Jump to content

உயிர் மெய்


Recommended Posts

உயிர் மெய் - புதிய தொடர் - 1

 

மருத்துவர் கு.சிவராமன்

 

டைசி நோயாளியைப் பார்த்துவிட்டு இருக்கையைவிட்டு எழும் நேரத்தில், அவர்கள் வந்தார்கள். `எங்களுக்காகப் பத்து நிமிஷம் மட்டும் சார்' என, சன்னமான குரலில் கேட்டுக்கொண்டனர். நான் மிகுந்த களைப்பில் இருந்தேன். `நாளைக்குச் சந்தித்து, நிதானமாகப் பேசலாமே!' எனக் கெஞ்சலாகச் சொன்னேன். சிறிய மௌனத்துக்குப் பிறகு, `கடைசியா உங்களைப் பார்த்துப் பேசிட்டுப் போகலாம்னு காத்திருக்கோம்' எனச் சொல்லி அதிரவைத்தார்கள். அவர்கள், குழந்தையின்மை சிகிச்சைக்காக வந்திருந்தார்கள். அன்று நாங்கள் பேசி முடித்து வெளியே வருகையில், வெறிச்சோடிப்போயிருந்த வானமும் சாலையும் விடியலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தன... அவர்களைப்போலவே!

இன்று, குழந்தையின்மைக்கு எனப் பிரத்யேக மருத்துவமனைகள் வந்துவிட்டன. எங்கும் குழந்தை வரம் கேட்டு ஏங்கும் தம்பதிகள். கோயில்களில்கூட, `குழந்தைப்பேறு ஸ்பெஷல்' என விளம்பரம் செய்யத் தொடங்கிவிட்டனர். ` `இன்றைக்கு 12-B பஸ் சரியான நேரத்துக்கு வருமா?' என்பது மாதிரியான அன்றாட அவசரத்தில், இந்த வாரம் புரலாக்ட்டின் அளவு கணிசமாகக் குறைந்திருக்குமா, என் கருமுட்டை வெடிக்க அது வழிவிடுமா?' என விஞ்ஞானிகள் போல தவிப்புடன் காத்திருக்கின்றனர் தம்பதிகள். அப்படியான உள்ளங்களோடும், `அப்படியான சிக்கலுக்குள் சிக்கிவிடாமல் என்னையும் என் அடுத்த தலைமுறையையும் காத்திட வேண்டும்' எனச் சிந்திக்கும் நட்பு வட்டாரத்தோடும் நடத்தும் சிநேகமான உரையாடல்தான் இந்தத் தொடர்.

p22c.jpg

பெண்ணின் சினைமுட்டைகள், பெண்ணாக அவள் தாயின் வயிற்றில் ஜனிக்கையிலேயே உருவாவதும் சரி, பிறகு பூப்படையும் பருவம் வரை ஏற்படும் வளர்ச்சியும், அந்த முட்டையின் இயக்கமும் சரி, உயிரணுவோடு பிணைந்து கருவாகி, சரேலென மூன்றேகால் கிலோ ஐஸ்வர்யாவாகவோ அய்யாசாமியாகவோ உருவாவது முற்றிலும் முழுதாகப் புரிந்திடாத இயற்கையின் விந்தை.

“அம்மா, எனக்கு மீசை வருது பாரேன்” என 14 வயதுப் பையன் அரும்புமீசையை முறுக்கிக் காட்டுகையில், ``மம்மி, இனி அவனை டவுஸர் போடச் சொல்லாதே. பேன்ட் போடச் சொல்லு. கரடி மாதிரி உடம்பெல்லாம் முடி வளருது. இந்த வயசுலேயே இவனுக்கு நெஞ்சு மயிர்” என வீட்டில் உள்ள மூத்த பெண் சொல்லும்போது, கோபத்தைக் காட்டும் பையனின் உடைந்த குரல், ஓர் ஆண்பால் கவிதை. அப்படிக் குரல் உடைகையில், விதைப்பைக்குள் `செர்டோலி' செல்கள் சிலிர்த்தெழுந்து, விந்தணுக்களைச் சேமிக்கத் தொடங்கியிருக்கும்.

ஒவ்வொரு மாதவிடாய்ச் சுழற்சியிலும், பெண்ணின் இரண்டு பக்கங்களிலும் உள்ள சினைப்பையில் சில முட்டைகள் படிப்படியாக வளர வேண்டும். 14-வது அல்லது 15-வது நாளில் அந்தக் கருமுட்டை அதன் புறத்தோலைக் கழற்றி வீசி, வெடித்துச் சினைக்குழலைப் பற்ற வேண்டும். இப்படி சினைக்குழலுக்குள் சிங்காரித்து ஓடிவரும் சினைமுட்டையை, காதலால் கசிந்துருகிக் கருப்பைக்குள் புகுந்த உயிரணுக்களில் ஒருசில ஓடிவந்து, அதில் ஒன்று முட்டையின் மதில் சுவரை உடைத்து உள்நுழைய... அவள் அம்மா!

முந்தைய பாராவின் ஒவ்வொரு நிகழ்வுக்கும், ஏதோ ஒரு துளி ஹார்மோன், சின்னதாக ஒரு கட்டமைப்பு, சிறு கவிதையாக ரசாயனங்களின் சமிக்ஞைகள் இருக்க வேண்டும் என்கிறது நவீன அறிவியல். `வாதமாய்ப் படைத்து' எனும் சித்த மருத்துவமோ,

`வாயுவோடு விந்துசென்று மலர்க்குட் சேர்ந்தால்
மலரினுள்ள இதழ்களெல்லாம் மூடிக்கொள்ளும்.
தேயுவோடு வாயு நின்று திரட்டும் பாரு...
செப்பியதாந் தினமொன்றில் கடுகு போலாம்'


- என இன்றைய அறிவியல் நுணுக்கங்கள் ஏதும் வராதபோது, முதல் நாளில் `கடுகு போலாம்' என ஆரம்பித்து, ஒவ்வொரு மாதத்துக்கும் கருவின் வளர்ச்சியைச் சொல்லியிருக்கும்.

இந்த ஹார்மோன்களின் சுரப்பு எப்படி நிகழ்கிறது? இதற்கான சமிக்ஞையை மூளைக்குள் யார் பிரசவிக்கிறார்கள்? ஏவாள் கடித்துப் போட்ட ஆப்பிளிலிருந்தோ, ஏமி ஜாக்சன் சிரிப்பிலிருந்தோ இந்தச் சுரப்பும் பிறப்பும் நுணுக்கமான பல சூட்சுமங்களுடன் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

p22b.jpg`இனி நீதான்டா எனக்கு!' என ஏதோ ஒரு பார்வையில் புரிந்தபோது, மனசுக்குள் அடித்த மின்னலில் சில துளி ஹார்மோன் சுரக்கும். `இது நட்பு அல்ல; காதல்’ எனப் புரிந்ததும், அவசரமாகப் பரிமாறப்பட்ட முதல் முத்தம் மூளைக்குள் சில ரசாயனச் சமிக்ஞைகளை ஏற்படுத்தும். அந்த நீண்ட கடற்கரையில் அலுவல்விட்டு வந்து காதலியோடு அமர்ந்து, அவசியமே இல்லாமல் அந்தச் சுண்டுவிரலுக்கு 1,500 முறையாவது சுடக்கு எடுக்கும்போது, கருப்பையின் உள்சுவர் கணிசமாக வளரும். அவன் `நீ சூடும் பூவெல்லாம் ஒருபோதும் உதிராதே!' என, தாமரையின் கவிதை வரியில் நெகிழ, கருமுட்டை கணிசமாக உப்பிப் பருத்து வளரும்.

சாமி சப்பரம் பார்க்கத் தேர்வீதியிலும் தோளிலும் சுமந்த தகப்பன் சில ஆண்டுகள் கழித்து `நீ சாயும் தோள் இதுதான்' எனச் சுட்டிக் காட்டியவருடன் மணமேடையைக் கைகோத்த படி சுற்றியபோது, அத்தனை கூட்டத்துக்கு முன்னால், அப்பாஅம்மா முன்னால், அவன் கை சுண்டுவிரலை நசுக்க வழக்கமாக வரும் வலி, கோபத்தைக் கொட்டுவது மாறிப்போய், அன்றைக்கு வெட்கத்தைக் கொப்புளிக்க, அந்த வெட்கம் கொட்டிவிடாது இதழோரம் முறுவலிக்க என அத்தனையிலும் இந்தச் சுரப்புகளும் ரசாயனச் சமிக்ஞைகளும் இத்தனை காலம் இயல்பாகச் சுரந்துகொண்டேதான் இருந்தன. திருமணமாகி பத்து வருடங்கள் ஆன பிறகும் கிடைக்கும் லிஃப்ட் தனிமையில் உரசிக்கொடுக்க முனையும் முத்தத்தில், அப்போதும் சினைப்பைக்குள் வளர்ந்து நிற்கும் சினைமுட்டை உடைந்து கருவாக உருவாகும்.

இப்படியான காதலின்/காமத்தின் நெளிவு சுளிவுகளால் மட்டுமல்ல, ஆணோ பெண்ணோ பருவமடைந்து வளர்ந்துவருகையில் அன்றாடம் சாப்பிடும் பசலைக்கீரைக் கடைசலில் மாப்பிள்ளைச்சம்பா சோற்றை உருட்டி உண்பதும், செவ்வாழைப்பழத்தை முருங்கைப் பூ பாலில் சாப்பிடுவதும், வஞ்சிரம் மீன் வறுத்து நாட்டு்க்கோழிக் குழம்பு ஊற்றிச் சாப்பிடுவதும் சேர்கையில்தான் சினைமுட்டையும் உயிரணுவும் உற்சாகமாக வளர்ந்து நிற்கும்.

காதல் கனிந்து கசிந்துருகும் தருணத்தில், சாப்பிட்ட முருங்கைப் பூ பாலினாலோ, சிலாகித்த உச்சி முத்தத்தாலோ என எத்தனையோவால் அத்தனை சுரப்புகளும் படைப்புகளும் நகர்வுகளும் ஒருமித்து, கருத்தரிப்பைக் கச்சிதமாக நிறைவேற்றும். அன்றைய ஒருசெல் உயிரி க்ளாமிடா மோனஸிலிருந்து ஒவ்வொரு செல்லையும் உருக்கிய கிளியோபாட்ரா வரையிலான அத்தனையிலும் இப்படித்தான் இந்த நிகழ்வு இருந்தது.

ஆனால், இன்றைய நிலை அப்படி அல்ல. இந்த ஊதாக் கலர் மாத்திரையைச் சாப்பிட்டால் தான், `உயிரணு ஓடியாந்து முட்டையோடு பிணைய முடியும். தலைக்குக் குளிச்ச தேதியிலிருந்து ஐந்தாம் நாள் மறக்காம ஆரம்பிச்சுடுங்க' என, காதலை கலர் கலர் கேப்சூலிலும், காமத்தை இரண்டு மி.லி ஊசியிலும் அடைத்துக்கொடுக்கும் வித்தை பலமடங்கு உயர்ந்துகொண்டிருக்கிறது.

`கருத்தரிக்க, இந்த ஊசி உங்களுக்கு இனி அவசியம் வேண்டும். அப்போதுதான் ஐ.யூ.ஐ-க்குச் சரியாக இருக்கும். முட்டை அதுபாட்டுக்கு வளர்ந்துட்டே இருக்கு. இரண்டு செ.மீ-க்கு மேல் உடையணும். அப்படி உடையலைன்னா, அந்தக் கருமுட்டை பிரயோஜனம் இல்லை. இந்த ஊசியைப் போட்டுக்க' என்ற ஆலோசனை நம்மில் பலருக்கும் கிடைக்கிறது.

இரவின் உச்சத்துக்குப் பிந்தைய வாஞ்சையான அரவணைப்பில், வெட்கப்புன்னகையும் களைத்து மகிழ்ந்த காதலும் கொஞ்சநாளாகக் காணவில்லை. `சரியா... டி14. மாதவிடாயிலிருந்து 14-வது நாள். முட்டை வெடிச்சிருக்கணும்.

10-ம் தேதி மாத்திரை மட்டும் மிஸ்ஸாகிடுச்சு. ஓவுலேஷன் ஆகியிருக்குமா? இப்போ போன உயிரணு உரசி முட்டையை அடைச்சிருக்கும்ல? கோ அன்சைம் க்யூவும் முருங்கைப் பூ லேகியமும் நீங்க சாப்பிட ஆரம்பிச்சு, 75 நாள்களுக்கு மேல் இருக்கும்ல?' என, சந்திராயன் ராக்கெட்டை அனுப்பிவிட்டு, கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்திருக்கும் ஸ்ரீஹரிகோட்டா சயின்ட் டிஸ்ட்டுகள் மாதிரி பின்னிரவில் கவலையோடு பேசிக்கொண்டிருக்கும் தம்பதியர் இங்கு பெருகிவருகின்றனர்.

காமம் சுரக்க... காதல் கிறக்க, இப்போது கூடுதல் கரிசனமும் மெனக்கெடலும் தேவைப்படுகின்றன. `இந்த மாத்திரை, சினைப்பை நீர்க்கட்டிகள் குறைய. இந்த ஊசி, காமம் கொப்புளித்துக் கருமுட்டை வெடிக்க 10-வது நாள் போட்டுக்கணும்பா. இந்த மாத்திரை, டி4-லிருந்து உங்கள் முட்டையை வளர்க்க, சாப்பிட்டே ஆகணும். இந்த மாத்திரை, சோம்பியிருக்கும் உயிரணு வேகமாக ஓடிச்சென்று கருமுட்டையை உடைக்க  அவசியம் உங்களுக்குத் தேவை. இந்த கேப்சூல், குறைந்திருக்கும் உயிரணுக்களைக் கூட்ட (சாப்பாட்டுக்குப் பின்னே). அப்புறம் காதலாகிக் கசிந்துருக எனப் பட்டியல் பல புதுமணத் தம்பதிகளுக்குச் சீர்வரிசையாக நீண்டுகொண்டே இருக்கிறது.

என்ன நடந்துகொண்டிருக்கிறது இங்கே? சினைப்பை நீர்க்கட்டிகள் குறித்த பேச்சு, 20 ஆண்டுகளுக்கு முன்னால் அவ்வளவாக இல்லை. கருத்தரிப்புக்குப் பிறகு அல்ட்ராசவுண்ட் சோதனையில் குழந்தையைப் பார்த்து வரும்போது அந்தப் பக்கம் யதேச்சையாகத் தென்படும் தரவாகவே அப்போது இருந்தது.

