Jump to content

கிறிஸ்துவின் தானியங்கள்: இறை வார்த்தை என்னும் விதை


Recommended Posts

கிறிஸ்துவின் தானியங்கள்: வாழ்வு தரும் உணவு

 

 
shutterstock681739054

மனிதரின் அடிப்படைத் தேவைகளில் உணவும் நீரும் முதன்மையானவை. சாதாரண உணவு உயிரோடு இருப்பதற்கு உதவுகிறது. ஆனால், கடவுள் தரும் உணவு உயிர் வாழ்வதற்கு உதவுகிறது. இங்கு வாழ்வு எனக் குறிப்பிடப்படுவது ஆன்மிகம் சார்ந்தது. உயிரோடு வாழ்வது என்பது கடவுளோடு இணைந்த வாழ்வு. அந்த வாழ்வு அவருடைய மகன் இயேசுவால் எளிதாக்கப்பட்டிருக்கிறது.

இயேசுவை அன்றாட வயிற்றுப் பாட்டுக்கான உணவை வழங்கும் வல்லமை பெற்றவர் என்று, அவர் செய்த சில அற்புதங்களைக் கண்டு அவரை ஓர் உணவுத் தொழிற்சாலையாகக் கருதிக்கொண்டார்கள். அவரிடம் திரும்பத் திரும்ப அதையே எதிர்பார்த்தனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசுவின் பதில் அவர்களைத் தெளிவடையச் செய்தது.

 

 

பசியும் இல்லை தாகமும் இல்லை

யோவான் எழுதிய நற்செய்தி அதிகாரம் 6-ல் 30 முதல் 35 இறைவசனங்களை வாசித்துப் பாருங்கள். இயேசு, கொல்லப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு மக்கள் மத்தியில் போதனை செய்துகொண்டிருந்தார். அப்போது மக்களில் சிலர் அவரிடம் வந்து, “ஐயா…நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் அருள் அடையாளம் காட்டுகிறீர். எகிப்திலிருந்து மீட்டுவரப்பட்ட எங்கள் முன்னோர்கள் பாலை நிலத்தில் தங்கியிருந்தபோது ‘மன்னா’ என்ற உணவை உண்டார்களே! ‘அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளப்பட்டது’ என மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!” என்று கேட்டனர்.

அதற்கு இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவை அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது” என்றார். உடனே அவர்கள், “ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்” என்று கேட்டுக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது”என்றார்.

 

நம்பிக்கையின் உயர்வு

இயேசுவை அன்றாடம் அணுகிச் சென்ற மக்கள் தங்களுக்கு அவர் வழியே உணவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். அதற்குக் காரணம் தண்ணீருக்குக் கூட வழியில்லாத பாலை நிலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு மோசே கடவுளிடமிருந்து ‘மன்னா’என்னும் உணவைப் பெற்றுக் கொடுத்தார். அதுபோலவே மக்களின் வாழ்வுக்கு நெறிகாட்டும் வகையில் ‘தோரா’ என்னும் திருச்சட்டத்தை வழங்கினார்.

இதைத் தங்கள் ஆன்மிக வரலாற்றின் மூலம் அறிந்து வாழ்ந்த மக்கள், இயேசுவும் அதே உணவைப் பெற்றுத்தருவார் என நினைக்கிறார்கள். இயேசுவால் செய்ய முடியாத அதிசய செயல் ஏதாவது உண்டா எனத் தங்களின் எதிர்பார்ப்புக்கு நியாயம் கற்பிக்கிறார்கள். அதிசயமான விதத்தில் ஐயாயிரம் மக்களுக்கு இயேசு உணவு வழங்கிய நிகழ்வும் அவர்கள் இப்படி எதிர்பார்க்கக் காரணமாக அமைகிறது.

ஆனால், இயேசு மன்னாவைவிடச் சிறந்த ஓர் உணவை அவர்களுக்கு வழங்குகிறார். அது மன்னாவைப் போல் சில காலம் மட்டுமே தரப்பட்ட உணவு அல்ல. என்றும் ஜீவித்திருக்கும் உயிருள்ள உணவு. இயேசுவே மக்களுக்கு உணவாகத் தம்மைக் கையளிக்கிறார். இந்த உணவை உண்போர் பசியால் வாட மாட்டார்கள். அவர்களுடைய தாகமும் தணியும். இது எவ்வாறு நிகழும் என்பதை இயேசு விளக்கிச் சொல்கிறார். முழுமையான நிறைவைத் தருகின்ற உணவை நாம் தேடினால் இயேசுவை அணுகிச் செல்ல வேண்டும்.

நம் வாழ்க்கையின் தாகம் தணிய வேண்டும் என விரும்பினால் இயேசுவிடம் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இவ்வாறு இயேசு இறை நம்பிக்கையின் உயர்வை உணர்த்துகிறார். இயேசுவை நம்புவது என்றால் என்ன? வரலாற்றில் வாழ்ந்து, இறையாட்சி பற்றி மக்களுக்குப் போதித்து, சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசு நமக்காகத் தம்மையே கையளித்ததால் நமக்கு உணவாக மாறினார். இயேசுவை நம் வாழ்வின் ஊற்றாக ஏற்றால் அவரே நமக்கு வாழ்வு வழங்குவார்.

