Jump to content

அண்டை வீட்டு நல்லவன்!


Recommended Posts

அண்டை வீட்டு நல்லவன்! - சிறுகதை

எழில்வரதன் - ஓவியம்: ரமணன்

 

சையாம பல மணி நேரமா காம்பவுண்டு சுவத்துக்கு முட்டுக்கொடுத்து உக்காந்திருக்காரே... அவர் பேரு111.jpg பார்த்தசாரதி. இப்ப யார்கிட்டயும் பேச மாட்டார். அவருக்கு பொண்டாட்டியோட சண்டை. ரெண்டு நாளா வயிறும் சரியில்லை; வாழ்க்கையும் சரியில்லை. அதனால, ஒருத்தர்கிட்டயும் பேசக் கூடாதுங்கற வைராக்கியம் அவருக்கு.

அவரைப் பார்க்க ரொம்ப நாள் கழிச்சு ஒரு ஃப்ரெண்டு வந்தாங்க. பேரு அமுதவள்ளி. பார்த்தசாரதியோட அந்தக் காலத்து டாவு. அவங்களுக்கு இப்ப ரெண்டு குழந்தைங்க. பார்த்தசாரதிகிட்ட, `கல்யாண வாழ்க்கை எப்படிடா போயிட்டிருக்கு?’னு கேட்டாங்க. பார்த்தசாரதிக்குக் கல்யாணம் முடிஞ்சி, ஆறு மாசம்தான் ஆச்சு. தாம்பத்ய வாழ்க்கையில பயங்கரத் தகராறு; டப்பா டான்ஸ் ஆடுது. ஆனா, சோத்துக்கு உப்புப் போட்டுத் திங்கறவன், பொண்டாட்டி சரியில்லைனு அடுத்தவன் பொண்டாட்டிகிட்ட புகார் பண்ண மாட்டான். பண்ணினா அது அசிங்கம். அதுவுமில்லாம, பேசக் கூடாதுங்கற வைராக்கியம். ஆனா, காலங்காத்தால இயற்கை உபாதை முட்டிட்டு நிக்குமே... அப்படி துக்கம் தொண்டைக்குழியில பீறிட்டு நிக்குது. அழாம இருக்க முடியாது. பார்த்தசாரதி வெடிச்சிட்டாரு. `ஓ...’னு ஒரே அழுகை.

p326a.jpg

“டேய், என்னாச்சுடா? வீட்ல ஏதாவது பிரச்னையா?” ஃப்ரெண்டு கேட்டாங்க.

“எனக்கு வீடே பிரச்னைதாண்டி. மூக்குல மொளகாப்பொடி தூவிக்கிட்டு, `ஹச்சு... ஹச்சு’னு தும்மிக்கிட்டே, ஒன்பதாயிரம் ஓட்டை இருக்கிற முண்டா பனியனைப் போட்டுக்க நீ ட்ரை பண்ணியிருக்கியா?”
``டேய்... லூசு... உன்னோட முண்டா பனியனை நான் எதுக்குடா போட்டுக்கணும்?”

“ஒரு பேச்சுக்குச் சொல்றேன்... தும்மிக்கிட்டு ஓட்டை பனியனைப் போட்டுக்கறது எவ்ளோ பெரிய கஷ்டம். எதுல கை விடறது, எதுல தலை விடறது, மிச்சமிருக்கிற ஆயிரம் ஓட்டையில எத விடறதுனு ஒரே குழப்பமா இருக்குமில்ல... அப்படி இருக்குடி என் பொண்டாட்டியோட குடும்பம் நடத்துறது”

“அப்படி என்னடா பிரச்னை?”

பார்த்தசாரதி மானஸ்தன். அந்தக் கால டாவாக இருந்தாலும் பொண்டாட்டி பத்தி வாயைத் தொறக்க மாட்டாரு. ஆனா, மூக்குல வந்த கொப்பளத்தை எத்தனை நாளைக்கு மறைக்கறது... வலி உசிர் போகுதுல்ல?
``பொண்டாட்டிங்கற பேருல முள்ளம்பன்றியைக் கையில குடுத்துட்டாங்க. பார்க்கிறவன்லாம் கேக்கறான்... `என்னாச்சி பார்த்து? பிசாசுகிட்ட அறை வாங்கின பிச்சைக்காரன் மாதிரி சுத்துறே... என்ன மேட்டர்?’னு. எல்லாருக்கும் தெரிஞ்சிபோச்சு, பார்த்தசாரதி பனியன்ல ஆயிரத்தெட்டு ஓட்டைன்னு.’’

பார்த்தசாரதி புலம்பறாரு. அதுகூடப் பரவாயில்லை. `` `ஒண்ணு உன் பனியன மாத்து... இல்ல பொண்டாட்டிய மாத்து. ஏன் இப்படி சீரியல் பார்க்குற நேரத்துல வந்து என்கிட்ட பொலம்பறே?’னு கடுப்படிச்சிட்டா சுப்புலட்சுமி.’’

``யாருடா அந்த சுப்புலட்சுமி?’’ - அமுதவள்ளி கேட்டாங்க.

``ஏய்... நீ இன்னும் கிளம்பலையாடி?”

“அடப்பாவி... முத்திப்போச்சா உனக்கு? நீ பாட்டுக்கு தனியா புலம்பறே?’’

