Jump to content

பயண அனுபவங்கள் ஒரு சிறுகுறிப்பு


Recommended Posts

"இது எங்க சுற்றுலா" எனும்  தலைப்பில் பெண்கள் தாம் பயணம் செய்த இடங்கள் தொடர்பாக ஒரு சிறு குறிப்பினை பதிந்துள்ளார்கள் , அவற்றினை நான் இங்கே பதிந்து விடுகிறேன்  அத்துடன் வேறு சில பயணக் குறிப்புகளையும் இதில் இணைக்கிறேன்.  இது முழுமையான பயணக் கட்டுரையாக இல்லாவிடினும் பல புதிய இடங்களை எமக்கு அறிமுகப் படுத்துகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதியுங்கள் பார்க்கிறோம்.....! tw_blush:

Link to comment
Share on other sites

இது எங்க சுற்றுலா: ஸ்வீட் ஸ்வீடன்!

tour_3168975f.jpg
 
 
 

விமானத்தைப் பக்கத்தில்கூடப் பார்க்காத நான் முதல் முறை தனியாகக் கிளம்பி, இரு விமானங்களில் பயணித்து ஸ்வீடன் சென்றேன். சென்னையிலிருந்து துபாய்வரை ஒரு பயணம். ஒரு மணி நேர இடைவெளியில் வேறு விமான நிலையம் செல்ல வேண்டும். குறைந்தது அரைமணி நேரம் ஆகும். விமானத்தைப் பிடிக்க வேண்டுமென்ற பயத்தில் காபிகூடக் குடிக்காமல், மூன்று பேருந்துகளில் பயணித்து, விமானத்தில் ஏறி ஆனந்தப் பெருமூச்சு விட்டேன். என்னை அழைத்துச் செல்ல மகனும் மருமகளும் வந்திருந்தார்கள்.

கடைவீதிக்குச் செல்லும்போது ஆப்பிரிக்கர், ஆஸ்திரேலியர், ஜப்பானியர், ரோமானியர் என்று பல நாட்டு மக்களையும் பார்த்தேன். ஆண், பெண் வேறுபாடின்றி அனைவரும் பேன்ட், டிஷர்ட் அணிந்திருந்தனர். பெரும்பாலும் அணிகலன்கள் அணியவில்லை. ஒரு சிலர் முத்துகளை அணிந்திருந்தனர். புடவையுடன் வெளியே சென்ற என்னைப் பார்த்த பலரும் இந்திய ஆடையா என்று வியப்புடன் கேட்டார்கள். சிலர் வணக்கம் செய்துவிட்டுப் போனதைப் பார்த்து நான் மகிழ்ச்சியில் திளைத்தேன். ஸ்வீடிஷ் மக்களுக்கு வெண்மை, செம்மை நிறத் தலைமுடி இருக்கும். மூன்று மாதக் குழந்தையை வெள்ளை முடியுடன் பார்த்தபோது வித்தியாசமாக இருந்தது.

sweden_3168976a.jpg

வாசா அருங்காட்சியகம் சென்றோம். முன்னூறு ஆண்டுகள் கடலுக்கு அடியில் மூழ்கிவிட்ட கப்பலை வெளியே எடுத்து, சுற்றிலும் சுவர்கள் எழுப்பி அருங்காட்சியகமாக்கிவிட்டார்கள். ஏழு மாடிகள் கொண்ட அந்தக் கப்பலின் ஒவ்வொரு மாடியிலும் விதவிதமான சிற்பங்களைப் பார்த்து வியந்தோம்.

பின்லாந்து செல்லும் கப்பலில் ஒருநாள் முழுதும் இருந்தோம். கடற்கரை ஓரங்களில் உயர்ந்த மலைப் பகுதிகள் இருந்தன. அங்கு வசிக்கும் மக்கள் எங்கே செல்வதென்றாலும் படகில்தான் பயணிக்க வேண்டும். கப்பலில் தனித் தனியாக அறைகள் இருந்தன. பெரிய உணவு விடுதியும் இருந்தது. விதவிதமான பழங்களும் ரொட்டிகளும் சாப்பிட்டோம். தனியாக வெளிநாடு சென்றதும் பல விஷயங்களைப் பார்த்து அனுபவித்ததும் என் வாழ்நாள் சந்தோஷமாக மனதில் நிலைத்துவிட்டன.

- ஆனந்தி முத்தையா, சென்னை.

 

இரு சக்கர வாகனத்தில் ஏற்காடு!

yercaud_3168973a.jpg

பரபரப்பான இயந்திர வாழ்க்கையில் திடீர் தென்றலாக அமைந்தது இருசக்கர வாகனத்தில் சென்ற ஏற்காடு பயணம். ஆறாவது திருமண நாளன்று நான் எதிர்பார்க்காத வகையில் ஒரு பர்ஸையும் என்னைப் பற்றிய கவிதையையும் அன்பளிப்பாகக் கொடுத்தார் என் கணவர். முன்னறிவிப்பு இல்லாமல் என்னையும் மகளையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு சர்ரென்று புறப்பட்டார். அவருக்கு பைக் பந்தயங்களில் அலாதிப் பிரியம். மலையேற்றப் பயிற்சிக்காக ஒவ்வொரு வாரமும் ஏற்காடு செல்வது வழக்கம். இதனால் பழக்கப்பட்ட அந்தப் பாதையில் அரை மணி நேரத்தில் ஏற்காடு வந்தடைந்தோம்.

மான் பூங்கா, ஊஞ்சல் விளையாட்டு, படகு சவாரி போன்ற இடங்களுக்குச் சென்றோம். காட்டெருமை, புள்ளிமான், முயல், நரி, ஓநாய், கீரிப்பிள்ளை, புனுகு பூனை போன்றவற்றைப் பார்த்தோம். பழம்பெரும் எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் குடும்பத்தினரின் பங்களா பயணியர் விடுதியாக இருந்ததைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது. எங்கள் படம் கொண்ட கீ செயின், மிளகாய் பஜ்ஜி, முட்டை ஃப்ரைடு ரைஸ், மலைகளின் அழகு, சில்லென்ற காற்று, என் கணவரின் அன்பு போன்றவை இந்தப் பயணத்தை சுகமான நினைவாக என்றும் நிலைத்திருக்க வைத்துவிட்டன.

- ராபியா, சேலம்.

 

சிறுமலை தந்த பேரானந்தம்!

sirumalai_3168978a.jpg

திருச்சியிலிருந்து இரண்டு நாள் பயணமாகச் சிறுமலை கிளம்பினோம். 18 கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டிச் சிறுமலை அடைந்தோம். மூன்றாவது வளைவைத் தாண்டியபோதே, சில்லென்ற காற்று வரவேற்றது. ஒருபுறம் மலைக்காடும் மறுபுறம் பள்ளத்தாக்கும் பரவசமளித்தன. மலையேறும் சாலை சீராக இருந்ததால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் உச்சியை அடைந்தோம்.

அங்கேயே பிறந்து, வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களே பெரும்பாலும் இருக்கின்றனர். சுற்றுலாப் பயணிகளின் கவனம் சிறுமலை பக்கம் அதிகம் திரும்பாததால், மாசில்லாமல் இயற்கை அழகு கொஞ்சியது. தனியார் தங்கும் விடுதிகள் சிலவும் இருக்கின்றன. சிறுமலையில் பல்வேறு வகையான தாவரங்களும் விலங்கினங்களும் காணப்படுகின்றன. மழைக்காலங்களில் அருவியிலிருந்து தண்ணீர் வரும். நாங்கள் சென்றபோது நீர் இல்லை.

சிறுமலை வாழைப்பழம் புகழ்பெற்றது. பலாப் பழங்களும் காய்த்துக் கிடந்தன. காப்பிச் செடிகளும் மிளகுக் கொடிகளும் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. இரவு மின்விசிறி இல்லாமல் இயற்கையின் குளிர்ந்த காற்றோடும் பூக்களின் நறுமணங்களோடும் வண்டுகளின் ரீங்காரத்தோடும் உறங்கினோம்.

