Jump to content

ரிலாக்ஸ் -2


Recommended Posts

இதனை எழுதிடக்கூடாது என்றே நினைத்திருந்தேன். கணகளை தொடைத்துக்கொண்டு கிளம்பிய அந்த காட்சி எனக்கு மட்டுமே பிரத்யேகமானது. Its a character of emotional idiot. இருந்துவிட்டு போகிறது. எப்படி எப்படியே மனதை திசை திருப்பினாலும் அந்த முகம் வந்து வந்து போகின்றது. வழக்கமாக காலை செட்டியார் அகர சாலையில் அலுவலகம் வரும்போது ஆரம்பத்திலேயே மாணவர்கள் யாரேனும் ஏறிக்கொள்வார்கள். ரெட்டேரி சந்திப்பு வரையில் (1.5 கிமீ) அல்லது போரூர் மேம்பாலம் வரைக்கும் வருவார்கள். அவர்கள் வளசரவாக்கம் அல்லது விருகம்பாக்கத்தில் பயிலும் மாணவர்களாக இருப்பார்கள். சில சமயம் யாரேனும் கைகாட்டி ஏறிக்கொள்வார்கள். இன்று சத்யலோக் இல்ல வாசலில் ஒரு முதியவர் கை காட்டினார். உள்ளே முதியோர் இல்லமும் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியும் இருக்கு. எங்கே என்றேன் வழக்கம்போல “SRMC. Drop me in the main road" என்றார். ஒரு மனது நேரமாச்சா என்றது இன்னொரு மனது ச்ச போய் ஆஸ்பிட்டலவிடு என்றது. ரெட்டேரி சந்திப்பில் இடது பக்கம் திரும்பினால் போரூர், வலது பக்கம் திரும்பினால் ராமச்சந்திரா. பிரதான சாலையை அடையும்போது “i will get down here" என்றார். இல்லை நான் ஹாஸ்பிட்டல்ல விட்றேன் என்றேன். "Entrance is enough" என்றார். வாசலை அடைந்ததும் உள்ளே நுழைந்தேன் “dont trouble yourself please" என்றார். Out-Patient கட்டிட வாசலில் நிறுத்தச்சொன்னார். “God bless you my child. He had sent you as his messenger" என்றார். “இது கூட செய்யலைன்னா என்னங்க” என்றேன். அப்ப தான் தமிழுக்கு வந்தார் “எனக்கு 90 வயசாகுது கண்ணா. நான் நிறைய சேவை இந்த சமூகத்து செஞ்சிருக்கேன். ஆனா திரும்பி எதுவும் எதிர்பார்க்கல. தனிமையில அதை நெனச்சு பார்த்து சந்தோஷப்பட்டுப்பேன். நீங்க செஞ்சது மிகப்பெரிய சர்வீஸ்”. “இதெல்லாம் சேவை இல்லைங்க, இதெல்லாம் கடமைன்னு தான் எங்கப்பா வளர்த்திருக்கார்” என்றபோது தழுதழுத்தது அவர் கண்களில் நீரைப்பார்த்து. ஏதோ ஒரு வலி இருந்திருக்க வேண்டும் அது தனிமையா, உடல்வலியா உபாதையா தெரியவில்லை ஆனால் ஒரு சின்ன உதவி உலுக்கிவிட்டுவிடுகின்றது. “Take care. Good day" என்று கிளம்பினேன். தோளில் சில்லென்ற அந்த கைகள் பட்டு ஆசிர்வதித்தன.

 

 

 மூலம்முகநூல்

கற்றுக்கொள்ளும் பயணங்கள் : 

Rumtek Monastery - Google map ல் Just 13 kms என்று காட்டியது. பொதுவாக google என்ன சொல்கிறதோ அதனுடன் சேர்த்து ஒரு அரைமணி நேரம் extra எடுத்து கொள்வது என் வழக்கம். Gangtokகில் இருந்து என் பயணம் தொடங்கியது. 

யாருமற்ற காட்டு வழி. காடுகளுக்குள் தனியாக செல்லும்போது பயமே இல்லை. (  ஆனால் நகரங்களில் அத்தனை மனிதர்களுக்கும் மத்தியில் என்னமோ ஒரு பயம் மற்றும் அசாதாரண சூழல் ). வழி நீண்டுகொண்டே இருக்க, இடது பக்கம் சாலைகள் பிரிந்த வண்ணம். வலது பக்கம் 10000 ஆயிரம் அடி பள்ளத்தாக்கு. கொஞ்சம் கொஞ்சமாக காட்டை ரசித்தாலும் பயம் வர ஆரம்பித்தது. Google சொல்லும் rumtek monastery பக்கத்தில் இருப்பதாக தெரிந்தாலும், ஏதோ ஒன்று சரியில்லை என்று மனது சொன்னது. 

சரியாக 1 km இருக்கும்போது car ஐ நிறுத்திவிட்டு பக்கத்தில் நின்ற மனிதரிடம் கேட்டேன்.

 " Rumtek Monastery ? " ..  " 

"இது வழியில்லையே. நீங்கள் திரும்ப வேண்டும் "என்றார். Shock வந்தது. ஆனால் அவரை கடந்த பெண் சொன்னாள்.. 

" இல்லை இல்லை. 30 km ...  இங்கிருந்து செல்லலாம் " 

இருவரும் சிறிது நேரம் பேசி பின் " ஆம். செல்லலாம் " என்றனர். 

Google 1 km சொல்கிறது. மனிதர்கள் 30 சொல்கிறார்கள். யாரை நம்புவது ? 

Google தப்பு என prove ஆனது. இமயமலை தன் பக்கங்களை இன்னும் முழுமையாக technology இடம் விற்க வில்லை. அதனால் தான் ... இமயம் ஈர்க்கும் போல்.  

மனிதர்களை கேட்டு பயணிப்பதே நிலை என ஆனதோடு, GPS ம் விடைபெற்றது. இப்போது மனிதர்களே GPS Google எல்லாம். 

ஆங்காங்கே எதிர்ப்பட்ட மனிதர்களை கேட்டுக்கொண்டே பயணிக்க ஆரம்பித்தேன். 

அப்போதுதான் .. Didup Tshering Lepache வந்தார். வயதான Jackie Chan தோற்றம். இடதும் வலதுமாக கால் சாய்த்து நடக்கும் நடை. சிரித்த முகம். ஒரு அழகான cap. 

எல்லோரிடமும் கேட்பதுபோல் அவரிடமும் கேட்டேன் ..  

" RUmtek ? " 

" Raemtek ? "  என்று அவரின் இயல்பில் கேட்டுவிட்டு ஏதோ சொன்னார். மொழி புரியவில்லை. 

பின் இடது பக்கம் வந்து car ல் ஏறிக்கொண்டார். 

" போகலாம் " என்று சொன்னது சைகையில் புரிந்தது. 

யார் என்று தெரியவில்லை. Car ல் ஏறி போகச் சொல்கிறார். சரி செல்வோம் என்று பயணத்தை மீண்டும் தொடங்கினேன். 

" மதராசியா ? " 

" ஆம் ". 

"தனியாகவா ? "

" ஆம் ". 

" நான் நேபாளி. உங்களுக்கு நேபாளி தெரியுமா ? " இது இந்தியில். 

" இல்லை. தெரியாது. "

" பரவாயில்லை. பரவாயில்லை "

வழி சொல்லிக்கொண்டே வந்தார். வழியும் முடிவதாக இல்லை. பசுமையான காடும், நானும், Didup ம் மட்டுமே அங்கே. 

" Rumtek புத்தா அழகாக இருக்கும் " அவர் சிரித்து கொண்டே சொன்னார். 

" நீங்கள் எப்போது கடைசியாக பார்த்தீர்கள் ? "

" நான் போனதே இல்லை " 

இப்போது எனக்கு மீண்டும் shock. போனதே இல்லை என்கிறார். ஆனால் வழி சொல்கிறார். 

" இங்கே இடது. அடுத்தும் இடதே " 

சொல்லிக்கொண்டே இருந்த அவரை கவனித்தேன். 

" யார் இவர் ? ஏன் இவ்வளவு தூரம் வரவேண்டும் ? ஒரு வேளை அவருக்கு போகும் வழியில் எதுவும் வேலை இருக்குமோ ? " என்றெல்லாம் கேள்வி ஓடியது. 

அத்தனையையும் மெதுவாக கேட்டேன். 

பலமாக சிரித்தது மட்டுமே பதில். எனக்கு ஒன்றும் புரியவில்லை. 

இன்னும் 15 km. 10 km. 6 km. என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தார். ஆனால் எங்கும் பெயர்பலகை இல்லை. திடீரென்று GPS Google எல்லாம் work செய்தது. ஆனால் shock news ஒன்றை கொடுத்தது. Rumtek 75 km என்று சிரித்தது google. 

" ம்ம்ம்ம். இன்னும் 2 km மட்டுமே " அவர் சிரித்தார். Google 79 என்றது. ஒன்றுமே புரியவில்லை. இவரை நம்பலாமா என்ற கேள்வி ஒரு Micro second தோன்றியது. ஆனால் ... புத்தனை பார்க்க செல்லும் எனக்கு என்ன நடந்தால் என்ன என்றும் தோன்றியது. 

" இன்னும் 1 km " என்று அவர் சொல்லும்போது சாலை பணி நடந்து கொண்டிருந்தது என் பயணத்தை வழி மறித்தது. 

" இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் " என்று இறங்கியவுடன் ஒருவர் சொன்னார். வரிசையாக truck நின்றுகொண்டிருந்தது. ஆனால் car என்னுடையது மட்டுமே. 

சிரித்து கொண்டு நின்றேன். " என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் - எல்லாம் புத்தன் செயல் " என்று சிரித்துக்கொண்டே நின்றேன். ஆச்சர்யமாக 5 நிமிடத்தில் " போகலாம் " என்று குரல் வந்தது. Google இன்னும் 80 சொச்சம் km காட்டிக்கொண்டிருந்தது. 

கொஞ்ச தூரப்பயணம் ..  Rumtek என்று முதல்முறையாக பார்த்தேன். Didup சிரித்தார். 

" பயம் போய்விட்டதா ? "  

நான் பலமாக சிரித்தேன். 

" ஒரு selfie எடுக்கட்டுமா ? " என்று கேட்டேன். 

" தாராளமாக " என்று சிரித்தார். 

Monastery முன் இறங்கியவுடன், கை குலுக்கி எதிர்ப்பக்கம் சென்று நின்றார். 

" ஏன் " என்று கேட்டேன். 

" என் கிராமத்திற்கு செல்ல ஏதோ ஒரு வண்டி வரும் " என்று சிரித்தார். 

கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது. 

எனக்காகவே வந்திருக்கிறார். நான் என் இடத்தை அடைந்தவுடன் இன்னொரு வண்டிக்காக நிற்கிறார். என்ன ஒரு மனிதர் !என்ன ஒரு மனிதம் !! 

நடந்து அவரிடம் சென்று 

" எனக்காகவே வந்தீர்கள் ? " என்று கேட்டேன். 

சிரித்தார். பலமாக என்னை போலவே சிரித்தார். 

பின் அமைதியாக சொன்னார் ... 

" ஆம். உனக்காகவே வந்தேன். என்னமோ தெரியவில்லை...  வர தோன்றியது " என்று கண்களை பார்த்து சொன்னார். 

சிலிர்த்து நின்றேன். கொஞ்சம் மகிழ் நீர் கண்களில். 

ஆம். 

நான் என் புத்தனை பார்க்கிறேன். 

நீங்களும் பார்க்கிறீர்களா ?

 

முகநூல்

Link to comment
Share on other sites

நேஷனல் ஜியாக்ரஃபில வந்த ஒரு நிகழ்ச்சில... ஒரு வெற்றிகரமான நிர்வாகிக்கு இதில் எது தேவை?? 

1) Power - அதிகாரம், 
2) க்ரியேட்டிவிட்டி - க்ரியேட்டிவிட்டி (டமில்'ல தெரில)
3) Intelligence - புத்திசாலித்தனம்.

அப்படீன்னு கேள்வி கேட்டு அதுக்கு சில எக்சர்சைஸ் (உடற்பயிற்சி இல்லீங்கோ) மூலமா பதில் கண்டு பிடிக்கிற ஒரு நிகழ்ச்சி... செமயா இருந்தது.. 

எப்பவும் பிரச்சனைய எதிர் நோக்கி இருக்க வேண்டிய ஒரு நிர்வாகி, பல்வேறு வகையான உத்திகள் மூலமா அதுக்கு தீர்வு கண்டுபிடிக்க வேண்டியிருக்கும், அதனால வெற்றிகரமான நிர்வாகிக்கு அவசிய தேவை  க்ரியேட்டிவிட்டின்னு சொல்லிட்டு,  ஒரு பேப்பர் க்ளிப்பை காமிச்சு 30 வினாடிகளில்அதை எதெதுக்கெல்லாம் பயன்படுத்த முடியும்ன்னு லிஸ்ட் போட சொன்னாங்க....

நான் போட்டதுல 5 வரைக்கும் வந்தது.. (காது குடைய, டைக்கு சேஃப்ட்டி பின்னா குத்த, நகத்துல அழுக்கெடுக்க, செல் போன் க்ளிப் மற்றும் பொண்ணுங்க தலயில ரோஜா பூ வச்சு விட.. (ஹிஹி) 

டீவில பெரிய கண்ணாடி போட்டிருந்த பையன் 7 போட்டு என்னை விட சிறந்த நிர்வாகி ஆகிட்டான்... :( . இனிமே காபி குடிக்கும் காலை நேரத்துல பாட்டு பார்க்கிறேன்னு நினைச்சுகிட்டே ம்யூசிக் சேனலில் விளம்பரம் பாக்குறதை விட்டுட்டு இப்படி நிகழ்சிகளை பாக்கலாம்ன்னு இருக்கேன்.

மீன் வொய்ல்... நீங்க பேப்பர் க்ளிப்புக்கு வேறு ஏதாவது உபயோகம் சொல்ல முடியுமான்னு முயற்சி செய்யுங்க. ஞாபகம் இருக்கட்டும் 30 வினாடிகள். 5'ஐ தாண்டினா நான் உனக்கு அடிமை... :P

Doctor sarv- Facebook 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

--- போகும் வழியில் இறக்கி விடுவதற்கு நல்ல மனசு இருந்தால் போதும்....!

--- அவ்வளவு தூரம் கூடவே வந்து வழி சொல்ல தாராளமான மனசும் நேரமும் இருக்க வேண்டும்.....!

--- நான் புத்திசாலி என்று காட்டிக்கொள்ள விரும்பவில்லை. (இது தன்னடக்கம். டூப் என்று நீங்கள் நினைத்தால் ....ஓ கே).....!  tw_blush:

Link to comment
Share on other sites

15 hours ago, suvy said:

--- போகும் வழியில் இறக்கி விடுவதற்கு நல்ல மனசு இருந்தால் போதும்....!

--- அவ்வளவு தூரம் கூடவே வந்து வழி சொல்ல தாராளமான மனசும் நேரமும் இருக்க வேண்டும்.....!

--- நான் புத்திசாலி என்று காட்டிக்கொள்ள விரும்பவில்லை. (இது தன்னடக்கம். டூப் என்று நீங்கள் நினைத்தால் ....ஓ கே).....!  tw_blush:

நீங்க புத்திசாலி தான் நம்புகிறன் சுவி அண்ணா :) வருகைக்கு நன்றி 

Good reads 

அகம் புறம் 
 
வண்ணதாசன்

நா ன் பத்து நாட்களாக ஒன்றுமே செய்யவில்லை. புரியவில்லையா? அர்ச்சனா வந்து பத்து நாட்கள் ஆகிவிட்டன.

ஏழு வயதுக் குழந்தையிடம் பத்து நாட்கள் என்ன, முழு ஆயுளைக்கூட ஒப்படைத்துவிடலாம் என்பது உங்களுக்கும் தெரியும். அயலூரிலிருந்து தாத்தா - பாட்டியின் ஊருக்கு வருகிற பேரன்-பேத்திகளுக்காகத்தான் கால் பரீட்சை, அரைப் பரீட்சை, முழுப் பரீட்சை விடுமுறையெல்லாம் வருகிறது.

அந்தந்தப் பருவங்களில், இந்த வீட்டின் சில இடங்கள் ‘அர்ச்சனாவுக்கு எப்போ லீவு?’ என்று ஒவ்வொருத்தரிடமும் கேட்கும். என்னிடம் கேட்பதையே அவளுடைய அம்மாச்சியிடமும் கேட்கும். ஆனால், இரண்டு பேரின் பதில்களில் நிழல் அசைந்து, வெயில் விழுந்து, மறுபடி நிழல் அசைகிற மாதிரி, யாரிடமிருந்து பிரியமான வார்த்தைகள் வருகின்றன என்று ரகசியமாகச் சரிபார்க்கும்.

நந்தியாவட்டைச் செடிக்குப் பக்கத்திலுள்ள குட்டித் திண்ணையின் விசாரிப்பு முதலில். அர்ச்சனா தனக்குத்தானே அல்லது நந்தியாவட்டைப் பூக்களோடு அல்லது வளையல் பூச்சியோடு பேசுவது அந்தக் கறுப்புத் திண்ணையில் இருந்து.

அப்புறம் இந்த மச்சுப் படிகள். பெரியதோ சிறியதோ என்றில்லாமல் ஒவ்வொரு அறையிலும் போதுமான இடங்கள் இருக்க, அவள் திரும்பத் திரும்பத் தேர்ந்தெடுப்பது இந்த

மச்சுப்படிகளைத்தான். அதிலும் இந்த மூன்றாம், நான்காம், ஐந்தாம் படிகளில் என்ன இருக்குமோ தெரியவில்லை. ஆனால், அவள் மாத்திரம் தனியாக விளையாடுவதற்கு மட்டுமே இந்தப் படிகள். சேக்காளிக் குழந்தைகளுடன் என்றால், அதே மச்சுப்படிகளுக்குக் கீழே உள்ள இடைவெளி, கதவுகளின் பின்புறம், பீரோவுக்குப் பக்கவாட்டுச் சந்து மற்றும் கட்டிலடிகளே! அதில் மாற்றமில்லை.

ஊருக்குப் போன பிறகு, பீரோவின் இடை வெளியில் அல்லது அதிகம் திறந்து மூட அவசியமற்ற ஒரு கதவின் பின்னாலிருந்து நமக்குக் கிடைக்கிற பொம்மைகள், அதற்குப் பின்பு சில நாட்களாவது நம்முடன் உயிரோடு இருக்கும்; அல்லது, நம்மை உயிரோடு வைத்திருக்கும்.

பொன்னிறமான நீண்ட கூந்தலுள்ள, கிட்டத்தட்ட முழு உடைகளையும் இழந்துவிட்ட ஒரு சிவந்த பொம்மையை, ஒரு குட்டி மரப்பாச்சியை, ஒரு கால் உடைந்த சிறு சுடுமண் குதிரையை (அதன் காலை ஒடித்தது யாராக இருக்கும் என்பது தெரியாதா!) எல்லாம் கண்டுபிடித்து என் பக்கத்தில் போட்டுத் தூங்கும்போது, அவை ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ளத் துவங்கிவிடும். முக்கியமாக கால் ஒடிந்த சுடுமண் குதிரையிடம் மரப்பாச்சி செய்கிற உரையாடல்கள் முடிவற்றவை. பொம்மைகளை நான் வைத் திருக்க, பொம்மை சார்ந்த பேச்சுக்கள் அர்ச்சனாவின் அம்மாச்சியிடமிருந்து வரும்.

மொழியை, பேச்சை, காலமும் வாழ்க்கையும் கூழாங் கற்களைப் போல உருட்டிக் கொண்டு இருக்க, உறவுகள்தான் அதனை ஜீவனுடன் வைத் திருக்கின்றன. தலைமுறைகளைத் தாண்டித் தாண்டி, எந்தச் சேதாரமும் இன்றி ஒரு பெருமரம் போலப் பூத்துக் குலுங்குகிற பேச்சை, பாட்டியின் நரை முடிக்கும் பேத்தியின் ஓட்டைப் பல்லுக்கும் இடையிலுள்ள ஐம்பது வருடங்களின் இடை வெளி மீதான மைல்கற்களில் ஒரு மீன்கொத்தி போல அமர்ந் தால்தான் கேட்க முடியும்.

கிளிக்குஞ்சு, வாகை மரப் பொந்திடமும்... ஆலம்பழத்தின் விதை இனிப்பு நக்கி ஊர்கிற எறும்புகள், தொங்கும் விழுது களிடமும்... தண்டவாளங்கள், வேப்பம்பூக்களிடமும் பேசுவதும் இவர்கள் பேசுவதும் வேறுவேறு அல்ல. கல் மண்டபத்தில் தொங்கவிட்ட கால் நகங்களின் நதி மூழ்கலுக்குள் மீன் குஞ்சுகள் மொய்ப்பது இந்தப் பேச்சுக் களைக் கடிப்பதற்காக மட்டுமே!

குட்டித் திண்ணையும் மச்சுப் படிகளையும் தவிர, வருபவை வளையல் பூச்சிகள். அவை என்ன... வருடம் பூராவுமா ஊர்ந்துகொண்டு இருக்கும்! மிஞ்சிப்போனால் மழைக் காலத்திலிருந்து பனிக் காலம் வரை! ஆனால், அர்ச்சனா வருகிற தகவலை அறிந்தது போல ஒன்றோ, இரண்டோ வாசல் கோலத்தின் மேல் துவங்குவது எப்படி?!

ஆட்டோவுடன் விக்டர் வந்தால் அவளைப் பற்றி ஒரு கேள்வி. கூரியர் முத்துக்குமார் எத்தனை தடவை அர்ச்சனா வுடன் பேசியிருப்பார்! ‘என்ன பெங்களூரு பேத்தி வரலையா?’ என்று ஒரு சிரிக்கிற கேள்வி அவரிடமிருந்து எப்படி வரு கிறது? அவல் விற்கிற ராமையன் பட்டிக்காரிக்கு நார்ப்பெட்டியை யும் அந்தக் காலத்துப் பக்காவை யும் இன்னும் விட முடியாதது போல, எப்போதோ பார்த்திருக் கிற இதுபோன்ற சிறுபிள்ளை களையும் விட முடியாதோ? ‘பேத்தியா வந்திருக்காளா?’ என்று சுருக்குப்பைக்குள் காசைப் போட்டபடி கேட்கிற அளவுக்கு இந்த ஏழு வயதுப் பிள்ளைகளிடம் இருக்கிற மாய இசைப்பு எது?

