Jump to content

தனித்துத் தெரிகிறானா? ‘கூட்டத்தில் ஒருத்தன்’ விமர்சனம்!


Recommended Posts

தனித்துத் தெரிகிறானா? ‘கூட்டத்தில் ஒருத்தன்’ விமர்சனம்!

 

 

 

தனக்கென எந்த சிறப்புத் திறமைகளும் இல்லாமல், தன்னுடைய சராசரி குணத்தைப் பற்றித் தாழ்வாக நினைத்துக்கொண்டு வாழும் ஒருவனுக்கு, தற்செயலாக ஒரு பாராட்டுக் கிடைக்கிறது. அப்படி தன்னைப் பாராட்டிய அந்த +2 மாணவியின் மீது காதல்கொண்டு, அவள் சேர்ந்த கல்லூரியிலேயே சேர்ந்து, தன் விருப்பத்தை அவளிடம் தெரிவிக்கிறான். இவனை, கூட்டத்தில் ஒருத்தனாக இருப்பவனென்றும், ‘சாதித்துவிட்டு வா, அப்புறம் என்னன்னு பாக்கலாம்’ என்று வழியனுப்பிவைக்கிறாள் காதலி. சோர்ந்துபோய் தற்கொலைக்கு முயல்கிறவனின் வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்கள், குறுக்குவழியில் அவனுக்குக் கிடைக்கும் புகழ்வெளிச்சத்தின் உண்மை நிலவரம் என்னவென்று காதலிக்கு, குடும்பத்துக்கு, கல்லூரிக்கு என அனைவருக்கும் தெரிந்ததும், எல்லோரும் அவனைக் கைவிடுகிறார்கள். பிறகு, அவன் என்ன ஆனான்... நிராகரித்தவர்களே அவனை ஏற்றுக்கொண்டு, தொலைக்காட்சிப் பெட்டியின் முன்பு ஆனந்தக் கண்ணீருடன் அட்டென்ஷனில் நிற்குமளவுக்கு அவன் என்னசெய்தான் என்பதே கூட்டத்தில் ஒருத்தன் படத்தின் கதை.

கூட்டத்தில் ஒருத்தன்

'சூது கவ்வும்', 'தெகிடி'யில் நாம் பார்த்த அசோக் செல்வனா இது என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு ஆளே மாறியிருக்கிறார். நடை, உடை, பேச்சு என அனைத்திலும் கூட்டத்தில் ஒருத்தனாகவே நமக்குத் தெரிகிறார். தோற்றத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் தன் கதாபாத்திரத்துக்கான நியாயத்தைச் செய்திருக்கிறார். வீட்டில், சமுதாயத்தில், கல்லூரியில் என எங்கெல்லாம் தான் உதாசீனப்படுத்தப்படுகிறேன் என சமுத்திரக்கனியிடம் அவர் சொல்லி விசனப்படும் காட்சியில், "காதலிக்கணும்னா சாதனை செஞ்சி இருக்கணுமா சார்? நானெல்லாம் காதலிக்கிறதே சாதனை தான் சார்" என்று அவர் கலங்குகையில், அவரைப் போன்ற குணாதிசயம் கொண்டவர்களுக்கு அது அழுத்தமான காட்சியாகவே மனதில் பதியும். பால சரவணனுக்கு, படம் முழுக்க கதாநாயகனோடு டிராவல் பண்ணும் காமெடியன் கதாபாத்திரம். சில இடங்களில் மட்டும் கிச்சுக்கிச்சு!  ப்ரியா ஆனந்த் நடிப்பில் குறை ஒன்றும் இல்லை. 

சத்யா எனும் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். நாசர், ஜான்விஜய்க்கு இன்னும் அழுத்தமான கதாபாத்திரம் கொடுத்திருக்கலாம். நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில், ஏண்டா இப்படி என்கிற பாடல், படத்தின் பலம். எஸ்.பி.பி-யின் குரலில் இருக்கும் இளமை என்றும் நிலைத்திருக்கும் என்பதற்கு ஒரு நற்சான்று இந்தப் பாடல். பி.கே. வர்மாவின் ஒளிப்பதிவு, கதையை  நீரோட்டம்போல நகர்த்துகிறது. லியோ ஜான் பால் எடிட்டிங், இந்தப் படத்துக்கு பர்ஃபெக்ட்.

