Jump to content

முந்தும் ‘தம்பி சார்’... பிந்தும் ‘மாப்பிள்ளை சார்’


Recommended Posts

மிஸ்டர் கழுகு: முந்தும் ‘தம்பி சார்’... பிந்தும் ‘மாப்பிள்ளை சார்’

 

 

p44a_1517316907.jpg

‘முந்தும் தம்பி சார்... பிந்தும் மாப்பிள்ளை சார்’ என்று காகிதத்தில் எழுதி எடுத்துவந்து காண்பித்தார் கழுகார். முதலில் நமக்குப் புரியவில்லை. அதன்பிறகு, ‘தி.மு.க’ என்று எழுதி அதைக் காண்பித்தார். ‘புரிந்துவிட்டது’ என்று தலையசைத்தோம். சிரித்தபடியே செய்திகளைச் சிதறவிட்டார் கழுகார்.

“தி.மு.க-வில், ‘தலைவர்’ என்றால் கலைஞர்; ‘தளபதி’ என்றால் ஸ்டாலின். இது அனைவருக்கும் தெரியும். நெருங்கியவர்களுக்கு மட்டும்தான், ‘தம்பி சார்’ என்றால் உதயநிதி, ‘மாப்பிள்ளை சார்’ என்றால் சபரீசன் என்று தெரியும்.”

‘‘ஓஹோ!”

‘‘அதனால்தான், ‘தம்பி சார் முந்துகிறார்’ என்று சொன்னேன். உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் குறித்து இரண்டு இதழ்களுக்கு முன்பு நான் கொடுத்த விஷயங்களெல்லாம் அச்சுப்பிசகாமல் அப்படியே நடக்கின்றன. மா.சுப்பிரமணியன் நடத்திய பொங்கல் விழாவில் உதயநிதி பங்கெடுத்ததுகூட ஆச்சர்யம் இல்லை. பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து தாம்பரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டு அதிர்ச்சியைக் கொடுத்தார் உதயநிதி. அந்த நிகழ்ச்சிதான், அவரது அரசியல் பயணத்தின் தொடக்கமாக அமைந்தது.’’

‘‘தாம்பரத்திலிருந்து புதிய தலைவர் புறப்பட்டுவிட்டார் என்கிறீரா?”

‘‘அப்படித்தான் சொல்கிறார்கள் தி.மு.க-வில். மு.க.ஸ்டாலினின் மகன் என்ற அளவிலும், திரைப்பட நடிகர் என்ற அளவிலும்தான் உதயநிதி ஸ்டாலினை வெளியில் எல்லோருக்கும் தெரியும். ஆனால், முரசொலி அறக்கட்டளையின் தலைவர் பொறுப்பில் உதயநிதிதான் இருக்கிறார். ‘முரசொலி’ பத்திரிகையின் நிர்வாக இயக்குநரும் உதயநிதிதான். கடந்த ஏழு வருடங்களாக அவர் இந்தப் பொறுப்பில் இருக்கிறார். முரசொலி அலுவலகத்தை நவீனப்படுத்தியது அவர்தான். ஆனாலும், நேரடி அரசியலிலிருந்து அவர் ஒதுங்கியே இருந்தார். முரசொலி பவள விழா நிகழ்ச்சிகளில்தான், மேடைக்கு வந்து முன்வரிசையில் அமர்ந்தார். முரசொலியின் நிர்வாக இயக்குநர் என்ற வகையில், அவர் உட்கார வைக்கப்பட்டதாக அப்போது சொன்னார்கள். இந்த நிலையில், கையில் கொடி பிடிக்கவும் ஆரம்பித்துவிட்டார் உதயநிதி.”

‘‘ஏன் இந்தத் திடீர் ஆசை?”

