Jump to content

கிறிஸ்துவின் தானியங்கள்: இறை வார்த்தை என்னும் விதை


Recommended Posts

கிறிஸ்துவின் தானியங்கள்: வாழ்வு தரும் உணவு

 

 
shutterstock681739054

மனிதரின் அடிப்படைத் தேவைகளில் உணவும் நீரும் முதன்மையானவை. சாதாரண உணவு உயிரோடு இருப்பதற்கு உதவுகிறது. ஆனால், கடவுள் தரும் உணவு உயிர் வாழ்வதற்கு உதவுகிறது. இங்கு வாழ்வு எனக் குறிப்பிடப்படுவது ஆன்மிகம் சார்ந்தது. உயிரோடு வாழ்வது என்பது கடவுளோடு இணைந்த வாழ்வு. அந்த வாழ்வு அவருடைய மகன் இயேசுவால் எளிதாக்கப்பட்டிருக்கிறது.

இயேசுவை அன்றாட வயிற்றுப் பாட்டுக்கான உணவை வழங்கும் வல்லமை பெற்றவர் என்று, அவர் செய்த சில அற்புதங்களைக் கண்டு அவரை ஓர் உணவுத் தொழிற்சாலையாகக் கருதிக்கொண்டார்கள். அவரிடம் திரும்பத் திரும்ப அதையே எதிர்பார்த்தனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசுவின் பதில் அவர்களைத் தெளிவடையச் செய்தது.

 

 

பசியும் இல்லை தாகமும் இல்லை

யோவான் எழுதிய நற்செய்தி அதிகாரம் 6-ல் 30 முதல் 35 இறைவசனங்களை வாசித்துப் பாருங்கள். இயேசு, கொல்லப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு மக்கள் மத்தியில் போதனை செய்துகொண்டிருந்தார். அப்போது மக்களில் சிலர் அவரிடம் வந்து, “ஐயா…நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் அருள் அடையாளம் காட்டுகிறீர். எகிப்திலிருந்து மீட்டுவரப்பட்ட எங்கள் முன்னோர்கள் பாலை நிலத்தில் தங்கியிருந்தபோது ‘மன்னா’ என்ற உணவை உண்டார்களே! ‘அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளப்பட்டது’ என மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!” என்று கேட்டனர்.

அதற்கு இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவை அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது” என்றார். உடனே அவர்கள், “ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்” என்று கேட்டுக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது”என்றார்.

 

நம்பிக்கையின் உயர்வு

இயேசுவை அன்றாடம் அணுகிச் சென்ற மக்கள் தங்களுக்கு அவர் வழியே உணவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். அதற்குக் காரணம் தண்ணீருக்குக் கூட வழியில்லாத பாலை நிலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு மோசே கடவுளிடமிருந்து ‘மன்னா’என்னும் உணவைப் பெற்றுக் கொடுத்தார். அதுபோலவே மக்களின் வாழ்வுக்கு நெறிகாட்டும் வகையில் ‘தோரா’ என்னும் திருச்சட்டத்தை வழங்கினார்.

இதைத் தங்கள் ஆன்மிக வரலாற்றின் மூலம் அறிந்து வாழ்ந்த மக்கள், இயேசுவும் அதே உணவைப் பெற்றுத்தருவார் என நினைக்கிறார்கள். இயேசுவால் செய்ய முடியாத அதிசய செயல் ஏதாவது உண்டா எனத் தங்களின் எதிர்பார்ப்புக்கு நியாயம் கற்பிக்கிறார்கள். அதிசயமான விதத்தில் ஐயாயிரம் மக்களுக்கு இயேசு உணவு வழங்கிய நிகழ்வும் அவர்கள் இப்படி எதிர்பார்க்கக் காரணமாக அமைகிறது.

ஆனால், இயேசு மன்னாவைவிடச் சிறந்த ஓர் உணவை அவர்களுக்கு வழங்குகிறார். அது மன்னாவைப் போல் சில காலம் மட்டுமே தரப்பட்ட உணவு அல்ல. என்றும் ஜீவித்திருக்கும் உயிருள்ள உணவு. இயேசுவே மக்களுக்கு உணவாகத் தம்மைக் கையளிக்கிறார். இந்த உணவை உண்போர் பசியால் வாட மாட்டார்கள். அவர்களுடைய தாகமும் தணியும். இது எவ்வாறு நிகழும் என்பதை இயேசு விளக்கிச் சொல்கிறார். முழுமையான நிறைவைத் தருகின்ற உணவை நாம் தேடினால் இயேசுவை அணுகிச் செல்ல வேண்டும்.

நம் வாழ்க்கையின் தாகம் தணிய வேண்டும் என விரும்பினால் இயேசுவிடம் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இவ்வாறு இயேசு இறை நம்பிக்கையின் உயர்வை உணர்த்துகிறார். இயேசுவை நம்புவது என்றால் என்ன? வரலாற்றில் வாழ்ந்து, இறையாட்சி பற்றி மக்களுக்குப் போதித்து, சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசு நமக்காகத் தம்மையே கையளித்ததால் நமக்கு உணவாக மாறினார். இயேசுவை நம் வாழ்வின் ஊற்றாக ஏற்றால் அவரே நமக்கு வாழ்வு வழங்குவார்.

