Jump to content

ஆலடி பஸ் - சிறுகதை


Recommended Posts

ஆலடி பஸ் - சிறுகதை

சிறுகதை: இமையம், ஓவியங்கள்: ஸ்யாம்

 

``கொஞ்சம் நவுந்து குந்து'' என்று வடக்கிருப்புக்காரி சொன்னாள்.

``ஆளு வருது!'' பிரியங்கா சொன்னாள்.

``ஆளு வரப்ப எந்திரிச்சுக்கிறேன். இப்ப நவுந்து குந்து.''

``கடக்கிப் போயிருக்காங்க. இப்ப வந்துடுவாங்க.''

``பஸ் ஒங்க ஊட்டுதா?''

``கவர்மென்ட்டுது.''

``அப்பறம் என்னா... நவுந்து குந்து.''

``ஆளு வருதுன்னு ஒனக்கு எத்தன வாட்டி சொல்றது? வேற எடம் பாத்து குந்து.''

``ஆளு வரப்ப வரட்டும். நீ நவுந்து குந்து. இல்லன்னா வழிய வுடு'' என்று வடக்கிருப்புக்காரி முறைப்பது மாதிரி சொன்னாள்.

p70a.jpg

இரண்டு ஆள்கள் உட்காரக்கூடிய சீட்டில் முதலில் பிரியங்கா உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் ஜன்னலையொட்டியிருந்த இடத்தில் ஒரு கைப்பையை வைத்திருந்தாள்.

வடக்கிருப்புக்காரி ``வழியைவிடு'' என்று கேட்டதும், வழியை விடக் கூடாது என்பது மாதிரி முன் சீட்டில் இருந்த கம்பியை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டாள். அவள் கையை எடுத்தால்தான் மற்ற ஆள் உள்ளே போக முடியும். பிரியங்காவின் கையைத் தள்ளிவிட்டு உள்ளே போக முயன்றாள் வடக்கிருப்புக்காரி. குறுக்கே வைத்த கைகளை லேசாகக்கூட பிரியங்கா தளர்த்தவில்லை. பிரியங்காவின் கைகளை விலக்கிப்பார்த்தாள். முடியவில்லை.

கோபத்தில் ``என்னா ஊரு போவணும்?'' என்று கேட்டாள் வடக்கிருப்புக்காரி.

வேண்டா வெறுப்பாக பிரியங்கா சொன்னாள், ``ஆலடி.''

``நான் வடக்கிருப்பு போவணும். அம்மாம் தூரம் நின்னுக்கிட்டுப் போவ முடியாது. இந்தக் கூட்டத்துல நீ நாலாவது ஸ்டாப்புத்தான. செத்த நவுந்து குந்தனாத்தான் என்ன?'' என்று வடக்கிருப்புக்காரி கேட்டாள்.
``பஸ்ஸுல வேற எடமே இல்லியா?''

``இருந்தா நான் எதுக்கு ஒங்கிட்ட வந்து தொங்கிக்கிட்டு நிக்குறன்?''

வடக்கிருப்புக்காரி கோபமாகச் சொன்னதை பிரியங்கா காதில் வாங்கவில்லை. அவளைப் பார்க்க விரும்பாத மாதிரி பஸ்ஸுக்கு வெளியே பார்த்தாள். கைப்பையைக் கொடுத்து, `இடம் பிடித்து வை' எனச் சொல்லிவிட்டுப் போன டீச்சர் வருகிறாளா என்று பார்த்தாள். பஸ் ஏறுவதற்காக  இங்கும்  அங்குமாக   ஓடிக்கொண்டிருந்த கூட்டமும், பஸ் ஏறுவதற்காகக் காத்திருந்த கூட்டமும்தான் தெரிந்தது. டீச்சர், கண்களில் படவில்லை.

``ஆள் வருதா... ஆள் வருதா?'' என்று வடக்கிருப்புக்காரியோடு இதுவரை எட்டு ஒன்பது பேருக்குமேல் கேட்டுவிட்டார்கள். இன்னும் எவ்வளவு பேர் வந்து கேட்பார்களோ தெரியாது. `சீக்கிரமாக டீச்சர் வந்துவிட்டால் போதும்' என்று பிரியங்கா நினைத்தாள்.

எப்போதுமே அவளுக்கு எட்டு தேதிகளுக்குப் பிறகுதான் பீரியட் வரும். இந்த மாதம் எட்டு நாள்களுக்கு முன்பே வந்துவிட்டது. காலையிலேயே தெரிந்திருந்தால் வீட்டிலேயே இருந்திருப்பாள். மதியம் 2 மணிக்குதான் விஷயம் தெரிந்தது. உடனே போய் முதலாளியிடம் ``அவசரமாக வீட்டுக்குப் போக வேண்டும்'' என்று சொன்னாள்.

``எதுக்கு?'' என்று நூறுமுறைக்குமேல் கேட்டார்.

``சும்மாதான் சார்'' என்று சொல்லி மழுப்பினாள்.

ரொம்பவும் கெஞ்சிய பிறகு, ``6 மணிக்குப் போ'' என்று சொன்னார்.

தான் வேலை பார்க்கும் ஜெராக்ஸ் கடை முதலாளியின் மீது அவளுக்கு அளவுகடந்த கோபம் உண்டாயிற்று. தினமும் ராத்திரி 9 மணிக்குதான் விடுவான். அவனுடைய குணம் தெரிந்து அதிகமாக லீவ் போட மாட்டாள். முன்கூட்டியே வீட்டுக்குப் போகிறேன் என்றும் சொல்ல மாட்டாள்.

