Jump to content

“இவர் வழி... தனி வழியா..?” ரஜினியின் அரசியல் ரூட்!


Recommended Posts

“இவர் வழி... தனி வழியா..?” ரஜினியின் அரசியல் ரூட்! - பாகம் 1 ⁠⁠⁠⁠

 

ரஜினி  தொடர்

2016...தமிழக அரசியலில் மிகமுக்கியமான ஆண்டு! ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. தொடர்ந்து இரண்டாவது முறையாக அரியணையில் அமர்ந்து வரலாறு படைக்கப்பட்ட வருடம். அந்த சாதனையைப்படைத்த ஜெயலலிதா, அதே ஆண்டு டிசம்பரில் இறந்தும் போனார்.

2016 டிசம்பர் 5-ம் தேதிக்குப் பிறகு தமிழக அரசியலே மாறிப்போனது. அதுவரை ஊமைகளாக இருந்த ‘மாண்புமிகுக்கள்’ எல்லாம் மீடியா முன்பு பேச ஆரம்பித்தார்கள். அமைச்சர்கள் பேட்டி தர மாட்டார்களா என மைக்குடன் பத்திரிகையாளர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து ஓடிய காலம்போய், பைட் கொடுப்பதற்காக, மைக்கைத் தேடி அமைச்சர்கள் அலையத் தொடங்கினார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது எதிர்த்த மத்திய அரசின் திட்டங்களை எல்லாம், அவரது மறைவுக்குப் பின் அ.தி.மு.க. ஆட்சி ஆதரிக்கத் தொடங்கியது. 

தன் படத்துக்கு சிக்கல் வந்தபோது, ‘‘நாட்டை விட்டு வெளியேறுவேன்’’ என ‘விஸ்வரூபம்’ எடுத்தார் கமல். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, அவர் காட்டிய அதிகபட்ச எதிர்ப்பு இதுதான். சென்னையை பெருவெள்ளம் புரட்டிப்போட்டபோது, ‘‘மக்கள் வரிப்பணம் எங்கே போனது? அரசு நிர்வாகம் செயலிழந்துவிட்டது’’ எனத் தெரிவித்தார் கமல்ஹாசன். ஆனால் பிறகு ‘‘வேறு மாதிரியாக எழுதிவிட்டார்கள்’’ என ஜகா வாங்கினார். ஜெயலலிதா இறந்த பிறகு, கமலுக்கும் வீரம் வந்துவிட்டது. ‘107செயற்கை உறுப்பினர்களை ஏவியவரைவிட 104 செயற்கைக் கோள்களை ஏவியவரே போற்றுதலுக்குரியவர்’ என கூவத்தூர் கூத்தை கிண்லடித்தார். ‘தப்பான ஆளு, எதிலும் வெல்லும் ஏடாகூடம்’ என்றெல்லாம் கமல்போட்ட ட்வீட்கள் தமிழக அரசியலைத் திணறடித்தன.

ஜெயலலிதா மரணம்

ஜெயலலிதாவின் நிழலாக வலம்வந்த சசிகலாவும் பாய்ச்சல் காட்டினார். ஜெயலலிதாவைப் போலவே மேக்-அப் போட்டுவந்து, ‘‘அக்கா... கோட்டையைவிட்டுக் கிளம்பிட்டீங்களா... மதிய சாப்பாட்டுக்கு என்ன வேண்டும்?’’ என அ.தி.மு.க பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுக்கொண்டதும் பேசிய பேச்சின்போது கிளிசரின் இல்லாமலேயே கண்ணீர் சிந்தினார். ஜெயலலிதா பயன்படுத்திய கார், சேர் மற்றும் அவரைப் போன்றே ஹேர்ஸ்டைல் என சசிகலா மாறிப்போனதற்கு காரணம் ஜெயலலிதாவின் மரணம்தான்.

‘துணிச்சல்காரி’ என பெயர்பெற்ற ஜெயலலிதா, இந்த உலகத்துக்கு விட்டுச் சென்றது துக்கத்தை அல்ல. தைரியத்தை! ஒரு மரணம், அரசியல் நகர்வுகளை மட்டும் மேற்கொள்ளவில்லை.சிலரின் குருதியில் ‘தைரியம் மற்றும் பாசிட்டிவ்’ குரூப் ரத்தத்தையும் செலுத்திவிட்டுப் போயிருக்கிறது. இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியும் விதிவிலக்கல்ல.‘‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.’’ என்று 21 ஆண்டுகளுக்கு முன்பு முழங்கிய ரஜினியின் உதடுகளின் உறைப்பு காலப்போக்கில் கரைந்துபோனது.பிறகு சூப்பர்ஸ்டாரே, ஜெயலலிதாவுக்கு ‘தைரியலட்சுமி’ பட்டம் எல்லாம் கொடுத்தது அக்மார்க் தடம் மாறுதல்கள். 

ரஜினி

ஜெயலலிதா மரணத்துக்குப்பிறகு, ரஜினி தடம் மாறியிருக்கிறார். அண்மையில் ரசிகர்களைச் சந்தித்தபோது அவர், ‘‘போர் வந்தால் களத்தில் குதிப்போம்... இங்கே சிஸ்டம் கெட்டுக்கிடக்கு... பச்சைத் தமிழன்’’ என்றெல்லாம் முழங்கி இருக்கிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது திரையில்பேசிய அரசியல் வசனங்களை அவர் உயிருடன் இல்லாதபோது, நிஜத்தில் தற்போது பேச ஆரம்பித்துவிட்டார். கால் நூற்றாண்டு காலமாக விவாதிக்கப்பட்டுவந்த ‘ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்கிற பேசுபொருள், ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. ‘ஆண்டவன் கட்டளை’ இந்தமுறை நிஜமாகும் என்பதுதான் எல்லோரின் எதிர்பார்ப்பு. கடந்த காலங்களில் அரசியல் பேசிவிட்டு போய்விடுவார். இந்தமுறை அரசியல் புள்ளிகளையும் பத்திரிகையாளர்களையும், நண்பர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். ‘‘ரஜினியின் அரசியல் என்ட்ரி இந்தமுறை நிச்சயம் நடக்கும்’’ என்பதுதான் அவரைச் சந்தித்துவிட்டு வந்த பலரின் கணிப்பாக இருக்கிறது.

