Jump to content

ரெட் கார்ப்பெட்டில் சறுக்கியது ஜூலியா ஓவியாவா..?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 33) #BiggBossTamilUpdate


Recommended Posts

ரெட் கார்ப்பெட்டில் சறுக்கியது ஜூலியா ஓவியாவா..?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 33) #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.
 
 
 
சரி, இன்று துவங்கும் இந்தத்  தொடரின் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் என்னென்ன நடந்தது என்பதை தினமும் பார்க்கப் போகிறோம்.
 

bigg boss tamil update

வம்பு பேசுதல், மற்றவர்களின் அந்தரங்கமான தருணங்களை எட்டிப் பார்த்தல் போன்றவை மனிதனின் ஆதாரமான இச்சைகளில் அடக்கம். சாவி துவாரத்தின்  வழியாக இதர மனிதர்களின் நடவடிக்கைகளைப் பார்த்து இன்படையும் Voyeurism  எனப்படும் சிறுமையான குணத்தின் மீது நம்பிக்கை வைத்து உருவாக்கப்பட்ட 'பிக் பாஸ்' எனப்படும் ரியாலிட்டி ஷோ, உலகமெங்கிலும் வெற்றி பெற்றது. அது  இப்போது தமிழகத்திலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியதில் ஆச்சரியமொன்றுமில்லை. சில விஷயங்களில் மானுட குலத்தை உத்தரவாதமாக நம்பலாம். அத்தனை சீக்கிரம் நல்லவர்களாகி விட மாட்டார்கள்.

'இந்த நிகழ்ச்சி ஒரு  கலாசார சீரழிவு' என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் கலாசார காவலர்கள் ஒருபுறம் ஆவேசமாக கதறிக் கொண்டிருக்கிறார்கள. இன்னொரு புறம்,  குறிப்பிட்ட நேரம் வந்ததும் கைகள் நடுங்க... ''ஹலோ.. விஜய் டிவியா? எப்ப சார் பிக் பாஸ் போடுவீங்க?" என்று ஆவலுடன் கேட்கும் குடிமகன்கள் பெருகிக் கொண்டே இருக்கிறார்கள். கோடிக்கணக்கானவர்கள்  இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள் என்கிறது ஒரு தகவல். சின்னய்யா ரெளத்ரம் பழகியதில் காரணம் இல்லாமல் இல்லை.

ஆனால் சமூகவலைத்தளங்களில் திடீரென்று கிளம்பியிருக்கும் உளவியல் நிபுணர்கள் இந்த நிகழ்ச்சியைப் பற்றி வேறொரு பார்வையை முன்வைக்கிறார்கள்.

'ஒரு குறிப்பிட்ட சூழலில் அடைபடுவதின் மூலம் மனிதர்களிடம் உற்பத்தியாகும் மாற்றங்கள், அகங்கார மோதல்கள், உயர்வு - தாழ்வு மனப்பான்மைகளின் பிரதிபலிப்புகள், மனச்சிக்கல்கள் போன்றவை இந்த நிகழ்ச்சியில் வெளிப்படுகின்றன. இவற்றைக் கவனிப்பதின் மூலம் அவற்றைக் கொண்டு கண்ணாடியில் சரிபார்த்துக் கொள்வது போல  நம்மை சுயபரிசீலனை செய்து கொள்ளலாம். நம்மிடம் உள்ள குறைகளை இவை மறைமுகமாக சுட்டிக் காட்டுகின்றன; யோசிக்க வைக்கின்றன' என்கிற வகையில் இந்த நிகழ்ச்சி உபயோகமானது என்கிறார்கள்.  'சமூகப் பரிசோதனை' என்று கமல் சொல்லியதும் இதைத்தான்.

சரி, இன்று துவங்கும் இந்தத்  தொடரின் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் என்னென்ன நடந்தது என்பதை தினமும் பார்க்கப் போகிறோம்.

**

காயத்ரி - ஓவியா சமாதான உடன்படிக்கை நிகழ்ந்ததின் எதிரொலியாக கடந்த சில நாட்களாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சி சலிப்புறத் துவங்கி விட்டது. 'We want more emotion' என்று கதறும்படி ஆகிவிட்டது. தீமைகள் இருந்தால்தான் அதன் நடுவில் நன்மைகளை அடையாள காண முடியும். 

bb1a_11472.jpg

ஆதார் கார்டிற்கு எதிர் பரப்புரைப் பாடலை எப்போதோ பாடி வைத்து விட்ட 'தல'யின் திரைப்படத்திலிருந்து இன்றைய சுப்ரபாத எழுச்சி நடந்தது. 'அதாரு.. அதாரு...காட்டாதே உதாரு' பாடலுக்கு வழக்கம் போல ரகளையாக நடனமாடித் தீர்த்து விட்டார் ஓவியா. சோலார் பவருக்கு முன் மெழுகுவர்த்தி போல, டான்ஸ் மாஸ்டர் காயத்ரியே, ஓவியாவின் முன் டல்லாகத் தெரிகிற அளவிற்கான நளினமும் உற்சாகமும் ஓவியாவின் நடனத்தில் தெறித்தது.

***

'குருவி.. குருவி. அடிபட்டுடுச்சா.. குருவி'' என்கிற குணா கமல் ரேஞ்சிற்கு தனிமையில் பேச ஆரம்பித்து விட்டார் ஜூலி. ஓவியாவை நகலெடுக்கும் முயற்சியாகத் தெரிகிறது. என்றாலும் ஜல்லிக்கட்டுப் போராளியை இப்படி தனிமையில் அமர வைத்தது பாவம்தான்.

நமிதாவின் பிரிவால் இன்னமும் கடுப்பாகியிருக்கும் ரைஸா, 'யாரையாவது அறையலாம் என்கிற வாய்ப்பு கிடைத்தால் எவரை தேர்ந்தெடுப்பீர்கள்' என்கிற ஜூலியின்  கேள்விக்கு சந்தேகமேயில்லாமல் 'ஓவியா' என்று பதில் தந்தார். 'i want to go home' என்று கண்ணைக் கசக்கிக் கொண்டேயிருக்கிறது இந்த கான்வென்ட் பேபி.

காயத்ரி - ஓவியா சமாதானத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது ஜூலிதான். அவருடைய ஒவ்வொரு அசைவிலும் இது அப்பட்டமாகத் தெரிகிறது. எனவே இப்போது ரைஸாவுடன் கூட்டணி. இந்த நிகழ்ச்சியைப் பார்த்தால் அரசியல்வாதிகள் கூட மண்டையைப் பிய்த்துக் கொள்வார்கள் போலிருக்கிறது. அத்தனை கட்சித் தாவல்கள்.

'ஆறுதல் நாயகன்' என்கிற பட்டத்தை கேள்வியே கேட்காமல் சினேகனுக்கு வழங்கலாம். எவர் கண்கலங்கினாலும், அதிலும் தாய்க்குலங்கள் கலங்கினால் 'கட்டிப்பிடி வைத்தியம்' மூலம் அவர்களை ஆற்றுப்படுத்த 24 மணி நேரமும் போர்க்கால அடிப்படையில் தயாராக இருக்கிறார். ஆறுதல் சொல்வது மட்டும்தான் அவருடைய நோக்கமா என்று சந்தேகம் பல சமயங்களில் வருகிறது.

இன்று காலையில் இருந்தே ஓவியா 'அப்செட்'.  அது நாள் வரையில் காயத்ரி குழுவிற்கு முன்னால் ஒரு சவால்தன்மையுடன் இயங்க வேண்டியிருந்ததால் அதிலேயே நேரம் போயிருக்கும். இப்போது அதுவும் முடிவடைந்து விட்டதால் ஏற்பட்ட வெற்றிடமாக இருக்கலாம். தனிமையில் அழுது கொண்டிருந்த ஓவியாவை 'தேவதைகளின் காவலர்' சினேகன் உடனே ஓடிச் சென்று சமாதானப்படுத்தினார். மனிதர் ஒரு சந்தர்ப்பத்தையும் வீணாக்குவதாக இல்லை.

***

பாத்திரம் கழுவும் விஷயத்தில் மறுபடியும் பிரச்னை வெடித்தது. தனது நல்லியல்புகளின் மூலம் மக்களின் பிரமாண்டமான அபிமானத்தைப் பெற்ற 'டார்லிங்' ஆக ஓவியா இருந்தாலும், பணிகளை சரியாகச் செய்யாமல் டபாய்ப்பது துவக்கத்திலிருந்தே அவரது பலவீனமாக இருக்கிறது.  டீம் லீடர் ரைஸா உத்தரவிட்டும் ஆரவ்விடம் சுவாரசியமாக கடலை போட்டுக் கொண்டிருந்தது ஓவர்.

bb1c_11208.jpg

சற்று யோசித்தால் இந்த நிகழ்ச்சியில் பெண்கள் இல்லாமலிருந்தால் எத்தனை சலிப்பாக இருந்திருக்கும்? முதல் நாளிலேயே 'பிக் பாஸ்', 'பிக் பெயில்' ஆயிருப்பார். பெண்கள்தான் ஆக்கத்தின், அழிவின் மையமாக இருக்கிறார்கள்.

'நம்பியார்' mode -ல் இருந்த காயத்ரி திடீரென்று திருந்தி விட்டதால் அந்த இடத்திற்கு பொருத்தமாக நபராக அமர்ந்து விட்டார் ஜூலி. இனி சர்ச்சைகள் அவரைச் சுற்றியே மையம் கொள்ளும் என்பது உறுதியாகி விட்டது. ஒருவகையில் ஜூலி  பலிகடாவிற்கான மாற்றோ என்று கூட தோன்றுகிறது.  'True, true' ரைஸாவிற்கு இந்த அளவிற்கெல்லாம் சாமர்த்தியம் போதாது.

***

விக்ரமன் சினிமாப்பாடல் மாதிரி 'இப்படியே போய்க் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது' என்று யோசித்த பிக் பாஸ், நாரதர் வேலையை மறுபடியும் துவங்கி விட்டார். இம்முறை அவர் வெடித்தது நகைச்சுவை சரவெடி.

ஓபிஎஸ் மாதிரி 'திடீர் தலைவர்' ஆகும் அதிர்ஷ்டம் அடித்தது ஜூலிக்கு. இரண்டு அணிகளாக பிரிந்து செய்யும் சமையல் போட்டிக்கு அவர் நடுவராக இருப்பார். இந்தப் போட்டியில் தோற்கும் அணி ஜூலிக்கு பல்வேறு விதமான பணிவிடைகளைச் செய்ய வேண்டும்.  நேற்று வெளியே தனிமையில் அமர வைத்ததற்கு பரிகாரம் போல.

'இந்தப் புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் நெனச்சேனா' என்று புலம்பிய வடிவேலுவின் வசனத்தை தங்களின் மைண்ட் வாய்ஸில் நினைத்துக் கொண்ட போட்டியாளர்கள் விதியை நொந்து கொண்டு சமையல் போட்டிற்கு தயாரானார்கள்.

bb1f_11013.jpg

bb1e_11363.jpg

bb1d_11250.jpg

மசாலா கம்பெனி உரிமையாளரே, இந்தியாவெங்கும் அலைந்து திரிந்து வாங்கி வந்த மசாலா பொருட்களின் 'பிராண்ட்' சிறப்பாகவே ஃபோகஸ் செய்யப்பட்டது. சார்லி சாப்ளின் மீசையுடன் படுகாமெடியாக ஜூலி நடுநாயகமாக அமர்ந்திருக்க இரண்டு டீம்களும் பரபரப்பாக இயங்கினார்கள். சினேகன் விரலில் ரத்தக் காயம் ஏற்பட, 'பாசமலர்' ஜூலி உடனே பதறி, தற்காலிகமாக தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு உதவி செய்ய ஓடிய காட்சி 'கிழக்கு சீமையிலே' சென்டிமென்ட்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் திறமையைக் கொண்டிருந்தது.

கிச்சன் செட் முன்னால் ஓவியா நின்ற போது, 'விதிகளின் படி அது தவறு' என்று தலைவர் ஜூலி பயங்கர ஜபர்தஸ்துடன் கறாராக சுட்டிக்காட்ட, ஆரவ்வின் பக்கத்தில் நின்று கொண்டு ஓவியா காட்டிய 'வெவ்வெவ்வே' ஒரு ஜாலியான தருணம்.

***

இரண்டு குழுக்களின் சமையலையும் ரசித்து ருசித்து சாப்பிட்டார் ஜூலி. 'மேடம் மேடம் என்று அவரை ஆரவ் கலாய்த்துக் கொண்டே இருந்தது நகைச்சுவை கலாட்டா. ஆரவ், மட்டுமல்ல ஜூலியின் பந்தாவை எல்லோருமே கலாய்த்தார்கள். ஜூலிக்கு புரைக்கேறிய போது 'நான் தட்றேன்' என்று தாமாக முன்வந்து ஓவியா ஓங்கித் தட்டியதும், அதற்கு நீலாம்பரி போல ஜூலி ஒரு லுக் தந்ததும்... நிஜமாகவே சிரிப்பை அடக்க முடியவில்லை.

எதிர்பார்த்தபடியே ஓவியா இருந்த டீமை தோற்ற அணியாக ஜூலி தேர்வு செய்தார். சினேகன் செய்த 'முட்டை மசாலா' அத்தனை ருசியாக இல்லை என்பது அவர் சுட்டிக் காட்டியிருந்த காரணம். ஒருவேளை ஜூலியின் இந்த தீர்ப்பு அவரளவில் நியாயமானதாக ஒன்றாக கூட இருக்கலாம். ஆனால் ஓவியாவை பழிவாங்கவே அவர் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும் என்கிற அளவிற்கு நிலைமை இருந்தது.

அப்புறம் துவங்கியதுதான் சீரியஸ் + காமெடி கலாட்டா.

தலைவர் ஜூலியின் ஆணைப்படி அவர் செல்லுமிடமெல்லாம் ரெட் கார்ப்பெட் விரிக்கப்பட வேண்டும். இந்தப் பணிக்காக அவர் தேர்வு செய்தது ஓவியாவை. ஜூலிக்குள் இருந்த 'நீலாம்பரி' முழுமையான சந்திரமுகியாக வெளிப்பட்ட தருணம் அது.

உள்ளுக்குள் பொங்கிய கோபத்தை மறைத்துக் கொண்டு 'வாடி மகளே' என்கிற சவாலுடன் ஓவியா களத்தில் இறங்கினார். ரெட் கார்ப்பெட்டில் ஜூலி காலை வைத்ததும் ஒரே இழு. தடுமாறிய ஜூலி ஏறத்தாழ விழப் போனார். கொலைவெறியுடன் ஓவியா மறுபடியும் இழுக்க விழுந்து வாரினார் ஜூலி. கார்ப்பெட்டில் இருந்த சிவப்பெல்லாம் ஜூலியின் கண்களில் ஏறியது. ''what to do? am doing my task' என்று ஓவியா அலட்சியமாக சொன்னாலும் அப்பட்டமாக அவர் பழிவாங்கியது வெளிப்படையாகவே தெரிந்தது.

collage2_11108.jpg

ஓவியாவிற்கு நிச்சயம் இது சறுக்கல்தான். எதையும் உற்சாகமாக எதிர்கொள்ளும் ஓவியாவைத்தான் ஜனங்களுக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் இன்று வேறுமாதிரியான ஓவியாவை பார்க்க முடிந்தது. ஆனால் இதற்கு காரணமாக அவருக்கு ஒருவேளை இருக்கும் மனஅழுத்தத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.

காலையில் இருந்தே 'மூட் அவுட்' ஆக இருந்த ஓவியாவிற்கு, 'ஜூலிக்கு' சேவகம் செய்யும் task தரப்பட்டதும் அழுத்தி வைத்திருந்த அத்தனை கோபமும் வெளிப்பட்டிருக்க வேண்டும். ஆறுதல் சொல்லப் போயிருந்த தன்னிடம், நன்றி சொல்வதற்கு மாறாக, பிளேட்டை திருப்பி அபாண்டமான பழி சுமத்திய ஜூலியின் மீது ஓவியாவிற்கு இருக்கும் மனக்குறை இன்னமும் நீங்கவில்லை என்றுதான் தெரிகிறது. மேலும் அதற்காக அவர் இதுவரை மன்னிப்பு கூட கேட்கவில்லை என்பது கூடுதல் கோபத்தை தந்திருக்கிறது என யூகிக்கலாம்.  தனது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாக அவர் இதை எடுத்துக் கொள்வது ஒருபுறம் நியாயம்தான். ஆனால் இதுவொரு விளையாட்டுப் போட்டி. இதற்கான உத்திகளோடுதான் இங்கு இயங்க வேண்டும். இந்த அடிப்படையை கணேஷைத் தவிர எல்லோரும் உணர மறுக்கிறார்கள். இதுவரை சமாளித்த ஓவியாவும் இன்று சறுக்கி விட்டார்.

விளைவு இன்று நடந்த பழிவாங்கல் படலம்.

***

bb1k_11379.jpg

ஓவியாவின் இந்த நடவடிக்கையை இதர போட்டியாளர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள். 'i want to go home' என்று மறுபடியும் கான்வென்ட் பேபி சிணுங்கியது. ஓவியா சமாதானப்படுத்தும் முயற்சியில் ஆரவ் உடனடியாக இறங்கினார். 'ஆறுதல் நாயகன்' சினேகனும் இணைந்து கொண்டார். 'am done. போதும். நான் வீட்டுக்குப் போறேன்' என்று வழக்கத்திற்கு மாறாக கதறித் தீர்த்த ஓவியாவை இருவரும் சமாதானம் செய்தார்கள்.

bb1l_11535.jpg

'தலைவியானவுடனே  நீ ஓவர் பந்தா பண்ண. அது ரொம்ப கேவலமாக இருந்தது' என்று ஜூலியை உரிமையுடன் கண்டித்தார் காயத்ரி. சென்ற வாரங்களோடு ஒப்பிடும் போது காயத்ரியின் பிம்பம் தலைகீழாக மாறி விட்டது. இது நிகழ்ச்சியின் போக்கில் நடந்ததா அல்லது நடத்தி வைக்கப்பட்டதா என்பது 'பிக் பாஸிற்கே' வெளிச்சம். என்றாலும் காயத்ரியின் தாய்மை பிம்பமும் ஒரு நோக்கில் அழகாகவே இருந்தது.  'உப்பு மூட்டை தூக்கிச் செல்கிறேன்'' என்று ஜூலியை காயத்ரி தூக்கிச் சென்று இருவரும் கீழே விழுந்தது அவல நகைச்சுவை. மரண பங்கம்.

collage_11144.jpg

சிறந்த performance-க்காக சக்தி மற்றும் சினேகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பரிசாக மசாலா பொருட்கள்.

அவர்கள் செய்த சமையலில் மசாலா இருந்ததோ இல்லையோ, ஜூலியை தலைவராக்கி அவருடன் ஓவியாவை மோத விட்டதின் மூலம் இன்றைய நிகழ்ச்சியல் செமயான மசாலாவைச் சேர்த்த  பிக் பாஸின் 'செஃப்' திறமையை எத்தனை பாராட்டினாலும் தகும்.

இந்த வாரம் எவரும் வெளியேற மாட்டார்கள். இது பார்வையாளர்களுக்கு  மட்டுமே தெரிந்த ரகசியம்.

இன்று ஆண்டவர் வருவார். குறும்படம் காட்டுவாரா, வெறும்படத்தோடு முடித்து விடுவாரா என்பது இன்றும், நாளையும் தெரியும். 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/97235-bigg-boss-tamil-updates-day-33-bigg-boss-contestant-julie-slipped-and-fell-down-what-happened-actually.html

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply

ஜூலியின் மன்னிப்பில் உண்மையில்லை என்கிறார் ஓவியா. உண்மையா? - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 34) #BiggBossTamilUpdate

 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

bigg boss tamil update

 

எதிர்பார்த்ததுதான் என்றாலும்...அதையும் தாண்டிய ஏகோபித்த வரவேற்பு இந்த தொடருக்கு. வாசகர்களுக்கும், முக்கியமாக ஓவியா-ஜுலிக்கும் நன்றிகள். நேற்று விகடன் தளத்தில் அதிகளவில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளில் வாசிக்கப்பட்ட ஒன்றாக முதல் அத்தியாயம் இருந்தது. அந்த வரவேற்பை தக்க வைக்க கை கொடுக்குமாறு பிக்பாஸை கேட்டுக் கொள்கிறேன்.

நேற்றைய, ரெட் கார்ப்பெட்டில் சறுக்கியது ஜூலியா ஓவியாவா..?! அத்தியாயத்தின் இறுதியில் ஓவியா மீதான உங்கள் அபிமானம் பற்றிய கேள்விக்கு வாசகர்களின் பெரும்பான்மை பதிலை கணிக்க முடியும். 

Survey Result

 

ஆம்... ஓவியா ஆர்மி ஓவியாவை விட்டுக் கொடுப்பதாக இல்லை. பிக் பாஸ் டார்லிங் பட்டத்தை ஓவியாவே இப்போதும் தக்க வைக்கிறார். 

சரி... நேற்றைய (29/07/17) பிக் பாஸ் நிகழ்வுகளை அலசுவோம்..! 


*****

kamal


பரணி வெளியேற்ற வைபவம் நடந்த போது 'வீட்டுக்குள்ள இத்தனை கஷ்டப்பட்டீங்க, எப்ப சந்தோஷமா இருந்தீங்க?' என்று கமல் பரணியிடம் கேட்டார். 'சனி,ஞாயிறு.. நீங்க வரும் போதுதான் சார்" என்றார் பரணி. ஒருவகையில் அது பிக் பாஸ் பார்வையாளர்களுக்கும் கூட பொருந்தும் என நினைக்கிறேன்.
 

அந்த வாரம் முழுக்க நடந்த பரபரப்புகளுக்கான வேறொரு பரிமாணத்தை, அதற்கான விடைகளை, தீீர்ப்புகளை அவர் தருவார் என்று நீதிபதியை ஆவலாக எதிர்நோக்கி அமர்ந்திருப்பது போன்று நாம் காத்திருக்கிறோம். அம்மாவினால் தண்டிக்கப்பட்ட சிறுவன், அழுது கொண்டே  'இரு.. அப்பா வந்ததும் அவர் கிட்ட சொல்றேன்' என்று தன் மனக்குறையைக் கொட்ட அவரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்ப்பது போல கமல் வருகையை வார இறுதியில் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. வெளி மனிதர்களையே அதிகம் பாா்த்திராத போட்டியாளர்களுக்கும் கமலின் வருகை பயங்கர உற்சாகத்தையும், பயம் கலந்த ஆவலையும் ஏற்படுத்தும் என யூகிக்கிறேன். 

சிறந்த ஒப்பனையுடன் வரவேற்பறையில் அவர்கள் பவ்யமாக அமர்ந்திருக்கும் தோரணையிலேயே இது தெரிகிறது. வாத்யாரைக் கண்ட பள்ளி மாணவர்கள் போல வரவழைக்கப்பட்ட மரியாதையுடன் அமர்ந்திருக்கிறார்கள். 'என்னப்பா... ஏதோ சண்டையாமே?' என்று விசாரிக்கப்படும் போது .. 'சண்டையா.. இல்லையே.. அப்படின்னா... என்ன..அது எங்கோ திருநெல்வேலியிலோ . தூத்துக்குடியிலோ இருக்கும் சார்.. எங்களுக்குத் தெரியாது ' என்று பூசி மெழுகப் பார்க்கிறார்கள்..  30 காமிராக்கள் காட்சிகளை பதிவு செய்து கொண்டிருக்கிறது என்பதை மறந்து 'என்ன நடந்துச்சுன்னா.. ' என்று அபத்தமாக விளக்கம் தர முனைகிறார்கள். அவர்களின் அகவுணர்வுகளை மட்டுமே காமிராவால் பதிவு செய்ய முடியாது. 

desk biggboss




கமலின் முன்னால் போட்டியாளர்கள் இப்படியிருக்கும் போது, சற்று கவனித்துப் பார்த்தால் ஓவியா மட்டுமே இங்கு வித்தியாசப்படுகிறார். மற்றவர்கள் அதுவரை பல பிறாண்டல்களில், உரசல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் கமல் முன்னால் அத்தனையையும் மழுப்புகிறார்கள்; நடிக்கிறார்கள். இதற்கு நேரெதிராக ஓவியா இருக்கிறார்.  வீட்டினுள் ஏற்படும் பல சர்ச்சைகளை பொறுமையாக கடக்கிறார். சமயங்களில் வெடிக்கிறார். 

ஆனால் கமல் முன்னால் போலியாக எதையும் நடிப்பதில்லை. அது கோபமோ, மன்னிப்போ, சந்தோஷமோ சட்டென்று அப்படியே வெளிப்படுத்தி விடுகிறார்.. இதுவே அவருடைய நேர்மையையும் தனித்தன்மையையும் காட்டுகிறது. இது போன்றவர்கள் வெளியுலகத்தை விட தங்களுக்குத் தானே உண்மையாக இருப்பதற்கே முக்கியத்துவம் தருவார்கள். மற்ற குறைகள் இருந்தாலும் இந்தக் குணத்திற்காகத்தான் ஓவியா மிக அதிகமாக கொண்டாடப்படுகிறார். பெரும்பான்மையோரிடம் இல்லாத அரிய விஷயம் இது. 
 

ஜூலி தனக்கு செய்த அபாண்டமான துரோகத்தையும், நெஞ்சழுத்தத்துடன் இன்னமும் அதை சாதிப்பதையும் ஓவியாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அந்தக் கீழ்மை அவருக்கு வெறுப்பையும் ஒவ்வாமையையும் ஏற்படுத்துகிறது. அதைச் சகிக்க முடியாமல் கோபப் பட்டுக் கொண்டே இருக்கிறார்.  மற்றவர்களின் கடுமையான வசைகளையும் வெறுப்பையும் உடனே மறந்து ' ok fine, no problem' என்று உதறி விட்டுச் செல்லும் ஓவியாவால், ஜூலியின் இந்த நேர்மையின்மையை சகித்துக் கொள்ள முடியாமல் இருப்பது ஒருவகையில் நியாயமே.. 
 

இன்னொரு புறம், இந்த விஷயத்தில் ஜூலி இன்னமும் கூட மனதார மன்னிப்பு கேட்கவில்லை என்றே தெரிகிறது. வாத்தியார் அதட்டி, 'என்னடா மன்னிப்பு கேட்கறியா?' என்றவுடன் 'சரிங்க .. சார்..' என்று பவ்யமாக கூறி விட்டு வாய் வார்த்தையாக மன்னிப்பு கேட்கும் பள்ளி்ச் சிறுவனைப் போல்தான் ஜூலி நடந்து கொண்டிருக்கிறாரே ஒழிய, எவருடைய கட்டாயமும் உந்துதலும் இல்லாமல் தன்னிச்சையாக மனதின் ஆழத்திலிருந்து மன்னிப்பு கேட்கவில்லை. கடந்த வாரமும் சரி, இந்த வாரமும் சரி அதுவே நிகழ்ந்தது. இதுதான் ஓவியாவை அதிக மன உளைச்சலுக்கு தள்ளுகிறது. தாமே முன் வந்து பேசி. ஜூலிக்கு சில வாய்ப்புகள் தந்தும் கூட அவர் அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் கடந்து செல்வது அதிக கோபத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் கமல் முன்னாலேயே 'அவ இன்னமும் திருந்த மாட்டா சார்..எனக்கு நம்பிக்கையில்லை' என்று சொல்ல வைக்கிறது. 
 

ஆனால் ஒன்று தோன்றுகிறது. ஓவியா இல்லாவிட்டாலும் கூட நிகழ்ச்சியைப் பார்க்க முடியும். ஜூலி இல்லையென்றால் இந்த நிகழ்ச்சி கணிமான வெறுமையை அடையும் என்று நினைக்கிறேன். பிரபல அந்தஸ்து ஏதுமில்லாமல் ஒரு சாதாரண பின்னணி கொண்ட பெண்ணால் ஒரு நிகழ்ச்சியில் இத்தனை தாக்கத்தை ஏற்படுத்த முடியும், தனக்கான முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பது ஒருவகையில் அவரின் பலம்.  'எங்களை விடவும் அவங்க நல்லா நடிக்கறாங்க சார்' என்று ஓவியா, கச்சிதமான நேரத்தில் போட்டுக் கொடுத்தது ஒருவகையில் சரியான அனுமானம். 



***
 

சரி, நிகழ்வுகளைப் பற்றிப் பார்ப்போம். 

வழக்கம் போல் ஓவியாவின் ரகளையான நடனம். இதைப் பாராட்டி பாராட்டி நமக்கே சலித்து விட்டது. 

 

ஸ்மோக்கிங் அறைக்குள் இருந்த ஒரு தவளையிடம் ஓவியா பேசுவதும் அது நகர்ந்த போது பதறி ஓடி வந்ததும் பார்க்க ஜாலியாக இருந்தது. போலவே ரைசாவும் தவளையைக் கண்டு அதீதமாக பயந்தது நகைச்சுவை. பெருநகரத்தைச் சார்ந்த உயர்வர்க்க பெண்களின் தோரணையே அவர்களிடம் தெரிந்தது. மாறாக, விவசாயப் பின்னணியிலிருந்து வந்ததாலேயோ என்னமோ, ஜூலி தவளையைக் கையால் பிடித்து அப்புறப்படுத்தினார். ஒருபுறம் இது வேண்டாத வேலைதான். அப்படியே விட்டிருந்தால் அது போயிருக்கும்.  கையில் பிடித்து முறுக்கு பிழிந்திருக்க வேண்டாம். 

ஓவியா
 

காயத்ரி இப்போது அடக்கி வாசிப்பது, தன்னுடைய பிம்ப சேதத்தை சரிசெய்யும் முயற்சி முயன்றாலும், அவருடைய கடுமையான முகம் மீண்டும் வெளிவரத் துவங்கியிருக்கிறது. 'கார்ப்பெட் இழுக்கப்பட்ட விவகாரத்தில்' "ஓவியாவின் மீது அதிக கோபம் வந்தது' என்கிறார். இது ஜூலி மீதுள்ள பாசமா அல்லது தன்னிடமிருக்கும் அடிமையை தக்கவைத்துக் கொள்வதற்கான உந்துதலா என்பது ஆராயத்தக்கது.

 

ஜூலி தலைவர் ஆனதும் அதிக பந்தா செய்தது பிரச்னைக்கு முக்கியமான காரணம். ஓவியாவை பழிவாங்க வேண்டுமென்றே அவர் காய்களை நகர்த்திய தந்திரமும். (இந்தச் சூழலை உருவாக்கித் தந்த பிக் பாஸ் மூல காரணம் என்றாலும்). 

'சின்ன பிக் பாஸ்' என்கிற தற்காலிக கிரீடம் கிடைத்தாலும் ஆரவ் அதை வைத்துக் கொண்டு அதிக பந்தாவேதும் செய்யவில்லை என்பதை கவனிக்க வேண்டும். அந்த நிலையை சரியாக கையாண்டார். தண்டனைக்காக தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்களிடம் அதற்கான காரணத்தை, இயல்பான பணிவுடன் சொல்லி நம்மைக் கவர்ந்தார். ஜூலி இதைச் செய்யவில்லை. 'பதவி வரும் போது பணிவு வரவேண்டும்' என்கிற தங்க வாக்கியம் இங்கு நினைவுகூரத்தக்கது. 
 

தலைவர் ஆனாலும் ஒருவகையில் அது ஜூலிக்கு அளிக்கப்பட்ட தண்டனையே. சிறிது நகர வேண்டுமானாலும் 'ரெட் கார்ப்பெட்' சேவை தேவை. அதற்கு ஓவியாவை அழைக்க வேண்டும். பிறகென்ன, சண்டைதான், சச்சரவுதான். 'பிக் பாஸின்' இந்த ஏற்பாடு பிரமாதம். நூறு நாரதர்கள் சேர்ந்தாலும் இது போன்ற டெடரான ஐடியாக்களை யோசிக்க முடியாது.
 

'சூசு' போவதற்காக ஜூலி  ஆரவ் பெயரைச் சொல்லி அழைக்க, "ஏன், என் பெயரைச் சொல்லி கூப்பிடட்டும்' என்று ஓவியா சொன்னது ஜாலியான பந்தா. ஒருவகையில் அது சரிதானே? 'டயர்ட் ஆன மாதிரி இருக்கே. காலைப் பிடிச்சு விடட்டுமா?' என்று ஜூலியை அவர்  விளையாட்டாக சீண்டிக் கொண்டேயிருந்தார். தலைவர் பதவி எப்போதும் பிரச்னைதான் போல. முள் கிரீடம் அணிந்தது போல. பாவம் ஜூலி. 


***
 

'ஒரு பொய் நூறு பொய்களுக்கான விதை' என்கிற மகா தத்துவத்துடன் நிகழ்ச்சிக்குள் நுழைந்தர் கமல். தமிழக அமைச்சர்களுடன் இடும் சண்டை ஒருபுறம், கடுந்தமிழில் 'ட்வீட்கள்' எழுத வேண்டிய கடமை ஒருபுறம், ரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டிய கண்ணியம், சபாஷ் நாயுடு.... என்று இருக்கிற ஆயிரம் பணிகளுக்கிடையில் அது சார்ந்த சலிப்பு முகத்தில் ஏதுமில்லாமல் புத்துணர்ச்சியோடு வந்தார். வழக்கமான கருப்பு உடை கனஜோராக இருந்தது. ஆனால் காமிராவை முறைத்து பார்த்துக் கொண்டே 'ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு' என்று பயமுறுத்துவதை தவிர்க்கலாம். 

ஒவியா
 

கடந்த வாரங்களைப் போல், 'வழவழா கொழகொழா' நாட்டாமையாக இல்லாமல் தேங்காய் உடைத்ததைப் போன்று தெளிவாக பிரச்னைகளை  நோக்கி கமல் நகர்ந்தது பாராட்டு. மாற்றம், முன்னேற்றம், கமல். 
 

ஆனால் என்னவொரு   நெருடல் என்றால்.....
 

'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' திரைப்படத்தில் ஒரு நகைச்சுவைக் காட்சி வரும். மேலாளராக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், பெண்களைப் பார்த்ததும் இளிப்புடன் வழிவார். ஆனால் ஆண்களைப் பார்த்ததும் முகம் கடுகடுவென்று மாறும். இதற்கேற்ப பின்னணியில் 'சுந்தரி நீயும் சுந்தரம் ஞானும்' பாடல் ஓடும். (அட, இதுவும் கமல் பாட்டுதான்). 

இதைப் போலவே சுற்றிச் சுற்றி வந்து ஜூலியின் பொய்யை இரண்டு வாரமாக மிக நீண்ட குறுக்கு விசாரணை செய்யும் கமல், காயத்ரி செய்த ராவடிகளை போகிற போக்கில் கடந்து செல்வது ஏன்.. ஏன்.. என்கிற கேள்வி நெருடிக் கொண்டேயிருக்கிறது. ஓவியாவை தூங்க விடாமல் காயத்ரி டீம் செய்த அக்கிரமங்களை 'குறும்படமாக' உருவாக்கும் இயக்குநராக கமல் ஏன் மாறவில்லை? ஏதேனும் பட்ஜெட் பிரச்னையா, அல்லது வேறு ஏதேனும் சார்பு அரசியலா?
 

'தாங்கள் சார்பற்றவர்கள்' என்று என்னதான் பல்வேறு விதமாக விளக்கமளித்துக் கொண்டிருந்தாலும் இத்தனை பெரிய நெருடலை அவர்களால் கடக்க முடியவில்லை. 


இந்த நிகழ்ச்சிக்கு வரும் எதிர்வினைகளை கமலும், பிக் பாஸ் டீமும்  நிச்சயம் கவனித்துக் கொண்டிருப்பார்கள். மேற்குறிப்பிட்ட நெருடல் பல பார்வையாளர்களிடம் இருப்பதை சமூக வலைத்தளங்களில் எழும் கொதிப்புகளின் மூலம் உணர முடிகிறது. இந்தக் கேள்விக்கான சரியான பதிலை விளக்குவது நலன் பயக்கும், அவர்களுக்கு. 



oviya collage
 

'அவ்வை சண்முகி' திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியை, போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிந்து நடித்துக் காண்பிக்க வேண்டும் என்றொரு task தரப்பட்டது. 'எது பொய், எது உண்மை, பெண்ணாக வேடமிட்ட ஆண்..' என்கிற கருத்தாக்கம், இந்த திரைப்படத்தில் இருந்ததால் இதைத் தேர்ந்தெடுத்தேன் என்றார் கமல்.
 

இரு அணிகளின் பங்களிப்பில், சக்தி குழுவின் நடிப்பு சிறந்ததாக இருந்தது. நாகேஷின் தோரணையை இயன்ற வரையில் பிரதிபலித்தார் சக்தி. காயத்ரியின் நடிப்பும் ஓகே. ஜூலியின் பிராமண உச்சரிப்பு பரவாயில்லை. 'டெல்லி் கணேஷாக' ஆரவ் கலக்கியது ஆச்சரியம். இறுதிப்பகுதியில் மாராப்பை மூடிய படி ஜூலி தந்த எக்ஸ்பிரஷன் ரகளை. 

வையாபுரி டீமில் அவருடைய நடிப்பு அட்டகாசம். கூடுதலாக பல வசனங்களைச் சேர்த்து பிரமாதப்படுத்தினார். சந்தடி சாக்கில், தன் வழக்கமான புராணமான, புஷ்டியான கணேஷை 'சாப்பாட்டு ராமன்' என்று கிண்டலடிக்கவும் தவறவில்லை. பிராம்ப்டிங் தர வேண்டியிருந்த ஓவியா பயங்கரமாக சொதப்பினார். பெண்  வேடத்தில் சிநேகனைப் பார்க்க செம காமெடியாக இருந்தது. மன்மோகன் சிங்கை நினைவுப்படுத்துவது போல இருந்தார். 

நாடகம் முடிந்ததும் நிஜ நாடகம் நடந்தது. 'அந்த ஐந்து விநாடி வீடியோவை ஏன் துருவிக் கொண்டேயிருக்கிறீர்கள்' என்று கமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தார். 'என் மேல் நம்பிக்கையில்லையா?"

'திரும்பவும் போட்டுப் பார்க்கலாமா?' என்கிற கேள்விக்கு 'வேண்டாம் சார்' என்று ஜூலி சொன்னது ஒருவகையில் புத்திசாலித்தனம். ஆனால் இந்த விஷயத்தைதானே இரண்டு வாரங்களாக 'திரும்பத் திரும்ப பேசற நீ' யாக அவர் கேட்டுக் கொண்டேயிருந்தார் என்று எரிச்சலாகவும் வந்தது. 

'அவ்வை சண்முகி' காட்சிகள் நடிக்கப்பட வைக்கப்பட்டது ஏன் என்கிற கேள்விக்கு 'அதுல நெறய பொய் வருது' என்று முதலில் சரியாக சுட்டிக் காட்டியது ஒருவகையில் அவரை வெளிப்படுத்தியது. நுணலும் தன் வாயால் கெடும். (காலையில் வந்த தவளை). 

 

ஜூலி கேட்ட மன்னிப்பில் வழக்கம் போல் உண்மைத்தனம் இல்லை. ஒரு கட்டாயத்திற்காக சொன்னது போல்தான் இருந்தது. ஓர் அற்பமான பிரச்னையை பிடித்துக் கொண்டு வருடக்கணக்கான பகைமையுடன் உளைச்சல் கொள்ளும் நமக்கும் இதில் பாடம் இருக்கிறது. உறவுகளுடன் கழிக்க வேண்டிய எத்தனை மகிழ்ச்சியான தருணங்களை இது போன்ற அசட்டுத்தனமான பிடிவாதத்தின் மூலம் இழக்கிறோம்?

Julie laugh biggboss
 

சக்தியின் 'ஆணாதிக்க' உரையாடலை, கமல் நேரடியாக கண்டித்தது பாராட்டு. ஆனால் சக்தி இன்னமும் கூட அதை நேரயாக ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. கமல் பேசுவதைப் போலவே 'வழவழா' என்று சுற்றி வந்தார். அப்போது கூட தான் கையை ஓங்கியதற்காக மனம் வருந்தி ஓவியாவிடம் மன்னிப்பு கேட்கத் தயாரில்லை. ஒருவகையில் இதுவும் 'ஜூலித்தனமே'.
 

காயத்ரியின் நிழலாக இருக்கும் சமயங்களில்தான் சக்தி பாழாகிறார் என்றாலும், அவர் மற்றவர்களை அவதானிக்கும், கிண்டலடிக்கும் விஷயங்களில் கூர்மையானவராக இருப்பதைக் கவனிக்கலாம். 'ஜூலி இல்லைன்னா.. எந்த ஸ்டோரியும் இல்ல' 'அடிபட்ட பாம்பு மாதிரியே படுத்திருக்கா' என்பது போன்ற உரையாடல்களில் ஜாலித்தனத்தோடு புத்திசாலித்தனமும் இருக்கிறது. 

கமலின் விசாரணையின் போது ஜூலியின் வரவழைக்கப்பட்ட சிரிப்பிற்கும் ஓவியாவின் தன்னிச்சையான சிரிப்பிற்கும் இடையே ஆயிரம் வித்தியாசம் இருந்தது. 'கார்ப்பெட்' இழுத்தது தவறு என்று சுட்டிக்காட்டப் போது அதை உடனே ஒப்புக் கொண்டதில் ஓவியா கவர்ந்தார். 'பொய் சொல்றவங்களை என்னால் ஏத்துக்க முடியாது.. சார்..' என்று அவர் சுட்டுவது நியாயமான காரணமே. அவரது ஆளுமைக் குணம் அப்படி. 


***
 

பிக் பாஸ் போட்டியாளர்கள் நடிக்கிறார்கள் என்கிற கருத்து பல பார்வையாளர்களின் மனதில் இருப்பதை பார்க்கிறேன். இதைப் பற்றி வரும் கட்டுரைகளில் விரிவாகப் பேசுவோம். 'தன்னைத் தானே வரைந்து கொள்ளும் சித்திரம்' என்று கச்சிதமான வார்த்தையில் கமல் குறிப்பிட்டது இதைத்தான். 

திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட சூழலில், பின்னணயில் மனிதர்கள் தன்னிச்சையாக வெளிப்படுத்தும் காட்சிகள் இவை. அதில் போலி இல்லை. அது திட்டமிட்ட நடிப்பு என்றால் பிக் பாஸ் போட்டியாளர்கள்தான் உலகின் மிகச்சிறந்த நடிகர்களாக இருக்க முடியும். ஆனால் திரைத்துறையில் அவர்கள் அத்தனை சிறந்தவர்கள் இல்லை என்கிற யதார்த்தத்தை கவனியுங்கள்.

Kamal laugh biggboss
 

உண்மையான பாவங்களுடன் வெளிப்படுத்தப்பட்ட காட்சிகளை திறமையாக ஒழுங்குபடுத்துவதின் மூலம் இடம் வலமாகவும், வலம் இடமாகவும் திரித்துக் காட்ட முடியும். தொடர்ச்சி அறுபடாமல் செய்வதுதான் இதிலுள்ள சவால். எடிட்டிங் இதில் முக்கியப் பங்காற்றுகிறது. (கவண் திரைப்படக் காட்சிகள் நினைவுக்கு வருகிறதா?) ஆனால் சினிமா ஞானம் அதிகமுள்ள கமல் இதை மறுக்க அல்லது மழுப்ப முயன்றது, சின்ன உறுத்தல். சில விஷயங்களை காட்டாமலிருப்பதின் மூலமும், சில காட்சிகளை கோடிட்டு அழுத்தம் திருத்தமாக காட்டுவதின் மூலம் பல 'உண்மைகளை' கட்டமைக்க முடியும். 

'காமிரா பொய் சொல்லாது. அது சிந்தனைக் கருவியல்ல' என்று அவர் சொன்னது மட்டுமே அடிப்படையான உண்மையாக இருக்க முடியும். 

desk
 

கேமராவின் பிரக்ஞை இல்லாமலிருப்பதே ஒரு நடிகனுக்கான அடிப்படை தகுதி என கமல் சொல்லியது முக்கியமான விஷயம். எந்தவொரு சினிமாவிலும் ஒரு துளி நேரமாவது நடிகர்கள் காமிராவைப் பார்த்து, அது எடிட்டிங்கிலும் தப்பி வெளியே வந்து விட்டால், சாதத்தில் கல்லைக் கடித்தது போல பார்வையாளர்களிடம் சட்டென்று ஒரு விலகலை ஏற்படுத்தும். 

***

 

'வெளியே வந்தா கையைக் காலை உடைச்சுடுவேன்'னுலாம் சொல்லாதீங்க.. நான் இங்க இருக்கேன்' என்று காயத்ரியை மறைமுகமாக அவர் குறிப்பிட்டது 'நச்'. ஆனால் அந்த வசனம் காயத்ரியை இடித்துரைக்கவா, அல்லது சமகால அரசியல் பூசல் தொடர்பான வசனமா என்பது குழப்பம். 'பிக் பாஸ்' சூழலையும் 'தமிழக அமைச்சர்கள் - கமல் மோதல்' என்கிற அரங்கிற்கு வெளியேயுள்ள சூழலையும் இணைத்து நையாண்டி செய்ததில் கமலின் சமயோசிதம் பாராட்ட வைக்கிறது. 

ஆனால் - 'அவங்க எல்லாம் தேவையில்லை (ரசிகர்கள்). நான் ஒருத்தனே போதும்' என்று வெளியே அறிக்கை விட்ட அதே சவடாலை அரங்கின் உள்ளேயும் வைத்தார். ஒரு விளி கேட்கிறது! 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/television/97340-as-per-oviya-there-is-no-truth-in-julies-apology-is-it-so.html

Link to comment
Share on other sites

ரைசாவின் சீக்ரெட்... பிந்து மாதவியின் டார்கெட்... சமாளிப்பாரா ஓவியா?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 35) #BiggBossTamilUpdate

 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

bigg boss tamil update

 

35-ம் நாள் பெரும்பாலும் விளையாட்டும் கலகலப்புமாக நடந்தது. அப்படியே முடிந்தால் என்ன சுவாரசியம்? எனவே ஒரு சர்ச்சையும் ஓர் இனிய ஆச்சரியமும் கூடவே நிகழ்ந்தது.

நேற்றைய, ஜூலியின் மன்னிப்பில் உண்மையில்லை என்கிறார் ஓவியா. உண்மையா? அத்தியாயத்தின் இறுதியில் ஜூலி மீதான உங்கள் அபிமானம் பற்றிய கேள்விக்கு வாசகர்களின் பெரும்பான்மை பதிலை கணிக்க முடியும். 

ஜூலி சர்வே

இந்த வாரம் வெளியேற்றம் கிடையாது என்கிற ரகசியம் பார்வையாளர்களுக்குத் தெரிந்தாலும் போட்டியாளர்களுக்குத் தெரியாது. என்றாலும்  'வெளியேற்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவரைக் காப்பாற்ற முடியுமென்றால் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்? என்று போட்டியாளர்களை நோக்கி கேட்ட கமலின் குறும்புத்தனமான கேள்வியோடு நேற்றைய நிகழ்ச்சி முடிந்தது. 

இப்படி அவர்களைச் சொல்ல வைப்பதன் மூலம், யார் யாரை வெறுக்கிறார்கள் அல்லது பிரிய மறுக்கிறார்கள் என்பது மறைமுகவாவது வெளிப்பட்டு விடும். ஆண்டவர் கடுந்தமிழில்  'ட்வீட்' போட்டுத்தான் மக்களை மண்டையைப் பிய்த்துக் கொள்ள வைக்கிறார் என்றால் பிக் பாஸ் வீட்டிலும் தன்னுடைய திருவிளையாடலை நிகழ்த்த தவறவில்லை. 

kamal
 

போட்டியாளர்கள் கூடிப் பேசி ஒரு முடிவிற்கு வந்தனர். அவர்கள் காப்பாற்ற முடிவு செய்தது 'ஆரவ்'. சக்திற்கு மட்டும் ஆரவ் மீது துவக்கத்தில் இருந்தே ஓரு மனக்குறை இருக்கிறது. 'ஐந்து விநாடி வீடியோ விஷயத்தில் ஜூலி பொய் சொன்னாள்' என்பதை அப்போது அருகிலிருந்த ஆரவ் ஏன் நண்பனாக நினைத்துக் கூட தன்னிடம் சொல்லவில்லை, குட்டு வெளிப்பட்ட போது ஒட்டுமொத்த குடும்பமும் தலைகுனிய வேண்டியிருந்ததே' என்று வருந்துகிறார். 

இதை விடவும் ஒரு உட்டாலக்கடியான வருத்தம் இருக்க முடியுமா என தெரியவில்லை. ஏனெனில் 'ஜூலி நடிக்கிறாள், பொய் சொல்கிறார்' என்பது துவக்க நாள் முதலே சொல்லப்பட்டு வந்திருக்கிற விஷயம். 'Fake' என்று ஆரத்தியும் ஜூலி மீது அழுத்தமான முத்திரையை பதித்து போய் விட்டார். எனில் 'ஜூலி பொய் சொல்லியிருக்கக்கூடும்'' என்பது ஆரவ் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? புரிந்தாற் போல் தலையை ஆட்டும் சக்திக்கு இது புரியாமலிருப்பதில் ஆச்சரியமில்லை. 
 

காயத்ரிக்குள் இருக்கும் 'சந்திரமுகி' அவ்வப்போது வெளியே வருவதும் மறைவதுமாய் இருக்கிறார். 

***
பெண் வேடத்தை இன்னமும் கலைக்காமல் சிநேகன் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தார். ஆரவ் அவரை விளையாட்டாக கட்டிப் பிடிக்கப் போக பதறிக் கொண்டு விலகினார். 'இப்பவாவது பொம்பளையா இருக்கற கஷ்டம் தெரியுதா?' என்று ரைசா விளையாட்டாக கேட்டாலும் அர்த்தமுள்ள கமென்ட் அது. பெண்களின் விருப்பமின்றி அவர்களைத் தொட்டுப் பேசுவது அவர்களுக்கு சங்கடமளிக்கும் என்பது பெண் வேடமிட்ட பிறகாவது சிநேகனுக்கு புரிந்திருக்குமா என தெரியவில்லை. ஏனேனில் பிற்பாடு ஒரு சங்கடத்தையொட்டி ரைசா அழும் போது, அணைத்து ஆறுதல் சொல்ல புயல் வேகத்தில் சென்றவர் நமது 'ஆறுதல் நாயகன்தான்'

BiggBossTamil



முன்பெல்லாம் ''இவரைப் பற்றி இவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்' என்று பிக் பாஸ் நிகழ்ச்சியாளர்கள் சரியாக போட்டுக் கொடுப்பார்கள்... ச்சே.. மன்னிக்கவும், சப்-டைட்டில் போட்டு கச்சிதமாக விளக்குவார்கள். ஆனால் இப்போது தொலைக்காட்சியை விட்டு சற்று விலகி திரும்பினாலும், 'யாரைப் பற்றி புறம் பேசுகிறார்கள்' என்று தெரியாமல் குழம்ப வேண்டியிருக்கிறது. இந்த நோக்கில் பிக் பாஸ் தம் சப் -டைட்டில் சேவையைத் தொடர்வது நல்லது. 

***
'பழைய தலைமுறையை விட இளைய தலைமுறையை பகைமையை தக்க வைத்துக் கொள்ளாமல் எளிதில் புறந்தள்ளி விடுவது மகிழ்ச்சி' என்று கமல் சொன்னது ஒரு நோக்கில் உண்மை. ஆனால் இன்னொரு பக்க நடைமுறை யதார்த்தம் என்னவெனில், அப்படி சண்டை போட்டு பகைமையைத் தக்க வைத்துக் கொள்ளும் அளவிற்கு சமகால வாழ்வில் நேரம் இருக்கிறதா, என்ன? அத்தனை பரபரப்பான வாழ்க்கை. 

பாருங்கள்..  நேரமின்மை காரணமாகத்தான் வேறு எவர்களோ சண்டையிட்டுக் கொள்வதை தொலைக்காட்சியில் ஆவலாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்! நம்முடைய சார்பில் வேறு எவரோ சண்டையிட, உணர்ச்சிவசப்பட, அழ.. என்று 'வாடிக்கையாளர்கள் சேவை மையங்கள் பல்வேறு விதங்களில் பெருகி விட்டன'. இனி நம் உறவினர்களின் மரணத்திற்கு கூட நாம் அழ வேண்டாம். அதற்கும் ஒரு சேவை வணிகம் வந்து விடும். நாம் சும்மாயிருந்தால் போதும்.  வாழ்க உலகமயமாக்கம். 

BiggBossTamil



'நான் உங்களைக் காப்பாற்றுகிறேன்' என்று ஓவியாவை நோக்கி கமல் கூறியவுடன் அங்கிருந்த பார்வையாளர்களிடமிருந்து மகிழ்ச்சி கரவொலி. ஓவியாவிற்கு கிடைக்கும் அதீதமான வரவேற்பை கமல் அத்தனை விரும்பவில்லையோ என்று தோன்றுகிறது. அதனால்தான் அவ்வப்போது ஓவியாவை தலையில் தட்டி வைக்கிறார். ஆனால், ரொம்பவும் தட்ட முடியாது, பார்வையாளர்களின் எதிர்ப்பு சேரும். எனவே 'காப்பாற்றுகிறேன்'என்று சொல்லி ஓவியாவின் வரவேற்பை தானும் சற்று எடுத்துக் கொண்டார். 

மக்களிடையே ஓவியாவிற்கு இருக்கும் பிரமாண்டமான அன்பையும் வரவேற்பையும் ஓவியாவால் சற்று உணர முடிகிறது. அதுவே அவருக்குத் தன்னம்பிக்கையையும் (கமலின் மொழியில் திமிரையும்) மகிழ்ச்சியையும் அளிக்கிறது. 

அவர் வெளியே வரும் போது இத்தனை புகழையும் தாங்கிக் கொள்ளும் முதிர்ச்சியோடு இருக்கிறாரா என்று கவலையாக இருக்கிறது. ஏனெனில் இந்தப் புகழ் மாலைகள் தற்காலிகம்தான். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ஓவியா புரட்சிப்படையெல்லாம் நிச்சயம் கலைந்து விடும். இந்தப் புகழ் தற்காலிகமானது என்று ஓவியா புரிந்து கொண்டால் நல்லது. ஆனால் அதன் கணத்தை தலையில் ஏற்றிக் கொண்டால் சிக்கல்தான். அப்படி ஏற்றிக் கொண்டு முதல்வர் கனவோடு அரசியலில் குதித்த பலர் கவிழ்ந்து விழுந்த பரிதாபத்தையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

***

பிக் பாஸ் போட்டியாளர்களை ஒரு விஷயத்தில் புரிந்து கொள்ள முடியவில்லை. வீட்டினுள் இருக்கும் போது 'வெளியேற வேண்டும்'' என்று புலம்புகிறார்கள். ஆனால் நாமினேஷில் பெயர் வந்து விட்டால் அதற்கும் பதட்டம் அடைகிறார்கள். இன்று வெளியேற முடியாமல் போனதற்கு ரைசா வருத்தப்பட்டது போல்தான் தோன்றியது. ஆனால் அது உண்மையானதா?

 

raisa




தற்கொலையின் நுனியில் உயிர்பிழைத்த பலர் பிற்பாடு பெரிய சாதனைகளுக்கு காரணமாயிருக்கிறார்கள். மறு சந்தர்ப்பம் என்பது மிக அரிய வாய்ப்பு என்றார் கமல். இதில் நமக்கும் கூட பாடம் உள்ளது. குறிப்பாக தற்கொலையில் இருந்து காப்பாற்றப்பட்டவர்கள், ஏதோவொரு முக்கியமான காரணத்திற்காகத்தான் இன்னொரு வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது என்கிற எண்ணத்தை விதைத்துக் கொண்டு ஆக்கப்பூர்வமான காரியங்களில் ஈடுபடலாம். 

வெளியேற்றத்திலிருந்து ஜூலி காப்பாற்றப்பட்ட போது சபையில் பலத்த மெளனம். கடந்த முறை நமீதா காப்பாற்றப்பட்டதாக எண்ணிய போது காயத்ரியும் ஜுலியும் பயங்கரமாக எகிறிக் குதித்தார்கள். ஆனால் ஜூலிக்கு இந்த வரவேற்பு இல்லை. அவரிடம் மற்றவர்கள் ஜாலியாகப் பேசினாலும் உள்ளுக்குள் பயங்கரமாக வெறுக்கிறார்கள் என்று தோன்றுகிறது. 'தாம் நடிகர்கள்' என்கிற உயர்வு மனப்பான்மை பிரச்னையாகவும் இருக்கலாம். 'அக்கா.. அண்ணா' என்று உருகும் ஜூலிக்கும் இதில் பாடம் உள்ளது. தான் காப்பாற்றப்பட்டு விட்டோம் என்று தெரிந்ததும், ஜூலி பேசிய வார்த்தைகளுக்கும் அங்கு அப்படியொரு மவுனம்.

***

பிறகு சில விளையாட்டுக்கள் துவங்கின. மேம்போக்காக பார்க்கும் போது இது விளையாட்டு போலத் தோன்றினாலும் அர்த்தம் பொதிந்த, ஆபத்தான விளையாட்டு. மிக கவனமாக விளையாட வேண்டியது. மற்றவர்களாக நடிக்க நேரும் போது அவர்களைப் பற்றிய உண்மையான எண்ணங்கள் தன்னிச்சையாக நமக்குள் இருந்து வெளியே வந்து விடும். இங்கும் அது போன்ற ஜாலியான விபத்துக்கள் நடந்தன.

சீட்டில் யார் பெயர் வருகிறதோ அவர்களைப் போல் நடித்துக் காட்ட வேண்டும் என்பது விளையாட்டு. சக்தியைப் போல் நடிக்க ஓவியாவிற்கு வரவில்லை. 'நீங்க நீங்களாகவே இருப்பதால்தான் நடிக்க முடியவில்லையோ?' என்று மிக அழகாக வாழைப்பழ ஊசியை செருகினார். மனிதர் இந்த விஷயங்களில் விற்பன்னராக இருக்கிறார். 

vaiyapuri BIggBossTamil



ஜூலியாக நடித்து ரகளை செய்து விட்டார் சிநேகன். அற்புதம். இங்கு ஒரு ரகசியம் என்னவெனில், எவர் தங்களின் உணர்ச்சிகளை அதிகமாக வெளிப்படுத்துகிறார்களோ அவர்களைப் போல் பாவனை செய்வது எளிது. 

கமல் முன்பு அமர்ந்திருக்கும் போதும் சரி, வீட்டினுள்ளும் சரி, ஜூலியின் விதம் விதமான முகபாவங்களைக் கவனிப்பது சுவாரசியமான அனுபவமாக இருக்கிறது. இனி தொலைக்காட்சி தொடர்களில் அவரை சிறந்த வில்லி பாத்திரத்தில் காண முடியும் என நினைக்கிறேன். (கொடூரமான நாத்தனார்). ஆனால், ஜூலியோ ஹீரோயின் ஆகிவிட்டார் என கோலிவுட் செய்திகள் சொல்கிறது.

collagemime_10138.jpg



காயத்ரியைப் போல் வையாபுரி நடித்துக் காண்பித்ததும் அழகு. 

***

மற்றவர்களின் உருவப்படங்கள் அச்சிட்ட பனியன்கள் தரப்பட்டன. தன்னுடைய பனியனில் எவருடைய உருவம் இருக்கிறதோ அந்த நபராகவே - தற்காலிகமாக - இருக்க வேண்டும் என்பது இன்னொரு விளையாட்டு. ஓவியாவைப் போலவே சிநேகன் பேசியது நல்ல நகைச்சுவை. கமலே வாய் விட்டு சிரித்து விட்டார். போலவே காயத்ரியைப் போல ஆரவ் பேசியதும். 

பிறகு வந்த இடைவேளைக்குள் ஒரு பரபரப்பான காட்சி நடந்தேறியது. 'ரைசா'வாக நடித்த ஓவியா பேசும் போது ரைசாவின் ஆண் நண்பர் பற்றிய தகவலை பொதுவில் கூறி விட்டார். இதற்காக ரைசாவிற்கு பயங்கர வருத்தமும் அழுகையும்.

shirt BiggBossTamil
 

இந்த விஷயத்தை சற்று நிதானமாகப் பார்க்கலாம். 'ரைசா'வின் உருவம் தாங்கிய பனியனை அணிந்து அவரைப் போல் பேசவேண்டிய task ஓவியாவிற்கு தரப்பட்டிருந்தாலும், இந்த விளையாட்டிற்குள்ளும்  கூட சில தார்மீகமான எல்லைகளும், கட்டுப்பாடுகளும் உள்ளன. ஏதோ ஒரு உரையாடலில், ரைசா முன்னர் தன்னிடம் பகிர்ந்து கொண்டு ஓர் அந்தரங்கமான தகவலை, ஓவியா பொதுவில் பகிர்ந்தது நிச்சயம் முறையற்றதாகும். 'கார்ப்பெட்' சர்ச்சைக்குப் பிறகு ஓவியாவின் சறுக்கல் நிகழ்வது இரண்டாவது முறை. 

ஏதோவொரு மனநிலையில் ஒருவர் நம்மிடம் பகிர்ந்து கொண்ட அந்தரங்கமான தகவல்களை எந்தவொரு சூழலிலும், ரகசியம் காப்பதே முறை. இதுவே அடிப்படையான நாகரிகம். இந்த தவறைச் செய்த ஓவியா,..அதற்காக வருந்தவில்லை என்பது கூடுதல் வருத்தம். இது task தானே என்று நியாயப்படுத்த முடியாது. 
 

இன்னொரு பக்கம், ஓவியா + ஆரவ் வை வைத்து இதர போட்டியாளர்கள் கிண்டலடித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். இதுவும் அவர்களின் அந்தரங்கமான விஷயம்தானே? 


***
 

புதிய போட்டியாளராக பிந்து மாதவியின் வருகை நிகழ்ந்தது 'பிக் பாஸ்' செய்த ஒரு நல்ல யுக்தி. இல்லையெனில் மீண்டும் மீண்டும் இந்தப் போட்டியாளர்களையே பார்ப்பது பார்வையாளர்களுக்கு சலிப்பையூட்டி விடும்.

பிந்து மாதவிக்கு உள்ள வசதி என்னவெனில், இந்த விளையாட்டின் தன்மையைப் பற்றியும் இதர போட்டியாளர்களைப் பற்றியும் அவருக்கு ஏற்கெனவே நன்றாக தெரிந்திருக்கும். அதற்கேற்ப தன்னுடைய வியூகங்களை அவரால் அமைத்துக் கொள்ள முடியும். அதே சமயத்தில் புதிய சூழலில் உள்ளே தன்னைப் பொருத்திக் கொள்வதற்கான சவாலும் அவர் முன் உள்ளது. 

Bindhu Madhavi
 

இனி ஓவியா புரட்சிப்படையெல்லாம் என்ன ஆகும், கலைந்து மாதவியின் பக்கம் சாய்ந்து விடுமா, அல்லது கட்சி இரண்டாக உடைந்து தனித்தனி கொடியை உருவாக்கிக் கொள்வார்களா, ஓபிஎஸ், எடப்பாடிகள் தோன்றுவார்களா என்பது வரும் வாரங்களில் தெரியவரும். 
 

ஆனால் ஒன்று, ஓவியாவிற்கு இத்தனை வரவேற்பு கிடைத்தது அவரது புற அழகினால் அல்ல. அவர் அத்தனை புகழ் பெற்ற நடிகையும் அல்ல. பிக் பாஸின் நுழைவிற்குப் பின்னரே அவருக்கு இத்தனை புகழ் கிடைத்துள்ளது. இந்தப் புகழின் அசலான விஸ்தீரணம் அவருக்கே தெரியாது என்பதுதான் இதிலுள்ள முரண்நகை. அவருடைய அக அழகுதான் இதற்கு அடிப்படையான காரணம். ஒரு குழந்தையின் குதூகலத்துடனும் உண்மையுடனும் அவர் இருப்பதுதான் கோடிக்கணக்கான பார்வையாளர்களின் அன்பை பெற்றுத் தந்திருக்கிறது. இதில் ஆண்களின் சதவீதம் கூடுதலானது என்பது வெளிப்படை.
 

எனவே ஓவியா புரட்சிப்படை இந்தப் புயல் காற்றில் தடுமாறி வீழாமல் உறுதியாக நிற்கும் என நம்புகிறேன். இந்த உண்மை பிந்து மாதவிக்கும் தெரிகிறது. 'உங்களுடைய கடுமையான போட்டியாளராக யார் இருப்பார்' என்ற கேள்விக்கு சிறிதும் தயங்காமல் 'ஓவியா' என்றார். அது மட்டுமல்ல, திரைத்துறையில் ஓர் இடைவெளியில் இழந்துள்ள புகழை மீட்டுக் கொள்வதற்காகவே இந்த நிகழ்ச்சிக்குள் வந்துள்ளேன்' என்று வெளிப்படையாகவே கூறியதில் 'ஓவியாத்தனம்' தெரிகிறது. ஓவியாவைப் போலவே இவரும் மக்களின் வரவேற்பை பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 

'வெளியே நிகழ்ந்த எதையும் உள்ளே சொல்லக்கூடாது' என்கிற கறாரான விதியோடு பிந்து மாதவி உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பெண்களின் எண்ணிக்கை கூடியிருப்பதால் இனி அதிக சுவாரசியமான சர்ச்சைகளை எதிர்பார்க்கலாம். 
 

 

இப்போது எழுந்திருக்கும் மிக முக்கியமான சந்தேகம், 'ஆரவ் இனி எந்தப் பக்கம் சாய்வார்?' என்பதுதான். மனிதருக்கு ஜாக்பாட்தான். 

http://www.vikatan.com/cinema/tamil-cinema/television/97390-will-oviya-overcome-the-hurdles-from-raiza-and-bindhu-madhavi.html

Link to comment
Share on other sites

மனநலம் பிசகியவர் ஓவியாவா... பிந்து மாதவி ராஜதந்திரியா?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 36) #BiggBossTamilUpdate

 

 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

bigg boss tamil update

 

35-ம் நாளின் தொடர்ச்சி இன்னமும் முடியவில்லை. பிந்து மாதவி விருந்தினரா இல்லையா, என்று தெரியாமல் போட்டியாளர்கள் தலையைப் பிய்த்துக்கொண்டார்கள். வையாபுரி வேறு, 'எப்போது கிளம்புவீர்கள்' என்று  கேட்டுக்கொண்டேயிருந்தார். இது, விளையாட்டாக இருந்தாலும் உண்மையிலேயே தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு மெள்ள குறைந்துகொண்டுவருவதை நடைமுறையில் கவனிக்கிறோம். எந்த விருந்தினராவது நம் வீட்டுக்கு வந்தால், ஒரு வேளைக்கு மேல் அவர் எப்போது கிளம்புவார் என்று தவிக்கத் தொடங்கிவிடுகிறோம். 

நேற்றைய, ரைசாவின் சீக்ரெட்... பிந்து மாதவியின் டார்கெட்... சமாளிப்பாரா ஓவியா?!  அத்தியாயத்தின் இறுதியில் பிந்து மாதவியின் வருகை, ஓவியாவைப் பாதிக்குமா என்பது பற்றிய கேள்விக்கு வாசகர்களின் பெரும்பான்மை பதில், எப்போதும் போல, ஓவியா பக்கமே இருந்தது. 

VIkatan BiggBoss Survey

என் நண்பர் ஒருவர் இருக்கிறார். நான் அவருடைய வீட்டுக்குள் நுழைந்த அடுத்த கணமே, அவர் மகளிடம், 'அங்கிளுக்கு டாட்டா சொல்லு' என்று கிளம்பச் சொல்கிற செய்தியை மறைமுகமாகச் சொல்லிவிடுவார். அவர் விளையாட்டுக்காகத்தான் செய்கிறார் என்றாலும் நிலைமை உண்மையிலேயே அப்படித்தான் ஆகிவிடும்போலிருக்கிறது. 

பிந்து மாதவி

எண்களிடப்பட்ட அட்டையை, பிந்து மாதவி ஒவ்வொரு போட்டியாளருக்கும் மாட்டினார். ஓவியாவுக்கு எண்1. இதன் அர்த்தம் புரியாமல் காயத்ரியும் சக்தியும் தங்களின் சதியாலோசனையின்போது தலையைப் பிய்த்துக்கொண்டார்கள். "அஞ்சும் மூணும் எட்டு. அத்தோடு அஞ்சு கூட்டி மூணு கழிச்சா... என்று கருணாஸ் 'வசூல்ராஜா' திரைப்படத்தில் விளையாடும் நியூமராலஜி விளையாட்டு மாதிரி சக்தி இதற்கு விளக்கமெல்லாம் அளித்து, 'ஏழரையைக்' கூட்டினார். 
 

சேலை கட்டும் போட்டியில், கணேஷின் கவர்ச்சியையெல்லாம் பார்க்கவேண்டியிருந்தது. என்ன கொடுமை! இதில் தோற்றுப்போன சிநேகன், 'என்னைக் காப்பாத்த எந்த ஆம்பளையும் இல்லையா?' என்று விளையாட்டாகக் கதறிக்கொண்டே குளத்தில் விழுந்தார். போன வாரமும் 'சண்முகி' வேடம். இந்த வாரம் சேலை கட்டும் போட்டி. நாளைக்கும் பார்த்தால் ஆரவ் சிநேகனைக் கொஞ்சிக்கொண்டிருக்கும் ஒரு காட்சி தென்படுகிறது. . போட்டி முடிவதற்குள் சிநேகனை 'சிநேகிதியாக' மாற்றி அனுப்பிவிடுவார்களோ என்று பீதியாக இருக்கிறது. மனிதர் இதுநாள் வரை பெண்களிடம் செய்த 'கட்டிப்பிடி வைத்தியத்துக்கு' இத்தனை பெரிய தண்டனையா? பாவம்.

ஜூலி


பத்மினி - வைஜெயந்தி மாலா போட்டி நடனப் பாடல் ரேஞ்சுக்கு ஜூலி vs ஓவியா நடனப்போட்டி நடந்தது. 'எப்படியாவது ஜெயிக்க வேண்டும்' என்கிற வெறியோடு 'குத்தி' ஆடினார் ஜூலி. கீழே விழுந்து எழுந்தாலும் அவருக்கே கோப்பை கிடைத்தது. 'நான்தான் அதிகம் அடிவாங்கியிருக்கேன். கிண்ணி எனக்குத்தான்' என்கிற அளவில் ஒரு அபத்த வெற்றி.

***

 

நாடகம் நடிக்கும்போது, சக்தி அங்கு ஆதிக்கம் செலுத்திவிடுகிறாராம். இதர ஆண் போட்டியாளர்கள் சலித்துக்கொள்கிறார்கள். ஏற்கெனவே சக்தி பேசும் போதெல்லாம், 'ஒரு ஆக்டரா நான் என்ன சொல்றன்னா'  என்று ஆரம்பித்து நம்மைக் கொல்கிறார். கமலுக்கே புரியாத முகபாவத்தையெல்லாம் தந்து, அவரையே குழப்பிவிடுகிறார். சக்தி எந்தத் திரைப்படத்தில் 'நடித்தார்' என்கிற விஷயமே தெரியாமல் இன்னமும் மர்மமாக இருக்கும்போது, அவர் நடிப்பில் ஆதிக்கம் செய்கிறார் என்பதெல்லாம் புகாரா இல்லை வதந்தியா என்கிற கேள்வி எழுகிறது.  பி.வாசு வேறு இப்போதே ஒரு திரைக்கதையை எழுதித் தயாராக இருப்பாரோ என்கிற யூகம் வேறு பீதியைக் கிளப்புகிறது. 

நேற்றைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தபடி, தனது அந்தரங்கமான தகவலை, கமல் முன்பு பொதுச்சபையில் ஓவியா சொன்னதுதான் ரைசாவின் வருத்தத்துக்குக் காரணமாக இருந்திருக்கிறது. இதை, கணேஷிடம் பஞ்சாயத்து வைத்து மறுபடியும் புலம்பிக் கொண்டிருந்தார். ஓவியா இன்னமும் அதற்கு வருத்தம் தெரிவிக்காதது வேறு ரைசாவுக்கு கூடுதல் எரிச்சல். கடந்த வாரத்தில், ஜூலி வருத்தம் தெரிவிக்காத விஷயம் இப்போது ஓவியா பக்கம் சாய்ந்திருக்கிறது. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பிக் பாஸ்? சந்தோஷம்தானே, பட்டையைக் கிளப்புங்கள்.

***
36-ம் நாள், 


ஓவியா

'அவன் இவன்' திரைப்படத்தின் நடன இசையோடு ரகளையாகத் தொடங்கியது. புதிய போட்டியாளர் பிந்து மாதவியின் நடனம், ரசிக்கத் தகுந்ததாய் இருந்தது. (ஓவியா பேரவை, நோ டென்ஷன் ப்ளீஸ்). ஓவியாவின் நடனமும் வழக்கம்போல ரகளை. காயத்ரி வழக்கம் போல குரூப் டான்சர். பாவம். 

ஒரு திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியில், தூக்கு மாட்டிக்கொண்டதாக நாடகம் போடும் செந்தில், 'அவா.. அவா.. ஹே.. அவா...' என்று நின்றுகொண்டே நடனம் ஆடுவார். ஜூலி அமர்ந்துகொண்டே ஆடியது செந்திலை விடவும் காமெடியாக இருந்தது. 
 

அடுத்து வந்தது ஒரு வில்லங்கமான கட்டம்.

