Jump to content

கவிதைகள்


Recommended Posts

கவிதைகள்

இசை - ஓவியங்கள்: செந்தில்

 

46p1.jpg

சிறுமீ

சிறுமி ஆட்ட
குமரி அடக்க

சிறுமி ஆட்ட
குமரி அடக்க

சமீபத்தில் சமைந்த
ஒருத்தியின்
சமைப்புடன்
விளையாடிப் பார்க்கிறது
ஒரு தப்பட்டைக் குச்சி.


46p2.jpg

நீ ஒருக்களித்துச் சாய்ந்திருக்கும் குளக்கரை

உன் குளத்துப் பொற்றாமரையாக
ஒரு கணம் இருக்கக் கேட்டேன்
ஒரே ஒரு கணம்தான்.
அதுவும் இல்லையென்றான நாளில்தான்
குழாயடியின் நீண்ட வரிசையில்
எல்லா குடங்களையும்
இடித்துத் தள்ளிவிட்டு
``ஒரே ஒரு குடம்தானே கேட்டேன்''
என்று கத்தினேன்.

ஈருருளி ஓட்டுனன் - கவிதை

கார்த்திக் திலகன் - ஓவியம்: செந்தில்

 

51p1.jpg

ண்பர்களின் சீழ்க்கை ஒலிகளில்
களைகட்டுகிறது மகிழுந்துப் பயணம்
திடீரென்று குறுக்கே பாய்கிறது
ஓர் ஈருருளி
நீண்ட க்ரீச் ஒலியோடு
சாமர்த்தியமாக நிறுத்தினேன் மகிழுந்தை
தமிழின் மிகத் தொன்மையான
கெட்டவார்த்தைகளால்
என்னை வசவு பாடுகிறான் ஈருருளி ஓட்டுனன்
மகிழ்வோடு புன்னகைத்தேன்
என்னை வசவு பாடவாவது
அவன் உயிருடன் இருக்கிறானே என்ற நிம்மதி எனக்கு
பயத்தின் குளிரில் வெடவெடவென
நடுங்கியது மகிழுந்து
போய்வா என் இனிய நண்பனே
உன் ஈருருளியின் பின்னிருக்கையில்தான்
உட்கார்ந்து வந்திருக்கிறது
எங்கள் அதிர்ஷ்டம்
பெருவிரலையும் ஆள்காட்டிவிரலையும் இணைத்து
நாவுக்கு அடியில் வைத்து
இப்போது நானெழுப்பும் சீழ்க்கை ஒலி
உனக்கே உனக்காகத்தான்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • Replies 212
  • Created
  • Last Reply

காரம் நிமித்த இரவுகள் - கவிதை

ஸ்டாலின் சரவணன் - ஓவியம்: செந்தில்

 

52p1.jpg

ல்சர் புண்ணேறிய
பொத்தல் வயிறு குறித்து
அக்கறைப்பட்டு காது நீட்டும்
ஒரே ஓர் இரவு உணவக முதலாளியையும்
இன்னும் நான் கண்டடையவில்லை.

ஊரில் மல்லிகா சித்தி
அரைக்கும் தேங்காய் சட்னிக்கு
நாக்கை அறுத்துக்கொடுக்கும்
ருசியில் திளைத்தவன்.

இங்கு
ஏழே முக்காலுக்கு மேல்
உணவகம் செல்ல நேர்கையில்
வாளி அடித் தடவி
ஒரு இட்லி மட்டும்
லேசாக நனைகிறது.

`ஆம்லெட் ஒன்று’ என்றதும்
`பெப்பர் தூக்கலா?’ எனக் கேட்கும்
சிப்பந்தி சிறுவனிடம்
`பெப்பரே வேணாம்’ என்ற
பதில் கேட்டதும்
மேலும் கீழும் பார்க்கிறான்.

மாலைப் பொழுது
கடை வந்தடையும்
அத்தனை பறவைகளும்
கள்ளுண்டு வருவதாகவே எண்ணி
ஒரு கை காரம் தூக்கலான
சமையற்குறிப்புகளோடு
மிளகாய்களையே கண்களெனக்கொண்ட அவனை
தூரத்தில் பார்க்கையிலே
என் குலை நடுங்கும்.
மாதமோ கார்த்திகை என்பதால்
கடைமுதலாளி, மாஸ்டர் என
எல்லோரும் மாலை அணிந்து
நோன்புற்றிருக்கின்றனர்.

கடைசி மேசையிலிருந்து
மங்கலான குண்டு பல்பு
வெளிச்சத்தில்
கல்லாப்பெட்டியில் இருப்பவர் கழுத்தில் காற்றிலாடுவது
பெருங்குடல்போல் தெரிகிறது.

அதோ
அந்தச் சிப்பந்தி
கழுத்தில் அணிந்துள்ளான்
சிறுகுடலை.
பரோட்டா மாஸ்டர்
அழுத்திப் பிசைவது
என் கல்லீரலைத்தான்.

நெருங்கிவிட்டான்
வாளி நிறைய என் ரத்தத்தைச்
சுடச்சுடக் கொண்டுவரும்
ஒருவன்.

வந்ததும் கேட்கிறான்...
`குடல் ஒன்று
ஆர்டர் பண்ணட்டுமா சார்?’

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

புதிய காதலுக்கான எளிய தியானம்! - கவிதை

மனுஷ்ய புத்திரன் - ஓவியம்: செந்தில்

 

80p1.jpg

ங்களால் எப்போதோ நேசிக்கப்பட்ட ஒருவரின் திருமண அழைப்பிதழைக் காணும்போது நீங்கள் ஏன் நிலைகுலைய வேண்டும்?
 
