Jump to content

சச்சின் அணியின் தமிழ் தலைவாஸ் கபடி அணிக்கு தூதர் ஆனார் கமல்


Recommended Posts

சச்சின் அணியின் தமிழ் தலைவாஸ் கபடி அணிக்கு தூதர் ஆனார் கமல்

 
 
 
சச்சின் அணி,தமிழ் தலைவாஸ்,கபடி,தூதர்,கமல்
 

சென்னை: புரோ கபடி லீக்கில் சச்சின் அணியான தமிழ் தலைவாஸின் விளம்பர தூதராக நடிகர் கமல் அறிவிக்கப்பட்டுள்ளார்.
 

 

கோட்டை தாண்டி புகழை சூடுங்கள்:


புரோ கபடி தொடரில் பங்கேற்கும் சச்சின் அணியான ‛தமிழ் தலைவாஸ்' அணியின் விளம்பர தூதராக நடிகர் கமலஹாசன் அறிவிக்கப்பட்டார். '' முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் பங்கு இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்'' எனத் தெரிவித்துள்ள நடிகர் கமல், கோட்டை தாண்டி புகழை சூடுங்கள் என வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

 

தமிழ் தலைவாஸ்:


ஐ.பி.எல்., பாணியில் கடந்த 2014ல் துவங்கப்பட்ட புரோ கபடி லீக்கில், டில்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. இத்தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைக்க ஐந்தாவது சீசனில் தமிழகம், அரியானா, குஜராத் மற்றும் உ.பி., என கூடுதலாக 4 அணிகள் சேர்க்கப்பட்டன. இதில் பங்கேற்கும் தமிழகத்தின் சென்னை கபடி அணியின் பங்குகளை வாங்கி சக உரிமையாளர் ஆனார் சச்சின். இந்த அணிக்கு ‛தமிழ் தலைவாஸ்' என பெயர் சூட்டப்பட்டது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1814982

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தை பொங்கல் கபடி டூ ப்ரோ கபடி... இது சேலம் வீரர் பிரபஞ்சன் டைம் டிராவல்!

 
 

ஐ.பி.எல் போட்டிகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக வரவேற்பைப் பெற்று வருவது ப்ரோ கபடிதான். கபடியைக் கண்டுபிடித்ததாக தமிழகம் எப்போதுமே பெருமை பட்டுக்கொள்ளும்.  ஆனால் ப்ரோ கபடியில் தமிழகத்துக்கு என ஒரு அணி இல்லை என்ற குறை இருந்தது. இதோ இந்த சீசனில் தமிழகம் சார்பில் 'தமிழ் தலைவாஸ்' ப்ரோ கபடியில் பங்கேற்கிறது. தொழிலதிபர் பிராசாத்துடன் இணைந்து தமிழக அணியை வாங்கியிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்

கபடி வீரர் பிரபஞ்சன்

தமிழ் தலைவாஸ் அணிக்கு கேப்டனாக அஜய் தாக்கூர் செயல்படுகிறார். இந்திய அணியில் சீனியர் பிளேயரான அஜய், கடந்த உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் சூப்பர் ஹீரோவாக மிளிர்ந்தார். கபடி அணியில் பொதுவாக 10 முதல் 12 வீரர்கள் இருப்பார்கள். ஆனால் களத்தில் விளையாட ஏழு வீரர்களுக்கு மட்டுமே அனுமதி. அந்த வகையில் இந்த வருடம் தமிழ் தலைவாஸ் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த முக்கியமான பிளேயராகத் திகழ்கிறார் ரெய்டர் பிரபஞ்சன். 

வரும் வெள்ளிக்கிழமை தமிழ் தலைவாஸ் தெலுங்கு டைட்டன்ஸ் அணியைச் சந்திக்கிறது. அதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் பிரபஞ்சன். அவரிடம் பேசினேன். சொந்த ஊர், பின்னணி, கபடி விளையாட வந்த கதை, ப்ரோ கபடிக்குள் நுழைந்தது எப்படி என பல விஷயங்களைப் பகிர்ந்தார்.

"என்னோட சொந்த ஊர் சங்ககிரி, சேலம் மாவட்டம்.  குடும்பத்தில் அப்பா, அம்மா இரண்டு பேருமே லோக்கல் கபடி பிளேயர்கள். அப்பா ஊர் ஊரா போய்  சின்ன சின்ன டோர்னமென்ட்ல விளையாடுவார். அவங்க தமிழ்நாடு அளவிலோ இந்திய அளவிலோ போறதுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லை. நான் கபடி விளையாட ஆரம்பிச்சதே அப்பாவை பார்த்துத்தான். சின்ன வயசுல அவரோட கபடி விளையாடுற இடத்துக்கு அடிக்கடி போயிட்டு இருப்பேன். எட்டாவது படிக்கிறப்பதான் கபடி விளையாட ஆசை வந்தது. தைப்பொங்கலுக்கு  ஊர்ல நடக்குற கபடி போட்டியில் கலந்துக்கிட்டேன். 

எனக்கு அந்த விளையாட்டு ரொம்ப பிடிச்சது. அதுக்கப்புறம் அப்பா நிறைய விஷயங்கள் சொல்லித்தந்தார். 12-வது முடிச்சதுக்குப்பிறகு நமக்கு  படிப்புலாம் பெரிய அளவில் வராதுன்னு தெரிஞ்சது.  இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) சேர்ந்து அங்கே விளையாடிக்கிட்டே இலவசமாக கல்லூரிப் படிப்பையும் முடிச்சேன். அப்போ நான் சீரியஸா கபடி விளையாட ஆரமிச்சேன். ஊர்ல நானும் கபடி பிளேயரா வளர்ந்தேன். அதே சமயம் மாவட்ட அளவில் இருந்து மாநில அளவில் தகுதிபெற்று அங்க இருந்து இந்திய அணிக்கும் தேர்வானேன். கடந்த உலக கோப்பைத் தொடரில் இந்திய அணியின் கேம்ப்பில் நானும் இருந்தேன். ஆனா இதுவரைக்கு இந்திய அணிக்காக மேட்ச் ஆடலை.

ப்ரோ கபடி பிளேயர் பிரபஞ்சன்

நடுத்தர குடும்பம்தான் எங்களோடது. அப்பா குமரவேல் கபடி விளையாடிக்கிட்டே வருமானத்துக்காக அப்பப்போ ரியல் எஸ்டேட்டும் பார்த்துட்டு இருந்தார். அம்மா பெயர் உமாநாத். தம்பி சுபாஷ், பாப்பா யாழினினு ஐந்து பேர் கொண்ட குடும்பம். கபடிக்கு மட்டும் நான் வரலைனா இந்நேரம் ஊர்ல வெட்டியாதான் சுத்திட்டு இருந்திருப்பேன். இப்போ கஸ்டம்ஸ்ல வேலை பார்க்கிறேன். ப்ரோ கபடி வாய்ப்பு எங்க குடும்பத்தோட பொருளாதார நிலைமையை உயர்த்தி இருக்கு.

சேலம் தாலையூர் கபடி அணியில் சாமியப்பன்னு ஒரு பிளேயர் இருந்தார். அவர் இந்திய அணிக்காக விளையாடிருக்கிறார். ஊர்ல நடக்குற சின்ன டோர்னமென்ட்ல சாமியப்பன் அணிக்கு எதிரணியில் என்னோட அப்பா விளையாடியிருக்கிறார். சாமியப்பன் சார்தான் என்னை ஒரு கபடி பிளேயரா மாத்தினார். ஆரம்பகட்டங்களில் கை, கால்களில் நிறைய அடிபடும். ஆனா வீட்டுல எனக்கு நல்ல ஆதரவு தந்தாங்க. கபடி விளையாட போகாதன்னு சொல்ல மாட்டாங்க. ‛சீக்கிரமா காயத்தைக் குணப்படுத்திட்டு களத்துக்குப் போ’னு உற்சாகப்படுத்துவங்க. அவர்களின் ஆதரவுதான் எனக்கு பெரும் துணை. 

ப்ரோ கபடியை பொறுத்தவரைக்கு நான் மூணு சீசனில் விளையாடிருக்கேன். இரண்டாவது மற்றும் மூன்றாவது ப்ரோ கபடி சீசனில் யூ மும்பா அணிக்காக ஆடினேன். அப்போ களத்தில் இறங்க  பெரிய வாய்ப்புகள் இல்லை. இந்திய அணிக்கு ஆடாமல் ஜுனியராவே நேரடியாக தமிழக அணியில் இருந்து  ப்ரோகபடியில் வந்ததால் எனக்கும் பதற்றம் இருந்தது. அப்போ எனக்கு வயசு 21 -22 தான். கடந்த சீசனில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்காக ஆடினேன். அங்கே எட்டாவது பிளேயரா இருந்தேன். எல்லா மேட்சுலையும் ஏதாவதொரு தருணத்தில் களத்தில் இறக்கப்பட்டேன். அப்போதுதான் நம்பிக்கை கூடியது. போன வருஷம் நிறைய ரெய்டு பாயின்ட் எடுத்தேன். 

பிரபஞ்சன்

கடந்த ஒரு வருஷத்தில் என்னோட முன்னேற்றத்தைக் கவனிச்சு தமிழ் தலைவாஸ் அணி என்னை ஏலத்தில் எடுத்தாங்க. தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் சார் தான் இந்திய அணிக்கும் பயிற்சியாளர். இந்திய அணியின் கேம்ப்பில் அவர் என்னோட ஸ்டெப்ஸை மாத்தினார். முன்னாடி ரெய்டு போகும்போது யாரைப் பார்த்தாலும் தொடணும்னு நினைப்பேன். இதனாலே அங்கிட்டு இங்கிட்டு ஓடிட்டிருந்தேன். இப்போ ரெய்டுக்கு போனா எந்த பிளேயர குறிவைக்கணும், எப்படி அவரை வீழ்த்தணும்கிறதுல கவனம் செலுத்தணும்னு கத்துக்கிட்டேன். ஊர்ல எல்லோரும் நான் கபடி விளையாடுற ஸ்டைலே மாறிடுச்சுனு வாழ்த்துனாங்க. 

வீட்ல நார்மல் சாப்பாடுதான். அப்பா எனக்கு ஸ்பெஷலா பாக்கெட் மணி கொடுத்து முட்டை, சூப், பாதாம்லாம் வெளிய வாங்கி சாப்பிட சொல்வார். இப்போ நல்ல சாப்பாடு, தரமான பயிற்சி, பணம், புகழ் எல்லாம் கிடைக்குது. கடந்த சீசன்களில் விளையாடும்போது மொழி தெரியாம கஷ்டப்பட்டேன். இப்போ தமிழ்நாட்டுக்கு ஆடுறது பெருமையாக இருக்கு. நம்ம டீமுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான் பயிற்சியாளரும் கூட. இம்முறை பிளேயிங் செவனில் தொடர்ந்து விளையாடுவேன்னு நம்பிக்கை இருக்கு. வீட்டுக்கும் ஊருக்கும் தமிழ்நாட்டுக்கும் நிச்சயம் பெருமை சேர்ப்பேன் "  - என தம்ஸ்  அப் காட்டுகிறார் பிரபஞ்சன்.

http://www.vikatan.com/news/sports/96883-tamil-thalaivas-team-player-prabanjan-interview.html

Link to comment
Share on other sites

புரோ கபடி தொடக்க விழாவில் சச்சின், மித்தாலி ராஜ் பங்கேற்பு

 
 

புரோ கபடி லீக் ஐந்தாவது சீஸன் ஹைதராபாத் நகரில் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. முதன்முறையாக தமிழ்நாட்டிலிருந்து ஓர் அணி புரோ கபடி தொடரில் பங்கேற்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரெய்டர் பிரபஞ்சன், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த டிஃபண்டர் அருண் உள்பட ஏழு தமிழ்நாட்டு வீரர்கள், தமிழ் தலைவாஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.  சச்சின் உரிமையாளராக உள்ள தமிழ் தலைவாஸ் அணிக்கு நடிகர் கமல்ஹாசன் தூதராக உள்ளார். 

ப்ரோ கபடி லீக்

சமீபத்தில் சென்னையில் நடந்த ஜெர்ஸி அறிமுக விழாவில் பேசிய கமல், ‛இந்திய விளையாட்டுகளில் மூத்த அண்ணனாகத் திகழும் சச்சின் டெண்டுல்கர், கபடியைப் பிரபலப்படுத்த முன்வந்தது மகிழ்ச்சி. எங்கோ ஓர் ஐரோப்பியத் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டு உலகெங்கும் பரவ முடியும் என்றால், நம் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் ஆடி வந்த விளையாட்டு, தேசிய எல்லைகளை மட்டுமல்ல, உலக எல்லைகளைக் கடந்து செல்லும் என நம்புகிறேன். அதனால், அணியின் உரிமையாளர் என்னை அணுகியபோது உடனே சம்மதித்துவிட்டேன். இதை ஒரு பெருமையாகவும் கடமையாகவும் கருதுகிறேன். ‘தமிழ் தலைவாஸ்’ வெற்றி பெற வேண்டும்’’ என்று அவர், வாழ்த்து தெரிவித்தார். 