‘பெயர் தெரியாமல் ஒரு பறவை’ என்று சிறுகதை எழுதுவது முன்பு சுலபமாக இருந்தது. இப்போது இல்லை. கூடியமட்டுக்கும், எதிர்ப்படுகிற எல்லாப் பறவைகளின் பெயரையும் தெரிந்துவைத்திருக்க வேண்டிய தாகிவிட்டது. சிட்டுக்குருவிகள், மைனாக்கள், ஏழு சகோதரிக் குருவிகள், புறா, செம்போத்து, தேன்சிட்டு, மயில், கிளி, வால்குருவி, மீன் கொத்தி, மரங்கொத்தி இவற்றின் இறகு நிறங்கள், எங்கே கூடு கட்டும், முட்டை எவ்வளவு அளவில், என்ன நிறத்தில் இருக்கும்... பூச்சி, புழு சாப்பிடும் என்றால், என்ன பூச்சி... என்ன புழு?

இவ்வளவையும் தெரிந்திருந்தால்தான் ஓரளவுக்காவது இவர்களின் கேள்விக்குப் பதில் சொல்லிச் சமாளிக்க முடியும். அப்படி யும், எங்கள் வீட்டுக்குள் வந்து கூடு கட்டிக் குஞ்சு பொரித்த ஒரு பறவையின் பெயரைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. ‘காட்டுப் புறா’ என்று சொல்லி வைத்தேன். ‘புறாவும் காட்டில்தானே இருக்கும்’ என்று புறாவுக்கு வேடன் அம்பு விட்ட கதை எனக்குத் திருப்பிச் சொல்லப்பட்டது. அந்தக் கதையையும் நாம் தான் சொல்லியிருப்போம். நம் கதைகளிலிருந்து நாம் தப்பிக்க முடியாத இன்னொரு கணம் இது.

ஏன் இந்தப் பட்டியலில் காக்கை விட்டுப் போயிற்று? எந்த இடத்தில் உதிர்ந்துகிடந்தாலும் மூன்று, நான்கு வயதிலிருந்து தவறாமல் அர்ச்சனா கையில்எடுத்து வந்து பத்திரப் படுத்துவது காக்கைச் சிறகைத்தான். ஊருக்குப் போன பிறகு ஒரு தொலைபேச்சில், ‘தாத்தா பத்திரமாக வெச்சிருக்கீங்களா பென்சில் பாக்ஸையும் காக்காச் சிறகையும்?’ என்று கேட்கிற அளவுக்கு அது அப்படியென்ன மயில் பீலியைவிட அழகு!

ஒரு வெறும் சாம்பல் இறகு, ஒற்றையாகப் பறந்து பறந்து போய் ஒரு குழந்தையின் கனவில் செருகுவது அருமையானதில்லையா! ஒரு கிளி இறகை, மயில் இறகை, மீன் கொத்தி இறகையெல்லாம் பார்ப்பதற்கு முந்திய ஒரு பறத்தலின் வாசலை இந்தக் காக்கைச் சிறகுகள் எவ்வளவு அழகான எளிமையுடன் திறந்துவைத்து விடுகின்றன.

நல்லவேளை, இன்னும் வீடு கட்டுகிறார்கள். அப்படி வீடு கட்டுவதற்கான மணலை மனையிலேயே குவித்துவைக்கிறார்கள். குழந்தைகளை விளையாடவும் பெண்களை மணலில் உட்கார்ந்து பேசவும் அனுமதிக்கிற மனம் இன்னும் இருக்கிறது.

அது மணலும், அதன் ஈரமும், அந்த ஈரம் கசிகிற நதியின் காரியமாகக்கூட இருக்கலாம். ஆற்றங்கரைகளில், கரை மணலில் யாரும் யாரையும் கோபித்துக் கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது. குதிரை வண்டிக் காரர்கள் குளிப்பாட்டக் கூட்டி வந்த குதிரைகள் போல மனம் மணலில் திரும்பத் திரும்பப் புரள விரும்புகிறது. ஆற்றுப்படுகை யில் அவ்வப்போது கிடைக்கிற ஐம்பொன் சிலைகளாக ஆற்று மணலின் உள்ளேயெல்லாம் தோண்டும்போது தட்டுப்படுவ தற்காக இந்த மனிதர்களின் ஈரம் புதைந்துகிடக்கிறது.

ஒரு நத்தைக் கூடு, இரண்டு மூன்று சிப்பிகள் கிடைத்தால் போதும்... சிப்பியையும் நத்தைக் கூடுகளையும்விட அந்த ஐம் பொன் சிலைகளுக்குக் கூடுதல் மதிப்பில்லை. உறங்கும்போது உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ள மணல் சிப்பிகளை விடவும் அரும்பொருட்களை யாரும் அர்ச்சனாவுக்குத் தந்துவிட முடியாது. அன்றைய கனவில் ஓர் ஆறு பெருகியிருக்கும். அவள் படுக்கையை நனைத்து விட்டதாக நீங்கள் புகார் சொல்கிறீர்கள். வாய் கொப்பளித் துப் பற்பசை தேய்க்கும் வரை யாவது நீங்கள் ஏன் பொறுத்திருக் கக்கூடாது? நீங்களும் உங்கள் புகார்களும்!

பொம்மைகளைத்தான் எல்லோரும் வாங்கிக் கொடுப்பார்களே! நான் நீர்வண்ணப் பெட்டியையும், மிகத் தரமான நான்கு தூரிகைகளையும் வாங்கிக் கொடுத்தேன். சரியான விரல்களிடம் மிகச் சரியான உபகரணங்களையும், மிகச் சரியான ஆயுதங்களையும் ஒப்படைப்பது முக்கியமானது. நல்ல தூரிகை கொண்டு, நல்ல வண்ணங்கள், நல்ல விரல்களால் குழைக்கப்படும்போது, நிறங்கள் அதனதன் இறுக்கங்களை விட்டுப் புத்துயிர்த்துக் காகிதங்களில் இயங்கத் தொடங்கிவிடு கின்றன.

அதனால்தான் நிஜ மயிலைவிடவும் அர்ச்சனா வரைபவை அழகாகிவிடுகின்றன. முட்காட்டில் திரிகிறதைக் காட்டிலும் அழகான ஒரு மயில் எங்கள் வீட்டு மேஜை இழுப்பறையில் அகவல் அற்று ஆடிக்கொண்டு இருக்கிறது. சில சமயங்களில் இப்படி நான் எழுதிக்கொண்டு இருக்கையில், அது இழுப் பறையை வீட்டு வெளியேறி வலது பக்கத்து ஜன்னல் வழியாகத் தரையில் விழும் வெயிலில் கழுத்து அசைத்து அசைந்து அந்த வெயிலையே கொத்திக்கொண்டு இருக் கிறது.

அவளுடைய ஓவிய உலகம் இரண்டு வகையானது. ஒன்று பறவைகளால் ஆனது. மயிலும் கிளியும் தவிர, கூட்டமாக உயரப் பறக்கும் பறவைகளால் நிரம்பியது அவளுடைய வரை காகிதங்கள். இன்னொன்றில் சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், சீறிச் செல்கிற ராக்கெட்டுகளும் நிரம்பிய, பகல் இரவு பேதமற்ற வானத்தைப் பார்க்க முடியும். பிறைச் சந்திரன், முழு நிலா, சூரியன், நட்சத்திரங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் தெரிகிற வானம் எவ்வளவு அற்புதமானதோ, அவ்வளவு அற்புதமானது அவளுடைய வானவியல்! போன தடவை அவள் வந்த சமயம் ஒன்றும் மழைக் காலமில்லை. ஆனாலும், மழை பெய்தது.

கோடை மழைக்கே ஓர் உற்சாகமான பெய்தலும் சடசடப்பும் இருக்கும். இடைவெளியற்ற வெயிலுக்கு மத்தியில் வருவதால், நமக்கும் மழைக்கும் எடுத்த எடுப்பிலேயே ஒரு சிநேகிதம் வந்துவிடும். விடாமல் தொடர்ந்து பெய்கிற மழைக் காலத்தில் ஈரத்தின் மீது உண்டாகிவிடுகிற ஒரு சலிப்பு கோடை மழையில் இருக்காது. நனைய வேண்டும் என்று தோன்றும்.

அர்ச்சனாவும் நானும் நனைந் தோம். அது வெறும் நனைதல் அல்ல. அது மழை நடனம். மழையில் மழையுடன் ஆடுவது. கைகளை அகல விரித்து வானை நோக்கி உயர்த்திக் கால் மாற்றி ஆடுகிற அந்த நடனத்துக்கு ஓர் ஆதிவாசியின் அசைவுகள் வந்துவிடுகின்றன. ஒரு வனத்தின் நூற்றாண்டுக் கிளைகள் காற்றிலும் மழையிலும் இப்படித்தான் அசைய முடியும். அப்படி நாம் நனைந்து ஆடுகையில் இடும் அர்த்தமே அற்ற உரத்த சப்தங்கள்கூட, பாறையில் அறைந்து சிதறுகிற மழையின் குரல்வளையிலிருந்து நாம் பெற்றவையே! நீர்த்தாரையை உள்ளங்கையில் ஏந்துவதற்கும் மழைதான் சொல்லிக்கொடுத்திருக்கும்.

மழை மட்டும் அல்ல... ஆறும் கல் மண்டபங்களும்கூட அர்ச்சனாவின் விருப்பங்களின் பட்டியலில் இருப்பவையே! எந்தக் குழந்தைக்குமே பிடித்திருக்கிற அளவுக்கு ஆற்றிலும் கல் மண்டபங்களிலும், கல்மண்டபங்களின் மேற்கூரையில் நிற்கிற வெள்ளாட்டுக் குட்டிகளிடமும் ஏதோ இருக்கிறது.

‘தண்ணீர் ஏன் பச்சையா இருக்கு?’

‘கையில அள்ளினா எப்படி அது வெள்ளை ஆயிடுது?’

‘தண்ணீர் என்ன கலர்?’

இதையே மாற்றி மாற்றி வெவ்வேறு கேள்விகளாகக் கேட்டுக்கொண்டு, ஒவ்வொரு முறையும் கைகளில் தண்ணீரை ஆற்றிலிருந்து அள்ளி மறுபடி ஆற்றிலேயே விட்டுக்கொண்டு இருந்தது. எதனிடமிருந்து பெற்றோமோ அதனிடமே திருப்பிக் கொடுத்துவிடுவது என்பது, அந்தக் கைகளிலிருந்து சொட்டுகிற நீர்த் துளிகளில் எழுதிக் கோக்கப்பட்டிருந்தது.

‘தண்ணீர் என்ன நிறம்?’ - இந்த அடிப்படையான கேள்விக்கு என்னிடம் எந்தப் பதிலுமில்லை. யாரும் விஞ்ஞானபூர்வமான ஒரு விடையை புத்திசாலியின் அவசரத்தோடு சொல்லிவிடக் கூடாதே என்ற பதற்றம் எனக்கு.

நல்லவேளை! அப்படி யாரும் அருகில் இல்லை. படித்துறையில் இரண்டு மூன்று பெண்கள் துவைத்துக்கொண்டு இருந்தார்கள். ஒரு கறுப்பு வெள்ளாட்டுக் குட்டி படித்துறைக் கற்பாளங்களுக்கு இடையே முளைத்திருந்த புல்லைக் கடித்து நிற்பதன் நிழல் மடங்கி அடுத்த படியில் விழுந்தது. ஒரு ஷாம்பு பாக்கெட் பறக்க உத்தேசித்துக் காற்றுக்குப் புரண்டது.

இது போன்று பச்சைக் குழந்தைகள் கேட்கிற கேள்விகளுக்குத்தான் பழைய தலைமுறையில் நம் தாத்தாக்களும் பாட்டிகளும் மிக அபூர்வம் நிறைந்த கதைகளைப் பதிலாகிச் சொல்லி வந்தார்கள். ஒரு கதைசொல்லியின் விநோதக் கற்பனைகளும் சாகசங்களும் நிறைந்த அந்தப் பதில்கள் இந்தக் குழந்தைகளின் விலாப்புறங்களில் முளைக்கச் செய்கிற சிறகுகளுடன்தான், அதற்குப் பிந்திய வெகு காலத்துக்கு அவர்கள் பறந்துகொண்டே இருப்பார்கள்.

நாம் மிகுதியும் விவாதிக்கிற யதார்த்தத்துக்கும் மந்திர யதார்த்தத்துக்கும் இடையில் உள்ள அதிசய வெளியில் தும்பியைப் போன்ற அவர்களுடய சிறகுகள் அசையும்.

அர்ச்சனாவுக்கு அந்த மாயச் சிறகுகள் வாய்த்துவிட்டன என்பதை என்னால் உணரமுடிந்தது, அவள் ஊருக்குப் புறப்பட்ட சாயங்காலப் பொழுதில்தான்.

பல் மருத்துவரின் ஆலோசனையின் பேரில், அவளுடைய கீழ் வரிசைப் பால் பற்கள் நான்கை எடுத்திருந்தோம். அவள் அந்தப் பற்களை ஒரு குப்பியில் கவனமாகச் சேகரித்துக்கொண்டாள். வீட்டுக்கு வருகிற எல்லோரிடமும் அதைத் திறந்து காட்டுவதில் அவளுக்கு அலுப்பே இல்லை.

யாருமே அற்ற ஒரு தனிமையில், படுக்கைக்குப் போவதற்கு முன் அந்தக் குப்பியைத் திறந்து, பற்களையே அர்ச்சனா பார்த்துக்கொண்டு இருந்தது ஒரு தியானம் போலத் தோன்றியது. தன் புதிய விளையாட்டுத் தோழி சான்ட்ராவுடன் மானசீகமாக தன் பற்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்த தகவல்கள், ஒரு கவிதையின் புன்னகையை ஒத்திருந்தன.

பொம்மைகள், நீர்வண்ணப் பெட்டி, ஐஸ்வர்யா அக்கா விட்டுவிட்டுப் போயிருந்த ஹேர் க்ளிப், தான் வரைந்த ஓவியங்கள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டுச்செல்வதில் அவளுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால், தன் பற்களை இட்டுவைத்திருந்த குப்பியை ஞாபகமாக எடுத்துக்கொண்டாள்.

அவற்றைத் தூர எறிந்துவிட அவளுக்குச் சம்மதம் கிடையாது. எங்கள் காலம் எனில், சாணி உருண்டைக்குள் பொதிந்து வீசின பற்களைக் கூரைகள் என்றைக்கோ பெற்றுக்கொண்டு இருந்திருக்கும்.

‘அதைக் கொண்டுபோய் என்ன செய்யப் போகிறாய் அர்ச்சனா?’ - கேட்டேன்.

‘டூத் ஃபெய்ரிகிட்டே கொடுக்கணும்!’ - உடனடியாகப் பதில் வந்தது.

டூத் ஃபெய்ரி... பற்களின் தேவதை.

இதுவரைக்கும் கேள்விப்பட்டிராத அந்த தேவதைக்கும் சிறகுகள் இருக்கும், அர்ச்சனாவுக்கு முளைத்திருப்பதைப் போலவே!

உங்களுக்குத் தெரிகிறதா, அந்த தேவதைச் சிறகுகள்?
 
வண்ணதாசன் 

 

Link to comment
Share on other sites

ஒரு முற்பகல் வேலையில், அலுவலம் அருகே உள்ள, டீ மற்றும் சிற்றுண்டி விற்கும் கடை ஒன்றுக்கு  அருகே சென்றேன்.. நுழைவாயிலில் ஒரு முதியவர், பேண்ட் ஷர்ட் அணிந்து ஆனால் சற்றே அழுக்குடன் நின்று கொண்டிருந்தார்... வாழ்ந்து கெட்டவரின் அடையாளங்கள் தெரிந்தன.. . கடை ஓனர் அவரை ஏதோ திட்டி கொண்டிருந்தார்.. சாப்பாடு கேட்டிருக்கிறார் மறுக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டேன்.. நான் வர, அந்த முதியவர் என்னை பார்த்து ஏதோ சொல்ல நினைத்து நகர்ந்தார்.. எப்போதும் பணம் காசு கேட்கும் நல்ல உடல் நலத்துடன் இருப்பவர்களுக்கே,"காசெல்லாம் தர முடியாது, உழைச்சிக்கோ.. சாப்பாடு வேணுமா, வாங்கி தர்றேன் " என்று சொல்லி நான் வாங்கி குடுப்பது வழக்கம்.. சிலர் வாங்கி கொள்வார்கள், சிலர் மறுப்பார்கள்... இந்த முதியவரோ சாப்பாடு தான் கேட்டிருந்தார்.. அதை கடைக்காரர் மறுத்து விட்டார்.. அதற்கு திட்டி இருக்க வேண்டாம்... வாழ்ந்து கெட்டவர்கள் வலி உலகில் மிக பெரியது..
பெரியவரை பார்த்து..
"ஐயா.. நில்லுங்க... சாப்பாடு வாங்கி தரட்டுமா..." என்றேன்
சோர்ந்து வெறுத்து போன முகத்தில் மெலிதான புன்னகையுடன் தலையாட்டினார்.
கடை காரரிடம்
"ஒரு டீ முதலில் இந்த பெரியவருக்கு குடுங்க" என்றேன்
டீ மாஸ்டரிடம் சொல்லப்பட்டது 
"சாப்பிட என்ன இருக்கு... சாப்பாடு ."
" சாப்பாடு இல்ல சார்... லேட்டாகும்? "
" சாப்பாடா?"
"இல்ல சார்.. தக்காளி சாதம், வெஜிடபிள் பிரியாணி, முட்டை இப்படி தான்"
"எவ்வளவு நேரமாகும்?"
" அரை மணி நேரம் ஆகும் "
திரும்பி பெரியவரை பார்த்து
"ஐயா.. அரை மணி நேரம் ஆகுமாம்.. சாப்பாடு தர சொல்றேன்.. இருந்து வாங்கிட்டு போறீங்களா? "
மறுபடியும் தலை அசைத்தார்
" பிரியாணி காரம் இல்லாம இருக்குமா? "
" ம்ம்ம் "
" ஒரு பிரியாணி, ரெண்டு முட்டை... அவருக்கு குடுத்துருங்க.." என்று நூறு ரூபாயை நீட்டினேன்
சில்லறை கிடைத்தது.
பெரியவரிடம்," ஐயா வாங்கிட்டு போங்க.. இப்படி உட்காருங்க " என்று சொல்லி முடிக்கும் போது ஒன்று தோன்றியது.. பசியில் இன்னும் இவர் அரை மணி மேல இருக்க வேண்டுமே என்று..
மறுபடி கடைக்காரரிடம்..
" இப்ப உடனே சாப்பிட என்ன இருக்கு.. அவருக்கு அது வரை க்கும் பசிக்கு" என்று சொல்கையில் சூடாக வந்த வடை கண்ணில் பட்டது
" சரி அந்த வடை ஒரு இரண்டு குடுங்க" என்று வடையை வாங்கி பெரியவர் க்கு குடுத்து " இத சாப்பிடுங்க அது வரைக்கும்" என்று சொல்லிட்டு,
இந்தப்பக்கம் " வடை எவ்வளவு என்று கேட்டேன்? "
" வடை க்கு காசு வேணாம் சார்... "
நான் புதிராக அவரை பார்க்க, தலையாட்டி விட்டு தலையை குணிந்து கொண்டார்.

ஒரு ரூபாய் கூட தராமல் வசை சொல்லி திட்டி அணுப்பிய பெரியவர் க்கு, அதே மனது இரண்டு நிமிடத்தில் இருபது ரூபாய் மதிப்புள்ள இரண்டு வடை தருகிறது 

இந்த மாற்றம் நிகழ காரணம்.. நானோ.. முதியவரின் பசியோ, வேறெந்த காரணமோ அல்ல... அறம்..
வைரஸ், பேக்டிரியா விட வேகமாக தொற்றி க்கொள்ள கூடியது அறம்... வெகு காலமாக நான் உணர்ந்த விசயம் இது.. சிறியதோ பெரியதோ, நல் உதவி செய்ய நாம துணிந்தால், உடன் சேர பல கைகள் கிடைக்கும்.
எங்கள் மாற்றம் அறக்கட்டளை யே அப்படி தான் இயங்குகிறது... முதல் படி நாங்கள் வைத்தோம்... ஏழை அடிதட்டு நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு தொழில் கல்வி இலவசமாக தருவது எங்கள் நோக்கு, பணம் பரிவர்த்தனை ஏதும் இல்லாமல் ... முதல் படி எங்களுடையது... அடுத்தடுத்த படிகளில் எங்களுடன் சேர்ந்தவர்கள் எத்தனையோ பேர், முகம் தெரிந்து முகம் தெரியாமல்... ஐந்து ஆண்டுகளில் 400 மாணவர்கள் அப்படியாக படிக்கிறார்கள்... மாணவ செல்வங்கள் அனைவரையும் அவர்களின் குடும்பத்தையும் மேலே உயர்த்தும் நோக்கில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு க்கு ட்ரைனிங் வரை எங்களுக்காக எதையும் எதிர்பார்க்காமல் உதவும் நல்லுள்ளங்கள் ஏராளம் இங்கே.
உலகம் எவ்வளவு அழகானது என்பது, நாம் போட்டிருக்கும் கண்ணாடியை பொருத்தது..

இனி அந்த கடைக்காரர் பசிக்கு வரும் ஏழை முதியவர் களுக்கு ஏதாவது கண்டிப்பாக தருவார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

அறம் செய்து பழகுவோம்.