இன்று பிரச்னை என்பதால்தான் `வீட்டுக்குப் போகிறேன்' என்று கேட்டாள். அதற்கே நான்கு மணி நேரம் கழித்துதான் அனுப்பினார். மற்ற மாதங்களைவிட இந்த மாதம் என்ன காரணத்தினாலோ பீரியட் அதிகமாகவே வெளிப் பட்டது. தலைவலியும் அதிகமாக இருந்தது. `நின்றுகொண்டே இருந்தது காரணமாக இருக்குமோ!' என யோசித்தாள்.

வடக்கிருப்புக்காரி, கையில் வைத்திருந்த இரண்டு பைகளையும் உள்ளடக்கினாற்போல் பிரியங்காவின் காலையொட்டி வைத்தாள்.

ஒரு பை சாய்ந்து பிரியங்காவின் காலில் விழுந்தது. வெடுக்கென காலை இழுத்துக்கொண்டு பையை நகர்த்திவிட்டு ``பைய கொண்டாந்து காலு மேலதான் வெப்பியா?'' என்று கேட்டாள். பிறகு, காலை முன்புபோல் வைத்தாள்.

அப்போது பை மறுபக்கம் சாய்ந்து விழுந்தது. வடக்கிருப்புக்காரிக்குக் கோபம் வந்துவிட்டது.

``எதுக்கு காலால பைய ஒதைக்கிற?'' என்று கேட்டு முறைத்ததோடு, பையை முன்புபோல் நிமிர்த்தி வைத்தாள். அப்போது பின் படிக்கட்டு வழியாக பஸ்ஸுக்குள் ஏறி வந்த ஒரு பெண், `உட்கார இடம் இருக்கிறதா?' என அங்கு இங்கும் பார்த்தாள். வரிசையாகக் கம்பியைப் பிடித்தபடி ஆள்கள் நின்றுகொண்டிருந்தனர். ஒவ்வோர் ஆளாகப் பார்த்த அந்தப் பெண்ணின் கண்களில், பிரியங்கா உட்கார்ந்திருந்த இடத்துக்குப் பக்கத்தில் இடம் இருப்பது தெரிந்தது. பல ஆள்களை நெட்டிக்கொண்டும் இடித்துக்கொண்டும், ``நவுறுங்க... வழிவுடுங்க!'' என்று சொல்லிக்கொண்டும் பலரின் கால்களை மிதித்துக்கொண்டும் படாதபாடுபட்டு வந்து, ``ஆளு வருதா?'' என்று அவசரமாகக் கேட்டாள்.

`ஆமாம்' என்பது மாதிரி பிரியங்கா தலையை மட்டும் ஆட்டினாளே தவிர, வாயைத் திறந்து பேசவில்லை. அந்தப் பெண்ணைப் பார்க்கவும் இல்லை.

``ஆளு வரமுட்டும் செத்த குந்தட்டா? நிக்க முடியல. ஒரே நெரிசலா இருக்கு. தல கிறுகிறுப்பா இருக்கு'' என்று அந்தப் பெண் சொன்னாள்.

அவள் சொன்னதற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது மாதிரி பிரியங்கா பஸ்ஸுக்கு வெளியே பார்த்தாள். அவளுடைய கண்கள் கைப்பையை வைத்து விட்டுப் போன டீச்சரைத் தேடின. குறுக்கும் நெடுக்குமாக ஆள்கள் நடந்துகொண்டிருப்பது தெரிந்ததே தவிர, டீச்சர் மட்டும் கண்களில் பட வில்லை. டீச்சர் மீது பிரியங்காவுக்குக் கோபம் வந்தது. `எத்தனை பேருக்குதான் பதில் சொல்லி தொலைப்பது!' என்று எரிச்சலானாள். `நான் இருக்கும் நிலையில் இந்தத் தொந்தரவு வேறா' என்று நினைத்தபோது, அந்தப் பெண் சொன்னாள், ``வயசு வரமுற கெடயாது. என்னா காலமோ இது! கல்யாணமாயிடிச்சா?'' என்று கேட்டாள்.
``எதுக்குக் கேக்குகிற?''

``சும்மாதான்.''

``அத தெரிஞ்சுக்கிட்டு நீ என்ன செய்யப்போற?''

``எப்ப கல்யாணச் சோறு போடுவன்னு கேக்கத்தான்.''

அந்தப் பெண் எந்த அர்த்தத்தில் கேட்டாள் என்பது தெரிந்த மாதிரி பிரியங்கா, முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டாள். அப்போது வடக்கிருப்புக்காரி சொன்னாள், ``முகத்த பாத்தாலே தெரியுது. ஊரக்கூட்டித்தான் பாப்பா சோறு போடும்னு. நான் சொல்றது பலிக்குதா இல்லியான்னு பாரு.''

பீரியட் தொல்லை, தலைவலி என நொந்துப் போயிருந்த பிரியங்காவுக்கு, சரியான கோபம் வந்துவிட்டது. ``எனக்குக் கல்யாணம் ஆவாட்டிப் போவுது. நீ ஒண்ணும் எனக்கு மாப்ள தேடி அலய வாணாம்'' என்று கடுமையான குரலில் சொன்னாள்.

``நீ எதுக்கு தேங்கா ஒடைக்கிற மாதிரி ஒவ்வொரு வார்த்தையையும் பேசுற?''

பிரியங்காவையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த வடக்கிருப்புக்காரிக்கு, ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. முகத்தைக் கோணிக் காட்டிவிட்டு, ``செத்த முன்னாடி வந்து குந்துனதுக்கே இம்மாம் சிலுப்பு சிலுத்துக்குது. சொந்த பஸ்ஸா இருந்தா இன்னும் எம்மாம் சிலுத்துக்குமோ! அது ஆண்டவனுக்குத்தான் தெரியும்'' என்று சொன்னதுதான்.

