Jump to content

தமிழினி. ஒருமுனை உரையாடல்.(சாந்தி நேசக்கரம்)


Recommended Posts

23.04.2017 தமிழினி அவர்களின் 45வது பிறந்தநாள்.தமிழினி அவர்கள் பற்றி பல்லாயிரம் கேள்விகள். தமிழினி அவர்களுக்கும் எனக்குமான உறவு பற்றியும் அவளது திருமணம் , ஒரு கூர்வாழின் நிழல் நூல் பற்றிய சர்ச்சைகள் என பெரிய பட்டியல் நீளம்.

எனது மௌனம் கலைத்து தமிழினி பற்றிய உலகம் அறியாத பலவியடங்களை பகிர்ந்திருக்கிறேன். இது பெரிய பகிர்வு. நேரமெடுத்து வாசியுங்கள்.

------------------------------------

Saturday, April 22, 2017

தமிழினி.ஒருமுனை உரையாடல்.

 முன்னரெல்லாம் தூக்கம் தொலையும் இரவுகளில் நீயும் நானும் விடியும்வரை பேசிக்கொண்டிருப்போம். இப்போதும் உன் பற்றிய கனவுகளாலும் உன் தொடர்பாகக் கிழம்பும் புரளிகளாலும் என் தூக்கம் தொலைகிறது. உன்னோடு பேச விரும்பினாலும் மறுமுனையில் நீயில்லை.
தமிழினி !
js1.jpg


ஒரு பெரும் கனவாகவே இருந்தவள் நீ. இரண்டாயிரமாம் ஆண்டு  தொடக்கத்தில் இலக்கியம் மூலம் அறிமுகமானாய். சமாதான காலத்தில் ஒரு இரவு இன்ப அதிர்ச்சி தந்து சந்தித்த போது என் கனவில் இருந்த தமிழினியாய் இல்லாமல் சாதாரணமானவளாய் கைகோர்த்தாய்.

தோழில் கைபோட்டுக் கதைபேசி அக்காவானாய். எனது எழுத்துக்களின் வாசகியாய் உன்னை அறிமுகம் செய்து நெருங்கிய தோழி நீ. அக்காவாய் அம்மாவாய் அன்பு தந்த ஆழுமை நீ.

உன்பற்றிய நான் வைத்திருந்த பெரும் விம்பங்கள் உடைந்து நீ; நெருங்கிய உறவாகினாய். இலக்கியம் அரசியல் என அனைத்தும் பேசிக்கொள்ளும் தருணங்களைத் தந்தது காலம்.

உனது பொறுப்புகள் கடமைகள் நடுவிலும் அவ்வப்போது ஏதோவொரு வழியில் தொடர்போடிருந்தாய். பலருக்கு உன்னைப் பிடிக்கும் சிலருக்கு உன்னை கசக்கும். பிடிக்காத சிலர் முன் உன்பற்றி உனக்காக வாதாடுவேன். உன்னைப் பிடிக்கும் பலர் முன்னால் மௌனமாகக் கடந்து செல்வேன்.

ஆயிரம் புத்தகங்களை வாசித்தறியும் அறிதல்களை உனக்குள் கொண்ட ஆற்றல் நீ. உன்னிடமிருந்து கற்றுக்கொண்டவை ஏராளம்.

செஞ்சோலை வளாக விமானக்குண்டு வீச்சில் ஏற்பட்ட இழப்பில் நீ குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட போது நீ உனக்குள் உருகினாய்.
000            000             000

உனது தலைமையில் செஞ்சோலை வளாகத்தில் மாணவர்களுக்கான தலைமைத்தவ கற்கைநெறி வழங்கப்பட்ட போது , இலங்கையரச விமானப்படையினரால் நிகழ்த்தப்பட்ட குண்டு வீச்சில் மாணவர்கள் பலர் கொல்லப்பட்டார்கள்.

அந்த இழப்பின் முழுப்பொறுப்பும் உன்மீது சுமத்தப்பட்டது.
செஞ்சோலைப் படுகொலை பின்னர் உனது பதவி நீக்கம் பிறகும் நீ சோர்ந்து போகவில்லை.

வெற்றியை கொண்டாட கோடிகோடியாய் முன்வரும் யாரும் தோல்வியை அநாதையாகவே விட்டுவிடுவார்கள். நீயும் அப்படித்தான். அநாதைக் குழந்தையாய் தோற்றுப் போனாய். ஆனாலும் போராளியாகவே உன்னை உனது ஆற்றலை அடையாளப்படுத்தினாய்.

செய்யென்ற கட்டளைகளை கேள்வி கேட்காமல் செய்து கொண்டிருந்தாய். காலம் தந்த பணியில் புதிய போராளிகளை இணைக்கும் பணியில் உனக்கு பெரும் பங்கு இருந்தது. காலம் தந்த பணியில் விருப்பம் இல்லாது போனாலும் நிறைவேற்ற வேண்டிய விதி உனக்கு விதிக்கப்பட்டது.

புதிய போராளிகளை இணைக்கும் பணியில் நீயும் ஒரு ஆளாய் நின்றதற்காய் முதல் முதலாய் உன்னில் கோபம் வந்தது. நேரில் உன்னை சந்தித்தாலும் பேசவே கூடாதென்ற ஓர்மம் வந்தது. எனினும் உன் மீதான அன்பும் உன்னோடான நெருக்கமும் உன்னிலிருந்து பிரியாது உன்னை நேசிக்க வைத்தது.

அன்பு மட்டுமே உலகில் எல்லாக் குறைகளையும் ஏற்றுக் கொள்ளும் வலிமை மிக்கது. அந்த அன்பு தான் உனக்கும் எனக்குமான எல்லா வகையான முரண்களையும் தகர்த்து தோழமையை வளர்த்தது.

காலம் 2011 தை...,

2009 மேமாத முடிவுகளின் பின்னர் காணாமற்போன பலர் போல நீயும் காணாமல் போயிருந்தாய். திரும்பிவராதோர் பட்டியலில்; நீயும்....!

திடீரென ஒருநாள் விளக்கமறியல் சிறைச்சாலையில் நீயிருப்பதாய் தோழன் சதீஸ் (சிறையில் மரணமடைந்துவிட்டான்) அறியத்தந்தான். உன்னை அவன் மிகவும் கோபித்து திட்டியதாகவும் கூறினான்.

கொழும்பில் கைதாகும் போது குப்பிடியத்து தப்பியவன் சதீஸ். நீ குப்பிடியக்காமல் அல்லது உன்னை அழிக்காமல் எப்படி சரணடையலாம் என கோபித்தான்.

எந்த நேரமும் தன்னுயிரை இழக்கும் கனவோடு கொழும்பு வெளிமாவட்டங்களில் அலைந்தவன். அவன் கோபத்தில் அவனுக்கு நியாயமிருந்தது.

நீ ஏன் குப்படியித்து தப்பினாய் ? கேட்டதும் யோசிக்காமல் சொன்னான்.
அது ஆமி என்னை காப்பாற்றினான்....அல்லது நான் செத்திருப்பேன்....சாகத்தான் குப்பிடியச்சனான்.....என்றான் சதீஸ்.

சதீஸ் தன் வாதத்தில் பிடிவாதமாய் இருந்தான். நீயும் உன்போன்றவர்களின் சரணடைதலை அவன் ஏற்றுக் கொள்ளவேயில்லை. உங்களை நம்பி தங்கள் வாழ்வை சிறைகளில் கழிக்கும் போதெல்லாம் நீங்கள் களத்தில் இருக்கும் நம்பிக்கையே தன் சிறைவாழ்வைக் கூட பெரிதாக அலட்டவில்லையென்றான்.

அவன் சொன்ன கதைகளின் கனம் அவனது துயரின் வெளிப்பாடு உன் மீதான கோபமாக வெளியேறியது.

2011 தொடக்கத்தில் உன்னுடன் பேசுவதற்கான தொலைபேசியிலக்கம் தேடி சிறையில் இருக்கும் வேறொரு நண்பன் மூலம் பெற்றுக் கொண்டேன்.

அழைத்த நேரம் சாமம் தாண்டியிருந்தது. குரல் கேட்டதும் முதலில் அழுதாய். உன் கண்ணீரும் கலக்கமும் தீராமலே தொடர்ந்தது. நிமிடங்கள் கழிந்தது.

நான் யாரையும் காட்டிக் குடுக்கேல்ல. நானும் என்ரை கையால மண்போட்டு எத்தனை பேரை வழியனுப்பினான் ?
நானெப்பிடியம்மா காட்டிக் குடுப்பேன் சொல்லு ?

நீ கேட்ட கேள்விகள் எதற்கும் என்னிடம் பதில் இல்லை. உன் கண்ணீர் நீ சொன்ன கதைகள் உன் மீதிருந்த கோபத்தையும் கழுவிச் சென்றது.

சுகம் கேட்டு சுகம் சொல்லும் இடத்தில் நீயில்லை எனினும் கேட்டேன்.

