Jump to content

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்


Recommended Posts

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

புதிய தொடர்

-யுவகிருஷ்ணா

அடியென்றால் அடி. சரியான அடி. தன்னை ஏன் அந்த போலீஸ்காரன் அப்படி அறைந்தான் என்று அடிவாங்கியவனுக்குத் தெரியவில்லை. ‘என்ன சார், திடீர்னு தெரு முழுக்க போலீஸ்?’ என்று சாதாரணமாகத்தான் கேட்டிருந்தான். அதற்கு இப்படியா அடிப்பது? வாசலில் நின்று தேமேவென்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவன், கண்கள் இருள கன்னத்தை தடவிக்கொண்டு, அவசரமாக வீட்டுக்குள் போய் கதவைத் தாழிட்டான்.
1.jpg
மெதிலின் நகருடைய முக்கியமான சாலை அது. தனித்தனி பங்களாக்களாக பெரிய வீடுகள். கொலம்பியாவின் இரண்டாவது பெரிய நகரம். நானூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த நகரம் என்பதால் மரபும், நவீனமும் கலந்த கவர்ச்சியை தன்னகத்தே கொண்டிருந்தது மெதிலின். சுற்றிலும் ஒன்பது நகரங்கள்.

நகரம் முழுக்க மனித நடமாட்டத்தால் கசகசவென்றுதான் இருக்கும். அன்று கொலம்பியாவின் மொத்த போலீஸுமே மெதிலின் நகரில், அதுவும் இந்த குறிப்பிட்ட சாலையில் குவிக்கப்பட்டு விட்டதோ என்று எண்ணுமளவுக்கு தெருமுழுக்க மெஷின்கன் ஏந்திய கருப்புச் சட்டைகளின் கூட்டம்.

கிட்டத்தட்ட ஊரடங்கு உத்தரவு போட்டது மாதிரி நிலை. ஒலிபெருக்கி வாயிலாக காவல்துறை அதிகாரி பணிவான மொழியில், அதேநேரம் அதிகாரம் தொனிக்கும் குரலில் உரத்து சொல்லிக் கொண்டிருந்தார். ‘மெதிலின் மக்களே! இன்று கொலம்பியாவின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய நன்னாள்.

தீரமிக்க கொலம்பிய காவல்துறையினர் தங்களது வீரத்தை பறைசாற்றப் போகும் திருநாள். அசுரவதை நடத்த இருக்கிறோம். அரை நாள் அவகாசம் கொடுங்கள். அதுவரை காவல்துறையோடு ஒத்துழையுங்கள். அவரவர் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்!’ பெரிய ஆபரேஷன் ஏதோ நடக்கப் போகிறது என்று மக்களுக்கு புரிந்தது. ஆனால் - யாரை போடப் போகிறார்கள், ஏன் போடப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. ஏனெனில் - தடியெடுத்தவனெல்லாம் கொலம்பியாவில் மாஃபியா ஆகிக் கொண்டிருந்த காலமது.

தடுக்கி விழுந்தால் ஏதோ ஒரு கிரிமினலின் காலில்தான் விழவேண்டும் என்கிற அளவுக்கு கொலம்பியாவே, உலகின் குற்றத் தலைநகராக ஆகிப் போயிருந்த காலக்கட்டம். அமெரிக்க இளைஞர்கள் மொத்தமாக கொலம்பிய போதை படையெடுப்புக்கு பலியாகிக் கொண்டிருந்தார்கள். எனவேதான் கொலம்பியாவைப் பார்த்து அமெரிக்கா கோபமாகக் கேட்டது. ‘நீயே போட்டுத் தள்ளுகிறாயா அல்லது நான் உள்ளே புகுந்து விளையாடட்டுமா?’

கொலம்பியாவுக்கு மானப்பிரச்னை. ‘அய்யன்மீர், சிறிது காலம் பொறுங்கள். போதை ஏற்றுமதி செய்யும் ஒரு மொள்ளமாறி கூட எங்கள் நாட்டில் இல்லை என்கிற நிலையை ஏற்படுத்துகிறோம். ஒரு பயலும் கஞ்சா வளர்க்க மாட்டான். அப்படியே வளர்த்தாலும் வாஷிங்டன் பக்கம் கால் வைக்க மாட்டான். இது கொலம்பிய மாதா மீது ஆணை...’ அமெரிக்காவிடம் கெஞ்சினார்கள்.

பெரியண்ணன் பெரிய மனசு பண்ணினார். ‘பார்த்து, ஒவ்வொருத்தனா போட்டுடுங்க. ஒரு பய உசுரோட இருக்கப்படாது. குறிப்பா, அந்த காட்ஃபாதர். அவனை விட்டே, நீ செத்தே!’ சொன்னதுடன் நிற்காமல் வேட்டைக்கு செமத்தியான டாலர்களில் கூலியும், அள்ள அள்ளக் குறையாமல் ஆயுதங்களும் ஸ்பான்ஸர் செய்தது.

அந்த வகையில் இறுதி வேட்டைக்காகத்தான் மெதிலின் நகரில் கிட்டத்தட்ட ஒரு படையெடுப்புக்கான முஸ்தீபுகளோடு கொலம்பியாவின் தேசிய போலீஸ் களமிறங்கி இருந்தது. குறி, வேறு யாரு, நம்ம காட்ஃபாதர்தான். அரண்மனை மாதிரி கம்பீரமாகத் தெரிந்த அந்த பங்களாவைச் சுற்றித்தான் புற்றீசலாக போலீஸார். ஒட்டகச்சிவிங்கியால் கூட எட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு உயரமான கருங்கல் மதிற்சுவர்.

காம்பவுண்டுக்குள் இருந்த பங்களாவில் என்ன நடக்கிறது, யார் வசிக்கிறார்கள் என்றுகூட சுற்றியிருந்த ஏரியாவாசிகளுக்கு சரிவர தெரியாது. சமீப நாட்களாக யார் யாரோ வருகிறார்கள். விடிய விடிய பார்ட்டி அமளிதுமளிப்படுகிறது. தெருவில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைரன் கார்களுக்கு பக்கவாட்டில் பாதுகாப்பாக போலீசார் மறைந்து நின்றனர். ஒவ்வொருவர் கையிலும் அமெரிக்கா வழங்கிய மெஷின்கன்.

சில துணிச்சலான காவலர்கள் கார்களுக்கு மேல் ஏறிநின்று பங்களாவைக் குறிபார்த்தார்கள். இரும்புத் தொப்பிகளுக்கு பக்கவாட்டில் வழிந்த வியர்வை காதருகில் கோடாக இறங்கியது. கண்ணை இமைத்தால், அந்த கால்நொடியில் பிரளயம் ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தால் இமைக்கவும் மறந்து அந்த பங்களாவின் நெடிய இரும்பு கேட்டை பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

கோட்டைக் கதவு மாதிரி இருந்த அந்த கருப்பு கேட், உயர்தரமான இரும்பால் செய்யப்பட்டது. மெஷின்கன்னில் ஒரு ரவுண்டு சுட்டும்கூட அதை திறக்க முடியவில்லை. கதாயுதம் சைஸில் கையில் வைத்திருந்த சுத்தியல் கொண்டு இரண்டு போலீசார் ‘தொம் தொம்’மென்று அதை அடித்து நொறுக்க முயன்றுகொண்டிருந்தார்கள்.

பங்களாவுக்குள் இருந்து எந்நேரமும் துப்பாக்கிக் குண்டுகள் சீறிக்கொண்டு வரலாமென்ற அச்சம் அனைவருக்கும் இருந்தது. ஐந்து பேர் அடங்கிய ஒரு சிறப்புக் குழுவோடு கேட்டுக்கு முன்பாக கம்பீரமாக நின்று கொண்டிருந்தார் கர்னல் மார்ட்டின். அன்று வேண்டுமென்றே அவர் புல்லட் ப்ரூஃப் கோட் அணிந்து வரவில்லை. செய் அல்லது செத்து மடி. இதுதான் இறுதி வாய்ப்பு. அவர் எத்தனையோ காலமாய் காத்து நின்ற கணம்.

மெஷின்கன்னை தலைக்கு மேலாக உயர்த்திப் பிடித்தார். முகத்தில் அப்பட்டமாக வெளிப்பட்ட படபடப்பையும், பரபரப்பையும் மறைக்க நினைத்தும் முடியவில்லை. கஷ்டப்பட்டு புன்னகைத்து, தன் குழுவினரைப் பார்த்தார். இவர்கள்தான் பங்களாவுக்குள் நுழையப் போகிறார்கள். உளவுத்துறை கொடுத்த தகவல் தெளிவாக இருந்தது. ‘சிட்டு உள்ளேதான் இருக்கிறது. பாதுகாப்பும் பெருசாக பலமில்லை. பத்து பேருக்குள்தான்...’ ‘‘பாய்ஸ்! வேட்டைக்கு ரெடியா?” “யெஸ் சார்!’’ இரும்பு கேட் நொறுங்குவதற்கான தருணம்.

கறுப்புநிற கர்ச்சீப்பால் தன்னுடைய முகத்தை மூடினார் மார்ட்டின். வேட்டைப் புலியின் தீவிரம் வெளிப்படும் வெறிபிடித்த சிவந்த கண்கள். போதை மாஃபியாக்களை ஒழிக்கும் தொடர்பணிகளால், ஒழுங்காகத் தூங்கி மாதக்கணக்கு ஆகிறது. மார்ட்டின் சைகை காட்ட சில போலீசார் அக்கம் பக்கத்தில் இருந்த கட்டிடங்களில் ஸ்பைடர்மேன் மாதிரி ஏறத் தொடங்கினார்கள். ஒரு சான்ஸையும் விட்டுவிடக் கூடாது. ஒருவேளை காட்ஃபாதருக்கு சிறகு முளைத்து பறந்தும்கூட தப்பிக்கலாம். யார் கண்டது?

கட்டிடங்களில் ஏறிய போலீசார் வாகான இடம் பார்த்து அமர்ந்தார்கள். தங்கள் ஆயுதங்களை அந்த பங்களாவை நோக்கி நீட்டினார்கள். அத்தனை பேருமே குறிபார்த்துச் சுடுவதில் வல்லவர்கள். கொலம்பிய காவல்துறையின் தலைசிறந்த வீரர்கள். கேட் நொறுங்கியது. புலிகள் பாய்ந்தன. இவர்களின் வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்ததோ, என்னவோ தெரியாது. பங்களாவின் வாசலில் ‘விர்’ரூமிக் கொண்டிருந்த மஞ்சள் நிற டாக்ஸியின் ஆக்ஸிலரேட்டர் வெறித்தனமாக அழுத்தப்பட்டது.

“பாய்ஸ், ஷூட் த டயர்!” மார்ட்டினின் ஆணை பிறந்ததுமே துப்பாக்கிக் குண்டுகள் கார் டயரைத் துளைத்தன. டப். டப். டப். டயர்கள் தெறிக்க, கார் சடன் பிரேக் அடித்தது. காருக்குள் இருந்தவர்கள் கதவைத் திறந்து கண்ணிமைக்கும் நேரத்தில் பங்களாவுக்குள் ஓடினார்கள். ஓடிக்கொண்டே தங்கள் ரிவால்வரை அழுத்தி வாணவேடிக்கை நிகழ்த்தினார்கள். நிஜத்துப்பாக்கிகளால் கொண்டாடப்பட்ட கொலம்பியன் தீபாவளி.

மார்ட்டினும், அவரது குழுவினரும் தோட்டாக்களை இலக்கின்றி துப்பியவாறே முன்னேறினார்கள். கண்ணில் பட்ட அத்தனையுமே துவம்சம். கதவை எட்டி உதைத்தவாறே வீட்டுக்குள் நுழைந்தார் மார்ட்டின். அவரை எதிர்கொண்ட எதிரிகள், அச்சத்தில் தடதடத்தவாறே மாடிப்படிகளில் ஏறித் தப்ப முயற்சி செய்து பலியாகினர். அந்த நீண்ட ஹாலின் சுவர்கள் முழுக்க தோட்டாக்கள் துளைத்திருந்தன. அலமாரிகள் சின்னாபின்னமாகிச் சிதறியிருந்தன.

இதற்கிடையே அக்கம் பக்க பங்களாக்களில் நிலைகொண்டிருந்த காவலர்களும் இந்த பங்களாவின் ஜன்னல்களை நோக்கி சுடத் தொடங்கினார்கள். ஹாலின் மத்தியில் பிரும்மாண்டமாக கூரையை அலங்கரித்துக் கொண்டிருந்த ஷாண்டிலியரை நோக்கி ஒருவன் கண்ணை மூடிக்கொண்டு சுட்டான். எங்கும் கண்ணாடிச் சிதறல். “சார், இங்கே ஒருத்தனும் இல்லை! எல்லாரும் மாடிக்கு போயிட்டானுங்க...” சொன்னவாறே மாடிப்படியில் கால்வைத்த காவலனை, மார்ட்டின் தடுத்து நிறுத்தினார்.

“நம்ம தரப்புல ஒருத்தனும் சாகக்கூடாது. அப்படியே போறதா இருந்தா என் உயிர் போகட்டும்!” சொன்னவாறே தபதபவென்று படிகளில் ஏறினார். அவரை வரவேற்ற தோட்டாக்களிடம் கதகளி ஆடியவாறே முன்னேறினார். பின்தொடர்ந்து வந்தவர்கள் மார்ட்டினுக்கு பாதுகாப்பு அளிக்கும்விதமாக மேல் அறையிலிருந்த கதவுகளை சுட்டுக் கொண்டே இருந்தனர். மாடியில் பெரும் ஓலம் கேட்டது.

ஏகப்பட்ட பேரை தாங்கள் போட்டுத் தள்ளிவிட்டோம் என்பது போலீசாருக்கு புரிந்தது. வெளியிலிருந்து வந்த காவலர்களின் தோட்டாக்களும் கச்சிதமாக கயவர்களின் கதையை முடித்தது. பத்து நிமிடத்தில் கதம், கதம். காவலர்களுக்கு உயிர்ச்சேதமில்லை. மார்ட்டின் கவலையாக பிணமாகக் கிடந்தவர்களின் உடலைப் புரட்டி முகங்களைப் பார்த்துக் கொண்டே வந்தார். “அவன் தப்பிச்சிட்டான்னு நெனைக்கிறேன்!” இரண்டு கைகளையும் தலையில் வைத்தபடி அப்படியே சோபாவில் சாய்ந்தார்.

முதல் தளத்திலிருந்து உற்சாகக்குரல் கேட்டது. “சார், இது பாப்லோ!” வெளிர் நீல ப்ளூ ஜீன்ஸ், கருநீல டீஷர்ட் அணிந்திருந்த அந்தப் பிணத்தைத் திருப்பிப் போட்டார். கனமான தொப்பை. தாடி மறைத்திருந்த முகத்தை உற்று நோக்கினார். யெஸ். அவரேதான். தி கிரேட் காட்ஃபாதர். கோகைன் மன்னன். குற்றவியல் சக்கரவர்த்தி. அமெரிக்காவுக்கு தண்ணி காட்டிய அசால்ட் தாதா. போதை உலகின் பேரரசன். தி ஒன்அண்ட்  ஒன்லி, பாப்லோ எமிலோ எஸ்கோபார் கேவிரியா.

அந்த நாள், டிசம்பர் 2, 1993. முந்தைய நாள்தான் தன்னுடைய 44வது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடியிருந்தார் எஸ்கோபார். “ஜெய் கொலம்பியா! எஸ்கோபாரை நாம போட்டுட்டோம்!” மார்ட்டின் உற்சாகமாகப் பெருங்குரல் எடுத்து கத்தினார். காட்ஃபாதரின் இறுதிநாள் குறித்து போலீஸ் சொல்லும் கதை இதுதான். ஆனால், இதுதான் கதையா?
 

(மிரட்டுவோம்)

 

 

kungumam.co.

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

யுவகிருஷ்ணா - 2

மதுபோதைக்கு எதிராக தமிழ்நாடு போர்க்கோலம் பூண்டிருக்கும் காலம் இது. ஆனால் - அமெரிக்காவோ கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக போராடிக் கொண்டிருக்கிறது. போதைப்பொருள் விற்பனையாளர்கள், பயன்பாட்டாளர்கள் என்று ஆண்டுக்கு சராசரியாக ஆறு லட்சம் அமெரிக்கர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
9.jpg
போதையைப் பொறுத்தவரை புகை, மதுவெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. நம்ம ஊரு டாஸ்மாக்கெல்லாம் அவர்களுக்கு ஜுஜூபி. மரிஜுவானா, ஹெராயின், கோகெயின், ஓபியம் உள்ளிட்ட போதை வஸ்துகளால் தங்கள் நாடே அழிந்துவிடும் போலிருக்கிறது என்று அலறிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

குறிப்பாக LSD (Lysergic acid diethylamide), அமெரிக்க இளைஞர்களைச் சூறையாடிக் கொண்டிருக்கிறது. சும்மா டிஷ்யூ பேப்பர் மாதிரி இருக்கும். இல்லையேல் சின்ன சர்க்கரைக் கட்டி வடிவத்தில் இருக்கும். தம்மாத்தூண்டு புட்டு, நாக்குக்கு அடியில் வைத்தால் சொர்க்கம் தெளிவாகவே தெரியுமாம். தொடர்ச்சியாக பயன்படுத்துபவர்களின் நரம்பெல்லாம் லூசாகி, கொஞ்ச நாட்களிலேயே பைத்தியம் பிடித்து தெருத்தெருவாகத் திரிய வேண்டியதுதான்.
9a.jpg
பாப்லோ எஸ்கோபாரின் மரணத்தில் ‘மிரட்டுவோம்’ போட்டுவிட்டு, திடீரென்று போதை பாடம் எடுக்கிறீர்களே என்று அலுத்துக் கொள்ளாதீர்கள். போதை உலகின் பேரரசனைப் பற்றிய தொடரில், போதையின் வரலாற்றைத் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை என்றால் எப்படி? ஆழமாகப் போனால் போதையே தனி தொடராகிவிடும். எனவே, லைட்டாக ஓர் இழுப்பு மட்டும் இழுத்துவிடுவோம்.

அப்போதுதான் சொர்க்கமல்ல, நரகம் என்பது தெரியும்! உலகின் முதல் போதையென்று பாலியல் உறவைத்தான் சொல்லித் தொலைக்க வேண்டும். கடவுள் விதித்த கட்டுப்பாட்டை மீறி ஆதாம் ஏவாள் மீது போதை கொண்டான். பெண், மண், பொன்னென்று அவனுடைய போதை கொஞ்சம் கொஞ்சமாக பரிணாமம் அடைந்து இன்று LSDயில் வந்து நிற்கிறது.
9b.jpg
உலகின் ஆதித் தொழில்களில் ஒன்றாக போதை வணிகத்தையும் தயங்காமல் குறிப்பிடலாம். காட்டுமிராண்டியாக இருந்த மனிதன் வேட்டையின்போது காயப்படுவான். வலியைப் போக்க மூலிகைகளின் பயன்பாடுகளைத் தேடித்தேடி கண்டறிந்தான். வலிநிவாரணிகளைக் கண்டறியும் அவனது முயற்சியின் பக்கவிளைவுகளில் ஒன்றுதான் போதையை உணர்ந்தது.

இன்றும்கூட போதை ஏற்றிக்கொள்ளப் பயன்படும் லாகிரி வஸ்துகள் பெரும்பாலும் வலிநிவாரணியாக மருத்துவத்துறைக்கு பயன்படுபவைதான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் போதைதான். ஒரு பக்கம் ஆற்றங்கரை நாகரிகங்களை உருவாக்கி விவசாயத் தேவைகளுக்காக நிலங்களை பதப்படுத்தி தானியங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தான் மனிதன்.

இதை நாம் நாலாங்கிளாஸ் வரலாற்றுப் பாடத்திலேயே படித்திருக்கிறோம். பாடங்களில் சொல்ல மறந்தது என்னவென்றால் சைட் பிசினஸாக கஞ்சா, ஓபியம் உள்ளிட்ட போதை வஸ்துகளையும் தன்னுடைய தேவைக்காக பயிரிட்டிருக்கிறான். தன் தேவைக்கு மிஞ்சியவற்றை பண்டமாற்று முறையில் வணிகமும் செய்திருக்கிறான்.

சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சுமேரியர்கள் ஓபிய போதையில் திளைத்திருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் செப்புகின்றன. ஓபியம்தான் போதை வஸ்துகளின் தாய்வீடு. மார்பின், ஹெராயினெல்லாம் ஓபியம் வம்சம்தான். ஆற்றங்கரை நாகரிகங்களில் ஓபியம் பெரும் போதை எழுச்சியை உருவாக்கியிருக்கிறது. அக்கால மருத்துவர்களின் அனஸ்தீஷியாவாக இதுவே உயிர்களைக் காத்தது. என்றாலும், போதை வஸ்துவாக மாறி பல்லாயிரம் உயிர்களையும் குடித்தது.

பண்டைய போர்களில் ஓபியம் அவசியம். ஆவேசமாக எதிரியின் தலையை எவ்வித குற்ற உணர்வுமின்றி வெட்டித் தரையில் உருளச் செய்ய வேண்டுமானால், இதுமாதிரி ஓர் ஆவேச போதை இருந்தால்தானே வேலைக்கு ஆகும்? இந்த இடத்தில் அப்படியே கட் செய்து விக்ரம் நடித்த ‘இருமுகன்’ படத்துக்கு வாருங்கள். லவ் கேரக்டர் முன்மொழியும் ‘ஸ்பீட்’ அப்படியே ஃப்ரீஸ் ஆகிறதா? குட். எந்த இடத்தில் நிறுத்தினோம்... யெஸ். யுத்தம்.

போர்களில் காயமடைந்தவர்கள் சந்தன வில்லைகள் வடிவில் இருந்த ஓபியத்தை வாயில் ஒரு பக்கமாக ஒதுக்கித்தான் தங்கள் வலிகளை மறந்தார்கள். எனவேதான் படையெடுப்புக்குத் தயாராகும் மன்னர்கள் டன் கணக்கில் ஓபியத்தை ஸ்டாக் செய்து வைத்திருக்கிறார்கள். அஃபிஷியலாகவே அப்போதெல்லாம் போர்வீரர்களுக்கு போதை அலவன்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது.

சுமார் ஐயாயிரத்து ஐந்நூறு வருடங்களுக்கு முன்பாகத்தான் நாம் சாராயம் காய்ச்ச ஆரம்பித்தோம். இந்த மகத்தான கண்டுபிடிப்புக்கு புண்ணியம் கட்டிக் கொண்டவர்கள் எகிப்தியர்கள். ஏதோ புல்லின் சாறையெடுத்து வடிகட்டி காய்ச்சி குடிக்கும்போது போதை ஏறுகிறது என்பதை யதேச்சையாகக் கண்டுபிடித்தார்கள். அதன்பிறகே விஸ்கி, பிராந்தி, ஒயினென்று விதவிதமாக மதுவகைகளை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தியர்களும் லேசுப்பட்டவர்கள் இல்லை. சோமபானம், சுராபானம் என மூழ்கி முத்தெடுத்திருக்கிறார்கள். இலைதழைகளாலும் போதை ஏற்ற முடியும் என்பதெல்லாம் கொஞ்சம் லேட்டஸ்ட் (அதாவது குன்ஸாக ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) கண்டுபிடிப்புதான். இலைகளைக் காயவைத்து சுருட்டி தீ மூட்டி ஒரு இழுப்பு இழுத்தால் சும்மா ஜிவ்வென்று ஏறுகிறது என்பதையெல்லாம் சித்தம் போக்கு சிவன் போக்கு என்றுதான் கண்டறிந்தார்கள்.

தொழிற்புரட்சியின் விளைவாக எல்லா தொழில்களும் நவீனமானது மாதிரி போதைத் தொழிலும் புத்துணர்வு பெற்றது. அதுவரை முறைப்படுத்தப்படாத இத்தொழில், இதன் பின்னரே பக்காவாக பாட்டிலிங் & பேக்கேஜிங்கெல்லாம் செய்யப்பட்டு, அரசுக்கு வரியெல்லாம் கட்டி ஆஹா ஓஹோவென்று நடந்தது.

இன்றைய நம்முடைய டாஸ்மாக் எல்லாம் ஒருவகையில் அதன் நீட்சிதான். ஓபியம் விற்பனை தொடர்பாக இங்கிலாந்துக்கும், சீனாவுக்கும் இருமுறை போரே நடந்தது. ‘Anglo - Chinese war’ என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் அந்த இரு போர்களின் இயற்பெயரே ‘ஓபியம் போர்’தான். இந்தியாவில் ஓபியம் விளைவித்து, அதை சீனாவில் விற்பனை செய்யும்போது சீன அரசுக்கும், கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறு முற்றியதன் விளைவாகவே போர்கள் மூண்டன.

கி.பி. 1852ல் ‘அமெரிக்க மருத்துவக் கூட்டமைப்பு’ உருவானது. மருத்துவத்தில் இருந்து போதையைப் பிரித்தெடுத்த முன்னோடி அமைப்பு இதுதான். மருந்து விற்பனையை முறைப்படுத்த வேண்டும்; உயிர் காக்கும் மருந்துகள் போதை பயன்பாட்டுக்காக வீணடிக்கப்படக் கூடாது என்று இந்த அமைப்பே வலியுறுத்தியது. இதன்பிறகே மருந்துகளின் பயன்பாடுகளைக் கசடறக் கற்றவர்கள்தான் மருந்துக்கடை அமைக்கலாம் என்கிற நிலை உருவானது.

போதை தரும் மது உள்ளிட்ட சமாச்சாரங்கள் தனிக்கடை போட்டு வளர்ந்தன. ஒருகட்டத்தில் போதை மருந்து விற்பனை என்பது மரணதண்டனைக்குரிய குற்றம் என்று சில நாடுகளில் அறிவிக்கப்படுமளவுக்கு போதை எதிர்ப்பு தோன்றியது. போதையில் இருந்து விழித்தெழுந்த முதல் நாடு அமெரிக்காதான். என்றாலும் போதையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடாகவும் அதுவேதான் இன்றும் இருக்கிறது.

அமெரிக்கா மொத்தத்தையும் மரிஜுவானா ஜுரம் பிடித்து ஆட்டோ ஆட்டென்று ஆட்டுகிறது. அங்கே பத்தில் ஒருவர் போதைக்கு அடிமையானவர். அந்நாட்டின் மனிதவளமே முற்றிலுமாகச் சீர்குலைந்து போயிருக்கிறது. ஆண் பெண் வித்தியாசமில்லாமல், எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் குழிவிழுந்த கண்களுடன், டொக்கு விழுந்த கன்னங்களுடன் zombie மாதிரி திரிகிறார்கள்.

இந்த அவலநிலைக்குக் காரணம் தென் அமெரிக்காதான் என்று அமெரிக்கா கண்கள் சிவக்க கதறுகிறது. தென் அமெரிக்காவில்தான் கொலம்பியா இருக்கிறது. கொலம்பியாவைத்தான் நம் காட்ஃபாதர் பாப்லோ எஸ்கோபார் கட்டியாண்டார்.
 

(மிரட்டுவோம்)

kungumam.co

Link to comment
Share on other sites

 

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

யுவகிருஷ்ணா - 3

“இன்னா தலை. கடலுக்குள்ளாற போய் தூண்டில் போடுறதை உட்டுட்டு, குஜிலிங்களோட பீச்சாங்கரையில கும்மாளம் போட்டுக்கினு இருக்கே?” கேள்வி கேட்ட பையனுக்கு வயசு பதினெட்டுதான். டீ ஷர்ட்டில் நாலெழுத்து ஆங்கில கெட்ட வார்த்தைக்கு பெண்களை அழைப்பதைப் போன்ற ஏதோ குஜால் வாசகம். முட்டி வரை நீளும் ஷார்ட்ஸ். ஹிப்பி பாணி ஹேர்ஸ்டைல். கூர்மையானநாசி. அலைபாய்ந்து  கொண்டே இருக்கும் குறும்புக் கண்கள். பல்கலைக்கழக மாணவன்.
16.jpg
அவனுடைய கேள்வியை எதிர்கொண்ட ஜார்ஜுக்கு வயது நாற்பத்தைந்து இருக்கலாம். அஜித் மாதிரி பெப்பர் & சால்ட் ஹேர்ஸ்டைல். சிக்ஸ்பேக் உடல்வாகு. கட்டழகை ஊருக்கே பறைசாற்றும் விதமாக திறந்த உடம்புடன் ஒயிலாக வீற்றிருந்தார். சில்க் ஷார்ட்ஸ். அந்த மாணவனுக்கு கல்லூரியில் பாடம் எடுக்கும் பேராசிரியர் அவர்.

“தூண்டிலைப் போட்டு ஒவ்வொரு மீனா புடிச்சு அலுத்துடுச்சு. இன்னிக்கு நைட்டு வலையை விரிச்சி மொத்தமா வாரப்போறேன்...” பைனாகுலரில் தீவிரமாக கடலை ஆராய்ந்துகொண்டிருந்தார். கடலில் உலவிக் கொண்டிருந்த ஒவ்வொரு போட்டும் அவரது கழுகுப் பார்வைக்கு தப்பவில்லை. அவர் எதிர்பார்க்கும் சமிக்ஞை கிடைத்துவிட்டால், அன்று இரவு டன் கணக்கில் ‘சரக்கு’ கிடைக்கும்.
16a.jpg
பில்லியன் கணக்கில் பிசினஸ் செய்யலாம். பனாமா பக்கத்தில் சொந்தமாக ஒரு தீவையே வாங்கலாம். கரன்ஸியை சுருட்டி, அதில் கஞ்சாவை நிரப்பி புகைக்கலாம். படுக்கையறை முழுக்க ஐரோப்பிய அழகிகளை நிரப்பி காமசூத்திரத்தின் அத்தனை கலைகளையும் முயற்சிக்கலாம். ஓவர் நைட்டில் ஓஹோவென்று ஆகிவிடலாம். ஜார்ஜுக்கு இருபுறமும் உடைகளில் தாராளமயமாக்கல் கொள்கையைக் கடைப்பிடிக்கும் லோக்கல் மியாமி அழகிகள்.

சும்மா ஒரு கெத்து அட்மாஸ்பியருக்காக நிரப்பியிருந்தார். மியாமி கடற்கரை முழுக்கவே இதுமாதிரி காட்சிகள்தான். அரைகுறை ஆடைகளில் அழகிகள். பணம் கொழுத்தவர்கள் ஒன்றுக்கு நான்காக வாடகைக்கு அமர்த்தி உல்லாசமாக சூரியக் குளியல் நடத்துவார்கள். மதுவும், கஞ்சாவும் தூள் கிளப்பும். மியாமி கடற்கரையே முகலாய மன்னர்களின் அந்தப்புரம் மாதிரி எப்போதும் கிளுகிளுவென்றுதான் இருக்கும்.
16b.jpg
“தல... இன்னிக்கு செம கலெக்‌ஷன். நாளைக்கும் டிமாண்டு ஓவரா இருக்கும் போலிருக்கு...” ஷார்ட்ஸ் பையிலிருந்து கத்தையாக டாலர் நோட்டுகளை எடுத்து அவர் முன்பாக நீட்டினான். ஆசிரியர், போதை மருந்து டீலர். மாணவன், அவரிடமிருந்து சரக்கு வாங்கி ரீடெயில் பிசினஸ் செய்கிறவன்.

“எத்தனை முறை சொல்லியிருக்கேன்... பிசினஸை ஆபீசில் செய்யணும். பணத்தை அங்கே கொண்டு போய் கேஷியர் கிட்ட கட்டு...” ஆபீஸ் என்பது ‘பிளாக் டுனா gang’குக்கு ஹோட்டல் ரூம். மியாமி கடற்கரையை ஒட்டியிருந்த ஃபவுண்டன் ப்ளூ ஹோட்டல்தான் இந்த போதை மாஃபியாவின் தலைமையகம். அங்கிருக்கும் அறைகளை ஜார்ஜ் மாதிரி டீலர்கள் ஆக்கிரமித்து தங்களுக்கு அலுவலகமாகப் பயன்படுத்துவார்கள்.

ரிசப்ஷனிஸ்ட்டில் தொடங்கி கேஷியர், டெஸ்பாட்ச் என்றெல்லாம் தனித்தனி டிபார்ட்மெண்டுகளாக பக்கா ஆபீஸ் செட்டப். இப்படித்தான் எழுபதுகளின் மத்தியில் போதை பிசினஸ், கார்ப்பரேட் ஸ்டைலில் பக்காவாக அமெரிக்காவில் நடந்து கொண்டிருந்தது. ‘ப்ளாக் டுனா’ என்பது ஒரு மீனின் பெயர்.

இந்த கும்பல் சரக்கு பரிமாற்றத்துக்கு கோட்வேர்டாக ‘ப்ளாக் டுனா’ என்கிற பெயரை அடிக்கடி பயன்படுத்துவார்கள். அதுவே அவர்கள் கேங்கின் பெயராகவே நிலைத்து விட்டது. இவர்களுக்கென்று தனி லோகோ உண்டு. நம் பாண்டியர்களின் சின்னமான துள்ளும் மீன்தான், இந்த மொள்ளமாறி கும்பலின் லட்சனை.

மீன் படம் பொறிக்கப்பட்ட டாலரை செயினில் அணிந்திருப்பார்கள். அதுதான் அவர்களுக்கு அடையாள அட்டை. இவர்களைக் கண்டுபிடித்து சிறைப்படுத்த அமெரிக்க போலீசார் திணறினார்கள். காரணம், சிம்பிள். ஒரு பல்கலைக்கழக ஆசிரியர், போதை மருந்து வியாபாரியாகவும் இருப்பார் என்று யார்தான் கணிக்க முடியும்? அவர் தன்னிடம் படிக்கும் மாணவன் மூலமாகவே சரக்கு விற்கிறார் என்பதை யோசித்தாவது பார்க்க முடியுமா?

வக்கீல், ஆடிட்டர், டாக்டர் என கவுரவமான தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களே சைடு பிசினஸாக போதை வியாபாரம் செய்துகொண்டிருப்பார்கள். ஆதாரமில்லாமல் யார் மீதும் அவசரப்பட்டும் கை வைக்க முடியாது. அமெரிக்கா, தனிமனித சுதந்திரத்துக்கு ரொம்பவும் முக்கியத்துவம் தரும் நாடு.

தவிர, சரக்கு பரிமாற்றத்துக்கு வழக்கமான கேங் லெவல் நடைமுறைகளைப் பயன்படுத்த மாட்டார்கள். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனத்தில் எல்லாம் சரக்கு கடத்தப்படும். ரஜினி நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் கர்ப்பிணி மாதிரி நடித்து, அம்பிகா சரக்கு கொண்டு போவாரே... அந்த முறையெல்லாம் ‘ப்ளாக் டுனா’ கும்பலின் கண்டுபிடிப்புதான்.

இவர்களை எதுவும் செய்ய முடியாமல் நறநறவென்று பல்லைக் கடித்துக் கொண்டிருந்த அமெரிக்க அரசு அதிகாரிகளுக்கு, ஹோல்சேல் ரேட்டில் சரக்கு சப்ளை செய்யும் கொலம்பியா மீதுதான் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஒன்றரை வருஷத்தில் 500 டன் அளவுக்கு அசால்டாக ஏற்றுமதி செய்கிறார்கள்.

கொலம்பியாவுக்கு இதெல்லாம் சப்பை மேட்டர். காட்டுப் பகுதிகளில் காம்பவுண்டெல்லாம் போட்டு தொழிற்சாலை அமைத்து கோகெய்ன் தயாரிப்பார்கள். கிலோவுக்கு 1500 டாலர் உற்பத்திச் செலவு. ஆனால், அமெரிக்கச் சந்தையில் குறைந்தபட்சமாகவே கிலோ 50,000 டாலருக்கு போகும். நேர்மையாக வியர்வை சிந்தி பாடுபட்டு விவசாயம் செய்து கரும்போ, கோதுமையோ விளைவித்து 50 மடங்கு லாபம் பெற முடியுமா என்ன?

எனவே, ஆளாளுக்கு குடிசைத் தொழில் கணக்காக போதை ஃபேக்டரிகளை உருவாக்கினார்கள். அதை மார்க்கெட்டிங் செய்ய ‘கார்டெல்’கள் இருந்தன. ‘கார்டெல்’ என்றால் கேங். ஊரில் இருக்கும் ரவுடிப் பயல்கள் எல்லாம் ஏதாவது ஒரு கார்டெல்லில் எக்ஸிக்யூட்டிவ் ரேஞ்சில் இருப்பார்கள். ஒவ்வொரு கார்டெல்லுக்கும் ஒரு காட்ஃபாதர் உண்டு.
 
