Jump to content

உயிர் வளர்த்தேனே


Recommended Posts

உயிர் வளர்த்தேனே 01: உணவைச் சேமித்த முதல் இனம்

 

 
 
 
food_3013778f.jpg
 
 
 

‘உடலை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே’ என்றார் திருமூலர். நம் உயிரை உடலில் நிலைக்கச் செய்வதற்காக உயிரை, வளர்ப்போம் என்கிறார் அவர்.

மிஞ்சிப் போனால் 120 ஆண்டுகள்வரை உயிரை வளர்த்துச் செல்ல முடியும். அதற்குப் பின்னர் எந்தக் கொம்பனின் உயிரும் உடலில் நிலைத்திருக்க முடியாது. அது சரி, உயிர் எப்படி வளரும்…?

பிறக்கும்போது இரண்டு கிலோவாக இருக்கும் உடலை, நான்கைந்து முழுக் கோழிகளைத் தின்று, கன்வேயரில் வைத்துத் தள்ளுவதைப்போலக் கூடைக் கணக்காக முட்டைகளை வாய்க்குள் தள்ளி, மென்று தின்றால் தாடை வலித்துப் போகும். அப்புறம் அதை உணவுக் குழாயில் தள்ளி, குளியல் தொட்டி போன்ற கடாயில் எண்ணெய்க் குளியல் போட்ட ஊர்வன, பறப்பன, நடப்பனவற்றைப் பொரித்து கையில் கிடைத்ததையெல்லாம் உள்ளே தள்ளி, உடலை நானூறு கிலோ வரைக்கும்கூட வளர்த்தெடுக்கலாம்.

ஆனால் உயிரை….?

உயிர் வளருமா…? மனித உயிர் வேறு வகையில் வளர்ந்திருக்கிறது. இந்த உலகில் தோன்றும் பல்லாயிரக் கோடிக்கணக்கான மற்ற உயிர்கள் தோன்றிப் பிறகு மறைந்தும் விடுகின்றன. ஆனால், மனித உயிர் மட்டுமே வளர்ந்துகொண்டே போகிறது.

மற்ற உயிர்கள் எதன் கையிலும் நாளைக்கான உணவு இல்லை. கிடைத்ததைத் தின்பது அல்லது பசிக்கிறபோது தேடித் தின்பது அல்லது எஜமான் அளித்ததைத் தின்பது என்ற அளவில்தான் தம் உடலை வளர்த்து, உயிரை நிறைவு செய்துவிடுகின்றன.

உலகில் உள்ள ஒட்டுமொத்த உயிர்களிலும் மனித இனம் மட்டுமே உணவைச் சேமித்து வைத்து உண்கிறது, தங்கள் எதிர்காலத்துக்கான உணவைச் சேமிக்கிறது.

பறவைகள் உணவைத் தேடிச் சுமந்து வந்து, பறக்கும்வரை தம் குஞ்சுகளுக்கு ஊட்டுகின்றன.

மனிதரைப் போலத் தானியங்களையும், பருப்புகளையும், தயார் நிலை உணவுகளையும் அடுத்தடுத்த மாதங்களுக்கென்று எந்த உயிரினமும் சேமித்து வைப்பதில்லை.

சிங்கம் ஒரு கொடூர மிருகம் என்று நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது. எத்தனை நாள் பசிக்குப் பின்னர் சிங்கம் ஒரு உயிரினத்தை வேட்டையாடினாலும், அந்த இறைச்சியை நேற்றைய பசிக்கோ, கிடைக்குமோ கிடைக்காதோ என்ற அவநம்பிக்கையில் நாளைக்கும் சேர்த்தோ உண்பதில்லை.

வேட்டையாடிய சிங்கம் உண்ணும்வரை அதன் அருகிலேயே செந்நாய், நரி போன்ற சிறு விலங்குகளும், பறவைகளும் காத்துக்கொண்டிருக்கும். அவற்றைப் பார்த்து சிங்கம் முறைப்பதோ உறுமுவதோ “என் இறைச்சியைப் பங்கு போட்டுக்கொள்ள நீங்க யாரு’’ என்று துரத்துவதோ இல்லை. தன் விருந்தை முடித்து நாக்கால் வாயைத் துடைத்துக்கொண்டு அங்கிருந்து அகன்றுவிடுகிறது.

மனிதர்கள் மட்டுமே மதியத்துக்கான சோற்று டப்பாவைத் தூக்கிக்கொண்டு ஆபீஸ் போகிறார்கள். மனிதர்கள் மட்டுமே நாளைக்கான மாவை பிரிட்ஜில் வைத்திருக்கிறான். மனிதர்களின் வீட்டில் மட்டுமே மூட்டை அரிசியும் பருப்பும் தவமிருக்கின்றன. மனிதர்களுக்காக மட்டுமே வேகன் வேகன்களாக தெற்கிலிருந்து நெல்லும், வடக்கிலிருந்து கோதுமையும் ரயிலில் கூகூவென்று கூவிக்கொண்டு விரைகின்றன.

ஒரு சாயல்குடிக்காரரிடம் கடிபடுவதற்காக பண்ணை ஆப்பிள் சான்பிரான்சிஸ்கோ ஊரகப் பகுதி காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது. கனடாவில் தயாராகும் ஒரு ஊக்க மருந்துக்காகக் கேரளத் தேங்காய் ஏற்றுமதியாகிறது. (உள்நாட்டில் சாப்பிட்டால் அது கொலஸ்ட்ரால், அங்கே சாப்பிட்டால் அது உடலுக்கு வலு தரும் மருந்து. அதுதானே சூட்சுமம்).

மனிதர்களுக்காகவே மலை மலையாகத் தானியங்கள், மத்தியச் சேமிப்பில் குவிக்கப்படுகின்றன. ஆதி மனிதர்கள் உணவு சேமிக்கத் தொடங்கியதிலிருந்தே உயிரின் வளர்ச்சி ஆரம்பம் ஆகிவிட்டது. எப்படி..?

தழைகள், கனி, காய், கிழங்கு, இறைச்சி, பால் (இதுவே அறிமுகமான படிநிலை) என்று இருந்த உணவுமுறையில் தானியத்தை உண்ண முடியும் என்று ஆதி மனிதர்கள் கண்டுகொண்டதே, மனித உயிரின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டம்.

அவ்வளவு ஏன், தாய் முலைப்பாலை மட்டுமல்ல, இன்னொரு விலங்கின் பாலும் குடிக்கத் தகுந்ததுதான் என்ற கண்டுபிடிப்புகூட மிக முக்கியமான தாவல்தான். எந்த விலங்கு தன் பாலை நமக்கு அளிக்கும், எதன் பாலை நம் உடல் செரிக்கும் என்பதைக் கண்டுபிடிக்க எத்தனை மூதாதையர் தம் தாடையிலே ரத்தம் சொரிந்தனரோ?

 

அடுத்த வாரம்: செங்கிஸ்கான் பாணி நல்லதா? கெட்டதா?
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

pope_3013777a.jpg

எழுத்தாளர் போப்பு என்ற புருசோத்தமன் கவிதை, கதைகள் எழுதியிருந்தாலும், தற்போது உடல்நல எழுத்தாளராக அறியப்பட்டுள்ளார். மொழிபெயர்ப்புப் பணி, இயற்கை சார்ந்த உணவகம், அக்குபங்சர் மருத்துவம் என வேறுபட்ட அனுபவங்களைக் கொண்டவர். உணவு-உடல்நலன் சார்ந்து சமீப காலத்தில் அவர் எழுதிய நூல்கள் பிரபலமானவை.

தொடரும்...

http://tamil.thehindu.com/general/health/உயிர்-வளர்த்தேனே-01-உணவைச்-சேமித்த-முதல்-இனம்/article9118462.ece

Link to comment
Share on other sites

  • Replies 52
  • Created
  • Last Reply

உயிர் வளர்த்தேனே 02: செங்கிஸ்கான் பாணி நல்லதா, கெட்டதா?

 

 
தென்மேற்கு பிரான்ஸில் லஸ்ஸோ குகைகளில் உள்ள பழங்கற்கால மாட்டு ஓவியம்
தென்மேற்கு பிரான்ஸில் லஸ்ஸோ குகைகளில் உள்ள பழங்கற்கால மாட்டு ஓவியம்
 
 

மனித இனத்தின் முதல் சேமிப்பு உணவு பால்தான். கனி, காய், கிழங்கு, இறைச்சி ஆகியவற்றைப் பசிக்கிறபோது தேடி உண்ட ஆதித் தாய், தனது குழந்தை அழுகிற நொடியில் மார்பிலிருந்து பாலை ‘ஜஸ்ட் 2 மினிட்ஸ்'கூட காத்திருக்க வைக்காமல், அமுதமாகச் சுரந்து அளித்தாள்.

அதுபோலவே மற்ற பாலூட்டிகளும் தனது குட்டிகளுக்குப் பால் அளிப்பதை நமது மூதாதையர்கள் கவனித்துவந்தார்கள். சாதுப் பிராணியாக மாற்றப்பட்டிருந்த மாடு, ஆடு போன்றவற்றைத் தங்களுக்கு அருகில் வைத்திருந்து, பசிக்கிறபோது வேறு உணவு கிடைக்காத சூழலில் மாட்டின் மடிக் காம்பை உறிஞ்சிப் பால் அருந்தவும் கற்றுக்கொண்டார்கள்.

அந்த வகையில் பால்தான் மனித இனம் சேமித்த முதல் உணவு (Preserved food). இந்தச் சேமிக்கப்பட்ட உணவு உயிர்ச்சத்துகளும் உயிர்த்தன்மையும் நிரம்பியது. பாலுக்கு அடுத்தபடியாகத்தான் நமது மூதாதையர்கள் தானியங்களைச் சேமிக்கக் கற்றுக்கொண்டார்கள்.

தானியக் கண்டுபிடிப்பும் உற்பத்தியும் சேமிப்பும் பாதுகாப்பும் மனிதகுல வரலாற்றில் பல முக்கிய மாற்றங்களை நிகழ்த்தின. சொல்லப்போனால் அரசு என்ற நிர்வாக அமைப்பு தோன்றுவதற்குக் காரணமாக இருந்ததே, தானியம்தான். தானியம் குறித்துப் பிறகு பார்ப்போம். இப்போது விட்ட இடத்தில் தொடருவோம்.

இன்றியமையாத உணவு

ஒருபுறம் ‘வெள்ளை விஷம்’ என்று இயற்கை உணவு ஆதரவாளர்கள் பாலை வன்மையாக மறுக்கிறார்கள். மற்றொரு புறம் பாலூட்டிகளின் பாலை உலகின் பெரும்பாலான நாடுகளும், அனைத்து மனிதக் கூட்டங்களும் காலங்காலமாக நுகர்ந்துகொண்டே வந்திருக்கின்றன.

செங்கிஸ்கானின் படை கிளம்புகிறதென்றால் ஆயுதங்களைப் பட்டறையில் அடிக்கத் தொடங்குகிறபோதே, குதிரைப் பண்ணையில் குதிரைப் பாலாடைக் கட்டி சேமிப்பும் தொடங்கிவிடும். இறுகின பாலாடைக் கட்டிகளைச் சவைத்துக்கொண்டே குதிரையில் விரைந்து பறந்த செங்கிஸ்கானின் படை ஆசியாவின் பெரும்பகுதியை ஆக்கிரமித்ததை மறந்துவிட முடியாது.

நம் காலத்தில் அதிகம் புழங்கும் பதப்படுத்திய கெட்டிப்பாலும், பால் மாவும் ராணுவப் பயன்பாட்டுக்காக முதலில் உருவாக்கப்பட்டவைதான். பின்னர்தான் அது பொதுச் சமூக நுகர்வுக்குத் திறந்துவிடப்பட்டது. பாலும், பால் பொருட்களான பாலாடை கட்டி, வெண்ணெய், நெய் போன்றவையும் அனைத்துச் சமூகத்தினருக்கும் எப்போதும் இன்றியமையாத உணவுகளாகவே நீடித்துவந்துள்ளன.

cows_3021358a.jpg

மாடுகள் கால்நடைகளாக மாற்றப்பட்டது தொடர்பான பண்டைய எகிப்து ஓவியம்

எது வில்லன்?

பல் முளைக்கத் தொடங்கிய பிறகு பாலைச் செரிக்கும் திறன் குறைந்துவிடுகிறது என்ற கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. என்றாலும் காலங்காலமாக பாலைத் தொடர்ந்து பயன்படுத்திவருவதால், அதிலிருக்கும் சத்துகளை ஈர்க்க நம் உடல் தகவமைத்துக்கொண்டுவிட்டது. பசும் புல்லை மேய்ந்து ஒரு நேரத்துக்கு மூன்று, நான்கு லிட்டர்கள் மட்டுமே கறக்கும் நமது நாட்டுப் பசும்பாலும் அது சார்ந்த பொருட்களும் நம் உடலுக்குப் பெரும் கேடுகளை விளைவிக்கக் கூடியவையல்ல.

ஆனால், இன்றைய ‘பாக்கெட் யுக'த்தில் பிளாஸ்டிக் கிரேடுகளுடன் வீட்டுக் கிரில் கதவுப் பைகளில் வந்து விழுகிற பால்… நாம் எழும் முன்னே நமக்காகக் குளுமைத் தவம் கிடக்கிற பால்… சுண்டக் காய்ச்சியதைப் போன்ற அடர்த்தியான பால்… மினிஸ்டர் ஒயிட்டைக் காட்டிலும் பளீர் வெண்மையில் டாலடிக்கிற பால்... எடுத்துக் காய்ச்சினால் பாத்திரத்தில் பழுப்பு நிறத்தில் அடி பிடிக்கிற பால்… எத்தனை வேதிக்கலப்பு மிக்கது என்பதைப் பலரும் பல இடங்களில் எச்சரித்துவிட்டார்கள். பெட்ரோலியக் கழிவை நீர்க்கச் செய்து, அதனுடன் பால் போன்ற மாவை பிளண்ட் செய்து கலப்பதற்கு டிடர்ஜெண்ட் சேர்ப்பது உட்பட பல ஆபத்தான அம்சங்கள் பற்றி ஏற்கெனவே நிறைய பேசப்பட்டுவிட்டது.

‘’அதோ கூரையிலே கொள்ளி வைக்கிறானே, அதுதான் எம் பிள்ளைகளிலேயே உத்தமமான பிள்ளை’’ என்பது போல இன்றைய பாக்கெட் பாலில் மிகச் சிறப்பானதுகூட 40 சதவீதம் பாலையும் 60 சதவீதம் மற்றக் கூறுகளையும் உள்ளடக்கி உள்ளது என்பதே நாம் அறியாத உண்மை. பாக்கெட் தயிர், டப்பித் தயிர் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நெய்யில் பாமாயிலும், செயற்கை நறுமணங்களும், கவர்ச்சியான நிறமியும் சேர்க்கப்படுவது ஓரளவு அறியப்பட்ட ஒன்றுதான்.

சுவை சுரண்டல்

நம் காலத்தின் மிகப் பெரிய கேடு என்னவென்றால் வேதிக் கலப்புடைய பாலையும், பால் பொருட்களையும் பத்து வயதுக் குழந்தைகள்கூடச் சுவைத்துப் பழகிவிட்டதுதான். மெல்லிய கவிச்சை வாசமடிக்கும் மெய்யான மாட்டுப் பாலையும், ஜல்லிகளாக உடைந்து புளித்த நீரில் மிதக்கும் தயிரையும், உருக்கினால் நிறமிழந்து, உணவுடன் இரண்டறக் கலந்து நாவுக்கு மிதமான சுவையையும், செரிமான மண்டலத்துக்கு இதமான உணர்வையும் தருகிற மெய்யான நெய்யையும் தரங்கெட்டது என நிராகரித்துவிடுகிறார்கள் நம் குழந்தைகள். அவர்களது நாவின் சுவை மொட்டுகளைச் சுளீரென்று தாக்காத பண்டங்களை, தரங்கெட்டது என்று புறக்கணிக்கும் நிலை அதிவேகமாக வளர்ந்துவருகிறது.

நமது நாவின் சுவை மொட்டுகளைச் சுரண்டும் அனைத்துப் பண்டங்களும் நம் உள்ளுறுப்புகளைக் கடுமையாகப் பாதிக்கக்கூடியவை. அதனால்தான் 20 வயதில் வாயுப் பிடிப்பு, 30 வயதில் நீரிழிவு, 40 வயதில் முட்டித் தேய்மானம் என்று உடல் உபாதைகள் அதிவேகமாக நம்மைச் சூழ்ந்துவருகின்றன. 2025-ல் இந்தியர்கள் பாதிப் பேருக்கு நீரிழிவு நோயின் தாக்கம் இருக்கும் என இலக்கு வைத்து இயங்கிக்கொண்டிருக்கிறது வணிக மருத்துவம்.

நம்மைப் பொறுத்தவரை நாட்டுப் பசும்பால் அத்தனை தீங்கு விளைவிப்ப தில்லை. ஆனால், இன்றைய ஆலை உற்பத்திக்கு உள்ளாகிவிட்ட பாலும், பால் பொருட்களும் நம்பகத்தன்மை அற்றவை. அப்படியானால் பாலுக்கு என்னதான் மாற்று?

குழந்தைகளிலிருந்து நோயுற்ற முதியவர்கள்வரை அத்தனை பேருக்கும் உகந்த மிகச் சிறப்பான பால், நம் கைக்கு எட்டும் தொலைவிலேயே இருக்கிறது.

அதை அடுத்த வாரம் பார்த்துவிடுவோம்.

(அடுத்த வாரம்: டி.எம்.டி. கம்பிகளாக எலும்புகள் உறுதிபெற...)

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உயிர் வளர்த்தேனே 03: டி.எம்.டி. கம்பிகளாக எலும்புகள் உறுதிபெற...

 

 
tmt_3030094f.jpg
 
 
 

தேங்காய் என்றதும் அச்சத்தில் தென்னை மர உயரத்துக்கே எகிறிக் குதிப்பவர்கள் உண்டு. தேங்காய் என்றாலே ‘கொலஸ்ட்ரால்’, ‘ஷூகர்’ என்று நம் காலத்தில் அபாண்டமாகப் பழி சுமத்தப்பட்டிருக்கிறது. உணவகங்களில் இட்லியையும், சாம்பாரையும் சிமெண்டுக் கலவை போலக் கரைத்து, உள்ளே தள்ளுகிற பலரும் தேங்காய் சட்னியை மட்டும் அருவருப்புடன் புறந்தள்ளிவிடுகிறார்கள்.

ஆரோக்கியமான உடலைக் கொண்ட குழந்தைகளுக்குத் தேங்காயைக் கொடுத்துப் பாருங்கள். விரும்பி உண்பார்கள். காரணம், அவர்களது செரிமான மண்டலத்தில் கழிவுத் தேக்கம் ஏதும் இல்லை. அதனால் தேங்காயின் பால் மீது, அவர்களுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அது எளிதில் செரிமானமும் ஆகிவிடும்.

நமது உணவுப் பாரம்பரியத்தில் தேங்காய் பிரிக்க முடியாத அங்கமாக இருந்தது. புட்டு - தேங்காய்ப்பூ, இடியாப்பம் - தேங்காய்ப் பால், ஆப்பம் - தேங்காய்ப் பால், சொதசொதவென்று தேங்காயை அரைத்துவிட்டுச் சொதி, அவியல், தேங்குழல் முறுக்கு, தேங்காய் பால்திரட்டு, தொதல் போன்ற எத்தனையோ பண்டங்கள் தேங்காயை அடிப்படையாகக் கொண்டு நமது பாரம்பரியத்தில் இருந்துவந்துள்ளன.

இவை அத்தனையும் மெதுமெதுவாக வழக்கொழிந்துவருகின்றன. காரணம் தேங்காயில் கொலஸ்ட்ரால், பி.பி., சுகர் என்று திட்டமிட்டுக் கிளப்பப்பட்ட வதந்‘தீ’தான்.

தேவையற்ற மிரட்சி

நமது வயிற்றில் புளிப்புத் தேக்கம் மிகுந்திருந்தால் தேங்காயைச் செரிமானம் செய்வது கடினம்தான். இப்போது நாம் செய்ய வேண்டியது தேங்காயைத் தவிர்ப்பது அல்ல. மாறாகப் புளிப்புத் தன்மையுள்ள மாவுப்பண்டங்களையும், புளி சேர்த்த குழம்பு வகைகளையும், மிகை மசாலாக்களையும் தவிர்க்க வேண்டும்.

உடலில் தேக்கமுற்ற அமிலத் தன்மையை நீக்குவதற்கான முறைகளைக் கையாள வேண்டும். தேங்கிய அமிலம்தான் நஞ்சு நீராகவும், நச்சு வாயுவாகவும் மாறுகிறது. இவைதான் அல்சருக்குக் காரணம் என்ற உண்மையை நாம் உணர்வதே இல்லை. எனவே, அமிலத்தன்மையுள்ள உணவைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, உடலுக்கு ஊக்கமளிக்கும் தேங்காயைப் பார்த்ததும் குடையைக் கண்ட காளைமாட்டைப் போல் மிரள்வது தவறு.

தமிழகத்தின் நெல்லை, குமரி மாவட்டங்களில் தேங்காய் குறித்த அனைத்து மிரட்டல்களையும் தாண்டி, அதன் பயன்பாடு தொடர்ந்து அதிகமாகவே நீடித்துவருகிறது. அதேபோல் ஒரு மலையாளிக்கு உணவில் தேங்காய் இல்லாத நாள் என்றால், அது உணவற்ற நாள் என்று பொருள். ஆனால் நம்மைக் காட்டிலும் அவர்களிடையே மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களின் விகிதம் குறைவு.

தேங்காய் நமது மண்ணில் எங்கும் விளைகிற பொருள். நம் மண்ணில் விளைகிற பொருள், நமது பாரம்பரியப் பயன்பாட்டில் நீடித்த ஒரு உணவுப் பொருள் நிச்சயமாக நமக்குத் தீங்கைத் தருவதில்லை. கல்யாணம், காதுகுத்து, பூப்பு நன்னீராட்டு, கோயில் பூசை, இறுதிச் சடங்கு என அனைத்திலும் தவறாமல் இடம்பெறும் பொருள் உணவாகும்போது, எப்படி நம் உடலுக்குத் தீங்காக மாறும்?

தேங்காயால் உயிர் வாழ்பவர்கள்

தமிழகத்தில் இயற்கை உணவு முறையையும், இயற்கை சிகிச்சை முறையையும் பரவலாக்கிய நெல்லை சிவசைலத்தைச் சேர்த்த கு.இராம கிருஷ்ணன் ‘தேங்காய் பழச் சாமியார்’ என்றே அழைக்கப்பட்டார். குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர், தன் வாழ்நாள் முழுதும் தேங்காயையும் வாழைப் பழத்தையும் மட்டுமே உணவாக உட்கொண்டு வந்தார். இன்றைக்கும் அதைப் போலப் பலர் உண்டு.

சென்னிமலையைச் சேர்ந்த தங்கப் பாண்டி என்றொரு இளைஞர், கட்டிடத் தொழிலாளி. இவரது உணவில் நாள்தோறும் ஒரு தேங்காய் உண்டு. இதுபோக ஊறவைத்த வேர்க்கடலை, வெல்லம், ஒருசில பழங்கள் போன்றவைதான் இவரது உணவு. ஓராண்டுக்கும் மேலாக இதைத்தான் பின்பற்றிவருகிறார். நாள் முழுதும் சுறுசுறுப்பாக இருக்கவும், கடினமாக உழைக்கவும் இந்த உணவு முறை பொருத்தமாக இருப்பதாகக் கூறுகிறார். கொழுப்பு நிறைந்ததாகக் கூறப்படும் தேங்காயையும் வேர்க்கடலையும் தவறாது உண்டுவரும், அவரது உடல் மிகவும் திண்மையாக இருக்கிறது.

தேங்காய்ப் பழச் சாமியார் நமக்கு இரண்டு மூன்று தலைமுறைக்கு முந்தையவர். இயற்கைத் தத்துவத்தை முன்மொழிந்த அவர், மேம்பட்ட வாழ்க்கை நெறிமுறைக்காக அதைப் பின்பற்றிவந்தார். நமக்கு அது சாத்தியமில்லை என்று வைத்துக்கொண்டாலும்கூட, சென்னிமலை தங்கப்பாண்டி நம் காலத்திலேயே கண்ணெதிர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். இயல்பான சமூக வாழ்க்கையை மேற்கொண்டுவருகிறார்.

செரிமானம் சீரடையும்

மீண்டும் மீண்டும் தேங்காயை வலியுறுத்திக் கூறுவதற்குக் காரணம், நமது உணவில் இருந்து தேங்காயைக் கொஞ்சங்கொஞ்சமாக விலக்கி வைத்துவிட்டு நிறைய பேர் சோணங்கிகளாக மாறிக்கொண்டிருக்கிறோமே என்கிற ஆதங்கம்தான். இளந்தலைமுறையைச் சேர்ந்த ஆறேழு வயதுப் பையன் தனக்குக் கால் எலும்பு வலிக்கிறது என்கிறான். ஒரு சின்னஞ்சிறுவன் எலும்பைக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு, வலியின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது.

தேங்காயைச் சேர்த்தால் தனக்கு ஒத்துக்கொள்வது இல்லை, புளித்த ஏப்பம் வருகிறது என்பவர்கள் ஓரிரு நாட்கள் முழு விரதம் இருந்து வயிற்றை ‘ஸ்வச் பாடி’ஆக மாற்றி, செரிமான மண்டலத்தை வலுப்படுத்திக்கொண்டு, மறுநாள் தேங்காய்ப் பால் குடித்தால் எலும்புகளில் வலு கூடுவதை உணர முடியும். தேங்காய்ப்பால் எலும்புகளுக்கு வலு சேர்ப்பதுடன், அதிலுள்ள எண்ணெய்த் தன்மை பெருங்குடலின் வறட்சியை நீக்கி, நீண்ட நாள் மலச்சிக்கலையும் முடிவுக்குக் கொண்டுவரும். மலச்சிக்கலின் அடுத்த கட்டமான மூலநோய் வராமல் தடுக்கும்.

தேங்காய்ப் பாலின் பயன்பாடுகள் மிக நீண்டவை, அடுத்த முறை அவற்றைப் பார்ப்போம்.

தேங்காய்ப் பால் தயாரிப்பு முறை

நடுத்தர அளவுள்ள அதிகம் முற்றாத புதிய தேங்காயை எடுத்துக்கொள்ளவும். உடைத்து மொத்தக் காயையும் சன்னமான நீளக் கீற்றுகளாகக் கீறிக்கொள்ளவும். கீற்றுகளை மிக்ஸி ஜாரில் இட்டுத் தேங்காய்த் தண்ணீரையும் உடன் விட்டு, சுமார் நாற்பது கிராம் பனைவெல்லம், மூன்று ஏலக்காய் சேர்த்து 100 மில்லி நீர் விட்டுச் சுதையாக அரைக்கவும். இந்தக் கட்டத்தில் மேலும் 100 மில்லி நீர் விட்டு, இரண்டு சுற்று ஓடவிட்டு வடிகட்டிப் பால் எடுக்கவும். மீண்டும் இரண்டு முறை நூறு, நூறு மில்லியாக நீர் சேர்த்து அரைத்து, வடிகட்டி எடுத்தால் பால் தயார்.

விரும்பினால் மேற்கொண்டு தேவையான அளவு நீர் சேர்த்து நபர் ஒன்றுக்கு 150 மில்லி அளவில் நான்கு பேர் இந்தப் பாலைப் பருகலாம். சாக்லேட் பானத்தைவிட சுவையுடைய இந்தப் பால், குழந்தைகளுக்கும் பிடித்துப்போகும். இதைச் சூடான காபி, டீ அருந்துவது போல ஒவ்வொரு மடக்காகவே விழுங்க வேண்டும். சுமார் பதினைந்து நிமிடங்களுக்கும் மேலாக நிதானித்துக் குடித்தால், வயிறும் உடலும் தன்னியல்பாக ஏற்றுக்கொள்ளும்.

http://tamil.thehindu.com/general/health/உயிர்-வளர்த்தேனே-03-டிஎம்டி-கம்பிகளாக-எலும்புகள்-உறுதிபெற/article9172254.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உயிர் வளர்த்தேனே 04: வீட்டிலேயே ஒரு புத்துணர்ச்சி முகாம்

 

 
coco_3038550f.jpg
 
 
 

தேங்காய்ப் பாலைக் கூடுமானவரை வெறும் வயிற்றில் குடிப்பதே நலம். அதைக் குடித்த பின்னரும் குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு வேறு எதையும் உண்ணாமலும் பருகாமலும் இருப்பது நல்லது.

தேங்காய்ப் பாலை அப்படியே குடிப்பது மட்டுமல்லாமல், சோற்றுடன் பிசைந்தும் உண்ணலாம். சோற்றுடன் சேர்க்கிறபோது ஐந்தாறு சொட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்தால், தேங்காய்ப் பால் மோரின் சுவையைப் பெறும்.

பால் பொருட்கள் அவ்வளவு நம்பகமானவையல்ல என்பதை முன்னரே பார்த்திருக்கிறோம். எனவே, பால் மோருக்குப் பதிலாகத் தேங்காய்ப் பால் மோரைப் பயன்பாட்டில் நிரந்தரமாக்கிக்கொள்ளலாம்.

அதேபோல் அவலுடன் தேங்காய் பாலைச் சேர்த்து ஊறவைத்து, எலுமிச்சைச் சாற்றைக் கலந்தால் ‘உடனடி தயிர் சாதம்’ தயார். இந்தத் தயிர் சாதம் வயிற்றைத் தூய்மைப்படுத்தும் தன்மை கொண்டது. பால் தயிர் சாதம் தரும் எதிர்விளைவுகள் எதையும் இது தராது.

உடனடி சத்து உணவு

நீருக்குப் பதிலாகத் தேங்காய்ப் பாலை ஊற்றிச் சோறு சமைப்பது பள்ளிப் பிள்ளைகளின் மதிய உணவுக்கு ஏற்றதாக அமையும். இது சத்து மிகுந்த உணவாக மட்டுமல்லாமல், சுவை மிகுந்த உணவாகவும் இருக்கும். செய்முறையைப் பெட்டிச் செய்தியில் காண்க.

அதேபோல, சோறு வெந்து கொண்டிருக்கிறது. குழம்பு இன்னும் தயாராகவில்லை. அவசரமாக வெளியில் கிளம்ப வேண்டும் என்றால் சோற்றைக் கொட்டி ஆற வைத்துவிடுங்கள். அரை மூடித் தேங்காயைத் துருவி, அந்தப் பூவை எடுத்துச் சோற்றின் மீது சாரலாகத் தூவிவிட்டு, ஒரு தக்காளியையும், அரை வெங்காயத்தையும் பொடியாக வெட்டி வண்ணமயமாகச் சிதற விட்டு, சிறிதளவு நெய்யைப் படரவிட்டுப் பிசைந்து உண்டால் சிக்கனமான, ஆரோக்கியமான உணவு முடிந்தது. ஒரு ‘புல் மீல்ஸ்' தரும் நிறைவை இது தரும்.

அதன் சுவை நீண்ட நேரத்துக்கு நாவில் நின்று நர்த்தனமாடும். மறுநாள் காலையும் ‘கலகல’வென்று இருக்கும்.

சிறுநீரகம் பத்திரம்

‘ஏதாவது ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட்டுவிட்டுப் போகிறேன்’ என்று கடையில் கால் மணி நேரம் நின்றிருந்து, வறுத்த சோற்றை அரையும் குறையுமாக மென்று உள்ளே தள்ளி அவதிப்படுவோர் நம்மில் அதிகம்.

இந்த வறுத்த சோறு (ஃபிரைடு ரைஸ்) தொண்டையை வறளச் செய்து மீண்டும் மீண்டும் தண்ணீரைக் குடிக்க வைத்து, சிறுநீரகத்தை ‘அரை ஹார்ஸ் பவர் மோட்டா'ராகத் தொடர்ந்து வேலை வாங்கி, தளர்ந்து போக வைத்துவிடுகிறது. அதனால்தான் இந்தக் காலத்தில் ஆண் - பெண் இருபாலரும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளை அதிகம் எதிர்கொள்ள நேரிடுகிறது. முடி கொட்டுதலில் தொடங்கிக் குழந்தைப் பேறின்மை, கர்ப்பப் பைக் கட்டிகள்வரை பல்வேறுத் தொல்லைகள் இளம் வயதிலேயே தோன்றுவதற்குக் காரணம், சிறுநீரகங்களைச் சவட்டி வேலை வாங்குவதுதான். உபாதையைத் தரும் ‘ஃபாஸ்ட் ஃபுட்'டுக்கு பதிலாக, மேற்கண்ட உடனடிச் சத்து உணவைத் தாராளமாக உண்ணலாம்.

