Jump to content

நீர்க் குமிழி ..திடுக்கிட வைத்த ‘வனமோகினி’


Recommended Posts

நீர்க் குமிழி 1: திடுக்கிட வைத்த ‘வனமோகினி’

 

கே.தவமணி தேவி

22chrcjRajakumari1

‘ராஜகுமாரி’ படத்தில் சுகுமாராக எம்.ஜி.ஆர், விஷாராணியாக தவமணிதேவி

22chrcjThavamanidevi

கே.தவமணி தேவி

22chrcjRajakumari1

‘ராஜகுமாரி’ படத்தில் சுகுமாராக எம்.ஜி.ஆர், விஷாராணியாக தவமணிதேவி

சினிமாவில் சின்ன துரும்பைக் கிள்ளிப் போடுவதென்றால் கூட, ஏழுகடல் ஏழு மலை தாண்டி வட இந்தியாவுக்குப் பயணிக்க வேண்டும். மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற ‘மாயாலோக’ த்தை சேலத்தில் உருவாக்கி, இந்தத் தேவையற்ற அலைச்சலைப் போக்கியவர் ‘செல்லுலாய்டு சீமான்’ டி.ஆர்.சுந்தரம். ஒரு டாக்கீயை உருவாக்க அனைத்து வசதிகளையும் அங்கே நிர்மாணித்த பிறகு, 1937-ல் அவர் தயாரித்து, இயக்கி, வெளியிட்ட முதல் படம் ‘சதி அகல்யா’. அதில்தான் அறிமுகப்படுத்தப்பட்டார் ‘சிங்களக் குயில்’ கே. தவமணிதேவி.

 

பரபரப்பான பத்திரிகையாளர் சந்திப்பு

இந்தப் படத்தின் பூஜை 1936-ல் நடந்தபோது, அதைத் தொடங்கிவைத்தவர் அன்றைய காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமதி ருக்மணி லட்சுமிபதி. பூஜை முடிந்து படப்பிடிப்பு தொடங்கவிருந்த சில தினங்களுக்கு முன் மதராஸிலிருந்து பத்திரிகையாளர்களைச் சேலத்துக்கு வரவழைத்தார் சுந்தரம். ‘சதி அகல்யா’ படத்தின் கதாநாயகியைப் பத்திரிகையாளர்களிடம் அறிமுகப்படுத்தினார். பதினைந்து வயதே நிரம்பிய தவமணிதேவி, இலங்கைப் பெண்களின் கலாச்சார உடையில் பத்திரிகையாளர்களைக் கைகூப்பி வணங்கினார். சிங்களம் கலந்த தமிழில் கொஞ்சிக் கொஞ்சி பதில்கள் கூறினார். பதின்மம் விலகாத தன் கற்கண்டுக் குரலால் ஒரு ஆங்கிலப் பாடலை பாடிக் காட்டினார். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பின் ‘சதி அகல்யா’ படத்தில் ரிஷி பத்தினி அகலிகையாக நடிக்கவிருந்த தவமணி தேவியின் புகைப்படங்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டன. அதில் நீச்சல் உடையில் ஒய்யாரம் காட்டிய தவமணி தேவியைக் கண்டு பத்திரிகையாளர்கள் ஆடித்தான் போனார்கள். பன்னிரண்டு முழம் சேலை கட்டும் தமிழ்நாட்டுக்குள் இப்படியொரு துணிச்சல் பெண் இலங்கையிலிருந்து நுழைந்தால் எப்படியிருக்கும்!

நீச்சல் உடைப் புகைப்படங்களால் ‘சதி அகல்யா’ படம் வெளியாகும் முன்பே ‘கிளாமர் குயின்’ஆகப் பிரபலமாகிவிட்டார் தவமணி தேவி. அப்படியிருக்க தெய்வீகத் தன்மைகொண்ட அகலிகை வேடத்தில் அவரை நடிக்கவைக்க இந்தத் திருச்செங்கோட்டுக்காரருக்கு எவ்வளவு துணிவு வேண்டும்’ என்று ஆச்சரியமாகப் பேசிக்கொண்டார்கள் அன்று. ‘ஒருகால் அகலிகையை கவர்ச்சியாகச் சித்தரிப்பாரோ’ என்று அனுமானம் செய்தவர்கள், படம் வெளியானபோது ஏமாந்துபோனார்கள்.

 

திடுக்கிட வைத்த மேனகை

ஆனால் அடுத்தடுத்து நடிக்த படங்களில் அவர் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார். வெகு சில படங்களே நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவின் முதல் ‘கவர்ச்சிச் கன்னி’யாக மட்டுமல்ல, டி.ஆர்.ராஜகுமாரிக்கு முன் முதல் கனவுக் கன்னியாகவும் ஆனார் தவமணி தேவி. எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி முதன்முதலாக நடித்த ‘சகுந்தலை’யில் ‘மேனகை’யாகத் தோன்றினார். மார்பில் கச்சை கட்டிக்கொண்டு, ‘மேகத்துயில்’ என அன்று வர்ணிக்கப்பட்ட, உடல் வெளியே தெரியும் மெல்லிய ‘ட்ரான்ஸ்பரண்ட் ஜார்ஜெட்’ துணியால் ஆன பாவாடை அணிந்து, விஸ்வாமித்திர முனிவரின் கடும் தவத்தைக் கலைக்க இவர் ஆடிய நடனம், திரையரங்குகளில் வெப்ப அலைகளை உருவாக்கியது.

 

வனமோகினியும் ராஜகுமாரியும்

அடுத்து வெளியான ‘வனமோகினி’யில் தனது செல்ல யானையுடன் காட்டில் வாழும் பெண்ணாகக் கவர்ச்சி உடையில் தோன்றி கதிகலங்கவைத்தார் தவமணி தேவி. கவர்ச்சி உடை என்றால் மலேயா, மாலத்தீவு, ஹவாய் போன்ற தேசங்களில் பெண்கள் அணியும் ‘சாரத்தை’(sarong) என்ற பூப்போட்ட நீளமான துணியை உடலில் சுற்றி கழுத்தில் முடிச்சிட்டுக்கொள்ளும் ஆடையை தவமணி அணிந்திருந்தார். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே அப்படியொரு ஆடையைக் கதாநாயகி அணிந்தது அதுவே முதல்முறை. ‘வனமோகினி’யில் பத்துக்கும் அதிகமான பாடல்களைத் தன் இனிய குரலால் பாடி அசத்திய தவமணிதேவி, அந்தப் படம் வெளியான அதே ஆண்டில் வெளியான ‘வேதவதி அல்லது சீதா கல்யாணம்’ படத்தில், ‘வனமோகினி’க்கு நேர் எதிராக சீதையின் வேடத்தில் வந்தார். அதில் இந்திரஜித்தாகச் சிறுவேடத்தில் நடித்திருந்த எம்.ஜி.ராமச்சந்தர், பின்னர், ‘ராஜகுமாரி’யில் கதாநாயகனாக அறிமுகமானர். காலம் எல்லாவற்றையும் நீர்க்குமிழியாக மாற்றிவிடுகிறது. இப்போது ‘ராஜகுமாரி’ படத்தில், எம்.ஜி.ராமச்சந்தரைத் தன் அழகால் மயக்கமுயலும் சர்ப்பத்தீவின் விஷாராணியாக காமக் கதாபாத்திரம் ஒன்றை தவமணிதேவிக்கு வழங்கியது.

 

திறமைகளின் மொத்த உருவம்

தவமணிதேவியை அன்றைய தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் கவர்ச்சி பிம்பமாகச் சித்தரித்தார்கள். அவரை வைத்து தங்கள் கல்லாவை நிரப்பிக்கொண்டார்கள். அவரிடமிருந்து கவர்ச்சியை மட்டுமே எதிர்பார்க்க வைத்தார்கள். ஆனால் பரதம், கண்டி நடனம், ராக் அண்ட் ரோல், பாலே உள்ளிட்ட பல நடனங்கள் கற்றவர்தவமணிதேவி. சிறந்த பாடகி. ஆங்கிலத்தில் கவிதையும் பாடலும் எழுதும் ஆற்றல் அவருக்கு இருந்தது. ஆடை வடிவமைப்பு, ஒப்பனைக்கலை ஆகியவற்றை அறிந்தவர். யாழ்ப்பாணத்தின் இணுவில் பிறந்து வளர்ந்து 5 வயதுமுதல் அங்கே நடனமும் பாட்டும் கற்று, தங்கத் தட்டில் உண்டு வளர்ந்த தவமணிதேவியின் தந்தை கதிரேசன் சுப்ரமணியம் கொழும்பு நீதிமன்றத்தில் நீதியரசராகப் பணியாற்றியவர். தவமணிதேவியின் தாய் மாமா பாலசிங்கம், இலங்கை வெள்ளைக்கார அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர். 15 படங்களே நடித்த தவமணிதேவி, புதிய நடிகைகளின் வரவால் 1962-ல் சினிமாவிலிருந்து முற்றாக விலகி கோடிலிங்க சாஸ்திரியை மணந்து ராமேஸ்வரத்தில் குடியேறி அமைதியான வாழ்க்கையை வாழ்ந்தவர், தனது 81-வது வயதில் மறைந்தார்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19733680.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நீர்க் குமிழி 2: சிறையில் பூத்த எழுத்தாளர்!

 

 
22Panathottam

பி.எஸ்.ராமைய்யாவின் கதையில் உருவான ‘பணத்தோட்டம்’

ன்றைய தம்பி ராமையாவை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அன்றைய பி.எஸ். ராமையாவை தெரியுமா? ‘மணிக்கொடி’ கால எழுத்தாளர் மட்டுமல்ல, மணி மணியாக 300 சிறுகதைகளை எழுதிக் குவித்தவர். இலக்கிய உலகத்திலிருந்து சினிமா உலகத்துக்குப்போன மூத்த படைப்பாளிகளில் முக்கியமானவர், நாம் மறந்துபோய்விட்ட பத்தலக்குண்டு சுப்ரமணியன் ராமையா. ஆறு படங்களுக்கு வசனம், ஐந்து படங்களுக்கு கதை மட்டும், எட்டு படங்களுக்கு கதையும் வசனமும், இரண்டு படங்களை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியது என மொத்தம் 19 படங்களில் பி.எஸ்.ராமையாவின் திரை ஆளுமை திறம்பட விளங்கியது.

 

இளமையில் வறுமையை விரட்ட

இன்றைய திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டை வெள்ளைக்காரர்கள் பத்தலக்குண்டு என்று உச்சிரித்து அதையே ஆங்கிலப் பயன்பாடாகவும் மாற்றினார்கள். அந்த பத்தலக்குண்டு ஊரைக்குறிக்கும் ‘பி’தான் ராமையாவின் முதல் இனிஷியல். இரண்டாவது இனிஷியலான எஸ், ராமையாவின் தந்தை சுப்ரமணிய ஐயரைக் குறிப்பது. வத்தலக்குண்டு அருகேயுள்ள ஆத்தூர் கிராமம்தான் சுப்ரமணியருக்குப் பூர்வீகம். பிழைப்புக்காக சுப்ரமணியர் வத்தலக்குண்டுக்கு குடியேறினார். அவரது மகன் ராமையாவோ பிழைப்புக்காக சொல்லாமல் கொள்ளமால் மதராஸுக்கு குடியேறினார். இள வயதிலேயே தாயை இழைந்து வறுமையில் வாடினாலும் எட்டாம் வகுப்புவரை கற்றுத் தேர்ந்தார். தனது 16-ம் வயதில் மதராஸ் பட்டணத்துக்கு 1921-ல் வந்து சேர்ந்தார். ஆதரவின்றி வருபவர்களுக்கு உடனே அடைக்கலம் தரும் புண்ணியத் தலங்களாக அன்றும் ஹோட்டல்களே இருந்தன. ஹோட்டல் ஒன்றில் சர்வராகப் பணிபுரிந்து வயிற்றைக் கழுவிக்கொண்ட ராமையா, தனக்குக் கிடைத்து வந்த சொற்ப ஊதியத்தின் ஒருபகுதியை தந்தையாருக்கு அனுப்பியதுபோக எஞ்சிய அனைத்தையும் பத்திரிகையும் புத்தகங்களும் வாங்கப் பயன்படுத்தினார். வாசிப்பும் தமிழ் மீதிருந்த காதலும் 25 வயதில் அவரை கன்னி எழுத்தாளனாக மாற்றியிருந்தன. அதேசமயம் அண்ணல் காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரகப்போராட்டமும் அவரை ஈர்த்தது. 25.02.1930-ல் சென்னையில் நடந்த உப்புக் காய்ச்சும் போராட்டத்தில் கலந்துகொண்ட ராமையா கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

சிறையே பயிற்சிக்கூடம்

ராமையாவின் எழுத்துத்திறமைக்கு மேலும் உரம்போட சிறையே சிறந்த பயிற்சிக்கூடமாக அமைந்துபோனது. ஏனென்றால் சிறையில் ஏ.என்.சிவராமன், வ.ரா போன்ற எழுத்தாளுமைகளை சக சிறைவாசிகளாகப் பெற்றார். அவர்கள் வழியே வாசிப்பின் புதிய தளங்களைக் கண்டடைந்தது மட்டுமல்ல; சிறுகதை எழுதும் கலையிலும் சிறந்த பயிற்சியை அவர்களிடம் பெற்றார். சிறையில் அவர் எழுதிய சில கதைகள், விடுதலையாகி வெளியேவந்ததும் ‘காந்தி’, ‘ஜெயபாரதி’ போன்ற சிறு பத்திரிகைகளில் பிரசுரமாகின. இந்தக் கதைகளுக்கு முன்னர் அவரைப் பிரபலமாக்கியது ‘மலரும் மணமும்’ என்ற சிறுகதை. 1933-ல் ஆனந்தவிகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற இந்தச் சிறுகதையின் இலக்கியத் தரம் குறித்த விசாரம், கறாரான இலக்கியச் சிறுபத்திரிகையான ‘மணிக்கொடி’யின் ஆசிரியர் குழுவை எட்டியது. ‘மணிக்கொடி’யின் தீவிர வாசகராக இருந்த ராமையாவுக்கு அதே பத்திரிகையில் எழுதும் வாய்ப்பு மடியில் வந்து விழுந்தது. அவ்வளவு ஏன்… மணிக்கொடி ஒரு கட்டத்தில் நின்றுவிட்டபோது அதைத் தன் பொறுப்பில் எடுத்து, அதன் ஆசிரியராக இருந்து அதைச் சிறுகதைக்கோவையாக மூன்று ஆண்டுகள் வெளிகொண்டுவந்தார் ராமையா.

