Jump to content

சொல்வனம் // ஆனந்த விகடன் - கவிதைகள்


Recommended Posts

சொல்வனம்

படம்: கே.ராஜசேகரன்

 

அன்பு எனும் நான்

ன் அன்பு
ஒரு குருட்டுப் பிச்சைக்காரனின் கைத்தடி
மனமுவந்து பெறும் திருநங்கையின் ஆசி
குஷ்டரோகியின் நாற்பட்ட புண்ணுக்கான களிம்பு
நிறைமாதக் கர்ப்பிணியின் மசக்கை
முதிர்கன்னி எதிர்நோக்கும் ஆளரவமற்ற தனிமை
ஊமைச்சிறுமி யாசகம் பெற்ற ஐந்து ரூபாய் பணம்
மடி முட்டிக் கவ்வும் மறியின் காம்பு 
இளங்கன்று மேனியை வருடும் பசுவின் நா
வானம் பார்த்த வறண்ட பூமியின் முதல் தூத்தல்
கால்கடுக்கக் காத்திருக்கும் முதியவளின் கடைசிப்பேருந்து
தடம் மறந்த குட்டியானைச் செவிமடுக்கும்
தாய் யானைப் பிளிறல் சத்தம்
கலைமான்கள் அருந்தும் காட்டுச்சுனை
இணைக்கென பாதியிரவில் பார்சலாகும் மூன்று பரோட்டா
முதுகாவலாளியின் குட்டித் தூக்கம்
இறுதிவரை சொல்லப்படாத ஒருதலைக் காதல்
கண்ணீர்த்துளி பெருக்கும் இரவின் கனிவான பாடல்
பைத்தியம் கையேந்தும் அதிகாலைத் தேநீர்
நோய்வாய்ப்பட்ட வயோதிகன் விரும்பிக் கேட்கும்
விடுதலை மரணம்
என் அன்பு…

- தர்மராஜ் பெரியசாமி

p100.jpg

ஓவியக்காரி

சுவரெல்லாம் கிறுக்கத் தொடங்கிய
லாவண் குட்டி
முதலில் காடு வரைந்தாள்
மரக்கிளையில் மீன் வரைந்தாள்
நதி வரைந்தாள்
அதன் நீரில் விலங்குகள் வரைந்தாள்
வானம் வரைந்தாள்
அதன்மேலே படகு வரைந்தாள்
கடல் வரைந்தாள்
அதன் மேலே விமானம் வரைந்தாள்
அடுத்து என்ன வரைவதென
யோசித்துக்கொண்டே தூங்கிப்போனவள்
கனவிலும் எதையோ
வரைந்துகொண்டிருப்பாள்.

- கோ.பகவான்


காதல் காலம்

ன்றும்கூட சட்டை காலரில்
கர்சீப்பை வைத்துக்கொண்டு போகும்
ஆண்களின் முகத்தை
வலிய வந்து பார்க்கிறாள்
விமலா அக்கா;
இன்றும்கூட நம்பிக் கொண்டிருக்கிறாள்
ரயில்வே டிராக்கில் அடிபட்டு செத்த
முகமழிந்த பிணம்
வில்லியம் அண்ணா இல்லையென;
இன்னும்கூட நின்று கொண்டிருக்கிறது
அந்தப் பேருந்து நிழற்குடையும்
தட்டச்சுப் பயிலக பாதாம் மரமும்
காவியக் காதலுக்கு சாட்சியாய்;
இன்றும்கூட உயிரோடிருக்கிறார்
ஊர்ப் பெரியவர் சதாசிவம்
தான் எப்போதோ செய்துவிட்ட
பாதகங்களுக்கு
கோயில்தோறும் பாதயாத்திரை
செய்து பிராயச்சித்தம் தேடிக்கொண்டு;
இன்றும்கூட எங்கோ வளர்கிறது
வில்லியம் அண்ணாவின் வெளிர் நிறத்தில்
விமலா அக்காவின் அழகான கண்களுடன்
ஓர் அனாதைப் பிள்ளை;
இன்னும்கூட எங்கோ மூலையில் கிடக்கிறது
அந்த ரெஜிஸ்டர் ஆபீஸ் தடி நோட்டில்   
விமலா.s வில்லியம்.j என்ற பெயர்கள்...

- கோஸ்ரீதரன்

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓவியக்காரி சூப்பர் ......, ஏனைய கவிதைகளும் நன்று....!  tw_blush:

Link to comment
Share on other sites

சொல்வனம்

 

ஒற்றைக் குறுஞ்செய்தி

கோரைப் பற்களெனும்
கொடிய சொற்களைக்கொண்டு
கதறக்கதறக் கிழித்துக் குதறுகிறேன்
இம்மழை இரவை.
விடியும்வரை தூக்கம் தொலைத்து
செந்தூரமாய் விழிகள் சிவந்து
தேம்பியழுது
கண்ணீர் வறண்டு
ஆறுதல் கரத்திற்காய்
காத்திருத்தலைத் தொடர்கிறது.
தவளைபோல
விடாமல் பிணாத்துகிறது.
கதிரவனைப் பறிகொடுத்த வெம்மை
தன் சோகம் சொல்லி
அதனோடு இணைந்து கொள்கிறது.
தன்னை விட்டுவிடுமாறு
கன்னங்களில் போட்டுக்கொண்டு
கால்கள் பிடித்து இறைஞ்சுகிறது.
கணநேரத்தில் ஊடலகற்றுமாறு
உன்னிடமிருந்து ஒற்றைக் குறுஞ்செய்தி
வந்தால்கூடப் போதும்.
நினைவிலாவது அணைத்துக்கொண்டு
துயர்மிகும் இத்தனிமைக்கு
விடுதலை கொடுத்துவிடுவேன்.

- பாப்பனப்பட்டு வ.முருகன்

p64a.jpg

புல்லாங்குழல் மனசு

கடைசிப் பேருந்தைத்
தவறவிட்டவனின்
மனவிசும்பல் போலிருக்கிறது
இயலாமையை எதுவும் செய்யமுடியாத
அந்தப் பொழுதுகளில்
திருவிழாவில் தொலைந்தவனின்
மனநிலையைப் போலிருக்கிறது
விஷேசங்களில் சமனின்மையைச்
சந்திக்கும் பொழுதுகளில்
ரங்கராட்டினத்தின் உச்சியில்
ஏற்படும் பீதியைப் போலிருக்கிறது
எதிர்பாராமல் வந்துநிற்கும்
கடன் கொடுத்தவனைக்
கண்களால் பார்க்கும் பொழுதுகளில்
இவைகள் இல்லாவிட்டாலும்
வாழ்க்கை ருசிக்காது என்று
ஆறுதல் கொள்கிறது மனசு
எதிர்பாராமல் விழுந்துவிட்ட துளைகளையும்
புல்லாங்குழலாய் மாற்றிக் கொள்பவனின்
மனநிலையைப் போல

- விகடபாரதி

வாஞ்சையின் துளி!

வீசும் சிறுஅறை ஓரத்தில்,
அச்சிறு மேசை
நடுவில் மலினமான போத்தல் ஒன்று,
சுற்றிலும் பகிர்ந்துகொள்ளும் பிளாஸ்டிக் டம்ளர்கள்,
அருகே வாட்டர் பாக்கெட்,
சிவப்பேறிய மாங்காய்ப் பத்தை,

உழைத்து உப்பேறிய கரங்கள்
அதனைச்சுற்றி
நடுவில்
கை தட்டி ஏந்துபவளின்
கரங்களுக்குப் பதிலளிக்க
சட்டைப்பையில் எதுவுமில்லை,

“காசில்லக்கா! ஆனா உன் கையால
ஆசிர்வாதம் பண்ணிட்டுப்போக்கா!”

இறைநம்பிக்கையற்ற யாசகியோ
துணுக்குற்றவளாய்
ஒரு கணம்
அள்ளஅள்ளக் குறையாத
உப்புநீரின் வாஞ்சையை
ஒரு துளி உதிர்த்து
மறைந்தாள்
பெருந்தேவியாய்!!

- லிவிங் ஸ்மைல் வித்யா

வேண்டுதல்

நெடுஞ்சாலையில் விழுந்துகிடக்கும்
ஒரு பூவைப் பார்த்துவிட்டு
பேருந்தில் அமர்ந்திருக்கும் சிறுமி
அவசர அவசரமாகக்
கண்களை மூடிக்
கடவுளை வேண்டுகிறாள்
ஒரு வேகமான
காற்று வேண்டி.

- பிரபு

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

சொல்வனம்

ஓவியம்: இளையராஜா

 

அரை வேக்காட்டில் ஓர் அறம்

இப்படியே நடக்கிறது
இதோ இன்றும் ஓடி ஒளிய இயலாது
முட்டுச்சந்தொன்றில் மாட்டிக்கொண்டது ‘அறம்'
கணேசனிடம்.

ஒரு கவிதை வாசிக்கத் தந்து
பட்டபாடு...
“காற்புள்ளி, முற்றுப்புள்ளி, ஆச்சர்யப்புள்ளிகூட
அந்தந்த இடத்தில் சரியாய் இருக்கிறது
ஆனா, அறம் இல்லையேப்பா''
என்று உதட்டைப் பிதுக்கினார்.

மாட்சிமை பொதிந்த அரசர்
நம் கைகளில் இருக்கும்
அத்தனையும் செல்லா நோட்டுக்கள்
என்றறிவித்த நான்காம் நாள்
வங்கி வரிசையில் அரசரின் அறம் குறித்து
பேசிய பேச்சுக்கு சட்டை கிழிபடாமல்
வீடு போய்ச் சேர்ந்தது அவர் நல்ல நேரம்.

“அம்மாவுக்குப் பிறகு சின்னம்மா என்பது
அந்தந்தக் குடும்ப அறம்”
அண்ணாச்சியின் சமீபக் கூற்று
காந்தி ஜெயந்தி, மிலாடி நபி அன்று
ஷட்டர் தட்டி வாங்கிக் குடித்துவிட்டு
மிளகு உப்பு தூவி நான்காய் மடித்து
அவர் விழுங்கியதெல்லாம் ஹாஃப்பாயிலை அல்ல
அறத்தைத்தான் என்று யாரேனும்
அவரிடம் சொல்லுங்களேன்!

- ஸ்டாலின் சரவணன்

 

p58a.jpg

அதிகாலைக் காகம்

இருள் உதிரி உதிரியாகப் பறப்பதுபோல பறக்கின்றன
அதிகாலைக் காகங்கள்.
காக்கை, ஒரு பின்நவீனத்துவப் பறவை
பறவை அழகியலின் அதிகார மையத்தை அது சிதைக்கிறது.
கறுப்புத் துணியை முடிச்சுப்போட்டதுபோல
மரக்கிளையில் அமர்ந்திருக்கும் காக்கைகள்
இல்லாத காலையை
எனக்குப் பிடிப்பதில்லை
காக்கை என்பது, கடவுளின் மன்னிப்பு
வெள்ளைப் பன்றியின் ரோஸ் நிற மூக்கைப்போல
பாவங்கள் கவர்ச்சிமிகு வண்ணத்தில் இருக்கும்போது
கடவுளின் மன்னிப்பு எப்போதும்
கறுப்பு வண்ணத்தில்தான் இருக்கிறது
கடவுளே
இந்தக் காலையை
எத்தனை அழகாக்கிவிட்டது
உன் மன்னிப்பு!

