Jump to content

NH - 79 - ஐந்து கிலோ மீட்டர்


Recommended Posts

NH - 79 - ஐந்து கிலோ மீட்டர் - சிறுகதை

 

 

ல்லா நாளையும்போல கார்த்திக் அதிகாலையில் தனது காக்கி நிற கிளாசிக் ராயல் என்பீல்ட்   புல்லெட்டில் நந்தனம் ஒய். எம். சி. ஏ.  மைதானத்திற்குள் நுழைந்தான். முந்தைய நாள் இரவு மழை பெய்திருந்ததால் நிலம் முழுக்கக் குளுமை அடைந்து நெகிழ்ந்திருந்தது. நவம்பர் மாத இறுதி என்பதால் கொஞ்சம் குளிரும் பனி மூட்டமுமாயிருந்தது. அந்த நேரத்திலும் பத்துக்கும்  மேற்பட்டவர்கள் தெளிவற்ற பனிமூட்டத்திற்கு நடுவிலிருந்து ஓடிக்கொண்டும் நடந்து கொண்டும் இருப்பது உத்தேசமாய் தெரிந்தது.   

p260a.jpg

பொதுவாய் காலையில் இங்கே மூன்றுவகையான மனிதர்கள் வருகிறார்கள். பெரும்பாலும் மைதானத்தில் ஓடிக்கொண்டிருப்பவர்கள்  ஏதாவது ஒரு விளையாட்டில் விருப்பமும் , ஆர்வமும்  இருக்கும் வீர்களாய் இருப்பார்கள்.  குதிகாலைத் தரையில் ஊன்றாமல், நிறைய வேகமும் இல்லாமல் அதே நேரத்தில் விரைவாய் நடப்பவர்களைக் காட்டிலும் சற்று வேகமாய் ஷூ வின்  நுனிக்காலால் குதித்தபடியே ஜாக்கிங் செய்பவர்கள் நடுத்தர வயதினர்கள்.  நடந்துகொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் நாற்பத்தைந்தைக் கடந்த பெரிய பதவியில் அல்லது அந்தஸ்த்திலிருக்கும்  அரசு அதிகாரிகள் அல்லது பெரும் வணிகம் செய்பவர்களாய்  இருப்பார்கள். அரிதாய் இதில் விதிவிலக்கும் உண்டு. இங்கே வருபவர் யாராக இருந்தாலும் கார்த்திக்கை நன்றாக அறிந்து வைத்திருப்பார்கள். 

கார்த்திக் குமாரசாமி பிரபலமான ஓட்டப்பந்தய வீரன். கடந்த ஆண்டு ஆசிய ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வாங்கி தேசத்தைப் பெருமைப்படுத்தியவன். விளையாட்டுச் சார்ந்த எல்லா இந்தியப் பத்திரிகைகளிலும், இதழ்களிலும், அவனின் முகத்தை  அநேகமாய்  மாதம் ஒருமுறையாவது நாம் பார்க்கலாம்.  p270i4.jpg

கார்த்திக் ‘ஷூ’வைக் காலில் மாட்டிய பின்னும் இன்னும் ஓடாமல் அமர்ந்திருந்தான். அன்று அவனுக்கு ஏனோ ஓட  விருப்பமில்லாமல் இருந்தது. ஈரமும், குளிரும் காரணமில்லாமல் எல்லோருக்குள்ளும் ஒரு சோம்பறித்தனத்தை உருவாக்கி விடுகிறது என்று நினைத்தான். எந்த நோக்கமுமில்லாமல் தன் விலை உயர்ந்த  நைகி  ஷூவைப் பார்த்தான் . இந்தக் கால் முதன்முதலில் அணிந்த ஷூ கிருபாகரன் சார் வாங்கிக் கொடுத்ததுதான்.   