Policekaranmahal%203

நாடகமாகப் புகழ்பெற்றுத் திரைப்படமான ‘போலீஸ்காரன் மகள்’

 

 

சினிமா பிரவேசம்

மணிக்கொடி பரம்பரையில் மிகப்பின்னால் இணைந்துகொண்ட சி.சு.செல்லப்பா, “பாரதிக்குப்பின் கவிஞன் என்றால் ந.பிச்சமூர்த்தி, சிறுகதை ஆசிரியர் என்றால் பி.எஸ். ராமையா” என்று கூறும் அளவுக்கு மணிக்கொடியிலும் ஆனந்த விகடனிலும் கதைகளை எழுதிக்குவித்தார் ராமையா. சினிமாவைப் பற்றி எதுவும் எழுதக்கூடாது என்று விரதம் பூண்டிருந்த மணிக்கொடியிலிருந்து ராமையா விலகியபின், 1938 முதல் சினிமா விமர்சனங்கள் வரத் தொடங்கின. பத்திரிகையிலிருந்து விலகியபின் 1940-ல் ‘பூலோக ரம்பை’ என்ற படத்துக்கு வசனம் எழுதியதன் மூலம் தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார் ராமையா. அடுத்த ஆண்டே இவர் கதை, வசனம் எழுதிய ‘மதன காமராசன்’ சிறந்த கதாசிரியர் என்ற பெயரை இவருக்குப் பெற்றுத்தந்தது. அடுத்தடுத்து வாய்ப்புகளும் குவிந்தன. பின்னர் பி.யூ.சின்னப்பா, இளமை திரும்பிய குசேலனாக நடித்திருந்த ‘குபேர குசேலா’(1943) படத்தை கே.எஸ். மணியுடன் சேர்ந்து இயக்கினார்.

 

வாழ்வளித்த கலைஞன்

29chrcjps%20ramaiya

பி.எஸ்.ராமைய்யா

அதன்பின் 1947-ல் ‘தன அமராவதி’ என்ற படத்தை இயக்கிய பி.எஸ்.ராமையா, அந்தப் படத்தில்தான் ‘நகைச்சுவை மன்னன்’ என்று பெரும்புகழ்பெற்ற ஜே.பி. சந்திரபாபுவை திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். “சினிமா வாய்ப்பு தரவில்லை என்ற கோபத்தில் ஸ்டூடியோ வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் இவர்தான். சுதந்திரப் போராட்ட வீரரின் மகனும் கூட” என்று ராமையாவிடம் ஒட்டைக்குச்சிபோல் நின்ற சந்திரபாபுவை அறிமுகப்படுத்தினார்கள். சுதந்திரப்போராட்ட வீரரின் மகன் என்ற காரணத்துக்காக ‘தன அமராவதி’யில் சந்திரபாபுவுக்குச் சிறிய வேடம் கொடுத்தார் ராமையா. எஸ் எம் குமரேசன், பி எஸ் சரோஜா ஜோடி சேர்ந்து நடித்த அந்தப் படத்தில் அண்ணன் மாணிக்கம் செட்டியாராக புளிமூட்டையும். தம்பி ரத்தினம் செட்டியாராக சந்திரபாபுவும் நகைச்சுவை ‘ரகளை’ செய்தனர். சந்திரபாபுவின் நடனத் திறன், பாடும் திறன் இரண்டையும் கண்ட ராமையா, அறிமுப்படத்திலேயே ‘உன்னழகிற்கு இணை என்னத்தை சொல்வது’ என்ற முதல் பாடலையும் பாடவைத்து ஆடவும் வைத்து அழகுபார்த்தார். தனது நாடக எழுத்துக்களால் பல நடிகர்களுக்கு மேடையிலும் திரையிலும் வாழ்வளித்த கலைஞன் என்று ராமையாவை துணிந்து கூறலாம். சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவினருக்காக பி.எஸ்.ராமையா எழுதிய ‘பாஞ்சாலி சபதம்’, ‘பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்’, ‘தேரோட்டி மகன்’, ‘மல்லியம் மங்களம்’, ‘ கைவிளக்கு’, ‘சறுக்குமரம்’ போலீஸ்காரன் மகள்’ போன்ற நாடகங்களில் நடித்துக் கிடைத்த புகழால் முத்துராமன், வீ.கோபால கிருஷ்ணன், சகஸ்ரநாமம் போன்ற பல கலைஞர்கள் திரையிலும் நிரந்தமான இடத்தைப் பிடித்தனர். இந்த நாடகங்களில் பல திரைவடிவமும் பெற்று வெற்றியும் பெற்றன.

 

முதன் முதலில்

திரையுலகம் குறித்து முதன்முதலில் புத்தகம் எழுதிய பெருமைக்கு உரியவரான பி.எஸ்.ஆர், இந்திப் படவுலகின் தொடக்ககால பிதாமகர்களில் ஒருவரான மெஹ்பூப், ராமையாவின் பரந்த கதை அறிவை அறிந்திருந்ததால், அவர் தயாரித்து இயக்கிய ‘ஆன்’, ‘அமர்’ ஆகிய வெற்றிப்படங்களின் கதையாக்கத்துக்கு பெரும் ஊதியம் தந்து ராமையாவை பயன்படுத்திக்கொண்டார். தமிழகத்திலிருந்து இந்திப் படவுலம் மதித்து வரவேற்ற முதல்பெரும் திரை எழுத்தாளுமையுமான பி.எஸ்.ராமையா தனது 78-வது வயதில் மறைந்தார்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19769150.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறந்து போனவர்களை நினைத்து மகிழும் தருணங்களாக இந்தப் பதிவுகள்.தொடருங்கள்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

நீர்க்குமிழி 3: குறைவான படங்கள், நிறைவான நடிப்பு

 

 
06chrcjMarmaveeran

‘மர்ம வீரன்’ படத்தில் ஸ்ரீராம், வைஜெயந்தி மாலா

நாடகம் வளர்த்த மதுரை, பல சிறந்த கலைஞர்களைத் தமிழ்த் திரைக்கு அளித்திருக்கிறது. அவர்களில் அழகே உருவான நடிகர், ஸ்ரீராம் என்று அழைக்கப்பட்ட மதுரை ஸ்ரீராமுலு நாயுடு. பக்ஷிராஜா ஸ்டுடியோவை கோவையில் நிறுவிப் பல வெற்றிப்படங்களைத் தயாரித்த அதன் முதலாளியின் பெயரும் ஸ்ரீராமுலு நாயுடுவாக இருந்தது. இதனால் நடிகர் ஸ்ரீராமுலு நாயுடு தனது பெயரை ஸ்ரீராம் என மாற்றிக்கொண்டார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், என்.டி.ஆர், எஸ்.எஸ்.ஆர் என்று புகழ்பெற்று விளங்கிய கதாநாயகர்களுக்கு மத்தியில், தனது தனித்த, உயரமான, அழகான தோற்றத்தால் 50-களின் இறுதியில் கவனம் பெறத் தொடங்கினார் ஸ்ரீராம். ‘பார்க்க மட்டுமல்ல, பழகுவதிலும் உதவி என்று வருபவர்களுக்குக் கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுப்பதிலும் இவர் ‘ஹேண்ட்சம் ஹீரோ’ எனப் பாராட்டி எழுதியிருக்கின்றன அன்றைய பத்திரிகைகள்.

 

ஜெமினியிலிருந்து…

மதுரையில் பிறந்து வளர்ந்த பட்டதாரியான ஸ்ரீராம், ஜெமினி ஸ்டுடியோவின் படங்களால் ஈர்க்கப்பட்டார். எப்படியாவது ஜெமினியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற கனவுடன் சென்னை வந்தார். ஆனால், ஜெமினி ஸ்டுடியோவில் தன்னைப் போலவே நூற்றுக்கணக்கான ‘ஜெமினி பாய்ஸும் கேர்ள்ஸும்’ இருப்பதைக் கண்டு திகைத்துப்போனார். ஆனால் தனது தோற்றம், இதர திறமைகள் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தது. ஒருநாள் ஜெமினி தயாரிக்கும் படத்தில் தனக்கு நல்ல வேடம் கிடைக்கும் எனக் காத்திருந்தார். அவரது நம்பிக்கை வீண்போகவில்லை. பின்னால் ஜெமினிக்குப் புகழ் சேர்த்த படங்களில் ஒன்றாக மாறிய ‘சம்சாரம்’ படத்தில் ஸ்ரீராமுக்கு முக்கியக் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டாலும் தொடக்கத்தில் அவருக்கு அங்கே வசனம் இல்லாத ‘கூட்டத்தில் ஒருவன்’ வேடங்களே கிடைத்தன. அவற்றில் ஒன்று ஜெமினியின் பிரம்மாண்ட காவியமாகிய ‘சந்திரலேகா’வில் குதிரை வீரனாக அவர் நடித்தது.

ஆனால், ‘சந்திரலேகா’ தயாரிப்பில் இருக்கும்போதே எழுத்தாளர், இயக்குநர் கே.வேம்புவின் கண்களில் பட்டார் ஸ்ரீராம். ‘சந்திரலேகா’ வெளியான அதே ஆண்டில் வேம்பு, கதை, வசனம் எழுதி இயக்க, மெட்ராஸ் டாக்கீஸ் சௌந்தரராஜன் தயாரித்து வெளியிட்ட ‘மதனமாலா’(1948) படத்தில் ஓர் அழகிய ராஜகுமாரனாக குதிரையேறிவந்தார். அரசனுக்குப் பயப்படாமல் அரசவை நாட்டியக்காரி மதனமாலாவை காதலித்துக் கரம்பற்றினார். விக்கிரமனாக அந்தப் படத்தில் ஸ்ரீராம் வரும் காட்சிகளுக்குத் திரையரங்கில் விசில் பறந்தது.இளம் ரசிகைகளின் முகம் வெட்கத்தால் சிவந்தது.

 

இளம் ரசிகர்களின் ‘ஹீரோ’

அரச உடையில் சரி, சாதாரண குடும்பத்துப் பையனாக ஸ்ரீராம் எப்படி இருப்பார் என்பதை அடுத்த ஆண்டே வெளியான ‘நவஜீவனம்’ காட்டியது. ஸ்ரீராமைச் சுற்றித்தான் ‘நவஜீவனம்’ படம் நகர்ந்தது. எளிய தொழிலாளி நாகையா. அவருடைய மனைவி கண்ணாம்பா. பெற்றோரை இழந்ததால் தனது தம்பி ஸ்ரீராமைச் சிறுவனாகத் தன் வீட்டுக்கு அழைத்துவந்துவிடுகிறார் நாகையா. கண்ணாம்பாவும் ஸ்ரீராமைத் தன் மகனாகவே ஏற்றுக்கொள்கிறார். வளர்ந்து கல்லூரி மாணவன் ஆகும் ஸ்ரீராம் சக மாணவி வரலட்மியைக் காதலிக்கிறார்.

06chrcjsreeram

ஸ்ரீராம்

வரலட்சுமி நூல் மில் முதலாளியின் மகள். பணக்கார சம்பந்தம் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு ஆகாது என்று அண்ணனும் அண்ணியும் எச்சரிக்கிறார்கள். ஆனால், வளர்த்தவர்கள் சொல் கேளாமல் வரலட்சுமியைக் கல்யாணம் செய்து கொள்ளும் ஸ்ரீராம், மாமனாரின் திடீர் மரணத்துக்குப் பின் முதலாளி ஆகிறார்.

அண்ணன், அண்ணியைத் தன்னுடன் வற்புறுத்தித் தங்கவைத்துக்கொள்ளும் அவர், தான் ஒரு தொழிலாளியின் தம்பி என்பதை மறந்து ஆடம்பரத்தில் மூழ்கித் திளைக்கிறார். மனைவியைக் கடிந்துகொள்ளும் அண்ணியை அடித்தும்விடுகிறார். அண்ணனும் அண்ணியும் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு, ஸ்ரீராமுக்கு வாழ்க்கை புரிந்துவிடுகிறது. பிரிந்த குடும்பம் மீண்டும் இணைகிறது. கண்ணாம்பா தயாரித்து நடித்த இந்தப் படத்தில் நாகையா, கண்ணம்பாவுக்கு சற்றும் சளைக்காத நடிப்பைக் கொடுத்துப் பாராட்டு பெற்றார் ஸ்ரீராம்.

முதன்முறையாகத் திரைப்படங்களுக்கான விருதுகளை வழங்க தமிழக அரசு முடிவு செய்தபோது 1949-ல் சிறந்த திரைப்படமாக ‘நவஜீவனம்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தப் படத்தின் மூலம் அன்றைய கல்லூரி மாணவ, மாணவியர் ரசித்துப் பார்க்கும் நாயகனாக ஸ்ரீராம் மாறினார். இதைப் பயன்படுத்திக்கொள்ளும்விதமாக ஜெமினி நிறுவனம் அடுத்து தயாரித்த ‘சம்சாரம்’ படத்தில் அவருக்கு முக்கிய வேடம் அளித்தது. கிராமத்துப் பட்டிக்காட்டானாக இருந்து, பின் நவநாகரிக இளைஞனாக மாறும் இருபரிமாணக் கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கிய ஸ்ரீராமுக்கு உயர்தரமான நகைச்சுவை, குணச்சித்திர நடிப்பு கைவந்த கலையாக இருந்தது.