- கார்த்திக் திலகன்


மொழி

ஒரே முத்தத்தில்
என் அத்தனை மகரந்தங்களையும்
வாங்கிக்கொள்கிறாய்.
செம்பருத்தியின்
மொழி புரிய
ஆரம்பித்திருக்கிறது
எனக்கு!

- இந்து

http://www.vikatan.com

11 ஜ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைகள் மிக நன்றாக இருக்கின்றன, அவற்றைவிட அந்த ஓவியம் அபாரம்....!

--- ஓவியத்தின் வர்ணச் சேர்க்கைகள்....!

---பெண்ணின் கணுக்கால்கள் விரல்களின் அழுத்தம் & கெந்தல் நிலை....!

--- பட்டுசேலையால் வழியும் உள் பாவாடையின் மடிப்புகள்...!

--- வெள்ளிக்கு குடத்தில் பிரதிபலிக்கும் சூரிய ஒளி....!

--- அந்த வாளியும் அதன் கீழ்ப்பாகத்தில் குவிந்த தட்டும், நிழலும்...!

--- வாளியின் கைப்பிடியில் விளிம்பிகளில் படர்ந்திருக்கும் கறள்...!

--- கயிற்றின் முடிச்சு, அது ஒரு தூணில் கட்டபட்டிருக்கும் அழகு...!

--- கப்பியின் அழகு, அது பொருந்தியிருக்கும் ஆணி, மேல்வளை பொருத்தியுள்ள இரு ஆணிகள் அதன் இரு முனைகளிலும் நீர் போகாமல் பொறுத்தியுள்ள தகடுகள்.....!

--- பின்னணி காட்சி....!

--- பெண்ணின் கையின் அழகு, அழகான பட்டுச்சேலை, ஜான் அகலச் சரிகை...!

--- பிளவுஸின் ஊடே மங்கித் தெரியும் மேனியின் நிறம்....!

--- முன்னிரவின் கூடலை நினைத்து முறுவலித்த முகத்துடன் லயித்திருக்கும் முகபாவம்....!

அருமையோ அருமை, இப்பொழுது அந்த ஓவியத்தைப் பாருங்கள்.....!  tw_blush: 

Link to comment
Share on other sites

உங்கள் வர்ணனை அருமை..tw_thumbsup:tw_thumbsup:

தனிய பச்சையை போட்டுவிட்டு போகமுடியவில்லை..tw_blush:

4 hours ago, suvy said:

கவிதைகள் மிக நன்றாக இருக்கின்றன, அவற்றைவிட அந்த ஓவியம் அபாரம்....!

--- ஓவியத்தின் வர்ணச் சேர்க்கைகள்....!

---பெண்ணின் கணுக்கால்கள் விரல்களின் அழுத்தம் & கெந்தல் நிலை....!

--- பட்டுசேலையால் வழியும் உள் பாவாடையின் மடிப்புகள்...!

--- வெள்ளிக்கு குடத்தில் பிரதிபலிக்கும் சூரிய ஒளி....!

--- அந்த வாளியும் அதன் கீழ்ப்பாகத்தில் குவிந்த தட்டும், நிழலும்...!

--- வாளியின் கைப்பிடியில் விளிம்பிகளில் படர்ந்திருக்கும் கறள்...!

--- கயிற்றின் முடிச்சு, அது ஒரு தூணில் கட்டபட்டிருக்கும் அழகு...!

--- கப்பியின் அழகு, அது பொருந்தியிருக்கும் ஆணி, மேல்வளை பொருத்தியுள்ள இரு ஆணிகள் அதன் இரு முனைகளிலும் நீர் போகாமல் பொறுத்தியுள்ள தகடுகள்.....!

--- பின்னணி காட்சி....!

--- பெண்ணின் கையின் அழகு, அழகான பட்டுச்சேலை, ஜான் அகலச் சரிகை...!

--- பிளவுஸின் ஊடே மங்கித் தெரியும் மேனியின் நிறம்....!

--- முன்னிரவின் கூடலை நினைத்து முறுவலித்த முகத்துடன் லயித்திருக்கும் முகபாவம்....!

அருமையோ அருமை, இப்பொழுது அந்த ஓவியத்தைப் பாருங்கள்.....!  tw_blush: 

 

நன்றி..:)

Link to comment
Share on other sites

சொல்வனம்

படம்: சி.சுரேஷ்பாபு

 

நகரும் வாழ்க்கை

புலி பசித்தாலும்
புல்லைத் தின்னாது
வைராக்கியம் பேசி
வாழ வழி இல்லை
எலிக்கறி சமைத்து
எப்படியோ நகருது
எழவெடுத்த வாழ்க்கை.

- மீனா சுந்தர்

புழுக்கம்

திடீரென
மின்சாரம் அறுந்த இரவில்
புழுக்கம் தாங்காமல்
படுக்கையைத் திண்ணைக்கு
இடம் மாற்றிக்கொண்ட அப்பா
வீட்டுக்குள் எட்டிப்பார்த்து
இருள் கிழிக்கும் குரலில்
`உள் தாப்பா போட்டுத் தூங்கு' என்றார்
அம்மாவை!

- சசிஅய்யனார்

p92a.jpg

சித்திரைப் பட்டம்

வருடம் தவறாமல்
சித்திரைப் பட்டத்தில்
சுரைக்கொடி விதை போட்டு
கூரை மேல்
ஏற்றிவிடுவாள் அம்மா.
காய்ப்பது ஒருபுறம்.
பொட்டுப்பொட்டாய் நடுவீட்டில்
சூரியத்துளிகள்
ஒழுகி விழுவதைத்
தடுக்குமென்கிற தந்திரம்கூட.

- மீனா சுந்தர்

தவணைக் கறி

வங்கிக் கடனில் முளைத்த பயிர்கள்
தப்பியப் பருவமழையில் கருகின
சருகை மென்று சப்புக்கொட்டிய கால்நடைகள்
சரளைக் கல்லையும் மெல்லுகின்றன
இடையிடையே கானலைக் குடிக்கும்
மொடக் மொடக் சத்தம்...
சதுரங்கக் கட்டங்களாகப் பிளந்த நிலத்தின் மீது
தாவித்தாவி தவணை வசூலிக்கும் லத்திகள்.
வெடித்த நிலத்தில்
ஒளிந்த வெளுத்தக் கோவணங்களைக்
கூடிக் கொறிக்கும் வெள்ளெலிகள்
மண்வெட்டியைப் பிளந்து குளிர்காய்கின்றன.
மக்கும் குப்பைகளும் மக்காத குப்பைகளும் கொட்டிப் பிளந்த அக்குழி மேல் பொழிகிறது
செல்லாப் பணங்கள் கரைந்த
மரக்கூழ்.

- பச்சோந்தி

தனி...

கண்ணாமூச்சி
விளையாட்டு ஆரம்பமாயிற்று
அஸ்வின் பீரோ பின்னால்
ஒளிந்துகொண்டான்.
லாவண்யா கதவிற்குப் பின்னால்,
பிரித்வி, மகேஷ்
மாடிப் படிக்கட்டு கீழே ஒளிந்துகொண்டார்கள்.
கண்களைக் கட்டியபடி
கைகளைத் துழவியபடி
தேட ஆரம்பித்திருந்தான் கிருஷ்ணா
ஒளிவதற்கு மறைவிடமேதுமின்றி
தனியே சோகமாய் அமர்ந்திருக்கிறது
லாவண்யாவின் டெடிபியர் மட்டும்.

- கவி மாயாவி

http://www.vikatan.com/

25 ஜ

Link to comment
Share on other sites

சொல்வனம்

கோலிக்குண்டு கண்கள்

இந்தக் குட்டிப்பையனுக்கு
யார் சொல்லிக் கொடுப்பது?
பதில் சொல்ல முடியாத
கேள்விகளாகப் பார்த்துப்
பார்த்துக் கேட்கிறான்.
அவன் உதடுகளைப் பார்த்தால்
முத்தத்தின் இருக்கையைப்
போலவே இருக்கும்.
பதில் தெரியாத
நேரத்தில் எல்லாம்
அதில் ஒரு முத்தத்தை
உட்கார வைத்துவிட்டுப்
போய்விடுவேன்.
நேற்று அவன்
கேட்ட கேள்வியில்
என் மனைவியே
முகம் சிவந்துவிட்டாள்.
அவளின் சிவப்பு வண்ண
வெட்கத்துக்கும்
அவன் கோலி வடிவக்
கண்களுக்கும் இடையே
என் முத்தம் கிடந்து
அல்லாடியதைப்
பார்க்க பரிதாபமாக
இருந்தது எனக்கு.

- கார்த்திக் திலகன்

p54a.jpg

நேசம்

மகிழுந்து கண்ணாடியில்
படிந்த
பனியில்
தனது எண்ணங்களை
சித்திரமாக்குகிறாள் சிறுமி
தனது பார்வையால்
அள்ளிக்கொண்டு
பிரகாசிக்கிறது
வெயில்.

- புன்னகை பூ ஜெயக்குமார்

நீருள்ள குளம்

கைக்கு அடக்கமாக ஒரு
தவளைக்கல்லைத்
தேடி எடுத்துவிட்டேன்
இப்போது
நீருள்ள ஒரு
குளத்தைத்தான்
தேட வேண்டும்.

- பிரபு

பூர்வீக வீட்டின் உத்திரங்கள்

ஏதொவொரு சொல்லுக்காய்
ஏதோவொரு நிராகரிப்புக்காய்
ஓடிச்சென்று தாழ்ப்பாளிட்டு
விதி முடிக்கும்
யாரோ ஒருவருக்காய்
திடுக்கிட்டு கதவுடைத்துத்
திறக்கிறவர்களின்
கால்களில் விழுந்து
மன்னிக்கச்சொல்லி
மன்றாடுவதைப் போல்தான்
கிடக்கிறது
நாத்தள்ள
விறைத்துத் தொங்கும்
சோடிக்கால்களின் அடியில்
எப்போதும்
ஒரு பழைய நாற்காலி.

- கார்த்தி

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

சொல்வனம்

 

அவரவர் சாமர்த்தியம்

இனி ஏழைகள் இருக்கக் கூடாது என
அவர்கள் குடிசைகளுக்குத் தீ வைத்தாகிவிட்டது.
இனி நடுத்தர வர்க்கம் இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு
அவர்கள் வேலை வாய்ப்புகளைப் பிடுங்கியாகிவிட்டது.
இனி விவசாயிகள் இருக்கக் கூடாது
என்று சிந்தித்து
அவர்கள் நிலங்களை ப்ளாட் போட்டாகிவிட்டது.
இனி சிறுவணிகம் இருக்கக் கூடாது என
ஆன்லைன் வர்த்தகத்தை அவிழ்த்துவிட்டாகிவிட்டது.
இனி சாமானியர்கள், பாமரர்கள், சிறுபான்மையினர் என
எவரும் இருக்கக் கூடாது என ஆராய்ந்து
உயிர்த் தியாகம் என்ற முழக்கத்தை
ஒலிக்க விட்டாகிவிட்டது.
இனி இந்த தேசத்தில்
இருக்க வேண்டியவர்கள்
மேட்டிமை குடிமக்களே...
மற்றவர்கள்
அவர்களின் பட்டி ஆடுகளாகவோ,
கொட்டில் மாடுகளாகவோ,
காவல் நாய்களாகவோ
இருப்பதற்கு யாதொரு தடையும் இல்லை.