DSC_4717_10349_12498.jpg

 

ஜெயலலிதா இல்லை...கருணாநிதி அரசியலில் தீவிரமாகச் செயல்படும் நிலையில் இல்லை... அ.தி.மு.க. பலவீனமாக உள்ளது. இப்படியான வெற்றிடத்தில் கால்பதிக்க நினைக்கிறார் ரஜினி. அவருக்கு அரசியல்கைகூடுமா? அவரின் கடந்த கால அரசியல் நிகழ்வுகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தின? ரஜினியின் முதல் அரசியல் அத்தியாயம் எங்கே ஆரம்பித்தது? அதற்கான தொடக்கப்புள்ளி எங்கே விதைக்கப்பட்டது? அத்தனையும் இந்தத் தொடரில் அலசுவோம். அரசியலை ரஜினியோடு முடிச்சுப்போட்டு, முதன்முதலில் பேச ஆரம்பித்தார்களே, அந்த தருணத்தில் இருந்து இன்றைய ராகவேந்திரா தரிசனம்வரை அவ்வளவும் இங்கே இடம்பெறும்...

http://www.vikatan.com/news/coverstory/91116-rajinis-route-to-politics-episode-1.html

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

ரஜினி அரசியல் அறியத் துவங்கிய தருணம்! இவர் வழி... தனி வழி...?! ரஜினியின் அரசியல் ரூட்! பகுதி 2

 
 

ரஜினி தொடர்

1980-களில் ஆக்‌ஷன் படங்களில் வேரூன்றி இருந்தார் ரஜினி. 'பில்லா', 'முரட்டுக் காளை', 'தில்லுமுல்லு', 'மூன்று முகம்', 'பாயும் புலி', 'அடுத்த வாரிசு', 'நான் சிகப்பு மனிதன்', 'படிக்காதவன்', 'மிஸ்டர் பாரத்', 'வேலைக்காரன்' என அடுத்தடுத்து படங்கள் ஹிட்டடித்துக் கொண்டிருந்தன. ‘சூப்பர் ஸ்டார்’ என்கிற உச்சத்தைநோக்கிப் போய்க் கொண்டிருந்தார் ரஜினி. கிட்டத்தட்ட அந்தக் காலக்கட்டத்தில் தமிழகத்தை எம்.ஜி.ஆர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அப்போதெல்லாம் ரஜினியிடமிருந்து அரசியல் ரியாக்‌ஷன் வெளிப்படவே இல்லை.

இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த நடிகர் எம்.ஜி.ஆர்-தான். அரிதாரம் பூசியவர்கள்கூட அரியணையில் அமரலாம் என்கிற பார்முலாவைப் பார்த்துதான் பக்கத்து மாநிலமான ஆந்திராவில் என்.டி.ராமராவ், பின்னர் அரசியலில் குதித்து ஆட்சியில் அமர்ந்தார். இதையெல்லாம் பார்த்துவிட்டு ஜெயலலிதாவுக்கும் ‘அரசியல் காய்ச்சல்’ தொற்றிக்கொள்ள... அ.தி.மு.க-வில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். அ.தி.மு.க கொள்கைப்பரப்புச் செயலாளர், ராஜ்யசபா எம்.பி என அடுத்தடுத்த நகர்வுகளை நோக்கி போய்க் கொண்டிருந்தார் ஜெயலலிதா. இப்படியான அரசியல் மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தபோது, தன் மொத்தக் கவனத்தையும் கோலிவுட்டில்தான் செலுத்தினார் ரஜினி. கோட்டைப்பக்கம் அவர் திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஆனால் அவருடைய ரசிகர்கள், அப்போதும் இப்போதுபோலவே அரசியலுக்கு வரச்சொல்லி ரஜினியை இழுத்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால், ரஜினிக்கு அப்போது பெரிய அரசியல் ஆர்வம் எல்லாம் இல்லை. எல்லா அரசியல்வாதிகளிடமும் நட்போடு இருந்தார். அவருடைய அரசியல் என்பது வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தது. ஓட்டுப்போடும் சராசரி மனிதரைப் போலத்தான் ரஜினி அன்றைக்கு இருந்தார்.

ரஜினி


எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு முதல்வர் ஆனார் அவரது மனைவி வி.என். ஜானகி. இவரும் சினிமாவிலிருந்து வந்தவர்தான். எம்.ஜி.ஆர் மரணத்துக்குப் பிறகு ஜானகி, ஜெயலலிதா என அ.தி.மு.க. இரண்டு அணிகளாகப் பிரிந்தன. அதனால் ஜானகி அம்மாள் அமைச்சரவை ஒரு மாதம்கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. மெஜாரிட்டியை நிரூபிக்க சட்டசபை கூடியபோது, வரலாறுகாணாத வன்முறை வெடித்தது. இதனால், தமிழகத்தில் ஆட்சி கவிழ்ந்து, ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு, 1989-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. அந்த ஆட்சியும் ஒரு வருடத்துக்குள் கலைக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையே பிளவுபட்ட அ.தி.மு.க. ஒன்றானது. பின்னர் 1991-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க வென்று, முதன்முறையாக ஜெயலலிதா முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். கோடம்பாக்கத்திலிருந்து கோட்டையைப் பிடித்த மூன்றாவது முதல்வர் ஆனார் ஜெயலலிதா. 1991-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்த அந்தக்கணத்திலிருந்து அரசியலை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கினார் ரஜினி. அதற்குக்காரணமே, ஜெயலலிதாதான். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த காலத்தில் ரஜினிக்கோ அல்லது தமிழக சூழலுக்கோ பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆனால் ஜெயலலிதாவால் தமிழகத்தின் அரசியல் தலைகீழானது.

1991-1996-ம் ஆண்டுவரையிலான ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் தமிழக அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத பக்கங்கள். சர்வாதிகாரப் போக்குடன் நடந்த அந்த ஆட்சியின்மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. தடபுடலாக நடந்த வளர்ப்பு மகன் திருமணம், வக்கீல்கள் விஜயன், சண்முகசுந்தரம்மீது தாக்குதல், சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு, சுப்பிரமணிய சுவாமிக்கு நெருக்கடி, ஊழல்கள், சசிகலா குடும்பத்தினர் சொத்துக்குவிப்பு, நில அபகரிப்புகள், நீதிபதி உறவினர்மீது கஞ்சா வழக்கு, தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் தங்கியிருந்த ஓட்டல்மீது தாக்குதல் என நிறைய அடாவடிகள் அரங்கேறிக் கொண்டிருந்தன.ஓட்டுப்போட்ட சாமான்யன் இதையெல்லாம் பார்த்து கொதித்துக் கொண்டிருந்தபோது, ரஜினியும் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தார். அப்போதுதான் ‘அரசியல்’ அறிய ஆரம்பித்தார்.

உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்த கோபத்தைக் கொட்டித்தீர்த்து,வெடித்துவிட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் ரஜினி....

 

-தொடரும்

http://www.vikatan.com/news/coverstory/91538-rajini-starts-to-learn-politics-rajinis-route-to-politics-episode-2.html

Link to comment
Share on other sites

சிவாஜியை அவமதித்த ஜெயலலிதா! : “இவர் வழி... தனி வழியா..?” ரஜினியின் அரசியல் ரூட் பாகம் : 3

 
 

ரஜினி தொடர்

1991 சட்டசபைத் தேர்தலின்போது, ராஜீவ் காந்தி படுகொலையில் எழுந்த அனுதாப அலையில், எதிர்க்கட்சிகளை எல்லாம் வாரிச் சுருட்டி வீசிவிட்டு ஆட்சியைப் பிடித்தார் ஜெயலலிதா. அசுர பலத்தோடு ஆட்சியில் அமர்ந்த ஜெயலலிதா, 'எல்லாமே நான்’ என்கிற அதிகார தோரணையில் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தார். அதனால் எல்லா பக்கத்திலும் இருந்து எதிர்ப்பு. எந்தத் திட்டத்திலும் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக்கொண்டார். ஜெ.ஜெ அரிசி, ஜெ.ஜெ போக்குவரத்துக் கழகம் என எல்லாத் திட்டங்களிலும் ஜெயலலிதாவின் பெயர்தான் இடம் பெற்றன. அந்த வரிசையில், திரைப்பட நகருக்கும் தன் பெயரையே ஜெயலலிதா சூட்டிக் கொண்டபோது பிரச்னையானது.