``என்னா சிலுத்துக்கிறாங்க... வந்ததிலிருந்து நானும் பாத்துக்கிட்டிருக்கன், என்னமோ பெரிய இதுமாதிரி பேசிக்கிட்டிருக்க. நீ முன்னால வந்து சீட்ட புடிச்சிவெச்சிருந்து, நான் பின்னால வந்து கேட்டா வுடுவியா?'' என்று பிரியங்கா கோபமாகக் கேட்டாள்.

``வுடுவன்'' என்று இறுமாப்புடன் வடக்கிருப்புக்காரி சொன்னாள்.

``ஆளப் பாத்தாலே தெரியுது'' நக்கலாகச் சொன்னாள் பிரியங்கா.

``சீல கட்டியிருக்கும்போதே என்னா தெரியுது ஒனக்கு?'' என்று சீண்டுவது மாதிரி வடக்கிருப்புக்காரி கேட்டாள்.

``எது தெரிஞ்சா எனக்கென்ன? செத்த இடிக்காம தள்ளியே நில்லு. ஆம்பள நாயிவோ வந்து வந்து இடிக்கிற மாதிரியே நீயும் மேல மேல இடிச்சுக்கிட்டு நிக்குற!'' என்று சொன்னாள்.

பிறகு, அலுப்பும் சலிப்புமாக, ``பைய கொடுத்திட்டுப் போன டீச்சரு எங்கதான் போய்த் தொலைஞ்சாங்களோ தெரியலை. நானே பெரிய தலவலியில இருக்கேன். இதுல ஊர் சனியன் கிட்டயெல்லாம் சண்ட வாங்க வேண்டியிருக்கு; பேச்சு கேக்க வேண்டியிருக்கு'' என்று பிரியங்கா சொன்னதுதான், சட்டெனச் சண்டைக்குப் பாய்ந்தாள் வடக்கிருப்புக்காரி.

``வாய அடக்கிப் பேசு. யாரப் பாத்து சனியன்னு சொல்ற?''

``ஒன்ன எதுக்கு நான் சனியன்னு சொல்லப் போறன்? நான் இருக்கிற நெலம தெரியாமப் பேசிக்கிட்டு'' என்று சொல்லிவிட்டு, சீட்டில் ரத்தக்கசிவு இருக்குமோ என்று கவலைப்பட்டாள். தான் வேலைசெய்யும் ஜெராக்ஸ் கடை முதலாளியின் மீது அவளுக்குக் கோபம் உண்டாயிற்று. சாதாரண நாளாக இருந்தால் கிழவிகள், கைப்பிள்ளைக்காரிகள் பஸ்ஸில் கம்பியைப் பிடித்துக்கொண்டு வந்தால் தானாகவே எழுந்து `உட்காரு' என்று இடம் தந்துவிடுவாள். இன்று அவ்வாறு செய்ய முடியாது. எழுந்து நிற்கும்போது ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தில் `எப்போது பஸ்ஸை எடுப்பார்களோ, எப்போது வீடு போய்ச் சேருவோமா! ' என்று கவலையில் உட்கார்ந்திருந்தாள்.

``நீ சொன்ன ஆளு இன்னம் வல்ல. ஆளு வரமுட்டும் அந்த எடத்துல நான் குந்தினா ஒனக்கு என்னா நட்டமாப்போவுதுன்னு மறிச்சுக்கிட்டுக் குந்தியிருக்கிற? நீ செய்யுறதும் பேசுறதும்... என்னாமோ ஆகாயத்திலிருந்து வந்த மாதிரிதான் இருக்குது.''

``நீ ஆகாயத்திலிருந்து பொறந்து வந்தியா?''

``இல்லை.''

``அப்புறமென்ன? சட்டம் பேசாம வாய மூடிக்கிட்டு இரு'' எனத் தனக்கிருந்த சங்கடத்தில் பிரியங்கா சற்று அதிகமாகவே பேசினாள். மற்ற எல்லாரையும்விட அவளுக்குத்தான் சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டும் என்ற அவசரம்.

``நீ யாரு என்ன வாய மூடச் சொல்றதுக்கு?'' என்று கேட்ட வடக்கிருப்புக்காரி, அப்போதுதான் நினைவுக்கு வந்த மாதிரி ``நீ ஆலடிதான? அப்பிடித்தான் இருப்ப. ஊரு மாதிரிதான ஆளும் இருக்கும்'' என்று சொன்னாள்.
``ஆலடியப் பத்தி ஒனக்கென்னத் தெரியும்'' என்று பிரியங்கா சொல்ல, பதிலுக்கு வடக்கிருப்புக்காரி ஆலடியைப் பற்றி மட்டம்தட்டி சொல்ல, சண்டை படிப்படியாக வலுக்க ஆரம்பித்தது; வார்த்தைகள் தடிக்க ஆரம்பித்தன. பஸ்ஸுக்குள் இருந்த கூட்டத்தைப் பற்றி இருவருமே கவலைப்பட்டதுபோல் தெரியவில்லை. இவர்களின் சண்டையையும் பார்த்துக்கொண்டு முன் சீட்டில் கறுப்புச் சட்டை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்த ஆள், ``யாருக்கோ எடம் புடிக்கப்போயி நீங்க எதுக்கு சண்ட புடிச்சுக்கிறிங்க?'' என்று கேட்டான்.

வெடுக்கென்று பிரியங்கா கேட்டாள், ``நீ எந்த ஊரு நாட்டாம?''