- விகடபாரதி

p32.jpg

பெயருந்து

அரிதாகப் பேருந்துகள் வந்துசெல்லும் பாதையது.
அதையொட்டிய கிராமங்களில்
`கோபாலகிருஷ்ணன் போயிட்டானா?’ எனக் கேட்கும்போது
காலை எனில் மணி எட்டு
மதியம் எனில் மணி ஒன்று
மாலை எனில் மணி ஏழு என்று அறியப்படும்.
நாளொன்றுக்கு நான்கு முறை நகர் சென்று மீளும்
கோபாலகிருஷ்ணன் ரோட்வேஸ்
காலையில் தனது நான்கு சக்கரங்களால்
தினசரிகளின் வழி உலகை உருட்டி வருகிறது.
மதியம் அழுத்தி ஒலிக்கும் அதன் காற்று ஒலிப்பான்
பள்ளிகளால் துரத்தப்பட்டு தொலைவில்
கால்நடைகள் மேய்க்கும் சிறுவர்களின்
தூக்குச்சட்டிகளைத் திறக்கவைக்கிறது.
மாலையில் உரத்து ஒலிக்கவிடும் கானாக்களால்
ஜவுளிக்கடைகளில் துணி கிழித்து
திரும்பும் கிராமத்து யுவதிகளின்
பணியழுத்தம் தணிக்கிறது.
தூரத்தில் துண்டை ஆட்டியபடி வரும்
ஒரே ஒரு பயணிக்காக நிறுத்தி ஓட்டிச்செல்லும்
அதே ஓட்டுநர்தான்,
பிரசவ வேதனையுறும் மகளிரை அசுர வேகத்தில் சென்று
அரசு மருத்துவமனையில் சேர்ப்பவரும்.
நன்றிக் கடனாக `கோபாலகிருஷ்ணன்’ எனும் நாமத்துடன் உலவும் சிறுவர்கள் ஊருக்கு ஓரிருவர் உண்டு.
கடைசிப் பேருந்தும் போய்விட்டதாகப் புரண்டுபடுக்கும் எல்லையோர அய்யனாருக்கு
விபத்தின்றி கழிந்த ஒவ்வொரு நாளையும் சூடமென எரித்து
ஓடிச்சென்று பேருந்தில் ஏறும் நடத்துநரை
சாலையோரப் புளியமரப் பொந்திலிருந்து
தனது ஒளிர்ந்துருளும் விழிகளால்
நித்தமும் வழியனுப்புகிறது ஆந்தையொன்று.

 - கே.ஸ்டாலின்


ஒரே ஒரு கணம்

நெரிசலற்ற அதிகாலைப் பேருந்தில்
இருவர் அமரும் இருக்கையின் ஜன்னலோரத்தில்
தனியளாகச் சப்பணமிட்டு அமர்ந்திருக்கிறாள்
அறிவியல் புத்தகத்தை மடியில் விரித்தபடி.
ஒரு வரி வாசிப்பதும் சன்னலை வெறிப்பதுமாக
நீளும் பயணத்தில்
திடீரெனப் பரபரப்பாகி இரு கைகளையும் குவித்துப்
பிரார்த்திக்கிறாள்.
இடது புறம் கடந்த ஆலயமா
வலது புறம் கடந்த ஆம்புலன்ஸா
அறிவியல் புத்தகமா
பிரார்த்தனை எதன்மீதென அறிய
அவளின் உதடுகள் முணுமுணுப்பை
உற்றுக் கேட்கிறேன்... புரியவில்லை.
கடவுளே ஒரே ஒரு கணம்
என்னைக் கடவுளாக்கேன்.

 - இரா.பூபாலன்

http://www.vikatan.com

1 பி

Link to comment
Share on other sites

சொல்வனம்

 

32p1.jpg

கறுப்பு வெள்ளை

யல்தேசம் ஒன்றில் தலைவியைப்  பிரிந்திருப்பவன்
தலை துவட்டும் வேளையில்
தேங்காய்ப்பூ டவலில் சிக்கிய
சிறுமுடி ஒன்றின் வழியே நீண்டு வளர்கின்றன
கூந்தலிழை சிக்கிய நினைவுகள்.

துரித உணவில் அவனுக்கு
நீண்ட மயிர் தென்படாத அதே வேளையில்
அவளுக்குப் புரையேறுவதாக நீட்டிக்கப்படுகிறது
இருவருக்குமான ஆயுள்.

கடைசியாக அவளிட்ட எச்சில் முத்தத்தை
உலராமல் தேக்கிவைக்க
வளர்க்கப்பட்டிருந்த தாடியின்
இடையிடையே வெள்ளியாக முளைவிட்டு மின்னத் தொடங்கியிருந்தது
பிரிதுயர் அன்பு.

வேர்களைத் தேடி உதிர்ந்த வழுக்கையுடன்
பாதி கட்டி பூசப்படாத வீடு திரும்பியவனை
நரைத்த தலையோடு வரவேற்பவளின் அணைப்பில்
பாதிகளால் முழுமை அடைகிறது
கறுப்பு வெள்ளை வாழ்க்கை.

- சுபா செந்தில்குமார்


பட்டாம்பூச்சி ஸ்டிக்கர்

ரே வெட்டுதான்
துண்டான ஆட்டின் தலையை
குனிந்துகூடப் பார்க்கவில்லை அய்யனார்.
விற்றுத் தீர்ந்த கூடையில்
வீடு வந்தும் போகவில்லை பூவாசம்.
சக்கரத்தில் நசுங்கிய பட்டாம்பூச்சியைக்
கண்டுகொள்ளாமலேயே போகிறான்
வாகனத்தில் பட்டாம்பூச்சி ஸ்டிக்கர் ஒட்டிய
லாரிக்காரன்.

- பிரபு


குறுக்குக்கோடு

விருப்பமான பாடலொன்றின்
இடையிசையில் இருந்து மெள்ள முன்னேறி
முதல் வரியைப் பிடிப்பதுபோலன்றி,
வழி தவறிய கன்றுக்குட்டியை
தாய்ப்பசுவிடம் சேர்த்திட  
வளைந்து நெளிந்த பாதைகளில் பயணித்து
நெருங்கிடும் வேளையில்
தடையென வரும் குறுக்குக்கோட்டின் முன்
திகைத்து நிற்கும் சிறுவனின்
நகரும் பென்சில் முனையென
உன் மீதான வெறுப்பின்
எந்தவோர் இழையின் தொடர்ச்சியும்
உனது பேரன்பின் சாகரத்தில்
முடிவது கண்டு திகைக்கிறேன்.

- கே.ஸ்டாலின்


வீடு

வாடகையில்
500 ரூபாய் உயர்த்தி
கேட்கிறார் வீட்டுக்காரர்.
அதிகம்தான் என்றாலும்
ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.
பரணில்,
நிலத்தை அடகுவைத்து
கடன் வாங்கிய பத்திரங்கள் இருக்கும்
பெட்டிக்குப் பின்னே
கூடுகட்டி குஞ்சு பொரித்திருக்கும்
சிட்டுக்குருவிக்காகவாவது.

- கி.ரவிக்குமார்

http://www.vikatan.com

8பி

Link to comment
Share on other sites

சொல்வனம்

படம்: ஸ்ரீதர் பாலசுப்பிரமணியம்

 

பாட்டி வீட்டிற்கு வந்த கிளி

ஊருக்கு ஒதுக்குப்புறத்திலிருந்த
அந்த வெற்று நிலத்தில்
பெரிய மாமரமொன்று முன்பு இருந்தது.
காக்கைகளும் குருவிகளும் கிளிகளுமாய்
எப்போதும் இரைச்சலாயிருக்கும்
அந்தப் பிரதேசம்.
போனவருடம்தான் புளுப்ரின்ட் போட்டு
நிலத்தைச் சமன் செய்திருந்தார்கள்.
மூன்றடுக்கு மாடிகளோடு இப்போது
பிரமாண்டமான கட்டடமாய்
மாறிப்போயிருந்தது அந்த மாமரம்.
போனவாரம் மதிய நாளொன்றில்
அந்த வழியாகப் போகும்போது
எதேச்சையாய் நான் பார்த்தேன்
கீச் கீச்சென்று கத்தியபடி
ஒரு சின்னக் கிளியொன்று
குதூகலமாய் அந்த வீட்டையே
சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தது.
மாலையில் திரும்பவும்
அந்த வீட்டைக் கடக்கையில்
அப்போது அந்தக் கிளியைக் காணோம்.
கோடை விடுமுறைக்காக
வெகுதூரத்திலிருந்து
பாட்டி வீட்டைத் தேடி
வந்திருந்த கிளியோ என்னவோ?

 - எஸ்.நடராஜன்

p62a1.jpg

பொன்னூஞ்சல்

வயோதிகத்தின் வெறுமையில்
வதைக்கும் வறுமையில்
கடன் தொல்லையில்
காதல் தோல்வியில்
கணவன் மனைவி பிணக்கில்
தோற்ற அவமானத்தில்
களவாணிப்பட்டம் கிட்டிய களங்கத்தில்
நாண்டு நா வெளித்தள்ள
எம்மூர் சீவாத்திகள் விழிபிதுங்கத் தொங்கும்
ஏரிக்கரை புளியமரத்திற்கு
எமகாதக மரமெனும்
ஏச்சும் பேச்சும் பழியும் பாவமும்
அடியோடு நீங்கிற்று
நடுநிசியில் ஊரடைந்து
கூடாரமிட்டு குடியேறிய
கழைக்கூத்தனின் மகள்களில் ஒருத்தி
கயிற்றூஞ்சல் கட்டியாடிய கணம்தொட்டு!

-ஸ்ரீதர்பாரதி

வீடற்றவனின் வார்த்தைகள்

வீடிருப்பவனுக்கு
வெள்ளம் என்றும்
வேக்காலம் என்றும்
கடுங்குளிர் என்றும் சொல்ல
சொல்லிருக்கிறது
வீடற்றவனுக்கு
வீடு என்ற ஒற்றைச் சொல்லே
எல்லாமாக இருக்கிறது
வியர்வையோ
ஊதக் காத்தோ
மழையோ
வீடற்ற தன்மையிலேயே
எல்லாவற்றையும்
ஒன்றென பாவித்துக் கடந்துவிடும் அவன்
ஒதுங்கிக்கொள்ள
ஒரு வீட்டின் வெளி ஓரம் போதும் என்று
ஓடிக்கொண்டே இருக்கிறான்.

