Jump to content

உயிர் வளர்க்கும் திருமந்திரம்


Recommended Posts

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 47: தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

 

 
thirumandhiramjpg

நம்முடைய கடவுள் மரபில் ஒரு சிக்கல் இருக்கிறது. கடவுளை யார் அறியலாம்? யார் அணுகலாம்? யார் அணையலாம்? இதென்ன கேள்வி? யாரும் அறியலாம்; யாரும் அணுகலாம்; யாரும் அணையலாந்தானே?

ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை;

 

ஈரம் உடையவர் காண்பார் இணைஅடி... (திருமந்திரம் 273)

-யார் ஆர்வம் உடையவர்களோ அவர்கள் காண்பார்கள்; யார் அன்பு உடையவர்களோ அவர்கள் பெறுவார்கள் என்றுதானே வாக்களிக்கப்பட்டிருக்கிறது? ஆனால் நடைமுறையில் அது நிகழ்கிறதா என்றால், இல்லை. ஏன் நிகழவில்லை என்றால், கடவுள் சமயங்களுக்குள் அடைக்கப்பட்டுவிட்டார்; நிறுவனமயம்  ஆக்கப்பட்டுவிட்டார். நிறுவனங்களுக்குள்ளே நுழைவதற்கான தகுதிப்பாடுகளும், கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளும், நிகழ்த்தவேண்டிய சடங்குமுறைகளும், ஆற்றவேண்டிய கடமைகளும், அடையவேண்டிய இலக்குகளும் கற்பிக்கப்பட்டுவிட்டன.

இனி விதிமுறைகளுக்குப் பொருத்தப்பாடு உடையவர் காண்பர்; தகுதிப்பாடு உடையவர் அணுகுவர்; அணைவர். இந்த அமைப்புமுறையில், சிலர் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்; சிலர் வெளியே நிறுத்தப்படுகிறார்கள். எல்லோரும் ஒரு தன்மையில் தழுவத் தக்கவராக இறைவனார் இல்லை.

ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்றால், கருத்துக்குள் இருந்த கடவுள் புறத்துக்கு வந்துவிட்டார். வழிபாட்டுக்கு வசதியாக அவரைக் கழுவ வேண்டியிருக்கிறது; வழிபடுவோரிடமிருந்து அவரைப் பாதுகாக்கவும் வேண்டியிருக்கிறது. கருத்துமேட்டில் இருந்தது வரையில் களவாட முடியாதவராக இருந்த கடவுள், களத்துமேட்டுக்கு வந்ததற்குப் பிறகு களவுக்குப் பொருளானார். ‘வேப்பமரம் நோயிலே; வைத்தியனும் பாயிலே; காவல் காக்கும் ஐயனாரும் களவு போனாரே’ என்றொரு திரைப்படப் பாட்டு.

அகப்பொருளாக, அறிவுப்பொருளாக இருக்கின்ற ஒன்று, புறப்பொருளாக ஆனாலே இப்படித்தான்—ஆட்டை போடப்படும் அல்லது அணுக இயலாதபடிக் கட்டை போடப்படும்—கடவுளாக இருந்தாலும் சரி, கல்வியாக இருந்தாலும் சரி.

வெள்ளத்தால் அழியாது; வெந்தழலால்

வேகாது; வேந்த ராலும்

கொள்ளத்தான் இயலாது; கொடுத்தாலும்

நிறைவுஒழியக் குறைப டாது;

கள்ளத்தால் எவரும் களவாட

முடியாது; கல்வி என்னும்

உள்ளத்தே பொருள்இருக்க உலகுஎங்கும்

பொருள்தேடி உழல்வது என்னே?

-என்று கல்வியைப்பற்றி ஒரு பழம்பாட்டு. கல்வியை வெள்ளம் கொண்டு போய்விடாது; நெருப்பு எரித்துவிடாது; வேந்தர்கள் அதைப் பறிமுதல் செய்துவிட முடியாது; அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் நிறையுமே ஒழியக் குறையாது; யாரும் அதைக் களவாட முடியாது. ஏன்? அது உள்ளத்தில் இருக்கும் பொருள் என்பதால்.

உள்ளத்துப் பொருளாக இருந்தவரை களவாடப்பட முடியாத செல்வமாக இருந்த கல்வி, வெள்ளைக்காரர் காலத்தில் புறத்திறங்கிச் சான்றிதழ் வடிவாகிப் பின் அதுதான் கல்வி என்றான பிறகு, கல்வியைப் பலரும் களவாண்டுவிடவில்லையா?

