Jump to content

மாலைதீவும் சிறிலங்காவும்


Recommended Posts

மாலைதீவும் சிறிலங்காவும்

 

maldivesமாலைதீவு அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தாக்கம் சிறிலங்காவில் ஆட்சியைக் கைப்பற்றும் என ஆய்வாளர்களால் குறிப்பிடப்படும் சிங்கள பௌத்த பேரினவாதத்தை எச்சரிக்கைக்கு உள்ளாக்குகிறது.

நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகையால் எதேச்சாதிகார தலைவர் என்று வர்ணிக்கப்படுள்ள மாலைதீவு தலைவர் அப்துல்லா யமீன் அவர்கள் ஆட்சியில், நிர்வாக முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் மனிதஉரிமைக்கு எதிரான குற்றச்செயல்கள் அரசாங்கத் தரப்பால் நடத்தப்படுவதாக மேலைத்தேய  ஊடகங்களும் மனித உரிமை நிறுவனங்களும் முறைப்பாடுகளைச் செய்து வருகின்றன.

யமீன் அவர்களின் அரசியல் வரவு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் புதிய தளம்பல் நிலையை உருவாக்கியுள்ளது. இந்திய அரசியலில், 2015இல் இருந்து இந்து மேலாதிக்கவாதபாரதீய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

சுண்ணத்து இஸ்லாமிய மதவாத கலாச்சாரத்தை தன்னகத்தே கொண்ட  மாலைதீவு அரசியலில்  ஏற்பட்ட மாற்றத்தை சாதகமாகப் பயன்படுத்திய சீனத் தலைமை மாலைதீவுக்கு பொருளாதார உதவிகள் செய்வதற்கு முன்வந்தது.

ஜனநாயகத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இடையிலான தெரிவில் தனது நாட்டு மக்களுக்கு கூடுதலான நன்மை பயக்கக் கூடிய வகையில் பொருளாதார முன்னேற்றத்தை தாம் தெரிவு செய்ததாக நியாயம் தெரிவிக்கும் புதிய தலைவர் யமீன் அவர்கள், கூடுதலான சீன சார்பு கொள்கையைக் கடைப்பிடிப்பதாக மாலைதீவு எதிர்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

சிறிலங்கா எவ்வாறு சீனக் கடன்பளுவை அதிகரித்து அம்பாந்தோட்டைத் துறைமுகப் பகுதியில் 90 சதவீதத்தை சீனாவுக்குத் தாரைவார்த்துக் கொடுத்ததோ, அதேபோல, திருப்பி அடைக்க முடியாத சீன கடன்பொறிக்குள் மாலைதீவு  கொண்டு செல்லப்படுவதுடன் மாலைதீவு தீவுக்கூட்டத்தில் சுமார் 16 தீவுகளை சீனாவுக்கு திருப்பிச் செலுத்த முடியாத கடனுக்காக கொடுத்து விட்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு மாலைதீவு ஜனநாயக கட்சி தலைவர் மொகமட் நசீட் குற்றம்சாட்டி உள்ளார்.

நாட்டின் மேல்நீதிமன்றம் அரசியல் கைதிகளை விடுவிக்க அண்மையில் உத்தரவிட்டது. இந்த விடுதலை தனது ஆட்சியைக் குழப்புவதற்கெதிரான சதிதிட்டம் என்றும், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி என்றும் தேசிய தொலைகாட்சியில் தோன்றிய ஆட்சித்தலைவர் யமீன் நாட்டில் அவசரகால நிலையைப் பிறப்பித்தார்.

இது யுத்தபிரகடனமோ, தொற்றுநோய்களுக்கு எதிரான நடவடிக்கையோ அல்லது இயற்கை அழிவுக்கு எதிரான நடவடிக்கையோ அல்ல, இது அவை எல்லாவற்றிலும் மேலானது என்று ஆட்சி தலைவர் பிரகடனம்செய்தார்.

maldives

தலைநகர் மாலே இல் இராணுவம் குவிக்கப்பட்டு நீதிபதிகள் கைது செய்யப்பட்டனர், கடந்த ஐந்து வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களும் நாட்டின் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டின்  கீழ் கொண்டு வரப்பட்டனர்.

அதேவேளை சிறிலங்காவில் புகலிடம் தேடியிருக்கும் பிரதான எதிர்கட்சியான மாலைதீவு ஜனநாயக கட்சி தலைவரும் முன்னைநாள் ஜனாதிபதியுமான நசீட் அவர்கள்  மாலைதீவு பிரச்சினையில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் வகையில் இந்தியா தலையீடு செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் பிராந்திய வல்லரசுகளான சீன, இந்திய நாடுகளுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

நசீட் அவர்கள் மாலைதீவின் அரசியல் நிலைமையில்  இந்தியா தலையீடு செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தமையானது,- இந்திய பார்வையில் – 1988 ஆம் ஆண்டு சிறிலங்கா ஆயுதக்குழு ஒன்று மாலைதீவைக் கைப்பற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, இந்தியா “கற்றாளை நடவடிக்கை” என்ற பெயரில்ஆடிய நாடகத்தை பல இந்திய ஆய்வாளர்களுக்கும் நினைவுபடுத்தியது.

அதேபோல சிறிலங்காவில் இந்தியப் படைகள் தமிழ் மக்களை காப்பாற்றும் நடவடிக்கை என்ற பெயரில் உணவுப்பொதிகளை போட்ட சந்தர்ப்பமும் தொடர்ந்து  இந்திய இராணுவம் தரையிறக்கப்பட்ட சம்பவங்களும் இந்திய ஆய்வாளர்களின்  மீள் பார்வைக்கு வந்துள்ளது்

இவை இரண்டும் தேச இறையாண்மையை மீறும் செயலாகவே பார்க்கப்படுகிறது. இந்த இறையாண்மையை மீறும் செயற்பாடு இந்திய வரலாற்றில் ஏற்கனவே இடம்பெற்று இருப்பதால், மாலைதீவு அரசாங்கம் சீன உதவியைக் கோரும் நிலை ஏற்படக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது .

சீனாவின் அரச கட்டுப்பாட்டில் இயங்கும் பத்திரிகையான குளோபல் ரைம்ஸ், மாலைதீவில் இடம்பெற்று வரும் அரசியல் மாற்றம், சர்வதேச நியதிகளுக்கு  ஏற்ப உள்நாட்டு விவகாரமாக பார்க்கப்பட  வேண்டும் என்று அறிக்கை விட்டிருப்பதுடன், மாலைதீவு பிரச்சினைகளுடன் நேரடியாக விளையாடுவதை இந்தியா தவிர்த்து கொள்ள வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளது.

பொருளாதார ஏகாதிபத்திய கொள்கையினூடாக  சிறிய நாடுகளில் தனது பொருளாதார செல்வாக்கை செலுத்தி சீனா தெற்காசியப்  பிராந்திய பிடியை இறுக்கி வருவதாக இந்திய  ஊடகங்கள், குற்றம்சாட்டி உள்ளன.