-விகடபாரதி

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சொல்வனம்

 

 

80p1.jpg

அறியா முத்தம்

குட்டியம்முவிடம்
விளையாட்டாகச் சொன்னேன்
அந்தக் காட்சியிலுள்ள கதாநாயகி
நான்தானென்று
திடீரென்று கதாநாயகி கதாநாயகனுக்குக்
கன்னத்தில் முத்தமிடுவதைக் கண்டு
`நீ என்ன முத்தம் கொடுக்குற...
அது யாரு?’ என்று கேட்கிறாள்.
`உனக்குத்தானே முத்தம் தந்தேன்’ என்றபோது
குழைந்தபடி ஒப்புக்கொள்கிறாள்
கன்னத்து எச்சிலைத் துடைத்தபடி.

- க.சி.அம்பிகாவர்ஷினி

அப்பாவின் சிரிப்பையே சிரிக்கிறேன்...

ட்டுக்கோட்டை பேருந்து நிலையத்துக்குள் 80p2.jpg
நுழையும்போது
நிலம் மெள்ளத் தெளிய ஆரம்பித்தது.
அடுத்த பேருந்தைப் பிடிக்கும் அவசரத்தில்
நான்கு வடைகளை காலை உணவாக வாங்கி வந்தார்.
அந்தப் பேருந்தில் போனால்தான் திருத்துறைப்பூண்டியில்
அக்கா தங்கியிருக்கும் மாணவியர் விடுதிக்கு
பத்து மணிக்குச் செல்லலாம்.
இந்த ஞாயிறு பெற்றோர்கள் பிள்ளைகளைச்
சந்திக்க அனுமதியில்லை.
எனினும்
உடல் நலக்குறைவால் சிரமப்படும் அக்காவைப் பார்க்க
சிறப்பு அனுமதி வாங்கியிருந்தார் அப்பா.     
அவசரமாகப் பிடித்த பேருந்தில் அமர்ந்த வேகத்தில்  
நான்கு வடைகளும் என் வயிற்றுக்குள் தஞ்சமானது  
அப்போது என்னைப் பார்த்துச் சிரித்தார் அப்பா.
  
அக்காவைப் பார்த்து
அவளுக்குத் தேவையான பொருட்ளை வாங்கிக் கொடுத்து
செலவுக்குப் பணம் கொடுத்துத் திரும்புகையில்
`மதியச் சாப்பாடு பட்டுக்கோட்டையில் சாப்பிடுவோம்’ என்றார்.
அங்கு வந்து குளிர்பானம் வாங்கித் தந்தார்.
பின்னர் ஊருக்குச் செல்லும் பேருந்தில் ஏறினோம்.
மாலை வீடுவந்தும் `பசிக்குதுதாடா?’ எனச்    
சிரித்தபடியே கேட்டார் சாப்பிடாத அப்பா.

அன்று பசிக்கவில்லை... ஆனால், இன்று பசிக்கிறது.  
மகளை விடுதியில் பார்த்து
வெறும் சட்டைப்பையோடு திரும்புகையில்  
அப்பாவின் சிரிப்பையே சிரிக்கிறேன்.

- கட்டுமாவடி கவிகண்மணி



மதிப்பீடு

ட்டை கேட்டால்
‘நூறு ரூபாயில் காட்டட்டுமா?’ என்கிறார் துணிக்கடைக்காரர்.

உள்நுழையும்போதே
ஐம்பது ரூபாய் ரப்பர் செருப்பை
எடுத்து நீட்டுகிறார் செருப்புக்கடைக்காரர்.

மெனு கார்டுக்குள் நுழையவிடாமல் ‘பரோட்டாவா?’ என்கிறார் ஹோட்டல்காரர்.

உரிய ஸீட்டோடு ரயிலேறுகையில்
‘இது முன்பதிவு செய்த பெட்டி’ என்கிறார் பயணச்சீட்டுப் பரிசோதகர்.

‘அந்த மணியை அடிக்கக் கொஞ்சம் தூக்குங்க அங்கிள்’ என்னும் அச்சிறுமி
என்மீதான அத்தனை மதிப்பீடுகளையும்
உடைத்து உயர்த்துகிறாள் என்னை.

- நா.கோகிலன்

http://www.vikatan.com

15பி

Link to comment
Share on other sites

சொல்வனம்

படம்: சி.சுரேஷ்பாபு

 

96p1.jpg

மாய பிம்பம்

சாவு நிகழ்ந்த வீட்டின்
சுவரில் பதித்திருக்கும்
சிறு கண்ணாடி வழியே
கடந்துபோகிறவர்கள்
காணுறாவண்ணம்
தோன்றி மறைந்துகொண்டிருக்கிறது
இறந்துபோனவனின் பிம்பம்.

- கே.ஸ்டாலின்


முகமறியா வேண்டுதல்

நேற்று ரயிலடியில் இறந்துகிடந்த
சித்ரா சவுண்டு சர்வீஸ் லோகுவின் நினைவுகள்தான்
ஊரை அதிகமாய் ஆக்கிரமித்திருந்தன இன்று.
`லோகானுக்கு சிலாக்கெடுத்த தொண்டைடா
கத்துனான்னா ஏழூர் கேட்கும்’ என்றாள் அம்மா.
`கீச்சுக்கத்தி பொன்னாம் பேரன்னா சும்மாவா’ என
சிலாகித்தனர் ஊரில் சில கிழடுகட்டைகள்
பால்யத்திலேயே பூவரச இலையில்
கொண்டை ஹார்ன் செய்து விளையாடியதை
நினைவுகூர்ந்தார் உடன் படித்த ஒருவர்.
ரத்த சொந்தத்தில் எவர் பெயரும்
சித்ரா என்றில்லாதபோது
சவுண்டு சர்வீஸின் பெயர்க்காரணம்
முழுவீச்சாய் அலசப்பட்டது அன்று மட்டும்.
இறுதி வரை திருமணம் செய்யாது
இறந்துபோன அவரை அறிந்தவர் எவரேனும்
மனதார வேண்டியிருக்கலாம்
`லோகுவின் ஆன்மா சித்ரா அடையட்டும்’ என்று.

- மகிவனி


இசை

பாண்டியாட்டம்
விளையாடத்தான் சென்றாள் ஜானவி
அவள் தத்தித் தத்திக் குதிக்கையில்
கேட்கிறது
பியானோ இசை.

 - ராம்ப்ரசாத்


கொக்கு

டிந்த குளத்தில்
தண்ணீருமில்லை மீன்களுமில்லை
பழக்கதோஷத்தில்
வந்து வந்து ஏமாந்துபோகும்
கொக்குக்காகவாவது
ஒரு மழை வேண்டும்.

- பிரபு


கூடவரும் வைக்கோல்

ருசக்கர வாகனத்தின் பின்சக்கரத்தில்
சிக்கிக்கொண்டு கூடவரும்
ஒரு வைக்கோல் ஞாபகப்படுத்துகிறது...
ஒரு பச்சை வயலை
நாற்று நட்டப் பெண்ணை
சேறு குழப்பிய காளைகளை
வாய்க்கால் சுமந்த தண்ணீரை
தண்ணீருக்காக நடந்த உண்ணாவிரதத்தை
வரப்பிலமர்ந்து உண்ட மத்தியானச் சோற்றை
கோவணத்தோடு ஏரோட்டும் தாத்தாவை
பயத்தை ஏற்படுத்திய சர்ப்பத்தை
வளையல் கரங்களில் விளைந்திருந்த கருக்கருவாளை
வேலாமரத்தில் தொங்கிய தூளியை
மருந்து தெளிப்பானின் சுருதி பிசகாத ஓலத்தை
வயல்களினூடே நேர்க்கோடுகளை
நீட்டியிருக்கும் தண்டவாளத்தை
தண்டவாளத்தில் எப்போதேனும்
தடதடத்துப்போகும் ரயிலை
அறுவடைக் காலத்து மாட்டுவண்டிகளை
வீட்டு முற்றத்தில் கூடு கட்டும் சிட்டுக்குருவியை
இன்னும் தள்ளுபடியாகாத கடனை
வந்துசேராத மானியத்தை
தூக்கிட்டுக்கொண்ட பரமசிவத்தை
கட்டடங்கள் கொலைசெய்த வயல்வெளிகளை.

 - சௌவி


யாகசாலை

கீழத்தெரு எம் தாய் மேலத்தெரு உம் தாய்
அறுந்த செருப்பால் நம் தந்தைகளின் நட்பு
நன்கு அறிந்திருந்தோம் நம் குடிகளை
செங்குருதியில் நனைந்து மண்ணுள் உடல்கள்
அன்பு நெஞ்சிற் தஞ்சம்கொண்டதால்.

- பூர்ணா

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

சொல்வனம்

 

 

கானல் நீரலைகள்

நதியே! திரவத்தமிழே!
என்று பாடினேன்.
என்னை மிகவும் பிடித்துவிட்டது
நதிக்கு.
பேச்சு வாக்கில்,
தன் முதுகில் ஏழெட்டு லாரிகள்
மணல் அள்ளிய புண்களை
திருப்பிக் காட்டியது.
புண்களின் கானல் நெடியில்
மயக்கமே வந்துவிட்டது எனக்கு.
மணல் என்பது மணல் மட்டுமல்ல
அது சிறிய வடிவிலான
பூமி உருண்டை என்றது.
நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே,
எங்களைக் கடந்துபோனது
ஏழெட்டு மணல் லாரிகள்.
எத்தனையோ உலகங்களின் கண்ணீர் சொட்டிக்கொண்டிருந்தது வழி எங்கும்.
கானல் நீரலைகள்
நாய்களைப்போல
விரட்டிக் குரைத்தன லாரிகளை...

-கார்த்திக் திலகன்

p62a.jpg

ஃப்ளாஷ்பேக்

இரக்கமற்ற அந்த ஃப்ளாஷ்பேக்கிற்கும்
எனக்குமான WWF
இறுதிக்கட்டத்தை எட்டுகிறது
முகத்தில் மூன்று உதை
வயிற்றில் எட்டு மிதி வாங்கியபின்
அந்த ஃப்ளாஷ்பேக்கின் முன்
திராணியற்றவனாக நிற்கிறேன்.

இவனை எளிதில் வென்றுவிடலாம்
என்று தெரிந்துகொண்ட அது
கயிற்றின் மீது ஏறி
என் கழுத்தில் குதித்து கீழே தள்ளுகிறது
என்மீது ஏறி அமர்ந்துகொண்டு
என் கால்களை மடக்கிப் பிடித்துக்கொள்கிறது.

சர்ர்ர்ர்ர்ரென்று சறுக்கி வந்த அம்பயர்
அதன் வெற்றியை உறுதிசெய்ய எண்ணுகிறார்.

ஒன்...

உலகின் இரக்கமற்ற எல்லா மனிதர்களும்
அவருடன் சேர்ந்து எண்ணுகிறார்கள்.

டூ...

அந்த ஃப்ளாஷ்பேக்
மெல்ல என் காதருகில் வந்து கேட்கிறது
‘இந்த முறையாவது திருந்துறியா!?’