எப்போதோ நேசித்த ஒருவரை
எப்போதோ மறந்துபோய்விட்டீர்கள்
எப்போதோ இட்ட முத்தங்கள்
எப்போதோ உலர்ந்துவிட்டன
எப்போதோ சொன்ன சொற்கள்
எப்போதோ அர்த்தமிழந்துவிட்டன.
 
ஆனால் நீங்கள் எப்போதோ நேசித்த
ஒருவரின் திருமண அழைப்பிதழை
காண நேர்கையில்
நஞ்சின் ஒரு துளியை நாவில் அறிகிறீர்கள்
கண்ணீரின் ஒரு துளியை
அவசரமாக மறைக்கிறீர்கள்
ஏதோ ஒருவரை நீங்கள்
அப்போதுதான் இழந்ததுபோல
ஒரு சின்ன இருட்டில் போய்
சில நிமிடங்கள் அமர்ந்துவிடுகிறீர்கள்
அவர்கள் உங்களுக்கு
எப்போதோ இல்லாமல்போனவர்கள் என்பது உங்களுக்கு மறந்துவிடுகிறது.
 
எப்போதோ நம்மை நேசித்தவர்கள்
ஏன் நமக்கு அவர்களது
திருமண அழைப்பிதழை அனுப்புகிறார்கள்?
அந்த நாளில்
நாம் அங்கே வர வேண்டும் என்பதற்காக அல்ல
அதை நம் கையில் வாங்கும்போது
நமது கண்களை அவர்கள்
மானசிகமாகக் காண விரும்புகிறார்கள்
அந்தக் கணத்தில் அவர்கள்
ஒரு நியாயம் கேட்கவோ
ஒரு மன்னிப்பைக் கோரவோ விரும்புகிறார்கள்
ஒன்றை உங்களுக்கு நிரூபித்துக்காட்ட
விரும்புகிறார்கள்
நீங்கள் ஒன்றுமே நடக்காததுபோல
வண்ணத்தாளில் சுற்றப்பட்ட
பரிசோடு போய் நின்றால்
அவர்கள் மனமுடைந்துபோய்விடுவார்கள்
என்னால் நேசிக்கப்பட்டவர்களின்
எந்தத் திருமணத்துக்கும் நான் போனதில்லை
ஆனால், அந்தத் திருமண அழைப்பிதழ்களை
நான் எப்போதும் என் பையிலேயே வைத்திருப்பேன்
அவை எனக்கு நானே சிகிச்சை அளித்துக்கொள்ளும் மூலிகைகள்
என்னை நானே கடந்துசெல்லும்
சிறிய கப்பல்கள்
மேலும் நான் ஒரு புதிய காதலைத் தொடங்கும்போது
என்னைச் சமநிலைப்படுத்தும்
எளிய தியானங்கள் அவை.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

சிதில மனம்... சில குறிப்புகள் - கவிதை

தர்மராஜ் பெரியசாமி, ஓவியம்: செந்தில்

 

1

மனம் ஒரு விசித்திர ஜந்து
சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறீர்கள்
அதை ஒருமுறை
தாவச்சொல்லிக் கேட்டுப்பாருங்கள்
லொள்ள்ள்ள்ள்ள் எனக் குரைக்கும்.

p74a.jpg

2

நங்நங்கெனக் குளியலறைக் கதவை
நொறுக்கிக்கொண்டிருக்கும் நண்பா
கசங்கிய மனதைக் கழற்றி
அலசிக்கொண்டிருக்கிறேன்
கொஞ்சம் பொறு
மாட்டிக்கொண்டு வந்துவிடுகிறேன்.

3

அழுவதற்கான காரணங்கள் யாவும்
வற்றித் தீர்ந்துபோன பிறகு
முறுவலிக்கத் தொடங்கியிருந்த மனதிடம்
`நீ சிரிக்கையில் உன் முகம்
கொஞ்சமும் காணச் சகியவில்லை’ எனச் சொல்லிச் சென்றீர்கள்
உங்களை நினைத்துச் சிரிக்கவும்
நீங்கள் சொன்னதை நினைத்து விசும்பவும்
இப்போது காரணங்களிருக்கின்றன.

4

நினைவுகள் சரிந்து விழுந்து
எழத் திராணியற்று
முனகிக்கொண்டிருந்த மனதிடம்
ஓர் இருகுழல் துப்பாக்கி
முடிச்சிடப்பட்ட தூக்குக்கயிறு
பளபளக்கும் குறுவாள்
விஷமென எழுதப்பட்டக் குப்பி
நான்கில் எது வேண்டுமெனக் கேட்டேன்
ஒரு கணம் யோசித்த அது
நான்கையும் வாங்கி வைத்துக்கொண்டது.

5

உன் ரகசியங்கள் அனைத்தும் அறிந்தவன்
நான் ஒருவனே என்றது மனம்
அதற்குப் பிறகுதான் இரவோடு இரவாக
யாருக்கும் தெரியாமல்
அதன் கழுத்தை நெரித்து இரக்கமின்றிக்
கொல்லவேண்டிவந்தது.

http://www.vikatan.com

12ஏ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதைகள்.... பகிர்வுக்கு நன்றி நவீனன் .....!  tw_blush:

Link to comment
Share on other sites

கதிர் கூறாய்வு - கவிதை

தய்.கந்தசாமி

 

p21.jpg

பிடுங்கி எறியப்பட்ட கதிரென
கிடந்தந்தச் சடலம்.

பாதித் திறந்துகிடந்த கண்களில்
பச்சையாய் உறைந்துகிடந்ததொரு கனவு.

கபாலத்தைத் திறக்க வெளியேறியது
வறண்டு வெடித்த
வயல்வெளியின் காங்கல்.

நெஞ்சுக்கூட்டினுள்ளே முளைத்துப் பிளந்த
இரண்டாய் வெடித்துக்கிடந்தது
இதயம்.