பால் குளியல்

சரி, ‘முடிசூடிய வேந்தர்' தேங்காய்க்கு வருவோம். பிரியாணி சமைக்கிறபோது, அதை நான்கைந்து மணி நேரத்துக்கு மேல் வைத்திருக்கப் போவதில்லை என்றால், நெய்யைத் தவிர்த்துவிட்டு அல்லது குறைத்துக்கொண்டு, அதற்கு ஈடாகத் தேங்காய்ப் பாலைச் சேர்த்துக்கொள்ளலாம். இந்தக் காலத்தில் கடை நெய், அத்தனை பாதுகாப்பானதாக இல்லை என்பது மட்டுமில்லாமல், பொருளாதார ரீதியாகவும் தேங்காய்ப் பால் சிக்கனமாக இருக்கும். நெய்யைக் காட்டிலும் செரிமானமும் எளிதாகும்.

தேங்காய்ப் பால் வடித்த பின் கிடைக்கும் திப்பியை எடுத்துச் செடிகளுக்குப் போட்டால், திப்பியை உண்ண வரும் எறும்புகள் செடியின் வேர்ப்பகுதியில் இலவசமான நுட்ப உழவு ஒன்றை நிகழ்த்தும். அதனால் செடிகளுக்கு ‘போனஸ் காற்று' கிடைக்கும்.

எண்ணெய்க் குளியல் அருகிவிட்ட நிலையில், தேங்காய்ப் பாலைத் தேய்த்துக் குளித்தால் வறண்ட சருமம் ஈரப்பதம் பெறும் (குளியல் முறைகள் பற்றி, பின்னர் விரிவாகப் பார்ப்போம்). கண் எரிச்சல், உடல் சூடாகிவிட்டது போல் உணர்வது போன்ற நேரத்தில் ‘தேங்காய்ப் பால் குளியல்’ மேற்படி தொல்லைகளிலிருந்து உடனடி நிவாரணம் தரும்.

உடல் கழிவை வெளியேற்ற

போதிய மனப்பக்குவமும் விரதப் பயிற்சியும் இருந்தால் ஓரிரு நாட்களுக்குத் தேங்காய் மோர் உண்டு, உடலுக்குப் புத்துணர்ச்சி முகாம் ஒன்றை வீட்டிலேயே நடத்தலாம்.

எப்படி…? ஒரு தேங்காயுடன் நான்கு பெரு நெல்லிக்காயைச் சேர்த்து அரைத் தால், இதமான புளிப்புச் சுவையில் மோர் போன்ற பானம் கிடைக்கும்.

விடுமுறையைக் கொண்டாடுகிறோம் என்று சொல்லி ஒருசில ஆயிரங்களைக் கரைத்து, உடலுக்கு மேலும் சில உபாதைகளைக் கொண்டுவந்து சேர்த்துக்கொள்வதற்குப் பதிலாக, இரண்டு நாட்களுக்கு முழுக்க முழுக்க இந்த மோர்ப் பானத்தை மட்டுமே அருந்திவந்தால், உடல் கழிவுகள் நீங்குவது மட்டுமில்லாமல், வேலை நாளில் சுறுசுறுப்புடன் பணியாற்றலாம்.

நெல்லியும் தேங்காயும் உடலில் நுண் சத்துகளைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதால், அடிக்கடி எதையேனும் உண்ண வேண்டும் என்ற பேராவல் தணிந்துவிடும். பசிக்கிறபோது மட்டுமே உரிய உணவை உண்பது என்ற பக்குவத்தைப் பெற்றுவிடுவோம்.

காலத்துக்கு ஏற்றவாறு எளிய முறையில் தேங்காயின் முழுப் பயனும் நம் உடலில் எப்படிக் கொண்டுபோய்ச் சேர்ப்பது என்பதற்காகவே, இந்தத் தேங்காய்ப் பால் பரிந்துரை.

சத்தும் சுவையும் மிகுந்த லஞ்ச் பாக்ஸ்

# ஒரு மூடித் தேங்காயைக் கீறிப் போட்டு, இரண்டு முறை மிக்ஸியில் சுற்றியெடுத்து 400 மில்லி தேங்காய்ப் பால் எடுத்துக்கொள்ளவும்.

# பச்சரிசி 200 கிராம் எடுத்து ஒருமுறை மட்டும் அலசி நீரை வடிக்கவும்.

# பச்சைப் பட்டாணி அல்லது முளை கட்டிய பச்சைப் பயறு ஒரு கோப்பை அளவு எடுத்துக்கொள்ளவும்.

# சிறிய கேரட்டைப் பொடிப் பொடி சதுரங்களாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.

குக்கரில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, ஒரு பெரிய வெங்காயத்தைப் பொடியாக அரிந்துபோட்டு இளஞ்சூட்டில் பொரிக்கவும். ஒரு அங்குல நீளப் பட்டை, நான்கு கிராம்பு, ஒரு அன்னாசி பூ ஆகியவற்றை உடன் சேர்த்து மூன்று நிமிடங்கள் புரட்டிய பின்னர், அரை அங்குல இஞ்சியைத் தட்டிப் போட்டு அது வதங்கும் முன்னரே பயறு, கேரட்டை தாளிப்புடன் சேர்த்துக் கிளறவும். பச்சை வாசம் போகும்வரை கிளறிவிட்டு, தேங்காய்ப் பாலை அதில் ஊற்றவும். இப்போது அரிசி, தேவையான அளவு உப்பு போட்டுக் குக்கரை மூடிவிடவும். இரண்டு விசில் வந்த பின்னர் இறக்கி, ஆவி அடங்கிய பின்னர் எடுத்துக் கிளறி ஆற விட்டு, புதினா சட்னி தொட்டுச் சாப்பிடலாம். இது எளிமையான சத்தும் சுவையும் நிறைந்த உணவு. சத்து நிறைந்தது என்பதால் குறைவாகச் சாப்பிட்டாலே போதும்.

இது வண்ணமயமாகத் தோற்ற மளிக்கும் என்பதால் பள்ளிப் பிள்ளைகளின் லஞ்ச் பாக்ஸுக்கு மிகவும் ஏற்றது. சுவையாகவும் இருக்கும் என்பதால் டப்பா காலியாக வீடு திரும்பும்.

(அடுத்த வாரம்: தாய்ப்பாலுக்கு நிகரானது)

http://tamil.thehindu.com/general/health/உயிர்-வளர்த்தேனே-04-வீட்டிலேயே-ஒரு-புத்துணர்ச்சி-முகாம்/article9201604.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்த்தேனே 05: தாய்ப்பால் சுரக்காவிட்டால்...

 

 
 
milk_3045701f.jpg
 
 
 

தேங்காய்ப்பால் தாய்ப்பாலுக்கு நிகரானது. தாய்ப்பாலைப் போலவே இதில் நுண் சத்துகள், தாதுச்சத்துகள், உயிர்ச்சத்துகள், புரதச்சத்து ஆகியவை மிகுந்துள்ளன.

பத்து-இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இளம் தாய்மார்கள் தங்களது மார்புத் திண்மை குறைந்துவிடும் என்று தவறாகக் கற்பிதம் செய்துகொண்டு குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவதில் தயக்கம் காட்டிவந்தனர். இன்று அந்தத் தவறான நம்பிக்கை களையப்பட்டு விட்டது.

பெரும்பான்மை அன்னையர்கள் தாய்ப்பால் புகட்டவே விரும்புகின்றனர். ஆனால், ஓரிரு மாதங்களுக்கு மேல் அவர்களுக்குப் பால் சுரப்பதில்லை. அப்படியே சுரந்தாலும் பச்சிளங்குழந்தை தாயின் பாலை சப்பத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிறுத்திவிட்டுச் சப்பிய பாலையும் உமிழ்ந்து விடுவதும் நடக்கிறது. இளம் தாய்மார்களுக்கு மன வேதனை தரும் இந்நிகழ்வு பரவலாகிவருகிறது.

என்ன காரணம்?

தத்துவார்த்தமாகப் பார்த்தால் சிறிது காலத்துக்கு முன்பு அன்னையர்கள் குழந்தைகளுக்குத் தங்களது பாலைப் புகட்ட மறுத்தனர். அதன் எதிர்வினையாக இன்று குழந்தைகள் ஏற்க மறுக்கின்றனர் என்றும்கூடச் சொல்லலாம்.

ஆனாலும், நேரடியான உடலியல் காரணங்கள் எத்தனையோ உள்ளன. அன்னையின் உடலில் ஏதேனும் ஒரு சுவை இயல்புக்கு மாறாக மிகுந்திருப்பது, மன அழுத்தம், மட்டுப்பட்ட தாய்மை உணர்வு, தாய்மைப் பேற்றுக்கு முன்னர் மாதாந்திர உதிரப் போக்கில் ஏற்பட்ட இடர்ப்பாடு எனப் பல அம்சங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆய்வுகள் ஒருபுறம் இருக்கட்டும். இப்போது நம் உடனடித் தேவை, குழந்தை பால் அருந்தியாக வேண்டும்.

அரிசிப் பால்

பிறந்து ஒரு வாரத்திலேயே ஒரு குழந்தை “தாய்ப்பால், பவுடர் பால், பசும் பால் போன்ற பால் வடிவிலான அனைத்தையுமே நிராகரிக்கிறது, என்ன செய்யலாம்?’’ என்று என்னிடம் கேட்கப்பட்டது.

“எனக்கு அப்போதைக்குத் தோன்றியது, புழுங்கல் அரிசியைக் குழைய வேகவிட்டு பாலின் அடர்த்தியில் கஞ்சி நீர் வடித்துச் சிட்டிகை உப்பு போட்டுப் புட்டியில் ஊற்றிப் புகட்டுங்கள்” என்றேன். செய்தார்கள், வெகு ஆவலுடன் பருகத் தொடங்கியது குழந்தை.

“தாயும் தொடர்ந்து இதேபோன்று கஞ்சியை முழு ஆகாரமாக உண்டுவந்து, ஒரு வாரம் கழித்துப் பால் கொடுத்தால், ஒருவேளை குழந்தை தாய்ப்பாலை ஏற்கலாம்” என்று கூறினேன். அது நடந்ததா, இல்லையா என்று அறிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

தாய்மார்களுக்குத் தேங்காய்ப்பால்

இப்போது தாய்ப்பாலை உமிழும் குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கக்கூடியது நாட்டு மாடு பசும்பால். அது கிடைக்காத பட்சத்தில் தேங்காய்ப்பாலே மிகவும் உகந்தது.

தாயும் தொடர்ந்து தேங்காய்ப்பால் பருகி வந்தார் எனில் அவருடைய உடல்நலம் மேம்பட்டு, சுரக்கும் பாலின் தரமும் உயரும். குழந்தை தாய்ப்பாலை மறுக்கிறது என்பதற்காக வருந்தி அழுவதில் பயன் இல்லை. பால் சுரப்பை மேம்படுத்துவதில் அக்கறை காட்டுவதுடன், ஒரு நாளைக்கு ஓரிரு முறையேனும் பால் புகட்ட முயற்சிக்கும் பழக்கத்தைக் கைவிட்டுவிடக் கூடாது.

தாய்ப்பால் நன்றாகச் சுரக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான உணவுமுறைகளைக் கடைப்பிடிப்பது நமது பாரம்பரிய வழக்கம். குழந்தை தாயிடம் பால் நன்கு அருந்தினால், அத்தகைய உணவு முறைகளைப் பின்பற்றுவதில் பாதகம் இல்லை.

மிகை உணவு நஞ்சு

அன்னையர்கள் பால் சுரப்புக்காக மிகையாக உண்பது, பசிக்கும் முன்னரே உண்பது ஆகியவை கண்டிப்பாகக் கூடாது. மிகை உணவே உடலுக்கு நஞ்சாகி விடும். இந்த எளிய உண்மையை நாம் முழுமையாக உணர்வதில்லை.

பசித்த பின்னர் உண்கிற எந்தத் தரமான உணவும் முழுமையாகச் செரிக்கப்படும். முழுமையாகச் செரிக்கப்படும் எந்த உணவும் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை.

எனவே, மரக்கறி அல்லது ஊன்கறி எதுவானாலும் அவ்வப்போது மிதமான சுவை கூட்டிச் சமைத்து உண்டாலே போதும், பால் சுரப்பு தரமானதாக மாறும்.

குறிப்பாக, மாவுப்பண்டங்களைத் தவிர்த்தும் முழு தானியங்கள், முழு பயறு வகைகள் போன்றவற்றை உணவில் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ளலாம்.

பதப்படுத்திய (Preserved foods) உணவைப் போன்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட உணவு போன்ற பொருட்களை முற்றாகத் தவிர்க்க வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால், தேங்காய்ப்பால் மிகச் சிறந்த உணவு என்பதில் சந்தேகமில்லை.

 

(அடுத்த வாரம்: ததும்பும் உயிர்ச்சத்தும் தாதுச்சத்தும்)

http://tamil.thehindu.com/general/health/உயிர்-வளர்த்தேனே-05-தாய்ப்பால்-சுரக்காவிட்டால்/article9220973.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உயிர் வளர்த்தேனே 06: ததும்பும் உயிர்ச்சத்தும் தாதுச்சத்தும்

uyir

அரிசிக் கஞ்சியை அனைத்து வயதினரின் உடலும் எளிதில் ஏற்றுக்கொள்ளும். ஏனென்றால் தென்னிந்திய மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அரிசிப் பயன்பாட்டாளர்களே. நம்முடைய மரபணுவில் அரிசி ஏற்புத் திறன் பொதிந்திருக்கிறது.

ஆனால் ‘இன்றைய அரிசி’போதிய சத்துகளை நம் உடலுக்கு அளிப்பதாக இல்லை. ‘இன்றைய’ என்பதை அழுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. காரணம் எடைக்கு எடை அதில் உறைந்துள்ள வேதிக் கூறு. அத்துடன் அரிசியின் மிகைப் பயன்பாடு உடலுக்குத் தொல்லை தருவதாகவும் இப்போது மாறிவிட்டது. இது பற்றிப் பின்னர் பார்ப்போம்.

கோலோச்சும் கேழ்வரகு

அரிசிக்கு அடுத்தபடியாகத் தென்னிந்தியர்களின் உடல் அதிகமாக ஏற்றுக்கொள்வது சிறுதானியங்கள். அதிலும் தலைமைப் பீடத்தைப் பிடித்துக் கோலோச்சுவது தென்னகமெங்கும் ராகி என்ற பொதுப் பெயரில் அழைக்கப்படும் கேழ்வரகு. தென் தமிழகத்தில் கேப்பை என்றும், வட மாவட்டங்களில் கேவுர் என்றும் இதைக் கூறுவார்கள்.

‘கேப்பவன் கேனையனா இருந்தால் கேப்பையில நெய் வடியுமாம்’ என்றொரு கிராமப் பழமொழி உண்டு. இது வெறும் கே கே ரைமிங்குக்காக மட்டும் சொல்லப்படுவதல்ல. அர்த்தம் பொதிந்ததும்கூட.

மற்ற சிறுதானியங்களை இடித்துக் கூழாக்கினால் மேலே நெய் ஊற்றியது போல மினுமினுப்பு தென்படும். எடுத்து வாயில் போட்டால் நொழுநொழுவென்று வழுக்கிக் கொண்டு இரைப்பையைச் சென்றடையும்.

ராகியில் அந்தத் தன்மை கிடையாது. கொஞ்சம் வறண்ட தன்மை உடையது; மிகவும் கெட்டியானது. ராகியைத் திருகையில் இட்டு மாவாகத் திரிக்கும் வேலை என்றால் கடும் உழைப்பாளியின் தோள்பட்டையும் கன்றிப் போகும். அத்தனை வலுமிக்க தானியம் ராகி.

களியாக உண்டால் உடலின் நீரை ஈர்த்துக்கொள்ளக் கூடியது. புதிதாக உண்ணும் சிலருக்கு மலம் கட்டும். அதே ராகியைக் கூழாக்கி உண்டால் மலத்தை இளக்கும். எந்த வடிவத்தில் உண்டாலும் ‘இன்ஸ்டண்ட் எனர்ஜி’ தரக்கூடியது ராகி.

தானியங்களின் வாசம்

மற்ற சிறுதானியங்களை எவ்வளவுதான் பதப்படுத்திவைத்தாலும் ஓரிரு வருடங்களுக்கு மேல் தாக்குப் பிடிப்பதில்லை. வேளாண்குடி மக்கள் தங்களுடைய தானியங்களில் சோளம், கம்பு, வரகு, குதிரைவாலி என்ற வரிசையில் ஒவ்வொன்றாகக் காலி செய்துகொண்டே வந்து, கடைசியாகத்தான் கேழ்வரகுக் குதிரின் கொண்டியை விலக்குவார்கள்.

விவசாயிகள் வீட்டில் மரப்பலகையால் செய்த ஆறடி அல்லது எட்டடி உயரம், ஆறடி நீள - அகலம் உடைய குதிர் இருக்கும். அதன் அடிப்பகுதியில் அரையடி சதுரத்துக்குச் சின்னக் கதவைப் பொருத்தி, அதில் தாழ்ப்பாளும் பூட்டும் போட்டு வைத்திருப்பார்கள். முதுகிழவியின் சுருக்குப் பையில் பச்சைக் களிம்பேறி சாவி மாதக்கணக்காக உறங்கிக் கிடக்கும். தாங்கு தாங்கென்று நிலம் அதிர நடக்கும் முதுகிழவி பக்கத்தில் வந்தாலே தானியங்களின் கலவை வாசம் அடிக்கும்.

வியப்பூட்டும் நுட்பம்

தானியங்களைப் புழு பூச்சி பிடிக்காமல் இயற்கை வழியில் பாதுகாக்கும் முறையைத் தமிழர்கள் கற்று வைத்திருந்தார்கள். அந்த முறை எந்தத் தொழில்நுட்பவியலாளருக்கும் வியப்பூட்டுவது. உழைப்பைத் தவிர பைசா செலவு வைக்காதது, அந்தப் பாதுகாப்பு முறை.

பெரும் பெரும் தாழியிலோ அல்லது குதிரிலோ (தானியச் சேமிப்புக் குதிர் இன்று சுத்தமாக வழக்கொழிந்து விட்டது) சுக்காகக் காய வைத்த தானியத்தை நிரப்பி கொள்கலனைச் சுற்றிலும் வைக்கோலைத் தூவி, மெலிதாக அனல் ஏற்றுவார்கள். உள்ளிருக்கும் காற்று வெப்பத்தில் வெளியேறியதும் நிழலில் காய வைத்த நொச்சியிலை, வேப்பந்தழை ஆகிய பூச்சிக் காப்பு இலை தழைகளை அரையடி உயரத்துக்குப் போட்டு, அதன் மீது ஒரு அடுக்கு வரகுத் தாளைப் போடுவார்கள். வரகுத் தாள் நீரைக் கடத்தாது, இற்றுப் போகாது என்பதுதான் காரணம். அதன் மீது கால் அடி உயரத்துக்குக் குழைத்த சேற்றை இறுகப் பூசிவிடுவார்கள்.

இப்படி தானியத்தைச் சேமித்த விவசாயி, வங்கி இருப்பை எட்டு இலக்கத்துக்கு உயர்த்திக்கொண்டவர் போல இறுமாப்புடன் இருப்பார்.

ரகசியச் சேமிப்புக் கிடங்கு

பழைய கோவை, சேலம் மாவட்டங்களில் ராகியை நிலத்திலேயே அடித்துத் தூற்றி மணியாக்குவார்கள். நிலத்தின் ஒரு மூலையிலேயே பத்தடி ஆழத்தில் சுற்றிலும் பலகைக் கல் பதித்து உள்ளே ராகியைக் கொட்டி மேற்சொன்ன விதத்தில் சேறு பூசி, நீர் கசியாத வண்ணம் அதன் மீது கல் பலகையை ஒரு அடுக்கு வைத்துக் காட்டுச் செடிகளை வளர்த்துவிடுவார்கள். அதற்குக் கீழே ஒரு தானியக் கிடங்கு இருப்பதற்கான எந்தத் தடயமும் தெரியாது.

குறுநில மன்னர்களுக்கிடையே போர் ஏற்பட்டால் படைச் சிப்பாய்கள் முதலில் ஆடுமாடுகளை இழுத்துச் செல்வதும், தானியங்களைக் கொள்ளையடிப்பதும் வழக்கமாக இருந்தது. அல்லது வீட்டுடன் சேர்த்துத் தானியக் குதிருக்கும் தீ வைத்து விடுவார்கள். அதனால் கொள்ளையில் இருந்தும் தீவைப்பில் இருந்தும் தானியங்களைப் பாதுகாக்க நிலத்தடியில் சேமித்து வைத்து, போர் அடங்கிய காலத்தில் எடுத்துப் பயன்படுத்துவது அந்நாளில் பழக்கமாக இருந்தது.

மிகு விளைச்சல் காலத்தில் ஊர்ச்சமூகம் இவ்வாறு தானியத்தைச் சேமித்து வைத்துப் பஞ்ச காலங்களில் பயன்படுத்துவதும் உண்டு.

ததும்பும் உயிர் ஆற்றல்

ஐந்தாண்டுகளுக்கு முன்னர் சத்தீஸ்கர் அகழாய்வில் மண் குடுவையில் சேமிக்கப்பட்ட ராகி கண்டெடுக்கப்பட்டது. அதன் வயது கொஞ்சமில்லை நண்பர்களே… 1200 ஆண்டுகள்!

அந்த ராகி உளுத்துப் புழுபூச்சி பிடிக்காமல் இருந்தது என்பதுகூட வியப்பில்லை; முளைக்கும் திறனோடு இருக்கிறதா என்பதை அறிய மண்ணில் தூவிப் பார்த்தார்கள். மண்ணை முட்டி பிளந்து, வெளிர் பச்சைத் தளிர் விட்டு, ஆய்வாளர்களைக் கண்டு சிரித்தது அந்த ராகிப் பயிர்.

இப்படிப்பட்ட ராகியின் உயிர் ஆற்றலை, புதிதாக நானும் எதற்கு விளக்கிச் சொல்ல வேண்டும்?

(அடுத்த வாரம்: கன்றுக்குட்டியும் குடிக்கும் தானியப்பால்)
கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உயிர் வளர்த்தேனே 7: கன்றுக்குட்டியும் குடிக்கும் தானியப் பால்

nalam%20003

பச்சிளங் குழந்தைக்குத் தாய்ப்பால் பற்றாதபோது தேங்காய்ப்பால் அல்லது அரிசிக் கஞ்சி ஊட்டுவது குறித்துப் பார்த்தோம். தாய்ப்பாலுக்கு மாற்றாகவும், குழந்தையின் வளர்ச்சிக் கட்டத்தில் அரைத் திட உணவாகவும் புகட்டுவதற்கு ஏற்ற மற்றொன்றும் இருக்கிறது.

வழக்கொழிந்த அரும்பண்பு

அது எதுவெனப் பார்ப்பதற்கு முன், நமது பண்பாட்டில் வழக்கொழிந்து வருகிற நற்பண்பு ஒன்றை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவூட்டிக் கொள்வோம்.

இரண்டு தலைமுறைக்கு முன்புவரை பெரிதும் வேளாண்மை சார்ந்த நமது சமூகத்தில் எந்தக் குழந்தையாவது பாலுக்கு அழுதால் பால் சுரப்புடைய தாய் சாதி, மதம், இனம் பார்க்காமல் ஊட்டுவது வெகு இயல்பான காட்சி.

அதிலும் காட்டு வேலைகளின்போது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்களின் முலைப் பாலும் இடைச்சாதி குழந்தைக்கு ஊட்டுவதில் தடையேதும் இருந்ததில்லை. ஒரு இடைச்சாதித் தாய் தலித் குழந்தைக்கு ஊட்டினாளா என்பது எனக்குத் தெரியவில்லை.

எங்கள் வீட்டுக்கு வெளுக்கத் துணியெடுக்க வரும் ‘சின்னம்மா’ மடியில் என் தம்பிகள் பாலருந்தியதை நானே கண்ணாரக் கண்டிருக்கிறேன். அந்தச் சின்னம்மா இறக்கும்வரை அவரது வெற்றிலைச் செலவுக்கு நாங்கள் சுருட்டிய ரூபாய்த் தாளைத் திணித்தோமே தவிர, தன் மார்பால் பாலூட்டிய அவரை ஒரு நாளும் அம்மா என்றழைத்துப் பூரிக்கச் செய்ததில்லை.

இன்றோ வீட்டுக்கு வீடு வாஷிங் மெஷின் வந்த பின்னும் சாதி ஒழியவில்லை. குட்டி ஈன்று இறந்து போன நாயின் குட்டிகளுக்கு மடி கனத்த இன்னொரு நாய் பாலூட்டும் காட்சியைப் பார்த்து ஆறுதல் கொள்ள வேண்டியிருக்கிறது. பாலும் குழந்தைகளும் பொது என்று நாய்க்குத் தெரிந்த உலகியல் உண்மை, நமக்குத் தெரிவதில்லை.

சரி மாற்றுப் பாலுக்கு வருவோம்.

மாற்றுப் பாலின் ஊட்டம்

பல் முளைவிடும் ஐந்தாறு மாதக் குழந்தைக்குச் செரிவான மாற்றுப் பால் கேழ்வரகை அரைத்து வடித்துப் பெறுவதாகும். இந்தப் பாலை அருந்தத் தொடங்கி விட்டால், அதற்குப் பிறகு குழந்தைக்குத் தாய்ப்பாலே தேவையில்லை.

சுமார் நூறு கிராம் கேழ்வரகை எடுத்துப் பன்னிரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறின நீரை வடித்துவிட்டு அம்மியில் வைத்து நிதானமாக அரைத்தால், அதன் உயிர்ச்சத்து சிறிதும் சிதையாமல் கிடைக்கும்.

பல வீடுகளில் அரைப்பதற்காக அல்லாமல் அம்மியை டம்மியாகச் சாஸ்திரச் சடங்குக்காக வைத்திருக்கிறார்கள். சரி போகட்டும், அம்மி இல்லை என்பதற்காகச் சத்து மிக்க கேழ்வரகுப் பாலை விட்டுவிட வேண்டாம்.

எப்படிச் செய்வது?

ஊற வைத்த கேழ்வரகின் நீரை வடித்துவிட்டு, மிக்ஸி ஜாரில் இட்டு அரைபடுவதற்கு ஏதுவாகச் சிறிதளவு நீரை விட்டு அரைக்கவும் (நிறைய நீர் விட்டால் பூமிப்பந்தைப் போன்று உருண்ட கேழ்வரகு, பிளேடுக்குச் சிக்கி அரைபடாமல் வழுக்கிக்கொண்டு சுழன்று ஓடும்). எனவே, குறைவான நீர் விட்டு அரைத்தால்தான் பால் விடும்.

முக்கால் பாகம் அரைபட்ட அரைவையை எடுத்து ஃபில்டரில் பாலை வடிகட்டிவிட்டு, மீண்டும் நீர் ஊற்றி அரைக்க வேண்டும். இரண்டாம் முறை அரைத்ததும் கேழ்வரகு சக்கையாகிவிடும். இதையும் முந்தைய பாலுடன் சேர்த்து வடிகட்டிவிட வேண்டும்.

இப்போது இரண்டு பாலையும் எடுத்து அடுப்பைக் குறைவான தணலில் வைத்துக் கெட்டிப் பதம் ஆகும்வரை காய்ச்சி ஆறவிட்டு, உடன் பனங்கற்கண்டு (அ) சர்க்கரை கலந்து, குழந்தையின் மலப்போக்கு இறுகலாக இருந்தால் சற்றே வெண்ணெய் சேர்த்துப் புகட்டலாம்.

இந்த ராகிப் பால் ஊட்டத் தொடங்கிய இரண்டே வாரங்களில், ஆரோக்கியமான முறையில் குழந்தைக்கு எடை அதிகரிக்கத் தொடங்கும். பலருக்கும் இந்த முறையைப் பரிந்துரைத்தபோது, நல்ல பலன் கிடைத்ததாகச் சொன்னார்கள்.

அவசரம் தேவையா?

என் மகளுக்குக் குழந்தை பிறந்த நான்காம் மாதத்தில் இருந்தே கேழ்வரகுப் பால் ஊட்டத் தொடங்கினோம். வாய்க்கும் போதெல்லாம் குடுகுடுவென்று தவழ்ந்து சென்று எங்களது குடியிருப்பின் 24 மாடிப்படிகளை அடுத்தடுத்து இரண்டு முறை ஏறி வெற்றிக் களிப்பில் சிரிப்பான் பேரன்.

பத்து மாதக் குழந்தைக்குக் குளியல் டப்பில் ஒரு நாளைக்கு அரை மணி நேரமாகிலும் ஆட்டம் போட அனுமதி அளிக்க வேண்டும். குழந்தைக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சளி பிடிக்கும். காய்ச்சல் அடிக்கும். நாட்டு மருந்து உட்பட எவ்வித மருந்தும் இன்றி இரண்டு அல்லது மூன்றே நாளில் சளியும் காய்ச்சலும் போயே போய்விடும். ஆம், போயே போயிந்தி!

குழந்தைகள் எப்போதும் திருகிவிட்ட பொம்மைகள் போல் குதித்து விளையாடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்ப முடியாது. பிள்ளைகள் இயற்கைக்கு மாறாக அவசரமாக வளர்த்து, அவசரமாகப் பள்ளியில் சேர்த்து, அவசர அவசரமாகப் படித்து, அவசர அவசரமாக எல்லாவற்றையும் முடிக்க வேண்டும் என்று பெற்றோர் பலரும் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் படும் அவசரத்தைப் பார்த்தால் யூரியா போட்டும்கூடப் பிள்ளைகளை வளர்த்துவிடுவார்கள் போலிருக்கிறது.

பிள்ளைகள் நமக்குப் பிறந்தவர்கள் என்றாலும் நம் விருப்பத்துக்கு ஏற்றவாறு அவர்களால் வளர முடியாது. இயற்கையின் போக்கில்தான் வளர முடியும்.

சளி பிடித்தல் இயற்கையானது. வளர்ச்சிக் கட்டத்தில் உடலின் பழைய திசுக்களை எரிக்கும் நடவடிக்கையே காய்ச்சல். காய்ச்சலின் மூலமாகக் குழந்தைகள் நோய் எதிர்ப்புத் திறனைப் பெற்று, அடுத்த கட்டத்துக்குச் செல்கிறார்கள். இதைப் புரிந்துகொண்டால் உடனடியாக மருத்துவரிடம் தூக்கி சென்று உயிரெதிர்ப்பு (ஆன்டிபயாடிக்) ஆற்றலைச் செலுத்தி, சுயமாக ஓரிரு நாட்களில் தணிய வேண்டிய காய்ச்சலை மருந்தைக் கொடுத்து அமுக்கி வாரக் கணக்காக நீடிக்கச் செய்யும் தவற்றை இழைக்க மாட்டோம்.

சாதாரணக் காய்ச்சலை மருந்து கொடுத்து அமுக்கினால் அது காய்ச்சலைக் காட்டிலும் கடுமையான நோயாக உருவெடுத்து, குழந்தையை நிரந்தரத் தொல்லைக்கு உள்ளாக்கும்.

இது போதும்

மேலே சொன்ன கேழ்வரகுப் பாலை, சோறு வடித்த நீருடன் கலந்து இளங் கன்றுக்குட்டிக்கு பீடிங் பாட்டிலில் ஊற்றிக் கருணைமிக்க பசு நேசர்கள் புகட்டுகிறார்கள். கன்றை ஈன்ற மாடு இறந்துவிட்டாலோ அல்லது ஊர்க்காலி மாடுகளுடன் தாய்ப்பசு மேய்ச்சலுக்குச் சென்ற நேரத்தில் கன்று பாலுக்காக ம்…..ம்ம்மம்மாமா…. என்று மனதைச் சுண்டும் குரல் எழுப்பினாலோ கேழ்வரகுப் பால் ஊட்டும் பழக்கம் இன்றும் நீடிக்கவே செய்கிறது.

சில இடங்களில் மாட்டுக்கு ஸ்டீராய்டு ஊசி குத்தி, காற்று போன பலூனாக பால்காம்பு வற்றும்வரை கறந்துவிட்டு, கன்றுகளை நாய்க்குட்டி அளவுக்கு எலும்பும் தோலுமாக வற்றச் செய்கிற மனதைப் பிசையும் அவலங்களும் நம் காலத்தில் குறைவில்லை.

சரி, நம் குழந்தைக்குத் தேங்காய்ப்பால், கேழ்வரகுப் பால் மட்டுமே அனைத்துச் சத்துகளையும் அளித்துவிடுமா என்ற கேள்வி எழலாம். இந்த இரண்டை மட்டுமே அருந்தினால் போதுமானதுதான்.

இந்த மாற்றுகளுக்கும் இன்னொரு மாற்றுப் பால் உள்ளது. அதுவும் நம் கைக்கெட்டும் தொலைவிலேயே இருக்கிறது. அது என்ன என்று அடுத்த வாரம் பார்ப்போம்.

