Jump to content

சசிகலாவின் பரோல் ஓவர்! இன்று என்ன திட்டம்?


Recommended Posts

சசிகலாவின் பரோல் ஓவர்! இன்று என்ன திட்டம்?

 

சசிகலா

சிகலா பரோலில் வந்து நான்கு நாள்கள் ஆகின்றன! அவரின் அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் சசிகலா தற்காலிகமாகத் தங்கியிருக்கிறார். "இந்த நான்கு நாள்களில், உறவினர்களின் செல்போனில் எடப்பாடி கோஷ்டி அமைச்சர்கள் ஆறு பேருடன் தொடர்புகொண்டு சசிகலா பேசினார். அதே பாணியில் 25 எம்.எல்.ஏ-க்களுடனும் தகவல் பரிமாற்றம் நடந்தது" என்றெல்லாம் டி.டி.வி. தினகரன் கோஷ்டியினர், மீடியாக்களிடம் தகவல்களைச் சொல்லி வருகிறார்கள். 

 

ன்று ஒருநாள்தான் பாக்கி... சசிகலா பரோல் முடிந்து பெங்களூரு சிறைச்சாலைக்குப் போகப்போகிறார்...! அவர் கிளம்பும்போது, அவரைச் சந்திக்க, சில அமைச்சர்கள் ரெடியாகிறார்கள் என்று உளவுத்துறையினர் எடப்பாடியை எச்சரிக்க... 'அன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டம் நடக்கும்' என்று அவர் அறிவித்துவிட்டார். சசிகலா கோஷ்டி பக்கம் சாய இருந்த சில அமைச்சர்களுடன் சமாதானமும் பேசிவிட்டாராம் எடப்பாடி. தற்போதைய சூழ்நிலையில், அந்த அமைச்சர்கள் மதில்மேல் பூனையாக ஒதுங்கி நிற்கிறார்கள். அரசியல் நீரோட்டத்தைப் பார்த்து, அதற்கேற்ப பயணிக்க அவர்கள் முடிவு செய்துவிட்டனர். இப்போதைக்கு எடப்பாடி கோஷ்டியை தொடர்ந்து  ஆதரிக்கிறார்கள். 

குளோபல் மருத்துவமனைக்கு சசிகலா வந்தபோது என்ன நடந்தது?

டாக்டர் முகமது ரீலா தலைமையிலான குழுவினர், சசிலாவிடம் நடராசன் உடல்நிலை பற்றி எடுத்துச் சொன்னார்கள். "இது எங்களுக்கு மருத்துவரீதியாக சவாலான ஆப்ரேஷன்" என்று சொன்னபோது, சசிகலா ஆச்சர்யத்தோடு உற்றுக் கவனித்தாராம். நடுவில், சசிகலாவும் நிறைய கேள்விகளைக் கேட்டாராம். நடராசன் உடலிலிருந்து அகற்றப்பட்ட கல்லீரலை பத்திரப்படுத்தி வைத்திருந்த டாக்டர்கள், அதை சசிகலாவிடம் காட்டியதுடன், நல்ல நிலையில் உள்ள கல்லீரலையும் காட்டியுள்ளனர். "உங்கள் கணவரின் கல்லீரல்... முழுவதுமாக 'ஃபெயிலியர்' ஆகிவிட்டது. 14 மணிநேரம் ஆபரேஷன் நடத்தி, அவருக்கு மாற்று கல்லீரலையும், சிறுநீரகத்தையும் பொருத்தினோம்" என்றார்களாம். டாக்டர்கள் சொன்னதை பொறுமையாகக் கேட்டுக்கொண்டாராம் சசிகலா.