எப்பிடியக்கா இருக்கிறீங்கள் ? வழக்கு என்ன மாதிரி ?
நீதிமன்றுக்கு போறன் வாறன். எந்த மாற்றமும் இல்லை.

நீங்களெப்பிடி இருக்கிறியள் ? பிள்ளையள் வளந்திருப்பினம் ? உன் விசாரிப்பில் பழைய தமிழினியின் கருணையும் அன்பும் கலந்தேயிருந்தது.

அன்றிலிருந்து உன்னோடு தினமும் இரவு தொலைபேசிக்கொள்வது கடமையானது. தினசரி வெளிச்செய்திகளை உனக்கு சொல்லுவேன். சிலவேளைகளில் கவிதைகள் கூட உனக்கு வாசிக்க வேண்டி வந்தது.

சிலவேளைகளில் உறங்க முடியாமல் இரவுகளில் அழுதபடி அழைப்பாய். உன்னோடு விடிய விடியவும் பல நாட்கள் பேச வேண்டியிருந்தது. மன அழுத்தத்தின் உச்சம் உன்னை ஆட்கொண்டிருந்தது. சரியான மருத்துவமோ மாற்றுச் சிகிச்சையோ எதுவும் இல்லாத காலம் அது. உன்னோடு கதைத்துக் கதைத்து உன் கண்ணீரை துடைக்கத் தொடங்கினேன்.

கதைகதையாய் நீ சொல்லும் ஒவ்வொரு கதையும் கண்ணீராலேயே நிரப்பப்பட்டு உன் துயரங்களையே என்னுள் நிரந்தரமாக்கிவிடும்.

சிறையில் வாழும் பெண்கள் அவர்களது தனிமை துயரம் கண்ணீர் யாவையும் நீயொருத்தியே மொழிபெயர்த்தவள். வரிசையில் நின்று உணவு பெறுதல் முதல் அடிபட்டு தண்ணீர் எடுப்பது காக்கா குளியல் வரையும் நீ சொல்லும் கதைகள் ஒவ்வொன்றும் சிறைக்கதவுகளின் பின்னால் புதைந்திருக்கும் கோரமான உலகின் அறிமுகத்தைத் தந்தது.

அடிக்கடி அம்மாவுக்காய் அழுவாய்....உன்னோடு வாழ்ந்து மடிந்தவர்களுக்காய் மனமுருகிக் கண்ணீர் விட்டழுவாய். உன்னை உயிரோடு தப்புவித்து பழிசுமக்க வைத்த காலத்தைச் சபிப்பாய். ஆறுதல் சொல்ல முடியாது மறுமுனையில் சேர்ந்து அழும் போது மீண்டும் ஆறுதல் தரும் அம்மாவாகிச் சிரிப்பாய்.

அந்தக் கொடிய நாட்களில் உன்னோடு துணையாய் வந்தது இரண்டு. ஒன்று பைபிள் மற்றது நானென்று உன் நன்றியை அடிக்கடி தெரிவிப்பாய்.

 இராணுவச் சீருடைதரித்து உலவிய தமிழினிக்கும் சேலையுடுத்தவும் பொட்டுவைக்கவும் பூவைத்து உலவவும் வாழ்வை ரசிக்கவும் வாழவும்  ஆசைப்பட்ட காலம் அது.
js4.jpg

என்னமாதிரியக்கா ஒளிவட்டம் ஏதும் தெரியேல்லயோ ? போடியப்பா காய்க்காலம் போயிட்டுது இனியென்ன பழங்கள் தானே.

எங்களையெல்லாம் கலியாணம் கட்ட இனி எவனடி வரப்போறான்.

அக்காவின் பிடரியின் பின்னால் மொழி திரைப்படத்தில் பிரகாஸ்ராஜ்ஜிற்கு தெரிந்தது போல ஒரு ஒளிவட்டம் தோன்றும் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வேன்.

உனக்குள் ஒரு ராஜகுமாரன் இருந்தான். உனக்குள்ளும் மௌனமாய் ஒரு காதல் கோட்டை இருந்தது. உனக்குள்ளே நீ வளர்த்த காதல்செடியில் கோடி மகிழ்ச்சி நிரம்பியிருந்தது.

அவரைத் தொடர்பு கொண்டு உன்பற்றிச் சொன்ன போது உன் ராஜகுமாரன் இருந்த நிலமை உன்னைப் பற்றி யோசிக்கும் நிலமையில் இல்லையென்பதை வருத்தத்தோடு அறியத்தந்தார். தனது தொடர்பு இல்லையென்று சொல்லச் சொன்னார்.

நீ அவரோடு பேச ஆசைப்பட்டதை அவருக்குத் தெரிவித்தேன். அவர் உன்னுடன் பேச விரும்பவில்லை என்ற உண்மையை இறுதிவரை உனக்கு மறைக்க நான் சொன்ன பொய்களெல்லாம் ஒருநாள் பொய்யாகிப் போனது.

ஏன் பேச விருப்பமில்லையாமோ ?
 சீ அப்பிடியில்லை அவருக்கும் கனக்க பிரச்சனையள் தானே...கதைப்பார் கொஞ்சம் பொறுங்கோ.

சரி விடு ஆனால் எல்லாருக்கும் சொல்லிவிடு நான் யாரையும் காட்டிக் குடுக்கேல்ல...யாருக்கும் துரோகம் செய்யேல்ல.

அதற்குப் பிறகு உனது காதல் கோட்டை உன் கண்ணீரால் உடைந்து கரைந்தது.

உனக்குப் பயிற்சி தந்தவர்கள் உனக்கு பெயரிட்டவர்கள் உன்னோடு வாழ்ந்த பெரிய அக்காக்களில் பலர் வெளிநாடுகளில் இருந்தார்கள்.

உன்னைப்பற்றிய அவர்கள் பலரது கருத்து :- நீ காட்டிக் கொடுக்கிறாய்.
உனக்கு உதவாமல் தப்புவதற்காக அவர்கள் சொன்ன பழியே நீ துரோகியாகக் காரணம்.

நீ நேசித்தவர்களே உன்னை துரோகியாக எண்ணி ஊகங்களால் உன்னை காயப்படுத்திய கதைகள் ஏராளம். சிலரை விசாரித்தாய் அவர்களுடன் பேச ஆசைப்பட்டாய். உனக்காக அவர்களையெல்லாம் தேடித் தொடர்பு கொண்டேன்.

தொடர்பில் இருந்த பலர் தங்களுக்கும் எனக்கும் தொடர்பாடல் உண்டு என்பதை உனக்கு சொல்ல வேண்டாமென வேண்டிக் கொண்டார்கள். கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்தி வெளிநாடு வந்தவர்கள் உன்னை வெறுத்தார்கள்.  யாரும் உன்னைப் புரிந்து கொள்ளவில்லை.

நீ பேச ஆசைப்பட்டவர்கள் யாரும் உன்னோடு பேசவோ தொடர்பை ஏற்படுத்தவோ விரும்பவில்லை. உன்னை வேண்டாமென்றவர்கள் தொடர்பை நானும் துண்டித்துக் கொண்டேன். ஏனெனில் உனது கண்ணீரையும் துயரையும் தினம் தினம் கேட்டுக் கொண்டிருப்பவள் நான்.

இயக்கம் கலைத்துவிட்டவர்களும் தப்பியோடி வந்தவர்களும் பலர் உன்னைப் பற்றி விமர்சிக்கத் தொடங்கினார்கள். நீ அரசோடு சேர்ந்துவிட்டதாகவும் உன்னோடு நானும் அரசபுலனாய்வாளர்களின் ஆளெனவும் கதைகள் பரவத் தொடங்கியது.

தாங்கள் மட்டுமே தேசத்தின் காவலர்கள் எனும் கனவில் பலர் மிதந்தார்கள்.

நீ  அதிகாரத்தில் இருந்த காலங்களில் செய்த தவறுகள் என நீண்ட பட்டியல் ஒன்றை சொல்லத் தொடங்கினார்கள். பெரிதாய் நினைத்த பலரின் உண்மை முகம் வெளிவந்தது.

தவறுகளே செய்யாத மகாத்மாக்களாய் தங்களை நிறுவிய பலரின் தொடர்புகளை துண்டித்துக் கொண்டேன்.

நீ விடுதலையாகக் கூடாது என்பது பலரது எண்ணம். ஆனால் உன்னை மீட்க வேண்டும். பழிசொல்லும் இவர்கள் முன்னால் நீ வாழ்ந்து காட்ட வேண்டும்.

உன்னை மீட்கும் வழிகளைத் தேடத் தொடங்கினேன். உன் அம்மா , தங்கை யோகா யாவரும் உனது விடுதலைக்கான கதவுகளைத் தட்டத் தொடங்கினோம்.

அம்மாவின் அலைவுகளின் பயனாக சட்டத்தரணி ஒழுங்கானார். உனது வழக்கு நடக்க ஆரம்பித்தது. புனர்வாழ்வு கிடைக்கும் என்பது ஊகமாகி அது உண்மையாகும் தருணம் நெருங்கியது.