காலை அகத்தியபுரம் கிளம்பினோம். அகத்திய முனிவர் பூஜை செய்ததால், அந்த இடத்துக்கு அகத்தியபுரம் என்று பெயராம். அகத்தியர் சிவசக்தி சித்தர் பீடம் அகத்தியபுரம் வெள்ளிமலையில் அமைந்துள்ளது. அங்கு வருவோருக்குத் தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது, ஆசிரமத்தில் தங்குமிடம் உண்டு. யார் வேண்டுமானாலும் தங்கிக்கொள்ளலாம். குன்றுகளைச் சுத்தப்படுத்துதல் போன்ற பல்வேறு சேவைகளை ஆசிரமம் ஊக்குவித்துவருகிறது.

சூரிய ஒளி பட்டதும் பாறைகள் வெள்ளியாக மின்னின! அகத்தியபுரத்திலிருந்து வெள்ளிமலை உச்சியை அடைய 45 நிமிடங்கள் ஆயின. சரியான படிகள் இல்லாததாலும் உயரமாக இருந்ததாலும் ஏறுவதற்கு மிகவும் கஷ்டப்பட்டோம். ஆனால், மலையின் உச்சியை அடைந்தவுடன் இயற்கையின் படைப்பை எண்ணி மெய்சிலிர்த்தோம். எங்களைச் சுற்றிப் பச்சைப் பசேலென்று மலைகள். மலையிருந்து இறங்கவே மனமில்லை. எங்கு திரும்பினாலும் மருத்துவக் குணம் கொண்ட செடிகள். இந்த இலையைச் சாப்பிட்டால் பூச்சி விஷம் முறிந்துவிடும், அந்த இலையைச் சாப்பிட்டால் பாம்பு விஷம் இறங்கிவிடும் என்றார்கள்.

அங்குள்ள மனிதர்கள் அன்போடும் மரியாதையோடும் பேசுகிறார்கள். இருப்பதைக் கொடுத்து உபசரிக்கிறார்கள். சிறுமலைக் காடுகளும் மக்களும் இயற்கையின் மடியில் நிம்மதியாக இருக்கின்றனர்.

சிறுமலையில் ஏரி, சுற்றுலாத் தலங்கள், மக்கள் கூட்டம், கடைகள், பெரிய கோயில்கள் இல்லை. ஆனால் மன அமைதி கொடுக்கும் இயற்கையின் பேரழகு கொட்டிக் கிடக்கிறது. டவர் இல்லாததால் செல்போன் தொல்லையும் இல்லை.

கிளம்பியபோது ஆர்வம் காட்டாத குழந்தைகள், சிறுமலையிலிருந்து கீழே இறங்க மாட்டோம் என்றார்கள். அவர்களுக்காக இன்னொரு நாள் இருந்துவிட்டுத் திரும்பினோம்.

- சீதா வெங்கடேஷ், திருச்சி

 

திகட்டாத சிக்கிம்

skhim_3168977a.jpg

பத்து ஆண்டுகளுக்கு முன், குடும்பத்தோடு இந்தியாவின் வடகிழக்குப் பகுதியான சிக்கிம் சென்றுவந்தோம். சென்னை போன்று பரபரப்பின்றி அமைதியாக இருந்தது என் முதல் ஆச்சரியம். இமயமலையில் 14 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தியாவின் பட்டுச் சாலையான நாதுல்லா கணவாய் இரண்டாவது ஆச்சரியம். நம் இந்திய ராணுவத்தின் எல்லைப் பாதுகாப்புப் படை முகாம்களுக்கு அருகில் நின்றுகொண்டு எதிரேயுள்ள மலைகளின் அடிவாரங்களில் அமைந்துள்ள சீன ராணுவ முகாம்களை, இந்தியன் என்ற கர்வத்துடன் பார்த்தது அதற்கடுத்த ஆச்சரியம்.

1968-ல் இந்திய ராணுவத்தில் பணியாற்றி உயிர் நீத்த பாபா ஹர்பஜன் சிங் என்ற வீரர் நினைவாக உருவாக்கப்பட்ட நினைவிடம் இன்று, பொதுமக்கள் வழிபடும் கோயிலாக மாறிவிட்டது. தினமும் அங்கே ராணுவப் படுக்கையை விரித்துவைக்கிறார்கள். மறுநாள் காலை யாரோ இரவில் படுக்கையில் உறங்கி எழுந்தது போல் கலைந்திருக்குமாம். தினமும் காலையில் புதிதாக வைக்கப்படும் அவருடைய ராணுவ உடையும் பாலீஷ் செய்யப்பட்ட காலணிகளும் மாலையில் பார்த்தால் யாரோ உபயோகபடுத்தி விட்டுக் கழற்றியது போலிருக்குமாம். இதைக் கேள்விப்பட்டவுடன் அடிவயிற்றில் பயம் கலந்த ஆச்சரியம் ஏற்பட்டது.

வருடத்துக்கு ஒருமுறை செப்டம்பர் மாதத்தில் ஹர்பஜன் சிங்கின் நினைவுப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு, பஞ்சாப் மாநிலத்திலுள்ள அவரது சொந்த கிராமமான குக்வாவுக்கு ரயிலில் அனுப்பிவைக்கப்படுகின்றன. இறந்துவிட்ட ஒருவரின் பெயரில் பயணச்சீட்டுப் பெறுவதும், அவரது பொருட்களை ரயிலில் பயணிக்க வைப்பதும் இந்திய ரயில்வே வரலாற்றில் மற்றோர் ஆச்சரியம்.

பனி மலைச் சூழலில் கொழுக்கட்டை போன்ற சூடான மோமோவும், இந்திய ராணுவத்துக்குப் பெருமை செய்யும் பாபா கோயிலும், அதிகாலை 4.30 மணிக்கு உதயமாகும் சூரியனும், மாலை 4 மணிக்கே வந்துவிடும் இருளும், விடுதி முகவரி தெரியாமல் குளிரில் தேடி அலைந்ததும், சுற்றுலாவில் அறிமுகமாகி, நண்பராகிவிட்ட திருப்பத்தூர் செந்தில் குடும்பத்தினரும் இன்றளவும் எங்களால் மறக்க முடியாதவை இப்படிப் பல ஆச்சரியங்களை உள்ளடக்கிய சுற்றுலா இது. மீண்டும் ஒருமுறை சென்றுவர ஆசையைத் தூண்டும் திகட்டாத அனுபவங்கள்.

- ஆ.முத்துலெட்சுமி நயினார், திருநெல்வேலி.

 

பச்மரி

pasmari_3168979a.jpg

கடல் மட்டத்திலிருந்து சுமார் 3555 அடி உயரத்தில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ள பச்மரி (Pachmari), மத்தியப் பிரதேசத்திலுள்ள ஒரே குளிர்வாசஸ்தலம். விந்திய சாத்புரா மலைகளுக்கிடையே அமைந்துள்ள இந்த இடம், சாத்புராவின் ராணி என்று அழைக்கப்படுகிறது. 1875-ல் ஜேம்ஸ் ஃபோர்ஸித் என்ற ஆங்கிலேயரால் கண்டுபிடிக்கப்பட்ட அழகின் இருப்பிடம்! உல்லாசச் சுற்றுலாவுக்கான அத்தனை விஷயங்களும்அளவின்றிக் கொட்டிக் கிடக்கின்றன.

பளிங்கு போல் விழும் அருவிகள், நெளிந்து ஓடும் நீரோடைகள், அடர்ந்த காடுகள், 1000 வருடத்துக்கு முந்தைய கலாச்சாரம் பற்றி அறியவைக்கும் குகை ஓவியங்கள், சிவாலயங்கள், அழகிய வேலைப்பாடமைந்த கண்ணாடி சன்னல்களுடனான தேவாலயங்கள், கோண்ட் பழங்குடி மக்களின் நடனம், மிதமான குளிர் என்று அத்தனையும் கண்ணுக்கும் மனதுக்கும் பெருவிருந்து!