மேலும், "புதிதாகப் பொருத்தப்பட்ட சிறுநீரகம், நடராசன் உடலுடன் இணைந்து சரியாக வேலைசெய்ய ஆரம்பித்துவிட்டது. கல்லீரல் செயல்படும்விதம் தெரிய ஒரு வாரம் ஆகும்" என்றார்களாம். "எங்கள் அட்வைஸை நடராசனும், குடும்ப உறுப்பினர்களும் சரியாகப் பின்பற்றினால், அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவரின் உடல் நலத்திற்கு நாங்கள் கேரண்டி" என்று உறுதியாக டாக்டர்கள் சொன்னதாக சசிகலா குடும்பத்தினர் பேசிக் கொள்கிறார்கள். ஒருகட்டத்தில், சசிகலா, அவரது குடும்பத்தினர் பக்கம் திரும்பி, "ஏன் இந்த நிலை? ஆரம்பத்திலேயே மருத்துவமனையில் அவரைக் காட்டவில்லையா?" என்று கேட்டாராம்.

நடராஜன்"நான்கு மாதங்களுக்கு முன்பு, நடராசன்...கொஞ்சம் நல்ல நிலையில்தான் இருந்தார். அப்போதே 'கல்லீரலில் பிரச்னை' என்று எங்களுக்குத் தெரியும். அது வலுவிழக்கும்போது மாற்றிக்கொள்ளலாம் என்று டாக்டர்கள் தெரிவித்ததுடன், தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். ஆனால், ஒரே மாதத்தில் கல்லீரல் செயல்பாட்டை இழந்து விட்டது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என்றார்களாம். மேலும், "மாற்றுக் கல்லீரல், சிறுநீரகம்... இரண்டும் நடராசனுக்குத் தேவைப்பட்டது. சட்ட விதிமுறைகளின்படி, அதற்காகப் பதிவு செய்துவிட்டு, சில மாதங்கள் காத்திருந்தோம்.

இந்த மருத்துவனைக்கு வந்தபிறகு, தினமும் நாலு முறை ரத்த வாந்தி எடுத்தார். மிகவும் பயந்து விட்டோம். 'மல்டி ஆர்கன் தேவை' என்று பதிவு செய்தவர்களுக்குச் சட்டப்படி முன்னுரிமை தரவேண்டும். ஆனால், எடப்பாடி அரசு. அதைக் கண்டு கொள்ளவேயில்லை. ஐந்துமுறை ஆர்கன் கிடைக்கும் சந்தர்ப்பம் வந்தது. ஆனால், தரவில்லை. ஆறாவது முறைதான் அனுமதித்தார்கள்" என்று விவரமாக எடுத்துச் சொன்னார்களாம் உறவினர்கள். 

"டிஸ்சார்ஜ் ஆகி நடராசன் வீட்டுக்கு வரும்போது, அங்கே ஐ.சி.யூ. போல மாறுதல் செய்திருக்க வேண்டும். இன்னும் சில மாதங்களுக்கு அவரின் உடல்நிலையை மிக கவனத்துடன் தொற்று பரவாமல் நாம்தான் பார்த்துக் கொள்ளவேண்டும். டாக்டர்கள் தெரிவிக்கும் அட்வைஸை சரியாகப் பின்பற்ற வேண்டும்" என்றாராம் சசிகலா. அவரது  குடும்பத்தினர் அதற்கு தலையாட்டினார்களாம். 

கிருஷ்ணப்ரியா வீட்டில் யாருடனும் சசிகலா பேசவில்லை என்கிறார்கள். பெரும்பாலும் சசிகலாவின் பதில் மௌனம்தான். சிலர் பேசும்போது, கையால் சைகை காட்டி, அவரின் பதிலைப் புரியவைத்தாராம். உதாரணத்துக்கு, டெங்குக் காய்ச்சலில் நூற்றுக்கணக்கான மக்கள், இறந்து போகிற சம்பவங்களையும், அதுபற்றி எடப்பாடி அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதையும் டெல்டா பிரமுகர், கண்ணீருடன் எடுத்துச் சொன்னாராம். சீரியஸான முகத்துடன் கேட்டுக்கொண்டு, 'அம்மா நிச்சயம் சரிசெய்வார். அவரைப் பிரார்த்தனை செய்யுங்கள்' என்று சைகை மூலம் சொன்னாராம். "அமைச்சர்களின் செயல்பாடு, லட்சணம் தெரிந்து, முதல்வராக அம்மா இருந்தபோது, எல்லாத் துறைகளையும் அவர்தான் கவனித்து வந்தார். அமைச்சர்களுக்கு விவரம் தெரியாது. அம்மா, கோட்டைக்குப் போய்விட்டால் பணியில் மூழ்கிவிடுவார். பத்து, பதினைந்து முறை போன் மூலம் அழைப்பு விடுத்தவண்ணம் இருப்பேன். அப்புறம்தான்... வீடு ஞாபகமே அம்மாவுக்கு வரும்" என்று சொல்லியபோது, சசிகலா கண்ணில் நீர் துளிர்த்ததாம்.