அம்மாவோடை இடைக்கிடை கதை. பாவம் மனிசி. நானொரு தேனீர் கூட மனிசிக்கு வைச்சுக் குடுத்ததில்லை. வெளியில போனதும் மனிசிக்கு உழைச்சுக் குடுக்க வேணும். மனிசியை நல்லா வைச்சுப் பாக்க வேணும். இனியெண்டாலும் என்ரை குடும்பத்தை நான் தாங்க வேணும்.

எப்பிடியெண்டாலும் என்னை வெளிநாடு எடுத்துவிடு நான் வந்து உழைச்சு கடனைத் தருவன். உன்னை  தான் நம்பிறன்.
இதுதான் உனது பெரிய கனவாக இருந்தது.

உனது விடுதலையின் பின்னர் அம்மாவுக்காகவும் உன் குடும்பத்தின் உயர்வுக்காகவும் வாழ ஆசைப்பட்டாய்.

அடிக்கடி உன்னை வருத்தும் வயிற்றுவலியும் உடற்சோர்வும், தொடர்ந்து வதைக்கும் ஊடகங்களின் செய்திகளும் உன்னை உன் நிம்மதியை நித்திரையைப் பறித்துக் கொண்டிருந்தது.

நீ நீதிமன்று போய் சிறைச்சாலைக்கு வந்துவிடுவாய். அன்றைய நீதிபதியின் முடிவை எதிர்பார்த்திருக்கும் எனக்கும் உன் அம்மாவுக்கும் பலதடவைகள் ஏமாற்றம் தான் மிஞ்சும். வெலிக்கடை சிறைக்கம்பிகளின் பின்னால் நீ அன்றைய முடிவோடு வந்து களைத்திருப்பாய்.

உனது பெயரையும் உனது படத்தையும் ஊடகங்கள் வைத்து செய்யும் வியாபாரம் மட்டும் லட்சக்கணக்கான வாசகர்களின் கவனத்தைப் பெற்றிருக்கும். அந்தச் செய்திகளை உனக்கு வாசித்துக் காட்டும் போது நீ அழுவாய்.

ஊடகங்களாலும் உண்மை புரியாதவர்களாலும் நீ மனவுளைச்சல்படும் தருணங்களை யாராலும் புரிந்து கொள்ளவே முடியாது போனது.

இன்று நாளையென உனது விடுதலையின் நாட்கள் எண்ணப்பட்டு ஒருநாள் நீ புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட காலம் வந்தது. அந்தச்  செய்தியை நீயே அறியத்தந்தாய்.

வெளியில வந்ததும் என்னைக் கூப்பிடுற வழியைச் செய்ய வேணும். விதலையானதும் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்பதே உனது எண்ணம்.

000       000         000         

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு நீ அனுப்பப்படுவதற்கு நாள் குறிக்கப்பட்டது. முகம் பார்க்கவே முடியாத நெருக்கம் மிகுந்த கம்பிகளை விட்டு  வெளியேறும் நாளை எதிர்பார்த்திருந்தாய்.

உயர்ந்த மதில்களுக்குப் பின்னால் தொலைந்த இருள் நிறைந்த வாழ்விலிருந்து விடுதலையாகி பொதுவெளியில் உனது புனர்வாழ்வு அமையவிருந்தது.

புனர்வாழ்வுக்குச் செல்லவிருந்த உனக்கான அடிப்படை தேவைகளை அனுப்புவதற்கு தேவைப்பட்டது பதினெட்டாயிரம் ரூபாய்கள்.

அந்தப்பதினெட்டாயிரம் ரூபாய்களைப் பெறுவதற்கு சிலரிடம் உதவி கேட்ட போது நம்பியவர்களே மறுத்தார்கள். இறுதியில் அந்தப்பணத்தை நானே தயார் செய்து அனுப்பிய போது :-

உனக்கு எப்பிடி நான் இதையெல்லாம் திருப்பிச் செய்வன் ? என அழுதாய்.

வெலிக்கடைச்சிறையில் இருந்து வவுனியா கொண்டு செல்லப்படுவதற்கு முதல்நாள் மதியம் தங்கை யோகா தொடர்பு கொண்டாள்.

அக்கா நாளைக்கு வவுனியா போகப்போறா உங்களை ஒருக்கா கதைக்கச் சொல்லட்டாம்.

அன்றைய இரவு தொடர்பு கொண்டேன்.
நாளைக்கு நான் வவுனியா போயிடுவன்.
அங்கையிருந்து கதைக்க கிடைக்குமோ தெரியேல்ல.
அப்பிடிக் கிடைக்காட்டில் வெளியில வந்த பிறகுதான் கதைக்கலாம்.
அம்மவோடையும் யோகாவோடையும் தொடர்போடை இரு.
ஏதுமெண்டா அவை சொல்லுவினம்.

அன்று நீண்டநேரம் கதைத்தோம். விடிய 4மணிக்கு உன்னிடமிருந்து விடைபெற்ற போது..,

எனக்கொரு ஒளிவட்டத்தைக் கண்டுபிடி. சொல்லிக்கொண்டு சிரிப்போடு விடைபெற்றாய்.

000       000         000
26.06.2012 வவுனியாவிற்கு புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டாய். ஊடகங்கள் உன்னைப்பற்றி செய்திகளால் அந்த வாரத்தை தமதாக்கிக் கொண்டது.
அருகில் நின்று உன்னைப் பார்த்தது போல செய்திகள் எழுதினார்கள். அந்தச் செய்திகள் கேட்டு நீ எவ்வாறு துடித்தாய் என்பதை அறிவேன்.
இரக்கமே இல்லாமல் நீ செய்திகளாலும் ஊடகர்களாலும் பிய்த்தெறியப்பட்டாய்.

000         000          000

13.07.2012பிரித்தானியா போயிருந்த போது தம்பி அனுராஜ்ஜிடம் உன்னைப்பற்றி கதைத்திருந்தேன். விரைவில் நீ விடுதலையடைவாய். உனது நிலைபற்றிச் சொன்னேன். நீ திருமணம் செய்ய விரும்புவதையும் தெரிவித்தேன்.

அல்லது  ஸ்பொன்சர் செய்யக்கூடியவர்கள் இருந்தால் பணம் கொடுத்து உன்னை வெளியில் எடுப்போம் எனவும் கேட்டிருந்தேன்.

அன்று முதல் அனுராஜ் என்னோடு சேர்ந்து உனக்கு திருமணம் செய்வது அல்லது பணம் கொடுத்து யாரையாவது பிடித்து ஸ்போன்சர் செய்ய ஏற்பாடு செய்வதில் ஆட்களைத் தேடினோம்.

அனுராஜ் !
ஒரு போராளி. முள்ளிவாய்க்கால்வரை அவனும் போராடியவன். தாயகவிடுதலைக்காய் அவனும் தன்னை முழுதாய் இழந்தவன். ஏற்கனவே உன்னோடு அறிமுகமானவன். எங்களை நீ நம்பினாய். நாங்கள் உன்னை மீட்போம் என்ற நம்பிக்கையோடு புனர்வாழ்வு போனாய்.

பணத்தைத் தயார் பண்ணி வைப்பது நீ விடுதலையானதும் உன்னை வெளிநாடு எடுப்பது என்ற எங்கள் முயற்சியில் பலரை நாடினோம். தேசியம் தாயகம் சுதந்திரம் என பேசிய பலர் தந்த பதில்களில் உனக்காக ஒருசதத்தைத்தானும் தயார் செய்ய முடியவில்லை.

அம்மா உனக்கு திருமணம் செய்து வைக்கவே விரும்பினா.
நானும் போயிட்டா அக்கா தனிச்சுப்போடுவளம்மா. அவளுக்கு ஒரு
கலியாணம் பேசு பிள்ளை.

 அம்மா இதைத்தான் முடிவாய் சொன்னா.

உனது வயது உனது கடந்தகாலம் பற்றி கேட்கும் யாரும் உன்னை மணமுடிக்க முன்வரவில்லை. திருமணம் பேசும் தரகர்கள் சிலரை அணுகியபோது அவர்களும்...,

இயக்கத்தில இருந்துnவையெண்டா தெரியும்தானே...
நீங்கள் வேறையாரும் இருந்தா சொல்லுங்கோ என ஒரு திருமணத்தரகர் உனது படங்களைத் திருப்பியனுப்பினார்.

உனக்கான திருமணம் என்பது அவ்வளவு இலகுவில் நடக்கும் என்பது நம்பிக்கையற்றுப் போனது. உன்னை ஏதாவது மாற்றுவழி மூலம் வெளிநாடு எடுக்கும் முயற்சி மட்டுமே சரியென்று தோன்றியது.

முகநூல் மூலம் அறிமுகான ஜெயன்தேவாவோடு முகநூலில் அடிக்கடி சட்பண்ணிக்கொள்வேன். எனது எழுத்துக்களின் வாசகர் ஜெயன்தேவா. நேசக்கரம் சமூகப்பணிகளில் தனது ஆதரவையும் வழங்கியவர்.