குருத்துப்புழு வாழ்ந்த
பருத்தியின் சூலறையாய்
வயிற்றுக்குழிக்குள்
முளைக்காத விதைகளென
பாதி செறிக்காத பருக்கைகள்.
வானையும் மண்ணையும்
சபித்துச் செத்த
அந்தக் கடைமடைக்காரனுக்கு
நீருக்கேங்கி நீண்ட
நெற்கதிரின் வேர்கள்போலவே இருந்தன
விரல்கள்.

http://www.vikatan.com

19ஏ..

Link to comment
Share on other sites

இரண்டே எறிதலை இழுத்துச் செல்லுதல்... - கவிதை

பச்சோந்தி, படம்: எம்.விஜயகுமார்

 

p48.jpg 

சீமை ஓடுகளில் செருகி
சிமென்ட் தரையில் குத்தி நிற்கிறது சூரியக் கம்பி.
அது நெற்றியில் குத்தி நடுமண்டைக்கு நகர்கையில்
பயண அசதியில் உறங்குகிறார் அப்பா.
புழுதி பூசிய கைகால்களோடு
வீடுவந்த மகள்
உறக்கத்தை உதறி அப்பாவை எழுப்புகிறாள்.
மல்லாக்கப் படுத்திருந்தவர்
வலப்பக்கமாக ஒருக்களிக்கையில்
வழிந்த வியர்வையை நாக்கால் வழித்து
மடக்மடக்கெனக் குடித்துக்கொள்கிறார்.
ஐந்து நாள்களாகத் திருகுக் குழாயடியில்
வெயில் நிரம்பிக்கிடக்கின்றன பிளாஸ்டிக் குடங்கள்.
அப்பாவின் இமைகளைத் திருகினாள்
கண்களுக்குள் தடக்தடக் ரயிலொன்று
தண்டவாள இருட்டை விரட்டியது.   
பின்பு உறக்கத்தை மடிக்கையில்
குப்புறக்கப் படுத்துக்கொள்கிறார்
முதுகெங்கும் கோரைப்பாயின் கோடுகள்.
உறக்கம் கலைந்ததும் அப்பாவின் கண்கள் தேடின 
மகளோ... விரல் சப்பியபடி
நீலப்போர்வையில் உறங்குகிறாள்.

சந்தைக்குச் சென்ற அப்பா
சிறுமலைப் பிரிவில் இரண்டு படி வேர்க்கடலை வாங்கிவந்தார்.
டிக்டாக்கைக் கடித்துத் தின்று
முந்திரிப்பருப்பில் பிறைநிலவைக் கொறித்துக்கொண்டிருந்தாள் மகள்.
பின்பு ஊருக்குக் கிளம்பிய அப்பாவிடம்
`ஏம்ப்பா என்னை விட்டுட்டுப் போற...
ஏம்ப்பா என்னை விட்டுட்டுப் போற?’ என்ற
கேள்வியில் அப்பாவைத் தொங்கவிடுகிறாள்.
`சரி... அப்பாவுக்கு டாட்டா சொல்லுமா...’ என்று
உடைந்த குரலில் அம்மா சொல்ல
மகளோ... உள்ளங்கையிலிருந்த
இரண்டு பச்சை வேர்க்கடலைகளில்
ஒன்றை அப்பாவின் நெஞ்சின்மீதும்
மற்றொன்றை வயிற்றின்மீதும் எறிந்தாள்.
முதல் எறிதலில் பொத்துக்கொண்ட மார்பையும் 
இரண்டாம் எறிதலில் பிய்த்துக்கொண்ட குடலையும் 
தரதரவென இழுத்துக்கொண்டு 
கடைசிப் பேருந்துக்கு ஓடுகிறார் அப்பா.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையை விடவும் கனதியாயிருக்கிறது புகைப்படம்.....!

படத்தை வைத்துக் கொண்டுதான் கவிதை எழுதி இருப்பார் போல அபாரம்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

துளி - கவிதை

சச்சின்

 

p81a.jpg

ச்சு முறிந்த இறுதி நாளில்
தான் வேறொரு கூடடையப்போவதாகச்
சொல்லி கதறியழும் உனக்கு
ஒரு துளி உப்புநீரைப் பரிசளிக்கிறேன்
அதை ஆவியாகாமல் சேமித்து வை
அது காயங்களுக்கு மருந்தாகும்
உன் வீட்டுச் செடிகளின் வேர்களுக்கு
மகிழ்ச்சி தரும் கணவனின் அன்பாகும்
குடல் செல்லும் உணவின் உமிழ்நீராகும்
கொட்டும் தேனீக்களின் கொடுக்கறுக்கும்
முத்தத்தின் வாசமாகும்
காவியக் கதைகள் சொல்லி
உயிர் வளர்க்கும்
மேலும் ஒருநாள்
உன் அடிவயிற்றில் பரவசமூட்டிய
அழகு சிசு அமுதருந்தும்போது
அதன் ஈறு பட்டு உன் உயிர் கூசும்
அப்போது... அப்போது
அதன் கண்களை உற்றுப்பார்
அதிலிருந்து ஒரு துளி உப்புநீர்
வழிந்துகொண்டிருக்கும்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

குழந்தை உறங்கும் வீடு! - கவிதை

 

கவிதை: விஷ்ணுபுரம் சரவணன், ஓவியம்: செந்தில்

 

சின்னஞ்சிறு குழந்தை
உறங்கும் வீடு
தன் சத்தங்களை உறிஞ்சிக்கொள்கிறது.

கொதிக்கும் எண்ணெயில் விழுந்தும்
மெள்ள சோம்பல் முறிக்கின்றன
கடுகுகள்.

p46a.jpg

புடைவையால் மூடி
மிக்ஸியின் சத்தத்தைக்
குறைக்க முடியுமென நம்புகிறாள் அம்மா.

