Jump to content

மாங்குடி மைனர்


Recommended Posts

மாங்குடி மைனர் - சிறுகதை

சிறுகதை: பாக்கியம் சங்கர், ஓவியங்கள்: ஸ்யாம்

 

`மாங்குடி மைனர் இறந்துவிட்டார்' என்றது பேட்டை வாழ் பெருமக்களுக்கு அத்தனை மகிழ்வானதொரு செய்தியாகத்தான் இருந்தது. முக்கியமாக மைனரின் மூன்று மனைவிகளுக்கும் நெஞ்சம் குளிர்ந்து, முகம் ஒருவிதப் பூரிப்படைந்திருந்தது. தனது எண்பத்திரெண்டு வயதில் இத்தனை ஆன்மாக்களை சந்தோஷமடையச்செய்த மாங்குடி மைனர், பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்தபடி முறுக்கிய மீசையில் ஜபர்தஸ்தாக காட்சியளித்்தார், அகன்று விரிந்த முகத்தில் பட்டையைப் போட்டு நடுவில் வட்டமாகப் பொட்டு வைத்திருந்தனர். டுப்பு டுப்பு என்று ஒய்யாரமாக வலம் வந்துகொண்டிருந்த மைனரின் புல்லட்டை பேரன்களும் பேத்திகளும் ஏறிக்கொண்டு ஓட்டுவதாகப் பாவனை செய்து கொண்டிருந்தார்கள். பேட்டையில் பெரிய சாவு என்பதால், எந்த வீட்டிலும் உலை கொதிக்கவில்லை.

ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒப்பாரி வைக்க ஒன்பது பேர் கொண்ட குழுவை மைனரின் மனைவிமார்கள் காசு கொடுத்து நியமித்திருந்தார்கள். ஆகவே அழ வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமின்றி மூன்று மனைவிமார்களும் ஈ ஓட்டிக்கொண்டு முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டார்கள். காலையிலிருந்து காபி மட்டுமே ஓடிக்கொண்டிருப்பதால், ஒப்பாரிப் பெண்களின் சுதி சுத்தப்படவில்லைதான். பக்கத்திலேயே சாவுச்சோறு தயாராகிக்கொண்டிருந்ததால், கொஞ்சம் பலத்தைக் கூட்டிக்கொண்டார்கள்.

p86a.jpg

மைனரின் தாவாங்கட்டையோடு சேர்த்து, மண்டையில் கட்டப்பட்டிருந்த முடிச்சு திடீரெனத் தளர்ந்ததில், மைனரின் வாய் தொங்கியபடி நுரைத்துக்கொண்டிருந்தது. வாய்க்குள் ஈ போய்விடக் கூடாதென்பதற்காக விசிறிக்கொண்டிருந்த மனைவிகளில் மூத்தவர், “வாயக் கட்டிப்போட்டிருந்தாலும்… அவுத்துப்போட்டுட்டு ஜொள்ளு உடுறான் பாரு கம்மினாட்டி” என்று முனகியபடியே வாயைச் சேர்த்துக் கட்டினார். மைனரின் இடது பக்கம் நின்றிருந்த மனைவிமார்களிள் கடைசியானவள், “வேட்டிய நல்லா இறுக்கிக் கட்டுக்கா… சண்டாளப்பாவி செத்துட்டான்னு இவனல்லாம் நம்பக் கூடாது” என்று சொல்ல மூவரும் கமுக்கமாகச் சிரித்துக்கொண்டு, மைனரின் வேட்டியை ஒருதடவை பார்த்துக்கொண்டார்கள். அப்போது, தாள வாத்தியங்களோடு மைனரின் குத்துச்சண்டை வாத்தியார் சதுர் சூரிய சார்ப்பட்டா பரம்பரையின் மூத்தவர் கித்தேரிமுத்துவும் சிஷ்யர்களும் ‘குத்துச்சண்டை குலவிளக்கே’ என்கிற வாசகத்தோடு ஒரு பேனரைப் பிடித்துக்கொண்டு, குத்துச்சண்டை க்ளவ்ஸையே மாலையாக எடுத்துக்கொண்டு வந்தார்கள். மைனரின் கால்மாட்டில் பேனரை வைத்துவிட்டு க்ளவ்ஸை மாலையாகப் போட்டார்கள். மைனர் நடுநாயகமாக வீற்றிருக்க, மூன்று மனைவிகளும் அழ முயன்ற முகங்களோடு போஸ்கொடுத்தனர். கித்தேரிமுத்துவின் குத்துச்சண்டை குழுவினர் புகைப்படத்துக்கு நின்றனர். பழக்கதோஷத்தில் ஸ்மைல் ப்ளீஸ் என்றான் புகைப்படக்காரன். எல்லோரும் சிரித்தனர். மைனர் மட்டும் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