 

உயிருள்ள உணவு

இயேசுவை உணவாக உட்கொள்ளும் அனைவரும் அவரது போதனைகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலமே அவர் உயிருள்ள உணவு என்பதை உணர முடியும். இயேசுவைத் தம் வாழ்வுக்கு முன்மாதிரியாகக் கொண்டு, அவருடைய கட்டளைகளை ஏற்று நடக்கும் அனைவருக்கும் நிலைவாழ்வு உண்டு. நிலைவாழ்வு நாமாகவே உழைத்துப் பெறுகின்ற பேறு அல்ல, மாறாகக் கடவுளே தன் மகனின் வழியாக நமக்கு வழங்குகின்ற அன்புக் கொடை. இதுவே கடவுளின் ஏற்பாடு.

http://tamil.thehindu.com/society/spirituality/article23903532.ece

Link to comment
Share on other sites

கிறிஸ்துவின் தானியங்கள்: ஆலயம் தேடி ஓடத் தேவையில்லை!

Christ

இறைவனோடு இணைந்திருந்தல் என்பதுதான் ஆன்மிக நிலையில் முக்கியமான செயல்பாடு. அதற்குப் போலியான பக்தி எனும் வெளிவேடம் ஒருபோதும் பலன் தருவதில்லை. கடவுளின் வார்த்தைகளின்படி நடப்பதும் வாழ்வதும் அல்லது மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான முன்மாதிரியாகத் திகழ்வதும்தான் இறைவனோடு நம்மை இணைக்கிறது.

இப்படி அர்த்தபூர்வமான வாழ்க்கை வாழ்ந்தால் இறைவனைத் தேடி ஆலயத்துக்கு ஓட வேண்டியதில்லை. அவரே இறைவன் வாழும் ஆலயமாகிவிடுகிறார். இதைத்தான் யோவான் எழுதிய நற்செய்தி அதிகாரம் 15: 1 முதல் 8 வரையிலான இறைவார்த்தைகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

 

 

கனி கொடாத கிளைகள்

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உண்மையான திராட்சைக் கொடிநானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார்.

நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனி தர இயலாது.

அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது. நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.

என்னோடு இணைந்து இராதவர் கிளையைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும். நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது” என்றார்.

 

இஸ்ரேல் எனும் திராட்சைக் கொடி

“நானே உண்மையான திராட்சைச் செடி” என்று இயேசு கூறுகிறார். ‘உண்மையான’ என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது? அதனுடைய விவிலியப் பின்னணி என்ன என்பதை ஆராய்ந்தால் பழைய ஏற்பாட்டில் எப்போதெல்லாம் திராட்சைச்செடி அல்லது கொடி பற்றிய செய்தி வந்திருக்கிறதோ அப்போதெல்லாம் எதிர்மறையாகத்தான் பெரும்பாலும் அது சொல்லப்பட்டிருக்கிறது.

திராட்சைச்செடி இஸ்ரேயேல் தேசத்துக்கு ஒப்பிடப்பட்டாலும் அந்தத் தேசத்தின் தவறான அணுகுமுறையால்தான் இறைவாக்கினர்களால் திராட்சைச்செடியோடு ஒப்பிடப்படுகிறது. உதாரணமாக, இறைவாக்கினர் எரேமியா, இஸ்ரேயேலைக் காட்டுத் திராட்சைக்கு ஒப்பிடுகிறார். அதிலிருந்து உண்பதற்கான பழங்களைப் பார்க்க முடியவில்லை என்றும் கூறுகிறார். இதே கருத்தைத்தான் இறைவாக்கினர் எசாயாவும் முன்வைக்கிறார். ஆக, இங்கே திராட்சைச்செடி போலியானதாக சித்தரிக்கப்படுகிறது.

 

கனி தராத தேசம்

ஆனால், இயேசு தன்னை உண்மையான திராட்சைச் செடி என்று அறிவிக்கிறார். அப்படி அவர் கூறியதில் மறைந்திருக்கும் செய்தி என்ன என்பதை ஆராய்ந்தால் தெளிவான உண்மை புலப்படும். இஸ்ரேயேல் கடவுளின் உண்மையான திராட்சைச் செடியாகத் தன்னை நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல. இஸ்ரேயேலின் நடத்தையைப் பார்க்கிறபோது, அது உண்மையான திராட்சைச் செடியாக இல்லை. இனத்தால் யூதர்கள் என்பதால் யாரும் மீட்பு பெற்றுவிட முடியாது. யூதராக இருந்தாலும் அதற்கேற்ற இறைவார்த்தைகளைப் பின்பற்றி வாழும் வாழ்வை வெளிப்படுத்த வேண்டும். ஆனால், இஸ்ரேயேல் அதைச் செய்யவில்லை.