(அடுத்த வாரம்: மாட்டுக்கே கொடுக்கப்படும் மாற்றுப் பால்!)

http://tamil.thehindu.com/general/health/உயிர்-வளர்த்தேனே-7-கன்றுக்குட்டியும்-குடிக்கும்-தானியப்-பால்/article9280993.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்த்தேனே 8: மாட்டுக்கே வழங்கும் மாற்றுப் பால்

 

 
milk

பசுவின் பாலிலும், எருமைப் பாலிலும் மனித உடலின் தேவைக்கு அதிகப்படியான கொழுப்பு இருப்பதாகவும், அதனால் அதை நீக்க வேண்டுமென்று பரவலாக நம்ப வைக்கப்பட்டுள்ளது. இப்படி நீக்குவதற்காகக் கேன் கேனாக, பேரல் பேரலாக, டேங்கர் டேங்கராக ஆலைக்குக் கொண்டு செல்லப்படும் மாட்டுப் பாலில் என்னென்ன ரசாயனக் கூறுகள் கலக்கப்படுகின்றன என்பதை நாமறியோம்.

நம் தெருவிலேயே கறந்து விற்கப்பட்ட பாலில் மிஞ்சிமிஞ்சிப் போனால் படிக்கு ஆழாக்குத் தண்ணீரைக் கலக்குவார்கள். அதையும் தம் ஆள்காட்டி விரல் நுனியை ‘லெக்டோ மீட்டர்’ எனும் பால்மானியாக மாற்றி அடர்த்தியை அளந்து பார்க்கும் திறன் மிகுந்த மகானுபாவர்கள் நம்மிடம் இருந்தார்கள்.

அப்படிப்பட்ட மகானுபாவர்களை முறியடிப்பதற்காகவே மாட்டைத் தெருவில் கட்டி, பால் போணியில் சொட்டு நீர் கிடையாது என்று வெட்ட வெளிச்சமாகக் கவிழ்த்துக் காட்டி, இளம் பவளச் செங்காம்பிலிருந்து தித்திக்கும் பாலை நுரைக்க நுரைக்கக் கறந்து `சுடச் சுட’ சொம்பில் ஊற்றி, கொஞ்சம் கொசுறும் ஊற்றி, சுவரில் கோடு கிழித்துக் கணக்கு வைத்த காலம் வெகு தொலைவுக்கு அப்பால் சுவடில்லாமல் மறைந்து போய்விட்டது.

தள்ளாடும் கன்றுகள்

இன்றும் நகரத் தெருமுனையில் அங்கங்கே பால் கறக்கிறார்கள். கறப்பதற்கு முன் ‘வள்ளல் பெரும் பசு’க்களின் பிட்டத்தில் ஸ்டீராய்டு ஊசியை எந்தக் கூச்சமும், அச்சமும் இல்லாமல் ஏற்றிய பிறகு கறக்கிறார்கள். இது ஒரு `அன்- அக்கவுன்ட்டபிள்’ பசுவதை.

`ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி’ என்ற சொலவடையை உருவாக்கும் அளவுக்குச் செழிப்புக்குப் பேர்போன மாட்டுக் கன்றுக்குட்டிகள், இன்றைக்கு ஜன்னல் கம்பிகள் போல எலும்பைத் துருத்திக்கொண்டு நிற்கத் திராணியற்றுத் தள்ளாடும் காட்சியைக் காணச் சகிக்கவில்லை.

கழிவுதான் உணவு

வளரும் பிள்ளைகளின் எலும்பு உறுதிக்குக் கால்சியம் அவசியம் என்ற மாயை, நம் தலையில் ஆணியாக அறையப்பட்டுவிட்டது. தரமான பால் வழங்கிய எந்தப் பசுவும் தன் பாலில் கால்சியம் இல்லாமல் போய்விடக் கூடாதென அன்றாடம் பத்து கால்சியம் மாத்திரைகளைப் போட்டுக்கொண்டது இல்லை. அல்லது சுண்ணாம்புச் சுரங்கங்களுக்குள் சென்று சுண்ணாம்புக் கல்லை மேய்ந்து வருவதும் இல்லை.

பச்சைப் புல், எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்ட நிலக்கடலை, எள்ளுப் புண்ணாக்கு போன்றவற்றை உண்டுதான், `தொட்டு ஒரு வெள்ளைப் பொட்டு வைக்கலாம்’ என்பது போன்ற அடர்த்தியான பாலை மாடுகள் நமக்கு வழங்கிவந்தன.

 

paruthi_paal_3069980a.jpg
பருத்திப்பால்

பால் சுரப்பு அதிகரிக்க

மாடு வைத்துப் பால் கறந்து விற்று ஜீவனம் செய்தவர்கள், தங்கள் மாடு கூடுதலாகப் பால் கறக்க ஓர் உத்தியை மேற்கொண்டார்கள். அது என்ன உத்தி? நம் காலத்தைய ரசாயன மூளை கொஞ்சம் குறுக்குமறுக்காகத்தான் யோசிக்கும். மனித அறத்தை மீறி இன்னொரு கோணத்தில் சிந்திக்கத் துணியாத நம் முன்னோர், என்ன செய்தார்கள் தெரியுமா?

பால் தரும் மாட்டுக்கே பால் ஊற்றினார்கள். என்ன பால்? அதுதான் பருத்திப் பால். தம் நிலத்தில் விளைந்த பருத்தியை ஆலையில் கொடுத்து, பஞ்சைப் பிரித்து, அதைத் துணி நெய்யக் காசுக்கு விற்றுவிட்டு, மீந்த பருத்திக் கொட்டையை ஊற வைத்து, தோளும் புஜமும் புடைக்க ஆட்டிப் பாலெடுத்து மாட்டுக்கு வாஞ்சையுடன் புகட்டினார்கள்.

பருத்திக் கொட்டையை ஆட்ட ஆட்ட இளம் மஞ்சளும் பச்சையுமாய்ப் பொங்கிவரும் பருத்திப் பால். சுதையும் பாலுமாக நிறைந்து கிடக்கும் அரைவையிலிருந்து கொஞ்சம் அள்ளி மாட்டுக்கு ஊட்டி, நெஞ்சம் கனிவார்கள் மாட்டை நேசிப்பவர்கள்.

பருத்திக் கொட்டை அரைவையை உண்ட பசுக்கள் பாலை அருவியாகச் சுரந்தளிக்கும். அவற்றின் மேனியும் ஜிகுஜிகுவென ஜொலிக்கும்.

காசநோய்க்கு மருந்து

பசு மாட்டுக்கு மட்டுமல்ல, பகலெல்லாம் வெயிலில் காடுகரைகளில் வண்டியை இழுக்கும், இரண்டு முழ ஆழத்துக்கு மண்ணை ஊடறுத்து ஏர் உழுது செல்லும் காளை மாடுகளுக்கும் பருத்திப் பாலை ஊட்டுவார்கள். அத்தனை வலுவைத் தரவல்ல பருத்திப் பால், தென்னகத்தில் குழந்தைகளுக்கும் ஏற்ற பாலாக இருந்தது.

காசநோய் எனப்படும் எலும்பை உருக்கும் நோய்க்குச் சிறந்த மருந்து, பருத்திப் பால். அந்தக் காலத்தில் பஞ்சு மில்லில் வேலை செய்து எலும்பைச் சிதைக்கும் டிபி நோய்க்கு ஆளான பாட்டாளிகளுக்காகவே வணிகரீதியாகப் பருத்திப்பால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

இன்றளவும் மதுரை, காரைக்குடி, திருச்சி நகரத் தெருக்களில் குட்டியூண்டு தள்ளுவண்டியில் பருத்திப் பாலை வைத்துத் தள்ளிக்கொண்டு வந்து, பத்து ரூபாய்க்குச் சுடச்சுட விற்பவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் நம் ஆரோக்கியக் காவலர்கள் மட்டுமல்ல. கலாச்சாரக் காவலர்களும்கூட!

paruthi_3069979a.jpg
பருத்திக்கொட்டை

(அடுத்த வாரம்: இன்றைக்குத் தயாரிக்க முடியுமா?)

http://tamil.thehindu.com/general/health/உயிர்-வளர்த்தேனே-8-மாட்டுக்கே-வழங்கும்-மாற்றுப்-பால்/article9309297.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்த்தேனே 9: பருப்புப் பால் தெரியுமா?

 

 
uyir

அரை நூற்றாண்டுக்கு முன்னர்க் கிராமத்துத் தெருக்களில் பருத்திப் பால் விற்பார்கள். தமிழகத்தில் கணவரை இழந்த பெண்களுக்கு முதன்மைத் தொழில் இட்லி வியாபாரம். ஒரு ஊரில் அத்தொழிலை இரண்டு மூன்று பேர் செய்து கொண்டி ருந்தால் நான்காமவர் அவர்களுடன் போட்டிக்குப் போகாமல், கம்பு உருண்டை, பொரிமா உருண்டை, பருத்திப் பால் என்று இறங்கிவிடுவார்கள்.

ஈயம் பூசிய செப்புத் தவலையைப் புளியும் மண்ணும் போட்டு அரக்கத் தேய்த்துப் பொன் நிறத்துக்கு ஜொலிப்பேற்றி, நெற்றிக்கு அடிக்கும் நுணுக்கத்துடன் திருநீற்று பட்டை அடித்து நடுவில் குங்குமப் பொட்டு வைப்பார்கள். இருட்டில் வைத்தாலும் மெர்குரி போன்று ஒளி பொங்கும் அந்தத் தவலையில் வெல்லம், சுக்கு, ஏலக்காய் மணக்கும் பருத்திப் பாலைச் சுமந்து, தெருத் தெருவாகக் கூவி விற்பார்கள்.

எனது தந்தை வழிப் பாட்டிக்கு மூச்சிளைப்பு நோய் (ஆஸ்துமா). அன்றாடம் சத்தான ஆகாரம் வேண்டும். ஆனால், சுருக்குப் பையில் முடிந்து வைத்த காசில் அரையணாவைக் கொடுத்துத் தெருவில் விற்கும் பருத்திப் பாலை வாங்கிக் குடிக்கமாட்டார்.

எனவே, அப்பாவின் உத்தரவுப்படி வாரத்துக்கு மூன்று நாளைக்காவது எங்கள் வீட்டில் பருத்திப் பால் காய்ச்சப்படும். நெல்லுக்கு ஓடிய நீரைப் புல்லும் புசிவதுபோல, பாட்டிக்குக் காய்ச்சிய பருத்திப் பாலை நாங்களும் குடிப்போம்.

உடல் பெறும் தனி வனப்பு

பருத்திப் பால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் சுவைக்கத் தகுந்தது. அரை கெட்டி உணவு உண்ணத் தொடங்கும் ஆறு மாதக் குழந்தைக்கும் ஏற்றது. காய்ச்சலில் இருந்து மீண்டவர்களின் உடல் உடனடியாக வலுப்பெறுவதற்கும் இந்தப் பாலைக் கொடுக்கலாம்.

வயிற்றைத் தூய்மைப்படுத்த விரதம் இருந்து முடித்த பின்பும் இந்தப் பருத்திப் பால் பொருத்தமாக இருக்கும். பருத்திப் பாலைக் குடிக்க இளம் வயதிலேயே பழகிக்கொண்டால், மேனி நிரந்தரப் பொலிவுடன், திண்மையாக, கச்சிதமான கட்டமைப்புடன் திகழும்.

நம் காலத்தில் ஜிம்முக்குப் போய்ச் செலவிடும் நேரத்தைப் பருத்திப் பால் தயாரிக்கச் செலவிட்டால் காசு, நேரம் விரயம் இல்லாமல் `தஷ்க்கு புஷ்க்கு’ என ஒர்க் - அவுட் செய்யாமலேயே உடல் வனப்பைப் பெறலாம்.

இன்னொரு மாற்று

பருத்திப் பாலுக்கு அத்தியாவசியமான பருத்திக் கொட்டை நம் காலத்தில் எளிதில் கிடைக்குமா என்பது சந்தேகமே. பருத்திப் பாலுக்கு நிகரான இன்னொரு மாற்றுப் பாலும் உண்டு. அதற்குரிய மூலப் பொருட்கள் நம் கைக்கெட்டும் தொலைவிலேயே கிடைத்துவிடும். செய்முறையும் மகா எளிமை. இந்தப் பாலும் அனைத்து விதமான சத்துகளை உள்ளடக்கிய இயற்கைப் பால்.

இந்தப் பால், குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாயாருக்கும் ஏற்றது. தாயிடம் பால் பற்றாத குழந்தைக்கும் ஏற்றது. தாய்ப்பால், பசும்பால் போன்ற கறந்த பால் வகைகள் ஒவ்வாத குழந்தைகளும் குடிப்பதற்கு ஏற்றது.

பருப்புப் பால்

இந்தப் பாலைத் தயாரிப்பதற்கு நமக்கு வேண்டியதெல்லாம் நன்கு விளைந்த - காய்ந்த வேர்க்கடலைப் பருப்பு ஏழெட்டு, பாதாம் பருப்பு நான்கு, முந்திரிப் பருப்பு நான்கு, மக்காச் சோளம் சுமார் 20 கிராம். இவற்றை இரவில் ஊற வைத்துவிட வேண்டும்.

இவை காலையில் நன்றாக ஊறி இருக்கும். பருப்புக் கொட்டைகளின் எண்ணெய் கைப்புத் தன்மை நீங்கி முளைவிடும் பக்குவத்துக்கு வந்து முழு ஆற்றலைப் பெற்றிருக்கும். ஊறின நீரை வடித்துவிட்டு, புதிய நீர் சேர்த்து மேற்படி கொட்டைகளுடன் கால் மூடித் தேங்காயையும் உடன் சேர்த்து மைய அரைத்து வடித்தால், ஆரோக்கியமான இயற்கைப் பால் நுரைக்கப் நுரைக்க பளீரென்று கிடைக்கும்.

இந்தப் பாலை நேரடியாகவும், அடுப்பில் வைத்து ஒரு கொதிக்குச் சூடேற்றிப் பனங்கற்கண்டு அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்தும் குடிக்கலாம். குழந்தைகளுக்கு முதலில் சிறிதளவு கொடுத்து உடலைப் பழக்கிய பின்பு வேண்டிய அளவுக்குக் கொடுக்கலாம்.

ஆரோக்கியமான உணவு என்றாலே அது சுவையற்றதாக மருந்து போல இருக்கும் என்ற மனப் படிமம் நமக்கு ஏற்பட்டுள்ளது. உணவுக்கு அடிப்படையாக உள்ள மூலப் பொருளின் சுவை சிதையாமல் சமைத்து, அச்சுவை குன்றும் முன் உண்பதே உடலுக்கு நன்மை பயக்கும்.

paal_3078232a.jpg

பருத்திப் பால் செய்முறை

அந்தக் காலத்தில் எங்கள் வீட்டில் காய்ச்சிய முறையில் இருந்து சற்றே மாறுபட்டுத் தற்காலத்துக்கு ஏற்ற செய்முறை பருத்திப் பால் செய்முறை:

தேவையான பொருட்கள் பருத்திக் கொட்டை கால் கிலோ, வெல்லம் 150 கிராம், தேங்காய் ஒரு மூடி, அரிசி மாவு இரண்டு தேக்கரண்டி, சுக்கு பொடி ஐந்து கிராம், ஏலக்காய் ஐந்து.

செய்முறை பருத்திக் கொட்டையை லேசாக நீர் தெளித்துப் பத்து நிமிடம் ஊறவிட வேண்டும். பின்னர்க் கொட்டையைக் கல்லால் தட்டி உடைத்துப் போட்டு நீரில் மூழ்கும்படி எட்டு மணி நேரம் ஊறவிட வேண்டும். ஊறிய கொட்டையை நீரை வடித்து, உடன் தேங்காயைத் துருவி போட்டு ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் பெரிய ஜாரில் இட்டு அரைத்து, மூன்று முறை பால் எடுக்க வேண்டும்.

வெல்லத்தைத் தனியாகத் தூள் செய்து சுமார் 200 மில்லி நீர் சேர்த்துப் பாகு காய்ச்சித் தூசு, மண் போன்ற கசடுகளை நீக்கிக்கொள்ள வேண்டும. கசடு நீக்கிய பாகுடன் அரைத்து வடிகட்டிய பாலை ஊற்றிக் கொதிக்கவிட வேண்டும். கொதி வந்ததும் ஐந்து நிமிடம் அடுப்பை `சிம்’மில் வைத்துவிட்டுப் பாலைக் கரண்டியால் எடுத்து ஊற்றிப் பார்க்க வேண்டும். மிகவும் நீர் பதத்தில் இருந்தால் கெட்டித் தன்மைக்காகச் சிறிதளவு அரிசி மாவை நீரில் கரைத்துக் கொதியில் ஊற்றிக் கொதி `டுபுக்… டுபுக்’ என வந்து உடைகிற தருணத்தில் சுக்குப் பொடியையும் ஏலக்காய் பொடியையும் போட்டு இறக்கிவிட வேண்டும்.

கமகமக்கும் வாசனையுடன் சுவையான, ஆரோக்கியமான பருத்திப் பால் தயார். ஒரு லிட்டர் அளவில் இருக்கும் இந்தப் பால், ஐந்து பேர் குடிக்கப் போதுமானது.

முதலில் தாய்ப்பால், அப்புறம் தாவரப் பால்

இயற்கையான பால் தயாரிப்பு முறைகள், அவற்றின் ஊட்டச்சத்து பற்றி கடந்த சில வாரங்களாகப் பார்த்தோம். மேற்கண்ட பால் அனைத்தும் தாய்ப்பாலைவிட மேம்பட்டதோ என்ற எண்ணம் குழந்தையை வளர்ப்போர் மனதில் எட்டி பார்க்க வாய்ப்பிருக்கிறது. குழந்தையைப் பொறுத்தவரை தாய்ப்பால்தான் சிறந்த உணவு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

குழந்தையின் அத்தியாவசிய வளர்ச்சிக் கட்டத்தில் ஒரு தாய் தாய்ப்பாலையே முடிந்தவரை தர முயற்சிக்க வேண்டும். அதற்குப் பிறகே மேற்கண்ட இயற்கைப் பால்களைத் தர முயற்சிக்கலாம். அதேநேரம் செயற்கையான பால்மாவுகளிடம் அடிமைப்பட்டுக் கிடப்பதற்குப் பதிலாக, செலவு குறைந்த, ஊட்டச் சத்து மிகுந்த இயற்கை பாலை அணுகுவதே சாலச் சிறந்தது.

(அடுத்த வாரம்: ஒவ்வொரு செல்லிலும் தானியங்களின் பெயர் எழுதியுள்ளது)

http://tamil.thehindu.com/general/health/உயிர்-வளர்த்தேனே-9-பருப்புப்-பால்-தெரியுமா/article9338091.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்த்தேனே 10: ஒவ்வொரு செல்லிலும் தானியங்களின் பெயர் எழுதியுள்ளது

 

 
dhaniyam

ஒவ்வொரு அரிசியிலும் யார் பெயர் எழுதப்பட்டிருக்கிறதோ இல்லையோ; நமது உடல் திசுக்கள் ஒவ்வொன்றிலும் நாம் பாரம்பரியமாக உண்டுவந்த தானியங்களின் மூலக்கூறுகள் பதியப்பட்டிருக்கும்.

நமது நிலத்தில் விளையும் கிழங்கு, காய், கனி, தானியங்கள், இதில் உலவும் விலங்குகளின் பால், ஊண் ஆகியவற்றை ஏற்கும் விதத்திலேயே நமது செல்கள் வடிவமைந்திருக்கும்.

சந்தைத் தாராளமயமாதலுக்கு முன்னர்வரை நாம் உண்டுவந்த உணவுப் பொருட்கள் நமது சுற்றுவட்டாரத்தில் மட்டுமே விளைந்தவை. பொருள் போக்குவரத்து மலிந்துவிட்ட இன்றைக்கு, நம் கண்ணெதிரில் விளை யாத கோதுமை, ஓட்ஸ், சோயா போன்ற பலவும் நம் உணவுப் பட்டியலில் நுழைத்து இடத்தைப் பிடித்துக்கொண்டுவிட்டன.

இவற்றை உண்பதா, வேண்டாமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். காலங்காலமாக உண்டுவந்த தானிய வகைகளை ஏன் திடுமென நாம் கைவிட் டோம்? அது சரியா? நமது தானியங்களின் முக்கியத்துவம் என்ன என்கிற கேள்விகளுக்கு மட்டும் விடை தேடுவோம்.

ஊக்கச் சக்தி

ஆற்றுப் பாசனம் அல்லாத மானாவாரிப் பயிர்கள் விளையும் தமிழக நிலப்பகுதிகளில் விவசாயிகள் சிறிதளவே நெல்லை விளைவித்தார்கள். பெரும்பாலான நிலப்பகுதிகளில் கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, வரகு, குதிரைவாலி, சோளம் போன்ற தானியங்களையே விளைவித்துவந்தார்கள். இந்தத் தானியங்களைக் களத்தில் அடித்துத் தூற்றி மணியாக்கி மூட்டை கட்டியதும், அவை நேராகச் சந்தைக்குப் போனதில்லை.

பெரும் உடலுழைப்பைக் கோரும் வேளாண் கலாசாரத்தில் ஊக்கச் சக்தியாக இருந்தவை மேற்படி தானியங்களே. நமது சிறுதானியங்கள் நீரின்றி விளைபவை. ஆண்டுக்கு ஒன்பது மாதம் மண்டையைப் பிளக்கும் வெயிலைக் குடித்து விளைபவை.

வெயிலை வழங்கும் சூரியனின் ஆற்றல், நீரின் ஆற்றலைக் காட்டிலும் பன்மடங்கு வலுவானது. நமது தானியங்களைக் கதிரிலிருந்து பிரித்ததும் அவை ஒவ்வொன்றும் சூரியக் குஞ்சுகளாக மின்னுவதைப் பார்க்கலாம்.

ஏகபோக அரிசி

‘பசுமைப் புரட்சி’ என்ற பெயரில் அன்றாடப் பயன்பாட்டு விளைபொருளுக்கு மாறாகப் பணப் பயிர் விளைச்சலுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கம் அளித்தன. பணப்பயிர் உற்பத்தி தொடங்கியதும் மக்களுக்கும் மண்ணுக்கும் இடையில் இருந்த உயிர்ப்பு மிக்க பிணைப்பு அறுபட்டு விட்டது.

அதிக நீர் குடிக்கும், அதிகப் பூச்சி மருந்தைக் கோரும் குறுகிய காலப் பயிர் வகைகளை விவசாயிகள் விளைவிக்கத் தொடங்கினார்கள். இதன் விளைவாக இந்த மண்ணில் நெல் ஏகபோகமானது போலவே, நமது உணவிலும் அரிசி ஏகபோகமானது. பல தானிய, பலவகை உணவு என்றிருந்த நமது உணவுக் கலாசாரம் சிதைந்து, கலவையான உணவு அகற்றப்பட்டு நோய்கள் மலியத் தொடங்கின. இதற்குப் பின்னுள்ள அரசியலைப் பேசுவதானால், நாம் தடம் மாற வேண்டியிருக்கும். எனவே, சிறுதானிய உணவு குறித்து மட்டும் பேசுவோம்.

சட்டென்று முடியும்

சிறுதானிய உற்பத்தி குறைந்து வழக்கொழிந்துவிட்டாலும், இன்றைய அவசர வாழ்க்கை முறைக்குச் சிறுதானிய உணவு மிகவும் ஏற்றது. இன்றைய வேலை முறையில் உடலுழைப்பு குறைந்துவிட்டது என்றாலும், பல்திறன் தேவைப்படும் காலம் இது.

பல்திறனை ஈடுசெய்யும் வகையில் குறைந்த அளவில் அதிக ஆற்றலை வழங்கும் உணவே நம்முடைய தேவை. அதற்குப் பொருத்தமானவை சிறுதானியங்களே. அதேபோல் சிறுதானியச் சமையலும் சட்டென்று முடிந்துவிடக்கூடியது.

உயிரற்ற மாவு

அரிசியும், உளுந்தும் போட்டு ஆறு மணி நேரம் ஊறவைத்து, அரை மணி நேரம் ஆட்டி, எட்டு மணி நேரம் புளிக்க வைத்து இட்டிலித் தட்டிலோ, தோசைக் கல்லிலோ வார்த்து, துணையாகச் சட்னியோ சாம்பாரோ செய்ய ஏக தடபுடல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

அரிசி, உளுந்து போட்டு மாவாட்டி ஒரு வாரத்துக்குக் குளிர்ப் பெட்டியில் பதனப்படுத்தி வைக்கிறார்கள். ஆனால் இந்த மாவு, அரைத்த மறுநாளே தன் உயிராற்றலை இழந்துவிடுகிறது. இந்த உண்மையை நம்மில் பலர் உணர்வதில்லை.

உயிராற்றலை இழந்த மாவில் சமைக்கப்படும் பண்டங்கள் உடலுக்கு எந்த விதமான சக்தியும் வழங்குவதில்லை. அது மட்டுமல்ல அது உடலுக்குப் பெருஞ்சுமையாகி நோய்களின் ஊற்றுக்கண்ணாகவும் இருக்கிறது. குளிர்பதனப் பெட்டியில் வைத்த மாவைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கிற மறு வாரமே, தைராய்டு பிரச்சினையில் இருந்து பலர் விடுபடுவதைக் கண்கூடாகக் காண முடிகிறது.

எப்போதும் செய்யலாம்

கைவசம் எப்போதும் கேழ்வரகு உலர் மாவு இருக்குமானால், நேரத்துக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப அவ்வப்போது பத்து விதமான பண்டங்களைச் சமைத்து உண்ணலாம்.

வீட்டுத் தொட்டி முருங்கைச் செடியில் பறித்த பிடியளவு முருங்கைக் கீரை, அரை மூடி தேங்காய், இரண்டு பெரிய வெங்காயம், ஒரு காய்ந்த மிளகாய், அரை தேக்கரண்டி சீரகம், இரண்டு தேக்கரண்டி நெய், இருநூறு கிராம் கேழ்வரகு மாவு இருந்தால் போதும் சத்தும் சுவையும் நிறைந்த நான்கு ராகி ரொட்டிகளை இரண்டு பேர் தாராளமாக உண்ணலாம். தேங்காய்ப்பூ சேர்க்கப்பட்டுள்ளதால் மெல்லுவதற்கும் மெத்தென்று இருக்கும். இதற்குத் தொட்டுக்கொள்ள எதுவுமே தேவைப்படாது. இதைக் காட்டிலும் துரித உணவு வேறொன்று இருக்கிறதா என்ன?

அதே மாவில் தேங்காய்ப்பூ, ஒரு கற்பூரவல்லி வாழைப்பழம், நாட்டு வெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து, நீர் விட்டு மிக்ஸியில் அரைத்து, தோசைக்கல்லில் ஊற்றி நெய் காட்டி எடுத்தால் சிறு குழந்தைகள் விரும்பும் அதி சத்து மிகுந்த இனிப்பு `ராகி அப்பம்’ தயார்.

ஆக, மாற்றமில்லாத நம்முடைய உணவுச் சிந்தனையில் இருந்து சற்றே விலகிச் சிறுதானியங்களைப் பயன்படுத்துவது என்ற முடிவுக்கு வந்துவிட்டாலே போதும். படைப்புத் திறனுடன் புதிய புதிய சத்தான பண்டங்களை மிகக் குறைவான நேரத்தில் சமைத்துவிட முடியும். சிறுதானியங்கள் நெருப்புச் சத்து கொண்டவை என்பதால், உடல் பெருக்கத் தொல்லையில் இருந்து விடுபட்டு `சிக்’கென்ற உடலமைப்பை வெகு விரைவில் அடைய முடியும்.

(அடுத்த வாரம்: ராகி எனும் அவசர நண்பன்)

http://tamil.thehindu.com/general/health/உயிர்-வளர்த்தேனே-10-ஒவ்வொரு-செல்லிலும்-தானியங்களின்-பெயர்-எழுதியுள்ளது/article9365000.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்த்தேனே 11: ராகி எனும் அவசர நண்பன்

 

 
kanji

முன்னரே பார்த்தபடி கேழ்வரகில் உயிராற்றலும் (வைட்டமின்) தாதுச்சத்தும் (மினரல்ஸ்) நிரம்பி இருப்பதால் துணை உணவான காய்கறியையும், புரதத்தைத் தரும் பருப்பையும் ஒவ்வொரு பொழுதிலும் அத்துடன் சேர்த்தாக வேண்டிய கட்டாயம் இல்லை.

கேழ்வரகில் நெருப்பாற்றல் கூடுதலாக இருப்பதால், அதை உணவாக எடுக்கும்போது உடலில் வறட்சி உண்டாகும். எனவே, கிராமப்புறங்களில் அதைப் பெரும்பகுதி கூழாகவோ அல்லது களியாகவோதான் சமைப்பார்கள். இவை இரண்டும் நகர்ப்புறப் பயன்பாட்டுக்கும் இன்றைய உணவுக் கலாச்சாரத்துக்கும் சற்றே அந்நியமாகத் தோன்றலாம்.

கர்நாடகம் கொண்டாடுகிறது

நவீன மென்பொருள் தொழிலுக்குப் பெயர்போன பெங்களூரு உணவகங்களில் பத்தில் ஒன்றிலாவது ராகிக் களியும், ராகி தோசையும் முப்பொழுதும் கிடைக்கின்றன. ராகிக் களியுடன் கோழிக் குழம்பு அல்லது மரக்கறி விரும்பிகளுக்குப் பருப்புடன் கடைந்த கீரைச் சாறு முப்பதே ரூபாய்க்குக் கிடைக்கும். முப்பது ரூபாய்க்குக் கிடைக்கிற ‘சங்கட்டி மொத்தே’ எனப்படும் ராகிக் களி, முன்னூறு ரூபாய் பெறுமானமுள்ள உடல் நலக்கூறுகளைத் தன்னில் பொதிந்துவைத்திருக்கிறது.

ஒரு நேரமாவது கேழ்வரகுக் களி உண்ணாமல் கன்னடர்கள் பலருக்குப் பொழுது நிறைவுறாது. என்னதான் காவிரியை மறித்து அணைக்கு மேல் அணையாகக் கட்டி நெல் விளைவித்தாலும், அவர்களுடைய உணவில் `சங்கட்டி மொத்தே’யை மறப்பது இல்லை.

தேவே கவுடா பிரதமராக இருந்தபோது சௌத் பிளாக்கில் மூன்று நேரமும் ஆவி பறக்கும் ‘சங்கட்டி மொத்தே’யை உள்ளங்கையில் சுடச்சுடப் பிடித்துக் கொண்டிருந்தார்கள், தலையில் தொப்பி போட்ட சமையல்காரர்கள். அந்த அளவுக்கு வெள்ளை வேட்டி சட்டைக்கு உடன்பிறப்பாக இருக்கிறது கேழ்வரகுக் களி.

காட்டில் கிடைத்த களி

கர்நாடக சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வீரப்பன் பிணைக்கைதியாகக் காட்டுக்குள் வைத்துக்கொண்டிருந்தபோது தமிழக, கர்நாடக ஊடகங்கள் அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்தன. ஆனால் சத்தியமங்கலம் காட்டிலோ மீசை திருகின வீரப்பனின் கை, கேழ்வரகுக் களியைக் கிண்டிக் கொண்டிருந்தது. எழுபது வயதைக் கடந்தும் யோகாசனப் பயிற்சியைக் கைவிடாத ராஜ்குமார், தனது யோகப் பயிற்சிக்கு உவப்பான கேழ்வரகு களிக்கும் தொட்டுக்கொள்ளும் இறைச்சிக் குழம்புக்கும் குறைவேதும் நேரவில்லையெனப் பேட்டி கொடுத்தார்.

துடுப்பு வலித்துக் கிண்டுபவரின் தோள் வலிமைக்குப் பரீட்சை வைக்கும் கேழ்வரகுக் களியைச் சமைப்பது எளிதில் கைகூடும் கலையல்ல. ஆனால், அதைச் சமைக்கவும் உண்ணவும் கற்றுக்கொண்டுவிட்டால் சட்டென்று மேசைக்கு வந்து நிற்பதில் களியைப் போன்ற இலகுவான, சத்து நிறைந்த உணவு வேறொன்று இல்லவே இல்லை.

எங்கள் வீட்டில் இன்றும் பெரும்பான்மை வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெறுபவர் ‘ராகிக் களியார்’தான். விடுமுறை தினச் சிறப்பாகிய மீன் குழம்பு என்றாலும் ராகிக் களிதான், பஸ் பிடிக்கும் அவசரம் என்றாலும் ராகிக் களிதான். குளித்து, ஈரத்தலை உலர்வதற்குள் ஆவி நெளிந்து நெளிந்து வரக் காத்திருப்பார் ராகிக் களியார்.

எளியவர்களின் நண்பன் கொஜ்ஜி

அதன் ‘தொட்டுக்கை’ துணை உணவு இருக்கிறதே, அது அபாரம். அரிந்த இரண்டு பெரிய வெங்காயம், ஒரு தக்காளி, பாதி காய்ந்த மிளகாய், ஒரு கொட்டைப் பாக்களவு புளி, ஒரு சிட்டிகை சீரகம், ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீ ஸ்பூன் நல்லெண்ணெய், கொத்துமல்லித் தழை அனைத்தையும் ஒன்றாகப் போட்டு நீர் விட்டு மையப் பிசைந்தால்போதும் அற்புதமான சுவையில் `கொஜ்ஜி’ தயாராகிவிடும். மிக்ஸி, அடுப்பு, பண்டப் பாத்திரம் எதையும் தேடாமல், நாடாமல் கடகட வெனத் தயாராகிவிடும்.