1989-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக் காலத்தில், ‘திரைப்பட நகர்’ ஒன்றை அமைக்க முடிவு செய்து சென்னையை அடுத்த தரமணியில் இடம் தேர்வு செய்தார்கள். அப்போது மத்திய அமைச்சராக இருந்த உபேந்திராவை அழைத்து வந்து, திரைப்பட நகருக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டது. ஆனால், திரைப்பட நகர் உருவாவதற்கு முன்பே தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. அதன்பிறகு வந்த ஜெயலலிதா, அந்தத் திரைப்பட நகரைக் கொண்டு வர முயன்றார். சுமார் 66 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட திரைப்பட நகரில், குளிர்சாதன வசதி செய்யப்பட்ட படப்பிடிப்பு அரங்குகள், பரந்தப் புல்வெளி, காவல் நிலையம், கிராமம், குளம், தோட்டம், சாலை, கோயில், அங்காடித் தெரு என அத்தனையையும் திரைப்பட நகருக்குள் வடிவமைத்தார்கள். ஒரு படத்தின் மொத்தக் காட்சிகளையும் திரைப்பட நகருக்குள்ளே எடுத்துவிடும் அளவுக்குத் தரமணி திரைப்பட நகரம் உருவானது. பெரும் பொருள் செலவில், உருவாக்கப்பட்ட அந்த திரைப்பட நகருக்கு ‘ஜெ. ஜெ திரைப்பட நகர்’ எனப் பெயர் சூட்டினார்கள். 

ரஜினி

‘ஜெ.ஜெ ஃபிலிம் சிட்டி’ எனப் பெயர் சூட்டப்பட்டதுமே கோடம்பாக்கம் கொதிக்க ஆரம்பித்தது. ‘எம்.ஜி.ஆர் பெயரைத் திரைப்பட நகருக்குச் சூட்ட வேண்டும்’ எனத் திரையுலகத்தினர் கோரிக்கை வைத்தார்கள். அந்த வேண்டுகோளை அலட்சியப்படுத்திய ஜெயலலிதா, ‘ஜெ.ஜெயலலிதா திரைப்பட நகர்' எனப் பெயர் சூட்டினார். இதன் திறப்பு விழா 1994-ம் ஆண்டு நடைபெற்றது. ‘ஜெ.ஜெ ஃபிலிம் சிட்டி’யைத் திரையுலகம் எதிர்த்த நேரத்தில், ரஜினியும் கடும் கோபத்தில் இருந்தார். எம்.ஜி.ஆரின் பெயரையோ அல்லது சிவாஜியின் பெயரையோ வைத்திருக்க வேண்டும் என ரஜினி விரும்பினார். அந்தத் திரைப்பட நகர் தொடக்க விழாவிலும் முக்கிய சினிமாப் புள்ளிகள் புறக்கணிக்கப்பட்டனர். காரணம் ஜெயலலிதாவின் பெயரைச் சூட்டியதற்கு கோடம்பாக்கம் எதிர்ப்பு காட்டியதால், தங்களுக்கு  மரியாதை தரப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. ‘ஜெ.ஜெ ஃபிலிம் சிட்டி’ திறப்பு விழாவிலும் ஜெயலலிதா புராணம்தான் பாடினார்கள். எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க மூலம் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதாவுக்கு, எம்.ஜி.ஆர் பெயரைச் சூட்ட மனம் வரவில்லை. தன்னுடையக் கோபத்தை வெளிக்காட்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார் ரஜினி. அதற்கான நேரமும் வந்தது. எந்த ‘ஜெ.ஜெ ஃபிலிம் சிட்டி’யில் சிவாஜி அவமதிக்கப்பட்டாரோ, அதே சிவாஜிக்கு நடந்த ஒரு விழாவில், ஜெயலலிதாவோடு மேடையேறினார் ரஜினி.

சிவாஜிக்கு செவாலியே விருது வழங்கப்பட்ட போது ரஜினி என்ன பேசினார்?

- தொடரும்

http://www.vikatan.com/news/coverstory/92182-jayalalithaa-insults-sivaji-rajinis-route-to-politics-part-3.html

Link to comment
Share on other sites

விரல் சொடுக்கி ஜெயலலிதாவை விமர்சித்த ரஜினி! - இவர் வழி... தனி வழியா.?! ரஜினியின் அரசியல் ரூட்! பகுதி 4

 
 


ரஜினி

பிரெஞ்ச் மொழியில், ‘செவாலியே’ என்பதற்கு மாவீரன் எனப் பொருள். ஃபிரான்ஸை ஆண்டுவந்த மாவீரன் நெப்போலியனால், 1802-ம் ஆண்டு ‘செவாலியே விருது' வழங்கும் விழா தொடங்கப்பட்டது. செவாலியே விருதைப் பெற்ற முதல் ஆசிய நடிகர் சிவாஜிதான்! அந்த சிவாஜிக்கு ‘செவாலியே விருது' தரப்பட்டபோது நடந்த விஷயங்கள் தமிழக அரசியலின் முக்கியமானப் பக்கங்கள்.

1995-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில், 'செவாலியே விருது வழங்கும் விழா' கோலாகலமாக அரங்கேறியது. ரஜினி, கமல், தேவ் ஆனந்த், நாகேஸ்வரராவ், சிரஞ்சீவி, மம்முட்டி, சத்யராஜ், ராதிகா, ஶ்ரீதேவி, பாலசந்தர் எனத் திரையுலக முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர். விழாவின், சிறப்பு விருந்தினர் அன்றைய முதல்வர் ஜெயலலிதாதான்! ‘செவாலியே’ விருதை ஒரு தட்டில் ஏந்தியபடி நடிகை மீனா வந்தார். அதனைப் பெற்ற ஃபிரான்ஸ் தூதர் பிலீப் பெடிட் சிவாஜியின் சட்டையில், அந்த விருதை அணிவித்து விருதுக்கான சான்றிதழையும் அளித்தார். ‘‘சிவாஜியைத் தவிர இந்த விருதுக்குப் பொருத்தமானவர் வேறு யாரும் இருக்க முடியாது’’ எனப் புகழாரம் சூட்டினார் பிலீப் பெடிட்.

ரஜினி

கோலிவுட் சார்பில், வெள்ளியிலான 'வீர சிவாஜி சிலை' நடிகர் திலகம் சிவாஜிக்கு அளிக்கப்பட்டது. இதை ஜெயலலிதாதான் சிவாஜிக்கு அளித்தார். விழாவில் பேசிய ஜெயலலிதா, ‘‘கலைத் துறையில், அருந்தொண்டு ஆற்றியவர்களுக்கு இந்த ஆண்டு முதல் சிவாஜி விருது வழங்கப்படும்’’ என அறிவித்தார். ஜெயலலிதாவுக்குக் கமல் மனைவி சரிகாவும் ரஜினியின் மனைவி லதாவும் பொன்னாடை போர்த்தினார்கள். அந்தப் பொன்னாடையில் ஜெயலலிதாவின் உருவம் தங்கத்தினால், இழைக்கப்பட்டிருந்தது. 