p260c.jpg

இதுபோன்ற ஒரு நவம்பர் மாதத்தில்தான் கார்த்திக்கின் அம்மா தன் உடலை உதறி உதறி நாவைக் கடித்து இறந்துபோனாள். கார்த்திக்கு அப்போது ஆறு வயது இருக்கும். ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ளடங்கிய கிராமம். அவனும் அவன் அண்ணன் பழனியும் அப்படி அழுதார்கள். அப்பாவின் குறைவான ஊதியம் அவரின் அதிகமான குடிக்கு ஈடு கொடுக்க முடியாமல் இருந்தது. பல பொழுதும் வீட்டில் சாப்பிட உணவிருக்காது. வழக்கமாய் இருவருக்கும் அரசுப்பள்ளியில் வழங்கும் ஒருவேளை மதிய உணவு மட்டும்தான். விடுமுறை நாள்களில் அதற்கும் வழி இல்லை. அப்படியான நாள்களில் அவனும் அவன் அண்ணன் பழனியும் அடுத்த ஐந்து கிலோமீட்டரில் இருக்கும் தனது அம்மா வழிப் பாட்டியின் வீட்டிக்குச் செல்வார்கள். காலையிலேயே பசித் தாங்காமல் சிறுவர்கள் இருவரும் கிளம்பி விடுவார்கள். வெயில் வரத் துவங்கிவிட்டால் இன்னும் சிரமம். வறட்சிப் பிடித்த அந்த ஊர்ப் பகுதியில் நிழலுக்குக்கூட கருவேலத்தைத் தவிர வேறு மரங்கள் இல்லை. ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் நடப்பட்டிருக்கும் மைல்கல்தான் அவர்களின் இலக்கு. சிறுவர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு செருப்பில்லாத வெறும் காலால் ஓடுவார்கள். துவக்கத்தில் ஒவ்வொரு முறையும் இரண்டு வயது மூத்த பழனிதான் இலக்கை விரைந்து அடைந்தான். பசி, பிஞ்சு வயிற்றைக் கடிக்கக் கடிக்கப் பொறுக்கமாட்டாமல் கார்த்திக் வெறிகொண்டு ஓடினான். ஒவ்வொரு மைல்கல்லுக்கும் ஒரு பந்தயம். ஒவ்வொரு வெற்றி அறிவிப்பு. பெரும்பாலும் ஐந்து பந்தயங்களிலும் இளையவன் கார்த்திக்தான் வென்றான்.  பின்னெல்லாம் பழனி இரண்டாம் கல்லை நெருங்கிக்கொண்டிருக்கையில்  கார்த்திக் நாலாம் கல்லைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு கல்லைத் தொடும்போதும், ‘நான்தான் வென்றேன்’ என்று உரக்கக் கத்துவான்.   

p260d.jpg

பசி அவனை ஓடத் தூண்டியது. பெரும்பாலும் அவன் அண்ணன், பாட்டி வீட்டிற்கு வந்து சேரும்போது  இவன் சாப்பிட்டு முடித்து உறங்கிக்கொண்டிருப்பான்.  உறங்கிக்கொண்டிருப்பவனை அவன் அண்ணன் பலமாய் கிள்ளிவைப்பான். கார்த்திக் வலி பொறுக்காது திடுக்கிட்டு எழுந்து அமர்வான். `வேகமா  ஓடி வந்திட்டு என் சாப்பாடெல்லாம் சேர்த்துச்  சாப்பிட்டுடியாடா’ என இருவரும் மல்லுக்கட்டுவார்கள். சுப்புத்தாயம்மாள்தான் விலக்கி விடுவாள். ``ஏலே, நிறைய இருக்குடா சண்டை போடாதீங்க.  புண்ணியவதி போய்ச் சேர்ந்துட்டா. பிள்ளைங்க பாவம் சோத்துக்குத்  தட்டழியுதுங்க’’  புலம்புவாள். நாளடைவில்  தன் அண்ணன் வருவதை நிறுத்திக்கொண்டாலும்,  அவனுக்கும் சேர்த்து உணவெடுத்து வரத் தனித்து ஓடத் துவங்கினான். இப்போது அவனுக்கு ஓடப் பிடித்திருந்தது. ஒவ்வொரு மைல்கல் வரும்போதும் அதன் மேல் அமர்ந்து இரண்டு நிமிடம் இளைப்பாறுவான். அவ்வளவுதான்; மீண்டும் வெயில் பரவத் துவங்கும்முன் ஓடுவான்.

ஆறாவது படிக்க ராமேஸ்வரம் வந்தபோது தான் விளையாட்டு ஆசிரியர் கிருபாகரன் சார் இவன் திறமையைக்  கண்டுபிடித்தார். எல்லா பந்தயங்களிலும் உடன் படிக்கும் மாணவர்கள் இலக்கின் அரைப்பங்கைக் கடந்து கொண்டிருக்கையில் இவன் இலக்கைக் கடந்து நிற்பான். கிருபாகரன் சார் கார்த்திக்கைப் பன்னிரெண்டாவது படிக்கும் பெரிய பையன்களோடு ஓடவிட்டுப் பார்த்தார். அங்கேயும் அவன்தான் இலக்கை முதலில் அடைந்தான். அதன் பிறகு பயிற்சியின் மூலம் அவனை ஒழுங்குபடுத்தினார். அவனுக்கு ஐந்து கிலோமீட்டர் ஓடிவிட்டால், சாப்பிட வேண்டும். கிருபாகரன் சாரிடம் சொல்வான். ``சார்... நான் பரிசுக்காக ஓடலை. பசிக்காகத்தான் ஓடுறேன்’’ என்பான். அவருக்குத் தெரியும். தினமும் பயிற்சி முடிந்ததும், அவரால் இயன்ற நல்ல உணவை வாங்கி வைத்திருப்பார். பசி  இருந்தால்தான் வெறிகொண்டு ஓட முடியும் என்பதால், போட்டி நடக்கும் நேரங்களில் பட்டினியாகக் கிடப்பான். கிருபாகரன் சாரும் அவனைப் பசியோடவே விட்டுவிடுவார். வெற்றி பெற்றவனை எல்லோரும் தேடிக்கொண்டிருப்பார்கள். அவன் பரிசு வாங்கப் போகாமல் எங்காவது அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பான்.  மற்ற எல்லா வீரர்களும் ஓடத் தயாராவதற்கு முன்தான் சத்தான ஆகாரங்கள் எடுத்துக் கொண்டிருப்பார்கள்.  கார்த்திக்கைப் பசிதான் இயக்கியது. இப்போதுவரை அப்படித்  தான்.   