அப்படிப்பட்ட ஒரு தேசத்தில், குலத்தில் உதித்த இயேசு இறைவனோடு இணைந்து வாழ அவரது வார்த்தைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். அதுவே உண்மையான சீடத்துவ வாழ்வு என்பதை எடுத்துக்காட்டினார். அதன்படியே வாழ்ந்தும் காட்டினார். பொய்மையை எதிர்த்தார், போலி பக்தியைக் கிழித்தார், அதிகார பீடத்தில் இருந்தவர்களைத் துணிவுடன் விமர்சித்தார். தன்னைப் பலியாக்கியதன் மூலம் தியாகமும் அர்ப்பணிப்பும் மனித வாழ்வின் அங்கம் என்பதைக் காட்டினார்.

தனது முன்மாதிரியை முன்வைத்தே கனிதரும் திராட்சைக் கொடியாகிய என்னுடன் கிளையாக இணைந்திருங்கள் என்று அறிவுறுத்துகிறார். இயேசு உதித்த யூத குலத்தில் பிறந்தவராக இருந்தாலும் இறைவனோடு இணைந்திருக்கக் கடவுளுக்குப் பிரியமான முறையில் வாழ்ந்து காட்ட வேண்டும். மற்றவர்களைத் திருப்திப்படுத்துவது நமது வாழ்வின் நோக்கமல்ல. மாறாக, கடவுள் காட்டிய வாழ்வை, நாம் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான ஆன்மிக வாழ்வு.

 

வாழ்வும் அனுபவமும்

இறையனுபவம் என்பதும் கடவுளோடு இணைந்திருத்தல் என்பதும் ஒன்றே. தவறிலிருந்து மீண்டு வருவதற்கான ஆன்மிக சக்தியை இறை வார்த்தைகள் வழங்குகின்றன. குறைகளை ஏற்றுக்கொண்டு, நிறைவோடு வாழ்வதற்கான உந்துசக்தி இறைவார்த்தைகளில் ஊற்றாகப் பெருகி வழிகிறது. எந்தச் சூழ்நிலையிலும் சோர்ந்து போகாத ஒரு நிலையை இறை வார்த்தையைக் கற்பவர்களுக்கு அது வழங்குகிறது.

இயேசுவின் வெற்றிகரமான பூமி வாழ்க்கைக்கு இறை வார்த்தைகள் உதவியாக இருந்தன, அவர் கடவுளாகிய தந்தையோடு கொண்டிருந்த இறையனுபவமே அவரைத் தலைவராக்கியது. தாம் பெற்ற இறையனுபவத்தை உலகமும் பெற்றுக்கொள்ள வாழ்வுதரும் வார்த்தைகளை, அவர் மண்ணுலகுக்குக் கொட்டிக்கொடுத்திருக்கிறார். அவற்றை உள்ளங்களில் நிரப்பிக்கொண்டு இறை அனுபவம் பெற்றுக்கொள்வதே உண்மையான கிறிஸ்தவ வாழ்வு.

http://tamil.thehindu.com/society/spirituality/article23970121.ece

Link to comment
Share on other sites

கிறிஸ்துவின் தானியங்கள்: ஒரே ஒரு வார்த்தை மட்டும் போதும்

 

 

 
31chsrsbib

இயேசுவின் காலத்தில் ஜெருசலேமை ரோமானியர்கள் ஆண்டுவந்தனர். அதேநேரத்தில் யூதர்களின் மத நம்பிக்கைகளில் அவர்கள் தலையிடவில்லை. மேலும் ரோமானிய ஆளுநருக்கு அடுத்த நிலையில் யூத மதத்தின் அதிகார வர்க்கமாகிய யூத தலைமைச் சங்கத்தார் இருந்தனர். அவர்கள் யூத இனம் மட்டுமே புனிதமானது என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்துவந்தார்கள். அவர்களின் பழமைவாதத்தைத் துணிச்சலாகக் கேள்விக்குள்ளாக்கியவர் இயேசு. இதை இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம் வழியாகவே நாம் தெரிந்துகொள்ளமுடியும்.

 

நூற்றுவர் தலைவனின் கோரிக்கை

 

ஜெருசலேம், கப்பர்நாகூம், சமாரியா உள்ளிட்ட பெரிய நகரங்களின் சட்டம் ஒழுங்கைக் காத்துவந்த ரோமானியப் படையணியில், யூதர்கள் அல்லாத பிற இனத்தைச் சேர்ந்தவர்களும் உயர்ந்த பொறுப்புகளில் இருந்தனர். நூறு படை வீரர்களுக்குத் தலைவராக இருப்பவர்களை ‘நூற்றுவர் தலைவர்’ எனப் பெயரிட்டு அழைத்தனர். அப்படியான ‘நூற்றுவர் தலைவர்’ ஒருவர், இயேசுவைத் தேடி வந்தார். அதைக் குறித்து, மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து அதிகாரம் 8-ல் 5 முதல் 17வரையிலான, இறை வசனங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

அந்தக் காலத்தில் இயேசு கப்பர்நாகூமுக்குச் சென்றபோது ‘நூற்றுவர் தலைவர்’ ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். “ஐயா, என் மகன் முடக்கு வாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்த படுக்கையாகக் கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், “நான் உங்கள் வீட்டுக்கு வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்கள், என் மகன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரர்கள் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் வருகிறார்.