மேற்படி கொஜ்ஜி, களிக்கு மட்டுமல்ல சப்பாத்திக்கும்கூடத் தொட்டுக்கொள்ளப் பொருத்தமான துணையாக இருக்கும். கர்நாடக, ஆந்திர, தென் மராட்டிய எளிய பாட்டாளி மக்கள், நெடுந்தூரப் பயணம் கிளம்பினால் கோதுமை அல்லது ராகி மாவை லேசாக வறுத்து, உப்பு தூவி, நீர் விட்டுப் பிசைந்து உருண்டை பிடித்துக் காய வைத்துக்கொள்வார்கள். புளி, மிளகாயைத் துணியில் முடிந்துகொள்வார்கள். போகிற இடங்களில் வெங்காயம் வாங்கி அதைக் கட்டை விரல் நகத்தால் கீறிப் போட்டே ‘கொஜ்ஜி’ தயாரித்து, மாவு உருண்டையை உடைத்துப் போட்டுக் கொஜ்ஜியில் ஊறவைத்து உண்பார்கள்.

raghi_3092659a.jpg

கேழ்வரகு தந்த ஆசுவாசம்

தமிழகத்தின் வட மேற்கு நகரங்கள் பெரும்பாலானவற்றில் இன்று `இன்ஸ்டன்ட் எனர்ஜைசரான’ ராகிக் கூழ், ஆரவாரமான பலன்களைப் பெற்று உணவு வியாபாரத்தில் அமைதிப் போட்டி நடத்திக்கொண்டிருக்கிறது.

குறிப்பிட்ட காலத்துக்கு எனது தொழில் சென்னை சார்ந்தது என்று விதிக்கப்பட்டுப் பயணித்தபோது, பேருந்து முன்னோக்கியும் என் மனது பின்னோக்கியும் இழுத்து முரண்டு பிடித்தவாறே ஒரு வழியாகத் தாம்பரம் வந்து இறங்கினேன். சாத்தூர் சேவு தொடங்கிக் கொத்தவரை வத்தல்வரை பத்து வகையான கடிப்பான்கள் அணிவகுக்க, அவற்றின் பின்னணியில் நின்ற பளீரென்ற சில்வர் கூழ் அண்டாக்களைப் பார்த்த பிறகே மனது சமாதானம் அடைந்தது.

கடை உணவே கதியென்று இருக்கும் பேச்சிலர் மகானுபாவர்களுக்கு அவ்வப்போது ஆபத்பாந்தவனாக இருப்பது தள்ளு வண்டி ஆயா அண்டாக் கூழ்தான். கொத்தவரங்காய் வத்தலைக் கடித்துக்கொண்டு ஒரு சொம்பு கூழ் குடித்தால் போதும்; தலையுச்சி வரைக்கும் நிறைந்துவிடும். தொண்டையில் எரிச்சல், நெஞ்சிலே ஊசிக் குத்தல், வயிற்றிலே `கடமுடா’ சத்தம் என்று எந்த `இரிட்டேஷனும்’ இல்லாமல் அற்றைப் பொழுது திவ்வியமாகக் கழியும்.

பெருமளவு பாதுகாப்பான உணவான கூழ், அன்றாட விற்பனையில் கைக்கும் பாக்கெட்டுக்கும் எட்டும் தொலைவில் கிடைப்பதால் தனியாகக் கூழ் காய்ச்ச மெனக்கெட வேண்டியதில்லை. விடுமுறை நாளில் காலையில் அப்பா துணையுடன் ஸ்கேட்டிங் போகிற நகரத்துக் கான்வெண்ட் பிள்ளைகள்கூடக் கிரவுண்டில் இருந்து வீடு திரும்புகிற வழியில் மோரும், வெங்காயத் துண்டுகளும் விட்டு `ஆத்திய’ ராகிக் கூழ் குடிப்பதைக் காணும்போது, என்னைப் போன்ற உணவு அக்கறையாளர்களின் மனதுக்குக் கொஞ்சம் குளிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

நலமும் சுவையும் கூடி

கேழ்வரகுக் கூழ், கேழ்வரகுக் களி ஆகிய இரண்டின் தயாரிப்பும் இன்றைய நகர வாழ்க்கை முறையில் சற்றே கடினம் போலத் தோன்றலாம். எனவே, ராகியில் வேறுசில பதார்த்தங்களைச் சமைக்கும் முறையை அறிந்து வைத்துக்கொண்டால் அது நடைமுறைச் சாத்தியமாக இருக்கும். அதேநேரம் அதன் வறள் தன்மையை ஈடுசெய்கிற தேங்காய்ப்பூ அல்லது நல்லெண்ணெயைக் கேழ்வரகு மாவுடன் கலந்து சமைக்கிறபோது கேழ்வரகுப் பண்டங்கள் இறுகலாகவோ மலக்கட்டை உருவாக்குவதாகவோ இல்லாமல் மெத்தென்று இருக்கும்.

ஓர் உணவு என்னதான் உடலுக்கு நன்மை பயக்கக்கூடியது என்றாலும் மீண்டும் மீண்டும் உண்ண வைப்பதில், அதன் சுவைதான் முதன்மை இடத்தைப் பிடிக்கிறது. உணவில் பொதிந்திருக்கும் நலம் வெளித் தெரியாத அகக் கூறாகவும், சட்டென்று ஈர்க்கக்கூடிய சுவை பட்டவர்த்தனமான புறக் கூறாகவும் இருக்கின்றன. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானது போன்ற ஒரு கற்பிதம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டமில்லாத மெய்யான உணவில், நலமும் சுவையும் ஒன்றுக்கொன்று இயைந்த கூறுகள்தான். ஆனால், இதைச் சாதிப்பது படைப்புக் கலைக்குரிய சவால். அத்தகைய உணவுப் பண்டங்கள் குறித்து அடுத்த வாரம் பார்ப்போம்.

(அடுத்த வாரம்: படைப்புத் திறனில் மிளிரும் தானியப் பலகாரம்)

http://tamil.thehindu.com/general/health/உயிர்-வளர்த்தேனே-11-ராகி-எனும்-அவசர-நண்பன்/article9386745.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உயிர் வளர்த்தேனே 12: படைப்புத் திறனில் மிளிரும் தானியப் பலகாரம்

 

 
palakaaram

அரைத்த கேழ்வரகு மாவு மட்டும் இருந்தால் போதும், பத்து நிமிடங்களுக்குள் விதவிதமான பலகாரங்களைச் செய்து அசத்திவிடலாம். கேழ்வரகு மாவில் செய்யும் பலகாரங்கள் சத்துமிக்கவை, குறிப்பாக எலும்பை வலுவாக்கும் சுண்ணாம்பு எனப்படும் கால்சியச் சத்து.

உடனடி நொறுவை

கிராமங்களில் சமைப்பதற்கு முன்னர்ப் பசியென்று பிள்ளைகள் பெற்றோரைப் படுத்தி எடுத்தால், ஏதாவது பளபளப்பான பாக்கெட்டுகளில் விற்கும் மாமாங்கம் கழிந்த நொறுவைகளை வாங்கிக் கொறிக்குமாறு சட்டென்று கையில் இரண்டு ரூபாயைத் திணித்து விட மாட்டார்கள்.

கார விரும்பிப் பிள்ளைகளாக இருந்தால், ஒரு கப் கேழ்வரகு மாவை எடுத்து அதில் நான்கு சின்ன வெங்காயத்தை அரிந்து போட்டு, பன்னீர் தெளிப்பதுபோலத் தேங்காய்ப் பூவைத் தூவி, ஒரு சிட்டிகை சீரகத்தை நுணுக்கிச் சீராகத் தெளித்து, உப்பெடுத்து மாவில் காட்டி, பிடியளவு பொட்டுக்கடலையைச் சேர்த்து, மாவு தொண்டையைப் பிடிக்காமல் இருக்க ஒரு டீ ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றிக் கரண்டியால் மெல்லக் கிண்டுவார்கள்.

இந்தக் கலவையில் அறுசுவையும் இருக்கும், அனைத்துச் சத்துகளும் இடம் பெறும். வயிற்றை வறண்டு போகச் செய்வதாகவோ, சுள்ளென்று காரம் பிடிப்பதாகவோ இல்லாத மேற்படி பண்டம், மறுநாள் காலைக்கடனைச் சுளுவாகத் தீர்த்து விடும்.

பாக்கெட் பண்டம் வேண்டாமே

கண்களைச் சுண்டியிழுத்து உண்ணச் செய்யும் தற்காலப் பாக்கெட் பண்டங்களை அரையும் குறையுமாக மென்று தள்ளும் பிள்ளைகள் பலருக்கும் மலச் சிக்கல் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. மலச் சிக்கல், மனச் சிக்கலில் கொண்டுவந்து விடும். உடல் பருமன் தொடங்கித் தோல் ஒவ்வாமைவரை அடுத்தடுத்த நோய்களாகப் பரிணமிக்கும் என்ற உண்மையை இன்றைய அவசர கதியில் பலரும் உணரத் தவறுகிறோம்.

பாக்கெட் நொறுவைகளைத் தவிர்க்க வேண்டுமென்றால், பிள்ளைகள் விரும்பி உண்ணும்படியான பலகாரங்களை வீட்டிலேயே தயாரிக்கப் பெற்றோர் படைப்பார்வத்துடன் இறங்கிவிட வேண்டும்.

இனிப்பும் உண்டு

சரி, கேழ்வரகு மாவுக்குத் திரும்புவோம். அதே கேழ்வரகு மாவில் இன்ஸ்டன்டாக ஒரு இனிப்பைச் செய்யலாம். அரை கப் மாவில் 30 கிராம் உடைத்த வெல்லம், ஏலக்காய்த் தூள், தேங்காய் துருவல், அரை ஸ்பூன் நல்லெண்ணெயை விட்டுக் கிளறிக் கொடுத்தால் அற்புதமான இனிப்பு ஓரிரு நிமிடங்களில் தயாராகிவிடும்.

இந்த இனிப்புடன் தேங்காய்ப் பூவும், நல்லெண்ணெயும் கலக்கப் பட்டிருப்பதால் குழந்தைகள் மென்றும், மெல்லாமல் விழுங்கிவிட்டாலும் உணவுத் துகள்கள், செரிமான இயக்கத்தின்போது வயிற்றில் பசையாக ஒட்டாமல் வயிற்றையும், சிறுகுடலையும், பெருங்குடலையும் `பை-பா’ஸில் செல்லும் வாகனங்களைப் போல இலகுவாக விரைந்து கடந்து சென்றுவிடும்.

வறண்ட பண்டங்கள் வேண்டாம்

சூரியக் குஞ்சாக வெப்ப ஆற்றலைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் கேழ்வரகை, மாவாக்கிப் பண்டங்கள் தயாரிக்கிறபோது மிகுந்த கவனம் தேவை. தற்காலத்தில் காராச்சேவு, மிக்சர் போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்களுக்குக் கேழ்வரகு மாவைப் பயன்படுத்துகிறார்கள். இத்தகைய பலகாரங்கள் வயிற்றுக்குள் போனதும் உடலின் நீர்ச்சத்தைக் கவர்ந்து உபாதைகளை உருவாக்கும்.

எனவே, கேழ்வரகில் இறுகலான பண்டங்களைச் செய்யலாகாது. தற்காலக் குறைந்த உடலுழைப்புக்கு ஏற்ப எளிதில் செரிக்கும்படியாக மெத்தென்ற ஊடுபாவு (Texture) அமையும் விதத்தில் தேங்காய்ப்பூ, நல்லெண்ணெய் போன்றவற்றைக் கலந்தே செய்ய வேண்டும். அப்படிச் செய்கிறபோது சத்துகள் சமவிகிதத்தில் கிடைப்பதுடன் மலக்கட்டு ஏற்படாமலும் தவிர்க்கலாம்.

விருந்தினரை அசத்தலாம்

சாப்பாட்டு நேரமல்லாத இரண்டுங்கெட்டான் நேரத்தில் நண்பர்களோ தோழிகளோ வீட்டிற்கு வருகிறார்கள். எதையாவது செய்து அவர்களை அசத்த வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அதற்காக ரொம்பவும் மெனக்கெடத் தேவையில்லை. இருக்கவே இருக்கிறது ஆபத்பாந்தவன் கேழ்வரகு மாவு. இரண்டு கப் மாவு எடுத்து மிக்ஸி ஜாரில் போடுங்கள். ஒரு வாழைப்பழத்தை உரித்து ஒன்றிரண்டாகப் பிசைந்து மாவுடன் சேருங்கள்.

ஒரு ஏலக்காய், சுவைக்கேற்ப வெல்லத் தூள் சேர்த்து, நீர் ஊற்றி, தோசைமாவுப் பதத்தைக் காட்டிலும் கெட்டியாக அரைத்து, அதனுடன் அரை மூடி தேங்காய்ப்பூ சேர்த்து, ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து ஜனகராஜ் சொல்வது போல ‘ஒரு கலக்கு கலக்கி’ தோசைக்கல்லில் அழகான குட்டிக்குட்டி வட்டமாக வார்த்து, நெய் காட்டிப் புரட்டிப் போட்டு எடுத்தால், தேவாலயங்களில் கொடுக்கப்படும் அப்பத்தைப் போன்ற பண்டம் ஆவி பறக்கப் புன்முறுவல் காட்டும். புதுமையான இந்த `கேழ்வரகு அப்பம்’ உடலுக்கு இனிமை சேர்க்கும்.

இதே மாவைப் பணியாரக் கல்லில் ஊற்றிக் குழிப் பணியாரமாகவும் சுடலாம். அல்லது `டுபுக்… டுபுக்…’ என்று குமிழ் விடும் எண்ணெயிலும் பொரித்து எடுக்கலாம். எந்தப் பின்விளைவுகளையும் தராத இந்தப் பலகாரத்தை ஆசை அடங்க எத்தனை தின்றாலும் நம்மைப் பழி வாங்காது. செரிக்கக் கடினமில்லாத இந்த இனிப்பைக் குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.

மேற்படி மாவில் வெல்லத்துக்குப் பதிலாக ஓமமும், பொடியாக அரிந்த வெங்காயமும், அரிந்த மல்லி, கருவேப்பிலைத் தழைகளையும் சேர்த்துவிட்டால் அற்புதமான காரப் பலகாரமாகிவிடும்.

விறைப்பை விரட்ட

பலர் மனசளவில் இளைஞர்களாக இருந்தாலும், மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் என்னவோ நீரிழிவு பீதியை ஊட்டத்தான் செய்கின்றன. அரிசியைத் தவிர்ப்பதற்காகக் கேழ்வரகு மாவில் தோசை சுடப் புகுந்தால், அது `பாத்துருவோமா ஒரு கை’ என்பதுபோல விறைத்துக்கொண்டு நிற்கும். அப்படிப்பட்ட விறைப்பான கேழ்வரகுத் தோசைக்குப் பதிலாக, சீரான புள்ளிகளிட்ட மெத்தென்ற கேழ்வரகுத் தோசை வார்க்கும் ரகசியத்தை அடுத்த வாரம் பார்த்துவிடுவோம்.

(அடுத்த வாரம்: மெத்தென்று சமைக்கும் ரகசியம்)

http://tamil.thehindu.com/general/health/உயிர்-வளர்த்தேனே-12-படைப்புத்-திறனில்-மிளிரும்-தானியப்-பலகாரம்/article9408782.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்த்தேனே 13: மெத்தென்று சமைக்கும் ரகசியம்

 

 
puttu

கேழ்வரகு மாவில் தோசையென்றாலே காய்ந்து போன வறட்டி ஞாபகத்துக்கு வந்து சிலரது பி.பி., சுகர் என அத்தனையையும் ஒருசேர எகிறச் செய்துவிடும். பல வீடுகளில் நோயைக் காட்டிலும் கேழ்வரகு தோசையே பெரும் தண்டனையாகி விடும்.

அப்படிப்பட்டவர்கள் கவனிக்க வேண்டிய எளிய உத்தி ஒரு பிடியளவு வெள்ளை உளுந்தென்றால் இரண்டு மணி நேரம், கூடுதல் சத்தை வழங்கும் கறுப்பு உளுந்தென்றால் நான்கு மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸி சின்ன ஜாரில் இட்டு வெண்ணெயாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் உலர் கேழ்வரகு மாவை தோசைப் பதத்துக்குக் கரைத்து, புளிப்பதற்குச் சிறிதளவு மோர் சேர்த்து அரை மணி நேரம் ஊறவிட்டு வார்த்தால் தோசை, `ஜம்’மென்றும் மெத்தென்றும் இருக்கும்.

அதில் விழும் புள்ளிகளே கோலத்துக்கு வைத்த புள்ளிகளைப் போல ‘அம்புட்டு’ அழகாகக் கண்ணைக் கவரும். சட்னி, பொடி எனத் தொட்டுக்க எதுவுமே தேவைப்படாமல், அப்படியே சாப்பிடத் தோன்றும்.

நேரமில்லையென்றால்?

சரி, உளுந்தை ஊற வைப்பதற்கு அவகாசம் இல்லை. `அப்ப என்ன செய்றது, அப்ப என்ன செய்றது?’ ஒன்றும் பிரச்சினை இல்லை. அரை வாழைப் பழத்தையும் அரை மூடித் தேங்காயையும் மிக்ஸி ஜாரில் இட்டு அரைக்க வேண்டியது. இதைக் கேழ்வரகு மாவில் தோசைப் பதத்துக்குக் கலந்து ஊற்றினால் இதுவும் காலைச் சூரியனைப் போல உப்பி எழும்.

கேழ்வரகுப் பலகாரத்தை மெத்தென்று சமைத்தால்தான் சுவை என்ற அடிப்படையைப் புரிந்துகொண்டால், நம்மால் விதவிதமாக அசத்திவிட முடியும்.

தமிழகத்தின் பாரம்பரியமான கேழ்வரகு ரொட்டி, நமக்குத் தெரியும். நாலு சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் பாதி, கறிவேப்பிலைத் தழையைக் கிள்ளிப்போட்டு அல்லது முருங்கை இலையைப் போட்டுப் பிசைந்து தட்டி, தோசைக் கல்லில் சுட்டு எடுப்பார்கள். சடுதியில் தயாராகும் இதைக் காட்டிலும் விரைவான சத்தான உணவை, ஒரு ராக்கெட் பிடித்துத் தேடினாலும் கண்டடைய முடியாது.

இன்னும் எத்தனை நாளைக்கு?

நம் காலத்துக்கேற்ற விரைவு உணவான இந்த ரொட்டி, இன்று அபூர்வமாகி விட்டதற்குக் காரணம் அது மெல்லுவதற்குக் கடினமாக இருப்பதுதான். பல்லால் கடித்து மெல்லும் பழக்கம் அரிதாகிக்கொண்டு வருகிறது. பட்டாணிக் கடையைக் கடக்கும் போதெல்லாம் “இன்னும் எத்தனை நாட்களுக்கு இது நீடிக்கும்” எனும் வலி மிகுந்த கேள்வி, எனக்குள் எழுவது உண்டு.

மெல்லுகிறபோது பல்லும் தாடையும் வலிமையடையும். பல்லும் தாடையும் வலிமையடைந்தால் முகம் பொலிவு பெறும் என்ற எளிய ரகசியம் நமக்குப் புரியவில்லை. முகப் பொலிவில் அக்கறை காட்டுவோர் உணவை நன்றாக அரைத்து உண்ணும் பழக்கத் தைக் கைகொண்டாலே போதும்.

நம் காலத்துப் பிள்ளைகள் கோபத்தில் பற்களை நறநறக்கிறார்கள். அதற்குப் பதிலாக உணவுப் பொருட்களை மென்று உண்பதைப் பழக்கினால், அது பல வகைகளிலும் பலன் தரும்.

மென்மை ரகசியம்

மென்று உண்ணுதலே சிறந்தது. மெல்லுவதற்குச் சோம்பிக் கேழ்வரகை மறந்துவிட வேண்டாம் என்பதற்காகக் கேழ்வரகு ரொட்டியை மெத்தென்று சமைக்கும் முறையைத் தெரிந்துகொள்வோம். கேழ்வரகு ரொட்டிக்குச் சேர்க்கும் வழக்கமான மூலப் பொருட்களுடன் தேங்காய்ப் பூவையும், வெண்ணெயையும் சேர்த்துப் பிசைந்து தட்டி போட்டால் ரொட்டி மெத்தென்றும் இருக்கும், பிள்ளைகளின் கண்களுக்குக் கவர்ச்சியான நிறத்திலும் இருக்கும்.

நிறமி என்ன செய்யும்?

உணவுப் பொருள் எப்போதும் கவருகிற நிறத்தில் இருக்க வேண்டும்தான். ஆனால், அது உணவின் மூலப் பண்பைச் சிதைக்காத, இயற்கையான கவர்ச்சியாக இருக்க வேண்டும். மாறாகச் செயற்கை நிறமிகளைச் சேர்த்தால் அவை உள்ளுறுப்புகளைச் சிதைப்பது மட்டுமல்லாமல், நம்முடைய தோலின் நிறத்தையும் சிதைத்துவிடும். தற்காலத்தில் தோல் தொடர்பான நோய்கள் பெருகி வருவதற்கு உணவில் செயற்கை நிறமிகள் பயன்பாடு அதிகரிப்பதும் ஒரு முக்கியமான காரணி.

வணிக உணவில் சேர்ப்பது போக, நிறமிகளின் ஆபத்தை உணராமல் இப்போது பலர் வீட்டுச் சமையலிலும் செயற்கை நிறமிகளைத் தாராளமாகப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். தேங்காய்ப்பால் அல்லது பசும்பால் ஆகிய இரண்டையும் எந்த உணவுடன் சேர்த்துச் சமைத்தாலும், அந்த உணவுப் பண்டம் கவர்ச்சியான நிறத்தைப் பெற்று விடும். சுவையையும் இதமாக மாற்றி தரும். சரி, கேழ்வரகுக் கதைக்கு வருவோம்.

புட்டை மீட்போம்

கேழ்வரகுப் புட்டு வீட்டுச் சமையல் பட்டியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டு விட்டது. கேழ்வரகு மாவில் இளஞ்சூட்டிலான வெந்நீர் தெளித்து, தேங்காய்ப் பூவைத் தூவி, கொஞ்சமாக வெண்ணெயை உருக்கி ஊற்றிப் பிசறிவிட்டு ஆவியில் வேக வைத்து எடுத்தால், புதிய 2000 ரூபாய் நோட்டைப் போன்ற சிவப்பு நிறத்தில் கமகமவென்ற மணத்துடன் ஆவி பறக்கும் கேழ்வரகுப் புட்டு தயாராகிவிடும்.

கேழ்வரகுப் புட்டை அவ்வப்போது உண்டுவந்தால், வயிற்றிலும் குடலிலும் படித்துள்ள கசடுகளின் ஊடுபாவு நீங்கி, செரிமானத் திறன் அதிகரிக்கும்.

ஒரே விதமான கிரீஸ் போன்ற கொசகொசத்த மாவுப்பண்டங்களில் இருந்து, நமது வயிற்றுக்கும் குடலுக்கும் சற்றே ஓய்வு தரவில்லை என்றால், அவை விரைவில் சோர்ந்துபோகும். செரிமான மண்டலத்தில் ஏற்படும் கேடுதான் அனைத்து நோய்களுக்கும் அச்சாரமாகி விடுகிறது. உணவுப் பொருட்களின் மூலப் பண்பு நஞ்சாகிவிட்ட இந்தக் காலத்தில், உணவுத் தயாரிப்பு முறையிலும் உணவுப் பழக்கத்திலும் மிகப்பெரிய மாற்றங்களை அவசரமாகக் கொண்டுவர வேண்டியிருக்கிறது.

கம்பு, சோளம், தினை, குதிரைவாலி போன்ற தானியங்களில் விரைவான ஆரோக்கிய உணவு வகைகளைச் சமைப்பது எப்படி என்பதை அடுத்த வாரங்களில் பார்ப்போம்.

(அடுத்த வாரம்: கம்பு, சோளம், தினை தின்பண்டங்கள்)

http://tamil.thehindu.com/general/health/உயிர்-வளர்த்தேனே-13-மெத்தென்று-சமைக்கும்-ரகசியம்/article9421314.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்த்தேனே 14: கம்பு, சோளம், தினையில் கலக்கலாம்

 

 
kambu

கம்பு, சோளம், தினை ஆகியவை கதிர் முற்றிய பருவத்தில் பால் திரண்டிருக்கும். அவை மணியாகக் காய்வதற்கு முன் மேற்படி கதிர்களைப் பறித்து உள்ளங்கையில் வைத்து நிமிண்டினால் உமி கழன்று தானிய மணிகளில் பால் தெறிக்கும்.

முத்துபோல ஒளிரும் இந்தத் தானிய முத்துகளை வாயிலிட்டுச் சவைத்தால், பால் பொங்கி உதடுகளில் நுரைத்துவரும். தானியங்கள் பால் புரதமும், எரிமமும், நுண் சத்துகளும், உயிர்ச் சத்துகளும் நிரம்பியவை.

விவசாயக் குடும்பங்களில் தானியக் கதிர் அறுப்புக் காலத்துக்கு முன்பு நீள நீளமான தண்டுகளுடன் கதிர்களை அறுத்துவந்து, சுள்ளி கூட்டி நெருப்பு படர விடுவார்கள்.

கதிர்களின் சொங்கில் தொற்றிய நெருப்புப் பொறி அமாவாசை இருட்டில் மின்மினிப் பூச்சிகளைப் போலப் பறந்து மறையும். நெருப்பில் வாட்டிய கதிர்களை, முறத்தில் நிமிண்டி, இளம் கருகல் வாசத்துடன் மணிகளை உதிர்த்துக் கையால் அள்ளிப் பிள்ளைகளுக்குக் கொடுப்பார்கள். அதன் இயற்கையான சுவைக்கு எட்டாத தொலைவில் நிற்பவை, இன்றைய பொட்டலத் தயாரிப்புப் பண்டங்கள்.

மயிலிறகால் வருடும் சுவை

வாட்டியெடுத்த தானியக் கதிர் மணிகள் சுவையானவை மட்டுமல்ல சத்தானவையும்கூட. நாவின் சுவை மொட்டுகளின் மீது சவுக்கால் அடிப்பது போலச் சுளீர் சுளீர் எனத் தாக்குதல் தொடுக்கும் செயற்கை சுவை அனைத்தும், நாவின் இயல்புணர்வை மரத்துப் போகச் செய்யக்கூடியவை.

ஒரு பட்டாம்பூச்சி பூவில் அமர்வதைப் போன்று மென்மையான சுவையை மட்டுமே, தொடர்ந்து ஏற்றுவந்தோம் என்றால் நமது உடலில் நோய் உருவாவதற்கான வாய்ப்பே இல்லை. சுளீர் சுளீரென்று நாவைத் தாக்கும் சுவையை ஏற்றுப் பழகிவிட்டால், சுவையின் சுருதியை மேலும் மேலும் கூட்டிக்கொண்டே போக நேரிடும். சுவையின் வீரியத்தைக் கூட்டக் கூட்ட, ஒரு கட்டத்தில் நமது சுவையுணர்வு எந்த அளவுக்கும் நிறைவடையாமல் போய்விடும். அந்த நிலையை அடைவதற்கு முன்னர், உடல் அனைத்து விதமான நோய்களின் களமாக மாறிவிட்டிருக்கும்.

சூரிய மணிகள்

முற்றிய தானிய மணிகளில் திரண்ட பால் வெயிலில் காயக் காயப் பாறைபோல உறைந்து விடும். நம்முடைய சிறுதானியப் பயிர்கள் குறைவான நீரை உண்டு வளர்பவை. தானிய மணிகள் வெயிலைச் செரித்து விளைபவை. எனவே, தானிய மணிகள் ஒவ்வொன்றும் `சூரியக் குஞ்சுகள்’ என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஆற்றலைத் தம்முள் திணித்து வைத்திருப்பவை.

காய்வதற்கு முன் இளம் இனிப்பு, துவர்ப்பு, மென் உப்பு எனப் பல்சுவைகளும் அடங்கிய பாலாக இருக்கும் தானிய மணிகள், காய்ந்த பிறகு வெயிலில் தூரத்துக் குயிலின் பாடலோசை போன்று, இதமான கசப்புச் சுவையைத் தம்மில் ஏற்றி வைத்திருக்கும்.

உடனடி ஊட்டம்

நமது பாரம்பரியத் தானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், தினை போன்றவற்றை நீரில் பத்து மணி நேரம் ஊறவைத்து, இருபத்தி நான்கு மணி நேரத்துக்கு முளை கட்ட வைத்தால், அவை உயிர் பெறுகையில் மீண்டும் பால் கட்டத் தொடங்கும். இந்த நிலையில் ஆட்டிப் பால் எடுத்து, உடன் சர்க்கரைப் பாகும் நெய்யும் சேர்த்து அல்வா போலக் கிண்டி இனிப்பு செய்யலாம்.

இந்த இனிப்பில் மாவின் பிசுபிசுப்புத் தன்மை இருக்காது என்பதால், ஓரிரு நாட்களுக்கு வைத்திருந்து சாப்பிட இசைவாக இருக்காது. தானியப் பண்டத்தைச் சமைத்தவுடனேயே சாப்பிட்டு முடித்து விடுவது நல்லது. ஆனால், இந்த இனிப்பு உடலுக்கு மிகுந்த ஊட்டத்தை அளிக்கும்.

நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டு மீண்டவர்கள் உடனடியாக ஊட்டம் பெற இத்தகைய இனிப்பைக் கொடுப்பது விவசாயக் குடும்பங்களில் வழக்கம்.

திணற வேண்டாம்

தானியங்கள் என்றதும் கூழ், களி அதிகபட்சம் தோசைக்கு மேலாக வேறு புதிய பதார்த்தங்கள் எதையும் நாம் முயற்சித்துப் பார்ப்பதில்லை. சிறுதானியம் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பேசப்படுவதைக் கேட்டு, சூப்பர் மார்க்கெட் அடுக்கில் பாக்கெட்டைப் பார்த்ததும் ஆர்வமாக வாங்கி வந்துவிடுகிறார்கள். ஆனால் என்ன செய்வதென்று தெரியாமலோ அல்லது `எதற்குச் சோதனை முயற்சி?’ என்று சோம்பியோ வண்டு பிடிக்க விட்டு விடுகிறார்கள். இது சிறுதானியங்களுக்கு இழைக்கப்படுகிற அவமானம்.

விதவிதமான தின்பண்டங்கள்

கம்பு, சோளம் ஆகியவற்றைத் தனித்தனியாகவோ அல்லது சம அளவில் கலந்தோ அரை மணி நேரம் ஊறவிட்டு நீரை வடித்துவிட்டு, நீர் முற்றிலும் உலரும் வண்ணம் ஃபேனுக்குக் கீழ் துணியில் ஆற விட்டு மிக்ஸியில் போட்டு உடைத்துக்கொள்ள வேண்டும். ரவைப் பதத்துக்கு உடைத்த தானியத்தைக் கஞ்சியாகக் காய்ச்சலாம். அன்றலர்ந்த மலர் போன்ற இந்தக் கஞ்சி, இட்லி தோசையைப் போல மந்தத் தன்மையை ஏற்படுத்தாமல் வயிற்றில் இதமாக இறங்கும். இதற்குத் தொட்டுக்கொள்ளத் துவையலோ, முட்டைப் பொடிமாஸோ பொருத்தமாக இருக்கும்.

அல்லது இதே தானிய ரவையை லேசாக எண்ணெயோ, நெய்யோ விட்டு வறுத்து உப்புமாவாகவும் கிளறலாம். கம்பு, சோளம் தவிர்த்துக் குதிரைவாலி, தினை, சாமை, வரகு ஆகிய சிறு தானியங்களை நேரடியாகக் கஞ்சியாகக் காய்ச்சலாம் அல்லது உப்புமா கிளறலாம். பாசிப் பருப்பு போட்டு அரிசிக்குப் பதிலாகச் சிறுதானியப் பொங்கல் செய்யலாம்.

வயிற்றுக்கு இதம்

சமையலில் மரபான செய்முறைக்குச் சற்று மாறுபட்டு யோசித்தால் போதும். படைப்புத் திறன் மிகுந்த விதவிதமான பதார்த்தங்களை நம்மால் தயாரிக்க முடியும்.

தினையை ஒன்றுக்கு நாலு பங்கு நீர் விட்டுக் குழைய வேகவைத்து, தேங்காய்ப் பூவைத் தூவி, ஏலக்காயை நுணுக்கிப் போட்டு, வெல்லம் தட்டிப் போட்டு ஒரு கிண்டு கிண்டி இறக்கினால் குடிக்கக் குடிக்கத் திகட்டாத பாயசம் தயார். இந்தப் பாயசத்தை ஒரு நேர உணவாக எடுக்கப் பழகிக்கொண்டால் வயிறு தொடர்பான பல நீண்ட கால உபாதைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

அரிசி மாவுக்குப் பதிலாகத் தினைமாவில் கொழுக்கட்டை செய்து பிள்ளைகளுக்கு சுவை காட்டினால் போதும். வாரந்தோறும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடச் சொல்வார்கள்.