காயத்ரி
 

இதர உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கான வாய்ப்பை, போட்டிக்கு வந்தவுடனேயே பிந்து மாதவிக்குத் தந்தது போங்காட்டம். என்றாலும் அதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம், அவர் காயத்ரியை நாமினேஷன் செய்ததுதான். செம ஜாலியாக இருந்தது. காயத்ரியையும் சிநேகனையும் பொதுவாக எவரும் வெளியேற்றத்துக்காக பரிந்துரைசெய்வதில்லை. அவர்கள், சமையல் நன்றாக செய்கிறார்கள் என்பது ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம். 'அம்மா' உணவகத்துக்காக அம்மாவையே மறுபடியும் தேர்வுசெய்த சாப்பாட்டுப் பிரியர்கள்தானே தமிழர்கள்!
 

காயத்ரியைத் தேர்வுசெய்தது பிந்து மாதவியின் நல்ல யுக்தி. காயத்ரியின் மீது வெறுப்புள்ள அத்தனை பார்வையாளர்களும் இந்தக் காரணத்தினாலேயே பிந்து மாதவியைக் கொண்டாடத் துவங்குவார்கள். இன்னொரு தேர்வாக, 'ஜூலி'யைத் தேர்வுசெய்து 'தான் ஒரு ராஜதந்திரி' என்பதை நிரூபித்தார் பிந்து மாதவி.  ஜூலியின் வெறுப்பாளர்களும் இணைந்து பிந்துவை கொண்டாடத் துவங்குவார்கள். 
 

ஆரவ், ஓவியாவை நாமினேட் செய்ததுதான் மிகப் பெரிய அதிர்ச்சி. கூடவே இருந்து நன்றாகப் பேசிக்கொண்டு, அவளைத் திருத்துவதாகச் சொல்லிக்கொண்டு இப்படிச் செய்தது துரோகம். அவரைப் போலவே, ஓவியாவும் பதிலுக்கு ஆரவ்வை நாமினேட் செய்து அதிர்ச்சி தந்தார். அதற்குக் காரணமாக அவர் கூறியது, 'am selfish'. அதிலும் ஓவியா நாமினேட் செய்யும்போது சொன்ன ஆரவ் , bcoz I am selfish.  ரைசா, bcoz she is selfish. ஓவியாவின் தத்துவப் பட்டியல் புதிதிது. இது ஒரு பக்கம் நேர்மையான அறிவிப்பாக இருந்தாலும் இதை எப்படிப் புரிந்து கொள்வது? போட்டியில் தான் வெற்றிபெற வேண்டும் என்கிற சுயநலமா? ஆரவ் வீட்டுக்குள்ளே இருந்தால், அவரை எவராவது அபகரித்துக்கொள்வார்கள், எனவே வெளியேற்றுவோம் என்கிற காதலுணர்வா?

காயத்ரி, சக்தி, ரைசா, ஜூலி போன்றவர்கள், ஓவியாவையே தேர்வுசெய்வார்கள். எத்தனை முறை நாமினேட் ஆனாலும், அவர்  மக்களின் ஆதரவோடு திரும்பத் திரும்ப வெற்றிபெற்றுவிடுகிறார் என்கிற விஷயம், இவர்களுக்குக் கடுப்பாக இருக்கிறது. அவர்கள் மட்டுமல்ல, அனைத்துப் போட்டியாளர்களுக்குமே இந்த எரிச்சல் உள்ளுக்குள் இருக்கிறது. அதனால்தான், ஓவியா மறுபடியும் வெளியேற்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 
 

ஆகவே, ஓவியா பேரவையே... ராணுவப்  படைகளே.... போருக்கான நேரம் வந்துவிட்டது. முரசைக் கொட்டுங்கள். தாரை, தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும். 

ஓவியா

இதைப் போலவே ஜூலியும் காப்பாற்றப்பட வேண்டும். அவர் இல்லாவிட்டால், ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்காது. இது மட்டுமல்ல, அவர் வெளியே வந்துவிட்டால், ஏதாவது திரைப்படத்துக்கு நாயகியாகும் ஆபத்தும் இருக்கிறதாம். ஆகவே மக்களே... ஜூலி வெளியே வராமல் பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு. 



***
 

கணேஷ் முட்டைகளை எடுத்துத் தின்றுவிடுவதை மறைமுகமாக கிண்டலடித்துக் காட்டினார் வையாபுரி. கேமரா நகர்ந்து காட்டியபோது 'நான் கடவுள்' ஆர்யா மாதிரி யோகநிலையில் அமர்ந்திருந்தார் கணேஷ். வையாபுரி இப்படியே வெறுப்பேற்றிக்கொண்டிருந்தால், ஒருநாள்  கணேஷ் அகோரியாக மாறி, வையாபுரியின்  குரல்வளையைக் கடித்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. உணர்ச்சிகளை அதிகம் கட்டுப்படுத்திக்கொண்டிருப்பவர்களிடம்தான் அதிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

'அவ ஒரு பச்ச மண்ணு ப்ரோ' என்று ஓவியாவைப் பற்றி ஆரவ்விடம் சொல்லிக்கொண்டிருந்தார் கணேஷ். சமீபத்திய எபிஸோடுகளில்தான் கணேஷின் குரலை அதிகம் கேட்க முடிகிறது. இதுநாள் வரை கேமராவின் பார்வையில் படாமல் எங்கெங்கோ ஒளிந்துகொண்டிருந்தார். 'inhumane' என்று ஓவியாவைப் பற்றி சொல்லிவிட்டு, மறுநாளே 'அவ குழந்தை' என்று எப்படி கணேஷால் சொல்ல முடிகிறது என்று தெரியவில்லை. எவரை வேண்டுமானாலும் நம்பலாம், இந்த கணேஷை மட்டும் நம்பவே முடியாது போல.

பிந்து மாதவி
 

ஆரவ், சமயத்தில் புத்திசாலித்தனமாக யோசிக்கிறார். 'அவளுக்கு மக்களோட சப்போர்ட் இருக்கு ப்ரோ... பாருங்க,  அவ எத்தனை முறை நாமினேட் ஆனாலும் மக்கள் திரும்ப உள்ள அனுப்புறாங்க' 

அவருக்கு இப்போதாவது நிதர்சனம் புரிந்தால் சரி. 'அவளைத் திருத்தி சமுதாயத்தில் நல்லபடியா அனுப்பணும்' என்று ஆரவ் சொல்வதெல்லாம் ஓவர். எதற்கும் அவர் வெளியே வரும்போது, ஓவியா பேரவையின் கண்ணில் படாமல் காவல்துறை பாதுகாப்பு தந்து அழைத்துச்செல்வதுதான் அவருக்கு நல்லது. 

 'அவ அன்புக்கு ஏங்கறா ப்ரோ' என்று கணேஷ் சொன்னது மட்டும் மிகச்சரி. அந்த வீட்டில், ஓவியாவிடம் நேரடியாகப் பேசி, அன்பு செலுத்த எவருமில்லை. மிருகங்கள் நிறைந்திருக்கும் வனத்தில் மாட்டிக்கொண்ட குழந்தையின் நிலைமைதான் ஓவியாவுக்கு. 

***
 

'பாட்டுக்குப் பாட்டு' நிகழ்ச்சி நடத்தலாமா? என்று பஞ்சாயத்தைக் கூட்டினார் பிந்து மாதவி. புதுசு அல்லவா, ஆர்வக் கோளாறு. கே.பி. சுந்தராம்பாள் போன்று கணீர் குரலில்  ஜூலி பாட, போட்டி களைகட்டத் தொடங்கியது. 

ஓவியா



"பாரு... இந்த அஞ்சும் உட்கார்ந்து பேசிக்கிட்டிருக்குங்க. இதை வீடியோ எடுத்து வெச்சுக்கணும்... காணக் கிடைக்காத காட்சி' என்பது போல ஆண்கள் அறையிலிருந்து இவர்களைப் பார்த்து கிண்டலடித்துக்கொண்டிருந்தனர். 
 

அவர்கள் சொல்லியது போலவே, கண் பட்டது போல சிறிது நேரத்திலேயே போட்டி நின்றது. 'உள்ளே போகலாம்' என்று காயத்ரி உத்தரவிட, ரைசாவும் ஜூலியும் அடிமைகள் போல பின்னாலேயே சென்றனர். அவர்கள் சென்ற பிறகு, பிந்து மாதவியும் ஓவியாவும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக்கொண்டே குதூகலமாகப் பாடியது கவிதையான கணங்கள். 
 

'இரு பெண்கள் எத்தனை நெருக்கமான தோழிகளாக இருந்தாலும், அவர்களுக்குள் ஒரு மெல்லிய பகைமைக் கோடு ஒட்டிக் கொண்டேயிருக்கும். எப்போது வேண்டுமானாலும் அது வெடிக்கும்' என்று என்னுடைய நண்பர் ஒருவர் சொல்லிக்கொண்டேயிருப்பார். உண்மைதான் போல. ஆண்கள் இவ்வாறல்ல. பிரிக்கவே முடியாத படி நெருக்கமாக இருப்பார்கள். ஆனால், எந்த சர்ச்சையிலாவது பிரிந்துவிட்டால், அது ஏறத்தாழ நிரந்தரம்தான். ஆனால், பெண்கள் கடுமையான சண்டையிட்ட அடுத்த நிமிடமேகூட ஒருவருக்கொருவர் பேன் பார்த்துக்கொள்ளும் நெருக்கத்தை மறுபடியும் உற்பத்திசெய்துகொள்வார்கள். பெண் மனசு.
 

'ஓவியா என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை. அதனால், அவருடன் பேசப்போவதில்லை' என்கிற அறிவிப்பை வெளிட்டார் ரைசா. 'yeah.. true.. true.. you are right.. correct' என்பதைத் தவிர இந்த நிகழ்ச்சியில் அவர் வேறு என்ன பேசிவிடப்போகிறார்? ஓவியாவிடம் மட்டுமல்ல, எவரிடமும் அவர் பேசாமலிருந்தால்கூட எந்த வித்தியாசமும் தெரியப்போவதில்லை. 'நாட்டாமை' திரைப்படத்தில் மிக்சர் தின்று கொண்டேயிருக்கும் ஒரு பாத்திரத்திற்கு நிகரானவர் இவர்.

ரைசா 
 

'காதல் வாராதா, காதல் வாராதா, என் மேல் உனக்கு காதல் வாராதா" என்ற பாடலை ஆரவ்- வை நோக்கி பாடிக்கொண்டேயிருந்தார் ஓவியா. நிகழ்ச்சி முடிவதற்குள், இருவரில் எவராவது ஒருவர் பைத்தியமாகி அலைவார்கள் போலிருக்கிறது. 


***

 

அடுத்து வந்தது ஒரு விளையாட்டு. அந்த வீட்டின் சூழலை கச்சிதமாகப் பிரதிபலிக்கக்கூடியது. அதை, மனநல மருத்துவமனையாக கருதிக்கொண்டு, எவர் எவருக்கு எந்த மாதிரியான சிகிச்சை தர வேண்டும் என்று பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சொல்ல வேண்டும். 
 

இதில், பெரும்பான்மையோர் சுட்டிக்காட்டியது ஓவியாவை. ' bipolar இருப்பதால் ஓவியாவுக்குத்தான் ஷாக் ட்ரீட்மென்ட் தர வேண்டும்' என்று தன் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள முயன்றார் ரைசா. 'இதை நான் சொல்லவில்லை, அவரே சொல்லியதுதான்' என்று ஜாக்கிரதையாகவும் ஒரு வார்த்தை போட்டுவைத்தார். 

ஓவியா
 

இது போன்ற அரிய வாய்ப்பை காயத்ரி தவறவிடுவாரா என்ன, அவரும் தன் பங்கிற்கு ஓவியாவுக்குத்தான் சிகிச்சையளிக்க வேண்டும் என்றார். ஆனால், தனக்கு எதிரான அத்தனை கமென்ட்டுகளையும் எந்தவித முகச்சுளிப்பும் இல்லாமல் புன்னகையுடன் ஓவியா ஏற்றுக் கொண்டார். நல்ல மனநிலையில் உள்ளவர்களிடம் 'பைத்தியம்' என்று சொன்னால் கோபப்பட மாட்டார்கள். தன்னையறிந்தவர்கள் அவர்கள். மாறாக, மனச்சிக்கலும் தாழ்வுமனப்பான்மையும் உள்ளவர்கள்தான் அதீதமாகக் கோபப்படுவார்கள். 
 

விளையாட்டுப் போட்டியில்கூட இப்படி இவர்கள் வன்மத்தைக் கொட்டுவதைப் பார்க்கும்போது, உண்மையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியவர்கள் யார் என்கிற கேள்வி எழுகிறது. 


இந்த நோக்கில்,  'சிகிச்சை தேவைப்படுவது காயத்ரிக்கு' என்று சொல்லி பார்வையாளர்களின் மனதைக் குளிர்வித்தவர், புதிய போட்டியாளர் பிந்து மாதவி. ராஜதந்திரி.

மனநலப் பிரச்சினைகள் என்பது, இவர்கள் விளையாடுவதுபோல கேலியான விஷயமல்ல. இது போன்ற நுண்ணுணர்வில்லாத விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் பிக் பாஸ் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், மனநிலை பிசகியவர்கள், உள்ளே இருப்பவர்களா, போட்டியை நடத்துபவர்களா அல்லது வெளியே பார்த்துக்கொண்டிருப்பவர்களா என்கிற சந்தேகம் வந்துவிடும். 


ஜூலி

***
 

இந்த சிகிச்சை விஷயத்தில், சிநேகன் ஜூலியைப் பற்றி விளையாட்டாக ஏதோ சொல்லிவிட, காயத்ரியை தனிமையில் அழைத்துக் கொண்டு மறுபடியும் கண்ணைக் கசக்கத் துவங்கிவிட்டார் ஜூலி. 'சண்முகியும் சண்முகி அக்காவும் பேசத் துவங்கிட்டாங்க' என்று ஓவியா இதுகுறித்து அடித்த கமென்ட், நகைச்சுவை ஆட்டம்பாம். சிரிப்பு அடங்க சற்று நேரம் ஆனது. 
 

'இந்த வாரம் முழுக்க அமைதியாத்தானே இருந்தேன். ஏன் என்னை நாமினேட் பண்ணாங்க?' என்று செந்தில் மாதிரி முகத்தை அப்பாவித்தனமாக வைத்துக்கொண்டு கேட்டார் ஜூலி. அதற்கு கவுண்டமணி காயத்ரி தந்த விளக்கம், 'நீ தலைவர் ஆனவுடனே பயங்கர பந்தா பண்ணே, அதுதான்.'
 

ஆக.. ஜூலி அமைதியாக இருந்தால்கூட மற்றவர்களை எரிச்சலடையவைப்பதில் திறமைசாலியாக இருக்கிறார். இந்த வாரம் முழுக்கவும் அமைதியாக இருக்கப் போவதாக வேறு அறிவித்திருக்கிறார்.

பூகம்பம் ஒன்று பூவாக இருக்கப் போகிறதாம். இது, இன்னமும் ஆபத்தாயிற்றே... என்னென்ன நடக்கப்போகிறதோ!

http://www.vikatan.com/cinema/tamil-cinema/television/97546-is-oviya-mentally-retarded-is-bindhu-madhavi-diplomat-happenings-of-biggboss-day-36.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

collage2_11108.jpg

 

collage_11144.jpg

ஆக்களுக்கு.... நல்ல  "மப்பு"  போலை கிடக்கு. :unsure: :rolleyes:

Link to comment
Share on other sites

 

‘மிஸ்டர் பிக் பாஸ்... இதெல்லாம் தவிர்க்கலாமே..!' - ஒரு ரசிகனின் ஆதங்கம் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (37-ம் நாள்) #BiggBossTamilUpdate

 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg_Boss_Banner_09028.jpg

பிக்பாஸ் நிச்சயம் தமிழ் சேட்டிலைட் சேனல் கேளிக்கை எல்லையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்ல. ஆனால், இதுநாள் வரை கேலி, கிண்டல் கலாட்டாவும் அற்ப ஈகோ கோபமுமாக இருந்தவரை பிரச்னை இல்லை. ஆனால், நேற்றைய 37-ம் நாளின்  நிகழ்வுகள் சற்றே உறுத்தலாக இருக்கிறது. அது என்னவென்று இறுதியில் பார்ப்போம். இப்போது நேற்று என்ன நடந்தது என்று பார்ப்போம்..! 

‘ஓவியாவை எப்படியெல்லாம் துரத்தலாம்” என்று காயத்ரி தூங்காமலேயே யோசித்துக் கொண்டிருந்தாரோ என்னமோ, திருப்பள்ளியெழுச்சி பாடல் ஒலிப்பதற்கு முன்பே எழுந்து விட்டார். காலைக்கடன்களில் ஒன்றான புறம் பேசுதலை அப்போதே துவங்கி விட்டார். கூட பிந்துமாதவி.

17_Ga_09396.jpg

‘பரணி வெளியேற்றத்தின் போது ஏன் எவருமே தடுக்கவில்லை. வெளியே வந்து குரலாவது தந்திருக்கலாமே?’ என்பது பிந்து மாதவியின் கேள்வி. இது அவருடைய கேள்வி மட்டுமல்ல, பிக் பாஸ் பார்வையாளர்களின் அனைவரின் மனதிலும் இன்னமும் கூட நெருடிக் கொண்டேயிருக்கிற கேள்வி.  

“அவருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமே?’ என்று பிந்துமாதவி கவலையோடு கேட்ட போது ‘என்ன கால் உடைஞ்சிருக்கும். அவ்வளவுதானே’ என்றார் காயத்ரி. ஒரு நாளின் துவக்கத்தைக் கூட இத்தனை வன்மத்துடனும் மனிதத்தனம் துளி கூட இல்லாமலும் ஆரம்பிக்க முடியும் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ‘நீங்கள்தானே தலைவர், தடுத்திருக்கலாமே’ என்கிற லாஜிக்கான கேள்வியை பிந்து மறுபடியும் கேட்க, அப்போதும் திமிராக ‘அவர் என்ன பேபியா?’ என்றார் காயத்ரி. ‘காயூ பேபி’ என்று மற்றவர்கள் அழைக்கும் போது உச்சி குளிர சிரிக்கும் காயத்ரி, பரணியை ‘பேபியா’ என்கிறார். 

ஓவியா கார்ப்பெட்டை இழுத்ததால் ‘ஜூலிக்கு ஏதாவது ஆகியிருக்கும்’ என்கிற போலிப்பதட்டத்துடன் பஞ்சாயத்து வைக்கிற காயத்ரி, பரணியின் நிலைமையை ரத்தம் x தக்காளி சட்னி என்று அலட்சியமாக அணுகுவது அராஜகமானது. 

திருடர்களின் கூட்டத்தில் புகுந்த உளவாளி போலவே தள்ளியிருந்து நாசூக்காக விசாரணை செய்கிறார் பிந்துமாதவி. இதுவரையான காட்சிகளை அவர் ‘வெளியில்’ இருந்து பார்த்தது காரணமாக இருக்கலாம். 

**
காலையில் ஒலித்த பாடலுக்கு ஆரவ், காயத்ரியுடன் இணைந்து ஆடினார். ஓவியாவின் மீது நாமினேஷன் செய்த முதலே அவரிடமிருந்து விலகியிருப்பது தெரிகிறது. பிந்து மாதவியின் நடனமும் அபாரம். 

பிந்து மாதவியின் நடனம்

பிக் பாஸ் வீட்டில் முட்டை பிரச்னை பெரும்பிரச்சனையாக இருக்கிறது. 30 காமிராக்களைக் கொண்டு திருடப்பட்ட வைரத்தைக் கூட கண்டுபிடித்தவர்களால் முட்டை காணாமற் போவதை தடுக்க முடியவில்லை. வையாபுரிதான் இது குறித்து எப்போதுமே ஆக்ரோஷமாக இருக்கிறார். கூடி வாழும் தன்மையை வலியுறுத்தும் இந்த விளையாட்டில் பங்கிட்டு உண்பது ஒரு முக்கியமான விஷயம்தான் என்றாலும் ‘முட்டையைத் தின்று விடுகிறான்’ என்று கணேஷின் மீது அடிக்கடி குறை சொல்லிக் கொண்டேயிருப்பது எரிச்சலாக இருக்கிறது. ஒன்று அவரிடம் நேரடியாக பேசலாம் அல்லது ‘தின்று விட்டுப் போகட்டும்’ என விடலாம். ‘அதிகம் தின்கிறான்' என்று பரணியையும் இப்படித்தான் புறம் பேசிக் கொண்டேயிருந்தார்கள். 

பறவைகள் முட்டையை அடைகாப்பது போல இனி அவரவர்களின் பங்கு முட்டையை தலையணைக்கடியில் வைத்து படுத்துக் கொள்வதுதான் தீர்வாக இருக்கும் போலிருக்கிறது. 

** 

ஓவியா சமைத்தால்தான் சாப்பிடுவேன் என்று இன்னொரு பஞ்சாயத்தைக் கூட்ட முயன்றார் காயத்ரி. ஓவியா சமைக்காமல் சோம்பேறியாகவே இருக்கிறாராம். ‘அவர் பாத்திரம் கழுவும் வேலையைச் செய்தாரே’ என்று கணேஷ் கூறியும் சமாதானம் ஆகவில்லை. பேசாமல் காயத்ரி சாப்பிடாமல் விரதம் இருப்பதே அவர் ஆரோக்கியத்திற்கும் வீட்டின் அமைதிக்கும் நல்லது என தோன்றுகிறது. 

ஆரவ்வின் கழுத்திற்கு ஓவியா மசாஜ் செய்ததைப் பற்றி இன்னொரு பஞ்சாயத்து. ஒருவரைப் பிடிக்காமல் போய் விட்டால் அவர் செய்வது எதுவுமே பிடிக்காது என்கிற தர்க்கம் மறுபடியும் உண்மையாகிறது. கண்ணனை ஒழிப்பதைப் பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிற கம்சனின் கதையாகி விட்டது காயத்ரியுடையது. ஓவியாவை எதிலாவது மாட்டி விட வேண்டும் என்பதில் முனைப்பாக‌ இருக்கிறார். 

‘ஆரவ்வை ஓவியா எப்போதும் தொந்தரவு செய்து கொண்டேயிருக்கிறார்’ என்று பெண்கள் பேசிக் கொண்டார்கள். பெண்களின் ஒழுக்கவியலின் மீதாக பெண்களே அதிகம் புறம் பேசிக் கொள்வது மோசமான உலக நடைமுறை. இதனால்தான் அதிக பிரச்னைகள் உற்பத்தியாகின்றன. 

ஆரவ்வின் காதல் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகருமா என்கிற முக்கியமான பிரச்னையை சிந்தித்துக் கொண்டிருநதார் சிநேகன். ‘ஒருவகையில் ஓவியா genuine ஆக இருக்கிறார்’ என்று சிநேகன் சொல்லியதுதான் அவர் பேசியவைகளில் உருப்படியான விஷயங்களில் ஒன்றாக இருக்கும். ‘ஆரவ் எது கிடைத்தாலும் விடமாட்டான்’ என்று பெருமூச்சுடன் ஆண்கள் குழு பேசிக் கொண்டிருந்தது. 

16_synagen_09488.jpg

**

பிக் பாஸ் ஓர் ஆராய்ச்சி மையமாம். சிலர் தவிர்த்து மற்றவர்களெல்லாம் மனநல நோயாளிகளாம். இப்படியொரு அபத்தமான task. பிக் பாஸ் என்பது அடிப்படையில் ஒரு விளையாட்டு என்றாலும் விளையாட்டிற்கு என்று சில தார்மீகமான எல்லைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. ஹாஸ்டலில் புதிதான சேர்ந்த அப்பாவி இளம் மாணவனை, சீனியர் மாணவர்கள் மிக குரூரமாகவும் அநாகரிகமாகவும் ராகங் செய்வதற்கு இணையான task இது. 

அதிலும் சிநேகனுக்கு தரப்பட்டது மோசமான பாத்திரம். பெண்களின் உடைகளை எடுத்துப் போட்டுக் கொண்டு அவர்களின் தோரணையிலேயே நடந்து கொள்வாராம். திருநங்கைகளின் வாழ்வியல் வலிகளை, பிரச்னைகளை வெளிப்படுத்துவது போல் அமைந்திருந்தாலாவது இதைப் பாராட்டியிருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாக்களில் வருவதைப் போலவே இந்தப் பிரச்சினையை கிண்டலடித்திருக்கிறார்கள். முற்போக்கு உணர்வுள்ளதாக கூறிக் கொள்ளும் சிநேகன் ‘இப்படியொரு பாத்திரத்தை கிண்டலடித்து தன்னால் நடிக்க முடியாது’ என்று பிக் –பாஸிடம் ஆணித்தரமாக சொல்லியிருக்கலாம். அல்லாவிடில் இவர் என்ன போராளி?

இந்த task-ல் ஒவ்வொருவருக்காகவும் தரப்பட்டிருக்கும் பாத்திரங்களின் தன்மையைக் கவனித்தால் அவரவர்களின் குணாதிசயங்களை, பிரச்னைகளை கேலி செய்வது போல கச்சிதமாக திட்டமிடப்பட்டிருக்கிறது. திட்டமிட்ட அவமானப்படுத்துதல் இது. பிக் பாஸ் குடும்பத்தினர் அனைவருமே கூட இது போன்ற கேலிக்கூத்தான போட்டிகளை நாங்கள் விளையாட மாட்டோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் ஒற்றுமை என்பதே மருந்திற்கும் இல்லாமல் அந்தச் சிறிய வீட்டிற்குள்ளேயே ஒவ்வொரு மூலைக்குள்ளும் கூடி கூடி ஒருவரையொருவர் புறம் பேசிக் கொண்டிருக்கும் போது எப்படி ஒற்றுமை வரும்?

சல்லிக் கட்டுப் போராளியாக ஊடகங்களில் புகழ்பெற்று இந்தப் போட்டிக்குள் நுழைந்தவர் ஜூலி என்று அனைவருக்குமே தெரியும். ‘போராளிப் பைத்தியம்’ என்கிற ஒரு அடையாளத்தையும் மூலம் இவர்கள் யாரை இலக்காக்குகிறார்கள், கிண்டலடிக்க முனைகிறார்கள்? 

15_JUly_09460.jpg

கமல்ஹாசன் ‘hallucination’ என்கிற வார்த்தையை இயல்பாக கூறியதற்காக ‘நான் பைத்தியமாக்கா?’ என்று ஓவென்று கதறி பயங்கரமாக சீன் போட்ட ஜூலி, அதுவே task- ஆக தரப்பட்ட போது, அதிலுள்ள கிண்டலின் தீவிரத்தன்மை எதுவுமே புரியாமல் அல்லது புரிந்தாலும் கள்ள மெளனத்துடன் போராளிப் பைத்தியமாக கத்திக் கொண்டிருந்தது ஒருபுறம் காமெடி, இன்னொரு புறம் எரிச்சல். ஒரு செவிலியர் என்கிற முறையில் மனநலம் குன்றியவர்களின் நிலையைப் பற்றியும் அது தொடர்பான வார்த்தைகளின் சரியான பொருள் பற்றியும் அவர் சிறிதாவது அறிந்திருக்க வேண்டும். அப்படியொரு புரிதலே அவரிடம் இல்லை. 

தம்மை எவராவது சிறிது கிண்டல் செய்து விட்டாலும் கும்பலோடு வந்து விடுகிற காயத்ரியும் சிறிதும் சுயமரியாதை இல்லாமல் பைத்தியமாகக் கத்திக் கொண்டிருந்தது எரிச்சல். ‘சாக்லேட் பவுடருக்கா நான் பொய் சொல்வேனா, வேலை செய்வதற்காக மட்டுமே இந்த வீட்டில் சாப்பிடுகிறேன், இல்லையென்றால் சாப்பிட மாட்டேன்’ என்றெல்லாம் வேடம் போட்ட காயத்ரிக்காவது இந்த விளையாட்டின் அபத்தம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். 

இப்படி சுயமரியாதையே இல்லாம் பிக் பாஸின் கட்டளைப்படி எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறவர்களின் மத்தியில் வழக்கம் போல் தனித்தன்மையுடன் இருந்தவர் ஓவியா மட்டுமே. ஒரு கட்டத்திற்குப் பிறகு இந்த விளையாட்டை தன்னால் தொடர முடியாது என்று பிக் –பாஸிடம் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார். இதனால் மற்றவர்களின் luxury budget பாதிக்கப்படும் என்றாலும் என்ன செய்வது? இதற்காகவெல்லாம் பலியாடாக ஆக முடியுமா என்பது அவருடைய வாதம். 

 

இதற்குப் பின்னால் வலியும் வேதனையுமான அவரது உணர்வுகளும் வலிகளும் இருக்கின்றன. பரணி முதலிலேயே தப்பித்து விட்ட பிறகு அந்த வீட்டில் உளைச்சலையும் தனிமையையும் மற்றவர்களின் ஒதுக்குதலையும் அதிகமாக எதிர்கொண்டவர் ஓவியா மட்டுமே. நமக்கு காணக்கிடைத்த காட்சிகளிலேயே அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்டு கோபம் வந்தது. மிக குறிப்பாக அவரைத் தூங்க விடாமல் பெண்களின் படுக்கையறையில் காயத்ரி. நமீதா கும்பல் இணைந்து செய்த அடாவடித்தனம். இதுவே இப்படியென்றால் நமக்கு காட்டப்படாத காட்சிகளில் இன்னமும் என்னவெல்லாம் அவருக்கு அவமானங்கள் தரப்பட்டிருக்கும்? ‘நீ ஒரு ஹேரும் கேட்க மாட்டே’ என்று காயத்ரி குரூரமாகக் கூறுவதைக் கூட ஒரு புன்னகையுடன் கடந்தவர் ஓவியா. 

இப்படி பல நாட்களாக அழுத்தி வைக்கப்பட்ட உணர்வுகளையும் அழுகையையும் சில சமயங்களில் மட்டுமெ வெளிப்படுத்த முடிந்தது. மற்ற சமயங்களில் இதை இயல்பாகவே கடந்தார். மற்றவர்கள் ஒதுக்கி வைத்தாலும் தானே ஒரு உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டு அதில் இயன்ற அளவிற்கான மகிழ்ச்சியை உருவாக்கிய தேவதை. அதனால்தான் மக்களின் இத்தனை பெரிய அன்பைப் பெற்றிருக்கிறார். 

10_ovi_09585.jpg

அந்த வீட்டில் ஓவியாவிற்கு பல சமயங்களில் ஆதரவாக இருந்தது ஆரவ் மட்டுமே. எனவே அன்பிற்காகவும் அரவணைப்பிற்காகவும் ஏங்கிக் கொண்டிருந்த ஓவியாவிற்கு ஆரவ் மீது அன்பு உண்டானது ஒருவகையில் இயல்பானது. ஆனால் அவர்களுக்கு இடையில் பல சமயங்களில் இணக்கமும் விலகலும் மாறி மாறி ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. ஓவியா மீது ஆரவ்விற்கு காதல் இருக்கிறதா இல்லையா என்று மற்றவர்களே குழம்புமளவிற்கு ஆரவ் இந்த விஷயத்தில் சாமர்த்தியமாக நடந்து கொண்டார். ஆனால் எதையும் வெளிப்படையாக அணுகும் ஓவியா, ஆரவ் மீதான காதலையும் வெளிப்படையாகவே தெரிவித்தார். இது போன்ற பெண்கள் எளிதில் அவதூறுகளுக்கும் அவமானங்களுக்கும் ஆளாவார்கள். இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பதும் அதுவே. 

இன்னொரு பக்கம் ஆரவ்வின் தரப்பின் எதிர்பார்ப்பும் சரியாக இருப்பது போல் தோன்றுகிறது. தன்னுடைய நிலையை மிகத் தெளிவாகக் கூறியும் ஓவியா தொடர்ந்து தன்னை பின்தொடர்ந்து கொண்டேயிருக்கிறார், இதனால் என்னுடைய தனிப்பட்ட மதிப்பு பாதிக்கப்படலாம் என்று எண்ணுகிறார். 

ஆனால் இதற்கு அவர் சொல்லும் காரணமும் சந்தேகத்திற்கு இடம் தருவதாய் இருக்கிறது. ‘எல்லார் முன்னாடியும் என் கழுத்தை பிடிச்சு மசாஜ் செஞ்சே.’ என்கிறார். இதற்கு என்ன பொருள்? தனியான சந்தர்ப்பத்தில் இதைச் செய்தால் சரி என்பதா? காமிராக்களும் மனிதர்களும் இல்லாத தனிமையான சூழலாக இருந்தாலும் ஆரவ் இதே போன்றதொரு நேர்மையுடன் நடந்து கொள்வாரா? தெரியவில்லை.

இது சங்கடமான விஷயம். குழப்பமானதும் கூட. ஆண் x பெண் சிக்கல்களுக்கான வயது என்பது பல நூற்றாண்டுகளைக் கடந்தது. 

‘ஓவியா செய்வது போலவே, இந்த வீட்டில் ஓர் ஆண், ஒரு போட்டியாளரை தொடந்து கொண்டும் தொட்டுக் கொண்டும் இருந்தால் அது இதே போல் பார்க்கப்படுமா?’ ரைசா எழுப்பும் கேள்வியும் கவனிக்கத்தக்கது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பெண்களை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்லும் சிநேகனை நாம் எப்படியெல்லாம் கிண்டடிலத்திருக்கிறோம்? ஒருவேளை அந்த ஆறுதலில் சில சதவீதமாவது உண்மை இருந்திருக்கலாமே?

எனவே இந்த நோக்கில் ஓவியாவின் செயற்பாடுகள் அத்தனை ரசிக்கத்தக்கதாக இல்லை. அவர் தன் மன அழுத்தத்தை உணர்ந்தால் அது குறித்து பிக் பாஸிடம் முறையிடலாம். அல்லது வேறு வழியில்லாமல் காயத்ரி கும்பலுடன் இணக்கமாக முயலலாம். புதிதாக வந்திருக்கிற பிந்து மாதவியுடன் இறுக்கமான நட்பை ஏற்படுத்திக் கொள்வதின் மூலம் கூட தன் சிக்கல்களைக் கடக்கலாம். 

newbigcrws_vc1_09372.jpg

ஆனால் எந்தவொரு சூழலிலும் போலித்தனமாக நடிக்காமல் தன் மனச்சாட்சிற்கு ஏற்றபடி உண்மையாகவே இருக்க முயலும் ஓவியாவின் குணாதிசயம் கவர்கிறது. ஆனால் இது மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டிய கடமையும் அவருக்கு இருக்கிறது. 

இந்த விஷயத்தை இப்போது காயத்ரி பஞ்சாயத்திற்கு எடுத்திருக்கிறார். ‘ஓவியா தனிமைப்பட்டிருப்பதால்தான் இவ்வாறெல்லாம் செய்கிறார். இனி நாங்கள் அவரை எங்களுடன் இணைத்துக் கொள்கிறோம். அவர் தவறு செய்தால் கூட பொறுத்துக் கொள்கிறோம்’ என்கிறார். உண்மையாகவே நல்லெண்ணத்துடன் இதை அவர் செய்கிறாரா, அல்லது இதன் மூலம் தன்னுடைய பிம்பம் நேர்மறையான பொருளில் அழுத்தமாகும் என்கிற தந்திரமா என்று தெரியவில்லை. 

இந்தச் சிக்கலில் இருந்து ஆரவ்வை விடுவிக்கிற அளவிற்கு நல்லியல்பு கொண்டவரா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. 

**

ஓவியாவின் செயற்பாடுகள், அவருடைய குழப்பமான நடவடிக்கைகள், உணர்ச்சி மாறுபாடுகள் ஆகியவற்றையெல்லாம் பார்க்கும் போது அவர் மனஅழுத்தங்களிலும் சிக்கல்களிலும் இருப்பது போல் தோன்றுகிறது. அவர் இல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மதிப்பு சட்டென்று கீழிறங்கும் என்பதாலேயே அவர் task செய்ய மறுத்த போது கூட பிக் பாஸால் எதுவும் செய்ய முடியவில்லை. 
இந்த விளையாட்டில் ஓவியா ஜெயிப்பாரா என்பதெல்லாம் கூட முக்கியமில்லை. ஓவியாவிற்கு அவரேதான் முக்கியம். இந்த விளையாட்டோ இதில் கிடைக்கும் வெற்றியோ கூட மூன்றாம் பட்சம். இது சார்ந்த புரிதலை நோக்கி நகர்வாரா என்பதே இப்போதைய கவலை. 

இயக்குநர் ருத்ரைய்யா இயக்கத்தில் ‘அவள் அப்படித்தான்’ என்கிற திரைப்படம் வந்தது. ஆண்களின் தொடர்ந்த துரோகத்தால் அவர்களின் மீது வெறுப்புற்று, கோபத்தை முகமூடியாக்கிக் கொள்ளும் ஒரு பெண் பாத்திரம். ‘மஞ்சு’ எ்னகிற அந்தப் பாத்திரத்தை நடிகை ஸ்ரீபிரியா திறமையாக கையாண்டிருந்தார். 
ஆணாதிக்க உலகில் எவரையும் நம்ப முடியாமலிருக்கும் மஞ்சு, உண்மையான அன்புடன் ஓர் அணுகும் போது கூட தன் அலட்சியத்தால் அவரைப் புறக்கணிப்பார். அவரின் அன்பை உணரும் காலக்கட்டம் வரும் போது காலம் கடந்திருக்கும். 

ஓவியா இன்னொரு மஞ்சுவாக ஆகிவிடக்கூடாது.
** 

இப்போது பிக் பாஸ் மீதான ஆதங்கத்துக்கு வருவோம்..!

நேற்றைய நாளின் கட்டுரையிலேயே குறிப்பிட்டிருந்தேன். மனநலம் குன்றியவர்களை வேடிக்கைப் பொருளாக்கி விளையாட்டுப் போட்டி நடத்துவது சிறுபிள்ளைத்தனமானது மட்டுமல்ல குரூரமானதும் கூட. நுண்ணுணர்வு என்பது அறவே இல்லாதவர்கள்தான் இதை விளையாட்டாகப் பார்க்க முடியும். நேற்றைய பகுதிக்கான சமூகவலைதள விமர்சனங்களும் பிக் பாஸ் அணியினர் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என்று சுட்டிக் காட்டுவதாகவே இருந்தது! 

மனநலம் குன்றியவர்கள்

ஒருவர் மனநலம் குன்றியிருப்பது என்பது நிச்சயம் வேடிக்கையானதல்ல. அப்படி பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து பேசிப் பாருங்கள். மனஉளைச்சலால் அவர்களே பாதி பைத்தியமாகியிருப்பார்கள். தங்களின் அன்பு உறவுகளை அம்மாதிரியான நிலையில் பார்ப்பதும் பராமரிப்பது எத்தனை கடினமானது என்று நடைமுறையில் பார்த்தால்தான் தெரியும். மனச்சிக்கல் என்பது கருணையோடு அணுகப்பட வேண்டிய விஷயம். பொதுப்புத்தியோடு எள்ளி நகையாட‌  வேண்டிய விஷயமல்ல. 

என்னுடைய உளவியல் வகுப்பின் முதல் நாளில் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டார் ‘யாரெல்லாம் இங்கு நார்மலான மனிதர்கள்? கை தூக்குங்கள்’. தங்களை அப்நார்மல் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட்டவர்கள் கைதூக்கினார்கள். கேள்வியின் பொருள் பொதிந்து சிலர் கைதூக்காமல் இருந்தார்கள். கேள்வி புரியாமல் சிலர் அமைதியாக இருந்தார்கள். 

இந்தக் குறும்பு முடிந்ததும் ஆசிரியர் சொன்னார் ‘இந்த உலகில் நார்மலானவர்கள் என்று எவருமே கிடையாது” ஏனெனில் எது சரி என்று எவர் தீர்மானிக்க முடியும்? இந்த உலகம் வகுத்துள்ள நடைமுறைகளைப் பின்பற்றுபவர்களை இயல்பானவர்கள் என்றும் அதிலிருந்து மீறி நடக்கிறவர்களை ‘ஒருமாதிரி’ என்றும் நாம் புரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் மனநலம் குன்றியவர் என்று நம்மால் கருதப்படும் ஒருவரின் பார்வையில் நாம்தான் பைத்தியக்காரர்கள். 

இயல்பானவர்களாக கருதிக் கொண்டிருக்கும் நாமே பல சமயங்களில் இயல்புத்தன்மைக்கு மாறாக விநோதமாக நடந்து கொண்டிருக்கிறோம். எனில் இயல்பு என்பதுதான் என்ன?

இந்த கேள்விக்கான பதிலை பிக் பாஸே யோசிக்கட்டும். ஏனெனில், மனதின் ரசனை வீரியத்தை எதிர்மறை திசைக்கு இழுத்துச் செல்லும் நடைமுறைகளை அனுமதிக்கலாமா என்று பிக்பாஸ் மட்டுமல்ல...நாம் அனைவருமே சற்று நிதானமாக யோசிக்க வேண்டிய அளவிற்கு முக்கியமான விஷயம் இது! 

பின்குறிப்பு: பிக் பாஸ் நிகழ்ச்சியை குறை சொல்வது நோக்கம் கிடையாது. ஆனால், ஒரு ரசிகனாக அதில் உறுத்தும் விஷயங்களை விமர்சிக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து!

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/97663-a-request-from-fan-regarding-yesterdays-episode-whats-happening-in-biggboss.html

Link to comment
Share on other sites

‘ஓவியாவின் காதல் உண்மையானதா, அத்தனையும் நடிப்பா - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (38-ம் நாள்) #BiggBossTamilUpdate

 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg_Boss_Banner_09028.jpg

நேற்றைய ‘மிஸ்டர் பிக் பாஸ்... இதெல்லாம் தவிர்க்கலாமே..!' - ஒரு ரசிகனின் ஆதங்கம் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? அத்தியாத்தில் இப்படிப் போட்டியாளர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் காட்டுவது பற்றி வாசகர்களிடம் கேள்வி எழுப்பி இருந்தோம். அவர்களின் பதில் நமது கட்டுரையின் தன்மையை , ஓவியா சொல்வது போல் 'மகிழ்ச்சி'

VIkatan BiggBoss Survey


திருப்பள்ளியெழுச்சி பாடல் ஒலிப்பதற்குள் எழுந்துகொண்ட ஆரவ்வும் ஓவியாவும் வீட்டிற்கு வெளியே பேசிக்கொண்டிருந்தனர். புல்வெளியில் இருந்த பறவையொன்று ஒரு பூச்சியை வேட்டையாடிக் கொண்டிருந்தது நல்ல குறியீட்டுக் காட்சி. 

ஆரவ் – ஓவியா, பரஸ்பரம் இருவரில் எவர் எவரை வேட்டையாட முயல்கிறார்கள் என்று தெரியவில்லை. உரையாடலைத் துண்டித்துக் கொண்டு ஆரவ் சட்டென்று விலகினார். 

ஓவியா



போகனின் திரைப்படப் பாடல் வரிகள் ஒலித்தன.  சூழலுக்குப் பொருத்தமான பாட்டு. ஜூலியும் பிந்து மாதவியும் ஒரு துள்ளலிசைப் பாடலைப் பாட முயன்று கொண்டிருந்தனர். ‘லிரிக்ஸை சரியா நினைவுப்படுத்திப் பாடு’ என்று குறுக்கிட்டார் ஓவியா. அங்கு வந்த காயத்ரி, ஜூலியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து உடனே வெளியேறினார்.  

இந்த நிகழ்ச்சியை எவராவது தாமதமாகப் பார்க்கத் தொடங்கினால்கூட அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் ஓவியா சம்பந்தப்பட்ட விஷயங்களையெல்லாம் பிறகு தன்னுடைய பிரத்யேகமான நாடகத்தனத்துடனும் கிண்டலுடனும் மற்றவர்களுக்கு காயத்ரி விளக்குகிறார். ஒரு replay. தாமதப் பார்வையாளர்கள் இதற்காக அவருக்கு நன்றி சொல்லலாம். 

ரைசா



ஓவியா அருகிலிருக்கும் ரைசாவுடன் பேசமுயலும்போது அவரும் உரையாடலைத் துண்டித்துக்கொண்டு வெளியேறுகிறார். மிகுந்த மனக்கசப்புடன் ‘மகிழ்ச்சி’ என்கிற சொல் ஓவியாவின் வாயிலிருந்து வருகிறது. என்னவொரு முரண்நகை. 

‘இனிமே அவளை எங்களோடு சேர்த்துக் கொள்கிறோம்’ என்று நேற்று பாவனைக்காவது சொன்ன காயத்ரி முதற்கொண்டு ஏறத்தாழ எல்லோருமே (குறிப்பாக பெண்கள்) ஓவியாவை ஏன் இத்தனை கடுமையாக வெறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களின் கோணத்தில் இதற்கான நியாயமான காரணங்கள் இருக்கலாமோ? அந்தக் காட்சிகள் நம்மிடமிருந்து மறைக்கப்படுகிறதா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.  

ஓவியாவை, ரைசா அடிக்கடி ‘மென்ட்டல்’ என்கிற அடையாளத்துடன் குறிப்பிடுவது ஆட்சேபத்திற்குரியது. படித்த மேன்மக்கள் இப்படி எவ்வித நுண்ணுணர்வுமில்லாமல் சொற்களுக்கான அர்த்தம் புரியாமல் அவற்றை இறைப்பது வேதனை. நம் கல்விமுறையின் லட்சணம் இங்கு வெளிப்படுகிறது. இந்த விஷயத்தில் பாமரர்கள்கூட சமயங்களில் சரியாக இருப்பார்கள். 

ஊரிலுள்ள எல்லோரும் நிர்வாணமாகத் திரியும்போது கோவணம் கட்டியவன் ‘பைத்தியக்காரன்’ என்றொரு பழமொழி இருக்கிறது. ‘பிக் பாஸ்’ வீட்டில் அதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. மற்றவர்கள் எல்லோரும் அந்தந்தச் சூழலுக்கேற்ப முகமூடிகளை மாட்டித் திரியும்போது அவ்வாறான ஜாக்கிரதையுணர்வு ஏதுமில்லாமல் வெளிப்படையாகவே தன் உணர்ச்சிகளை எல்லா இடத்திலும் வெளிப்படுத்தும் ஓவியா மனநலம் பிசகியவராக மற்றவர்களுக்குத் தோன்றுவதில் ஆச்சர்யமில்லை. 

கொடுமையான மாமியாரும் நாத்தனார்களும், கோழைத்தனமான கணவனும் உள்ள கூட்டுக்குடும்பத்தில் அவதிப்படும் ஒரு புது மருமகளின் சித்திரமே ஓவியாவைப் பற்றி நமக்குக் கிடைக்கிறது. என்னவொன்று இந்த மருமகள் அடங்கிப் போகிற மருமகளாக இல்லை. தான் விரும்புவதை அடைய விரும்பும் வீம்புக்காரியாக இருப்பதுதான் அடிப்படையான பிரச்னை. 

ஆரவ்வை தன்னுடைய பாதுகாப்பில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று காயத்ரி தொடர்ந்து முனைகிறார். அவர்கள் அப்படி சுற்றி நின்று கொண்டிருப்பதே கூட ஓவியாவிற்கு அதிக உளைச்சலைத் தரக்கூடும் எனத் தோன்றுகிறது. ஆரவ்வின் மீதுள்ள possessives-ம் ஓவியாவின் இந்த வித்தியாசமான நடவடிக்கைகளுக்குக் காரணமாக இருக்கக்கூடும். அதிலும் ஒருவர் புலம்பும்போது, ரைசா சிரிக்கும் அந்தக் காட்சி , காயத்ரியை விடவும் ரைசாவின் பிம்பத்தின் மீது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

ரைசா



**

நேற்று நிகழ்ந்தது போல இன்னொரு கேலிக்கூத்தான ‘task’ பிக் பாஸால் தரப்பட்டது. ‘இது சீக்ரெட் பார்முலா, இதை எல்லோரிடமும் காட்டுங்கள்’ என்கிறார் பிக் பாஸ். அப்புறம் அது என்ன சீக்ரெட்? 

இந்தக் கேலிக்கூத்து ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும் இன்றைய நாளின் பெரும்பாலான தருணங்கள், ஆரவ் – ஓவியா இருவரின் இடையிலான சிக்கலில் மையம் கொண்டிருந்தன. இருவரில் எவர் நடிக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பது பெரிய சவாலாக இருக்கும் போலிருக்கிறது. ஆனால் சற்று நிதானமாக சமநிலையுடன் யோசித்தால் நியாயத் தராசு ஓவியாவின் பக்கம் சாயக்கூடும். 

இன்றைய நாளின் காட்சிகளை வைத்து ஒட்டுமொத்த நிலைமையை யூகிக்க முயல்வோம். நம்மால் யூகிக்கத்தான் முடியும். உண்மை என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. அவற்றைக் கொண்டும் ஓர் உண்மையை நிரூபிப்பது அத்தனை எளிதான விஷயமல்ல. விலாங்கு மீனை பிடிப்பதற்கு நிகரான செயல் இது. 

ஓவியா ஆரவ்வை பார்க்கும் பல முகபாவங்களைக் கவனித்தால் உண்மையான காதலுணர்வும் தவிப்பும் தென்படுகிறது. அதில் நடிப்பிருப்பதாகத் தெரியவில்லை. 

ஐந்து என்கிற எண்ணிற்கும் பிக் பாஸிற்கும் அத்தனை ராசியில்லை போல. ‘ஐந்து விநாடி வீடியோ’ என்று முன்னர் ஜூலி டீம் பினாத்திக் கொண்டேயிருந்தது. இப்போது ஓவியாவின் முறை. ‘ஐந்து நிமிஷம் பேசணும்’ என்று ஆரவ்விடம் இன்றைய நாள் முழுக்கத் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருந்தார். அப்படிக் கிடைத்த சமயத்தை சரியான தெளிவுடன் அவர் பயன்படுத்திக்கொள்ளவும் இல்லை. 

ஓவியா

“நீ ஏன் என்னை இப்படிப் பண்ணே.. அப்படியெல்லாம் பழகினே.. முத்தம் தந்தே.. இப்ப மாறிட்டே.. friend-ன்னு சொல்றே.. எப்படி சட் சட்டுன்னு அப்படி மாற முடியும். என்னால அப்படி மாற முடியாது. நீ என்னை ஏமாத்திட்டே” என்பதைத்தான் விதம் விதமாகச் சொல்கிறார் ஓவியா.

நட்பு என்பதை மீறி காதல் என்கிற உணர்விற்கு இடம் தந்து ஆரவ் பழகியிருக்கிறாரோ என்கிற சந்தேகம் இந்தக் குற்றச்சாட்டுகளின் மூலம் நமக்கு இயல்பாகவே எழுகிறது. ஓவியாவின் புகார்களின் மூலமாக அதுகுறித்த பின்னணிக் காட்சிகளை நம்மால் யூகிக்க முடிகிறது.  நமக்குக் காட்டப்படாத காட்சிகளில் அந்த மர்மம் உறைந்திருக்கலாம். காட்டப்பட்ட காட்சிகளில்கூட சில உதாரணங்கள் நமக்குத் தென்பட்டன. ஒருமுறை ஓவியா கடந்து சென்றபோது ஆரவ் விளையாட்டாக அவரைப் பின்புறம் உதைத்தது ஓர் உதாரண தருணம். 

தாம் ஒரு ரியாலிட்டி ஷோவின் விளையாட்டிற்குள் வந்திருக்கிறோம், அப்படியாகவே இதைக் கடந்து செல்வோம் என்கிற உணர்வு சிறிது கூட ஓவியாவிடம் தென்படுவது போல இல்லை. மேலும் மற்றவர்களைப் பற்றியும் அவர் கவலைப்படுவது போலத் தெரியவில்லை. ‘எனக்கு இந்த பொம்மை வேணும்’ என்று அடம்பிடிக்கிற குழந்தையின் மனப்பான்மையே அவரிடம் ஓங்கியிருக்கிறது. 

இருக்கிற போட்டியாளர்களிலேயே அதிக இயல்பாகவும், மகிழ்ச்சியாகவும், புறம் பேசாதவராகவும் இதுவரை கருதப்பட்ட ஓவியாவின் எதிர்திசை பிம்பம் இப்போது வெளிப்படத் தொடங்கியிருக்கிறது. டி.வி. சீரியல் போலவே அவரின் அழுகைச் சத்தம் இன்று முழுக்க ஓயவேயில்லை நாம் பார்த்து வந்த ஓவியா அல்ல இது. இது நாள் வரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த உணர்ச்சிகள் எல்லாம் இப்போது கட்டவிழ்ந்து காட்டாற்று வெள்ளமாகப் பாய்ந்து கொண்டிருக்கிறதோ?

ஓவியா

எந்தக் குணாதிசயங்களுக்காக அவர் மக்களால் கொண்டாடப்பட்டரோ அவற்றையெல்லாம் மெல்ல இழந்து கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. அங்கிருந்து வெளியேறினால் போதும் என்பதற்காக வேண்டுமென்றே செய்கிறாரோ என்கிற சந்தேகமும் எழுகிறது.  

ஆனால் அவருடைய நோக்கில் இதைப் பார்த்தால் ‘அவருக்கு ஆரவ்தான் முக்கியம்’ என்று நினைக்கிறார் போல. நாம் கொண்டாட வேண்டும் என்பதற்காக அவர் முன்பு பின்பற்றிய குணாதிசயங்களைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பது முறையானதல்ல. ‘அடி.. அவனை அடி.. என்று மேடையின் கீழ் நின்று நாம் ஆவேசமாகக் கூக்குரலிடலாம். ஆனால் மேடையின் மேல் ரத்தம் வழிய குத்துச்சண்டை போட்டுக் கொண்டிருக்கிறவனுக்குத்தான் அந்த வலி தெரியும். விளையாட்டில் ஜெயிப்பதல்ல, அவனுடைய உயிர்தான் முக்கியம். விளையாட்டிலிருந்து வெளியேறும் அந்த சுயநலமான முடிவை நோக்கித்தான் அவன் நகர வேண்டும். பார்வையாளர்களைக் குஷிப்படுத்துவதற்காக அடிவாங்கிச் சாக முடியாது. 

எனவே ‘ஓவியா தன் இயல்புத்தன்மையிலிருந்து விலகி விட்டாரே’ என்று பார்வையாளர்கள் தரப்பிலிருந்து குற்றம் சொல்ல நமக்கு அருகதையில்லை. இது குறித்தான முடிவை அவர்தான் எடுக்க முடியும். அந்தச் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும். 

**
இன்னொரு புறம் இந்தப் பிரச்னையை ஆரவ்வின் நோக்கிலிருந்து பார்த்தால் அவருடைய நிலைமை பரிதாபமாகவே இருக்கிறது. ஒருவேளை அவர் தொடக்கத்திலிருந்தே ஓவியாவிடம் நட்பு முறையில் மட்டுமே பழகியது உண்மையாக இருந்தால், இப்போது அவர் அனுபவித்துக் கொண்டிருப்பது நிச்சயம் டார்ச்சர்தான். 

ஓவியாவிடம் அவர் விளக்கம் கேட்கும் போதெல்லாம் ‘ இந்த விளையாட்டுக்கு வந்த ரெண்டாவது நாள்லயே..என்ன சொன்னேன்… சொல்லு பார்க்கலாம்.. என்னன்னு தெளிவா சொல்லு’ என்று கேட்கும் முறையில் இருந்தே இது காமிராவில் பதிவாகி இதுகுறித்த தெளிவை மற்றவர்கள் உணர வேண்டும் என்கிற திட்டத்துடன் பேசுகிறார் என்பது தெரிகிறது. தன் தரப்பு நியாயத்தை நிலைநாட்ட வேண்டும் என்கிற உத்வேகமாகவும் இருக்கலாம். 

ஜூலி


ஓவியாவை எந்த வகையிலும் புண்படுத்திவிடக் கூடாது என்கிற ஜாக்கிரதையுணர்வும் அதே சமயம் தன்னுடைய மதிப்பிற்கு களங்கம் வந்து விடக்கூடாது என்கிற கவனத்திற்கும் இடையில் அவர் தத்தளிக்கிறார் என்பது தெரிகிறது. அவருடைய பக்கம் உண்மை இருக்கிறது என்றால் ஆரவ்வைப் போல ஒரு கனவான் இருக்க முடியாது என்றே சொல்லலாம். அத்தனை நிதானமாக இந்தப் பிரச்னையை அணுகுகிறார். இந்த வகையில் ஆரவ் இன்னொரு கணேஷாக மாறிக்கொண்டிருக்கிறார் எனலாம். 

ஆனால் உண்மை அவர் பக்கம்தான் இருக்கிறதா?

 


ஆரவ் – ஓவியாவிற்கு இடையிலான பிரச்னைக்கு இடையே சிநேகன் தூதுவராக இயங்குவது ஒருவகையில் நிம்மதியாக இருக்கிறது. அவரும் இந்தச் சிக்கலை மெள்ள மெள்ள அவிழ்க்கத் தொடங்குகிறார். ஆனால் சமயங்களில் இந்தச் சிக்கலை நீக்குவதுதான் அவருக்கு முக்கியமா, இதை வைத்து தன் முக்கியத்துவத்தை நிலைநாட்டி இதைவைத்து குளிர்காய நினைக்கிறாரா என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை. 

ஓவியாவிற்கு நிகழ்ந்து கொண்டிருப்பதெல்லாம் மிக மிக உண்மையானது என்றால் பிக் பாஸ் தலையிட்டு, உளவியல் மருத்துவர் ஒருவரின் சேவையை ஓவியாவிற்கு அளிக்க வேண்டும். அதற்கான சரியான நேரம் இது. அவருடைய தனிப்பட்ட பிரச்னைகளின் மீதாக, அதுசார்ந்த உணர்வுகளைச் சுரண்டி வணிகமாக்குவது அநீதியான செயல். இந்த விளையாட்டைத் தொடர்வதற்கான மனநல தகுதியுடன் அவர் இருக்கிறாரா என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகே அவர் இங்கிருப்பது தொடர வேண்டும். பரணியைப் போல ஓவியாவும் சுவரேறிக் குதிக்க முயன்று அந்தக் காட்சிகளையும் டிஆர்பிக்காக அவர்கள் உபயோகப்படுத்துவார்கள் எனில் அது நியாயமேயல்ல. 

**
இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பான சம்பவமும் இல்லாமல் இல்லை. ‘கொஞ்ச நேரம் உன்னைக் கொல்லட்டா.. ஜூலி.. ‘ என்று பயங்கர கடுப்பில் ஓவியா பாட, அதுவரை தனது காந்தியத்தனத்தை பல்லைக் கடித்து காப்பாற்றிக் கொண்டிருந்த ஜூலி மறுபடியும் பஞ்சாயத்தைக் கூட்டினார். ஆரவ்விடம் கோபமாகப் புலம்பி விட்டு, அங்கு நடந்ததை மீண்டும் சக்தியிடம் சிரிப்புடன் சொல்லிக் காட்டினார். 

ஓவியா ஆரவ்விற்கு கழுத்து மசாஜ் செய்ய முயன்றதை புகாராகப் புறம் பேசிய காயத்ரி கும்பல், அதே காரியத்தை ஜூலி செய்து கொண்டிருந்தபோது இயல்பாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆரவ் மீது ஏற்பட்ட கவர்ச்சியை ஜூலி முன்னர் காயத்ரியிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது நினைவிற்கு வருகிறது. 
சீக்ரெட் பார்முலா என்கிற இழவு காணாமற் போனபோது அதைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அப்போது  ‘Perfect-ஆ இருக்கறவங்களைத்தான் நம்ப முடியாது’ என்றார் கணேஷ். பேசியது அவர் மனசாட்சியா?

**
மறுபடியும் ஓவியா பற்றிய பஞ்சாயத்தைக் கூட்டினார் காயத்ரி. அப்போது சிநேகன் சொன்னது அற்புதமான விஷயம். “அவ பிரச்னை பண்ற நேரத்துல மட்டும்தான் சிக்கலா இருக்கு. மத்த நேரத்துல எல்லாம் அவ ஜாலியத்தான் இருக்கா. 

சிநேகன்

ஆனா நாம என்ன பண்றம்னா.. பொழுதன்னிக்கும் ஓவியா.. ஓவியா.. ன்னு அவளைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம்’ என்றார். ‘ஆத்துல இருந்து நான் இறங்கிட்டேன். நீங்க இன்னமும் இறங்கலியா?’ என்கிற ‘வேதம் புதிது’ சிறுவனின் வசனமே நினைவுக்கு வருகிறது. உண்மையில் இதைக் கேட்டவுடன் ‘பளார், பளார்’ என்று தன்னை எவரோ அறைவது போல் திடுக்கிடுகிற சத்யராஜின் உணர்வை காயத்ரியும் அடைந்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்குமா?

**
நள்ளிரவில் இன்னொரு பஞ்சாயத்து. ‘சாப்பிட்ட தட்டுகளை ஓவியா கழுவ வேண்டும்’ என்று காயத்ரி இன்னொரு இம்சையைக் கூட்ட  ‘டீம் கேப்டன் யாரு.. குக்கிங் டீம்.. வாஷிங் டீம்’ னு எதுவுமே இல்லையே’ என்று ஓவியா லாஜிக் கேள்விகளாக அடுக்க சூடு பிடித்தது. ‘தட்டை கழுவி வெச்சுடும்மா’ என்று சிநேகன்  நிலைமையை சுமுகமாக்க முயல.. ‘நீங்க.. யாரு.. அதைச் சொல்ல.. டீம் கேப்டனா…” என ஓவியா.. ஹெவியாக ஒரு சேம் சைட் கோல் போட்டார். 

நள்ளிரவு நேரம் என்பதால் சிநேகனின் முகபாவத்தை க்ளோசப் காட்சியாக நம்மால் கவனிக்க முடியவில்லை என்பது துரதிர்ஷ்டம். 

அந்த நாள் முழுதும் ஓவியாவின் சார்பாக பஞ்சாயத்து செய்து விட்டு டயர்டாக உட்கார்ந்திருந்த மனிதர், இந்தத் திடுக்கிடும் வசனத்தைக் கேட்டவுடன்… சிவாஜியின் பாணியில் தழுதழுத்த குரலில்.. ‘யாரைப் பார்த்தும்மா.. அப்படிச் சொன்ன.. தூக்கி வளர்த்த என்னைப் பார்த்தா.. சொன்ன..உனக்கு ஞாபகமிருக்கா.. சின்ன வயசுல மிட்டாய் வாங்கித்தந்தனே.. கைவீசம்மா.. கைவீசு.. என்கிற கணக்காக நிச்சயம் கலங்கியிருப்பார் என்று தோன்றியது. நேரம் முடிந்து விட்டதால் பிக் பாஸ் அதைக் காட்டவில்லை போல. 

**

இன்றைய நாளின் நிகழ்வுகளில், குறிப்பாக ஆரவ் – ஓவியா இடையிலான பிரச்னைகள் அனைத்தும் உண்மையா, அல்லது நாடகமா, பிக் பாஸ் விளையாட்டின் பகுதியா.. என்றெல்லாம் நமக்கு எழுகிற சந்தேக கேள்விகளைத் தவிர்க்க முடியவில்லை. இப்படியே தொடர்ந்தால் பார்வையாளர்களும் பிக் பாஸ் மனநல விடுதியில் அனுமதிக்கப்படுவதைத் தவிர வேறு வழியும் இல்லை. இவற்றையெல்லாம் மீறி ஓவியாவின் மீது பரிதாபம் உண்டாவது நிஜம்.  அதைத்தான் உள்ளுணர்வும் உணர்த்துகிறது.

ஆண், பெண் உறவுச்சிக்கலின் வரலாறு மிக நீண்டது. இந்தச் சிக்கலின் மீது எத்தனையோ கதைகளும், நிஜங்களும், இதிகாசங்களும், வரலாறுகளும் நெடுங்காலமாக நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. இதற்கு விடைகாணும் முயற்சியும் சோர்வடையாமல் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. மனித குலம் இருக்கும் வரை இதற்கு விடை கிடைப்பது சிரமம்தான். 

 

 

பிக் பாஸ் வீட்டில் இன்று காலை ஒலித்த, போகன் திரைப்பட பாடலில் இருந்த வரிகளின் மூலம் சிறிது தீர்வு கிடைக்கலாம் எனத் தோன்றுகிறது..
 

 

 

காதல் என்பது நேர செலவு
காமம் ஒன்றே உண்மை துறவு.
நேசம் பாசம் போலி உறவு
எல்லாம் கடந்து மண்ணில் உலவு. 

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/97791-is-oviyas-love-a-true-one-or-is-just-acting-happenings-of-bigg-boss-tamil-day-38.html

Link to comment
Share on other sites

ஓவியா – பிக் பாஸ் வீட்டின் சூப்பர் ஸ்டார். ஏன்? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (39-ம் நாள்) #BiggBossTamilUpdate

 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg_Boss_Banner_09028.jpg

 

38-ம் நாளின் நள்ளிரவு டிராமாக்கள் இன்னமும் ஓயவில்லை. ஓவியா உபயோகித்த பாத்திரங்களைக் கூட அவர் கழுவாததற்காக காயத்ரி கடுமையாக கோபித்துக் கொண்டார். அனிருத் பாடலை விடவும் அதிகமான ‘பீப்’ ஒலிகள் அவருடைய வசனங்களில் உதிர்ந்தன. ‘தமக்கு ஆதரவாக இருப்பவர்’ என்பதையும் மறந்து சமாதானம் செய்ய வந்த சிநேகனிடம், எகிறி விழுந்தார் ஓவியா. காயத்ரி மீதிருந்த கோபத்தைத்தான் சிநேகனிடம் வெளிப்படுத்தினாரோ என்று தோன்றியது. ‘இப்படியெல்லாம் செய்கிறாரே’ என்று சிநேகன் மற்றவர்களை அழைத்து அங்கலாய்த்துக் கொண்டார். 

நேற்றைய ‘ஓவியாவின் காதல் உண்மையானதா, அத்தனையும் நடிப்பா' - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? அத்தியாத்தில்  ஆரவ் மேல் ஓவியா கொண்டிருக்கும் காதல் பற்றி கேட்டிருந்தோம்

சர்வே

 

‘காயத்ரி அக்கா இவ்ளோ கோபப்பட்டு நான் பார்த்ததில்லை’ என்று போலித்தனமாக காயத்ரிக்கு சார்பாக ஒத்து ஊதினார் ஜூலி. ‘நாங்கள் இதை விடவும் நிறைய பார்த்திருக்கிறோமே, போராளி மேடம்’ என்று அவரிடம் சொல்லத் தோன்றியது. அதிலும் ஆரவ், 'ஓவியா பொய் பேச மாட்டா' என்றதும், கேமராவை ஜூலி நோக்கி திருப்புவது எல்லாம், பிக்பாஸ் குறும்பு.

BIGG Boss Tamil

 

நள்ளிரவில் வெளியே சென்று மழையில் படுத்துக் கொண்ட ஓவியாவை உண்மையான அக்கறையுடன் சிநேகனும், வேறு வழியில்லாமல் வரவழைத்துக் கொண்ட அக்கறையுடன் ஆரவ்வும் சென்று சமாதானப்படுத்தினார்கள். 

**

காதல் தோல்வியின் மீதான ஓவியாவின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நடிப்பு, இவற்றின் பின்னணியில் பிக் –பாஸின் திரைக்கதை உள்ளது என்பது போன்று பல பார்வையாளர்கள் கருத்து சொல்வதையும் எண்ணுவதையும் பார்க்கிறேன். 

99% சதவீதம் இது நடிப்பு அல்ல என்றே நான் உறுதியாக கருதுகிறேன். ஏனெனில் என்னதான் திரைக்கதையை அமைத்துத் தந்தாலும் இத்தனை துல்லியமான நடிப்பை எத்தனை சிறந்த நடிப்புக் கலைஞராலும் தரவே முடியாது. ஆகவே ‘Task’- படிதான் செயல்படுகிறேன்’ என்று ஓவியா, ஆரவ்விடம் சொன்னதை ஒரு சுயபச்சாதாபத்தில் போட்டுக் கொண்ட தற்காலிக முகமூடி என்றே தோன்றுகிறது. 

காதல் நிராகரிப்பு, அது சார்ந்த தவிப்பு என்று நிஜ வாழ்வில் காதலர்களிடம் இருக்கக்கூடிய அத்தனை உண்மையான அடையாளங்களும் ஓவியாவிடம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. தங்களின் காதல் நிராகரிக்கப்பட்ட நிதர்சனத்தை அவர்களின் மனது அத்தனை எளிதில் ஏற்றுக் கொள்ளாது, எனவே சாப்பிடாமல், தூங்காமல் இருப்பது போன்று தங்களைத் தானே தண்டித்துக் கொள்வார்கள். இதன் மூலம் எதிர் தரப்பின் கவனத்தையும், அனுதாபத்தையும் பெற முயல்வார்கள். ஓவியாவின் நடவடிக்கைகளில் இவை அத்தனையுமே இருப்பதைப் பார்க்க முடிகிறது. நள்ளிரவில் தூக்கம் கலைந்த எரிச்சலில் பேசிக் கொண்டிருந்த ஆரவ்விடம் ஒரு பூனைக்குட்டியைப் போல சுருண்டு படுத்துக் கொண்டு கெஞ்சிய ஓவியாவைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. பிந்து மாதவி சொல்லியதைப் போல ‘உனக்கு இதெல்லாம் தேவையா, ஓவியா’ என்றே நாமும் கேட்கத் தோன்றுகிறது. 

ஓவியா ஏன் இப்படி விசித்திரமாக நடந்து கொள்கிறார்? நமக்கு காணக்கிடைத்த காட்சிகளின், கோணங்களின் படி இதைப் பற்றி யூகிக்கவும் ஆராயவும் முயல்வோம். 

ஓவியா

 

**

பிக்பாஸின் போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்கு முன்பாக தங்களுக்குள் அத்தனை அறிமுகம் இல்லாதவர்கள். இந்த வீட்டிற்குள் வந்த பிறகுதான் ஒருவரையொருவர் அறிந்து கொள்ள முற்பட்டவர்கள். இதுவே ஆரவ் மற்றும் ஓவியாவிற்கு பொருந்தும். 

ஓவியாவின் வெளிப்படைத்தன்மையால் அங்கிருக்கும் பெரும்பாலோனோரின், குறிப்பாக பெண்களின் எரிச்சலை எளிதில் சம்பாதித்துக் கொள்கிறார். பல நல்லியல்புகளுடன் அவர் இருந்தாலும் பணிகளை பங்கிட்டுக் கொள்வது, அதைச்சரியாக நிறைவேற்ற முயல்வது போன்ற விஷயங்களில் ஓவியாவின் பங்கு துவக்கம் முதலே திருப்திகரமாக இல்லை. ‘ஒத்துழையாம இயக்கம்’ சார்ந்த பிடிவாதத்தை பலமுறை கடைப்பிடிக்கிறார். 

இது சார்ந்த சர்ச்சைகள், வாக்குவாதங்களினால் மற்றவர்களினால் தனிமைப்படுத்தப்படுகிறார். இந்த நேரத்தில் ஆரவ்வின் ஆதரவு அவரை சற்று ஆற்றுப்படுத்துகிறது. அவர்களுக்குள் நட்பு இறுகுகிறது. நட்பு காதலாக பரிணமிப்பது மிக மிக இயல்பானது. அதுவேதான் ஓவியாவிற்குள்ளும் நிகழ்கிறது. தன்னையும் அறியாமல் இதற்கான சமிக்ஞைகளை ஆரவ்வும் அளித்தாகத்தான் தெரிகிறது. எனவே தன்னிச்சையாக இந்தக் காதலில் விழுந்து விட்ட ஓவியாவால் அது சட்டென்று நிராகரிக்கப்படும் போது ஏற்றுக் கொள்ள முயலவில்லை. ஒரு குழந்தையின் கையில் இருந்து சாக்லெட்டைப் பிடுங்கிக் கொண்டால் எப்படியெல்லாம் பிடிவாதம் பிடித்து அதை நோக்கி அழுமோ ஏறத்தாழ அந்த விஷயத்தையெல்லாம் அவர் செய்கிறார். ‘உன்னை மதிக்காதவங்களை நீ ஏன் மதிக்கணும். தூக்கிப் போட்டுட்டு போலாம்ல’ என்று சிநேகன் உபதேசிக்கும் போது வெள்ளந்தித்தனமான முகபாவத்துடன் ‘ஆமாம்ல.. இது ஏன் எனக்கு தோணாமப் போச்சு’ என்கிற போது வளர்ந்த குழந்தையைப் போலவே தோன்றுகிறார். 

‘லவ் பண்லாமா, வேணாமா’ என்கிற சிம்புவின் பாடலைப் போலவே ‘லவ் இருக்கா, இல்லையா’ என்கிற கேள்விக்கான விடையைத் தெரிந்து கொள்ளா விட்டால் அவருடைய தலையே வெடித்து விடும் போல் இருக்கிறது. 

அது மட்டுமே அவருடைய முதன்மையான பிரச்சினையாக இருக்கிறது. அவருடைய பலவீனமும் இதுவே. 

**

வையாபுரி

 

ஓவியா ஆரவ்விடம் தன்னுடைய காதலை அனைவரின் முன்பும் வெளிப்படையாக காட்டிக் கொண்டிருப்பதை பிக் பாஸ் போட்டியாளர்கள் முதற்கொண்டு பார்வையாளர்கள் வரை பலரும் முகச்சுளிப்புடன் விமர்சிக்கிறார்கள். இதையே ஒரு ஆண் போட்டியாளர், பெண் போட்டியாளரிடம் செய்து கொண்டிருந்தால் சும்மாயிருப்பார்களா என்பது அவர்களின் கேள்வி. ஆம். நிச்சயம் அது பெரிய சர்ச்சையாகி இருக்கும். உறுதிப்படுத்தப்படா விட்டாலும் பரணிக்கு நிகழ்ந்ததும் அதுவே. 