நம்ம காட்ஃபாதர் பாப்லோ எஸ்கோபாருடையது மெதிலின் கார்டெல். இந்த சனியன்கள் எல்லாம் சேர்ந்துதான் அமெரிக்காவை போதை சாக்கடைக்குள் தள்ளிக் கொண்டிருந்தார்கள். அதற்கு காரணமும் அவர்களேதான். வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பான் ஓர் அசுரன் என்பார்களே, அந்த கதை அமெரிக்காவுக்கு எப்போதுமே பொருந்தும்.

அவர்களே ஓர் அமைப்பை பொத்திப் பொத்தி வளர்ப்பார்கள். வளர்ந்ததும் அந்த அமைப்பே அவர்களைப் போட்டுத்தள்ள தொடை தட்டிக் கிளம்பும். அந்தக் காலத்திலிருந்து அல்குவைதா வரை இதுதான் அமெரிக்காவின் ராசி. இரண்டாம் உலகப் போர் முடிந்ததுமே உலகநாடுகளை அமெரிக்காவும், ரஷ்யாவும் இரண்டாக பங்கு போட்டுக் கொள்ள முயற்சித்தன. பாதி நாடுகள் கம்யூனிஸம். மீதி நாடுகள் முதலாளித்துவம். பனிப்போர் என்பார்களே, அது இதுதான்.

ரஷ்யாவின் மூக்குக்கு அருகிலேயே ஐரோப்பாவின் பல நாடுகளை முதலாளித்துவ நாடுகளாக, தன்னுடைய தோஸ்துகளாக மாற்றியது அமெரிக்கா. பதிலுக்கு அமெரிக்காவின் காலிலேயே குழி பறித்தது ரஷ்யா. தென்னமெரிக்க நாடுகள் பலவற்றிலும் ‘புரட்சி’ ஏற்பட ஏதுவாக பொதுவுடைமைக் கருத்துகளை பரவலாக்கியது. அமெரிக்கா ஆட்டுவித்தால் ஆடும் பொம்மை அரசுகளைக் கவிழ்த்து கலகம் செய்ய கொரில்லா குழுக்களை ஆதரித்து ஆயுதங்களையும் வழங்கியது.

சோவியத் ரஷ்யாவின் ஆதரவில் ஏராளமான இடதுசாரி ஆயுதக் குழுக்கள் தென்னமெரிக்காவில் தோன்றி, தத்தம் அரசுகளுக்கு எதிராக தினந்தோறும் புரட்சிப் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக கியூபாவில் ஏற்பட்ட புரட்சி, அமெரிக்காவை தூங்கவிடாமல் தொந்தரவு செய்தது. அதுபோன்று வேறு நாடுகளில் நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தது.

கொரில்லாக்களை போட்டுத்தள்ள பொம்மை அரசுகளுக்கு பக்கபலமாக உள்ளூர் தாதாக்களுக்கு காண்ட்ராக்ட் கொடுத்து, வலதுசாரி ராணுவக் குழுக்களை அமெரிக்கா உருவாக்கியது. இந்தக் குழுக்களுக்கு தாராளமாக நிதியுதவியும், அள்ள அள்ளக் குறையா ஆயுதங்களும், இதர ஜல்ஸா சமாச்சாரங்களும் கிடைத்துக் கொண்டே இருந்தன.

தான் உருவாக்கிய அமைப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு பெர்ஃபார்ம் பண்ணமுடியாமல் மொக்கையாகி விடும் பட்சத்தில் அவற்றை முற்றிலுமாகக் கைவிட்டுவிடுவது அமெரிக்காவின் ஸ்டைல். அம்மாதிரி அனாதரவாகிவிட்ட அமைப்புகள் பலவும், கார்டெல் அமைத்து போதை பிசினஸ் செய்து அரசை ஆட்டம் காணவைக்கும் அமைப்புகளாக அடித்துப் பிடித்து வளர்ந்துவிடுவார்கள்.

அமெரிக்காவுக்கு போதை சரக்கு ஏற்றுமதி செய்வார்கள். ஓகே. ஓரளவுக்கு அந்த காலக்கட்டத்தையும் சூழலையும் புரிந்து கொண்டிருப்பீர்கள். இனி, டைரக்டாகவே தி கிரேட் காட்ஃபாதர் பாப்லோ எஸ்கோபார், ஓனர் ஆஃப் மெதிலின் கார்டெல் அவர்களை தரிசிப்போம்.
 

(மிரட்டுவோம்)

http://kungumam.co.in

Link to comment
Share on other sites

 
 

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

யுவகிருஷ்ணா - 4

இவர்கள் இரண்டே பேர். வெறியோடு சுற்றி நின்றவர்கள் எட்டு பேர். ‘ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தை காட்டு’ என்று இயேசு சொன்னதாக, அம்மா அடிக்கடி சொல்வாள். அப்படி காட்டிக் காட்டித்தான் தினமும் கன்னம் வீங்கி வீட்டுக்கு வந்துகொண்டிருந்தான் எஸ்கோபார். பன்னிரெண்டு வயது முடியப் போகிறது. பெரிய பையன்களிடம் தினம் தினம் அடி வாங்குகிறான்.
13.jpg
காரணம் ரொம்பவும் அற்பமானது. அம்மா. அற்பம் என்று சொன்னது அம்மாவை அல்ல. அம்மாவால் இவனுக்கு ஏற்படும் விபரீதத்தை. எலிமெண்டரி ஸ்கூல் டீச்சரான அம்மா, பள்ளிக்கூடத்துக்கு வந்தோமா, பசங்களுக்கு ‘அ, ஆ, இ, ஈ’ என்று பாடம் எடுத்தோமா என்றில்லை. யார் எப்படி போனால் இவளுக்கென்ன?

இறைநம்பிக்கை மிகுந்தவள். குழந்தைகள் ஒழுக்கத்தோடு வளரவேண்டும் என்பதில் கண்டிப்பு காட்டுவாள். அப்பாவுக்கு அவர் உண்டு, அவர் வளர்க்கும் மாடுகள் உண்டு. வீட்டைப் பற்றியோ, ஆறு குழந்தைகளைப் பற்றியோ அலட்டிக் கொள்ளவே மாட்டார். எஸ்கோபாரின் வீட்டில் மதுரை ஆட்சி. தன்னுடைய குழந்தைகள் மட்டுமின்றி, ஊரில் இருக்கும் அத்தனை குழந்தைகளுமே ஒழுக்கசீலர்களாக வளரவேண்டும் என்று அம்மா எதிர்பார்த்ததுதான் பிரச்னை.

நாலாங் கிளாஸ் படிக்கிற பையன் கஞ்சா விற்கிறான் என்றால் இவளுக்கு என்ன போச்சு? அந்த பயல்களை பிடித்து பிரின்சிபாலிடம் கொடுக்கிறாள். ஸ்கூல் காம்பவுண்டில் பொறுக்கிப் பசங்கள் டோப் அடிக்கிறார்கள் என்றால், போலீஸுக்கு கம்ப்ளைண்ட் செய்கிறாள். இந்த முடிச்சவிக்கிகளோடு சில போலீஸ்காரர்களே போதையேற்றிக் கொள்வதை எஸ்கோபாரே பார்த்திருக்கிறான்.

இப்படியாக ஊரில் நடக்கும் நல்லது கெட்டதுகள் அனைத்திலும் அவள் மூக்கை நுழைக்கிறாள். அவளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. மரியாதைக்குரிய டீச்சர் என்பதால் அவளை விட்டு விடுகிறார்கள். எஸ்கோபாரின் அக்காவையும், எஸ்கோபாரையும்தான் டார்கெட் செய்கிறார்கள்.

இன்னும் சதை போடாமல், பார்க்க ‘துள்ளுவதோ இளமை’ தனுஷ் மாதிரி நோஞ்சானாக இருக்கும் அவனைப் பிடித்து சுளுக்கெடுப்பதின் மூலமாக அவன் அம்மா ஹெர்மில்டா டீச்சரை பழிவாங்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் கருதுகிறார்கள். அவர்களது ஈகோ இப்படித்தான் திருப்தியடைகிறது. எஸ்கோபாரை விடுங்கள். அவனுடைய நெருங்கிய நண்பன் என்கிற ஒரே பாவத்துக்காக குஸ்டோவாவும் மாட்டிக் கொள்கிறான். போதாக்குறைக்கு அவன் சொந்தக்காரப் பயல் என்பதால் அவனையும் சேர்த்து கும்மியடிக்கிறார்கள்.

இந்த கொடுமைக்கெல்லாம் விடிவுகாலம் எப்போது? அடிவாங்கி, அடிவாங்கி எஸ்கோபாருக்கும், குஸ்டோவாவுக்கும் சலித்து விட்டது. இப்போதெல்லாம் வலிப்பதே இல்லை. உடம்பு மரத்துப் போய்விட்டது. ஒருநாள் திருப்பி அடிப்போம் என்று விபரீதமாக முடிவெடுத்தான் எஸ்கோபார். அந்த நாள்தான் இந்த நாள்.

வழக்கம்போல பள்ளியை விட்டு பஞ்சு மிட்டாய் சுவைத்துக்கொண்டே எஸ்கோபாரும், குஸ்டோவாவும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். குட்டிச்சுவரில் உட்கார்ந்திருந்த பொறுக்கி கும்பல் ஒன்று அவர்களைச் சீண்டியது. தங்களது சீண்டலுக்கு இவர்கள் மிரளுவதில் அவர்களுக்கு அப்படியொரு பேரானந்தம். போர் அடிக்கும்போதெல்லாம் இவர்கள் இருவரையும் வம்புக்கு இழுத்து அடிப்பார்கள். அன்றும் டிட்டோ.

“ஆ ஊன்னா அம்மா பின்னாடி போய் ஒளிஞ்சிக்கிற பொம்பளைப் பசங்களா, கவுன் எடுத்து மாட்டிக்கங்கடா…” இருவரும் காதில் விழாதது மாதிரிதான் போய்க் கொண்டிருந்தார்கள். ஒருவன் பின்னாலேயே ஓடிவந்து எஸ்கோபாரின் தலையில் ஓங்கிக் குட்டிவிட்டு திபுதிபுவென்று ஓடினான். இன்னொருவன் சடாரென்று குஸ்டோவாவின் டவுசர் நாடாவை இழுத்து, அவிழ்க்க, பின்னாலேயே வந்த அந்த கும்பல் பகபகவென்று பி.எஸ்.வீரப்பா மாதிரி சிரித்தது.

எஸ்கோபார் நின்று முறைத்தான். சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை ஆயிற்றே? “அய்யே. கொழந்தைக்கு வீரம் வந்துடிச்சி பாரேன். முறைக்குது...” கும்பல் மீண்டும் கெக்கலித்து சிரித்தது. ஒருவன் மட்டும் முன்னே வந்தான். “என்னடா... என்னிக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கு முறைப்பெல்லாம் பலமா இருக்கு. போனவாரம் வாங்கின அடி மறந்துபோச்சா?”

எஸ்கோபாரின் சட்டையைப் பிடித்து இழுத்தான். மேல் பட்டன் தெறித்து விழுந்தது. கன்னத்தில் சப்பென்று ஒரு அப்பு அப்பினான். மார்பில் இரு கையையும் வைத்து பலமாகத் தள்ளி விட்டான். ‘நாயகன்’ படத்தில் போலீஸ் அடிக்க அடிக்க அப்படியே முறைத்துக் கொண்டு நிற்பாரே கமல்... அதேமாதிரி கம்பீரமாக நின்றான் எஸ்கோபார். பொறுக்கிகளுக்கு வெறியேறியது.

“பாப்லோ… வந்துடுறா போயிடலாம்...” அவிழ்ந்த டவுசரை சரிசெய்தபடியே அச்சத்தோடு குரல் கொடுத்தான் குஸ்டோவா. “அவன்தான் கூப்புடுறானில்லே? கெளம்புடா சப்பை. அடிச்சிட கிடிச்சிட போறேன்...” சொல்லி முடிக்கவில்லை. சொன்னவனின் செவுள் அடுத்த நொடியே பிகிள் ஊதியது. தன்னுடைய நீளமான கரங்கள் இரண்டையும் நன்கு பின்னுக்குத் தள்ளி விரல்களை அழுத்தமாக மூடி, இறுக்கமாக ஆக்கி சப்பென்று எதிரியின் இரு கன்னங்களிலும் பலமாகத் தாக்கினான்.

அடிவாங்கியவனுக்கு கண்கள் இருண்டன. பூச்சிகள் பறந்தன. வாயில் ரத்தம் கரித்தது. தள்ளாடியபடியே தடுமாறி விழுந்தான். முகம்மது அலி ஸ்டைலில் நாக் - அவுட். சாது மிரண்டது. காடு எரிந்தது. அதுவரை கேலியும் கிண்டலுமாக இருந்த கும்பல் சீரியஸ் ஆனது. எஸ்கோபாரையும், குஸ்டோவாவையும் சுத்துப் போட்டு வூடு கட்டியது. அந்த வட்டம் நகர்ந்து நகர்ந்து குறுக முயற்சித்தது.

“குஸ்டோவா, குட்ட குட்ட குனியறதுக்கு பொறந்தவனுங்களா நாம? எத்தனை பேரு வேணும்னாலும் இருக்கட்டும். எப்படி வேணும்னாலும் அடிக்கட்டும். நம்ம மண்டையே உடையட்டும். ஆனா, இவனுங்கள்லே ஒருத்தன்கூட இன்னிக்கு சில்லுமூக்கு உடையாம வீட்டுக்கு போவக்கூடாது. நான் ரெடி, நீ ரெடியா?” ஆக்‌ஷன் ஹீரோ மாதிரி சட்டென்று இரு கால்களையும் விரித்து, கைகள் இரண்டையும் குத்துச்சண்டை வீரன் மாதிரியான போஸ்களில் நிறுத்தினான்.

இந்த பஞ்ச் டயலாக்கை கேட்ட குஸ்டோவாவுக்கும் வீரம் பெருக்கெடுத்தது. காலடியில் குவிந்து கிடந்த கற்களில் வாகான இரண்டை கையில் எடுத்துக் கொண்டான். “வாங்கடா... வாங்கடா... முதலில் வர்றவனுக்கு ரத்தக்காயம் நிச்சயம்...” கூரான கல்லைக் காட்டிக்கொண்டே குஸ்டோவா சொன்னதும், சுற்றி நின்றவர்கள் நெருங்கத் தயங்கினார்கள். வட்டம் கொஞ்சம் இளகியது.

ஏற்கனவே அடிபட்டு கீழே விழுந்து கிடந்தவன், சின்னப் பயலிடம் அடிவாங்கி அசிங்கப் பட்டு விட்டோமே என்கிற ஆத்திரத்தில் ‘ஹோ’வென்று கத்திக் கொண்டே வட்டத்தைப் பிளந்துகொண்டு பாய்ந்தான். குஸ்டோவாவின் வலது கரத்தில் இருந்த கருங்கல் அவனது தவடையைப் பதம் பார்த்தது. எதிர்பாரா அடியால் அவன் மிரள, இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சட்டென்று குனிந்த எஸ்கோபார், அவனது கால்களைப் பிடித்து இழுத்து வாரினான்.

கீழே விழுந்தவனை இருவரும் மாறி மாறி எட்டி உதைக்க, சுற்றி நின்றவர்கள் வெறி கொண்டு பாய்ந்தார்கள். ஆனால் - அவர்கள் அச்சத்தில் திணறிக் கொண்டிருந்ததால் சரியாக சண்டை போட முடியவில்லை. இவர்களோ, செத்தாலும் பரவாயில்லை என்கிற எண்ணத்தில் கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்கினார்கள். துவந்த யுத்தம். இரு தரப்புக்குமே பலத்த சேதம்.

எஸ்கோபாருக்கும், குஸ்டோவாவுக்கும் விழுந்த அடிகளில் வலியே தெரியவில்லை. தாங்கள் இருவர் மட்டுமே போராடி அத்தனை பேர் கொண்ட கூட்டத்தை தலைகீழாக தண்ணீர் குடிக்க வைக்கிறோம் என்கிற பெருமிதத்தில் ஒருநொடி கூட வீணாக்காமல் கண்மூடித்தனமாக இலக்கில்லாமல் அடித்துக்கொண்டே இருந்தார்கள். வன்முறை அச்சமூட்டக்கூடிய செயல்பாடுதான். அந்த அச்சமும்கூட முதன்முறை
அதை சந்திக்கும் வரைதான்.

ஒரே ஒரு முறை அதில் ஈடுபட்டுவிட்டால், வன்முறையும் போதைதான். அதன் மற்ற பக்க விளைவுகளுக்காக வேண்டுமானால், ஈடுபட நாம் தயங்கலாம். வலியெல்லாம் தூசு. எனவேதான், மண்டை உடைந்து முகம் முழுக்க ரத்தம் பீறிடும் நிலையிலும்கூட ஒரு வன்முறையாளன் தன்னுடைய சண்டையை நிறுத்தவே மாட்டான். இந்த போதைக்கு ஒப்பான வேறு போதை இல்லவே இல்லை.

தன்னிடம் அடிவாங்கியவனின் கண்கள் அச்சத்தால் ‘அடிக்காதே’ என்று மவுனமொழியில் கெஞ்சுவதைக் காண்பது ராஜபோதை. அன்று எஸ்கோபாரும், குஸ்டோவாவும் அந்த ராஜபோதையை அனுபவித்தார்கள். சட்டையெல்லாம் கிழிந்தது. முகத்தில் ஆங்காங்கே கீறல். கை காலெல்லாம் சிராய்ப்பு.

ரத்தக்களரியாகத்தான் வீட்டுக்கு வந்தான் எஸ்கோபார். பார்த்ததுமே பதறிவிட்டார் அம்மா. “அடப்பாவி. எந்த வம்பு தும்புக்கும் போவமாட்டீயே. என்னடா ஆச்சு உனக்கு?” “நான் பெரியவன் ஆயிட்டேம்மா!” “வளர்ந்து சர்ச்சுலே ஃபாதர் ஆவேன்னு நினைச்சா, நீ அங்கே இங்கே சண்டையிழுத்து காட்ஃபாதர் ஆயிடுவே போலிருக்கே?”


                                                                                                                                                           (மிரட்டுவோம்)

                    

http://kungumam.co.in

Link to comment
Share on other sites

 

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

யுவகிருஷ்ணா - 5

‘அமரேந்திர பாகுபலியாகிய நான்...’ என்று பிரபாஸ், கைநீட்டி சத்தியப் பிரமாணம் செய்யும்போது மகிழ்மதி நாடே அலறியது இல்லையா? அப்படி ஓர் ஆரவாரம் நம் காட்ஃபாதர் பாப்லோ எஸ்கோபாருக்கும் அவனுடைய இளம் வயதிலேயே கிடைத்து விட்டது. பள்ளிப் பருவத்திலேயே அடிதடி என்று பாப்லோ இறங்கிவிட்டதாலோ அல்லது மெதிலின் புறநகரான ரியோநெக்ரோவில் இனி பண்ணை வைத்து, பணம் சம்பாதித்து வாழ முடியாது என்கிற இக்கட்டு தோன்றியதாலோ என்னவோ தெரியவில்லை.
14.jpg
பாப்லோவின் அப்பா, ஏபெல் எஸ்கோபார் தன்னுடைய நிலபுலங்களை கணிசமான விலைக்கு விற்றுவிட்டார். பாப்லோ பிறக்கும்போது அவனது அப்பாவுக்கு சொந்தமாக பன்னிரெண்டு ஏக்கர் நிலம், பெரிய பண்ணை வீடு, லிட்டர் கணக்கில் பால் கறக்கும் ஆறு மாடுகள் என்று அமோகமாகத்தான் இருந்தார்கள். பலரும் கருதுவதைப் போல பாப்லோவின் இளமைக்காலம் வறுமையானது அல்ல.

ரியோநெக்ரோவில் அனைத்தையும் விற்றபின் என்விகாதோ என்கிற குக்கிராமத்துக்கு இடம்பெயர்ந்தார்கள். அம்மா ஹெர்மில்தா, இங்கே சொந்தமாகவே ஒரு ஸ்கூலை தொடங்கிவிட்டாள். அப்பா, பேருக்கு பண்ணை நடத்தினார். கணிசமாக கையில் காசு இருந்தது. “பசங்களா, புது ஊருக்கு வந்திருக்கோம். உங்க வாலையெல்லாம் சுருட்டி வெச்சுக்கிட்டு அம்மா அப்பா பேச்சை கேட்டுக்கிட்டு சமத்தா நடக்கணும்.
14a.jpg
முக்கியமா பாப்லோ, உனக்குத்தான்…” ஆரம்பத்திலேயே எச்சரித்து விட்டார்கள். பாப்லோவுக்கு மீசை அரும்பும் பருவம். ஆருயிர் சகாவும், அத்தனை அராத்துத் தனங்களுக்கும் பார்ட்னருமான குஸ்டோவா இப்போது கூட இல்லாததால் திடீரென்று திருந்திவிட்டான். இல்லை... இல்லை... திருந்தியதைப் போல நடித்துக் கொண்டிருந்தான். அவன் உண்டு, அவன் படிப்பு உண்டு, மாலைவேளைகளில் கால்பந்து என்று சராசரி கொலம்பியனாக வளர்ந்து கொண்டிருந்தான்.

உயரம் சற்றே குறைவுதான் என்றாலும் குறும்பு கொப்பளிக்கும் கண்கள், அசத்தலான ஹேர்ஸ்டைல் என்று ஊரில் இருக்கும் கன்னிப் பெண்களின் நெஞ்சங்களில் அவனை அறியாமலேயே கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தான். அறுபதுகளின் இளைஞன் அவன். உலகம் முழுவதையும் அப்போது உலுக்கிப் போட்ட பாப் இசை, பன்னாட்டு உணவு வகைகள், ஹாலிவுட் திரைப்படங்கள் என்று பாப்லோ ரசனையாக உருமாறினான்.
14b.jpg
இவற்றை அனுபவிக்க அடிக்கடி மெதிலின் நகருக்கு செல்லத் தொடங்கினான். மெதிலினுக்கு இவனுடைய சகா குஸ்டோவாவும்  வருவான். இருவரும் சேர்ந்து பழையபடி சுற்ற ஆரம்பித்தார்கள். கொலம்பியாவில் பத்தாண்டு களுக்கு மேலாக நாற்பதுகளின் இறுதியில் தொடங்கி ஐம்பதுகளின் இறுதிவரை நீடித்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்திருந்தாலும், அதன் தாக்கம் ஆங்காங்கே நீடித்தது.

அரசியல் ஸ்திரமற்ற நிலை நீடித்ததால், கொலம்பிய இளைஞர்களை வழிகாட்டி நல்வழிப்படுத்த ஆட்கள் யாருமில்லை. தங்கள் நாட்டுக்குள் அமெரிக்காவின் மூக்கு அளவுக்கதிகமாகவே நீண்டிருந்ததை, அந்த இளைஞர்கள் விரும்பவில்லை. கொதிப்பான மனநிலையில் இருந்த கொலம்பிய இளைஞர்களுக்கு இருவேறு பாதை இருந்தது.

ஒன்று, புரட்சிகரமான கொரில்லா இயக்கங்களில் இணைந்து அரசுக்கு எதிராக கலகம் செய்வது. இரண்டாவது, அத்தனை கவலைகளையும் மறக்க உல்லாசங்களில் ஊறித் திளைப்பது. பாப்லோ எதைத் தேர்ந்தெடுத்திருப்பான் என்பதை தனியாக உங்களுக்கு சொல்லவும் வேண்டுமோ? அப்போது ‘Nadaismo’ என்கிற இயக்கம் கொலம்பியாவில் எழுச்சி பெற்றிருந்தது.

‘Nadaism’ என்றால் ‘Nothing-ism’. ‘எதுவுமே இல்லை’ என்று எல்லா பொறுப்புகளையும் துறந்து, ஜாலியாக தான்தோன்றித்தனமாக வாழ்வதே ‘Nadaism’. அக்கால அமெரிக்காவையே உலுக்கிப் பார்த்த ஹிப்பி கலாசாரத்தின் இன்னொரு வடிவம்தான் இது. இரண்டாம் உலகப் போர் முடிந்து உலகமே ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தபோது பலருக்கும் சிந்திக்க நிறைய நேரம் கிடைத்தது.

அப்போது ஏகப்பட்ட ‘இஸம்’களாக சிந்தித்துத் தொலைத்தார்கள். ஓவர்நைட்டில் சிந்தனையாளர்களாக ஆகிவிட்டார்கள். அவ்வகையில் ‘Existentialism’ என்கிற ‘இருத்தலியம்’ மற்றும் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை மறுத்து சிந்திக்க வகை செய்யும் ‘Nihilism’ இரண்டையும் உல்டா அடித்து உருவாக்கப்பட்டதே ‘Nadaism’. இந்த இஸங்களை எல்லாம் நோண்டிப் பார்த்தால் நம்முடைய பதினெண் சித்தர்கள் சொன்னவையாகத்தான் இருக்கும்.

அதை விடுங்கள். நம்முடைய ‘காட்ஃபாதர்’ பாப்லோவுக்கு ‘Nadaism’ மீது ஈர்ப்பு ஏற்பட்டு, ‘நதாய்ஸ்மோ’ இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதுதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். அந்த இயக்கத்தின் பொறுப்புத் துறப்பு என்கிற சிந்தனை, எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் பாப்லோ போன்ற இளைஞர்களை தேன் என ஈர்த்தது.

பாப்லோ குடியிருந்த என்விகாதோ பகுதியில்தான் இந்த இயக்கத்தின் மையம் இயங்கியது. ‘The Right to Disobey’ (மறுத்தலுக்கான உரிமை) என்கிற அந்த இயக்கத்தின் ஆவணம் மொத்தமும் பாப்லோவுக்கு மனப்பாடம். கண்டிப்பான கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பாப்லோவுக்கு மறுக்கும் சுதந்திரம் அவசியமாகப் பட்டதில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்?

கொள்கை, கோட்பாடு, கந்தாயத்தை எல்லாம் விடுங்கள். ‘நதாய்ஸ்மோ’ இயக்கம் ‘டோப்’ அடிப்பதை - அதான் கஞ்சா - ஊக்குவித்தது. முரட்டு போதையில்தான் மூளை தெளிவாகும். மூளை தெளிவாகும்போதுதான் பழைய பஞ்சாங்க மதிப்பீடுகளையெல்லாம் உடைத்தெறிவதற்கான சிந்தனைகள் உருப்பெறும் என்று அந்த இயக்கத்தின் முன்னோடிகள் சிந்தித்தார்கள்.

இந்த ஐடியா, பாப்லோவுக்கு ஏற்புடையதாக இருந்தது. ‘டோப்’ அடித்தான். அவனுடைய மூளையில் குழப்பமான சித்திரங்கள் தோன்றின. அந்த குழப்பங்கள் மறைந்து, மனசு தெளிவான போதுதான், தான் ஏன் காட்ஃபாதர் ஆகி கொலம்பியாவை ஆளக்கூடாது என்று தோன்றியது. அதன் பின் நடந்ததெல்லாம் வரலாறு.
 

(மிரட்டுவோம்)

http://www.kungumam.co.in

Link to comment
Share on other sites

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

 

யுவகிருஷ்ணா - 6

மெதிலின் நகரின் இடுகாடு, நூற்றாண்டு கால சமாதிகளால் பல ஏக்கர் பரப்பளவுக்கு நிறைந்திருந்தது. இன்னும் பல்லாயிரம் சடலங்கள் அங்கே நிரந்தரமாக நிம்மதியாக உறங்க தாராளமாக இடமிருந்தது.இரவுகளில் இடுகாட்டை கண்காணிக்கும் அந்த காவலர் கதிகலங்கிப் போயிருந்தார்.
5.jpg
போதைப் பிரியர்களுக்கும், பாலியல் தொழிலாளிகளுக்கும் வேளை கெட்ட வேளையில் அதுதான் கூவத்தூர் ரெசார்ட். காவலருக்கு அஞ்சோ, பத்தோ கவனித்துவிட்டால் போதும். தங்கள் ‘வேலையை’ காதும், காதும் வைத்தது மாதிரி முடித்துக் கொள்ளும் வரை வேறெந்த தொந்தரவும் இருக்காது.

ஆனால் - சமீபமாக அங்கே ஏதேதோ விசித்திரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஏதேதோ சத்தங்கள் கேட்கிறது. அமானுஷ்யமான நடமாட்டத்தை உணர்ந்தார் அந்தக் காவலர். “ஒருவேளை உண்மையிலேயே பேய்கள் இருக்கிறதோ?” ‘இருக்கிறது’ என்று அடித்துப் பேசினான் எஸ்கோபார்.
5a.jpg
பகலில் பள்ளி, மாலையில் மெதிலின் நகர் மதுக்கூடங்களில் சப்ளையராக பணி, இரவுகளில் கஞ்சா என்பதுதான் எஸ்கோபார் & கோவின் வாழ்க்கையாக இருந்தது. தொந்தரவில்லா போதை சுகத்துக்கு தொக்கான ஓர் இடம் வேண்டுமே? அதுதான் இந்த இடுகாடு. கையில் காசு புரண்டால், அவ்வப்போது டீன் ஏஜ் பாலியல் பெண்களோடு வருவார்கள். கிரானைட் கற்களால் வேயப்பட்ட சமாதிகளே மலர் மஞ்சம். காவலர் கண்டுகொள்ள மாட்டார். சின்னச் சின்ன கையூட்டுகளுக்கு விலை போயிருந்தார்.

சமீபமாக எஸ்கோபாரும், அவனுடைய சகா குஸ்டோவாவும் அந்த காவலருக்கு நெருக்கமான சகாக்களாக மாறியிருந்தார்கள். அவரோடு நாட்டுச்சாராயத்தை பகிர்ந்து கொண்டார்கள். குஷியாக இருக்கும் சில நேரங்களில் ‘டோப்’ கூட கொடுப்பார்கள். மாசக் கடைசியில் கேட்டால், வட்டியில்லாமல் கடனும் கொடுத்து உதவுவான் எஸ்கோபார்.
5b.jpg
அந்த இடுகாடுதான் எஸ்கோபாரின் தற்காலிக தலைமையகம். குஸ்டோவாவைத் தவிர்த்து வேறு சில தறுதலைகளும் எஸ்கோபாரின் தலைமையை ஏற்றிருந்தார்கள். ஒரு தலைவனாக மெதுவாக பரிணமித்துக் கொண்டிருந்தான் நம்ம ஆளு. வீட்டில் கிட்டத்தட்ட தண்ணீர் தெளித்து விட்டு விட்டார்கள். இத்தகைய சூழலில்தான் மெதிலின் இடுகாட்டில் பேய்ப் பிரச்னை.

“நடுராத்திரியில் ஏதேதோ சப்தம் கேட்குது பாப்லோ. போனவாரம் கூட நீ அந்தப் பொண்ணோட இருந்துட்டு கிளம்பிப் போனே பாரு... அன்னைக்கு அந்த பொம்பளை மேயரோட சமாதியில் இருந்து டொம்மு டொம்முன்னு சத்தம் கேட்டது. விளக்கு எடுத்துக்கிட்டு போயி பார்க்கலாம்னு கிளம்பினேன். அப்படியொரு கொடூரமான சிரிப்புச் சத்தம்.

சத்தியமா சொல்றேன். அது பேயோட சிரிப்புதான். முதுகெலும்பெல்லாம் அப்படியே நட்டுக்கிச்சி. நாலு நாள் ஜுரத்துலே விழுந்துட்டு, இன்னிக்கி காலையிலேதான் எழுந்து வந்தேன்!” காவலரின் கண்களில் அச்சம் மிச்சமிருந்தது. கஞ்சா புகையை ஆழமாக உறிஞ்சிவிட்டு, வானத்தைப் பார்த்து சிந்தித்தான் பாப்லோ. “நீ சொல்ற மாதிரியான விஷயத்தையெல்லாம் இங்கிலீஷ் படங்களில் பார்த்திருக்கேன்.

நிறைவேறாத ஆசையைத் தீர்த்துக்கறதுக்கு செத்தவங்க பேயா மாறி சமாதியை உடைச்சிக்கிட்டு வெளியே வந்துடுவாங்களாம். அப்படி இல்லைன்னா யாரையாவது பழி தீர்த்துக்கணும்னா கூட இதுமாதிரி சாத்தானா அலைவாங்களாம்!” பேயின் வேலைதான் என்று உறுதியாகச் சொன்னான் எஸ்கோபார்.

காவலரின் வேண்டுகோளை ஏற்று எஸ்கோபாரும், அவனுடைய குழுவினரும் இரவுகளில் சுடுகாட்டை ரோந்து வரத் தொடங்கினார்கள். அவர்களில் பலருக்கும் இதுபோன்ற அமானுஷ்யமான அனுபவங்கள் ஏற்படுவதாக அவ்வப்போது காவலரிடம் வந்து சொன்னார்கள். மேலும், சமாதிகளில் இருந்து கிளம்பும் பேய்கள் சும்மா கிளம்புவதில்லை. தங்கள் சமாதிகளை மூடியிருந்த விலையுயர்ந்த கிரானைட் கற்களையும் அபேஸ் செய்து கொண்டு போகின்றன.

நீத்தார் நினைவுநாளில் அஞ்சலி செலுத்த வரும் சம்பந்தப்பட்ட குடும்பத்தார், சிதைந்து போன சமாதிகளைக் கண்டு குமுறத் தொடங்கினார்கள். சமாதிகள் சரியாக ‘மெயின்டெயின்’ செய்யப்படுவதில்லை என்று காவலரிடம் சண்டைக்குப் போனார்கள். இடுகாட்டுக்கு பொறுப்பான சர்ச்சிடம் விவகாரம் போனது. சர்ச், ஓர் இளம் பாதிரியாரை வைத்து பஞ்சாயத்து செய்தது. ஃபாதரின் விசாரணையில் பேய்களின் அட்டகாசம் பற்றி தெரியவந்தது.

காவலர் சொன்ன கதைக்கு எஸ்கோபார் & கோ நேரடி சாட்சி. வேலிக்கு ஒணான்கள் சாட்சி. இளம் பாதிரியாருக்கு இயேசு நம்பிக்கை மட்டுமின்றி, சாத்தான் நம்பிக்கையும் இருந்தது. Exorcism மாதிரி ஏதாவது மாந்திரீக வேலைகள் செய்து சாத்தானின் லீலையை விரைவில் முறியடிப்பேன் என்று சபதம் ஏற்றார்.

ஆனால் - காணாமல் போய்க் கொண்டிருக்கும் சமாதிகளுக்கு என்ன பதில் சொல்வது? செத்தவர்கள் பேயாக மாறி தங்களை மூடியிருந்த கிரானைட் கல்லை எடுத்துக் கொண்டு வெளியேறுகிறார்கள் என்று சொன்னால் யார்தான் நம்புவார்கள்? அதுவுமின்றி அப்பாவி மக்களிடம் பேய் குறித்த பீதியை எழுப்புவதில் சர்ச்சுக்கு சம்மதமில்லை. எஸ்கோபாரே இந்தப் பிரச்னைக்கு ஒரு தற்காலிக ஏற்பாடு செய்தான்.

தனக்குத் தெரிந்த கல் வியாபாரி ஒருவரை அறிமுகப்படுத்தினான். மலிவு விலையில் செகண்ட் ஹேண்டில் கிரானைட் கற்களை அவர் தாராளமாக சப்ளை செய்ய முன்வந்தார். சர்ச், தலையில் அடித்துக் கொண்டு மாதாமாதம் அந்த ஏஜெண்டுக்கு பில் செட்டில் செய்தது. யாருக்குமே தெரியாமல் காதும் காதும் வைத்தமாதிரி இந்த வேலை நடந்து கொண்டிருந்தது.

இடுகாட்டுக் காவலரும், எஸ்கோபாரும் இந்த காண்ட்ராக்டில் கொஞ்சம் அப்படி இப்படியென்று கமிஷன் அடித்து ஊழல் செய்ததாகவும் சொல்கிறார்கள். ஆனால் - இன்னொரு ட்விஸ்ட்டும் உண்டு. அந்த கிரானைட் ஏஜெண்ட் வேறு யாருமல்ல, எஸ்கோபாரின் ஒண்ணுவிட்ட தாய்மாமன்தான். மேலும், அந்த இடுகாட்டில் பேயுமில்லை, நாயுமில்லை.

எஸ்கோபார் கும்பலின் திருட்டு வேலைதான். காவலரையும், சர்ச்சையும் கிரானைட்டை பேய்கள் களவாடுவதாக நம்பவைத்து இவர்கள்தான் ஆட்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். அதே கற்களையே கொஞ்சம் பாலிஷ் போட்டு, மீண்டும் சர்ச்சுக்கே சகாய விலையில் சப்ளை செய்து நல்ல காசும் பார்த்தார்கள்.