 

அதிகம் பேரால் பார்க்கப்படும் இந்திய விளையாட்டு லீக் தொடர்களில் இரண்டாவது இடத்தில் இருக்கும் புரோ கபடி லீக் தொடரின், ஐந்தாவது சீஸன் நாளை கோலாகலமாகத் தொடங்கவுள்ளது. இந்த விழாவில் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் அக்ஷய் குமார், சிரஞ்சீவி, ராம்சரண், ராணா டகுபதி, அல்லு அர்ஜுன், தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர் என்.பிரஸாத், அல்லு அரவிந்த், கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ், பாட்மின்டன் வீரர்கள் சாய் ப்ரணீத், கிடாம்பி ஸ்ரீகாந்த், குரு சாய்தத், பயிற்சியாளர் கோபிசந்த், ராமுராவ் மற்றும் சாமுண்டீஸ்வரி போன்ற பிரபலங்கள் பங்கேற்கின்றனர். தொடக்கவிழாவில் Nritarutya நடன நிகழ்ச்சி நடைபெறும்.

http://www.vikatan.com/news/sports/97048-pro-kabaddi-league-inauguration-will-be-held-in-hyderabad-tomorrow.html

Link to comment
Share on other sites

சேலம் பிரபஞ்சன் முத்திரை பதித்தும், தமிழ் தலைவாஸ் தோற்றது ஏன்? #MatchAnalysis #ProKabaddi

 

‘கபடிக்குச் சொந்தக்காரர்கள் நாங்கதான்’ எனத் தமிழர்கள் மார்தட்டுவதுண்டு. ஆனால் தமிழ்நாட்டில் கிரிக்கெட் வீரர்களுக்குக் கிடைத்த வரவேற்பு கபடி வீரர்களுக்குக் கிடைப்பதில்லை. தமிழ்நாடு சுதாரிப்பதற்கு முன்னதாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் சுதாரித்துக் கொண்டன. இந்திய அணியிலும் சரி, ப்ரோ கபடியிலும் சரி வட மாநில வீரர்கள் கலக்குகிறார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமிழக ப்ரோ கபடியில் தமிழ்நாட்டுக்கு எனப் பிரத்யேக அணி இல்லை. இதனால் தமிழக வீரர்களுக்குப் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சீசனில் தமிழக ரசிகர்களின் ஆதரவுடன் தமிழ் தலைவாஸ் அணி விளையாடுகிறது.

கபடி

அதிகளவில் இளம் வீரர்களைக் கொண்ட தமிழ் தலைவாஸ் அணிக்கு கேப்டனாக அஜய் தாகூர் இருக்கிறார். இவர் கடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் ஹீரோவாக ஜொலித்தவர். மூன்று மாதம் நடக்கும் ப்ரோ கபடித்தொடர் ஹைதராபாத்தில் நேற்று தொடங்கியது. சச்சின் டெண்டுல்கர், அக்ஷய் குமார் என நட்சத்திர பட்டாளம் தொடக்க விழாவில் பங்கேற்றது. சச்சின் டெண்டுல்கர் வாங்கிய அணி என்பதாலோ என்னவோ ஒரு போட்டியில் கூட விளையாடாத தமிழ் தலைவாஸ் அணிக்கு நேற்றைய தினம் ட்விட்டரில் ஆதரவு குவிந்தது. ப்ரோ கபடித் தொடரின் ஐந்தாவது சீசனின் தொடக்கப் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் மோதின. 

ராகுல் சவுதாரி, ராகேஷ் ஷர்மா என வலுவான வீரர்களும் அனுபவம் வாய்ந்த வீரர்களும் தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் இருந்தனர். தமிழக அணியில் அஜய் தாகூர், அமித் ஹூடா, டான்சியோன் லீ, பிரபஞ்சன், அருண் உள்ளிட்ட வீரர்கள் இருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே போட்டித் தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே தெலுங்கு டைட்டன்ஸ் அணி மேட்சில் ஆதிக்கம் செலுத்தியது.

தமிழ் தலைவாஸ்

முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி  தடுமாறியது. முதல் ஆட்டம் என்பதாலோ என்னவோ முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணியிடம் ஆக்ரோஷமே இல்லை. ரெய்டிலும் சரி டேக்கிலிலும் சரி சீராகப் புள்ளிகளைக் கோட்டை விட்டது அஜய் தாகூர் அணி. முதல் பாதியில் 13வது நிமிடத்தில்தான் முதல் டேக்கில்  புள்ளியைப் பெற்றது தமிழ் தலைவாஸ். முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் எடுத்த ஒரே டேக்கில் புள்ளி இதுதான். அந்த டேக்கில் புள்ளிக்குச் சொந்தக்காரர் டி.பிரதாப். மார்போடு சேர்த்து இறுக்கப்பிடித்து டேக்கில் செய்வதில் வல்லவரான தமிழக வீரர் அருண் நேற்று முதல் பாதி முழுக்க சொதப்பலாக ஆடினார். அவர் முயற்சி செய்த நான்கு முறையும் தோற்றார். ஒட்டுமொத்தம்மாக முதல் பாதியில் 11 முறை டேக்கில் புள்ளிகளை எடுக்க முயற்சி செய்த தமிழ் தலைவாஸ் அணி ஒரு புள்ளி மட்டுமே பெற்றது. 

தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் அஜய் தாகூர் முதல் பாதியில் ஸ்டார் பெர்ஃபார்மெராகத் திகழ்ந்தார். 12 முறை ரெய்டுக்குச் சென்று அதில் எட்டுப் புள்ளிகளை எடுத்து வந்தார். ராகுல் செளத்ரி ரெய்டுக்கு வரும்போதெல்லாம் தமிழ் தலைவாஸ் அணியைச் சேர்ந்த அமித் ஹூடாவுக்கு குறி வைத்தார். மூன்று முறை அவர் அமித் ஹூடாவை களத்தில் இருந்து வெளியேற்றினார். முதல் பாதியில் ஒரு கட்டத்தில் இரண்டு அணிகளும் 8-8 என்ற நிலையில் இருந்தன. அப்போது ராகுல் செளத்ரி அடுத்தடுத்து இரண்டு எதிரணி வீரர்களையும் வெளியேற்ற தமிழ் தலைவாஸ் ஆல் அவுட் ஆனது. அப்போது தடாலென முன்னிலை பெற்றது தெலுங்கு டைட்டன்ஸ். முதல் பாதியின் முடிவில் தமிழ் தலைவாஸ் அணி 11 - 18 என ஏழு புள்ளிகள் பின்தங்கியிருந்தது.

ப்ரோ கபடி

இடைவேளைக்குப் பிறகு தமிழ் தலைவாஸ் அணி சுறுசுறுப்பாக விளையாட ஆரம்பித்தது. நேரம் நேரம் செல்லச் செல்ல ஆட்டத்தில் ஆக்ரோஷமும் கூடியது. முதல் பாதியில் டேக்கிலில் சொதப்பிய அருண், இம்முறை அசத்தலாக நான்கு முறை வெற்றிகரமாக டேக்கில் புள்ளியை எடுத்தார். இரண்டாவது பாதியில் ஒருமுறை கூட அருண் சொதப்பவில்லை. ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் ரெய்டிலும் கலக்கியது தமிழ் தலைவாஸ். ஆனால் அது காலம் கடந்த முயற்சியாக மட்டுமே இருந்தது. கடைசி கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதால் தோல்விக்காண புள்ளி வித்தியாசத்தை குறைக்க முடிந்ததே தவிர தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் 32 - 27 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி வென்றது. வெறும் ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் வரலாற்றைத் தோல்வியுடன் தொடங்கியது தமிழ் தலைவாஸ். புள்ளிகள் வித்தியாசம் ஏழுக்குள் இருந்த காரணத்தால் லீக் சுற்றுக்கான புள்ளிப்பட்டியலில் தமிழக அணிக்கு ஒரு புள்ளி கிடைத்தது.

தெலுங்கு அணிக்கு மேட்ச் வின்னராகத் திகழ்ந்தார் ராகுல் சவுதாரி. அவர் புள்ளிகளைத் தொடர்ச்சியாக அள்ளினார். நேற்றைய போட்டியில் 19 ரெய்டுகளில் 10 புள்ளிகளை எடுத்தார் ராகுல். இதன் மூலம் ப்ரோ கபடியில் 25வது முறையாக சூப்பர் -10 சாதனையை செய்தார். ஹைதரபாத் அணிக்காக நூறு ரெய்டு புள்ளிகளை எடுத்த முதல் வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார் ராகுல் செளத்ரி. நேற்றைய தினம் ராகுலுக்குப் பக்கபலமாக சலுன்கே விளையாடினார். தமிழக அணியில் பிரபஞ்சன் அபாரமாக ஆடினார். ஆனால் கேப்டன் அஜய் தாகூர் சுமாராகவே விளையாடினார். தாகூர் பிரபஞ்சன் இணையை சலுன்கே - ராகுல் இணை வென்றது. கேப்டன் அஜய் தாகூர் விட்டுப்பிடிக்காமல் ஆரம்பத்தில் இருந்தே இறுக்கிப் பிடிப்பது அவசியம். 

பிரபஞ்சன் அபாரம் :- 

பிரபஞ்சன்

தமிழ் தலைவாஸ் அணிக்காக ப்ரோ கபடியின் வரலாற்றில் முதல் புள்ளியை எடுத்தவர் என்ற சிறப்புமிக்க பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் பிரபஞ்சன். நேற்றைய தினம் முதல் பாதியில் ஏழு முறை ரெய்டுக்குச் சென்ற பிரபஞ்சன் மூன்று புள்ளிகளை எடுத்து வந்தார். அதே சமயம் இரண்டு முறை பிடிபட்டார்.  இரண்டாவது பாதியில் எட்டு ரெய்டுக்குச் சென்றவர் நான்கு புள்ளிகளை எடுத்தார். ஆனால்  ஒரு முறை மட்டுமே பிடிபட்டார் . ஒட்டுமொத்தமாக நேற்று ஏழு புள்ளிகளை அள்ளினார் பிரபஞ்சன். ராகுலுக்கு அடுத்தபடியாக நேற்று அதிக புள்ளிகளை எடுத்தவர் பிரபஞ்சனே.  இக்கட்டான சூழ்நிலைகளில் அபாரமாக ஆடினார். இந்திய அணிக்காக இன்னும் விளையாடாத பிரபஞ்சன், சர்வதேச பிளேயரைப் போல் விளையாடியது பலரையும் வியக்கவைத்தது. இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் பிளஸ் பிரபஞ்சனின் அட்டகாச பெர்பார்மென்ஸ்தான் . 

போட்டி முடிந்த பிறகு தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் கே.பாஸ்கரனிடம் பேசினேன். 

Tamil Thalaivas coach Baskaran

முதல் பாதியில் ஆக்ரோஷமாக ஆடாததுதான் தோல்விக்குக் காரணமா? 
"எங்களது இலக்கு ராகுல் செளத்ரியை களத்தில் இருந்தே வெளியேற்றுவதாகவே இருந்தது. நாங்கள் ஆக்ரோஷமாக விளையாடவே இல்லை எனச் சொல்ல மாட்டேன். ராகுல் செளத்ரியை வெளியேற்றும் முயற்சியில் நாங்கள் இரண்டு புள்ளிகளை ஒரே நேரத்தில் இழந்தோம். அந்தத் தருணத்தில் அணியும் ஆல் அவுட் ஆனதால் மேட்ச் எதிரணிக்குச் சாதகமாகிவிட்டது

அஜய் தாகூருக்கு இன்றைய தினம் மோசமாக அமைந்துவிட்டதே ?
"மோசமாக அமைந்தது எனச்  சொல்ல முடியாது. என்னைப் பொறுத்தவரை அஜய் தாகூருக்கு இது கற்றுக்கொள்ளும் காலகட்டம். அவர் முன்பு இருந்த அணியின் நிலைமை வேறு. இப்போதைய அணியின் நிலைமை வேறு. இளம் வீரர்களை இப்போது வழிநடத்துகிறார். அந்தக் கவனத்துடன் அடுத்தடுத்த போட்டிகளில் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்" என்றார் கே.பாஸ்கரன். 

http://www.vikatan.com/news/sports/97239-telugu-titans-led-by-rahul-chaudhari-beat-tamil-thalivas.html

Link to comment
Share on other sites

பிக்பாஸ் அலையில் இந்த மேட்சை நீங்கள் மிஸ் செய்தீர்களா? #ProKabaddi #JPPvsDD

 
 

கம்பேக் மேட்ச்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு.  அதுவும் வலுவானவனிடம்தொடர்ந்து அடி வாங்கிக் கொண்டே இருந்த ஒருவன்  திருப்பி அடித்து வெற்றி கொண்ட கதைகள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. சினிமா, கிரிக்கெட் மட்டுமல்ல  கபடியிலும்  அப்படிப்பட்ட  கம்பேக் கதைகள் உண்டு. நேற்று நடந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், தபாங் டெல்லி இடையிலான போட்டி கம்பேக் மேட்ச்களுக்கு ஒரு சிறிய உதாரணம். 

