Jump to content

தெருவாசகம்


Recommended Posts

தெருவாசகம் 1: ஆங்கிலேயத் தமிழறிஞரின் சாலை

 

 
23jkrellisroad

சென்னை மாநகரத்தின் இதயப் பகுதியான அண்ணா சாலையும், வாலாஜா சாலையும் சந்திக்கும் புள்ளிக்கு அருகில் உள்ளது எல்லீஸ் சாலை. அதன் மறுமுனை திருவல்லிக்கேணி பாரதி சாலைக்கு அருகில் சென்று முடிகிறது. இதற்கு இணையாக காயிதே மில்லத் சாலை வடபகுதியில் செல்கிறது. இந்தச் சாலை மட்டுமல்லாது இந்தப் பகுதியே எல்லீஸ்புரம் என்று அழைக்கப்படுகிறது.

 

யார் இந்த எல்லீஸ்?

23jkrellis

பிரான்சிஸ் வைட் எல்லீஸ்

கிழங்கிந்தியக் கம்பனி ஆட்சியில் அதிகாரியாகப் பணியாற்றிய பிரான்சிஸ் வைட் எல்லிஸின் (Francis Whyte Ellis) நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயர் இந்தச் சாலைக்குச் சூட்டப்பட்டது. சமீபத்தில் சென்னையில் ஆங்கிலேயர்களின் பெயரிலான சாலைகளின் பெயரை மாற்ற மாநகராட்சி முடிவெடுத்தது. இதற்காக 50 சாலைகள் முதலில் பட்டியலிடப்பட்டன. அவற்றுள் இந்த எல்லீஸ் சாலையும் ஒன்று. அதன்படி சில சாலைகளின் பெயரும் மாற்றப்பட்டன. ஆனால் எல்லீஸ் சாலையின் பெயர் மாற்றும் முடிவே கைவிடப்பட்டது.

காரணம், எல்லீஸ் கிழக்கிந்தியக் கம்பனி அதிகாரி மட்டுமல்ல. அவர் தமிழ் அறிஞர். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடி. புறநானூறு, நாலடியார், சீவக சிந்தாமணி, பாரதம், பிரபுலிங்கலீலை முதலான நூல்களைக் கையாண்டு அவர் குறளுக்கு விளக்கவுரை எழுதியதாக வரலாற்றாசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதி தனது கட்டுரையில் கூறுகிறார்.

1777-ல் இங்கிலாந்தில் பிறந்த எல்லீஸ், 1796-ல் கிழக்கிந்தியக் கம்பெனிப் பணிக்காகச் சென்னை வந்தர். முதலில் எழுத்தராகப் பணியாற்றினார். பிறகு வருவாய்ச் செயலாளர் அலுவலக உதவியாளர், உதவி வருவாய்ச் செயலாளர், வருவாய்ச் செயலாளர் எனப் படிப்படியாகப் பதவியுர்வு அடைந்தார். மாசிலிப் பட்டிணத்தின் ஜில்லா நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். 1809-ல் சென்னை மாகாண நிலச் சுங்க ஆட்சியராகவும் 1810-ல் சென்னை மாகாண ஆட்சியராகவும் பதிவியுர்த்தப்பட்டார்.

 

எல்லீசன் ஆன எல்லீஸ்

எல்லீஸ், சென்னை மாகாணத்தின் ஆட்சியராக இருந்த காலகட்டத்தில் சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாட்டு வந்திருக்கிறது. அதைப் போக்கும் பொருட்டு பல கிணறுகளை வெட்டுவித்திருக்கிறார். அந்தக் கிணறுகளில் ஒன்று சென்னை ராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் வெட்டப்பட்டது. இந்தக் கிணறு 1818-ம் ஆண்டு வெட்டப்பட்டது. கிணற்றின் கைப்பிடிச் சுவரில் அவர் ஒரு கல்வெட்டைப் பதிப்பித்திருக்கிறார். அந்தக் கல்வெட்டில் திருக்குறள் பொருட்பாலில் வரும் கீழ்க் கண்ட குறளை மேற்கோள் காட்டியிருக்கிறார் எல்லீஸ். “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்/வல்லரணு நாட்டிற் குறுப்பு”. இதிலிருந்து அவரது தமிழ்க் காதலை உணர்ந்துகொள்ள முடியும். இப்போது இந்தக் கல்வெட்டு தமிழ்நாடு தொல்லியல் துறையின் மதுரை அருங்காட்சியகத்தில் உள்ளது என்ற கல்வெட்டாய்வாளர் ஐராவதம் மகாதேவனின் குறிப்பைத் தன் கட்டுரையில் மேற்கோள் காட்டுகிறார் வேங்கடாசலபதி.

21JKRELLISROAD
 

 

கேமரா உபகரணங்களின் சந்தை

மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளையும் பிற இந்திய நாட்டு மொழிகளையும் ஆங்கிலேய நிர்வாக அதிகாரிகளுக்குப் பயிற்றுவிப்பதற்காகப் புனித ஜார்ஜ் கோட்டையில் 'சென்னைக் கல்விச் சங்கம்' என்ற ஒரு கல்லூரியைத் தமிழ்ப் பெயரில் 1812-ல் நிறுவினார். தமிழ் மீதிருந்த பற்று காரணமாகத் தன் பெயரை தமிழ் உச்சரிப்புக்குத் தகுந்தாற்போல் எல்லீசன் என மாற்றிக்கொண்டார். இன்னும் பல தமிழ்த் தொண்டாற்றும் முன்பு தனது 41-வது வயதில் எல்லீஸ் இறந்தது தமிழுக்குப் பெரும் இழப்பு. இந்த முன்னோடியைக் கவுரவிக்கும் ஒரே ஒரு அடையாளம் இந்தச் சாலை மட்டுமே.

இன்று இந்தச் சாலை கேமராக்கள், ஃபோட்டோ ஃப்ரேம்ஸ், விளையாட்டுக் கேடயங்கள் போன்றவற்றுக்கான தமிழ்நாடு அளவிலான சந்தையாக மாறியிருக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான கேமரக் கலைஞர்கள் இங்கு தங்கள் வேலைக்கான உபகரணங்கள் வாங்குவதற்காக இங்கு வருகிறார்கள். வார நாட்களில் எப்போதும் நெருக்கடியாகவே இந்தச் சாலை இருக்கும். நிறுவனப் பெயர்ப் பலகை தயாரிக்கும் நிறுவனங்களும் இந்தச் சாலையில் அதிகம். இந்தச் சிறிய சாலைக்குள்ளே விளக்காலான நிறுவனப் பெயர்ப் பலகைகள் வடிவமைப்பு, பிரிண்ட் என முழுமையாகத் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்குத் தரப்படுகிறது. இந்தக் கட்டுரை எழுதப்பட்ட தி இந்து (தமிழ்) அலுவலகமும் இந்தச் சாலையின் தொடக்கத்தில்தான் உள்ளது.

http://tamil.thehindu.com/society/real-estate/article19736132.ece

 

 

தெருவாசகம் 02: தொன்மையும் சுவையும் நிறைந்த தெரு

 

 
04JKRMINTSTREET

மிண்ட் தெரு   -  படம் ரகு

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் பார்க் டவுனையும் வண்ணாரப்பேட்டையையும் இணைக்கும் தங்கசாலை தெரு (மிண்ட் தெரு), சென்னையின் மிகப் பழமையான, நீண்ட தெருக்களில் ஒன்று. இன்றும் கடைகளும் மக்கள் கூட்டமும் நிரம்பி வழிவதால் சென்னையின் பரபரப்பான தெருக்களில் ஒன்றாகவும் இது உள்ளது.

 

மிண்ட்- பெயர்க் காரணம்

17-ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசிய யூத வணிகர் ஜாக்வெஸ் டி பைவியா (Jacques de Paivia) என்பவர் இங்கு யூதர்களுக்கான இடுகாட்டை உருவாக்கினார். பிறகு, இந்த இடுகாடு லாயிட்ஸ் சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது மிண்ட் தெருவாக இருக்கும் பகுதியைப் பற்றி நமக்குக் கிடைக்கும் முதல் வரலாற்றுப் பதிவு இதுதான்.

சென்னையின் வரலாற்றைப் பற்றிப் பல கட்டுரைகள் எழுதியுள்ள வரலாற்றாசிரியர் வி.ஸ்ரீராம் இந்தத் தெருவைப் பற்றியும் எழுதியுள்ளார். 18-ம் நூற்றாண்டில், கிழக்கிந்திய கம்பெனியினர் தங்களது துணி வியாபாரத்தை வளர்க்கும் நோக்கில் சலவைத் தொழிலாளிகளை இங்கே குடியமர்த்தினர். இதற்கு வாஷர்ஸ் ஸ்ட்ரீட் (Washers street) என்றும் பெயரிட்டனர்.

1841-42- களில் கிழக்கிந்திய கம்பெனி, தன் நாணயம் தயாரிக்கும் தொழிற்சாலையை இங்கு மாற்றியதிலிருந்து இந்தத் தெரு ‘மிண்ட் தெரு’ என்ற பெயரைப் பெற்றது என்கிறார் ஸ்ரீராம். எனவே, தமிழில் இந்தத் தெரு நாணயச் சாலை என்றும் தங்க சாலை என்றும் அழைக்கப்படுகிறது.

 

பன்மொழிப் பூங்கா

இங்கு ஆங்கிலேயர்களால் குடியமர்த்தப்பட்ட சலவைத் தொழிலாளிகளில் பெரும்பாலானோர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். சில ஆண்டுகளில் துபாஷி என்று அழைக்கப்பட்ட இரண்டு மொழி பேசும் இடைத்தரகர்களும் குஜராத்தின் சவுராஷ்ட்ரா பகுதியைச் சேர்ந்த துணி வியாபாரிகளும் இங்கே குடியேறினர். இவர்களைத் தொடர்ந்து அடகு வியாபாரத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் மார்வாரிகளும் இங்கே குடியேறினர். இதன் மூலம் தொடக்கம் முதலே இந்தத் தெரு பல மொழி பேசுபவர்கள் வசிக்கும் பகுதியாக இருந்துவருகிறது.

04JKR42BHAJANMANDIRAMMINTSTREETVG

ராமர் கோயில் பஜனை மடம்   -  படம். வி.கணேசன்

 

 

அச்சும் சினிமாவும் வளர்ந்த இடம்

அச்சுத் தொழில் பரவத் தொடங்கிய காலகட்டத்தில் மிண்ட் தெருவில் பல அச்சகங்கள் தொடங்கப்பட்டன. ஆங்கிலேயர்களின் நாணயத் தொழிற்சாலை இருந்த கட்டிடம் பிறகு அரசின் அச்சகமாக மாற்றப்பட்டது. 1860-ல் ஆறுமுக நாவலர் இங்கு ஒரு அச்சகத்தைத் தொடங்கினார். இப்போது இந்த அச்சகம் இல்லை என்றாலும் அதே கட்டத்தில்தான் நாவலர் அறக்கட்டளைக்குச் சொந்தமான விற்பனைக் கிடங்கு இயங்கிவருகிறது. 1900-ம் ஆண்டு இந்தத் தெருவில் தொடங்கப்பட்ட ‘சஸ்த்ர சஞ்சீவினி அச்சகம்’ இந்தத் தெருவில் இன்றுவரை செயல்பட்டுவருகிறது. 1880-களில் அப்போது வாரம் மூன்றுமுறை வெளியாகிக்கொண்டிருந்த ‘தி இந்து’ ஆங்கில இதழும் இந்தத் தெருவில் இருந்த அச்சகத்திலிருந்துதான் வெளியானது. தமிழ் வார இதழ் ‘ஆனந்த விகடன்’ அதன் தொடக்க ஆண்டுகளில் இங்கிருந்துதான் வெளியாகிக்கொண்டிருந்தது.

அதேபோல் சினிமா என்ற ஊடகம் தமிழர்களிடையே பரவிய புதிதிலேயே இங்கு சில திரையரங்குகள் தொடங்கப்பட்டன. இங்கு இருந்த கிரவுன் மற்றும் முருகன் திரையரங்குகள் மிகப் பழமையானவை. முருகன் திரையரங்கில்தான் 1931-ல் வெளியான தமிழின் முதல் பேசும்படமான ‘காளிதாஸ்’ வெளியிடப்பட்டது.

 

பக்தியும் மரபிசையும் தழைத்த இடம்

1880-களில் இங்கிருந்த தொண்டை மண்டலம் துளுவ வெள்ளாளர் பள்ளியில் மகா வைத்தியநாத சிவன் என்பவரால் நடத்தப்பட்ட கச்சேரிதான் சென்னையில் முதல் முறையாக டிக்கெட் விற்பனை செய்து நடத்தப்பட்ட கர்னாடக இசைக் கச்சேரி என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். 1909-ல் இங்கு இயங்கிவந்த ‘இந்து இறையியல் பள்ளி’யில் சி.சரஸ்வதி பாய் என்பவர் தனது முதல் ஹரிகதை நிகழ்ச்சியை நடத்தினார். ஒரு பெண் ஹரிகதை நடத்துவதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்திருக்கிறது. 1896-ல் இந்தப் பள்ளிக்கு மகாத்மா காந்தி வருகைபுரிந்தார்.

04JKRTTVHIGHERSECONDARYSCHOOLVG

காந்தி வருகை தந்த துளுவ வெள்ளாளர் பள்ளி   -  The HIndu

சென்னையில் கர்னாடக இசையின் பஜனை வடிவத்தை வளர்க்கும் நோக்கில் இந்தத் தெருவில் பல பஜனை மடங்கள் தொடங்கப்பட்டன. நுற்றாண்டைக் கடந்த இரண்டு மடங்கள் இப்போதும் இயங்கிவருகின்றன. தற்போது இந்தத் தெருவில் இருக்கும் சுமைதாங்கி ராமர் கோவில், முன்பு பஜனை மடமாக இருந்தது.

 

சாட் உணவுகளின் மையம்

தொன்றுதொட்டு இங்கு குஜராத்தியர்களும் ராஜஸ்தான் மார்வாரிகளும் வசித்துவருவதால் சென்னையில் அசலான சுவையுடன் கூடிய சாட் உணவுகளுக்கான மையமாக இந்தத் தெரு விளங்குகிறது. மாலை நேரங்களில் சமோசா, கச்சோரி, கட்லெட், பானிபூரி, ஜிலேபி, வடா பாவ் உள்ளிட்ட நொறுவைகளைச் சுடச் சுட தயாரித்து விற்கும் பல கடைகள் இந்தத் தெருவில் இருக்கின்றன. பண்டிகைக் காலங்களில் வரிசையில் நின்று தின்பண்டங்களை வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களைப் பார்க்கலாம்.

மாலை நேரங்களில் சாட் உணவுகளுக்காகவும் ஷாப்பிங் செய்து பொழுதைக் கழிப்பதற்காகவும் இங்கு வரும் இளைஞர்களால் புதுமைக் களை அணிந்திருக்கும் இந்தத் தெருவின் தொன்மையை இங்குள்ள பஜனை மடங்களும் ராஜஸ்தான் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட வீடுகளும் நினைவுபடுத்துகின்றன.

http://tamil.thehindu.com/society/real-estate/article19974183.ece

Link to comment
Share on other sites

  • 2 months later...

தெருவாசகம்: சென்னையின் பழமையான சாலை

 

30jkrtheruvasakamIMG
29JKRROYA
29JKRAMIRMAHALKVSJPG

அமீர் மஹால் நுழைவுவாயில்   -  The Hindu

29JKRMARKETKVSJPG

ஜாம்பஜார் சந்தை   -  The Hindu

30jkrtheruvasakamIMG
29JKRROYA
 

சென்னை என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அண்ணா சாலையில் வாகனங்கள் சீறிப் பாய்ந்துசெல்லும் காட்சி. இந்தச் சாலைக்கு அருகிலுள்ள ஒரு சாலைதான் பாரதி சாலை. அதன் பழைய பெயர் பைகிராப்ட்ஸ் சாலை. எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகம் இருக்கும் ராயப்பேட்டை மணிக்கூண்டு சந்திப்புக்கும் மெரினா கடற்கரை காமராஜர் சாலை கண்ணகி சிலை சந்திப்புக்கும் இடையே நீண்டிருக்கிறது இந்தச் சாலை.

 

யார் இந்த பைகிராப்ட்ஸ்?

மகாகவி சுப்பிரமணிய பாரதியார், தனது கடைசிக் காலத்தை திருவல்லிக்கேணியில்தான் கழித்தார். இங்குள்ள பார்த்தசாரதி கோயிலில் இருந்த யானை தாக்கி நோய்வாய்ப்பட்ட பாரதி, இறந்தும் போனார். அவரது நினைவைப் போற்றும் விதத்தில் தமிழ்நாடு அரசு பைகிராப்ட்ஸ் சாலை என்று இருந்த பெயரை பாரதி சாலை என்று மாற்றியது. ஆனாலும், இன்றும் இந்தச் சாலையைப் பலர் பழைய பெயரிலேயே அழைக்கிறார்கள்.

பைகிராப்ட்ஸ் என்ற பெயர் ஆங்கிலேயே அதிகாரி ஒருவருடையது. செயின்ட் தாமஸ் பைகிராப்ட்ஸ், 1807 டிசம்பர் 4 அன்று இங்கிலாந்தில் ஹாம்ஸ்டீட் என்னும் இடத்தில் பிறந்தார். பள்ளிப் படிப்பை பாத் கிராமர் பள்ளியிலும், பட்டப் படிப்பை ட்ரினிட்டி கல்லூரியிலும் முடித்தார். கிழக்கிந்திய கம்பெனியின் மூலம் 1829-ம் ஆண்டு சென்னையில் பணிபுரிய வந்தார். எழுத்தராகத் தன் பணியைத் தொடங்கியவர் படிப்படியாகப் பதவி உயர்வுபெற்றார். தென்னார்க்காட்டில் வருவாய்த் துறையிலும் நீதித் துறையிலும் 1829-லிருந்து பத்தாண்டுகள் பணியாற்றினார். 1839-ல் பிரிட்டனுக்குத் திரும்பிச் சென்றவர் மீண்டும் 1843ல் இந்தியாவுக்குத் திரும்பியதும் சென்னை மாகாணத் தலைமைச் செயலகத்துக்கு மாற்றப்பட்டார்.

முதலில் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் பின் 1845-ல் வருவாய்த்துறைச் செயலாளராகப் பதவி உயர்த்தப்பட்டார். அதே ஆண்டில் சென்னை மாகாண அரசின் தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும் செயலாற்றினார். பின்னாளில், 1855 முதல் 1862 சென்னை மகாணத்தின் தலைமைச் செயலாளராகப் பதவி உயர்த்தப்பட்டார். இவர் சென்னை மாகாணச் சட்டமன்ற உறுப்பினராகவும் செயலாற்றியுள்ளார். பணி ஓய்வுக்குப் பின் இங்கிலாந்து திரும்பிய பைகிராப்ட்ஸ் 1894, ஜனவரி 29-ல் தனது 84-ம் வயதில் காலமானார்.

 

சாலையின் சிறப்புகள்

சென்னையின் மிகப் பழமையான இந்தச் சாலையில்தான் ஆற்காடு நவாபின் அதிகாரபூர்வ இல்லமான அமீர் மஹால் உள்ளது. முன்னோடி மர்ம நாவல் எழுத்தாளரான வடுவூர் துரைசாமி ஐயங்கார் இந்தச் சாலையில்தான் வீடு வாங்கி வசித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. ஜாம்பஜார் என்று அழைக்கப்படுகிற இந்தச் சாலையின் மையத்தில் இருக்கும் சந்தை ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளின் வர்த்தக மையமாக இருக்கிறது. இது சென்னையின் மிகப் பழமையான சந்தைப் பகுதிகளுள் ஒன்று. இந்தச் சாலையில் ஒரு பகுதி ராயப்பேட்டையில் இருக்கிறது. ராயப்பேட்டை மெத்தை, திரைகளுக்கான சந்தை. அதனால் அது தொடர்பான கடைகளும் இந்தச் சாலையில் இருக்கின்றன. திருவல்லிக்கேணி பகுதி துணிக் கடைகளுக்கான சந்தையாக இன்று இருக்கிறது. பெல்ஸ் சாலை என அழைக்கப்படும் பாபுஜெகஜீவன்ராம் சாலை சந்திப்புப் பகுதியில் பழைய புத்தகங்கள் விலைக்குக் கிடைக்கும்.

http://tamil.thehindu.com/society/real-estate/article22377419.ece

Link to comment
Share on other sites

  • 1 month later...