 

உயிருள்ள உணவு

இயேசுவை உணவாக உட்கொள்ளும் அனைவரும் அவரது போதனைகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலமே அவர் உயிருள்ள உணவு என்பதை உணர முடியும். இயேசுவைத் தம் வாழ்வுக்கு முன்மாதிரியாகக் கொண்டு, அவருடைய கட்டளைகளை ஏற்று நடக்கும் அனைவருக்கும் நிலைவாழ்வு உண்டு. நிலைவாழ்வு நாமாகவே உழைத்துப் பெறுகின்ற பேறு அல்ல, மாறாகக் கடவுளே தன் மகனின் வழியாக நமக்கு வழங்குகின்ற அன்புக் கொடை. இதுவே கடவுளின் ஏற்பாடு.

http://tamil.thehindu.com/society/spirituality/article23903532.ece

Link to comment
Share on other sites

கிறிஸ்துவின் தானியங்கள்: ஆலயம் தேடி ஓடத் தேவையில்லை!

Christ

இறைவனோடு இணைந்திருந்தல் என்பதுதான் ஆன்மிக நிலையில் முக்கியமான செயல்பாடு. அதற்குப் போலியான பக்தி எனும் வெளிவேடம் ஒருபோதும் பலன் தருவதில்லை. கடவுளின் வார்த்தைகளின்படி நடப்பதும் வாழ்வதும் அல்லது மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டான முன்மாதிரியாகத் திகழ்வதும்தான் இறைவனோடு நம்மை இணைக்கிறது.

இப்படி அர்த்தபூர்வமான வாழ்க்கை வாழ்ந்தால் இறைவனைத் தேடி ஆலயத்துக்கு ஓட வேண்டியதில்லை. அவரே இறைவன் வாழும் ஆலயமாகிவிடுகிறார். இதைத்தான் யோவான் எழுதிய நற்செய்தி அதிகாரம் 15: 1 முதல் 8 வரையிலான இறைவார்த்தைகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

 

 

கனி கொடாத கிளைகள்

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “உண்மையான திராட்சைக் கொடிநானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார்.

நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கிளைகள் திராட்சைக் கொடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாகக் கனி தர இயலாது.

அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது. நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.

என்னோடு இணைந்து இராதவர் கிளையைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கிளைகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும். நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது” என்றார்.

 

இஸ்ரேல் எனும் திராட்சைக் கொடி

“நானே உண்மையான திராட்சைச் செடி” என்று இயேசு கூறுகிறார். ‘உண்மையான’ என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது? அதனுடைய விவிலியப் பின்னணி என்ன என்பதை ஆராய்ந்தால் பழைய ஏற்பாட்டில் எப்போதெல்லாம் திராட்சைச்செடி அல்லது கொடி பற்றிய செய்தி வந்திருக்கிறதோ அப்போதெல்லாம் எதிர்மறையாகத்தான் பெரும்பாலும் அது சொல்லப்பட்டிருக்கிறது.

திராட்சைச்செடி இஸ்ரேயேல் தேசத்துக்கு ஒப்பிடப்பட்டாலும் அந்தத் தேசத்தின் தவறான அணுகுமுறையால்தான் இறைவாக்கினர்களால் திராட்சைச்செடியோடு ஒப்பிடப்படுகிறது. உதாரணமாக, இறைவாக்கினர் எரேமியா, இஸ்ரேயேலைக் காட்டுத் திராட்சைக்கு ஒப்பிடுகிறார். அதிலிருந்து உண்பதற்கான பழங்களைப் பார்க்க முடியவில்லை என்றும் கூறுகிறார். இதே கருத்தைத்தான் இறைவாக்கினர் எசாயாவும் முன்வைக்கிறார். ஆக, இங்கே திராட்சைச்செடி போலியானதாக சித்தரிக்கப்படுகிறது.

 

கனி தராத தேசம்

ஆனால், இயேசு தன்னை உண்மையான திராட்சைச் செடி என்று அறிவிக்கிறார். அப்படி அவர் கூறியதில் மறைந்திருக்கும் செய்தி என்ன என்பதை ஆராய்ந்தால் தெளிவான உண்மை புலப்படும். இஸ்ரேயேல் கடவுளின் உண்மையான திராட்சைச் செடியாகத் தன்னை நினைத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல. இஸ்ரேயேலின் நடத்தையைப் பார்க்கிறபோது, அது உண்மையான திராட்சைச் செடியாக இல்லை. இனத்தால் யூதர்கள் என்பதால் யாரும் மீட்பு பெற்றுவிட முடியாது. யூதராக இருந்தாலும் அதற்கேற்ற இறைவார்த்தைகளைப் பின்பற்றி வாழும் வாழ்வை வெளிப்படுத்த வேண்டும். ஆனால், இஸ்ரேயேல் அதைச் செய்யவில்லை.

அப்படிப்பட்ட ஒரு தேசத்தில், குலத்தில் உதித்த இயேசு இறைவனோடு இணைந்து வாழ அவரது வார்த்தைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். அதுவே உண்மையான சீடத்துவ வாழ்வு என்பதை எடுத்துக்காட்டினார். அதன்படியே வாழ்ந்தும் காட்டினார். பொய்மையை எதிர்த்தார், போலி பக்தியைக் கிழித்தார், அதிகார பீடத்தில் இருந்தவர்களைத் துணிவுடன் விமர்சித்தார். தன்னைப் பலியாக்கியதன் மூலம் தியாகமும் அர்ப்பணிப்பும் மனித வாழ்வின் அங்கம் என்பதைக் காட்டினார்.

