Jump to content

ஒரு நண்பன் - சிறுகதை


Recommended Posts

ஒரு நண்பன் - சிறுகதை

 

நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... அசோகமித்திரன், ஓவியங்கள்: அனில் கே.எஸ்.

 

 

ரிகோபால் என்னை எச்சரித்தான்: ''இதோ பார், நீ ரொம்ப 'ரெட்’ ஆகுற. போலீஸ் பிடிச்சா என்ன ஆகும் தெரியாது!''

அவன் சொன்னதில் தவறு கிடையாது. ஆனால் இவன் யார், எப்போது பார்த்தாலும் என்னை இதைச் செய்யாதே அதைச் செய்யாதே என்று சொல்வது? விவிலியத்தில் கெய்ன், கர்த்தரிடம் சொல்வான்: 'நான் என்ன, என் சகோதரனைக் காவல் காப்பவனா?’ இதை அவன் சகோதரன் ஏபல்லைக் கொன்ற பிறகு சொல்கிறான். என்ன நெஞ்சழுத்தம்!

ஹரிகோபால், இந்த மாதிரி என் விஷயங்களில் தலையிடுவது இது முதல்முறை அல்ல. நான் இன்ஸ்பெக்டர் செண்பகராமனுடன் சினிமாவுக்குப் போனது, அவர் ஒரு மாடி வீட்டுக்குப் போனபோது நான் அவருடன் இருந்தது எல்லாம் எப்படியோ தெரிந்துகொண்டு, 'இதோ பார், நீ அந்தப் போலீஸ்காரனுடன் சுத்தினே, உனக்கும் சீக்கு வந்து அவன் மாதிரி ஆஸ்பத்திரில சாவே' என்று சொன்னான்.

செண்பகராமன், என் மீது எவ்வளவு அன்பு கொண் டிருந்தார் என்று அவனுக்கு எப்படித் தெரியும்? எப்படிப் புரியவைப்பது? அவர் அந்த மாடி வீட்டுப் பெண்ணிடம் கொண் டிருந்த அன்பும், அவள் அவர்மீது கொண்டிருந்த அன்பும் அவனுக்கு என்ன தெரியும்? இப்போது ஹோமி ஃபிரம்ரோஸுடன் நான் ஒருமுறை பேசியதை எப்படியெல்லாம் விமர்சிக்கிறான்?

எனக்கு முதல் நாளிலிருந்தே ஹோமி பற்றி வியப்பு. நான், இன்டர்மீடியேட் முதல் வருடம். அவன், இரண்டாம் வருடம். என் உயரம்தான் இருப்பான். முகத்தில் லட்சிய வேகம் பளிச்சென்று தெரியும். அவனை நான் எந்த அசட்டுத்தனமான சூழ்நிலையிலும் பார்க்கவில்லை. அவனாக என்னிடம் பேச வந்தபோது, ஹரிகோபால் குறுக்கிடுகிறான்!

p76.jpg

இந்தியா, சுதந்திரம் அடைந்துவிடும் என்று தெரிந்துவிட்டது. ஆனால், மிகவும் கொண்டாடிவிட முடியாது. நாடெல்லாம் கலவரம். சாவுகள் ஆயிரக்கணக்கில். கொள்ளை, தீயிடுதல், பெண்களை நிர்மூலமாக்குதல். எங்கள் ஊரில் ஓரளவுக்குத்தான். ஆனால், வட இந்தியாவில், பஞ்சாபில், வங்காளத்தில், டெல்லியில் சொல்லி முடியாது. இதில் காந்தி வேறு உண்ணாவிரதம் இருக்கிறார்.

எங்கள் ஊரில் வெளியூர் செய்திப் பத்திரிகைகளுக்குத் தடை. ஆனால் வானொலியைத் தடைசெய்ய முடியாதே? எங்கள் நிஜாம் அரசின் ரேடியோவைக் கேட்கக் கூடாதா? யார் என்ன சொன்னாலும் நிஜாம் ரேடியோவில் 'ஃபர்மாயிஷ்’ ஒலிபரப்பு மிகவும் நன்றாக இருக்கும். நூர்ஜஹான், சுரைய்யா, ஜோரா பேகம் பாட்டுகளாக ஒலிபரப்பும். எனக்கு அந்தப் பாடகர்களைப் பிடிக்கும். எங்கள் வீட்டில் ரேடியோ கிடையாது. ஆனால், பக்கத்தில் காஸிம் வீட்டில் நான்கு தெருக்களுக்குக் கேட்கும்படி ரேடியோ வைப்பார்கள். எனக்கு ஒரு சந்தேகம். அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதை யாரும் கேட்கக் கூடாது என்றுதான் ரேடியோவை உரக்கவைக்கிறார்களோ?