‘‘ரஜினி, கமல், விஷால் என நட்சத்திரப் பட்டாளம் மொத்தமும் அரசியலை நோக்கி நகர்ந்துவருவதைப் பார்த்துத்தான், உதயநிதியும் உள்ளே இறங்கத் தயாராகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. பொங்கல் தினத்தன்று ஸ்டாலினிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, அரசியல் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார் உதயநிதி. அப்போது, அரசியலுக்கு நடிகர்கள் வருவது பற்றிப் பேச்சு வந்தது. ‘அவங்க அரசியலுக்கு வர்றாங்க. நான் அரசியல்லயே இருக்கேன். இனி, நானும் எல்லா கூட்டங்களுக்கும் வர்றேன்’ என்று உதயநிதி சொல்ல... அதற்கு ஸ்டாலினும் தலையாட்ட... அரசியல் பிரவேசம் நடந்துள்ளது.”

p44d_1517316938.jpg

‘‘ஸ்டாலினின் மருமகன் சபரீசன்தானே இதுவரை ஆக்டிவாக இருந்தார்?”

‘‘ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பயணம் தொடங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளாக அவருக்கு ‘ஆல் இன் ஆல்’ ஆக இருந்தவர் சபரீசன். ‘ஸ்டாலினின் கட்டளையே சாசனம்’ என்று செயல்பட்டவர் அவர். ‘உதயநிதிக்கு அரசியல் ஆர்வம் இல்லை. அதனால், சபரீசனைக் கொண்டுவருகிறார்கள்’ என்று அப்போது பேச்சு எழுந்தது. இப்போது, உதயநிதிக்கே அந்த ஆசை வந்துவிட்டது. அதனால், சபரீசன் வழக்கம்போல் பின்னால் இருந்து செயல்படுவாராம். உதயநிதியையும் சபரீசனையும் ஒன்றாக உட்கார வைத்து ஸ்டாலின் பேசியுள்ளார். சபரீசனின் சம்மதத்துடன்தான், உதயநிதியின் செயல்பாடுகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதை வைத்துத்தான், ‘தம்பி சார் முந்துகிறார்... மாப்பிள்ளை சார் பிந்துகிறார்’ என்று சொன்னேன்.”

‘‘ஓஹோ!”

‘‘உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசம், பொங்கல் நாளன்றே ஒத்திகை பார்க்கப்பட்டது என்கிறார்கள்.”

‘‘என்ன ஒத்திகை?”

‘‘ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் திருநாளன்று, கட்சிக்காரர்களை வீட்டில் வைத்து மு.க.ஸ்டாலின் சந்திப்பார். அப்போது, ஒவ்வொருவருக்கும் புதிய 20 ரூபாய் நோட்டை ஸ்டாலின் கொடுப்பார். இந்த ஆண்டும் அந்த நிகழ்வு நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் வழக்கம்போல், 20 ரூபாய் நோட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் நின்று, நோட்டுகளை எடுத்துக்கொடுத்தவர் மகேஷ் பொய்யாமொழி. திடீரென்று மகேஷ் பொய்யாமொழி இடத்துக்கு உதயநிதி வந்தார். அவரே 20 ரூபாயை எடுத்துக்கொடுத்தார். அப்போதே அங்கிருந்தவர்களின் புருவங்கள் ஆச்சர்யத்தில் உயர்ந்தன. உதயநிதி, சபரீசன், மகேஷ் பொய்யாமொழி, கார்த்திக் மோகன் ஆகிய நால்வர் அணி உருவாகிவிட்டது. இதுதான், இனி தி.மு.க-வின் புதிய படையாகச் செயல்படப் போகிறது.”

‘‘ம்!”

‘‘சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு ஸ்டாலின் பேட்டியளித்தார். அப்போது, ‘உங்களுக்கு அடுத்த நிலையில் வலுவான அடுத்த தலைமுறைத் தலைவர்கள் வரிசை ஒன்று வெளியே தெரியவில்லையே. அப்படி இருக்கிறார்களா? இருந்தால், அவர்களை எப்போது எப்படி வெளியே கொண்டுவரப் போகிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு ஸ்டாலின், ‘ஒரு படையே இருக்காங்க. சீக்கிரம் பார்ப்பீங்க’ என்று சொல்லியிருந்தார் ஸ்டாலின். அவர் சொல்லும் படை இதுதான் போலும்!”