பார்த்தசாரதிக்கு முத்தித்தாங்க போச்சு. இல்லைன்னா, சீரியல் பார்க்குற சுப்புலட்சுமிகிட்ட சொந்தக் கதையைச் சொல்லி அசிங்கப்பட்டு நிப்பாரா? ஆயிரம் ஓட்டைகள் உள்ள பார்த்தசாரதி பனியனைப் பத்தி ஊருக்குள்ள கசிய விட்டதே சுப்புலட்சுமிதான்.

பார்த்தசாரதிக்கும் அவர் பொண்டாட்டிக்கும் அப்படி என்னதான் பிரச்னை? இந்தக் கேள்விக்கு விடை தெரிஞ்சிட்டா, ராஜ்யத்துல பாதி எழுதிவெச்சு, ராஜ்யத்தோட இளவரசியைக் கல்யாணமே பண்ணிக்கலாம். அது ஒரு விடை தெரியாத சண்டை. நேத்துல இருந்து புதுசா ஒரு சண்டை. புருஷனைப் பார்த்தா சிரிக்காம, பேசாம, மொகத்தைத் திருப்பிக்கிட்டுப் போற சண்டை.

`அட கூறுகெட்ட புருஷா... இதுதான் என் பிரச்னை. அதை சரி பண்ணு’னு சொன்னா ஏதாவது செய்யலாம். பார்த்தசாரதியும், `உனக்கு என்னதாண்டி பிரச்னை?’னு நேரடியா கேட்டும் பார்த்தாச்சு. சிக்கன் சாப்பிடற நேரத்துல செத்த எலி ஞாபகத்துக்கு வந்தா ஒரு மாதிரி மூஞ்சியை வெச்சிப்பாங்கல்ல... அந்தம்மா அப்படி வெச்சிக்குது. மனுசன் என்னதான் பண்ணுவாரு. உடம்புல பிரச்னைன்னா வாய்விட்டுச் சொல்லலாம்... வாயே பிரச்னைன்னா?

பார்த்தசாரதி பஞ்சாயத்தெல்லாம் வெக்கறதில்லை. புருஷன் பொண்டாட்டிக் குள்ள சண்டைன்னதும், அமெரிக்காக்காரன் மாதிரி, அவசியமில்லாம வெடிகுண்டெல்லாம் தூக்கிட்டு வந்து, சண்டையைப் பெரிசு பண்ணி, சொந்த நாட்டுக்கு சூனியம் வெப்பாங்க. சப்பணங்கால் போட்டு, வந்த நாட்டுல சுரண்ட ஆரம்பிப்பாங்க. பாரந்தூர் பரமேசுக்கு அப்படி நடந்திருக்கு. பஞ்சாயத் துங்குற பேர்ல புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல வந்து, ஒருத்தி பாய்விரிச்சுப் படுத்துட்டா. இப்ப அவனுக்கு ரெண்டு பொண்டாட்டி. ரெண்டு சண்டை. ரெண்டு பஞ்சாயத்து. ரெண்டு ஓட்டை விழுந்த பனியன். இந்தக் கஷ்டகாலம் தேவையா?

அது மணக்குதோ, நாறுதோ... நம்ம பல்லை நாமதான் தொலக்கியாகணும்னு முடிவு பண்ணி, பார்த்தசாரதி, தன் அருமைப் பொண்டாட்டிகிட்ட சமாதானம் பேசினாரு. `பிரச்னையைச் சொல்லு... பேசி முடிச்சிக்கலாம்’னாரு.

இது வீடே இல்லையாம். குடும்பமே இல்லையாம். இங்கே வர்ற மனுசங்க மனுசங்களே இல்லையாம். வர்றவங்க மூஞ்செல்லாம் அவலட்சணமா இருக்காம். இப்படி இருந்தா, எப்படிக் குடும்பம் நடத்தறதுனு கேக்கறாங்க. பார்த்தசாரதி குழம்பிப் போயிட்டாரு. வீட்டுக்கு வர்ற விருந்தாளிங்க கோணல் மாணலா மூஞ்சியை வெச்சிருந்தா அவர் என்ன பண்ணுவாரு?

`நான் சந்தைக்குப் போனேன். அங்கேருந்த பொண்ணுங்க எல்லாம் அழகாவே இல்லை. அதனால கத்திரிக்கா வாங்கலை. எனக்கு சாப்பாடே வேணாம்.’னு சொன்னா அந்தம்மா சும்மா இருப்பாங்களா? `கடைக்குப் போனா, கண்ணு கத்திரிக்கா மேல இருக்கணும். எதுக்குப் பொண்ணு மேல போச்சு?’னு குதிப்பாங் கல்ல. ஒரு வீடுன்னா பலபேர் வருவாங்க. சொந்தக்காரிங்க, விருந்துக் காரிங்க, தெரிஞ்சவ, தெரியாதவ, பொண்ணுங்க, பொம்பளைங்க, பக்கத்து வீட்டுக்காரிங்க, கல்யாண மான அழகு தேவதைங்க, கன்னிப் பொண்ணுங்க... இப்படி யார் யாரோ வருவாங்க.

“அடேய்... பார்த்த சாரதி... உன் வீட்டுக்கு லேடீஸ் மட்டும்தான் வருவாங்களா? அதுவும் உன்னைப் பார்க்கவா?’’

``என்னைப் பார்க்க எவ வந்தா? எல்லாம் என் பொண்டாட்டியப் பார்க்க வருவாங்க... எனக்குனு யார் வராங்க?’’