சுதந்திரம் வந்துவிட்டது, எங்களுக்குத் தவிர. ஹோமி, இப்போது இன்னும் பரபரப்பானான். எவ்வளவு கூர்மையான புத்தி? எங்கள் கல்லூரியில் மிகச் சிறப்பாகப் பேசக்கூடிய நான்கைந்து பேர்களில் அவன்தான் முதல் இடம். எங்கள் கல்லூரியில் நல்ல பேராசிரியர்கள், ஆங்கிலத் துக்கும் ஐரோப்பிய வரலாற்றுப் பாடங்களுக்கும்தான். இந்தக் காரணத்தினால் நிறைய விவாதங்கள், நிழல் பாராளுமன்றம், நிழல்

p76a.jpgஐ.நா. சபை என வருடத்தில் ஐந்தாறு பெரிய நிகழ்ச்சிகள் நடக்கும். நானும் பங்குபெறுவேன். என்றாலும், ஹோமி அளவுக்கு நான் பங்காற்ற முடியாது. அவன் எப்படி இவ்வளவு பொதுவுடைமை நூல்களைப் படித்தான் என்று நான் வியப்பேன். எனக்கு காந்தி, அகிம்சை, சத்தியாகிரகம் இதற்கு மேல் ஒன்றும் தெரியாது.

அன்று ஹரிகோபால் கல்லூரிக்கு வரவில்லை. நான் ஹோமியிடம், ''நீ படிக்கும் புத்தகங்களில் ஏதாவது எனக்குப் படிக்கக் கொடுப்பாயா? இரண்டே நாட்களில் படித்துவிட்டுத் தருகிறேன்'' என்றேன்.

'உனக்குப் புரியாதே...' என்றான்.

'நான் படிப்பேன்' என்றேன்.

அவன் புன்முறுவல் செய்தான். அவனுக்குக் களையான முகம். அதில், அன்றுதான் முதல் முறை அவன் சிரித்து நான் பார்த்தேன். அவன் தணிந்த குரலில், 'அவற்றை இங்கு கொண்டுவர முடியாது' என்றான்.

என் முகம் வாடிவிட்டது. 'நீ இதற்கெல்லாம் அழுதுவிடுகிறாயே... இன்னும் எவ்வளவு போராட்டங்களைச் சந்திக்க வேண்டிவரும், தெரியுமா?' என்று கேட்டான்.

நாங்கள் எங்கள் வகுப்புகளுக்குப் போய்விட்டோம்.

றுநாள் மாலை பஸ் ஸ்டாப்பில் அவன் என்னைத் தனியாக அழைத்து, 'என் வீட்டுக்கு வருகிறாயா?' என்று கேட்டான்.

'ராணி கஞ்ச்தானே?'

'உனக்கு எப்படித் தெரியும்?'

'எனக்குத் தெரியும்.'

'நாளை காலை வருகிறாயா? இது ரொம்ப ரகசியம்.'

'நான் யாருக்கும் தெரியாமல் படிக்கிறேன்.'

இதைச் சொல்லித் திரும்பிப் பார்த்தேன். ஹரிகோபால் எங்களையே கவனித்துக் கொண்டிருந்தான்.

ஹோமி ஃபிரம்ரோஸ் வீட்டுக்கு நேர் வழி, ஆக்ஸ்போர்டு தெரு வழியாகச் சென்று ஜேம்ஸ் தெருவில் திரும்பி நேராக ராணி கஞ்ச் அடைவது. நான் அன்று செகண்ட் பஜார் வழியாகச் சென்றேன். அது மிகவும் குறுகலான கடைத் தெரு. அது செகண்ட் பஜார் என்றால், எது முதல் பஜார்? தெரியாது. எனக்கு மட்டும் இல்லை, நான் விசாரித்த யாருக்குமே தெரியவில்லை.

அது ஒரு பழைய மாடிக் கட்டடம். எப்போதோ பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிச் சுவருக்கு நீல நிறம் அடித்திருந்தார்கள். அது மிகவும் மங்கிப்போயிருந்தது. கீழே ஏதோ மோட்டார் உதிரிப் பாகங்கள் கடை. அதை ஒன்பது, ஒன்பதரை மணிக்குத்தான் திறப்பார்கள். கட்டடத்தின் பக்கத்தில் ஒரு சிறு சந்து. அதன் வழியாகப் போனால், ஒரு சின்னக் கதவு. அங்கு மாடிப்படிகள் இருந்தன. காலையிலும் அங்கு இருட்டு. நான் தட்டுத்தடுமாறி மாடியை அடைந்தேன். கதவு மூடியிருந்தது. நான் மூன்று, நான்கு முறை ஹோமி பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன். வயதான அம்மாள் கதவைத் திறந்தாள்.