 

பன்முக நாயகன்

வெறும் 23 படங்களே நடித்திருக்கும் ஸ்ரீராமின் சிறப்பு, கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் தொடர்ந்து நடித்தது. இரண்டாவது கதாநாயகன், வில்லன், பாசமான தம்பி, பாசமான அண்ணன், பட்டிக்காட்டான், கோடீஸ்வரன், வீரம் செறிந்த இளவரசன் என பல வண்ணத் துணைக் கதாபாத்திரங்களில் தன் நடிப்புத் திறமையை நிறைவாகப் பளிச்சிடச் செய்திருக்கிறார். பிசிறு தட்டாத கணீர் குரல், நாடகத்தனம் குறைந்த ஸ்டைலான நடிப்பு, எம்.ஜி.ஆர்., ரஞ்சன் ஆகிய நடிகர்களுக்கு இணையாக வாள் சுழற்றும் திறன், சிறந்த குதிரையேற்ற வீரர், நல்ல காரோட்டி எனப் பல திறமைகள் கொண்டவர் ஸ்ரீராம். சொந்தப் படம் தயாரித்ததால் அதிக நஷ்டத்தைச் சந்தித்த நடிகர்களில் ஒருவராக ஆனார். ‘மலைக்கள்ளன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு வில்லனாகவும் ‘பழனி’ படத்தில் சிவாஜிக்குத் தம்பியாகவும் நடித்த ஸ்ரீராம், இந்திப் படவுலகில் நுழைந்திருந்தால் வெற்றியை ஈட்டியிருக்கலாம்.

06chrcjpazhani

‘பழனி’ படத்தில் எஸ்.எஸ்.ஆர், ஸ்ரீராம், சிவாஜி, முத்துராமன்

 

 

‘மர்மமாய்’ மறைந்த கலைஞர்

கடைசியாக அவர் தயாரித்து நடித்த படம் ‘மர்மவீரன்’. அமெரிக்க எழுத்தாளர் ஜான்ஸ்டன் மெக்கல்லியின் (Johnston McCulley) புகழ்பெற்ற ‘ஸோரோ’ வரிசை நாவல்களின் சாகசக் கதாபாத்திரமான டான் டியாகோவை நினைவூட்டும் வேடத்தில் மகேந்திரனாகவும் பரம்வீர் ஆகவும் ‘மர்ம வீரனில்’ இரண்டு பரிமாணங்களில் ஸ்ரீராம் வழங்கிய நடிப்பு சாகசமும் சவால்களும் நிறைந்தது. சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி.ஆர். எஸ்.வி.ஆர், வி.கே.ஆர், ஆர்.நாகேஷ்வரராவ் என அன்று திரையில் ஒளிர்ந்த அத்தனை ஜாம்பவான் நடிகர்களும் ஸ்ரீராமின் நட்புக்காக ‘மர்மவீர’னில் நடித்துக் கொடுத்தார்கள். படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் ‘எலெக்ட்ரிக்’ வாள் சண்டை என்ற புதுமையைப் புகுத்திய ஸ்ரீராம் ரசிகர்களுக்குப் பல்சுவை விருந்தளித்தார். பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம், நான்கு வாரங்களுக்குமேல் ஓடாததால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தவர், சாதனைகள் படைக்கு முன்பே மறைந்தார்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19802428.ece

Link to comment
Share on other sites

நீர்க்குமிழி: எஸ்.எஸ்.வாசனின் முதல் தெரிவு!

 

 
13chrcj%20madana%20kamarajanklvs%201

’மதன காமராஜான்’ படத்தில் கே.எல்.வி.வசந்தா

மிழ் சினிமாவிலும் திரைக்கதை உண்டு, அதற்கு இணையான பிரம்மாண்டம் உண்டு என்பதை உலகத்துக்கு உரக்கச் சொன்ன முதல் படம் வாசன் இயக்கித் தயாரித்த ‘சந்திரலேகா’. ஆம்! ‘சந்திரலேகா’ படத்தின் கால அளவைக் குறைத்து, அதன் ஆங்கில மொழியாக்கப் பதிப்பை, அமெரிக்கா, ஜப்பான், பல ஸ்காண்டிநேவியன் நாடுகள் எனத் துணிந்து திரையிட்டு, தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்தார் வாசன். அப்படிப்பட்ட பிரம்மாண்டக் காவியத்தின் கதாநாயகியாக வாசனால் முதலில் தேர்வு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவர் கே.எல்.வி.வசந்தா.

‘சுலோச்சனா’ படத்துக்குப் பின், வி.என்.ஜானகி, மாதுரி தேவி, அஞ்சலி தேவி, ஆகிய புதிய கதாநாயகிகளின் வரவு, வசந்தா போன்ற சீனியர்களின் புகழை மங்கச்செய்துவிட்டது. மாடர்ன் தியேட்டர்ஸும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுவந்த புதிய கதாநாயகிகளை அமர்த்த வேண்டிய தொழில்போட்டிக்குத் தப்பவில்லை. இருப்பினும் வசந்தாவை மாடர்ன் தியேட்டர்ஸ் வஞ்சனை இன்றி முதல் ஐந்து ஆண்டுகள் ஆதரித்தது.

ஜெமினியின் தயாரிப்பான ‘நந்தனார்’(1942) படத்தின் பாட்டுப் புத்தகத்தின் உள் அட்டையில் ‘சந்திரலேகாவாக ‘கானமயில்’ கே.எல்.வி.வசந்தா நடிக்கிறார்’ என்று விளம்பரமே வெளியிட்டிருந்தது ஜெமினி. வசந்தா, ஜெமினியின் முதல் தயாரிப்பான ‘மதன காமராஜன்’ படத்தின் அன்றைய வசீகரக் கதாநாயகி. ஆறுமாதங்கள் ஓடோ ஓடென்று ஓடி ஜெமினியை ராசியான சினிமா சாம்ராஜ்ஜியம் என்று கூறவைத்த படம். அப்படிப்பட்ட ‘மதன காமராஜன்’ நாயகி வசந்தாவை, வாசன் சந்திரலேகாவாக அறிமுப்படுத்த விரும்பியதில் ஆச்சரியமில்லை.

கானக் குயிலாக பாடும் திறமை, அதிவேகமாகப் பரதம் ஆடுவதிலும் திறமை, கண்களால் நடிக்கத் தெரிந்த தமிழ்க் காரிகை எனப் பல தகுதிகள் கொண்ட வசந்தாவுக்குப் பதிலாக டி.ஆர்.ராஜகுமாரியை வாசன் ஏன் அமர்த்திக்கொண்டார்?

 

சென்னையைக் காலிசெய்த வசந்தா

அங்கேதான் சிக்கல். ஒரு வெற்றிப் படத்தின் கதாநாயகி, அதே நிறுவனத்தின் அடுத்த வாய்ப்புக்காக வருடக்கணக்கில் காத்துக்கொண்டிருக்க முடியுமா? இருந்தும் பொறுமை காத்தார் வசந்தா. ‘மதன காமராஜன்’ படத்துக்குப் பின்னர் ‘நந்தனார்’, ‘பால நாகம்மா’, ‘மங்கம்மா சபதம்’ என மூன்று வெற்றிப் படங்களை அடுத்தடுத்து தயாரித்த வாசன், ‘சந்திரலேகா’வின் கதையை உருவாக்கும் பொறுப்பைத் தனது கதை இலாகாவிடம் ஒப்படைத்திருந்தார்.

13chrcjBARMARANI

’பர்மா ராணி’ பட போஸ்டர்

கதை தயாராகி முடிந்தபோது அதுகோரி நின்ற பிரம்மாண்டம், அதன் மையக் கதாபாத்திரமான சந்திரலேகாவுக்குத் தேவைப்படும் அப்சரஸ் தோற்றம் ஆகியவற்றுக்கு வசந்தா பொருத்தமாக இருக்க மாட்டார் என்று முடிவுசெய்த வாசன், தனது கதாநாயகியாக டி.ஆர்.ராஜகுமாரியைத் தேர்வு செய்தார். இது தெரிந்ததும் காத்திருந்த வசந்தாவுக்கு வருத்தமாகிவிட்டது. அது வளர்ந்து சொந்த ஊரான சென்னையை விட்டே கிளம்பும் வைராக்கியத்தை வசந்தாவுக்குக் கொடுத்துவிட்டது.

கோபத்தில் சேலத்துக்குக் குடிபெயர்ந்த வசந்தா, மாடர்ன் தியேட்டர்ஸின் ‘கம்பெனி நடிகராக’ தன்னை இணைத்துக்கொண்டார். அதன் பிறகு மாடர்ன் தியேட்டர் அதிபர் டி.ஆர். சுந்தரம் தயாரிக்க, தமிழ் தெரியாத எம்.எல்.டாண்டன் இயக்கிய ‘ராஜ ராஜேஸ்வரி’யில் (1944) கதாநாயகியாக நடித்தார். பிலிம் ரோல் தட்டுப்பாடுகளால் சிக்கித் தவித்த சுந்தரம் போன்ற பெரிய சினிமா முதலாளிகள், பிரிட்டிஷ் சர்க்காரை ஆதரித்து யுத்தப் பிரச்சாரப் படங்களை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். அப்படி டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கிய படம்தாம் ‘பர்மா ராணி’(1945). வசந்தாதான் பர்மா ராணி.

அதில் ஜப்பானிய ராணுவத் தளபதியாக டி.ஆர்.எஸ்ஸே நடித்து அசத்தினார். படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு மார்டர்ன் தியேட்டர் தயாரித்த புராணப் படம் ‘சுபத்ரா’வில் நடித்தார். அன்றைய வில்லன் நடிகரான டி.எஸ். பாலையா நாயகனாக நடிக்க அடுத்து தயாரான படம் ‘சித்ரா’. அதில் ‘டைட்டில்’ ரோலில் நடித்தார் வசந்தா. இதுவும் இரண்டாம் உலகப் போர் பின்னணியில் உருவான படம்தான்.

இதன் பிறகு மாடர்ன் தியேட்டர்ஸின் ‘சுலோச்சனா’ 1946-ல் வெளியானது. இதிலும் வசந்தாவுக்கு டைட்டில் ரோல்தான். வசந்தாவுடன் கதாநாயகனாக இந்திரஜித் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.எஸுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் படப்பிடிப்புக்கு வராமல் டிமிக்கி கொடுத்தார். சின்னப்பாவுக்கு கல்தா கொடுத்துவிட்டு கண்டிப்புக்குப் பெயர்போன சுந்தரமே இந்திரஜித்தாக நடித்தார். ‘புரட்சிக்கவி’ பாரதிதாசன் வசனம் எழுதிய ‘சுலோச்சனா’ சுமாரான வெற்றியையே பெறமுடிந்தது. இதற்கிடையில் கோவை செண்ட்ரல் ஸ்டூடியோ தயாரித்த ‘சாலி வாஹனன்’படத்தில் கதாநாயகன் ரஞ்சனின் சகோதரியாக நடித்தார். இதில் எம்.ஜி.ஆருக்கு(ராமச்சந்தர்) வில்லன் வேடம்.

 

30-களில் தொடங்கி...

13chkmlrcjbhoologa%20rambai

‘பூலோக ரம்பை’ படத்தில் கே.எல்.வி.வசந்தா

‘சுலோச்சனா’ படத்துக்குப் பின், வி.என்.ஜானகி, மாதுரி தேவி, அஞ்சலி தேவி, ஆகிய புதிய கதாநாயகிகளின் வரவு, வசந்தா போன்ற சீனியர்களின் புகழை மங்கச்செய்துவிட்டது. மாடர்ன் தியேட்டர்ஸும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுவந்த புதிய கதாநாயகிகளை அமர்த்த வேண்டிய தொழில்போட்டிக்குத் தப்பவில்லை. இருப்பினும் வசந்தாவை மாடர்ன் தியேட்டர்ஸ் வஞ்சனை இன்றி முதல் ஐந்து ஆண்டுகள் ஆதரித்தது.

1923-ம் ஆண்டு குன்றத்தூரில் பிறந்த கே.எல்.வி.வசந்தா, சிறு வயது முதலே வாய்ப்பாட்டு, நடனம் ஆகிய கலைகளைக் கற்றுத் தேர்ந்தார். தனது வேடங்களுக்கான பாடல்களைப் பாடி, அற்புதமாக நடனமாடி ஒல்லியான உடல்வாகுடன் ரசிகர்களைக் கவர்ந்தவர். ‘மதன காமராஜன்’ படத்தில் ‘ ஒரு நாளும் உமைப் பிரியவிடேன்’ என்று தேன் சொட்டும் குரலில் பாடியபடி ‘பிரேமவள்ளி’யாக அன்றைய ரசிகர்களைக் கிறங்கடித்த நடிப்பை வழங்கியவர்.

‘மதன காமராஜன்’ படத்தில் இடம்பெற்ற ‘ரதி- மன்மதன்’ நாட்டிய நாடகத்தில் வசந்தாவின் எழில்மிகு பரத நாட்டியம் இன்றும் பேசப்படுகிறது. எம்.கே.டி. நடிக்க, கே.சுப்ரமணியம் இயக்கிய ‘பவளக்கொடி’(1934) படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, 1939-ல் வெளியாகி 25 வாரங்கள் ஓடிய ‘ரம்பையின் காதல்’ படத்தின் கதாநாயகியாகப் புகழ்பெற்றார். கே.எல்.வி.வசந்தா நடித்த படங்களின் எண்ணிக்கை 17 மட்டும்தான். பாடல், ஆடல், நடிப்பு ஆகிய திறமைகளில் தனித்து விளங்கிய கே.எல்.வி.வசந்தா, சென்னை திரும்பி அமைதியான வாழ்க்கை வாழ்ந்தார். தனது 85-ம் வயதில் மறைந்தார்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19846041.ece

Link to comment
Share on other sites

நீர்க்குமிழி: ‘மயக்கும் மாலைக் கவிஞன்’

 

 
20chrcjKoondukili

‘கூண்டுக்கிளி’படத்தில் சிவாஜி, எம்.ஜி.ஆர்

எம்

.ஜி.ஆர் - சிவாஜி இருவரும் நட்சத்திர நடிகர்களாக புகழ்பெற்றுவிட்ட அறுபதுகளின் தொடக்கம். சிவாஜி காங்கிரஸ் நடிகராகவும் எம்.ஜி.ஆர் திமுக நடிகராகவும் இருந்தார்கள். அரசியல் ரீதியாக துருவங்களாக விளங்கிய அவர்கள் இருவரும் இணைந்து, தமிழ் எழுத்துலகின் முதல் பொதுவுடைமை எழுத்தாளர் விந்தனின் திரைக்கதை, வசனத்தில் நடித்தார்கள். முதலும் கடைசியுமாக அவர்கள் இணைந்து நடித்தது அந்த ஒரே படம்தான். “அந்தப் படத்தின் உரையாடல் உஷ்ணம் நிறைந்த ஒன்றாக இருந்ததற்குக் காரணம், அதில் கம்யூனிசக் கருத்துக்களை நிரப்பி விந்தன் எழுதியிருந்ததுதான். அது பொதுவுடமைத் தோழர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துவிட்டது” என்று கவிஞர் வாலி பாராட்டிய அந்தப் படம் ‘கூண்டுக்கிளி’.