p260b2.jpg

மாவட்ட அளவிலான பந்தயத்திற்குச் செல்லும்போது கிருபாகரன் சார் அவனுக்கு ஒரு ஜோடி நல்ல விலையுள்ள ஷூ ஒன்றை வாங்கிக் கொடுத்தார்.ஓடி ஓடி எல்லா பந்தயங்களிலும்  வென்றான்.    பன்னிரெண்டாவது முடித்ததும்  அவர்தான் சென்னையில் இங்கு வந்து சேர்த்தார். கிருபாகரன் சார் இப்போது தன் பணிக்காலம் முடிந்து ஓய்வுபெற்று விட்டார். கார்த்திக்கின் புகைப்படத்தை எப்போதாவது நாளிதழ்களில்   பார்த்துவிட்டால் போதும். உடனே போன் செய்து விடுவார். அவன் தேசிய அளவில் ஓடுவதைக் காண வேண்டுமென்பதற்காகவே தன் மகளிடம் தொணதொணத்து எல்லா ஸ்போர்ட்ஸ் சேனல் இணைப்புகளையும் வாங்கினார். அந்தப் பந்தயத்தில்தான் கார்த்திக்குக்கு வெள்ளிப் பதக்கம். அன்று இரவு கார்த்திக்கு போன் செய்து முதல் வாய்ப்பைத் தவறவிட்டதற்காய் கோபப்பட்டார். ``ஓடுவதற்கு முன் வயிற்றுக்கு ஏதும் உணவு கொடுத்தியா?’’ என்று கேட்டார். தன் ஸ்பான்சர் நிறுவனம் வழங்கும் சத்துபானம் குடித்ததாய் சொன்னான். ``நீ ரெண்டாவது இடம் வாங்கினது மத்தவங்களுக்கு வேணும்னா பெருமையா இருக்கலாம். எனக்கு இல்லை. மறந்துட்டியா. நீ பதக்கத்துக்காக ஓடுறவன்  இல்லை. பசிக்காக ஓடுறவன். பசியோடு ஓடியிருந்தால் முதலிடம் கிடைத்திருக்கும்’’ என்று பெரிதும் விசனப்பட்டார். கார்த்திக் குமாரசாமி சப்தம் கேட்டுத் திரும்பினான். வெங்கட் நின்று கொண்டிருந்தார்.