எண்பதுகளில் உலகத்தையே தன்னுடைய கள்ளக் கடத்தல் சாம்ராஜ்யத்தால் உலுக்கிய சக்கரவர்த்தி, மாஃபியாக்களின் டான், கார்டெல்களின் காட்ஃபாதர் எஸ்கோபாரின் முதல் தொழில் இதுதான் என்று சொன்னால், கருப்பு உலகத்துக்கே கேவலம்தான். ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையால் 1989ல் உலகின் டாப்-10 பணக்காரர்களில் ஒருவராக அடையாளம் காட்டப்பட்ட பாப்லோ எஸ்கோபார், தன்னுடைய இந்த முதல் தொழிலைப் பற்றி எங்குமே மூச்சு விட்டதில்லை. யாராவது கேட்டால் மவுனமான ஒரு சிரிப்பை மட்டுமே உதிர்ப்பார்.

இந்தத் தில்லுமுல்லு வேலையைச் செய்துகொண்டிருந்தபோது எஸ்கோபாரின் வயது ஜஸ்ட் பதினேழுதான். சர்ச்சிடமிருந்து ஏமாற்றி நிறைய காசு ஆட்டை போட்டு, தாறுமாறாக செலவழிக்க ஆரம்பித்தான். அவனும், அவனுடைய நண்பர்களும் இரவுநேர உல்லாசங்களில் திளைக்க ஆரம்பித்தார்கள். படிப்பு? அது கிடக்குது கழுதை!
 

(மிரட்டுவோம்)

http://kungumam.co.in

Link to comment
Share on other sites

 
 

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

யுவகிருஷ்ணா - 7

மீசைகூட ஒழுங்காக முளைக்காத பதினேழு வயது. சாதாரண விவசாய அப்பா. டீச்சர் அம்மா. அன்பான சகோதர சகோதரிகள். கட்டுக்கோப்பான மதப்பின்னணி அமைதியான கிராம வாழ்க்கையின் பின்னணியில் இருந்து ஒரு வன்முறையாளன் உருவாவது சாத்தியமில்லாத சம்பவம்தான்.
14.jpg
திடீரென ஒருவன், அத்தனை சட்டவிரோத செயல்களின் மீதும் மோகம் கொண்டு, மெதிலின் நகரின் மைனர் தாதாவாக வலம் வந்ததை நம்ப முடியவில்லை இல்லையா? பாப்லோ எஸ்கோபாரின் ஏழு வயதில் நடந்த ஒரு சம்பவமே, அவனை வாழ்க்கையை ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று வாழ்ந்து பார்க்கத் தூண்டியது.

உயிரின் மீது இருந்த அச்சத்தை முற்றிலுமாகப் போக்கியது. ரத்தத்தை கண்டு ரசிக்கும் மோகம் அவனுக்கு அப்போதுதான் ஏற்பட்டது. பாப்லோவின் அண்ணன் ராபர்ட்டோ எஸ்கோபார் அந்த நிகழ்வை விலாவரியாகவே விவரித்திருக்கிறார். அவர் குரலிலேயே அந்த ரத்த சரித்திரத்தை கேட்போமா? “நாங்கள் பிறந்த காலத்தில் கொலம்பியா நிஜமாகவே பற்றி எரிந்துகொண்டிருந்தது.
14a.jpg
பழமைவாதிகளுக்கும், புரட்சிகர எண்ணம் கொண்ட கொரில்லாக்களுக்கும் இடையேயான சண்டை உச்சத்தில் இருந்தது. கொலம்பிய வரலாற்றில் ‘La violencia’ என்று அழைக்கப்பட்ட காலக்கட்டம் அது. இந்த உள்நாட்டுப் போர் முடிந்தபோது மொத்தம் மூன்று லட்சம் அப்பாவி மக்கள் பலியாகி இருந்தார்கள் என்றால், அந்த காலக்கட்டம் எப்படி இருந்திருக்குமென்று நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.

அதிபர் தேர்தலில் வேட்பாளராக நின்ற ஒருவர் கொல்லப்பட்டதைத்  தொடர்ந்து இந்த வன்முறை வெறியாட்டம் தொடங்கியது. பத்து ஆண்டுகளுக்கு உக்கிரமாக நீடித்தது. கண்டம் துண்டமாக வெட்டி வீசப்பட்ட சடலங்களை சாதாரணமாகப் பார்த்துக்கொண்டேதான் நாங்கள் வளர்ந்தோம். திடீர் திடீரென எங்கள் தெருவில் வசிப்பவர்கள் காணாமல் போவார்கள்.

ஏதோ ஒரு குழு, சந்தேகத்தின் பேரில் அவர்களைக் கடத்திச் சென்றிருக்கலாம். அவர்களில் ஓரிருவர் உயிரோடு - பெரும்பாலும் கையோ காலோ இல்லாமல் - திரும்பினாலே அதிசயம்தான். பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகளுக்கு கணக்கு வழக்கே கிடையாது. துப்பாக்கி எடுத்தவனெல்லாம் புரட்சியாளன் ஆனான்.

இப்படிப்பட்ட சூழலில்தான் நாங்கள் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் வளரவேண்டும் என்று எங்கள் அம்மா விரும்பினாள். நாங்கள் வளர்ந்து பாதுகாப்பாக அமெரிக்காவுக்கோ அல்லது ஐரோப்பாவுக்கோ சென்று அமைதியான வாழ்வை வாழவேண்டும் என்பதுதான் அவளது ஆசை. அதற்கு ஏகப்பட்ட பணம் தேவை. சம்பாதிக்க வேண்டுமானால் நல்ல கல்வி அவசியம்.

எனவேதான் எங்களுடைய கல்வியில் அம்மாவுக்கு அவ்வளவு அக்கறை. அந்த குறிப்பிட்ட ஓரிரவை மட்டும் நாங்கள் மறக்கவே முடியாது. எங்கள் வாழ்க்கையையே முற்றிலுமாக புரட்டிப் போட்ட இரவு. பாப்லோ, பிற்காலத்தில் உலகத்தையே அதிரச் செய்யும் காட்ஃபாதராக உருவெடுத்ததற்கு அச்சாரம் போட்ட இரவு.

வன்முறையை நேரடியாக நாங்களே நேர்கொண்ட அந்த இரவு, என்னை அதிர்ச்சியடைய மட்டும்தான் செய்தது. பாப்லோவையோ, அதுதான் வன்முறையை ரசிப்பவனாக உருவெடுக்க வைத்தது. அப்போது எனக்கு பத்து வயது. பாப்லோ, என்னைவிட மூன்று வயது சிறியவன். எனக்கு புதிதாக சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தார்கள். அதை மாற்றி மாற்றி ஓட்டிக்கொண்டு நானும் பாப்லோவும் பள்ளியில் இருந்து திரும்பியிருந்தோம்.

ஆயுதம் ஏந்திய சில கொரில்லாக்கள் எங்கள் வீட்டு முன்பாக ஏதோ சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். துப்பாக்கி முனையில் எங்கள் அம்மாவை மிரட்டிக் கொண்டிருந்தார்கள். எங்களைப் பார்த்ததுமே அம்மா, ‘வீட்டுக்குள்ளே போங்க’ என்று அவசர அவசரமாகத் துரத்தினாள். ஏனெனில் சிறுவர்களை கடத்திப்போய் ஆயுதப் பயிற்சி வழங்குவது அப்போது வழக்கமாக இருந்தது.

‘அவருக்கு அரசியலே தெரியாதுங்க. அவர் உண்டு, அவரோட பண்ணை உண்டு, பசு மாடுங்க உண்டுன்னு அப்பிராணியா கெடப்பாருங்க...’ என்று எங்கள் தந்தையைப் பற்றித்தான் அவர்களிடம் கெஞ்சலான குரலில் அம்மா பேசிக் கொண்டிருந்தாள். ‘பாருங்க டீச்சரம்மா. நீங்க நல்லவங்க. ரொம்பவே நல்லவங்க. அதனாலேதான் தலைவர் சும்மா போய் பேசிட்டு வரச் சொன்னாரு.

இன்னொரு வாட்டி உங்க புருஷனைப் பத்தி இதுமாதிரி கேள்விப்பட்டோம்னா, குடும்பம் மொத்தத்தையும் வெட்டிப் போட்டுட்டு பண்ணையை நாங்க எடுத்துப்போம்...’ இருபது வயது மதிக்கத்தக்க அந்த அண்ணன், கண்டிப்பான குரலில் மிரட்டினான். அவன் எத்தனையோ முறை அப்பாவைப் பார்க்கும்போதெல்லாம் பணிவாக சல்யூட் வைப்பதை பார்த்திருக்கிறேன்.

நானும், பாப்லோவும் ஜன்னல் வழியாக இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தோம். அம்மா கையைத் தூக்கி கும்பிட்டபடி அவர்களது காலில் விழப் போனாள். அவர்கள் அவளைத் தூக்கி நிறுத்திவிட்டு விறைப்பாகக்  கிளம்பினார்கள். அந்தக் காட்சியைப் பார்த்தபோது எனக்கு அம்மா மேலே பரிதாபம்தான் வந்தது. ஆனால் - பாப்லோவோ கோபத்தில் முகம் சிவந்தான்.

‘அந்த பொறுக்கிங்க காலில் அம்மா எதுக்கு விழணும்?’ சீற்றத்தோடு என்னைக் கேட்டான். அவன் உணர்ச்சிவசப்படும் போதெல்லாம் லேசாக திக்கித் திக்கிப் பேசுவான். அன்றும் திக்கினான். கொஞ்ச நேரத்தில் அம்மாவோடு, அப்பாவும் பதட்டமாக ஓடி வந்தார். கதவு, ஜன்னல் அத்தனையையும் சாத்தினார்.

‘நிச்சயமா அவனுங்க ராத்திரி வருவானுங்க. நம்மளையெல்லாம் வெட்டிப் போட்டுடுவானுங்க...’ குரல் கம்ம அம்மாவிடம் சொன்னார். குழந்தைகள் எல்லோரும் கட்டிலுக்கு அடியே பதுங்கிக் கொண்டோம். என்னுடைய விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. சிறியவன் என்றாலும் பாப்லோதான் என்னை தைரியப்படுத்திக் கொண்டிருந்தான்.

அப்பா, அந்த கொரில்லாக் குழுக்களின் ரகசியங்களை எதிரிகளின் குழுக்களுக்கு சொல்கிறார் என்று தலைவனுக்கு சந்தேகமாம். உண்மையில் எங்கள் குடும்பத்துக்கு எவ்வித அரசியல் ஆர்வமும் இல்லை. நாங்கள் உண்டு, எங்கள் பண்ணை வேலைகள் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருந்தோம்.

ஆனால் - இப்படித்தான் அடிக்கடி யாராவது அப்பாவி மீது சந்தேகப்பட்டு, அந்தக் குடும்பத்தையே அழித்தொழிப்பது இந்த கொரில்லாக்களின் வழக்கம். அப்பா எதிர்பார்த்தபடியே நடுராத்திரியில் எங்கள் வீட்டின் மீது தாக்குதல் தொடங்கியது. ‘கதவைத் திறடா’ என்று அந்த கொரில்லா குழுவின் தலைவன் ஆவேசமாகக் கத்தியவாறே துப்பாக்கியை திருப்பிப் பிடித்து கதவின் மீது டொம் டொம்மென்று இடித்துக் கொண்டிருந்தான்.

அம்மா அழுது கொண்டிருந்தாள். அப்பா தலையில் அடித்தபடி, நொறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கதவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ‘போச்சு. எல்லாம் போச்சு. நான் செத்தா பரவாயில்லை. குழந்தைங்களாவது உசுரோட மிஞ்சணும். ஹெர்மில்தா, நான் அவனுங்களோட போயிடறேன். திரும்ப வருவேனான்னு தெரியாது. குழந்தைகளை பத்திரமா பார்த்துக்கோ...’ சொன்னபடியே கதவைத் திறக்க அப்பா நகர்ந்தார்.

அம்மா வழியை மறித்துக் கொண்டு, ‘செத்தா எல்லாருமா சாவோம். ப்ளீஸ், நீங்க இல்லாமே நாங்க மட்டும் இருந்து என்ன பண்ணுறது?’ என்று அழுதவாறே அவரைத் தடுத்துக் கொண்டிருந்தாள். அந்தக் காலத்து கொலம்பிய கிராமங்களில் வீடுகள் உறுதியாக இருக்கும். நல்ல வலுவான காட்டு மரங்களில் உருவாக்கப்பட்டிருக்கும். சுலபமாக யாரும் உடைத்துவிட முடியாது.

கதவை உடைக்க முயற்சித்துக் கொண்டிருந்தவன், அது முடியாமலோ என்னவோ ஆங்காரமாகக் கத்தினான். ‘டேய் வெளியே வாங்கடா. இல்லேன்னா மொத்த வீட்டையும் தீ வெச்சு கொளுத்திடுவோம்...’ இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த பாப்லோ திமிறத் தொடங்கினான். அவனை அடக்குவதே எனக்கு பெரும்பாடாகப் போய்விட்டது. ஏழு வயதுச் சிறுவனால் ஆயுதம் ஏந்திய ஆட்களை எப்படிச் சமாளிக்க முடியும்?

பெட்ரோல் வாசனை எங்கள் நாசியைத் தொட்டது. வீட்டின் மேல் ஊற்றி தீ வைத்திருக்கிறார்கள். வெளியே தாழ்வாரம் திகுதிகுவென்று எரியத் தொடங்கியது. பட் படாரென்று சப்தத்தோடு தீயில் மரங்கள் கருகி தாழ்வாரமே விழ ஆரம்பித்தது. கதவில் தீப்பற்றினால் அவர்கள் சுலபமாக உள்ளே வந்துவிடுவார்கள். ஜன்னல் வழியே நெருப்பின் மஞ்சள் ஒளி ஊடுருவியது. வீட்டில் அனைவரின் முகத்திலும் அப்பட்டமான பீதி உறைந்திருந்தது.

பாப்லோ மட்டும்தான் கோபத்தில் முகம் சிவந்து கொண்டிருந்தான். ‘தொலைந்தோம்’ என்றுதான் நினைத்தோம். அம்மா முழங்காலிட்டு குழந்தை இயேசுவைப் பிரார்த்திக்கத் தொடங்கினாள். அவளது பிரார்த்தனை, பரலோகத்தில் இருக்கும் பிதாவுக்கு கேட்டதோ என்னவோ, அந்த அதிசயம் நிகழ்ந்தது. மெஷின்கன் முழக்கம். சர்சர்ரென்று ஜீப்புகள் தெருவில் நுழையும் சப்தம்.

‘ஆஹா. மிலிட்டரி வந்துடிச்சி...’ அப்பா பரவசமாக சொன்னார். கொரில்லாக்கள் தப்பி ஓடும் சப்தமும், அவர்கள் மீது ராணுவத்தினர் நடத்தும் துப்பாக்கிச்சூடு சப்தமும் தெளிவாகக் கேட்டது. ‘யாராவது இருக்கீங்களா?’ வெளியே மிலிட்டரிக்காரர் ஒருவர் குரல் கொடுக்க, எங்கள் குடும்பமே ‘காப்பாத்துங்க...’ என்று அபயக்குரல் எழுப்பியது.

வெளியே வந்து பார்த்தால் - எங்கள் தெருவே எரிந்து கொண்டிருந்தது. காடுகள் தீப் பிடித்தால் அப்பகுதியே இரவிலும் பகலாகத் தெரியுமே... அப்படி இருந்தது. சாலையோரங்களில் மனிதர்கள் செத்துக் கிடந்தார்கள். பச்சையான மாமிசமும், ரத்தமும் கலந்த நெடியில் நான் வாந்தியெடுத்து விட்டேன்.

கொல்லப்பட்டவர்கள் அத்தனை பேருமே விவசாயம் செய்து கொண்டோ, மாட்டுப் பண்ணை வைத்துக் கொண்டோ வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி குடியானவர்கள். பாழாய்ப்போன அரசியலுக்கு எவ்விதத்திலும் சம்பந்தப்படாதவர்கள். எல்லாவற்றையும் இழந்து எங்கள் குடும்பம் நடுத்தெருவில் நின்றது...

பொதுவாக பாப்லோ பற்றி எழுதப்படும் கதைகளில் இந்த சம்பவம் பதிவாவதில்லை. அந்த கெட்ட கனவை நாங்கள் எல்லோரும் விரைவிலேயே மறந்துவிட்டோம். அவன் மட்டும் மறக்கவேயில்லை என்பதால்தான் அவனும் வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்தான். கையில் துப்பாக்கியை ஏந்தினால்தான் மற்றவர்கள் நமக்கு பயப்படுவார்கள், மரியாதை தருவார்கள் என்கிற எண்ணம் அவனது உள்ளத்தில் வலுவாகப் பதிந்துவிட்டது...”
 

(மிரட்டுவோம்)

kungumam.co

Link to comment
Share on other sites

 

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

யுவகிருஷ்ணா - 8

ஏழு வயதில் எதிர்கொண்ட அந்த கொடூரமான இரவுதான் பாப்லோ எஸ்கோபாரை வன்முறையின்பால் வசீகரித்திருக்க வேண்டும். துப்பாக்கியை நீட்டினாலே போதும், அனைவரும் அஞ்சி நடுங்குவார்கள் என்கிற பாடத்தை அவன் அன்றுதான் கற்றிருக்க வேண்டும். ஸ்பானிஷில் பேசினால் சில நாடுகளில் வசிப்பவர்களுக்குத்தான் புரியும்.
7.jpg
உலகமெங்கும் வசிப்பவர்களுக்கு புரியக்கூடிய ஒரே மொழி, நீட்டிய துப்பாக்கியின் மவுனமொழிதான் என்று அவன் அன்றுதான் உணர்ந்திருக்க வேண்டும். அந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் கழித்து, ஒரு டிவி பேட்டியில் எஸ்கோபார் சொன்னார் (சின்னப் பயலாக இருக்கும்போது ‘ன்’, வளர்ந்தபிறகு ‘ர்’)!

“நான் எப்போதுமே என்னை மகிழ்ச்சியான மனநிலையில் வாழும் மனிதனாகத்தான் கருத விரும்புகிறேன். நேர்மறையாகவே எதையும் அணுகுவேன். வாழ்க்கை மீது எப்போதும் நம்பிக்கை வைத்திருப்பேன். ஏனெனில் சிறுவயதிலிருந்தே நான் சந்தித்த மோசமான சம்பவங்கள், எனக்கு புதிய திறப்புகளை ஏற்படுத்தியது. மனித வாழ்க்கை என்பதே புதுப்புது அனுபவங்களால்தான் சுவாரஸ்யமாகிறது...”

சிறுவயதிலேயே செமத்தியான ஒரு ஆக்‌ஷன் ப்ளாக்கை கண்டுவிட்டதாலோ என்னவோ, தன் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் ஹாலிவுட் கரம் மசாலா படத்தின் காட்சிகளைப் போல சுவாரஸ்யமாக ஆக்கிக் கொண்டே செல்வது பாப்லோ எஸ்கோபாருக்கு வாடிக்கையாகிப்போனது.

வன்முறையை ஒரு கலையாக ரசித்து, ருசித்து செய்யக்கூடிய கொலைக்கலைஞனாக பிற்பாடு ஆனான் எஸ்கோபார். பாப்லோ தன்னுடைய இருபதாவது பிறந்தநாளையே மெதிலின் நகரின் சிறைச்சாலையில்தான் கொண்டாடியதாகச் சொல்வார்கள். யெஸ். பதினேழு வயதில் பாப்லோவும், அவனுடைய நண்பர்களும் செய்து கொண்டிருந்த சுடுகாட்டுத் திருட்டு விரைவிலேயே அவர்களுக்கு அலுத்துவிட்டது.

காரணம், பாப்லோவுக்கு அதில் எதிர்பார்த்த அளவுக்கு திரில் கிடைக்கவில்லை. சுடுகாட்டு சமாதியை மூடியிருக்கும் கற்களைத் திருடுகிறோம். ஒரு பேயோ, ஆவியோ அதற்காக நம்மைப் பழிதீர்த்திருக்க வேண்டாமா? பேயுமில்லை. நாயுமில்லை. இந்த ஆட்டம் ரொம்பவும் போர் அடிக்கிறது.

நாலு பேர் நம்மைத் துரத்த வேண்டும். நாம் அவர்களிடமிருந்து தப்பி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஒருகட்டத்தில் ஓட்டத்தை நிறுத்திவிட்டு, துரத்துபவர்களைத் தாக்க வேண்டும். நம்மைத் துரத்தி வந்தவர்கள் தப்பித்து ஓட, நாம் அவர்களைத் துரத்த வேண்டும். அதுதான் ஆட்டம். அப்படி ஆடுவதுதான் வீரம்.

போயும் போயும் சர்ச் பாதிரியார்களை ஏமாற்றி பணம் சம்பாதித்தால் நம்ம கெத்து என்னதான் ஆவது? தொழிலை மாற்றிக்கொள்ள முடிவெடுத்தான் பாப்லோ. தான் முன்பு வேலை செய்துகொண்டிருந்த மது விடுதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ய ஆரம்பித்தான். உள்ளூரில் இருந்த போதை மாஃபியாக்களிடம் லம்பான விலை கொடுத்து சரக்கு கொள்முதல் செய்ய வேண்டியிருந்தது.

ரீடெயிலராக பாப்லோவுக்கு பெரிய லாபமில்லை. நாமே இந்த தொழிலை நேரடியாகச் செய்தால் என்ன என்கிற எண்ணம் அப்போதுதான் மேலோங்கியது. ஆனால் - சொந்தமாகத் தொழில் செய்வது அவ்வளவு சுலபமா என்ன... அதுவும் போதைத்தொழில்? குஸ்ேடாவா சொன்னான்.

“பாப்லோ, நாமெல்லாம் சில்லறைங்க. அன்னி அன்னிக்கு சரக்கு வித்தோமா; கிடைச்ச காசுலே குடிச்சிட்டு பொண்ணுங்களோட கூத்தடிச்சோமான்னு இருக்கணும். அதைத் தாண்டி டைரக்டா பிசினஸ் செய்ய நினைச்சோம்னு வெச்சுக்கயேன். கார்டெல்காரனுங்க கழுத்தை அறுத்து ரோட்டுலே தூக்கி வீசிட்டு போயிடுவானுங்க...”

வேண்டும் எனும்போது மழை வராது. வேண்டாம் எனும்போதுதான் பொத்துக் கொண்டு கொட்டும். பாப்லோவும் அதுமாதிரிதான். வேண்டாம் என்றால் வேண்டும் என்பான். வேண்டும் என்றால் வேண்டவே வேண்டாம் என்பான். “குஸ்ேடாவா, நல்லா கேளு. நாம தனியா பிசினஸ் பண்ணப் போறோம். நாமளே ஒரு கார்டெல் ஆரம்பிக்கிறோம்.

பிசினஸுங்கிறது இங்கே எவன் அப்பன் வீட்டு சொத்துமில்லே. ஆத்துத்தண்ணி. வக்கு இருக்கிறவன் வாரிக் குடிக்கலாம். நான் எவன் குடியையும் கெடுக்க மாட்டேன். ஆனா, என் குடியைக் கெடுக்க நினைச்சா சும்மா விடமாட்டேன்...” “பஞ்ச் டயலாக்கெல்லாம் நல்லாதான் இருக்கு பாப்லோ.

ஆனா, பாரு... கார்டெல் ஆரம்பிக்கணும்னா ஆளு பலம் இருக்கணும். நாம மொத்தமா ஆறேழு பேருதான் இருக்கோம். பெரிய நெட்வொர்க் வேணும். நூத்துக்கணக்குலே ஆளுங்களை வெச்சு வேலை வாங்கணும்னா லட்சக்கணக்குலே பணம் வேணும்...” குஸ்ேடாவா, யதார்த்தவாதி. எது சாத்தியமோ அதைத்தான் சொல்லுவான். பாப்லோ, கனவுலகில் வாழ்பவன்.

சாத்தியமே இல்லாத கனவுகளை நனவாக்கத் துடிப்பவன். “எடுத்துப்போம். எதையாவது பெருசா எடுத்துப்போம். அதை வித்து நிறைய பணம் சம்பாதிப்போம். கார்டெல் இல்லை. நாம ஒரு அரசாங்கத்தையே நிறுவப்போறோம்..!” ‘திருடுவோம்’ என்று சொல்லமாட்டான். பதிலாக ‘எடுத்துப்போம்’ என்றுதான் சொல்வான்.

ஏனெனில், தான் எதையெடுத்தாலும் அது தனக்காகவே கடவுளால் படைக்கப்பட்டது என்பது பாப்லோவின் நம்பிக்கை. “சைக்கிள் திருடி விக்கலாமா? நல்ல லாபம். இப்ப பசங்களுக்கு எல்லாம் சைக்கிள்னா அவ்வளவு உசுரு...” அறுபதுகளின் இறுதியில் ‘சைட்’ அடிக்க இளைஞர்கள் சைக்கிளையே நம்பியிருந்தார்கள்.

எனவேதான் குஸ்ேடாவா சைக்கிள் திருடி சம்பாதிக்கலாம் என்று யோசனை சொன்னான். “டேய், நான் அரசாங்கமே அமைக்கணும்னு பேசிக்கிட்டிருக்கேன். நீ என்னை சில்லறைத் திருடனா ஆகச் சொல்றியே. இன்னும் கொஞ்சம் பெருசா சொல்லு...” “மோட்டார் பைக்?” “சைக்கிளுக்கு ரெண்டு வீலு. பைக்குக்கும் ரெண்டு வீலுதான். இன்னும் கொஞ்சம் பெருசா…” “கார்?”

“அதேதான். இதுக்கு நாலு வீலு இருக்கு. இங்கே எடுக்கறோம். வெளியூர்லே விக்கறோம்...” கொலம்பியா, உள்நாட்டுப் போராலும் வன்முறையாலும் சீரழிந்த தேசம் என்றாலும், நகர்ப்புற நாகரிகத்துக்கு படுவேகமாக கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மாறிவிட்ட தேசம். பல நூறு நகரங்களைக் கொண்ட தேசம்.

கார் பிரியர்கள் ஏராளமாக இருந்தார்கள். குறிப்பாக போதை கம்பெனிகளான கார்டெல்களில் பணியாற்றுபவர்களுக்கு கார் மீது தனி மோகம். கார்டெல்களில் எடுபிடிகள் கூட ஸ்டைலாக காரில் வந்து இறங்குவது அப்போது ஃபேஷன். பாப்லோ கும்பல் ஆரம்பத்தில் மிகவும் எச்சரிக்கையாகவே தொழிலைத்தொடங்கினார்கள்.

யாருமில்லாமல் அனாதரவாக நீண்ட நேரத்துக்கு பார்க் செய்யப்பட்டிருந்த கார்களைத்தான் ஓசைப்படாமல் கதவு திறந்து, திருட்டுச் சாவி போட்டு திருடினார்கள். திருடிய கார்களை அப்படியே விற்க மாட்டார்கள். போலீஸில் மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சம் இருந்தது. எனவே, அந்த ஊர் புதுப்பேட்டைக்குக் கொண்டு போய் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து பார்ட் பார்ட்டாகத்தான் விற்பார்கள்.

பத்து பதினைந்து கார்களை சுட்டபிறகு, பாப்லோவுக்கு குளிர் விட்டுப் போனது. கார் உரிமையாளரின் கண்ணெதிரிலேயே வண்டி மீது கை வைக்க ஆரம்பித்தான். நகரங்களுக்கு வெளியே ஆளரவமற்ற சாலைகளில் தனியாக கார் ஓட்டி வருபவர்களை மிரட்டி பறித்தான். இப்போதெல்லாம் பயந்து பயந்து ஸ்பேர் பார்ட்ஸ் பிரித்து விற்கும் பிசினஸே இல்லை.

டைரக்டாக வாடிக்கையாளர்களைப் பிடித்து செகண்ட் ஹேண்டில் விற்க ஆரம்பித்தான். கார்களுக்கு ஆவணங்களைப் பெற உள்ளூர் முனிசிபல் அதிகாரிகளுக்கு லஞ்சமாக பணத்தை அள்ளி அள்ளி வீசினான். லஞ்சம் கொடுத்தால் காரியம் நடக்கும் என்கிற பேருண்மையை எஸ்கோபார் தெரிந்து கொண்டது இந்த பிசினஸில்தான்.

மின்னல் வேகத்தில் காரைக் கடத்துவதுதான் எஸ்கோபாரின் ஸ்பெஷாலிட்டி. ‘ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் கார்கள் வேண்டும்’ என்று அடிக்கடி கார்டெல் ஆட்கள் கேட்பார்கள். அவர்களது தேவையைப் பூர்த்தி செய்வதே பாப்லோ கும்பலின் லட்சியம். விரைவிலேயே கார்டெல் வட்டாரங்களில் பாப்லோ எஸ்கோபாரின் பெயர் பிரபலமானது.

அவர்களது பார்ட்டிகளில் கெத்தாக  உடையணிந்து, தன் கும்பலோடு கலந்துகொள்வான். எந்த வேலையைச் செய்தாலும் அதை என்ஜாய் செய்வதுதான் நம்ம காட்ஃபாதரின் ஸ்பெஷாலிட்டியே. இந்த வியாபாரத்தையும் சின்சியராகச் செய்தான். எனினும், எதிர்பாராவிதமாக முதன்முதலாக கார் திருட்டு வழக்கில்தான் எஸ்கோபார் சிறைச்சாலையைத் தரிசிக்க வேண்டியிருந்தது.

எல்லாவற்றுக்கும் விலை உண்டு என்கிற அவனுடைய நம்பிக்கை உடைவதற்கும் அந்த சம்பவம்தான் காரணமாக இருந்தது. தன்னுடைய இருபதாவது ஹேப்பி பர்த்டே கேக்கை சிறையில் வெட்டியதையும் தன் எதிர்கால ராஜபோக வாழ்க்கைக்கு அவசியமான ஓர் அனுபவமாகவே அவன் எடுத்துக் கொண்டான்.
 

(மிரட்டுவோம்)

kungumam.co

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

யுவகிருஷ்ணா - 9

‘லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்’ என்று சொல்லக்கூடிய ஒரு நேர்மையான அதிகாரி கொலம்பியாவிலும் அந்தக் காலத்தில் இருந்து தொலைப்பார் என்று பாப்லோவுக்கு எப்படித் தெரியும்? துரதிருஷ்டவசமாக மெதிலின் முனிசிபாலிட்டி அலுவலகத்துக்கு அப்படியொரு நேர்மையின் சிகரம் டிரான்ஸ்பர் வாங்கி வந்திருந்தார்.
12.jpg
எப்போதும் போல ஒரு திருட்டு காருக்கு போலி ஆவணம் தயாரிப்பதற்காக அங்கே தன்னுடைய சகாக்கள் சகிதம் வந்திருந்தான் பாப்லோ. அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் காட்டிய கண்சாடைக்கு அர்த்தம் என்னவென்று இவர்களுக்கு புரியவில்லையா, அல்லது எதுவாக இருந்தாலும் பணத்தால் அடித்து சரிக்கட்டிவிட முடியும் என்கிற மிதப்பா என்று தெரியவில்லை.

அதிகாரமாக அந்த அதிகாரியின் டேபிளுக்கு முன்பாக இருந்த நாற்காலியில் ஆணவமாக வந்து அமர்ந்தான் பாப்லோ. ஸ்டைலாக கால் மேல் கால் போட்டான். ஒரு சிகரெட்டை கொளுத்தி, அந்தக் கால நீராவி ரயில் என்ஜின் கணக்காக புகையை அந்த அதிகாரி மீது ஊதினான். “நான் சொல்லுற நம்பருக்கு ஒரு ஆர்.சி. புக்கு போட்டுக் கொடு...” என்று சொல்லியவாறே, பணத்தை கற்றையாக அவரது டேபிளின் மீது  போட்டான்.
12a.jpg
கண்கள் சிவந்த அந்த அதிகாரி, அப்படியே எழுந்து கொத்தாக அவனது சட்டையைப் பிடித்தார். தரதரவென்று இழுத்து வந்து கேட்டுக்கு வெளியே தள்ளினார். “தொலைச்சுப்புடுவேன். அதிகாரிக்கே லஞ்சம் கொடுக்குறீயா நீ?” என்று கொதித்தவர், பாதுகாவலுக்காக நின்றிருந்த போலீஸ்காரரிடம் சொன்னார்.

“இவனைக் கொண்டுபோய் லாக்கப்புலே அடைங்க. வேலையெல்லாம் முடிச்சிட்டு வந்து கேஸ் கொடுக்கறேன்...” பாப்லோவும், அவனுடைய கும்பலும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. கொதித்தெழுந்த சகாக்களை பாப்லோ அடக்கினான். “இவனை மாதிரி ஒருத்தன்  ரெண்டு பேராவது இருக்கிறதாலேதான் கொலம்பியாவுலே மழை பெய்யுது. அவன் வேலையை அவன் செய்யட்டும்.

நம்ம வேலையை நாம செய்வோம்...” சொல்லிவிட்டு போலீஸ்காரரோடு ஸ்டேஷனுக்கு போனான். அந்த அதிகாரி அதோடு நிற்கவில்லை. அதுவரை இவர்கள் எத்தனை கார்களுக்கு திருட்டு டாக்குமெண்ட் செய்திருக்கிறார்கள் என்று நோண்டி நொங்கெடுத்து ஒரு முழுநீள குற்றப்பட்டியலோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். புகார் கொடுத்தார்.

தன்னுடைய இருபதாவது பிறந்தநாளை இவ்வாறாகத்தான் ஜெயில் கம்பிகளுக்குப் பின்னால் பாப்லோ கொண்டாட வேண்டியிருந்தது. லஞ்சம் கொடுத்ததற்காக உள்ளே போனவன், லஞ்சம் கொடுத்துதான் வெளியே வந்தான் என்பது நகைமுரண். எல்லா அதிகாரிகளுமேவா  நேர்மையாக இருந்துவிடுவார்கள்?

வெளியே வந்த பாப்லோ கொஞ்சம் உஷாராகவே தொழிலை நடத்தினான். வாழ்க்கையில் ஒருமுறை செய்த தவறை, இரண்டாம் முறை செய்ததே இல்லை என்பதுதான் பாப்லோவின் ஸ்பெஷாலிட்டி. இம்முறை அவன் நேரடியாக கார் திருட்டில் ஈடுபடுவதைத் தவிர்த்தான். பதிலாக அதைவிட பணம் அறுவடையாகக்கூடிய வேறு ஒரு ரூட்டை பிடித்தான். இதுவும் ஒருவகையில் கார் பிசினஸ்தான்.

ஆனால் - கார் திருட்டல்ல. மெதிலின் நகரில் லஞ்ச லாவண்யங்களால் கொழுத்த அரசு அதிகாரிகளின் பிள்ளைகள் கொழுப்பெடுத்துப் போய் சூதாட்டங்களில் ஈடுபட்டார்கள். அவர்களோடு விளையாடி லட்சக்கணக்கில் சம்பாதித்தார்கள் கார்டெல்களில் பணிபுரியும் ரவுடிகள். காசினோ போன்ற உல்லாச விடுதிகளைத் தவிர்த்து, கார் பந்தயம் போன்ற த்ரில்லான சூதாட்டங்களுக்கு நல்ல மவுசு இருந்தது. பாப்லோ, கார் பந்தயங்களை சட்டத்துக்குப் புறம்பாக நடத்தத் தொடங்கினான்.

பாப்லோ நடத்தும் பந்தயங்களில் கலந்துகொள்ள ஏராளமானோர் ஆர்வம் காட்டினார்கள். ஏனெனில், நடத்துவது மொள்ளமாறி பிசினஸாக இருந்தாலும் அதிலும் ஒரு நேர்மையை கறாராகக் கடைப்பிடிப்பான் பாப்லோ. இவன் நடத்தும் பந்தயங்களில் யாரும், யாரையும் எதற்காகவும் ஏமாற்றவே முடியாது.

இவன் மற்றவர்களுக்கு லஞ்சம் கொடுப்பானே ஒழிய, இவனது குழுவினரில்  யாராவது கையூட்டு கிய்யூட்டு என்று கையை நீட்டினால் விரல்களை முறித்துவிடுவான். பாப்லோவின் குழுவால் நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய நடத்தப்படும் கார் பந்தயங்கள் மெதிலின் நகரவாசிகளுக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியது.

அந்த நேரங்களில் வெளியே யாரேனும் தலை காட்டினால் அவர்களது உயிருக்கு உத்தரவாதமே இல்லை. பல விபத்துகள் நடந்தன. அந்த விபத்துகளை எல்லாம் வேறு வேறு கேஸ்களில் இணைக்க போலீஸ்காரர்களுக்கு தங்கள் லாபத்தில் ஒரு பகுதியைதாராளமாக வாரியிறைத்தான்.