பஞ்சபாண்டவர்கள் அஞ்ஞாத வாசத்தின்போது இங்கு வாழ்ந்ததன் அடையாளமாக ஐந்து பாண்டவர் குகைகள் உள்ளன. அதனால் பச்மரி (ஐந்து குகைகள்) என்று அழைக்கப்படுகிறது.

சாத்புரா நேஷனல் பார்க் வனவிலங்கு சரணாலயம், பிரியதர்ஷினி பாயின்ட், கண்ணைப் பறிக்கும் 150 அடி உயர பீ ஃபால்ஸ் (Bee Falls), டட்ச் ஃ பால்ஸ், ரஜத் ஃபால்ஸ், இரு உயர்ந்த மலைகளுக்கிடையே V வடிவ ஹண்டிகோ பள்ளத்தாக்கு, சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் அழகாகக் காட்டும் 4,400 அடி உயர தூப்கார், மூன்று பக்கங்களும் மலைகளால் சூழப்பட்டு, மூன்று வாசல்களுடைய கோட்டை போல உயர்ந்து நிற்கும் ரீச்கரின் மிரட்டும் அழகில் நம்மையே மறந்துவிடுவோம். மஹாதேவ், ஜடாசங்கர், சவுராகர் போன்றவை பக்தர்கள் தரிசிக்க வேண்டிய சிவாலயங்கள்.

பச்மரிக்குப் பேருந்து வசதிகள் இல்லை. போபால், ஜபல்பூரிலிருந்து செல்லலாம். ஹௌரா- மும்பை ரயில் பாதையிலுள்ள பிப்பாரியா ரயில் நிலையத்தில் இறங்கி, வேன், ஜீப் மூலமாகப் போகலாம். தங்கும் விடுதிகள் நிறைய உள்ளன. வாய்ப்பு கிடைத்தால் அதிகம் அறியாத, மக்கள் கூட்டம் அதிகமில்லாத, அழகிய மாசில்லா பச்மரியை ஒரு முறையாவது தரிசித்து விடுங்கள்.

- ராதா பாலு, திருச்சி.

 

கடல் பாதி மலை பாதி!

kadal_3168980a.jpg

ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, Great ocean road பயணம் சிலிர்ப்பூட்டியது. ஒருபக்கம் அமைதியான கடல், மறுபக்கம் குளிர்ச்சியான மலை, நடுவிலிருந்த பாதையில் 200 கி.மீ. தூரம் பயணித்தோம். வழியில் கற்களை ஆங்காங்கே உயரமாக அடுக்கியிருந்தார்கள். நானும் கணவரும் கற்களை அடுக்கிவைத்தோம். பரந்து, விரிந்த கல் அடுக்குகளிடையே பிள்ளையார் வடிவில் அடுக்கப்பட்டிருந்த அடுக்கு எங்களைக் கவர்ந்தது!

- என்.கோமதி, நெல்லை.

 

வீரம் விளைந்த மண்!

veeram_3168974a.jpg

நானும் என் கணவரும் வீரபாண்டிய கட்டபொம்மன் ஊரான கயத்தாறுக்குச் சென்றோம். ஆங்கிலேயருக்கு எதிராக வீர முழக்கம் எழுப்பிய வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையையும் செய்திகளையும் பார்த்தோம். ‘வானம் பொழியுது, பூமி விளையுது, உனக்கு எதுக்கு வரி’ என்ற வீர வசனம் நினைவில் வந்து, உற்சாகத்தை அளித்தன. சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை எண்ணிப்பார்த்துப் பெருமிதம் கொண்டோம். கூட்டம் அதிகம் இல்லை. குழந்தைகளுக்கு வரலாற்றைச் சொல்லித்தர நினைப்பவர்கள் இதுபோன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

- உஷா முத்துராமன், திருநகர்

http://tamil.thehindu.com/society/women/இது-எங்க-சுற்றுலா-ஸ்வீட்-ஸ்வீடன்/article9714230.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறு பயணக் குறிப்புகள் என்றாலும்.... பல இடங்களை ஒரு தொகுப்பில் வாசிக்கும் போது,
அந்த இடங்களைப் பற்றி ஓரளவு அறியக்  கூடியதாக உள்ளது. 

Link to comment
Share on other sites

மஞ்சள் பூக்கள் மலரும் மலை!

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் லோனாவாலா என்னும் இயற்கை எழில் கொஞ்சும் இடத்துக்கு என் குடும்பத்தினருடன் பயணமானேன். லோனாவாலா புனேவிலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் இருக்கிறது. நகரமயமாதலின் சாயல் இன்னும் அதிகம் விழாத சிறு நகரான லோனாவாலாவின் எளிமை என்னை வெகுவாகக் கவர்ந்தது. இதமான, மிதமான குளிருடன் கூடிய பருவநிலை, அழகிய வண்ணப் பூக்களுடன் திகழும் சிறிய மலைக் குன்றுகள், பரந்து விரிந்த ஏரிகள் என ஒவ்வொன்றும் கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சி! மலைப் பிரதேசமெங்கும் பூத்துக் குலுங்கிய சிறு மலர்களை இன்றைக்கெல்லாம் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

ஒரு மாலை நேரத்தை ஏகாந்தமாகக் கழிப்பதற்கு உகந்த அழகான, இயற்கைப் பிரதேசங்கள் மற்றும் தாவரக்காடுகளைப் பின்னணியாகக் கொண்டு ‘புஷி அணை’ அமைந்துள்ளது. இதன் அமைதியான சூழலும், ஸ்படிகம் போன்ற நீரும் மனதுக்கு இன்பம் அளிக்கின்றன.

லோனாவானாவில் பாரம்பரியம் மிக்க கோட்டைகளும் புராதனக் குகைகளும் உள்ளன. கார்லா குகையின் அருகிலேயே ஏக்வீராதேவி கோயில் அமைந்துள்ளது. கார்லா குகைகயைப் போலவே பாஜா குகைகள் அமைந்துள்ளன. மாலை வேளையில் சூரிய ஒளி நேரடியாகக் குகைக்குள் விழுவதால் அதன் நுட்பமான வேலைப்பாடுகள் நன்கு தெரிகின்றன. மிகப் பெரிய சைதன்யம், எளிமையான எண்கோணத் தூண்கள், அவற்றின் மீது அமைந்த அரை நீள்வட்டம் கூரை, மர வளைவுகள், வெளிப்புறச் சாளரங்கள், நுட்பமான சிற்பங்கள் என இவற்றின் அழகை வர்ணித்துக்கொண்டே போகலாம்.

மகாராஷ்டிர உணவான வடாபாவ், போஹா, மிசெல் போன்றவை, அம்மாநிலப் பெண்களின் சேலை கட்டும் பாங்கு, ஆண்கள் பலர் காந்தி குல்லாய் அணிந்து வெண்ணிற உடைகளில் வலம் வந்தது என ஒவ்வொன்றையும் ரசித்தேன். அங்கே மும்பையைச் சேர்ந்த இரண்டு பெண்கள் எனக்குத் தோழிகள் ஆகிவிட்டனர். நம் ஊரின் பில்டர் காபியின் சுவையையும் மணத்தையும் வானளாவப் புகழந்தனர். இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட லோனாவாலாவின் அழகு, மழைக்காலங்களில் பன்மடங்காகிவிடுகிறது!

http://tamil.thehindu.com/society/women/இது-எங்க-சுற்றுலா-மஞ்சள்-பூக்கள்-மலரும்-மலை/article8543973.ece

கப்பல் ஏறிப் போயாச்சு!

kappal_3166673f.jpg
 
 
 

உலகை வலம்வருவதில் அதீத விருப்பமுள்ள எங்கள் தம்பியின் அழைப்பிற்கிணங்க கடந்த பிப்ரவரியில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தோம். அங்கே டாம்பா துறைமுகம் நோக்கிப் பயணம். ஃபுளோரிடாவின் மேற்குக் கரையோரத் துறைமுகம். அங்கிருந்து 12 அடுக்கு கார்னிவல் பேரடைஸ் என்ற சொகுசுக் கப்பலில் ஆறு நாள் இன்பச் சுற்றுலா. இல்லை இல்லை வரலாறு, புவியியல் சார்ந்த சுற்றுப் பயணம் என்பதே சரி. நாங்கள் சென்றது பிரிட்டிஷ் மற்றும் மெக்சிகோ நாடுகளைச் சேர்ந்தது என்பதால் முழுமையான பரிசோதனை ஆங்காங்கே நடைபெற்றது.

