Jump to content

இறுதிக் கிரியை - மரணச் சடங்கு - ஈமச் சடங்கும் சமய அனுட்டானங்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிக் கிரியை - மரணச் சடங்கு - ஈமச் சடங்கும் சமய அனுட்டானங்களும் - இதன் பிரதி பல இணையங்களில்

 
t10-1_300_300.jpg

 

 

இவ் நிலையற்ற பூவுலகில் (மாய உலகில்) பிறக்கும் ஒவ்வொருவரும் "இறப்பது நிச்சயம்" என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மை. ஒருவர் இறந்தபின் அவர் எம்மதத்தைச் சார்ந்தவரோ அம் மதத்தின் விதிகளுக்கு அமைய அந்த ஆன்மா சாந்தி அடைவதற்காகவும், அந்த ஆன்மாவைத் தாங்கி நின்ற உடலை புனிதமாக்குவதற்காகவும் (சிவமாக்குவதகாகவும்) கிரியைகள் நடாத்தப்பெற்று;தகனம் செய்யப் பெறுகின்றன அல்லது நல்லடக்கம் செய்யப் பெறுகின்றன.

மேலும் விளக்கமாக கூறூவதாயின்; மானிட பிறப்பெடுத்து வாழ்ந்த ஆன்மாவானது இரண்டு சூழ்நிலைகளில் பாவவினைகளை செய்து விடுகின்றன. ஒன்று தாம் செய்யும் செயல் பாவம் என அறிந்திருந்தும் செய்வது, மற்றையது பாவம் என அறியாமலே செய்வது அல்லது எதுவுமே அறியாமலேயே நிகழ்ந்து விடுவது போன்ற சந்தற்பங்களில் உடலினாலும், வாக்கினாலும், மனதினாலும் மூன்று விதமாக பாவ வினைகளைச் செய்கின்றது. இவற்றுள் பாவம் என அறிந்து செய்யும் செயலால் ஏற்படும் பாவ வினையை அந்த ஆன்மா அனுபவித்தே ஆக வேண்டும். அறியாது செய்த பாவ வினைகள் அவரின் வழிவந்த வாரிசுகள் அவருக்காக செய்யும் மரணச் சடங்கு, அந்தியேட்டி கிரியைகள், தான தர்மங்களினால் நிவர்த்தியாகின்றன அல்லது குறைந்துபோகின்றன என ஆகம நூல்கள் கூறுகின்றன.

 

கன்ம வினைகளால் பீடிக்கப்பெற்ற ஆன்மாவை ஜீவாத்மா அல்லது சூட்சும சரீம் என்றும் அது இப்பூவுலகில் பெற்றிருக்கும் உடலை தூலசரீரம் என்றும் அழைப்பர். சூட்சும சரீரம் தூலசரீரத்தை விட்டுப் பிரிதலையே நாம் இறப்பு என கூறுகின்றோம். இந்த இறப்பின்போது ஜீவாத்மாவானது (சூட்சும சரீரம்) யமதூதர்களினால் கவர்ந்து யமலோகத்தில் இருக்கும் யமதர்மாராஜனிடம் அழைத்துச் செல்கின்றனர். பூலோகத்திற்கும் யமலோகத்திற்கும் இடையே சுமார்எண்பத்தியாறாயிரம் காதவழி தூரம் இருப்பதாகவும்; பாவம் செய்த ஆன்மாக்களுக்கு உரிய தண்டனை அவர்கள் செல்லும் பாதையிலும், எமலோகத்திலும் வழங்கப் பெறுவதாகவும்; அப் பாதையை கடந்து செல்வதற்கு பாவம் செய்த சில ஆன்மாக்களுக்கு ஒரு வருடம் வரை ஆகலாம் என்றும், கருடபுராாணம் கூறுவதாக சொல்லப்பெறுகின்றது.

இறந்த ஜீவாத்மாவின் கன்ம வினைகளுக்கு ஏற்ப பாதையின் உக்கிரம் தன்னிச்சையாகவே மாற்றமடைவதால்; உடலை விட்டுப் பிரிந்த ஜீவாத்மா பாவம் என அறியாது செய்த பாவங்களை நிவர்த்தி செய்து அல்லது குறைத்து யமலோகம் செல்லும்வரை உள்ள பாதையையின் உக்கிரத்தை குறைத்து சுகமாக கடந்து செல்வதற்காகவும், அந்த ஜீவாமாவை சாந்திபெறச் செய்வதற்காகவும்அவர்களின் வாரிசுகளினால்; இறுதிக் கிரியை, (எட்டுவீடு, 15ம் நாள் படையல்) அந்தியேட்டி கிரியை, மாதமாசியம், திவசம் போன்ற சிரார்த்த கிரியைகளையும், தானங்களையும் சிரத்தையோடு செய்கின்றார்கள். இதனால் அந்த ஜீவாத்மாவிற்கு புண்ணியப் பேறினால் நற்பிறப்பு கிடைக்கும் என்பதும் ஐதீகம். 

ஒருவர் இறந்த காலத்தை வைத்தும் அந்த ஜீவாத்மா பாவம் அதிகம் செய்த ஆத்மாவா அல்லது புண்ணியம்அதிகம் செய்த ஆத்மாவா என்று கணித்துக் கொள்கின்றார்கள். உத்தராயண காலத்தில் (தைமாதம் முதல் ஆனிமாதம் வரை உள்ள காலம்), சுக்கிலபக்‌ஷத்தில் (வளர்பிறைக் காலம்), உடலின் தொப்பூழுக்கு மேல் (கண்கள், காதுகள், நாசிகள், வாய்) அமைந்துள்ள ஏதாவது ஒரு வாசலினால்  உயிர் பிரிந்திருந்தால் புண்ணியம் அதிகம் செய்த ஆன்மாவாகவும்; தட்சணாயன காலத்தில் கிருஷ்ணபக்‌ஷத்தில் உடலின் தொப்பூழுக்கு கீழ் உள்ள வாயில்களில் ஒன்றினால் உயிர் பிரிந்திருந்தால் பாவவிணை அதிகம் செய்த ஆன்மாவாக கணிக்கப்பெறுகின்றது. ஒருவர் இறக்கும் போது ஆன்மாவானது உடம்பில் உள்ள ஒன்பது வாசல்களில் ஏதாவது ஒரு வாசலினால் பிரிவதாக ஐதீகம். இதனை இறந்தவுடன் ஒருவரின் ஏதோ ஒரு வாயில் ஈரமாக இருப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 

பாவம் செய்யாத பரிசுத்த ஆன்மாக்களை காண்பது அரிதினும் அரிது. எந்த ஒரு ஆன்மாவும் தெரிந்தோ தெரியாமலோ பாவம் செய்தே இருப்பார்கள் என்பது நம்பிக்கை. பரிசுத்தமான ஆன்மாவானது  நேரடியாக பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்தவிடுகின்றது என்பது ஐதீகம்.

 

புலம் பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் இந்துக்களாகிய நாம் ஒருவர் இறந்தபின் செய்யும் கிரியைகள் பற்றி அறிந்திருத்தல் மிகவும் முக்கியமாகின்றது. முக்கியமாக இளம் சந்ததியினர் தெரிந்து கொள்வதற்காக இது பற்றிய விபரங்களை (நாம் அறிந்தவற்றை) இங்கு பகிர்ந்து கொள்கின்றோம்.

