Jump to content

வேகம் எடுக்கும் ‘ஃபெரா’... அச்சத்தில் சசிகலா!


Recommended Posts

வேகம் எடுக்கும் ‘ஃபெரா’... அச்சத்தில் சசிகலா!

ழக்குகள்... வாய்தாக்கள்... தண்டனைகள்... சசிகலாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் புதிதல்ல. அப்படித் தொடங்கி, 20 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் வெளியான தீர்ப்புதான், சசிகலாவைச் சிறைக்கு அனுப்பியது. அதைப் போல 22 ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் சிக்கலான அந்நியச் செலாவணி மோசடி வழக்குகள், வெட்டுக்கிளிகளைப் போல் மொத்தமாகக் கிளம்பி சசிகலா குடும்பத்தை அலைகழிக்கத் தொடங்கி உள்ளன. இதனால் அச்சத்தில் இருக்கிறார் சசிகலா.

ஜெ.ஜெ டி.வி, சசிகலா, தினகரன், பாஸ்கரன், சுதாகரன் ஆகியோர் மீது 1995-96 காலகட்டத்தில் அந்நியச் செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ‘ஃபெரா’ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 8 அந்நியச் செலாவணி மோசடி வழக்குகளும் சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. கடந்த 2015-ம் ஆண்டு, பொருளாதாரக் குற்றப் பிரிவு நீதிமன்ற நீதிபதி தெட்சிணாமூர்த்தி, இவற்றில் பல வழக்குகளில் சசிகலா மற்றும் சசிகலா குடும்பத்தினரை விடுவித்துத் தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த நீதிமன்றம், ‘சசிகலா குடும்பத்தை விடுதலை செய்தது செல்லாது. அந்த வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது. அதனால் இந்த வழக்குகள் தற்போது மீண்டும் முதலில் இருந்து விசாரிக்கப்பட்டு வருகின்றன. அதில் தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களிடம், கேள்வி கேட்டு குற்றச்சாட்டுப் பதிவு செய்யும் நடைமுறை தொடங்கி உள்ளது.

p36b.jpg

ஆஜர்... ஆஜர்... ஆஜர்!

பொருளாதாரக் குற்றவியல் மாவட்ட நீதிபதி-I ஜாகீர் உசேன், பொருளாதாரக் குற்றவியல் மாவட்ட நீதிபதி-II மலர்மதி ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்குகள் இப்போது நடைபெற்று வருகின்றன. கடந்த 20-ம் தேதி இந்த வழக்குகள் ஒன்றில் சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகன்கள் சுதாகரன், பாஸ்கரன்ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். சுதாகரனை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து அழைத்து வந்தார்கள். 21-ம் தேதி வந்த இரண்டு வழக்குகளில் சசிகலாவும், பாஸ்கரனும் விசாரிக்கப்பட்டார்கள். சுதாகரனைப் போல் சசிகலா நேரில் வரவில்லை. பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தே ‘வீடியோ கான்ஃபரன்சிங்’ முறையில் பதில் அளித்தார். மேலும் 2 வழக்குகளில் வரும் ஜூலை 1-ம் தேதி சசிகலாவும் பாஸ்கரனும் ஆஜராக வேண்டும். இதற்கிடையில் மற்றொரு அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மற்றொரு மகனான டி.டி.வி.தினகரன் ஆஜராக வேண்டி இருந்தது. ஆனால், அவர் வாய்தா வாங்கிக் கொண்டார்.

நீதிமன்றக் காட்சிகள்!

ஜூன் 20-ம் தேதி காலை, பெங்களூரு போலீஸ் சுதாகரனை வாகனம் மூலம் சென்னை அழைத்து வந்தது. வழக்கமான வெள்ளைக் குர்தா அல்லாமல், பட்டு குர்தாவில் சுதாகரன் நீதிமன்றம் வந்தார். எப்போதும் அணிந்திருக்கும் கூலிங்கிளாஸ் இந்த முறை மிஸ்ஸிங். சிறைக்குச் செல்வதற்கு முன் எப்படி இருந்தாரோ... அதே உருவத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அப்படியே இருந்தார். ஆனால், அவர் முகத்தில் மட்டும் சோர்வும் லேசான குழப்பமும் தெரிந்தது. 12.30 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்ட சுதாகரன், பாஸ்கரனிடம் நீதிபதி மலர்மதி வழக்குத் தொடர்பான கேள்விகளைக் கேட்டார். சுதாகரன் உரிமையாளராக இருந்த சூப்பர் டூப்பர் டி.வி-க்கு மின்சாதனப் பொருள்கள் சிங்கப்பூரில் இருந்து வாங்கப்பட்டன. அதற்கு சுதாகரன், டாலரில் பணம் செலுத்தி இருந்தார். ஆனால், அது அங்கீகரிக்கப்பட்ட வங்கி மற்றும் முகவர்கள் மூலம் கொடுக்கப்படவில்லை என்பதுதான் வழக்கு. அதுபற்றிய கேள்விகளை நீதிபதி மலர்மதி கேட்டார். சுதாகரன், ‘தெரியாது’ என்ற ஒரே பதிலைத்தான் அனைத்துக் கேள்விகளுக்கும் கொடுத்தார். பாஸ்கரனும் அதே பதிலைத்தான் சொன்னார்.

