக் கூட ஓடவைத்த பெருமை அன்றைய காலத்தில் உண்டு.

அதுபோல் இளையராஜா இசையிருந்தால் ஓடாத படம் கூட நன்றாக ஓடும் என்றொரு நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் உண்டாகும்படி செய்தவர் இவர். இளையராஜாவின் சாதனை அளப்பரியது. அதை இசை நுணுக்கம் அறிந்தவர்கள் சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும். சிம்பொனி இசையமைத்த பெருமை இந்தியத் திரையுலகில் இவரைத் தவிர எவருக்குக் கிடைத்திருக்கிறது?

விசுவநாதன் அவர்களைப் போல ஒரு பாடலுக்கு ஒருமணி நேரத்தில் பின்னணி இசையை அமைக்கின்ற ஆற்றல் இவர் ஒருவருக்குத்தான் உண்டு. சிலருக்கு இரண்டு நாள் அல்லது ஒருவாரம் கூட ஆகிவிடுகிறது.

எம்.எஸ்.விசுவநாதனுக்குப் பிறகு குறிப்பிடத் தகுந்த இசையமைப்பாளர் இவர். மண்வாசம் மிக்க பாடல்களுக்குப் பண்வாசம் கொடுத்த பெருமை இவரைத்தான் சேரும். 

இந்தப் படத்தின் கதாசிரியர் ஆர். செல்வராஜ் ஒரு காட்சியைச் சொல்லி அதில் எப்படிப்பட்ட கருத்துகள் இடம் பெற வேண்டும் என்று அதையும் சொல்லி பாடல் எழுதச் சொன்னார்.

"பாடலுக்கேற்ப இசையமைக்கும்படி ராஜாவிடம் சொல்லுகிறேன். எழுதி வாருங்கள்'' என்றார். நானும் எழுதிச் சென்றேன்.

ஒருநாள் இயக்குநர் பாரதிராஜாவைச் சந்தித்த போது "நீங்கள் எழுதிய பாடல் நன்றாக இருந்தது. ஆனால் அந்தக் காட்சியை நாங்கள் மாற்றிவிட்டு வேறொரு காட்சியை அமைத்திருக்கிறோம். மெட்டமைத்ததும் உங்களை அழைக்கிறேன்'' என்றார்.

சொன்னது போல் இளையராஜா மெட்டுப் போட்ட பிறகு என்னை அழைத்து எழுதச் சொன்னார்.

முதலில் ஒரு பல்லவி எழுதினேன். "கவிதையாக இருக்கிறதே. பாடலைப் போல் இல்லையே'' என்றார் கங்கைஅமரன். அதாவது பல்லவி நன்றாக இல்லை என்று நேரிடையாகச் சொல்லாமல் கவிதையாக இருக்கிறதே என்று சொல்வது அந்நாள் நாகரிகம். நானும் அதைப் புரிந்து கொண்டு உடனே வேறொன்று எழுதினேன். 

எல்லோருக்கும் அது பிடித்து விட்டது. அதுதான்,
மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ
வேப்பந் தோப்புக் குயிலும் நீதானோ?
 - என்ற பாடல்
அதன் பிறகு சரணத்திற்கு டியூன் கொடுத்துவிட்டு, "இன்னொரு கம்பெனிக்குப் போய் விட்டு வருகிறோம், நீங்கள் எழுதிக் கொண்டிருங்கள்'' என்று இளையராஜா சென்றுவிட்டார்.

அவர்கள் திரும்பி வருவதற்குள் பாடலை எழுதி முடித்து விட்டேன். அதை நான் எழுதும் போது கவிஞர் சிற்பியும் அங்கிருந்தார். இவர் பாரதியார் பல்கலைக்
கழகத் தமிழ்த் துறைத்தலைவராகப் பின்னாளில் திகழ்ந்தவர். சாகித்ய அகாடமி விருது பெற்றவர். ஒன்றரை மணி நேரத்தில் அந்தப் பாடலை எழுதினேன்.

அதற்கு சாட்சி சிற்பிதான். அவரும் பாடலைப் பாராட்டினார். அவரும் அதில் ஒரு பாடல் எழுதியிருக்கிறார். ஆனால் படத்தில் அது இடம் பெறவில்லை. இசைத் தட்டில் மட்டும் இடம் பெற்றது. அதுவும் ஹிட்டான பாடல்தான். "மலர்களே...  நாதசுரங்கள்' என்று ஆரம்பமாகும் அப்பாடல்.

நான் சரணம் எழுதிக் கொண்டிருந்தபோது, இரண்டாவது சரணத்தில்,  "கரும்பு வயலே குறும்பு மொழியே' என்ற வரியை எழுதிவிட்டு அதற்குப் பதில் வேறொரு வரியை எழுதி, "இந்த இரண்டு வரிகளில் எது நன்றாக இருக்கிறது?'' என்று அங்கிருந்த அந்தக் கம்பெனியைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டேன். அவர், "ராதிகாவின் பாத்திரத்திற்கேற்ப "கரும்புவயலே குறும்பு மொழியே' என்பதுதான் நன்றாக இருக்கிறது'' என்றார்.

இளையராஜா திரும்பி வந்து என் பாடலைப் பார்த்துவிட்டு மிகவும் பாராட்டினார். "சிரமமான சந்தத்தை சிறப்பாக எழுதிவிட்டீர்கள்'' என்று கங்கை அமரன் கை குலுக்கினார். எல்லோரையும் விட பாரதிராஜாதான் மிகவும் பாராட்டினார். பாராட்டும் போது, "கரும்பு வயலே குறும்பு மொழியே - என்ற வரி ராதிகாவின் பாத்திரப் படைப்பைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. அருமை!'' என்று புகழ்ந்துரைத்தார்.

அப்போது அந்த வரி நன்றாக இருக்கிறது என்று ஏற்கெனவே சொன்னாரே அந்த நண்பரைப் பார்த்தேன். உடனே அவர் புன்முறுவல் காட்டினார்.

"உங்களைப் போல புத்திக் கூர்மையுள்ளவராக அந்த நண்பர் இருக்கிறாரே...  அவர் யார்?'' என்று பாரதி ராஜாவிடம் கேட்டேன்.

"அவர் நமது அசிஸ்டெண்ட் டைரக்டர். பெயர் பாக்கியராஜ்'' என்றார். உடனே எனக்கு வணக்கம் தெரிவித்தார். நானும் வணக்கம் தெரிவித்தேன். பிறகு சினிமா உலகமே அவர் வீட்டுக்குமுன் வணக்கம் தெரிவித்து பல காலம் கைகட்டி நின்று கொண்டிருந்தது.

திரைக்கதை அமைப்பதில் இந்தியத் திரையுலகில் இவருக்கு நிகர் எவரும் இல்லை என்று சொல்லத் தக்கவகையில் பதினைந்து ஆண்டு காலம் கொடி கட்டிப் பறந்தார். இவருடைய திரைக்கதைக்காக இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆறு மாதத்திற்கு மேல் காத்திருந்தார் என்றால் இவர் ஆற்றல் எப்படிப்பட்டது என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

சென்னை கமலா திரையரங்கில் இப்படத்தின் நூறாவது நாள் விழாவில் இப்பாடலை ராகத்தோடு பாடி, "இதைப் போல எங்கள் படங்களுக்கும் பாடல்கள் போடக்கூடாதா?'' என்று இளையராஜாவிடம் நடிகர் திலகம் சிவாஜி கேட்டார். சபையோர் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

அந்த ஆண்டின் சிறந்த பாடலாசிரியராகத் தமிழக அரசு என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு இப்பாடலும் ஒரு காரணம். இந்தப் பாடலை ஜெயச்சந்திரன் பாடியிருப்பார். இப்பாடல் பிரபலமான போது, " "மாஞ்சோலை' என்று சொல்லலாமா? "மாந்தோப்பு' என்று தானே சொல்ல வேண்டும். வேப்பந் தோப்பு எங்கே இருக்கிறது?'' என்றெல்லாம் பலர் பத்திரிகையில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள்.

இலக்கியப் பயிற்சி உடையவர்கள் அப்படிக் கேட்கவில்லை. அவர்களுக்கு விவரம் தெரியும்.

மாஞ்சோலை என்றும் சொல்லலாம். மாந்தோப்பு என்றும் சொல்லலாம். ஆகாயத்தை வானம் என்றும் சொல்லலாம் விசும்பு என்றும் சொல்லலாம். இதில் ஒன்றும் சொற்குற்றம் இல்லை.

பாரதியார் பாடிய குயில் பாட்டில், "மேற்கே சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை அந்த மாஞ்சோலை அதனில் ஓர் காலையிலே' என்று பல இடங்களில் மாஞ்சோலை என்ற சொல்வருகிறது.

தமிழறிஞர் மு.வ. அவர்கள் மாஞ்சோலை என்ற சொல்லை இலக்கியக் கட்டுரையொன்றில் எடுத்தாண்டிருக்கிறார்.

வள்ளலாரின் மனுமுறை கண்ட வாசகத்தில் மாஞ்சோலை என்ற சொல் கையாளப்பட்டிருக்கிறது.

மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் வழியில் திருமாஞ்சோலை என்ற ஊரே இருக்கிறது. திருநெல்வேலிப் பகுதியில் மாஞ்சோலை எஸ்டேட் என்ற பெயரில் ஒரு எஸ்டேட் இருக்கிறது.

இதையெல்லாம் தெரிந்து கொள்ளாதவர்கள் இலக்கியங்கள் எதையும் பயிலாதவர்கள் - எனக்கு எதிர்ப்பான கருத்துக்களைக் கூறினார்கள்.

அதைப் போல "வேப்பந்தோப்பு' என்று முத்துலிங்கம் எழுதியிருக்கிறாரே எங்கே இருக்கிறது அந்தத் தோப்பு? என்றெல்லாம் அர்த்தமில்லாமல் கேட்டார்கள். அப்படி யார் கேட்டார்கள் என்றால் நான் மிகவும் மதிக்கும் பாடலாசிரியர் மருதகாசியும், இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும் தான் அப்படிக் கேட்டார்கள்.

பல மரங்கள் சேர்ந்தாலே அது தோப்புத்தானே அப்படி வேப்ப மரங்கள் கூட்டமாக ஓரிடத்தில் இருந்தால் அது வேப்பந்தோப்புத்தான். எங்கள் ஊர்ப்பகுதியில் அப்படி நிறையத் தோப்புக்கள் இருக்கின்றன. திண்டுக்கல்லில் ஒரு தெருவுக்குப் பெயரே வேப்பந்தோப்புத் தெரு என்று இருக்கிறது.

அதற்காகக் கூட்டமாக நிற்கும் எல்லா மரவகைகளையும் தோப்பு என்றோ சோலை என்றோ சொல்லக் கூடாது. கருவேல மரங்கள் அடர்த்தியாக ஓரிடத்தில் இருந்தால் அதைக் கருவேலந்தோப்பு என்று சொல்லக்கூடாது. கருவேலங்காடு என்று தான் சொல்ல வேண்டும். இப்படிச் சில முறைகள் இருக்கின்றன.

