Jump to content

‘பா.ஜ.க தலைமைக்கு எடப்பாடி பழனிசாமியின் பார்ட்டி ஃபண்ட்!’ - போட்டு உடைக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்


Recommended Posts

‘பா.ஜ.க தலைமைக்கு எடப்பாடி பழனிசாமியின் பார்ட்டி ஃபண்ட்!’ - போட்டு உடைக்கும் தங்க.தமிழ்ச்செல்வன்

 
 

தங்க.தமிழ்ச்செல்வன்

Chennai: 

‘பா.ஜ.க அரசுக்கு மாதம் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் வாரிக் கொடுக்கிறார் எடப்பாடி பழனிசாமி’ என அதிர வைக்கிறார் தினகரன் ஆதரவாளரான தங்க.தமிழ்ச்செல்வன். ‘இந்த அரசைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் கப்பம் கட்டுகின்றனர். இதன்பின்னணியில் குருமூர்த்தி இருக்கிறார்’ எனவும் பட்டியலிடுகிறார். 

 
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றியை ஆளும்கட்சி நிர்வாகிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதைவிடக் கூடுதலாகக் கொதிக்கின்றனர் பா.ஜ.கவினர். கடந்த ஓரிரு நாள்களாக ஆடிட்டர் குருமூர்த்திக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் இடையே நடந்து வந்த வார்த்தைப் போர், சற்று தணிந்திருக்கிறது. ‘படித்த முட்டாள் போல குருமூர்த்தி பேசக் கூடாது. அவருக்கு என்ன முகம் இருக்கிறது?' என அமைச்சர் ஜெயக்குமார் கொதிக்க, ‘திறனற்றவர்கள் என்ற பொருளில் நான் கூறிய வார்த்தை வேறுவிதமாக அர்த்தப்படுத்திவிட்டது' என விளக்கம் கொடுத்திருக்கிறார் குருமூர்த்தி. இந்நிலையில், ‘பா.ஜ.கவின் தேர்தல் செலவுகளுக்கு எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் பணம் கொடுத்தனர். குஜராத், இமாசலப் பிரதேச தேர்தல்களுக்கும் பணத்தை வாரிக் கொடுத்தனர். பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் மாதம்தோறும் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் பா.ஜ.க தலைமைக்கு இந்த அரசு கப்பம் கட்டுகிறது' என்கிறார் தங்க.தமிழ்ச்செல்வன். 

தங்க.தமிழ்ச்செல்வனிடம் பேசினோம். 

“மாயாஜாலம் செய்து தினகரன் வெற்றி பெற்றுவிட்டார்' என்கிறாரே பன்னீர்செல்வம்? 

“ஆமாம். அப்படிச் செய்துதான் நாங்கள் வெற்றி பெற்றோம். இதைக் கண்டுபிடிக்க முடியாத கையாலாத அரசாகத்தானே நீங்கள் இருக்கிறீர்கள். உடனடியாக பதவியை ராஜினாமா செய்துவிட்டுக் கிளம்புங்கள். எங்களைத் தோற்கடிக்க முடியாததற்கு, இந்த அரசின் நிர்வாகத் திறமையின்மைதான் காரணம். உங்கள் தோல்வியை ஒப்புக் கொள்ளுங்கள். டி.டி.வியின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் கொந்தளிக்கிறார் குருமூர்த்தி. எங்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள், தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை, போலீஸ் என அனைத்தையும் ஏவிவிட்டவர் அவர்தான். ‘ஓட்டுக்கு ஆறாயிரம் கொடுங்கள்' என எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வத்துக்கு குருமூர்த்திதான் அறிவுறுத்தினார். அவருடைய வழிகாட்டுதலில்தான் இவர்கள் தேர்தலை எதிர்கொண்டார்கள். இவ்வளவு செய்தும் வெற்றி பெறவில்லை என்பதால்தான் அப்படியொரு மோசமான வார்த்தையை உபயோகித்தார் குருமூர்த்தி. தேர்தலில் எங்களுக்கு இமாலய வெற்றி கிடைத்துள்ளது. இது எதிர்பார்த்த வெற்றிதான்". 