ஒருவர் நோய்வாய்ப் பட்டு, அல்லது (முதிர்ச்சி) வயோதிபம் அடைந்ததினால், சுயநினைவற்று இருக்கும் தறுவாயில் (சேடம் இழுக்கும் நிலையில்); அந்த ஆன்மா இறைவனையே எண்ணும் படியான சூழ்நிலையை உருவாக்குவதற்காக அவரைச் சூழ்ந்து நின்று பஐனைகள் (தோத்திரங்கள்) பாடுவார்கள். அனுபவம் மிக்கவர்கள், அல்லது நாடிபிடித்து பாப்பவர்கள் ஜீவன் பிரியும் நிலையை உணர்ந்தால் "ஜீவன் போகப் போகுது" உரிமைகாரர் பால் பருக்குங்கள் என்று கூறுவர்.

அப்போது அவருக்கு தீர்த்தம் அல்லது பால் பருக்கி அவருடைய வலது காதில் சமயதீட்சை பெற்ற ஒருவர் மூலம் "பஞ்சாட்சர மந்திரம் -சிவாயநம" சொல்லி தோத்திரம் பஜனையாக பாடுவார்கள். இவ்வாறு நாம் செய்யும் போது பிரிய இருக்கும் ஆன்மாவானது இவ்வுலகத்தில் பெற்றிருந்த ஆசாபாசங்களை மறந்து, இறைநாட்டம் கொண்டதாகி இறைவனை நாடி நிற்கும். அந்த நிலையில் ஜீவன் (ஆன்மா) பிரிந்தால் இறைவனின் கடாட்சம் அந்த ஆன்மாவுக்கு கிடைக்கும் எனபது ஐதீகம்.

 

ஆனால் நாம் அவர்மீது கொண்ட அன்பு, பாசத்தினால் ஆன்மா பிரியும் தறுவாயிலும்கூட அழுது, புலம்பி, அவரை உறவு முறை சொல்லி அழைத்து; அந்த ஆன்மாவை நின்மதியாக இறைவனை நாட விடாது நிலைகுலையச் செய்யும் பெரும் தவறைச் செய்து விடுகின்றோம். இப்படி செய்வதைத் தவிர்த்து நாம் எல்லோரும் அந்நேரத்திலாவது எம் குலதெய்வங்களை வழிபட்டு அந்த ஆன்மாவின் ஈடேற்றத்திற்காக பிரார்தனை செய்தல் மிகவும் முக்கியமானதொன்றாகும்.

 

சைவ மதத்தைச் சார்ந்த ஒருவர் இறந்து விட்டால் அவருடைய ஆன்மா சாந்தி அடைவதற்காக செய்யப்  பெறும் கிரியைகள் பற்றி அறிந்து கொள்வோம். இவற்றுள் சில கிரியைகள் இடத்திற்கு இடம் வேறுபடலாம். ஆனால் நோக்கம் ஒன்றே.

 

இறுதிக் கிரியைகள்: 
இந்து மகன் ஒருவர் இறந்துவிட்டால் அவரை உடனே குளிப்பாட்டி, விபூதி அணிவித்து, சந்தணம்,குங்கும பொட்டும் வைத்து தெற்குத் திசை நோக்கி தலைப் பகுதி இருக்குமாறு கட்டிலை வைத்து, குத்து விளக்கேற்றி வைப்பார்கள். அத்துடன், இறந்தவரின் உடல் வைக்கப்பெற்றுள்ள இடத்தில் கட்டிலுக்கு மேலே வெள்ளை கட்டுவார்கள். அதற்கும் ஒரு காரணம் சொல்லப் பெறுகின்றது. அதாவது இறந்தவரின் உடல் வைக்கப் பெற்றிருக்கும் கட்டிலுக்கு (இடத்திற்கு) மேலே கட்டப்பெற்ற வெள்ளைத் துணியில் அந்த உடலை விட்டுப் பிரிந்த சூட்சும சரீரம் கொண்ட (ஆன்மா) ஆவியானது தொங்கிக் கொண்டு நிற்குமாம்.

 

அதனாலேயே இறந்தவரின் உடலை தோயவாக்கும் போதும் வெள்ளைத் துணி கட்டிய இடத்திற்கு கீழே வைத்து தோய வார்க்கிறார்கள். அதன் பின்பும் இறுதிக் கிரியைகள் நடக்கும் போதும் வெள்ளை கட்டிய இடத்திலேயே தலைப் பக்கம் தெற்கு நோக்கி இருக்குமாறு வைக்கிறார்கள். குளிப்பாட்டும் போதும், கிரியைகள் நிகழும் போதும் இறந்தவரின் ஆத்மா அந்த வெள்ளை துணிகளில் தொங்கியவாறு இருக்கும் என்பது நமது மூதாதையினர் கூறிய விளக்கமாகும். இறந்தவரின் ஆவி இறந்த நாளில் இருந்து 16 நாட்கள் வரை அவ்வீட்டை சுற்றிக் கொண்டு நிற்கும் என்பதும் ஆன்றோர் கூற்று. அதனாலேயே 3ம் நாள், 8ம் நாள், 15ம் நாள் படையல் என இறந்தவர் விரும்பி உண்ணும் உணவும், உணவுப் பண்டங்களும் படைத்து இறந்தரின் ஆவியை மகிழ்விக்கின்றார்கள்.

 

இக் கிரியைகள் இடத்திற்கு இடம் வித்தியாசமான முறைகளில் செய்யப் பெறுகின்றன. சாதாரணமாக ஒரு பொதுமகன் இறந்து விட்டால். அவர் உடம்பை (பூதவுடலை)தூல சரீரத்தை தகனம் செய்வார்கள். அவர் சமய தீட்சை பெற்று ஆசார சீலராக வாழ்ந்திருந்தால் "சமாதியும்"இருத்துவார்கள். 

 

அனேகமாக வெளிநாடுகளில் ஒருவர் இறந்தால் அவரின் பூதவுடலை இரண்டு அல்லது மூன்று தினங்கள் பார்வைக்கும், அஞ்சலிக்கும் வைத்தபின், இறுதிக் கிரியைகள் செய்து; மின் அல்லது காஸ் போறணையில் எரியூட்டி தகனம் செய்வது வழக்கமாக உள்ளது. ஆனால் அவரின் ஆன்மா சாந்தி அடைய செய்யப்பெறும் கிரியைகள் எல்லாம் சைவ ஆகம விதிகளுக்கு அமைய இடம் பெறுகின்றன.

 

இறந்தவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராயின் அவர் அரசனாக இருந்தாலும் சரி ஆண்டியாகஇருந்தாலும் சரி (பள்ளிவாசலில் வைக்கப் பெற்றிருக்கும்) பூதவுடல் எடுத்துச் செல்லும் தொட்டிலில்தான் பூதவுடலை மையவாடிக்கு (இஸ்லாமியர்-இடுகாடு) எடுத்துச் செல்வார்கள் அத்துடன்  பூதவுடல் உயிர் பிரிந்த 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்யப் பெற்று விடும். அது அவர்களின் சமய கலாச்சாரமாகும்.

 

சைவசமயத்தைச் சேர்ந்த ஒருவர் அகால மரணமடைந்தால் எதுவித சமய கிரியைகளும் செய்யாது, தோத்திரம் பாடி கற்பூரம்தீபம் ஏற்றிய பின் தகனம் செய்கின்றார்கள். ஆனால் தற்பொழுது அந்தநிலை மாறி எல்லாச் சந்தற்பங்களிலும் சமய கிரியைகள் செய்கின்றனர்.