கூட்டத்தில் ஒருத்தன் விமர்சனம்

கூட்டத்தில் ஒருத்தன், தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள எப்படியெல்லாம் போராடுகிறான் என்கிற கதை சுவாரஸ்யமானது என்றாலும், அடுத்தடுத்து வரக்கூடிய காட்சிகளைத் தமிழ் சினிமாவை அதிகம் பார்க்கும் எவரும் எளிதில் கணித்துவிடலாம் என்பதால், சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடுவதோடு, காதல், ஏமாற்று வேலை, ரவுடி, என்கவுண்டர் என படத்தின் கான்செப்ட்டுக்குத் தேவையில்லாத காட்சிகள் திணிக்கப்பட்ட உணர்வு ஏற்படுகிறது. 

 
 

கடைசி அரைமணி நேரம் ஆவணப்படம் பார்க்கிற மாதிரியான ஒரு அனுபவத்தையும் கொடுக்கிறது. என்றாலும், எடுத்துக்கொண்ட கதைக் கருவில் பாசிட்டிவ்வான ஒரு எண்ணத்தை, சமூக அக்கறையை இன்றைய இளைஞர்களிடம் விதைக்க முயற்சித்தற்காக இயக்குநர் ஞானவேலைப் பாராட்டலாம். மையக்கதையை நோக்கி அதிகம் பயணித்திருந்தால், இந்த கூட்டத்தில் ஒருத்தன் இன்னும் ஜொலித்திருப்பான்.

http://www.vikatan.com/cinema/movie-review/97275-kootathil-oruthan-movie-review.html

Link to comment
Share on other sites

திரை விமர்சனம் - கூட்டத்தில் ஒருத்தன்

koreview

கூட்டத்தில் ஒருவனாக இருக்கும் ஒருத்தனை ஆயிரத்தில் ஒருவனாக மாற்றுகிறது காதல். அதுதான் இப்படத்தின் ஒருவரிக் கதை.

படிப்பு, தனித்திறமை, சுறுசுறுப்பு என எல்லாவற்றிலும் சராசரியாக இருக்கும் ஒரு ‘மிடில் பெஞ்ச்’ மாணவன் அசோக் செல்வன். இவர், எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் முதல் பெஞ்ச் மாணவி ப்ரியா ஆனந்த் மீது காதலாகிறார். அதற்காகவே, ப்ரியா ஆனந்த் படிக்கும் கல்லூரியிலும் சேர்ந்து, அவரை சுற்றிச் சுற்றி வருகிறார். ‘‘உன்னைப் பத்தி சொல்றமாதிரி ஒரு விஷயம் பண்ணிட்டுவா, அப்புறம் யோசிக்கலாம்’’ என வெடுக்கென்று வெட்டிவிடுகிறார் ப்ரியா. மனமுடையும் அசோக் செல்வன் தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது, கடலில் தத்தளிக்கும் வாய்பேசாத சிறுவனைக் காப்பாற்றப்போக, பிரபலமாகிறார். அதன் பிறகு அவரது வாழ்க்கையில் நிகழும் சில அசாதாரணத் திருப்பங்கள் அவரைக் கல்லூரியில் முதல் மாணவன் ஆக்குகின்றன. காதலும் கைகூடுகிறது. ஆனால் கூடிய வேகத்திலேயே உடைந்தும் போகிறது. காதல் தோல்வியால் நொறுங்கிப்போகும் அவர், மீண்டு எழுந்தாரா, இல்லையா? அவரது பின்கதை என்ன என்பதுதான் ‘கூட்டத்தில் ஒருத்தன்’.

ஒரு அழகான காதல் கதைக்குள், இதழியல், வன்மம், சமூக அக்கறை ஆகிய 3 அம்சங்களைக் கலந்து திரைக்கதை எழுதியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தா.செ.ஞானவேல். கதைக்குள் கதை, காட்சிக்குள் காட்சி என திரைக்கதையில் அடுக்குகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

குடும்பத்தில் 3 குழந்தைகளில் நடுவில் பிறந்தவன், வகுப்பறையில் நடு பெஞ்ச் மாணவனின் உணர்வுகளை மையமாகக் கொண்டு விளையாடியிருக்கிறார். திரைக்கதை, வசனங்களில் அவரது புத்திசாலித்தனம் நன்கு வெளிப்படுகிறது.