வந்தது யாரா இருந்தாலும், வீட்டுக்கு வந்தவங்களுக்கு விருந்து வெப்பாங்க. அவங்களும் போட்டதைத் திம்பாங்க. அதுக்கப்புறம், நல்ல அகலமா சிரிச்சு, `நல்லாருக்கு விருந்து. நீங்களும் நம்ம வீட்டுக்கு வாங்க...’னு அழைச்சிட்டுப் போவாங்க. இதுதானே நடைமுறை. அதை விட்டுட்டு, `வந்தவங்களோட மொகறை ஏன் சப்பட்டையா இருக்கு... ஏன் அழகா இல்ல... ஏன் அடிபட்ட தேவாங்கு மாதிரி முழிக்கறாங்க?’னு ஆராய்ச்சியெல்லாம் பண்ணி, அதையே ஒரு சண்டை ஆக்கினா எப்படி?

“இந்த மனுசங்களை யார் படைச்சது?” பார்த்தசாரதி, அந்தம்மாகிட்ட அறிவுபூர்வமா ஒரு கேள்வி கேட்டாரு. அதுக்கு அவரே பதிலும் சொன்னாரு.

“மனுசங்களை அந்த சாமியில்ல படைச்சான். சிலபேர் அழகா இருப்பாங்க. சிலபேர் கொஞ்சம் முன்னே பின்னேதான் இருப்பாங்க. சாமிக்கு மட்டும் தூக்கம் வராதா? ஏதோ தூக்கக் கலக்கத்துல, உப்பினாப்பல, இழுத்தாப்பல, துருத்தினாப்பல சில பேரைப் படைச்சிடுவான். மொகம் குரங்காட்டம் இருந்தாலும், `இருக்குறதுலயே இதுதான் அழகான குரங்கு’னு நாம மனசைத் தேத்திக்கணும். புருஷனோட சண்டை யெல்லாம் போடக் கூடாது.”

“யோவ், பிரச்னை மூஞ்சியில இல்ல... உன் வீட்ல. ஒண்ணு வீட்டை மாத்திக்க. இல்லை உன் பொண்டாட்டிய மாத்திக்க...”

இப்ப சொன்னது, சுப்புலட்சுமி இல்லை. பார்த்தசாரதியோட அருமைப் பொண்டாட்டி.

பொண்டாட்டியே, `பொண்டாட்டியை மாத்திக்க’னு சொல்றான்னா பிரச்னை பெரிசாத்தான் இருக்கும். ஒண்ணில்ல... ரெண்டு பிரச்னை.

வீட்டுக்கு விருந்தாளிங்க வர்றாங்க. அவங்க கோணல் மாணலா மூஞ்சியை வெச்சுக்கறாங்க. அவங்க வந்து போறப்பல்லாம் சண்டையும் வருது. இந்த மூணையும் கூட்டிக் கழிச்சு, கொழம்பு வெச்சுப் பார்த்தா, இதுல ஏதோ சதி இருக்குனு பார்த்தசாரதி முடிவு பண்ணிட்டாரு. பொண்டாட்டிக்கும் நமக்கும் நடுவுல கலவரத்தை உண்டாக்கி, பிரிக்கணுங்கற நோக்கத்தோட, நேருக்கு நேர் மோத முடியாம, குறுகிய நெஞ்சும் குட்டி சைஸ் உள்ளாடையும் போடற யாரோ ஒரு எதிரியோட திட்டம்தான் இதுனு பார்த்தசாரதி உறுதியா நம்பிட்டாரு. யார் அந்த எதிரி? ஆராய்ச்சி பண்ணினாரு.

நேத்து கிரிஜா வந்தா. அவ பொறக்கறப்பவே புள்ளப்பூச்சி. சதியெல்லாம் பண்ண மாட்டா. ரெண்டு நாளைக்கு முன்னால, ரமா வந்தா. கல்யாணத்துக்கு முன்னால நல்லாதான் இருந்தா. இப்போ, ரிப்பேரான புல்டோசருக்கு அக்காவாயிட்டா. அவளும் சதி பண்ண வாய்ப்பில்லை. போன வாரம், அகஸ்டினும் அவன் பொண்டாட்டியும் வந்தாங்க. கூடவே அவளோட தங்கச்சி. வர்றப்ப சிரிச்சிட்டு வந்து, போறப்ப வாந்தி வர்றாப்பல மூஞ்சியை வெச்சிக்கிட்டுப் போனாங்க. ஒருவேளை, சதிகாரன் அகஸ்டினாக்கூட இருக்கலாம்...

``யோவ்... உன்னோட பிரச்னைக்கு இன்னொருத்தனோட கையைப் புடிச்சி இழுக்காதே... மொதல்ல உன் மூஞ்சியைப் பாரு. அதுவே அசிங்கமாத்தான் இருக்கு.”

பா.சாரதியோட பொண்டாட்டி, சண்டைக்குக் கிளம்பிட்டாங்க. அதுக்கப்புறம்தான் கண்ணாடியைப் பார்த்தாரு. ஒரு மாதிரி மூக்கெல்லாம் புடைச்சிக்கிட்டு, வாய் கோணி, பார்க்கவே அருவருப்பா... கண்ணாடியில தெரிஞ்சது மூஞ்சியே இல்லை... அது ஒரு பயங்கரம்.