 

 

வீட்டில் ஒருவர் இறக்க நேரிட்டால்; இறந்த உடன் பூதவுடலைச் சுத்தம் செய்து (குளிப்பாட்டி), விபூதி பூசி ஈமைக்கிரியைகள் ஆரம்பிக்கும் வரையும் வீட்டின் ஒரு பகுதியில் தெற்குப் பக்கம் தலை இருக்கும்படியாக கட்டிலில் படுக்க வைத்து தலைமாட்டில் குத்துவிளக்கேற்றி வைப்பது வழக்கம். உறவினர்கள் யாராவது தூர தேசத்தில் இருந்து வரும் வரை காத்திருப்பதாயின் அப்பூதவுடல் பழுதடையாது இருக்க உரிய மருந்துகள் இட்டு பாதுகாத்து வைப்பார்கள். சில சந்தற்பங்களில் பூதவுடல் வீக்கமடையும். அதனைத் தவிற்பதற்காக ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை அல்லது அல்லது உப்பை சீலைத்துணியில் கட்டி நெஞ்சில் வைத்தும், ஒரு சாக்கில் நெல்லை கட்டி கட்டிலுக்கு கீழே வைப்பார்கள். வெளிநாடுகளிலும், பெரிய பட்டினங்களிலும் இறந்தவரின் பூதவுடல் மலர்சாலையில் (Funeral Home) வைக்கப் பெறுவதால் அவர்களே அதனைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

 

சாதாரணமாக பொதுமகன் ஒருவனின் ஈமைக் கிரியைகளை சைவக் குருமாரே செய்து வருகின்றனர். ஆனால் பிராமணருடைய இறுதிக் கிரியைகளை மாத்திரம் பிராமணரக் குருமாரேசெய்கின்றார்கள். இறுதிக் கிரியையின் போது இறந்தவரின் நெருங்கிய இரத்த உறவினர்கள் கடமைகளைச் (கிரியைகளை) செய்வது வழக்கம். இறந்தவர் தந்தையாயின் அவரின் மூத்தமகனும், தாயாயின் இளையமகனும், சில சந்தற்பங்களில் எல்லா ஆண்மக்களும் இணைந்து கடமைகளைச் செய்வார்கள். உடலுக்கு செய்யும் இறுதிக்கிரியைகள் மூலம் அந்த ஆன்மாவானது அந்த உடலைத் தாங்கி நின்ற காலத்தில் தெரியாமல் செய்த தீவினைகள் நீங்கப் பெற்று சாந்தி அடைவதாக ஐதீகம்.அத்துடன், தன்னை இயங்க வைத்த ஆன்மாவைபிரிந்தனால் சவமாக இருக்கும் உடலை சிவமாக்கி அதனை அக்கினியில் சங்கமக்க செய்யும் புனித கிரிகையாகவும் நிகழ்த்தப் பெறுகின்றது. 

 

அதனால் ஆன்மாவின் ஈடேற்றம் கருதி பயபக்தியோடு இறைவனை பிரார்தனை செய்யக் கூடியவர்களாக ஆண் பிள்ளைகளையும், இரத்த உறவினர்களையும் அனுமதிக்கின்றனர். பெண் பிள்ளைகளைப் பொறுத்தமட்டில் அவர்களை சுடுகாடு செல்வதற்கு எமது சமூகம் அனுமதிக்காத காரணத்தினாலும்; அவர்கள் விவாகம் செய்து கணவனுடன் இருப்பதாலும் கடமை செய்வதற்கு அனுமதிப்பதில்லை. ஆனால் அவர்கள் எல்லாப் பூஜைகளிலும் கலந்து இறந்தவருக்காக பிரார்த்தனை செய்வார்கள். தற்காலத்தில் ஆண்பிள்ளைகள் இல்லாத சில குடும்பங்களில் பெண்களும் கடமைகள் செய்து உறவினர் அல்லது இரத்த உறவு உள்ள ஒருவர் மூலம் தகனக் கிரியையை நிறைவேற்றுகின்றனர்.

 

கிரியைகள் இரண்டு வகைப்படும். ஒன்று சுபகிரியை மற்றையது அபரக்கிரியை. இறந்ததன் பின் செய்யப்படும் சடங்குகள் (இறுதிக்கிரியை) அபரக்கிரியை என அழைக்கப்படுகின்றது.

 

சுபகிரியைகள் செய்யப் பெறும் போது ஆராத்தி, தீபங்கள் வலதுபக்கமாக உயர்த்தி செய்யப் பெறுகின்றன. ஆனால் அபரக்கிரியை செய்யும் போது மறுதலையாக இடதுபக்கம் உயர்த்தி செய்யப் பெறுகின்றன. கடமை செய்வோருக்கு பூநூல் வலது பக்கத் தோழில் அணிவிக்கப் பெறுகின்றது (குருமார் இடதுபக்கத் தோழில் அணிவர்). ஆனால் தற்பை வழக்கம் போல் வலது மோதிர விரலில் அணிகின்றனர். அனேகமாக சுபகிரியையின் போது கும்பத்திற்கு வைக்கப் பெறும் மாவிலைகள் 5-7-9 ஆகவும் அபரக்கிரியையின் போது 3 மாவிலைகள் ஆகவும் இருக்கும்.

 

ஆன்ம ஈடேற்றத்திற்காக; சூர்ணோத்சவம் (மரணச்சடங்கு), தகனம், அஸ்தி சஞ்சயனம் (காடாற்று), அந்தியேட்டி, பாசாணபூசை, உருத்திர பலி, நவசிராத்தம், ஏகோத்திர விருத்தி சம்கிதை, இடபதானம், ஏகோதிட்டம், மாசியம், சோதகும்பசிராத்தம், சுவர்க்கமாதேயம், வைதரணிகோதானம், சபிண்டீகரணம் (வீட்டுக்கிரியை) சிராத்தம் முதலிய கிரியைகள் நடைபெறுகின்றன. 

 

மரணச் சடங்கு தொடக்கம் பாஷாணபூசை வரையுள்ள கிரியைகளை சைவ குருமாரும்;சபிண்டீகரணம் சிராத்தம் முதலிய கிரியைகளை பிராமண குருமாரும் செய்து வைக்கிறார்கள். விளக்கமாக கூறுவதாயின் மரணச்சடங்கு முதல் பாஷாணபூசை வரையுள்ள பூசைகளைஅபரக்கிரியைகள் என்றும், சபிண்டீகரணம, சிரார்த்தம் முதலியன சுபகிரியைகள் என்றும் அழைக்கப் பெறும். ஆனால் சபிண்டீகரணம், சிரார்த்தம் போன்ற வீட்டுக் கிரியைகளை சிலர் சைவக் குருமார் மூலம்  செய்விக்கின்றனர். சைவக் குருமார் “சூத்திரராக” இருப்பதனால் சூத்திரர் ஒருவரின் இறப்பினால் அல்லது பிறப்பினால் உண்டான ”ஆசூசம்” என்னும் துடக்கு நீங்காது என பல சமூகங்களில் கருத்து நிலவுகின்றது. அதனால் அவர்கள் வீட்டுத் கிருத்தியங்களை (அந்தியேட்டி, துடக்குக் கழிவு போன்றவற்றை) பிராமண குருமார் மூலம் செய்விக்கின்றனர். 

 

இதிலே தகனத்துக்கு முன்னர் இறந்தவரின் உடலுக்கு விசேட அந்தியேட்டி, நிருவாண அந்தியேட்டி ஆகியவை இடம்பெறும். மாமிச உணவு உண்ணாத, சமய தீட்சை பெற்றவரின் உடலில் (பூதவுடலில்) சமய அந்தியேட்டி தகனம் செய்ய முன் செய்யப்படுவதே வழக்கம். இந்த கிரியைகளை செய்யும் கடமைக்காரர் இவை பற்றிய முழுமையான விளக்கத்தை தெரிந்து கொண்டு செய்தால் தான் முழுமையான நன்மை கிடைக்கும். 