கப்பலில் கால்வைக்கும் முன் அதன் பிரம்மாண்டத்தை வியப்புடன் பார்வையிட்டோம். இரண்டாயிரத்தும் மேற்பட்ட பயணிகளில் பல நாட்டவர்கள் இருந்தார்கள். ஆறு நாள்களும் பலவகை உணவுகள் உட்பட எல்லாமே இலவசம் என்பதால் மகிழ்ச்சியோடு பொழுதுபோக்கவே பலரும் வந்திருந்தனர்.

ஆழமான கடலில் 20 நாட்டிக்கல் மைல் வேகத்தில் கப்பல் செல்வதை உணர்வதும், மேல் தளத்தில் சூரிய உதயம், அஸ்தமனம் ஆகியவற்றை ரசிப்பதும் மனதுக்கு ரம்மியமான ‘டைட்டானிக் அனுபவம்’.

அடுத்த அனுபவம்தான் வாழ்நாளில் மறக்க முடியாதது. படகில் 20 பேரை அழைத்துச் சென்று நடுக்கடலில் மிதக்கும் நீர்மூழ்கிக் கப்பலில் இறக்கிவிட்டார்கள். கதவுகள் சாத்தப்பட்டு நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்துக்கொண்டே 102 அடி ஆழம் சென்றது பரவசமான அனுபவம். கடல் அடியில் பவளப்பாறை, பலவகை மீன்கள், கடல் பாம்புகள், ஆமைகள், தாவரங்கள் என வித்தியாசமான குதூகல ஆரவாரம். ஒரு பெரிய சங்கு மல்லாந்தபடி ஊர்ந்து சென்றதை முதன் முதலாகக் கண்டு வியந்தோம். நாங்கள் அங்கிருந்த ஒன்றரை மணி நேர உற்சாகம் விவரிக்க இயலாதது.

பயணிகளில் பெரும்பாலோர் வட, தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். “நீங்கள் எந்த நாட்டிலிருந்து வருகிறீர்கள்? நீங்கள் உடுத்தியிருக்கும் ஆடையின் பெயர் என்ன?” என்பதுதான் பெரும்பாலானோர் எங்களிடம் கேட்ட கேள்வி. கேமன் தீவில் கரீபியன் பேரடைஸ் என்ற சொகுசுக் கப்பலைக் காட்டிய எங்கள் தம்பி, “இதுலதான் முதலில் பதிவு செய்யலாம் என நினைத்தேன். ஆனால் இதில் ‘சோறு’ போட மாட்டாங்க” என்றதும் விழுந்து விழுந்து சிரித்தோம்.

சொகுசுக் கப்பலில் துண்டு துணியுடன் அனைவரும் நீச்சல் குளத்தில் இருந்ததைப் பார்த்து நாங்கள் மட்டும் நீளமான புடவையோடு சுற்றியது எங்களை நெளிய வைத்தது.

‘இத்தரை, கொய்யாப் பிஞ்சு, நீ அதில் சிற்றெறும்பே’ என்ற பாரதிதாசனின் வரிகளை நான் அடிக்கடிச் சொல்வேன். நானும் அப்படியோர் எறும்பாக மாறி பூமி உருண்டையில் இந்தியாவின் எதிர்ப்பக்கம் சுற்றிவிட்டு வந்தேன் என்பதில் பெரு மகிழ்ச்சி. வீடு திரும்பியவுடன் ஒரு வாரம் இட்லி, தோசை சாப்பிட்டது தனிக் கதை.

http://tamil.thehindu.com/society/women/இது-எங்க-சுற்றுலா-கப்பல்-ஏறிப்-போயாச்சு/article9708825.ece

அரைகுறை ஆங்கிலத்துடன் அமெரிக்காவில்...

kalaivani_3164303f.jpg
 
 
 

என் முதல் சுற்றுலாப் பயணம், சென்னையிலி ருந்து அமெரிக்காவிலுள்ள டென்வருக்குச் சென்றதுதான். அதுவும் தனியாக, ஆங்கிலம் பேசத் தெரியாமல். அரைகுறை ‘பட்லர் இங்கிலிஷ்‘ மட்டுமே அறிந்திருந்தேன். ஆனால், நான் நினைத்ததுபோல் பயமாக இல்லை. இருபத்தியாறு மணி நேரம் பயணித்து, என் மகன் வசிக்கும் இடத்தைச் சென்றடைந்தேன். எங்கும் புதிய முகங்கள், புதிய சூழ்நிலை, தட்பவெப்பமும் வேறு ஆனால், நம்முடைய நாட்டைச் சேர்ந்த வெவ்வேறு மாநிலத்தவர்களைப் பார்க்க முடிந்தது.

எனக்கு தெரிந்த அரைகுறை ஹிந்தியில் அவர்களுடன் பேசினேன். சட்டத்தை மதிக்கும் அமெரிக்க நாட்டு மக்களைக் கண்டு பிரமித்தேன். சாலை விதிகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்கிறார்கள். சாப்பாடு விஷயத்தில் பிரச்சினையில்லை. எல்லாப் பெரிய நகர்களிலும் இந்திய மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் உண்டு.

உச்சிப் பாலம்

டென்வரிலிருந்து கொலராடோ மாகாணாத் துக்குச் சென்றோம். அது வடஅமெரிக்காவின் நடுவிலுள்ள மாநிலம். அந்தப் பகுதியில் மலைகள் அதிகம். இரு புறமும் உயரமான மலைகளின் நடுவில் ஆறு ஓடுகிறது. இரு மலைகளை இணைக்கத் தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘ராயல் கார்ஜ் பிரிட்ஜ்’ என்று பெயர். இந்தப் பாலம் உலகிலேயே மிகவும் பெரியது. அதனுடைய நீளம் 1,260 அடியும், 384 மீட்டர் அகலமும் கொண்டது. இந்தப் பாலத்தை இணைத்துள்ள கம்பிகளின் எடை மட்டும் 300 டன் (1 டன் = 1,000 கிலோ). பாலத்தின் அடிப்பாகம் மட்டும் ஆயிரம் டன் இரும்பாலானது.

இந்தப் பாலத்திலி ருந்து பார்த்தால் இரண்டு மலைகளின் நடுவே ஓடும் அர்கன்சாஸ் ஆற்றின் அழகை ரசிக்க முடிகிறது. இதே பகுதியில் உலகிலேயே அதிக தூரம் மலையில் பயணிக்கிற டிராம் உள்ளது. அதனுடைய நீளம் 2,200 அடி. அர்கன்சாஸ் நதியிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் இந்த டிராம் செல்கிறது. இந்த உயரத்தில் இருந்து பார்க்கும்போது மனிதர்கள், ஒரு சிறு புள்ளியைப் போல் தெரிகிறார்கள்.

அர்கன்சாஸ் நதியை அருகில் சென்று காண, இங்கு செங்குத்தான (incline train) ரயில் உள்ளது. இந்த ரயில் இரண்டு மாலைகளை ஐந்து நிமிடங்களில் கடக்கிறது.

பிசாசு நகரம்

இந்தப் பகுதியில் உள்ள ‘கோஸ்ட் டவுன்’ என்ற இடம் 18-ம் நூற்றாண்டை அழகாகக் கண் முன்னே காட்டுகிறது. அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட சாரட் வண்டி, கொல்லன் பட்டறை, குதிரைச் சேணம், சாரட் வண்டி ஓட்டும் சாட்டின் கவுன், கண்ணாடிப் பாத்திரங்கள், இசைக்கும் நிலையில் உள்ள பியானோ, தாமஸ் ஆல்வா எடிசன் கையெழுத்திட்ட காசோலை, தொலைபேசி, அச்சகம், அகல வீடுகள் என அந்தக்கால மனிதர்களின் வாழ்க்கை முறையைக் கண் முன்னே நிறுத்துகிறது.