Pro Kabaddi


புரோ கபடியை பொறுத்தவரை  ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி எப்போதுமே வலுவான அணிகளில் ஒன்று.  ஐபிஎல்லில் ஆடும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஜெராக்ஸ் தான் தபாங் டெல்லி. அரை இறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் எல்லாம் கடந்த சீசன்களில் விளையாடவில்லை. கடைசி  இரண்டு இடத்தில் வந்துவிடக்கூடாது  என்பதை நோக்கமாக கொண்டு விளையாடும்  அணியாகத்தான் இருந்தது. டெல்லியோடு மேட்ச்சா? ஐந்து புள்ளிகள் நிச்சயம்ப்பா என்ற மனநிலையில் தான் கடந்த சீசன்களில்  எதிர் அணிகளும் விளையாடின.

இதுவரை 57 போட்டிகளில் ஆடியுள்ள தபாங் டெல்லி அணி ஜெயித்தது வெறும் 15ல் தான். அதுவும் மூன்றாவது சீசனில் 14 போட்டிகளில் ஆடி வெறும் ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் வென்றது. இதோ இந்த சீசனில் 12 அணிகள் கோப்பையைக் கைப்பற்ற போட்டி போடுகின்றன. ஜெயிப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்கு முதல் போட்டியே தபாங் டெல்லி அணியுடன்தான். "ஒன்சைடு மேட்ச்சா   இருக்குமேப்பா ",  "சுவாரஸ்யமே இருக்காதே" என  கமென்ட்டுகளில் ... மீம்களில்... கலாய்த்து தள்ளினார்கள் நெட்டிசன்கள். தபாங் அணியும்  கடைசியாக ஜெய்ப்பூர் அணியுடன் மோதிய ஐந்து போட்டிகளிலும் வெற்றிபெறவே இல்லை.  ஜெயிப்பூர் அணியில் உடும்புப்பிடி நாயகன் மன்ஜீத் சில்லர் இருந்தார். அவர் தான் அந்த அணியின் கேப்டனும் கூட. அவரைத் தவிர  ஜஸ்விர் சிங், செல்வமணி உள்ளிட்ட திறமையான வீரர்களும் இருந்தனர். தபாங் டெல்லி அணியில் பிரபலமான இந்திய வீரர்கள் யாரும் இல்லை.  ஈரான் வீரர் மீரஜ் ஷேயிக்தான் அந்த அணிக்கு கேப்டன்.

pro kabaddi

ஹைதரபாத் கச்சிபோலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு எட்டு மணிக்கு மேட்ச் தொடங்கியது. ஆரம்பத்திலியே போட்டுத் தாக்கியது ஜெய்ப்பூர்.  0 - 2 என முதல்  இரண்டு நிமிடங்களில் பின்தங்கினாலும் அதன்பின்னர் சுதாரித்து  ஒரு சாம்பியன் அணி எப்படி  ஆடுமோ அப்படியொரு நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுதியது ஜெய்ப்பூர்.  மன்ஜீத் சில்லர் ரெய்டுக்கு வரும்போதெல்லாம்  ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினார்கள். செல்வமணி ஜெய்ப்பூருக்கு புள்ளிகள் சேர்த்தார். 0-2 என நிலையில் இருந்து  தடாலென  7 - 4 என்றானது ஸ்கோர். அந்த பதற்றத்தில் மேலும் தவறுகளை செய்தனர் டெல்லி வீரர்கள்.  எதிரணியின் பதற்றத்தைச் சாதகமாக்கிக் கொண்ட ஜெய்ப்பூரைச் சேர்ந்த  ஜஸ்விர் சிங் அக்ரசிவ் மனப்பான்மையோடு  ரெய்டுக்குச் சென்று தபாங் டெல்லி அணியை துடைத்துப் போட்டார். ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆல் அவுட் ஆனது டெல்லி. 


14 - 4  என ஜெயிப்பூர் எளிதாக முன்னிலை பெற்றது. அப்போது Do or die எனச் சொல்லப்படும் கட்டாயம் புள்ளிகள் வென்றே ஆக வேண்டிய ரெய்டில் மாற்றுவீரராக களமிறங்கிய ஈரான் வீரர் அபோல்ஃபாசில் மக்சொட்லு அற்புதமாக ஒரு புள்ளியை எடுத்தார்.  எதிரணியின் வலுவான  ரெய்டரான ஜஸ்விர் சிங்கை  வெளியேற்றும் பணியையும்  அபோல்ஃபாசில்  முடித்தார். முதல் பாதி முடிவில் ஸ்கோர் 16 - 10 என்ற நிலையில் இருந்தது. ஆறு புள்ளிகள் முன்னிலையோடு ஜெய்ப்பூர் இரண்டாவது பாதிக்கு ரெடியானது. ஐந்து நிமிட ஓய்வுக்கு  பிறகு அம்பியில் இருந்து அந்நியனாக மாறியது டெல்லி அணி. ரெய்டிலும் சரி, டேக்கிலிலும் சரி ஜெய்ப்பூரை பிழிந்து எடுத்தது. 

கபடி

இரண்டாவது பாதி தொடங்கியதுமே ஜெய்ப்பூரை ஆல் அவுட் செய்தனர் டெல்லி வீரர்கள். இதனால் இரண்டு புள்ளிகள் கூடுதலாக கிடைத்தது. 14 - 7 என்ற ஸ்கோர் பின்னர் 16 - 13 என்றானது. அதன் பின்னர் 18 - 17 என்றானது. அப்போது டூ ஆர் டை  ரெய்டுக்குச் சென்ற ஜஸ்விர் சிங் அவுட் ஆனார். ஸ்கோர் சமநிலைக்கு வந்தது. 18 - 18 என புள்ளிகள் இருந்தபோது ஜெயிப்பூர் அணி பதற்றத்தில் பிடியை முற்றிலுமாக தளர்த்தியது. மன்ஜீத் சில்லரையும், ஜஸ்விரையும் குறிவைத்து வீழ்த்தியது தபாங் டெல்லி.

இரண்டாவது பாதியில் ஈரான் கேப்டன் மீராஜ் ஷேயிக் சிறப்பாக ஆடினார்.  நெகிழ்வுத் தன்மை மிக்க தனது உடலை பயன்படுத்தி ரெய்டில் பல புள்ளிகளைக் குவித்தார் மீரஜ். ஜெயிப்பூர் மீண்டும் ஆல்அவுட் ஆனது. அப்போது ஸ்கோர் 21 - 27. இப்போது  தபாங் அணி ஆறு புள்ளிகள் முன்நிலையில் இருந்தது. அதன்பின்னர் ஜெய்ப்பூர் அணி சுதாரிக்கத் தொடங்கினாலும் அது காலம் கடந்த முயற்சியாக மட்டுமே இருந்தது. ஆட்ட நேர இறுதியில் 30 - 26 என்ற கணக்கில் நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது தபாங் டெல்லி.  எதிரணியில் வலுவானவனை முதலில் வீழ்த்து, எளிதில் வெற்றி வசப்படும் எனும் யுக்தியைத்தான் பயன்படுத்தியது டெல்லி அணி. 

IMG_0211_11071.JPG

 

முதல் போட்டியிலேயே டெல்லி அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்தது ஜெய்ப்பூர் ரசிக  கூடாரம். இந்த சீசனில் தன்னம்பிக்கையுடன்  தொடர்ந்து ஆடுவோம். சாம்பியன் ஆக வேண்டும் என எங்களுக்கும் ஆசை இருக்கிறது என போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் சொன்னார் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரமேஷ் பென்டிகிரி. டெல்லி அணி இந்த சீசனில் இன்னும் எந்தெந்த அணிகளுக்கு எல்லாம் சஸ்பென்ஸ் வைக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.

http://www.vikatan.com/news/sports/97338-did-you-miss-the-pro-kabaddi-league-match.html

Link to comment
Share on other sites

கடைசி 5 நிமிடங்களில் தலைகீழாக மாறிய மேட்ச்... தெலுங்கு டைட்டன்சை பாட்னா வென்றது எப்படி? #MatchReview #ProKabaddi 

 

ஜெய் மகிழ்மதி என ஆரவரத்துடன் களமிறங்கிய தெலுங்கு டைட்டன்ஸ்  அணியை கடைசி நிமிடங்களில் ஜெயித்திருக்கிறது பாட்னா பைரேட்ஸ் அணி. புரோ கபடி சீசன்-5 சுற்றில் நேற்று  ஹைதரபாத் கச்சிபோலி ஸ்டேடியத்தில் இரவு 9 மணி ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் பாட்னா பைரேட்ஸ் அணியும் மோதின.

Pro kabaddi


பாட்னா எப்போதுமே பலமான அணியாகவே  இருந்து வந்துள்ளது. இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணியை முதல் போட்டியிலேயே ஜெயித்திருந்தது தெலுங்கு டைட்டன்ஸ் அணி. அந்த வெற்றியை முழுதாக கொண்டாடுவதற்கு முன்னதாக, மறுநாளே இரண்டாவது போட்டியில் ஆடியது தெலுங்கு டைட்டன்ஸ். சொந்த மண்ணில் நடக்கும் மேட்ச் என்பதால் தெலுங்கு அணிக்கு  ரசிகர்களிடம் இருந்து வரவேற்பு குவிந்தது. மேட்ச் முடியும் வரை ஜெய் மகிஷ்மதி கோஷம் போட்டனர் மண்ணின் மைந்தர்கள். 

மேட்ச் தொடங்கியவுடனேயே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது பாட்னா. ஆனால் டைட்டன்ஸ் அணி சோர்ந்துவிடாமல் போராடியது. இதனால் இரண்டு அணிகளுக்கும் புள்ளிகள்  சம அளவில் கிடைத்துக் கொண்டே இருந்தன. 7 -7 என மேட்ச் இருக்கும்போது பாட்னா அணியைச் சேர்ந்த மோனோ காயத்  டூ ஆர் டை ரெய்டுக்குச் சென்றார்.  அவரை வளைத்துப் பிடித்தது  டைட்டன்ஸ். இதையடுத்து தெலுங்கு டைட்டன்ஸ் அணி சார்பில் விகாஸ் ரெய்டுக்குச் சென்றார். அவர்  இரண்டு பேரை வெளியேற்றினார். அப்போது ஆல் அவுட் செய்து ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லத்  தவறியது தெலுங்கு அணி. குறிப்பாக  ராகேஷ் குமார் டேக்கிலில் கோட்டை விட்டார். 

12 - 10 என ஸ்கோர் இருந்தபோது தெலுங்கு டைட்டன்ஸ் அணியின்  கேப்டன் ராகுல் சவுதரி சூப்பர் டேக்கில் செய்யப்பட்டார். இதையடுத்து இரண்டு புள்ளிகள் பாட்னா அணிக்கு கிடைத்தன. அதன் பின்னர் பாட்னா வீரர் பர்தீப் நர்வால் ரெய்டுக்கு வந்தபோது கிடுக்கிப்பிடிப் போட்டு  வெளியேற்றினார் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்த விஷால் பரத்வாஜ். இப்போது மீண்டும் பாட்னா அணியை ஆல் அவுட் செய்யும் அற்புதமான வாய்ப்பு தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்குக் கிடைத்தது. நம்பிக்கையோடு  ரெய்டு சென்றார் ராகுல் சவுதரி. ஆனால்  இரண்டாவது முறையாக சூப்பர் டேக்கிலில் மாட்டினார். ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். முதல் பாதி முடிவில் 14 -15  என இருந்தது ஸ்கோர். ஒரு புள்ளி பின்தங்கியிருந்தது  டைட்டன்ஸ். 

Pro Kabaddi

இரண்டாவது பாதி தொடங்கியவுடன் அடுத்த நிமிடத்திலேயே மீண்டும் பாட்னாவை ஆல் அவுட் செய்யும் வாய்ப்பு தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்குக் கிடைத்தது. மீண்டும்  ரெய்டுக்குச் சென்றார் ராகுல்; மீண்டும்  சூப்பர் டேக்கிலில் சிக்கினார். ஆனால் இந்த முறை பாட்னா அணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படவில்லை. காயம் ஏற்படுத்தும் நோக்கில்  ராகுலை பிடித்ததால் தெலுங்கு அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது.  இதையடுத்து, சில நொடிகளில் பாட்னா அணி ஆல் அவுட் ஆனது.  ஸ்கோர் 19 -16 என்றானது. இந்த  முன்னிலையை பயன்படுத்தி மேட்சை கட்டுப்பட்டுக்குள் வைக்க முயற்சி செய்தது தெலுங்கு அணி. நேரம் போனாலும் பராவயில்லை பாட்னா அணி புள்ளிகள்  பெற்றுவிடக் கூடாது என்ற மனநிலையுடன்  ஆடியது. எனினும், பாட்னா அணி கடுமையாக போராடியது. 