புறநிலைப்படுத்தப்படும் பொருள் அனைவரும் அணுகிவிட முடியாதபடிக் காவல் செய்யப்படும்; காவல் செய்யப்படும் பொருள் களவாடப்படும். களவாடல் தவிர்க்கப்பட வேண்டுமானால் காவல் கைவிடப்பட வேண்டும். காவல் கைவிடப்பட வேண்டுமானால் களத்துமேட்டில் இருக்கும் பொருள் மீண்டும் கருத்துமேட்டுக்கு ஏற வேண்டும்.

களத்துமேட்டில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் கடவுளை விடுதலை செய்கிறார் திருமூலர். சிலர் மட்டுமே அணுகுமாறும் அணையுமாறும் வேலி கட்டி வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் கடவுளை, அனைவரும் அணுகுமாறும் அணையுமாறும் வேலியை வெட்டி உள்ளுக்குள் கொண்டு வந்துவிடுகிறார்.

உள்ளம் பெருங்கோயில்; ஊன்உடம்பு ஆலயம்;

வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்;

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்;

கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே (திருமந்திரம் 1823)

கோவில் என்பது இதுவரை நீங்கள் ஊற்றைச் சடலம் என்று எண்ணியிருந்த ஊன் உடம்பு. உள்ளந்தான் கருவறை. வாய்தான் கோபுர வாசல். இறைவனின் அடையாளக் குறி எது என்றால் உங்கள் சீவன்தான். கள்ளத்தனம் செய்வதாக நீங்கள் கருதியிருந்த ஐந்து புலன்கள்தாம் உங்கள் இறைவனார்க்கு நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் விளக்குகள்.

திருமூலர் புறக் கோவிலை ஆதரிக்காதவர் இல்லை. ஆனால் கோவில்கள் சிறைகள் ஆகுமென்றால் ஞானவாள் கொண்டு எறிந்து இறைவனைச் சிறை மீட்கத் துணிந்தவர். கொள்கைகள் மக்களுக்கானவை. மக்களால் கொள்ளமுடியாத கொள்கைகளைத் தள்ளத் தயங்காதவர் அவர்.

வேட்டவி உண்ணும் விரிசடை நந்திக்குக்

காட்டவும் யாம்இலம் காலையும் மாலையும்

ஊட்டுஅவி ஆவன; உள்ளம் குளிர்விக்கும்

பாட்டுஅவி காட்டுதும் பால்அவி ஆமே. (திருமந்திரம் 1824)

வேள்வித் தீயில் இறைவனை வழிபடுகிறவர்களோ, இறைவனுக்கு அளிக்கவேண்டிய உணவை அவிப் பொருளாகத் தீயில் இடுகிறார்கள். உருவத் திருமேனியில் இறைவனை வழிபடுகிறவர்களோ, காலையும் மாலையும் பூசனை நேரங்களில் உணவையும் இறைவன் திருவுருவத்துக்கு முன்பாகப் படைத்துக் காட்டுகிறார்கள். இறைவனை உள்ளுக்குள் வழிபடும் நாம் என்ன செய்ய என்றால், உள்ளம் குளிருமாறு உங்கள் மொழியில் ஒரு பாட்டைக் காட்டுங்கள். அது பால் ஊற்றிப் படைத்ததற்குச் சமானம் என்று எல்லோர்க்கும் எட்டுகிற எளிய பூசனைக்குப் பரிந்துரை செய்கிறார் திருமூலர்.

இறைவனைப் புறநிலைப்படுத்தி, அவனுக்கு ஒரு வடிவம் கொடுத்து வழிபடுவது எளியது. அகநிலைப்படுத்தி வழிபடுவது எளியதா? எளியதில்லைதான்.

கண்டுகண்டு உள்ளே கருத்துஉற வாங்கிடில்

கொண்டுகொண்டு உள்ளே குணம்பல காணலாம்;

பண்டுஉகந்து எங்கும் பழமறை தேடியை

இன்றுகண்டு இங்கே இருக்கலும் ஆமே. (திருமந்திரம் 578)

வெளியே காண்பதுபோல உள்ளே காண்பது கடினந்தான். கருத்தைச் செலுத்திப் பழகினால் கைவசப்பட்டுவிடும். இறைவன் எங்கே இருக்கிறான் என்று வேதங்கள் தேடித் தேடிக் களைக்கின்றன; வேதங்களால் கண்டுகொள்ள முடியாதவனை எங்கேயோ எப்போதோ அல்ல, இன்றே, இங்கேயே, இப்போதே கண்டு கொள்ளலாம். இது நல்லதில்லையா?

இறைவனை உடம்புக்குள் கொண்டு வந்து குடியிருத்துவது என்பது என்ன திரூமூலரின் விருப்பமா என்றால், அது வழிபடுகிறவரின் விருப்பம். வழிபடுகிறவர் இறைவனாரை எங்கே எழுந்தருள வேண்டுகிறாரோ அங்கே எழுந்தருள்வார் இறைவனார்—புறமாக இருந்தாலும் சரி, அகமாக இருந்தாலும் சரி.