இதையெல்லாம் அந்தப் பாடல் வெளிவந்த நேரத்தில் விமர்சனங்களுக்குப் பதில் சொல்கிற வகையில் விளக்கமாகக் கூறியிருக்கிறேன். இந்தப் பாடலுக்கு இதைப் போல விமர்சனங்கள் அதிகம் வந்ததால் தானோ என்னவோ இந்தப் பாடல் மிகவும் பிரபலமான பாடலாக அமைந்தது.
படம் உதவி : ஞானம்
(இன்னும் தவழும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

கங்கை அமரனுக்கு வந்த வாய்ப்பு பாக்யராஜூக்கு மாறியது!

 

 
aanandha_thenkatru_22

 

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே-22:

இளையராஜா இசையில் நான் பாடல் எழுதிய இரண்டாவது படம் "புதிய வார்ப்புகள்'. இது ஜெயகாந்தனுடைய கதைத் தலைப்பு. பாரதிராஜாதான் இந்தப் பெயரை வைத்தார். இந்தப் படத்திற்குக் கதை வசனம் ஆர்.செல்வராஜ். ஆனால் அவர் "பொண்ணு ஊருக்குப் புதுசு' என்ற படத்தை இயக்கப் போய்விட்டதால் பெரும்பாலான வசனங்களை பாக்யராஜ்தான் எழுதினார். கதை மட்டும் ஆர். செல்வராஜ்.

இந்தப் படத்திற்குப் பாடல் எழுதுவதற்காக "டைரக்டர் உங்களை அழைத்து வரச் சொன்னார்' என்று பாரதிராஜாவின் இணை இயக்குநர் ஜே. ராமு, வீட்டிற்கு வந்து என்னை அழைத்துச் சென்றார். பாடல் எழுதுவதற்கான காட்சியை பாரதிராஜா விளக்கினார்.

கதாநாயகன் "குங்குமம்' பத்திரிகை படிப்பவன். கதாநாயகி "இதயம்' பத்திரிகை படிப்பவள். ஒருநாள் குங்குமம் கொடுக்க முடியுமா என்று கதாநாயகி கதாநாயகனிடம் கேட்பாள். நீ இதயத்தைக் கொடுத்தால் நான் குங்குமம் கொடுக்கிறேன் என்று இரு பொருள் படச் சொல்லுவான். அதன் பின் அவர்களுக்குள் காதல் வளர்கிறது.

ஒரு நாள் ஊரை விட்டுக் கதாநாயகன் சென்று விடக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகிறது. அவன் செல்வதற்குள் அவனை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்று கதாநாயகி பேருந்து நிற்குமிடத்திற்கு ஓடுவாள். அதற்குள் அவன் பேருந்தில் ஏறிச் சென்று விடுவான். அப்போது கதாநாயகி பாடுவது போல ஒரு பாடல்.

அதை நேரிடையாக அவள் பாடாமல் அவள் கோணத்தில் பின்னணியில் பாடுவது போலவும் இருக்கலாம். இதயம், குங்குமம் என்ற வார்த்தை அந்தப் பாடலில் வரவேண்டும் என்றும் கூறினார்.

இளையராஜா மெட்டை வாசித்தார். அந்த மெட்டுக்கு ஏற்றாற்போல் அங்கேயே எழுதி விட்டேன்.
இதயம் போகுதே
எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
கேட்காதோ...
இதுதான் பல்லவி. இந்தப் பாட்டை ஜென்ஸி பாடியிருப்பார். இது பிரபலமான பாடலாக அமைந்தது.

இதில் கண்ணதாசன் "வான் மேகங்களே...' என்ற பாடலையும், கங்கை அமரன் "தனனம் தனனம் தனத் தாளம் வரும்' என்ற பாடலையும் எழுதினார்கள். இதில் எல்லாப் பாடல்களும் பிரபலமான பாடல்கள்தாம். கிழக்கே போகும் ரயில் படத்திலும் மூன்று பாட்டு. இதிலும் மூன்று பாட்டுத்தான். இது பாரதிராஜாவின் சொந்தப்படம்.

muthlinkam.jpg

பாடலை நான் எழுதிக் கொண்டிருந்த போது இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கச் சொல்லி பாரதிராஜா கங்கை அமரனிடம் கேட்டார். அவர் மறுத்துவிட்டார். அதன் பிறகுதான் பாக்யராஜை கதாநாயகனாக ஆக்கினார். அந்தப் படத்திலிருந்து பாக்யராஜுக்கு எல்லா வகையிலும்
ஏறுமுகம்தான்.

பாக்யராஜ் முதன்முதலில் இயக்கிய படம் "சுவரில்லாத சித்திரங்கள்'.  அந்தப் படத்திலிருந்து நடிகை ஷோபனா நடித்த "இது நம்ம ஆளு" என்ற படம் வரை பாக்யராஜ் படங்களுக்குத் தொடர்ந்து எழுதினேன்.

சுவரில்லாத சித்திரங்கள் படத்தில் முதன் முதல் என்னைத்தான் பாடல் எழுத அழைத்தார்.

ஆடிடும் ஓடமாய் ஆனதே காதலே
ஆறுதல் தேடியே யாரிடம் போகுமோ...
சோதனை வேதனை சேர்ந்துவரும்
வாழ்க்கை மாறுமோ...
இதுதான் பல்லவி.
இதில் சரணத்தில்,
பாய்ந்தோடும் கங்கை இங்கே
பசித்தேங்கும் வயிறும் இங்கே
சுகங்களே அரசாளும் பூமி எங்கே
மாலை ஏன் மேடை ஏன்?
கூட்டமேன் கொடிகளேன்?
தோழனே கூறடா...
மாற்றுவோர் இங்கே யாரடா?
-என்று சமுதாயப் பார்வையோடு எழுதியிருப்பேன்.

பசியால் வாடுபவர்கள் கங்கை, காவிரி பாய்கிற இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுதும் இருக்கிறார்கள். ஒருவேளை உணவில்லாமல்
உலகம் முழுதும் பட்டினியாகக் கிடப்பவர்கள் 120 கோடிப்பேர் என்று உலக வங்கி கணக்குக் கூறுகிறது. இந்தியாவில் மட்டும் இரவு உணவு கிடைக்காமல் பட்டினியாய்க் கிடப்பவர்கள் 40 கோடிப் பேர் என்றும் அதே உலக வங்கி சொல்கிறது. இது சென்ற ஆண்டுக் கணக்கு. இப்போது கூடியிருக்கும்.

சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் 40 கோடிப் பேருக்கு இந்தியாவில் இரவு உணவு கிடைக்கவில்லையென்றால் இந்த சுதந்திரத்தால் என்ன பலன்? இதைத்தானே சுதந்திரம் பெற்ற நான்காண்டுகளில் வெளிவந்த "மணமகள்' என்ற படத்தில் கலைவாணரும், டி.ஏ.மதுரமும் பாடல் மூலம் கேட்டார்கள்.

சுதந்திரம் வந்ததின்னு சொல்லாதிங்க
சும்மா - - சொல்லிச்சொல்லி
வெறும் வாயை மெல்லாதிங்க
சோத்துப்பஞ்சம் துணிப்பஞ்சம்
சுத்தமாகத் தீரலே - - இதுல
சுதந்திரம் சுகம் தரும் என்றால்
யாரு நம்புவாங்க...
-இது உடுமலை நாராயணகவி எழுதிய பாட்டு.

அந்த நாளில் அவர் அப்படி எழுதினார். ஆர்.சி. சக்தி டைரக்ட் செய்த "கூட்டுப்புழுக்கள்' என்ற படத்தில் அதைவிட எழுச்சியோடும் வேகத்தோடும் ஒரு பாடல் எழுதினேன்.
எம்.எஸ்.விசுவநாதன் இசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாட்டு இது.
தேசத்தைப் பார்க்கையிலே - நெஞ்சம்
தீப்பந்தம் ஆகுதடா - அதன்
வேஷத்தைக் கலைத்திடவே - புது
வேகத்தைக் காட்டுங்கடா - அதற்கு
விதையொன்று போடுங்கடா
நித்தம்பல குற்றங்களைச்
செய்பவனைக் கண்டு
சித்தம் துடிக்குதடா
கொள்கைதனை விற்கும்
சில கூட்டங்களைக் கண்டு
ரத்தம் கொதிக்குதடா
- இது பல்லவி

 

ஜாதி ஒழிந்திட மேடை அதிர்ந்திடத்
தலைவர்கள் முழங்குகிறார் - அவர்
ஆயிரம் பேசினும் ஜாதியைத் தானடா
தேர்தலில் தேடுகிறார்.
சீதை நெருப்பினில் அன்று குளித்தது
தென்திசைத் தீவினிலே - வர
தட்சிணைத் தீயினில்
சீதைகள் மாய்வது
இந்திய தேசத்திலே
வெள்ளிப் பணங்களை
அள்ளிக் கொடுக்கையில்
சட்டங்கள் மாறுதடா - அட
லஞ்சமும் ஊழலும் தேசிய ரீதியில்
நர்த்தனம் ஆடுதடா

இதைப் போல இன்னும் இரண்டு சரணங்கள் வரும்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடல் இது. இன்னமும் நாட்டின் நிலைமை இப்படித்தானே இருக்கிறது? இதை யார் மாற்றுவது? இது மாற வேண்டும் என்றால் சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ போன்ற உண்மையான புரட்சித் தலைவர்கள் தோன்றி அதிரடி மாற்றத்தை உருவாக்க வேண்டும். அதுவரை நம் நாடு இப்படித்தான் இருக்கும். உண்மையான கொள்கைகளும் இலட்சியங்களும் அண்ணா, காமராஜர் காலத்திற்குப் பிறகு புதைக்கப்பட்டுவிட்டது.
"அடி அனார்கலி, உனக்குப் பிறகு
உயிரோடு புதைக்கப்பட்டது
இந்திய நாட்டின்
ஜனநாயகம்தானடி'
-என்று கவிஞர் வைரமுத்து பல்லாண்டுகளுக்கு முன்பு ஒரு கவிதை எழுதியிருந்தார். அதுதான் இப்போது நம் நினைவுக்கு வருகிறது.

ஏ.எல். நாராயணன் கதை வசனம் எழுதிய  "18 முதல் 22 வரை' என்ற படத்தில் நான் ஒரு பாடல் எழுதியிருந்தேன்.
அம்மா சொன்னாங்க
அப்பா சொன்னாங்க
அதையும் நானும் கேக்கலே
தாத்தா சொன்னாங்க
பாட்டி சொன்னாங்க
அதையும் அப்பா கேக்கலே
சொல்லுறவன்
சொல்லிக்கிட்டுத் தான் இருப்பான்
தள்ளுறவன்
தள்ளிக்கிட்டுத்தான் இருப்பான்
அண்ணா சொன்னதைக்
கேக்கும் தம்பியை
அடையாளம் நீயும் காட்டு - அட
கொள்கை என்பதும்
லட்சியம் என்பதும்
தேர்தல் நேரத்துப் பாட்டு
-இதை எஸ்.பி. பாலசுப்ரமணியமும், எம்.ஜி.சக்ரபாணி மகன் எம்.ஜி.சி. பாலும் பாடியிருப்பார்கள்.
இந்தப் படம் வெளிவரவில்லை. பாடல்கள் மட்டும் இசைத்தட்டாக வெளிவந்தது. இதில் எல்லாப் பாடல்களையும் சங்கர் கணேஷ் இசையில் நான்தான் எழுதியிருந்தேன்.
(இன்னும் தவழும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

எப்போதும் அவரை நான் நினைக்க வேண்டும்!

