Jump to content

கருணாநிதி வைர விழாவும் சர்ச்சைகளும்!


Recommended Posts

கருணாநிதி வைர விழாவும் சர்ச்சைகளும்!

1957-ம் ஆண்டு குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் வென்று ஓட ஆரம்பித்தவர், 2016 தேர்தலில் திருவாரூரிலும் வென்றார். ‘இதுவரை போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் தொடர்ந்து வென்ற ஒரே தலைவர்’ என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் கருணாநிதி. 1957-ல் சட்டமன்றத்துக்குள் நுழைந்த கருணாநிதியின் சட்டமன்றப் பணிக்கு இப்போது வயது 60. அவரின் சட்டமன்றப் பணி வைர விழாவைக் கருணாநிதியின் பிறந்த நாளான, ஜூன் 3-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்போகிறது தி.மு.க. ராகுல் காந்தியில் ஆரம்பித்து அகில இந்தியத் தலைவர்கள் பலர் நிகழ்ச்சிக்கு வருகிறார்கள் என்றாலும், விழா நாயகனே வரக்கூடிய நிலைமையில் இல்லை. இந்த விழா என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது? அரசியல் மாற்றங்கள் நடக்குமா?

p8b.jpg

அப்போதும் சர்ச்சை... இப்போதும் சர்ச்சை!

2007-ல் கருணாநிதியின் சட்டமன்றப் பொன் விழா கொண்டாடப்பட்ட நேரத்தில் தி.மு.க-தான் ஆட்சியில் இருந்தது. அதனால் தடபுடலுக்குப் பஞ்சமே இல்லை. சட்டசபையில் இரண்டு நாள்கள் விழாவும், சென்னைத் தீவுத்திடலில் பொதுக்கூட்டமும் நடத்தினார்கள். அப்போதும் அகில இந்திய தலைவர்களையெல்லாம் அழைத்துவந்து கூட்டம் போட்டார்கள். சட்டமன்றத்தைப் பூக்களால் அலங்கரித்திருந்தனர். 

அன்றைக்கு நடந்த விழாவில் ‘அ.தி.மு.க-வும் பங்கேற்க வேண்டும்’ என நினைத்தது தி.மு.க. இதற்காக விழாக்குழுவில் இடம்பெற அ.தி.மு.க பிரதிநிதி ஒருவரைப் பரிந்துரைக்கும் படி அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாவுக்குக் கடிதம் அனுப்பினார்கள். உடனே ‘அ.தி.மு.க-வை விழாவுக்கு அழைக்கும் அளவுக்கு தி.மு.க-வுக்குத் தைரியம் வந்துவிட்டது’ என கொதித்துப் போய் அறிக்கைவிட்டார் ஜெயலலிதா.

p8a.jpgகடந்த கால படிப்பினையோ, என்னவோ... இப்போது நடைபெறும் விழாவுக்கு அ.தி.மு.க, பி.ஜே.பி கட்சிகளுக்கு அழைப்பு இல்லை. ‘‘பி.ஜே.பி-யைத் தி.மு.க அழைத்திருக்க வேண்டும்’’ என தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சொல்ல... ‘‘பி.ஜே.பி மதவாதக் கட்சி. ஆகையால், அதை நாங்கள் அழைக்கவில்லை. அதன் நட்புக் கட்சியாக அ.தி.மு.க இருக்கிறது. அதனால், அந்தக் கட்சியையும் நாங்கள் அழைக்கவில்லை’’ என விளக்கம் கொடுத்திருக்கிறார், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. உடனே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘கருணாநிதி பங்கேற்காமல் நடத்தப்படும் வைர விழா, அரசியல் ஆதாயத்துக்கானது. தமிழர்களுக்குத் துரோகம் செய்தோர் களை அழைத்து நடத்தப்படும் விழா இது’’ என்று சீறியிருக்கிறார்.

‘‘இது அரசியல் விழா அல்ல” என்று ஸ்டாலின் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அந்தளவுக்குச் சர்ச்சைக்குரியதாக இப்போதும் ஆகிவிட்டது.

60 கணக்கு சரியா?

‘தொடர்ந்து 13 தேர்தல்களில் எம்.எல்.ஏ-வாகத் தேர்வு செய்யப்பட்டவர்’ என்கிற பெருமையைக் கருணாநிதி பெற்றிருந்தாலும், அவர் 60 வருடங் களாக சட்டமன்றத்தில் இருந்தார் என்று சொல்ல முடியாது.

1991 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் வென்ற ஒரே எம்.எல்.ஏ கருணாநிதிதான். அன்றைய தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2001, 2011 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் வென்றபோதும், சட்டமன்றத்துக்குச் சென்று விவாதங்களில் பங்கெடுக்கவில்லை அவர். அவ்வப்போது கையெழுத்து மட்டும் போட்டுவிட்டுத் திரும்பிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். ‘தொடர்ந்து 60 நாள்கள் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அவைக்கு வராமல் போனால் அவரது எம்.எல்.ஏ பதவி பறிபோகும்’ என்பது விதி.