தங்கச்சி மீனாளுக்குத் திருமணம் செய்விக்கத் திருமாலிருஞ்சோலையிலிருந்து கிளம்பித் தல்லாகுளம் வந்து வைகையில் இறங்கும் கள்ளழகரை ‘இன்னின்ன இடங்களில் எழுந்தருள்க’ என்று மண்டகப்படிக்காரர்கள் வேண்டினால் வேண்டியவண்ணம் எழுந்தருள்வதில்லையா கள்ளழகர்? சாணியையோ சந்தனத்தையோ கூம்பாகப் பிடித்து ‘இதிலே எழுந்தருள்க’ என்றால் அங்கே எழுந்தருள்வதில்லையா கடவுள்? எல்லா இடத்திலும் எழுந்தருளும் கடவுள் உடம்புக்குள் எழுந்தருள மாட்டானா?

‘மணிவண்ணா, நான் போகின்றேன், நீயும் கிளம்பு’ என்று திருமழிசை ஆழ்வார் அழைத்தபோது பாம்புப்பாயைச் சுருட்டிக்கொண்டு கிளம்பியும், ‘போகவில்லை, படுத்துக் கொள்’ என்றபோது பாம்புப்பாயை விரித்துப் படுத்துக்கொண்டும், ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்று பெயர் வாங்கிய கடவுள், ‘வா, வந்து எனக்குள் குடியிரு’ என்று அழைத்தால் வந்திருக்க மாட்டானா?

நாபிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலம்

தாபிக்கும் மந்திரம் தன்னை அறிகிலர்;

தாபிக்கும் மந்திரம் தன்னை அறிந்தபின்

கூவிக்கொண்டு ஈசன் குடிஇருந் தானே. (திருமந்திரம் 579)

மேலே இருந்து கண்காணிக்கிறவன் இறைவன் என்று கருதுகிறார்கள். ஆனால் அவன் அனைத்துக்கும் அடிநிலை ஆதாரமாகக் கீழே இருந்து தாங்குகிறவன். உந்திச்சுழிக்குக் கீழே பன்னிரண்டு அங்குலத்தில் இருக்கிறது உடம்பின் அடிநிலையாகிய மூலாதாரம். அங்கே அவனை எழுந்தருளச் செய்யும் வகை தெரியாமல் திகைக்கிறார்கள். வகை தெரிந்து எழுந்தருளச் சொன்னால் கூவிக்கொண்டு வந்து அங்கே குடியிருப்பான் கடவுள்.

(அழைப்போம் கடவுகளை…) கட்டுரையாசிரியர்,

https://tamil.thehindu.com/society/spirituality/article24873046.ece

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 48: உள்ளம்தான் அறத்தின் நிகழ்களம்

 

 
thirumandhiramjpg

‘இருக்கவா? இறக்கவா? அதுதான் கேள்வி இப்போது’ என்று தன் நெஞ்சொடு கிளக்கிறான் ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் (Hamlet). கலந்துரையாட ஆளில்லாமல் ஒற்றையாகிப் போகும்போது, அல்லது தான் கருதும் கனத்த பொருளைத் தன்னோடு கலந்துரையாடித் தனக்கு விளக்கத் தகுதியான ஆள் அமையாதபோது, ‘நெஞ்சே நெஞ்சே’ என்று தம் நெஞ்சத்தோடு தாமே தமக்கு எட்டியவாறு மனிதர்கள் பேசிக்கொள்வது நெஞ்சொடு கிளத்தல் (soliloquy).

சில சமயங்களில் சிலவற்றைச் செய்தாக வேண்டிய அழுத்தம் மேலே விழுகிறது. அவற்றைச் செய்வதில் உள்ள அறம் சார்ந்த நெருக்கடி உணரப்பட்டு, நெஞ்சம் மறுகி நிற்கும்போது கேள்வி வருகிறது: ‘செய்து இருக்கவா? செய்யாமல் இறக்கவா?’

 

வேலையில் ஆட்களை நியமிப்பதற்குக் கையூட்டுப் பெற்றுத் தரவேண்டும் என்று ஓர் அதிகாரி கட்டாயப்படுத்தப்படுகிறார்; அவருக்கு விருப்பமில்லை; அறமில்லை என்று கருதுகிறார். பணிந்தால், உள்ளம் பழிக்கும். பணியாவிட்டால் வாழ்வியல் நெருக்கடிகள் வரும். நெருக்கப்பட்ட அதிகாரி, இந்தக் கேள்வியை எண்ணிப் பார்த்தோ என்னவோ, தொடர்வண்டிக்கு முன்னால் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொள்கிறார்.