‘கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம்’ என்றான் பாரதி. இந்த நோக்கில் ஓவியாவின் நடவடிக்கைகள், காதல் வெளிப்படுத்துதல்கள், ஆரவ்விற்கு தரும் இடைஞ்சல்கள் அதீதமானதுதான். அதில் மாற்றுக்கருத்தில்லை. 

ஆனால் – இதைப் பொதுப்புத்தியின் பார்வை கொண்டல்லாமல் ஓவியாவின் பிரத்யேகமான ஆளுமையின் நோக்கிலிருந்து பார்க்க முயல்வோம். 

‘Be Yourself’ என்பது ஓவியாவின் தாரக மந்திரம். தங்களின் உணர்வுகளுக்கு முகமூடி போட்டுக் கொள்ளாமல் ஒப்பனையின்றி அப்படியே வெளிப்படுத்தி விடுவது அவருடைய சுபாவங்களில் ஒன்று. பெரும்பான்மையோரால் கடைப்பிடிக்க முடியாத குணாதிசயம் இது.  நம்மால் பெரிதும் பின்பற்ற முடியாத இந்த குணாதிசயத்தை ஓவியா கொண்டிருப்பதால்தான் அவரை நமக்கு பெருமளவு பிடித்துப் போகிறது. ஓவியாவை நம்முடைய ‘ஆல்டர் ஈகோ’வின் கச்சிதமான பிம்பம் என சொல்லலாம். 

ஓவியாவிற்கான பிரத்யேகமான உலகில் அவருக்குத்தான் முன்னுரிமை தரப்படுகிறது. ‘மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ’ என்றெல்லாம் மிடில் கிளாஸ் தனமாக அவர் அலட்டிக் கொள்வதில்லை. தன்னுடைய உலகின் விதிகளின்படி வெளிப்படையாக வாழ நினைக்கிறார். இதை மற்றவர்களால் ஜீரணிக்க முடிவதில்லை. 

தனிநபர் சுதந்திரம் என்பது மேற்கத்திய நாடுகளில் மிக முக்கியமாகப் பார்க்கப் படுகிறது. காதலர்கள் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருக்கையில் முத்தமிடத் தோன்றினால் அதை இயல்பாக நிறைவேற்றிக் கொள்கிறார்கள். சுற்றியிருக்கிற மற்றவர்களுக்கும் இது நெருடலாக தோன்றுவதில்லை அப்படியாக அவர்களின் கலாசாரம் பரிணமித்திருக்கிறது. ஓரெல்லை வரை தனிநபருக்கான சுதந்திரத்தை பொதுவெளியில் அவர்களால் நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. ஏனெனில் சில அற்புதமான தருணங்களை நாம் அப்போது தவற விட்டு விட்டால் அந்த தருணங்கள் பிறகு வாய்க்காமலேயே போகலாம். 

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்கிற தத்துவத்தை நடைமுறையில் அனுமதிக்கிற, அது சார்ந்த சுதந்திரத்தை இயல்பாக பின்பற்றுகிற சமூகம் மனச்சிக்கல்கள் அதிகமில்லாமல் இருக்கும். 

ஆனால் நாம் அவர்களிடமிருந்து கலாசார ரீதியாக மட்டுமின்றி பல விஷயங்களில் சுமாராக இருநூறு ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறோம். நம் மண்ணுக்கென்று பிரத்யேகமான பண்பாட்டு, கலாசார பெருமைகள் இருந்தாலும் ‘நாலு பேர் என்ன சொல்வார்களோ, நினைப்பார்களோ’ என்கிற அச்சுறுத்தலுக்காகவே தனிநபர் சார்ந்த பல விருப்பங்களை விழுங்கிக்  கொண்டு பல்வேறு மனப்புழுக்கங்களோடு அவதிப்படுகிறோம். இதுவே சமூகத்தின் வெவ்வேறு குற்றங்களுக்கான காரணங்களாகவும் மாறுகின்றன. 

தெரிந்தோ, தெரியாமலோ ஓவியா மேற்குலகத்தின் பிரதிநிதியாக இருக்கிறார். எனவேதான் அவரது நடவடிக்கைகள் ஆசார மனோபாவமுடைய நமக்கு விசித்திரமாகத் தெரிகின்றன. 

அவர் தனக்குத்தானே மிக மிக நேர்மையாக இருக்க நினைக்கிறார். இதை ஆரவ் உள்ளிட்ட மற்றவர்களும் பல சமயங்களில் ஒப்புக் கொள்கிறார்கள். கண்ணைக் கட்டிக் கொண்டு ஆடிய ஒரு விளையாட்டில் கூட ஓவியா நேர்மையின்றி நடக்கத் தயாரில்லை’ என்கிற ஓர் உதாரணத்தை ஆரவ்வே சொல்கிறார். 

ஆனால் இந்த தனிநபர் சுதந்திரத்திற்கு என ஒரு கறாரான எல்லையிருக்கிறது. ‘நீ கையை வீசுவதற்கான சுதந்திரம், அடுத்தவரின் மூக்கின் எல்லைவரைக்கும்தான் இருக்கிறது’ என்றொரு பழமொழி இருக்கிறது. தன் மீது திணிக்கப்பட்ட காதலை  எதிர்தரப்பிடம் வலியுறுத்துவதற்கான சுதந்திரம் ஓவியாவிற்கு எத்தனையுள்ளதோ, அதை மறுப்பதற்கான அதே சுதந்திரம் ஆரவ்விற்கும் உள்ளது. 

முதலில் இருந்தே ‘ நண்பர்கள்’ என்கிற எண்ணத்துடன்தான் தான் பழகினேன்’ என்கிறார் ஆரவ். அவர் சொல்வதில் பெருமளவு உண்மையிருக்கலாம். ஆனால் அப்படியாகத்தான் அவர் நடந்து கொண்டாரா என்றெழுகிற சந்தேகத்தை துடைக்க முடியவில்லை. 

‘எப்பவாவது உன் கிட்ட ஆரவ் ‘லவ் யூ’ன்னு சொல்லியிருக்கிறாரா என்று சிநேகன் நேரடியாக கேட்கும் போது ‘அப்படி சொன்னதில்லை’ என்று நேர்மையாக ஒப்புக் கொள்ளும் ஓவியா, ‘ஆனா நமக்கு உள்ள தெரியும் இல்லையா,. அவர் நடந்துக்கிட்ட சில விஷயங்கள்… என்றும் சொல்கிறார். நேரடியாக சொல்லப்படாவிட்டாலும் சில நடவடிக்கைகளின் மூலமாக உள்ளுணர்வின் உந்துதலில் இந்த உணர்வை அறிந்து கொள்ள முடியும். அதிலும் பெண்கள் இந்த விஷயத்தில் இன்னமும் கூர்மையாக இருப்பார்கள். 

**

வையாபுரி

 

ஓவியாவின் தரப்பிற்கு இன்னமும் வலிமையூட்டும் காரணமாக இன்று வையாபுரியின் கோபம் அமைந்தது. பழைய தமிழ் திரைப்படங்களில் எல்லாம் ஒரு காட்சிக் கோர்வை வரும். திமிர் பிடித்த மனைவிக்கு அடிமைத்தனமான கணவன் இருப்பான். மனைவி மற்றவர்களுக்கும் தனக்கும் செய்யும் கொடுமையையெல்லாம் வாயில்லாப்பூச்சியாக தாங்கிக் கொள்வான். ஆனால் ஒரு கட்டத்தை தாண்டிய பிறகு கொடுமை தாங்காமல் துணிவு கொண்டு மனைவியின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை அறைவான். 

‘அப்படிப் போடு’ என்று அவனுடைய துணிச்சலைக் கண்டு பார்வையாளர்களும் உற்சாகமாவார்கள். ஏறத்தாழ இதே உணர்வை இன்று வையாபுரி தந்தார். ‘என்ன நடந்தாலும் சரி, நான் உன் பக்கம் நிக்கறேன்.. உன் பக்கம்தான் உண்மையிருக்கு’ என்று ஓவியாவிடம் மிகுந்த உணர்ச்சியுடன் ஆவேசமாக அவர் வாக்குத் தந்தது ‘மாஸான’ காட்சியாக இருந்தது. ‘எனக்கும் ஒரு பொண்ணு இருக்கு.’ என்று அவர் குறிப்பிட்டது நெகிழ்வையளித்தது. ஒரு பொறுப்பான தகப்பனின் சித்திரத்தை வையாபுரி தந்தார். 

ஏறத்தாழ மற்றவர்கள் அனைவரும் ஓவியாவை தனிமைப்படுத்தி ஒதுக்கி வைக்கும் போது அவர் தந்த அவமானங்களையெல்லாம் விழுங்கி விட்டு சிக்கலான தருணங்களில் உதவி  மற்றும் ஆலோசனைகள் தரும் சிநேகனின் ஜெண்டில்மேன்தனம் பாராட்ட வைக்கிறது. என்னவொன்று, இதை அப்படியே காயத்ரி கும்பலிடம் புறம் பேசும் போது மட்டும்தான் நெருடல் ஏற்படுகிறது. ‘ஆரவ் பிரச்னையை ஓவியாவை பழிவாங்குவதற்கான சந்தர்ப்பமாக காயத்ரி உபயோகித்துக் கொள்கிறார்’ என்று அவர் சொல்வது உண்மையான விஷயம். 

**

காதலில் விழுந்து விட்டு பின்பு அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் ஓவியாவின் சித்திரத்தின் மூலம் சமகால இளம் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பல பாடங்கள் உள்ளன. 


வெளிப்படையாகவும் இயல்பாகவும் இருப்பது, மற்றவர்களின் உள்ள குறைகளை ஊதிப் பெருக்கி புறம் பேசாமல் இருப்பது. மற்றவர்களின் புண்படுத்துதல்களை மனதிற்குள் வாங்கிக் கொள்ளாமல் அவற்றை புன்னகையுடன் கடப்பது என்று பல நல்ல விஷயங்கள் ஓவியாவிடம் இருந்தாலும் காதல் என்கிற உணர்வு மட்டுமே அவரைப் படாத பாடு படுத்துகிறது. ‘இந்த வீட்ல மற்ற விஷயங்கள எல்லாம் ஓகே. அதையெல்லாம் ஈஸியா மேனேஜ் செஞ்சிடுவேன்’. ஆனா காதல் விஷயத்துல மட்டும்தான் நான் வீக்’ என்று அவர் சொல்வதைப் பார்க்கலாம். 

நட்பிற்கும் காதலுக்குமான துல்லியமான வித்தியாசத்தை புரிந்து கொண்டு எதிர்தரப்பிடம் பழக வேண்டும். அது ஆணோ, பெண்ணோ தன்னுடைய நிலையை துவக்கத்திலேயே எதிர் தரப்பிடம் தெளிவுப்படுத்தி விட வேண்டும். தாமாக வளர்த்துக் கொண்ட கற்பனைகளை பிறகு கைவிட முடியாமல் தம்மையும் துன்புறுத்திக் கொண்டு மற்றவர்களையும் துன்புறுத்தக்கூடாது.  இப்படிப்பட்ட பிரச்சினையைில் பெண்கள் மீது இளம் ஆண்கள் நிகழ்த்தும் வன்முறைகளைப் பற்றி பல செய்திகளை தினமும் பார்க்கிறோம். 

‘விரும்பி வர்றவங்களை எனக்குப் பிடிக்கறதில்ல.. அவங்களை உடனே ஒதுக்கிடுவேன். இவர் விலகி விலகி போறதாலதான் பிடிச்சிருக்கு’ என்று ஆரவ் குறித்து ஓவியா சொல்வது பழமைவாத சிந்தனைதான் என்றாலும் ஒருவகையில் அதுதான் மனிதனின், குறிப்பாக பெண்களின் மனோபாவம். ‘விரும்பிப் போனால் விலகிப் போகும், விலகிப் போனால் விரும்பி வரும்’ என்று பெண்களின் உளவியல் குறித்த பொதுப்படையான கருத்து உண்டு. 

தமக்கு முன் வீசப்படும் அனுதாபங்களை ஓவியா பயன்படுத்திக் கொள்வதில்லை என்பது அவருடைய மனஉறுதியின் இன்னொரு அடையாளம். ‘ஏதோவொன்றை’ சாப்பிடச் சொல்லி போலிப்பரிவுடன் காயத்ரி நினைவுப்படுத்திய போது .. ‘நீங்க கவலைப்படாதீங்க.. எனக்கு அம்மா இருக்காங்க’ என்று மூக்குடைத்தது ஒருவகையில் நெருடல் என்றாலும் இன்னொரு வகையில் காயத்ரியின் அதுவரையான கொடுமைகளுக்கு ஒரே வாக்கியத்தில் ஓவியா அளித்த பதிலடியாக எடுத்துக் கொள்ளலாம். 

தனக்கு விருப்பமில்லாத task-ஐ கறாராக தொடர ஓவியா மறுப்பதிலிருந்து, தங்களுக்கு உவப்பில்லாத விஷயங்களை தயக்கத்தோடு ஏற்றுக் கொள்ளாமல் கண்டிப்புடன் மறுப்பதற்கான வழக்கத்தையும் நாம் பின்பற்றத் துவங்கலாம். ‘BE YOURSELF’. மற்றவர்களின் தீர்மானங்களுக்காக நாம் வாழ முடியாது. வாழவும் கூடாது. 

**

பிக் பாஸ் தமிழ்

இன்று தரப்பட்ட task-ல் நிகழ்ச்சிகளை நகைச்சுவையாக தொகுத்து தர ஆவலுடன் முன்வந்த வையாபுரியை தடுத்து நிறுத்தி அந்த வாய்ப்பை ஜூலிக்குத் தந்த சக்தியின் செயல் நெருடலைத் தந்தது. ஆனால் பல திரைப்படங்களில் ஏற்கெனவே நடித்து புகழ் பெற்று விட்ட வையாபுரியை விடவும், நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகம் ஆக விரும்பும் ஜூலிக்கு வாய்ப்பு தரப்பட்டது சரியே. 

ஆனால் ஒரு வழக்கமான VJ மாதிரியே செயற்கைத்தனத்துடன் ஜூலி பேசியது சலிப்பு. இந்த விஷயத்தில் ‘கலக்கப் போவது யாரு’ தொகுப்பாளராக ஜாக்குலினுக்கு போட்டியாக வருவார் என்று தோன்றுகிறது. ஏன் நிகழ்ச்சி தொகுப்பாளர் அனைவரும் சொல்லி வைத்தது போல ஒரே மாதிரியான பாணியை பின்பற்றுகிறார்கள் என்று தெரியிவில்லை.  

கூட்டுக்குடும்பங்கள் அதிகமிருந்த  காலக்கட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்து வைக்க வயதில் முதிர்ந்த ஒரு உறவினர் ‘பஞ்சாயத்திற்கு’ வருவார். அதை நினைவுப்படுத்தும் வகையில், பிந்துமாதவி அந்த வீட்டின் பழைய விஷயங்கள் ஒவ்வொன்றையும் விசாரணை செய்வது சிறப்பு. நம்முடைய ஆதங்கங்களையே அவர் பிரதிபலிக்கிறார் என்கிற வகையில் அவரை பிடித்துப் போகிறது. அப்படி விசாரணை செய்யப்படும் நபர்களும் தங்களின் வாக்குமூலங்களை குற்றவுணர்வின் அடிப்படையில் தெரிவிக்கிறார்கள் என்பதையும் நம்மால் உணர முடிகிறது. வெளியில் இருந்து அதுவரை பார்த்த ஓவியாவிலிருந்து முற்றிலும் வேறு மாதிரியான ஓவியாவை அருகில் பார்க்கும் பீதி பிந்து மாதவியின்  முகத்தில் வெளிப்படையாகத் தெரிகிறது. முந்தைய எபிசோடில் காயத்ரியிடம் பரணி பற்றி கேள்வி கேட்டது, ஓவியாவிடம்' இதெல்லாம் உனக்குத் தேவையா' ,  நேற்று ஆரவிடம், ' நீயும் கொஞ்சம் தப்பு பண்ணின. ஓவியா மேல தான் எல்லா தப்பும்னு நீ பழி போட முடியாது ' என கேள்வி கேட்பது என பிந்து மாதவி, மக்களின் கேள்விகளை எல்லாம் அங்கிருக்கும் நபர்களிடம் முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்.

பிந்து மாதவி

 

‘அவ ரொம்ப நேர்மையானவ. கோபத்தில் ஏதாவது போட்டு உடைப்பார். அல்லது தனக்கு தீங்கு ஏற்படுத்திக் கொள்வாரே தவிர, மற்றவர்களுக்கு தீங்கு செய்ய மாட்டார்’ என்று சக்தி, பிந்து மாதவியிடம் சொல்வது சரி. ஆனால் ‘அவளை அறையணும் போல கோபம் வருது’ என்று வேறு சமயத்தில் சொல்லும் போது, கமலால் கண்டிக்கப்பட்டும் கூட அவருக்குள் இருக்கும் ஆணாதிக்க உணர்வு அப்படியே வெளிப்படுகிறது. தான் எப்போதும் சொல்லிக்கொண்டு இருப்பது போல் 'நடிகனான' சக்தி தனக்கு இருப்பதாக நினைக்கும் நடிகன் என்கிற பிம்பம் உடைந்து இருப்பதை வெளியே வந்து நிகழ்ச்சியைப் பார்க்கும் போது உணர்வார் என்றே தோன்றுகிறது,

**
ஓவியா பிக் பாஸ் வீட்டில் தமக்கு தரப்படும் பணிகளை சரிவரச் செய்யாமல் டபாய்க்கிறார், சோம்பேறியாக இருக்கிறார், அவர் வேலையைச் சேர்த்து நாங்களும் செய்ய வேண்டுமா?’ என்று காயத்ரி நினைப்பது ஒருவகையில் சரிதான். ஆனால் அது சார்ந்த ஆட்சேபத்தை கோபமாகவும் வசைகளாகவும் அவர் வெளிப்படுத்துவதுதான் நெருடலையும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. 

ஓவியாவின் தற்போதைய பிரச்னை, வலி பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். இந்தச் சமயத்தில் கூட பணியைச் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துவதும், அது சார்ந்த சர்ச்சையை உருவாக்கி பழிதீர்க்க முயல்வதும்  முறையானதல்ல. 

“ஏன் இந்த வேலைகளையெல்லாம் நான் செய்யணும்.. தலையெழுத்தா” என்று அவர் உண்மையாகவே  நினைப்பாராயின் இந்த விளையாட்டின் மையத்தை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றே ஆகிறது. 

கூடிவாழும் தன்மை, அது சார்ந்து எழும் சிக்கல்களின் மீதான சகிப்புத்தன்மை, இதர போட்டியாளர்களிடம் உண்மையாகவே காட்டும் இணக்கம் ஆகியவற்றை உணர்ச்சி மோதல்களின் வழியாக சோதிப்பதே இந்த விளையாட்டின் அடிப்படையான நோக்கமும் சவாலும்.  இதர போட்டியாளர்களை தங்களின் குடும்ப உறுப்பினர்களாக பாவிக்கவே முயற்சி செய்ய வேண்டும். மாறாக ‘இனி பிக் –பாஸ் வீடுதான் வாழ்க்கை’ என்கிற முறையில் நிரந்தர பகைமையை வளர்த்துக் கொள்ளக்கூடாது. நம்முடைய நிஜ வாழ்க்கையில் இவ்வாறான மனச்சிக்கலை உள்ள ஒரு குடும்ப உறுப்பினர் வீட்டில் இருந்தால், நாம் இவ்வாறுதான் கோபமாக நடந்து கொள்வோமா’ என்கிற மன முதிர்ச்சியை காயத்ரி அடைய வேண்டும் என்று தோன்றுகிறது. 

சக்தி

**

தனது அரசியல் வருகை சார்ந்து நீண்ட காலமாகவே பல குழப்பமான கருத்துக்களை ரஜினி சொல்லி வந்தாலும், அவருடைய ‘வாய்ஸ்’க்கிற்கு என்று இன்னமும் கூட ஒரு முக்கியமான எதிர்பார்ப்பு இருக்கிறது. முக்கியமான நேரங்களில் அவருடைய சிறிய அசைவு கூட பரபரப்பாக பேசப்படுகிறது. அதைப் போலவே இந்த பிக் –பாஸ் விளையாட்டின் தவிர்க்க முடியாத மையமாக ஓவியா இருக்கிறார். 

தனது இனிமையான நல்லியல்புகளால் பலரைக் கவர்ந்து கவனிக்க வைத்த ஓவியா தனது இன்னொரு புறமான நிறத்தினாலும் அதே விதமான கவன ஈர்ப்பை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்கிறார். அவர் இல்லாவிட்டால் பிக் – பாஸ் விளையாட்டின் செல்வாக்கு பெரிதும் சரிந்து விடும் என்று நிகழ்ச்சி வடிமைப்பாளர்களும் மறைமுகமாக ஒப்புக் கொள்கிறார்கள். இயந்திரக் குரலில் மற்றவர்களை கண்டிப்புடன் கையாளும் பிக் பாஸ், ‘ஸாரி.. இந்த task-ஐ என்னால் செய்ய முடியாது’ என்று ஓவியா கண்டிப்புடன் சொன்ன போது அதை எப்படிக் கையாள்வது என்கிற தடுமாற்றம் பிக் –பாஸின் குரலில் அப்பட்டமாக தெரிந்தது. இந்த வகையில் பிக் –பாஸிற்கே பாஸ் ஓவியாதான். 

ஓவியாவிற்கு பெருகிக் கொண்டே வரும் மக்களின் ஆதரவையும், வாக்குகளின் எண்ணிக்கையும் கமலையும் ஆச்சர்யப்படவே வைக்கும். மற்ற போட்டியாளர்கள் தங்களைக் கீழாக எண்ணி விடக்கூடாது என்பதற்காக, அவ்வப்போது ஓவியாவை செல்லமாக தட்டியும் வைக்கிறார்.

 

அனைத்து துறைகளிலும் விளையாட்டுக்களிலும் ஆண்களின் வெற்றியே அதிகம் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு சமூகத்தின் பெரும்பான்மையை தன்னைக் குறித்து பேசவும், சிந்திக்கவும், அன்பு செய்யவும் வைத்த ஓவியாவின் இந்த வெற்றி  பெண்ணிய நோக்கில் மிக முக்கியமானது. சில பிசிறுகள் இருந்தாலும் அவருடைய ஆளுமை, சமகால இளம் பெண்களுக்கு மிகப் பெரிய பாடமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/97938-oviya-is-the-super-star-of-biggboss-house-happenings-of-bigg-boss-day-39.html

Link to comment
Share on other sites

அந்நியன் மோடில் ஓவியா... எப்படி எதிர்கொள்வார் கமல் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (40-ம் நாள்) #BiggBossTamilUpdate

 
 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg_Boss_Banner_09028.jpg

இந்தியாவிற்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்த வரலாற்றுக் காரணத்தினாலோ என்னவோ, பிக் பாஸ் வீட்டிலும் இப்போதெல்லாம் நள்ளிரவில்தான் வரலாற்றுச் சம்பவங்கள் அதிகம் நிகழத் துவங்கி விட்டன. 

நேற்றைய ஓவியா – பிக் பாஸ் வீட்டின் சூப்பர் ஸ்டார். ஏன்?- பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? அத்தியாத்தில்  ஓவியாவிற்காக பேசுவதில் யார் நிஜமாக நடந்து கொள்கிறார்கள் ? என்பது பற்றி கேட்டிருந்தோம்

விகடன் சர்வே பிக் பாஸ்



அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறவனை தட்டி எழுப்பி “தூங்கிட்டிருக்கிறியா மச்சி?” என்றால் அவன் எப்படியெல்லாம் காண்டாவான்? அப்படியொரு கோபம் ஆரவ்விற்கு வந்திருக்கும். சரியாக 12.00 மணிக்கு நடுஇரவில் அவரை எழுப்பிய ஓவியா ‘முட்டாள்னு நெனச்சியா. குற்றவுணர்வு இல்லையா…மாத்திரை.. கமல் சார்.. என்றெல்லாம் ஏதேதோ சொன்ன போது விஷயம் ஆரவ்வைப் போலவே நமக்கும் புரியவில்லை. 

ஆனால் இதை முதலில் நிதானமாக கையாண்ட ஆரவ்வின் பொறுமையை பாராட்ட வேண்டும். ‘ப்ளே பாய்’ என்று சொல்லப்பட்டவுடன்தான் பொறுமையை இழந்தார். இதை அரையும் குறையுமாய் ஒட்டு கேட்டுக் கொண்டிருந்த காயத்ரி குழு ‘பஞ்சாயத்து பாலிடால் குடிச்சிட்டானாம்’ என்கிற ரேஞ்சிற்கு தவறாக புரிந்து கொண்டு என்னென்னமோ பேசிக் கொண்டிருந்தார்கள். வம்பு பேசுதலின் அடிப்படையான விஷயமே தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வதந்திகளின் மீதாகத்தான் உருவாகிறது.  

Bigg Boss Tamil



பொதுவாக ஆண்களும் பெண்களும் கலந்து செல்கிற பயணங்களில்  இரவு தங்கும் போது பாதுகாப்பிற்காக பெண்களின் அறையை பூட்டி வைப்பது வழக்கம். ஆனால் ‘எங்களைக் காப்பாத்துங்க பிக் பாஸ். ஆண்களின் அறையை பூட்டி வெச்சிடுங்க’ என்று அந்த வீட்டின் ஆண்கள் கதறும்படியாகி விட்டது நிலைமை. யட்சி போல இரவில் திரிந்து கொண்டிருக்கிற ஓவியா.. ஒற்றை ஆளாய் அந்த வீட்டையே மிரட்டிக் கொண்டிருக்கிறார். 

இதுவரையான பிக் பாஸ் நிகழ்வுகளில் ஓவியாவிற்கு நிறைய வசைகளும் அவமானங்களும் கிடைத்தாலும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாத அவர், அதிகம் காயப்பட்ட விஷயங்களில் ஒன்று ஜூலி சொன்ன பொய். அவர் அப்படி நினைப்பது முழு நியாயமே. உண்மையான கவலையுடன்  ஆறுதல் சொல்லச் சென்ற தன்னை வேறு மாதிரியாக சித்தரித்ததும் அல்லாமல் அந்தப் பொய்யை நெடுநாட்கள் பாதுகாப்பாக வைத்திருக்கிற ஜூலியின் மீது ஓவியாவிற்கு மட்டுமல்ல நமக்கே கூட கொலைவெறியாகத்தான் இருக்கிறது. 

எனவே கோபத்தில் ஜூலியை நோக்கி ‘இனிமே பொய் சொல்லாத. எப்படி ஒரு மாசமா ஒரு பொய்யை இழுக்க முடியுது’ என்று ஓவியா கேட்பதின் மூலம் பொய் சொல்லுதல் என்னும் சிறுமையை அவரால் சகித்துக் கொள்ளவே முடிவதில்லை என்று தெரிகிறது. 

‘சரியான விஷயத்துக்காக கோபப்பட்டா எனக்கு ரொம்பவும் பிடிக்கும்’ என்று சிநேகனிடம் அன்றிரவு சொல்கிறார் ஓவியா. அவரின் பிரத்யேகமான ஆளுமைக்குணத்தை, அதிலுள்ள தூய்மைகளை, கறாரான தேர்வுகளை இது போன்ற உரையாடல்களிலிருந்து நம்மால் புரிந்து கொண்டு அவரை வியக்க முடிகிறது.  

oviya arav



***

பெண்கள் அறையிலிருந்து தன்னுடைய போர்வையை எடுத்துச் சென்ற ஓவியா, போகும் முன்..  ‘ஜூலி.. கடுப்புல இருக்கேன்.. ஏதாவது பாட்டு கீட்டு பாடினே.. செஞ்சிடுவேன்’ என்று மாரி ‘தனுஷ்’ மாதிரி மிரட்டி விட்டுப் போக, ஒப்பாரி வைக்க ஏதாவது காரணம் கிடைக்காதா என்று காத்திருந்த ஜூலி, அரைகிலோ காரணம் கிடைத்த மகிழ்ச்சியில் ‘அக்கா.. அவ.. என்னை செஞ்சிடுவேன்னு’ மிரட்டறாக்கா’ என்று ஏதோ கொலை முயற்சியை எதிர்கொண்டது போல காயத்ரியிடம் தஞ்சம் புகுந்தது ஒருவகையில் காமெடியாக இருந்தாலும் இன்னொரு வகையில் பரிதாபமாகவே இருந்தது. ‘எவண்டி.. உன்னைப் பெத்தான்’ என்று முன்பு ஓவியாவை கிண்டலடித்து கெத்தாக பாடிய ஜுலியா இது? எப்படி ஒடுங்கிப் போயிருக்கிறார், பாவம். 

காலை ஆறு மணிக்கு ஒரு மாதிரியாகவும், மாலை ஆறு மணிக்கு மேல் வேறு மாதிரியாக உருமாறுகிற வடிவேலுவைப் போல ‘பாடினே, செஞ்சுடுவேன்’ என்று இரவு மிரட்டிய ஓவியா, காலையில் புன்னகையுடன் ஜூலியை நோக்கி ‘தேவர் மகன்’ சிவாஜி மாதிரி ‘ஏதாவது பார்ரி…’ என்று கட்டளையிட ‘என்னடா இது இசைக்கு வந்த சோதனை…இது மேல வந்து பாய்ஞ்சிடுமோ’ என்று பயந்து கொண்டே சமய சந்தர்ப்பமில்லாமல் ‘வேர் ஈஸ் த பார்ட்டியை’ ஈனஸ்வரத்தில் பாடிய ஜூலியைப் பார்க்க சிரிப்பு தாங்க முடியவில்லை. 

oviya julie



‘அவ உன் கிட்ட வந்து பேசினா.. சிரிச்சு பேசு.. என்ன.’ காயத்ரி உத்தரவு தந்தவுடன்தான் இந்த மாற்றம் ஜூலியிடம் நிகழ்ந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். அதற்கு முன் குட்மார்னிங் சொல்லி  ஸ்டோர் ரூமில் தாமாக  வந்து கட்டிப்பிடித்த ஓவியாவிடம் முகம் தராமல் போனார் ஜூலி. தனக்கென்று சுயபுத்தியும் தனித்தன்மையும் இல்லாமல் இன்னொருவரின் நிழலில் இருக்கிற அடிமைத்தனத்தோடு ஒருவரின் ஆளுமை இருந்தால் அது எத்தனை மொண்ணையாகவும் எரிச்சலூட்டுவதாகவும் இருக்கும் என்பதற்கான சரியான உதாரணம் ஜூலி. ஒரு துளியாக இருந்தாலும் அது நம்முடைய சுயமான ஆளுமையாக இருக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் ஜூலியின் நேரெதிரான பிம்பம் ஓவியா. சரியோ, தவறோ.. அவர் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவரேதான் எடுக்கிறார். எதிரே இருப்பவர் கமல்ஹாசனா, போண்டா மணியா என்றெல்லாம் பார்த்து அதற்கேற்ப எதிர்வினை செய்யும் பழக்கமெல்லாம் அவரிடம் இல்லை. 

காயத்ரி, நமீதா, ரைசா, ஜூலி ஆகியோர் இணைந்து ஓவியாவை முன்பு தூங்க விடாமல் பாட்டுப்பாடி செய்த கலாட்டாவிற்கான பதிலடியை ஓவியா இன்று தந்து விட்டார் என்று தோன்றுகிறது. இதை ஒற்றை ஆளாய் அவர் செய்த சாதனையைக் கவனிக்க வேண்டும். சக்தி உள்ளிட்ட உருவங்கள் இருட்டில் சப்தமேயின்றி ரகசியக் குரலில் பேசிக் கொண்டு கமுக்கமாக அமர்ந்திருந்தன. 

‘என்னை செஞ்சுடுவேன்னு சொல்றாக்கா?’ என்றவுடன் செயற்கையான ஆச்சரியத்துடன் ‘What.. are you serious?” என்ற ரைசாவின் அதீதமான முகபாவம் இருட்டிலும் தெளிவாகத் தெரிந்தது. சரோஜாதேவிக்கு அடுத்தபடியாக ஹெவி மேக்கப் போட்டு சாதனை படைக்கும் ரைசா, அந்த இருட்டிலும் கையில் கண்ணாடியை வைத்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இது போன்ற ரைசாவின் மேட்டிமைத்தனமான உடல்மொழி பல சமயங்களில் நம்மை எரிச்சல்படுத்துகிறது. 

ஹாரர் படம் பார்த்த பயத்தோடு சப்தநாடியும் ஒடுங்க அனைவரும் ஒன்றாக இணைந்து பாதுகாப்பாக படுத்துக் கொண்டார்கள். அவர்களைப் பார்க்க பரிதாபமாக இருந்தாலும், ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்கிற பழமொழிற்கு ஏற்ப, அதுவரை அடக்கியிருந்த அத்தனை கோபத்தையும் ஒரே நாளில் வெளிப்படுத்திய ஓவியாவைக் கண்டு அவர்கள் அடங்கி ஒடுங்கியது மகிழ்ச்சியைத் தந்தது. 

oviya


**

உள்ளே தூங்க முடியாமல்.. வெளியே நீச்சல் குளத்தில்.. ‘ஐ லவ் யூடா.. என்று பினாத்திக் கொண்டே இருந்த ஓவியாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. 

காதல் என்கிற உணர்வு எத்தனை அதிக இன்பத்தை தருகிறதோ, அதற்கு நிகராக ஏன் சமயங்களில் அதற்கும் மேலாகவும் துன்பத்தையும் தருகிறது. முகத்தில் பொங்கி வழியும் கண்ணீருடன் நீச்சல் குளத்தின் ஓரத்தில் படுத்துக் கொண்டிருந்த ஓவியாவை நேரில் சென்று ஆறுதல் சொல்ல முடியாதா என்கிற ஏக்கம் ஏற்பட்டது. இதற்கு மேலும் இது பிக்பாஸ் உருவாக்கிய திரைக்கதை, ஓவியாவின் நடிப்பு என்றெல்லாம் ஒருவர் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. (இறைவனின் திருவிளையாடல் போல இதற்கான விளையாட்டுக் களத்தை உருவாக்கித் தந்தது பிக் பாஸ் என்பது வேறு).

பார்வையாளர்களின் ஏக்க குரல் காயத்ரிக்கு கேட்டிருக்குமோ என்னமோ, ஓவியாவை அழைத்து அருகில் அமர வைத்து உரையாடியது நெகிழ்வான காட்சி. ‘I Feel bad for her’ என்று அவர் காலையில் சொன்ன போது இந்த நல்லியல்பை காயத்ரி குழு முதலிலேயே கடைப்பிடித்திருந்தால், ஓவியாவிற்கு இத்தனை அவஸ்தை நேர்ந்திருக்காதோ என்று தோன்றிற்று. 

சரியான நேரத்தில் தரப்படாத வைத்தியம், பிறகு எத்தனை சிறப்பானதாக இருந்தாலும் அது வீண். 

‘உங்களிடம் எனக்கு ஏதும் பிரச்னையில்லை’ என்று காயத்ரியை நோக்கி ஓவியா சொன்னது சிறப்பு. அவர் தன்னை நோக்கி எத்தனை கடுமையான வார்த்தைகளில் வசைந்திருந்தாலும் அது மேற்பரப்பில் உள்ள கோபம். தன் மனதின் ஆழத்தில் சென்று கடுமையாக பாதிக்கக்கூடிய அளவிற்கானதல்ல’ என்கிற புரிதல் இருந்தால்தான் இப்படி சொல்ல முடியும். 


‘ஆரவ் சென்று விட்டானே’ என்று தவறாக நினைத்து வருத்தப்பட்டு பிறகு குழந்தைத்தனமான ஆச்சரியத்துடன் ‘என்னது…  அவன் வீட்டுக்குள்ள இருக்கானா?’ என்று  ஓவியா வியந்தது எல்லாம் அவர் கடுமையான மனக்குழப்பத்தில் இருக்கிறார் என்பதையே காண்பிக்கிறது. போட்டியாளர்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பே உளவியல் சிகிச்சை தருவது குறித்த முடிவை தாமாக முன்வந்து பிக் பாஸ் எடுத்திருக்க வேண்டும். மாறாக கடப்பாரையை முழுங்கினாலும் இஞ்சி கஷாயம் குடித்து அமைதியாக இருப்பது போல எல்லா கலாட்டாவையும் தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருப்பது முறையா மிஸ்டர் பிக் பாஸ்?

முந்தைய பாகங்களில் கணேஷ் குறிப்பிட்டதையொட்டி, இந்த விளையாட்டிற்கு வருவதற்கு முன், போட்டியாளர்களுக்கு மருத்துவ சோதனை செய்யப்படுகிறது’ என்று தெரிகிறது. ஓவியாவிற்கு முன்பே மனச்சிக்கல் இருந்திருந்தால் அது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும், போட்டியில் அனுமதித்திருக்கப்பட மாட்டார். பிக் பாஸ் நாட்களுக்குப் பிறகுதான் அவருக்கு உளச்சிக்கல் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. 

**

புயலுக்குப் பின் அமைதி என்பதைப் போல மறுநாள் காலையில் வேறு மாதிரியான ஓவியாவைப் பார்க்க முடிந்தது. எல்லோரையும் இழுத்து வைத்து மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தார். என்றாலும் வேதாளம் எப்போது முருங்கை மரம் ஏறுமோ என்று பதட்டமாகவே இருந்தது. 

 

Oviya



இத்தனை கலாட்டாக்களுக்குப் பிறகு, ஆரவ் தன் நிலையை தெளிவுப் படுத்திய பிறகும் ஆரவ்வை அவர் தொடர்ந்து தொட்டுப் பேசுவதும் ‘ஐ லவ் யூ’ என்பதும் நிச்சயம் அத்துமீறல்தான். இதில் மாற்றுக்கருத்தேயில்லை. ஆரவ் எதிர்கொள்ளும் மனஉளைச்சலையும் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டேயாக வேண்டும். 

ஆனால் ஓவியா தன்னுணர்வு அதிகம் இல்லாத குழப்பமான நிலையில் இதையெல்லாம் செய்கிறார் என்கிற அனுதாபத்தின் பின்னணியோடு இதைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. இதே மனக்குழப்பத்தோடு ஒரு ஆண், பெண் போட்டியாளரிடம் நடந்து கொண்டால் இதே அனுதாபத்தோடுதான் பார்ப்பீர்களா என்றொரு கேள்வி எழலாம். நம் சமூக சூழலில் பெண்ணுக்குத் தரப்படும் சில பிரத்யேக சலுகைகள், அனுதாபங்கள் ஆணிற்குத் தரப்படுவதில்லை என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

மன அழுத்தம் எனப்படும் தீவிரமான நிலையில் ஓவியா இருக்கிறார் என்பது தெளிவு. ‘இருக்கா இல்லையா” என்று அவர் ஆரவ்விடம் பஞ்சாயத்து வைத்து விட்டு அவர் இல்லை. என்றவுடன் ‘அடப்பாவி’ என்று ஆச்சரியப்பட்டு அல்லது கோபப்பட்டு விட்டு பின்பு சில நிமிடங்களுக்குள் அதே கேள்வியுடன் மறுபடியும் அவர் வருவதைக் கவனிக்கும் போது ‘இல்லை’ என்ற பதிலை அவர் மனம் ஏற்கவே மறுக்கிறது என்றுதான் தெரிகிறது. காலத்திற்கு மட்டும்தான் இந்தக் காயத்தை ஆற்றும் சக்தி உண்டு. அதுவரை அவர் கவனமாக பாதுகாக்கப்பட வேண்டியவர். இது ஆணாக இருந்தாலும் பொருந்தும். 

 


ஓவியாவின் உளச்சிக்கல் எந்த அளவிற்கு உள்ளது என்பதை யூகிக்க முயலும் போது அவர் அபாய கட்டத்திற்குள் விழவில்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் தனக்கு உளவியல் சிகிச்சை தேவை என்பதை அவரே உணர்ந்து அதை பிக் பாஸிடம் கேட்கிறார். இது சார்ந்த தன்னுணர்வு இருக்கும் வரை பெரிய பிரச்னையில்லை. இதையும் கடந்து விட்டால்தான் அவர் ஆபத்தான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார் என்று கொள்ளலாம்.

பொதுவாக நம் சமூகத்தில் மனநலம் சார்ந்த பிரச்னைகள் நிறைய இருக்கின்றன. ஆனால் மனநல மருத்துவரின் சேவையை நாடுவது குறித்தும் நிறைய தயக்கமும் மனத்தடையும் நம்மிடம் இருக்கின்றன. ‘நான் என்ன பைத்தியமாக்கா’ என்று ஜுலி நினைப்பதைப் போலவே, ‘பைத்தியம்’ என்று மற்றவர்கள் நினைத்து விடுவார்களோ என்று பலர் அஞ்சுகிறார்கள். ஏன், அவர்களுக்கே கூட அம்மாதிரியான தயக்கம்தான் இருக்கிறது. 

 

bindhu madhavi gayathri



உடலில் ஏற்படும் ஆரோக்கிய சீர்கேடுகளைப் போலவே மனதிலும் ஏற்படும், அதற்கான சிகிச்சையை நாடுவது மிக இயல்பானது மட்டுமல்ல அவசியமானது என்கிற விழிப்பு உணர்வு பரவ வேண்டியது அவசியம். பொது மருத்துவர்களுக்கு நிகரான எண்ணிக்கையில் மனநல மருத்துவர்களின் தேவை ஒரு சமூகத்திற்கு இருக்கிறது. ஆனால் இங்கு நிலைமை இப்படியில்லை. 

இந்த நோக்கில் தன் பிரச்னை குறித்து மிக தெளிவாக சிந்தித்து உளவியல் மருத்துவரின் சேவையை ஓவியா தானே நாட முயன்றது சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறது. 

‘இந்த விளையாட்டிற்கு தான் உகந்த போட்டியாளர் அல்ல, எனவே என்னை உடனே வெளியேற்றுங்கள்’ என்று பிக் –பாஸிடம் அவர் வேண்டிக் கொண்டது நெகிழ்வாக இருந்தது. 
 
**
இத்தனை தீவிரமான பிரச்சினை போய்க் கொண்டிருந்த போதிலும் தன் கடமையில் கண்ணுங்கருத்துமாக இருக்கும் பிக் பாஸ், கயிறு இழுக்கும் task வைத்தார். ஓவியா இதில் கலந்து கொள்ளவில்லை. இந்த விளையாட்டில் கணேஷிற்கு ஏற்பட்ட சிறிய காயத்தைக் கண்டு முதலில் அதிர்ச்சியடைந்த ஓவியா, பிறகு அவர் நடிக்கிறார் என்று கூறுவது அவருடைய மனக்குழப்பதையே காட்டுகிறது. ‘இத்தனை முட்டை தின்றும் எப்படிய்யா கீழே விழுந்தான்’ என்று வையாபுரி ஒருவேளை மனதிற்குள் நினைத்திருக்கக்கூடும். 

நாமினேஷன் படலத்தில் சக்தி, ஆரவ் போன்றோர்களின் பெயர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகம் அடிபட்டன. பிந்து மாதவி ‘காயத்ரியின்’ பெயரை முன்மொழிந்து வயிற்றில் பாலை வார்த்தார். இந்தச் சிக்கலான சூழலில் இருந்து ‘ஆரவ்’வை வெளியேற்றி அவரைக் காப்பாற்ற வீட்டு உறுப்பினர்கள் நினைக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. ஆனால் ‘ஓவியா’வின் பெயரைச் சொன்னால் மக்களின் ஆதரவை இழந்து விடுவோம் என்கிற பயமும் இருக்கிறது போல.

தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, ரைசாவிற்கு தரப்பட்ட தண்டனை போல வாயில் பிளாஸ்திரியை ஒட்டிப் பார்த்தார் ஓவியா. மற்றவர்கள் அதை நீக்கச் சொல்லி வற்புறுத்திய போது ‘பேசினால்தானே பிரச்சினை’ என்றார். பிறகு அவரே அதை நீக்கிக் கொண்டார். என்ன செய்து இந்த மனச்சிக்கலில் இருந்து மீள முடியும் என்கிற உபாயம் அவருக்கு பிடிபடவில்லை. ஆனால் மீளவேண்டும் என்கிற தன்னுணர்வு அவருக்கு இருப்பது நிச்சயம் ஆரோக்கியமான விஷயம். 

**
இதற்கிடையில் ஓவியா நீச்சல் குளத்தில் விழுந்து கிடக்கிறார் என்கிற பரபரப்பு ஏற்பட்டது. இது போன்ற மனச்சிக்கல் கொண்டிருப்பவர்களை மிக கவனமாக கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்பதற்கான பாடம் இது. உண்மையாகவே தற்கொலை எண்ணத்துடன் விழுந்தாரா, அல்லது கவன ஈர்ப்பிற்காகவா என்பதையும் பார்க்க வேண்டும். அவருடைய குழப்பம் அத்தகையது. தற்கொலையின் நுனிவரை சென்று பயந்து போய் திரும்பி வந்தவர்கள் நிறைய உண்டு. 

தன் தற்கொலை முயற்சி குறித்து  ஓவியா தானே கிண்டலடித்துக் கொண்டது சுவாரஸ்யமான காட்சி. சுயபகடி என்பது முக்கியமான விஷயம். தன்னம்பிக்கை உள்ளவர்களால்தான் தன்னையே முன்வைத்து கிண்டலடித்துக் கொள்ள முடியும். இந்த காதல் விஷயத்தை தவிர இதர விஷயங்களில் அவர் அபாரமான மனஉறுதியுடன் என்றுதான் தோன்றுகிறது. 

‘பாசத்திற்கு முன்னாடி எலி, பகைக்கு முன்னாடி புலிடா..’ என்பது போல் ஓவியா உதிர்க்கிற பொன்மொழிகளையெல்லாம் எவராவது தொகுத்து வைக்கலாம். மிகச்சிற்நத வரலாற்று ஆவணங்கள் இவை. 

சனியன்று கமலை எதிர்கொள்ள சங்கடப்பட்டு அதற்குள் இந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டுமென்றுதான் ஓவியா இத்தனை விஷயங்களை செய்கிறார் என்பது வையாபுரியின் கணிப்பு. ஆனால் இந்த வாரம் நிகழ்ந்த கலாட்டாக்களையெல்லாம் பார்த்திருந்த கமல், ‘எந்த ஒவியாவிடம் பேசுவது’ என்று தயங்கி இந்த வார பஞ்சாயத்தையே ஒத்தி வைத்திருந்தாலும் கூட நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஒவியாவிற்கு இருக்கிற மக்களின் ஆதரவை ஒருபக்கம் மனதில் வைத்துக் கொண்டே இதை இன்று கமல் சரியாக கையாள்வார் என்றே தோன்றுகிறது. தன் வாழ்நாளில் இது போன்ற மனிதர்களின் இயல்புகளை கமல் நிச்சயம் கடந்து வந்து இருப்பார். கமலுக்கு இதுவொரு சிறந்தாக டாஸ்காக இருக்கும் என்றே நம்பலாம். 

**
‘ஆக்சுவலி ஒரு நர்ஸா நான் ஓவியா பக்கத்தில இருந்திருக்கணும்’ என்று ஜுலி தன் தொழில்நிலையை இப்போதாவது உணர்ந்தது சிறப்பு. இதை அவர் முன்பே செய்திருக்கலாம். ஒரு செவிலியராக இருந்து கொண்டு ‘நான் பைத்தியமா’ என்று அவர் பேசியது அதுவொரு தாழ்வான நிலை என்றெல்லாம் பொதுப்புத்தியுடன் நினைத்துக் கொண்டது போன்றவை தன் தொழில் சார்ந்த அறிவில் பின்தங்கியிருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. 

காயத்ரியைக் கூட மன்னிக்க முன்வந்த ஒவியா, சக்தி குறித்த நெருடலை வைத்துக் கொண்டிருப்பது, சக்தியின் ஆணாதிக்க உணர்வின் மீதான வெறுப்பு என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. ‘இந்தப் பொண்ணு கிட்ட பேசினா என்ன சொல்லி அவமானப்படுத்துமோ’ என்று நினைத்தாரோ என்னமோ, சக்தியும் ஓவியாவிடம் அதிகம் பேசாமல் நிலைமையை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தார். 

மீட்புக்குழு வரும் வரைக்கும் கூட ஓவியாவால் அங்கு தாங்க முடியவில்லை. அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் என்கிற தவிப்பில் இருந்தார். காதலுணர்விற்கே உண்டான தவிப்பு இது.  நிலைமை இயல்பாக இருக்கும் போது காதலின் அருகேயே எத்தனை ஜென்மங்கள் இருந்தாலும் நன்றாக இருக்கும் என்று தோன்றும். ஆனால் அந்த உறவில் கடுமையான விரிசல் ஏற்பட்டால் அவர் முகத்திலேயே விழிக்கக்கூடாது என்று தோன்றி உடனே விலகச் சொல்லும். 

 ’45 நாள் இருந்துட்டே.. ஒரு 45 நிமிஷம் இருக்க முடியாதா’ என்ற மாதிரியெல்லாம் பேசி காயத்ரி அவரை அற்புதமாக கையாண்டார். காயத்ரியின் இன்னொரு பக்கம் இது. 

‘ஏதாவது டெரரா.. ஒரு கதை சொல்லுங்க’ என்று சிநேகனிடம் வேண்டிக் கொண்டார் ஒவியா.. ‘நீ என்னைக் கொல்ற மாதிரி ஒரு கதை சொல்லவா’ என்று நகைச்சுவையாக சொல்லி நிலைமையை சுமூகமாக்க முயன்றார் சிநேகன். சிநேகனின் மீது சில குறைகள் இருந்தாலும் எவராவது சிக்கலான சூழலில் இருந்தால் தன்னுடைய அதுவரையான கோபம், மனக்குறை போன்ற அனைத்தையும் விட்டு விட்டு பாதிக்கப்பட்டவரின் பக்கத்தில் இருந்து ஆறுதலான மொழிகளைச் சொல்வது உயர்ந்த குணம். வையாபுரியும் தன் நகைச்சுவை உணர்வின் மூலம் நிலைமையின் தீவிரத்தைக் குறைக்க முயன்றார். நகைச்சுவையைப் போல சிறந்த மருந்து உலகத்திலேயே கிடையாது. 

oviya



‘கொட்ற மழைல படுத்துப் பார்த்திருக்கீங்களா.. நல்லா இருக்கும்..’என்று மழைத்துளிகளை வாயில் பிடிப்பது போல் செய்து ஒவியா செய்து காட்டியது ஒரு கவிதையான தருணம். மழையைக் கண்டால் உடனே பதறி ஒதுங்குகிறவர்களுக்கு மத்தியில் இயற்கையைக் கொண்டாட நினைப்பவர்கள் மிக அபூர்வமானவர்கள். கலையுணர்வும் நுண்ணுணர்வும் கொண்டவர்கள். 

**
இந்தப் போட்டியிலிருந்து ஓவியா விலகுவது பார்வையாளர்களுக்கு பெரிய இழப்பும் வருத்தமும் என்றாலும் அவருடைய நோக்கில் அவர்  உடனடியாக விலகுவதே நல்லது. அவருக்கு இப்போதைய உடனடி தேவை மருத்துவ கண்காணிப்பும் நெருங்கிய உறவுகளின் அரவணைப்பும். 

வழக்கமாக ‘நாளை’ என்று போடப்பட்டு வழக்கமாக காட்டப்படும் காட்சிகளை இன்று காணவில்லை. ஓவியாவின் ரகளையைக் கண்டு பிக் –பாஸ் எடிட்டிங் குழுவே குழப்பத்தில் மூழ்கி இதை தவற விட்டதா அல்லது இதைக் காட்டாமல்  பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகமாக தூண்டும் வணிக உத்தியா என்று தெரியவில்லை. 

ஓவியா வெளியேறினாரா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படாமலேயே ஓவியாவின் ரசிகர்கள் இப்போதே சோகமாகி விட்டார்கள். சமூக வலைத்தளங்களில் இது குறித்த துயரமும் வருத்தமும் பொங்கி வழிகிறது. ‘இனி இந்த நிகழ்ச்சியைப் பார்க்க மாட்டோம்’ என்கிற பிரசவ வைராக்கியங்கள் ஆறாக ஓடுகின்றன. சரியான நிலைமையை அறிந்து கொள்ளாமல் இப்படி அவசரப்படுவது தவறு

இத்தனை குறுகிய நாட்களில் ஒவ்வொரு தமிழக மனதையும் நெருங்கிய உறவு போல் எண்ண வைத்தது ஓவியாவின் பிரத்யேகமான ஆளுமையின் மீதான சாதனை. அவருடைய கலைப்பயணமும் தனிப்பட்ட வாழ்க்கையும் சிறந்து விளங்கட்டும் என்று அவரை வாழ்த்துவோம்.

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/98070-how-will-kamal-tackle-oviya-happenings-of-bigg-boss-day-40.html

Link to comment
Share on other sites

'பிக் பாஸ்' வீட்டுக்குள்தான் இருக்கிறார் ஓவியா! 

ஓவியா, அதிக மன அழுத்தத்திலும் குழப்பத்திலும் இருக்கிறார் என 'பிக் பாஸ்' வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் சொல்லி வந்தார்கள். நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்களும் ஓவியா நடவடிக்கையின் மூலம் இதை உணர்ந்தார்கள். நேற்றை நிகழ்ச்சியிலும், ஓவியா நீச்சல் குளத்தில் மூக்கைப் பிடித்துக்கொண்டு மூழ்கியதைப் பார்த்ததுமே... சினேகன், ஆரவ் உள்ளிட்டவர்கள் ஓவியாவை நீச்சல் குளத்தில் இருந்து மீட்டனர். அவர், தற்கொலை எண்ணத்துடன் விழுந்தாரா அல்லது கவனஈர்ப்புக்காகச் செய்தாரா என்பது தெரியாமல் அங்கு இருப்பவர்கள் குழம்பிப் போனார்கள். 'உடனே இந்த வீட்டைவிட்டுப் போகணும்' எனத் தொடர்ந்து சொல்லிவந்தார்.

ஓவியா

காயத்ரியை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்த 'பிக் பாஸ்', 'ஓவியாவின் மேனேஜர் வந்துகொண்டிருக்கிறார். அவரை 45 நிமிடங்கள் காத்திருக்கச் சொல்லுங்கள்' என்றார். ஆனால், அதுவரைகூட ஓவியாவால் அங்கு இருக்க முடியவில்லை. அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் என்கிற தவிப்பிலேயே இருந்தார். '45 நாள் இருந்துட்டே... ஒரு 45 நிமிஷம் இருக்க முடியாதா’ என்று காயத்ரி, ஓவியாவிடம் பேசி அமைதிகாக்க வைத்தார். அத்துடன் நேற்றைய நிகழ்ச்சி முடிந்தது.

இதற்கிடையில் ஓவியா, பிக் பாஸ் வீட்டிலிருந்து சிவப்பு காரில் செல்வதுபோன்ற ஒரு புகைப்படம் வெளியானது. இதையடுத்து, 'ஓவியா, பரணியைப்போல 'பிக் பாஸ்' வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்' என்று பலரும் தகவல்களைப் பரப்பினர். 

இதுகுறித்து விஜய் டிவி தரப்பில் விசாரித்தோம், ''உண்மைதான். ஓவியாவுக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்பட்டது. அதனால், அவரை வெளியே அழைத்துச் சென்றோம். அவரை  மருத்துவக் குழு முழுவதும் பரிசோதனை செய்தார்கள். அவர் முழு ஆரோக்கியத்துடனும் முழு மன நலத்துடனும் இருக்கிறார் என்று அந்தக் குழு சொன்னது. இதையடுத்து, 'மீண்டும் நான், 'பிக் பாஸ்' வீட்டுக்குள் போக ஆசைப்படுகிறேன்.' என ஓவியா சொன்னார். அதனால், அவரை வீட்டுக்குள் அனுப்பியுள்ளோம். 

ஓவியா, வையாபுரி, ஜூலி மூவரும் எலிமினேஷன் லிஸ்டில் இருக்கிறார்கள். வாக்குகள் அடிப்படையில் யார் வெளியேறுவார் என்பதை கமல் சார் இன்று அறிவிப்பார். அது நாளை ஒளிபரப்பாகும். ஒருவேளை, ஓவியா அதிக வாக்குகள் பெற்று காப்பாற்றப்பட்டாலும், உடல் நிலையைக் கருத்தில்கொண்டு அவர் வெளியேற விரும்பினால், அவர் வெளியேற்றப்படவும் வாய்ப்பு இருக்கிறது'' என்றார்கள்.

 

நாம் அறிந்த வகையில், வாக்குகள் எண்ணிக்கையின்படி ஜூலி வெளியேற வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ஓவியா தானாக வெளியேற விரும்பினால், ஓவியாவை வெளியே அனுப்புவதா அல்லது தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்புவதா என்பதை கமல் முடிவு செய்வார். 

http://www.vikatan.com/news/tamilnadu/98107-oviya-stays-in-bigg-boss-house-only.html

Link to comment
Share on other sites

ஓவியாவுக்கு ஓய்வு தேவை தான்... இருந்தாலும் மிஸ் யூ ஓவியா! - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (41-ம் நாள்) #BiggBossTamilUpdate

 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg_Boss_Banner_09028.jpg

பிக் –பாஸ் வீடு இன்று நெகிழ்ச்சியான உணர்வுகளால் நிறைந்திருந்தது. ஒரு டிராமாவின் கிளைமாக்ஸ் போல. அழுகை – பிரிவுத் துயரம் – குற்றவுணர்ச்சி – சுயபரிசீலனை – கருணை – துரோகம் - நடிப்பு ஆகியவற்றின் உணர்ச்சிக்கலவைகள். தன்னுடைய விலகலின் மூலம் அத்தனை பேரையும் ஒற்றுமைப்படுத்தியும் சிந்திக்க வைத்தும் சென்று விட்டார் ஓவியா.

அதற்கு முன் –

முந்தைய வாரங்களை விட இந்த வாரம் கமலின் ‘தீர்ப்பு நாள்’ குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஓவியாவின் வெளியேற்றம், அதன் பின்னணிக்காரணங்கள், அது தொடர்பான நபர்கள் போன்வற்றை கமல் மிக கறாராக குறுக்கு விசாரணை செய்வார் என்று பார்வையாளர்கள் தீர்க்கமாக நம்பினர். கமல் அந்த நம்பிக்கையை பெரிதும் காப்பாற்றினார் என்பது மகிழ்ச்சி. மிகவும் நுட்பமான, அதிரடியான கேள்விகளைக் கேட்டு பதில்களை வாங்கினார். அதே சமயத்தில் எதிர் தரப்பிற்கும் அதிக சங்கடத்தை தரவில்லை. கமலுக்கு ஒரு hats-off.

kamal

இது மட்டுமல்லாமல், ஓவியாவின் உடல்நலம், பிக் –பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவர் வெளியேறி விட்டாரா, அல்லது தொடர்வாரா என்பது குறித்த பல கேள்விகளும் வதந்திகளும் பொதுவெளியில் தொடர்ந்து உருவாகிக் கொண்டேயிருந்தன. இதற்குமான பதில் கிடைத்தது. ஆம். ஓவியா இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது இன்று உறுதிப்படுத்தப்பட்டது. 

ஒரு தகவல் சோகத்தையும் மகிழ்ச்சியையும் ஒரு சேர தரமுடியும் என்றால் அது இதுதான். பிக் –பாஸ் வீடு மட்டுமல்லாமல், நாமுமே ஓவியா இல்லாததின் வெறுமையை வரும் வாரங்களில் நிச்சயம் அனுபவிப்போம். இன்னொரு பக்கம், அவருடைய உடல் மற்றும் மன ஆரோக்கியம் குறித்துப் பார்க்கும் போது அவர் வெளியேறியது சிறந்த முடிவு என்றே தோன்றுகிறது. 

**

இந்த வாரம் முழுக்க எடுக்கப்பட்ட யாரைக் காப்பாற்ற விரும்புகிறீர்கள் என கேட்டிருந்தோம். வழக்கம்போல் 90% வாக்குகள் ஓவியா வசம் தான். வாசகர்களின் கருத்துப்படி ஜூலி தான் வெளியேற்றப்படவேண்டும். எதற்கும், இன்று இரவு நிகழ்ச்சி வரை காத்திருப்போம்

ஓவியா


ஓர் இரங்கல் செய்தி என்பதுடன் இந்த நிகழ்ச்சியை கமல் துவங்கிய போது ஒரு விநாடி சட்டென்று தூக்கிப் போட்டது நிஜம். ஏனெனில் ஓவியா உடல்நலம் குறித்த வதந்திகள் அப்போது காற்றில் உலவிக் கொண்டிருந்தன. பிக் –பாஸ் நிகழ்விற்காக அரங்கப் பணியாளராக இருந்த கலீம் ஷேக் என்பவரின் மரணத்திற்காக கமல் அனுதாபச் செய்தி தெரிவித்தது கண்ணியம். (‘ஏற்கெனவே இருந்த நோயின் காரணமாக’ என்றார் கமல். ஆனால் ஊடகங்களில்  அங்கு ஏற்பட்ட விபத்து என்றே வந்திருந்தது).

அடுத்ததாக ஒரு முக்கியமான விஷயத்தை தொட்டார். இதற்காக கமலை எத்தனை பாராட்டினாலும் தகும். 

பிக் பாஸ் போட்டியாளர்களை மனநலம் குன்றியவர்களைப் போல நடிக்க வைக்கும் task-ஐ விகடனின் இந்தத் தொடரில் நானும் கண்டித்திருந்தேன். பல சமூக ஆர்வலர்களும் மனநல மருத்துவர்களும் இதைப் பற்றிய தங்களின் கண்டனங்களையும் கடுமையான அபிப்ராயங்களையும் தெரிவித்திருந்தார்கள். 

இதே கண்டனத்தை கமலும் தனது பிரத்யேகமான பாணியில் அழுத்தமாக தெரிவித்தார். ‘என்னுடைய படங்களிலும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பாத்திரங்களாக வருவார்கள், ஆனால் காமெடியனாக அல்ல, கதாநாயகனாக’ என்றது மிகச்சிறப்பு (‘குணா’ படம் சட்டென்று நினைவிற்கு வந்தது). ‘இது போன்று நடக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன். ஒருவேளை அது தொடர்ந்தால் இந்த நிகழ்ச்சி கூட எனக்கு முக்கியமில்லை’ என்று துணிவுடன் கமல் அறிவித்தது அபாரம். தான் ஒரு சிறந்த கலைஞர் என்பது மட்டுமல்லாமல் பொறுப்புள்ள குடிமகன், சமூகவுணர்வுள்ள பிரதிநிதி என்பதை பதிவு செய்து விட்டார். நன்றி கமல்.

கமல்

 

கூட்டுக்குடித்தன அமைப்பு பலமாக இருந்த காலக்கட்டங்களில் குடும்ப உறுப்பினர்களில் எவருக்கேனும் மனநலம் பிசகியிருந்தால் அவரை புறக்கணிக்காமல் அரவணைத்துப் பாதுகாப்பார்கள். ஆனால் நவீன காலத்தில் அவர்களை மருத்துமனைகளில் தள்ளி தனிமைப்படுத்தும் சூழல் உருவாகி விட்டது. இப்போது அந்த நிலைமை மெல்ல மாறுகிறது. இந்தச் சூழலில் இது போன்ற கேளிக்கைச் சித்திரங்கள் ஆபத்தானது’ என்று அவர் குறிப்பிட்டது முக்கியமானது. இது பிக் –பாஸ் நிகழ்ச்சி வடிவமைப்பாளர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழ் சினிமா இயக்குநர்களுக்குமே முக்கியமான செய்தி. 

**

உளவியல் ஆலோசகர் – ஓவியா தொடர்பான உரையாடல்கள் காட்டப்பட்டன. ‘என்னால் இயன்றதை முயன்றேன். ஆனால் முடியவில்லை’ என்பதையே வேறு வேறு விதங்களில் கூறிக்கொண்டிருந்தார் ஓவியா. பாவம், உளவியல் ஆலோசகரே சோர்வடைந்திருப்பார். ‘இந்த விளையாட்டில் தொடர வேண்டுமென்பதற்காக ‘I can’t change myself’ என்று சொன்னது அவருடைய பிரத்யேகமான முத்திரை வாக்கியம். சிம்புவின் மொழியில் சொன்னால் ‘எனக்கு நடிக்கத் தெரியாதுய்யா’. 

ஓவியா

தங்களின் அடுத்த நகர்விற்கான திட்டங்களைப் பற்றி ஓவியாவும் ஆரவ்வும் பேசிக் கொண்டிருந்தனர். பக்கத்தில் சிலை போல அமர்ந்திருந்த ஜூலியின் சித்திரத்தை, வெளியே வந்த வையாபுரி நகைச்சுவையுடன் நடித்துக் காண்பித்தார். ஜூலி கடந்து சென்ற போது ‘என்னதான் நான் முயற்சி செய்தாலும் மக்கள் மாறவில்லை’ என்ற ஓவியாவின் சொல் ஜூலியைச் சுட்டதா என்று தெரியவில்லை. 

ஆனால் பலியாடாக ஜூலியை முன்நிறுத்தி அவரைக் கிண்டலடித்து சிரிப்பதன் மூலம் தங்களின் குறைகளை மற்றவர்கள் மறைக்க முயல்கிறார்களோ என்று தோன்றியது. குறிப்பாக, சக்தி மற்றும் காயத்ரி.


ஆனால் இது போன்றவைகளைத் தாண்டி ஓவியாவின் பிரச்னைகளுக்குப் பிறகு பிக் –பாஸ் குடும்பமே ஒன்றிணைந்து அவருக்கு ஆதரவாகவும் அனுசரணையாகவும் இருந்தது முக்கியமான விஷயம். குறிப்பாக சிநேகன் மற்றும் வையாபுரி தந்த ஆறுதலும் ஆலோசனைகளும் முக்கியமானது. மற்றவர்களின் ஆறுதல்களில் போலித்தன்மையும் நடிப்பும் குற்றவுணர்வின் வெளிப்பாடும் இருந்திருக்கலாம். 


குடும்பம் என்கிற அமைப்பு தொடர்ந்து சுழல மிக ஆதாரமான அச்சு அன்பு என்கிற விஷயம். கூடிவாழும் தன்மை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், மற்றவர்களின் பிரச்னைகளை அனுசரணையுடன் புரிந்து கொள்ள முயலுதல் போன்றவை குடும்பத்தின் அடிப்படையான இயங்குமுறையாக இருக்க வேண்டும்.

கருத்து வேறுபாடுகளினால், சச்சரவுகளினால் தனிநபருக்கு ஏற்படும் மனச்சிக்கல்தான் தொற்று நோய் போல் அப்படியே பரவி சமூகத்தின் பிரச்னைகளாகவும் மாறுகின்றன. சமூகக் குற்றங்களின் ஊற்றுக்கண்கள் எங்கேயிருக்கிறது என்று ஆராய்ந்தால் அது சம்பந்தப்பட்ட நபர்களின் குடும்பத்திற்குள் மறைந்திருப்பதை உணரலாம். குடும்ப வன்முறை என்பது மிக ஆபத்தான விஷயம். ஓவியாவின் மூலம் இது சார்ந்த மிகப்பெரிய பாடத்தை நாம் கற்க முடிகிறது. 

பிக்- பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் விதம் விதமாக ஓவியாவை ஆற்றுப்படுத்த முயன்றனர். நகைச்சுவையும் அதில் கலந்து ஓடியது. ‘காதல் வந்துட்டாலே.. பிரச்னைதான்.. இதுல முட்டைப் பிரச்னை வேற’ என்று மனச்சிக்கலின் இடையேயும் பவுண்டரிகளாக அடித்துக் கொண்டேயிருந்தார் ஓவியா. 

மறுபடியும் வாக்குமூல அறை. ‘தன்னால் ஒரளவிற்கு சமாளிக்க முடியும்’  என்று நம்பிய ஓவியாவால் இந்த விளையாட்டைத் தொடர முடியவில்லை. இந்தப் பொய்யான விளையாட்டை விட வெளியே சென்று நம்பகத்தனமான மனிதர்களுடன் உண்மையான விளையாட்டை ஆட விரும்புகிறேன் என்றார். 
சிங்கத்தின் குரல் மெலிந்து பூனையாகியது போல ‘செத்து செத்து ஆடும் இந்த நள்ளிரவு விளையாட்டில்’ பிக் பாஸின் இயந்திரக்குரலில் அப்பட்டமான சோர்வு தெரிந்தது. ‘போதும் விட்ரு தாயே’ என்று உள்ளுக்குள் கதறியிருப்பார். 

**

பிக் பாஸ் நிகழ்வுகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட திரைக்கதை என்பதை இன்னமும் பலர் பிடிவாதமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள். களமும், சில சிக்கல்களை நோக்கி அவர்களை உந்தித் தள்ளும் பின்னணிச் செயல்களும் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் தரப்படுகிறது. மற்றபடி போட்டியாளர்களின் தன்னிச்சையான எதிர்வினைகள் அனைத்துமே நிஜம். உண்மையானது. 

ஓவியாவின் காதல். அது சார்ந்த துயரம் கூட திரைக்கதையின் ஒரு பகுதி என்று சிலரால் நம்பப்பட்டது. அவரின் இத்தனை அல்லல்களைப் பார்த்த பிறகும் எப்படி அவர்களால் பிடிவாதமாக எண்ண முடிகிறது என்பது ஆச்சரியம். இது 99 சதவீதம் நடிப்பல்ல, உண்மை என்று இந்தத் தொடரில் முன்னர் கூறியிருந்தேன். 

ஆனால் –

ஓவியா

 

நள்ளிரவு 01.00 மணிக்கு குழப்பமான மனநிலையுடன் வீட்டில் உலவிக் கொண்டிருந்த ஓவியா, எதையோ பகிர்ந்து கொள்ள, மற்றவர்களை எழுப்புவதற்காக தண்ணீர் பாட்டிலை போட்டு சத்தம் எழுப்பியது அராஜகமான குறும்பு. ‘am done. Am the winner. எழுந்திருங்க நண்பர்களே.. போட்டி முடிந்து விட்டது’ என்றெல்லாம் அவர் உற்சாகமாக கூவிய போது சட்டென்று ஒரு கணம் தூக்கி வாரிப் போட்டது. எதிர்தரப்பினர் நம்பியது உண்மையோ?

புதிய பறவை சிவாஜி கணேசன் மாதிரி, ‘அத்தனையும் நடிப்பா” என்று நான் உணர்ச்சிகரமாக கலங்கத் துவங்குவதற்குள் புரிந்து போனது, அந்த வீட்டில் தொடர்ந்து தங்க முடியாமல் ஓவியா நிலைகொள்ளாமல் தவிக்கிறார் என்பது. ‘இந்த விளையாட்டில் ஜெயிக்கிறேனா என்பது முக்கியமில்லை. இங்கு அனுபவம், காதல் போன்றவை கிடைத்தன. True love never fails’ என்றெல்லாம் தத்துவ மழைகளாகப் பொழிந்தார். நள்ளிரவு இரண்டு மணிக்கு கிடைத்த இந்த உபன்யாசத்தால் பிக் –பாஸ் தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பார். 

**

தன் கெத்து குறையாமல் ஓவியாவிடம் மன்னிப்பு மாதிரி எதையோ கேட்டார் சக்தி. ‘எனக்கு ஆக்ட் பண்ணத் தெரியாது’ என்பதுதான் திரைப்பட ரசிகர்களுக்கு அதில் இருந்த ஒரே சிறந்த வாக்கியம். ‘நல்லவேளை, நான் போறதுக்குள்ள, இது தெரிஞ்சிடுச்சு’ என்றார் ஒவியா. அற்ப பகையைக் கூட வருடக்கணக்காக பாதுகாத்து வைப்பவர்களுக்கான பாடம் இது. 

விடைபெறும் தருணமாக சிநேகனும் ஓவியாவும் பேசிக் கொண்டது நெகிழ்ச்சி. ‘அப்படிப் பார்க்காதீங்க’ என்றார் ஓவியா. முன்னர் நமீதா விடைபெறும் போதுதான் இதையே சொன்ன நினைவு. சிநேகனின் பார்வையில் ஏதோவொரு வசீகரம் இருக்கிறது போல. அதுவும் பெண்களின் கண்களுக்குத்தான் அது தெரிகிறது. சிநேகனின் அழுகையைப் பார்த்து ‘ஓவர் ஆக்ட் பண்றீங்க’ என்று ஓவியா சொன்னதும் ‘யாரு நானா?’ என்று சிநேகன் பதிலுக்கு கேட்டதும் ரகளை. 

snegan oviya

மற்றவர்களின் வெளியேற்றங்களின் போது அவர்கள் விலகிய பிறகுதான் போட்டியாளர்கள் கலங்குவார்கள். ஆனால் ஓவியாவின் விஷயத்தில் முன்கூட்டியே இது நடந்தது. சிநேகன் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் கலங்கிக் கொண்டேயிருந்தார். ‘நாம் இணைந்து அவரை தனிமைப்படுத்தி விட்டோமோ என்று சக்தியிடம் கூறினார். சக்தி அப்போதும் மனம் திறக்காமல் தவறுகளை பொதுவாக நியாயப்படுத்த முயன்றது நெருடல். அதிக தவறுகள் செய்யாமல்  இருந்தாலும் மனம் வருந்தும் சிநேகனின் மீதான மரியாதை கூடியது. 
ஓவியாவின் விலகல் பற்றிய அறிவிப்பு அதிகாரபூர்வமாக பிக் – பாஸால் அறிவிக்கப்பட்டது. ‘எல்லோரும் கோஷம் எழுப்புங்கள்’ என்கிற பிரசங்கக்குரலில் ‘உதவி செய்யுங்கள்’ என்றார் பிக் பாஸ்.