 

 
anandha_thenkatru_-_23

 

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே- 23!

"சுவரில்லாத சித்திரங்கள்'  அடுத்து, கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது படம் "ஒரு கை ஓசை'. இதற்கு இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன். இந்தப் படத்திற்கு அவர் இசையமைப்பதற்கு நானும் ஒரு காரணம்.
மச்சானே வாங்கய்யா அந்தப்புரம் - நான்
அச்சாரம் போடாத கொய்யாப்பழம்...
இதுதான் அந்தப் படத்தில் நான் எழுதிய பாடல்.
"சுவரில்லாத சித்திரங்கள்' படத்தைத் தயாரித்த நிறுவனம் பாக்யராஜ் இயக்கத்தில் "மெளன கீதங்கள்' என்ற படத்தை அடுத்துத் தயாரித்தது. இது நூறு நாட்கள் ஓடிய வெற்றிப் படம். இதில் கங்கை அமரன் இசையில் நான் எழுதிய பாடல்.
டாடி டாடி - ஓ மை டாடி
உனைக் கண்டாலே ஆனந்தமே
பேட்டா பேட்டா - மேரா பேட்டா
எந்தன் ஆனந்தம் உன்னோடுதான்...
என்று தொடக்கமாகும். இதில் ஒரு சரணத்தில்,
கரையோரம் நண்டெல்லாம் 
தான்பெற்ற குஞ்சோடு
அன்போடு ஒன்றாக விளையாடுதே
அதுபோல அம்மாவும் நம்மோடு கைகோர்த்து
அன்போடு விளையாட மனம் ஏங்குதே...
என்று வரும்.
இந்தப் பாடலுக்குப் பல விமர்சனங்கள் வந்தன. நண்டு குஞ்சு பொரித்தால் தாய் நண்டு இறந்துவிடும் என்று தானே இலக்கியங்கள் சொல்கின்றன. 
"நண்டு சிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில்
கொண்டகரு வேஅழிக்கும் கொள்கைபோல் 
- ஒண்டொடீ
போதம் தனம்கல்வி பொன்றவரும் காலம்அயல்
மாதர்மேல் வைப்பர் மனம்'
என்று ஒளவையார் பாடிய வெண்பாவே சான்றாக இருக்கிறதே. அப்படியிருக்க தாய் நண்டும் குஞ்சு நண்டுகளும் ஒன்றாக விளையாடுகின்றன என்று எழுதியிருக்கிறாரே முத்துலிங்கம். இதை எப்படி ஏற்றுக் கொள்வது என்று "குமுதம்' பத்திரிகையில் ஒருவாசகர் முதலில் எழுதினார். இரண்டு வாரங்கள் இது பற்றி விமர்சனங்கள் வந்தன.

இலக்கியத்தில் அப்படிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அறிவியல் சாகாது என்று சொல்கிறது. நாம் முத்துலிங்கத்திடமே கேட்போம்  என்று குமுதம் பத்திரிகை மூன்றாவது வாரம் எழுதியது. நான்காவது வாரத்தில் நான் அதற்குப் பதில் சொன்னேன்.

"நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு உழவுத் தொழில் நன்றாகத் தெரியும். எங்கள் வயல் வரப்பிலும் வளைகளிலும் நண்டுகள் குஞ்சுகளோடு விளையாடுவதைக் கண்டிருக்கிறேன்.

குஞ்சு பொரிக்கும் போது சில நண்டுகள் இறக்கலாம். பல நண்டுகள் இறப்பதில்லை. ஒளவையினுடைய வெண்பாவும் எனக்குத் தெரியும். யாரும் நண்டு குஞ்சு பொரிக்கும் போது நேரில் பார்த்ததில்லை. பிரசவத்தில் கூட சில தாய்மார்கள் இறந்து விடுகிறார்கள். அதற்காக எல்லாத் தாய்மார்களும் இறந்துவிடுவார்கள் என்று சொல்லலாமா?

இந்தப் பாட்டைப் பாடுகின்ற அந்தக் குழந்தைக்கு இதெல்லாம் தெரியாது. அவன் பெரிய நண்டைத் தாய் நண்டென்றும், சிறிய நண்டுகளைப் பிள்ளை நண்டுகள் என்றும் எண்ணிக் கொள்கிறான். இதை அந்தக் குழந்தையின் கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டுமே தவிர,  அதை அறிவியல் கண்ணோட்டத்திலோ நமக்குத் தெரிந்த இலக்கியக் கண்ணோட்டத்திலோ பார்க்கக் கூடாது'' என்று நான் அந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன்.

இப்படியெல்லாம் விமர்சனங்கள் வந்ததாலோ என்னவோ அந்தப் பாடல் பிரபலமான பாடலாக அமைந்தது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கோபிநாத் என்னை எங்கே எப்போதும் பார்த்தாலும் "கரை ஓரம் நண்டெல்லாம்'  போலப் பாட்டெழுதி மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று கிண்டல் செய்வார்.

எப்போதும் கே.பாக்யராஜ் பாடல் எழுத இரவில்தான் அழைப்பார். விடிய விடிய எழுதுவோம். இரவு நேரத்தில் நீண்டநேரம் கண்விழித்தால் எனக்கு மறுநாள் காய்ச்சல் வந்துவிடும். அதனால் பாக்யராஜ் படத்திற்கு எழுதப் போகிறேன் என்றால் "குரோசின்' மாத்திரையையும் கையோடு எடுத்துச் செல்வேன். நான் சொல்வது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்ச்சி.

கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் எனக்குத் தூக்கமே வருவதில்லை. இதற்காக நான் எந்த மருத்துவரையும் பார்க்கவில்லை. கண்ணை மூடிக்கொண்டு படுத்திருப்பேன். அவ்வளவுதான். மறுநாள் கூட்டங்களில் பேச வேண்டியவை அல்லது எழுத வேண்டியவையெல்லாம் அப்போதுதான் எனக்கு மின்னிக் கொண்டிருக்கும். இதுவரை எனக்கு சர்க்கரை வியாதியோ, தலைவலியோ வந்ததில்லை. ஆனால் சிறுவயதில் இருந்து அடிக்கடி காய்ச்சல் வந்து போய்க் கொண்டிருக்கும்.

தூக்கம் இல்லாததால் எனக்கு உடல் மெலிந்து கொண்டிருக்கிறதே தவிர வேறு எந்தப் பிரச்னையும் இல்லை. சில நேரங்களில் சோர்வாக இருக்கும். எனக்குத் தூக்கம் வராத செய்தியை குமுதம் பத்திரிகையின் வாயிலாக இந்தக் குவலயமே அறியும்படி அன்று செய்தவர் கவிப்பேரரசு வைரமுத்துதான். ஒருமுறை "தினமணி' ஆசிரியர் வைத்தியநாதன் கூட "இப்போதாவது தூக்கம் வருகிறதா?' என்று கேட்டார். மற்ற வகையில் பிரபலம் இல்லாவிட்டாலும் இந்த வகையிலாவது நாம் பிரபலமாக இருக்கிறோமே என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

ஒருநாள் இரவு ஒன்பது மணிக்கு ராகவன் என்ற நண்பர் வந்து ஏவி.எம். தயாரிக்கும் "முந்தானை முடிச்சு' படத்திற்குப் பாடல் எழுத பாக்யராஜ் உங்களை அழைத்துவரச் சொன்னார் என்று கூட்டிச் சென்றார்.

ஏவி.எம். ஸ்டுடியோவில் ஒரு அறையில் வைத்து எனக்குக் காட்சியை விளக்கி இளையராஜாவின் மெட்டையும் போட்டுக் காட்டிப் பாடல் எழுதச் சொன்னார். இரவில் பத்தரை மணிக்கு எழுதத் தொடங்கி விடிகாலை நான்கு மணிக்குத்தான் பாடல் முடிந்தது. அந்த அளவுக்கு வேலை வாங்கினார் பாக்யராஜ்.

அந்தப் படத்தில் எல்லாப் பாடல்களும் ஹிட்டான பாடல்கள் என்றாலும் நான் எழுதியது முக்கியமான ஒரு காட்சிக்கான பாடல்.

சின்னஞ்சிறு கிளியே
சித்திரப் பூவிழியே
அன்னைமனம் ஏங்கும்
தந்தைமனம் தூங்கும்
நாடகம் ஏனடா
ஞாயத்தைக் கேளடா...
- என்று நடிகை ஊர்வசி பாடுவது போல் தொடக்கமாகும். அன்றைய "மாலை முரசு' பத்திரிகை இந்தப் பாடலைச் சிறந்த பாடலென்று அந்த ஆண்டு தேர்ந்தெடுத்துப் பாராட்டியது. அப்போது அந்தப் பத்திரிகையின் சினிமா நிருபராக இருந்தவர் கணேசன்.

அதுபோல் பாக்யராஜ் இயக்கிய "தூறல் நின்று போச்சு' என்ற படத்தில் ஒரு பாடல். அந்தப் பாடலை வேறொரு கவிஞரை வைத்து எழுதியிருந்தார். அதை இசையமைப்பாளர் இளையராஜா ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு என்னை எழுதச் சொன்னார் பாக்யராஜ். அந்தப் பாடலும் பிரபலம் ஆனது. ஆனால் இந்தப் பாடலின் பல்லவியை எழுதியவர் பாக்யராஜ். சரணத்தை மட்டும்தான் நான் எழுதினேன். அந்தப் பாடல் இதுதான்.

பூபாளம் இசைக்கும்
பூமகள் ஊர்வலம்
இருமனம் சுகம்பெறும் வாழ்நாளே...

நான் எழுதிய பாடலை இளையராஜாவிடம் காட்டியபோது, "இந்தப் பல்லவி இந்தப் பாட்டுக்குச் சரியில்லை என்பதால் தான் உங்களை வைத்து எழுதச் சொன்னேன். நீங்கள் அவர் எழுதிய பல்லவியை வைத்துக் கொண்டே எழுதியிருக்கிறீர்களே! இந்தப் பாடல் என்ன பூபாள ராகத்திலா இருக்கிறது?'' என்று கோபமாகக் கேட்டார். அப்படிக் கேட்டுவிட்டு, "சரி சரி உங்களுக்காக வைத்துக் கொள்வோம்'' என்று பாடலை ஒலிப்பதிவு செய்தார். இதை இதுவரை நான் பாக்யராஜிடம் சொன்னதில்லை.

இளையராஜாவின் இசை உதவியாளர் சுந்தரராஜனிடம்,  "பூபாளம் இசைக்கும் - என்ற இந்தப் பாடல் எந்த ராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது?'' என்று கேட்டேன். "கீரவாணி ராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது'' என்றார்.

பாக்யராஜ் என் நெருங்கிய நண்பர். 1983-ஆம் ஆண்டு, முதன்முதல் நான் கார் வாங்கும்போது ஐயாயிரம் ரூபாய் குறைவாக இருந்தது, கேட்டதும் உடனே கொடுத்துவிட்டார். அன்றைக்கு ஐயாயிரம் என்பது இன்றைய ஐம்பதாயிரத்திற்குச் சமம். அடுத்தமாதமே தருகிறேன் என்று சொல்லித்தான் வாங்கினேன். ஆனால் இதுவரை நான் கொடுக்கவே இல்லை. ஏன்? என்னிடம் இல்லை என்பதாலா? இல்லை இல்லை. எப்போதும் அவரை நான் நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக.