‘‘சென்னையின் அடுத்த மேயர் உதயநிதி என இப்போதே தி.மு.க-வில் ஒரு குரூப் கிளம்பிவருகிறதே?”

‘‘உதயநிதியை முதலில் சென்னை மேயராகக் கொண்டுவருவதுதான் இவர்களது திட்டமாம். அதனால்தான், அவருக்கு அரசியல் பயிற்சி கொடுக்கும் பொறுப்பை சென்னை மாநகர முன்னாள் மேயரும், தற்போதைய எம்.எல்.ஏ-வுமான மா.சுப்பிரமணியன் வசம் ஒப்படைத்துள்ளனர். மாநகராட்சி நிர்வாக வேலைகள் பற்றித் துல்லியமாகத் தெரிந்தவர் மா.சுப்பிரமணியன். ‘சென்னை மாநகராட்சி என்பது தமிழக அரசாங்கத்தின் ‘மினி மாடல்’. அது ஒரு குட்டி அரசாங்கம். அங்கு மேயராக இருப்பவருக்கு, ஏறத்தாழ தமிழக முதலமைச்சருக்கு இருப்பதைப்போலவே நிர்வாக வேலைகள் இருக்கும். பட்ஜெட் போடுவது முதல் மற்ற நடைமுறைகளும் தமிழக அரசாங்கத்தைப் போலத்தான் சென்னை மாநகராட்சியிலும். அதனால், அந்தப் பதவியில் இருந்து உதயநிதி முதலில் பயிற்சி எடுக்கட்டும் என நினைக்கின்றனர்’ என்று சொல்கிறார்கள் தி.மு.க-வில்!” என்றபடி எழுந்தார் கழுகார்.

டேபிளில் இருந்த அல்வா பொட்டலத்தை அவர் பக்கம் திருப்பினோம். பார்த்துச் சிரித்தவர், ‘‘நடராசன் அனுப்பி வைத்த ‘அல்வா நியூஸ்’ பற்றிச் சொல்கிறேன் கேளும்...’’ என்றார்.

‘‘சொல்லும்’’ என்றோம்.

p44e_1517316961.jpg

‘‘சென்னையில் ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய நாள்களில் உலக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாநாடு நடைபெற்றது. உலகம் முழுவதுமிருந்து வந்திருந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்துகொண்டனர். சமீபத்தில், கல்லீரல் மற்றும் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட சசிகலாவின் கணவர் நடராசனும் அதில் கலந்துகொண்டார். அவருக்கு, அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து காப்பாற்றிய டாக்டர் முகமது ரீலாவும் அதில் கலந்து கொண்டார். இரண்டாவது நாள் நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வதாக இருந்ததால், அன்று நடராசன் போகவில்லை. முதல் நாள் நிகழ்ச்சியில் காலை 10.30 மணிக்கு கலந்துகொள்ள வந்தவர், மதியம் 1.30 வரை இருந்தார். அதன்பிறகு, டாக்டர் ரீலா வீட்டில் விருந்து நடைபெற்றது. அந்த விருந்தில், நடராசன் சார்பில் அனைவருக்கும் திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலை மிட்டாய், பண்ருட்டி முந்திரி ஆகியவை அடங்கிய பை ஒன்று வழங்கப்பட்டது. அந்தப் பைகளில் ஒன்றை, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கும் அனுப்பிவைத்தார் நடராசன்’’ என்றபடி பறந்தார்.

படம்: கே.குணசீலன்


‘‘அமைச்சர் மிரட்டவில்லை!’’