“என்னாச்சுடி என் மூஞ்சிக்கு... கொரங்கு கடிச்ச இஞ்சியாட்டம் இருக்கு. எல்லார் மூஞ்சியும் கோணலாகறபடி யாராவது வெடிகுண்டு வீசிட்டாங் களா... இல்லை மருந்து, மாயம் பண்ணிட்டாங்களா?”
“இந்த நக்கல்தானே வேண்டாங்கறது. பிரச்னை மூஞ்சியில இல்லை, வீட்ல இருக்கு. வீடுங்கற பேர்ல பெரிய குப்பைத்தொட்டியைக் காட்டி, அதுல கொண்டாந்து உக்கார வெச்சிருக்கே. நான் கல்யாணத்தப்பவே சுமாராதான் இருப்பேன். இந்த வீட்டுக்கு வந்தப்புறம், என் மூக்கைப் பாரு. ஓயாம தும்மி, தும்மி மூக்கு பிரிட்டிஷ்காரன் பீரங்கி மாதிரி பொடைச்சிப்போச்சு.”

“ஏய்... பொடைச்சிருந்தாலும் உன் மூக்கு இருக்கே, அது ஒரு பொக்கிஷம்டி.”

“அடச்சீ... மூக்கை விடு... இப்போ இந்தக் கொஞ்சல் ரொம்ப அவசியமா? இந்த வீட்டை நீ எப்பதான் சுத்தம் பண்ணுவே? ஒரே அடப்பாசாரமா இருக்கு.”

“இது பழைய வீடும்மா. பரம்பரைச் சொத்து. கடந்த நூறு வருசமா தாத்தா பாட்டி காலத்துல இருந்து அப்படியே இருக்கு. அதுவுமில்லாம பரம்பரை வீட்டைச் சுத்தம் பண்ணினா அதிர்ஷ்டம் போயிடும்னு சொல்வாங்க...”

“இதென்ன கூமுட்டைத்தனமா இருக்கு... யார் அப்படிச் சொன்னாங்க?”

“என் பாட்டிதான் சொன்னாங்க.”

“இருக்காங்களா, செத்துட்டாங்களா?”

“சின்ன வயசுலேயே செத்துட்டாங்க.”

“எப்படி இருப்பாங்க... வீட்டை இப்படி வெச்சிருந்தா அல்பாயுசுல போக வேண்டியதுதான். நூறு வருசமா ஒட்டடை கூட அடிக்காம இப்படியா வெச்சிருக்கறது? வர்றவங்க, இங்கே ஆரம்பிச்சு, வீட்டுக்குப் போற வரைக்கும் `கர்ரு... கர்ரு...’னு காறித் துப்பு றாங்க. எனக்கு அசிங்கமா இருக்கு. ஒண்ணு, வீட்டைச் சரிபண்ணு; இல்லை, என்னை மறந்துடு. நான் என் அம்மா வீட்டுக்கே போயிடறேன்.”
மொதல்ல, `வீட்டுக்கு வர்றவங்க மொகமே சரியில்லை’னு சொன் னாங்க. இப்போ, `வீடு குப்பையா இருக்கு’னு சொல்றாங்க. வீடு குப்பையா இருக்குறதுக்கும், வர்றவங்க மொகம் கோணலா இருக்குறதுக்கும் சம்பந்தம் இருக்கா? பா.சாரதி பொண்டாட்டி, `இருக்கு’னு சாதிக்கறாங்க.

“இப்படிப் பாழடைஞ்ச வீட்டுல இருந்தா, தெனத்துக்கும் நொச்சு நொச்சுனு தும்மி, சீக்கு வந்து, மண்டையில சளி கோத்து, மூஞ்சி வீங்காம என்ன பண்ணும்? வா, வந்து பாரு. வெளியே மத்தவங்கெல்லாம் எவ்ளோ தெளிவா இருக்காங்கன்னு.’’

பார்த்தசாரதி சட்டையப் பிடிச்சு இழுத்துட்டு வந்து, தெருவைக் காட்றாங்க. பார்த்தசாரதியும் பார்த்தாரு. இந்த உலகத்தில் எல்லாரும் அழகாத்தான் இருக்காங்க. எதிர்வீட்டு பைஜாமா பொண்ணு, மாடிவீட்டு தாவணி, ஸ்கூட்டரில் போகும் சுடிதார், ஜீன்ஸ் போட்ட காளியம்மா,  காய்கறி வாங்கப் போகும் நேப்பாள மங்கை, வராண்டாவில் நின்று கூந்தல் உலர்த்தும் சின்ன வயசு டீச்சரம்மா, கோயிலுக்குப் போகும் மீனாட்சி... எல்லாருமே அழகாத்தான் இருக்காங்க.

“அப்ப ஆம்பளைங்க அழகா இல்லயா?”

“ஆம்பளைங்க அழகா இருந்தா என்ன, இல்லாட்டி எனக்கென்னடி வந்துச்சு. நம்ம வீட்டுக்கு யார் சூனியம் வெச்சது? நமக்கும் வர்றவங்களுக்கும் மூஞ்சி இப்படி ஆகறதுக்கு காரணம் என்ன... மொதல்ல அதை ஆராய்ச்சி பண்ணலாம்.”

“மனுசனா பொறந்தவனுக்கு ஒண்ணு மூளை இருக்கணும், இல்லை மூக்காவது இருக்கணும். இப்படி மூக்கும் இல்லாத, மூளையும் இல்லாத ஆளுக்குப் பொண்டாட்டியா வந்து வாய்ச்சேன் பாரு... எனக்கு வேணும். செத்த எலியை அடைச்சுவெச்ச டப்பாவாட்டம் வீடு நாறிக் கெடக்குது. வீடு பூரா ஒரே ஒட்டடை. இந்தப் பாழடைஞ்ச வீட்டுல எத்தனை நாளைக்கு இருக்குறது?”