சசிகலாவைச் சந்திக்க அவரது தம்பி திவாகரன் வரவில்லை. நடராஜன் குளோபல் மருத்துவமனையில் அட்மிட் ஆனதிலிருந்து சசிகலா வரும்வரை, அடிக்கடி திவாகரன் வந்து சென்றார். ஆனால், சசிகலா பரோலில் வந்த பிறகு, அவரை இன்னும் திவாகரன் சந்திக்கவில்லை. காரணம், திவாகரனுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாம். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் டெங்குக் காய்ச்சல் அறிகுறி இருப்பதாகச் சொன்னார்களாம். அதன்காரணமாகவே, அவர் சசிகலாவைச் சந்திக்க வரவில்லையாம். சசிகலா இன்று கிளம்பும்போது, அவரை திவாகரன் சந்திப்பாராம்.

திவாகரன்

சசிகலாவின் கேள்விகள்?

"நான் சிறைச்சாலைக்கு செல்லும்முன், போயஸ்கார்டன் முகவரிதான் நிரந்தரம் என்று சிறை ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளேன். பரோலில் போகும்போது, அதே முகவரிதானே என்னுடையது? அங்கேதானே என்னைத் தங்க அனுமதிக்க வேண்டும். ஏன் அங்கே தங்கக் கூடாது என்கிறார்கள்? நான் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கப்போகிறேன். எனக்குச் சிறைச்சாலை விதித்த கண்டிஷன்களை நான் நிச்சயமாக ஃபாலோ பண்ணுவேன்... ஆனால், அதெல்லாம் என் வீட்டில் இருந்தால்தானே முடியும்? நான் உறவினர் வீட்டில் இருக்கும்போது, அந்த உறவினரைப் பார்க்க விசிட்டர்கள் வருவார்கள். கட்சி நிர்வாகிகள் வருவார்கள. எத்தனையோ பேர் வரும்போது, சிறைச்சாலை கண்டிஷன்களை அவர்கள் ஏன் பின்பற்றவேண்டும்?" என்று கேட்டாராம். இதற்குப் பதிலளித்த வழக்கறிஞர்களில் ஒருவர், "இல்லம்மா... போயஸ்கார்டன் பங்களா யாருக்குச் சொந்தம் என்கிற சட்ட சர்ச்சை நிலவுகிறது. அதனால், அங்கே உங்களைத் தங்க அனுமதிக்கமாட்டார்கள்" என்றாராம். "சசிகலா ஏதும் பேசவில்லையாம்". 