 

மற்றைய சமயத்தவர்கள் (இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள்) இறுதிக் கிரியையின் போது இறந்தவரின் பூதவுடலை அவர்களுடைய ஆலயங்களுக்குள் எடுத்துச் சென்று பிரார்தனை செய்கிறார்கள் பிரார்த்தனை நிறைவு பெற்றபின் பூதவுடலை நல்லடக்கம் செய்வார்கள். ஆனால் இந்துகள் இறந்தவர்களுடைய பூதவுடலை "ஆசூசம்" எனக் கூறி ஆலயத்தினுள் அனுமதிப்பதில்லை. அதனால் கிரியை செய்யப் பெறும் இடத்தை ஆலயத்தைப் போல் தூய்மையானதாக்கி அங்கேயே பூசைகளையும், பிரார்த்தனைகளையும் செய்கின்றார்கள். 

 

மரணக்கிரியை நடைபெற இருக்கும் இடத்தில் (முற்றத்தில்) பந்தல் அமைத்து வெள்ளை கட்டி, மாவிலை, தோரணம், பூக்களால் அலங்கரித்து அந்த இடத்தினை சாணத்தினால் (சுமங்கலிப் பெண்) மெழுகுவார்கள். சுப நிகழ்ச்சிகளுக்காக அமைக்கப் பெறும் பந்தலை “சொக்கட்டான் பந்தலும்” (முகடு உள்ள தாகவும்), அபரகிரியைகளுக்கு  “தட்டைப் பந்தல்” முகடுஅற்ற பந்தலும் அமைப்பார்கள். 

 

வெளிநாடுகளில் அதற்கென அமைக்கப் பெற்ற மண்டபங்களில் நடைபெறுவதால், அவ்விடத்தை மஞ்சள் தண்ணீர் தெளித்து புனிதமாக்கிய பின் கிரியைகள் செய்யத் தொடங்குவார்கள், பூதவுடல் மலர்சாலையைச் சேர்ந்தவர்களால் சுத்தன் செய்யப்பெற்று, அலங்கரிக்கப் பெற்றிருக்கும் அதனால், இங்கு குளிப்பாட்டுதல், அபிழ்ஷேகம் செய்தல் போன்றன செய்யப் பெறுவதில்லை, பதிலாக பஞ்சகவ்விய நீரினைச் தெளித்து பூதவுடலை புனிதப் படுத்துவார்கள்.

 

சைவ குரு மரணக் கிரியைகளை ஆரம்பிக்கும் போது முதலில்; அங்கு உருத்திரகும்பமும் (நடுவில்), அதனை சுற்றி அட்ட திக்கு பாலகர்களுக்கான கும்பங்களும், மேற்குப் பக்கத்தில் புண்ணியாகவாசன கும்பமும், கிழக்குப் பக்கத்தில் உரல், உலக்கை, மணி, மயானத்துக்கு கொண்டு செல்லும் மண்குடக் கும்பம் வைத்து பூசைகளை ஆரம்பிப்பார். கடமை செய்பவர் மொட்டை வழித்து, தோய்ந்து (முழுகிய) பின் புத்தாடை தரித்து ஆசாரசீலராக விபூதி தரித்திருத்தல் வேண்டும். அவர் அன்றைய தினம்நோன்பு இருத்தல் அவசியம்.

 

கிரியைகள் செய்வதற்கு கும்பங்கள் வைத்து கும்ப பூஜைகள் ஆரம்பமானதும், பூதவுடலை ஒரு பூநூல்மூலம் கும்பங்களுடன் தொடர்பு படுத்தி அதனை அக்கினியுடன் சங்கமிக்கச் செய்யப் பெறுகின்றது. கும்ப பூசைகள் நிறைவு பெற்றதும் அக்கினி கோமம் வளர்க்கப் பெறுகின்றது. அப்போது பூதவுடல் (குளிப்பாட்டல்) அபிஷேகம் செய்யப் பெறும். வீட்டின் தென் புறத்தில் தெற்கு நோக்கியவாறு பூதவுடலை இருத்தியோ அல்லது தலை தெற்குப் பக்கம் இருக்கும் வண்ணம் கிடைத்தியோ அபிஷேகம் செய்வார்கள்.

 

அதன் பின்னர் கடமை செய்பவர் அரப்பு, எண்ணெய் முதலியவற்றை சிரசில் வைக்க வேண்டும். பின்னர்; அரிசிமா ஒரு பாத்திரத்தில் நீரில் கரைத்து அபிழ்ஷேகம் செய்யப் பெறும், இது போல் மஞ்சள் மா, அபிஷேகக் கூட்டும் ஒரு பாத்திரத்தில் நீரில் கரைத்து அபிஷெகம் செய்யப் பெறும். அதன் பின் பால், தயிர், இளநீர் முதலியவற்றால் அபிஷேகம் செய்வார்கள். கடமை செய்பவர் மேற்கு முகமாக நின்று கீழிருந்து (கால்மாட்டில் ஆரம்பித்து) மேலாக (தலைவரை) அவரின் புறங்கையினால் வேறு ஒருவர் உதவியுடன் இந்த அபிஷேகம் செய்வார். பூதவுடல் பழுதடைந்த அல்லது அபிஷேகம் செய்ய முடியாத நிலையில் இருந்தால் அபிஷேகத் திரவியங்களை பூதவுடல் மீது தெளித்து விடுவார்கள். சில ஊர்களில் கிரியை செய்யும் சைவக் குருவே அபிஷேகத்தை நடாத்துவார். 

 

அதன் பின்னர்; கும்ப அபிஷேகம் நடைபெறும். பன்னீர் போன்ற வாசனைப் பொருட்கள் முதலியவற்றை சிரசிலே சாத்த வேண்டும். பின்னர் பூதவுடலை அலங்கரித்து மண்டபத்துக்கு கொண்டு வந்து தெற்கு பக்கமாக தலைப்பகுதி இருக்கக் கூடியதாக கட்டிலை வைப்பார்கள். அதன் பின்; திருநீறு அணியப் பெற்று  பூசைகள் செய்வார்கள். கடமை செய்பவரே பூதவுடலுக்கு தூப தீபம் காட்டி பூசைகளைச் செய்வார். அதன் பின் அறுகு, மஞ்சள் பொடி போன்றனவற்றை உரலில் இட்டு மணியடித்து பத மந்திரம் சொல்லி மூன்று, அல்லது எட்டுத்முறை இடித்த பின்பு,திருப்பொற்சுண்ணம் இருபது பாடல்களும் பாடி, ஒவ்வொரு பாடலுக்குன் ஒருமுறை அல்லது மூன்று முறை சுண்ணமிடிப்பார்கள். சுண்ணமிடித்து சுண்ணப்பொடியும் சேர்த்து பூதவுடலுக்கு அபிஷேகம் செய்யப் பெறும். அனேகமாக கண்ணீல் அப்பி விடுவது வழக்கம்.

 

பெண்கள் சுமங்கலியாக இறப்பதை ஒரு பெரிய பேறாக கருதுகின்றனர். சுமங்கலியாக இறப்பது என்பது வயோதிபமடைந்து, கணவருக்கு முதல் இயற்கை மரணம் எய்துதலைக் குறிக்கும்.சுமங்கலியாகவே பூவோடும், பொட்டோடும் இறக்கும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அதுவும் இறைவன் கொடுத்த வரம் எனக் கூறுகின்றனர். கணவனையே கண்கண்ட தெய்வமாக மதித்து நடப்பவர்களுக்கு இப் பேறு சுலபமாக கிடைத்து விடுகின்றது என நம்புகின்றனர்.