   

ஒரு பெண்ணுக்கு உரிமைகொண்டாடும் இரண்டு ஆண்களையும் அவர்களின் நடுவே சிக்கி, தன் நிலையை நிலைநாட்டப்போராடும் ஒரு சாமானியப் பெண்ணையும் கதாபாத்திரங்களாகச் சித்தரித்த துணிச்சல் மிக்க கதை, திரைக்கதையை ‘கூண்டுக்கிளி’ படத்துக்கு எழுதி, அதற்கு உரையாடலையும் மூன்று பாடல்களையும் எழுதினார் விந்தன்.

‘கூண்டுக் கிளிக்காக’ விந்தன் எழுதிய பாடல் ஒன்றில்…

‘மண்ணும் பொன்னும் மாயை என்று மக்களுக்கு சொல்லிவிட்டு..

பெண்ணைப் பார்த்து கண்ணடித்தல் சரியா தப்பா?

விண்ணுல ஆசையின்றி விரும்பும் பெண்ணை நேசத்தோடு

கண்ணியமாய் காதலித்தால் சரியா தப்பா?“

ஆகிய நான்கு வரிகளை தணிக்கைத் துறை தடை செய்தது. இந்த நான்கு வரிகளும் படத்திலிருந்து நீக்கப்பட்டாலும் ரெக்கார்டுகளில் இந்த வரிகள் இடம்பெற்று, இந்த வரிகளை எழுதிய அந்தக் கவிஞன் யார் என்று கேட்கவைத்தன. கவிதைகள் வழியாகவே எழுத்துலகில் இடம்பிடித்த விந்தன், ‘பாட்டாளிகளின் படைப்பாளி’யாக பெயர்பெற்றது தன் கதைகளின் வழியாக.

 

ஒரு தொழிலாளி படைப்பாளியாக…

செங்கல்பட்டை அடுத்த நாவலூரில் வேதாசலம்-ஜானகியம்மாள் என்ற ஏழைத் தம்பதியின் மூத்தமகனாக 22.09.1916-ல் விந்தன் பிறந்தார். பெற்றோர் சூட்டிய பெயர் கோவிந்தன். ஆறாம் வகுப்பு வரை பயின்ற விந்தன், அதன்பின் குடும்பச்சூழல் காரணமாக அப்பாவுடன் ஒரு கூலித் தொழிலாளியாக வேலைக்குச் சென்றார். மகனின் கற்கும் ஆர்வத்தைக் கண்ட அவரது தந்தை இரவுப் பள்ளியில் சேர்ந்தார்.

20chrcjVinthan

விந்தன்

ஓவியக் கலையின் பெருவிருப்பம் கொண்டிருந்த மகனை சென்னைக்கு அனுப்பிவைத்தார் வேதாசலம். தன் சொந்த முயற்சியால் சென்னை எழும்பூர் ஓவியக் கல்லூரியில் விந்தன் சேர்ந்தார். அங்கும் அவரை வறுமை துரத்தியதால் தூரிகையை பாதி வண்ணத்துடன் கீழே வைத்துவிட்டு, குடும்பத்துக்காக அச்சகத் தொழிலாளியாக தமிழரசு அச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

அங்கிருந்து, ‘ஆனந்த விகடன்’ அச்சகத்தில் பணிக்கு மாறினார். விகடனில் வேலை செய்துகொண்டே ‘சுதேசமித்திரன்’ இதழுக்கு கவிதைகள் எழுதினார். பின்னர் விகடனிலிருந்து கல்கி அச்சகத்துக்கு மாறினார். அச்சகப் பணியாளராக இருந்தபோதும் தனது ஊழியரின் எழுத்தார்வத்தை மதித்தது கல்கி வளாகம். கல்கி வார இதழின் பாப்பா மலர் பகுதியில் வி.ஜி. என்ற பெயரில் கோவிந்தன் எழுதிய சிறுவர் கதைகள், அறிவுக்களஞ்சியக் கட்டுரைகள் வாசர்களைக் கவர்ந்தன. ஆசிரியர் கல்கி இவரது எழுத்தாற்றலைக் காலத்தே கண்டுணர்ந்து பாராட்டியதோடு நில்லாமல், கோவிந்தன் என்ற அவரது பெயரைச் சுருக்கி ‘விந்தன்’ எனச் சூட்டினார். ‘கல்கி’ இதழின் ஆசிரியர் குழுவிலும் விந்தனைச் சேர்த்துக்கொண்டார்.

தன்னை உலகறிய வைத்த கல்கியின் மாணவராகவே விந்தன் தன்னை எண்ணிக்கொண்டார். தன்னைக் கண்டெடுத்த கல்கிக்கு தன் முதல்நூலைச் சமர்ப்பணம் செய்தார். அதுமட்டுமல்ல, பாட்டாளி வர்க்கத்தின் வலியை தன் படைப்புகளில் எளிய தமிழில் படைத்த விந்தன், சரித்திர நாவல் எதையும் எழுதியல்லை. ஆனால், தனது ஆசானை கவுரவப்படுத்தும் விதத்தில் முதன்முதலாக திரையில் உயிர்பெற்ற அமரர் கல்கியின் ‘பார்த்திபன் கனவு’(1960) படத்துக்கு மிகச் சிறந்த முறையில் வசனம் எழுதினார். ஏனோ அப்படம் வெற்றிபெறவில்லை.

20chrcjParthibankanavu

60களின் சென்னையில் ‘பார்த்திபன் கனவு’ படத்துக்கு கட் -அவுட் விளம்பரம்

 

 

கனவுக் கன்னிக்கு பிடித்த எழுத்துக்காரர்

விந்தன் தமிழ்த்திரைக்கு வசனமும் பாடலும் எழுத வந்தபோது கண்ணதாசன் பிரபலம் ஆகவில்லை. பாட்டாளிகளின் வயிற்றுப்பாட்டையும் வர்க்கப் போராட்டத்தையும் எழுதிய பாட்டுக்கோட்டையான பட்டுக்கோட்டையாரும் திரையில் நுழைந்திராத அக்காலத்தில், ஏழையின் பாடலை ஜோடனை இல்லாமல் எடுத்துவைத்ததில் பட்டுக்கோட்டைக்கே அண்ணன் என்று விந்தனைக் கூறலாம். அப்படிப்பட்டவர் திரையில் புகழ்பெறக் காரணமாக இருந்தவர் 40-களின் கனவுக்கன்னியான டி.ஆர்.ராஜகுமாரி.

விந்தனின் எழுத்துக்களை கல்கியில் தொடர்ந்து வாசித்து அவரது ரசிகையாக இருந்த இவர், தனது சகோதரர், இயக்குநர் ராமண்ணாவுடன் இணைந்து ஆர்.ஆர்.பிக்ஸர்ஸ் என்ற படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ‘வாழப் பிறந்தவள்’ என்ற படத்தை தயாரித்தபோது, “இந்தக் கதைக்கு விந்தன் வசனம் எழுதட்டும்” என்று டி.ஆர்.ராமண்ணாவிடம் பரிந்துரைத்தார். ராஜகுமாரியின் பரிந்துரைக்குக் காரணம், தனது எழுத்துக்களில் பெண்களுக்கு விந்தன் கொடுத்த முக்கியத்துவம்.

 

படம் மாறிய பாடல்

“சினிமா உலகிலும் அரசியல் உலகிலும் பத்திரிகை உலகிலும் எனக்கிருந்த மாயையை நீக்கிய மகத்தான ஒளிக்கீற்றுக்குப் பெயர் விந்தன்” என்று எழுத்துலகச் சக்கரவர்த்தி ஜெயகாந்தன் வியந்து கூறியிருக்கிறார். ஆனால் நடிகர்களின் கையில் சிக்குண்ட 60-களின் தமிழ் சினிமாவில் ஒரு கலகக்காரராக விந்தனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சினிமாவில் தையல் தொழிலாளியாக இருந்து தயாரிப்பாளர், இயக்குநராக உயர்ந்த எம்.நடேசன் இயக்கம், தயாரிப்பில் சிவாஜி – பத்மினி நடித்த ‘அன்பு’ படத்தில்

’ஒன்னும் புரியவில்லை தம்பி… எனக்கு

ஒன்னும் புரியவில்லை தம்பி..

கண்ணு ரெண்டும் சுத்துது

காதை அடைக்குது

கஞ்சி கஞ்சி என்று வயிறு

கெஞ்சி கெஞ்சி கேட்குது…’

என வறியவனின் வயிற்றுப் பசியை எல்லோருக்குமான எளிய தமிழில் எழுதி, முதலாளி வர்க்கத்தின் மனசாட்சியை சாட்டையால் விளாசினார்.

20chrcjANBU

‘அன்பு’ படத்தில் பத்மினி, சிவாஜி

 

‘அன்பு’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, டி.ஆர். ராஜகுமாரியின் நிறுவனத்துக்கு இம்முறை கதை, திரைக்கதை, வசனம் எழுதிய படம்தான் ‘கூண்டுக்கிளி’. இந்தப் படத்துக்காக விந்தன் எழுதிய ஒரு பாடலைப் பயன்படுத்தாமல் அப்படியே கைவசம் வைத்துக்கொண்டார் ராமண்ணா. அந்தப் பாடலை அடுத்து பிரம்மாண்டமாகத் தயாரித்த ‘குலேபகாவலி’ என்ற படத்தில் விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் இசையில் பயன்படுத்திக்கொண்டார். அந்தப் பாடல்தான், இந்த இசை இரட்டையர்களுக்கு ‘மெல்லிசை மன்னர்கள்’ என்ற பட்டத்தை கொண்டுவந்து சேர்க்க காரணமாக அமைந்த ‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ…’ பாடல். இதை எம்.எஸ்.வியே தனது பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

 

எழுத்தில் சாதனை திரையில் வேதனை

1951-ல் கல்கியிலிருந்து விடுபட்டு திரையுலகில் நுழைந்த விந்தன், அங்கே தனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்த எம்.நடேசன், மாவன்னா ஆச்சாரி ஆகியோரின் பரிந்துரையுடன் பி.யு.சின்னப்பா தயாரித்த ‘வானவிளக்கு’ படத்துக்கு வசனம் எழுதினார். ஆனால் படம் பாதியில் நின்றுபோனது. அதன் பிறகே ‘அன்பு’ படத்துக்காக அழைக்கப்பட்ட விந்தன், ஏழு படங்களுக்கு வசனங்கள், பாடல்கள் எழுதினார். பின்னர் ‘மனிதன்’ பத்திரிகையைத் தொடங்கிய அவர், தனது திரையுல அனுபவங்களை ‘தெருவிளக்கு’ என்ற தலைப்பில் அதில் தொடராக எழுதினார்.

உண்மைகளை ஒளிக்காமல் எழுதியதால் எழுந்த எதிர்ப்பை அடுத்து, அந்தத் தொடரை நிறுத்த வேண்டிய நிலையில் பத்திரிகையும் நின்றுபோனது. என்றாலும் எழுத்துலகில் சாதனைகளை படைத்த விந்தன், திரையுலக்குத் தேவைப்படும் பொய்மையை தனது பேனா மையில் கூட பூசிக்கொள்ள விரும்பாததால் ஒதுக்கப்பட்டார். எம்.ஆர்.ராதாவை இவர் கண்ட நீண்ட பேட்டியும், எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை இவர் தொடராகப் பதிவு செய்ததும் படைப்புக்கு அப்பாற்பட்ட பத்திரிகை திரை எழுத்தில் ஆக்கபூர்வமானவை.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19882018.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நீர்க்குமிழி: முதல் பின்னணிப் பாடகி

 

 
27CHRCJsabapathy

‘சபாபதி’ படத்தில் பாடகி பி.ஏ.பெரியநாயகியாகவே தோன்றினார்

நடிப்பைவிட சங்கீதமே பிரதானமாகக் கருதப்பட்டுவந்த காலம் அது. ‘மேனகா’(1935) போன்ற சமூக சீர்திருத்த படங்கள் வெளிவந்துவிட்ட 1940 மற்றும் 50களில் சங்கீத வித்வான்களுக்கும் நல்ல தோற்றம் கொண்ட பாடகிகளுக்கும் சினிமாவில் நடிக்கும் அதிர்ஷ்டம் அடித்தது. பாட்டுத் திறமை இருந்தவர்களிடம் நடிப்புத் திறமையும் இருந்தால் ரசிகர்களால் வரவேற்கப்பட்டார்கள். பி.ஏ.பெரியநாயகி என்று புகழ்பெற்ற பண்ருட்டி ஆதிலட்சுமி பெரியநாயகி அப்படிப்பட்ட அழகிய தோற்றம் கொண்ட சங்கீத வித்தகியாக இருந்தார்.

 

பண்ருட்டியிலிருந்து புறப்பட்டவர்

பேசும்படம் மட்டுமின்றி கிராமபோன் இசைத்தட்டு உலகமும் அகில இந்திய வானொலியும் சங்கீதத்தை பெரிதும் நம்பியிருந்த அந்நாட்களில் எம்.எஸ். சுப்புலட்சுமியின் வருகை, இசைத்தட்டுகள் வழியே 1930-களிலேயே நிகழ்ந்துவிட்டது.