பனியாகக் கரையும்

விதவிதமாகச் சுவைக்க விரும்பும் பருவத்தில் இருக்கும் பிள்ளைகள் கையில் கவர்ச்சியும் சுவையும் கொண்ட ஆரோக்கியமான பண்டங்களைத் தராமல், ஆபத்து நிறைந்த வணிக நொறுவைப் பாக்கெட்டுகளை அவர்களிடமிருந்து பறிக்க முடியாது.

ஆறில் ஒரு பங்கு உளுந்தும் மீதி ஐந்து பங்கு தினையும் போட்டு, சிறிய குடும்பம் என்றால் மிக்ஸியிலேயே அரைத்து, அரை மணி நேரம் புளிக்கச் செய்து தோசை சுட்டு பாருங்கள். நெய் ஊற்றாமலே இளம் பொன்னிறத்தில் மொறுமொறுவென்று உருப்பெறும் தினை தோசை, நம் குழந்தைகள் நாவில் பனியாகக் கரைந்து உருகும்.

மேலும் சில சுவை மிகுந்த தானியப் பலகாரங்களை எளிய முறையில் செய்வது பற்றி அடுத்த வாரமும் பார்க்கலாம்.

http://tamil.thehindu.com/general/health/உயிர்-வளர்த்தேனே-14-கம்பு-சோளம்-தினையில்-கலக்கலாம்/article9432315.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்த்தேனே 15: தானியங்கள் தரும் நோயினின்று விடுதலை

 
grains

கேழ்வரகில் ஒரு புதுமை இனிப்பு செய்வோமா?

கேழ்வரகு மாவைச் சலித்து எடுத்துக்கொண்டு அதில் பனங்கருப்பட்டிப் பாகை ஊற்றித் தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்துக்கொண்டு, இரண்டு விரல் பிடியளவு சுக்கு, ஏலக்காய்த் தூள் போட்டுக் கலக்கி ஒரு பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். மாவை உருண்டையாக்கி, `கலக் கலக்’ எனக் கடலை எண்ணெய் குமிழியிடும் கடாயில் போட்டு எடுத்தால், சிறிய கிரிக்கெட் பந்துபோல எம்பிவரும்.

சற்றே வெதுவெதுப்பாகச் சாப்பிட்டால், இதுதான் அமிர்தமென்று சத்தியம் செய்வீர்கள். அத்தனை சுவை. நெய்யும் சர்க்கரைப் பாகும் விட்டுச் செய்கிற மற்ற இனிப்பு வகைகளைக் காட்டிலும், செய்முறையும் இதில் எளிது. சுவையும் அதிகம், உடலுக்கும் நன்மை தரும்.

மலச்சிக்கல் நீக்கும் கம்பு

ஒரு பங்கு புழுங்கலரிசி, இரண்டு பங்கு கம்பு. இரண்டையும் மண் பாத்திரத்தில் இட்டுச் சீராக வறுத்து ஆற வைத்து, ரவைப் பதத்துக்கு அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை வைத்து ஐந்தே நிமிடத்தில் ஒரு ஆரோக்கிய உணவைத் தயாரித்துவிடலாம்.

கல்லீரலுக்குக் குளுமை தரும் கம்பு மாவில் பொடித்த வெல்லத்தைத் தூவி, வெந்நீர் விட்டுப் பிசைந்துகொள்ள வேண்டும். பிசைந்த உருண்டை இளக்கமாக இருக்கும். இந்த உருண்டையில் மேலும் உலர் மாவு சேர்த்து உருட்டி வைத்தால், ஐந்து நிமிடத்தில் கெட்டியாக மாறும்.

பொரித்த கம்புமாவு உருண்டையைக் குழந்தைகளுக்கு ஒரு வயது முதலே பழக்கிவிட்டால், பிற்காலத்தில் பாக்கெட் நொறுவைகள் மீது அவர்களுடைய நாட்டம் செல்லாது. கம்புமாவு பிசுபிசுப்புத் தன்மை அற்றது என்பதால், பிற நொறுவைகளைப் போல மலச் சிக்கலை உருவாக்காது. ஏற்கெனவே மலச் சிக்கல் இருந்தால், அதை நீக்கவும் வல்லது.

பள்ளியில் படும் அவஸ்தை

பள்ளிக்குச் செல்லும் தற்காலக் குழந்தைகள் தாமதமாக எழுந்து வேனைப் பிடிக்கும் அவசரக் கதியில், காலையில் மலத்தை முழுமையாகக் கழிப்பதில்லை. மென்னுணர்வு மிகுந்த குழந்தைப் பருவத்தினருக்குப் பதற்றச் சூழலில் முழுமையாக மலம் வெளியேறாது. பள்ளிக்குச் சென்று வகுப்பில் உட்கார்ந்த பிறகு, வயிற்றில் கனத்துக் கிடக்கும் மலம் வெளியேற முனைப்பு காட்டும். அப்போது வகுப்பில் பலர் முன்னிலையில் ‘மிஸ்’ என்றழைத்து இரண்டு விரலைக் காட்டக் கூச்சமாக இருக்கும்.

எனவே, குழந்தைகள் மலத்தை வயிற்றிலேயே அடக்கிக் கொள்வார்கள். மீறி ஆசிரியரின் அனுமதி பெற்று, பள்ளியின் பொதுக் கழிவறைக்குப் போகவே கூச்சப்படும் அளவுக்கு ‘என் பிள்ளையைச் சிறப்பாக வளர்க்கிறேன்’ என்ற பெருமையில், அவர்களைத் தொட்டாற் சிணுங்கியாக - கூச்ச சுபாவம் மிக்கவர்களாகவே அநேகப் பெற்றோர் வளர்த்துவருகின்றனர்.

இவர்கள் புறச் சூழலுக்குப் பொருந்துவது மிகக் கடினம். அவர்களால் பழகின கழிப்பறையில் மட்டுமே மலம் கழிக்க முடியும். அதையும் மீறிய மனப்பக்குவத்துடன் பள்ளிக் கழிப்பறையில் கழிக்க முயன்றால், அவை மெய்யாகவே அச்சப்படும்படியான பராமரிப்புடன்தான் இருக்கும். 95% பள்ளிக் கழிப்பறைகளில் போதுமான நீர் வசதி இருப்பதில்லை.

இப்படி அடுக்கடுக்கான காரணங்களால் தற்காலத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும்பாலானோருக்கு மலச் சிக்கல் பிரச்சினை, தொலைக்காட்சித் தொடர்களைக் காட்டிலும் பல வருடங்களாக நீடித்துக்கொண்டிருக்கிறது. மலச் சிக்கல், மனச்சிக்கல், ஒவ்வாமை, தோலரிப்பு, மூச்சிளைப்புவரை பல்வேறு உடல் பிரச்சினைகளுக்கு ஊற்றுக் கண்ணாகத் திகழ்வதைக் கண்கூடாகக் கண்டுவருகிறோம்.

நார்ச்சத்து மிகுந்த நம்முடைய சிறுதானியங்களை உணவு வடிவத்தில் ஏற்கிறபோது, அவை குழந்தைகளின் மலச் சிக்கலுக்கு `அமைதியாக’ தீர்வைத் தந்துவிடுகின்றன.

நிறமி தரும் தோல் பிரச்சினை

குழந்தைகள் விரும்பி உண்ணும் இனிப்பு வகைகளிலேயே நிறமிக்காகவும், பதப்படுத்தியாகவும் (preservative) சேர்க்கப்படும் ரசாயனக் கூறுகள் கலந்த கேக் குடலில் பிசுபிசுப்புடன் ஒட்டி உறவாடி மலத்தைச் சிக்கச் செய்வதுடன், சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம். நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் அதீத அளவில் கலக்கப்படும் நிறமிகள், மலரிதழைப் போன்ற நம் குழந்தைகளின் சருமத்தில் எத்தகைய விளைவை உருவாக்கும் என்ற ஆபத்தைப் பெற்றோர்கள் உணர்வதில்லை.

தோலில் வெயில் படாமல் வளர்வதாலும் நம் குழந்தைகளுக்கு மேற்சொன்ன ரசாயனக் கழிவுகளை வெளியேற்றும் திறன் உடலில் இருப்பதில்லை. விற்பனையாகாத ஒரு பெயருடைய கேக், அடுத்த சில நாட்களில் வேறு ஒரு நிறம் சேர்க்கப்பட்டுப் புதிய அவதாரம் எடுக்கும் தொழில்நுட்ப ரகசியம் நம்மில் பலருக்குத் தெரியாது. குறிப்பாகச் சொல்வதென்றால் சுளீரெனத் தாக்கும் சுவையில், அடர்த்தியான நிறத்தில் பளீரென மின்னும் கேக் வகைகள், போன ஜென்மத்தில் இன்னொரு பெயரில் அதே கண்ணாடிப் பெட்டியில் தவமிருந்த பூர்வாந்திரக் கதைகள் நமக்குத் தெரியாது.

ஈர்ப்பும் சுவையும்

கேக் போன்ற வெளித் தயாரிப்புப் பண்டங்களை வாங்கித் தருவதற்குப் பதிலாகக் குழந்தைகளுக்கு வீட்டிலேயே சிறு தானியங்களில் நொறுவைகள் தயாரித்துத் தருவதுதான் பொறுப்பான பெற்றோரின் அடையாளம்.

ஒரு பங்கு பயற்றம் (பாசிப்) பருப்பு, அதில் ஆறு பங்கு தினை, பதத்துக்கு நெய், இனிப்புக்கு வெல்லம், வாசத்துக்கு இரண்டு சிட்டிகை ஏலப்பொடி, செரிக்க ஒரு சிட்டிகை சுக்கு பொடி அனைத்தையும் ஒன்று கூட்டி மிக்ஸியில் இட்டு அரைத்துப் பட்டும் படாமல் நீர் தெளித்துப் பார்க்கத் திண்மையாகவும், தொட்டால் புட்டு கொள்ளும்படி மென்மையாகவும் உருண்டை பிடித்து வைத்தால், தினை உருண்டைகள் காலியாகாதா? அவற்றின் சுவையும் நலமும் உணர்ந்துவிட்டால் நம் குழந்தைகள் ஏன் “கேக்கு… கேக்கு” என்று கேட்கப் போகிறார்கள்?

வெளிப் பண்டங்களை முற்றாக மறுக்கும் பல குழந்தைகளை அடிக்கடி காண நேர்கிறது. அவர்களைப் பார்த்து வியப்பதற்கு இடம் தராமல், வீட்டிலேயே ஈர்ப்பும் சுவையும் நிரம்பிய பலகாரங்களைப் பெற்றோர் செய்து தருவதே சூட்சுமம்.

பிரியாணியும் இருக்கே…

தினை, சாமை, குதிரைவாலி அரிசி வகைகளில் பலகாரங்கள் மட்டுமல்ல, அன்றாட உணவுக்குரியவற்றையும் சமைத்து அசத்தலாம். தினையரிசி, குதிரைவாலி, சாமை ஆகியவற்றைக் கலவையாகவோ, தனித்தோ அரிசிக்குப் பதிலாகப் போட்டுப் பிரியாணி செய்தால், அதன் சுவை அற்புதத்திலும் அற்புதமாக இருக்கும்.

தினை பிரியாணியை ஓரிரு முறை சுவைத்துவிட்டால், அதற்குப் பின்னர்ப் பாஸ்மதி அரிசிப் பிரியாணியைப் பார்க்கும்போது, நாக்கின் சுவை நரம்புகள் உங்களுக்கு அது வேண்டும் எனத் தொந்தரவு படுத்தாது.

உலகம் மாறும்

நம்முடைய சிறுதானியங்கள் சூரிய ஆற்றல் மிகுந்தவை என்பதை முன்னரே பார்த்துள்ளோம். அதனால் நிறைந்த சத்துகளுடன், மிகுந்த சுவை தருபவை என்பது மட்டுமில்லாமல், அவற்றைத் தொடர்ந்து உண்டுவர நம் உடலில் தேங்கும் நச்சுக் காற்று அவசர அவசரமாக வெளியேறி விடும். நெருப்பு காற்றைத் தின்னும் என்ற தர்க்கம் நாம் அறியாததல்ல?

பெருந்தானியங்கள் காற்று நிரம்பிவை. தொடர்ந்து அவற்றை மட்டுமே பயன்படுத்துகிறபோது உடலில் கெட்ட வாயுக்களும், வாயுக்கள் மிகும்போது அவை அமில வடிவத்தில் மாறித் தேங்குவதும் தவிர்க்கவே முடியாது.

எனவே, நாமும் நம் வருங்காலத் தலைமுறையும் நோயின் பிடியினின்று நீங்க சிறுதானியப் பயன்பாட்டை அதிகரித்துக்கொள்வோம். சிறுதானியப் பயன்பாடு அதிகரிக்கும்போது நமது உடல் நோயினின்று விடுதலை பெறும். சிறுதானிய விளைச்சல் அதிகரிக்கும்போது, நமது மண்ணும் ரசாயன உரத்திலிருந்து விடுதலை பெறும். சிறுதானிய விளைச்சல் அதிகரிக்கும்போது நமது காற்றும் நச்சுப் பூச்சிக்கொல்லிகளிலிருந்து விடுதலை பெறும்.

ரசாயனப் பயன்பாட்டைத் தவிர்க்கிறபோது காதுக்கு இனிய இசையைத் தரும் பறவை இனங்களும், கண்ணுக்கு இனிய ஒளியைத் தரும் பூச்சியினங்களும், நாவிற்கு இனிய தேனைத் தரும் தேனீக்களும் பெருகும்.

(அடுத்த வாரம்: அரிசியைக் கொஞ்சம் அலசுவோம்) 

http://tamil.thehindu.com/general/health/உயிர்-வளர்த்தேனே-15-தானியங்கள்-தரும்-நோயினின்று-விடுதலை/article9441407.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்த்தேனே 16: தானியக் கஞ்சிக்குத் தயாரா?

 

 
grains

தேனும் தினை மாவும் நம் இலக்கியத்தில் புகழ்மிக்க ஓர் உணவுப் பலகாரம். அத்தகைய மரபார்ந்த சுவையுணவை நாம் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டோம். தினை விளைவிக்கும் எளிய விவசாயக் குடும்பத்தினருக்கோ, `தினை ஒரு ஆடம்பரம்’ என்கிற அளவுக்கு அந்நியமாகிப் போன பயிராக அது இருக்கிறது. தேனீக்கள் அருகிவரும் நம் காலத்தில் தினை மாவில் தேனூற்றிப் பிசைவது என்றால், கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஆடம்பரமாகிவிடும்.

தினை மாவில் தேன் கலந்துதான் உண்ண மறந்தோம். சரி, கருப்பட்டிக்கு என்ன தடை? தினையை மையான மாவாக அரைத்து, (தேனில் ஊற வைத்து இடித்தால் மட்டுமே அதை முழுவதும் மாவாக மாற்ற முடியும். அந்த அளவுக்குக் கெட்டியானது தினை) அதில் கருப்பட்டித் தூளையும், சிறிதளவு நெய்யும் கலந்து பிசைந்து உருண்டையாகப் பிடித்தால் உயிர் கரையும் சுவையாகத் திகைப்பூட்டும்.

லட்டுக்கு அவமானம்

தினையும் வெள்ளைச் சர்க்கரையும் கலந்த லட்டை இனிப்புக் கடையில் ஒரு நாள் பார்க்க நேர்ந்தது. பொருந்தாகக் கலவையாக இருந்தாலும் தினைக்காகச் சமாதானம் செய்துகொண்டு, நான் சுவைத்த பின் உடன் வந்த நண்பரின் பள்ளிப் பையன்களுக்காகக் கால் கிலோ வாங்கினோம். பள்ளி நொறுவை இடைவேளையில் இனிப்பு டப்பாவைப் பிரித்த நண்பரின் பையன்கள் இருவரும் பெரும் கேலிக்குள்ளானார்கள்.

காரணம்? பப்ஸ், கேக், சமோசா போன்ற நொறுவையைக் கொண்டு வராமல் “இது என்னடா கார்ப்பரேசன் ஸ்கூல் பசங்களப் போல மாவுருண்டைய எடுத்துட்டு வந்து, லட்டூனூ பீத்துறீங்க?” என்று சக மாணவர்கள் அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அந்தப் பிஞ்சுகளின் மனதில் எந்தளவுக்கு நம் பாரம்பரியம் குறித்தும், அரசுப் பள்ளிகள் குறித்தும் நஞ்செண்ணம் விதைக்கப்பட்டிருக்கிறது? கற்றல் என்பது அறிவுக் கிளர்த்தலாக இல்லாமல், அந்தஸ்தாக மாற்றப்பட்டிருப்பதே நம் பிரச்சினை.

சரி, நம் பேசு பொருளுக்கு வருவோம். தினை மாவும் கருப்பட்டியும் கலந்து அதிரசம் சுடலாம். அரிசி மாவுக்குரிய அதே பக்குவம்தான். அதேபோலக் கருப்பட்டிப் பாகில் தினை மாவைக் கரைத்து அச்சு முறுக்கும் சுடலாம்.

உரம் தேவையில்லை

தினையே வெயில் நிறத்தில்தான் மினுமினுக்கும். எனவே, அதுவொரு வெப்பமான தானியம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. பொதுவாகவே சிறுதானியங்கள் வெப்பமானவை என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். வெப்பமான நிலத்தில் வெப்பத்தைக் குடித்து வளரும் இவற்றுக்கு உரமே தேவையில்லை. இயற்கையான உரத்துக்கு மாற்றாக ரசாயன உரம் போட்டால் பயிர்கள் கருகி விடும். ரசாயனக் கலப்பு சிறிதும் அற்ற சிறுதானியங்கள் நம் உடலுக்கு மிகுந்த நலம் தரும்.

அதேநேரத்தில் சிறுதானிய உணவு வகைகளை உண்பதற்கு நம் உடலைக் கொஞ்சங் கொஞ்சமாகப் பழக்கப்படுத்தினால் மட்டுமே, தற்காலத்து உடல் ஏற்றுக்கொள்ளும்.

உடலைத் தயார்படுத்துங்கள்

தற்காலத்தில் சத்தற்ற சக்கையான உணவையே பெரும்பாலும் உண்டு வருகிறோம். அவற்றை மட்டுமே செரித்துப் பழக்கப்பட்ட நிலையில், திடீரென்று உயிர்ச்சத்துகள் நிரம்பிய சிறுதானிய உணவை உண்கிறபோது, நமது உடல் தகவமைத்துக்கொள்ளச் சற்றே தடுமாறலாம். அந்த வகையில் தொடக்கத்தில் வயிற்று வலியும், வயிற்றுப் போக்கும் ஏற்படுவது இயற்கையானதே. இதுதான் சாக்கு என்று நினைத்துச் சிறுதானியங்களைத் தள்ளி வைக்க வேண்டியதில்லை. பொதுவாகச் சிறுதானியங்களை நீர்த்த கஞ்சி வடிவத்தில் அருந்திப் பழகுவதே உடல்நலனுக்கு ஏற்றது.

புளித்த மாவுக்குத் தடை

வாரம் முழுதும் இட்லி, தோசை. தோசை, இட்லி என்று மாறி மாறி உண்டி வகைகளைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கும் நாம், ஒரே மாவில் பலவகையான பதார்த்தங்களைச் செய்வதில் பலே கில்லாடிகள்.

மாவே புளித்த மாவு. அந்தப் புளித்த மாவில் வெந்த இட்லிகளைப் பொடித்துப் போட்டு உப்புமாவும், நுரைத்த மாவின் புளிப்பை மறைக்க வெங்காயத்தை வெட்டிப் போட்டு வெங்காய ஊத்தப்பமும் செய்து, சொந்த உடலுக்குத் துரோகம் செய்துகொள்வதில் நம்மைவிட தேர்ந்தவர் எவர் உளர்?

மாவுக்கு எப்படிக் குடுமி வைத்தாலும், அதன் புளிப்பு அடையாளம் தெரியாமல் போய்விடுமா என்ன? அந்தப் புளிப்பு மாவில் இருந்து நம் வயிற்றுக்கும் உடலுக்கும் விடுதலை அளிக்க வாரத்தில் ஒரு நாளாவது கஞ்சி அருந்திச் சிறுதானியப் பயன்பாட்டைத் தொடங்கலாம்.

தானியக் கஞ்சி

நம் உடல் இயல்பாக இருக்கும் நாட்களில், மிதமான புறச்சூழல் நிலவும் நாட்களில் சிறுதானியக் கஞ்சி தயாரித்துப் பொட்டுக்கடலை தேங்காய் சட்னி தொட்டுச் சுவைத்துப் பருகலாம்.

உமிப் போர்வை போர்த்தாத கேழ்வரகு, கம்பு போன்றவற்றை முளை கட்டியும், தினை, சாமை, குதிரைவாலி போன்றவற்றை ஊற வைத்து, உலரவிட்டு மாவாக அரைத்து வைத்துக்கொண்டால் கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்கலாம். மெய்யாகவே சில நிமிடங்களில் தயாராகிவிடும் இந்த ‘சத்து மாவு கஞ்சி’, வயிற்றின் செரிமானத் திறனை அதிகரிக்கும். அதே நேரத்தில், உடலுக்கு மிகுந்த ஆற்றலை அள்ளிக் கொடுக்கும்.

பள்ளிக்குப் போகும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் விடுமுறை நாளில் இதுபோன்ற கஞ்சிகளுக்குப் பழக்கப்படுத்தி வைத்தால், துரிதப் பலகாரங்களைத் தேடி ஓட வேண்டியதில்லை. பசி என்றதும் நிமிடங்களில் தயாரித்து, மனமாரப் பசியாறலாம்.

எரிக்காமல் கரைக்க முடியுமா?

விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்வோருக்கும் உடற்பயிற்சி செய்வோருக்கும் ‘சத்து மாவுக் கஞ்சி’ ஊக்கச் சக்தியின் ரகசியமாக விளங்கும். மினுமினுப்பான தொப்பை கீழ் நோக்கி இறங்கத் தொடங்கியதும் ஆயிரக்கணக்கில் செலவு செய்து டிராக் சூட்டும் ஸ்போர்ட்ஸ் ஷூவும் வாங்கிவிடுகிறார்கள். அப்புறம், ஆரோக்கியம் தானாகவே உடல் தேடி வந்து சேரும் என்று கனவுலகில் மிதக்கிறார்கள்.

இன்னமும் வணிக வளாகம் கட்டாத நகர மைதானத்தில் உடலை முறுக்கி நடை பயில விரும்பும் நடுத்தர வயதினருக்கு எனது பணிவான உடல்நலக் குறிப்பு, முதலில் சத்து மாவுக் கஞ்சிக்கு மாறுங்கள். டிராக் சூட் இன்றியே ‘ஜிம் பாடிக்காரர்’ ஆவீர்கள்.

முதலில் தேவையற்ற சதையை எரிக்காமல், அதை அப்படியே திரண்ட சதையாக எப்படி மாற்ற முடியும்? எளிய, அதேநேரம் சத்து மிகுந்த உணவுக்கு மாறும்போது உடலின் செரிமான மண்டலம் தூய்மை அடைவதுடன் உபரிச் சதையும் தானாகவே வெளியேறும். அவற்றை முறுக்கிப் பிழிந்து காயப்போட வேண்டியதில்லை.

சத்து மாவுக் கஞ்சி, தானியக் கஞ்சி, தானியப் பலகாரங்கள் என்று அடுத்தடுத்த படிநிலைகளுக்கு நாம் தயாராக இருந்தால், உடல் தானாகவே வனப்பு பெறும். நம் குழந்தைகளும் உடல்நலம் பெறுவார்கள்.

(அடுத்த வாரம்: அரிசியை ஒதுக்க வேண்டாம்)

http://tamil.thehindu.com/general/health/உயிர்-வளர்த்தேனே-16-தானியக்-கஞ்சிக்குத்-தயாரா/article9452822.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உயிர் வளர்த்தேனே 17: அரிசியை ஊரை விட்டு ஒதுக்க வேண்டாம்

 

 
rice

சிறுதானியங்கள் பற்றி மட்டுமே இந்தத் தொடரில் தொடர்ந்து பேசிவருவதால் அரிசியின் மீது மறுப்புணர்வு இருக்குமோ என்று பலரும் நினைக்கலாம். ஆனால், இல்லை. முப்போதும் எப்போதும் அரிசியை மட்டுமே சார்ந்திருப்பதைத்தான் நாம் மறுக்க வேண்டும்.

மெத்தென்ற அரிசிச் சோற்றை மெல்லுகிறபோது முதலில் இளம் இனிப்புச் சுவையும், அடுத்து மென்மையான துவர்ப்பும், கசப்பும் கூடி இறுதியில் உப்பாக நாவில் நின்று நர்த்தனமாடும். நிதானமாக அரைத்துக் கூழாகித் தொண்டையில் இறங்குகிறபோதும், ஒரு மலர், காம்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு தரையில் வந்து அமர்வதுபோல இரைப்பையைச் சென்றடைகிறபோதும் அரிசிச் சோறு தரும் சுகமே அலாதிதான்.

அரிசி ஆர்வம்

எனக்கு நெருக்கமான அண்ணன் ஒருவர் இருக்கிறார். மூன்று வேளையும் எதை ருசித்து, எவ்வளவு உண்டாலும் அவருக்கு வயிறும், மனதும் அடங்காது. இறுதியாக ஒரு கவளம் சோற்றைத் தயிர் அல்லது மோரில் பிசைந்து சுவர்ப் பூச்சுக்குச் சிமிண்டு சாந்து அறைவதுபோல் கப்பென்று அறைந்தால்தான் `ஹப்ப்ப்ப்பா…’ என்று அவருக்கு நிறைவாக இருக்கும். அரிசியின் மீது பலருக்கும் இதே பிடிப்பு உண்டு.

அதிலும் நேற்றிரவு ஆறின சோற்றில் வடி கஞ்சி ஊற்றி, உப்பு போட்டு ஊற வைத்த பழைய சோற்றை மையாகப் பிசைந்து, பிசைக்குத் தப்பிய பருக்கைகளைத் (தெலுங்கில் இதை `மெதுக்குலு’ என்பர். எவ்வளவு பொருத்தமான பெயர்) வலையில் மீனை அரித்து எடுப்பதுபோல் விரல்களில் திரட்டி, உருண்டை பிடித்து, வாயில் நிரப்பி மென்று உள்ளிறக்கி, அதே வாயில் நீராகாரத்தையும் இரண்டு வாய் குடித்தால் சொர்க்கமே நமக்குப் பக்கத்தில் வரும். நல்ல வெயில் நேரத்தில் அந்த மப்புடன் வேப்ப மரத்தடியில் தூங்கினால் சொர்க்கம் நம் கண்ணுக்குள் நிலைக்கும். இத்தனை சுகம் தருவதால்தான் அரிசி நமக்கு முதன்மை உணவாக இருக்கிறது. உலகின் பெரும்பகுதி மக்களுக்கும் அதுதான் முதன்மை உணவு.

அரிசியின்றிக் கழிவதில்லை

உலகின் வெவ்வேறு ஆற்றின் கரையொட்டிய பகுதிகளில் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் நெல் வேளாண்மை தோன்றியிருக்கும் என்பது பொதுவான ஒரு அனுமானம். உலகின் பெரும்பகுதி உணவுத் தேவையை ஈடுசெய்வது அரிசியே. அதிலும் குறிப்பாகத் தென்னிந்தியர்களான நமக்கு, ஒவ்வொரு பொழுதும் அரிசியின்றிக் கழிவதில்லை.

ஏழைத் தாய்மார்கள் தங்களிடம் இருப்பில் உள்ள கடைசிப் பிடியரிசியை உலையில் இடும்போது, அவர்களது அடிவயிற்றில் இனம் புரியாத பயம் கிடுகிடுக்கும். இந்தப் பயம் வேளாண் கலாச்சாரம் சார்ந்தது. முன்பு ஒவ்வொரு விவசாயக் கூலித் தொழிலாளி வீட்டிலும்கூட மூலை அடுக்குப் பானைகளில் தானியங்கள் சேமிக்கப்பட்டிருக்கும்.

நாம் முன்னரே சொன்னதுபோல இன்று குதிர்களும், அடுக்குப் பானைகளும் முற்றாக வழக்கொழிந்து, அடுப்பிலே உலை வைத்துவிட்டு, சுருட்டின ரூபாய் நோட்டை விரித்துக்கொண்டு அரிசி வாங்கக் கடைக்கு ஓடுகிறார்கள் தாய்மார்கள். 1960-களின் மத்தியில் தொடங்கிய பசுமைப் புரட்சிக்குப் பின்னரே நெல் விளைச்சல் பரவலானது. பசுமைப் புரட்சி நிலத்தினின்றும் சிறுதானி யங்களை அகற்றிவிட்டு, ஏகபோக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.

அரிசி அரசியல்

தமிழகத்தில் அரிசி ஏகபோக இடத்தைப் பிடித்ததைப் போலவே மற்ற நாடுகளிலும் மற்ற தானிய விளைச்சல் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை, பெருஞ்சோளமாகிய மக்காச் சோளம் ஆகிய மூன்றும் இப்படிப் பேராதிக்கம் செலுத்துகின்றன (நம்முடைய நாட்டுச் சோளம் எளிதில் மட்கிவிடும். அமெரிக்க மஞ்சள் சோளம் அவ்வளவு எளிதில் மட்குவதில்லை. அதனால் இதற்கு மக்காச் சோளமென்று பெயர் வைத்துள்ளனர் நம் மக்கள்). இவை மூன்றையும் பெரு உற்பத்திக்கும், ஆலை சார்ந்த வணிகப் பண்ட உற்பத்திக்கும் பயன்படுத்துவது எளிது. அதனால் அரிசி, கோதுமை, மக்காச் சோளம் ஆகிய மூன்றும் ஏகபோக நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன. இதற்குப் பின்னுள்ள விரிவான அரசியலைப் பேசுவதற்கான களம் இதுவல்ல.

அண்ணா காலத்தில் தமிழக அரசியலைப் புரட்டிப் போட்ட ஒரு முக்கியக் கருவியாக அரிசி இருந்தது. அப்போது ‘ரூபாய்க்கு ஒரு படியரிசி நிச்சயம், மூன்று படியரிசி லட்சியம்’ என்பது திமுகவின் 1967 சட்டமன்றத் தேர்தல் முழக்கம். கருணாநிதியின் அதிகாரம் எம்.ஜி.ஆர். கைக்கு மாறியதற்குக் காரணம் அரசியல் மட்டுமல்ல. `அரிசி’யியல் காரணமும் உண்டு.

விசேஷ அரிசி

விவசாயக் குடும்பங்களில் சிறுதானியமே முதன்மை உணவு என்றாலும் அரிசிக்குக் கூடுதல் முக்கியத்துவம் இருக்கத்தான் செய்தது. ஆற்றுப் பாசனம், ஏரிப் பாசனம் என நீர் வசதி நிரம்பிய பகுதிகளில் இரண்டு மூன்று போகங்களாக நெல் விளைவிக்கப்பட்டது.

என்னதான் சிறுதானியங்கள் சத்து மிகுந்தவை என்றாலும் ஒரு விசேஷம், சடங்கு, சம்பிரதாயம், கொண்டாட்டங்கள் அனைத்திலும் முதலிடத்தைப் பிடித்திருப்பது நெல்லும் அரிசியும்தான். அதற்குப் பின்புலத்திலும் ஒரு காரணி உண்டு என்றாலும் இங்கே அதற்குள் இறங்க வேண்டாம்.

மறைந்த பிள்ளைச் சோறு

மிதமான சுவையுடைய அரிசிச் சோறு செரிக்க எளிதானது. நிறைய எரிமச் சத்தை வழங்கக்கூடியது. உடல் பலவீனமானவர்களுக்கு, திட உணவு உண்ணத் தொடங்கும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.

அரிசிச் சோறு வடிக்காத விவசாயக் குடும்பங்களில் குழந்தை இருந்தால், அக்குழந்தைகளுக்கு ஊட்டுவதற்கு அரிசிச் சோறு வடிக்கிறவர்கள் முதல் வேலையாகக் கிண்ணத்தில் போட்டு, சம்பந்தப்பட்ட வீட்டுக்குக் கொடுத்தனுப்பி விடுவார்கள். கொடுப்பவர்களுக்கும் பெறுகிறவர்களுக்கும் சண்டை இருந்தால்கூட ‘பிள்ளை சோறு’ கிண்ணம் நகர்வது நின்று போகாது. பிள்ளைச் சோறு தரத் தவறுவதும், பெரியவர்கள் சண்டையை முன்னிட்டுப் பிள்ளைச் சோற்றைப் பெற மறுப்பதும் பாவம் என்று கருதுகிற உயரிய பண்பு பசுமைப் புரட்சி வரையும் தமிழகக் கிராமங்களில் நீடித்தது.

மறையாத பொங்கலின் சுவை

‘அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறு கை அளாவிய கூழ்’ என்று வள்ளுவர் சொல்கிற அளவுக்கு இல்லாவிட்டாலும், பிள்ளைக்கு ஊட்டுவதற்காக அன்னையின் கை நையப் பிசைகிற சோறும் பெருமளவு இனிதுதான். சோற்றைப் பிசைகிற அம்மாவின் விரலிடுக்கில் பிதுங்கி நிற்கும் வெள்ளை முத்துகளை வழித்து நக்கி மகிழும் பெரிய பிள்ளைகளாக நீங்கள் இருந்ததில்லையா?