ஆனால் மற்றவர்களின் உதவியை கறாராக மறுத்து விட்டார் ஓவியா. மற்றவர்களின் அனுதாபங்களை எந்தவகையிலும் சம்பாதித்துக் கொள்ளக்கூடாது என்கிற மனவுறுதியின் வெளிப்பாடு இது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இந்த சுயமரியாதையுணர்வு மற்றவர்களை புண்படுத்தாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். 

‘மத்ததெல்லாம் இங்க இருக்கட்டும்’ என்றார்… ‘வேறென்ன.. இருக்கு’ என்று வையாபுரி கேட்க, ‘இங்க ‘விட்டுட்டுப்’ போறதெல்லாம் இங்கேயே இருக்கட்டும் என்றார் ஓவியா. என்னத்தை விட்டுட்டுப் போறார்? என்று வையாபுரியின் மைண்ட் வாய்ஸ் நினைத்திருக்கக்கூடும்.

வர வர ரஜினியின் ‘வாய்ஸ’களுக்கு இணையான பூடகங்களுக்கு மாறிக் கொண்டிருக்கிறது ஓவிய மொழி. 

மற்றவர்கள் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, ‘No more emotional drama’ என்கிற கறாரான அறிவிப்புடன் எவரிடமும் விடைபெறாமல் வெளியேறினார் ஓவியா. இது தவிர்க்கப்பட்டிருக்கலாம், இது நிச்சயம் நெருடலான விஷயம்தான் என்றாலும் அவர் இன்னமும் மனக்குழப்பத்தின் பிடியிலிருந்து வெளியே வரவில்லை என்பதையே காட்டுகிறது. மட்டுமல்லாமல், அங்கிருந்து உடனே வெளியேற விரும்புகிற ஆர்வத்தை மறைத்துக் கொண்டு போலியாக மற்றவர்களிடம் நடிப்பதை அவர் தவிர்க்க விரும்பியிருக்கலாம். 

**

பிறகு வீட்டுக்குள் துவங்கியது குற்றவுணர்ச்சி மீதான நாடகம்.. தனக்கு கடுமையான போட்டியாளராக இருப்பார் என்று ஓவியாவை கருதிய பிந்து மாதவியால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ‘அவர் வெளியே சென்றதுதான் நல்லது’ 

விடைபெறும் போது ஒரு வார்த்தையாவது சொல்லி விட்டுச் சென்றிருக்கலாமே என்று சக்தி வருந்தினார். ‘அவ அவளா இல்லை’ என்று தாம் சரியாக உணர்ந்ததை பதிலாகச் சொன்னார் சிநேகன். 

snegan

 

ஒருவரது இருப்பின் அருமை அவரது விலகலின் போதுதான் அழுத்தமாக உறைக்கிறது என்பதை காலம் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டேயிருக்கிறது. நாம் எப்போதுமே தாமதமாகத்தான் இந்தப் பாடத்தை கற்கிறோம் என்பதுதான் இதிலுள்ள கசப்பான உண்மை. 

குற்றவுணர்வின் உச்சத்தை அடைந்தவர் ரைசா தான். அதுவே அவர் மனம் திரும்புவதற்குமான வழியாகவும் அமைந்தது. இனி இன்னொரு ஓவியாவை உருவாக்கி விடக்கூடாதென்கிற கவனத்துடன் இதர போட்டியாளர்கள் அவரை தொடர்ந்து ஆற்றுப்படுத்தியது சிறப்பானது. 
‘இந்த விளையாட்டிற்காக நாம் பல காரியங்களைச் செய்திருக்கிறோம். சிலரை தொடர்ந்து போலி என சொல்லியிருக்கிறோம். குறிப்பாக பரணியை தனிமைப்படுத்தியிருக்கிறோம். அவங்க தப்பு செஞ்சாங்களா, இல்லையான்னு நமக்கு எப்படி தெரியும், நம்ம எப்படி தீர்ப்பு சொல்ல முடியும்’ என்றெல்லாம் ரைசா வாக்குமூலம் போல குறிப்பிட்டது உள்ளபடியே அவர் உள்ளத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காட்டியது. 

raisa

‘தான் செய்த நிராகரிப்பு, புறக்கணிப்பு, கேலி, நையாண்டி’ போன்றவை கூட ஓவியாவின் இந்த நிலைக்கு ஒருவகையில் காரணமாக இருக்கலாம்’ என்று அவர் வருந்துவது நெகிழ்ச்சி. ஆனால் சக்தி மற்றும் காயத்ரி இதை இன்னமும் defending ஆகவே அணுகுவது போல பட்டது.  ‘அவ பிரச்னைக்கு நாம காரணம் கிடையாது. ஆரவ்வின் rejectionதான் காரணம்’ என்கிறார் காயத்ரி. உண்மையும் பொய்யும் கலந்த காரணம் அது என்று தோன்றுகிறது. இந்த நாடகத்தில் கண்ணைக் கசக்கிக் கொண்டு ஓரமாக பங்கெடுக்க முயன்றார் ஜூலி. ஆனால், முதல் முறையாக நடிப்பில் 'பெயிலு' வாங்கினார் ஜூலி.
‘எல்லோரும் அவள் நடிக்கிறாள் என்றே நினைத்தார்கள். இப்போதுதான் அவர்களுக்குப் புரிந்திருக்கிறது’ என்றார் ஆரவ். 

‘ஓவியாவை ஆரவ் இன்னமும் சரியாக அரவணைத்துச் சென்றிருக்கலாமோ’ என்று ஒட்டுமொத்த பழியையும் சிநேகன் சுமத்த முயன்ற போது ‘அப்படிச் சொல்ல முடியாது. நாம் இளம் வயதிற்கான அனுபவப் போதாமைகளுடன் உள்ளோம். ஆரவ்வும் அப்படித்தான். என்று ரைசா குறிப்பிட்டது அவர் அடைந்த மனப்பக்குவத்தை காட்டுகிறது. பிக் பாஸ் வீட்டில் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாக இது அவருக்கு இருக்கும். 

**

‘வெளியே சென்ற பிறகு ஓவியாவைத் தொடர்பு கொள்ள முயல்வேன். அவள் தண்டனை கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு நட்பை புதுப்பிப்பேன்’ என்றார் ஜூலி. நல்ல மாற்றம். ‘நமது நிருபர்’ பிந்து மாதவி இந்தச் சமயத்தில் சரியான கேள்வியை முன் வைத்தார். ‘அவங்க மன்னிப்பு கேட்டும் நீங்க ஏன் சொல்லலை?” “சார் முன்னாடியே கேட்டுட்டேன். திரும்பத் திரும்ப எப்படி ஸாரி சொல்றது’ என்பது ஜூலியின் பதில்.

ஒருவர் உண்மையாக மனம் வருந்தி மன்னிப்பு கேட்பதற்கும் மற்றவர்களின் கட்டாயத்திற்காக சம்பிரதாயத்தன்மையுடன் போலியாக மன்னிப்பு கேட்பதற்கும் உள்ள வித்தியாசத்தை ஜூலியால் இன்னமும் உணர முடியவில்லையா என்று தெரியவில்லை.  அவரின் போலித்தனத்தை நம்மாலேயே உணர முடிகிற  போது பொய்யை கடுமையாக வெறுக்கும் ஓவியாவால் உணர முடியாமலா இருக்கும்?
ஓவியா நுழைவின் போது அரங்கமே உற்சாகக் கூச்சலுடன் அவரை வரவேற்றத்பார்வையாளர்களின் உற்சாகமான அன்பை அதே உற்சாகத்துடன் வாங்கிக் கொண்டு திருப்பியும் அளித்தார் ஒவியா. ‘உங்கள் அன்பிற்கு கைம்மாறு அளிக்கும் வகையில் பொறுப்போடு நடந்து கொள்வேன். இது பற்றிய அறிவிப்பு வரும்’ என்றார் ஓவியா. ‘வருங்கால தமிழகமே, ஆட்சி நமதே’ என்றலெ்லாம் ஓவியப்படை இதை அரசியல் ரீதியாக கற்பனை செய்து கொள்ளக்கூடாதே என்று கவலையாக இருந்தது. 

bigg boss tamil

**

காதல் என்கிற உணர்வுகளைப் பற்றிய அடிப்படைகளை விளக்க ஆரம்பித்தார். முன்னாள் ‘காதல் இளவரசன்’ ஆயிற்றே….எத்தனை அனுபவங்களைக் கடந்து வந்திருப்பார். ‘நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்’ என்கிற தோரணையுடன் அவர் ஓவியாவிற்கு அளித்த உபதேசங்கள் அருமையானவை. 

விடைபெறுவதற்கு முன்பாக ‘வீட்ல இருக்கறவ மத்தவங்களுக்கு ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா? என்றார் கமல்.

சபையே மிக ஆவலாக அந்தப் பதிலை எதிர்பார்த்தது. சம்பிரதாயமாக எல்லோருக்கும் நன்றியும் அன்பும் சொல்வார் போல என்று நான் கூட நினைத்திருந்தேன். தூக்கி வாரிப் போட்டது போல் பளிச்சென்று வந்து விழுந்தது அந்த மகா வாக்கியம் ‘luv you arav’.

உருகி உருகி ரொமான்ஸ் திரைப்படங்கள் எடுத்திருந்த தமிழ் இயக்குநர்கள் எல்லோரும் இந்தக் காட்சியைப் பார்த்தால் மிரண்டு போயிருப்பார்கள். இப்படியொரு உணர்ச்சியை தங்கள் திரைப்படங்களின் காட்சியில் கொண்டு வரவில்லையே என்று. அந்தப் பதிலைக் கண்டு கமலே ஒரு கணம் திகைத்துப் போனது அவரது முகபாவத்தில் தெரிந்தது. 

ஓவியாவை இத்தனை தயார் செய்து கமலின் முன்னால் அமர்த்தி வைத்திருந்த உளவியல் ஆலோசகர் நொந்தே போயிருப்பார். ‘நமக்கு இன்னமும் பயிற்சி தேவையோ”

‘அவர் உங்களுக்குப் பொருத்தமானவர் இல்லை’ என்று கூட்டம் ஆரவரித்த போது, அதை மிகவும் பணிவுடன் மறுத்த ஓவியா, ‘decision is mine’ என்றது அற்புதம். கமலும் இதை வழிமொழிந்தார். ‘மக்களிடமிருந்து கிடைக்கும் இந்த அன்பு உண்மையானது’ என்றதும் அற்புதம். 

பார்வையாளர்களின் ஆரவரமான கைத்தட்டலுடனும் பிரியாவிடையுடனும் ஓவியாவின் வெளியேற்றம் நடந்தது. 

‘ஒரு ஊரில் அழகே அழகாய் ஒருத்தி இருந்தாளே’ என்கிற ‘காக்க காக்க’ பாடலின் பின்னணியுடன் ஓவியாவைப் பற்றிய காட்சித் தொகுப்பு ஒன்று காட்டப்பட்டது. அபாரமாக  தொகுக்கப்பட்ட அந்தக் காணொளியை உருவாக்கியவர்களுக்கு பாராட்டு. 

**

பிறகு துவங்கியது குற்ற விசாரணை. பிக்-பாஸிடம் அனுமதி வாங்கிக் கொண்டார் கமல். ‘கொஞ்சம் தள்ளிக்கறீங்களா.. அவங்க கூட பேசணும்’ என்ற போது வசூல்ராஜா கமலின் குரல் ஒலித்த பிரமை. ‘வழக்கமாக மொத்தமா உட்கார வெச்சு பேசுவேன். இந்த முறை தனித்தனியா பேசணும். ஒரு காரணம் இருக்கு’ என்ற போது சக்தியும் காயத்ரியும் ஒருவரையொருவர் பள்ளி மாணவர்கள் போல பார்த்துக் கொண்டார்கள். 

‘இதுவரையான காட்சிகளை வெளியில் இருந்து பார்த்து ஒரு மாதிரி குழம்பிப் போயிருந்தேன். ஆனால் உள்ளே நிலைமை அத்தனை பயமுறுத்தலாக இல்லை’ என்றார் பிந்து மாதவி. ‘ஓவியா வின்னராக இருப்பார்’ என்று அவர் கூறியதும் கூட்டம் ஆரவரித்தது. 

நடுநிலைமையைப் பின்பற்றுவதற்கும் எல்லாவற்றில் இருந்தும் சாமர்த்தியமாக ஒதுங்கியிருப்பதற்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது’ என்று கணேஷின் மைனஸ் பாயின்ட்டை சரியாகப் பிடித்தார் கமல். ‘அவரை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. கூட்டாக இணைந்து பணியாற்றுவதில் அவர் எப்போதும் பின்னடைவை அடைந்தார்’ என்று கணேஷ் சொன்னது ஒருவகையில் உண்மைதான்.

‘inhumane’ என்று ஓவியா குறித்து சொன்னதை பரணிக்கும் ஏன் பொருத்திப் பார்க்கவில்லை என்ற கமலின் கிடுக்கிப்படி கேள்வியை கணேஷால் சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. தடுமாறி பதில் சொன்னார்.

இந்த வாக்குமூலப் படலத்தை மிக நேர்மையாக எதிர்கொண்டது ரைசா. “ஆம் அவர் தனிமைப்படுத்தப்பட்டதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருப்பேன்’. ‘இந்தக் குடும்பத்தில் எவரேனும் நாட்டாமைத்தனமாக நடந்து கொள்கிறார்களா’ என்கிற கமலின் கேள்விக்கு பதிலளிக்க ரைசா முதலில் தயங்கினாலும், கமல் தைரியப்படுத்திய பிறகு ‘சக்தி மற்றும் காயத்ரி’யை குறிப்பிட்டதற்குப் பாராட்டு. அவர்கள் செல்வாக்கான பின்னணியில் இருந்து வருகிறார்கள் என்கிற காரணத்தை அவர் சொன்னது சரியானது. 

ஒரு கூட்டத்தில் உயர்வு – தாழ்வு மனப்பான்மைகள் எவ்வாறு உருவாகின்றன என்பதற்கான சிறந்த வாக்குமூலம் ரைசாவுடையது. 

நாளை ஒளிபரப்பாகவிருக்கும் சிநேகனின் வாக்குமூலத்தை கலங்கிய கண்களுடன் கமல் கேட்டது நெகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. 

**

சரி, ஓவியாவின் மீதான இந்த அதீதமான அன்பை ஒருபுறம் வைத்து விட்டு இந்தச் சூழலை இன்னமும் கறாராக அணுகுவோம். 

ஓவியா போட்டியிலிருந்து விலகியது அல்லது வெளியேற்றப்பட்டது குறித்து துயரமும் வருத்தமும் இருக்கும். இதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று சக போட்டியாளர்களின் தனிமைப்படுத்துதல் இருந்திருக்கும். இந்த சமயங்களில் ஆரவ் தந்த ஆறுதலையும் நட்பையும் ஓவியா காதல் என்று தவறாக புரிந்து கொண்டாரோ அல்லது ஆரவ்வும் முதலில் அது போன்ற சமிக்ஞையை தந்து விட்டு பின்பு மாறினாரா என்பதெல்லாம் ஆய்வுக்குரியது. இது சார்ந்த முழு உண்மைகள் நாம் அறியாதது. 

எனவே இது குறித்தான முழு சாதகத்தையும் ஓவியாவிற்கு தந்து விட்டு ஆரவ் மற்றும் இதர நபர்களின் மீது மட்டும் சுட்டுவிரலை கடுமையான தொனியில்  நீட்டுவது முறையற்றது. 

ஓவியா வெளிப்படையாக நடந்து கொள்பவர், பொய் சொல்லத் தெரியவாதவர், வெகுளியானவர் என்பதெல்லாம் எத்தனை உண்மையோ, அதேயளவிற்கான உண்மை, கூடிவாழும் தன்மையில் அவருக்கு இருக்கும் பலவீனங்கள். பணிகளை பங்கிட்டு செய்வதில் அவருக்கு இருந்த சோம்பேறித்தனம், தலைவராக ஏற்கப்பட்டவரின் வழிகாட்டுதல்களை அலட்சியத்துடன் புறக்கணித்தது என்று பல பின்னடைவுகள் அவரின் பங்காக இருந்தது. இந்த விளையாட்டின் அடிப்படைக்கு இந்த அம்சங்கள் மிக எதிராக இருக்கின்றன. 

kamal oviya

இன்னொன்று, இந்தக் குறுகிய காலத்திலேயே இத்தனை அழுத்தமான காதல் உணர்ச்சி அவரிடம் உருவானது நிச்சயம் நிலையானதல்ல. பெரும்பாலான காதல் திருமணங்கள் தோற்றுப் போவதும், கடுமையான சச்சரவுகளுடன் வேறு வழியில்லாமல் தொடர்வதும் இந்தக் காரணத்தினாலேயே. பெரும்பாலான காதலும் திருமணங்களும் இனக்கவர்ச்சியின் உந்துதலால்  அவசரமாக நடைபெறுகின்றன. காதலுக்கு முன்பு இன்பமாக இருந்த சூழல்,  திருமணத்திற்குப் பிறகு பரஸ்பர வேடங்கள் கலைந்தவுடன், அந்த யதார்த்தத்தை எதிர்கொள்ள முடியாமல் கசப்பாக மாறுகிறது. 

இத்தனை ஆழமாக இந்தக் காதலுக்குள் ஓவியா விழுந்தது அவருடைய நோக்கில் சரியானதாக இருக்கலாம். அதற்கான நியாயமான காரணங்கள் இருக்கலாம். உண்மையான அன்பை அவர் தேடியலைந்தது கூட இந்த விபத்து நிகழ்வதற்கு ஒரு வழியாக இருந்திருக்கக்கூடும். 

ஆனால் இந்த விலகலின் மூலம் சிந்திப்பதற்கான அவகாசம் அவருக்கு கிடைக்கக்கூடும். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நிதானமாக வளர்ந்து முதிர்ச்சியடையும் காதலே, அதற்குப் பின் உருவாகும் உறவிற்கு பலமான அஸ்திவாரமாக அமையும் என்பதை அவர் உணரக்கூடும். 

ஓவியாவின் ஆளுமையும் அவரது குழப்பமான நடவடிக்கைளும் உளவியல் நோக்கில் ஒரு நல்ல case study-க்கான உதாரணம். காதலர்கள் கொள்ளக்கூடிய துயரங்களை காதல் திருமணங்களை தடுத்த பெற்றோர்கள், தடுக்கவிருக்கிற பெற்றோர்கள் புரிந்து கொள்ள இந்த அத்தியாயங்கள் உதவக்கூடும். 

குறுகிய காலத்தில் உருவாகும் காதலை விடவும் வாழ்க்கை இன்னமும் பிரமாண்டமானது.  அந்த சவால்களையும் திறம்பட ஓவியா சமாளிப்பார் என நம்புவோம்.ஏனென்றால், அவர் ஓவியா.

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/98189-oviya-needed-rest-still-we-miss-you-happenings-of-bigg-boss-day-41.html

Link to comment
Share on other sites

ஜூலி, காயத்ரி, ஆரவ்... கமல் விசாரணையில் உணர்ந்தது என்ன? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (42-ம் நாள்) #BiggBossTamilUpdate

 
 

 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg_Boss_Banner_09028.jpg

 

அறியாதவர்களுக்காக மட்டும் இந்த தகவலைச் சொல்கிறேன். மற்றவர்கள் பொருத்தருள்க. 

1950-ல் ரஷோமான் என்கிற ஜப்பானிய சினிமா வெளியானது. திரையுலக மேதைகளில் ஒருவரான அகிரா குரசேவா இயக்கியது. பின்னாளில் உருவான பல உலக சினிமாக்களுக்கு இந்த திரைப்படம் முன்னுதாரணமாக. ‘Rashomon Effect’ என்றே இதன் தனித்தன்மையான பாணி வகைப்படுத்தப்பட்டது. 

ஒரு கொலை நிகழும். அந்தச் சம்பவத்தைப் பற்றி சம்பந்தப்பட்டவர்கள் அவரவர்களின் கோணங்களில் வாக்குமூலம் தருவார்கள். உண்மை என்பது பல பரிமாணங்களைக் கொண்டது, அதை அறிய முயல்வது மிக கடினம், அதுவொரு காட்சிப்பிழை என்பதை மையப்பொருளாக இந்த திரைப்படம் கொண்டிருந்தது. வீணை பாலச்சந்தர் இயக்கத்தில் ‘அந்த நாள்’ என்று உருவான தமிழ் திரைப்படமும் இதன் பாதிப்பில்/பாணியில் உருவானதே. 

இந்த திரைப்படத்தைப் பற்றி இங்கு சொல்வதற்கு தகுந்த காரணம் உண்டு. 

பிக் –பாஸ் வீட்டின் உறுப்பினர்களிடம் இன்று குறுக்கு விசாரணை நடந்தது. ஓர் அனுபவமுள்ள, திறமையான வழக்கறிஞருக்கு உரித்தான மேதமையுடன் தனது கேள்விகளை நுட்பமாக முன் வைத்தார் கமல். வாழைப்பழத்தினுள் ஒரு ஊசி அல்ல, பல ஊசிகள் இருந்தன. ‘எனக்கு நடிப்பு பிடிக்கும்’ என்று ஜூலியிடம் சொன்னது ஒரு சிறந்த உதாரணம். இதில் எத்தனை ஊசிகளை எதிர்தரப்பினர் புரிந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. இதிலிருந்த நையாண்டியான குத்தலை சிலரால், சில தருணங்களில் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்பதுதான் சோகம். ‘ஆமாம் சார்.. ‘ என்று வெள்ளந்தியாக ஆமோதித்தார் ஜூலி. 

கமல் கிண்டித் தருவது நையாண்டி அல்வா என்பதே தெரியாமல் பிக் –பாஸ் போட்டியாளர்கள் அதை சுவாரசியமாகத் தின்று கொண்டிருந்தார்கள்.

கமல் வழக்கறிஞராக ஆகியிருந்தால் இன்னமும் சிறந்த நடிகராகியிருப்பார் என்று தோன்றுமளவிற்கு அவரது தோரணையும் முகபாவங்களும் பல்வேறு விதங்களில் ஜொலித்தன. அவற்றை எழுத்தில் கொண்டு வருவது  கடினம். மிக மிக நிதானமாக முன்வைக்கப்பட்ட கேள்விகளின் மூலம் தன் வியூகத்தை அமைத்தார். பின்பு இரை தூண்டிலில் நன்றாக மாட்டியவுடன் ஒரே ‘பச்சக்’தான்.. ஆனால் இந்த விசாரணையில் குறைகளும் இல்லாமல் இல்லை.
விதம் விதமான கேள்விகள். விதம் விதமான பதில்கள். விதம் விதமான பரிமாணங்கள். உண்மை துலங்கியதா?

Kamal

கமலின் இந்த குறுக்கு விசாரணையைப் பற்றி பிறகு பார்ப்போம். அதற்கு முன் 42-ம் நாளின் நிகழ்வுகள். 

**

ஓவியாவின் பிரிவிற்கு இன்றும் பிக் –பாஸ் வீடு சோகத்தில் மூழ்கியிருக்கும் என நினைத்தால் நிலைமை நேர்மாறாக இருந்தது. வையாபுரியின் நகைச்சுவையின் காரணமாக சிரிப்பு மத்தாப்புகள் வெடித்தன. நல்லது, ஓவியா இருந்திருந்தாலும் இதைத்தான் வற்புறுத்தியிருப்பார். ‘வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்’

‘கமல் முன்னால் இதர வீட்டு உறுப்பினர்கள் எப்படியெல்லாம் இருப்பார்கள்’ என்பதை அபாரமாக நடித்துக் காட்டினார் வையாபுரி. ரைசா அதிர்ச்சியடைவது போல் அவர் காட்டியது அருமை. ஜூலி வலியில் கத்திக் கொண்டு கீழே விழும் சமயத்தில் உடம்பு முழுதும் உதறலோடு முன்னர் ரைசா தந்த திகைப்புக் காட்சி நினைவிற்கு வந்தது. 

ஜூலி போல நடித்துக் காட்டியது ரகளை. அதற்கு ஜூலியும் வஞ்சனையேில்லாமல் சிரித்தது நல்ல விஷயம். சுயபகடி ஆரோக்கியமான ஒன்று. 

raisa

வையாபுரியின் இந்த நகைச்சுவைத் திறமையை தமிழ் சினிமா இன்னமும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
 
**

பிறகு துவங்கியது குறுக்கு விசாரணை.1975ம் ஆண்டு வெளியான அந்தரங்கம் படத்தில்  ‘ஞாயிறு ஒளிமழையில்' என்பது கமல் பாடிய பாடல் ஒன்றின் துவக்க வரி. அதன் துணையோடு நிகழ்ச்சியை துவக்கினார். 

கமலின் கேள்விகளில்  குறிப்பாக சில விஷயங்களை உறுதிப்படுத்தும் நோக்கமும் அது சார்ந்த உண்மைத்தகவல்களை போட்டியாளர்களின் வாயிலிருந்து எப்படியாவது பிடுங்கும் சமயோசிதமும் இருந்தது. 

ஒன்று, பரணியைப் போலவே ஓவியாவும் தனிமைப்படுத்தப் பட்டாரா, அதன் காரணங்கள் என்ன, அதை உருவாக்கிய பின்னணியில் இருந்த நபர்கள் யார்? 

இரண்டு, ஓவியா – ஆரவ் இடையே இருந்தது காதலா அல்லது நட்பு மட்டும்தானா? இதில் ஆரவ்வின் பங்கு என்ன? 

Snegan

முதலில் வந்த சிநேகனின் நெகிழ்ச்சியான உரையாடலைக் கேட்டு கமலே நெகிழ்ந்து விட்டார். ‘ஆம். ஓவியா தனிமைப்படுத்தப்பட்டதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருப்பேன். அது சார்ந்த குற்றவுணர்வு எனக்கு உள்ளது. அவருக்குள்ள பிரச்னை தெரிந்திருந்தால் இன்னமும் ஆதரவாக நின்றிருப்பேன்’ என்றவர், ‘ஓவியாவின் நெருக்கமான நண்பராக இருந்த ஆரவ் சரியாக செயல்பட்டிருக்கலாம். அந்தப் பிரச்னைதான் ஓவியாவை அதிகம் பாதித்தது’ என்று சொல்லவும் தவறவில்லை. ஆனால் சந்தடி சாக்கில், பாரதி, கண்ணதாசன் என்ற கவிஞர்களின் வரிசையில் கமலையும் வைத்தது ஓவர் ஐஸ். 

“என்ன வையாபுரி, வழக்கத்திற்கு மாறாக உங்க குரல் அழுத்தமாக கேட்டதே’ என்ற கமலின் நையாண்டி, வையாபுரிக்கு புரியவில்லை. இவர் பெரும்பாலும் ஆரவ்வை குற்றம் சாட்டினார். அந்தக் காதல் நிஜமா என்றதற்கு ‘இருக்கு.. ஆனால் இல்லை’ என்பது போல் பதில் வந்தது. 

அந்த ஒரு நாளில் பொறுப்பான தந்தை போல் சத்தமாக பேசி, ஓவியாவின் பக்கம் நின்றதால் வையாபுரி தப்பித்தார். இல்லையெனில் கமலின் கிடுக்குப்பிடி கேள்விகளில் மாட்டியிருக்கக்கூடும். 

அடுத்து வந்து மாட்டியவர் ஜூலி. ‘என்ன யோசிக்கறீங்க?’ என்றதும் “வீட்டுக்குப் போறதை பத்தி யோசிக்கறேன் சார்”

“அப்ப ஓவியா பத்தி யோசிக்கலையா?” என்று வில்லங்கமாக மாட்டி விட்டார் கமல். “முதலில் உங்களை அனைவரும் ஒதுக்கி வைத்த சமயத்தில் ஆதரவாக இருந்தவர் ஓவியா மட்டுமே. அவருக்கு நீங்கள் துரோகம் செய்ததாக உணரவில்லையா?” என்று தூண்டிலை இறுக்கியவுடன் “ஆமாம்’ என்று ஒப்புக் கொண்டார். 

ஓவியாவை அதிகம் பாதித்த விஷயங்களில் ஒன்று ஜூலியின் இந்தப் பொய்யும் துரோகமும். மேலும் அதற்காக ஜூலி உண்மையில் மனம் வருந்தி மன்னிப்பு கேட்காததும் 

**

ஓவியா பிரச்னையின் மையமாக கருதப்படும் ஆரவ்விடம் தொடர்ந்தது விசாரணை. 

ஆனால் இது சற்று ஆழமான அந்தரங்கமாக, அளவை மீறிப் போனது ரசனைக்குரியதாக இல்லை. இது சார்ந்த நுண்ணுணர்வு கமலுக்கு நிச்சயம் உண்டு. ஆனால் மக்களின் உணர்வுகள் தந்த அழுத்தத்தாலும் ஓவியாவின் காதல் ஒருதலைப்பட்சமானதல்ல என்பதை நிரூபிக்க விரும்பியதாலும் இந்த ‘எல்லை தாண்டிய பயங்கரவாத’ செயலை நிகழ்த்தினார் என புரிந்து கொள்வோம். ஆனால் ஆரவ்விற்காகவும் ஒருபக்கம் அனுதாபப்பட வேண்டியிருக்கிறது. 

Aarav

“எதையோ திருப்பிக் கொடுத்துடு’-ன்னு ஓவியா சொல்லிக்கிட்டே இருந்தாங்களே’, அது என்ன பண்டம்?’ என்று மெதுவான பந்தை முதலில் வீசினார் கமல். பிறகு யார்க்கர், கூக்ளி என்று பலவிதமான பாணிகளில் பந்துகள் வந்து விழுந்து கொண்டேயிருந்தன.  முகம் வெளிறிப் போனார் ஆரவ்.

“ஓவியா உளைச்சலாக இருந்ததற்காக அவரை ஆற்றுப்படுத்த முத்தம் தந்தேன்’ என்றார் ஆரவ் ‘ஓ.. மருத்துவ முத்தமா? என்று இதற்குப் புதுப் பெயர் சூட்டினார் கமல். மறுபடியும் அதேதான் ‘நீ படிச்ச ஸ்கூல்ல, நான் ஹெட்மாஸ்டர்’ தோரணை கமலிடம் வெளிப்பட்டது. ‘பல்வேறு விதமான முத்த அனுபவம்’ உண்டு என்றதும் கூட்டம் ஆரவரித்தது. 

இந்த மருத்துவ முத்தத்தை சபையிடம் சென்று வாக்குமூலமாக சொல்லச் சொன்னது அதீதம். ஒருவேளை ஆரவ் தரப்பில் மேலதிக தவறுகள் இருக்கின்றன என்பதற்கான காணொளி சாட்சியங்கள் பிக் பாஸிடம் இருக்கலாம். பொதுவாக இது போன்ற சங்கடங்களை கண்ணியமாக கையாளும் கமல் ஆரவ்வையும் அது போன்றே கையாண்டிருக்கலாம் என்று தோன்றியது. 30 காமிராக்கள் இருந்தாலும் ‘சில அந்தரங்க தருணங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமேயானதுதானே’!

**

அடுத்து கெத்தாக வந்து அமர்ந்து பயங்கரமாக மூக்கு உடைபட்டவர் சக்தி. இவரிடம் அபாரமான நகைச்சுவையுணர்வும் விஷயங்களை கூர்மையாக கவனித்து அதைப் பற்றி சரியான அபிப்ராயங்களைச் சொல்லும் தன்மையும் இருப்பதை கவனிக்கிறேன். ஆனால் பெரிய பிரச்னையாக இருப்பது அவருடைய அகங்காரம்தான். செல்வாக்குள்ள பின்னணியில் இருந்து வருபவர்களுக்கு பொதுவாக இருக்கும் குணாதிசயம் இது. அதற்கு இவரை மட்டும் குறை சொல்லி உபயோகமில்லை. ஓவியாவை அறைய கை ஓங்கியதற்கு இவர் கடைசி வரை மனமார மன்னிப்பு கேட்கவேயில்லை என்றுதான் தோன்றியது. இந்த விஷயத்தில் இவரும் ஒரு ‘ஜூலி’யே.

‘மன்னிப்பு கேட்டீங்களா” என்று கமல் கேட்டதற்கு ‘அவங்க கேட்டாங்க சார். நானும் கை கொடுத்தேன்’ என்று அபத்தமாக வழிந்தார் சக்தி. ‘ஓ.. கை கொடுத்தா சாரி-ன்னு அர்த்தமா?’ என்று கமல் செருகிய நையாண்டி ஊசி, சக்திக்கு புரிந்ததா என்று தெரியவில்லை. ‘ஒரு Sorry-ஐ தூக்கிப் போட்டிருக்கலாமே?” என்று சக்தியின் அலட்சியப் போக்கை கமல் சூசகமாக சுட்டிக் காட்டியதும் அவருக்குப் புரிந்ததா என தெரியவில்லை. 

‘Task-க்கிற்கு போய் ஏன் அழுதீர்கள்’ என்ற கேள்விக்கு ‘தலைவராகவும் இருந்து கொண்டு திருடனாகவும் இருக்க முடியவில்லை’ என்று சக்தி சொன்னதும், ‘அப்ப நீங்கதான் அரசியலுக்கு வரணும்’ என்று சட்டென்று கமல் சொன்னது அபாரமான satire. 

‘சமயத்துல நீ .. ன்னு சொல்றாங்க’ என்று சக்தி சுட்டிக்காட்டியது அபத்தமான புகார். இந்த மொழிப்பிரச்னை சார்ந்த தடைகள், தவறான புரிதல்கள்  பிக் – பாஸ் வீட்டில் நிறைய இருக்கிறது. இந்தியாவின் கலாசார எல்லைகள் சார்ந்த நடைமுறைப் பிரச்னைகளை இவை பிரதிபலிக்கின்றன. அதை சகிப்புத்தன்மையுடன் தாண்டி வருவதுதான் ஒரு குடிமகனுக்கு முன்உள்ள பொறுப்புள்ள சவால். 

தமிழில்  உள்ள  ‘நீ.. நீங்க..’ போன்ற ஒருமை, பன்மைகளை கையாள்வது ஒரு மலையாளிக்கு நடைமுறைச் சிரமம் என்பதை சட்டென்று மலையாளத்தில் பேசி கமல் உணர்த்தியது அற்புதம் (அவர் நடித்த ‘சத்யா’ திரைப்படத்தில் சுவாரசியமான காட்சி நினைவிற்கு வருகிறது)

‘இந்த விளையாட்டை சந்தோஷமாக விளையாடுங்கள். இது சார்ந்த பிரச்னையினுள் உணர்ச்சிப்பூர்வமாக ஆழமாக விழுந்து விடாதீர்கள்’ என்று கமல் சொன்னது முக்கியமான அறிவுரை. விகடனின் இந்தத் தொடரிலும் கவனித்திருப்பீர்கள், ‘அடிப்படையில் இது ஒரு விளையாட்டு, பீம்சிங் படமோ, வாழ்க்கையோ அல்ல’ என்பதையே நானும் தொடர்ந்து சொல்லி வருகிறேன். 

**

மிகவும் எதிர்பார்க்கப்பட்டதில் காயத்ரியின் மீதான விசாரணை முக்கியமானது. சபை நாகரிகங்களுக்கு மீறிய சில தகாத சொற்களை காயத்ரி பல முறை சொல்லிக் கொண்டேயிருந்தார். அதை கமல் உணர்த்த விரும்பினார். ஆனால் காயத்ரியால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அல்லது புரியாதது போல் நடித்தாரா?

gayathri

தன் தலைமுடியை தொட்டுக் காட்டி கமல் அதை உணர்த்தியது அபாரமான தோரணை. அப்போதும் கூட காயத்ரியின் அகங்கார உணர்வு தணியவில்லை. தன் தவறை ஒப்புக் கொள்ளும் பக்குவம் வரவில்லை. ‘ஹேர் –ன்னுதானே சார் சொன்னேன்’ என்று நியாயப்படுத்த முயன்றது குழந்தைமையா, குரூரமா என்று தெரியவில்லை. 

ஓவியா பிரச்னைக்குள் ஆழமாக விழுந்த பிறகு தாமே முன்வந்து அனுசரணையாக இருந்த காயத்ரியின் நல்லியல்பையும் கமல் பாராட்டத் தவறவில்லை. 

பிக் –பாஸ் விளையாட்டு உலகின் பல நாடுகளில் ஒளிபரப்பானாலும், இந்தியில் பல பாகங்களைக் கடந்திருந்தாலும் தமிழிற்கு என்று ஒரு கலாசார பின்னணி இருக்கிறது. அது சார்ந்த மீறல் இந்த நிகழ்ச்சியில் இருப்பதை அனுமதிக்க மாட்டேன் என்று அழுத்தம் திருத்தமாக கமல் சொன்னது பாராட்டு. 

இந்தியா என்கிற தேசத்தின் முக்கியமான அரசியல் பாகுபாடுகளில் ஒன்றான ‘வட இந்திய –தென்னிந்திய’ வித்தியாசத்தை அரசியல் நெடியுடன் கமல் சுட்டிக்காட்டியது உண்மை. ‘எதிர் அரசியல்’ என்று இது கருதப்பட்டு வழக்கு போடப்பட்டாலும் சந்திப்பேன் என்றார். ‘அடுத்த முறை எடிட் எல்லாம் செய்ய மாட்டோம். அப்படியே போட்டுடுவோம். ஓவியாவிடம் காட்டிய கனிவைத் தொடருங்கள்’ என்று கமல் உபதேசித்த ‘காயத்ரி மந்திரம்’ பொருள் பொதிந்தது. காயத்ரி இனியாவது மாறுவாரா? நிகழ்ச்சியில் மட்டும் அல்ல. 

**

அடுத்ததாக போட்டியாளர்களில் எவர் வெளியேறக்கூடும் என்கிற யூகம் பகிரப்பட்டது. ’48 வருடங்களில் கற்றுக்கொள்ள முடியாத அனுபவத்தை இந்த 41 நாட்கள் கற்றுக் கொடுத்தன’ என்று ஆத்மார்த்தமாக சொன்னார் வையாபுரி. 

எதிர்பார்த்தபடியே ஜூலியின் வெளியேற்ற அறிவிப்பு சபையில் அறிவிக்கப்பட்டது. பிக் –பாஸ் வீட்டில் அதிக சலனமில்லை. முன்பே எதிர்பார்த்தார்கள் போல. ‘யார் எவிக்ஷன்’ என்று கமல் கேட்ட போது முன்பு குதித்துக் கொண்டே ‘நான்.. நான்.. என்று உற்சாகமாக கூவிய ஜூலியால் உண்மையாகவே புலி வந்து முன்னால் நின்ற போது அந்த உண்மையை  இயல்பாக ஏற்க முடியவில்லை. 

vaiyapuri Julie

ஏமாற்றமும் விரக்தியும் அவரது முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது. ஜூலி மட்டுமல்ல, வெளியேறிய இதர உறுப்பினர்கள் கூட உள்ளே இருக்கும் போது ‘வெளியே செல்ல வேண்டும்’ என்று சலித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் ‘வெளியேற்றம்’ அறிவிக்கப்பட்ட போது மனம் உடைந்து  கலங்கிக் கொண்டே வெளியேறுகிறார்கள். மக்களின் அபிமானத்தைப் பெற முடியவில்லையே என்கிற கலக்கமா, அல்லது இதுவரை பழகிய நண்பர்களைப் பிரிவது உண்மையாகி விட்டது என்கிற நடுக்கமா என தெரியவில்லை. இந்த விஷயத்திலும் தன் தனித்தன்மையைக் காட்டியவர் ஓவியா மட்டுமே. 

‘இந்த வீட்டின் உறுப்பினர்களை மரணம் வரைக்கும் மறக்க மாட்டேன். – கடைக்குட்டி ஜீலி’ (ஜூலி 'ஜூலி' என்பதை 'ஜீலி' என்று தான் எழுதி இருந்தார்) என்கிற பிரியாவிடைச் செய்தியை எழுதினார். “ஓவியா அளவிற்கு ஏன் அண்ணே.. என்னைப் பார்த்துக்கலே..?’ என்று உரிமையுடன் சிநேகனிடம் சண்டை போட்டார். பாவமாக இருந்தது. 

ஜீலி

**

பிறகு நடந்தது கமலுடன் ஓர் உரையாடல். ‘கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இந்த அனுபவம் இருந்தது’ என்ற ஜூலி, தனக்குப் பிடித்தமானவர்களின் அன்பு பட்டியலில் முதன்மையாக காயத்ரியை வைத்தார். பின்பு சிநேகன் என மாற்றினார். அவரது பட்டியலில் சில நாட்கள் மட்டுமே இருந்த ஸ்ரீ கூட இருந்தார். ஆனால் ஓவியா இல்லை. ஆரத்தியும் இல்லை. இதுவொரு நெருடலே. என்றாலும் இந்த விஷயத்திலாவது அவருடைய போலித்தனம் இல்லாதது ஓர் ஆறுதல். 

காயத்ரியை தனது குருவாக அவர் சொன்னதை புரிந்து கொள்வதற்கும் ஜீரணிப்பதற்கும் நாமும் ‘ஜூலியாக மாறினால்தான் முடியும் போல. ‘காயத்ரி ஓர் அப்பாவி’ என்றதும் இதே ரகம்தான். நாமறியாத காயத்ரி ஒருவேளை பெரிதும் காட்டப்படவில்லையோ, என்னவோ. 

Kamal Julie


இந்த சரியான சமயத்தில் ஜூலிக்கு ஒரு முக்கியமான குறும்படம் காட்டப்பட்டது. அப்போது அவரது முகபாவங்களைக் கவனிப்பது ரசிக்கத்தக்கதாக இருந்தது. துரோகத்திற்கே துரோகம் செய்யப்பட்டவை ஒளிபரப்பான தருணங்கள் என்று அவற்றை வர்ணிக்கலாம். தன் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அப்படியே விழுங்கிக் கொண்டு ‘விடுங்க சார்.. எங்க ஃபேமிலிதானே சொன்னாங்க’ என்று பெருந்தன்மையாக கடக்க முயன்ற போலித்தனத்தை கமல் மிக அபாரமாக அம்பலப்படுத்தினார். ‘எனக்கு நடிப்பு பிடிக்கும்’ ஆனால் இந்த நையாண்டிக் குறிப்பை ஜூலியால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதை பாராட்டாக நினைத்து சிரித்து வைத்தார். அவர் அறியாமை குறித்து பரிதாபமே எழுகிறது.

ஜூலி ஓவியாவிற்கு செய்தது ‘துரோகம்’ என்பதையும் ‘காயத்ரி’யின் கட்டுப்பாட்டில் அவர் இருந்ததையும், பரணி அண்ணனுக்கு இழைத்த அநீதியையும் அவருடைய வார்த்தைகளின் வழியாகவே கமல் திறமையாக வரவழைத்தார். இந்த வாக்குமூலங்களையும் மன்னிப்புகளையும் மனதார உணர்ந்து ஜூலி அளித்தாரா, இல்லையா என்பது அவருடைய அகத்திற்கே வெளிச்சம். 

இந்தச் சமயத்தில் ஜூலியைப் பற்றிய இன்னொரு கோணத்தையும் நாம் பரிசீலித்துதான ஆக வேண்டும். ஜூலியின் பிசிறுகள் பாதுகாப்புமின்மை உணர்ச்சியின் காரணமாக உருவான நடுத்தரவர்க்க மனோபாவத்தின் அப்பட்டமான வெளிப்பாடு. 

செல்வாக்கு, புகழ் அது சார்ந்த உயர்வு மனப்பான்மை போன்ற பின்னணிகளைக் கொண்ட பலமான போட்டியாளர்களின் இடையில் தனக்கு கிடைத்த தற்காலிக புகழின் வெளிச்சத்தின் பின்னணியில் ஒரு சாமானியராக இந்த விளையாட்டிற்குள் நுழைந்தார் ஜூலி. எவருமே தனக்கு ஆதரவு தரவில்லை என்று முதலில் ஆதங்கப்பட்ட அவர், அது தந்த பாதுகாப்பின்மையுணர்வு தந்த பயத்தில் எவரையாவது பற்றிக் கொண்டு நாட்களைக் கடத்த வேண்டிய சூழலினுள் தள்ளப்பட்டார். 

அந்த வீட்டினுள் அதிகாரத்தலைமையாக தன்னிச்சையாக உருவான காயத்ரியை ஜூலி பற்றிக் கொண்டதில் ஆச்சரியமில்லை. இவர்களின் மூலம் பிக் –பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் தனக்கு கிடைக்கவிருக்கும் திரையுலக ஆதாயங்களைப் பற்றிய கற்பனைகள் ஜூலிக்குள் இருந்திருக்கலாம். 

Bigg Boss Tamil

உடல் பலமுள்ளவர்கள் இருக்கும் சிறைக்குள் தள்ளப்படும் பலவீனமான ஒருவன் தன்  சுய பாதுகாப்பிற்காக அதிக பலமுள்ள ஒருவனிடம் அடிமையாக மாறுவதைப் போன்ற உளவியல் இது. 

என்னவொன்று, பிக் –பாஸ் இருப்பு என்பது தற்காலிகமானது, தன் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது, அதில் நிகழும் சிறுபிசிறு கூட பூதாகரமாக ஆக்கப்படலாம் என்கிற யூகத்தைச் செய்ய ஜூலி தவற விட்டு விட்டார். மனச்சாட்சியின் குரல் பலமாக ஒலிக்கும் போது அதைக் கேட்காமலிருப்பது போன்று கள்ள மெளனம் சாதித்தால் அதற்கான விளைவுகளை பின்னாளில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அவர் கணித்திருக்கலாம். 

சமூகவலைத்தளங்களில் மிக அதிகமாக கிண்டலடிக்கப்பட்டவர், கோபத்திற்கு ஆளானவர் ஜூலி. பாவம், செல்வாக்குள்ள பின்னணியிலிருந்து வராததால், அவர் தொடர்பான காட்சிப் பிசிறுகள் அப்படியே வெளிவந்தனவோ என்னவோ. .

‘என் தங்கையை வெளியே அனுப்புகிறேன். அவரைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்’ என்கிற சமயோசிதமான குறிப்புடன் கமல் சொன்னது கண்ணியத்தின் அடையாளம். பார்வையாளர்களின் மன்னிப்பை ஜூலி கண்ணீருடன் தரையில் விழுந்து ஏற்றுக் கொண்டது மாற்றத்தின் அடையாளம். (பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு பரணியை சந்தித்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டது மாதிரியான ஒரு காட்சி, சமூகவலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. அது உண்மையாக இருந்தால் ஜூலி மீதான மதிப்பு உயர்கிறது)

**

பிக் பாஸ் விளையாட்டின் ரசிகர்கள் சில குறிப்பிட்ட விஷயங்களை மனதில் இருத்திக் கொண்டு இந்த நிகழ்ச்சியை ரசிப்பது நல்லதென்று தோன்றுகிறது. 

காமிராக்கள் காட்சிகளை 24 மணிநேரமும் தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருந்தாலும் நமக்கு காட்டப்படுவது ஒருமணி நேரச் சுருக்கம்தான். அதை வைத்துக் கொண்டு சில உண்மைகளை கண்டுபிடிப்பது என்பது சாத்தியமில்லை. மட்டுமல்லாமல் அந்த ஒரு மணி நேரத் தொகுப்பிலும் சிலருக்கான சாதகங்கள் மற்றும் சிலருக்கான பாதகங்கள் சார்ந்த சார்பு அரசியல் இருக்கக்கூடும். காமிராக்கள் பொய் சொல்வதில்லை என்பது உண்மைதான். ஆனால் அது எப்படி பேச வேண்டும் என்பதை மனித தவறுகளால் நிகழ்த்த முடியும். 

மற்றவர்களின் சறுக்கல்கள் அம்பலப்படுவதைக் கண்டு நாம் மகிழ்ச்சியில் குதிக்காமல், நம் வீடுகளிலும் காமிரா இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் என்று யோசிப்பதின் பெயர் – சுயபரிசீலனை. அதையும் செய்வோம். அதுவே இந்த நிகழ்ச்சியை நேரம் செலவு செய்து பார்த்ததற்கான நிகர மதிப்பாக இருக்க முடியும். 

பிக் –பாஸ் வீட்டில் உள்ளவர்கள் எவரும் நூறு சதவீத வில்லன்களோ, நாயகர்களோ அல்ல. நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள். நமக்கான பலங்களும் பலவீனங்களும் அவர்களுக்கும் உண்டு. அது சார்ந்த பிரக்ஞையோடு அவர்களை அணுகுவோம். 

kamal

 

கமல் இந்த குறுக்கு விசாரணையை திறமையாகவே நிகழ்த்தினாலும் இதற்குப் பின்னால் மக்களின் உணர்வுகள், அது சார்ந்த வெளிப்பாடுகள், கருத்துகள் போன்றவற்றின் அழுத்தங்கள் கமலுக்கும், பிக் –பாஸ் நிகழ்ச்சியாளர்களுக்கும் இருந்ததோ என்று தோன்றியது. மக்களின் பிரம்மாண்டமான ஆதரவை ஓவியா பெற்றிருப்பதால், அது சார்ந்த எந்தவொரு எதிர்மறையான அசைவையும் செய்து விடக்கூடாது என்கிற ஜாக்கிரதைத்தனம் தெரிந்தது. பாதிக்கப்பட்ட எளிய சமூகத்தின் சார்பாக திரையில் ஹீரோ வீராவேசமாக வசனம் பேசும் அதே மிகையான தன்மை இந்த நிகழ்ச்சியிலும் பிரதிபலித்தது. 

“அவங்க என்ன தப்பு செஞ்சாங்கன்னு நமக்கு எப்படி தெரியும். தீர்ப்பு சொல்ல நாம யாரு?” என்று பரணியின் வெளியேற்றத்தைப் பற்றி ரைசா முன்னர் ஆத்மார்த்தமாக வாக்குமூலம் தந்து பேசிக் கொண்டிருந்த காட்சி நினைவிற்கு வருகிறது. 

 

தீர்ப்பு சொல்ல நாம் யார்? அதற்கான தகுதி நம்மிடம் இருக்கிறதா?

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/98225-have-julie-gayathri-aarav-learnt-from-kamals-interrogation-happenings-of-bigg-boss-day-42.html

Link to comment
Share on other sites

 

கொலவெறி காயத்ரி... மாற்றம் முன்னேற்றம் ரைசா! - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (43-ம் நாள்) #BiggBossTamilUpdate

 
 

 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg_Boss_Banner_09028.jpg

 

42-ம் நாள் நிகழ்வுகளின் தொடர்ச்சி ஒளிபரப்பானது. 

ஓவியாவின் வாழக்கையை ‘பிக் பாஸிற்கு’ முன்னால் பின்னால் என்று பிரிக்க முடியும் என்று ரைசா சொன்னது சரியாக இருக்கலாம். அந்தளவிற்கான பாதிப்பை ஓவியாவின் வாழ்க்கையில் பிக்-பாஸின் அனுபவம் ஏற்படுத்தியிருக்ககூடும். அவர் தன்னுடைய உறுதியின் படி ஆரவ்வை தேடி இணைவாரா அல்லது ஆறு மாதத்திற்குள் இதையெல்லாம் நினைத்து சிரித்துக் கொண்டிருப்பாரா என்பதை யூகிப்பது கடினம். இந்த நிகழ்ச்சியின் விளைவுகளுக்கு பின்னால் பிக் பாஸ் இருப்பது போல, வாழ்க்கை என்கிற task-ன் பின்னால் இருக்கிற, நம்மால் உணர முடியாத அந்த பிக் பாஸ் என்ன முடிவு வைத்திருக்கிறாரோ.

oviya

‘ஒரு பொண்ணா சொல்றேன். ஒரு கிஸ் கூட ஆம்பளைங்களுக்கு எதிரான சாட்சியாக மாறி விடும்” ‘சின்ன முத்தம் கூடவா?’ என்றார் ஆரவ். இனி மீதக்காலங்களில் எத்தனை முத்த வகைகளை பிக்பாஸ்ஸின் மூலமாக நாம் அறியப் போகிறோமோ என்று தெரியவில்லை. கமல்ஹாசனை இதற்கு தொகுப்பாளராக போட்ட சகுனமோ? ஓவியாவிற்கு நிகழ்ந்த அநீதியை பற்றி ஆரவ்வை கண்டிக்காமல் அவருக்கு சார்பாக பேசுவதின் மூலம் ‘சமயங்களில் ஒரு பெண்ணே பெண்ணுக்கு எதிரியாக இருப்பார்’ என்கிற வழக்கத்தை நிரூபித்து விட்டார். ஆரவ் இப்போது எதிர் அணியில் இருந்திருந்தால், இதே காயத்ரி ஆரவ் மீது வசை பொழிந்திருக்கலாம். 

ஏற்கெனவே எதிர்பார்த்திருந்தபடி இப்போது கமலை வெளிப்படையாக விமர்சிக்கத் துவங்கி விட்டார் காயத்ரி. மனதிற்குள் ‘மூஞ்சியும் மொகரைக்கட்டையும்’ என்று நினைத்துக் கொண்டாலும் ‘நான் என்ன அப்படி கெட்ட வார்த்தை சொல்லிட்டேன்’, ஹேர் என்றது அத்தனை கெட்ட வார்த்தையா?’ என்றார். அந்த வார்த்தையை உபயோகித்து அவரை எவராவது பேசினால் விருது கிடைத்தது போல மகிழ்வாரா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். 

‘காயூ பேபி’ என்று சமயங்களில் மற்றவர்கள் குறிப்பிடுவதைப் போல மனதளவில் முதிர்ச்சியடையாமல் சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கிறார். தன்னுடைய அடுத்த பஞ்சாயத்தில் கமல் இதை விசாரிப்பாரா என்று பார்க்க வேண்டும். 

ganesh

**

இது வரை அமைதிச் சாமியாராக இந்த விளையாட்டை திறமையுடன் விளையாடிக் கொண்டிருந்த கணேஷ், கமல் அவரது diplomacy-ஐ குறிப்பிட்டுக் காட்டியவுடன் உஷாராகி விட்டாரோ அல்லது உண்மையிலே மனதார நினைத்துச் சொன்னாரோ தெரியவில்லை, பரணி தனிமைப்படுத்தப்பட்டு சுவரேறி குதிக்குமளவிற்குச் செல்ல நேர்ந்ததற்காக காமிரா முன்பு பரணியிடம் மன்னிப்பு கேட்டார். நீதி தாமதமாகவாவது வெல்வது மகிழ்ச்சி. 

காயத்ரியும் சக்தியும் இணைந்து தங்களைப் போலவே ஜூலியை மாற்றி விட்டார்கள் என்று வையாபுரியிடம் குற்றம் சாட்டினார் சிநேகன். ‘ஜூலி திறமையானவள்’ என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தார். உண்மைதான்.

ஆரவ் தந்த முத்தம் பற்றி போட்டியாளர்கள் விதம் விதமாக அலசினார்கள். ஆரவ்வின் மருத்துவ முத்தம் பற்றிய விஷயம் மற்ற உறுப்பினர்களுக்கு தெரியவந்தால்தான் அதிக ஃபுட்டேஜ் கிடைக்கும் என்பதுதான் பிக் பாஸின் உத்தி போலிருக்கிறது. அது வேலை செய்யத் துவங்கி விட்டது. 

**

இத்தனை நாள் பிக் பாஸ் வீட்டின் நடைமுறைகளுக்கு பழகிய  போட்டியாளர்கள், வெளியே சென்றவுடன் அது சார்ந்த பாதிப்புகள் தொடருமே, என்ன செய்வார்கள் என்று நான் முன்பே யோசித்துக் கொண்டிருந்தேன். இந்த விஷயத்தை வையாபுரி நகைச்சுவையாக நடித்துக் காட்டினார். பிந்துவும் இணைந்து கொண்டார்.

vaiyapuri

ஆனால் நகைச்சுவை ஒருபுறமிருக்கட்டும், வெளியேறும் போட்டியாளர்கள் தங்களை நடைமுறை வாழ்க்கையில் உடனே பொருத்திக் கொள்ள சிரமப்படுவார்கள். அது சார்ந்த மனப்பாதிப்பு நிச்சயம் நீடிக்கும். எனவே தகுந்த உளவியல் ஆலோசனை அளிக்கப்பட்ட பிறகே அவர்கள் வெளியே அனுப்பப்பட வேண்டும். குறிப்பாக, தெரிந்தோ தெரியாமலோ பொதுமக்களின் கோபத்தை சம்பாதித்துக் கொண்ட ஜூலி போன்றவர்களுக்கு கட்டாயம் இந்த ஆலோசனை தேவை. பிக் பாஸ் இதைப் பின்பற்றுகிறதா என தெரியவில்லை.

மருத்துவ முத்தம் பற்றிய தகவலை ஆரவ் சபையில் வாக்குமூலமாக தெரிவித்த போது கணேஷ் காண்பித்த மிகையான உணர்வுகளையும் ஆர்வத்தையும் வையாபுரி நடித்துக் காண்பித்தது நகைச்சுவை ரகளை. 

**

43 –ம் நாள் காலையில் திருப்பள்ளியெழுச்சி பாடல் ஒலிபரப்பானது. உடனே சட்டென்று நினைவிற்கு வந்தது ஓவியாவின் நடனம்தான். அவர் இல்லாத வெறுமையை அப்பட்டமாக உணர முடிந்தது. அந்தக் குறையை ஓரளவிற்கு பிந்துமாதவி போக்கினார். காயத்ரி, ஆரவ்வை இணைத்துக் கொண்டு ஆட முயல, அவர் கும்பிடு போட்டு விட்டு விலகினார். எதற்கு வம்பு?

Arav gayathri

பாட்டு ஒலிக்கும் சமயங்களில் சக்தி செய்வது பெரும்பாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. போர்வையை விலக்கி காமிராவைப் பார்த்து விட்டு பின்பு சலிப்புடன் முகத்தை மூடிக் கொள்வார். 

ஒரு நாளின் துவக்கத்தை ஒவ்வொருவரும் எதிர்கொள்வதில் எத்தனை வித்தியாசங்கள்?

“காயத்ரி மாஸ்டரை முன்பே தெரியும். நான் ஹீரோவா.. நடிச்ச படத்துல.. ‘என்று சொல்லிக் கொண்டிருந்தார் சிநேகன். ஹீரோவா? இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் எப்போது நடந்தது? ‘வெள்ளந்தியாக’ இருந்த ஜூலியை corrupt செய்தது, காயத்ரி + சக்தி கூட்டணி என்பது பாசமிகு அண்ணன் சிநேகனின் எண்ணம். 

**

நாமினேஷன் படலத்தில் நிறைய பேர் வையாபுரியை தேர்வு செய்தார்கள். அதற்கு சொல்லப்பட்ட காரணம், வையாபுரி, தன் உறவினர் திருமணத்திற்கு செல்லத் துடிக்கிறார் என்பது. பிக்பாஸ் குறிப்பிட்டது போல இது தகுந்த காரணம் அல்ல. ‘இங்கு நூறு நாட்களுக்கு தங்க வேண்டியிருக்கும்’ என்கிற விஷயம் வையாபுரிக்கு முன்பே தெரியும். எனவே அது பொருந்தாத காரணமாகி விட்டது. அவர் கடுமையான மனஅழுத்தத்தில், வீட்டு ஞாபகத்தில் இருக்கிறார் என்பது பொருத்தமான காரணமாக இருந்திருக்கலாம்.

வையாபுரியின் முறை வந்த போது ‘இந்த கணேஷ் பயலை நெனச்சேதான் டென்ஷன் ஆகுது. முட்டையை எடுத்து தின்னுப்புடறான்’ என்று அதே பல்லவியை நகைச்சுவையாகச் சொன்னார். ஆனால் அந்த வீட்டில் நகைச்சுவைக்குரல் கேட்பது அவர் மூலமாகத்தான் மட்டுமே நடக்கிறது. 
பொதுவாக நகைச்சுவையுணர்வுள்ளவர்களின் மறுபுறம் சோகமாக இருக்கும். சட்டென்று உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். ஆங்காங்கே படுத்துக் கொண்டு பினாத்திக் கொண்டிருந்த வையாபுரியைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. ‘எனக்காக யாரும் ஓட்டுப்போடாதீர்கள்’ என்ற வித்தியாசமான வேண்டுகோளை கண்ணீருடன் வைத்தார். நம் அரசியல் தலைவர்களில் எவராவது இப்படி என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா?

சக்தியின் ஆணாதிக்கம், காயத்ரியின் கெட்டவார்த்தை பேசுதல் ஆகிய இரண்டு சரியான காரணங்களைக் கூறியதால் ரைசாவின் தேர்வு ஏற்கப்பட்டது. இதர அனைத்து நபர்களின் காரணங்களும் பொருத்தமாக இல்லாததால் நிராகரிக்கப்பட்டது. ‘ட்ரூ.. ட்ரூ.. என்று தலையாட்டிக் கொண்டிருந்த ‘ரைசா’ தலைவரா என்று அனைவருமே அதிர்ச்சியடைந்தார்கள். குறிப்பாக சக்தி.. ‘ஆரவ்.. நீ தலைவரா இருந்துடேன்’ என்றது சற்றே அதிர்ச்சியாக இருந்தது. ‘ஆணாதிக்கவாதி’ என்ற ரைசாவின் புகாரை அது பிரதிபலித்தது. ஆனால், சக்தி கிளீனிங் டீமின் தலைவரைத்தான் சொல்கிறார் என்பது அங்கு இருக்கும் சிநேகன் போன்ற சக போட்டியாளர்களுக்கே புரியவில்லை என்பது தான் உண்மை.

சக்தியின் ஆணாதிக்க வெளிப்பாட்டு கமெண்ட்டைப் பற்றி வையாபுரியிடம் சிநேகனும் அங்கலாய்த்தார். கமல், சக்தியை அரசியலுக்கு வரச் சொன்னதின் பின்னால் உள்ள கிண்டலை அவர் உணரவில்லை என்று சிநேகன் சொன்னது சரியானது. எல்லாவற்றிற்கும் புரிந்தாற் போல் பாவனை தரும் சக்திக்கு சில எளிமையான விஷயங்கள் கூட புரிவதில்லை.

**

‘ட்ரூ’ பிஸ்கெட்டை சாப்பிட்டு வளர்ந்தாரோ என்னமோ, அது வரை மற்றவர்களின் பேச்சுகளுக்கு ‘ட்ரூ…ட்ரூ..’ என்றே தலையாட்டிக் கொண்டிருந்த ரைசாவிடம் இப்போது மிகப் பெரிய மாற்றம் தெரிகிறது. ஒரு புது அவதாரம். மாற்றம், முன்னேற்றம், ரைசா.                    அதிலும் எப்போதும்  மேக்-அப் கிட்டுடன் இருந்த ரைசா இப்படி மேக்-அப் கூட இல்லாமல் மக்களின் கேள்விகளை ஆரவ்விடம் முன் வைத்தது அழகு.

raisa oviya

ஓவியாவின் மனஅழுத்த பிரச்சினை, அவரது வெளியேற்றம், அதில் தனது பங்கு சார்ந்த குற்றவுணர்ச்சி, கமலின் ஆலோசனை ஆகிய விஷயங்கள் அவரின் மனதில் ஆழ்ந்த பாதிப்பை உருவாக்கியிருக்கிறது போல. 

காயத்ரி மற்றும் சக்தியின் புறம் பேசுதல்களுக்கு இதுவரை சாமர்த்தியமாக ‘ஆமாம் சாமி’ போட்டுக் கொண்டிருந்த நிலையில் இருந்து மாறி எதையும் நேராக விவாதிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது நல்ல மாற்றம். ‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே’ என்கிற பாடலை பின்னணியில் போட்டால் பொருத்தமாகியிருக்கும் போல. ஓவியப்படை போல ‘ரைசா பேரவை’ இனி உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதன் விளைவு, ஒரே நாளில் காயத்ரியின் பகைமையைச் சம்பாதித்துக் கொண்டார். ‘ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது’ என்பது காயத்ரியின் எண்ணம்.

போதாக்குறைக்கு ரைசா ‘தலைவி’யாக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால் அது சார்ந்த எரிச்சல், பிக்பாஸ் வீட்டில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொங்கி வழிந்து கொண்டேயிருக்கிறது.

இதுவும் பிக்பாஸின் திருவிளையாடல்களில் ஒன்றோ, என்னமோ.

snegan raisa

**

ஆரவ்வின் பிரச்சினையை அவரிடமே நேரடியாக ரைசா விவாதித்தது அழகு. ‘ஓவியா தொடர்பான காதலில் உங்களுடைய பங்கும் இருக்கிறதுதானே, ஓவியாவிற்கு ஆதரவாக இருந்த நீங்கள் ஏன் சட்டென்று நிறம் மாறி, காயத்ரி அணியில் ஒட்டிக் கொண்டீர்கள், அவர்களுக்கு பயப்படுகிறீர்களா, இந்த மாற்றம்தானே ஓவியாவை அதிகம் பாதித்திருக்கக்கூடும்’ என்றெல்லாம் பாயிண்ட் பாயிண்ட்டாக விஜய்காந்த்தின் தொடர் பஞ்ச் டயலாக் மாதிரி அடுக்கிக் கொண்டே போக ஆரவ் தடுமாறியது நன்றாகவே தெரிந்தது. ஆனால் ஆரவ் இன்னமும் தனக்கு பாதுகாப்பான விஷயங்களையே முன்வைத்து தடுப்பாட்டம் ஆட முயன்று கொண்டிருக்கிறார். 

காயத்ரிக்கு பிரதான எதிரியாக மாறியதின் மூலம் இனி ரைசா சுவாரசியமான போட்டியாளராக மாறுவார் என நம்பலாம்.

ஆனால் பெண்கள் தரப்பு குறைவது ஆட்டத்தை அசுவாரசியமாக்குகிறது. பிக்பாஸ் கவனிக்கவும். சக்திகள் இல்லையேல் பிக்பாஸ் இல்லை. (காயத்ரி நிழலாக இருக்கும் ‘சக்தி’ யைப் பற்றி இங்கு குறிப்பிடவில்லை. அது வீண் சக்தி)

**

இந்த நாளின் பெரும்பான்மையான இடத்தை எடுத்துக் கொண்டது ‘காயத்ரி மந்திர’ வார்த்தைகளின் பிரச்சினை. 
‘தான் கெட்டவார்த்தைகள் பேசுவதை ஏதோ உலகமகா குற்றம் போல் கமல் தொடர்ந்து சொல்லிக் கொண்டேயிருக்கிறார், என்னை எவரும் discourage செய்தால் பிடிக்காது’ என்பதையே கோபத்துடனும் ஆற்றாமையுடனும் விதம் விதமாக சொல்லிக் கொண்டிருந்தார் காயத்ரி. அவருடைய இந்த குணாதியசத்தை சுருக்கமாக விவரிக்க வேண்டுமெனில் ‘A spoiled child’ எனலாம். 

gayathri

இந்த விளையாட்டு துவங்கிய நாள் முதலே பல்வேறு சமயங்களில் காயத்ரி கோபத்தில் துப்பிய வசைகளைக் கண்டு பார்வையாளர்கள் மட்டுமல்லாமல் இதர போட்டியாளர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். காட்டப்பட்ட காட்சிகளிலேயே இத்தனை வன்மம் என்றால் காட்டப்படாத காட்சிகளில் எத்தனை இருக்கும் என்கிற திகிலான யூகம் எழுகிறது. இது குறித்து முன்னர் நிகழ்ந்த ஓர் உரையாடலில் கமல் சொன்னது ‘காட்டினா அசிங்கம்-னு நாங்களே பல காட்சிகளை எடிட் செய்து விடுகிறோம்’ என்பதை நினைவில் கொள்ளலாம். 

‘நான்  திட்டறதை ஏன் காட்டுகிறீர்கள், நல்லதைக் காட்டுங்கள்’ என்று அவர் கேட்பது முட்டாள்தனத்தின் உச்சம். இந்த விளையாட்டின் அடிப்படையே மனிதர்களின் சகிப்புத்தன்மையை சோதித்து அதில் அவர்கள் இடறி விழும் தருணங்களை முதன்மையாக காட்டுவதுதான். இதன் வணிகம் அதைச் சார்ந்துதான் இருக்கிறது. அவர்கள் என்ன நீதிக்கதை வகுப்பா நடத்திக் கொண்டிருக்கிறார்கள்?

இந்த அடிப்படையை சரியாக புரிந்து கொண்டால் கூட ‘தன் கோபங்கள் காட்டப்பட்டது’ குறித்த காயத்ரியின் கோபம் எத்தகைய சிறுபிள்ளைத்தனம் என அவருக்குத் தெரியும். 
‘இது ஒரு கேம். அதைத்தான் ஃபோகஸ் செய்து காண்பிப்பாங்க’ என்று ரைசா அடைகிற புரிதலை கூட காயத்ரியால் அடைய முடியவில்லை. 

இத்தனைக்கும், மற்றவர்களின் சறுக்கல்களை மையப்படுத்தி பெருக்கிக் காட்டிய கமல், காயத்ரியின் தவறுகளை தொடர்ந்து இடதுகையால் ஒதுக்கி கண்டுகொள்ளாமலேயே இருப்பது ஏன் என்கிற ஆதங்கமும் எரிச்சலும் நீண்ட நாளாகவே பார்வையாளர்களிடம் இருந்தது.. இப்படி நிறைய முறை வாய்ப்பு தரப்பட்டும் அதை காயத்ரியால் உபயோகித்துக் கொள்ள முடியவில்லை. கோபம் கண்ணை மறைக்கிறது. ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’.

‘கோபம் என் அடிப்படையான இயல்பு, மற்றவர்கள் தூண்டும் போது எப்படி என்னால் கோபப்படாமல் இருக்க முடியும்?’ என்கிற அவரின் கேள்வி ஒருவகையில் நியாயமானது. ஆனால் இதைச் சோதிக்கும் ஒரு விளையாட்டிற்குள் அவர் நுழைந்திருக்கிறார் என்பதை மறந்து விடுகிறார். தன் எதிர்மறை குணங்களை கட்டுப்படுத்திக் கொள்வதுதான் இந்த விளையாட்டில் உள்ள சவாலே. இப்படி தன் சிறுமைக் குணங்களை ‘சீராக்கிக்’ கொள்வது விளையாட்டிற்குப் பிறகு அவரது சொந்த வாழ்க்கையிலும் கூட உதவும். 

 

மட்டுமல்ல, எந்த விளையாட்டிலும் சில கறாரான விதிகள் உண்டு. சக போட்டியாளர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால், ஆபாசமாக திட்டினால் அதற்குரிய தண்டனைகளை அனுபவித்துதான் ஆக வேண்டும். உதாரணமாக கால்பந்து விளையாட்டில் இதைப் பார்க்கலாம். எதிரே வருகிறவன் எப்படி சீண்ட முயன்றாலும் அதைச் சமாளித்து கோல் போஸ்ட்டை நோக்கி நகர்வதே முறை. அதை விட்டு விட்டு நடுவரின் ஆட்சேபத்தின் போது … ஏய்.. எங்க அப்பா யார் தெரியுமா? இதெல்லாம் எங்கிட்ட வெச்சுக்காத” என்றெல்லாம் துள்ளினால் சிறுபிள்ளைத்தனமாக தெரியும். பார்ப்பவர்கள் சிரிப்பார்கள். 

‘கெட்ட வார்த்தை பேசுவதை குறைத்துக் கொள்ள முடியாது’ என்று கமலிடம் சொல்லி விட்டேன் என்று அவர் ஜம்படிப்பது இன்னொரு ‘சீரான’ பொய். 

**

‘Discourage’ எவர் செய்தாலும் எனக்குப் பிடிக்காது என்கிறார் காயத்ரி. ‘காயூம்மா. அந்த வார்த்தையை சொல்ல விட்டுட்டியே… எத்தனை அருமையான கெட்ட வார்த்தை தெரியுமா..  சொல்லிப் பாரு.. ஷோக்கா இருக்கும்’ என்று தனக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகளை எல்லாம் மெட்ராஸ் தமிழில் கற்றுத் தந்து கமல் வழிகாட்ட வேண்டும் என காயத்ரி எதிர்பார்க்கிறாரா?

‘என் அம்மாவிற்கு மட்டும்தான் என்னைக் கண்டிக்க உரிமை இருக்கு’ ‘என் அப்பா கூட என்னைக் கண்டிச்சதில்ல’ என்றலெ்லாம் சொல்லுவதின் மூலம் தன் பெற்றோரைப் பற்றி பெருமையாக சொல்லவதாக ஒருவேளை காயத்ரி நினைக்கலாம். ஆனால் அவர்களின் வளர்ப்பு முறையிலுள்ள தவறுகளை தாமே முன்வந்து பொதுவில் அம்பலப்படுத்துகிறோம் என்பதை அவர் உணரவில்லை. 

‘நீங்க செய்யாதையா காட்டினாங்க?’ என்கிற சிநேகனின் கேள்வி முக்கியமானது. ‘யாருக்கும் நம்மை நிரூபிக்கத் தேவையில்லை’ என்கிற சக்தியின் ஆறுதல் கூட இருந்தே கெடுக்கும் கூடா நட்பு. 