என்.சி.வசந்தகோகிலம், டி.கே.பட்டம்மாள் ஆகிய இருவரும் அடுத்துவந்த பத்தாண்டுகளில் பிரபலமானார்கள். இந்த மூவருக்கும் அடுத்த நிலையில் பெரும்புகழ் ஈட்டியிருக்கவேண்டிய பல சிறந்த சங்கீதப் பாடகிகள் சட்டென்று மறக்கப்பட்டார்கள்.

அந்த வரிசையில் தமிழ் சினிமாவின் முதல் பின்னணிப் பாடகி என்ற பெருமைக்குரியவரான பி.ஏ.பெரியநாயகியின் திரைப்பிரவேசம் அவரது பாட்டுத் திறமையினால் நிகழ்ந்தது. உச்ச ஸ்தாயிலில், மெச்சத்தக்க இனிமையுடன் பாடக்கூடிய அபாரமான குரல்வளமும் பார்வைக்குப் பாந்தமான தோற்றமும் கொண்டிருந்த பெரியநாயகி, சென்னையை அடுத்த பண்ருட்டி வட்டத்தில் உள்ள திருவதிகை என்ற ஊரில் பிறந்தவர். பெரிய நாயகியின் தாயார் ஆதிலட்சுமி, ‘பண்ருட்டி அம்மாள்’ என்ற பட்டப்பெயருடன் ‘மதராஸ் பிரெசிடென்ஸி’ அறிந்த கர்நாடக சங்கீதப் பாடகியாக இருந்தார்.

இலங்கைக்குக் கச்சேரிகள் பாடச் சென்ற அவர், அங்கே சங்கீத ஆசிரியையாக மாறினார். இதனால் குடும்பம் இலங்கைக்குக் குடிபெயர்ந்தது. ஆதிலட்சுமிக்கு பாலசுப்பிரமணியன், ராஜாமணி, பெரியநாயகி என மூன்று பிள்ளைகள். மூவரையுமே சங்கீதத்தில் பழக்கினார் ஆதிலட்சுமி. சகோதரன், சகோதரியுடன் தனது பத்தாவது வயதுவரை இலங்கையில் வளர்ந்தார் பெரியநாயகி. இசைத்தட்டு நிறுவனங்களும் பேசும்படமும் சங்கீதத் திறமைகளுக்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதைக் கண்ணுற்ற ஆதிலட்சுமி, தனது பிள்ளைகளுடன் தாயகம் திரும்பி, சென்னை திருவல்லிக்கேணியில் குடியேறினார்.

தாயார் மூலம் அடிப்படை சங்கீத ஞானம் பெற்றிருந்தாலும் பத்தமடை சுந்தர ஐயரிடம் ராஜாமணியும் பெரியநாயகியும் முறையாகச் சங்கீதம் பயின்று அரங்கேற்றம் செய்தனர். அதைத் தொடர்ந்து சகோதரிகள் இருவருக்குமே கச்சேரிகள் கிடைத்தன. அம்மா ஆதிலட்சுமி எதிர்பார்த்ததுபோலவே முன்னணி கிராமபோன் ரெக்கார்ட் நிறுவனங்கள் மகள்கள் இருவருக்கும் பாடும் வாய்ப்புகளை வழங்கின. அதில் ஏ.வி.மெய்யப்பனின் சரஸ்வதி சவுண்ட் கம்பெனியும் ஒன்று.

27CHRCJGEETHAGANDHAI

கீதகாந்தி படத்தில்

 

சகோதரியுடன் முதல் வாய்ப்பு

அந்தக் காலத்தில் ரெக்கார்டு உலகில் பிரபலமாகிவிட்டால் அடுத்த வாய்ப்பு, பாடி நடிக்கும் திரைப்படமாக இருந்தது. சி.வி.ராமன் இயக்கத்தில் 1940-ல் வெளியான ‘விக்ரம ஊர்வசி அல்லது ஊர்வசியின் காதல்’ என்ற படத்தில் பெரியநாயகியின் அக்காள் பி.ஏ.ராஜாமணிக்கு நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதே படத்தில் காந்தர்வக் கன்னியாகச் சிறு வேடத்தில் பாடி நடிக்கும் வாய்ப்பு பி.ஏ.பெரியநாயகிக்கு அமைந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘என்னைப்போலே பாக்கியவதி யார்?’ என்ற பாடல்தான் திரைப்படத்துக்காக பெரியநாயகி பாடிய முதல் பாடல்.

இந்தச் சகோதரிகள் பின்னர் லேனா செட்டியார் தயாரிப்பில் டி.ஆர்.ரகுநாத் இயக்கிய ‘பிரபாவதி’(1944) படத்திலும் இணைந்து சிறு வேடங்களில் தோன்றினர். ஆனால் அக்காள் ராஜாமணியைவிட கூடுதல் கவனமும் புகழும் தங்கையான பெரியநாயகிக்கே கிடைத்தது. அதற்குக் காரணமாக அமைந்தது ஏ.வி.எம்மின் ‘சபாபதி’(1941) திரைப்படம். இந்தப் படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன் - ஆர்.பத்மா ஜோடியின் திருமண வரவேற்புக் காட்சியில் பி.ஏ.பெரியநாயகியின் கச்சேரியையே இடம்பெறச்செய்தார் படத்தை இயக்கித் தயாரித்த ஏ.வி.மெய்யப்பன்.

பெரியநாயகி பாடத் தொடங்கும் முன்னார், திருமண வரவேற்பு அழைப்பிதழின் பின்பக்கத்தில் ‘சங்கீத நிகழ்ச்சி’ பி.ஏ.பெரியநாயகி என அச்சிடப்பட்டிருப்பதை திரை முழுவதும் க்ளோஸ் அப்பில் காட்டி, சங்கீதத்தைப் பெருமைப்படுத்தியிருந்தார் மெய்யப்பன்.

 

27CHRCJPANJAMIRUTHAM
ஸ்ரீவள்ளியில் கிடைத்த அங்கீகாரம்

அதன்பிறகு டி.ஆர். மகாலிங்கம், குமாரி ருக்மணி நடித்த ‘ஸ்ரீவள்ளி’(1945) படத்தைத் தயாரித்து இயக்கினார் மெய்யப்பன். படம் முடிந்து முதல் பிரதியைத் திரையிட்டுப் பார்த்தபோது அதிர்ந்துபோனார். டி.ஆர்.மகாலிங்கத்தின் வெண்கலக் குரலுக்கு ஈடுகொடுக்கும்விதமாக இல்லை குமாரி ருக்மணி பாடியிருந்த பாடல்கள். படப்பெட்டிகள் அனைத்தும் தயாராகி, பிரதிகள் பல ஊர்களுக்கு அனுப்பிவிட்டிருந்த நிலையில் அவை அனைத்தையும் திரும்ப அனுப்பும்படி தந்தி கொடுத்தார்.

பி.ஏ.பெரியநாயகியை அழைத்து ருக்மணி பாடியிருந்த எல்லாப் பாடல்களையும் ஒரே நாளில் பாடவைத்துப் பதிவுசெய்தார். அன்று நவீன முறையாக அறிமுகமாகியிருந்த ‘போஸ்ட் சிங்க்ரனைசேஷன்’ முறையில் (post synchronisation method) ருக்மணியின் உதட்டசைவுகளுக்கு பெரியநாயகி பாடிய பாடல்களை இணைத்து இரவோடு இரவாகப் புதியப் படப் பிரதிகளை அச்சிட்டு மீண்டும் அனுப்பிவைத்தார். படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது மட்டுமல்ல, இப்புதிய முறையில் பாடிய முதல் பின்னணிப் பாடகி என்ற பெருமையும் பெரியநாயகிக்கு வந்து சேர்ந்தது.

பி.ஏ.பெரியநாயகியின் குரலுக்கும் நடிப்புக்கும் பெருமை சேர்த்த படங்களின் பட்டியலில் ‘கீதகாந்தி’, ‘பஞ்சாமிர்தம்’, ‘என் மனைவி’, ‘மனோன்மணி’, ‘மகாமாயா’ ‘பிரபாவதி’, ‘கிருஷ்ண பக்தி’, ‘தர்மவீரன்’, ‘ஏகம்பவாணன்’, ‘ருக்மாங்கதன்’ உட்பட 11 திரைப்படங்களுக்கு இடமுண்டு. சிறந்த பாடகியாக இருந்தும், இனி பாடத் தெரியவேண்டிய அவசியமில்லை, பெரிதாய் நடிக்கவும் வேண்டாம் என்ற நிலையை உருவாக்கிய ‘அழகு’ கதாநாயகிகளின் படையெடுப்பாலும் தொழில்நுட்பத்தாலும் வாய்ப்புகளை இழந்த இசைக்கலைஞர்களில் ஒருவராக மறக்கப்பட்டார்.பி.ஏ. பெரியநாயகி ஆனால் அவரது பாடல்கள் இன்றும் ரசிக்கப்பட்டு வருகின்றன.

படங்கள் உதவி: ஞானம்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19923745.ece

Link to comment
Share on other sites

நீர்க்குமிழி: பாகவதருக்குப் பதிலீடாக ஆனவர்!

 

 
03CHRCJHONNAPPABHAGAVATHAR3

‘பக்த கும்ரா’ படத்தில் ஹொன்னப்ப பாகவதர்   -  The Hindu

தென்னிந்திய சினிமாவின் தாய்வீடு அன்றைய மதராஸ். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின், தெலுங்கு, மலையாள, கன்னட மொழித் திரைப்படங்களின் பேட்டைகள், அந்தந்த மாநிலத் தலைநகரங்களுக்கு இடம்பெயர்ந்தன. ஆனால், மற்ற மொழி நடிகர்கள், இயக்குநர்கள், இசைக்கலைஞர்கள் தமிழ் சினிமாவில் நடிப்பதையும் இயங்குவதையும் பெரிதும் விரும்பினார்கள். அன்று கேரளத்திலிருந்து பிரேம் நஸீரும் ஆந்திரத்திலிருந்து ராமராவும் நாகேஸ்வர ராவும் தமிழ் சினிமாவில் புகழ்பெற்றதுபோல் கர்நாடகத்திலிருந்து வந்து கதாநாயகனாக நடித்துப் புகழ்பெற்ற இசை மேதை சி.ஹொன்னப்ப பாகவதர்.

03CHRCJHONNAPPABHAGAVATHAR1

’மகாகவி காளிதாசா’ படத்தில் ஹொன்னப்ப பாகவதர்   -  The Hindu

பின்னணிப் பாடல் தொழில்நுட்பம் அறிமுகம் ஆகாத காலகட்டத்தில், பாடும் திறமை கொண்டவர்களுக்கே முதன்மை வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தன.

முசிறி சுப்ரமணிய ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர், ஜி.என்.பாலசுப்ரமணியம், டி.என்.ராஜரத்னம் பிள்ளை, எம்.கே. தியாகராஜ பாகவதர், சி,ஹொன்னப்ப பாகவதர் என சங்கீதம், நடிப்பு இரண்டிலுமே சாதித்தவர்கள் பற்றி இன்றைய தலைமுறைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கன்னட சினிமாவின் உன்னதமான முன்னோடிகளில் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் ஹொன்னப்பரை, அதற்கு முன் தமிழ் நாடக மேடையும் தமிழ் சினிமாவும் அங்கீகரித்தன.

 

எம்.கே.டியின் ‘அம்பிகாபதி’

கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகேயுள்ள சந்திரசௌடா என்ற சிற்றூரில் சிக்கலிங்கப்பா - கல்லம்மா தம்பதியின் மகனாக 1915-ம் ஆண்டு பிறந்தார். நெசவுதான் குடும்பத் தொழில். பஜன்களைப் பாடிக்கொண்டே நூல் பாவும் தாயார் கல்லம்மாதான் ஹொன்னப்பரின் முதல் இசை குரு. பத்து வயதானபோது குடும்பம் பெங்களூருவுக்குக் குடிபெயர்ந்தது. கேள்வி ஞானத்தைக் கொண்டு, ஸ்ருதி சுத்தமாக ஏழு வயதில் பாட ஆரம்பித்தார் ஹொன்னப்பர்.

அவரது ஆற்றலைக் கண்ட சம்பந்த மூர்த்தி பாகவதர் அவரைத் தன் மாணவராகச் சேர்த்துக்கொண்டார். தென்னகம் முழுவதும் ஹரிகதை விற்பன்னராக அறியப்பட்ட அவரது குழுவில் ஹார்மோனியம் வாசித்தபடி பின்பாட்டுப் பாடும் துடிப்பான இளைஞராக வலம் வந்தார்.

பின்னர் 16 வயதில் சேலம் ‘குப்பா ஸ்ரீ சென்ன பசவேஸ்வரா நாடகக் குழு’வில் சேர்ந்து, தமிழ், கன்னட புராண, நாடகங்களிலும் கன்னட பாகவத மேளா நாடகங்களிலும் பாடி நடித்தார். ‘வாலிப’ கிருஷ்ணன், நாரதமுனி வேடங்களில் நடித்துப் புகழ்பெற்றார். இவரது பாட்டுத் திறமையைக் கண்ட கர்னாடக இசையுலகம் 17 வயதில் தனிக் கச்சேரிகளுக்கு அழைத்தது.

03CHRCJHONNAPPABHAGAVATHAR

கிருஷ்ணர் வேடத்தில்...   -  The Hindu

அதைத் தொடர்ந்து கிராமபோன் இசைத் தட்டுகள் மூலம் ஹொன்னப்பரின் குரல் தென்னகம் முழுவதும் பரவத் தொடங்கியது. சேலம் சங்கீத ரசிகர்கள் சபா இவருக்கு ‘பாகவதர்’ பட்டம் சூட்டி பெருமை செய்தது.