பாக்கிட்டியைத் தவிர்த்து
கொட்டைப்பாக்கை
வாயில் அதக்கி
ஊறவைக்கிறாள் பாட்டி.

மெட்டிவிரல்களைத் தூக்கியபடி
நடக்கப் பழகிவிட்டாள் அக்கா.

குளவிகள்
வழி மாற்றிச் செல்கின்றன

வியர்த்து
நெகிழ்வாகின்றன அப்பளங்கள்.

குரலெழுப்பாமல்
பால் வீச்சம் வீசி
கன்றை அழைக்கிறது பசு.

கூடம் கடந்து
பின்வாசல் தாண்டி
கொல்லைக் கடைசியில் நிற்கும்
தாயின் விக்கலொலிக்கு
விழிகளைத் திறந்துபார்க்கிறது
குழந்தை.

http://www.vikatan.com

26ஏ

Link to comment
Share on other sites

ஒரு அமரர் மீண்டும் அமரராகிறார்!

கவிதை: ஜெ.பிரான்சிஸ் கிருபா

 

72p1.jpg

ச்சிவெயிலில் நகரத்தின் தார்ச்சாலை
அப்பளமாக பொரிந்துகொண்டிருந்த
வேளையில்
சிக்னலில் எரிந்த சிவப்பு விளக்குக்காக
சாலையில் நின்றிருந்த அமரர் ஊர்தியில்
மயானம் நோக்கிப் பயணப்பட்டிருந்த
அமரர்
படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தபடி
ஆசுவாசமாய்
சுற்றும்முற்றும் தலையைச் சுழற்றி
ஒரு மேற்பார்வை மேற்கொண்டுவிட்டு
என்னைக் கண்டதும்
மென்மையாகப் புன்னகைத்தார்.

பதிலுக்கு நானும் அதிர்ச்சியோடு
புன்னகைப்பதா வேண்டாமா என்ற
குழப்பத்தில்
பார்வையைச் சட்டென
வேறுபக்கமாகத் திருப்பிக்கொண்டேன்.

பாராமுகம் காட்டியபடியே இவர்
யாராக இருக்குமென்று
யோசிக்கலானேன்.

ஒரு சாயலில்
காலையில் தொலைக்காட்சிப்பெட்டியில்
பன்னிரண்டு ராசிகளுக்கும்
அருள் பொங்கும் முகம் மலர
அமர்த்தலான சிரிப்போடு
பலன்கள் சொன்ன ஜோசியரின்
பட்டையணிந்த முகம் போலிருந்தது.

மற்றொரு சாயலில்
சில வருடங்களுக்கு முன்பு
ஒரு ரயில் பயணத்தில்
எதிர் இருக்கையில் அமர்ந்தபடி
இருநூறு கிலோமீட்டர் நீளத்துக்கு
அறுநூறு கிலோமீட்டர் வேகத்தில்
இடைவிடாமல் அரசியல் பேசி
நான் கொலைகாரனாய் மாறவிருந்த
ஸ்டேஷனுக்கு முந்திய ஸ்டேஷனில்
இறங்கிப்போனவரைப் போலுமிருந்தார்.
இன்னொரு கோணத்தில்
இயன்றவரை இயந்து
முடிந்த அளவு பணிந்து
குடும்பம் நடத்தியும்
துணிந்துபோய் குடும்ப நல கோர்ட்டில்
விவாகரத்து வேண்டி நின்ற
என் மனைவியின் தரப்பில் ஆஜராகி
வாதாடியபடியே நீதிபதியைக்
கோமாளியாக மாற்றிய
வழக்கறிஞரின் முகவெட்டும்
ஒத்துப்போனது.

இவர்களில் ஒருவர்தானா என்று
உறுதிசெய்யும்பொருட்டு மனதை
திடப்படுத்திக்கொண்டு
திரும்பிப் பார்த்தபோது
மஞ்சள் விளக்கு அணைந்தது
பச்சை விளக்கு எரிந்ததும்
படுக்கையில் மீண்டும்
படுத்துக்கொண்டார் அமரர்!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

நம்மைப்போல்...

 

கவிதை: கே.ஸ்டாலின் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

 

79p1.jpg

ற்றைக்கு முன்தான்
உனது சாயலில்
எனையொருத்திக் கடந்தாள்.
எஞ்சிய எனது பயணத்தின்
வெளியெங்கும்
நிரம்பியது நின் நினைவு.

விடிந்த பொழுதின்
தொடு வானத்தில்
மேகங்களிடையே பிறையென
மிதந்துகொண்டிருப்பது
அழுக்கு நீங்கிய
உன் பெருவிரல் நகம்.

உறைந்த தார்ச்சாலையில்
காலைச்சூரியனின்
கரங்கள் பட்டு மின்னும்
கண்ணாடித்துண்டு
அவ்வப்போது
தோன்றி மறையும் உனது
தெற்றுப்பல்.

உதிர்ந்த காட்டுப்பூக்கள்
மணமெனப் பரப்புவது
உயிர்வரை ஊடுறுவும்
உன் தேகத்தின் வாசனை.

வழிப்போக்கர்களை
ஆதுரமாய்த் தழுவிக்கொள்ளும்
அடர் மரத்தின் பெருநிழலென்பது
என்றைக்கும் வற்றாத உனதன்பு.