என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார். இதைக் கேட்ட இயேசு, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரவேல் மக்கள் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலும் இருந்து பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வார்கள். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்” என்றார்.

பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, “நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்” என்றார். நூற்றுவர் தலைவர் வீட்டுக்குத் திரும்பிச் சென்றபோது அவரது மகன் குணமடைந்துவிட்ட அதிசயம் நிகழ்ந்திருந்தது. அதன்பின் இயேசு பேதுருவின் வீட்டுக்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடைசெய்தார்.

பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல தீய ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளிகளையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு, ‘அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்’ என்று இயேசுவுக்கு முன்பு வாழ்ந்த இறைவாக்கினர் எசாயா உரைத்த தீர்க்க தரிசனம் நிறைவேறியது.

 

கடவுளின் பந்தியில் அனைவருக்கும் இடம் உண்டு

இயேசுவின் வார்த்தைகள், அதுவரையிலான யூதர்களின் நம்பிக்கை பற்றிய பார்வையை அடியோடு புரட்டிப்போட்டது. ‘நூற்றுவர் தலைவன்’, தனது மகனைக் குணப்படுத்த இயேசுவின் உதவியை நாடுகிறார். அதில் உள்ள பிரச்சினையும் அவருக்குத் தெரியும். யூதச் சட்டப்படி, ஒரு யூதர் புற இனத்தவரின் வீட்டுக்குச் செல்லக்கூடாது. புறவினத்தார் வாழக்கூடிய பகுதிகள், யூதர்களின் பார்வையில் தூய்மையற்றவை, பிரவேசிக்கத் தகுதி அற்றவை. இயேசு ஒரு யூதர்.

‘நூற்றுவர் தலைவன்’ ஒரு புற இனத்தவர். இந்தச் சிக்கல் இரண்டு பேருக்குமே தெரிந்திருக்கிறது. அப்படியிருந்தும், இயேசு, “நான் உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் மகனைக் குணப்படுத்துவேன்” என்கிறார். இயேசு நடைமுறையில் இருக்கும் தீண்டாமைப் பிரச்சினை அறியாமல் அதைச் சொல்லவில்லை. மாறாக, ‘நூற்றுவர் தலைவனின்’ பதில் என்னவாக இருக்கப் போகிறது என்பதை எதிர்பார்த்துச் சொல்கிறார்.

இந்த இடத்தில்தான் இயேசுவின் மீதான நூற்றுவர் தலைவனின் ஆழ்ந்த நம்பிக்கை வெளிப்படுகிறது. அந்த நம்பிக்கையைப் பாராட்டும் இயேசு, அடுத்து கடவுளின் சித்தம் எதுவென்பதை அதிரடியாக அறிவிக்கிறார். அதாவது, “கிழக்கிலும், மேற்கிலுமிருந்து பலர் வந்து, கடவுள் தேர்ந்துகொண்ட இஸ்ரவேலின் வெவ்வேறு இனத்தில் பிறந்த மூதாதையர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்” என்பதுதான் அந்தச் செய்தி.

கடவுள் வாக்குறுதி அளித்த மீட்பர் இந்த மண்ணுலகுக்கு வருகிறபோது செய்யப்படுகிற விருந்தில் புற இனத்தவர்க்கு இடமே கிடையாது என்ற நம்பிக்கையில் இருந்த யூதர்களுக்கு, இந்தச் செய்தி காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப்போல இருந்தது.

இயேசுவின் எண்ணம் பரந்துபட்ட எண்ணம். அது அடிமைத்தளைகளை உடைத்தெறிகிற எண்ணம். அனைவரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எண்ணம். இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களையும் கடவுளின் பிள்ளைகளாகப் பார்க்கக்கூடிய எண்ணம். இயேசுவைப் பின்பற்றுகிற அனைவரும் வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் தங்கள் சொந்தச் சகோதரர்களாக ஏற்றுக்கொள்வார்கள் என்பதையே இயேசுவின் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

http://tamil.thehindu.com/society/spirituality/article24037041.ece

Link to comment
Share on other sites

கிறிஸ்துவின் தானியங்கள்: குருவையும் சீடரையும் கண்டடைதல்

 

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நல்லவற்றை நேர்வழியில் தேடித்தேடி தேர்வு செய்ய விரும்புகிறது தூய்மையான மனம். தூய்மையற்ற மனமோ குறுக்குவழியில் அனைத்தையும் அடைந்துவிடத் துடிக்கிறது. மனிதனுக்கு ஆன்மிகமும் அடிப்படையான தேவையாகும். மனிதன் தனக்கான ஞானகுருவைக் கண்டடையும்போது புதையலைக் கண்டுபிடித்துவிட்டதைப்போல துள்ளிக் குதிக்கிறான். போலியான ஞானகுருவைத் தேர்ந்துகொண்டவர்கள் ஏமாற்றத்தைச் சந்திக்கிறார்கள். தனக்கான சீடர்களைத் தேர்ந்துகொள்ளும் ஞானகுருக்களுக்கும் இது பொருந்துகிறது. இயேசு தனது சீடர்களைத் தேர்வு செய்தபோதும், தாங்கள் தேடிய ஞானகுரு இவர்தான் என சீடர்கள் இயேசுவைக் கண்டடைந்தபோதும் எப்படி உணர்ந்திருப்பார்கள்?