தனது முன்மாதிரியை முன்வைத்தே கனிதரும் திராட்சைக் கொடியாகிய என்னுடன் கிளையாக இணைந்திருங்கள் என்று அறிவுறுத்துகிறார். இயேசு உதித்த யூத குலத்தில் பிறந்தவராக இருந்தாலும் இறைவனோடு இணைந்திருக்கக் கடவுளுக்குப் பிரியமான முறையில் வாழ்ந்து காட்ட வேண்டும். மற்றவர்களைத் திருப்திப்படுத்துவது நமது வாழ்வின் நோக்கமல்ல. மாறாக, கடவுள் காட்டிய வாழ்வை, நாம் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான ஆன்மிக வாழ்வு.

 

வாழ்வும் அனுபவமும்

இறையனுபவம் என்பதும் கடவுளோடு இணைந்திருத்தல் என்பதும் ஒன்றே. தவறிலிருந்து மீண்டு வருவதற்கான ஆன்மிக சக்தியை இறை வார்த்தைகள் வழங்குகின்றன. குறைகளை ஏற்றுக்கொண்டு, நிறைவோடு வாழ்வதற்கான உந்துசக்தி இறைவார்த்தைகளில் ஊற்றாகப் பெருகி வழிகிறது. எந்தச் சூழ்நிலையிலும் சோர்ந்து போகாத ஒரு நிலையை இறை வார்த்தையைக் கற்பவர்களுக்கு அது வழங்குகிறது.

இயேசுவின் வெற்றிகரமான பூமி வாழ்க்கைக்கு இறை வார்த்தைகள் உதவியாக இருந்தன, அவர் கடவுளாகிய தந்தையோடு கொண்டிருந்த இறையனுபவமே அவரைத் தலைவராக்கியது. தாம் பெற்ற இறையனுபவத்தை உலகமும் பெற்றுக்கொள்ள வாழ்வுதரும் வார்த்தைகளை, அவர் மண்ணுலகுக்குக் கொட்டிக்கொடுத்திருக்கிறார். அவற்றை உள்ளங்களில் நிரப்பிக்கொண்டு இறை அனுபவம் பெற்றுக்கொள்வதே உண்மையான கிறிஸ்தவ வாழ்வு.

http://tamil.thehindu.com/society/spirituality/article23970121.ece

Link to comment
Share on other sites

கிறிஸ்துவின் தானியங்கள்: ஒரே ஒரு வார்த்தை மட்டும் போதும்

 

 

 
31chsrsbib

இயேசுவின் காலத்தில் ஜெருசலேமை ரோமானியர்கள் ஆண்டுவந்தனர். அதேநேரத்தில் யூதர்களின் மத நம்பிக்கைகளில் அவர்கள் தலையிடவில்லை. மேலும் ரோமானிய ஆளுநருக்கு அடுத்த நிலையில் யூத மதத்தின் அதிகார வர்க்கமாகிய யூத தலைமைச் சங்கத்தார் இருந்தனர். அவர்கள் யூத இனம் மட்டுமே புனிதமானது என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்துவந்தார்கள். அவர்களின் பழமைவாதத்தைத் துணிச்சலாகக் கேள்விக்குள்ளாக்கியவர் இயேசு. இதை இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம் வழியாகவே நாம் தெரிந்துகொள்ளமுடியும்.

 

நூற்றுவர் தலைவனின் கோரிக்கை

 

ஜெருசலேம், கப்பர்நாகூம், சமாரியா உள்ளிட்ட பெரிய நகரங்களின் சட்டம் ஒழுங்கைக் காத்துவந்த ரோமானியப் படையணியில், யூதர்கள் அல்லாத பிற இனத்தைச் சேர்ந்தவர்களும் உயர்ந்த பொறுப்புகளில் இருந்தனர். நூறு படை வீரர்களுக்குத் தலைவராக இருப்பவர்களை ‘நூற்றுவர் தலைவர்’ எனப் பெயரிட்டு அழைத்தனர். அப்படியான ‘நூற்றுவர் தலைவர்’ ஒருவர், இயேசுவைத் தேடி வந்தார். அதைக் குறித்து, மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து அதிகாரம் 8-ல் 5 முதல் 17வரையிலான, இறை வசனங்களைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

அந்தக் காலத்தில் இயேசு கப்பர்நாகூமுக்குச் சென்றபோது ‘நூற்றுவர் தலைவர்’ ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். “ஐயா, என் மகன் முடக்கு வாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்த படுக்கையாகக் கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், “நான் உங்கள் வீட்டுக்கு வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால், ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்கள், என் மகன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரர்கள் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் வருகிறார்.

என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார். இதைக் கேட்ட இயேசு, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரவேல் மக்கள் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை. கிழக்கிலும் மேற்கிலும் இருந்து பலர் வந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வார்கள். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்” என்றார்.

பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, “நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்” என்றார். நூற்றுவர் தலைவர் வீட்டுக்குத் திரும்பிச் சென்றபோது அவரது மகன் குணமடைந்துவிட்ட அதிசயம் நிகழ்ந்திருந்தது. அதன்பின் இயேசு பேதுருவின் வீட்டுக்குள் சென்றபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலாய்ப் படுத்திருப்பதைக் கண்டார். இயேசு அவரது கையைத் தொட்டதும் காய்ச்சல் நீங்கிற்று. அவரும் எழுந்து இயேசுவுக்குப் பணிவிடைசெய்தார்.

பேய் பிடித்த பலரை மாலை வேளையில் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர் ஒரு வார்த்தை சொல்ல தீய ஆவிகள் ஓடிப்போயின. மேலும் எல்லா நோயாளிகளையும் அவர் குணமாக்கினார். இவ்வாறு, ‘அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்’ என்று இயேசுவுக்கு முன்பு வாழ்ந்த இறைவாக்கினர் எசாயா உரைத்த தீர்க்க தரிசனம் நிறைவேறியது.

 

கடவுளின் பந்தியில் அனைவருக்கும் இடம் உண்டு

இயேசுவின் வார்த்தைகள், அதுவரையிலான யூதர்களின் நம்பிக்கை பற்றிய பார்வையை அடியோடு புரட்டிப்போட்டது. ‘நூற்றுவர் தலைவன்’, தனது மகனைக் குணப்படுத்த இயேசுவின் உதவியை நாடுகிறார். அதில் உள்ள பிரச்சினையும் அவருக்குத் தெரியும். யூதச் சட்டப்படி, ஒரு யூதர் புற இனத்தவரின் வீட்டுக்குச் செல்லக்கூடாது. புறவினத்தார் வாழக்கூடிய பகுதிகள், யூதர்களின் பார்வையில் தூய்மையற்றவை, பிரவேசிக்கத் தகுதி அற்றவை. இயேசு ஒரு யூதர்.

‘நூற்றுவர் தலைவன்’ ஒரு புற இனத்தவர். இந்தச் சிக்கல் இரண்டு பேருக்குமே தெரிந்திருக்கிறது. அப்படியிருந்தும், இயேசு, “நான் உங்கள் வீட்டுக்கு வந்து உங்கள் மகனைக் குணப்படுத்துவேன்” என்கிறார். இயேசு நடைமுறையில் இருக்கும் தீண்டாமைப் பிரச்சினை அறியாமல் அதைச் சொல்லவில்லை. மாறாக, ‘நூற்றுவர் தலைவனின்’ பதில் என்னவாக இருக்கப் போகிறது என்பதை எதிர்பார்த்துச் சொல்கிறார்.

இந்த இடத்தில்தான் இயேசுவின் மீதான நூற்றுவர் தலைவனின் ஆழ்ந்த நம்பிக்கை வெளிப்படுகிறது. அந்த நம்பிக்கையைப் பாராட்டும் இயேசு, அடுத்து கடவுளின் சித்தம் எதுவென்பதை அதிரடியாக அறிவிக்கிறார். அதாவது, “கிழக்கிலும், மேற்கிலுமிருந்து பலர் வந்து, கடவுள் தேர்ந்துகொண்ட இஸ்ரவேலின் வெவ்வேறு இனத்தில் பிறந்த மூதாதையர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர்” என்பதுதான் அந்தச் செய்தி.

கடவுள் வாக்குறுதி அளித்த மீட்பர் இந்த மண்ணுலகுக்கு வருகிறபோது செய்யப்படுகிற விருந்தில் புற இனத்தவர்க்கு இடமே கிடையாது என்ற நம்பிக்கையில் இருந்த யூதர்களுக்கு, இந்தச் செய்தி காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதைப்போல இருந்தது.

இயேசுவின் எண்ணம் பரந்துபட்ட எண்ணம். அது அடிமைத்தளைகளை உடைத்தெறிகிற எண்ணம். அனைவரையும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எண்ணம். இந்த உலகத்தில் இருக்கிற அனைத்து மக்களையும் கடவுளின் பிள்ளைகளாகப் பார்க்கக்கூடிய எண்ணம். இயேசுவைப் பின்பற்றுகிற அனைவரும் வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் தங்கள் சொந்தச் சகோதரர்களாக ஏற்றுக்கொள்வார்கள் என்பதையே இயேசுவின் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

http://tamil.thehindu.com/society/spirituality/article24037041.ece

Link to comment
Share on other sites

கிறிஸ்துவின் தானியங்கள்: குருவையும் சீடரையும் கண்டடைதல்

 

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நல்லவற்றை நேர்வழியில் தேடித்தேடி தேர்வு செய்ய விரும்புகிறது தூய்மையான மனம். தூய்மையற்ற மனமோ குறுக்குவழியில் அனைத்தையும் அடைந்துவிடத் துடிக்கிறது. மனிதனுக்கு ஆன்மிகமும் அடிப்படையான தேவையாகும். மனிதன் தனக்கான ஞானகுருவைக் கண்டடையும்போது புதையலைக் கண்டுபிடித்துவிட்டதைப்போல துள்ளிக் குதிக்கிறான். போலியான ஞானகுருவைத் தேர்ந்துகொண்டவர்கள் ஏமாற்றத்தைச் சந்திக்கிறார்கள். தனக்கான சீடர்களைத் தேர்ந்துகொள்ளும் ஞானகுருக்களுக்கும் இது பொருந்துகிறது. இயேசு தனது சீடர்களைத் தேர்வு செய்தபோதும், தாங்கள் தேடிய ஞானகுரு இவர்தான் என சீடர்கள் இயேசுவைக் கண்டடைந்தபோதும் எப்படி உணர்ந்திருப்பார்கள்?