 

கணவன் மனைவிக்கு முதல் இறக்க நேரிட்டால்; பூதவுடல் குளிப்பாட்டும் போது மனைவியையும் குளிப்பாட்டி, வெள்ளைச் சீலை அணிவிக்கப் பெறும். இறுதிக் கிரியையின் இறுதிக் கட்டமாக தானம் வழங்கள் நடைபெறு, அப்போது ஊர் ஆலயங்களுக்கு இறந்தவரின் பெயரால் தானம் வழங்கப் பெறும். அதனை அடுத்து மனைவி; கணவனுக்கு இறுதியாக மலர் அஞ்சலி செய்வார். அதன் போது மனைவி மலர்களைக் கொண்டு மூன்றுமுறை பூதவுடலை இடம் வந்து மலர்களை பூதவுடலுக்கு சமர்ப்பித்து வீழ்ந்து வணங்குவார். இச் சந்தற்பத்தில் கணவனால் கட்டப் பெற்ற புனிதமானதாலியானது ஒரு சுமங்கலிப் பெண்ணால் கழற்றப் பெற்று கணவனின் நெஞ்சில் வைக்கப் பெற்று இறுதிக் கிரியைகள் நிறைவு செய்வார்.  அன்று முதல் அந்தப் பெண் நல்ல காரியங்களை முன்நின்று செய்வதற்கு அருகதை அற்றவள் என ஒதுக்கப் பெற்று விடுவாள்.

 

ஆதி காலத்தில் கணவனை இழந்த மனைவியை கணவரின் சிதையில் வைத்து உயிரோடு எரித்து விடுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. சில பெண்கள் தானாகவே முன் வந்து உடன்கட்டைஏறுவார்கள் பலர் ஊர்மக்களின் வற்புறுத்தலில் அதனைச் செய்துள்ளனர். இந்நிலை தற்போது மாற்றம் அடைந்து அப்பெண் இளமையானவளாயின் மறுமணம் செய்தும் வைக்கின்றனர்.

 

சுண்ணம் இடிக்கும் பொழுது இறந்தவரின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உட்பட உரித்துடைய சந்ததிக்காரர்கள் பந்தம் பிடிப்பார்கள். வெளி நாடுகளில் அதற்கான வசதிகள் இல்லாத காரணத்தினால் பந்தத்திற்குப் பதிலாக ஊதுபத்தியைப் பிடித்து இறந்தவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்திப்பார்கள்.

அத்துடன் உரிமைக்கார பெண்களும் மலர் சார்த்தி இறுதி அஞ்சலியை செலுத்துவர். பின்னர் பெண்கள் வாய்க்கரிசி இட்ட பின், பூதவுடலின் வாய்,கை,,கால்,விரல்கள் ஆகியவற்றைக் கட்டி பூதவுடலை வஸ்திரத்தினால் மூடி பாடையில் வைத்துக் கால் முன்பக்கமாக இருக்கும் படி வைப்பார்கள். அந்த சமயத்திலும் உறவினர்களான பெண்கள் மூன்றுமுறை பாடையை இடப்பக்கமாக மரடித்துச் சுற்றிய பின் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து ஒப்பாரி வைத்து அழுவார்கள்.

அதன் பின் பறை மேளம், சங்கு வாத்தியங்களுடன் பூதவுடலை மயானத்துக்கு எடுத்துச் செல்வார்கள். கொள்ளி வைக்க இருப்பவர் (கடமை செய்பவர்) சந்தணக்கட்டையில் மூட்டப்பெற்ற நெருப்புச் சட்டியுடன் இடது தோழில் மண்பானை கும்பத்துடன் பூத உடலுக்கு முன்னே செல்ல (சில சந்தற்பங்களில் ஊரில் உள்ள புரோகிதர் (பாபர்) கொள்ளிச் சட்டியை எடுத்துச் செல்வார்). ஆண் உரிமையாளர்கள் பிரேதத்தின் பின் புறம் செல்வார்கள். 

 

மயானத்தை அடைந்ததும் மயானத்தில் விறகுகள் அடுக்கி தயார் செய்யப் பெற்ற சிதையை இடப் பக்கமாக மூன்று முறை சுற்றிய பின் பாடையை இறக்கி பூதவுடலை தலைப் பகுதி தெற்கும் திசையில் இருக்கும் படி கிடத்தல் வேண்டும். அனேகமாக சிதை அடுக்கும் போது காற்று வீசும் திசையைத்தான் முக்கியமாக கவனிப்பார்கள். அதனால் சரியாக வடக்குத் தெற்காக சிதை அமையாது போகலாம்.

சிதையின்மேல் பூதவுடல் வைக்கப் பெற்றதும் பூதவுலில் கட்டிய கட்டுகள் எல்லாம் அவிழ்கப் பெறும், அத்துடன் பூதவுடல் ஆணுடையதாயின் அரை நாண் (அறுநாக்கொடியும்) அவிழ்கப் பெற்று அவர் பிறக்கும் போது இருந்தது போல் சுதந்திரமாக்கப் பெறும். ஆனால் மானத்தைக் காப்பதற்காக அவருக்கு  அணிவித்த உடைகள் கழற்றுப் பட மாட்டாது. அதன் பின் உரிமைகாரர் வாய்க்கரிசிஇடுவார்கள். பின் கடமை செய்பவர் இடது தோளில் மட்குடக்கும்பதைத் தாங்கியவாறு சிதையை இடப்பக்கமாக சுற்றி வந்து குடத்தை தலைப்பக்கத்தில் வைத்து கும்ப நீர், அரிசி, பவுண் அல்லது காசுடன் வாய்க்கரிசியிடுவார்.

 

அதன்பின் பூதவுடலின்மேல் விறகுகட்டைகள் அடுக்கப்பெறும். அப்போது நெஞ்சுக்கு நேராக ஒருபெரிய கட்டையை வைப்பார்கள். அதை நெஞ்சாங்கட்டை என்று அழைப்பது வழக்கம். பூதவுடலானது நெருப்பில் எரியும்போது (புளுப்போல) முன்பக்கமாக வளைந்து கொள்ளும். அதனைத் தடுப்பதற்காகவே மொத்தமான நெஞ்சாங்கட்டையை வைக்கிறார்கள். 

 

அதன் பின்; முன்போல மண்பாலைக் கும்பத்தினை இடதுபுற தோளில் வைத்துக் கொண்டு சந்தணக் கொள்ளிக் கட்டையை பின்பக்கமாக ஏந்திய வண்ணம் கடமை செய்பவர் மீண்டும் இடப்புறமாக மூன்று முறை சுற்றி வருவார். ஒவ்வொரு சுற்றின் போதும் ஒருவர் (தலைமுடி அலங்கரிப்பாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்) மண்பானைக் கும்பத்தில் கத்தி நுனியினால் துவாரமிட்டு;  கும்ப நீரினை சிதைக்கு அபிழ்ஷேகம் செய்வார்கள். மூன்றாவது சுற்று முடிவில் கடமை செய்பவர் சிதையின் தலைப்பாகத்தில் தெற்கு முகமாக (சிதையின் எதிர்ப் பக்கம் பார்த்த வண்ணம்) சிதையப் பார்க்காது நின்று பிரணவ மந்திரத்தை சொல்லிக் கொண்டு சந்தணக் கட்டைக் கொள்ளியை சிதையில் (பிரேதத்தின் சிரசில்) வைத்து குடத்தை முன்புறமாக உடையும்படி போட்டு விடுவார். பின்பு அவர் கால்மாட்டிற்குச் சென்று பவித்திரம்(தற்பை), பூனூல் ஆகியவற்றை கழற்றி சிதையில் போட்டு வணங்கிய பின் திரும்பி பாராமல் சுடலை மடத்திற்கு செல்வது வழக்கம். 