இந்த நேரத்தில் சேலம் சங்கர் பிலிம்ஸ் தயாரிப்பில், பின்னாளில் பெரும் திரை எழுத்தாளராகப் புகழ்பெற்ற இளங்கோவன் கதை, வசனம் எழுத, எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கி, எம்.கே.டி நாயகனாகவும் எம்.ஆர்.சந்தானலட்சுமி நாயகியாகவும் நடித்த ‘அம்பிகாபதி’ (1937) படத்தில், தளபதி கருணாகரத் தொண்டைமானாக ‘உனையல்லால் கதியார் ஜெகதம்மா’ எனப் பாடி நடித்துச் சிறு வேடத்தில் அறிமுகமானார் ஹொன்னப்ப பாகவதர். அறிமுகப்படமே 52 வாரங்கள் ஓடியது வரலாறு.

 

கடவுள் வேடங்கள்

‘அம்பிகாபதி’ படத்தைத் தொடர்ந்து கிருஷ்ண பகவானாக, அக்னி பகவனாக, நாரத முனிவராக ஹொன்னப்பரைக் கடவுள் வேடங்களில் பொருத்தி அழகு பார்த்தது தமிழ் சினிமா. சங்கீதத்தில் விற்பன்னராக இருந்தது, நல்ல உயரம், கச்சிதமான உடற்கட்டு என அன்று ஒரு நடிகருக்கான அங்க லட்சணங்களாகப் பார்க்கப்பட்ட அத்தனையும் பொருந்தியிருந்ததாலும் கருணை பொழியும் அவரது வட்ட முகம் காரணமாகவும் கடவுள் வேடங்கள் அவரைத் தொடர்ந்து துரத்தின. இதிலிருந்து அவரை வெளியே கொண்டுவந்தார் மாடர்ன் தியேட்டர் சுந்தரம்.

மாடர்ன் தியேட்டர்ஸாரின் ஐந்து படங்களில் நடித்த ஹொன்னப்பர், அவற்றில் ஒன்றான ‘பர்மா ராணி’யில் பாடல்கள் எதுவும் பாடாமல் பிரிட்டிஷ் விமானப்படை வீரர் கேப்டன் குமாராக நடித்தார். துணை வேடங்களிலிருந்து முன்னேறி நாயகனாக நடிக்கத் தொடங்கிய பின் தமிழில் 14 படங்களில் கதாநாயகனாகவும் 3 படங்களில் சிறுவேடங்களிலும் நடித்திருக்கிறார்.

 

பாகவதருக்குப் பதிலாக…

புகழின் உச்சியில் இருந்த எம்.கே.தியாகராஜ பகவதர், 1944-ல் ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கில்’ கைதானபோது, அவர் நடிக்கத் தொடங்கியிருந்த படம் ‘ஸ்ரீமுருகன்’(1946). ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தை எம்.கே.டியின் நண்பரான ராஜா சந்திரசேகர் இயக்கிவந்தார். இனி எம்.கே.டியை வைத்துப் படத்தைத் தொடர முடியாது என்ற நிலை வந்தபோது, ஜூபிடர் சோமுவும் முகைதீனும் ஹொன்னப்ப பாகவதரை நாயகனாகப் போட்டுப் படத்தை முடிப்பது என முடிவெடுத்தனர்.

இதை ஒப்புக்கொள்ளாத இயக்குநர் ராஜா சந்திரசேகர் படத்திலிருந்து வெளியேறினார். தயாரிப்பாளர் சோமுவும் வி.எஸ்.நாராயணனும் இயக்கிப் படத்தை முடித்தனர். இந்தப் படத்தில் ‘எங்கே ஒளிந்ததம்மான்...’, ‘குமரனையே நினைத்து...’ ‘உள்ளம் புகுந்த அந்த’, ‘வள்ளியைக் காணேனே’ ஆகிய நான்கு பாடல்களைப் பாடி, படத்துக்கு உயிரூட்டினார். ‘ஸ்ரீமுருகன்’ படத்தைத் தொடர்ந்து, அதே ஆண்டில் வெளியான ‘வால்மீகி’ படத்தில் நாயனாக நடித்துக் கவர்ந்தார். இரண்டாம் முறையாக ஹொன்னப்பருடன் இந்தப் படத்தில் இணைந்து நடித்தார் டி.ஆர்.ராஜகுமாரி.

 

03chrcjValmeeki

‘வால்மீகி’ படத்தில் டி.ஆர்.ராஜகுமாரி, ஹொன்னப்ப பாகவதர்

கன்னட உலகில் சாதனைகள்

தமிழ் சினிமாவில் சங்கீத மின்னலாய் வந்து சென்றிருந்தாலும் கன்னடத் திரையுலகிலும் கர்னாடக இசை உலகிலும் அவரது சாதனைகள் பலருக்கும் படிக்கற்களாக அமைந்தன. சங்கீத வித்வான்களுக்குப் பாடத் தெரியுமே தவிர நடிக்க வராது என்ற அந்நாளின் கூற்றைப் பொய்யாக்கி, விதிவிலக்காகத் திகழ்ந்தவர் ஹொன்னப்பர்.

மிகச் சிறந்த சங்கீத மேதை, மேடை நாடக நடிகர், திரைப்பட நடிகர் ஆகிய சாதனைகளைக் கடந்து, மிகச் சிறந்த இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் கன்னடத்தில் தடம் பதித்தார்.

1955-ல் பி.சரோஜாதேவியை அறிமுகப்படுத்தி, இவர் தயாரித்து நடித்த ‘மகாகவி காளிதாசா’ கன்னடப் படத்துக்கு மிகச் சிறந்த இசையையும் அமைத்தார்.

சிறந்த கன்னடப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றது இப்படம். ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற தமிழ்ப் படத்தையும் தயாரித்திருக்கும் இவர், தன் இறுதிக் காலம்வரையிலும் கர்நாடக இசைக் கச்சேரிகளில் பெரும் ஆளுமையாக வலம்வந்தது மட்டுமல்ல, 300-க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை உருவாக்கி அளித்திருக்கிறார். திரையிலிருந்து விலகிய பின் ‘உமா மகேஸ்வரா’ என்ற நாடகக் குழுவைத் தொடங்கி மேடைக்கும் தன் பங்களிப்பைத் தரத் தவறவில்லை.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19968065.ece

Link to comment
Share on other sites

நீர்க்குமிழி: பன்முக நடிப்பின் முன்மாதிரி - மாதுரி தேவி

 

 
10chrcjMarmayogi

‘மர்மயோகி’ படத்தில் எம்.ஜி.ஆர், மாதுரி தேவி

சினிமாவின் எஜமானர்கள் அன்றும் இன்றும் கதாநாயகர்கள்தான். ஆவணப்படமாகத் தோன்றிய சினிமாவில் கதை நுழைந்த பிறகு, கதாநாயகர்கள் அதில் முதலிடம் பிடித்துக்கொண்டார்கள். நாயகனைச் சிறப்பிக்கவும் அவனது வீர தீரப் பிரதாபங்களை நிலைநாட்டவும் துணைக் கதாபாத்திரங்கள் தேவைப்பட்டன. கதாநாயகர்களைக் காதல் மன்னன்களாகச் சித்தரிக்க கதாநாயகிகள் தேவைப்பட்டனர். எம்.கே. தியாகராஜ பாகவதர் நட்சத்திர நடிகராகப் பிம்பம் பெற்ற காலம் தொடங்கி, தமிழ் சினிமாவில் இதுதான் நிலை. “நாதா… ஸ்வாமி… அத்தான்…அன்பரே…மிஸ்டர்...ஹலோ..பிரதர்” என்பதுவரை நாயகனை அழைக்கும் நாயகியின் தோரணையும் சொற்களும் மாறினவே தவிர, நாயகனே தன்னை வாழ்விக்க வந்த தெய்வம் எனக் கதாநாயக வழிபாடு செய்வதில் இன்றும் கதாநாயகியே ஆகச் சிறந்தவளாக இருக்கிறாள்.

10chrcjMaduridevi%201

மாதுரி தேவி

ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கதாநாயகிகளை அல்லது பெண்களை முதன்மைப்படுத்தும் திரைப்படங்கள் ஆரம்பம் முதலே வந்துகொண்டிருப்பது ஆறுதலானதே. அதிர்ஷ்டவசமாகச் சில கதாநாயகிகளுக்குப் பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரங்கள் அமைந்துவிடுவதுண்டு. அவர்களின் மிகக் குறுகிய திரைவாழ்க்கையில் கிடைக்கும் அத்தகைய கதாபாத்திரங்களில் அவர்கள் ஜொலிப்பதும் உண்டு. 50-களின் தமிழ் சினிமாவில் அப்படி ஜொலித்த இருவர் பானுமதியும் மாதுரி தேவியும். பானுமதியின் திரைப் பயணம் மகாநதி என்றால் மாதுரி தேவியுடையது மிக அழகிய, ஆனால் சீற்றத்துடன் பாய்ந்தோடிய சிற்றோடை எனலாம்.

 

மறக்க முடியாத ‘மந்திரிகுமாரி’

பகலில் அரண்மனை ராஜகுருவின் மகன் பார்த்திபன், இரவில் கொள்ளையர்களின் தலைவன். கொள்ளையுடன் கொலைகளையும் கலைபோல் செய்து ரசிக்கும் அவன், பெண்களைக் கவர்ந்து செல்லும் காமக் கள்வன் என்பதறியாது அவனைக் காதலிக்கிறாள் மந்திரியுடைய மகளான அமுதவல்லி. பார்த்திபனின் முகத்திரை விலகிய பிறகும் அவனைக் காப்பாற்றித் திருத்த முயன்று தோற்றுப்போகிறாள்.

முடிவில் மனைவி என்றும் பாராமல் தன்னை மலை உச்சியிலிருந்து தள்ளி கொன்றுவிடச் சதிசெய்தவனை, அமுதவல்லியே அங்கிருந்து தள்ளிக் கொன்று, தேசத்தைக் காக்கும் வீராங்கனை ஆகிறாள். காதலுக்காக உருகி, கலங்கி, போராடும் அப்பாவிப் பெண்ணாக ஒரு பரிமாணம். தன் காதலே தேசத்தின் பாதுகாப்பைப் பலி கேட்கும் கூரிய கட்டாரியாக மாறும்போது அதைத் துணிவுடன் எதிர்கொண்டு, கூடாக் காதலின் களப்பலியாக மாறி, நாட்டைக் காக்கும் வீரப் பெண்ணாக இன்னொரு பரிமாணம் என, அமுதவல்லி கதாபாத்திரத்தில் மாதுரி தேவி வாழ்ந்து காட்டிய படம் ‘மந்திரிகுமாரி’.

60 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இப்படம், இன்றும் மறக்க முடியாத ‘மந்திரிகுமாரி’யாக வட சென்னையின் முருகன் உள்ளிட்ட பழம்பெரும் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெறுகிறது. டி.ஆர்.சுந்தரம், எல்லிஸ் ஆர்.டங்கன், கலைஞர் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், எம்.என்.நம்பியார் அதில் பங்குபெற்றிருக்கிறார்கள் என்பதற்காக மட்டுமே இந்த வரவேற்பு அல்ல. மந்திரிகுமாரி அமுதவல்லியாக முதன்மை வேடத்தில் தோன்றி, பகல் வேடப் பார்த்திபனாக நடித்த எஸ்.ஏ.நடராஜனுடன் இணைந்து ‘வாராய் நீ வாராய்’, ‘உலவும் தென்றல் காற்றினிலே’ ஆகிய அழியாப் புகழ்பெற்ற பாடல்களில் காதல் ரசம் சொட்டும் நடிப்பை மாதுரி தேவி வழங்கினார்.

மிக முக்கியமாக, மு.கருணாநிதியின் அனல் தெறிக்கும் வசனங்களைக் கம்பீரமான உடல்மொழியுடன் கணீர்க் குரலில் பேசி நடித்த மாதுரி தேவியின் அபாரமான ஆற்றலுக்காகவுமே இந்தப் படம் கொண்டாடப்பட்டது. கலைஞர்.மு.கருணாநிதிக்குச் சிறந்த கதை வசனகர்த்தா என்ற அந்தஸ்தை நிலைநாட்டிய படமாகவும் எம்.ஜி.ராமச்சந்தர், எம்.ஜி.ஆராக உயர வழிவகுத்ததும் எம்.என்.நம்பியார் எனும் பார்த்ததுமே பயமூட்டக்கூடிய வில்லன் நடிகரைத் தமிழ்த் திரைக்கு அடையாளம் காட்டியதுமான இந்தப் படம்தான், மாதுரி தேவியைப் பன்முகக் கதாபாத்திரங்களில் ஜொலிக்கும் முன்மாதிரிக் கதாநாயகியாக உயர்வடையச் செய்தது.

 

வட சென்னையின் மகள்

இன்று வட சென்னை என்றாலே இடறலாக நோக்கும் மனப்பான்மை பலரிடமிருக்கிறது. ஆனால், அன்று வெள்ளையர்கள் நேசித்த பகுதி அது. சென்னை, ராயபுரத்தில் சூசை – மனோரஞ்சிதம் தம்பதியின் மகளாக 1927-ல் பிறந்த கிளாரா மேரிதான் பின்னர் திரைப்படத்துக்காக மாதுரி தேவி எனப் பெயர் சூட்டிக்கொண்டார். வசதியான குடும்பம், செயின்ட் ஆன்டனி ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் பத்தாம் வகுப்புப் பயின்றபோது, அப்பகுதியின் பங்கு தேவாலயம் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் ‘பாஸ்கா’ நாடகத்தை நடத்திவந்தது. அதில் மன்னன் ஏரோதுடைய மகளாக மேடையில் பாடியபடி நடனமாடினார். அதே நாடகத்தில் இயேசுவைப் போற்றும் லாசருவின் சகோதரி மார்த்தாளாகவும் மற்றொரு காட்சியில் இயேசுவின் பாதங்களை பரிமளத் தைலம் கொண்டு பூசும் ஒதுக்கப்பட்ட பெண்ணாகவும் சிறப்பாக நடித்தார்.