பணக்காரத் தொப்பை,  விலை உயர்ந்த ஷூ, அதன் பாதத்தில் கொஞ்சம் சகதி அப்பியிருந்தது. நாற்பதுகளில், தன் வயதிருக்கும் பெரிய கார் நிறுவனத்தின் உற்பத்தி மேலாளர். அந்த நிறுவனம்தான் கடந்த ஆண்டு கார்த்திக்கின் ஸ்பான்ஸர் ஆக இருந்தது. வெங்கட் எப்போதும் லஜ்ஜை இல்லாமல் பேசுவார். பிதுங்கித் தொங்கு சதை நிறைந்த உடல்வாகு அவருக்கு. மெலிந்த உடலின் தேவை என்பது கலவிக்குச் சரியாய் உதவும் என்பதாக மட்டுமே இருந்தது. அதனால்தான் தினமும் இங்கே வந்து விடுவார். கிரவுண்டை  அரை வட்டம் மட்டும் நடந்துவிட்டு ``அவ்வளவு தான்’’ வந்து அமர்ந்து விடுவார். பெரும்பாலும் பேசிப் பேசி உடலைக் குறைக்க நினைப்பார். சந்திக்கும்போதெல்லாம் ‘அது மாதிரியான’ வறட்சி காமெடிகள் சொல்வார். சிரிக்கவில்லை என்றால் வேறொன்று சொல்கிறேன் என்று ஆரம்பித்துவிடுவார் என்பதால், கார்த்திக் வேறு வழியில்லாமல் சிரித்து வைப்பான். அன்றும் அப்படித்தான். கார்த்திக் பேச விஷயமில்லாமல் ``என்ன சார் மூணு நாளா வாக்கிங் வரலைபோல’’என்றான். ``ஆமா கார்த்திக், மூணு நாளா  ஃவொயிப் வீட்ல இல்லை. என் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா ஜனகராஜ் மாதிரிதான். உங்கிட்ட ஒரு விஷயம்  சொல்லணும்னு நினைச்சேன்’’ அருகில் யாரும் இல்லை என்றாலும்  சிரிப்பும் ரகசியமும்  கலந்து தணிந்த குரலில் பேசினார்.  ``மூணு நாளா மழை பெஞ்சதுல குழந்தைக்கி சேந்த மாதிரி மூணு நாலு லீவு விட்டதால் என் மனைவி அவங்க அம்மா வீட்டுக்குத்  திருச்சிக்குப் போய்ட்டாங்க.  வீட்டுக்கு   நான் வரும்போது மழை மேகமா இருந்தது. வீட்ல யாரும் இல்லாட்டி எவ்வளவு சுதந்திரமா இருக்குது. நாலாவது மாடியில அபார்ட்மென்ட்  பால்கனியில உட்கார்ந்துக்கிட்டு  குப்பியைத் திறந்து கொஞ்சம் தீர்த்தம் விட்டுக்கலாம்னு  கண்ணாடி கிளாஸ்ல ஊத்தி நிதானமா குடிச்சேன். தூறல்போட ஆரம்பிச்சது. அப்போ தான் ஞாபகம் வந்தது. என் மனைவி ஏற்கெனவே போன் பண்ணிச் சொன்னது. `வேலைக்கி இருக்கிறவங்க உங்க துணியைத் துவைச்சு மாடியில காய வெச்சிருக்காங்க.  மழை ஏதும் வந்தா எடுத்து வெச்சிடுங்க. இல்லாட்டி விட்டுடுங்க. காலைல அவங்க வந்து எடுத்து வெச்சிடுவாங்க’னு. நான் அவசரமா மாடிக்குப் போனேன். மழை தூறல்போட ஆரம்பிச்சிடுச்சு.  அவசரஅவசரமா என் துணியெல்லாம் எடுத்துட்டு இருக்கும்போதுதான் பார்த்தேன். காயப்போட்டுக் கிடக்கும் என் உடைகளுக்கு அருகில் ஒரு பெண் அணியும் கீழ் உள்ளாடை கிடந்தது.  கவனித்துப் பார்த்தேன். வாழ்க்கையில் முதன்முதலாக  ‘விக்டோரியா சீக்ரெட்’ பிராண்ட் உள்ளாடையை இப்போதுதான் பார்க்கிறேன். அவ்வளவு வேலைப்பாடு. அதற்குள் மழை வலுக்கத் துவங்கிவிட்டது. இன்னும் நாலைந்து  சொட்டு மழை நீர் பட்டாலே முழுக்க நனைந்துவிடும் என்று தோன்றியது.  அதை அப்படியே  விட்டுவிட்டால் நனைந்து பாழாகிவிடும் என்பதால் எனது துணிகளோடு அதையும் எடுத்துக்கொண்டேன்.  யாரும் பார்த்துவிட்டால் என்னை எதிர் பாலினரின் உள்ளாடைகளைத் திருடுபவன் என்று தவறாக நினைத்துக்கொள்வார்களோ என்று அச்சம் வேறு. எனது துணிகளை வீட்டின் உள்ளேயும் பால்கனியில் கொஞ்சமுமாக உலரவிட்டேன். அந்த உள்ளாடை எனது உணவு மேசையின் நாற்காலியில் காய்ந்துகொண்டிருந்தது. ஒரு உள்ளாடையை இவ்வளவு கலைநயத்தோடு  நான் பார்த்ததே இல்லை. தயாரித்து வெளியிடும் அமெரிக்காக்காரன் ‘ராய் ரேமண்ட்’ பெரிய கலாரசிகன்தான். பாவம் யாருடைய உள்ளாடையோ இரவெல்லாம் என் வீட்டில் ஈரம் உலர்த்திக்கொண்டிருந்தது.  இதை  விரும்பி அணியும் அந்த இளம்பெண்ணும் பெரிய கலைத்தன்மை நிறைந்தவளாகத்தான் இருக்க முடியும். காலையில் பார்த்தேன். உள்ளாடை காய்ந்து வழுவழுப்பான டைல்ஸ் தரையில் கிடந்தது.முழுக்கக் காய்ந்துவிட்டதுபோல. கையில் எடுக்கையில் எடை இழந்து கிடந்தது.  நல்லவேளை யாரும் பார்ப்பதற்குள்ளாக அதனிடத்தில் போய் மீண்டும் வைத்து விடலாம் என்று எடுத்துக்கொண்டுபோய் மாடியில் நீண்ட  கோடு போலிருந்த நைலான் கொடியில் தொங்கவிட்டேன்.  

p260e.jpg

ஆபீஸ் போகும்போது அபார்ட்மென்ட் வாட்ச்மேனிடம்  மெல்லிய குரலில்  கேட்டேன்  `புதுசா யாரும் குடி வந்திருக்காங்களா?’அவர் `அதெல்லாம் இல்லை சார்’ என்று சொல்லிவிட்டார். நான் அலுவலகம் வந்துவிட்டு வீட்டிற்குத் திரும்பினேன்.  இன்றும் அதேபோல் வீட்டிற்குள் நுழைந்ததுமே  மழை  வலுக்கத்  துவங்கிவிட்டது. நான் வீட்டிற்குள் அணியும் கால்சட்டைக்கு மாறினேன். சட்டென ‘விக்டோரியா சீக்ரெட்’ நினைப்பு வந்தது. மாடிக்கு ஓடினேன். அது அதே இடத்திலேயே நனைந்துகொண்டிருந்தது. இன்றும் அதேபோல்தான் எனது உணவு மேசை நாற்காலியில் இரவெல்லாம் ஈரத்தோடு தூங்கியது. விடிகாலையில் எழுந்து அதே போலவே மாடியில் போய்த் தொங்கவிட்டேன்.இன்று எனக்குக் கொஞ்சம் அச்சமாய் இருந்தது. நான் எடுத்துவந்த பிறகு யாராவது அதைத் தேடி வந்திருப்பார்களா என்று.