இல்லாத இருமை

இந்தக் கேள்வி முறையான கேள்வியா? பிழையான கேள்வியா? விடைகளைப் பிழை என்று சொல்லலாம்; கேள்விகளையே பிழை என்று சொல்லலாகுமோ? சொல்லலாகும். அப்பக்கம் இப்பக்கம் அசைய விடாமல், ‘இரண்டில் ஒன்று சொல்க’ என்று விடையை அடைத்து வைத்துக்கொண்டு கேட்கும் கேள்வி பிழையான கேள்வி இல்லையோ? ‘ஆம், இல்லை’ என்ற இரண்டு வாய்ப்புகளை மட்டுமே நம் முன் நிறுத்தும் கேள்வி பிழையான கேள்வி இல்லையோ? இவ்வகைக் கேள்விகள் பொய்-இருமைக் கேள்விகள் (false dilemma). இல்லாத இருமையைக் கட்டமைக்கின்றன இவை. இரண்டிலிருந்தும் விலகிய மூன்றாவது கூறு ஒன்று இருப்பதை அடியோடு மறைக்கின்றன இவை.

‘இருக்கவா? இறக்கவா?’ என்ற இக்கேள்வி, நெருக்கடிக்குப் பணிந்துகொடுத்து, இப்போதிருக்கும் அதே நிலையில் தொடர்ந்து இருக்கவா? அல்லது பணிய மறுத்து, இப்போதிருக்கும் அதே நிலையில் இறக்கவா என்ற இருமைகளைக் கட்டமைக்கிறது. உடைத்துப் பார்த்தால், கேள்வி இருத்தலையும் இறத்தலையும் பற்றியதில்லை; இப்போதிருக்கும் நிலையைப் பற்றியது; இல்லையா? அதைத் தக்கவைத்துக் கொள்வதா அல்லது அதிலிருந்து தள்ளப்படுவதா என்பதைப் பற்றியது; இல்லையா?

தக்கவைத்துக்கொள்ளப் போராடுவது அல்லது தாக்குப்பிடிக்க முடியாமல் தள்ளிவிடப்படுவது என்ற இந்த இரண்டு வாய்ப்புகள்தாமா? வேறு இல்லையா என்றால், ஏன் இல்லை? தக்கவைக்கப் போராடாமல், தள்ளியும் விடப்படாமல், இப்போதிருக்கும் நிலையை நாமாகவே துறந்துவிட்டால்? துறந்து வெளியேறுதல் என்பது இந்த இருமைகளுக்கு இடையில் நிற்கும் மூன்றாவது வாய்ப்பில்லையா? அந்த வாய்ப்பைக் கண்டுகொள்ளத் தெரிந்திருந்தால், ‘இருக்கவா? இறக்கவா?’ என்ற கேள்வியே எழாதில்லையா? புத்தருக்கு எழவில்லையே?

‘இப்போதிருக்கும் நிலை பொருட்டே இல்லை; பிறக்கும்போது இந்த நிலையில் இல்லை; இறக்கும்போதும் இந்த நிலையில் இருக்கப்போவதில்லை; இடையில் வந்தது இடையிலேயே போகிறது; போகட்டும்’ என்று சிக்க வைக்கும் விவகாரத்திலிருந்து தன்னை விலகிக்கொள்ளத் தெரிந்தவர், நோகாமல் வாழ்வார் இல்லையா?

அறம் என்பது என்ன?

சரியான விடைகள் தேவையில்லை என்று கருதப்படும் இடங்களில் கேள்விகளே பிழையாக எழுப்பப்படு கின்றன. கேள்விகள் பிழையாக எழுப்பப்பட்டால் விடைகளும் பிழை யாகவே எழுகின்றன. கேள்விகள் திருத்தப்பட்டாலோ உண்மைகள் தாமாகவே கிளம்புகின்றன.

‘இருக்கவா? இறக்கவா?’ என்ற கேள்வியின் அடியாதாரம் அற உணர்ச்சியே அல்லவா? அப்படி என்றால், ‘அறத்தோடு இருக்கவா? அறம் இழந்து சிறக்கவா?’ என்று கேட்பது சரியாக இருக்கும் அல்லவா?