சிறிலங்காவைப் போல மாலைதீவுகளும் சீனாவின் ஒரு  பாதை ஒரு சூழல் திட்ட முயற்சிகளுக்கு  ஏற்ற  ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் நிலையத்தைக் கொண்டுள்ளது. தனது எதிர்கால பொருளாதாரத் தேவையை நோக்கமாக கொண்டு மாலைதீவை தனது முழுக்கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதன் மூலம் இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஒரு நிரந்தர நிலையை எடுத்து கொள்ள சீனா முயற்சிக்கிறது.

மாலைதீவில் ஏற்பட்டிருக்கும்கொந்தளிப்பு அரசியலுக்கும் சிறிலங்காவில் இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல்களுக்குப் பின்பு ஏற்பட்டுள்ள அரசியல்  நிலைக்கும்  இடையில்  மிக நெருங்கிய தொடர்புகள் உள்ளன.

மாலைதீவின் மதவாதத்துக்கும் சிறிலங்காவின் பேரினவாதத்துக்கும் இடையில் உள்ள ஒற்றுமை- வேற்றுமைகள் குறித்து தொடர்ந்து அடுத்தவாரம் பார்க்கலாம்.

http://www.puthinappalakai.net/2018/02/22/news/29277

Link to comment
Share on other sites

http://www.kaakam.com/?p=941

மிகைப்படுத்தப்பட்ட ஆழ நோக்கற்ற குறைப்புரிதல்களும் உளவுநிறுவனங்களின் கருத்தேற்றங்களின் மூலம் வரும் ஊடகச் செய்திகளைக் கொண்டு புவிசார் அரசியல் குறித்த தவறான பார்வைகள் இருக்கின்றன. இந்து மா கடலில் புவிசார் அரசியலில் என்னென்ன சித்து விளையாட்டுகள் இருக்கின்றன என்பதையறிய இந்த ஆய்வுக் கட்டுரையைப் படித்து ஒரு விவாதக் களம் மூலம் கதைத்துத் தெளிவடைவோமா?

 

புவிசார் அரசியலும் தமிழீழமும் (Geopolitics & Tamileelam)- -தம்பியன் தமிழீழம்-

Geopolitics-padam-678x381.gif

தற்போதெல்லாம் புவிசார் அரசியல் பற்றிப் பேசுவது அரசியலில் ஆழ்ந்த புரிதலற்றோரிடத்தில் கவர்ச்சிகரமானதாகப் பார்க்கப்படுவதோடு இது குறித்து பேசுபவர்கள் இது குறித்து பரந்தளவில் ஆய்வறிவற்றவர்களாகவே இருக்கின்றனர். ஐ.நாவிடம் போய் முக்கிப் பெற முடியும் என்று சொல்லப்பட்ட தமிழர் உரிமைகள் (அந்த மடைமை வெளிப்பட்டுப்போக) இப்போதெல்லாம் புவிசார் அரசியலில் சித்து விளையாட்டுக் காட்டிப் பெற்று விடலாம் என நம்பிக்கையூட்டித் தம்மை மீட்பராகக் காட்டப் பலருக்குப் பயன்படுகின்றது.

எரித்திரியா தனிநாடாகியதில் செங்கடல் அரசியலும், தென்சூடான் தனிநாடாகியதில் அந்தப் பகுதியில் இருக்கும் பெருவளமும் ரசியாவின் உறுதிப்பாடு எக்காலத்திலும் குலைந்திருக்க உதவியாயிருக்கத் தக்க பகுதிகளில் மேற்குலகு தமது மேலாண்மையைக் காட்டுவதின் பின்னால் சாத்தியமாக்கப்பட்ட கொசாவோ, மொன்ரி நீக்ரோ போன்ற தனிநாடுகள், பாகித்தானில் குவாடர் துறைமுகத்தினூடாக தொடர்வண்டி, தரைவழி என்பனவற்றினூடாக சீனா தனது மலாக்கா நீரிணையூடான போக்குவரத்துக்கு மாற்றுப் பாதை அமைக்கும் போது  அமெரிக்க காங்கிரசில் பல்கித்தான் தேசிய இன விடுதலைப் போராட்டம் குறித்துத் தீர்மானம் இயற்றியமை, இந்தோனோசியாவின் எண்ணெய் வளத்தில் 40% இனைத் தனதாகக் கொண்டுள்ள ஆச்சே மாநிலத்தின் தன்னாட்சி உரிமைக்கு மேற்காற்றிய பங்கு என்று அடுக்கிச் செல்லக் கூடிய தேசிய இன விடுதலைப் போராட்டங்களும் புவிசார் அரசியலும் என்ற ஆய்வுப் பகுதியானது (இது குறித்து அடுத்த கட்டுரையில் முழுமையாக எழுதப்படும்) முழு அளவில் ஆய்வுக்குட்படுத்தப்படாமல் வெறுமனே ஒரு ராடர் நிலையமும் எரிபொருள் நிரப்பிச் செல்ல வழிவகை செய்யக் கூடியதாய் மட்டுமே இருக்கக் கூடிய இடங்களுக்கு செங்கடல், மலாக்கா நீரிணை போன்ற புவிசார் அரசியலில் தவிர்க்க முடியாத இடங்களுக்குக் கொடுக்கப்படும் முதன்மையையும் தாண்டி கொடுக்கப்படும் அறிவிலித்தனம் மேம்பட்டு விட்டமையால் தமிழீழமும் புவிசார் அரசியலும் என்ற விடயத்தை விளங்குவதற்காக இந்துமாகடலின் புவிசார் அரசியல் குறித்து இப்பத்தி அதிக முதன்மையளிக்கின்றது.

இந்துமாகடல்  பகுதியில் (Indian Ocean Region) உலகின் 1/3 பங்கு மக்கள் தொகையினர் வாழ்கின்றனர். இந்த இந்துமாகடல் பகுதியானது வடக்கே இந்திய துணைக்கண்டத்தாலும் (Indian Sub-continent) மேற்கே ஆபிரிக்கா கண்டத்தாலும் கிழக்கே அவுத்திரேலியா (Australia) கண்டத்தாலும் தெற்கே தெற்குக் கடலெனப்படும்  அந்தாட்டிக்கா பெருங்கடலாலும் (Antatica Ocean) எல்லைப்படுத்தப்படுகிறது.

Indian-Ocean-490x315.png

இந்த இந்துமாகடலை (Indian Ocean) அரேபிக்கடல் (Arabian Sea) மற்றும் வங்காள விரிகுடாக் கடல் (Bay of Bengal) என இரு பெரும் பிரிவாக குறித்து நோக்குவது வழமை.