என்னதான் மாங்குடி மைனராக இருந்தாலும், பேட்டையில் மூத்த தலை என்பதால், கல்யாணச் சாவு என்று அறிவித்துவிட்டார்கள். “வாழ்ந்து ரசிச்ச உடம்புடா… குளிரக்குளிர அவனக் கொண்டாடிட்டு எரிக்கணும்டா…” என்று தேசிங்கு சொன்னார். வெற்றிலையை மடித்துப் போட்டுக்கொண்டார். மைனரின் எல்லா வேலைப்பாடுகளுக்கும் ஏவல் புரி பார்த்துக் கொண்டிருந்தவர். தேசிங்கு சொன்னதைப் பேட்டைப் பெருசுகளும் ஆமோதித்தனர் “சரிய்யா அப்போ நைட்டு கானாக்கு ஜிகான கூப்டுல்லாம்… சீரியல் செட்டுக்கு தாஸாண்ட சொல்லிடலாம்… அப்றம் தார்ப்பாயி போடச் சொல்லிரு…” ஊர் தலைவர் தேசப்பன் அடுக்கிக்கொண்டே போனார். அப்போதுதான் கூட்டத்திலிருந்த ஒருவன் கேட்டான். “அப்போ பேண்டுக்கு கல்யாணிக்கிட்ட சொல்லிடலாம்ல… கல்யாணிக்கா டான்சுன்னா மைனரு தெம்பா இருப்பாப்போல…” என்று இளித்தான். இப்போது, நாற்காலியில் அமர்ந்திருந்த மைனரின் முகம் ஒரு சிறுபுன்னகை பூத்தது. “கல்யாணியவே சொல்லலாண்டா… மைனரோட பொண் டாட்டிங்க மூஞ்சத் தூக்கி வச்சிப்பாளுங்கோ… அதான் யோசிக்கிறேன்…” - தேசப்பன் கொஞ்சம் தயங்கினார். “நீ இன்னா தேசப்பா யோசிச்சிக்கினு இருக்க… கல்யாணி வந்து ஒரு குத்து குத்துனாதான்… மைனரு கட்ட வேகும்ப்பா… சொல்லிவுடு தேசப்பா…” வெற்றிலைக்குதப்பலைத் துப்பிக்கொண்ட தேசிங்கு, “அப்ப சரிய்யா… கல்யாணியாண்ட சொல்லிடலாம்… டேய் அப்படியே இருவது லிட்ரு சாராயம் சொல்லிவுட்ரு…” என்றபோதுதான் மாங்குடி மைனரின் முகம் காதலாகிக் கசிந்து, கல்யாணியின் வருகைக்கெனக் காத்திருந்தது.