பிரித்தானியா போன போது அனுராஜ்யும் நானும் ஜேயன்தேவாவை நேரில் சந்தித்தோம். ஏற்கனவே அனுராஜ் ஜெயன்தேவா அவர்களுடன் அறிமுகமாகியிருந்தான்.

ஜெயன்தேவா நேசக்கரம் பணிகள் பற்றி கதைத்த போது ஒரு போராளிப் பெண்ணுக்கு உதவி தேவையென்பதைத் தெரிவித்தேன். தன்னால் முடிந்த உதவியை தானும் செய்வதாக தெரிவித்தார்.

உனது வயதையும் தெரிவித்து திருமணம் செய்ய யாராவது முன்வந்தால் அந்த முயற்சியையும் மேற்கொள்ளலாம் என்பதையும் தெரிவித்தோம்.

ஜெயன்தேவா உதவ முன்வந்த போதும் அது தமிழினிக்குத் தான் உதவியென்றதை தெரிவிரிக்கவில்லை. எங்களோடு சேர்ந்து ஜெயன்தேவாவும் உனக்கான வழியொன்றை அமைக்க துணையாக நின்றார்.

04.08.2012 அன்று துளசி இல்லத்தில் நடைபெற்ற எனது கவிதைநூல் வெளியீட்டு விழாவிற்கு ஜெயன்தேவாவும் பேச்சாளராக வந்திருந்தார். அந்தச் சந்திப்பின் பின்னர் அடிக்கடி போராளிகள் உதவிகள் பற்றி ஜெயன்தேவா உரையாடுவது வழக்கம்.

நீ விடுதலையானதும் உன்னை ஸ்பொன்சர் செய்து வெளிநாடு எடுப்பது என்பதைத்தான் அப்போதைய முடிவாக எடுத்தோம்.

பிரித்தானியாவிலிருந்து யேர்மனி திரும்பிய பின்னர் அம்மாவுடன் பேசியபோது ஜெயன்தேவா பற்றி அம்மாவுக்குச் சொன்னேன்.

ஏன் பிள்ளை அவர் அக்காவை கலியாணம் கட்டுவரே ? இது அம்மா.
ஏன்னம்மா உங்களுக்கு விசரே அவருக்கும் அக்காவுக்கும் 13வயது கூட. அதெல்லாம் சரிவராது. இது நான்.

அவவை வெளிநாடு எடுக்கிறதுக்கான உதவிதான் அவர் செய்யலாம். தொடர்ந்த என்னை அம்மா மறித்தா.

பிள்ளை எனக்கும் அப்பாவுக்கும் 17வயது வித்தியாசம் நாங்களும் நல்லா வாழ்ந்தனாங்கள். வயதொண்டும் பிரச்சனையில்லை. மனம் ஒத்துப்போனால் சரி.

அம்மா உனக்கொரு திருமணம் செய்ய வேண்டுமென்றதில் பிடிவாதமாயிருந்தார். தாயின் ஆசையது. ஆனால் நடைமுறையில் இருந்த பிரச்சனைகள் அம்மாவால் புரிந்து கொள்ள முடியவில்லை.

வவுனியா புனர்வாழ்வு முகாமில் தொலைபேசும் வாய்ப்பு வந்தது. சனி , ஞாயிறுகளில் உன்னோடு தொலைபேசத் தொடங்கினேன். அந்தச் சில நிமிடங்களில் உன் குரலைக்கேட்டு நலவிசாரிப்போடு பேசவேண்டிய விடயங்களை அவசரமாக பேசி விடைபெறுவேன்.

உன்னை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அம்மாவுக்கு இருந்தது. அப்படியொரு சந்திப்புக்கு வந்த போது அம்மா ஜெயன்தேவா பற்றி உனக்குச் சொல்லியிருந்தா.

நீ அவரைத் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொல்லியனுப்பியிருந்தாய். வெளிநாடு வருவதற்காக பொய்யான திருமணம் ஒன்றைச் செய்வதில் உனக்கும் உடன்பாடு இல்லையென்பதையும் சொல்லியிருந்தாய்.

தங்கை யோகா தொலைபேசியில் அழைத்துச் சொன்னாள். அக்கா உங்களைக் கதைக்கட்டாம்.

ஒரு சனிக்கிழமை தொடர்பு கொண்டேன். 

ஏற்கனவே விவாகரத்து பெற்ற ஜெயன்தேவாவிற்கும் உனக்குமான வயது வித்தியாசம் , நீ கடந்து வந்த அரசியலிற்கு முரணான அரசியல் கொள்கைகளோடு உள்ள ஒருவருடன் உனக்கு ஒத்துவருமா ?

அப்படி அவரை நீ திருமணம் செய்தால் உன்னைத் துரோகியாக்கியவர்கள் எப்படி உன்னை தூற்றுவார்கள் ? இதுவே எனது நிம்மதியைத் தின்று கொண்டிருந்தது.

ஜெயன்தேவாவும் தனக்கும் உனக்குமான வயது வித்தியாசம் தனது கடந்தகால வாழ்வின் குறைகள் உன்னை பாதிக்கும் என்பதை தெரிவித்தார்.
தன்னைப்பற்றி வெளிப்படையாக தனது கடந்தகால வாழ்வு பற்றி எதையும் மறைக்காமல் தெரிவித்த மனிதரை நீ நேசிக்கத் தொடங்கினாய்.

ஓரு சனிக்கிழமை உன்னை தொலைபேசியில் அழைத்தேன். நீ ஜெயன்தேவாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதை வெளிப்படையாய் சொன்னாய்.

உங்கள் இருவருக்குமான வயது வேறுபாடு இயல்புகளைப்பற்றிச் சொன்ன போதும் நீ எதற்கும் உடன்படவேயில்லை. இந்தத்திருமணத்தில் உடன்பட மறுத்த எனக்கு நீ சொன்ன காரணங்களுக்கும் கேட்ட கேள்விகளுக்கும் பதில் இல்லாது போனது.

வாழுறது கொஞ்சக்காலம் அதில வயசு வேறுபாடு அரசியல் பாத்து என்னத்தையம்மா சாதிச்சம் ? இருக்கிறமட்டும் நிம்மதியா வாழ்ந்திட்டு சாவம்.  இதுதான் நீ இறுதி முடிவாய் சொன்னது.

ஜெயன்தேவாவோடு பேச விரும்பினாய். அம்மாவோடு முதலில் பேசிய ஜெயன்தேவா அம்மாவுக்கு தன்னைப்பற்றி கூறினார். அம்மா அவரை உனக்கான வாழ்க்கைத்துணையாக அமைப்பதையே விரும்பினா.

நீயும் ஜெயன்தேவாவும் தொலைபேசத் தொடங்கினீர்கள். கடிதங்கள் எழுதினீர்கள். உனது மாற்றங்கள் பற்றி அம்மா சொல்வதை நானும் யோகாவும் ஆச்சரியமாய் கதைப்போம்.

உன்னைப்பார்க்க வந்து திரும்பும் ஒவ்வொரு முறையும் உனக்கான ஒளிவட்டம் பற்றி நீ சொல்லும் யாவையும் அம்மா அப்படியே வந்து சொல்லுவா.

விதி யாரையும் தன் கணக்கிலிருந்து விட்டுவைக்காது என்பதற்கு உனது வாழ்வு காலச்சான்றாகியது. எதிரெதிர் குணங்களோடான ஒருவரோடு சமரசம் செய்து வாழ்வதற்கு நீ தயாராகினாய். நீ ஜெயன்தேவாவைக் காதலித்தாய். உனது இயல்புகளோடும் தன்னை மாற்றி உன்னோடு வாழ ஜெயன்தேவாவும் தயாராகினார்.
js3.jpg


000         000         000
நீ விடுதலையாகும் நாள் அறிவிக்கப்பட்டது. உனது விடுதலையை ஊடகங்கள் எப்படியெல்லாம் பலியெடுக்கும் என்பது அறிந்ததே. நாம் எதிர்பார்த்தது போல நீ விடுதலையாகும் நாள் விடிந்தது. அம்மாவிடம் நீ கையளிக்கப்பட்டாய்.

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது போல ஊடகங்கள் உன்னை மீண்டும் துரத்தத் தொடங்கியது. நீ உனது நிம்மதியை இழந்து போனாய். ஆளாளுக்குக் கதையெழுதினார்கள். பழி சொன்னார்கள்.

தமிழினியிடம் பேட்டியெடுக்க வேணும். உங்களோடை கதைக்கிறவாம் ? தீபச்செல்வன் தொடர்பெடுத்தான்.

நான் அவவோடை கதைக்கிறேல்ல.

நீயும் நானும் கோபம் என்பது போல அவனுக்கு நடிக்க வேண்டியிருந்தது.

உன்பற்றி தீபச்செல்வன் வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு எவ்வித பதிலையும் கொடுக்கும் நிலையிலும் அன்று நானில்லை. நீ எப்படி அந்தரிப்பாயோ என்பது தான் தொடர் கவலையைத் தந்துகொண்டிருந்தது.