-இரா. இராஜகோபாலன் 

#மகிழ்வித்து_மகிழ்
#மாற்றம்
#MaatramFoundation

Link to comment
Share on other sites

அது 1996ஆம் ஆண்டு. தீபாவளிக்குச் சில நாள்கள் இருந்தன. அந்தத் தீபாவளிக்கு அவ்வை சண்முகி திரைப்படம் வெளியாவதற்கு அணியமாக இருந்தது. என் முதல் கவிதைத் தொகுப்பான “பூக்கள்பற்றிய தகவல்கள்” வெளியாகியிருந்தது. 

கமல்ஹாசன் அத்தொகுப்பைப் படித்துவிட்டார். எழுத்தாளர் சுஜாதா கூறியிருக்கக்கூடும். தொகுப்பைப் படித்துவிட்டு என்னைப் பற்றி கவிஞர் புவியரசிடம் புகழ்ந்து கூறியிருக்கிறார். அப்போது எனக்குப் புவியரசோடு அறிமுகம் ஏற்பட்டிருந்தது. புவியரசோடு எனக்கு மடல்வழித் தொடர்பும் உண்டு.  

புவியரசிடமிருந்து வந்த மடலிலிருந்து அவர் 
அத்தொகுப்பின் இன்றியமையாத கவிதைகள் சிலவற்றை மனப்பாடமாக நினைவிலிருந்து சொல்பிசகின்றிக் கூறினார் என்று அறிந்தேன். எனக்கு வானில் பறப்பதுபோல் இருந்தது. என் மகிழ்ச்சியைத் தெரிவித்து மடல் எழுதினேன். 

பிறகு புவியரசிடம் என்னைப் பற்றி எப்போதும் ஒரு வார்த்தை நலம் விழைவாராம். நினைவிலிருந்து என் கவிதையொன்றைக் கூறுவாராம். நான் திருப்பூர்க்குள் நாயாய் பேயாய் அலைந்து திரிந்த நாள்கள் அவை. இவை எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தன. வேறென்ன நான் செய்ய முடியும் ?  

“அமரகாவியம் என்ற திரைப்படம் தூய தமிழ் உரையாடல்களோடு எடுக்கப்படவிருக்கிறது. அதில் உங்களை இணைத்துப் பணியாற்றலாம் என்ற எண்ணம் அவர்க்கிருக்கிறது. வந்து அவரைச் சந்திக்க இயலுமா ?” என்று புவியரசு கேட்டிருந்தார். கட்டாயம் இயலும் என்று என் இசைவை எழுதியிருந்தேன். அப்போது எல்லாமே அஞ்சல்தான். தொலைபேசியைக்கூடப் பயன்படுத்த இயலா நிலை. 

குறிப்பிட்டிருந்த நாளில் நான் புவியரசு வீட்டில் இருந்தேன். ராஜ்கமல் நிறுவனத்தின் மகிழுந்து வந்தது. ஆழ்வார்ப்பேட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கிருந்த பணியாளர்கள் பணிவோடு வரவேற்று விருந்தினர் அறையில் அமரவைத்தனர். 

இருபத்தொன்றாம் அகவைக்குரிய எனக்குத் தரப்பட்ட அந்தப் பணிவும் உபசரிப்பும் மிகப்புதியவை. எண்மர் அமரக்கூடிய அறை. குளிரூட்டி ஓடிக்கொண்டிருந்தது. நடுவிலிருந்து சிறு மேசையில் ஏழெட்டுப் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. நான் அந்தப் புத்தகங்களை எடுத்து ஒவ்வொன்றாகப் புரட்டிவிட்டு மீண்டும் வைத்துவிட்டேன். அடுக்காக இருந்த நூல்களைக் கிட்டத்தட்டக் கலைத்து வைத்துவிட்டேன். எனக்கு அப்படித்தான் பழக்கம். நூல்களைப் பரப்பி வைத்துவிடுவேன். 

குளம்பியும் சிற்றுணவும் வந்தன. குடித்துவிட்டுக் காத்திருந்தோம். இதற்கிடையே புவியரசு ஏதோ சொல்ல அந்தப் பேச்சில் ஆழ்ந்துவிட்டேன். நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் கமல்ஹாசன் அறைக்குள் வந்துவிட்டார். 

அவரை முதன்முதலாகப் பார்க்கிறேன். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர் நேராக என்னைப் பார்த்துக் கும்பிட்டார். நானும் கும்பிட்டேன். “எப்போது வந்தீர்கள் ? எப்படி இருக்கிறீர்கள் ?” என்று கேட்டுக்கொண்டார். 

நேராக என்னெதிரே அமர்ந்தவர் நான் கலைத்துப் போட்டிருந்த புத்தகங்களை எடுத்து அடுக்கினார். நானும் கூடச்சேர்ந்து அடுக்கச் சென்றேன். அதற்குள் அவர் முன்பிருந்ததுபோன்றே அடுக்கி வைத்துவிட்டார். அன்றிலிருந்து யார் வீட்டுக்குச் சென்றாலும், நான் எடுத்துப் படிக்கும் நாளிதழை முறையாய் மடித்து வைத்துவிடுகிறேன்.  

நான் சிறு பதற்றத்தில் இருக்கிறேன் என்று அவர் விளங்கிக் கொண்டிருக்க வேண்டும். என்னை இயல்பாக்குவதற்காக சில நகைச்சுவைகளைச் சொன்னார். “ஜப்பான்ல பைசா நகரத்துச் சாய்ந்த கோபுரம் இருந்திருந்தா அதுக்கு என்ன பேரு வைச்சிருப்பான்…? சொல்லுங்க…” என்றார். நான் “தெரியலீங்களே…” என்றேன். “நிக்கிமோ நிக்காதோ…” என்றார். நான் சிரித்தேன். இப்படிப் பலவற்றையும் பேசிக்கொண்டிருக்கையில் நான் இயல்பாகிவிட்டேன்.

என் கூச்சம் அகன்று அவரோடு தங்கு தடையின்றிப் பேசினேன். புவியரசு தன் கண்களாலேயே “மேற்செல்க” என்று பச்சை காட்டினார். நான் உற்சாகமாகிவிட்டேன். 

வாய்மையுறச் சொல்கிறேன்… திரைப்படங்களில் கமல்ஹாசனை நாம் பத்து விழுக்காடுதான் பார்த்திருக்கிறோம் ! நேரில் அவர் முகம் காட்டும் மெய்ப்பாடுகள் இருக்கின்றவே… அடேங்கப்பா… கண்கொட்டாமல் பார்த்துகொண்டிருக்கலாம். முகத்தில் என்னென்னவோ பாவனைகளைச்  செய்தபடியே பேசினார். அவற்றையெல்லாம் அவர் எந்தத் திரைப்படங்களில் வெளிக்காட்டி நடிக்கவே இல்லை எனலாம். 

உரையாடலிடையே மீண்டும் நாங்கள் உண்பதற்கு வேண்டியவை வந்தன. எனக்கும் புவியரசுக்கும் என்னென்னவோ பட்சணங்கள் இருந்தன. கமல்ஹாசனுக்கென்று தனியாய் ஒரு தட்டில் சில எள்ளுருண்டைகளும் எலுமிச்சைத் தேநீரும் வந்தன. வயிறு பிடிக்கச் சாப்பிட்டோம். 

அடுத்து அமர காவியம் படத்தைப் பற்றிய பேச்சுக்கு வந்தோம். படம்குறித்து விளக்கமாய்ச் சொன்னார். அதில் உரையாடல்கள் எப்படி இடம்பெற வேண்டும் என்பதையும் விளக்கினார். தாம் இயக்குவதாகவும் அதில் தாம் நடிப்பது குறித்து இப்போதைக்கு முடிவாகவில்லை என்றும் கூறினார். படம் சார்ந்த எல்லா முன்னேற்பாடுகளும் முடிந்தபின் இங்கே வந்து எழுத வேண்டும் என்றார். 

எனக்கிருந்த ஐயங்கள் சிலவற்றைக் கேட்டேன். அவற்றைத் தீர்த்துத் தெளிவுபடுத்தினார். சந்திப்பு இனிமையாய் முடிந்தது. எங்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார். அவர் சென்ற பிறகு அக்கட்டடத்தில் அங்குமிங்கும் எல்லா அறைகளுக்கும் சென்றேன். புவியரசுக்கு அங்கே எல்லாரும் தெரிந்தவர்களாயிற்றே… அவர் நின்று உரையாடிக்கொண்டிருக்க… நான் சமையற்கட்டுக்கே போய் அங்கிருந்தவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். 

எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்த சென்னைப் பயணம் அது. ஊர்வந்து சேர்ந்த பிறகு கம்பர் சார்ந்த சில ஆராய்ச்சிகளைச் செய்து வைத்திருந்தேன். அந்தக் குறிப்புகளின் பிழிவைத்தான் இங்கே கடந்த ஆண்டில்  ஒருமுறை கம்பரைப் பற்றிய வரலாறாகப் பதிவிட்டேன். பலர்க்கு அது  நினைவிருக்கலாம். 

சில திங்கள்களில் ‘அமரகாவியம்’ படம் கைவிடப்பட்டது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு கமல்ஹாசனை நான் காணும் வாய்ப்பு அமையவில்லை. நியாயமாக அவர் மறந்து போயிருக்க வேண்டும். ஆனால், என்னைப் பற்றி அவர் தம் நண்பர்களிடம் குறிப்பிடாமல் இருந்ததே இல்லை. 

அந்த அன்பு, தற்காலத்தில் அண்ணன் சுகாவிடம் என்னைப் பற்றிப் பகிர்வதுவரை தொடர்கிறது. “கமல் சார் உங்களைப் பற்றி அவ்வளவு சொல்றாருங்களே…” என்பதுதான் நீயா நானா இயக்குநர் ஆண்டனி என்னிடம் பேசத் தொடங்கிய முதல் சொற்றொடர். 

கமல்ஹாசனின் அன்பைப் பெறுவது அவ்வளவு எளிதில்லை. அப்படிப் பெற்றுவிட்டால் அந்த அன்புக்கு விலைமதிப்பே இல்லை. 

இந்தியா முழுக்க ஆயிரக்கணக்கான பெருமான்களைப் பார்த்தவராயிற்றே… அவர்க்கு ஒருவரை மதிப்பிடத் தெரியாதா... என்ன ? அவர் நாம் நினைத்துக்கொண்டிருப்பதைப்போல் மிக எளிமையான திரைப்படக்காரர் அல்லர். இதைப் பலரும் உணர்ந்திருக்கிறார்கள். நன்றாகவும் அறிவார்கள். 

கலைத்துறையிலிருந்து மக்களுக்கான அரசியல் களத்தில் இறங்கியிருக்கும் இந்நேரத்தில் கமல்ஹாசனார்க்கு என் உள்ளம் கனிந்த வாழ்த்துகள் ! 

- கவிஞர் மகுடேசுவரன்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கார் தயாரிக்கும் தொழிலில் ஜப்பானியர்கள் பல சிகரங்களை எட்டியவர்கள். நேர்மை, உழைப்பு , திட்டமிடுதல், தொழிலாளர் பயிற்சி ,ஆராய்ச்சி என்று அவர்கள் வளர்ச்சி வழிமுறைகள் பிரமிக்கத்தக்கவை. ஜப்பானியர்களை விஞ்சி யாருமே அந்தத் தொழிலில்  இல்லை என்ற பெருமை அவர்களிடமிருந்தது.

நிஸான் ஒரு ஜப்பானியக் கம்பெனி. 1999ல் நிஸான் மூடும் நிலைக்கு வந்தது. ஆர்டர்கள் இல்லை. உலக அளவில் தேவை குறைந்தது. டொயோட்டாவின் வியூகங்களை சமாளிக்கமுடியவில்லை. அப்போது நிஸான் கம்பெனியின் பங்குதாரர்கள், இயக்குநர்கள் ஜப்பானியத் திறமைகளைத் தாண்டி யோசிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். பிரான்ஸின் ரெனோ கம்பெனியின் தலைவரான கார்லோஸ் கசானைத் தேர்ந்தெடுத்தனர். பிரேசில் நாட்டைச் சேர்ந்த கசான் ஃப்ரெஞ்ச் - லெபனான் முன்னோர் களைக் கொண்டவர். Mr.Fix-it என்ற செல்லப் பெயர் உண்டு.

கசானின் அதிரடி வியூகங்களால் நிஸான் மீண்டும் தழைத்தது. அவர் ரெனோ- நிஸான்- மிட்சுபிஷி இணைந்த ஒரு செயல் திட்டத்தை உருவாக்கி கம்பெனியை மீட்டு நிலை நிறுத்தினார்.

ப்ரேசிலியரைக் கொண்டு வந்தது ஜப்பானின் திறமைக் குறைவு அல்ல , மற்றவர் திறன் மீது நம்பிக்கை. செயல் முறைகளில் புது யோசனை வேண்டும் என்ற ஜப்பானியர்களின் முனைப்பில் இது தேச எல்லைகளைத் தாண்டிய வெற்றி. 

Pepsi, கூகிள், மைக்ரோ சாஃப்ட்  அமெரிக்கர் அல்லாத , மூன்றாம் உலக நாடு என்று கருதப்பட்ட இந்தியாவில அடிப்படைக் கல்வி பயின்ற இந்தியர்களைத் தலைவராகத் தேர்தெடுத்துள்ளன. இது அமெரிக்க சிந்தனையின் வெற்றி.. அமெரிக்கர்களின் தோல்வியல்ல.

Fb

Link to comment
Share on other sites

பெண்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்று பலருக்குத் தெரியத்தான் இல்லை. என் ரிடயர்மென்ட்டுக்கு ஒரு எட்டு மாசம் முன்பு எனக்கு நடந்தது இது. எங்கள் போதாத காலம் அப்போது ஒரு பாடாவதி ஐஏஎஸ் எங்களுக்கு இயக்குனராக இருந்தார். பணி செய்த எந்த இடத்திலும் அவருக்கு நற்பெயர் இல்லை. கன்ஃபெர்ட் ஐஏஎஸ். நாங்கள் படித்துப் பார்த்து தெளிவாக எழுதியனுப்பும் கோப்பில் எல்லாம் சகட்டு மேனிக்கு கொர்ரீஸ் எழுப்பி வைப்பார். முக்கியமான கோப்புகளில் தேவையின்றி கொர்ரீஸ் போட்டு நிறுத்தி வைப்பார். தலைமைச் செயலகத்தில் ஒரு முக்கியமான திட்டம் தொடர்பான மீட்டிங் நடந்தது, அது தொடர்பான கோப்பு என்னிடம். அந்தக் கோப்பிலோ இவர் கொர்ரி போட்டு வைத்திருக்கிறார். நிச்சயம் அங்கு கேள்வி எழும்பும். அதுவும் மான்யத் தொகை விடுவிப்பது தொடர்பான கோப்பு அது.

கோப்பை எடுத்துக் கொண்டு நானும் எனது பிரிவின் உதவி இயக்குனரும் தலைமைச் செயலகம் சென்றோம். மீட்டிங் ஆரம்பிப்பதற்கு சற்று முன்பு எங்களை அழைத்து அந்தக் கோப்பைக் கேட்டார். இயக்குனர் கேட்டால் கொடுத்துதானே ஆக வேண்டும்? நாங்களும் பணிவாகக் கோப்பை நீட்டினோம். கோப்பைப் பிரித்தார். எங்கள் கண்ணெதிரிலேயே அந்தக் கோப்பின் நோட் ஃபைலில் தான் கொர்ரி எழுதியிருந்த பக்கத்தை மட்டும் சரக்கென்று உருவி நான்காகக் கிழித்து தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். நானும் என் ஏடியும் ஒருவரை ஒருவர் திகைப்போடு பார்த்துக் கொண்டோம். எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இன்னும் சற்று நேரத்தில் மீட்டிங் நடக்க உள்ள நிலையில் அவர் அப்படி செய்தது எங்களுக்கு வயிற்றைக் கலக்கியது.

ஏன் சார் இப்படி செய்தீர்கள் என்று கேட்கவா முடியும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியிடம்? எந்த ஒரு கோப்பிற்குமே குறிப்புக் கோப்புதான் அதன் ஜாதகம் மாதிரி.  கோப்பில் எடுக்கப் பட்ட 
அனைத்து  நடவடிக்கைகளுக்கும்  அதுதான் அத்தாரிட்டி. அதில் கடைசியாய் நான் கோப்பை சமர்ப்பித்த விவரமும், அதில் அவர் கொர்ரி எழுதியிருந்ததையும் மட்டும் கிழித்தால் கோப்பைப் பார்க்கிறவர்களுக்கு அதில் கடைசியாக எடுக்கப் பட்ட நடவடிக்கையின்  விவரம் தெரியாமல் போகும். அப்படித்தான் அன்று ஆயிற்று. மீட்டிங்கில் அந்த ஐஏஎஸ் பழியை எங்கள் மீதே போட்டார். கோப்பு தனக்கு சமர்ப்பிக்கப்படவே இல்லை என்று   அண்டப் புளுகு புளுகினார். அங்கேயே வைத்து எல்லார் முன்னிலையிலும் எங்களை, பொறுப்புடன் வேலை பார்க்கவில்லை என்று சொல்லி அவமதித்தார். ஏழை சொல் அம்பலம் ஏறுவதாவது! செயலாளர் எங்கள் இருவருக்கும் உடனே மெமோ கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டார்.

அவர் செய்த தவறுக்கு எங்களுக்கு மெமோ. அன்று முதல் அவருக்கு கோப்பு அனுப்பி அதில் தேவையற்ற கொர்ரி ஏதேனும்  அவர் எழுதி இருந்தால் உடனே அந்தப் பக்கத்தை முன்ஜாக்கிரதையாக ஒரு ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்வது எனக்கு வழக்கமாயிற்று.

அப்படித்தான் அடுத்த இரண்டு மாதம் கழித்து  முதியோர் இல்லங்களுக்கு மான்யம் விடுவித்து கருவூலத்திலிருந்து  பெறப்பட்ட ஒரு முப்பது காசோலைகளை சம்பந்தப் பட்டவர்களுக்கு அனுப்புவதற்காக ஒப்புதல் கேட்டு கோப்பு சமர்ப்பித்திருந்தேன். அந்தக் கோப்பு அவரது டேபிளுக்குச் சென்றது. ஒரு வாரத்திற்கு மேலாகியும் திரும்பவில்லை. நானும் அவரது உதவியாளரிடம் கேட்டு கேட்டு சலித்து விட்டேன்.

ஏன் இன்னும் மான்யம் விடுவிக்கவில்லை என்று என்ஜிஒக்களிடமிருந்து போன் மேல் போன் வந்தது. வந்து விடும் பொறுமையாயிருங்கள் என்று பதில் சொல்வோம். அதில் பொறுமையிழந்த யாரோ ஒருவர் பத்திரிகைக்குப் போய் விட்டார். லஞ்சம் எதிர்பார்த்து  நாங்கள் மான்யத்தை விடுவிக்கவில்லை என்று மறுநாள் பத்திரிகையில் செய்தி வர, தலைமைச் செயலகத்திலிருந்து கேள்வி மேல் கேள்வி. நான் இயக்குனர் அறைக்கு அழைக்கப் பட்டேன். "ஏம்மா ஒழுங்கா வேலை செய்யறதில்லையா?" என்றார்.

"சார் ஃபைல் உங்க டேபிள்ளதான் பத்து நாளா இருக்கு" என்றேன். அவர் முகம் மாறியது. அவர் என்னை போகச் சொன்னார். ஒருமணிநேரம் கழித்து மீண்டும் அழைக்கப் பட்டேன். அந்தக் கோப்பைத் தூக்கி என் எதிரில் எறிந்தார். அதில் அப்போதுதான் பின் தேதியிட்டு ஏதோ கொர்ரி எழுதியிருந்தார். நான் குறிப்பு எழுதி எவ்ளோ நாளாச்சு? என் டேபிள்ள ஃபைல் இருந்தா பார்த்து எடுத்துக்கிட்டு போக வேண்டியதுதானே? என்று கத்தினார். நான் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மலைத்துப் போய் நின்றிருந்தேன்.

அப்போது அவர் என்னை, காலோடு தலை பார்த்து விட்டு சொன்னதுதான் நான் இந்தப் பதிவை எழுதக்  காரணம். "நிக்கற ஸ்டைலைப் பாரேன். என்னமோ விஸ்வரூபம் படத்துக்கு டிக்கெட் வாங்க நிக்கறா மாதிரி போஸ் குடுத்துக்கிட்டு நிக்கறாங்க இந்தம்மா" என்றார் நக்கலாக. அந்த அறையில் என்னைத் தவிர நான்கைந்து பேர் இருந்தோம். எனக்கு சுறுசுறுவென்று ஏதோ எகிறியது. அவரிடம் உத்தரவு கூடப் பெறாமல் சட்டென அந்த அறையை விட்டு வெளியில் வந்தேன்.

கொஞ்சம் கழித்து அவரது பி.ஏ பெண்மணி ஓடி வந்தாள். "மேடம் சார் உங்களைக் கூப்பிடறார்" என்று அழைத்தாள். "வர முடியாது" என்றேன் அழுத்தமாக. ஏன் மேடம்..? என்று பதறினாள்  பிஏ. "லேடீஸ் கிட்ட எப்டி பேசணும்னு முதல்ல உங்க சார் கத்துக்கட்டும் அப்பறம் வரேன்"  என்று நிர்த்தாட்சண்யமாக மறுத்து விட்டேன். "என்னாச்சு மேடம்?" என்றாள். நான் நடந்ததைச் சொன்னேன். " என் உடம்புல என்ன பிரச்சனை இருக்குன்னு எனக்குதான் தெரியும். கால்ல பிளேட் இருப்பதால் அந்தக் காலில் அதிக வெயிட் கொடுத்து எப்போதுமே நிற்க மாட்டேன். அது புரியாமல் நான் நின்ற போஸை அவர் எப்படி கிண்டலடிக்கலாம்? முதலாவதா ஒரு பெண்ணை ஏற இறங்கப் பார்த்து இப்படி கிண்டல் செய்வதே நாகரிகம் இல்லையே. நிச்சயமாக இனி நான் அவர் அறைக்கு வர மாட்டேன். இனி எந்த உத்தரவானாலும் கோப்பில் எழுதி அனுப்பட்டும்" என்றேன்.

