Jump to content

‘நிலாவரை’ புதிர் அவிழ்ந்தது


Recommended Posts

‘நிலாவரை’ புதிர் அவிழ்ந்தது
 

குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருந்தது. அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராச்சியாளர்கள் பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால், முழுமையான முடிவுகளைப் பெறமுடியவில்லை.  

image_c6f428c977.jpg

அன்று, பிற்பகல் 2.30 மணி, 23 ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2016 ஆம் ஆண்டு. குடாநாட்டின் வெப்பநிலை 35 பாகை செல்ஸியஸைக் காட்டியது. ஆனால், குடாநாட்டில் மிகவும் ஆழமான பகுதியில், நீருக்கடியில் அதன் வெப்பறிலை 26 பாகை செல்சியஸ் எனப் பதிவாகியது.  

ஆம்! அன்றுதான் பல புதிர்களையும் இரகசியங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த நிலாவரைக் கிணற்றின் ஆழம் அறியப்பட்டது.   

இலங்கை கடற்படையின் சுழியோடிகள், ரோபோக்களின் உதவியுடன் நிலாவரைக் கிணற்றின் ஆழத்தை அறியும் வண்ணம், சகல நவீன பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றியவாறு கிணற்றுக்குள் இறங்கினார்கள்.   

கிணற்றுக்குள் 55.5 மீற்றர் (182 அடி) சென்றபோது, கீழ்மட்டம் தென்பட்டது. நன்றாக வளர்ந்த பனை அல்லது தென்னை மரம் சராசரியாக 90 அடி உயரம் வரை காணப்படும். அப்படிப் பார்த்தால், சராசியாக இரண்டு பனை அல்லது தென்னை மரங்களின் உயரம் கொண்டதாக இந்தக் கிணற்றின் ஆழம் காணப்படுகின்றது.   

கிணற்றின் அடிப்பாகத்தில் மூன்று மாட்டு வண்டிகள் காணப்படுகின்றன என்பது சுழியோடிகள் கொண்டுசென்று ரோபோக்கள் எடுத்த படங்களின் மூலம் தெரியவந்தது. ஒரு வண்டில் முற்றாகச் சிதைவடைந்த நிலையிலும் மற்றையவை மாட்டு வண்டிகள் என உருவத்தை அடையாளம் காணக்கூடியவாறும்  காணப்படுகிறது. இந்த மாட்டு வண்டிகள் கிணற்றுக்குள் எவ்வாறு வந்தன அல்லது விழுந்தன என்பது தொடர்பில் எதுவித தகவல்களும் கிடையாது. வண்டில்களின் நிலையை வைத்துப் பார்க்கும்போது, இந்தச் சம்பவம், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றிருக்கலாம் என அனுமானிக்க முடிகிறது.   

image_8e89f55073.jpg

ரோபோக்கள் செய்த ஆய்வில், கிணற்றின் ஆழமான இடங்களில் பல திசைகள் நோக்கி, குகைகள் போன்று பல சுரங்க வழிகள் காணப்படுகின்றன. இவற்றில் சில இடங்களில் வேகமானதும் சில இடங்களில் சாதாரணமானதுமான நீரோட்டங்கள் காணப்படுகின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.   

image_add400138e.jpg

நிலாவரைக் கிணற்றுக்குள் எலுமிச்சம்பழத்தைப் போட்டால், அதை சில மணிநேரத்தின் பின்னர், கீரிமலைத் தீர்த்தக் கேணியில் எடுக்கலாம் என சிறுவயதில் கேள்விப்பட்டதுண்டு. அதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதை ரோபோக்களின் ஆய்வுகள் நிரூபணம் செய்கின்றன. ஏனெனில், கிணற்றில் இருந்து, பல திசை நோக்கிச் செல்லும் சுரங்கப்பாதைகளின் ஊடான நீரோட்டங்கள் காணப்படுகின்றன. கீரிமலைக் கேணியின் தென்கீழ் மூலையில், ஒருவர் உள்ளே நுழைந்து செல்லக்கூடிய அளவுக்கு குகை ஒன்று காணப்படுவதை இப்பொழுதும் பார்க்கமுடியும். அதனூடாகவே கேணிக்கு நல்ல தண்ணீர் வருகின்றது. இந்தக் குகைக்கும் நிலாவரைக் கிணற்றில் ரோபோக்கள் உறுதிப்படுத்திய குகைக்கும் இடையிலான நீரோட்டத்தொடர்பு இருப்பதை உய்ந்தறிய முடிகிறது.