இரண்டாவது பாதியில்  முதல் பதினைந்து நிமிடங்கள் மேட்ச் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இரு அணிகளும் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக இருந்தன. 25 - 24  எனக் காட்டிய ஸ்கோர் கார்டு இரு அணிகளின் ரசிகர்களையும் பதற்றத்தில் வைத்திருந்தது. அப்போது பர்தீப் நர்வால்  ரெய்டுக்குச் சென்றார்.  அந்த ரெய்டில் மேட்ச் மாறியது. கேப்டன் பர்தீப்பை வெளியேற்றினால் மேட்ச் தங்களுக்கு சாதகமாக மாறிவிடும் என்பதை உணர்ந்த தெலுங்கு டைட்டன்ஸ், அவரை மடிக்கிப் பிடித்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தது. ஆனால் பர்தீப் ஒரே ரெய்டில்  மூன்று புள்ளிகளை அள்ளினார். ஸ்கோர் 25 - 27 என்றானது. ஒரே மேட்சில் பத்து புள்ளிகளை எடுத்ததன் மூலம்  சூப்பர் -10 சாதனையை நிகழ்த்தினார் பர்தீப் நர்வால்.  மூன்று வீரர்களை இழந்தது  டைட்டன்ஸ். எதிரணியை ஆல் அவுட் ஆக்கியதில் அடுத்தபடியாக மூன்று புள்ளிகள் வந்தன. இப்போது ஸ்கோர் 26 -31.  ஆல்அவுட் ஆகி மீண்டும் களத்துக்குள் வந்தபோது ஆக்ரோஷமாக ஆடியது டைட்டன்ஸ். ஆனால் எந்தபலனும் கிடைக்கவில்லை. ஆட்ட  நேர முடிவில் 29 - 35 என்ற கணக்கில் தோற்றது  டைட்டன்ஸ். ஆறு புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று  இந்த சீசனில் வெற்றிக் கணக்கைத் தொடங்கியது பாட்னா பைரேட்ஸ். 

http://www.vikatan.com/news/tamilnadu/97367-patna-pirates-beat-telugu-titans.html

Link to comment
Share on other sites

நகம் கடிக்க வைத்த த்ரில் மேட்ச்... யு மும்பா யூ டர்ன் போட்டு வென்றது எப்படி? #ProKabaddi #MatchReview

 
 

இந்த சீசனில் தனது முதல் போட்டியில் புனே அணியிடம் தோற்றிருந்தது மும்பை அணி. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை  நேற்று சந்தித்தது யு மும்பா. ஹரியானாவுக்கு இதுதான் முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானா அணியைப் பொறுத்தவரையில் சுரேந்தர், மோஹித் சில்லர் என இரண்டு  முக்கியமான வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து இதற்கு முன்னர் பல சீசன்களில் விளையாடியிருக்கிறார்கள்.  இவர்கள் இருவருக்குமே எதிரணி கேப்டன் அனுப்குமாரோடு பல போட்டிகளில் ஆடிய பரிச்சயம் உண்டு. மும்பை அணியைப் பொறுத்தவரை அவர்களுக்கு எல்லாமே கேப்டன் அனுப் குமார்தான். 

Pro kabaddi

ஹைதராபாத் கச்சிபோலி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த Pro Kabaddi League மேட்ச்சில் முதல் ரெய்டு சென்றவர் அனுப்குமார். மேட்ச் ஐதராபாத்தில் நடந்தாலும் அனுப் குமாருக்கு ஆதரவுக் குரல்  மட்டும் ரெய்டுக்கு ரெய்டு அதிகரித்துக் கொண்டே இருந்தது.  அவர் ஒரு புள்ளியை எடுத்து வந்தார்.  பதிலுக்கு ஹரியானாவும் ரெய்டில்  இரண்டு  புள்ளிகளைப் பெற்றது. மும்பை அணி வீரர் காசிலிங் அடாகே அட்டகாசமாக  இரண்டு புள்ளியை எடுத்தார். களத்துக்குள் ஆழமாகச்  சென்று போனஸ் புள்ளிகளை அள்ளி வருவதில் கெட்டிக்காரர் அவர். இந்த முறை போனஸ் லைனில் கெத்தாக காலை வைத்தது மட்டுமின்றி, எதிரணி வீரர் விகாஸையும்  அவுட் ஆக்கியிருந்தார்.

ஸ்கோர் 5-4 என இருந்த போது  ஹரியானா ஒரு புள்ளி பின்தங்கியிருந்தது. அப்போது Do or Die ரெய்டில் ஹரியானாவுக்குப் புள்ளிகள் எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம். வசீர் சிங் ரெய்டுக்குச் சென்றார்.  வலது முனையில் நின்றுகொண்டிருந்த சுரிந்தர் சிங் ஓடிவந்து வசீரின் வலது தொடையில் உடும்புப்பிடி போட்டார். மற்ற வீரர்களும் துரிதமாகச் செயல்பட வசீர் அவுட். அடுத்த Do or Die ரெய்டில் சுரேந்தர் மும்பையின் எல்லைக்குள் நுழைந்தார். அவர் புத்திசாலித்தனமாக  இரண்டு புள்ளிகளை எடுத்து வந்தார். அதில் யூ மும்பாவின் துடிப்பான பீல்டர் சுரீந்தர் காலியானார். இப்போது ஹரியானாவின் கை ஓங்கியது. 8-9 என்றானது ஸ்கோர். 

Pro kabaddi

ஒரு புள்ளி பின்தங்கியிருந்த நிலையில் பதற்றத்தில் தவறுகள் செய்ய ஆரம்பித்தது யு மும்பா. வரிசையாக  புள்ளிகளை இழக்கத் தொடங்கியது எனினும் கேப்டன் அனுப் மட்டும்  கூலாக விளையாடினார். ரெய்டில் தவளை போலத் தாவி கோட்டைத் தொட்டு புள்ளிகளைப் பெற்றார். மீண்டும் ஒரு Do or Die ரெய்டு ஹரியானாவுக்கு. இம்முறை வசீர் சிங் புள்ளிகள் வேட்டைக்குச் சென்றார். மும்பையின் எல்லையில் அனுப்குமாரும், ஜோகிந்தர் சிங்கும்  புள்ளிகள் வேண்டுமே என்ற பசியோடு காத்திருந்தார்கள். இருவரும் ஆளுக்கொரு முனையில் நின்றுகொண்டிருந்தார்கள். கபடி... கபடி... எனப் பாடிக்கொண்டே வந்த வசீர் ஜோகீந்தர்தான் சற்றே பலவீனமானவர் என்பதை உணர்ந்து  அவர் இருக்கும் பகுதியில் நன்றாக இறங்கினார். இரைக்காகக் காத்திருந்த கொக்குப் போல ஜோகீந்தர் ஒரு அற்புதமான டேக்கில் செய்தார்.

போனஸ் லைனுக்குள் வசீர் வலது காலை வைக்க, ஜோகீந்தர் தனது இடது கையால்  வசீரீன் வலது காலின் கணுக்கால் பகுதியை இறுகப்பற்றினார். வசீர் தப்பிக்க முயலவே தனது வலது கையால் வசீரின் இடதுகாலின் கனுக்காலையும் பிடித்து ஒருசேர இரண்டு கால்களையும் இழுத்தார். ஆனால் வசீர் லேசுபட்ட ஆள் இல்லை அல்லவா!  அவர் நீச்சல் தெரியாதவன் தண்ணீரில் மூழ்கினால் தப்பிக்க எப்படித் துடிப்பானோ அப்படித் துள்ளினார். அதற்குள் அனுப்குமார் வந்து ஆளை அமுக்கினார். துள்ளி அடங்கிய வசீர் சிங் அவுட். சூப்பர் டேக்கிலில் இரண்டு புள்ளிகள்  மும்பைக்குக் கிடைத்தது என அதன்  ரசிகர்கள் உற்சாகமடைவதற்குள்  அம்பயர்,  ஹரியானா  அணிக்கு ஒரு புள்ளிகள் என அறிவித்தார். காரணம் என்னவெனில் வசீர் போனஸ் லைனுக்குள் வந்தபோதே ஜோகிந்தர் கோர்ட்டின் எல்லைக்கு வெளியே ஒருமுறை தனது காலை வைத்துவிட்டார்.  அருமையான டேக்கில் வீணானது. புள்ளியும் போனது. இப்போது அணியில் இருந்தே ஒரே ஆள்  அனுப் மட்டுமே. 

Pro kabaddi

அனுப் சூப்பர் ரெய்டில் புள்ளிகள் எடுக்கப் பார்த்தார். ஆனால் அங்கே பிடிபட்டு வீழ்ந்தார். மும்பை ஆல் ஆவுட் ஆனது. முதல் பாதியில் கடைசி நேர தவறுகளால் 11 - 15 எனப் பின்தங்கியது  யு மும்பா. முதல் பாதியில் வெறும் இரண்டு டேக்கில் புள்ளிகள் மட்டுமே  எடுத்திருந்தது மும்பை அணி. குறிப்பாக டிஃபென்டர் சுரேஷ் குமார் பலவீனமான ஆளாகத் தெரிந்தார். அவரைக் குறிவைத்து புள்ளிகளை அள்ளியது ஹரியானா. இரண்டாவது பாதி தொடங்கியதும் அனுப் குமார் சில நிமிடங்களில் அவுட் ஆனார். மளமளவென புள்ளிகளைப் பெற்றது ஹரியானா. அனுப் குமார்


12 -19 என ஸ்கோர் இருந்தபோது ஹரியானா எளிதில் வென்றுவிடும் என்றே பலரும் கருதினார்கள். மும்பையின் ஸ்டார் பிளேயர்கள் வெளிய இருந்த நிலையில் மும்பையின் எல்லைக்குள் மூன்று பேர் மட்டுமே இருந்தனர். வசீர் சிங் ரெய்டுக்குச் சென்றார். இம்முறை அவரை ஓடி வந்து  அட்டகாசமாக டேஷ்  அடித்து வெளியேற்றினார் சுரேஷ் குமார். முதல் பாதியில் சொதப்பிய சுரேஷா இப்படி ஆடுவது என ஆச்சர்யமாக இருந்தது. சூப்பர் டேக்கில் காரணமாக மும்பை அணிக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்தன. மும்பையின் ரெய்டர் காசிலிங் இப்போது ஹரியானா எல்லையில் வேட்டையாடச் சென்றார். அவர்  இரண்டு பேரை வெளியேற்றினார். அதன்பின்னர் அனுப்குமார் ரெய்டுக்குச் சென்றார். அவரும் தன் பங்குக்கு இரண்டு பேரை வெளியேற்றினார்.

அனுப்குமாரின் 'வாவ்' ரெய்டால் ஹரியானா ஆல் ஆவுட் ஆனது. தொடு புள்ளிகளோடு ஆல் அவுட் செய்ததற்கான புள்ளிகளும் இப்போது மும்பை அணிக்குக் கிடைத்தது. இப்போது ஸ்கோர் 22 - 20 என்றானது. இரண்டே நிமிடங்களில் மேட்ச்  மாறியது. அரங்கில் சுவாரஸ்யம் கூடியது. ரசிகர்கள் சீட்டின் நுனிக்கே வந்தார்கள். உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தார்கள். 25 -22  என மேட்ச்  Close ஆக சென்றது. அப்போது வசீர் சிங் ஒரு ரெய்டு புள்ளியைப் பெற்றுத்தந்தார்.  25 - 23, 25 - 24 , 26 - 24, 27 - 24, 28 - 24, 28 -25 என ஸ்கோர் கார்டு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிறவைத்தது. ஆட்டம் முடிய  இரண்டரை நிமிடங்கள் இருந்தன. இப்போது அனுப் குமார் ரெய்டுக்குச் சென்றார். அவர் வேண்டுமென்றே காலத்தைக் கடத்தி வெற்று ரெய்டு செய்தார். புள்ளிகள் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஹரியானா தீபக் குமாரை ரெய்டுக்கு அனுப்பியது. அவர் அவுட். ஸ்கோர் 29 -25.  இப்போது மும்பை வீரர் காசிலிங் ரெய்டில் பிடிபட்டார். ஸ்கோர் 29 - 26 என்றானது. இன்னும் ஒரு நிமிடம் மிச்சமிருந்த நிலையில் வசீர் சிங் ரெய்டுக்குச் சென்றார். அவர் போனஸ் புள்ளியைப் பெற்றது மட்டுமின்றி இன்னொரு ரெய்டு புள்ளியையும் பெற்றார். ஸ்கோர் 29 - 28. 