வெள்ளைச் சட்டை, கறுப்பு ஜீன்ஸ் காஸ்ட்யூமில் கண்ணாடி அணிந்து வந்திருந்தார் ரஜினி. விழா மேடையில், சிவாஜி ஏறியதும் ஓடிப்போய் அவர் காலைத்தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டார் ரஜினி. சிவாஜி, ஜெயலலிதா எல்லோரும் பேசி முடித்த பிறகு நன்றியுரை சொல்ல வந்தார் சூப்பர் ஸ்டார். ‘வெறும் நன்றியுரைதானே... ரஜினி இதில் என்ன பேசிவிடப் போகிறார்’ என்றுதான் எல்லோருமே நினைத்தார்கள். நன்றியுரை ஆற்றிய இருபது நிமிடமும் மொத்தக் கூட்டத்தையும் தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார் ரஜினி. இத்தனைக்கும் விழாவில், சிவாஜியை வாழ்த்திப் பேசுகிறவர்கள் பட்டியலில்தான் ரஜினியின் பெயர் இருந்தது. ஆனால், ‘‘நான் நன்றியுரை சொல்கிறேன்’’ எனக் கேட்டு வரிசையை மாற்றிக்கொண்டார் ரஜினி. 

நன்றி சொல்ல வேண்டியவர்கள் பட்டியலை விழாக் குழுவினர் ரஜினியிடம் தந்திருந்தார்கள். அந்த லிஸ்ட்டை அப்படியே மடித்துப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு தன் இஷ்டத்துக்கு ஏற்றபடி மாற்றிப் பேசினார் ரஜினி. ‘‘சிவாஜியை வாழ்த்திப் பேசுகிற அளவுக்கு எனக்குத் தகுதி இல்லை. அவரின் உடல்நலத்துக்காக அரை நிமிடம் பிரார்த்திப்போம்’’ என ரஜினி அழைப்பு விடுத்ததும் ஸ்டேடியத்தில் திரண்டிருந்தக் கூட்டம் மொத்தமாக எழுந்து மௌனம் காத்தது. அதன்பிறகு ரஜினி பேசிய வார்த்தைகள் அனைத்தும் அக்னி ரகம்.

ரஜினி

மைக்கைப் பிடித்த ரஜினிக்குத் திடீரென வார்த்தைகள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி வந்தன. பேசிக்கொண்டே போனவர் திடீரென ஜெயலலிதா பக்கம் திரும்பி விரலைச் சொடுக்கிக் கொண்டு, ‘‘நான் ரொம்ப டென்ஷனா இருக்கேன்...’’ எனச் சொல்லி படபடவெனப் பொழிய ஆரம்பித்தார். ‘‘நீங்க திறந்து வெச்சீங்களே... ஃபிலிம் சிட்டி... அப்பவே சிவாஜி சாரைக் கௌரவிச்சிருக்கணும். நீங்க அதைச் செய்யலை. அவரை மதிக்கலை. அந்த விழா மேடையில், அவரை உட்கார வெச்சுக் கௌரவம் பண்ணியிருக்கணும். அது தப்பு! தப்பு பண்றது மனித இயல்பு. தப்பைத் திருத்திக்கறது மனிதத்தனம்’’ எனச் சொன்னதுமே... முடிவுக்கு வர வேண்டிய விழா பரபரப்பைத் தொற்றிக் கொண்டது. 

“அப்போ பண்ண தப்பை இப்போ சரிபண்ணிட்டீங்க. இப்படி ஒரு பிரமாண்டமான விழா நடத்த உதவி பண்ணி, வந்து கலந்துக்கிட்டு சரி பண்ணிட்டீங்க. தப்பு யார் பண்ணாலும் தப்புன்னு சொல்வேன். அது குடிமகனோட உரிமை; அதுவும் ஒரு நடிகன் என்ற முறையில் எனக்கு நிறையவே உரிமை இருக்கு. யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன். விமர்சிக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு’’ என ரஜினி பேசிக்கொண்டே போக... கூட்டம் ஆச்சர்யத்தோடு புருவத்தை உயர்த்தியது.

ரஜினி

ரஜினியின் பேச்சுக்குக் கைத்தட்டல்கள் ஒலித்துக் கொண்டிருக்க... மேடையில், நடுநாயகமாக அமர்ந்திருந்த ஜெயலலிதா கூட்டத்தை சலனமில்லாமல், உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். ஜெயலலிதாவை விமர்சித்த ரஜினி அதே நேரம் பாராட்டவும் தவறவில்லை. ‘‘திரைப்படத் தொழிலாளர்கள் வீடு கட்டிக்கொள்ள 85 ஏக்கர் நிலத்தை இலவசமாக தமிழக அரசு அளித்திருக்கிறது. திரைப்படத் துறைக்கு ஏராளமான சலுகைகளை முதல்வர் வழங்கிவிட்டார். அதனால் திரைப்படத் துறையினர் இனியும் கோரிக்கைகளை வைத்து அவரைத் தொந்தரவு செய்யவேண்டாம்’’ என்றார்.  

அன்றைய காலகட்டத்தில், ஜெயலலிதா ஒரு நிகழ்ச்சிக்கு வந்தால், அவரை வரவேற்று கட் அவுட் வைப்பது... புகழாரம் சூட்டுவது... காலில் விழுந்து வணங்குவது எனத் துதிபாடும் நிகழ்வுகள் அமோகமாக இருக்கும். அந்த அளவுக்கு ஒன்மேன் ஆர்மியாக ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. அவரைக் கண்டித்து அறிக்கைவிடக்கூட பலரும் அச்சப்பட்ட காலம் அது. அப்படியானச் சூழலில், ஜெயலலிதாவை மேடையில் வைத்துக்கொண்டே, ‘‘யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன்’’ எனப் பேசிய ரஜினியின் தைரியத்தைப் பலரும் பாராட்டினார்கள். விழா முடிந்ததும் ரஜினியை, சிவாஜி கட்டித் தழுவினார். ரஜினிக்குத் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் கைகுலுக்கி வாழ்த்துச் சொன்னார்கள். 
 
ஜெயலலிதாவுக்கே இந்த விழா ஒரு புதிய அனுபவமாக இருந்தது. ஆட்சிக்கு வந்த பிறகு, தான் இருக்கும் மேடையிலேயே இப்படி ஒரு தாக்குதலை ஜெயலலிதா சந்தித்ததில்லை. அசந்து போய் உட்கார்ந்திருந்தார் ஜெயலலிதா.

 

 

- தொடரும்

http://www.vikatan.com/news/coverstory/92569-jayalalithaa-versus-rajini-rajinis-route-to-politics-part-4.html

Link to comment
Share on other sites

சீமானையும் அவர் தம்பிகளையும் ரஜினிகாந்த் சமாளிப்பது கடினம் ...நடிகர் சிங்கமுத்து

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ரஜனிக்கு விகடன் எடுக்கும் ஆலவட்டம் அப்படி இப்படி கொண்டுவந்து ரஜனி அரசியலில்தவிர்க்கமுடியாதவர் என்று  நிறுவ முயற்ச்சி பண்ணுது அப்படியே ஒவ்வொரு தொடரின் முடிவிலும் வாசகர் கருத்துக்கள் என்ற பகுதி இருக்கு அங்கு போய் பார்த்தால் ரஜனியை கழுவி ஊத்தி எடுக்கிறார்கள் ஒண்டுமில்லாத காலிபெருங்காய டப்பாவை விகடன் தூக்கி பிடிப்பதன் காரணம் பலதாக இருக்கட்டும் இனி மிளகாய் அரைப்பது கஷ்ட்டம் .