பி.ஏ சென்று விட்டாள். அவரிடம் என்ன சொன்னாளோ தெரியாது. அவர் மீண்டும் என்னை அழைத்தார். என் பிரிவில் அத்தனை பேரும் 
பிரச்சனை வேண்டாம் மேடம் போங்க என்று என்னை வற்புறுத்த, வேண்டா வெறுப்பாகச் சென்று அவர் முகத்தைக் கூடப் பார்க்காமல் நின்றேன்.

"சாரிம்மா உங்க பிரச்சனை எனக்குத் தெரியாது. வெரி சாரி என்றார். நான் அவரை நிமிர்ந்து பார்த்தேன். சார் என் காலில் பிரச்சனயே இல்லை என்றாலும் கூட நீங்கள் இப்படி பேசியது உங்கள் பதவிக்கு அழகல்ல, இருந்தாலும் நீங்கள் சாரி சொல்லி விட்டதால் நான் இதை இதோடு மறந்து விடுகிறேன் என்று சொல்லி விட்டு வெளியில் வந்து விட்டேன்.

இதன் பிறகுதான் கிளைமாக்ஸ். ஒரு ஐஏ எஸ்சே மன்னிப்பு கேட்டு விட்டார் என்று தன் இமேஜை உயர்த்திக் கொண்டவர் மறுநாளே நாங்கள் செய்யாத தவறுக்கு எனக்கும் எங்கள் ஏடிக்கும் 17b யின் கீழ் சார்ஜ் மெமோ கையொப்பமிட்டு அனுப்பினார். இதனால் என் ரிடையர்மென்டே கேள்விக்குறியானது. என்னிடமிருந்த அத்தனை ஆதாரங்களையும்  கொண்டு அத்தனைக்கும் பதில் அனுப்பினேன். ரிடயர்மென்ட்டிற்கு முதல் நாள் குற்றமற்றவள் என்று அந்த சார்ஜிலிருந்து விடுவிக்கப் பட்டேன். என் ரிடையர்மென்ட் நிகழ்ச்சியில் கூட அந்த இயக்குனர் கலந்து கொள்ளவில்லை. அதைப் பற்றி நானும் கவலைப்படவில்லை. அவர் அறைக்குச் சென்று நானும் விடைபெற விரும்பாமல் கிளம்பி விட்டேன். நாமார்க்கும் குடியல்லோம். நமனையும் அஞ்சோம்.

வித்யா சுப்ரமணியம் 

முகநூல் 

 

 

Link to comment
Share on other sites

'யானை பாகனுக்கு யானையால் தான் சாவு' ன்னு சொல்லுவாங்க. பழக்கும் போது, பாகனோட சொல் பேச்சு கேட்க, பயங்கர கொடூரமா அடிப்பாங்க. அதனால, யானை அந்த காயத்தோட வடுவையும், வலியையும் மனசுல நியாபகம் வெச்சுகிட்டே இருக்கும். மஸ்து நேரத்துல வாய்ப்பு கிடைச்சு அந்த கோபம் வெளிப்பட்டு ருத்ர தாண்டவம் ஆடிரும். முக்கியமா... மஸ்து நேரத்துல, தலைமை பாகன்... யானை பக்கத்துல இருக்க மாட்டான். காரணம், யானைக்கு தன் பாகன் மேல் இருக்கும் வன்மம் வெளிப்படும் நேரம் அதுதான். 

ஒரு யானைய பழக்கும் போது அந்த யானைய சுத்தி நாலு அல்லது ஐஞ்சு கும்கிய நிறுத்துவாங்க. ஒரு ஏழெட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன்னாடி நின்னு ஆளுக்கு ஒரு குச்சிய கீழ போடுவாங்க. பக்கத்துல ஒரு கும்கி நிற்கும். அது, எப்பிடி குச்சிய எடுத்து பாகன் கைல குடுக்கனும்னு திரும்ப திரும்ப செஞ்சு காட்டும். அவ்வளவு சுலபத்தில் புது யானை குச்சிய எடுத்துடாது. ஆனா அது எடுக்கற வரைக்கும் கும்கிகள் விடாது. புது யானைய தந்தங்களால் முட்டி நொறுக்கும். பாகன்கள் ஒன்றரை இஞ்ச் தடிமனில், ஆறடி நீளத்தில், ஒரு வாரம்  விளக்கெண்ணையில் ஊறப் போட்டு தீயில் வாட்டிய, யானைகளுக்காகவே ஸ்பெஷலா தயார் செஞ்ச காட்டு மூங்கில் பிரம்புகள வெச்சிருப்பாங்க. வளைச்சா வட்ட வடிவத்துல ரப்பர் மாதிரி முனைக்கு முனை முட்டும். மனுஷன் அதுல ஒரே ஒரு அடி வாங்குனா செத்துருவான். அதால அடிச்சு வெளுப்பாங்க. பிளிரும்... ரெண்டு கால்ல எழுந்து நிற்கும். ஆனா குச்சிய எடுக்காது. எடுக்குற வரைக்கும் கும்கிகளும், பாகன்களும் விடமாட்டாங்க. கடைசியா அடி தாங்காம குச்சிய எடுத்து  எந்த பாகன் கைல குடுக்குதோ, அவனைதான் அந்த யானைக்கு பிடிச்சிருக்குன்னு அர்த்தம். இனி அவனுக்கு மட்டுமே கட்டுப்படும். அவன்தான் வாழ்நாள் முழுவதும் அந்த யானைக்கு தலைமை பாகன். இப்ப யானைக்கு பிடிச்சவன தேர்ந் தெடுத்தாச்சு. இனி யானைக்கான பயிற்சி ஆரம்பமாகும். 

அதை பழக்கறதுகுள்ள, தும்பிக்கைய தூக்க முடியாத அளவுக்கு கரோல்ல அடைச்சு... மூணு நாளைக்கு உணவு குடுக்க மாட்டாங்க. நாலாவது நாள் தன் பாகனை பார்த்து கெஞ்சும். கொஞ்சம் கரும்பும் வெல்லமும் குடுத்து ருசிகாட்டி, பசிய தூண்டி சொல் பேச்சு கேட்டா.. கரும்பு வெல்லம் கிடைக்கும்னு அதுக்கு உணர வெச்சு, வழிக்கு கொண்டு வருவான். அதுக்குள்ள எத்தனை அடிகள் சித்ரவதைகள் அப்பப்பா. அந்த பாகனை கண்டாலே, யானைக்கு மனசுல ஒருவித கிலி ஏற்படுற மாதிரி பண்ணிருவான். என்ன பயமும் பாசமும் ஏற்பட்டாலும், அவ்வளவு சீக்கிரம் தன் மேல் யாரையும் ஏற விட்டுடாது.

கட்ட கடைசியா... என்னைக்கு அந்த யானை,  பாகனை முழுசும் எந்த எதிர்ப்பும் இல்லாம, தன் முன்னங் கால்கள மடக்கி குடுத்து, அதன் வழியா மேல ஏறி உட்கார அனுமதிக்குதோ... அன்னைக்கு பூஜை போட்டு கும்கிகளின் துணையோட கரோல திறப்பாங்க. பாகன் யானை மேல உட்கார்ந்து தான் கரோலை விட்டு வெளிய வரனும். அப்பதான் அது முழுசும் பழக்கப் பட்டதுக்கான அடையாளம். இதெல்லாம் நடக்க 48 நாட்கள் ஆகும். கோவை மாவட்டத்துல 13 பேரை கொன்று, கேரள அரசால் சூட்டிங் ஆர்டர் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய ரௌடி 'மக்னா' யானை, இன்னைக்கு முதுமலை கேம்ப்ல மூர்த்திங்குற பேர்ல அவ்ளோ சாதுவா இருக்கு. அந்தளவுக்கு சித்ரவதை ட்ரெய்னிங்.

மஸ்துன்னா மதம்.. நவம்பர் டூ ஜனவரி யானைகளின் இணைச் சேர்க்கை காலத்தில், நெத்தியில் இருந்து மஸ்து நீர் வடியும். பாகன் மேல் பாசம் உள்ள யானைகள், மஸ்து ஆரம்ப நிலையிலேயே பாகனை எச்சரிக்கை செய்யும். சாதாரணமா ஒற்றை கால் சங்கிலிதான் போடுவாங்க. ஆனா மஸ்து அறிகுறி ஆரம்பமாகும் போதே... ரெட்டை காலுக்கு சங்கிலி போட்ருவாங்க. சாதாரணமா அங்குசத்த பார்த்தா கட்டுப்படும் யானை, மஸ்து நேரத்துல கட்டுப்படாது. அதன் பிறகு யாரும் கிட்ட நெருங்க முடியாது. மூணு மாசமும் அதற்கு ஒரே இடம்தான். அந்த மஸ்து நீரோட வாசம், நீண்ட தூரம் வீசும். வாசம் வந்தா... எந்த காட்டு யானையும் அந்த ஏரியாலயே நிக்காது. மஸ்து நிலையில் இருக்கும் யானை வினோதமா நடந்துக்கும். தும்பிக்கையை தூக்கி தந்தத்து மேல போட்டுக்கும். பயங்கர ரெஸ்ட் லெஸ்ஸா இருக்கும். உர்ர்ர்ர் ன்னு உருமிகிட்டே இருக்கும். எப்பவும் யானை உருமல்ல இருக்கும் போது பக்கத்துல போகக் கூடாது. கோபத்தின் அறிகுறி. பார்வை வெறிச்சு இருக்கும். மண், செடி, கொடிகளை தலைமீது போட்டுக் கொள்ளும். ரொம்ப பசி எடுக்குற வரை சாப்பிடாது. மஸ்து நீரை தும்பிக்கையால தொட்டு தொட்டு ருசி பார்க்கும். அந்த சுவை யானையை மேலும் மேலும் வெறி ஏற்றும். அதனால மஸ்து நேரத்துல நூறு பேர் எதிர்ல நின்னாலும், அபார நியாபக சக்தி கொண்ட யானை,  தன்னோட பாகன் மேலான பகைய தீர்த்துக்க... தன்னிலை மறந்து, வெறி கொண்டு முதல்ல அவனதான் தேடும். சிக்குனான்... அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு போட்ரும்.

சின்ன கொசுறு தகவல்:

யானைல ஆறு வகை. அதில், தும்பிக்கையை ஒட்டி கீழ் நோக்கி வளரும் தந்தங்களை கொண்ட யானைகளை வளர்க்கவே முடியாது. நம்பக தன்மை இல்லாதது. எப்பவும் ரெஸ்ட் லெஸ்ஸா.. கொல வெறியோடவே இருக்கும். எந்த நேரம் ஆளை தூக்கும்னு கணிக்கவே முடியாது. கும்கி படத்துல வர்ற கொம்பன் யானை வகைதான் அது. 

அதே போல உடம்பில் முதுகெலும்பு தூக்கிக் கொண்டு, ஆள் உட்கார முடியாத உடலமைப்பு கொண்ட யானை களையும், இடுங்கிய கண்களை கொண்ட யானை களையும், நெற்றி துருத்திய யானை களையும் வளர்க்கவே முடியாது. பயங்கர சிடு மூஞ்சி. இது அவ்வளவு ஆபத்தில்லை னாலும் கூட, கையாள்வது சிரமம். வேண்டா வெறுப்பா கட்டளைக்கு அடி பணியும். இதன் மீது துர்நாற்றம் வீசும். (இந்த படத்தில் உள்ள வகை)

ஒழுங்கில்லாத தந்தங்கள் அல்லது ஒற்றை தந்தம் கொண்ட யானையை வளர்க்கவே கூடாது. வனத்துறை, வீட்டில் வளர்க்க அனுமதி கொடுக்காத ஒரே வகை இதுதான். காட்டு யானைகளில், இந்த ஜாதி யானைகள்தான் ஆட் கொல்லிகள். மற்ற வகைகள் வெறும் மிரட்டலுடன் விலகி போய்விடும். இது மறைந்திருந்து தாக்கும் அறிவும் குணமும் உடையது. மனுஷன பார்த்துட்டா, அனல் போல கொதிநிலைக்கு போயிடும். பயங்கர ராட்ஷசன். அது உடம்பிலிருந்து அழுகிய மாமிச வாசம்  வீசும். மலைவாழ் மக்கள், இந்த யானையின் மீது வீசும் குமட்டல் வாடையை வைத்தே இது வருவதையோ, அருகில் நிற்பதையோ கண்டு பிடித்து விடுவார்கள். 

ஒச்சம் இல்லாத, நிமிர்ந்த தலை, சம அளவுகளில் அகலமாக முன் நோக்கி V வடிவில் பால் போன்ற நிறமுடைய தந்தங்கள், தேன் நிறத்தில் மின்னும் கண்கள், எப்பவும் முகத்தில் ஒரு சாந்தம், அருமையான கீழ்படிதல், வசீகரிக்கும் அழகு கொண்ட உடலமைப்பு, அடர்ந்த முடி கொண்ட வால், அழகான நகங்கள், மடங்காத காதுகள், ஆள் அமரும்படி படுக்கை போன்ற முதுகமைப்பு, நடக்கும் போது அடி மாற்றி வைக்காமல் சரியான அளவுகளில் காலை முழுவதும் தரையில் ஊன்றி நடத்தல், தன் சுற்றுப் புறத்தை சுத்தமாக பராமரித்தல், அன்புக்காக ஏங்கும்,  மனிதர்களுடன் முக்கியமாக குழந்தை களுடன் நன்கு பழகி, சொல் பேச்சு கேக்கும். இது பட்டத்து யானையோட சாமுத்திரிகா லட்சணம். இது போன்ற குணங்கள், பத்தாயிரத்துல ஒரு யானைக்குதான் அமையும். இதன் உடம்பில் தாமரை பூவின் நறுமணம் வீசும். முழுவதும் இந்த மொத்த குணங்களும் அமையக் கிடைக்கா விட்டாலும், இதில் மூன்றில ஒரு பங்கு குணங்கள் அமையப் பெற்ற யானைகளை தாராளமாக வளர்க்கலாம். மனிதர்களை தாக்காது.
!!! ???

நன்றி v. sakthi

முகநூல் 

Link to comment
Share on other sites

 

படித்ததில் பிடித்தது. ..

*?பல தோல்விகள் 
முன்னொரு காலத்தில் “பிழைக்கத் தெரியாத முட்டாள்” என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார். தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள்.

அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கொண்டிருப்பார்கள்.

அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை தனதாக்கிய அந்த மாமனிதன் தான் “சாய்க்கிரோ ஹோண்டா”.

தனது வாழ்க்கை அனுபத்தை சாறு பிழிந்து எடுப்பது போன்று “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று அந்த இளைஞன் சொன்னார்.

Toyoto நிறுவனத்திற்கு piston (உந்துருளி) தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு.

யாருக்காகவும் அவன்காத்திருக்கவில்லை. அப்பாவின் திட்டு , சக மாணவர்களின் கேலிகளுக்கு இடையே, மாதிரி உலோகம் உருக்கும் கூடம் ஒன்றை 1928ஆம் ஆண்டு உருவாக்கினார்.

இதற்காக இரவு பகலாக உழைத்தார். ஓராண்டு காலமாக கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி piston ஐ பெரும் எதிர்பார்ப்புடன் Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது piston இல்லை என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியியளாளர்கள்.

முதலாவது கனவுத் திட்டம் படுதோல்வி அடைந்தது. மனம் பாரமாக இருந்தது. திரட்டி வைத்த முதலீடு மொத்தமும் வீணாகியது. எல்லோரும் தங்களது கேலிகளை பொழிந்தார்கள்.

புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார். மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய piston மாதிரியை Toyoto நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

அருமை என்று பாராட்டிToyoto நிறுவனம் ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு கொண்ட சாய்க்கிரோ ஹோண்டா பெரிய தொழிற்கூடம் கட்டினால் தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையிலான piston தயாரிக்க முடியும்.

எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா. அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சிமென்டு தட்டுப்பாடு.

எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சீமெந்துக் கூட கிடைக்கவில்லை. ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு என அவரது அப்பா கூறினார், வாழ்க்கை முழுவதும் ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாயா என்றார் உயிர்நண்பன்.

இவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காது சிமென்டு கலவைக்கு இணையான மாற்றுக்கலவையை உருவாக்கும் முறையை கண்டுபிடித்தார் ஹோண்டா.

ஆங்காங்கு கடன் வாங்கி சில மாதங்களிலேயே பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார்.

தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி piston தயாரிக்கும் தொழிலை அமர்க்களமாகத் தொடங்கினார். கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது.

அமெரிக்கா போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்து நாசமாக்கியது.

ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால்,தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிறங்கி சேதங்களை சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா.

ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கி விட்டது.

மொத்தத்தொழிற்சாலையையும் dதிருப்பிக்கட்ட முடியாத நிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மற்றும் மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு Toyoto நிறுவனத்திற்கு விற்பனை செய்தார் ஹோண்டா.

இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப்பாருங்கள்.........

ஆனால் அப்போதைய நிலையில் ஹோண்டா கூறிய கருத்து.......

“நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளிகூட கவலைப்பட மாட்டேன்… இருக்கிற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கிவிடுவேன்.”

இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம் ஜப்பானின் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலக்கட்டம், ஜப்பான் முழுதும் பெற்றோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன.

எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிளில் செல்கின்றார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார். அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது.

அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம் புது ஐடியா தோண்றியது.

அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.

அதை எடுத்துக்கொண்டு ஆனந்தமாக சுற்றி வந்தார் ஹோண்டா. அதேபோன்று எங்களுக்கும் செய்துகொடு என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள்.

அவரும் சளைக்காமல் செய்து கொடுத்தார். அதன் விளைவு என்ன ஆயிற்று?????

அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா.

கையில் பணமில்லை, வங்கிகள் கடன்தரத் தயாராகவில்லை. ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன் என்று எல்லோரும் கூறினார்கள்.

அப்போதும் கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார்.

முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார்.

5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள்முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் உதயமானது.

முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலோகம் உருக்கும் கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் வகைகளை கொண்டு வந்தார்.

அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப் பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா.

இப்போது ஹோண்டா நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் வாகனங்களை தயாரிக்கிறது.

ஹோண்டா கார்களுக்கு மேற்கத்தேய நாடுகளிலும் பெரும் வரவேற்பு இருந்தது. எத்தனையோ வகை வகையான தயாரிப்புக்களில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது இந்த நிறுவனம்.

ஹோண்டா தயாரிப்புகளைப் பார்க்கும் போதெல்லாம் அனைவருக்கும் நினைவுக்குவருவது, அதன் மாமனிதன் சாய்க்கிரோ ஹோண்டா தனது வாழ்க்கை அனுபவங்களைச் சாறுபிழிந்து சொன்ன வார்த்தைகள்தான்:

 “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே"
.
Fb

Link to comment
Share on other sites

டியர் நெட்டிசன்ஸ், தரவுகளை காப்பது நம் கையிலும் இருக்கிறது!