காசிபுரத்தில் ஒரு துஷ்டி வீட்டில்தான் மாங்குடி மைனர் கல்யாணியை முதன்முதலாகப் பார்த்தார். தன் மூன்று மனைவிமார்களிடமும் இல்லாத ஏதோ ஒன்று… அல்லது தான் பார்த்த பெண்களில் இல்லாத ஒன்றை கல்யாணியிடம் பார்த்தார். தன் ஐம்பதாவது வயதில் இத்தனை மனக்கிலேசத்தை மைனர் அனுபவித்ததில்லை. சுருள்முடியோடும், அகன்று விரிந்த மார்போடும் சார்பட்டா பரம்பரையின் குத்துவீரரான மைனர் ஒரு பனித்துளியைப்போல உருகிக் கொண்டிருந்தார். மைனரின் முகம் போன போக்கைப் புரிந்துகொண்டார் தேசிங்கு. “இன்னா சண்முகவேலு… பேண்டுக்காரி மேல கண்ண வச்சிட்டப்போல… ம்…” என்று கண்ணடித்தார், மாங்குடி மைனரின் பெயரைச் சொல்லி கூப்பிடுவது தேசிங்கு மட்டும்தான். “சாராயத்த ஊத்துடா… வாயி நம நமங்குதுல்ல…” என்றவர், எதிரே உட்கார்ந்து கேனிலிருந்து சாராயத்தை ஊற்றிக்கொண்டிருக்கும் கல்யாணியை அடித்துவிடுவதைப்போல பார்த்தார். கல்யாணியும் இதைக் கவனித்தும் கவனிக்காதவாறு ஒரு கல்ப்பை அடித்துக்கொண்டு, தன் ஆட்காட்டி விரலால் இலை ஊறுகாயைச் சல்லிசாக வழித்து, நாக்கின் நடு மத்தியில் வைத்து ஓர் உறிஞ்சு உறிஞ்சினாள். மைனருக்கு மேனியெல்லாம் சிலிர்த்து இதயம் மேலும் கீழும் அடித்துக்கொண்டது.

திருநா ஷெனாயில் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா… ஆறடி நிலமே சொந்தமடா’ வாசித்துக் கொண்டிருந்தான். சட்டியை வார் பிடித்துக்கொண்டிருந்த பெருசு ‘டர்ர்ரம்ப்ம்… டர… டர… டர்ர்ர்ரம்ப்பம்…’ என்று ஒத்திகை பார்த்துக்கொண்டது. பேண்டையும் கொண்டைக்குச்சியால் ‘டம் டும் டம்’ என்று அடித்துச் சரிசெய்து கல்யாணியைப் பாவமாகப் பார்த்தது. பெருசுவின் கண்கள் போதைக்காக ஏங்கியதை கல்யாணி உணர்ந்துகொண்டாள். கேனிலிருந்து சாராயத்தை லோட்டாவில் ஊற்றிக் கொடுத்தாள். ஒரே மடக்கில் கல்ப்பாக ஏற்றிக்கொண்டு முராகோஸை ஜல் ஜல் என டைமிங் போட்டு கண்களை உருட்டிக் காட்டியது. சுதி ஏறிப்போன கல்யாணி எழுந்து நின்று நெட்டி முறித்தாள். சிலை வார்த்த மேனியெனச் செதுக்கியபடியிருந்தாள். புறாவின் கன்னக்கதுப்புகளில் படிந்திருக்கும் சாம்பல் நிறத்தை ஒத்திருந்தது அவள் மேனி. முந்தியை வாரிச்சுருட்டிச் சொருகிக்கொண்டாள். மைனரின் சகலமும் அவளின் முந்தியில் சொருகிக்கொண்டதாக அல்லாடிக் கொண்டிருந்தார். தன் வசத்தில் மைனர் இல்லையென்பதை அத்தனை போதையிலும் தேசிங்கு உணர்ந்து கொண்டார்.

ஊர்வலம் தொடங்கியது. பேட்டையில் கல்யாணியின் சாவு டான்ஸுக்கு ஈடு கொடுக்கும் பயல்கள் இனிதான் பிறக்க வேண்டும். ஆனாலும், பயல்கள் கல்யாணியோடு குத்துவதைக் கொண்டாடித் தீர்த்துக் கொள்வான்கள். ஊர்வலம் நெடுஞ்சாலைக்கு வந்தது. கல்யாணியின் அரங்கேற்றம் இதிலிருந்துதான் ஆரம்பமாகும். திருநா ஒரு லோட்டாவை லோடு பண்ணிக்கொடுக்க ஏற்றிக் கொண்டாள். “குத்துடா திருநா” கல்யாணி மதர்த்துப்போயிருந்தாள். உடல்தான் போதையில் சற்று தள்ளாடியபடி இருந்தது. அவளின் கண்கள் இந்த வாழ்வின் மீதான தனது நடனத்தை ஆடித்தீர்த்துவிட வேண்டும் என்கிற வேட்கையில் இருந்தது. ‘டர்னாக்… னாக்… னாக்… னாக்… னாக்கு… னாக்கு… டர்னாக்’ சட்டியைத் தோளில் மாட்டிக்கொண்ட பெருசு அடியை வாசித்தது. திருநா ஷெனாயில் தோதாக இழுத்து இழுத்து தம் கட்டினான். ஊர்வலத்தில் ஆடிக்கொண்டிருந்த பயல்கள் எல்லாம் வழி விட, கல்யாணி களம் இறங்கினாள், ஊர்வலத்தின் நாயகன் என்கிற முறையில் பரமசிவம் முதலியார் பிணத்துக்கு ஒரு சலாம் வைத்தாள். ஒரு மயில்போல பாவம் பிடித்து ஆடத் தொடங்கினாள். அவள் முகம் குறு குறுவென்று மயில் பார்ப்பதைப் போலவே பாவனை கொண்டாள். மைனர் வேட்டியை இறுக்கிக் கட்டிக்கொண்டார். கல்யாணியின் வளைவு நெளிவுகளில் தன்னை சந்தனமாகக் கரைத்துப் பூசிக் கொள்ள வேண்டுமென நினைத்துக்கொண்டார். ஆட்டம் குத்தாக மாறியது.

