Jump to content

எமோஜி - சிறுகதை


Recommended Posts

எமோஜி - சிறுகதை

 
 

நர்சிம் - ஓவியங்கள்: ஸ்யாம்

 

வாட்ஸ்அப் சிணுங்கலில் விழித்துக்கொண்டு எழுந்தேன். மதுவைச் சந்தித்த நொடியிலிருந்து இன்றுவரை என் அத்தனை நாள்களும் அவளின் செய்தியில்தான் விடிகின்றன. இது இன்று நேற்று அல்ல... குறுஞ்செய்தி காலத்திலிருந்தே இப்படித்தான்.

“ I am not feeling well, இன்னிக்கு லீவு, don’t call me.”

உடனே பதில் அனுப்பினேன்.

“You are not feeling well, OR your feelings are not well?”

66p1.jpg

எனக்குத் தெரியும், பதில் வராது என்று. வரவில்லை. பல் துலக்கிக் குளித்து, சீருடை உடுத்தி, கிளம்பும் வரை 40, 50 முறை மொபைலைப் பார்த்திருப்பேன். பதில் வரவில்லை. ஆனால், நீல வண்ணத்தில் டிக் மார்க்குகள். உதாசீனம் செய்கிறாள் என எடுத்துக்கொண்டால் எனக்குக் கோபம் வரலாம் என்பதால், கோபத்தில் இருக்கிறாள் என்று எடுத்துக்கொண்டேன், சிரிப்பு வந்தது.

வண்டியைக் கிளப்பும் முன்னரும் ஒருமுறை போனை அனிச்சையாக எடுத்துப் பார்த்தேன். ம்ஹூம். மொபைலில் சலனமே இல்லை என்பதுபோல் மனதில்பட்டது. ஒருவேளை நேற்று நடந்த சண்டையே இறுதி என்றாகி, இனி பேசவே போவதில்லை என்றானால், என் இதயம் இத்தியாதி எல்லாவற்றையும் விடுங்கள்,  சதாசர்வகாலமும் அவள் நிமித்தமாகவே இருக்கும் இந்த மொபைலுக்கு என்ன சொல்லிப் புரியவைப்பது? அதற்காகவாவது சமாதானம் ஆகிவிடவேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

நானும் மதுவும் சென்னையின் மிகப் பிரமாண்டமான நட்சத்திர ஹோட்டலில் வேலைபார்க்கிறோம். முன் அலுவலகம் என்பதை ஆங்கிலப்படுத்திக்கொள்ளுங்கள். நட்சத்திர விடுதிகளில்  Front Office Management என்பதுதான் ஆகக் கடினம். அதுவும் ஐந்தும் அதற்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் எனில், கேட்கவே வேண்டாம். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வது, அதுவும் வாடிக்கையாக வரும் வாடிக்கையாளர்கள் எனில் இன்னும் அதிக கவனமாக அவர்களைக் கையாள வேண்டும். கவனம் என்றால், பிறந்த குழந்தையைக் கையாளும் கவனம். சொகுசில் சிறு குறை என்றாலோ அவர்களின் ஈகோவுக்கு இழுக்கு என்றாலோ அவர்கள் நேராக வருவது முன் அலுவலகத்துக்குத்தான். வந்து ஆடிவிடுவார்கள் ஆடி. நானும் மதுவும் அப்படியாகப்பட்ட வாடிக்கையாளர்களை இன்முகத்தோடு கையாள வேண்டிய பதவியில் இருக்கிறோம்.

என்னைவிட இரண்டு வருடங்கள் இந்தப் பதவியில் அதிக அனுபவம் உள்ளவள் மது. நான், நாய் வாய் வைப்பதுபோல் வெவ்வேறு உத்தியோகங்கள் பார்த்துவிட்டு, இறுதியில் இங்கு ஐக்கியமாகிவிட்டேன். இந்த வேலையில் நான் தொடர்ந்து இருப்பதற்கு மது மட்டுமே முழுமுதற்காரணம். ஆம், நான் வேலைக்குச் சேர்ந்து பயிற்சி நாளில் இருந்தபோது, அரசியல் பிரமுகர்கள் சிலர் தங்கியிருந்தார்கள். அவர்கள் என்னைப் படுத்தியபாட்டில் வழக்கம்போல் ஒரு ஏ-4 தாளைக் கையில் எடுத்தேன். எனக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பில் இருந்த மது மேடம்தான் என்னை ஆற்றுப்படுத்தி, அதுபோன்ற சூழ்நிலைகளை எப்படிக் கையாள வேண்டும் எனக் கற்றுக்கொடுத்தார்.

66p2.jpg

ஆனாலும் அதில் ஒருவன் படுத்தி யெடுத்திருந்தான் என்னை.

“எதுக்கு இந்த வெய்யில்ல இப்பிடி கோட்டு சூட்டு டை எல்லாம் தம்பி?”

“உள்ள ஏ.சி தானே சார். இதுதான் யூனிஃபார்ம்.”

“அது சரி, ஆமா... உங்க வேலை என்ன?”

“உங்களுக்கு அசிஸ்ட் பண்றது. ஏதாவது பிரச்னை, சந்தேகம்னா தீர்த்துவைக்கிறது.”

“உங்களைத்தான் தேடிக்கிட்டிருந்தேன். ஆமா, இது எத்தனை ஏக்கர்? சதுர அடி என்ன ரேட்டுன்னு வளைச்சீங்க?”

நான் ஒரு நொடி சுற்றிலும் பார்த்துவிட்டு, “அதெல்லாம் தெரியாது சார்.”

“அட என்னப்பா, இப்பத்தான் சந்தேகத்தைத் தீர்த்துவைக்கிறதுன்னு சொன்ன! சரி, யாராச்சும் வெவரமான ஆளா இருந்தா கூட்டிட்டு வா.”