தெருவாசகம்: தாமரைப் பூ நகரம்

 

 
NORTHMASISTREET%202

வட மாசி வீதி, படம்:   -  ஜி.மூர்த்தி

பாண்டிய ராஜ்ஜியத்தின் தலைநகராக விளங்கிய மதுரை மாநகரின் பல வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளுக்கு மௌன சாட்சியாக வறண்டோடும் வைகை நதி இன்றும் தன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நகரின் நடுவே தவழ்கிறது. இருக்காதா பின்னே. சினம் கொண்ட கண்ணகியின் கோபத்தில் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பையே அணைத்த நதியல்லவா அது.

   

சங்கம் வளர்த்த மதுரையின் சிறப்புகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரை மல்லி, ஆயிரம் கால் மண்டபம், அழகர் மலை, கோனார் மெஸ், ஜிகர் தண்டா என்று அதன் அடையாளங்களாக நீளும் பட்டியலின் நீளம் மிக அதிகம். அவற்றுள் ஒன்றுதான் அதன் நகரமைப்பு.

CHITHRAI

தெற்குச் சித்திரை வீதி,   -  The Hindu

மதுரை நகரின் வடிவமைப்பும் கட்டமைப்பும் தெருக்களும் கட்டிடங்களும் பண்டைய காலத் தமிழ் நாகரிகத்தின் பெருமைக்குச் சான்றுகளாக இன்றும் திகழ்கின்றன. மதுரை நகரம், வழிபாட்டு மையமாக விளங்கும் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றித்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நகரின் அமைப்பு தனித்துவம் வாய்ந்த ஒன்று. ஏனென்றால், மற்ற நகரங்களைப் போன்று இதன் தெருக்கள் நேர்க்கோட்டில் அமையாமல், சதுர வடிவில் அடுக்கடுக்காகச் சுற்றும்வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த அமைப்பானது மதுரையை ஆண்ட நாயக்கர்களுள் முதல் நாயக்கரான விசுவநாத நாயக்கரால் (கி. பி. 1159–64) உருவாக்கப்பட்டது.

நகரின் மையமும் அதைச் சூழ்ந்துள்ள தெருக்களும் விரிந்த தாமரை மலரின் தோற்றத்தை ஒத்தவை எனப் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. நகரத்தின் மையம், பூமத்திய ரேகைகளின் அச்சுடன் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது, வானிலிருந்து பார்க்கும்போது கோயிலின் நான்கு வாசல்களின் வழியாக அந்த ரேகைகள் நீள்வதுபோல் தோன்றுகின்றன.

கழுகுப் பார்வையில் இந்த அமைப்பு தன் அழகின் மூலம் நம் மனதைக் கொள்ளையடித்துச் செல்லும். புதிதாக அங்குச் செல்லும் ஒரு சுற்றுலாப் பயணி அந்தத் தெருக்களில் ஏதோ ஒன்றில் நடக்க ஆரம்பித்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்குள் தொடங்கிய இடத்தையே அவர் வந்தடைவார்.

கோயில் பிரகாரத்திலும் அதைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களிலும் திருவிழாக்கள் இன்றும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. அதில் நடக்கும் தேரோட்டத்தைக் காண கூடும் கூட்டம் மதுரையின் பாரம்பரியம் உயிர்ப்புடன் இருப்பதைக் காட்டுகிறது.

shutterstock114947263
 

அங்குள்ள வீதிகளுக்கு ஆடி, சித்திரை, ஆவணி மூல, மாசி என்று தமிழ் மாதங்களே பெயர்களாகச் சூட்டப்பட்டுள்ளன. கோயிலைச் சுற்றி முதல் அடுக்கிலிருக்கும் வீதி ‘ஆடி வீதி’ என அழைக்கப்படுகிறது. அது முற்றிலும் ஆன்மிக வழிபாட்டுக்குரிய வீதி. முன் காலத்தில் இந்தத் தெருவுக்குள் உயர்சாதியினர் மட்டுமே செல்ல முடியும். அந்த ஆடி வீதியைச் சுற்றி சித்திரை வீதி, மாசி வீதி, ஆவணி மூல வீதி போன்ற வீதிகள் அடுத்தடுத்து உள்ளன.

சில தெருக்களின் பெயர்கள் அங்கு வசிக்கும் மக்களின் தொழில்சார்ந்து அமைந்துள்ளது. உதாரணத்துக்கு, வளையல் வியாபாரிகள் இருப்பது ‘வளையல்காரர் தெரு’, தங்கநகை வியாபாரிகள் இருப்பது ‘நகைக்கடைத் தெரு’, பாத்திர வியாபாரிகள் இருப்பது ‘பாத்திரக்காரத் தெரு’, வெற்றிலை வியாபாரிகள் இருப்பது ‘வெத்தலக்கடை தெரு’.

SOUTHAVANIMOOLASTREET

தெற்கு ஆவணி வீதி,   -  The Hindu

 

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு பாரதியார் மதுரையில் ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். அப்போது அவர் நடந்து சென்ற தெரு ‘பாரதியார் உலா வீதி’ என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தெரு மதுரையில் உள்ள வீதிகளில் முக்கியமான ஒன்றாக இன்றும் கருதப்படுவது ‘பாரதியார் உலா வீதி’.

பழங்காலத்தில் உயர்சாதியினர் கோயிலுக்கு அருகில் உள்ள தெருக்களிலும், ஏழை மற்றும் பிற்பட்ட படிநிலை மக்கள் தொலைவில் உள்ள தெருக்களிலும் குடியிருந்தனர். 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் வருகை, தொழில் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, நகரமயமாதல் ஆகியவற்றின் காரணமாக மதுரை நகரின் அமைப்பில் மாறுதல்கள் ஏற்பட்டன. அந்த மாறுதல்கள் காரணமாகக் கோட்டைச் சுவர் அகற்றப்பட்டுப் புதிய தெருக்கள் உருவானதால் தற்போது அனைத்துப் படிநிலை மக்களும் ஒன்றிணைந்து வாழ்கின்றனர்.

http://tamil.thehindu.com/society/real-estate/article22916964.ece

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

தெருவாசகம்: நரிமேட்டால் உருவான பிராட்வே

 

 
BROAD

பிராட்வே சந்திப்பு   -  The Hindu

 

பிராட்வே என்றால் அகலப்பாதை என்று தமிழில் பொருள். ஆனால், இன்று அந்தச் சாலையில் அகலமும் இல்லை பாதையும் இல்லை. சாலையெங்கும் காளான்களைப்போன்று கடைகள் முளைத்து பாதையைக் குறுக்கி நிற்கின்றன. இது போதாதென்று சில வருடங்களாக மெட்ரோ ரயில் பணிகளும் பாதையை இன்னும் குறுக்கி நடப்பதே சிரமம் என்ற நிலையை ஏற்படுத்தி, நம்மை மூச்சுத் திணறவைக்கிறது.

     

ஆனால், இந்தச் சாலை அது உருவான காலகட்டத்தில் உண்மையிலேயே விஸ்தாரமான சாலையாகத்தான் இருந்துள்ளது. அது அன்று ஜார்ஜ் டவுனை முத்தையால்பேட்டை என்றும் பெத்துநாயக்கன்பேட்டை என்றும் இரண்டாகப் பிரித்து தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நீண்டு சென்றுள்ளது.

BROADQ

பிராட்வே பேருந்துநிலையம்   -  HINDU

 

இந்தச் சாலை உருவாவதற்கு முன்பாக அந்தப் பகுதி ஒரு தேவையற்ற பள்ளமாக இருந்தது. இந்தப் பள்ளத்தின் பெரும்பகுதி ஸ்டீபன் பாபன் என்னும் ஆங்கிலேயருக்குச் சொந்தமாக இருந்துள்ளது. பிரிட்டிஷ் அரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஸ்டீபன் பின்னாளில் கல்கத்தாவின் அட்வகேட் ஜெனரல் ஆகவும் இருந்தார். 1878-ம் வருடம் சென்னையில் குடியேறினார். 1882-ம் வருடம் சென்னையில் நவீன காவல்படையை உருவாக்கியவர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

இன்று இந்தச் சாலையில் பொது மருத்துவமனையும் பார்க் டவுன் தபால் நிலையமும் இருக்கும் இடம் அன்று ஒரு மலையாக இருந்தது என்பதை நம்ப முடிகிறதா? ஆம் அன்று அந்தப் பகுதியில் ஒரு மலை இருந்தது. அந்த மலை அப்போது நரிமேடு என்று தமிழிலும் ஹாக்ஸ் ஹில்ஸ் என்று ஆங்கிலேயர்களாலும் அழைக்கப்பட்டது. உயரமான நரிமேடு மலைப் பகுதியால் ஜார்ஜ் கோட்டைக்கு ஆபத்து நேர வாய்ப்பிருப்பதாகக் கருதிய பிரிட்டிஷ் அரசு, அந்த நரிமேடு மலையை உடைத்துத் தரைமட்டமாக்க முடிவு செய்தது.

BROADWAY

பிராட்வே பகுதி   -  The Hindu

 

ஆனால், நமது ஸ்டீபனுக்கு வேறு திட்டம் இருந்தது. அதனால், அவர் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தி, உடைக்கும் அந்த மலையைக்கொண்டு பள்ளத்தை நிரப்பும்படி செய்தார். மண்ணடி என அழைக்கப்படும் பகுதியிலும் ஸ்டீபனின் நிலத்திலிருந்த பள்ளத்தையும் மூட நரிமேடு மண் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு, யாருக்கும் பயனற்ற எதற்கும் லாயக்கற்ற பள்ளத்தை, இன்றும் நமக்குப் பயன்படும் பிராட்வே ஆக மாற்றினார். அதை ஸ்டீபன் பாபனின் நினைவாக பாபன் பிராட்வே என்று அழைக்கலாமா என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள்.

இன்று மூக்குக் கண்ணாடிக் கடைகள் நிரம்பி வழியும் இந்த பிராட்வே, 1890-களில் இரண்டு புகழ்பெற்ற உணவகங்களைத் தன் அடையாளங்களாகக் கொண்டிருந்தது. முதலாவது அடையாளம் பி. வெங்கடாச்சலம் உணவகம். அதன் சுவை மிகுந்த உணவுகளும் காரத் துவையல்களும் இங்கிலாந்துவரை புகழ்பெற்று விளங்கியிருக்கிறது. மிளகு ரசத்தை மிளகு சூப்பாக்கிய பெருமை வெங்கடாச்சலத்தையே சாரும். இரண்டாவது அடையாளம் ஹாரிசன் உணவகம். ஹாரிசன் உணவகம் இன்றும் நுங்கம்பாக்கத்தில் நவீனமாக வளர்ந்துள்ளது.

CHENNAIBROADWAY

பிராட்வே பகுதி   -  The Hindu

 

இன்று நம் நாட்டின் குக்கிராமங்களில்கூடத் தனியார் மருத்துவமனைகள் நிறைந்துள்ளன. ஆனால், நம் மாநிலத்தின் முதல் தனியார் மருத்துவமனை இந்த பிராட்வேயில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ஆம். 1900-ம் வருடம் டி.ஏ. சங்கர நாராயணன் என்ற புகழ்பெற்ற மருத்துவர் அங்கு அவரது மருத்துவமனையை நடத்தி வந்திருக்கிறார்.

popham

ஸ்டீபன் பாபன்

இன்று காலம் மாறிவிட்டது. அந்தச் சாலையின் பெயரும் மாறிவிட்டது. இன்று அந்தச் சாலை புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் டி. பிரகாசம் நினைவாக பிரகாசம் சாலை என்று அழைக்கப்படுகிறது.

ஆனாலும் சிலர் அதை இப்போதும் பிராட்வே என்று சொல்லும் போக்கும் உள்ளது. என்றாலும், இன்று எப்படி நமக்கு அந்தப் பள்ளமும் நரிமேடு என்ற மலையும் தெரியாமல் உள்ளதோ, அதே போன்று இன்னும் சில பத்தாண்டுகளில் பிராட்வே என்ற பெயரும் முற்றிலும் மறைந்து பிரகாசம் சாலை என்னும் பெயர் நிலைபெற்றுவிடக்கூடும்.

http://tamil.thehindu.com/society/real-estate/article23273405.ece

Link to comment
Share on other sites

தெருவாசகம்: உதிர்ந்த பாரம்பரியம்

 

 
Dangelis%20-1

ன்கு செழித்துப் படர்ந்துயர்ந்த ஆல மரத்தைப் போன்றவை பாரம்பரியம் மிக்க தொன்மையான கட்டிடங்கள். இடிக்கப்பட்ட பாரம்பரிய கட்டிடங்களின் இடிபாடுகளில் சரிவது வெறும் கல்லும் மண்ணும் மட்டும் அல்ல, அங்கு வாழ்ந்தவர்களுடைய கனவுகளும் நினைவுகளும்தாம். அதன் ஞாபகங்கள் மெல்ல மனிதர்களின் மனதை விட்டுக் காலப்போக்கில் அழிந்துவிடும். ஆனால், சில கட்டிடங்களின் வடிவும் நினைவும் நம் மனதில் என்றும் அழியாமல் நீங்காத வடுவாக உறைந்து நிற்கும். அத்தகைய கட்டிடங்களில் ஒன்று சென்னை மவுன் ரோட்டில் இயங்கிவந்த பாட்டா விற்பனை நிலையக் கட்டிடம். அது தற்போது இடிக்கப்பட்டுவருகிறது.

       

சென்னையின் அடையாளமாக இருந்த எல்.ஐ.சி. கட்டிடம் கட்டப்படுவதற்கு முன்பாகவே சென்னையின் அடையாளமாக இது இருந்துள்ளது. பாரம்பரிய கட்டிடமாக அறிவிக்கப்பட்டிருந்த பல கட்டிடங்கள் சென்னையில் கேள்வியின்றி இடிக்கப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் தற்போது இந்தக் கட்டிடமும் இணைந்துள்ளது. ஆனால், இதை இடிப்பவர்கள் இதை முன்பக்கமிருந்து இடிக்காமல் பின்பக்கமாக இருந்து இடிக்கிறார்கள். அதன் முகப்புச் சுவர் மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்தக் கட்டிடம் எந்தச் சுவடுமின்றி முற்றிலும் துடைத்து எறியப்பட்டுவிடும்.

bata1%201

 

138 வருடப் பாரம்பரியம்

சரியாகச் சொல்வது என்றால், இந்தக் கட்டிடம் 138 வருடப் பாரம்பரியம் கொண்டது. மின்தூக்கியும் மின்விசிறியும் ஐஸ் தயாரிக்கும் இயந்திரமும் சுடுநீர் குழாயும் கொண்ட முதல் கட்டிடம் என்ற பெருமை இதற்கு உண்டு. கோர்சிகாவைச் சேர்ந்த கியாகோமோ டி ஏஞ்சலிஸ் 1880-ம் வருடம் இந்த இடத்தில் மெர்சோன் பிரான்சைஸ் எனும் தின்பண்டங்கள் விற்பனையகத்தை ஆரம்பித்தார்.

முதலில் அவர் அந்த இடத்தில் தின்பண்டங்களும் ஐஸ் கட்டிகளும் உணவு வகைகளும் தயாரிக்கப் போவதற்குத்தான் அனுமதி வாங்கியுள்ளார். அதற்காக அங்கு ஒரு நவீன சமையலறையை நிர்மாணித்தார். அந்த வகைச் சமையலறை அக்காலத்தில் தென்னகத்தில் எங்கும் இல்லை.

அந்தக் கடையின் பெருமையும் சுவையும் விரைவில் சென்னை முழுவதும் பரவியது. அப்போது ஏஞ்சலிஸ், தன்னால் பெரிய விழாக்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் கேட்டரிங் சர்வீஸ் செய்ய முடியும் என அறிவித்தார். இது அவர் தொழிலின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல; அந்தச் சிறிய கட்டிடத்தின் விரிவாக்கத்துக்கும் வித்திட்டது. ஏனென்றால், அந்தக் காலத்தில் பெரும் புகழோடு விளங்கிய கன்னிமாரா போன்ற ஹோட்டல்களில்கூட இந்த கேட்டரிங் வசதி கிடையாது.

ஏஞ்சலிஸ் தனது இந்தச் சேவைக்கு ஒரு தலைசிறந்த பிரெஞ்ச் சமையல்காரரைப் பயன்படுத்தினார். அந்தத் தரமான உணவின் வாசனை அப்போது ஆளுநராக இருந்த அம்ப்தில்லின் நாசியை அடைந்தது. அதன்பின் ஏஞ்சலிஸ் ஆளுநரின் நிகழ்ச்சிகளுக்கும் அவர் அளிக்கும் விருந்துகளுக்கும் ஆஸ்தான கேட்டரிங் ஒப்பந்ததாரராக மாறினார். அதனால் அவரது கேட்டரிங் சர்வீஸ் சென்னையில் உள்ள பெரும்புள்ளிகள் அனைவராலும் விரும்பிப் பயன்படுத்தப்படும் ஒன்றாக மாறியது.

bata1%203
 

 

சென்னையின் முதல் ஆடம்பர விடுதி

இந்த அசுர வளர்ச்சி ஈட்டிக்கொடுத்த செல்வத்தால் 1906-ம் வருடம் அந்த இடத்தில் ஒரு சிறிய ஹோட்டலை நிறுவினார். அந்த ஹோட்டல் அடுத்த இரண்டு வருடங்களில் சென்னையின் முதன்மையான ஹோட்டலாக மாறியது. அப்போது மௌண்ட்பேட்டன் பெயரிலிருந்த இந்தச் சாலையைப் பார்த்தவண்ணம் இருந்த அதன் நீண்ட வராண்டா உருக்கிய இரும்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட அலங்கார தோரண வாயில்களைக் கொண்டிருந்தது. இந்த வராண்டாவை அடுத்து மெளண்ட் சாலை, பிளாக்கர்ஸ் சாலை ஆகிய இரு சாலைகளைப் பார்த்த வண்ணம் தங்கும் அறைகள் இருந்தன.

இந்த அறைகள்தாம் சில வருடங்கள் முன்பு வரை சிவா புத்தக கடை போன்று பல சிறு கடைகளாக இருந்தன. இதன் தங்கும் அறைகள் அனைத்தும் குளியலறையையும் கழிவறையையும் கொண்டிருந்தன. அதன் குழாய்களில் எப்போதும் சுடு தண்ணீர் வந்தது அப்போது பெரிதாகப் பேசப்பட்டது.

dajenl
 

இதன் அறைகளுக்கும் பிளாக்கர்ஸ் சாலைக்கும் இடையே உருவாக்கப்பட்டிருந்த பார்சியன் தோட்டத்தில் இருந்த ரோஜாக்களும் அங்கு வழங்கப்பட்ட மதுபானமும் சென்னையில் அப்போது மிகவும் பிரசித்தி பெற்றவை. ஷாப்பிங் முடித்துத் திரும்பும் சீமாட்டிகள் அந்த ஹோட்டலில் கிடைக்கும் பிரெஞ்ச் உணவு வகையையும் இத்தாலிய உணவு வகையையும் சுவைக்கத் தவறியதே இல்லை. மின்தூக்கி வசதி இருந்ததால் ஏஞ்சலிஸ் தன்னுடைய ஹோட்டலின் மீது மாடித் தோட்ட வசதியையும் (ரூஃப் கார்டன்) உருவாக்கியிருந்தார்.