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

“இவர் வழி... தனி வழியா..?” ரஜினியின் அரசியல் ரூட்! 

தமிழ்நாட்டில் கமலகாசன் மாதிரி இன்னும் இளிச்சவாயன்கள் இருக்கும் வரைக்கும் ரஜனிகாந்த் மட்டுமல்ல அமிதாப்பச்சனும் தமிழ்நாட்டுக்கு முதல்வராய் வரலாம்.
 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

‘‘ஜெயலலிதா அமர்ந்திருந்த மேடையில் ரஜினியின் ஆவேசப் பேச்சு” - இவர் வழி... தனி வழியா.?! ரஜினியின் அரசியல் ரூட்! பகுதி-5

 

ரஜினியின் அரசியல் ரூட்

‘செவாலியே’ விருது விழாவில், ஜெயலலிதா பங்கேற்பதற்கு முன்பு திரைப்படத் துறைக்காக ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ‘திரைப்படத் தொழிலாளர்கள் வீடு கட்டிக்கொள்ள 85 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக அளிக்கும்’ என்பதுதான் அந்த அறிவிப்பு. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, ‘செவாலியே’ விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு இரண்டு நாள் முன்பு நடைபெற்றது. ‘செவாலியே’ விருது நிகழ்ச்சியில், பங்கேற்ற ரஜினி ஜெயலலிதாவை விமர்சித்ததோடு இந்த திட்டத்துக்காகப் பாராட்டவும் செய்திருந்தார். ‘‘திரைப்படத் தொழிலாளர்கள் வீடு கட்டிக்கொள்ள 85 ஏக்கர் நிலத்தை இலவசமாக தமிழக அரசு அளித்திருக்கிறது. திரைப்படத் துறைக்கு ஏராளமான சலுகைகளை முதல்வர் வழங்கிவிட்டார். அதனால் திரைப்படத் துறையினர் இனியும் கோரிக்கைகளை வைத்து அவரைத் தொந்தரவு செய்யவேண்டாம்’’ என்றார். 

ரஜினிகாந்த் மற்றும் சிவாஜி

இந்த இரண்டு விழாக்கள் அடுத்தடுத்து நடைபெற்றன. அதற்கு முன்பு ரஜினி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அங்கிருந்து கிளம்பி வந்தார். 1995-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் தேதி திரையுலகத் தொழிலாளர்கள் குடியிருப்பு அடிக்கல் நாட்டும் விழா சென்னைப் பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. திட்டத்தைத் தொடங்கிவைக்க ஜெயலலிதா வந்திருந்தார். அவருக்கு முன்பாக, தன் மனைவியுடன் வந்தார் ரஜினி. அமைச்சர்கள் ரஜினியின் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அமைச்சர்கள் கே.ஏ.கே., ஆர்.எம்.வீரப்பன் மட்டும்தான் எதற்கும் கவலைப்படாமல் ரஜினியை நலம் விசாரித்தார்கள். முதல்வர் ஜெயலலிதா விழா மேடைக்கு வந்ததும் அருகே போய் கைகூப்பி வணக்கம் சொல்லிவிட்டு வந்தார் ரஜினி. ‘‘நல்லா இருக்கீங்களா..?” என ஜெயலலிதா கேட்டபோது இரண்டு கைகளைத் தூக்கி ஆகாயத்தைக் காட்டிச் சிரித்தார் ரஜினி.

அந்த விழாவில், ரஜினி மேடையில் அமரவில்லை. மேடைக்கு எதிரேதான் அமர்ந்திருந்தார். ஒரு கட்டத்தில், ரஜினியைப் பேச அழைத்தார்கள். பூங்கொத்தை ஜெயலலிதாவுக்கு அளித்துவிட்டு மைக் முன்பு வந்தார் ரஜினி. ‘‘மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அவர்களே...” எனப் பேச ஆரம்பித்தார். ‘செவாலியே’ விழாவுக்கு முந்தைய விழா என்பதால், ரஜினியின் பேச்சில் காரம் இல்லை. ஆனால், அர்த்தம் பொதிந்ததாக இருந்தது அவர் உரை. ‘‘இந்த நாள் நம்ம எல்லோருக்கும் சந்தோஷமான நாள். வேற யாரும் பண்ணாத நல்ல காரியத்தைப் பண்ணியிருக்கீங்க. உங்களை இந்த முதலமைச்சர் நாற்காலியில உட்கார வெச்சது பணக்காரங்க இல்லை கோடீஸ்வரங்க இல்லை... ஏழைகள்! அவங்களுக்கு நீங்க நல்லது பண்ணீங்கன்னா... உங்களுக்கு இருக்கிற எல்லாப் பட்டங்களையும்விட சிறந்தப் பட்டமாக ‘ஏழைகளின் தலைவி’ பட்டம் கிடைக்கும். ஏழைகளுக்கு வீடு, சாப்பாடு எல்லாம் கிடைக்கறதுக்கு ஏற்பாடு பண்ணணும். இந்த விழாவை ஏற்பாடு பண்ணியிருக்கறவங்களுக்குச் சொல்றேன். இந்த குடியிருப்புகளெல்லாம் யாருக்குப் போய்ச் சேரணுமோ அவங்களுக்குப் போய்ச் சேரணும். உண்மையான ஜனங்களுக்கு, இல்லாதவர்களுக்குக் கிடைக்கணும். ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரைக்கும்தான் ஏமாத்தறவங்க இருப்பாங்க... யாரும் ஏமாறக்கூடாது” என்றார்.

ஜெயலலிதா, சிவாஜி

இறுதியாகப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தன் பேச்சில், யாரையும் குறிப்பாக பெயர் சொல்லி அழைக்காமல், ‘முன்னணி நட்சத்திரங்களே’ என்றார். இந்த விழாவில், ஜெயலலிதாவைப் புகழ்ந்து தள்ளினார்கள் திரையுலகினர். ஆனால், இரண்டு நாள் கழித்து நடந்த ‘செவாலியே’ விழா அதற்கு நேரெதிர். ஜெயலலிதாவைப் பற்றிய புகழுரைகளும் குறைவுதான். ‘செவாலியே’ விருது பெறுவதற்கு முன்பு சிவாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்ததால், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். மருத்துவமனையில் இருந்து வந்த ஒரு வாரத்துக்குள் ‘செவாலியே’ விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய ரஜினி, ‘‘நாதங்களில் சிறந்தது ஓம் நாதம். மொழிகளில் சிறந்தது மெளன மொழி. மருந்துகளில் சிறந்தது பிரார்த்தனை. அந்த உன்னதமான கலைஞனின் இதயம் ஓய்வு எடுக்க நினைக்கிறது. அந்த இதயத்தைக் கேட்கிறேன். ஓ இதயமே நீ இருக்கிறது ஒரு மகத்தான கலைஞனின் உடலில். ஓய்வு தேவைதான். ஆனால், எங்கள் இதயங்கள் எல்லாம் ஓய்வு எடுத்தபின், நீ ஓய்வு எடுக்கலாம். அதுவரை இதயமே அமைதியாக இரு’’ என சிவாஜிக்காக உருகினார் ரஜினி.