இது ஒருவகை எனில், க்ரீம் அப்பிய முகத்தோடும் கமகமவென வாசனை திரவம் உடையெங்கும் கமழ, அப்படியே காஷ்மீர் பனிப்பிரதேசத்திலிருந்து இறங்கி வந்த சாத்வீகமான முகத்தோடு வரவேற்பறையில் நின்று தம் விவரங்களைக் கொடுத்து, அறையை அடைந்த நொடியில் ஏதோ அறுந்த பூனைபோல் அடித்தொண்டையிலிருந்து கத்தத் தொடங்கும் மகானுபவர்கள் வேறு வகை. தண்ணீர் சூடென்றாலும் கத்துவார்கள். ஏ.சி அதிகமாக வந்தாலும் சரி, மிதமாக வந்தாலும் சரி, படுக்கை விரிப்பில் ஆரம்பித்துத் தரையில் கிடக்கும் மிதியடி வரை குற்றம் கண்டுபிடித்து, பில்லைக் கட்டும்போது இன்னும் அடிவயிற்றிலிருந்து கத்தி, சல்லிசாக டிஸ்கவுன்ட் வாங்கிக்கொண்டு, ஆனாலும் முகத்தை உர்ரென்று வைத்து, “பணமெல்லாம் பெரிய விஷயமில்லை. ஆனால், நீங்கள் உங்கள் தவறை உணர வேண்டும் அல்லவா!” என்பது போன்ற முத்துகளை உதிர்த்துப்போவார்கள். அத்தனை திட்டையும் வாங்கிக்கொண்டு, கட்டணத்தில் எவ்வளவு மங்களம் பாடியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்து, பொது மேலாளர் எனும் மேதகு சிம்மசொப்பனத்திடம் பாட்டு வாங்கி என நாள் ஒவ்வொன்றும் நகர்வதற்குள் நாக்குத் தள்ளிவிடும்.

“துப்பினாலும் துடைத்துப் போட்டுப் போய்க்கொண்டே இரு” என்பதை இவருக்கு முன்னரே மது என்னிடம் பயிற்சியின்போது சொல்லித் தந்திருந்தாள். ஒருவிதத்தில் யோசித்துப்பார்த்தால், பயிற்சி என விதவிதமாக ஆங்கிலத்தில் அவர்கள் வகுப்பெடுத்த அத்தனையிலும் ஒரே தாரகமந்திரமாகச் சொன்னது, “வாடிக்கையாளர் என்ன சொன்னாலும் சரி, இன்முகத்தோடு சிரித்துக்கொண்டே இரு, அதற்குத்தான் உனக்குச் சம்பளம்.”

அதுவும் காலையில் கோட்டு சூட் எல்லாம் போட்டு, டையைக் கட்டிக்கொண்டு கிளம்பும்போது புருவம் உயர்த்தி, `பார்த்தியா, எப்படிப் போறான் பாரு என் மகன்!’ என அப்பா எதிர்படுவோரிடம் சைகையில் கித்தாய்ப்பாகக் கேட்பதைப் பார்க்கும்போது, ஒரு சுயகழிவிரக்கம் வரும் பாருங்கள், அதைச் சொல்லில் வடிக்க முடியாது என்பதால் எழுத்தில்.66p3.jpg

மதுவைக் கண்ட உடனேயெல்லாம் காதல் வந்துவிடவில்லை எனக்கு. நான் உனக்குப் பயிற்சி அளிக்கும் சீனியர் எனும் திமிரில் இருந்தாள். கடைக்கண் பார்வை என்பதே கிஞ்சித்தும் கிடையாது. ஏளனப் பார்வை மட்டும்தான். அதிலும் ஏதாவது சொல்லித் தந்துவிட்டு அதைத் திரும்பிக் கேட்டு, உடனடியாகச் சரியான பதில் சொல்லவில்லை எனில், `பிக் பாஸ்’ காயத்ரியை மக்கள் பார்ப்பதுபோல் ஒரு பார்வை. அவ்வளவுதான். அசிங்கம் பிடுங்கித் திங்கும். ஆனால், அடுத்த நொடியில் ஒரு சிறு பூஞ்சிரிப்பு என்னை இலகுவாக்கிவிடும்.

வேலைக்குச் சேர்ந்து ஓரளவுக்கு வேலை புரிந்து பழகிவிட்டது என்பதை, கீழே பேஸ்மென்ட்டில் வண்டியை நிறுத்திவிட்டு, தூண்களை அடையாளம் வைக்காமல் நடந்து சரியான பாதையில் உள்ளே நுழைந்துவிடுவதில் தீர்மானித்துவிடலாம். அப்படி எல்லா இடங்களும் மனிதர்களும் அந்தப் பிரமாண்ட நட்சத்திர விடுதியின் எந்த இடுக்கில் கேமரா நுழையாது என்பது வரை தெளிந்த மூன்றாவது மாதத்தில்தான் அந்தச் சம்பவம். அதை நாங்கள் ‘ஈவென்ட்’ என்போம். பெரிய நிறுவனங்கள் தாங்கள் அடைந்த வெற்றியைக் கொண்டாடும் பொருட்டோ அடையப்போகும் வெற்றிக்கான இலக்கைத் தீர்மானிக்கும் பொருட்டோ ஒட்டுமொத்த இந்தியாவின் கிளைகளிலிருந்தும் தம் ஊழியர்களை ஒருசேர அழைத்து வந்து எங்கள் பிரமாண்ட ஹோட்டலில் தங்கவைத்து, மூன்று வேளை சோற்றைப் போட்டு மீட்டிங் வைத்து மூளையைக் கழுவிச் சுத்தமாகச் சலவை செய்து அனுப்புவார்கள். அப்படியான ஒரு பெரிய ஈவென்ட் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெறப்போவதாகவும் அதற்கான வரைவுத் திட்டம் குறித்துப் பேச அந்த நிறுவனத்தின் தூதுவர்கள் வந்துள்ளதாகவும் சொல்லி, மது என்னையும் அந்த மீட்டிங்குக்கு அழைத்துப்போனாள்.