கிராமத்துக் கோயில்களில் அன்றாடம் மாலை வேளையில் மணியடித்துப் பூசை செய்து அரச இலையில் பிடியளவு பொங்கல் தருவார்கள். பொங்கல் என்றாலே வெல்லம், நெய் என்ற படிமத்தை வழித்து எடுத்துவிடுங்கள்.

பச்சை நெல்லை பூசாரினி உரலில் இட்டுக் குற்றிய இளஞ்சிவப்பு அரிசியை எதுவுமே போடாமல் பொங்கி, கறுப்பாக எண்ணெய்ப் பிசுக்கு பிடித்த பிள்ளையாருக்குப் படைப்பார்கள். உள்ளங்கை பொத்துப் போகும் அளவுக்கான சூட்டுடன் அரச இலையில் தரப்படும் அந்தப் பொங்கலை ஆள்காட்டி விரலால் தொட்டு நாக்கில் வைத்தாலே, தலைக்குச் சுரீர் என்று ஏறும். அத்தனை சுவை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நான் சுவைத்தது, நினைக்குந்தோறும் நாவில் நீர் ஊறச் செய்கிறது.

அந்தச் சுவை அரை நூற்றாண்டில் எங்கே தொலைந்தது? பிளீச் செய்தது போன்ற இன்றைய மின்னலடிக்கும் பளீர் வெள்ளை அரிசி நமக்கு ஏற்றதுதானா? இதை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து அடுத்தடுத்த வாரங்களில் பார்ப்போம்.

http://tamil.thehindu.com

Link to comment
Share on other sites

உயிர் வளர்த்தேனே 18: ததும்பி நிற்கும் தனிச் சுவை

 

 

இன்றைய அரிசி உயிர்ப் பண்பில் சக்கையாகவும், உட்கூறில் வெறும் ரசாயனக் கூடாகவும் இருக்கிறது. இது எப்போது இப்படி மாற்றப்பட்டது என்பது குறித்து அப்புறம் பார்ப்போம். அரிசியைப் பயனுள்ள வகையில் நாம் ஏற்கிறோமா என்பதை முதலில் பார்ப்போம்.

இதோ உழவர் பெருநாளாம் பொங்கல் வந்துவிட்டது. தை மாதத்தில் முற்றிய நெற்கதிர்களை அறுவடை செய்யும் முன், கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கும் படையலே பொங்கல். தமிழர்களின் தனிப் பண்டிகையாம் தைத் திருநாளில், புத்தரிசியைப் பொங்கும் நிலையில் இந்த முறை நாம் இல்லை. உழவர்களின் நிலை கண்டு பொங்க வேண்டிய சூழல்தான் இன்றுள்ளது.

இயந்திரத்தில் இட்டுத் தீட்டாத அரிசியை வெறுமே பொங்கினாலே போதும் நாவைச் சுழற்றத் தோன்றும் சுவை, அப்பொங்கலில் ததும்பி நிற்கும்.

இயற்கை படையல்

நெல் மணி முற்றிய வயலில் சூரியனின் வடதிசை நோக்கிய பயணத்தின் அடையாளமாக வயலின் வடகிழக்கு மூலையில் பத்திருபது கதிர்களை அறுத்து, அங்கேயே உரலில் இட்டுக் குற்றி, வயலின் வடகிழக்கு மூலையில் அடுப்பு கூட்டி, புது மண் பானையில் பாலையே உலையாக ஊற்றி, பொங்கும்போது ஊர் கூடி மகிழ்வுப் பெருக்கோடு குலவையிடும்போது மழை பெய்வது போல உலையில் அரிசியைப் பெய்வார்கள்.

கரும்புச் சாறு காய்ச்சும்போது பொங்கலில் பெய்வதற்கென்றே எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்த சர்க்கரையைப் போட்டுக் கிண்டி இறக்கியதும் வயலின் ஈசான மூலையிலேயே படையலிடுவார்கள். அல்லது காவல் தெய்வமாம் அய்யனார், வயல் நடுவே மேட்டிலேயே பிதுங்கிய விழிகளுடனும், கறுகறுத்த வெற்று மேனியுடனும், கையில் உயர்த்திய அரிவாளுடனும் நிற்பார். அவரது இடுப்புக்குப் புதுத் துணியைச் சுற்றிப் படையலிட்டு ஊரே பகிர்ந்துண்ணும். இந்த அடையாளப் பொங்கலைப் படைத்து, அறுவடையை முடித்த பின்னரே பெரும் பொங்கல் கொண்டாடப் பெறும்.

இன்று சாப்பாட்டு அரிசியிலேயே ரெண்டு பிடி எடுத்துக் குக்கரில் போட்டு, மூணு விசிலா நாலு விசிலா என்று குழம்பி இறக்கி, ஏகத்துக்கும் முந்திரித் திராட்சைகளைச் செயற்கை மணமூட்டும் நெய்யில் பொரித்துக் கலந்து தயாரிக்கும் பொங்கல், லாலா கடை இனிப்பைப் போலவே இருக்கிறது. இயற்கைப் பால் மணக்கும் பொங்கலை இனி என்றைக்குச் சுவைப்போமோ எனும் ஏக்கத்தை ஒத்தி வைத்து விட்டு அரிசிக்குப் போவோம்.

அரிசி எங்கிருந்து வருகிறது?

அரிசி எதில் இருக்கிறது?. பிளாஸ்டிக் பையில் இருக்கிறது. பிளாஸ்டிக் அரிசிப் பை எங்கிருந்து வந்தது? அரிசி மண்டி அல்லது சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வந்தது. சரி, அந்த அரிசி எதிலிருந்து வந்தது? இந்தக் கேள்விக்கு விடை சொன்னால் இரண்டு மதிப்பெண்ணா ஐந்து மதிப்பெண்ணா என்று திருப்பிக் கேட்கும் நிலையில்தான் இருக்கிறது இன்றைய தலைமுறை. அதற்கு நெல்லில் இருந்து கிடைக்கிறது என்ற உண்மை தெரியாத அளவுக்கு ஆலைப் பண்டமாகி விட்டது நம் அரிசி.

இயந்திரத்தில் இட்டு உமியைப் பிரிப்பதற்கு எளிதாக நெல்லை அரை வேக்காடாக நீராவியில் வேக வைத்த அரிசியைத்தான் ஒட்டு மொத்தமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

யாருக்கு எந்த அரிசி?

உடலுழைப்பு குறைவாகச் செலுத்துவோருக்குப் பச்சரிசி, கடின உழைப்பாளிகளுக்குப் புழுங்கல் அரிசி என்ற பாகுபாடு குறிப்பறியாத ஒரு நாளில் மறைந்து போனது. அனைவருக்கும் பொதுவாகி விட்டது அரை வேக்காட்டு அரிசி. இந்த அளவுக்குச் சமூகம் ஆலைமயமாகிவிட்ட பின்னர், தொலைந்தொழிய வேண்டிய சாதியம் மட்டும் விட்டபாடில்லை.

பச்சை நெல்லை மொத்தமாகக் குற்றி அரிசியாக்கி வைத்தால் புழு பிடித்துவிடும் என்பதற்காக, அவ்வப்போதுக் குற்றி பயன்படுத்துவார்கள். அரிசியை உரலில் இட்டுக் குற்றும்போதே வாசனை கமகமவென்று மணக்கும். பச்சரிசி உலையில் கொதிக்கும்போதும் உயிரை ஈர்க்கும் ஒரு வாசத்தைப் பரப்பும். சோற்றின் சுவையில் இனிப்பு முதலிடம் பிடித்திருக்கும்.

அரிசியாக்கும் தனிக் கலை

உடலை வளைத்துக் கடின வேலைகளைச் செய்யாதவர்கள் பச்சரிசி உண்பார்கள். கடின உழைப்பு செய்வோருக்குப் பச்சரிசி கட்டுப்படியாகாது. எனவே உமிக்கும் அரிசிக்கும் இடையில் உள்ள உயிர்ச் சத்து, தாதுச் சத்துப் படிவத்தை மாவுப் பண்பு நிறைந்த அரிசியில் ஏற்றி வைக்கும் விதமாக மாற்றுவார்கள். நெல்லை ஒரு நாள் ஊற வைத்து, நீரை வடித்து விட்டு நிதானமான வெப்பத்தில் புழுங்க விடுவார்கள். புழுங்கின நெல்லை இளம் வெயிலில் பரப்பிவிடுவார்கள். ஆவி பறக்கும் அவித்த நெல்லின் வாசம் அந்தப் பிரதேசத்தை விட்டு அகலாமல் செல்லப் பிராணி போல ஓரிரு நாட்களுக்கு அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும்.

நெல்லைப் புழுங்க வைப்பதையே ஒரு கலையாகக் கற்று வைத்திருந்தது நம்முடைய வேளாண் சமூகம். நெல்லைப் புழுங்க வைப்பது மட்டுமல்ல, அரிசி முறுகி விடாத அளவுக்குப் பக்குவமாக இளம் வெயிலில் காய வைப்பதும் தனிக் கலை.

நெல் அவித்து, காய வைத்து, அரவை எந்திரத்தில் இட்டு அரைத்து வீடு கொண்டுவந்து சேர்ப்பது ஒட்டுமொத்தக் குடும்பத்துக்கும் ஒருவார வேலை. அரிசியோடு உபரியாக உமியும் தவிடும் ‘நானும் வர்ரேனே’ என்று வீடு வந்து சேரும்.

சத்து நிறைந்த தவிடு!

தவிட்டை முறத்தில் இட்டுத் தெள்ளினால் மென்மையான நெய்த் தவிடு கிடைக்கும். இந்தத் தவிட்டுடன் வெல்லம் போட்டுப் பிசைந்து உருண்டை பிடித்துப் பிள்ளைகளுக்குத் தின்பண்டமாகக் கொடுப்பார்கள்.

உயிர்ச் சத்து மிகுந்த அத்தகைய இயற்கையான பண்டங்கள்தாம் என்னைப் போன்ற முந்தைய தலைமுறைக்கு உடலுக்கு உரமாகவும் உழைப்புக்கு ஆதாரமாகவும் அமைந்தன. கடையில் விற்கும் பண்டங்களில்கூட எள்ளு மிட்டாய் என்றும் கசகசா மிட்டாய் என்றும் உடலுக்கு ஊக்கம் தரும் பண்டங்களே கிடைத்தன. சமையலுக்கும் மருந்துக்கும் பயன்பட்டுவந்த மசாலாவில் முக்கியமான ஒன்றான கசகசா, மெதுமெதுவாக வழக்கொழிந்துவருகிறது.

அரைத்த நெல்லின் நெய்த் தவிடு, பிள்ளைகளுக்குப் பண்டமாவதுபோலப் பருத்த பருந்தவிடு மாடுகளுக்கு இஷ்ட உணவாக இருந்தது. நோயுற்ற கன்றும் மாடும் விரைவில் தேறுவதற்குத் தவிட்டை எடுத்து வடித்த கஞ்சியில் கட்டியாகப் பிசைந்து ஊட்டுவார்கள்.

காட்டு வேலைகள் தீவிரமாக நடக்கும் காலங்களில் மாடுகளிடம் கடின வேலை வாங்குவதற்காக மாட்டுத் தொட்டி நீரில் தவிட்டைக் கட்டியாகக் கரைத்து விடுவார்கள். அத்தனை சத்து மிகுந்த தவிடுகூட, இன்று நம் பார்வையில் இருந்து மறைந்து வருகிறது.

கஞ்சித் தண்ணியின் வலிமை

சில நோய்களுக்குத் தவிட்டைச் சூடுபடுத்தி ஒத்தடம் கொடுத்து, ஆற்றலும் வெப்பமும் புறத் தோல் வழியாக உள்ளுக்குள் செலுத்தப்பட்டால், நெருக்கடியான கட்டத்தில் இருந்து நோயாளி விரைவில் மீட்சி பெறுவார். அத்தகைய மருத்துவப் பயன்பாட்டுக்கும் கிடைக்காத அரிய பொருளாகத் தவிடு மாறிவிட்டது.

தவிட்டில் எண்ணெய் எடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. தவிட்டு எண்ணெய் என்ற பெயரில் எண்ணெய் பாக்கெட்டுகள் சந்தையில் பரவலாகிவருகின்றன. அதை அப்படியே நம்புவதற்கில்லை. அரிசியை பாலிஷ் செய்யும் முறையில் எடுக்கப்படும் எண்ணெய், வைட்டமின் மாத்திரைகளுக்கு மூலக்கூறாகப் பயன்படுத்தப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கிடைக்கின்றன.

தவிட்டுக்கே இத்தனை உயரிய குணங்கள் உள்ளபோது தவிட்டின் உள்ளுறையும் அரிசி, வலிமை மிக்கதாகத் தானே இருக்க வேண்டும்.

ஆம், அரிசியை வேக வைத்து, வடித்து எடுக்கிற நீரே உடலுக்கு மிகுந்த வலிமை தருவதுதான். கிராமத்துப் பள்ளிகளில் மாணவர்களை உள்ளங்கை நீட்டச் சொல்லிப் பிரம்படி தருகிறபோது கையைப் பின்னுக்கு இழுக்காத மாணவனைப் பார்த்து ஆசிரியர் கேட்பார் ‘ஏண்டா கஞ்சி தண்ணியில கருப்பட்டி கரைச்சி மண்டுறியோ (குடிக்கிறியோ)’ என்று கேட்பார். அந்த அளவுக்குக் கஞ்சி தண்ணியின் வலிமை பிரசித்தம்.

எளிய அரிசிக் கஞ்சிகள் குறித்து அடுத்த வாரம் பார்ப்போம்.

http://tamil.thehindu.com/general/health/உயிர்-வளர்த்தேனே-18-ததும்பி-நிற்கும்-தனிச்-சுவை/article9479080.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்த்தேனே 19: வடிகஞ்சியின் மகிமை

 

 
uyir

ஊறவிட்டு நீர் வடித்த அரிசியை, கொதிக்கிற உலையில் போடுகிற காட்சியே கண்ணுக்கு அலாதி சுகம். ஆடிப் பதினெட்டு அன்றைக்கு நீர் தேவதையை வழிபட்டு ஆறு, குளங்களில் பூக்களைச் சொரிவதுபோல கொதிக்கிற நீரும் அடங்க வேண்டும், அரிசியையும் கொதி வெப்பம் தாக்கி விடக்கூடாது என்பதுபோல சடங்காகத் தூவுவார்கள்.

திகுதிகுவென எரியும் தீயின் நாவுகளை சற்றே தணிப்பார்கள். காதலன் காதலி சரசமாடுவது போல ‘சள’ ’சள’வென்று நீரும் அரிசியும் ஒன்றினுள் ஒன்றாகத் தம்மை இழைத்துக்கொள்ளும். ஊறின அரிசி, தன்னை வெப்பத்தில் நெகிழ்ந்து நீரை உள்வாங்கும். அரிசியின் வீரியத்தை நீர் தன்னில் ஏற்றுக்கொள்ளும்.

இந்த இயற்பியல், வேதியியல் மாற்றங்களுக்குப் பிறகு அரிசி பூவாக மலர்ந்து மணம் வீசும். வெந்த சோற்றைப் பதம் பார்ப்பதெல்லாம் வடிப்பதற்கு முன் நிகழ்த்தும் வெறும் சடங்குதான். அரிசியின் வெந்த மணமே “இதோ நான் தயார், வா என்னை ஏற்றுக்கொள்” என்று மென்னழைப்பு விடுக்கும். ‘உலை மூடி’, ‘கண் தட்டு’ என்று நம் சமையல் அறைகளில் உலவிய ஒரு பாத்திரம் இன்று முற்றாக குணம் இழந்துவிட்டது. வடித்தல் பண்பும் முற்றாக வழக்கொழிந்து போனது.

சோறு வடித்தலை இத்தனை விஸ்தாரமாகப் பேசுவதற்குக் காரணம், வடிகஞ்சியின் மேன்மையை உணர்வதற்காகவும் குக்கரில் விரைத்த சோற்றின் ஆபத்தை அறிவதற்காகவும்தான். முதலில் வடிகஞ்சியின் மகிமையைப் பார்ப்போம்.

‘பசுமைப் புரட்சி’ என்ற நிலத்தின் மீதான வன்புணர்ச்சிக்கு முன்னர், இங்கு விளைந்த அரிசியை வேக வைத்து வடிப்பார்கள். வடிக்கிற நீரை, சோற்றுக்குத் தரும் அதே மரியாதையுடன் ஒரு பாத்திரத்தில் பிடித்து வைப்பார்கள். வடிப்பது காலை நேரமாக இருந்தால், திட்டமிட்டே கட்டியாக வடிப்பார்கள். மாலை நேரமென்றால் நீர்க்க வடிப்பார்கள்.இரண்டுக்கும் பயன்பாடு மாறுபட்டிருப்பதே காரணம். கட்டியாக வடித்த கஞ்சி சற்று நேரத்தில் ஜெல்லாக உறைந்துவிடும்.

போலிகளின் உலா

உணவின் மூலப்பொருட்கள் அனைத்தும் ஆலைக்குச் சென்று சக்கையாக்கப்பட்டு, ரசாயனக் கலப்புடன்தான் விற்பனைக்கு வருகின்றன. அவற்றின் வெற்றுத்தன்மையை மறைக்கவே ஜிகுஜிகுப்பான பாக்கெட்டுகளில் பேக் செய்து, ‘100% நேச்சுரல்’, ‘ஆர்கானிக்’ என்றெல்லாம் கதிர் மணிகளைக் குளோசப்பில் படமெடுத்துப் போட்டு கவர்ச்சி காட்டுகிறார்கள். நாமும் ஏதோ மனச் சமாதானத்துடன் வாங்கிவந்து சமைத்து உண்டு, வயது பேதமில்லாமல் நோய்களின் ஊற்றுக் கண்ணாகத் திகழ்கிறோம்.

சவர்க்காரத்தின் வரவு

ஜெல்லாக திரண்ட வடி கஞ்சியைக் கலக்கி அதில் பருத்தித் துணியை முக்கிக் காயவைத்து இஸ்திரி போட்டால், துணி கத்தியைப் போன்று விரைத்து முடமுடப்பாக இருக்கும். அதே கஞ்சியை உடலுக்கும் தலைக்கும் தேய்த்து உலரவிட்டுக் குளித்தால் எண்ணெய் குளியலின் பலன்கள் கிடைக்கும். அந்தக் காலத்தில் வீட்டுக்கு வீடு சோப்பு என்ற சவர்க்காரத்தின் பயன்பாடு வெகு அபூர்வம். அதன் மூலப்பொருளை வெளிப்படுத்தும் ‘சவுக்காரம்’ என்ற சொல்லை இன்றளவும் சிங்கப்பூர், மலேசிய, இந்தோனேசியத் தமிழர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். என்னுடைய பெண், குளியலறையில் இருந்துகொண்டு ‘மம்மீ பிரிங் மீ சவுக்காரம்’ என்று குரல் கொடுத்து ஆங்கிலத்தைப் பழிவாங்கும் அழகை ரசித்திருக்கிறேன்.

அந்தக் கால சோப்பு

உப்பு, புளிப்பு, காரம் மூன்றும் மண்ணில் ஒன்றிணைகிறபோது, அதன் அரிப்புத்தன்மை மிகுதியாக இருக்கும். தொடர்ந்து நீர்த் தேங்கி புளிப்பேறிய மண், நீரின் உப்புத் தன்மையை உள்ளே ஈர்க்க முடியாமல் அப்படியே வைத்திருக்கும் நிலையில், வெயில் காய்ந்தால் நிலம் சப்பாத்தி உப்புவதுபோல் உப்பிப் பொடித்துப் போகும்.

இந்த மண்ணில் உப்பு, புளிப்பு, காரம் மூன்றின் சுவையும் மிகுந்திருக்கும். இந்த நீரில் துணியை முக்கிக் காய வைப்பார்கள். பின்னர் அதே துணியை ஆவியில் வேக வைப்பார்கள். இந்த வேக்காட்டில் துணியில் படிந்த அழுக்கும் கறையும் துணியை விட்டு வெளியேறும் பக்குவத்துக்கு வந்து விடும். அதை ஆற்று அல்லது ஓடை நீரில் அடித்துத் துவைக்கிறபோது அழுக்கும் கரையும் முற்றாக நீங்கி பளீரென்று ஜொலிக்கும். வண்ணார் துணி மூட்டையைப் பிரிக்கிறபோது உவர் மண்ணின் வாசத்துடன் வெயிலின் வாசமும் சேர்ந்து கம கமவென்று மணக்கும்.

கூந்தலை பராமரிக்கும்

சரி, நம் கதைக்கு வருவோம். துணியில் படிந்த அழுக்கையும் கரையையும் நீக்கவல்ல ‘சவர்க்கார’த்தின் மென்தன்மையை மட்டுமல்லாமல், உடலுக்கு ஊட்டம் தரும் எண்ணெயின் தன்மையையும் பெற்றிருந்தது நம் சோறு வடித்த கஞ்சி. வடித்த கஞ்சியில் குளித்தால் மேனி பளபளவென்று மின்னும்.

இது புனைவெழுத்தல்ல. சிறுவயது நினைவுடன் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் கைக்குத்தல் அரிசி வடித்த கஞ்சியைத் தலைமுடிக்குத் தேய்த்து உலரவிட்டுக் குளித்த முடித்தபோது தலைமுடியில் விரைப்புத்தன்மை ஏறியதை அனுபவப்பூர்வமாக உணர முடிந்தது. வடித்த கஞ்சியின் இந்த ‘ஜெல்’ தன்மைதான், நமது எலும்புக்கு வலிமையையும் நெகிழ்வையும் தரக்கூடியது.

உடனடி ஊட்டம்

மாலை நேரத்தில் சோறு வடிக்கிறபோது தாராளமாக இறங்கும்படி நீர் வைப்பார்கள். அவ்வாறு வடித்த கஞ்சியை மாலையில் விளையாடச் செல்லும் பிள்ளைகளுக்கு உப்புக் கலந்து கொடுப்பார்கள். இரவுச் சோற்றில் ஊற வைத்துக் காலையில் பழைய சோறு உண்பார்கள். நீருக்கு அடியில் கிடக்கும் பழைய சோற்றைத் துழாவிப் பிடித்து உருண்டை கட்டி, அதை மண் சட்டி சுண்ட குழம்பில் தொட்டுச் சுவைத்தால் ‘அடா…. அடா….’. நம் செல்கள் அத்தனையும் உயிர்த்துத் துளிர்ப்பதை குளுமையாக உணர முடியும்.

கால் கலையம் பழைய சோறு, அது நீஞ்சுவற்கு வசதியாக முக்கால் கலையம் நீச்சத்தண்ணி, அதன் மீது கொஞ்சி விளையாடும் நான்கைந்து சின்ன வெங்காயம் - இது போதும். ஒரு வெங்காயத்தை வாயிலிட்டு அரைத்த காரம் நீங்க நீராகாரத்தை அரை ஹார்ஸ் பவர் மோட்டார் வேகத்துக்கு உறிஞ்சிக் குடித்துவிட்டு, அரைக் குறுக்கம் நிலத்து மண்ணை உச்சிப் பொழுதுக்குள் புரட்டிப் போட்டு விடுவார் உடலில் உரம் ஏறிய ஒரு விவசாயி.

இன்று என்ன செய்கிறோம்?

இன்று சோற்றை வடித்துண்ணும் பழக்கத்தை மறந்தோம். முப்பத்தைந்து வயதைக் கடப்பதற்குள் ஆணும் பெண்ணும் முட்டி வலியால் அவதிப்படுகிறோம். அதிலும் கடந்த ஓரிரு ஆண்டுகளில் இருபது வயதைக் கடக்காத இளைஞர், இளைஞிகளுக்கும் இத்தொல்லை அதிகரித்துவருவது மனதை நடுங்கச் செய்கிறது.

சோற்றை இன்று நாம் மலர வேக விடுவதில்லை. குக்கரின் அழுத்தத்தில் அரிசியை மிரட்டிப் பணிய வைக்கிறோம். நீரும் அரிசியும் ஒரு புரிதலுக்கு வரும் முன்னர் ஐந்தே நிமிடத்தில் ‘உஸ்ஷ்….’ என்று விசிலடிக்கையில் கான்கிரீட் சுவர்களே அதிர்ந்து நடுங்குகின்றன. அடுப்பை அணைக்க அலறிப் பிடித்து ஓடும் அன்னையருக்குப் ‘பி.பி’ எகிறுகிறது.

அரிசியின் அனைத்துச் சத்துகளையும் சிதைத்து, விரைத்த அரிசியை சூயிங்கத்தை மெல்லுவதுபோல் மெல்லுகிறோம். ‘அரைவேனா’ என்று சவால் விடும் சோற்றை, வேறு வழியே இல்லாமல் குழம்புகளின் தயவால் துவட்டி தொண்டைக் குழிக்குள் தள்ளுகிறோம். அதுவும் ஒரு டிவி, நியூஸ் பேப்பர், அரட்டை போன்றவற்றின் துணையில்லாமல் தொண்டைக்குள் செல்ல மறுக்கிறது.

வெறும் சோற்றை மென்று பார்த்த நினைவிருக்கிறதா உங்களுக்கு…? அது எத்தனை மதுரமான சுவை …? சோறு தனிச் சுவை….. வடித்த கஞ்சி இன்னொரு சுவை….. சோறும் கஞ்சியும் செம்புலப் பெயல் நீரெனப் பிரிக்க முடியாத சூட்டில் கலந்திருந்தால் அதுவொரு தனிச் சுவை.

http://tamil.thehindu.com/general/health/உயிர்-வளர்த்தேனே-19-வடிகஞ்சியின்-மகிமை/article9492841.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்த்தேனே 20: ஆசிய நாடுகளில் ஆட்சி செலுத்தும் கஞ்சி

 
kanji%202

குக்கர் அறிமுகமான புதிதில் அதனுள் அடங்கும் ஒரு பாத்திரத்தில் அரிசியும், பொருத்தமான அளவில் தண்ணீரும் வைத்து மூடி, அதற்குப் பின்னர் குக்கரின் மூடியைப் போட்டு அடுப்பில் ஏற்றுவார்கள். அதிலாவது சற்றுக் கஞ்சித் தன்மையுடன் கூடிய சோற்றை ருசிக்க முடிந்தது. இந்த முறையில் அரிசியின் சத்துகள் முழுமையாகச் சிதையாது.

காரணம், அரிசியை நேரடியாக ஆவி தாக்குவதில்லை என்பதால் அழுத்தம் குறைவாகச் செலுத்தப்படும். அரிசி, நீரில் தளதளத்து மலர்ந்து வேகச் சற்றேனும் கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ள வாய்ப்பிருக்கும். சோறும் ஓரளவு சுவையாக இருக்கும்.

சோற்றை மீண்டும் சூடுபடுத்தலாமா?

ஆனால், இன்று அநேக வீடுகளில் அரிசியைக் கழுவோ கழுவென்று கழுவி நேரடியாகக் குக்கரில் போட்டு, நீர் ஊற்றி நீராவியின் நேரடி அழுத்தத்தில் வேகவைப்பதால் சோறு, எரிமச் சத்துகள் மிகுந்து, நுண்சத்துகள் முற்றாகச் சிதைந்து விடுகின்றன. இன்னும் பல வீடுகளில் மின்சார குக்கரில் சோற்றை அவிப்பதுடன், அவ்வப்போதுச் சூடாகச் சாப்பிடுவதற்காகச் சிறிதளவு நீர் ஊற்றி மறு சூடு ஏற்றுகிறார்கள். மறு சூடேற்றிய சோற்றில் ஆவி பறக்கும். ஆனால் சுவையிருக்காது.

எந்த உணவில் அதற்குரிய இயல்பான சுவையில்லையோ, அதில் சத்தும் முழுமையாகக் கிடைக்காது. “பரபரப்பான இன்றைய வாழ்க்கை முறையில், அதெல்லாம் பார்க்க எங்க சார் நேரமிருக்கு?” என்ற சமாதானத்தை உடனடியாகக் கையில் வைத்திருக்கிறோம்.

உடல், பாழடைந்த வீடா?

இயல்பான சுவைக்கு மாறாக எப்போது புளிப்பு, காரம், உப்பைப் போன்று நாவை வன்மமாகத் தாக்கும் சுவையைச் சார்ந்திருக்கத் தொடங்கினோமோ, அன்றைக்கு நம் உடலில் உயிரின் சாரம் குறையத் தொடங்கும். உயிரின் சாரம் குறைகிற உடலில் நோய்கள் குடியேறத் தொடங்கும். பாழடைந்த வீட்டில் விஷ ஜந்துகள் குடியேறுவதைப்போல.

வெள்ளையாக இருந்தால் போதுமா?

நாம் உண்கிற உணவில் பெரும்பங்கு அரிசி. ஆனால், அதற்கு உரிய மரியாதையைக் கொடுக்கிறோமா? இன்றைய தலைமுறையினர் பலருக்கும் பச்சரிசி, புழுங்கலரிசி, அரை வேக்காட்டு அரிசி ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகள் தெரியவில்லை. இதற்குப் பொருள் அரிசியில் பேதம் இல்லை என்ற பெருந்தன்மை அல்ல. பச்சையோ புழுங்கலோ எதுவானாலும் வெள்ளையாக இருந்தால் போதும் என்ற வெள்ளை மோகம்தான்.

அரிசி, உஜாலாவில் முக்கி எடுத்தது போன்று டாலடிக்கும் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டியதில்லை. வெண்மையின் உச்சத்தைக் குறிக்க ‘முத்து போன்ற வெள்ளை’என்கிறோம். அந்த முத்தே முழுமையான வெண்மையுடன் இருப்பதில்லை. திரட்சிதான் முத்துக்குச் சிறப்பே தவிர, அதன் நிறம் அல்ல. அரிசியும் பழுப்பு நிறத்தில் திரண்டிருப்பதுதான் நல்லது.

வழக்கொழிந்த அரிசிக் கஞ்சி

அரிசியைச் சோறு, இட்லி, தோசை ஆகியவற்றுக்கு மட்டுமே ஆதாரப் பொருளாகப் பயன்படுத்துகிறோம். அரிசியை அடிப்படையாகக் கொண்ட பிற பதார்த்தங்களான ஆப்பம், புட்டு, பணியாரம், களி, உப்புமா போன்றவை வழக்கில் இல்லாதது போலவே அரிசிக் கஞ்சியும் கிட்டத்தட்ட முழுதாக வழக்கொழிந்துவிட்டது.

முன்பு குளிர் காலங்களில், காய்ச்சலுற்ற நாட்களில் கஞ்சி காய்ச்சுதல் வெகு இயல்பான ஒன்றாக இருந்தது. காலைக் கஞ்சி, மாலைக் கஞ்சி, கறிக் கஞ்சி என்ற சொற்கள் இன்றளவும் மதுரை, தேனி மாவட்டங்களில் வழக்கில் உள்ளன.

“முட்டிக்கு முட்டி தட்டி, ஜெயில்ல தள்ளி இவனைக் கஞ்சி குடிக்க வைச்சாத்தான் சரிப்படுவான்” என்று பழி தீர்ப்பாகச் சிறைக் கஞ்சியைச் சொல்வார்கள். உண்மையில் சிறைக் கஞ்சியும், பொட்டுக் கடலைச் சட்டினியும் அபாரமான சுவையுடன் இருந்த காலம் உண்டு.

அரசியல் கைதியாக ஐந்து நாட்களுக்குச் சேலம் சிறையில் நான் இருந்தபோது கஞ்சியைச் சுவைத்த அனுபவம் உண்டு. அந்த நாட்களில் விடியும் முன்னரே அரிசிக் கஞ்சியின் வாசம் நாசியைத் தாக்கி, வயிற்றில் கபகபவெனப் பசியைத் தூண்டிவிடும். அத்தனை சுவைமிக்கதாக இருக்கும் அரிசிக் கஞ்சி.

அதே சுவையிலான அரிசிக் கஞ்சியைச் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஐந்து நட்சத்திர உணவகத்தில் சுவைத்திருக்கிறேன். நம்மூர் ஜெயில் கஞ்சி, ஐந்து நட்சத்திர உணவகத்துக் கஞ்சியை மிஞ்சும் சுவையில் இருந்தது. அந்தக் கஞ்சியை ருசிப்பதற்காகவே சிறைக்குப் போகலாமா என்றுகூடத் தோன்றுவதுண்டு.

அசைவக் கஞ்சியும் உண்டு

சீனர்களின் காலைச் சிற்றுண்டியில் கஞ்சி சகஜமாக இடம்பெறும். அரிசியுடன் சிறிதளவு கொத்துக் கறி, பொடியாகத் தறித்த கோழிக்கறி, முள்ளில்லாத மீன் துண்டுகள், இறால், பொரித்த நெத்திலி பொடி ஆகியவற்றில் எதையாவது ஒன்றைக் கலந்து அசைவக் கஞ்சியாகவே காய்ச்சி உண்கிறார்கள்.