31
.1.18 ஜூ.வி இதழில் ‘நிர்மலா சீதாராமனை மிரட்டினாரா வேலுமணி?’ என்ற கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் நம்மிடம் பேசிய பி.ஜே.பி-யின் எஸ்.ஆர்.சேகர், ‘‘அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கொடீசியா உள்ளிட்ட தொழில் அமைப்புகளை மிரட்டினார்’’ என்று கூறியிருந்தார். இதையடுத்து நம்மைத் தொடர்புகொண்ட கோவை கொடீசியா அமைப்பின் தலைவர் சுந்தரம், ‘‘அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எங்களை மிரட்டவில்லை. அமைச்சர் நிர்மலா சீதாராமன் எங்கள் அமைப்பின் உறுப்பினர்களுடன் ஒரு கலந்துரையாடலுக்கு வந்திருந்தார். அதன் முடிவில் அவர் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு அறிவித்தது, நாங்களே எதிர்பார்க்காதது. மத்திய அரசும் மாநில அரசும் எங்களின் எல்லா முயற்சிகளுக்கும் ஆதரவாக உள்ளன” என்றார்.


‘‘உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்!’’

 

p44ee_1517316843.jpg

மிழகத்துக்கு கர்நாடகாவிடமிருந்து காவிரி நீர் பெற்றுத் தர வலியுறுத்தி,  அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் அனைத்துக் கட்சிகள் சார்பில், தஞ்சாவூரில் வைகோ தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. உடல்நலக் குறைவுடன் இருந்த எல்.கணேசன், வைகோ வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அவரைச் சந்திப்பதற்காகவே போராட்டத்துக்கு வந்தார். ம.தி.மு.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் சேர்ந்த எல்.கணேசன், பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் வைகோவைச் சந்தித்தார். ‘‘எப்படிண்ணே இருக்கீங்க, உடம்பு இப்ப பரவாயில்லையா! இந்த நிலையில் நீங்க ஏன் இங்க வந்தீங்க?’’ என எல்.கணேசன் கைகளைப் பற்றிக்கொண்டு வைகோ, நா தழுதழுக்க வாஞ்சையுடன் விசாரித்தார். ‘‘நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்’’ என்றார் எல்.கணேசன். இருவரும் கொஞ்சம் நேரம் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு கண் கலங்கினர்.


p44c_1517316880.jpg

‘மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம்’ என்று பிப்ரவரி 2-ம் தேதியிலிருந்து மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் செல்கிறார் தினகரன். தஞ்சை வடக்கு மாவட்டத்தில் தனது பயணத்தைத் தொடங்குகிறார். ‘‘நான் இந்தப் பயணத்தை முடிக்கும்போது இந்த ஆட்சி கலைந்திருக்கும்’’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார் தினகரன்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலை நடத்த, கடந்த 25-ம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டது. அரசியல் கட்சிகளை மிஞ்சும் அளவுக்கு இப்போதே களேபரங்கள் ஆரம்பித்துவிட்டன. பல கோடிக்கு பணப்புழக்கம் இருக்கும் என்று சொல்கிறார்கள்.

‘கடந்த சில வருடங்களில் ரஜினி குடும்பத்தினர் பல ஃபைனான்சியர்களுடன் நிகழ்த்திய கொடுக்கல் வாங்கல்களில் பிரச்னையானது எத்தனை, இன்னும் நிலுவையில் உள்ளவை எவை எவை?’ என்று தமிழக உளவுத்துறையினர் தகவல் சேகரித்து வருகிறார்கள்.

கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சூதாட்ட கிளப்கள் ஜெகஜோதியாக நடக்கின்றன. அந்தந்த ஏரியா ஆளுங்கட்சிப் பிரமுகர்களுக்குத் தினமும் பத்தாயிரம் ரூபாயை வங்கிக்கணக்கில் போடுகிறார்களாம். கப்பம் கட்டாத ஒரு சூதாட்ட கிளப்பில் 12 லட்ச ரூபாயை போலீஸார் பிடித்தார்களாம். போலீஸ் கல்லா களைகட்டுகிறதாம்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.