பேஸ்புக் அன்லடிகா விவகாரத்தில் எல்லாத்தரப்பினரும் மார்க் ஜக்கர்பர்கை வறுத்தெடுக்கத்துவங்கியிருக்கின்றனர். நிச்சயமாக பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்கிற்கு இது சோதனையான காலம் தான். பயனாளிகள் எண்ணிகை படி பார்த்தால், உலகின் மிகப்பெரிய நாடாக கருதக்கூடிய பேஸ்புக் இணைய உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பயனாளிகள் தரவுகளை தவறாக பயன்படுத்த அனுமதித்த விவகாரத்தில் வசமாக சிக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். ஒரு பக்கம் வழக்கு, விசாரணை அச்சுறுத்தல் என்றால் இன்னொரு பக்கம் பிரைவசி வல்லுனர்கள் முதல் இணைய சாமானியர்கள் வரை, பயனாளிகள் தகவல்களை பேஸ்புக் கையாளும் விதம் தொடர்பான கேள்விக்களை அள்ளிவீசி வருகின்றனர்.
சட்டப்படியும், தார்மீக நோக்கிலும் பேஸ்புக் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். தவறுகளை திருத்திக்கொண்டாக வேண்டும்.  ஏனெனில் பேஸ்புக் சாம்ப்ராஜ்யம், பயனாளிகளின் தரவுகள் அறுவையில் வளர்ந்திருக்கிறது. பயனாளிகள் வெளியிடும் நிலைத்தகவல்களையும், விருப்பங்களையும் இன்னும் பிற தகவல்களையும் திரட்டி, அவர்களுக்கான தனிப்பட்ட சித்திரத்தை வைத்துக்கொண்டு அவற்றுக்கு பொருத்தமான விளம்பரங்களை வெளியிட்டு வருவாயை பேஸ்புக் அள்ளிக்குவித்து வருகிறது. 
பேஸ்புக்கின் இந்த தகவல் அறுவடை பற்றி பிரைவசி காவலர்கள் பல ஆண்டுகளாக எச்சரித்து வருகின்றனர் என்றாலும், லைக்குகளிலும், ஷேர்களிலும் மட்டுமே மூழ்கியிருந்த நெட்டிசன்கள் இப்போது பேஸ்புக் தங்களைப்பற்றி இந்த அளவு தகவல்களை திரட்டுகிறதா என திகைத்துப்போயிருக்கின்றனர். ஒருவிதத்தில், இந்த விழிப்புணர்வுக்காக பேஸ்புக் அனல்டிகா விவகாரத்திற்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
இந்த விவகாரத்திலேயே அலசி ஆராய்வதற்கும், கேள்வி கேட்பதற்கும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்றாலும், நெட்டிசன்களைப்பொருத்தவரை, இன்னும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கின்றன. முதல் விஷயம், தரவுகள் அறுவடை என்பது ஏதோ பேஸ்புக் மட்டும் செய்வதல்ல. அநேகமாக எல்லா இணைய நிறுவனங்களும் இதை செய்கின்றன. பேஸ்புக் போன்ற பெரிய நிறுவனங்கள் அதிகமாக செய்கின்றன. அது மட்டும் அல்ல, பேஸ்புக் பரவலாக பயன்படுத்தப்படும் இணைய மேடையாக இருப்பதால் அதன் மூலம் தவறான காய்களை நகர்த்தி தேர்தல் மற்றும் வாக்கெடுப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என்பது தான் திடுக்கிட வைக்கும் விஷயம். 
பேஸ்புக் போலவே குறும்பதிவு சேவையான டிவிட்டரும் பயனாளிகள் தகவல்களை சேகரிக்கிறது. நம்பர் ஒன் தேடியந்திரமான கூகுள் நீண்ட காலமாகவே இதை செய்து வருகிறது. இன்னும் பல நிறுவனங்கள் இதை செய்கின்றன. புதிது புதிதாக அறிமுகமாகி கொண்டிருக்கும் செயலிகள் இருப்பிடம் சார் தகவல் உள்ளிட்ட பலவிதமான தகவல்களை சேகரித்துக்கொண்டிருக்கின்றன. இந்த தகவல்கள் பெரும்பாலும் விளம்பர நோக்கில் பயன்படுத்தப்படலாம். சேகரிக்கப்படும் நோக்கத்திற்கு ஏற்ப வில்லங்கமாகவும் பயன்படுத்தப்படலாம். 
விஷயம் என்னவெனில் இணையத்தில் அடியெடுத்து வைத்துவிட்டால் போதும், நமக்கு பிரைவசி என்று சொல்லப்படும் தனியுரிமை என்று எதுவும் கிடையாது. பல முனைகளில் இருந்து தகவல்கள் திரட்டி சேகரிக்கப்படுகின்றன. இ-காமர்ஸ் தளங்களில் ஷாப்பிங் செய்யும் போது நமது விருப்பத்தேர்வுகள் குறித்து வைக்கப்பட்டு அதற்கேற்ப அடுத்த முறை தள்ளுபடி அறிவிப்புகள் அளிக்கப்படுகின்றன. கூகுளில் ஒரு குறிப்பிட்ட சொல்லை தேடி விட்டு, பத்து நிமிடம் கழித்து பேஸ்புக் பக்கம் சென்றால், அந்த சொல் தொடர்பான விளம்பரம் எட்டிப்பார்க்கிறது. 
இணையத்தில் நாம் தொடர்ந்து டிராக் செய்யப்படுகிறோம். கண்ணுக்குத்தெரியாத நிழலாக அல்கோரிதம்கள் நம்மை கண்காணித்து குறிப்பெடுத்துக்கொண்டே இருக்கின்றன. நம்மைப்பற்றி நமக்கே தெரியாத பலவிஷயங்களை இணைய நிறுவனங்கள் தெரிந்து வைத்திருக்கின்றன. குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கான தனிப்பட்ட தேர்வுகளை முன்வைப்பதற்காக இந்த தகவல்கள் பயன்படுத்தப்படுவதாக சொல்லப்பட்டாலும், அதைவிட விளம்பர வருவாய் தான் இன்னும் முக்கியமான காரணம்.
இப்படி ஒவ்வொரு அடியும் டிராக் செய்யப்படுவது பிரைவசிக்கு வேட்டு வைத்திருப்பது இன்றைய தேதியில் இணையத்தின் தலையாய பிரச்சனையாக இருக்கிறது.
இந்த பிரச்சனைக்கு இணைய நிறுவனங்களை மட்டும் குற்றம் சொல்வதற்கில்லை. இணையவாசிகள் மீதும் தவறு இருக்கிறது. பெரும்பாலான நெட்டிசன்கள் தங்கள் தரவுகளின் பாதுகாப்பு பற்றி கவலைப்படுவதில்லை. அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்கின்றனர். ஏன், எதற்கு என யோசிக்காமல், பகிர்வதிலேயே இன்பம் காண்கின்றனர். ஆனால், தாங்கள் பதிவு செய்யும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு பலவிதமாக பயன்படுத்தப்படுவதை அறியாமல் இருக்கின்றன. அல்லது அறிந்தும் அலட்சியமாக இருக்கின்றனர்.
ஒரு காலத்தில் இணைய நிறுவனங்கள் இணையவாசிகளின் தகவல்களை திரட்ட படாதபாடு பட்டுக்கொண்டிருந்தன. பிரவுசரில் குக்கி மென்பொருள்கள் போன்றவற்றை எல்லாம் வைத்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இப்போதும் இந்த வழி தொடர்கிறது என்றாலும், நெட்டிசன்கள் மிகை பகிர்வு மூலம் இதை மிகவும் எளிதாக்கிவிட்டனர். பேஸ்புக் விருப்பங்களை வைத்தே ஒருவரின் அரசியல் சார்பை எளிதாக அடையாளம் கண்டுவிடலாம். எந்த வகையான தளங்களுக்கு செல்கின்றனர் என்பதை வைத்தே அதிகம் பயணம் செய்யும் ரகத்தைச்சேர்தவர் என்பதி யூகித்து விடலாம். இவற்றை தான் இணைய நிறுவனங்கள் செய்து கொண்டிருக்கின்றன.
அது மட்டுமல்ல, கூகுள் மெயில் அல்லது பேஸ்புக் நுழைவு வசதியை இன்னும் பல சேவைகளுக்கான நுழைவு வசதியாக பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் நம்முடைய இணைய தடங்களை இன்னும் பரவலாக பதிய வைத்து விடுகிறோம். இவ்வளவு ஏன் பேஸ்புக், தனது உறுப்பினர்கள் அல்லாதவர்கள் பற்றிய தகவல்களை கூட சேகரிக்கும் ஆற்றல் பெற்றிப்பதாக கூறப்படுவது பற்றி உங்களுக்குத்தெரியுமா? ஆம், ஏதேனும் பக்கத்தில் பேஸ்புக் வசதி மூலம் லைக் செய்தால் போதும், அந்நிறுவனம் அதன் பிறகு அவரது இணைய தடத்தை பின் தொடரத்துவங்கி விடுகிறது.
இப்படி எல்லாம் நடக்கும் போது நெட்டிசன்கள் எத்தனை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆனால் நாம் அப்படி இருக்கிறோமா என கேட்டுக்கொள்ள வேண்டும். நம்மில் எத்தனை பேர் புதிய சேவையை பயன்படுத்துவதற்கு முன், இணைய நிறுவனங்களின் விதிகள் மற்றும் நிபந்தனைகளை பொறுமையாக படித்துப்பார்த்திருக்கிறோம் சொல்லுங்கள். நிபந்தனைகள் என பார்த்ததுமே கடைசி கட்டத்திற்கு வந்து, ஏற்றுக்கொள்கிறேன் எனும் பட்டனை கிளிக் செய்து விடுகிறோம். விதிகள் மற்றும் நிபந்தனைகளை நம்மால் மாற்ற முடியாது என்றாலும், அதை படித்துப்பார்த்தால், நம்முடைய தகவல்கள் எந்த வகையில் எல்லாம் பயன்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும் அல்லவா? 
அதே போலவே, ஸ்மார்ட்போனில் நோட்டிபிகேஷனாக எட்டிப்பார்க்கும் புதிய செயலி அல்லது வைரலாகி கவனத்தை ஈருக்கும் செயலியை உடனே பயன்படுத்த துடிக்கிறோம். அந்த செயலியின் சேவைக்கு எந்த அவசியம் இல்லாவிட்டாலும் கூட, இருப்பிடம் சார்ந்த தகவல் மற்றும் புகைப்படம் உள்ளிட்டவற்றை அணுகுவதற்கு அனுமதி தேவை எனும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு உள்ளே நுழைகிறோம். அதன் பிறகு அந்த செயலி நமது இணைய நடவடிக்கைகள் சுதந்திரமாக வேவு பார்த்து தகவல்களை திரட்டிக்கொள்கிறது.
இணையத்தில் உலாவும் போது நாம் பயன்படுத்தும் பிரவுசர்களில் குக்கி மென்பொருள்களை செயலிழக்கச்செய்யும் வசதி இருக்கிறது என்பதை கூட அறியாதவர்களாக தான் இருக்கிறோம். கூகுள் போல பயனாளிகளின் தேடல் சுவடுகளை கண்காணித்து தகவல்களை சேமிக்கும் வழக்கம் இல்லாத டக்டக்கோ போன்ற மாற்று தேடியந்திரங்கள் பற்றி அதிகம் அறியாமல் இருக்கிறோம்.
நாம் நம் தகவல்களை பாதுகாப்பதில் அதிக அக்கரை இல்லாதவர்களாக இருக்கிறோம் என்பதே உண்மை. இந்த அறியாமையும், அலட்சியமுமே இணைய நிறுவங்களின் தகவல் அறுவடையை இன்னும் சுலபமாக்கி கொண்டிருக்கின்றன. இலவச சேவை வழங்குவதால் இணைய நிறுவனங்கள் பயனாளிகளை ஒரு பொருளாகவே கருதி செயல்படுகின்றன. ஆக, இணைய நிறுவனங்களை அதிலும் குறிப்பாக பேஸ்புக் போன்ற மெகா நிறுவனங்களை பொறுப்புடன் நடந்து கொள்ள நிர்பந்திக்க வேண்டும் என்றால் நெட்டிசன்களாகிய நாம் இன்னும் கொஞ்சம் பொறுப்புடன் இருப்பது அவசியம். நிறுவனங்களுக்கு நம் தரவுகளின் அருமை தெரிந்திருக்கிறது. அதனால் தான் அவற்றை தங்கமாக கருதி அறுவடை செய்கின்றன. நம் தகவல்களின் உரிமையை நாம் உணர்ந்து கொண்டால் அதை பாதுகாப்பதற்கான அவசியத்தையும் உணர்வோம். அந்த தேவையை பேஸ்புக் அனல்டிகா ஏற்படுத்தி இருக்கிறது.

 Fb
நன்றி; தமிழ் யுவர்ஸ்டோரியில் எழுதியது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

#காவிரி நீர்:
பத்து வருடம் முன்பு பெங்களூருவில் நான் வேலை பார்த்த நிறுவனத்தில்,
27 ஊழியர்களுக்கு நான் மேலாளர். 27 பேரும் (ஆண் பெண் உட்பட முப்பது வயதுக்குக் குறைவான இளைஞர்/இளைஞிகள்.
7 கன்னடர்கள், 9 தமிழர்கள், 5 தெலுங்கர்கள், மீதி வடநாட்டவர்.
ஒரு நாள் coffee இடைவெளியில் பேசிக்கொண்டிருக்கும்போது, நந்தகுமார் என்ற இளைஞர் (கன்னடர்- மைசூர் - பிறந்து வளர்ந்தது - MBA பெங்களூரு பல்கலைக்கழகம்) சற்றுத் தயங்கி,
"சார், தப்பா நினைக்கக் கூடாது. நீங்கள் நியாயவாதி என்பதால் உங்களைக் கேட்கிறேன். கேட்கலாமா?" என்றார்.
அப்போது, இன்று போலவே காவிரி நீர்ப் பிரச்னை உச்சம்.
"கேளேன் நந்து" என்றேன். அவர் கேட்டது (ஆங்கிலத்தில்தான்)
"சார், கன்னட மக்கள் உழைப்பில், கர்நாடக அரசின் முதலீட்டில் விஸ்வேஸ்வரய்யா கஷ்டப்பட்டு கட்டிய காவிரியிலிருந்து தமிழக மக்கள் பங்கு கேட்பது எந்த விதத்தில் நியாயம் ?: என்று கேட்டார்.
""அதாவது KRS அணை பற்றிக் கேட்கிறீர்கள் இல்லையா" ? என்றேன்.
"அதுவும்தான்" என்றார். எனக்கு புரை ஏறிவிட்டது.
"காவிரியை விச்வேஸ்வரய்யா கட்டினாரா?" என்றேன்.
அவர் குழப்பத்துடன் "பின்னே" என்றார்.
அவரிடம் இருந்த குழப்பமே, மீதி இருந்த ஆறு MBAக்களிடமும் இருந்தது.
நான் உடனே சொன்னேன், "நந்து, இதற்குப் பதில் பின்னால் சொல்கிறேன். முதலில் உங்களுக்கு அரை நாள் விடுமுறை தருகிறேன். உங்கள் வேலையை நான் செய்து கொள்கிறேன். நீங்கள் கூகிள் இல் உட்காருங்கள். நான் இப்போது எழுதிக்கொடுக்கும் பத்து வார்த்தைகளைத் தேடி, விக்கிபீடியாவில் அவை எல்லாம் முழுதாகப் படித்து விட்டு, மாலை என்னிடம் வரவேண்டும்" என்றேன்.
"சரி சார்" என்றார். நான் எழுதிக் கொடுத்தேன்.
Cauvery River, Chola Kingdom, Kallanai, Karikaal Chola, Raja Raja Chola, Tanjore, Coorg, Upper Riparian State, Lower Riparian State, KRS Dam
மாலை தொங்கிப் போன முகத்தோடு வந்தார். "எல்லாம் படித்து விட்டேன். நீங்கள் சொல்ல ஏதும் இல்லை சார். சாரி" என்று சென்று விட்டார்.
"ஒரு நிமிடம்.... நந்து, நீங்கள் படித்ததையெல்லாம் உங்கள் மீதி நண்பர்களுக்கும் சொல்லுங்கள்" என்றேன்.
நான் மேலே சொன்னதை நம்புபவர்கள் நம்புங்கள். நம்பாதவர்கள், கர்நாடகாவில் யாரிடமாவது காவிரி பற்றிப் பேசிப் பாருங்கள்.
-----
நிறைய பேருக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை.
குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்கிருந்து நேரடியாக ஓடி வந்து தமிழகத்தின் வழியாக ஓடிப்போய் கடலில் கலந்துவிடுவது போலவும், அப்படி கடலில் கலக்க விட்டுவிட்டு ஏதோ கர்நாடகக்காரன் தேக்கி வைத்திருக்கும் தண்ணீரில் பங்கு கேட்டு தமிழகம் தகராறு செய்வது போலவும் சிலர் பேசிட்டு இருக்காங்க.
அவங்க பேசுவதை பார்த்தால் காவிரி ஆறு உற்பத்தியாகி 200 ஆண்டுகள்தான் ஆனதுபோல இருக்கு.
ஒரு விஷயம் அவுங்களுக்கு புரியவே இல்லை, பூகோள ரீதியாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நதி கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் வழியாக ஓடி கடலில் கலந்துகொண்டுதான் இருந்தது.
அப்போது காவிரி டெல்டாவில் முப்போகம் விவசாயம் நடந்துகொண்டேதான் இருந்தது.
ஆனால் பிரச்சனை ஆரம்பித்ததே 1932ல் காவிரியின் நீர்பிடிப்பு பகுதியில் கிருஷ்ண ராஜ சாகர் அணை கட்டப்பட்ட பிறகுதான்.
அதுவரை தடையின்றி ஓடிக்கொண்டிருந்த நதி காவிரி டெல்ட்டாவை தாண்டி தினமும் பல மில்லியன் லிட்டர் தண்ணீரை கடலுக்குள் கொண்டுபோய் சேர்த்துக்கொண்டே இருந்தது.
KRS அணை கட்டப்பட்ட பிறகு காவிரியில் ஒரு சொட்டு நீர்கூட வர முடியவில்லை. காரணம் காவிரியை தடுத்து கட்டப்பட்ட KRS அணையில் நீர் அடைபட்டது.
அந்த அணை நிரம்பும் தருவாயில் உபரி நீர் மட்டும் வெளியேறிக்கொண்டிருக்கும். அதாவது இயற்கையான போக்கில் ஓடின நதி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
(KRS அணையை தொடர்ந்து கபினி,ஹேமாவதி,ஹாரங்கி அணைகள் கட்டப்பட்டபோதும் அப்படித்தான்)
நம்முடைய நதி நீரை கேட்பது நமது உரிமை. சிலர் அதை என்னமோ யாசகம் போல நினைத்துக்கொண்டு மழை நீரை சேகரிக்க கூடாதா? கடல் நீரை குடி நீராக்கி குடிக்க கூடாதா என்கிறார்கள்.
அவர்களுக்கு ஒன்று புரியவில்லை. நதி நீர் என்பது நிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, கடலுக்கும் சொந்தமானது. 
நதி நீர் கடலில் கலந்தேயாக வேண்டும். அது கட்டாயம். அதுதான் இயற்கை.
புவியியல் வல்லுந‌ர்களிடம் கேட்டுப்பாருங்கள் இதற்கான விளக்கத்தை தருவார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் சீனா மஞ்சளாற்றின் குறுக்கே உலகின் மிகப்பெரிய ஒரு அணையை கட்டியது.
அந்த தண்ணீரை பாலைவனத்தின் பக்கம் திருப்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை சோலைவனமாக்கியது. ஆனால் அந்த ஆறு கடலில் சேரும் பகுதியில் நதி நீர் ஓடாததால் உப்பு நீர் நிலத்தடி நீருக்குள் ஊடுறுவியது. அந்த பகுதி கடற்கரையின் உப்பு அளவு அதிகரித்தது.
கடற்கரையோரம் இருந்த மஞ்சள் ஆறு பாசன பகுதிகள் பாலைவனமானது. மிகப்பெரிய பாதிப்பை சந்தித்த சீனா தற்போது அதை சரி செய்ய முயன்று வருகிறது.
அதுபோல காவிரி நீர் கடலில் கலக்காவிட்டால் காவிரி கழிமுக மாவட்டங்கள் பாலைவனமாகும்.
நம் மாநிலத்திற்குள் அணைகளே கட்டக்கூடாது என நான் சொல்லவில்லை. அணைகள் கட்டி அந்த தண்ணீர் ஏரி, குளங்களில் சேமிக்கப்பட்டாலும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் கட்டாயம் கடலில் கலந்தேயாக வேண்டும்.
அணைகள் பற்றி பேசுவோம். கர்நாடகாவிலிருக்கும் KRS, கபினி, ஹேரங்கி, ஹேமாவதி அணைகளில் தேக்கப்படும் தண்ணீரை நம் மேட்டூர் ஸ்டேன்லி அணை என்ற ஒரு அணையில் தேக்கிவிடலாம். இந்த 5 அணைகளில் மேட்டூர் அணைதான் மிகப்பெரியது.
கர்நாடகத்திலிருக்கும் அனைத்து அணைகளும் மலைப்பாங்கான மேட்டு நிலத்தில் இருக்கும் அணைகள்தான்.
ஆனால் தமிழகத்தில் மேட்டூருக்கு கீழே அப்படிப்பட்ட நில அமைப்பு இல்லை. காவிரி டெல்டா மாவட்டங்கள் சமவெளிப்பகுதிகளை கொண்டது. அதில் கிருஷ்ணராஜ சாகர், மேட்டூர் ஸ்டேன்லி போன்ற அணைகளை கட்ட முடியாது ஆனால் சிறு சிறு தடுப்பணைகளை மட்டும் கட்ட முடியும்.
இது பூகோள ரீதியில் உள்ள நீர் வடி நிலம், டெல்டா சமவெளி.
சிலர் கல்லணை மட்டும் டெல்டா பகுதியில் இல்லையா என கேட்கலாம்.
ஆம். கேள்வி சரிதான்.
கல்லணை ஒன்றும் நீங்கள் நினைப்பதுபோல் டி.எம்.சி கணக்கில் நீரை தேக்கி வைத்து வறட்சி காலத்தில் திறந்துவிட்டு பயன்படுத்தும் அணை கிடையாது. அது ஓடும் காவிரியின் குறுக்கே தண்ணீரை தடுத்து நிறுத்தி பல சிறு சிறு வாய்க்கால்களுக்கு பிரித்து அனுப்பும் ஒரு மிகப்பெரிய மதகு போன்றது. கல்லணையில் ஒரு டி.எம்.சி நீரை கூட தேக்க முடியாது.
காவிரி நதியை பொறுத்தவரை மேட்டூர் ஸ்டேன்லி நீர் தேக்கம் ஒன்று மட்டுமே போதும். 
அதிலிருந்து வரும் தண்ணீரை சேமிக்க முயற்சிக்கலாம்.
நிறைய சிறு சிறு தடுப்பணைகள் கட்டி நிலத்தடிநீர் மட்டத்தை உயர்த்தலாம், அந்த நீரை ஏரி, குளங்களில் சேமிக்கலாம்.
ஆனால் ஒரு சொட்டு தண்ணீரைக்கூட கடலுக்கு விடமாட்டேன் என நாம் நினைத்தால் இயற்கை நம்மை பழிக்கும்.
டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய அணையை கட்டுவேன் என யாராவது சொன்னால் அது கற்பனையாகத்தான் இருக்கும்.
உண்மையில் காவிரி டெல்டா சமவெளியில் பெரிய அணைகளை கட்ட முடியாது. சிறு, குறு தடுப்பணைகளை மட்டுமே கட்ட முடியும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் நிறைய தடுப்பணைகளை கட்டிக்கொள்ளாதது நம்முடைய தவறுதான். தர்க்க ரீதியில் தவறுதான் ஆனால் இயற்கையை நாம் மாற்ற முயற்சிக்கவில்லை என்ற வகையில் அது சரி.
இதற்காக நமக்கு காவிரியில் உரிமை இல்லாதது போலவும், கர்நாடகாவை தொந்தரவு செய்வது போலவும் யாரும் பேசாதீர்கள்.
சர்வதேச நதி நீர் தாவா சட்டத்தின்படி ஒரு நதி மீது அதிக உரிமை அதன் கீழ் பகுதியில் இருப்பவர்களுக்குத்தான்.
நமது உரிமையைத்தான் கேட்கிறோம் பிச்சை அல்ல. நமது அரசியல் சண்டைக்காக நமது உரிமையை ஏளனப்படுத்தாதீர்கள்!
முடிவாக ஒன்று. காவிரியில் நமக்கு இருக்கும் உரிமை போன்றே வங்கக்கடலுக்கும் உரிமை இருக்கிறது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக காவிரி நீரை வங்கக்கடலும் குடித்து வந்திருக்கிறது. அதை கர்நாடகாவும், நாமும் முழுவதும் எடுத்துக்கொண்டால் இயற்கைக்கான பங்கை யார் கொடுப்பது?
------
நன்றி
குருமூர் என்பவரது பதிவு..
-[WhatsApp]

Link to comment
Share on other sites

  • 1 month later...