சிங்கப்பூர் உணவுத் தொகுதிகளில் பத்துக்கு ஒரு கஞ்சி ஸ்டால் இருக்கும். சிக்கன் போரிட்ஜ், ஃபிஷ் போரிட்ஜ் என நம் விருப்பத்துக்கேற்ப ஆர்டர் செய்தால் ஆவி பறக்கும் கஞ்சியை, தேங்காய் போன்ற அழகான பிளாஸ்டிக் கும்பாவில் இறைச்சித் துண்டுகள் மிதக்கப் பரிமாறுகிறார்கள். அதனுடன் கலக்கப் புளிப்புக் காடியும், வினிகரில் ஊறிக் காரம் மட்டுப்பட்ட மிளகாய்த் துண்டுகளும் வைப்பார்கள். தொட்டுக்கொள்ளத் துணைச் சுவையின்றியே கஞ்சி, கபகபவென அடிவயிற்றில் சூடாகப் பரவும். அவ்வப்போதுப் போனஸ் சுவையாக இறைச்சித் துண்டுகள் பல்லில் அரைபடும்.

எனது சிறு வயதில் வீட்டில் யாருக்குக் காய்ச்சல் என்றாலும், ஒட்டுமொத்தமாக அனைவருக்குமே கஞ்சிதான். என் அம்மாவின் பழுப்பு நிறக் கஞ்சியைக் குடிப்பதற்காகவும், பள்ளி விடுப்புக்காகவும், தடித்த போர்வை வாசத்துக்காகவும் காலமெல்லாம் காய்ச்சலில் விழுந்து கிடக்கலாம் போலத் தோன்றும்.

உடலுக்கு வெப்பமேற்றுவது என்றால் கொள்ளுக் கஞ்சி, வலுவேற்றுவது என்றால் உளுந்துக் கஞ்சி, உதிரப் போக்கை ஈடுசெய்ய எள்ளுக் கஞ்சி எனப் பத்துக்கும் மேற்பட்ட வகைகளில் அடுத்தடுத்துக் கஞ்சிகளைச் சுவைக்கலாம்.

kanji_3124257a.jpg

ஆரோக்கியத்தை வரவேற்கும் கஞ்சி செய்முறை

ரண்ட புழுங்கல் அரிசியில் ஒன்றுக்கு ஆறு பங்கு நீர் விட்டு மலரக் கஞ்சியாகக் காய்ச்சினால் பிரியாணியையே தூக்கி சாப்பிடும் வாசம் வீசும். குளிர் காய்ச்சலென்றால் புழுங்கல் அரிசியை லேசாக வறுத்து, அதை மிக்ஸியில் இட்டு ஒன்றிரண்டாக உடைத்து அதனுடன் சுமார் எட்டில் ஒரு பங்கு பாசிப்பருப்பு கலந்து, ஐந்தாறு பல் பூண்டும், விரல் பிடியளவு இஞ்சித் துருவலும் தூவி, மசிய வேகவிட்டு, கல் உப்பு காட்டினால் - அந்தக் கஞ்சி ஒரு சிறு குழந்தைபோல் நம்மைக் கை நீட்டி அழைக்கும். உடனே ஆசையில் நாம் உருகிவிடக் கூடாது.

அரை ஸ்பூன் மிளகு, சீரகத்தைப் பொடித்துப் போட்டு நெய்யில் தாளித்து, அதன் மீது ஊற்றினால் முதல் குவளை நீர் ஊற்றும்போது சிலிர்த்துச் சிரிக்குமே குழந்தை, அதுபோலச் சிரிக்கும் கஞ்சி.

லேசாக ஆறிய நெளுநெளுப்பான கஞ்சியினுள் மணிக்கட்டுவரை கையை முக்கி, அலைத்து அள்ளிப் பருகுவது ஒரு சுவையென்றால், ஸ்பூனில் அள்ளி `ப்ப்பூ… ப்ப்பூ..’ என ஊதி, ஸ்பூனைத் தழுவச் சுழற்றி உண்பதும் மற்றொரு சுவை.

எச்சரிக்கை. நுனி நாக்கில் வன் சூடு தாக்கினால் இரண்டு மூன்று நாட்களுக்கு எதன் சுவையுமே தெரியாது.

http://tamil.thehindu.com/general/health/உயிர்-வளர்த்தேனே-20-ஆசிய-நாடுகளில்-ஆட்சி-செலுத்தும்-கஞ்சி/article9505483.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்த்தேனே 21: அருமருந்தாகும் கஞ்சி வகைகள்

 

 
kanchi

அந்தக் காலப் பள்ளி மதிய உணவில் ஒரு நாள் கஞ்சி, மறுநாள் கோதுமை உப்புமா, அடுத்த நாள் மீண்டும் கஞ்சி என்று ஒருநாள் விட்டு ஒருநாள் அரிசிக் கஞ்சியாகவே ஊற்றினார்கள். ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறையாகப் படிக்கத் தொடங்கியவர்கள் அந்தக் கஞ்சியைக் குடித்துத்தான் படித்து மேல்நிலைக்கு வந்தார்கள். இன்று கஞ்சி என்பது ஏழ்மைப்பட்டோர் உணவுப் பட்டியலிலும்கூட இடம்பெறுவது இல்லை என்பது துரதிருஷ்டம்.

செரிமானத் திறனை மீட்டெடுக்க

உடலின் செரிமானத் திறன் மந்தமாகிப் போன நிலையில் அரிசிக் கஞ்சியே மிகச் சிறந்த உணவு. எந்த நோயென்றாலும் நடுத்தர வயதினர் என்றால் தொடர்ந்து மூன்று நாளைக்குக் காலை, பிற்பகல் இரண்டு வேளையும் கஞ்சி மட்டுமே அருந்துவது உடல்நலனை மேம்படுத்தும்.

இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற மாவுத்தன்மை மிகுந்த உணவையே தொடர்ந்து சாப்பிட்டு நம்முடைய இரைப்பையிலும் குடலிலும் செரிமானத் திறனும் உணவின் சாரத்தை ஈர்க்கும் திறனும் மந்தமாகி இருக்கும். இந்நிலையில் உயிர்மச் சத்துகளும் எரிமச் சத்தும் நிரம்பிய அரிசிக் கஞ்சியைக் குடிக்கிறபோது, அவர்களது செரிமான உறுப்புகள் மட்டுமல்லாமல், மலக் குடலும் கழிவு நீக்கப் பாதையும் சட்டென்று இரண்டே நாட்களில் திறன் பெறுவதைத் தெளிவாக உணர முடியும்.

தூய்மைப்படுத்தும் உத்தி

பேதிக்கு எடுத்துக்கொண்டு வயிற்றைச் `சுவச்’ செய்து முடித்த பின்னும், விரதம் இருந்து உள்ளுறுப்புகளைத் தூய்மைப்படுத்திய அடுத்த நாளும், காய்ச்சலில் இருந்து மீண்ட பின்னரும் அரிசிக் கஞ்சியைக் குடித்தால் உடல் முழுவதும் ஊக்கம் பரவுவதைத் துல்லியமாக உணரலாம்.

உடலில் கழிவுத் தேக்கம் உச்ச நிலையை எட்டி விடுவதே, நோய்க்குக் காரணம் என்ற உடலியல் உண்மையை அனைத்து மருத்துவ முறைகளும் ஒப்புக்கொள்கின்றன. என்றாலும் மாற்று மருத்துவம் என்ற பெயரில் அழைக்கப்படுகிற நமது மரபு சிகிச்சை முறைகளே அதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.

ஆண்டுக்கு இரண்டு முறை பேதிக்கு எடுக்கும் தற்சிகிச்சை முறை, நமது பாரம்பரியத்தில் இருந்துவந்தது. தற்போது அது வழக்கொழிந்து விட்டது. பேதிக்கு எடுப்பது நல்லது என்றால், பீதியடைகிறார்கள். அது சற்றே கடுமையான சிகிச்சை என்றாலும், அனைத்து நோய்களுக்கும் பேதிக்கு எடுப்பது எளிய தீர்வாக இருக்கும். நோய் முற்றி உடல் பலவீனமான நிலையில் பேதிக்கு எடுத்தால் எதிர் விளைவுகளை அளிப்பதாகச் சில நேரங்களில் அமைந்துவிடும். எனவே, இது பற்றிய பயிற்சி உள்ளவர்களின் துணையுடன் பேதிக்கு எடுப்பதே நல்லது.

நோய் விரட்டும் புழுங்கலரிசி கஞ்சி

எந்த நோயாக இருந்தாலும் தொடர்ச்சியாகப் பசிக்கிற போதெல்லாம் நன்றாக நீர்த்த வெறும் புழுங்கலரிசிக் கஞ்சியைக் குடிக்கக் குடிக்க உடல்நலம், எந்த மருந்தும் இல்லாமல் மேம்படுவதை இரண்டு மூன்று நாட்களிலேயே உணரலாம். நோய்க்கு ஆட்படாத நிலையிலும் வாரம் ஒரு முறையேனும் கஞ்சி அருந்துவதை நம்முடைய சமையலறைப் பண்பாடாக மாற்றிக்கொண்டால், வீட்டில் அனைவருமே நோயை வரும் முன் காப்பவர்களாக மாறிவிடுவோம்.

பனிக்காலப் பிரச்சினைக்கு

இது பின் பனிக்காலம். வழக்கத்துக்கு மாறாக அதிகாலையில் புறச்சூழலில் குளிர்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்றில் ஈரத்தன்மை மிகுந்திருக்கிறது. எனவே யாருக்கு வேண்டுமானாலும் சளி, காய்ச்சல், தலைபாரம், பழைய உடல் தொல்லைகள் முதலானவை தலைதூக்குவது இயல்புதான். இவற்றைத் தொல்லையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. உடல் தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் முயற்சி எனும் உண்மையைப் புரிந்துகொண்டால், வெகு விரைவில் அதலிருந்து மீண்டுவிட முடியும்.

நன்றாகக் கவனித்துப் பார்த்தால், மேற்சொன்ன இயல்புக்கு மாறான நிலையில் பசி இருக்காது. காரணம் முதல் வேலையாக வயிற்றைத் தூய்மைப்படுத்தும் வேலையில் உடல் இறங்கியிருக்கும். கூடுதல் தற்காப்பு நடவடிக்கையாக வாயில் கசப்புச் சுவையை உருவாக்கியிருக்கும்.

வாயில் கசப்பும், வயிற்றில் பசியின்மையும் இருக்கிற நிலையில் எதையும் உண்ணாதிருப்பதே நோயிலிருந்து விரைவாகக் குணமாவதற்கு வழி. வயிறு தூய்மை அடைந்த பின்னர், ஓரளவு பசியுணர்வு தோன்றியதும் நம்முடைய விருப்பமான உணவு வகைகளின் மீது பெரும் நாட்டம் உருவாகும். அவற்றை உண்ண முயற்சித்தாலும் உண்ண முடியாது. இதுபோன்ற நேரத்தில் உண்ணத் தகுந்தவை கஞ்சி வகைகளே.

காய்ச்சலுக்கேற்ற கைவைத்தியம்

சளி, காய்ச்சல் என்றால் கொள்ளுக் கஞ்சி. முளை கட்டி காய வைத்த கொள்ளை ஒரு பங்கும், மூன்று பங்கு அரிசியும் சேர்த்துக் கடந்த வாரம் பார்த்த அதே செய்முறையில் கஞ்சியாகக் காய்ச்சி அருந்தலாம். முளைகட்டிய கொள்ளு இல்லாதபோது சாதாரணக் கொள்ளையும் அரிசியையும் லேசாக வறுத்துப் பயன்படுத்தலாம்.

எலும்பில் பலமான அடி அல்லது முறிவு போன்றவை ஏற்பட்ட ஆரம்பக் கட்டத்தில் உண்பதற்கு ஆவல் இருக்காது. இந்நிலையில், சாப்பிட்டால்தான் நல்லது என்று உடலின் இயல்புக்கு மாறாக உணவைத் திணித்து உடலியக்கத்தை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கிக் கொள்ளக் கூடாது. இதுபோன்ற நேரத்தில் பசி தோன்றத் தொடங்கியதும் முழு கறுப்பு உளுந்துடன் மூன்று பங்கு அரிசி கலந்து வழக்கமான செய்முறையில் கஞ்சி காய்ச்சி அருந்தினால், குணமடைதல் விரைவு பெறும்.

மாதவிடாய் சோர்வுக்கு அருமருந்து

இதே கஞ்சியைப் பூப்படையும் பெண்ணுக்கு அளித்தால் திடீரென ஏற்பட்ட குருதிப் போக்கை, உடல் எளிதாக ஈடுசெய்துகொள்ளும். மாதந்தோறும் ஏற்படும் குருதிப் போக்கு, பெண்ணுடல் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளும் நடவடிக்கை. இக்காலத்தில் உடல் மிகவும் பலவீனமடையும். பெண்கள் எரிச்சலும் கோபமும் காட்டுவது இயல்பு. அவர்களுடைய உடலுக்கு ஊக்கமளிக்கும் உளுந்துக் கஞ்சியுடன் இரண்டு ஸ்பூன் கறுப்பு எள்ளை வறுத்துப் பொடித்துச் சேர்த்து அருந்தினால், உடல் வலி பெருமளவு குறையும்.

உறவைப் பேணும் கஞ்சி

அதிக மூளை உழைப்பில் ஈடுபடு கிறவர்கள் பல விதமான சுவையை நாடுவது இயல்பு. ஆனால் அடிக்கடி மிகை சுவை உணவை உண்பதாலும், இரவுத் தூக்கம் கெடுவதாலும், குளிர்சாதன சூழலிலேயே இருப்ப தாலும் பித்தப்பை கல், சிறுநீரகக் கல் தோன்றுவது நம் காலத்தில் சர்வ சாதாரணமான ஒன்று. இவர்கள் மிகை சுவை உணவை உண்ட ஓரிரு நிமிடங்களிலேயே வலித் தொல்லையை உணர்வார்கள்.

இத்தொல்லைக்கு ஆளாகிறவர்கள் முழுமையாக வலியிலிருந்து மீளும்வரை தொடர்ந்து கஞ்சியைப் பருகி வருதல் நன்று. சுவையும் சத்துகளும் நிரம்பியதாகக் கஞ்சியை மாற்றிக்கொள்ள நோன்புக் கஞ்சி போன்ற ஒன்றைத் தயாரித்து உண்டால் ருசிப் பண்புக்கும் நிறைவு கிடைக்கும். உடல்நலத்தையும் தீமை அண்டாது.

இக்கஞ்சியை விடுமுறை நாட்களில் தயாரித்துக் குடும்பமாக அமர்ந்து அருந்தினால் குடும்ப உறவும் வலுப்படும். அனைவரது உடல்நலனும் மேம்படும். குறைவாக உண்டதும் வயிறு அடங்கினாற் போல இருக்கும். ஆனாலும், அடுத்த வேளைக்கு ஆரோக்கியமான பசியைத் தூண்டும்.

 

நோன்புக் கஞ்சி செய்முறை

சுமார் முக்கால் கிலோ அரிசி, 200 கிராம் ஆட்டுக் கறி, இரண்டையும் கனமான அகன்ற பாத்திரத்தில் போட்டு எட்டு பங்கு நீர் சேர்த்து வேக விட வேண்டும். அது வெந்துகொண்டிருக்கும்போதே, இரண்டு அங்குல இஞ்சியைத் துருவிப் போட வேண்டும். உடன் இருபது பல் பூண்டை ஒன்றிரண்டாக நசுக்கிப் போட வேண்டும். அரிசியும் கறியும் மலரத் தொடங்கும் கட்டத்தில் பத்து கிராம்பு, ஐந்து அன்னாசிப்பூ, இரண்டங்குலப் பட்டை ஆகியவற்றைத் தட்டிப் போட்டு நான்கு ஸ்பூன் நெய்யில் தாளித்துக் கஞ்சியில் ஊற்ற வேண்டும்.

கஞ்சி நன்றாக மசிகிற பக்குவத்தை எட்டியதும் சுவைக்கு ஏற்பக் கல்லுப்பு சேர்க்க வேண்டும். விரும்பினால் மூன்று தக்காளிப் பழங்களைப் பொடியாக வெட்டிப் போடலாம். இறுதியாகக் கைப்பிடியளவு புதினா, கொத்துமல்லி தழை ஆகிய இரண்டையும் அரிந்து கஞ்சியுடன் சேர்த்துக் கலக்கிவிட்டு மூடி வைக்க வேண்டும்.

குடிக்கிற பதத்துக்கு ஆறியதும் எடுத்துப் பருகலாம். சுமார் பதினைந்து பேர் அருந்தப் போதுமானது என்பதால் குடும்பங்களின் கூடுகையின்போது சமைத்துச் சாப்பிட ஏதுவானது

http://tamil.thehindu.com/general/health/உயிர்-வளர்த்தேனே-21-அருமருந்தாகும்-கஞ்சி-வகைகள்/article9520953.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்த்தேனே 22: காய்ச்சி வடித்த தண்ணியும் ஏழாயிரம் ரூபாய் சமாச்சாரமும்

 

 
kanji

கஞ்சிகளைப் பற்றி கொஞ்சம் அதிகமாகத்தான் பேசிட்டோமோ என்று சிலர் நினைக்கலாம். அரிசிப் பயன்பாட்டைக் கொண்ட அனைத்துச் சமூகங்களிலும், ஒரு காலத்தில் கஞ்சியே முதன்மை இடம்பிடித்திருந்தது. ஆனால், இன்றோ அது முற்றாக வழக்கொழிந்துவருகிறது. வழக்கொழிந்தேவிட்டது என்றே சொல்லலாம். அப்படியிருக்க நலம் பயக்கும் கஞ்சி குறித்து, இன்னும் கொஞ்சம் பேசியே தீர வேண்டியிருக்கிறது.

உலகின் மூல ஆற்றலான நெருப்பு போதிய அளவுக்கு இருக்கிறபோது, இயங்கு ஆற்றல்களின் அடுத்த நிலையில் உள்ள நீர் ஆற்றல் உலக உயிர்களுக்கு அவசியமாக இருந்தது. இன்று மூல ஆற்றலான நெருப்பு (இதய ஆற்றல்) பற்றாக்குறையாக இருப்பதால், அப்போதைக்கு அப்போது சூடேற்றிக்கொள்ள வேண்டி இருக்கிறது.

அதனால்தான் அடிக்கடி உடலைச் சூடேற்றிக்கொள்ளத் தேநீர், காபி போன்ற அல்லது உடல்நலத்தில் அக்கறை கொண்டிருப்பதாகப் பாவனை செய்துகொண்டு ‘கிரீன் டீ’ அருந்தி ‘நமக்கு நாமே’ உசுப்பேற்றிக் கொள்கிறோம். சோற்றைக்கூட மீண்டும் சூடேற்றி வறுத்த சோறாக, அதுதான் பிரைடு ரைஸாகச் சாப்பிடுகிறோமே.

அடிமைத்தனம்

சுய உந்துதல் இல்லாதபோதுதான், நமக்கு மறு உந்துதல் தேவைப்படுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. உணவிடையே சூடான பானம் அருந்துவதைக் காண நேர்கிறபோதெல்லாம், தனக்குத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டு ரத்த விளாரைக் காட்டி ஒரு ஆள் கையேந்தும் கற்பனைக் காட்சி என் மனக் கண்ணில் தோன்றி மறையும்.

காபி, தேநீர் அருந்துவது ஒன்றும் குற்றச் செயல் அல்ல. ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்கு அது இல்லையென்றால் ஒரு வேலையும் ஓடாது என்று பலர் கூறுவதை ஒரு விதமான அடிமை மனோபாவம் என்றே சொல்லலாம்.

மருந்தா, உணவா?

நாற்பது வருடங்களுக்கு முன்னர் நம்முடைய அரசு மருத்துவமனைகளில் ‘த/அ’ வெள்ளை மாத்திரைகள் உண்டோ இல்லையோ, கண்டிப்பாகச் சட்டென்று குளுமை காட்டும் சாத்துக்குடி, ஆரஞ்சு, நெளுநெளுப்பாக வாசனை வரும் அரிசிக் கஞ்சி, கோணிப்பை போன்ற பிரெட், நுரைத்து அடங்காத பால் போன்றவை வேளாவேளைக்குப் பினாயில் நெடி படரும் கட்டிலைத் தேடி வந்துவிடும். நோயாளிக்கு நலம் பயக்கும் மேற்படி உணவு வகைகள் எல்லாம் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் இப்போது மறைந்து போய்விட்டன.

இன்றைக்கு மக்களின் உடல்நலம் முழுவதும் மாத்திரைகளுக்குள் அடங்கியிருப்பதான பிம்பம் அழுத்தம் திருத்தமாகப் பதிக்கப்பட்டுவிட்டது. போதாக்குறைக்குப் பாசத்தின் நெகிழ்வடையாளமாக இரவெல்லாம் கண் விழித்து, கடிகார முள்ளைப் பார்த்துப் பார்த்து மாத்திரையைப் பிரிக்க, நோயாளி கண் கலங்க, இவர் அவரது தலைமுடியைக் கோத... அடா அடா அடா எத்தனை லட்சம் முறைதான் இக்காட்சிகளைப் பார்த்து உருகுவதோ…? நாம் உருகும் வேகத்துக்கு அண்டார்க்டிக் பனிப்படலம்கூட உருகுவதில்லை.

நோயை விரட்டலாம்

தொண்டைக்குள் லட்டியாக இறங்கி, வயிற்றுக்குள் தீ வைப்புக் கலவரங்கள் நடத்தும் மாத்திரைகள் இல்லாமலே, நமது உடல்நலனில் ஓர் அமைதிப் புரட்சியை நடத்த முடியும், கஞ்சியிடம் நாம் தஞ்சமடைந்தால். ஆம், எந்த நோயும் தலைகாட்டும் தொடக்கக் கட்டத்திலேயே நன்றாக நீர்த்த வெதுவெதுப்பான கஞ்சி, தொட்டுக்கொள்ளக் கறிவேப்பிலை சட்னி ஆகியவற்றை மட்டும் அருந்திவந்தால் நோய் இரண்டாம் படியைத் தாண்டாமல் தடுத்து விடலாம்.

நோயை ஜீரோ நிலையில் வைக்க விரும்பும் ஹீரோ நாம் என்றால், வாரத்துக்கு ஓரிரு வேளை கஞ்சி அருந்திவருவதை வழக்கமாகக் கொண்டால், கஞ்சிக்கு அஞ்சித் தொலைவில் இருந்தபடியே நோய் திரும்பிச் சென்றுவிடும்.

வடிநீர் போதும்

கஞ்சியிலும் குழைய வெந்த புழுங்கலரிசிக் கஞ்சிதான் என்றில்லாமல், வேறு பல கஞ்சிகளைப் பார்த்தோம். அதேபோல் கேரளச் சிவப்பு மட்டையரிசியில் கஞ்சி வைத்துப் பருக்கை இல்லாமல் வெறும் நீரை அருந்தினாலே போதும் வயிற்றுக்கு நிறைவை அளிக்கும், நோயைத் தொலைவுக்குத் துரத்தும். தொடர்ந்து அடுத்தடுத்து வேலைகள் இருக்கும் பிஸியான நாட்களில் உண்ணக்கூட நேரமிருக்காது. அதுபோன்ற நேரத்தில் வயிற்றில் பசியிருக்காது என்றாலும், உயிர்ச்சத்து அவசியத் தேவையாக இருக்கும். அதை ஈடுசெய்யும் அமிர்த பானம் கஞ்சி வடிநீர்தான்.

ஒரு டம்ளர் கைக்குத்தல் அரிசியை வேகவைத்து உறைந்து போகாத அளவுக்கு நீர்த்த கஞ்சியாக வடித்துக் கல் உப்பு, மிளகுத் தூள் சேர்த்துக் கலக்கி பிளாஸ்கில் ஊற்றி வைத்துக்கொண்டு பசிக்கும்போது குடித்துவந்தால், அன்றைய பொழுதெல்லாம் சோர்வின்றிக் கழியும்.

சிவப்பரிசியும் கிச்சிலியும்

கைக்குத்தல் அரிசியைப் போலவே சிவப்பரிசியும் கிச்சிலிச் சம்பா அரிசியும் மிகுந்த ஆற்றல் தருபவை. குடலிறக்கம், பெருங்குடல் உப்புசம் போன்ற உடற் தொல்லைகள் மிகுந்த நேரங்களில் சிவப்பரிசி, கிச்சிலிச் சம்பா அரிசிகளைத் தனியாகவோ, இரண்டையும் சம அளவில் கலந்தோ கஞ்சியாக வடித்து, அதை மட்டுமே அருந்திவர நோயிலிருந்து அதிவேகமாகக் குணமடையலாம்.

எவ்வளவு பெரியதென்று கூறப்படுகிற நோய்கள், உடலைக் காட்டிலும் பெரியவை அல்ல. அவற்றைப் பற்றிய பீதி மட்டுமே மிகவும் பயங்கரமானவை. நோய் கண்ட நாள் முதல் உடலை மேலும் மேலும் தொல்லைக்கு உள்ளாக்காமல் இருந்தால்போதும், உடல் தானாகவே நோயிலிருந்து மீளத் தொடங்கிவிடும்.

தொல்லைக்கு உள்ளாக்காமல் என்றால் உள்ளீடுகளைக் கவனித்து அனுப்ப வேண்டும் என்பதுதான். அதாவது எளிதில் செரிக்கக்கூடிய, அதேநேரத்தில் சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும். அந்த வகையில் சரியான உணவு அரிசிக் கஞ்சிதான்.

ஏழாயிரம் ரூபாய் சமாச்சாரம்

எனக்கு மிகவும் நெருக்கமான மாமா பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர்ச் சிறுநீரகப் பாதிப்பால் ஒரு மாதக் காலத்துக்கும் மேலாகத் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருந்தார். வாரக் கணக்காக உணவேதும் இல்லை. தொண்டையில் குழாய் செருகிப் புனல் வைத்துப் பிசுபிசுப்பான திரவத்தை மட்டும், அவ்வப்போதுச் செலுத்திக்கொண்டிருந்தார்கள். மேற்படி திரவம் ஜெர்மன் இறக்குமதி. சுமார் இருநூறு மில்லி விலை ஏழாயிரம் ரூபாய் என்றார்கள்.

மாதக்கணக்காக வீடும் மருத்துவமனையும் என்று அலைந்துகொண்டிருந்ததில் மருத்துவர்கள் எனக்கு நெருக்கமாகிவிட்டார்கள். நான் மருத்துவரை அணுகி ‘இந்த வெள்ளை பாக்கெட்டில் இருப்பது என்ன?’ என்று கேட்டேன். மருத்துவர் தோளில் கைபோட்டு பக்குவமாக ‘வேறொன்றும் இல்லை ஜெண்டில்மேன், எக்ஸ்ட்ராக்ட் ஆஃப் ரைஸ்தான். இதற்கென்றே விளைவிக்கப்பட்ட அரிசி. அதன் சாரக்கூறுகளை மட்டுமே பிரித்தெடுக்கும் நுட்பம் நம்மிடம் இல்லை’ என்றார்.

“அந்த நுட்பம்தானே அரிசியைக் காய்ச்சி வடிக்கிற தண்ணி, அது நம்மிடம் இருக்கிறதே” என்று நான் கேட்டிருந்தால், அது அதிகப்பிரசங்கித்தனமாகப் பார்க்கப் பட்டிருக்கும். என் தோள் மீதிருந்த கை பிறகு என்ன ஆகியிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

மாறாத சோறு

சரி போதும் நண்பர்களே கஞ்சிப் பிரஸ்தாபங்கள். சோற்றுக்குக் காட்டும் சிரத்தையில் பத்தில் ஒரு பங்காவது கஞ்சிக்குக் காட்ட வேண்டும் என்பதே நம் அக்கறை. இயற்கையின் விதிப்படி எல்லாமே மாறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், நாம் உண்ணும் சோறு மட்டும் மாறுதல் விதியை மீறி, எப்போதும் மாறாமல் அப்படியே இருந்துவருகிறது.

எனவே, மாறுபட்ட சோறு வகைகளை, உடல்நலனுக்கு ஊக்கம் தரும் வகைகளை அடுத்தடுத்த வாரங்களில் பார்ப்போம்.

அடுத்த வாரம்: கரம் மசாலா சாதம் தெரியுமா?

http://tamil.thehindu.com/general/health/உயிர்-வளர்த்தேனே-22-காய்ச்சி-வடித்த-தண்ணியும்-ஏழாயிரம்-ரூபாய்-சமாச்சாரமும்/article9534603.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்த்தேனே 23: கரம் மசாலா சாதம் தெரியுமா?

 
uyir

பள்ளிக்குப் போகும் நம் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸைத் திறந்தால் வாக்குகளை அள்ளிக் குவிப்பது, பளீரென்று `ப்ளோரசன்ட்’ வெளிச்ச நிறத்தில் இருக்கும் எலுமிச்சை சாதமும், உருளைக் கிழங்கு வறுவலும்தான். வாரத்துக்கு எட்டு நாளென்றாலும்கூட அரை தூக்கக் கலக்கத்திலேயே எலுமிச்சை சாதத்தைக் கிண்டி டப்பிக்குள் அடைக்க நமது தாய்மார்கள் `ரோபோ’ போலத் தயாராக இருக்கிறார்கள்.

சுவையில்லாத உணவு நல்லதா?

“நாமென்ன பண்றது. அதுங்க அதைத்தானே வேணும்னு அடம் பிடிக்குதுங்க” என்று குழந்தைகளின் உணவு ரசனை மீது பழிகூறித் தப்பித்துக்கொள்கிறோம். நல்ல கலைப் படைப்புகளைத் தர வேண்டியது, சமூகத்தின் ரசனை மட்டத்தை உயர்த்த வேண்டியது எப்படி ஒரு சிறந்த கலைஞனின் பொறுப்போ, அதுபோலவே தம் குழந்தைகளைத் தேர்ந்த உணவு வகைகளை விரும்பச் செய்வது பெற்றோரின் தலையாய கடமை, பொறுப்பு.

சுவை நீக்கம் செய்யப்பட்ட உணவே உடலுக்கு நலம் தரும் உணவு என்றொரு கற்பிதம் பலரது மனங்களிலும் மிக அழுத்தமாகப் பதியப்பட்டிருக்கிறது. இது சுவையில் அக்கறையற்ற உடல்நலத் தீவிரவாதிகள் உருவாக்கிய படிமம். உண்மையில் சுவையும் நலனும் ஒன்றோடு ஒன்றாகக் கைகொடுத்து உதவக்கூடிய இரட்டைப் பிறவிகள். சொத்துக்குச் சண்டை போட்டு உர்ரென உறுமி முறைத்துக்கொள்கிற பகையாளிகள் அல்ல.

செயற்கையான சுவையூட்டிகள்தான் உடல்நலனுக்குத் தீமை தருபவையே தவிர, உணவின் ஆதாரமான இயற்கைச் சுவை, உடலுக்கு நன்மையையும் மனதுக்கு நிறைவையுமே தருகிறது.

மனசு கலந்த உணவு

உணவைத் தயாரிக்கும்போது அதன் மூலப்பொருட்களில் உள்ளுறைந்த சுவை வெளிப்பட்டு, புதியதொரு சுவையைப் பரிமளிக்கச் செய்கிற அற்புதக் கலையே சமையல். சமையல் என்பது கொட்டிக் கிளறி இறக்குகிற தயாரிப்புப் பண்டம் அல்ல. நாசிக்கு மணத்தையும், கண்களுக்கு ஈர்ப்பையும், நாவுக்குச் சுவையையும் நமது உடலின் செல்களுக்குப் புதுக் கிளர்ச்சியையும் தரவல்லவை. இதை உலகின் அனைத்துச் சமூகங்களும் உணர்ந்தே இருந்தன.

நம் பண்பாட்டின் பல சிறப்பம்சங்கள், உலகமயமாதல் அவசரக் கதியில் ஜேசிபிகள் கொண்டு அடித்து நிரவப்பட்டு, கார்பரேட் கலாசாரத்துக்குள் எப்படித் திணிக்கப்படுகின்றனவோ, அதுபோல உணவின் படைப்பாக்கத் திறனும் மிக வேகமாக நம்மிடமிருந்து நமக்குத் தெரியாமலேயே மிக வேகமாக அழித்தொழிக்கப்பட்டு வருகிறது.

`காக்கா முட்டை’ படத்தில் கதையின் இரட்டை நாயகர்களான சிறுவர்கள், பீட்ஸாவை மெல்லும்போது, “நம்ம ஆயா சுட்ட தோசை இதைவிட நல்லாருந்துச்சுடா” என்று கூறுவது வெறும் வேடிக்கை வசனமல்ல, ஒவ்வொரு நேர உணவையும் ஒரு கலைப் படைப்பாக உருவாக்கித் தரும் உயிர்க் கரங்களுக்கு அளிக்கும் விருது!

ஒரு உணவின் சிறப்பம்சம் அதிலுள்ள மூலப்பொருட்கள் என்ன விகிதாச்சாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதிலோ, எந்த வெப்பத்தில் தயாரிக்கப்பட்டது என்பதிலோ இல்லை. அதைச் சமைத்தவரின் மனசும் ஈடுபாடும் எந்த அளவுக்கு அப்பதார்த்தத்தில் கரைக்கப்பட்டுள்ளது என்பதில்தான் உணவின் சிறப்பு இருக்கிறது.