 

இன்னும் முப்பது நொடிகள் மட்டுமே இருந்த நிலையில், மேட்சில் உச்சபட்சப்  பரபரப்பு தொற்றியது . அனுப் குமார் ரெய்டு சென்றார். அவர் புள்ளிகள் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆடவே இல்லை. அதே சமயம் அவரை அவுட் ஆக்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஹரியானாவுக்கு. அனுப் குமார் ரொம்பவே கூலாக கிரீஸுக்கு அருகிலேயே நின்று கொண்டு எதிரே இருந்த திரையில் நேரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். நொடிகள் குறைந்து கொண்டே வந்தன. ச்சே ..பாஞ்ச்...ச்சார்...தீன்..தோ ...ஏக்  - U MUMBA WON BY ONE POINT. அரங்கம் ரசிகர்களின் கூக்குரலால் ஆட்டம் கண்டது.  ஒரு நல்ல வீரருக்கு எப்போது தாக்க வேண்டும் என்பதை விட எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பது தெரியும். எல்லோரும் நன்றாக ஆடுவார்கள். ஆனால், புத்திசாலிகள்தான் சாம்பியன்கள் ஆவார்கள். அனுப் குமார் புத்திசாலி; சாம்பியன்! 

http://www.vikatan.com/news/sports/97410-u-mumba-beat-haryana-steelers-in-pro-kabaddi-league.html

Link to comment
Share on other sites

'இருப்பா... பாயின்ட் வரட்டும்' என காத்திருந்து, புள்ளிகளை இழந்து... தோற்றதா டெல்லி ? #ProKabaddi

 
 

ப்ரோ கபடித் தொடரின்   (Pro Kabaddi) நேற்றைய போட்டியில் குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணியும் தபாங் டெல்லி அணியும் மோதின. டெல்லி தனது முதல் போட்டியில்  வெற்றி பெற்று நம்பிக்கையோடு இந்த மேட்சை எதிர்கொண்டது. குஜராத் அணிக்கு இந்த சீசனில் இதுதான் முதல் போட்டி. செம எனெர்ஜியுடன் களம் கண்டது. 

Pro kabaddi

குஜராத் அணியின் பிளேயிங்  செவனில் சுகேஷ் ஹெக்டே, இரான் வீரர் ஃபாசெல் அட்ரச்சலி, சச்சின்  உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். டெல்லி அணியில் மீரஜ்  ஷேய்க், நிலேஷ் ஷிண்டே, அபோஃபாசல் மக்சொட்லோ ஆகிய முக்கியமான வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். முதல் ரெய்டில் டெல்லி, குஜராத் இரண்டுமே  ரெய்டுகளில் புள்ளிகள் எடுக்காமல் திரும்பிவந்தன. டெல்லி அணி சார்பில்  இரண்டாவது ரெய்டுக்கு கேப்டன் மீராஜ் ஷேயிக் சென்றார். அவருக்குக் கால் லேசாக வழுக்கியது. துரிதமாக செயல்பட்டு அமுக்கிப் பிடித்து தூக்கிப் போட்டது குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ். மீரஜ் ஷேயிக் மட்டுமல்ல டெல்லி அணியே அந்த ரெய்டிலிருந்து மேட்சை கோட்டை விடத் தொடங்கியது. 

டெல்லி அணி ரெய்டுகளில் திணறியது. குஜராத் டெல்லி வீரர்கள் வரும்போதெல்லாம் கொசுவைப் பிடித்துத் தூக்கியெறிவது போல களத்துக்கு வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர். இடையில் இரண்டு ரெய்டுகளில் டெல்லி அணியும் ரெய்டுக்கு வந்த  குஜராத் வீரர்களை மடக்கிப் பிடித்தது. அதைத்தவிர வேறொன்றையும் சாதிக்கவில்லை. அற்புதமாக  டேக்கில் செய்துகொண்டிருந்த டெல்லி வீரர் சுனில் அவுட் ஆனதும் அந்த அணி இன்னும் பின்னடைவைச் சந்தித்தது. எனினும் மேட்ச் விறுவிறுப்பாகவே இருந்தது. ஏனெனில் இரண்டு அணியிலும் வெற்று ரெய்டுகள் நிறைய செய்யப்பட்டன. இதனால் முதல் கால் மணி நேரத்தில் எந்த அணியும் மிகப்பெரிய முன்னிலை பெறவில்லை. 

ஸ்கோர்  8-5 என்ற நிலையில், குஜராத் வீரர் ராகேஷ் நர்வால் ரெய்டு சென்றார். டெல்லியின்  கோட்டையில்  நிலேஷ் ஷிண்டே, ஆனந்த் பாட்டில், பாஜிரோ ஹோடகே இருந்தனர். அப்போது  டூ ஆர் டை ரெய்டுக்கு வந்த குஜராத் வீரரை மடக்கிப்பிடிக்க முயற்சி செய்தபோது நிலேஷ் ஷிண்டே எல்லைக் கோட்டுக்கு வெளியே தெரியாமல் காலை வைத்துவிட்டார். இதைக் கவனித்த நடுவர்கள் அவரை உடனே வெளியேறச் சொன்னார்கள். ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளாத நிலேஷ் அந்த ரெய்டு முடியும் வரை களத்தில் எதிரணி வீரருக்குப் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்தார். 30 நொடிகள் முழு ரெய்டும் முடிந்த பிறகு அம்பயர் நிலேஷை அழைத்து எச்சரிக்கை செய்ததோடு ஒரு டெக்கினிக்கல் பாயின்ட்டையும் குஜராத் அணிக்குக் கொடுத்தனர். அதன் பிறகு மீதமிருந்த இரண்டு பேரையும் குஜராத் எளிதாக ஊதித்தள்ளியது. முதல் பாதியின் கடைசி இரண்டு நிமிடங்களில் குஜராத் அணியின் பக்கம் புள்ளிகள் குவிந்தன. ஸ்கோர் 15 - 5 என்றானது. பத்து புள்ளிகள் பின்தங்கிய நிலையில் மேட்ச் நழுவத் தொடங்கியது குறித்து ஆலோசிக்க இடைவேளையில் கூடியது டெல்லி குழு. 

Pro Kabaddi

முதல் பாதியில் மாஸ் பெர்ஃபார்மென்ஸ் காட்டியிருந்தது குஜராத். ரெய்டில் 5 புள்ளிகள், டேக்கிலில் 5 புள்ளிகள், ஆல் அவுட் செய்ததில் இரண்டு புள்ளிகள், எக்ஸ்ட்ரா வகையில் மூன்று புள்ளிகள் என அனைத்து பாக்ஸையும் டிக் செய்திருந்தது. டெல்லி அணி வெறும் ரெய்டு புள்ளிகளை மட்டுமே எடுத்தது. குஜராத் அணி ஆடிய விதத்தைப் பார்க்கும்போது இரண்டாவது பாதியில் அபாரமாக ஆடி 15 புள்ளிகளுக்கு மேலான வித்தியாசத்தில் முரட்டுத்தனமான வெற்றியைப் பெறும் எனத் தோன்றியது. இரண்டாவது பாதி தொடங்கியதும் குஜராத் இன்னும் நெருக்கியது. டெல்லி வீரர் அபோல்ஃபாசில் ரெய்டுக்கு வந்தபோது குஜராத் அணியைச் சேர்ந்த ஃபாசல் அட்ரச்செல்லி கணுக்காலை இழுத்துப் பிடித்து அடக்கினார். அது நேற்றைய தினத்தின் பெர்ஃபெக்ட் டேக்கில். 

நேரம் செல்லச் செல்ல டெல்லி அணியைப் பார்ப்பதற்கே பரிதாபமாகத் தெரிந்தது . குஜராத் அணியில் எல்லா வித்தையும் தெரிந்த ஆட்கள் இருந்தார்கள். ஒருவர் ஒற்றைக்கையால் கணுக்காலைப் பிடித்து இழுப்பார்; இன்னொருவர் இரண்டு கைகளாலும் ரெய்டுக்கு வரும் வீரரின் மூட்டைக் கட்டியணைத்து  அவுட் ஆக்குவார்; சிலர் பாய்வார்கள், சிலர் தோள்களையும், மார்புப்பகுதியையும் பிடித்து ஆளை அமுக்குவார்கள். இப்படிப் பலவித ஆட்களும் அங்கே  இருப்பதால் டெல்லி அணிக்கு ஆரம்பத்தில் மேட்ச்சில் என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. அதற்குள் விறுவிறுவென புள்ளிகளைச் சேர்த்தது குஜராத். இரண்டாவது பாதியில் முதல் பத்து நிமிட முடிவில் ஸ்கோர் 21 - 8 என இருந்தது. அடுத்த மூன்று நிமிடங்களில் தபாங் டெல்லி மீண்டும் ஆல் அவுட் ஆகவே  26 - 9 என்றானது ஸ்கோர். 

குஜராத்துக்கு மிக எளிதான வெற்றி கிடைப்பது போன்ற சூழ்நிலை இருந்தது. அப்போது குஜராத் அணியின் ஆக்ரோஷமான ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அலட்சிய ஆட்டமாக மாறத் தொடங்கியது.  டெல்லி அணியில் மூத்த வீரர்கள் சொதப்பிக் கொண்டிருக்க இளங்கன்று ஸ்ரீராம், குஜராத்தின் வியூகங்களுக்குள் சென்று சுழன்று சுழன்று புள்ளிகளைச் சேர்த்தார். டெல்லி அணியின் ஸ்கோர் திடீரென விர்ரென எகிறியது. அடுத்த ஐந்து நிமிடத்தில் டெல்லி மட்டும்தான் புள்ளிகளை அள்ளிக்கொண்டிருந்தது. குஜராத் மிக்சர் சாப்பிட்டது.

 

இன்னும் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் டெல்லி அணி புள்ளிகள் வித்தியாசத்தை சரசரவெனக் குறைத்தது. அப்போது ஸ்கோர் 26 - 19. ஆட்ட நேர முடிவில் 26 - 20 என்ற கணக்கில் வென்றது குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ். கடைசி ஏழரை நிமிடங்களில் ஒரு புள்ளிகூட குஜராத் அணியால் எடுக்க முடியவில்லை. அதே சமயம் டெல்லி அணி 11 புள்ளிகளைக் குவித்தது. What a Come Back ! . பாயின்ட்  வரட்டும்  பாயின்ட் வரட்டும்  எனக் காத்திருக்காமல் கடைசி ஏழு நிமிடங்களில் டெல்லி ஆடிய அசுரவேக ஆட்டத்தை முதல் பாதியிலும் காட்டியிருந்தால் மேட்ச் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருந்திருக்கும். 

http://www.vikatan.com/news/sports/97684-gujarat-fortunegiants-beat-dabang-delhi-kc-in-pro-kabaddi.html

Link to comment
Share on other sites

தெலுங்கு டைட்டன்ஸ் ஹாட்ரிக் தோல்வி... ஆனாலும், ராகுல் சவுதரிக்கு லைக்ஸ்! #ProKabaddi #TTvsUPY 

 

புரோ கபடி (Pro Kabaddi) ஐந்தாவது சீசனில் தனது முதல் போட்டியை தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஆடியது உத்தரப் பிரதேச அணியான யு பி யோதா. முதல் போட்டியிலேயே தெலுங்கு அணியை வீழ்த்தி உற்சாகமாக தொடரில் என்ட்ரி கொடுத்திருக்கிறது யு பி யோதா. சொந்த மண்ணில் நான்காவது போட்டியில் ஆடும் தெலுங்கு டைட்டன்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியைச் சந்தித்திருக்கிறது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி வென்ற ஒரே  போட்டி தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான மேட்ச் மட்டும் தான். 
நேற்றைய தினம் எப்படித் தோற்றது ராகுல் சவுதரி தலைமையிலான  தெலுங்கு டைட்டன்ஸ்?

Pro Kabaddi UP Yoddha Vs Telugu Titans

ஆரம்பத்தில் இருந்தே  இரண்டு அணிகளும்  நீயா நானா மல்லுக்கட்டில் இறங்கின. இரண்டு அணியிலும் முதல் சில நிமிடங்களில்  ரெய்டு சென்றவர்கள் புள்ளிகளை அள்ளிக் கொண்டு வந்தார்கள். எந்த ஒரு கட்டத்திலும் இரண்டு அணியும் விட்டுக் கொடுக்கவே இல்லை. யு பி ஒரு புள்ளி கூடுதலாக முன்னிலை வகிக்கும் போதெல்லாம் தெலுங்கு டைட்டன்ஸ் அடுத்தடுத்த ரெய்டுகளில்  சமன் செய்து கொண்டிருந்தது. 