சூதாட்டத்தின் சுவாரஸ்யத்தை ஒருமுறை சுவைத்துவிட்டால், அந்த போதை சாகும்வரை கிறுகிறுத்துக்கொண்டே இருக்கும். இந்த கார் பந்தயங்களில் கலந்துகொண்டு ஒரே நாளில் ஓட்டாண்டியான கோடீஸ்வரர்கள் ஏராளம். சூது விடாது. பாப்லோவின் பினாமி டிரைவர்கள் இந்த பந்தயங்களை ரியாலிட்டி ஷோக்கள் கணக்காக ஏகத்துக்கும் ஸ்டண்ட் வேலைகள் செய்து சுவாரஸ்யப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

இந்த பந்தயங்களில் கலந்துகொள்ள மட்டுமல்ல, வேடிக்கை பார்க்கவும் ஏராளமானோர் நள்ளிரவுகளில் சாலைகளில் கூடுவார்கள். பரம்பரையாக பந்தயம் நடத்திக் கொண்டிருந்த பழைய ஆட்கள் டென்ஷன் ஆகத் தொடங்கினார்கள். மிகக்குறுகிய காலத்தில் பாப்லோ குழுவினர் இந்தத் தொழிலில் ஈடுபட்டு கோடிகளைக் குவித்தது அவர்களை வயிறெரிய வைத்தது.

வேண்டுமென்றே இந்தப் பந்தயங்களில் கலந்துகொண்டு தேவையே இல்லாமல் ஏதாவது கலாட்டாவை உருவாக்கத் தொடங்கினார்கள். பிரச்னையை சமாளிக்க பாப்லோவே நேரடியாகக் களமிறங்கினான். பிரச்னை செய்வதற்காகவே பந்தயம் ஒன்றில் கலந்து கொண்ட ஒருவனை காரோடு கடத்தினான்.

பெரும் தொகை ஒன்றை நிர்ணயித்து அவனை மீட்டுக்கொண்டு செல்லுமாறு அவனுடைய குழுவுக்கு தகவல் அனுப்பினான். கடத்தப்பட்டவன் கார் பந்தயங்களில் முக்கியமான புள்ளி. பெரும் பணக்காரனும்கூட. ரிஸ்க் எடுக்க விரும்பாத அவனது ஆட்கள், பாப்லோ கேட்ட தொகையைக் கொடுத்து ஆளை மீட்டுச் சென்றார்கள்.

ஒரு ஆளைக் கடத்தினால் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா என்று பாப்லோவே ஆச்சரியத்தில் மூக்கின் மேல் விரல் வைத்தான். கார் பந்தயத்தைவிட ஆளைக் கடத்துவது லாபகரமான தொழிலாக இருக்கும்போலிருக்கிறதே என்று யோசித்தான். தன்னுடைய குழுவினரைக் கலந்தாலோசித்தான். தொழிலை மாற்றிக் கொள்ளலாம் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அத்தனை பேரும் கோடீஸ்வரனாக வேண்டும் என்கிற வெறியில் இருந்தார்கள். சீக்கிரமாக கார்டெல் ஆரம்பிக்க வேண்டும். உலகமெங்கும் பிசினஸ் செய்ய வேண்டும். பாப்லோவை முப்பது வயதுக்குள்ளாகவே காட்ஃபாதர் ஆக்கிவிட வேண்டும். நினைத்ததெல்லாம் வரிசையாக நடக்கத் தொடங்கின.

பாப்லோ ஆரம்பித்த புது பிசினஸ் மெதிலின் நகர பணக்காரக் குடும்பங்களையும், லஞ்ச ஊழலில் கொழித்துக் கொண்டிருந்த அரசு அதிகாரிகளையும் மட்டுமல்ல, போதை பிசினஸில் பழம் தின்று கொட்டை போட்ட பெரிய கார்டெல் ஆட்களையே கூட பதம் பார்த்தது.
 

(மிரட்டுவோம்)

kungumam.co

Link to comment
Share on other sites

 
 

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

யுவகிருஷ்ணா - 10

உலகம் தோன்றியதிலிருந்து இதுவரைக்கும் ‘சின்ன கல்லு, பெத்த லாபம்’ கணக்காக முதலீடே இல்லாமல் ரொம்பவும் லாபகரமாக நடக்கக்கூடிய பிசினஸ் எதுவென்று சொல்லுங்கள்?
14.jpg
* போதை
* பாலியல்
* சூதாட்டம்
* சினிமா
* அரசியல்

இப்படியே பட்டியலிட்டுக் கொண்டே போனால், இன்னும் இதே மாதிரி ஒரு நூறு தொழில்களையாவது இணைக்க வேண்டி வரும். இந்த எல்லா தொழில்களையுமே யோக்கியமாகவும் செய்ய முடியும். ஆனால் - லாபம் குறைவு. அயோக்கியர்களுக்குத் தான் அத்தனை இடங்களிலும் மவுசு.
14a.jpg
இம்மாதிரி தொழில்களில் யோக்கியமாக வென்றவர்கள்கூட ஏதோ சில சந்தர்ப்பங்களில் அயோக்கியத்தனமான செயல்பாடுகளையே செய்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும். எனவேதான் ‘எல்லாவற்றையும் சந்தேகி’ என்கிறார் காரல் மார்க்ஸ். சரி, நம் கதைக்கு வருவோம்.

மேற்கண்ட தொழில்களின் பட்டியலில் பெரும்பாலானவர்கள் ஒரு முக்கியமான ஆதித்தொழிலைக் குறிப்பிட மறந்து விட்டிருப்பீர்கள்.அந்தத்  தொழில் என்று ஒன்று இல்லாவிட்டால், கேங்ஸ்டர்களை வைத்து சினிமாப்படம் கூட எடுக்க முடியாது. யெஸ். ஆள்கடத்தல். I mean kidnapping.

‘அடத்தூ. இதெல்லாம் ஒரு தொழிலா?’ என்று அவசரப்பட்டு காறித்துப்பாதீர்கள். காட்ஃபாதராகவோ, டானாகவோ வலம் வருவதற்கு மட்டுமல்ல, நம்ம கொலகாரன்பேட்டை ஏரியாவில் லோக்கல் ‘தல’யாக அதகளம் செய்ய வேண்டுமானாலும்கூட இந்த வேலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உங்களுக்கு நினைவில் வரும் உலகத்தை உலுக்கிய எல்லா கிரிமினல்களுமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வேலையை செய்தே இருப்பார்கள். பணத்துக்காக என்றில்லாவிட்டாலும்கூட சில பேரை மிரட்டுவதற்காகவாவது இதை செய்தாக வேண்டியது நிழலுலகில் இன்றியமையாதது.

‘போக்கிரி’ திரைப்படத்தில் கமிஷனரான நெப்போலியனின் மகளை மாஃபியா கும்பல் கடத்தும் காட்சி நினைவுக்கு வருகிறதா? போலீஸின் பிடியில் சிக்கிய இண்டர்நேஷனல் டான் ஆன பிரகாஷ்ராஜை வெளியே கொண்டுவருவதற்கு அதைத் தவிர்த்து வேறு வழியே இல்லை. இந்த ஆள் கடத்தும் அசிங்க வேலையில் இருக்கும் பெரிய சிக்கலே ரிஸ்க்தான். கடத்தப்படும் நபரின் ‘கெத்து லெவல்’ பொறுத்து எடுக்க வேண்டிய ரிஸ்க்கின் தீவிரம் அதிகரிக்கும்.

ஆனால் - எத்தனைக்கு எத்தனை ரிஸ்க்கோ, அத்தனைக்கு அத்தனை பணம் டாலர்களாக கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும் என்பது மட்டும் உறுதி. எனினும்கூட ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் இந்த பிசினஸை ஒட்டுமொத்தமாக நிறுத்தியே ஆகவேண்டும். எப்போது நிறுத்த வேண்டும் என்று தெரியாதவன், அடையாளம் தெரியாத பிணமாக ஏதோ மார்ச்சுவரியில் கிடப்பான்.

போலீஸோ, எதிரிகளோ, சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டவனுடைய பரம்பரையையே ஒட்டுமொத்தமாக புதைத்த இடத்தில் புல், பூண்டு முளைக்கும்வரை விடவே மாட்டார்கள். வெற்றிகரமான ஒரு டான் என்பவன், ஆள் கடத்தல் வேலைகளை மிகச்சரியான நேரத்தில் நிறுத்தியவனாக மட்டுமே இருப்பான்.

நம்மூர் சந்தனக் கடத்தல் வீரப்பனையே எடுத்துக் கொள்வோம். ஆரம்பத்தில் சின்னச் சின்னதாக ஆள் கடத்தல் வேலைகளைச் செய்து அரசாங்கத்தோடு பேரம் பேசிக் கொண்டிருந்தான். இந்த வேலையில் ருசிகண்டு ஒருகட்டத்தில் விஐபிகளாக பார்த்து தூக்க ஆரம்பித்தான். அதன் பிறகே, வீரப்பன் என்கிற ஒருவன் இருந்தான் என்கிற அடையாளமே இருக்கக்கூடாது என்கிற வெறியில் காவல்துறை காடுகளுக்குள் கடுமையான தேடுதல் வேட்டையை நடத்தியது.

முடிவு, நாமெல்லாம் நன்கு அறிந்ததே. வீரப்பன் மட்டும் தன்னுடைய பேச்சு எடுபட்ட ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில், அரசாங்கத்தை தாஜா செய்து சரண் அடைந்து தன்னுடைய கோரிக்கைகளை முன்வைத்திருந்தால், இந்நேரம் ஜெயில் தண்டனையைக் கூட முடித்து வெளியே வந்து, அரசியல் கட்சியே கூட தொடங்கியிருக்கலாம்.

ரைட்டு. நம்ம ‘காட்ஃபாதர்’ பாப்லோவின் மேட்டருக்கு வருவோம். கார் திருட்டு வேலைகளில் சில பிரச்னைகள் ஏற்பட்டபோது, தொழிலை விரிவுபடுத்தி சட்டவிரோதமான ரேஸ் நடத்தி பெரும்பணம் சம்பாதித்தான். அதற்காக ஏற்கனவே செய்து கொண்டிருந்த கார் திருட்டு வேலைகளை அப்படியே நிறுத்திவிட்டான் என்று பொருள் இல்லை.

அந்தப் பணிகளை கொஞ்சம் நவீனப்படுத்தி, அதிலிருந்தும் கணிசமாக வருமானம் பார்த்துக் கொண்டிருந்தான். அதாவது, திருடன் என்கிற அவப்பெயரை சுமக்க விரும்பாமல் டீசண்டாக ‘கார் செக்யூரிட்டி’ என்றொரு தொழிலாக அதை பெயர் மாற்றினான். அதாகப்பட்டது - காருக்கு காப்பீடு செய்யும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு பாப்லோவின் தோழன் குஸ்டாவோவும், அவனுடைய அல்லக்கைகளும் நேரில் போவார்கள். ஒரு பிசினஸ் டீல் முன்வைப்பார்கள்.

“உங்களுடைய நிறுவனத்தில் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட எந்த காருமே திருடு போகாது. அந்த வாகனங்களின் பாதுகாப்பை பாப்லோவின் தோழர்களான நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். கார்கள் திருடு போகாது என்பதால், நீங்கள் யாருக்கும் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டிய தேவையே இருக்காது. அதனால் உங்கள் நிறுவனம் பெரும் லாபம் சம்பாதிக்கும்.

நாங்கள் மொத்தத்தையும் கேட்கவில்லை. ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை எங்கள் சேவைக்கு சன்மானமாக வழங்கி விடுங்கள்...” மிகவும் நாகரிகமாக சொல்லப்படும் இந்த ஒப்பந்தத்துக்கு ஓகே சொல்லும் கம்பெனிகள் பிழைத்தன. இல்லாவிட்டால் அடுத்தடுத்து கார்கள் காணாமல் போகும்.

ஒவ்வொரு காருக்கும் காப்பீட்டுத் தொகையை வழங்கி வழங்கியே சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் கம்பெனி விரைவில் திவாலாகும் சூழல் நேரிடும். அலறிக்கொண்டு ஒப்பந்தம் போட ஓடிவருவார்கள். கமிஷன் பர்சன்டேஜ் கொஞ்சம் எகிறியிருக்கும். ஆனாலும், வேறு வழியில்லை. இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு மட்டுமல்ல.

சொகுசு கார்களை ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி செய்த பெரும் பணக்காரர்களும் தங்கள் கார்களுக்கு செக்யூரிட்டி வசதி ஏற்படுத்தித் தருமாறு பாப்லோ கும்பலிடம் வந்து கெஞ்ச ஆரம்பித்தார்கள். இதற்காக மாதாமாதம் இவர்களுக்கு மாமூல் அழத் தொடங்கியிருந்தார்கள். திருடனிடமே திருட்டு போகாமல் பார்த்துக் கொள் என்று ஒரு பொருளை ஒப்படைத்துவிட்டால், அதைவிட பெரும் பாதுகாப்பு அந்த பொருளுக்கு வேறொன்றுமில்லை.

இம்மாதிரி தொழில்களால் கேரண்டியான வருமானம் மாதாமாதம் பாப்லோ குழுவினருக்கு கிடைத்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு ஏரியாவிலும் கலெக்‌ஷன் ஏஜெண்ட் வைத்து பணம் வசூலித்துக் கொண்டிருந்தான் பாப்லோ. இம்மாதிரி சந்தர்ப்பத்தில்தான் அவனுக்கு யதேச்சையாக பெரும் லாபத்தை கொடுக்கக்கூடிய தொழிலாக ஆள் கடத்தல் விளையாட்டாக அறிமுகமானது.

பெரிய பணக்காரர்களின் குடும்பத்தினரை குறிவைத்து ஸ்கெட்ச் போட்டுத் தூக்கினான். பணயக் கைதிகளை விடுவிக்க பணமும், தங்கமும் கூலியாகக் கேட்டான். பேரம் சரியாக படியாத சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட கைதியின் விரலையோ, காதையோ, அல்லது அறுப்பதற்கு வாகான வேறேதேனும் உறுப்புகளையோ வெட்டியெடுத்து பார்சலில் அனுப்புவான்.

பேரம் பேசிக்கொண்டிருந்தவன், கேட்ட பணத்தோடு கூடுதல் பணத்தையும்  போட்டுக்கொண்டு பதறியடித்துக் கொண்டு ஓடிவருவான். கைதிகளை எப்படி எப்படியெல்லாம் டிசைன் டிசைனாக சித்திரவதை செய்ய முடியும் என்று இத்தொழிலில் முன்பு ஈடுபட்டு ஓய்வெடுத்துவிட்ட முன்னாள் நிபுணர்களின் ஆலோசனைகளை ஃபீஸ் கொடுத்து பெற்றான்.

ஆள் கடத்தல் தொழிலில் வேகமாக பாப்லோ வளர்ந்து கொண்டிருந்தபோதுதான், மெதிலின் நகரையே அப்போது அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்த அந்த பெரும்புள்ளியின் கண்ணில் பட்டான். “யாருடா அந்த பாப்லோ எஸ்கோபார்? என்னை வந்து பார்க்கச் சொல்லு...” மிரட்டலான அழைப்பு வந்திருந்தது. அவரைப் போய்ப் பார்த்தால் உயிருக்கு நிச்சயமில்லை என்கிற நிலையில் சந்திப்புக்குத் தயாரானான் பாப்லோ.
 

(மிரட்டுவோம்)

www.kungumam.co

Link to comment
Share on other sites

 

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

யுவகிருஷ்ணா - 11

ரேஃபல் ப்யூண்டே நம் காட்ஃபாதரின் காட்ஃபாதரே இவர்தான். ரேஃபல், அப்போது கடத்தல் சாம்ராஜ்யத்தின் முடிசூடா சக்கரவர்த்தியாக மெதிலின் நகரில் திகழ்ந்தார். சிகரெட்டில் தொடங்கி தங்கம் வரை எந்த சரக்காக இருந்தாலும் ரேஃபல் கைகளுக்கு வந்துவிட்டுதான் மார்க்கெட்டுக்கு வரும்.
11.jpg
இரண்டாம் உலகப் போரின் விளைவால் மிக மோசமாக வீழ்ச்சியடைந்திருந்த ஜப்பான், வீறுகொண்டு எழ எலெக்ட்ரானிக்ஸ் துறையையே பெரிதும் சார்ந்திருந்தது. ஏற்றுமதி வாயிலாக மற்ற நாடுகளுக்கு தங்கள் தயாரிப்பைக் கொண்டு சென்று நேர்வழியில் சந்தைப் படுத்திக் கொண்டிருந்தது ஒருபுறம்.

மறுபுறம் வரி உள்ளிட்ட சர்வதேச விதிகளுக்கு கட்டுப்படாமல் மாஃபியாக்கள் வாயிலாக கடத்தல் சரக்காகக் கொண்டு சென்று கொண்டிருந்தது. குறிப்பாக ஜப்பானியத் தயாரிப்புகளான வாட்ச், ரேடியோ, டிவி உள்ளிட்டவற்றுக்கு வட மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் நல்ல மவுசு இருந்தது. பணம் படைத்தவர்களால் கூடுதல் பணம் கொடுத்து இந்த சொகுசுகளை அனுபவிக்க முடிந்தது. நடுத்தர மற்றும் ஏழை மக்கள்? வரி கட்டாமல் கடத்திவரப்படும் சரக்குகளே கதி.
11a.jpg
இதனால்தான் அந்நாளைய கடத்தல் மாஃபியாக்கள் தங்கள் தொழில் குறித்து எவ்வித குற்றஉணர்வும் கொண்டிருக்கவில்லை. கணிசமாக லாபம் பார்த்தாலும், தாங்கள் மக்களுக்கு பெரும் சேவை செய்வதாகவே உறுதியாக நம்பினார்கள். தங்களை நவீன ராபின் ஹுட்டுகளாக பிரகடனப்படுத்திக் கொண்டார்கள். முறைகேடான வழியில் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தின் ஒரு பகுதியை சமூகத்துக்காக செலவிட அவர்களுக்கு தயக்கமே இல்லை.

ரேஃபலும் அப்படிப்பட்டவர்தான். அவரை மிஞ்சிய கடத்தல் கலைஞன், தென்னமெரிக்காவிலேயே இருக்க முடியாது என்று அவர் வாழும் காலத்தில் பெயர் பெற்றார். பனாமா கால்வாய் பகுதியில் சர்வதேச எல்லையிலேயே நடுக்கடலில் சரக்குகளைக் கைமாற்றிக் கொள்வார். எண்ணற்ற சிறு படகுகளைப் பயன்படுத்தி சரக்கு தென்னமெரிக்க கடற்கரையோரம் பல்வேறு நகரங்களுக்கு போகும்.
11b.jpg
அங்கிருந்து கார், லாரி மூலம் சாலை மார்க்கமாகவே தேவைப்படும் இடங்களுக்கு சப்ளை செய்யப்படும். தங்கம், எலெக்ட்ரானிக்ஸ், துணிமணி போன்றவற்றையெல்லாம் சும்மா சேவை மாதிரிதான் கடத்திக் கொண்டிருந்தார்கள். அதிலிருந்து வருகிற லாபம் பெரிய அளவில் கார்டெல் நடத்திக் கொண்டிருந்த ரேஃபல் போன்றவர்களுக்கு பாக்கெட் மணிதான்.

லாபத்துக்கு? வேறென்ன... போதைதான். கார்டெல்களுக்கு மெயின் பிசினஸே போதை கடத்தல்தான். அமெரிக்கா, தென்னமெரிக்கா மீது காண்டு ஆனதே இந்த மேட்டரில்தான் என்பதை ஆரம்பத்திலேயே பார்த்துவிட்டோம். ரைட்,ரேஃபலுக்கு வருவோம். அப்படியாப்பட்ட கடத்தல் முதலையான ரேஃபல், சின்ன அளவில் கார் திருட்டு, ஆள் கடத்தல் மாதிரி பிசினஸ்கள் செய்து கொண்டிருந்த பாப்லோவை சந்திக்க விரும்பினார் என்றால், அதற்குக் காரணம் பாப்லோவிடம் வெளிப்பட்ட துல்லியமான தொழில் நேர்த்திதான்.

தன் உதவியாளரிடம் கேட்டார். “பாப்லோவுக்கு என்ன பிடிக்கும்?” “கார். லேட்டஸ்ட் சொகுசு கார்னா உசுரு. அதுலே மின்னல் வேகத்தில் பறக்குறதை விரும்புவான்...” “ஓகே. என்னை மீட் பண்ண வர்றதுக்கு அவனை பிக்கப் பண்ண மெர்சிடிஸை அனுப்பு. அடுத்து?” “கஞ்சா...” “நம்ம கிட்டே இருக்குற சரக்குலேயே காஸ்ட்லியான சரக்கு ஒரு கிலோ பாக்கிங் பண்ணி, கிஃப்ட் ராப்பர் சுத்தி வை.

வேற?” “ஃபுட்பால் பார்க்குறதுன்னா பயலுக்கு உசுரு. அதுவும் பீலே ஆடுறாருன்னா தூக்கமில்லாமே பார்த்துக்கிட்டு கிடப்பான்...” “சூப்பர். அடுத்த வாரம் ஒரு மேட்ச் நடக்குது. அவனை ஸ்டேடியத்துக்கே கூட்டிக்கிட்டு வந்துடு!” இவ்வாறாக ஒரு சோட்டா பையனை சந்திக்க அவனுக்கு சிகப்புக் கம்பள வரவேற்பு கொடுக்க பார்த்துப் பார்த்து ஏற்பாடு செய்தார் ரேஃபல்.

அவருடன் இருந்தவர்களுக்கு ஆச்சரியம். இதுவரை ரேஃபல் யாருக்குமே இவ்வளவு மரியாதை கொடுத்ததில்லை. ரேஃபலின் ரைட் ஹேண்டாக இருந்தவன் வாய்விட்டே கேட்டான். “ஏண்ணா, ஒரு பச்சா பயலுக்கு எதுக்கு இவ்வளவு? வாடான்னா வந்து உங்க காலில் விழுந்து ஷூவை முத்தமிட்டுட்டு போவப்போறான்...” “டேய், இவன் மத்தவங்களை மாதிரி இல்லேடா.

அவனைப் பத்தி கேள்விப்படுறப்போ எல்லாம் என்னோட 20 வயசு நினைவுக்கு வருது. அப்ப நான் எப்படியிருந்தேனோ அப்படி அவன் இப்ப இருக்கான்!’’ ரேஃபலும், பாப்லோவும் சந்தித்த அந்த தினம் உணர்வுபூர்வமானது. பல்லாயிரக்கணக்கானோர் ஸ்டேடியத்தில் பார்வையாளர்களாக குழுமிக் கிடக்க ஃபுட்பால் மேட்ச் நடந்து கொண்டிருந்தது.

குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்த ஸ்பெஷல் ரூமில் அமர்ந்து போட்டியை ரசித்துக் கொண்டிருந்தார் ரேஃபல். அவருடைய வாயில் உயர்தரமான கியூபா சுருட்டு புகைந்து கொண்டிருந்தது. எதிரே இருந்த டேபிளில் பிரெஞ்ச் ரம்மும், ஸ்பானிஷ் ஸ்காட்ச் விஸ்கியும். பாப்லோவுக்கு தருவதற்காக ஏகத்துக்கும் பரிசுப் பொருட்களை அவரே கடை கடையாக ஏறி இறங்கி வாங்கியிருந்தார்.

தூரத்தில் சூரியன் மாதிரி பிரகாசமாக நடந்து வந்து கொண்டிருந்தான் பாப்லோ. அவனது நடையில் மெக்ஸிகோ மாடுபிடி வீரனுக்குரிய கம்பீரம் இருந்தது. மிகப்பெரிய டானை சந்திக்க வருகிறோம் என்கிற அச்சம் அவனது கண்களில் கொஞ்சம்கூட தென்படவில்லை. ஸ்டைலான உடல்மொழியில் காண்பவர்களை வசீகரித்துக் கொண்டிருந்தான்.

அருகில் வந்து நின்றான் பாப்லோ. காதலியைப் பார்ப்பது மாதிரி அன்பொழுக அவனைப் பார்த்தார் ரேஃபல். “இவன்தான் பாப்லோ...” உதவியாளர் சம்பிரதாயமாக அறிமுகப்படுத்த, அவனை அருகில் அமர்த்தினார். “எப்படி இருக்கே?” “எனக்கென்ன? நல்லாருக்கேன். சொல்லுங்க. உங்களுக்கு என்ன செய்யணும்?”

“எதுக்கு கூப்பிட்டீங்கன்னு கேட்காம, என்ன செய்யணும்னு கேட்குற பாரு. இதுக்குதாண்டா உன்னைக் கூப்பிட்டேன்!” ஸ்டேடியத்தில் ஆரவாரம் திடீரென எழுந்தது. ஒரு வீரர் அசகாய தீரம் காட்டி தலையில் முட்டி கோல் போட்டிருந்தார். சட்டென்று மேட்ச்சில் ஆர்வமாகி மைதானத்தையே பார்க்க ஆரம்பித்தார் ரேஃபல்.

என்ன பேசுவது என்று தெரியாமல் தர்மசங்கடமாக அமர்ந்திருந்தான் பாப்லோ. நகம் கடித்தான். காலால் கோலம் போட்டான். இடுப்பில் வைத்திருந்த ரிவால்வரை சட்டென்று உருவினான். ரேஃபலைச் சுற்றியிருந்த பாதுகாவலர்கள் பதற, இவனோ ஸ்டைலாக தூக்கிப்போட்டு விளையாடிக் கொண்டிருந்தான்.

இவனுடைய அத்தனை செய்கைகளையும் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே இருந்தார் ரேஃபல். ரசித்துக்கொண்டே இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். போட்டியில் ரேஃபல் ஆதரித்த அணி வெற்றி பெற்றிருக்க வேண்டும். மைதானமே எழுந்து ஆனந்தக் கூத்தாட, குழந்தை போல ரேஃபலும் எழுந்து நின்று கைகளைத் தட்டியவாறே குதிக்கத் தொடங்கினார்.

ஃபுட்பால் பார்க்க பாப்லோவுக்கும் பிடிக்கும்தான். ஆனால், அன்று இருந்த டென்ஷனில் அவனுக்கு விளையாட்டில் மனம் செல்லவில்லை. பாப்லோவுக்கு கை கொடுத்து, “நான் ரேஃபல். ஏதோ சின்னதா பிசினஸ் பண்ணிக்கிட்டிருக்கேன். தெரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். தெரியலைன்னாலும் உனக்கு ஒண்ணும் பெரிய நஷ்டம் கிடையாது...” குறும்பாக மீண்டும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

கையை மிகவும் அழுத்தமாக பாப்லோவுக்கு வலிக்குமளவுக்கு வேண்டுமென்றே பிடித்தார். பாப்லோவோ அவரைவிடவும் அழுத்தமாக கையைப் பிடித்தான். “நான் பாப்லோ. உங்களை மாதிரி பெரிய கார்டெல் எல்லாம் வெச்சிக்கிட்டு இல்லேன்னாலும் பத்து, இருவது பசங்களை வெச்சிக்கிட்டு ஒரு ஓரமா இங்கே விளையாடிக்கிட்டிருக்கேன்.

என்னை உங்களுக்கு தெரியலேன்னா, நிஜமாவே உங்களுக்கு நஷ்டம்தான்...” துடுக்குத்தனமாக பதில் சொன்னான். நியாயமாக ரேஃபல் கோபப்பட்டிருக்க வேண்டும். மாறாக புன்னகைத்தார். “ஃபீல்டுலே நீதான் என் பேர் சொல்லப் போற வாரிசு!” முதல் சந்திப்பிலேயே பாப்லோவுக்கு வாரிசு பட்டம் அறிவித்து விட்டார் ரேஃபல். அவருடைய ஆட்கள் மட்டுமின்றி பாப்லோவுக்கே கூட இது அதிர்ச்சிதான்.
 

(மிரட்டுவோம்)

kungumam.co

Link to comment
Share on other sites

 

காட்ஃபாதர்

யுவகிருஷ்ணா - 12

நகரத்தை ஊடறுத்துக் கொண்டு ஓடும் மெதிலின் நதிதான் அப்போது கடத்தல் முதலைகளின் நீர்வழிப் போக்குவரத்துக்கு பெரும் உதவியாக இருந்தது. சாலைவழி கெடுபிடிகளுக்கு லஞ்சம் கொடுத்து மாய்வதைவிட, கூலியாட்களை வைத்து சிறு படகுகளில் சரக்கு எடுத்து வருவது சுலபமாக இருந்தது.
20.jpg
பெரும் செல்வந்தரான ரேஃபலிடம் சேர்ந்தபோது, ஆரம்பத்தில் பாப்லோவுக்கு தரப்பட்டுக் கொண்டிருந்தது எல்லாம் சில்லறை வேலைகள்தான். சரக்கு எடுக்க தன்னை ரேஃபல் அனுப்பாதது குறித்து அவனுக்கு ஆதங்கம் இருந்தாலும், அதை வெளிப்படையாக என்றுமே கேட்டதில்லை. தன்னுடன் சேர்த்துக் கொண்டபோதே பாப்லோவிடம் ரேஃபல் தெளிவாகச் சொல்லியிருந்தார்.

“நீ கோடி கோடியாக பணத்தை அறுவடை செய்ய சொல்லிக் கொடுக்கிறேன். நிறைய கோடிகளை கைவசம் வைத்திருக்கும் ஒருவனைப் பிடி. அவனது பாதுகாப்பை உறுதி செய். அவனுடைய நம்பிக்கையை முழுமையாகப் பெறும் வரை அமைதியாக வேலை செய். அவனே உனக்கு அத்தனையையும் கற்றுக் கொடுப்பான்...” “நான் எதற்கு புதுசாக ஒரு கோடீஸ்வரனைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்? அதுதான் நீங்கள் இருக்கிறீர்களே?” சட்டென்று பதில் வந்தது பாப்லோவிடம்.
20a.jpg
புன்னகைத்தவாறே பாப்லோவை தட்டிக் கொடுத்தார் ரேஃபல். அன்றிலிருந்து ரேஃபலை மட்டுமின்றி, அவருடைய தொழில் சாம்ராஜ்யத்தையும் பாதுகாக்கும் பொறுப்பை யாரும் கொடுக்காமல் தானே எடுத்துக் கொண்டார் பாப்லோ. இனிமேல் ‘ன்’ வேண்டாமே, ‘ர்’  விகுதியிலேயே மரியாதை கொடுப்போம்.

ஏனெனில், ரேஃபலிடம் சேர்ந்தபோதே பாப்லோ எஸ்கோபார், பாதி காட்ஃபாதர் ஆகிவிட்டார். ரேஃபலுடைய நிறுவனம் மெதிலின் நகரில் லாட்டரி வியாபாரத்தில் கொழித்துக் கொண்டிருந்தது. ரகளையான அடிதடி பிசினஸ் அது. வான் டட்டாக இந்த ஜீப்பில் வந்து ஏறிய பாப்லோ, சிறிய சலசலப்புகள் ஏற்படும் இடங்களில் எல்லாம் என்ட்ரி கொடுத்து, அதை பெரிய பிரச்னையாக ஆக்கி, வன்முறையாக இவரே தீர்த்துவைத்து தொடர்ந்து ரேஃபலிடம் சபாஷ் வாங்கிக் கொண்டிருந்தார்.

கொலம்பியன்கள் எல்லோரும் அப்போது ஊது ஊதுவென்று சிகரெட்டுகளை ஊதித்தள்ளிய காலம். ரேஃபல், சிகரெட் விற்பனையில் இறங்கியபோது - ஏற்கனவே தன்னிடமிருந்த மார்க்கெட்டிங் செட்டப்பை பயன்படுத்தி அந்த பிசினஸும் எதிர்பாரா அளவுக்கு லாபகரமாக நடக்க அச்சாணியாக இருந்தார் எஸ்கோபார்.

இப்படியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தன்னுடைய பாஸிடம் சபாஷ்களை குவித்துக் கொண்டிருந்த பாப்லோவுக்கு பெரும் பொறுப்பு ஒன்றைக் கொடுக்க திட்டமிட்டார் ரேஃபல். “இதுவரைக்கும் நீ சம்பளத்துக்குதான் வேலை பார்த்துக்கிட்டிருந்தே. கமிஷனா லட்சங்களை குவிக்கிற ஆஃபர் ஒண்ணு தர்றேன். செய்யமுடியுமா?” என்ன ஏதுவென்று விசாரிக்காமலேயே தலையை ஆட்டினார் பாப்லோ.

“வெளிநாடுகளிலிருந்து நிறைய சரக்கு வாங்குறேன். படகில் தொடங்கி கண்டெயினர் வரை பலவிதங்களில் அதை டிரான்ஸ்போர்ட் பண்ணி என்னோட கோடவுனுக்கு கொண்டு வர்றேன். ஆனா, எப்பவுமே இருபத்தஞ்சு பர்சென்ட் கம்மியாதான் சரக்கு வந்து சேருது. இடையிலே எவன் எவனோ எங்கெங்கோ ஆட்டையைப் போடுறான். என்ன முயற்சி பண்ணியும் இதை தடுத்து நிறுத்த முடியலை.

நான் கொள்முதல் பண்ண சரக்கு என்கிட்டே சேதாரம் இல்லாமே வந்து சேரணும். இந்த லாஜிஸ்டிக்ஸ் வேலையை நீ எடுத்துக்கோ. இதுலே நீ எனக்கு எவ்வளவு லாபம் கொடுக்கறியோ, அதுலே பத்து பர்சென்ட் உனக்கு கமிஷன்!” கிட்டத்தட்ட ஏஜென்ஸி மாதிரி. பாப்லோவுக்கு சந்தோஷம். குஸ்டாவோ உள்ளிட்ட தன்னுடைய நம்பகமான சகாக்களைப் பிடித்து ரகசியக் கூட்டம் நடத்தினார்.

“சீக்கிரமே கார்டெல் ஆரம்பிக்கிற நம்ம கனவு நனவாகப் போவுது. ரேஃபல் இறக்குற சரக்கு இனிமே அவரோட கோடவுனுக்கு எந்த செய்கூலி சேதாரமும் இல்லாம அப்படியே போகணும். இதுக்கு நாமதான் பொறுப்பேத்துக்கணும்...” சரக்கு கைமாறும் இடங்களை எல்லாம் கண்காணித்தார்கள்.

வயலுக்கு பாயும் தண்ணீர், எங்கோ புல்லுக்கும் பாய்கிறது. அந்த இடம் எதுவென்று கண்டுபிடிக்காமல் இந்த சிக்கல் தீராது. ரேஃபலின் கையாட்களிலேயே யாரோ ஒரு கருப்பு ஆடு இருக்க வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் சந்தேகித்தார்கள். ம்ஹூம். அப்படி ஒருவரும் இல்லை. மெதிலின் நகருக்கு வடக்கே 350 கிலோமீட்டர் தூரத்தில் டர்போ நகரம் அந்த கடலோர நகரத்தில்தான் சரக்குகள், ரேஃபலின்  கண்ட்ரோலுக்கு வருகிறது.

தன்னுடைய சகாக்களோடு அங்கே போனார் பாப்லோ. சரக்கு ஏற்றி இறக்கும் இடங்களை தொடர்ந்து ரகசியமாக கண்காணித்தார். ரேஃபலுக்காக சுமார் ஐம்பது சுமையேற்றும் தொழிலாளிகள் வேலை பார்த்தார்கள். அவர்களுக்கு ஒரு மேஸ்திரி. மிகக்குறைந்த கூலிக்கு வேலை பார்த்த இவர்கள்தான் லோடு ஏற்றும்போது லேசாக சேதாரத்தை உருவாக்குகிறார்கள் என்பதை பாப்லோ குழுவினர் கண்டுபிடித்து விட்டார்கள்.

குஸ்டாவோ டென்ஷன் ஆனான். “அந்த கூலிக்கார நாய்களை சுட்டுத் தள்ளிட்டு, நம்ம ஊருலே இருந்து ஆளுங்களை இறக்கலாம் பாப்லோ...” “நான்சென்ஸ். கம்யூனிஸம்னா என்னன்னு தெரியுமா உனக்கு? விடு. நான் பார்த்துக்கறேன்...” பாப்லோ, நேராக அந்த  தொழிலாளிகளிடம் போனார். அத்தனை பேருக்கும் உணவும், மதுவும் கொண்டு சென்றார்.

“தொழிலாளத் தோழர்களே, நான் நம்ம பாஸோட பிரதிநிதியா இங்கே புதுசா வந்திருக்கேன். இனிமே இங்கிருந்து கிளம்புற சரக்குகளுக்கு நான்தான் உத்தரவாதம் கொடுக்கணும். உங்களுக்கு எந்த தொல்லையும் நான் கொடுக்க மாட்டேன்னு மட்டும் முதலில் உறுதி சொல்லுறேன். ரொம்ப கம்மியா கூலி கொடுக்கறாங்க. இன்னையிலேருந்து அது அப்படியே டபுளா கொடுக்க முயற்சி பண்ணியிருக்கேன்.