``சரிதான்'' என்று சொன்ன அந்த ஆள், அடுத்த வார்த்தை பேசவில்லை. அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கருத்த திடுமலான ஆள் கோபமாக, ``ஒங்க சண்டய எதுக்கு ஊர் சண்டயா மாத்துறீங்கன்னு கேக்கக் கூடாதா? ஒன் ஊரு அவ்வளவு நல்ல ஊரு, மத்த ஊரு அம்மாம் மோசமா? ஒன் ஊரப் பத்தி எனக்கும் தெரியும். வம்பு சண்டக்கின்னு அலயுற ஊரு. குடிகாரப் பய ஊரு. கைப்புள்ளக்காரங்க எத்தன பேரு நிக்குறாங்க? நீ செத்த நவுந்து குந்துனாத்தான் என்ன? கவர்மென்ட் பஸ்ஸ பட்டா போட்டு வாங்குன மாதிரி பைய வெச்சுக்கிட்டு குந்தியிருக்கிற? எடம் இல்லாம ஆளுங்க நிக்குறது ஒனக்குத் தெரியலியா?'' என்று கேட்டான்.

கொஞ்சம்கூட யோசிக்காமல் அவன் கேட்ட வேகத்திலேயே பிரியங்கா கேட்டாள் ``நீ எந்த ஊரு பஞ்சாயத்துத் தலைவரு? ஒன்ன யாரு இந்தப் பஞ்சாயத்துக்குக் கூப்புட்டது?''

``ஒரு நாயத்த சொல்லக் கூடாதா?''

``ஒனக்கு மட்டும்தான் நாயம் தெரியுமா? நாட்லயே நீதான் பெரிய பஞ்சாயத்தா?'' என்று முகத்திலடிப்பது மாதிரி அந்த ஆளிடம் கேட்டதும், அவன் பிரியங்காவிடம் வாயடிக்க ஆரம்பித்தான். அவனோடு சேர்ந்துகொண்டு வடக்கிருப்புக்காரியும் பேச ஆரம்பித்தாள். பிரியங்கா ஒரு நூல் சளைக்கவில்லை. ஒரே ஆளாக இரண்டு பேரையும் சமாளித்தாள். சத்தம் பெரிதாகக் கேட்கவே முன்னால் இருந்தவர்கள் எல்லாம் பின்னால் திரும்பிப் பார்த்தார்கள். டிரைவர் சீட்டுக்குப் பின்னால் நின்றுகொண்டு சீட்டு போட்டுக்கொண்டிருந்த கண்டக்டர் மட்டும் திரும்பிப் பார்க்கவில்லை. நிற்க இடம் இல்லாமல் ஆள்கள் நெருக்கிக்கெண்டு நிற்பது, பின்னால் சண்டை நடப்பது, ``எப்ப பஸ்ஸ எடுத்துத் தொலைவானுவளோ. காத்துகூட இல்ல'' என்று திட்டுவதைப் பற்றி அக்கரையில்லாமல் தன்னுடைய வேலையில் கவனமாக இருந்தார்.

பழக்கதோஷத்தில் அவ்வப்போது, ``உள்ளாரப் போங்க. உள்ளாரப் போங்க'' என்று மட்டும் சொன்னார்.

``என்னாத்த உள்ளார போறது? நிக்கவே எடமில்ல. இனிமே போனா ஆளுங்க தலமேலதான் ஏறிப் போவணும்'' என்று சொன்ன ஒரு பெண், ``பாலக்கொல்ல ஒரு டிக்கெட்'' என்று சொல்லி, பணத்தைக் கொடுத்தாள். பணத்தை வாங்கிக்கொண்டு சீட்டைக் கொடுத்தார் கண்டக்டர். அவனிடம் பாலக்கொல்லைக்காரி கேட்டாள், ``பின்னால ஒரே சண்டயும் சச்சரவுமா இருக்கே. அத ஒரு சத்தம் போட்டு அடக்குனா என்னா?''

``ஏழு மணி சிங்கிள்னாலே தெனந்தெனம் இதே ராவுடிதான். நீ ஒரு சண்டயத்தான் பாக்குற? நான் ஒரு நாளக்கி நூறு சண்டயப் பாக்குறன். இந்த நேரத்துக்கு இன்னொரு பஸ் வுட்டா நல்லா இருக்கும். எவன் வுடுறான்? இத வுட்டா இன்னும் ரெண்டு மணி நேரத்துக்குப் பஸ்ஸே இல்லை. நவுந்து நில்லும்மா. எத எதயோ கண்டுபுடிக்கிறதுக்கு தெனம்தெனம் ராக்கெட் வுடுறானுவோ. ஒரு டவுன்பஸ்ஸ சேத்து வுட மாட்டங்கிறானுவோ'' என்று சொன்ன கண்டக்டர், இரண்டு மூன்று பேரை இடித்துக் கொண்டு ஓர் அடி தூரம் முன்னால் வந்து, ``டிக்கெட்... டிக்கெட்'' என்று கத்தினார். அப்போது ஒரு பெண் மூன்று பெரிய பெரிய பைகளுடன் இடித்துப்பிடித்து பஸ்ஸில் ஏறுவது தெரிந்ததும், ``இந்த நேரத்துல எதுக்கும்மா இத்தன பையிவுள தூக்கிக்கிட்டு வர? ஆளு நிக்கவே இடமில்லியே!'' என்று அந்தப் பெண்ணிடம் கேட்டார் கண்டக்டர்.
``ஆளு ஒரு பஸ்ஸிலயும் பை ஒரு பஸ்ஸிலயுமா வரும்?'' என்று அந்தப் பெண் கேட்டாள். அவள் கேட்டதைக் காதில் வாங்காத மாதிரி, ``டிக்கெட்... டிக்கெட்'' என்று சொன்னார் கண்டக்டர்.