கட்சி அமைப்பில் நிறைய மாறுதல்கள் செய்ய சசிகலா வரவை எதிர்நோக்கி காத்திருந்தாராம் தினகரன். ஏனென்றால், சசிகலா சிறைச்சாலையில் இருக்கும்போது, அவரின் ஒப்புதலோடு என்கிற வார்த்தையைப் போட்டுதான் கட்சி நிர்வாகிகள் நியமனம் மற்றும் நீக்கம் தொடர்பான அறிவிப்புகளைத் தினகரன் வெளியிட்டு வந்தார். சசிகலாவே பரோலில் வருகிறார் என்பதால், சசிகலா பெயரிலேயே அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டிருந்தாராம் தினகரன். ஆனால், 'சிறைக்கண்காணிப்பாளர் கண்டிஷன்களைப் பார்த்தபிறகு, அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டதே?' என்கிற ஆதங்கம் அவருக்கு! 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க விவகாரம் முடிவுக்கு வந்தவுடன் பொதுக்குழுவை கூட்ட, தினகரனுக்கு சசிகலா பச்சைக்கொடி காட்டிவிட்டாராம். அதற்கான பூர்வாங்க வேலைகளை திவாகரன் தரப்பினர் செய்ய ஆரம்பித்துவிட்டனர். 'தேர்தல் கமிஷனுக்குச் சரியான பாடம் புகட்டுவதே அடுத்த இலக்கு' என்று தினகரன் தரப்பினர் சொல்லிவருகிறார்கள்.

 

இன்று நண்பகல் சென்னையிலிருந்து சசிகலா கிளம்ப உள்ளார். குறுகிய காலமே பரோலில் வந்திருந்தாலும், தமக்கு அ.தி.மு.க வட்டாரத்தில் இருக்கும் செல்வாக்கை சசிகலா புரிந்து கொண்டார் என்கின்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/104659-poes-garden-is-my-permenent-address--says-sasikala.html

Link to comment
Share on other sites

ஜெயலலிதா ஆல்பம், தனியறை தனிமை, சிக்கல் ஜாதகம்! - பரோலில் கலங்கிய சசிகலா

 
 
 

சசிகலா

Chennai: 

'முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது' என்று உறவுகளிடம் சசிகலா கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா, ஐந்து நாள்கள் பரோலில் சென்னை வந்தார். தி.நகரிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியிருக்கும் சசிகலா, பெரும்பாக்கத்தில் சிகிச்சைபெறும் நடராசனைச் சந்தித்தார். மருத்துவமனையைத் தவிர வேறு எங்கும் செல்லவில்லை. வீட்டிலேயே முடங்கியிருக்கும் சசிகலா, உறவுகளிடம் மட்டுமே பேசியுள்ளார். சிறைத்துறை விதித்த நிபந்தனையால், ஆதரவாளர்கள் யாரையும் சசிகலா சந்திக்கவில்லை. தினகரனிடமும் ஜெயானந்திடமும் அரசியல் நிலவரம்குறித்து விவாதித்துள்ளார்.

சிறையிலிருந்து வெளியில் வந்த சசிகலா, விரும்பிய உணவுகளைச் சமைத்துக்கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமீபகாலமாக சசிகலா, அசைவ உணவுகளைத் தவிர்த்துள்ளார். இதனால், சைவ உணவுகளை ஸ்பெஷலாக சமைத்துக் கொடுத்தபோதிலும், அவற்றை சசிகலா சரிவர சாப்பிடவில்லையாம். இது, வீட்டில் உள்ளவர்களுக்கு வருத்தம். சசிகலாவுக்கென்று ஒதுக்கப்பட்ட தனியறையிலேயே நேரத்தைக் கடத்தியுள்ளார். பரோலில் வந்த முதல் மூன்று நாள்கள் அமைதியாக இருந்த சசிகலா, நேற்று உறவுகளிடம் மனம் விட்டுப் பேசியுள்ளார். இன்றுடன் பரோல் முடிவடைவதால், நேற்றிரவு நீண்ட நேரம் வீட்டிலுள்ளவர்களிடம் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

அப்போது, தினகரனின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், ஏழுமலையை பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தாக்கிவிட்டனர். அதில், ஏழுமலையின் உதடுகள் கிழிந்துவிட்டன என்று பதற்றமாகச் சொல்லியிருக்கிறார். உடனே, தினகரன், 'அவர் நலமாக இருக்கிறாரா... நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று கூறியிருக்கிறார். அதன்பிறகு, ஏழுமலை தாக்கப்பட்ட தகவல் சசிகலாவுக்குத் தெரிவிக்கப்பட்டதாம். அப்போது அவர், 'அதிகாரம் அவர்கள் கையிலிருப்பதால் ஆட்டம் போடுகிறார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு இருக்கிறது' என்று ஆதங்கத்துடன் சொல்லியிருக்கிறார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