இன்று சினைப்பை நீர்க்கட்டிகள் குறித்த பெருங்கூச்சலும், அளவுக்கு அதிகமான பயமும் பயமுறுத்தலும், அதுவே முற்றிலும் அலட்சியப்படுத்துகையில் அதையொட்டி வரும் கருத்தரிப்புத் தாமதமும் ஏராளம். உணவிலும் நடையிலும் உடற்பயிற்சியிலும் செதுக்கிச் சீராக்கவேண்டிய பிழையை, மாத்திரைகளைக் கொட்டிக் குழப்பும் சிகிச்சைகள் பெருகி வருகின்றன. அவசரம், அவமானம், அறமற்ற அறிவியல் எனும் காரணங்கள் சாலையோர சலூன்கள்போல கருத்தரிப்பு உதவி மருத்துவ மனைகளை உருவாக்கிவருகின்றன.

அன்று, `ஆணுக்கு சராசரியாக 40-50 மில்லியன் உயிரணுக்கள் ஒரு மில்லி விந்துவில்' என்ற நிலை இருந்தது. இன்று, `20 மில்லியன் இருந்தால் போதும்' என ஓர் ஆணின் விந்தணுக்கள் தடாலடியாக இறங்கிப்போனது ஏன்? நீர் மாசுபட்டது முதல் `நீட்' தேர்வால் மாசுபட்டுப் போன மூளை வரை நிறைய காரணங்கள்.

p22.jpg

தன் இயல்பான பாலியல் விளைவையும் விசும்பலையும் போலியான சமூக அழுத்தத்தில் மறைத்து, நடுநிசி ஊடக மருந்துக் கொள்ளையர் களிடம் காண்டாமிருகம் - குதிரை மருந்து வாங்கிச் சிக்கி, உளவியல் நோயாளிகளாகும் அப்பாவிக் கூட்டம் ஒருபக்கம்.

`நேரத்தைத் தாமதம் செய்யாதீங்க. அறிவியல் எவ்வளவோ வளர்ந்து நிற்கிறது. `இக்ஸி' பண்ணியாச்சுன்னா குழந்தை உறுதி. வெளியே பொருளாதார விஷயத்தில் உதவிட, தவணைத் திட்ட வசதியை வங்கியே கொடுப்பார்கள். எங்க ஊழியர், உங்களுக்கு உதவிடுவாங்க. பேசுங்க', என நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசி இழுக்கும் கூட்டத்தில் சிக்கும் `கூகுள் பட்டம்' பெற்ற வாலிபர் கூட்டம் இன்னொரு பக்கம்.

`நேத்து கல்யாணம் பண்ணினவ எல்லாம் இன்னிக்கு வாந்தியும் வயிறுமா இருக்காளுங்க. இவன் தம்பிப் பொண்டாட்டிக்கு என்ன குறை வெச்சமோ தெரியலை, நாலு வருஷங்களா இவ வயித்துல ஒரு புழுப் பூச்சி தங்கலை' எனும் ரொட்டியில் ஜாம் தடவுவதுபோல் நாவில் விஷம் தடவும் சில ஓநாய்க் கூட்டங்கள் மறுபக்கம் என, அன்பற்ற, அறமற்ற வணிக வன்முறைக் கூட்டங்களுக்கு நடுவே காதலும் காமமும் சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பதுதான் நிதர்சனம்.

சின்னச்சின்ன அக்கறைகள், சற்று விசாலமான புரிதல்கள், பிழைகளை விலக்கி அரவணைக்கும் வாஞ்சை, கனவோடும் காதலோடும் காத்திருக்கும் பொறுமை, மரபின் நீண்ட அனுபவத்தையும் அறிவியலின் நுணுக்கத்தையும் `அறம்' எனும் புள்ளியில் ஒருங்கிணைத்து, வாழ்வியலை நகர்த்தும் மனநிலையை இவை மட்டுமே தரும்.காதலாய்... காமமாய்... கருவாய்... உயிராய்!

- பிறப்போம்...


p22aa.jpg

காதலின் சின்னம்!

dot.png மனித இனமும் அவனின் மூத்த தலைமுறையான குரங்கினமும் அதிகம் நேசித்துச் சாப்பிட்ட உணவு வாழைப்பழம். அநேகமாக கவுண்டமணி – செந்தில் நகைச்சுவைக்குப் பிறகு, பழத்தின் வகையிலிருந்து பத்தி ஸ்டாண்டு வகையறாவுக்குக் கொஞ்சம் நகர்ந்துவிட்டது. கூடவே `வாழை வெயிட் போடும்' என்ற சங்கதியில் பல வீடுகளில் புறக்கணிக்கப்பட்ட பழம்.

dot.png வாழைப்பழம், காதலின் சின்னம்; காமத்தின் ஊற்றுக்கண் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ஸ்ட்ராபெர்ரியைக் காதலோடு பாடும் நம் கவிஞர்கள், செவ்வாழையையும் சீக்கிரம் பாடியாக வேண்டும்.

dot.png ஆணின் விந்தணுக்களை உயர்த்திட உதவும் கனி, வாழை. குறிப்பாக செவ்வாழை. அதில் உள்ள  `bromelin' எனும் என்சைம், விந்தணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தும். பொட்டாசியம் மக்னீசியம் முதலான பல உப்புகளும் விந்தணுக் களைச் சீராகப் படைக்க உதவிடும்.

dot.png மூளையில் காதல் சுரக்கத் தேவையான செரட்டோனினைக் கட்டமைக்கும் பணிக்குத் தேவையான ட்ரிப்டோஃபேனையும் வாழைப்பழம் கொடுக்குமாம்.

dot.png `விந்தணுக்கள் குறைவுக்கு, உடலின் அதிக சூடான பித்தநிலையும் காரணம். அந்தப் பித்தத்தைச் சமப் படுத்த, கபத்தைத் தரும் கனி வாழை' என்கிறது சித்த மருத்துவம்.

dot.png அதிக நார்ச்சத்துள்ள நெல்லை மதுரைப் பகுதி நாட்டுவாழை, செவ்வாழை, சிறுமலைப்பழம் ஆகியவை, வாழை இனங்களில் தனிச் சிறப்புள்ளவை.

dot.png நீரிழிவுக் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள்,  வாழையை வணங்கி விடைபெறுவது நல்லது.

dot.png காலை உணவில், 30 மணித்துளிகளுக்கு முன்னதாக வாழையைச் சாப்பிடுவது சிறப்பு. மலம் கழிக்க உதவும் என இரவில் உணவுக்குப் பிறகு சாப்பிடுவது ரத்தச் சர்க்கரை அளவைக் கொஞ்சம் உயர்த்தக் கூடும்.


p22a.jpg

குளியல்

அதிகம் குளிராத, வெதுவெதுப்பான நீரில் தினமும் இரண்டு முறை குளிப்பது, கருத்தரிப்புக்கு நல்லது. குளித்தல், பித்தத்தைத் தணிக்க உதவும்.

பித்தம் அதிகரித்தால் விந்தணுக்கள் குறையும். பெண்களின் கருப்பை உள்சுவர் எண்டோமெட்ரியம் உலர்ந்து, அதனால் உயிரணு நீந்த முடியாதிருக்கும் சூழலில் ஏற்படும் கருத்தரிப்புத் தாமதத்துக்கு இருமுறை குளியல் உதவும்.

வாரம் ஒருமுறை எண்ணெய்க்குளியல் (நல்லெண்ணெயில்) எடுத்துக்கொண்டால், பித்தத்தைக் குறைத்துக் கருத்தரிப்பை விரைவாக்கும்.

கண்ணகி மதுரை வீதியில் வந்த கோலத்தை, அநேகமாக இன்றைய இளம்பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். ஆதலால், அடிக்கடி ஷாம்பு போட்டு செம்பட்டையான தலைமுடியுடன் முன்நெற்றியில் பறக்கவிட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

அது அழகா எனத் தெரியவில்லை. ஆனால், ஆரோக்கியமில்லை எனச் சொல்லலாம். கொஞ்சம் இயல்பான எண்ணெய்ப்பசை தலைமுடிக்கு அவசியம். வெள்ளாவி போட்டு வெளுத்த நிலையில், அதை வெடவெடவென வைத்திருப்பது பித்தத்தைக் கூட்டி, பின்னாளில் கருவழிப் பாதையில் கஷ்டத்தைக் கொடுக்கக்கூடும்.

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

உயிர் மெய் - 2

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

மருத்துவர் கு.சிவராமன் படம்: எம்.விஜயகுமார் - மாடல்: எஸ்.பிரனஜே

 

p94d1.jpg

ட்டாம் வகுப்பு ஆண்டு விடுமுறையில் ஊருக்குப் போய்விட்டு, ஒன்பதாம் வகுப்பின் முதல் நாள் பள்ளிக்கு வரும் அனுபவம், கடைசி வரை நினைவில் நிற்கும் அழகான ஒரு கவிதை. இணையம், அலைபேசி, தொலைபேசி எதுவும் இல்லாத அன்றைய நாளில், இரண்டு மாதங்கள் கழித்து நண்பர் கூட்டத்தைப் பார்க்கும் வைபவம் என்பது, அநேகமாக தேர் பார்ப்பதுபோல... சக்கர ராட்டினத்தின் உச்சியில் இருந்து ஊர் பார்ப்பதுபோல!

`ஏல... அங்கே பாரு, அருணாசலம், பத்மநாபன் எல்லாரும் எம்புட்டு வளர்ந்துட்டானுங்க. உன் ஹைட்டைவிட அதிகமா இருப்பானுவல்ல? ஆறுமுக அண்ணாச்சிக் கடையிலதானே அரிசி வாங்கி சோறு திங்குறானுவ. இல்லை, லீவுல ஆச்சி வீட்டுக்குப் போயி சிவப்பரிசி தின்னானுவுளானு தெரியலை’ என்ற பேச்சு இல்லாத வகுப்பறைகளே இராது. 

p94a.jpg

கூடவே, `எந்த வாத்தி நமக்கு வாறாரோ தெரியலை!’ என்பதற்கு இணையான பரபரப்பு, `யாருக்கெல்லாம் மீசை வந்திருக்கிறது?’ என்பதுதான். அருகம்புல்போல லேசாகக் குருத்துவிட்டிருக்கும் இளமீசையை, உதடு வலிப்பதை வெளிக்காட்டாமல், ஓரமாகச் சுருட்டி, ‘அருவா மீசையாக்கும்’ என வெறுப்பேற்றுவர் அந்த மாப்பிள்ளை பெஞ்ச்சினர்.

`மீசை, தாடி வளர்ச்சியும் பேணலும்' என்பது இன்று நேற்று அல்ல... பல ஆயிரம் ஆண்டுகளோடு மனிதனின் மத நம்பிக்கை, கலாசார நம்பிக்கை, பண்பாட்டுப் பழக்கம், பருவகால மாறுபாடு எனப் பல காரணங்களால் பரிணமித்த ஒன்று. `மிலிட்டரியில் மீசை வெச்சே ஆகணும்’ என 1450-களிலும் `சிரைச்சே ஆகணும்’ என 1900-களிலும் ஐரோப்பாவில் பல அரசியல் சட்டங்கள் வந்து போன வரலாறு உண்டு.

மீசை, காலகாலமாக ஆணின் அடையாளம்; கொஞ்சம் ஆணாதிக்கத்தின் ஊற்றுக்கண் என்றும் கொள்ளலாம். `நான் பாலகன் அல்ல, இளைஞன்’ என அறிவிக்கும் உடலின் வளர்ச்சியே `மீசை'. ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரான் விதைப்பையில் கணிசமாகச் சுரக்க ஆரம்பித்தவுடன் மீசையும் கிருதாவும் வளர ஆரம்பிக் கின்றன. சாதாரணமாக, 11 வயதில் மேல் உதட்டின் ஓரமாக விளிம்பில் விளைச்சலைக் காட்டும் இந்த மீசை மயிர், உண்மையில் தலைமயிரைவிட வேகமாக வளரக்கூடியது. வருடத்துக்கு ஆறு, ஏழு இன்ச் சராசரியாக வளரக்கூடிய இயல்பு மீசைக்கு உண்டு.

`அடிக்கடி ஷேவிங் பண்ணினால், முடி வளராது; ஏற்கெனவே பல பில்லியன் டாலரில் பணம் கொழிக்கும் ரேஸர் கம்பெனிகளின் வணிகம்தான் வளரும்’ என்கிறது மீசை ஆராய்ச்சி.
 
``மீசையும் கிருதாவும் ஏன் இப்படித் திடீரென வளர்கின்றன? நேற்று வரை அழகாக அக்காவின் குரலைப்போலவே மெல்லியதாகயிருந்தது. இன்று ஏன் என் குரல் பெரியப்பா மாதிரி இருக்கிறது?’’ எனத் தொடங்கி, தன் உடம்பில் நடக்கும் எந்த மாற்றத்தையும் கணிச மாகக் கலவரப்படுத்தும் உணர்வு களையும் யாரிடமும் விவாதிக்க முடியாமல் நிற்கும் `திடீர் ஆண்மகன்கள்’தாம் நம் ஊரில் அநேகம்.

ஒரு பெண் பூப்பெய்தும் பருவத்தில் அவர்களுக்காகக் கொடுக்கப்படும் அக்கறையில் சிறு சதவிகிதம்கூட ஆண் பிள்ளைகளுக்கு அவர்களது Male puberty நேரத்தில் நம் ஊரில் கொடுக்கப்படுவதில்லை. வயதுக்குவந்த பெண்ணை, அவள் பயத்தை, கலவரக் கண்ணீரை, அன்னை வாரி அரவணைத்துப் பல்வேறு நுணுக்கங் களைப் படிப்படியாகப் பேச ஆரம்பிப்பதுபோல், ஆண்மகனிடமும் பேச பல வீடுகளில் நண்பனாக அப்பா இல்லை. நண்பனோ, அப்பாவியாக இல்லை.

விளைவு? காம்பவுண்ட் சுவரிலும் டீக்கடை பெஞ்சிலும் அவர்கள் நடத்திய க்ளினிக்கில் மாத்ரூபூதத்தில் இருந்து பாத்ரூம் தம் வரை அறிமுகமாகின. தப்பும் தவறுமாக ஆண் உறுப்பின் அளவு முதல் அவன் இயல்பான உணர்வுகளும் அதன் விளைவுகளும் வரை அங்கே போதிக்கப்பட்ட விஷயங்கள்தாம், இன்று கொடிகட்டிப் பறக்கும் ஆண்மைப் பெருக்கி வியாபாரத்துக்கான வித்து.