- கலைவாணி, மேட்டூர் அணை.

http://tamil.thehindu.com/society/women/இது-எங்க-சுற்றுலா-அரைகுறை-ஆங்கிலத்துடன்-அமெரிக்காவில்/article9697639.ece

Link to comment
Share on other sites

பரவசமூட்டிய கண்ணாடி ரயில்!

sutrula_3166644f.jpg

 
 
 

ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற மலை வாசஸ்தலம் அரக்குப் பள்ளத்தாக்கு. காடுகள் அடர்ந்த அழகிய பகுதியாக இருப்பதால், ஆந்திராவின் மிக முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

விசாகப்பட்டினத்திலிருந்து ரயில் மூலமாகவும் பேருந்து மூலமாகவும் அரக்குப் பள்ளத்தாக்கை அடையலாம். நாங்கள் ரயிலில் செல்ல முடிவெடுத்தோம். இந்தியாவிலேயே முதன்முதலாக, முற்றிலும் கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட அதிநவீன VISTADOME ரயில் பெட்டிகள் இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் பெட்டிகளைச் சென்னை ICF நிறுவனம் தயாரித்துள்ளது. ஒரு ரயில் பெட்டியின் கட்டுமானச் செலவு சுமார் மூன்றரை கோடி ரூபாய் என்று அறிந்தபோது ஆச்சரியத்தில் இமைக்க மறந்தோம். இந்த ரயிலின் முதல் பயணம் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. முதல் நாள் ஓட்டத்தில் பயணம் செய்யும் அற்புத வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது!

கண்ணாடி ரயிலில் அமர்ந்துகொண்டு பச்சைப் பசேலெனப் படர்ந்திருக்கும் மரங்களையும் பள்ளத்தாக்குகளையும் சிலுசிலுக்கும் காற்றையும் வழிந்தோடும் சிற்றருவிகளையும் ரசித்துக்கொண்டே சென்றோம்.

விசாகப்பட்டினத்திலிருந்து காலை ஏழு மணிக்குப் புறப்படும் இந்த ரயில், 58 மலைக் குகைகளையும் 84 பாலங்களையும் கடந்து சென்றது. சர்வதேசத் தரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டியில் பயணம் செய்தது அலாதி அனுபவத்தைத் தந்தது. மிகப் பெரிய கண்ணாடி ஜன்னல்கள், வேண்டிய பக்கம் திருப்ப வசதியாக இருக்கைகள் போன்றவை எங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கின. இனிய பாடல் காட்சிகளோடு, அரக்குப் பள்ளத்தாக்கு பற்றிய சுவையான செய்திகளைச் சொல்லும் தொலைக்காட்சிப் பெட்டிகள் மூலம் பொது அறிவை வளர்த்துக்கொள்ள முடிந்தது. சிற்றுண்டி, தேநீர், தண்ணீர் போன்றவை ரயிலிலேயே வழங்கப்பட்டன.

பயணம் நான்கு மணிநேரம். ஆனால், நேரம் எப்படிக் கடந்தது என்றே தெரியவில்லை. உயர் ரக இருக்கைகளின் வசதி, சுகமான சூழல் என்று முற்றிலும் ஒரு மாறுபட்ட அனுபவத்தை இந்தப் பயணம் எங்களுக்கு வழங்கியது.

tour_3166643a.jpg

- மீனாட்சி முரளிதர், விசாகப்பட்டினம்

http://tamil.thehindu.com/society/women/இது-எங்க-சுற்றுலா-பரவசமூட்டிய-கண்ணாடி-ரயில்/article9708779.ece

Link to comment
Share on other sites

இது எங்க சுற்றுலா: ஒரே நாளில் இரண்டு வானவில்

 

sujatha_2826819f.jpg

 
 
 

ஆப்ரிக்க நாடுகள் என்றாலே வறண்ட பாலைவனங்கள் கொண்டவை என்கிற எண்ணத்தை மாற்றியது எங்கள் ஆப்பிரிக்கப் பயணம். தென்னாப்ரிக்கா மிக அழகான இயற்கை வளத்தை கொண்டுள்ளது. சில்லென்ற இயற்கை சூழலில் நெரிசலோ புகையோ இல்லாமல் நெடுந்தூரம் பயணம் செல்வது அவ்வளவு ஆனந்தமாக இருந்தது. அருகில் உள்ள ஸாம்பியாவில் உள்ள விக்டோரியா ஃபால்ஸ் சென்றிருந்தோம். நயாகரா அளவுக்குப் பெரியதாக இல்லையென்றாலும் உலகின் மிக பெரிய அருவிகளுள் ஒன்று என்பதால் அதைப் பார்க்கச் சென்றோம். விமானத்தில் பயணிக்கும்போதே அருவியின் அழகை மேலிருந்து பார்த்து ரசிக்கலாம். ஓடும் அருவியின் அழகை அருகில் நின்று ரசித்த பின் சற்றுக் கீழே இறங்கி அதன் எதிரில் நின்று அது விழும் அழகை ரசித்தோம்.

பிரம்மாண்டமாக அது விழும் அழகினை நாள் முழுக்கப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். மேலிருந்து விழும் அருவி தெறித்து நம் மேல் மழை போல் பொழிகிறது. அதற்காக அங்கேயே ரெயின் கோட் தருகிறார்கள். அதை போட்டுக்கொண்டு அருவியின் அருகில் நனையாமல் நின்று ரசிக்கலாம். தினமும் காலை, மாலை இரு வேளையும் வானவில் தெரிவது இந்த இடத்தை மேலும் அழகாக்குகிறது. மாலை நேரம் சாம்பியா அருவியில் படகில் அழைத்துச் செல்கிறார்கள். நதியின் மீது மாலை நேரச் சூரியனின் கதிர்கள் விழுந்து அழகூட்டுவதைவிட அருமையான காட்சி இருக்க முடியாது. அருவிகள் எப்போதும் அழகுதான் என்றாலும் கடல் கடந்து சென்று நான் ரசித்த அருவிக்கு எப்போதும் என் மனதில் தனியிடம் உண்டு.

- சுஜாதா தாமு, சென்னை.

 

http://tamil.thehindu.com/society/women/இது-எங்க-சுற்றுலா-ஒரே-நாளில்-இரண்டு-வானவில்/article8514274.ece

 
 
 
Victoria Falls - ZambiaVictoria Falls - ZimbabweVictoria-Falls---Zambia.jpg

Victoria Falls - Zambia

The Victoria Falls are situated on the Zambezi River between Zambia and Zimbabwe, and have long been considered to be one of the 7 Wonders of the World.

Victoria-Falls---Zambia.jpg
 
Link to comment
Share on other sites

இதுவரை போகாத ஒரு ஊருக்கு போனாத்தான் அது டூர் இல்லனா அது சுத்த போர்!

 

 

bir_biling22

 

ஒவ்வொரு விடுமுறைக்கும் ஒரு புது இடத்துக்கு டூர் போனா சூப்பரா இருக்கும் தானே?! எப்போ பாருங்க ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, வால்பாறை, டாப் ஸ்லிப்னு சொந்த ஏரியாலயே சுத்திகிட்டிருந்தா எப்படி? அதுக்குப் பேர் குண்டுச் சட்டிக்குள்ள குதிரை ஓட்டறதும்பாங்களே அதான். சரி புதுசா வேறெந்த இடத்துக்குப் போலாம்னு ஏதாவது திட்டம் இருக்கா உங்க கிட்ட? இருந்தா ஓகே...
இல்லனா நாங்க எதுக்கு இருக்கும்? அதையெல்லாம் கண்டுபிடிச்சு சொல்லிட்டா போச்சு. நாளை முதல் அக்னி நட்சத்திரம் வேறு தொடக்கம். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அனல் பட்டையைக் கிளப்ப வீட்டு ஏ.சி க்கு டெப்ரஸன்ல தீப்பிடிச்சுக்காம இருந்தா சரி. ஏனெனில் அத்தனை வேலைப்பளுவை அதற்கு இந்த இரண்டு மாதங்களில் நாம் தருகிறோம். 24 மணி நேரமும் வீடு, அலுவலகம், மால்கள், தியேட்டர்கள், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் என எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பது தேச பக்தி அல்ல ஏ.சி தான். இந்த ஏ.சி போதையில் இருந்து விடுபட்டு கொஞ்சம் இயற்கையே குளு, குளுவென ஆக்கி வைத்திருக்கும் புத்தம் புது இடங்களுக்குப் போனால் என்ன? 