”அலுவலகங்களில் பெண்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகள் சமீபத்தில்தான் அதிகரித்திருக்கின்றன. முன்பெல்லாம் இப்படிக் கிடையாது” 

சொன்னவரைக் கூர்ந்து பார்த்தேன். சீரியசாகத்தான் சொல்லிக்கொண்டிருந்தார். 

“சமீபம்னா - ஐந்து வருடங்கள் இருக்குமா?”
“இல்ல, ஒரு இருபது வருடம்/ 25 வருடம் , சொல்றேன்” 

சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தேன். 2001ல் நடந்தது. இன்றும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. 

அறிவியல் ஆய்வுக் கருவிகள் விற்பனையை விடுத்து மென்பொருள் விற்பனை, ஆளுமை என்று  நான் பணி செய்திருந்த காலம். மும்பை பிராந்தியத்தின் மேனேஜர். 

எனக்குக் கீழே மூவரைப் பணியமர்த்த கம்பெனி முடிவுசெய்தது. கம்பெனி என்பது இன்ஃபோஸிஸ், விப்ரோ அளவுக்குப் பெரிதுமல்ல, லால்ஜி- கீம்ஜி அண்ட் ஸன்ஸ் என்ற லாலா கம்பெனியுமல்ல. ரெண்டுங்கெட்டான். 

ஏதோ பன்னாட்டுக்கம்பெனியிலிருந்து வந்த மனித வளத்துறை முதன்மை அதிகாரி “ எல்லா டிபார்ட்மெண்டிலிருந்தும் இண்டர்வியூக்களில் ஆ ட்கள் இருக்கணும். அப்பத்தான் வருகின்ற ஆட்கள், அனைத்துத் துறையிலும் சுமுகமாகப் போவார்கள் “ என்று ஒரு தீர்மானத்தோடு,  , tally யில் பணிசெய்யப் போகும் ஆட்களைத் தேர்ந்தெடுக்க , tallyல் எத்தனை l உண்டு என்பதே தெரியாத என்னையும் வைத்தார்கள். சமோசா, கோலா குடித்து விட்டு, சிப்ஸ் இல்லை என்ற புகார் எழுதி வைத்து விட்டு வந்தேன். 

அது கிடக்கிறது. என் துறையில் ஆளெடுக்க, எனது முதன்மை அதிகாரி விகாஸ் தோமர் வருகிறார் என்பது சரியாக இருந்தது. அதோடு பைனான்ஸ், லாஜிஸ்டிக்ஸ் என்ற துறையிலிருந்து ஒரு கும்பல் வருகிறது என்பது சந்தேகமாக இருந்தது. இந்த நன்கு படித்த, படுபாவிகள் ஒரு கும்பலாகப் பல கொடுமைகளைச் செய்து வந்தனர் என்றும் சேர்மேனுக்கு இது தெரியாது எனவும் தலைமையகத்தில் வதந்தி உண்டு.

ஹெச். ஆர் அதிகாரி ‘ எடுக்கப்போகும் மூவரில் ஒருவராவது மைனாரிட்டி கம்யூனிடியிலிருந்து வரவேண்டும்; ஒரு பெண் எடுக்கப்படவேண்டும்” என்று சொல்லி வைத்தார். கும்பலுக்கு ஏகக்குஷி. பெண்களின் பயோடேட்டாவை அவர்களே தரம் பிரித்தார்கள். 

தோமர், நான் , எனது அசிஸ்டெண்ட்  ரஸூல் என்பவர்களோடு கும்பலில் இருந்து இருவர். ஹெச். ஆர். துறையிலிருந்து ஒருவர் வரமுடியவில்லை. 

கும்பல் தலைவர் அடுக்கப்பட்டிருந்த பயோடேட்டாக்களைப் பார்த்து முகம்சுளித்தார். பெண்கள் லிஸ்ட் ஒன்ணு நான் வைச்சிருந்தேனே? அந்த பயோடேட்டாவையெல்லாம் காணோம்?”

“நிறைய பேர் வர்மாட்டேன்னு சொல்லிட்டாங்க.” என்றார் தோமர். “ அதிகம் அலையவேண்டியிரூக்கும்னு சொல்ிட்டோம்.” 

வாசலில் சென்று பார்த்த தோமர் முகம் மாறினார் “ ரசூல், எப்படி இந்த ரெண்டு பெண்கள் வந்திருக்காங்க? வரவேண்டாம்னு நான் சொல்லச் சொன்னேனே?”

“சார் இவங்களைத் தொடர்பு கொள்ள முடியலை. மத்தவங்ககிட்ட இண்டர்வியூ இல்லைன்னு ஆபரேட்டர் கூப்பிட்டுச் சொல்லிட்டா”

கும்பலிலிருந்து வந்த ஒருவர், வாசலைப் பார்த்து பரவசமடைந்தார். “ தோமர், அந்த கோட் போட்ட பொண்ண வரச்சொல்லுங்க” 

தோமர் முகம் சிவந்தார். “அந்தப் பொண்ணை உள்ளே கூட்டிட்டுப் போ. நீ பக்கத்துலயே இரு, ரசூல். நான் இப்ப வந்துடறேன். நான் வர்ற வரை கேள்விகள் தொடங்க வேண்டாம்” 

இது 2001. என்ன கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது என்ற விதிமுறைகளெல்லாம் அதிகம் அமலில் இல்லாத காலம். பெண்களுக்கும் தங்கள் உரிமை அதிகம் தெரியாத நாட்கள். 

கேள்விகள் சில , நாகரிகத்தின் எல்லையைத் தொட்டுப் பின் வந்தன. 

”ராத்திரி இருக்க வேண்டி வந்தா, என்ன செய்வே?”

“வீட்டுக்குப் போன் பண்ணுவேன். தம்பியைக் கூப்பிடுவேன்”

“என் கார்ல வர முடியணும் உனக்கு. அந்த நம்பிக்கை இருக்கனும், got it?"

அவள் வெலவெலத்துப் போயிருந்தாள். மேலும் கேள்விகள் பலமாக இருந்தன. “ உங்க கார்லதான் வரணும்னா வரவேண்டியதுதான் சார்” என்றாள். 

தோமர் எழுந்தார் “ இண்டர்வியூ இதோடு முடிகிறது. நீ போகலாம்” என்றார் கடுமையான முகத்துடன். அவள் அழுதுவிடுவாள் போலிருந்தது. 

வாசலில் தோமரிடம் மெல்லிய குரலில் கெஞ்சிக்கொண்டிருந்தாள்   “ப்ளீஸ் சார், எனக்கு வேலை மிக அவசியம். என்ன வேணாலும் செய்யறேன். இல்லன்னு சொல்லிறாதீங்க.”

“பார்க்கலாம்.: என்றார் சுருக்கமாக. மற்ற பெண்ணை சீக்கிரம் அனுப்பிவைத்தார். 

இரு பெண்களையும் அவர் எடுக்கவில்லை. ஹெச். ஆர் அவரை தலைமையகத்தில் உலுக்கி எடுத்தது.  தோமர் அமைதியாக “ எல்லாத் துறையிலிருந்தும் ஒரு பெண் வீதம் தேர்ந்தெடுத்து ஒரு குழுவை அமையுங்கள். அவர்களிடம் விளக்கம் சொல்கிறேன்” 

குழு அமைக்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் பேரிளம்பெண்கள்.   அவர்களிடம்  தோமர் 10 நிமிடம் பேசினார்.  கூட்டம் முடிந்து வெளி வந்த பெண்கள் கண்கலங்கியிருந்தனர். 

அன்று மாலை சேர்மனிடம் குழு சென்றது. அடுத்த நாள் ஹெச்.ஆர் தலைவர் தோமரிடம் மன்னிப்புக் கோரினார். 

கும்பல் அசரவில்லை. தோமர் இரு மாதங்களில் ராஜினாமா செய்து லண்டனில் ஒரு கம்பெனியில் சேர்ந்தார். போகுமுன் என்னிடம் சொன்ன வரிகள் இவை

“ ஒரு ஆர்டரும் கிடைக்காம இருந்தாலும் பரவாயில்லை. உன் பிராந்தியத்தின் வளர்ச்சி பற்றி படுகேவலமாக கம்பெனியில் பேசினாலும் பரவாயில்லை. ’என்ன வேணும்னாலும் செய்யறேன்’னு உடைஞ்சு போற அளவுக்கு ஒரு பெண்ணை பலவீனப்படுத்தி அதில் ஆதாயம் பார்க்கறவனுக்குத் துணை நின்றுவிடாதே. மகா பாவம் அது” 

அவலங்கள் எத்துறையில் என்றல்ல, என்றுமுதல் என்றல்ல, ’இருக்கிறது’ என்பது கசப்பான வலிதரும் நிஜம். 

அதன்பின் தோமரை நான் சந்திக்கவில்லை. இதுவரை அப்படி ஒரு நிகழ்வு என் அனுபவத்தில் இல்லை.

 ஒவ்வொரு இண்டர்வியூவிலும் தோமரை நினைவில் சந்திக்கிறேன்.

Suthakar kasturi

Face book

Link to comment
Share on other sites

அன்பானவர்களே….
முள்ளிவாய்க்கால் மனித அவலத்தின்போது…. அந்த நெருப்பின் தணலில் இருந்து மீண்டுவந்த உயிர்களில் எனது உயிரும் ஒன்று…. அந்த உயிர் வேகிய அவலத்தின் ஒருதுளியை – எனது பட்டுணர்வை – இங்கு பதிகிறேன். இது என் பணி. 
இதனை வாசித்து உணர்பவர்கள் முடிந்தளவுக்கு இதனை  உங்கள் பக்கத்தில் பகிர்ந்து உதவுங்கள். தனிப்பட்ட முறையில்  எனக்காக அல்ல இது .
இப்படித்தான் ஒவ்வொருவரும் துடித்தோம் என்பதை உலகறியட்டும். அவ்வப்போது என் நினைவுத்துளிகளை  எழுதுவேன் .
*********************************************

2009 மே மாதத்தின் 
மறக்க முடியாத அந்த நாட்கள் மனதில் காட்சிகளாக விரிகின்றன…..
இரணைப்பாலை என்கிற இடத்திலிருந்து ….. வலைஞர்மடம் என்கின்ற கடலோரக்கிராமத்திற்கு வந்துசில வாரங்கள் இருந்தோம். வலைஞர்மடம் தேவாலயம் கூப்பிடு தொலைவில் இருந்தது. மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில்…. புலராத பொழுதொன்றில்...... இராணுவம் பேயாட்டம் போட்டதில் அங்கிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்படுகிறது….
இன்றைய நாட்களில் முள்ளிவாய்க்காலின் ஒரு பகுதியில் ஒரு  போராளிக்குடும்பத்தினருடன் இருக்கிறேன்..... சுற்றி நிகழ்பவை எதுவும் நல்லதாக இல்லை….. எல்லாச் சனங்களும் குழம்பிக்கிடந்தார்கள்.

எனக்கு நான் மட்டுமே என்று ஆகிப்போன சூழ்நிலை…… 
இனி யாரையும் யாரும் கவனிக்க இயலாது என்றாகிவிட்டதை நான் புரிந்துகொள்கிறேன்……
உலகின் கொடும்போர்கள் எல்லாம் எப்படி நிகழ்ந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தது மனது. 
இதற்குள் எனது துணைவர் இரண்டு தடைவைகள் காயப்பட்டிருப்பதாக தகவல் அறிகிறேன். அதே இடத்தில் அவருடன் நின்ற போராளிகள் இருவர் வீரச்சாவு அடைந்துவிட்டார்கள்…. இருவருமே திருமணமானவர்கள். அவர்களுக்கு குழந்தைகளும் இருக்கின்றார்கள். 
அவர்களில் ஒருவர்…..அவரைக் காணும்போதெல்லாம் அவரது கழுத்தை கட்டிக்கொண்டு இறங்க மறுக்கும் அவரது மூன்று வயது அன்புப் பெண்குழந்தையை எண்ணி என் மனம் துவள்கிறது...
கண்முன்னே வீழுகின்ற  பல்வகைக் குண்டுகளில் சனங்கள் காயப்பட்டும் இறந்துகொண்டும் இருக்கிறார்கள்…… எவரது உயிருக்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. உயிர்கள் அவ்வளவுக்கு மலினப்பட்டிருந்தன. 
நான் குழந்தைகளை கடவுளராக நேசிக்கும் இயல்புடையவள்….. அந்தக் குழந்தைகள் உணவின்றி…. பயத்துடன் விறைத்து உறைந்து வாழும் காட்சியை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை…..
நான் தங்கியிருந்த பகுதியில் சிறுவர் இல்ல குழந்தைகள் கொஞ்சப்பேர் இருந்தார்கள். அவர்களின் தற்காலிக பாதுகாப்பு அகழியில் ஒருநாள் இரவு அவர்களுடன் நானும் தங்கினேன்….. வெளியே  பல்குழல் பீரங்கிகளின் செல்கள் அதிர்ந்துகொண்டிருந்தன. 
மறுநாள் நடுச்சாமத்தில் திடீரென உக்கிரமான செல் வீச்சு.  பாதுகாப்பு அகழிக்கு செல்வதற்கு போதியகாலம் இல்லை….நடப்பது நடக்கட்டும் என நிலத்தில் கிடக்கிறோம்…. செவிகள் கிழிய கிட்டவாக ஒரு செல்விழுகிறது….
எங்கள்மேல் ஏதோ சரசரவென கொட்டுகிறது…..
கூக்குரல்களும் கதறல்களும் நடுங்க வைக்கின்றன…. 
அந்த பாதுகாப்பு அகழியின் ஒருபக்கம் சிதைவடைந்துவிட…. அருகே வெளியில் படுத்திருந்த ஓர் தாய், பெண்பிள்ளை உட்பட மூன்றுபேர் இறந்துபோனார்கள் என கதை வருகிறது…..இத்தனைக்கும் நானும் சிலரும் கூட வெறுந்தரையில் தரையோடு தரையாக ஒட்டிக் கிடந்தோம். தலையை நிமிர்த்த முடியாத நிலை…….
எனக்கு சாவதுபற்றி பயம் ஏற்படவில்லை. காயப்பட்டு குற்றுயிராக துடிக்கவேண்டாமே என்ற மனநிலை…..
ஒருதடைவையாவது சாவதற்குள் கஜனை ( மகனை) பார்ததுவிடவேண்டும் என்கின்ற தவிப்பும் அவ்வப்போது எழுந்தது……
பாடசாலையில் என்னிடம் படித்த என்னை அளவற்று நேசிக்கிற பிள்ளைகளும் அவ்விடங்களில் திரிவதை காண்கிறேன்.  அவர்களின் அவலமான தோற்றம் என் நெஞ்சகத்தை பிறாண்டியது. அந்த என் குழந்தைகளுக்கு எதுவும் செய்யமுடியவில்லையே என்கின்ற துயரம் என்னைத் தின்றுகொண்டிருந்தது. 

“ பெரியம்மா…. எனக்கு செல்லுக்கு பயம்….. செல் அடிக்கவேண்டாம் எண்டு சொல்லுங்கோ……”
என்கிறான் ஒரு போராளிக்குடும்பத்தினரின் மூன்று வயதுக்குழந்தை. எங்கள் வீட்டருகே தான் அவர்களின் வீடு. 
அம்மா வெருட்டினால்…. அக்காவோ அண்ணனோ சண்டைபிடித்தால் என்னிடம் ஓடிவந்து முறையிடும் அந்தப் பிஞ்சு, இராணுவம் செல் அடிப்பதையும் என்னிடம் முறையிடுகிறது.
கையாலாகாதவளாக அவனை பார்க்கிறேன்….. வேறென்ன செய்யமுடியும்?!....
சற்றே கிட்டவாக துயிலும் இல்லம்….
போராளிகள் வித்துடல்களாக விதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்…..
ஒருபுறத்தே இறந்த சனங்களின் உடல்கள் மண்ணுக்குள் போகின்றன….
செல்களும் துப்பாக்கி குண்டுகளும் ஓய்வதாக இல்லை…… பேய் மழையாக அவை பொழிகின்றன…..அவற்றுக்குத்தான் உணர்வில்லையே……
சிறுவர் இல்லப் பிள்ளைகளுக்கான கழிப்பறை வாசலில் சனங்களும் தண்ணீர்ப் போத்தல்களுடன் நிற்கிறார்கள். கழிப்பறையின் தகரங்களில் வேகம் குறைந்த, துப்பாக்கிச் சன்னங்கள் விழுகின்ற ஒலி…..
வாழ்க்கையின் நீட்சி நிகழ்தகவாக தொடர்வதை உணர்கிறேன்….. மனதிலும் 
உடலிலும் சோர்வு….. 
ஆனாலும் ஏதோவொரு நம்பிக்கை அந்த நேரத்திலும் உள்ளிருந்து இயக்கிக்கொண்டிருக்கிறது….
இருளில் சனங்கள் நிழலுருவங்களாக நடமாடுகிறார்கள்…..
இரவு…..
பயங்கரமான வெடிப்புச் சம்பவம் ஒன்று……. செவிகளின் கேட்கும் வலுவினைக் கடந்து சகிக்க முடியாத பேரொலி தொடர்கிறது….
சம்பவம் நிகழும் இடத்திலிருந்த சனங்களை போராளிகள் அப்புறப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்….. 
நடப்பது என்னவென்று தெரியாமல் சனங்கள் அவலப்பட்டு ஓடுகிறார்கள்…..
குழந்தைகள் வீரிட்டு அலறுகின்றன….
“ வெடிக்கின்ற நேரம் ஓடக்கூடாது….. “ என்று என்னை தங்களுடனே அவர்கள் தக்கவைக்கிறார்கள். 
ஒவ்வொரு முறையும் வெடிப்பு ஒலி கேட்கின்ற போது, இதயம் தொண்டைக்குள்ளிருந்து வெளியே விழுந்துவிடப்போவதாக எத்தனித்துக்கொண்டிருந்தது. 
வெடிப்பின் உச்சமாக ஒரு பெரும் வெடியோசை……
அண்டம் அதிர்வது போல……. நாங்கள் இருந்த தறப்பாள் கூரையின் மீது ஏதேதோ விழுகின்றன….. 

என்னுடன் இருந்த குடும்பத்தினர் உண்டியல்சந்திக்கு போக முடிவு செய்கிறார்கள்….
“ நானும் வரட்டுமா….” என்று கேட்க மனது இடம்தரவில்லை. 
மீண்டும் ஆதரவற்றுப் போய்விடப்போகிறேனே என மனம் சொல்கிறது….
அவர்கள் தங்களை தயார் செய்ய, நான் அப்படியே எதுவும் தோன்றாமல் இருக்கிறேன்….
மனது சுமைகளின் அழுத்தம் தாங்காமல் வெடித்துவிடும் போல தெரிந்தது. 
அப்போது….
“ நீங்களும் எங்களோடை வாங்கோ ஆதியக்கா……. “ அந்தப் பெண் சொல்கிறாள். அவளும் ஒரு போராளி.( குழந்தை ஒன்றை சில மாதங்களுக்குமுன் பெற்றெடுத்திருந்தாள் அவள் ). 
ஒரு பையில் யாரோ தந்த பாவாடை சட்டையுடன், சிறிதளவு பணமும் சில அணிகலன்களும் என்னிடம் உடைமையாக  அப்போது இருந்ததன….. என்பையை இறுகப் பற்றியபடி போகிறேன்….
உண்டியல்சந்திக்கு போகும்வழியில் எறிகணைகள் விழ…..  சிதறி  ஓடுகிறோம்.....அந்த அமளி துமளியில் அந்தப் பையும் தொலைந்து போக….. வெறுமனே உயிர்ப்பிணமாக நடைப்பயணம் தொடர்ந்தது……

ஆதிலட்சுமி சிவகுமார்

முகநூல் 

Link to comment
Share on other sites

  • 2 months later...

அசாம் மாநிலத்தின் திங் (Dhing) ஊர் நெல் வயல்களால் ஆசிர்வதிக்கப்பட்ட பூமி, விவசாயத்தை தவிர வேறு சாயங்கள் பூசாத வெள்ளை மனது விவசாய குடும்பங்கள் நிறைந்த சிறிய கிராமங்களை உள்ளடக்கிய ஊரும் கூட. திங் நகரத்தின் ஏதோ ஒரு வீட்டு வாசலில், தன் எட்டாவது உதைக்கு பிறகு சற்று முனகி மெதுவாக இரும தொடங்குகிறது, ஒரு பழைய பஜாஜ் ஸ்கூட்டர். இந்தியாவின் முதல் செயற்கைகோள் ஆர்யபட்டாவை தாங்கிய ராக்கெட்டை விட அதிக புகையை கிளப்பியபடி நகரும் இந்த பஜாஜ் டப்பாவின் ஓட்டுநர் பெயர் சம்சுல் ஹக். ஜவஹர் வித்யாலயா பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர். ஆர்யபட்டா ராக்கெட் சரித்திரம் படைத்தது இவருக்கு நினைவில் இருக்குமா எனத் தெரியவில்லை, ஆனால் பஜாஜில் தான் மேற்கொள்ளும் இப்பயணம் புதிய சரித்திரத்தை உருவாக்கி இந்திய தடகள வரலாற்றில் ஒரு பெயரை பொன்னெழுத்துகளால் பொறிக்க போவது நிச்சயம் என தெரிந்திருக்கும். ஆம் THE GODDESS OF SPEED, இந்தியாவின் தங்க மங்கை ஹிமாதாஸின் திறமையை முதலில் கவனித்தவர் ஆசிரியர் சம்சுல் தான்.

ஹிமாதாஸின் தந்தையும் ஒரு விவசாயி, ஜவஹர் வித்யாலயா பி.டி மாஸ்டர் உங்கள பார்க்க வந்திருக்காரு என செய்தி வர, அரசு பள்ளி மாணவியாச்சே என் பொண்ணு, என்ன பிரச்னை பண்ணினாளோ என பதறி ஓடி வருகிறார்.

“சார் ! உங்க ஸ்கூல் பசங்கள அடிச்சிட்டாளா சார் ?" என எடுத்த எடுப்பில் அவர் ஆரம்பிக்க, 

இல்ல ! ஏன் கேக்குறீங்க ? என்று தயங்குகிறார் சம்சுல்.