கிளாராவின் ‘பாஸ்கா’ நடிப்பின் புகழ் நாடக வட்டாரத்திலும் பரவியது. பல நாடகக் குழுக்களிலிருந்து கிளாராவுக்கு அழைப்புகள் வந்தன. அனைத்தையும் மறுத்துவிட்டார் அப்பா சூசை. பாஸ்கா நாடகத்தில் மூன்று வேடங்களில் சிறுவயதிலேயே நடித்த அதிர்ஷ்டம், பின்னாளில் திரையில் அவர் புகழ்பெற்றபோது இரட்டைக் கதாபாத்திரங்கள் அவரைத் தேடி வர ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

10chrcjmanthirikumari

’மந்திரிகுமாரி’ படத்தில் மாதுரி தேவி, எஸ்.ஏ.நடராஜன்

 

 

துணிவின் மறு பெயர்

1939-ல் வெளியான ‘பாண்டுரங்கன்’ படத்தில் துணை வேடமேற்றுத் தனது திரைப் பயணத்தை தொடங்கிய மாதுரி தேவிக்கு, கதாநாயகி வாய்ப்பு அமைந்தது 1947-ல். போமன் இரானி இயக்கத்தில் வெளிவந்த ‘லட்சுமி விஜயம்’ படத்தில் அமுதா, குமுதா என்ற இரட்டை வேடத்தில் நடித்தார். அதன்பின் டி.ஆர்.சுந்தரம் கண்களில்பட்ட மாதுரி தேவி, மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான நாயகிபோல் ஆனார். ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ (1947), ஜுபிடர் பிக்சர்ஸின் ‘மோகினி’ (1948) எனப் படங்களின் எண்ணிக்கை பெருகியது. அடுத்து கே.ராம்நாத் தயாரித்து இயக்கிய ‘கன்னியின் காதலி’மாதுரி தேவியின் பன்முக நடிப்புப் பரிமாணங்களை முழுமையாக வெளிக்கொணர்ந்தது. அந்தப் படத்தில் ஆதித்தன், கலைமணி, சந்திரிகா ஆகிய மூன்று வேடங்களில் வியக்கவைக்கும் வேறுபாடுகளைக் காட்டி நடித்தபோது மாதுரிக்கு வயது 20. இவற்றில் ஆதித்தன் என்பது இளைஞன் வேடம். இதன் பின்னர் தமிழ் சினிமாவைப் புரட்டிப்போட்ட மாடர்ன் தியேட்டஸின் ‘பொன்முடி’ (1950) மாதுரி தேவியின் சாதனை எனலாம். அந்நாளின் அத்தனை தயக்கங்களையும் உடைத்து, அந்தப் படத்தின் நாயகன் பி. வி. நரசிம்ம பாரதியுடன் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்துத் துணிவின் மறுபெயர் மாதுரி தேவி எனப் பெயர்பெற்றார்.

தொடக்கத்தில் நகைச்சுவை வேடங்கள், நடனம், நாயகி, இரட்டை வேடம், வில்லி வேடம் என எதையும் விட்டுவைக்காத மாதுரி தேவியின் நடிப்பில் வெளியான மொத்தப் படங்கள் 39. வில்லைப் போல் நீண்டு வளைந்த புருவங்கள், வில்லிலிருந்து புறப்படும் நாணைப் போன்ற கூறிய நாசி, காந்தமாய் உள்ளிழுக்கும் உருண்டைக் கண்கள், வாய் திறந்து சிரித்தால் மயக்கும் வசீகரம் எனச் சிறந்த தோற்றம் கொண்ட, கனவு நட்சத்திரமாக உயர்ந்த இவர், நளினமாக நடனமாடுவதிலும் பெயர்பெற்று விளங்கினார். எஸ்.முகர்ஜி என்பவரை மணந்துகொண்டு சில படங்களையும் சொந்தமாகத் தயாரித்துப் பொருள் இழப்பைச் சந்தித்த பின் 1962-க்குப் பிறகு திரையுலகிலிருந்து முற்றாக விலகி வாழ்ந்தவர், 1990-ல் மறைந்தார். அந்நாளைய நாயகிகள் ஏற்கத் தயங்கியவை அவர் ஏற்ற வேடங்கள். அவரது புகழை அவை என்றும் மனத்திரையில் ஒளிரச் செய்யும்.

படங்கள் உதவி: ஞானம்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article20009337.ece

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

 

 
 
 

நீர்க்குமிழி: இந்திய மேடைப் புலி

08chrcjkpkesavan2

கே.பி.கேசவன்

 

நாடக நடிகர்கள்தான் ஆரம்பகாலத் தமிழ் சினிமாவில் நடிகர்களாக இருந்தார்கள். சில நாடகக் கலைஞர்கள் பிடிவாதமாக சினிமாவை வெறுத்தனர். ஆனால், சினிமாவின் வளர்ச்சி, நாடகத்தை நலிவடையச் செய்தது. வைராக்கியத்துடன் இருந்தவர்களின் பிடிவாதம் பின்னர் தளர்ந்து, அவர்களும் திரை நோக்கிப் படையெடுத்தனர்.

இன்னும் சிலர் நாடகம், சினிமா இரண்டையுமே இரு கண்களாகக் கருதினர். அதனால் சினிமாவில் நடித்துக்கொண்டே நாடக மேடையிலும் அரிதாரம் பூசி வந்தனர். தாய் வீடான நாடகம், அதன் குழந்தையான திரைப்படம் இரண்டுமே சுதந்திரப் போராட்ட இயக்கத்தை வளர்க்கச் சிறந்த ஆயுதங்கள் என்பதைக் கண்டறிந்தவர் தீரர் சத்தியமூர்த்தி. தொடக்கத்தில் நாடகக் கலைஞராகவும் பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மண்டலத் தலைவராகவும் இருந்த அவர், நாடகக் கலைஞர்கள், அங்கிருந்து சினிமாவுக்கு வந்த நடிகர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரைச் சுதந்திர இயக்கத்துக்குப் பயன்படுத்திக்கொண்டார். சமரசம் ஏதுமற்ற தூய தலைவராக இருந்த சத்தியமூத்தி ஏற்படுத்திய தாக்கம், பெரும்பாலான நடிகர்களை காங்கிரஸ் இயக்கத்தில் இணைய வைத்தது. அப்படிப்பட்ட சத்தியமூர்த்தியின் தலைமையை ஏற்றுக்கொண்ட சிறந்த நாடக, திரைநடிகர் கே.பி.கேசவன்.

 

தொடர்புடையவை

 

கொள்கைப் பிடிப்பு

அன்றைய மதராஸ் ராஜதானியிலிருந்த பாலக்காட்டின் ஒரு பகுதியான ஒலவக்கோட்டில் பிறந்து வளர்ந்தவர் கே.பி.கேசவன். சிறுவயதிலேயே பாடும் திறமையைப் பெற்றிருந்த இவரை, பெற்றோர், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்த்தனர். 1912-முதல் புகழ்பெற்று விளங்கியது மதுரை ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனி. ‘சதாவதானி’ கிருஷ்ணசாமி பாவலர் அதன் முக்கிய நாடக ஆசிரியர்களில் ஒருவராகப் பொறுப்பேற்ற பின் அதிலிருந்து பல தலைசிறந்த நடிகர்கள் உருவாகி வந்தார்கள். அதற்குக் காரணம் நாட்டில் தேசிய இயக்கம் எழுச்சி பெற்றுவிட்ட அக்காலக் கட்டத்தில், புராண நாடகங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பாவலர் எழுதிய தேசிய நாடகங்கள் பெரும்புகழ் பெற்றன.

பாவலரின் ‘பதி பக்தி’, ‘கதர் பக்தி’, ‘பம்பாய் மெயில்’, ‘நாகபுரி கொடிப் போர்’போன்ற தேசிய நாடகங்களில் கதாநாயகனாக நடித்து திருவிதாங்கூர் முதல், மதராஸ், மைசூர் ராஜதானிகள்வரை புகழ்பெற்று விளங்கி மகா நடிகர்தான் கே.பி.கேசவன். இந்த நாடகங்கள் திரைப்படமானபோது அவர்தான் கதாநாயகன். அந்நாளில் விதேசித் துணிகளை அணிவதே கேவலம் என்று எண்ணி அவற்றை பொது இடத்தில் எரித்து சுதந்திர உணர்ச்சியை மக்கள் வெளிப்படுத்திய நிலைமை நாட்டிலே உருவானது. அதற்குத் தலைவர்களின் போராட்டத்துடன் கே.பி.கேசவன் நடித்த ‘கதர் பக்தி’ நாடகம் ஊட்டிய தேசிய உணர்வும் ஒரு காரணமாக இருந்தது வரலாறு. கணீர் குரலும் திருத்தமான உச்சரிப்பும் கம்பீரமான உடல்மொழியும் கே.பி.கேசவனுக்கு ‘இந்திய மேடைப்புலி’ என்ற பட்டத்தைக் கொண்டுவந்து சேர்த்தன.

சிறு வயதுமுதலே புராண, இதிகாச நாடகங்களில் நடித்து வளர்த்திருந்தாலும், ராஜபார்ட் நடிகராக உயர்ந்தபோது, தீரர் சத்தியமூத்தியைத் தலைவராக ஏற்றபின் மூட நம்பிக்கையைப் பரப்பும் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடிப்பதில்லை என்பதை இறுதிவரை கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்த முதல் ‘லட்சிய நடிகர்’ என்று இவரைக் கூறலாம். “கலைஞர்கள் அனைவரும் மக்களுக்கு முன்மாதிரியாக இருந்து கதர் அணியுங்கள்” என்று சத்தியமூர்த்தி வேண்டுகோள் வைத்தபோது, தனது காரின் இருக்கைகளுக்குக் கூட கதரை உடுத்தி அழகு பார்த்தார் கேசவன்.

திறமை மற்றும் அழகின் மொத்த உருமாக இருந்த கேசவன், திரையுலகில் சில படங்களில் மட்டுமே நாயகனாக நடித்துள்ளார். ஆனால், அந்தச் சில படங்களே அவரை நாடறிந்த நடிகராக மாற்றியிருந்தன. எவ்வளவு விரைவாக அவர் புகழ்பெற்றாரோ அவ்வளவு வேகமாக மறக்கப்பட்டவர். “இவரது வாழ்க்கையிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் என்னைப் புகழின் போதைக்கு அடிமையாகாமல் காத்தது” என எழுதியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

 

எம்.ஜி.ஆருடன் நட்பு

கிருஷ்ணசாமிப் பாவலரை ஆசிரியராக ஏற்று நடிகர்களாக பாய்ஸ் குழுவில் வளர்ந்தபோது, கே.பி.கேசவனுடன் அங்கே நெருங்கிப் பழகியவர்களில் எம்.ஜி.ஆரும் அவருடைய அண்ணன் சக்கரபாணியும் அடங்குவர். அனைவருடன் இனிமையாகப் பழகுவதுடன் நில்லாமல், தன் ரசிகர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கவுரப்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார் கேசவன், அவரது நாடகம் சிறிய ஊரில் நடந்தாலும் நிச்சயமான வசூலைக் குவித்தது.

பின்னர், திரையுலகில் அடிவைத்தபோது அவரது படங்களும் வெற்றிபெற்றன. கே.பி.கேசவன் ‘ராஜ்மோகன்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்தபோது, தனக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரும்படி கேசவனிடம் உதவிகேட்டார் எம்.ஜி.ஆர். “ ராம்சந்தர்… உன் அழகுக்கும் நிறத்துக்கும் இந்த சினிமாவையே ஆளப்போறவன் நீ. ஒரு சீன் வேடமெல்லாம் உனக்கு வேண்டாம்” என எம்.ஜி.ஆரை உற்சாகப்படுத்துவார் கேசவன். அவர் கொடுத்த உற்சாகம்தான் பெரிய வேடங்களுக்காக நம்பிக்கையுடன் தன்னைக் காத்திருக்க வைத்தது என்று எம்.ஜி.ஆர் தனது வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்திருக்கிறார்.

 

‘இரு சகோதரர்கள்’

மாடர்ன் தியேட்டர்ஸில் நடிகராக இருந்தபோது எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் கே.பி.கேசவன் நடித்த ‘இரு சகோதரர்கள்’ படம் மிகப் பெரிய வெற்றிபெற்றிருந்தது. அந்தப் படத்துக்காகச் சிறந்த நடிகராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். திரும்புகிற திக்கெல்லாம் கேசவனுக்குப் பாராட்டு மழை. அந்தப் படத்தை ரசிகர்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதைக் காண, , சென்னை அண்ணா சாலையில் இருந்த நியூ எல்பின்ஸ்டன் தியேட்டரில் காண, தன் முக்கிய நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு சென்றார் கேசவன். எம்.ஜி.ஆரைத் தனது வலப்பக்கத்தில் அமரவைத்துக்கொண்டார்.

08chrcjerusakothararkal

படத்தின் இடைவேளையின்போது, தங்கள் அபிமான நடிகர் கேசவன் வந்திருப்பதை அறிந்துகொண்ட மக்கள், அவரைப் பார்ப்பதற்காகத் திரண்டனர். அவரது பெயரைக் கூறி கூச்சலிட்டனர். அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரும் ஒன்றுக்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்தார். ஆனால், எம்.ஜி.ஆரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. இதன் பிறகு நடந்த சம்பவத்தை எம்.ஜி.ஆர், ‘சமநீதி’ என்ற பத்திரிகையில் இப்படி விவரித்து எழுதியிருக்கிறார்.

 

தலை கீழாய் மாறிய புயல்

“கேசவனைக் கண்ட மக்களின் ஆரவாரத்தைக் கண்ட நான், “இத்தனை ஆதரவு பெற்றவருக்கு அருகில் நாம் உட்கார்ந்திருக்கிறோமே என்று பெருமை கொண்டேன். படம் முடிவதற்குள், வெளியே வந்து விட வேண்டும் என்று, நாங்கள் புறப்பட்டோம். அதற்குள் மக்கள் வெளியே வந்து சூழ்ந்துவிட்டனர். சூழ்ந்துகொண்டவர்களை விலக்கிவிட்டு கே.பி.கே.வை அந்த மக்கள் கூட்டத்திலிருந்து மீட்டு, காரில் ஏற்றி பத்திரமாக அனுப்பிவைத்தேன். அன்று மக்களுக்கு என்னை யார் என்றே தெரியாது. இந்தச் சம்பவம் நடந்து, பல ஆண்டுகளுக்குப் பின், சென்னை நியூ குளோப் தியேட்டருக்கு கே.பி.கேசவனும் நானும் ஆங்கிலப் படம் ஒன்றைப் பார்க்கச் சென்றிருந்தோம் அப்போது நான் நடித்த ‘மர்மயோகி’ படம் வெளிவந்து சில மாதங்களே ஆகியிருந்தன.