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனுஷனையே கடிக்கும் கதையாக என்றாவது ஒருநாள் கமல் மீதே அவர் கெட்ட வார்த்தை அபிஷேகம் செய்யக்கூடும் என்று பார்வையாளர்கள் கருதியது மெல்ல உண்மையாகிக் கொண்டிருக்கிறதோ என்னமோ. அவருடைய மைண்ட் வாய்ஸ்களை பதிவு செய்யக்கூடிய கருவி மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு அது உபயோகப் படுத்தப்பட்டால் இரண்டு விஷயங்கள் நிகழக்கூடும். ஒன்று, அந்தக் கருவியே பயத்தில் நடுங்கி எரிந்து தீய்ந்து விடலாம். இன்னொன்று, அதைக் கேட்டவுடன் கமலே இந்த நிகழ்ச்சியிலிருந்து நொந்து போய் விலகி விடலாம். 

gayathri

‘I Want to go home. Am done’ என்று காயத்ரி முதன்முறையாக கண்ணீர் விட்டது ஒருபக்கம் பரிதாபமாக இருந்தாலும், இதுவரை அவரது செயல்களைக் கண்டு எரிச்சல்பட்டுக் கொண்டிருந்த பார்வையாளர்கள் சற்று ஆசுவாசமாக உணர்ந்திருப்பார்கள். 

கமலின் கண்டிப்பிற்காக அழுதாரா? வெங்காயம் வெட்டும் போட்டியில் தோற்று விட்டதற்காக அழுதாரா என்று வேறு குழப்பமாக இருக்கிறது. ‘ரைசா… இருடி.. உனக்கு வெச்சுக்கறேன்’
எத்தனை சந்தர்ப்பங்கள் தந்தும் அதை உணராமல் தன்னுடைய தவறுகளின் பள்ளத்திலேயே நின்று கொண்டிருக்கும் காயத்ரியின் பிடிவாதம் ஒருபக்கம் கோபத்தை ஏற்படுத்தினாலும், இன்னொரு பக்கம் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. அவர் வெளியில் வந்தவுடன் மக்களின் பகைமையை எதிர்கொள்வது ஒருபக்கம் இருக்கட்டும், நெருங்கிய உறவுகளும் நட்புகளும் கூட காட்டப்போகும் ஆட்சேபங்களையெல்லாம் எப்படி எதிர்கொள்வார்?

‘கமல் உன் அப்பா மாதிரி’ என்று சிநேகன் சொல்ல, ‘அதற்காகத்தான் விடறேன்’ என்று காயத்ரியும் சொல்ல இந்த நாடகத்தின் வெம்மை சற்று இறங்கத் துவங்கியது. 

**

போட்டியில் வென்றவர்களுக்கான பரிசாக அவரவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பேசிய உரையாடலின் பதிவு ஒலிபரப்பப்பட்டது. கணேஷின் மனைவி நிஷா மிகுந்த முதிர்ச்சியான சொற்களில் அழகாக உரையாடினார். ‘வீட்ல நிறைய முட்டை வாங்கிச் வெச்சிருக்கேன்’ என்று ஒரு வார்த்தை சூசகமாக சொல்லியிருக்கலாம். 

மனைவியும் மகனும் அன்பாக உரையாடியதைக் கண்டு சக்தி நெகிழ்ந்தார். கண்கலங்கினார். அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. சக்தியின் ஆணாதிக்க தன்மையைக் கண்டு ‘உங்க வீட்ல பார்த்திருட்டிப்பாங்க’ என்று முன்பு கமல் கோடிட்டுக் காட்டியதும் நினைவிற்கு வந்தது. 

சிநேகனின் உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாததால் அவருக்கு ஒலிச்சித்திரம் இல்லை. ஓர் அழுகை நாடகம் நடக்கும் என்பதை பொய்யாக்கிவிட்டு அதை இயல்பாக எதிர்கொண்டார் சிநேகன். 

ரைசா சுட்டிக்காட்டிய படி, ஜூலி இல்லாத வெறுமையை நாம் உணர்வது நிதர்சனம். ‘ஜில்ஜில் ரமாமணி’ இல்லாமல் தில்லானா மோகனாம்பாள் படத்தை பார்ப்பது போல் இருக்கிறது. 

Julie

**

இந்த வாரம் ரைசாவைத் தவிர, அனைவருமே நாமினேஷன் பட்டியில் இருப்பதால் காயத்ரியை வெளியேற்ற எப்படியெல்லாம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக சமூகவலைத்தளங்களில் விதம்விதமாக மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆர்வத்தில் சிறிய பங்கையாவது அதிகார அரசியல் வாக்களிப்பில் காட்டியிருக்கலாமே, மக்களே.

பிக் பாஸ் அனுபவத்தின் மூலம் ரைசா பக்குவமடைந்து உயரே சென்று கொண்டிருக்கிறார். அதன் மறுமுனையில் தன் சிறுபிள்ளைத்தனங்களின் மூலம் காயத்ரி இன்னமும் கீழே நகர்ந்து கொண்டிருக்கிறார். மனித இயல்புகளின் மாற்றங்கள். 

வேறு என்ன மாற்றங்கள் நிகழப் போகின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/98357-gayathri-is-still-the-same-is-it-right-time-for-raisa-army-happenings-of-bigg-boss-day-43.html

Link to comment
Share on other sites

அட, இவ்ளோ சீக்கீரம் பிக்பாஸ் போரடிக்குமா? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (44-ம் நாள்) #BiggBossTamilUpdate

 
 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg_Boss_Banner_09028.jpg

 

 

ஒரிஜினல் நாயகி ஓவியா, நகைச்சுவை நாயகி ஜூலி ஆகிய முக்கிய கதாபாத்திரங்கள் இல்லாததால் காமெடி சீன்களை வைத்து கல்லா கட்ட பிக் பாஸ் முடிவெடுத்து விட்டார் போலிருக்கிறது. ஆனால் நமக்குத்தான் சிரிப்பு வரவில்லை. இந்த நிகழ்ச்சி சலிப்புறத் துவங்கி விட்டது. 

துணிதுவைப்பது, பாத்ரூம் கழுவுவதையெல்லாம் பார்க்கவா நாம் அமர்ந்திருக்கிறோம்? சந்தானம் ஒரு திரைப்பட நகைச்சுவைக்காட்சியில் கேட்பதைப் போலவே “எங்களையெல்லாம் பார்த்தா அவ்ளோ மொக்கையாவா தெரியுது?” என்று பிக்பாஸை கேட்கத் தோன்றியது. 

காயத்ரி



‘முட்டை கணேஷ்’ நிதானமாக உண்பதை சிநேகனும் மற்றவர்களும் கிண்டலடித்துக் கொண்டிருந்தார்கள். எவரைப் பற்றியும் கவலைப்படாமல் ‘தான் உண்டு தன் முட்டை உண்டு’ என்று கருமமே கண்ணாயினராக இருக்கிறார் கணேஷ்.

அதற்கு முன், காலையில் ‘ஆடுகளம்’ திரைப்படத்திலிருந்து ‘ஒத்த சொல்லாலே’ என்கிற ரகளையான பாடல் ஒலிபரப்பானது. ஒற்றைச் சொல்லை அடிக்கடி சொல்லி சர்ச்சையில் மாட்டிக் கொண்ட காயத்ரி நடனம் என்ற பெயரில் எதையோ செய்தார், உடற்பயிற்சியோ என்னவோ. பிந்து மாதவியின் நடனம் தேவலை. ஓவியா இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ. வழக்கத்திற்கு மாறாக சக்தியும் இன்று அதிக ‘சக்தி’ வந்து பிந்துவுடன் ஆடினார். 

gayathri sakthi



**
வையாபுரி மறுபடியும் வாக்குமூலப் படலத்தை உருக்கமுடன் ஆரம்பித்து விட்டார். இனி நல்ல கணவனாகவும் பொறுப்புள்ள தகப்பனாகவும் இருப்பதாக தன் மனைவிக்கு வாக்களித்தார். இதை பார்த்துக் கொண்டிருக்கும் பல குடும்பத்தலைவிகளுக்கு அவரவர்களின் கணவன்மார்கள் குறித்து இப்படி தோன்றலாம். ‘இந்த மனுசனை கொண்டு போய் அங்க ஒரு மாசம் தள்ளி விட்டு வந்தாத்தேன் திருந்துவாரு போல”

வையாபுரி



சரியான நேரத்தில் சாப்பாடு கிடைக்காததாலும் உடல் உழைப்பினால் ஏற்படும் வலியினாலும் வையாபுரி புலம்பிக் கொண்டேயிருந்தார். ‘சார்.. நீங்க மைண்ட் வாய்ஸ்’ல பேசறாத நெனச்சு சத்தமா பேசிட்டிருக்கீங்க’ என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. வீட்டு வேலைகள் என்ற விஷயத்தையே இதுவரை செய்திராத குடும்பத் தலைவர்கள் இந்தக் காட்சியை ஒருவேளை திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்திருப்பார்களோ, என்னவோ. ‘இதையெல்லாம் பார்த்துட்டு பொண்டாட்டி அழுவா’ என்றவர், சட்டென்று ‘அழுவறாளோ.. சிரிக்கறாளோ..’ என்று இணைத்துக் கொண்டது நகைச்சுவை மத்தாப்பு. 

**

பிக் பாஸ் வீட்டின் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு ‘Luxury budget task’ தரப்பட்டது. எந்த அணி ஜெயிக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே பட்ஜெட் தரப்படும். தோற்ற அணி லக்ஸரி பொருட்களை உபயோகப்படுத்தக்கூடாது.  பிக் பாஸின் திருவிளையாடல் இது. ஆடம்பரமான உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்தவர்களின் வயிற்றில் அடித்தால் அவர்களுக்குள் நிச்சயம் அடித்துக் கொள்வார்கள் என்கிற பயங்கரமான திட்டம் போல. ‘பசி வந்தால் பத்தும் பறக்கும்’ போது ‘நிச்சயம் சண்டை உண்டு’ என்று பிக்பாஸ் முடிவுசெய்து விட்டார் போல. நடக்கட்டும். 

பட்ஜெட்டிற்கான பொருட்களைப் பற்றி கலந்தோசிக்க தங்கள் குழுவுடன் தனியாக அமர்ந்த சிநேகன் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு சொன்னார். ‘இந்த விஷயம் ரகசியமாக இருக்கணும்’. மூலைக்கு மூலை புறம் பேசுவதற்கென்றே சிருஷ்டிக்கப்பட்ட அந்த இடத்தில் ஆகிற வேலையா இது?

சக்தி சிநேகன்



**

பிக்பாஸ் சலவை மையம் என்கிற task. தரப்படுகிற பழைய துணிகளை இரண்டு அணிகளும் துவைத்து தர வேண்டும். எவர் அதிக எண்ணிக்கையிலான துணிகளை நன்றாக துவைக்கிறார்களோ, அவர்களுக்கு மதிப்பெண்கள். சக்தி மற்றும் பிந்து மாதவி இதன் தரபரிசோதனையாளர்களாக இருப்பார்களாம். காலக்கொடுமை. 

பணிபுரிவதற்காக அவர்களுக்கு தரப்பட்ட உடை நகைச்சுவையாக இருந்தது. மேக்கப் இல்லாத ரைசா, கண்டாங்கி சேலையில் அசல் ‘கிராமத்து கிளி’யாகவே மாறி விட்டார். 

பிக்பாஸ் போட்டியாளர்களின் உடைகளை அவர்களே துவைத்துக் கொள்வார்களா, அல்லது வெளியில் இருந்து துவைத்து வருமா என்று பார்வையாளர்களுக்கு நீண்ட காலமாக இருந்த வரலாற்றுச் சந்தேகம் இன்று தீர்ந்து விட்டிருக்கும். குறைந்த எண்ணிக்கையிலான துணிகளை துவைப்பதற்கே அப்படி அலுத்துக் கொண்டார்கள் என்றால் தங்களின் துணிகளை எப்படி துவைப்பார்கள்? 

நெருக்கடி காலக்கட்டங்களில் விமானத்தில் இருந்து போடப்படும் உணவுப்பொட்டலங்களை கைப்பற்றுவது போல் பழைய துணிகளை பிடிக்க போட்டா போட்டி. ஆரவ் சமயோசிதமாக செயல்பட்டு அதிக துணிகளைக் கைப்பற்றினார். 

Bigg Boss Tamil



‘இதுவரைக்கும் குத்தவெச்சு உக்காந்ததே இல்ல. குறுக்கு வலிக்கு’ என்று அலுத்துக் கொண்ட வையாபுரி ‘இன்னமும் என்னென்ன விளையாட்டை வெச்சு சோதிக்கப் போறீங்களோ’ என்றார். ‘பார்வையாளர்களாகிய நாங்கள்தான் அதை சொல்ல வேண்டும்.

தாம் துவைக்க எடுத்த ஒரு சட்டையில் லிப்ஸ்டிக் கறை இருப்பதை கண்டுபிடித்தார் ஆரவ். ‘எவன் முத்தம் கொடுத்ததுன்னு தெரியலையே’ என்று அவர் சொன்னது அட்டகாசமான topical காமெடி. தன்னுடைய சங்கடத்தை சுயபகடியின் மூலம் உடனே அவர் கடந்து வருவது சிறப்பு. இப்படி ஒருவரையொருவர் கிண்டலடித்துக் கொள்வதன் மூலம் பணியைச் சுலபமாக்கிக் கொள்ள முயன்றார்கள். ‘ஆடிப்பாடி வேலை செஞ்சா அலுப்பிருக்காது’ என்கிற கிராமத்து மக்களின் பழக்கம், தன்னிச்சையாக அவர்களிடம் வந்து விட்டது போல. 

**

‘இந்தாளுக்கு எந்த வேலை கொடுத்தாலும் காரெக்டராகவே மாறிடறான்யா’ என்று அயர்ன் வேலை செய்து கொண்டிருந்த சிநேகனைப் பார்த்து சொன்னார் சக்தி. சிநேகன் ஹீரோவாக நடிப்பதை விட ‘கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டிக்குதான் லாயக்கு’ என்று இதற்குப் பொருளா என தெரியவில்லை.

ganesh



‘எவன் பாட்டெழுத வாய்ப்பு தரலைன்னாலும் பரவாயில்லை, இனி அயர்ன் கடை வெச்சு பிழைச்சுக்குவேன்’ என்றார் சிநேகன். இசையமைப்பாளர்களும் தயாரிப்பாளர்களும் மறக்காமல் இந்த முக்கிய தகவலை குறித்து வைத்துக் கொள்ளவும். 

‘எப்படி பத்த வெக்கறது ப்ரோ’ என்று விசாரித்து தெரிந்து கொண்டார் கணேஷ். இதுவரை சாப்பாட்டுச்சாமியாராக இருந்த அவர், அதிகம் பற்ற வைத்து நிகழ்ச்சியை இனியாவது சுவாரசியமாக்குவார் என எதிர்பார்க்கலாமா?

சிநேகன் அணி கடின உழைப்பின் மூலம் துவைத்துத் தந்த துணிகளை, சக்தி நிராகரித்தது அநியாயம். பக்கத்தில் இருந்த எதிரணி காயத்ரி வேறு ஏத்திக் கொடுத்துக் கொண்டேயிருந்தார். 

‘இவன் ஜிம்பாடியை வெச்சுக்கிட்டு ஒர்க்அவுட் பண்ணிட்டு சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கிடுவான்.’ என்று கணேஷை தன் மைண்ட் வாய்ஸால் விமர்சித்தார் வையாபுரி. ‘சக்தியும் காயத்ரியும் ஒண்ணா உக்காந்து பேசியே காலத்தைக் கழிச்சுடுங்க’ … எனக்குத்தான் என்ன பண்றதுன்னுன்னெ தெரியலை.. என்று புலம்பிக் கொண்டேயிருந்தார். ஓய்வு பெற்று மூலையில் அமர்த்தி வைக்கப்படும் வயதானவர்களின் தனிமைப் பிரச்சினையைப் போலவே இருந்தது, அவருடைய புலம்பல். பிக் பாஸ் அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்கலாம், பாவம். 

bigg boss Tamil



எதிர்பார்த்தபடியே துணிதுவைக்கும் இந்த விளையாட்டில் மெலிதான சண்டை மூண்டது. தங்கள் அணி சிரமப்பட்டு துவைத்த துணிகளை சக்தி வேண்டுமென்றே நிராகரித்தார் என்று சிநேகன் வருத்தப்பட்டாரோ, என்னவோ. மூலையில் சென்று சோகத்துடன் அமர்ந்து விட்டார். சக்தி இதை யூகித்து விசாரித்த போது  ‘அப்படியெல்லாம் இல்லை’ என்று மறுத்தார்.

ஆனால் இந்தச் சண்டை விரைவில் அடங்கி விட்டது பிக்பாஸிற்கு ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். ஆண்களின் சண்டை அத்தனை எளிதில் பற்றிக் கொள்வதில்லை. மேலும் அவர்கள் அற்ப விவகாரங்களை சண்டையாக எடுத்துக் கொள்வதில்லை

இன்றைய நாளில் சிநேகன் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

பிக் பாஸ் வீடு, இரண்டு அணிகளாக பிரிக்க வைக்கப்பட்டதை, ‘சம்சாரம் அது மின்சாரம்’ திரைப்படத்தோடு ஒப்பிட்டு சக்தி விவரித்தது ரகளை. அங்குள்ள ஒவ்வொருவரையும் திரைப்படப் பாத்திரங்களோடு இணைத்து கலாட்டா செய்ததும் ரசிக்க வைத்தது. என்ன செய்ய, சுவாரசியமே இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் பிலிம் பெஸ்டிவல் திரைப்படத்தில் மொக்கையான நகைச்சுவைக்காட்சி வந்தால் கூட பார்வையாளர்கள் மிகையாக சிரித்து வைப்பார்கள். அது போல இதையேல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது. 

ஏற்கெனவே ஒருமுறை குறிப்பிட்டதுதான். சுற்றி நடக்கும் விஷயங்களை கவனமாக குறித்துக் கொண்டு அதை நகைச்சுவையாக விவரிப்பதில் சக்திக்கு திறமை இருக்கிறது. இதைச் சரியாக அவர் வளர்த்துக் கொள்ளலாம். 

gayathri



**

போட்டியாளர்களில் பெரும்பாலோனோர், வசதியான பின்னணியில் இருந்து உடல் உழைப்பு என்றால் என்னவென்றே தெரியாத சூழலில் இருந்து வந்தவர்களாகத்தான் இருப்பார்கள். சமூகத்தின் பல்வேறு நிலைகளில் இது போன்ற பல கடினமான பணிகளைச் செய்யும் எளிய மக்களின் சிரமங்களை இனியாவது அவர்கள் உணர்வார்கள் என நம்பலாம். தங்கள் வீட்டுப் பணியாளர்களை இனி கருணையோடு நடத்துவார்கள் என்று கருதலாம். பார்வையாளர்களுக்கும் இது சார்ந்த செய்தி இருக்கிறது. 
 

இன்றைய நாளின் தொகுப்பில் அதிக சுவாரசியமில்லை. புதிய போட்டியாளரான ‘நமது நிருபர்’ பிந்து மாதவியும் ஜோதியில் ஐக்கியமாகாமல் இன்னமும் விருந்தினராகவே இருக்கிறார். இப்படியே சென்று கொண்டிருந்தால்,  இந்த நிகழ்ச்சிக்கு நேரம் செலவழிக்க வேண்டுமா என பார்வையாளர்கள் யோசிக்கும் நிலை ஏற்பட்டு விடலாம். பிக் பாஸ் ஜாக்கிரதை! (என்ன செய்ய, ஜூலி, ஓவியா என பவர் பிளேயர்ஸை வைத்து செம ஷோ காட்டிவிட்டீர்கள். இப்போது சவசவ அத்தியயங்கள் கடுப்படிக்கிறது!)

 

 

gayathri

 

 

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/98489-are-we-getting-bored-of-bigg-boss---happenings-of-bigg-boss-day-44.html

Link to comment
Share on other sites

அலோ பிக்பாஸா... ஓவியா எப்போ சார் வருவாங்க? - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (45-ம் நாள்) #BiggBossTamilUpdate

 

 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

Bigg_Boss_Banner_09028.jpg

 

பிக்பாஸ் வீட்டில் திருப்பள்ளியெழுச்சிக்கு ஏன் எப்போதும் சமகால திரையிரைசப்பாடல்களே ஒலிபரப்பாகின்றன? முந்தைய தலைமுறையைச் சார்ந்த பாடல்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன். அங்குள்ள போட்டியாளர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் என்பதால் இப்படியா? சற்று கற்பனை செய்து பார்ப்போம். ஏ.எம்.ராஜா, எம்.எஸ்.வி பாடலுக்கு ஓவியாவின் நடனம் எப்படியிருக்கும்?

பிக் பாஸ் காதில் எனது மனவோட்டம் சென்று சேர்ந்து விட்டதோ, என்னமோ, ரீமிக்ஸாக இருந்தாலும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் இருந்து ‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’ பாடலை ஒலிக்க விட்டார். 

bigg boss Tamil


வழக்கம் போல் அதேதான். சூரியன் இல்லாத பிரபஞ்சம் போல ஓவியாவின் இருப்பும் நடனமும் இல்லாமல் ஒளியிழந்து கிடக்கிறது பிக் பாஸ் வீடு. (கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ). 

‘அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’ என்கிற பாடல் வரிகள் கூட ஓவியாவை குறிப்பது போலவே இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமல்லாது பொதுவாக அனைவருக்குமே.. ஓவியாவைப் போல காலைப்பொழுதை உண்மையான உற்சாகத்துடன் நடனமாடி வரவேற்க கற்றுக் கொள்ளுங்கள்.. சோர்வாக எழாதீர்கள் அல்லது உற்சாகமாக இருப்பது போல் நடிக்க செய்யாதீர்கள்’ என்று சொல்ல வருகிறார்களோ, என்னமோ. (போய்த்தான் பார்ப்போமே)

**

‘சந்தைக்குப் போகணும், ஆத்தா வையும்’ சப்பாணி போல நேற்று வரை ‘வீட்டுக்குப் போகணும்’ என்று அனத்திக் கொண்டிருந்த வையாபுரி, மயில் தந்த உற்சாகத்தில் சப்பாணிக்கு திடீர் வீரம் வந்தது போலவே திடீர் மனமாற்றத்துடன் நூறு நாட்களை இங்கேயே கழித்து விடுவது என முடிவு செய்து விட்டார். இந்த மாற்றத்தின் பின்னணி என்னவென்று தெரியவில்லை. ‘இங்க ரேஷன் கார்டு பிரச்னை, ஆதார் கார்டு பிரச்னை’ன்னு நெறய ஓடிட்டு இருக்கு. நீங்க பேசாம அங்கனயே இருந்துட்டு வாங்க’ என்று வீட்டம்மணி தகவல் அனுப்பி விட்டார்களோ, என்னமோ. 

வையாபுரி



நேற்று சிநேகன் அணி வெற்றி பெற்றதால் அவர்களுக்கு மட்டும் லக்ஸரி பொருட்களை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு தரப்பட்டது. ரைசாவின் கையெழுத்து அவரைப் போலவே அழகாக இருக்கிறது. (ரைசா பேரவையின் முதல் உறுப்பினர்) கடலை மிட்டாய் எல்லாம் லக்ஸரி பட்ஜெட்டில் வருமா, என்ன? GST வந்தவுடன் விலையேறி விட்டதோ? 

தன்னுடைய காலையுணவு வந்தவுடன் ‘ப்ரோ.. இதுல 2 முட்டை போட்டீங்கதானே’ என்று கேட்டு கணேஷ்  உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு சாப்பிடத் துவங்கினார். ப்பா.. என்னவொரு தெளிவு!

கணேஷ்



இதனால் அறியப்படுவது யாதெனில் கணேஷ் இனி திருந்துவது என முடிவு செய்து விட்டார். அவரது மனைவியின் உபதேசத்தைக் கேட்ட பிறகு இந்த மாற்றம். வீட்டில் ‘மீனாட்சி’ ஆட்சி போலிருக்கிறது. ஒவ்வொரு பூட்டிற்கும் ஒவ்வொரு சாவி இருக்கிறது. சரியான சாவியைத் தேடாமலிருப்பதுதான் பிரச்னை. இதுநாள் வரை மற்றவர்கள் ஜாடை மாடையாக சொல்லுவதையெல்லாம் கவனிக்காதது போல் இருந்தவர் வீட்டிலிருந்து வந்த சில நிமிடத்துண்டு உபதேசத்திற்கு (கட்டளைக்கு ?)  எத்தனை முக்கியத்துவம் தருகிறார்? வெளியில் வீறாப்பாக திரிந்தாலும் இந்த கணவர் சமூகம் பெரும்பாலும் சரணாகதி கோஷ்டிதான் போலிருக்கிறது. 

அல்லது இப்படியும் இருக்கலாம். ‘என்னய்யா . இவ்ள சம்பளம் கொடுத்துட்டு.. அவரால எந்தவொரு சென்ஷேனல் ஃபுட்டேஜூம் கெடைக்கலை. காமிரா கண்ல படாம யோகா பண்றன்னு எங்கயாவது உட்கார்ந்து தூங்கறாரு, ஏதாவது பண்ணுங்க’ என்று பிக் பாஸ் மற்றவர்களுக்கு சூசகமாக உத்தரவிட்டாரோ என்னமோ. 

‘என்கிட்ட என்னென்ன பிரச்னைன்னு சொன்னீங்கன்னா.. சரி செய்துவிடுவேன்” என்று  தன் குறைகளைப் பற்றி மற்றவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினார். அடப்பாவி! அப்ப இத்தனை நாள் மத்தவங்க ஜாடையா சொன்னதெல்லாம் காதில் விழாத மாதிரியே நடிச்சிருக்காரு, மனுஷன். 

ganesh



கணேஷின் பிரியமான நண்பரான வையாபுரிதான் இந்தப் பஞ்சாயத்தை துவக்கி வைத்தார். “இவன் தொடர்ச்சியா 3 சீசனுக்கு கூட தாங்குவான் போலிருக்கு. அத்தனை ஷூ, டிரஸ் எடுத்துட்டு வந்திருக்கான். அப்படியே போட்டு வெச்சிருக்கான். கொசு வேற புடுங்கியெடுக்குது. (என்னது! பிக்பாஸ் வீட்டில் கொசுவா? ஐயகோ.. எனில் ஓவியா காயத்ரி குழுவைத் தவிர நிஜகொசுக்களுடன் அத்தனை நாட்கள் அவதிப்பட்டுக் கொண்டிருந்தாரா? ஓவியப்படைக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தால் இன்னமும் மனம் நொந்திருப்பார்களே)

வையாபுரியுடன் மற்றவர்களுடன் இணைந்து புகார்ப்பட்டியலை வாசித்தார்கள். ‘ந்தா பாருப்பா.. நீயுண்டு உன் முட்டையுண்டு –ன்னு ஒரு பறவை போல வாழறே.. இங்க கொலையே நடந்தா கூட கமுக்கமா யோகா பண்றேன்னு பேர்வழி-ன்னு ‘அப்பா’ திரைப்படத்துல வர்ற பையன் மாதிரி, ‘நாலு பேர் கண்ல விழாம சும்மா இருப்போம்’ ன்ற மாதிரியே இருக்க.:”, மத்தவங்களுக்கு வேணுமே-ன்னு பார்க்காம.. முட்டை, சிக்கன்லாம் எடுத்து தின்னுப்புடற. ஷேர் செஞ்சு சாப்பிடுவோம்-னு உனக்கு தோண மாட்டேங்குது’. எத்தனை நாள்தான்யா நாங்களும் வலிக்காத மாதிரியே நடிக்கறதே.. எங்களுக்கு மேல நீயும் நடிக்கறே..” 
என்று பட்டியல் நீண்டது. ‘யார்ரா.. இவன்.. பனியன் விளம்பரத்துல வர்றவன் மாதிரியே இருக்கான்’ என்று சந்தானத்தால் திரைப்படக்காட்சியில் கிண்டலடிக்கப்பட்ட கணேஷ், இவற்றையெல்லாம் ஓர் ஆன்மிக புன்னகையோடு பெருந்தன்மையோடு கேட்டுக் கொண்டிருந்தார். 

இந்த விளையாட்டை சகிப்புத்தன்மையுடன் திறம்பட ஆடிக் கொண்டிருப்பவர்களில் கணேஷ் முதன்மையானவர். ஆனால் ‘கூடிவாழும் தன்மை’ எனும் நோக்கில் அவர் பிரச்னைகளில் இருந்து ‘சம்சாரம் அது மின்சாரம்’ ரகுவரன் மாதிரி ஒதுங்கியிருப்பது மிக முக்கியமான குறை. சமூகப் பிரச்னைகளைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் சுயநலம் பிடித்த மேல்தட்டு வர்க்க சித்திரம் கணேஷிற்குப் பொருந்துகிறது. 

**

ஆரவ், நெல்லை வழக்கு மாதிரி எதையோ பேசி சக்தியை கலாட்டா செய்து கொண்டிருந்தார். சக்தி குழந்தை மாதிரி அமர்ந்திருந்தார். ஆரவ் ஓவராக கிண்டலடித்த சமயத்தில் தாய்ப்பறவை மாதிரி உடனே ஓடி வந்து ஆரவ்வை விளையாட்டாக தடுத்தார் காயத்ரி. இவரிடம் எதிர்மறை குணங்கள் இருந்தாலும் தாய்மை சார்ந்த குணநலன்கள் இருப்பதைக் கவனிக்கலாம். ‘தனக்கான சாப்பாட்டுத் தேவை குறைவாக இருந்தாலும் மற்றவர்களுக்கு சமைத்து தருவதை தடுக்கும் வகையில் சமையல் பொருட்களை கட்டுப்படுத்தும் taskகளை பிக்பாஸ் தந்த போது அவர் நேற்று சலித்துக் கொண்டதை கவனித்திருக்கலாம்..

Gayathri



காயத்ரியும் சக்தியும் இணைந்து புறம் பேசிக்கொண்டேயிருப்பது ரசிக்கத்தக்கதல்ல என்றாலும் அவர்களுக்கு இடையேயான அன்பும் பாசப்பிணைப்பும், சக்தியின் கிண்டல் பேச்சுக்களை ரசித்து காயத்ரி கேட்கும் விதமும் சமயங்களில் பார்க்க அழகாகவே இருக்கிறது. ஒருவேளை பிக் பாஸ் வீட்டில் இருந்து சக்தி முதலில் வெளியேறினால், காய’த்ரி’ பிரிவு சோகத்தில் பாதியாகி காய ‘ஒன்றரை’யாகி விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. குழந்தையில்லா வீட்டில் கிழவன் துள்ளிக் குதித்த கதையாக, ஓவியா இல்லாத வீட்டில் இந்த இரண்டு பேரும் இணைந்து லூட்டி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். 

**

துணிகள் அனுப்பப்படுவதற்கான சைரன் ஒலித்தது. அவைகளை முதலில் பிடிப்பதற்காக சறுக்குப் பாதையின் மேலேயே ஏறி வசதியாக அமாந்து கொண்டார் ஆரவ். ‘நாங்களும் ஏற மாட்டோமா.. எங்களுக்குத் தெரியாதா’ என்றெல்லாம் சவடால் விட்ட சக்தி அதற்கு முயன்று ‘வழுக்குது’ என்று கைப்புள்ள வடிவேலு மாதிரி இறங்கி விட்டார். ‘இது என்ன சினிமா ஷூட்டிங்கா.. சக்தி ப்ரோ.. ஷாட்டை கட் செஞ்சி,. டூப்பை மேலே ஏற அனுப்புவதற்கு’. 

லாவகமாக மேலே ஏறி துணிகளைப் பிடித்துக் கொண்டிருந்த ஆரவ்வை பாசத் தூண்டிலால் மடக்க முயன்றார் எதிரணி காயத்ரி. ‘தம்பி.. இறங்கிட்றா’ 

‘இந்த அக்கா –தம்பி பாசத்தையெல்லாம் வீட்டிற்கு வெளிய வெச்சுக்கோ. கேம்னு வந்தா சீரியஸா இரு’ என்று உண்மையிலேயே சீரியஸ் ஆனார் ரைசா. மேக்கப் கிளியாக இருந்த ரைசாவிடம் எத்தனை முன்னேற்றம். காயத்ரிக்கும் இவருக்கும் இடையில் பகைமைக்கான மெல்லிய கோடு ஓடிக் கொண்டிருக்கிறது போல. எனில் அது சார்ந்த சண்டை வரும் வாரங்களில் நிச்சயம் நடக்கும். எனவே துண்டை விரித்துப் போட்டு அமர்ந்து ஆவலாக காத்திருக்கலாம். 

bigg boss Tamil



இதைப் போலவே சக்தி துணிகளை வேண்டுமென்றே நிராகரிக்கிறார் என்கிற வெறுப்புடன் சிநேகன் அடிபட்ட பாம்பு மாதிரி உலாவுகிறார். துணிகளைப் பிடித்துக் கொண்டு ஆரவ்வை ‘கிச்சு கிச்சு மூட்டி’ சக்தி இடையூறு செய்து விட்டார் என்கிற கோபம் வேறு அவருக்கு இருக்கிறது. எனவே சண்டை நிச்சயம் உண்டு. ஆண்டவன் நம்மை அப்படியெல்லாம் கை விட்டு விட மாட்டான். காத்திருப்போம். 

உடல்உழைப்பு சார்ந்த இந்த விளையாட்டை மிக உற்சாகமாக எதிர்கொள்கிறவர் ஆரவ் மட்டுமே. ரைசாவுடன் இணைந்து ஜாலியான கமெண்ட்டுகளாக சொல்லி அடி பின்னுகிறார். (கடவுளே.. அடுத்த குறும்படம் உருவாகும் அளவிற்கு நிலைமை போய்விடக்கூடாது).

**

“சின்ன வயசுலதான் அவ்ள கஷ்டப்பட்டோம். அந்தப் பலனுக்காக இப்ப சற்று வசதியான வாழ்க்கைக்குள் நுழைந்து விட்ட பிறகும் இது போல உடல் உழைப்பு சார்ந்த விளையாட்டுக்களில் கஷ்டப்பட வேண்டுமா’ என்று மைண்ட் வாய்ஸில் சத்தமாக பேசி ‘வலிக்காத மாதிரியே எவ்ளதான்யா நடிக்கறது” என்று வாய்விட்டு அழுதே விட்டார் வையாபுரி. மற்றவர்கள் இன்னமும் வாய்விட்டு அழவில்லை என்பதுதான் வித்தியாசம். ‘வசதியான பின்னணியில் இருந்து வந்தவர்கள் கூட இப்படி கஷ்டப்படுகிறார்களே’ என்று பக்கத்து இலைக்கும் பாயாசம் தேடிக் கொண்டார். 

‘கழிவறைக் கதவுகளை மூடி வைத்த விளையாட்டில்’ முன்பு ஆக்ரோஷமாக ஆட்சேபம் தெரிவித்தது போல இப்போதும் அவர் தெரிவித்திருக்கலாம். வையாபுரி போன்ற வயதான போட்டியாளர்களுக்கு உடல்உழைப்பு சார்ந்த task-ஐ பிக் பாஸ் தவிர்ககலாம். சக்திக்குப் பதிலாக வையாபுரிக்கு தரப்பரிசோதனையாளர் பாத்திரம் தந்திருக்கலாம். 

ரைசா டீம்



முதலில் இருந்து கவனித்தால், சக்தியும் காயத்ரியும் எப்போதும் ஓரணியில் இருப்பது போலவே அமைகிறது, இது தற்செயலா, திட்டமிடலா? மட்டுமல்லாமல் உடல் உழைப்பு அதிகமில்லாத பணிகள் மட்டுமே அவர்களுக்கு தரப்படுவது போலவே தோன்றுகிறது. ரைசா கருதுவது போல, Are they really an influence people in the industry? 

**

சக்தி விவரித்த நகைச்சுவையின் படி வீட்டிற்கு இடையில் கோடு கிழிக்கப்பட்டு தனித்தனி சமையல் நடைபெறுகிறது. ‘நம்ம வீட்டு சாம்பார் ஏன் பழசுன்னு அவங்க கிட்ட சொல்ற” என்று உண்மையான குடும்பத்தலைவி போலவே ஜோதியில் நன்றாக ஐக்கியமாகி விட்டார் ரைசா. மேக்கப் இல்லாமல் அவரை சேலையில் பார்க்க இளம்வயது சோனியா காந்தி ஜாடை தெரிகிறது. 

‘பேண்ட்ல பட்டன் இந்தப் பக்கம் இருக்கணுமா, கூடாதா” என்றொரு சீரியஸான லாஜிக் கேள்வியை கணேஷ் கேட்டுக் கொண்டிருக்க, பெண் பார்க்க வந்தது போல பிந்துமாதவி வெட்கப்பட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார். அம்மணி காமிராவில் படும் காட்சிகளே மிகக் குறைவாகத்தான் இருக்கிறது. இவர் ஓவியாவிற்கு பலத்த போட்டியாக இருப்பார் என்றெல்லாம் முதலில் பேசப்பட்டது. சிங்கம் மாதிரி உறுமுவார் என்று பார்த்தால் பூனையின் சத்தம் கூட இல்லை. ‘இவர் ஒரு மாதிரியாக விழித்துக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்தால், உளவியல் ஆலோசகருக்கு அடுத்த வேலை வந்து விடும் போலிருக்கிறது. 

பிந்து மாதவி



‘என் பொன்னான கைகள் புண்ணாகினாலும் பரவாயில்லை. உழைத்துக் கொண்டேயிருப்பேன்’ என்று பஞ்ச் டயலாக் பேசினார் காயத்ரி. செளகரியமாக சாய்ந்து கொண்டே அவர் இதைச் சொன்னதுதான் பயங்கர நகைச்சுவை. வையாபுரி கஷ்டப்படுவதை பார்க்க சகிக்கவில்லையாம். எனவே சக்தி அணி, லக்ஸரி பட்ஜெட்டை விட்டுத்தர முன்வந்து விட்டார்கள். 

உடல் உழைப்பை சார்ந்த இந்த task  எல்லோருக்குமே அதிக சிரமம் என்பதால் சொல்கிறார்களா, அல்லது வையாபுரியின் மீதான மட்டுமான அக்கறையில் உண்மையிலேயே விட்டுத்தருகிறார்களா என்று தெரியவில்லை. பின்னதுதான் காரணம் என்றால் மகிழ்ச்சி. விட்டுத்தருதல்தான் குடும்ப சுமூகமான இயங்குமுறைக்கு அடிப்படை காரணிகளில் ஒன்று. 

**

சக்தி தங்களின் கடுமையான உழைப்பை வேண்டுமென்றே நிராகரித்து விடுவாரோ என்று சிநேகன், ரைசா போன்றோர் பதட்டத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார்கள். சக்தியும் அதற்கு ஏற்பவே துணிகளின் தரத்தை கறாராக ஆய்வு செய்து கொண்டிருந்தார். ‘நீங்க பாம் ஸ்குவாட்ல இருந்திருக்கணும் சக்தி. சரி.. நீங்க முடிச்சிட்டு நாளைக்கு சொல்லுங்க. நான் அதுவரைக்கும் தூங்கறேன்’ என்று அவருடைய நிதானத்தை கிண்டலடித்தார், வீட்டு விருந்தினர் பிந்துமாதவி.

ஆனால் சக்தி அப்படியெல்லாம் பழிவாங்கவில்லை போலிருக்கிறது. சிநேகனின் அணியே இன்றும் வென்று வெண்கல கோப்பையை கைப்பற்றியது. ‘பிக் பாஸ்.. எங்களாலும் முடியலை. அவங்களாலும்.. முடியல..இந்த துணி துவைக்கற task வேண்டாமே’ என்று சக்தி உருக்கமுடன் வேண்டிக் கொண்டார். ‘எங்களாலும் முடியல ப்ரோ.. நிகழ்ச்சி ரொம்ப மொக்கையா போகுது’ என்று நாமும் அவரிடம் சொல்லத் தோன்றியது. 

போட்டியாளர்களின் கண்ணீரைப் பார்த்த பிக் பாஸ் பெரிய மனதுடன் இந்தப் போட்டியை முடித்துக் கொண்டார். எல்லோரும் ஆனந்தக் கூச்சலிட்டார்கள். நாமும். 

ரைசா



**

இந்தக் கொடுமை முடிந்து சற்று நிம்மதியாக இருக்கலாம் பார்த்தால் அடுத்து ‘பேய்க்கதைகள்’ சொல்லும் task-ஆம்…  .. முடியல.. வேணாம்.. வலிக்குது…. அழுதுடுவேன்’’…

பாலைய்யாவிடம் பேயக்கதை சொல்லும் ‘காதலிக்க நேரமில்லை’ ‘செல்லப்பா’ நாகேஷாக தங்களை நினைத்துக் கொண்டு மொக்கை போட ஆரம்பித்தார்கள் வையாபுரியும், ஆரவ்வும். வழக்கம் போல் ரைசா பயப்படுவது போல அதிக சீன் போட்டார். இதற்குத் தோதாக விளக்கையணைத்தார்கள். ‘அட்மாஸ்பியர்’ உருவாக்குகிறார்களாம். 

ரைசா ஆரவ்



இருவர் சொன்ன கதைகளிலுமே விடாப்பிடியாக நாய் வந்தது. பிக்-பாஸ் வீட்டில் அவர்கள் தூங்கும் போதெல்லாம் வந்து குரைத்து எழுப்பும் நாய் சார்ந்த ஆழ்மன பாதிப்பு அவர்களிடம் அதிகம் ஏற்பட்டு விட்டதோ. 

நள்ளிரவில் ஆண்கள் டீம் எழுந்து பெண்கள் அறைக்குள் சென்று பயமுறுத்தியதெல்லாம் மொக்கையான டிராமா. 

போதும் நிறுத்திக்குவோம். 

**

நாளைய பகுதியில் தான் கெட்ட வார்த்தைகள் பேசுவதைப் பற்றி காயத்ரி ஏதோ வாக்குமூலம் தருகிறார் போலிருக்கிறது. கோபமில்லாமல் கெட்டவார்த்தை கலக்காமல் அந்த வாக்குமூலம் அமைந்தால் நல்லது.  

நடைமுறையில் கூட கவனிக்கலாம். ‘அப்படி என்னடா நான் கெட்ட வார்த்தை பேசிட்டேன்..’என்று ஆரம்பிப்பவர்கள், தங்களையும் அறியாமல் வரிசையாக ஆபாச வசைகளை  இறைப்பார்கள். முரண்நகைக்கான உதாரணம் இது.
 

பிந்து மாதவி

 


ஆணாதிக்கம்  அதிகமுள்ள துறையில் தான் பணிபுரிவதால் ‘கோபம்’ என்கிற குணாதிசயத்தை ஒரு முகமூடி போல உபயோகப்படுத்தி அதுவே பழகி விட்டது. அந்த வார்த்தைகளின் பொருள் அறிந்து மனதார உபயோகப்படுத்துவதில்லை’ என்று காயத்ரி சொல்வது சமாதானமா, டேமேஜ் கண்ட்ரோல் முயற்சியா, நடைமுறை சார்ந்த உண்மையா என்று தெரியவில்லை. 

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஷயத்தைப் பற்றி இன்று அறிந்து கொள்வோம்.

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/98614-biggboss-when-will-oviya-come-happenings-of-biggboss-day-45.html

Link to comment
Share on other sites

எங்களுக்கு இன்னொரு பேர் இருக்கு... காயத்ரி, சக்தி, ரைசாவின் பாட்ஷா வெர்ஷன்ஸ்! - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (46-ம் நாள்) #BiggBossTamilUpdate

 

கடந்த இரண்டு நாட்களாக துணி துவைக்கும் சலிப்பான task ஒளிபரப்பானதால் வெறுப்படைந்த பார்வையாளர்கள், பிக் –பாஸைப் போட்டு நன்றாக துவைத்துக் கொண்டிருந்தனர். இதனால் உக்கிரம் அடைந்த  பிக் பாஸ், இன்றாவது எப்படியாவது அடுப்பைப் பற்ற வைத்து தொழிலைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டார் போல. காயத்ரியின் மூலம் அதைச் செயல்படுத்த தீர்மானித்தார். நல்ல தேர்வு.  வீட்டைப் பற்ற வைக்கச் சொன்னால் காட்டையும் இணைத்து பற்ற வைக்கும் திறமை கொண்டவரான காயத்ரி இந்த task-ஐ திறமையாக கையாண்டார். அவருக்குள் இருந்த பல ரூபங்கள் மறுபடியும் விழித்துக் கொண்டன. 

‘இனி நல்ல பிள்ளையாய் இருப்பேன்’ என்று காலையில் தந்த வாக்குறுதி காற்றில் பறந்து மாணிக் பாட்சா மறுபடியும் வெளிப்பட்டார். ‘’அது வேற வாய், இது நாற வாய்’ என்கிற வடிவேலுவின் காமெடியைப் போல் ஆகிவிட்டது காயத்ரியின் நிலைமை.

Bigg Boss Tamil


எது எப்படியோ, நிகழ்ச்சி மறுபடியும் சூடுபிடித்த சந்தோஷத்தில் பார்வையாளர்கள் இருந்திருப்பார்கள். 

**


பிக்பாஸ் வீட்டில் பொதுவாக வேகமான துள்ளலிசைப் பாடல்களே காலையில் ஒலிபரப்புவார்கள். அப்போதுதான் தூங்குமூஞ்சிகள் சற்றாவது அசைந்து எழுந்திருக்கும் என்று. வீட்டில் குழந்தைகளை எழுப்புவதற்கு கூட இந்த டெக்னிக்கை பலர் பயன்படுத்துவதுண்டு.

ஆனால் இன்று காலை ‘ஒன்றா. ரெண்டா.. ஆசைகள்’’ எனும் அட்டகாசமான மெலடி, ரொமாண்டிக் பாடல்’ ஒலிபரப்பானது. ‘அவர்’ இருந்திருந்தால் காற்றில் மிதந்து நகரும் இறகு போல எத்தனை அற்பதமாக ஓவியம் அசைவது போல ஆடியிருப்பார்? நேற்றைய கட்டுரையிலும், அலோ பிக்பாஸா... ஓவியா எப்போ சார் வருவாங்க? என கேள்வி எழுப்பி இருந்தோம். ரசிகர்களின் வாக்கும், நமது கட்டுரையை பிரதிபலித்திருப்பது மகிழ்ச்சி

சர்வே



சிநேகன் அணி 450 மதிப்பெண்கள் பெற்றதால் கட்ஆஃப் மார்க்கில் லக்ஸரி பட்ஜெட்டை வென்றது. காப்பி பவுடரா, ஐஸ்கீரிமா எதை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் நிலவியது. 

ரைசா



நடைமுறையில் கூட இது மாதிரியான தேர்வுச்சிக்கலை நாம் பலமுறை சந்தித்திருப்போம். சிலர் சுயநலத்துடன் தான் விரும்பியதை கறாராக சொல்வார்கள்.. சிலர் அந்த பிடிவாதத்தைக் கண்டு உள்ளுக்குள் மனம் சுருங்கி வேறு வழியில்லாமல் அதற்கு ஒப்புக் கொள்வார்கள். சிலர் எல்லோருக்கும் இணக்கமான தீர்வு இருந்தால் அதை ஏற்றுக் கொள்வார்கள். அவரவர்களின் குணாதிசயங்களை இது பிரதிபலிக்கும். இது போன்ற சமயங்களில் மனம் சுருங்காமல் தங்களின் தேவைகளை, எதிர் தரப்பு புண்படாமல் அழுத்திக் கேட்பது ஒருவகையில் புத்திசாலித்தனம். அது கிடைக்கவில்லையென்றாலும் பரவாயில்லை என்கிற மனநிலையும்  கூடவே வேண்டும்.


பிந்து மாதவி காஃபி பவுடர் பக்கம் நிற்க, ஆரவ்வும் ரைசாவும் ஐஸ்கிரீம் பக்கம் நின்றார்கள். காஃபி என்பது ஒருவகையில் அத்தியாவசிய தேவை. அத்தோடு ஒப்பிட்டால் ஐஸ்கிரீம் என்பது ஆடம்பரம். சிநேகன் நடுநிலைமையை வகிக்க, ஜனநாயக முறைப்படி ஐஸ்கிரீம் தேர்வு செய்யப்பட்டது. 

இந்த முடிவிலிருந்து தான் தனிமைப்படுத்தப்பட்டதாக பிந்து மாதவி பின்பு வருந்தினார். இதை வெளிப்படையாக அவர் சொன்னது சிறப்பு. 
‘ஆனால் இதை உள்ளேயே தெளிவாக சொல்லியிருக்கலாமே’ என்றார் ரைசா. தாங்கள் நீண்ட நாட்களாக இங்கிருந்து தினமும் காஃபி அருந்துவதால் ஒரு மாற்றத்திற்காக ஐஸ்கிரீம் தேர்ந்தெடுத்தோம் என்று அவர் சொன்ன தர்க்கமும்  ஒருவகையில் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது. முதலில் நடுநிலையாக இருந்த சிநேகனும் பின்பு காஃபி பவுடர் பக்கம் சாய்ந்தார். ஏனெனில் அது அத்தியாவசியமானது என்பது பிறகுதான் அவருக்கு உறைக்கிறது. 

ரைசா



இந்த விஷயத்தை ஏன் விலாவாரியாக எழுதுகிறேன் என்றால் நீங்கள் ஒரு விருந்திற்கு Host ஆக இருக்கிறீர்கள் என்றால் வந்திருக்கும் விருந்தினர்களின் எவருடைய மனமும் கோணாமல் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதென்பது மிகப் பெரிய சவால். அவரவர்களின் தனிப்பட்ட ருசியை அறிந்திருத்தல்,  அதில் ஏற்படும் ரகசியமான அகங்கார மோதல், உயர்வு –தாழ்வு மனப்பான்மை என்று எல்லா குணாதிசயங்களும் மோதும் இடம் அது. எனவே குறுகிய நேரத்திற்குள் சமயோசிதமாக அதற்கான தீர்வைக் கண்டுபிடிக்க தருணங்களை கவனித்து வைத்துக் கொள்வது நல்லது. 

**

நாமினேஷன் பட்டியலில் இருக்கிற பயமா அல்லது உண்மையிலேயே மனம் மாற முடிவு செய்தாரா என்று தெரியவில்லை. காயத்ரி, பார்வையாளர்களை நோக்கி வாக்குமூலம் தர ஆரம்பித்தார். ‘டங் ஸ்லிப் ஆகும் போது கெட்ட வார்த்தை வருது. ..என்ன பண்றது.. ஆனா நான் மனதார சொல்வதில்லை.. இங்க நாங்க ரொம்ப நாளா எந்தவித வசதியும் இல்லாம தனிமையில் இருக்கோம்.. என்றலெ்லாம் ஒரே பினாத்தல். 

பார்வையாளர்களுக்கு பறக்கும் முத்தமெல்லாம் தந்து கவர முயன்றார். எத்தனை பேர் தொலைக்காட்சி முன் மயங்கி விழுந்தார்களோ என்று தெரியவில்லை. காயத்ரியை வெளியேற்றுவதற்காக கொலைவெறி திட்டத்தின் வாக்கு கணக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தவர்களும் மனம் மாறினார்களா என்பதும் தெரியவில்லை. 

காயத்ரி



‘எங்க மூஞ்சிங்களையே தொடர்ந்து பார்க்கறீங்களே.. உங்களுக்குப் போரடிக்கலையா?’ என்று அவர் கேட்டது மட்டுமே ஒரே  நியாயமான கேள்வி. ஓவியாவின் பிம்பத்தை நகலெடுக்கிறேன் பேர்வழி என்று குழந்தைத்தனமாக அவர் பேசிக்காட்டியது.. பேபி ஷாலினி பாத்திரத்தில் பொன்னம்பலம் நடித்தது போலவே கர்ணகடூரமாக இருந்தது. 

மேல்தட்டு வர்க்க விநோத உணவுகளையே சாப்பிட்டு நாக்கு செத்துப் போயிருந்த வையாபுரி, ‘பரோட்டாவும் நாட்டுக்கோழி குழம்பும்” கேட்டு தானொரு அசல் தமிழன் என்பதை நிரூபித்தார். ஆனால் பரோட்டா தமிழ் மரபு சார்ந்த உணவா? சரி, விடுங்கள், எழுத்தாளர் நாஞ்சில் நாடன் குறிப்பிட்டதைப் போல பரோட்டா தேசிய உணவாகி பல வருடங்கள் ஆகி விட்டன. சொந்த பிரதேசத்தை விட்டு விலகியிருக்கிறவர்களுக்கு இது போன்ற உணவு சார்நத ஏக்கம் அதிகமாக இருக்கும். 

தலைவி ரைசாவை அழைத்த பிக் பாஸ ‘வீட்டில் எவரும் தூாங்காமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு’ என்றார். ரைசாவின் நிலைமை பாவம், இயந்திர நாய்க்கு மாற்றாக ஆக வேண்டிய பரிதாபம். பிக் பாஸின் கடுப்பு மிக குறிப்பாக கணேஷின் மேல்தான் இருக்கும் என நினைக்கிறேன். நேற்றே எச்சரித்தும் எவ்விதமான சென்ஷெனல் ஃபுட்டேஜூம் தராமல் யோகா பாவனையில் விதம் விதமாக தூங்கிக் கொண்டிருக்கிறாரே என்று. ரைசா எச்சரித்ததும் வேறு மாதிரியான அஷ்டகோணல் நிலையில் மாற்றிக் கொண்டு உறக்கத்தை தொடர முயற்சித்தார் கணேஷ். 

vaiyapuri



ரைசாவும் ஆரவ்வும் நெருக்கமாகிக் கொண்டு வருகிறார்களோ என்கிற ஐயத்தை அவர்களின் உரையாடல்களும் செல்லமான சீண்டல்களும் காண்பிக்கின்றன. ஐயா.. ஆரவ்.. அவர்களே.. ரைசாவிடம் எந்த மருத்துவ முயற்சியும் செய்ய வேண்டாம் என்று ரைசா பேரவை உங்களை அன்புடன் எச்சரிக்கை செய்கிறது. 

‘போட்டிருக்கிறது பிந்துவோட டிரஸ்ஸா’ என்று ஆரவ் கலாய்க்க முயல ‘அப்ப டிரஸ்தான் நல்லாயிருக்கா?” என்று செல்லமாக கோபித்துக் கொண்டார். ரைசா. பெண்களை முதலில் பாராட்டிவிட்டு பின்பு மெல்லிய விமர்சனங்களை வைப்பதுதான் சரியாக இருக்கும் என்று அவர் தந்த டிப்ஸ் உபயோகமானது. நான் குறித்து வைத்துக் கொண்டேன். 

‘பிக்பாஸ் தன்னைப் பாராட்டி இனிமையாக பேசிக் கொண்டிருந்தார்’ என்று ரைசா ஜாலியாக  ரீல் ஓட்டிக் கொண்டிருக்க.. அதைப் பொறுக்க முடியாத சக்தி தனது வழக்கமான குணத்தோடு ‘மேக்கப் இல்லாம வந்துராத –ன்னு சொல்லியிருப்பார்.. ‘போ.. எல்லோரையும் எழுப்பு’. என்று கட்டளையிட்டிருப்பார்’

ரைசா பேரவையின் அடுத்த டார்க்கெட்டாக சக்தியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் தோழர்களே.

**

பிந்துவின் விநோதமான உடையை எல்லோரும் கிண்டலடித்து தீர்த்தார்கள். ‘துவைக்கும் task-ல் நிராகரிக்கப்பட்ட உடையை எடுத்து போட்டு வந்து விட்டாயா’ என்றார் ஆரவ். இரண்டு ஆள் நுழையும் அளவிற்கான பேண்ட். ‘நமீதா மற்றும் பொன்னம்பலம் ஆடை’ என்று தன் பங்கிற்கு பற்ற வைத்தார் வையாபுரி. 

பிந்து மாதவி



சிநேகனின் உடல்மொழியை கிண்டலடித்தார் சக்தி. மற்றவர்களின் நடவடிக்கைகளை கவனித்து அபாரமாக பகடி செய்யும் திறமை சக்திக்கு இருக்கிறது. மட்டுமல்லாமல் தமிழ் சினிமா காட்சிகளையும் கரைத்து குடித்து வைத்திருக்கிறார். 

மேலே விவரித்த காஃபி பவுடர் – ஐஸ்கிரீம் பஞ்சாயத்து மறுபடியும் ஓடியது. எது அவசியம், அநாவசியம் என்கிற தேர்வு என்பது இப்போது அவர்களுக்குப் புரிந்திருக்கும். ‘தன் முடிவுகளை அங்கேயே தெளிவாக சொல்ல வேண்டும். முதலில் தயங்கி பிறகு குழப்பக்கூடாது’ என்று தலைவி ரைசா தன் தரப்பு தர்க்கத்தை தெளிவாக முன்வைத்தார்.

ஸ்மோக்கிங் ரூமில் ஆரவ்வும் ரைசாவும் எதையோ தீவிரமாக விவாதித்தனர். ரைசா ‘இந்த உலகத்திற்கு ஏதோ சொல்ல வருகிறார்’  போலிருக்கிறது. ஆனால் என்னவென்று தெளிவாக இல்லை. அவர் சொன்னதை ஒரு மாதிரியாக சிரமப்பட்டு புரிந்து கொள்ள முயற்சித்தால் ‘பெரும்பான்மையில் ஒளிந்து கொள்ளும் பாதுகாப்பு உணர்ச்சிக்காக நம் தனித்தன்மையை இழந்து விடக்கூடாது. இந்த எட்டு பேர் மட்டும் உலகம் இல்லை. கோடிக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் நாமாக இருப்போம்” 

ரைசா



‘ட்ரூ.. ட்ரூ..’ என்று இதை ரைசாவின் பாணியிலேயே ஆமோதித்தார் ஆரவ். ரைசாவை கவர்ந்து விடும் ஐடியாவில் தீவிரமாக இருக்கிறார் போலிருக்கிறது. 

தெலுங்கு பிக் –பாஸ் நிகழ்ச்சியில் புகை பிடிக்கும் காட்சிகளையெல்லாம் தைரியமாக காட்டுகிறார்களாம். தமிழில் அப்படியொரு காட்சி இதுவரை வந்ததேயில்லை. நல்ல விஷயம்தான். கமல், கலாசாரம் குறித்து எச்சரித்ததும் நினைவிற்கு வருகிறது. ஆனால் அண்டை மாநிலங்களான தமிழிற்கும் தெலுங்கிற்கும் வேறு வேறு கலாசாரமா என்ன? 
நள்ளிரவு 12 மணிக்கு சிகரெட் குடித்தால் உடல் நலத்திற்கு போஷாக்கானது என்கிற பொய் ஐடியாவை சொல்லி கணேஷை நம்ப வைக்கிறார்களாம். ‘ஐயா.. பிக் பாஸ் ஸ்கிரிப்ட் ரைட்டரே… இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக யோசியுங்களேன்.. கொடுமையான நகைச்சுவை.’ கணேஷ் அந்த அளவிற்கு முட்டாளா என்ன? ஒருத்தன் சும்மா இருந்தா மேலே குதிரை ஏறி விடுவீர்களே.. பிற்பகுதிகளில் கணேஷின் ஆக்ஷன் காட்சிகள் ஏதாவது வரும் போலிருக்கிறது. 

**

‘நான் ஏன் இந்த வீட்டை விட்டு வெளியேறக்கூடாது’ என்கிற தலைப்பில் இரண்டு நிமிடங்கள் பேச வேண்டும்’ இப்படியொரு task.

 ‘போக வேண்டும் என்கிற பிடிவாதத்துடன் முதலில் ஒரு டிராமா. பிறகு பரிந்துரையோ அல்லது வெளியேற்றமோ நிகழ்ந்தால் அதற்கு நேர் எதிராக ஒரு டிராமா’ - இதுதான் பிக் பாஸ் போட்டியாளர்கள் வழக்கமாக செய்வது. கூடுதலாக இந்த டிராமா வேறு.

முதலில் காயத்ரி ஆரம்பித்தார் அவருடைய பேச்சில் நிறைய தற்காப்புணர்ச்சியும் பொடி வைத்து பேசுதலும் இருந்தது. 

‘பிக் பாஸின் 50வது நாள் நிகழ்ச்சியில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கெட்ட வார்த்தையை இறைப்பவள் என்கிற பிம்பம் என்மீது விழுந்து விட்டது. அதற்கு மற்றவர்கள் தூண்டி விட்டதுதான் காரணம்.. இந்த வீட்டில் எல்லா வேலைகளையும் task-களையும் பின்வாங்காமல் செய்திருக்கிறேன். (அதாவது, ஓவியா அப்படிச் செய்யவில்லை). கெட்டவார்த்தைகள் தவறி விழுந்தாலும் மனமார சொன்னதில்லை. (நல்ல லாஜிக் யுவர் ஆனர்) ஓவியாவையும் இது போல்தான் திட்டியிருக்கிறேன். அவளுடைய நல்லதிற்காக. ஓவியா புண்பட்டிருந்தால் இதன் மூலம் அவளிடம் மன்னிப்பு கேட்கிறேன். (யப்பா.. ஓவியப் பரிவாரங்களே.. பழிவாங்கி விடாதீர்கள். அதற்குத்தான் இது) என்னோட அன்பான version-ஐ நீங்கள் பார்க்கணும். (அதான் மாலை பார்த்தோமே). நிஜமான அன்போட நான் பழகறதை நீங்க பார்க்கணும். (சக்தி கிட்ட மட்டும்தான் அன்பா இருப்பேன்)’

‘வையாபுரி சொன்ன காரணம் வித்தியாசமாக இருந்தது. ‘இந்த வீட்டை விட்டு போக வேண்டும் என்று முதலில் பிடிவாதமாக இருந்தேன். ஆனால் குடும்பத்தாரின் அபிப்ராயம் என்னை மாற்றி விட்டது. (அப்ப.. தனியா ஓரு டீலிங் நடக்குதா, பிக் பாஸ்). வாய்ப்பு குறைவு காரணமாக இப்போது திரையரங்கில் என்னைப் பார்க்க முடியாத மனைவியும் பிள்ளைகளும் தினமும் தொலைக்காட்சியில் என்னை பார்க்க முடிவதற்காக மகிழ்கிறார்கள். வீட்டில் இருப்பதை விடவும் இங்கு இருந்தால் நான் மகிழ்ச்சியாக இருப்பதாக நினைக்கிறார்கள். (என்னா வில்லத்தனம் பசங்களா), குடும்பத்திற்காக இங்கு இருப்பேன் என்றவர், ‘வீட்டில் கோபத்தில் கெட்ட வார்த்தைகளை இறைப்பேன், ஆனால் இங்கு வந்தவுடன் ஒரு வார்த்தை கூட அப்படி பேசியதில்லை’ என்றார். (காயத்திரி மேடத்தின் கவனத்திற்கு).

‘கடந்த வாரங்களில் நிகழ்ந்த மனப்போராட்டங்களைக் கடந்து இப்போது தளர்வாக உணர்கிறேன். இந்த விளையாட்டில் நானாக இருக்க விரும்புகிறேன். 50வது நாளை பார்க்க விரும்புகிறேன். தொடர்ந்து விளையாடுவேன்.’ என்றார் ஆரவ். (ரைசாதான் மனமாற்றத்திற்கு காரணமோ, தலைவா!)

கணேஷ் சொன்ன காரணம் முக்கியமானது. ‘இதுவரை கூட்டுக்குடும்பம் என்கிற அமைப்பில் இருக்க எனக்கு சந்தர்ப்பம் அமையவில்லை. இங்குதான் இதைப் பார்க்கிறேன். என்னுடைய குறைகளை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக பார்க்கிறேன்.’ அபாரம் கணேஷ். 

‘என் தந்தையின் நிழலில் இருந்து விலகி நிற்பதற்கான புகழை இந்த நிகழ்ச்சி தரும் என நம்புகிறேன்’ என்று சொன்ன சக்தியின் அந்த பாயிண்ட் முக்கியமானது. . ‘என் அம்மாவை, மனைவியை திட்டியிருக்கிறேன். அவற்றை உணர்கிறேன். இந்த வீட்டில் நானாகவே இருக்கிறேன்’ என்றார். ‘மக்கள் வெளியேற்றினால் போவேன். நானாக சீன் செய்து போக மாட்டேன்’ என்று மனதில் ஒவியாவை வைத்துக் கொண்டு சொன்னாரோ, என்னமோ. காயத்ரியின் நண்பராயிற்றே.. அந்த வாசனை இல்லாமல் இருக்குமா?

‘எந்த எதிரியுடனும் போட்டியிட்டு நான் தோற்றதில்லை. முதன்முறையாக நண்பர்களுடன் போட்டி போட்டு வெற்றி பெறும் வாய்ப்பை பிக் பாஸ் தந்திருக்கிறது என்றார் சிநேகன். (கவித்துவமாக பேசறாராராம்). இதுவரை தேடிய அன்பு இங்கு கிடைக்கிறது என்றார். (அடுத்த டார்கெட் முயற்சி ரைசாவா, கவிஞரே).

கணேஷ்



பிந்து சொன்னது மிக சம்பிரதாயமானது. 

**
‘நாமினேஷன் பட்டியிலில் ஒருவரைக் காப்பாற்ற வேண்டும் என்றால் எவரை தேர்வு செய்வீர்கள்?’ என்றொரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. பின்னே என்ன, சண்டையே நடக்காமல் இருந்தால் பிக்பாஸிற்கும் மட்டுமல்ல நமக்குமே எத்தனை எரிச்சலாக இருக்கும்? எனவே பிக் பாஸ் தன் திருவிளையாடலை துவக்கினார். 

வையாபுரிக்கும் சிநேகனும் சமமான எண்ணிக்கையைப் பெற்று மேட்ச் டிரா ஆகும் விபரீதமான சூழல் ஏற்பட்டது. இருவரின் சார்பாக அவரவர்களின் காரணங்களைச் சொன்னார்கள். ‘வையாபுரி இருந்தால் ஜாலியாக இருக்கும், வயதில் பெரியவர்’ என்று ஒருபுறமும் ‘சிநேகனுக்கு சமைக்கத் தெரியும், எந்த பிரச்னையாக இருந்தாலும் முதலில் வந்து உதவுபவர்’ என்றும் விதம் விதமான காரணங்கள். 

‘இப்படில்லாம் மங்குனிகளாக இருந்தால் எப்படிய்யா சண்டை வரும்?’ என்று எரிச்சல் பட்ட பிக் பாஸ், ‘செல்லாது.. செல்லாது..யாராவது ஒருத்தர் பேரைத்தான் சொல்லோணும்’ என்று வெற்றிலை எச்சில் தெறிக்க தீர்ப்பைச் சொல்லி விட்டார். எனவே சபை கூடியது. அங்கு விழுந்தது பிரச்னைக்கான விதை. அதை மரமாக வளர்த்து எரித்து தீயை ஜொலிக்க விட்டவர் காயத்ரி அவர்கள்.

**

பாட்சா படத்தின் வசனத்தை அற்புதமாக நகலெடுத்தார் சக்தி. ‘நாங்கள்ளாலாம் மொதல்ல ரவுடிடா.. அப்புறம்தாண்டா இதெல்லாம்’. நடிகர் சேது விநாயகம் அபாரமாக சொன்ன, புகழ்பெற்ற வசனம் அது. இதை பிக் பாஸிடம் சிநேகன் பேசினால் எப்படியிருக்கும் என்று அவர் கிண்டலடித்தது ஜாலி.

சக்தி



அந்தக் கிண்டலை இன்னமும் அற்புதமாக மேம்படுத்தினார் சிநேகன். ‘ஐயா.. என் பேரு சிநேகன்..’ என்றவர் பிறகு மைக்கை கழற்றி வைத்து விட்டு ‘எனக்கொரு இன்னொரு பேர் இருக்கு’ என்றது அபாரம்.  பிக் பாஸே ஒரு நிமிடம் வியந்திருப்பார். ‘இந்தப் பய கிட்டயும் ஒரு திறமை ஒளிஞ்சுதான் இருக்கு’

வில்லங்க சபை கூடி விவாதித்தது. உள்ளே சிநேகனுக்கு வாக்களித்தவர்கள் எல்லாம் இந்த உரையாடலுக்குப் பிறகு வையாபுரியின் பக்கம் மனம் மாறினார்கள். ‘பலமான போட்டியாளரான சிநேகனை வெளியேற்றினால் தங்களின் வாய்ப்பு பிரகாசமாகலாம். வையாபுரி எளிதாக அடிக்கக்கூடிய டார்கெட்’ என்கிற ஞானோதயம் அவர்களுக்கு அப்புறம்தான் வந்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் முதலிலேயே ஒற்றுமையாக சிந்தித்தவர்கள் சக்தியும் காயத்ரியும். அபாரமான வில்லங்க அலைவரிசை இருவருக்குள்ளும் இருக்கிறது. 

ஆனால் சிநேகனின் சார்பில் மிக வலுவாக நின்றவர் ரைசா. (அந்தாளுக்கு எங்கேயோ நிறைய மச்சம் இருக்கு). ‘ஏதாவது பிரச்னைன்னா முதலில் ஓடி வருபவர் சிநேகன்தான்’. இதை அவர் காயத்ரி பக்கம் திரும்பி சொல்லிய அந்த நேரம் கொழுத்த ராகுகாலமாக இருக்க வேண்டும். அப்போது துவங்கியது ஏழரை.

‘இத்தனை பேரு இருக்கும் போது அது ஏண்டா என்னைப் பார்த்து அப்படியொரு கேள்வியைக் கேட்ட?’ என்கிற கரகாட்டக்காரன் கவுண்டமணி மாதிரி பொங்கி விட்டார் காயத்ரி. 

“என் பிரச்னைகளை எதிர்கொள்ள எனக்குத் தெரியும்’ என்பது காயத்ரியின் திமிரான பதில். “அம்மா.. தாயே.. உனக்கு வர்ற பிரச்னை இல்ல.. உன்னால எங்களுக்கு வருகிற பிரச்னையைத்தான் சொன்னேன்’ என்று ரைசா தெளிவாக சொல்லியிருக்கலாம். ஏழரை கூடி பதிநான்காக உயர்ந்திருக்கும். 

‘அன்றே சொன்னார் அண்ணா’ மாதிரி. நான் நேற்றைய கட்டுரையிலேயே சொல்லியிருந்தேன். காயத்ரிக்கும், ரைசாவிற்கும் நிச்சயம் சண்டை வரும், காத்திருப்போம் என்று. காயத்ரியின் பதிலைக் கேட்டு ரைசா சிரித்து விட்டது வேறு, எரியும் நெருப்பில் விமானத்திற்கு போடும் பெட்ரோலை ஊற்றியது போல கப்பென்று பிடித்துக் கொண்டது. 

காயத்ரி


**

வெளியேற்றப்படாதவராக வையாபுரி ‘ஏகமனதாக’ தேர்ந்தெடுக்கப்பட்டார். வையாபுரிக்கு மனதிற்குள் நிம்மதியாக உணர்ந்திருப்பார். நிகழ்ச்சியில் தொடர வேண்டும் என்கிற ‘வீட்டம்மாவின்’ கட்டளையையும் மீறி  வீட்டிற்கு சென்றிருந்தால் என்னென்ன விபரீதங்கள் நிகழ்ந்திருக்குமோ?. நிச்சயம் நாட்டுக்கோழி குழம்பு கிடைத்திருக்காது. 

தாங்கள் கூடி எடுத்த முடிவு பற்றி ரைசா நேரடியாக அறிவிக்கத் துவங்கினார். ஆனால் இதைப் பொறுக்க முடியாத சக்தி, அதற்கான காரணங்களை விளக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். 

இந்த விவாதம் நடந்த போது ஒளிபரப்பான காட்சிகளை நாமும் பார்த்தோம், பிக்பாஸூம் பார்த்தார். எனில் தமிழ் சினிமாவில் ஒரு பாத்திரத்தைப் பற்றி இன்னொருவர் விளக்குவது போன்று  முடிவு சொல்லும் போதும் விளக்கங்கள் தேவையில்லை. எனவே ரைசாவின் முடிவு சரியானது. 

என்றாலும் அதிகாரபூர்வமான காரணங்களுடன் இதை தொகுத்து வழங்க சக்தியை அழைத்தார் பிக் பாஸ். 

**

‘ஏண்டா என்னைப் பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்ட’ விவகாரத்திற்காக காயத்ரி பொங்கிக் கொண்டேயிருந்தார். மனக்கொதிப்பை அவரால் அடக்க முடியவில்லை. ஆரவ்விடம் இது பற்றி பேசும் போது ஒரு பீப் ஒலி கேட்டது. (எடிட் பண்ணிட்டாங்க, ஆண்டவரே). காலையில் காமிரா தந்த வாக்குறுதியெல்லாம் காற்றில் போனது. 

ஆரவ் சமாதானப்படுத்தியும் தன் கோபம் அடங்காத காயத்ரி, ஸ்மோக்கிங் ரூமில் நிம்மதியாக இருந்த ரைசாவிற்கு ஏழரை தருவதற்காக சென்றார். 

ஓவியாவிற்காகவாது காதல் பிரச்னைக்குப் பிறகுதான் மனச்சிக்கல் உருவானது. ஆனால் காயத்ரிக்கு இருப்பது நிரந்தரமான பிரச்னை என்று தோன்றுகிறது. உயர்வுமனப்பான்மை, அகங்காரம், பிடிவாதம் உள்ளிட்ட பல எதிர்மறையான குணங்கள்.

புகைக்கும் அறையில் பலமான விவாதம். ‘இதை ஏன் பெரிசு பண்றீங்க காயத்ரி’ என ரைசா சொல்ல.. என்னை அப்படிக் கூப்பிடாதே என்று முன்பு ஜூலியுடன் வைத்த அதே வகையான கோபத்தைக் கொண்டார். காயத்ரி. 

ரைசா



காயத்ரியைக் காணோமே என்று தேடி வந்த சக்தி, இந்த சூடான உரையாடலை சிறிது கேட்டவுடன் பீதியுடன் அங்கிருந்து நகர்ந்து விட்டார். 