நான் த்ரீ...எண்ணுவதற்குள்
என் கால்களை உதைத்து
போட்டியைத் தொடர விரும்பவில்லை
நான் அந்த ஃப்ளாஷ்பேக்கிடம்
தோற்றுப்போகவே விரும்புகிறேன்.

- தி.விக்னேஷ்

மைக் டெஸ்டிங் 1...2...3...

சிட்டு பாட்டியோட
மூணாவது பொண்ணு வைரம்
இந்தக் கிணத்துலதான் மிதந்துச்சுன்னு
சொல்லிட்டுப்போன தங்கப்பாண்டி
எடுத்துட்டுப்போனது
கோடையோட குளியல் கொண்டாட்டத்த.

மாந்தோப்புக்குள்ள
ஏதோ ஒரு மரத்துலதான்
பானு அத்தை கயித்துல தொங்குச்சுன்னு
ராஜதுரை சொன்னதுக்குப்பிறகு
யாருக்குத்தான் தோணும்
திருட்டு மாங்கா திங்க.

பூட்டியே கெடக்குற
மஞ்சகலர் வீட்ல
சாந்தி அக்கா விஷம் குடிச்சு
செத்துட்டாங்கனு
வினோத் மூலமா கேள்விப்பட்டதிலிருந்து
எடுக்கவே போனது இல்ல
காம்பவுன்ட்டுக்குள் விழுந்த பந்துகள.

முத்துவிஜயன் ஞாபகப்படுத்தினதுக்குப் பிறகு
அவுட்டானாலும் பரவாயில்லப்பானு
தீக்குளிச்ச தோழி
அன்புச்செல்வி வீட்டு
சந்துப்பக்கம் ஒளியவே மாட்டோம்
ராத்திரி விளையாடும்போது.

தண்டவாளத்துல வெச்ச காசு
தங்கமாகும்னு சொன்னாலும்
யாரும் போறதா இல்ல
பொட்டல் ஸ்டேஷன் பக்கம்
கோகிலாவ ரெண்டு துண்டா
பிரபு பார்த்ததுலயிருந்து.

மழைக்குறியோடு
பாதிக்கப்பட்டவங்களுக்கு
நீதி உண்டு
பழிவாங்குவேன் ஒருநாள்னு
அருள் வந்து ஆடும்
ஊர்க் குலசாமி
இன்னைக்கு வரைக்கும் மலையேறுவது
சுருட்டோடு வேண்டியதை
மட்டுமே வாங்கிக்கிட்டு.

-கார்த்தி

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

சொல்வனம்

 

96p1.jpg

விழுந்து உடையும் ஊர்க்குளம்

விடுமுறை நாளில் மல்லாந்து கிடக்கும்
பளிங்குக் குளத்தின் மீதேறி
ஈர நடனம் புரிகிறார்கள்
குழந்தைகளும் பெரியவர்களும்
மணிக்கு ஒரு தொகை வசூலிக்கப்படுகிறது.
குளத்தில் நீலம் பாவித்துத் தளும்பும் வானத்தை
குழந்தைகள் குடித்துச் செருமுகின்றன.
தாமரைக் கொடிகள் இல்லை
நீர்க்காகங்களின் முக்குளிப்பில்லை
கரை தொட்டு நிற்கும் மரங்களில்லை
மீன்களில்லை
மீனுண்ணிப் பறவைகளில்லை
குளம்போல் ஒரு குளம் மட்டும் இருக்கிறது.
மழை ஒரு பொருட்டில்லை அதற்கு
குழாய் வழி பெருகிவந்து குழாய் வழியாகவே
வெளியேறிவிடுகிறது.
ஊர்க்குளம் ஒன்று வானத்தின் கரிய
மேகத்திற்குள் நின்றபடி மெல்லக் குமுறுகிறது.
நீச்சல் அறியாத அலைகளில் விழுந்து  உடைகின்றன
சொட்டுகள் சில.


- காடன்


உயிரோடிருக்கும் அறை

அந்த அறையின் நாற்றத்தை
இனி நீங்கள் சுவாசிக்க வேண்டியதில்லை
 
அந்த அறையின் முனகல்களால்
இனி உங்கள் துயில் கலையப்போவதில்லை

அந்த அறையில் மேலும் பல கிரீஸ் டப்பாக்களை
இனி நீங்கள் அடுக்கி வைத்துக்கொள்ளலாம்

அந்த அறை புறக்கணிக்கப்பட்டது பற்றி
இனி உங்களை யாரும் கேள்வி கேட்கப்போவதில்லை

ஒரே ஒரு கோரிக்கை

அந்த அறையை சுத்தப்படுத்திய அவளை
இனியேனும் உங்கள் அறைக்குள் அனுமதியுங்கள்

இன்னும் உயிரோடுதான் இருக்கிறது
அறைகளற்ற அவள் வீடு.


- சுபா செந்தில்குமார்


கடைசி அந்தி நிறத்திலான உடை

இறந்தவன் என்றோ பரிசளித்த ஆடையொன்றை
அணிந்து செல்லும் நாளொன்றில் அவனது
நினைவுகளால் நெய்யப்படுகிறோம்.
எல்லா வண்ணங்களின் மீதும் கருமை பூசி
நமது அன்றையச் சூரியனை
இருளச்செய்கிறான்.
பணிச்சுமைகளுக்கிடையே
துருத்திக்கொண்டு நிற்கும்
அவனது ஞாபகங்கள்
நமது அன்றைய நாளை மேலும் இறுகச்செய்கிறது
அல்லது தளர்த்திவிடுகிறது
அவ்வாடையைக் களையும்
நாளின் இறுதியில்
அவனைச் சிதையிலிறக்கி
திரும்பிய மழைக்கால
அந்தியொன்றை மீட்டுத்தருகிறான்.
அன்றைய இரவில்
நமது போர்வைக்குள்
கதகதத்துக்கொண்டிருப்பது
நாம் அவ்வப்போது ஸ்பரிசித்த அவனது
உள்ளங்கைகளின்றி வேறென்ன?


- கே.ஸ்டாலின்

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

சொல்வனம்

 

26p1.jpg

வாழ்க்கை,
பெவிலியனுக்கே அனுப்பிவைக்கிறது 
ஆட்டத்தின் எல்லா உத்திகளும்
முறியடிக்கப்பட்டுவிட்டப் பிறகு
கைகளில் வலிந்து திணிக்கப்பட்ட மட்டையுடன்
மலங்க மலங்க விழிக்கும்
கடைசி வரிசை ஆட்டக்காரன்போல
எச்சில் விழுங்க நிற்கிறேன்.
மூச்சிரைக்க மூர்க்கமாக ஓடிவரும்
ஓர் அதிவேகப் பந்துவீச்சாளன்போல வீசும்
வாழ்வின் கரங்களிலிருந்து விடுபட்டு
முகத்துக்குச் செங்குத்தாய்
விருட்டெனப் பறந்துசெல்கிறது
தொட்டுவிடக்கூட முடியாத
கடைசிக்கும் கடைசியான வாய்ப்பு.
எல்லாமும் கைமீறிப்போன பிறகு
ஒன்றுமே செய்ய முடியாத மைதானத்தில்
ஒன்றுமே செய்ய முடியாத ஓர் ஆட்டக்காரன்
என்னதான் செய்துவிட முடியும்
துயரத்துடன்
பெருந்துயரத்துடன்
முகத்தைத் தொங்கப்போட்டு
பெவிலியன் நோக்கித் திரும்புவதைவிட.

- தர்மராஜ் பெரியசாமி

தேனிலவுக்கு `விஜி' என்று பெயர்
நீண்ட பயணமொன்றில் நீளும் குளிரில்
தழுவும் மேகங்களைக்கொண்ட ஒரு மலையுச்சியில்
உருகும் ஒருத்தியின் கண்களில் சுடரும் காதல்
ஒரு பறவைபோல ஆகாயத்தைச் சுற்றும்போது
எதிர்ப்படும் மரணப் பள்ளத்தாக்கின் வாசலில்
அதன் கண்கள் நிலைகுத்தி நிற்கையில்
சேர முடியாமல் சேர்ந்து இறந்துபோன
ஆன்மாக்களின் அழுகை விசும்பலை
அந்தப் பள்ளத்தாக்கின் மூலைமுடுக்கெங்கும்
ஓங்கி ஒலிக்கவிட்ட காலத்தின்
இரக்கமற்ற கண்களோடு
ரத்தக்கறை படிந்து துருவேறிக்கிடக்கும் கைகளோடு
சிதைந்துகிடக்கும் முகங்களோடு
யாராவது  இருக்கக்கூடுமென்று  சந்தேகிக்கையில்         
தூண்டிலில் சிக்கிய மீனொன்று
கரைக்கு வந்ததும் துள்ளுமே ஒரு துள்ளல்
அப்படித் துள்ள ஆரம்பிக்கும் மனசை     
அன்பின் சொரூபமாய்
`அசோகா' என்று கூப்பிட்டு அணைத்துக்கொண்ட அந்தத் தேனிலவுக்கு `விஜி' என்று பெயர்.

- அசோக் பழனியப்பன்

ற்றுக்கோடு
மிதிவண்டியில் என்னை அமரவைத்து மிதிக்கிறான் மகன்.
எட்டி முன்னால் பார்த்துக்கொண்டே
`மெள்ள வீசு’ என்று
எதிர்காற்றுடன் பேச்சுவார்த்தை
நடத்துகிறேன்.
காற்றோ இதற்காகத்தான் காத்திருந்தேன் என
தாயாகி அவன் கேசம் கோதுகிறது
குழந்தையாய் அவன் தோள்  பற்றுகிறேன்
சிரித்தபடி விரைகிறான் அவன் தந்தையாக.

- அகராதி

யதைக் கழற்றுதல்
ஒரு நடுத்தர வயதுப் பெண்ணை அழைத்தேன்
அம்மையீர்...
ஓர் இருபது ஆண்டுகளுக்குப்
பின்னால் வர முடியுமா?
இருபது ஆண்டுகளுக்கு
முந்தைய முகம்
இங்கேதான் இருக்கிறது
வந்து எடுத்துக்கொள்ளுங்கள்
என் காதல் பற்றியா கேட்கிறீர்கள்?
அது கிடக்கிறது கழுதை
`ஒரு முப்பது ஆண்டுகள்
முன்னால் வா’ என்று
நீங்கள் அழைத்தால்
நுரைதள்ள ஓடிவந்து
உங்களை உரசிக்கொண்டு நிற்கும்.
`வயது என்பது உடைபோல’ என்று
நீங்கள்தானே சொன்னீர்கள்
சொல்லுங்கள் அம்மணி
இருபது உடைகளைக் கழற்ற
உங்களுக்கு இவ்வளவு நேரமா?