‘சுத்தி நூறுபேரு இருக்கும்போது தனிமைய ஃபீல் பண்ணியிருக்கீங்களா?’ என்று கதாநாயகனின் தாழ்வு மனப்பான்மையை சட்டெனச் சுட்டிக்காட்டும் வசனம் ஓர் உதாரணம்.

கிளைமாக்ஸிலும் புதுமையைக் கையாண்டிருக்கிறார். கடைசி 20 நிமிடப் படத்துக்கு முதுகெலும்பாக அமைந்துவிடுகிறது முடிவுப்பகுதி.

ஆனால், முதல் பாதியில் உள்ள சுவாரசியமும், விறுவிறுப்பும் இரண்டாம் பாதியில் இல்லை. குடிக்கிற காட்சியும், தேவையற்ற பாடல்களும் படுத்துகின்றன.

கதாபாத்திரத்துக்கேற்ற முகம், நாயகன் அசோக் செல்வனுக்கு. கதைக்கேற்ற நடிப்பையும் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார். முகம், கண்கள், உடல்மொழி என எல்லாவற்றிலும் தன்னை சராசரி மாணவனாக வெளிப்படுத்துகிறார். உருமாற்றம் நிகழ்ந்துவிடும் இறுதிக்காட்சியிலும் நம்பகமான நடிப்பைத் தந்திருக்கிறார்.

நாயகி ப்ரியா ஆனந்த் அழகு. நடிக்கவும் செய்திருக்கிறார். தனக்குத் தரப்பட்ட கதாபாத்திரத்தை அலட்டல் இல்லாமல் வெளிப்படுத்திச் சென்றுவிடுகிறார்.

நாயகனின் நண்பனாக வரும் பால சரவணனின் நகைச்சுவையும் சிறப்பு. ‘நாயும் மச்சான், நானும் உனக்கு மச்சானா?’, ‘எப்ப நீ படிக்கிற பையனாகிட்டியோ அப்பவே என் நண்பன்கிற தகுதியை இழந்திட்ட’ என்பது போன்ற வசனங்களின்போது தியேட்டரே குலுங்கிச் சிரிக்கிறது.

தாதாவாக வருகிற சமுத்திரக்கனியின் பாத்திரம் படத்துக்கு பெரிய பலம். தாதாவாக, நல்ல மனிதராக, நாயகனுக்கு உதவும் அண்ணனாக, வாய்பேசாத சிறுவனின் தந்தையாக நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார். நாசரும் படத்தில் இருக்கிறார், நடிக்க அதிகம் வாய்ப்பு இல்லாத கதாபாத்திரம்.

தாதா, போலீஸ் இன்ஸ்பெக்டர், கல்லூரி நண்பன் ஆகியவை பழகிப்போன வழக்கமான தமிழ் திரையுலக கதாபாத்திரங்கள் என்றாலும், அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் முதல் பெஞ்ச் மாணவரின் வில்லத்தனம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

நாயகனுக்குள் காதல் மலரும் தருணம், காதலுக்குப் பிறகு அவரிடம் தோன்றும் மாற்றங்கள் ஆகியவற்றை நிவாஸ் கே.பிரசன்னா இசையின் துணையுடன் பளிச்சென புதுமையாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர். அதற்கு பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவும் கைகொடுக்கிறது.

முதல் பாடலும் (ஏண்டா இப்படி, எனக்கு ஏண்டா இப்படி) அதைக் காட்சிப்படுத்திய விதமும் ரசிக்கும்படி இருக்கிறது. கதைக்கும் உதவுகிறது.

புதிய கதை, சமூகத்தின் மீதான அக்கறை, நடிகர்கள் தேர்வு, தொழில்நுட்பம், படமாக்கம் என எல்லாம் கச்சிதம். திரைக்கதையில் தொக்கி நிற்கும் ‘ஓவர் டோஸ்’ தன்மை, ரசிகர்கள் எளிதாக ஊகித்துவிடக்கூடிய காட்சிகள் இவற்றைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், குடும்பத்துடன் கொண்டாடப்பட வேண்டியவனாக வசீகரிக்கிறான் ‘கூட்டத்தில் ஒருத்தன்’!

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19389653.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.