 

தங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு அவற்றைவிட உயர்வான ஒன்றைப் பெற்றுக்கொள்கிறபோது ஏற்படும் உணர்வே ஆன்மிகத்திலும் கிடைக்கிறது. பதவி, பணம், புகழ் இந்த மூன்றும் கிடைத்துவிடும்போது அந்தஸ்து தானாகவே வந்து ஒட்டிக்கொள்கிறது. இந்த மூன்றையும்விடச் சிறந்தது ஆன்மிக வாழ்வுதான். அதைப் பெறுவதற்காக தன்னிடமுள்ள அனைத்தையும் துறக்க யாராவது முன்வருவார்களா என்று கேட்டால், அது அரிதானதே. அப்படிப்பட்ட அரிய முன்மாதிரிகளாக இருந்தார்கள் இயேசுவும் அவரது சீடர்களும். இப்படிப்பட்ட அரிதான, அருமையான குணத்தைப் பற்றி இயேசு ‘விலை உயர்ந்த ஒரு முத்து’ பற்றிய உவமை வழியாக எடுத்துக் கூறினார்.

 

விலை உயர்ந்த முத்தும்

நல்ல மீன்களும்

மத்தேயு நற்செய்தி அதிகாரம் 13-ல் 45 முதல் 48 வரையிலான இறைவசனங்களைப் படிப்பதன் மூலம் அறிந்துகொள்ளலாம். இயேசு தாம் தேர்ந்தெடுத்த தன் சீடர்களைப் பார்த்து, “விண்ணுலக அரசாங்கம் அருமையான முத்துக்களைத் தேடிப் பயணம் செய்கிற வியாபாரியைப் போல் இருக்கிறது. விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டுபிடித்ததும், அவன் போய், தன்னிடம் இருந்த அனைத்தையும் உடனடியாக விற்று அதை வாங்கிக்கொண்டான்.

அதோடு, விண்ணுலக அரசாங்கம், கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொள்கிற வலையைப் போல் இருக்கிறது. வலை நிறைந்ததும் மீனவர்கள் அதைக் கடற்கரைக்கு இழுத்துக்கொண்டுவந்து அங்கே உட்கார்ந்து நல்ல மீன்களைக் கூடைகளில் சேகரிப்பார்கள், ஆகாதவற்றையோ தூக்கியெறிவார்கள்.” என்றார்

 

நேசித்த தொழிலை விட்டுவிட்டு

மீன்பிடி தொழில் நிரந்தரமான வருவாயைத் தரக்கூடியது. மழை பொய்த்துப் போகலாம், ஆனால் கடலும் அதில் உற்பத்தியாகும் மீனும் என்றுமே வற்றுவதில்லை. அப்படிப்பட்ட உயர்ந்த, உடல் உழைப்பு கொண்ட தொழிலில் ஈடுபட்டிருந்த பேதுரு, அவரது சகோதரர் அந்திரேயா, யாக்கோபு அவரது சகோதரர் யோவான் ஆகியோர் அந்தத் தொழிலை விட்டுவிட்டு இயேசு அழைத்ததும் அவரைப் பின்பற்றிச் சென்றார்கள். இதை மத்தேயு நற்செய்தி அதிகாரம் 4-ல் 18 முதல் 22 வரையிலான இறைவசனங்கள் நமக்கு விளக்குகின்றன.

“கலிலேயா கடலோரமாக இயேசு நடந்துபோனபோது, பேதுரு என்ற சீமோனையும் அவருடைய சகோதரர் அந்திரேயாவையும் பார்த்தார். அவர்கள் இரண்டு பேரும் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மீனவர்கள். இயேசு அவர்களிடம், ‘என் பின்னால் வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்களாக ஆக்குவேன்’ என்று சொன்னார். அவர்கள் உடனடியாக வலைகளை விட்டுவிட்டு அவர் பின்னால் போனார்கள். அங்கிருந்து அவர் போனபோது, சகோதரர்களாக இருந்த இன்னும் இரண்டு பேரைப் பார்த்தார். அவர்கள்தான் செபெதேயுவின் மகன்களான யாக்கோபும் யோவானும். அவர்கள் தங்களுடைய அப்பாவோடு படகில் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களையும் இயேசு அழைத்தார். அவர்கள் உடனடியாகப் படகையும் தங்களுடைய அப்பாவையும் விட்டுவிட்டு அவர் பின்னால் போனார்கள்.”