நீ மகளீர் அரசியல்துறையின் பொறுப்பாளராயிருந்த காலத்தில் ஒருநாள்கூட உன்னோடு பேசி அறியாதவன். தனது தங்கையை இயக்கம் இறுதி யுத்தத்தின் போது போராளியாக்கியதற்காக நீயே காரணம் என்றான்.
தன் தங்கையைக் கொண்டு போனவர்களைக் கண்டித்து தனது வலைப்பூவில் கவிதை எழுதினான். தனக்கென்று வரும் போது தீபச்செல்வனின் தியாக முகம் கோரமாயிருந்தது.

உனது தொலைபேசியலக்கத்தை புனர்வாழ்வு முகாமில் இருந்து பெற்றுக் கொண்ட தீபச்செல்வன் அம்மாவை தொலைபேசியில் அழைத்தான்.
சக்தி தொலைக்காட்சியில் வேலைசெய்து கொண்டிருந்த தீபச்செல்வன் ரூபவாகினி தொலைக்காட்சியில் இருந்து பேசுவதாக அம்மாவின் தொலைபேசிக்க அழைத்தான்.

தமிழினியுடன் கதைக்க வேண்டுமென்றான் அப்படியொரு ஆள் இல்லையென்ற அம்மாவின் பதிலில் திருப்திப்படாதவன் சிவகாமியுடன் கதைக்கவென்றான் அப்படியும் ஒரு ஆளில்லையெனச் சொல்லி அம்மா தீபச்செல்வனை மட்டுமல்ல தொடர்பு கொண்ட எல்லோரின் தொடர்பையும் துண்டித்துக் கொண்டா.

அம்மாவிடம் கையளிக்கப்பட்ட நீ உனது ஊருக்குப் போகவில்லை. உனக்காக உனது துணைவனால் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் நீ வாழத்தொடங்கினாய். நீ விரும்பிய உனது காதல் துணையோடு உனக்கு பதிவுத்திருமணம் நடைபெற்றது.

நீ பிரித்தானியா வந்து சேரும்வரை யாருக்கும் இவ்விடயம் தொடர்பாக தெரியக்கூடாது என்பதில் யோகாவும், நானும் கவனமாயிருந்தோம்.
உன்னை வைத்து அரசியல் செய்யும் பலருக்கு நீ பேசுபொருளாயிருந்தாய். உனக்குள்ளும் ஒரு வாழ்வு பற்றிய கனவுகளும் ஆசைகளும் நிரம்பியிருந்ததை யாரும் அறியார். நீ விரும்பிய வாழ்வை நீ அமைத்துக் கொண்டாய்.
js2.jpg


ஓளிவட்டத்தை கண்டவுடனும் எங்களை மறந்து போயிட்டியள் என்ன ?
திருமணம் முடிந்து சிலநாட்களில் கேட்ட போது...,
என்ரை வாழ்க்கையில உன்னை நான் எப்படி மறப்பேன் ?
குரல் உடைந்து சொன்னாய்.

ஜெயன்தேவா பற்றி நீ வைத்திருந்த மதிப்பும் நீ வாழ்ந்த வாழ்வையும் அடிக்கடி சொல்லி மகிழும் தருணங்களில் இப்படியொரு மனிதரை உனக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றியென அடிக்கடி சொல்லிக் கொள்வாய்.

முகநூல் பல நல்லவர்களையும் நல்ல விடயங்களையும் தந்து கொண்டிருக்கிறது. உனது வாழ்வில் நீ மீண்டும் புதிதாய் பிறக்க உன் வாழ்க்கைத் துணையாய் அமைந்த ஜெயன்தேவாவையும் முகநூல் தான் பெற்றுத்தந்தது.

உன்னைப் பிரித்தானியா எடுப்பதற்கான முயற்சிகளில் இழுபறிகள் தொடங்கியது. அனுராஜ் சில உதவிகளை தானே முன்வந்து செய்தான். சட்ட ஆலோசனைகளை சட்டத்தரணி நண்பர் கீத்திடம் பெற்றுக் கொண்டு உனக்கான ஸ்பொன்சர் அலுவல்கள் தொடங்கியது.

பிரித்தானியா வந்ததும் உன்னை விமானநிலையத்தில் வரவேற்க நான் வர வேண்டுமென்றாய். நாங்கள் நிறையக் கதைக்க வேணும் என்றெல்லாம் கனக்கச் சொன்னாய்.

ஸ்கைப் ஊடாக தினமும் பேசிக்கொள்ளும் வசதி வந்தது. நிறையக் கதைகள் ஸ்கைப் மட்டுமே அறியும். சிரிப்பு , அழுகை , துயரம் எத்தனை கதைத்தோம்.
உன்னைச் சந்திக்கும் நாளுக்காக காத்திருந்தேன்.

000              000                        000

உனக்குள்ளேயே குறுகிப்போன உன்னை வெளியில் கொண்டுவர விரும்பிய ஜெயன்தேவா உனக்கு கணவனாய் மட்டுமன்றி உனக்கு நல்ல தோழனாகினார். ஜெயன்தேவாவுக்கு இறுதிவரை மனைவியாக வாழ்ந்து இறந்து போகவே நீ ஆசைப்பட்டாய்.
tamilini.jpg

சமூகம் விடுதலை என நீ வகுத்த பாதைகள் யாவும் நடைமுறைக்கு சரியாகாதவையென நீ உனக்குள்ளே முடிவெடுத்து பலமுறை என்னோடு முரண்பட்டுக் கொண்டாய்.


சீருடையில் பார்த்துப் பழகிய தமிழினி முற்றிலும் மாறிப்போனாள். சேலைகட்டி பஞ்சாபி போட்டு உச்சி நெற்றி கழுத்தில் கும்குமம் வைத்து வாழ்வதில் மகிழ்ச்சியிருப்பதாய் நம்பினாய்.

ஆனால் சிறந்த எழுத்தாற்றல் கொண்ட தமிழினியை உலகத்திற்கு தர ஜெயன்தேவா ஆசைப்பட்டார். எழுத்தும் மன அழுத்தத்தை மாற்றும் மருந்து என்பதை நானும் உனக்கு அடிக்கடி வலியுறுத்தினேன்.

ஜெயன்தேவா உன்னை முகநூலில் எழுத ஊக்குவித்தார். ஜெயன்தேவா , சிவகாமி என்ற பெயரை சுருக்கி ஜெசியாக கவிதைகள் எழுதினாய். றொமீலாவாகவும் நிறைய எழுதினாய். பின்னர் தமிழினியாக வெளிப்பட்டாய்.

உனது உலகம் விரிந்தது. முகநூலுக்கு வந்து அரட்டையடிக்காமல் சிறந்த எழுத்தாளர்களோடு அறிமுகமானாய். கல்வியியலாளர்களோடு உனது கருத்துக்களை எழுத்துக்களைப் பகிரத் தொடங்கினாய்.

உனக்கு உதவி கோரியபோது உன்பற்றி விமர்சித்தவர்கள் கூட உனது வாசகர்களாகினர்.

நீ நிறைய எழுதினாய்.  ஸ்கைப்பில் உனது எழுத்துக்களை வாசித்துக்காட்டுவாய். வீடியோவில் முகம்காட்டி மணிக்கணக்காய் பேசுவாய். உன்னைப் பிடித்திருந்த இருட்காலம் அகல்கிறதென்பதை நம்பத் தொடங்கினாய்.

பழைய தமிழினியைக் கண்டெடுத்த ஜெயன்தேவாவிற்கு எத்தனை கோடிதடவைகள் நன்றி சொன்னாய்..., இப்போதும் நீ உன் துணைவர் பற்றி சொன்ன கதைகள் நிறைய இருக்கிறது.

உண்மையான அன்பு இப்படித் தானிருக்குமோ ? பலதடவை நானும் யோசித்ததுண்டு. நீ காதல் , நேசிப்பு பற்றி வகுப்பெடுக்கும் அளவு மாறிப்போனாய்.

உலகில் ஒரு பெண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கைத்துணை கிடைத்தால் அவளால் உலகையே ஆழ முடியும் என்பதற்கு நீ அடையாளமாகினாய்.

அழுதழுதே சிறைக்கம்பிகளின் பின்னே காலம் போகப்போகிறதென நம்பிய நீ சிரிக்கத் தொடங்கினாய். வாழ ஆசைப்பட்டாய். வாழ்வை ரசிக்கத் தொடங்கிய உனக்கு வருடக்கணக்காய் அலைத்த வயிற்றுவலி அதிகரிக்தக் தொடங்கியது.

என்னாலை இருக்கேலாதாம் அசையேலாதாம்.., இப்படி நீ வலியில் துடித்து மருத்துவமனை சென்று வந்தாய். உனது நோய் கண்டுபிடிக்கப்படவில்லை.
கொழும்புக்குப் போய் ஒருக்கா ஸ்கான்பண்ணிப் பாருங்கோவன்..,
சொன்ன போது  சொன்னாய்.

போகப்பயமாயிருக்கடி..,
மற்ற வருத்தமோ தெரியேல்ல சொல்லியழுதாய்.

