Jump to content

சகாப்தம் தாண்டிய ஒரு வீரன் “வி.ரி.மகாலிங்கம்”


Recommended Posts

சகாப்தம் தாண்டிய ஒரு வீரன் “வி.ரி.மகாலிங்கம்”

IMG_5357.jpg

இலங்கையின் விளையாட்டுத்துறைசார் ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவரான வி.ரி.மகாலிங்கம் யாழ்ப்பாணம் நாவலர் வீதியைச் சேர்ந்தவர். விளையாட்டுத் துறையோடு பொலிஸ் துறையில் இணைந்துகொண்ட இவர் எதிர்பாராத விபத்தொன்றில் சிக்கி 1966 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

விளையாட்டுத்துறையில் துடுப்பாட்டம், கால்பந்தாட்டம், நீளம்பாய்தல், உயரம் பாய்தல் என பல்வகை ஆளுமை கொண்டவர். அன்றைய காலகட்டத்தில் பல்வேறு சாதனைகளுக்குச் சொந்தக்காரராக திகழ்ந்தார். பொலிஸ் துறையில் இணைந்தபோதும் தனது விளையாட்டுத்துறைமீதான ஈடுபாடுகளைக் குறைத்துக்கொள்ளாத இவர் மரணிக்கும்வரை இலங்கையில் புகழ்பூத்த விளையாட்டு வீரராகவே திகழ்ந்தார்.

வி.ரி.மகாலிங்கம் 1943 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 23 ஆம் திகதி தம்பி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். ஆறு சகோதரர்களுடனும் ஒரு சகேதரரியுடனும் எண்மரில் ஒருவனாய் மகாலிங்கம் வாழ்ந்தார்.

தனது ஆரம்பக் கல்வியை நாவலர் பாடசாலையில் கற்ற இவர் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்றார். பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இணைந்துகொண்ட இவர் விளையாட்டுத்துதுறையில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி கல்லூரிக்கும் யாழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்தார்.

கல்வியில் மட்டும் கோலோச்சியிருந்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி விளையாட்டுத்துறையிலும் புகழைத் தேடிக்கொள்வதற்கு மகாலிங்கத்தின் பங்கு அளப்பரியது. யாழ்ப்பாணம் இந்துவின் விளையாட்டுப் போட்டிகளிலும் யாழ்ப்பாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளிலும் கனிஷ்ட பிரிவின் முதல் வெற்றியாளன் மகாலிங்கம்தான்.

அதன் பின்னரான காலபகுதியில் மத்தியகல்லூரியில் இணைந்துகொண்ட போதும் அங்கும் அவர் விளையாட்டுத்துறையை விட்டுவைக்கவில்லை. விளையாட்டுத்துறையில் சகல பிரிவுகளிலும் சளைக்காமல் சாதனை நிகழ்த்தினார். 1959 இல் யாழ்ப்பாணக் கல்லூரிகளுக்கிடையிலான விளையாட்டுச் சங்க போட்டிகளில் மத்தியகல்லூரி அணிக்கு தலைமைதாங்கிய இவர் வெற்றிக் கனியைப் பறித்துக்கொடுத்தார். 1961 ஆம் ஆண்டிலும் யாழ்ப்பாணக் கல்லூரிகளுக்கிடையிலான விளையாட்டுச் சங்க போட்டிகளில் மத்தியகல்லூரி அணிக்கு தலைமை தாங்கிய இவர் சிரேஸ்ட பிரிவில் முதல்நிலை வீரராகத் தெரிவாகியதோடு அரிய சாதனைக்காக வழங்கப்படுகின்ற விருதினையும் பெற்றுக்கொண்டார்.