Arabian-Sea-490x315.png

அரபிக்கடலானது (Arabian Sea) வடக்கே பாகித்துதான் (Pakistan) மற்றும் ஈரானினாலும் (Iran) கிழக்கே இந்தியாவாலும் மேற்கே சோமாலியாவின் வடகிழக்கு மற்றும் அரபிக்குடாவாலும் (Gulf of Arabia) எல்லைப்படுத்தப்படுகிறது. மும்பையிலுள்ள சவகர்லால் நேரு துறைமுகம், பாகித்தானிலுள்ள குவாடர் (Gwadar) மற்றும் கராச்சி (Karachi) துறைமுகங்கள் மற்றும் ஓமானிலுள்ள சலலா துறைமுகம் என்பன அரபிக்கடல் பகுதியிலுள்ள முதன்மையான துறைமுகங்களாகும். யேமனின் சகோட்றா (Socotra), ஓமானின் மசிரா (Masirah) மற்றும் இந்தியாவின் லக்சதீப் (Lakshdeep) போன்ற தீவுகள் இந்த அரபிக்கடலில் உள்ள தீவுகளாகும்.

Ports-in-Arabian-Sea-490x315.png

 

 

 

 

Strait-of-Hormuz-2-490x315.png

இந்த அரபிக் கடலில் உள்ள ஓமான் வளைகுடா (Gulf of Oman) மற்றும்  பேர்சியன் வளைகுடா (Persian Gulf) என்பன கோர்மசு நீரிணையால் இணைக்கப்பட்டுள்ளது.

Strait-of-Bab-el-Mandab-490x315.png

செங்கடல் (Red Sea) மற்றும் ஆடென் வளைகுடா (Gulf of Aden) என்பன பாப்- எல் மண்டெப் எனும் ஒடுங்கிய நீரிணையால் இணைக்கப்பட்டுள்ளது.

 

Important-straits-and-canal-4-490x315.pn

இந்த செங்கடலானது சுயச்சு கால்வாய் (Suez Canal) மூலம் ஐரோப்பாவுக்கு இணைக்கப்படுகிறது. கோமர்சு நீரிணை (Strait of Hormuz), பாப்அல் மண்டெப் (Bab el- Mandab) மற்றும் சுயச்சு கால்வாய் (Suez Canal) போன்றனவே ஐரோப்பா, மத்திய கிழக்கு (Middle East) மற்றும் தெற்காசியா போன்றவற்றை இணைக்கும் குறுகிய பாதைக்கு (Shortest Route) வழிகோலுகிறது.

சீசெல்சு (Seychelles), கொமொரசு (Comoros), மடகச்கார் (Madagascar) மற்றும் மொரிசியசு (Mauritius) போன்ற புவியியல் முதன்மைவாய்ந்த தீவுகள் இந்துமாகடலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளன. கேப் ஒவ் அகல்காசு (Cape of Agulhas) என்னும் இடம் இந்துமாகடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்துமாகடலின் நடுப் பகுதியில் மாலதீவு தீவுக் கூட்டம் (Maldives) மற்றும் பிரித்தானியாவின் இந்துமாகடல் பகுதியான டிகோகார்சியா (Diego Garcia) தீவுக்கூட்டமும் அமைந்துள்ளன. பிரித்தானியாவால் தனது நாட்டுக்கு வெளியே தனக்குச் சொந்தமாக்கியுள்ள தீவுக் கூட்டமான டிகோகார்சியா எனும் இடமானது அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவுக்கும் இராணுவத்தளமாக அமைந்திருக்கின்றது.

British-America-Base-490x315.pngஇதில் உள்ளயசுரிசு முகாம் (Camp Justice)எனும் அமெரிக்காவின் மிகப் பெரும் கடற்படைத்தளமானது இந்துமாகடலில் அமெரிக்காவின் மேலாண்மையை உறுதிப்படுத்துவதாக உள்ளது. பிரித்தானியாவுக்கு சொந்தமாக்கப்பட்டுள்ள டிகோகிரேசியா என்ற இந்த தீவுக்கூட்டமானது 1966 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவிற்கு நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய விரிகுடாவாகிய வங்காள விரிகுடா கடலானது (Bay of Bengal) இந்துமாகடலின் வடகிழக்குப் பகுதியாக இருக்கிறது. வங்காள விரிகுடா கடலானது வடக்கே வங்காளதேசினாலும் (Bangladesh) கிழக்கே பர்மாவினாலும் (Myanmar) மேற்கே இலங்கைத்தீவு மற்றும் இந்தியாவினால் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, விசாகப்பட்டிணம், கல்கத்தா மற்றும் சிட்டாகோங் என்பன இப்பகுதியிலுள்ள முதன்மையான துறைமுகங்களாகும்.

Bay-of-Bengal-490x315.png

இந்த வங்காள விரிகுடா கடலில் உள்ள மிகப் பெரிய தீவுக் கூட்டம் இந்தியாவிற்குச் சொந்தமாக்கப்பட்டுள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக் கூட்டமாகும். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக் கூட்டத்திற்கு வடக்கே மியான்மாருக்குச் சொந்தமான கொகோ தீவும் (Coco Island) மேற்கே வங்காள விரிகுடா கடலும் தெற்கே இந்தோனேசியாவுக்குச் சொந்தமான சுமாத்திரா தீவும் அமைந்துள்ளன. நிக்கோபார் தீவுக்கூட்டத்திலுள்ள பெரிய நிக்கோபார் (Great Nicobar) எனப்படும் பகுதியானது மலாக்கா நீரிணைக்கு (Malacca Strait) மிக அருகாமையிலுள்ளது. பேர்சியன் வளைகுடா மூலமாக ஏற்றுமதி செய்யப்படும் அண்ணளவாக 85% ஆன கச்சா எண்ணெய் கோமர்சு நீரிணையூடாகப் பயணித்து மலாக்கா நீரிணையூடாக சீனா மற்றும் யப்பான் ஆகிய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது.

Malacca-Strait-490x315.png

550 மைல் நீளமான மலாக்கா நீரிணையானது இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுக்கும் மலேசியா குடாநாட்டிற்கும் இடையே இருக்கும் மிகவும் ஒடுக்கமான நீரிணையாகும். இந்துமாகடலையும் பசுபிக்மாகடலையும்  இணைக்கும் மிகக் குறும்பாதையாகவும் மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் வளத்தை ஏற்றி வருவதற்கு சீனாவுக்கு இருக்கும் ஒரேயொரு பாதையாகவும் மலாக்கா நீரிணை இருப்பதால் உலகின் கடற்பாதைகளில் மிகவும் முதன்மை வாய்ந்ததாக இது கருதப்படுகிறது. உலகின் 40% ஆன வணிகமும் உலகின் 20% ஆன எண்ணெய் வணிகமும் இந்த மலாக்கா நீரிணையூடாகவே நடைபெறுகின்றது. 70%- 80% வரையிலான  சீனா மற்றும் யப்பானின் எண்ணெய் இறக்குமதி இந்த மலாக்கா நீரிணாயூடாகவே நடைபெறுகின்றது. மலாக்கா நீரிணையூடாக வரும் கச்சா எண்ணெய் சிங்கப்பூர் மற்றும் மலேசிய துறைமுக முனையங்களில் (Terminals) இறக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு ஆசியச் சந்தைக்கு பெற்றோலியப் பொருட்களாக தென்சீனக்கடல் (South China Sea) மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றது. மீதிக் கச்சாய் எண்ணெய் (Crude Oil) தென்சீனக் கடல் மூலம் சீனா, யப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இதில் தென் சீனக்கடல் மூலம் கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெயில் 15% தென்கொரியாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