நீ சொன்ன மற்ற வருத்தம்  புற்றுநோயாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளுக்குள் இருந்தாலும் உன்னை தைரியப்படுத்தினேன்.

அப்பிடியெல்லாம் இருக்காது. இப்பதானே மருத்துவம் நிறைய இருக்கும் எந்த வருத்தத்தையும் மாத்தலாம். மனசை குழப்பாமல் போங்கோ.
ஓரவாரம் கழித்து ஒரு செவ்வாய்கிழமை ஸ்கைப்பில் வந்தாய்.

நாளைக்கு மெடிக்கல் றிப்போட் வரும் என்ன வருதோ தெரியேல்ல.
பழைய மகிழ்ச்சி அன்றைக்கு இல்லை. சோர்வோடு கதைத்தாய். ஸ்கைப்பில் முகம் காட்டினாய். அழுதாய்.

ஓண்டுமிருக்காது உங்களுக்கு இப்போதைக்கு வீசா இல்லை தெரியுமோ ?
80வயது தாண்டினாத்தான் உங்களுக்கு வீசா கண்டியளோ ? சொன்னேன. நீ சொல்றபடி கான்சர் வருத்தமில்லாமல் நாளைக்கு றிப்போட் வந்தால் நல்லம் தான்.

மறுநாள் மதியம் உன்னை தொலைபேசியில் அழைத்தேன்.
என்னவாமக்கா றிப்போட் வந்திட்டுதோ ? கேட்ட எனக்குச் சொன்னாய்.
ஓமம்மா கான்சராம்.

பேரிடியென்பதா இல்லை இதை பொதுவானதென்று ஏற்றுக்கொள்ளவா ?
சரியம்மா நான் ஸ்கைப்வாறன் இதில காசெல்லோ ?

தோலைபேசியைத் துண்டித்தேன். ஸ்கைப்வந்தாய்.
அம்மாக்குத் தெரியுமோக்கா கான்சரெண்டு ?
ஓ அம்மா ஒரே அழுகையா இருக்கிறா.
கான்சரெண்டா என்னக்கா இப்ப தானே நல்ல மருத்துவம் இருக்கு செய்யலாம்.

யோசிக்கப்படாது தைரியமா இருங்கோ.

பாதிவருத்தம் எங்கடை தைரியத்தில தான் மாறும்.

புற்றுநோயாளிகளுடன் பணியாற்றிய எனக்கு அவர்களின் முடிவு என்ன என்பது தெரியும். ஆனால் என் அக்கா உனக்குப் புற்றுநோயும் மாறும் எனவே நானும் நம்பினேன்.

இந்தியா சென்று மருத்துவம் செய்யலாம் என்ற நம்பிக்கையில் இந்தியாவில் சில நண்பர்களின் ஆதரவோடு உன்னை இந்தியா அனுப்ப முயற்சித்தோம்.
நீ பயணம் செய்யும் வலுவை இழந்து கொண்டிருந்தாய்.

இந்தியாவில் தொடர்பில் இருந்த மருத்துவர் உனது ஆயுட்காலம் குறுகிவிட்டதை தெரிவித்தார்.

வாழ்வேன் என ஆசைப்பட்ட உனக்கு உன் ஆயுள் முடியப்போகிறது என்று சொல்ல முடியவில்லை.

கீமோதெரபி சிகிச்சையை மேற்கொள்ளத் தொடங்கினாய். போக்குவரத்து பயணங்கள் என பணம் மட்டுமே உனது எஞ்சிய நாட்களையும் தீர்மானித்திருந்தது.

உங்கடை பேரைச்சொல்லி உதவி கேட்கட்டே அக்கா ? உன்னிடம் கேட்டேன்.
ஏற்கனவே உனக்கு செய்த சிறு உதவிகளை லட்சக்கணக்கில் செய்ததாய் கதை பரப்பிய பலரது பொய்களால் உடைந்து போயிருந்தாய்.

உனது பெயரை வெளிப்படுத்தி யாரிடமும் இறைஞ்ச வேண்டாமென்று நிபந்தனை விதித்தாய்.

கண்ணெதிரே நீ இறந்து கொண்டிருக்க எப்படி ஒதுங்க முடியும் ? ஆனால் நீ யாரிடமும் உதவி கேட்க வேண்டாமென்ற பிடிவாதத்தை கைவிடவேயில்லை.

சிலரிடம் உன் நிலமை பற்றிச் சொன்ன போது பாவம் நீயென்ற பதில்கள் தான் வந்தது. பணம் தர முன்வரவில்லை.

உனது மரணம் உன்னை நெருங்குவதை நீயும் உணரத்தொடங்கினாய்.

உனது நோயுடனான போராட்டத்தை அறிந்த நோர்வே நாட்டு ஊடகவியலாளர் நோர்வே பெண்கள் அமைப்பினரிடம் உனது நிலையைக் கூறினார். உன்னை கவனிக்காத அவர்கள் மீது கோபித்தார்.

ஒருநாள் தொலைபேசியெடுத்த நீ நோர்வே மகளீர் அமைப்பினர் உன்னை நோர்வேக்கு ஸ்பொன்சர் செய்ய சம்மதித்தாக சொன்னாய். ஆனால் அவர்கள் உன்னிடம் வைத்த நிபந்தனையை என்ன சொல்ல ?

நோர்வே அழைப்பார்களாம் அதற்கு பதிலாக நீ முதற்களவீராங்கனை மாலதி அவர்களின் நினைவுநாளில் மேடையேறி பரிசில் வழங்கி உரையாற்ற வேண்டுமாம்.

ஏற்கனவே இலங்கைச்சிறை , நாலாம் ஆறாம் மாடிகளுக்குச் சென்று வந்த நீ மாலதி நினைவுநாளில் மேடையேறுதல் சாத்தியமா என்பதை குறித்தவர்கள் யோசிக்கவில்லை.அந்தப்பேரம் பேசலை நீ மறுத்தாய்.

காலம் உன்னை தன் கணக்கிலிருந்து கிழித்தெடுக்கத் தொடங்கியிருந்தது. நீ எழுதிக்கொண்டிருந்த உனது போராட்டகால வாழ்வை நூலாக்கும் முயற்சியும் இடையில் இழுபடத்தொடங்கியது.

வெளிப்படையாய் நீ எழுதிய பலவிடயங்கள் உன்மீது சேறடிக்கும் உன்னை துரோகியாக்கும் என்பதை சொன்ன போது சொன்னாய்.

இது என்ரை அனுபவம். இதில பொய்யில்லை. எதையும் குறைக்கவோ மாற்றவோ நீ சம்மதிக்கவில்லை. எந்த விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ளும் தைரியத்தோடு இருந்தாய். உன் சுயசரிதை வெளியில் வரவேண்டும் என்பதை விரும்பினாய். உனக்கான ஆதரவைத் தருவதைத்தவிர வேறு வழியிருக்கவில்லை.

உன் எழுத்தின் நேர்மையை நேர்மையோடு எதிர்கொள்ளும் மனநிலையற்ற சமூகத்தின் பிரதிநிதியான இனத்தில் தான் நீயும் நானும் பிறந்திருந்தோம்.

நீ பிடிவாதக்காரி. உனது கருத்துக்களில் யாருக்கும் விட்டுக் கொடுக்காதவள். அந்தநாள் சீருடைத் தமிழினியை நினைவுபடுத்தினாய்.

நீ வாழும் போதே உனது நூலை வெளியிட ஜெயன்தேவா விரும்பினார். உனது ஆசையும் அதுவே.

உன் கடைசிநாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தது.

இந்த மனிசனை விட்டிட்டுப் போகப்போறன் அதுதான் இப்ப என்ரை கவலையா இருக்கு.

பாவம் தனிக்கப்போகுது.

உன் இறுதிக்காலங்களில் நீ உன் துணை ஜெயன்தேவா பற்றியே அதிகம் யோசித்தாய். கலங்கினாய். காலத்திடம் உயிர்பிச்சையேந்தினாய்.

இன்னொரு 5வருசம் அந்தாளோட வாழக்கிடைச்சா காணுமெனக்கு.

உன் இறுதிக்காலங்கள் மருத்துவமனையோடு கரையத் தொடங்கியது.

ஆனாலும் நீ வாழப்போகும் நாட்கள் உனக்கான மருத்துவம் செய்ய பணத்தின் தேவை அதிகமாயிருந்தது.

நம்பிக்கை வேரறுபட்டு உன்னைப் பிரியப்போகும் நாட்கள் ஒவ்வொன்றாய் குறைந்து கொண்டிருந்தது. ஜெயன்தேவா வெளிப்படையாக சிலரைநாடி உதவிகோரினார்.

அவரது முயற்சியில் தடைபோடாமல் விடு என உன்னிடம் வேண்டினேன்.

இந்த மனிசனுக்கு விளங்கேல்ல நான் சாகப்போறனெண்டது. சரி அந்தாளின்ரை ஆசையையும் ஏன் தடுப்பான்.
என்று நீ உதவிகோர அனுமதித்தாய்.