தனது கல்லூரிக்காக மகாலிங்கம் செய்த சாதனைகளில் பெரிய சாதனை கல்லூரி அணிகளுக்கு தலைமை தாங்கியது மட்டுமன்றி 1962 ஆம் ஆண்டு இலங்கை ரீதியான விளையாட்டுப் போட்டிகளில் நீளம் பாய்தலிலும் உயரம் பாய்தலிலும் அவர் பெற்றுக்கொண்ட வெற்றி என்றே கூறலாம். இவரது இச் சாதனைக்காக அகில இலங்கை கல்லுரிகளின் போட்டிக் குழுவினரால் வர்ண விருது இவருக்கு வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணக் கல்லூரிகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியின்போது நீளம் பாய்தலில் 21 அடி ஆறரை அங்குலம் நீளம் பாய்ந்து இலங்கைச் சதனை ஒன்றை தன்வசப்படுத்தினார்.

இத்தோடு மட்டுமன்றி இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் இவர் ஈட்டிய சாதனைகளைக் கௌரவித்து கொழும்புக்கு வெளியே உள்ள கல்லூரிகளுக்கு வழங்கப்படுகின்ற “தார்பற்” வெற்றிக்கிண்ணத்தை யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி முதல்முறையாக தனதாக்கிக்கொண்டது.

1962 ஆம் ஆண்டு இலங்கையின் பிரபல விளையாட்டுக் கழகமாகத் திகழ்ந்த இலங்கை வழிவயற் கழகத்தினர் இவருக்கு இலங்கையின் சிறந்த கனிஷ்ட விளையாட்டு வீரர் என்ற கௌரவத்தை வழங்கினர். 1963 இல் யாழ்ப்பாணம் ஏஏஏ (AAA) விளையாட்டுப் போட்டியில் நீளம்பாய்தலில் சாதனை ஒன்றினை நிலைநாட்டினார்.  நீளம் பாய்தலிலும் உயரம் பாய்தலிலும் இவர்பெற்ற சாதனைகளினால் 1964 ஆம் ஆண்டு இவர் இலங்கையின் தேசிய வீரராகும் கௌரவத்தினைப் பெற்றுக்கொண்டார்.

மெய்வல்லுனர்ப் போட்டிகளோடு மகாலிங்கத்தின் சாதனைகள் முற்றுப்பெற்றிருக்கவில்லை. துடுப்பாட்டத்திலும் உதைபந்தாட்டத்திலும் யாழ்ப்பாணம் மத்தியகல்லூரிக்குப் பெருமை தேடிக்கொடுத்த வீரராக அவர் திகழ்ந்தார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லுரியின் கிரிக்கெட் அணிக்கு மட்டும் மகாலிங்கம் தலைவரல்ல. யாழ்ப்பாண கல்லுரிகளின் கிரிக்கெட் அணிக்கும் மகாலிங்கம்தான் தலைவர். 1963 ஆண்டு யாழ்ப்பாண பாடசாலைகளின் கிரிக்கெட் அணிக்குத் தலைமைதாங்கிய அவர் கொழும்பு பாடசாலைகளுக்கிடையிலான அணிக்கு எதிராகக் களமிறங்கி 89 ஓட்டங்களால் யாழ்ப்பாண பாடசாலைகள் அணியை வெற்றிபெறச்செய்தார்.

அன்றைய போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சிப் போட்டிகளில் பங்குபற்றியிருந்த டேவல் லீவரெஸ் மற்றும் சரத்விமலரத்தின என்பவர்களுடன் விளையாடினார்.
யாழ்ப்பாணம் மத்தியகல்லூரியின் உதைபந்தாட்ட அணியில் தன்னை இணைத்துக்கொண்ட மகாலிங்கம் உதைபந்திலும் உச்ச புகழைப் பெற்றுத்திகழ்ந்தார். 1962, 1963 ஆம் ஆண்டுகளில் கல்லுரியின் அணியில் விளையாடிய அவர் யாழ்ப்பாண கல்லூரிகளுக்கிடையிலான போட்டிகளில் பல வெற்றிகளைக் குவித்தார்.