விடுமுறைகளுக்கு திட்டம் வகுத்துக் கொடுக்கவென்றே பல இணையதளங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று யாத்ரா. யாத்ரா மூலமாக இந்த முறை மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே 45 சதவிகிதம் பேர் இதுவரையிலும் விடுமுறை டூர் பிளான் செய்திருக்கிறார்களாம். சரி இந்திய மற்றும் இண்டர்நேஷனல் டூர்களில் கியூட்டான இடங்களைப் பரிந்துரைப்பதில் கெட்டிக்காரர்களான யாத்ரா தளம் இந்த முறை பரிந்துரைக்கும் இடங்கள் எதுவென இப்போது தெரிந்து கொள்வோம்.

தவாங்: 

Tawang1.jpg

அருணாச்சலப் பிரதேசத்தின் மிகச்சிறிய மாவட்டம் இது. உலகின் மிகப்பிரசித்தி பெற்ற பெளத்த மடாலயங்களில் ஒன்று இங்குள்ளது. இந்தப் பிரதேசம் எப்போதுமே அதன் மதம் மற்றும் விவசாயத்துடன் இணைந்த கலாச்சார விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்காகச் சிறப்புற்று விளங்குவது. அதுமட்டுமல்ல சமீபத்தில் திபெத்திய மடாதிபதியான தலாய் லாமா வாயிலாக இந்தியாவின் அனைத்துப் பகுதி மக்களும் அறிந்து கொள்ளும் விதமாக செய்திகளிலும் அடிக்கடி இடம் பெற்ற பிரதேசம் தான் இது. இங்கிருக்கும் தவாங் பெளத்த மடாலயம் சரித்திரப் பிரசித்தி பெற்றது. அதைக் காண்பதற்கு மட்டுமல்ல இந்தியாவின் மத்தியப் பகுதிகளிலும், தென் பகுதிகளிலும் அனலடித்துக் கிடக்கும் கோடையைச் சமாளிக்க ஆண்டின் எல்லா மாதங்களிலும் தூறலுடன் கூடிய மழையோடு இப்படி ஈரம் குறையாமலிருக்கும் பிரதேசத்துக்குப் போய் சில நாட்களைக் கழிப்பது என்பதெல்லாம் தேவலோகத்துக்குப் போய் இந்திர சபையில் கண்ணயறுவதற்குச் சமானம் என்பது அதை அனுபவிப்பவர்களுக்கே புரியக் கூடும். ஆர்வமிருப்பவர்கள் உங்கள் டூர் பிளானை இதை நோக்கி திட்டமிடலாம்.

கலிம்பாங்: 

kanchenjunga-trek-fixed-departure-progra

இந்து மேற்கு வங்கத்தில் இருக்கும் அருமையான டூரிஸ்ட் ஸ்பாட். இங்கு ஆண்டின் பெரும்பான்மை மாதங்களிலும் இதமான தட்ப வெப்ப நிலையே நீடிக்கும். இந்தியாவின் பல்வேறு விதமான வேறுபட்ட கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களால் பிணைக்கப்பட்டு நெகிழ்ந்த மனங்களுடன் வாழும் மக்களைக் கொண்ட இந்தியப் பகுதி இது. இங்கிருந்து பார்த்தால் இமயமலைச் சிகரங்கள் அனைத்தையுமே கண்களால் மட்டுமல்ல கேமராக்களிலும் விழி விரிய அப்படியே அள்ளிக் கொள்ளலாம். இமயத்தின் அடிவாரத்தில் இயற்கையின் கொடையாக பரந்து விரிந்து கிடக்கும் பச்சைக் கம்பள விரிப்பு போன்ற சமவெளிப் பகுதிகளையும், வெள்ளிப் பனியாய் உருகி வழிந்து கொண்டிருக்கும் எண்ணிலடங்கா மலை முகடுகளையும் இங்கிருந்து கண்டால் மட்டுமே ஜென்ம சாபல்யம் அடைய முடியும். அத்தனை அழகான சின்னஞ்சிறு உலகம் இது.

ஜிரோ:

ziro.jpg

அருணாச்சலப் பிரதேசத்தின் இன்னுமொரு சொர்க்கம் இது. டூரிஸ்டுகள் அதிகம் விரும்பிச் செல்ல தேர்ந்தெடுக்கும் இடங்களில் இதற்கு எப்போதும் முதலிடம் உண்டு. இங்கு மக்களின் முக்கியமான தொழில் நெல் விளைவிப்பது. இரண்டு விதமான நெல் வகைகள் இங்கே உற்பத்தியாகின்றன. அது மட்டுமல்ல இங்கிருக்கும் டரின் மீன் பண்ணை டூரிஸ்டுகள் தவற விடக்கூடாத இடங்களில் ஒன்று. அது மட்டுமல்ல ஜிரோவின் அழகான பைன் மரக்காடுகளால் ஆன சமவெளிப்பகுதிகள் டூரிஸ்டுகள் வந்து தங்கி இயற்கையை அனுபவித்து ரசிக்கத் தோதான இடங்களில் ஒன்று. என்பதால் இதையும் தவற விடாமல் ஒரு முறை சென்று பார்த்து வரலாம்.

 

பிர் பிலிங் கஜ்ஜியர்
 

 

 

bir-biling.jpg

இந்தியாவில் பாராகிளைடிங் சாகஷ விளையாட்டுகளில் ஈடுபடும் ஆர்வமுள்ளவர்கள் நிச்சயம் தவற விடக்கூடாத இடங்களில் இது ஒன்று. இந்தியாவில் ஹிமாச்சல் பிரதேசத்தில் இருக்கும் இந்த டூரிஸ்ட் ஸ்பாட்டின் பாராகிளைடிங் பைலட்டுகள் மிகத் திறன் வாய்ந்தவர்கள் என்வதால் இந்தியா மட்டுமல்ல உலகெங்கிலும் இருந்து விடுமுறைகளில் இங்கு வந்து பாரகிளைடிங் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். பாராகிளைடிங் மட்டுமல்ல இங்கு ஹேங் கிளைடிங், ட்ரெக்கிங் மற்றும் கேம்பிங் வசதிகளும் உள்ளதால் டூரிஸ்டுகளுக்கு மிகச் சிறந்த பொழுதுபோக்கு சாகஷ அம்சங்களைத் தரும் இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

தீர்த்தன்வேலி:

thirthan_valley.jpg

இந்த இடமும் இந்தியாவின் ஹிமாச்சலப் பிரதேசத்தில் தான் இருக்கிறது. சுற்றிலும் நதிகள் பாய, பச்சைப் பட்டு விரித்தாற் போல சமவெளிகளில் இயற்கை அழகு கொஞ்ச ஆங்காங்கே மிகத் திறன் வாய்ந்த ஓவியரின் கை வண்ணத்தில் உறைந்த சொர்க்கம் போல காட்சியளிக்கும் குளிர் நீர் ஏரிகள் சூழ அமைந்துள்ள கிரேட் ஹிமாலயன் நேஷனல் பூங்கா அமைந்த்துள்ள இடம் இது தான். இங்கே டூர் வரும் மக்கள் இதன் அழகான ஏரிகளில் மீன் பிடித்து மகிழலாம், மலை ஏறிப் பழகலாம், இன்னும் சற்று அதிகப்படியாக இங்கிருக்கும் கிராமங்களில் அந்த மக்களோடு மக்களாக இணைந்து அவர்களது வீடுகளில் பேயிங் கெஸ்டுகளாகத் தங்கிக் கொண்டு சில நாட்களுக்கு மட்டுமேனும் அருமையான ஒரு வடகிழக்குப் பிராந்திய கிராமத்து வாழ்வை ஆசை தீர வாழ்ந்து பார்க்கலாம்.

நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோம் இப்போது நீங்கள் ரெடியா? டூர் பிளான் செய்பவர்கள் இந்த இடங்களுக்குத் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. இது வெறுமே ஒரு பரிந்துரையே உலகில் நாம் காண வேண்டிய, காணாமல் விடுபட்டிருக்கக் கூடிய எழில் மிகு பிரதேசங்கள் இன்னும்... இன்னும்... இன்னும் நிறையவே உண்டு.

முதலில் நமது இந்தியாவை நாம் முற்றறிய வேண்டுமெனில் பயணம் ஒன்றே சிறந்த வழி. பயணத்துக்கு உகந்தவை விடுமுறைக் காலங்கள். நிச்சயம் விடுமுறைகள் தோறும் எங்காவது குடும்பத்துடன் பயணிக்க மட்டும் மறக்கவே மறக்காதீர்கள். 

http://www.dinamani.com/lifestyle/travellogue/2017/may/03/if-you-are-interested-to-plan-out-your-summer-vacations-to-unexplored-places-2695461--1.html

Link to comment
Share on other sites

 

வாழ்க்கையில் ஒரு முறையேனும் இந்த இடங்களில் ஏதாவதொன்றை பார்த்து விட்டாலே ஜென்ம சாபல்யம்!

 

 

 
miyami

விடுமுறை தினங்கள் வார இறுதி ஓய்வு நாட்கள் என்றெல்லாம் இல்லை இப்போதெல்லாம் நினைத்தால் மக்கள் சுற்றுலாவுக்குத் தயாராகி விடுகிறார்கள். காலை, மாலை, இரவு என  எல்லா நேரங்களிலும் ஃபார்மேட்  மோடில் ஆட்டோமேட்டிக் மெஷின்  போல  இயங்க வைத்து களைப்படையச் செய்யும் இந்த வாழ்வின் மீதான சுவாரஸ்யம் குன்றாமல் இருக்க இப்படி நினைத்த மாத்திரத்தில் சுற்றுலா கிளம்புவது என்பதும்ஒரு ஆரோக்கியமான விஷயமே!

நடுத்தரக் குடும்பங்களில் தாத்தா காலத்தில் திருப்பதிக்கு போக வருடம் முழுக்க காசு சேர்க்க ஆரம்பித்து வருட இறுதியில் மலை ஏறிப் போய் பெருமாளை சேவித்து வருவார்கள், அவர்களுக்கு அது சுற்றுலா. அப்பா காலத்தில் கொஞ்சம் முன்னேறி சேர்த்து வைத்த காசு போதவில்லை என்றால் அலுவலகத்தில் பி.எப் லோன் வாங்கி  ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என்று போய் வந்தார்கள். இப்போதைய டிரெண்ட் என்ன தெரியுமா? நீங்கள் உள்நாட்டு அயல்நாட்டு சுற்றுலா போய் வர சில வரையறைகளின் கீழ்  வங்கிகள் கடன் தரத் தயாராக இருக்கின்றன. இதன் காரணமாகவோ என்னவோ முந்தைய வருடங்களை விட இப்போது அயல்நாட்டு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. 

எப்படி ஆயினும் சுற்றுலா போய் வருவது மனதுக்கு மிக மிக ஆரோக்கியமான விஷயமே. 'வோல்கா முதல் கங்கை வரை' வரை நூலாசிரியரும் இந்தியப் பயண இலக்கிய நூல்களின் தந்தையுமான ராகுல் சாங்கிருத்யாயன் கூற்றுப் படி 'ஓடிக் கொண்டே இருந்தால் தான் அது நதி ஒரே இடத்தில்  தங்கி விட்டால் அது அழுக்கு தேங்கும் குட்டை' என்பதற்கிணங்க மக்களின் பயண ஆர்வங்கள் மேம்பாட்டு வருவது நன்று!

உலகம் ஒரு குளோபல் கிராமம் என்றான பின் இப்போது  உலகின் எந்த மூலையில் இருந்தும் மற்றொரு மூலைக்கு திட்டமிட்டு குறுகிய காலத்தில் சென்று  திரும்பலாம் என்று நம்புவதால் மக்களின் உலகச் சுற்றுலாக்கள் பெருத்து விட்டன. பள்ளிக் குழந்தைகளிடம் கூட விடுமுறை கழிந்து பள்ளி திறந்த பின்னான உரையாடல்கள் இவ்விதமே நிகழ்கின்றன.


'நாங்க இந்த வருஷம் துபாய் போனோமே. புர்ஜ் கலீபா மேல இருந்து ஃபோட்டோ எடுத்து ஃபேஸ் புக்ல ஷேர் பண்ணிருக்கோம்.' என்கிறாள் ஒரு பள்ளிச் சிறுமி. அடுத்த வருஷம் கனடா போய் நயாகரா ஃபால்ஸ் பார்ப்போம் , அதுக்கடுத்த வருஷம் ஜாக்கி ஷான் பார்க்க ஷாங்காய் போறோம். அப்புறம் யூ.எஸ் போறோம். சிங்கப்பூர், மலேசியா எல்லாம் ஏற்கனவே பார்த்தாச்சு என்ற ரீதியில் விரிகிறது சிறுவர், சிறுமியரின்  பள்ளிக்கூடக் கலந்துரையாடல்கள். 
 
இதனடிப்படையில் சுற்றுலாவை மையமாக வைத்து உலகின் 57 நாடுகளில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் சுற்றுலாப்பயணிகளை அதிகம் கவரும் நகரங்கள் எவை என்று ஒரு லிஸ்ட் தயாரிக்கப்பட்டது. அந்த லிஸ்டில் முதலில் இருக்கும் நகரம் எது? அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் நகரங்கள் எவை? என்று இந்தக்  கட்டுரையை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

shankhai1.jpg
ஷாங்காய்: ஷாங்காய் என்றால் சீன மொழியில் 'கடலுக்கு மேலே' என்று பொருள். ஹுவாங்ப்பூ நதியின் கரையில் அமைந்த துறைமுக நகரமான ஷாங்காய் எப்போதுமே உலக மக்கள் சென்று வர விரும்பும் முக்கியமான சுற்றுலா தளங்களில் முதலிடம் வகிக்கிறது. புகைப்படத்தைப் பார்த்தாலே நகரத்தின் அழகில் உள்ளம் கொள்ளை போகிறது. 

pattaya1.jpg


பட்டாயா: தாய்லாந்தில் இருக்கும் இந்த பட்டாயா நகரம் 1960 களில் சாதாரண மீன்பிடி கிராமமாகவே இருந்து வந்தது. ஆனால் இங்கிருக்கும் அழகான கடலும் நதியும் சார்ந்த சுற்றுப்புறம் இன்று இதை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றியுள்ளது. இப்போது இங்கே எல்லாத் திசைகளிலும் சுற்றுலாப்  பயணிகள் வந்து தங்கிச் செல்லும்  ரிசார்ட்டுகள்  பல்கிப்பெருகியுள்ளன. 

miyami1.jpg


மியாமி: அமெரிக்காவின் தெற்கு மாகாணத்தில் முக்கிய நகரம் மியாமி. இங்கே கியூபாவின் செல்வாக்கு அதிகமிருந்தாலும் உலக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்  அமெரிக்க நகரங்களில் எப்போதும் இதற்கு மிகப் பெரும் இடமுண்டு. புகழ் பெற்ற மியாமி கடற்கரை இந்தியாவில் பல மொழி  திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளது.

pukhet1.jpg

http://www.dinamani.com/lifestyle/travellogue/2016/aug/16/வேர்ல்டு-டூர்-போகலாமா-2557046--1.html

 

Link to comment
Share on other sites

 
 
 
 
 
 

வாழ்க்கையில் ஒரு முறையேனும் இந்த இடங்களில் ஏதாவதொன்றை பார்த்து விட்டாலே ஜென்ம சாபல்யம்! 