``என்ன மாப்ளை... விளைச்சல் சரியில்லை போல?’’ என மீசை இல்லாத தோழனை நக்கலாக நகைக்கும் நண்பர் கூட்டம் இப்போதும் உண்டு. அந்த நகைப்பில் மிரண்ட பிள்ளை, நடு இரவில் கண்ணாடி முன் மைக்ராஸ்கோப் வைத்து மீசையைத் தேடும். ``பரு வருது. ஆனா, மீசையைக் காணோமே! ஐ திங்க் சம் பிராப்ளம் மாப்ளை. ஆக்ச்சுவலி இன்டர்நெட்ல என்ன போட்டிருக்கான் தெரியுமா..?’’ என வாட்ஸ் அப்பில் அவன் நண்பனின் அரைவேக்காட்டு மூளை தப்பும் தவறுமாகத் தின்று, அதை அரைகுறையாக எடுத்து அனுப்பும் வாந்தியைப் படித்து, பீதியோடு கிளம்பித் திரிவான் அந்தப் பூனைமீசை பாலகன். தவறாகப் புரிந்து கொண்டதை யாரிடமும் பகிராததன் நீட்சியாக, வீட்டிலும் விட்டத்தைப் பார்த்துக்கொண்டு யாரிடமும் பேசப் பிடிக்காமல், அம்மாவிடம் சண்டை கட்டுவதும், அப்பாவிடம் முனகி முனகிப் பேசி வாங்கும் திட்டுகளில்தான் முதல் உளவியல் சிக்கல்கள் ஊற்றெடுக்கின்றன. அன்றே மீசையின் பிரச்னைகளைப் பேச முடியாத அந்தப் பாலகன், பின்னாளில் தன் ஆசைகளின் எந்தப் பிரச்னையையும் பேசாமல் கற்பனைக்குள்ளும் கலவரத்துக்குள்ளும் புதைக்க ஆரம்பிக்கிறான்.

பன்னிரண்டுகளில் இப்படியான மீசைப் பிரச்னையைப்போலவே காதல் ஹார்மோன் களோடு தொடர்புபடுத்தி இருபதுகளின் இளைஞன் கலவரப்படும் இன்னொரு விஷயம், முன்வழுக்கையும் முடி உதிர்தலும். தேதிவாரியாகப் போட்டு, ``நேற்று மட்டும் விழுந்தது மொத்தம் 43 முடி சார்’’ என ஆரம்பித்து, எண்ணிய முடிகளைத் தனித்தனியே பிளாஸ்டிக் கவரில் தேதி போட்டு வைத்துக்கொண்டு,
அதை எக்ஸல் ஷீட்டில் மெயில் அனுப்பிய `முன்வழுக்கை முத்தண்ணா’க்களை எனக்குப் பரிச்சயம் உண்டு.
 
வெளியே அழகுப் பிரச்னையாக இதை அவன் சொன்னாலும், அவன் அடிமனதில் இந்த `மயிர் உதிர்தலுக்கும் உயிரணுக் குறைவுக்கும் தொடர்பு உண்டோ?’ என காம்பவுண்ட் சுவரில் குத்தவைத்து அவன் குழாம் நடத்திய க்ளினிக்கில் உருவான அன்றைய அச்சம்தான் அதற்குக் காரணம். நானோகிராம் அளவில் டெஸ்டோஸ்டீரான் கொஞ்சம் கூடுவதில்கூட இந்த மயிர் உதிர்தல் (Androgenetic alopecia) ஏற்படும் என்பது புரியாமல் மனஅழுத்தம் பெறும் அவர்கள், அதற்காக சந்தையில் கிடைக்கும் பெட்ரோல், டீசல் தவிர அத்தனை எண்ணெய்களிலும் தலையைக் காட்டுவர். சில வெளிநாட்டு எண்ணெயில் நேரடியாக டைஹைட்ரோ-டெஸ்ட்ரோஸ்டீரோன் (Dihydrotestosterone) மாதிரி, ஆண் ஹார்மோன்களின் அண்ணன், தம்பிகள் ரசாயனங்களைச் சேர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். இப்படியான இன்டர்நெட் தைலங்கள் ஒருவேளை முடியை வளர்த்தாலும், அடியை ஆட்டம் காண வைக்கும் (கருத்தரிப்புக்கான உயிரணுக்களை ஓரங்கட்டிவிட வாய்ப்பு உண்டு).

ஆண்களாலும் ஆன்லைனிலும் அதிகம் பேசப்படும் இந்த டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன், மிகமிக முக்கியமானது. அதே சமயம், இயற்கையின் மிக சூட்சுமமான படைப்பு. ஆண்களுக்குக் குறைச்சல் என்பதால் உடனடியாக நோயையும், பெண்களுக்குக் கூடுதல் என்பதால் தடாலடியான பிரச்னையையும் தரக்கூடிய சுரப்பு அல்ல அது. அதன் ரேஞ்ச் நீளமானது. நபருக்கு நபர், மரபுக்கு மரபு, பருவத்துக்குப் பருவம், வாழும் இடத்துக்கு இடம் மாறுபடும். `இந்தக் காதல் ஹார்மோன் சற்றே குறைவாக இருப்பவர்கள், அதிகம் காதலிக்கிறார்கள்; காதலிக்கப்படவும் செய்கிறார்கள். கூடுதலாகக் கொட்டிக்கிடப்பவர்கள், பெரும்பாலும் விவாகரத்துக்கு ஓடுகிறார்கள்' எனும் ஆச்சர்யமான புதிய மருத்துவ ஆய்வுக் கணிப்பு, சத்தமாகச் சொல்கிறது.

மீசையோ தாடியோ, முன் நெற்றி மயிரோ ஆண் ஹார்மோனின் அடையாளங்களே தவிர, அதன் அளவைச் சொல்லும் அளவுகோல் அல்ல. அதன் குறைநிறைக்கு என எடுக்கும் மெனக்கெடல்களில் நிறையப் பரிச்சயமும் பாதுகாப்பும் மருந்தாக இருக்க வேண்டும். தடாலடியான சிகிச்சை, பின்னாளில் கருத்தரிப்பில் சிக்கல் தர வாய்ப்பு உண்டு. மீசை துளியூண்டா இருக்கிறது என்பதற்காக, `அடடா... ஆண்மைக் குறைவோ?’ என நடுநிசி டாக்டருக்கு முக்காடு போட்டுக்கொண்டு முந்த வேண்டாம். டெஸ்டோஸ்டீரானின் படைப்பு, விந்தணுக்களை உயர்த்தப் படைக்கப்பட்டது; அதன் பக்க விளைச்சல்தான் மீசை.

அடர்ந்து, சுருண்டு நிற்கும் மீசை உள்ளோரில் சிலர் விந்தணுக்கள் குறைவோடும், ஷாரூக் கான், சல்மான் கான் மாதிரி ஆரம்பத்திலிருந்தே இருக்கும் மொழு மொழு கன்னத்தினர், மூன்று நான்கு குழந்தைகளோடும் இருப்பது உண்டு. `மீசையும் வளரவில்லை; அக்குள் மற்றும் ஆண் உறுப்பில் முடி வளரவில்லை' என்றால் மட்டுமே மருத்துவரை அணுகி ஆலோசிப்பது அவசியம். மற்றவை `எல்லாமே’ நன்றாக இருந்து, மீசையின் வளர்ச்சி மட்டும் தற்கால நன்செய் நில வறட்சி மாதிரி இருந்தால், `அமேசான் தைலம்’, `குலேபகாவலி லேகியம்’ எனத் தேடித் தேடி அலைவது, கொஞ்ச நாளில் அவர்களை உளவியல் நோயாளியாக்கி, உளவியல் சிக்கலால் வரும் ஆண்மைக் குறைவை அழைத்துவரும். மீசையின் உற்பத்தி, அடர்த்தி, நீளம் எல்லாமே நம்மைத் தேரடிக்குக் கூட்டிச்சென்ற, தாத்தா-பாட்டியிலிருந்து சமீபத்தில் கண்டறியப்பட்ட கீழடியில் புதைந்திருக்கும் நம் முன்னோர் வரை உள்ள மரபின் நீட்சியில்தான் இருக்கும். ரன்பீர் கபூர் குடும்ப மரபில் இருந்துகொண்டு, பித்துக்குளி முருகதாஸ் மீசையை எப்போதும் எதிர்பார்க்கக் கூடாது.

`அட, மீசை வளர்ந்திருக்குபோல! பெரிய மனுஷன் ஆகிட்டு வார. இன்னும் பொறுப்பு நிறைய இருக்குடா உனக்கு. கொஞ்சம் தொப்பை விழுது; சூரியநமஸ்காரம் பண்ணப்போறியா... ஜிம்ல சேரப்போறியா? என்னைப் பொறுத்தவரைக்கும் ரெண்டும் வேணும்டா’ எனப் பேச வேண்டும்.
 
பள்ளியில், பாடத்தில் மனப் பாடமாகப் படித்த டெஸ்டோ ஸ்டீரானுக்கும், நீங்கள் மொட்டை மாடியில் அவனோடு பேசும் டெஸ்டோஸ்டீரானுக்கும் வித்தியாசமான புரிதல் அவனுக்கு வரும். `பாலகனிலிருந்து இளைஞனாக மாறிவருகிறாய். பாலியல்ரீதியாக இப்படியான கிளர்ச்சியான மாற்றங்களை உன்னுள் விளைவிக்கும். இட்லியைச் சாப்பிட வயிறு சுரக்கும் `அமைலேஸ்' (Amylase) மாதிரி, அடுத்த தலைமுறையை உருவாக்க உன்னுள் சுரக்கும் திரவம்தான் விந்து’ என உடற்சுரப்புகள் குறித்தும், அதனால் வரும் மனமாற்றங்கள் குறித்தும் வெளிப்படையான ஏற்ற இறக்கங்கள் இல்லாத உரையாடல் அவனுக்கு அப்பாவிடமிருந்து அவசியம் தேவை. அநேக ஏற்ற இறக்கத்துடனும், சன்னி லியோன் உதாரணங்களுடன் நண்பன் அவற்றைச் சொல்வதற்கு முன், பாலியல் புரிதலை சிறுவயதில் அவனுக்குப் பல் துலக்கக் கற்றுக் கொடுத்ததுபோல், இரண்டு வயது வரை இரவில் படுக்கையில் சிறுநீர் கழித்தவனை அவனது இரண்டே கால் வயதில் படுக்கும் முன்னர் சிறுநீர் கழிக்கக் கற்றுக்கொடுத்தது மாதிரி நிதர்சனங்களைச் சொல்லி பாலியல் புரிதல்களை அவனுக்குள் உருவாக்கவேண்டியது பெற்றோரின் கடமை.

`கற்றுக்கொள்கிறோம்’ என்ற பிரக்ஞை இல்லாமல், கற்றுக்கொள்வது என்பது சரியான வாழ்வியல் நகர்வுகளில், நேர்த்தியான உரையாடல்களில் மட்டுமே நடக்கும். அத்தகைய வாழ்வியல் உரையாடல்கள், பள்ளிப் பாடமாக நடத்தும் பாலியல் கல்வியைவிட ஒரு துளி மேலிருந்து அதைப் புரிந்திட உதவிடும்.

- பிறப்போம்...


என்ன சாப்பிடலாம்?

p94b.jpg

பெண் குழந்தைகளுக்கு உளுந்து எப்படி முக்கியமோ, அந்த அளவுக்கு 10-12 வயதை எட்டும் ஓர் ஆணுக்கு, நிறைய புரதங்கள் அடங்கிய நிலக்கடலை, மீன், முட்டை, பாசிப் பயறு, ராஜ்மா பயறு, சிவப்புக் கொண்டைக்கடலை ஆகியவை முக்கியம். பால் பற்றி பல மாறுபட்ட கருத்துகள் உள்ளன. மருத்துவர் பரிந்துரைத்தால் இன்றி, பாலை போணி போணியாகக் குடிக்கச் சொல்லி குழந்தைகளைக் கட்டாயப்படுத்த வேண்டாம்.

எல்லா கீரைகளும் ஃபோலேட் சத்துகள், கனிமச் சத்துகளுடன், விந்தணுக்களை உற்பத்திசெய்யும் செர்டோலி செல்களையும் சீராக வைத்திருக்க உதவுபவை. மீசை வளரவில்லை என்பதற்காக, தனக்குத் தெரிந்த ஆண்மைப்பெருக்கி மருந்துகளை வாங்கித் தருவது பதின்பருவத்தில் வேண்டாம். இயல்பான உடல் வளர்ச்சிக்கு, ஹார்மோன் வளர்ச்சிக்கு உதவிடும் புரதக்கூட்டான சத்து மாவு, கம்பு-கேழ்வரகு உருண்டை எனக் கொடுத்தாலே போதுமானது.


ஜீன்ஸ், பாலகனுக்குப் பாதுகாப்பு அல்ல!

p94c.jpg

10 வயதுடைய சிறுவர்கள் பலரின் வீடுகளில் ஸ்கூல் யூனிஃபார்மைத் தவிர்த்து மற்ற ஆடைகளை அவர்களின் அலமாரியில் பார்த்தால், 90 சதவிகிதம் ஜீன்ஸ்களாகத்தான் இருக்கும். ஒருகாலத்தில் `Mining' எனும் சுரங்கத் தொழிலாளிகளின் ஆடையாக இருந்துவந்த ஜீன்ஸ், தற்போது இளம்பிராயத்துப் பிள்ளைகளின் கனவு ஆடை. `உடலை இறுக்கிப் பிடிக்கும் அந்த ஜீன்ஸ், விந்தணுக்களின் வளர்ச்சியைக் கணிசமாகப் பாதிக்கிறது’ எனப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. நிறைய இளைஞர்களுக்கு இன்று விந்தணுக்கள் குறைவுக்கு ஜீன்ஸ் ஆடையும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். வரும்முன் காப்பது சிறப்பு. வீட்டில் காற்றோட்டமான பருத்தி இழையிலான உள்ளாடை மற்றும் டவுஸர்தான் சிறப்பு.