1964 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் உதைபந்தாட்டக் கழகத்துக்காக விளையாடுவதறகாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அகில இலங்கை ரீதியிலான கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் பங்கேற்றார். அவரது அணி அரையிறுதி ஆட்டம்வரை சென்றது. உதைபந்தோடு மகாலிங்கம் வலைபந்தாட்டத்திலும் சிறந்த ஈடுபாடு கொண்ட விளையாட்டு வீரராகத் திகழ்ந்துள்ளார்.

கல்லூரிக் காலம் முடித்து 1964 ஆம் ஆண்டு இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தில் உதவிப் பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு நியமனம் பெற்ற மகாலிங்கம் களுத்துறையில் தனது உதவிப் பொலிஸ் பரசோதகர் பயிற்சியினை முடித்து இரத்தினபுரியில் பணிக்கு அமர்த்தப்பட்டார்.

பின்னர் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திலும் மருதானை பொலிஸ் நிலையத்திலும் உதவிப் பொலிஸ் பரிசோதகராகப் பணியாற்றினார். பொலிஸ் துறையிலும் தனது விளையாட்டு ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் அவர் சற்றும் குறைத்துக்கொள்ளவில்லை. பொலிஸ் துறையில் உடற்பயிற்சி விளையாட்டுக்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர் பொலிஸ் திணைக்களங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்றார். 1965, 1966 ஆம் ஆண்டுகளில் அரசினர் சேவைளாயர் போட்டிகளில் பங்கேற்ற அவர் நீளம்பாய்தல் மற்றும் உயரம்பாய்தலில் முதல்நிலை வீரராக வெற்றிபெற்றார்.

குறித்த இரு வருடங்களிலு்ம சிறந்த விளையாட்டு வீரராகத் தெரிவுசெய்யப்பட்ட அவர் “ஒஸ்மன் டீ சில்வா வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டார். பொலிஸ் விளையாட்டுப் போட்டிகளில் நீளம் பாய்தல் மற்றும் உயரம்பாய்தலின் சாதனைக்குச் சொந்தக்காரரும் இவராகவே திகழ்க்கின்றார்.

இலங்கை பொலிஸ் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டிகளில் இவர் விளையாடும் அணியே வெற்றிக்கனியைப் பறித்தது.

கல்லூரிக் காலத்திலும் சரி பொலிஸ் துறையில் இணைந்தபோதும் சரி விளையாட்டோடு மட்டும் நின்றுவிட்டாது சிறந்த ஒழுக்கமுள்ளவராக தன்னை உயர்த்திக்கொண்ட மகாலிங்கத்தின் வாழ்க்கை மிகக் குறுகிய காலத்தில் முடிந்துபோய்விடும் என எவரும் எண்ணியிருந்திருக்கவில்ல. அந்தத் துர்ப்பாக்கிய சம்பவம் 1966 ஆம் ஆண்டு நிகழ்ந்திருந்தது. 1966 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் மூன்றாம் திகதி வியாழக்கிழமை அதிகாலை கொழும்பில் வாகனம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த அவரது உயிர் திடீரென ஏற்பட்ட விபத்தொன்றில் பறிக்கப்பட்டுவிட்டது.

அச் செய்திகேட்டு இலங்கையின் விளையாட்டுத்துறை மட்டுமன்றி மத்தியின் மைந்தர்களும் துடிதுடித்துப்போனார்கள். தங்களின் தலைவனாய் மத்தியின் விளையாட்டுத்துறையின் வழிகாட்டியாய் திகழ்ந்த ஒரு அண்ணனை இழந்த கோகத்தில் மத்தியின் மைந்தர்களும் வியாட்டுத்துறையினர் ஒரு நண்பனை இழந்த சோகத்திலும் துயருற்றனர்.

விளையாட்டுத் துறையின் தொடர் சாதனையாளர்களாக பத்திரிகைகளில் அடிக்கடி இடம் பெறும் மகாலிங்கம் இதனால் ஊடகத்துறை நண்பர்களுடனும் நெருங்கிய உறவினைக் கொண்டவராக திகழ்ந்தார். மகாலிங்கத்தின் மரணம் அறிந்த பத்திரிகை நண்பர்கள் ஒருகணம் திகைத்துநின்றனர். மகாலிங்கத்தின் சாதனைகளில் எழுதிய அவர்களது கரங்கள் அவரது மரணச் செய்தியை எழுதமுடியாது தவித்தன. மறுநாள் பத்திரிகைகள் யாவும் மகாலிங்கத்துக்கு இறுதி அஞ்சலியோடு புகழஞ்சலி செலுத்தின.