கட்டார், மலேசியா, இந்தோனேசியா மற்றும் அவுத்திரேலியா போன்றவற்றிலிருந்து வரும் திரவ இயற்கை எரிவாய் வணிகத்தின் அரைப்பங்கு தென்சீனக்கடலூடாக சீனா, யப்பான் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றது. அவுத்திரேலியா மற்றும் இந்தோனேசியா போன்ற உலகின் நிலக்கரி ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் நாடுகளிலிருந்து வரும் நிலக்கரியானது தென்சீனக் கடலினூடாகவே உலகெங்கிற்கும் செல்கின்றது. இதனாலேயே ஆசியாவின் வணிகத்தில் தென்சீனக் கடல் (South China Sea) முதன்மைப் பங்கு வகிக்கின்றது.

எனவே தான் சீனாவானது மலாக்கா நீரிணை குறித்து மிகுந்த உயிர்த் துடிப்புக் கொள்கின்றது. தொழிற்துறையில் பருத்து நிற்கும் சீனாவிற்கு மலாக்கா நீரிணையூடான போக்குவரத்தில் ஏதேனும் தடங்கல் நேரின் அது அதற்கு மிகப் பெரும் ஆற்றல் நெருக்கடியைக் கொடுக்கும்.

எல்லைச் சிக்கலாகச் சொல்லப்பட்டு 1962 இல் நடந்தேறிய சீன- இந்தியப் போரிற்கான மெய்க் காரணமே சீனாவின் மலாக்கா நீரிணையூடான கப்பற் போக்குவரத்தில் ஏற்பட்ட குறுக்கீடுகள் தான். இதனால் சீனாவானது இந்துமாகடலில் உள்ள துறைமுகங்களின் அபிவிருத்திப் பணிகளைச் செய்வதில் முழு மூச்சாக இறங்கியுள்ளது. இதற்கான வாய்ப்பு எங்கு கிடைக்கிலும் அங்கு ஒரு ஒப்பந்தத்தைப் போட்டு வேலையைத் துவங்கி விடுகிறது சீனா. அந்தமான் தீவுக் கூட்டத்திற்கு மிக அருகாமையிலுள்ள மியான்மாருக்குச் சொந்தமான கொகோ தீவானது கண்காணிப்புத்தளம் அமைப்பதற்காக சீனாவுக்கு 1994 ஆம் ஆண்டில் குத்தகைக்கு வழங்கப்பட்டது.

Coco-Islands-490x315.png

எனினும் நார்கடோம் தீவு எனப்படும் அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டத்திலுள்ள தீவில் இருக்கும் இந்தியாவின் மிக வலுவான ராடர் நிலையத்தினால் (Radar Station) இந்தப் பகுதியில் சீனாவினால் செய்யக் கூடிய ஒவ்வொரு சிறிய நகர்வுகளையும் துல்லியமாகக் கண்காணிக்க இந்தியாவுக்கு இயலுமானதாயிருப்பது இந்தியாவின் சீனாவை மேவிய இந்துமா கடல் மேலாண்மையை உறுப்படுத்துகிறது.

தொழில்மயமாக்கத்தின் பின்னர் எண்ணெய் வளமானது நாடுகளின் பொருண்மியத்திற்கான மூல வளமாகியது. உலகின் 40% கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே பெறப்படுகிறது. உலகின் 35% கடல் வழி கச்சா எண்ணெய் ஏற்றுமதி கோர்மசு நீரிணை (Strait of Hormus) மூலமே இந்தியா, யப்பான், சீனா, தென்கொரியா போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

572 தீவுகளைக் கொண்ட தீவுக் கூட்டமான இந்தியாவிற்குச் சொந்தமாக்கப்பட்ட அந்தமான் நிக்கோபாரானது மலாக்கா நீரிணையை மிக நெருங்கியவாறு அமைந்துள்ளது. இந்தத் தீவுக் கூட்டமானது ஆண்டுக்கு 60,000 இக்கு மேற்பட்ட வணிகக் கப்பல்கள் செல்லும் வங்காள விரிகுடாக் கடலில் (Bay of Bengal) இந்திய மேலாண்மையை உறுதிப்படுத்த இந்தியாவிற்கு உதவுகின்றது. இப்படியாக தென்கிழக்காசியாவிலும் தனது புவிசார் ஆளுகையை ஏற்படுத்த வல்லதாய் அமைந்திருக்கும் அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டத்தில் முப்படைகளையும் உள்ளடக்கிய பாரிய படைத்தளத்தை இந்தியா அமைத்து வைத்துள்ளது. இதனாலும் மற்றும் 7517 கிலோ மீற்றர் நீளமான இந்தியாவின் கடல் எல்லையினாலும் (Coastal Line) அமெரிக்காவுக்கு அடுத்த படியாக இந்துமாகடலின் பேராளுமையாக இந்தியா வளர்ந்த நிலையிலிருக்கிறது.

சீசெல்சு, அகலேகா மற்றும் மொரிசியசு தீவுகளில் தனது கடற்படைத் தளத்தை அமைப்பதற்கான இணக்கப் பேச்சுகளை முடித்துக்கொண்டு நடவடிக்கையில் இறங்கிவிட்டது இந்தியா. ஏலவே மடகசுகாரில் தனது கண்காணிப்புத் தளத்தை அமைத்துள்ள இந்தியா இந்துமாகடலில் நடைபெறுவனவற்றை உற்று நோக்கி வருகின்றது.

Silk-Route-490x315.png

எனினும், மியான்மார், பங்காளதேசு, இலங்கைத்தீவு, மாலதீவு, மொரிசியசு, சீசெல்சு மற்றும் பாகித்தான் ஆகிய நாடுகளுடன் தனது கடல்சார் உறவுகளை வளப்படுத்தி தனது கடல்வழிப் பாதையை வளப்படுத்த சீனா வரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தியே வருகின்றது. சீனா தலையால் நடந்தாலும் இந்துமாகடலில் மலாக்கா நீரிணையைக் கடக்காமல் சீனாவிற்குள் நுழைய முடியாத நிலையே சீனாவின் புவிசார் நிலை.