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது பெரியவர்கள் வந்து விலாவாரியாக வெளங்கப்படுத்தினால் நல்லது ஆராச்சும் இருக்கிறியளோ என்ன??:unsure::unsure:tw_blush:

Link to comment
Share on other sites

உயிர் மெய் - 3

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

மருத்துவர் கு.சிவராமன்

 

`காலையில 7.20 மணிக்கு அவ பெரியவளாகிட்டா. பஞ்சாங்கத்தைப் பார்த்து அதுக்கான பலனை சரியா குறிச்சுத் தரச் சொல்லு. `அவ ஜென்ம நட்சத்திரம் மகம்’னு மறக்காம சொல்லு...' என அம்மா அன்றைக்குச் சொல்லி பஸ் ஏற்றிவிட்டபோது, ‘என்னத்தைச் சொல்றா? எதுக்கு அவசர அவசரமா என்னை கிராமத்துக்குத் தனியா அனுப்புறா? பஞ்சாங்கம் பார்க்கிற அளவுக்கு என்ன புனிதம் இது?’ - புரியவில்லை.

காலாபாணி ஜெயிலில் இருக்கும் கைதிக்கான சாப்பாட்டுத் தட்டை ஜெயில் கதவின் கடைசிக் கம்பி வழியாக `சர்...’ என்று அனுப்புவார்களே... அப்படி அன்றைக்கு என் பள்ளித்தோழன் கிச்சான், வெளி அறையில் தனியே பசியோடு உட்கார்ந்திருக்கும் அக்காவுக்கு அவளுக்கான சாப்பாட்டை ஏன் அவள் கையில் கொடுக்காமல் தட்டைத் தரையோடு உரசியபடி அனுப்பினான்? என்ன புதிர் இது? - தெரியவில்லை.

இப்போது, ``சார், கரெக்டா தேதி வருது. அப்புறம் சாமி பார்க்க முடியாமப்போயிடும். `அந்த அம்மனே என் வயித்துல குழந்தையா பிறக்கணும்’னு மாவிளக்கு எடுக்க நேர்ந்திருக்கேன். `தள்ளிப்போக' மாத்திரை குடுங்க!’’ என ஒரு பெண்மணி கேட்டார். ``மூளை இருக்கா உங்களுக்கு? நீங்க கும்பிடுற அத்தனை பொம்பளை சாமிகளுக்கும் பீரியட் வரும்ல. எவ்ளோ கஷ்டப்பட்டு மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டு, இப்பத்தான் சைக்கிள் சரியா வருது. இந்தச் சமயத்துலதான் கருத்தரிப்பு சாத்தியமாகும்.

p30a.jpg

இந்த நேரத்துலபோய் சாமி பேரைச் சொல்லி மருந்தைச் சாப்பிட்டு, சங்கடத்தை விலை கொடுத்து வாங்குறீங்களே...’’ எனக் கத்தியது, என்ன சங்கடம் இது? எனப் பெரும்பாலானோர் யோசிப்பதில்லை.

ஆனால், இன்றும் புதிராகவோ புனிதமாகவோ, ஓய்வாகவோ சங்கடமாகவோ, உடைத்து எறியவேண்டிய சங்கிலியாகவோ, சமூகத்தின் ஒவ்வொரு விளிம்பும் ஒவ்வொருவிதமான புரிதலை, இந்த மாதவிடாய் குறித்துப் பெண் குழந்தை மனதில் ஆழமாகப் புதைத்துக்கொண்டே இருக்கிறது.

சீக்கிய மதம் தவிர, அநேகமாக அனைத்து மதங்களும் இந்த மாதவிடாயைத் தீட்டாக, விலக்காக, கட்டாய ஓய்வாகப் பார்ப்பதுதான் இந்த `நானோ’ உலகிலும் உலக வழக்கு. `கோயிலுக்குள் வராதே; சர்ச்சில் கம்யூனியன் கிடையாது; தொழுகை வேண்டாம்’ என அத்தனை மதங்களும் ஒன்றாக நிற்கும் ஒரே விஷயம் இதுதான். ஒருவேளை இந்த மாதவிடாய் இல்லை என்றால், இந்த மானுடப் பிறப்பு என்ற ஒன்று இல்லை என்பது மட்டும் எல்லா சாமிகளுக்கும் தெரியும்.

மாதவிடாய்த் தொடக்கத்தை ஊரெல்லாம் ஃப்ளெக்ஸ் அடித்துக் கொண்டாடும் இந்தக் கூட்டம்தான், அந்தச் சமயத்தில் `சாமியைக் கும்பிட வராதே’ `சடங்கு, சாங்கியத்தில் எதையும் தொடாதே’ எனப் பயப்படவும் செய்கிறது. இன்னொரு பக்கம், `என்னது ஓய்வா... ஓரமா?

எங்க கம்பெனி சானிட்டரி நாப்கின்ஸைப் பயன்படுத்தினா, நீ லாங் ஜம்ப், ஹை ஜம்ப் மட்டுமல்ல... சர்க்கஸ்கூட செய்யலாம்’ என எல்லா நிறுவனங்களும் சங்கடம் நீக்குவது மாதிரி சந்தையைப் பிடிக்க அத்தனை ஊடகங்களிலும் சொல்லிவருகின்றன.

உண்மையில் மாதவிடாய் என்பது, கன்னிப்பெண்ணின் இதழோரத்து ஈரம் மாதிரியான ஹைக்கூ கவிதை; அவள் அலுவலகத்திலோ அடுப்பங்கரையிலோ நெற்றிப்பொட்டில் துளிர்க்கும் வியர்வை மாதிரி ஒரு மாபெரும் உழைப்பு; அகம் மகிழ்ந்து அவள் மனம்விட்டு சத்தமாகச் சிரிக்கும்போது இமையோரத்தில் பனிக்கும் நீர் மாதிரியான ஒரு பெருமிதம். சில நேரங்களில் மட்டும், `இந்த மாசமும் வந்திடுச்சா?’ எனப் பின்னிரவில் ஏக்கத்துடன் கவிழ்ந்து படுத்து அழுகையில், தலையணையை மட்டுமே ஆதரவாக அணைத்து உறிஞ்சும் கண்ணீர். மாதவிடாயின்போது வரும் குருதியோட்டம், மானுடம் முதலான அத்தனை பாலூட்டிகளின் அடையாளம். சினைமுட்டையை வந்து சேர விந்துவுக்கு விரித்துவைக்கும் சிவப்புக் கம்பளம் அது. கருவாகக் கருத்தரிக்காதபோது முட்டையோடு பெருமிதமாக வெளியேறும் வைபவமே தவிர, ஒதுக்கியது, ஓரங்கட்டியது, ஓய்வாக இருக்கச் சொன்னது எல்லாம் ஆணாதிக்க மத(ன)த்தின் வெளிப்பாடே.

``பயங்கரமா வலிக்குது மம்மி. வாந்தி வருது, தலைவலிக்குது. ஸ்கூலுக்கு நான் போகலை’’ என அழும் 11 வயதுக் குழந்தைகளை, ``லீவா! நாளைக்கு எக்ஸாம். இந்த மாத்திரையைப் போட்டுகிட்டு போ’’ என விரட்டும் கூட்டம் ஒருபக்கம். ``ஒரு எம்.ஆர்.ஐ பார்த்துடலாமா?’’ என டாக்டர் கேட்க, ``வரும்போதே எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு அல்ட்ரா சவுண்ட் எடுத்துட்டு வந்துட்டோம்’’ எனச் சொல்லும் அம்மாக்கள் இன்னொரு பக்கம். ``அதெல்லாம் ஒண்ணும் ஆகாது வா..! வந்து லைன்ல நில்லு’’ என்ற தாவணித் தோழியின் பேச்சைக் கேட்டு, கொளுத்தும் வெயிலில் நின்று `நீராரும் கடலுடுத்த...’ பாடலின் பாதியிலேயே `சொய்ங்...’ என சோகையால் மயங்கி விழும் கிராமத்துப் பெண்கள் மற்றொரு பக்கம்... என மாதவிடாயில், 11 - 12 வயதில் இன்றும் கசங்கிக் கண்ணீர்விடும் குழந்தைகளே அதிகம்.

நெடுங்காலமாக இந்தியப் பெண்ணுக்கு 14 - 15 வயதில் நடந்த இந்த மாதவிடாய் தொடக்கம், இன்றைக்கு பெரும்பாலும் 12 வயதைச் சுற்றியே நிகழ்கிறது. குழந்தைப் பருவ கவனிப்புகளும், அக்கறைகளும், மருத்துவமும், ஊட்டச்சத்து உணவும் கணிசமாகக்கூடியதுதான் இந்த மாற்றத்துக்கான முக்கியக் காரணம். அதே சமயம், இன்னும் கத்திரிப்பூ பாவாடையைக் கையில் தூக்கி, தன் ஒல்லிக்குச்சிக் கால்களால் பாண்டி ஆடும் கோதை 13 - 14 வயதில் பூப்பெய்த, போக்மேனும் டூமும் விளையாடும் குண்டு ஷ்ரேயாவோ 6-ம் வகுப்பின் ஆரம்பத்திலேயே பூப்பெய்துகிறாள். அதற்குக் காரணம், சிப்ஸையும் சிக்கன் லெக்பீஸையும் அடிக்கடி கொறிக்க ஷ்ரேயாவுக்கு வாய்ப்பு இருக்கிறது. கல்கோனா மிட்டாயைத் தம்பிக்குத் தெரியாமல் வாய்க்குள் ஒதுக்கி ரசிப்பவள்தான் கிராமத்துக் கோதை. ``ஃப்ரைடு ரைஸுக்கு உருளைக்கிழங்குப் பொரியல் மட்டும்தான் அவளுக்கு வேணும். சிக்கனைத் தவிர, வேறு எதுவும் தொட்டுச் சாப்பிட மாட்டேங்கிறா’’ எனச் சற்று உருண்டு, பருத்து உட்கார்ந்திருக்கும் தன் பெண் குழந்தையைக் கூட்டிவரும் அவளின் செல்ல அம்மாவுக்குத் தெரியாது... இந்த போஷாக்குத் தரப்போகும் பின்னாள் பிணக்கு.

p30b.jpg

குண்டான பெண் குழந்தையும், உடற்பயிற்சி இல்லாத குழந்தையும் அநேகமாக சீக்கிரத்தில் பூப்பெய்துவிடும். மாதவிடாய் தொடங்கும் வயது குறையக் குறைய, அவர்களுக்குப் பின்னாளில் சினைப்பை நீர்க்கட்டி (PCOD - Polycystic Ovarian Disease) முதல் மார்பகப் புற்றுநோய் வரை வரும் வாய்ப்பு அதிகம். இந்தச் சினைப்பை நீர்க்கட்டிகள் அதிகரிக்க அதிகரிக்க, மாதவிடாய் சுழற்சி சீரற்றுப்போகும் வாய்ப்பும் உண்டு. 28 நாள்களுக்கு ஒருமுறை வரவேண்டிய இந்த நிகழ்வு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என நிகழும். அப்படித் தள்ளிப்போகும் மாதவிடாயால் சிலருக்குப் பிற்காலத்தில் கருமுட்டை வளர்ச்சி பாதிப்பும், வெடிப்பில் தாமதமும்கூட நிகழலாம். அழுது அடம் பிடித்தாலும் கூடுதலாகச் சாப்பிடும் தயிர்ச்சோற்றுக்கும் சிக்கனுக்கும் விதிக்கும் சின்ன தடைதான், பின்னாளில் அவள் கருத்தரிப்பு கம்பெனிகளில் காத்திருக்காமல் வைத்திருக்க உதவிடும். உடனே தடாலடியாக, `அய்யய்யோ... நீர்க்கட்டியா?’ எனச் சினைப்பை நீர்க்கட்டிக்கான மருத்துவத்தை 13 வயதில் ஆரம்பிப்பது அபத்தம்.

உணவுக் கட்டுப்பாட்டையும் உடல் உழைப்பையும் அந்தக் குழந்தைக்கு அதிகபட்சம் கற்பிப்பது மட்டுமே இந்த நீர்க்கட்டியை வராமல் விரட்டும். ``ஸோ... நீ டாக்டர் அங்கிள் சொன்ன மாதிரி 5 மணிக்கு கிரவுண்டுல போய் ஓடுறே. இனி உனக்கு சிக்கன் கிடையாது’’ எனச் சொல்லி அலாரம் வைத்துக் கொடுத்துவிட்டு பெற்றோர் அவர்கள் அறையில் போய்ப் படுத்துக்கொண்டால், எந்தக் குழந்தையும் 5 மணிக்குப் புரண்டுகூடப் படுக்காது.  `இறுதிச்சுற்று’ மாதவன் மாதிரி எழுப்பி விட்டுவிட்டு, கூடவே ஓட வேண்டும். முதலில் கொலைவெறியோடு அந்தக் குழந்தை உங்களைப் பார்த்தாலும், பின்னாளில் நிச்சயம் கொஞ்சும்; பெருமையுடன் அரவணைத்துக்கொள்ளும்.

ஏனென்றால், பூனை மீசையை முறுக்கிக்கொண்டு சைக்கிளில் சுற்றும் பாலக(இளைஞ)னுக்குக் கிடைக்கும் வாய்ப்பு, நகர்ப்புறத்தில்கூட நம் பெண் குழந்தைகள் பலருக்குக் கிடைப்பதில்லை. ``இவ்ளோ நாள் போனது இருக்கட்டும். நீ இப்போ பெரிய மனுஷிங்கிறதை நினைவுல வெச்சுக்கோ. பசங்க கண்ணு, அவங்க அங்கிள் கண்ணு எல்லாம் சரி கிடையாது’’ எனப் பயமுறுத்தி, தன் ஜன்னலுக்கு வெளியே மட்டும் தெரியும் உலகத்தை ஊறுகாய் போட்டுக்காட்டுவது தொடங்கும். `அப்படின்னா, உன் செல்போனைத் தா... நான் கேண்டி க்ரஷ் விளையாடுறேன்’ என ஆரம்பிக்கும் பெண் குழந்தைக்கு, அன்று முதல் சிறகுகள் சிறுத்துப்போய் உடல் பருக்கும்... பிராய்லர் கோழிபோல! பருத்த உடல் மாதவிடாய்ச் சீர்கேட்டுக்கான முதல் நுழைவாயில்.