 


புக்கெட் தீவு: 576 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த புக்கெட் தீவு தாய்லாந்தின் பெரிய தீவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதைத் தவிர  மேலும் 32 குட்டி குட்டித் தீவுகள் தாய்லாந்தில் உள்ளன. இங்கே பெருமளவு டின் மற்றும் ரப்பர் உற்பத்தி செய்யப்படுவதால் பொருளாதார வளம் மிக்க தீவுகளில் இதுவும் ஒன்று.

guanchou1.jpg


குவாங்ஷூ: சீனாவின் மூன்றாவது மிகப்பெரிய நகரமான இந்த குவாங்ஷூ தென் மத்திய மாகாணமாகிய குவாங்டங் பகுதியில் அமைந்துள்ளது. 
 
 thaipei1.jpg
தைபே: தைவான் தலைநகரமான தைபே அங்கிருக்கும் சுவையான தெருவோர உணவகங்கள் மற்றும் இரவுக்  கடைகள் மூலமாக சுற்றுலாப் பயணிகளை   ஈர்க்கும் திறனைப் பெற்றுள்ளது. இந்தத் தெருவோர உணவகங்களில் அசைவ உணவுகள் அனைத்தும் அவ்வப்போது பயணிகள் விருப்பத்துக்கு ஏற்ப உடனடியாக தயாராகின்றன. தொட்டியில் மிதந்து கொண்டிருக்கும் மீன் வாடிக்கையாளர் விருப்பத்திற்கு இணங்க அடுத்த  நொடியில் எண்ணெய்யில் பொறிக்கப் பட்டு  தட்டில் வைக்கப் படும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் அந்த உணவின் சுவையை!
 

rome.jpg
 
ரோம்: பழைய ரோம் நகரம் கி.பி.பத்தாம் நூற்றாண்டில் ரோமுலஸ் மற்றும் ரீமஸ் சகோதரர்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப் பட்டது என்கிறது வரலாறு. ரோம் 'உலக நாகரீகத்தின்  தொட்டில்' என்று பாராட்டத்  தக்க வகையில் அங்கே எங்கெங்கு காணினும் நவீன மயம்.

  seole.jpg


சியோல்: தென் கொரியாவின் தலைநகரான சியோலின் மக்கள் தொகை 10 மில்லியனுக்கும் அதிகம்.மக்கள் நெருக்கடி மிகுந்த நகரம் என்றாலும் எப்போதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நகரங்களில் சியோலும் முன்னணியில் இருக்கிறது. 

antalya.jpg
 
  
அனடோலியா: மத்திய தரைக்கடலின் கரையோரப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த துருக்கிய நகரம் அதன் ஸ்படிக  நீல நிற கடற்கரைக்காக சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் விரும்பப் படுகிறது. 

 
 

 

 
 
 
 
 
  •  
 

colalampur.jpg 
  
கோலாலம்பூர்: தெற்கு மலேசிய தீபகற்பத்தில் அமைந்துள்ள கோலாலம்பூர் மலேஷியாவின்  தலைநகர், சுற்றுலாப் பிரியர்கள் கோலாலம்பூரை  'நுகர்வோரின்  சொர்க்கம்' என்று அழைத்து கொண்டாடுகிறார்கள்.  
 
  istanbul.jpg


 

இஸ்தான்புல்: உலக  நகரங்களில் பாதி ஆசியாக் கண்டத்திலும் பாதி ஐரோப்பாக் கண்டத்திலுமாக அமைந்திருக்கும் ஒரே நகரம் என்ற பெருமை இஸ்தான்புலுக்கு  உண்டு.
 
dubai.jpg  

துபாய்: உலகிலேயே மிக உயரமான கட்டிடமாக 163 மாடிகள் கொண்ட புர்ஜ் கலீபா எனும் கட்டிடம் துபாயில் தான் அமைந்துள்ளது. இதற்காக மட்டுமல்ல இந்தக் கட்டிடம் கட்டப் படுவதற்கு முன்பும் கூட துபாய்க்கு  உலக சுற்றுலாப் பயணிகளின் பயண லிஸ்டில் எப்போதும் முதலிடம் உண்டு. 
புகைப்படத்தில் உள்ள நகரங்கள் மட்டுமல்ல இதே போன்ற  சிறந்த சுற்றுலாத் தளங்கள் உலகெங்கும் இன்னும் விரிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு விடுமுறை காலத்தின் போதும் பயணிகள்இந்த லிஸ்டை சோதித்துக் கொள்ளலாம். இன்னமும் பார்க்காத இடங்களில் காத்திருக்கலாம் நமக்கான சுவாரஸ்யங்கள்! 

 
 

 

http://www.dinamani.com/lifestyle/travellogue/2016/aug/16/வேர்ல்டு-டூர்-போகலாமா-2557046--3.html

Link to comment
Share on other sites

  • 2 months later...

சுற்றுலா: ஹிதோன் ஒரு நீர் வழி கிராமம்

s7

வித்தியாசமான கண்களுக்கு குளிர்ச்சி தரும் இயற்கைக் காட்சிகள், ஓலைக் கூரைகள் கொண்ட எளிமையான பண்ணைவீடுகள் இவை அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றது தான் இந்த ஹிதோன். கிழக்கு நெதர்லாந்தில் உள்ள குட்டித் தீவு. தெருவோ, சாலைகளோ கிடையாது. எங்கும் கால்வாய்தான்; எங்கே போகவேண்டுமென்றாலும் படகு போக்குவரத்துதான்.  இது "குட்டி வெனிஸ்' எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு வரும் தபால்கள் படகு மூலமே விநியோகிக்கப்படுகிறது.
முன்பு கால்வாய் வழி போக்குவரத்து மட்டுமே இருந்தது. தற்போது சைக்கிளில் செல்லும் அளவுக்கு பாதைகள் போடப்பட்டுள்ளன. நடைப் பயணம் செய்வோர் கால்வாயைக் கடக்க, மரத்தாலான பாலங்கள் உள்ளன. இங்கு இரண்டு அருங்காட்சியகங்கள் உண்டு. 
இங்கு தங்குவதற்கு அழகான பெரிய மற்றும் சிறிய பண்ணை வீடுகளும் வாடகைக்கு கிடைக்கும். பெரும்பாலும் ஓலைக் கூரைகள் கொண்ட பண்ணைவீடுகள். கால்வாய் ஓரங்களில் உணவகங்கள் அதிகம் காணப்படுகின்றன. இங்குள்ள கால்வாய்களில் வாழும் வாத்துகள் எழுப்பும் சத்தங்கள்தான் மற்ற பறவைகளின் சத்தத்தை விட அதிகம்.
படகு சவாரி செய்ய பெடல், துடுப்பு, மோட்டார் மற்றும் மின்சாரப் படகுகளையும் பயன்படுத்துகின்றனர். படகுகளை வாடகைக்கு எடுத்து விருப்பம் போல் சவாரி செய்யலாம். எளிதாக இயக்கும் வகையில் இருக்கும் இந்த படகுகளில் இரண்டு அல்லது மூன்றுபேர் அமர்ந்து செல்லலாம். இதற்காக பிரத்யேகமாக படகுகள் வாடகைக்கு விடும் கடைகள் ஆங்காங்கே கால்வாய் அருகில் உண்டு. குளிர் காலமான நவம்பர் முதல் மார்ச் வரை படகு சவாரி செய்ய காலை 10.30 மணிமுதல் மாலை 3.30 வரை மட்டுமே ஏற்றது. அதன்பின்னர் நீர் நிலைகள் எல்லாம் பனிக்கட்டியாக மாறிவிடும். ஏப்ரல் முதல் அக்டோபர் வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை படகு சவாரி செய்யலாம்.  சென்னையில் இருந்து தூரம் வான்வழியாக 7787 கி.மீ.  இங்கு மக்கள் தொகை சுமார் 3 ஆயிரம் மட்டுமே. 
-ஒய்.டேவிட் ராஜா

http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2017/aug/08/சுற்றுலா-ஹிதோன்-ஒரு-நீர்-வழி-கிராமம்-2751742.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ..... ஆதவன்....   :)  :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.