அறம் என்பதென்ன? இந்தக் கேள்வி எழுந்தபோது சாக்ரட்டீசின் நண்பர்கள் சில விடைகளைச் சொன்னார்கள். செபலசு என்பவன் சொன்னான்: அறம் என்பது உண்மை சொல்லுதலும் வாங்கியதைத் திருப்பிக்கொடுத்தலும். சாக்ரட்டீசு கேட்டான்: கத்தியைக் கடன் வாங்கினேன்; கடனைத் திருப்பிக் கொடுக்கச் சென்றபோது கொடுத்தவனின் மனம் பிறழ்ந்திருப்பதைக் கண்டேன். இப்போது எது அறம்? அவனது மனப் பிறழ்வைப் பொருட்படுத்தாமல் உண்மை சொல்லிக் கத்தியைத் திருப்பிக்கொடுப்பதா? அல்லது கமுக்கமாகத் திரும்பி வந்துவிடுவதா? கமுக்கமாகத் திரும்பி வந்துவிடுவதுதான். அப்படியென்றால் உண்மை சொல்வதும் வாங்கியதைத் திருப்பிக் கொடுப்பதும் எப்படி அறமாகும்? அறம் இடம் பொருள் ஏவல் சார்ந்ததில்லையா?

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின் (குறள் 292)

-குற்றமில்லாத நன்மை தரும் என்றால், பொய்யும் மெய்யை ஒத்ததுதான் என்று நமக்குப் பாடம் இ்ல்லையா?

பாலிமாக்கசு என்பவன் சொன்னான்: அறம் என்பது நண்பர்களுக்கு நல்லது செய்வதும் எதிரிகளுக்குத் தீங்கு செய்வதும். சாக்ரட்டீசு கேட்டான்: நண்பர்கள் என்று கருதப்படுகிறவர்கள் புறத்தில் நண்பர்களாகவும் அகத்தில் எதிரிகளாகவும் இருந்தால்? எந்தக் காரணமும் இல்லாமல், ஒருவன் எதிர்த் தரப்பினன் என்பதற்காகவே அவனுக்குத் தீங்கு செய்ய முடியுமா? செய்யலாம் என்றால் அது எப்படி அறமாகும்? முகத்துக்கு எதிராகவே முழங்கினாலும் தண்டித்து மகிழ்வது எப்படிச் சால்பாகும்?

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு (குறள் 987)

-தாம் விரும்பாததை ஒருவர் தனக்குச் செய்தாலும் பொறுத்துக்கொண்டு அவருக்கு நல்லதையே செய்யாவிட்டால் தாம் தலைமைப் பண்புள்ளவர் என்பதற்கு என்ன பொருள் என்று நமக்குப் பாடம் இல்லையா?

திரசீமாக்கசு என்பவன் சொன்னான்: வலிமையும் அதிகாரமும் உள்ளவன் என்ன சொல்கிறானோ அதுதான் அறம். சாக்ரட்டீசு சொன்னான்: அறம் என்பது அறிவின் விளைபொருள். அதிகாரம் என்பது அறிவீனத்தின் விளைபொருள். அறிவீனம் தன் வலிமையைப் பயன்படுத்தி அறிவை எப்போதும் ஆளமுடியாது. வலிமையும் அதிகாரமும் முரண்பாடுகளையும் பகைமைகளையும் உருவாக்கும்; இறுதியாக அவற்றிலேயே சிக்கி அழியும். அறம் என்பது அறிவினால் ஆளப்படும் உள்ள ஒழுங்கு.

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும் (குறள் 293)

-தன் நெஞ்சு அறிந்த ஒன்றைப் பிறர் அறியமாட்டார்கள் என்று பொய்யாகச் சொல்ல வேண்டாம்; சொன்னால் தன் நெஞ்சே அந்தப் பாவத்துக்குச் சான்றாக நின்று தன்னை வருத்தும் என்று நமக்குப் பாடம் இல்லையா?

கண்காணி இல்என்று கள்ளம் பலசெய்வார்

கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால்;

கண்காணி யாகக் கலந்துஎங்கும் நின்றானைக்

கண்காணி கண்டார் களவுஒழிந் தாரே. (திருமந்திரம் 2067)

கடவுள் பெயரைச் சொல்கிறவர்கள்கூடக் கண்காணிக்க ஆளில்லை என்று துணிந்து களவாணித்தனம் செய்கிறார்கள். கண்காணி இ்ல்லாத இடம் என்று ஒன்றா இருக்கிறது? கண்காணி எங்கும் கலந்து நின்றவன் இ்ல்லையா? கண்ணாகவே நின்று அனைத்தும் காட்டுகிற கண்காணி தன்னைக் காட்ட மாட்டானா? அவனைக் கண்டுகொண்டவர்கள் இனிக் கள்ளத்தனம் செய்வார்களா?

கண்காணி யாகவே கையகத் தேஎழும்;

கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்;

கண்காணி யாகக் கலந்து வழிசெய்யும்;

கண்காணி ஆகிய காதலன் தானே. (திருமந்திரம் 2072)

கண்காணும் உருவமாக எழுந்து நிற்பான்; கண்காணிக்கிறவனாகக் கருத்துக்குள் உறைந்திருப்பான்; காணும் கண்ணாக நின்று காண்பிப்பான்; காவல் செய்யும் கண்காணி என்றாலும் அந்தக் காவல் என்மேல் கொண்ட காதல் அல்லவோ?

