Jump to content

சிவப்பு விளக்குகளின் பின்னால் முகம் மறைக்கும் நாடு


Recommended Posts

சிவப்பு விளக்குகளின் பின்னால் முகம் மறைக்கும் நாடு
 

பங்களாதேஷில் உள்ள ‘தெளலத்தியா’ விபசாரத்துக்கென்றே ஒதுக்கப்பட்ட ஒரு கிராமம். இந்தக்கிராமத்தின் மொத்த வாழ்க்கையும் இயக்கமும் சந்தையும் பாலியல் தொழிலை மையப்படுத்தியே இருக்கிறது. 

இங்கே சுமார் 1,600 பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுகின்றனர். ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 600 பெண்கள் 3,000 பேர்களை எதிர்கொள்கின்றனர். இங்குள்ளவர்களில் பலர், கடத்தப்பட்டு இங்கே விற்கப்பட்டுள்ளனர். சிலர், தங்களின் சொந்தங்களால் கொண்டு வந்து விடப்பட்டுள்ளனர். ஒரு சிலர், தங்களுடைய கணவர் அல்லது காதலனால் கொண்டுவரப்பட்டவர்கள். இத்தொழிலில் விருப்பம் இல்லாத பெண்கள், இத்தொழிலை விட்டும் கிராமத்திலிருந்தும் வெளியேருவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

பங்களாதேஷ் அரசியலமைப்புச் சட்டமோ விபசாரத்தையும் சூதாட்டத்தையும் தடுக்க வேண்டும் என்று கூறுகிறது.

பாலியல் தொழில் ஹொங்கொங்கில் சட்டபூர்வமானது. ஹொங்கொங்கில் பாலியல் தொழில் செய்கின்றவர்கள் ஒவ்வொரு நகரிலும் உள்ளனர். அவர்களுக்கான விளம்பரச் சேவை செய்யும் சஞ்சிகைகள், நாளிதழ்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. ஹொங்கொங் அரசாங்கம் பாலியல் தொழிலாளர்கள், ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்திக் கொள்வதற்கான சட்டப்பூர்வமான அனுமதியையும் வழங்கியுள்ளது.  

இலங்கையில், பாலியல் தொழில் சட்டத்துக்குப் புறம்பானது. பாலியல் தொழில் நடப்பதாகக் கருதப்படும் இடங்கள் பொலிசாரினால் சோதனையிடப்படுகின்றன. அங்கே குற்றவாளிகளாக இனங்காணப்படுகின்றவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள்.

இருந்தாலும், இந்தத்தொழில் அயல் நாடுகளில் உள்ளதை விட இலங்கையில் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது என அரசாங்கத் தரப்பிலிருந்து ஆறுதல் கூறப்படுகிறது. ஆனாலும், பெண்கள், சிறுவர், சிறுமியர் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுதல், பெற்றோர்கள் குழந்தைகளைப் பாலியல் தொழிலுக்காகக் கட்டாயப்படுத்தல் என்பதெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. 

இலங்கையில் சிறுவர் பாலியல் தொழில், குறிப்பிடத்தக்களவு சமூகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது எனச் சமூகவியல் ஆய்வுகளும் அவதானிப்புகளும் கூறுகின்றன. 

குழந்தைகளைப் பாலியல் நோக்கில் முறைகேடாக அணுகினால், அதற்கான தண்டனை 20 ஆண்டுகள் சிறை என்கிறது சட்டம். ஆயினும், 40,000 சிறுவர், சிறுமியர் பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்ற புள்ளிவிவரத்தை குழந்தைகள் உரிமைகள் அமைப்புகள் தருகின்றன. இந்த எண்ணிக்கை இதைவிடக் கூடுதலாக இருக்கலாம் என்பது சமூகவியலாளர்களின் அவதானிப்பு.

குறிப்பாக, இலங்கையின் சுற்றுலாத்துறைப் பகுதிகளில் பாலியல் துஷ்பிரயோகங்களும் பாலியல் தொழில்களும் அதிகமாக உண்டு என்ற அவதானமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான ஆண்கள் பாலியல் தொழிலாளிகளைத் தேடிச் செல்கின்றனர். நாட்டில் கிட்டத்தட்ட 40,000 பாலியல் தொழிலாளிகள் காணப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக 100 சிறுவர்கள் பாலியல் நோக்கில் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். விபசார விடுதிகளில் ஆறு தொடக்கம் பதின்னான்கு வயதுடைய பல்லாயிரக்கணக்கான சிறுவர் பாலியல் தொழிலாளிகள் காணப்படுகின்றனர் எனவும் சொல்லப்படுகிறது. நிச்சயமாக இது நாட்டின் அபாய நிலையைக் குறிக்கும் தகவல்களே.