'ஹோமி ஃபிரம்ரோஸ் இருக்கிறானா?'

''நீ யார்?'

'ஹோமியோடு நிஜாம் காலேஜில் படிப்பவன்.'

'நீ சின்னப் பையனாக இருக்கிறாயே?'

'அவனுக்கு ஒரு வருஷம் ஜூனியர்.'

p76b.jpgஅந்த அம்மாள் உள்ளே போனாள். நான் கதவருகே நின்றுகொண்டிருந்தேன்.

ஹோமி வந்தான். அவன் வெள்ளைச் சட்டை பைஜாமா அணிந்திருந்தான். என்னைப் பார்த்துவிட்டு உள்ளே போனான். தடிப் புத்தகம் ஒன்றைக் கொண்டுவந்தான்.

'பை ஏதாவது கொண்டுவந்திருக்கிறாயா?' என்று கேட்டான். அவன் மீண்டும் உள்ளே சென்று தடியானத் துணிப்பை ஒன்றைக் கொண்டுவந்தான். புத்தகத்தைப் பையில் போட்டு, தணிந்த குரலில், 'இதை யாரிடமும் காட்டாதே. உன் வீட்டில் யார் யார் இருக்கிறார்கள்?' என்றான்

'எனக்கு இரண்டு அக்கா. அப்புறம் தம்பி தங்கை...'

'ஒரு அக்கா பி.ஏ. மேத்ஸ்., சரியா?'

'ஆமாம். உனக்கு எப்படித் தெரியும்?'

'இதை யாரிடமும் காட்டாதே. திரும்பக் கொண்டுவரும்போதும் பையில் போட்டுக் கொண்டுவா.'

'உன் வீட்டில் யார் யார்?'

'அம்மா, அப்பா. அண்ணன் பம்பாயில் இருக்கிறான். அவன் எங்களோடு சண்டை.'

'அம்மா, நல்லவங்களாக இருக்கிறாளே?'

'அவன் 'வீட்டை விற்று பணம் கொடு’ என்கிறான். என் அப்பாவுக்கு பராலிசிஸ். இந்த வீடு மாதிரி எங்களுக்கு வேறே கிடைக்காது. சரி, நீ போ. புத்தகம் ஜாக்கிரதை. யாரிடமும் காட்டாதே.'

நான் அன்று கல்லூரிக்குப் போகவில்லை. ஹோமி கொடுத்த புத்தகத்தைப் படிக்க முயற்சிசெய்தேன். அவன்   சொன்னது சரி. அதன் நடை, சொற்கள் புரியவில்லை. சியாங் கே ஷேக்கைத் திட்டுவது தெரிந்தது.

நான் அடுத்த நாள் கல்லூரி போனபோது ஹரிகோபால் என்னை வெற்றிக் களிப்போடு பார்த்தான். 'நான் சொன்னேன்ல, உன் சிவப்பு நண்பனை போலீஸ் இழுத்துண்டுப் போயிட்டாங்க.'

'ஐயய்யோ!'

'இப்போ ஐயோ சொல்லி என்ன? அனந்தகிருஷ்ண ரெட்டி தெரியும்ல, அதான் மேட்ச்சல் ஜமீன்தார். அவன் மர்டர்லே இவனும் இருக்கான்.'

'இவனுக்கு அவனைத் தெரியவே தெரியாதே!'

'ஏன் தெரியணும்? இவன்தான் எல்லா ஜமீன்தாரையும் கொல்லணும்னு சொல்றானே...'

எனக்கு அழுகை அழுகையாக வந்தது. ஹோமி ஃபிரம்ரோஸ் கொலை செய்கிறவன் இல்லை. ஆனால், இதை யாரிடம் சொல்வது?

p76c.jpgநான் ஹோமி வீட்டுக்குப் போனேன். அவன் அம்மா என்னைக் கட்டிக்கொண்டு அழுதாள். அப்புறம் ரகசியமாக 'நீ இங்கே வராதே. உன்னையும் போலீஸ் பிடிச்சுண்டுப் போயிடும்' என்றாள்.

நான் நேராக ஜேம்ஸ் ஸ்ட்ரீட் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனேன். செண்பகராமன் உயிரோடு இருந்தபோது அங்கு நிறையப் போயிருக்கிறேன். அவர் கீழ் வேலைசெய்த ஒரு சப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்தேன்.

'ஏமி பாபு?' என்று கேட்டார்.

'என் நண்பனை போலீஸ் கொண்டுபோய்விட்டார்கள்.'

'பேரு ஏமி?'

நான் சொன்னேன்.

'இங்கே யாரும் அப்படி இல்லையே? அது ஹைடராபாட் போலீஸாக இருக்கும்.'

'உங்களுக்குத் தெரிந்தவங்க அங்கே இருக்காங்களா?'