‘இதயமே அமைதியாக இரு’ என சிவாஜிக்கு உருகிய ரஜினியின் இதயம், அமைதியாக இல்லை. ஜெயலலிதா ஆட்சியின் அடாவடிகளைக் கண்டு இன்னும் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது. 3 மாதங்கள்கூட முடியவில்லை. அதற்குள் இன்னொரு மேடையில், ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்தார். அது ‘பாட்ஷா’ வெற்றி விழா. அந்த விழாவில் என்ன நடந்தது?   

-தொடரும்

http://www.vikatan.com/news/tamilnadu/93717-rajini-anger-speech-in-jayalalithaa-s-stage-rajinis-route-to-politics-part-5.html

Link to comment
Share on other sites

“வெடிகுண்டு கலாசாரம்... தூக்கில் போடுங்கள்” ‘பாட்ஷா’ விழாவில் நடந்தது என்ன? இவர் வழி... தனி வழியா.?! ரஜினியின் அரசியல் ரூட்! பகுதி 6

 
 

பாட்ஷா

1995-ம் ஆண்டு வெளியான ‘பாட்ஷா’, ரஜினியின் திரைப்பட வரலாற்றின் திருப்புமுனை சினிமா!

ஆர்.எம்.வீரப்பனின் ‘சத்யா மூவிஸ்’ சூப்பர்ஹிட் படங்களைத் தயாரித்து வந்தது. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதாவோடு மோதல்போக்கைக் கடைபிடித்த ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, ஜானகி அணியை ஆதரித்தார். இதனால் ஜெயலலிதாவுக்கும் ஆர்.எம்.வீரப்பனுக்குமான பனிப்போர் தொடர்ந்துகொண்டிருந்தது. 1991-ல் ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தபோது ஆர்.எம்.வீரப்பன் எம்.எல்.ஏ-வாக இல்லை. ஆனாலும், பழைய கசப்புகளை எல்லாம் மறந்து ஆர்.எம்.வீரப்பனை அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார் ஜெயலலிதா. அப்படி அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான் ‘பாட்ஷா’ படத்தை 'சத்யா மூவிஸ்' தயாரித்தது.

தனது அரசியல் வாழ்க்கைக்கே ‘பாட்ஷா’ திரைப்படம் உலைவைக்கும் என ஆர்.எம்.வீரப்பன் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். ஆர்.எம்.வீரப்பனின் அரசியல் வாழ்வை அஸ்தமனம் ஆக்கிய அந்தப் படம்தான் ரஜினியை அரசியலுக்கு இழுத்து வர வித்திட்டது எனலாம். ஆர்.எம்.வீரப்பனுக்கு அஸ்தமனமும், ரஜினிக்கு சிவப்புக் கம்பளமும் விரித்த ‘பாட்ஷா’ படம்தான் 'பஞ்ச்' டயலாக் சினிமாவின் பிதாமகன். சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ‘பாட்ஷா’வில் கதை, நடிப்பு, பாடல்கள், ஆக்‌ஷன் என சகல அம்சங்களும் சிறப்பாக அமைந்ததால் படம் இமாலய வெற்றி பெற்றது. ரஜினி நடித்து அதுவரை வெளிவந்த எல்லாப் படங்களின் வசூலையும், ‘பாட்ஷா’ முறியடித்து விட்டது. 1995 பொங்கல் பண்டிகை அன்று வெளியான ‘பாட்ஷா’ வெள்ளிவிழா கொண்டாடியது. சென்னையில் 184 நாள்கள் ஓடியது. கோவையில் ஒரு வருடத்துக்கு மேல் ஓடியது.

‘பாட்ஷா’ திரைப்படத்தின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின்போதுதான், ‘‘தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் பரவியுள்ளது’’ என்கிற பரபரப்பை ரஜினி பற்றவைத்தார். பெரிய புயலைக் கிளப்பிய, அரசியலில் பல திருப்பங்கள் ஏற்படக்காரணமான ‘பாட்ஷா’ படத்தின் வெள்ளி விழா, 1995 ஜுலை 14-ஆம் தேதி நடைபெற்றது. சென்னை ‘அடையாறு பார்க்’ ஹோட்டல் விழாவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. மாலைநேரம் வெளியே மழைத்தூறலுடன் ஏரியா குளிச்சி ஆகிக்கொண்டிருக்க...ஹோட்டலுக்கு உள்ளே அனல் வீசத் தொடங்கியது. சத்யா மூவிஸ் தொடங்கி 30 ஆண்டுகள் ஆகியிருந்தன. அதற்காகக் குறும்படம் ஒன்றைத் தயாரித்திருந்தார்கள். அதை விழாவில் முதலில் திரையிட்டார்கள். சத்யா மூவிஸ் தயாரித்தப் படங்களில் இருந்து சில காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன. எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் காட்சிகளைத் தொடர்ந்து,  ரஜினி நடித்த படங்களின் சீன்களைக் குறும்படத்தில் சேர்த்திருந்தார்கள். அந்தப் படத்தைப் பார்த்தவர்களுக்கு 'எம்.ஜி.ஆருக்குப் பிறகு ரஜினிதான்' என்று உணர்த்துவதுபோன்று காட்சிகள் அமைந்திருந்தன. அநீதியை எதிர்த்து ரஜினி குரல் கொடுத்துப் பேசும் வசனங்களைப் பார்த்து விழாவில் விசில் சத்தம் அதிகளவில் பறந்தது. 

‘‘ ‘பாட்ஷா’ படத்தின் வெற்றியானது, அதன் திரைக்கதையை உருவாக்கிய ஆர்.எம்.வீரப்பனையே சேரும். படத்தின் வெற்றிக்காகப் பாடுபட்ட அனைவருக்கும் என் நன்றி’’ என்றபடியே பேசத் தொடங்கினார் ரஜினி. ‘‘இந்த விழாவில் முக்கியமான ஒரு பிரச்னை பற்றிப் பேச விரும்புகிறேன். சமீபத்தில் டைரக்டர் மணிரத்னம் வீட்டின் மீது வீசப்பட்ட வெடிகுண்டு என் மனதை மிகவும் சங்கடப்படுத்தி விட்டது. அதுமட்டுமல்ல, அடுத்தடுத்து பல இடங்களில் வெடிகுண்டுகள் வீசப்பட்டு, அப்பாவிப் பொதுமக்கள் பலியாகி இருக்கிறார்கள். சமீபகாலமாக, தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தமிழக முதலமைச்சருக்கு (ஜெயலலிதா) இதை என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன். வெடிகுண்டு, துப்பாக்கிக் கலாசாரத்தை ஒழிக்கச் சட்டம் கொண்டு வாருங்கள்.

ரஜினி

சிங்கப்பூரில் போதைமருந்து வைத்திருந்ததால், அவர்களை விசாரணை இல்லாமல் தூக்கில் போடுகிறார்கள். அதேபோல் வெடிகுண்டு, துப்பாக்கி வைத்திருப்பவர்களை விசாரணை இன்றி தூக்கில் போடவேண்டும். ஒரு 10 பேரைத் தூக்கில்போட்டால் போதும். எல்லாம் சரியாகிவிடும். குற்றம்செய்தவர்களைப் பிடித்துத் தண்டியுங்கள். ஆனால் ஒரு குற்றவாளிகூட இன்னமும் தண்டிக்கப்படவில்லையே ஏன்? தமிழகப் போலீஸார் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. திறமைவாய்ந்த அவர்களிடம் அந்த இடத்தைக் கொடுங்கள். தலையிடாதீர்கள். அவர்கள் அடக்கிக்காட்டுவார்கள். தமிழ்நாட்டில் வெடிகுண்டுக் கலாசாரமே இல்லையென ஆக்கிவிடுவார்கள். தமிழகத்தில் இனி வெடிகுண்டு, துப்பாக்கி வன்முறை நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி ஏதாவது நடந்தால், அதற்கு அரசாங்கமே பொறுப்பு. இதை நான் ரஜினிகாந்தாகச் சொல்லவில்லை. நாட்டில் வாழும் குடிமக்களில் ஒருவனாகச் சொல்கிறேன்.’’