மயிலென பாவம் கொண்டவள் இப்போது புலியெனச் சீற்றம் கொண்டாள். எதிரே ஆடிக்கொண்டிருந்தவன் லுங்கியை வாயில் கடித்துக்கொண்டு குத்தினான். மைனரும் கல்யாணியோடு ஒரு குத்தாவது குத்திவிட வேண்டும் என நேரம் பார்த்து நடந்துகொண்டிருந்தார். கல்யாணி ஒரு மாகாளியெனத் தன்னை வரித்துக்கொண்டாள். மிகுந்த ஆவேசம் கொண்டவளாக ஆடிக்கொண்டிருந்தாள். தன் ஸ்தனங்களை வாத்தியத்துக்கு ஏற்றவாறு இங்கும் அங்கும் குலுக்கிக் குலுக்கி ஆடியது மைனரைப் பித்துப்பிடிக்கவைத்தது. எதிரே குத்தியவனுக்கு தாவு தீர்ந்து ஆட்டத்தின் சுதி குறைந்தது. தனது தோல்வியை ஒப்புக்கொண்டவனாக கல்யாணிக்கு ஒரு சலாம் வைத்தபடி ஒதுங்கிக்கொண்டான். சரியான சமயம் என்று நினைத்த தேசிங்கு மைனரை ஆட்டக்களத்தில் தள்ளி விட்டார். மைனரும் குத்துகிறேன் பேர்வழியில் ஏதோ ஆட, கல்யாணி மைனரின் தோளில் கை போட்டபடி தன் இடுப்பை மட்டும் தாளத்துக்கு ஏற்றாற்போல வளைத்து நெளித்து ஆடினாள். மைனருக்கு ஒன்றும் புரியவில்லை. இப்பிறவியின் பெரும்பயனை தான் அடைந்து விட்டதாக உணர்ந்தார். ஷெனாய் வாசித்துக்கொண்டிருந்த திருநா,  கல்யாணியை ஆச்சர்யமாக பார்த்தான். யாருடனும் அவள் இப்படி நடந்து அவன் பார்த்ததில்லை. தனது ஆட்டத்தால் எவனையும் சலாம் வைக்க வைத்துவிடும் இவள்… ஒரு நளினத்தோடு ஆடுவதை முதன்முதலாகப் பார்த்தபோது திருநாவுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது.