80 அடி நீளமும் 30 அடி அகலமும் கொண்ட ஒரு பில்லியர்ட் விளையாட்டு அறையும் அந்த ஹோட்டலில் இருந்துள்ளது. பொழுதுபோக்குவதற்கு கிளப்கள் எதுவும் இல்லாத அந்தக் காலகட்டத்தில், இதை விட்டால் வேறு வழியே என்ற நிலைதான் மேல்நாட்டவருக்கு இருந்திருக்கிறது. 1934-ம் வருடம் சென்னைக்கு விளையாட மெரில்போன் கிரிக்கெட் கிளப் அணி (இங்கிலாந்து கிரிக்கெட் அணி அப்போது அப்படிதான் அழைக்கப்படும்) கூட இந்த ஹோட்டலில்தான் தங்கியிருக்கிறது.

அந்தக் காலத்திலேயே விருந்தாளிகளை அருகில் உள்ள ரயில் நிலையங்களில் இருந்து அழைத்து வருவதற்கு மோட்டார் வாகன வசதியை இந்த ஹோட்டல் கொண்டிருந்தது. 1937-ம் வருடம்வரை, அதாவது மறு சீரமைப்பு செய்யப்பட்ட கன்னிமாரா ஹோட்டல் திறக்கப்படும்வரை, சென்னையின் ஹோட்டல்களில் முதலிடத்தில் ஏஞ்சலிஸ் ஹோட்டல் இருந்துள்ளது.

bata1%204
 

 

போஸோட்டோ & சன்ஸ் ஆக மாறிய ஏஞ்சலிஸ்

ஏஞ்சலிஸ் ஃபிரான்சிலிருந்து சென்னை வந்ததால் அவர் கோர்சிகாவைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறார். ஆனால், அவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். அவர் தான் பிரெஞ்சு நாட்டைச் சார்ந்தவராகக் கருதப்படுவதைக் குறித்துப் பெரிதும் அலட்டிக் கொண்டதாகவும் தெரியவில்லை. சொல்லப்போனால் அவர் வீட்டில் கூட இத்தாலியில் பேசுவதைத் தவிர்த்து ஆங்கிலத்தில் உரையாடுவதைத்தான் விரும்பியிருக்கிறார்.

ஏஞ்சலிஸ் ஒரு சுவாரசியமான மனிதராக இருந்தவர் எனச் சொல்லப்படுகிறது. அவர் இயந்திரவியலில் நிபுணத்துவம் மிக்கவராகத் திகழ்ந்தார். ரைட் சகோதரர்கள் விமானம் கண்டுபிடித்தில் இருந்து சரியாக எழு வருடங்கள் கழித்து, ஏஞ்சலிஸ் தானே ஒரு வானூர்தியை 1909-ம் வருடம் வடிவமைத்துப் பறந்துள்ளார். பின் 1909-ம் வருடம் பல்லாவரத்தில் பொதுமக்களின் முன்னிலையில் அவர்களிடம் கட்டணம் வசூலித்துப் பறந்துள்ளார்.

இவர் பறந்தது மிகப் பெரிய கண்காட்சி போல் பார்க்கப்பட்டுள்ளது. இவர் பல்லாவரத்தில் பறந்த செய்தி அன்றைய செய்தி நாளிதழ்களில் செய்தியாக வந்துள்ளது. அதைச் செய்தியாக எழுதியவர் சுப்ரமணிய பாரதி. பறப்பதற்குமுன் எப்போதும் கூட்டத்தை நோக்கி, தன்னுடன் விமானத்தில் பயணிக்கும் தைரியம் கொண்டவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா என்று கேட்பார். ஆனால், அந்தப் பயணங்களில் ஒருமுறை மட்டும் ஒருவர் தைரியமாக அவருடன் பயணித்துள்ளார்.

d
 

அதற்குப் பிறகு ஹோட்டல் தொழிலை அவருடைய மகன் கார்லோ கவனிக்க ஆரம்பித்துள்ளார். அப்போது அந்த ஹோட்டல் டி ஏஞ்சல்ஸ் & சன்ஸ் என்று அழைக்கப்பட்டுள்ளது. 1920-ம் வருடம் கார்லோ வாத்து வேட்டைக்குச் சென்றபோது துரதிர்ஷ்டவசமாக நீரில் மூழ்கி இறந்துவிட்டார். அதன் பிறகு அமெரிக்காவில் இருந்த எஞ்சல்ஸின் மற்றொரு மகன் லூயிஸ் சென்னைக்குத் திரும்பி அந்த ஹோட்டலைக் கவனித்துள்ளார்.

ஆனால், லூயிஸுக்கு அந்தத் தொழிலில் பெரிய ஈடுபாடு இல்லை. எனவே, அந்தக் தொழிலைச் சரியாகக் கவனிக்காமல் குறை சொல்லிக் கொண்டே இருந்தார். இறுதியில் அதை விற்று விடுவது என முடிவு செய்து அதை விற்கும் முயற்சியில் ஈடுபட்டார். இறுதியில் அந்த ஹோட்டலை சென்னையில் வசித்த இத்தாலியரான போஸோட்டோ என்பவருக்கு விற்றார். அதன் பிறகு அந்த ஹோட்டல் போஸோட்டோ & சன்ஸ் ஆக மாறியது.

dajel

டி ஏஞ்சிலிஸ்

ஹோட்டல் விற்கப்பட்டாலும் டி’ ஏஞ்சல்ஸ் தான் மறையும் வரை சென்னையில்தான் வாழ்ந்துள்ளார். ஆனால், 1950-ம் வருடம் இரண்டாம் உலகப் போரின்போது போஸோட்டோ இத்தாலிக்குச் சென்றுவிட்டார். அவர் செல்லும் முன் இப்போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ஹோட்டலை வெறும் 15,000 ரூபாய்க்குப் பால் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த முசுலிபா சௌதரி என்பவருக்கு விற்றுள்ளார்.

1970-களில் பாட்டா நிறுவனத்தின் விற்பனை மையமாக இது மாறியது. இப்போது 2018-ல் எந்த அடையாளமுமின்றி மண்ணோடு மண்ணாகியுள்ளது.

ஏஞ்சல்ஸின் மகன் லூயிசின் பேரன் ஜெஃபர்ரிஸ் ஈவான்ஸ் டி ஏஞ்சலிஸ் தற்போது சிலியில் வசித்து வருகிறார். இந்த நிகழ்வைப் பற்றிக் கேட்கப்பட்தற்கு “நகரங்கள் தங்கள் வரலாற்றை மதிக்க வேண்டும். என் தாத்தாவின் ஹோட்டல் இடிக்கப்படுவது எனக்குப் பெருந்துயரை அளிக்கிறது” என்று சொல்லி மௌனத்தில் ஆழ்ந்தவர், தன் தாத்தா தமிழை நன்கு சரளமாகப் பேசுவார் என்று சொல்லி அவர் நினைவுகளில் மூழ்கியுள்ளார்.

http://tamil.thehindu.com/society/real-estate/article23391158.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தெருவாசகம்: அன்று அன்னச் சத்திரம் இன்று மருத்துவமனை

 

 
JKR10STANLEYHOSPITALVG

CHENNAI, 20/06/2008: Front view of Stanley Hospital, Rayapuram in Chennai. Photo: V. Ganesan 20/06/08   -  the hindu

செ

ன்னையின் பாரம்பரிய வரலாறு இன்னும் வடசென்னையில்தான் அணையாமல் உயிர்ப்போடு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. சென்னையின் ஆரம்பக்காலங்களிலேயே மக்கள் விரும்பிக் குடியேறிய பகுதி அதுதான். அந்தக் காலகட்டத்தில் சென்னையின் அடையாளமே வடசென்னைதான்.

       

இன்று தமிழ் திரைப்படம் வட சென்னை பகுதியை வெட்டும் குத்தும் வன்முறையும் மிகுந்த பகுதியாகத் தொடர்ந்து சித்திரிக்கிறது. ஆனால், அந்த வன்முறை இன்று நேற்று நிகழவில்லை. சொல்லப்போனால் இன்று திரையில் காட்டப்படுவதை விடக் கொடூரமான வன்முறைகள் அங்கு 18-ம் நூற்றாண்டிலேயே அரங்கேறியுள்ளது.

JKRSMC

CHENNAI, 05/04/2008: View of Stanley Medical College in Chennai on April 05, 2008. Photo: M. Vedhan   -  THE HINDU

 

மைசூர் நவாபாக இருந்த ஹைதர் அலிக்கும் வெள்ளையர்களுக்கும் இடையே ஓயாமல் போர் அங்குதான் நிகழ்ந்துள்ளது. அந்தப் போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு வெறும் ஆறுதலை மட்டும் அளிக்காமல், அந்த மக்களுக்கு வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றி அடைக்கலம் அளித்த சத்திரம் ஒன்று அங்கு இருந்தது.

அந்தச் சத்திரம் இன்றும் நம்மிடையே அந்த நினைவுகளைச் சுமந்து கொண்டு நிற்கிறது. மோனிகர் சத்திரம் என்று அன்று அழைக்கப்பட்ட அதன் அன்றைய பெயரைச் சொன்னால் பலருக்குத் தெரியாது. ஆனால், அதன் இன்றைய பெயரான ஸ்டான்லி மருத்துமனையைச் சொன்னால் அதைத் தெரியாதவர்களே இருக்க வாய்ப்பில்லை.

 

மோனிகர் சத்திரம்

18-ம் நூற்றாண்டில் நடந்த அந்தப் போரின் பாதிப்புகள் மிகவும் துயர் மிகுந்ததாக இருந்துள்ளது. அது ஏற்படுத்திய உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் சொல்லிலும் எண்ணிலும் அடங்காதது. 1782-ல் மணியக்காரர் என்று அழைக்கப்பட்ட அந்தக் கிராமத்தின் தலைவர் ராயபுரத்திலிருந்த தன்னுடைய தோட்டத்தில் போரில் காயமடைந்தவர்களுக்கு கஞ்சி வழங்குவதற்காக ஒரு சத்திரத்தை நிர்மாணித்துள்ளார். மணியக்காரர் என்பது ஆங்கிலேயர்களால் மோனிகர் என்று உச்சரிக்கப்பட்டதால் அது மோனிகர் சத்திரம் என்று அப்போது அழைக்கப்பட்டது.

விரைவில் அந்தச் சத்திரம் போரில் காயமடைந்தவர்கள் மட்டுமன்றி, நோயாளிகளும் ஏழைகளும் அனாதைகளும் தங்கும் உறைவிடம் ஆயிற்று. போர் நடந்த சமயத்தில் பிளாக் டவுன் என்று அழைக்கப்பட்ட அந்தப் பகுதியில் இருந்த கட்டிடங்கள் அனைத்தையும் கிழக்கிந்திய நிர்வாகம் இடித்துத் தள்ளியது.

JKRST

MADRAS MISCELLANY: FACADE OF THE STANLEY HOSPITAL, CHENNAI. PHOTO:S R RAGHUNATHAN.   -  THE HINDU

 

ஆனால், அந்தச் சமயத்தில் இந்தக் கட்டிடத்துக்கு மட்டும் அரசாங்கம் விதிவிலக்கு அளித்தது. 1799-ல் ஜான் அண்டர்வுட் எனும் மருத்துவர் அந்தச் சத்திரத்துக்குள் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். அது அப்போது கஞ்சித்தொட்டி மருத்துவமனை என்று மக்களால் அறியப்பட்டது.

1807-ல் வெள்ளையர்களும் ஆற்காடு நவாபும் அதற்கு பெரும் நன்கொடையைத் தாராளமாக அளித்ததால், அந்த மருத்துவமனை தன் சேவையை நன்கு விரிவுபடுத்தியது. 1808-ல் அந்தச் சத்திரத்தின் நிர்வாகத்தையும் மருத்துவமனையின் நிர்வாகத்தையும் சென்னை அரசு ஏற்று நடத்தத் தொடங்கியது. 1910-ல் அந்த மருத்துவமனை அரசுடைமையானதால், அதன் பெயர் ராயபுரம் மருத்துவமனை என்றானது.

 

மருத்துவப் படிப்புகள் தொடக்கம்

1933-ல் ஜார்ஜ் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லி என்பவர் சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தார். 1933-ல் அங்கு முதன் முதலாக ஐந்து வருட மருத்துவ படிப்பு (டிப்ளமா இன் மெடிக்கல் & சர்ஜரி) அவரால் தொடங்கிவைக்கப்பட்டது. அதன் பிறகு அந்த மருத்துவமனையின் பெயர் ஸ்டான்லி மருத்துவமனையாக 1936-ல் ஜூலை 2-ம் தேதி மாற்றப்பட்டது.

1938-ல் அங்கு 72 மாணவர்கள் மட்டுமே படித்தனர். அந்த எண்ணிக்கை 1963-ல் 150 ஆக உயர்ந்தது. இன்று ஆண்டுக்கு 250 மாணவர்கள் நீட் தேர்வின் அடிப்படையில் அங்கு மருத்துவம் படிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரியாக மட்டுமல்லாமல், தலைசிறந்த மருத்துவமனையாகவும் இன்று அது திகழ்கிறது.

Stanley
 

இன்று நம் நாட்டில் மருத்துவத் துறையில் மிகப் பெரிய ஆளுமைகளாகத் திகழ்பவர்களில் பெரும்பாலானோர் இங்குப் படித்துத் தேறியவர்கள்தான்.

அரவிந்த் கண் மருத்துவமனையைத் தோற்றுவித்த கோவிந்தப்பா வெங்கடசாமி, பிளாஸ்டிக் சர்ஜரியில் ஜொலிக்கும் ராமசாமி வெங்கடசாமி, மனநல மருத்துவர் மாத்ருபூதம், அப்போலோ மருத்துவமனையின் பிரதாப் சி ரெட்டி, பத்மபூஷன் விருது பெற்ற நடேசன் ரங்கபாஷ்யம் என்று நீளும் அங்குப் படித்தவர்களின் பட்டியலின் நீளம் மிக அதிகம்.

அங்கு இருந்த சத்திரம் 1910-ல் அருகில் இருந்த வெங்கடகிரி ராஜாவினுடைய சத்திரத்துக்கு இடம் மாற்றப்பட்டது. அது இன்றும் அங்கு ஏழைகளுக்கும் முதியோர்களுக்கும் உறைவிடமாகத் திகழ்கிறது. அந்தச் சத்திரத்தின் தலைமைப் பொறுப்பு இன்று மாவட்ட ஆட்சியாளரிடம் உள்ளது.

stanly

ஜார்ஜ் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லி

 

இந்தச் சத்திரத்தில் இருப்பவர்கள் இறந்தபின், அவர்களின் உடல் அவர்களின் உறவினர்வசம் ஒப்படைக்கப்படாது. அந்த உடல் ஸ்டான்லி மருத்துவமனையின் உடலமைப்பியல் துறைவசம் ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கப்படும் வழக்கம் இன்றும் தொடர்கிறது.

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதைப் போல அன்றைய ஆளுநருக்கு மரியாதை செலுத்தும்விதமாகவோ அவருக்குப் பயந்தோ அவர் மனதைக் குளிரச் செய்யவோ அந்த மருத்துவமனையின் பெயர் ஸ்டான்லி என்றானது. அந்தப் பெயர்தான் இன்றும் நம்மிடையே நிலைத்து நிற்கிறது.

அந்த இடத்துக்கும் சத்திரத்துக்கும் மருத்துவமனைக்கும் உரிமையாளரான மணியக்காரரின் பெயர் அந்த மருத்துவமனையின் பெயரிலிருந்து மட்டும் அகற்றப்படவில்லை. அது வரலாற்றிலிருந்தும் மக்கள் மனதிலிருந்தும் சேர்த்தே அகற்றப்பட்டுவிட்டது.

http://tamil.thehindu.com/society/real-estate/article23535556.ece

Link to comment
Share on other sites

தெருவாசகம்: ஏழு கிணறுகள்

JKRVALLALAR

CHENNAI, 21/08/2012: Vallalar Illam at Veerasamy Street, Seven Wells, in Chennai. Photo: K. Pichumani   -  The Hindu

JKRSEVENWELLSANDMADRAS1
JKRCORPORATIONWARD55ANDPORTUGUESESTREET
JKRVALLALAR

CHENNAI, 21/08/2012: Vallalar Illam at Veerasamy Street, Seven Wells, in Chennai. Photo: K. Pichumani   -  The Hindu

JKRSEVENWELLSANDMADRAS1
 

சென்னையில் கோடைக் காலம் எப்போதும் தனியாக வருவதில்லை. அது வருடா வருடம் தண்ணீர் பஞ்சத்தையும் அழைத்துவந்துவிடுகிறது. இந்தத் தண்ணீர் பஞ்சம் இன்று நேற்று நடக்கும் நிகழ்வு அல்ல, காலங்காலமாக இருந்துவருகிறது. சென்னைப் பட்டணமாக மாறத் தொடங்கியதுமே தண்ணீர்ப் பஞ்சமும் வந்திருக்கலாம்.

அதற்கு முன்புவரை மதராஸப்பட்டணமாக இருந்த சென்னையின் தண்ணீர்த் தேவையை இங்கு ஓடிய ஆறுகளும் நீர் சுரந்த ஊற்றுகளும் ஊரணிகளும்தாம் தீர்த்துவைத்தன. ஆனாலும் 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அது போதாமல் போனது. சென்னையின் தண்ணீர் தேவையைத் தீர்ப்பதற்காகக் கூடுதலாக ஏழு கிணறுகள் தண்ணீர் சேவை நிலையம் நிர்மாணிக்கப்பட்டது. அது இன்றைய தங்க சாலையும் பழைய ஜெயில் சாலையும் சந்திக்கும் இடத்தில் அமைக்கப்பட்டது.

1891-ல் சென்னையில் சுமார் ஐந்து லட்சம் பேர் வசித்தனர். அவர்களின் தண்ணீர் தேவையை இந்த ஏழு கிணறுகளும் மதராஸ் முனிசிபாலிட்டியின் கட்டுப்பாட்டில் இயங்கிய மதராஸ் வாட்டர் வொர்க்ஸும் தீர்த்துவைத்தன. அவற்றில் ஏழு கிணறுகள்தாம் மிகவும் பழமைவாய்ந்தவை. இந்தக் கிணறுகளை வெட்டியது ஃப்ரான்சிஸ் வைட் எல்லீசன் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு வருகிறது. அதற்குக் காரணம் பெரியபாளையத்தம்மன் கோயிலில் இருந்த எல்லீசனின் கல்வெட்டு.

அந்தக் கல்வெட்டில் 1818-ல் சென்னையில் நிலவிய பஞ்சத்தைத் தீர்ப்பதற்காக அவர் 27 கிணறுகளை வெட்டியதாகப் பொறிக்கப்படிருந்தது. ஆனால், அந்த 27 கிணறுகளில் இந்த ஏழு கிணறுகள் அடங்கவில்லை என்பதை ஜி. டபிள்யூ. மெக்ஜார்ஜ் என்பவர் எழுதியுள்ள ‘வேஸ் அண்ட் வொர்க்ஸ் இன் இந்தியா’ எனும் புத்தகத்திலிருந்து அறிய முடிகிறது. அந்தப் புத்தகத்தின்படி, இந்தக் கிணறுகள் 1772-ம் ஆண்டே பேகர் எனும் ஆங்கிலேயத் தளபதியால் நிர்மாணிக்கப்பட்டுவிட்டன.

அவர் அரசாங்கத்துடன் ஒப்பந்தமிட்டு அதன்படி சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுமார் 6,000 பேரின் தண்ணீர் தேவையை ஏழு வருடங்களுக்குத் தீர்த்துவைத்தார். 1782-ம் ஆண்டு இந்த ஏழு கிணறு தண்ணீர் சேவையை அரசாங்கம் 10,500 ரூபாய் விலைக்கு வாங்கிக்கொண்டது. ஆரம்பத்தில் கிழக்கிந்திய அரசு ஏழு கிணற்றிலிருந்து பெற்ற தண்ணீரைக் கோட்டைக்கு மட்டும்தான் பயன்படுத்தியது. பின்பு அதை அருகில் இருந்த ராணுவ மையங்களுக்கும் பிரசிடென்ஸி குடியிருப்புக் கட்டிடங்களுக்கும் பயன்படுத்த ஆரம்பித்தது.