மீட்டிங் அறையின் பிரமாண்டம் ஒரு பக்கம், அதில் கமழும் அமைதி மறுபக்கம் என நான் டென்ஷன் ஆக, ஏகக் காரணிகள். எந்தப் பிரச்னையும் இல்லாமல் என் அருகில் அமர்ந்திருந்தாள் மது. மேஜைக்கு அந்தப் பக்கம் மூன்று பேர். மூவரும் மும்பையிலிருந்து வந்திருந்தார்கள். சரமாரியாகக் கேள்விகள் தொடுத்தார்கள். அத்தனை கேள்விகளுக்கும் இன்முகத்தோடு, `அதைச் செய்ய அப்படி ஒரு வழி இருக்கிறது. இதற்கு எனத் தனியாக ஆள்கள் இருக்கிறார்கள் ‘எனச் சட் சட்டென கொஞ்சமும் யோசிக்காமல் பதில் சொல்லி அசரடித்தாள். அவர்கள் முழுமனதாக ஏற்று, ஈவென்ட்டை உறுதிசெய்துவிட்டுப் போனார்கள்.

“நாளைக்கு சண்டே. ஆனா, நீங்க வந்திருங்க. நாம ஒரு ஒன் ஹவர் இந்த ஈவென்ட்டை எப்படி ஹேண்டில் பண்றதுனு டிஸ்கஸ் பண்ணுவோம்”

அப்போதுகூட அரை மனதாகத்தான் தலையாட்டினேன். மறுநாள் நடக்கப்போகும் எந்த ஒன்றுக்குமான சிறு சமிக்ஞையைக்கூட என்  உள்மனம் சுட்டவில்லை.

விடுமுறை நாள்களில் அலுவலகம் செல்வதில் ஓர் அலாதி சுகம் எனக்குண்டு. நாம் தினமும் கடக்கும் இடம், வேறு மாதிரி தோன்றும். நாம் அன்றாடம் உபயோகிக்கும் மேஜை, பொருள்கள் எல்லாம் நம்மையே ஸ்நேகமாகப் பார்ப்பதுபோல் இருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, டிஷர்ட்-ஜீன்ஸ், உடலைச் சுதந்திரமாக எண்ணவைக்கும் உடை. இப்படி எல்லாமும் சேர்ந்து மனதில் ஒரு நிதானம் குடிகொள்ளும். அப்படித்தான் இருந்தது அந்த ஞாயிறு. ஆனால், எல்லாம் மதுவைப் பார்க்கும் வரைதான். அப்படியா வருவாள்? அத்தனை நாள்களும் மதுவை ஹோட்டல் சீருடையான சேலையில், அதுவும் ஒருவிதமான அந்நியத்தன்மை வாய்ந்த கட்டமைப்பில் கட்டிக்கொண்டு, பொம்மைபோல் அலங்காரம் செய்து செயற்கை புன்னகையோடுதான் பார்த்திருக்கிறேன். ஆனால், அந்த ஞாயிற்றுக்கிழமை அழகுக்கான அத்தனை தேவதைகளும் அவளை ஆசீர்வதித்து, அவளோடு வழிநெடுக உடன் வந்து, என் கண்களின் விழித்திரையை இழுத்துக் கொண்டுபோய் அவள் முன் நிறுத்திவிட்டுப் போய்விட்டார்கள் என்பதுபோல் நின்றிருந்தேன்.

இழுத்துக் கட்டப்படாத கேசம், முகப்பூச்சு இல்லாத முகம். வெள்ளை நிறச் சட்டையும் அல்லாத டிஷர்ட்டும் அல்லாத ஒன்று, ப்ளூ ஜீன் என எளிமையாக இருந்தாள். எளிமையின் அழகுச் சுடர் நாள் முழுக்க மிளிர்ந்துகொண்டே இருக்கும் தன்மையுடையது. என் கண் முன் ஒரு சுடர் அசைந்து எரிந்துகொண்டிருந்ததுபோல் இருந்தது, மது அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது.

“என்ன மேடம்... இதுல சின்னப்பொண்ணு மாதிரி தெரியுறீங்க.”

“ஹலோ, நான் சின்னப்பொண்ணுதான். இந்த வேலையில உங்களைவிட டூ இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஜாஸ்தி. ஆனா, நீங்க ரொம்ப சீனியர்தானே!”

அவளின் அந்த `ரொம்ப சீனியர்’  வார்த்தைகள் என்னைக் காயப்படுத்திய நொடியில் அலறினேன்.

“ரொம்பல்லாம் இருக்காது. உங்களைவிட ரெண்டு செட்” என நான் பதறுவதைப் பார்த்து,

“யூ டூ லுக் குட் இன் திஸ்” என்றாள். ஆனால் அதில் எந்தவித காதல், காம உணர்வும் இல்லாமல்  `ஒரு டீ சொல்லு’ என்பதுபோல்தான் தட்டையாகச் சொன்னாள்.

“லெட்ஸ் கெட் இன் டு பிசினஸ்” என்றவள், எழுந்துபோய் எங்கிருந்தோ வெள்ளைத் தாள்களையும் வண்ணப் பேனாக்களையும் எடுத்துக்கொண்டு வந்தாள்.

“இது பெரிய ஈவென்ட். நேத்து கேட்டீங்கல்ல. அல்மோஸ்ட் 1,000 பேர நாம கவனிக்க வேண்டி இருக்கும். இந்த மாதிரி ஈவென்ட் மேனேஜ்மென்ட்ல நமக்கு என்னவெல்லாம் சேலஞ்சஸ் இருக்கும்னு லிஸ்ட் அவுட் பண்ணிட்டு, அதுக்கு நாமளே பதில் சொல்லிக்கிட்டோம்னா சிம்ப்பிளா முடிஞ்சிடும்” என அவளாகவே சொல்லிக்கொண்டு எழுதத் தொடங்கினாள்.

எனக்கு ஏதோ விண்ணுலகில் வீற்றிருப்பது போல் இருந்தது. `ஞாயிறு போற்றுதும்’ என்ற வாக்கியம் நினைவுக்குள் வந்து போனது.

