Jump to content

இந்த மொபைலை மடக்கலாம்... சுருட்டலாம்... சாம்சங்கின் அடுத்த சரவெடி!


Recommended Posts

இந்த மொபைலை மடக்கலாம்... சுருட்டலாம்... சாம்சங்கின் அடுத்த சரவெடி!

சாம்சங்

இந்த மாதம் ஆப்பிளின் புதிய ஸ்மார்ட்போனான ஐபோன் X வெளியாகியிருந்த சமயத்தில் சாம்சங் ஒரு அறிவிப்பை வெளியிட்டது . புதிய ஐபோன் X க்கு பதிலடி தரும் வகையில் இந்த அறிவிப்பை சாம்சங் வெளியிட்டிருந்தாலும் ஆப்பிளின் தாக்கத்தால் அந்த அறிவிப்பு பரவலாக கவனிக்கப்படவில்லை. ”2018-ம் ஆண்டு ஜனவரியில் மடக்கக்கூடிய வகையிலான (Foldable Smartphone) ஸ்மார்ட்போனை வெளியிடப்போகிறோம்” என்பதுதான் அந்த அறிவிப்பு.

 

ஸ்மார்ட்போன்கள் தொடக்கத்தில் இருந்த வசதிகளில் இருந்து பல வகைகளில் மேம்பட்டிருந்தாலும் பெரிதாக மாறாத விஷயம் அதன் திரைதான். உடைந்தால் அதிகம் செலவு வைக்கக் கூடியதும் அதுதான். எத்தனை புதிய தொழில்நுட்பங்கள் வந்தாலும் திரை உடைந்து போவதை தடுக்க முடியவில்லை. திரை எதற்காக உடைகிறது என்பதைப் பார்த்தால் அது சற்றும் வளையாத தன்மையைக் கொண்டிருக்கிறது என்பதுதான் விடையாக இருக்கும். சற்று நெகிழும் தன்மையுடைய திரையை மொபைலில் பயன்படுத்தினால் அது உடையும் வாய்ப்பைப் பெருமளவு குறைக்க முடியும். இந்த நிலையில்தான் அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் மடக்கக்கூடிய வகையிலான ஸ்மார்ட்போனை வெளியிடப்போகிறோம் என்று அறிவித்திருக்கிறது சாம்சங். எனவே இதில் நெகிழும் தன்மையுடைய திரை பயன்படுத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். 

சாம்சங


கடந்த வருடம் இது போன்ற ஒரு மொபைலை அறிமுகப்படுத்தியிருந்தது லெனோவோ .டேப்லட் வடிவத்தில் இருந்த அதை இரண்டாக மடித்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அது எப்படிச் செயல்படுகிறது என்பதை விளக்கியும் காட்டியது லெனோவோ. லெனோவோ மட்டுமின்றி இதே கான்செப்டை மையமாக வைத்துப் பல ஸ்மார்ட்போன்கள் படங்கள் வெளிவந்தாலும் அவை எதுவும் விற்பனைக்கு வரவில்லை. எல்லாம் பரிசோதனை நிலையிலேயே இருக்கின்றன. 

ஆனால் இதற்கெல்லாம் பல வருடங்களுக்கு முன்னர் 2013 ம் ஆண்டிலேயே மடக்கக்கூடிய வகையிலான ஸ்மார்ட்போன் கான்செப்ட்டை அறிமுகப்படுத்தி டெக் உலகை ஆச்சரியப்பட வைத்தது சாம்சங். அப்பொழுது வெளியிட்ட ஒரு வீடியோவில் ஒரு மொபைல் மடக்கக்கூடிய வகையிலும் மற்றொன்று ஒரு சிறிய பாக்ஸ் போன்ற இடத்தில் இருந்து சுருட்டி வைக்கப்பட்ட திரையை வெளியில் இழுக்கும் வகையிலும் இருந்தது. அதன்பிறகு சாம்சங் நிறுவனம் இந்த மாடல் மொபைல் தொடர்பாக ஆர்வம் காட்டாதது போலத் தெரிந்தாலும், இது தொடர்பான ஆராய்ச்சியில் முனைப்பாகவே இருந்தது. அறிவிப்பு வெளியாகி 5 வருடங்களுக்குப் பின்னர் அந்த ஸ்மார்ட்போன் வெளியாவது இப்போது உறுதியாகியிருக்கிறது. 

எப்படி இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் 

சாம்சங்


7 அல்லது 8 இன்ச் திரையைக் கொண்டிருக்கலாம். அதை மடக்கிப் பயன்படுத்தும் போது கைக்குள் அடங்குமாறு இருக்கும். அதற்கு தகுந்தவாறு பேட்டரியின் வடிவம் மாற்றியமைக்கப்படலாம். திரையைப் பொறுத்தவரை அது OLED வகை திரையாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. திரையானது நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையைக் கொண்டிருக்கும். 5 வருடங்களுக்குப் பின்னர் வெளியாவதால் 2013 ம் ஆண்டில் காண்பிக்கப்பட்ட மொபைல் வடிவமைப்பு பெரிய அளவில் மாறுபட்டிருக்கலாம். இது தொடர்பாக பல காப்புரிமைகளை கையில் வைத்திருக்கிறது சாம்சங். 

 

அண்மைக்காலமாக வெளியாகும் மொபைல்களின் திரை பெரிய அளவில் மாற்றம் பெற்று வருகிறது. இதற்கு முன்பு மொபைலின் திரையின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு பெரிய இடைவெளி இருக்கும். அது தற்பொழுது வெளியாகும் மொபைல்களில் குறைவதைக் கவனித்தால் தெரியும். அதே வேளையில் இது போன்ற புதிய திரை தொழில்நுட்பங்களால் ஸ்மார்ட்போன்களின் ஒட்டு மொத்த வடிவமைப்புமே மாற்றமடையும். உள்ளங்கைக்குள் உலகம் என்பது போல எதிர்காலத்தில் எவ்வளவு பெரிய மொபைலாக இருந்தாலும் அதை நம் கைகளுக்குள் அடக்கி விடலாம். 

http://www.vikatan.com/news/information-technology/103577-samsung-will-launch-foldable-smartphone-soon.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.