இந்த ஏழு கிணறுகள் தண்ணீர் சேவை நிலையம் கடலிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் இருக்கிறது. அந்த நிலையத்திலிருந்து கோட்டை சுமார் 3 கி.மீ. தொலைவில் இருக்கிறது. ஏழு கிணறு நிலையத்திலிருந்து தண்ணீர் பெறும்பகுதிகளிலேயே தொலைவான பகுதி இந்தக் கோட்டைதான். இந்த நிலையத்தில், பதினாறு அடி விட்டத்தில் 23-லிருந்து 29 அடி ஆழத்தில் பத்துக் கிணறுகள் வெட்டப்பட்டன. ஆனால், அந்தப் பத்துக் கிணறுகளில் மூன்றில் தண்ணீர் ஊற்று குறைவாக இருந்ததால் அவை கைவிடப்பட்டன. அதனால் அதன் பெயரும் ஏழு கிணற்றுத் தண்ணீர் சேவை என்றானது.

இந்தக் கிணறுகளிலிருந்து தண்ணீரானது பிகோட்டா லிவர் மூலம் தொட்டிகளுக்கு மேலேற்றப்பட்டது. பின்பு அது நாற்பத்து எட்டு அடி நீளமும் முப்பது அடி அகலமும் ஆறு அடி உயரமும் கொண்ட பில்டர்களில் (வடிப்பான்கள்) சுத்திகரிக்கப்பட்டது. பின்பு அங்கிருந்து 2,000 கன அடி கொள்ளளவு கொண்ட இரண்டு பெரிய தொட்டிகளுக்குத் தண்ணீர் மேலேற்றப்பட்டது. பின்பு அந்தத் தொட்டிகளிலிருந்து 5 அங்குல விட்டம் கொண்ட இரும்புக் குழாய்கள் வழியாகப் புவி ஈர்ப்பு விசையின்மூலம் தேவைப்படும் இடங்களுக்குத் தண்ணீர் வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு அப்போது ஆன மொத்தச் செலவு சுமார் நாற்பத்து மூன்று ஆயிரம் ரூபாய் மட்டுமே.

1925-ம் வருடம்வரை இந்த ஏழு கிணறுகளின் பாதுகாப்பாளராக நிக்கோலஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் இருந்துள்ளார்கள். மரியாதையின் அடிப்படையில் அரசாங்கத்தால் அவர்கள் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டனர். ஆனால், அந்தக் கௌரவத்தைப் பயத்தின் அடிப்படையில் அவர்கள் துறந்துவிட்டனர். இந்த இரண்டுக்கும் ஒரு சுவாரசியமான பின்னணி உண்டு.

18-ம் நூற்றாண்டில் மைசூர் நவாப் ஹைதர் அலியும் அவரது மகன் திப்பு சுல்தானும் ஆங்கிலேயர்களைத் தென்னிந்தியாவில் மிகத் தீவிரமாக எதிர்த்துள்ளனர். சொல்லப்போனால் தங்கள் படை பலத்தாலும் போர் உத்திகளாலும் நவீன ஆயுதங்களாலும் அவர்கள் ஆங்கிலேயர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்துள்ளார் என்பதை வரலாற்றிலிருந்து அறிய முடிகிறது. கிழக்கிந்திய அரசாங்கத்தின் வளர்ச்சியை மட்டுப்படுத்தும் நோக்கில் அவர்களை மதராஸப்பட்டணத்திலிருந்து அகற்ற ஹைதர் அலி 1767-ம் ஆண்டும் 1769-ம் ஆண்டும் மிகப் பெரிய போர் தொடுத்துள்ளார். அந்தப் போர்கள் இன்றைக்கு ராயபுரம் என்று அழைக்கும் பகுதியில் நடந்துள்ளன.

1769-ல் நடந்த போரின்போது அப்பகுதியில் இருந்த குடிநீர்க் கிணறுகளில் விஷத்தைக் கலக்கும் ஹைதர் அலியின் முயற்சியை சில்வெஸ்டர் நிக்கோலஸ் எனும் படை வீரர் முறியடித்துள்ளார். நேர இருந்த பெரும் ஆபத்திலிருந்து ஆங்கிலேயர்களைக் காப்பாற்றிய அவருடைய துணிவைக் கௌரவிக்கும் விதமாக, அந்த நிகழ்வுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்னால் நிர்மாணிக்கப்பட்ட ஏழு கிணறுகள் தண்ணீர் நிலையத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அவர் குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டது.

சில்வெஸ்டர் நிக்கோலஸ் காலத்துக்குப் பின் அவருடைய மகன் ஜோஸப் நிக்கோலஸ் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்; அவருக்குப் பின் அவருடைய மகன் எட்மண்ட் அல்பன் நிக்கோலஸ் ஏற்றுக்கொண்டார். அவருடைய மறைவுக்குப் பிறகு அந்தப் பொறுப்பை அவருடைய சகோதரர் எவ்லின் ஏற்றுக்கொண்டார். அந்தக் கௌரவப் பொறுப்பு வகித்த எல்லா நிக்கோலஸ்களும் பதவியில் இருக்கும்போதே இறந்து போனதால், தலைமுறை தலைமுறையாகத் தன் குடும்பத்தின் வசம் இருந்த அந்தப் பணியை 1925-ம் ஆண்டு எவ்லின் நிக்கோலஸ் அரசாங்கத்திடம் ஒப்படைத்து முடித்துவைத்தார்.

அதன் வரலாற்றுச் சிறப்புக்குச் சான்றாக, அந்த ஏழு கிணறுகளில் ஒன்று மட்டும் இன்றும் தண்ணீரைக் கோட்டைக்கு அனுப்பித் தன்னை உயிர்ப்போடு வைத்துக்கொண்டுள்ளது. அன்று ஏழு கிணறுகள் தண்ணீர் நிலையம் இருந்த பகுதியில் இன்று பொதுப்பணித் துறையின் பணிமனையும் சேமிப்புக் கிடங்கும் உள்ளன. அதன் அருகில் இருக்கும் வீராசாமி தெருவில் ராமலிங்க அடிகளாரின் நினைவு இல்லம் உள்ளது. அதில் ராமலிங்க அடிகளார் தங்கி இருந்துள்ளார்.

இந்த ஏழு கிணறுகளைச் சுற்றியுள்ள, அடர்த்தியான வீடுகளால் நிறைந்திருக்கும் பல தெருக்களை உள்ளடக்கிய குடியிருப்புப் பகுதி இன்றும் ‘செவென் வெல்ஸ்’ என்ற பெயரில்தான் அழைக்கப்படுகிறது. ஆனால், அந்தப் பெயரின் காரணத்தை அறிந்தவர்களே இன்று இல்லை என்று சொல்லும்வண்ணம், அவர்கள்அரிதினும் அரிதாக உள்ளனர். அன்று சென்னையின் தாகத்தைத் தணித்த பகுதி, இன்று கேட்பாரற்று எந்தப் பராமரிப்புமின்றி புறக்கணிக்கப் பட்டுக் காலத்தின் கொடிய மறதிக்குச் சான்றாக உள்ளது.

http://tamil.thehindu.com/society/real-estate/article23615940.ece

Link to comment
Share on other sites

தெருவாசகம்: அரண்மனைக்காரன் தெரு

 

 
JKRARMENIANCHURCH

அர்மெனியத் தேவாலயப் புறத் தோற்றம்   -  THE HINDU

 

எல்லாத் தெருக்களுக்கும் ஒரு வரலாறு இருக்கும். அந்த வரலாற்றில் பல தலைமுறையினரின் வாழ்வு அடங்கியிருக்கும். சென்னையிலிருக்கும் அரண்மனைக்காரன் தெரு என அழைக்கப்படும் ஆர்மேனியன் தெருவும் இதற்கு விதிவிலக்கல்ல.

     

அந்தத் தெரு வட சென்னையில் மண்ணடியையும் சைனா பஜாரையும் இணைக்கிறது. அன்றும் இன்றும் அது வணிக மையமாகவே திகழ்கிறது. அன்று என்பதில், 365 வருடங்களும் சுமார் 20 தலைமுறையும் அடங்கியுள்ளன. அதன் தொன்மைக்கும் பெருமைக்கும் சான்றாகப் பல வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள் இன்றும் அங்கு உள்ளன.

JKRARMENIANSTREET

அரண்மனைக்காரத் தெருவின் ஒரு பகுதி   -  THE HINDU

 

சென்னையிலிருந்து சுமார் 4,500 கி.மீ.க்கு அப்பால் ஆர்மேனியா நாடு உள்ளது. 1650-ம் ஆண்டில் அங்கிருந்து வந்தவர்கள் இங்கே குடியமர்ந்த காரணத்தால், இந்தத் தெரு இன்றும் ஆர்மேனியன் தெரு என்று அழைக்கப்படுகிறது.

ஆர்மேனியர்கள் இந்தியாவுக்கு எட்டாம் நூற்றாண்டின் இறுதியிலேயே வந்துவிட்டனர். 780-ம் ஆண்டு கேரளாவின் மலபார் கடற்கரையில் தாமஸ் கானாதான் இந்தியாவில் கால் பதித்த முதல் ஆர்மேனியத். ஆனால், அங்கிருந்து சென்னைக்குள் நுழைவதற்கு ஆர்மேனியர்களுக்கு சுமார் எட்டு நூற்றாண்டுக் காலம் பிடித்தது. ஒருவேளை கூகுள் மேப் போன்று ஏதேனும் ஒன்று அன்று இருந்திருந்தால், அவர்களின் நுழைவு ஒரு வருடத்துக்குள் நிகழ்ந்திருக்கும்.

சென்னையில் ஆர்மேனியர்கள் 1600-களில் இருந்ததாக வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. சென்னை பரங்கிமலைக்கு அருகில் 1663-ம் ஆண்டு அடக்கம் செய்யப்பட்ட கோஜா டேவிட் மார்கர் என்பவரின் கல்லறை அதற்குச் சான்று. ஹுர்பெர்டா வோன் வோஸ் என்பவரின் புத்தகத்தின்படி, ஆர்மேனியர்கள்தாம் போர்த்துகீசியர்களை இங்கு அழைத்து வந்துள்ளனர். பரங்கிமலைக்கு மேலிருக்கும் தேவாலயம்தான் ஆர்மேனியக் கப்பல்களுக்கும் போர்த்துகீசிய கப்பல்களுக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்துள்ளது.

இன்று சென்னை உயர் நீதிமன்றம் இருக்கும் இடத்தில்தான் அவர்கள் முதல் தேவாலயத்தைக் கட்டியுள்ளனர். கிழக்கிந்திய கம்பெனியிடம் முறையாக அனுமதி பெற்று, முழுவதும் மரத்தாலேயே அதைக் கட்டியுள்ளனர். அந்தத் தேவாலயப் பராமரிப்புக்காக அங்கு வசித்த ஆர்மேனியர்களுக்கு 50 பவுண்டுகளைக் கிழக்கிந்திய கம்பெனி வழங்கியுள்ளது. அது பிற பகுதிகளில் வசித்த ஆர்மேனியர்களையும் அங்கு வசிக்கத் தூண்டியுள்ளது.

JKRARMENIANCHURCH6

ஆர்மனியத் தேவாலயம் உட்புறம்   -  THE HINDU

 

ஆர்மேனியன் தெருவில் இன்று இருக்கும் ஆர்மேனிய தேவாலயம் 1712-ம் ஆண்டு கட்டப்பட்டது. பிரெஞ்சு முற்றுகையின்போது சிதிலமடைந்த அந்த ஆலயம் 1772-ம் ஆண்டு மீண்டும் கட்டப்பட்டுள்ளது. சென்னையில் மிகவும் புகழ்பெற்ற ஆர்மேனியராக கோஜா பெட்ரஸ் உஸ்கானைச் சொல்லலாம். 1723-ம் ஆண்டு மணிலாவிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்த அவர் ஒரு வணிகர். சிறந்த வள்ளலாகவும் விளங்கினார். இன்று சென்னையில் இருக்கும் பல ஆர்மேனியக் கட்டிடங்களையும் மத வழிபாட்டுத் தலங்களையும் கட்டியதோடு மட்டுமல்லாமல், அதைத் தானமாகவும் அவர் கொடுத்துள்ளார். இந்தத் தெருவில்தான் புகழ்பெற்ற கோகுலே ஹால் உள்ளது.

சென்னையில் வசித்த கடைசி ஆர்மேனியரின் பெயர் மைக்கேல் ஸ்டீபன். அவரும் சென்னையை விட்டுச் சென்று பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. அன்று சென்னையில் கொடிகட்டிப் பறந்த ஆர்மேனியர்களின் நினைவாக இன்று அவர்களின் பெயரிலிருக்கும் இந்தத் தெருவும் கட்டிடங்களும்தாம் உள்ளன.

JKRGOKHALEHALL5

கோகுலே ஹால்   -  THE HINDU

 

இன்று காலம் மாறிவிட்டது. நகரமும் மாறி விட்டது. அன்று வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த அந்தத் தெரு இன்று தெருவோரக் கடைகளால் நிரம்பி வழிகிறது. பாதையை அடைத்தபடி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கடைகளுக்கும் வாகனங்களுக்கும் இடையே புகுந்து கார்களும் ஆட்டோக்களும் காதைக் கிழிக்கும் ஒலி எழுப்பிச் செல்கின்றன. இன்றும் அபூர்வமாக இந்தத் தெருவினுள் ரிக்‌ஷாக்கள் மனிதர்களைச் சுமந்து செல்கின்றன.

பாதையற்ற இந்தத் தெருவில் மனிதர்கள் நசுங்கியபடியே பரபரப்பாக நுழைந்து செல்கின்றனர். இந்தத் தெருவில் ஆர்மேனியர்கள் வடிவமைத்திருக்கும் தொன்மையான நுழைவு வாயில் மக்களின் பார்வையில் படாதவாறு துரித உணவகம் ஒன்று மறைத்து நிற்கிறது. அந்த வாயிலின் பெருமை அந்த உணவகத்துக்கோ அதைக் கடந்துசெல்லும் மனிதர்களுக்கோ தெரியாது.

http://tamil.thehindu.com/society/real-estate/article23707116.ece

Link to comment
Share on other sites

தெருவாசகம்: ஓ! பணக்காரத் தெரு

 

 
JKRATHARJAMATH
 

கோயம்புத்தூர் என்றவுடன் முதலில் நம் நினைவுக்கு வருவது ‘ஏனுங்கோ’ என்று மரியாதையுடன் அழைக்கும் அந்த மக்களின் சிரித்த முகம்தான். நொய்யல் ஆற்றங்கரையில் மேற்குத் தொடர்ச்சி மலை சூழ வீற்றிருக்கும் கோயம்புத்தூர் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று. சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகையைக் கொண்டது இந்நகரம்.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் அளவுக்கு பருத்தித் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் நகரம். அது மட்டுமல்லாது இயந்திரங்கள் உற்பத்திசெய்வதிலும் கோவை சிறந்து விளங்குகிறது. அந்நகர மக்களால் தயாரிக்க முடியாத பொருள் எதுவுமில்லை என்று பெருமையாகச் சொல்லப்படுவதும் உண்டு.

உற்பத்தியில் மட்டுமல்லாமல், வணிக வளத்திலும் செல்வச் செழிப்பிலும் அந்நகரம் சிறந்து விளங்கி உள்ளது. இன்றும் சிறந்து விளங்குகிறது. அதற்கு அந்நகரில் இருக்கும் ஒப்பனக்காரத் தெரு சான்று.

ஒப்பனக்காரத் தெரு, கோயம்புத்தூரிலிருக்கும் மிகப் பழமையான தெருக்களில் ஒன்று. அதுபோல கோவையில் அதிக அளவில் வியாபாரம் நடக்கும் தெருவும் இதுதான். அதனால் இந்தத் தெருவைப் பணக்காரத் தெரு எனச் சொல்லலாம். மிகப் பெரிய வர்த்தகத் தெரு இந்தத் தெருவைப் பற்றிய செய்திகள் 14-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த விஜய நகர அரசர்களின் ஆட்சியின்போதும் 15-ம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர் ஆட்சியின்போதும் எழுதப்பட்ட வரலாற்றுக் குறிப்புகளில் இடம்பெற்றுள்ளன என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

கோயம்புத்தூரில் மட்டுமல்லாமல், இந்திய அளவிலும் மிகப் பரபரப்பான வணிகத் தெருவாக உள்ளது ஒப்பனக்காரத் தெரு. அங்கே பல வணிக நிறுவனங்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க பழமையான கட்டிடங்களும் இருக்கின்றன. கோயம்புத்தூரில் முதன்முதலாக மின் இணைப்பு வசதி பெற்ற தெரு என்ற பெருமையும் அதற்கு உண்டு.

ஒப்பனக்காரத் தெரு கோயம்புத்தூர் நகராட்சிக் கட்டிடத்துக்கும் டவுன் ஹாலுக்கும் அருகில் உள்ளது. இந்தத் தெருவின் ஒருபுறம் தெற்கு ஒக்கடமும் மறுபுறம் மில் ரோடும் உள்ளன. ஊக்கு விற்கும் சிறு தெருவோரக் கடைகள்முதல் தங்க ஆபரணங்கள் விற்பனை செய்யும் பெரும் நகைக் கடைகள்வரை பல கடைகள் அந்தத் தெருவில் உள்ளன. இந்தியாவில் ஜவுளித்தொழிலின் மையமாக கோயம்புத்தூர் திகழ்வதால், இந்தத் தெருவின் பெரும் பகுதியை ஜவுளிக்கடைகள்தாம் ஆக்கிரமித்து உள்ளன.

தமிழகத்தின் முக்கியமான ஜவுளிக்கடைகள் எல்லாம் அங்கே கிளை விரித்துள்ளன. பண்டிகைக் காலத்தில் இந்தத் தெரு மக்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும். அப்போது அந்தத் தெருவின் நடைபாதைகளில் எல்லாம் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் இந்தத் தெருவில் நுழைந்து வெளிவருவது பெரும் சவால்தான்.

JKROPPANAA
 

அந்தத் தெருவில் உள்ள பாரம்பரிய சிறப்புமிக்க அத்தர் ஜமாத் மசூதி 1860-ல் கட்டப்பட்டது. அது திருநெல்வேலி பேட்டையிலிருந்து அங்கே குடியேறிய 52 வாசனைத் திரவ வியாபாரிகளின் குடும்பங்களால் கட்டப்பட்டது. அதனால்தான் அந்த மசூதி அத்தர் மசூதி என்றழைக்கப்படுகிறது. அத்தர் என்றால் தமிழில் வாசனைத் திரவியம் என்று அர்த்தம்.

இந்த மசூதிக்கு இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு வந்துள்ளார். அவர் தவிர, ரஷ்யாவின் பிரதமர் குருஷ்ஷெவ் உட்படப் பல உலகத் தலைவர்கள் அங்கு வருகை புரிந்துள்ளனர். குருஷ்ஷெவ் 1953-ம் ஆண்டு ரஷ்யாவின் பிரதமர் ஆவதற்கு முன்பாக இந்த மசூதிக்கு வந்துள்ளார்.

ரம்ஜான் புனித நோன்பின்போது அந்த மசூதியில் வழங்கப்படும் நோன்புக் கஞ்சி மிகவும் பிரசித்தி பெற்றது. கோயம்புத்தூரின் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாக அந்த மசூதியைக் குறிப்பிடலாம். இன்றும் தங்கள் மத நம்பிக்கையை மீறி பல்வேறு சமயத்தினரும் அங்கே கூடுகின்றனர். அங்கு விற்கப்படும் மோதிரங்களையும் தாயத்துகளையும் வாங்கிச் செல்வது அங்கு வருவோரின் வாடிக்கையாக உள்ளது.

