Jump to content

இலங்கை இராஜதந்திரத்தை இந்தியா உணரவில்லை


Recommended Posts

"முகத்திற்கு ஓங்கி அடிவயிற்றில் குத்தும்' தமது கூர்மையான இராஜதந்திரத்தை, புத்தர் ஞானம் பெற்ற பௌர்ணமி தினத்திலும் இலங்கை ஆட்சியாளர்கள் நடத்தி இருக்கிறார்கள்.


சர்வதேச பௌத்த வெசாக் தின நிகழ்வுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட இலங்கைப் பயணத்தின்போது இலங்கை ஆட்சியாளர்கள் வடிவமைத்த காட்சிகள் ஒவ்வொன்றும் அரசியல் அர்த்தங்கள் கொண்டவை.


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர்கள் மத்தியில் மோடியை உரையாற்ற வைத்து, இலங்கைஇந்திய உறவெனும் அரூபத்துக்குத் தங்க முலாம் பூசியிருக்கிறது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு.
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை நிகழ்ந்த மாதத்தில் இலங்கைக்குச் சென்ற இந்தியப் பிரதமர், அந்த வரலாற்றுத் துயரம் குறித்த சிறுசொல்லைக்கூட எங்கும் உதிர்க்கவில்லை.


காலம் காலமாக இந்திய எதிர்ப்பு வாதத்தின் பெயரால் இலங்கைவர்கள் கொன்ற ஈழத் தமிழர்களின் உரிமைப் பிரச்சினையைத் தற்போதைய இந்திய அரசும் பொருட்படுத்தவில்லை என்பதைத்தான் மோடியின் இந்த மௌனம் உணர்த்துகிறதா?
புவியியல் ரீதியாக கேந்திர முக்கியம் கொண்ட ஈழத் தமிழர்களை, தீண்டத்தகாத ஒரு இனமாகவே இந்தியப் பெருநாடு இன்னும் பார்க்கிறதா?


சீனாவில் நடந்த பட்டுப்பாதைக் கூட்டத்தொடரை இந்தியா நிராகரித்திருந்த சூழலில், அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முதல் இருக்கை வழங்கப்பட்டிருக்கிறது.


மோடியை இலங்கைக்கு அழைத்து, அடுத்த நாளே சீனாவோடு கைகுலுக்கினார் ரணில். சிறிமாவோ பண்டாரநாயக்காவின் காலத்திலிருந்தே சீனாவோடு இலங்கைத் தலைவர்களுக்கு இருக்கும் உறவு ஆழமானது.


அந்த உறவின் நிமித்தம் இந்தியாவுக்கு எழும் கோபத்தை, காட்சிமயமாக்கும் வைபவ அரசியலில் காணாமல் செய்து விடுவதில் இலங்கைவர்கள் வல்லவர்கள். அதுவே மோடியின் பயணத்தில் நிரூபணமாகி இருக்கிறது.


இந்திய மக்களிடம் இருக்கும் இலங்கை மீதான எதிர்ப்பையும் மிக லாவகமாகத் தோற்கடித்து விடுகிற இந்த வித்தை, அவர்களின் அரசியல் கலாசாரத்தின் நீட்சி.
கூடவே, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா திரும்பிவிடக்கூடாது என்கிற பதற்றம். மொத்தத்தில், இந்தியாவை அணைப்பது போல் அணைத்துக்கொண்டே, சீனாவை முத்தமிடும் நகர்வு.


மோடி விஜயம் செய்வார் என அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் கொழும்பில் எழுந்தன. மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான எதிர்க்கட்சி அணியின் உறுப்பினர்களில் ஒருவரான விமல் வீரவன்ச, மோடிக்குக் கறுப்புக்கொடி காட்டவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.


இதை "எதிர்க்கட்சியின் எதிர்ப்பு' என்று மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது. "இந்தியத் தலைவர் ஒருவரின் வருகையை எதிர்க்கும் அளவுக்குச் இலங்கை அரசியல்வாதிகள் இருக்கிறோம்' என்பதையே விமல் வீரவன்ச மூலம் இந்தியாவுக்கு உணர்த்த விரும்பியது இன்றைய இலங்கை அரசாங்கம்.