அதுவுமில்லாமே நல்லா வேலை செய்யுறவங்களுக்கு வாராவாரம் இன்சென்ட்டிவ். இனிமே இங்கே வேலைக்கு வர்றவங்களுக்கு சாப்பாடு நம்ம கம்பெனியே இலவசமா போடும். சாயங்காலம் வீட்டுக்கு போறப்போ ஆளுக்கு ஒரு சரக்கு பாட்டில்…” பாப்லோ, திட்டங்களை அறிவித்துக்கொண்டே போக.. தொழிலாளர்கள் கைதட்டி வரவேற்றார்கள்.

“தொழிலாளர் தலைவன் பாப்லோ எஸ்கோபார் வாழ்க!” என்று கோஷமிட்டார்கள். பெரிய கடத்தல் மன்னனாக வருவதை லட்சியமாகக் கொண்ட தன்னை, டிரேட் யூனியன் தலைவர் ரேஞ்சுக்கு இவர்கள் மாற்றிவிடுவார்களோ என்று சட்டென்று பதறினார் பாப்லோ. “ஆனா, ஒண்ணு.

இனிமே இங்கே லோட் ஆகிற சரக்குலே ஒரே ஒரு கிராம் குறைஞ்சாகூட அதுக்கு காரணமானவன் அடுத்த நாள் கடலில் பிணமா மிதப்பான்!” இதைச் சொன்னபோது பாப்லோவின் கண்களில் தெரிந்த கொலைவெறி, தொழிலாளர்களை நடுங்க வைத்தது. 50 பர்சென்ட் அன்பு, 50 பர்செண்ட் வன்முறை-இதுதான் பாப்லோவின் சக்சஸ் ஃபார்முலா. இப்போதும்கூட உலகின் தலைசிறந்த கடத்தல் மன்னர்கள் பலரும் பாப்லோவின் இந்த ஃபார்முலாவைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
 

(மிரட்டுவோம்)

kungumam.co.

Link to comment
Share on other sites

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

அன்பு 50%, வன்முறை 50% என்கிற பாப்லோவின் சீக்ரட் சக்சஸ் ஃபார்முலாவுக்கு கடத்தல் ஏரியாவில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் - வரம் கொடுத்தவன் தலையிலேயே கையை வைக்கும் வேலையை பாப்லோ செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக ரேஃபல். ஏனெனில், வரம் கொடுத்தவரே அவர்தானே?

“இனி உங்க சரக்கு ஒரு துளி கூட சிந்தாம சிதறாம டெலிவரி ஆக வேண்டிய இடத்துக்கு சொன்ன நேரத்துக்கு போய்ச் சேர்ந்துடும். ஆனா…” “ஆனா? தயங்காம சொல்லு பாப்லோ…” அன்பு மிகுந்த பார்வையை பாப்லோ மீது செலுத்தி கேட்டார் ரேஃபல். “எனக்கு சேரவேண்டிய ஷேர் பத்து பர்சென்டுன்னா கட்டுப்படி ஆகாது...” “அதுக்கு?” இந்த சின்னப் பையன் கொஞ்சம் அதிகப்பிரசங்கித் தனமாகப் பேசுகிறானே என்கிற எண்ண ஓட்டத்தில் தன் குரலில் லேசாக கண்டிப்பை உயர்த்தினார்.
4.jpg
இதற்கெல்லாம் அசருகிற ஆளா நம்ம பாப்லோ? “லாபத்துலே பாதி... அதாவது எனக்கு 50% வந்தாகணும்!” சட்டென்று கோட் உள்பாக்கெட்டில் வைத்திருந்த ரிவால்வரை எடுத்து பாப்லோவை நோக்கி நீட்டினார். “யார் கிட்டே பேசுறேன்னு தெரியுதா?” “உங்களாலே விசையை அழுத்த முடியாது ரேஃபல்.

ஏன்னா, நீங்க குறிவெச்சிருக்கிறது உங்க அன்பான, நம்பிக்கைக்குரிய பாப்லோவை நோக்கி...” “அன்புக்கு விலை பேசாதே பாப்லோ. ரொம்ப தப்பு!” துப்பாக்கியை மேஜை மீது எறிந்துவிட்டு, இரு கைகளாலும் தலையைப் பிடித்துக் கொண்டார் ரேஃபல். “நீங்க என்னோட பாஸ். நான் உங்க சிஷ்யன். இந்த உறவுக்காக உயிரையும் கொடுப்பான் இந்த பாப்லோ.

ஆனா, இப்ப நாம பேசிக்கிட்டிருக்கிற டாபிக் வேற. நீங்க பிசினஸ்மேன். நான் உங்ககிட்டே பிசினஸ் பேசுறேன். இதுல கறாரா இல்லைன்னா நம்ம குரு - சிஷ்யன் உறவேகூட எதிர்காலத்துல அறுந்து  போகலாம். நான் அதை மனசுலே வெச்சுக்கிட்டுதான் பேசுறேன்...” ரேஃபல் ஆச்சரியமாக பாப்லோவைப் பார்த்தார். “உனக்கு என்ன வயசு இருக்கும்?” “வரப்போற டிசம்பர் முதல் தேதியிலே இருபது முடியுது பாஸ். வயசை விடுங்க. நான் உங்களுக்கு கொடுக்கப்போற ஆஃபரை கவனிங்க.
4c.jpg
வெளிநாடுகளில் இருக்கிற உங்க ஏஜெண்டுகளுக்கு முன்பணம் கொடுத்து சரக்கை பனாமா கடலில் வாங்கிக்கறீங்க. அங்கிருந்து டர்போ சிட்டிக்கு வருது. டர்போவிலிருந்து நாடு முழுக்க கொண்டு போகணும். இதுக்கு கூலியாட்கள், டிரைவர்கள், பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய தடியனுங்க, சரக்கை கொண்டு போக கார், லாரி, கண்டெயினருன்னு வண்டிங்க, சரக்கை பத்திரமா வைக்கிறதுக்கு கோடவுன், அதை பாதுகாக்க நூற்றுக்கணக்கில் ஆட்கள், போலீஸுக்கு மாமூல், அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பங்கு… சரக்கு வாங்குறதைவிட அதை டெலிவரி பாயிண்டுக்கு கொண்டு போறதுக்குள்ளே உங்களுக்கு ஆகிற செலவுதான் சரக்கோட விலையை விட பன்மடங்கு அதிகமா இருக்கு...” “எல்லாரும் இப்படி ரிஸ்க் எடுத்துதானே பிசினஸ் பண்ணுறோம்?”

“அந்த ரிஸ்க்கே உங்களுக்கு இனிமே இல்லை. நீங்க பாட்டுக்கு முதல் போட்டு சரக்கை ஆர்டர் பண்ணிடலாம். உங்க கஸ்டமர் கிட்ட விலை பேசி டெலிவரி டேட் ஃபிக்ஸ் பண்ணிக்கலாம். சரக்கை கடலில் இருந்து இறக்குறதுலே தொடங்கி, டெலிவரி வரைக்குமான எல்லா ரிஸ்க்கான வேலையையும் பாப்லோ & கோ பார்த்துக்கும்.

முதல் போடுற முதலாளி என்பதால் உங்களுக்கு ஃபிப்டி பர்சென்ட். உயிரைப் பணயம் வைக்கிற தொழிலாளிகளான எங்களுக்கு ஃபிப்டி பர்சென்ட். டீலா, நோ டீலா?” “அதாவது என்னை டீசன்டா ஒதுங்கிக்க சொல்லுற…” “பாஸ், நீங்கதான் என் குரு! எந்த சிஷ்யனும் குருவை மிஞ்ச நினைக்க மாட்டான். குருவா பார்த்துதான் சிஷ்யனை மிஞ்ச விடணும்...” இதைச் சொல்லும்போது பாப்லோவின் கண்களில் ஒரே ஒரு நொடி தென்பட்ட கொலைவெறியை ரேஃபல் கவனிக்கத் தவறவில்லை.
4a.jpg
“மெதிலினை மட்டுமல்ல. கொலம்பியாவை, தென்னமெரிக்காவை, உலகத்தையே நீ அசைச்சுப் பார்க்கப் போறே பாப்லோ...” ஆசீர்வதிக்கும் விதமாக கையை உயர்த்திச் சொன்னார் ரேஃபல். இவரிடம் பாடிகார்டாக வேலைக்கு பாப்லோ சேர்ந்து சில மாதங்கள்தான் ஆகியிருக்கும். வருடக்கணக்காக அங்கே பெஞ்ச் தேய்த்துக் கொண்டிருக்கும் தடியர்கள் பலரும் இன்னமும் கூலிக்குத்தான் மாரடித்துக் கொண்டிருந்தார்கள்.

மிகக்குறுகிய காலத்திலேயே பாடிகார்டு, பார்ட்னராக மாறியது தொழில் போட்டியாளர்களின் கண்களை மட்டுமல்ல. ரேஃபலுக்கு வேண்டியவர்களையும் கூட உறுத்தியது. பாப்லோவுக்கு இந்த சில்லறைப் பிரச்னைகளில் கவனம் செலுத்த நேரமோ, ஆர்வமோ இல்லை. அப்படி ஏதேனும் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தால், இருக்கவே இருக்கிறது பாப்லோவின் ஸ்பெஷல் ஃபார்முலா.

50 பர்சென்ட் அன்பு, 50 பர்சென்ட் வன்முறை. கலகக்குரல் எழுப்புபவனை அழைத்து அன்பாகப் பேசுவார். “உனக்கு என்ன பிரச்னை? எவ்வளவு வேணும்?” பாப்லோ நீட்டும் சூட்கேஸை அன்போடு வாங்கிவிட்டால் தீர்ந்தது சிக்கல். இல்லையேல் மறுநாள் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் கலகக்காரனின் உடல் மெதிலின் நதியின் கரையில் எங்காவது ஒதுங்கியிருக்கும்.

ஆரம்பத்தில் ரேஃபலின் சரக்குகளுக்குதான் இதுபோல செக்யூரிட்டி & இன்சூரன்ஸ் வேலைகளை செய்ய ஆரம்பித்தார் பாப்லோ. இவருடைய தொழில் நேர்த்தியும், நேர்மையும் பிடித்துப் போக கார்டெல் வைத்து மாரடித்துக் கொண்டிருந்தவர்கள் சிலரும் சேஃபாக இவரிடம் தங்கள் பிசினஸை ஒப்படைக்க ஆரம்பித்தார்கள்.

அதாவது வட்டிக்கு துட்டு ரவுண்டில் விட்டுவிட்டு சுகமாக உட்கார்ந்திருப்பது மாதிரி. அசலும், முதலுமாக வாங்கிக் கொடுப்பது பாப்லோவின் தலையெழுத்து. மெதிலின் நகரில் மட்டுமின்றி கொலம்பியா முழுமைக்குமே தன்னுடைய நெட்வொர்க்கை விரிவுபடுத்தத் தொடங்கினார் பாப்லோ. சைக்கிளில் தொடங்கி கண்டெயினர் வரை ஏகத்துக்கும் அவர் வாங்கிப் போட்டார்.

நகரங்களுக்கு இடையே சரக்கை பாதுகாத்து வைக்க கோடவுன்கள் கட்டினார். எல்லாமே சொந்தம்தான். வாடகைக்கு எடுப்பது பாப்லோவுக்கு பிடிக்கவே பிடிக்காது. சின்ன இடமாக இருந்தாலும் சொந்த இடமாக இருக்க வேண்டும் என்பது அவரது பாலிஸி. சுருக்கமாக வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் கொலம்பியாவின் எல்லா ஊர்களிலும் அவருக்கு ‘சின்னவீடு’ இருந்தது.

பிரச்னை வந்தால் காசு கொண்டு பேசுவார். அப்படி யும் தீரவில்லை என்றால் துப்பாக்கி பேசும். வன்முறைக்கும் அடிபணியாத சிக்கல்களைத் தீர்க்கவேண்டுமானால், ரேஃபல் முன்பாகப் போய் கைகட்டி நிற்பார். தொழிலில் நீண்டகால சீனியர் என்பதால் அத்தனை நெளிவுசுளிவுகளும் ரேஃபலுக்கு அத்துப்படி. அவர் என்ன சொல்கிறாரோ அதை கண்ணை மூடிக்கொண்டு செய்வார் பாப்லோ.

அந்த நாட்களில் பாப்லோ நகர்வலம் வருவதே கண்கொள்ளக் காட்சியாக இருக்கும். விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை அவரே அசுரவேகத்தில் ஓட்டுவார். அவரது வண்டிக்கு முன்பாகவும், பின்பாகவும் தலா நான்கு ஜீப்புகள், பக்கவாட்டில் இருபுறமும் தலா நான்கு பைக்குகள் என்று ஒரு நாட்டின் அமைச்சரைப் போலவே அவரது கான்வாய் பறக்கும்.
4b.jpg
டீன் ஏஜில், தான் கண்ட கனவை நனவாக்கிக் கொண்டார் பாப்லோ. இருபத்தி இரண்டு வயதிலேயே அவர் ஆசைப்பட்டது மாதிரியே மில்லியனர் ஆகிவிட்டார். அம்மாவுக்கு வசதியான சொகுசு பங்களாவை வாங்கிக் கொடுத்தார். அண்ணனுக்கு தனியாக சைக்கிள் பிசினஸ். தன்னுடைய நிழல் வேலைக்குத் தேவையான ஆவணங்களைத் தயாரிப்பதற்கும், அரசாங்கத்துக்கு போலிக்கணக்கு காட்டவும் இந்த பிசினஸ்தான் பாப்லோவுக்கு உதவியாக இருந்தது.

சொந்த பந்தங்கள் கேட்டது எல்லாமே பாப்லோவிடம் கிடைத்தது. மற்றவர்களுக்கு மட்டுமல்ல, தனக்கும் விதவிதமாக அயல்நாட்டு இறக்குமதி கார்களை பெரும் செலவு செய்து வாங்கினார். இதெல்லாம் போதும்தானே? ஆனால் - பாப்லோவுக்கு போதவில்லை. உலகமே நடுங்கக்கூடிய கார்டெல் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். அமெரிக்காவிலும் பிசினஸில் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும். கொலம்பியாவில் தன்னைக் கேள்வி கேட்கும் அதிகாரம் எவனுக்குமே இருக்கக்கூடாது. என்ன செய்யலாம்? மக்கள் தலைவனாகி விட வேண்டியதுதான். அதாவது, காட்ஃபாதர் ஆகிவிடவேண்டியதுதான்.

(மிரட்டுவோம்) 

kungumam.co

Link to comment
Share on other sites

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

யுவகிருஷ்ணா - 14

கோடி கோடியாக கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் பணத்தை என்னதான் செய்வது? மெத்தையில் பஞ்சுக்கு பதிலாக பணத்தை  செருகிவிட்டு படுத்து உருண்டார் எஸ்கோபார். என்னதான் ஊதாரித்தனமாக செலவழித்தாலும் கோபுரமாக குவிந்து கொண்டே இருந்தது.  அப்போதைய கொலம்பிய அரசுக்கு அவ்வளவு சமர்த்து போதாது என்பதும் எஸ்கோபாரிடம் அளவுக்கதிமான வருமானத்துக்கு மீறிய சொத்து  சேர்ந்ததற்கு காரணம்.
12.jpg
உள்நாட்டுக் குழப்பங்களில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த அரசுக்கு, கடத்தல் மாதிரி சப்பை விஷயங்களை கண்டுகொள்ள  நேரமில்லை. ஊரிலிருந்த எல்லா வங்கியிலுமே தலா பத்து கணக்காவது வைத்திருந்தார். எல்லா கணக்கிலும் தளும்பத் தளும்ப பணம்  இருந்தது.

இத்தனைக்கும் இந்த கடத்தல் ஏஜென்ஸி வேலைகளை கிட்டத்தட்ட மூன்றாண்டுகள்தான் செய்தார் பாப்லோ. அடுத்த கட்டத்துக்கு -  கார்ப்பரேட் செட்டப்பில் ஒரு கார்டெல் - நகருவதற்காக தம்மை தயார் செய்து கொண்டிருந்தது எஸ்கோபார் கும்பல். எதிர்காலத்தில் தன்னை  வரவரலாறு வெறும் கடத்தல் மன்னனாக பதிவு செய்வதில் அவருக்கு விருப்பமில்லை.

ஒரு ராபின்ஹுட்டாக - மக்கள் தலைவனாக - தான், அறியப்பட வேண்டும் என்று மிகவும் மெனக்கெட்டார். அந்த காலக்கட்டத்தில் அவர்  என்ன செய்வார் என்பது அவருடன் இருந்தவர்களுக்கே கூட தெரியாது. தினம் தினம் சர்ப்ரைஸாக எதையாவது செய்து தன்னுடைய  சகாக்களுக்கு மட்டுமின்றி, மெதிலின் நகர மக்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுப்பார்.

திடீரென்று தன்னிடமிருக்கும் டிரக் ஒன்றை தானே ஓட்டிச் செல்வார். நகரின் மத்தியில் இருந்த பெரிய சூப்பர் மார்க்கெட் முன்பாக  நிறுத்துவார். எஸ்கோபாரே டிரக்கில் வந்து இறங்குகிறார் என்றதுமே சூப்பர் மார்க்கெட் பணியாளர்கள் பதறி விடுவார்கள். எல்லோருக்கும்  கைக்கு கிடைத்த பணத்தை சும்மா டிப்ஸாக வாரி வழங்கிக் கொண்டே ஜாலியாக ஷாப்பிங் செய்வார்.

கறி, மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களாக இருந்தால் அப்படியே கடையில் இருக்கும் மொத்த சரக்கையும் டிரக்கில் ஏற்றச் சொல்வார்.  துணிக்கடைகளுக்குப் போய் எல்லா ஸ்டாக்கையும் அள்ளிக் கொள்வார். இதற்கெல்லாம் முறையாக பில் செட்டில் செய்துவிடுவார்  என்பதுதான் எஸ்கோபாரின் ஸ்பெஷாலிட்டி.

அந்த டிரக் அப்படியே புறநகருக்கு போகும். அங்கே சேரிகளில் வசிக்கும் எளிய மக்களுக்கு இந்த உணவு, உடை உள்ளிட்டவைகளை தன்  கையாலேயே வாரி வழங்குவார். குழந்தைகளோடு குழந்தையாக சேர்ந்து ஃபுட்பால் விளையாடுவார். மாதத்துக்கு ஒருமுறையாவது  பாப்லோவின் இந்த திக்விஜயத்தை மெதிலின் ஏழை எளியவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய சிறியளவிலான  பிரச்னைகளை தானே முன்னின்று தீர்த்து வைப்பதில் எஸ்கோபாருக்கு பேரானந்தம்.

தன்னுடைய ஆட்களிடம் அடிக்கடி சொல்லுவார். “எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் வெட்டிட்டோ, சுட்டுட்டோ எங்கிட்ட வந்து  நின்னீங்கன்னா, என் உசுரைக் கொடுத்தாவது காப்பாத்துவேன். உங்க மேல தப்பா, அவங்க மேல தப்பா, என்ன பிரச்னைன்னே  கேட்கமாட்டேன். ஆனா, சாதாரண ஏழை ஒரே ஒருத்தன் கூட ‘எஸ்கோபாராலே பாதிக்கப்பட்டேன்’னு சொல்லிடக்கூடாது.

ஏன்னா, துப்பாக்கித் தோட்டாவை விட ஆபத்தானது ஓர் ஏழையின் கண்ணீர்! அதுக்கு எந்த காலத்துலேயும் நாம காரணமா  இருந்துடக்கூடாது...” பாப்லோவின் இந்த ஏழை பங்காளன் முகம், மக்களிடையே அவருக்கு பெரும் ஆதரவை உருவாக்கியது. தங்களுக்கு  உதவி தேவை என்றால் நள்ளிரவிலும் அவர் வீட்டுக் கதவை உரிமையாகத் தட்டுவார்கள்.

பாப்லோவுக்கு ஏதேனும் பிரச்னை என்று கேள்விப்பட்டால் துடித்துப் போனார்கள். அவரது பிசினஸுக்கு வெளிப்படையாகவே ஆதரவு  தெரிவித்தார்கள். பாப்லோவிடம் வேலைக்குச் சேர முண்டியடித்தார்கள். அதே நேரம் - பாப்லோவின் இன்னொரு முகத்தைக் கண்டு  அதிகாரத்தில் இருந்தவர்கள் அஞ்சத் தொடங்கினார்கள்.

அளவுக்கதிகமான அன்பு அல்லது வரைமுறையில்லாத வன்முறை என்கிற பாப்லோவின் ஃபார்முலாவை எப்படி எதிர்கொள்வது என்று  தெரியாமல் குழம்பினார்கள்; நடுங்கினார்கள். பாப்லோவுக்கு அடங்கா விட்டால் ரத்தக்களரி என்பது கொலம்பியாவே உணர்ந்த அனுபவ  உண்மை.

இந்த நிலைக்கு உயர பாப்லோ ஆரம்பத்தில் சிரமப்பட்டிருந்தாலும், எல்லாவற்றையும் திட்டமிட்டு செட்டப் செய்தபிறகு மழைக்காலத்தில்  ஆற்றில் பெருக்கெடுக்கும் தண்ணீர் மாதிரி பணம் காட்டாறாக அவரது சாம்ராஜ்யத்துக்குள் பாய்ந்து கொண்டே இருந்தது. முறையான கணக்கு  வழக்கு இல்லாமல் செலவழித்துக் கொண்டே போனால், ‘குன்றும் கரையும்’.
12a.jpg
தான் ஒருநாள் ஓட்டாண்டி ஆகலாம் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அவரிடம் வேலை பார்த்தவர்களும் கொஞ்சம் ஓவர் அட்வான்டேஜ்  எடுத்துக் கொண்டார்கள். கணக்கு காட்டுவதில் தன் சகாக்கள் தன்னை ஏமாற்றுகிறார்கள் என்பது பாப்லோவுக்கும் தெரியும். அதை ஓர்  எல்லை வரை அனுமதித்தார்.

ஒருகட்டத்தில் அத்தனையையும் முறைப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. சைக்கிள் பிசினஸ் வைத்துக் கொடுத்த அண்ணன்  ராபர்ட்டோவை அழைத்தார். “எனக்கு எவ்வளவு பணம் வருது, எவ்வளவு செலவழிக்கிறேன்... எதுவுமே தெரியலை. பங்களாவுலே  கண்ணுக்கு எட்டின தூரம் வரை பணம் கொட்டிக் கிடக்கு. சகாக்கள் முடிஞ்சவரைக்கும் அள்ளிக்கிட்டு போறானுங்க.

அவங்ககிட்ட கண்டிப்பா நடந்துக்க முடியாது. கஷ்டகாலத்துல எனக்கு தோள் கொடுத்தவனுங்க...’’ ‘‘சரி. நான் என்ன செய்யணும்?’’  ‘‘எல்லாத்தையும் ஒழுங்குக்கு கொண்டு வர்வர்றதுக்கு நீதான் உதவணும்!” “பாப்லோ... தெரிஞ்சோ தெரியாமலோ இந்த பாழாப்போன நிழல்  பிசினஸுல மாட்டிக்கிட்ட. எனக்கு இதுல உடன்பாடில்ல. தவிர...’’ ‘‘தயங்காம சொல்லுண்ணே...’’ ‘‘இது பாவப் பணம்னு நெனைக்கிறேன்!”

பட்டென்று சொன்ன அண்ணனை பாசத்துடன் பார்த்தார் எஸ்கோபார். ‘‘இந்த நேர்மைதான் எனக்கு வேணும். இது பாவப் பணம்தான்.  இல்லைன்னு சொல்லலை. குத்திக் காட்டறேன்னு நெனைச்சுக்காதே...’’ நெருங்கி அண்ணனின் தோளில் கை போட்டார். ‘‘நாம சின்ன வயசுல  மாடு மேய்ச்சுக்கிட்டு இருந்தோம்.

அப்பா, பால் கறந்து பிசினஸ் பண்ணிக்கிட்டு இருந்தார். அம்மா, பசங்களுக்கு பாடம் நடத்தி நமக்கு பால் பவுடர் வாங்கிப் போட்டாங்க.  இப்ப நம்ம குடும்பம் நல்லாருக்கு. எதனாலனு உனக்கே தெரியும்...’’ ராபர்ட்டோவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. பாவப்  பணத்தில்தான், தன் குடும்பம் உட்பட அனைவரும் நிம்மதியாக வாழ்கிறோம் என்ற நிஜம் தடுமாற வைத்தது.

சங்கடத்தில் கையைப் பிசைந்தார். “என்னை நம்புண்ணா. எல்லாத்தையும் கொஞ்ச நாள்ல சட்டபூர்வமா மாத்திடுவேன். நான் உன் தம்பி.  கெட்டவனாவே இருக்க மாட்டேன். இந்த கொலம்பியாவுக்கே கலங்கரை விளக்கமா மாறுவேன். இதெல்லாம் நடக்கணும்னா நீ என் கூட  இருக்கணும்...’’ சட்டென்று தம்பியைக் கட்டிப் பிடித்தார். வார்த்தைகள் வெளிப்படுத்தாததை கரங்கள் வெளிப்படுத்தின.

அந்த நொடியிலிருந்து பாப்லோவுக்கு வரும் பணம் முறையாக கணக்கு வைக்கப்பட்டது. அதாவது பாப்லோவுக்கு. அரசுக்கு வரி கட்டி  அல்ல! வேலை செய்யும் ஆட்களுக்கு சம்பளம்; போலீசுக்கும், அதிகாரிகளுக்கும், அரசியல் முதலைகளுக்கும் சேரவேண்டிய பங்கு; அடுத்த  சரக்கு கொள்முதலுக்கான அட்வான்ஸ்...

எல்லாம்... எல்லாமே ஒழுங்குக்கு வந்தன. முக்கியமாக தன் தம்பியின் வள்ளல் தன்மைக்கும் சேர்த்து ராபர்ட்டோ பணத்தை ஒதுக்கினார்.  சமூகநலத் திட்டங்களும் ஜாம் ஜாம் என்று நடந்தன. ஏழைளுக்கு கல்வி, வீடு, மருத்துவ உதவிகள்... சகலமும் குறைவின்றி அரங்கேறின.  அண்ணன் உடையான் ஆபத்துக்கு அஞ்சான்!

எஸ்கோபார் எதிர்பார்த்ததும் இதைத்தான். ஆனால், எதிர்பார்த்ததுக்கும் மேலாக ராபர்ட்டோ நடந்து கொண்டார். எந்த காரணத்துக்காக தம்பி  அழைத்தபோது தயங்கினாரோ... அதை மாற்ற என்ன செய்வதாக எஸ்கோபார் உறுதி அளித்தாரோ... அதை தம்பியை கேட்காமல் அவரே  செய்யத் தொடங்கினார்.

பணத்தை சட்டபூர்வமான தொழில்களில், அதுவும் எஸ்கோபாரின் பெயரில் முதலீடு செய்யத் தொடங்கினார்! குறிப்பாக ரியல் எஸ்டேட்  பிசினஸில் பாப்லோ ஈடுபடுவதற்கு ராபர்ட்டோவே தூண்டுதலாக இருந்தார். அசையா சொத்துகளை வாங்கிக் குவித்தால், தம்பியின்  எதிர்கால அரசியல் தேவைகளுக்கு அவை உதவுமென்று தீர்க்கதரிசனமாக கணக்குப் போட்டார். பின்னாளில் பாப்லோவோடு தேடப்படும்  குற்றவாளியாக அப்பாவியான ராபர்ட்டோவின் பெயரும் இடம்பெற இதுவே காரகாரணமாகியது!

(மிரட்டுவோம்)

kungumam.co

Link to comment
Share on other sites

 

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

யுவகிருஷ்ணா - 15

சப்தம் கேட்டு பால்கனிக்கு வந்து நின்றார் பாப்லோ. கேட்டில் ஒரு பெரியவர் செக்யூரிட்டிகளிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே..? புருவத்தை சுருக்கியபடி பாப்லோ யோசித்தபோது - “பாப்லோ, என்னைத் தெரியலையா? உங்கப்பன் ஏபெலோட ஃப்ரண்டு!” பெரியவர் அடிவயிற்றிலிருந்து கத்தினார்.

அடையாளம் தெரிந்தது. அவர் வளர்ந்த என்விகாதோவில் வசிப்பவர் அந்த பெரியவர். அப்பாவுக்கு நெருங்கிய சகாவாகவும் இருந்தவர். அப்பாவுடன் ஒன்றாக ஊர் சுற்றியவர். ‘நதாய்ஸ்மோ’ இயக்கத்திலும் தீவிரமாக இயங்கியவர். “அவரை உள்ளே அனுப்பு. யாரு என்னன்னு விசாரிக்காம சண்டை போடுறதா?” செக்யூரிட்டிகளைக் கடிந்து கொண்ட பாப்லோ, அவராகவே இறங்கிவந்து பெரியவரை வரவேற்றார்.

“எப்படி இருக்கீங்க அங்கிள்?” “நல்லா இல்லை பாப்லோ. எல்லாரும் நாசமா போயிக்கிட்டிருக்கோம்!” இந்த பதிலை சத்தியமாக பாப்லோ எதிர்பார்க்கவில்லை. உதவி கேட்டு வருபவர்கள் எடுத்ததுமே இப்படி கதற மாட்டார்கள். சீரியசான பிரச்னையாக இருக்க வேண்டும். தோளைப் பிடித்து சோஃபாவில் அமர வைத்தார். குடிக்க தண்ணீர் கொடுத்தார். தொண்டைக்குழியில் நீர் காட்டாறாக இறங்கியதைப் பார்த்தபோது துக்கம் தொண்டையை அடைத்தது.

பெரியவரின் கரங்களை கெட்டியாகப் பிடித்தார். “நான் என்ன செய்யணும்?” “பணம் எதுவும் வேண்டாம் பாப்லோ...’’ ‘‘ம்...’’ ‘‘நம்ம ஊரையே ஒருத்தன் சீரழிச்சிக்கிட்டிருக்கான்...’’ ‘‘...’’ ‘‘குழந்தை, குட்டியெல்லாம் அவங்கிட்ட கொத்தடிமையா இருக்கு...’’ எஸ்கோபாரின் கண்களில் சிவப்பேற ஆரம்பித்தது. ‘‘புழு பூச்சிலேந்து மனுஷன் வரைக்கும் எல்லாரையும் ராவும், பகலுமா சித்திரவதை பண்ணிக்கிட்டிருக்கான்…” தன் உள்ளங்கையை பாப்லோ மடக்கி அழுத்தினார்.

நரம்புகள் புடைத்து எழுந்தன. பார்வையை மட்டும் பெரியவரின் முகத்திலிருந்து விலக்கவில்லை. இமைக்கவுமில்லை. கடவுளின் முன்னால் கையை விரித்து தன் சோகத்தை சொல்லி அழுவதுபோல் அந்தப் பெரியவர் தொடர்ந்தார். “டீகோ எகாவரியாவை தெரியுமில்லையா? இப்ப கொலம்பியாவோட பெரும் தொழிலதிபர்கள்ல அவனும் ஒருத்தன்.

அரசியல்வாதிங்க அத்தனை பேரும் அவன் கால்ல விழுந்து கிடக்காங்க. அவங்கிட்டே லஞ்சம் வாங்காத அதிகாரியே நம்ம நாட்டுலே கிடையாது...’’ ‘‘...’’ ‘‘டெக்ஸ்டைல் பிசினஸ் பண்ணுறான். அவனோட மில் எல்லாமே என்விகாதோவை சுத்திதான் இருக்கு...’’ ‘‘...’’ ‘‘ஆரம்பத்துலே தேனாட்டம் பேசினான். மில் வேலைக்கு ஆள் சேர்த்தான். நல்ல சம்பளம் கொடுக்கிறேன்னு சத்தியம் செஞ்சான்...’’ ‘‘...’’ ‘‘நம்ம ஆளுங்க மொத்தமா அவனோட மில்லுலே போய் சேர்ந்தானுங்க…” இதற்கு மேல் பெரியவரால் பேச முடியவில்லை.

12.jpg

பெரும் ஓலமாக கேவல் வெடித்தது. அவரை அப்படியே தன் மார்போடு பாப்லோ அணைத்தார். முதுகை நீவி விட்டார். கொஞ்சம் கொஞ்சமாக கேவல் அடங்கியது. விலகி தன் உள்ளங்கையால் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட பெரியவர் மூக்கை உறிஞ்சினார். ‘‘இதுக்கு அப்புறம்தான் தன் சுயரூபத்தை அவன் காட்டினான். ஆர்டர் அதிகம் வர வர நிறைய துணி தயாரிக்க வேண்டியிருந்தது.

இருக்கிற ஆட்களை வைச்சு சமாளிக்க முடியாது. புதுசா ஆள் எடுக்கணும். அந்தப் படுபாவி என்ன செஞ்சான் தெரியுமா..?’’ ‘‘...’’ ‘‘இருந்த ஷிப்ட்டை தூக்கிஎறிஞ்சான். நேரம் காலம் பார்க்காம  எல்லாரையும்  உழைக்கச் சொன்னான். இதுக்கு எக்ஸ்ட்ரா சம்பளமும் கொடுக்கலை...’’ ‘‘கம்யூனிஸ்ட் தோழர்கள் இதை எதிர்த்து கேட்கலையா?’’ ‘‘கேட்டதோட போராட்டம் நடத்தவும் ஏற்பாடு செஞ்சாங்க...’’ ‘‘ம்...’’ ‘‘ஆனா, ஆர்ப்பாட்டம் நடக்கறதுக்கு முன்னாடி தன்னோட கார்டெல் தாதா நண்பர்களை வெச்சு, எதிர்த்தவங்களை எல்லாம் போட்டுத்தள்ளிட்டான்...’’
‘‘...’’ ‘‘இப்ப நிலமை  என்ன தெரியுமா பாப்லோ... தொழிற்சாலைல வேலை பார்க்கிற பாதிப் பேருக்கு காசநோய் வந்திருக்கு.

எப்ப வேணாலும் அவங்க உயிர் போகலாம். அப்படி செத்தாங்கன்னா அவங்க வீட்டுலேந்து யாராவது அந்த இடத்துக்கு வரணும். வேலையைத் தொடரணும். வாரத்துக்கு மூணு நாள் ஊருக்குள்ள வண்டி வருது. எதிர்ல தென்படற குழந்தை குட்டிகளை எல்லாம் அப்படியே அள்ளிப் போட்டு ஃபேக்டரிக்கு போயிடறாங்க...’’ “நம்ம ஊரு பண்ணையாருங்க இதை தட்டிக் கேட்கலையா..?’’

“கிழிச்சாங்க. அவங்களும் இதுல கூட்டுதானே? பத்துக்குப் பத்து நிலம் வைச்சிருக்கிறவங்க கிட்டேந்தும் அதைப் பிடுங்கறாங்க. ஆடு, மாடுகளையும் ஓட்டிட்டுப் போயிடறாங்க. இப்படி ஊர் சொத்தையே பண்ணையாருங்க ஆட்டை போட டீகோதானே உதவியா இருக்கான்? அப்படிப்பட்டவனை எப்படி இவங்க எதிர்ப்பாங்க?’’ ‘‘...’’ ‘‘இது நம்ம என்விகாதோ ஊரோட நிலமை மட்டுமல்ல.

மகதலேனா சமவெளில இருக்கிற பல கிராமங்களோட நிலை இப்ப இதுதான். பள்ளிகளை எல்லாம் மூடிட்டு வர்றாங்க. பசங்களை எல்லாம் மில்லுக்கு வரச் சொல்றாங்க. என் பேரனைக் கூட...’’ பெரியவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை. உடைந்து போய் குலுங்கிக் குலுங்கி அழுதார். பாப்லோ எஸ்கோபாருக்கு ரத்தம் கொதித்தது.

“நான் ஒருத்தன் இங்க இருக்கிறதையே மறந்துட்டீங்களா? ஆரம்பத்துலயே எங்கிட்டே கொண்டு வர வேணாமா?” குரலை உயர்த்திய பாப்லோ சட்டென்று தணிந்தார். “கவலைப்படாதீங்க. நான் பார்த்துக்கறேன். தைரியமா போயிட்டு வாங்க...’’ பாப்லோ இப்படிச் சொன்னால் அதுவே சாசனமல்லவா? பெரியவர் கையெடுத்து கும்பிட்டார். நிம்மதியுடன் வெளியேறினார். அடுத்த நொடி பாப்லோ, தன் படையைக் கூட்டினார்.