கடந்து சென்றது
நிச்சயம் நீயாகவே இருப்பின்
எதிர்திசையில்
எனது சாயலில் நீயும்
எனைக் கண்டிருக்கலாம்
உனது வெளியெங்கும்
நினைவுகளால் நான் நிரம்ப
இன்று நாம் பயணித்தது
திறந்துகொண்ட இறந்தகாலப்
பாதையொன்றின் மீதெனலாம்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

வறண்ட தொண்டையிலிருந்து ஓர் ஒலி - கவிதை

கார்த்திக் முருகானந்தம், ஓவியம்: ஹாசிப்கான்

 

ருதமும் நெய்தலும் மணந்ததுபோல்
எங்கள் வயல்கள் கடலென மாறியிருந்தன.
வாய்க்கால் வழியோடும் மீன்களுக்கும் நண்டுகளுக்கும்
வயல்களில் சிச்சிறு வீடுகள் இருந்தன.

எங்கள் நிலங்களின் அறம்
அப்போது பச்சையாயிருந்தது.
சிறு குச்சிக்கொண்டு கீறினால்கூட
மண்ணின் ஈரம் ரத்தம்போல் சொதசொதக்கும்.

p42a.jpg

எங்கள் மாடுகள் பசியென்னும்
வார்த்தையைப் பழகியிருக்கவில்லை.
கலப்பையில் ஒட்டிய மண்
வெயிலில் உதிர்ந்ததில்லை.
விசிறிய விதைகளை
நிலங்கள் விழுங்கியதில்லை.
திறந்தவெளி கர்ப்பப்பைபோல்
நெற்குழந்தைகளைச் சுமந்திருந்தன.
அறுவடை என்பது
தொப்புள்கொடியறுத்தலென நம்பியிருந்தோம்.
ஏர்கள் எங்களை ஏய்த்ததில்லை.

நெகிழியில் தொடங்கி அரிசியில் வந்துநிற்கும்
தொழில்நுட்ப அரசியலில்தான்
நாங்கள் தொலைந்துவிட்டோம்.

மனித ஈரம் வற்ற வற்ற
மண்ணின் ஈரமும் வற்றிப்போயிற்று.
எங்கள் அம்மணங்கள் பார்த்து
நாடு சிரித்துக்கொண்டிருக்கிறது.

எங்கள் கலப்பைகளைக்
கறையான்கள் தங்கள் வயிற்றில்
செரித்துக்கொண்டிருக்கின்றன.

http://www.vikatan.com

26ஏ

Link to comment
Share on other sites

குறுக்குசால் - கவிதை

கவிதை: ஆதவன் தீட்சண்யா, படம்: எம்.விஜயகுமார்

 

நீங்களாகவே உங்கள் கோவணத்தை
உருவியெறிந்ததன் மூலம்
கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததோடு
கஜானாவிற்கு வருமான இழப்பையும் ஏற்படுத்தியதற்காக
உங்கள்மீது கடுங்கோபத்திலிருக்கிறது அரசாங்கம்

p99a.jpg

உல்லாசம் பீறிடும் கேளிக்கைக்கான ஆவலில்
தன் பரிவாரத்தோடு
உப்பரிகை மாடத்திலிருந்து
மைதானத்தைப் பார்வையிடும் மன்னர்பிரானுக்கு
துயரங்களும் குமுறல்களுமான மன்றாடுதலை
உயிருருகச் சொல்வதற்கு ஒத்திகைப் பார்ப்பதன் மூலம்
மற்றுமொரு குற்றத்தையும் இழைத்தவராகிவிடாதீர்கள்

தின்பதற்கு எலியும் குடிப்பதற்கு மூத்திரமும்
தட்டுப்பாடின்றி கிடைக்கும் இத்தேசத்துக்கு
விசுவாசம் காட்டும் வாய்ப்புகளை
வேண்டுமென்றே தவறவிடுகிற நீங்கள்
விளைநிலம் வெள்ளாமை என்று உச்சரித்து
தேசவிரோதத்தின் அடர்த்தியை ஏன் கூட்டுகிறீர்கள்

பிடில் வாசித்துக்கொண்டிருப்பதில்
மன்னரோடு
மக்களும் போட்டியிட்டுவரும் நாட்டில்
சூழும் இக்கொடுநெருப்பை அணைக்க
யாரும் வரப்போவதில்லை
பொசுக்கும் சூட்டுக்குள் சிக்கித் தவிப்போரே
சொந்தக்காலில் தப்பி வாருங்கள்

கிளம்பிப்போன தடம் மறந்துப்போவதற்குள்
சொந்த ஊர் திரும்புங்கள்
பாளம்பாளமாய் வெடித்துக்கிடக்கும் இந்தப் பாழ்நிலத்தில்
பட்டொளி வீசி பறக்கும்படியாய் நட்டுவையுங்கள்
நம் தேசியக்கொடியை
ஜப்தி செய்ய வருவோரின் கழுத்தை இறுக்குவதற்காவது
அது தேவைப்படும்.

 

http://www.vikatan.com/

3m

Link to comment
Share on other sites

மழைப்பாடல் - கவிதை

கவிதை: அய்யப்பமாதவன்

 

p74a.jpg

கொடும் வெம்மையில் நகரத்தின் ஒளிச்சிதறல்கள்
எரிக்கும் ஒளிக்கீற்றென மாற்றிவிடும் போலிருந்தது
பசுமையை மரங்களிலிருந்து கருணை துளியுமின்றி
எடுத்துப்போயிருந்தது ஆகாயச் சுடர்
நிலமெங்கும் சுனைகளை பாலைவன வடிவிற்கு
செய்திருந்தது கோடை
தாகமெடுத்த பறவைகள் சிதைந்துகிடந்த நதிகளில்
செத்த மீன்களிடையே நின்றிருந்தன
சூரியன் நிரம்பிய குடங்களுடன் நீர் தேடிய பெண்கள்
வறண்ட நாவுகளில் உழன்றுகொண்டிருந்தனர்
வயலெங்கும் முடிந்த அறுவடையின் மீந்த சருகுகள்
மழைக்கான பாடலைப் பாடுவதுபோலிருந்தது
ஈரமற்ற வெளியில் பிளந்திருந்த மண் பரப்பில்
நெற்பயிர்களின் கனவுகள் ஆழப் புதைந்திருந்தன
கட்டடங்கள் முளைத்த வெளியெங்கும் இறந்துவிட்ட
மரவுடல்கள் தழைக்க வழியற்றிருந்தன
தருக்களைக் கொன்றுவிட்டு கருமுகில்கள் திரளுமெனக்
காத்திருக்கிறது பைத்தியக்காரப் பேருலகு.