 

அனேகமாக கடமை செய்தவர் சிறியவராயின் அவரிடம் ஒரு இரும்பாலான ஆயுதம், அல்லது திறப்பைக் கொடுப்பார்கள். இரும்பு கையில் இருக்கும் போது பேய், பிசாசு, கெட்ட ஆவிகள் அவரைத் தொடராது என்பது இந்துக்களின் நம்பிக்கை. அனேகமாக சுடலை, அல்லது சுடுகாட்டில் சுடலை மடம் அமைந்திருக்கும். வந்தவர்கள் எல்லோரும் மடத்திற்கு சென்று அங்கு ஊர்ப்பெரியவரின் தலைமையில் இக் கிரியையில் சம்பந்தப்பட்ட புரோகிதகாரருக்கு உரிய சம்பழத்தை வழங்குவார். பூதவுடலை எரிப்பதற்காக நியமிக்கப் பெற்றோர். பூதவுடல் எரியும் வரை மயானத்தில் நின்று எரிப்பார்கள். மற்றையோர் தத்தமது வீடுகளுக்குச் சென்று விடுவார்கள்.

 

கடமை செய்தவரும், உரிமைகாரர்களும் இறுதிக் கிரியை நடந்த வீட்டிற்குச் செல்வார்கள். வீட்டிற்குச் சென்றதும் படலையடியில் கால் கழுவி தண்ணீர் தெளித்தபின் படலையடியில் கையில் இருக்கும் கத்தியினால் சூல கீறி காவல் செய்தபின் உள்ளே நுளைய வேண்டும். அதன் பின்பு வீடு சுத்தம் செய்யப் பெற்று பட்டினிக் கஞ்சி காச்சுவார்கள். பட்டினிக் கஞ்சி என்பது முருங்கை இலையும் கொஞ்ச அரிசியும் போட்டு காச்சும் கஞ்சி. இறந்தவரின் துக்கத்தினால் பட்டினியாக இருந்த உறவினர்கள், பட்டினியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இக் கஞ்சியைக் குடிப்பது வழக்கத்தில் உள்ளது. இதனை உரிமைக்கஞ்சி என்றும் அழைப்பர். பூதவுடல் தகனம் செய்யும் வரை இறந்தவரின் வீட்டில் அடுப்பு மூட்டமாட்ர்கள். தகனம் செய்வதற்கு இரண்டு மூன்று நாட்கள் செல்லுமாயின் அயலார், உறவீனர்கள் பட்டினிச்சாப்பாடு கொடுப்பது வழக்கம்.

 

வீட்டில் இறந்தவருடைய படம் இருந்தால் அதனை வைத்து குத்து விளக்கேற்றி, இவ் கஞ்சியையும் படைத்து அதன் பின் மற்றையோருக்கு பரிமாறுவதும் வழக்கம். அதன் பின் அவ் வீட்டில் உள்ளோர் சாப்பிடும் உணவையும், பாக்கு வெற்றிலை, தேத்தண்ணி, போன்ற பானங்களையும் படைத்து, அதன் பின் உண்பார்கள். சில சந்தற்பங்களில் வசதி உள்ளோர் ஒரு இளநீர்ரை வெட்டிப் படைப்பார்கள். சில சமயங்களில் படம் வைத்து, விளக்கேற்றி, இளநீர், சாப்பாடு படைப்பதை அந்தியேட்டிவரை செய்வார்கள். புலம் பெயர் நாடுகளில் வாழ்வோர் தகனம் செய்த தினம், முதலாம் எட்டு, இரண்டாம் எட்டு, 15ம் நாள், அந்தியேட்டி போன்ற விஷட தினங்களில் மட்டும் படம் வைத்து, விளக்கேற்றி, இளநீர், சாப்பாடு படைப்பதை செய்கின்றனர். மாமிச உணவு படைக்கும் முதலாம் எட்டு (மூன்றாம் நாள்) தோத்திரம் பாடுதல், கற்பூரம் கொழுத்துதல் என்பன செய்வதில்லை. 

 

காடாற்றுதல் (காடாத்து):
ஊரில் இறந்தவரின் பூதவுடல் தகனம் செய்த மறுநாள் அல்லது மூன்றாம் நாள் “காடாத்து” (காடு ஆற்று) என்னும் கிரியை நடைபெறுகின்றது, இதற்கு குருமார் அழைக்கப் பெறுவதில்லை. ஊரில் உள்ள பெரியவரே தலைமை தாங்கி செய்விப்பார். காடாற்று என்பது பூதவுடல் எரித்ததினால் சூடாக இருக்கும் ”சுடுகாட்டை” ஆறச்செய்தல் என பொருள் பெறும். அனேகமாக சுடுகாடு கடல், ஆறு, குளம் , கேணி போன்றவற்றை அண்மித்தே இருக்கும். எரித்த இடத்தில் உள்ள எலும்புகள், சாம்பல்கள் என்பவற்றை நீர் நிலைகளில் சங்கமிக்கச் செய்வதற்கு எரித்த இடம் நீர் உற்றி ஆற்றப் பெறுதல் அவசியம். (சுடுகாடு என்பது பூதவுடலை எரிக்கும் இடமெனவும், இடுகாடு என்பது பூதவுடலை அடக்கம் செய்யும் இடம் எனவும் பொருள் பெறும்,)

 

காடு ஆற்றச் செல்வதற்கு நவதானியம், கடகம், குடம், அரப்பு, எண்ணை, பழங்கள், தீன்பண்டம்முதலியவற்றை முற்றத்தில் வைப்பார்கள், பெண்கள் அதனை மூன்றுமுறை சுற்றி மாரடித்து அழுவார்கள். அதன் பின் கடமை செய்தவர், பெரியவர், இன்னும் உதவி செய்ய மூன்றுபேர் எல்லாச் சாமான்களையும் எடுத்துக் கொண்டு சுடுகாட்டிற்குச் செல்வார்கள். அங்கே நெருப்புடன் இருக்கும் விறகுக் கொள்ளிகளை அகற்றிய பின் குடத்தில் நீர் கொண்டுவந்து சிதை இருந்த இடத்தின் கால்மாட்டில் ஆரம்பித்து தலைமாடு வரை ஊற்றி பூர்த்து தணலாக இருக்கும் நெருப்பை அணைப்பார்கள். அப்போது பார்த்தால் பூதவுடல் படுக்க வைத்த இடத்தில் எல்லா எலும்புகளும் எரிந்த இடம் வெள்ளை நிற சாம்பராக ஒரு ஆளின் உருவமாக தெரியும்.

 

பின் சிதை இருந்த தலைப்பகுதில் விளக்கு ஏற்றி கும்பம் வைத்து பூசைக்கு தேவையான அபிஷேக பொருட்களையும் வைப்பார்கள். மண்கலசம் ஒன்றில் பால் ஊற்றி அதை தலைப்பகுதியிலும் வைப்பார்கள். 

 

கடமைகள் செய்தவர்; பூதவுடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் முழு உருவமும் இருப்பதாக பாவனை செய்து (பூதவுடல் தகனம் செய்த இடத்தில் உடலின் எலும்புகள் எரிந்த இடம் பால் போல் வெள்ளைச் சாம்பராக தெரியும்) மேற்கே பார்த்து நிற்றுகொண்டு; கால் பகுதியில் இருந்து தலை நோக்கி புறங்கையால் அபிஷேகம் செய்ய வேண்டும். பின்னர் முழங்கால்கள், தொப்புள், மார்பு, நெற்றி, தலை ஆகிய ஐந்து இடத்திலும் திருநீறு, சந்தனம், மலர்கள், வைத்து தூப தீபம் காட்டி வணங்கியபின் குறுப்பிட்ட ஐந்து இடங்களிலும் இருக்கும் எலும்புகளை ஒழுங்காக எடுத்து தலைமாட்டில் இருக்கும் பாலுள்ள கலசத்தில் வைக்கவும்.