உள்ளந்தான் அறத்தின் நிகழ்களம். உள்ளத்தில் அவரவரை வைக்கும் வள்ளுவர் ‘தன் நெஞ்சு அறிவது பொய்யற்க’ என்கிறார். உள்ளத்தில் கடவுளை வைக்கும் திருமூலர் ‘கடவுள் அறிவது பொய்யற்க’ என்கிறார். சொற்கள்தாம் வேறு. இலக்கு ஒன்றுதான். பொய்யற்றுக் களவொழிந்து இறவாது இருந்திடுக.

(அறம் வளர்ப்போம்…) கட்டுரையாசிரியர்,

https://tamil.thehindu.com/society/spirituality/article24935814.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 49: மன்மனத்து உள்ளே மனோலயம்

 

 
uyirjpg

வணிகம் செய்கிறவர்கள் வரவுசெலவுகளைக் கணக்கிட்டு, ஆகமொத்தம் இந்த வணிகத்தால் நமக்கு வந்த ஊதியம் அல்லது இழப்பு இவ்வளவு என்று மதிப்பிட்டுக் கொள்வதைப்போல, வாழ்வின் வரவுசெலவுகளைக் கணக்கிட்டு இந்த முறையிலான வாழ்வினால் நமக்கு வந்த ஊதியம் அல்லது இழப்பு இவ்வளவு என்று மதிப்பிட்டுக்கொள்ள முடியுமா? தாயுமானவர் ஒரு கணக்கெடுக்கிறார்:

...யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்

 

உறங்குவதும் ஆகமுடியும்;

உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே

ஒன்றைவிட்டு ஒன்றுபற்றிப்

பாசக் கடற்குளே வீழாமல் மனதுஅற்ற

பரிசுத்த நிலையைஅருள்வாய்,

பார்க்கும்இடம் எங்கும்ஒரு நீக்கம்அற

நிறைகின்ற பரிபூரணானந்தமே.

(தாயுமானவர், பரிபூரணானந்தம், 10)

கணக்கெடுத்துப் பார்த்தால், பசி தீரச் சாப்பிட்டிருக்கிறோம்; படுத்து உறங்கியிருக்கிறோம். அல்லாமல் வேறென்ன? உள்ளதே போதும் என்று ஒரு பொழுதேனும் தோன்றியிருக்கிறதா? ‘நான், நான்’ என்னும் அறிவற்ற குளறல் என்றைக்காவது அற்றுப் போயிருக்கிறதா? அதை விடுவோம், தாவி இதைப் பிடிப்போம்; இதை விடுவோம், தாவி வேறொன்றைப் பிடிப்போம்; தாவித் தாவிப் பிடித்துக் கடைசியில் பிடிமானமில்லாமல் பற்றாகிய பழங்கடலுக்குள் விழுந்து அமிழ்வோம்.

அல்லாமல் வேறென்ன? அவ்வாறெல்லாம் ஆகிவிடாமல், இனி என்னைப் புதிய உயிர் ஆக்கி, மனம் தன்னை மிகத் தெளிவு செய்து, என்றும் ஆனந்தம் கொண்டிருக்கச் செய்வாய் என்று பரிபூரண ஆனந்தத்தை வேண்டுகிறார் தாயுமானவர்.

முற்றத் துறக்கும் முன் அரசக் கணக்கெழுதியவர் தாயுமானவர். பட்டினத்தாரும் அவ்வாறே. முற்றத் துறக்கும் முன் வணிகக் கணக்கெழுதியவர். தாயுமானவரைப்போலவே பட்டினத்தாரும் வாழ்க்கைக் கணக்கெடுக்கிறார்:

உண்டதே உண்டும், உடுத்ததே உடுத்தும்,

அடுத்து அடுத்து உரைத்ததே உரைத்தும்,

கண்டதே கண்டும், கேட்டதே கேட்டும்

கழிந்தன கடவுள் நாள் எல்லாம்;

விண்டதா மரைமேல் அன்னம்வீற்று இருக்கும்

விழவுஅறா வீதிவெண் காடா,

அண்டரே போற்ற அம்பலத்து ஆடும்

ஐயனே, உய்யுமாறு அருளே.