புலிகளுக்கும் படையினருக்குமிடையில் யுத்தம் நடந்த வேளை, அனுராதபுரம், ஹெப்பிட்டிக்கொலாவை போன்ற இடங்களில் உள்ள சில கிராமங்கள், பாலியல் தொழிலாளர்களால் நிரம்பியிருந்தன. யுத்தக்களத்திலிருந்து விடுமுறையில் வரும் படையினரின், பாலியல் சேவை மையங்களாகத் இவை தொழிற்பட்டன. 

ஆனாலும், அதைச் சட்டரீதியாக அரசாங்கம் தடுக்க முனையவில்லை. அந்தப் பாலியல் தொழிலாளிகளைத் தடுத்தால், அதனுடைய தாக்கத்தை யுத்தத்தில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அரசாங்கம் உள்ளூர எச்சரிக்கப்பட்டது. இதனால் பாலியல் தொழிலுக்குச் சட்டரீதியாகத் தடை என்றாலும் அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் ஒருவகையான நிழல் அங்கிகாரத்தை அரசாங்கம் வழங்கியிருந்தது. யுத்தம் முடிந்து விட்டால் எல்லாம் சரியாகி விடும். அல்லது எல்லாவற்றையும் சரிப்படுத்தி விடலாம் என்று நம்பப்பட்டது. ஆனால்...?

கிளிநொச்சியில் உள்ள கிராமம் ஒன்றில் இயங்கி வந்த, பாலியல் தொழிலுக்கான மையம் ஒன்றை, 17. 05. 2017 பொலிஸார் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கேயிருந்த நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இனி அவர்களின் மீது விசாரணைகள் நடக்கும். சட்டத்தின் முன்னே, இந்தப் பெண்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டால், குறித்த பெண்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்; தண்டனையும் வழங்கப்படலாம்.

 அப்படித் தண்டனை வழங்கப்பட்டால், தண்டனையைப் பெற்றவர்கள், தங்களுடைய தண்டனைக் காலம் முடிந்தவுடன், மீள வந்து என்ன செய்வார்கள்? அவர்களால் என்ன செய்ய இயலும்?ஏனென்றால், இந்தப் பெண்கள் ஏற்கெனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். தொழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் மிகச் சிரமமான வாழ்க்கையோடிருந்தார்கள். தங்களின் உடலை விற்றே வயிற்றை நிரப்ப வேண்டியதொரு வாழ்க்கைச் சூழலைக் கொண்டிருந்தவர்கள். 

இந்த நிலையில் இருந்தவர்கள், மீண்டு வந்தாலும் என்ன நடக்கும்? அவர்கள் பிழைப்பு நடத்துவதற்கு வேறு வழியென்ன இருக்கிறது? அதற்கான ஏற்பாடுகளை யாராவது செய்திருக்கிறார்களா? இந்தப் பெண்களைப்போல இன்னும் ஏராளமான பெண்கள் தொழில் இல்லாமல், வருமானம் இல்லாமல், வாழ முடியாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கான வாழ்க்கை உத்தரவாதமென்ன?

நாட்டில் உள்ள பெரும்பாலானவர்களின் வாழ்க்கை மிகச் சிரமமான நிலையில்தானே இருக்கிறது. எண்பது வீதமானவர்கள் கடன் பட்டுத் தொழில் செய்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேடமாக நிவாரணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. சுய தொழிலுக்கான ஊக்குவிப்பாக பல்வேறு உதவிகள் அரசாங்கத்தினாலும் பல சர்வதேசத் தொண்டு அமைப்பினாலும் செய்யப்பட்டுள்ளன. இப்படியெல்லாம் இருந்தும் பாலியல் தொழில் செய்துதான் வாழ வேணும் என்றால்.... என்று யாரும் கேட்கலாம்.

இது இப்படி மேலோட்டமாகப் பார்க்கும் விடயமல்ல. ஆழமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு பெரிய பிரச்சினை. நாட்டின் பொருளாதாரம், பண்பாடு, மக்களின் வாழ்க்கை, சமூகப் பாதுகாப்பு எனப் பலவற்றோடு சம்மந்தப்பட்டது இது.

ஹொங்கொங்கில் பாலியல் தொழில் செய்வது சட்டபூர்வமானது. இதை அந்தநாடு பகிரங்கமான ஒரு தொழில்துறையாக அங்கிகரித்துள்ளது. இதன் சாதக பாதங்களை எதிர்கொள்வதற்கு அந்த நாடு அதற்குரிய வகையில் ஒழுங்கமைப்புகளையும் செய்திருக்கிறது. 