குழந்தையின் பருத்த உடலைக் குறைப்பது எப்படி என்பது, கிட்டத்தட்ட `ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யார்?’ என்கிற மாதிரி லேசில் கண்டறிய முடியாத சிக்கல். மரபால் வந்ததா... உடன் உட்கார்ந்து அதிகம் சாப்பிட்டதால் வந்ததா... வேலையே செய்யாததாலா... எது காரணம் என்பதைத் தெரிந்துகொண்டால்தான் தீர்வு கிடைக்கும். நீர்க்கட்டிகளைக் குறைக்க/நீக்க, முதலில் உணவிலிருந்துதான் அதைத் தொடங்க வேண்டும். மாதவிடாயைச் சீர்ப்படுத்த, முதலில் உணவில் ஹை கிளைசிமிக் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

p30d.jpg

நவீன மருத்துவ அறிவியல், ரத்தத்தில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தி ஆளுமைசெய்யும் இன்சுலின் சுரப்பானது, 12 - 13 வயதில் கொஞ்சம் கட்டுப்பாடற்றுச் சுழல்வதால், அகோரப்பசியும் (Hyperinsulinimic), அதையொட்டி சினைப்பையில் நீர்க்கட்டியும் வருகின்றன. அதனால்தான், நிறைய நீர்க்கட்டி இருந்தால் அலோபதி, ரத்த சர்க்கரைக்கான மாத்திரையைப் பரிந்துரைக்கிறது. `வெள்ளை மாத்திரை ஒண்ணு, பெரிய மாத்திரை ரெண்டு, பச்சை மாத்திரை ஒண்ணு, சரியா?’ என, தான் சாப்பிடும் இந்த ரசாயனக் குமிழ்கள் எதற்கு... ஏன்... உள்ளே போய் என்ன செய்யும் என எந்தப் புரிதலுமே பெருவாரியான மக்களுக்கு இல்லை. அதைப் புரியவைக்கும் அளவுக்கான நேரமும் மருத்துவ உலகில் சிலருக்கு இல்லை; மனசோ பலருக்கு இல்லை. விளைவு? `நீர்க்கட்டி போய் மாதவிடாய் சீராகணும்’ என அன்று அவளுக்கு ஆரம்பிக்கும் இந்த மருத்துவம், அவளின் பேரன், பேத்தி காலம் வரை தொடர்கிறது... இன்னும் கூடுதல் நோயுடன் கூடுதல் வேதனைகளுடன் அதைவிடக் கூடுதல் மாத்திரைகளுடன்!

- பிறப்போம்...


p30c.jpg

சினைப்பையில் நிறைய நீர்க்கட்டிகள்... பூப்பெய்திய பிறகு மாதவிடாய் சரியே இல்லை... என்ன சாப்பிடலாம்?

* காலை பானம்: பால் வேண்டாம். கருப்பட்டி காபி அல்லது எலுமிச்சை/ஆரஞ்சு பழச்சாறு 200 மி.லி (10 மி.லி பழச்சாறு. மீதி 190 மி.லி இளஞ்சூட்டு நீர் - சிறிது தேன்).

காலை உணவு: பழத்துண்டுகளுடன் கம்பு-சோள தோசை (கம்பு இரும்பு டானிக்; சோளம் புரத டானிக்).

காலை பள்ளிச் சிற்றுண்டி: கொய்யாப் பழத்துண்டு அல்லது எள் உருண்டை.

மதியம்: காய்கறி சாலட், கீரைக்கூட்டு அல்லது மீனுடன் சிவப்பரிசி, கறுப்பரிசி அல்லது பழுப்பரிசிச் சோறு.

மாலை: பால் சேர்க்காத தேநீர், சுண்டல்.

இரவு: முழுத்தோலுடன்கூடிய கோதுமை ரொட்டி, காய்கறி சிறுதானிய உப்புமா.

மிக முக்கியமாக : கணக்கு, உயிரியல் பாடம் மட்டுமல்லாமல் நீதிபோதனை மற்றும் விளையாட்டுப் பாடங்களுக்கெல்லாம் ட்யூஷன் வைக்கும் பெற்றோரின் `வியாதி'யையும் குணப்படுத்த வேண்டும். மாலை நேரத்தில் பெண்களை விளையாட, நடனம் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். தினசரி ஓட்டமும் நடையுமான பயிற்சியுடன் ஏதேனும் விளையாட்டு – மொத்தமாக 1-2 மணி நேரத்துக்கு.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

உயிர் மெய் - 4

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

மருத்துவர் கு.சிவராமன்

 

``இந்த கப்லதான் புடிச்சுட்டு வரணும்; மாடியில் ஆண்கள் டாய்லெட் இருக்கு. அங்கே போய் எடுத்துட்டு வாங்க’’ என்று அந்தப் பெண் தட்டச்சு செய்துகொண்டே, பிளாஸ்டிக் புட்டி ஒன்றை நீட்டும்போது, அதை வாங்கிக்கொண்டு கழிப்பறைக்கு நடக்கும் ஆண்மகனின் மனதுக்குள் வரும் வலி, உலகின் உச்சகட்ட வலி. பல்வேறு நோயாளிகள் பயன்படுத்தும் கழிப்பறையில், பினாயில் வாடைக்குள் நின்றுகொண்டு, உயிரணுக்களை சேகரித்துத் தர நிற்கும் கணத்தில் ஆணின் மனம், `மலரினும் மெல்லியது காமம்... தேனிலவில், கசிந்துருகாத உயிரணுவை இப்படி மூத்திரச்சந்தில் நின்றுகொண்டு, நினைவில் புணர்ந்து சேகரிப்பது மாதிரியான மருத்துவ வன்முறை உலகில் வேறெதுவும் இல்லை’ என அங்கேயே உரக்கக் கத்தத் தோன்றும். அதே சமயம், முந்தைய இரவில் அவளோடு நடந்த உரையாடல் நினைவுக்கு வரும். ``ம்ஹும்... வேண்டாம். இன்னிக்கிக் கூடாது. டாக்டர், நாலு நாளைக்கு சேராம இருந்து, அஞ்சாவது நாள் காலைல உயிரணுக்களைச் சேகரிச்சுத் தரச் சொல்லியிருக்கார். இப்போ சமர்த்தா போய் தூங்குங்க’’ என அவள் முத்தமிட்டு விலகிச் செல்கையில், அவள் இமையோரத்து கண்ணீர்த்துளி நெற்றியில் விழுந்து, சுளீர் எனச் சுட்டது இப்போதும் கொதிக்கும். மொத்தத்தில், `உயிரணு எண்ணிக்கையை அளந்து வரச் சொல்லும் சோதனை, உளவியலாக அதிகபட்ச வலிதரும் ஒன்று’ என்கிறது மருத்துவ உலகம்.

p32b.jpg

``சரியா புட்டியில சேகரிச்சீங்களா... போன தடவை மாதிரி கீழே சிந்திடலையே?’’ என வரவேற்பறையில் காத்திருக்கும் மனைவி கேட்கும்போது முணுக்கென கோபம் பற்றிக்கொள்ளும். கணவன் கண்ணில் தெரியும் கோபத்தை அவசரமாக அடையாளம் கண்ட மனைவி, ``சாரிங்க... ரொம்ப நெர்வஸா இருக்கு, அதான்...’’ எனக் காதலோடு கைகளை இறுகப் பற்றி விசும்பிக்கொள்வதும், ``ச்சேய்... எதனாச்சும் ஸ்கேனு, எம்.ஆர்.ஐ-னு செஞ்சு இந்த விந்தணுவை எண்ணிப் பார்க்க முடியாதா?’’ எனப் புலம்புவதும், ``இதுதான் கடைசி. இனிமே சத்தியமா இப்படி ஒரு சோதனைக்கு வரவே மாட்டேன்’’ என வியர்த்து, வெறுத்து, சோதனைச் சாலையைவிட்டு அவர்கள் வெளியேறுவதும் இப்போது நகர்ப்புறங்களில் அதிகம்.

`கருத்தரிப்புக்குத் தேவையான அளவு உயிரணுக்கள் உள்ளனவா?' என்பதை அறிந்துகொள்ள எடுக்கும் சோதனை, கருத்தரிப்பு தாமதத்துக்கான சிகிச்சையில் தலையாயது. ஆனால், `எப்போது சோதனைக்குச் செல்ல வேண்டும்?’ என்பது முன் நிற்கும் முதல் கேள்வி. `எந்த அளவுக்கு இந்த விந்தணு சோதனை துல்லியமானது?’ என்பது அடுத்த கேள்வி. `திருமணமாகி குறைந்தபட்சம் ஒன்றரை ஆண்டுகளாக, தொடர்ச்சியான உடலுறவு இருந்த பின்னரும் கருத்தரிக்கவில்லை என்றால் மட்டுமே மருத்துவரை ஒரு தம்பதியர் அணுக வேண்டும். அதுதான் நெறி' என்கிறது மருத்துவ அறம்.

அப்படியான குடும்ப உறவில் இருந்தும், கருத்தரித்திராத தம்பதியர் முதலில் தங்கள் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசிக்கலாம். `எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது. ஏன் இன்னும் நிகழவில்லை?' எனும்போது, முதலில் சோதிக்கவேண்டியது, ஆணின் விந்தணு சோதனைதான்.  எடுத்தவுடன் பேக்கேஜ் டீலாக, எல்லாச் சோதனைகளையும் இருவருக்கும் ஒரே தடவையில் செய்து முடிப்பது அவசியமற்றது. ஒருவேளை கருத்தரிப்பு தாமதம் எனத் திருமணமாகி 8-10 ஆண்டுகள் ஆன பிறகு, வரும் தம்பதியரிடம் வேண்டுமானால் இப்படியான மொத்தச் சோதனைகள்... அதுவும் சில நேரத்தில் மட்டும் அவசியப்படலாம். ``அந்த கம்பெனி பேப்பரையெல்லாம் நாங்க பார்க்கவே மாட்டோம். புதுசா முதல்ல இருந்து மறுபடியும்...’’ என பரோட்டா சூரி மாதிரி சோதனை செய்யச் சொல்லும் வேதனைகள் நம் ஊரில்தான்
மிக அதிகம்.

உலகெங்கும் உள்ள கருத்தரிப்பு தாமதத்தில் ஏறத்தாழ 60% குறைபாடு ஆணில்தான் உள்ளது. ஆதலால், முதலில் அறியப்பட வேண்டியது ஆணின் உயிரணு, விந்து. ``எனக்கு எல்லாமே நல்லாத்தான் இருக்கு. அவளுக்குத்தான் மாதவிடாய் சரியான நாளுக்கு வர்றதில்லை. முதலில் அவளைச் சரி பண்ணுங்க’' எனச் சொல்லும் ஆணாதிக்க அரைவேக்காடுகள் இன்னும் இங்கே அதிகம். அவர்களில் பெரும்பாலோருக்கு விந்து பற்றியத் தவறான புரிதலோடு, உளவியல் சிக்கல் ஒட்டியிருப்பதுதான் சோதனைக்கு முன்வராமல் ஒளிவதன் காரணம். ``80 துளி ரத்தம் ஒரு துளி விந்தாமே’’ எனத் தொடங்கி, உயிரணுக்கள்
குறித்த சாமானியனின் புரிதல் அலாதியானது. `விந்துவிட்டவன் நொந்து கெட்டான்’ என்ற எதுகை மோனையுடன் எக்கச்சக்கமான பழமொழி மிரட்டல் வேறு, நம் ஊரில் காலகாலமாகச் சுற்றித் திரிகிறது. இந்தப் பழமொழிகளுக்குப் பின்னணியில் வெகுஜனம் தவறாகப் புரிந்துகொண்ட ஒரு மரபு அறிவியல் இருக்கிறது.

`விந்து’ எனும் உயிரணுவும், `சுரோணிதம்’ எனும் சினைமுட்டையும் பாரம்பர்ய சித்த ஆயுர்வேத அறிவியலில் மிகமிக முக்கியமான தாதுக்கள்.

`7-ம் அறிவு’ மாதிரி அது ஏழாம் தாது. நாம் தினம் தினம் சாப்பிடும் ஒவ்வொரு வேளை உணவும் முதல் நாள் அதன் சாரமாகவும், பின்னர், அடுத்தடுத்த நாள்களில் ரத்தம், ஊன், கொழுப்பு, எலும்பு, மூளை எனக் கடந்து ஏழாம் நாள் சுக்கிலம் (ஆண் உயிரணு) / சுரோணிதம் (சினைமுட்டை)-யில் வந்தடையும் என்பது அந்தக்காலக் கணக்கு. விந்தை வலுப்படுத்த வேண்டிய அக்கறை ஒவ்வொரு வேளை உணவிலும் இருக்க
வேண்டும் என்பதுதான் அதன் முக்கியக் கருத்து. காண்டாமிருகக் கொம்பிலிருந்தோ, `காண்டம்' வாசத்திலிருந்தோ விந்துவுக்குத் தடாலடி பலம் வருவதில்லை.  ஒவ்வொரு வேளை உணவும் சீராக உட்கிரகிக்கப்பட்டு, உடலின் ஒவ்வொரு திசுவின் மூலைக்குள்ளும் சீராகப் பயணப்பட்டு பயணப் பட்டு, கடைசியாக அது விதைப்பையின் உள்ளே உயிராற்றல் மிக்க அணுவாக உருவாக்கப்படும் என்பதுதான் அந்தக்காலப் புரிதல். சுற்றி வளைத்துப் பார்த்தால், `உயிரணு செர்டோலி செல்லுக்குள் உருவாகும்' என இதனைச் சுருக்கமாகச் சொன்ன நவீன அறிவியல் கருத்தோடு ஒத்துப்போகும்
நம் ஊர் அறிவியல்.

உயிரணு, இயற்கையின் படைப்பில் ரொம்பவே தனித்துவமானது. `உடலின் மற்ற கோடானுகோடி அணுக்கள் இருந்த இடத்தில் அப்படியே தேமே என இருந்துகொண்டு, தங்களுக்கு இடப்பட்ட பணியை ஆயுள்காலம் வரை செய்துகொண்டி ருக்கும். ஆனால், இந்த ஆணின் உயிரணுவும், பெண்ணின் சினை முட்டையும் தனக்கென அபரிமித இயக்க ஆற்றலைப் (Kinetic energy) பெற்று, தன்னோடு படைக்கப்பட்டுக் குத்தவைத்திருக்கும் சக பயணிகள் ஒவ்வொன்றோடும் போட்டி போட்டுக்கொண்டு, முந்தியடித்து இலக்கை நோக்கிப் பொங்கி எழ, நீந்த, உருண்டோட எப்படிக் கற்றது?' என்பது இயற்கையின் இன்னும் சரிவரப் புரியாத விந்தை.