இன்னும் தவழும்... 

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

பாடலாசிரியர்களை "வாத்தியார் ஐயா' என்று அழைத்தவர்!

 

 
0000_anandha_thenkatru_24

 

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -24

நான் பாடல் எழுதிய இசையமைப்பாளர்களில் மிகவும் குறிப்பிட வேண்டியவர் எம்.எஸ். விசுவநாதன்.

நமது உடல் தசையால் ஆனது என்றால் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விசுவநாதன் உடல் இசையால் ஆனது. இசையை வேள்வியாகச் செய்தவர். இசையைத் தவிர வேறு எதுவும் அவருக்குத் தெரியாது.

எந்த அளவுக்குப் பெயரும் புகழும் இருந்ததோ அந்த அளவுக்கு அடக்கம் உடையவராகவும் இருந்தார். ஆர்ப்பாட்டமோ ஆணவமோ அணுவளவும் இல்லாதவராக இருந்த ஒரே இசையமைப்பாளர் நான் அறிந்தவரை அவர்தான்.

"நிலையில் திரியா தடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது' - என்பார் திருவள்ளுவர். அவர் வகுத்த இந்த இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்ந்தவர் எம்.எஸ்.வி.

அடக்கத்தை முந்தைய தலைமுறைக் கலைஞர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த வகையில் பண்பாட்டுப் பாடத்தை ஏனைய இசையமைப்பாளர்களுக்கும் கற்றுத் தருகின்ற கலைக்கூடமாகத் திகழ்ந்தவர் எம்.எஸ்.வி. ஆனால் இவரைப் பார்த்துப் பலர் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் எனது வருத்தம்.

இவர் போட்ட ராஜபாட்டையிலே தான் இன்றைய இசையமைப்பாளர்களின் இசைத் தேர்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. பல்வேறு வகையான மெட்டுக்களை வித்தியாசமாகப் போட்டு வெற்றி பெற்ற வித்தியாசாகரம் இவர்.

இவர் ஒருவர்தான் எழுதிய பாடலுக்கு இசையமைக்கக் கூடியவர். அதனால் இவர்தான் உண்மையான இசையமைப்பாளர். மற்றைய இசையமைப்பாளர் பெரும்பாலும் எழுதிய பாடலுக்கு இசையமைப்பதில்லை. அவர்கள் போடுகின்ற மெட்டுக்களுக்குத்தான் நாங்கள் பாடல்கள் எழுதுகிறோம். ஆகவே அவர்களை மெட்டமைப்பாளர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இதே கருத்தை வாலியும் சொல்லியிருக்கிறார்.

மெட்டும் ஒருவகையான இசைதான் என்றாலும் எழுதிய பாடலுக்கு இசையமைத்து அதை வெற்றி பெறச் செய்வதற்கு அதிகத்திறமை வேண்டும். பல்வேறு மொழிகளில் பல்வேறு இசையமைப்பாளர்கள் போட்ட மெட்டுக்களைக் காப்பியடித்துக் கூட மெட்டுப் போட்டுவிடலாம். ஆனால் எழுதிய பாடலுக்கு காப்பியடித்து யாரும் மெட்டுப் போட முடியாது. அதிலும் வெவ்வேறு வகையான மெட்டுப் போட முடியாது.

ஒரு காலத்தில் இந்திப்பட மெட்டுக்களைக் கையாண்டு மெட்டுப் போட்டவர்கள் உண்டு. அப்படி அந்தப் படத்தில் உள்ள மெட்டைப் போடுங்கள் என்று தயாரிப்பாளரோ இயக்குநரோ கேட்டுக் கொண்டால் கூட எம்.எஸ்.வி. ஒத்துக் கொள்ளமாட்டார். புதிதாகத்தான் மெட்டுப் போடுவார்.

ஜி. ராமநாதன் எஸ்.எம்.சுப்பையாநாயுடு கே.வி. மகாதேவன் இவர்களுக்குப் பிறகு எழுதிய பாடலுக்குப் பலவகையான மெட்டுக்களைப் போட்டுக் காட்டக்கூடிய வல்லமை பெற்றிருந்தவர் இவர்தான். பாடலாசிரியர்களை "வாத்தியார் ஐயா' என்று மரியாதையோடு அழைத்தவரும் இவர்தான். அவர் இசையில் பாடல் எழுதியது எங்களுக்கெல்லாம் ஒரு பொற்காலம்.

என்னுடைய ஆரம்பகாலப் பாடல்கள் பிரபலமானதற்கு எம்.எஸ்.வியின் இசைதான் காரணம். என்னதான் கருத்துக்கள் பாடல்களில் இருந்தாலும் அதற்கு அமைக்கக்கூடிய இசை இனிமையாக இல்லாவிட்டால் பாடல் எடுபடாது. இசை இனிமையால் பாடல்களை வெற்றி பெற வைத்தவர் அவர்.

"ஒரு குழந்தை நடைவண்டி ஓட்டிப் பழகும்போது அந்தக் குழந்தை விழுந்துவிடாமல் எப்படி நடைவண்டி குழந்தையைக் கூட்டிச் செல்கிறதோ அப்படி இசை இருக்க வேண்டும்' என்பார் அவர்.

குழந்தையாகப் பாடல்களும் அந்தக் குழந்தையைக் கூட்டிச் செல்லுகின்ற நடைவண்டியாகவும் இருந்ததுதான் எம்.எஸ்.வி.யின் இசை.

இன்றைய சிலரது இசை வேகமாக வந்து குழந்தையை மோதி வீழ்த்திவிட்டுப் போகின்ற கார்களின் ஓட்டத்தைப் போன்ற இசை, இது ஓட்டுபவனுக்கே சமயத்தில் ஆபத்தை ஏற்படுத்தும்.

விஸ்வநாதன் இசையில் எழுந்த பாடல்கள் எல்லாம் இசையோடு பாடினாலும் கவிதை வடிவில் இருக்கும். இசையில்லாமல் பாடலைச் சொன்னாலும் கவிதையாக இருக்கும். அப்படிப்பட்ட வடிவிலே அமைந்தவைதான் அவரது இசையில் மலர்ந்த அனைத்துப் பாடல்களும்.

கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், வாலி போன்றவர்களின் பாடல்கள் சாகாவரம் பெற்ற பாடல்களாக இருக்கின்றன என்றால் அதற்கு எம்.எஸ்.வி.யின் சிரஞ்சீவித் தன்மையான இசைதான் காரணம்.

ஒரு பாடல் நன்றாக வரும்வரை எம்.ஜி.ஆர். கவிஞர்களைவிட மாட்டார். பாடகர்கள் நன்றாகப் பாடும் வரை எம்.எஸ்.வி.யும் விடமாட்டார்.

இருவரும் நடனமும் பயின்றவர்கள். இது பலருக்குத் தெரியாது. எம்.ஜி.ஆர். கத்திச் சண்டை போடுகின்ற லாகவத்தைப் பார்த்தாலே அவருக்கு நடனமும் தெரியும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். உயரம் குறைவாக இருந்த காரணத்தால் நடனம் தனக்கு சரிப்பட்டு வராது என்று இசையில் மட்டுமே அக்கறை காட்டத் தொடங்கினார் எம்.எஸ்.வி. இது நடன இயக்குநர் பி.எஸ். கோபாலகிருஷ்ணன் சொல்லித்தான் எனக்குத் தெரியும். "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்தில் நான் எழுதிய மூன்று பாடல்களில் ஒரு நாட்டியப் பாடலுக்கு நடனம் அமைத்தபோதுதான் பி.எஸ். கோபால கிருஷ்ணன் இதைக் கூறினார்.

எம்.எஸ்.வி.யைப் பொருத்தவரை பல்லவியை நாங்கள் எழுதினாலும் சரணத்திற்கு அவர் போடுகின்ற மெட்டுக்குத்தான் பாடல் எழுதுவோம். அப்படி இல்லாமல் முழுப் பாடலையும் எழுதி ஒரு வார்த்தையைக் கூட மாற்றாமல் அப்படியே இசையமைத்த பாடல்களும் உண்டு.

அப்படிப்பட்ட பாடல்களில் "வயசுப் பொண்ணு' என்ற படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலைக் குறிப்பிட வேண்டும். இந்தப் பாடலை ஜெமினி ஸ்டுடியோவில் இயக்குநர் கே. சங்கரின் எடிட்டிங் அறையில் இருந்து எழுதினேன்.

"திருக்குற்றாலம், கன்னியாகுமரி, பூம்புகார் ஆகிய இடங்களில் படமாக்கப் போகிறோம். அதற்குத் தகுந்தபடி சரணங்கள் இருக்க வேண்டும். முதலில் பொதுவாக ஒரு பல்லவி எழுது'' என்று அந்தக் காட்சிக்கான சூழலைச் சொன்னார் கே.சங்கர்.

நான் யோசித்துக் கொண்டிருந்தேன். உடனே சங்கர்,  "நான் ஒரு வார்த்தை சொல்லட்டுமா... அதிலிருந்து ஆரம்பிக்கிறாயா?''  என்றார். "சொல்லுங்கள்'' என்றேன். "காஞ்சிப் பட்டுடுத்தி... என்று ஆரம்பித்துப் பார்'' என்றார். அவர் சொன்னதுதான் தாமதம்;  உடனே பல்லவி முழுவதையும் வாயாலே சொன்னேன். அவ்வளவு வேகம் அப்போது.

நன்றாக இருக்கிறது.  "முழுப்பாடலையும் இங்கேயே இருந்து எழுது. விஸ்வநாதனிடம் கொடுத்து டியூன் போடுவோம்'' என்றார். அங்கேயே இருந்து இரண்டு மணிநேரத்தில் அந்தப் பாடலை எழுதினேன்.

எம்.எஸ்.வி.யிடம் கொடுத்து டியூன் போடச் சொன்னபோது அவர் முக்கால் மணிநேரத்தில் மூன்று வகையான மெட்டுக்களை அந்தப் பாட்டுக்குப் போட்டார். அதில் ஒரு மெட்டைத்தான் டைரக்டர் தேர்ந்தெடுத்தார்.

இந்தப் பாடலை ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அந்தப் படத்தின் பைனான்சியர் சடையப்பச் செட்டியார் "இது ரொம்ப சுலோவாக இருக்கிறது. இந்த மெட்டு வேண்டாம். இந்தப் பாட்டும் வேண்டாம். வேறொரு பாட்டெழுதி அதற்கு மெட்டுப் போடுங்கள்'' என்றார். அந்தப் படத்தில்,
அதோ அதோ ஒரு செங்கோட்டை
இதோ இதோ ஒரு தேன்கோட்டை
எதோ எதோ உன் மனக்கோட்டை
என்றும் என்றும் நான் உன் வேட்டை
என்றொரு பாட்டு முதலில் எழுதியிருந்தேன். ரிதம் கொஞ்சம் வேகமாக இருக்கும். செட்டியாருக்கு அந்தப் பாட்டுப் பிடித்திருந்தது. அதுபோல் இந்தப் பாட்டிலும் ரிதம் வேகமாக இருக்க வேண்டும் என்றார்.