இவ்வாறு சகாப்தம் தாண்டிய விளையாட்டு வீரன் , வி.ரி மகாலிங்கம் ஞாபகார்த்தமான “வி.ரி.மகாலிங்கம் பிறிமியர் லீக் 20 – 20 துடுப்பாட்டத்தொடர் 2017 ஆம்ஆண்டு முதல் நடைபெறவுள்ளது.

யாழ்மாவட்ட கிரிக்கெட் சங்கம் வி.ரி.மகாலிங்கத்தின் குடும்பத்தினரான அவரது சகோதரர் வி.ரி.சிவலிங்கத்தின் அனுசரணையுடன் இந்த கிரிக்கெட் சுற்றுத்தொடரை இந்த ஆண்டுமுதல் நடத்த தீர்மனித்துள்ளன.

வி.ரி.சிவலிங்கம் இலங்கையின் சிரேஷ் சட்டத்தரணிகளுள் ஒருவராகத் திகழ்கின்றார். அவரது முழுமையான நிதிப்பங்களிப்புடன் இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 24 கழகங்கள் பங்கேற்ற “வி.ரி.மகாலிங்கம் பிறிமியர் லீக் T20 கிரிக்கெற் சுற்றுப்போட்டியில்” இறுதியாட்டத்துக்கு யாழ். பல்கலைக்கழக அணியும் திருநெல்வேலி ரி.சி.சி விளையாட்டுக் கழக அணியும் தெரிவாகியுள்ளன.

2017 ஆம் ஆண்டுக்கான இறுதிப் போட்டி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் மாலை நடைபெறவுள்ளது.

இன்றைய இறுதிப்போட்டிக்கு பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் கலந்து கொள்ளவுள்ளார்.

http://globaltamilnews.net/archives/46351

Link to comment
Share on other sites

வி.டி. மகாலிங்கம் தொடரின் இறுதிப் போட்டி
 

image_d4b420fdb3.jpg

வி.டி. மகாலிங்கம் ஞாபகார்த்த பிறீமியர் லீக்கின் இறுதிப் போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணியும் திருநெல்வேலி கிரிக்கெட் அணியும் மோதவுள்ளன.

image_d4f855c12a.jpgimage_28b3c8e4cf.jpg

யாழ். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், வி.டி.மகாலிங்கம் ஞாபகார்த்த பிறீமியர் லீக் இருபதுக்கு - 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டியானது, இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது. இச்சுற்றுப் போட்டியில், யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 24 அணிகள் பங்குபற்றின.

சென்றலைட்ஸ், ஜொலிஸ்ரார்ஸ், ஸ்ரீகாமாட்சி, ஸ்ரான்லி, அரியாலை மற்றும் விக்டோரியன்ஸ், ஜொனியன்ஸ், கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், ஹாட்லியன்ஸ், ஸ்கந்தா ஸ்ரார், றெஜின்போ, கிறாஸ்கொப்பர்ஸ், ஓல்கோட், சென்ரல், திருநெல்வேலி வை.எம்.எச்.ஏ, யூனியன்ஸ், பற்றீசியன்ஸ், மானிப்பாய் பரிஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி கிரிக்கெட் கழகம், டிறிபேக், நியுஸ்ரார், விங்ஸ், ரைரேன் ஆகிய அணிகள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றின.