யாக்கோபுவும் யோவானும் தாங்கள் நேசித்த தொழிலை மட்டுமல்ல இயேசுவை குருவாக ஏற்றுக்கொள்ள தங்கள் தந்தையையும் விட்டுவிட்டுச் சென்றார்கள். இயேசு போன்ற ஒருவருடன் செல்ல அந்தத் தகப்பனும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இயேசு தன் உவமையில் குறிப்பிடப்பட்ட அந்த வியாபாரி செய்தது முட்டாள்தனமான ஒரு காரியமாக இன்றுள்ள பல வியாபாரிகளுக்குத் தோன்றலாம். காரணம் லாப நோக்கம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு வியாபாரி, இப்படிப்பட்ட வியாபாரத்தில் ஆர்வம் செலுத்தமாட்டார். ஆனால் இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்ட வியாபாரியின் உயரிய கண்ணோட்டம் வேறு வகையானது. பொருளாதார லாபத்தை அல்ல, ஆனால் ஒப்பற்ற மதிப்பு கொண்ட ஒன்றைச் சொந்தமாக்கிக் கொள்வதில் கிடைக்கிற மகிழ்வு, நிறைவு ஆகிய உணர்வுகளையே அவர் லாபமாகக் கருதினார். அந்த லாபம் ஆன்மிக ரீதியிலானது. உங்கள் குருவை நீங்களும் குரு உங்களையும் கண்டுகொள்ளும்போது நீங்களும் அதை அடைவீர்கள்.

http://tamil.thehindu.com/society/spirituality/article24096446.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் ஆன்மீக குருவே உம் பாதம் சரணடைந்தேன் ஐயா. விலை உயர்ந்த இரட்சிப்பிற்காக நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமென் .......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கிறிஸ்துவின் தானியங்கள்: இரண்டு வகை ஆலயங்கள்

 

 
14chsrschrist%202

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றனர் முன்னோர். ஆனால், எங்கும் எதிலும் நிறைந்திருப்பவரே கடவுள் என்பதை எல்லா மதங்களுமே வலியுறுத்துகின்றன. அப்படியானால் ஆலயங்கள் எதற்கு என்ற கேள்வி எழலாம். இதற்கு ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விளக்கம் தரலாம். இயேசு கொடுத்த விளக்கம் யூதப் பழமைவாதிகளைக் கோபப்படுத்தியது. தந்தையாகிய கடவுள் வசிக்கும் வீட்டை சந்தைக் கடையாக மாற்றியவர்களை அடித்துத் துரத்தினார். கடவுள் வாழும் ஆலயத்தை இரண்டுவிதமாக இயேசு எடுத்துக்காட்டினார். யோவான் நற்செய்தி அதிகாரம் இரண்டில் இறைவசனங்கள் 13 முதல் 22 வரை படித்தால் இதைப் பற்றி அறியலாம்.

 

 

எருசலேம் நோக்கி

காணாவூர் திருமணத்தில் திராட்சை ரசம் தீர்ந்துபோன நேரத்தில் தன் அன்னை மரியாளின் வேண்டுகோளை ஏற்றுத் தண்ணீரைத் திராட்சை ரசமாக மாற்றி அருள் அடையாளத்தை நிகழ்த்தினார் இயேசு. பின்னர் அங்கிருந்து அவரும் அவருடைய அம்மாவும் சீடர்களும் கப்பர்நகூம் நகரத்துக்குப் போய் அங்கே சில நாட்கள் தங்கினார்கள்.

பின்னர், யூதர்களுடைய விடுதலைத் திருவிழாவாகிய பாஸ்கா பண்டிகை நெருங்கிவிட்டிருந்ததால் இயேசு தன் சீடர்களுடன் கடவுளாகிய தந்தையின் பேராலயம் அமைந்திருந்த எருசலேமுக்குப் புறப்பட்டார். சுற்றுவட்டாரங்களில் உள்ள எல்லா நகரங்களில் இருந்தும் எருசலேம் தேவாலயத்துக்கு வந்து கடவுளுக்குப் பலி செலுத்தி பாஸ்கா பண்டிகையைக் கொண்டாடுவதை யூதர்கள் புனிதமாகக் கருதினார்கள். எனவே, யூத குலத்தில் பிறந்த இயேசுவும் பாஸ்கா பண்டிகையைக் கொண்டாட எருசலேமுக்குப் போனார்.

 

தந்தையின் வீடு சந்தையானது!

அவர் ஆலயத்துக்குள் நுழைந்ததும் அங்கே கண்ட காட்சிகள் அவரை அதிர்ச்சியடைச் செய்தன. ஆலய வளாகத்துக்குள் அமைதி இல்லை. ஆடு, மாடு, புறா போன்றவற்றை விற்பவர்களையும் மேஜைகளைப் போட்டு அதில் நாணயமாற்றம் செய்துகொண்டிருந்த தரகர்களையும் கண்டார். அவருக்குக் கோபம் தலைக்கேறியது. உடனே, கயிறுகளால் ஒரு சாட்டை செய்தார். ஆடு மாடுகளையும் ஆலயத்தை வணிக வளாகம் ஆக்கிய அனைவரையும் ஆலயத்திலிருந்து விரட்டி அடித்தார். நாணயம் மாற்றுபவர்களின் காசுகளைக் கீழே கொட்டி, அவர்களுடைய மேஜைகளைக் கவிழ்த்துப்போட்டார். புறா விற்பவர்களை நோக்கி,

“இதையெல்லாம் இங்கிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்! என் தந்தையுடைய வீட்டை இனியும் சந்தைக்கடை ஆக்காதீர்கள்!” என்று உரக்கக் கத்தினார். அப்போது, “ உங்களுடைய வீட்டின் மேலுள்ள பக்தி வைராக்கியம் எனக்குள் பற்றியெரியும்” என்று யூதர்களின் திருச்சட்டத்தில் எழுதப்பட்டிருந்த வசனத்தை அவருடைய சீடர்கள் நினைத்துப் பார்த்தார்கள். பொறுமையும் சாந்தமும் மிகுந்த தன் வார்த்தைகளால் மக்களைக் கட்டிப்போடும் இயேசுவா இது என்று சீடர்கள் வியந்துபோனார்கள்.