p36a.jpg

நடுவகிடு நரைத்த சசிகலா!

21-ம் தேதி காலை 11 மணிக்கு வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் சசிகலாவிடமும், நேரில் பாஸ்கரனிடம் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அல்லிக்குளம் நீதிமன்றத்தில் உள்ள வீடியோ கான்ஃபரன்சிங் அறைக்கு நீதிபதி ஜாகிர் உசேன் முதல் ஆளாக வந்துவிட்டார். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான பப்ளிக் பிராசிக்யூட்டர் ரமேஷ், சசிகலாவுக்கு ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், பாஸ்கரன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அசோகன், இவர்களோடு வழக்கில் ஆஜரான பாஸ்கரன் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் இரண்டு பேர் தவிர வேறு யாரும் அந்த அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

11.25-க்கு விசாரணை தொடங்கினாலும், 11.45-க்குத்தான் வீடியோ கான்ஃபரன்சிங் இணைப்புக் கிடைத்தது. பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து ஒளிபரப்பான வீடியோவில், அந்தச் சிறையின் கண்காணிப்பாளர் டாக்டர் அனிதா முதலில் பேசினார். நீதிபதி ஜாகீர் உசேனுக்கு வணக்கம் தெரிவித்த அவர், “சசிகலா நீதிபதியின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் தயாராக உள்ளார்” என்ற தகவலைச் சொன்னார். அந்த வீடியோ திரை முழுவதும் இளம் நீல நிறத்தில் இருந்தது. திரையின் கீழே வலதுபுறமாக, செவ்வக வடிவத்தில் சசிகலாவின் உருவம் தெரிந்தது.

சசிகலாவின் முகத்தில் மெல்லிய சோகமும், தளர்ச்சியும் காணப்பட்டது. மற்றபடி குரல் கம்பீரமாகவே இருந்தது. அவர் சிறையில் கைதிகளுக்கு வழங்கப்படும் சீருடையில் இருந்தாரா என்பதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. உடல் முழுவதையும் மறைத்து, முழுமையாக சால்வை ஒன்றைப் போர்த்தியிருந்தார். நெற்றியில் நாமம் இல்லை. நடுவகிடு எடுத்துத் தலைவாரி இருந்தார். அதில் சரியாக அந்த நடுவகிடு மட்டும் நரைத்திருந்தது. கண்களில் நீர் வடியும் பிரச்னை சசிகலாவுக்கு இருப்பதால், அடிக்கடி கர்சீப்பால் கண்களைத் துடைத்துக்கொண்டே இருந்தார்.

நீதிபதி ஜாகீர் உசேன் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்.

முதலில் பரணி பீச் ரிசார்ட்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் 3 கோடி அமெரிக்க டாலர்கள் பரிமாற்றம் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், முதல் கேள்வியாக, “இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டபோது, முறையாக உங்களுக்கு மகஜர் வழங்கப்பட்டதா?” என்பதை நீதிபதி கேட்டார். அதன்பிறகு, ‘இந்த வழக்கில் சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்கிறீர்களா?’, ‘இந்தக் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டுள்ள ராமச்சந்திரன் உள்ளிட்ட நபர்களை உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேள்விகளை அடுக்கினார். அவை அனைத்துக்கும் சசிகலா, “தெரியாது...’’,  “எனக்கு நினைவு இல்லை” என்ற இரண்டு பதில்களை மட்டுமே மாற்றி மாற்றிச் சொன்னார். அதன்பிறகு பாஸ்கரனிடம் அதே கேள்விகள் கேட்கப்பட்டன. அவர் அனைத்துக் கேள்விகளுக்கும் ‘‘தெரியாது’’ என்றே பதில் சொன்னார். ஆனால், வாக்குமூலம் சரியாக பதிவு செய்யப்பட்டதா? என்ற கேள்விக்கு, “என்னை மிரட்டி, கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்கினார்கள். அதில் என்னை மிரட்டிக் கையெழுத்துப்போட வைத்தனர்” என்று பதில் அளித்தார்.