``ஆறு மணிக்குமேல பஸ் ஏறினாளே ஒரே சாராய வாடதான்'' என்று முன்பு கண்டக்டரிடம் சட்டம் பேசியவள் சொன்னாள், ``செத்த நவுறுங்க'' என்று சொல்லிவிட்டு முன்னால் போக முயன்றாள். அப்போது அவளுடைய கண்களில் பிரியங்காவுக்குப் பக்கத்தில் இடம் இருப்பது தெரிந்தது. அந்த இடம் தனக்காகத்தான் காத்திருக்கிறது என்பது மாதிரி பத்து இருபது பேரைத் தாண்டிக்கொண்டும், ஏழெட்டு பேரின் கால்களை மிதித்துக்கொண்டும் வந்தாள். சீட்டில் பை இருப்பது தெரிந்ததும் அவளுடைய முகம் மாறியது. வடக்கிருப்புக்காரியை இடித்துக்கொண்டு, ``செத்த நவுந்து குந்து'' என்று பிரியங்காவிடம் சொன்னாள்.

``ஆளு வருது'' முகத்தை ஒருவிதமாக வைத்துக்கொண்டு சொன்னாள் பிரியங்கா.

``மூணு பை வெச்சியிருக்கேன். நிக்க முடியல. வேர்வ நாத்தத்துல மயக்கம் வர மாதிரி இருக்கு'' என்று அந்தப் பெண் சொன்னாள்.

``இப்பதான் ஒரு சண்டய முடிச்சேன். அதுக் குள்ளார நீ வந்திட்டியா? மேல இடிக்காம நில்லு. ஆளு வருது'' வெடுக்கென்று பிரியங்கா சொன்னாள். அப்போது எதிர் சீட்டில் உட்கார்ந் திருந்த ஆள், ``பஸ்ஸுல சீட்டு புடிச்சதுக்கே இம்மாம் கிராக்கிக் காட்டுது. இன்னம் எம்.எல்.ஏ., எம்.பி., மந்திரி சீட்டப் புடிச்சிருந்தா எம்மாம் காட்டுமோ!'' என்று சொல்லி, அவன் வாயை மூடவில்லை. பிரியங்காவுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ...

``நீ போயி புடியன் எம்.எல்.ஏ., மந்திரி சீட்ட, நானா வாணாங்கிறேன்'' என்று பிரியங்கா வேகமாகச் சென்னாள். அந்த ஆளுக்கும் கோபம் வந்ததுபோல் தெரிந்தது.

``நானும் வந்ததிலிருந்து பாக்குறன். நீ என்னமோ பெரிய இதுமாதிரி பேசிக்கிட்டிருக்க? கண்டக்டரக் கூப்புட்டு சொன்னாத்தான் நீயெல்லாம் சரிப்படுவ.''

``நீ கண்டக்டரத்தான் கூப்புடு... கலெக்ட்டரத்தான் கூப்புடு. யார் வந்து என்னா பண்றாங்கன்னு நானும் பாக்குறன்''  என எதிர் சவால்விட்டாள் பிரியங்கா.

``நாளக்கி நீ என் ஊரத் தாண்டித்தான பஸ்ஸுல வரணும். அப்ப வெச்சுக்குறேன் ஒன்ன'' என்று அந்த ஆள் சொன்னான்.

``நாயி நக்கிப் போட்ட எல மாதிரி இருக்கு ஒம் மூஞ்சி. நீ என்ன வெச்சுக்கிறியா? எப்ப வரணும், எங்க வரணும்னு சொல்லு. வாரேன். ஒன்னால முடிஞ்சத பாரு'' ஒரு நூல்கூட சளைக்காமல் சவால்விட்டாள்.

``ஆளப் பாத்தாலே தெரியுது'' என்று அந்த ஆள் சொன்னதுதான்.

``என்னய்யா தெரியுது? ஒழுங்கு மரியாதியா வரணும். இல்லன்னா மானம் மரியாத கெட்டுடும். என்னமோ தெரியுதாம்ல'' என்று கேட்டுக் கத்த ஆரம்பித்ததும் நின்றுகொண்டிருந்த ஒன்றிரண்டு பேர், ``பொம்பளக்கிட்ட எதுக்கு வாயக் கொடுத்த?'' என்று அந்த ஆளை சண்டை போட்டனர். அதன் பிறகுதான், அவனுடைய வாய் ஓய்ந்தது.

பிரியங்காவுக்கு எரிச்சலாக இருந்தது. இன்றைக்குப் பார்த்து எல்லாரும் வந்து தன்னிடம் வம்பு வாங்குகிறார்களே என்று. `விஷயத்தை எப்படி வெளியே சொல்வது? உட்கார்ந்திருக்கும் போது இருப்பதைவிட எழுந்து நின்றால் அதிகமாக வெளிப்படலாம். விஷயம் பலருக்கும் தெரிந்துவிட்டால் அசிங்கமாகிவிடுமே' என்று கவலைப் பட்டாள். அதனால் `எது நடந்தாலும் எழுந்திருக்கக் கூடாது. எத்தனை பேர் வந்தாலும் வாயைக் குறைக்கக்  கூடாது' என்று முடிவெடுத்து கொண்டாள். `பஸ்ஸைவிட்டு இறங்கும்போதுகூட ஜாக்கிரதையாக இறங்கணும்' என எண்ணியவாறு ஏதேனும் துர்நாற்றமடிக்கிறதா எனப் பார்த்தாள். `சில பெண்களுக்கு பீரியட் வந்தால் லேசாக துர்நாற்றமடிக்கும். அதை வைத்தே பக்கத்தில் இருக்கும் பெண்கள் கண்டுபிடித்து விடுவார்களே' என்று கவலைப்பட்டாள். அப்போது பின் படிக்கட்டு வழியாக ஏறி பஸ்ஸுக்குள் வியர்க்க  வியர்க்க சித்தாள் வேலைக்குப் போய்விட்டு வந்த நடுத்தர வயதுள்ள பெண்ணுக்கு என்னவாயிற்றோ ``சனியன்புடிச்ச பஸ்ஸில ஏறினாலே இதே தொல்லை தான். பொட்டச்சிவுளயே பாக்காத மாதிரிதான் ஒவ்வொரு நாயும் இடிக்கும்... ஒராசும்'' என்று சத்தமாகச் சொன்னாள். அவள் சொன்னது எவரின் காதுகளிலும் விழுந்த மாதிரி தெரியவில்லை. அந்த அளவுக்கு பஸ்ஸில் இருந்த ஸ்பீக்கர் செட் ஒலித்துக்கொண்டிருந்தது.

p70b.jpg

அப்போது ``டிக்கெட்... டிக்கெட்'' என்று கேட்டுக்கொண்டு வந்த கண்டக்டர் பிரியங்காவிடம் வந்தார். ``ஆலடி'' என்று சொல்லிப் பணத்தைக் கொடுத்தாள்.