ஒவ்வொரு முறை உடலுறவின்போதும், `காதல் மன்னர்கள்’ காலத்தில், அவர்கள் 60 முதல் 120 மில்லியன் உயிரணுக்களை (ஒரு மி.லி அளவில்) சினைமுட்டையை நோக்கி அனுப்பினார்கள். `காதல் இளவரசர்கள்’, `காதல் பேராண்டிகள்’ காலத்தில் இவை 15-20 மில்லியன்களாக நலிந்துபோய்விட்டன. நவீன மருத்துவ அறிவியல், `ஒரு மி.லி விந்தில் 20-39 மில்லியன் அணுக்களாவது இருந்தால்தான் கருத்தரிப்பது சாத்தியம்’ எனச் சொல்கிறது. ஆனால், உலகெங்கும் உள்ள கருத்தரிப்பு ஆய்வாளர்கள் `இந்தக் கணக்கெல்லாம் ரொம்பத் தப்பு. இது சமீபத்தில் டேம் தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோல் போட்ட `செல்லூர்' சயின்ஸ் மாதிரி செல்லாது செல்லாது. முறையான புள்ளிவிவர ஆய்வுகள் இல்லை. கொஞ்சூண்டு விந்துள்ளவர் குழந்தை பெறுவதும், கோடிக்கணக்கில் அணுக்களை வைத்துக்கொண்டு குழந்தைக்காகக் காத்திருப்பதும் நிறைய குழப்பங்களை விளைவிக்கிறது' என்கிறார்கள். பெருவாரியானோர் ஏற்றுக்கொண்ட கணக்கில், ஒரு புணர்ச்சியில் 2.5 முதல் 3 மி.லி அளவேனும் விந்து இருக்க வேண்டும். அதில், ஒரு மி.லிட்டரில் 39 மில்லியன் உயிரணுக்கள் இருந்தால், கருப்பைக்குள்ளான ஓட்டப்பந்தயத்துக்கு அவை தயாராம். அப்படி மொத்தமாக ஓடும் உயிரணுக் கூட்டத்தில் ஏற்கெனவே செத்துப்போன, நோஞ்சானாயிருக்கிற மற்றும் உடல்திறனற்ற உயிரணுக்கள் எல்லாமே கலந்து இருக்கும்.  அவை அனைத்தும், காஷ்மீர் பனிச்சருக்கு போலிருக்கும் கருப்பையின் வழுக்குப் பாறையின் உச்சியில் `வான்.. வருவான்...' என இசைத்துக்கொண்டு மணிரத்னம் படத்தின் ஹீரோயின் மாதிரி காத்திருக்கும் சினை முட்டையை நோக்கி மூச்சிரைக்க சரேலென முன்னேறும். முதலில் வந்துசேரும் விந்தணு, தன் உச்சி மண்டையின் கூரான கன்னத்தை அவளின் (சினைமுட்டையின்) கன்னத்தோடு உரசும். கூடவே அதனோடு அனுப்பும் அக்ரோசோம் (Acrosome) ரசாயன சமிக்ஞையில், அவள் கோட்டைச் சுவர் உடைந்து, செம்புலப் பெயனீர்போலக் கலக்க... அடுத்த விநாடியில் புது ஆதார் கார்டு புறப்படுகிறது!

p32a.jpg

பெண்ணுறுப்பில் இருந்து கருப்பையை நோக்கி கீழிருந்து மேலாகத் தொடங்கும் ஓட்டப்பந்தயத்தில் முன்னேற முதலில் போதிய கூட்டம் வேண்டும்; அபரிமித இயக்க ஆற்றல் வேண்டும்; ஓட்டப் பந்தயத்தில் களைத்திடாமல் இருக்க உணவு வேண்டும்; மேல் நோக்கி ஓட அதற்கேற்ற உடல்வாகு வேண்டும்.

இதையெல்லாம் கணக்கிடத்தான் விந்தணுச் சோதனை. இந்தச் சோதனை எப்படி நடக்க வேண்டும், எப்படி இந்தக் கணக்கை எண்ண வேண்டும் என்றெல்லாம் உலக சுகாதார நிறுவனம் பல வழிகாட்டுதல்களைச் சொல்கிறது.

உயிரணுக்கள் சோதனை என்பது ஒரு சிறிய வழிகாட்டுதல் மட்டுமே. சோதனையில் பெறும் விந்துவுக்கும், `ஒரு கண்ணில் வலி வந்தபோது மறுகண்ணும் தூங்கிடுமா?' என வைரமுத்து வரிகளோடு காதல்செய்து பெறும் உயிரணுக் களுக்கும் வித்தியாசம் ஏராளம் உண்டு. உடல் உறவின்போது, முதலில் கசியும் புராஸ்டேட் கோள திரவம் கருப்பையின் வாசலை ஊடுருவ, அதன் வாயில் பகுதியை ஒட்டி சில சமிக்ஞை தருமாம். பின்னால் பெண்ணுறுப்பில் மொத்தமாகக் காத்திருக்கும் உயிரணுக் கூட்டமும், மேலிருந்து சமிக்ஞை கிடைத்தவுடன், அதன் பின்னர் மொத்தமாக மேல் நோக்கி ஓடுமாம். உறவின் உச்சத்தில் இப்படியெல்லாம் நடக்கும் திட்டமிடுதலை, புட்டியில் பிடித்துத்தரும் உயிரணுக்களில் மொத்தமாக அளந்திட முடியாது. விழியோரத்தில் தெரியும் காதல், இதழோரத்தில் அரவணைக்க அழைக்கும் புன்னகை, மூச்சுமுட்டக் கொடுக்கும் முத்தம், பரவசமூட்டவைக்கும் பள்ளிக்காலத்தில் அவனுக்குப் பிடித்த கல்கோனா மிட்டாய் பரிசு, ஓய்ந்துவரும் பொழுதில் `நானிருக்கேன்டா!' என கரிசனத்தோடு கழுத்தைச் சுற்றும் கரங்கள்... இன்னும் எத்தனையோ, உயிரணுக்களை உருவாக்கித்தள்ளும்; திறம் படைக்கும்; இலக்கை நோக்கி ஓடவைக்கும்; கருத்தரிக்கவைக்கும்.

- பிறப்போம்...


விந்தணு சோதனை... கவனத்தில் கொள்ளவேண்டியவை!

ரண்டு முதல் ஏழு நாள்கள் உடலுறவுகொள்ளாமல் இருந்து சோதனைக்குச் செல்ல வேண்டும். `போன மாசம் புணர்ந்தது... அதுக்கப்புறம் இல்லை. அப்படின்னா, அளவு நிறைய இருக்கும்’ என இன்ஜினீயரிங் கணக்குப் போட்டு நீங்கள் சென்றால், அது அப்பட்டமான தவறு. அணுக்கள் உடைந்தும் இறந்தும் அதில் இருக்கும். உங்கள் மருத்துவர் சொல்வதைக் கேளுங்கள்.

p32c.jpg

சோதனையகத்தில் சேகரித்துத் தருவது சிறந்தது. அதற்கான மனநிலை முற்றிலும் இல்லாதபோது, வீட்டிலிருந்து 20-30 நிமிடங்களில் சாம்பிளைத் தர இயலுமென்றால், உங்கள் மருத்துவரிடம் ஒப்புதல் பெற்று, உடலுறவில் காண்டம் உதவியுடனோ, விந்து வெளியேறுவதற்கு முன்னதாக (Coitus interruptus) அதனைச் சேகரித்தோ தரலாம். வீட்டில் இருந்தே பழைய பெருங்காய டப்பாவில் பிடித்துவருவது, சாதாரணக் கடையில் கிடைக்கும் ஆணுறை அணிந்து புணர்ந்து, அதை புட்டியில் மாற்றி எடுத்து வருவதெல்லாம் தவறான விஷயம். அதற்கென பிரத்யேக காண்டம், சோதனைச் சாலையில் பெறப்பட்ட கிருமி நீக்கம் செய்யப்பட்ட புட்டி தேவை.

முந்தைய இரவில் புகை, மதுப் பழக்கங்கள் இருப்பது உயிரணுவின் தரத்தைக் குறைக்கும். சோதனைக்கு முன்னர், அதிக காபி அருந்துவதும் தவறு. சிறுநீர் கழித்துவிட்டு, கைகளையும் ஆணுறுப்பையும் சோப்பு நீரில் தூய்மை செய்துவிட்டு, முழுமையாக உலர வைத்துவிட்டு, உயிரணுக்களைச் சேகரிக்க வேண்டும். கழிப்பறையில் சேகரிப்பது கூடாது. சோதனைச்சாலையில் இதற்கென பிரத்யேக அறை வேண்டும்.

கொஞ்சம் குறைவாக முடிவுகள் இருந்தால், அதற்காகப் பதறவேண்டியதில்லை. ஒரு முறை பெறப்பட்ட முடிவு ஒருபோதும் சரியாக இருக்காது. 4-6 வார இடைவெளியில் இரண்டு, மூன்று முறை சோதிக்க வேண்டும். அதன் சராசரிதான் கிட்டத்தட்ட சரியான அளவாக இருக்கும். இன்றைக்கு எடுத்துவிட்டு, நான்கு நாள்கள் கழித்து இன்னொரு சாம்பிள் கொடுப்பது தவறு.

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

உயிர் மெய் - 5

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

மருத்துவர் கு.சிவராமன்

 

ருத்தரிப்புக்காக மருத்துவமனை வாசலில் காத்திருக்கும் முக்கால்வாசி தம்பதியருக்கு அனைத்துமே எண்களைச் சுற்றிய உலகம்!  `டி5-ல் (மாதவிடாய் தொடங்கியதிலிருந்து ஐந்தாம் நாள்) ஹார்மோன் அளவு தெரியணும். டி6-ல், உயிரணுவை எண்ணிப் பார்க்கணும்.  டி8-ல், சினைப்பைக் குழல் சரியா இருக்குதானு சினைமுட்டை வரும் பாதையை ரேடியோ ஆக்டிவ் திரவம் செலுத்தி வலியோடு சோதிக்கணும். டி14-ல் உடலுறவுகொள்ள வேண்டும்...' என எல்லாமே எண்கள். எண்களைப் பார்த்துப் பார்த்து செய்யும் காதல் மட்டுமேதான் கருத்தரிக்கும் என்ற அறிவியல்/வணிகக் கணக்கில், கண்கள் சொல்லும் காதல் கணக்கு, காணாமல் போய்விட்டது.

p30a.jpg

45 வயதில்கூட நகர நெரிசலில் நசுங்கிப்போய் வீட்டுக்கு வரும்போதும், ஜன்னலோரத்தில் தனிமையில் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு, தூரத்தில் தாயோடு விளையாடும் குழந்தைகளைத் தவிப்போடு பார்த்துக்கொண்டிருக்கும் மனைவியின் முகத்தைத் திருப்பி, அவள் விழியோரக் கண்ணீரை விலக்கி, கண் பார்த்து கண்ணால் எழுதும் மௌனக் கவிதையின் சிலாகிப்பில், அது தரும் சிலிர்ப்பில் மிச்சம் மீதி இருக்கும் முட்டையும் உயிரணுவும் ஓடிவந்து கட்டிக்கொள்ளும். கண்கள் சொல்லும் பரவசத்தின் அறிவியல், எண்கள் சொல்லும் அறிவியலைவிட ஆழமானது. 

``ஹேய்... இந்தப் பூ அமேஸான் காட்டில் மட்டுமே பூக்கும். போன வாரம், அங்க பூத்துச்சாம்; கஷ்டப்பட்டு வரவெச்சேன். இந்தா...’’ என அவள் கண்பார்த்துச் சொன்ன பரவசமூட்டிய பொய், கல்யாணத்துக்குப் பின்னர், கணிசமாகக் காணோம். மாறாக, ``இன்னிக்கு உனக்கு பர்த்டே இல்லை... அமேஸான்ல ஆர்டர் பண்ணணும்னு நெனைச்சிட்டிருந்தேன்... ஸாரிப்பா. கிளையன்ட் மீட்டிங்ல மறந்துட்டேன்...’’ எனும் நிதர்சனமான உண்மை எக்கச்சக்கமாகக் கூடிக்கொண்டே செல்கிறது. புனைவான அமேஸான் பூக்களில் இருந்த கவித்துவமான காதலும் கற்பனையும் மட்டுமே காமத்தின் ஊற்றுக்கண் என்பது
மாறி, நிதர்சனமான வெற்று எண்களில் மட்டுமே விதவிதமாக எண்ணப்படுவதுதான் இன்றைக்குப் பெருகும் கருத்தரிப்பு மையங்களின் அடிக்கல். 

கவித்துவப் பார்வையும், அதை ஒட்டிப் பொங்கும் காமமும் கணிசமாகக் காணாமல் போவதில் எக்குத்தப்பாகப் பெருகும் இன்னொரு விஷயமும் ஒரு முக்கியக் காரணம். ``என்னால் முடியாது; எனக்குக் குழந்தை பாக்கியத்துக்கு வாய்ப்பில்லை. என் தவறான பழக்கங்கள் என்னை முற்றிலும் ஆண்மையற்றவனாக மாற்றிவிட்டன. அதற்கான தகுதியை இழந்துவிட்டேன்’’ எனக் கூனிக்குறுகி, கைகள் வியர்த்து, படபடப்புடன் சொல்லும் ஆண்கள் இன்று அதிகம். ``அப்படி எந்தக் குறையும் உனக்கு இருப்பதாகத் தெரியவில்லை. உன் அத்தனை மருத்துவ சோதனை முடிவுகளும் மிகச் சரியாகவே உள்ளன. எதற்கு இந்தப் பதற்றம்?’’ என்று சொன்னப் பின்னரும் எந்தவிதச் சமாதானமும் அடையாமல் மீண்டும், ``என்னால் ஒரு நிறைவான தாம்பத்திய உறவைத் தர இயலாது. நான் அந்த விஷயத்தில் சற்று ஊனமானவன். என்னுடைய தீயப் பழக்கம் அதற்கான காரணம்’’ எனத் தாழ்வு மனப்பான்மையின் உச்சத்தில், உள்ளங்கை வியர்க்கச் சொல்லும் அந்த ஆண்மகனின் தவறான புரிதலுக்குப் பின்னால், இந்தச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற பாலியல் குறித்த முற்றிலும் தவறான செய்திகள் மிக முக்கியக் காரணம். வெளிப்படையாகப் பாலியல் குறித்துப் பேச முன்வராத நம் சமூகத்தில், சிக்கும் ஆண்மகனைப் புரட்டி எடுத்து, அடித்து, தின்றுத் துப்பும் அறமற்ற வணிகக் கும்பல், மருத்துவர் வேடம் தரித்து, ``நீ திருமணத்துக்கு லாயக்கற்றவன், இளம் வயதில் உன் சுய இன்பப் பழக்கத்தில் உன் ஆணுறுப்பு  சிறுத்துவிட்டது; தளர்ந்து விட்டது. ஒரு பெண்ணையும் உன்னால் திருப்தியடையச் செய்ய முடியாது; குழந்தையும் பெற்றெடுக்க முடியாது’’ என்ற தீய விஷத்தைத் தொடர்ந்து அடிமனதில் புகுத்திவருகிறது.