இதனால் மேட்ச் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்றது. யு பி யோதா அணித் தலைவர் நிதின் தொமரும் சரி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் கேப்டன்  ராகுல் சவுதரியும் சரி தங்கள் அணிக்காக புள்ளிகளை அள்ளி வீசினார்கள். இரண்டு அணி கேப்டன்களுக்கு இடையேயான ஆரோக்கியமான மோதலாக இருந்தது மேட்ச். குறிப்பாக ராகுல் சவுதரி விளையாடிய விதம் அருமை. தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக சூறாவளியாக சுழன்ற ராகுல் அடுத்தடுத்த போட்டிகளில் மங்கினார். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் ஆடிய களைப்புக்கு மத்தியில், ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு  சார்ஜ் ஏற்றிக் கொண்டு நேற்றைய ஆட்டத்தில் பட்டையைக் கிளப்பினார். ரெய்டுக்கு வரும் வீரர்களை அடக்குவதில்  சிறப்பாக செயல்படக் கூடிய யு பி யோதா அணியினர் ராகுல் சவுதரியிடம் தோல்வியைச் சந்தித்தார்கள்.

Pro Kabaddi UP Yoddha Vs Telugu Titans

ராகுல் சவுதரி  ரெய்டுக்குச்  செல்லும் காட்சிகளை பார்க்க நீங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும். ராகுல் கிடுகிடுவென வலது பக்கத்தில் இருந்து இடது பக்கம், இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் ஓடிக் கொண்டிருப்பார். மேலோட்டமாக பார்த்தால் கபடி விளையாடத் தெரியாதவன் பாலபாடம் பயின்று ஆர்வக் கோளாறுடன் ஆடுவதாக தோன்றும். ஆனால் ராகுல் அப்படிப்பட்டவர் அல்ல. அவரது உடல் ஒரு பொசிஷனிலும், அவர் கால் ஒரு பொஷிஷனில், கண்கள் வேறொரு பொசிஷனிலும் கவனம் செலுத்தும். அவரைப் பிடிக்க ஃபீல்டர்கள் முயன்றால், அவர்களுக்கு தனது காலை கொடுப்பார். ஆனால் அவர்கள் கால்களை இறுகப் பற்றும் அந்த மைக்ரோ நொடிக்கு முன்னதாக வெடுக்கென தாவிவிடுவார். அந்த யுக்தியால் தான் அவர்  சிறந்த ரெய்டர் என பெயர் எடுத்திருக்கிறார். புரோ கபடித் தொடரின் வரலாற்றிலும் இதுவரை அதிக ரெய்டு புள்ளிகளை வைத்திருப்பதும் அவரே. 

Pro Kabaddi UP Yoddha Vs Telugu Titans

முதல் பாதியில் 1-1 , 2-2, 4-4 , 7-7, 8 -8 என சரிசமமாகவே ஸ்கோர் சென்றது. 20 நிமிட முடிவில் ஸ்கோர் 11 - 12 . தெலுங்கு டைட்டன்ஸ் அணி ஒரு புள்ளி யு பி யோதாவை விட பின்தங்கியிருந்தது. 

நேற்றைய தினம் ராகுல் சென்ற ரெய்டுகள் அற்புதமாக இருந்தன. யு பி யோதா வீரர்கள் விடா கொண்டனாக இருந்தாலும் இவர் தப்பித்துக் கொண்டே  இருந்தார். கிடுகிடுவென ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் ஓடும்போதும், யாரைத் தொட வேண்டும் என்பதில் ராகுல் தெளிவாக இருப்பார்.  ஒரு பக்கம் ஓடிக்கொண்டே பின்னால் இருக்கும் வீரரைத் தனது ஒரு காலால் தொடும் சாமர்த்தியம் அவருக்கு மிகப் பெரிய ப்ளஸ். இரண்டாவது பாதியில் ஒரு சாமர்த்தியமான அவுட் செய்தார் ராகுல். இதனாலேயே  ராகுல் சவுதரி  ரெய்டுக்குச் செல்லும் போதெல்லாம் ரசிகர்கள் ஆரவாரம் நூறு டெசிபலைத் தாண்டியது. மேட்சில் இன்னும் 14 நிமிடங்கள் மிச்சமிருந்த நிலையில் ஸ்கோர் 13 - 14 என இருந்தது. அப்போது யு பி யோதா அணியில் மாற்று வீரராக  களமிறங்கியிருந்த சுரேந்தர் சிங் ரெய்டுக்குச் சென்று மூன்று பேரை ஒரே நேரத்தில் காலி செய்தார். இது தான் மேட்ச்சின் திருப்புமுனை. 

Pro Kabaddi UP Yoddha Vs Telugu Titans

இரண்டு அணிகளுமே  ஒரு திருப்புமுனை ரெய்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது முந்திக்கொண்டது யு பி யோதா. அந்தப் புள்ளியில் இருந்து மேட்ச்  உத்தரப் பிரதேசம் பக்கம் திரும்பியது. தெலுங்கு டைட்டன்ஸ் அணியினர் வரிசையாக பதற்றத்தில் தவறு செய்ய ஆரம்பித்தார்கள். யு பி யோதா வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு ஆடியது. கடைசி  பத்து நிமிடங்களில் வரும் வீரர்களை வரிசையாக அமுக்கி வெளியே தூக்கிப்போட்டார்கள். ஆட்ட நேர முடிவில் 31 - 18 என மெகா வெற்றியைப் பெற்றது யு பி யோதா. 13 புள்ளிகள் வித்தியாசத்தில் மோசமாகத் தோற்றது டைட்டன்ஸ்.

 

Rahul_15132.jpg

 

http://www.vikatan.com/news/sports/97689-up-yoddha-beat-telugu-titans-in-pro-kabaddi.html

Link to comment
Share on other sites

எட்டே நொடியில் ஹரியானா வெற்றியைத் தவறவிட்ட மேட்சை பார்த்தீர்களா? #ProKabaddi

 

பிக்பாஸ் ஒளிபரப்பாகும் அதேநேரத்தில்தான் புரோ கபடியும் (Pro Kabaddi) நடந்து கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் புரோ கபடியில் ஹரியானா குஜராத் இடையிலான மேட்ச்சை எத்தனை பேர் பார்த்தீர்கள் எனத் தெரியவில்லை. செம மேட்ச். 

Pro Kabaddi

ஹைதரபாத் கச்சிபோலி உள்விளையாட்டு அரங்கத்தில் புரோ கபடி போட்டிகள் நடந்துவருகின்றன. புரோ கபடியின் ஐந்தாவது சீசனில் நேற்றைய தினம் இரவு எட்டு மணிக்கு நடந்த மேட்சில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் குஜராத் அணியும் மோதின. முதல் போட்டியில் ஹரியானா ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோற்றிருந்தது. குஜராத் அணி தனது முதல் போட்டியில் டெல்லியிடம் கடைசி நேர பதற்றத்திற்குப் பிறகு வென்றது.

குஜராத் அணி செம எனெர்ஜியுடன் களமிறங்கியது. ஹரியானா நம்பிக்கையோடு களம் கண்டது. குஜராத் அணி சார்பில் முதலில் ரெய்டுக்குச் சென்ற சுகேஷ் ஹெக்டேவும், ஹரியானா சார்பில் ரெய்டுக்குச் சென்ற வஜிர் சிங்கும் புள்ளிகள் எதுவும் எடுக்கவில்லை. குஜராத் அணிக்கு முதல் புள்ளியைப் பெற்றுத்தந்தவர் சச்சின். அவர் டூ ஆர் டை ரெய்டில் அசால்ட்டாக இரண்டு புள்ளிகளை எடுத்தார். 
முதல் ஒன்பது நிமிடங்களில் ஸ்கோர் 5 -4 என இருந்தது. ஹரியானா அணியைச் சேர்ந்த விகாஸ் ஒரு முறை ரெய்டுக்கு வந்தபோது கால் இடறவே தடுமாறினார். அதைப் பயன்படுத்தி அவரை அவுட்டாக்கி வெளியில் உட்கார  வைத்தது குஜராத் அணி. அதற்கு அடுத்த முக்கியமான ரெய்டு ஒன்றில் சச்சின் அனுப்பப்பட்டார். அந்த ரெய்டில் சச்சினை சூப்பர் டேக்கில் செய்தனர் ஹரியானா வீரர்கள். போனஸ் புள்ளிகள் கிடைத்தன. அடுத்ததாக கேப்டன் ஹெக்டேவும் அவுட் ஆனார்.  அப்போது ஸ்கோர் 7-7 என இருந்தது. அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு மேட்ச் விறுவிறுப்பாகவே சென்றது. இரண்டு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. 

Pro Kabaddi

முதல் பாதியில் 11 - 8 என்ற ஸ்கோரில் முன்னிலையோடு இருந்த குஜராத் அணி, இடைவேளை முடிந்த பிறகு புள்ளிகளை இழந்தது. இதனால் மீண்டும் ஸ்கோர் சமநிலைக்கு வந்தது. இரண்டு அணிகளுமே டிஃபென்சில் வலுவாக இருந்தன. இதனால் ரெய்டுகளில் இரண்டு அணி வீரர்களும் புள்ளிகள் எடுக்க சிரமப்பட்டனர். 11 -11  என ஸ்கோர் சம நிலையில் இருந்தபோது ஹரியானா வீரர் விகாஸ் ரெய்டுக்குச் சென்றார். அவரை குஜராத் அணியைச் சேர்ந்த சுனில் குமார் காளையை அடக்குவது போல முயற்சி செய்தார். அனால் விகாசின் விவேகமான துள்ளலால் ஒரு புள்ளி ஹரியானாவுக்குக் கிடைத்தது. ஆட்டம் தொடங்கிய  நிமிடத்திலிருந்து முதல் முறையாக ஒரு புள்ளி முன்னிலை பெற்றது ஹரியானா  ஸ்டீலர்ஸ். 

அந்த முன்னிலையைப் பயன்படுத்தி ஹரியானா முன்னேறியிருக்க வேண்டும். ஆனால், ஹரியானா கேப்டனின் ஆர்வக் கோளாறு ரெய்டால் திட்டம் பாலானது. அவசரப்பட்டு ஒரு ரெய்டுக்குச் சென்ற சுரேந்தர் நாடாவை சூப்பர் டேக்கில் செய்தது குஜராத் அணி. இத்தனைக்கும் அது டூ ஆர் டை ரெய்டு கூட கிடையாது. எதிரணியில் மூன்று  பேர் மட்டுமே இருந்திருந்தனர். கேப்டன் சுகேஷ் கொஞ்சம் சுதாரித்திருந்தால் குஜராத்தை ஆல் அவுட் செய்யும் முயற்சியில் கூட இறங்கியிருக்கலாம். ஆனால், அவசர ரெய்டால் சூப்பர் டேக்கில் செய்யப்பட்டது மட்டுமன்றி, பலம் வாய்ந்த இரண்டு குஜராத் வீரர்களும் களத்தில் இறங்கினர்.

Pro Kabaddi

அவர்கள் சத்தமில்லாமல் ஹரியானா வீரர்களை வெளியேற்றினர். இரண்டே நிமிடங்களில் ஹரியானா ஆல் அவுட் ஆனது. 11 - 12 என இருந்த ஸ்கோர்  தடாலென 22 -13 என்றானது. அப்போது மேட்ச் முடிய எட்டரை நிமிடங்கள் மிச்சம் இருந்தன. இப்போது ஹரியானா வீரர்கள் அக்ரசிவ்வாக ஆட ஆரம்பித்தனர். ரெய்டுக்கு வந்த ராகேஷ் நர்வாலை அள்ளிக்கொண்டு போய் வெளியே போட்டுவிட்டு வந்தனர். விகாஸ் கன்டோலா சென்ற ஒரு ரெய்டு மேட்சின் திருப்புமுனையாக அமைந்தது. தங்களது எல்லைக்குள் நுழைந்த விகாசை மார்போடு இறுகப் பிடித்து தடுத்து நிறுத்த முயற்சி செய்தார் குஜாரத் அணியின் அபோஜர். அவரது முயற்சி வீணாகிவிடக்கூடாது என்பதற்காக கேப்டன் சுகேஷும் அவரைப் பிடிக்க முயற்சி செய்தார். இதற்கிடையில் மகேந்திர சிங் ராஜ்புட்டும் விகாசை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் துள்ளியவாரே கோட்டைத் தொட்டார் விகாஸ். மூன்று பேரும் அவுட். அடுத்த நிமிடத்திலேயே குஜராத்தும் ஆல் அவுட் ஆனது. இப்போது ஸ்கோர் 23 - 23.