 

உடனே எம்.எஸ்.வி.  "செட்டியார், இந்தப் பாட்டை ஓ.கே. செய்யுங்கள். இதை நான் ஹிட் பண்ணிக்காட்டுகிறேன்'' என்று சவால் விட்டுச் சொன்னார். அவர் சொன்னதுபோல் அந்தப் படத்தில் அதுதான் ஹிட்டான பாடலாக அமைந்தது. படம் நான்கு வாரம்தான் ஓடியது. படத்தின் பெயரையே அந்தப் பாடல்தான் இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறது அந்தப் பாடல்தான்.
காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் 
                                                           பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும் -  
                                                                                  அந்தத்
திருமகளும் உன்னழகைப் பெற
                                                                       வேண்டும்...
என்ற பாடல்.
சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை 1978-79-ஆம் ஆண்டு எனக்குப் பெற்றுத் தந்த பாடல்களில் இதுவும் ஒன்று. இன்னொரு பாடல் "கிழக்கேபோகும் ரயில்', படத்தில் இடம் பெற்ற "மாஞ்சோலைக் கிளிதானோ மான்தானோ' என்ற பாடல்.

பாடல்களுக்காக எங்களுக்கு ஆண்டுதோறும் ராயல்டி கொடுக்கின்ற அமைப்பு ஒன்று இருக்கிறது. அதற்கு ஐ.பி.ஆர்.எஸ். என்று பெயர். அந்த அமைப்பின் சார்பில் ஒருமுறை எனக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இந்தித் திரைப்பட இசையமைப்பாளர் நெளஷத் அதற்குத் தலைமை தாங்கினார். நெளஷத்தை மானசீகக் குருவாகக் கொண்டவர் எம்.எஸ்.வி.

அதனால் நான் பேசும்போது, "தென்னாட்டு நெளஷத் என்று போற்றப்படுகின்ற எம்.எஸ்.வி. அவர்களே'' என்றேன். எல்லாரும் கைதட்டினர். பக்கத்தில் இருந்த நெளஷத் அருகில் இருந்த இசையமைப்பாளர் புகழேந்தியிடம் நான் என்ன பேசுகிறேன் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு உடனே எழுந்து, "அவர் தென்னாட்டு நெளஷத் என்றால் நான்தான் வடநாட்டு எம்.எஸ்.வி.'' என்று கூறினார். இப்படிப்பட்ட பெருந்தன்மை இன்றைய இசையமைப்பாளர்கள் எவரிடமாவது இருக்கிறதா? உண்மையிலே அவர்கள் காலம் திரையுலகில் பொற்காலம் தான். அவர்கள் காலத்தில் நாங்களும் பணியாற்றினோம் என்பதுதான் எங்களுக்குள்ள பெருமை!
(இன்னும் தவழும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே - 25: உனக்காகத் தலைவர் காத்திருக்கிறார்!

 

 
dk7

1977-இல் எம்.ஜி.ஆர்  ஆட்சிக்கு வந்தார். அவர் ஆட்சி ஏற்ற மூன்றாண்டுகளுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டே இடம்தான் அண்ணா தி.மு.க.வுக்குக் கிடைத்தது. இதனால் மக்கள் மனம் மாறிவிட்டது என்று சொல்லி எம்.ஜி.ஆர் ஆட்சியை மத்திய அரசு 1980-ஆம் ஆண்டு கலைத்துவிட்டது. கலைத்துவிட்டது என்று சொல்வதைவிட கலைக்கச் செய்தார்கள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

கலைத்த சில நாட்களில் நாஞ்சில் மனோகரன், மொடக்குறிச்சி சுப்புலட்சுமி போன்றவர்கள் தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார்கள்.

அந்த நேரத்தில் கவிஞர் இ. முத்துராமலிங்கம் என்பவர் தி.மு.க.வில் சேர்ந்ததை "மதுரைமணி' என்ற பத்திரிகையில் "கவிஞர் முத்துலிங்கம் தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார்' என்று தவறாக எழுதியிருந்தார்கள்.

இது பற்றிச் சொல்வதற்காக நான் எம்.ஜி.ஆரைச் சந்திக்க மாம்பலம் ஆற்காடு தெருவில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்றேன். அப்போது கா. காளிமுத்து வந்திருந்தார். அவரும் இதைப் பற்றி என்னிடம் கூறினார்.

இண்டர்காமில் நாங்கள் இருவரும் வந்திருப்பதாக எம்.ஜி.ஆரிடம் அலுவலக உதவியாளர் முத்து கூறினார். என் பெயரை "முத்துலிங்கம்' என்று சொல்வதற்குப் பதில் "முத்துராமலிங்கம்' என்று சொல்லிவிட்டார். உடனே நான் ""முத்துலிங்கம் என்று சொல்லுங்கள்'' என்றேன். தவற்றைத் திருத்திக் கொண்டு ""முத்துலிங்கம்'' என்று கூறினார். உடனே என்னிடம் தொலைபேசியைக் கொடுத்து பேசுங்கள் என்றார்.

நான் தொலைபேசியை வாங்கிக் கொண்டு கோபமாகக் கூறினேன். ""நமது அலுவலகத்தில் இருப்பவர்களுக்கே முத்துலிங்கம் யார், முத்துராமலிங்கம் யார் என்று கூடத் தெரியாமலிருக்கிறார்களே. அப்படி இருக்கும்போது பத்திரிகைக்காரர்களுக்கு என்ன தெரியும்? எல்லாப் பத்திரிகைகளிலும் முத்துராமலிங்கம் தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார் என்று செய்தி போடும்போது மதுரையிலிருந்து வருகிற "மதுரைமணி' என்ற பத்திரிகையில் முத்துலிங்கம் தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார் என்று தவறாகப் போட்டிருக்கிறார்களே, என்ன செய்யலாம்?'' என்றேன்.

""நானும் பார்த்தேன். "என்ன நம்ம முத்துலிங்கம் கூடப் போய்விட்டாரே!' என்று பலபேர் என்னிடம் சொன்னார்கள். முத்துலிங்கம் போகவில்லை. "மதுரை மணி' பத்திரிகையில் பெயரைத் தப்பாகப் போட்டிருக்கிறார்கள். 
முத்துலிங்கத்தை விட்டு மறுப்பு வெளியிட வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். நீயே வந்துவிட்டாய்'' என்றார்.

""உடனே மறுப்பு எழுதி "மதுரை மணி' பத்திரிகைக்கு அனுப்பி,  "தவறுக்கு மன்னிப்புக் கேளுங்கள் இல்லையேல் வழக்குத் தொடருவேன்' என்று எழுது'' என்றார். அதன்படியே எழுதினேன். அவர்களும் தவற்றை உணர்ந்து பெட்டிச் செய்தி வெளியிட்டு தவறுக்காக வருந்துகிறோம் என்று மன்னிப்பும் கேட்டனர். இப்போது இ. முத்துராமலிங்கம் என்ற கவிஞர் உயிரோடு இல்லை. மறைந்துவிட்டார்.

இண்டர்காமில் பேசும்போது எம்.ஜி.ஆர். என்னிடம் இன்னொன்றும் சொன்னார். 
""எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் "இதுதான் பதில்' என்ற படம் தயாரிக்கிறோம். போனவாரம்தான் பிலிம் சேம்பரில் பதிவு செய்தோம். இசை எம்.எஸ்.விசுவநாதன் என்றும் பாடல்கள் கவிஞர் முத்துலிங்கம் என்றும் பதிவு செய்திருக்கிறோம். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் வரலாற்றில் ஒரே ஒரு பாடலாசிரியரை மட்டும் பிலிம் சேம்பரில் இதுவரை பதிவு செய்ததில்லை. உன்னைத்தான் செய்திருக்கிறோம். அப்படிப்பட்ட நேரத்தில் பத்திரிகையில் இந்தச் செய்தியைப் பார்த்ததால் நம்மைச் சேர்ந்த பலரும் என்னிடம் கேட்டனர்'' என்றார்.

உடனே நான் ""குஞ்சப்பன் கூட என்னிடம் இதைச் சொல்லி வருத்தப்பட்டார். அவரிடமும் பத்திரிகைச் செய்தி பற்றி விளக்கமாகக் கூறினேன்'' என்றேன். ""சரி கம்போசிங் வைக்கும்போது சொல்கிறேன். காளிமுத்துவிடம் கொடு'' என்றார். நான் காளிமுத்துவிடம் தொலைபேசியைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டேன்.
இரண்டு நாள் கழித்து சத்யா ஸ்டுடியோவில் கம்போசிங். எம்.ஜி.ஆர். காட்சியைச் சொல்லி ஒரு பல்லவி எழுதச் சொன்னார்.

உன்-உள்ளத்தில் துணிவிருந்தால் - இந்த
உலகம் உனது கையில் வரும் - கொள்கை
உறுதியோடு வாழ நினைத்தால் - இந்த
உலகம் உனக்குப் பரிசுதரும்

என்று எழுதினேன். அண்ணன் எம்.எஸ்.விசுவநாதன் உடனே இசையமைத்துப் பாடிக்காட்டினார்.
எம்.ஜி.ஆர். கேட்டுவிட்டு கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தார். ""நீங்களே ஒரு டியூன் போடுங்கள். டியூனுக்கு எழுதட்டும்'' என்று கூறினார். அவர் நான்கு டியூன் போட்டுக் காட்டினார். அதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து இதற்குப் பல்லவி எழுதென்றார்.

வண்ணப் பூஞ்சோலை
வாழ்க்கை பொன்மேடை
வளமோடு நீ வாழலாம் - புள்ளி
மயில் போல நீ ஆடலாம்
குயில் போலவே இன்ப வான்மீதிலே - நீ
மகிழ்வோடு இசை பாடலாம்

என்று எழுதிக்காட்டினேன். இன்னொன்று எழுது என்றார். எழுதினேன். இரண்டையும் பார்த்துவிட்டு ""வண்ணப் பூஞ்சோலை - பல்லவியே இருக்கட்டும். நாளை மீண்டும் சந்திப்போம், காலையில் 8.30-க்கு வந்துவிடுங்கள்'' என்று எம்.எஸ்.வி.யிடம் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
மறுநாள் எம்.ஜி.ஆர் முதல் எம்.எஸ்.வி. வரை டைரக்டர் கே.சங்கர், ப. நீலகண்டன், எம்.ஜி.ஆர் நடித்த "தாழம்பூ' படத்தை இயக்கிய என்.எஸ். ராம்தாஸ் உட்பட எல்லோரும் வந்துவிட்டார்கள். நான் 9.15 க்குத்தான் சென்றேன். 8.30க்கு என்றால் 9 மணி அல்லது ஒன்பதரைக்குத் தானே வருவார்கள் என்று நினைத்துச் சென்றேன். சொன்ன நேரத்திற்கு எம்.ஜி.ஆர். வந்துவிட்டதை அறிந்து பதறினேன்.