ஆனால், மகிந்தவைச் சந்தித்து இந்தியாவுக்கு வரும்படி தனிப்பட்ட ரீதியாக அழைப்பு விடுத்தார் மோடி. இந்த அரசியல் சாணக்கியத்தில் மகிந்த  மைத்திரி என இரண்டாக உடைந்து நிற்கும் இலங்கை சுதந்திரக்கட்சி ஒன்றாகி விடுகிறது.


ஒரு தேரை பின்நின்று தள்ளுபவர்களுக்கும் முன் நின்று இழுப்பவர்களுக்கும் எப்படி இலக்கு ஒன்றோ, அதுபோலவே மோடியை அழைக்கவும் செய்தனர்; எதிர்க்கவும் செய்தனர்.


இந்திய ஆதிக்கத்திற்கு எதிராக, தான் நிகழ்த்தும் நாடகத்தில், இந்தியத் தலைவர்களையே பாத்திரமாக்கி விடும் இலங்கை இராஜதந்திரத்தை இந்தியாவும் உணர்வதாக இல்லை.


நல்லிணக்க அரசு என்கிற ஜோடனையின் கீழே, தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் சைவ வழிபாட்டுத்தலங்களை இடித்து அழிக்கும் அநீதியும், ஆக்கிரமிப்புக் குடியேற்றங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.


இந்த வேளையில் தமிழ்த் தலைவர்களுடனான மோடியின் சந்திப்பு முதன்மையோ முக்கியத்துவமோ பெறவில்லை. சர்வதேச பிரச்சினையின் ஓர் அம்சமாக மாறியிருக்கும் ஈழத்தமிழ் அரசியலை, இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தின் பிரதானமான இந்திய நாடு தவிர்த்தோடவே முடியாது.


இந்தப் பிராந்தியத்தில் தனது நேச சக்தியான ஈழத்தமிழ் மக்களின் நீதிக்காக இந்தியா செயல்படவேண்டிய கட்டாயத்தைக் காலம் உருவாக்கி இருக்கிறது.
வெறிகொண்டவர்கள் கையினால், புத்தன் போதித்த அமைதியும் சமாதானமும் குத்திக் கிழிக்கப்பட்ட நிலையில் உள்ளது இலங்கை.


இங்கு இலங்கை பௌத்த பிக்குகள் வெறும் மதத்தலைவர்கள் அல்ல, இலங்கை அரசை நிர்வகிப்பவர்கள். தமிழர்கள் மீதான அனைத்து வன்முறைகளையும் சட்டரீதியாக நெறிப்படுத்துபவர்கள்.


இந்திய ஆதிக்கத்தின் நீட்சியாகவும் இந்துக்களாகவும் ஈழத் தமிழர்களை உருக்காட்டி, "அவர்களைக் கொல்வது சொர்க்கத்துக்குச் செல்லும் வழி' என்று இலங்கைவர்களுக்குப் போதிப்பவர்கள்.


பௌத்த மரபின்படி மன்னனுக்கு எழுந்து நிற்காத புத்த பிக்குகளை ஒரு இந்துவான மோடி சிரத்தையோடு வணங்கினார். இந்தியாவை வெறுத்து ஒதுக்கும் வரலாற்றின் கசப்புகளோடு, ஒரு இந்தியத் தலைவரை இலங்கை பிக்குகள் எதிர்கொண்டார்கள்.
இலங்கைப் பாரம்பர்யத்தில் கூர்மையானதாகக் கடைப்பிடிக்கப்படும் இந்திய எதிர்ப்பு வாதத்தோடு மோடியை அவர்கள் கடந்தார்கள்.


ஈழத்தமிழ் மக்களோ, "இந்தியப் பிரதமர் தமது பிரச்சினைக்குத் தீர்வாக என்ன கூற இருக்கிறார்' என எதிர்பார்த்தார்கள். அதுவும் வெறுங்கனவாய் கலைந்தது.
இந்நிகழ்வு வரைக்கும் ஈழத்தமிழ் மக்களின் கையில் இந்தியா தந்திருக்கிற பரிசுக்கு நிரந்தமான பெயருண்டு. "ஏமாற்றம்'.


மோடியின் தலைக்குள் தமிழக அரசியல்!