இருந்தபோதும், மலாக்கா நீரிணையூடான கடல்வழிப் பாதைக்கு மாற்று வழியாக பாகித்தானின் குவாடர் China-Pakistan-Economic-Corridor-490x315துறைமுகத்திலிருந்து தரைவழி மற்றும் தொடர்வண்டிப் பாதை (Railway Route) வழியாக சீனாவின் தெற்கு சின்சியாங் தொடர்வண்டிப்பாதையை (Southern Xinjiang Railway) அடையக் கூடிய CPEC (China- Pakistan Economic Corridor) என்கின்ற திட்டமானது கட்டுமாணப் பணிகளில் துரித வேகம் எடுத்துள்ளது. இந்தத் திட்டத்திற்கான 62 பில்லியன் அமெரிக்க டொலர் செலவை முழுவதுமாக சீனாவே ஏற்றுள்ளது.

சீனாபாகித்தானின் CPEC இக்குப் பதிலடியாக ஈரானின் சாபகார் (Chabahar) Chabahar-Port-490x315.pngதுறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளிற்கான ஒப்பந்தத்தில் ஈரானும் இந்தியாவும் கைச்சாத்திட்டு இந்தப் பணி பெரும்பாலும் நிறைவுறும் தறுவாயிலுள்ளது. இந்தியாவினால் தனது நாடு கடந்து அதிக பொருட் செலவில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணி இதுவென ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இந்த சாவகார் துறைமுகமானது ஆப்கானித்தானுக்கும் மத்திய ஆசியாவுக்கும் இந்தியாவிற்கு வழிவிடுகிறது.

சியா முசுலிம் நாடான ஈரானுக்கும் சன்னி முசுலிம் நாடுகளான சவுதி அரேபியா, பஃரேன், கட்டார் மற்றும் ஓமான் போன்ற நாடுகளுக்கிடையிலும் இந்த கோர்மசு நீரிணையூடான கடற்பாதை அமைந்துள்ளதால், அந்த கடற்பாதையில் தடங்கலை ஏற்படுத்த இயலும் தன்னுடைய இயலுமையைக் கூறி ஈரான் மற்றைய அரபு நாடுகளை மிரட்டியே வருகிறது. அவ்வாறு ஒரு தடங்கல் இந்தக் குறித்த கடற்பாதையில் நேரின் ஆசிய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் வரத்து இல்லாமல் போவதுடன் மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி மிகப்பெருமளவில் சரிந்து போகும். தனது கச்சாய் எண்ணெய் இறக்குமதியில் 18% இனை இந்த கோர்மசு நீரிணையைத் தனது கடல்வழியாகப் பயன்படுத்தி அமெரிக்கா மேற்கொள்கின்றது. இதனாலேயே அமெரிக்கா தனது வலிமைவாய்ந்த கடற்படையை பஃரேனில் நிறுத்தியுள்ளது. கோர்மசு நீரிணை மூலமான தடங்கலற்ற கப்பற் போக்குவரத்தை உறுதிப்படுத்துவதற்காகவே அமெரிக்கா இங்கு நிலை கொண்டுள்ளது. இந்தக் கடற்பாதையில் ஏதேனும் தடங்கல் ஏற்படின் உலகின் பெருமளவான தொழிற்துறைகள் முடங்கிவிடும் என்பதுடன் கச்சா எண்ணெயின் விலை உச்சமாகும். இதற்கான மாற்றுக் கடற்பாதை ஆயிரக்கணக்கான மைல் தொலைவு அதிகமாகிவிடும்.

Djibouti-490x315.png

அமெரிக்கா டியிபோட்டியில் (Djibouti)லெமொனியர் (Camp Lemonnier)என்ற மிகப் பெரும் இராணுவ முகாமை அமைத்து நிலைகொண்டுள்ளது. இதுவே ஆபிரிக்காவிலுள்ள அமெரிக்காவின் மிகப் பெரிய இராணுவத்தளமாகும். இந்த டியிபோட்டி எனும் நாடானது ஆபிரிக்காவையும் மத்திய கிழக்கையும் இணைக்கும் பாப்அல் மண்டாப் நீரிணைக்கு மிக அருகிலுள்ளது. இந்த நீரிணையூடாக உலகின் 18% திரவ இயற்கை எரிவாயு (Liquid Natural Gas) மற்றும் 4% கச்சா எண்ணெய் ஆகியன போக்குவரத்துச் செய்யப்படுகின்றன. இதனூடாகவே பேர்சியன் வளைகுடாவின் இயற்கை எரிவாயு மற்றும் பெற்றோலியப் பொருட்கள் ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவிற்குச் செல்கின்றது.

இந்தியாவும் அமெரிக்காவும் அண்மையில் இணைந்து நடத்திய கூட்டு ஆய்வுப் பயணத்தில் இயற்கை எரிவாயுப் படுக்கைகள் மற்றும் கனிம வளங்கள் வங்காள விரிகுடாக் கடற்படுக்கைகளில் மிகுந்து கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இவற்றை அகழ்வதற்கான இடமாக வங்காள விரிகுடாக் கடல் எதிர்காலத்தில் முதன்பெற்று வரலாம். அதற்கு சில பத்தாண்டுகள் ஆகலாம். அப்போது வளம் மிகுந்து இலங்கைத் தீவு புவிசார் நலனுக்கான முதன்மைப் பங்கை ஓரளவு பெறலாம். அது தமிழீழம்  அமைக்கும் அளவிற்கு மாற்று வழியில்லாச் சிக்கலாக மேற்குலக மற்றும் இந்தியாவுக்கு இருக்கும் என நினைப்பது எவ்வாறான குருட்டு நம்பிக்கையென இதுகாலவரையிலான அரசியலை உள்வாங்கியோருக்குப் புரியும்.

134 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா சீனாவின் பொருட்கள் விற்பனையாகும் மிகப் பெரிய சந்தையாகும். இந்தியாவின் ஆளும் வர்க்கங்களே சீனாவின் பொருட்களிற்குச் சந்தை வழங்கும் தரகு முதலாளிகள் என்று கூறிவிடக் கூடியளவிலேயே இருக்கின்றனர். எனவே இந்தியாசீனா முறுகல் நிலையென்பது இந்தியாவை உடைத்துத் தேசிய இனங்கள் விடுதலையடையப் பயன் தராது. இதனை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் விடுதலைப் போராட்டங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. என்னதான் மாற்றுப் பாதையை தரை வழி, தொடர் வண்டி வழி கொண்டு தலைகீழாய் நின்று அமைத்தாலும் கடல்வழி போல வணிகமாற்ற வேற எந்த வழியும் உதவாது. சீனா உலகின் முதலாளித்துவ பொருண்மிய வல்லரசாகலாம். ஆனால் இந்து மாகடலில் அமெரிக்காவும் அதனது பேட்டைரவுடியானஇந்தியாவுமே மேலாண்மைச் சக்திகள். சீனா இந்தியாவைப் பெருமளவில் பகைத்து மலாக்கா நீரிணையால் வணிக மாற்றுவதில் சிக்கலினை ஏற்படுத்திக் கொள்ளாது. மாறி மாறித் தமது மேலாண்மையை நிலைநிறுத்த இப்படியே போட்டி போட்டுக் கொண்டு முதலாளித்துவ பொருளாதார முறைமை மாறாமல் வணிகமாற்றுவார்கள்.