நிலாவரைக் கிணற்றுக்கு நேரடியான நிலத்தடி நீர் தொடர்பு இருப்பதனால் வரட்சின்போதும் மழைக்காலத்தின்போதும் நீர் மட்டம் குறைவதோ கூடுவதோ கிடையாது. 

இலங்கையின் வடபகுதியின் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைத்தோற்ற அமைப்பே நிலத்தடியில் காணப்படும் குகைகளுக்கான காரணமாகும். இதுகுறித்து பேராசிரியர் சிவச்சந்திரனின் ‘ நிலாவரைக் கிணறு ஜீவநதியா’ என்கிற தனது கட்டுரையில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார். 

image_eb89a9a434.jpg

‘யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட, மன்னாரிலிருந்து பரந்தன் முல்லைத்தீவை இணைக்கும் கோட்டுக்கு வடக்காக உள்ள பிரதேசங்கள் யாவும் மயோசின் காலம் என்று புவிச்சரிதவியலாளர்களால் வழங்கப்படுகின்றது. சுண்ணக்கற்பாறைகள் உருவான காலத்தில் இவை தோன்றியவையாகும். அக்காலத்தில் இப் பிரதேசங்கள் கடலிலிருந்து மேலுயர்த்தப்பட்டன. இதனாலேயேதான் யாழ்ப்பாணப் பகுதிகளில் கிணறு தோண்டும்போது, சங்கு, சிப்பி போன்ற கடல் வாழ் உயிரினங்களின் சுவடுகளைக் காணக்கூடியதாக உள்ளது.   

இக்கடல் உயிரினச்சுவடுகள் நீண்ட காலமாக இடம்பெற்ற அமுக்கத்தாலும் பௌதிக இரசாயன மாற்றங்களினாலும் சுண்ணப்பாறைகளாக உருமாற்றம் பெற்றன. சுண்ணப் பாறைகள் வன்னிப்பிரதேசத்தில் மிக ஆழத்திலும் யாழ்ப்பாணத்தின் வடகரைப்பகுதிகளில் குறிப்பாக பலாலி, தெல்லிப்பழை, காங்கேசன்துறைப் பகுதிகளில் மேற்பரப்பிலும் காணப்படுகின்றன. இப்பாறைப்படைக்கு மேல் மண் படிவுகள் சில அடி முதல் 30 அடி வரையான கன பரிமாணத்தில் படிந்துள்ளன. ஓர் அங்குல மண் படிவு உருவாவதற்கு குறைந்தது 100 வருடங்கள் செல்லும் என புவிச்சரிதவியலாளர்கள் கணிப்பிட்டுள்ளனர். 

ஒழுங்குமுறையற்று குடாநாட்டு மண் வளத்தை சுரண்டுவோர் இதைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.    

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுண்ணக்கற்பாறை அடிப்படைப் பாறையாக அமைந்திருப்பதனாலேயே இங்கு நாம் தரைக்குக்கீழ் இருந்து கிணறுகள் மூலம் நீரைப்பெற முடிகின்றது. இங்கு ஆதிகாலம் முதல் குடியிருப்புகள் தோன்றுவதற்கும் வரண்ட பிரதேசமாக இருப்பினும் நெருக்கமாக மக்கள் வாழ்வதற்கும் நீர் இறைப்பை நம்பிய விவசாய நடவடிக்கைகள் மேலோங்கியிருப்பதற்கும் இங்கு தரைக்கீழ் நீரை இலகுவில் பெறக்கூடியதாய் இருந்தமையே காரணமாகும்.  