 

தங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு அவற்றைவிட உயர்வான ஒன்றைப் பெற்றுக்கொள்கிறபோது ஏற்படும் உணர்வே ஆன்மிகத்திலும் கிடைக்கிறது. பதவி, பணம், புகழ் இந்த மூன்றும் கிடைத்துவிடும்போது அந்தஸ்து தானாகவே வந்து ஒட்டிக்கொள்கிறது. இந்த மூன்றையும்விடச் சிறந்தது ஆன்மிக வாழ்வுதான். அதைப் பெறுவதற்காக தன்னிடமுள்ள அனைத்தையும் துறக்க யாராவது முன்வருவார்களா என்று கேட்டால், அது அரிதானதே. அப்படிப்பட்ட அரிய முன்மாதிரிகளாக இருந்தார்கள் இயேசுவும் அவரது சீடர்களும். இப்படிப்பட்ட அரிதான, அருமையான குணத்தைப் பற்றி இயேசு ‘விலை உயர்ந்த ஒரு முத்து’ பற்றிய உவமை வழியாக எடுத்துக் கூறினார்.

 

விலை உயர்ந்த முத்தும்

நல்ல மீன்களும்

மத்தேயு நற்செய்தி அதிகாரம் 13-ல் 45 முதல் 48 வரையிலான இறைவசனங்களைப் படிப்பதன் மூலம் அறிந்துகொள்ளலாம். இயேசு தாம் தேர்ந்தெடுத்த தன் சீடர்களைப் பார்த்து, “விண்ணுலக அரசாங்கம் அருமையான முத்துக்களைத் தேடிப் பயணம் செய்கிற வியாபாரியைப் போல் இருக்கிறது. விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டுபிடித்ததும், அவன் போய், தன்னிடம் இருந்த அனைத்தையும் உடனடியாக விற்று அதை வாங்கிக்கொண்டான்.

அதோடு, விண்ணுலக அரசாங்கம், கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொள்கிற வலையைப் போல் இருக்கிறது. வலை நிறைந்ததும் மீனவர்கள் அதைக் கடற்கரைக்கு இழுத்துக்கொண்டுவந்து அங்கே உட்கார்ந்து நல்ல மீன்களைக் கூடைகளில் சேகரிப்பார்கள், ஆகாதவற்றையோ தூக்கியெறிவார்கள்.” என்றார்

 

நேசித்த தொழிலை விட்டுவிட்டு

மீன்பிடி தொழில் நிரந்தரமான வருவாயைத் தரக்கூடியது. மழை பொய்த்துப் போகலாம், ஆனால் கடலும் அதில் உற்பத்தியாகும் மீனும் என்றுமே வற்றுவதில்லை. அப்படிப்பட்ட உயர்ந்த, உடல் உழைப்பு கொண்ட தொழிலில் ஈடுபட்டிருந்த பேதுரு, அவரது சகோதரர் அந்திரேயா, யாக்கோபு அவரது சகோதரர் யோவான் ஆகியோர் அந்தத் தொழிலை விட்டுவிட்டு இயேசு அழைத்ததும் அவரைப் பின்பற்றிச் சென்றார்கள். இதை மத்தேயு நற்செய்தி அதிகாரம் 4-ல் 18 முதல் 22 வரையிலான இறைவசனங்கள் நமக்கு விளக்குகின்றன.

“கலிலேயா கடலோரமாக இயேசு நடந்துபோனபோது, பேதுரு என்ற சீமோனையும் அவருடைய சகோதரர் அந்திரேயாவையும் பார்த்தார். அவர்கள் இரண்டு பேரும் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மீனவர்கள். இயேசு அவர்களிடம், ‘என் பின்னால் வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்களாக ஆக்குவேன்’ என்று சொன்னார். அவர்கள் உடனடியாக வலைகளை விட்டுவிட்டு அவர் பின்னால் போனார்கள். அங்கிருந்து அவர் போனபோது, சகோதரர்களாக இருந்த இன்னும் இரண்டு பேரைப் பார்த்தார். அவர்கள்தான் செபெதேயுவின் மகன்களான யாக்கோபும் யோவானும். அவர்கள் தங்களுடைய அப்பாவோடு படகில் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களையும் இயேசு அழைத்தார். அவர்கள் உடனடியாகப் படகையும் தங்களுடைய அப்பாவையும் விட்டுவிட்டு அவர் பின்னால் போனார்கள்.”