12a.jpg

“இதுவரைக்கும் நாம செஞ்ச அத்தனை வேலையுமே நமக்காக, நம்ம லாபத்துக்காக செஞ்சது. இந்த முறை செய்யப் போறது மக்களுக்காக. இதுல உங்களை எல்லாம் ரிஸ்க் எடுக்க வைக்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க. நான் வளர்ந்த ஊருக்காக, இதை நீங்க செஞ்சாகணும்னு கேட்டுக்கறேன். விருப்பமில்லாதவங்க விலகிக்கலாம்...” “என்ன எஸ்கோபார்... இப்படி பிரிச்சுப் பேசலாமா? நாமெல்லாம் ஒரே குடும்பம். விஷயம் என்னன்னு சொல்லுங்க…” என்விகாதோ ஊருக்கு டீகோவால் ஏற்பட்டிருக்கும் ஆபத்தை விளக்கினார்.

பச்சைக் குழந்தைகளைக் கூட கொத்தடிமைகளாக அள்ளிச் செல்லும் அநியாயம் அத்தனை பேரையும் சுட்டது. கொதித்துப் போய் ஒருவன் சொன்னான். “இந்த அநியாயத்தை செய்யுற ஒருத்தன்கூட உயிரோட இருக்கக்கூடாது பாப்லோ. பணத்துக்காக எந்த கீழ்த்தரமான நிலைக்கும் போகலாம்ங்கிற எண்ணம் எவனுக்குமே வரக்கூடாது!” பாப்லோ புன்னகைத்துக் கொண்டே சொன்னார்.

“அன்பு அல்லது அடி. இதுதான் நம்ம ஃபார்முலா. ஒவ்வொரு பண்ணையாரா போய் எச்சரிப்போம். டீகோவோட அவங்க எந்த டீலிங்கும் வெச்சிக்கக் கூடாது. சம்மதிச்சா விட்டுடலாம். இல்லேன்னா, அழித்தொழிப்புதான்!” “அழித்தொழிப்பா?” “யெஸ். இப்போ இந்தியாவில் இது நடந்துக்கிட்டிருக்கு. மக்களை வதைக்கிற பண்ணையார்களை அழித்தொழிக்கிற போர் இது.

அரசாங்கம் மக்களை கைவிட்டுட்ட நிலைல வேற வழியில்லாமே அதிகாரத்தை மக்களே கைல எடுத்திருக்காங்க!’’ அதன் பிறகு அன்பு அல்லது அழித்தொழிப்பு என்கிற ஸ்லோகனோடு மகதலேனா சமவெளி கிராமங்களுக்கு பாப்லோ குழுவினர் படையெடுத்தார்கள். “எவண்டா பாப்லோ?” என்று எகிறிய பண்ணையார்கள், இருந்த சுவடு தெரியாமல் அழித்தொழிக்கப்பட்டனர். மற்றவர்கள் பாப்லோவுக்கு பயந்துகொண்டு டீகோவுடனான உறவினை முறித்துக் கொண்டனர்.

ஆனால் - டீகோ மட்டும் பாப்லோ படையிடமிருந்து தப்பித்துக் கொண்டே இருந்தார். டீகோவுக்கு வெயிட்டாக ஸ்கெட்ச் போட்டிருந்தார் பாப்லோ. அவரே நேரடியாக இந்த ஆபரேஷனில் இறங்கினார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடு களோடுதான் டீகோ சுற்றிக் கொண்டிருந்தார். ஒருநாள் - வீட்டில் இருந்து கிளம்பிய டீகோவின் கார், தொழிற்சாலைக்கு வந்து சேரவில்லை. அவர் காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்புக்கு வந்த வாகனங்களும் அப்படியே காற்றில் கரைந்துவிட்டதைப் போல காணாமல் போயின.

டீகோவின் வீட்டுக்கு போன் வந்தது. ஒரே வார்த்தைதான். “ஐம்பதாயிரம் டாலர். ரெண்டே நாளில் ரெடி பண்ணுங்க. இல்லேன்னா டீகோவோட எலும்புகூட கிடைக்காது!” குடும்பத்தினர் பதறிப் போனார்கள். சொன்ன நேரத்தில் பணயத்தொகை கைமாறியது. இருப்பினும் - டீகோ மட்டும் வீடு வந்து சேரவில்லை.

மிகச்சரியாக ஆறு வாரங்கள் கழித்து என்விகாதோவின் அருகில் அழுகிப் போன டீகோவின் உடல் கிடைத்தது. அவரை போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவர்கள், மிகக் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்றார்கள். டீகோவைக் கொன்றது எஸ்கோபார்தான் என்று நாட்டுக்கே தெரியும். எனினும், அவர் மீது கைவைக்க ஒருவருக்கும் தைரியமில்லை.

இந்த ஆபரேஷனில் பாப்லோ எஸ்கோபாருக்கு பெரியதாக ஏதும் லாபமில்லைதான். டீகோவுக்கு கிடைத்த பணயத் தொகை கூட அவரது கும்பலின் போக்குவரத்து மற்றும் டீ செலவுகளுக்கான கன்வேயன்ஸ் மாதிரிதான் உதவியது. என்றாலும் இந்த நிகழ்வே இருவிதமான எண்ணங்களுக்கு விதை போட்டது. ஒன்று, கொத்தடிமை முறையை எதிர்த்துப் போராடிய சமூக நீதிக் காவலனாக பாப்லோவைக் கொண்டாட வைத்தது. இது மக்களின் மனதில் பதிந்த பிம்பம்.

இன்னொன்று, கொலைக்கு அஞ்சாத மாபாதகன் என்ற தோற்றம். இது அரசாங்கமும், வன்முறை அமைப்புகளான கார்டெல்களும் பாப்லோ குறித்து எண்ணிய வடிவம். ஆனால் - எஸ்கோபார் மட்டும் இந்த இரண்டைக் குறித்தும் சட்டை செய்யாமல் மூன்றாவது உருவமாக மாறினார். அதுதான் ‘காட்ஃபாதர்’ இமேஜ்!
 

(மிரட்டுவோம்)

www.kungumam.co.

Link to comment
Share on other sites

 
 

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

யுவகிருஷ்ணா - 16

“எவண்டா அந்த பாப்லோ?” எல் பாத்ரினோ அலறினார். எந்தவொரு சூழலிலும் தன்னுடைய உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ளாமல் மரக்கட்டை மாதிரி பிரச்சினைகளைக் கையாளுபவர் அவர். டீகோ எகாவரியாவின் கொடூர மரணம், கொலம்பியாவையே உலுக்கியிருந்தது. கொத்தடிமைகளாக இருந்து விடுதலை பெற்ற மக்கள் ஒருபுறம் கொண்டாடினார்கள் என்றால், கார்டெல் நடத்தி கிரிமினல் தொழிலில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தவர்கள் கதறினார்கள்.

கொலம்பியாவின் கார்டெல்கள் அத்தனையும் தங்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள ஒட்டுமொத்தமாக ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். அவர்தான் எல் பாத்ரினோ. கார்டெல்காரர்களுக்கு நேரடியாக பாப்லோ மீது கை வைப்பதில் அச்சமிருந்தது. எனவேதான் தங்கள் தலைவரிடம் பிரச்னையைக் கொண்டு வந்திருந்தார்கள். பாப்லோ எஸ்கோபாரின் ரிஷிமூலம் மொத்தத்தையும் கேட்டு அறிந்தார் எல் பாத்ரினோ. ‘பாப்லோவை வளரவிடக்கூடாது.

எதிர்காலத்தில் தங்களுக்கே அவனுடைய வளர்ச்சி ஆபத்தைக் கொண்டு வரலாம். முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்’ என்பதே பெரும்பாலான கார்டெல் முதலாளிகளின் வற்புறுத்தலாக இருந்தது. ஆனால், சிலரோ பாப்லோவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். பாப்லோ களத்துக்கு வந்தபிறகுதான் கார்டெல்களின் போதை உள்ளிட்ட போக்குவரத்துகள் முறைப்படுத்தப்பட்டு சுலபமாக நடந்து வருகிறது என்று வாதிட்டார்கள்.

ஒரு முடிவுக்கு வரமுடியாமல் அந்த கூட்டம் இழுத்துக்கொண்டே போனது. இறுதியில் எல் பாத்ரினோ சொன்னார். “அவனை நான் பார்க்கணும்.” அத்தனை பேரும் அமைதியாக இருந்தார்கள். “அவங்கிட்டே பேசணும். பேசிட்டு என்னோட முடிவை சொல்றேன்...” எல் பாத்ரினோவின் முடிவு பாப்லோவிடம் சொல்லப்பட்டது. பாப்லோ தன் சகாக்களை அழைத்து ஒரு கூட்டம் போட்டான்.

“நல்லா கேட்டுக்கங்க. தலைவர் என்னை கூப்பிட்டிருக்காரு. டீகோவை நாம போட்டுத் தள்ளுனது கார்டெல்காரனுங்களுக்கு பிடிக்கலை. எல் பாத்ரினோ கிட்ட என்னைப் பத்தி என்ன சொல்லியிருக்காங்கனு தெரியலை. நான் அவரைப் பார்க்கப் போறப்ப என்ன வேணும்னாலும் நடக்கலாம். ஒருவேளை என்னை அங்கேயே முடிச்சிட்டானுங்கன்னு வெச்சுக்கங்க…” பாப்லோ பேசிக்கொண்டே போக, அவனுடைய நெருங்கிய சகாவான குஸ்டாவோ விம்மத் தொடங்கினான்.

12.jpg

“ஒரு பேச்சுக்குதாண்டா சொன்னேன். என் தலையை எவனாவது எடுக்க நினைச்சா - அது எல் பாத்ரினாவாகவே இருந்தாலும் - அதுக்கு முன்னாடி நாலு தலை தரையிலே உருளும்!” ஆதரவாக குஸ்டாவோவை அணைத்துக் கொண்டே தொடர்ந்தான். “ஒருவேளை நான் உயிரோடு வரலைன்னா… எல்லாரும் உடனே வேற வேற ஊருக்கு பிரிஞ்சி ஓடிடுங்க. முடிஞ்சா நாட்டை விட்டே எஸ்கேப் ஆயிடுங்க.

என்னை அழிக்க நினைச்சாங்கன்னா, நான் இருந்ததுக்கு புல் பூண்டு அடையாளம் கூட இல்லாம முடிச்சிடணும்னுதான் நினைப்பாங்க!” “உயிருக்கு உத்தரவாதம் இல்லைன்னு தெரியுது இல்லே? நீ எதுக்கு பாப்லோ அங்கே போகணும்?” சீற்றத்தோடு கேட்டான் ஒருவன். “வேற வழி கிடையாது. இங்க எல்லாமே இப்படிதான். நான் போய் பார்க்கலைன்னா வாராவாரம் என்னோட குடும்பத்துல ஒரு சாவு விழும்.

நீங்களும் ஒவ்வொருத்தரா காணாமப் போவீங்க. கார்டெல் நெட்வொர்க், நம்ம அரசாங்கத்தைவிட பெருசு!” என்ன பேசுவது என்று தெரியாமல் எல்லோரும் மவுனமாக இருந்தார்கள். “நீங்க போகலாம்...” எல் பாத்ரினோவை நேருக்கு நேராக சந்திக்க எமனை சந்திக்கும் உத்வேகத்தோடு தயார் ஆனார் பாப்லோ. என்னவெல்லாம் பேசவேண்டும், எப்படி சமாளிக்க வேண்டும் என்று கண்ணாடி முன்பாக நின்று ஒத்திகை பார்த்தார்.

கார்டெல் தலைவர்கள் அணிவதைப் போல பந்தாவான கோட் சூட்டை பிரத்யேகமாக தைத்து வைத்துக் கொண்டார். எல் பாத்ரினோவை சந்திக்கச் செல்லும்போது துப்பாக்கிக்கு அனுமதியில்லை. இருப்பினும் தன்னுடைய பாதுகாப்புக்கு சில ஆயுதங்கள் தேவை என்று பாப்லோ கருதினார். பிரான்ஸ் நிழலுலக தாதாக்கள் பயன்படுத்தும், உள்ளங்கைகளுக்குள் அடங்கிவிடும் சிறியரக துப்பாக்கியான அப்பாச்சே ரிவால்வரை ஆர்டர் செய்து வாங்கினார்.

சோதனையில் சிக்காத வகையில் அதை கோட்டின் கைப்பகுதிக்குள் மறைத்துக் கொண்டார். தன்னுடைய ஷூவின் அடிப்பகுதியில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் ஸ்டிலட்டோ கத்திகளை ஒளித்து வைத்தார். தன்னுடைய வழக்கமான அன்பு அல்லது ஆப்பு ஃபார்முலாவை, எல் பாத்ரினோவுடனான சந்திப்பில் பயன்படுத்த முடியாது என்று பாப்லோவுக்கு தெரியும். தலைவர் என்ன பேசுகிறாரோ, அதற்கு ஏற்ப தன் உத்தியை வகுத்துக் கொள்ள வேண்டும். எதிராளியின் நகர்த்தலுக்கு ஏற்ப செஸ் ஆடுவது போல...

அந்த நாளும் வந்தது. சகாக்கள் ஊர்வலமாக பாப்லோவை அழைத்துச் சென்றார்கள். திறந்த ஜீப்பில் பாப்லோ அமர்ந்திருந்தார். முன்னும் பின்னும் பைலட் ஜீப்புகள் சகிதமாக மெதிலின் நகரின் சாலைகளில் வழக்கத்தைக் காட்டிலும் மிக மெதுவாக இவர்களது குழுபயணப்பட்டது. குறிப்பிட்ட திருப்பத்தில் இவர்களது ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்டது. கருப்பு நிற கார் ஒன்றில் பாப்லோவை மட்டும் ஏறும்படி, ஒரு கார்டெல் தாதா சொன்னான். அந்த காருக்குள் வேறு சில கார்டெல் முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்தார்கள்.

அவர்களைக் கண்டு பாப்லோ சிநேகமாக சிரிக்க, பதிலுக்கு சிரிப்பதா முகத்தைத் திருப்பிக் கொள்வதா என்று புரியாத குழப்பத்தில் அவர்கள் மையமாகத் தலையை ஆட்டினார்கள். யாரும் எதுவும் பேசவில்லை. பாப்லோவின் கண்கள் கட்டப்பட்டன. அவரது உடல் சோதனை செய்யப்பட்டது. நல்லவேளையாக சோதனை செய்தவன் கைகளில் அந்த சிறிய துப்பாக்கி தட்டுப்படவில்லை. ஷூவை சோதனை செய்யாததால் ஸ்டிலட்டோக்களும் தப்பித்தன.

பரவாயில்லை. பிரச்னை ஏற்பட்டால் சமாளித்துக் கொள்ள ஆயுதங்கள் கைவசமிருக்கின்றன என்று நிம்மதியடைந்தார் பாப்லோ. நகரைத் தாண்டி அந்த கார் மின்னலை மிஞ்சும் வேகத்தில் பறந்து ஒரு கிராமத்துக்குள் நுழைந்தது. சிதிலமடைந்து காணப்பட்ட பாழடைந்த பங்களாவுக்கு முன் நின்றது. கேட்டில் இருந்தவனிடம் கார் டிரைவர் சரியான கோட் வேர்டை சொன்னான். கொஞ்சம் மாற்றிச் சொன்னால் கேள்வியே கேட்காமல் தோட்டா, டிரைவரின் தலையைத் துளைத்திருக்கும்.

12a.jpg

பாப்லோவின் கண் கட்டை அவிழ்த்தார்கள். வெளிச்சத்துக்கு கண்கள் பழகாமல் கூசியது. “இங்கதான் கொலம்பியாவோட முதல் கார்டெல் இயங்கிச்சு. சென்டிமென்டா முக்கியமான கூட்டங்களையும், முடிவுகளையும் கார்டெல்காரங்க இங்கதான் எடுப்பாங்க... எடுக்கறோம்...” பாப்லோவுக்கு தகவல் தெரிவிக்கும் தொனியில் மையமாக ஒருவர் பேசினார்.

பாப்லோவோ அமைதியாக அவர்களுடன் நடந்தார். அந்த பங்களாவின் பெரிய கதவு திறந்ததும், எஸ்கோபாருக்கு ஆச்சரியம். வெளியே அரதப்பழசாகத் தெரியும் அந்த கட்டிடம், உள்ளே அவ்வளவு நவீன வசதிகளைக் கொண்டிருந்தது. இவருடைய ஆச்சரியத்தை அவர்கள் கேலியாகப் பார்த்தார்கள். தலைவரின் அறைக்கு முன்பாக அத்தனை பேரும் நின்றார்கள்.

“பாப்லோ... இது உனக்கு தலைவருடனான ஒன் டூ ஒன் மீட்டிங். ரூமுக்குள்ள நுழைஞ்சதுமே கையைக் கட்டிக்கணும். தலைவரோட கண்களை நேருக்கு நேர் பார்க்காம தலையைத் தாழ்த்திக்கணும். அவர் பேசி முடிச்சி ஒரு கேப் விட்டப்புறம்தான் நீ பேசணும். இடையிடையே குறுக்கிடக் கூடாது...” கதவைத் தட்டினார்கள். “யெஸ். கம் இன்...” கொஞ்சம் பெண்மை கலந்த மென்மையான குரல்தான். எல் பாத்ரினோவை ரொம்பவும்தான் கம்பீரமாக நாம் கற்பனை செய்துவிட்டோமோ என்று பாப்லோ நினைத்தார்.

கையைக் கட்டியவாறே தலையைத் தாழ்த்திக்கொண்டு அறைக்குள் நுழைந்தார். இவர் நுழைந்ததும் கதவு சாத்தப்பட்டது. மேஜைக்கு முன்பாக போய் நின்றார். “நீதானா?” “….” “பாப்லோ எஸ்கோபார். இன்னும் இருவத்தஞ்சு வயசு கூட ஆகலை. அதுக்குள்ள நாடு முழுக்க எதிரிகளை சம்பாதிச்சிட்டே...” “…” “சில்லறையா ஏதோ செஞ்சிக்கிட்டிருந்தேன்னுதான் இதுவரைக்கும் உன்னை உயிரோட விட்டு வெச்சிருந்தோம்...” “…” மெல்ல எழுந்தார் எல் பாத்ரினோ. பாப்லோவின் அருகில் வந்து நின்று தோளில் கை வைத்தார்.

நாற்காலியில் அழுத்தி உட்கார வைத்தார். கோட்டுக்குள் நிதானமாக கையைவிட்டார். பளபளவென்று மின்னிய ரஷ்யத் தயாரிப்பு துப்பாக்கியை எடுத்தார். அதன் முனையை முத்தமிட்டார். லீவரை இழுத்தார். பாப்லோவின் நெற்றியில் வைத்து அழுத்தினார். காதோரங்களில் வியர்வை ஆறாக பெருக்கெடுத்தது. “போடவா... அப்படியே போடவா..?” பாப்லோ மெதுவாக தன்னுடைய வலது கை கோட் பாக்கெட்டுக்குள் விரல்களை நுழைத்தார்.

அவருக்கு சந்தேகம் வராத வகையில் அபாச்சேவை எடுத்துவிட்டால் போதும். தன்னை போடுவதற்கு ட்ரிக்கரை அழுத்திய அடுத்த கணமே, அவரையும் போட்டுவிடலாம். செத்தாலும், எல் பாத்ரினோ மாதிரி மகத்தான கார்டெல் தலைவனைப் போட்டுவிட்டுத்தான் பாப்லோ செத்தான் என்று வரலாறு பேசும். “சொல்டா… ட்ரிக்கரை அழுத்தட்டா?” பாப்லோ அபாச்சேவை இறுகப் பிடித்தார்!
 

(மிரட்டுவோம்)

www.kungumam.co.i

Link to comment
Share on other sites

 
 

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

யுவகிருஷ்ணா - 17

“நீங்க ட்ரிக்கரை அழுத்துறதுக்கு ஒரு மைக்ரோ செகண்ட் முன்னாடி நான் ட்ரிக்கரை அழுத்திடுவேன் தலைவரே. ரெண்டு பேரும் ஒண்ணாவே சொர்க்கத்துக்கு டிராவல் பண்ணுவோம்...” மந்தகாசப் புன்னகையோடு பாப்லோ சொன்னார். திடீரென அவரது கைகளில் அபாச்சேவை கண்டதும் எல் பாத்ரினோவுக்கு திகைப்பான புன்னகைதான் வந்தது. பாத்ரினோவின் இடுப்பில் பாப்லோவின் சிறிய துப்பாக்கி முனை வலிக்குமளவுக்கு அழுத்திக் கொண்டிருந்தது.

அடுத்த நொடி விளையாட்டாக ‘ஹேண்ட்ஸ் அப்’ செய்துவிட்டு வெடிச்சிரிப்பு சிரித்தார். பாப்லோவும் அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டார். ஆனால் - வெகு கவனமாக தலைவரின் சிரிப்பைவிட சில டெசிபல் அடக்கியே சிரித்தார். பாப்லோவை ஆதரவாக இறுக்கிக் கட்டி அணைத்தார் பாத்ரினோ. “உன்னைப் பார்த்தா என்னையே என்னோட இருபது வயசுலே பார்த்த மாதிரி இருக்குடா…” பாப்லோ தன்னுடைய துப்பாக்கியை எடுத்து இடுப்பில் செருகினார்.
11.jpg
“என்னை நிழல் தொழிலில் வளர்த்துவிட்ட ரேஃபல் கூட இதே வார்த்தைதான் சொன்னாரு. ஆனா, தலைவரே, ஆணவத்துலே பேசுறேன்னு நெனைக்க வேணாம்...” “….” “நான் உங்களுக்கெல்லாம் ரொம்ப மேலே மேலே போவப் போறேன். ஒரு கட்டத்துல இந்த நாட்டையே கைப்பற்றப் போறேன்...” வேறு யாரேனும் இதுபோல எல் பாத்ரினோ முன்பாக பேசியிருந்தால் தலை வெடித்துச் சிதறியிருப்பார்கள்.

ஏனோ, அவர் பாப்லோவின் பேச்சை மழலைச்சொல் மாதிரியாக ரசித்துக் கொண்டிருந்தார். “இந்த திமிருதானே வேணாங்கிறது?” தன்னுடைய டேபிளில் இருந்த ‘பெல்’லை அடித்தார். வெளியே குழுமியிருந்த கார்டெல் உரிமையாளர்கள் பணிவோடு வந்து எல் பாத்ரினோ முன்பாகக் கைகட்டி நின்றார்கள். அவர்களைப் பார்த்ததுமே பாப்லோவும் எழுந்து வரிசையில் அவர்களோடு போய் நின்றார்.

தன்னுடைய கைத் துப்பாக்கியை பாப்லோவிடம் கொடுத்தார் பாத்ரினோ. தலைவர் இதுமாதிரி ஒருவனிடம் துப்பாக்கியைக் கொடுத்தால், அவனையும் கார்டெல் தலைவர்களில் ஒருவனாக அங்கீகரிக்கிறார் என்று அர்த்தம். பாப்லோ, கிரிமினல்தனத்தில் பட்டம் பெற்று விட்டதாகப் பொருள். இனிமேல் அவர் தனிக்கடை போடலாம். கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கரவொலி எழுப்பினார்கள். பாப்லோ தன்னுடைய மரியாதையைத் தெரிவிக்கும் விதமாக தலைவரின் கையை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டு, கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார்.

“பாப்லோ, இப்ப நீயும் எங்களில் ஒருத்தன். உன்னோட கார்டெலுக்கு என்ன பேரு வைக்கலாம்?” சட்டென்று பாப்லோவிடமிருந்து பதில் வந்தது. “மெதிலின் கார்டெல்!” எல்லாவற்றையும் வருடக்கணக்காக இவர் யோசித்துத் தானே வைத்திருந்தார்! “குட்... ஊர் பேரை வெச்சிக்கிட்டே. கெடுக்காம இருந்தா சரி...” மற்றவர்களைப் பார்த்துச் சொன்னார். “பாப்லோ இனி நம்முடைய சகோதரன். அவனுடைய தொழிலுக்கு நம்மில் யாரும் இடையூறு ஏதும் செய்யக்கூடாது. அவனும் செய்ய மாட்டான். செஞ்சா என்ன ஆவோம்னு பாப்லோவுக்கே தெரியும்…” ஓரக்கண்ணால் பாப்லோவைப் பார்த்துக் கொண்டே சொன்னார்.

இதற்குள்ளாகவே தலைவரின் பணியாள் ஒருவன் பூங்கொத்தையும், ஷாம்பெயின் பாட்டிலையும், அனைவரும் புகைக்க உயர்தர கஞ்சா நிரப்பிய சுருட்டுகளையும் கொண்டு வந்து பணிவாக வைத்தான். பாப்லோவுக்கு பொக்கே கொடுத்தார் தலைவர். மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஷாம்பெயின் பாட்டில் குலுக்கி பீய்ச்சப்பட்டது.
11a.jpg
மிகக்குறைந்த அளவிலான ஆட்களே அங்கு நிரம்பியிருந்தாலும், பார்ட்டி களை கட்டியது. ஏனெனில், ஒவ்வொருவருமே கொலம்பியாவின் வெடிகுண்டுகள். கொலைபாதகங்களுக்கு அஞ்சாத வில்லாதி வில்லன்கள். ஓச்சோ சகோதரர்கள், கார்லோஸ் லேதர், ஜோஸ் ரோட்ரிக்ஸ் என்று அங்கு வந்திருந்த கார்டெல் கடத்தல் மன்னர்கள் கோப்பையோடு, பாப்லோவிடம் வந்து பேசினார்கள்.

“பாப்லோ, தலைவரே சொல்லிட்டாருன்னு மெதப்பா இருந்துடாதே. இங்க சிலபேருக்கு உன்னை சுத்தமா பிடிக்காது. எங்களைப் பொறுத்தவரைக்கும் நீயும் எங்களில் ஒருத்தன் ஆனது மகிழ்ச்சிதான். எங்களாலே செய்ய முடியாத வேலைகளை உனக்கு கொடுக்கறோம். அதே மாதிரி நீயும் சில வேலைகளை எங்களுக்கு கொடுக்கலாம். நாம ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருப்போம்...” பாப்லோவுடன் இந்த இணக்கமான போக்குக்கு உடன்பாடு இல்லாதவர்கள், தங்களுக்குள் கூடிப்பேசினார்கள். கார்டெல்களின் அதிகாரத்தை கேள்விக்குறியாக்கிய ஒருத்தனையே கார்டெல் வைத்துக் கொள்ள தலைவர் அனுமதித்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை.

“தலைவருக்கு என்னாச்சி? புரோக்கர் வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற சின்னப் பயலையெல்லாம் கார்டெல் லீடர் ஆக்குறாரே?” வயிறெரிந்தார்கள். சமயம் கிடைக்கும்போது வகையாக பாப்லோவை சிக்கவைக்க வேண்டுமென்றும் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். பாப்லோ, கார்டெல் தலைவரான விஷயம் மெதிலின் நகர் முழுக்க பரவியது. அவரால் பயன் பெறும் ஏழை, எளியவர்கள் இதை திருவிழா மாதிரி கொண்டாடினார்கள். தினமும் பாப்லோ இந்த வெற்றிக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது.

குஸ்டாவோ மூலமாக கார்டெலுக்கு நூற்றுக்கணக்கில் இளைஞர்களை வேலைக்கு சேர்த்தார். அத்தனை பேருக்கும் கைத்துப்பாக்கிகள் வழங்கப்பட்டன. ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர், அவர்களுக்கு சுட பயிற்சியளித்தார். மெதிலின் நகரின் மேப்பை வைத்துக்கொண்டு பாப்லோ தன்னுடைய கார்டெல் பணிகளைத் திட்டமிட ஆரம்பித்தார். நகரிலிருந்த அத்தனை மதுவிடுதிகளிலும் சப்ளை செய்யப்படும் போதை மருந்துகள், தம்முடைய கார்டெல்லுடையதாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்டாய ஆணை பிறப்பித்தார்.

கார்டெல்லில் பணியாற்றுபவர்களுக்கு ஐடெண்டிட்டி கார்ட், மாதாமாதம் கணிசமான சம்பளம், இன்சென்டிவ் என்று பக்காவாக கார்ப்பரேட் கம்பெனி செட்டப்பை உருவாக்கினார். நகரில் எந்த சம்பவம் நடந்தாலும் போலீசுக்கு முன்பாக மெதிலின் கார்டெல் ஆட்கள் போய் நிற்பார்கள். சம்பவ இடத்திலேயே நீதி விசாரணை நடத்தப்படும். தப்பு செய்தவர்களுக்கு தண்டனை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி.

யாரும் போலீஸ், கோர்ட்டு என்றெல்லாம் போகவேண்டிய அவசியமில்லை. அரசாங்கத்துக்கு வரியும் கட்ட வேண்டாம். ‘எங்க ஏரியா உள்ளே வராதே’ என்று அரசாங்கத்தை துரத்தித் துரத்தி அடித்தார்கள் மெதிலின் கார்டெல்காரர்கள். விளைவு, மெதிலின் நகரமே கொலம்பியாவில் இருந்து தனியாக துண்டிக்கப்பட்டது மாதிரி ஆகிவிட்டது. பாப்லோ, மெதிலினுக்கு அரசர் போல தன்னை நினைத்துக் கொண்டார்.

மெதிலின் கார்டெல்லே சாலைகள் போட்டது. மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தது. தகுதியான டாக்டர்களோடு நவீன வசதிகள் கொண்ட இலவச மருத்துவமனைகள். குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுப்பதற்காக பள்ளிகள் அனைத்தும் நவீனப்படுத்தப் பட்டன. ஒரு நல்ல மக்கள்நல அரசாங்கம் என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனையையும் சட்டவிரோத அமைப்பான மெதிலின் கார்டெல் செய்து கொண்டிருந்தது.

வருமானம்? கார்டெல் அமைத்துக் கொள்ளலாம் என்று தலைவர் அனுமதி கொடுத்தவுடனேயே தன்னுடைய பிசினஸை இன்டர்நேஷனல் லெவலுக்கு விரிவு படுத்தி விட்டார் பாப்லோ. மற்ற கார்டெல்காரர்களுக்கும் சைடில் ‘ஜாப் ஒர்க்’ செய்து கொடுத்தார். ஏற்கனவே பணம் குன்றுமாதிரி பாப்லோவின் பங்களாவில் குவிந்திருந்தது. இப்போது மலையளவு பெருகத் தொடங்கிவிட்டது.

கார்டெல்காரர்களின் நலப்பணிகளில் மக்கள் மகிழ்ச்சியாகத் தான் இருந்தார்கள். ஆட்சியாளர்கள்தான் கொதித்துப் போனார்கள். பாம்பாய் கொத்துவதற்கு சமயம் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். பாப்லோ மீது கடுப்பில் இருந்த போட்டி கார்டெல்காரர்கள் அவர்களோடு இணைந்து கொண்டார்கள். இவர்களுக்கு பாப்லோவும் பதிலடி கொடுக்க நினைத்தபோதுதான் கொலம்பிய தெருக்கள், ரத்தத்தால் கழுவப்பட்டன.
 

(மிரட்டுவோம்)

www.kungumam.co

Link to comment
Share on other sites

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

யுவகிருஷ்ணா - 18

டான் ஆவது சுலபமல்ல. ஆகிவிட்டால் அந்தப் பதவியை தக்கவைத்துக் கொள்வது அதைவிட கஷ்டம். அந்த சிரமத்தைத்தான் பாப்லோ பட்டுக் கொண்டிருந்தார். அந்நாளில் கொலம்பியாவில் கார்டெல் நடத்துவது என்பது தனியாக அரசாங்கமே நடத்துவது மாதிரி. ஒவ்வொரு நொடியும் பணம் தண்ணீராகச் செல வழிந்து கொண்டே இருக்கும். அதை ஈடுகட்ட இரு மடங்கு சம்பாதித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

சிறிய அளவில் தொழில் செய்துகொண்டிருந்தபோதே அண்ணனைத் தன்னுடைய நிர்வாகத்துக்குள் இழுத்துப் போட்டுக் கொண்டதால் ஓரளவுக்கு சமாளித்துக் கொண்டிருந்தார் பாப்லோ. களப்பணிகளுக்கு இருக்கவே இருக்கிறார் நெருங்கிய நண்பர் குஸ்டாவோ. இருப்பினும் - ஒவ்வொரு நாளையும் கழிப்பது என்பது பெரும் யுகமாகவே ஆகிக் கொண்டிருந்தது. குஸ்டாவோவால் மெதிலின் நகர் முழுவதையும் கார்டெலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததுதான்.
9.jpg
ஆனால் - நாடு முழுக்க சரக்கு அனுப்ப வேண்டும். கொலம்பியா தாண்டி அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்தெல்லாம் ஆர்டர்கள் குவிகின்றன. ஒரே ஒரு ஆர்டரை மறுத்துவிட்டாலோ அல்லது டெலிவரியில் சொதப்பிவிட்டாலோ போச்சு. நேரடி ஆர்டர்கள் தவிர்த்து மற்ற கார்டெல்காரர்களுக்கும் கமிஷன் அடிப்படையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

ஹிப்பி கலாச்சாரம் அமெரிக்காவில் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த காலம் என்பதால், போதை சமாச்சாரங்களின் தேவை அதிகரித்துக் கொண்டே இருந்தது. கஞ்சாவை மற்ற தயாரிப்புகளாக மாற்ற ஃபேக்டரிகளை உருவாக்கும் வேலை வேறு கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தது. அவ்வப்போது பயல்கள் சொதப்பிவிட்டு வந்து நிற்பார்கள். சிலபேர் போலீசில் மாட்டிக் கொள்வார்கள். சில சமயங்களில் சரக்கு மொத்தமும் ஏதோ ஒரு துறைமுகத்திலோ அல்லது செக்போஸ்ட்டிலோ மாட்டிக் கொள்ளும். நேரத்துக்கு ஆள் அனுப்பியோ அல்லது நேரடியாகவோ சென்று பாப்லோதான் சமாளிக்க வேண்டும்.

குஸ்டாவோ நாளுக்கு நாள் முரடனாகி வந்தார். அவருக்கு போலீஸ் என்றாலே எரிச்சல். எடுத்ததுமே எகிறும் அவரை இதுபோல பஞ்சாயத்துகளுக்கு பாப்லோ அனுப்புவதில்லை. அதிகாரிகளிடம் அத்துமீறி பேசக்கூடாது என்பது பாப்லோவின் பாலிசி. என்ன இருந்தாலும் அத்துமீறுவதற்கு அரசாங்கத்தின் லைசென்ஸ் பெற்றவர்கள் அவர்கள். நாம் கொஞ்சம் அடங்கித்தான் போகவேண்டும் என்று அடிக்கடி சொல்வார். ஆனால் - ஒரு கட்டத்துக்கு மேலே போனால், தடயமே வைக்காமல் தலையை எடுத்து விடுவார்.

திடீர் திடீரென்று எஸ்கோபாரே லைனுக்கு திக்விஜயம் செய்வார். ஃபேக்டரிகளில் நுழைந்து தொழிலாளர்களுக்கு உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்று சோதிப்பார். மாறுவேடத்தில் அவரே லாரி டிரைவராக சரக்கு டெலிவரி செய்யக் கிளம்புவார். அப்போதைய கொலம்பிய கார்டெல்களில் பாப்லோவின் இம்மாதிரியான நடவடிக்கைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

“மெதிலின் கார்டெல் லீடரே நேரா ஃபீல்டுக்கு போறாரு. அந்தாளுதான்யா கெத்து. நம்ம ஆளும் இருக்காரே!” என்று மத்த கார்டெல் பணியாளர்கள் தத்தமது தலைவர்களின் வீரத்தை கேலி பேசினர். இதனால் வேறு வழியில்லாமல் பெயருக்காவது அவ்வப்போது ஃபீல்டுக்கு போகும் வழக்கத்தை கார்டெல் தலைவர்கள் கைக்கொண்டார்கள்.
9a.jpg
அம்மாதிரிதான் அன்று ரேஃபலுக்கு செய்து கொடுக்க வேண்டிய அசைன்மென்ட் ஒன்றுக்கு, தானே களமிறங்கினார் பாப்லோ. மொத்தம் நாற்பது டிரக்குகளில் சரக்கு கொண்டு செல்ல வேண்டும். நீர்வழிப் போக்குவரத்துக்கு வாய்ப்பில்லாத நிலையில், சாலை வழியெங்கும் இருக்கும் செக்போஸ்ட்டுகளை சமாளிக்க, தானே போவதுதான் சரியென்று அவருக்குத் தோன்றியது.

டிரக்குகளில் ஏற்றப்பட்டிருந்தது பெரும்பாலும் எலெக்ட்ரானிக் சமாச்சாரங்கள்தான். ஆனால், ஐந்து வண்டிகளில் மட்டும் ‘பவுடர்’ இருந்தது. முதல்தர போதை. நாக்கில் வைத்தால் சுர்ரென்று நொடியில் சொர்க்கத்தைக் காட்டும். “ரொம்ப கவனமா கொண்டு வந்துடு பாப்லோ. ஏகத்துக்கும் முதலீடு பண்ணியிருக்கேன். பார்த்துக்கோ...” என்று ஒன்றுக்கு நாலு முறை போன் செய்து பேசியிருந்தார் ரேஃபல்.