தொடர்ந்து உறவுகளுடன் நடந்த உரையாடலில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்த பேச்சு எழுந்துள்ளது. அந்தச் சமயத்தில், சசிகலாவின் முகம் மாறியுள்ளது. திடீரென உணர்ச்சிவசப்பட்ட சசிகலா, அக்காவின் ஆன்மா, அவர்களை மன்னிக்காது. பதவிக்காக இருவரும் கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டனர் என்று கூறியதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. அதன்பிறகு, குடும்பம் தொடர்பான விவாதம் நடந்துள்ளது.

இன்று காலையில் எழுந்த சசிகலா முகத்தில் சோகம் அப்பியிருந்தது. பரோல் முடிந்து சிறைக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைத் தினகரன், ஜெயானந்த் ஆகியோர் செய்துள்ளனர். கடந்த ஐந்து  நாள்கள் குடும்ப உறவுகளுடன் சசிகலா நேரத்தைச் செலவிட்டபோது, அவரை உடனிந்து கிருஷ்ணப்ரியா கவனித்துள்ளார். சசிகலாவின் கோபம் முன்பைவிட குறைந்திருப்பதை உறவுகள் கவனித்துள்ளன. சிறை வாழ்க்கை, சசிகலாவின் நடவடிக்கைகள் பலவற்றை மாற்றியிருப்பதாகவும் கருதுகின்றன. சசிகலாவிடமிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் உத்தரவு போலவே முன்பு இருக்கும். ஆனால், தற்போது அப்படியில்லை. எதையும் யோசித்து, அமைதியாகப் பேசுகிறார். அவ்வப்போது அவரது பழைய கோபம் வந்தாலும், அதை உறவுகளின் முன்பு பெரிதாகக் காட்டிக்கொள்ளவில்லை.

சசிகலா

ஜெயலலிதா நடித்த படங்கள், ஜெயலலிதாவுடன் இருக்கும் தன்னுடைய புகைப்படங்கள்கொண்ட ஆல்பங்களைப் பொறுமையாகப் புரட்டிப் பார்த்துள்ளார் சசிகலா. அப்போது, அவரது கண்கள் கலங்கியுள்ளன. பரோலில் இருந்த நாள்களில், தனிமையிலேயே அதிக நேரத்தைச் செலவழித்துள்ளார். மேலும், ஆன்மிகத்தில் அதிக அளவு ஈடுபாட்டுடன் இருக்கிறாராம். ஜெயலலிதாவின் ஜாதகத்தைச் சொன்ன விருதுநகர் புள்ளி, சசிகலாவின் ஜாதகத்தைக் கணித்து சில தகவல்களைச் சொல்லியிருக்கிறார். அதில், இனிவரும் காலங்கள் சசிகலாவுக்குச் சிக்கல் நிறைந்ததாக இருக்கும் என்று சொல்லியதாகச் சொல்லப்படுகிறது. இது, சசிகலா மட்டுமல்ல குடும்ப உறவுகளையும் வருத்தமடையவைத்துள்ளது. 

 

சிறைக்குச் செல்லத் தயாரான சசிகலா, 'நடராசனை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள். அ.தி.மு.க விவகாரத்தை அமைதியாகக் கையாளுவோம். அவசரப்பட்டதே நமக்கு ஆபத்தாகிவிட்டது' என்று குடும்ப உறவுகளிடம் தன்னுடைய மனதில் உள்ள சில விஷயங்களை வெளிப்படையாகப் பேசியதாக, தினகரனுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். 

http://www.vikatan.com/news/tamilnadu/104683-jayalalithaa-album-loneliness---sasikalas-prison-experience.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.