000         000         000

நீ நினைவிழக்கத் தொடங்கினாய். பேசக்கூடிய தைரியத்தையும் இழந்து கொண்டிருந்தாய். என் வீட்டில் மரணத்தின் துயர் பரவியது.

என் தோழனும் நானும் உன்னைப்பற்றியே நாட்கணக்காய் கதைத்துக் கொணடிருந்தோம்.

என் அலைபேசிக்கு உனது அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது. உன்னோடு பேசும் தைரியம் வரவில்லை.

சாகப்போகிறேன் என நீ சொல்லும் செய்தியைக் கேட்டுக் கொண்டு என்னால் இயங்க முடியவில்லை.

என்னெண்டு எடுத்து கதையன் அம்மாச்சி.
என் தோழன் சொன்னான்.

தைரியம் மிக்க என்  தமிழினி அக்கா மரணவாசலில் நிற்கிறாய். அந்தக் கடைசிக் குரலை எப்படிக் கேட்பது. உன் கடைசிக்குரலைக் கேட்கும் துணிச்சல் எனக்கு இல்லை. உன்னோடு பேசாமல் தவிர்த்தேன்.

யாழ் இணையத்தில் உனக்காக நிதி சேகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. சிலர் என்னிடம் தொடர்பு கொண்டு உதவ முன்வந்தார்கள். கிடைத்த சிறு உதவிகளை அம்மாவின் வங்கிக்கு அனுப்பினேன்.

யாழிணையத்தில் உன் பற்றி வந்து கொண்டிருந்த செய்தியை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தேன்.

காலம் உனக்கு இறுதி அத்தியாத்தை எழுதத் தயாராகியது.  உன் உயிர் நாட்களிலிருந்து அழிபட்டு மணிக்கணக்காகி , நிமிடங்களில் வந்து நின்றது. எந்த நிமிடமும் உனது உயிர் பிரியும் தருணம்.

உனது ஞாபகங்கள் மட்டுமே அலைக்களித்த பொழுதுகள் அவை.
000          000         000

அம்மாச்சி அம்மாச்சி...,

நித்திரையில் கிடந்த என்னை வந்து எழுப்பினான் தோழன். அவன் தந்த தேனீரைக் குடித்து முடியச் சொன்னான்.

உங்கடை Viber இல் ஒரு செய்தி போட்டிருக்கிறேன் பாருங்கோ. சொன்னான்.

வளமையாக அவன் பார்க்கும் சிறப்பு விடயங்கள் எனக்கு வைபர் ஊடாக அனுப்புவான். அப்படியொரு செய்தியாகவே நினைத்து அவன் அனுப்பிய இணைப்பை அழுத்தினேன்.

அது உனது மரணச்செய்தி. எதிர்பார்த்த செய்தியாக இருந்தாலும் அதை ஏற்கும் மனநிலை இருக்கவில்லை.

அண்மைய நாட்களில் உன்பற்றி நாங்கள் இருவரும் நிறையக் கதைத்திருக்கிறோம். கண்முன்னே நீ பிணமாய் கிடப்பது போலிருந்தது உனது மரணப்படுக்கையின் நிழற்படங்கள்.

தங்கை யோகாவுக்குத்தான் தொலைபேசினேன். யோகா அழுதாள். அத்தான் பாவமக்கா.

யோகாவுக்கு எந்த ஆறுதலையும் சொல்ல முடியவில்லை. அவளது அழுகையைக் கேட்கக்கேட்க என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவளிடமிருந்து விடைபெற்றேன்.

உலகமெல்லாம் உனக்கான அஞ்சலி நிகழ்வுகள் இராணுவ தகுதிநிலை வழங்கல் என ஆரவாரித்தது தமிழ் ஊடகங்கள்.
நீ வாழும் போது உதவாத பணம் உனது அஞ்சலி நிகழ்வாக கரைந்து கொண்டிருந்தது.

நானும் ஒரு பார்வையாளராய் உனது மரணத்தின் பிறகு அமைதியாயே இருந்தேன்.

உனது மரணத்தின் பிறகே பலருக்கு உனது துணை ஜெயன்தேவா என்பது அறிய வந்தது. ஜெயன்தேவா பற்றி பலரது விமர்சனங்கள் மாறிமாறி ஊடகங்களில் செய்திகளாகிக் கொண்டிருந்தது.

ஜெயன்தேவாவின் பல்கலைக்கழக நண்பன் என்று ஒருவர் பிரித்தானியாவிலிருந்து இவனா உனக்குக் கணவன் என எழுதினார்.

ஜெயன்தேவா பற்றி மேலும் சிலர் அப்படி இப்படி என கதைகள் எழுத ஆரம்பித்தனர்.

நீ ஜெயன்தேவாவுடன் ஆத்மார்த்தமாய் வாழ்ந்தாய் என்பதை எவரும் புரிந்து கொள்ளவில்லை.

நீ யாரைத் திருமணம் செய்ய வேண்டும் நீ யாருடன் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை உன் மீதான அக்கறை மிகுந்தோர் என சொல்லப்பட்ட பல கள்வர்கள் எழுதினார்கள் , திட்டினார்கள் , சபித்தார்கள் இன்னும் நிறைய....!

ஒருவாரம் கழித்து ஜெயன்தேவாவுடன் தொலைபேசினேன். நீ அவரது கண்முன்னே இறந்து போனதை நீ துடித்ததை நீ அழுததை அவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

நீங்கள் தானே சாந்தி அவளோடை கடைசிவரையும் தொடர்போடை இருந்தனீங்கள். உங்களுக்கு எல்லாம் தெரியும் தானே. அவள் வாழ ஆசைப்பட்டவள். காலம் பறிச்சிட்டுது. அவரது நம்பிக்கையாய் இருந்தவள் நீ. அவரது வாழ்வாய் இருந்தவள் நீ. உன்னை இழந்த துயரம் அவரது உறுதியை உடைத்துப் போட்டது.

நீ எழுதிய உனது போராட்ட அனுபவ நூலை வெளியிட வேண்டுமென்றார். உனது ஆசையும் அதுவே. நீ எழுதியபடியே நூலை வெளியிடப்போவதாகச் சொன்னார்.

உன்மீது பழியுரைத்தோர் , உன்னை தேசத்துரோகியாய் கதைசொன்னோர் என எல்லோருக்கும் பதிலாக உனது நூல் மட்டுமே இருந்தது.

000            000             000
உனது கூர்வாழின் நிழலில் நூல் வெளியானது. ஜெயன்தேவா தபாலில் அனுப்பி வைத்தார். நூலைப்படித்த பிறகு உன்னிலிருந்த மதிப்பு மேலும் உயர்ந்தது.

சிறந்த எழுத்தாற்றல் மிக்க தமிழினி நூலில் நிமிர்ந்து நின்றாள்.

உனது நூலை வாசிக்கமாட்டோம் என சிலரும் வாசிக்காமலே பலரும் உனது நூலை நீ எழுதவில்லை ஜெயன்தேவா அரசகூலியாகி உனது தியாகத்தை விற்பதாய் இணையத்தளங்களில் நீயே பேசுபொருளாகினாய்.

தமிழினக்கு யார் திருமணம் செய்து வைத்தது ?

சாந்தி நேசக்கரமா ?

அவள் இலங்கையரசின் உளவாளியெல்லோ?

ஜெயன்தேவா இலங்கையரசின் விருந்தாளியெல்லோ?

சாந்தி நேசக்கரம் நீ எப்படி தமிழினிக்கு ஒரு துரோகியை திருமணம் செய்து வைத்தாய் ?

அரசகைக்கூலியே உனக்கு தமிழினியின் பெறுமதி தெரியுமா ?

என்மீது விழும் சொ(க)ற்கள் இவை.

என் வரையில் உனக்கு உண்மையான தோழியாய் இருந்திருக்கிறேன். உனக்கு ஆறுதல் தேவைப்பட்ட காலத்திலும் நீ அந்தரித்த காலத்திலும்  உன்னோடு கூட வந்திருக்கிறேன். நீ மீள நானும் சிறு அணிலாய் உன்னோடு பயணித்திருக்கிறேன்.

உனக்கு விசஊசி ஏற்றியே கொல்லப்பட்டாயாம். ஒருசாரார் சொல்கிறார்கள்.
நீ பாலியல் வல்லுறவுக்கு அதிகம் உட்படுத்தப்பட்டதனால் தான் உனக்கு புற்றுநோய் வந்ததாம்.

சாவின் பிறகும் உன் நிம்மதியைப் பறித்து தங்கள் விருப்பிற்கு ஏற்ப எழுதுகிறார்கள் பேசுகிறார்கள்.

நீ ஆதரவற்று அந்தரித்த போது ஒளித்தவர்களெல்லாம் கேட்கும் கேள்விகள் கோடிக்கணக்கு.

இந்த மனிதர்களை நீ பார்த்துவிட்டு இறந்திருக்க வேண்டும். ஆனால் காலம் தன் கணக்கிலிருந்து உன்னை விடுவித்துக் கொண்டு போய்விட்டது.