இப்போது இடைவேளையின்போது மக்கள் என்னைச் சூழ்ந்துகொண்டனர். எனக்கு அருகில், அதே கே.பி.கேசவன் அமர்ந்திருந்தார். அவரை யார் என்றே படம் பார்க்க வந்தவர்கள் கவனிக்கவில்லை. படம் முடிந்து வெளியே வந்தபோது மக்கள் கூட்டத்திடமிருந்து என்னை மீட்டு, காரில் திணித்துப் பத்திரமாக அனுப்பிவைத்தார். காரின் பின் கண்ணாடி வழியே கேசவனைப் பார்த்தபோது மக்களில் ஒருவராக, சாமானியராக கூட்டத்தில் கரைந்துபோனார்.

கலைஞனுக்கு உச்சநிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம், மக்களால் தரப்படும் மயக்க நிலை; அவ்வளவுதான். இதை நம்பி ஏமாந்து விடுவோமானால், நாம் மற்றவருக்குப் பண்பு, பாசம், பகுத்தறிவு முதலியவற்றைத் தரும் கடமை கலைஞனாக இயங்க முடியாது. கலைஞனைப் பொறுத்தவரையில், அவனுக்கு வீழ்ச்சியே கிடையாது. சூழ்நிலை உயர்த்தும் தாழ்த்தும். அது பிற மக்களின் மனதில் தோன்றும் முடிவு!” என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருக்கிறார்.

படங்கள் உதவி: ஞானம்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article21290648.ece

Link to comment
Share on other sites

நீர்க்குமிழி: குடும்பத்தைக் காப்பாற்ற திரை நடிப்பு! - கே.ஆர் செல்லம்

 

 

15CHRCJENMANIVI

‘என் மனைவி’ படத்தில் சாரங்கபாணியுடன் செல்லம்

 

சினிமா பேசத்தொடங்கியபோது, நடிகர்கள் பாடுவதும் செந்தமிழில் பேசுவதுமே மக்களுக்கு அதன் மீதான கவர்ச்சியைக் கூட்டியது. ஆனால் அடுத்தகட்ட கவர்ச்சி என்பது, காதல் வசனங்கள், காதலையும் பாலுணர்வையும் தூண்டும் வரிகளைக் கொண்ட பாடல்கள், நாயகனும் நாயகியும் கைகளைப் பிணைத்தபடி நந்தவனத்தில் நடப்பது எனத் தொடங்கி ஒரு கட்டத்தில் கதாநாயகன் கதாநாயகியை அலேக்காகத் தூக்கி மஞ்சத்தில் கிடத்தும் காட்சி என்பதுவரை அதன் எல்லை விரிந்துகொண்டே சென்றது.

 

காட்டு மனிதன் பிடியில்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தில் நேரடியாக வெளியாகத் தொடங்கியிருந்த இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களில் காலும் தொடையும் தெரிய கதாநாயகிகள் வலம் வந்தனர். இது தமிழ் சினிமா எடுத்துக்கொண்டிருந்தவர்களில் சிலருக்குத் துணிவைத் தந்தது. அதன் விளைவுதான் 1938-ல் வெளியான ‘வனராஜ கார்ஸன்’ திரைப்படம். சந்தர்ப்ப வசத்தால் சிறுவயது முதல் காட்டில் வளர்ந்த கதாநாயகன், வில்லனின் மகளான கதாநாயகியைக் காட்டுக்குள் தூக்கிச் சென்றுவிடுகிறான். முதலில் மிரளும் நாயகி, பின் வனராஜனின் நல்ல குணங்களைப் பார்த்து அவனுக்குப் பேசக் கற்றுத் தருகிறாள். இருவரும் காதல் கொள்கிறார்கள்.

15chrcjbalayogini

பாலயோகினி’ படத்தில் பேபி சரோஜாவுடன் கே.ஆர்.செல்லம்

கதாநாயகிக்குச் சிறுத்தைப் புலியின் தோலை ஆடையாக அணிவிக்கிறான் நாயகன். வில்லன் இப்போது காட்டுக்குள் நுழைந்து மகளை மீட்க, துப்பாக்கியுடன் வருகிறான். அவனிடமிருந்து நாயகியை அலேக்காகத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு கடும் பாறைகளும் செடிகளும் நிறைந்த கானகத்துள் ஓடித் தப்பிக்கிறான்.

தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல; தென்னிந்திய சினிமாவுக்கே முதல் வனத் திரைப்படம் அல்லது டார்சான் படம் ‘வனராஜ கார்ஸன்’தான். நாற்பதுகளின் இந்திப் பட உலகில் சாகச நாயகனாகப் புகழ்பெற்றிருந்த ஜான் கவாஸ், காட்டு மனிதன் கார்ஸன் கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்க, அவர் தூக்கி தோளில் வைத்துக்கொண்ட அந்தக் கதாநாயகியாக நடித்தவர் கே.ஆர்.செல்லம்.

 

‘லக்ஸ் ப்யூட்டி’யின் பரிதாபப் பேட்டி

ஒரு தமிழ்ப் பெண் தொடைகள் முழுவதும் தெரிய அந்தப் படத்தில் நடித்திருந்தது பெரும் பரபரப்பை உருவாக்கியது. ‘வனராஜ கார்ஸன்’ வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தார்கள். ஜான் காவாஸுக்காக அல்லாமல், செல்லம் வரும் காட்சிகளைக் காணத் திரும்பத் திரும்பத் திரையரங்கில் அன்றைய ரசிகர்கள் திரண்டார்கள். படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. பல பத்திரிகைகள் கதாநாயகியின் கவர்ச்சிக்காகக் கடும் விமர்சனங்களை வைத்தன. கதாநாயகனும் அரை நிர்வாண ஆடையோடுதான் நடித்தார் என்பதுபற்றி அவை மூச்சு விடவில்லை.

“ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு இவ்வளவு துடுக்குத்தனம் கூடாது” என ஒரு பத்திரிகை கண்டித்தது. அப்போது செல்லம், “என்னை இந்தப் படத்தில் இவ்வளவு கவர்ச்சியாக நடிக்க வைப்பார்கள் என்று நினைக்கவே இல்லை. ஒப்பந்தம் போட்டுக்கொண்டதால் என்னால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது” என்று பேட்டி அளித்து, அனைவரது பரிதாபத்தையும் சம்பாதித்துக்கொண்டார்.

15chrcjlux%20beuty

‘லக்ஸ்’ விளம்பரத்தில்

அதன் பிறகு செல்லம் எந்தக் கவர்ச்சிக் கதாபாத்திரத்திலும் நடிக்கவில்லை. ஆனால், இந்தப் படத்தின் மூலம் செல்லத்துக்குக் கிடைத்த புகழை, ‘லக்ஸ்’ குளியல் சோப் நிறுவனம் தனது விளம்பரத்துக்குப் பயன்படுத்திக்கொண்டது. ‘வனராஜ கார்ஸன்’ படத்தைத் தொடர்ந்து செல்லம் கதாநாயகியாகவும் இரண்டாம் கதாநாயகியாகவும் நடித்த படங்களின் எண்ணிக்கை குறைவே என்றாலும் அவரது எழிலார்ந்த, குழந்தைத்தனம் மிகுந்திருந்த இளமையான தோற்றம் காரணமாக அவரை ‘லக்ஸ்’ பியூட்டி என்று பத்திரிகைகள் அழைத்தன. அவரது பேட்டியை வெளியிட முண்டியடித்தன. ஆனால், செல்லத்தின் நிஜமான பூர்விகம் எந்தப் பேட்டியிலும் பதிவாகவில்லை.

 

தஞ்சையின் புத்ரி

அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் ஜில்லாவின் பாபநாசம் தாலுகாவுக்கு உட்பட்ட கம்பயநத்தம் கிராமம்தான் கே.ஆர்.செல்லத்தின் சொந்த ஊர். செல்லத்தின் தகப்பனார் கே.ரங்கசாமி பள்ளிக்கூட வாத்தியார். அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். பெயர் கனகவல்லி. கடைக்குட்டிப் பெண். படிப்பிலும் பாட்டிலும் படுசுட்டி. அன்றைய வழக்கப்படி பெண் பெரியவளாகிவிட்டால் வருடம் திரும்பியதும் கல்யாணம்தான். அப்படித்தான் கனகவல்லிக்கு 14 வயதில் திருமணம் செய்து வைத்தார்கள்.

புகுந்தவீட்டில் கனகவல்லிக்குச் சொல்லொண்ணா துயரம். சம்பாத்தியம் ஏதுமில்லாத கணவன், மாமியார் கொடுமை. துளைத்தெடுக்கும் வறுமை. இவற்றுக்கு மத்தியில் இரண்டு குழந்தைகளை ஈன்றெடுத்தாள். தகப்பனார் தந்த சீதனம் அத்தனையும் கரைந்துவிட, கணவனை விட்டுக்கொடுக்காமல் அவருடைய உறவினர்கள் செல்வாக்குடன் வாழ்ந்து வந்த பம்பாய்க்குச் சென்று பிழைத்துக்கொள்ளலாம் என்று அங்கே சென்றது குடும்பம். உறவினர் வீட்டில் விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குத்தானே? சுவரிலடித்த பந்துபோல் மதராஸ் வந்து சேர்ந்தார்கள்.

 

பிள்ளைகளைக் காக்க

மதராஸில் ‘கௌசல்யா’ என்ற படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது சவுத் இந்தியன் பிலிம் கார்பரேஷன் என்ற நிறுவனம். அந்தப் பட கம்பெனியில் கனகவல்லியுடைய கணவரின் நண்பர் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். நண்பனிடம் கெஞ்சிக் கூத்தாடி கம்பெனி வீட்டிலேயே குடும்பத்தை தங்கவைத்தார் கனகவல்லியின் கணவர். அவருக்கு வேலை கிடைத்ததும் வேறு வீடு பார்த்துக்கொண்டுவிடலாம் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தாள் கனகவல்லி. ஒருநாள் வேலைதேடிச் சென்ற கணவன் திரும்ப வரவே இல்லை.

ஒருவாரம் ஆனது, ஒருமாதம் ஆனது. இரண்டு வயதும் மூன்று வயதும் நிரம்பிய இரு குழந்தைகளோடும் கண்ணீரோடும் நின்ற கனகவல்லியின் நிலையைப் பார்த்த கம்பெனியார், “ உன் கஷ்டத்தைப் போக்கிக்கொள்ள இந்தப் படத்தில் நடி. இங்கேயே தங்கிக்கொள்” என்று இரக்கம் காட்டினார்கள். அந்தப் படத்தின் இயக்குநர் பி.எஸ்.வி.ஐயர் நான்கு காட்சிகளில் வரும் கதாபாத்திரத்தைக் கனகவல்லிக்குக் கொடுத்தார். கனகவல்லி என்ற பெயரை கே.ஆர்.செல்லம் என்று மாற்றினார்.

15chrcjvanaraja%20karzan

‘வனராஜ கார்ஸன்’ படத்தில்

பிள்ளைகளைக் காக்க சினிமாவில் நடித்தார் செல்லம். அவர் நடித்த முதல் படமான ‘கௌசல்யா’ தோல்வி அடைந்தது. கம்பெனியும் மூடப்பட்டது. இந்த நேரத்தில்தான் அதே படத்தில் நடித்த கே.என்.மீனாட்சி என்ற மூத்த நடிகையின் உதவியால் பல கம்பெனிகளில் அறிமுகப்படுத்தப்பட்டார் கே.ஆர்.செல்லம். ‘தஞ்சாவூர்ப் பெண்’ என்று கேள்விப்பட்டதும் ஊர்ப்பாசம் காரணமாகத் தனது ‘பாலயோகினி’ (1937) படத்தில் முழுநீளக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார், அன்று புரட்சிகர இயக்குநராக மலரத் தொடங்கியிருந்த கே.சுப்ரமணியம். ‘பாலயோகினி’யில் நடித்த பின் கே.ஆர்.செல்லத்துக்கு வாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கின.

 

தேசபக்தியும் நகைச்சுவை சக்தியும்

திருமணம் ஆனவர், இரண்டு பிள்ளைகளின் தாய் என்று கூறினாலும் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத அழகிய இளங்குமரியாகத் திரையில் வலம் வரத் தொடங்கினார் செல்லம். அவற்றில் அவர் நடித்த ‘தேச முன்னேற்றம்’ ‘சூர்யபுத்திரி’ போன்ற தேசபக்திப் படங்களும் ‘மதனகாமராஜன்’, ‘மீரா’ போன்ற புராணப் படங்களும் அவருக்குப் பெயர் பெற்றுத்தந்தன. அதன் பின்னர் அவர் ‘நகைச்சுவைத் தென்றல்’ கே.சாரங்கபாணியின் மனைவி செல்லமாக, ‘என் மனைவி’(1942) படத்தில் கணவரின் நடத்தையைச் சந்தேகப்படும் அசட்டு மனைவியாக மிகச் சிறந்த நகைச்சுவை நடிப்பை வழங்கினார். நகைச்சுவை குணச்சித்திர நடிப்பில் அவர் காட்டிய ஈடுபாட்டின் காரணமாக நகைச்சுவையுடன் கூடிய குணச்சித்திர அம்மா கதாபாத்திரங்களில் மிளிரத் தொடங்கினார். கே.சாரங்கபாணி - கே.ஆர்.செல்லம் நகைச்சுவை குணச்சித்திரக் கூட்டணி பல படங்களில் தொடர்ந்து ‘பாட்டாளியின் வெற்றி’ (1960) வரை பயணித்தது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article21669579.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.