அடுத்த நாள் நான் அலுவலகம் வந்ததும்  பகல் முழுக்க மழை பிடித்துக்கொண்டது. விக்டோரியா நனைந்துகொண்டிருப்பாள். நிச்சயம் நம்பினேன். வீட்டைத் திறக்கும் முன்பாக நேராக மாடிக்குப் போனேன். மழையில் நனைந்த சிறு செல்லப்   பிராணியை வீட்டிற்குள் தூக்கி வந்ததுபோல் அதைத் தூக்கிக்கொண்டு வந்தேன். இரவு முழுக்கக் குடித்தபடி அதைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். அழகான ஓவியத்தைப் பார்ப்பது போல் இருந்தது. அதிகாலையில் ரயில் நிலையத்திற்குக் கூப்பிட வரச்சொல்லி என் மனைவி கால் செய்தாள். நேற்று துவங்கிய மழை விடிகாலை வரையிலும் கொட்டியது. நான் முகத்தை மட்டும் கழுவிவிட்டு காரை எடுத்தேன். எனது அபார்ட்மென்ட் தாண்டும் போதுதான் விக்டோரியாவின் ஞாபகம் வந்தது. நல்லவேளை என்று நினைத்து வீட்டைத் திறந்து மீண்டும் மழையில் அதைத் தொங்கவிட்டேன். நாளையிலிருந்து இனி நாம் பார்க்க முடியாது என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டேன். காரில் போகும்போது அதன் நினைப்பே அவ்வளவு குளுமையாக இருந்தது. இந்த மூன்று நாள்களும் அறிமுகமில்லாத பேரழகான  ஓர் இளம்பெண் என்னோடு தங்கியிருந்ததைப்போல.

அவர்களை அழைத்துக்கொண்டு வந்து வீட்டில் விட்டேன். காலை ஏழுமணி வரை   மழை  நிற்கவே இல்லை.  சகானா பள்ளியிலிருந்து ‘இன்று பள்ளி விடுமுறை’ என்ற வார்த்தைகள் வரும் குறுஞ்செய்திக்காய் எங்கள் இருவர் போனையும் வாங்கிப் படுக்கையில் வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டே இருந்தாள். அதே நேரம் திரைச்சீலையை விலக்கி ஜன்னலின் வழியே மழையின் தீவிரத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். மழை கிட்டத்தட்ட நின்றுவிட்டது. ஜன்னலிலிருந்து அவள் முகம் பள்ளிக்கூடம் செல்லும் பீதிக்கு வந்தபோது சரியாய் அந்த மெசேஜ் வந்துவிட்டது. `ஹேய்ய்ய்... ஜாலி’ கத்தினாள். `இங்க நல்ல மழையாங்க ?’ மனைவி அவ்வளவு கனிவாய் கேட்டாள். `ஆமாம். நல்லவங்களா இருந்தா, அந்த ஊர்ல மழை பெய்யுமாம். நீ ஊருக்குப்போன மூணு நாளுமே இங்கே மழை பெஞ்சது’ அந்த ஜோக் அவளுக்குப் பிடிக்கலபோல. உடனே எழுந்து மாடிக்கு ஓடினாள். திரும்ப வரும்போது ஈரமான  விக்டோரியாவைக் கையில் பிடித்தபடி நின்றிருந்தாள். `கட்டுன பொண்டாட்டியோட உள்ளாடைகூட தெரியாதா? மூணு நாளா நனையுதுபோல. உங்க துணிக்குப் பக்கத்துலதானே காய்ஞ்சது’அடக்க முடியாமல் இன்று உண்மையாகவே கார்த்திக் சிரித்துவிட்டான். ``சிரிக்காதீங்க கார்த்திக்.இப்படித்தான் இந்தியாவுல முக்கால்வாசிப் பேர் குடும்பம் நடத்துறாங்க’’ கொஞ்சநேரம் பேசிவிட்டுக் கிளம்பினார். கார்த்திக்குக்கு ‘அப்பாடா’ என்று இருந்தது.