எம்..ஜி.ஆர். அறைக்கு வெளியே நின்ற பத்திரிகையாளர் சோலை, ""உனக்காகத் தலைவர் அரைமணி நேரமாகக் காத்திருக்கிறார். கோபமாக இருக்கிறார். சீக்கிரம் போ'' என்றார். நான் உள்ளே நுழைந்து ""மன்னிக்கணும் தலைவரே'' என்று வணங்கினேன். ""மணி என்ன ஆகுது?'' என்று கோபமாகக் கேட்டார். நான் மெளனம் காத்தேன். ""சரி உட்கார்'' என்றார். உதவியாளர் சபாபதியிடம் ""டிபன் ரெடியா?'' என்றார். ""ரெடி'' என்று சொல்லி எல்லோருக்கும் கொண்டு வந்தார்.
பிறகுதான் தெரிந்தது. நான் வந்த பிறகுதான் எல்லோரும் காலைச் சிற்றுண்டி அருந்த வேண்டும் என்று இருந்திருக்கிறார்கள் என்று.
சரணத்திற்கு டியூன் போட்டு எம்.எஸ்.வி. வாசித்துக் காட்டினார். மீண்டும் காட்சியை எம்.ஜி.ஆர் எனக்கு நினைவு படுத்தினார்.

""தற்கொலை செய்து கொள்வது தவறு. தங்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் மிருகங்கள் கூட தற்கொலை செய்து கொள்வதில்லை. ஐந்தறிவு படைத்த விலங்கினமே தற்கொலை செய்து கொள்வதில்லை எனும்போது ஆறறிவு படைத்த மனிதன் தற்கொலை செய்து கொள்வது கோழைத்தனமல்லவா? உறுதியும் தன்னம்பிக்கையும் வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு அவசியம் வேண்டும். இப்படிப்பட்ட கருத்துக்களை சரணத்தில் சொல்ல வேண்டும்.

காட்டுக்குள் ஜீப்பில் சென்ற காட்டிலாகா அதிகாரி தற்கொலை செய்து கொள்ள இருந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றி, மேடு பள்ளம் மிகுந்த காட்டுச் சாலை வழியாக அழைத்து வரும்போது அவளுக்கு அறிவுரை கூறுவதுபோல் இந்தப் பாடல் வருகிறது. ஆயினும், அவளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் அது பொருந்தும் வகையில் இருக்க வேண்டும்'' என்றார்.

நேற்றுச் சொன்னதை மீண்டும் எனக்கு நினைவுபடுத்துவது போல் அவர் கூறியதற்குக் காரணம், ப.நீலகண்டன், கே.சங்கர் போன்றவர்கள் காட்சியைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. ஏனென்றால் இவர் தான் கதை திரைக்கதை இயக்கம் எல்லாமே.

வளைவுகள் திருப்பங்கள் வழியை மாற்றலாம்
வழி சொல்வோர் வேறொரு திசையைக் காட்டலாம்
கலங்கரை விளக்காக நீமாற வேண்டும்
கரைசேர நினைப்போர்க்கு ஒளியாக வேண்டும்
-என்று ஒரு சரணம் முதலில் எழுதினேன்.

 

""நன்றாக இருக்கிறது. இதை இரண்டாவது சரணமாக வைத்துக் கொள்ளலாம். முதல் சரணத்தில் வாழ்க்கையையும், சாலையையும் இணைத்து ஏதேனும் கருத்தைச் சொல்ல வேண்டும். தோல்விகளெல்லாம் வெற்றிக்குப் படிக்கட்டுக்கள். அதுபோல் நமக்கு விழுகிற அடிகளும் விழுப்புண் ஆகலாம். இப்படிப்பட்ட கருத்துக்கள் இருக்க வேண்டும். நாளை மறுநாள் ரிக்கார்டிங். இனிமேல் கம்போசிங் தேவையில்லை. பாடல் எழுதி முடித்ததும் என்னிடம் காட்டு'' என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார். நாங்களும் சென்றோம்.

மறுநாள் இரவு பத்துமணிக்கு குஞ்சப்பன் வந்து என்னை அழைத்துக்கொண்டு ஆற்காடு தெருவிலுள்ள அலுவலகத்திற்குச் சென்றார். அங்கே என்.எஸ். ராம்தாஸ் இருந்தார். ""பாடல் முடிந்துவிட்டதா?'' என்றார். ""முடிந்தது'' என்றேன். ""சின்னவர் தொலைபேசியில் வாசித்துக் காட்டச் சொல்கிறார். நான் வாசிக்கட்டுமா நீங்கள் வாசிக்கிறீர்களா?'' என்றார். ""நீங்களே வாசியுங்கள்'' என்றேன். வாசித்தார். ""நான் சொன்னது போல் எழுதவில்லை. வேறு எழுதச் சொல்லுங்கள். எவ்வளவு நேரம் ஆனாலும் பாடலை இன்று முடிக்க வேண்டும். முத்துலிங்கத்திடம் போனைக் கொடுங்கள்'' என்று சொல்லியிருக்கிறார்.

ராம்தாசிடம் என்ன சொன்னாரோ அதைத்தான் என்னிடமும் சொன்னார். ""இரவு இரண்டு மணியானால் கூட பரவாயில்லை.  உனக்காக நான் விழித்திருக்கிறேன்'' என்றார்.

(இன்னும் தவழும்)

 

 

 

 

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - : படத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறது பாடல்!- கவிஞர் முத்துலிங்கம்

 

 

 
sk3

எம்.கே. தியாகராஜ பாகவதருடைய "புதுவாழ்வு' படத்திற்கு ஒரு நகைச்சுவைப் பாடல் எழுதுவதற்காக கலைவாணர் என்.எஸ்.கே. வீட்டிற்கு மருதகாசியையும், இசையமைப்பாளர்  ஜி. ராமநாதனையும் அழைத்துச் சென்றார்கள். அந்தப் படத்தில் என்.எஸ்.கே.யும், டி.ஏ. மதுரமும் பாடுகின்ற பாடல் அது என்பதால் என்.எஸ்.கே.யின் ஒப்புதலைப் பெறுவதற்காகக் கூட்டிச் சென்றார்கள்.
அப்போதுதான் முதல்முறையாக என்.எஸ்.கே.யின் அறிமுகம் மருதகாசிக்குக் கிடைக்
கிறது. மருதகாசியிடம் என்.எஸ்.கே. ""எனக்கு இதுவரை உடுமலையாரும், கே.பி. காமாட்சி சுந்தரமும்தான் பாடல் எழுதியிருக்கிறார்கள். ஒரே ஒரு பாடலை சந்தானகிருஷ்ண நாயுடு மட்டும் எழுதியிருக்கிறார். நீங்கள் எழுதுகின்ற பாடல் எனக்குப் பிடித்திருந்தால் வைத்துக் கொள்வேன். இல்லையென்றால் உடுமலையாரைத்தான் அழைக்க வேண்டியிருக்கும். அப்படி நடந்தால் அதற்காக நீங்கள் வருத்தப்படக்கூடாது. அதற்குச் சம்மதமானால் எழுதுங்கள்'' என்று சொல்லியிருக்கிறார்.
அண்ணன் மருதகாசி அதைச் சவாலாக எடுத்துக்கொண்டு, ""காட்சி என்ன? அதைச் சொல்லுங்கள்'' என்றிருக்கிறார்.
""ஒரு குருவிக்காரனும் குருவிக்காரியும் தனித்தனியாக வியாபாரத்திற்குச் சென்றுவிட்டு தங்கள் குடிசைக்குத் திரும்புகிறார்கள். அப்போது குருவிக்காரன், குருவிக்காரி இருந்த தோற்றத்தைப் பார்த்து சந்தேகத்தோடு சில கேள்விகள் கேட்கிறான் அவளும் பதில் சொல்லிக் கொண்டு வருகிறாள்.
முடிவில் ஒரு உண்மையைச் சொல்கிறாள். அதாவது ஒரு காலிப்பயல் தன்னைக் கையைப் பிடித்து இழுத்ததாகவும் அதனால் ஏற்பட்ட சண்டையில் கைவளையல் உடைந்ததாகவும் சொல்கிறாள். உடனே கோபத்துடன் அவனுக்குப் புத்தி புகட்டப் போவதாகச் சொல்லி அவளையும் அழைத்துக் கொண்டு வெளியே வருகிறான். இதுதான் காட்சி'' என்று என்.எஸ்.கே. விளக்கியிருக்கிறார்.
""இது மிகவும் எளிதாயிற்றே. குற்றாலக் குறவஞ்சியில் வருகிற சிங்கன் சிங்கி கதைதானே!'' என்று மருதகாசி சொல்ல ""ஓ, உங்களுக்கு இலக்கியப் பயிற்சி உண்டா?'' என்றார் என்.எஸ்.கே."தனக்கு இலக்கியப் பயிற்சியளித்தவர்
பாபநாசம் ராஜகோபாலய்யர்' என்றும் "தனது மானசீக குரு உடுமலை நாராயணகவி'யென்றும், "ராமநாடகக் கீர்த்தனை எழுதிய சீர்காழி அருணாசலக் கவிராயர், நந்தனார் சரித்திரம் எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியார், சர்வமத சமரசக் கீர்த்தனைகள் எழுதிய மாயூரம் முன்சீப் வேத நாயகம்பிள்ளை, பாபநாசம் சிவன், நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் இவர்களெல்லாம் என் வழிகாட்டிகள்' என்றும் மருதகாசி சொல்லியிருக்கிறார்.
உடனே என்.எஸ்.கே. அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ""உடுமலையார் இருக்கும் இதயத்தில் உங்களுக்குப் பாதியைக் கொடுத்துவிட்டேன். நீங்கள் நன்றாக வளருவீர்கள்'' என்று வாழ்த்தினார். மறுநாள் அந்தப் பாடலை எழுதிக்கொண்டு மருதகாசி என்.எஸ்.கே.யைச் சந்தித்துப் பாடிக் காட்டினார். அவரும் பரவசப்பட்டார்.
ஆனால் அந்தப் படத்தில் அந்தப் பாடல் இடம் பெறவில்லை. அதை என்.எஸ்.கே.யும் பாடவில்லை. 1955-இல் வெளிவந்த "முல்லைவனம்' என்ற படத்தில் அந்தப் பாடல் இடம் பெற்றது. அது இதுதான்.
ஆண் : சீனத்து ரவிக்கை மேலே
சேலம்பட்டு ஜரிகைச் சேலை
ஓரங்கிழிஞ்ச தென்னடி - என் குருவிக்காரி
உண்மையைச் சொல்லிப் போடடி
பெண் : பானையை எறக்க நானும்
பரணை மேலே ஏறும்போது
ஆணிமாட்டிக் கிழிஞ்சு போச்சுடா
என் குருவிக்காரா
அவநம்பிக்கை கொள்ள வேணாண்டா
ஆண் : சீவிச் சிணுக்கெடுத்து
சிங்காரிச்சுப் பூவும் வச்சு
கோயிலுக்குத் தானே போனே - என் குருவிக்காரி
கூந்தல் கலைஞ்ச தென்னடி
பெண் : கோயிலுக்குப் போயி நானும்
கும்பிட்டதும் என் மேலே
சாமிவந்து ஆடினதாலே - என் குருவிக்காரா
கூந்தல் கலைஞ்சு போச்சுடா -         
இப்படிப் போகும் அந்தப் பாடல்