“பெரிய சேலஞ்ச், ஏர்போர்ட்ல இருந்து இவங்களை ஹோட்டலுக்குக் கூட்டிட்டு வர்றது. அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு ஏர்போர்ட்ல டிராப் பண்றது. மற்றபடி ஒன்ஸ் தே ஆர் இன், எல்லா டிப்பார்மென்ட்லயும் அலெர்ட் கொடுத்து அதை ஃபாலோ பண்ணிட்டாலே போதும்.”

அன்று அவளோடு காபி குடித்தது, சுகந்தம் சுவாசித்தது என ஒவ்வொரு விநாடியையும் மெள்ளத்தான் கடந்தேன். அவள் அதிவேகமாக வேலைகளை முடித்துக் கிளம்பிப் போய்விட்டாள்.

66p6.jpg

அற்புதமாக நடத்தி முடித்தோம் அந்த ஈவென்ட்டை.

“என்ன மேடம், பார்ட்டி எல்லாம் கிடையாதா?” என்ற என் தூண்டிலுக்கு என்னையே புழுவாகப் பார்ப்பதுபோல் பார்த்து, “வொர்க் பண்ணது நானு. நீங்கதானே ட்ரீட் கொடுக்கணும்?” என்றாள்.

அப்போதுதான் ஜி.எம் எங்களை அவசரமாக அழைத்து, எங்கள் அலுவலக மொழியில் சொல்வதானால் என் பேன்ட்டைக் கழற்றினார். ஆம். எங்கள் ஹோட்டல் டிரைவர், வட இந்தியப் பெண்ணிடம் தகாத வார்த்தை பேசிவிட்டானாம். அதற்கு நான்தான் பொறுப்பு. ‘ஓட்டுநர்களைச் சரியாக க்ரூம் செய்யவில்லை’ எனத் திட்டித் தீர்த்துவிட்டார்.

வெளியே வந்து ஆய்ந்த அறிகையில், அந்தப் பெண் பாண்டிச்சேரி போகும் வழியில் இரவில் டிரைவர் சீட்டுக்கு அருகில் அமர்ந்து உறங்கியிருக்கிறாள். நாள் முழுவதும் ஓட்டிக் களைத்த ஓட்டுநர், இரவில் இப்படி அருகில் அமர்ந்து குறட்டை விட்டுக்கொண்டு வரும் பெண்மணியிடம், “தூங்காதீர்கள், எனக்கும் தூக்கம் வரும்” என்று சொல்ல முற்பட்டு, இவ்வளவு பெரிய பிரச்னை ஆகிவிட்டது.

மது விழுந்து விழுந்து சிரித்தாள். ஏனெனில், அந்தப் பெண்ணிடம் ஆங்கிலத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார் ஓட்டுநர், “மேடம், இஃப் யூ ஸ்லீப், ஐ வில் ஸ்லீப் வித் யூ.”

`நீங்கள் தூங்கினால், நானும் தூங்கிவிடுவேன்’ என்பதை இப்படிச் சொன்னதும், அந்தப் பெண் தாம் தூம் எனக் கத்தி பேனிக் பட்டனை எல்லாம் அழுத்திப் பாலியல் பிரச்னை வரை கொண்டுபோய்விட்டாள்.

``அவன் எப்படி என்னோடு படுப்பேன் என்று சொல்வான். நான் டெல்லியில் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?” என்று கத்திக் கொண்டிருந்த பெண்ணை, நான் பரிதாபமாகப் பார்த்தேன். இன்னும் கொஞ்சம் விட்டால் மீடியாவுக்குப் போய்விடுவாள்போலிருந்தது.

மதுதான் தக்க நேரத்தில் வந்து அந்தப் பெண்ணிடம் அது மொழிப் பிரச்னை என்றும் அவன் சொல்ல நினைத்தது இதுதான் என்றும் விளக்கி, ரூம் பில்லில் பாதியைக் குறைத்து மங்களம் பாடி அனுப்பிவைத்தாள். எனக்குப் போன உயிர் திரும்பிவந்தது.66p4.jpg

மது என்னிடம் சொன்னாள் “எப்பவுமே கம்யூனிகேஷன் கரெக்ட்டா இருந்துட்டா, லைஃப் ரொம்ப ஈஸி. நாம நினைக்கிறதைத் தேவையான இடத்துல சொல்லத் தெரிஞ்சுட்டா போதும்.”

நான் ஆமோதிப்பதுபோல் தலையாட்டி “ஆனா, எல்லாரும் எல்லாத்தையும் எல்லார்கிட்டயும் கம்யூனிகேட் பண்ணிற முடியாது இல்லையா?”

மது குழப்பமாகப் பார்க்க,

“ஓகே, அன்னிக்குப் பேசிட்டிருக்கும்போது உங்களுக்குப் பிரெஞ்சு மொழி தெரியும்னு சொன்னீங்க ரைட்?”

“யெஸ்.”

“அப்போ, அதுல, ‘நான் உங்க கூடவே கடைசி வரைக்கும் இருந்தா நல்லா இருக்கும்னு இப்ப தோணுது. ஆனா, ஏன்னு தெரியலை. இந்த ஏன்னு தெரியாத காரணம்தான் எனக்குப் பிடிச்ச காரணம்’. இந்த சென்ட்டன்ஸை எப்படி அப்படியே இதே ஃபீலோடு சொல்ல முடியும்? அந்த மொழியில அதுக்கு இடம் இருக்கா?”

சட்டென அவள் முகம் மாறியது. எழுந்து போய்விட்டாள். எனக்கு லேசாக உதறல் எடுத்தது. வழக்கம்போல் ஏ-4 தாளே துணை என ராஜினாமா கடிதம் எழுத வேண்டியதுதான்போல. எந்நேரமும் ஜி.எம்மிடம் இருந்தோ, ஹெச்.ஆரிடமிருந்தோ அழைப்பு வரக்கூடும் என மொபைலைப் பார்த்தேன்.

வாட்ஸ்அப்பில் மதுவின் டி.பி மிளிர்ந்தது.

`நீ ஒரு நல்ல கம்யூனிக்கேட்டர். எனக்கு சொல்லவேண்டியதைத் தீர்க்கமா சொல்லிட்ட. அதுவும் பிரெஞ்சு, அது இதுன்னு சேஃப் சைடு கம்யூனிகேஷன், ஐ லைக் இட்.’