இப்படி ரஜினி பேசிக்கொண்டே போனபோது, மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் முகத்தில் எந்தச்சலனமும் இல்லை. ஆனால் உள்ளத்தில் லேசான உதறல் இருந்திருக்கும். ரஜினி பேசி முடித்ததும் அவருடன் கைகுலுக்கி, உபசரித்து தட்டிக்கொடுத்து ரஜினியை வழியனுப்பி வைத்தார் ஆர்.எம்.வீரப்பன். ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அமைச்சரை மேடையில் வைத்துக்கொண்டே, தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாசாரம் பற்றிப்பேசுவதற்கு ‘தில்’ வேண்டும். அது, அப்போது ரஜினியிடம் இருந்தது. ரஜினியின் பேச்சு, உடனடியாக அரசின் காதுகளுக்குப் போய்ச்சேர்ந்தது. அதைவிட ஆர்.எம்.வீரப்பன் அந்தமேடையில் இருந்தார் என்பது அன்றைய அமைச்சர் எஸ்.டி.எஸ் மூலம் ஜெயலலிதாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. ரஜினியின் இந்தப் பேச்சுக்கு மக்களிடம் ஏக வரவேற்பு. ரஜினியின் வீட்டுக்குத் தினமும் ரசிகர்கள் குவிய ஆரம்பித்தார்கள்.

ஆளும் கட்சியில் இருந்து ரஜினிக்கு அடுத்தடுத்து எதிர்ப்புகள் வரத் தொடங்கின. ஆர்.எம்.வீரப்பனுக்கு அதைவிட அதிர்ச்சிகள் காத்திருந்தன. ‘பாட்ஷா’ பட வெற்றி விழாவில் ரஜினி பேச்சுக்குப் பிறகு என்ன நடந்தது?

-தொடரும்.

http://www.vikatan.com/news/tamilnadu/94393-rajini-s-route-to-politics-part-6.html

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

ஆர்.எம் வீரப்பனின் பதவியைப் பறித்த ரஜினியின் பேச்சு! இவர் வழி... தனி வழியா.? - ரஜினியின் அரசியல் ரூட் : பகுதி 7

 
 

ரஜினி

'பாட்ஷா' பட விழாவுக்கு முந்தைய வருடம் வரையில், எந்தக் கூட்டத்திலும் ரஜினி, அரசியல் பேசியது கிடையாது. ஆனால், ‘பாட்ஷா’ வெள்ளி விழாவில், அரசியல் பேசியதோடு, ஆட்சிக்குக் கண்டனமும் தெரிவித்தார் ரஜினி. இது அன்றைய அரசியலில் பல திருப்பங்கள் ஏற்படக் காரணமாக அமைந்தது. ரஜினி, அப்படிப் பேசுவதற்குக் காரணமாக இருந்தது டைரக்டர் மணிரத்னம் வீட்டின் மீது வீசப்பட்ட வெடிகுண்டு மட்டுமல்ல... தமிழகத்தில் அப்போது  அடுத்தடுத்து நிகழ்ந்த வெடிகுண்டு வீச்சு சம்பவங்களும்தான். 

மும்பையில் நடைபெற்ற மதக் கலவரத்தை மையமாக வைத்து ‘பம்பாய்’ என்கிற படத்தை எடுத்திருந்தார் மணிரத்னம். இந்து - முஸ்லிம் மதங்களைச் சார்ந்த காதலர்களை மையமாக வைத்துப் பின்னப்பட்ட இந்தக் கதையில் ‘பம்பாய்’ கலவரமும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இந்தப் படம் தொடர்பாக இரண்டு தரப்பிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில்தான் சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள மணிரத்னம் வீட்டில், 1995-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி வெடிகுண்டு வீசப்பட்டது. மாடியின் வராண்டாவில் அமர்ந்து காபி குடித்தபடியே மணிரத்னம் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரின் வீட்டு சுற்றுச்சுவர் அருகே வந்த 2 பேர் வெடி குண்டுகளை அவரை நோக்கி வீசினார்கள். குறி தவறி ஆஸ்பெஸ்டாஸ் கூரை மீது விழுந்து வெடித்தது.  இதனால், மாடியின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. ஒரு குண்டு தாழ்வாரத்தை உடைத்துக்கொண்டு உள்ளே விழுந்தது. வெடிகுண்டு சிதறல்களினால் மணிரத்னத்தின் வலது கால் தொடையில், சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன. வீட்டின் வேலைக்கார அம்மாள் கமலாவின் கையில் காயம் ஏற்பட்டது. மணிரத்னமும் வீட்டுக் காவலாளியும் குண்டு வீசியவர்களைப் பிடிக்க ஓடினார்கள். விவரம் அறிந்து மற்றவர்களும் அவர்களைப் பிடிக்க ஓடியபோது துப்பாக்கியை காட்டி மிரட்டியபடியே ஓர் ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றனர் குற்றவாளிகள். வெடிக்காத குண்டு ஒன்றையும் மணிரத்னம் வீட்டின் அருகிலேயே அவர்கள் போட்டுச் சென்றிருந்தார்கள். தேவகி மருத்துவமனையில் மணிரத்னமும் கமலாவும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். அப்போது சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ராஜசேகர நாயர், ‘‘வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்கும்’’ என சொன்னார். 

இப்படித்தான் சேலம் மாவட்டம் வாழப்பாடியில், உள்கட்சித் தகராறில் ஒரு குண்டு வெடித்தது. மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வீசுவதற்கு முன்பே தமிழகத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தபடியே இருந்தன. 1991-1996-ம் ஆண்டு வரையிலான ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் நடந்த குண்டு வெடிப்புகள் இவை...

1) 1993 ஆகஸ்ட் 8 - சென்னை ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் குண்டு வெடிப்பு. 11 பேர் பலி

2) 1995 ஏப்ரல் 14 - சென்னை இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் குண்டு வெடிப்பு. சண்முகம் பலி.

3) 1995 ஜூலை 3 - நாகூரில் இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் தங்கமுத்து கிருஷ்ணனின் மனைவி தங்கம், பார்சல் குண்டுக்குப் பலி.

4) 1995 ஜூலை 4 - மயிலாடுதுறை பி.ஜே.பி மாவட்ட அமைப்பாளர் ஜெகவீரபாண்டியன் வீட்டுக்குத் தபாலில், பார்சல் வெடிகுண்டு. 