யாக்கோபுவும் யோவானும் தாங்கள் நேசித்த தொழிலை மட்டுமல்ல இயேசுவை குருவாக ஏற்றுக்கொள்ள தங்கள் தந்தையையும் விட்டுவிட்டுச் சென்றார்கள். இயேசு போன்ற ஒருவருடன் செல்ல அந்தத் தகப்பனும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இயேசு தன் உவமையில் குறிப்பிடப்பட்ட அந்த வியாபாரி செய்தது முட்டாள்தனமான ஒரு காரியமாக இன்றுள்ள பல வியாபாரிகளுக்குத் தோன்றலாம். காரணம் லாப நோக்கம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு வியாபாரி, இப்படிப்பட்ட வியாபாரத்தில் ஆர்வம் செலுத்தமாட்டார். ஆனால் இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்ட வியாபாரியின் உயரிய கண்ணோட்டம் வேறு வகையானது. பொருளாதார லாபத்தை அல்ல, ஆனால் ஒப்பற்ற மதிப்பு கொண்ட ஒன்றைச் சொந்தமாக்கிக் கொள்வதில் கிடைக்கிற மகிழ்வு, நிறைவு ஆகிய உணர்வுகளையே அவர் லாபமாகக் கருதினார். அந்த லாபம் ஆன்மிக ரீதியிலானது. உங்கள் குருவை நீங்களும் குரு உங்களையும் கண்டுகொள்ளும்போது நீங்களும் அதை அடைவீர்கள்.

http://tamil.thehindu.com/society/spirituality/article24096446.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் ஆன்மீக குருவே உம் பாதம் சரணடைந்தேன் ஐயா. விலை உயர்ந்த இரட்சிப்பிற்காக நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமென் .......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கிறிஸ்துவின் தானியங்கள்: இரண்டு வகை ஆலயங்கள்

 

 
14chsrschrist%202

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றனர் முன்னோர். ஆனால், எங்கும் எதிலும் நிறைந்திருப்பவரே கடவுள் என்பதை எல்லா மதங்களுமே வலியுறுத்துகின்றன. அப்படியானால் ஆலயங்கள் எதற்கு என்ற கேள்வி எழலாம். இதற்கு ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விளக்கம் தரலாம். இயேசு கொடுத்த விளக்கம் யூதப் பழமைவாதிகளைக் கோபப்படுத்தியது. தந்தையாகிய கடவுள் வசிக்கும் வீட்டை சந்தைக் கடையாக மாற்றியவர்களை அடித்துத் துரத்தினார். கடவுள் வாழும் ஆலயத்தை இரண்டுவிதமாக இயேசு எடுத்துக்காட்டினார். யோவான் நற்செய்தி அதிகாரம் இரண்டில் இறைவசனங்கள் 13 முதல் 22 வரை படித்தால் இதைப் பற்றி அறியலாம்.

 

 

எருசலேம் நோக்கி

காணாவூர் திருமணத்தில் திராட்சை ரசம் தீர்ந்துபோன நேரத்தில் தன் அன்னை மரியாளின் வேண்டுகோளை ஏற்றுத் தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றி அருள் அடையாளத்தை நிகழ்த்தினார் இயேசு. பின்னர் அங்கிருந்து அவரும் அவருடைய அம்மாவும் சீடர்களும் கப்பர்நகூம் நகரத்துக்குப் போய் அங்கே சில நாட்கள் தங்கினார்கள்.

பின்னர், யூதர்களுடைய விடுதலைத் திருவிழாவாகிய பாஸ்கா பண்டிகை நெருங்கிவிட்டிருந்ததால் இயேசு தன் சீடர்களுடன் கடவுளாகிய தந்தையின் பேராலயம் அமைந்திருந்த எருசலேமுக்குப் புறப்பட்டார். சுற்றுவட்டாரங்களில் உள்ள எல்லா நகரங்களில் இருந்தும் எருசலேம் தேவாலயத்துக்கு வந்து கடவுளுக்குப் பலி செலுத்தி பாஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவதை யூதர்கள் புனிதமாகக் கருதினார்கள். எனவே, யூத குலத்தில் பிறந்த இயேசுவும் பாஸ்கா பண்டிகையைக் கொண்டாட எருசலேமுக்குப் போனார்.

 

தந்தையின் வீடு சந்தையானது!

அவர் ஆலயத்துக்குள் நுழைந்ததும் அங்கே கண்ட காட்சிகள் அவரை அதிர்ச்சியடைச் செய்தன. ஆலய வளாகத்துக்குள் அமைதி இல்லை. ஆடு, மாடு, புறா போன்றவற்றை விற்பவர்களையும் மேஜைகளைப் போட்டு அதில் நாணயமாற்றம் செய்துகொண்டிருந்த தரகர்களையும் கண்டார். அவருக்குக் கோபம் தலைக்கேறியது. உடனே, கயிறுகளால் ஒரு சாட்டை செய்தார். ஆடு மாடுகளையும் ஆலயத்தை வணிக வளாகம் ஆக்கிய அனைவரையும் ஆலயத்திலிருந்து விரட்டி அடித்தார். நாணயம் மாற்றுபவர்களின் காசுகளைக் கீழே கொட்டி, அவர்களுடைய மேஜைகளைக் கவிழ்த்துப்போட்டார். புறா விற்பவர்களை நோக்கி,

“இதையெல்லாம் இங்கிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்! என் தந்தையுடைய வீட்டை இனியும் சந்தைக்கடை ஆக்காதீர்கள்!” என்று உரக்கக் கத்தினார். அப்போது, “ உங்களுடைய வீட்டின் மேலுள்ள பக்தி வைராக்கியம் எனக்குள் பற்றியெரியும்” என்று யூதர்களின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருந்த வசனத்தை அவருடைய சீடர்கள் நினைத்துப் பார்த்தார்கள். பொறுமையும் சாந்தமும் மிகுந்த தன் வார்த்தைகளால் மக்களைக் கட்டிப்போடும் இயேசுவா இது என்று சீடர்கள் வியந்துபோனார்கள்.