- கார்த்திக் திலகன்

http://www.vikatan.com

15மா

Link to comment
Share on other sites

சொல்வனம்

 

92p2.jpg

மீட்சி

பேருந்துப் பயணங்களில்
சாலையோரம் நடந்துசெல்கையில்
உறவினர் கூடியிருக்கும் விழாக்களில்
கிடைக்கும் சிறுசிறு இடைவேளைகளில்
தனியே இருக்கையில் என
ஓயாமல் கைப்பேசியின் திரையையே
பார்த்துக்கொண்டிப்பவளைப் பற்றி
உங்களிடம் அநேகக் குற்றச்சாட்டுகள் இருக்கலாம்
அவளிடமும் உங்களுக்குச் சொல்ல சில கதைகளுண்டு
தகாதப் பார்வையைத் தவிர்க்கும் பாவனையாக
தேவையற்று நீளும் உரையாடலைத்
துண்டிக்கும் வழியாக
யாரோ ஒருவரின் குறுஞ்செய்திக்காகக்
காத்திருக்கும் தவிப்பாக
நிரந்தரமாகக் காணாமல்போன ஒருவரின் ஞாபகப் படங்களாய் இருக்கலாம்
அல்லது
அது அவளுக்கு கிடைத்த
ஒரேயொரு மீட்சியாகவும் இருக்கலாம்.

- சத்யா வேலுசாமி

92p11.jpg

மாயமும் யதார்த்தமும்

ல்க் பொம்மையின் கரங்களையும்
சூப்பர்மேனின் நெஞ்சையும்
ஸ்பைடர்மேனின் கால்களையும்
ராமானுஜனின் கண்ணாடியையும்
ஒன்றிணைத்த ஓர் உருவத்தைத்
திரையரங்கில் பார்த்துவிட்டு
ஹல்க் ராமானுஜனாகவும்
சூப்பர்மேன் ஸ்பைடர்மேனாகவும்
ராமானுஜன் சூப்பர்மேனாகவும்
ஸ்பைடர்மேன் ஹல்க்காகவும்
திரையரங்குக்கு வெளியே
நடந்துகொண்டிருந்தார்கள்.

- ராம்ப்ரசாத்


தலைமான் வீடு

பிரண்டையில் புளிவைத்து அரைத்துச் செய்யும்
வெஞ்சனம் பிசைந்து சோறுண்ட நாளில்
`இப்போது நன்கு பசியெடுக்கிறது’ என்றார் அப்பா.
ரெட்டைச்சுழி உடம்பின் தேக்கு பலத்தைக் குறைத்து
படுக்கையில் தள்ளிய நோய் 
ஓர் இலைச்சுருட்டுப் புழுவைப்போல் அவரை உறிஞ்சி எடுத்திருந்தது.
அம்மியை இடுக்கிப் பிடித்திருந்த அம்மாவின்
தொடைகளில் ஏறியிருந்தது அப்பாவை மீட்டெடுக்கும் உறுதி.
குழவிக்கல்லில் நசுங்கிக் குழைந்த உப்பு மிளகு காரம் பூசி
ஊறவைத்த முழு வெடக்கோழியில் இறங்கிக்கொண்டிருந்தது 
ஊரையே வளைத்து முடுக்கும் ருசி.
காரம் தூக்கலாக இருக்கும்போது 
அப்பாவைச் சாப்பிடவைத்துப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
கறி பிடிக்காத இளைத்த என் உடம்பைத் தேற்றும் நோக்கில்
சிறுதானியங்கள் விளையும் ஊருக்குச் சென்று
கோழி வாங்கிவரும் அவர் சொல்வது...
`அந்த ஊர் இன்னும் பச்சைப்பசேலென்று இருக்கிறது'.
அப்படிப்பட்ட அப்பாவைத்தான் தூக்கிக் கொடுத்துவிடப் பார்த்தோம்.
வீட்டின் தலைமான் கவலைக்கிடமாகும்போது தோன்றும்
துர்நிமித்தங்கள் தரும் பயத்துடன்கூடிய துயரம்
முட்டைகளோடு தவறிவிழும் கூட்டின் அருகிலேயே
பறந்து தவிக்கும் பறவையின் நிலைக்குக் 
குடும்பத்தைத் தள்ளிவிடுகிறது.
தன் மகனை உயிர்ப்பிக்க முலையூட்ட வருமாறு 
என்றோ இந்நிலத்துக்குள் உறங்கப்போய்விட்ட
அவரது தாயிடம் வேண்டிக்கொண்டோம்.
அடுத்த சில நாட்களில் நோய்மை அவர் கண்களின் வழியே 
இறங்கிப்போயிருந்த தடத்தைக் கண்டோம்.
அவரின் வெளிறிய கண்களில் 
லேசாய் ரத்தக்கோடுகள் தெரியத் தொடங்கின.
அப்பா அப்போது ஒரு புதிய பனங்கன்றென 
எழுந்து உட்கார்ந்திருந்தார். 

- மௌனன் யாத்ரீகா

http://www.vikatan.com

22மா

Link to comment
Share on other sites

சொல்வனம்

ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி, செல்வம் பழனி

 

நிழற்படகு

சாளரங்களின் குறுக்குத் தடுப்புகளைக் கடந்து
அனுமதியற்று உள் நுழைந்த
சூரிய ஒளி அலையில்
மிதக்கின்றது ஒரு தொட்டிலின் நிழல்.
மின்மினிக் கண்களை
மூடிக்கொண்டிருக்கும் மகவு
புடவைத் தொட்டிலினுள்
துடுப்புக் கால்களை அசைக்க
அலைகிறது நிழற்படகு.
அடுக்களை புகை மூட்டத்தில்
அலைகிற வளையல் கை
உப்பிற்கும் மிளகாய்க்கும்
ஓடுகின்ற வேளையில்
வீல்லென அழுகின்ற பிள்ளைக்கு
ஓடி வந்து “ப்பே...ப்பேபே...” யென
தாலாட்டுகிறாள்.
ஊமைத் தாயின் குரல் கேட்டு
முகம் மலர்ந்து சிரிக்கின்ற
அக் குழந்தையின் செவிக்குள்
“ஆராரோ ஆரிரரோ’’
என்றே கேட்கிறது.

- கோ

p80a.jpg


சாயல்

மிதமிஞ்சிய தனலில் தகிக்கும் வன்மம்
குதிரும் கணமொன்றிற்காக
நாவால் மீசையை நீவியபடியே
ஒரு கள்ளப்பூனையென காத்துக்கிடக்கிறது.
அதன் கொடும் பற்கள்
துரோகக் கற்களில் முன்பே கூர்தீட்டப்பட்டு
சிக்கும் இரையைக் கிழிக்க
தயார்நிலையில் இருக்கிறது.
இதழ்க்கடையில் மெல்லியதாய் விரியும்
போலிப் புன்னகையை
நீங்கள் நம்பிவிட்டதை நினைந்த பொழுதே

p80b.jpg

உவகையில் உடலைச் சற்றே
ஓசையின்றி சிலிர்த்துக்கொள்கிறது.
இயல்பாய் கவிழ்ந்த இருளை
அது தனக்குச் சாதகமாக்கியதன் பொருட்டு
வருத்தம்தான் இரவுக்கு.
ஆனால், அப்பூனையோ
எதன்பொருட்டும் கவலைகொள்ள நேரமின்றி
கருமமே கண்ணாயிருக்கிறது.
கனல் ஒளிரும் விழிகள்தான்
காட்டிக்கொடுக்கின்றன என
கைவசம் புகாரொன்றையும் வைத்திருக்கும்
அப்பூனையைக் கண்டு
நமக்கென்ன அச்சம்..?
ஒரு சாயலில் அது
என்னையோ உங்களையோ ஒத்திருக்கிறது எனும்போது!

- பாப்பனப்பட்டு வ.முருகன்


p80c.jpg

கீப் ரைட்

நெடுஞ்சாலை அகலப்படுத்த
வெட்டித் தீர்த்த மரங்களின்
மிச்சம் மீதி இருந்த வேர்கள்
அனிச்சையாய் இன்னும்
நீர் உறிஞ்சுகின்றன
மரத்தின் பசியாற்றும் தாய்மையொடு
புசிக்க மரமற்றது உணராமல்
ஊட்டாத முலைப்பாலாக
உறிஞ்சிய நீர் மண்ணில் கசிய
மண்ணுக்குள் ஈரம் அது
மனிதருக்கில்லா ஈரம்
நெகிழ்ந்து வழிவிட
நெடுஞ்சாலையில் கொதிக்கும் தார்
கொல் கருவியாய் இறங்கி
கருணைக் கொலை நடந்தேறியது
மண் மேல் நடந்த மரப் படுகொலைகள்
மரவேர் அறியாதே மடிந்தடங்கியது
அடங்கிய அச்சிறுவேர்கள்
நெடுஞ்சாலையின் இடது பாகத்தில்தான்
சாந்தி அடைந்து கொண்டிருக்கின்றன
ஆகவே நெடுஞ்சாலையில் வேகமாக பயணிப்பதென்றால் 
தயவு செய்து வலது பாகத்திலேயே பயணிக்கவும்.

- நாகராஜ சுப்ரமணி

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

சொல்வனம்

 

94p1.jpg

அம்மா

இரண்டு நாள் விடுமுறைக்கு வந்த அம்மா
பூஜை அறையில் எருக்கம்பிள்ளையாருக்கு
மஞ்சள் அரளிப்பூ மாலை போட்டிருந்தாள்.
என் சேலைகளும் சுடிதார்களும்
தரம் பிரிக்கப்பட்டு வரிசையானது.
மல்லிகைப்பூவையும் மிஞ்சிய இட்லி
கொத்தமல்லிச் சட்னியுடன் மணத்தது.
ஒரு துணி விடாமல் துவைத்து
மடித்துக்கொண்டே பேசும் அந்த அரை மணியில்
ஊரில் புதிதாக நட்ட வாழையும்
என் வகுப்புத் தோழியின் விசாரித்தலும்
வெயிலுக்கு இதமாக அண்ணன் எடுத்துத்தந்த
புடவையும் வந்து போகும்.
பூக்கள் சிரித்த தலையணை எனக்கும்
பொம்மைப் படத் தலையணை பேரனுக்கும்
வானவில்லில் நனைத்ததை
அவருக்குமாகக் கொடுத்துவிட்டுக்
கிளம்பும்போது சொன்னாள்...
`பாத்திரம் கழுவிட்டு
குழாய நல்லா அடைச்சிட்டுப் போ
சொட்டிக்கிட்டே இருக்கு
அங்க அமராவதியில தண்ணி இல்ல புள்ள’.
விடுமுறையில் வந்த அம்மா
பழைய விவசாயியின் மகளாகவே தெரிந்தாள்.

- இந்து


94p2.jpg

நிராசை

மழைக்கால அந்தியொன்றில்
கடந்துகொண்டிருக்கும்
சவ ஊர்வலத்தினிடையே
தொடுவானில்
அரிதாகத் தோன்றும்
வானவில் ஒன்று
இறந்தவனின் கண்களை
ஒரு கணம்
ஒரேயொரு கணம்
திறந்து மூடும்படி
கேட்கிறது.