அப்போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த ஒரு பையன் ``பஸ்ஸை எப்பத்தான் எடுப்பிங்க? மணி ஆவுறது தெரியலியா?'' என்று கேட்டான்.

அவனைத் தொடர்ந்து படிக்கட்டில் நின்றுகொண்டிருந்தவர்களும் பஸ்ஸுக்குள் இருந்தவர்களும், ``பஸ்ஸை எப்பத்தான் எடுப்பானுங் களோ!'' என்று முணுமுணுத்தனர். பயணிகள் சத்தம்போட்டதைக் காதில் வாங்காத மாதிரி கண்டக்டர் சொன்னார், ``மேல ஏறி வாங்க.''

``நாங்க மேல ஏறி வர்றது இருக்கட்டும். பஸ்ஸை எப்ப எடுப்பிங்க?'' என்று ஓர் ஆள் கேட்டான்.

``டிரைவர் டீ குடிக்கப் போயிருக்காரு. வந்ததும் எடுப்பார். சட்டம் பேசாம உள்ளார ஏறி வா.''

``ஒரு வாரமா டீ குடிக்கிறாரா? இந்தச் சனியன்புடிச்ச பஸ்ஸுல வந்தாலே இதே தொல்லைதான். எப்ப எடுப்பானுங்கன்னே தெரியாது'' என்று சொல்லி அந்த ஆள் அலுத்துக்கொண்டான்.

கண்டக்டர் பதில் சொல்ல வில்லை. ``டிக்கெட்... டிக்கெட்'' என்று கேட்டான். பஸ்ஸை எடுக்கவில்லை என்ற முணுமுணுப்புகள் அவன் காதுகளில் விழுந்த மாதிரியே தெரியவில்லை. பஸ்ஸுக்குள் தள்ளிவிடுதல், நெட்டுதல், இடித்தல், வழியில் இருந்த கைப்பைகள், சிறுசிறு மூட்டைகள் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் டிக்கெட்டைப் போட்டுக்கொண்டிருந்தார். அப்போதுதான் பிரியங்காவிடம் பையைக் கொடுத்துவிட்டுப் போன இரண்டு ஆள் தடிமனில் இருந்த டீச்சர் வந்தாள். படிக்கட்டில் மட்டும் ஏழு, எட்டு பேர் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை விலக்கிக்கொண்டு ஏறி, வழியில் நின்று கொண்டிருந்தவர்களை இடித்துக்கொண்டு வந்து பிரியங்காவின் பக்கத்தில் உட்காருவதற்குள் டீச்சருக்கு மூச்சு வாங்கிவிட்டது. உட்கார்ந்த வேகத்தில் முகத்தில், கழுத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தாள்.

``கடையில ஒரே கூட்டம். ரவ காபிப் பொடி வாங்குறதுக்குள்ளார உயிர் போயிடிச்சு. செல்லுக்கு ரீசார்ச் பண்ணலாமின்னு போனா அங்க அதுக்குமேல கூட்டம். அரிசிக்கட, மளிகக் கடயிலகூட அம்மாம் கூட்டம் கெடயாது. என்னா ஊரோ, என்னா நாடோ'' என்று தானாகப் பேசிக்கொண்டாள். பிறகு, பிரியங்கா பக்கம் திரும்பி ``பஸ்ஸுல என்னா இன்னிக்கி இம்மாம் கூட்டம்? உள்ளார வரதுக்குள்ளார ஆள சட்டினி ஆக்கிட்டாங்க'' என்று கேட்டாள்.

``தெனம் இப்பிடித்தான் இருக்கும். காலயில ஊர்லயிருந்து டவுனுக்கு வரும்போது பஸ் மேலியே அம்பதுக்கு மேல ஆளுங்க குந்தியிருப்பாங்க'' பட்டும்படாமல் சொன்னாள் பிரியங்கா.
``படிக்கட்டுல ஏறி, உள்ளார வரதுக்குள்ளார பட்ட கஷ்டத்த பாத்தா நடந்தே ஊருக்குப் போயிருக்கலாம்.''

``தெனம் தெனம் டவுன்பஸ்ஸுல வந்தாதான ஒங்களுக்குத் தெரியும். உயிர் போயி... உயிர் வரும். தெனம் பஸ் ஏறி பாருங்க அப்ப தெரியும்'' என்று சொன்னாள். அப்போது டீச்சர் தன்னுடைய போனையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்ததும், ``ஒங்க போனு வெல கொண்டதா?'' என்று கேட்டாள்.

``ஆமாம்.''

``இப்ப வந்தத, செத்த முன்னாடியே வந்திருந்தா என்ன? பெரிய போர்க்களமே நடந்துபோச்சு'' என்று வடக்கிருப்புக்காரி சொன்னாள். என்ன சொல்கிறாள், எதற்காக தன்னிடம் சொல்கிறாள் என்று புரியாமல் குழம்பிப்போனாள் டீச்சர்.

``அவுங்க  எப்ப வந்தா ஒனக்கென்ன?'' வடக்கிருப்புக் காரியிடம் பிரியங்கா கேட்டாள்

``ஒரு பொட்டச்சிக்கு இவ்வளவு ராங்கி ரப்பு இருக்கக் கூடாது.''