"இல்ல, எப்பவுமே புட்பால் புட்பால்னு பசங்க கூட சேர்ந்து விளையாடும், கடைசில சண்டை போடும் .. "அதான் கேட்டான் என மழுப்புகிறார் தந்தை தாஸ்.

“சரி !! உங்க பொண்ணு வேற என்னெல்லாம் செய்யும் ? “.

அறையின் ஒரு ஓரத்தில் சேலை தலைப்பால் முகத்தை மூடியிருக்கும் ஹிமாவின் தாய் ஆர்வத்துடன் பேச ஆரம்பிக்கிறார். "புட்பால் விளையாடுவா, கபாடியும் நல்ல ஆடுவா சார், டிராக்டர் கூட ஓட்டுவா,  கொஞ்சம் பசங்க கூட சண்டை போடும்...ஆனா நல்ல பொண்ணு தான் சார் என இழுக்க” ..ஆமாம் சார் !! என கோரஸ் பாடுகிறார்கள் ஐந்து அக்காக்களும்.

“உங்க பொண்ணு ஓட்டத்தை நீங்க பாத்திருக்கீங்களா ? “

“பாத்திருக்கீங்க ளாவா ?காடு, மேடு, கழனி, வாய்க்கா வரப்புனு ஒடியே தான் இருக்கும், சொன்னா நம்ப மாட்டிங்க, பக்கத்து வீட்டுக்காரன் டாடா சுமோவை காட்டி வம்பிழுக்க அதையும் ஓடியே முந்தி ஜெயிச்சுட்டா சார், அடுத்த நாளே அவன் சுமோவையே வித்துட்டான், சமோசாக்கு பொறந்தவன் ! என கைவிரல்களில் நெட்டி முறிக்கிறார் அம்மா.

 "உங்க பொண்ணுகிட்ட அற்புதமான ஓட்ட திறமை இருக்கு, கவுகாத்தி டவுன்ல எனக்கு தெரிஞ்ச கோச் ஒருத்தர் இருக்கார், அங்க ஹிமா தங்கி பயிற்சி எடுத்துக்கிட்டா ஒரு பெரிய எதிர்காலம் அவளுக்கு இருக்கும். காமன் வெல்த், ஏசியன் கேம்ஸ்னு நிச்சயம் பெரிய பெரிய வெற்றிகள் பெற வாய்ப்பிருக்கு !!” 

“காம ..ஆசி .. ஒன்னும் புரியல.. என் பொண்ணு டிவில வருமா சார்.. அதைச் சொல்லுங்க ?

“டிவில வருமா..அம்மா !! உன் பொண்ணு இந்தியாவையே டிவி முன்னால உட்காரவே வைக்க போகுது...இந்தியக் கொடி உயரப் பறக்கும்போது இந்தியன் ஒவ்வொருத்தனையும் தலை நிமிர வைப்பாம்மா.. அனுப்பறீங்களா !! என ஆர்வத்துடன் பெற்றோர்களை பார்க்கிறார் ஆசிரியர் சம்சுல்.

குடும்பம் மொத்தமும் தந்தை தாஸை நோக்கி திரும்புகிறது. தனது ஓட்டக் கனவுகளை தன் வறுமைக்காக தியாகம் செய்து, விவசாயத்தை தொழிலாகத் தொடர்ந்த ஹிமாவின் தந்தை தாஸ், ஆசிரியரின் அருகில் வந்து கேட்கிறார். 

"கவுகாத்தில அந்த கோச் பேர் என்ன சார் ? “...

July 2018, பின்லாந்து நாட்டின் டேம்பே நகரம் வர்ண விளக்குகளால் ஒளிரும் இரவு, அதன் பெருமைகளில் ஒன்றான ராடினா அரங்கம் 158 நாடுகள் கலந்து கொள்ள 1462 போட்டியாளர்கள் பங்கேற்க என 2018 IAAF World U20 Championships போட்டிகளை கோலாகலமாக தொடங்குகிறது. நானூறு மீட்டர் ஓட்டம் தொடங்க இன்னும் சில விநாடிகள் உள்ள நிலையில் ஹிமாதாஸ் அரங்கில் நுழைகிறார். மற்ற நாட்டு வீரர்களை நோக்கி அவர்கள் நாட்டு ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். இந்தியாவிற்கு விளையாட்டு வீரர்கள் தான் பார்வையாளர்களும் கூட. இதைப்பற்றி  கவலைப்படாமல் ஹிமாதாஸ் பந்தயபாதையில் தயார் நிலையில் காத்திருக்கிறார். அவர் பார்வை ஒரு வருடத்திற்கு முன்பு பழக்கமாகிய SPIKE ஷூக்களின் மீது படர்கிறது, அதை தனக்கு அணிய பழக்கப்படுத்திய தன் பயிற்சியாளர் நிபுன் பக்கம் பார்வையை செலுத்துகிறார். ஆனால் நிபுன் உனக்கு முன்னால் இருப்பவர்களை கவனி என சைகை செய்கிறார். 

பந்தயபாதையின் முதலில் காத்திருப்பவர் ரோமானிய வீரர் ஆண்ட்ரியா மிக்கோல். முந்தைய போட்டிகளில் இருமுறை தங்கம் வென்றவர். அதற்கு அடுத்து காத்திருக்கும் டெய்லர் மேன்சன் அமெரிக்க கறுப்பின பெண், இயற்கையாகவே இரும்பு போன்ற உடலும், அதிகபட்ச ஸ்டாமினாவும்  கொண்டவர், அடுத்து மூன்றாமிடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லா கானலி, அமினோ ஆசிட் வஸ்துகள், ப்ரோட்டீன் பவுடர்கள் கொண்டு வெற்றிக்காகவே தயார் செய்யப்பட்ட உடல். இவர்கள் பெயர்களை சொன்னபின் “ஹிமா தாஸ் பிரம் இன்ட்யா அட் போர்த் பொசிசன்" என அறிவிப்பு வருகிறது. 400 மீட்டர் ஓட்டம். ஒரு நிமிடம் தான் ..சரியா சொல்வதானால் ஒரு நிமிடம் கூட இல்லை 52 நொடிகள் மட்டுமே. அதற்குள் மொத்த வாழ்க்கையும் மாறி விடும். ஹிமாதாஸிற்கு தெரியும், இந்தியா உறங்கி கொண்டிருக்கும் இந்த வேளை, தன் மொத்த கிராமமும் விழித்திருக்கும். டிவியில் பார்ப்பதற்கு மின்சாரம் இல்லை எனினும் என் அன்னை வானத்தை நோக்கி பிரார்தித்தபடி இருப்பாள் என்ற நினைவுகளினூடே, ஆல் செட் , கோ ! என துப்பாக்கி வெடிக்கிறது. இந்த ஓசைக்காகவே இத்தனை நாள் காத்திருந்த உடலின் தசைத் திசுக்கள் அசுரகதியில் உந்தி தள்ள வெடித்து கிளம்பும் தோட்டாவை போல விரைகிறார்கள் போட்டியாளர்கள். போட்டியின் வர்ணனையாளர் மிக உற்சாகமாக அறிவிக்கிறார். “Off they go, well !!! Lets keep a very close eye on himadas in lane four !!

10வது நொடி : ஆஸ்திரேலியாவின் 'எல்லா கானலி' முன்னேறுகிறார், ரசிகர்கள் அலறுகிறார்கள் .

19 வது நொடி : அமெரிக்காவின் 'டெய்லர் மேன்ஷன்' கானலீயை பின்னுக்கு தள்ளி முன்னேறுகிறார், அவருக்கு பின் ரோம்னியாவின் ஆண்ட்ரியா ஓடி வருகிறார்.வர்ணனையாளர் இவர்களை அறிவித்து விட்டு “Himados has gone for a conservative approach there என்கிறார். அடுத்த சில நொடிகளை ஆஸ்த்ரேலியாவும், அமெரிக்காவும் மாறி மாறி முன் வந்து பங்கிட்டு கொள்கிறார்கள்.

42 வது நொடி... இன்னும் 80 மீட்டர் மட்டுமே கடப்பதற்கு மீதம் உள்ளது. ஒரு ஆச்சர்யம் நிகழ்கிறது. இந்தியாவின் ஹிமாதாஸ் நான்காம் இடத்தில் இருந்து தன் உயிரின் மொத்த சக்தியையும் திரட்டி படபட வென அரங்கம் அதிர அழுத்துகிறார்.  
 
45 வது நொடி : “ எம் பொண்ணு டாட்டா சுமோ வேகத்தையே மிந்துனவ சார்.. கவுகாத்தி என்ன கடல் தாண்டியும் ஜெயிப்பா “

47 வது நொடி : “விவசாயம் கஷ்டம் தான், அதைவிட கஷ்டம் வறுமை சார், அதுக்காகதான் என் கனவை விட்டு கொடுத்தேன்..எம் பொண்ணாவது நல்லா வரணும்.. அவ நிச்சயம் வருவா ..சார் “
 
50 வது நொடி : ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ருமேனியா என ஆண்டைகள் அனைத்தும் பதறித் தவிக்கிறார்கள். காரணத்தை வர்ணனையாளர் உலகிற்கு அறிவிக்கிறார்.

Here comes , Here she comes ! Hima doss,  the indian is certain that she can see the line.. She can see history.. Indians never won any medal in the track events, but…but..das has done it here.. brilliant..really brilliant victory ..என அலறும் அந்த நொடி வெற்றி கோட்டை முதல் ஆளாக கடக்கிறார் ஹிமா தாஸ். அரங்கம் ஆர்ப்பரிக்கிறது. கடைசி எட்டு நொடிகளில் இந்தப் பெண் காட்டிய உழைப்பை, உறுதியை எண்ணி மெய் சிலிர்க்கிறது. இந்திய வீரர்கள் கட்டித் தழுவிக் கொள்கிறார்கள். சர்வதேச ஓட்ட போட்டிகளில் இந்தியாவின் முதல் தங்கத்தை பெற்று தந்துள்ளார் ஹிமா தாஸ். தங்க மெடலை அவர் பெறும் தருணம் நம் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. 

ரோமானிய மற்றும் அமெரிக்கா கொடிகள் இடமும் வலமும் இருக்க, இந்திய மூவர்ண கொடி, என் தேசக் கொடி அவைகளை தாண்டி உயர உயர மேலே செல்கிறது. ஹிமா தாஸின் கண்களில் இருந்து கண்ணீர் கன்னங்களை தாண்டி கழுத்தில் இருக்கும் தங்க விருதை நனைக்கிறது, தேசிய கீதம் முழுவதும் வழிந்த இடைவிடாத கண்ணீர், பார்க்கும் ஒவ்வொரு இந்தியனையும் உணர்ச்சி பிழம்பாக மாற்றுகிறது. இந்தியாவின் ஒரு மூலையில் இருந்து நம் பசிக்கு உணவளித்த விவசாய குடும்பம், இந்தியன் ஒவ்வொருவரின் ஆயுளுக்கும் பெருமைப்பட ஒரு வரலாற்று வெற்றி உணர்வையும் இப்போது அளித்திருக்கிறது. ஒரு சாமான்ய விவசாயியின் பிள்ளை சரித்திரம் படைத்த இத்தருணத்தில் பெருமிதம் கொள்வோம். நம் வீரர்களை கொண்டாடுவோம். ஜெய்ஹிந்த்.

 

ஹரிகரசுதன் முகநூல் 

தமிழகத்தின் பாதி பரப்பளவு கூட இல்லை அந்த நாடு ..

சென்னை மக்கள் தொகையில் பாதி கூட இல்லை அந்த நாட்டின் மக்கள் தொகை 

நாட்டின் ஒரு ஆண்டின் மொத்த பொருளாதாரம் நம்மூரின் ஒரு மிக பெரிய ஐடி கம்பெனியின் ஓராண்டின் அளவு தான் இருக்கும்..

சுதந்திர நாடாக பிரகடனம் செய்து முப்பது ஆண்டுகள் கூட ஆகவில்லை.. 

போரில் சிதைந்து, கடந்த பத்து பதினைந்து வருடங்களாக தான் நிமிர்ந்துள்ளது..

ஆனால் #குரோசியா உலகின் மிகப்பெரிய ஆயுதம் ஏந்தா போரில் காட்டிய வீரம் தனித்துவம் sportsmanship வேற லெவல்.

உயிரை கொடுத்து ஆடினார்கள் என்கிற சொலவடை க்கு ஏற்ப ஒரு விளையாட்டு... யாரும் பெரிதாக எதிர்ப்பார்க்காமல், இந்த ரவுண்டில் வெளியேறுவார்கள், அடுத்ததில் என்று எதிர்பார்க்க, இறுதி வரை நெஞ்சை நிமிர்த்தியபடி வந்து சேர்ந்தார்கள்.

குரோசிய அதிபர் திருமதி. கோலிண்டா க்ராபர் (Kolinda Grabar K ), தன் நாடு விளையாடிய ஒவ்வோரு ஆட்டத்திற்கும் அரசாங்க செலவில்லாமல் தனது சொந்த செலவில் (அந்த நாட்களுக்கு சம்பளம் கோராமல் விடுப்பு எடுத்து கொண்டு, குரோசிய அணியின் சீருடையில் வந்து) அணியை உற்சாக படுத்தியதும்.. நேற்று பரிசளிப்பு விழாவில், மழையும் பாராமல், கண்ணீருடன் இருக்கும் ஒவ்வொரு வீரரையும் கட்டியணைத்து பாராட்டியதும்.... அழகான கவிதைகள் மத்தியில், ஒரு மிக அழகான கவிதை.. ஒரு நாட்டின் தலைவி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான எடுத்து காட்டு...  ப்ரெஞ்சு வீரர்கள் ஒவ்வொருவரையும் அதே வாஞ்சையுடன் பாராட்டியது அவரின் பெரும் மனிதத்தை மான்பை எடுத்து காட்டுகிறது...
இத்தகைய தலைவர் தலைவிகள் இருந்தாலே எத்தனை காயங்கள் கொண்ட நாடும், விரைவில் நிமிர்ந்து வெற்றி நடை போடும்.

இந்த ஆண்டின் மிக அழகான புகைப்படமாக இதை கருதலாம்..

அழுதபடி வரும் குரோசிய அணி கேப்டன் லுகா மோட்ரிக்கை (Luka Modric),  கண்ணீருடன் கட்டியணைத்து ஆறுதல் கூறும் அதிபர்..

இத்தகைய தாய்மை க்காக தலைவிக்காக அடுத்த முறை களத்தில் இறங்கும் போது, இதை விட வெகுண்டு வெற்றியை பறிக்க தோன்றும்.

Well played Croatia... Hats off... Perhaps you've proved again, Victory is not about just winning.

- இரா. இராஜகோபாலன் 
#Croatia 
#KolindaGK
#Modric
#FIFAWorldcup

Link to comment
Share on other sites

சூர்யா நடித்து செல்வராகவன் இயக்கும் படத்திற்காக இன்று பொள்ளாச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தேன். 
அங்கே காத்திருக்கும் போது 
“நீங்கள் பொன்வண்ணன் தானே ?”
என சிறுவயதில் ஒரு சகோதரர் அறிமுகமானார்.

அவர் என்னிடம் சினிமாவை பற்றி எதாவது கேட்பார் என எதிர்பார்தேன்.
ஆனால் அவர் கேட்ட முதல் கேள்வி சினிமாவை பற்றியல்ல ...
“காவிரி பிரச்சனை என்னாச்சு சார் ?”என்பதுதான்.
நான் ஆச்சரியத்துடன் ...
“நீங்க வெளிநாட்டிலிருந்து வருகிறீர்களா?என்றேன்.
இல்லை சார் ...பூனே 
அங்கே என்ன பன்றீங்க...?
ராணுவ பயிற்சியில் இருக்கேன் ..,,
-சுவராஸ்யமானேன்....
எந்த ஊர் நீங்க..?
பூர்வீகம் ராம்நாடு...!ரொம்பவருஷமா கோவையில் சிறு ஹோட்டல் (காந்திபுரம் சிவானந்தா காலனியில் முத்து ஹோட்டல் ) நடத்தி வருகிறோம்.
ஒருமாத விடுப்பில் ஊருக்கு போகிறேன் “என்றார்.
எப்படி ராணுவ ஆசை வந்தது..?
“அப்பா ஆசைப்பட்டார்..அவருக்கு சிறுவயதில் காலில் அடிபட்டதால் ராணுவத்தில் சேரமுடியல..! அதனால
என்னை உடுமலை பேட்டை அமராவதி “சைனிக் ஸ்கூல்ல” சேர்ந்தார் .அவரது ஆசைய நிறைவேற்ற என்னை கஷ்டப்பட்டு படிக்கவச்சார்.

“கனவுகள்தான் லட்சியங்களாகிறது “
என நினைத்துக்கொண்டே ..தொடர்ந்து
ராணுவ பயிற்சி அனுபவங்களை கேட்டேன்.

“4 வருடம் காலம்....பயிற்சிக்கு பலமாநிலத்திலிருந்து வந்தவர்கள்தான் அதிகம்.
1800 பேரில் தமிழக இளைஞர்கள் 30 பேர்தான்.
மற்ற மாநிலத்தவர் எல்லோரும் அவர்கள் தாய்மொழியை பேசினாலும் இந்தியையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் ஆனால் நான் ஆரம்பத்தில் இந்தி தெரியாமல் கஷ்டப்பட்டேன் ..
காலை 5மணியிலிருந்து இரவு 10 மணிவரை பலவிதமான வகுப்புகள்.....”........,
என அனைத்து ராணுவ பயிற்சிகளையும்  கூற நான் சுவராஸ்யமாக கேட்டு தெரிந்து கொண்டேன்.....!

..”தமிழகத்தில் ராணுவத்திலிருப்பவர்களுக்கு பெண் கொடுக்க யோசிக்கறாங்க.....வடமாநிலத்தில் போட்டி போட்டு குடுக்கிறார்கள் சார்..!என்றார் 

அவருடன் பேசிவந்த நேரத்தில் என்னுடன் புகைப்படம் எடுக்கவேயில்லை ...ஆச்சரியப்பட்டு கேட்டேன்....
...”பயிற்சிபள்ளியில் செல் போனுக்கு அனுமதியில்லை சார்..! ஆரம்பத்தில் கஷ்டமா இருந்துச்சு..
ஆனா இப்ப நிம்மதியா இருக்கு...மனிதர்களுடன் முகம் பார்த்து பேச நிறைய நேரம் கிடைக்கிறது “ என சிரித்தார்.......உண்மைதான்...
தொடர்ந்த விமான பயணத்தில் -தமிழ்நாட்டு அரசியல் நிகழ்வுகள் ..காவிரி பிரச்சனை...அனைத்தையும் அவருக்கு விவரித்தேன்.

என் போனில் அவருடன் புகைப்படம் எடுத்து, கனவுகளை நனவாக்கிய அவரின் “தந்தைக்கு” அனுப்பிவிட்டு ,
நிறைவான விமானபயணத்தை நிறைவுசெய்துவிட்டு....

இதோ,பொள்ளாச்சியை நோக்கி......

 

 

இயக்குனர்/நடிகர் பொன்வண்ணன் முகநூல் 

Link to comment
Share on other sites

On 5/10/2018 at 5:15 PM, அபராஜிதன் said:

அன்பானவர்களே….
முள்ளிவாய்க்கால் மனித அவலத்தின்போது…. அந்த நெருப்பின் தணலில் இருந்து மீண்டுவந்த உயிர்களில் எனது உயிரும் ஒன்று…. அந்த உயிர் வேகிய அவலத்தின் ஒருதுளியை – எனது பட்டுணர்வை – இங்கு பதிகிறேன். இது என் பணி. 
இதனை வாசித்து உணர்பவர்கள் முடிந்தளவுக்கு இதனை  உங்கள் பக்கத்தில் பகிர்ந்து உதவுங்கள். தனிப்பட்ட முறையில்  எனக்காக அல்ல இது .
இப்படித்தான் ஒவ்வொருவரும் துடித்தோம் என்பதை உலகறியட்டும். அவ்வப்போது என் நினைவுத்துளிகளை  எழுதுவேன் .
*********************************************

2009 மே மாதத்தின் 
மறக்க முடியாத அந்த நாட்கள் மனதில் காட்சிகளாக விரிகின்றன…..
இரணைப்பாலை என்கிற இடத்திலிருந்து ….. வலைஞர்மடம் என்கின்ற கடலோரக்கிராமத்திற்கு வந்துசில வாரங்கள் இருந்தோம். வலைஞர்மடம் தேவாலயம் கூப்பிடு தொலைவில் இருந்தது. மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில்…. புலராத பொழுதொன்றில்...... இராணுவம் பேயாட்டம் போட்டதில் அங்கிருந்து வெளியேறவேண்டிய நிலை ஏற்படுகிறது….
இன்றைய நாட்களில் முள்ளிவாய்க்காலின் ஒரு பகுதியில் ஒரு  போராளிக்குடும்பத்தினருடன் இருக்கிறேன்..... சுற்றி நிகழ்பவை எதுவும் நல்லதாக இல்லை….. எல்லாச் சனங்களும் குழம்பிக்கிடந்தார்கள்.