 

பின்னர் மிகுதி எலும்புகள் எல்லாவற்றையும் (தவற விடாது)  எல்லாவற்றையும் எடுத்து (முடியுமானவரை கடமை செய்தவரே  எல்லாவற்றையும் எடுப்பது நல்லது) ஒன்றாக்கி ஒரு பாத்திரத்தில் அல்லது கடகத்தில் எடுப்பார்கள். பின் அந்த இடத்தை சுத்தம் செய்து நவதானியங்களை விதைத்து; நெற்பொரி, வெற்றிலை பாக்கு, பழங்கள் முதலியவற்றை சாஸ்திரப்படி படைப்பார்கள். அதன் பின்னர்; அரளி பூ மரத்தண்டை வெட்டி அந்த இடத்தில் அளைத்து நட்டுவிடுவர்கள். முன்னர் கலசத்தில் எடுத்த (முக்கிய எலும்புப் பகுதி (அசதியையும்), ஏனைய எலும்புகள் சாம்பல் முதலியவற்றை கடமை செய்தவர்  கடலுக்கு எடுத்து சென்று வடக்கு முகமாக பார்த்து  நின்றவண்ணம் தெற்குப் பக்கமாக கடலில் (அல்லது நீர் நிலையில்) போட்டுக் கரைத்து விடுவார்கள். அதன் பின்னர் வீட்டுக்குச் செல்வார்கள். இதற்கென குறிக்கப் பெற்ற விதிமுறைகள் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் வழக்கமாக எல்லோரும் செய்வதையே பின்பற்றிச் செய்கிறார்கள்.

 

எட்டுக்கிரியை.
இக் கிரியை காலகாலமாக நம் முன்னோர்கள் செய்து வந்ததையே நாமும் பின்பற்றை செய்து வருகின்றோம். தகனம் செய்த நாள் தொடக்கம் அந்தியேட்டி வரை இறந்தவரின் படத்தை ஒரு இடத்தில் வைத்து விளக்கேற்றி தாம் உண்ணும் உணவினை படைப்பது வழக்கமாக இருக்கின்றது. அதேநேரம் இறந்தவருக்கு பிடித்த உணவுகள் வகைகளை இறந்த எட்டாம் நாள் படைத்து வருவதும் வழக்கமான ஒன்றாகும். பூதவுடல் தகனம் செய்யப் பெற்ற மூன்றாம் நாள் அல்லது உயிர் பிரிந்த எட்டாம்நாள் அல்லது இரண்டு தினங்களும் எல்லா வகை உணவுகளையும் அவியலாகவும், சிலவற்றை சுட்டும் சமைத்தும், அத்துடன் வெற்றிலைபாக்கு, சுறுட்டு, சாராயம் என்பனவற்றையும் மாலைநேரம் (மங்கல் பொழுதில்) படைத்து அதன்பின் படைக்கப் பெற்ற எல்லா உணவுகளிலும் சிறிது எடுத்து அவற்றை நீர்நிலைகளில் போடுவார்கள்ம் அல்லது சந்தியில் வைத்து காகத்திற்கு வைத்தபின் உற்றார் உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து உண்பார்கள். ஆண் ஒருவர் இறந்தால் அப்பிதிர் பேய் என்றும், பெண் ஒருவர் இறந்தால் அப்பிதிர் பிசாசு என்றும் சொல்வதுண்டு.

 

அந்தியேட்டி.
இறந்து முப்பத்தோராம் நாள் செய்யப்படும் கிரியையாகும். இந்தக் கிரியை இரண்டு விதமாகச் செய்யப் பெறுகின்றது. அந்தியேட்டி கிரியை, வீட்டுக் கிரியை என்பன. அந்தியேட்டி (இது சாதாரண சைவர்கள்) பூதவுடலுக்கு பதிலாக தர்ப்பையினால் (புத்தணி) சரீரம் போல செய்து அதற்கு இறுதிக் கிரியையின் போது பூதவுடலுக்கு செய்யப் பெற்ற எல்லாப் கிரியைகளும் செய்யப் பெற்று தகனம் செய்து அதன் அஸ்தி (தற்பையின் அஸ்தி) பெறப்படுகின்றது. இது புனர் தகனம் எனப்படும். பின் அங்கு பாசாணம் ஸ்தாபித்து அதற்கு அபிஷேகம் போன்றன செய்யப்படும். இங்கு முப்பத்தியொரு பிண்டங்கள் இடப்படும். இவற்றுள் தலைப் பகுதியில் வைக்கும் பிண்டம் பெரிதாக இருக்கும். இந்த பிண்டங்கள் பச்சை அரிசிச் சாதம், கறிவகைகள், பலகாரங்கள், பழங்கள் எல்லாவற்றையும் சேர்த்து உருட்டி பிசைந்து இடவேண்டும். அதன் பின் ஏகோத்திர விருத்தி செய்யப்படும்.

 

நம் முன்னோர்கள் இப்பூசையை வசதி கருதியும், புனித ஸ்தலம் எனக் கருதியும் அனேகமாக எல்லோருமே கீரிமலையில் செய்வது வழக்கம். கீரிமலையில் இதற்கென பிரத்தியேக இடவசதியும், குருமாரும், புனிதமான சமுத்திரமும் இருப்பதனால் அங்கு சென்று செய்தனர். தற்பை சுட்ட அஸ்தியையும் (பாசாணத்தையும்), பிதுருகளுக்கு சமர்ப்பித்த பிண்டத்தையும், கும்பத்தையும் புனிதமான சமுத்திரத்தில் சங்கமிக்கச் செய்தல் புனிதம்  நிறைந்ததென என கருதுகின்றனர். இக்கிரியைகளை சைவக்குருமாரே செய்வது வழக்கம்.

 

வசதி படைத்தோர்; தங்கள் வீடுகளிலோ, அல்லது ஊர் ஆலய வளாகத்திலோ மண்டபம் அமைத்து கிரியைகள் செய்தபின்; பாசாணத்துக்கு தூப தீபம் காட்டி பூசை முடித்த பின் கும்பம், பாசாணம், பிண்டம் ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அல்லது தேர் போன்று ஒரு வாகனம் அமைத்து அதில் வைத்து மேளம் தாளம் முழங்க எடுத்துச் சென்று பிண்டத்தை ஒருவரும் அதன் பின் கும்பத்தை ஒருவரும், அதனைத் தொடர்ந்து பாசானத்தை ஒருவரும் கடற்கரைக்கு எடுத்துச் சென்று கடமை செய்தவர் இடையளவு தண்ணீரில் நின்ற வண்ணம் வடக்குப் பக்கம் பார்த்து நின்று முதலில் பிண்டத்தை தெற்கு பக்கமாகவும், பின் கும்பத்தை வடக்குப் பக்கமாகவும், பாசாணத்தை தலைக்கு மேலால் தெற்குப் பக்கமாகவும் நீர்நிலையில் இட்டு ஸ்நானம் செய்வார்கள். அந்தியேட்டி கிரியைக்கு கடற்கரையே உகந்த இடமாகக் கருதப் பெறுகின்றது.

 

பின்னர் வீட்டு வாசலை அடைந்ததும் வேப்பிலையை சப்பி, நெருப்பு, சாணம், மண், வெண்கடுகு ஆகியவற்றை தொட்டு கல்லின் மேல் கால் வைத்து அல்லது உலக்கையை கடந்து செல்ல வேண்டும். சில இடங்களில் கடமை செய்தவர் வீட்டினுள் நுளையும் போது ஆராத்தியும் எடுப்பார்கள்.

 

வீட்டுக்கிரியை அல்லது சபிண்டீகரணம். 
வீடினை கழுவி சுத்தம் செய்து புண்ணியாகவாசனம் செய்த பின்னர் வீட்டுக்கிரியை செய்ய வேண்டும். விக்னேஸ்வர பூசை, புண்ணியாக வாசனம், பஞ்ச கவ்விய பூசை முதலிய கிரியைகளை செய்து நவசிராத்தம், ஏகோத்திர விருத்தி, சம்கிதை, இடபதானம், ஏகோதிட்டம், மாசிகங்கள், சோத கும்ப சிராத்தம், சபிண்டீகரணம் செய்வதே ஒழுங்குமுறை.