இந்தத் தெரு ஏன் ஒப்பனக்காரத் தெரு என்று அழைக்கப்படுகிறது என்பதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. வணிகத்தில் செழித்து விளங்கும் செல்வந்தர்கள் இந்தத் தெருவில் அதிகம் இருப்பதால், ‘ஓ பணக்காரத் தெரு’ என்பதே மருவி ஒப்பனக்காரத் தெரு என்று அழைக்கப்படுவதாகச் சிலர் நகைச்சுவையாகச் சொல்வதும் உண்டு. ஒப்பனைக்காரர்கள் அந்தத் தெருவில் வசித்து வந்ததால் அது ஒப்பனக்கார தெரு என்று அழைக்கப்பட்டது என்றும் சிலர் சொல்கின்றனர்.

ஆனால், மக்களிடம் வரி வசூலித்த பலிஜா நாயுடு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு வசித்துள்ளனர். அதனால்தான் அது ஒப்பனக்காரத் தெரு என்று அழைக்கப்படுகிறது என்பதுதான் பரவலான நம்பிக்கையாக உள்ளது. ஒப்பனக்காரர்கள் என்றால் தமிழில் வரி வசூலிப்பவர்கள் என்று அர்த்தம். தெலுங்கில் அது ஒப்பனவாரு என்று அழைக்கப்படுகிறது.

காரணம் எதுவாக இருந்தால் என்ன? கோயம்புத்தூரின் தொன்மையான வரலாற்றையும் பழமையின் சிறப்பையும் வணிக வளத்தின் செழிப்பையும் இந்தத் தெரு இன்றும் தாங்கிப் பிடித்துக்கொண்டு நிற்கிறது.

http://tamil.thehindu.com/society/real-estate/article23774759.ece

Link to comment
Share on other sites

தெருவாசகம்: பத்து தலைமுறைகளின் பாலம்

 

 
12JKRSTREETWORD

சுலோச்சன முதலியார் பாலம்   -  TAMIL

 

திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் தமிழகத்தின் இரட்டை நகரங்கள். வற்றாத ஜீவநதியான தாமிரபரணி இந்த இரட்டை ஊர்களுக்கிடையில் பாய்ந்தோடுகிறது. பாளையங்கோட்டை தாமிரபரணியின் தென் பகுதியில் ஆற்றிலிருந்து 1.5கிமீ தொலைவில் இருந்தது. திருநெல்வேலி ஆற்றின் வட பகுதியில் 3 கி.மி தொலைவில் இருந்தது.

 

அன்று பிரிந்திருந்த அந்த ஊர்கள் இன்று கிட்டத்தட்ட ஒன்றாகிவிட்டன. நகரம் வளர்ச்சி கண்டுவிட்டதால் இன்று ஆற்றின் கரையிலிருந்தே ஊர் ஆரம்பித்துவிடுகிறது. அந்த ஊர்களை இணைத்தபடி ஆற்றின் மீது கம்பீரமாக வீற்றிருக்கும் பாலத்தில் வாகனங்கள் சீறிக்கொண்டு செல்கின்றன.

அந்தப் பாலத்தை வண்ணாரப்பேட்டை பாலம் என்று உள்ளூர்வாசிகள் அழைக்கிறார்கள். ஆனால், அதன் உண்மையான பெயர், சுலோச்சன முதலியார் பாலம் என்பதே. பாலத்தின் முன்னொட்டாக இருக்கும் அந்த சுலோச்சன முதலியாரின் பூர்வீகம் செங்கல்பட்டு.

திராவிட மொழியியல் அறிஞரான ராபர்ட் கால்டுவெல்டு எழுதிய ‘History of Tinnevelly’ புத்தகத்தின்படி (இது திருநெல்வேலிச் சரித்திரம் என்னும் பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது), 1884-ம் ஆண்டு இந்தப் பாலம் திறக்கப்பட்டு உள்ளது. அதன்படி 174 வயதாகும் இந்தப் பாலம் சுமார் 10 தலைமுறையினரின் வாழ்வுக்குச் சான்று.

1800-களிலும் அந்தப் பகுதியின் வர்த்தக மையமாக நெல்லையே இருந்துள்ளது. பாளையங்கோட்டையிலிருந்து தங்களுக்குத் தேவையானதை அங்கே சென்றுதான் மக்கள் வாங்கி உள்ளனர். ஆனால், 1844-க்கு முன்பு வரை பாலம்தான் இல்லையே. அப்போது வசதியானவர்கள் படகிலும் ஏழ்மையானவர்கள் நீந்தியும் தாமிரபரணியைக் கடந்து நெல்லைக்குச் சென்று உள்ளனர். ஆனால், வெள்ளம் கரை புரண்டோடும் காலத்தில் நீந்திக் கடப்பது மட்டுமல்ல, படகில் கடப்பதும் மிகவும் கடினம். உயிரிழப்புகளும் இதனால் ஏற்பட்டுள்ளன.

இப்பிரச்சினைக்குத் தீர்வு காண தாமிரபரணியின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்துக்கு, அன்றைய நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த ஆர். ஈடன் 1836-ம் ஆண்டு கடிதம் எழுதினார். ஆனால், அதைக் கிழக்கிந்திய கம்பெனி அரசு பொருட்படுத்தவில்லை. ஆர். ஈடனுக்குப் பிறகு, 1840 மார்ச் 5 அன்று நெல்லை ஜில்லா கலெக்டராக ஈ.பி.தாம்சன் பொறுப்பேற்றார்.

அவர் பதவியேற்ற சில நாட்களில் அங்குள்ள படகுத் துறையில் பெரிய கலவரம் வெடித்தது. அதில் சிலர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவம் தாம்சனின் நிர்வாகத் திறனைக் கேள்விக்கு உள்ளாக்கியது. போதுமான போக்குவரத்து வசதி இருந்திருந்தால் இந்த உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம் என தாம்சன் நினைத்தார்.

12JKRSTREETWORD%202

அதிகாரிகளுடன் பாலம் அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் சுலோச்சன முதலியாரும் கலந்துகொண்டார். சுலோச்சன முதலியார் அப்போது தாம்சனின் கீழ் சிரஸ்தாராகப் பணியாற்றினார். சிரஸ்தார் பதவி இன்றைய தாசில்தார் பதவிக்கு இணையானது. சுலோச்சன முதலியார் பணத்துக்காக அல்லாமல், கவுரவத்துக்காகவே வேலைக்குச் செல்லும் அளவுக்கு அவரது குடும்பம் செல்வச் செழிப்பு மிகுந்திருந்தது.

அவரின் சொந்த ஊர் சென்னை பூந்தமல்லிக்கு அருகில் இருக்கும் திருமணம். ஆங்கிலேயர்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களாகத் அவரது குடும்பத்தினர் பணியாற்றி உள்ளனர். அவருடைய தந்தை ராமலிங்க முதலியார், கட்டபொம்மனின் வழக்கை விசாரித்த பானர்மேனுக்கு மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியவர். தாம்சன் தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில், நெல்லையையும் பாளையங்கோட்டையையும் இணைக்கும் வகையில் தாமிரபரணியின் மேல் பாலம் கட்ட வேண்டும் என முடிவுசெய்யப்பட்டது. கேப்டன் ஃபேபரரிடம் அதைக் கட்டும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

லண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தை ஒத்த வடிவமைப்பில் ஃபேபர் பாலத்தின் வரைபடத்தைத் தயாரித்தார். அந்தப் பாலம் அமைப்பதற்கு 50 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று மதிப்பீடு செய்து அரசிடம் தெரிவித்தார். 50 ஆயிரம் ரூபாய் என்பது இன்றைய மதிப்பில் சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கானது. பாலத்தின் வடிவமைப்பு பிடித்திருந்தும், அந்தப் பாலத்தால் அரசுக்கு எவ்விதப் பயனும் இல்லை என்பதால் கிழக்கிந்திய கம்பெனி அரசு அவ்வளவு பெரிய தொகையைச் செலவு செய்யத் தயங்கியது. அந்தப் பாலத்தால் மக்களுக்குத்தான் பலன் என்பதால், மக்களிடமே பணம் வசூலித்துக் கட்டலாம் என்று ஆட்சியர் தாம்சன் முடிவுசெய்தார். பணம் வசூலிக்கும் பொறுப்பு சுலோச்சன முதலியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வறுமையில் உழலும் மக்களை மேலும் வறுமையில் தள்ளும் அந்த முடிவுக்கு உடன்படாத சுலோச்சன முதலியார் தானே முழுப் பணத்தையும் செலவு செய்யலாமே என்று யோசித்தார். மனைவி வடிவாம்பாளிடம் கலந்து பேசினார். அவரும் சற்றும் யோசிக்காமல் தன்னிடமிருந்த நகைகளை எல்லாம் கழற்றிக் கொடுத்தார். இதனால் உத்வேகம் அடைந்த முதலியார், தன்னிடமிருந்த சொத்துகளை எல்லாம் விற்று அரசிடம் பாலத்தைக் கட்டும்படி சொன்னார்.

JKRSULOCHANA

பரபரப்பான சுலோச்சன முதலியார் பாலம்   -  THE HINDU

 

760 அடி நீளம், 21.5 அடி அகலம், 60 அடி விட்டத்தில் 11 ஆர்ச்சுகள், அவற்றைத் தாங்க இரட்டைத் தூண்களுடன் அந்தப் பாலம் நான்கு வருடங்களுக்குள் கட்டி முடிக்கப்பட்டது. அந்தப் பிரம்மாண்ட தூண்கள் ரோமானிய அரண்மனையை நினைவூட்டும்படி இருந்தன. இன்றும் இருக்கின்றன. அந்தப் பாலத்தின் திறப்பு விழாவில், தனிநபராக அதற்கு உதவிய சுலோச்சன முதலியாரை ஆங்கிலேய அரசு சிறப்பாகக் கவுரவித்தது. அந்தப் பாலத்தின் மீது நடந்த முதல் மனிதர் என்ற பெருமை சுலோச்சன முதலியாருக்கு வழங்கப்பட்டது.

மேலும் அவரைப் பாராட்டும் வகையில் பாலத்தின் முகப்பில் 20 அடி உயரக் கோபுரம் அமைக்கப்பட்டது. சுலோச்சன முதலியாரின் உதவியை விவரித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட ஒரு மீட்டர் அகலம் கொண்ட கல்வெட்டு அதில் பதிக்கப்பட்டது. அந்தக் கல்வெட்டு 1970 வரை இருந்து உள்ளதாகத் தெரிகிறது.

அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலத்தின் மேற்பகுதி மிகுந்த சேதம் அடைந்தது. அதைச் செப்பனிடும்போது போக்குவரத்து நெரிசலைக் கருத்தில்கொண்டு பாலமும் விரிவுபடுத்தப்பட்டது. அந்த விரிவாக்கத்தின்போது பெயர்த்து எறியப்பட்ட அந்தக் கோபுரத்தையும் கல்வெட்டையும் தாமிரபரணி வாங்கிக்கொண்டது. அந்த நினைவுகளின் மேல்தான் தாமிரபரணி ஓடிக்கொண்டிருக்கிறது.

http://tamil.thehindu.com/society/real-estate/article23857336.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தெருவாசகம்: தமிழ் எழுத்தாளரின் பெயரில் ஒரு வீதி

 

 
pu
 

திருநெல்வேலியில் தாமிரபரணியின் ஆற்றங்கரையில் இருக்கும் வண்ணாரப்பேட்டையில் புதுமைப்பித்தன் வீதி உள்ளது. ஆனால், 2016 வரை அந்த தெரு ‘சாலை தெரு’ என்றுதான் அழைக்கப்பட்டது. ஏன் அந்தத் தெரு புதுமைப்பித்தன் தெரு என்று இன்று அழைக்கப்படுகிறது? அந்தத் தெருவுக்கும் புதுமைப்பித்தனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கும் என்று சற்று ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்கள் வியப்பையும் மலைப்பையும் ஒருங்கே ஏற்படுத்தின.

 
pudumai

தமிழின் முன்னோடி எழுத்தாளரான சொக்கலிங்கம் விருதாச்சலம் என்ற புதுமைப்பித்தன் அந்தத் தெருவில் 13 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். பல ஆண்டுகளாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சாலை தெருவுக்கு, புதுமைப்பித்தன் பெயரைவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துவந்துள்ளனர். அதன் பலனாக 2016 செப்டம்பர் 15-ல் அந்தத் தெருவுக்கு ‘புதுமைப்பித்தன் வீதி’ என்று நெல்லை மாநகராட்சி பெயர்மாற்றம் செய்தது.

1906-ல் கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் புதுமைப்பித்தன் பிறந்தார். அவரது அப்பாவின் சொந்த ஊர் திருநெல்வேலி. நெல்லைக்கு புதுமைப்பித்தன் வந்தபோது அவருக்கு வயது 12. வண்ணாரப்பேட்டையில் இருந்த கம்பராமாயணத் தெருவில் அவர் 13 ஆண்டுகள் வாழ்ந்தார். படிப்பில் ஒருபோதும் அவருக்கு நாட்டம் இருந்தது இல்லை. இருப்பினும், பாளையங்கோட்டையில் இருந்த தூய யோவான் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். அதன் பின், மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் மேற்படிப்பு படித்தார்.

பாடப் புத்தகங்களைப் படிக்கிறாரோ இல்லையோ, கதைப் புத்தகங்களை மாய்ந்து மாய்ந்து படித்தாராம். அதிலும் குறிப்பாக ஆங்கிலத் துப்பறியும் நாவல்களைப் படிப்பதில் அவருக்கு அலாதியான ஆவல். அந்தக் காலக்கட்டத்தில் அவர் எழுதவும் முயற்சி செய்திருக்கிறார். வண்ணாரப்பேட்டை புதுமைப்பித்தனின் பேட்டையாகவே இருந்துள்ளது.

அவரது நண்பர்களான முத்துசிவன், தீத்தாரப்பன், சதானந்தன், குகன்பிள்ளை, மகாராஜன் ஆகியோர் அங்கு ஒரு அறையில் வாடகைக்குத் தங்கியுள்ளனர். அப்போது எல்லாம் புதுமைப்பித்தனின் இருப்பு அங்குதான் என எழுத்தாளர் நாறும்பூநாதன் தனது கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.

தாமிரபரணி ஆற்றங்கரையின் மணல் வெளிகளில் தன் நண்பர்களோடு நீண்ட இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபடுவதும் தனிமையில் லயிப்பதும் அவருடைய அன்றாட வாடிக்கையாக இருந்துள்ளது. இளம் வயதில் அந்த வயதுக்கு உண்டான அத்தனை குறும்புகளையும் புதுமைப்பித்தன் புதுமையாக நிகழ்த்தியுள்ளார்.

pdhumaipithan

தென்னந்தோப்பில் இளநீர்க் குலைகளைத் திருட்டுத்தனமாகக் கயிறு கட்டி இறக்குவது, திருடிய இளநீரை ஆற்றங்கரையில் நண்பர்களோடு பகிர்ந்து பருகுவது, மாந்தோப்புக்கு அருகிலிருக்கும் சுடுகாட்டுக்குள் சென்று அமர்ந்து வேடிக்கை பார்ப்பது, அங்கு நண்பர்களுடன் விளையாடுவது என இளமையை அணுஅணுவாக ரசித்து ருசித்து அனுபவித்துள்ளார்.

25 வயது வரைதான் புதுமைப்பித்தன் நெல்லையில் வசித்துள்ளார். அதன் பிறகு அவர் எஞ்சிய வாழ்நாளை சென்னையில் கழித்தபோதிலும், அவரது ஆழ் மனதில் இலக்கியத்துக்கான விதை திருநெல்வேலியில்தான் விதைக்கப்பட்டது. திருமணத்துக்குப் பிறகு அப்பாவுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அவர் ராஜ்ஜியம் நடத்திய வண்ணாரப்பேட்டை சாலை தெருவை விட்டு வெளியேறி, தன் மனைவியுடன் பாளையங்கோட்டை முருகன்குறிச்சிக்குச் சென்று சித்தப்பா வீட்டில் தங்கியுள்ளார்.

பின்பு அங்கிருந்து சென்னை வந்த புதுமைப்பித்தன் ‘மணிக்கொடி’ இதழில் முதலில் பணியாற்றியுள்ளார். அதன் பிறகு ‘ஊழியன்’ இதழில் பணியாற்றிய அவர் அங்கிருந்து விலகி ‘தினமணி’ நாளிதழிலில் உதவி ஆசிரியராகச் சேர்ந்துள்ளார். தினமணியில் அவர் 1936 முதல் 1943 வரை பணியாற்றியுள்ளார்.

‘தினமணி’யில் அவர் வேலையைச் சிரத்தையுடன் பார்த்துள்ளார். புத்தக மதிப்புரை எழுதுவதும் விமர்சனங்கள் எழுதுவதும் அங்கு அவரின் முக்கியப் பணிகள். அவரது விமர்சனங்கள் நேர்மையாகவும் கறாராகவும் இருக்கும். பாரதி மகாகவியா தேசிய கவியா என்ற விவாதம் அப்போது மிகத் தீவிரமாக நடந்துள்ளது. தேசியக்கவி என்பதன் பக்கம் கல்கி நின்றார். மகாகவி என்பதன் பக்கம் புதுமைப்பித்தன் நின்றார். அப்போது ரசமட்டம் என்ற புனைபெயரில் மகாகவிக்கு ஆதரவாக புதுமைப்பித்தன் எழுதியது அக்கால வாசகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றது.

26CHMMHTVPP
 

புதுமைப்பித்தன் சினிமாத் துறையிலும் தனது ஆழமான முத்திரையைப் பதித்துள்ளார். ‘அவ்வையார்’ படத்தின் திரைக்கதை, வசனம் புதுமைப்பித்தன்தான் எழுதியுள்ளார். ‘அவ்வையார்’ திரைப்படத்துக்குப் பின் ‘காமவல்லி’, ‘ராஜமுக்தி’ முதலிய திரைப்படங்களிலும் அவர் பணிபுரிந்துள்ளார். ராஜமுக்தி காலத்தில் தான் அவருக்கு காச நோய் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு காசநோய் முற்றியதால், 1948-ல் மனைவியை நாடி திருவனந்தபுரத்துக்குச் சென்றார்.

எப்படி ‘மகாமசானம்’ எனும் சிறுகதையில் ஒரு பிச்சைக்காரன் சாவதை பற்றி எழுதி இருப்பாரோ, அதைபோல புதுமைப்பித்தனும் அங்குக் கொஞ்சம் கொஞ்சமாக வறுமையில் சாகத் தொடங்கினார். நோயின் தீவிரம் குறைந்தபாடில்லை. அது நாளுக்கு நாள் தன் மரணப் பிடியை அவரின் மீது இறுக்கியது. இறுதியாக 1948 ஜூன் 30-ல் அவரது 42-ம் வயதில் புதுமைப்பித்தனை காசநோய் முழுவதுமாக விழுங்கிக்கொண்டது.

 

http://tamil.thehindu.com/society/real-estate/article23997399.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தெருவாசகம்: கோவையின் ரங்கநாதன் தெரு

 

 

 
JKRDIWALISHOPPING

பொருளாதாரம் மிகுந்திருந்தால் இன்று எந்த நகரத்தாலும் சடுதியில் நவீனமயமாகிவிட முடியும். கோவை அப்படியான நகரம். அந்த நகரத்தின் நவீனம் முன்னேறிய நாடுகளின் நகரங்களுக்கு இணையாகக் கோவையை மாற்றியிருக்கிறது. உலகின் பெரு நகரங்களில் நிறைந்திருக்கும் நவீன அங்காடிகளும் விற்பனைக் கூடங்களும் (மால்கள்) திரையரங்குகளும் இன்று கோவையிலும் உள்ளன. சொல்லப்போனால், மற்ற நகரங்களில் இல்லாத வசதிகளும் இன்று கோவையில் உள்ளன. ஆனால் கோவையின் சிறப்பு இந்த நவீனமய வளர்ச்சியில் இல்லை, அது நவீனமயத்தின் அசுர வளர்ச்சியை மீறித் தன்னுடைய பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அதன் பாங்கில் உள்ளது. கோவையின் அந்தச் சிறப்புக்கு வலு சேர்க்கும் தெருக்களுள் ஒன்றே உப்புக் கிணறு தெரு.