"நீங்கள் எழுதுவது எனக்குப் பிடிக்கவில்லையென்றால் உடுமலை நாராயண கவியை வைத்துத்தான் பாடல் எழுதுவேன். அப்புறம் நீங்கள் வருத்தப்படக்கூடாது' என்று கலைவாணர், மருதகாசியிடம் சொன்னாரல்லவா? அதுபோல் எனக்கும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
"எங்க ஊரு ராசாத்தி' என்றொரு படம். ராதிகாவும், சுதாகரும் நடித்தது. கதை வசனம் இயக்கம் கலைமணி. ஒருநாள் கலைமணி என்னை அழைத்து இந்தப் படத்தில் வரக்கூடிய ஒரு காட்சியைச் சொல்லி,  ""இதற்குப் பாடல் எழுதுங்கள். ஏற்கெனவே இந்தக் காட்சிக்குக் கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். அது எங்களுக்கு மன நிறைவாக இல்லை.
அதனால், நீங்கள் எழுதுங்கள். எங்களுக்குப் பிடித்தால் உங்கள் பாடலை வைத்துக் கொள்கிறோம். இல்லையென்றால், வாலியின் பாடலைத்தான் வைக்க வேண்டியிருக்கும்'' என்றார். உடனே நான் ""நீங்கள் வாலியிடமே சொல்லி வேறு பாடலை எழுதி வாங்க வேண்டியதுதானே'' என்றேன்.
""இல்லை. அவர் பெரிய கவிஞர். "நீ கொடுக்கிற பணத்திற்கு அதுபோதும். எழுத முடியாது' என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது? அதனால் நெருங்கிய நண்பர் என்ற முறையிலே உங்களிடம் கேட்கிறேன்'' என்றார் கலைமணி.
""யார் மியூசிக்? டியூனைப் போட்டுக் காண்பியுங்கள்'' என்றேன். ""கங்கைஅமரன் மியூசிக்'' என்று சொல்லிவிட்டு அவர் போட்ட டியூனை டேப் ரிக்கார்டரில் போட்டுக் காண்பித்தார். வாலி எழுதிய பாடலையும் பார்த்தேன். பரவாயில்லை என்ற வகையில்தான் இருந்தது.
உடனே அதை சவாலாக எடுத்துக்கொண்டு மறுநாளே பாடலை எழுதி கலைமணியிடம் காட்டினேன். அவருக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. கங்கை அமரனும் பாடலைப் பார்த்து கைகுலுக்கிப் பாராட்டினார். இதற்கு மூன்று பல்லவிகள் எழுதினேன். மூன்றும் நன்றாக இருந்தது. என்றாலும் ஏதேனும் ஒரு பல்லவியைத் தானே வைக்க வேண்டும் என்று ஒரு பல்லவியைத் தேர்ந்தெடுத்து, எழுதிய நான்கு சரணங்களில் இரண்டு சரணங்களையும் தேர்ந்தெடுத்தார்கள்.
அந்தப் படத்தில் பிரபலமான பாடலே இதுதான். ஆனால் அந்தப் படம் ஓடவில்லை. நான் எழுதிய அந்தப் பாடல்தான் அந்தப் படத்தின் பேரையே இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறது. இலங்கை வானொலியில் அப்பாடல் ஒலிப்பரப்பாகாத நாளே இல்லை என்ற வகையில் ஒலிபரப்பப்பட்டது. அந்தக் காலக் காதல் ஜோடிகளுக்கும் கல்லூரி மாணாக்க மாணாக்கியருக்கும் மிகவும் பிடித்த பாடல்.

ஆண் : பொன்மானைத் தேடி - நானும்
பூவோட வந்தேன்
நான்வந்த நேரம் - புள்ளி
மான் அங்கே இல்லே - அந்த
மான்போன மாயமென்ன - ஏ ராசாத்தி
அடி - நீ சொன்ன பேச்சு நீர்மேலே போட்ட
மாக்கோலம் ஆச்சுதடி - அடி
நான் சொன்ன பாட்டு ஆத்தோரம் வீசும்
காத்தோட போச்சுதடி
இதில் இரண்டாவது சரணத்தில்
உன்னை மறக்க முடியலே
உயிரை வெறுக்க முடியலே
ஏ - ராசத்தி
நீயும் நானும் ஒண்ணாச் சேரும்
காலம் இனிமேல் வாராதோ?
பெண் : இன்னோரு ஜென்மம் - இருந்தா
அப்போது பொறப்போம்
ஒண்ணோடு ஒண்ணா - கலந்து
அன்போட இருப்போம்
அது - கூடாமப் போச்சுதுன்னா
ஏ - ராசாவே
நான் - வெண்மேகமாக விடிவெள்ளியாக
வானத்தில் பொறந்திருப்பேன்
என்னை - அடையாளம் கண்டு நீ ஓடி வந்தா
அப்போது நான் சிரிப்பேன்.

-இந்தப் பாடல் வெளிவந்த நேரத்தில் பலர் என்னிடம் உதவியாளராகச் சேரவேண்டும் என்று வந்தார்கள். அவர்களுடைய திறமையை அறிந்து என்னிடம் உதவியாளராக இருப்பதைவிட நல்ல டைரக்டர் ஒருவரிடம் உதவியாளராகச் சேருங்கள் என்று அனுப்பி வைத்தேன். அப்படிச் சேர்ந்தவர்கள் சிலர் டைரக்டராகவே ஆகிவிட்டார்கள். அவர்கள் படத்திற்கும் நான் எழுதியிருக்கிறேன்.
கலைமணி முதன்முதல் கதை வசனம் எழுதி இயக்குவதாக அறிவித்த படம் "ஆசைகள்'. சங்கர் கணேஷ் இசையில் அந்தப் படத்தின் முதல் பாடலை நான்தான் எழுதினேன்.

தெய்வம் நீயே - உந்தன்
திருக்கோயில் மணித்தீபம் நான்
-என்று தொடங்கும். அப்பாடலை வாணிஜெயராம் பாடினார். ஆனால் படம் வெளியாகவில்லை. பாடல் மட்டும் அடிக்கடி வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. அதன் பிறகு படம் வெளிவந்தால்தான் வானொலியில் பாடல் ஒலிபரப்பப்படும் என்ற விதிமுறை வகுக்கப்பட்டது. அதனால் அந்தப் பாடல் அப்புறம் ஒலிபரப்பப்படவில்லை.
கலைமணி பல படங்களுக்குக் கதை வசனம் எழுதியவர். அவர் வசனம் எழுதிய முதல் படம் பாரதிராஜா இயக்கிய "16 வயதினிலே'  படம்தான். பின்னர் "எவரெஸ்ட் பிலிம்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி, பல வெற்றிப் படங்களைத் தயாரித்தார். அதில் முதல் படம் "கோபுரங்கள் சாய்வதில்லை'. இதில், இளையராஜா இசையில்,
ஏம் புருஷன்தான்
எனக்கு மட்டும்தான்
சொந்தந்தான் என்று நான் நெனச்சேனே
அந்த நெனப்பைமட்டும் எனக்குவிட்டு
மனக்கதவைத் தான்
சாத்திவிட்டுப் போனாரே
- என்று நான் எழுதிய பாடல்தான் அந்தப் படத்திலேயே பிரபலமான பாடல். படமும் நூறுநாட்கள் ஓடியது.
பின்னர்,  "பிள்ளைநிலா',  "சிறைப்பறவை',  "முதல்வசந்தம்',  "இங்கேயும் ஒரு கங்கை' ஆகிய படங்களைத் தயாரித்தார். இவற்றில் எல்லாம் நான் பாடல் எழுதியிருக்கிறேன். இதில் "முதல் வசந்தம்' படத்தில் நான் எழுதிய பாடல் மிகவும் பிரபலமானது. இளையராஜா இசையில் நான் எழுதிய அந்தப் பாடல்,
ஆறும் அது ஆழமில்லே - அது
சேரும் கடலும் ஆழமில்லே
ஆழம் எது ஐயா - அந்தப்
பொம்பளெ மனசு தாய்யா
அடி - அம்மாடி அதன் ஆழம் பார்த்த தாரு
அடி - ஆத்தாடி அதைப் பார்த்த பேரைக் கூறு நீ
-என்று ஆரம்பமாகும். இளையராஜாவே பாடி அந்தப் பாட்டுக்குப் பிரபலம் கொடுத்தார். இதே பாட்டை அந்தப் படத்தின் கதாநாயகி
ரம்யாகிருஷ்ணன் பாடுவது போல வரும் காட்சியில் பல்லவியின் கடைசி இரண்டு வரியையும், சரணத்தையும் வேறு வார்த்தைகளைப் போட்டு எழுதினேன். அதை உமா ரமணன் பாடியிருப்பார். அதுவும் பிரபலமானது ஒரே மெட்டு என்பதால்.

(இன்னும் தவழும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே : "ஆடப்பிறந்தவளே' பாடல் வந்த கதை

 

 
dkf6

பாடலைப் பற்றிச் சொல்வதற்கு முன் மூன்று வாரங்களுக்கு முன் நடந்த என் மகளின் திருமணம் பற்றிய செய்தியைச் சொல்லிவிட்டுத் தொடர விரும்புகிறேன். ஆறாண்டுகளுக்கு முன்பு என் மகளுக்குத் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. அந்தச் செய்தியை இசைஞானி இளையராஜாவிடம் சொல்வதற்காகச் சென்றிருந்தேன்.

செய்தியைச் சொன்னவுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அவர் எழுந்து சென்று கைகழுவிவிட்டு வந்து ஒருலட்சம் ரூபாயைக் கொடுத்து திருமணத்தை சிறப்பாக நடத்துங்கள் என்றார். அதுபோல் அண்ணன் ஆர்.எம்.வீ வேண்டியவரும் காவியக் கவிஞர் அண்ணன் வாலியின் நெருங்கிய நண்பருமான தொழிலதிபர் கிருஷ்ணகுமார் இதைக் கேள்விப்பட்டு என்னை அழைத்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து ""திருமணத்தைச் சீர்பெற நடத்துங்கள். மேலும் தேவைப்பட்டால் சொல்லுங்கள்'' என்றார். 

ஆனால் அந்தத் திருமணம் நடைபெறவில்லை. இப்போதுதான் அது 
நடந்திருக்கிறது. 

அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி 
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த 
உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம் 
பருவத்தால் அன்றிப் பழா
என்ற ஒளவையார் பாடலும்
இன்னார்க்கு இன்னார் என்று
எழுதி வைத்தானே தேவன் அன்று

என்ற கண்ணதாசனின் பாடலும் தான் அப்போது நினைவுக்கு வந்தது. ஏனென்றால் அன்றைக்குப் பார்த்த மாப்பிள்ளை வேறு. இன்றைக்குப் பார்த்து மணம் முடித்திருக்கும் மாப்பிள்ளை வேறு.

திருமண வரவேற்பு அழைப்பை கவிப்பேரரசு வைரமுத்துவிடம் கொடுத்த போது. இந்தத் திருமணத்தில் என்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று சொல்லி, நான் கேட்காமலேயே ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தார்.

அதே போல் தொழில் அதிபர் கிருஷ்ணகுமாரிடம் அழைப்பைத் தந்த போது ""அந்தத் தேதியில் நான் ஊரில் இல்லை, இதை வைத்துக் கொள்ளுங்கள்'' என்று வலுக்கட்டாயமாக என் கையில் இருபத்தையாயிரம் ரூபாயைத் திணித்தார்.
இதற்கெல்லாம் கைம்மாறாக நான் என்ன செய்து விடப் போகிறேன்? 

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் 
வானகமும் ஆற்றல் அரிது 
-என்ற திருக்குறளைத்தான் நான் நினைவு கொள்ள வேண்டும்.