அப்பாடா என்று இருந்தது. கையெடுத்து கும்பிடும் எமோஜியைப் பதிலாக அனுப்பினேன். அதற்கு `பிரச்னை பண்ணாமல் விட்டதற்கு, கோடானுகோடி நன்றிகள் அம்மா தாயே’ என்று அர்த்தம் என்பது என் மனதுக்குத் தெரியும்.

உடனே பதில் அனுப்பினாள் `சரி, அதை பிரெஞ்சுல சொல்லித்தரணுமா?’

ஒரு நொடிதான் யோசித்தேன். `இல்லை. அந்தப் பொண்ணுக்குத் தமிழும் தெரியும். கரெக்ட்டா கம்யூனிகேட் பண்ணிட்டேன்னு அவளே சொல்லிட்டா’ கூடவே நான்கைந்து மலர்கள், சிரிப்பு, ஹார்ட்டின் என அனைத்து எமோஜிகளையும் அனுப்பிவைத்தேன். அந்த நொடியில் உயிரைப் பணயம் வைப்பதுபோல்தான் இருந்தது. ஏனெனில், வெகுநாள்களுக்குப் பிறகு அப்பாவுடன் ஸ்நேகம், அலுவலகத்தில் ஓரளவு பிடித்தமான வேலை என அன்றாடம் கச்சிதமாகப் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது மது ரூபத்தில், அவள் இதைத் தவறாக எடுத்துக்கொண்டு பிரச்னை செய்துவிட்டால், அவ்வளவுதான். சீட் உடனே கிழிந்துவிடும். அப்பா மீண்டும் “நீயெல்லாம்...” எனப் பல்லவி பாடுவார். பைக் டியூ கட்டுவதே பெரும்பாடு ஆகிவிடும்.

மதுவிடமிருந்து பதில் வரவில்லை. ஆயிரம் பாம்புகள் மொபைலுக்குள்ளிருந்து நாக்கை வெளியே நீட்டி என்னைக் கொத்த வருவதுபோல் இருந்தது, ஒவ்வொரு முறையும் நான் மொபைலை எடுத்துப் பார்க்கும்போதும். அனுப்பியிருக்கக் கூடாதுதான். நல்ல நட்பு, நல்ல தோழியாக மதுவோடு காலம் முழுக்க இருந்திருக்கலாம்தான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அவள் புற அழகில் ஒரு நாளும் நான் ஈர்க்கப்படவில்லை (சரி சரி, அந்த ஞாயிற்றுக்கிழமை தவிர) அவளின் ஆளுமை, சிரிப்போடு சிக்கலைக் கடக்கும் முறைமை என ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன.

பலூனை ஊதும்போது காற்றின் கொள்ளளவுக்கான பயம் பீடிக்குமே, அப்படித்தான் நகர்ந்தன நொடிகள். மனம் முழுக்க வாட்ஸ்அப் குறித்த விசனம்தான். `எல்லாம் சரி, அந்த ஹார்ட்டின் எமோஜியைத் தவிர்த்திருக்கலாம்’ என்று கடைசியாக ஒரு ஞானம் பிறந்தது. இனி பிறந்து?
மறுநாள் என்னை ஜி.எம் அழைப்பதாகக் கட்டளை வந்தது. அடுத்த வாரம் ரிட்டையர்ட் ஆகப்போகிறவர். அதற்கான கடுகடுப்பில் இருந்தார்.

உள்ளே நுழைந்தேன். மது இல்லை. `சரி எதுவானாலும் எதிர்கொள்வோம். அப்படிப் பெரிய தவறு ஒன்றும் செய்துவிடவில்லை. என் காதலை மிக நாகரிகமாகத் தெரிவித்தேன். ஏற்கலாம் அல்லது மறுக்கலாம். இப்படி மூன்றாவது மனிதனிடம் போய்ச் சொல்லி, வேலைக்கே உலைவைப்பது எல்லாம் எவ்வகை நியாயம் மது?’ என்று மனதுக்குள் கேள்வி.

என்னை அமரச் சொன்னார்.

66p7.jpg

“யெஸ் சார்.”

“மது...” என இன்டர்காமில் அழைத்தார். நான் நாற்காலியின் நுனியில் அமர்ந்திருந்தவன் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்வதுபோல பின்வாங்கிக்கொண்டேன்.

மது நுழையும் வரை அமைதியாக ஏதோ வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

`என்ன இது, பள்ளிக்குழந்தைபோல் செய்துவிட்டாளே இந்த மது!’ என நினைத்துக்கொண்டிருக்கும்போதே வந்தாள்.

“கம் கம் மது, சிட்” என என் அருகில் அமரவைத்தார். நான் அவள் பக்கம் பார்ப்பதைத் தவிர்த்தேன்.

ஜி.எம் கணீரெனப் பேசினார், “ரகு, ஹோப் மது இன்ஃபார்ம்டு யூ. உனக்கு புரமோஷன் வந்திருக்கு. மதுதான் ஸ்ட்ராங்கா ரெக்கமண்ட் பண்ணாங்க. யூ ஹேவ் டு தேங்க் ஹெர்.”

என் விழிகள் விரிந்தன. படக்கென அவளைத் திரும்பிப் பார்த்தேன்.

ஜி.எம்மிடம் மது மிக நிதானமாக, “சார், ஒரே டிபார்ட்மென்ட்ல ஒரே கிரேட்ல நாங்க ரெண்டு பேரும் இருந்து கன்ட்டினியூ பண்ணலாமா, இல்ல பாலிசியில ஏதாவது அப்ஜெக்‌ஷன் இருக்கா?”

நானும் ஜி.எம்மும் குழப்பமாக அவளைப் பார்க்க, “யெஸ் சார், நாங்க மேரேஜ் பண்ணிக்கிறதா ப்ளான் பண்ணியிருக்கோம்” என்றாள்.

``வாவ், கன்கிராட்ஸ்! என்கிட்ட சொல்லவேயில்லையே” என்றார்.