last-490x315.png

கோமர்சு நீரிணை (Strait of Hormuz), பாப்அல் மண்டெப் (Bab el- Mandab), சுயச்சு கால்வாய் (Suez Canal) மற்றும் மலாக்கா நீரிணை (Malacca) போன்று ஏற்புடைய மாற்றுவழி, புவிசார் இரீதியாகவே இல்லாத இந்த புவிசார் முதன்மைப் புள்ளிகளுக்கோ அல்லது விட்டுச் செல்ல முடியாத இந்த முதன்மைப் பகுதிகளில் மேலாண்மை செய்ய வழிசெய்யும் இடங்களோ புவிசார் அரசியலில் தீர்மானகரமான மாற்றத்தை அதன் புவிநிலை சார்ந்து ஏற்படுத்த வல்லதாயமையும். அப்படியான இடங்களில் புவிசார் நலனடிப்படையிலான பேரம் பேசல்கள் தனிநாடமைப்பது வரை கொண்டு செல்ல இயலுமானதாயிருக்கும். அப்படியொரு வாய்ப்புத் தமிழீழமமைப்பதில் இல்லை என்ற கசப்பான உண்மையைச் சொல்லியாக வேண்டும். எமக்கு இருக்கும் ஒரேயொரு வழி தமிழ்நாடு, தமிழீழம் என்ற இரு தமிழர் தேசங்களில் மக்கள் மயப்பட்ட புரட்சிப் போராட்டமே. இதற்கு உலகவாழ் தமிழரனைவரும் உழைக்க வேண்டியதே இப்போதிருக்கும் ஒரே வழி. மற்றைய படி புவிசார் அரசியல் பேசுவதும் ஐ.நா மன்றம் போவதும் ஒரே மாதிரியான இரு வேறு நிகழ்வுகளே. இது தமிழீழ விடுதலையைப் பெற்றுத்தர எக்காலத்திலும் உதவாது. இந்தியா என்ற தேசிய இனங்களின் சிறைக்கூடமாகிய சந்தை துண்டு துண்டாக உடைந்து தேசிய இனங்கள் விடுதலையடைந்தாலேயே தமிழீழம் இந்த உலகில் மலர உறுதியான வாய்ப்புண்டு.

-தம்பியன் தமிழீழம்-

2017-12-09

தொடரும்…….

http://www.kaakam.com/?p=941

Link to comment
Share on other sites

மாலைதீவும் சிறிலங்காவும் – 2

 

mahindaமாலைதீவு அரசியலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலை- பிராந்திய வல்லரசுகளுக்கிடையிலான நேரடி சொற்போர் என்பதற்கு அப்பால்,   சிறிலங்காவில் நடந்த உள்ளுராட்சி சபை தேர்தலின் முடிவுகளைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமைகள், அரசியல் மாற்றத்துக்கு இட்டுச் செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சிறிலங்கா அரசியலில், முன்னைநாள் அதிபரும்,  தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தினால் பிரிந்து போய்விடும் என்று எதிர்பார்த்திருந்த வேளை நாட்டை, சிங்கள மக்களுக்கு மீட்டுக்கொடுத்தவரான மகிந்த ராஜபக்ச . தெற்கில் மீண்டும் எழுச்சி கண்டிருக்கிறார்.

இந்த எழுச்சியை பல்வேறு இராஜதந்திரிகளும் சிந்தனையாளர்களும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ராஜபக்சவின் மீள்வருகை என்பது சீன வேதாள நடனம் சிறிலங்காவில் மீண்டும் ஆரம்பம் என்ற பார்வை எல்லோரிடமும் உள்ளது.

கொள்கையளவில் இந்திய மேலைத்தேய சார்புடையது என்று பார்க்கப்படும் ஐக்கிய தேசிய கட்சியும் அதனுடன் கூட்டு சேர்ந்த சிறிலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து அமைத்துக்கொண்ட  கூட்டு அரசாங்கம் பல்வேறு பிழைகளை தனது மூன்று வருடகால ஆட்சியில் விட்டிருக்கிறது.

வாழ்க்கைச் செலவு அதீதமாக அதிகரித்திருந்தது, அபிவிருத்தி நடவடிக்கைகள் முடக்கம் கண்டிருந்தன, மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள், தேர்தல் வாக்குறுதிகளில் சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாமல்போன தன்மை ஆகியன அந்தப் பிழைகளாகும்.

தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கத்திடம் இருந்து எந்தெந்த குற்றச்சாட்டுகளைக் கூறி ஆட்சியைக் கைப்பற்றியதோ அதே பிழைகளைத் தானும் கொண்டிருந்த நிலை, இந்த தோல்விக்கு காரணம் என்ற பார்வை சர்வதேச ஆய்வாளர்கள் மத்தியிலே உள்ளது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் ராஜபக்ச குடும்பம் பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டிருந்தது என்ற குற்றசாட்டு எதையும் நடைமுறை அரசாங்கத்தினால் தகுதியான ஆதாரங்கள் இருந்தும், ராஜபக்ச குடும்பத்தில் எவரையும் சட்ட நடவடிக்கைக்குள் கொண்டு வர முடியாது போன நிலை மகிந்த ராஜபக்சவின் மீள் எழுச்சிக்கு பெரும் ஆதரவாக அமைந்துள்ளது.

Mahinda - rajapaksha

கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனது பத்திரிகைப் பேட்டியில் ஐக்கிய தேசிய கட்சியின் வாக்காளர் தொகை தொடர்ச்சியாக கடந்த முப்பதுவ ருடங்களாக படிப்படியாக வீழ்ச்சி கண்டு வருவதாவும். சிங்கள பௌத்தவாதம் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிந்த பின்னரும் எழுச்சி கண்டு வருவதாகவும் கணக்கிட்டுள்ளார்.

இதனால் மகிந்த ராஜபக்ச பதவிக்கு வருவது தவிர்க்க முடியாது என குறிப்பிடும் அப்பேராசிரியர் இனிவரும் காலங்களில் இலங்கை குறித்து இனவாதம், ஜனநாயகம், மனித உரிமை, சமூகங்களுடனான இணைந்த வாழ்வு என்ற பதங்கள் நாட்டின் ஒற்றுமைக்கு ஒவ்வாத வகையில் சர்வதேச நாடுகளின் பேசுபொருளாக மாறும் நிலை ஏற்பட உள்ளதாகவும் எதிர்வு கூறியுள்ளார்.

இனவாதத்தை தமது வாக்கு பெறுவதற்குரிய கருவியாக பயன்படுத்திய அரசியல் கட்சிகளும் மதத்தலைவர்களும் இன்று இனவாதத்தின் எழுச்சியைக் கண்டு பயந்துபோய் கருத்துகள் வெளியிடுவதும் கவனிக்கக் கூடியதாகும்.