 

யார் கொடுத்த அதிகாரம்?

இயேசுவின் இந்தத் துணிச்சலான செயலைக் கண்டு ஆத்திரம் அடைந்த யூத மத அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அவரிடம், “ இப்படியெல்லாம் செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை எங்களுக்கு நிரூபிக்க என்ன அடையாளத்தைக் காட்டப்போகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாட்களில் இதை எழுப்புவேன்” என்று சொன்னார். அப்போது யூதர்கள், “இந்த ஆலயத்தைக் கட்ட வருஷங்கள் எடுத்தன, நீ இதை மூன்று நாட்களில் எழுப்பிவிடுவாயோ?” என்றார்கள்.

ஆனால், அவர் தன்னுடைய உடலாகிய ஆலயத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். இயேசு அடிக்கடி அப்படிச் சொன்னதை அவர் கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வந்தபோது சீடர்கள் நினைத்துப் பார்த்தார்கள். அதனால், வேதவசனங்களையும் அவர் சொன்ன வார்த்தைகளையும் நம்பத் தொடங்கினார்கள்.

சீடர்களின் அழுத்தமான நம்பிக்கை இயேசுவின் பூமி வாழ்க்கை முடிந்தபிறகே வலுப்பெற்றது எனலாம். ஆனால், சீடர்களாக இல்லாதவர்கள், பாஸ்கா பண்டிகை சமயத்தில் அவர் எருசலேம் தேவாலயத்தைத் துணிந்து தூய்மைப்படுத்தியபின் செய்த அடையாளங்களைப் பார்த்து, நிறையப் பேர் அவருடைய பெயரில் நம்பிக்கை வைத்தார்கள். ஆனால், இயேசு அவர்களை நம்பவில்லை. ஏனென்றால், அவர்கள் எல்லாரையும் பற்றி அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. எந்த மனிதனைப் பற்றியும் அவருக்கு யாரும் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏனென்றால், அவர்களுடைய இதயத்தில் என்ன இருந்ததென்று அவருக்குத் தெரிந்திருந்தது.

ஆலய வளாகத்துள் வந்து மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகக் கத்தி பிராத்த்தனை செய்கிறவர்களை அவர் அறிவார். ஆனால், கடவுள் ஆலயத்தில் இருந்து நம் குரல்களைக் காதுகொடுத்துக் கேட்கும் அதேநேரம், அவர் நம் உள்ளத்திலும் குடியிருக்க விரும்புகிறார். கடவுள் குடியிருக்கும் உள்ளத்தைத் தாங்கியிருக்கும் நம் உடலும் கோயில்தான் என்பதை இயேசு தெளிவாக எடுத்துக்காட்டினார். ஆனால், பழமைவாத யூதர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. இன்றும் கூட ஆலயத்தில் கடவுளைத் தொழும் பலரது உடல் கடவுள் குடியிருக்கத் தகுதியானதாக இல்லை.

http://tamil.thehindu.com/society/spirituality/article24152902.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கிறிஸ்துவின் தானியங்கள்: திருமணம் எனும் நம்பிக்கை

 

 

 
shutterstock545072050

யேசுவை இறைமகனாக ஏற்றுக்கொண்டு அவரது நெறிகளைப் பரப்பியவர் புனித பவுல். இவர் இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர் அல்ல. ஆனால், தலைசிறந்த அப்போஸ்தலராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். இயேசுவின் மரணத்துக்குப் பின் மறை பரப்பும் பணியில் ஈடுபட்ட இவர், ‘கிறிஸ்து இயேசு, உலக மக்கள் அனைவருக்காகவுமே சிலுவையில் பலியானார், அவர் அனைவருக்கும் பொதுவானவர், யூதர்கள் மட்டுமே அவரை உரிமை கொண்டாட முடியாது’ என்ற கருத்தை முதல் முறையாகத் துணிவுடன் வலியுறுத்தினார்.

 

திருமறை பரப்பும் பணியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு பவுல் எழுதிய திருமடல்கள், விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை மேலும் செழுமைப்படுத்தியிருக்கின்றன. அந்த வரிசையில் எபேசிய மக்களுக்கு பவுல் எழுதிய திருமடலில், கணவன் மனைவி இடையிலான உறவு குறித்து, அவர் குறிப்பிட்டிருக்கும் தீர்க்கமான கருத்துகள் குடும்ப அமைப்பையும் குடும்ப உறவையும் வலுப்படுத்தக்கூடியவை. அவற்றைப் புதிய ஏற்பாட்டில், எபேசியர் புத்தகத்தில் அதிகாரம் 5-ல் 23 முதல் 33 வரையிலான வசனங்களில் வாசித்துப் பாருங்கள்.