 
JKRUPPUKINARULANE
 

உப்புக்கிணறு தெருவை கோவையின் ரங்கநாதன் தெரு எனலாம். சென்னை தி.நகரில் இருக்கும் ரங்கநாதன் தெருவைப் போன்று இதுவும் வணிகத்துக்குப் பெயர்போனது. இந்தத் தெரு டவுன் ஹாலை ஒட்டி இருக்கும் சந்தைப் பகுதியில் உள்ளது. இது ராஜா தெருவுக்குச் செங்குத்தாகவும் ஒப்பணக்காரத் தெருவுக்கு இணையாகவும் உள்ளது. தள்ளுபடி கால விற்பனை என்ற ஒன்று இந்தத் தெருவுக்குத் தனியே கிடையாது. இங்கு விற்கப்படும் பொருட்களின் விலை எப்போதும் தள்ளுபடி கால விற்பனையைவிடக் குறைவாகவே இருக்கும். அடித்தட்டு மக்களும் நடுத்தர மக்களும் பெரும்பாலும் அவர்களுக்கு வேண்டியதை அந்தத் தெருவில் வாங்கிக் கொள்வது வாடிக்கை.

துணிக்கடைகளும் கட் பீஸ் கடைகளும் அந்தத் தெருவினுள் மிகுதியாக உள்ளன. எண்ணிக்கையில் அவற்றுக்கு அடுத்தபடியாக கவரிங் நகை கடைகளும் ஃபான்ஸி ஸ்டோர்ஸ்களும் உள்ளன. சில வைரநகை கடைகள் அந்தச் சிறு கடைகளின் கூட்டத்தில் ஒட்டாமல் தனித்து நிற்கின்றன. எப்போதும் இந்தத் தெருவில் விற்பனை கொடிகட்டி பறக்கும். அதுவும் பண்டிகைக் காலம் என்றால் கேட்கவே வேண்டாம். அப்போது கோவைவாசிகள் மட்டுமல்லாமல்,அருகிலிருக்கும் கேரள எல்லைப் பகுதியிலிருந்தும் மக்கள் மலைபோல் குவிந்து இருக்கும் துணிமணிகளை அள்ளிச் செல்வர்.

uppukinar

சுடிதாரைத் துணியாக வாங்குவோர் அதை எங்குத் தைப்பது என்று கையைப் பிசையத் தேவையில்லை. தி.நகரில் இருக்கும் ரங்கநாதன் தெருவைப் போன்று இங்கேயும் தையல்காரர்கள் நிறைந்து இருக்கின்றனர். அந்தச் தெருவில் இருக்கும் ‘ஓட்டேஜஸ்’ பில்டிங்கினுள் நுழைந்தால், துரித உணவகம் போன்று துரித தையலகங்கள் நிரம்பி வழிகின்றன. துணியை அவர்களிடம் கொடுத்த பத்தாவது நிமிடத்தில் அது சுடிதாராக உங்கள் கையில் திரும்பி வந்துவிடும். அதுவே பிளவுஸ் என்றால் சுமார் இரண்டு மணி நேரம் பிடிக்கும்.

மேலும், நீங்கள் வாங்கிய சுடிதாரின் அளவுகளில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் அதை உடனடியாக மாற்றித்தரும் ஆல்ட்ரேஷன் தையல்காரர்களும் அங்கு உள்ளனர். கல்லூரி மாணவிகளும் வேலைக்குச் செல்லும் இளம் பெண்களும் பெரும்பாலும் தங்கள் தோழிகளுடன் அங்குதான் ‘விண்டோ ஷாப்பிங்’ செய்கின்றனர். அதிக செலவின்றி, நிறைய நேரம் சுற்றி, அரட்டையடித்தபடியே பேரம் பேசி, கைநிறையைச் சாமான்களை வாங்கிச் செல்வது அவர்களின் வாடிக்கையாக உள்ளது. ஊக்குகள், ஹேர் பேண்டுகள் அலங்கார தலை மாட்டிகள் நகப்பூச்சுகள் போன்றவைதான் அவர்களால் பெரிதும் வாங்கப்படுகின்றன. அங்கு இருக்கும் இந்திரா ஸ்டோர்ஸ் இந்தப் அலங்காரப் பொருட்களுக்கு மிகவும் பெயர் போனது.

இன்று அந்தத் தெருவினுள் ஜாக்கிரதையாக நாம் செல்ல வேண்டியது அவசியம், அந்தத் தெருவினுள் நடந்து செல்லும்போது சட்டென்று நின்றுவிடக் கூடாது. மீறி நின்றால், பின்னால் வரும் நபரால் நாம் கீழே தள்ளப்படக்கூடும். அங்குள்ள கடைகளில் தொங்கும் வண்ணச் சேலையோ துப்பட்டாவோ நம் கவனத்தை கவர்ந்து இழுத்தால், இடம் வலம் திரும்பிப் பார்த்து, பின் அங்குச் செல்வது உடம்புக்கு நல்லது.

அந்தத் தெருவினுள் நடக்கும்போது, கடைகளுக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கும் சிறு பையன்களின் கண்களைப் பார்க்காமல் கடந்து செல்வது உசிதம். இல்லையென்றால், ‘அக்கா இங்க வாங்க, அண்ணா இங்க வாங்க, சுடிதாரா? சாரியா?’ என்ற வார்த்தைகள், நீங்கள் வீடு திரும்பிய பின்னும், பல நாட்கள் உங்கள் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டு இருக்கும்.

uppukinar1

ஜாஸ்மின் வாசனைத் திரவியம், முப்பது ரூபாய்க்கு செயின், கம்மல் செட், பத்து ரூபாய்க்கு கூலிங் கிளாஸ், பெல்ட், ரிவால்விங் பக்கிள்ஸ் என இங்குப் பல வகைப்பட்ட பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன. எந்திரன் திரைப்படம் வெளியான சமயம், இந்தத் தெரு வேறொரு விஷயத்துக்காக மிகவும் புகழ்பெற்று விளங்கியது. ஆம், எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் கையில் போட்டிருந்த மெஹந்தி டிசைன், அந்தத் தெருவில்தான் முதன் முதலாகப் பெண்களுக்குப் போட்டுவிடப்பட்டது.

கோவையில் வசிக்கும் இன்றைய தலைமுறையினருக்கு அந்த மெஹந்தி விஷயம் தெரியும். அந்தத் தெருவின் ஓரங்களில் இருக்கும் சிறு கடைகளும் அங்கு விற்கப்படும் பொருட்களும் தெரியும். ஆனால், முன்பு அங்கிருந்த உப்புத் தண்ணீர் கிணறோ அதனால்தான் அந்தத் தெருவுக்கு உப்புக்கிணறு தெரு என்று பெயர் வந்த விஷயமோ தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு.

படங்கள்: எம்.செந்தில்குமார்

http://tamil.thehindu.com/society/real-estate/article24054798.ece

Link to comment
Share on other sites

தெருவாசகம்: கொள்ளை கொள்ளும் வெள்ளை நகரம்

 

 
shutterstock1024551862
 
 

இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இந்தியாவின் சில பகுதிகளுக்கு உடனடியாகச் சுதந்திரம் கிடைக்கவில்லை. அவற்றுள் ஒன்று புதுச்சேரி. இன்று ஒருங்கிணைந்த இந்தியாவின் யூனியன் பிரதேசங்களுள் ஒன்றாக இருக்கும் இதற்கு 1954-ல் சுதந்திரம் கிடைத்தது. ஆனால் அதற்கும் 10 ஆண்டுகள் கழித்துதான் பிரெஞ்சு நாடாளுமன்றம் புதுச்சேரி இந்தியாவின் ஒரு பகுதி என்பதை முறையாக அங்கீகரித்திருக்கிறது. அந்த அளவுக்கு புதுச்சேரி அவர்களுக்குப் பிடித்த பகுதியாக இருந்திருக்கிறது. இந்தப் பிரியத்தை புதுச்சேரியின் தலைநகரகான பாண்டிச்சேரியின் நகரமைப்பின் மூலம் இன்றும் உணர்ந்துகொள்ள முடியும்.

   
 

புதுச்சேரி மக்களுக்கும் பிரெஞ்சுக் கலாச்சாரத்தின் மீது ஈடுபாடு அதிகம். அதன் தனித்துவனத்தை பாண்டிச்சேரிக்குள் நுழையும் ஒவ்வொருவரும் உணர்வர். புதுவை மக்கள் பிரான்சை நேசிக்கிறார்கள். பிரான்ஸ் வாழ்வைப் பிரதிபலிக்கிறார்கள். அந்தக் கலாச்சாரத்தை நகல் எடுத்து வாழ்கிறார்கள். ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தினரால் இரவு உணவுக்குப் பின் குடும்பத்தோடு அமர்ந்து வீட்டிலேயே மது அருந்த இன்றும் புதுவையில் முடியும். தமிழகத்தில் இந்தப் பழக்கம் பரவலாக இல்லை. அதுபோல அவர்களிடம் பிரான்சுக்கு செல்ல வேண்டும் என்ற கனவு இன்றும் உள்ளது.

 

சினிமாவில் வரும் வில் ப்ளான்ஷ்

பிரான்சின் மீதான புதுச்சேரியின் காதலைத் தெரிந்துகொள்ள நாம் சுமார் 354 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். 1674-ல் பிரான்ஸ் முதல் குடியிருப்பைப் புதுச்சேரியில் அமைத்தது. அப்போது புதுச்சேரியை அங்கு ஓடிய கால்வாயின் இருபுறமும் இருக்குமாறு அவர்கள் வடிவமைத்தனர். கால்வாயின் ஒருபுறம் பிரெஞ்சுக்காரர்கள் குடியிருக்க வில் ப்ளான்ஷ் (Ville Blanche) உருவாக்கினர். இது வெள்ளை நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. கால்வாயின் மறுபுறம் புதுச்சேரிக்காரர்கள் குடியிருக்கவில் நாய்ர் (Ville Noire) உருவாக்கினர்.

shutterstock1087362059
 

பிரான்ஸ்நாட்டின் ராணு வீரர்களூம் அரசு அதிகாரிகளும் வியாபாரிகளும் மக்களும் அந்த வில் ப்ளான்ஷியில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்தனர். 1954-ல் புதுச்சேரியை பிரான்ஸ் இந்தியாவிடம் ஒப்படைத்தபோது, அங்கு வசித்த பிரெஞ்சுக்காரர்களுள் பலர், பிரான்ஸ் குடியுரிமையுடன் அங்கேயே வாழத் தீர்மானித்தனர். இது புதுச்சேரி மீது பிரெஞ்சுக்காரர்களுக்கு உள்ள மோகத்துக்குச் சிறந்த உதாரணம். புதுச்சேரியில் பிரெஞ்சு இன்றும் ஆட்சி மொழியாக இருப்பதன் காரணமும் அதுதான்.

சுற்றுலாவுக்கு வருபவர்களைக் கவர்ந்து இழுக்கும் பாண்டிச்சேரி பகுதிகளுள் ஒன்று வில் ப்ளான்ஷ். பிரெஞ்சுப் பாணி வீடுகள். அழகான சாலைகள், தெரு விளக்குகள் எனப் பிரெஞ்சுப் பாரம்பரியத்தை இந்தப் பகுதி நினைவூட்டும். முன்புறம் சற்றே சரிந்த தாழ்வாரம் கொண்ட மாளிகை வீடுகளை தமிழ் சினிமாவில் அடிக்கடி பார்த்திருப்போம். சமீபத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ‘தங்கமே’ பாடல் இங்கேதான் படமாக்கப்பட்டது.

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்தி, மலையாளம், ஹாலிவுட் உள்ளிட்ட பல சினிமாக்கள் இந்த வில் ப்ளான்ஷில் படமாக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியின் சாலைகள் சரியாக 90 டிகிரியில் ஒன்றுடன் ஒன்று இணைகின்றன. சொல்லப்போனால், இந்தப் பகுதிக்குள் நுழைந்தால் பிரான்ஸுக்கே போய்விட்ட மாதிரியான அனுபவம் நமக்குக் கிடைக்கும்.

காற்று சுழன்று தவழும் கடற்கரை சாலையில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டிடங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. பிரெஞ்சுக் கட்டிட கலை அழகுக்கும் அவர்களின் ரசனைக்கும் சான்றாக அந்தச் சாலையில் உயர்ந்து நிற்கும் போர் நினைச் சின்னமும் 88 அடி உயரக் கலங்கரை விளக்கமும் பிரான்ஸ் தூதரகமும் நமக்கு இன்றும் பிரமிப்பு ஊட்டுகின்றன. இந்தக் கட்டிடங்களுக்கு இணையாக நீளும் சாலையில் கடற்கரை காற்றை வாங்கியபடி நடை போடுவது ஒரு நல் அனுபவத்தை அளிக்கும்.

shutterstock680900452
 

வில் நாய்ர் பகுதி தமிழ் குவார்ட்டர் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு தெருக்கள் குறுகியதாக உள்ளன. பாரம்பரிய வடிவில் கட்டப்பட்ட சில பழைய வீடுகள் மட்டுமே இன்று அங்கு உள்ளன. மற்ற பழைய வீடுகள் நகரமயமாக்கலின் வளர்ச்சியில் மூழ்கி உருமாறிவிட்டன. 1738-ல் கட்டப்பட்ட ‘தி மேன்சன் ஆஃப் ஆனந்தரங்கம் பிள்ளை’ இன்றும் அங்கு உள்ளது. பிரெஞ்சுக் கட்டிடக்கலையும் தமிழ்க் கட்டிடக்கலையும் இணைத்து இந்தக் கட்டிடம் உருவாக்கப்பட்டது.

ஆனந்தரங்கம் பிள்ளை 52 வயது வரைதான் உலகில் வாழ்ந்துள்ளார். 1709-ல் பிறந்த அவர் 1761-ல் மறைந்துவிட்டார். அவர் பிரெஞ்சு ஆளுநரான துய்ப்ளெக்சின் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். இவரது நாட்குறிப்புகள்தாம் புதுசேரியில் பிரஞ்சு ஆட்சியிருந்த காலகட்டத்துக்கான முக்கியமான வரலாற்று ஆவணம்.

வில் ப்ளான்ஷ் பகுதியில் வசிக்கும் பிரெஞ்சுக்காரர்களின் வாழ்வை மதுவும் உணவும்தாம் நகர்த்தி செல்கின்றன. தொழில் என்ற ஒன்று அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு ஓய்வூதியப் பணம் பிரான்ஸ் அரசால் வழங்கப்படுகிறது. அவர்கள் வசிப்பதற்கு அரண்மனை போன்ற வீடுகள் உள்ளன. ஒய்வும் வசதியும் வளமும் இருந்தாலும், அவர்களின் வாழ்வு ஒருவகையில் சபிக்கப்பட்ட ஒன்றுதான்.

http://tamil.thehindu.com/society/real-estate/article24115090.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தெருவாசகம்: இது ராஜன் பாட்டை

 

 

pt%20rajanjpg

தெருக்கள் நம்மிடையே இருக்கும் வரலாற்றுச் சின்னங்கள். அவற்றின் பெயர்கள் முக்கியமான வரலாற்றுக் குறிப்புகள். அவை வரலாற்றின் நீட்சியாகப் பல தலைமுறைகளைக் கடந்தும் அழியாமல் நிற்கின்றன. பெரும்பாலான தெருக்களின் பெயருக்குப் பின் ஏதோ ஒரு மனிதனின் வாழ்க்கை இருக்கும். மதுரையிலும் சென்னையிலும் இருக்கும் பி.டி.ராஜன் சாலையும் அத்தகையதே.

 

 

யார் இந்த பி.டி. ராஜன்?

பி.டி. ராஜனின் முழுப் பெயர் பொன்னம்பல தியாகராஜன். 1892-ல் ஏப்ரல் 4 அன்று தேனிக்கு அருகில் இருக்கும் உத்தமபாளையத்தில் அவர் பிறந்தார். இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜிலுள்ள ‘த லேஸ் ஸ்கூல்’ கல்லூரியில் வரலாறும் ஆக்ஸ்போர்டிலுள்ள ‘ஜீசஸ் கல்லூரி’யில் சட்டமும் படித்தார்.

 

ptr

பி.டி. ராஜன்

முதலமைச்சரான பி.டி. ராஜன்

இந்தியாவுக்கு வந்த பின் வழக்கறிஞராகச் சில காலம் பணியாற்றினார். அரசியல் ஈடுபாடு காரணமாக நீதிக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். 1920-ல் நீதிக்கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு சென்னை மாகாண சட்டமன்ற கவுன்சில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் அவர் அமைச்சராகவும் இருந்துள்ளார். 1937-ல் தோல்வியைத் தழுவும்வரை அவர் சென்னை மாகாண சட்டமன்ற கவுன்சில் உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார். 1939-ம் ஆண்டை அவர் அரசியல் வாழ்வின் உச்சம் எனலாம். அந்த ஆண்டுதான் சென்னை மகாணத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.1944 வரை அப்பதவியில் நீடித்துள்ளார்.

 

பெரியாருடன் மோதல்

திராவிட அரசியல் பிடிப்பின் காரணமாக நீதிக்கட்சியில் இணைந்த பி.டி. ராஜனுக்கு ஒருகட்டத்தில் பெரியாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் காரணமாக நீதிக்கட்சியிலிருந்து விலகி, போட்டி நீதிக்கட்சியைத் தொடங்கினார். 1957 வரை தான் தொடங்கிய கட்சிக்கு அவரே தலைமை வகித்தார்.

1952-ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் சென்னை மாகாண சட்டமன்ற கவுன்சில் உறுப்பினர் ஆனார். 1957-ல் அவரது உறுப்பினர் பதவி முடிவுக்கு வந்ததிலிருந்து அவர் தீவிர அரசியலிலிருந்து படிப்படியாக ஒதுங்க ஆரம்பித்தார். 1974 செப்டம்பர் 24-ல் 82-ம் வயதில் அவரது சொந்த ஊரான உத்தமபாளையைத்தில் இறந்தார். பி.டி. ராஜன் திராவிட கொள்கையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பிரமாணர் அல்லாதோரைக் கோயில் அறங்காவலர்களாக நியமிப்பதற்குப் போராடினார். பி.டி. ராஜனின் மகன் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனும் தீவிர அரசியலில் ஈடுபட்டவர்.