அணிகள், நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 6 அணிகள் இடம்பெற்று அவற்றுக்கிடையில், லீக் முறையில் முதற்சுற்றுப் போட்டிகள் இடம்பெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களையும் பெற்ற அணிகள், காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் விலகல் முறையில் நடைபெற்றன. மொத்தமாக 66 போட்டிகள் இதுவரையில் நடைபெற்று முடிந்து, இச்சுற்றுப் போட்டியானது தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

அரையிறுதிப் போட்டிகளில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி, எட்டு ஓட்டங்களால் சென்றலைட்ஸ் அணியை வென்றது. அதேபோல், திருநெல்வேலி கிரிக்கெட் அணி, 21 ஓட்டங்களால் அரியாலை ஐக்கிய அணியை வென்றது.

 இறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக. யாழ். மாவட்டச் செயலர் நாகலிங்கம் வேதநாயகன், கௌரவ அதிதியாக, வட மாகாண கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் பி.றஜீவன், சிறப்பு அதிதிகளாக யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.கே. எழில்வேந்தன், மல்லாகம் கிராமிய அபிவிருத்திச் சங்கத் தலைவர் பாலாம்பிகை சிறிபாஸ்கரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

image_dbeb8e7c0a.jpgimage_79a644ed2d.jpg

இறுதிப்போட்டிக்கு முன்னதாக காலையில் மூன்றாமிடத்துக்கான போட்டியில் இடம்பெறவுள்ளது. இதில், அரியாலை ஐக்கிய அணியும் சென்றலைட்ஸ் அணியும் மோதவுள்ளன.

http://www.tamilmirror.lk/உள்ளூர்-விளையாட்டு/வி-டி-மகாலிங்கம்-தொடரின்-இறுதிப்-போட்டி/88-205888

Link to comment
Share on other sites

திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் மகாலிங்கம் தொடரில் சம்பியன்

 
திருநெல்வேலி கிரிக்கெட் கழகம்  மகாலிங்கம் தொடரில் சம்பியன்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

யாழ்ப்­பாண மாவட்ட துடுப்­பாட்­டச் சங்­கத்­தால் தனது அங்­கத்­து­வக் கழகங்களுக்கு இடை­யில் நடத்­தப்­பட்ட வி.ரி.மகா­லிங்­கம் ஞாப­கார்த்­தக் கிண்­ணத்­துக்­கான ரி-–20 தொட­ரில் திரு­நெல்­வேலி கிரிக்­கெட் கழக அணி கிண்­ணம் வென்­றது.

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி­ மைதா­னத்­தில் நேற்றுப் பிற்­ப­கல் 2 மணிக்கு இடம்­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக அணியை எதிர்த்து திரு­நெல்­வேலி கிரிக்­கெட் கழக அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய திரு­நெல்­வேலி கிரிக்­கெட் கழக அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 20 பந்­துப் ப­ரி­மாற்­றங்­கள் நிறை­வில் 9 இலக்­கு­களை இழந்து 129 ஓட்­டங்­க­ளைக் குவித்­தது. அதி­க­பட்­ச­மாக லவ­காந் 35 ஓட்­டங்­க­ளைக் குவித்­தார்.

பந்­து­வீச்­சில் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்கழக அணி­யின் சார்­பாக ஜனாந்­தன் 4 இலக்­கு­க­ளைக் கைப்­பற்­றி­னார்.

130 ஓட்­டங்­களை இலக்­கா­கக் கொண்டு பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்ப் பாணப் பல்­க­லைக் கழக அணி 19 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் 105 ஓட்­டங்­க­ளுக்கு சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது.

நிதர்­சன் அதி­க­பட்­ச­மாக 19 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார். பந்­து­வீச்­சில் சுரேந்­தி­ரன் 3 இலக்­கு­ளைக் கைப்­பற்­றி­னார்.

http://newuthayan.com/story/39731.html

Link to comment
Share on other sites

பல்கலை அணியை வீழ்த்தி V.T மகாலிங்கம் பிரீமியர் லீக் சம்பியனானது ரி.சி.சி

V.T மகாலிங்கம் அவர்களது ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட “வி.ரி.மகாலிங்கம் பிரீமியர் லீக் T-20” கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் யாழ் பல்கலைக்கழக அணியை 24 ஓட்டங்களால் வீழ்த்திய திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் தொடரின் சம்பியன்களாக முடிசூடியது.