இது ஆரம்பித்தது, இன்றைக்கு இப்போது நள்ளிரவில் நாம் தொலைக்காட்சி ஊடகங்களில் அடித்தொண்டையில் ஐஸ்க்ரீம் தடவிப் பேசும் விளம்பரங்களில் மட்டுமல்ல... பிரபல இதழ்களில், பொடி எழுத்துகளில் பொய்களைப் பொறுக்கிப் போட்டு வரும் விளம்பரங்களில் மட்டுமல்ல... ரொம்ப நாளாக நடக்கும் பித்தலாட்டம்.

1400-களில் இந்தியாவில் முதன்முதலில் இந்திய மருத்துவ முறைகளைப் பற்றி, மூலிகைகளைப் பற்றி ஆவணப்படுத்திய கார்சியா டி ஆர்த்தா (Garcia de Orta) எனும் போர்ச்சுக்கீசிய பாதிரியார் தென் இந்திய மருத்துவ முறைகளைப் பற்றி  ஆவணப்படுத்துகையில், `சென்னை மாகாணத்தில் பிரபுக்களும் பெரும் செல்வந்தர் களும் மூலிகைகளைக்கொண்டு அவர்களின் ஆண்மைக்குறைவுக்கு வைத்தியம் செய்து கொள்கின்றனர்’ எனப் பதிவிடுகிறார். இந்தச் செய்தியைப் பார்த்தால், இதே வேலையில் காலகாலமாக ஒரு பெரும் அறமற்ற கூட்டம், ஆணுக்கு பாலியல் குறித்தத் தவறானப் புரிதலை உண்டாக்கி, அடிமனதில் அழுத்தம் வரவழைத்து, காசு பண்ணிக்கொண்டிருந்தது என்பது புரிகிறது.

இந்தப் போலிகள் கொடுக்கும் மனஅழுத்தத்தின் தொடக்கப் புள்ளி, போர்னோ (நீலப்படங்கள்) பக்கங்கள் கொடுப்பது. அறியாத வயது கொடுக்கும் ஈர்ப்பிலும் கட்டுக்கடங்காத ஆர்வத்திலும், அம்மாவின் செல்போனை வாங்கி, நேற்று வரை `கேண்டி கிரஷ்' விளையாடியவன், இன்று பாத்ரூமுக்குள் போனைத் தூக்கிச் சென்று பெரும்பாலும் நோண்டுவது போர்னோ பக்கங்களை. தான் பார்த்த விஷயங்களைப் பரவசத்தோடு நட்பு வட்டாரத்தில் பகிர்வதில் அவனுக்கு ஏற்படும் முதலும் முற்றிலுமான தவறான கற்பிதம், `ஆண்மை என்பது உறுப்பின் நீள அகலமே' என்பதுதான். போர்னோவில் பார்த்தவற்றை நேரடியாக ஒப்புநோக்கி, `என் அளவு அப்படி இல்லையே; இது பெரும் குறைபாடு. இதைச் சரிசெய்யாவிட்டால், காலம் முழுக்க அவமானத்தில் கூனிக் குறுகி வாழ வேண்டியதுதான்’ என்ற முற்றிலும் பிழையான முடிவுக்கு அவன் வருகிறான். `நீட்' எழுத பயந்து நிற்கும் ப்ளஸ் டூ பையன்களும் சரி, ஏற்கெனவே பி.டெக்., பி.இ., படித்துவிட்டு, `கேட்’ எழுத வியர்த்து நிற்கும் அறிவு ஜீவியும் சரி, இந்த விஷயத்தில் படு மக்காக நிற்பது இன்றும் அவர்களுக்குத் தெளிவாக நடத்தாத பாலியல் பாடத்தால்தான்.

`ஒரு பெண்ணுக்கு பாலுறவின்போது சரியான மகிழ்வையும் தூண்டுதலையும் தரக்கூடிய வாயில்பகுதி வெறும் இரண்டு இன்ச் அளவுதான். உடல் சேர்க்கையில், இந்தப் பகுதி தூண்டப்பட்டாலே ஒரு நிறைவான கலவி இன்பத்தை இருபாலரும் அனுபவிக்க இயலும். குழந்தைப்பேற்றுக்கோ அந்த வாயில் பகுதியில் செலுத்தப்படும் உயிரணுக்கள், முழுத் திறனுடன் மேல்நோக்கிச் சென்று கருத்தரிப்பை நிகழ்த்த இயலும். ஆணுறுப்பின் அளவு என்பது மங்கோலியர், ஆசிய மரபினர், ஆப்பிரிக்க மரபினர், ஐரோப்பியர் என்ற மரபின்படியம், அவரவர் உயரம் எடைக்கு ஏற்றபடியும் மாறுபட்டிருக்கும். தடகளத்தில் பறக்கும் உசேன் போல்ட்டின் நீண்ட தொடை எலும்புக்கும், நீச்சல்குளத்தில் மோட்டார் படகுபோல் விரையும் பில்ப்ஸின் (Phelps) நீண்ட கைகளுக்கும், எப்படி ஒரு நீண்ட மரபுப் பின்னணி உள்ளதோ, அதேபோல்தான் `எல்லா நீட்சி'க்கும்... என அறிவியல் தெளிவாக மீண்டும் மீண்டும் இந்தக் கருத்தின் தவறை பல்வேறுவிதமாக வலியுறுத்திச் சொல்கிறது.

வயதோடு மெள்ள மெள்ள வளரும் தவறான பாலியல் புரிதலில், `என்னால் முடியாது’ என வளரும் தாழ்வு மனப்பான்மை, ஒருகட்டத்தில் முற்றிலுமாக அவனை உளவியல் நோயாளியாக்கி, இந்த உளவியல் நோயிலேயே ஆண்மைக் குறைவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெறும் அவலத்துக்குச் செல்கிறான். அவனுள் 15, 16 வயதில் தொடங்கும் இந்த மாற்றம், 26 முதல் 27 வயதில் அவனை முழு உளவியல் நோயாளியாக மாற்றுகிறது. நூற்றுக்கு 75 சதவிகிதம் உளவியல்ரீதியான சிக்கல்கள்தான் ஆண்மைக் குறைவை ஏற்படுத்துகிறது. ஹார்மோன்கள் குறைவு, ஒருசில உளவியல் நோய்க்கான மருந்துகள், உயர் ரத்த அழுத்தத்துக்கு எனக் கொடுக்கப்படும் மருந்துகள் தற்காலிகமாக ஆண்மைக்குறைவை ஏற்படுத்தக்கூடும். அதைச் சீர்செய்ய, சரியான மருத்துவத்தால் நூறு சதவிகிதம் முடியும். விளம்பரம் வைத்து நடக்கும் உணவுச் சந்தையையே உற்றுப் பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். உயிரணுச் சந்தையில் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?! குடும்பத்திலும் குடும்ப மருத்துவரிடமும் பெறும் ஆலோசனை தராத உயரத்தை, எந்த விளம்பரமும் தராது. 

p30b.jpg

உறுப்பின் நீள, அகலம் குறித்த தப்பான புரிதலுக்கு அடுத்து மிகத் தவறாக பெரும்பாலான ஆண்கள் புரிந்துகொண்டு, தாழ்வு மனப் பான்மையில் புதையும் மற்றொரு விஷயம், சுய இன்பம் குறித்தது. `சே... இதைப் பத்தி எல்லாம் ஒரு குடும்ப நாளிதழில் எழுதணுமா?' என்கிற சிந்தனைதான் தாறுமாறாகப் பெருகும் தாழ்வு மனப்பான்மைக்கு மிக முக்கியமான காரணம். இலைமறைவு காய்மறைவாக பேசியது போதும்; குடும்பத்தில், கல்விக்கூடத்தில், சற்று வெளிப்படைத்தன்மையுடன், அறிவியல் உண்மையுடன் இதைப் பகிரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பாலியல் அறிவியல் சொல்கிறது... `நூற்றுக்கு 95 சதவிகித ஆண்கள் பருவமடைந்தப் பின்னர், சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள்; 5 சதவிகிதம் பேர் பொய் சொல்கிறார்கள்.' இது ஈர்ப்பில் நிகழ்கிற, இயற்கையின் தூண்டுதலே ஒழிய இழிசெயலல்ல. `பணி குறித்தோ வேலை குறித்தோ ஈடுபாடு வராதபடி, என்றென்றும் இந்தத் தூண்டுதலில் முழுமையாக இருக்கிறேன்' என்போருக்கு உளவியல் ஆலோசனையும், சில வாழ்வியல் மாற்றங்களும் அவசியமே ஒழிய, மருந்துகள் எதுவும் எப்போதும் தேவையில்லை என்றே மருத்துவக் கணிப்பு கூறுகிறது,

  பின்னாளில், ஆணின் கருத்தரிப்புக்கான தாமதத்துக்கு ஆண்மைக்குறைவு, உயிரணுக் குறைவைத் தாண்டி இன்னும் சில காரணங்கள் இளமையில் ஏற்படுவதுண்டு. அதில் மிக முக்கியமானது, அம்மை நோயில், பொன்னுக்கு வீங்கி நோயில் அந்த வைரஸ்கள் விதைப்பையைத் தாக்கி அழிப்பது. `அம்மையா? மருத்துவமே வேண்டாம்; சாமிக்குத்தம்’ என்போருக்கும், `அம்மைக்கு தடுப்பூசி மருந்தா? வேண்டவே வேண்டாம்; அது வணிகப் பித்தலாட்டம்`, என்போருக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. நோய்க்கான காரணியை, அதன் அறிவியலை முற்றிலும் மறந்து, மறுத்து, அறத்தைத் தொலைக்கும் அறிவியலை எதிர்க்கவேண்டிய கூட்டம், கூச்சலாக `அறிவியலே வேண்டாம்’ என எதிர்ப்பதில், விதைப்பையின் செர்டோலி செல்கள் சிதைக்கப்படும் வாய்ப்பு உண்டு. அம்மைக்கான தடுப்பும், ஒருவேளை வைரஸின் தீவிரத்தில் விதைப்பையில் வலியுடன் வீக்கமும் இருந்தால், உடனடி மருத்துவமும் மிக மிக அவசியம்.

p30c.jpg

சறுக்கு மரத்தில் சறுக்கி விளையாடும் குழந்தையின் ஆர்வம், மாடிப்படியின் கைப்பிடியில் சறுக்கி வருவதிலும் தொடரும். அப்படிச் சறுக்கும்போது ஏற்படும் வழுக்கலில், ஆணின் விதைப்பையில் விபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு. Torsion tes tes’ எனும் நிலையில், எசகு பிசகாக விந்துக்குழல் திருகி, விதையை உடனடியாக அகற்றவேண்டிய சூழல் வரலாம். இப்படித் திருகலிலோ, வேறு காரணத்தாலோ ஒரு testes அகற்றப்படுவதில் `அய்யய்யோ ஒரு விதை இல்லையா... அப்புறம்?' எனப் பயப்பட வேண்டியதில்லை. முழு வேலையை அடுத்த விதை எடுத்துச்செய்யும் அபாரசக்தியை இயற்கை அளித்திருக்கிறது. பெண்ணின் சினைப்பையிலும் இதேதான். ஆண் குழந்தை பிறந்து அவனைக் குளிப்பாட்டுகையில், டயாப்பர் போடுகையில், தாயோ தந்தையோ குழந்தையின் விதைப்பைக்குள் விதை இருக்கிறதா எனத் தடவிப் பார்க்க வேண்டும். சில நேரத்தில் பிறப்பின்போது வயிற்றினுள் அந்த உறுப்பு விதைப்பைக்குள் இறங்காமல் போயிருக்கக்கூடும். ஒரு வயதுக்குள் அதனைக் கண்டறிந்து, அறுவைசிகிச்சையில் சரிசெய்வதால் மட்டுமே விதையைக் காப்பாற்ற முடியும். தவறவிட்டாலும், அது பின்னாளில் பல தொல்லைகளைத் தரக்கூடும்.

p30d.jpg

`எல்லாம் சரியாக இருந்தும், ஏனோ நிகழவில்லை' என்போர்தான் இன்றைக்கு அதிகம். அவர்களில், `அது குத்தம்... இது குத்தம்' என ஆய்வில் தென்படும் நுண்ணிய விஷயங்களுக்குள் உடனடியாக நொறுங்கிப் போகாமல் இருக்க, ஒவ்வொருவரும் உலகினைப் புரிந்துகொள்வதற்கு எடுக்கும் முனைப்புபோல், உடலினை விசாலமாக அறிதலுக்கும் அவசியம் முனைப்பு எடுக்க வேண்டும். அரை மண்டையாக சலூனில் இருந்து வரும் பையனைக் கொலைவெறியுடன், ``ஏன்டா இப்படி?’’ என விவாதிக்கையில், ``விராட் கோஹ்லி வெட்டியிருப்பதுபோல, இது `மொஹாக் ஸ்டைல்’ உங்களுக்கு என்ன தெரியும்?’` எனும் விடலைப் பையனிடம், உங்களுக்குத் தெரிந்த பாலியல் விளக்கங்களையும் வெளிப்படையாகப் பகிர வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, கருத்தரிப்பைக் கணக்கிடும் எண்களைக் காட்டிலும், காதலைக் கசியவிடும் கண்கள் அவசியம் என்பதையும் உணர்த்திட வேண்டும்.

- பிறப்போம்...