“ஏய் கோவிச்சிக்காதடி... இப்ப என்ன உன் பிரச்னை... வீட்டைச் சுத்தம் செய்யணும். அவ்ளோதானே? நீயே பண்ணிக்க..”

“ஹாங்... நல்லா சொல்வியே... வந்த புதுசுல நான் பண்ணிக்கறேன்னு சொன்னேன். விட்டியா நீ. இப்ப என்னால முடியலை. நான் பண்ணவும் மாட்டேன்.”

வீட்டைப் பராமரிக்கவேண்டியது புருஷனா பொண்டாட்டியானு திரும்பவும் சண்டை. பார்த்தசாரதியோட பரம்பரையில வீட்டைப் பராமரிக்கறது, சுத்தம் பண்றது எல்லாமே பொண்ணுங்கதான். `அதுதான் உலகத்து நியதி’னு ஊர்ஜிதப்படுத்தி, ஊறுகாய் போடப் பார்த்தாரு. வேலைக்கு ஆகலை.

`ஒரு பொண்ணு பொடவை கட்டிக்கிட்டு, ஏணியில ஏறி ஒட்டடை அடிக்க முடியுமா... அது பாதுகாப்பா? கீழே விழுந்து இடுப்பு எலும்பை ஒடைச்சிக்கிட்டா என்ன பண்ணுவ? காலம் முழுக்க தனியா படுக்க உனக்கு பயமாயிருக்காதா?’னு அருமைப் பொண்டாட்டி கேட்டாங்க. இது மொதலுக்கே மோசம். பார்த்தசாரதி தரையில படுத்தாலும் தனியா படுக்க மாட்டாரு. ராத்திரி ஆனா தேவைப்படற தேவலோக மதன சுந்தரிகளின் கதையனு பவங்கள் கேக்காம அவருக்குத் தூக்கம் வராது. அதுவுமில்லாம, பொண்டாட்டி கீழே விழுந்து இடுப்பெலும்பை ஒடைச்சிக்கிட்டா சமைக்கறது, துவைக்கறது, துடைப்பமெடுத்து வாசல் கூட்டிக் கோலம் போடுறதுனு மொத்த எதிர்காலமும் பொடவை கட்டிப் பொங்கல் வெக்கிற மாதிரி ஆகிடும். அதனால, வீட்டைச் சுத்தம் பண்ற பொறுப்பைப் பார்த்தசாரதியே ஏத்துக்கிட்டாரு. ``ஒரே நாள்ல, வீட்டை ஒதுங்கவெச்சு, ஒட்டடை அடிச்சு, பளபளனு ஆக்கிக் காட்டுறேன் பாருடி’’னு சவால் விட்டாரு. பொண்டாட்டியை, சுப்புலட்சுமி யோட சேர்த்து பூங்காவுக்கு அனுப்பி, ``சோளப்பொரியும், ஐஸ்க்ரீமும் சாப்பிட்டுட்டு வா. வீட்டை மாளிகை மாதிரி ஆக்கி வெக்கிறேன்’னு வீர சபதம் பண்ணிட்டாரு.

`வீட்ல அப்படி என்னதான் குப்பை?’னு பரண்ல ஏறிப் பார்த்தப்பதான் வீட்டோட பயங்கரத்தைப் பார்த்தசாரதியால புரிஞ்சிக்க முடிஞ்சுது. அது வீடே இல்லை. `பாதாள பைரவி’ பேய்க் குகையில் வருவது மாதிரியான ஒரு பயங்கரம். ஏகப்பட்ட சிலந்திப் பூச்சிங்க  படை படையா கூடு கட்டியிருக்கு. எலி குடும்பக்கட்டுப்பாடு பண்ணிக்காம, குடும்பம் பண்ணி குட்டி போட்டிருக்கு. அதில்லாம கரப்பான்பூச்சி, மரவட்டை, கறையான், காட்டுப் பூச்சினு ஏகப்பட்ட உயிரினங்கள்.

வீ்ட்டோட மேலே இப்படின்னா, கீழே அதைவிட பயங்கரம். குடிகாரனோட சண்டை போட்ட பைத்தியக்காரன் மாதிரி, பொருள்களெல்லாம் தாறுமாறா இறைஞ்சி கிடக்கு. `இதை ரெண்டு நாளைக்குள்ள, ரெண்டு மாசத்துக்குள்ள, ரெண்டு வருசத்துக்குள்ள, இல்லை... ரெண்டு ஜென்மம் எடுத்தாலும் சரிபண்ண முடியாது’னு மலைச்சிப் போயிட்டாரு. ஒரேயடியா ஓடிப் போயிடலாமானு யோசனை பண்ணினாரு. அப்படி ஓடினாலும், வாழ்க்கை கழுவிவெச்ச வௌக்கு மாதிரி பெரிசா ஒண்ணும் மாறிடாது. வீட்டை மொத்தமாவோ, சில்லறையாவோ சுத்தப்படுத்த முடிஞ்சா அது உலக அதிசயம். அதைப் பண்ணித்தான் ஆகணும். இல்லைன்னா, பொண்டாட்டி திரும்ப வரமாட்டாங்க. சொல்லிட்டுதான் போயிருக்காங்க.