http://www.vikatan.com

3m

Link to comment
Share on other sites

நீரும் நீர்சார்ந்த இடமும்! - கவிதை

முத்துக்குமார் இருளப்பன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

 

84p1.jpg

டவர் காது திருகினால்
சூடான தண்ணீரும்
பெண்டிர் காது திருகினால்
குளிர்ந்த தண்ணீரும் தரும்
அதிசயத் தெருக்குழாய் அது

தாகம் தீர்க்க வந்த காக்கைக்கு
துள்ளலாக உதட்டு முத்தம் கொடுக்கிறது

நீண்டு செல்லும் குடங்களின் வரிசையில் புதியதாகத் தென்பட்ட
தண்ணீர்க் கேன்களைக் கருதி
பெண்டிர் இடுப்பு குறித்தான
கவலையில் மூழ்குகிறது

குடத்துக்கும் கேனுக்குமான
கொள்ளளவுக்காக
செல்லம்மா கிழவிக்கும் லதா சித்திக்குமான தலைமுடிச் சண்டையை WWE ஆட்டம் போல ரசிக்கிறது.

உபரிநீர் வழித்தடத்தை
துண்டுஓடு கொண்டு முருங்கைக்கு மடை மாற்றியத்தில் பெருமிதம் கொள்கிறது

மணல் திருடர்களின் ராஜங்கத்தில்
எம்-சாண்ட் கொழுக்கட்டை தின்று
லிட்டருக்குப் பத்து ரூபாய் கொடுக்க அர்த்தமாகிறது

சமீபத்திய காது திருகுதலில்
வந்த பெருமூச்சில்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை பகிர்வுகளுக்கு நன்றி 

Link to comment
Share on other sites

யானை 2.0 - கவிதை

 
 

ஆத்மார்த்தி - ஓவியம்: செந்தில்

 

96p1.jpg

நெடுஞ்சாலையில்
ஒரு யானை மெதுவாக ஊர்ந்து வந்தது.
அதன் மேல் பாகன் உருவில்
ஒரு வைக்கோல் பொம்மை இருந்தது.
பொம்மையைப் பாகன் என்றே யானை நம்பிற்று.
அதற்குப் புரிகிறாற்போல அது பாகனல்ல பொம்மை என
யாராலும் அதனிடம் சொல்ல முடியவில்லை.
யானையின் உடல்மீது அவ்வப்போது
பொம்மைக் கரங்களோடு பிணைத்திருக்கும் அங்குசம் உரசுமாறு ஏற்பாடாகியிருந்தது.
அந்த நெடிய சாலையில் சந்திக்கிற ஒவ்வொருவர் முன்பும் நின்று துதிக்கையை நீட்டிக் காசு கேட்டது.
காசை என்ன செய்கிறது என்று அதைத் தருபவர் ஆவலாதியில் உற்று நோக்கினர்.
பொம்மையின் வலதுகரத்திற்குப் பதிலாக ஒரு எலக்ட்ரானிக் உண்டியல் பொருத்தப்பட்டிருந்தது.
காசு பத்திரமாக அதனுள் சேர்ப்பிக்கப்பட்டது.
யானை ஆசி வழங்கிவிட்டு அடுத்த இடம் நோக்கி நகர்ந்தது.
`இதென்ன நியாயம்’ எனக் கேட்ட பக்தரிடம்
இப்படிச் சொன்னதாம் அசரீரிக் கடவுள்
“யானை என்று தன்னை அறியாத யானைக்குப் போதும் போதும்
வைக்கோல் பாகனும் முதுகில் உரசும் அங்குசமும்.”

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

மயக்கத்தின் ஆலோலம் - கவிதை

கவிதை: வெய்யில்

 

நீ நெற்றியில் இட்டிருக்கும்
வெண்புள்ளி - அது
ஒரு மானினுடையது, சினையாயிருக்கிறது
அதன் வயிற்று சிறு ரத்தத் துண்டம் நான்
புல்லின் நறுஇதழ்கள் நீ

p62a.jpg

கீழ் இமையில் நீ வளைத்திருக்கும்
கருமை
முரட்டுப் பன்றியின் வண்ணம்
அதன் நெஞ்சில் பாய்ந்திருக்கும் முள் நான்
சுற்றிலும் உன் ஞாபகத்தின் சீழ்

உன் நாசியின் சிறு பள்ளத்தில் குந்தியிருக்கும்
கல்லின் நீலம் - அது
நூற்றாண்டு ஆமையொன்றின் கனவாலானது
தொல்மீனின் எலும்புக்கூட்டுள் பூத்த
கடற்தாமரை நான் - அதைச்
சிதைத்து நடனமிடும் கொடுங்கயலின் வால் நீ

தலைசுற்றிக் கவிழ்ந்த அரளிப்பூவென
உன் இடுப்புப் பாவாடையின் பித்த மஞ்சள்
இன்னும் பிறக்காத
பிரபஞ்சத்தின் வானத்துக்கு உரியது - அதில்
இதய வடிவில் மிதந்து கனலும் எரிகற்கள் நான்
விழுங்கக் காத்திருக்கும் கருந்துளைகள்
என் உன் காமம்