பாப்லோவின் டிரக்குகள் டர்போ நகரிலிருந்து மெதிலினுக்கு வரிசையாக அணிவகுத்துக் கிளம்பின. பாப்லோவின் திறந்த ஜீப்தான் அந்த ஊர்வலத்தில் முதன்மையாக வந்து கொண்டிருந்தது. ஓரிரு இடங்களில் போலீஸ்காரர்கள் மடக்க முயற்சிக்க, முன்னணியில் படை நடத்தி வரும் தளபதி மாதிரி வீற்றிருந்த பாப்லோவைக் கண்டதுமே சல்யூட் வைத்தார்கள். சல்யூட் வைத்தவர்களுக்கெல்லாம் சன்மானத்தை வாரி வழங்கிக் கொண்டே வந்தார் பாப்லோ.

மெதிலினை நெருங்கிய வேளையில், ‘இனி பிரச்னையில்லை. பயல்கள் பாதுகாப்பாக கொண்டு வந்துவிடுவார்கள்’ என்கிற நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டு விட்டது. சாலையோர மோட்டல் ஒன்றில் ஜீப்பை நிறுத்தினார். லேசாக தாகசாந்தி செய்துவிட்டுப் போகலாம் என்று இருந்தது. டக்கீலாவை ஒரு ஷாட்தான் ருசித்திருப்பார். டிரைவர் ஒருவன் வியர்க்க விறுவிறுக்க ஓடிவந்து பாப்லோ முன்பாக நின்றான்.

“என்னடா, எல்லாம் சேஃபா ஊருக்குள்ளே போயிடிச்சி இல்லை?” “இல்லை தலைவரே. மடக்கிட்டானுங்க...” “யாரு?” “போலீஸ்!” “மெதிலின் கார்டெல் டெலிவரின்னு சொல்ல வேண்டியதுதானே?” “நாம சொல்லுறதுக்கு முன்னாடியே அவங்களுக்கு தெரியும் தலைவரே. தெரிஞ்சேதான் கை வெச்சிருக்கானுங்க. மொத்த சரக்கையும் சீஸ் பண்ணி போலீஸ் ஹெட்குவார்ட்டர்ஸுக்கு கொண்டு போறாங்க...” “சரி விடு. நான் நேரா போய் பேசிடறேன்...” அடித்துக் கொண்டிருந்த சரக்கை அப்படியே வைத்துவிட்டு எழுந்தார்.

“வேணாம் தலைவரே!” அவன் தயங்கித் தயங்கி சொன்னான். புரியாமல் அவனைப் பார்த்தார். “சரக்கும் கையுமா உங்களைப் புடிச்சி உள்ளே வைக்கிறதுதான் அவங்க திட்டம். நல்ல வேளையா அவங்க புடிக்கிறப்போ நீங்க இல்லை...” பாப்லோவுக்குப் புரிந்தது. எவனோ எதிரி விளையாடிக் கொண்டிருக்கிறான். ஒரே ஒரு முறை பாப்லோவை உள்ளே உட்கார வைத்துவிட்டால் போதும். மார்க்கெட்டில் மெதிலின் கார்டெல்லின் மவுசை அப்படியே அமுக்கி விடலாம்.

என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்தார் பாப்லோ. சரக்கு ரேஃபலுடையது. அவருக்குத்தான் முதலில் தகவல் தெரிவிக்க வேண்டும். அங்கிருந்தபடியே போன் அடித்தார். “ஏற்கனவே மேட்டர் கேள்விப்பட்டேன் பாப்லோ. ஸ்கெட்ச் போட்டிருக்கிறது என்னோட சரக்குக்கு இல்லை. உனக்குத்தான். நாலாபக்கமும் உன்னை வலைவீசி தேடிக்கிட்டிருக்காங்க. மாட்டிட்டேன்னா சரக்கும் கையுமா உன்னை லிங்க் பண்ணி உள்ளே போட்டுருவானுங்க. நான் எப்படியும் ரெண்டு நாளில் சரக்கை எடுத்துடுவேன்.

அதுவரைக்கும் நீ போலீஸ் கண்ணுலே பட்டுடாதே...” பாப்லோ தன்னுடைய ஜீப்பை அங்கேயே விட்டுவிட்டார். மெதிலினுக்கு போகும் பஸ் ஒன்றில் ஏறி டிக்கெட் எடுத்தார். மெதிலினின் காட்ஃபாதர் சாதாரண பஸ்சில் பயணிகளோடு பயணியாக பயணிப்பார் என்பதை யார்தான் யூகிக்க முடியும்? ஊர்வந்து சேர்ந்ததுமே முதலில் குஸ்டாவோவைத்தான் அழைத்து விசாரித்தார். “என்ன ஏதுன்னு ஏதாவது விவரம் தெரிஞ்சுதா?” “ரெஸ்த்ரொபே!” பற்களைக் கடித்தபடி அழுத்தமாகச் சொன்னார் குஸ்டாவோ.


                                                                                  (தொடரும்)

 

www.kungumam.co

Link to comment
Share on other sites

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

யுவகிருஷ்ணா - 19

“ரெஸ்த்ரொபேவா? அவனை நான் பார்க்கணுமே!” என்றார் பாப்லோ. கார்டெல் ஆரம்பித்த பிறகு முதன்முறையாக மிகப்பெரிய அவமானத்தை சந்திக்கிறார். ரெஸ்த்ரோபேவும் கார்டெல்தான் நடத்துகிறான். கோகெயின் தவிர வேறெதையும் வாங்கி விற்பதில்லை என்பதில் மிகவும் உறுதியாக இருப்பவன். மிகக்குறைவான உழைப்பு, அபரிமிதமான லாபம் என்று கிரிமினல்களுக்கே உரிய மனோபாவம் கொண்டவன். கோடி கோடியாக சம்பாதித்தாலும் எச்சைக்கையால் காக்காய் கூட ஓட்ட மாட்டான்.
14.jpg
இப்படிப்பட்ட நிலையில் எட்டாம் வள்ளலாக பாப்லோ, மெதிலின் நகரில் புகழ் பெற்று வருவது அவனுக்கு எரிச்சலையே கொடுத்தது. ஒட்டுமொத்த கார்டெல்களின் தலைவரும், தன்னுடைய அடுத்த வாரிசு கணக்காக பாப்லோ மீது அன்பு செலுத்தியது மேலும் அவனைக் கடுப்பேற்றியது. அரசியல்வாதிகளின் ஆதரவோடு, போலீசுடன் கூட்டணி அமைத்து பாப்லோவை சிக்கவைக்க தகுந்த சமயம் பார்த்துக் கொண்டிருந்தான்.

பாப்லோவே சரக்கு ஊர்வலத்தை அணிவகுத்து நடத்திவருகிறான் என்று அதிகாரிகளுக்கு போட்டுக் கொடுத்தது அவன்தான். “பாப்லோ, ரெஸ்த்ரோபே ஒரு மண்ணுளிப் பாம்பு. அவன் கார்டெல் தலைவர் ஆனதுக்கு அப்புறமா அவனை நேர்லே பார்த்தவங்களை விரல் விட்டு எண்ணிடலாம். மறைவா இருந்துட்டு போனிலேயே எல்லா விஷயங்களையும் ஆபரேட் பண்ணுறான்...” “…” “அவன் கிட்டே வேலை செய்யுறவங்களிலேயே பலருக்கும் கூட தங்களோட பாஸ் கருப்பா சிவப்பான்னு தெரியாது...” குஸ்டாவோ சொன்னதை பாப்லோவால் நம்ப முடியவில்லை.

“ஒருத்தன் வெளியே முகமே காட்டாம வெற்றிகரமா கடத்தல் பிசினஸை எப்படி நடத்த முடியுது?” “அங்கேதான் சூட்சுமம் இருக்கு பாப்லோ. ரெஸ்த்ரோபேங்கிறது ஒரு பேரு. அந்த பேரை வெச்சுக்கிட்டு அதிகாரிகளே இந்த வேலையை செய்யுறாங்களோன்னு எனக்கு ஒரு டவுட்டு. ஆனா, ஒரு விஷயம் உறுதி. நம்மளை எப்படியாவது அழிக்கணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு திரியறது இந்த ரெஸ்த்ரோபே க்ரூப்தான்...” “நாம எவனுக்கும் துரோகம் பண்ணதில்லை. பண்ணவும் போறதில்லை.

அதே நேரம் நமக்கு துரோகம் நடந்தா, அதை பார்த்துக்கிட்டு அப்படியே சும்மாவும் இருக்க மாட்டோம்...” கர்ஜித்தார் பாப்லோ. தன்னுடைய சோர்ஸ்களை போனில் அழைத்தார். ரெஸ்த்ரோபே பற்றி தொடர்ச்சியாக விசாரிக்க ஆரம்பித்தார். உருப்படியான க்ளூ எதுவும் கிடைக்கவில்லை. இந்த சமயத்தில்தான் பாப்லோவுக்கு ரூபின் அறிமுகமானான். துடிப்பான இளைஞன். வசதி யான குடும்பத்தைச் சார்ந்தவன். அமெரிக்காவில் கல்லூரிப் படிப்பு.
14a.jpg
அங்கேயே விமானம் ஓட்டுவதற்கு பயிற்சியும் எடுத்தான். அனாயாசமாக ஆங்கிலம் பேசுவான். அவனுடைய தோற்றத்துக்கும், கவர்ச்சியான மொழி பிரயோகத்துக்கும் வீழாத கன்னிகளே இல்லை எனுமளவுக்கு மெதிலின் நகர மதுவிடுதிகளில் ரூபின் பிரபலமாக இருந்தான். கைநிறைய சம்பாதித்தாலும் அவனுக்கு அட்வெஞ்சரான வேலைகளின் மீது ஆர்வம் இருந்தது. மது விடுதிகளிலும், சூதாட்ட மையங்களிலும் கார்டெல்களில் பணியாற்றுபவர்களுக்கு அவனோடு பழக்கம் ஏற்பட்டது.

நட்புரீதியில் இவர்கள் கொடுக்கும் சிறிய அளவிலான சரக்கு பார்சல்களை, தான் விமானம் ஓட்டிச் செல்லும் நாடுகளுக்கு கடத்த ஆரம்பித்தான். இதிலும் கணிசமாக சம்பாதிக்க முடிகிறது என்று தெரிந்ததுமே, இதையே மெயின் பிசினஸாக ஆக்கிக் கொண்டான். ரூபின் மூலமாக மற்ற பைலட்டுகளுக்கும் கார்டெல் ஆட்களின் தொடர்பு கிடைத்தது. பாப்லோ எஸ்கோபாருக்கும் ஓரிரு முறை ரூபின் உதவியிருக்கிறான்.

எக்ஸ்ட்ராவாகக் கிடைக்கும் இந்த பாக்கெட் மணியை மொத்தமாக உல்லாசங்களுக்கு செலவழித்தான் ரூபின். அடிக்கடி அமெரிக்க, ஐரோப்பிய நகரங்களுக்கு பறப்பான். எல்லாவகையான சுகத்தையும் அனுபவிக்க வேண்டும். வாழ்வதே உல்லாசங்களை சுவைக்கத்தான் என்பது அவனது பாலிசி. ஒருமுறை மியாமிக்கு அவசரமாக சரக்கு அனுப்ப வேண்டியிருந்தது. ரூபினிடம் போனில் பேசினார் பாப்லோ.“மன்னிக்கணும் பாப்லோ. முக்கியமான ஆளு ஒருத்தரோட பார்சலை எடுத்துட்டேன்.

வேணும்னா உங்க சரக்கை அடுத்த வாரம் டெலிவரி செய்யவா?” “டபுள் பேமென்ட் கொடுக்கறேன் ரூபின். ரொம்ப அர்ஜென்ட். என்னைவிட முக்கியமான ஆளா உனக்கு சரக்கு கொடுத்தவன்?” “ஆமாம். ரெஸ்த்ரோபே, என்னோட நெருங்கிய நண்பன்!” சட்டென்று பாப்லோவின் குரலில் பரபரப்பு ஏறியது. ரெஸ்த்ரோபே என்று நிஜமாகவே ஒருவன் இருக்கிறான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். எனினும், தனக்கும் ரெஸ்ரோபே வுக்குமான பிரச்னையைக் காட்டிக் கொள்ளாமல் ரூபினின் வாயைப் பிடுங்கினார்.
14b.jpg
“அவரு பெரிய கார்டெல் டான் ஆச்சே? ரூபின், எனக்கு ஒரு சின்ன ஹெல்ப். ரெஸ்த்ரோபேவோட நான் பிசினஸ் பண்ண விரும்பறேன். அவரை நேருக்கு நேரா சந்திச்சி பேசணும். ஏற்பாடு பண்ண முடியுமா?” “அது கொஞ்சம் கஷ்டம் பாப்லோ. ரெஸ்த்ரோபே, தன்னை வெளிப்படுத்திக்க விரும்ப மாட்டார்...” “இல்லை ரூபின். கொலம்பியாவில் கிட்டத்தட்ட எல்லா கார்டெல் ஓனருங்களுக்கும் என்னை தெரியும்.

ஆனா, ரெஸ்த்ரோபேவை மட்டும் பிடிக்கவே முடியலை. நீதான் ஹெல்ப் பண்ணணும்...” “கேட்டுப் பார்க்கிறேன்...” பாப்லோவின் விருப்பத்தை ரெஸ்த்ரோபேவிடம் ரூபின் சொன்னபோது, அவருக்கும் ஆச்சரியம்தான். “அவனை ஒழிச்சிக் கட்டணும்னு வேலை பார்க்குற என்னையே பார்க்கணும்னு விரும்பறானா? ஆச்சரியமா இருக்கு. சந்திக்கறேன்...” பாப்லோவிடம் விஷயம் சொல்லப்பட்டது. மட்டமான ஒரு சூதாட்ட விடுதியில் மிகவும் ரகசியமாக அந்த சந்திப்பு  நடந்தது.

ஜம்மென்று டிரெஸ் செய்து கொண்டு கம்பீரமாக போனார் பாப்லோ. அவர் எதிர்பார்த்த தோற்றம் கொண்டவனாக ரெஸ்த்ரோபே இல்லை. குள்ளமாக, ஒல்லியாக, மிக எளிமையான ஆளாகத் தெரிந்தார். கீச்சுக்குரலில் பேசினார். இவரைப் பார்த்தா அத்தனை பேரும் அஞ்சுகிறார்கள் என்று பாப்லோவுக்கு ஆச்சரியம். நேரடியாக விஷயத்துக்கு வந்தார். “நான் இங்கே சண்டை போடறதுக்காக கார்டெல் நடத்தலை. ஆக்சுவலா, எனக்கு வன்முறை பிடிக்காது. ரத்தம்னாலே அலர்ஜி...”

பாப்லோவின் கடந்தகாலம் மொத்தமும் ரெஸ்த்ரோபேவுக்கு தெரியும். எனவே புன்முறுவலோடு கேட்டுக் கொண்டிருந்தார். “நாம ஒத்துப் போயிடலாம். உங்க வழியில நான் இதுவரை குறுக்கிட்டதில்லை. ஆனா, நீங்க யாரோ எதுவோ சொன்னதை நம்பி என்னோட வேலையை தடுக்க முயற்சிக்கறீங்க. இனிமே அது வேணாம்...” “பாப்லோ, நீ சின்னப் பையன். தொழில்னா இப்படித்தான். எனக்கு உன் மேலே தனிப்பட்ட பகை எதுவும் கிடையாது. ஆனா, உன்னைப் பார்த்து நிறைய பேர் பயப்படுறாங்க.

உன்னை ஒழிக்கணும்னு விரும்பறாங்க. துரதிருஷ்டவசமா அவங்களில் பெரும்பாலானவங்க எனக்கு வேண்டப்பட்டவங்க...” “நீங்க சொல்லுறது புரியுது. உங்க இடத்துலே நானா இருந்தாலும் அதைத்தான் செய்வேன். ஆனா, இப்போ நானும் உங்களுக்கு வேண்டப்பட்டவன்னு நீங்க நம்பணும்...” “எனக்கு வேண்டப்பட்டவங்கன்னா, அவங்களாலே கணிசமா லாபம் கிடைக்குதுன்னு அர்த்தம். உன்னாலே…” ரெஸ்த்ரோபே முடிப்பதற்கு முன்னாலேயே தன்னுடைய டீலை முன்வைத்தார் பாப்லோ.

மாதாமாதம் கணிசமான அளவு உயர்தரமான கஞ்சா, ரெஸ்த்ரோபே சுட்டிக்காட்டும் இடத்துக்கு பாப்லோவின் மெதிலின் கார்டெல்லால் டெலிவரி செய்யப்படும். வழக்கமான மார்க்கெட் விலையில் பாதியைத்தான் இதற்கு ரெஸ்த்ரோபே தருவார். பதிலுக்கு வேறு சில கமிஷன் வேலைகளை பாப்லோவுக்கு அவர் பிடித்துத் தருவார்.

“இது போதும் ரெஸ்த்ரோபே. எனக்கு தொழில் செய்யுறது, அதில் லாபம் பார்க்கிறதையெல்லாம் விட உன்னை மாதிரி ஒருத்தரோட நட்புதான் முக்கியம். அதுக்காக நான் எதை வேணும்னாலும் செய்வேன்...” இந்தளவுக்கு பாப்லோ, இதுவரை யாரிடமும் குழைந்து பேசியதில்லை. மார்க்கெட் முழுக்க ரெஸ்த்ரோபேவும், பாப்லோவும் ஒப்பந்தத்துக்கு வந்துவிட்டார்கள் என்கிற தகவல் தந்தி வேகத்தில் பரவியது. பாப்லோவை எதிர்த்தவர்கள் வேறு வழியின்றி பம்மத் தொடங்கினார்கள்.
14c.jpg
பாப்லோவுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், ரெஸ்த்ரோபேவின் போன் கால் வரும். போனில் அடங்கிவிட்டால் பிரச்னையில்லை. இல்லையேல், சம்பந்தப்பட்டவர் ஆறடி மண்ணுக்குள் அடங்கிவிட வேண்டியதுதான். மிகக்குறுகிய காலத்திலேயே பாப்லோவின் மெதிலின் கார்டெல்லும், ரெஸ்த்ரோபேவின் கார்டெல்லும் இரட்டைக்குழல் துப்பாக்கி களாக மெதிலின் நகரின் நிழல் தொழிலை ஆளத் தொடங்கின. அப்படியே ஆறு மாதம் அமைதியாகத்தான் போனது.

ஒருநாள் - பாப்லோவை முதன்முதலாக ரெஸ்த்ரோபே சந்தித்த அந்த பாடாவதி சூதாட்ட விடுதியின் வாசலில்... ரெஸ்த்ரோபே பிணமாகக் கிடந்தான்! அவனுடைய உடல் சின்னாபின்னமாகிக் கிடந்தது. பெரும் சித்திரவதையை அனுபவித்து செத்திருக்கிறான் என்று போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொன்னது. போலீசுக்கு தெரியும், இது பாப்லோவின் பிரத்யேக ஸ்டைல் கொலை.

மற்ற கார்டெல் ஓனர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். பாப்லோ, நம்ப வைத்து கழுத்தறுத்திருக்கிறார் என்பது உறுதியாகத் தெரிந்து விட்டது. ஆனால் - அதை தட்டிக் கேட்கும் தைரியம் யாருக்குமே இல்லை. பாப்லோ, இவர்களைத் தாண்டி வளர்ந்து விட்டார். தன் பாதையில் குறுக்கிடுபவர்களுக்கு இதுதான் கதியென்று நேரடியாகச் சொல்லாமலே எச்சரிக்கை விடுத்திருக்கிறார்!

(தொடரும்)

www.kungumam.co.

Link to comment
Share on other sites

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

யுவகிருஷ்ணா - 20

கண்டதுமே காதல். இராமனை கண்டதுமே சீதைக்கு வந்தது மாதிரிதான். மாஃபியாவுக்கெல்லாம் லவ்வு வரக்கூடாதா என்ன? நம்ம காட்ஃபாதருக்கும் வந்தது. மரியா விக்டோரியாவுக்கு அப்போது வயது பதிமூன்றுதான். பாப்லோ, இருபத்து நான்கு வயது கட்டிளங்காளை.கார்டெல்கள் சம்பந்தப்பட்ட பார்ட்டி அது. மரியாவின் அண்ணன், பாப்லோவின் கார்டெல்லில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அதன் அடிப்படையில்தான் மரியா குடும்பம், அந்த பார்ட்டியில் கலந்துகொண்டிருந்தது.
9.jpg
மர்லின் மன்றோ பாணியில் உடையணிந்திருந்தார் மரியா. ‘ராக் & ரோல்’ பாடகர் எல்விஸ் பிரெஸ்லி மாதிரியான ஆடையலங்காரத்தில் பார்ட்டிக்கு வந்திருந்தார் பாப்லோ. பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் பக்கத்தில். பற்றிக்கொண்டு எரிந்தது காதல். அதற்கு முன்பாக பாப்லோவை யாருமே இவ்வளவு உணர்வுபூர்வமாகக் கண்டதில்லை. கொலம்பியாவின் பெரிய குடும்பத்துப் பெண்கள் பலரும் அங்கே வந்திருந்தார்கள். பாப்லோவோடு பேசவும், பழகவும் ஏகத்துக்கும் போட்டாபோட்டி.

ஆனால் - “நாம் நடனமாடலாமா?” பாப்லோதான் மரியாவைக் கேட்டார். மெதிலின் நகரின் எலிஜிபிள் பேச்சுலர் கேட்கிறார். மறுக்க முடியுமா மரியாவால்? அந்த நாளின் ஹீரோ & ஹீரோயின் இவர்கள் இருவரும்தான். நடனமாடிக்கொண்டே மரியாவின் காதில் கிசுகிசுப்பாக தன்னுடைய பர்சனல் தொலைபேசி எண்ணை சொன்னார் பாப்லோ. அன்று இரவே மரியாவிடமிருந்து போன் வந்தது. அவர்களது அடுத்த சந்திப்பு டேட்டிங் ஆனது.
9a.jpg
இரும்பு இதயம் கொண்டவர் என்று பேர் பெற்ற பாப்லோவின் இதயத்துக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்த காலம் அது. எனக்காக படைக்கப்பட்டவள் இவள்தான் என்று உறுதியாக நம்பினார். பாப்லோவுக்கு வழக்கமான காதலனாக இருக்கத் தெரியவில்லை. மரியாதான் அவருக்கு எப்படியெல்லாம் காதலிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். பாப்லோவுக்கு மரியா எழுதும் காதல் கடிதங்கள் அத்தனையும் இலக்கியத்தரம். ‘என் போதை பேரரசனே’ என்று விளித்துதான் கடிதம் எழுதுவார்.

பாப்லோவுக்கு அவர் செல்லமாக ஒரு பெயர் வைத்திருந்தார். இங்கே குறிப்பிட முடியாத அளவுக்கு ‘காமரீதியான’ செல்லப்பெயர் அது. காதல் கிளிகள், மெதிலின் நகரம் முழுக்க ஜோடியாகப் பறந்தன. அப்போது வெளிவந்திருந்த அத்தனை ஹாலிவுட் படங்களையும் பார்த்து சலித்து விட்டனர். பார்ப்பதற்கு படங்களே இல்லாதபோது மேடை நாடகங்களுக்கு போவார்கள். வழக்கமான காதலர்களைப் போல எல்லா இடங்களிலும் கார்னர் சீட்தான்.

தியேட்டர் இருளில் ஒருநாள் கிசுகிசுப்பாக மரியா கேட்டார். “எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்?” “அம்மாவையும், அண்ணனையும் வீட்டுக்கு வந்து பேச சொல்றேன்...” மரியாவின் வீட்டில் பூகம்பம். வம்பு தும்பு இல்லாத அரசு அதிகாரி எவருக்காவதுதான் மரியாவை கட்டித்தர முடியுமென்று அவரது குடும்பத்தினர் போர்க்குரல் எழுப்பினர். “தட்டிடலாமா?” குஸ்டாவோ கேட்டார். “வேணாம்டா. பிசினஸ் மாதிரி ஃபேமிலியை டீல் பண்ணக்கூடாது. என்ன இருந்தாலும் என்னோட மாமனார் குடும்பம்...” பாப்லோ மிகவும் நெகிழ்ந்திருந்தார்.

பாப்லோவை சந்தித்து பழக முடியாதபடி மரியா வீட்டிலேயே சிறைபிடிக்கப் பட்டார். ஷேக்ஸ்பியரின் ரோமியோ கணக்காக சுவர் ஏறிப்போய் மரியாவைப் பார்த்தார் பாப்லோ. தன்னைப் பார்த்தால் கொலம்பிய அரசாங்கமே நடுங்குகிறது. ஆனால், தானோ மாமனாரின் கோபத்துக்கு அஞ்சுகிறோமே என்று அவருக்கு வெட்கமாகவும் இருந்தது. இருப்பினும் முதன்முறையாக தன்னை ஒரு சாமானியனாக உணரும் அந்த உணர்வை அவர் பெரிதும் விரும்பினார்.
9b.jpg
மூன்று ஆண்டுகள் உயிருக்கு உயிராகக் காதலித்தார்கள். இனியும் பொறுக்கமுடியாது என்கிற நிலையில் 1976ல் திருமணத்துக்கு நாள் குறித்தனர் பாப்லோ குடும்பத்தினர். இந்த திருமணத்துக்கு திருச்சபை அனுமதி கொடுக்கக்கூடாது என்று மரியாவின் குடும்பத்தினர் விண்ணப்பித்திருந்தனர். பாப்லோ, அவர் வாழ்விலேயே முதன்முறையாக ரொம்பவும் ஓவராக வளைந்து கொடுத்தார். திருச்சபை பிஷப்பை நேரில் சந்தித்தார்.

மரியாவுக்கும் தனக்குமான உயிருக்குயிரான காதலைப் பற்றி நெகிழ்ச்சியாக எடுத்துச் சொன்னார். “பாப்லோ, நீ கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்றது மகிழ்ச்சிதான். ஆனா…” “…” பாப்லோவுக்கு கோபம் வந்துவிடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வோடு பிஷப், ஜாக்கிரதையாகவே அந்த உரையாடலைக் கையாண்டார்.

“பெண்ணோட குடும்பம் நியாயமான காரணத்தைச் சொல்லி திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க...” “என்ன காரணம் சொல்லுறாங்க?” “அந்தப் பொண்ணுக்கு பதினஞ்சு வயசுதான் ஆகுது. கல்யாணம் பண்ணுற வயசு இன்னும் ஆகலைன்னு சொல்லுறாங்க...” “அதுக்கு?” “நான் கல்யாணம் பண்ணி வெச்சேன்னா எனக்கு நிறைய சிக்கல் வரும். நான் நிறைய பேருக்கு பதில் சொல்லணும்.

பொண்ணோட குடும்பம் சம்மதிச்சா எனக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது...” “என்னோட மாமனார் நிச்சயம் சம்மதிக்க மாட்டார். வேற வழி?” “கொஞ்சம் செலவாகுமே?” பிஷப் இழுத்தார். ‘அடப்பாவிகளா, இங்கேயுமா?’ என்று மனசுக்குள் நினைத்துக் கொண்ட பாப்லோ, காரில் இருந்த சூட்கேஸை எடுத்து வந்து பிஷப் முன்பாகத் திறந்து காட்டி னார்.
9c.jpg
“இதுல எவ்வளவு இருக்குன்னு தெரியலை. நீங்க உங்களுக்கு கேட்குறீங்களா... இல்லைன்னா வேற யாருக்கோ பதில் சொல்லணும்னு சொன்னீங்களே, அவங்களுக்கு கேட்குறீங்களான்னு தெரியலை. இன்னும் பணம் தேவைப்பட்டாலும் கணக்கு வழக்கில்லாமே கொடுக்கறேன். பிரச்னை இல்லாமே நீங்கதான் எல்லாத்தையும் சுமுகமா முடிச்சிக் கொடுக்கணும்...” திறந்திருந்த சூட்கேஸை பார்த்ததுமே பிஷப்பின் வாய் ஆச்சரியத்தில் அகன்றது.

கல்யாணம் செய்துகொள்ளக்கூட லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறதே என்று பாப்லோவுக்கு வருத்தமாக இருந்தது. பிஷப், சரிக்கட்ட வேண்டியவர்களைச் சரிக்கட்டினார். கணிசமாக அவருடைய பங்கும் மிச்சமிருந்தது. அப்புறமென்ன? சட்ட திட்டங்களில் இருந்த அத்தனை ஓட்டையையும் பிஷப் கண்டுபிடித்து சரிபண்ணினார். பாப்லோவுக்கும், மரியாவுக்கும் ஜாம் ஜாமென்று ஊர் மெச்ச திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் முரண்டு பிடித்த மரியா குடும்பத்தினர், பல்வேறு முனைகளிலிருந்து கொடுக்கப்பட்ட அன்பு நெருக்கடிகளுக்கு வேறு வழியின்றி அடிபணிந்தனர். பாப்லோ பாட்டுக்கும் காதல், கல்யாணம் என்று பிஸியாக இருந்த காலத்தில் அவரது கார்டெல்லுக்கு வேறுவகையான பிரச்னைகள் ஏற்படத் தொடங்கின.

(மிரட்டுவோம்)

www.kungumam.co.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
 
 

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

யுவகிருஷ்ணா - 21

Honeymoon is over. தென்னமெரிக்காவின் வரைபடத்தை அட்லஸில் பார்த்தீர்கள் என்றால் தெரியும். கடத்தல் வேலைக்காகவே இயற்கை இந்த தேசத்தை அங்கே அமைத்திருப்பதைப் போன்ற தோற்றத்தை உணரலாம். வட அமெரிக்காவையும், தென்னமெரிக்காவையும் இணைக்கும் பனாமா கால்வாய் கொலம்பியாவின் மூக்கு மாதிரி அமைந்திருக்கிறது.
11.jpg
ஈக்குவேடார், வெனிசுலா, பிரேஸில், பெரு உள்ளிட்ட தென்னமெரிக்க நாடுகளுக்கு சரக்கு சப்ளை செய்வதாக இருந்தாலோ... அல்லது இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு எதையோ கொண்டு செல்ல வேண்டுமென்றாலோ கொலம்பியாவை தவிர்க்கவே முடியாது. இதனால்தான் போதை மாஃபியாக்கள் கொலம்பியாவில் அமர்ந்துகொண்டு உலகளவில் பிசினஸ் செய்ய வேண்டியிருந்தது.

கல்யாண ஜோரில் சில மாதங்கள் ஜாலியாக இருந்துவிட்டதால், பிசினஸில் எஸ்கோபாருக்கு டச் விட்டுப் போயிருந்தது. திடீரென்று தேனிலவு முடிந்து, லெளகீக வாழ்க்கைக்கு திரும்பினால் நிறைய கார்டெல்கள், மெதிலின் கார்டெல்லை முந்திக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தன. எனவே, தீவிரமாக வேலை பார்க்க ஆரம்பித்தார். சரக்கு கொள்முதலுக்கும் சப்ளைக்கும் அவரே நேரடியாகச் செல்ல ஆரம்பித்தார்.
11a.jpg
சின்ன ஆர்டரோ, பெரிய ஆர்டரோ கார்டெல் ஓனரே வருகிறார் என்பதால் மீண்டும் மெதிலின் கார்டெல்லுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மவுசு ஏறத் தொடங்கியது. பக்கத்து நாடான ஈக்குவேடாரில் இருந்து கோகெய்ன் எடுத்து வர வேண்டும். ரொம்ப சின்ன ஆர்டர்தான். இருந்தாலும் எஸ்கோபார், குஸ்டாவோ இருவரும் தங்களின் மிக நெருக்கமான மூன்று சகாக்களோடு சென்று சாலை மார்க்கமாகவே ஜீப்பில் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

கொலம்பியா எல்லையில் செக்போஸ்ட். வழக்கமான சோதனைதான். காவலர்களுக்கு வழக்கமாகத் தரவேண்டிய மாமூலை எடுத்துக் கொண்டு அந்த சிறிய கேபினுக்குள் நுழைந்த குஸ்டாவோ திரும்பவேயில்லை. ஐந்து நிமிடங்கள் கழித்து குஸ்டாவோவைத் தேடிப் போன சகா ஒருவனும் திரும்பவில்லை. டென்ஷன் ஆன எஸ்கோபார் அவரே நேரடியாக உள்ளே போனார்.
11b.jpg
அங்கே - குஸ்டாவோவும், தேடிப்போன சகாவும் மண்டியிட்டு அமர்ந்திருந்தார்கள். துப்பாக்கி முனையில் அவர்களை இரு இளம் அதிகாரிகள் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். உள்ளே நுழைந்த எஸ்கோபாரை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. அயிரை மீனுக்கு தூண்டில் போட்டால் திமிங்கலமே வந்து மாட்டுமென்று யார்தான் நினைப்பார்கள்? இவரையும் மண்டியிடச் சொன்னார்கள்.

“நான் யாருன்னு தெரியுமில்லே?” கண்கள் சிவந்து கர்ஜித்தார் பாப்லோ. “தெரிஞ்சதுனாலேதான் அரெஸ்ட் பண்ணுறோம். நாங்க DAS ஏஜெண்டுகள்!” நம்மூரில் சிபிஐ மாதிரி கொலம்பியாவில் டாஸ். எஸ்கோபார் வந்த ஜீப் சோதனையிடப்பட்டது. ஸ்டெப்னி டயருக்குள் மறைத்து வைத்திருந்த சுமார் நாற்பது கிலோ கோகெய்ன் கைப்பற்றப்பட்டது. கையும் களவுமாக மாட்டுவது எஸ்கோபாரின் ஆட்களுக்கு புதிதல்ல.

கவனிக்க வேண்டியவர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தோ, அல்லது மிரட்டியோ வெளியே வந்துவிடுவார்கள். ஆனால் - இம்முறை நேரடியாக டாஸ் ஏஜெண்டுகளிடமே மாட்டிக் கொண்டதால், உடனடியாக என்ன செய்வது என்று எஸ்கோபாருக்கே தெரியவில்லை. கேஸ் கோர்ட்டுக்கு போனால் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கடைசியாக ஒரு கார் திருட்டில் ஜெயிலுக்கு போயிருக்கிறார்.

அதற்கு முன்பாக டீன் ஏஜில் சில்லறை பிரச்னைகளுக்காக சில நாட்கள் போயிருக்கிறார். கார்டெல் முதலாளியாக உயர்ந்த பிறகு ஜெயிலுக்குப் போவது என்பது கவுரவப் பிரச்னை. அந்த ஏஜெண்டுகளிடம் அவர்கள் கனவிலும் நினைக்காத தொகையை பேரமாக பேசினார். அவர்களோ நேர்மையை நிலை நாட்டுவதற்கென்றே பிறந்தவர்கள் மாதிரி பந்தா செய்து கொண்டிருந்தார்கள்.

நீதியை விலை கொடுத்து வாங்கினால் மட்டுமே வெளியே வருவது சாத்தியம். துரதிருஷ்டவசமாக இவர்களது வழக்கை விசாரித்த நீதிபதியோ ஹமாம் போட்டு குளிப்பவர். அத்தனை பேருமே திடீரென்று நேர்மையாகி விட்டால் நம்முடைய பொழைப்பு எப்படி ஓடுமென்று சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் எஸ்கோபார் புலம்பத் தொடங்கினார். பிரச்னை கார்டெல்களின் பெரிய தலைவரிடம் போனது.

‘என்ன விலை கொடுத்தாவது எஸ்கோபாரை காப்பாற்றுங்கள்’ என்று அவர் கட்டளையிட்டு விட, பாப்லோவின் கார்டெல் மட்டுமின்றி கொலம்பியாவின் அத்தனை கார்டெல்களும் களமிறங்கி தங்கள் தொடர்புகளை பயன்படுத்தத் தொடங்கின. அரசியல்வாதிகளோ இப்பிரச்னையில் தலையைக் கொடுக்க அஞ்சினார்கள். எஸ்கோபாரை உள்ளே வைக்க அமெரிக்கா ஆர்வம் காட்டியதுதான் பின்னணி காரணம். ரூபின்தான் உருப்படியான ஒரு ஐடியாவைக் கொடுத்தான்.

இரண்டு அத்தியாயங்களுக்கு முன்பு ரெஸ்த்ரோபேவின் நண்பனாக நமக்கு அறிமுகமானானே ஒரு பைலட்...? அவனை நினைவிருக்கிறதுதானே?
அதாவது பாப்லோவின் வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு ஒரு தம்பி உண்டு. அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆகவே ஆகாது. அவர்களுக்குள் சொத்து தொடர்பான பிரச்னைகள் இருந்து வந்தன. அண்ணனை தர்மசங்கடப்படுத்த வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த அந்தத் தம்பியை, ரூபினின் ஆலோசனைப்படி இந்த கிரிமினல்கள் வளைத்துப் போட்டார்கள்.