பார்த்தசாரதி வெளியே போய், ஆற்றலை ஏற்றிக்கொண்டு, திரும்ப வந்து களத்துல இறங்கிட்டாரு. எங்கே போனார் என்பது ரகசியம். பெரிய துணி எடுத்து, மூக்கு துவாரம், கண் துவாரம் இரண்டையும் விட்டு, உடம்பின் மற்ற பாகத்தில் துணியைச் சுற்றி, கண்ணாடியில் பார்த்தால், சவ அடக்கம் செய்யப்பட்ட பிணம் போலவும் தெரிகிறது, யுத்தத்துக்குக் கிளம்பிவிட்ட போர்வீரன் போலவும் தெரிகிறது.

ஒட்டடை அடிப்பது, ராக்கெட் விடுவதுபோல அத்தனை கஷ்டமானதில்லை என்ற துணிச்சலோடு, விளக்குமாற்றைச் சுழற்ற ஆரம்பித்தார் பார்த்தசாரதி. முதலில், சின்னதாகப் புகை மூட்டம்போல ஆரம்பித்த தூசுப்படலம், புழுதிப் புயலாக மாறி, வீட்டைச் சூழ்ந்துகொண்டது. பட்டப்பகலில் வீடு இருண்டே போகிறது. கண் எரிகிறது; மூக்கு அரிக்கிறது; ஓயாத தும்மல். தூசு மண்டலத்துக்கு நடுவே ஒரு போர்வீரன். அந்த இடமே, நரகத்தின் இருள்போல மாறி பயமுறுத்த ஆரம்பிக்கிறது. அப்போது, அங்கே உயரமும் அகலமும் ஒரே அளவுகொண்ட உருண்டையான ஒரு ஆள் பிரசன்னமானார்.

`பாதாள பைரவி’ குகைக்குள் தைரியமிக்க இன்னொரு மனிதனா? புகைமூட்டத்துக்கு நடுவே நின்றிருந்த அந்த அஞ்சாநெஞ்சன், பார்த்தசாரதிக்கு நன்கு அறிமுகமான மதனகோபால். அண்டைவீட்டு நல்லவன். சுப்புலட்சுமியின் புருஷன். வந்த மனிதர், பார்த்தசாரதியை அதுவரை பார்க்காத சாரதிபோல அதிசயமாகப் பார்த்தார். அதற்கு இரண்டு காரணம் இருக்கலாம். ஒன்று, `இவனெல்லாம் கடைசியில ஒட்டடை அடிச்சு வீட்டைச் சுத்தம் பண்ணக் கிளம்பிவிட்டானா?’ என்ற அதிசயமாக இருக்கலாம். `இந்த வீட்டை இந்த ஜென்மத்துல சுத்தம் பண்ணிட முடியுமா?’ங்கற ஆச்சர்யமாகவும் இருக்கலாம்.

“என்ன... பார்த்து சார்... ஒட்டடை அடிக்கறீங்களா?”

“ஒட்டடை அடிக்காம, வீட்டு மேற்கூரையில பெரிய சைஸ் தோசையா சுடறேன்? நானே தூசு தும்புல அவதிப்படறேன்... இது புரியாம...”

“கோவிச்சிக்காதீங்க சார்... நீங்க இப்படி வேலை பார்க்கறதைப் பார்க்க எனக்கு சந்தோஷமா இருக்கு.”

“உலகத்துல பாதிப்பேர் அதானே பண்றாங்க. அடுத்தவன் வேலை செய்யறதைப் பார்த்து அதுல ஒரு சந்தோஷம்... சரி, தள்ளி நில்லுங்க.”

மதனகோபால் தள்ளிப் போய், ஒரு சேரைப் போட்டு உட்கார்ந்துவிட்டார். `இந்தாளுக்கு நம்ம வீட்டுல என்ன வேலை... அதுவும் இந்த நேரத்துல?’ பார்த்தசாரதிக்குக் குழப்பம். மதனகோபாலுக்கு எப்பவும் வேட்டிதான். வெளியே வந்தாலும் வீட்டிலிருந்தாலும் வேட்டிதான். அவரின் அரிசிமூட்டை உடம்புக்கு பேன்ட் தைக்கும் டெய்லர் இனிமேல்தான் பிறந்து வர வேண்டும். குண்டா இருந்தாலும் நல்ல மனுசன். அவருக்கு மூக்கில் வாசம் பிரித்தறிய முடியாத ஒருவகை நோய் உண்டு. அவரிடம் பார்த்தசாரதி கேட்டார்...

“கோபால் சார், இப்போ வீட்டுக்குள்ள வௌவால் வீச்சம் வருதா பாருங்க...”

“சேச்சே. எனக்குப் பூ வாசம்தான் வருது. நல்லா இருக்கு சார்.”