முதலாவது முறையாக இவ்வருடம், யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கம் வி.ரி.மகாலிங்கம் அவர்களது சகோதரர் வி.ரி.சிவலிங்கத்தின் அனுசரணையுடன் நடாத்திய இந்த கிரிக்கெட் சுற்றுத்தொடர்  யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட 24 கழகங்களின் பங்கெடுப்புடன் இடம்பெற்றிருந்தது.

 

 

அரையிறுதிப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக அணியை எதிர்த்து சென்றலைற் விளையாட்டுக் கழகமும், திருநெல்வேலி ரி.சி.சி அணியை எதிர்த்து அரியாலை மத்திய விளையாட்டுக் கழக அணியும் மோதியிருந்தன. அவற்றில் வெற்றி பெற்ற யாழ். பல்கலைக்கழக அணியும் திருநெல்வேலி கிரிக்கெட் கழக அணியும் தொடரின் இறுதியாட்டத்துக்கு தெரிவாகியிருந்தன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (20) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்த இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற திருநெல்வேலி அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தனர்.

முதல் ஓவரிலேயே 5 ஓட்டங்களை சேகரித்திருந்த திருநெல்வேலி அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் தர்சிகன், அசோக்கினை அடுத்தடுத்து மைதானம் விட்டு அனுப்பினார் பல்கலையின் பந்துவீச்சாளர் ஜெனந்தன்.

பின்னர் 3ஆவது விக்கெட்டிற்காக இணைந்த ஜசிந்தன், லவகாந்த் ஜோடி அரைச்சத இணைப்பாட்டத்தினை பகிர்ந்திருந்த வேளையில் ஜசிந்தன், லோகதீஸ்வரால் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து துவாரசீலன் வீசிய 13ஆவது ஓவரில் சைலேஸ்வரன் 14, சுரேந்திரன் ஆகியோர் ஆட்டமிழக்க 81 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்கள் என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது திருநெல்வேலி அணி.

தொடர்ந்து வந்த சிவாராஜ் 14, சுரேஷ் 08, பிரபாவன் 08 மற்றும் கிருத்திகனின் பெறுமதியான 10 ஓட்டங்களுடன் 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது திருநெல்வேலி தரப்பு.

பந்து வீச்சில் ஜெனந்தன் 23 ஓட்டங்களிற்கு 04 விக்கெட்டுக்களையும், சிக்கனமாகப் பந்து வீசிய துவாரகசீலன் 10 ஓட்டங்களிற்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

 

 

தொடர்ந்து 130 என்ற இலகுவான இலக்கினை நோக்கி களம்புகுந்த பல்கலையின் ஆரம்பத் துடுப்பாட்ட விரர்களான கபில்ராஜ், கல்கோகன் இணை முதல் ஓவரிலேயே இரண்டு சிக்சர்கள், ஒரு பௌண்டரி உள்ளடங்கலாக 19 ஓட்டங்களை சேகரித்து.

அடித்தாடிக்கொண்டிருந்த கல்கோகனை பிரபாவன் ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்த ஓவரிலேயே சுரேஷின் பந்து வீச்சில் கபில்ராஜ் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த செந்தூரனையும் பிரபாவன் ஆட்டமிழக்கச் செய்ய 33/3 எனும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது பல்கலை அணி.

நான்காவது விக்கெட்டிற்காக துவாரகசீலன் மற்றும் குருகுலசூரிய ஆகியோர் 26 ஓட்டங்களைப் பகிர்ந்து போட்டியினை தம்பக்கம் ஈர்த்துக்கொண்டிருந்த வேளையில் தூவாரகசீலன் (14) சுரேந்திரனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

சுரேந்திரன் வீசிய 10ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் அடித்தாடி 6 ஓட்டம்பெற்ற கஜேந்திரன் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். குருகுலசூரிய 14, பண்டார ஆகியோரது விக்கெட்டுக்களை அடுத்த ஓவரில் அனுருத்தன் வீழ்த்தினார்.