அங்கு காயத்ரியைக் கட்டுப்படுத்தும் ஓரே ஆயுதம் சக்தி மட்டுமே. ரைசா அவரிடம் தன் ஆதங்கத்தை சொல்லிய போது ‘அவ குழந்தை மாதிரி’ என்றார். அவரை அப்படியே நீச்சல் குளத்தில் போட்டு அமுக்க வேண்டும் போல் இருந்தது. அதற்குப் பெயர் குழந்தை்தனம் அல்ல, சிறுபிள்ளைத்தனம், சக்தி அவர்களே. 

பிந்துமாதவியிடமும் தன் கோபத்திற்கான காரணத்தை விளக்கினார் காயத்ரி. ‘சொல்லிட்டப்பறம் ஒரு சிரிப்பு சிரிச்சா பாரு”

இந்தப் பிரச்னை பற்றி மீண்டும் சக்தியிடம் காயத்ரி பேசிக் கொண்டிருந்த உள்ளுக்குள் இருந்த அவரது ‘பல ரூபங்கள்’ வெளிப்பட்டன. ‘இவ யாரு எனக்கு சொல்றது.. என் பிரச்னையைப் பார்த்துக்க எனக்குத் தெரியாதா, சிநேகன் கிட்ட போய் எப்பவாவது பிரச்னைன்னு நான் நின்னிருக்கேனோ.. அவராதான் தானா முன்வந்து உதவி செஞ்சிருக்கார் (கவிஞரே.. உமக்கு இது தேவைதானா). இது என் சுயமரியாதை சம்பந்தப்பட்ட விஷயம்’ என்று பொங்கினார்.

சிநேகன் தாமாக முன் வந்து உதவியது நல்ல விஷயம்தானே?’ என்று சக்தி நியாயமான விஷயத்தை முன்வைத்தாலும் அகங்காரமும் தன்முனைப்பும் நிரம்பி வழிகிற காயத்ரியால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ’34 வருஷமா என் தனிப்பட்ட பிரச்னைகளைக் கூட நானேதான் பார்த்திட்டு இருக்கேன். என் ஃபேமிலி கூட எனக்கு ஹெல்ப் பண்ணதில்ல’ என்றெல்லாம் பெரிய குண்டுகளாக அவர் வீசிக் கொண்டிருந்ததை அவரின் குடும்பத்தார் பார்க்காமலிருந்தால் நல்லது. 

பிறந்த கணத்தில் இருந்தே தன் பிரச்னைகளை தானே தீர்த்துக் கொண்ட காயத்ரி நிச்சயம் ஒரு ‘child prodigy’யாகத்தான் இருக்க வேண்டும். 

‘கமல் வைக்கப்போகும் பஞ்சாயத்தை முன்கூட்டியே உணர்ந்த காயத்ரி அது பற்றியும் சக்தியிடம் கூறினார். (பயப்படறியா குமாரு). ‘என் தன்மானம் தூண்டப்படும் போது சும்மாவா இருக்க முடியும்? ‘நான் அப்படித்தான்’ என்கிற அவரின் மனக்கொதிப்பு வெளிப்படையாகவே தெரிந்தது. ‘எது சரி, எது தப்பு என்று சொல்கிற தகுதி எவருக்கு இங்கு வீட்டில் இருக்கிறது. கணேஷையும் என்னையும் தவிர இந்த வீட்டில் உன்னைப் புரிந்தவர்கள் எவருமில்லை’ என்றலெ்லாம் சக்தி சமாதானம் சொன்னபிறகுதான் புயலின் வேகம் சற்றாவது தணிந்தது. 

சமூகத்தின் முன்பான தன்னுடைய பிம்பம் சேதம் அடையக்கூடாது என்கிற பிரக்ஞை முதலில் இருந்தே காயத்ரிக்கு இருக்கிறது. ஆனால் அதற்கான எதிர்திசையிலேயே அவருடைய பயணம் இருப்பது துரதிர்ஷ்டமானது. ‘இனிமே எடிட் பண்ண மாட்டோம். அப்படியே போட்டுடுவோம்’ என்கிற கமலின் எச்சரிக்கையை நினைவில் கொண்டிருக்கலாம். ஆத்திரம் கண்ணை மறைக்க, தன்னையும் அறியாமல் அவர் வெளிப்படுத்துகிற அந்தரங்க விவரங்கள், அவரோடு இணைந்து அவருடைய குடும்பத்தை சங்கடப்படுத்துகிற சூழலை தவிர்த்திருக்கலாம். ‘Attitude’ பிரச்னை ரைசாவிடம் இருப்பதாக கண்டுபிடிக்கும் காயத்ரி சற்று தன்னையே திரும்பிப் பார்க்க வேண்டும்.  

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/98762-gayathri-turns-back-to-her-mode-sakthi-and-raisa-joins-the-party-happenings-of-bigg-boss-day-46.html

Link to comment
Share on other sites

காயத்ரி எவிக்‌ஷனில் இருந்து தப்பியது... தற்செயலா... பிக் பாஸின் தற்காப்பா?! பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (47-ம் நாள்) #BiggBossTamilUpdate

 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

biggboss9812_10255.jpg

திருவிளையாடல் திரைப்படத்தின் வசன பாணியில் ‘பிரிக்கவே முடியாதது’ என்றால் அது பிக் பாஸ் ‘சக்தி – காயத்ரி என்று எளிதாக பதில் சொல்லி விடலாம் போல. அந்த இருவரும் நிகழ்த்தும் சதியாலோசனையோடு மங்கலகரமாக நிகழ்ச்சி துவங்கியது. 

பிக் பாஸ் எடிட்டிங் குழுவிற்கு ஒரு வேண்டுகோள். இப்படி விடியற்காலை காட்சிகளைக் காட்டும் போது போட்டியாளர்களின் முகங்களுக்கு க்ளோசப் கோணங்களை தயவு செய்து வைக்காதீர்கள். 

வழக்கம் போல் காயத்ரியின் வசனத்தின் இடையில் பீப் சத்தம். காயத்ரியின் உரையாடல்களை மட்டும் ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டூடியோ தரத்தில்  நிதானமாக சில முறை கவனமாக கேட்டு தணிக்கை செய்துவிட்டுதான் இணைக்க வேண்டும் போல. பாவம், பிக் பாஸ் நுட்பக்குழுவிற்கு கூடுதல் சுமையைத் தருகிறார் காயத்ரி. 

biggboss14_10533.jpg

பிக் – பாஸ் போட்டியாளர்களின் பொதுவான தன்மை இவர்களின் உரையாடல்களிலும் வெளிப்படுகிறது. ஒரு நேரத்தில் ‘இங்கிருந்து வெளியேற வேண்டும்’ என்று ஆவேசப்படுகிறார்கள். இன்னொரு நேரத்தில் தங்களின் Nomination, Eviction குறித்து அதிகமாக கவலைப்படுகிறார்கள். கூடி கூடி பதட்டத்துடன் விவாதிக்கிறார்கள். என்னதான்யா உங்க பிரச்னை?

சக்தி மற்றும் சிநேகன் உறவில் ஏற்பட்ட விரிசல், ரைசாவின் மீது காயத்ரிக்கு உருவாகியிருக்கும் பகைமை, வன்மம் ஆகியவை இந்த உரையாடலில் வெளிப்பட்டன. 

சக்தி பிரபலமானவர் என்று சிநேகன் நம்புவதும், சக்தியும் அதை ரகசிய தற்பெருமையுடன் தானே வழிமொழிந்து கொள்வதும்…. கொடூரமான நகைச்சுவை. 

**

ரைசா காமிராவுடன் ஓர் உரையாடல் நிகழ்த்தினார். ஆனால் இதையெல்லாம் ஓவியா செய்தால்தான் பார்க்க அதிக அழகாக இருக்கிறது. ‘அப்படிப் பார்க்காதே.. ஸ்பிரே அடிச்சுடுவேன்’ என்கிற காவிய வசனத்தை மறக்க மனம் கூடுதில்லையே..

‘இந்த வீட்ல எனக்கு பேசறதுக்கு யாருமில்ல. இனி உங்கூடதான் பேசப்போறேன், சரியா.. உனக்கு தமிழ் தெரியுமா? ஓயாம வேலை செய்யறியே, உனக்கு போரடிக்காதா?’ என்றெல்லாம்  ரைசா காமிராவை கொஞ்சிக் கொண்டிருந்தார். பதிலுக்கு காமிராவும் பேசியது.  ஒருகணம் காமிராவின் மீது பொறாமையாக வந்தது. காயத்ரியின் எதிரிகள் வரிசைப் பட்டியலில் புதிதாக இணைந்திருப்பதால் ரைசா அது சார்ந்த மனஅழுத்தத்தில் இருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அஃறிணைப் பொருட்களுடன் உரையாடுவது அதிலொரு அடையாளம். 

bigg boss

இதை சரியாக மோப்பம் பிடித்துக் கொண்டு சிநேகன் வரும் போதெல்லாம் அவருக்கு சந்தர்ப்பம் தராமல், தன்னை மறைத்துக் கொண்டு அழுது தீர்க்கிறார். ரைசா, அடுத்த ஓவியாவாக ஆகிவிடக்கூடாது. 

**

சிநேகனின் மெளனம் நிச்சயம் சக்தியை குற்றவுணர்வு கொள்ள வைக்கிறது. ‘நாமாக சென்று மறுபடியும் கேட்கலாமா?’ என்கிறார். ‘அவராக வந்து கேட்கட்டும்’ என்கிறார் காயத்ரி. சகுனிகள் எல்லாக் காலத்திலும் நம் கூடவே இருக்கிறார்கள். 

காயத்ரிக்கும் ரைசாவிற்குமான இந்த பகைமையை ‘நமது நிருபர்’ பிந்து மாதவி தலையிட்டு போக்க முயன்றது சிறப்பு. ‘எல்லாமே சரியாயிடும்’ என்று இவர் சொல்வதைக் கேட்டு பிக் பாஸிற்கு உள்ளூர நிச்சயம் கோபம் வந்திருக்க வேண்டும். ‘ஏம்மா புதுப்பொண்ணு.. எல்லாம் சரியாவதற்கா.. இவ்ளோ பாடு படறோம்?”

காயத்ரியையும் ரைசாவையும் ஒருவருக்கொருவர் நகைச்சுவையாக அறிமுகப்படுத்தி வைத்தார் நிருபர். ஆனால் வேதாளம் அத்தனை சீக்கிரம் முருங்கை மரத்தில் இருந்து இறங்கி விடுமா என்ன? 

biggboss15_10020.jpg

‘என்னை உங்களுக்குப் பிடிக்காது, இல்லையா? என்று ரைசா நேரடியாக கேட்ட போது ‘யாரு சொன்னா?” என்று மழுப்பினார் காயத்ரி. ‘இது ஒரு விளையாட்டு. குடும்ப உணர்வு இங்கில்லை’ என்கிற ஞானோதயமெல்லாம் அம்மணிக்கு இப்போதுதான் வந்திருக்கிறது. 

மறுபடியும் அதேதான். ‘என் பிரச்னைகளை நானேதான் பார்த்துக் கொள்வேன்’ சுயமரியாதைக்கும் தன்னகங்காரத்திற்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ‘நான்’ ‘எனது’ போன்ற சொற்களை அதிகம் பயன்படுத்துவர்களிடம் உள்ளது நிச்சயம் அகங்காரம்தான். 

‘ஸ்ரீ, ஜூலி, ஓவியாவிற்கெல்லாம் பிரச்னை வரும் போது நான் கூட நின்றிருக்கிறேன்’ என்றார் காயத்ரி. ஒருபக்கம் உண்மைதான். ஆனால் பிரச்னைகள் உருவாக எவர் அடிப்படையான காரணம் என்பதையும் ஆராயலாமே?

‘ஓவியா சண்டை போட வரும் போதெல்லாம் நான் avoid செய்திருக்கேன்’ என்பது போன்ற தடாலடியான பொய்களையெல்லாம், மேலேயிருந்து ‘ஆண்டவர்’ கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார் மேடம். இதற்கெல்லாம் விடை ‘தீர்ப்பு நாள்’ பஞ்சாயத்தில் இருக்கிறது

‘இங்குள்ளவர்கள் அனைவருக்குமே மனஅழுத்தமுள்ளது. அதுவே முக்கிய காரணம்’ என்று ரைசா சொன்னது சரி. ‘நான் எப்ப சண்டை போடப் போறேனோ’ என்று சந்தடி சாக்கில் பிந்து மாதவி திருவாய் மலர்ந்ததைக் கண்டு பிக் பாஸ் கேக் வெட்டி அந்த மகிழ்ச்சியை கொண்டாடியிருப்பார். 

**

காயத்ரியின் ஆட்சேபத்தையும் மீறி சக்தி சிநேகனிடம் சென்று உரையாடியது சிறப்பானது. ‘காப்பாற்றப்பட வேண்டியவராக’ சிநேகனை விட்டு விட்டு வையாபுரியை தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை சக்தி மறுபடியும் விளக்கினார். போதும் விட்டுடுங்கய்யா… நீங்களும் உங்க.. strategy-ம்

வையாபுரி பாணியில் காமிராவின் முன்நின்று ‘எனக்காக வாக்களிக்காதீர்’ என்று வேண்டிக் கொண்டார் சிநேகன். ‘பத்து வருடத்திற்கு முன்பிருந்த சிநேகன் வந்து விடுவானோ என்று பயமாக இருக்கிறது’ என்று அவர் சொன்ன போது ‘அட பாட்ஷா பட பிளாஷ்பேக்’ எல்லாம் பிக் பாஸில் வரப்போகிறதா என்கிற ஆவல் ஏற்பட்டது. ‘எதிரிகளை விடவும் நண்பர்களுடன் போட்டி போடுவது’ அவருக்கு சங்கட்டடமாக இருக்கிறதாம். 

biggboss21_10009.jpg

வையாபுரியின் போக்கு சரியில்லை. முன்பு டாக்டராக இருந்த போது ஓவியாவிடம் ‘நானொரு உம்மா தரட்டுமா?’ என்று விளையாட்டாக கேட்பது போல கேட்டு வைத்தார். இப்போது பிந்து மாதவியை நோக்கி ‘மாதவி பெண் மயிலாய் தோகை விரித்தாள்’ என்று பாடுகிறார். அதுவும் தப்புத்தப்பாக வேறு பாடுகிறார். அது ‘பொன் மயிலாள்’ அவருடைய ‘வீட்டம்மணி’ இதை கவனிக்க வேண்டும். 

இதை விடவும் நகைச்சுவை, ‘மயில்’ என்கிற வார்த்தையை பிந்து மாதவி தவறாக உச்சரித்தது. அது காயத்ரியின் காப்பிரைட் வார்த்தை என்பதை மறந்து விட்டார். காயத்ரியுடன் பழகிய சிறிது நாட்களிலேயே இந்த வார்த்தை பிந்துவிடம் ஒட்டிக் கொண்டது போல. 

**

பிக் பாஸிடம் வேண்டிக் கொண்டது போல வையாபுரிக்கு பரோட்டாவும் பாயாவும் வந்து சேர்ந்தது. மற்றவர்கள் வயிற்றெரிச்சலுடன் ‘ஹிஹி..நீங்க சாப்பிடுங்கண்ணே’ என்று வழிந்தனர். நாட்டுக்கோழி சாப்பிட்ட பிறகு வையாபுரியின் சேட்டைகள் கூடாமலிருக்க வேண்டுமே!

வையாபுரிக்கென வந்த உணவை மற்றவர்கள் பங்கிட்டுக் கொண்டது குறித்து ரைசாவிற்கு வருத்தம். ஆம், அது சரிதான். ஒருவரின் வேண்டுகோளின் பேரில் பிரத்யேகமாக வந்த உணவை அவர் முதன்மையாக உண்ண அனுமதிப்பதுதான் முறை. பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ‘வேணாம்.. வேணாம்’ என்று மறுப்பது போன்ற பாவனையுடன் வாங்கிக் கொள்வது முறையல்லதான். ஆனால் வையாபுரியால் தனியாகவும் தின்ன முடியாது. அதற்கேற்ற உடம்பும் இல்லை. எனவே தாமாக முன்வந்து மற்றவர்களுக்கு தந்ததும் இன்னொரு வகை நாகரிகமே. 

biggboss13_10203.jpg

பிக் –பாஸில் அற்பமான பிரச்னைகளுக்கெல்லாம் பஞ்சாயத்து கிளம்புவது ஒரு பக்கம் எரிச்சலாகத்தான் இருக்கிறது. ‘ஸ்கிரிப்ட் ரைட்டர்’ ரூம் போட்டு யோசிக்க வேண்டும். 

ரகசியமாக அழுது கொண்டிருந்த ரைசாவை ஆற்றுப்படுத்த சரியாக வந்து சேர்ந்தார் சிநேகன். ‘நாயக்கரே.. நீங்க நல்லவரா.. கெட்டவரா?”

ரைசாவின் கண்ணீரை துடைக்க காமிராவிற்கு கைகள் துடித்திருக்க வேண்டும். ஹிஹி.. நமக்கும். 

**

‘சிறிய வயதிலிருந்தே உங்களுக்கு கோபம் வருமா?’ என்று ‘நமது நிருபர்’ பிந்துமாதவி தன் பணியை மறுபடியும் துவங்கி விட்டார். 
‘கோபமெல்லாம் இல்லை, யாரிடம், எப்படி, பேச வேண்டும் என்று ஒருவருக்கு தெரிந்திருக்க வேண்டும். என்னுடைய experience என்னவென்று ரைசாவிற்கு தெரியுமா?’ என்றார் காயத்ரி. இவரின் நடனத்திறமை பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆனால் திருப்பள்ளியெழுச்சி பாடலுக்கு இவரை விடவும் அற்புதமாக ஓவியாவும், பிந்து மாதவியும் நடனமாடுவது போலத்தான் தெரிகிறது. அப்புறம் என்ன அனுபவம்?

biggboss17_10211.jpg

‘அது ஏண்டா என்னைப் பார்த்து அப்படியொரு கேள்வியைக் கேட்ட’ பிரச்னை காயத்ரியை துரத்திக் கொண்டேயிருக்கிறது. “ரைசா ஏன் என்னைப் பார்த்து சிரிச்சா?”

**

விஜய் டிவிக்காரர்கள் ஒரு கரண்டி மாவை வைத்துக் கொண்டு அதிலேயே தோசை, ஊத்தப்பம், அடை, பிரியாணி’ என்று எல்லா உணவு வகைகளையும் தயாரிப்பதில் விற்பன்னர்கள். தங்கள் நிலையத்திற்கென ஆஸ்தான வித்வான்களை உருவாக்குவதிலும் திறம் படைத்தவர்கள். 

‘அது இது எது’ நிகழ்ச்சியில் வரும் ‘சிரிச்சா போச்சு’ பகுதியை அப்படியே எடுத்து வந்து ‘பிக் பாஸில்’ நுழைத்தார்கள். 

வீட்டில் நிகழும் எந்தவொரு மாற்றத்தையும் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும்’ என்றொரு task. சிரிப்புத் திருடன் சிங்காரவேலு போன்றதொரு பாத்திரம் நுழைந்தது. இருக்கிற பாத்திரங்களையெல்லாம் எடுத்து கோணியில் போட்டது. நுழைந்த முதல் கணமே கணேஷின் தட்டில் இருந்த உணவைப் பிடுங்கியது முக்கியமான டெக்னிக். ‘சாப்பாட்டு ராமன்’ கணேஷ் மிகவும் சிரமப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டார்.

திருடனைப் பார்த்து பிந்து மாதவி கரோத்தே ஸ்டைல் காட்டிய போது ‘ஜாக்கி சான்’ ஜூலியைப் பார்ப்பது போலவே இருந்தது. 

‘ஐயா.. அந்த டைமண்டு எங்க இருக்குன்னு சொல்லிடுங்கய்யா.. ஷேர் பண்ணிக்கலாம்’ என்று சக்தியிடம் திருடன் சொன்னது நல்ல முயற்சி. உலக நாயகனின் வாரிசான அவர் ‘விருது திரைப்படங்களில்’ வருவது போன்ற முகபாவத்துடன் அமர்ந்திருந்தார்.

பிந்து மாதவியை அருகில் சென்று பார்த்த திருடன் ‘டிவில பார்த்த போது நல்லாத்தானே இருந்தீங்க’ என்றது செம கலாய். ‘கணேஷ் ப்ரோ.. வானத்துல என்ன தேடறீங்க.. பகல்லயே நட்சத்திரம் எண்ணறீங்களா’ என்றதும் சிறப்பு. ‘அவர் அவாய்ட பண்றாராராம்’ என்று சரியான நேரத்தில் கிண்டலடித்தார் சக்தி. 

biggboss16_10099.jpg

இந்தக் கொடுமைகளுக்கு இடையில் காயத்ரி காமிராவைப் பார்த்து ‘நான் ரியாக்ட் பண்ணலையே.. என்ற  வெவ்வெ. காட்டிய போது, நமக்கு எரிச்சலும் சிரிப்பும் கலந்ததொரு விசித்திரமான உணர்வு எழுந்தது. ‘நீங்க.. அப்படியே…ரியாக்ட் பண்ணிட்டாலும்”….

அடுத்த வந்த ஜோக்கர், சிநேகனை குறி வைத்து கலாய்த்தது சிரிப்பு. Task முடிந்ததற்கான மணியடித்ததும்தான் போட்டியாளர்களைப் போலவே நமக்கும் நிம்மதி வந்தது. 

வித்தியாசமான task-களை யோசியுங்க பிக் –பாஸ். 

திருடிய பொருட்களையெல்லாம் சிரிப்புத் திருடன் திருப்பித் தந்து விட்டார். நேர்மையான திருடன். 

‘நீங்க ஆர்ட்டிஸ்டுன்ணே.. நீங்க போக மாட்டீங்க..’ என்று சக்தியிடம் சிநேகன் சொல்லிக் கொண்டிருந்தார். இதற்கு திருடனின் காமெடியே பரவாயில்லை. 

**
இந்தப் போட்டியில் போட்டியாளர்கள் இதுவரை எத்தனை ஈடுபாட்டுடன் கலந்து கொண்டிருந்தார்கள் என்பதை சோதிக்கும் task. இதுவரையான நிகழ்வுகளில் இருந்து ஒவ்வொருவருக்கும் ஐந்து கேள்விகள் கேட்கப்படும். அனைத்திற்கும் சரியாக பதில் அளிப்பவர் வெளியேற்றத்தில் இருந்து காப்பாற்றப்படுவார். 

‘நமீதா வீட்டு செல்லப் பிராணிகளின் பெயர்கள் யாவை?’ என்பது போன்ற கடினமான நூறு மார்க்  கேள்விகள். 

ஆரவ்வின் முறை வந்த போது ‘ஓவியாவிற்கு தரப்பட்ட tongue twister’ என்ன? என்ற கேள்வி கேட்கப்பட்டது. புகழ்பெற்று வைரல் ஆன அந்த காவிய டியூனை மறந்த ஆரவ்வை ஓவியப் பேரவை வன்மையாக கண்டிக்கிறது. வரலாறு முக்கியம் அமைச்சரே. 

தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் யார் என்கிற கேள்விக்கு ஆரவ்விற்கு பதில் தெரியாமலிருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால் சிநேகனும் தடுமாறியது வியப்புதான். ‘தாயுமானவர்’ என்றார். இந்த விஷயத்தில் கவிஞரின் தமிழ் ஆசான் ஜூலிதான் போலிருக்கிறது. 

இதற்கான சரியான விடையை பிக் –பாஸ் தெளிவுப்படுத்தி விடுவது நல்லது. இல்லையென்றால் இந்தப் பிழையான தகவல் இளம் மனங்களில் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் வரலாறாக பதிந்து விடும். இவ்வாறுதான் பல வரலாறுகள் திட்டமிட்டு எழுதப்படுகின்றன. 

ஆரவ் தந்த முத்தத்தின் பெயர் என்ன என்ற கேள்வியெல்லாம் ஓவர். கமல் தற்செயலாக சொல்லியதை கல்வெட்டில் எல்லாம் பதித்துக் கொண்டிருக்க வேண்டாம். (நாளைய பகுதியில்) இது குறித்து ஆரவ் சங்கடப்படுவது நியாயமே. 

பிந்து மாதவி இந்தக் கேள்விக்கு தடுமாறினார். அம்மணி, பழைய எபிஸோட்களையெல்லாம் பார்க்கவில்லை போலிருக்கிறது. ‘ஓவியாவை விளையாட்டாக குளத்தில் தள்ளியது யார்’ என்கிற கேள்விக்கு ‘அவரேதான் விழுந்தார்’ என்றார். ஏதாவது வழக்கிற்கு சாட்சி சொல்ல இவரைத்தான் அழைத்துச் செல்ல வேண்டும்.. விளங்கிடும்.

ஆனால் ‘மருத்துவ முத்தம்’ என்ற பதிலை மிகத் தெளிவாகச் சொன்னது கணேஷ். ஆரவ்வை முன்பு நோண்டி நோண்டி விசாரித்து தெரிந்த கொண்டது இப்போது சரியான நேரத்தில் உபயோகமாகியிருக்கிறது. வெல்டன் கணேஷ். சிறந்த மாணவர் நீங்கள். 

**

ஐந்து கேள்விக்கும் சரியான விடையைச் சொல்லி சரோஜாதேவி உபயோகித்த சோப்பு டப்பாவை பரிசாக வென்றவர் காயத்ரி. இதன் மூலம் வெளியேற்றத்திலிருந்து அவர் காப்பாற்றப்படுகிறார். ‘தான் வெற்றி பெற்றதற்காக நினைத்து முந்திரிக் கொட்டைத்தனமாக முதலில் கையை உயர்த்தி சக்தி பல்பு வாங்கினாரோ.?

biggboss18_10179.jpg

‘எனக்கு சுயமரியாதைதான் முக்கியம் சக்தி. இந்தப் போட்டியில்லை’ என்று பஞ்ச் டயலாக் பேசிய காயத்ரி, வெற்றி பெற்றதற்கான அறிவிப்பு வந்தவுடன் இடைத்தேர்தல் அரசியல்வாதி போல மகிழ்ச்சியுடன் கைகூப்பி நன்றி தெரிவித்தார். 

காயத்ரியை வெளியேற்றுவதற்காக விதம் விதமான கணக்குகளைப் போட்டு தலையைப் பிய்த்துக் கொண்டு வாக்களித்த கணிதவியல் வல்லுநர்களுக்கு இந்த விஷயம் நிச்சயம் பயங்கர அதிர்ச்சியை அளித்திருக்கும். ‘பிக் பாஸின்’ திட்டமிட்ட சதி என்று இப்போதே தீவிரமான எதிர்ப்புக் குரல்கள் சமூகவலைத்தளங்களில் ஒலிக்கத் துவங்கி விட்டன. 

காயத்ரியின் வெற்றி தற்செயலானதா, திட்டமிட்டதா? முன்னதாகத்தான் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. உண்மையைச் சொல்லுபவர்கள் எதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை., பொய் சொல்லுபவர்களுக்குத்தான் அதிக நினைவாற்றல் தேவை என்கிற தர்க்கத்தை இங்கு பொருத்திப் பார்க்கலாம். அந்த நினைவாற்றல் திறமை காயத்ரிக்கு இப்போது உதவியிருக்கிறது என்று நினைக்கிறேன். 

**

காயத்ரியின் வெற்றி சக்தியைத் தவிர இதர போட்டியாளர்களுக்கு நெருடலாக இருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அது சார்ந்த முணுமுணுப்புகள் பலமாகவே ஒலிக்கின்றன. ‘தன்னை பலவீனமான போட்டியாளர்’ என்று சக்தி சொன்னது குறித்து ஆரவ்விற்கு கோபம். எனவே இந்த விளையாட்டை தொடர்வது எரிச்சலாக இருக்கிறது என்கிறார். மன்னார்குடி மாஃபியாவிற்கான நிகரான தலைமை அதிகாரத்தை சக்தி –காயத்ரி குழு அங்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள் போலிருக்கிறது. எதிரணியினர் ரகசியமாகவே புழுங்க வேண்டியிருக்கிறது. 

ரைசா – சிநேகன் vs சக்தி – காயத்ரி உரையாடலை ஏதோ மாஃபியா கேங்கின் சதித்திட்டம் போல பிக் பாஸ் எடிட்டர் மாற்றி மாற்றி காட்டி பில்டப் தர முயன்றது ஒருபக்கம் நகைச்சுவையாக இருக்கிறது. 

biggboss19_10078.jpg

காயத்ரியின் வெற்றி அவர்களின் அணிக்கே மகிழ்ச்சியைத் தரவில்லை என்று வியக்கிறார் சிநேகன். ‘நீ போயிட்டியின்னா நான் ரொம்ப கஷ்டப்படுவேண்டா’ என்கிறார் காயத்ரி. (இவருக்கு எதிராக வாக்களித்த மக்களுக்கு ஆறுதல் செய்தி இது). 

சக்தி – காயத்ரி குழு இந்த வீட்டில் நீடித்தால் நான் வெளியேறுவது குறித்து தீவிரமாக யோசிப்பேன்’ என்கிறார் ரைசா. உண்மைதான். அவர்களால்தான் நிறைய மனப்புழுக்கங்கள் உருவாகின்றன. ‘அவர்கள் இருவரும் குழுவாக இருப்பதுதான் பலம். ஒருவேளை. பிரிந்தால் ‘நாகரிகமாக’ நடந்து கொள்வார்கள் என்கிற ரைசாவின் கணிப்பு சரியாக இருக்கலாம். 
‘ரைசா.. இன்னிக்கு மூட்அவுட்ல இருக்காங்க.. மேக்கப் போடலை. குளிக்கலை’ என்கிற முக்கியமான தகவலை காயத்ரியிடம் பகிர்ந்து கொண்டார் சக்தி. 

**

காயத்ரி காப்பாற்றப்பட்டது குறித்து பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு நிறைய எரிச்சலும் கோபமும் இருக்கலாம். தங்களின் வாக்குகள் வீணாகி விட்டதே என்கிற நியாயமான கவலையும் தோன்றலாம். 

ஆனால் கவனியுங்கள், ஓவியா, ஜூலி போன்ற முக்கியமான போட்டியாளர்கள் வெளியேறி விட்ட நிலையில், பிந்து மாதவி வீட்டிற்கு வெளியே இன்னமும் ‘விருந்தினராக’ நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் காயத்ரியின் வெளியேற்றமும் நிகழ்ந்தால் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்காது. காயத்ரி இருந்தால்தான் கலகம் பிறக்கும். கலகம் பிறந்தால்தான் சண்டை நடக்கும். சண்டையை வேடிக்கை பார்ப்பதுதான் நமது நோக்கம் என்கிற முக்கியமான அடிப்படையை மறந்து விடக்கூடாது. விக்ரமன் படத்து பாடல்கள் மாதிரி பிக் –பாஸ் வீடு மாறினால் பார்க்க சகிக்காது. சமூகவலைத்தளங்கள் போலவே அதுவொரு ரத்தபூமியாக நீடிக்கும் வரைதான் அதன் மதிப்பு இருக்கிறது. 

biggboss20_10577.jpg

 

பாட்சா படம் வெற்றிகரமாக ஓடியது, வெறும் மாணிக்கத்திற்காக மட்டும் இல்லை. அந்த திரைப்படத்திற்கு அதிக மார்க் கிடைத்ததில், ‘மார்க் ஆண்டனிக்கும்’ கணிசமான பங்கு இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. ஒரு நாடகம் அதிக சுவாரசியமாக அமைய திறமையான Antagonist தேவை. இப்போதைக்கு காயத்ரிதான் அந்த ‘ஆண்டனி. இந்த அடிப்படையை மறந்து விடாதீர்கள் மக்களே..

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/98883-is-gayathris-eviction-escape-planned-one-or-not-happenings-of-bigg-boss.html

Link to comment
Share on other sites

உள்ளே கெட்டவார்த்தை... கமல் முன் ஸ்கூல் குழந்தை... அந்நியன் மோடில் காயத்ரி! பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (48-ம் நாள்)

 
 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

biggboss9812_10255.jpg

சனி, ஞாயிறு ‘ஆண்டவர்’ வரும் நாள். எனவே ‘தீர்ப்பு நாள்’. எனவே இந்த வாரமும் கமலின் வருகையை, அவரது குறுக்கு விசாரணையை பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டுமன்றி, பார்வையாளர்களும் மிக ஆவலாகவும் பதட்டமாகவும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். இதுதான் ‘SATURDAY FEVER’ போல.

எவர் வெளியேறப் போகிறார்கள் என்பதை விடவும், ‘காயத்ரி தன்னைக் காத்துக் கொண்டாரா, அல்லது பிக் பாஸால் காப்பாற்றப்பட்டாரா, இது தற்செயலா, முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா? 

இது போன்ற மாற்றம் ஏற்படுமெனில் நாங்கள் மெனக்கிட்டு அளித்த வாக்குகளின் நிலை என்ன? ஏன் அவை வீணடிக்கப்பட்டன? ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வெற்றிக்கு மிக ஆதாரமாக உள்ள பார்வையாளர்களை பிக் பாஸ் அவமானப்படுத்துகிறாரா, உதாசீனப்படுத்துகிறாரா என்பது போன்று பல கேள்விகள், புகார்கள், கோப தாபங்கள் கமலின் முன்னால் காத்துக் கொண்டிருந்தன. அவர்தானே மக்களின் பிரதிநிதி?

kamal



பிக் பாஸூம் கமலும் மக்களின் இந்த உணர்வுகளை புரிந்து கொண்டதால் அதற்கான ஜாக்கிரதையுடன் தற்காப்பு ஆட்டத்தை இன்று மிக கவனமாக ஆடினார்கள். ஆனால் மக்களிடமிருந்து வரும் அழுத்தங்களை சமாளிப்பதற்காக உருவாக்கப்பட்ட நாடகமா இது என்று தெரியவில்லை. 

அது பற்றி பிறகு. இப்போது வெள்ளியன்று நடந்த நிகழ்வுகளைப் பற்றி பார்ப்போம். 

‘புதுப்பேட்டை’ திரைப்படத்தில் இருந்து ஒலித்த ‘வர்றியா’ பாடலுக்கு வழக்கம் போல் பிந்துமாதவி சிறப்பாக நடனம் ஆடினார். காயத்ரியும் வழக்கம் போல் சோம்பல் முறித்தார். அது ஏன் ஆணகள் பெரும்பாலும் நடனம் ஆடாமல் சோம்பேறிகளாக சாய்ந்து கொண்டிருக்கிறார்கள்? 

gayathri bindhu madhavi



கமலின் பஞ்சாயத்து குறித்து பிக் –பாஸ் போட்டியாளர்கள் விதம் விதமாக கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர். “யார் மற்றவர்களுக்கு அதிகமாக டேமேஜ் செய்கிறார்களோ, அவர்களுக்குத்தான் அதிக டேமேஜ் ஆகும்’ என்கிற தத்துவத்தை காலையிலேயே உதிர்த்தார் ரைசா ‘அவர் என்ன சொல்ல வர்றார்னா..’ என்று மொழிபெயர்க்கும் பாணியில் . ‘தன்வினை தன்னைச்சுடும்’ என்று பழமொழியின் வழியாக சுருக்கமாக மொழிபெயர்த்தார் சிநேகன். 

‘இந்த வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, அற்ப விவகாரங்களுக்காகவா அத்தனை சண்டை போட்டோம், வருத்தப்பட்டோம்’ என்று நமக்கே காமெடியாகத் தெரியும்’ என்றார் சிநேகன். உண்மைதான். நம்முடைய வாழ்க்கையில் கூட கடந்த நாட்களை rewind செய்து பார்த்தால் எத்தனை அற்பமான விவகாரங்களுக்கு கூட ஓவர் ரியாக்ட் செய்திருக்கிறோம் என்கிற நோக்கில் பார்த்தால் சிரிப்புதான் வரும். பிக் பாஸ் முடிந்த பிறகு, இதையா இத்தனை நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம் என்கிற உணர்வு வருவதைப் போலவே.

**

சிநேகனும் ரைசாவும் அப்படி என்னதான் பேசிக் கொள்கிறார்கள் என்று உளவு பார்ப்பதற்காக சக்தியும் பக்கத்தில் அமர்ந்திருந்தாரோ, என்னவோ. பிறகு அங்கிருந்து விலகி, வரப்போகிற கமலின் பஞ்சாயத்தை எண்ணி திகிலுடன் ஸ்தம்பித்துப் போய் அமர்ந்திருந்த காயத்ரியிடம் சென்று ஆறுதல் சொன்னார்.

bindhu raisa snegan



சுற்றிலும் காமிராக்கள் கண்காணித்துக் கொண்டிருக்கும் நிலையில் எப்படி சில போட்டியாளர்களால் ரகசியம் காக்க முடியும் என்பதை வேடிக்கையாக சொல்லிக் காட்டினார் வையாபுரி. ‘ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது’.

மறுபடியும் சப்டைட்டில் சேவையை பிக்பாஸ் துவங்கியது மகிழ்ச்சி. ரைசாவிடம் வையாபுரி முணுமுணுப்பான குரலில் யாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் என்பது பார்வையாளர்களுக்கு புரியாமல் போய் விடக்கூடாது என்கிற கவலையுடன் அதைப் ‘போட்டுக்’ கொடுத்தார். ‘இவர்கள் ‘சக்தி – காயத்ரி’யைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்’
‘ரெண்டுல ஒண்ணு போயிடுச்சுன்னா.. இன்னொன்னுக்கு பைத்தியம் பிடிச்சிடும். தன்னால அதுவும் போயிடும் இங்க நடக்கறத அங்க சொல்றது.. அங்க நடக்கறத இங்க சொல்றது.. இதையெல்லாம் பண்ணமா இருந்தா அதுங்களுக்கு தலைவலி வந்திடும்’ என்று சக்தி –காயத்ரி கூட்டணி உடைவதால் ஏற்படும் நன்மையான எதிர்விளைவுகளை பற்றிப உற்சாகமாக முணுமுணுத்தார் வையாபுரி. 


காயத்ரி தனிமையடைவதால் உருவாகும் சூழல் பற்றி வாக்களித்த பார்வையாளர்களுக்கும் உற்சாகமான எதிர்பார்ப்பு இருக்கிறது. 

**

லக்ஸரி பட்ஜெட்டிற்கான தேர்வின் போது, ‘வீட்ல நான் –வெஜ்ஜே இல்லை’ என்ற சக்தி, தேர்வுப்பட்டியலின் போது ‘சிக்கனை’ தன்னிச்சையாக நுழைக்க முயன்றார். ஆனால் அதைவிடவும் அத்தியாவசியமான பொருட்கள் தேவைப்பட்டதால் அந்த தேர்வை அவர் அழிக்க வேண்டியிருந்தது. 

snegan raisa



‘ஐந்து நிமிடங்கள் தரப்படும், இந்த வீ்ட்டிலிருந்து எவர் வேண்டுமானாலும் வெளியேறலாம்’ என்று பிக் பாஸின் அறிவிப்பு வந்தால் ‘எவருமே வெளியேற மாட்டார்கள்’ என்கிற யூகத்தை சிரிப்புடன் சொல்லிக் கொண்டிருந்தார் சிநேகன். ஆம், அப்படித்தான் நமக்கும் தோன்றுகிறது. சில காட்சிகளில் வெளியேற வேண்டும் என்று துடிக்கிறவர்கள், வேறு காட்சிகளில் அந்த உணர்வே இல்லாமல் இருக்கிறார்கள். இடையில் என்னதான் நிகழ்கிறது? அவர்கள் அடையப் போகும் தொகைக்கான செக் எதையாவது திரையில் பிக் –பாஸ் காட்டுவாரா?

**

சக்தி இந்தப் போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டால் ‘துணையின்றி தான் தனிமைப்பட்டு விடுவோம்’ என்கிற பதட்டமும் உளைச்சலும் காயத்ரிக்கு நிறைய இருக்கிறது. எனவே அது குறித்து புலம்பிக் கொண்டேயிருக்கிறார். மட்டுமல்லாமல், தான் கெட்ட வார்த்தைகள் பேசுவதை நிறுத்தாதது குறித்து கமல் கேள்வி கேட்பாரோ என்கிற பயமும் இருக்கிறது. 

பலமானவர்கள், ரவுடிகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பவர்களில் பலர், மறுமுனையில் எத்தனை பலவீனமானவர்கள் என்பதையே காயத்ரியின் நிலைமை காட்டுகிறது.  ஏதோவோரு சிறிய ஆயுதத்தை வைத்துக் கொண்டு தங்களை பிரம்மாண்டமாக காட்டிக் கொள்கிறவர்கள், அந்த ஆயுதத்தை பிடுங்கி விட்டால் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகிறார்கள். ‘எரியறதை பிடுங்கினால் கொதிக்கறது அடங்கும்’ என்பது பழம்மொழி.

எனவே சக்தியிடம் ‘தள்ளிப் போகாதே’ பாடலை மறுபடியும் மறுபடியும் பாடிக் கொண்டேயிருக்கிறார் காயத்ரி. இந்தப் பதட்டமே உளறலாகவும் மாறுகிறது. ‘அது எப்படி உன்னை அனுப்புவாங்க.. அப்படி அனுப்பினா நான் ரவுடியா மாறிடுவேன்’ என்கிறார். (ஏற்கெனவே அப்படித்தானே இருக்கீங்க). சில நாட்கள் முன்பு தான் ஜூலி, ஸ்ரீயிடம் , " என்னை தனியா விட்டுட்டு போயிடாத " என்று சொன்னது போல் இருந்தது. நேற்றைய நிகழ்வில், காயத்ரி சக்தியைப் பார்த்து, " என்னை தனியா விட்டுட்டு போயிடாத " என்கிறார்

‘உனக்கு முன்னாடி நான் போயிடணும் சக்தி’ என்று காயத்ரி சொல்வதையெல்லாம் நாம் பழைய திரைப்படங்களில் நிறையப் பார்த்திருக்கிறோம். 

‘நான் போகணும். என் மகனைப் பார்க்கணும்’ என்று தான் வெளியேறப் போவது குறித்தான பயத்தை பாசக்காட்சியாக சக்தி மாற்றும் போது ‘அனுப்பிடாதீங்க.. நான் தனியா மாட்டிப்பேன்’ என்று ரகசியக் குரலில் காமிராவிடம் சொல்கிறார் காயத்ரி. இது போன்ற சமயங்களில்தான் அவரது குழந்தைத்தனம் வெளிப்படுகிறது. ஆனால் இதற்காக, கமலின் முன்னால் ‘எல்கேஜி’ மாணவி போல முகத்தை மாற்றி வைத்துக் கொள்வதெல்லாம் ஓவர். 

gayathri sakthi



**

‘என் வாழ்க்கையில் நிகழும் அனைத்துப் பிரச்னைகளையும் நானேதான் எதிர்கொள்வேன்’ என்று ரைசாவிடம் சவடால் விட்ட காயத்ரி, இப்போதைய பதட்டத்தில் ஆரவ் மற்றும் கணேஷிடம் சென்று ‘சக்தி போயிட்டா… எனக்கும் ‘சக்தி’ போயிடுமே.. தனியா மாட்டிப்பனே.. யார் எனக்கு ஆதரவு தருவா? என்றெல்லாம் புலம்புவது ஒருபக்கம் நகைச்சுவையாகவும் ஒருபக்கம் பாவமாகவும் இருக்கிறது. 

இது நாள் வரை தாம் மற்றவர்களை வதைத்துக் கொண்டிருந்ததெல்லாம் இப்போது தனக்கு எதிராக திரும்பி விடுமோ என்று அஞ்சுகிறார். அது சார்ந்த பயமும் குற்றவுணர்வும் அவரைத் துரத்துகிறது. குறிப்பாக அவர் அஞ்சுவது புதிய எதிரியான ரைசாவிற்கு. சிநேகனை கூட மறுபடியும் சோப்பு போட்டு வசப்படுத்தி விடலாம். 

‘ஒருவேளை ஆரவ் வெளியே சென்றால், ஓவியாவின் நிலையை நேரில் சென்று பார்க்க வேண்டும். ஆனால் அதைச் செய்வாரா என்று சந்தேகம்’ என்கிறார் சிநேகன். 

ஆரவ், சக்தி, காயத்ரி



**

ஆண்களும் ஆணாதிக்கமும் நிறைந்திருக்கும் சினிமாத் துறையில் கோபமாக இருந்தால்தான் வேலை வாங்க முடியும், நிலைமையை சமாளிக்க முடியும்’ என்று தன் நிலையை நியாயப்படுத்த முயல்கிறார் காயத்ரி. கோபமாக உத்தரவுகள் போட்டால் பணிகள் நடக்கும் என்பது அதிகாரிகளின் அபத்தமான கற்பனை. இதனால் பணியாளர்களின் தன்னிச்சையான ஒத்துழைப்பு அதிகம் கிடைக்காது. மாறாக அந்த இடத்தில் கோபமும் வன்மமும் நோய் போல பரவிக் கிடக்கும்.

சரி, பணியிடத்தில் கோபமின்றி பணிகள் நடக்காது என்கிற நடைமுறையை ஒருவகையில் ஏற்றுக் கொள்ளலாம் என்றாலும், பிக் பாஸ் என்பது ஒரு வீடு, கூடிவாழும் தன்மையை சோதிப்பது என்கிற அடிப்படையை காயத்ரி செளகரியமாக மறந்து விடுகிறார். பணியிடங்களில் காட்டும் அதே கோபத்தை வீட்டிலும் அவர் காட்டுவாரா? 
அலுவலகத்தில் ஏற்படும் கோபங்களை வீட்டிலும், வீட்டில் ஏற்படும் கோபத்தை பணியிடத்திலும் காட்டும் நபர்களைப் பற்றி நாம் என்ன நினைப்போம்?

சனியன்று நிகழப் போகிற பஞ்சாயத்து தொடர்பான தற்காப்பு ஆட்டமாக, சிநேகனிடம் ரைசாவிடமும் காயத்ரி வலிந்து வந்து பேசியதை அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தனர். இந்த இணக்கத்தை துவக்கத்தில் இருந்தே காயத்ரி கடைப்பிடித்திருந்தால் பிரச்னைகளே உருவாகியிருக்காது. உருவான பின் அதைப் பற்றி அஞ்சுவது, அதை மறைக்க நினைப்பது வீண். 

gayathri



தான் கெட்ட வார்த்தைகள் பேசுவது பற்றி கமல் கேட்டால் அதை எவ்வாறு எதிர்கொள்வது என்பதற்கான ஒத்திகையை காயத்ரி செய்து காட்டிக் கொண்டிருந்தார். ரஜினிக்கான உடல்மொழியுடன் (கமல் என்பதால் ரஜினியா?) பஞ்ச் டயலாக்குடன் அதை பேசிக் காட்டியது நகைச்சுவை. ‘ரஜினி மாதிரி செய்யச் சொன்னா, ஜனகராஜ், செந்தில் மாதிரி உட்கார்ந்துக்கிட்டே பண்றே” என்று சரியாக சுட்டிக் காட்டினார் சக்தி. சமயத்தில் சேம் சைட் கோல் அடிப்பதில் சக்தி மன்னராக இருக்கிறார். 

**

‘வீட்டு உறுப்பினர்கள் என் முன்னால் வெளிப்படையாக உண்மைகளைச் சொல்வதில்லை. அகத்தில் நிறைய புறம் பேசுகிறார்கள்’ என்கிற முன்னுரையுடன் ஆரம்பித்தார் கமல்.

கடந்த வாரத்தில் பரபரப்பாக அமைந்த கமலின் குறுக்கு விசாரணைக் காட்சிகள் இந்த வாரம் பெரும்பாலும் சுவாரசியம் இழந்து போனது. அதற்கான காரணம், ஆச்சரிய விருந்தினர்களாக வந்த ஸ்ரீபிரியா மற்றும் சதீஷ் உடன் நிகழ்ந்த உரையாடல். இதைக் குறைத்துக் கொண்டு நேரடியாக அகம் தொலைக்காட்சிக்குள் சென்றிருக்கலாம். 

‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படம் 58 வருடங்களைக் கடந்ததற்காக வாழ்த்து சொல்ல வந்திருப்பதாக ஸ்ரீபிரியா சொன்னாலும், காயத்ரி காப்பாற்றப்பட்டது உள்ளிட்ட பல கேள்விகளைக் கொண்டிருக்கும் பார்வையாளர்களின் பிரதிநிதியாக அவர் வந்திருக்கிறார் என்பது வெளிப்படை. 

kamal



இந்த உரையாடலின் மூலம் பார்வையாளர்களின் ஐயங்களுக்கு விடை சொல்வது என்பதை விடவும் அவர்களின் கோப, தாபங்களைக் குறைப்பதற்கான ஒருவழியாக இது திட்டமிடப்பட்டதோ என்று தோன்றுகிறது. நல்ல திருவிளையாடல், பிக் பாஸ்.

கமலின் நகைச்சுவையுணர்வும் சமயோசிதமும் வழக்கம் போல் இந்த உரையாடலில் வெளிப்பட்டது. ' என்ன மேல பாக்கறீங்க லைட்மேனையா என ' ஆண்டவர்' பற்றி ஆண்டவர் அடித்த கமென்டிற்கு, அவரும் முக்கியம் தானே என ஸ்ரீப்ரியா கொடுத்த பதில் கமென்ட்.செம.

 ‘நீங்க குழந்தைல நடிச்சதைக் கூட நாங்க நடிக்கலை’ என்று சதீஷ் சொன்னது மிகையான ஐஸ் என்றாலும் நகைச்சுவையாக கருதி சிரித்து வைக்கலாம். 

இந்த நிகழ்ச்சிக்கு தாம் நெறியாளராக இருப்பதன் கடமை பற்றியும் அது சார்ந்த பொறுப்பு, சங்கடங்கள் ஆகியவை பற்றியும் கமல் விளக்கம் அளித்தார். ‘மக்களின் கோப தாபங்களை, நடுவரான தாம் அப்படியே எதிரொலிக்க முடியாது’ என்று அவர் சொன்னது சரி. 

இதர மொழிகளில் நடக்கும் பிக் பாஸ் போட்டிகளில், அதன் நெறியாளர்கள் பார்வையாளர்களின் கோபங்களை உள்வாங்கி அப்படியே தானும் போட்டியாளர்கள் மீது காட்டுவதைக் குறித்து பாராட்டும், மகிழும் குறிப்புகளை இணையத்தில் காண்கிறேன். ஒரு நெறியாளரின் பணி நிச்சயம் அதுவல்ல. சினிமாவில் எளிய மக்களின் சார்பில் அவதார நாயகராக பாவனை செய்யும் அதே அறச்சீற்றத்தை நிஜத்திலும் செய்ய முடியாது. அப்படிக் காட்டினால் அதுவும் நடிப்பே. 

பார்வையாளர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் அதே சமயத்தில், போட்டியாளர்களையும் காயப்படுத்தாத நிதானம் ஒரு நெறியாளருக்கு நிச்சயம் வேண்டும். அது சார்ந்த பொறுமையும் கண்ணியமும் கமலுக்கு நிறைய இருக்கிறது. இதர மொழி நிகழ்ச்சிகளை நான் பார்க்கவில்லையென்றாலும் இதர நெறியாளர்களை விட கமல் சிறப்பாகவே செயல்படுகிறார் என்றே தோன்றுகிறது. 

sripriya sathish



‘இரண்டு பேர் பங்குபெறுவதுதான் முத்தம்’ என்ற ஸ்ரீபிரியாவின் குறிப்பை ‘மூன்று பேர் கூட பங்கு கொள்ள முடியும்’ என்று இடைமறித்த கமலின் நகைச்சுவை நன்று. 
முத்த விவகாரத்தில் பெண் பக்கமே அதிக தவறிருப்பதாக நியாயத் தராசு சாய்ந்து கொண்டிருந்த போது, ஆரவ்வுடன் நிகழ்ந்த விசாரணையில் அவரை வலியுறுத்தி இந்த விவகாரத்தில் அவருடைய பங்கையும் அம்பலப்படுத்தி, பெண்ணின் நிலையை காப்பாற்றியதற்காக நன்றி’ என்று ஸ்ரீபிரியா தெரிவித்ததை நெகிழ்ச்சியுடன் கமலும் ஏற்றுக் கொண்டார். 

கமலை புகழ்ந்து கொண்டிருக்கும் அதே வேளையில், ஸ்ரீபிரியா இடையிடையே சதீஷை மட்டம் தட்டிக் கொண்டேயிருந்தார். ஸ்ரீபிரியா வெளிப்படையாக பேசுவது நல்ல விஷயம்தான் என்றாலும், அது அதிக நேரம் நீண்டது சலிப்பைத் தர ஆரம்பித்துவிட்டது.

‘இந்த நிகழ்ச்சியை தமிழ் பார்வையாளர்கள் அதிகம் கவனிக்கத் துவங்கியிருப்பதும் வெற்றியடைந்ததும் உங்களால்தான்’ என்று சதீஷ் குறிப்பிட்டது உண்மை. அந்தப் பொறுப்பை பல சமயங்களில் கமல் சரியாக உணர்ந்திருக்கிறார் என்று தெரிகிறது. சில சமயங்களில் தவற விடுகிறார் என்கிற சந்தேகமும் உள்ளதுதான். 

‘எதிர் தரப்பிற்கு சரியான பதில்களை அளித்து விட்டால் அடுத்த கேள்விகள் வராது’ என்கிற கமலின் விளக்கம் சரிதான். ஆனால் பார்வையாளர்களின் சில கேள்விகளுக்கு இன்னமும் கூட பதில் வராதது போல்தான் இருக்கிறது ஆண்டவரே. 

இந்த நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் என்று பலர் நம்பிக் கொண்டிருப்பது தவறு என்பதற்கான தரவுகளை கமல் விளக்கினார்.  ‘நாம இப்ப அடுத்து என்ன பேசப் போறேன்னு தெரியாது, இல்லையா?’ என்றவர், ‘தோராயமா உள்ள ரெடி பண்ணது மட்டும்தானே’ என்று கூடவே சொன்னதை தவிர்த்திருக்கலாம். முரணாக தோன்றக்கூடிய வாய்ப்பிருக்கிறது. 
‘போட்டியாளர்களின் சில தன்னிச்சையான எதிர்வினைகளை சிற்நத திரைக்கதையாளனால் கூட எழுத முடியாது’ என்கிற கமலின் கூற்று உண்மை. இதை ஏன் சிலர் நம்பவே மறுக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. இதற்கான உதாரணமாக ‘இயக்குநர் மணிவண்ணன் சொன்ன சம்பவத்தை’ கமல் மேற்கோள் காட்டியது சரியானது. 

கமல் சதிஷ்



பெண்களிடம் மட்டும் சிநேகன் நிகழ்த்தும் ‘கட்டிப்பிடி வைத்தியத்தை’ சதீஷ் மேடையில் நடித்துக் காட்டியது நகைச்சுவை. அந்த நடிப்பிற்காக கமலும் உடன்பட்டது சிறப்பு. இந்த விஷயத்தில் சிநேகனின் மீது எத்தனை பார்வையாளர்களுக்கு பொறாமை இருக்கிறது என்பது சபையின் ஆரவாரத்தில் தெரிந்தது. 

ஆரவ்வின் மருத்துவ முத்தத்தையும் சதீஷ் கிண்டலடித்தார். ஆனால் இது குறித்த காட்சிகள் ஏன் காட்டப்படவில்லை என விருந்தினர்கள் கேட்டது ரசனைக்குறைவானது மட்டுமல்ல, அபத்தமும் கூட. 

**

‘காயத்ரி ஏன் காப்பாற்றப்பட்டார்’ என்கிற ஸ்ரீபிரியாவின் கேள்வி முக்கியமானது. சபையின் கைத்தட்டல்களில் இது பிரதிபலித்தது. ‘இந்த கைத்தட்டல்களில் நானும் இணைகிறேன்’ என்று வேகமாக வந்த பந்தை மிக அநாயசமாக கடந்து சென்றார் கமல். 

‘இப்போதுதான் நல்லபடியாக வாக்களிக்க கற்றுக் கொண்டிருக்கிறோம். குறைந்தபட்சம் பிக் பாஸிலாவது முறைகேடுகள் நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்களேன்’ என்கிற கமலின் அரசியல் பஞ்ச் சூப்பர். 

‘நீங்க சொல்லி ஓட்டுப் போட நாங்க தயாராக இருக்கோம்’ என்று தன் பங்கிற்கு அரசியல் வெடிகுண்டை வீசினார் சதீஷ். இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்திதான் சிவாஜி என்கிற கலைஞனின் உடம்பும் மனதும் முன்பு ரணகளமானது என்கிற நிதர்சனத்தை அறிவாளியான கமல் புரிந்து கொள்வார் என்று நம்புவோம். 

‘இந்த நிகழ்ச்சியின் சட்டதிட்டங்கள் எனக்கே கூட முழுதாகப் புரியவில்லை’ என்று நேர்மையாக ஒப்புக் கொண்ட கமல், இம்முறை பந்தை சாமர்த்தியமாக பிக் –பாஸின் பக்கம் தள்ளி விட்டார்.

பிக் –பாஸ் பொறுப்புடன் பதில் அளித்தாலும் ‘இந்த நிகழ்ச்சி குழந்தைகளும் பார்க்கும் நேரம்… என்பதால் என்று துவங்கிய பதிலில் இருந்து ‘இது குழந்தைகள் பார்க்கக்கூடிய நிகழ்ச்சி என்பதை மறைமுகமாக அவர் அங்கீகரிக்கிறாரா என்ன”?

ஆரவ் முத்தம் தொடர்பான காட்சி காட்டப்படாததற்கு தமிழ் கலாசார மரபு ஒரு காரணம் என்றாலும் போட்டியாளர்களின் அந்தரங்கத்தை மதிப்பதுவும் ஒரு காரணம் என்றார் பிக் பாஸ். ஒருவகையில் சரி. ஆனால் இந்த நிகழ்ச்சியில் அந்தரங்கம் பற்றியெல்லாம் பிக் பாஸ் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல்தான்.

ஸ்மோக்கிங் அறையில் புகைப்பிடிக்கும் காட்சிகள் காட்டப்படாதது குறித்து நானும் இந்தத் தொடரில் எழுதியிருந்தேன். இந்த உரையாடலில் அந்த விஷயத்தையும் கமல் தொட்டுச் சென்றது சிறப்பு.

பிக்  பாஸ்

 



**

காயத்ரி காப்பாற்றப்பட்டாரா என்பது குறித்த ஸ்ரீபிரியாவின் கேள்வி பிடிவாதமாக தொடர்ந்தது. இது குறித்த பிக் பாஸின் விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படிதான் இருந்தது. குறைந்தபட்சம் எனக்கு. 

ஏனெனில் இந்த விளையாட்டில் ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்று சொல்லி விட்ட பிறகு, ‘கேள்வி –பதில்’ பகுதி திணிக்கப்பட்டதா என்று ஆராய்வதில் நியாயமில்லை. மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு கேட்கப்பட்ட அதே வகை கேள்விகள்தான் காயத்ரியிடமும் கேட்கப்பட்டன. ‘எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்’ வகை கேட்கப்படவில்லை. (எளிய தமிழில் கேளுங்கள் என்று தான் வலியுறுத்தியாக காயத்ரி பிறகு தெரிவிக்கிறார். எளிய கேள்விகள் அல்ல)

‘மக்களுக்குப் பிடித்தமான நபர் இந்த நிகழ்ச்சியில் மீண்டும் வரக்கூடும்’ என்கிற பிக் பாஸின் அறிவிப்பை சபை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டது. எனில் ஓவியாவின் தரிசனம் மீண்டும் நிகழ அதிக வாய்ப்புண்டு. 

‘எனக்கான சார்புகளும் இருக்கலாம்’ என்று தனது சொற்பொழிவின் இடையே கமல் கூறியது கவனிக்கத்தக்க பாயிண்ட். பூனைக்குட்டி வெளியே வந்த சமயமா அது?

கணேஷிற்கு முன்பு கமல் சொன்ன அறிவுரையைப் போலவே ‘எதற்கு வம்பு’ என்று கமலும் சமயங்களில் ஒதுங்கிக் கொள்கிறாரோ என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. அதற்கான வெளிஅழுத்தங்கள் அவருக்குத் தரப்படுகிறதோ என்னவோ. 

இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு அவர்களின் குணாதிசயங்கள் மாறுவதில்லை. ஏற்கெனவே இருந்ததுதான் அது’ என்று கமல் குறிப்பிட்டது சரியான விஷயம். 
பார்வையாளர்களின் சந்தேகங்களை தெளிவுப்படுத்துவதற்காகவும் அந்த சாக்கில் அவர்களின் கோபங்களைத் தணிப்பதற்காகவும்தான் இந்த உரையாடல் என்றாலும் எழுதி வைத்துக் கொண்டு பேசிய நாடகம் போலவும் அமைந்தது நெருடல். இந்தப் பகுதியை சுருக்கமாக வைத்துக் கொண்டிருக்கலாம்.

இன்னொன்று, கமலின் தனிப்பட்ட சினிமா விஷயங்கள், அரசியல் நையாண்டிகள் போன்றவற்றை இதனோடு இணைப்பது ஒருவகையில் சுவாரசியம்தான் என்றாலும் இன்னொரு வகையில் இடையூறாகவே இருக்கிறது. 

சென்ற முறை நடந்த சர்வேயில், ஜூலி தான் குறைவான வாக்குகளைப் பெற்றார். மக்களின் தேர்வை பிரதிபலித்து ஜூலி வெளியேற்றப்பட்டது மகிழ்ச்சி. இந்த முறை 1% வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் இருப்பது சக்தி. இரவு வரை காத்திருப்போம்

Bigg boss survey



**

பிந்து இந்த வீட்டிற்குள் நுழைந்த போது போட்டியாளர்களுக்கு அணிவித்த எண் பட்டியல் தொடர்பான ரகசியம் இன்று வெளியானது. தனக்குப் பிடித்தமான வரிசையை அவர் அணிவித்தார். ஒவியாவிற்கு முதல் எண் கிடைத்தது நினைவிருக்கலாம். 

‘போட்டியாளர்கள் தங்களின் குறைகளை வெளிப்படையாக இப்போது என்னிடம் தெரிவிக்கலாம்’ என்றொரு வாய்ப்பை கமல் தந்தார். 
காயத்ரியின் தரப்புதான் இப்போது முக்கியம் என்பதால் அது குறித்து பார்க்கலாம். மட்டுமல்லாமல் இதர போட்டியாளர்கள் பெரிதாக ஏதும் சொல்லவில்லை. கணேஷ் மட்டும் பரணியிடம் மன்னிப்பு கேட்டார். 

சிநேகனும் சக்தியும் பேசிக் கொண்டது அவர்களுக்கே புரியமா என தெரியவில்லை. உப்புச்சப்பற்ற குறிப்புகள் அவை. எளிய விவகாரம். 

இனி காயத்ரி.

வீட்டின் உள்ளே மற்ற சமயங்களில் டெடராக இருக்கும் காயத்ரி கமலின் முன்னால் மட்டும் பள்ளிக்கூட மாணவி மாதிரி மாறி விடுகிறார். அந்நியனில் நடித்த விக்ரம் கூட காயத்ரியிடம் டியுஷன் படிக்க வேண்டும் போல.

சமீபமாக கமலைக்கூட கடுமையாக விமர்சிக்கத் துவங்கி காயத்ரி, இப்போது சபையில் அதை நேர்மையாக சொல்லாமல் குழைந்து கொண்டே வழிவது எரிச்சலானது. மட்டுமல்லாமல் விளையாட்டிற்கு வெளியே தாண்டி, கமல் உடனான குடும்பத் தொடர்புகளையும் நினைவூட்டுவது விளையாட்டின் அறம் அல்ல. அந்தக் குழைவை காயத்ரி ஒவ்வொரு முறையும் செய்கிறார். இம்முறை பதட்டம் அதிகம் என்பதால் குழைவும் அதிகமாக இருந்தது. 

இம்முறையும். கமலும் அது சார்ந்த சார்புகளினால் காயத்ரியின் குறைகளை இடதுகையால் தள்ளிச் செல்கிறாரோ என்று தோன்றுகிறது. கடந்த வாரம் இருந்த கடுமை கூட இந்த வாரம் இல்லை. 

arav snegan

 



கமலுடான குடும்ப நெருக்கத்தை சாமர்த்தியமாக அடையாளப்படுத்தும் காயத்ரி,  அதே சமயத்தில் அது சார்ந்த சலுகை தனக்கு ஏதும் தரப்படுவதில்லை என்பதையும் சபையின் முன்னால் உறுதிப்படுத்த முனைகிறார். மிக மிக சாமர்த்தியமான விளையாட்டு இது. 

இம்முறையும் அதே மாதிரியான மயிலிறகு தடவல்களை கமல் நிகழ்த்தினார்.  காயத்ரி தொடர்பான ஒரு குறும்படத்தை கறாராக உருவாக்கி சபையில் ஒளிபரப்பியிருந்தால் காயத்ரிக்கே தன்னைப் பற்றிய சரியான பிம்பலும் புரிதலும் கிடைத்திருக்கலாம். ஜூலிக்கு நிகழ்ந்த விஷயம் காயத்ரிக்கு ஏன் நிகழ்வதேயில்லை.?

‘எவ்ளோ கோபத்தைக் குறைத்திருக்கிறேன்’ என்ற காயத்ரி, சக்தியை சாட்சிக்கு அழைத்த போது சக்தி பதறி விலகினார். (வேலிக்கு ஓணான் சாட்சியா?)

ரைசா மட்டுமே காயத்ரியின் கோபத்தைப் பற்றி சுட்டிக் காட்டினார். மற்ற சமயங்களில் இது பற்றி பேசும் வையாபுரி கூட இப்போது மெளனம் காத்தார். (இவர் புறம் பேசுவதேயில்லையாமே?)

கணேஷூம் பிந்துவும் காப்பாற்றப்பட்டவர்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார்கள். எனில் சக்தியின் நிலைமை என்ன? இன்றைக்குத் தெரியுமா?

‘எனக்காக ஒரு குட்டி டான்ஸ் ஆட முடியுமா” என்று வேண்டுகோள் வைத்தார் காயத்ரி. கமல் அதை ஏற்காவிட்டாலும், குட்டி நடனம் அல்ல, காயத்ரியின் இசைக்கு ஏற்ப கமல் பல ,நாட்களாகவே, நீண்ட நடனம் ஆடிக் கொண்டிருக்கிறாரோ?

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/98988-are-we-witnessing-multiple-personalities-from-gayathri-happenings-of-bigg-boss-day-48.html

Link to comment
Share on other sites

பரணி, ஓவியா போல இப்போது தனிமை சூழலில் காயத்ரி... என்ன நடக்கும்? பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (49-ம் நாள்) #BiggBossTamilUpdate

 
 

Bigg Boss

தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டோ காயத்ரி காப்பாற்றப்பட்ட நிலையில் பார்வையாளர்களின் பலத்த எதிர்பார்ப்பின் படி ‘சக்தி’யின் வெளியேற்றம் இன்று நிகழ்ந்தது. இதன் மூலம் காயத்ரி ‘சக்தி’யும் அகன்றது எனலாம். 

மந்திர தந்திரக்கதைகளில் ஒருவனின் உயிர், மலை, கடல் கடந்து ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டிருக்கும். இராமாயணத்தில் வாலியுடன் சண்டையிடும் எவரும் தங்களின் பாதி பலத்தை வாலியிடம் இழந்து விடுவார்கள் என்பது போன்ற கதையாடல் உண்டு. 

இதைப் போலவே பிக் பாஸ் வீட்டில் காயத்ரியின் பெரும்பலமாக இருந்தவர் சக்தி. அவருக்கு ஆதரவாகவும் வடிகாலாகவும் கோபத்தைக் கட்டுப்படுத்தும் ஆயுதமாகவும் சிரிக்க வைத்து ஆற்றுப்படுத்திய நண்பனாகவும் இருந்தவர் சக்தி. சுருங்கச் சொன்னால், சக்தியில்லையேல், சிவமில்லை என்பது போல சக்தியில்லையேல் காயத்ரி இல்லை.

இதை காயத்ரியும் தெளிவாக உணர்ந்திருந்தார். எனவேதான் சக்தியின் வெளியேற்றத்திற்கு முன்பே அது குறித்து பதட்டமும் உளைச்சலுமாக இருந்தார். தான் தனிமைப்பட்டு விடுவோமோ என்று அஞ்சினார். விதை விதைத்தவன் வினை அறுப்பான். ஒருவர் செய்த தீமைகள் பூமராங் போல திரும்பி வரும் தருணங்கள் நிச்சயம் அமையும். 

இந்த உலகத்தில் எந்தவொரு மனிதருமே முழுக்க முழுக்க நல்லவரும், தீயவரும் இல்லை. சதவீதத்தின் அளவு மட்டுமே மாறுபடும். இதுவேதான் காயத்ரிக்கும் பொருந்தும். மற்றவர்கள் சமயங்களில் குறிப்பிடுவது போல ஒருவகையில் அவர் ‘குழந்தை’தான். ஆனால் பிடிவாதமான குழந்தை. 

கோபம் ஒருவரின் பலவீனமாக இருக்கலாம். ‘கோபப்படுபவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்’ என்கிற நம்பிக்கை கூட உண்டு. அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்பது போன்ற பழமொழிகளும் உண்டு. ஆனால் தம்மிடம் உள்ளது பலவீனம் என்பதை உணர்ந்து பிறகு திருத்திக் கொள்ள முனையாதவர் பாடு சிரமம்தான். அந்தவகையில்தான் காயத்ரி மீது வருத்தமாக இருக்கிறது.

காயத்ரி 

தன்னைக் குறித்து எவராவது சிறிது சீண்டினால் கூட உடனே கோபப்பபட்டு பிறகு வருத்தத்துடன் அழும் காயத்ரி அதே மாதிரியான தண்டனையை இன்னொருவருக்கு தராமலிருப்பதுதானே முதிர்ச்சி?

**

‘சக்தி’ ஒருவேளை வெளியேறினால் காயத்ரி தனக்கு ஏற்படும் அத்தனை அழுத்தத்தையும் எங்கள் மீது போடுவார்’ என்கிற ரைசாவின் அபிப்ராயத்தை காயத்ரியால் ஜீரணிக்கவே முடியவில்லை. தன் வழக்கமான தன்மையின் படி ரைசாவின் மீது கோபப்படுகிறார், வசைகிறார்.  மற்றவர்களிடம் சொல்லி புலம்புகிறார். 

‘அப்படியா, ரைசா.. சரி.. இனி என் மாற்றத்தின் மூலம், அன்பான நடவடிக்கைகளின் மூலம் உங்கள் நினைப்பை பொய்யாக்குகிறேன்.’ என்று மனப்பூர்வமாக உணர்ந்து, ஆக்கப்பூர்வமான சவால் விட்டு அதைப் பின்பற்றலாம். இதன் மூலம் அவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அந்த மகிழ்ச்சி மற்றவர்களுக்கும் பரவும். அவர் மீதுள்ள தவறான அபிப்பிராயங்களும் எதிர்மறை பிம்பமும் இனி மறையும்.

தன் பலவீனங்களை நெறிப்படுத்தி ஆக்கப்பூர்வமான திசைக்கு அழைத்துச் செல்ல முடியாததால்தான் பல துன்பங்கள் விளைகின்றன, அவருக்கும் மற்றவர்களுக்கும். 

**

‘எல்லைக்கோடுகள், தொல்லைக்கோடுகள்’ என்கிற சொற்களுடன் உள்ளே நுழைந்தார் கமல். சுதந்திர தினம் வருவதையொட்டி அவர் பேச்சு இருந்தது. ‘தமிழ் தலைவா’ கபடிப் போட்டி பற்றிய காணொளி காண்பிக்கப்பட்டது. 

கிரிக்கெட், கால்பந்து போன்ற மேற்கத்திய விளையாட்டுக்கள் மட்டுமே இங்கு பிரபலமாக இருக்கும் சூழலில் இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுக்கள் மெல்ல மறைந்து கொண்டிருக்கின்றன. இந்த வகையில் தமிழ் மண்ணின் பாரம்பரிய விளையாட்டான ‘கபடி’க்கு புத்துணர்ச்சி தரும் வகையிலான நடவடிக்கைகள் அற்புதம்; அவசியம்.

‘இந்தக் கோடு போட்டதே நாம்தான்’ என்று கபடியின் எல்லைக்கோட்டை கமல் அழுத்திச் சொன்னது அபாரம். 

**

“யார் வெளியேறத் தயாராக இருக்கீங்க?” என்று கமல் கேட்டதற்கு சிநேகன், ஆரவ், சக்தி என்று மூன்று பேருமே கை தூக்கினார்கள். (ஜூலி உட்பட பலரும் இப்படித்தான் முதலில் உற்சாகமாக கைதூக்குகிறார்கள். ஆனால் பிறகு ‘அழுவாச்சி’ நாடகம்தான் நடக்கிறது) தாமதமாக கை தூக்கிய ஆரவ், ‘கூட துணைக்கு எவரையாது அனுப்பி வெச்சா நல்லாயிருக்கும்’ என்று சூழலை சிரிப்பாக்கினார். 

Bigg Boss

‘சாணக்கிய தந்திரம் இல்லாததால் இங்கு நீடிக்க முடியவில்லை’ என்று சிநேகன் குறிப்பிட்டது எவரை?

‘வீரம் –னா பயமில்லாத மாதிரி நடிக்கறது’ என்கிற குருதிப்புனல் திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டிய சக்தி, ‘இங்க இருந்தா கோபத்தில் ஏதாவது தப்பு செஞ்சிடுவேன்னு தோணுது. அதனால் போகத் தோணுது’ என்றார். 