 

மீண்டும் ஸ்கோர் சமநிலையில் வந்ததால் ஆட்டத்தில் உச்சபட்ச பரபரப்புத் தொற்றியது. மைதானத்தில் உட்கார்ந்திருத்த ரசிகர்கள் எழுந்து நின்று கவனிக்க ஆரம்பித்தனர். 24 - 24 , 24 - 25 , 25 - 25 . 25 - 26 என ஸ்கோர்கார்டு மாறிக்கொண்டே இருந்தது 26 - 27 என ஸ்கோர் இருந்தபோது மேட்ச் முடிய வெறும் 40 நொடிகள் மட்டுமே இருந்தன. மகேந்திர சிங் ரெய்டுக்குள் வந்தார். அவர் ஒரு மேஜிக் புள்ளி எடுத்தார். மேட்ச் இப்போது சமநிலைக்கு வந்தது. 27 - 27 என்ற நிலையில் எட்டு நொடிகள் மீதம் இருந்தன. ஹரியானா வீரர் விகாஷ் புள்ளிகள் பெற முயற்சிக்கவில்லை. ஆட்டநேர முடிவில் 27 - 27 என ஸ்கோர் இருந்தது. மேட்ச் டிரா ஆனது. இரண்டு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

http://www.vikatan.com/news/sports/97812-gujarat-fortunegiants-vs-haryana-steelers-match-tie.html

Link to comment
Share on other sites

புரோ கபடி லீக்: தமிழ்தலைவாசுக்கு 2-வது தோல்வி

புரோ கபடி லீக்கில் பெங்களூருக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் தமிழ்தலைவாஸ் அணி 31-32 என்ற புள்ளி கணக்கில் நூலிழை வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

 
 
புரோ கபடி லீக்: தமிழ்தலைவாசுக்கு 2-வது தோல்வி
தமிழ் தலைவாஸ் வீரரை, பெங்களூரு புல்ஸ் வீரர் பாய்ந்து பிடிக்கிறார்
நாக்பூர்:

12 அணிகள் இடையிலான 5-வது புரோ கபடி போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நாக்பூரில் நேற்றிரவு நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாசும், பெங்களூரு புல்சும் (பி பிரிவு) மோதின.

விறுவிறுப்பான இந்த மோதலில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய பெங்களூரு புல்ஸ் அணி 10-வது நிமிடத்திலேயே தமிழ் தலைவாசை ஆல்-அவுட் செய்து புள்ளிகளை மளமளவென அள்ளியது. தலைவாஸ் வீரர்கள் பல தடவை ரைடுக்கு சென்று வெறுங்கையுடனே திரும்பினர். முதல் பாதியில் 8-23 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் மோசமான நிலையில் பரிதவித்தது.

இரண்டாவது பாதியில் தமிழ் தலைவாஸ் அணியினர் புதிய வியூகம் அமைத்து துடிப்புடன் செயல்பட்டனர். எதிரணியை ஆல்-அவுட் ஆக்கிய அவர்கள் சரிவில் இருந்து எழுச்சி பெற்றனர். 5 நிமிடங்கள் எஞ்சி இருந்த போது 22-30 என்ற புள்ளி கணக்கில் பின்தங்கிய தமிழ் தலைவாஸ் அணி மறுபடியும் ஒரு முறை பெங்களூருவை ஆல்-அவுட் செய்து வேகமாக நெருங்கியது.

கடைசி ஒரு நிமிடம் இருக்கையில் 30-31 என்ற கணக்கில் ஆட்டத்தை கொண்டு வந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்த சூழலில் பெங்களூரு வீரர் ரோகித் குமார் வெற்றிகரமாக ரைடு செய்து ஒரு புள்ளி எடுக்க, பதிலடியாக தமிழ் தலைவாஸ் வீரர் பிரபஞ்சனும் ஒரு புள்ளி எடுத்தார். அதற்குள் ஆட்ட நேர முடிவுக்கு வந்ததால் தமிழ்தலைவாஸ் அணி 31-32 என்ற புள்ளி கணக்கில் நூலிழை வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ரோகித் குமார் 11 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் அணியில் கேப்டன் அஜய் தாகூர், பிரபஞ்சன் தலா 6 புள்ளிகளும் எடுத்தனர்.

தொடக்க ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்சிடம் தோற்று இருந்த அறிமுக அணியான தமிழ் தலைவாசுக்கு இது 2-வது தோல்வியாகும். பெங்களூரு அணிக்கு 2-வது வெற்றியாகும்.

இதே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் தபாங் டெல்லி-மும்பை (இரவு 8 மணி), பெங்களூரு புல்ஸ்- உத்தரபிரதேச யோத்தா (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன. 

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/05101213/1100585/Pro-Kabaddi-League-2nd-defeat-for-Tamil-Thalaivas.vpf

Link to comment
Share on other sites

பர்தீப் நர்வாலின் அணியிடம் சரணாகதி அடைந்த பெங்களூரு காளைகள் #ProKabaddi

 
 

நேற்றைய தினம் இரவு  9 மணி ஆட்டத்தில்,  பாட்னா பைரேட்ஸ் அணியும்  பெங்களூரு  புல்ஸ் அணியும்  நாக்பூர் மைதானத்தில் களம் இறங்கினார்கள். பாட்னா பைரேட்ஸ் அணியினர் செய்த தவறால், முதல் புள்ளியைப் பெங்களூரு  புல்ஸ் அணியினர் பெற்று மகிழ்ச்சியடைந்தனர்.

பெங்களூரு புல்ஸ்

சனிக்கிழமை நடந்த ஆட்டத்தில், பெங்களூரு புல்ஸ் அணியினர் யூ பி யோதா அணியினரிடம் படுமோசமாகத் தோற்றார்கள். அந்தத் தவறுகளை  இன்றைய ஆட்டத்தில் செய்யக்கூடாது என மிகக் கவனமாக விளையாடினார்கள். ஆட்டத்தின் முதல் பாதியில், பாட்னா பைரேட்ஸ் அணியினர் மிகத் திறமையாக விளையாடி, பெங்களூரு புல்ஸ் அணியினரை  இரண்டு முறை ஆல் அவுட் செய்தனர். பாட்னா பைரேட்ஸ் அணியின் கேப்டன் பர்தீப் நர்வால் ரெய்டில் சென்று, டேக்கிள் வியூகங்களைத் தவிடுபொடியாக்கிப்  புள்ளிகளை மேலும் மேலும் சேர்த்துக்கொண்டே இருந்தார்.

 

ஆட்டத்தின் முதல் பாதியில், பெங்களூரு புல்ஸ் அணியினர் 11 புள்ளிகள் பெற்று பின்தங்கி இருந்தார்கள். பாட்னா பைரேட்ஸ் அணியினர் 22 புள்ளிகள் எடுத்திருந்தனர். முதல் பாதியிலேயே  கேப்டன் பர்தீப் நர்வால் சூப்பர் டென் புள்ளிகளை எடுத்து அசத்தினார்.  இரண்டாம் பாதியில் பெங்களூரு புல்ஸ் அணியினரை பாட்னா பைரேட்ஸ் அணியினர்  மூன்றாவது முறையாக ஆல் அவுட் செய்தனர். ஆட்ட நேர முடிவில் 46 - 32 என்ற கணக்கில் எளிதாக பெங்களூரு அணியை வென்றது பாட்னா பைரேட்ஸ். 

http://www.vikatan.com/news/sports/98260-bangalore-bulls-lost-the-match-against-patna-pirates.html

Link to comment
Share on other sites

பெங்கால் அணியை வீழ்த்தியது பெங்களூரு புல்ஸ்

 

 
10chpmuKabadi%202

புரோ கபடி லீக் தொடரில் நேற்று நாக்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள பெங்களூரு புல்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில் பெங்கால் வாரியர்ஸ் அணி வீரரின் பிடியில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார் பெங்களூரு அணியின் கேப்டன் ரோஹித் குமார்.

புரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 31-25 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

நாக்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 10-வது நிமிடத்தில் இரு அணிகளும் தலா 5 புள்ளிகள் சேர்க்க ஆட்டம் 5-5 என சமநிலையில் இருந்தது. இந்த நிலையில் பெங்கால் அணியின் விநோத் குமார் ரைடு மூலம் 2 புள்ளிகள் சேர்க்க அந்த அணி 7-5 என்ற முன்னிலையை பெற்றது. இதையடுத்து கேப்டன் ரோஹித் குமார் அடுத்தடுத்த ரைடுகளில் புள்ளிகள் சேர்க்க பெங்களூரு அணி 9-8 என முன்னிலைக்கு வந்தது. தொடர்ந்து அசத்திய பெங்களூரு அணி முதல் பாதியில் 12-10 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்தது.

2-வது பாதியில் பெங்கால் அணி சீராக புள்ளிகள் சேர்த்து 16-16 என்ற சமநிலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான அஜெய் குமார் ஒரே ரைடில் 4 புள்ளிகளை அள்ளினார். இதைத் தொடர்ந்து பெங்களூரு 4 முதல் 5 புள்ளிகள் முன்னிலையை தக்கவைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தியது.

4 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் பெங்களூரு அணி 28-22 என வலுவான நிலையில் இருந்தது. முடிவில் பெங்களூரு அணி 31-25 புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் அஜெய் குமார் ரைடில் 8 புள்ளிகளும், ஆஷிஸ் குமார் டேக்கிள் மூலம் 5 புள்ளிகளும் பெற்றனர்.பெங்களூரு அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 ஆட்டத்தில் தோல்வியடைந்துள்ளது. ஒரு ஆட்டத்தை டிரா செய்திருந்தது. அதேவேளையில் தொடர்ச்சியாக இரு வெற்றிகளை பெற்ற பெங்கால் அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

 

இன்றைய ஆட்டம்

புரோ கபடி லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் புனேரி பால்தான் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பெங்களூரு புல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 3-வது ஆட்டமாகும். இரு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ள தமிழ் தலைவாஸ் முதல் வெற்றியை பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது. மேலும் பெங்களூரு அணியை இந்த சீசனில் 2-வது முறையாக எதிர்கொள்கிறது.

கடந்த ஆட்டத்தில் அந்த அணிக்கு எதிராக ஒரு புள்ளி வித்தியாசத்தில் (32-31) தோல்வியை சந்தித்திருந்தது. இந்த தோல்விக்கு தமிழ் தலைவாஸ் அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கும். - நன்றி ‘ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்’

http://tamil.thehindu.com/sports/article19462554.ece

Link to comment
Share on other sites

புரோ கபடி லீக்: பெங்களூர் அணியை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி முதல் வெற்றி!

 

புரோ கபடி லீக்கில் பெங்களூர் அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது தமிழ் தலைவாஸ்.

தமிழ் தலைவாஸ்


புரோ கபடி லீக் இந்தாண்டு தமிழகத்துக்கு சற்று ஸ்பெஷலானது. சச்சினின் தமிழ் தலைவாஸ் அணி களமிறங்குகிறது என்றதுமே எதிர்பார்ப்புகள் எகிறியது. மொத்தம் இரண்டு பிரிவுகளாக இந்த சீசன் நடந்து வருகிறது. ஒரு பிரிவில் ஆறு அணிகள் வீதம் மொத்தம் 12 அணிகள் மல்லுக்கட்டுகின்றன.


தமிழ் தலைவாஸ் அணி குரூப் பி-யில் இடம் பெற்றுள்ளது. அந்த குரூப்பில் பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரேட்ஸ், தெலுகு டைட்டன்ஸ், பெங்கால் வாரியஸ், யு பி யோதா, தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த பிரிவைப் பொறுத்தவரை பெங்களூர் அணி முதல் இடத்தில் உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி தெலுகு டைட்டன்ஸ் மற்றும் பெங்களூரு அணியுடன் போராடி தோல்வியடைந்தது.

 


இந்நிலையில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மீண்டும் மோதின. கடந்த போட்டிகளில் கிடைத்த அனுபவத்தை வைத்து இந்தப் போட்டியில் நல்ல திட்டமிடலுடன் களமிறங்கியது தமிழ் தலைவாஸ் அணி. இதனால் ஆரம்பம் முதலே பெங்களூரு அணிக்கு தண்ணீ காட்டியது தமிழ் தலைவாஸ்.  இதையடுத்து, 29 - 24 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. 

http://www.vikatan.com/news/sports/98734-tamil-thalaivas-beats-bengaluru-bulls-in-pro-kabbadi.html

Link to comment
Share on other sites

புரோ கபடி 2017: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி

 

புரோ கபடி போட்டியின் 31-வது லீக் சுற்று ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியானது 29-19 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, இந்த சீசனில் 6-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

புரோ கபடி 2017: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி
 
 
 
அகமதாபாத்:
 
புரோ கபடி போட்டியின் 31-வது லீக் சுற்று ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியானது 29-19 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி, இந்த சீசனில் 6-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
 
புரோ கபடி லீக் போட்டிகள் மூன்றாம் கட்டமாக அகமதாபாத்தில் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று (16-ம் தேதி) நடைபெற்ற 31-வது லீக் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் குஜராத் அணி 29-19 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. குஜராத் அணியின் சச்சின் 11 புள்ளிகள் எடுத்தார்.
 