“என்கிட்டயே இப்பத்தான் சார் சொல்றா” என்றேன். என் முகத்தில் அவ்வளவு சிரிப்பு இருந்திருக்க வேண்டும். ஜி.எம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

“அப்போ டபுள் ஹேப்பினஸ்” எனக் கையைக் குலுக்கி விடைகொடுத்தார். மறக்காமல் “ஆல் தி பெஸ்ட் போத் ஆஃப் யூ” என்றார்.

அப்படி அதிரடியாகக் காதலைச் சொன்னவள் மது. அதன் பிறகு என்னைவிடவும் என் குடும்பத்தாரிடம் அவ்வளவு பாசமாகப் பழகியவள். குறிப்பாக, என் அப்பா அவளுக்கு நல்ல நண்பர் ஆகிவிட்டார். இப்படி இத்தனை நெருக்கம் ஆன பிறகும், அவள் குணம் அறிந்தும், இத்தனை வருடங்கள் அவளோடு இருந்தும் நேற்று நான் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாதுதான். சரி நான் ஒன்றும் அப்படித் தப்பாகக் கேட்கவில்லையே. புதிதாக ஒருவன் வேலைக்குச் சேர்ந்திருக்கிறான். அவனுக்கு ட்ரெய்னிங் கொடுக்கும் பொறுப்பு மதுவுக்கு. அவனைப் பார்த்தவுடன் நான் எதேச்சையாகக் கேட்டேன், “இப்பிடித்தானே நானும் ட்ரெய்னிங்னு நுழைஞ்சேன்”அவ்வளவுதான்.

இந்த “வாட் டு யூ மீன்” என்ற வாக்கியத்தைக் கண்டுபிடித்தவன் மட்டும் என் கையில் கிடைத்தால் அவ்வளவுதான். அதையே ஐம்பது முறை கேட்டிருப்பாள் விதவிதமாக. நான் ஒருகட்டத்தில், “பொசஸிவ்ல கேட்டுட்டேன். அவன் ஆள் வேற கொஞ்சம் நல்லா இருந்தான். அதான், சரி ஸாரி.” அதற்கும் வாட் டு யூ மீன்தான்!

“அப்போ நீங்க அழகா இருக்கிறதா நினைப்பா?” அஸ்த்திவாரக்கல்லை லேசாக ஆட்டத் தொடங்கினாள்

“சரி விடு, ஜாலியாக் கேட்டேன்”

“இதுதான் ஜாலியா? அப்போ உங்கிட்ட பழகினமாதிரிதான் எல்லர்கிட்டயும் பேசுவேன்னு நினைச்சுட்டியா?” ஒரே நொடியில் கண்ணாம்பாவில் துவங்கி, சரோஜாதேவிக்குள் புகுந்து,இறுதியில் ஓவியாவாக முடித்தாள், “கெட் லாஸ்ட், நோ மோர் சான்ஸ் டு யூ.”

மது இல்லாமல் அலுவலில் மனம் லயிக்கவில்லை. எல்லாவற்றையும்விட அதிகக் கோபமும் இயலாமையும் அவள் வாட்ஸ்-அப் ஆன்லைனில் தொடர்ந்து இருப்பதைப் பார்க்கும்போதுதான் ஏற்பட்டது. நான் டைப் செய்வது போல் ஆரம்பித்து அழித்துக்கொண்டே இருந்தேன். அவளுக்கு டைப்பிங் என்று வரட்டும் என. அவள் சட்டைசெய்யாமல் ஆன் லைனிலேயே இருந்தாள்.

அன்று ஒரு நாளைக் கடப்பதே கடினமாக இருந்தது என்றால் அதனையடுத்து வந்த இரண்டு நாள்கள் அலுவலகத்தில் மது இல்லாமல் எதுவுமே ஓடவில்லை. சட்டென வற்றிப்போன குளம்போல் காட்சியளித்தது அலுவலகம். என் மேஜைக்கு வலப்பக்கமும் ஏ-4 தாள்கள்  இருந்தன; இடப்பக்கமும் இருந்தன. மது இல்லாத இந்த அலுவலகத்தில் இனி இருக்கப் போவதில்லை என முடிவெடுக்கச் சொல்லி அந்தத் தாள்கள் படபடப்பதுபோல் தோன்றின. மின்விசிறியைத் திசைமாற்றி வைத்துவிட்டு கிருத்திகாவின் உதவியை நாடினேன்.

கிருத்திகா மதுவோடு ஒன்றாக வேலைக்குச் சேர்ந்தவள். ஃபுட் டிப்பார்ட்மென்ட். யார் என்னவென்றே தெரியாமல், ஆனால் ஒரே நாளில் வேலைக்குச் சேர்ந்துவிட்ட ஒரு தகுதியே நெருக்கமான நண்பராக ஆவதற்கான தகுதியாகிவிடும். அப்படித்தான் மதுவிற்குக் கிருத்திகா.
கிருத்திகாவிடம் கெஞ்சிக் கூத்தாடி மதுவை அழைக்கச் சொல்லி ஸ்பீக்கரில் போடச் சொன்னேன்.

“என்ன மது இன்னும் ஒடம்பு சரி ஆகலையா?”66p5.jpg

மதுவின் குரல் கம்மியிருந்தது. எல்லாம் என்னால்தான்.

“பெட்டர் கிருத்திகா. த்ரோட்தான் சரி இல்ல, இன்ஃபெக்ட் ஆகிருச்சு, பட் நார்மல், அம்மா அப்பாகூட வெளில போயிட்டு இருக்கேன், சொல்லு”

நான் சைகையில் என்ன பேசவேண்டும் என்பதைச் சொன்னேன்.

“ஆமா, என்ன உன்னோட ஆளைத் திட்டிவிட்டியா? ரெண்டு நாளா ஆள் எக்ஸ்பெயரி ஆன நூடுல்ஸ் மாதிரி திரிஞ்சு போய் இருக்கான்”

“உங்கிட்ட வந்துட்டானா, இஸ் இட் ஆன் ஸ்பீக்கர்? இஸ் ஹி அரவுண்ட்?”