**

‘சிநேகன் இயற்றிய கவிதையொன்றுதான் பல நேரங்களில் எங்களுக்கு ஆறுதல்’ என்று வையாபுரி சொன்னதும், கமலின் வேண்டுகோளின் பேரில் அந்தக் கவிதையின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. நன்றாகவே இருந்தது. டியூன் போட்டு பாடியே காண்பித்து விட்டார் சிநேகன். அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களில் இனி அவரே இசையமைப்பாளர் ஆவார் போல. (தயாராக இருங்கள்).

இந்தக் கட்டுரையில் கூட இதைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். பிக் பாஸ் டீம் அதைப் படித்தார்களோ என்னவோ தெரியவில்லை.

தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவராக ஜூலி மற்றும் சிநேகன் குறிப்பிட்ட பிழையான தகவல் அப்படியே பதிந்து விடக்கூடாது என்று சொல்லியிருந்தேன். அது இந்த நிகழ்ச்சியின் வாயிலாகவே திருத்தப்பட வேண்டும் என்றும். சிநேகனின் மனம் புண்படாத வகையில் அதைக் கண்ணியமாக கமல் நிகழ்த்தியது சிறப்பு.

**

அதிகம் நேரம் கடத்தாமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தார் கமல். சக்தியின் வெளியேற்றம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. நிச்சயம் அதை சக்தி எதிர்பார்த்திருந்தார் என்பது அவர் தோரணையில் தெரிந்தது. ‘உள்ளே பழகியது போதும், வெளியே ரெளத்ரம் பழகாதீர்கள்’ என்றார் கமல் சூசகமாக.

Bigg Boss

‘மற்றவர்கள் எல்லோரும் இதர போட்டியாளர்களின் நாமினெஷன் வழியாக  வெளியில் போயிருக்கிறார்கள். நான் மட்டும் பிக் –பாஸ் நாமினஷேனில் வெளியேறுகிறேன். அது பெருமை’ என்றார் சக்தி. இது பெருமையா என்ன? அவரின் வெளியேற்றத்தை தீர்மானித்தது மக்களின் வாக்கு அல்லவா?

மற்றவர்களின் வெளியேற்றத்தின் போது தனது சலனத்தை பெரிதும் காட்டாத கணேஷைக் கூட அழவைத்தது, சக்தியின் வெளியேற்றம். எதிர்பார்த்தபடியே கண்ணீரில் நனைந்தார் காயத்ரி. நிச்சயம் இந்தப் பிரிவு அவரைப் பாதிக்கும். இனி மற்றவர்களிம் காட்டும் இணக்கம், அன்பு போன்றவற்றின் மூலம் அவர் தன் உளைச்சலைக் கடந்து வர முடியும். ஆனால் அவரின் ஆதாரமான குணாதிசயம் அதற்கு அனுமதிக்குமா?

‘நீ வெளிய போனா என்னைப் பத்தி எல்லார் கிட்டயும் நல்லதா சொல்லு’ என்பது போல் முன்பே சக்தியிடம் வேண்டுகோள் வைத்திருந்தார் காயத்ரி. எனவே அதை மறைமுகமாக சக்தியிடம் நினைவுப்படுத்தினாரோ? ‘என் அம்மாவை சென்று பார்’ என்றார். 

சக்தி வெளியேறிய மறுகணமே, ரைசாவின் குறிப்பு தொடர்பான தன் கோபத்தை மற்றவர்களிடம் உடனேயே வெளிப்படுத்தினார் காயத்ரி. சக்தியின் பிரிவு மீதான துயரத்தை வெளிப்படுத்திய அடுத்த கணமே, இந்தக் கோபத்தை அவர் காட்டியது முரண். எனில் எது நிஜம்? துயரமான சமயங்களில் மற்றவர்களின் மீதான கோபத்தை புறக்கணிக்கத்தான் பொதுவாகத் தோன்றும். 

தனது ஆதங்கத்தை காயத்ரி தெரிவித்த போது பிந்துவால் சிலையாக மட்டுமே நிற்க முடிந்தது. ‘அவள் மேலிருந்த மரியாதை போய் விட்டது’ என்று காயத்ரி கோப்பட்ட போது கணேஷ் ஆறுதல்படுத்தினார். 

‘மறுவருகையின் போது சக்தி மீண்டும் வரக்கூடும். அவரை நான் நாமிஷேன் செய்த விஷயம் தெரிந்தால் நான் செத்தேன்’ என்று பயந்தார் ரைசா. ஆனால் ‘தான் மறுபடியும் இங்கு வரப்போவதில்லை’ என்று கமலிடம் சக்தி தெரிவித்து விட்டதால் ரைசாவின் பயம் வீணே. ஆனால் சக்தி –காயத்ரி கூட்டணியைக் கண்டு இதர போட்டியாளர்கள் ஏன் இத்தனை அஞ்சுகிறார்கள் என்கிற மர்மம் இன்னமும் பிடிபடவில்லை. 

Bigg Boss

**
‘அடுத்த வாரம் நிச்சயமா நான் போயிடுவேன்’ என்று புலம்பிக் கொண்டிருந்தார் காயத்ரி. ‘தன்னுடைய கருத்துக்களை மட்டுமே ரைசா சொல்லியிருக்க வேண்டும். எதற்காக என்னைப் பற்றிய யூகங்களை சொல்ல வேண்டும்’ என்பது காயத்ரியின் வருத்தம். ‘என்னை அவர் தூண்டுகிறார். என்னுடைய பலவீனம் ரைசாவிற்கு தெரிந்திருக்கிறது’ என்றும் சொன்னார். ஆக.. தன் பலவீனம் என்னவென்று காயத்ரிக்குத் தெரிந்திருந்தும் அதை பலமாக ஆக்க முயலாமல் மற்றவர்களுக்குத் தெரிந்து விட்டது குறித்தே கவலைப்படுகிறார். 
‘கோபமில்லாமல் என்னை எப்படி பாதுகாத்துக் கொள்ள முடியும்?’ என்று அவர் கேட்பது சிறுபிள்ளைத்தனம். 

‘இங்குள்ள நிகழ்வுகளை வெளியே சரியாக காட்டுகிறார்கள். அதனால் மக்கள் சரியாக வாக்களிக்கிறார்கள். எனவேதான் சக்தியின் நியாயமான வெளியேற்றம் நிகழ்ந்தது’ என்று சிநேகனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ரைசா. பொதுமக்களிடம் தாங்கள் தவறாக சித்தரிக்கப்படுகிறோமோ என்று போட்டியாளர்கள் நினைத்துக் கொண்டிருந்தது தவறு என்பதை அவர்கள் உணர்ந்தால் சரி. கண்ணாடியால் பிம்பத்தை அப்படியேதான் காட்ட முடியும்.

ஓவியாவின் வெளியேற்றத்திற்கு கூட ஆரவ் இத்தனை கலங்கவில்லையே, சக்திக்கு போய் இப்படி கலங்குகிறானே’ என்று ரைசாவிற்கு ஆச்சரியம். எவர் மனதை எவர் அறிவார்?

Bigg Boss

‘ஜூலி, சக்தி, நமீதா என்று தனக்குப் பிடித்தவர்கள் அனைவரும் வெளியேறி விட்டார்கள்’ என்று கலங்குகிறார் காயத்ரி. மீதம் இருப்பவர்களை பிடித்தவர்களாக மாற்றிக் கொள்ளாமல் சென்றவர்களை குறித்து கலங்குவது வீண். மட்டுமல்லாமல் ஜூலி மீது அவருக்கு இருந்தது அன்பா, அதிகாரமா என்பது விவாதத்திற்கு உரியது. பல நேரங்களில் ஜூலியை அவர் தோழி போல நடத்தியதாகத் தெரியவில்லை. தன் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரஜையைப் போல்தான் நடத்தினார். 
‘பொண்ணுங்க எல்லாம் பயங்கரமானவங்களா இருக்காங்க’ என்பது காயத்ரியின் புலம்பலில் இடையே வெளிப்பட்ட ஒரு தத்துவ முத்து. சேம் சைட் கோல். 

காயத்ரியின் கூடவே இயற்கையும் அழுதது. மழை பெய்தது. ‘அடுத்து என்ன நிகழுமோ’ என்று சிநேகன் கவலைப்பட்ட போது, ‘அது அப்புறம்”, இப்போது மழையை ரசிப்போம்’ என்றார் ரைசா. ஓவியாவின் வாரிசாக மாறிக் கொண்டு வருகிறார்

வெளியே வந்த சக்திக்கும் கமலுக்கும் உரையாடல். 

‘சக்தி’ நடித்த திரைப்படம் ஒன்று ஐம்பது நாட்களுக்கும் மேலாக ஓடியது என்றால் அது ‘பிக் பாஸாக’ மட்டும்தான் இருக்க முடியும் என்று இணையத்தில் எவரோ ஜாலியாக கலாய்த்திருந்தார்.

இதே போல ‘Trigger’ என்கிற வார்த்தையை வைத்துக் கொண்டு சக்தியை பாடாய் படுத்தி விட்டார் கமல். ஒரே ரகளை. இனி ‘டிரிக்கர்’ பிராண்ட் ஜீன்ஸ் கூட சக்தி உபயோகப்படுத்த மாட்டார். அத்தனை கலாய்ப்பு.

‘ஐம்பது நாள் அனுபவம் எப்படி இருந்தது’ என்று கமல் கேட்டதற்கு ‘மற்றவர்கள் கவனிக்கிறார்கள் எனும் போது நாம் செய்யும் தவறுகளை நாமே உணர்கிறோம் என்று தெரிகிறது. உள்ளுக்குள் இருந்து திருத்தும் குரல் எழுந்து கொண்டே இருக்கிறது. எனவே ‘என்னை’ உணர்ந்தேன்’ என்றார் சக்தி. நல்ல விஷயம்.

இதற்கு எதிர்திசையிலும் ஒரு விஷயம் இருக்கிறது. 

‘எவராலும் கண்காணிக்கப்படாத போதும் சரியாக இயங்குவதற்குப் பெயர்தான் நேர்மை’ என்றொரு பொன்மொழியை சில அரசு அலுவலகங்களில் பார்த்திருக்கிறேன். 

‘சமநிலைக்கு கொண்டு வந்த  நிலைக்கண்ணாடி என்று சொல்லலாமா?’ என்று கேட்ட கமல், ‘சக்தி’ தரிசனம் கிடைத்ததா?’ என்று கேட்டதும் நுட்பமானதொன்று. 

**

‘இந்த வீட்டில் துவக்கத்திலிருந்தே உங்களுக்கு பிடிக்காத நபராக இருந்தவர் எவரென்று சொல்ல முடியுமா?’ என்றொரு தூண்டிலைப் போட்டார் கமல். வகையாக வந்து மாட்டிக் கொண்ட சக்தி ‘ஓவியாவைச் சொல்வேன். அவர் செய்த சில விஷயங்கள் பிடிக்கவில்லை. ‘அடிச்சிடுவியா’ என்பது மாதிரியே பக்கத்தில் வந்து நின்னாங்க’ என்றார். 

Bigg Boss

ஓர் ஆண் என்கிற அகம்பாவத்துடன் ஒரு பெண்ணை நோக்கி அறைவதற்காக கை ஓங்கிய சக்தி, தன் தவறை இன்னமும் கூட உணரவில்லை என்பது வருத்தம். அவருக்கு காட்டப்பட்ட குறும்படத்தை பார்த்த போதாவது அவருக்கு உறைத்ததா என்று தெரியவில்லை. பொதுவெளில் ஓர் ஆண் தன்னை அடிக்க வருவதாகச் சொன்னால் சுயமரியாதையும் துணிச்சலும் உள்ள பெண், ஓவியா போலத்தான் எதிர்வினை செய்ய முடியும்; செய்ய வேண்டும். 

மொத்த வீடியோக்களையும் பார்த்த பிறகு சக்தி இதை உணர்வார் என நம்புவோம். அல்லது அவருடைய சுற்றத்தாராவது அவருக்கு இதை உணர்த்த வேண்டும். காயத்ரியைப் போலவே சில விஷயங்களில் தொடர்ந்து பிடிவாதம் பிடிக்கும் குணம் சக்திக்கு இருக்கிறது. 

‘அவங்க என்னை trigger பண்ணிட்டே இருந்தாங்க’ என்று சொல்லி சக்தி மாட்டிக் கொண்டார். சபையினரிடமிருந்து ஆரவாரம் எழுந்தது. அவர்கள் தன்னைப் பாராட்டுகிறார்கள் போல என தவறாக நினைத்துக் கொண்ட சக்தி மேலும் உற்சாகமாகப் பேச முயல, இடைமறித்த கமல் ‘நீங்க வெளியே போனவுடன் இதைப் புரிந்து கொள்வீர்கள்’ என்றார். பிறகுதான் சக்திக்கு புரிந்தது, இந்த வார்த்தையுடன் இணைத்து தன்னைக் கலாய்த்திருக்கிறார்கள் என்பது. 

நம்முடைய தோரணையில், உடல்மொழியில் தான் அறியாமலேயே சில விஷயங்களை, சில வார்த்தைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவோம். மற்றவர்கள் சுட்டிக்காட்டாமல் இதை நம்மால் உணரவே முடியாது. இதிலுள்ள தவறான விஷயங்களை சுற்றி இருக்கிறவர்கள் நிச்சயம் சுட்டிக் காட்டுவது நல்லது. 

**

‘வீட்டினுள் இருப்பவர்களில் உங்கள் நெருங்கிய நண்பர் யார்?’ என்பதற்கு சக்தி வேறு பதிலை சொல்லியிருக்கவே முடியாது. எனவே நேர்மையாக ‘காயத்ரி’ என்று ஒப்புக் கொண்டார். ‘பத்து வருடங்களுக்கும் மேலாக என் நெருங்கிய நண்பர். அவருடைய முக்கியமான பலவீனம் கோபம். என்னைப் போலவே உடனே கோபப்பட்டு விடுவார். அது தவறு என்று உணரும் போது அழத் துவங்கி விடுவார்’ என்றார். (முந்தைய காட்சிகளில் காயத்ரி அழுதது, தன் தவறை உணர்ந்து என்பது போல் தெரியவில்லை. உணர்ந்திருந்தால் மகிழ்ச்சி).

‘அழுவதற்குப் பதிலாக தன்னை திருத்திக் கொள்ளலாம் அல்லது மன்னிப்பு கேட்டு விடலாமே’ என்று கமல் சொன்னது அபாரம். கமலின் அனுபவம் இது போன்ற இடங்களில் பளிச்சிடுகிறது. ‘அறுபது வயதைக் கடந்த பிறகுதான் இது போன்ற ஞானங்கள் எல்லாம் ஏற்படும். பிக் பாஸ் ஒரு நல்ல வாய்ப்பு. இது போன்றவைகள் எல்லாம் எனக்கு இளமையில் கிடைக்கவில்லையே என்று ஏக்கமாக இருக்கிறது என்றார் கமல். உண்மை. 

‘உங்கள் தந்தையின் அந்தஸ்து உங்களுக்கு உள்ளே உதவியாக இருந்ததா?’’ என்றொரு சூசகமான கேள்வியை கமல் எழுப்பினார். சக்தியையும் காயத்ரியையும் திரைப்பிரபலங்கள், செல்வாக்கானவர்கள் என்று நினைத்துக் கொண்டுதான் பெரும்பாலோனோர் உள்ளே அமைதியாக இருந்ததாகத் தோன்றியது. 

அதை ஒருமாதிரியாக ஒப்புக் கொண்டார் சக்தி. ‘இதுவரை என் தந்தையின் நிழலில் இருந்தேன். அதிலிருந்து விடுபட்டு எனக்கான சுயஅடையாளத்தை இந்த நிகழ்ச்சி உருவாக்கித் தந்தது என்று நம்புகிறேன். இனி மக்களில் ஒருவனாக இருப்பேன்’ என்பது அவர் தன்னை உணர்ந்திருக்கிறார் என்றுதான் தோன்ற வைக்கிறது. 

‘அங்கீகாரம் என்பது உடனே கிடைக்காது. அதற்கு பல வருடங்கள் ஆகும். அதற்கான உழைப்பு தேவை. ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட விவரங்களை மற்றவர்கள் அறியவே எத்தனையோ வருடங்கள் ஆகிறது’ என்பதை உதாரணத்துடன் கமல் சுட்டிக் காட்டியது அருமை.
‘இந்த வழக்கத்திற்கு எதிர்திசையில், புகழ் வரப்போவதற்கு முன்னால் உங்களைப் பற்றிய ஆய்வுகள் பிக் பாஸ் மூலமாக முடிந்து விட்டன’ பயன்படுத்திக் கொள்ளுங்கள் என வாழ்த்தினார் கமல். 

**

‘உங்களை டிரிக்கர் பண்றேன்னு நெனச்சுக்காதீங்க’ என்று பரணி குறித்த பஞ்சாயத்தை ஆரம்பித்தார் கமல். இந்த விஷயம் குறித்து முன்பு அதிகம் கேட்கப்படாததிற்கு வட்டியும் முதலுமாக, தனித்தனியாக அவர் இதை அணுகுவது ஒருவகையில் மகிழ்ச்சி. சபையோரின் கைத்தட்டலும் இதை எதிரொலித்தது. 

‘இதற்கு சக்தி சொன்ன விளக்கம் இதுவரை எவரும் சொல்லவில்லை. இது ஏற்புடையதாக இருக்கிறது’ என்றார் கமல். ஆனால் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை. இதை பிற்பாடு கமலே உணர்ந்தது போல்தான் தோன்றியது. 

‘பிக்பாஸின் உத்தரவுபடிதான் பரணி சுவரேறிக் குதித்தார் போல என்று நாங்கள் நினைத்தோம்’ என்று சக்தி கூறுவது உண்மையா என தெரியவில்லை. பிக் பாஸ் சுவர் ஏறியெல்லாம் குதிக்கச் சொல்ல மாட்டார் என்பதை யூகிப்பது எளிய விஷயம்.

மற்றவர்களின் கூற்றுப்படி பரணி சில தவறுகளை உள்ளே செய்திருந்தாலும் கூட, ஒருவர் மனஉளைச்சலில் ஆபத்தான விஷயத்தில் இறங்கும் போது, எல்லா கோப தாபங்களையும் விட்டு விட்டு உடனே சென்று உதவி செய்வதோ, ஆதரவாக பேசுவதோதான் முறை. அன்றாட வாழ்க்கையில் கூட நாம் இதைப் பார்க்கலாம். பரம்பரைப் பகை என்றாலும் கூட ஒருவருக்கு எதிர்பாராத விபத்து என்றால் உதவி செய்ய ஓடுவதே அடிப்படையான மனித நேயம். 

Bigg Boss

‘பொய்யர், நடிக்கிறாள்’ என்றெல்லாம் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டுக் கொண்டிருந்த ஜூலிக்கு காட்டப்பட்ட அதே மனிதநேயம், நிச்சயம் பரணிக்கும் காட்டப்பட்டிருக்க வேண்டும். 

**

‘தரப்பட்ட task-களில் முதலில் ஆர்வமாக இருந்த நீங்கள் பின்பு ஏன் ஆர்வமிழந்து விட்டீர்கள்’ என்று கேட்டார். ‘உடலுழைப்பு சம்பந்தமான விளையாட்டுக்கள் சோர்வடைய வைக்கின்றன. உளைச்சலைத் தருகின்றன’ என்றார் சக்தி. ‘அதையொரு அனுபவமாக எடுத்துக் கொள்ளலாமே, கூடுதலான விஷயத்தை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அதைப் பயன்படுத்திக் கொள்ளலாமே’ என்று கமல் சொல்வது சரி. 

மேற்கத்திய நாடுகளில் மாணவர்கள் ஒருவருடம் கட்டாயம் ராணுவப் பணியில் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறது. அது செல்வந்தரின் மகனோ, அல்லது ஏழையின் மகனோ.. நிச்சயம் இதில் கலந்து கொள்ள வேண்டும். உடல் சார்ந்த சிரமங்களை அங்கு எதிர்கொள்ளும் போது வாழ்வின் பல அடிப்படையான விஷயங்களை கற்றுக் கொள்ள முடிகிறது. நெருக்கடியான சூழல்களில் அவை உதவும். நம் நாட்டிலும் அது போன்றதொரு ஏற்பாட்டைச் செய்யலாம். 

இதற்கான உதாரணத்தை தன் சுயவாழ்க்கையில் இருந்தே சொன்னார் கமல். அந்த தகவலை நானும் முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். 

**

போட்டியாளர்களின் புகைப்படங்களை வட்டத்தட்டில் ஒட்டி, அதைச் சுற்றும் போது எவருடைய புகைப்படத்தின் மீதான அம்புக்குறி வந்து நிற்கிறதோ, அவரைப் பற்றி ஒரு வரியில் திரைப்படத் தலைப்பாக சொல்லி, சுருக்கமான விமர்சனத்தையும் சொல்ல வேண்டும் என்கிற விளையாட்டு.

வையாபுரிக்கு ‘சாப்ளின் செல்லப்பா’ என்றார் சக்தி. வையாபுரியின் சில குறைகளை அவருடைய வயதும் நகைச்சுவையுணர்வும்தான் காப்பாற்றுகிறது போல. 

பிறகு சுற்றியதில் வந்து நின்றது காயத்ரியின் படம். விதி வலியது. சபையும் சக்தியின் அபிப்ராயத்தைப் பற்றிக் கேட்க ஆவலாக இருந்தது.

Bigg Boss 

படத்தின் பெயர் ‘குழந்தை உள்ளம்’ என்றார் சக்தி. ஆனால் சபை இதை ஒப்புக் கொள்ளவில்லை. ஏமாற்றமான கூக்குரல்கள் ஒலித்தன. ‘தாலாட்டு பார்த்தீங்களா’ என்று குழந்தை என்கிற வார்த்தையுடன் இணைத்து அற்புதமாக கிண்டலடித்தார் கமல். 

‘காயத்ரி ஒரு குழந்தை போல. கோபம்தான் அவரது பலவீனம். அதைத்தவிர உள்ளே வேறு ஒன்றுமில்லை. அவருக்கு சிறந்த நண்பனாக இருப்பேன்’ என்றார் சக்தி. மகிழ்ச்சியான விஷயம். இக்கட்டான சூழலிலும் நண்பரை விட்டுக்கொடுக்காமல் பேசுபவரே உண்மையான நண்பன். 

‘காயத்ரியை அவரது தந்தையின் இழப்பிற்கு முன்னரும் பின்னரும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்’ என்றொரு தனிப்பட்ட காரணத்தைக் கூறினார் சக்தி. இருக்கலாம். அது சார்ந்த உளைச்சல் கூட காயத்ரியின் சமநிலையின்மைக்கு காரணமாக இருக்கலாம். (இதே காரணத்தை ஓவியாவிற்கும் கூட பொருத்திப் பார்க்கலாம். அவருடைய தாயும் சமீபத்தில்தான் புற்றுநோய் காரணமாக மறைந்து போனார். இந்த விஷயம் சக்திக்கு தெரியுமா என தெரியவில்லை).

மற்றவர்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பது, அதை சரியாக உபயோகித்து கிண்டலடிப்பது போன்ற சில ஆதாரமான திறமைகள் சக்தியிடம் இருக்கின்றன. ஒரு நடிகருக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய விஷயம் இது. 

ஆயிரம் பலங்கள் இருந்தாலும் ஒரேயொரு பலவீனம் ஒரு நபர் பற்றிய எதிர்மறைச் சித்திரத்தை பிரம்மாண்டமாக உருவாக்கி விடுகிறது. தன்னுடைய திறமைகளை சக்தி வளர்த்தெடுத்து நடிப்புத்துறையில் பிரகாசிப்பார் என நம்புவோம். 

சக்தியைப் பற்றிய குறும்படம் ஒன்று காட்டப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் அவர் கழித்த தருணங்கள். ஒவியா பற்றிய பகுதி வந்த போது ‘அடடா.. நாமும் ஸாரி சொல்லியிருக்கலாமோ’ என்று அவருக்குத் தோன்றியதா என தெரியவில்லை. 

‘கோபத்திற்கான பயிற்சி முகாம்’ என்கிற குறிப்புடன் சக்திக்கு விடை தந்தார் கமல்.

**

50 நாட்கள் காட்சிகளின் தொகுப்பு ஒன்று பிக் பாஸ் வீட்டு உறுப்பினர்களுக்கு காட்டப்பட்டது. பாப்கார்ன், சோபா சகிதமாக உட்கார்ந்து ரசித்தனர். பல்வேறு வகையான உணர்ச்சி பாவங்கள் அவர்களின் முகங்களில் வெளிப்பட்டன. ஓவியா பற்றிய காட்சிகளின் பிரதிபலிப்பாக ஆரவ்வின் முகபாவம் கவனிக்கத் தகுந்ததாக இருந்தது. போலவே காயத்ரியின் முகபாவங்களும். 

ஓவியாவின் உற்சாக தருணங்களைப் பார்க்க நமக்கும் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. 

Bigg Boss

பிறகு அறுசுவை விருந்து. ஆட்டுக்கு ஏன் இலையும் தழையும் அதிகமாகப் போடுகிறார்கள் என்று தெரியாமல் உற்சாகமாக உணவருந்தினார்கள் போட்டியாளர்கள். ‘அவ்வை சண்முகி’ திரைப்படத்தில் டெல்லி கணேஷ் புலம்புவது போல ‘தெளிய வைத்து தெளிய வைத்து அடிக்கும் உத்தி இது போல. 

‘அய்.. சைட்டிஷ் வந்துடுச்சு.. சரக்கு இனிதான் வரும் போல’ என்று இளைஞர்களுக்கே உள்ள குறும்பை வெளிப்படுத்தினார் ஆரவ். (அடப்பாவி. அப்ப உள்ள கண்கலங்குனது மாதிரி இருந்ததெல்லாம் நடிப்பா).

பிக்பாஸ் மற்றும் கமல் தந்த பரிசுகளுக்காக போட்டியாளர்கள் நன்றி சொன்னார்கள். 

**

‘சில நேரங்களில்…. சில மனிதர்கள். சில தவறுகள் செய்யத்தான் செய்கிறார்கள். மனிதர்கள்தானே…. தவறுகள் குற்றங்கள் அல்ல…  என்பதை பொருத்தமான நேரத்தில் சரியான தோரணையில் சொன்னார் கமல்.

 ‘கைத்தட்டுங்கப்பா…’ என்பது போல் பின்பு இடைவெளி விட்டார். ‘கோர்வையா சொல்லிட்டேன்ல’

எழுத்தாளர் ஜெயகாந்தனின் கூற்று அது என்று பிறகு வெளிப்படுத்தியது சிறப்பு. 

சில வரவுகள் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவிருக்கின்றன என்றொரு அறிவிப்பை கமல் வெளியிட்டார். ‘உங்களுக்கு சந்தோஷம். ஆனால் உள்ளே இருப்பவர்களுக்கு எப்படியோ’ என்று சிண்டு முடியவும் தவறவில்லை.

Bigg Boss

ஓவியா மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ‘சில வரவுகள்’ என்பதைக் கேட்ட போது அங்கிருந்த சபையும் ‘ஓவியா.. ஓவியா..’ என்று கூவியது. ‘எனக்குத் தெரியாது. வரவிரும்புபவர்கள் வருவார்கள்’ என்றார் கமல்.

என்னளவில் ஒவியா மீண்டும் வீட்டுக்குள் வருவது பொருத்தமான முடிவாக இருக்காது. டெண்டுல்கர் கிரிக்கெட் மேதைதான். ஓய்வு பெற்ற பிறகு ‘சரி.. நான் மீண்டும் வந்து ஆடுகிறேன்’ என்றால் அது நன்றாகவா இருக்கும்? 

சில பிரிவுகள் நியாயமானவை; தேவையானவை. அவை அப்படியே இருக்கட்டும்.

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/99043-will-gayathri-be-put-into-the-same-position-as-oviya-bharani-what-will-happen-next-happenings-of-bigg-boss.html

Link to comment
Share on other sites

தனக்குத்தானே ட்ரிக்கர் ஆகிறாரா காயத்ரி?! என்ன நடக்கும்? பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (50-ம் நாள்) #BiggBossTamilUpdate

பிக் பாஸ் தொடர்

பிக் பாஸ் விளையாட்டின் 50வது நாள் இது. இத்தனை விரைவில் ஐம்பது நாட்களை கடந்து விட்டது என்று ஆச்சரியமாக இருக்கிறது. இத்தனை குறுகிய காலத்திற்குள் இந்த விளையாட்டு தமிழக மனங்களுக்குள் பிரிக்க முடியாதபடிக்கு ஆழமாக பதிந்து விட்டது. 

இதையொரு வம்பு நிகழ்ச்சியாக மட்டும் பார்க்காமல், போட்டியாளர்களின் குறைகாணும் வாய்ப்பாக மட்டும் பயன்படுத்தாமல் தம்மை நோக்கிய சுயபரிசீலனைக்கான பரிசோதனையாகவும் ஆக்கிக் கொள்ள வேண்டும். பிக் பாஸ் விளையாட்டு வெற்றியோ, இல்லையோ.. அத்தனை மணி நேரங்களை செலவு செய்த பார்வையாளர்களின் வெற்றி இதுவாகத்தான் இருக்கும். 

ஐம்பதாவது நாள் மட்டுமல்ல, இன்று நாமினேஷன் நாளும் கூட. எனவே அது சார்ந்த எதிர்பார்ப்பும் இருக்கிறது. 

‘சக்தி’ விலகி விட்டதால் எதிர்பார்த்தபடியே காயத்ரி இன்று ருத்ரமூர்த்தியாக மாறினார். வழக்கத்தை விடவும் அதிகமாக தன்னை இன்று அம்பலப்படுத்திக் கொண்டது ஒரு துன்பியல் நாடகம். வாக்காள பெருமக்கள் உற்சாகமாக தயாராகி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

அதற்கு முன் - 

**

காயத்ரி

49வது நாளின் நிகழ்வுகள் இன்னமும் முடியவில்லை. காயத்ரி இன்னமும் அச்சத்தின், பதட்டத்தின் பிடியில் இருப்பது போலிருக்கிறார். எனவே அதுவே மிரட்டலாக வெளிவருகிறது. ‘என்னைக் கட்டுப்படுத்த சக்தியும் இல்லை. எனவே ரைசாவை ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லுங்கள். இல்லையெனில் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது’ என்கிறார். ஏறத்தாழ இது மிரட்டல்தான். ஆனால் இது உண்மையில் அவருடைய உள்ளார்ந்த அச்சத்தின் வெளிப்பாடு. 

இன்னொரு பக்கம் ரைசாவிற்கும் இது சார்ந்த கவலை இருக்கிறது. கவுண்டமணி பாணியில் ‘பாருங்க மக்களே.. இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை.. நான் ஏதாவது செஞ்சனா.. அவங்களா.. ஏதோ சொல்லிட்டே இருக்காங்க. ஓவியாவின் நிலைமைதான் எனக்கும் ஆகி விடும் போலிருக்கிறது’ என்றார். 

ரைசா

‘அது உன் மீதுள்ள கோபமில்லை. என் மீது காட்ட முடியாத கோபத்தைத்தான் உன் மீது காட்டுகிறார்.’ என்கிறார் சினேகன். 

வேலியில் செல்கிற ஓணான் எந்த திசையில் பாய்ந்தாலும் பிரச்னைதான். 

**
சக்தி போய் விட்ட பிறகு தானும் கிளம்பி விட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த காயத்ரிக்கு திடீரென்று என்ன ஞானோதயம் வந்ததோ தெரியவில்லை, ஆர்த்தி, ஜூலியின் சார்பாக தான் இருந்து இந்த விளையாட்டில் ஜெயிக்க வேண்டும் என விரும்புகிறார். 

முதலில் வெளியேற அடம் பிடிக்கிறவர்கள், பின்பு அங்கேயே தங்க விரும்புவது பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இடைப்பட்ட நேரத்தில் என்னதான் நடக்கிறது? ‘கெட்ட வார்த்தை பேசுகிறேன் என்கிறார்கள். என்னை நிரூபிப்பதற்காகவது இங்கு இருப்பேன்’ என்றவர் கூடவே ‘ஆனால் என்னை எவராவது தூண்டி விட்டால் என்ன செய்வேன் என்று தெரியாது’ என்கிற குறிப்பையும் சொல்லத் தவறவில்லை. தாம் ‘Trigger’ சக்தியின் நண்பர் என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

**
50 வது நாள் காலை. 

பிக் பாஸ் காலை

காயத்ரி – ரைசாவின் மனநிலை தெரியாமல், ‘Where is the party, அட.. எங்க வீட்ல party’  என்கிற பாடல் அசந்தர்ப்பமாக ஒலித்தது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது போல, ஓவியா இல்லாத வீட்டில் பாடல் இசைப்பது வீண். அதற்குப் பதில் ஷெனாய் இசை போட்டு போட்டியாளர்களை எழுப்பலாம். 

வழக்கத்திற்கு மாறாக கணேஷ், காயத்ரியுடன் இணைந்து நடனம் ஆடினார். 

பிக் பாஸ் நடனம்

‘நான் ஒண்ணுமே செய்யலையே. பின் ஏன் என் மேல அவங்க கோபப்படறாங்க’ என்பது ரைசாவின் குழப்பமான கேள்வி.

காயத்ரி தன்னிடம் சொன்னதாக சொன்ன விஷயங்களை ரைசாவிடம் சொன்னார் சினேகன். இது மாதிரியான போக்கை சினேகன் இன்னமும் மாற்றிக் கொள்ளவில்லை.

‘அவளை ஒழுங்கா இருக்கச் சொல்லு. முட்டியை உடைச்சுடுவேன். நூறு ரூ-க்கு நடிக்கச் சொன்னா, ஆயிரம் ரூ.-க்கு நடிக்கறா.. (இதையேதான் காயத்ரியும் நாமினேஷன் சமயத்திலும் சொன்னார்). நான் எவிக்ஷன்-ல வெளிய வர்றது ரொம்ப ஈசி. ஒரேயொரு கெட்ட வார்த்தை போதும்’ என்று காயத்ரி சொன்னதையெல்லாம் ரைசாவிடம் போட்டுக் கொடுத்தவர், தன் சார்பிலும் புகார்ப்பட்டியலை வாசித்தார். 

ஜூலி – ஆர்த்தி சண்டை வருவதற்கு காயத்ரிதான் காரணம். நிறைய பேர் இங்கிருந்து வெளியேறியதற்கும் காரணம் அவரே. ஜூலியை காயத்ரி நன்றாக உபயோகித்துக் கொண்டார். “ஓவியா அளவிற்கு ஏன் என்னைப் பார்த்துக் கொள்ளவில்லை’’ என்று வெளியேற்றத்தின் போது ஜூலி என்னைக் கேட்டார். ‘உனக்கு காயத்ரி குழுவின் ஆதரவு இருக்கிறது. ஆனால் ஓவியா தனிமையில் இருக்கிறாரே’ என்பதாக  சினேகன் சொன்னது சரியான காரணம். 

சினேகன், ரைசா

‘காயத்ரிக்கு எதிரிப் பட்டியலில் இருக்கிறவர்களை நான் ஆதரித்ததால், என்னையும் அவர் எதிரியாக எண்ணுகிறார். இப்போது உன்னை ஆதரிப்பதால்தான் என்னிடமும் பாராமுகமாக இருக்கிறார்’ என்று சினேகன் சொன்னதைக் கேட்டு அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை.

இந்திய மரபில் ஆலயங்களுக்கு பயணம் செய்வது ஒரு முக்கியமான பழக்கம். ஆன்மீகத்தின் வழியாக அதைப் பிணைத்து வைத்திருக்கிறார்கள். குறுகிய இடத்தில் இருக்கும் போது நம் மனமும் குறுகலாகிறது. இதுவே நிறைய இடங்களுக்குப் பயணப்படும் போது, பல பிரமாண்டமான வெளிகளை, பல்வேறு மனிதர்களை எதிர்கொள்ளும் அனுபவங்கள் கிடைக்கும் போது நம் மனமும் விசாலமாகிறது. மிக குறிப்பாக இமயமலை போன்ற மலைப்பிரதேசங்களின் உச்சிக்கு பயணம் செய்கிறவர்களுக்கு, இந்தப் பிரபஞ்சத்தின் முன்னால் தான் ஒரு தூசி அளவு கூட இல்லை’ என்கிற உள்நோக்கிய மனத்திறப்பு நிகழ்வதாகச் சொல்கிறார்கள். பொதுவாக ஆலயங்கள் பிரமாண்டதாக கட்டப்படுவதற்கு இது ஒரு காரணம் என்கிறார்கள்.  பிக் பாஸ் எனும் சிறிய வீட்டில் எத்தனை அரசியல். அது சரி, அதுதானே இந்த விளையாட்டின் நோக்கமும்.

ஜன்மாஷ்டமியை பூஜை செய்து கொண்டாடும் task-ஆம். இதற்கெல்லாம் கூடவா task? பல்வேறு சமூகங்களைச் சார்ந்த பார்வையாளர்களும் பார்க்கும் ஒரு ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் குறிப்பிட்ட மத அடையாளத்தைப் பற்றிய பண்டிகையை கொண்டாடச் சொல்லி வலியுறுத்துவது சரியா? ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீதான சார்பு அரசியல் வளர்ந்து வரும் நிலையில் இது சார்ந்த விஷயங்களை பிக் பாஸ் ஜாக்கிரதையாக கையாள வேண்டாமா?

இதே போல் மற்ற மதங்களின் பண்டிகைகளையும் சமமாக கொண்டாடினால் மட்டுமே இந்த பூஜை விளையாட்டு சரியாக இருக்கும். 

 

**
காயத்ரி பிரச்னை பற்றி, கணேஷ் மற்றும் ஆரவ்விடம் தான் பேசியதாக சினேகன், ரைசாவிடம் தெரிவித்தார். “கமல் வெளிப்படையான கருத்தைக் கேட்ட போதுதான் ரைசா சொன்னார். அவ்வளவுதானே? இதற்கு ஏன் காயத்ரி இத்தனை கோபம் கொள்ள வேண்டும். ஏன் இந்த திடீர் மாற்றம்? கடந்த வாரங்களில் இருவரும் இணைந்துதானே இருந்தார்கள்? சரி, இனி ரைசா அவர் விஷயத்தில் தலையிட மாட்டார். காயத்ரியும் ரைசாவின் விஷயத்தில் தலையிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்’

இப்படியாக மூன்றாம் உலகப் போர் நிகழாதவாறு இதர நாட்டின் அதிபர்களான கணேஷ், ஆரவ்விடம் சினேகன் சமாதான உடன்படிக்கையை செய்து கொண்டார். காயத்ரி எனும் அணுகுண்டை பயன்படுத்தாமல் ஜாக்கிரதையாக கையாள்வது ஒரு முக்கிய ஷரத்தாக இந்த உடன்படிக்கையில் எழுதப்பட்டது. 

ரைசா இதற்கு திடீரென்று எரிச்சலானார். “அவங்க என்ன என் அக்கா, தங்கச்சியா, அவங்க மேல எனக்கு 0% interest-தான். (காயத்ரியை என்ன EMI –லயா வாங்கப் போறாங்க?) தற்காப்பு ஆட்டமாக காயத்ரியிடம் ஒதுங்கிச் செல்வதாக ரைசா கூறுவது ஒருவகையில் சரிதான். ஆனால் ஆட்டத்தின் முக்கிய விதியான சகிப்புத்தன்மையை கடைப்பிடிக்கும் விஷயத்தில் ரைசா பின்வாங்குகிறார். காயத்ரி இந்த விஷயத்தில் பல கிலோமீட்டர்கள் பின்னால் இருப்பதால் அவருக்கு இந்த விதி தேவையே படாது. 

**
சினேகன், ரைசா உரையாடல் தொடர்ந்தது. 

சினேகன், ரைசா

‘இரவு 03.00 மணிக்கு காயத்ரி என்னை வந்து எழுப்பினார். நான் பயந்து விட்டேன். ‘தலை பயங்கரமாக வலிக்குது. ஏதாவது மாத்திரை இருக்கா” என்று கேட்டார். கணேஷ், ஆரவ்வையெல்லாம் விட்டு விட்டு ஏன் என்னிடம் கேட்டார் என்று குழப்பமாக இருந்தது. எப்படியோ சமாளித்தேன்’ என்றார் சினேகன்.

ரைசா மீதான காயத்ரியின் பயமும் எரிச்சலும் தன்னிச்சையாக இந்த உத்தியை கடைப்பிடிக்கச் செய்திருக்கலாம். இப்போதைக்கு ரைசாவிற்கு ஆதரவாக இருக்கும் சினேகன்தான் ரைசாவின் பெரிய பலமும் ஆதரவும். அனுதாபத்தின் பேரில் அவரை தன் அணியில் இழுக்க முடியுமா என்று பார்ப்பதற்காக இந்த தலைவலி நாடகம் காயத்ரியால் நிகழத்தப்பட்டிருக்கலாம். யூகம்தான்.

சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் கூட இத்தனை சிறந்த பாயிண்டை சரியான சமயத்தில் எடுத்திருக்க முடியாது. அதைவிடவும் சிறப்பான பாயிண்ட்டை எடுத்தார் ரைசா. பொண்ணு புத்திசாலி ஆகிட்டே வருது. 

‘என் பிரச்னைகளை நானே பார்த்துப்பேன்’னு சொல்றதுதானே காயத்ரி ஸ்டைல். இப்ப என்னவாம்? இந்த உரையாடலுக்குப் பின்தானே பிரச்னை தீவிரமானது” என்றெல்லாம் தர்க்கபூர்வமான கேள்விகளை அடுக்கினார்.
 
‘என் மேல இருக்கற கோபத்தைத்தான் உன் கிட்ட காட்டறாங்க. சக்தி போன உளைச்சல் வேறு’ என்று சினேகன் சொன்னதும். விரக்தியின் உச்சத்திற்குச் சென்ற ரைசா, ‘எல்லோரும் போய் சாவுங்க’ என்றார். 

பார்வையாளர்களைத்தான் சொல்கிறாரோ? கோபப்படும் போதும் அழகாக இருக்கீங்க, மேடம். (ரைசா பேரவையின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்ததாமே?)

**

பிக் பாஸ் பூஜை

கிருஷ்ண பஜனை துவங்கியது. ‘கிருஷ்ணா, கிருஷ்ணா’ என்று கும்பிட்டுக் கொண்டிருந்த நமீதா இப்போது இருந்திருந்தால் பண்டிகை களைகட்டியிருக்கும். ‘நா என்ன சொல்ற.. எல்லாம் நல்லா.. பாட்டு பாடுது..

தன் கந்தர்வ குரலில் ‘அலை பாயுதே கண்ணா’வை காயத்ரி பாட, விழா இனிதே நிறைவுற்றது. (இது பொருத்தமான பாட்டா?)

**

பிக்பாஸ் போட்டி

தலைவி பொறுப்பிலிருந்து ரைசா விடுவிக்கப்பட்ட அறிவிப்பு வந்தது. (என்ன… சைதை தமிழரசி தாக்கப்பட்டாரா.. ஐயகோ.. கடை அடைப்பு…)

அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கப்படுவதற்கான task துவங்கியது. தலையின் மீது ஒரு பாட்டிலை வைத்துக் கொண்டு ஒரு காலையும் தூக்கி வைத்துக் கொண்டு எவர் அதிக நேரம் நின்று தாக்குப் பிடிக்கறார்களோ அவரே தலைவர். 

உடல் பலத்தை சார்ந்து இவ்வாறெல்லாம் போட்டி வைப்பது அபத்தம். பெண்கள் இதில் தோற்றுப் போகும் வாய்ப்பு அதிகமுண்டு. நாம் வாக்களித்து சட்டமன்றத்திற்கு தலைவராக அனுப்பி வைத்தவர்கள், அணிக்கு அணி தாவி சர்க்கஸ் வேலை காட்டிக் கொண்டிருக்கும் போது விளையாட்டுப் போட்டிகளின் மூலம் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது ஆபத்தானது மட்டுமல்ல, சிறுபிள்ளைத்தனமானதும் கூட. 

‘ஒரு காலைத் தூக்கி தவம் செய்யும் தாசா…’ என்கிற கடலோரக் கவிதைகள் பாடலை பின்னணியாக ஒலிபரப்பியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கரகாட்டக்காரங்க மாறி நிக்கறாங்க பாரு’ என்று தோற்று இறங்கிய வையாபுரி மற்றவர்களை கிண்டலடித்துக் கொண்டிருந்தார். 

பிக் பாஸ் பிந்து

பிந்து இறுதி வரை  தாக்குப் பிடித்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருப்பதாக யூகிக்கிறேன். அவர் முதலிலேயே இரு கையையும் சமமாக உயர்த்திக் கொண்டு நின்றார். இதன் மூலம் சமநிலையாக அவர் நிற்பதற்கான வாய்ப்பு அதிகம் இருந்தது. ஆனால் மற்றவர்கள் இதைச் செய்ய தவறி விட்டனர். 

பிந்து தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். (சரி, என்ன செஞ்சு தொலையறது, பிந்து பேரவையும் ஒண்ணு ஆரம்பியுங்க)

**

இன்றைய நாளின் அதிகம் எதிர்பார்க்ப்பட்ட பகுதி வந்தது. Nomination. வழக்கமாக ரகசிய அறையில் தனியாக நடக்கும் இந்த சடங்கு இந்த முறை வில்லங்கமாக ஆக்கப்பட்டது. ஆம், பொதுவில் நடக்கும் இந்த நிகழ்வில் இருவரை நாமினேட் செய்து விட்டு அதற்கான காரணங்களையும் கூற வேண்டும்.

பிக் பாஸ், எவிக்‌ஷன்

ஆடுகளுக்கு இலை, தழையைப் போட்டு விட்டு களத்தில் மோத விடுவதற்காக அழைத்துச் செல்லும் ‘வீர விளையாட்டை’ பிக் பாஸ் நடத்த முடிவு செய்து விட்டார். ‘This is called வெச்சு செய்யறது’ என்றார் தலைவி பிந்து. ‘வட போச்சே’ மாதிரி ‘எனக்கு கட்அவுட் போச்சே’ என்பது தலைவியின் ஆதங்கம்.

**
கொலைவெறியில் காத்துக் கொண்டிருந்த காயத்ரி, தன் பெயர் அறிவிக்கப்பட்டவுடனேயே ரைசாவின் கட்அவுட் அருகில் சென்றார். செய்முறைக்கான விதிகள் கூட சொல்லி முடிக்கப்படாத நிலையில், அவசரம் அவசரமாக ரைசா படத்தின் மீது ஸ்பிரே அடித்தார். 

பிக் பாஸ், காயத்ரி

“ரைசா முதலில் தன்னை வெளிப்படுத்தவில்லை. நான்தான் அவரை அணுகி பல விஷயங்களை கற்றுத் தந்தேன். இப்போது அதுவே எனக்கு வினையாகி விட்டது. பத்து ரூபாய்க்கு நடிக்கச் சொன்னா ஐம்பது ரூபாய்க்கு நடிக்கறாங்க. (அப்ப.. நடிக்கவா.. சொல்லித் தந்தீங்க.. சிவாஜி படங்களை உதாரணம் காட்டிட்டீங்களோ). அவங்களுக்கு Attitude அதிகமாகிடுச்சு. மரியாதை இல்ல. இதை வெளியில் காண்பித்தால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ளட்டும். எனவேதான் அவரை வெளியே அனுப்புகிறேன்’ என்று பொரிந்து தள்ளினார். (நீங்கள் வெளியே வந்தால் கூட அந்தப் பாடம் கற்றுத்தரப்படுமோ என்று தோன்றுகிறது, காயத்ரி)

இப்படியாக காயத்ரி ரகளை செய்து கொண்டிருந்த போது ரைசாவின் எதிர்வினையாக அவரின் முகபாவங்கள் ரசிக்கத்தக்கதாக இருந்தன. (ம்.. சொல்லுங்க.. அண்ணாச்சி… சொல்லுங்க..) ‘இனிமே இந்தப் போட்டி உக்கிரமா இருக்கும். வையாபுரிக்கு பிஞ்சு உடம்பு, மனசு.. தாங்க மாட்டாரு. எனவே அவரையும் நாமினேஷன் செய்யறேன்’ என்று கருணை காட்டினார் காயத்ரி. ‘நூறு நாள் இருப்பேன்’ என்று வீட்டம்மணியிடம் சபதம் போட்ட வையாபுரி உள்ளுக்குள் வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்.

கணேஷூம் காயத்ரியை தேர்ந்தெடுத்தது ஆச்சரியம். ‘காயூ… உங்க கிட்ட நெறய நல்ல குணங்கள் இருக்கு. கோபம்தான் உங்களோட ஒரே பலவீனம். ஒரு விஷயம் உங்க மண்டைல ஏறிட்டா இறங்கறதுக்கு நேரம் ஆகுது. மத்தவங்க சொல்ற உபதேசங்களை அப்பத்திக்கு கேட்டுட்டு மறுபடியும் முருங்கை மரத்துல ஏறிடுவீங்க. ‘Self anyalysis’ நடக்கணும். அந்த நெகட்டிவ் விஷயத்துக்காக உங்களை நாமினேட் பண்றேன்’ என்றார். (இதுதான் ராஜதந்திரமோ)

‘ரைசா.. நீங்களும் எனக்கு நல்ல பிரெண்டுதான்..(கணேஷ்…உங்களுக்கு யார்தான் பிரெண்டு இல்ல.. வீட்டுக்குள்ள வந்த திருடனும் பிரெண்டுதான்) சில விஷயங்கள் ரூடா பண்றீங்க.. ஹர்ட் ஆகாம செஞ்சா நல்லாயிருக்கும்’ என்று ரைசாவை நாமினேட் செய்த காரணத்தைச் சொன்னார். கணேஷ் 

ஆரவு்வும் சேம்சைட் கோல் போட்டு பாசமிகு அக்காவை பொதுவில் அம்பலப்படுத்தினார். ‘கோபம்தான் உங்கள் பலவீனம்’ ரைசாவை மயிலிறகால் தடவி விட்டுச் சென்றார். (பின்ன.. ரைசா போயிட்டா…டைம் எப்படி பாஸாகும்..) ‘நீ நடந்துக்கறது சரியா இருக்கலாம். ஆனால் சிலருக்கு அப்படித் தெரியாது.”

காயத்ரியை தேர்வு செய்த வையாபுரி, கணேஷ் சொன்ன காரணத்தையே சொன்னார். ரைசாவின் நலனுக்காக அவரை வழியனுப்பி வைப்பது அவருடைய தேர்வு.
**
கணேஷை தேர்வு செய்த சினேகன் குறிப்பிட்ட காரணம் சரியானது. ‘அவர் எல்லாவற்றிலும் ஜாக்கிரதையாக நடுநிலைமை இருக்கப் பார்க்கிறார். சுயமுடிவு எடுக்காமல் எல்லோரிடமும் கலந்தாலோசிக்கிறோர். சுயமாக இல்லை’ ஆரவ்விற்கும் இதே காரணம்தான்.

‘என்னைப்பத்தி என்னங்க புரியணும் உங்களுக்கு.. எனக்கு 1990-ல் அம்மை ஊசி போட்டாங்க. 95-ல் எல்கேஜி வகுப்பு சேர்ந்தேன். அப்ப என் பக்கத்துல உட்கார்ந்திருந்த பொண்ணு பேரு காவ்யா..’ என்றெல்லாம் ஆரவ் பிறகு ஜாலியாக சினேகனை கலாய்த்துக் கொண்டேயிருந்தார்
.
ஆண்கள் தங்களுக்கு இடையே உருவாகும் பிரச்னைகளை நகைச்சுவையாக எளிதில் தாண்டி வந்து விடுகிறார்கள். ஆனால் பெண்கள்.. ப்பா….

**

பிக் பாஸ், பிந்து

தலைவி பிந்துவின் முறை. அவர் காய்களை நேரடியாக, வெளிப்படையாக நகர்த்தியதற்கு பாராட்டு. ‘காயத்ரி.. உங்களால்தான் நிறைய பிரச்னைகள் உருவாகுது. எனவே நீங்கள் வெளியே போகணும்..

And.. ‘ஆரவ்… ஓவியா பிரச்சினையில் உங்கள் மேல் தவறில்லை என்பது போல பலர் நினைக்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. உங்கள் மேல் தவறுள்ளது’ 
இறுதியாக ரைசா. 

வையாபுரியை தேர்ந்தெடுத்தற்கு காயத்ரி சொன்ன அதே காரணம். ‘போட்டி உக்கிரமா இருக்கும்’ இந்த விஷயத்தில் ரைசாவும் காயத்ரியும் ஒரே அலைவரிசையில் சிந்திக்கிறார்கள் போல.

அடுத்து காயத்ரியை தேர்ந்தெடுத்தார். எளிதாக யூகிக்கக்கூடியதுதான்.

பிக் பாஸ், ரைசா

“காயத்ரி.. உங்களுக்கு என் மேல கோபம் இருக்கு. அது ஏன்னு எனக்கே தெரியல. சமயத்துல கோபமா பேசறீங்க.. சமயத்துல சிரிச்சு பேசறீங்க. என்னால புரிஞ்சுக்க முடியல. குழப்பமா இருக்கு. ‘வீட்டுக்குப் போகணும்’ன்றது என் விருப்பம். இருந்தாலும் வெளிப்படையாக நடந்துக்க விரும்பறேன். அது உங்களுக்கு முரட்டுத்தனமா தெரிஞ்சா.. ஒண்ணும் செய்ய முடியாது’ என்பது போல் அவரது விளக்கம் இருந்தது. 

எனவே இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் இரண்டு பேர். காயத்ரி மற்றும் ரைசா.

சினேகன் மட்டுமே எவராலும் நாமினேட் செய்யப்படவில்லை. பெண்கள் வாக்கு அவருக்கு எதிராக விழாததனின் ரகசியத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஆண்களும் ஏன் எதிராக வாக்களிக்கவில்லை? சினேகனின் சமையல் திறமைதான் காப்பாற்றியதோ?

**
கடந்த வாரம் காயத்ரியை வெளியேற்றுவதற்காக மண்டையை உடைத்து கணக்குப் போட்டு வாக்களித்தவர்களுக்கு உற்சாகமான செய்தி. மறுபடியும் வீறு கொண்டு எழலாம். இடையில் வேறு ஏதாவது நீட் தேர்வு முறையில் காயத்ரி காப்பாற்றப்படுவதற்கான வாய்ப்பு இருக்காது என்றே நம்புவோம். 

இந்தக் கணிதவியல் வல்லுநர்களில் இன்னொரு பிரிவும் இருப்பதாகத் தோன்றுகிறது. அது சற்று குருரமான யோசனை. சக்தியும் வெளியேறி விட்ட நிலையில் தனிமையில் உள்ள காயத்ரியை வீட்டினுள் தங்க வைத்து ‘வெச்சு செய்யறது’ என்கிறார்கள். 

வேண்டாம். ஓவியாவாக மாறுவதுதான் இந்த விளையாட்டின் மூலம் நாம் கற்றுக் கொள்வதாக இருக்க வேண்டும். காயத்ரியாக மாறுவதல்ல.
**

நாமினேஷன் படலம் முடிந்ததும் தங்களின் தேர்வுகளைப் பற்றி போட்டியாளர்கள் தாங்களே கிண்டலடித்துக் கொண்டார்கள். எவராலும் ஸ்பிரே அடிக்கப்படாத சினேகனின் கட்அவுட்டின் மீது ஆசை தீர வர்ணம் பூசினார் பிந்து. 

பிக் பாஸ், பிந்து

மற்றவர்கள் உணவருந்தும் போது காயத்ரி செல்லவில்லை. கணேஷ் அழைத்தும் செல்லாமல் சோகத்துடன் படுத்திருந்தார். (ஓவியாவும் இதே போல் முன்பு இருந்த நிலை நினைவிற்கு வந்தது. கடவுள் இருக்கான் குமாரு)

மற்றவர்கள் உணவருந்திக் கொண்டதையும் காயத்ரி சோகமாக படுத்திருந்ததையும் ஒரே கோணத்தில் காட்டிய காமிராமேன் புத்திசாலி.

**
‘எவரும் தூங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தலைவரின் பொறுப்பு’ என்று பிந்துவின் கடமையை பிக் பாஸ் நினைவுப்படுத்தினார். (அந்த நாய் என்னதான் ஆச்சு?) தானும் நாயைப் போலவே குரல் எழுப்பினார் பிந்து. (தலைவரா இருக்கறது கஷ்டம்தான் போல). போட்டியாளர்கள் பிந்துவை அதிகம் சட்டை செய்யவில்லை. தலைவர்கள் ஏன் சர்வாதிகாரிகளாக மாறுகிறார்கள் என்கிற ரகசியம் பிடிபடுகிறது. மட்டுமல்ல, சர்வாதிகாரத்தனத்துடன் இருப்பவர்கள்தான் தலைவராக தாக்குப்பிடிக்க முடியும் போல. 

**

காயத்ரி ‘நீலாம்பரியாக’ மாறிய ஓர் உக்கிரமான தருணம் ஆரவ்வுடன் தனிமையில் பேசிக் கொண்டிருந்த போது வெளிப்பட்டது. அவரைக் கட்டுப்படுத்த சக்தியும் இல்லாத சூழல். எனவே ஆட்டம் ஓவராக இருந்தது.

“ரைசாவும் நேர்மைதான். நானும் நேர்மைதான். ஆனா நான் நேர்மையா இருக்கறது மட்டும் முரட்டுத்தனமா தெரியுதா.. ஒரு சப்பை கேரக்டர் வந்து ‘இப்படி இரு.. அப்படி இரு’ ன்னு.. நீ முகத்தை திருப்பிக்கறே.. நீ வந்து என்னை சொல்றதுக்கு ஆளே கிடையாது.. என்னோட ‘திமிரை’ நான் விட்டுக்கொடுக்க முடியாது. (நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்)  இருபது வருஷம் அனுபவம் எனக்கு இருக்கு. எத்தனையோ விஷயம் கடந்து வந்திருக்கேன். கற்பனையே செய்ய முடியாத அவலங்களையெல்லாம் கடந்து வந்திருக்கேன். இதெல்லாம் எனக்கு மேட்டரே கிடையாது.. அவளுக்கு எத்தனையோ உதவி செஞ்சிருக்கேன்.. என் கிட்டயேவா…’ என்றெல்லாம் ருத்ரதாண்டவம் நடந்தது.

ஆரவ், காயத்ரி

காயத்ரியின் கோபத்துடன் ஊடே.. அந்த வசனங்களை திறமையான மாடுலேஷனில் அவர் சொன்னதுதான் ரசிக்கும்படி இருந்தது. ரகுவரனால் கூட இப்படி பேசியிருக்க முடியாது.  சக்தியைப் பற்றி ஏதோ சொல்லியதுதான்.. காயத்ரியை அதிகம் புண்படுத்தியதாம். அதற்குத்தான் அதிகம் அழுதாராம். சக்தி வெளியேற்றத்திற்கு கூட இல்லையாம்.. (சக்தி இதைக் கேட்டு trigger ஆவாரா) ‘என்னமோ இவங்கதான் உத்தமங்க மாதிரியும்… அது……. தான் எனக்கு கோபம் வந்தது. என்கிறார் காயத்ரி.

.. அடப் போங்கய்யா.. சின்னப்புள்ளத்தனமா இருக்கு. Human behavior பற்றியெல்லாம் காயத்ரி பேசுவது சாத்தான் வேதம். 

பீதியுடன் அமர்ந்திருந்த ஆரவ், இதற்கு ஏதும் மறுப்போ கண்டனமோ சொல்லவில்லை.. (ஏன் சொல்லித்தான் பாரேன்….)

**
பிக் பாஸ் வீட்டில் பேய் இருப்பதாக ஒரு போட்டியாளரை நம்ப வைக்க வேண்டும் என்று ஒரு task. மனதளவில் எவர் பலவீனமானவர் என்று கண்டுபிடிப்பதற்காகவா இந்த விளையாட்டு? என்னமோ சிறுபிள்ளைத்தனமாக இருக்கு.

சினேகனின் தலைமையில் பலியாடாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிந்து. (கட் அவுட் முகத்தில் கரி பூசியதுதான் காரணமோ)

**
இது போன்ற விளையாட்டு நம் வாழ்க்கையிலேயே கூட தன்னிச்சையாக நடந்திருக்கும். பேய்ப்படம் ஏதாவது பார்த்துக் கொண்டிருப்போம். வழக்கமாக காற்றில் ஆடும் திரைச்சீலை கூட அன்று உக்கிரமாக ஆடுவது போல தோன்றும். பயந்து போய் படத்தை நிறுத்தி விடுவோம். ஆளாளுக்கு பேய்க்கதைகளை சொல்ல ஆரம்பிப்பார்கள். பொய்யும் மெய்யுமாக தனியனுபவங்கள் துவங்கும். தங்களை மற்றவர்கள் கவனிக்க வேண்டும் என்பதற்காக எத்தனை மசாலா சேர்க்க முடியுமோ அத்தனையும் சேர்த்து கதை சொல்வார்கள்.

பேயை நம்பாத ஒருவர் அந்தக் கூட்டத்தில் நிச்சயமாக இருப்பார். மற்றவர்களை கிண்டல் செய்து கொண்டேயிருப்பார். ஆனால் கூட்டம் கலைந்து வீட்டிற்குப் போகும் போது அவர்தான் அதிக திகிலுடன் செல்வார். 

மனம் நிகழ்த்தும் மாய விளையாட்டுக்கள் இவை. இது தற்காலிகமாக அமைந்தால் பரவாயில்லை. பிக் பாஸ் திட்டம் போல இத்தனை நீண்ட நாடகமாக நிகழ்த்துவது ‘கப்பித்தனமான’ ஐடியாவாக இருக்கிறது.

மட்டுமல்ல, பயப்படுகிறவர்களுக்கு உண்மையிலேயே ஏதாவது மனபாதிப்பு ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது. ‘என்ன வேண்டுமானாலும் செஞ்சிக்கங்க’ என்று உத்தரவு தந்த பிக் பாஸ் இதைக் கருத்தில் கொண்டாரா?

எனவே ஆளாளுக்கு பேய் இருப்பது போன்ற உணர்வுகளை பிந்துவின் மனதில் பதிவு செய்ய முயன்றார்கள். ‘நான்தான் அதிகம் பயப்படுவேன். என்னை தேர்ந்தெடுத்திருக்கலாமே’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார் காயத்ரி. (பார்வையாளர்களின் மைண்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும்) ஆனால் பயமுறுத்தப்படுவராக காயத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் என்னவெல்லாம் பிறகு நடந்திருக்கும்? task முடிந்த பிறகு மற்றவர்களின் கதி என்ன? ஒருத்தன் ஒழுங்கா ஊருக்கு போய் சேர முடியாது. 

ஆனால் இதை கணேஷிடமிருந்து மறைத்தது விளையாட்டின் விதிமீறல். ‘அவன் ஓவர் ஆக்ட்’ செஞ்சிடுவான் என்று சொல்லப்பட்டது. அவர்தான் வந்தது முதலே விருதுப்படங்களின் முகபாவத்தைக் கொண்டிருக்கிறாரே.. பிறகு எப்படி ஓவர் ஆக்ட்?

**

சினேகனின் கவிதையைக் கேட்டு பிந்து குமுறி குமுறி அழுதார். இன்னொரு முறை அந்தக் கவிதை சொல்லப்பட்டால் நம்முடைய நிலைமையும் அதுதான். 

பிக் பாஸ், பிந்து, சினேகன்

தனிமைச் சிறையில் அடைக்கப்படுவர்கள் சிறிய அசைவிற்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள் என்பதுதான் பிந்துவின் கலங்குதலுக்கு காரணமாக இருக்கக்கூடும். இந்த வாய்ப்பை தவற விட விரும்பாத சினேகன் பிந்துவிற்கு தன் வழக்கமான பாணியில் ஆறுதல் சொன்னார். (இதற்காகதான் கவிதையைச் சொன்னாரா!)

‘நம்முடைய முகமூடிகள் நம்மையறியாமலே வெளிப்பட்டு விடுவதுதான் இந்த விளையாட்டின் முக்கிய அம்சம்’ என்று சினேகன் சொல்லியது சரியானது. 

பிக் பாஸ், பேய்

‘இன்னாடா.. அவார்டா கொடுக்கறாங்க.. ரேஞ்சிற்கு சினேகன் நடுஇரவில் கத்தி கலாட்டா செய்தார். ஆனால் இந்த பேய் task-ஐ நாம் அறிவதற்கு முன்னால் விளம்பர இடைவேளைக்கு இந்தக் காட்சி காட்டப்பட்ட போது  நமக்கு டெடரராகத்தான் இருந்தது. தெரிந்த பிறகு பயமில்லை. 

பேய் பற்றிய விஷயங்களும் இப்படித்தான். நம்முடைய கற்பனைகள்தான் நம்மையே பயமுறுத்துகின்றன. 

பேய்களின் விளையாட்டு நாளைக்கும் தொடரும் போல. தொலைக்காட்சியின் மீது தாயத்து கட்டி வைக்க வேண்டியதுதான்.

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/99157-is-gayathri-triggering-herself-happenings-of-bigg-boss-day-50.html

Link to comment
Share on other sites

சினேகன் பேய் பிந்து மாதவியை மிரட்டுகிறதா... கிச்சுகிச்சுகிறதா?! பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (51-ம் நாள்) #BiggBossTamilUpdate

 

Bigg Boss

50 வது நாளின் நள்ளிரவு கலாட்டாக்கள் இன்னமும் முடியவில்லை. பேய் task-க்கிற்காக,  ‘இன்னாடா அவார்டா கொடுக்காறாங்க’ ரேஞ்சிற்கு சிநேகன் ஓவர் ஆக்ட் செய்தார். இருமும்போது ரத்தமெல்லாம் வருகிறதாம். இந்த task-ஐ பார்த்து நம் காதில்தான் ரத்தம் வருகிறது. 

**

நேற்று இந்தக் கட்டுரையில் நான் குறிப்பிட்டது போல ஓவியா இல்லாத வீட்டில் எதற்கு துள்ளலிசைப் பாடல் என்று பிக் –பாஸிற்கு தோன்றியதோ என்னமோ, ‘அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம்’ பாடல் ஒலிபரப்பினார்கள். சிநேகன் தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருந்தார். ஃபீல் பண்ணுகிறாராம். பக்கத்தில் கணேஷ்ஷூம் கவலையாக உட்கார்ந்திருந்தார். பேய் பயத்தில் இருப்பவருக்கு இவர் ஆறுதலாக இருக்கிறாராம். முடியலை. (சிநேகன் எழுதிய பாடல் வரிகள்தான் அவை) வழக்கமாக நடனமாடும் பிந்துவும் அசையாமல் பீதியுடன் அமர்ந்திருந்தார். 

Bigg Boss

**

‘ஜீனோ’ கத்தியும் ரைசா இன்று எழுந்திருப்பதாகத் தெரியவில்லை. ‘என்னைத் தூங்க விடுங்கள். அதுவரை மைக் அணியப்போவதில்லை’ என்று போராட்டத்தைத் துவங்கினார். நல்ல விஷயம். நமக்கு கிடைக்கும் ஆதாயங்களுக்காக அதிகார மையங்களிடம் எந்தளவிற்கு வேண்டுமானாலும் குனிய வேண்டும் என்றில்லை. தாக்குப் பிடிக்க முடியாத எல்லையில் நிச்சயம் எதிர்ப்புக்குரல் தர வேண்டும். 

இன்னொரு பக்கம் சிநேகன் தன் அபத்த நாடகத்தை தொடர்ந்து கொண்டேயிருந்தார். கணேஷ் திடீரென்று டாக்டர் ஆகி ‘இல்ல. ப்ரோ.. வயித்துக்குள்ளே acid இருக்கில்லையா?  அது மேல வந்துடுச்சு. அதான் ஸ்மெல் வருது’ என்று புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். (பிக் பாஸ் வீட்டில் மவுத் வாஷ் இல்லையோ?)

மருத்துவமனையில் நோயாளிகளை விசாரிக்க வரும் சில புத்திசாலிகள் இப்படித்தான் தன்னுடைய ‘மருத்துவ அறிவை’ பல்வேறு விதமாக வெளிப்படுத்தி நோயாளியையும் அவரது உறவினர்களையும் பீதிக்கு உள்ளாக்குவார்கள். சாத்துக்குடிக்கு ஆசைப்படாமல் இவர்களை உடனே வெளியேற்ற வேண்டும். 

கணேஷின் வைத்திய புத்திசாலித்தனத்தைக் கண்டு வையாபுரியும், ஆரவ்வும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். வீட்டின் உள்ளேயும் பிந்து ஏன் குருதிப்புனல் கமல் மாதிரி கூலிங் கிளாஸ் அணிந்திருக்கிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ‘பயத்தை மறைக்கத்தான்’ என்று ஆரவ் சொன்னதும்தான் எனக்கும் புரிந்தது. 

Bogg Boss

**
‘என்னை வாக்குமூல அறைக்கு கூப்பிடுங்கள் என்று அடம்பிடித்த ரைசா, பிக் – பாஸிடம் தெளிவாகவே பேசினார். ‘இரவில் என்னால் தூங்க முடியவில்லை. தொந்தரவுகள் இருக்கின்றன. ஏதேதோ சத்தம் வருகிறது.  பகலிலும் நீங்கள் தூங்கவிடவில்லையென்றால் எப்படி?’ இது சரியாக வராது.  நான் கிளம்புகிறேன்’ என்றார். 

அடுத்த ஓவியாவாக மாறிக் கொண்டிருக்கும் ரைசாவை இழக்க விரும்பாத பிக் பாஸ், உடனே தணிந்த குரலில் ‘இரவில் நிம்மதியாக உறங்க உத்தரவாதம்’ என்றார். (ஆனால் அந்த நாளின் இரவில் பேய் ‘task’-க்கிற்காக ஆரவ்வும் சிநேகனும் நிறைய சத்தம் எழுப்பிக் கொண்டுதான் இருந்தார்கள். ரைசா பேரவை உங்களை வன்மையாக கண்டிக்கிறது, பிக்பாஸ்).

ரைசாவின் இந்த புகாரும் உண்மையா அல்லது அவருக்கு தனியாக ஏதும் task தரப்பட்டிருக்கிறதா என்று தெரியவில்லை. அண்டர்கவர் ஆப்பரேஷனில் பணிபுரியும் காவல்துறை ஆசாமிகள் ஒருவரையொருவர் பார்த்தே சந்தேகப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அந்தத்துறையின் இயல்பு அது. ஆனால் ஒரு விளையாட்டில் ஒருவரை மட்டும் தனிமைப்படுத்தி அவருக்குத் தெரியாமல் பேய் விளையாட்டு விளையாடுவது அபத்தமானது. 

நாளைக்கே எந்த போட்டியாளராகவது மனஉளைச்சலில் விநோதமாக நடந்து கொண்டாலோ அல்லது ஏதேனும் ஆபத்திற்கு மற்றவர்களின் உதவியை நாடினாலோ, பிக் பாஸ் ஏதோ task கொடுத்திருக்கிறார் போல என்று மற்றவர்கள் நினைத்துக் கொண்டு அமைதியாக இருந்தால் பிரச்சினையாகி விடும். ஓவியாவின் மனஉளைச்சலை ‘நாடகம்’ என்றே நம்பிக் கொண்டு அவரை இன்னமும் புண்படுத்தி வெளியே அனுப்பியதை இங்கு நினைவு கூரலாம். 

**
மற்றவர்கள் இந்த விளையாட்டில் அதிஉற்சாகமாக பங்கு பெற்றுக் கொண்டிருக்கும் போது மனச்சாட்சி உறுத்திய ரைசா மட்டும் தன் ஆட்சேபத்தை வெளிப்படுத்தினார். அதுதான் சரி. மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை தரும் task என்றால் சரி. ஆனால் இது போன்று ஒருவரைக் குறிவைப்பது அபத்தமானது மட்டுமல்ல ஆபத்தானது. அந்த வீட்டில் ஒருவராவது சரியாக சிந்திக்கிறாரே என்று ரைசா குறித்து ஆறுதலாக இருக்கிறது. 

இது போன்ற ஆபத்தான task-களை ஜாக்கிரதையாக கையாள வேண்டிய பிக் –பாஸூம்.. இந்த task நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. அப்படியே தொடருங்கள் என்று  சிநேகனுக்கு அனுமதி தந்தது அநியாயம். 

‘பேய் நம்பிக்கை குறித்து பொதுவில் பல தவறான விஷயங்கள் இருக்கின்றன. அவையெல்லாம் பொய் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த task உதவும்’ என்று ரைசாவின் ஆட்பேசபத்திற்கு சப்பைக்கட்டு கட்டினார் சிநேகன். விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த விளையாட்டு என்பதைக் கேட்டு பிக்-பாஸே ரகசியமாக சிரித்திருப்பார். 

மட்டுமல்லாமல் இன்னொரு உறுப்பினரான கணேஷிடம் இந்த task பற்றி  மறைத்ததும் கூடுதல் அநியாயம்.

**

Bigg Boss

என்னதான் விளையாட்டு என்றாலும் இப்படி ஒருவரை தனிமைப்படுத்தி பயப்படுத்துகிறோமே என்கிற குற்றவுணர்வோ தயக்கமோ காயத்ரியிடம் துளி கூட இல்லை. மிக உற்சாகமாக யோசனைகள் தந்து கொண்டிருந்தார். இதே task அவர் மீது நடத்தப்பட்டிருந்தால், அது முடிந்த பிறகு பத்ரகாளியாகியிருப்பார். எல்லோரையும் போட்டு வறுத்து எடுத்திருப்பார். இது சிநேகனுக்கும் தெரிந்திருப்பதால்தான் எளிய டார்க்கெட்டான பிந்துவை தேர்ந்தெடுத்தார். 