2011 தேர்தலுக்குப் பிறகு, ‘‘கலைஞர் அவைக்கு வருவதற்குத் தயாராக இருக்கிறார். அவருடைய மோட்டார் நாற்காலி அவைக்குள் வருவதற்கும், உள்ளே அமர்வதற்கும் ஏற்றபடி இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும்’’ என தி.மு.க-வினர் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆனால், அதற்கான வசதியை அ.தி.மு.க அரசு செய்து கொடுக்கவில்லை. ‘‘ஜெயலலிதா மட்டும் அவைக்கு வந்தாரா?” என்கிற கேள்வியை தி.மு.க எழுப்புகிறது. உண்மைதான். 2006-2011 தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா தொடர்ந்து அவைக்கு வரவில்லைதான்.  ஆனால், ஒருமுறை தனி ஆளாக வந்து விவாதத்தில் பங்கேற்றார். அதன்பிறகு  அவர் வரவில்லை.  இங்கே போட்டியே, தவறுகளை நியாயப்படுத்துவதில்தானே நடக்கிறது.

சட்டமன்றத்துக்கு விழா எடுக்கவில்லை!

‘தமிழக சட்டமன்றப் பேரவை அமைக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதற்காக விழா எடுக்காமல், கருணாநிதியின் சட்டமன்றப் பொன் விழாவை நடத்துவது ஏன்?’ என 2006-ல் சர்ச்சை வெடித்தது. 1935-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசு சட்டத்தின்படி, முதன்முதலாக 1937-ம் ஆண்டு ஜூலை மாதம் ‘சட்டமன்றப் பேரவை’ ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி 2007 ஜூலையில் தமிழக சட்டமன்றப் பேரவைக்கு 70 வயதானது. இதற்காக விழா எடுக்காமல் கருணாநிதியின் 50 ஆண்டு சட்டமன்றப் பணிகளைப் பாராட்டி தடபுடலாகப் பொன் விழாவை நடத்தினார்கள். ‘எந்த அவையில் உறுப்பினராக இருக்கிறோமோ, அந்த அவையின்   70-ம் ஆண்டு விழாவை நடத்தாமல் தன்னுடைய சாதனைக்காக விழா எடுப்பது எந்த வகையில் நியாயம்?’ என விமர்சனங்கள் எழுந்தன. பேரவைக்கு விழா எடுத்தால், கருணாநிதியின் பொன் விழா விஷயங்கள் செய்திகளில் அமுங்கிவிடுமோ என்று நினைத்துதான் சட்டமன்றப் பேரவை 70-ம் ஆண்டு விழாவைத் திட்டமிட்டுப் புறக்கணித் தார்கள். இந்தியா குடியரசான பிறகான 1952-ம் ஆண்டிலிருந்து கணக்கிட்டு, தமிழக சட்டமன்றத்தின் வைர விழா 2012-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் கொண்டாடப்பட்டது. ஆனால், அதில் கருணாநிதி பங்கேற்கவில்லை.

p8.jpg

வாக்குறுதிகள் என்ன ஆனது?

2007-ம் ஆண்டு தீவுத்திடலில் நடைபெற்ற தனது சட்டமன்றப் பணிகள் பொன் விழாவில் பேசிய கருணாநிதி, ‘‘பொன் விழா நினைவாக நதிகள் இணைப்புக்கு அடிக்கல் நாட்டுங்கள்’’ என மேடையில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள் விடுத்தார். கடைசியில் பேசிய மன்மோகன் சிங், ‘‘கருணாநிதியின் ஒத்துழைப்புடன் நதிகள் இணைப்புக்கு விரைவில் தீர்வு காண்போம்’’ என்றார். பத்தாண்டுகள் போனதுதான் மிச்சம். சட்டமன்றத்தில் நடந்த பொன் விழா கொண்டாட்டத்தின்போது பேசிய கருணாநிதி, ‘‘இப்போது இருக்கும் சட்டமன்றத்தில் இடம் போதவில்லை. பொன் விழா செய்தியாக புதிய சட்டமன்றம் விரைவில் கட்டப்படும். அதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடக்கும்’’ என அறிவித்தார். சொன்னபடியே புதிய சட்டமன்றத்தை மட்டுமல்ல, புதிய தலைமைச் செயலகத்தையும் சேர்த்துக் கட்டினார். கட்டடம் கட்டியதில் ஊழல் எனச் சொல்லி நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் போட்டார் ஜெயலலிதா. அதோடு அந்தக் கட்டடத்தை மருத்துவமனையாக மாற்றிவிட்டார். கருணாநிதியால் இவற்றைத் தடுக்க முடியவில்லை.

‘‘இப்போது சட்டசபையைக் கூட்டாமல் ஏன் இருக்கிறார்கள் என்றால் கருணாநிதியைப் பற்றி பேசி விடுவோமோ என்பதால்தான்” என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். சட்டமன்றம் நடந்தால்தான் சர்ச்சைகள் வெடிக்கும் என்றால், சட்டமன்ற விழாக்கள் என்றாலும் சர்ச்சை நடப்பது வழக்கம் ஆகிவிட்டது.

http://www.vikatan.com/juniorvikatan/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.