இருந்தபோதிலும் சிங்கள பெளத்தத்தின் எழுச்சியை உள்நாட்டு ஆய்வாளர்களுடன் மேலைத்தேய இந்திய ஆய்வாளர்களும் கூட தவிர்க்க முடியாதது என்று எதிர்வு கூறி உள்ளனர்.

இந்தநிலையில் தன்னை ஒரு சிங்கள இன விடுதலை போர்வீரனாக காட்டிக்கொள்ளும் மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினரும்- வாக்கு வங்கியை உறுதிப்படுத்துவதற்காக உலகம் தமக்கு எதிராக நிற்பதாகவே காட்ட முற்படுவர்.

அது ஐக்கிய தேசியக் கட்சி ஆயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாயினும், புலம்பெயர் தமிழர்களாயினும், மேலைத்தேய இராஜதந்திரிகள் ஆயினும், எல்லோருமே சிங்கள மக்களின் நலனுக்கு எதிராக செயற்படுவதாகவே காட்ட முற்படுவர்.

அதேவேளை சிறிலங்காவின் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய, நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிபரின் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், நான்கரை ஆண்டு காலத்திற்கு நாடாளுமன்றம் செயற்பட வேண்டிய நிலையில், 2020 ஆம் ஆண்டு வரையில் அரசாங்கத்துக்கு அவகாசம் உள்ளது.

சிறிலங்காவில் எத்தகைய நிலை எழுந்தாலும், எந்த அரசு பதவியில் இருந்தாலும் அந்த அரசு சட்ட அங்கீகாரம் பெற்றதாகவும் சர்வதேச அரசியல் நீரோட்டத்துடன் சேர்த்து கொள்ளக் கூடியதாகவுமான சூழலை பெற்றுத் தருவதில் மேலை நாடுகளும் சீனத் தரப்பும் கவனமாக இருந்தன.

mahinda

2009 ஆம் ஆண்டு போர் முடிந்தவுடன் சிறிலங்காவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் விவகாரத்தை சீன – ரஷ்ய கூட்டு தடுத்து நிறுத்தி இருந்தது.

அதேபோல போர் முடிந்த சில நாட்களுக்குள், மென்மைப்படுத்தப்பட்ட தீர்மானம் ஒன்றை சிறிலங்காவுக்கு எதிராக  ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவர முற்பட்ட போது, சீன- பாகிஸ்தானிய கூட்டு தவிர்த்திருந்தது.

அதன்பின்பு மேலும் கழுவி மென்மைப்படுத்தப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்த போது, இந்தியா அதற்கு ஆதரவளித்து சிறிலங்காவை அமெரிக்க கண்காணிப்பிலிருந்து சர்வதேச ஒட்டத்திற்கு அப்பால் செல்லாது பாதுகாத்து வைத்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது .

இனஅழிப்பு என்ற பேச்சிற்கு உட்படாது, மனித உரிமை மீறல்கள் என்ற வகையில் சிறிலங்கா பொதுப்படையான குற்றங்களில் சம்பந்தப்பட்டதாக மாற்றப்பட்டு, இனஅழிப்பு என்ற பதமோ தமிழர்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் என்றோ இல்லாத வகையில், சர்வதேச புவிசார் அரசியல் நகர்வுகளுக்கு ஏற்றவகையில் மிதப்படுத்தப்பட்டு விடப்பட்டது.

ஆனால் வடக்கு-கிழக்கில்,கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் மிதவாத தலைமை மீது மக்கள் நம்பிக்கை இழந்தநிலை ஏற்பட்டிருப்பதை தமிழ் மிதவாத தலைமை உணரத் தலைப்பட்டிருக்கிறது.

வடக்கு- கிழக்கில் மிதவாத தலைமைத்துவத்திற்கு பதிலீடாக தமது தெரிவுகளை பரவலாக காட்டி இருப்பதானது, மிதவாத தலைமைத்துவத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமை விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தும் வகையில் திருப்பி உள்ளது.

மாலைதீவு விவகாரத்தில் அதிபருக்கெதிராக ஊழல் குற்றச்சாட்டுகள், மனித உரிமை குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டாலும் நேரடியான எதிர்க்கட்சி அரசியலை கொண்டு நகர்த்தக் கூடிய தன்மையே உள்ளது.

ஆனால் இனிமேல் சிறிலங்கா விடயத்தில் மேலைத்தேய இந்திய தரப்புகள் சிறிலங்காவை சர்வதேச இராஜதந்திர நீரோட்டத்தில் இருந்து வழுவாது வைத்திருப்பதானது, சீனாவின் கடன்பளு இராஜதந்திரத்தையும் சிறிலங்கா ஏற்றுக்கொள்ள வைப்பதற்கும் வசதி செய்வதாக அமைந்து விடுகிறது

சீனத் தரப்பு கூறுவது போல, சிறிலங்கா, மாலைதீவு பிரச்சினைகள் சாதாரண உள்நாட்டு பிரச்சினையாக சித்தரிக்க முடியாதுள்ளது. இவை ஆழமான சர்வதேச வல்லரசுகளின் மூலோபாயங்களை நோக்கமாக கொண்டதாக பார்க்கப்படுகிறது என்ற மேலைத்தேய பார்வை உள்ளது.

உள்நாட்டு விவகார பொறிமுறைகளில் நம்பிக்கை அதிகம் கொண்ட மேலைத்தேய நோக்கினுாடாக பார்ப்போமானால், சிறிலங்கா அரசியல் கட்டமைப்பை சீர்குலைப்பதன் ஊடாகவே சீனக் கடன்பளுவிலிருந்து சிறிலங்காவை மாற்ற முடியும்.

மாலைதீவு, சிறிலங்கா ஆகிய இரண்டு நாடுகளுக்குமான நெருக்கமான ஒப்பீட்டை அடுத்தவாரம் தொடர்ந்து பார்க்கலாம்.

http://www.puthinappalakai.net/2018/03/02/news/29442

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

மாலைதீவும் சிறிலங்காவும் -3

 

monks-led violence (1)தெற்காசிய அரசியலில் சிறிலங்காவும் மாலைதீவும் சீன பொருளாதார, மூலோபாய தலையீடுகளினால் ஈர்க்கப்பட்டு, உள்நாட்டு அரசியலில் தாக்கங்களை கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் ஒத்தபோக்குடைய பல்வேறு குணாதிசயங்கள் இருப்பதை காணக் கூடியதாக உள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் இந்திய மேலாதிக்க நிலையை அச்சுறுத்தம் வகையில் இந்து சமுத்திரத்தால் சூழ்ந்துள்ள இரு தீவுகளும் உள்நாட்டில் மதவாத எழுச்சியினால் தாக்கம் கண்டு வருகின்றன.

மாலைதீவில் இந்து அடிப்படைவாத இந்திய மத்திய அரசு என்ற பார்வையை மக்கள் மத்தியில் பரப்புவதன் மூலம், பிரதான எதிர்க்கட்சித் தலைவரை ஆளும் அதிபர் அப்துல்லா யமீன் நாட்டை விட்டு ஒடச் செய்திருக்கிறார்.