அவருக்கு பீஸாக மிகப்பெரிய தொகை பேசப்பட்டது. பாப்லோவுக்காக ஆஜராகும் வழக்கறிஞர் தன்னுடைய சொந்தத் தம்பி. ஒருவேளை உறுதியான சாட்சிகளின் அடிப்படையில் தீர்ப்பு பாப்லோவுக்கு எதிராக வந்தால், தம்பியுடைய தனிப்பட்ட விரோதம் காரணமாகவே அப்படி தீர்ப்பு வழங்கப்பட்டதாக கருதப்படும். ஒருவேளை பாப்லோவை விடுவிடுத்து விட்டால் தம்பிக்காக நீதிபதி, நீதியை சமரசம் செய்துகொண்டதாக விமர்சனம் எழும்.

ரைட்டில் போனாலும் ஆப்பு, லெஃப்டில் போனாலும் காப்பு என்கிற நிலையில் இந்த வழக்கை, தான் விசாரிக்க விரும்பவில்லை என்று நீதிபதி வேறு வழியே இல்லாத நிலையில் விலகிவிட்டார். இது போதாதா? கார்டெல்கள் தங்களுடைய முழு செல்வாக்கை பயன்படுத்தி தங்களுக்கு வாகாக தீர்ப்பு வழங்கக்கூடிய ஒரு நீதிபதியை இந்த வழக்கை விசாரிக்க வைக்கும் வகையில் வேலை செய்தார்கள். இன்றுவரை உலக அளவிலேயே நீதியை வளைக்கும் முயற்சிகளுக்கு முன்னுதாரணமாக அந்த வழக்குதான் விளங்குகிறது!

சாட்சிகள் அத்தனையும் உறுதியாக இருந்தும், சாட்சிகளில் இருக்கும் சப்பை ஓட்டைகளை பூதாகரமாக்கி அந்த தில்லாலங்கடி தீர்ப்பை வெளியிட்டார் நீதிபதி. “பாப்லோ போன்ற சமூகத்தின் உயர்தட்டு அடுக்கில் இருப்பவர் போதை மருந்து கடத்துவார் என்று எண்ணுவதே பாவம்...” என்கிற அளவுக்கு அராஜகமான தீர்ப்பு இது. புடம் போட்ட தங்கமாக (?) சிறையிலிருந்து பாப்லோவும், அவரது சகாக்களும் வெளிவந்தார்கள். அவரை ஊர்வலமாக மெதிலின் நகர் சாலைகளில் அழைத்துச் சென்றார்கள் கார்டெல் பணியாளர்கள்.

உலகத் தலைவர் கணக்காக சாலையின் இருமங்கிலும் வேடிக்கை பார்க்கக் கூடியிருந்த பொதுமக்களுக்கு கையசைத்துக் கொண்டே பாப்லோ வந்தார். புன்சிரிப்போடு இருந்த அவரது முகம், ஒரே ஒரு கணம் மட்டும் சட்டென்று சீரியஸானது. குஸ்டாவோவைக் கூர்ந்து பார்த்தார். குஸ்டாவோவுக்கு அந்தப் பார்வையின் பொருள் புரிந்தது. ஊர்வலம் முடிவதற்குள்ளாகவே பாப்லோவை கைது செய்த டாஸ் இளம் ஏஜெண்டுகள் லூயிஸ், கில்பர்ட்டோ இருவரையும் வெறிகொண்ட ரவுடிகள் விரட்டி விரட்டி வெட்டினார்கள். அன்று படுகொலை செய்யப்பட்டவர்கள் அவர்கள் இருவர் மட்டுமல்ல. கொலம்பியாவில் கொஞ்சமே மிஞ்சியிருந்த நீதியும் நேர்மையும் கூடத்தான்!
 

(மிரட்டுவோம்)

www.kungumam.co

Link to comment
Share on other sites

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

 

யுவகிருஷ்ணா - 22 

‘சட்டம் வளைக்கப்படக் கூடியது’ என்பது உலகமெங்கும் வாழ்வாங்கு வாழும் எல்லா சட்டவிரோத சக்திகளுக்குமே தெரியும். அதனால்தான் சட்டத்தைக் கண்டு அவர்கள் அஞ்சுவதில்லை. அதே நேரம், ‘சட்டம் இருமுனை கத்தி’ என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். ‘எப்போது வேண்டுமானாலும் அது தங்களுடைய நெஞ்சில் பாய்ந்து, இருதயத்தை குத்திக் கிழிக்கும்’ என்கிற அறிவு இல்லாவிட்டால் அழிந்தே போவார்கள்.
17.jpg
மெதிலின் நகரின் முடிசூடா ராஜாவாக எஸ்கோபார் வலம் வந்து கொண்டிருந்தபோதே, சாதாரண இரு ஏஜெண்டுகள் அவரைக் கைது செய்ய முடிகிறது என்றால், தன்னுடைய சாம்ராஜ்யத்தைவிட சட்டம் பெரியதுதான் என்பதை ஒப்புக் கொண்டார். எப்போது வேண்டுமானாலும் சட்டத்தை தன் மீது பாய்ச்சி கார்டெல்லை முடக்கவோ... ஏன், தன்னை கொல்லவோ கூட முடியும் என்பதை அறிந்திருந்தார். எனவேதான் சட்டத்தை நிலைநாட்டும் அந்தஸ்தை தான் எட்டுவதற்காக ரொம்பவும் மெனக்கெட்டார்.

அரசு அதிகாரிளையும், அரசியல்வாதிகளையும் எந்த வகையிலும் தன் தரப்பு ஆட்கள் பகைத்துக் கொள்ளக்கூடாது என்று முனைப்பாக இருந்தார். “நாம் யாரையாவது அச்சுறுத்தினால்தானே நம்மை வீழ்த்த வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு ஏற்படும்? நாம் அவர்களுடைய நட்பு சக்தி என்கிற எண்ணத்தை அவர்களுக்கு உறுதியாக ஏற்படுத்த வேண்டும்...” என்று கார்டெல் கூட்டங்களில் வலியுறுத்தத் தொடங்கினார். மக்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களை விரிவுபடுத்தி நிறைய செலவு செய்ய ஆரம்பித்தார். 

ஏனெனில் அரசு தமக்கு எதிர்ப்பாக மாறினாலும், மக்கள் சக்தி தனக்கு துணையிருக்கும் என்று நம்பினார். நாடு முழுக்க கோகெயின் பயிரிட்டார். தன்னுடைய கார்டெல்லுக்கு மட்டுமின்றி, மற்ற கார்டெல்களுக்கும் அவற்றை மலிவு விலையில் கொடுத்து உதவினார். முக்கிய நகரங்களில் கோகெயினை பதப்படுத்தி பவுடர் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவினார். இந்தத் தயாரிப்புகளை தங்குதடையின்றி சப்ளை செய்யக்கூடிய போக்குவரத்து கட்டமைப்பை நிறுவினார். பாப்லோ எஸ்கோபாரின் மெதிலின் கார்டெல்லுக்கு சாதாரண சைக்கிளில் தொடங்கி ஏரோப்ளேன் வரை வாகனங்கள் சகட்டுமேனிக்கு வாங்கப்பட்டன. 
17a.jpg
இந்த வேலைகளைச் செய்ய ஏராளமான இளைஞர்களுக்கு கொழுத்த சம்பளத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. பாப்லோவின் காலத்தில் அரசு வேலைக்கு செல்வதைக் காட்டிலும், மெதிலின் கார்டெல்லில் வேலை பார்ப்பதே கொலம்பிய இளைஞர்களுக்கு கவுரவமான தேர்வாக அமைந்திருந்தது. எல்லாவகையிலான கொடுக்கல் வாங்கல்களிலும் குறிப்பிட்ட சதவிகிதம் ‘கட்டிங்’காக அதிகாரிகளுக்கும், ஆளும் வர்க்கத்துக்கும் கொடுத்தாக வேண்டும் என்பதில் பாப்லோ கண்டிப்பாக இருந்தார்.

அரசுத் தரப்பில் எந்தவொரு சிறியளவிலான பிரச்னை ஏற்பட்டாலும், “கத்தை கத்தையாக கணக்கு பார்க்காமல் பணத்தைக் கொண்டுபோய் சம்பந்தப்பட்டவன் முகத்தில் எறி...” என்பார் பாப்லோ. வன்முறை மட்டுமே கார்டெல்களின் வழிமுறை என்கிற நிலை, பாப்லோவின் காலத்தில் முற்றிலுமாக மாறியது. இவரது பாணி தொழில் செயல்முறைகளையே மற்ற கார்டெல்களும் பின்பற்றத் தொடங்கின. அவ்வகையில் உலக மாஃபியா வரலாற்றில் ஒரு புதிய டிரெண்டை பாப்லோ உருவாக்கினார். பாப்லோ, கொலம்பியாவில் ஏற்படுத்திய பொருளாதார வளர்ச்சி எத்தகையது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம்.

1976 தொடங்கி 1980 வரையிலான வெறும் ஐந்தாண்டுகளில் கொலம்பியாவின் நான்கு நகரங்களில் இருந்த அனைத்து வங்கிகளின் இருப்பும் அப்படியே இரு மடங்கானது. நாட்டின் முதல் குடிமகனில் தொடங்கி, கடைக்கோடி வறியவன் வரைக்கும் பணத்தை மெத்தையில் போட்டுப் புரண்டார்கள். போதைத் தொழிலில்தான் தங்கள் நாடு கொழிக்கிறது என்பதை அறிந்திருந்தாலும் அரசாங்கம், கண்டும் காணாமலும்தான் இருந்தது. தங்களுக்கு முறையாக கப்பம் கட்டிவிட்டு நேர்மையாக (!) தொழில் செய்பவர்களை நாமும் ஆதரிக்க வேண்டும் என்கிற மனப்பான்மை அரசின் ஒவ்வொரு அங்கத்துக்கும் ஏற்பட்டு விட்டது.

அந்நாளைய கொலம்பிய அதிபர் அல்போன்ஸாவே இதை மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கிறார். “நாங்கள் இதுவரை மூடிக்கிடந்த ஜன்னலைத் திறந்து விட்டோம்...” என்று வாக்கு  மூலமே கொடுத்திருக்கிறார். ஓர் அரசாங்கம் தன்னுடைய பொருளாதாரத்தை போதைத் தொழில் செய்து ஸ்திரப்படுத்திக் கொள்கிறது என்பது வெட்கக்கேடான சமாசாரம். ஆள்பவர்கள் யோக்கியமாக இருக்கும் பட்சத்தில் இதற்காகத் தலை காட்டவே வெட்கப்படுவார்கள். ஆனால்  நாய் விற்ற காசு குரைக்கவா போகிறது என்று கொலம்பிய அரசு, போதைத் தொழிலை மறைமுகமாக ஆதரிக்கத் தொடங்கியதுதான் அவலம். 

தங்களை தட்டிக் கேட்பார் எவருமில்லை என்கிற நிலையில் கார்டெல்கள் கதகளி ஆடத் தொடங்கின. “அவரு கஷ்டப்பட்டு கஞ்சா பிசினஸ் செஞ்சு பெரிய ஆளாயிட்டாரு...” என்று போதை அதிபர்கள் குறித்து பெருமையாக கவர் ஸ்டோரி எழுதின கொலம்பிய ஊடகங்கள். கார்டெல்களில் பணிபுரிபவர்கள் கணவான்களாக சமூகத்தில் மதிக்கப்பட்டார்கள். இந்த நிலைக்கு பிள்ளையார் சுழி போட்ட பெருமை பாப்லோவையே சேரும். கொடூரமான குற்றவாளியான கார்லோஸ், பாப்லோவின் நம்பிக்கைக்குரிய சகா. விமானங்களில் போதை கடத்தல் செய்வதற்கான நெட்வொர்க்கை அவர்தான் துல்லியமாக உருவாக்கினார். 
17b.jpg
பஹாமாஸில் இந்த நார்மன் கேவ் பகுதியில் மிகப்பெரிய பங்களாவோடு ஒரு போதைத் தொழிற்சாலையையும், கிடங்கையும் அவர் ஏற்படுத்தினார். இதற்கு பாப்லோ மற்றும் கொலம்பிய அரசின் நல்லாசி எப்போதுமே இருந்தது. வெகுவிரைவில் நார்மன் கேவ் மொத்தத்துக்குமே அவர்தான் அதிபர் என்கிற நிலைமை ஏற்பட்டது. போதைத் தொழிலுக்காக இங்கு தனி விமான நிலையமே அமைக்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவின் கண்டிப்பான வற்புறுத்தலால் பஹாமா அரசாங்கம், 

போதை கடத்தல்காரர்களை கட்டுப்படுத்த முயற்சித்தபோது, ஒரு விமானம் முழுக்க பணத்தை நிரப்பி, பஹாமா முழுக்க இருந்த அரசியல்வாதிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பணமழை பொழியச் செய்து அசத்தினார் இவர். கார்லோஸ் ஓர் உதாரணம்தான். பாப்லோவுடன் ஒத்துப் போனவர்கள் ஒவ்வொருவருமே ஒரு தீவு வாங்கி, அங்கே தனி அரசாங்கம் அமைத்து ஆளத் தொடங்கினார்கள். கொலம்பிய கார்டெல் மாஃபியாக்களுக்கு கிடைத்த இந்த அந்தஸ்து மற்ற தென்னமெரிக்க மாஃபியாக்களையும் கவர்ந்தது. 

அவர்களும் பாப்லோவோடு டீலிங் வைத்துக் கொள்ள போட்டாபோட்டி போட்டார்கள். குறிப்பாக மெக்ஸிகோவைச் சார்ந்த குழுக்கள். இவர்கள் அத்தனை பேரையும் அரவணைத்து ஒரு மிகப்பெரிய குற்றவியல் சாம்ராஜ்யத்தை, பேரரசாங்கம் கணக்காக தென்னமெரிக்காவில் நிறுவும் முயற்சியில் கிட்டத்தட்ட பாப்லோ வென்றுவிட்டார் என்றே சொல்லவேண்டும். இத்தகைய சாதனையை செய்திருந்தாலும் பாப்லோ சர்வசாதாரணமாக கொலம்பிய இளைஞர்களோடு பீச்சில் கால்பந்து விளையாடிக் கொண்டிருப்பார். 

கார் ரேஸ்களில் கலந்து கொள்வார். கொலம்பியாவில் நடைபெறும் எந்தவொரு திருவிழாவுக்கும் பாப்லோதான் சீஃப் கெஸ்ட். உலகமே இந்த பூனையா பால் குடிக்கிறது என்று ஆச்சரியப்படுமளவுக்கு நடந்துகொண்டார். அமெரிக்கா மட்டும் நறநறத்துகொண்டிருந்தது. தங்கள் நாட்டின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போதை போருக்கு காரணமானவரைப் போட்டுத் தள்ள திட்டங்களை தீட்டிக் கொண்டிருந்தது.
 

(மிரட்டுவோம்)

www.kungumam.co

Link to comment
Share on other sites

 

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்

யுவகிருஷ்ணா - 23

வெளிப்பார்வைக்குத்தான் மெதிலின் நகரில் பாப்லோவின் சிம்மாசனம் இருந்தது. ஆனால் - அவருடைய சாம்ராஜ்யம் வெனிசூலா நாட்டு எல்லையில் ரகசியமாக அமைக்கப்பட்டிருந்தது. பாப்லோவின் கொடுக்கல் வாங்கல்களை கறாராக பார்த்துக் கொண்டிருந்த அவருடைய அண்ணன், தம்பிக்காக அங்கே சுமார் 37 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு சிறிய நாட்டையே பார்த்துப் பார்த்து உருவாக்கியிருந்தார்.

கோகெயின் விளைநிலங்கள் அங்கேதான் அமைந்திருந்தன. அங்கே விளையும் கோகெயினை அங்கேயே பவுடராக்கி பேக்கிங் செய்வதற்காக ஒரு பிரும்மாண்டமான ஃபேக்டரி. மிகப்பெரிய சரக்கு விமானங்கள் வந்து செல்வதற்கு வசதியாக நீண்ட ரன்வே ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த ரன்வேயை சாட்டிலைட் மூலமாகக்கூட கண்காணிக்க முடியாத அளவுக்கு கில்லாடியான ஒரு ஐடியாவை பாப்லோ செயல்படுத்தி இருந்தார்.
14.jpg
அதாவது - மொத்தம் எழுபது நகரும் இல்லங்கள். மரத்தால் கட்டப்பட்ட இந்த வீடுகளுக்கு சக்கரம் இருக்கும். இந்த வீடுகள் அத்தனையையும் ரன்வே மீது பார்க்கிங் செய்து நிறுத்தியிருப்பார்கள். விமானம் ஏதேனும் வருகிறது என்றால் மட்டும் வீடுகள் ஓரமாக நகர்த்தப்பட்டு விடும்! இந்த இடத்துக்கு சரக்கு போக்குவரத்துக்காக வரக்கூடிய விமானங்கள், மிகப்பெரிய நூற்றாண்டுகால மரங்களுக்குக்  கீழே பார்க்கிங் செய்யப்படும்!

ஐரோப்பிய போதை மாஃபியாக்கள் பலரும் சொந்தமாகவே விமானம் வைத்து தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் என்பதால், அந்த விமானங்கள் வந்துபோக வசதியாக இம்மாதிரி ஏற்பாடு. அந்த நகரும் இல்லங்களில்தான் போதை வயல் மற்றும் ஃபேக்டரிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் குடும்பம் குட்டி யோடு தங்கியிருந்தார்கள்.

பெண்கள் பொதுவாக வயல் வேலை செய்வார்கள். ஆண்களுக்கு ஃபேக்டரியில் கோகெயினை பதப்படுத்தும் லேபரட்டரி வேலைகள் இருக்கும். இவர்களுக்கு டிவி உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் கொடுத்து சுகமாக வாழ வழி செய்திருந்தார் பாப்லோ. தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்காக ஒரு ஸ்கூலே அங்கு கட்டப்பட்டது.

உணவு, உடை, இருப்பிடம், குழந்தைகளுக்கு கல்வி அத்தனையும் இலவசமாக கொடுத்து, மேற்கொண்டு கணிசமாக சம்பளமும் கொடுக்கப்படுகிறது என்றால் யார்தான் பாப்லோவிடம் வேலை செய்ய விரும்ப மாட்டார்கள்? கொலம்பியாவில் அரசு வேலையில் பென்ச் தேய்ப்பதைக் காட்டிலும் பாப்லோ எஸ்கோபாரின் மெதிலின் கார்டெல்லில் வேலைக்கு சேருவதுதான் கவுரவமாக பார்க்கப்பட்டது.
14a.jpg
ஆனால் - பாப்லோவிடம் வேலைக்கு சேர்ந்தவர்கள், வேலை பிடிக்காமல் வெளியே செல்ல முடியாது என்பது மட்டும்தான் பிரச்னை. அப்படியே வெளியேறியே ஆகவேண்டும் என்று நினைப்பவர்கள் உலகத்தை விட்டே வெளியேறிவிட வேண்டியதுதான். இதற்காக அதிகம் வலிக்காமல் விடுதலை கொடுக்கும் பணியை செய்யும் ஸ்பெஷலிஸ்டுகளும் பாப்லோவிடம் இருந்தார்கள்.

பொதுவாக இந்த ரகசிய இடத்துக்கு பாப்லோ வருவதில்லை. கொலம்பிய அதிகாரிகள் அவரை கண்காணிப்பதில்லை என்றாலும், அமெரிக்காவின் உளவுத்துறை ஏஜெண்டுகள் அவரது விஷயத்தில் கண்கொத்திப் பாம்பாக இருந்தார்கள். முடிந்தால் பாப்லோவை போட்டுத் தள்ளவும் காத்திருந்தார்கள். எனினும், கொலம்பியாவில் வைத்து அவரை போடுவது சாத்தியமே இல்லை என்பதையும் உணர்ந்திருந்தார்கள்.

பாப்லோவின் நம்பிக்கைக்குரிய சகாக்களில் சிலர் இந்த ‘போதை கிராம’த்தை நிர்வகித்து வந்தார்கள். அவர்களுக்குரிய கட்டளைகள் குஸ்டாவோ மூலமாக சங்கேத மொழியில் அவ்வப்போது வரும். ஆடிக்கு ஒருமுறை, அமாவாசைக்கு ஒருமுறை பாப்லோ இங்கே மாறுவேடத்தில் திக்விஜயம் செய்வதுண்டு. வந்திருப்பவர் பாப்லோதான் என்று அவருடைய சகாக்களுக்கே கூடத் தெரியாமல் ஒரு முறை போட்டுத் தள்ளப் போய்விட்டார்கள்!

எப்போதாவது தன்னுடைய குட்டி விமானத்தை பாப்லோவேஓட்டிக்கொண்டு வருவார். அந்த விமானத்தின் சப்தம் கேட்டாலே தொழிலாளர்கள் அவரவர் செய்து கொண்டிருக்கும் வேலையை அப்படி அப்படியே போட்டுவிட்டு பாப்லோவைச் சூழ்ந்து கொள்வார்கள். கண்கள் மின்ன அவரை அன்போடு விசாரிப்பார்கள். தங்கள் தோளில் தூக்கிவைத்துக்கொண்டு ஊர்வலமாக வருவார்கள். பாப்லோவை வாழ்த்தி கோஷங்களும் ஒலிக்கும்.

மூட்டையாக பணத்தை கட்டி முதுகில் லஞ்ச் பேக் கணக்காக மாட்டிக் கொண்டு வருவார். கண்ணில் பட்டவர்களுக்கெல்லாம் கையில் எவ்வளவு பணம் தட்டுப்படுகிறதோ அவ்வளவையும் அள்ளிக் கொடுப்பார். கணக்கு வழக்கே கிடையாது. அந்தக் காலகட்டத்தில் பாப்லோவுக்கு பணத்தின் மதிப்பே தெரியாமல் போய்விட்டது. பணம் என்பது அவரைப் பொறுத்தவரை வெறும் காகிதம்.

தொழில் என்பது அவரைப் பொறுத்தவரை பணம் சம்பாதிக்கக்கூடிய வழிமுறை அல்ல. அட்வென்ச்சருக்காகவும், அதிகாரத்துக்காகவும்தான் இதைச் செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கொலம்பியா போதைத் தொழிலின் 40% வியாபாரம் எஸ்கோபாரின் மெதிலின் கார்டெல் நிறுவனத்தால் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. உலகப் புகழ்பெற்ற ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை, எஸ்கோபாரின் அருமை பெருமைகளை(!) 1987, அக்டோபரில் பட்டியலிட்டது.

அப்போது உலகின் டாப் 100 பணக்காரர் பட்டியலில் அவர் டாப்-10ல் இருந்தார். 1981ல் இருந்து 1986க்குள் 7 பில்லியன் டாலர் (இன்றைய இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.45 ஆயிரம் கோடி!) அளவுக்கு பாப்லோ மட்டுமே போதை வர்த்தகம் செய்திருக்கிறார். 1987ல் பாப்லோவின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 2 பில்லியன் டாலர் (இன்றைய இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.12 ஆயிரத்து 800 கோடி!) ஆக இருக்கலாம் என்றும் ‘ஃபோர்ப்ஸ்’ கணித்திருந்தது.

இவ்வளவு பெரிய பணம் புழங்கியும், அவர் ஐந்து பைசா கூட வரி கட்டவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. தன்னுடன் பணியாற்றும் சகாக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் வாரி வாரி வழங்கியது போக,பொது மக்களுக்கும் கணக்கு வழக்கின்றி செலவு செய்து கொண்டே இருந்தார். இறைக்கிற கிணறு அல்லவா... ஊற்றெடுத்துக் கொண்டேதான் இருந்தது.

பாப்லோ பத்து ரூபாய் முதலீடு போட்டால் அது ஆயிரம் ரூபாயாகத் திரும்பி வந்துகொண்டே இருந்தது. எப்படியெனில், ஒரு கிலோ போதை மருந்தை தயாரிக்க பாப்லோவுக்கு ஆயிரம் டாலர் செலவாகும் என்றால், அதன் மதிப்பு அமெரிக்காவில் எழுபதாயிரம் டாலர்! தென்னமெரிக்காவில் இருந்த எந்த நாடுமே பாப்லோ மீது கை வைக்கத் துணியாத நிலையில், அமெரிக்காவின் மூன்று சட்டபரிபாலன அமைப்புகள் அவரை வேட்டையாடத் துணிந்தன.

போதை வியாபாரம், முறைகேடான பணப்பரிமாற்றம், காசு வாங்கிக் கொண்டு கொலை செய்வது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தி, தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தன. எந்தவொரு சாம்ராஜ்யமுமே ஒருகட்டத்தில் வீழ்ச்சிக்கு உள்ளாகித்தானே ஆகவேண்டும்? பாப்லோவுக்கு அப்படியொரு வீழ்ச்சியை ஒரு ‘போக்கிரி’ ஏற்படுத்தினான். ஆமாம். ‘போக்கிரி’யேதான்! 
 

(மிரட்டுவோம்)

www.kungumam.co

Link to comment
Share on other sites

 

காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன் 24

 
 

“யார் அந்த ராபர்ட் முஸெல்லா?”
எஸ்கோபார் கேட்டபோது யாராலும்
உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை.

ஏனெனில் -அதுவரை யாருமே முஸெல்லாவை நேரில் கண்டதில்லை. அவரது கீர்த்தியைத்தான் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.எஸ்கோபார் மட்டுமல்ல. கொலம்பிய கார்டெல் தலைவர்கள் அத்தனை பேருமே சந்திக்க ஆசைப்பட்ட நபர் முஸெல்லா.அவர் கருப்பா, சிகப்பா, ஒல்லியா, குண்டா, உயரமா, குள்ளமா எதுவுமே யாருக்கும் தெரியாது.
9.jpg
அமெரிக்க வர்த்தகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் வால்ஸ்ட்ரீட்டில் அத்தனை பேருமே முஸெல்லா பெயரை அப்போது பயபக்தியோடு உச்சரித்துக் கொண்டிருந்தார்கள்.அமெரிக்காவின் சிஐஏ அதிகாரிகளில் தொடங்கி, உள்ளூர் காவல்நிலையத்தின் கடைக்கோடி போலீஸ்காரர் வரை முஸெல்லாவைப் பற்றி ஏதேனும் துப்பு கிடைக்குமா என்று நேரம், காலமில்லாமல் அலைந்து கொண்டிருந்தார்கள்.

எஸ்கோபார் முஸெல்லாவைப்  பற்றி விசாரித்ததற்கு தகுந்த காரணம் இருந்தது.எண்பதுகளின் தொடக்கத்தில் திடீரென போதைத் தொழில் பெரும் சரிவினைச் சந்தித்தது. தென்னமெரிக்காவில் அரசுகளின் மறைமுக உதவியோடு கார்டெல்கள் டன் டன்னாக போதையை உற்பத்தி செய்தாலும், அதற்குரிய சந்தை அமெரிக்காவில்தான் இருந்தது.
9a.jpg
அமெரிக்காவில் விற்றது போக மிச்சம் மீதி இருந்தால்தான் ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் ஷிப்பிங் நடக்கும்.இப்படிப்பட்ட நிலையில் -திடீரென ஒட்டுமொத்த அமெரிக்காவுமே இரும்புக் கோட்டையாக மாறியது.போதைப் பொருட்களை கைமாற்றிவிடும் தரகர்கள் பலரும் கைதானார்கள். அல்லது நடுத்தெருவில் நாய் மாதிரி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அறுபதுகளில் இருந்து அமெரிக்காவுக்கும், தென்னமெரிக்க கார்டெல்களுக்கும் இடையே இருந்த தொடர்பு திட்டமிட்டு ஒவ்வொன்றாக துண்டிக்கப்பட்டு வந்தது.

வழக்கமான ஏஜெண்டுகள் பலரும் உயிருக்கு பயந்து இந்தத் தொழிலை விட்டு விலகி ஓட ஆரம்பித்தார்கள்.அமெரிக்காவில் தொழில் நடத்த வேண்டுமானால் முஸெல்லாவின் தொடர்பின்றி யாரும் செய்ய முடியாது என்கிற நிலை ஏற்பட்டது.எனவேதான், நம்முடைய காட்ஃபாதரும் முஸெல்லாவை வலைபோட்டு தேடிக் கொண்டிருந்தார்.

பெயருக்கு சைக்கிள் வர்த்தகம் செய்யும் தன்னுடைய அண்ணன் ராபர்ட்டோ எஸ்கோபாரை பிசினஸ் ட்ரிப் என்கிற பெயரில் அமெரிக்காவுக்கு அனுப்பி, முஸெல்லாவை தொடர்புகொள்ள முயற்சித்தார். பாப்லோவின் அத்தனை அமெரிக்க நண்பர்களும் முயற்சித்தும்கூட ராபர்ட் முஸெல்லாவை தொடர்புகொள்ளவே முடியவில்லை.முஸெல்லா எப்போதுமே தொடர்பு எல்லைக்கு வெளியேதான் இருப்பார். அவரிடமிருந்து நேரடியாக எவருக்குமே தொலைபேசி அழைப்புகூட வந்ததில்லை. ஆனாலும், அமெரிக்க கிரிமினல்கள் வட்டாரத்தில் முஸெல்லாவின் பேருக்கு நல்ல மரியாதை இருந்தது.

ஒரு கொடுக்கல் வாங்கலில் முஸெல்லாவின் பெயர் அடிபட்டால், வேறு யாருமே வம்பு தும்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள். தொழிலில் நாணயமானவர் என்று வெகுவிரைவிலேயே பெயர் எடுத்துவிட்டார். பல அமெரிக்க அரசியல்வாதிகளின் பினாமி சொத்துகளை முஸெல்லாதான் நிர்வகிக்கிறார் என்றார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களின் அன்றாடப் பிரச்னைகளும் முஸெல்லாவிடம் கொண்டு செல்லப்பட்டு, சகாயமான ரேட்டில் அனைத்தும் தீர்த்து வைக்கப்பட்டன.

அவருக்கு எந்த வேலை செய்கிறோம் என்பதில் அக்கறையில்லை. செய்யும் வேலையில் எவ்வளவு லாபம் என்பதை மட்டுமே பார்ப்பார். நூறு டாலர் கிடைக்கிறது என்றால், எந்த காரணமும் இல்லாமல் கழுத்தறுக்கவும் தயங்காத கொலைவெறியர் அவரென்று பேசிக்கொண்டார்கள்.எல்லாமே பேசிக் கொண்டார்கள், கேள்விப்பட்டார்கள்தான்.

ஏற்கனவே சொன்னமாதிரி முஸெல்லாவை யாரும் நேரில் கண்டதில்லை. அவர் தொடர்பான எந்தவொரு குற்றத்திலுமே, அவர் பெயரை தொடர்பு படுத்தி குற்றம் சாட்டுவதற்கு ஒரே ஒரு ஆதாரம்கூட இருந்ததில்லை.‘இவரைப் பற்றி ஓவர் பில்டப்பாக இருக்கிறதே?’ என்று நமக்கு எழும் சந்தேகம்தான் ஆரம்பத்தில் எஸ்கோபாருக்கும் எழுந்தது.

எனவேதான், மற்ற கார்டெல்கள் முஸெல்லாவை தொடர்புகொள்ள போட்டா போட்டி போட்டபோதும்கூட இவர் மட்டும் ஆர்வமே காட்டாமல் இருந்தார்.ஆனால் -தன்னுடைய பிரத்யேக போதை நகரில் தயாரிக்கப்படும் சரக்குகள் எதுவுமே அமெரிக்காவுக்கு கடத்தப்படாமல், மலை மலையாக கிடங்குகளில் குவிக்கப்பட்டிருந்ததைக் கண்டதும், வேறு வழியின்றி முஸெல்லாவுக்கு சரணம் போட்டே ஆகவேண்டிய கட்டாயம்.

கொலம்பிய கார்டெல்கள் கடைவிரிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள் என்கிற தகவல் முஸெல்லாவுக்கு தெரியாமலா இருக்கும்?
லாபத்தில் சதவிகிதம் பேசுவதில் தன்னுடைய கை ஓங்கும் வரை அவர் காத்திருந்தார். கிட்டத்தட்ட ஐம்பதுக்கு ஐம்பது என்று பேரம் பேசப்பட்ட நிலையில் களத்தில் குதித்தார்.

முதலில் முஸெல்லாவின் ஆட்கள் தொடர்பு கொண்டது எஸ்கோபாரின் மெதிலின் கார்டெல் போன்ற பெரிய அமைப்புகளை அல்ல.
கொலம்பியாவில் குடும்பமாகவே சின்ன அளவில் கார்டெல் அமைத்து போதைத்தொழில் செய்து வந்த கன்ஸாலோ மோரா என்பவரை, ஆழம் பார்த்து காலை விடுவதற்காக, முஸெல்லா இவரை தேர்வு செய்திருக்கலாம்.

கன்ஸாலோவின் கண்டெயினரை துறைமுகத்தில் தங்கள் வாகனங்களில் ஏற்றியதுமே உரிய தொகைக்கான செக் கிழித்துத் தரப்பட்டது. ‘கையிலே காசு, வாயிலே தோசை’ என்பது முஸெல்லாவின் சித்தாந்தம்.

‘கடன் அன்பை முறிக்கும்’ என்பதில் உறுதியாக இருந்தார். அவரும் யாரிடமும் கடன் சொல்லமாட்டார். அவரிடமும் யாரும் கடன் சொல்லக்கூடாது.
மோராவுக்கு ஒரு டீலிங்கை முஸெல்லா முடித்துக் கொடுத்திருக்கிறார் என்கிற தகவல் பரவியதுமே கொலம்பிய கார்டெல்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். தங்களில் ஒருவன் சாதித்து விட்டதாக கொண்டாடினார்கள்.

மோராவும், அவருடைய தந்தை மற்றும் சகோதரர்களும் அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட்டில் ஓர் சிறியளவிலான வர்த்தக நிறுவனத்தை நடத்தி வந்தார்கள். பேருக்கு அது ஓர் ஃபைனான்ஸ் கம்பெனியாக இருந்தாலும், முறைகேடான தொழில் கொடுக்கல் வாங்கல்களுக்கு ஒரு சட்டபூர்வமான முகமாகவே இருந்து வந்தது.

மெதிலின் கார்டெல் ஆட்களுக்கு ‘ஹவாலா’ டைப்பில் அமெரிக்காவில் இருந்து பணத்தை கொண்டு வரும் ஸ்டாக் புரோக்கர் ஒருவர் மோராவின் நெருங்கிய நண்பர். இந்த புரோக்கரோடு பாப்லோவின் குழுவினருக்கும் நல்ல தொடர்பு இருந்தது. இவர் மூலமாக மோராவை அவர்கள் தொடர்பு கொண்டார்கள். சுலபமான ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்கள்.

“முஸெல்லாவோடு நல்ல நட்புறவை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கொஞ்சமும் எதிர்பாராத லாபத்தை, எந்த முதலீடுமின்றி, உழைப்புமின்றி அந்த நட்புக்காக மட்டுமே நீங்கள் பெறுவீர்கள்...”

பாப்லோவின் வாக்குறுதி மோராவுக்கு உற்சாகத்தை அளித்தது. மெதிலின் ராஜாவே, தன்னை போன்ற சின்ன லெவல் மாஃபியோவோடு தொடர்பு கொண்டு பேசியது பெரிய கவுரவம் என்று நினைத்தார்.எனவே, முஸெல்லாவை சந்தித்துவிட முடிவெடுத்தார்.முஸெல்லாவுக்கும், மோராவுக்கும் இடையே இருந்த ஒரே தொடர்பு எமிலோ என்கிற தரகர்தான்.

கொலம்பிய கார்டெல்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக, தான் முஸெல்லாவை சந்தித்துத்து உரையாடவேண்டும், அதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று எமிலோவை அவர் கேட்டுக் கொண்டார்.“முஸெல்லா யாரையும் சந்திக்க விரும்புவதில்லையே? அவருடைய முகம் யாருக்கும் தெரியாததுதான் அவரது பலம். அதுவுமின்றி இப்போதுதான் நீங்கள் எங்களோடு தொழில் செய்ய ஆரம்பித்திருக்கிறீர்கள். அதற்குள்ளாக...” எமிலோ முடிப்பதற்குள் மோரா குறுக்கிட்டார்.

“நான் பாப்லோ சார்பாக சந்திக்க விரும்புகிறேன்!”பாப்லோவின் பெயரைக் கேட்டதுமே எமிலோ, கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தான்.“பாப்லோவின் சார்பாக என்பதால் ஒருவேளை அவர் உங்களை சந்திக்க விரும்பலாம். கேட்டுப் பார்க்கிறேன்...”
 

(மிரட்டுவோம்)

- யுவகிருஷ்ணா

www.kungumam.co

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.