உடனே பதறி ஸ்பீக்கரை ஆஃப் செய்தவள்

“ச்சே, ஐம் இன் லேடிஸ் ட்ரெஸ்ஸிங் ரூம்டி, பை த வே, காலைல ரொம்ப டிஸ்டர்பா இருந்தான், நார்மலா ஏதாவது சிரிச்சுப் பேசிட்டுப் போவான், அதான்”

பேசிக்கொண்டே ஹேண்ட்ஸ் ஃப்ரியை அவள் ஒரு காதிலும் என் காதில் ஒன்றையும் வைத்தாள்.

மதுவின் குரலை உன்னிப்பாய்க் கேட்டேன்.

“இல்ல கிருத்திகா, அவன்னு  இல்ல, மோஸ்ட்லி எல்லா ஆம்பளைங்களுமே பொண்ணுங்கன்னா ரொம்ப ஈஸியா எல்லார்கிட்டயும் எல்லாத்தையும் பேசிருவோம்னு நினைக்கிறாங்க. யாருகிட்டயுமே பேசலன்னா பிரச்னை இல்ல, ஒருத்தன்கிட்ட பேசிட்டா, அவ எல்லார்கிட்டயும் பேசிருவா, போயிருவான்னு ஒரு ஃபீல், இரிட்டேட்டிங்கா இருக்கு, சில விஷயத்தை எக்ஸ்ப்ளைனே பண்ணக் கூடாதுன்னு நினைப்பேன். எங்க அம்மா எங்கிட்ட இவர்தான் உங்கப்பான்னு என்னிக்காவது எக்ஸ்ப்ளைன் பண்ணி இருக்காங்களா என்ன? பேசிக் ஃபீல் , பேசிக் ட்ரஸ்ட் இத எல்லாம் எக்ஸ்ப்ளைன் பண்ணித்தான் புரியவைக்கனும்னா, அப்பிடி ஒரு ரிலேசன்சிப்பே தேவை இல்லன்னு தோணுது, இப்பக் கூட அவன் கைல கெடச்சா நல்லா பளார்னு ஒரு அறை விடனும்னுதான் தோணுது. விடு, லீவ் தட்”

“ஹலோ, சோடா இருந்தா குடிச்சக்கப்பா, இப்பிடி மூச்சு விடாம பேசுற, ஆனா பாவம்ப்பா..”

அவர்கள் பேசிக்கொண்டே இருந்தார்கள். நான் ஹேண்ட்ஸ் ஃப்ரியை மெதுவாகக் கழட்டி கிருத்திகாவிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

மிகவும் காயப்படுத்திவிட்டேன் என்பது அதுவரை புரிந்திருக்கவில்லை. சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டு நாம் சிரித்து மழுப்பினாலும், அந்த வார்த்தைகள், ‘வீழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் சொல்லப்பட்டது’ என்பதை உணர்த்திவிடும் போல. வார்த்தைகள் மிகவும் விசுவாசமானவை. அவற்றின் நோக்கத்தையும் ஆளையும் அவை சென்றடைந்துவிடும். நான் கேட்ட வார்த்தையின் அமிலத்தன்மை மதுவின் மனதைப் பொசுக்கி விட்டது என்பதை நினைக்கும்போதே வேதனையாய் இருந்தது.

கிருத்திகாவை நிமிர்ந்து பார்க்கும் நிலையில்கூட என் மனம் இல்லை. வெளியே வந்துவிட்டேன்.

என் மனம் இப்போது ஒரு வேண்டாத வேலையைப் பார்த்தது. ஆம், சம்பந்தமில்லாமல் ஒரு பழைய நினைவை எங்கிருந்தோ தரதரவென இழுத்துக்கொண்டு வந்தது.

ஒருமுறை ஷாப்பிங் போகலாம் என முடிவெடுத்த நொடியில் கிளம்பிவிட்டோம். மது எப்போதும் அப்படித்தான்.

“பிஸியா? வீட்டுக்குப் போகணுமா சீக்கிரம்?”

“இல்லையே, ஏன்?”

“சரி பார்க்கிங்ல வெயிட் பண்ணு, யூனிஃபார்ம் மாத்திட்டு வர்றேன், டாப்ஸ் எடுக்கணும். போலாம்”

அவ்வளவுதான். கிளம்பிவிட்டோம்.

வளாகத்திற்குள் நுழைந்து, அவள் எப்போதும் எடுக்கும் பிராண்ட் டிவிசனுக்குள் நுழைந்தவள், அள்ள ஆரம்பித்தாள். நான் வழக்கம்போல ட்ரையல் ரூம் இருக்கும் திசையில் தேவுடு காத்துக்கொண்டிருந்தேன்.

வழக்கத்தைவிடவும் நேரம் அதிகமாகச் சற்று சந்தேகம் அடைந்து வளாகத்திற்குள் தேடினால், நான்கைந்து பெண்களைச் சேர்த்துக்கொண்டு, மேலாளர் என டை கட்டிக்கொண்டு நின்றவனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். ட்ரையல் ரூம் கண்ணாடியை ஆட்காட்டி விரலால் தொட்டுப் பார்த்திருக்கிறாள். இடைவெளி ஏதும் இல்லாமல், விரல் நுனியும் விரலின் பிம்ப முனையும் தொட்டுக்கொண்டிருக்கிறது. அப்படி இருந்தால், அந்தக் கண்ணாடியின் பின்புறம் இருந்து  ஆடை மாற்றுவதை பார்க்கலாம் எனும் சாத்தியம் இருக்கிறதாம். அதைத் தெரிந்து வைத்திருந்த மது, அங்கிருந்த மற்ற பெண்களையும் இணைத்துக்கொண்டு, விளக்கம் கேட்க, மேனேஜரின் பதில் திருப்தி அளிக்காததால், மற்ற பெண்கள் நேரம் ஆகிவிட்டது என விலகிவிட்டாலும், என்னை இழுத்துக்கொண்டு அருகாமையில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் அளித்து, அந்த மேனேஜரை அங்கு வரவழைத்து, கையோடு கண்ணாடியை மாற்றிவிடுவதாக அவன் எழுதிக் கொடுத்தவுடன் தான் அந்தப் பிரச்சனையை விட்டாள்.