``நீ சோறு போட்டு வளத்தியா?''

``இல்லை''.

``அப்புறமென்ன... வாய மூடிக்கிட்டு வா.''

``அட சிவனே! எங்க காலத்துல எல்லாம் இப்பிடிப் பேசி கேட்டதில்ல'' என்று சொன்ன வடக்கிருப்புக்காரி, பக்கத்தில் இடித்துக் கொண்டிருந்த ஆளை முறைத்துப் பார்த்தாள். அப்போது பள்ளிக்கூடப் பெண் பிள்ளைகள் ஆறேழு பேர், டியூஷன் முடித்துவிட்டு பஸ்ஸில் ஏறினார்கள். மிக்ஸி ஜாடிக்குள் போட்ட வெங்காயம் மாதிரி அவர்களை அடுத்தடுத்த ஆள்கள் உள்ளே தள்ளிவிட்டார்கள்.

வடக்கிருப்புக்காரிக்குப் பக்கத்தில் மூன்று பைகளை வைத்துக் கொண்டிருந்த பெண் ``உள்ளார நிக்குறது மூச்ச முட்டுற மாதிரி இருக்கு. வேர்வ நாத்தம் கொடலப் புடுங்குது. கால வெக்கிறதுக்குகூட எடமில்ல. கம்பிய புடிக்கவும் வழியில்ல. பஸ் போவும்போது குலுக்கிற குலுக்குல கொடலே வெளிய வந்துடும்போல. இதுல என்னான்னுதான் ஊருக்குப் போயி சேறுவனோ. டவுனு பஸ்ஸின்னாலே தகரடப்பா பஸ்ஸுதான் வுடுறானுவ'' என்று புலம்ப ஆரம்பித்தாள். மூட்டைப்பூச்சி பதுங்கு வதற்குக்கூட பஸ்ஸில் இடம் இல்லை. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு பையன் செல்போனில் எதையோ குடைந்துக் கொண்டிருந்தான்.

``வேல பாக்குறியாம்மா?'' என்று டீச்சர் கேட்டாள்.

``ஜெராக்ஸ் கடையில வேல பாக்குறன்'' என்று சொன்னாள்.

அடுத்த வார்த்தை டீச்சர் கேட்கவில்லை. ஆனாலும், தானாகவே பிரியங்கா சொன்னாள், ``திடீர்னு பீரியட் ஆகிடிச்சு. விஷயத்தச் சொல்லி மத்தியானமே பெர்மிஷன் கேட்டேன். இப்பதான் அந்த நாயி விட்டான். நடந்து வரும்போது அதிகமாயிடிச்சு. சீட்டுல பட்டுடுமோன்னு கவலையா இருக்கு. அதனாலத்தான் ஒக்காந்த எடத்தவிட்டு எந்திரிக்கல. ஒரே சண்டயா ஆகிடிச்சு. எப்படா வீட்டுக்குப் போய் சேருவோம்னு இருக்கு.''
``அப்படியா?'' என்று பட்டும்படாமல் டீச்சர் கேட்டாள். அவளுடைய குரலிலும் முகத்திலும் எந்த மாற்றமும் இல்லை.

பஸ்ஸின் முன் படிக்கட்டிலும் பின் படிக்கட்டிலும் நின்றுகொண்டிருந்த பத்துக்கும் அதிகமான ஆண்கள், டிரைவர் பஸ்ஸில் ஏறியது தெரிந்ததும், ``ரைட்... ரைட்... போவலாம் ரைட்..!'' என்று கத்தினார்கள்.
பஸ் புறப்பட்டது.

``இடம் பிடிச்சதுல பிரச்னையா?'' என்று டீச்சர் கேட்டாள்.

``ஒரு பிரச்னையுமில்ல. பேசாம வாங்க டீச்சர்'' என்று பிரியங்கா சொன்னாள்.

``உண்மையைச் சொல்லும்மா.''

``வீட்டவிட்டு வெளிய வந்தாலே பிரச்னைதான். அதுலயும் டவுன்பஸ்ஸில ஏறினா பிரச்னை இல்லாம இருக்குமா? அதுவும் பொட்டச்சிக்கு.''

``எனக்கு சீட்டு புடிச்சதாலதான ஒனக்கு பிரச்னை?''

``எங்க ஊர்ல வேல பாக்க புதுசா வந்திருக்கிற டீச்சர் நீங்க. ஒங்களுக்கு எடம் புடிக்க மாட்டனா?''

``சீக்கிரம் வந்திடலாமின்னுதான் போனேன். செல்போன் கடயிலதான் லேட்டாகிடுச்சு.''

``இதென்ன பிரச்னை... பஸ்ஸுல சீட்டு புடிக்கிற தகராறுல சண்டயாயி போலீஸு, கோர்ட்டுன்னு அலஞ்சவங்கயெல்லாம் எங்க ஊர்ல இருக்காங்க?''

``நிஜமாவா?'' என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள் டீச்சர்.

``இந்த பஸ்ஸுல நடக்கிற காதல் கதயெல்லாம் பாத்தா, நீங்க இன்னம் என்னா சொல்வீங்களோ? பள்ளிக்கூடத்துப் புள்ளைங்க நிக்கிற எடத்துல மூணு நாலு பசங்க எப்பிடி நெரிச்சிக்கிட்டு நிக்குறானுவ பாருங்க'' என்று சொன்னாள் பிரியங்கா.

``நீ சொல்றதெல்லாம் புதுசா இருக்கு'' என்று உலகமே தெரியாத அப்பாவி பெண் மாதிரி டீச்சர் சொன்னாள்.