- கே.ஸ்டாலின்


94p31.jpg

காணக் கிடைக்காத நிழல்

அப்பத்தா இறந்த ஏழாம் நாள்
பந்தல் பிரித்த இரவில்
துக்கம் விசாரிக்க
வீடு வந்திருந்த பெரியவர்
எங்களில் யாருக்கும் அறிமுகமில்லாதவர்.
தகவல் தாமதமாகக் கிடைத்ததாக வருந்தியவர்
அப்பத்தாவின் பூர்வீகம் குறித்து
நாங்கள் அறியாத செய்திகளைப் பகிர்ந்தார்.
பழைய நினைவுகளில் மூழ்கிக்
கண்ணீரோடு கொஞ்ச நேரம்
பொட்டாட்டம் அமர்ந்திருந்தவர்,
தன் வயது நண்பர்களில்
அவர் மட்டும் மிஞ்சியிருப்பதாகச் சொன்னார்.
பின் கனத்த நெஞ்சோடு எழுந்தவர்
என்ன நினைத்தாரோ
சற்றே திரும்பி வீட்டுக்குள் எட்டிப்பார்த்து
மாடத்தில் ஏற்றியிருந்த தீபத்தை
வணங்கி விடைபெற்று நடந்தார்
காணக் கிடைக்காத
கடவுளின் நிழல்போல.

- மு.மகுடீசுவரன்


94p4.jpg

நிதானம்

பந்தயக் குதிரையின் வேகமோ
வேட்டைச் சிறுத்தையின் பாய்ச்சலோ
பகை விலங்கிடமிருந்து தப்பிச்செல்லும்
மான்கள் முயல்களின் அதிவிரைவோ இன்றி
பரபரப்படையாமல் பதற்றமேதும் கொள்ளாமல்
ஒரு முகையவிழும் லாகவத்தோடு
காய்ந்த புழுதியில் பரவும் ஈரக்கரிசனத்தோடு
தூரக் கடல் மீதும்
தடுப்பற்ற நிலத்தின் மீதும்
இருள் துடைத்து
மெள்ள பொன்முலாம் பூசிக்கொண்டிருந்தான்
கோடையின் வருகையை
அறிவித்தலின் பொருட்டுப் புறப்பட்ட
புலர் சூரியன்.
அந்த நிச்சலன நிதானம்
எனக்கு மிகப் பிடித்திருந்தது.

- பாப்பனப்பட்டு வ.முருகன்

http://www.vikatan.com

29மா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்வனம் மிக அடர்த்தியாய் இருக்கு. வனத்துள் சென்றால் வெளியே வருவது சிரமமாய் இருக்கு....!  tw_blush:

Link to comment
Share on other sites

சொல்வனம்

 

96p1.jpg

பாப்பா அலை
கடற்கரையில் கால் நனைத்தபடி நின்றிருந்தோம்.
என் சிறுமகளின் பாதங்கள் இரண்டும்
இரு சொல் கவிதை.
அவை மண்ணில் புதைந்து விளையாடுவதை
ரசித்துக்கொண்டிருந்தேன்.
முதலில் வருவது
பெண்ணலை என்றேன்.
அடுத்து வருவது
ஆணலை என்றேன்.
மூன்றாவதாக ஒரு சிற்றலை...
பாப்பா அலை... பாப்பா அலை...
என்று துள்ளிச் சிரித்தாள் பாப்பா.
குனிந்து பாப்பா அலையை
கைகளில் அள்ளினேன்.
முதன் முதலில் தாதி என் கைகளில் இட்டபோது
வழுவழுவென்று நெளிந்த
பாப்பாவைப்போலவே
என் கைகொள்ளாமல் வழிந்தது
பாப்பா அலை.
அதற்கு இனிமேல்தான்
நான் பெயர் வைக்க வேண்டும்.

- கார்த்திக் திலகன்

நினைவு
ஆற்றிலே விட்டும்கூட
போக்கிலே போகும்வரை
வட்டமடிக்கும்
குடுவை மீன்.

- கார்த்தி

திருடக் கூடாது குள்ளநரி
சாலையின் நடுவே
வானம் பார்த்தபடி சோற்று
பருக்கையின் காய்ந்த
தடயத்துடன் விழுந்து கிடக்கிறது
ஒரு டிபன் பாக்ஸ்.
மாலை நேர கூடடைதலில்
ஏதோ ஒரு டோராவின்
சாப்பாட்டுக் கூடையிலிருந்து
விழுந்திருப்பதை உறுதி செய்கிறது
உடனிருந்த உருளை சிப்ஸ்.
அது ஒரு பெண் குழந்தையினுடையது
என நம்ப வைக்கிறது
டிபன் பாக்ஸைக் கழுவி
வைத்திருக்கும் பாங்கு.
காணாமல்போன டிபன் பாக்ஸூக்கு
டோரா தயங்கித் தயங்கி
அம்மாவிடம் கூறப்போகும் காரணத்தை
நேராய் காண ஆவல்.
விழுந்தது கிடக்கும் டிபன்பாக்ஸினை குனிந்து
எடுக்கையில் காதில் விழுகிறது
குள்ள நரி திருடக் கூடாது
குள்ள நரி திருடவே கூடாது
என்னும் டோராவின் மந்திரக் குரல்
என் வேண்டுதல் எல்லாம்
காரணம் கேட்டு அடிக்காத
அம்மா அந்த டோராவுக்கு
வாய்திருக்க வேண்டும்.
கூடவே  வாஞ்சையாய்
ஒரு முத்தமும் உண்டெனில்
பரம சந்தோஷம்.

- யுவராஜா வைத்தியநாதன்

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

சொல்வனம்

ஓவியம்: ராஜ்குமார் ஸ்தபதி

 

28p1.jpg

புன்னகை

‘அம்பாள் ஒரு சக்தி வெய்வம்’
என்பாள் அம்மா.
‘பெண் பூசாரி வைத்துக் கொள்ளும்
சக்தி மட்டும் விதிவிலக்கு’ என்பாள் மகள்.
‘வாய்க்கொழுப்பு மட்டும் அடங்குதா பாரு’ என்பாள் அம்மா.
‘உமையாம்பிகானு பேர் வெச்சுக்கிட்டு
அந்தச் சக்திகூட இல்லைன்னா
எப்படிம்மா?’ எனக் கேட்கும் மகளைப்
பார்த்துப் புன்னகைக்கிறது
அம்பாளின் சிவப்புக்கல் மூக்குத்தி.

- விகடபாரதி


அளவு

தன் மகனின் அளவு கேட்கும்
துணிக்கடை சிப்பந்தியிடம்
ஒரு நிமிடம்
அக்கம்பக்கம்
அருகில் எனத் தேடிப்பார்த்து
`அந்தா... அந்தத் தம்பிபோலத்தான் இருப்பான்’ என்று
காத்திருப்பு இருக்கையில் உட்கார்ந்து
ஆண்ட்ராய்டு பேசியில்
க்ளாஷ் ஆஃப் க்ளான்ஸ் விளையாடும்
யாரோ ஒரு தம்பியைக் காட்டும்
அம்மாவின் அன்பைவிடவா
ஆகாயம் பெரியது.

- தரணி வேந்தன்


ஒரு சாரட் வண்டியில்...

வினாத்தாள் வழங்கப்படும் முன்
வியர்வை கசியும் உள்ளங்கைகளை
உதடுகளால் ஊதி உலர்த்திக்கொள்ளும் அவள்
விழிகள் மூடி இஷ்ட தெய்வத்தைத் துணைக்கழைத்து எழுதத் துவங்குகிறாள்.
மனனம் செய்து மறந்தவற்றை
தலையுயர்த்தி விட்டத்திலிருந்து மீட்டெடுக்கிறாள்.
தவறென நினைத்ததை அடிக்கும்போதெல்லாம்
தன்னையே நொந்துகொண்டு
எழுதுகோலின் பின்முனையைக் கடிக்கிறாள்.
மணி ஒலிக்கும்போதெல்லாம்
கைக்கடிகாரத்தை உற்று நோக்குகிறாள்
இருபது பேருக்கு மத்தியில் தனித்திருக்கும் அவள்
விடைத்தாளைக் கையளிக்கும்போதே
மற்றவர் முகம் நோக்குகிறாள்.
இவ்விதம் தனது சின்னஞ்சிறு செய்கைகளால்
அறைக் கண்காணிப்பாளனாகிய என்னை
ஒரு சாரட் வண்டியின் பின்னிருத்தி
சீருடையின் வண்ண ரிப்பன்கள் காற்றில் பறக்க
மூன்று மணி நேரமாய்
தனது புரவியை விரைந்து செலுத்துகிறாள்
தேவதையுரு கொண்ட அச்சிறுமி.

- கே.ஸ்டாலின்

http://www.vikatan.com

5ஏ

Link to comment
Share on other sites

சொல்வனம்

 

ரகசியம்

ஒரு பறவையின் காதோடு
முன்பு நானொரு ரகசியம் சொல்லிவைத்திருந்தேன்.
இன்று அந்தப் பறவை
அந்த ரகசியத்தை
நானறியும் முன்
சில பூக்களின் வண்ணங்களோடு
சேர்த்துவிட்டது.
ம்ம்ம்...
இனி அந்தப் பூக்களுக்கு அருகில்
வண்ணத்துப்பூச்சிகள் நெருங்காமல்
பார்த்துக்கொள்ள வேண்டும்.

p26a.jpg

நாள்

ஒரு நாள்
ஒரு குழந்தை தன்
இரு கைகளையும்
என் கைகளுக்குள் குவித்து
`இந்தா பத்திரமா வெச்சுக்கோ’
என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டது.
இன்று வரையில்
பத்திரமாகவே வைத்திருக்கிறேன்
அந்த நாளை.

- கிருத்திகா தாஸ்

விரும்பிக் கேட்கும் நேயர்

சண்டைக் காட்சிகளையும்
காதல் காட்சிகளையும்
மெய்ம்மறக்க ரசித்துவிட்டு
பாடல் ஒலிக்கத் தொடங்கியதும்
திரையரங்க இருக்கையிலிருந்து எழுந்து
புகைக்கச் சென்ற சின்ராசண்ணன்,
வீட்டை எதிர்த்து, காதலித்து
திருமணம் செய்துகொண்ட நாளிலிருந்து
விரும்பிக் கேட்கும் பாடல்களின் பிடியிலிருந்து
மீண்டுவர விடவே இல்லை
ராணி அண்ணியின் காதல்.

- ஸ்ரீ நிவாஸ் பிரபு

பின்மதியக் கதவுகள்

வெறிச்சோடிக் கிடந்தது வீதி
அது விடுமுறை நாளொன்றின்
பின்மதியம்.
எதிரில் தெரிந்த வீட்டின் கதவை
தாகத்தில் தட்டினேன்.
பாதியில் பிரித்ததைப்போல்,
கதவுகள் சிணுக்கமாக மரவொலி எழுப்பின.
வெளிவந்த ரதியின் உடைகள் கசங்கியிருந்தன
நெற்றிக்குங்குமம் தீற்றலாக அழிந்திருந்தது
வியர்வைச் சுரப்பிகள் அவள் அழகை முணுமுணுப்பதைப் பார்க்க முடிந்தது.
சற்றுமுன் அவள் தோள்களில் அமர்ந்திருந்த
மூச்சுச் சூட்டின் பாடலை,
காதின் கொப்புகள் இசைத்தன.
எதுவும் கேட்கத் தோன்றாமல்
சாலையில் இறங்கி நடந்தேன்.
சிறுபிள்ளைபோல என்கூடவே
ஓடிவந்தது வெயில்.
இப்போதெல்லாம்
விடுமுறை நாளின் பின்மதியம்
தாகத்தின் கதவுகளாகவே தெரிகின்றன.