இன்னும் குளிர் போகவில்லை.  இப்போது பெங்களூருவில் குளிர் இன்னும் அதிகமாய் இருக்கும் என்று நினைத்தான். பாவம்  மேகா  என்ன செய்வாளோ. மேகா சர்வதேச அளவில்  பிரபலமான ஸ்போர்ட்ஸ் இதழின் புகைப்படக் கலைஞர். ‘ Photo courtesy-மேகா கிருஷ்ணன்’ என்றுதான் இதழ்களில் வெளிவரும். சர்வதேச அளவிலான நீச்சல் போட்டி பெங்களூருவில் நடப்பதால், இரண்டு நாள்களாக அங்கு   முகாமிட்டிருக்கிறாள். கார்த்திக் மைதானத்தில் ஓடிக்கொண்டிருக்கிறான் என்றால்,மேகா உலகமெங்கும் எங்கெல்லாம் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அல்லது கிரிக்கெட் நடக்கிறதோ அங்கே பறந்துகொண்டே இருப்பாள். அவள் ஓய்வாய் இருந்து கார்த்திக் ஒரு நிமிடம்கூட பார்த்தது இல்லை. ஒருநாள் ஓய்வு கிடைத்தால்கூட ஓவியம் வரைவாள், கவிதை எழுதுவாள், புத்தகம் வாசிப்பாள். பெரும்பாலும் அவை கம்யூனிஸப் புத்தகமாக இருக்கும். மார்க்ஸ்,  பூக்கோ , சாப்ளின், ஜீசஸ், பிராண்டோ, பாம்பே ஜெயஸ்ரீ, ஜெயமோகன்,  வடிவேல் காமெடி, எண்ணெய்க் கத்திரிக்காய்  என எல்லாமும் பேசுவாள். கார்த்திக்குக்கு இதில் எதுவும் தெரியாது.

பொதுவெளியில் மேகா நமக்கு வேறு மாதிரியும் அறிமுகமாகியிருக்கிறாள். இதைச் சொன்னால்  அவளை நிச்சயம் எல்லோரும் அடையாளம் காண முடியும்.

‘ஒரு விதை பெத்ததுதானே இந்தக் காடு

  ஒரு தாய் பெத்ததுதானே இந்த நாடு’

இந்தப் பாடல் மேகா எழுதியது. புரட்சிப் பக்கம் ஒதுங்காதவர்கள் இந்தப் பாடலைக் கேட்டிருப்பது அரிதானது.

மற்றவர்களுக்கு அவளின் இந்தப் பாடல் நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

 ‘மழை பெய்கையில்

 மலர் பொய்கையில்

நனைந்தபடி எதிரில் வருவது நீயன்றோ என் கரம் கோர்த்தபடி  உடன் வரக் கூடுமன்றோ’

எவ்வளவு பிரபலமான ஆல்பம் இது. அவளே எழுதிப் பாடியது. அநேகருக்கு அவளை இப்படித்தான் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

கார்த்திக் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்து 0.02 நொடி இடைவெளியில் நான்காவது இடத்திற்குப் பிந்தி தோற்று அழுதபோது அதைப் புகைப்படமாக்கி  ‘இந்தியா அழுகிறது’ என்று தலைப்பிட்டு அவள் வேலை செய்யும் பத்திரிகையில் வெளியிட்டாள். அதன் அடுத்த வாரமே `வெற்றிக்கு மிக அருகில்’ என்று தலைப்பிட்டு அவனின் எளிமையான உடை,  மலிவான ஷூ, மேலும் அவனைப் பின் தொடர்ந்து சென்று காசில்லாமல் இந்த நகரத்தில் எங்கே போனாலும் நடந்தும்,  ஓடியும் மட்டுமே செல்லும் அவனின் புகைப்படங்களைப் போட்டுக் கூடவே  கார்த்திக்கின் வாழ்க்கையில் கடந்துவந்த சிறு பகுதியையும் எழுதி இருந்தாள். நிர்வாகம் கேட்டதற்கு ``அடுத்த வருடம் நிச்சயம் வெற்றி பெற்று நம் இதழின் அட்டைப் படத்தில் வருவார்’’ என்று நம்பிக்கையுடன் சொன்னாள்.

கார்த்திக்குக்கு அப்போது பெரிதாய் யாரும் ஸ்பான்சர் இல்லை. `நல்ல ஸ்பான்சரும், கோச்சும் இருந்தால் அடுத்த போட்டியில் கார்த்திக் நிச்சயம் தேசத்தைக் கெளரவிப்பார்’ என எழுதியிருந்தார்கள். அடுத்த நாள் காலையில் கார்த்திக் அந்த ஸ்போர்ட்ஸ் இதழைத் தொடர் ஓட்டக்காரன் கையில் வைத்துக்கொண்டு ஓடும் குச்சியைப்  போல  சுருட்டிக்கொண்டு அண்ணாசாலையின்  வழியே ஓடியே அவளின் அலுவலகத்திற்கு வந்து, ‘தனக்கு பட்சாதாபம் தேவையில்லை’என்று  கோபமாய் கத்தினான். அவள் அப்போது புனேவிற்கு அலுவலக நிமித்தமாகச் சென்றிருந்தாள். திரும்ப வந்தவளிடம் அலுவலகத்தில் இருப்பவர்கள் சொன்னார்கள். அவளே கார்த்திக்கு போன் செய்து பேசினாள். அவளைப் பேசவிடாமல் கார்த்திக் கோபமாகக் கத்தினான். அடுத்த நாள் கார்த்திக் அழும் அதே புகைப்படத்தைப் பெரிய சைஸில் பிரின்ட் போட்டு கூரியர் செய்தாள். அதோடு ‘இதை உங்கள் அறையில் ஒட்டிவைத்து தினமும் அழுங்கள்’ என்ற வாசகத்தை இணைத்திருந்தாள். மேகா தன்னைக் கேலியும், அவமானமும் செய்வதாய் உணரத் துவங்கினான். கிருபாகரன் சாருக்கு போன்செய்து பேசினான். அவர் அவனை ஆற்றுப்படுத்தினார். ‘`எனக்குத் தெரிந்து அவள் உன்னை அவமானப்படுத்தவில்லை. எனக்கென்னமோ உன்னைவிட உன் வெற்றியில் அவள்தான் முழு நம்பிக்கையும் ஈடுபாடும்கொண்டிருக்கிறாள் என்று படுகிறது’’என்று சொல்லி போனைத் துண்டித்தார்.