புவிச்சரிதவியலாளரால் குடாநாட்டில் சுண்ணக்கற்பாறை தரையின் கீழ் நீரோடும் குகைகள் அடையானம் காணப்பட்டுள்ளன. மழையால் பெறப்படும் நீர், நிலத்துக்குள் ஊடுருவிச்சென்று, கடினமான அடித்தள சுண்ணக்கற்பாறைப் படைகளில் தங்கி நின்று, தரைக்கீழ் நீராகக் காணப்படுகின்றது. கிணறு தோண்டும் போது இத்தரைக்கீழ் நீரே ஊற்றாக கிணற்றுக்குள் வந்து தேங்குகின்றது.  

இவ்வாறான ஊற்றுக் கண்கள் போன்று, உள்ளே அமைந்துள்ள சிறு துளைகள், தொடர் துளைகள், வெடிப்புகள் என்பன நீண்ட காலமாக இடம்பெறும் இரசாயன அழிதலுக்கு உட்பட்டு, பெரிய குகைகளாக உருமாறி விடுகின்றன. இக்குகைகள் சில அடி முதல் பல மைல் நீளம் வரை ஒரே தொடராகத் தரைக்குக் கீழே அமைந்திருக்கின்றன.   

குகை மேலும்மேலும் அரிக்கப்பட, அதன் பரிமாணம் அதிகமாவதால் குகையின் மேற்பரப்பு இடிந்து வீழ்கின்றது. இவ்வாறு உருவான ஒரு குகைப்பள்ளமே நிலாவரைக்கிணறு. இவ்வாறு, மேற்பரப்பு இடிந்து வீழ்ந்ததால் உருவாகிய குகைப்பள்ளங்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பகுதிகளில் காணப்படுகின்றன.

குரும்பசிட்டி பேய்க் கிணறு, புன்னாலைக்கட்டுவன் குளக்கிணறு, அல்வாய் மாயக்கை குளம், கரவெட்டி குளக்கிணறு, ஊரணி வற்றாக்கிணறு, கீரிமலைக்கேணி, நல்லூர் யமுனா ஏரி, மானிப்பாய் இடிகுண்டு, ஊரெழுவில் பொக்கணை போன்றவையாகும்.’
நிலாவரைக் கிணற்றுக்குள் 18.3 மீற்றர் (60 அடி) வரையிலுமே நல்ல தண்ணீர் காணப்படுகின்றது. ஆழம் செல்லச்செல்ல நீரில் உப்புத்தன்மையின் செறிவு அதிகரித்துச் செல்வதாக ஏற்கெனவே நடத்திய பல ஆய்வுகளில் அறியவந்தது.

1965 இல் நீர்வள வடிகாலமைப்புச் சபையினர், நிலாவரைக் கிணற்றில் மேற்கொண்ட ஓர் ஆய்வின்படி, 10 மணித்தியாலங்களில் 30, 000 - 40, 000 கலன் நீர் அக்கிணற்றில் இருந்து இறைக்கப்பட்டது. இதற்கு மேலும், நீர் இறைக்கப்படின் உப்பு நீர் மேலோங்கி வருவது அவதானிக்கப்பட்டு அம்முயற்சி நிறுத்தப்பட்டது. இதற்காக, மட்டக்களப்பிலிருந்து நீராவி இயந்திரம்  தருவிக்கப்பட்டே, அந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

யாழ்ப்பாணக் குடாநாட்டின் தரைக்கீழ் நீர்வளம் உப்பு நீரின் மேல் மிதப்பதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. எனவே, நல்ல நீர் கிடைக்கும் கிணறுகளில் இருந்து அதிகளவு நீரை வெளியேற்றுவோமாயின் அவை உப்பு நீர்க்கிணறுகளாக மாறிவிடும் ஆபத்துக் காணப்படுகிறது. இன்று குடாநாட்டின் பலபகுதிகளில் இந்தநிலைமை உருவாகிவருகிறது.