சிறிலங்காவில் பௌத்த மதவாத எழுச்சி தற்பொழுது தாண்டவமாடி வருகிறது. மேலைத்தேய இந்திய சார்பு கொள்கைகளை கொண்டது என்ற  பொதுக்கருத்தை கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  அரசாங்கத்தை மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகிறது.

இருந்தபோதிலும் சிறிலங்காவில் இடம்பெற்று வரும் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான தாக்குகதல்களை கலாசார தேசியவாதமாக சித்தரித்து சர்வதேச அரங்கில் மென்மைப்படுத்தும் முயற்சிகளில் கொழும்புசார் ஊடகங்கள் முனைப்பாக ஈடுபட்டு வருகின்றன.

மாலைதீவின் அதிபர் யமீன் சீன பாகிஸ்தானிய கூட்டில் அதிக நம்பிக்கை கொண்டவராகவும் நாடாளுமன்ற ஜனநாயகவாதியாகவும் காட்டிக் கொள்வதில் அதிக அக்கறை கொண்டுள்ளார்

மாலைதீவு இஸ்லாமிய மதவாதம், இந்து மதவாத ஆதிக்கம் கொண்ட இந்திய அரசாங்கத்திற்கு எதிரான போக்கை கொண்டுள்ளது. இதனால் மாலைதீவின் நிலையம் இந்தியாவின் அக்கறையை அதிகரிக்க வைக்கிறது.

மாலைதீவு சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. இது இந்திய சார்பு எதிர்கட்சிகளின் ஆதரவு இல்லாதபோதிலும் செய்து கொள்ளப்பட்டிருக்கிறது.

மாலைதீவு நாட்டின் 70 சதவீத கடன் சீனாவிடம் இருந்து பெற்று கொள்ளப்பட்டிருக்கிறது. இது அந்த நாடு சீனாவிடம் பொருளாதார அடிமையாகப் போகும் நிலைக்குள் வந்திருப்பதைக் காட்டுகிறது.

சிறிலங்கா எவ்வாறு அம்பாந்தோட்டைத் துறைமுகப் பகுதியை சீனாவிடம் கையளித்ததோ அதேபோல சுமார் 16 தீவுகளை சீனாவிடம் மாலைதீவு கொடுத்து விட்டது.

இந்தியாவே முதல் என்ற வெளியுறவு கொள்கை மாலைதீவின் பாதுகாப்பு தொடர்பாக அந் தநாட்டின் பொதுப்பண்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் அதிபர் யமீன் மதவாத சக்திகளின் துணையுடன் அரசாங்கத்தை நடத்தி வருகிறார்.

சிறிலங்காவில் மதவாத சக்திகளின் துணையுடன் மகிந்த ராஜபக்ச பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு முயற்சிப்பதுடன், அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்றும் எண்ணத்துடன் செயற்பட்டு வருவது  போல்த் தெரிகிறது .

இந்தநிலையில் மேலைத்தேய இந்திய சக்திகள் மிகுந்த அக்கறையுடன் சிறிலங்கா , மாலைதீவு அரசியல் நிலைமைகளை கவனித்து வருகின்றன.

உள்நாட்டில் தெற்காசியப் பிராந்திய வல்லரசான இந்தியாவுக்கு எதிரான கொள்கைகளை சித்தாந்த ரீதியாக விதைத்து தமது செல்வாக்கு பலப்படுத்தலில் மும்முரமாக இருந்த மாலைதீவின் யமீன் அரசாங்கமும் சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச தரப்பும் தமது புவியியல் நிலையத்தை புரிந்து கொண்டு செயலாற்ற முற்படுகின்றனர்.

அதேவேளை உலகம் இன்றைய சர்வதேச இராஜதந்திர நிலையில் இரண்டு பிரதான கூட்டுகளை மையமாக வைத்து நகர்கிறது.

அதில் ஒன்று சீன சார்பு கூட்டு. இது பொருளாதார முண்னேற்றத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு நகரும் வளம்மிக்க அல்லது பூகோள நிலைய முக்கியத்துவம் கொண்ட சிறிய அரசுகளின் கூட்டு.

மற்றையது மேலைத்தேய ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் கூட்டு. இந்த கூட்டு உலக அரசுகள் அடாவடித்தனம் கொண்டவை என்ற நம்பிக்கை உடையன. இந்த அரசுகளை நிறுவனமயமாக்கலில் அவற்றின் குணாதிசயங்களுக்க ஏற்ப தகுதி பிரிவுகளை உருவாக்கி தமது இராஜதந்திர பொருளாதார தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தும் கூட்டு ஆகும்.

உதாரணமாக ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நாணய நிதியம், மனித உரிமைகள் மையம் என பல்வேறு சர்வதேச நிறுவனங்களை உருவாக்கி இவற்றினை கருவிகளாக கொண்டு இராஜதந்திர நகர்வுகளுக்கு பயன்படுத்துவதாகும்.

மாலைதீவும் சிறிலங்காவும் மதவாதத்திலும் பேரினவாதத்திலும் அரசியல் செய்யும் தேசங்களாக தெரிகிறது. இருந்தபோதிலும் நிறுவனத்துவவாதத்தை ஏற்றுக்கொண்டு சர்வதேச அரங்கில் தம்மை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கத்தை கொண்டன.

இவர்களது தாரக மந்திரமாக இறையாண்மை ,ஜனநாயகம், சட்டவாக்க சபை, மனித உரிமை, நாடாளுமன்ற முறைமை ஆகியன உள்ளன. இந்த சொற்பதங்கள் மேலைத்தேய நிறுவனத்துவவாத நகர்வுகளுக்கு எதிரான கேடயங்களாக மட்டும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த சிறிய இரு நாடுகள் மட்டுமல்லாது சீனா உட்பட பல்வேறு வல்லரசுகளும் கூட, மேலைத்தேய ஆதிக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்து கொள்வதற்கு இத்தகைய சொற்பதங்களை கொண்டு தம்மை சுதாகரித்து கொள்வதை வரலாறு காட்டி நிற்கிறது.

ஆகவே எதிர்வரும் காலங்களில் சிறிலங்காவில் பதவி ஏற்கும் அரசும் இதையே செய்யும் என்பதில் ஐயமில்லை. இதனை கருத்தில் கொண்டு சிறிலங்காவின் உள்நாட்டு நிறுவனங்களின் செயற்பாடுகளால்- அது நாடாளுமன்றம் ஆயினும் உள்ளுராட்சி சபையாயினும், தமிழ் மக்கள் பரவலாக்கப்பட்ட அதிகாரங்கள் ஊடாக, தமது  இறையாண்மையை நோக்கிய நகர்வுத் திட்டங்களை முன்னெடுப்பதன்ள் ஊடாகவே நீண்டகால நலன்களை உறுதி செய்து கொள்ளமுடியும்.

http://www.puthinappalakai.net/2018/03/17/news/29853

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.