உணவு தண்டனையா?

சமையல் என்பது தாயின் பொறுப்பு என்று நான் சுருக்க விரும்பவில்லை. குடும்பத்தின் வருமானச் சுமை பெண்களின் தோள் மீதும் இறங்கிக்கொண்டிருக்கிற தற்காலத்தில், குடும்பத்துக்கான உணவுத் தயாரிப்பில் ஆண்களுக்கும் சமப் பொறுப்பு இருக்கிறது. பல பெற்றோர் தம் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸுக்கான உணவுத் தயாரிப்பைப் பெரும் தண்டனையாகக் கருதுகிறார்கள். அதைப்போலவே குழந்தைகளும் தமது லஞ்ச் பாக்ஸைத் தண்டனையாகவே நினைக்கிறார்கள்.

பல குழந்தைகள் ‘ஞாபக மறதியாக’ லஞ்ச் பாக்ஸை வீட்டில் விட்டு விட்டுப் போவதை மிகுந்த சிரத்தையுடன் செய்வதைக் காணலாம்.

அவர்கள் நம் குழந்தைகள், வளரும் குழந்தைகள், ஆறு முதல் எட்டு மணி நேரம் கவனம் ஊன்றிப் படிக்க வேண்டிய குழந்தைகள். எனவே, மிகுந்த ஆற்றல் தரும் உணவு வேண்டும் என்பதற்காக இல்லாவிட்டாலும், நாம் சொன்னதற்காக அன்றாடம் பத்துப் பன்னிரண்டு கிலோ எடையுள்ள புத்தக மூட்டையை எலும்பு முதிராத தங்கள் முதுகில் ஏற்றி, பள்ளியில் இரண்டு மூன்று மாடிகளுக்கு ஏற்றி இறக்குகிறார்கள். நம் குழந்தைகள் மீது நம்ம ஊர் கல்வி நிகழ்த்தும் வன்கொடுமை இது.

சமைப்பதில் படைப்பூக்கம் வேண்டாமா?

புத்தக மூட்டையைச் சுமப்பதால் இழக்கும் ஆற்றலை ஈடுசெய்வதற் காகவாவது குழந்தைகளுக்குச் சுவையும் சத்தும் நிரம்பிய உணவை அளிப்பது பெற்றோரின் கடமை. ஒவ்வொரு நாள் லஞ்ச் பாக்ஸும் வியப்பு-ஆர்வத்துடன் திறக்கக்கூடிய ஒன்றாக மிகவும் படைப்பூக்கத்துடன் தயாரிக்கப்பட வேண்டும்.

அடுத்த வேளைக்குக் கட்டும் பொட்டலச் சாதம் என்றாலே, அது புளிப்பு கலந்த எலுமிச்சை அல்லது புளி சாதமாகத்தான் இருக்க வேண்டும். புளிப்பேறி இருந்தால்தான் அது கெடாது என்றொரு கற்பிதம் இருக்கிறது. உண்மையில் உலர்தன்மையுடன் தயாரித்து ஆற வைத்த பின் பேக் செய்த சாத வகைகள் ஆறிலிருந்து எட்டு மணி நேரம்வரை தாராளமாகத் தாக்குப் பிடிக்கும்.

உடல்நலன் என்ன விலை?

இன்றைக்கு அரிசியைச் சோறாக்கிய பின் அதிலுள்ள ரசாயனக் கூறு மிக விரைவாக அதைக் கெடுத்து விடும் என்ற உண்மையை நாம் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, உண்ணத் தகுதியான அரிசி எது என்ற நுழைவுத் தேர்வில் நாம் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாக வேண்டும். உடல்நலன் என்பது காசு கொடுத்து வாங்குகிற பண்டம் அல்ல. அது நம்முடைய ஒவ்வொரு சிறு நகர்வுடனும் தொடர்புடையது.

தாளிப்பில் வேர்க்கடலை, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுப் பத்துத் துளிகள் எலுமிச்சைச் சாறு விட்டு மஞ்சளை நுணுக்கிப் போட்டுத் தயாரிக்கிற சாதம் சர்வ நிச்சயமாகக் குழந்தைகள் உடலுக்கு நலம் தரும்தான். ஆனால், அன்றாடம் அதையே தொடர்ந்து உண்கிறபோது எலுமிச்சை சாதத்தில் உள்ள சத்துகளை ஏற்கும் திறன் உடலில் நிறைவு பெற்றுவிடும். அல்லது எலுமிச்சை சாதத்தைத் தவிர வேறு எதையும் ஏற்க முடியாத நிலைக்கு உடல் தள்ளப்பட்டு விடும். எனவே, ஒவ்வொரு நாளும் புதுப்புது உணவுப் பண்டத்தைக் கொண்டு லஞ்ச் பாக்ஸை நிரப்புவது குறித்துப் பார்க்கப் போகிறோம். இந்த வாரம் சத்தும் சாரமும் நிறைந்த கரம் மசாலா சாதம் குறித்துப் பார்க்கலாம்.

தயாரிக்கும் முறை

தரமான புழுங்கலரிசிச் சாதத்தை வடித்து வைத்துக்கொள்ள வேண்டும். அரை அங்குலப் பட்டை, நான்கு கிராம்பு, மூன்று மிளகு, இரண்டு அன்னாசிப்பூ ஆகியவற்றை இளஞ்சூட்டில் புரட்டி மிக்ஸி சின்ன ஜாரில் இட்டுத் தூளாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஐந்தாறு இஞ்சி துருவல், நசுக்கிய பூண்டு ஒரு பல் வைத்துக்கொள்ள வேண்டும்.

தாளிக்கும்போது வாணலியில் இரண்டு டீ ஸ்பூன் நெய் விட்டுச் சூடேற்ற வேண்டும். நெய் உருகியதும் அதில் ஐந்தாறு துளசி இலைகளும், ஓமவல்லி எனப்படும் கற்பூரவல்லி இலை இரண்டைப் போட்டு மிதமான சூட்டில் வதக்கி வாசம் கிளம்பி வரும்போது அதில் இஞ்சி, பூண்டையும் சேர்த்துப் புரட்ட வேண்டும். பின்னர் பட்டை கிராம்புப் பொடியைப் போட்டு ஒரு சுற்று சுற்றி, உதிரியாக உள்ள சாதத்தைச் சிறிது சிறிதாகத் தூவிக் கிளறி, அகன்ற பாத்திரத்தில் கொட்டி ஆறவிட்டு லஞ்ச் பாக்ஸில் ஒரு செல்லப் பிராணியை வைப்பது போல லாவகமாக அமர்த்த வேண்டும்.

அடிக்கடி சளி பிடிக்கும் குழந்தைகளின் தொண்டையில் இதமாக இறங்கும் இந்தக் கரம் மசாலா சாதம். இதில் உள்ள மூலிகைப் பண்புள்ள காரம் குழந்தைகளின் உடலுக்குக் காற்று ஆற்றலையும், மண் தன்மை மிகுந்த பட்டை, கிராம்பு ஆகியவை தாது ஆற்றலையும் வழங்குகின்றன. இந்த ஆற்றல்களின் வீரியத்தன்மை நெய்யில் மட்டுப்பட்டிருப்பதால் நாவுக்கு இதமான சுவையை வழங்கும். அடிக்கடி சளி பிடிக்கும் குழந்தைகளின் நாவுக்கும் உடலுக்கும் ஏற்ற உணவு இந்தக் கரம் மசாலா சாதம்.

கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்

http://tamil.thehindu.com/general/health/உயிர்-வளர்த்தேனே-23-கரம்-மசாலா-சாதம்-தெரியுமா/article9549202.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உயிர் வளர்த்தேனே 24: வணிகப் பண்டங்களில் இருந்து விலகி நிற்க...

 

 
uyir

பள்ளிக்குப் போகும் குழந்தைகளின் அன்றாட காலை உணவு மிகப்பெரும் பிரச்சினையாக இருக்கிறது. தனிப்பயிற்சி, வீட்டுப்பாடம் என வேலைகள் அனைத்தையும் முடித்த பின்னர்த் தங்களைத் தளர்த்திக்கொள்வதையும் ஒரு வேலையாகவே அவர்கள் செய்ய வேண்டியிருக்கிறது. தொலைக்காட்சி பார்ப்பது, கம்ப்யூட்டர் கேம் விளையாடுவது, தலையைப் போனுக்குள் நுழைத்துக்கொள்வது என மீண்டும் குழந்தைகள் மன அழுத்தத்துக்கு உள்ளாகிக் கிட்டத்தட்ட நள்ளிரவில்தான் படுக்கவே செல்கிறார்கள்.

நள்ளிரவில் தூங்கச் செல்லும் குழந்தைகளைக் காலையில் பள்ளிக்கு அனுப்புவதற்கு, இரக்கமில்லாமல் அடித்து எழுப்ப நேர்கிறது. குளியல், காலைக்கடன் கழிப்பது போன்றவற்றை அரைகுறையாகவே முடித்த நிலையில் பிளஸ் டூ பையனுக்கும்கூட அம்மாவே ஊட்டினாலும் அந்த உணவு அரைத் திடப்பொருளாகத்தான் வயிற்றுக்குள் இறங்குமே தவிர, உணவாக இரைப்பையைச் சென்றடையாது.

குழந்தைகளின் படிப்பில் அக்கறையுள்ள பெற்றோர் அவர்களது முக்கியப் பருவமான பள்ளி வயதில் உடல்நலனில் கண்டிப்பான அக்கறையைக் காட்ட வேண்டும். அவர்களது எதிர்காலத்திற்கென்று காசைக் கொட்டுகிறோம், கடன்படுகிறோம். ஆனால் நிகழ்காலத்தில் அவர்களது உடலைப் பாழ்படுத்துவதை ‘வேறு என்ன செய்வது?’ என்று கேள்விகளுடனேயே தொங்கலில் நிறுத்துகிறோம்.

மதிய உணவு முழு ஆற்றல் தருமா?

காலை 7 – 9 மணிக்குச் சிறுகுடல் ஆற்றலுடன் இயங்கும் நேரம். அந்த நேரத்தில் கடனே என உணவு திணிக்கப்பட்டால், அது ஒட்டுமொத்த உடலையும் கண்டிப்பாகப் பாதிக்கும். சரி, காலை உணவுதான் பொருத்தமாக இல்லை. மதிய உணவாவது முழு ஆற்றலை வழங்கக்கூடியதாக இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. இந்த அம்சங்களைத் தெளிவாக உணர வேண்டும் என்பதற்காகவே இங்கே விரிவாகப் பேசுகிறோம்.

பல லட்சங்கள் நுழைவுக் கட்டணமாகவும், பதினாயிரங்களை மாதாந்திரக் கட்டணமாகவும் கல்விக்குச் செலுத்தினாலும் சர்வதேசப் பள்ளிகள் உட்படப் பெரும்பாலான பள்ளிகளில் மதிய உணவு உடனடியாகச் சமைத்து வழங்கப்படுவதில்லை. அதற்கு நம் அரசுப் பள்ளிகளே தேவலாம். சத்துணவு என்ற பெயரில் ஓரளவு ஒப்புக்கொள்ளும் உணவை வழங்குகின்றன.

இப்போது சில பள்ளிகள், குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுகிறேன் என்ற பெயரில், ஒவ்வொரு நாளும் என்ன மெனு என்பதைப் பட்டியலிட்டுக் கொடுத்து மதிய நேரத்தில் கண்காணிக்கிறார்கள். இதை அவர்கள் அக்கறையாகவே செய்தாலும், அது அராஜகமான ஒன்றாகவே தோன்றுகிறது. குழந்தை கள் அனைவரும் ஒரே உணவைக் கொண்டுவந்தால் எப்படித் தங்களுக்குள் பரிமாற்றம் செய்துகொண்டு, நிறைவாக உண்ண முடியும் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்வதில்லை.

உணவில் சத்துக் கணக்கைவிட மன நிறைவுக்குத்தான் முதலிடம் என்பதை உணரும் பக்குவத்தை நம் தனியார் பள்ளிகள் ஒருபோதும் அடைந்துவிட முடியாது.

தீவிரக் கட்டுப்பாடு அவசியமா?

ஒவ்வொரு நாளும் விதவிதமான காய்கறிகளை உண்ண வேண்டும் என்று நிர்பந்திக்கின்றன சில பள்ளிகள். சதை பிடித்து வளர்கிற பருவத்தில் குழந்தைகள் வயிற்றை எளிதில் அடைக்கும் நார்ச்சத்து மிகுந்த உணவை வெறுப்பது இயல்புதான்.

பெரியவர்களுக்கான நல்ல உணவு என்று சொல்லப்படுபவை அத்தனையும் குழந்தைகளுக்கும் பொருத்தமானவையல்ல. காய்கறி, கீரை நல்ல உணவு என்று சொல்லித் தலையணைக்குள் பஞ்சை திணிப்பதுபோல, குழந்தைகளின் வாயில் காய்கறிகளைத் திணிக்க முயற்சிக்கக் கூடாது.

ஓடியாடி உடலாற்றலை எரிக்கும் பருவத்தில் எரிமச் சத்து (கார்போஹைட்ரேட்) உணவையும், உடல் கட்டுமானத்துக்குரிய கடினத்தன்மை கொண்ட கிழங்கு போன்றவற்றை வறுவலாகவும் உண்ணக் குழந்தைகள் விரும்புவது இயற்கையே. குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட உணவை அறிவார்த்தமாகத் தேர்வு செய்வதில்லை. அப்படித் தேவையும் இல்லை.

துரித உணவுக்கு மாற்று?

அப்படியானால் பளபளப்பான காகிதங்களில் சுற்றிவரும் சக்கைப் பண்டங்களையே குழந்தைகள் விரும்புகிறார்களே, அது சரியா என்ற கேள்வி எழுகிறது. சரியல்லதான். `ஜங்க் ஃபுட்’ எனப்படும் இந்த வணிகப் பண்டங்கள் எந்தச் சத்துகளையும் தருவதில்லை என்பதுடன், குழந்தைகளின் மென்மையான உள்ளுறுப்புகளை மோசமாகச் சிதைத்து நிரந்தர நோயாளிகளாக்கி விடுகின்றன. வேறு நல்ல பண்டங்களை உண்ண விடாத அளவுக்கு நாவின் சுவை மொட்டுகளையும் சுரண்டி கெடுத்துவிடுகின்றன.

குழந்தைகளை எப்படித் தமது தயாரிப்புக்கு அடிமையாக்குவது என்று பரிசோதனைக்கூடத்தில் தலையைக் கசக்கிக் கொண்டிருப்பவர்களை ஆராய்ச்சியாளர்கள் என்று சமூகம் நம்பிக்கொண்டிருப்பதே இதற்குக் காரணம். இந்த நம்பிக்கை அனைத்துத் துறைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.

வணிக நொறுவைப் பண்டங்களில் இருந்து நம் குழந்தைகளை மீட்டெடுப்பது எப்படி என்று நம் பெற்றோர்கள், வணிக நிறுவனங்களைக் காட்டிலும் கூடுதல் சிரத்தையுடன் சிந்தித்து, செயல்பட வேண்டியிருக்கிறது. இயற்கையான, விதம்விதமான சுவை கொண்ட உணவைப் பச்சிளம் பருவத்தில் இருந்தே குழந்தைகளுக்குப் பழக்கிவிட்டால் வணிகப் பண்டங்களை நிச்சயமாக அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

சாக்லேட் விரும்பாத சிறுவன்

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர்ச் சிங்கப்பூர் சென்று திரும்பி இருந்தேன். நம்மவர்களிடம் உள்ள அதே வழக்கத்துடன் வயதானவர்களுக்குக் கோடாலித் தைலம், நண்பர்களுக்கு டி சர்ட், பெண்களுக்குப் புடவை, பிள்ளைகளுக்குச் சாக்லேட் வாங்கி வந்திருந்தேன்.

என்னைக் காண ஒரு நண்பர் வந்திருந்தார். உடன் அவரது ஆறு வயதுப் பையனும். என் அக்கம்பக்க வீட்டுக் குழந்தைகள் நாவில் உமிழ்நீர் ஊற, நான் வாங்கி வந்த சாக்லேட்களின் ஜிகுஜிகுப்பான உறைகளைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். நண்பரின் பையன் கைக்குச் சில சாக்லெட் பார்களை எடுத்து நீட்டினேன்.

நண்பர் மிகுந்த மென்மையான சுபாவம் கொண்டவர். அதே பண்புடன் பதற்றமின்றி “இதெல்லாம் வேண்டாம் … அவன் சாப்பிட மாட்டான்” என்றார். அப்படிச் சொல்லிக் கொண்டி ருக்கும்போது அவனும் மற்றக் குழந்தைகளைப்போல மினுமினுப்பான காகிதத்தை ஆர்வத்துடன் பிரித்துக் கொண்டிருந்தான்.

“குழந்தைகளின் சின்னச் சின்ன விருப்பங்களுக்கு நாம் பெரிய கட்டுப்பாடு விதிக்க வேண்டியதில்லை” என்று நண்பரிடம் தத்துவார்த்தமாகப் பேசிக் கொண்டிருந்தேன். பாரின் காகிதத்தைப் பிரித்த பையன், சாக்லேட்டை வாயில் வைத்தானே தவிர, அவனால் அதைச் சுவைக்க முடியவில்லை. உதட்டில் அரக்கு நிறத்தில் கூழாக வழிய விட்டான். கண் விழிகள் பிதுங்கின.

நண்பர் சிரித்தபடியே “நான் சொன்னேனில்லையா….. சிறுவயது முதற்கொண்டே இதைச் சுவைத்துப் பழக்கமில்லாததால் மற்றக் குழந்தைகளைப் பார்த்து ஆர்வத்தில் முயன்றாலும், இது போன்றவற்றின் சுவையை அவனது நாவும் உடலும் ஏற்றுக் கொள்வதில்லை” என்றார்.

இந்நிகழ்வு எனக்கு மிகப்பெரிய படிப்பினையைக் கொடுத்தது. நமது ஏட்டுப் படிப்புகளை மட்டுமல்ல, ‘நெட்’ மேய்ச்சலையும் கள அனுபவங்களுடன் பொருத்திப் பார்த்த பிறகே பின்பற்றத் தொடங்க வேண்டும்.

பட்டாணி சாதம் பராக்!

pattani_3137389a.jpg

இந்த வாரம் குழந்தைகளின் கண்களுக்கே விருந்து அளிக்கும் சத்தான ஒரு சாத வகை குறித்துப் பார்த்து விடுவோம்.

தேவையானவை: உரித்த பச்சைப் பட்டாணி நூறு கிராம், கிட்டத்தட்டப் பட்டாணி அளவுக்குச் சிறுசிறு கியூப்களாக வெட்டிய கேரட், துருவிய இஞ்சித் துண்டுகள், நசுக்கிய பூண்டு இரண்டு பல், சுமார் 20 கிராம் வெண்ணெய், நான்கு கிராம்பு, அரை அங்குல நீளப் பட்டை. சமைக்கப் போகும் அரிசியைத் தேங்காய்ப் பாலில் ஊற விட வேண்டும்.

குக்கரை அடுப்பில் ஏற்றி வெண்ணெயைப் போட்டு உருகியதும், இஞ்சி பூண்டைச் சேர்த்துப் புரட்ட வேண்டும். அது வாசம் கிளப்பியதும் கிராம்பு, பட்டையை ஒன்றிரண்டாகத் தட்டி போட வேண்டும். இரண்டும் கலவையான வாசனையை எழுப்பும்போது பச்சைப் பட்டாணி, கேரட் இரண்டையும் போட்டு நிறம் மாறாமல் புரட்டி அரிசியின் அளவுக்கு ஒன்றரை மடங்கு (தேங்காய்ப் பாலில் ஊறியிருப்பதால் அரைப் பங்கு குறைத்துக்கொண்டு) நீர் விட்டுக் கொதி வந்ததும், அரிசியைப் போட்டு மூடி வைக்க வேண்டும்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கமகமவென்ற வாசனையோடு பட்டாணி சாதம் நம்மை அழைக்கும். பச்சை, சிவப்பு அங்கங்கே இளங்கறுப்பு நிறத்தில் மின்னும் பட்டைக் கிராம்பு எனப் பல வண்ணச் சாதம், அப்போதே சாப்பிட வேண்டும் என்று ஆவலைத் தூண்டும். அரிசி தேங்காய்ப்பாலில் ஊறியிருப்பதால் சாதத்தின் நிறம் வெள்ளையாக டாலடிக்கும். சுவையும் மென்மையாகக் கரைந்து உடலெங்கும் பரவும்.

கட்டுரையாளர், உணவு எழுத்தாளர்

http://tamil.thehindu.com/general/health/உயிர்-வளர்த்தேனே-24-வணிகப்-பண்டங்களில்-இருந்து-விலகி-நிற்க/article9559145.ece

Link to comment
Share on other sites

உயிர் வளர்த்தேனே 25: ‘பரோட்டா சூரி’ கணக்கை மறந்துவிட்டோம்

parota

நாம் என்னதான் சமவிகித சரியுணவு குறித்துப் பேசிக் கொண்டிருந்தாலும், உண்ணுவதென்னவோ அதிகபட்சம் அரிசி, பேருக்கு ஒன்றிரண்டு காய்களை ஒவ்வொரு வேளையும் எடுத்துக்கொள்கிறோம்.

அதிலும் வளரிளம் பருவத்தினர், குறிப்பாகப் பள்ளி செல்லும் குழந்தைகளின் உணவில் போதிய கவனம் செலுத்துவதில்லை. வாரத்தில் ஒருநாள் விடுமுறை நாளன்று மரக்கறி உண்போர் எனில் வறுத்த - பொரித்த கிழங்கு காய், ஒரு வடை, பாயச இனிப்புடனும் மணக்க மணக்கச் செய்கிறோம்.

ஊண் உண்பவர்கள் என்றால் கோழி, பிரியாணி, செவிட்டில் அறைகிறாற் போன்ற சிவப்புச் சாயத்தில் முக்கிய இறைச்சித் துண்டங்களை எண்ணெயில் பொரித்துச் சிக்கன் 65 என்று குழந்தைகளுக்குப் படைத்தருள்கிறோம்.

நிறமிகள் எதற்கு?

இந்தச் சிவப்புச் சாயத்தைப் பற்றி ஒரு பாட்டம் சொல்லியாக வேண்டும். இத்தனை அழுத்தமும், அடர்த்தியும் நிறைந்த செயற்கை நிறமியை நம் உடல் ஏற்கவே ஏற்காது. அவ்வளவு ஏன், உடலுக்கு நன்மை செய்யும் கீரையைத்தான் உண்கிறோம். உயிர்ச்சத்து மிகுந்த பச்சையை நம் உடல் முழுமையாக ஏற்கிறதா? இல்லையே!

அடுத்த நாள் மலத்தில் பச்சையத்தை வெளியேற்றி விடுகிறதே. அல்லது பலருக்குக் கீரையை உண்ட அடுத்த இரண்டு மணி நேரத்தில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுப் பச்சையாகச் சென்றுவிடுகிறதே. இதேபோலத்தான் அடர் சிவப்பு நிறத்திலான பீட்ரூட் பொரியல் உண்டால், அடுத்த வேளை சிறு நீரும் மெலிதான பீட்ரூட் நிறத்தில் வெளியேறுவதைக் காண முடியும்.

நம் உடலுக்கு ஆறு சுவை தேவை என்பதுபோல, வண்ணத்திலும் வெள்ளை, மஞ்சள் நிறத்தில் மட்டுமல்ல, ஏழு வண்ணங்களிலும் உணவு தேவைப்படுகிறது. ஆனால் அது இயற்கையான வண்ணமாக இருந்தாலும்கூட அடர்த்தியை மட்டுப்படுத்தியே உண்ண வேண்டும். அதனால்தான் கீரையுடன் பருப்பு, தேங்காய் ஆகியவற்றைச் சேர்த்து நிறத்தின் அடர்த்தியைத் தணியச் செய்து உண்கிறோம்.

தவிர்ப்பது நலம்

தற்கால உணவில் செயற்கை நிறமிப் பயன்பாடு கடுமையாக அதிகரித்துவிட்டது. எவ்வித அச்ச உணர்வும் இன்றி வீட்டுச் சமையலிலும் நிறமிகளைத் தாராளமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். வெளியில் உண்கிறபோதும் செயற்கை நிறமிகள் குறித்த எச்சரிக்கை உணர்வு நம்மிடம் அறவே இல்லை.

உடலுக்கு அந்நியமான எந்தப் பொருளாக இருந்தாலும் உடல் நிராகரிக்கவே செய்யும். உடலுக்கு நன்மை பயப்பதற்காகப் பொருத்துகிற இதய வால்வையே நூறு யோசனைக்குப் பின்னரே மருத்துவர்கள் பொருத்துகின்றனர். அதிலும் பல நேரங்களில் உடல் அதை நிராகரித்துப் பெரும் தொல்லைக்குள்ளாகிறது.

அப்படியிருக்க ரசாயன நிறமிகளை உடல் ஏற்குமா? உடனடியாக வெளியேற்றத் தவிக்கும். அவ்வாறு வெளியேற்றும் முயற்சியில், நமது சிறுநீரகத்துக்கும் கல்லீரலுக்கும் பணிச்சுமையை அதிகமாக்கும்.

தோல் பிரச்சினைக்குக் காரணம்

உணவின் வழியாக உடலில் செலுத்தப்பட்ட செயற்கை நிறமியைக் கழிவு நீக்க உறுப்புகள் தமது வழக்கமான பணிச் சுமைகளுக்கு இடையே மலம், சிறுநீர் வழியாக வெளியேற்ற முடியாவிட்டால், உடலின் மிகப்பெரிய உறுப்பாகிய தோல் மூலம் வெளியேற்றுவதற்காகத் தோலின் ஓர் அடுக்குக்கு அனுப்பி விடுகிறது அல்லது நுரையீரலுக்கு அனுப்பி விடுகிறது.

அதனால்தான் நம் காலத்தில் பலருக்கும் மிக இளம் வயதிலேயே சுவாச ஒவ்வாமையும், தோலரிப்பு போன்ற தோல் ஒவ்வாமையும் ஏற்படுகின்றன.

இன்றைய வணிக உணவுப் பண்டங்கள் எதுவுமே நிறமி கலக்காமல் இல்லை. குழம்புகளுக்குக்கூட நிறமி ஏற்றுகிறார்கள். நாம் வீட்டில் நல்லது தானே என நினைத்து மஞ்சள் பொடியைப் பயன்படுத்துகிறோம். கடையில் விற்கப்படும் மஞ்சள் தூள், மஞ்சளை அரைத்துத் தயாரித்தது என்று நம்பினால் நம்மை அப்பாவிகள் என்றுகூடச் சொல்ல முடியாது. அதற்கும் மேலான வார்த்தையில்தான் அழைத்துக்கொள்ள வேண்டும்.

நிறமிகள், சிக்கன் 65, மஞ்சள் தூள் ஆகியவை பற்றிப் பிறிதொரு நேரத்தில் பார்க்கலாம். இப்போது பள்ளி போகும் குழந்தைகளுக்கான மதிய உணவு குறித்துப் பார்த்துவிடுவோம்.

பரோட்டா சூரி கணக்கு

குழந்தைகள் ஓடியாடி விளையாடினால், இப்போது அவர்கள் உண்ணும் மூன்று நான்கு இட்லிகளும், தோசைகளும் போதாது. பத்துப் பன்னிரண்டு இட்லிகளாவது தேவை. இது கூடக் குறைவுதான். என் பருவத்தில் வீட்டு இட்லியே 24 சாப்பிட்டிருக்கிறேன். பரோட்டா சூரி, `கணக்கை முதலில் இருந்து சாப்பிடத் தொடங்கியபோது’ எனக்குச் சிரிப்பு வரவில்லை. அட, நம்மைப் போல ஒருவர் அடுத்த தலைமுறையிலும் இருக்கிறாரே என்று புளகாங்கிதம்தான் அடைந்தேன்.

விளையாட்டை மறந்த குழந்தைகள்

குழந்தைகளின் உடல் கட்டுமானம் உறுதி பெற நன்றாக விளையாட வேண்டும். விளையாட்டில் ஆர்வம் உடைய குழந்தைகளை இப்போதெல்லாம் மிகவும் அபூர்வமாகவே பார்க்க நேர்கிறது. அதிலும் பெண் குழந்தைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்.

முந்தைய தலைமுறையில் பதின்ம வயதின் நடுப்பகுதிவரை ஆண்களும் பெண்களும் சேர்ந்தே விளையாடுவார்கள். பருவ வயதில் பெண்களுக்கு இருக்கும் பாலின ஈர்ப்பை மறந்து ஆண் குழந்தைகளுடன் சரிக்குச் சமமாக விளையாடுவார்கள். மரங்களில் ஏறுவது, ஓடிப் பிடித்து விளையாடுவது எனச் சகலமும் உண்டு.

தாய்மார்கள்தான் அவர்களை விளையாட்டுக்கு மத்தியில் இழுத்துக்கொண்டு வந்து தலையில் அடித்துப் பெண் என்பவள் ஒரு தனியினம் என்று போதிப்பார்கள். அப்போதும் உடலின் ஊக்கம் உள்ளுக்குள் போதனையைப் பதிய விடாது. மறுநாளும் வழக்கமான நேரத்தில் வீட்டுக்கு வந்து, அவளது விளையாட்டுத் தோழன் அப்பாவித்தனமாக அழைப்பான்.

சில அம்மாக்கள் ‘அவளுக்கு வீட்டு வேலை இருக்கு’ போன்ற ஏதேனும் சாக்குப்போக்குகளைச் சொல்வார்கள். சிலரோ ‘ஏய்… வயசுக் குழந்தையோட என்னடா இன்னமும் கூடி விளையாடிட்டுத் திரியறீங்க. வெக்கமாயில்ல…’ என்று பட்டவர்த்தனமாகப் பேசிவிடுவார்கள்.

பையன்களிலும் பெரும்பாலோருக்குப் பெண்ணின் தாய் சொன்ன சொல் முழுமையாகப் புரிந்துவிடாது. பதின்ம பருவத்தில் விளையாட்டாலும் உழைப்பாலும் உடல் முறுக்கிப் பிழியப்படும்வரை பாலுணர்வுக் கிளர்ச்சி தலைதூக்குவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புரதச் சத்து சாதம்

sadham_3139998a.jpg

கடந்த வாரம் உயிர்ச்சத்து மிகுந்த ஒரு சோறு வகையைப் பார்த்தோம். இந்த வாரம் உடலின் கட்டுறுதிக்கு வலுசேர்க்கும் சோறு வகை ஒன்றைப் பார்க்கலாம். கேரட், பச்சைப் பட்டாணிக்குப் பதிலாகப் புரதச் சத்து மிகுந்த சிலவற்றை இந்த முறை சேர்த்துக்கொள்வோம்.

ஐம்பது கிராம் வேர்க்கடலை, அதே அளவு கிட்னி பீன்ஸ், நான்கைந்து பாதாம் பருப்பு, நான்கைந்து முந்திரிப் பருப்பு. இதில் பாதாம் பருப்புதான் வேண்டும் என்பதில்லை. பலாக்கொட்டையைக்கூட எடுத்துக்கொள்ளலாம். இவற்றை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்துவிட வேண்டும். தேங்காய்ப் பாலில் அரிசியை ஊற வைக்க வேண்டும்.

பழைய மாதிரியே வெண்ணெய் அல்லது நெய் இரண்டு தேக்கரண்டி விட்டுப் பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, நசுக்கிய இஞ்சி, பூண்டு தாளிப்பு போட்டு, அவை நிறம் மாறும் தருணத்தில் ஊற வைத்த கொட்டை வகைகளைத் தாளிதத்தில் போட வேண்டும். அவற்றில் இருந்து வாசம் கிளம்பும்வரை ஒயிலாகப் புரட்ட வேண்டும். கொட்டை வகைகள் நிறம் மாறினால், அவற்றிலுள்ள சத்துகள் சிதைக்கப்பட்டு விடும். எனவே, கவனமாக நிறம் மாறும் முன்னரே பொருத்தமான அளவு நீர் விட்டு, அரிசியைப் போட்டு மூடி விட வேண்டும். சாதத்தை இறக்கியதும் பொடியாக அரிந்து வைத்த மல்லிப் புதினா தழைகளை மேலாகத் தூவிக் கிண்டி விட்டால் கவர்ச்சியாக இருக்கும்.

அழுத்தமும், அடர்த்தியும் நிறைந்த செயற்கை நிறமியை நம் உடல் ஏற்கவே ஏற்காது. அவ்வளவு ஏன், உடலுக்கு நன்மை செய்யும் கீரையைத்தான் உண்கிறோம். உயிர்ச்சத்து மிகுந்த பச்சையை நம் உடல் முழுமையாக ஏற்கிறதா? இல்லையே!

(அடுத்த வாரம்: சருமத்தின் மென்மையைப் பாதுகாக்கும் சோறு)

http://tamil.thehindu.com/general/health/உயிர்-வளர்த்தேனே-25-பரோட்டா-சூரி-கணக்கை-மறந்துவிட்டோம்/article9570802.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.