உன் உதட்டுக்கு எழுதிய சிவப்பு
கருணை பெருகும் ஆந்தையின் செங்கண்கள்
கொடுங்கோலரசின் பலிபீட வண்ணம்
நானிப்போது
காட்டில் அழுகும் மிருக வாடை, தண்ணென்ற மழை
பிணந்தின்னிப் புள் உன் ப்ரியம்
தாபமோ சக்கரவாகம்

நீண்ட நம் கலவிப்பொழுதுகளின் கண்ணீரில் நீந்தி
முடிவற்ற உன் அடிவானத்துக்குத் துடுப்பு வலிக்கிறேன்
இது மயக்கத்தில் யாரோ பாடும் ஆலோலம்

ஆழியே.. அடிவானே... ஆலோலமே...

http://www.vikatan.com

10m

Link to comment
Share on other sites

வெயில் - கவிதை

கவிதை: இயற்கைசிவம், படம்: எம்.விஜயகுமார்

 

1.
மரத்தினடியில் முளைத்து
சாயங்காலம் வரையிலும்
சிமிட்டிக்கொண்டிருக்கின்றன
வெயில் எழுப்பிய
நிலத்தின் கண்கள்.

2.
இலைகள் றெக்கைகள்
ஒவ்வொன்றினடியிலும்
ஓடிவந்து பதுங்கிக்கொண்டது நிழல்.
தற்போது
மரத்தை வட்டமிட்டுக்கொண்டிருக்கிறது
வெயில்.

p96a.jpg

3.
ஆடி
அசைந்து
மிதந்து
பூமி சேர்ந்து
அத்தனையழகாய்
மரணத்தை வாழ்கிறது
சருகொன்று.

4.
குறுக்கும் நெடுக்குமாகப் பறந்து
வெயிலைப் பரிகசிக்கிறது
ஒரு குயிலிருள்
ஒரு காகயிருள்
ஒரு ரெட்டைவாலிருள்.

5.
மிகுந்த கணத்துடன்
பின்தொடரவேண்டியிருக்கிறது வெயிலுக்கு
ஒரு மூன்று சக்கர வண்டியின் பின்னே,
கைவிடப்பட்ட ஒரு முதியவளின் பின்னே,
சிக்னலில் சிவப்பு விளக்குக்காகக் காத்திருக்கும்
கால்களின் பின்னே.

6.
அப்படி ஓர் அடர்த்தியாய்ப்
பொழிந்த வெயிலை
அலைந்து திரிந்து சேகரித்து
அடுப்பினுள் மூட்டிய விறகில்
ஊதிவிடும் அம்மாவின் முத்தம்
ஒருபோதும்
காந்தியதில்லை எங்களுக்கு.

http://www.vikatan.com

10m

Link to comment
Share on other sites

 

கைவிடுதல்
6.jpg
உன்னைக் கைவிட வேண்டுமென்றால்
உன்னைப் பற்றிய இல்லாத ஓர் அவதூறை
நம்பியாக வேண்டும்
உன் தரப்பு நியாயத்தை சகட்டுமேனிக்கு
ஏளனப்படுத்த வேண்டும்
இன்னும் கீழ்த்தரமாய் இறங்கி
சில அத்தியாயங்கள் படைக்க வேண்டும்
என் மீதான நம்பகத்தன்மையை
உன்னிடமிருந்து வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்
உன்னைக் கைவிடுதல் என்பது
அத்தனை எளிதான ஒன்றல்ல
ஆயினும் நான் உன்னிடமும்
நீ என்னிடமும்
மாயையைப் போலாகும் வரை விடுவதாயில்லை
கைவிடுதல் எனும் ஓர் அத்தியாயத்தை.

www.kungumam.co.

Link to comment
Share on other sites

மன இரைச்சல் - கவிதை

கவிதை: ராகவ்.மகேஷ், படம்: எம்.விஜயகுமார்

 

மூன்றாம் எண் நடைமேடையில்
குழந்தை இடுப்பில் வைத்து கனத்த பையைத்
தூக்காமல் தூக்கிச் செல்லும்
அவளைத் தெரிகிறதா?

p81a.jpg

அலைபேசித் தொடுதிரையைப்
பயத்தோடு பார்த்து பவ்யமாகப் பதிலளித்து
மௌனம் சுமக்கிறாள்

விடுமுறை வெயிலில் வியர்வைப் பிசுக்கோடு
அடம் செய்யும் குழந்தையை அடித்துவிடாமல்
பொறுமை பூக்கிறாள்

அம்மாவின் தயிர்சாதப் பொட்டலம்
வராத பசியை வரவழைத்துக்கொண்டிருக்க
பிஸ்கட் பாக்கெட் பிரித்து
குழந்தைக்கு நீட்டுகிறாள்

சோழன் விரைவு வண்டி
மூன்றாவது பிளாட்பாரத்தினுள் நுழைவதாக வரும் 
பெண்குரலை கவனத்தில் கொள்கிறாள்

ஆயுட்கால அவஸ்தையோடு 
மாதாந்தர அவஸ்தையும் சேர்ந்துகொள்ள
முன்பதிவற்ற பெட்டியைத் தேடியபடி நகர்கிறாள்

அவளது ஆழ்மனதின் இரைச்சலை
ரயில் பெரும் சத்தமாக மொழிபெயர்த்தபடி
வந்து நிற்கிறது!

http://www.vikatan.com

10m

Link to comment
Share on other sites

காந்தியம் - கவிதை

கவிதை: இசை

ஞ்சள் என்று சொல்லி விட முடியாதபடிக்கு
ஒரு வித மரக்கலரில்
இடையே கொஞ்சம் பச்சை வாங்கி
சிவந்த பொன்னிறத்தில்
கிறங்கடிக்கும் வாசனையுடன்
நடுமத்தியில் 
அளவானதான அழகான ஓட்டையோடு
நாவூறித் ததும்பச் செய்யும்....