பெரும்பாலும் மழைக்காலங்களில், குடாநாட்டில் தரைக்குக் கீழாக அமைந்துள்ள சுண்ணக்கற் குகைகள் மூலம், தரைக்கீழ் நீரின் பெரும்பகுதி வீணாகக் கடலைச் சென்றடையும் நிலை பல இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

குறிப்பாக, கெருடாவில், கீரிமலை போன்ற இடங்களைக் குறிப்பிடலாம். எனவே இவ்வாறான குகைகளின் உள்ளே அணைகளைக் கட்டி, அல்லது நன்னீர் தேக்கங்களை ஏற்படுத்தி, நிலத்தடி நீர் கடலினுள் செல்வதைத் தடைசெய்தல் வேண்டும். யாழ்ப்பாணக்குடாநாட்டின் வளமும் வாழ்வும் இத்தரைக்கீழ் நீர் வளத்தின் கொள்ளளவை அதிகரிப்பதிலேயே பெரிதும் தங்கியுள்ளது.

image_06fd67b5cd.jpg

கி. பி 1824 இல், சேர் எட்வேட்பான்ஸ் எனும் தேசாதிபதியின் கட்டளைப்படி, யாழ்ப்பாண உதவிக ஆளுநராக சேர் டைக் என்பவர் நியமிக்கப்பட்டார்.   

 யாழ்பாணத்தின் அபிவிருத்திக்காக தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்து, பல வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். இவரை, மக்கள் ‘யாழ்பாண ராசா’  என செல்லமாக அழைத்தார்களாம்.  டைக், பதவியேற்ற 1824 இல் அந்த வருடமே நிலாவரைக் கிணற்றை மையப்படுத்திய நீர்பாசனத் திட்டம் பற்றி அவர் திட்டம் வகுத்ததாக ஆங்கிலேயரின் யாழ்ப்பாண நிர்வாகக் குறிப்புகளில் காணக் கிடைக்கிறது. 

இன்றும் நிலாவரைக் கிணற்றுக்கு மேற்குப்புறமாக உள்ள சிறுப்பிட்டி, மேற்குப்புறமாக உள்ள அச்செழு, ஈவினை  கிராமங்கள் உட்பட அருகிலுள்ள நவகிரி, புத்தூர், கலைமதி ஆகிய கிராமங்களுக்கான விவசாய முயற்சிகளுக்கான நீர், நிலாவரைக் கிணற்றிலிருந்தே பெற்றுக்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.      

  1890 இல் நிலாவரையிலிருந்து யாழ்ப்பாண நகருக்குத் தண்ணீர் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பின்னர் இந்தத் திட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டமையால் அது கைவிடப்பட்டது. 

வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, ஜே/ 275 கிராமசேவகர் பிரிவுக்குள் நிலாவரைக்கிணறு அமைந்துள்ளது. யாழ்ப்பாண நகருக்கு வடக்கு திசையில் 16 கிலோமீற்றர் தொலைவில், அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராசா வீதி, புத்தூர் பருத்தித்துறை நெடுஞ்சாலை சந்திக்கும் சந்தியில் நிலாவரைக்கிணறு அமைந்துள்ளது. 

கிணறு அமைந்துள்ள பகுதி தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்குச் சொந்தமானதாகும். இதன் பராமரிப்பு பணிகளை வலிகாமம் கிழக்கு பிரதேச சபை மேற்கொள்கின்றது.  இருந்தபோதிலும், நிலாவரைக் கிணற்றின் நீர் வழங்கும் பணிகள், வாராவத்தை குடிநீர் விநியோகத்திட்டம் என்ற பெயரில் தேசிய வடிகாலமைப்பு, குடிநீர் அதிகார சபையால் மேற்கொள்ளப்படுகிறது. 

மருது, வேம்பு, வாகை போன்ற விருட்சங்கள் உயர்ந்து, வளர்ந்து சோலையாக நிழல் பரப்பி நிற்பதும் மனதுக்கு இனிமையான அமைதியான சூழலும் நிலாவரைக் கிணற்றின் அதிசயத்துக்கு அப்பால் மக்களை இந்த இடம் தன்பால் இழுக்கின்றது. 

2009 ஆம் ஆண்டு போர் ஓய்வுக்கு முன்னர், இந்தக் கிணற்றை பாடசாலை மாணவ மாணவியர் உட்பட, ஒருசில உள்ளூர் வாசிகள் வந்து பார்த்துச் செல்வார்கள். இவர்களை விட, வழிப்போக்கர்களும் விவசாயிகளும் இந்தச் சோலையில் இளைப்பாறிச் செல்வார்கள். 