‘ரூ.10-க்கு நடிக்கச் சொன்னால் ரூ.50-க்கு நடிக்கிறாள்’ என்று ரைசாவை குற்றஞ்சாட்டிய காயத்ரி இந்த task-க்கிற்காக ரூ.1000-க்கு நடித்துக் கொண்டிருக்கிறார். ‘லைட்டை ஆஃப் பண்ணா எஃபெக்ட் நல்லா வரும்’ என்று பல முறை நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தார்.

ஒருத்தரை பயமுறுத்தறதுன்னா என்னா உற்சாகம்?. துணியை ரகசியமாக எடுத்து விட்டு பின்பு ‘ஏற்கெனவே நம்ம மேலே 18 கேஸ் இருக்கே’ என்று அவருக்குத் தோன்றியதோ..என்னவோ.. ‘நான் திருடலை.. task-க்காகத்தான் பண்றேன்’ என்று ஒரு சாட்சியத்தை காமிரா முன்பு பதிவு செய்து விட்டுச் சென்றார். (என்னா.. வில்லத்தனம்!) மட்டுமல்லாமல் அந்த முட்டாள்தனமான விளையாட்டுக்கு உற்சாகத்துடன் கூடுதல் யோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தார். சலங்கையை வைத்து பயமுறுத்தலாமாம். டான்ஸ் மாஸ்டர் அல்லவா? Professional ethics என்பது இதுதான் போல. 

தக்காளி சட்னி x ரத்தம் தத்துவத்தை சரியாக பின்பற்றுபவர் காயத்ரிதான்.

 

அந்த வீட்டில் ‘நெகட்டிவ் எனர்ஜி’ இருப்பதாக எல்லோரும் பாவனை செய்கிறார்கள். ஆனால் பார்வையாளர்களுக்கு எது உண்மையான நெகட்டிவ் எனர்ஜி என்று தெரியாதா? 

Bigg Boss

இவரை விடவும், மனச்சாட்சியின் படி இந்த விளையாட்டில் பங்குபெறப்போவதில்லை என்ற ரைசாவின் நேர்மை எத்தனையோ தேவலை. ‘task-ன்னு வந்துட்டா செஞ்சுதானே ஆகணும். அதற்குத்தானே அக்ரிமெண்ட் போட்டிருக்கோம்’ என்று பிக்பாஸின் உண்மையான விசுவாசியாக இருந்தார் சிநேகன். அவரின் உடல்மொழியை வாக்குமூல அறையில் கவனித்தால், ஒரு விசுவாசமான தொழிலாளி, பெரிய முதலாளியிடம் பயபக்தியுடன் கும்பிட்டு வருவதைப் போலவே எப்போதும் வருவார். 

**

ரைசாவின் ஒத்துழையாமை இயக்கத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வையாபுரி சொல்கிறார். ‘கடந்த வாரம் இது தலைவியா இருந்தது இல்லையா.. இப்ப பிந்து தலைவின்னவுடனே இதுக்கு பிடிக்கலை. அதற்குத்தான் இப்படியெல்லாம் பண்ணுது’

இவர்தான் கடந்தவாரத்தில் ‘நான் யாரைப் பற்றியும் புறம் பேசுவதில்லை’ என்று கமலிடம் அழுத்தம் திருத்தமாக சொன்னவர். 

பாதுகாப்பு காரணத்திற்காக இரவு பெண்கள் ரூமில் படுத்துக் கொள்வதற்காக ஆண்கள் தரப்பிலிருந்து ஒரே போட்டா போட்டியாக இருந்தது. ஆரவ் வேறு குறும்பாக சிரித்துக் கொண்டிருந்தார். கணேஷ் வேறு ‘நான் நான்’ என்று முதலில் கை தூக்கினார். இதிலிருந்து தோன்றும் சந்தேகத்தைப் பார்த்தால் இந்த பேய் task பிக் பாஸ் உருவாக்கிய ஐடியாவா? அல்லது ஆரவ் மற்றும் சிநேகன் உருவாக்கியதா?

இது தனக்கான டார்கெட் என்பது புரிந்தோ அல்லது புரியாமலோ பிந்து மற்றவர்களிடம் தைரியமும் ஆறுதலும் சொல்லிக் கொண்டிருந்தார். அவரின் சிரிப்பைப் பார்த்தால் இதை யூகித்து விட்டது போல் தெரிகிறது. அப்படி நிகழ்ந்தது எனில் ஆயிரம் வாட்ஸ் பல்பு அளவில் பெரிய பல்பாக வாங்கப் போகிறவர், மந்திரவாதிகள் கூட்டத்தின் தலைவர் சிநேகன்தான். 

‘எனக்கென்னமோ பிந்துவிற்கு தெரிஞ்சுடுச்சு போல’ என ரைசா எச்சரித்த போது ‘இவ வேற.. task முடியட்டும். கழுத்தைப் பிடிச்சு அமுக்கறேன். மனுஷன் நைட்டும் பகலுமாக எவ்ளோ கஷ்டப்பட்டு இதை பண்ணிக்கிட்டு இருக்கான்’ என்று ஏதோ விஞ்ஞான ஆராய்ச்சி செய்வது போல அலுத்துக் கொண்டார் சிநேகன். அவருடைய இந்த பில்டப்பிற்காகவாவது இந்த task தோற்க வேண்டும். பிந்து எல்லோரையும் பார்த்து சிரிக்க வேண்டும். 

Bigg Boss

“தூள் படத்தில் ரீமா சென்னை பார்த்து  விவேக் சொல்வது போல ‘என் ஸ்வப்னா… புத்திசாலி.. அவளை யாராலும் ஏமாத்த முடியாது”.

**

இந்த மொக்கையான ஐடியாவிற்காக எல்லோரும் அமர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்கிறார்களாம். அவர்களின் ஐடியா படி விளக்கு அணைந்து அணைந்து எரிந்தது. பிந்துவால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. அவர் எங்கே கண்டுபிடித்து விடுவாரோ என்கிற அச்சத்தில் காயத்ரி ஓவர் ஆக்ட் செய்தார். தலையை அமைதியாக குனிந்து அமர்ந்து கொண்டு சிநேகன் அவரை மிஞ்சினார். வையாபுரி முதலில் சிரித்து சொதப்பினார். இவர்தான் ‘கணேஷ் ஓவர் ஆக்ட் செய்துவிடுவார் என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக் கொண்டேயிருந்தது. 

அதுவரை ஒப்புக்கு சப்பாணியான இருந்த கணேஷிற்கும் இந்த task பற்றி பிறகு சொல்லப்பட, அதுவரை தாம் ஏமாந்தது பற்றிய உணர்வேயில்லாமல் ஒவர்ஆக்ட் செய்வதில் எல்லோரையும் மிஞ்சத் துவங்கினார். அவர் முகத்தில் போட்டிருந்த ஏதோவொன்றைப் பார்த்தால் அவரைத்தான் பேயாக நடிக்க வைக்கவிருந்தார்களோ என்னமோ.

**

இதற்கிடையில் தேசபக்தி task வேறு.   பேய் விளையாட்டை விடவும் நகைச்சுவையாக இருந்தது. சுதந்திரதினத்தையொட்டி ஒரு நிமிடம் பேச வேண்டுமாம். போட்டியாளர்கள் தாங்கள் சிறுவயத்தில் பள்ளிக்கூடத்தில் படித்ததையெல்லாம் அப்படியே ஒப்பித்தார்கள். ‘சுதந்திர இந்தியாவில் மின்விளக்கு இல்லாத இடமே இல்லை’ என்றார் வையாபுரி. 

தனிமனித ஒழுக்கம் மிக முக்கியம் என்றார் ஆரவ். அவர் சீரியஸாக சொல்கிறாரா, காமெடி செய்கிறாரா என்று புரியவில்லை. ‘மற்றவர்களை ஒழுக்கமாக இருக்கச் சொல்வதை விட தாம் முதலில் ஒழுக்கத்தைப் பின்பற்ற வேண்டும்’ என்று அவர் சொன்னது மருத்துவ முத்தம் என்று விமர்சித்த ‘ஆண்டவரையோ?’

**
பிந்துவை பயமுறுத்துவதற்காக ஏதோ உலக சதி போல ஆரவ்வும் சிநேகனும் என்னென்னவோ முயன்று கொண்டிருந்தார்கள். ‘என்னமோ சத்தம் கேட்குது’ என்று காயத்ரி உசுப்பி விட, எழுந்து வந்து பார்த்த பிந்து மாதவி அப்படியொன்றும் பயப்பட்டது போல தெரியவில்லை. ‘எல்லாம் காலையில பார்த்துக்கலாம்’ என்று இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்து விட்டார். 

இடையில் விளக்கு அணைந்த போது… ‘காயூம்மா.. கம் டார்லிங்.. டோண்ட் வொர்ரி’ என்று கணேஷ் காயத்ரிக்கு மிகையாக ஆறுதல் சொன்னார். சைவப்பூனை மாதிரி இருந்து கொண்டு சிநேகன், ஆரவ்வை கூட மிஞ்சி விடுவார் போலிருக்கிறது.
பிந்து பயப்படுகிறாரோ, இல்லையோ, மனநல நோயாளிகள், துணிதுவைத்தல் taskகளுக்கப் பிறகு பார்வையாளர்களை அதிகம் எரிச்சலூட்டிய task  இந்த பேயாகத்தான் இருக்க வேண்டும். அதிலும் ஒருவரை தனிமைப்படுத்தி பயமுறுத்தும் அநீதியை ரைசாவைத் தவிர மற்ற எவருமே உணரவில்லை என்பதும் கொடுமை. 

Bigg Boss

 


**
பிக் பாஸ் வீட்டில் உள்ள உண்மையான ‘பேயை’ வாக்காளர்கள் கண்டுகொள்வார்கள் என்று நம்பலாம். வாக்கு எனும் மந்திரக்கோலை வைத்து பேயை விரட்டுவார்களா என்பதை வரும் வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/99214-is-disguised-snehan-threatening-bindhu-madhavi-what-happened-today.html

Link to comment
Share on other sites

View image on Twitter

சுஜா வருணி தான் அடுத்ததாக உள்ளே வரப்போவதாக பரவலாக பேசப்படுகிறது(இணையத்தில்)
 

 

Link to comment
Share on other sites

 

கவுண்டமணி சொன்ன மாதிரி, ‘நாமெல்லாம் தேவையில்லாம பிறந்துட்டமா?’ பிக்பாஸ்?! - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? (52-ம் நாள்) #BiggBossTamilUpdate

 
 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்

Bigg_Boss_Baner_11586_10541.jpg

இத்தனை நாள் பிக்பாஸ் விளையாட்டை கவனித்துக் கொண்டிருந்ததில் அதிகபட்சமான எரிச்சலை அடைந்தது, இன்றுதான். மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக நடித்த task-ஐ விட அதிக பொறுமையை சோதித்தது, இந்தக் கொடுரமான பேய் task. 

மிக மிக சுமாரான இந்த ஐடியாவை மூன்று நாட்களுக்கு மேல் இழுத்தது ஒருபுறம் என்றால் போட்டியாளர்களின் ஓவர்ஆக்டிங் உள்ளிட்டு (குறிப்பாக வையாபுரி) வேறு சில காரணங்களும் இருக்கின்றன. இவற்றை விரிவாக பார்ப்போம். 

அதற்கு முன் -

**

52 வது நாளின் பள்ளியெழுச்சிப் பாடலுக்காக, நாகார்ஜூனாவைப்  போலவே நமக்கும்  நரம்பு புடைக்கும் அளவிற்கான ‘நாக்குப்பூச்சி’ தேசபக்திப் பாடலை அலற விட்டார்கள். ‘ஜெய் ஹிந்த்’ படத்தில் இருந்து ‘தாயின் மணிக்கொடி’.

ஒவியா இருந்திருந்தால் கூட இந்தப் பாட்டுக்கு என்ன டான்ஸ் ஆடுவது என்று குழம்பியிருப்பார். எனவே மற்றவர்கள் குழம்பிப் போய் அமர்ந்திருந்ததில் ஆச்சரியமில்லை.

**

இன்றைய நாளிலும் கொடுமையான பேய் task தொடர்ந்தது. இதற்காக துணியை குளத்தில் எறிந்து கேஸ் அடுப்பையெல்லாம் எரிய விட்டார்கள். ஆரவ்வின் ஐடியாவா இது? ஒரு கேஸ் சிலிண்டர் என்ன விலை விற்கிறது தெரியுமா? அதற்கான மானியத்தையும் நிறுத்தி விடப்போகிறார்கள் போலிருக்கிறது. அதை எடுத்து வருபவருக்கு ரூ.50/- தர வேண்டியிருக்கிறது. பழைய காலத்து பேய்களை கவனியுங்கள். ‘ஜகன்மோகினி’ திரைப்படத்தின் பேய் தன் கால்களையே அடுப்பில் வைத்து எரித்துதான் சமையல் செய்யும். நம் முன்னோர் பேய்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல. முன்னாளின் பேய் கூட அத்தனை சிக்கன நடவடிக்கையுடன்தான் வாழ்ந்திருக்கிறது. 

இந்த பேய் task-க்கிற்காக இன்று அதிகமாக ஓவர்ஆக்ட் செய்து எரிச்சலூட்டியவர் வையாபுரிதான். காயத்ரியாவது ஆயிரம் ரூபாய்க்கு நடிக்கிறார் என்றால் இவர் பத்தாயிரத்தை தாண்டி விடுவார் போலிருக்கிறது. 

வையாபுரி

‘எங்களை நிம்மதியா வாழ விட மாட்டீங்களா.. இதுக்குத்தான் நான் போய்த் தொலையறேன்னு சொன்னேன்..’ என்றெல்லாம் காமிராவை நோக்கி கூப்பாடு போட ஆரம்பித்து விட்டார். 

**

இது தொடர்பான ஒரு சினிமா துணுக்கு நினைவிற்கு வருகிறது. குறுக்கீட்டிற்கு மன்னியுங்கள். நடிகர் வடிவேலு பகிர்ந்து கொண்ட சம்பவம் இது. 

தேவர்மகன் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அது. சிவாஜி கணேசன் இறந்து கிடப்பது போன்ற சீன் எடுத்துக் கொண்டிருந்தார்கள். சிவாஜியின் மரணத்திற்கு தன் துயரத்தை வெளிப்படுத்தும் காட்சியில்.. ஓவென்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு ஓவர்ஆக்ட் செய்தார். வடிவேலு.  அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். . எனவே எப்படியாவது நல்ல பெயர் வாங்கி விட வேண்டும் என்கிற ஆசை வடிவேலுவிற்குள் இருந்தது போல. 

இவரின் அதிகமான ஒலம் தாங்காமல் பிணமாக படுத்திருந்த சிவாஜியே எழுந்து விட்டாராம். ‘ஏண்டா.. எரும. கதாபாத்திரத்தின் படி கமல்ஹாசன்தான் என் மகன்.. அவன் கூட அத்தனை அழுவல.. நீ ஏண்டா இப்படிக் கத்தி கூப்பாடு போடறே. ஒழுங்கா நடி” என்று அதட்டினாராம். இதை நேர்காணலில் சொல்லிச்.  சிரித்தார் வடிவேலு. 

**

வடிவேலுவை விடவும் அதிகமாக ஓவர்ஆக்டிங் செய்தார் வையாபுரி. பிந்துவை எப்படியாவது நம்ப வைப்பதற்காக அவர் செய்த இந்த பயங்கர நாடகம் நிச்சயம் சொதப்பல்.  கணேஷ் ஓவர்ஆக்ட் செய்து விடுவான் என்று கிண்டலடித்துக் கொண்டிருந்த இந்த பிரகஸ்பதிதான் இன்று அதை விடவும் அதிகம் சொதப்பினார். 

அது மட்டுமில்லாமல், தன் மனதில் உள்ளதையெல்லாம் வெளியில் கொட்டி சந்தடி சாக்கில் பிக்பாஸையும் திட்டித் தீர்த்தார். நல்ல ஐடியா. “உங்களுக்கு மனச்சாட்சி இருக்கா.. நீங்க கூப்பிட்டா வந்து டான்ஸ் ஆடணும். பெல் அடிச்சா சாப்பிடணும். என்னய்யா நெனச்சிட்டு இருக்கீங்க?’ என்கிற அவரின் மனக்கொதிப்பெல்லாம் பாவனை என்கிற பெயரில் இன்று வெளியே வந்து விழுந்தது. 

கமல் முன்பு சொல்லியதுதான். மாமியாரின் கொடுமைகள் காரணமாக அவரை நேரடியாகத் திட்ட முடியாத மருமகள், சாமி வந்தது போல நடித்து கன்னாபின்னாவென்று திட்டுவது போன்று, வையாபுரியும் பிக்பாஸின் மீதுள்ள வெறுப்பையெல்லாம் இன்று வகையாகத் தீர்த்துக் கொண்டார் போலிருக்கிறது. 

இவரின் ஓவர்ஆக்டிங்கை பிந்து ஒரு நக்கலான முகபாவத்துடன் பார்த்துக் கொண்டிருந்ததுதான் அதிக நகைச்சுவை. ஒரு மனுஷன் உயிரைக் கொடுத்து இத்தனை ஃபர்பாமன்ஸ் பண்றாரேன்னு ஒரு மரியாதை வேண்டாம். 

பிந்து

அவ்வப்போது சிரித்து இந்த அற்புதமான task-ஐ கெடுத்துக் கொண்டிருந்த வையாபுரி, ‘நான் கத்தினதை பார்த்து அது பயந்துடுச்சு. மயக்கம் போட்டு விழாத குறைதான்’ என்றெல்லாம் பிறகு தன்னைத்  தானே பெருமையாக நினைத்து மற்றவர்களிடம் சொல்லிச் சிரித்தார்.  அடக்கொடுமையே!

**

“நைட்டெல்லாம் எங்களைத் தூங்க விடலே”: என்று வையாபுரி பாவனையாக கோபப்பட்டதெல்லாம் அநியாயம். ஏனெனில் தூங்க முடியாமல் அவதிப்பட்டதாக இரண்டு நாட்களயாக சொல்லிக் கொண்டிருந்தவர் ரைசாதான். ‘இனிமேல் சத்தம் வராது’ என்று உத்தரவாதமளித்த பிக்பாஸ் அந்த வாக்குறுதியைக் காப்பாற்றாமல் task-ஐ தொடர்ந்து நடத்த சிநேகனுக்கு அனுமதியளித்தது கொடுமையானது மட்டுமல்ல அபத்தமானதும் கூட.

ஏனெனில் ‘இது task-ஆக இருக்கும்’ என நேற்றே சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த பிந்து, இன்று வாய் விட்டே சொல்லத் துவங்கி விட்டார். இதற்கு பிரதானமான காரணமாக சிநேகன் இருப்பார் என்றும் அவர் சரியாகவே யூகித்து விட்டார். (சிநேகனின் ஃபர்பாமன்ஸ் அப்படி). எனில் எதற்காக இதற்குப் பிறகும் பூசாரியை வரவழைத்தது போன்ற அபத்தங்களை பிக்பாஸ் தொடர்ந்து செய்ய வேண்டும்? தோல்வியை ஒப்புக் கொள்ளக்கூடாது என்றா? அல்லது உங்கள் போதைக்கு பார்வையாளர்கள்தான் ஊறுகாயா?

**

பிந்து நக்கலாக சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் சிநேகன் குழுவினர் தங்களின் பொய்களை அதிகப்படுத்தினர். பிந்துவின் முன்னால் உட்கார்ந்து வகை வகையாக சிநேகன் ரீல் ஓட்டிக் கொண்டிருக்க காயத்ரி கூடவே ஒத்து ஊதினார். ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது என்பது இதுதான். 

ஆரவ்

இந்த task-ற்கிற்கு ரைசா ஒத்துழைக்கவில்லை என்பதும், இந்த ஐடியாவை கசிய விட்டு தங்களின் திட்டத்தையும் உழைப்பையும் அவர் பாழடிக்கிறார் என்பதும் மற்றவர்களின் கோபத்தை அதிகப்படுத்தியது.  ‘எரிச்சலா வருது.. கையை ஓங்கிடுவேன்’ என்று அடுத்த ‘சக்தி’யாக மாறிக் கொண்டிருந்தார் ஆரவ். 

வையாபுரியும் ரைசா மேல் கோபம் கொண்டு ஜாடையாக திட்டிக் கொண்டிருந்தார். ‘என்ன ஆச்சு இவருக்கு, கேரக்ட்டருக்குள்ள போயிட்டாரா?’ என்று ரைசா நுட்பமாக கிண்டல் அடித்ததற்கு காரணத்தை நேரடியாக சொல்லாமல் ‘காலைல இருந்து கத்திட்டுதான் இருக்கார்’ என்று மழுப்பினார் சிநேகன். அங்கொன்றும் இங்கொன்றும் பேசும் பழக்கத்தை விடாமல் பின்பற்றுகிறார் சிநேகன்.

4_10278.jpg

‘am exhausted’ நான் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற விரும்புகிறேன்’ என்று பிக் –பாஸிடம் சொன்னார் ரைசா. ஒருவரை மட்டும் தனிமைப்படுத்தி பயமுறுத்தும் இந்த விளையாட்டை அவர் வெறுப்பதற்கான நியாயமான காரணங்கள் உண்டு. இதற்கு தடையாக இருக்கும் இவர் மீது மற்றவர்கள் கோபப்படுவது (குறிப்பாக, தந்தையாக நினைத்துக் கொண்டிருந்த வையாபுரி) ரைசாவின் மனஅழுத்தத்தை அதிகரிக்கச் செய்திருக்க வேண்டும். 

‘விதிமுறைகளின் படி ‘Eviction process’ வழியாகத்தான் நீங்கள் வெளியேற முடியும். இப்போது நாமினேஷனில் இருக்கிறீர்கள். எனவே மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்பது பிக் பாஸின் கறாரான தீர்ப்பு. முதலாளிகள் முதலாளிகள்தான். 

ஆனால் இந்த வாரம் காயத்ரியைத்தான் மக்கள் வெளியேற்றுவார்கள் என்று ரைசாவிற்குத் தோன்றியிருக்கலாம். அது உண்மைதானே, வாக்காளப் பெருமக்களே?

**

வையாபுரி உள்ளிட்ட மற்றவர்கள் இந்த அற்பமான task தொடர்பாக தன் மீது கோபமாக இருப்பதையும் அவமானங்களைத் தருவதையும் சகித்துக் கொள்ள முடியாத ரைசா, சிநேகனிடம் தன் எரிச்சலைக் கொட்டினார். ‘இந்த task –ற்கு நீங்க இடையூறா இருக்க மாட்டீங்கன்னு சொன்னீங்க.. ஆனா அதை மீறுகிறீர்கள் என்று ‘அவர்களுக்கு’ கோபம் என்று சாமர்த்தியமாக மற்றவர்களின் மீது பழியைச் சுமத்திய சிநேகனின் நாடகத்தைக் கண்டு ரைசா எரிச்சல் அடைந்தது நியாயமே. 

5_10042.jpg

‘இதுவொரு silly game. எனக்குப் பிடிக்கலை. இது என் பிரச்சினையும் இல்ல. நான் போறேன். Leave me alone. I mean it. என்றவுடன் சிநேகன் முகம் வெளிறிப் போனார். அப்போது அவரை அரவணைத்து ஆறுதல் சொல்ல பக்கத்தில் எவருமேயில்லையே? என்ன சோதனை!

**

நாயின் குரைப்பையும் பொருட்படுத்தாது ரைசா தொடர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். பிறகு எரிச்சலுடன் எழுந்து தன் ஆட்சேபத்தை பிக்பாஸிடம் தெரிவித்தார். உடல்நிலை சரியில்லாததால் முன்பு நமீதாவிற்கு வழங்கப்பட்ட சலுகைகள் ரைசாவிற்கும் தரப்பட வேண்டும். ஆனால் தரப்படவில்லை. போட்டியாளர்களைப் பொறுத்து பிக்பாஸ் பாரபட்சம் காட்டுகிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. 

ரைசா மீது செம கடுப்பில் உள்ள வையாபுரி. ‘நாய அவுத்து விடுங்க. இல்லைன்னா நாங்களும் தூங்குவோம்’ என்றெல்லாம் சொன்னவர் ‘அவளை அடிச்சு வெளில துரத்துங்க’ என்று சொன்னதெலெ்லாம் ஓவர். இரண்டு நாட்களுக்குள் ஒருவர் மீதான நட்பு மறைந்து, இத்தனை வன்மமா தோன்றும்?

ஒரு நகைச்சுவையாளராக வையாபுரியின் மீதிருந்த பார்வையாளர்களின் பிரியம் மறைந்து அவர் மீது கோபமும் எரிச்சலும் ஏற்பட்டிருக்கக்கூடிய நாளாக இது அமையும் என்று தோன்றுகிறது. 

**

6_10062.jpg

தலைவியின் பொறுப்பை பிக்பாஸ் நினைவுப்படுத்தியவுடன் வேறு வழியில்லாமல் ரைசாவிடம் சென்று ‘பகலில் தூங்கக்கூடாது’ என்று பிந்து சொன்னவுடன் ‘நான் யார் பேச்சையும் கேட்க முடியாதுன்னு போய் சொல்லு’ என்று எரிச்சல்பட்டார் ரைசா. 

அதிகாரபடிநிலை வழியாக அடிமைகளை உருவாக்கி அவர்களின் மூலமாக காரியங்களை சாதித்துக் கொண்டு, அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தி விட்டு  தான் சாமர்த்தியமாக விலகி நிற்கும் அப்பட்டமான முதலாளித்துவத்தனம் பிக்பாஸின் நடவடிக்கைகளில் தெரிகிறது. இதற்கான கலகக்குரலை எழுப்புவதற்காக ரைசாவை பாராட்டலாம். 

‘இந்த பீடைங்களையெல்லாம் கட்டி மேய்க்க முடியாது’ என்று வையாபுரியின் ஓவர்ஆக்டிங் கூடிக் கொண்டே சென்றது. 

**

7_10573.jpg

ரைசாவிற்கு எதிரான அபிப்ராயங்களை சிநேகனிடம் சொல்லி ஆரவ்வும் கணேஷூம் அவரை ஏத்தி விட்டுக் கொண்டிருக்கும் போது ‘உறவுகள் இருந்தும் தனிமையில் வாழ்கிறேன் என்று ரைசா ஒருமுறை சொல்லிய காரணத்திற்காகத்தான் அவளை நிறைய ஊக்குவித்தேன்’ என்று சொன்னவர் ‘அன்பு கொடுக்கற இடத்துல வாங்கத் தெரியாம இருக்கறதும் தப்பு, தேவைப்படற இடத்துல கொடுக்காம இருக்கறதும் தப்பு’ என்பது போன்ற வருங்கால சந்ததிகளுக்கு தேவைப்படுகிற கல்வெட்டு விஷயங்களை சொல்லும் சமயங்களில் சிநேகன் ஆச்சரியப்பட வைக்கிறார். திருவிளையாடல் தருமி மாதிரி இந்த சமயத்தில்தான் சிநேகனை கவிஞர் என்று லேசாக ஒப்புக் கொள்ள முடிகிறது. 

**

‘இதுவொரு task-ஆ? ஏன்னா இதையெல்லாம் பேய் செஞ்சிச்சு –ன்னு நான் நம்பலை. எனக்கு பேய் நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் மத்தவங்க பயப்படறாங்கன்னுதான் கேக்கறேன்’ என்று நேரடியாக பிக்பாஸிடம் இந்த விஷயத்தைக் கேட்டார் பிந்து. பிக்பாஸ் உப்பு போட்டு சாப்பிடுகிறவராக இருந்தால் இந்த task-ஐ அத்தோடு முடித்திருக்க வேண்டும். ஏனெனில் விளையாட்டிற்காக இருந்தாலும் எவர் மையப்படுத்தப்படுகிறாரோ, அவரே நம்பவில்லை என்றாகி விட்ட பிறகு இதை நிறுத்தி விடுவதே நல்லது. 

8_10243.jpg

ஆனால் ஒரு முதலாளிக்கேயுரிய சாமர்த்தியத்துடன் பேசிய பிக்பாஸ், ‘பொருட்கள் உடைந்து சிதறியதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்றார். எத்தனை ஜாக்கிரதையான ஸ்டேட்மெண்ட்? ஏனென்றால் பொருட்களை உடைத்த குறிப்பிட்ட ஐடியா சிநேகனுடையது. 

இந்த வாரம் வீட்டின் தலைவர் பிந்துதான். என்றாலும் அவர் மீதே இந்த task-ஐ ஏவிவிடுவது அநீதியானது. மட்டுமல்லாமல் எல்லாவற்றிற்கும் சிநேகனையே அழைத்து பிக்பாஸ் கலந்தாலோசிப்பதும் அநியாயம். எனில் தலைவி பதவி ஒப்புக்கு சப்பாணியா? தமிழக அரசியல் தோற்று விட்டது போங்கள்.

**

இந்த task ஏறத்தாழ தோற்று விட்டபிறகும் சிநேகன் உள்ளிட்ட மற்றவர்கள் விடாமுயற்சியுடன் உளறிக் கொண்டேயிருந்தது நேர விரயம். “ஸ்மோக்கிங் ரூம் மேல எதையோ பார்த்து பயந்தது மாதிரி நான் வேணா.. மயக்கம் போட்டு விழுந்து விடட்டுமா? என்று காயத்ரி ஒரு டெடரான ஐடியாவைத் தந்தார். 

9_10502.jpg

வையாபுரி அண்ணன் மறுபடியும் தன் பினாத்தல் புராணத்தை துவங்கி விட்டார். காலையில் ஏன் அத்தனை ஓவர்ஆக்ட் செய்தார் என்கிற ரகசியம் அவருடைய பினாத்தலில் தன்னிச்சையாக வெளிப்பட்டு விட்டது. ‘இங்க ஒருநாள் பொழுது போறதுக்குள்ள உயிர் போவுது. இதுல வீட்ல இருந்து அவ வேற ஒருத்தி, ‘நூறு நாள் இருந்துட்டு வாங்க’ன்றா. 

அதுவரை வாயில்லாப்பூச்சியாக இருந்த பிம்பத்தைக் கலைத்து விட்டு தன் துணிச்சலான பிம்பத்தை அழுத்தமாக நிலைநிறுத்தி போட்டியில் எப்படியாவது தொடர வேண்டும் என்பதற்காக வையாபுரி படுகிற பாடுகள்தான் இவை போல. பாவம்.

“வீட்ல பழைய சாதமும் வெங்காயமும் தின்றது. இங்க வந்தவுடன் பீட்சா, பர்கர் –ன்னு கேக்கறது’ என்று வையாபுரி சொன்னவுடன் அடுத்த காட்சியில் சிநேகனை காமிரா காண்பித்தது தற்செயலா? எடிட்டரின் குறும்பா? “பகல்ல நாயை அவுத்து விடறாங்க.. நைட்ல பேயை அவுத்து விடறாங்க’ என்றெல்லாம் தொடர்ந்து ஒன்லைனர்களாக வீசினார் வையாபுரி. “படுத்துக்கிட்டு பேசிட்டே இருந்தா பைத்தியம்-ன்றாங்க. பேசாம இருந்தா நாயை அவுத்து விடறாங்க’

10_10180.jpg

சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டு திரும்பிக் கொண்டிருந்தவரை அப்படியே அமுக்கி ‘பூசாரியாக’ நடிக்க அழைத்து வந்து விட்டனர் போலிருக்கிறது. பிக்பாக்கெட் கேஸில் மாட்டியவர் போலவே திருதிருவிழியுடன் ஒரு பூசாரி. 

அவர் செய்த விநோத காரியங்களை நக்கலுடன் பார்த்துக் கொண்டிருந்த பிந்து, சில விஷயங்களுக்கு நான் ஒத்துழைக்க மாட்டேன் என்று மறுத்ததும் நன்று. ஆனால் கூட இருந்தவர்கள் வற்புறுத்தியதால் வேறு வழியில்லாத தத்தளிப்புடன் குளத்திற்குள் இறங்கினார். ‘நீங்கதான் தைரியசாலி மாதிரி இருக்கீங்க’ என்று பூசாரி பிந்துவை நம்ப வைக்க முயற்சி செய்ததெல்லாம் படுசெயற்கை.

collage_10190.jpg

பூசாரியை சட்டையே செய்யாமல் ரைசா தூக்கத்தைத் தொடர்ந்தது கண்டு பூசாரியே நொந்து போயிருப்பார். 

பிந்துவை சிநேகன் குளத்தில் தள்ளி விட்ட பிறகு இந்தக் கொடூரமான task முடிவிற்கு வந்தது. தானே ஜோக்கடித்து விட்டு தானே பயங்கரமாக சிரித்துக் கொள்பவர்கள் போல, இந்தக் கொடுமையான task-ஐ வெற்றிகரமாக முடித்து விட்டதாக நினைத்து போட்டியாளர்கள் அனைவரும் மிகையாக சிரித்தது பயங்கர எரிச்சல். 

collage5_10054.jpg

இந்த அபத்த நாடகங்களில் பங்கெடுக்காமல் ஒதுங்கியிருந்த ரைசா உண்மையிலேயே புத்திசாலிதான். இதுவொரு task என்பதை முதலிலேயே யூகித்த விட்ட பிந்து, சிநேகன் மட்டுமே இதன் பின்னணியில் இருந்திருக்கலாம் என்று நம்பியதற்கு மாறாக, அனைவருமே இதில் பங்கு பெற்றார்கள் என்கிற தகவல் அவருக்கு ஆச்சரியத்தையும் கூடவே எரிச்சலையும் அளித்திருக்கலாம். கூட்டுத் துரோகம். சிநேகன் குளத்தில் தள்ளிவிட்ட போது அவரது முகபாவம் பாவமாக இருந்தது. 

collage2_10364.jpg

‘‘பேய் நம்பிக்கையெல்லாம் போலி. தெய்வம் என்ற ஒன்று இருக்கிறது’ மொக்கையான நீதியுடன் இந்த நாடகத்தை முடித்தார் சிநேகன். மெசேஜ் சொல்றாராம்.. 

ரைசா முதலிலேயே குறிப்பிட்டது போல ஒரு விளையாட்டுப் போட்டி என்பது பங்கேற்பவர்களோடு இணைத்து பார்வையாளர்களையும் மகிழ்ச்சிப்படுத்துவது போன்ற சுவாரசியத்தன்மையுடன் அமைந்திருக்க வேண்டும். உப்புச்சப்பற்ற இந்தக் கொடூரமான நகைச்சுவையை மூன்று நாட்களுக்கு இழுத்தது, பிந்துவிற்கு மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்கும் இழைத்த மிகப் பெரிய அநீதி. 

பேய் நம்பிக்கை பொய் என்று சொல்ல வந்த நீதிக்காகத்தான் இந்த task என்றே நாம் நம்பித் தொலைப்போம் என்றாலும் கூட. அதையாவது சுவாரசியமாகத் திட்டமிட்டிருக்க வேண்டாமா? 

Just for laughs gags என்ற ஆங்கில ரியாலிட்டி ஷோவொன்று இருக்கிறது. பொதுவிடங்களில் செல்பவர்களை பல விஷயங்களை செய்து ஏமாற்றுவார்கள். பார்வையாளர்களையும் கூடவே ஏமாந்தவர்களையும் சிரிக்க வைப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இந்த ஏமாற்றும் விஷயம் அதிகபட்சமாக ஐந்து நிமிடங்களில் முடிந்து விடும். இந்த ஐந்து நிமிஷங்களுக்காக அவர்கள் மிகவும் மெனக்கெட்டு உழைப்பார்கள், அதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். 

உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். ஒரு கட்டடத்தின் லிஃப்டில் ஏறிப் பயணிக்கிறார் ஒருவர். ஒரு குறிப்பிட்ட தளத்தில் நின்று கதவைத் திறக்க வைக்கப்படுகிறார். கதவு திறந்ததும் எதிரே, ஒரு கழிவறையின் உள்ளரங்க அமைப்பு இருந்தால் அவர் எப்படி திகைத்துப் போவார்? இதைச் செய்வதற்காக பின்னணியில் அவர்கள் எத்தனை உழைத்திருக்க வேண்டும்?

collage6_10189.jpg

முதலில் பார்வையாளர்கள் ஏமாந்தவரின் திகைப்பைக் கண்டு விழுந்து விழுந்து சிரிப்பார்கள். விஷயம் புரிந்த பிறகு ஏமாந்தவர்களும் பயங்கரமாக சிரிப்பார்கள். சில நிமிடங்களில் இது முடிந்து விடும். ஆனால் அபாரமாக இருக்கும்.

இதோடு ஒப்பிடும் போது  பிக் பாஸின் இந்த சுமாரான டிராமா கொடுமை. அதிலும் மூன்று நாட்களுக்கு இழுக்கப்பட்டது அநியாயம். ஒருவரை தனிமைப்படுத்திய கொடுமை என்பது ஒருபுறமென்றால் அவருக்குத் தெரிந்து விட்ட பிறகும் விடாமல் பிடிவாதமாக இழுத்தது இன்னமும் கொடுமை. 

இது போன்ற கொடூர நகைச்சுவைகளை பிக்பாஸ் டீம் இப்போதே கைவிடுவது நலம். இல்லையெனில் பார்வையாளர்களின் எரிச்சலை மேலதிமாக சம்பாதித்துக் கொள்வார்கள். ‘கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்க, பிக்பாஸ்”

**

ஓவியா, ஜூலி போன்ற முக்கியமான போட்டியாளர்கள் விலகி விட்ட நிலையில் நிகழ்ச்சியின் சுவாரசியம் குறைந்து விட்டதால் புதிய போட்டியாளர்களை இறக்க வேண்டிய கட்டாயம் பிக் பாஸிற்கு. கடந்த வாரமே இது சார்ந்த சூசகமான அறிவிப்பை கமல் வெளியிட்டிருந்தார். 

மட்டுமல்லாமல் பிடிவாதம் பிடிக்கும் ரைசாவிற்கும் பிக்பாஸ் ஒரு செக்மேட் வைத்தாக வேண்டும். எனவே புதிய வரவாக சுஜா வரூணி அந்தரத்தில் தொங்கிக் கொண்டே வந்து இறங்கினார். 

collage3_10278.jpg

மக்களுக்கு நன்கு அறிமுகமான நபர்களை நிகழ்ச்சியில் பங்கு பெற வைத்தால்தான் கவனிக்க வைக்க முடியும் என்பது சரிதான். ஆனால் திரைத்துறையில், அதிலும் நடிக, நடிகையர்களையே தேர்ந்தெடுப்பது ஏன்? அதிலும் ‘பிரபலங்கள்’ என்கிற பில்டப்புடன், திரைத்துறையில் புகழ் மங்கியிருப்பவர்களைத்தான் அழைத்து வர முடிகிறதா? ஆடி மாத கோயில் விழாக்களில் அழைத்து வரும் மைக்ரோ பிரபலங்களைப் போலவே பிக்பாஸூம் இருப்பது பரிதாபம். 

ஒரு சமூகத்தின் பல்வேறு துறைகளில் உள்ள பிரபலங்களை அழைத்து வந்தால் நிகழ்ச்சியின் சுவாரசியம் கூடும். இதிலும் நடிகர்கள்தான் முக்கியமா? கவுண்டமணி சொன்னது போல ‘நாமெல்லாம் தேவையில்லாம பிறந்துட்டமா?’

**

சுஜா வருணி வந்தவுடனேயே அதிகமான தன்னம்பிக்கையுடன் மிகையாக எல்லோரையும் பார்த்து சிரித்து வைத்தார். சினிமாவில் நடனக்காட்சிகளில் ஆடுபவர் என்பதால் காயத்ரி மாஸ்டருக்கு குரு வணக்கம் வைத்தார். இது போன்ற தேர்வுகள், ஒரு குறிப்பிட்ட போட்டியாளருக்கு சார்பாக சென்று முடியலாம் என்பது பிக்பாஸிற்கு தெரியாதா, அல்லது அதுதான் திட்டமா? 

31_10572.jpg

சக்தி –காயத்ரி கூட்டணியின் மூலம் பிக்பாஸிற்கு வெளியில் கிடைக்கப் போகும் ஆதாயங்களை நினைத்துத்தான் ஜூலி, ஆரவ் போன்றோர் அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள் என்றொரு பேச்சு ஏற்கெனவே அடிபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அது போலவே கூடுதலாக இன்னொரு நபரை அழைத்து வந்தது தவறான தேர்வு.

ஆனால் சுஜா, காயத்ரிக்கு ஆதரவாக இருக்க மாட்டார் என்று தோன்றுகிறது. வெளியில் ஒரு மாஸ்டராக அவர் எப்படியெல்லாம் நடந்து கொண்டார் என்று அவருக்குத் தெரியும். அது மட்டுமல்லாமல் இத்தனை நாள் நிகழ்ச்சியில் காயத்ரியின் திருவிளையாடல்களையெல்லாம் பார்த்தே வந்திருப்பார். 

இதைப் போலவே காயத்ரிக்கும் தெரிந்திருக்கிறது. எனவேதான் சுஜா வந்து நுழைந்த அடுத்த நிமிடமே அவரைப் பற்றி சிநேகனிடம் புறம் பேசத் துவங்கி விட்டார். “அவ பத்து ஜூலிக்கு சமம்’. என்று சொன்னது மட்டுமல்லாமல், ஆரவ்விடம் ‘நீ அங்க போகாத. அக்கா கிட்டயே இரு’ என்பதின் மூலம் ஏதோ ஆரவ் என்கிற அப்பாவியை சுஜா மயக்கி இழுத்து விடுவார் என்பது போல பாவனையை அவர் செய்தது எரிச்சல். ஒரு பெண்ணை இழிவு படுத்துவதில் இன்னொரு பெண்தான் முதன்மையாக இருக்கிறார்.

**

ஒரு புதிய போட்டியாளர் வந்தவுடனேயே அவருக்கு ஆதரவையும் நம்பிக்கையையும் அளிப்பதுவே இதர போட்டியாளர்களின் அடிப்படையான நாகரிகம். பிடிக்கிறதோ இல்லையோ, வீட்டிற்கு வந்த விருந்தினரை பாவனையாக வரவேற்பது போன்றாவது இதைச் செய்ய வேண்டும். கணேஷ் இதைத்தான் செய்தார். ‘பாவம், அந்தப் பெண்ணிற்கு இரவு உணவு கூட அளிக்காமல் அழைத்து வந்து விட்டார்கள் போலிருக்கிறது’. பிந்துவும் கணேஷூம் சுஜாவிற்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் மற்றவர்கள் ஒதுங்கியிருந்து கிண்டலடித்துக் கொண்டிருந்தது, அநியாயமான ‘ராகிங்’

ஆண்கள் அறையில் அமர்ந்திருந்தவர்கள் கணேஷின் உதவி நடவடிக்கைகளை பயங்கரமாக கொச்சைப்படுத்திக் கொண்டிருந்தனர். இந்த வரிசையில் வையாபுரியின் கமெண்ட்டுகள் நாராசம். “போர்ட்டர் வேலை செய்யறான்” “கட்டிப்பிடி கட்டிப்பிடிடா” “கணேஷ்.. உங்க பெட் இங்க இருக்கு” “செருப்பைக் கூட தூக்கிடுவான்’ போன்றவையெல்லாம் நிச்சயம், மோசமான பாலியல் சீண்டல் கலந்த கொச்சைத்தனம். திரைத்துறையில் உள்ள ஒரு பெண்ணைப் பற்றி அதே துறையில் உள்ளவர்களே கொச்சைப்படுத்துவது கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறிவது போல. வையாபுரியின் ஆட்டம் அதிகமாகிக் கொண்டே போகிறது. 

சிநேகனும் தன் பங்கிற்கு இந்தக் கிண்டல்களில் கூடுதல் வெறுப்பைச் சேர்த்தார். கணேஷ் உள்ளே வந்ததும் அவரையும் வைத்துக் கொண்டு தங்களின் கிண்டல்களைத் தொடர்ந்தனர். ‘எருமை மாட்டின் மீது மழை பெய்வது போல” ஏன் இந்தக் கிண்டல்களை கணேஷ் தாங்கிக் கொள்கிறார் என்று தெரியவில்லை. இதற்குப் பிறகாவது கணேஷ்  திருப்பி ஒரு அடி அடித்தால்தான் சிநேகன், வையாபுரி குழு தங்களின் திருவாய்களை மூடும்.

**

சுஜா வருணி பின்னணி தொடர்பான ஒரு காணொளி காட்டப்பட்டது. ‘கதாநாயகியாக ஆக முயன்று ஐட்டம் பாடல்களில் வீழ்ந்து போன பல நடிகைகளைப் போன்ற சோகச்சித்திரம் இவருக்குப் பின்னாலும் இருக்கிறது என நினைக்கிறேன். இவருடைய சில நேர்காணல்களை வாசித்த நினைவில் இருந்து அப்படித்தான் தோன்றுகிறது. சசிகுமாரின் ‘கிடாரி’ திரைப்படத்தில் கூட இவரது குணச்சித்திர நடிப்பு நன்றாக இருந்தது. ஆனால் முதலில் வாக்களித்ததற்கு மாறாக, இவர் சம்பந்தப்பட்ட பல காட்சிகளை வெட்டி விட்டார்கள் என்று வருத்தப்பட்டார். திரையுலகின் பின்னணியில் உள்ள பல்லாயிரக்கணக்கான சோகக்கதைகளில் இதுவும் ஒன்று.

 ‘பிக் பாஸ் இல்ல சீனியர்களின் வியூகங்களை சமாளிக்கும் திறனை சுஜா பெற்றிருப்பாரா, ஜோதியில் ஐக்கியமாகி விடுவாரா, ரைசா போன்று புரட்சியாளராக ஆவாரா, காயத்ரியைப் போன்று சண்டைக்கோழியாக இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

32_10348.jpg

இரவில் பெண்கள் அறையில் ஓர் உரையாடல். பேய் சம்பந்தமான சம்பவங்களை புதுவரவான சுஜாவிடம் சொல்லி அவருக்கு பீதியூட்ட மற்றவர்கள் முயற்சித்துக் கொண்டிருந்தனர். இதில் என்ன கொடுமை என்றால் பாதிக்கப்பட்ட பிந்துவும் இந்த வரிசையில் இணைந்ததுதான். 

முதலில் அடிமையாக இருந்து கொடுமைப்பட்டவர்கள்,  பிறகு தங்களுக்கு சிறுஅதிகாரம் கிடைத்தால் கூட அந்த அதிகாரத்தைக் கொண்டு அடிமைகளுக்கு ஆதரவாக இல்லாமல் அவர்களும் அதிகாரவட்டத்தில் இணைந்து மேலதிக கொடுமைகளைச் செய்யத் துவங்கி விடுவார்களாம். இதன் மூலம் தான் இன்னமும் முன்னேற முடியும் என்கிற சுயநலமே அவர்களை அப்படிச் செய்ய தூண்டுமாம். 

பிந்துவின் நிலைமையைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது. மனித இயல்புகளில் கணத்திற்கு கணம் எத்தனை மாற்றங்கள். 

 

‘புதிய விருந்தினரைப் பற்றி இதர உறுப்பினர்கள் உடனே புறம்பேசத் துவங்கி விட்டனர்’ என்று பிக்பாஸ் டீமின் அசரிரீக்குரல் கவலைப்படுகிறது. அதுதானே உங்களுக்கு வேண்டும் பிக்பாஸ்?

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/99338-where-is-biggboss-heading-to-happenings-of-biggboss-day-52.html

48 minutes ago, nunavilan said:

View image on Twitter

சுஜா வருணி தான் அடுத்ததாக உள்ளே வரப்போவதாக பரவலாக பேசப்படுகிறது(இணையத்தில்)
 

 

 

Link to comment
Share on other sites

பிக்பாஸ் தொடருக்கு மீண்டும் திரும்புகிறேனா?: நடிகை ஓவியா விளக்கம்

 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடரில் ஓவியா மீண்டும் பங்கேற்க உள்ளதாக எழுந்த சர்ச்சைகளுக்கு அவர் அளித்துள்ள விளக்கத்தை கீழே பார்க்கலாம்.

 
 
 
 
201708172256090455_Will-I-return-to-the-
 
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தொடரில் ஓவியா மீண்டும் பங்கேற்க உள்ளதாக எழுந்த சர்ச்சைகளுக்கு அவர் அளித்துள்ள விளக்கத்தை கீழே பார்க்கலாம்.

தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிரபலமான நபர்கள் ஒரே வீட்டில் ஒன்றாக 100 நாட்கள் இருக்குமாறு இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடிகர் கமல்ஹாசன் இதனை தொகுத்து வழங்குகிறார்.

201708172256090455_1_biggboss._L_styvpf.

இந்நிகழ்ச்சியில் ஒரு பங்கேற்பாளராக நடிகை ஓவியா கலந்து கொண்டிருந்தார். பின்னர், பல்வேறு விவகாரங்கள் காரணமாக நிகழ்ச்சியின் பாதியிலேயே அவர் வெளியேறினார். ஆரவ் உடன் ஏற்பட்ட காதல் தொடர்பாக பிக்பாஸ் அரங்கில் அவர் தற்கொலைக்கு முயன்றதாக செய்திகள் வெளியாகின.

தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாத அளவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதால் நடிகை ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி சொந்த ஊரான கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றுவிட்டார். அங்கு அவர் மனநல சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படங்களும் தொடர்ந்து ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்நிலையில், கொச்சியில் உள்ள தனது இல்லத்திலிருந்து வீடியோ மூலமாக ஓவியா சில விளக்கங்களை அளித்துள்ளார். அதில், முக்கியமாக மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பில்ல என தெரிவித்துள்ளார். நல்ல கதை அம்சமுள்ள திரைப்படங்களில் கவனம் செலுத்தப்போவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், “இனி என்னை திரைப்படங்களில் நீங்கள் (ரசிகர்கள்) பார்க்கலாம். நான் நடித்துள்ளேன் என்பதற்காக படங்களை ஆதரிக்க வேண்டாம். படம் நன்றாக இருந்தால் பாருங்கள். இல்லையெனில் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அப்படி விமர்சனம் செய்யுங்கள். கண்டிப்பாக படங்கள் நடிப்பதுதான் என்னுடைய திட்டம்” என்று ஓவியா தெரிவித்துள்ளார்.
 

http://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/08/17225603/1102916/Will-I-return-to-the-Bigboss-series-again-oviya-explans.vpf

Link to comment
Share on other sites

ஆரவ் vs ஹரீஷ்... பிந்து மாதவி vs சுஜா... பிக்கப் ஆகுமா பிக்பாஸ்..?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 53) #BiggBossTamilUpdate

 

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்

Bigg_Boss_Baner_11586_09084.jpg

‘பிக் பாஸினால் ஓவியாவிற்கு புகழ் கிடைக்கவில்லை, ஓவியாவால்தான் பிக்பாஸிற்கு புகழ்’ என்கிற பொருளில் ஒரு மீம் பார்த்தேன். உண்மைதான் போல. அந்தளவிற்கு ஓவியாவின் விலகலுக்குப் பிறகு நிகழ்ச்சி களையிழந்து போயிருக்கிறது. கமலின் பஞ்சாயத்தும் காயத்ரியின் ராவடியும் இருப்பதால்தான் ஓரளவிற்காவது சமாளிக்க முடிகிறது. 

இந்த வாரம் நாமினேஷனில் காயத்ரி இருப்பதால் செத்த பாம்பு போல சாமர்த்தியமாக இருக்கிறார். ஆனால் எவரையாவது ஏமாற்றும் task என்றால் மட்டும் உற்சாகமாக ஒத்து ஊதுகிறார்: ஐடியாக்கள் தருகிறார். 

கமலுக்கே கூட இந்த வார பஞ்சாயத்தில் அதிக வேலை இருக்குமா என தெரியவில்லை. அந்தளவிற்கான முக்கிய சர்ச்சைகள் ஏதும் நிகழவில்லை. 

‘நூறு நாள் வேலைத்திட்டத்தில்’ உறுதியாக பங்கு பெறுவதாக வீட்டம்மணியிடம் வாக்கு தந்த விட்ட வையாபுரி, அதற்காக ஒருபக்கம் புலம்பினாலும், இன்னொரு பக்கம் தன் இடத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக ‘ஓவராக’ நடிக்க ஆரம்பித்து விட்டார். அவரின் நகைச்சுவையுணர்வுதான் ஓரளவிற்காவது ஆறுதல். ஆனால் ஓவர் ஆக்டிங்கின் காரணத்தால் அதையும் மனதார ரசிக்க முடியவில்லை. 

**

3_09097.jpg

‘இந்த வாரம் prank வாரம் போல’ என்ற புதுவரான ஹரீஷ் சொல்லியது போல இந்த வாரம் முழுக்க அபத்தமான taskகளால் பார்வையாளர்களை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். துணிதுவைக்கும் task, பேய் task என்று எரிச்சல் மயம். 

இந்த வரிசையில் இன்னொரு அபத்த ஐடியாவை இப்போது கையில் எடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். ‘ராகிங்’ task. இது பிக் பாஸ் தந்ததா, போட்டியாளர்கள் தன்னிச்சையாக உருவாக்கிக் கொண்டதா என தெரியவில்லை. 

பிந்துவை மட்டும் தனிமைப்படுத்தி செய்த பேய் task-ஐ தொடர்ந்து புது உறுப்பினர்களை பயமுறுத்துகிறேன் பேர்வழி என்று தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது மாதிரி நடிக்கிறார்களாம். ‘Promo’க்களில் வெளிப்படும் ஆவேசமான வார்த்தைகளைக் கேட்டு ‘இன்னிக்கு சண்டை நிச்சயம் உண்டு’ என்று ஆர்வமாக குத்த வைத்து உட்கார்ந்தால் அது நடிப்பாம். 

பார்வையாளர்களின் கவன ஈர்ப்பிற்காக சில உத்திகளைக் கையாள்வதில் தவறில்லை. ஆனால் மொத்தமாக ஏமாற்றினால் பார்வையாளர்களும் நிகழ்ச்சியை மொத்தமாக கைவிட்டு விடுவார்கள். 

முன்பெல்லாம் சண்டை என்றால் அதில் ஓரளவிற்காவது நம்பகத்தன்மை காப்பாற்றப்படும். இப்போது ‘போட்டியாளர்களே’ திங்கட்கிழமை, பில்டப் தரணும், புதன்கிழமை சண்டை போடணும், சனிக்கிழமை அமைதியாக இருக்கணும்’, இது பிக்பாஸ் ரூல்’ என்றெல்லாம் சொல்லி புதுவரவான சுஜாவை கலாய்க்கிறார். பிக்பாஸ் ஒரு scripted programme என்கிற பேச்சு பலமாக இருக்கும் போது இப்படி ஓவராக நடிப்பதின் மூலம் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது சரியா?

பேய் task-ன் போது சிநேகன் கத்தியதை, விளம்பர இடைவேளைக்கு முன்பு பார்த்த போது நமக்கு தூக்கிப் போட்டது நிஜம். ஆனால் அது ஓவரான நடிப்பு என்று பிறகு தெரிந்த போது ஏமாற்றமாக இருந்தது. இதுவே தொடர்ந்தால், என்னதான் promo-ல் முதலில் ஏமாற்ற முயன்றாலும் ‘இவிய்ங்க… இப்படித்தான் பாஸூ. அப்புறம் ஒண்ணுமிருக்காது’ என்று பார்வையாளர்களுக்கு ஆர்வம் அணைந்து விடும். 

பார்வையாளர்களை மாக்கான்களாக நினைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாக ஏமாற்றக்கூடாது என்பது திரைக்கதையின் பாலபாடம். 

**

சுஜாவை ராகிங் செய்கிறோம் என்று கத்திக் கூப்பாடு போட்டு நடித்து இன்றைய பொழுது பூராவும் கழித்து விட்டார்கள். நாளை ஹரீஷிற்கும் அதே ட்ரீட்மெண்ட் போல. அப்படித்தான் Promo-வில் தெரிகிறது. ஆனால் ஹரீஷ் பனங்காட்டு நரி போல தெரிகிறார்.  பார்ப்போம்.

ஒருபக்கம் இவர்கள் செய்யும் மிகையான விளையாட்டுக்கள் மிக நீளமாக அமைந்து நம்முடைய பொறுமையைச் சோதித்தாலும், ஒரே மாதிரியான சூழலில் அதே மனிதர்களை திரும்பத்திரும்ப பார்ப்பதால் உருவாகும் மனஅழுத்தம் காரணமாக, சிரிப்பதற்கான எந்தவொரு வாய்ப்பையும் அவர்கள் தவற விடாமல் பின்பற்றுகிறார்களோ என்று தோன்றுகிறது. அதுவே ஒருவர் புதிதாக மாட்டினால் அது கொலைவெறியுடன் அவரை கலாய்ப்பதற்கான ஆர்வத்தை தருகிறதோ என்னமோ. சந்தடிசாக்கில் அவர்களின் மனக்கொதிப்புகளும் சேர்ந்து வெளியே வந்து கொட்டுகின்றன. குறிப்பாக வையாபுரி இதில் விற்பன்னராக இருக்கிறார். 

**

பிக்பாஸ் வீட்டின் புதிய வரவான ‘சுஜா வருணி’யின் முதல் நாள் இன்று துவங்குகிறது. நேற்று ட்ரெய்லர் மட்டும்தான். ஆனால் இதர உறுப்பினர்கள் முதல் நாளிலேயே தங்களின் கோரமான முகங்களைக் காட்டியது துரதிர்ஷ்டம். அடுத்தடுத்த நாட்களிலும் சுஜாவின் மீது தங்களின் வெறுப்புகளைக் கொட்ட வாய்ப்புண்டு.

2_09467.jpg

‘ஆடலுடன் பாடலைக் கேட்டு’ பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷன் ஒலித்தது. இத்தனை நாள் நிகழ்ச்சிகளை வெளியில் பார்த்து வந்ததாலோ என்னமோ, சுஜா தன்னை ஓவியாவின் நகலாக முன்வைக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.  விடிந்ததும் காமிராவைப் பார்த்து முத்தம் தருகிறார். பேசுகிறார். ‘இந்த வீட்டில் நீதான் என் ஃப்ரெண்ட். பிக் பாஸ் முடியற வரைக்கும் என் கூட இருக்கணும். ஏதாவது bad vibration வந்தால் (யார் அது?) சொல்லணும். ஓடிப் போயிடுவேன்’ என்றெல்லாம் காமிராவை செல்லம் கொஞ்சுகிறார். 

ஆனால் ஓவியாவை வேறு எவருமே சமன் செய்ய முடியாது என்றுதான் தோன்றுகிறது. சுஜா, ஓவியாவைப் போல நடனமாட முயலவில்லை என்பது மட்டுமே ஆறுதல். மாறாக வழக்கம் போல் பிந்து மாதவி நடனம் ஆடி நம் ஏக்கத்தைப் போக்கினார். 

1_09046.jpg

‘புது துடைப்பம் நன்றாகப் பெருக்கும்’ என்றொரு பழமொழி இருக்கிறது. இதை இழிவாக எடுத்துக் கொள்ள வேண்டாம். புதிதாக இணைந்த பணியாளர்கள் துவக்க உற்சாகத்தில் முனைப்புடன் வேலை செய்து போல காட்டிக் கொள்வார்கள். எல்லோரிடமும் இணக்கமாக பழக முயல்வார்கள். இது இயல்புதான். எல்லோரையும் கவர்வதற்கான முயற்சி. சுஜா வருணி இப்படித்தான் இருக்கிறார். 

இதன் எதிர்முனையில் என்ன நிகழும் என்றால் அங்கு பல வருடங்களாக பணியில் உள்ள அனுபவஸ்தர்கள், புதியவர்களை வெறுப்புடன் பார்ப்பார்கள். கிண்டலடிப்பார்கள். வீம்பிற்கென்றே பல வேலைகளைச் செய்யச் சொல்வார்கள். 

இதற்கு மாறாக அவர்களை வரவேற்கும் உற்சாகத்துடன் ஆதரவாக இருப்பவர்கள் அரிதானவர்கள். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் கணேஷை மட்டுமே பார்க்க முடிகிறது. ஆனால் அவருமே தான் தனிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பெரும்பான்மை ஜோதியில் அவ்வப்போது கலந்து கொள்கிறார். ‘சரத்பாபு’ கேரக்டர் போல இருக்கிறார்.  குறிப்பாக கமலின் அறிவுரைக்குப் பிறகுதான் வெளியே வரத் துவங்கியிருக்கிறார். அதற்காக வையாபுரியின் அதீதமான கிண்டல்களைத் தாங்கிக் கொள்கிறார். அவ்வாறும்  அவர் இருக்கத் தேவையில்லை. 

**

4_09489.jpg

இதுவரை எவரும் செய்யாத வழக்கமாக கேமிராக்களை சுத்தம் செய்யத் துவங்கினார் சுஜா. ‘அது நல்லா இருந்தாத்தானே, நம்மளை நல்லா காட்டும்’ என்று பொருத்தமான தர்க்கத்தை முன்வைத்தார். ஆனால் அந்த வீட்டின் மாமியாரான காயத்ரி ‘காமிராவையெல்லாம் துடைக்கக்கூடாது’ என்று தன் அதிகாரத்தை நிலைநிறுத்த முயன்றார். இதற்கு அசராத சுஜா, காமிராவையே கேட்க அதன் ஒப்புதலோடு துடைக்கத் துவங்கினார். காயத்ரிக்கு ஒரு பல்பு. 

இந்த செயலை கணேஷ் ஒருபுறம் பாராட்டினாலும், ‘புதுப்படம்ல பிரிண்ட் அப்படித்தான் இருக்கும். போகப் போக டல் அடிச்சுடும்’ என்றார் வையாபுரி. 

காயத்ரியின் குணாதிசயத்தைப் பற்றி  சினிமாவுலகில் ஏற்கெனவே சுஜா அறிந்திருந்தாலும், பிக்பாஸின் அதுவரையான காட்சிகளைப் பார்த்திருந்தாலும் கூட ‘போட்டு வாங்குவதற்காக’ காயத்ரியிடம் பேச்சுக் கொடுத்தது சுவாரசியமான காட்சி. ‘உங்களுக்கு கோபம் வருமா?’ என்று மெல்ல கேட்க, முதலில் பல்லைக்கடித்துக் கொண்டு பொறுமையாக பதில் சொன்ன காயத்ரி, பாம்பு போல சட்டென்று ஒரு சீறு சிற, பயந்து பின்வாங்கினார் சுஜா. 

**

ரைசா மீதுள்ள ஆதங்கத்தைப் பற்றி ஆரவ், வையாபுரி, பிந்து என்று எல்லோரிடமும் மாறி மாறி புறம் பேசிக் கொண்டிருந்தார் சிநேகன். ‘இங்க இருக்கறவங்க எல்லோருமே புறம் பேசறாங்க. என்னால தாங்க முடியலே’ என்று அவரேவும் சொல்லிக் கொள்கிறார். ‘இனிமே இந்த வீட்ல எவருக்கும் ’no sympathy, no affection’ என்று தத்துவம் பேசினார் ஆரவ். ‘காயத்ரி பேரவையின்’ தளபதியாக அவர் இருப்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

புதுவரவான சுஜா, வீட்டை சுத்தம் செய்வதைக் கண்டு வையாபுரி உள்ளிட்ட இதர போட்டியாளர்கள் கிண்டலடித்தனர். இந்த ராகிங் ஜோதியில் பிந்துவும் ரைசாவும் இணைந்து கொண்டது சற்று ஆச்சரியம். பேய் task-ல் எல்லோரும் சேர்ந்து தன்னை ஏமாற்றியதை பிந்து அத்தனை சீக்கிரம் மறந்து விட்டாரா, அல்லது புது அடிமை கிடைத்தவுடன் பெரும்பான்மை தரப்பில் இணைந்து விட்டாரா என்று தெரியவில்லை. 

சிநேகனும் பிந்துவும் பலமாக கத்திக் கொண்டு சண்டை போடுவார்களாம்.. அதைக் கண்டு சுஜா பயப்பட வேண்டுமாம். ‘நீ இந்த வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டே’ என்பது போல கோபப்படும் விஷயத்திற்கு பிந்து சரிப்பட்டு வரவில்லை. சுந்தரத் தெலுங்கு வாசனையுடன் அவர் தட்டுத்தடுமாறி தமிழை உச்சரிப்பதற்குள் சண்டையின் மூடே போய் விடும் போல. 

இதையெல்லாம் பார்த்து சுஜா சற்று பயந்தது போல்தான் தெரிந்தது. அல்லது இதுவரையான எபிஸோட்களையெல்லாம் பார்த்த யூகத்தில் ‘பயபுள்ளக ஏதோ பண்ணுதுங்க.. என்ன பண்றது.. பயப்படற மாதிரி நடிச்சு வெப்போம்’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாரோ, என்னமோ.

**

5_09498.jpg

‘எல்லா அப்பாக்களுக்கும் பொண்ணுங்களைப் பிடிக்கும். ஆனா என் அப்பாவிற்கு மட்டும் ஏன் என்னை பிடிக்காமல் போனது?’ என்று சுஜா வையாபுரியிடம் அன்னியோன்யமாக பேசத் துவங்கி விட்டார். அவர் தனது சுயசரிதையை சொன்ன போது பரிதாபமாக இருந்தது. 
தந்தையின் ஆதரவு இல்லாமல் குடும்பப் பொறுப்பை இளமையிலேயே ஏற்க வேண்டிய பரிதாபம், தாயின் மருத்துவச் செலவை சமாளிக்க, ஒரு பாடலுக்கு ஆட வேண்டிய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு, பின்பு அதுவே நிலைத்துப் போன சோகம். என்று பல ஐட்டம் டான்ஸர்களின் துயரத்தின் பிரதிநிதியாக இருந்தார். அடுத்த முறை திரையில் இது போன்ற நடனங்களைப் பார்க்கும் போது, அவர்களைப் பற்றி மோசமாக கமெண்ட்டுகள் அடிப்பதற்கு முன்பு, இது போன்ற துயரங்களையும் கூடவே நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. 

என்னவொன்று, சுஜாவிடம் ஒரு கேள்வியைக் கேட்டு விட்டு கேமிராமேன் எழுந்து போய் லஞ்ச்சைக் கூட முடித்து விட்டு வந்து விடலாம் போல. அத்தனை நீளத்திற்கு பேசிக் கொண்டே போகிறார். 

**

அடுத்து ஒரு கண்ணாமூச்சி task. அது முக்கியமில்லை. அதன் மூலம் கிடைத்த பரிசாக ‘ஆரவ்விற்கு’ eviction-ல் இருந்து தப்பித்த வாய்ப்பு கிடைத்ததுதான் சற்று அதிர்ச்சி. மேலும் இன்னொரு அதிர்ச்சியும் காத்திருந்தது. 

‘எவரையாவது eviction’-ல் இருந்து காப்பாற்றலாம் என்கிற பரிசு, கணேஷிற்கு கிடைத்து தொலைத்தது.. மனிதர், ‘காயூ பேபியை’வை தேர்வு செய்து வாக்காளர்களின் முகத்தில் கரியைப் பூசி விடுவாரோ? மீண்டும் ஒரு பயங்கர ஏமாற்றத்தை வாக்காளர்களால் தாங்கிக் கொள்ள முடியுமா?

கணேஷ் புத்திசாலித்தனமான தேர்வை செய்வார் என்று நம்புவோம். 

**

7_09101.jpg

ஆரவ்வும் காயத்ரியும் சதியாலோசனையில் அமர்ந்தனர். ரகசியமான பேச்சு. சிநேகனைப் பற்றிய புறம். ‘வாயைத் திறந்தா அத்தனையும் பொய்’ என்றார் காயத்ரி. வழக்கம் போல் ஏற்ற இறக்கங்களுடன் அவர் புறணி பேசிய விதம் ஜூலியை நினைவுப்படுத்தியது. ‘வெளியே வந்து எல்லாரையும் செஞ்சுடுவேன்’ என்கிறார் காயத்ரி. வெளியில் உள்ள நிலைமை அவருக்குத் தெரியவில்லை. 

**
புது வரவாக ஹரீஷ் கல்யாண். மருத்துவமனையில் எந்த குழந்தை பிறந்தது என்கிற நர்ஸின் அறிவிப்பு போல ‘It’s a boy’ என்று உற்சாகமாக அறிவித்தார் கணேஷ். “உனக்கு காம்படிஷனுக்கு அனுப்பியிருக்காங்க’ என்று சரியான பாயிண்டை ஆரவ்விடம் முன்வைத்தார் காயத்ரி. ஆரவ்வின் முகத்தில் சுருதி இறங்கித்தான் போயிருந்தது. 

collage_09341.jpg

பரணியை நினைவுப்படுத்துவது போல சுவரேறி குதித்து எண்ட்ரி தந்தார் ஹரீஷ். வெளியே குதிப்பதற்குத்தான் தடை போல. 

ஏணி வரத் தாமதமாகியதால் ‘அப்படியே கீழே குதிச்சடட்டுமா’ என்று ஹரீஷ் கேட்டதற்கு ‘வேண்டாம்’ என்பது போல் கையசைத்தார் காயத்ரி. ‘கீழே விழுந்தா கால் உடையப் போகுது. அவ்ளதானே’ என்று பரணிக்கு நியாயம் பேசியவரும் இவர்தான். 

வீட்டுக்குள் நுழைந்ததும் தன் அதிரடியைத் துவக்கினார் ஹரீஷ். ‘எவர் உடனடியாக ஒரு உணவைத் தயார் செய்து தருகிறாரோ, அவர்களுக்கு பிக்பாஸ் பரிசு காத்திருக்கிறது’ என்றதும் சுஜாவும் ரைசாவும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடினார்கள். 

தங்களின் வீடுகளில் கூட இத்தனை சுறுசுறுப்பாக செய்திருப்பார்களோ என்று தெரியவில்லை. பரிசு என்றதும் மளமளவென்று வேலை நடந்தது. பெற்றோரைச் சுற்றி வந்து பழத்தைப் பெற்றுக் கொண்ட விநாயகரைப் போல வெள்ளரிக்காயை நறுக்கி கொண்டு வந்தது காயத்ரி அணி. ரைசா அவசரம் அவசரமாக சப்பாத்தி செய்து கொண்டிருந்தார், பாவம். 

11_09024.jpg

‘Task-லாம் இல்ல. பசிச்சது. அதான் அப்படிச் சொன்னேன்’ என்று ஹரீஷ் அம்பலப்படுத்தியதும் ரைசா மிகப் பெரிய பல்பை வாங்கியது போல முழித்தார். விளையாட்டாக ஹரீஷைத் திட்டினாலும் பலருக்கும் உள்ளுக்குள் எரிச்சல் ஏற்பட்டது வெளிப்படையாகத் தெரிந்தது. .

‘தண்டனையாக நீச்சல் குளத்தில் விழ வேண்டியிருக்குமோ என்று பயந்துதான் அவசரம் அவசரமாக சமையல் செய்தேன்’ என்று ரைசா சமாளித்தாலும் ஆரவ் அவரை கிண்டல் செய்யத் தவறவில்லை. புது போட்டியாளரான ஹரீஷிடமிருந்து ரைசாவை பாதுகாப்பதுதான் இனி ஆரவ்வின் முழு நேர பணியாக இருக்கும் போல. கூடவே காயத்ரி பேரவை தளபதியாகவும் இருக்க வேண்டும். கஷ்டம்தான். 

**

பிந்துவைப் போலவே உள்ளே நுழைந்ததும் ‘நமது நிருபர்’ பணியைத் துவக்கினார் ஹரீஷ். மருத்துவ முத்தம் மாதிரி நீங்கள் ‘கட்டிப்பிடி வைத்தியம்’ செய்வதால் உங்களுக்கு ‘டாக்டர்’ என பெயர் வைத்திருக்கிறேன் என்று ஹரீஷ் சொன்னதும், வெட்கமேயில்லாமல் சிரித்தார் சிநேகன். உள்ளுக்குள் மனம் சுருங்கினாரோ என்னமோ. 

collage2_09436.jpg

ஓவியாவின் வெளியேற்றத்தில், துயரத்தில் ஆரவ்விற்கு முக்கிய பங்கு இருக்கிறது என்றாலும் எல்லோருக்குமே அதில் பங்கு இருக்கிறது அல்லவா என்றொரு முக்கியமான கேள்வியைக் கேட்டார் ஹரீஷ். வேறு வழியில்லாத சிநேகன் அதை ஒப்புக் கொண்டார். 

 

**
புதுவரவுகளை இணைப்பது மட்டுமில்லை. இந்த நாடகத்தை சுவாரசியமான ஐடியாக்களுடன் தொடர்வதில்தான் பிக்பாஸின் சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது. இல்லையெனில் ரிமோட் என்கிற பிரம்மாஸ்திரத்தை பிக்பாஸின் மீது பார்வையாளர்கள் ஏவத் தயங்க மாட்டார்கள்.

http://www.vikatan.com/cinema/bigg-boss-tamil/99457-bigg-boss-tamil-updates-day-53-aarav-vs-harish-bindhu-madhavai-vs-sujahow-biggboss-will-strike-a-hit.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று ஆரம்பமாகின்றது விவாதம்! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. அந்த வகையில் இன்று காலை 9.30 மணி முதல், மாலை 5.30 மணி வரையிலும் நாளை (20) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373909
    • ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் வடக்கு- கிழக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரியதையடுத்தே, இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முற்பகல் குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தோடு, இவ்விவகாரம் தொடர்பாக வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை கிடைக்கப்பெறும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் எவரும் கைது செய்யப்பட்டவர்களை வந்து பார்வையிடவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373977
    • அன்புள்ள நண்பரே அழகுப் பெண்களே ........!  😍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.