p789a.jpg

உலகத்தை  வெல்வது கிடக்கட்டும்
முதலில்
இந்த உளுந்து வடையை வெல்

http://www.vikatan.com

17m

Link to comment
Share on other sites

காலத்தில்

5.jpg
பெயரிட்டழைத்து தலைகுனிந்து தேடிய பின்
நீ தோளுக்குமேலே உயர்ந்து நிற்பது,
ஆடையகத்தில் சிறுமியுடையைத் தேர்ந்த பின்
நீ என் ஆடையை அணிந்து சென்றது,
அம்மாவென்ற மழலைக்
குரலொன்றில் திரும்பியபின்
நீ கல்லூரிக்குச் சென்றிருப்பது,
குழந்தைப்பாடல் ஒலிக்கச் செய்தபின்
நீ எட் ஷீரனை விரும்பிக் கேட்பது,
பூனைக்குட்டியின் காணொளியைக்
காண அழைத்தபின்
நீ டிராகனுடன்
வேற்றுக்கிரகம் பயணித்திருப்பது,
இப்படியே கரடிபொம்மையை
பரிசளித்த பின்,
சாக்லேட்டை பகிர்ந்துகொள்ள
விரும்பிய பின்,
உறக்கத்தில் அணைத்துக்கொள்ள
துளாவிய பின்
என வெவ்வேறு சமயங்களில்
சற்றே தாமதமாகவேனும் நினைவு வருகிறது
சேயாய் நீ பிறந்த அதே நாளில்
தாயாய்ப் பிறந்த எனைவிட்டு
கால மழையில் நீ மட்டும் வளர்ந்திருப்பது
எத்தனை முயற்சித்தும் நினைவு வருகிறதில்லை
அது எந்தத் துளியில் நிகழ்ந்ததென்பது.

www.kungumam.co

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

அவ்வளவும் நாம் - கவிதை

 

மாரிசெல்வராஜ் - ஓவியம்: ஸ்யாம்

 

வ்வளவும் நாம்.
நான் யாரென்ற சிந்தனையில்
நானிருக்கும் போதெல்லாம்
அநேகமாக என் அப்பா
ஓர் ஆட்டுக்குட்டியோடுதான் விளையாடிக்கொண்டிருப்பார்
ஆட்டுக்குட்டியின் கேள்விகளை நான் கேட்பேன்
மேய்ப்பனின் பதில்களை அவர் சொல்வார்

அப்பா நாம் யார்
நாம் நொண்டிபெருமாளின் வாரிசுகள்
அப்பா அதற்குமுன் நாம் யார்
கிழவன் பரியேறும்பெருமாளின் வாரிசுகள்
அப்பா அதற்குமுன் நாம் யார்
சம்போரையன் ஐயரின் உழவர்கள்
அப்பா உழவனாவதற்கு முன் நாம் யாராக இருந்தோம்
உழவனாவதற்கு முன் நாம் நிலமாக இருந்தோம்
வயல் வரப்பு வாய்க்கால் பறவைக்கூட்டமெனவும் நாமே இருந்தோம்
காடாக இருந்த நினைவும் பல கனவுகளில் உண்டு
நதியாகக் கடல் வந்தடைந்த வழித்தடமும் பாடத்தில் உண்டு
மொத்தத்தில் நாம் எல்லோருக்கும் எல்லாமுமாக இருந்தோம்
போதுமா என் மகனே

80p1.jpg

இதுமட்டும்தானா அப்பா அப்படியெனில்
நாம் அரசனாக இருந்த நினைவில்லையா உனக்கு
வாள் வீரம் போர் மகுடம் கோபுரமென
செங்கோல் ஏந்தி நாம் வாழ்ந்த கதையில்லையா உன்னிடம்
அப்படியொரு கதை  நிச்சயமாய் இருந்திருக்கும்
மன்னித்துக்கொள் மகனே
பேராசைகளை பெருந்துரோகங்களை
ஆண்ட பெருமைகளை
அடக்கிய உயிர்களைச் சொல்லும் கதைகளை
நாம் நினைவில் வைத்துக்கொள்ளவே கூடாது மகனே
அப்படியெனில் அப்பா
நாம் அரசனாக இருந்தோமென்ற நினைவு உன் நெஞ்சை நிமிர்த்தவேயில்லையா
நிச்சயமாக இல்லை மகனே
நாம் எல்லாமுமாக இருந்தோமென்ற நினைவே என்னை
இந்த ஆட்டுக்குட்டியோடு விளையாடச் சொல்கிறது

சரி அப்பா
இந்த ஆட்டுக்குட்டிக்கு நாம் இப்போது யார்
எஜமானர்களாக இருக்கலாம்
தோல் வியாபாரிகளாக இருக்கலாம்
இறைச்சிக் கடைக்காரராக இருக்கலாம்
மேய்ப்பர்களாக இருக்கலாம்
சக வழிப்போக்கர்களாகவும் இருக்கலாம்
இன்னொரு ஆட்டுகுட்டியாகவும் இருக்கலாம்
ஆனால், சரியான பதில் நம்மிடத்தில் இல்லை மகனே
அது அந்த ஆட்டுகுட்டியின் கண்களில் இருக்கிறது
போதும் அப்பா இப்போது சொல்லுங்கள்
நான் யார்
நீ என் விதை
நீங்கள் இல்லாமல் நான் யார்
என் பயிர்களின் நிலம்
விளையாடாதீர்கள் அப்பா இன்னொருவருக்கு நாம் யார்
இன்னொருவருக்கு நாம் இன்னொருவர்
ஐயோ அப்பா
அவ்வளவுதானா நாம்
ஐயோ மகனே
அவ்வளவும் நாம்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.