போர் முடிவுற்ற பின்னர், தென்பகுதி சுற்றுலாப்பயணிகளும் புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களும் குடாநாட்டுக்கு வரும்போது, சென்று பார்க்கும், இளைப்பாறும் முக்கிய சுற்றுலா இடமாக    இப்போது  நிலாவரை கிணற்றை அண்டிய சுற்றாடல் மாறிவிட்டது.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதத்தில்  குடாநாட்டு பனை உட்பட்ட உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் குளிர்பானக் கடைகளும் இங்கு வியாபாரத்தில் ஈடுபடுகின்றார்கள். 

நிலாவரைக் கிணற்றுக்கு அருகில் சிவன் கோவில் ஒன்றும் காணப்படுகின்றது. இது மிகவும் புராதனமான சிவாலயமாகும். யாழ்ப்பாண வரலாற்றைக் கூறும் இலக்கிய நூலான தட்சண கைலாய புராணத்தில், இந்த சிவாலயம் குறித்த விவரங்கள் காணப்படுகின்றன. தட்சண கைலாய புராணத்தில் ‘நவசைலேஸ்வரம்’ எனக் குறிப்பிடப்படும் ஆலயம் நிலாவரையில் அமைந்துள்ள சிவன் ஆலயமாகத்தான் இருக்க வேண்டும் என்ற தற்துணிபு பல சமய, வரலாற்று அறிஞர்களிடம் காணப்படுகின்றது. 

நிலாவரை தொடர்பான கர்ணபரம்பரைக் கதையும் இராமாயணத்துடன் தொடர்புபட்டதாகக் காணப்படுகிறது. இராமன், சீதையை மீட்பதற்காக இராவணனுடன் போர் புரிவதற்கு, வானரப் படைகளுடன் இலங்கை வந்தபோது, வானரப்படைகளின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக தனது அம்பை ஊன்றி, நீர் எடுத்த இடமே இது என்று  அந்த கர்ண பரம்பரைக்கதை கூறுகிறது. 

எது எவ்வாறாயினும், நிலாவரைக் கிணறு, குடாநாட்டில் ஒரு பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட  வேண்டிய தொட்டுணரக் கூடிய மரபுரிமைச் சொத்தாகும். 
அது, இன்று பெற்றிருக்கும் பிரபல்யம், சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய தனித்துவம் போன்றவை காரணமாக இந்தப் பகுதி சுற்றுலாவுக்குரிய  வசதிவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, இங்கு வரும் மக்கள் சந்தோஷமாகத் தமது பொழுதைப்போக்கிச் செல்ல வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். 

தரமான உணவுவிடுதிகள், சிறுவர் பூங்கா, தங்கும் விடுதிகள் அத்துடன் பாதுகாப்பு போன்ற உல்லாசப் பயணிகள் எதிர்பார்க்கும் வசதிவாய்ப்புகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். 

அவ்வாறு திட்டங்கள் வகுத்துச் செயற்படுத்தப்படுமானால் இப்பகுதில் வேலைவாய்ப்பற்று இருக்கும் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிைடப்பதுடன் பொருளாதார முன்னேற்றத்துக்கான அடிப்படைகளும் உருவாக்கப்படுவதாக அமையும். இருக்கும் வளத்தை நிறைவாகவும் திறமையாகவும் பயன்படுத்தினால் முன்னேற்றமும் வளர்ச்சியும் சாத்தியமே.

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நிலாவரை-புதிர்-அவிழ்ந்தது/91-201818

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிணத்துக்கை வண்டில்  எப்பிடி வந்திருக்கும் எண்டதுதான் என்ரை முழுயோசினையும்.....:cool:

Link to comment
Share on other sites

நிலத்துக்கு அடியில் குகைகள் காண படுவது நல்லது இல்லை,ஏன் என்றால் மண் இலகுவாகும் போது நிலம் இடிந்த்து விழ சாத்தியம் உண்டு. இதனால் சாதாரண வீடுகள்  அப்படியே இடிந்த்து நிலத்த்துக்குள் விழும். இதை ஆங்கிலத்தில் sink hole என்று குறிப்பிடுவார்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிணத்துக்க புத்தர் சிலை ஒன்றும் இருக்கல்லையே.. இவங்கள் அவசர அவசரமா இறங்கேக்க நினைச்சம்.. புத்தர் சிலையை இரவோடு இரவா போட்டிட்டு.. பகலோடு பகலா தேடுறாங்களோன்னு. அப்புறம் அதை வைச்சே.. யாழ் குடா நாட்டை சிங்கள பெளத்தர்களது ஆக்கிடலாம். tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராமனும்....இராமாயணமும் ..எமது வாழ்வையும்...வளங்களையும் எப்போதும் தின்று கொண்டே இருந்தன....இருக்கின்றன...என்பதையும் இந்தப் பதிவு மூலம் அறிந்துகொள்ள முடிந்தது..!

அட...அம்பை ஊன்றித் தவளையைத் தான்...அவனால் கொல்ல முடிந்தது என நினைத்திருந்தேன்!

சுண்ணாம்புக் கல்லைக் கூட....அவனால் துளைக்க முடிந்திருக்கின்றது என்பது...உண்மையிலேயே ஆச்சரியம் தரக் கூடிய விடயம் தான்..!

ஆனால்...எதற்காக...நமது இனமான வாலியை...மறைந்திருந்து கொன்றான் என்பது தான்....இன்னும் புரியாத மர்மம்!

ஒரு வேளை....ராஜ தந்திரமாக இருக்குமோ.....என்னமோ...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கிணத்துக்கை வண்டில்  எப்பிடி வந்திருக்கும் எண்டதுதான் என்ரை முழுயோசினையும்.....:cool:

எனக்கு வண்டில்ல  பூட்டின மாடு என்னாச்சு எண்டு யோசனைtw_dizzy:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நவீனன் said:

இராமன், சீதையை மீட்பதற்காக இராவணனுடன் போர் புரிவதற்கு, வானரப் படைகளுடன் இலங்கை வந்தபோது, வானரப்படைகளின்

 

8 hours ago, புங்கையூரன் said:

 

ஆனால்...எதற்காக...நமது இனமான வாலியை...மறைந்திருந்து கொன்றான் என்பது தான்....இன்னும் புரியாத மர்மம்!

ஒரு வேளை....ராஜ தந்திரமாக இருக்குமோ.....என்னமோ...?

...மறைந்து இருந்து கொல்லுதல்.... அது ஒரு தொடர் கதை.

Link to comment
Share on other sites

13 hours ago, குமாரசாமி said:

கிணத்துக்கை வண்டில்  எப்பிடி வந்திருக்கும் எண்டதுதான் என்ரை முழுயோசினையும்.....:cool:

ஏழாலைக் கிணற்றைக் காவிச்செல்ல முயற்சி மேற்கொண்டதுபற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதுபோல நிலாவரைக் கிணற்றையும் காவிச்செல்ல கீழே துளை போட்டிருப்பார்கள். கிணற்றைக் காவிச்செல்ல வந்த வண்டிதான் உள்ளே இருக்கிறது. காவுவதற்குப் போடப்பட்ட அந்தத் துளைகளைத்தான் இன்று குகைகள் என்கிறார்கள். :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள கட்டுரை, இதனூடாக பல சந்தேகங்களுக்கு விடைகிடைத்த போதும் கூடவே மேலும் பல சந்தேகங்களை கிளப்பி உள்ளது.
புராணக்கதை கதைகளையும் இதிகாசங்களையும் ஆராட்ச்சிக்குள் கொண்டுவருவது பொருத்தமற்றதாகும் என்பது எனது கருத்து. 

Link to comment
Share on other sites

கோவில் இருந்தால் அங்கு ஒரு தீர்த்தக் கேணியும் இருக்கும். அப்படி நிலாவரையிலுள்ள கோவிலுக்காகக் கட்டப்பட்டதுதான் அந்தக் கேணி. அதற்குள் இடி வீழ்ந்து ஆழம் தெரியாது தூர்ந்து போனதுதான் நிலாவரைக் கேணி என்று அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.