000        000         000
2009 இற்கு பிந்திய தமிழினியின் மாற்றம் தெளிவு 2009இற்கு முந்திய தமிழினியைக் காணாமற்போக வைத்தது.

எதிரியாய் இருந்த இனத்தையும் அதன் இராணுவத்தையும் நீ மதிக்கும் நிலைமை எப்படி வந்தது ?

18வருடம் எதிரியாக நீ கருதியவர்களை நீ நேசிக்கும்படியான காலமாற்றத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

கொன்றவர்களோடு கைகுலுக்கிக் கொள்ளும் மனநிலையை நீயும் உன்போன்ற பலரும் உணரும் நிலை எப்படி உருவானது ?

எதிரி எங்களை எப்படி வென்றான் ? என்னிடமுள்ள ஒரே பதில் :-

காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு தனக்கெதிராகப் போராடியவர்களின் உளவுரணை உடைக்கும் மனவலுவை எதிரி கொண்டிருந்த உண்மையை இன்னும் உணராதவர்களாய் , எங்களுக்குள் மல்லுக்கட்டுவதில் காலத்தைக் கழிக்கிறோம்.

'எல்லாப்பலத்திலும் ஒரு பலவீனம் நிச்சயம் உண்டு அந்தப்பலவீனத்தில் அடி'
சொன்ன தலைவனின் வேதத்தை எதிரி நன்றாகவே புரிந்து கொண்டுள்ளான்.

எதிரி எங்களைப் பலவீனப்படுத்திக் கொண்டே போகிறான். நாங்கள் இன்னுமின்னும் சிதிலங்களாகிக் கொண்டிருக்கிறோம்.
பல்லாயிரக்கணக்கில் தெருவில் இறங்கிப் போராடியவர்கள் இன்று சில ஆயிரங்கள் கூட சேர முடியாது போயுள்ளோம்.

இது ஆயுதங்களால் போராடும் காலமல்ல. தந்திரத்தால் மனபலத்தை தகர்க்கும் போராட்ட காலம். எதிரியின் நாடியில் துப்பாக்கியை வைப்பதற்கு திட்டமிடுவதை விடுத்து தோழில் கைபோட்டுக் கொண்டு வெல்லும் நவீனத்தை தேட வேண்டும்.

இதுவே உனக்கும் உன்போல நாங்கள் விலைகொடுத்த அனைவருக்குமான கைமாறாகும்.

சாந்தி நேசக்கரம்.
22.04.2017.

அன்புத் தோழி மறைந்த தமிழினி அவர்களுக்காக 22.06. 2012 எழுதிய கவிதை மீளும் நினைவு. வெலிக்கடை சிறைவாசம் முடித்து வவுனியா புனர்வாழ்வு முகாம் சென்ற சேதியை அவள் அறியத்ததந்து உரையாடிய போது அவளுக்காக எழுதிய கவிதை இது. பலதடவை வாசித்து தன் கண்ணீரால் பல கதைகள் சொன்னவள் நினைவோடு.....!
-----------------------------------------------------------

கால விதிகளின் கட்டறுத்தெறிந்த
வீரத்தின் விலாசங்களோடு
வனவாசம் போனவர்களுடன்
ஆழுமையின் வீச்சாய்
அடையாளம் காட்டப்பட்டவள் நீ.

பெண் விதியின் முழுமைகளை
நீ பேசிய மேடைகள்
பதிவு செய்து கொண்டதோடு
நீயொரு பெண்ணியவாதியாய்
பெருமை கொள்ளப்பட்டவள்.

உன்னையும் உனது ஆழுமைகளையும்
உச்சத்தில் ஏற்றி எழுதியோரும்
உன் குரலில் பதிவு செய்தோரும்
எண்ணிலடங்காதவவை....

எழுச்சியின் காலங்களை இப்படித்தான்
காலம் கௌரவப்படுத்துவது வரலாறு.
வீழ்ச்சியின் பின்னரே யாவும்
விழித்துக் கொள்கிறது.
அதுவே உனக்கும்
உன்போன்றோருக்கெல்லாம் நிகழ்ந்தது.

000

2009 மே,
காலச் சூரியனின் கைகளிலிருந்து
தவறிப்போனவளாக
வரலாறு உன்னைப் பதிவுசெய்தது....

பணியாத வீரங்களெல்லாம் கைதூக்கிய சரணாகதி
உன்னையும் தோல்வியின் கைகளில் கொடுத்துவிட
காலத்தால் கைவிடப்பட்டவர்கள் வரிசையில் நீயும்
தோற்றப்போன ஒரு முன்னாள் பெண் போராளி.

திட்டும் சபித்தல்களும்
உன்மீது சொரிந்த வேளையில்
எல்லோர் போலவும்
நானும் கோபித்ததும் உன்னை சந்;தேகித்ததும்
நீயறியாத இரகசியங்கள்....

கழுத்திலிருந்த குப்பிகளின் நிலமை பற்றியும்
கடைசிநேர நிலவரம் பற்றியும்
உங்களைத்தான் விழுங்கியது
எங்களது பேரங்கள்.

இருள் நிறைந்த கம்பிகளின் பின்னால் - நீ
இருளோடு கரைந்த கதைகள்
அறிந்த போது
எல்லாக் கோபமும் போய்
தோழமை வென்றது.
தோழியே உனக்காய் கண்ணீரில் கரைந்த
பொழுதுகள் கனத்தது....

கோபம் மறந்து உன்னோடு கதைத்து
உனது கண்ணீரைப் பங்கிட்ட போது
நெஞ்சுக்குள் உறுத்தும்
உன் மீதான எனது கோபங்கள்
அர்த்தமற்றுப் போய்விட்டன....

துயரங்கள் தின்ற உனது நாட்களை
நினைவுகொள் நேரமெல்லாம்
கரைந்துருகி வழிகிற உனது கண்ணீரின்
துயர் கரைக்கும் அந்தரத்தில்
உனக்கான ஒளிவட்டமொன்றைக் கீறிக்கொள்வதாய்
உனது கண்ணீரைப் புன்னகையாக்கிய
வெற்றியை யாரிடமும் சொல்லாமல்
அழுத நாட்களை நீ அறியமாட்டாயடி.....

கம்பிகள் உன்னை விடுவிக்கப் போகும் நாளுக்காய்
உன் அம்மாபோல நானும் காத்திருந்த நாட்களில்
உனது விடுதலையின் செய்தி
நெஞ்சுக்குள் பொங்கிய மகிழ்வை
நீ வரும் வரை
பொக்கிசமாய் பத்திரமாய் வைத்திருக்கிறேன்....

வா நாங்கள் மீண்டும் பேசிக் கோபித்து விவாதித்து
மிஞ்சிய பொழுதுகளையேனும் மீள் நினைவு கொள்வோம்.

22.06.2012
சாந்தி நேசக்கரம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுவதும் வாசிக்கவில்லை.முடியாது.இடை இடை புகுந்து பார்த்தேன்.கஸ்டமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, shanthy said:

இது ஆயுதங்களால் போராடும் காலமல்ல. தந்திரத்தால் மனபலத்தை தகர்க்கும் போராட்ட காலம். எதிரியின் நாடியில் துப்பாக்கியை வைப்பதற்கு திட்டமிடுவதை விடுத்து எதிரியாய் இருந்த இனத்தையும் அதன் இராணுவத்தையும் நீ மதிக்கும் நிலைமை எப்படி வந்தது ? நவீனத்தை தேட வேண்டும்.

போராளி:துப்பாக்கியை நீட்டு எதிரிக்கு
போராளி: தோழில் கைபோட்டுக் கொண்டு வெல்லும் நவீனத்தை தேட வேண்டும்.
போராளி:போரடத்தேவையில்லை எதிரியே எமக்கில்லை
போராளி: எல்லாம் அவன் செயல்.....

எந்த ஒரு போராட்டமும்,எந்த ஒரு அரசாங்கமும் நேர்மை ,நீதி போன்றவற்றை கடப்பிடித்து இதுவரை  இயங்கவில்லை இனியும் இயங்கப்போவதுமில்லை.....

நாம் எதிரிக்கு தோழில் கைபோட்டுக் கொண்டு வெல்லும் நவீனத்தை தேட எதிரி அதை விட நவீனத்தை தேடுவான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் போராளி என்பதாகவும் பெண் என்பதாகவும் நசியுண்ட இனத்தின் கூறாகவும் வெவ்வேறுபட்ட கோணத்தில் பார்க்கப்பட்டதும் பார்க்கப்படுவதும்தான் சகோதரியின் நிலை அவரைப்பற்றிய உரையாடலை பல இடங்களில் சந்தித்திருக்கிறேன். மானுடத்தை நேசிக்கிறேன். மனம் வலித்திருக்கிறது. அவர் ஒரு பெண்ணாக பாதிக்கப்பட்ட போராளியாக விடுபடமுடியாத மனஉளைச்சலுக்கு ஆளானவராக பல் முனைகளில் துயருற்றிருக்கிறார் என்பதை அறிவோம் சாந்தி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.