 

யார் கொடுத்த அதிகாரம்?

இயேசுவின் இந்தத் துணிச்சலான செயலைக் கண்டு ஆத்திரம் அடைந்த யூத மத அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அவரிடம், “ இப்படியெல்லாம் செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை எங்களுக்கு நிரூபிக்க என்ன அடையாளத்தைக் காட்டப்போகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு, “இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாட்களில் இதை எழுப்புவேன்” என்று சொன்னார். அப்போது யூதர்கள், “இந்த ஆலயத்தைக் கட்ட வருஷங்கள் எடுத்தன, நீ இதை மூன்று நாட்களில் எழுப்பிவிடுவாயோ?” என்றார்கள்.

ஆனால், அவர் தன்னுடைய உடலாகிய ஆலயத்தைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார். இயேசு அடிக்கடி அப்படிச் சொன்னதை அவர் கொல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வந்தபோது சீடர்கள் நினைத்துப் பார்த்தார்கள். அதனால், வேதவசனங்களையும் அவர் சொன்ன வார்த்தைகளையும் நம்பத் தொடங்கினார்கள்.

சீடர்களின் அழுத்தமான நம்பிக்கை இயேசுவின் பூமி வாழ்க்கை முடிந்தபிறகே வலுப்பெற்றது எனலாம். ஆனால், சீடர்களாக இல்லாதவர்கள், பாஸ்கா பண்டிகை சமயத்தில் அவர் எருசலேம் தேவாலயத்தைத் துணிந்து தூய்மைப்படுத்தியபின் செய்த அடையாளங்களைப் பார்த்து, நிறையப் பேர் அவருடைய பெயரில் நம்பிக்கை வைத்தார்கள். ஆனால், இயேசு அவர்களை நம்பவில்லை. ஏனென்றால், அவர்கள் எல்லாரையும் பற்றி அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. எந்த மனிதனைப் பற்றியும் அவருக்கு யாரும் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஏனென்றால், அவர்களுடைய இதயத்தில் என்ன இருந்ததென்று அவருக்குத் தெரிந்திருந்தது.

ஆலய வளாகத்துள் வந்து மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகக் கத்தி பிராத்த்தனை செய்கிறவர்களை அவர் அறிவார். ஆனால், கடவுள் ஆலயத்தில் இருந்து நம் குரல்களைக் காதுகொடுத்துக் கேட்கும் அதேநேரம், அவர் நம் உள்ளத்திலும் குடியிருக்க விரும்புகிறார். கடவுள் குடியிருக்கும் உள்ளத்தைத் தாங்கியிருக்கும் நம் உடலும் கோயில்தான் என்பதை இயேசு தெளிவாக எடுத்துக்காட்டினார். ஆனால், பழமைவாத யூதர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை. இன்றும் கூட ஆலயத்தில் கடவுளைத் தொழும் பலரது உடல் கடவுள் குடியிருக்கத் தகுதியானதாக இல்லை.

http://tamil.thehindu.com/society/spirituality/article24152902.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கிறிஸ்துவின் தானியங்கள்: திருமணம் எனும் நம்பிக்கை

 

 

 
shutterstock545072050

யேசுவை இறைமகனாக ஏற்றுக்கொண்டு அவரது நெறிகளைப் பரப்பியவர் புனித பவுல். இவர் இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர் அல்ல. ஆனால், தலைசிறந்த அப்போஸ்தலராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். இயேசுவின் மரணத்துக்குப் பின் மறை பரப்பும் பணியில் ஈடுபட்ட இவர், ‘கிறிஸ்து இயேசு, உலக மக்கள் அனைவருக்காகவுமே சிலுவையில் பலியானார், அவர் அனைவருக்கும் பொதுவானவர், யூதர்கள் மட்டுமே அவரை உரிமை கொண்டாட முடியாது’ என்ற கருத்தை முதல் முறையாகத் துணிவுடன் வலியுறுத்தினார்.

 

திருமறை பரப்பும் பணியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு பவுல் எழுதிய திருமடல்கள், விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை மேலும் செழுமைப்படுத்தியிருக்கின்றன. அந்த வரிசையில் எபேசிய மக்களுக்கு பவுல் எழுதிய திருமடலில், கணவன் மனைவி இடையிலான உறவு குறித்து, அவர் குறிப்பிட்டிருக்கும் தீர்க்கமான கருத்துகள் குடும்ப அமைப்பையும் குடும்ப உறவையும் வலுப்படுத்தக்கூடியவை. அவற்றைப் புதிய ஏற்பாட்டில், எபேசியர் புத்தகத்தில் அதிகாரம் 5-ல் 23 முதல் 33 வரையிலான வசனங்களில் வாசித்துப் பாருங்கள்.