அதன் பின்னர் 9ஆவது விக்கெட்டிற்காக நிதர்சன் மற்றும் சுபேந்திரன் 30 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்த வேளையில் சுபேந்திரன் ஆட்டமிழந்தார். 19ஆவது ஓவரில் லோகதீஸ்வர் ரன் அவுட் முறை மூலம் ஆட்டமிழக்க, 19 ஓட்டங்களுடன் நிதர்சன் களத்திலிருந்தார்.

இதன் காரணமாக, 24 ஓட்டங்களால் யாழ். பல்கலைக்கழக அணியினை வெற்றிகொண்ட திருநெல்வேலி கிரிக்கெட் கழக அணி V.T மகாலிங்கம் பிரீமியர் லீக்கின் முதலாவது கிண்ணத்தினை தமதாக்கியது.

திருநெல்வேலி அணியின் பந்து வீச்சினைப் பொறுத்தவரையில் சுரேந்திரன் 10 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும் அனுரதன், பிரபாவன், சுரேஷ் ஆகியோர் தலா 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டி சுருக்கம்

திருநெல்வேலி கிரிக்கெட்  கழகம் 129/09 (20) – லவகாந்த் 35,சைலேஸ்வரன் 14, சிவராஜ் 14, உதிரிகள் 21, ஜெனந்தன் 4/23, துவாரகசீலன் 3/10

யாழ் பல்கலைக்கழகம் 105/10 (18.2) – நிதர்சன் 19*, துவாரகசீலன் 14, குருகுலசூரிய 14, சுரேந்திரன் 03/10, அனுரதன் 02/18, பிரபாவன் 02/19

போட்டி முடிவு: 24 ஓட்டங்களால் திருநெல்வேலி கிரிக்கெட் கழகம் வெற்றி

மூன்றாம் இடத்திற்கான போட்டி

யாழ்ப்பாணம் சென்றலைட்ஸ் – அரியாலை சென்றல் ஆகிய அணிகள் மோதியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது சென்றலைட்ஸ்.

 

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய சென்றலைட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அணியின் சார்பாக ஜூலியஸ் 49, அலன்ராஜ் 34, செல்ரன் 23, டார்வின் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஜரோசன், ஜெனன்ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பதிலுக்குத் துடுபெடுத்தாடிய அரியாலை அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அரியாலை அணி சார்பாக கிருபாகரன் 53, பிரிசங்கர் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தனர். பந்துவீச்சில் அதிரடி காண்பித்த ஜெரிக் 25 ஓட்டங்களிற்கு 5 விக்கெட்டுக்களை விழ்த்தியிருந்தார்.  சென்றலைட்ஸ் அணியினர் 51 ஓட்டங்களால் வெற்றிபெற்று மூன்றாவது இடத்தினைத் தமதாக்கினர்.

விருதுகள்

இறுதிப் போட்டிக்கான விருதுகள்

சிறந்த துடுப்பாட்டவீரர் – லவகாந்த் – திருநெல்வேலி கிரிக்கெட் கழகம்

சிறந்த களத்தடுப்பாளர் – கிருத்திகன் – திருநெல்வேலி கிரிக்கெட் கழகம்

சிறந்த பந்து வீச்சாளர் – ஜெனந்தன் – யாழ் பல்கலைக்கழகம்

ஆட்ட நாயகன் – சுரேந்திரன் – திருநெல்வேலி கிரிக்கெட் கழகம்

 

தொடர் விருதுகள்

சிறந்த துடுப்பாட்ட வீரர் – தர்சிகன் – திருநெல்வேலி கிரிக்கெட் கழகம்

சிறந்த பந்து வீச்சாளர் – லோகதீஸ்வர் – யாழ் பல்கலைக்கழகம்

தொடர் நாயகன்  – துவாரகசீலன் – யாழ் பல்கலைக்கழகம்

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.