ஆனால்,  பங்களாதேஷிலும் இலங்கையிலும் பாலியல் தொழில் செய்யப்படுவது சட்டரீதியாகக் குற்றம். இருந்தாலும் பாலியல்தொழிலும் பாலியல் தொழிலாளர்களும் பாலியல் குற்றச்சாட்டுகளும் பெரியதொரு புள்ளிவிபரப் பட்டியலாக வளர்ந்திருக்கின்றன. இதனால் இந்த நாடுகளின் சமூகவாழ்க்கை, பண்பாடு, மக்களின் பொருளாதார நிலை உள்ளிட்ட பலவும் குழப்பத்துக்குள்ளாகி இருக்கின்றன. 

இங்கு திரைமறைவில், சட்டவிரோதமாக நடப்பதால், இதனால் ஏற்படும் பாதிப்புகளும் மிக மோசமானவையாக இருக்கின்றன. நாட்டில் பெரியதொரு தொகுதியினர் பாலியல் தொழிலிலும் பிறழ்வு நடத்தைகளிலும் ஈடுபட்டிருக்கின்றனர் என்பது உண்மையே. ஆகவே, இதைக் குறித்து நாடு சிந்தித்தே ஆகவேணும்.

பாலியல் தொழில் மற்றும் பாலியல் பிறழ்வுகளுக்கு இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன. ஒன்று, சுற்றுலாப் பயணிகள். இரண்டாவது, சமூகப் பொருளாதார நிலையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி. பெருமளவு வருவாய் நாட்டுக்குக் கிடைக்கிறது என்பதால் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் பெருங்கவனத்தைக் கொண்டுள்ளது.ஆனால், சுற்றுலாத்துறையினால் ஏற்படும் பாதகமான விளைவுகளைக் கட்டுப்ப டுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

மறுவளத்தில் நாட்டில் பொருளாதாரக் கொள்கையின் தவறுகளால் வேலையின்மையும் பொருளாதரப் பிரச்சினைகளும் மிக மோசமான எதிர்விளைவுகளை உண்டாக்கி வருகின்றன. குறிப்பாக உற்பத்திசார் பொருளாதாரத்துக்கான ஏற்பாடுகள் நாட்டில் இல்லை. அல்லது அதில் கூடிய கவனம் செலுத்தப்படவில்லை. 

கடந்த ஆறு ஆண்டுகளும் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மின்னிணைப்பு, வீதிப்புனரமைப்பு, கட்டட நீர்மாணம் போன்றவற்றில் வேலை செய்யக்கூடியதாக இருந்தது. இப்போது அந்தப் பணிகளும் முடிவடைந்து விட்டன. ஆகவே, வேலையில்லாப்பிரச்சினை இன்று ஒவ்வொருவரையும் பிடித்தலைக்கழிக்கிறது. 

ஒழுங்கான வேலை கிடைக்காதவர்கள் பாலியல் தொழிலுக்கும் சட்டவிரோத நடத்தைகளுக்கும் செல்கின்றனர்.  இதனால், சமூகப் பிறழ்வான, சட்டவிரோதமான காரியங்கள் நடக்கின்றன. சட்டவிரோதமான, சமூகப் பிறழ்வான காரியங்களின் பெருக்கம் நாட்டை மிகமோசமான அழிவுக்கே கொண்டுபோய்ச் சேர்க்கும்.

இந்த நிலை குறித்து நாம் அரசாங்கத்தைக் கண்டிப்பதுடன், இதைப்பற்றி அரசின் கவனத்தைக் கோரும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேணும். இந்தப் பொறுப்பு சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அதிகமுண்டு. 

அதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணசபைகளும் இதைக்குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது.தொடர்ந்து, புலம்பெயர் சமூகத்தின் நிதிப் பங்களிப்புகளை இலங்கையின் உற்பத்திசார் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதைப் பற்றியும் சிந்திக்கலாம். ஆனால், கோயில்களில் மணிக்கூட்டுக் கோபுரம் கட்டுவதற்கும் தேர்மூட்டியை விரிவாக்கவும் வெளிநாடுகளில் இருந்து பணம் ஊருக்குள் செழிப்பாக வந்து சேருகிறது. இதனால் என்ன நல்விளைவுகள் உண்டாகும்? 

போருக்குப் பிந்திய கிளிநொச்சியில் மூன்று கோயில்களில் கோடிக்கணக்காகச் செலவழிக்கப்பட்டு ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. நகரில் ஒரு விஹாரையும் ஒரு தேவாலயமும் பிரமாண்டம் ஆக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு தொழில் மையத்தை உருவாக்குவதைப்பற்றி யாரும் சிந்திக்கவில்லை.  

நாட்டிலே தொழிற்சாலைகளையும் பண்ணைகளையும் பிற தொழில் வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டிய அரசும் மக்களும் அதற்கு எதிர்மாறான செயற்பாடுகளிலேயே  கரிசனையோடிருக்கின்றன. இது நாட்டுக்கு நல்லதேயல்ல. 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சிவப்பு-விளக்குகளின்-பின்னால்-முகம்-மறைக்கும்-நாடு/91-197228

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.