'ஹைடராபாட் போலீஸ், நாங்க இருக்கவே கூடாதுங்கிறாங்க. நான் சொன்னா கேட்பாங்களா?'

நான் கல்லூரிக்குப் போனேன். ஆங்கில வகுப்பில் என் பக்கத்தில் உட்கார்ந்து 'பீம்! பீம்!’ என்று சத்தம் எழுப்பி என்னை வம்பில் மாட்டிவிடும் மஸ¨த்தின் அப்பா, ஒரு பெரிய அதிகாரி. நான் ஒருமுறை போலீஸ் தடியடியில் மாட்டிக்கொண்டபோது அந்த மனிதன்தான் தடியடி ஆர்டர் கொடுத்தார்.

நான் மஸூத்திடம் 'ஹோமி ஃபிரம்ரோஸை போலீஸ் கொண்டுபோயிடுத்தாம்' என்றேன்.

'யார்... அந்த கம்யூனிஸ்ட்தானே?'

'அது தெரியாது. அவன் என் தோஸ்த்.'

'நான் உன் தோஸ்த் இல்லையா?'

'நீயும் தோஸ்த்தான். அதனால்தான் உன் உதவியைக் கேட்கிறேன்.'

மஸ¨த் யோசித்தான். 'உனக்கு மஷீராபாத் ஜெயில் தெரியுமா?'

'தெரியும்.'

'உனக்கு எப்படித் தெரியும்?'

'அதன் பக்கத்தில் இருக்கும் ஒரு தர்ஜிதான் எனக்கு பேன்ட் தைப்பார். அவர் என் அப்பாவுக்கு ரொம்பத் தெரியும்.'

மஸ¨த், அவன் நோட்டுப்புத்தகத்திலிருந்து ஒரு சிறு துண்டு கிழித்தான். அதில் உருதுவில் இரு சொற்கள் எழுதினான். 'இதைக் கொண்டுபோய்க் காண்பி. முடியுமானால் ஏற்பாடு செய்வார்கள்.'

நான் கல்லூரியிலிருந்து நேராக மஷீராபாத் போனேன். அது ஒரு கோட்டை. மிகப் பெரிய கதவில் ஒரு சிறு கதவு. அதுவே பெரிதாக இருக்கும். அங்கு இருந்த காவலாளியிடம் அந்தச் சிறு துண்டுக் காகிதத்தைக் கொடுத்தேன்.

அரை மணி கழித்து நீல நிற உடை அணிந்த ஒரு போலீஸ்காரன் என்னை உள்ளே அழைத்துப் போனான். அது மிகப் பெரிய சிறை. இருட்டில் ஓர் அறையில் ஹோமி கிடந்தான். நான் 'ஹோமி' என்று மெதுவாகக் கூப்பிட்டேன். அவன் திடுக்கிட்டுத் திரும்பினான்.

'போ போ! இங்கே வராதே!' என்றான். அவனால் நிற்க முடியவில்லை. முகம், உடல் எல்லாம் காயம்.

'போ! வராதே இங்கே!' என்று மீண்டும் கத்தினான். நான் அழுதுகொண்டே திரும்பினேன். அவன் மெதுவாக 'உஸ்' என்றான். நான் திரும்பினேன்.

அவன் மிகவும் மெதுவாக, 'நான் கொடுத்ததை எங்கேயாவது புதைத்துவை' என்றான்.

நான் வீடு திரும்பி வீட்டுப் பப்பாளி மரத்தடியில் ஒரு பெரிய குழி தோண்டினேன்.

'என்னடா?' என்று அம்மா கேட்டாள்.

'ஒரு செடிக்காக...' என்றேன்.

அன்று இரவு ஹோமி கொடுத்த புத்தகத்தைப் புதைத்துவைத்தேன்.

ஹோமி, திரும்பி வரவே இல்லை. போலீஸ்காரர்கள் 'அவன் தப்பித்து ஓடிவிட்டான்’ என்றார்கள். அது இல்லை என்று எனக்குத் தெரியும். அவன் இரு கால்களையும் உடைத்துவிட்டிருந்தார்கள். அங்கே மஷீராபாத்திலேயே கொன்று புதைத்திருப்பார்கள். திடீரென்று எங்கள் அப்பா இறந்துவிட்டார். இரு மாதங்களில் நாங்கள் சென்னை வந்துவிட்டோம்.

து எல்லாம் நடந்து 65 ஆண்டுகள் சென்றுவிட்டன. ஹோமி ஃபிரம்ரோஸ் மஷீராபாத்தில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போயிருப்பான். அவன் கொடுத்த புத்தகம், பப்பாளி மரத்தடியில் மக்கிப்போயிருக்கும். நான் மக்கிப்போகக் காத்திருக்கிறேன்!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.