p86b.jpg

சோமு செட்டியார் தகன மேடையில் எரிந்துகொண்டிருந்த இரவு. பரமசிவம் கல்லறையின் மேல் ஒரு விரிப்பைப் போட்டு கல்யாணி உட்கார்ந்திருந்தாள். மைனர் அவளின் மடியில் படுத்தபடி நிலவை ரசித்துக்கொண்டிருந்தார். பௌர்ணமியின் முந்தைய நாள் இரவு என்பதால், நிலவு பொன்னிறத்தில் கனிந்து களி கூர்ந்து இருந்தது. ஹரிச்சந்திரன் சமாதியில் திருநாவும் பெருசும் சரக்கடித்துக் கொண்டிருந்தனர். மைனர் மிதமான போதையிலிருந்தார். “நேத்து மார்க்கெட்ல வச்சு… மூணு பேரும் ரவுண்டு கட்டி அந்த மாரி கேள்வி கேட்டாளுங்கலாம்… தேசிங்கு சொன்னான்… உனக்கு வாயி இல்ல… நீ நாலு கேள்வி நறுக்குன்னு கேட்க வேண்டியதுதான…” சொக்கலால் பீடியைப் பற்றவைத்துக்கொண்டு ஓர்  இழுப்பு இழுத்துக்கொண்டார். “மைனரே நீ இன்னா ஆளுன்னு எனக்குத் தெரியாது… அவளுகளாண்ட நீங்க கேட்டதுதாண்டி கரெக்ட்டுன்னு சொல்லியிருப்ப… இங்க வந்து கத வுட்றியா… ஆங்…” கல்யாணி இப்படிக் கேட்டதும் மைனர் இருமியே சமாளித்தார்.

“பதில் சொல்லத் துப்பில்ல… இருமி சமாளிக்கிறான் பாரு…” செல்லமாகத் தொடையைக் கிள்ளி எடுத்தாள். மைனர் வலிப்பதுபோல துள்ளி எழுந்து கல்யாணியின் பக்கத்தில் உட்கார்ந்து அணைத்துக் கொண்டார். “அது என்னமோடி… மூணு பேரும் சக்களத்திங்கதான்… ஆனா பாரு செட் ஆயிட்டாளுங்கோ… இவுளுக்கு ஒண்ணுன்னா… அவ துடிக்கறதும்… அவுளுக்கு ஒண்ணுன்னா இவ துடிக்கறதும்னு ஒண்ணும் மண்ணுமா இருக்காளுங்கோ… உன்னதான் சேத்துக்க மாட்டிங்கறாளுங்கோ… அதான் ஒண்ணும் புரியல…” மைனர் யோசிப்பதைப்போல முகத்தை வைத்துக்கொண்டார். “புரியாத மாறியே மூஞ்ச வச்சிக்காத… என்னதான் இருந்தாலும் அவளுங்க ஒண்ணுக்குள்ள ஒண்ணு… ஒரே வகையறா… நான் அப்டியா… என்ன எப்டி சேப்பாளுங்கோ… மைனரே ஒண்ணு சொல்றேன் நல்லா புரிஞ்சுக்கோ… அவுளுங்களுக்கு நீ வச்சிக்கினு இருக்கறது பிரச்சன இல்ல… என்ன வச்சிக்கினு இருக்கறதுதான் பிரச்சன. அப்புறம் நீதான் என்ன வச்சிக்கினு இருக்கன்னு நெனக்கறாளுங்க... நான்தான் உன்ன வச்சிக்கினு இருக்கறனு போக்ச் சொல்லு… தாலி கட்டிக்கினு எத்தன பேர வேணா வச்சிக்கலாம்… எவனும் ஒண்ணும் சொல்ல மாட்டானுங்கோ… தனியா ஒருத்தி வாழ்ந்துடக் கூடாது…  த்தா... தனியா ஒருத்தி கவ்ரதயா வாழவே முடியாதுன்னா… நீங்க இன்னா ஆம்பளைங்கடா… உன் பொண்டாட்டிங்க பச்சையா கேக்கச் சொல்லவே வந்துச்சு…

மார்க்கெட்டாண்டயே வச்சு நாலு வாங்கு வாங்கியிருப்பேன்… உன் மூஞ்சிக்காகத்தான் உட்டேன்” மைனரின் முகம் பரவசத்துக்குள்ளாகி கல்யாணியை இறுக்கி முத்தினார். அடுத்த பரவசத்துக்குள் தாவ முயன்றபோது மைனரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டாள். விழிகளில் ஈரம் படிந்திருந்தது. மைனருக்கு ஏதும் விளங்கவில்லை. இத்தனை வருட பந்தத்தில் கல்யாணி அழுது மைனர் பார்த்ததில்லை.