எனக்கு நான் மட்டுமே என்று ஆகிப்போன சூழ்நிலை…… 
இனி யாரையும் யாரும் கவனிக்க இயலாது என்றாகிவிட்டதை நான் புரிந்துகொள்கிறேன்……
உலகின் கொடும்போர்கள் எல்லாம் எப்படி நிகழ்ந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தது மனது. 
இதற்குள் எனது துணைவர் இரண்டு தடைவைகள் காயப்பட்டிருப்பதாக தகவல் அறிகிறேன். அதே இடத்தில் அவருடன் நின்ற போராளிகள் இருவர் வீரச்சாவு அடைந்துவிட்டார்கள்…. இருவருமே திருமணமானவர்கள். அவர்களுக்கு குழந்தைகளும் இருக்கின்றார்கள். 
அவர்களில் ஒருவர்…..அவரைக் காணும்போதெல்லாம் அவரது கழுத்தை கட்டிக்கொண்டு இறங்க மறுக்கும் அவரது மூன்று வயது அன்புப் பெண்குழந்தையை எண்ணி என் மனம் துவள்கிறது...
கண்முன்னே வீழுகின்ற  பல்வகைக் குண்டுகளில் சனங்கள் காயப்பட்டும் இறந்துகொண்டும் இருக்கிறார்கள்…… எவரது உயிருக்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. உயிர்கள் அவ்வளவுக்கு மலினப்பட்டிருந்தன. 
நான் குழந்தைகளை கடவுளராக நேசிக்கும் இயல்புடையவள்….. அந்தக் குழந்தைகள் உணவின்றி…. பயத்துடன் விறைத்து உறைந்து வாழும் காட்சியை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை…..
நான் தங்கியிருந்த பகுதியில் சிறுவர் இல்ல குழந்தைகள் கொஞ்சப்பேர் இருந்தார்கள். அவர்களின் தற்காலிக பாதுகாப்பு அகழியில் ஒருநாள் இரவு அவர்களுடன் நானும் தங்கினேன்….. வெளியே  பல்குழல் பீரங்கிகளின் செல்கள் அதிர்ந்துகொண்டிருந்தன. 
மறுநாள் நடுச்சாமத்தில் திடீரென உக்கிரமான செல் வீச்சு.  பாதுகாப்பு அகழிக்கு செல்வதற்கு போதியகாலம் இல்லை….நடப்பது நடக்கட்டும் என நிலத்தில் கிடக்கிறோம்…. செவிகள் கிழிய கிட்டவாக ஒரு செல்விழுகிறது….
எங்கள்மேல் ஏதோ சரசரவென கொட்டுகிறது…..
கூக்குரல்களும் கதறல்களும் நடுங்க வைக்கின்றன…. 
அந்த பாதுகாப்பு அகழியின் ஒருபக்கம் சிதைவடைந்துவிட…. அருகே வெளியில் படுத்திருந்த ஓர் தாய், பெண்பிள்ளை உட்பட மூன்றுபேர் இறந்துபோனார்கள் என கதை வருகிறது…..இத்தனைக்கும் நானும் சிலரும் கூட வெறுந்தரையில் தரையோடு தரையாக ஒட்டிக் கிடந்தோம். தலையை நிமிர்த்த முடியாத நிலை…….
எனக்கு சாவதுபற்றி பயம் ஏற்படவில்லை. காயப்பட்டு குற்றுயிராக துடிக்கவேண்டாமே என்ற மனநிலை…..
ஒருதடைவையாவது சாவதற்குள் கஜனை ( மகனை) பார்ததுவிடவேண்டும் என்கின்ற தவிப்பும் அவ்வப்போது எழுந்தது……
பாடசாலையில் என்னிடம் படித்த என்னை அளவற்று நேசிக்கிற பிள்ளைகளும் அவ்விடங்களில் திரிவதை காண்கிறேன்.  அவர்களின் அவலமான தோற்றம் என் நெஞ்சகத்தை பிறாண்டியது. அந்த என் குழந்தைகளுக்கு எதுவும் செய்யமுடியவில்லையே என்கின்ற துயரம் என்னைத் தின்றுகொண்டிருந்தது. 

“ பெரியம்மா…. எனக்கு செல்லுக்கு பயம்….. செல் அடிக்கவேண்டாம் எண்டு சொல்லுங்கோ……”
என்கிறான் ஒரு போராளிக்குடும்பத்தினரின் மூன்று வயதுக்குழந்தை. எங்கள் வீட்டருகே தான் அவர்களின் வீடு. 
அம்மா வெருட்டினால்…. அக்காவோ அண்ணனோ சண்டைபிடித்தால் என்னிடம் ஓடிவந்து முறையிடும் அந்தப் பிஞ்சு, இராணுவம் செல் அடிப்பதையும் என்னிடம் முறையிடுகிறது.
கையாலாகாதவளாக அவனை பார்க்கிறேன்….. வேறென்ன செய்யமுடியும்?!....
சற்றே கிட்டவாக துயிலும் இல்லம்….
போராளிகள் வித்துடல்களாக விதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்…..
ஒருபுறத்தே இறந்த சனங்களின் உடல்கள் மண்ணுக்குள் போகின்றன….
செல்களும் துப்பாக்கி குண்டுகளும் ஓய்வதாக இல்லை…… பேய் மழையாக அவை பொழிகின்றன…..அவற்றுக்குத்தான் உணர்வில்லையே……
சிறுவர் இல்லப் பிள்ளைகளுக்கான கழிப்பறை வாசலில் சனங்களும் தண்ணீர்ப் போத்தல்களுடன் நிற்கிறார்கள். கழிப்பறையின் தகரங்களில் வேகம் குறைந்த, துப்பாக்கிச் சன்னங்கள் விழுகின்ற ஒலி…..
வாழ்க்கையின் நீட்சி நிகழ்தகவாக தொடர்வதை உணர்கிறேன்….. மனதிலும் 
உடலிலும் சோர்வு….. 
ஆனாலும் ஏதோவொரு நம்பிக்கை அந்த நேரத்திலும் உள்ளிருந்து இயக்கிக்கொண்டிருக்கிறது….
இருளில் சனங்கள் நிழலுருவங்களாக நடமாடுகிறார்கள்…..
இரவு…..
பயங்கரமான வெடிப்புச் சம்பவம் ஒன்று……. செவிகளின் கேட்கும் வலுவினைக் கடந்து சகிக்க முடியாத பேரொலி தொடர்கிறது….
சம்பவம் நிகழும் இடத்திலிருந்த சனங்களை போராளிகள் அப்புறப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்….. 
நடப்பது என்னவென்று தெரியாமல் சனங்கள் அவலப்பட்டு ஓடுகிறார்கள்…..
குழந்தைகள் வீரிட்டு அலறுகின்றன….
“ வெடிக்கின்ற நேரம் ஓடக்கூடாது….. “ என்று என்னை தங்களுடனே அவர்கள் தக்கவைக்கிறார்கள். 
ஒவ்வொரு முறையும் வெடிப்பு ஒலி கேட்கின்ற போது, இதயம் தொண்டைக்குள்ளிருந்து வெளியே விழுந்துவிடப்போவதாக எத்தனித்துக்கொண்டிருந்தது. 
வெடிப்பின் உச்சமாக ஒரு பெரும் வெடியோசை……
அண்டம் அதிர்வது போல……. நாங்கள் இருந்த தறப்பாள் கூரையின் மீது ஏதேதோ விழுகின்றன….. 

என்னுடன் இருந்த குடும்பத்தினர் உண்டியல்சந்திக்கு போக முடிவு செய்கிறார்கள்….
“ நானும் வரட்டுமா….” என்று கேட்க மனது இடம்தரவில்லை. 
மீண்டும் ஆதரவற்றுப் போய்விடப்போகிறேனே என மனம் சொல்கிறது….
அவர்கள் தங்களை தயார் செய்ய, நான் அப்படியே எதுவும் தோன்றாமல் இருக்கிறேன்….
மனது சுமைகளின் அழுத்தம் தாங்காமல் வெடித்துவிடும் போல தெரிந்தது. 
அப்போது….
“ நீங்களும் எங்களோடை வாங்கோ ஆதியக்கா……. “ அந்தப் பெண் சொல்கிறாள். அவளும் ஒரு போராளி.( குழந்தை ஒன்றை சில மாதங்களுக்குமுன் பெற்றெடுத்திருந்தாள் அவள் ). 
ஒரு பையில் யாரோ தந்த பாவாடை சட்டையுடன், சிறிதளவு பணமும் சில அணிகலன்களும் என்னிடம் உடைமையாக  அப்போது இருந்ததன….. என்பையை இறுகப் பற்றியபடி போகிறேன்….
உண்டியல்சந்திக்கு போகும்வழியில் எறிகணைகள் விழ…..  சிதறி  ஓடுகிறோம்.....அந்த அமளி துமளியில் அந்தப் பையும் தொலைந்து போக….. வெறுமனே உயிர்ப்பிணமாக நடைப்பயணம் தொடர்ந்தது……

ஆதிலட்சுமி சிவகுமார்

முகநூல் 

என்னை மிகவும் பாதித்த வாசிப்பு இது....., அந்நேரத்தில் அங்கிருந்த ஒவ்வொருவருக்காகவும் மனம் பிரார்திக்கிறது. அம்மக்களிற்கான எமது சமகால அரசியலை பார்க்கும் போது நாம் எல்லாம் மனிதர்களா எனும் வினா எழுகிறது!

Link to comment
Share on other sites

எங்கள் ஆய்வகத்தில் இந்திய ராணுவத்திற்குத் தேவையான குண்டு துளைக்காத ஆடைகள் மட்டும் தலைக்கவசத்தை மேம்படுத்தக்கூடிய ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலம் அது. ஆய்வு நிதி அளித்திருந்த மத்திய அரசின் பாதுகாப்பு நிறுவனத்தின் சார்பில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை பிராஜக்ட் டைரக்டர் நேரில் வந்து ஆய்வு செய்வார். அந்த வார ஞாயிறு முக்கியமான சோதனை செய்ய வேண்டிய நாள். அதற்கு முன்னால் பொருளின் தன்மை, இயந்திரவியல் பண்புகள் என எல்லாவித சோதனைகளும் முடிந்திருந்தன. கடைசியாக ரியல் லைப் டெஸ்ட். ஆள் சந்தடியில்லாத ஒரு பிரதேசத்தை தேர்வு செய்திருந்தோம். வேறொன்றுமில்லை, போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் இயந்திரத் துப்பாக்கிகளால் நாங்கள் தயாரித்த ஆடைகள், தலைக்கவசத்தை சுட்டு பரிசோதிப்பார்கள். எப்படி தாங்குகிறது என. பொருளின் எடையும் குறைவாக இருக்க வேண்டும். தாங்குதிறனும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆய்வு. இதற்காக பலவித காம்போசிட்களை உபயோகப்படுத்தி இருந்தோம்.

அந்த நாளும் வந்தது. சென்னையில் உள்ள ஒரு ராணுவ மையத்தில் இருந்து இயந்திரத் துப்பாக்கிகளும் வந்திறங்கின. சில சோதனைகளுக்குப் பிறகு பிராஜக்ட் டைரக்டரிடம், இது இந்த மெட்டீரியல், இந்த காம்போசிசன், இவ்வளவு கியூரிங் டைம், டென்சைல் இவ்வளவு இருந்தது, பிரிட்டில் அதிகமா இருக்கு, டப்னெஸ் குறைவு, அதனால இதை மாற்றி ட்ரை செய்தோம் என அவரிடம் தெரிவித்துக் கொண்டிருந்தேன். பின் மதிய உணவு நேரத்திலும் விவாதம் நடந்து கொண்டேயிருந்தது, திரும்பவும் பீல்டுக்கு வரும்பொழுது ஒரு ஆசை வந்தது. பிரபலமான ஏ கே 47ஐ தூக்கிப் பார்க்க வேண்டும் என. அவரிடம் சொன்ன உடன் சிரித்துக் கொண்டே கோ அஹேட் என்றார். 

ஏழெட்டு துப்பாக்கிகள் இருந்தன. தூக்குறது தூக்குறோம் நல்ல பீஸா தூக்குவோம் என்று தேடிப்பிடித்து ஒன்றை எடுத்து தூக்கிப் பார்த்தேன். அவர் சிரித்தார். எதற்கு என்று கேட்டேன். யாரை அழைத்து வந்து உங்களுக்குப் பிடித்த ஒன்றை இதில் இருந்து எடுங்கள் என்று சொன்னாலும் இதைத்தான் எடுப்பார்கள், என்ன விசேஷம் என்றால் இதுதான் இருப்பதிலேயே பழையது என்றார். இது ஒரிஜினல் ரஷ்யன் மேக். மீதம் எல்லாம் நாம் அவர்களிடம் டிசைன் வாங்கித் தயாரித்தது என்றார். ஆச்சரியத்துடன் அதை திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்த என்னிடம் இதென்ன பிரமாதம் முதன் முதலில் 47ல் தயாரிக்கப்பட்ட ஏ கே 47 களே இன்னும் நன்றாய்த்தான் உள்ளன என்றார். பின்னர் பேச்சு ரஷ்யன் டெக்னாலஜி பற்றி திரும்பியது. ரஷ்யர்களிடம் இருந்து நாம் வாங்கிய துப்பாக்கிகள், பீரங்கிகள் எல்லாமே நம்மை எந்த சூழ்நிலையிலும் கைவிடாதவை என்றார். ரஷ்ய டாங்குகளில் 12 ஸ்பீட் கியர் பாக்ஸ் ஒன்று இருக்குமாம். அது ஹைட்ராலிக் கியர் பாக்ஸ். முக்கால் படி உழக்கு பார்த்திருக்கிறீர்களா அந்த அளவில் தான் இருக்குமாம். சிக்கலாக வடிவமைக்கப்பட்ட ஏகப்பட்ட போர்ட்கள் கொண்டது அது. அந்த டிசைன் முடிந்ததும் அந்த பொறியாளருக்கு மனச்சிதைவே வந்துவிட்டதாம். பயிற்சி முடிந்து வரும் டிரைனி ஆபிசர்கள் அந்த டேங்கில் பர்ஸ்ட் கியர் போட்டால் தான் அவரை ஆபிசராகவே ஏற்றுக் கொள்வார்களாம். உடல் உறுதியும் வேண்டும், இலாவகமும், டைமிங் சென்ஸும் வேண்டும் அதற்கு, 

ரஷ்யத் துப்பாக்கிகளின் நீடித்த உழைப்பிற்கு முக்கிய காரணம் அவர்களது மெட்டலர்ஜி. நம் இந்தியப் உலோகங்களை, ஒரு உபயோகத்திற்கு என்றால் என்ன இயந்திரவியல் பண்புகள் தேவையோ அதற்கேற்ப தயாரிப்பார்கள். ஆனால் ரஷ்யர்கள் அதன் மைக்ரோ ஸ்ட்ரக்ட்சர் வரை யோசிப்பார்கள். மூலக்கூறுகள் எப்படி விரவி இருக்க வேண்டும், அதற்கு எப்படி வெப்ப்படுத்தி குளிர்விக்க வேண்டும் என அடிவரை போவார்கள். நாம் அவர்களுடைய டிசைனை வாங்கி அப்படியே தயாரித்தாலும் அவர்களின் தரத்தை நெருங்க முடியாததற்கு இதுவும் ஒரு காரணம். அவர்களின் குளிர் காலம் உலகறிந்தது. அந்த சூழலிலும் ஒரு மைக்ரான் அளவு கூட உலோகம் சுருங்கிவிடக் கூடாது எனத் திட்டமிடுவார்கள். அந்த அளவு நுணுக்கமாக போவதால் நம் எல்லையில் நிலவும் குளிரை எளிதாக சமாளிக்கும் அவர்கள் இயந்திரங்கள்.

நான் கூட கல்லூரியில் படிக்கும்போது நினைப்பதுண்டு. அமெரிக்க, ஜப்பானிய, ஜெர்மானிய பொருட்கள் நம்மிடையே அதிகம் புழங்குகின்றன. ஆனால் ரஷ்யத்தயாரிப்புகள் என்று எதுவும் நாம் உபயோகப்படுத்தியதில்லையே என. எங்கள் தெருவில் எஸ் யூ சி ஐ என்ற கம்யூனிச உறுப்பு அமைப்பின் அலுவலகம் இருந்தது. 80களில் அங்கு ரஷ்யப் புத்தகங்கள் வரும். டபுள் டெம்மி சைஸில் இருக்கும் அந்தப் புத்தகத்தின் தாள்களைத்தான் கட்டுரை நோட்டு தவிர மற்ற அனைத்திற்கும் அட்டை போட பயன்படுத்துவேன். நான் அறிந்து உபயோகப்படுத்திய ரஷ்யத் தயாரிப்பு என்றால் அது ஒன்றுதான். அந்த புத்தகங்களை சொந்தக்கார பையன்கள் அடுத்த ஆண்டு வாங்கி உபயோகித்தாலும் அட்டை கிழியாமல், மங்காமல் இருக்கும். அவையெல்லாம் வர்ஜின் பேப்பர்கள். நேரடியாக மரக்கூழில் செய்யப்படுவது. இப்போது நாம் உபயோகிக்கும் காகிதங்கள் பெரும்பாலும் இந்த வர்ஜின் காகிதம், வைக்கோல் போன்றவற்றை அரைத்து தயாரிப்பது. அந்த பேப்பர் தவிர ரஷ்யத் தயாரிப்பு எதுவும் உபயோகப்படுத்தியதில்லை. மது அருந்தும் பழக்கமிருந்தால் வோட்கா உபயோகித்திருக்கலாம். பின்னர் நான் கோவையில் ஒரு பம்ப் நிறுவனத்தில் பணியாற்றிய போதுதான் ரஷ்யத் தயாரிப்புகள் நம்மிடையே அதிகம் புழங்காததன் காரணம் அறிய முடிந்தது. அந்நிறுவனத்தின் டிசைன் பிரிவில் இருந்த போது, ஒரு பம்ப் டிசைனில் பிரச்சினை வந்தது. வழக்கமான போல்ட் போட்டால் பம்பின் மேல் மூடி டிசைனை மாற்றியாக வேண்டிய கட்டாயம். ஏற்கனவே அதற்கான டை எல்லாமே தயாராக இருந்தது. அந்த டிசைன் தான் நல்ல லுக்காக இருக்கிறது என எல்லோரும் ஏற்றுக்கொண்ட டிசைனும் ஆகும். உடனே நான் ஒரு யோசனை சொன்னேன். நார்மல் போல்ட்டுக்கு பதிலாக அலன் போல்ட் போடலாம் என்று (அதனுடைய தலை அளவு வழக்கமான போல்டை விட குறைவாக இருக்கும்). உடனே என மேனேஜர், நீ பிராக்டிகலா யோசிக்க மாட்டேன் என்கிறாய் என்றார். நம்ம பம்ப் கிராமப்பகுதிகளில் அதிகம் விற்கும். அங்க ஒரு ரிப்பேர்னா அவங்களே பார்ப்பாங்க, இல்லேன்னா ஒரு மெக்கானிக்க கூப்பிடுவாங்க, அவங்ககிட்ட இந்த அலன் கீ எல்லாம் இருக்காது (அலன் போல்டை திருக உதவுவது) நம்மளத் திட்டுவான். அடுத்த ஆள் யோசனை கேட்டா அத வாங்காதேம்பான். நம்ம பம்ப் சின்னப்பிள்ள கூட கழட்டி மாட்டுற மாதிரி இருக்கணும் என்றார். 

எழுபதுகளில் அளவைகள் எல்லாம் உலகம் முழுவதும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காக எஸ் ஐ யூனிட் சிஸ்டம் கொண்டுவரப்பட்டது. இப்போது ஸ்மார்ட் போன் சார்ஜர்கள் எல்லாம் ஒரே மாதிரியாக மாற்றப்பட்டதை இதற்கு உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட அடி, பவுண்ட், இஞ்ச் முறை இன்னுமே உலகம் முழுவதும் சில இயந்திரங்களில் பயன்படுத்தப்படுகிறது என்றாலும் (காற்றழுத்தம் – பி எஸ் ஐ – பவுண்ட்ஸ் பெர் ஸ்கொட்யர் இஞ்ச்) பெரும்பாலும் அவர்களும் எஸ் ஐ யூனிட்டிற்கு மாறிவிட்டார்கள். ஆனால் இரும்புத்திரை நாடான அப்போதைய ரஷ்யா தன் தயாரிப்புகளை உலகம் முழுவதிற்கும் பொதுவான அளவீடுகளில் தயார் செய்யவில்லை. பொது மக்களிடம் நேரடியாகப் புழங்கும் ஒன்றிற்கு மாற்று உபகரணங்கள் அரிதாக இருந்தால் அது எடுபடாது. இன்னொன்று அவர்கள் பெரிதாக எந்த சந்தையையும் குறி வைக்கவில்லை. அவர்கள் கம்யூனிச சிந்தனையும் அதற்கு ஒரு காரணம். அவர்கள் குறி வைத்தது பாதுகாப்பும் சம்பந்தப்பட்ட இயந்திரங்களே. அதற்கான வருமானமும் அதிகம். 

மெக்கானிக்கல், சிவில் பொறியாளர்களுக்கு அடிப்படையான சப்ஜெக்ட் என்பது ஸ்ட்ரெந்த் ஆப் மெட்டீரியல்ஸ். ஸ்டீபன் டிமோஷன்கோவ் என்ற ரஷ்யர் எழுதிய ஸ்ட்ரெந்த் ஆப் மெட்டீரியல்ஸ் புத்தகம் மிகப் பிரபலமானது. நாங்கள் கிண்டலாகச் சொல்வோம். தஸ்தவேஸ்கியும் டிமோஷன் கோவும் படிச்சாப் போதும். ஒன்னு வாழ்க்கைக்கு இன்னொன்னு பிழைப்புக்கு என்று. அந்த அளவிற்கு பொறியியல் பின்புலமிருந்தும் மெட்டலர்ஜியில் பிஸ்தாக்களாய் இருந்தும் ஒரு ரஷ்யன் காரோ, பைக்கோ நம்மிடையே புழங்காததற்கு காரணம் அவர்கள் தங்கள் எல்லையை பாதுகாப்பு உபகரணங்கள் என்று சுருக்கிக்கொண்டதும் பொது உடைமைச் சிந்தனையும் காரணம் எனலாம். 
ஆனால் அதே பொது உடைமை சிந்தனை கொண்ட சீனர்கள் பொருளாதாரமே பலம் என்று களத்தில் இறங்கிவிட்டார்கள். 

செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்டும் கூடங்குளத்தில் அவர்களது தொழில்நுட்பத்தில் நம்பி இறங்குகிறோம் என்றால் ரஷ்ய டெக்னாலஜியில் நாம் நம்பிக்கை வைத்திருப்பது தான். ஆனால் என்ன எல்லா ஸ்பேர் பார்ட்ஸும் அங்கிருந்து தான் வரவேண்டும்.

இன்னொரு ரஷ்யப் பொருளை உபயோகிக்க எவ்வளவு காலம் ஆகுமோ?

முரளி கிருஸ்ணன் முகநூல் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.