(பட்டினத்தார், திருவெண்காட்டுத் திருவிசைப்பா)

உண்டதைத்தான் உண்கிறோம்; உடுத்ததைத்தான் உடுக்கிறோம்; பேசியதையே திரும்பத் திரும்பப் பேசுகிறோம்; பார்த்ததையே பார்க்கிறோம்; கேட்டதையே கேட்கிறோம். திரும்பிப் பார்த்தால், ஐயோ, கடவுளைக் கண்டுகொள்வதற்காக வழங்கப்பட்ட நாட்களை அல்லவா வீணாக்கியிருக்கிறோம்? திருவெண்காட்டு ஈசா, இவ்வாறு உழற்றாமல், என்னைச் சரியான திசைக்குத் திருப்பி ஆட்கொள்ள மாட்டாயா?

அறிந்ததைக் கணக்கெடுக்கும் திருமூலர்

தாயுமானவரைப் போலவும் பட்டினத்தாரைப் போலவும் கணக்கெழுதும் பயிற்சி உள்ளவரா திருமூலர் என்று தெரியவில்லை. என்றாலும் அவரும் கணக்கெடுக்கிறார். ஆனால், இவர் போடும் கணக்கு கொஞ்சம் வேறாக இருக்கிறது. தாயுமானவரும் பட்டினத்தாரும் உண்டதை, உடுத்தியதைக் கணக்கெடுக்கிறார்கள். திருமூலர் அறிந்ததைக் கணக்கெடுக்கிறார்:

உற்றுஅறிவு ஐந்தும், உணர்ந்துஅறிவு ஆறுஏழும்,

கற்றுஅறிவு எட்டும், கலந்துஅறிவு ஒன்பதும்,

பற்றிய பத்தும், பலவகை நாழிகை

அற்றது அறியாது அழிகின்ற வாறே (திருமந்திரம் 741)

மெய், வாய், கண், மூக்கு, செவி என்று புலன்களின் வழியாக உற்று அறிந்த வகையில் அறிவு ஐந்து; புலன்களால் உற்று அறிந்தவற்றையெல்லாம் மனத்தினுள் வாங்கிக் கொண்ட வகையில் அறிவு ஆறு; வாங்கிக் கொண்டவற்றையெல்லாம் வகைப்படுத்தித் தொகுத்து, உணர்ந்துகொண்ட வகையில் அறிவு ஏழு;

முற்றறிவு பெறுவதற்கு, உற்றும் உணர்ந்தும் அறிந்தவை போதாதென்று, அறிஞர் பெருமக்கள் உணர்ந்து சொன்னவற்றைக் கசடறக் கற்று அறிந்த வகையில் அறிவு எட்டு; கசடறக் கற்று, அறிந்தவற்றுக்குத் தக நின்று, தானே பட்டும் அறிந்த வகையில் அறிவு ஒன்பது; பட்டு அறிந்தவற்றையெல்லாம் ‘தனது’ என்று பற்றிக்கொண்ட வகையில் அறிவு பத்து. அறிந்தாலும் என்ன, அறியாவிட்டாலுந்தான் என்ன என்று கருதத்தக்க அற்பங்களையெல்லாம் அறிவதிலேயும் அவற்றைத் தனதாக்கிப் பற்றிக் கொள்வதிலேயும் காலம் கழிகிறது. காலம் கழிகிறது என்பதையே அறியாமல், ஐயோ, வாழ்வு அழிகிறதே?

தளைப்படுத்துவது எது?

அறிவுதான் விடுதலை செய்யும். விடுதலை செய்ததா என்று கணக்குப் பார்த்தால் செய்யவில்லை. என்றால் என்ன கோளாறு? விடுதலை தருவது எதுவோ அதை அறிந்து அதில் ஈடுபடாமல், தளைப்படுத்துவது எதுவோ அதை அறிந்து அதில் ஈடுபட்டது.

கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தது

அங்குபுக் கால்அன்றி ஆய்ந்துஅறி வார்இல்லை;

திங்கள்புக் கால்இருள் ஆவது அறிந்திலர்;

தங்குபுக் கார்சிலர் தாபதர் ஆமே.

(திருமந்திரம் 2930)

கொங்கு எனப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையின் காடும் காடு சார்ந்த நாடுமாகிய பகுதியில் அகிலும் சந்தனமும் மிளகும் கிராம்பும் ஏலமும் பெரும் வருவாயை ஈட்டித்தரும் வணிகப் பொருள்கள். அவை எந்த வகையில் கொள்முதல் செய்யப்படுகின்றன, என்ன விலைக்கு விற்கப்படுகின்றன என்னும் வணிக விவரங்களை வேறு பகுதியில் வாழ்கிறவர் ஒருவர் அறிய வேண்டுமானால் அவர் கொங்குப் பகுதிக்குப் போய்த்தான் அறிய வேண்டும். என் இடத்திலிருந்தே அறிவேன் என்றால் கதை நடக்காது.