இந்த வழக்கின் கேள்வி-பதில் முடிந்ததும், 5 நிமிடங்கள் இடைவேளை அளிக்கப்பட்டது. அப்போது பாஸ்கரன் வெளியில் வந்து தன் உதவியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்; தண்ணீர் குடித்தார்; சில நிருபர்களுடனும் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் லேசாகக் கலங்கி இருந்தன.

இடைவேளைக்குப் பிறகு...

முதல் வழக்கின் குற்றச்சாட்டுப் பதிவு முடிந்ததும், சசிகலா இருந்த திரையில் தோன்றிய சிறை கண்காணிப்பாளர் டாக்டர் அனிதா, “இந்த அறையில் சிக்னல் வீக்காக இருக்கிறது. அதனால், சசிகலாவை மற்றொரு அறைக்கு மாற்றுகிறோம்” எனத் தெரிவித்தார். இரண்டாவது வழக்கு, ஜெ.ஜெ டி.வி தொடர்பான அந்நியச் செலாவணி மோசடி வழக்கு. அது தொடர்பான கேள்விகளுக்கும் சசிகலா, ‘தெரியாது’, ‘நினைவில் இல்லை’ என்ற பதில்களையே சொன்னார். பாஸ்கரனும் அப்படியே சொன்னார். 

அல்லிக்குளம் நீதிமன்ற வளாகத்தில் 15-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் உள்ளன. அனைத்துக்கும் பொதுவாக ஒரே ஒரு வீடியோ கான்ஃபரன்சிங் அறை மட்டுமே இருக்கிறது. சிறிய, ஏ.சி வசதி இல்லாத அறை. வீடியோ ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியும் அதரப் பழசானது. ஆனால், பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா இருந்த அறை அதிகபட்சமாக குளூருட்டப்பட்ட அறையாம். அதனால்தான் சசிகலா தன்னை முழுவதுமாக மறைத்து சால்வை போர்த்தியிருந்தார்.

p36.jpg

நீதிபதியும் வழக்கறிஞர்களும்

சசிகலாவை விசாரித்த நீதிபதி ஜாகீர் உசேன் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர். அங்கு வழக்கறிஞராகப் பணியாற்றியவர், 1991-ம் ஆண்டு மாஜிஸ்திரேட்டாகத் தேர்வானார். விசாரணையின்போது எந்த இடத்திலும், சசிகலாவை ‘மேடம்’ என்றோ, வேறு சொற்களைப் பயன்படுத்தியோ அழைக்கவில்லை. எழுதப்பட்ட கேள்விகளை வாசித்து, அவற்றுக்குச் சசிகலா சொன்ன பதில்களை மட்டும் பதிவு செய்தார்.

சசிகலா தரப்புக்காக வாதாடுபவர் மூத்த வழக்கறிஞர் பி.குமார். கடந்த 30 ஆண்டுகளாக இவர் பொருளாதாரக் குற்ற வழக்குகளை நடத்தி வருகிறார். ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்காக சொத்துக்குவிப்பு வழக்கை நடத்தியவர்.  இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், இடைத்தரகர் சுகேஷ் சந்திராவை, பி.குமார்தான் தினகரனுக்கு அறிமுகம் செய்தாரா என்று டெல்லி போலீஸ் இவரை விசாரித்தது.

அமலாக்கத்துறை சார்பில் வழக்குகளை வழக்கறிஞர்கள் தண்டபாணியும், என்.ரமேஷும் கவனித்து வந்தனர். தண்டபாணி உயர் நீதிமன்ற நீதிபதியாகத் தேர்வானதால் வழக்குகள் ரமேஷ் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவர் ஆறு ஆண்டுகள் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றியவர்; குற்றவியல் வழக்குகளில் நிபுணத்துவம் பெற்றவர்.

நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் மீண்டும் ஒரு பயணம் ஆரம்பம்.
 

http://www.vikatan.com/juniorvikatan/2017-jun-28/investigation/132250-fera-case-sasikala.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.