அதன்பிறகுதான் பெரிய நிறுவனங்களின் கவனம் கார்த்திக்கின் பக்கம் திரும்பியது. இடைவிடாதப் பயிற்சி. ஆசியப்போட்டியில் கார்த்திக் இரண்டாமிடம். இந்த முறை நிர்வாகத்திடம் பேசி அட்டையில் புகைப்படத்தைப் போடச் சொன்னாள். கார்த்திக் இந்த முறையும் ஓடியே அவளின் அலுவலகத்திற்குச் சென்றான். சாலையில் நிறைய பேர் அவனை அடையாளம் கண்டுகொண்டார்கள். அவள் இப்போது மதுரையில் ஜல்லிக்கட்டைப் புகைப்படம் எடுக்கப் போயிருப்பதாக அலுவலகத்தில் சொன்னார்கள். அவளின் எண்ணை வாங்கிப் பேசினான். பார்க்க வேண்டுமென்று சொன்னான். சென்னைக்குத் திரும்பியதும் சந்திக்கலாம் என்று சொன்னாள். ‘வர  எத்தனை நாளாகும்?’  `நாலு நாள்’ என்றாள். கோபமாய் வைத்தான். ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு உடனே கிளம்பிச் சென்று தேடினான். 

அங்கே இருப்பதிலேயே உயரமான இடத்தில் ஏறிநின்று  மாடுபிடிக் களத்தைப் புகைப்படம் எடுக்க கேமராவின் 1200-1700mm ஜூமைத் திருகியபோது தூரத்தில் இவன் கூட்டத்திற்குள் யாரையோ தேடுவதைப் பார்த்து இவளே போன் செய்தாள்.

`இங்க என்ன பண்ற?’

`உன்னப்  பார்க்கத்தான்.’

`அதான் வந்திடுறேன்னு சொன்னேனே... மூணு நாள் பொறுக்க மாட்டியா?’

`இல்ல. முடியாது.’

அந்த உயரமான கட்டடத்தின் நுனிக்கு அவனும் ஏறி வந்தான். கார்த்திக் நேரடியாகவே கேட்டான்.  ``கல்யாணம் பண்ணிக்கலாமா?’’ கொஞ்சநேரம் அமைதியாய் அவனைப் பார்த்துவிட்டு நிதானமாய் சொன்னாள்.  ``கிரவுண்டுல ஓடு... லைஃப்ல ஏன் இவ்வளவு வேகமா ஓடுறே. கொஞ்சம் காதலிக்கலாம். அப்புறம் அப்பாகிட்ட சொல்லிட்டுக் கல்யாணம் பண்ணிக்கலாம்’’ அவர்கள் அப்படியே அங்கிருந்து கிளம்பி ராமேஸ்வரம் போய் கிருபாகரன் சாரைப் பார்த்தார்கள்.  மேகா அடம் பிடித்தாள். அதிகாலையில் கிளம்பி அவனின் கிராமத்திலிருந்து அதேபோல அவனின் பாட்டி ஊருக்கு, ஐந்து கிலோமீட்டர்கள் நடந்து போனார்கள் இருவரும். அன்று தான் கார்த்திக் அந்த ஐந்து கிலோமீட்டரையும் ஓடாமல் மேகாவோடு  நடந்தே கடந்தான். கார்த்திக் இந்த ஐந்து கிலோமீட்டர் தூரத்தையும் கடக்கும்போது ஷூவைக் கழற்றி வெறும் காலால்தான் நடந்தான்.  ஒவ்வொரு மைல்கல்லையும் அடைந்ததும் மேகா அந்தக் கல்லைப்போய் தடவிப் பார்த்தாள். ``உன்னோட முதல் இலக்கு இதுதானே’’ என்று அவனிடம் கேட்டாள். கார்த்திக்கை அதன் மேல் அமரவைத்துப் புகைப்படம் எடுத்தாள். தானும் எடுத்துக் கொண்டாள். ஐந்து கிலோமீட்டர் கழிந்து ஊர் வந்ததும் எடுத்து வந்திருந்த உணவை அவனுக்குக் கொடுத்தாள். மேல்கூரை இல்லாமல்  சிதிலமடைந்த மண் சுவர் வீட்டில் அமர்ந்து இருவரும் உணவை உண்டார்கள்.  மேகா, கார்த்திக்கிடம் கேட்டாள் ``உன்கூட ஓடுன  உங்க அண்ணன் இப்போ எங்கே கார்த்திக்?’’ ``அவரு  இப்போ உட்கார்ந்திட்டாரு. இப்போ மதுரையில பெரிய அரசு அதிகாரி.’’