பார்த்தசாரதி அப்போதுதான் பார்த்தார். மதனகோபாலின் முகத்தில் அப்படி ஓர் அழகு. முகம் கோணலாகவோ, சப்பட்டையாகவோ, துருத்திக்கொண்டோ இல்லை. அப்படியென்றால் வீடு தூய்மையடைந்ததாக அர்த்தமா? பார்த்தசாரதிக்குப் பரம சந்தோஷம். அதன் பிறகு, வீட்டில் இருந்த வேண்டாத குப்பைகளைத் தெருவில் கொண்டு போய்க் கொட்ட, மதனகோபால் உதவிசெய்ய, பிறகு, கோணல் மாணலாக இருந்த ஃபர்னிச்சர்களைச் சரி செய்து, துடைத்து, கழுவியானது. மதனகோபால் எல்லாவற்றுக்கும் உதவிசெய்தார். அடுத்தவர் வீடு நறுவிசாக இருக்க வேண்டும் என்று நினைத்து, வீட்டுக்கு வந்து உதவிசெய்யும் மனிதர்களும் இந்தக் காலத்தில் இருக்கிறார்கள் என்றால், அது பார்த்தசாரதி செய்த புண்ணியம். மதனகோபாலே, ஜன்னல் மற்றும் கதவில் தொங்கிய அழுக்குத் திரைச்சீலைகளை மாற்றினார். கண்கவர் பொம்மைகளைத் துடைத்து அழகாக அடுக்கிவைத்தார். இப்போது வீடு மொத்தமாக மாறிப்போனது. பக்கத்து வீட்டுக்கு வந்துவிட்டதுபோல அத்தனை எடுப்பாகவும் அடையாளம் தெரியா மலும் இருந்தது. நேற்றைக்கு மங்கலாக, அழுக்காகத் தெரிந்த அந்த வீடு இன்று புதுப்பொலிவு பெற்றிருக்கிறது.

`வீடு தேடிவந்து உதவியவருக்கு ஒரு லெமன் ஜூஸ் தரலாமே...’ என்று பார்த்தசாரதி நினைப்பதற்குள்ளாக, மதனகோபால் டம்ளரில் ஜூஸ் போட்டு எடுத்து வந்து கொடுக்கிறார். இதுதான் உத்தமமான மனிதர்களுக்கான அடையாளம். `உன் வீடு, என் வீடு’ என்று பாரபட்சம் பாராமல், ஓடியாடி வேலைசெய்து உதவுவது.

இருவரும் சேர்ந்து ஜூஸ் குடிக்கிறார்கள். அப்போது, மதனகோபாலின் பையன், `அப்பா...’ என்று ஓடி வருகிறான். ஐந்து வயது. அவர் மடியில் உட்கார்ந்துகொள்கிறான். அவனுக்கும் அவர் ஜூஸ் கொடுக்கிறார். குளிர்பானத்தைக் குடித்துவிட்டு, பையன், “அப்பா, சாக்லேட்...” என்கிறான்.

மதனகோபால், ஆர அமர எழுந்து சென்று பீரோவைத் திறந்து, பணத்தை எடுத்து பையன் கையில் கொடுத்து, “உன் அம்மாகிட்ட சொல்லாதே... சத்தம் போடுவா” என்று சொல்லி வெளியே அனுப்புகிறார்.
பார்த்தசாரதிக்குப் பொங்குகிறது; கொதிக்கிறது. அடுத்தவன் வீட்டுக்கு வந்து உதவிசெய்வதை உலகமே அனுமதிக்கும். அதற்காக, அடுத்தவன் பீரோவைத் திறந்து, உரிமையோடு பணம் எடுத்து, பையனிடம் கொடுத்து, `உன் அம்மாகிட்ட சொல்லாதே’னு சொல்றது என்ன மாதிரியான திருட்டுத்தனம். `பட்டப்பகல்ல, கண்ணைத் தொறந்துட்டு இருக்கும்போதே திருடறது’னு இதைத்தான் சொல்வார்கள்.

“எனக்கு ஒரே பிள்ளைங்கறதால செல்லம் குடுத்து வளர்த்துட்டேன். அதான்... அவன் எது கேட்டாலும், `வாங்கிக்க’னு காசு தந்துடறது.”

“ரொம்ப சந்தோஷம். ஆனா மதனகோபால் சார்... உங்க வீட்டுக்குப் போயி உங்க பீரோவைத் தொறந்து, உங்க காசை எடுத்து, உங்க பையனுக்குக் குடுத்திருக்கணும். இங்கே என் வீட்டுக்கு வந்து என் காசை ஏன் எடுக்கணும்?”

“என்னது உங்க வீடு, உங்க காசா? பார்த்து சார்... பார்த்துப் பேசுங்க சார். நீங்க இருக்கிறது எங்க வீட்ல. நீங்க ஒட்டடை அடிச்சது எங்க வீட்டுக்கு. சுப்புலட்சுமி எவ்ளோ கூலி பேசினாளோ, அதை வாங்கிட்டு எடத்தைக் காலி பண்ணுங்க.”

p326b.jpg

`அடப்பாவி பார்த்தா... சொந்த வீடுனு நெனைச்சு, அண்டை வீட்டுக்கு ஒட்டடை அடிச்சிட்டியே... பொண்டாட்டிக்குத் தெரிஞ்சா சும்மா விடுவாளா?’ பார்த்தசாரதி நொந்துபோனார். சொந்த வீடுனு நெனைச்சு அடுத்தவன் வீட்டுக்கு ஒட்டடை அடிக்கிற அளவுக்கு பார்த்தா  ஒண்ணும் பைத்தியமில்லை. இந்தத் தவறு நடந்ததற்குக் காரணமே வேறு... அதைப் புரிந்துகொள்ள ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்.
பார்த்தசாரதிக்குக் கடவுள் பக்தி அதிகம். நான்கு மணி நேரம்கூட வெயிலில் மண்டியிட்டு உட்கார்ந்து அவர் சாமி கும்பிடுவது வழக்கம். ஒருநாள் கோயிலுக்குப் போகும்போது, வழி மறந்துபோனது. புதிய இடம், புதிய கோயில்.