அவர் 1968-ல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியமான தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தமிழ்நாடு சட்டசபை சபாநாயகராகவும், இந்து அறநிலைத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பி. டி, ராஜனின் பேரனும் பழனிவேல் ராஜனின் மகனுமான பழனிவேல் தியாகராஜனும் தற்போது அரசியல் பணியாற்றி வருகிறார். தமிழகத்தின் 15-வது சட்டசபையில் அவர் எம்.எல்.ஏ. ஆக இருந்துவருகிறார்.

sivan%20park

 

பி.டி. ராஜன் சாலை

பி.டி. ராஜனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மதுரை கோரிப்பாளையத்திலும் சென்னை கே.கே. நகரிலும் இருக்கும் சாலைகளுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோரிபாளையத்தில் உள்ள பி.டி. ராஜன் சாலை, ஜும்ப்ரோபுரம் பகுதியில் உள்ளது. அது செல்லூர் சாலையையும் பி.பி. குளம் சாலையையும் இணைக்கிறது. அந்தச் சாலையில்தான் புகழ்பெற்ற தீபம் நூலகம் உள்ளது. பி.பி. குளம் சாலையுடன் அந்தச் சாலை இணையும் இடத்தின் வலது புறம் மஸ்ஜித் ஷுபைதா பள்ளிவாசல் உள்ளது. நரிமேடு சாலையுடன் அது இணையும் இடத்தில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. மாரியம்மன் கோயிலுக்கு அருகில் நகராட்சிக்குச் சொந்தமான குழந்தைகள் பூங்கா உள்ளது. இது தவிர ஏராளமான துணிக்கடைகள், உணவகங்கள், வங்கிகள் அங்கு மிகுந்துள்ளன.

sivan%20park%201

பி.டி. ராஜன் சாலை, சென்னை

 

சென்னையில் உள்ள கே.கே. நகரில் இருக்கும் பி.டி. ராஜன் சாலை அசோக் நகர் இரண்டாவது அவென்யுவையும் அசோக் பில்லர் மெயின் ரோடையும் இணைக்கிறது. முன்பு குடியிருப்புகள் நிரம்பி வழிந்த அந்தப் பகுதியில் தற்போது வணிக நிறுவனங்கள் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன. அந்தச் சாலையில் இருக்கும் சிவன் பூங்கா இன்றும் மிகவும் பிரபலமான ஒன்று. காலையிலும் மாலையிலும் மக்கள் அங்கு நடைப்பயிற்சி செய்வது வாடிக்கை. விடுமுறை நாட்களின் மாலை வேளைகளில் அந்தப் பகுதியில் வசிக்கும் குடும்பங்களால் சிவன் பூங்கா நிரம்பி வழிகிறது.

http://tamil.thehindu.com/society/real-estate/article24178948.ece

Link to comment
Share on other sites

தெரு வாசகம்: நெல்லையின் திருக்குறள் பாலம்

 

 
22tilantwo%20tier%20bridgetvl%204
 
 

வ்வொரு நகரமும் தனக்கென்று ஓர் அடையாளத்தைத் தன்னுள் வைத்துள்ளது. ஆக்ராவுக்கு தாஜ்மகால், சென்னைக்கு எல்.ஐ.சி, திருச்சிக்கு மலைக்கோட்டை, மதுரைக்கு மீனாட்சி அம்மன் கோவில் என நீளும் அந்த அடையாளங்களின் பட்டியலில் திருநெல்வேலியின் ஈரடுக்குப் பாலத்துக்கும் சிறப்பான இடம் உண்டு. நெல்லையப்பர் கோயில், சுலோச்சனா சம்பத் முதலியார் பாலம் எனப் பல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் நெல்லையின் அடையாளங்களாக உள்ளன. 1973-க்குப் பிறகு எழுந்த இந்த ஈரடுக்குப் பாலம் முந்தைய அடையாளங்களுடன் ஒன்றாக மாறிவிடாமல் நெல்லையின் தனி அடையாளமாக உருவெடுத்துவிட்டது.

   
 
23CHMMHTV
 

நெல்லையில் அமைந்திருக்கும் இந்தப் பாலம்தான் இந்தியாவிலேயே முதன்முதலாகக் கட்டப்பட்ட ஈரடுக்குப் பாலம். நெல்லைச் சந்திப்பில் உள்ள தண்டவாளத்தைக் குறுக்கே கடப்பதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் இப்பாலம் கட்டப்பட்டது. ஆசியாவிலேயே ரெயில் பாதையின் குறுக்கே அமைக்கப்பட்ட முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் என்ற பெருமைக்குரிய சிறப்பு இந்தப் பாலத்துக்கு உண்டு.

1969-ல் அன்றைய முதல் அமைச்சர் மு. கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மேம்பாலம் 1973-ம் ஆண்டில் 47 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. அதே ஆண்டில் நவம்பர் மாதம் 13 அன்று முதல்வர் மு. கருணாநிதி இந்த மேம்பாலத்தைத் திறந்துவைத்தார். திருக்குறள் போன்று இரண்டு அடுக்குகளைக் கொண்டு கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளதால் இப்பாலத்துக்குத் திருவள்ளுவர் பாலம் என்று கலைஞர் பெயர் சூட்டினார்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் உட்கட்டமைப்பு சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாகச் சாலைகள். தமிழகத்தில் சாலையால் இணைக்கப்படாத குக்கிராமமே இல்லை. இன்றைக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. பாலங்கள் கட்டப்படுவது சடுதியில் நிகழ்ந்துவிடுகிறது. ஆனால், 1973 அப்படியான காலம் அல்ல. ஆனால் அப்போதே இந்த ஈரடுக்குப் பாலத்தை, அதுவும் நான்கு ஆண்டுகளுக்குள் அவர் கட்டி முடித்தது மகத்தான சாதனைதான்.

tv%20bridge%201

நெல்லைச் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கும் நெல்லைச் சந்திப்பு பேருந்து நிலையத்துக்கும் அருகில் இருக்கும் எஸ்.என். ஹைரோட்டில் இந்த இரட்டை அடுக்கு மேம்பாலம் இருக்கிறது. ‘திருவள்ளுவர்’ பெயரைத் தாங்கியுள்ள இந்த மேம்பாலம் நெல்லை ஜங்சனையும் டவுனையும் இணைக்கிறது. குற்றாலத்துக்குச் செல்ல விரும்புவோரும் நெல்லையப்பர் கோயிலுக்குச் செல்ல விரும்புவோரும் இந்தப் பாலத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

இந்தப் பாலம் 800 மீட்டர் நீளமும் 8 மீட்டர் அகலமும் கொண்டது. இந்தப் பாலத்தை 25 குறுக்குத் தூண்கள் தாங்கிப் பிடித்து நிற்கின்றன. அந்த 25 தூண்களில், 13 தூண்கள் வில் வளைவாக 30.30 மீ அகலத்தில் உள்ளன. எஞ்சிய 12 தூண்கள் 11.72 மீ அகலம் கொண்ட தாங்கிகளாக உள்ளன. இந்தத் தூண்களின் மேல் பரத்தப்பட்டிருக்கும் சிமெண்டு சிலாபுகளால் இந்தப் பாலத்தின் மேற்பரப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிமெண்டு சிலாபும் 31 மீட்டர் நீளமும் 600 டன் எடையும் கொண்டதாகும். இந்தப் பாலத்தின் முதல் அடுக்கில் சைக்கிள்களும் இருசக்கர மோட்டார் வாகனங்களும் லகுரக வண்டிகளும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. மேல் அடுக்கில் பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.

tv%20bridge%202
 

பாலம் கட்டப்பட்டு 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பாலத்தில் பழுது ஏற்பட்ட காரணத்தால் அது மூடப்பட்டது. ஒரு கோடியே 45 லட்சம் செலவில் இப்பாலம் சீரமைக்கப்பட்டுப் போக்குவரத்துக்காக மீண்டும் 2000-ல் திறந்து விடப்பட்டது. புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில் பாலம் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்தப் பாலத்தின் கீழ்ப் பகுதி தற்போது ஆக்கிரமிப்புகளால் பிதுங்கி வழிகிறது. கீழ்ப் பாலம் சந்திப்பு பகுதியுடன் இணையும் இடத்தில் சாலை முறையாகப் பராமரிக்கப்படாததாலும், கழிவுநீர் ஓடைகள் அமைக்கப்படாததாலும் மழைநீர் தேங்குவது வாடிக்கையாகிவிட்டது. பருவமழை பெய்யும்போதெல்லாம் பாலத்தின் கீழ்ப் பகுதியில் மழைநீர் தேங்கி கழிவுநீர்க் குட்டையாக மாறுகிறது. திருநெல்வேலியின் பெருமைக்குரிய அம்சங்களில் ஒன்றாகத் திகழும் ஈரடுக்கு மேம்பாலம் போதிய பராமரிப்பு இல்லாமல் மழைநீர், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நோய் பரப்பும் இடமாக மாறியுள்ளது.

மழைநீர் எளிதாக வழிந்தோடும் வகையில் கழிவுநீர் ஓடை அமைக்க வேண்டும் என்றும் தேங்கி இருக்கும் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பாலத்தின் பழுதினை உடனடியாகச் செப்பனிட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இப்பாலத்தின் தடுப்புச் சுவர்களில் வண்ண படங்களை வரைந்து அதன் கம்பீரத்தை நிலை நாட்ட பொதுமக்களும் முயல்கின்றனர். நெல்லையின் பெருமைக்குரிய அடையாளம் அதே பெருமையுடன் நிலைக்க வேண்டும் என்பதே திருநெல்வேலிக்காரர்களின் விருப்பம்.

http://tamil.thehindu.com/society/real-estate/article24227892.ece

Link to comment
Share on other sites

தெருவாசகம்: கென்னடி ஆன கன்னடர் தெரு

 

 
IMG20180628135702296
 
 
 

மயிலாப்பூரைத் தமிழகத்தில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். இதில் ஆச்சரியம் இல்லை. இன்று சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியாகிவிட்ட இந்த ஊரை கிரேக்கர்களும் ரோமானியர்களும் ஒன்றாம் நூற்றாண்டிலேயே அறிந்திருந்தார்கள் என்பது வியப்புக்குரியது. இந்த வியப்பை மேலும் அதிகரிக்கவைக்கிறது அங்கே இருக்கும் கென்னடி தெரு. லஸ் கார்னரையும் முசிறி சுப்ரமணிய ஐயர் சாலையையும் (ஆலிவர் ரோடு) கென்னடி தெரு இணைக்கிறது. கென்னடி என்றவுடன் முதலில் நமக்கு நினைவுக்கு வருபவர், 1963-ல் சுட்டுக் கொல்லப்பட்ட அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடிதான். அவருக்கும் இந்தத் தெருவின் பெயருக்கும் என்ன தொடர்பு?

 

மயிலாப்பூர் தமிழகத்தின் கலாச்சார மையம். சென்னையின் தொன்மையான பகுதிகளில் ஒன்று. மயில்கள் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பது மருவி மயிலாப்பூர் ஆகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. பண்டைய ஜெர்மானிய வரைபடத்திலும் கிரேக்க வரைபடத்திலும் இந்தப் பகுதி ‘மலியர்பா’ என்று குறிக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் ப்ளேஃபேர் எனும் ஸ்காட்லாந்து வரலாற்றாய்வாளர் இந்தப் பகுதியை ‘மெலியபோர்’ என்று குறிப்பிட்டுள்ளார். ரோமானியர்களும் கிரேக்கர்களும் அரேபியர்களும் இங்கு வந்து வணிகம் புரிந்துள்ளனர். இயேசுவின் சீடர்களில் ஒருவரான புனித தாமஸ் கி.பி. 68-ல் மலபாரிலிருந்து மயிலாப்பூருக்கு வந்திறங்கியுள்ளார்.

IMG20180628135723744
 

மானுடவியலாளர் எட்கர் தர்ஸ்டன் கே. ரங்காச்சாரி என்பவருடன் இணைந்து எழுதியிருக்கும் ‘தென்னிந்தியச் சாதிகளும் பழங்குடிகளும்’ (Castes and tribes of southern India) எனும் புத்தகத்தின் படி, 17-ம் நூற்றாண்டில் செம்பரம்பாக்கம் பகுதியில் 4,000-க்கும் அதிகமான கன்னடர்கள் இருந்துள்ளனர். அவர்கள் கன்னடம் பேசும் லிங்காயத்து சமூகத்தின் ஒரு பிரிவினர். அவர்கள் மைசூரை ஆண்ட சிக்க தேவராயருக்கு எதிராகப் பெரும் கலகம் செய்துள்ளனர்.

ஆத்திரமடைந்த தேவராய, லிங்காயத்து சமூகத்தினரின் மீது மனிதாபிமானமற்ற முறையில் கொடிய தாக்குதலை நிகழ்த்தியுள்ளார். அதில் ஏராளமானோர் உயிர் இழந்துள்ளனர். எஞ்சியவர்கள் அங்கிருந்து தப்பி நாடோடிகளாக மலையிலும் வனத்திலும் திரிந்துள்ளனர். பின்பு தாங்கள் வசித்த வனத்தின் ஊடாகவும் மலையின் ஊடும் கடந்து செல்லும் படைவீர்களுக்குத் தயிர் விற்றுள்ளனர். பின்பு அவர்கள் மெல்ல நகர்ந்து நாளடைவில் செம்பரம்பாக்கத்தில் குடியமர்ந்துள்ளனர்.

kanndaiga

அன்றைய கன்னடிக தெருவில் தயிர் விற்கும் கன்னடர்

அப்போது மந்தைவெளி என்பது ஒரு மேய்ச்சல் நிலம். மாடுகள் அங்கு மிகுந்து இருந்துள்ளன. மேலும் மயிலாப்பூர் பிராமணர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. தயிர் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், அங்கு வசித்த பிராமணர்களுக்குத் தயிர் விற்பதற்காக அவர்கள் மயிலாப்பூரில் இப்போது இருக்கும் கென்னடித் தெருப் பகுதியில் குடியேறியுள்ளனர். தயிர் நிரம்பிய மண் பானைகளை நார்க் கூடைகளில் வைத்து, அதைக் கறுப்புக் கம்பளியால் சுற்றி, அதைத் தலையில் சுமந்தபடி தெருத் தெருவாகச் சென்று தயிரை விற்பது அவர்களின் அன்றாட வாடிக்கை.

வெயில் காலம், குளிர் காலம் என எந்தக் காலமாக இருந்தாலும் அவர்கள் தலையில் தயிர்ப் பானையுடன் அதிகாலையிலேயே தயிர் விற்கத் தொடங்கிவிடுவார்கள். தலையிலும் தோளிலும் தயிர் பானையைக் காவடியைத் தூக்கி செல்வது போல் சுமந்து செல்வதால், அவர்கள் காவடிகர்கள் என்றும் அப்போது அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று அவர்கள் வசித்த பகுதி கால ஓட்டத்தில் வெகுவாக மாறிவிட்டது. ‘குன்வடி’ என்று முதலில் அழைக்கப்பட்ட அவர்கள் வாழ்ந்த தெரு மருவி ‘கன்னடி’ என்றாகி, இப்போது ‘கென்னடி’ என்றாகி உள்ளது. ஆனால், அங்கு வசித்த கன்னடர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. இன்று அந்தத் தெருவில் கன்னடர்களின் சுவடுகூட இல்லை.

http://tamil.thehindu.com/society/real-estate/article24297921.ece

Link to comment
Share on other sites

தெரு வாசகம்: கார்களை அலங்கரிக்கும் சாலை

 

 
JKRGP

திரு.வி.க. சாலை (ஜெனரல் பாட்டர்ஸ் சாலை)   -  the hindu

ஜெனரல் பாட்டர்ஸ் சாலை என்றவுடன் முதலில் நம் நினைவுக்கு வருபவை வாகன உதிரிப் பாகங்கள். ஆடம்பரமான சீட் உறையோ நவீன ஆடியோ சிஸ்டமோ பழைய பாகங்களோ எது வேண்டுமானாலும் அங்கு கிடைக்கும். டாடாவின் நானோ காராக இருந்தாலும் சரி, பென்ஸின் நவீன எஸ்யுவி காராக இருந்தாலும் சரி, எல்லா கார்களும் தங்களுக்குத் தேவையான பாகங்களைப் பெறுவதற்குச் செல்லும் இடமே ஜெனரல் பாட்டர்ஸ் சாலை. இப்போது இதன் பெயர் திரு.வி.க. சாலை என மாற்றப்பட்டுள்ளது.

   
 

அண்ணா சாலையிலிருந்து (மவுண்ட் ரோடு) பிரிந்து சென்னை எல்.ஐ.சி.க்குப் பின்புறம் இந்தச் சாலை செல்கிறது. சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான வேலையால் இந்தச் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலில் பிதுங்கித் திணறுகிறது. இந்தச் சாலையில் செல்லும் வண்டிகளுக்கு முன்னும் பின்னும் ஓரங்குல இடைவெளி இருந்தால்கூட, அது ஆச்சரியமே. இந்தப் போக்குவரத்து நெரிசலால் சில நன்மைகளும் இந்தச் சாலைக்கு ஏற்பட்டுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல, குப்பை மேட்டுக்குள் இன்று இந்தச் சாலை மூழ்கியிருக்கவில்லை. போக்குவரத்து நெரிசலால் குப்பைகள் இன்று உடனுக்குடன் அகற்றப்பட்டுவிடுகின்றன. சாலை முழுவதையும் வாகனங்கள் ஆக்கிரமித்துள்ளதால், மனிதர்கள் நடந்து செல்வது அரிது. இதனால், பான்பராக் உமிழ்வுகளால் ஏற்படும் சிவப்புக் கறைகள் சாலைகளில் இல்லை.

JKRGPROAD

வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடைகள்   -  THE HINDU

 

50 ஆண்டுகளுக்கு முன்பு, அண்ணா சாலைதான் தென்னகத்தின் பிரசித்திப் பெற்ற வாகன உற்பத்தியாளர்களின் விருப்ப இடம். தற்செயலாகவோ திட்டமிட்டோ எல்லாப் பெரிய நிறுவனங்களின் விற்பனை நிலையங்களும் அலுவலகங்களும் அண்ணா சாலையிலேயே இருந்தன. சிம்சன், ஆடிஸன், ராயல் என்பீல்ட், சவுத் இந்தியா அட்டோமொடிவ் கம்பெனி, அமால்கமேஷன் குழுமத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஓக்ஸ், ஸ்டாண்டர்ட் மோட்டார் புராடெக்ட்ஸ் ஆப் இந்தியா, டிவிஎஸ் போன்றவையும் அங்குதான் இருந்தன.

வாகன உற்பத்தி மையங்கள் அண்ணா சாலையில் இருந்ததால், இயல்பாகவே வாகனப் பழுது பார்க்கும் நிலையங்கள் அண்ணா சாலைக்கு அருகில் அதை ஒட்டி இருந்த பார்டர் தோட்டத்தில் பல்கிப் பெருகின. அந்தக் காலத்தில் இடங்களின் பெயர்களுக்குப் பின்னால் தோட்டம் என்று சேர்த்துக்கொள்வது வாடிக்கை. ஆங்கிலேயர்களின் காலத்தில் தோட்டம் ‘கார்டன்’ என்று மாறியது. இன்று சென்னையில் இருக்கும் கீழ்ப்பாக்கம் கார்டன், கே.எம். கார்டன் போன்றவை அப்படி உருவானவைதாம்.

பார்டர் தோட்டத்தில் மட்டுமே இருந்த பழுது பார்க்கும் நிலையங்கள், இன்று சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை போன்ற இடங்களிலும் படர்ந்து பரவியுள்ளன. புதுப்பேட்டையில் தடுக்கி விழுந்தாலும் ஒரு வாகனப் பழுது பார்க்கும் கடையில்தான் விழுவோம். அந்த அளவுக்கு இன்று அந்தப் பகுதி முழுவதும் பழுதுபார்க்கும் கடைகள் நிறைந்துள்ளன.

பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதில் விருப்பமில்லை. இதனால் வாகனப் பழுது பார்க்கும் நிலையங்களுக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கும் இடையே உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்குச் சிறு வியாபாரிகள் முளைத்தனர். அந்தச் சிறு வியாபாரிகளுக்கு ஏற்ற இடமாக இந்த ஜெனரல் பாட்டர்ஸ் சாலை விளங்கியது.

JKRGP%202

வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடைகள்   -  THE HINDU

 

பெரிய நிறுவனங்கள் அருகிலிருந்ததும் குறைவான வாடகையுமே அதற்குக் காரணங்கள். ஜெனரல் பாட்டர்ஸ் சாலையில் மட்டுமல்லாமல், உதிரிப் பாகக் கடைகள் ஸ்டேட் பாங்க் தெருவிலும் ஒயிட்ஸ் ரோட்டிலும் பரவியிருந்தன. இதனால், அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் டெட்ராய்ட் என்று இந்தப் பகுதி அழைக்கப்பட்டது.

ஜெனரல் பாட்டர்ஸ் சாலையைச் சுற்றிய ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள்தான் ஆட்டோமொபைல் சார்ந்த தொழில்கள் அன்று இருந்தன. கால ஓட்டத்திலும் நாகரிக வளர்ச்சியிலும் 1980-களில் வாகனங்களின் எண்ணிக்கை சென்னையில் அதிகரித்தன. இதனால் வாகனங்களைப் பழுது பார்க்கும் நிலையங்களும் உதிரிப் பாகக் கடைகளும் நகரின் மற்ற பகுதிகளுக்கும் பரவின. இன்று இந்தக் கடைகள் இல்லாத தெருவே சென்னையில் இல்லை எனலாம். இன்று ஜெனரல் பாட்டர்ஸ் சாலையில் மொத்த விற்பனைக் கடைகள் உள்ளன. அவை நகரின் மற்ற பகுதிகளில் இருக்கும் கடைகளுக்குப் உதிரிப் பாகங்களை விற்பனை செய்கின்றன.