இது குஜராத் அணியின் 6-வது வெற்றியாகும். இதன்மூலம் அந்த அணி 33 புள்ளிகளுடன் ஏ பிரிவு புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
 
முன்னதாக நடைபெற்ற லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் அரியானா அணியும் மோதின. இப்போட்டி 25-25 புள்ளிக் கணக்கில் டிராவில் முடிந்தது. தமிழ்நாடு அணி 10 புள்ளிகளுடன் பீ பிரிவில் ஆறாவது இடத்தில் உள்ளது.
201708170036534912_1_pkl3._L_styvpf.jpg
இன்று (17-ம் தேதி) நடைபெறும் லீக் போட்டிகளில் தமிழ் தலைவாஸ் - தபாங் டெல்லி அணிகளும், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகளும் பலப்பரிட்சை நடத்த உள்ளன.

http://www.maalaimalar.com/News/Sports/2017/08/17003648/1102732/pkl-2017-gujarat-beat-telugu-titans.vpf

Link to comment
Share on other sites

தெலுங்கு டைட்டன்ஸ் அணியை அசால்ட்டாக டீல் செய்த குஜராத் #proKabaddi

 
 

புரோ கபடி (Pro Kabaddi) ஐந்தாவது சீசனின் 31 வது போட்டி நேற்று இரவு ஒன்பது மணிக்கு அகமதாபாத் டிரான்ஸ்டடியா ஸ்டேடியத்தில் நடந்தது. ராகுல் சவுதரி தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் சுகேஷ் ஹெக்டே தலைமையிலான குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. குஜராத் அணிக்கு இது எட்டாவது போட்டியாகும். 

Pro Kabaddi Season 5: Gujarat Fortunegiants Vs Telugu Titans


தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் பிளேயிங் செவனில் ராகேஷ் குமார், நிலேஷ் சலுன்கே, விஷால் பரத்வாஜ், சொம்பிர், விகாஸ், ரோஹித் ரானா, ராகுல் சவுத்ரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். குஜராத் அணியில் ஃபாசெல் அட்ரச்செல்லி, அபோசர் மொகாஜர்மிகனி, சச்சின், பர்வேஷ் பைன்ஸ்வால், சுனில் குமார், ரோஹித் குலியா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

Pro kabaddi logo

தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்குப் புள்ளிக்கணக்கை தொடங்கி வைத்தவர் விகாஸ். அவர் ஃபாசல் அட்ரசெல்லி, ரோஹித் குலியா என இரண்டு முக்கியமான வீரர்களை வெளியில் அனுப்பினார். ஒட்டுமொத்த ஸ்டேடியமும் ஒரு நிமிடம் அமைதியானது. அதன் பிறகு குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணிக்குப் புள்ளிக்கணக்கைத் தொடங்கி வைத்தார் இளம் வீரர் சச்சின். அவர் போனஸ் புள்ளிகளை எடுத்தார். மீண்டும் சுகேஷ் ஹெக்டே வந்து ஒரு போனஸ் புள்ளியை எடுத்தார். சச்சினும் சுகேஷும் அதன் பின்னர் மேட்சில் ஆதிக்கம் செலுத்தினார்கள். முதல் ஆறு நிமிட முடிவில் குஜராத் 5 –3  என முன்னிலையில் இருந்தது. ராகுல் சவுதரி நேற்றைய தினம் தொடக்க ரெய்டுகளில் புள்ளிகளை எடுக்கவில்லை. 

சச்சின் நேற்று துடிப்புடன் செயல்பட்டார். முதல் பாதியின் எட்டாவது நிமிடத்தில் ரெய்டுக்குச் சென்று எதிரணி கேப்டன் ராகுல் சவுதரியை அனாயசமாக வீழ்த்தினார். குஜராத்தின் உடும்புப்பிடி கொஞ்சம் கொஞ்சமாக இறுக ஆரம்பித்தது. சச்சின் ஒரே ரெய்டில் எதிரணியில் எஞ்சியிருந்த மூவரையும் வீழ்த்தினார். தெலுங்கு டைட்டன்ஸ் அணி ஆல் அவுட் ஆனது. 12-3 என  வலுவான முன்னிலையில் இருந்தது குஜராத். தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் ஒற்றுமையே இல்லாமல் இருந்தது. வீரர்களுக்கு இடையே சரியான புரிதல் இல்லை. ஏற்கெனவே இந்த சீசனில் ‘தெறி’த்தன பார்மில் இருக்கும் குஜராத் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை நசுக்கிப் பிழிந்தது. 

Pro Kabaddi Season 5: Gujarat Fortunegiants Vs Telugu Titans

தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம் வெற்றிக்கான எந்த உத்வேகமும் தெரியவில்லை. முதல் பாதி முடிவில் 20 -7 என முன்னிலையில் இருந்தது குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ். இந்த 20 புள்ளிகளில் சச்சின் மட்டுமே ஒன்பது புள்ளிகளை எடுத்திருந்தார். முதல் பாதி முழுக்க ஒரே ஒரு டேக்கிள் புள்ளியைக் கூட தெலுங்கு டைட்டன்ஸ் அணியால் எடுக்க முடியவில்லை. அந்த அணி பரிதாபமான நிலையில் இருந்தது. குஜராத் போன்ற எதாவது அணியாக இருந்தால் இங்கே மேஜிக்கை எதிர்ப்பார்க்கலாம். ஆனால் குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் தானே எதிரணி. அப்புறம் நிலைமை எப்படி இருக்கும்...!

இரண்டாவது பாதியின் முதல் ஒன்பது நிமிடங்கள் மேட்ச் ஆரோக்கியமாக இருந்தது. இந்த ஒன்பது நிமிடங்களில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி ஐந்து புள்ளிகளையும் குஜராத் இரண்டு புள்ளிகளையும் எடுத்திருந்தன. ராகுல் சவுதரியை வெளியே உட்கார வைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தியது குஜராத். ராகுல் ரெய்டுக்கு வந்தபோது கணுக்காலைப் பிடித்து டேக்கிள் செய்து ஆர்ப்பரித்தார் அபோசர். ஆட்டம் முடிய ஐந்து நிமிடம் இருக்கும் வேளையில் 25 – 16 என முன்னிலையில் இருந்தது குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ். 

Pro Kabaddi

 


ஆட்ட நேர இறுதியில் 29 – 19 என்ற கணக்கில் வென்றது குஜராத். முதல் பாதியை ஒப்பிடும்போது இரண்டாவது பாதியில் தெலுங்கு டைட்டன்ஸ் ஓரளவு சிறப்பாக ஆடியது. இதனால் 12 புள்ளிகள் வித்தியாசத்தில் கவுரவத் தோல்வியுடன் தப்பித்தது. இல்லையெனில் மெகா தோல்வியைச் சந்தித்திருக்கும் ராகுல் அணி. ஒன்பதாவது போட்டியில் ஆடும் தைட்டன்ஸுக்கு இது ஏழாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் அணிக்கு வெற்றி நடையில் சிதறி விழுந்த மற்றொரு அணியாகிப் போனது தெலுங்கு டைட்டன்ஸ்.

http://www.vikatan.com/news/sports/99360-gujarat-fortune-giants-successfully-beat-telugu-titans.html

Link to comment
Share on other sites

வெற்றியை கோட்டைவிட்டது தமிழ் தலைவாஸ்: 29-30 என்ற புள்ளிகள் கணக்கில் டெல்லி அணியிடம் வீழ்ந்தது

 

 
18chpmuMeraj

தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக அசத்தலாக ரைடு மேற்கொண்ட டெல்லி அணியின் கேப்டன் மீரஜ்.

புரோ கபடி லீக் 5-வது சீசன் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி தபாங் அணி 30-29 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது.

அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்க நிமிடங்களில் டெல்லி அணி ஆதிக்கம் செலுத்தியது. மீரஜ் ஷேஹ், ரவி தலால் புள்ளிகள் சேர்க்க முதல் 5 நிமிடத்தில் டெல்லி அணி 5-2 என முன்னிலைப் பெற்றது. தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் புள்ளி டெல்லி வீரர் ரோகித் பாலியன் ரைடுடின் போது செய்த தவறால் கிடைத்தது.

இதன் பின்னர் அடுத்த ரைடில் பிரபஞ்சன் ஒரு புள்ளி சேர்த்தார். 6-வது நிமிடத்தில் டெல்லி கேப்டன் மீரஜை, சூப்பர் டேக்கிள் மூலம் தமிழ் தலைவாஸ் வீரர்கள் மடக்கினர். இதனால் 2 புள்ளிகள் கிடைத்தது. அடுத்த ரைடில் அஜய் தாக்குர் ஒரு புள்ளியும், தடுப்பாட்டம் மூலம் ஒரு புள்ளியும் சேர்க்க தமிழ் தலைவாஸ் அணி 6-5 என முன்னிலைப் பெற்றது.

இதையடுத்து மீரஜ், ரைடு மூலம் ஒரு புள்ளி சேர்க்க டெல்லி அணி 7-6 என முன்னிலைக்கு வந்தது. தமிழ் தலைவாஸ் தரப்பில் அஜய் தாக்குரும், டெல்லி அணி தரப்பில் மீரஜ், ரோகித் பாலியன் ஆகியோர் அடுத்தடுத்து புள்ளிகள் சேர்க்க 16-வது நிமிடத்தில் ஆட்டம் 9-9 என்ற சமநிலையை அடைந்தது.

பிரபஞ்சன் ரைடில் சிக்கிய நிலையில், டெல்லி வீரர் ஸ்ரீராம் தனது அசத்தல் ரைடில் 2 புள்ளிகள் சேர்க்க டெல்லி அணி 12-9 என்ற முன்னிலையை பெற்றது. அடுத்த ரைடில் அஜய் தாக்குர் ஒரு புள்ளி பெற்றார். இந்த சூழ்நிலையில் ரைடு சென்ற மீரஜை சூப்பர் டேக்கிள் முறையில் தமிழ் தலைவாஸ் வீரர்கள் மடக்க முதல் பாதி ஆட்டம் 12-12 என சமநிலையில் இருந்தது.

2-வது பாதியின் தொடக்கத்தில் டெல்லி வீரர் ஸ்ரீராமை, சூப்பர் டேக்கிள் முறையில் தமிழ் தலைவாஸ் வீரர்கள் மடக்கினர். இதைத் தொடர்ந்து அடுத்த ரைடில் அஜய் தாக்குர் ஒரு புள்ளி சேர்க்க தமிழ் தலைவாஸ் அணி 15-12 என முன்னிலைப் பெற்றது. 23-வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய அபோஸல் அடுத்தடுத்த ரைடுகளில் புள்ளிகள் சேர்க்க டெல்லி அணி முன்னேற்றம் கண்டது. இதற்கிடையே அஜய் தாக்குர் 27-வது நிமிடத்தில் டாங் ஜியோன் லியை, சூப்பர் டேக்கிள் முறையில் டெல்லி வீரர்கள் மடக்கிப்பிடிக்க அந்த அணி 16-17 என நெருங்கியது. இந்த சூழ்நிலையில் ரைடு வந்த மீரஜை, தமிழ் தலைவாஸ் வீரர்கள் மடக்கினர். தொடர்ந்து அஜய் தாக்குர் ரைடில் ஒரு புள்ளி சேர்க்க 19-16 என தமிழ் தலைவாஸ் முன்னேறியது.

31-வது நிமிடத்தில் அபோஸல் ரைடு மூலம் 2 புள்ளிகள் சேர்க்க டெல்லி அணி 19-20 என மீண்டும் நெருங்கி வந்தது. ஆனால் அடுத்த ரைடில் அபோஸல் சிக்கினார். இதையடுத்து 33-வது நிமிடத்தில் டெல்லி அணி ஆல் அவுட் ஆக தமிழ் தலைவாஸ் 25-22 என முன்னிலைப் பெற்றது. 1 நிமிடம் 2 விநாடிகள் எஞ்சிய நிலையில் டெல்லி அணி 27-28 என நெருங்கி வந்தது.

இந்த சூழ்நிலையில் டெல்லி கேப்டன் மீரஜ், சூப்பர் ரைடில் 3 புள்ளிகள் சேர்க்க ஆட்டம் டெல்லி அணியின் பக்கம் சாய்ந்தது. முடிவில் டெல்லி அணி 30-29 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. 6 ஆட்டத்தில் விளையாடி உள்ள அந்த அணி தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்த நிலையில் வெற்றிப் பாதைக்கு திரும்பி உள்ளது. தமிழ் தலைவாஸ் 3-வது தோல்வியை சந்தித்தது.

டெல்லி அணி தரப்பில் மீரஜ், ரைடு மூலம் 9 புள்ளிகளும், விராஜ் விஷ்ணு, டேக்கிள் மூலம் 2 புள்ளிகளும் சேர்த்தனர். தமிழ் தலைவாஸ் அணி தரப்பில் அஜய் தாக்குர், ரைடு மூலம் 13 புள்ளிகளும், அமித் ஹூடா, டேக்கிள் மூலம் 4 புள்ளிகளும் சேர்த்தனர்.

 

 

http://tamil.thehindu.com/sports/article19515528.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.