என் குலதெய்வ வழிபாட்டிற்காகச் சொந்த ஊருக்குச் சென்ற போது என் மகளின் முதல் திருமண அழைப்பை மதுரை ஆதீனத்திடம் தான் மதுரைக்குச் சென்று கொடுத்தேன். அவர் வாழ்த்துத் தெரிவித்ததுடன் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்னைக்கு வருகிறேன் என்றும் சொன்னார். சொன்னது போல், வரவேற்பு நிகழ்ச்சிக்காகவே மதுரையில் இருந்து சென்னை வந்தார். இரவு 7 மணி முதல் 9 மணி வரை அரங்கிலேயே அமர்ந்திருந்தார். என் மனம் நெகிழ்ந்து விட்டது. வருகை தந்த திரைப்படக் கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், இலக்கிய விற்பன்னர்கள் எல்லாரும் அவருடன் அளவளாவினர்.

தெரிந்த நண்பர்கள், இலக்கியவாதிகள் பலருக்கு நான் அழைப்பு கொடுக்கவே இல்லை. காரணம் தனி ஒருவனாக என்னால் அலைய முடியவில்லை, ஆயினும் கூட இருந்து உதவிய திரைப்பட இயக்குநர் ஜே.பி. என்ற ஜெயப்பிரகாஷ், நடிகர் அருள்மணி, மணவை பொன். மாணிக்கம், கலைமாமணி ஏர்வாடி ராதா கிருஷ்ணன், கவிஞர் ரவி சுப்பிரமணியம், தொழில் அதிபர் சுந்தர், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், நாஞ்சில் அன்பழகன் ஆகியோருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அழைப்புக் கொடுக்காமலேயே பலர் வருகை தந்து வாழ்த்தினர்.

ஒருவர் செய்த உதவிக்கு ஈடாக உன்னால் எதுவும் செய்ய முடியாது என்றால் அவர்கள் செய்த உதவியை நான்கு பேர் அறியச் சொல்லிவிடு. அதுவே நீ காட்டும் நன்றிக்கு அடையாளம் என்று நபிகள் நாயகம் போன்ற ஞானிகள் சொல்லியிருக்கிறார்கள். அந்த வகையில்தான் இதைச் சொல்கிறேன்.

2015-இல் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் சென்னை நகரம் பாதிக்கப்பட்ட போது நிவாரணப் பணிகளுக்காக இசைஞானி இளையராஜா ஒருவர் மட்டுமே பெருந்தொகைக் கொடுத்து உதவினார். இது பலருக்குத் தெரியாது. 

இப்படிப்பட்ட பண்பாளர்களால் தான் இவ்வுலகம் வாழ்கின்றது. இதைத்தான் "பண்புடையார்ப் பட்டுண்டுலகம்' என்றார் வள்ளுவர்.

என் மகள் திருமணத்தின்போது காவியக் கவிஞர் அண்ணன் வாலி இல்லையே என்ற குறையைத் தவிர வேறு எந்தக் குறையும் இல்லை. என் மகளை சிறு குழந்தையிலிருந்தே நன்கறிவார். ""எப்போது திருமணம் எப்போது திருமணம்'' என்று அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார். ஜாதகம் பொருந்தவில்லையென்று நான் சொன்ன போது ""ஜோதிடம் தனை இகழ்' என்று பாரதியாரே சொல்லியிருக்கிறார். ஆகவே ஜாதகத்தை நம்பாதே'' என்றும் சொல்வார். அப்படிப்பட்ட சிறப்புக்குரியவர் அண்ணன் வாலி.

அவர் திரைப்பாடல்கள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்த போது, இலக்கியவாதிகள் கண்ணதாசனுக்குக் கொடுத்த அங்கீகாரத்தை அவருக்குக் கொடுக்கவில்லை. "அவதார புருஷன்' என்ற காவியத்தை எழுதிய பிறகு தான் இலக்கியவாதிகளும் தமிழறிஞர்களும் அவர் பக்கம் திரும்பினர்.

கம்பன் விழாக் கவியரங்கம் போன்ற இலக்கிய விழாக்கள் அனைத்திலும் அவரை அழைக்கத் தொடங்கினர். "பாண்டவர் பூமி', "கிருஷ்ணவிஜயம்', "இராமானுஜ காவியம்' போன்ற பல காவியங்களைப் படைத்திருந்தாலும் அதில் மாஸ்டர் பீஸ் என்று சொல்லும்படி இருப்பது "அவதார புருஷன்' தான். இயைபுத் தொடையை வைத்து எழுதுவதில் அவருக்கு நிகர் எவரும் இலர்.

இராமனுடைய அவதாரத்தைச் சொல்லும்போது,
அன்று சர்ப்பத்தில் படுத்தவன்
இன்று கோசலையின் கர்ப்பத்தில் படுத்தான்
என்பார்.
காகங்கள் கொத்தியா கற்பாறை பிளக்கும்
மேகங்கள் முட்டியா மேல்வானம் வெடிக்கும்
என்று ஓரிடத்தில் எழுதியிருப்பார்.
குழந்தை ராமன் அழுகிறான். கோசலை தாலாட்டுகிறாள்... எப்படி....?
பாலகர் என்றால் பாலுக் கழுவார்
பார்த்த(து) உண்டு நாட்டினிலே
பாற்கடல் மீதே படுத்துக் கிடந்தவன்
பாலுக் கழுவதேன் வீட்டினிலே
இப்படிப் பலவற்றைச் சொல்லலாம்.

""ஒருவன் ஆளாண்மை மிக்கவனாயினும், தோளாண்மை மிக்கவனாயினும் அவனிடம் தாளாண்மை இல்லையென்றால் வாழ்க்கை வயலில் அவனால் வேளாண்மை செய்ய முடியாது'' என்று ஓரிடத்தில் உரைப்பார். இதெல்லாம் மறக்க முடியாத கருத்துகள்.
ஆனாலும் இலக்கியப் பயிற்சி இல்லாதவர்களெல்லாம் அவரை விரும்பியது அவருடைய பாடல்களுக்காகத்தான். எம்.ஜி.ஆர். தான் அவர் வளர்ச்சிக்குப் பலமாக இருந்தார். இது அனைவரும் அறிந்த உண்மை, ஆனாலும் ஒரு படத்தில் பாடல் எழுதும் போது எம்.ஜி.ஆருக்கு மனக்கசப்பு ஏற்பட்டு ""இந்தப் படத்தில் இனி நீங்கள் பாடல் எழுத வேண்டாம்'' என்று சொன்ன நிகழ்ச்சியும் நடந்திருக்கிறது.

"அரச கட்டளை' படத்தில் ஒரு காட்சி.
அந்த நாட்டுமன்னன் ஒரு சர்வாதிகாரி. அவனுடைய ஆட்சியைக் கண்டித்தும் அவனுக்கு எதிராகவும் மக்கள் மனதில் புரட்சிக் கருத்துக்களை தன் பாடல் மூலம் விதைக்கிறாள் ஒரு நாட்டியக்காரி. இதைக் கேள்விப்பட்ட சர்வாதிகாரி, ""நீ ஆடல் பாடலை நிறுத்த வேண்டும். இல்லையேல் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்'' என்று ஆணையிடுகிறான்.

 

அந்த அரசாணையை ஒரு படை வீரனிடம் கொடுத்தனுப்புகிறான். அந்த ஓலையைப் பறித்துக் கொண்ட கதாநாயகன், ""எல்லாருடைய கட்டளைக்கும் மேற்பட்ட ஒரு கட்டளை இருக்கிறது. அதுதான் இறைவன் கட்டளை. இறைவன் கட்டளைக்கு முன்னால் எந்த சர்வாதிகாரியின் கட்டளையும் நிற்காது. இதை உன் அரசனிடம் போய்ச் சொல்'' என்கிறான். இதுதான் காட்சி.

""இது நான் பாடுவது போல இருக்க வேண்டும். இங்கேயே பல்லவி எழுதுங்கள்'' என்று எம்.ஜி.ஆர் சொல்லியிருக்கிறார். வாலியும் அதற்குத் தகுந்தாற்போல் பல்லவி எழுதிக் காட்டியிருக்கிறார். அதைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர் ""என்னை இழிவுபடுத்த வேண்டும் என்று எத்தனை நாள் காத்திருந்தீர்கள் வாலி?'' என்று கோபமாகக் கேட்டிருக்கிறார்.

உடனே வாலி, உடல் வியர்த்து வெலவெலத்துப் போய், ""நீங்கள் சொன்ன காட்சிக்கு நான் சரியாகத் தானே எழுதியிருக்கிறேன். இதில் என்ன தவறு?'' என்று கேட்டிருக்கிறார்.

""காட்சிப்படி சரிதான். ஆனால் இதில் வேறொரு கருத்தும் வருகிறதே அது புரியவில்லையா உங்களுக்கு? பல்லவியை நீங்களே படியுங்கள்'' என்றார் எம்.ஜி.ஆர்.

ஆண்டவன் கட்டளை முன்னாலே - உன்
அரச கட்டளை என்னாகும் 

 என்று வாலி பல்லவியைப் படிக்கத் தொடங்கினார்.
""நிறுத்துங்கள். நம் படத்திற்குப் பெயர் என்ன?'' இது எம்.ஜி.ஆர். கேள்வி
""அரச கட்டளை'' - இது வாலியின் பதில்.
""சிவாஜி நடித்து நூறு நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படம் ஆண்டவன் கட்டளை. இது உங்களுக்குத் தெரியுமல்லவா?'' 
 ""ஆமாம். தெரியும்.''
""அப்ப, ஆண்டவன் கட்டளை முன்னாலே, உன் அரச கட்டளை என்னாகும் என்றால் சிவாஜி நடித்த "ஆண்டவன் கட்டளை' படத்திற்கு முன்னாலே நீ நடிக்கும் "அரச கட்டளை'ப் படம் நிற்க முடியுமா என்று கேட்பது போல் இல்லையா?''

""அண்ணே, நான் அப்படியெல்லாம் நினைத்துப் பார்க்கவில்லை. காட்சிக்கு இது சரியென்று நினைத்து எழுதினேன், மன்னிக்க வேண்டும். வேறு பல்லவி எழுதுகிறேன்'' என்று வாலி சொல்லியிருக்கிறார்.

""வேண்டாம். இனிமேல் இந்தப் படத்திற்கு நீங்கள் எந்தப் பாட்டும் எழுத வேண்டாம்'' என்று சொல்லிவிட்டு கவிஞர் நா.மா.முத்துக்கூத்தனை அழைத்து, காட்சியை விளக்கிப் பாடல் எழுதச் சொன்னார் எம்.ஜி.ஆர்.

உடனே முத்துக் கூத்தன்,
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை
ஆடிவா ஆடிவா ஆடிவா 
ஆடப் பிறந்தவனே ஆடிவா

என்ற பல்லவியை எழுதினார். இந்தப் பாடல் அந்தப் படத்தில் மிகவும் பிரபலமான பாடலாக இன்றும் விளங்குகிறது.

கவிஞர்களை விட எம்.ஜி.ஆர். பாடல்களில் எவ்வளவு நுட்பமாகக் கவனம் செலுத்தியிருக்கிறார் என்பதை வாசகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டிருக்கிறேன்.
(இன்னும் தவழும்)

 

http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2017/dec/27/ஆனந்தத்-தேன்காற்று-தாலாட்டுதே--33-ஆடப்பிறந்தவளே-பாடல்-வந்த-கதை-2833957--2.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.