இப்படி தொடர்ச்சியான குண்டு வெடிப்புகளைப் பார்த்துத்தான் ‘பாட்ஷா’ படவிழாவில் பொங்கினார் ரஜினி. பாட்ஷா படத்தின் வெள்ளி விழாவின்போது ஜெயலலிதா மந்திரிசபையில் உணவு அமைச்சராக இருந்தார் ஆர்.எம் வீரப்பன். ரஜினியின் பேச்சுக்கு அவர் எந்த ரியாக்‌ஷனும் காட்டாததால், அவருடைய பதவியே பறிபோனது. அதற்கு முன்பே ஆர்.எம் வீரப்பனுக்கும், ரஜினிகாந்துக்கும் எதிராக அ.தி.மு.க-வினர் கண்டன கூட்டங்களை நடத்தினர். காட்டமாக அறிக்கைகள் வெளியிட்டனர்.

ரஜினி - ஆர். எம். வீரப்பன்

‘பாட்ஷா’ படத்தின் வெற்றி விழாவுக்கு முன்பே அமெரிக்கா செல்ல ஆர்.எம் வீரப்பன் திட்டமிட்டிருந்தார். விழா நடந்த அடுத்த நாள்தான் அவர் அமெரிக்கா கிளம்பிப் போனார். அதன்பின், அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்தன. 'துரோகியை நீக்குங்கள்’ என்று அ.தி.மு.க பிரமுகர்கள் அறிக்கை வெளியிட்டனர். இதனால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. 'ரஜினி அரசியலில் ஈடுபடவேண்டும். தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும்' என்கிற கோரிக்கையை வைத்தனர் ரசிகர்கள். குறிப்பாக ‘அ.தி.மு.க-வினருக்குப் பாடம் புகட்டவேண்டும்’ என ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். 'ரஜினி, அரசியலுக்கு வர வேண்டும்' என்கிற கோரிக்கையை அப்போது தமிழகக் காங்கிரஸ் தலைவராகயிருந்த குமரிஅனந்தனும் முன்வைத்தார்.  'ரஜினியின் ஆதரவை வைத்து காங்கிரஸ் மீண்டும் அரியணை ஏறமுடியும்' என அவர் நினைத்தார். 

இவ்வளவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோதும் ரஜினி மவுனமாகவே இருந்தார். ‘பாட்ஷா’ வெள்ளி விழாவுக்கு முன்பே முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த ஆர்.எம் வீரப்பன், தன்னுடைய வெளிநாட்டுப் பயணம் பற்றித் தெரிவித்திருந்ததை நினைவுபடுத்தி, மறுநாள் தான் கிளம்பப் போவதை உறுதிப்படுத்தி, விடைபெற்றுக்கொண்டுதான் விழாவுக்கு வந்தார். ‘பாட்ஷா’ படத்தயாரிப்பில் தனக்கு நேரடியாகத் தொடர்பு இல்லை என்பதால், ஆர்.எம் வீரப்பன் மேடைக்குச் செல்லாமல், முன் வரிசையில் ஒரு பார்வையாளராக அமர்ந்திருந்தார். ஆனால், ஆர்.எம் வீரப்பன்  கீழே அமர்ந்திருப்பதைப் பார்த்த ரஜினி, அவரை மேலே வரும்படி அழைத்து, மேடையில் அமரச் செய்தார். அப்போதுதான் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி ரஜினி பேசினார். யாரையும் தாக்கிப்பேசவேண்டும் என்ற எண்ணத்தில் வெளியிடப்பட்ட கருத்தாக அதை ஆர்.எம் வீரப்பன் எண்ணவில்லை. அதோடு விழாவின் இறுதியில் ரஜினி பேசியதால், அவர் பேசி முடித்ததும் விழாவும் முடிந்துவிட்டது. இதனால் ஆர்.எம் வீரப்பனும் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

அடுத்தநாள் காலை, `முதல்வர் பார்க்க விரும்புகிறார்’ என்ற தகவல் ஆர்.எம் வீரப்பனுக்குத் தகவல் வர உடனே போயஸ்கார்டன் சென்றார். இன்டர்காமில் ஆர்.எம் வீரப்பனுடன் ஜெயலலிதா பேசினார். “நேற்று ரஜினி ஏதேதோ பேசியிருக்கிறார்... நீங்கள் மேடையில் அதையெல்லாம் கேட்டுக்கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தீர்களா?’’ என கேட்டார், ஜெயலலிதா. “இல்லம்மா... அவர் இயல்புப்படி பேசினார். அது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்று நான் நம்பவில்லை... தவிர, அவர் கடைசியாகப் பேசியதும், கூட்டம் முடிந்துவிட்டது. மறுப்பு சொல்ல வாய்ப்பும் இல்லை’’ என விளக்கம் கொடுத்தார் ஆர்.எம் வீரப்பன். “அவர் என்னை அட்டாக் பண்ணித்தான் பேசியிருக்கார். அதை நீங்க கேட்டுக்கிட்டு இருந்தீங்க...!’’ என சொல்லி  ரிசீவரை வைத்துவிட்டார் ஜெயலலிதா. இந்த விவரங்களை எல்லாம் ஆர்.எம் வீரப்பனே தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

ரஜினிகாந்த்

'ஜெயலலிதா கோபத்தில் இருக்கிறார்' என்பது ஆர்.எம் வீரப்பனுக்குப் புரிந்துவிட்டது. அடுத்து என்ன நடக்கும் என்பதையும் புரிந்துகொண்டவர் திட்டமிட்டபடியே அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார். ரஜினி - ஆர்.எம் வீரப்பனைத் தாக்கி அறிக்கைகள் வெளியானது. இதனால் அமெரிக்காவிலிருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ஆர்.எம்.வீரப்பன். 'நான் அமைச்சராக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பது முதல்வர் முடிவு செய்ய வேண்டிய விஷயம். அவர் எப்போது என்னை வேண்டாம் என்றாலும், நான் போகத் தயாராக இருக்கிறேன். இதற்காகப் போராட்டம் செய்யத் தேவையில்லை’ என அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதன்பின், ஒரு மாத காலம் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, ஆகஸ்டு 14-ம் தேதி நள்ளிரவில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு ரஜினி ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர். இது ஜெயலலிதாவை எரிச்சல் அடைய வைத்தது. அடுத்த நாள் சுதந்திர தினம்... தேசிய கொடி ஏற்றும் அரசு விழாவில், வழக்கம்போலவே ஆர்.எம்.வீரப்பனும் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். வழக்கம்போல அமைச்சர் பொறுப்பை ஆர்.எம் வீரப்பன் கவனித்துக் கொண்டிருந்தார். எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என நினைத்து ஆர்.எம்.வீரப்பனின் வீட்டுக்கே நேரில் வந்து ஆறுதல் சொன்னார் ரஜினி. இந்த சந்திப்பு நடந்துமுடிந்து 15 நாட்களுக்குப்பின், ஆர்.எம்.வீரப்பனிடமிருந்த உணவுத் துறை பறிக்கப்பட்டு கால்நடைத்துறை ஒப்படைக்கப்பட்டது. இதன்பின் திடீரென்று அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. சில நாட்களில், அ.தி.மு.க-வில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இதனால், 1995-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி  ‘எம்.ஜி.ஆர் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார். ஒருவழியாக ரஜினியின் பேச்சு, ஆர்.எம்.வீரப்பனின் பதவியைப் பறித்துவிட்டது.

http://www.vikatan.com/news/coverstory/96903-rajini-speech-gives-trouble-to-rm-veerappan-rajinis-route-to-politics-part-7.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.