 

உன் உடலை நேசிப்பதுபோல்

“கணவர்களே... மனைவிகளே... இறைமகன் இயேசுவுக்குப் பயந்து, ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு நடங்கள். மனைவிகளே... நம்முடைய எஜமானுக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதுபோல், உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள். ஏனென்றால், கிறிஸ்து இயேசு நம் சபைக்குத் தலையாக இருப்பதுபோல், கணவன் மனைவிக்குத் தலைவனாக இருக்கிறான். கிறிஸ்து தன்னுடைய உடலாகிய சபையின் மீட்பராக இருக்கிறார். கிறிஸ்துவுக்குச் சபை கட்டுப்பட்டு நடப்பதுபோல் மனைவிகளும் தங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.”

கணவர்களே... சபைக்காக கிறிஸ்து தன்னையே கொடுத்து அதன்மீது அன்பு காட்டியதுபோல் நீங்களும் உங்கள் மனைவிமீது தொடர்ந்து அன்பு காட்டுங்கள். அவளது வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். கடவுளுடைய வார்த்தையாகிய தண்ணீரால் சபையைச் சுத்தப்படுத்திப் புனிதமாக்குவதற்காக இயேசு அப்படிச் செய்தார். எந்தவொரு கறையோ எந்தவொரு குறையோ இல்லாமல் பரிசுத்தமான, களங்கமில்லாத சபையாக அது தனக்கு முன்னால் பிரகாசிக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தார்.

குடும்பமும் அதைப் போன்றதே, கணவர்களும் தங்கள் சொந்த உடல்மீது அன்பு காட்டுவதுபோல் தங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும். தன் மனைவிமீது அன்பு காட்டுகிறவன் தன்மீதே அன்பு காட்டுகிறான். ஒருவனும் தன் உடலை வெறுக்க மாட்டான், அதைக் கவனித்துக்கொண்டு நெஞ்சார நேசிப்பான். கிறிஸ்துவும் இப்படித்தான் சபையை நேசிக்கிறார். ஏனென்றால், நாம் அவருடைய உடலின் உறுப்புகளாக இருக்கிறோம். ‘இதன் காரணமாக, மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்; அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக இருப்பார்கள்.’ என்ற திருமணச் சட்டத்தின் பரிசுத்த ரகசியம் மகத்தானது.” என்று பவுல் குறிப்பிடுகிறார்.

கணவன் மனைவியின் பரிசுத்தமான உறவே குடும்பம் எனும் அமைப்பை வலுவாக்குகிறது. இந்த உறவும் நம்பிக்கையும் உடையும்போது குடும்ப அமைப்பும் உடைந்துபோகிறது. கணவன் மனைவி உறவில் சிக்கல் தோன்ற பல்வேறு காரணங்கள் இருந்தாலும் உடல்ரீதியான பந்தமும் மனரீதியான நம்பிக்கையும் மிக முக்கியமானவை என்பதை இயேசு எடுத்துக்காட்டுகிறார். இதை மத்தேயு புத்தகம் அதிகாரம் 5-ல் 27 முதல் 32 வரையிலான இறைவார்த்தைகள் வழியாக அறிந்துகொள்ள முடியும்

 

விவாகரத்து வேண்டாம்

இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்துப் பேசும்போது... “ மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு பெண்ணைப் பாலியல் இச்சையோடு பார்த்துக்கொண்டே இருப்பவன், அவளோடு ஏற்கெனவே தன் உள்ளத்தில் முறைகேடான உறவுகொண்டுவிடுகிறான். உன் வலது கண் உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு. உன் முழு உடலும் கெஹென்னாவுக்குள் (நரகம் போன்ற கொடுமையான தண்டனை தரப்படும் இடம்) வீசப்படுவதைவிட உன் உறுப்புகளில் ஒன்றை இழப்பதே மேல்.’

இயேசுவின் வார்த்தைகளில், குற்றங்களின் தொடக்கம் அலைபாயும் கண்கள் வழியே நிகழும் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். ஆணோ பெண்ணோ பிறரைப் பாலியல் இச்சையுடன் பார்ப்பதை அடியோடு களைந்தெறிய வேண்டும் என்கிறார் இயேசு. மீறிப் பார்க்கும்போது பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவே கடவுள் உங்கள் கணக்கில் பாவத்தைச் சேர்த்துக்கொள்கிறார்.

ஆணோ பெண்ணோ விவாகரத்துப் பெற்றவர் மறுமணம் செய்துகொள்வது இன்று வாழ்க்கை முறையாக இருக்கையில் ஏற்றுக்கொள்ள முடியாத முரண்பாட்டுடன் இயேசுவின் வார்த்தைகள் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். கூர்ந்து கவனியுங்கள், அவர் மறுமணத்தை எதிர்க்கவில்லை. பாலியல் முறைகேட்டால் திருமண பந்தத்தை முறித்துக்கொண்டவர்களின் மறுமண பந்தம் வலிமையுடன் நீடிக்காது என்பதையே அவர் திட்டவட்டமாக எடுத்துக்காட்டுகிறார்.

http://tamil.thehindu.com/society/spirituality/article24330133.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.