 

உன் உடலை நேசிப்பதுபோல்

“கணவர்களே... மனைவிகளே... இறைமகன் இயேசுவுக்குப் பயந்து, ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு நடங்கள். மனைவிகளே... நம்முடைய எஜமானுக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதுபோல், உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள். ஏனென்றால், கிறிஸ்து இயேசு நம் சபைக்குத் தலையாக இருப்பதுபோல், கணவன் மனைவிக்குத் தலைவனாக இருக்கிறான். கிறிஸ்து தன்னுடைய உடலாகிய சபையின் மீட்பராக இருக்கிறார். கிறிஸ்துவுக்குச் சபை கட்டுப்பட்டு நடப்பதுபோல் மனைவிகளும் தங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.”

கணவர்களே... சபைக்காக கிறிஸ்து தன்னையே கொடுத்து அதன்மீது அன்பு காட்டியதுபோல் நீங்களும் உங்கள் மனைவிமீது தொடர்ந்து அன்பு காட்டுங்கள். அவளது வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். கடவுளுடைய வார்த்தையாகிய தண்ணீரால் சபையைச் சுத்தப்படுத்திப் புனிதமாக்குவதற்காக இயேசு அப்படிச் செய்தார். எந்தவொரு கறையோ எந்தவொரு குறையோ இல்லாமல் பரிசுத்தமான, களங்கமில்லாத சபையாக அது தனக்கு முன்னால் பிரகாசிக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தார்.

குடும்பமும் அதைப் போன்றதே, கணவர்களும் தங்கள் சொந்த உடல்மீது அன்பு காட்டுவதுபோல் தங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும். தன் மனைவிமீது அன்பு காட்டுகிறவன் தன்மீதே அன்பு காட்டுகிறான். ஒருவனும் தன் உடலை வெறுக்க மாட்டான், அதைக் கவனித்துக்கொண்டு நெஞ்சார நேசிப்பான். கிறிஸ்துவும் இப்படித்தான் சபையை நேசிக்கிறார். ஏனென்றால், நாம் அவருடைய உடலின் உறுப்புகளாக இருக்கிறோம். ‘இதன் காரணமாக, மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்; அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக இருப்பார்கள்.’ என்ற திருமணச் சட்டத்தின் பரிசுத்த ரகசியம் மகத்தானது.” என்று பவுல் குறிப்பிடுகிறார்.

கணவன் மனைவியின் பரிசுத்தமான உறவே குடும்பம் எனும் அமைப்பை வலுவாக்குகிறது. இந்த உறவும் நம்பிக்கையும் உடையும்போது குடும்ப அமைப்பும் உடைந்துபோகிறது. கணவன் மனைவி உறவில் சிக்கல் தோன்ற பல்வேறு காரணங்கள் இருந்தாலும் உடல்ரீதியான பந்தமும் மனரீதியான நம்பிக்கையும் மிக முக்கியமானவை என்பதை இயேசு எடுத்துக்காட்டுகிறார். இதை மத்தேயு புத்தகம் அதிகாரம் 5-ல் 27 முதல் 32 வரையிலான இறைவார்த்தைகள் வழியாக அறிந்துகொள்ள முடியும்

 

விவாகரத்து வேண்டாம்

இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்துப் பேசும்போது... “ மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு பெண்ணைப் பாலியல் இச்சையோடு பார்த்துக்கொண்டே இருப்பவன், அவளோடு ஏற்கெனவே தன் உள்ளத்தில் முறைகேடான உறவுகொண்டுவிடுகிறான். உன் வலது கண் உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு. உன் முழு உடலும் கெஹென்னாவுக்குள் (நரகம் போன்ற கொடுமையான தண்டனை தரப்படும் இடம்) வீசப்படுவதைவிட உன் உறுப்புகளில் ஒன்றை இழப்பதே மேல்.’

இயேசுவின் வார்த்தைகளில், குற்றங்களின் தொடக்கம் அலைபாயும் கண்கள் வழியே நிகழும் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். ஆணோ பெண்ணோ பிறரைப் பாலியல் இச்சையுடன் பார்ப்பதை அடியோடு களைந்தெறிய வேண்டும் என்கிறார் இயேசு. மீறிப் பார்க்கும்போது பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவே கடவுள் உங்கள் கணக்கில் பாவத்தைச் சேர்த்துக்கொள்கிறார்.

ஆணோ பெண்ணோ விவாகரத்துப் பெற்றவர் மறுமணம் செய்துகொள்வது இன்று வாழ்க்கை முறையாக இருக்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத முரண்பாட்டுடன் இயேசுவின் வார்த்தைகள் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். கூர்ந்து கவனியுங்கள், அவர் மறுமணத்தை எதிர்க்கவில்லை. பாலியல் முறைகேட்டால் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டவர்களின் மறுமண பந்தம் வலிமையுடன் நீடிக்காது என்பதையே அவர் திட்டவட்டமாக எடுத்துக்காட்டுகிறார்.

http://tamil.thehindu.com/society/spirituality/article24330133.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.