- கார்த்திக் திலகன்

சிமிட்டல்

பார்வையற்ற
கலைஞனின்
புல்லாங்குழல்
துளைகள்
கண்களாகி
இமைக்கின்றன.

- ராகவ்.மகேஷ்

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

சொல்வனம்

 

உப்பு கலந்த...

ஒவ்வொரு முறையும்
உனதன்பை
ஒளிரும் வண்ணக் காகிதம் சுற்றிய
உயர்ரகப் பரிசுப்பொருள்போலவே
என்னிடம் நீட்டுகிறாய்
எனது எதிர்பார்ப்பெல்லாம்
ஓர் ஆரம்ப வகுப்பு மாணவன்
அவசரத்தில் கிழித்த அரிச்சுவடித் தாளில்
ஊறிய ஊதா நிறம் வெளியில் தெரிய
கசியும் வியர்வையுடன்
கசங்கிய உள்ளங்கைகளில்
நீ தரப்போகும்
உப்பு கலந்த
சில நாவற்பழங்கள் மட்டுமே.

- கே.ஸ்டாலின்

தேன் சிந்தும் நேரம்...

பண்பலையில் ஒலித்துக்கொண்டிருந்தது
`சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்...' பாடல்.

கைகள் பூக்களைப் பின்ன
பாலுவோடு பாடிக்கொண்டிருந்தாள்
பூக்காரி.

அழுக்குப் பாவாடை
அண்ணனின் சட்டை
களை இழந்த முகமென
இருந்த அவள்
`கேளாய் பூ மனமே...' என
பாலு உச்சஸ்தாயியில் முடிக்கும்போது
பல்லக்கு ராணியென மாறியிருந்தாள்.

குழுமியிருந்த பூக்கள்
மறுமுறை மலர்ந்தத் தருணத்தில்
துள்ளிக் குதித்து
ராசாவின் கைகளில் முத்தமிட்டு
நாரில் வரிசையாக அமர்ந்தன.

ஒவ்வொரு பூவிலும்
ராசா சிரித்துக்கொண்டிருந்தார்.

- முத்துக்குமார் இருளப்பன்

p54a.jpg

உளுந்தவடை ஒன்று... ஆமைவடை ஒன்று...

பாட்டி வடை சுட்டக் கதை சொல்லப்போகிறேன்.
கேட்டுக் கேட்டுச் சலித்தாலும் மறுபடியும் கேட்பீர்கள்
ஏனெனில், வடை என்றால் அதிக ப்ரியம் உங்களுக்கு.
பாட்டியின் நிலம் பேக்கரியாக மாறிய பின்
காக்கைகள் திருட்டுப் பட்டத்தை இழந்துவிட்டன.
பாட்டியின் வாழ்வு திருடுபோனதை
வியாபார வளர்ச்சி என்கிறார்கள்.
உளுந்தவடையின் முகத்தில் சாம்பார் ஊற்றுகையில்
விவசாயியின் சாயலில் தென்பட்ட மாஸ்டரை
விழியுருட்டிப் பார்த்தது கண்விழித்த உளுந்து.
ஆமைவடையின் நாவு சுடப்பட்டிருந்தது
சிறுதானியங்கள் பல வடிவம்கொண்டு
ஆங்கிலப் பெயர்களோடு
அழகழகாகக் காட்சிதருகின்றன.
சதுரவடிவ கேக்கில் படுத்திருக்கும் முயல்குட்டி
முறைத்துக்கொண்டே அசைவற்று...
புழுக்கத்துக்கு மின்விசிறியை உயிர்ப்பிக்கையில்
மரம் கொல்லப்பட்டது நினைவிருப்பதில்லை.
ஸ்நாக்ஸ் கொறித்து தேநீர் சுவைத்தபடி
நாளிதழில் கொலை, பாலியல் வல்லுறவுச் செய்திகளில்
அவரவருக்கான கிருபையைப் பொழிந்துவிட்டு
அந்த நாளை அப்படியே மடித்துவைத்துவிடுகிறோம்.

- பூர்ணா

நீங்கள் உடுத்திவிடுவது யாதெனில்...

கொளுத்தும் வெயிலில் உங்களுக்கு நேர் மேலாகப்
பறந்து செல்லும் பறவையொன்று
தனது நிழலால் உங்களின் உச்சந்தலையை
வருடிச் செல்லுமெனில்
நீங்கள் இருப்பது ஒரு வனத்தினிடையில்.
உங்களின் நாற்சக்கர வாகன வேகத்தை மெதுவாக்கி
ஒரு பாம்பு பத்திரமாகச் சாலையைக் கடக்க
அவகாசம் தருவீர்களெனில்
நீங்கள் காத்திருப்பது நெளிந்தோடும் நதிக்கரையில்.
பூவில் புணரும் பட்டாம்பூச்சிகளைக் கண்டு
பறிப்பதைப் பாதியில்விடுத்து வீடு திரும்புவீர்களெனில்
எக்காலமும் உங்கள் தோட்டம்
நந்தவனம் என்றே அழைக்கப்படும்.
ஈன்ற பசுக்களின் நஞ்சுக்கொடிகள்
தொங்கும் ஆலமரத்தினடியில்
எந்தத் தயக்கமுமின்றி இளைப்பாற அமர்வீர்களெனில்
இலைகளின் அசைவில் நீங்கள் உணரக்கூடும்
நின்றபடியே மாநிலம் கடக்கும்
அடிமாடுகளின் அவஸ்தையான சுவாசத்தை.
ஆண்டின் முதல் மழை நாளில்
உடல் சீக்குக் குறித்த அச்சமின்றி
மொட்டைமாடியில் முற்றாய் நனைந்திட
குழந்தைகளை அனுமதிப்பீர்களெனில்
ஆடை களைந்த அவர்களுக்கு
நீங்கள் உடுத்திவிடுவது ஒரு பருவத்தை.

- கே.ஸ்டாலின்

கோணங்கள்...

`கடல்லேருந்து கொஞ்சம்' என்று
சொல்லியபடியே
ஒரு நீர் ஜாடியைச் சட்டென
என் மீது கவிழ்த்தாள் ஜானவி.

ஆடைகள் நனைந்தனவோ என அதிர்ச்சியுற்றேன்.
என் மீது சிப்பிகள்.

 - ராம்பிரசாத்

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

சொல்வனம்

 

ரயிலோட்டும் கட்டெறும்புகள்

நீளும் தண்டவாளத்தில்
ரயில் வராத நேரத்தில்
ரயிலோட்டும் கட்டெறும்புகள்
அதிர்வுகளற்று அதனதன் தூரம் கடக்கின்றன
ஏதேதோ தூக்கிச்செல்லும் எறும்புகள்
சரக்கு ரயிலாகி
உணவைக் கடத்துகின்றன
ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு
ரயில் நிலையங்களற்ற
இந்த ரயில் பயணத்தில்
எறும்புகளே பயணிகளாகவுமிருக்கின்றன
ரயிலாகவுமிருக்கின்றன
பச்சைக்கொடியும் சிவப்புக்கொடியுமற்ற
பயணம்
இரவிலும் பகலிலும்
தொய்வின்றித் தொடர்கிறது
எறும்புகளின் தண்டவாளப் பயணத்துக்கு
பகலில் சூரியனும் இரவில் நட்சத்திரங்களும்
வெளிச்சத் துணையிருப்பதாய்
பெருமை பீற்றுவதை நிராகரித்துவிட்டு
மேகங்கள் வானத்தை மூடிய இரவிலும்
வேகம் குறையாது பயணிக்கின்றன எறும்புகள்
தண்டவாளத்தைத் தாண்டிக் கடக்கும் பொழுதில்
மனசு புகுந்து எழுத்துக்களான எறும்புகள்
கண்ணீர்த்துளிகளாகின்றன
தூரத்தே ரயில்வரும் ஓசை கேட்கிறது

 - சௌவி

p52.jpg

காட்டு விலங்கு

ஒரு சிறிய ஓணானைப்போல,
ஒரு சிறிய நத்தையைப்போல,
ஒரு சிறிய எறும்பைப்போல,
ஒரு சிறிய அணிலைப்போல,
அந்த காட்டில்
மழை நீரும்
ஓர் விலங்கைப்போல‌
அங்குமிங்கும்
ஓடிக்கொண்டிருக்கிறது...

- ராம்பிரசாத்

கிராமம்

சுவர் தாண்டி வந்த எலுமிச்சை மரத்தை
வேரோடு பிடுங்கச் சொல்லி
பேச்சுவாக்கில் வலுத்த சண்டையில்
பேச்சு போனது பக்கத்து வீட்டாரோடு.
காய் முற்றி விழுவதாய்
அடியோடு தென்னை மரத்தை
வெட்டச் சொல்லிப் போட்ட சண்டையில்
வெகுநாள்களாய் பேசுவதில்லை பின் வீட்டாரோடு.
குவித்துச் சேர்த்துக் கூட்டிய குப்பைகள்
காற்றில் பறந்து வீட்டுக்குள் விழுவதாய்
எப்போதும் பேசிக்கொள்வதில்லை எதிர் வீட்டாரோடு.
நாங்கள் பேசுகிறோம்
நகரத்தில் அன்னியோன்யம் இல்லை என்று.

- எஸ்.நடராஜன்


கூடவே வெளியேறுபவன்

றந்தவனோடு
என்றோ நீங்கள் சேர்ந்து
உணவருந்திய உணவகத்தினுள்
தற்செயலாகத்தான்
நுழைகிறீர்கள்
நினைவுகள் பின்னோக்கி இழுக்க குறிப்பாக
அதே இருக்கையை
தேர்ந்தெடுக்கிறீர்கள்
செரிக்காத அவனது
நினைவுகளை நீங்கள்
விழுங்கிக்கொண்டிருக்க
பக்கத்தில் வந்தமரும் ஒருவர் அவனுக்குப்பிடித்த
அதே உணவை
எடுத்துவரப் பணிக்கையில்
சட்டென இறந்தவனின்
சாயல் கொள்கிறார்
கட்டணத்தை கொடுத்துவிட்டு இப்போது
வெளியேறிக்கொண்டிருப்பது நிச்சயமாக நீங்கள்
மட்டுமல்ல.

- கே.ஸ்டாலின்

பறவை

நீண்ட நேரமாக
இடைஞ்சலாக இருந்த
அந்தப் பறவையை
என் ஜன்னலில் இருந்து
விரட்டி விட்டு விட்டேன்..
ம்ம்..
இப்போதும்
இடைஞ்சலாகத்தான்
இருக்கிறது.

- கிருத்திகா தாஸ்

http://www.vikatan.com

3m

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.