“என்ன மது, அவன் சொன்ன மாதிரி, அங்க சுவர்தானே இருக்கு, கண்ணாடி வாங்கும்போது பார்க்காம வாங்கி இருக்கலாம்தானே, இந்த மாதிரி பெரிய ஷோ ரூம்ஸ்ல ஈஸியா அப்படிப் பண்ண மாட்டாங்க மது”

“அப்படி நம்பித்தான போறோம். அந்த நம்பிக்கைய நாசப்படுத்துனதுக்குத்தான் இந்த மாதிரி செஞ்சேன். இவனுங்க பண்றதால, யாரையும் எதையும் முழுசா நம்பமுடியாம போயிரக்கூடாது இல்ல.. அதான் இந்த லெஷன்” 

மது மிக மென்மையான குரலில்தான் அப்படிச் சொன்னாள். ஆனால் அந்த வார்த்தைகளில் அவ்வளவு  அழுத்தம் பொதிந்திருந்தது.

அப்படிப்பட்ட மதுவா இனி மனசு மாறப்போகிறாள்? எனக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கும் கிருத்திகாதான் பாவம். என்னால் அவளுக்கும் திட்டு விழுந்திருக்கும்.

விளையாட்டாக ஆரம்பித்த சண்டை உண்மையிலேயே முறிவுக்கு வந்ததுபோல் தோன்றத் துவங்கியது. நான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவள் டி.பி சட்டென மறைந்து போனது. ஆம், பிளாக் செய்துவிட்டிருந்தாள். அதுவரை அடக்கி வைத்திருந்த அத்தனை உணர்வையும் சேர்ப்பித்து அழைத்தேன். முதல் ரிங் போவதற்குள்ளாகவே டிஸ்கனெக்ட் செய்தாள்.

கழிவிரக்கம் கொஞ்சம் கண்ணீரைக் கூட்டி வந்தது. அப்பாவிடம் இருந்து போன், உடனே வீட்டிற்கு வரச்சொல்லி. சில நாட்கள் இப்படித்தான் ஆகும். எல்லா கெட்டவையும் ஒரே நாளில் நடந்துவிடும். ‘அப்படியான நாள்’ என நினைத்துக்கொண்டே வீட்டை அடைந்தேன்.

உள்ளே,

மது, குடும்ப சகிதம் அமர்ந்திருந்தாள்.

அப்பா என்னிடம்,

“ஏண்டா எப்பப் பாரு சண்ட போடுறியாமே, நேத்து நைட் வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம் உம் மேல ஆத்திரம் வந்து ஓங்கி ஒரு அறை விடனும்னு நினைச்சாளாம், அப்படி நெனச்ச உடனே அடிக்கணும்னா கல்யாணம் பண்ணிக்கிறதுதான் ஒரே வழின்னு முடிவு பண்ணிட்டாளாம்”
அப்பா சொல்லச் சொல்ல,மதுவைப் பார்த்து சிரித்தேன், கண்ணில் நீர் வர.

வாட்ஸ்-அப்பில் கிருத்திகா நிறைய பூக்கள் மற்றும் வாயைப் பொத்திக்கொண்டிரு எனும் எமோஜியையும் அனுப்பி வாழ்த்தி இருந்தாள்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கற்பனைக் கதை தானே அண்ணை?!
    • நல்லாயிருக்கு....கந்தையர்  😁 👍🏼 இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜேர்மனியர்களுக்கு  இருந்த ஒரு சட்டம் தான் பக்கது ஊர்களுக்கு போகமுடியாது.இடம்பெயர முடியாது. காரணம் பாதிப்பில்லாத இடங்களை நோக்கி மக்கள் இடம் பெயர்ந்ததினால்  அழிந்த இடங்களை மீண்டும் புனரமைக்க முடியாது.  இதற்காக அந்தந்த இடத்து மக்களை அந்த இடத்திலையே அமர வைத்து நாட்டை முன்னேற்றினார்கள். அதே சட்டத்தை  பின்னர் அகதிகளுக்கும் கொண்டு வந்தார்கள். காரணம் வரும் அகதிகள் எல்லோரும் பெரிய பெரிய நகரங்களை நோக்கியே சென்றார்கள். அதனை கட்டுப்படுத்தவே  எந்த நகரத்தில் வந்து இறங்குகின்றீர்களோ அந்த இடத்தில் தங்க வைத்து  வெவ்வேறு ஊர்களுக்கு பிரித்து பிரித்து அனுப்பினார்கள். ஜெர்மனியில்  அகதிகள் விடயத்தில் ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில்  அகதிகளை ஒரே நகரத்தில் குவிக்காமல்  நாடு முழுவதும் குக்கிராமங்கள் ஈறாக எல்லா இடத்திலும் வீடுகளை கொடுத்து தங்க விட்டார்கள்
    • முந்தி ஒரு திரியிலை காம்பிலை பெட்டிச்சாப்பாடு பற்றி கதைக்கேக்கை எனக்கு அப்பிடி ஒரு அனுபவமும் இல்லையெண்டது ரீலா கந்தையர்? 😎 அப்ப நீங்களும் ஜெயில் எல்லாம் போய் இருக்கிறியள். நீங்களும் தியாகி தான் 🤣
    • தேர்தல் காலத்து அரசியல் நாடகங்களை விளங்காத பாலகர்கள் வையகத்தில் இன்னும் உளர். 🤣
    • புதினால் ஆளப்படுகின்ற ரஷ்யாவை ஒரு பொறுப்புள்ள நாட்டின் தலைவராக வரப்போகின்றவர் எப்படி ஆதரிக்க முடியும் மேற்குலகநாடுகளில் வசதியாக  இருந்து விளையாடி கொண்டிருக்கின்ற வளர்ந்த  ஈழதமிழ் விளையாட்டு பிள்ளைகள் சிலராலே முடியும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.