அதன்பின் வந்த நாள்களில் மேகா  சென்னையில் இருந்தால்  காலையில்  கிளம்பி ஒய். எம். சி. ஏ. மைதானத்திற்கு வந்து விடுவாள்.  அதுபோல  மாலையில் அலுவலகம் முடிந்ததும் மைதானத்திற்கு வந்து விடுவாள். ஒருநாள் காலையில் மேகாவின் அப்பா மேகாவோடு ஒய்.எம்.சி.ஏ. வந்தார். குலம், கோத்திரம், சாதி என்று ஏதோ சொல்லிவிட்டு ``இதெல்லாம் நடக்காது’’ என்று அமைதியாகக்  கிளம்பினார். அவர்கள் தொடர்ந்து சந்திப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. கார்த்திக் போட்டிக்காக இத்தாலி சென்றபோது மேகாவிற்கு மிகவும் பிடித்த புகைப்படக் கலைஞர் ‘ருபெர்டோ  குஸ்டர்லை’ ( Roberto kusterle ) சந்தித்து அவர் எடுத்த புகைப்படத்தில் அவரின் கையொப்பம் வாங்கி  வந்து அவளின் பிறந்த தினத்திற்குப் பரிசளித்தான். மேகா அவ்வளவு சந்தோஷப்பட்டாள். 

திடீரென ஒருநாள் மாலை மேகா போன் செய்து இன்று மாலை ஏழு மணிக்குத் தனது வீட்டுக்கு வரச் சொன்னாள். கார்த்திக் கிளம்பிப் போனான். மேகாவின் அப்பா இல்லை. அவளின் அம்மா வரவேற்று காபி கொடுத்தாள். காபி குடித்து முடிந்ததும்  மேகா அவனை வீட்டின் ஒரு குறிப்பிட்ட அறைக்கு அழைத்துச் சென்றாள். அறை வெளியே பூட்டப்பட்டிருந்தது. உள்ளே தெளிவாக எழுபதுகளின் பிரபலமான கிஷோர் குமார் சோகப் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தன.  மேகா ரகசியக் குரலில் சொன்னாள்.  ``ஆடிட்டர் அனந்த கிருஷ்ணன் உள்ளே தண்ணி அடிச்சிக்கிட்டு இருக்கார். வருசத்துல ஒருநாள் மட்டும். அவர் இப்படித்தான்’’ ``அப்படியா ஏன்? அவங்க அம்மா இல்ல அப்பா யாரும் இறந்த நாளா?’’ ``இல்ல. அவர் லவ் பண்ணின பொண்ணோட கல்யாணநாள். ரொம்பக் குடிச்சி ஏதும் ஒப்புக்காம போயிடக்கூடாதுல. அதன் வெளிய பூட்டி வெச்சிருக்கோம்’’ கதவைத் திறந்துகொண்டு கார்த்திக் நுழைந்தான். போய் பத்து நிமிடம் கழித்து அனந்த கிருஷ்ணன் குழந்தையைப் போல் அழும் குரல் கேட்டது. அரைமணி கழித்து கார்த்திக் வெளியே வந்தான். மெதுவான குரலில் கார்த்திக் இருவரிடமும் சொன்னான். ``உங்க அப்பா கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டார்’’  சந்தோஷப்பட்டார்கள்.  உள்ளே கிஷோர்குமார் பாடல் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தது.

பொழுது நன்றாக விடிந்துவிட்டது.  கார்த்திக் தன் போனை கால் சட்டைக்குள்  தேடி எடுத்தான். வாட்ஸ்அப்-பில்   மேகாவிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது.

‘குட்மார்னிங்  ஸ்போர்ட்ஸ்மேன்.’

பதில் அனுப்பினான். ‘குட்மார்னிங் போட்டோகிராபர்.’ 

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ப்பா..... கதை சூப்பர்.....இந்தக் கதையை நம்ம இளைஞர்கள் எப்படி தவற விட்டனர்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

யார் தனி யா..tw_blush:

59 minutes ago, suvy said:

ப்பா..... கதை சூப்பர்.....இந்தக் கதையை நம்ம இளைஞர்கள் எப்படி தவற விட்டனர்.....!  tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தனியா(மல்லி....சிங்களத்திலும் சரியா இருக்கு போல ) களுக்கல்ல கடு கடு வென்று காரமாய் இருக்கும் மிளகாய்க்களுக்கானது.....!  tw_blush:

இது மணமான இளைஞர்களுக்கானது.......!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.