ஜெயப்பிரதா தியேட்டர், மெலோடி தியேட்டர் போன்றவையும் இந்த ஜெனரல் பாட்டர்ஸ் சாலையில்தான் இருந்தன. சத்தியமூர்த்தி பவன் இந்தச் சாலையில்தான் உள்ளது. அண்ணா சாலையில் இருந்து ஜெனரல் பாட்டர்ஸ் சாலை தொடங்கும் இடத்தில் இன்று ‘புகாரி ஹோட்டல்’ போன்ற சென்னையின் பாரம்பரியமிக்க உணவகங்கள் உள்ளன. இந்தச் சாலை முடியும் இடத்தில் எக்ஸ்பிரஸ் அவென்யு வணிகக்கூடம் உள்ளது. இந்தச் சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு இவையும் காரணங்களே.

http://tamil.thehindu.com/society/real-estate/article24352338.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தெரு வாசகம்: போர்ச்சுகல் மெட்ராஸ், திராவிடச் சென்னை

 

 

 
therujpg

நகரின்  பெயருக்குப் பின் இருக்கும் காரணத்தைக் கண்டறிய முயல்வது, ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகளைக் கொண்டிருக்கும் புதிருக்கு விடை காண முயல்வதுபோலச் சவாலான காரியம். சில நகரங்களின் பெயர்களுக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். சென்னை நகருக்குப் பல காரணங்கள் மட்டுமல்ல, ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களும் உள்ளன.

சென்னை தமிழகத்தின் தொன்மையான நகரங்களில் ஒன்று. மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட அந்த நகரம், சென்னை என்று பெயர் மாற்றப்பட்டு 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1996 ஜூலை-16-ல் இந்தப் பெயர் மாற்ற அறிவிப்பை அன்றைய முதல்வர் மு.கருணாநிதி அதிகாரபூர்வமாக வெளியிட்டார். அதன் மூலம் நம் மீதான ஆக்கிரமிப்பை நினைவூட்டும் மெட்ராஸ் என்ற அந்தப்  பெயர் இல்லாமல் ஆனது.

 

இரு கிராமங்கள்

மெட்ராஸ் என்ற பெயர்தான் அந்த நகரின் அடையாளம் என்று அன்றைய காகலட்டத்தில் மக்களால் நினைக்கப்பட்டது. ஆனால், உண்மை அதுவல்ல. சென்னை என்ற பெயர் நமக்கோ அந்த நகருக்கோ அந்நியப்பட்டதல்ல. வரலாற்று ஆய்வுகளும் அதன் முடிவுகளும் அந்த நகருக்கும் சென்னைக்கும் உள்ள தொடர்பை உறுதி செய்கின்றன.

portugaljpg

மெட்ராஸ் என்ற பெயரும் சென்னை என்ற பெயரும் மதராஸப்பட்டினம், சென்னப்பட்டினம் என்ற இரண்டு ஊர்களின் பெயரில் இருந்துதான் தோன்றியது எனப் பரவலாக நம்பப்படுகின்றது. சொல்லப்போனால், அந்த இரண்டு ஊர்களின் இணைப்பில் உருவான பரப்பைத்தான் இன்று நாம் சென்னை என்று வரையறுத்துள்ளோம், இந்த இரண்டு பெயர்களுக்குக் காரணங்கள் எனப் பல வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன.

அரசாங்க அறிக்கைகளும் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வரும் வாய்வழி க்கதைகளும் அதன் ஒவ்வொரு வாதத்துக்கும் முட்டுக் கொடுக்கின்றன.

அதில் பிரதானமானது, சின்னப்ப நாயக்கர்பற்றிய வாதம். புனித ஜார்ஜ் கோட்டை, புனித மேரி ஆலயம், துறைமுகம், அவற்றை ஒட்டியிருந்த குடியிருப்புப் பகுதிகள் போன்றவை அமைந்த இடங்கள் சின்னப்ப நாயக்கர் உடையவை. தெலுங்கு பேசிய செல்வந்தரான அவரிடமிருந்து அந்தப் பகுதிகளை ஆங்கிலேயர்கள் வாங்கியுள்ளனர். அதற்கான ஆவணங்கள் எழும்பூரில் இருக்கும் சென்னை அரசுக் காப்பகத்தில் இன்றும் உள்ளது.

அவரது நினைவாக அந்தப் பகுதி, அன்றைய காலகட்டத்தில் அங்கு வாழ்ந்த மக்களால் சென்னப்பட்டினம் என்று 300 ஆண்டுகளுக்கு மேலாக அழைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால், ஆங்கிலேயர்கள் எதற்காக அந்த நகரை மெட்ராஸ் என்று அழைக்கத் தொடங்கினார்கள் என்பதைப் பற்றியோ ஒட்டுமொத்த பகுதியும் எவ்வாறு மெட்ராஸ் பிரெசிடென்ஸி ஆக உருமாறியது என்பதைப் பற்றியோ இந்த வாதத்தில் தெளிவான விளக்கம் இல்லை.

சென்னை பட்டினக் கோட்டை

சென்னை - மெட்ராஸ் என்ற பெயர்களுக்குக் காரணமாக மற்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. அந்தக் காரணம் நம்மை 1639-ம் ஆண்டுக்கு அழைத்துச் செல்கிறது. கிழக்கிந்திய கம்பெனி தாங்கள் குடியமர்வதற்காகத் தேர்வு செய்த இடத்தில் சென்னப்பட்டினம், மதராஸப்பட்டினம் என்ற இரண்டு கிராமங்கள் இருந்துள்ளன.

மதராஸப்பட்டினம் அப்போது புனித ஜார்ஜ் கோட்டைக்குத் வடக்கு பக்கமாக இருந்துள்ளது. 1600-களில் நிகழ்ந்த ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்புக்கு முன்பாகவே மதராஸப்படினம் இருந்துள்ளது. ஆங்கிலேயர்கள் அதைச் சுவீகரித்து தாங்கள் ஆளும் பகுதியை மெட்ராஸ் என அழைக்கத் தொடங்கினார்கள் என்பதே இந்த வாதத்தின் சாரம்.

புனித ஜார்ஜ் கோட்டைக்குத் தெற்கு பக்கமாகச் சென்னப்பட்டினம் கிராமம் இருந்துள்ளது. விஜயநகர சாமராஜ்யத்தில் சந்திரகிரியை ஆண்ட ஸ்ரீ ரங்க ராஜாவின் ஆட்சியில் வெங்கடாத்திரி நாயுடு தளபதியாக இருந்துள்ளார். வெங்கடாத்திரி தன்னுடைய தந்தை, ‘சென்னப்ப நாயுடு’வின் நினைவாக அந்தப் பகுதிக்குச் சென்னப்பட்டினம் என்று பெயர் சூட்டியுள்ளார். வெங்கடாத்திரியின் முதல் அரசாணையில் மதராஸப்பட்டினம் என்ற பெயரும் இடம்பெற்றுள்ளது.

சென்னை என்றால் அழகு

ஆனால், சிலர் சென்னப்பட்டிணத்தில்தான் கோட்டை கட்டப்பட்டுள்ளது என்று நம்புகிறார்கள். அந்தக் கோட்டையைச் சுற்றி புது நகரம் வேகமாக வளர்ந்தது என அவர்கள் நம்புகிறார்கள். வெங்கடாத்திரியின் உத்தரவால்தான் அந்தப் பகுதி சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டதா அல்லது அதற்கு முன்பே அது அவ்வாறுதான் அழைக்கப்பட்டதா என்பதைப் பற்றித் தெளிவாக அறுதியிட்டுக் கூற முடியவில்லை.

எது எப்படியோ, சென்னப்பட்டினம் மதராஸப்பட்டினம் என இரண்டு பகுதிகள் இருந்துள்ளன என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. வடக்கில் இருந்த மதராசப்பட்டினம் தெற்கு நோக்கியும் தெற்கில் இருந்த சென்னப்பட்டினம் வடக்கு நோக்கியும் விரிந்து பரவி ஒன்றுடன் ஒன்று இணைந்து தங்களது அடையாளத்தை இழந்துள்ளன. நாளடைவில் ஒன்றாக மாறிப் போன அந்தப் பகுதியை எப்படி அழைக்க வேண்டும் என்ற அடையாளச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

theru%202jpg
 

மதராஸப்பட்டினம் என்ற பெயர் ஆங்கிலேயர்களுக்குப் பிடித்திருந்ததால், இந்த அடையாள சிக்கலைக் களையும் விதமாக, ஒட்டுமொத்தப் பகுதியையும் மெட்ராஸ் என அழைக்கத் தொடங்கினர். ஆனால் மக்கள் அந்தப் பகுதியைச் சென்னப்பட்டினம் என்றே அழைத்துள்ளனர். சென்னப்பட்டினம் என்ற பெயர் திராவிடத்தோடு தொடர்புடையது. தெலுங்கு மொழியில்  ‘சென்னு’ என்றால் ‘அழகு’ என்று அர்த்தம்.

1600 வரை பின்னோக்கி செல்லும்போதுதான் சென்னை என்ற பெயருக்கான காரணம் நமக்கு ஓரளவுக்குப் புலப்படுகிறது. ஆனால். மெட்ராஸ் என்ற பெயருக்கான காரணத்தை அறிய, 1500-ம் ஆண்டுவரை நாம் பின்னோக்கி செல்ல வேண்டியுள்ளது. மெட்ராஸ் என்ற பெயர் நம் நாட்டோடு தொடர்புடையது அல்ல, அது போர்ச்சுக்கல் நாட்டுடன் தொடர்புடையது. ஆம், 1500-களில் சென்னையில் போர்ச்சுக்கல் நாட்டவர்கள் குடியேறியுள்ளார்கள். அப்போது அங்கு வாழ்ந்த போர்ச்சுக்கல் நாட்டின் உயரதிகாரியான ‘மேட்ரே டி சோய்ஸ்’ என்பவரின் நினைவாகவே ’மெட்ராஸ்’ என்ற பெயர் உருவானதாகச் சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மெட்ராஸ் எனும் அந்நியப் பெயரை, நாம் சுதந்திரம் பெற்று ஐம்பது ஆண்டுகள் ஆன பின்னே நாம் நீக்கியுள்ளோம். நாடு முழுவதும் ஆங்கிலேயர்களின் நினைவாகச் சூட்டப்பட்ட பெயர்கள் நம் நாட்டு ஆளுமைகளின் பெயரால் நாடு முழுவதுன் இன்று மாற்றப்பட்டு வருகின்றன. ’மெட்ராஸ்’ சென்னை என மாறி 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தும் மெட்ராஸ் என்ற பெயர் இன்னும் மக்கள் மனதிலிருந்து மறையாமல் இருக்கிறது. அடிமைத்தனத்தைத் தாங்கி நிற்கும் அந்தப் பெயர், கால ஓட்டத்தில் மக்கள் மனத்திலிருந்து முற்றிலும் மறையக்கூடும்.

https://tamil.thehindu.com/society/real-estate/article24480621.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தெரு வாசகம்: குஜிலிப் பாட்டுத் தெரு

 

 

 
therujpg

இன்றைய பர்மா பஜார் (அந்தக் காலக் குஜிலி தெரு)

குஜிலி என்றவுடன் மனது ஏடாகூடமாகக் கற்பனைசெய்துகொள்ளும். அந்த அளவுக்கு அந்தச் சொல் தவறான ஒரு செயலைக் குறிக்கப் பயன்பட்டுவந்துள்ளது. தமிழ் சினிமா கிட்டத்தட்ட அதைப் பொதுவெளியில் உபயோகிக்கத் தகாத சொல்லாக்கிவிட்டது. என்றாலும் குஜிலி என்ற பெயரில் சென்னையிலும் திருச்சியிலும் தெருக்கள் உள்ளன. குஜிலி என்ற பெயரின் பின் இருக்கும் பொருளையும் குஜிலிக்கும் அந்தத் தெருக்களுக்கும் உள்ள தொடர்பையும் தேடிச் சென்றபோது கிடைத்த தகவல்கள் வியப்பை ஏற்படுத்தின.

பொதுவாக, குஜிலி தெருக்களில் வணிகம் செழித்திருந்துள்ளது. மக்கள் அதிக அளவில் கூடும் இடமாக அந்தத் தெருக்கள் இருந்துள்ளன. இந்தத் தெருக்களை மக்கள் ஒன்று கூடி வணிகம் புரியும் வணிக வீதி என்று மட்டும் சுருக்கிவிட முடியாது. குஜிலி என்ற பெயரும் அந்தப் பெயரைத் தாங்கி இன்றும் நம்மிடையே இருக்கும் அந்தத் தெருக்களும் வரலாற்றில் அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

 

திருச்சியின் குஜிலித் தெரு

திருச்சியில் இருக்கும் ‘நடு குஜிலித் தெரு’ காந்தி மார்க்கெட்டுக்கு அருகில் உள்ளது. திருச்சியின் மையத்தில் இருப்பதாலோ என்னவோ இந்தத் தெரு ‘நடு குஜிலித் தெரு’ என்று அழைக்கப்படுகிறது. புறவழி நெடுஞ்சாலைகளும் பெரிய கடைவீதி உள்ளிட்ட திருச்சியின் முக்கியமான சாலைகளும் சந்திக்கும் இடத்தில் இந்தத் தெரு உள்ளது. இந்தத் தெரு அமைந்திருக்கும் பகுதி திருச்சியின் முக்கிய வணிக மையமாக இன்றும் திகழ்கிறது.

சென்னையின் குஜிலித் தெரு

19-ம் நூற்றாண்டின் இறுதியில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் கந்தசாமிக் கோவிலைச் சுற்றி குஜிலி பஜார் இருந்துள்ளது. பர்மாவிலிருந்து வந்து குடியேறியவர்களுக்கானது அது. 1960களில் பர்மாவிலிருந்து அங்கு குடியேறியதால், அன்று முதல் அது பர்மா பஜார் என்று அழைக்கப்படுகிரது.

சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக, வெள்ளைக்காரர்கள் காலத்தில் ‘தீவ்ஸ் பஜார்’ என்று அது அழைக்கப்பட்டது. இந்த ‘தீவ்ஸ் பஜார்’ பற்றி 1925-ம் ஆண்டு வெளியான ‘பஞ்சாமிர்தம்’ இதழில் எழுத்தாளர் அ.மாதவையா விரிவாக எழுதியுள்ளார். 1913-ல் வெளியான ’விஷ்ணு ஸ்தல மஞ்சரி' இதழில் “வேடிக்கை பார்ப்பதிலேயே மனம் செலுத்தாமல் அப்போதுக்கப்போது தங்களுடைய ஜேபியிலும் மடியிலும் வைத்திருக்கும் பணப் பைகளைக் கவனித்து வர வேண்டும். இவ்விடத்தில் முடிச்சவிழ்க்கும் பேர்வழிகள் அதிகம்'' என்று மயிலை கொ. பட்டாபிராம முதலியார் எழுதியுள்ளார்.

குஜிலி: பெயர்க் காரணம்

குஜிலி என்பது குஜராத்தி பெண்களைக் குறிக்கும் சொல் எனவும், குஜிலி என்பது உருதுமொழிச் சொல் எனவும் மாறுபட்ட கூற்றுகள் இருக்கின்றன. குஜிலி எனில் இந்தியில் தினவு அல்லது அரிப்பு என்று பொருள். பெரியவர் நூ. தா. லோ. சு. அவர்கள் அதை CHRYSTILE ASBESTOS அதாவது கல்நாரில் ஒரு வகை என்று அதைக் குறிப்பிடுகிறார். இந்தக் கனிமத்துக்கும் அந்த பஜாருக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

குஜிலி பஜார்

குஜிலி பஜாரில் விற்கப்படும் பொருட்களில் முக்கியமானது பாட்டுப் புத்தகங்கள்தாம். பாட்டுப் புத்தகங்கள் என்றவுடன், சினிமா பாடல்கள் என்று எண்ண வேண்டாம். அவை வேறு ரகம். சொல்லப் போனால், அங்கு விற்கப்பட்ட பாடல்கள் குஜிலிப் பாடல்கள் என்றே அழைக்கப்பட்டன. இன்றைய புதுக்கவிதையைப் போன்றும் கானா பாடல்களைப் போன்றும் அது தனி பாணியில் அமைந்த ஒரு வித இலக்கியமாகவே இருந்தது.

theru%202jpg
 

குஜிலிப் பாடல்கள்

எந்தப் பொருள் புதிதாக அறிமுகமானாலும் அதைப் பற்றிப் பாட்டாக எழுதி இருக்கிறார்கள். நடப்பு நிகழ்வுகளும் சுடச்சுடப் பாட்டாக அன்று எழுதி விற்கப்பட்டுள்ளன. இந்தப் பாட்டுப் புத்தகத்தின் விலை வெறும் அரை அணாதான்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தலைவர்களின் கைதுகளை ‘அரெஸ்டு பாட்டு’ என்ற பெயரில் உடனுக்குடன் பாடல்களாக எழுதி விநியோகித்துள்ளனர். தேச பக்தர்களுக்கு எதிரானவர்கள் தரப்பிலிருந்து ‘இராஜ விசுவாசக் கும்மி’ போன்ற சில பாட்டுப் புத்தகங்களும் வெளி வந்திருக்கின்றன.

இன்று நம்மிடையே இருக்கும் கானா பாடல்களைப் போன்று குஜிலிப் பாடல்கள் அன்று மிகவும் பிரசித்திபெற்று விளங்கின. அந்தக் காலத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இந்தத் தெருமுனைக் கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள். 1960கள் வரைகூட இந்த வகைப் பாட்டுப் புத்தகங்கள் குஜிலி பஜாரில் கிடைத்து வந்தன.

எரிக்கப்பட்ட குஜிலிப் பாடல்கள்

மதராஸ் ரெயில் கலகம், கிண்டிரேஸ் பாட்டு, சிலோன் கலகச் சிந்து போன்ற குஜிலிப் பாடல்கள் அப்போது மிகவும் பிரபலமாக இருந்துள்ளன. காந்திச் சிந்து, பகத்சிங் சிந்து, மாப்ளாக் கலவரச் சிந்து போன்ற பாடல்களால் இந்த வகைப் பாடல்கள் ஆங்கிலேயர்களின் வெறுப்புக்கு ஆளானது. பல்லாயிரக் கணக்கான குஜிலிப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆங்கில அரசால் எரிக்கப்பட்டன.

உதாரணப் பாட்டு

குஜிலிப் பாடல்கள் எப்படி இருக்கும் என்பதற்கு, 1922 ஜூலை 22-ம் தேதி பாளையங்கோட்டை சிறையிலிருந்து ஓடிப்போன செம்புலிங்க நாடாரைப் பற்றிய பாட்டு ஒரு உதாரணம்.

‘செம்புலிங்கம் ஓடின சங்கதி சொல்ல வேண்டாமா

அதைப்பாட வேண்டாமா

ஊரில்கேள்க வேண்டாமா

மனங்கொள்ள வேண்டாமா

அணாக்கொடுத்து புஸ்தகம்வாங்கிப் பார்க்க வேண்டாமா

பார்த்துநல்ல குற்றங்குறை தெரிய வேண்டாமா’

இந்தக் குஜிலி வகைப் பாடல்கள், இப்போது தெருக்களின் பெயராக மட்டுமே நம்மிடையே உள்ளது. சபை நாகரிகம் கருதியோ என்னவோ, இன்று நாம் அந்தப் பெயரைப் பொதுவெளியில் சொல்லவே கூச்சப்படுகிறோம், அதன் பொருள் உணராமல்.

https://tamil.thehindu.com/society/real-estate/article24600246.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.