“பேண்டுக்காரனுக்கு பொண்ணா பொறந்தது தப்பாய்யா… அப்பன்தான் எல்லாம்… பேண்டு வாத்தியத்த கேட்டே வளந்தவ… சின்ன வயசிலயே ஷெனாய வாசிக்க ஆரம்பிச்சன்… எங்கப்பனுக்கு ஒரே குஷி… என் வாரிசு பாத்தியாடான்னு பொங்குனான்… வயசாகிப்போயி… அப்பனால வாசிக்க முடில…

தாவு தீந்துட்சி… நான் வாசிக்க ஆரம்பிச்சேன்… லுங்கியத் தூக்கிக்கினு என் முன்னாடி வந்து குத்துவானுங்க… அப்பனால அதத் தாங்கிக்க முடியல… என்ன எப்படியாவது ஒருத்தன் கைல புட்சிக் குடுத்துறணும்னு… எவ்ளோ அலைஞ்சான்… சாவுல வாசிக்கற பொண்ணுன்னு எவனும் வர்ல… இதுலயே குட்க்குட்சிச் செத்தும் போயிட்டான்… எப்பயாவது அப்பன் ஞாபகம் வரும்… யாருமே இல்லன்னு தோணும்… அப்பதான் உன்னப் பாத்தேன்… உன் மூஞ்சில எங்கப்பனப் பாத்தன்”. மைனர் ஒரு குழந்தையைப்போல குலுங்கி குலுங்கி அழுதார். ஒரே குத்தில் ஒருவனை நாக்கவுட் செய்துவிடும் மைனர், இந்த மாதிரியான விஷயங்களில் பொசுங்கிவிடுவார். தனக்காக அழுதுகொண்டிருக்கும் ஒரு ஜீவனை அத்தனைக் காதலோடு அணைத்துக்கொண்டாள். இது போதும் என நினைத்துக்கொண்டாள். தன்னைக் காதலோடு அணைத்துக் கொள்ளும் மைனருக்கு தன் ஜென்மத்தைக் கரைத்தால் என்ன என்று தோன்றியது அவளுக்கு.

தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவள் மைனரை மார்போடு இறுக்கிக்கொண்டாள். கல்யாணியின் மார்போடு புதைந்து விசும்பிக் கொண்டிருந்தவரிடம், “யோவ் மைனரு… அழாதய்யா… என்னமோ உன்னாண்ட சொல்லணும்னு தோணுச்சி… வுடு… வுடு…” என்றவள் மைனரின் தலையைக் கோதியபடியே அணைத்திருந்தாள். இப்போது கல்யாணிக்கு மைனர் தேவைப் பட்டார். முந்தியை விலக்கி இன்னமும் தோதாக மைனரின் முகத்தை அழுந்தச் செய்தாள். சமிக்ஞையின் சங்கேதம் புரிந்தவராக மைனர் குழந்தையாகிப்போனார். நடுநிசியில் நிலவு பிரகாசம் கொண்டிருந்தது. தனது நடனத்தைப் போல உக்கிரம்கொண்டவளாக மைனரைக் கீழே சரித்தாள். தகன மேடையில் எரிந்துகொண்டிருந்த கொள்ளி எழுந்து உட்கார்ந்து கொண்டது. தகதகவென ஒளிர்ந்த ஜுவாலையின் தீப்பொறியென வியர்வை தெறித்தது. வசமிழந்த மைனர், கல்யாணியை இறுகப் பற்றிக்கொண்டார். அவள் நெற்றியில் முத்தினார். ஜென்மம் ஈடேறிப்போனதாக இருந்தது கல்யாணிக்கு. எழுந்த கொள்ளி மீண்டும் தணலுக்குள் அடங்கியது. இருவரும் மல்லாந்து படுத்தபடி நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தனர். “கல்லு… எனக்கொரு ஆச… செய்வியா” மைனரின் மார்போடு திரும்பியவள் என்ன என்பதுபோல் பார்த்தாள். “நான் செத்துப்போயிட்டா எனக்கோசரம் அந்த மயில் டான்ஸ் ஆடுவியா… கண்ண உருட்டி உருட்டி என்னமா அழகா இருப்ப தெரியுமா நீ…” மைனரும் கண்ணை உருட்டிக் காண்பித்தார்.