நீச்சல் கற்றுக்கொள்ள விரும்புகிறவர் குளத்தில் இறங்குவது கட்டாயம் இல்லையா? மாலை மயங்கி நிலா வரும்வரையில் இருள்தான்; நிலா வந்துவிட்டால் இருள் ஒடுக்கப்பட்டுவிடுகிறது இல்லையா? அவ்வாறே ஒன்றை அறியப் புகுந்துவிட்டால் அறியாமை நீங்குகிறது. ஆனால் அறியப் புகுந்தது எதுவோ அதை அறியாமல் விடுவதில்லை என்ற விடாமுயற்சியும் அங்குமிங்கும் விலகாத நேர்க்கோட்டு நினைவும் உள்ளவர்கள் மட்டுமே அதை அறிகிறார்கள்.

விடுதலை விளையுமிடத்தைக் கண்டறியவும் விலகாத நேர்க்கோட்டு நினைவு, விடாமுயற்சி வேண்டும். அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம்?

அங்குமிங்குமாக அலைக்கழிக்கும் மனம் என்னும் மாடு அடங்கினால் நேர்க்கோட்டு நினைவு இயல்வதாகும். மனம் என்கிற மாட்டை அடக்கும் வகை என்ன? கொம்பைப் பிடித்து மடக்க வேண்டும். மன மாட்டின் கொம்புகள் எங்கே இருக்கின்றன? அவை நம் மூக்கிலிருந்து மூச்சாக நீள்கின்றன. மூச்சைப் பிடித்தால் மாட்டை மடக்கலாம். கூற்றை உதைக்கலாம்.

மன்மனம் எங்குஉண்டு வாயுவும் அங்குஉண்டு;

மன்மனம் எங்குஇல்லை வாயுவும் அங்குஇல்லை;

மன்மனத்து உள்ளே மகிழ்ந்துஇருப் பார்க்கு

மன்மனத்து உள்ளே மனோலயம் ஆமே.

(திருமந்திரம் 620)

மனம் புறப்பொருள்களை நத்தித் திரியும்போது, உயிர்க் காற்று அலைகிறது. மனம் ஒடுங்குகிறபோது, உயிர்க் காற்று தன் அலைச்சல் மாறிக் கட்டுப்பட்டு ஒழுங்குக்கு வருகிறது. புறப்பொருள்களைப் பற்றித் திரிகிற மனத்தையே பற்றித் திரிக. மனம் மனத்துக்குள்ளேயே ஒடுங்கும். நஞ்சுக்கு நஞ்சே மருந்தாவதுபோல, மனத்தை மனமே வசப்படுத்தும் என்ற பாட்டால் மனத்துக்கும் உயிர்க் காற்றுக்கும் உள்ள நேரடித் தொடர்பு சொன்ன திருமூலர் மற்றொரு பாட்டால் அதை உறுதிப்படுத்துகிறார்:

பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்

பிராணன் இருக்கில் பிறப்புஇறப்பு இல்லை;

பிராணன் மடைமாறிப் பேச்சுஅறி வித்துப்

பிராணன் நடைபேறு பெற்றுஉண்டீர் நீரே.

(திருமந்திரம் 567)

பிராணன் என்கிற உயிர்க்காற்றும் மனமும் நேர்த் தொடர்புள்ளவை. உயிர்க்காற்றுப் பெயர்ந்தால் மனம் பெயரும்; மனம் பெயர்ந்தால் உயிர்க்காற்றின் நடை மாறும். உயிர்க்காற்று நடைமாறாமல் நிலைகுத்திவிட்டால் பிறப்பு இறப்பு அச்சத்திலிருந்து விடுதலை கிடைக்கும். உயிர்க்காற்றை நிலைநிறுத்துக. பேச்சுப் பேச்சென்றும் உங்கள் பெரும்பேச்சின் பயனின்மையை உங்களுக்கு நீங்களே அறிவித்துக்கொண்டு பேச்சடக்குக. உயிர்க்காற்று கதி மாறாமல் நடைபழகும். அந்தச் சிதறா நடையின் பேறாக விடுதலை வந்து முன்னிற்கும்.

காற்று மெலிய தீயை அவித்துவிடும்; வலிய தீயை வளர்க்கும். காற்றின் தோழமை நன்று. காற்றை நித்தமும் வாழ்த்துக (பாரதி, வசன கவிதை, காற்று). வாழ்வைக் கணக்கெடுக்க விரும்புகிறவர்கள் காற்றைக் கணக்கெடுங்கள். காற்றில் இருக்கிறது வாழ்வு.

(வாழத் தொடங்குவோம்) கட்டுரையாசிரியர்,

https://tamil.thehindu.com/society/spirituality/article24992612.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.