``புதுசுமில்ல... பழசுமில்ல. தெனம் நடக்கிற கதயத்தான் சொல்றன்'' என்று சொன்னாள் பிரியங்கா.

திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி,

``எதுக்கு டீச்சர் இம்மாம் நகய போட்டுக்கிட்டு டவுன்பஸ்ஸுல வர்றீங்க? எவனாவது அடிச்சுக்கிட்டு போயிடப்போறான். இந்தக் காலத்துல வெறும் பொட்டச்சி நின்னாலே சும்மா வுட மாட்டானுவோ'' என்று சொன்னாள்.

அதைக் கேட்டதும் டீச்சரின் முகம் மாறிவிட்டது. காற்றுக்காக ஜன்னல் பக்கமாக முகத்தைத் திருப்பினாள் டீச்சர். அப்போது தனக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஆளிடம், ``ஆளு நிக்குறது தெரியலியா?'' என்று வடக்கிருப்புக்காரி கேட்டாள்.

``செத்த நேரம்தான? பேசாம நின்னுக்கிட்டு வாம்மா. எடமிருந்தா நவுந்து போவ மாட்டாங்களா? ஒம் மேல இடிக்கணும்னு எனக்கென்ன வரமா?'' என்று கேட்டான் அந்த ஆள்.

பஸ் டவுனைத் தாண்டி கொஞ்ச தூரம்தான் வந்திருக்கும். வடக்கிருப்புக்காரி அநியாயத்துக்கு பிரியங்காவின் மேல் சாய்ந்துக்கொண்டிருந்தாள். அதனால், அவளை அடிக்கடி முறைத்துப் பார்த்தபடி இருந்தாள் பிரியங்கா. அப்போது ஏதோ அழுத்துவது மாதிரி இருக்கவே திரும்பிப் பார்த்தாள். வடக்கிருப்புக்காரியையொட்டிய ஓர் ஆள் அதிக போதையில் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. மீண்டும் பிரியங்காவின் தோள்பட்டையில் கை விழுந்தது. விழுந்தது மட்டுமல்ல, லேசாக அழுத்தவும் செய்தது. பிரியங்கா திரும்பிப் பார்த்தாள். சட்டென கை கம்பியைப் பிடித்தது. பிரியங்கா திரும்பியதும், கம்பியைப் பிடித்திருந்த கை மீண்டும் பிரியங்காவின் தோள்பட்டையை அழுத்தியது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள். கோபத்தை அடக்கிப் பார்த்தாள். கை வந்து வந்து தோள்பட்டையை அழுத்தியது.

பட்டென எழுந்த பிரியங்கா, ``ஒலகத்திலயே நீதான் ஆம்பளயா? நானும் ரொம்ப நேரமா பாத்துக்கிட்டு வரன். கைய கொண்டாந்து எங்க வைக்கிற? பஸ்ஸுல வந்துதான் நீ ஆம்பளங்கிறத காட்டுவியா? ஒன் வீரத்த காட்டுற எடத்தில போய் காட்டு. எங்கிட்ட காட்னா அறுத்துடுவன் அறுத்து'' என்று சொல்லி சத்தம் போட்டாள்.

``நான் எங்க வந்து ஒன்ன தொட்டன்?'' என்று அந்த ஆள் கேட்டதும், ``வாய மூடு. கைய வுடுறதுக்கு ஒனக்கு ஒலகத்தில வேற எடமே இல்லியா?'' என்று காட்டுக் கத்தலாகக் கத்தினாள் பிரியங்கா.
``என்னம்மா கத்துற?'' என்று அந்த ஆள் கேட்டதுதான்.

``அடிடி அவன. நானும் எம்மாம் நேரந்தான் பொறுத்துப் பொறுத்துப் பாக்குறது?'' என்று வடக்கிருப்புக்காரி சொன்ன மறுநொடியே தன்னுடைய புடைவையில், தான் உட்கார்ந்திருந்த இடத்தில் ரத்தக் கசிவின் ஈரம் இருக்குமோ என்ற கவலையைக்கூட மறந்துவிட்டு அந்த ஆளை ஒரே நெட்டாக நெட்டித் தள்ளினாள் பிரியங்கா. வடக்கிருப்புக்காரியும் ஒரு நெட்டு நெட்டினாள்.

``ரெண்டு பேரும் என்னா ஊரு? ஆம்பளயவே நெட்டித் தள்ளுறீங்களா?'' என்று கேட்டு அந்த ஆள் கத்தினான். அவனிடம் பிரியங்காவும் வடக்கிருப்புக்காரியும் ஒரே நேரத்தில் சண்டைக்குப் பாய்ந்தனர். யாருக்கு வாய் அதிகம் எனச் சொல்ல முடியாது. அங்கு நடக்கும் சண்டையைப் பார்க்காமல் போனுக்குப் போட்ட காசு ஏறிவிட்டதா என்று செல்போனை எடுத்துப் பார்த்தாள் டீச்சர்.

``டிக்கெட்... டிக்கெட்'' என்று கண்டக்டர் கத்திக்கொண்டிருந்தார். பஸ்ஸில் இருந்த ஸ்பீக்கர் செட், சினிமா பாட்டு ஒன்றில் அலறிக் கொண்டிருந்தது. இருட்டில் பஸ் ஓடிக் கொண்டிருந்தது.

``ஐயோ! என் மணிபர்ஸக் காணுமே'' என்று சொல்லி ஒரு பெண் அழ ஆரம்பித்தாள் அப்போது, ``குறவன்குப்பம் நிறுத்து'' என்று பஸ்ஸுக்குள் ஓர் ஆள் கத்திச் சொன்னான்.

எந்தச் சத்தத்தையும் பொருட்படுத்தாமல் கண்டக்டர் ‘`டிக்கெட்... டிக்கெட்...’ என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே.  இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.