“யோவ் நல்லாத்தான்யா உருட்ற நீ…” வெட்கத்தில் சிரித்தார் மைனர். “நீ இருக்கும்போதே ஆடுறவ…

செத்தா ஆட மாட்டனா… என்ன உன்னாலதான் பாக்க முடியாது…”

“நீ ஆடுனா… நான் செத்தாலும் பாப்பன் கல்லு…”. “நீ பாத்தாலும் பாப்பய்யா… நீ இன்னா மாறி ஆளுன்னு எனக்குத் தெரியாது…” என்று கண்ணடித்தாள்.

சடு வழிந்து சிரித்த மைனர்தான், தலைக்கட்டோடு வாயில் வெற்றிலை திணிக்கப்பட்டு கல்யாணியின் மயில் நடனத்துக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.

பிரியாணியைப் பதம் பார்த்துக்கொண்டிருந்தார் பஷீர். மைனருக்கு முன்னால் தார்ப்பாயை விரித்தார்கள். பந்தலை நட்டு சீரியல் விளக்குகளால் மைனர் ஜொலித்துக் கொண்டிருந்தார். ஜிகான் தலைமையில் கானா குழுவினரும் ஆஜராகி விட்டனர். இந்த இரவு முச்சூடும் தனது பாடல்களால் மைனரைக் குஷிப்படுத்திவிட வேண்டும் என ஜிகான் தொண்டையைச் செருமிக் கொண்டான். தபேலா அண்ணன் டகாவை ‘பும் பும்’ என்று இழுத்துக்கொண்டார். பேட்டைத் தலைவர் தன் ஜமாக்களோடு மைனரின் லீலைகளைப் பேசியபடி சரக்கை இழுத்துக் கொண்டிருந்தார். தேசப்பன்தான் ஆரம்பித்தார், “இன்னா தேசிங்கு… கல்யாணியக் காணோம்…

ஹும்… என்னதான் இருந்தாலும் அவளும் பொம்பளதான… இத்தன வருஷமா அவ முந்தானையவே மோந்துக்கினு இருந்தாரு… போக்ச் சேந்துட்டாரு, ஊரே காறி மூஞ்சாலும்… மைனர அப்பிடித் தாங்கிப் புடிச்சவ… குடுத்து வச்ச மனுசன்தாண்டா மைனரு” மட்டை ஊறுகாயைத் தொட்டுக்கொண்டவர் தேசிங்குவிடம் நீட்டினார். ஒரு லோட்டாவைச் சாத்திவிட்டு ஊறுகாயை நக்கிக்கொண்ட தேசிங்கு, “கல்யாணி தெய்வம்ப்பா… கட்ஸிக் காலத்துல சீக்கு வந்து கெடந்தப்போ, மூணு பொண்டாட்டிகளும் கழுவித்தான் ஊத்துனாளுங்கோ… இவதான் மைனரை ஒரு கொழந்தயாட்டம் பாத்துக்குனா” என்று லோட்டாவை கேன் பையனிடம் நீட்டினார் தேசிங்கு. “ஏழு குறுக்கு நாலு நெடுக்கு நான்கலாக்கில்… வாகனம்… அந்த நான்கலாக்கு வாகனத்துல நீயும் நானும் போகணும்… போயித்தானே ஆகணும்…” ஜிகானின் பாடல் பொண்டு பொடிசிலிருந்து பெருசு வரைக்கும் உற்சாகத்தை வரவழைத்தது. அப்போதுதான் யாவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த கல்யாணி தனது பேண்ட் வாத்தியங்களோடு வந்திறங்கினாள்.

மைனரின் மூன்று மனைவிமார்களின் முகங்களும் அந்த இரவிலும் வியர்த்துக் கொட்டியது. கல்யாணி கையில் ஒரு மாலையோடு மைனர் அருகே வந்தாள். பக்கத்தில் திருநாவும் வந்தான். சில்லிட்டிருந்த மைனரின் உடல் ஏதோ முறுக்கேறியதைப்போல முகம் பரவச நிலையில் இருப்பதாகத் தோற்றம் கொண்டது. “எப்டி கல்லு மாதிரி வரா பாரு… கண்ணுல ஒரு கண்ணீரு இருக்கா… ஒரு கம்பல இருக்கா” மூத்த மனைவி முணுமுணுத்தாள். “கட்னவளுக்குத்தான் கட்ட வலிக்கும்… ஒட்னவளுக்கு ஒடம்பா வலிக்கும்… முண்ட” நடு மனைவி கடிந்துகொண்டாள். தேசிங்கு எழுந்து வந்து கல்யாணியோடு சேர்ந்து கொண்டார். கொண்டுவந்த மாலையை மைனருக்குப் போட்டாள். மூன்று மனைவிகளும் எரித்துவிடுவதைப்போலப் பார்த்தார்கள். அந்தப் பார்வையைத் தனக்கு ஆசீர்வாதமாக எடுத்துக் கொண்டாள்.