கனியன் பூங்குன்றனார் எழுதிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பாடல் வரியை, இலங்கையில் இந்திய வம்சாவளி மக்கள் செறிந்து வாழும் அட்டனில் நடந்த மக்கள் கூட்டத்தின்போது மோடி சொன்னதும் தமிழில் தனது உரையை ஆரம்பித்ததும் திருக்குறளோடு உரையை முடித்ததும் இலங்கையில் கடும்போக்கு இலங்கை அரசியல் தலைவர்களிடையே பெரும் பிரளயத்தை உண்டு பண்ணியிருக்கிறது.


இலங்கை தலைநகர் கொழும்பு வந்திருந்த மோடி, இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் பொதுக்கூட்டம் ஒன்றில் இப்படி உரையாற்றியது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.


இது என்ன இந்தியாவின் காலனியா? இன்னொரு நாட்டில் பொதுக்கூட்டம் ஒன்றில், ஒரு அரச தலைவர் எப்படி உரை நிகழ்த்தலாம் என்று தீவிர இலங்கைக் கடும்போக்கு அரசியல்வாதி உதய கம்மன்பில கேள்வி எழுப்பி உள்ளார்.


அது மட்டும் அல்ல மோடியின் வருகைக்குப் பின்னர் கொழும்பு அரசியலில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் மோடி டீம், ராஜபக்ஷவுடன் நடத்திய திடீர் சந்திப்பே இந்தக் குழப்பத்துக்குக் காரணம்.


நிகழ்ச்சி நிரலில் இப்படி ஒரு சந்திப்பு பற்றி குறிப்பு இல்லை. ஆனால், ஜனாதிபதி மைத்திரிபாலவின் இரவுபசார விருந்துக்குப் பின்னர், நள்ளிரவு 11 மணிக்கு ராஜபக்சேவைக் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் மோடி சந்தித்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.


மகிந்த ராஜபக்ஷவுடன் அவரது தம்பி கோத்தபாயவும் சந்திப்பில் கலந்துகொண்டது இன்னும் உச்சகட்டம்.மோடி என்னவோ வெசாக் தின நிகழ்வுகளுக்குத்தான் வந்தார்.
ஆனால், சீனாவின் செல்வாக்கு நன்றாக இலங்கைக்குள் வேரூன்றி இருப்பதை, இங்கு வந்த பின்னர் அவர் உணர்ந்து கொண்டார்.


சீனாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும் கடல் நகரம் முதல் கட்டடங்கள் வரை தனது கண்ணூடாகவே கண்டு கொண்டார். இவை எல்லாவற்றுக்கும் ஒரு செக் வைக்கவே அவர் ராஜபக்சேவைச் சந்தித்தார்' என்கின்றன கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள்.


தேர்தலில் தோல்வியடைந்தாலும் ராஜபக்ஷவின் அரசியல், இலங்கை மக்களிடையே வலுவாக உள்ளது. "நீங்கள் என்னுடன் சாதகமாக நடந்து கொள்ளாவிட்டால், நான் இவர்களையும் அரவணைக்க வேண்டியிருக்கும்' என்ற செய்தியை இந்தச் சந்திப்பு சொல்வதாகக் கருதுகிறார்கள் இலங்கைத் தலைவர்கள்.


ராஜபக்சேவின் இந்த நள்ளிரவு சந்திப்பு எப்படி ஏற்பாடானது, யார் ஏற்பாடு செய்தது என்பதற்கு இன்னும் பதில் இல்லை. ஆனால், மோடியின் "செக்' எல்லாரையும் குலுங்க வைத்துள்ளது.


அது மட்டுமில்லை, "தமிழகத்தின் எம்.ஜி.ஆரையும் தந்தது மலையக மண்தான்' என்று தனது அட்டன் பொதுக்கூட்ட உரையில் மோடி சொன்னதும், தமிழக அரசியலை அவர் தன் தலைக்குள் வைத்திருப்பதையே உணர்த்துகிறது.


ஜுனியர் விகடன்

 http://www.thinakkural.lk/article.php?article/ucauzbeqsx9916853573b5a920627pebi007ed8b2f4fec25a92406a2lyxzu#sthash.N5RPBF6e.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.