ஆடிட்டர் குருமூர்த்திக்கும் பன்னீர்செல்வத்துக்கும் என்ன தொடர்பு? 

“அம்மா மரணத்துக்குப் பிறகு பன்னீர்செல்வத்தைக் கையில் எடுத்தது குருமூர்த்தி. அ.தி.மு.கவை உடைத்தது; தர்மயுத்தத்தை ஏற்பாடு செய்தது; இரட்டை இலையை முடக்கியது; தேர்தல் ஆணையத்தில் எங்களை நிறுத்தியது; எடப்பாடி பழனிசாமியைக் கையில் எடுத்தது; இணைப்பை நடத்தியது; இரட்டை இலையை வாங்கிக் கொடுத்தது என அனைத்தையும் முன்னின்று நடத்தியவர் குருமூர்த்தி. இவ்வளவு உழைப்பைக் கொட்டியவருக்குப் பரிசாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி அமைந்துவிட்டதை அவரால் ஏற்க முடியவில்லை. எனவே, கோபம் வரத்தானே செய்யும்". 

மோடி-எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

முதல்நாள் கொதித்த அமைச்சர் ஜெயக்குமார், மறுநாளே ‘அவர் ஒரு பண்பாளர். இப்படியெல்லாம் பேசக் கூடாது' என மாற்றிப் பேசியதற்கு என்ன காரணம்? 

“குருமூர்த்தியை வசைபாடுவதை எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் ஜெயக்குமார் மாற்றிப் பேசுகிறார். நாஞ்சில் சம்பத்மீது ஏராளமான வழக்குகளைத் தொடுத்தார்கள். ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை இம்பொடன்ட் என்கிறார் குருமூர்த்தி. ஏன் அவர்மீது வழக்குப் பதியவில்லை? ஒரு கண்டன அறிக்கையைக்கூட எடப்பாடி பழனிசாமி வெளியிடவில்லை. அப்படிச் செய்ய முடியாததற்குக் காரணம், இவர்கள் பா.ஜ.கவின் கைக்கூலியாக மாறிவிட்டதுதான். இந்த அரசை மக்கள் விரும்பவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாகத்தான் ஆர்.கே.நகரில் எங்களுக்கு இமாலய வெற்றி கிடைத்தது. தமிழ்நாடே டி.டி.வி.தினகரனை ஏற்றுக் கொண்டது. மிகப் பெரிய அரசியல் மாற்றம் விரைவில் வரும்”. 

 

 

‘குஜராத் தேர்தலுக்காக பா.ஜ.க தலைமைக்குப் பணம் கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி’ என்கிறீர்கள்? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்கிறீர்கள்? 

 

“உ.பி, குஜராத் தேர்தல் செலவுகளுக்காக ஆயிரம் கோடி ரூபாயை எடப்பாடியும் பன்னீர்செல்வமும் கொடுத்திருக்கின்றனர். பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் மாதம் ஆயிரம் கோடி ரூபாயை இவர்கள் கப்பம் கட்டுகின்றனர். மாநில அரசில் செய்யும் ஊழல் பணத்தில் பாதிப் பணம் பா.ஜ.க தலைமைக்குச் செல்கிறது. இரட்டை இலையை இவர்களுக்குக் கொடுத்தது; சின்னம்மா குடும்பத்தின் மீது வருமான வரித்துறை சோதனையை ஏவிவிடுவது என எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே பா.ஜ.க அரசு நடந்துகொள்கிறது. இந்த ஆட்சிக்கு எந்தவித தொந்தரவும் இல்லாமல் இருப்பதற்குக் காரணம், மாதம்தோறும் மிகச் சரியாக கப்பம் கட்டுவதுதான்’. 

https://www.vikatan.com/news/tamilnadu/112034-edappadi-palanisamy-gives-party-fund-to-bjp-leadership-says-thanga-tamilselvan.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.