 

இக்கிரியை பொதுவாக பிராமணக் குருமார் மூலம் செய்யப் பெறுகின்றது. சில இடங்களில் சைவக்குருமாரே இதனையும் செய்கின்றனர், காரணம் பிதிர்த்தற்பணம்; இறுதிக்கிரியைகள் செய்தவருக்கே உரியன எனக் காரணம் கூறப்படுகின்றது. இறந்தவருக்காக வழங்கப் பெறும் தர்ப்பணம் (உடை, குடை, செருப்பு, தானம் முதலியன) இறந்தவருக்காக கிரியைகள் செய்த தமக்கே வழங்கப் பெறவேண்டும் என்பது சைவக் குருமாரின் வாதமாகும். 

 

வீட்டுக்கிரியையின் போது இரண்டு பிராமணக்குருமார்கள் வருவார்கள். அதில் சிரேஷ்ட குரு கிரியைகளைச் செய்வார், மற்றயகுரு பிதிர்காரகனாக வீற்றிருந்த்து ”ஏகதிட்டம்” என்றழைக்கப்பெறும் கிரியைகளைச் செய்து தானங்களைப் பெற்று முதலிலேயே சென்றுவிடுவார். அவர்செல்லும் போது வீட்டைத் திரும்பிப் பார்க்ககூடாது. அத்துடன் அவர் வெளியே செல்லும் போது அவரின் பின்னால் சாணம் கரைத்த தண்ணீர் அல்லது மஞ்சள் நீர் தெளித்து புனிதமாக்குவார்கள். காரணம் அவர் அங்கே பிதிராக தோற்றமளிக்கின்றார்.திரும்பவும் அங்கு வரக்கூடாது என்பது நியதி.

அதன் பின்னர் சிரேஷ்ட குரு பூசைகளை நிறைவு செய்து, அங்கு இருப்போரை ஆசீர்வதித்து விடைபெற்றுச் செல்வார். அவர் முற்றத்தில் நிற்க அவரைச் சுற்றி வந்து வீழ்ந்து வணங்குவார்கள். அவர் வீட்டில் உள்ளவர்களை ஆசீர்வதித்த பின் விடை பெற்றுச் செல்வார். அவர் இங்கே இறைவனாக மதிக்கப் பெறுகின்றார்.

ஆனால் தற்போது எமது ஊரில் வதியும் சைவக் குரு ஒருவரே இரண்டு கிரியைகளையும் செய்யும் வழக்கத்தை முன்னெடுத்துள்ளார். இங்கு அவர் பிதிர்தேவதையாக இருந்து ஏகதிட்டத்தினையும், தெட்சனையையும் பெற்று, அதனைை ஒருவர் மூலம் தமது வீட்டிற்கு அனுப்பியபின்னர்; குருவாக அமர்ந்து கிரியைகள் செய்வதை எமது ஊர் சைவக் குருமார் தற்போது புதிதாக புகுத்தியுள்ளனர்.

அவர்கள் இரண்டு வருமானங்களும் தமக்கே கிடைக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில்அப்படிச் செய்வதனால் புனிதமான கிரியைகள் அர்த்தமற்றதாக்கி மாசுபடுத்துவது வேதனைக்குரியதே. எம்மைவிட்டுப் பிரிந்த ஆன்மாவிடம் சேர்ப்பதற்காக நாம் வழங்கும் தானஞ்களை பெற்றுச் செல்லும் “பிதிர் தேவதைக்கும்”, இறைவனாக வீற்றிருந்த்து கிரியைகளை நடாத்தி ஆசிகள் வழங்கும் குருவுக்கும் இடையே உள்ள பேதம் புரிந்து கொள்ளாத சைவைக் குருருவாகவும் இருக்கலாம்.

பொதுவாக வீட்டுக் கிரியைகளை எம் முன்னோர்கள் பிராமணக் குருமர் மூலமே செய்து வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.  

 

சுபம்
 
குறிப்பு:                  
 இதனை இணைத்ததன் நோக்கம், இங்கே புலத்திலே தமிழரது இறுதிக்கிரியைகள் யாரந்த இடத்திலே குரலை உயர்த்திக் கதைப்பவராகவும் இரண்டு தேவாரம் தெரிந்தவராகவும் இருக்கிறாரோ அவருக்குத் தெரிந்த முறையிலே அல்லது வகையிலே நடாத்திமுடிக்கப்படுகிறது. உறவை இழந்த துயரில் உறவுகளும் அதனை நெறிப்படுத்த முடியாது நிற்பதாலும் துயர்பகிர வருகின்றவர்களும் தமக்கென்ன என்று போவதாலும் அதனது சீரமைவுகள் சரியாக அமைவதாகத் தெரியவில்லை. மேலேயுள்ளதிலும் சரிபிழைகள் இருக்கலாம். களஉறவுகள் பட்டறிவின்பாற்பட்டு சரியானவற்றையும் அறித்தவற்றையும் பகிர்வது பொருத்தமாகும்.  சிலநேரங்களில் மிகுந்த மனவேதனையளிப்பதாகச் சில நடைமுறைகள் உள்ளன. தாயைப்பிரிந்து துடிக்கும் ஒருபிள்ளை கொள்ளிக்குடத்தைத் தோளிலே ஏந்தியவாறு சுற்றிவந்து கால்மாட்டிலே உடைக்க முயல ஒருவர் வந்து பிழை தலைமாட்டில் உடைத்துவிட்டு திரும்பிப் பார்காது போக்ச் சொல்ல பிள்ளை போக வெளிக்கிட, இல்லை பூனூலைக்களற்றிக் கால்மாட்டிற் போட்டுக் கும்பிட்டுவிட்டுப் போகச்சொல்ல அந்த இளைஞன் தடுமாற ஏனிந்தநிலை. இறுதிக்கிரியைகளை கூடியவரை ஒரேவிதமாகச் செய்வதே சரியானது என்பது எனது எண்ணமாகும்.   
 
 

http://www.kathiravan.com/aanmeekam/archives/195

https://ta.wiktionary.org/wiki/மரணச்சடங்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரயோசனமான பதிவு .....நன்றி நொச்சி.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலத்தில் ஒருசில கடமைகள் கடுமையானதாகவும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருந்தாலும்.......

இறுதிக்கிரியை என்பது முக்கியமானதாகவே எல்லா மதங்களிலும் உபதேசிக்கப்படுகின்றது.


பிரயோசனமான பதிவிற்கு நன்றி நொச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

பிரயோசனமான பதிவு .....நன்றி நொச்சி.....! 

வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி.

6 hours ago, குமாரசாமி said:

இன்றைய காலத்தில் ஒருசில கடமைகள் கடுமையானதாகவும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருந்தாலும்.......

இறுதிக்கிரியை என்பது முக்கியமானதாகவே எல்லா மதங்களிலும் உபதேசிக்கப்படுகின்றது.


பிரயோசனமான பதிவிற்கு நன்றி நொச்சி.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

மரணம் எல்லோருக்கும் நிகழும்.கணவனின் இழப்பில் மனைவி துவண்டிருக்க அவள்மீது சுமத்தப்படும் கிரியைகள் குறித்து பல கேள்விகள் உள்ளன. ஆனால் அவைகூட ஒரு நெறிமுறையாக இல்லையென்பது வேதனையே. தமிழராயிருந்து சைவராகிப் பின் இந்துவாய் கிறிஸ்த்தவராய் இஸ்லாமியராய் என்றாகி எல்லாமே தமிழரிடம் பல்வேறாகிவிட இந்துவாகியவர்களது நிலையே வினவுதலுக்குரியதாகவும் மேலும் மன வேதனையளிப்பதாகவும் உள்ளது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.