வழியில் இருந்த ஒரு ஆளிடம், “சார், சூரியநாராயணன் கோயிலுக்கு எப்படி சார் போறது?”

எதிரில் இருந்த நபர், வாய் பேசப் பிடிக்காத `உர்...’ மூஞ்சிபோல. `உர்...’ என்றுதான் பதில் வருகிறது.

“என்னங்க பேசாம நிக்கிறீங்க... நீங்க ஊருக்குப் புதுசா?’’

அதற்கும் பதில் வெறும் ``உர்...’’

“அட என்னங்க இது! நீங்க என்ன ஊமையா..?’’

அதற்கும் ``உர்...’’ என்ற பதில். அந்த நபர், மேலே போகவும் முடியாதபடி வழிமறித்து நிற்கவும், பார்த்தசாரதிக்குக் கோபம் பொங்க ஆரம்பித்து விட்டது.

“இதப் பாருங்க... எனக்குக் கெட்ட கோவம் வந்துடும். உங்களுக்கு வழி தெரியலைன்னா `தெரியலை’னு சொல்லி வழி விட்டு நில்லுங்க. நான் போய்க்கிறேன்” என்றவர், அந்த நபரின் கையைப் பிடித்து இழுத்து நகர்த்தப் பார்க்க, அதுவரை வெறும் `உர்...’ மட்டும் சொல்லிக் கொண்டிருந்த நபர், லபோதிபோவென்று கத்தியபடி, பார்த்த சாரதிமீது பாய, பார்த்த சாரதியும் அந்த நபர்மீது பாய, இருவருக்கும் தள்ளுமுள்ளு, முட்டல் மோதல். தெருவில் புரண்டு சண்டை போட்டு, நாலு சாத்து சாத்திவிட்டு, கோயிலுக்குப் போகாமலேயே திரும்பி விட்டார் பார்த்தசாரதி.

வீட்டுக்கு வந்தால், பொண்டாட்டி லபோதிபோ.

“என்னாச்சுய்யா... சட்டை பேன்ட்டெல்லாம் கிழிஞ்சிருக்கு... உடம்பெல்லாம் காயமா இருக்கு.’’

“புதுசா ஒரு கோயிலுக்குப் போனேன். வழி தெரியலை. எவனோ ஒரு `உர்ரன்னா’கிட்ட வழி கேட்டேன். கை கால் எல்லாத்தையும் புடிச்சி கடிச்சிவெச்சுட்டான்.”

 “அடப் பாவி. வழி சொல்லப் பிடிக்கலைனா, பேசாமப் போகவேண்டியதுதானே... இப்படியா கடிச்சிவெப்பான் அந்தப் பாழாய்ப்போறவன்.’’

அப்போது, பார்த்தசாரதிக்கு வேண்டப்பட்ட ஒரு அம்மா வந்து, “நிர்மலா... உன் புருஷன் இன்னைக்கு ஒரு நாயோட வாலைப் புடிச்சி தரதரனு இழுத்து, அதோட ஒரே சண்டை. அந்த நாயும் நல்லா புடிச்சி கடிச்சிவெச்சிருச்சு. நாய் கடிச்சா பின்னால பிரச்னை ஆகும். போய் ஊசி போட்டுட்டு வா” என்றாள்.

பார்த்தசாரதியின் அருமைப் பொண்டாட்டி, புருஷனை முறைத்தபடி கேட்டாள்... “யோவ்... குடிச்சிருக்கியா? நீ திருந்தவே மாட்டியா? எனக்கு வீடும் வௌங்கலை, கட்டின புருஷனும் வெளங்கலை. உன்னை எப்படித்தான் நான் திருத்தறது...” என்று சண்டையை ஆரம்பித் தாள்.

பார்த்தசாரதி, உச்சி வெயிலில் நான்கு மணிநேரம் குப்புற விழுந்து ஏன் சாமி கும்பிடுகிறார்; சொந்த வீடென்று நினைத்து பக்கத்து வீட்டுக்கு ஏன் ஒட்டடை அடிக்கிறார்; மனைவி யோடு தினம் தினம் சண்டை வருவதற்கு என்ன காரணம் என்று இப்போது புரிந்திருக்கும். பூங்காவுக்குப் போன மனைவி வந்தால், அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்தில் உட்கார்ந்திருந்த பார்த்தசாரதி, சாமிக்கு முன்னால் போய், `இனிமேல் குடிப்பதில்லை’ என்று சத்தியமிட்டு சபதம் செய்தார். பார்த்த சாரதியின் கெட்ட நேரம், சத்தியம் செய்த இடத்தில் கூரான குத்துவிளக்கு இருந்தது. ஐயய்யோ ரத்தம்!

இனிமேல் பார்த்தசாரதி குடிக்க மாட்டார். அதற்கு அவரின் பொண்டாட்டியே போதும். அவளும் புதிதாக ஒரு குத்துவிளக்கை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாள். இப்போது ஆயுத பூஜை முடிந்தது. அடுத்து தீபாவளி வெடி. அது முடிந்து சுமங்கலி பூஜை. அதெப்படி மூன்று பூஜை ஒரே நாளில் வரும்... அதெல்லாம் தெரியாது. புருஷன் ஆரோக்கியத்துக்கு தீபாவளி வெடியும் சுமங்கலி பூஜையும் மிக நல்லது.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.