ஊரறிய, மைனரின் மனைவிகள் அறிய, அவருக்கு மாலையிடுவதில் பேருவகை கொண்டாள். மைனருக்குப் பிடித்த குதிரைப் படம் போட்ட பிராந்தி புட்டியைக் கீழும் மேலுமாக தட்டி மூடியைத் திறந்தாள். மைனருக்கு படைப்பதைப்போல வைத்துவிட்டு ஒரு துளியைத் தெளித்துவிட்டு ராவாக அடித்தாள். “வெண்ணிலா முற்றத்திலே வேணு கானம்… மேல் மாடி உச்சியிலே அவளும் நானும்” பாடிக்கொண்டிருந்தான் ஜிகான்.

சட்டியைக் கழுத்தில் மாட்டிக்கொண்டான் அயிலு. ஷெனாயில் ஒற்ற அடியை வாசிக்கத் தொடங்கினான் திருநா. ஜிகான் குழுவினர் புரிந்து கொண்டு அமைதி காத்தார்கள். பேட்டையே சூழ்ந்துகொள்ள, கல்யாணி முந்தியைச் சொருகினாள். மைனருக்கு வணக்கம் வைத்தாள். மயில்போல ஆடத்தொடங்கினாள். வளைவு நெளிவுகளில் கொஞ்சம் வயது தெரிந்தாலும்… மினுக்கு குறையவில்லை. எல்லா சுக துக்கங்களையும் தனது நடனத்தால் சமன் செய்துகொள்கிறாள். ஒற்றஅடி இப்போது குமுக்குக்கு மாறியது. தேசிங்கும் தன்னை மறந்து ஆடினான். தீப்பிழம்பென ஆடிக்கொண்டிருக்கும் நடனத்தின் ஒவ்வோர் அசைவிலும் மைனரின் காதல் ஒளிந்துகொண்டிருந்தது. மைனரின் முகம் கனிந்து களி கூர்ந்து ஒளிர்ந்துகொண்டிருந்தது. கல்யாணியின் இத்தனை தீவிரமான நடனத்தை பேட்டை முதன்முதலாகப் பார்க்கிறது. உச்சத்தில் நடனத்தை நிறுத்தியவள் மைனர் அருகே சென்று நெற்றியில் முத்தினாள். “என்னை மனுஷியா நடத்துன ஆம்பளைய்யா நீ… போயிட்டு வா…” என்று மைனரிடம் சொல்லிவிட்டு யாரையும் சட்டை செய்யாமல் திரும்ப நடந்தாள். மைனர் ஆசுவாசம் அடைந்தார்.

தூரத்தில் மைனர் எரிந்துகொண்டிருந்தார், பௌர்ணமியின் முந்தைய நாள் நிலவு அத்தனை ஒளிர்வோடு மின்னிக்கொண்டிருந்தது. பரமசிவம் கல்லறையில் உட்கார்ந்திருந்தாள் கல்யாணி. மாயரூபமென மைனர் பக்கத்தில் வந்து உட்கார்ந்து மடியில் கிடந்து, சிரித்து பின் மறைந்தார். இனி இந்த வாழ்வில் தான் பேசுவதற்கு மைனர் இல்லை என்று உணர்ந்த தருணம் பெருங்குரலெடுத்து கல்யாணி அழத் தொடங்கினாள்.

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அன்றைய மைனர்களின் வாழ்க்கை.... சும்மா சொல்லக் கூடாது, ஒரு ராஜா கூட அப்படி வாழ்ந்திருக்க மாட்டார்.... என்ன நிறைய கல்யாணிகளை உருவாக்கி விட்டிருப்பார்கள்....!  tw_blush: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.