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

உயிர் மெய் - 6

மருத்துவர் கு.சிவராமன்

 

முகப்பேர் ஏரி பூங்காவில் ஐந்தாவது சுற்றை முடித்துவிட்டு, கொஞ்ச நேரம் மூங்கில் காற்றைச் சுவாசிக்கலாம் என சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தேன். பக்கத்து பெஞ்சில் அந்தத் தாய்க்கும் மகளுக்கும் நடந்த சத்தமான உரையாடல் எட்டிப் பார்க்கவைத்தது. குண்டாக வியர்த்துப் போய் அமர்ந்திருந்தவளுக்கு அதிகபட்சம் 20-ல் இருந்து 21 வயது இருக்கலாம். இளங்காலையில் ஓடிவிட்டு, வேகமாக நடந்துவிட்டு உட்கார்ந்தால் கிடைக்கும் ஒரு பளிச் முகம் அந்தப் பெண்ணுக்கு இருந்தது. கையில் செல்போனுடன் இடுப்பில் வீட்டுச் சாவியைச் சொருகிக்கொண்டு பென்குவின்போல நடந்து வந்து அவள் அருகில் அமர்ந்தவர் அநேகமாக அவள் அம்மாவாக இருக்கக்கூடும். ``அந்தா பாரு... பின்னாடி, 8 போட்டுருக்காங்க. போய் அதுல பத்து சுத்து சுத்திட்டு வா... வெயிட் குறையும்; இடுப்பு தசை குறையும்; தைராய்டுக்கும் நல்லதாம். குரூப்ல ஷேர் பண்ணியிருந்தாங்க’’ என்ற அம்மாவுக்கு, மகளிடமிருந்து ஒரு முறைப்பு பதிலாக வந்தது. ``எனக்கு வாட்ஸ்அப்பில் உன்னைப்போல பெருசுங்க 11 போடச் சொல்லி வந்திருக்கு; நீ இந்தப் பக்கம் - அந்தப் பக்கம் திங்கு திங்குனு 11 போட்டுக் குதிக்கிறியா? வெயிட் குறையும்; மூட்டுவலியும் குறையும்’’ எனக் கோபமும் நக்கலுமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

அந்தப் பெண்ணின் கோபமான பேச்சில், ``இது தைராய்டைத் துரத்தும் ஓட்டம்’’ என்பது மட்டும் எனக்குப் புரிந்தது. காலை நடைப்பயிற்சி செய்கையில் நம்மில் பலர் இப்படி அழகான, கொஞ்சம் குண்டான, கூடவே முகத்தில் சிறிது பூனை மீசையுடன் ஓடிக்கொண்டிருப்போரைக் கடக்க முடியும். அவர்களில் ஒரு சிலரை கொஞ்சம் உற்றுப் பார்க்கையில், முகத்தோடு கண்களும் வியர்த்திருப்பதைக் காண முடியும். ஆம்! அந்தக் கண்ணீரின் பின்னணியில், `என்று ஒழியும் இந்த தைராய்டு சுரப்புக் குறைவு?’ எனும் கோபமும் கொப்பளிக்கும்.

p32a.jpg

``எதுக்கு தைராய்டுக்கு மாத்திரை?’’

``கொஞ்சம் சுரப்பு குறைவு. உங்க TSH (Thyroid-Stimulating Hormone) அளவு கூடுதலாயிருக்கிறது. கருத்தரிக்க இந்தச் சுரப்பு ரொம்ப ரொம்ப அவசியம். நீங்க கண்டிப்பாக இந்த மாத்திரை எடுத்தாகணும்.’’
 
மேற்கூறிய இந்த உரையாடல்கள் இன்றைய கருத்தரிப்புக்கான மெனக்கெடலில் அதிகமாக மருத்துவருக்கும் கருத்தரிப்புத் தாமதமாகும் பெண்ணுக்கும் இடையே நடக்கும்.

``டாக்டர்! ஒண்ணு, `எனக்கு இன்னைக்கு உடம்புக்கு முடியலை’ங்கிறா. இல்லைன்னா, `இன்னைக்கு வேண்டாமே!’ங்கிறா. ஒருவேளை அவளுக்கு என்னைப் பிடிக்கலையோன்னு தோணுது’’ எனச் சொல்லும்போது, அநேகமாக இருவரின் முகமும் கவிழ்ந்துதான் இருக்கும். `ஆணுக்குத் தேவைப்படும்போதெல்லாம், விருப்பமும்  பிடிப்பும் கொஞ்சமும் இல்லாமல்கூட, புருஷன் என்பதால் உடலுறவுகொண்டு, வியர்த்துப் பழக்கப்பட்ட ஆணாதிக்க உலகில் இப்படியாகச் சொல்லி விலகி இருக்கவும் வாய்ப்புண்டா என்ன?’ என ஆச்சர்யமாயிருக்கலாம். ஆனால், இப்படியான விலகல் இன்று பெருகிவரும் நிதர்சனம். அவனைப் பிடிக்காதது அதற்குக் காரணம் அல்ல. அந்தச் சமயத்தில் மூளைக்குள் காதல் பூக்க மறுக்கும், தைராய்டு சுரப்பின் சீரற்ற அபஸ்வரங்களால்!

 ``இப்படியே தள்ளிப் போனேன்னா பின்னே எப்படி புள்ளை பிறக்கும்?’’ எனக் கோபத்தோடு குமுறும் ஆணுக்கும், ``இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே ஜாலியா?’’ எனக் குதறும் சமூகத்துக்காகவும் அந்த `இருட்டுப் பொறியியல் தொழில்நுட்பத்தில்’,  உணர்வின்றி, உடன்படுகையில் பிறப்புறுப்பில் வலியும் இறுக்கமும் உயிரைப் பிடுங்கும். அந்த வலிக்கு Dyspareunia என்று பெயர். அந்த நேரத்தில் ஏற்படும் பிறப்புறுப்புத் தசைகளின் இறுக்கத்துக்கு vaginismus என்று பெயர். இரண்டுமே கருத்தரிப்புக்குத் தடையாக இருக்கும்.

உதட்டைக் கடித்துக்கொண்டும், அழுகையை அடக்கிக்கொண்டும் அம்மாவிடம் மட்டும் அந்த வலியை விசும்பிச் சொல்கையில், அவள் ``அதெப்படி இன்னமும்... மூணு வருஷம் ஆச்சு... அதெல்லாம் வலிக்காது. உனக்கு மனப்பயம். மாப்பிள்ளை எவ்ளோ தங்கமான குணம். கோபமா பேசும்போதே வலிக்காது. அது எப்படி?’’ எனப் பதிலளித்து நகரும்போது இன்னும் கூடுதலாக வலிக்கும். இந்த வலிக்கும், பிறப்புறுப்பின் அந்த நேர இறுக்கத்துக்கும் தைராய்டு கோளச் சுரப்புக் குறைவுக்கும் மிக முக்கியக் காரணம் என்பது நம்மில் நிறைய பேருக்குத் தெரியாது. அன்பால், ஆசையால் நெருங்கும் கணவனை `அதற்கு மட்டும் வேண்டாம்’ என விலக்குவதற்கு, பாசமோ நேசமோ குறைவதாக இருக்காது; தைராய்டு சுரப்புக் குறைவுகூட காரணமாயிருக்கக் கூடும். இருபாலருக்கும் அந்த உறவின் நாட்டத்தை அதிகரித்து மகிழ்வைக் கூட்டுவதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது தைராய்டு சுரப்புதான். உடலுறவின்போது, நிகழவேண்டிய பெண்ணுறுப்பின் சுரப்பு, சரியாகச் சுரக்காமல் போவதற்கும் இந்த தைராய்டு சுரப்புக் குறைவு காரணமாக இருக்கலாம். இந்தச் சுரப்பு குறைகையில், இருவருக்குமே வரும் வலி, இந்த நிகழ்வில் காமத்தின் உச்சத்தை நோக்கி நகராமல், பாதியில் உயிர்த்தொழில் தடைபடும். இத்தனைக்கும் காரணமான தைராய்டு குறைவைச் சீராக்குவது, `குவா... குவா’ அவாவின் முதல் மைல்கல்.

தைராய்டு சுரப்புக் குறைவுக்கான மருத்துவத்தில் மிக அதிகமாகப் பேசப்படும் சொல், அயோடின். `அயோடின் பற்றாக் குறையால்தான் தைராய்டு சுரப்புக் குறைபாடு ஏற்படுகிறது’ எனச் சொல்லித்தான் தேசிய அயோடின் கொள்கையே அரசால் வகுக்கப் பட்டது. அயோடினைத் தண்ணீரில் கலந்துத் தரலாமா... பாலில் கலக்கலாமா? எனப் பலகட்ட ஆய்வில் கடைசியாக உப்புதான் சரியான ஊடகம் என முடிவு செய்யப்பட்டது. `உப்பு... உப்பேய்...’  என அது வரை வீதியில் வந்து விற்று, நாழியில் அளந்து தந்து, கௌரவமாக வணிகம் செய்த பல்லாயிரம் பேரை யூனிஃபார்ம் மாட்டி, உப்பு கம்பெனி வாசலில் காவலாளியாக்கினர். பத்து பதினைந்து கம்பெனிகள் மட்டும் இன்று பல ஆயிரம் கோடி உப்பு வணிகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். `அயோடைஸ்டு உப்பு மூலமா அயோடின் உடம்புக்கு வந்தா நல்லதுதானே?’ என்போரை உணவரசியலும் உலக அரசியலும் தெரியாத அம்மாஞ்சிகள் எனலாம். ``இன்று நாம் வாங்குவது உப்பு அல்ல. `அயோடைஸ்டு சோடியம் குளோரைடு’ எனும் ரசாயனம்; இரண்டும் வேற வேற’’ என குய்யோ முய்யோ எனப் பல முறை கதறினாலும், இதுவரைக்கும் நம் நாட்டில் 10,000 கோடிக்கும் மேலான இந்த உப்பு ரசாயன வணிகத்தில் இருந்து பின்வாங்க யாரும் தயாராக இல்லை. உள்நாட்டு குருமார்கள் கம்பெனி, நாட்டு உப்பு விற்று காசுபார்க்க வரும்போது வேண்டுமானால், நம் ராஷ்ட்ரிய குருவுக்கு இந்த உப்புத் தப்புத் தாளங்கள் தெரிய வரக்கூடும். அது வரை நாம் யோகா, தவமெல்லாம் செய்வோம்.

``என்றைக்கு தைராய்டைக் கட்டுப்படுத்த அயோடின் உப்பு வந்ததோ, அதற்குப் பின்னர்தான் தைராய்டு கோள பிரச்னை இன்னும் அதிகமாகக் கும்மியடித்து கோலோச்சுகிறது’’ என்கிறார்கள் அறம்சார் சிந்தனையில் இன்னும் உள்ள பல மூத்த மருத்துவர்கள். ``அதுதான் கிடைக்க மாட்டேங்குதே... அயோடின் இல்லாத உப்புக்கு எங்கே போறது?’’ என்போருக்கு ஒரு சுளுவான ஐடியா. ஒரு தாம்பாளத்தில் நீங்கள் வாங்கிய அயோடின் சால்ட்டை விரவிவைத்து ஆறு மணி நேரம் வெயிலில்வைத்து எடுங்கள். அதிகபட்ச அயோடின், ஆவியாகிக் காணாமல் போய்விடும். இப்படி எளிய ஓர் உத்தியை சமீபத்தில் பகிர்ந்துகொண்டது, இந்த பிரச்னையை நெடுங்காலம் பேசிக்கொண்டிருக்கும் சென்னையின் மூத்த எண்டோகிரைனாலஜிஸ்ட் மருத்துவப் பேராசிரியர் சந்திரசேகர். ``இந்த அயோடின் கலந்த உப்பு சந்தைக்கு வந்த பிறகுதான், அதிக அளவில் தைராய்டு சுரப்புக் குறைவு நோயும், உடல் எடை அதிகரிப்பும், அதனால் பெருகும் கருத்தரிப்புத் தாமதமும், ஒன்றிலிருந்து ஒன்றாகக் கிளைக்கிறது’’ என்கிறார் அவர்.

``அய்யோ... அப்படீன்னா எல்லாமே டுபாக்கூரா?’’ என உடனே இதுவரை சாப்பிட்டு வந்த தைராக்சின் மாத்திரையைத் தூக்கி எறிந்துவிட வேண்டாம். உங்கள் மருத்துவரோடு பேசி, படிப்படியாகக் குறைக்க வேண்டும். நானோகிராம் துளியில் சுரக்கும் மிக நுட்பமான சுரப்புகள், சினைமுட்டையைக் காலத்தே கனியவைக்க, உடலுறவில் ஈடுபாடு வர, மிகமிக அவசியம். தைராய்டு சுரப்பு குறைந்திருக்கும் பட்சத்தில், சினைப்பைக்குள் சரியாக 14-ம் நாளில் சினைமுட்டை வெடிக்கும் நிகழ்வு நடக்காமல் போகக்கூடும். மாதவிடாய் வருவது மூன்று, நான்கு மாதத்துக்கு ஒரு முறை எனத் தாமதம் ஆகக்கூடும்.

தைராய்டு சுரப்பு, தமிழ் மருத்துவப் புரிதலில், `தீ தீ தித்திக்கும் தீ’யாக்கும். ஆம் `தீ’ எனும் தமிழ்ச்சொல்லுக்கு இன்னொரு பெயர் பித்தம். வாதம், பித்தம், கபம் எனும் மூன்று உயிர்த் தாதுக்களில் பித்தம் சீராக இருந்தால்தான் கருத்தரிப்பின் மொத்தமும் சரியாக நடக்கும். உடலுறவின் மகிழ்வுக்கும், சினைமுட்டை வெடிப்புக்கும், உயிரணுக்கள் ஓவ்வொன்றும் உசேன் போல்ட்டாக ஓடுவதற்கும், காதலில் காத்திருக்கும் பெண்ணின் பசலைக்கும், அரியரில் மூழ்கிய, `ஞே’ பேர்வழியும்கூட, அடுத்த சீனில் ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் டிஸ்டிங்‌ஷன் வாங்கி பாகுபலியாவதற்கும், உடலின் பித்தம் தனிச் சிறப்போடு இருக்க வேண்டும். கொஞ்சம் அது ஓவராகப் போகும்போது, `அவனுக்குப் பித்தம் தலைக்கேறிடுச்சு’ எனும் வழக்குச் சொல்லாடல், இன்றும் நம் ஊரில் நடமாடுவது உண்டு. அன்று தமிழன் சொன்னவை அர்த்தமுள்ளவை.

இப்படித் தொன்மை சொன்ன பித்தம் சரியாக இருக்கவும், நவீனத்தின் தைராய்டு சுரப்பு சரியாக இருக்க வேண்டும். அதற்கு அதிகாலை மாத்திரை மட்டுமே போதாது. தொடர்ச்சியான நடைப்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, சூரிய நமஸ்காரம், விபரீதகரணி முதலான சில யோகப் பயிற்சிகளை, காலையில் எழுந்தவுடன் பல் விளக்குவதற்கு முன்னதாக, வாட்ஸ்அப் விளக்கும் வழக்கத்தை நிறுத்திவிட்டு, செய்து வர வேண்டும். வேக நடையும், விபரீதகரணி ஆசனமும் வீதன (தைராய்டு) கோளத்தைத் தூண்டி சுரப்பைச் சீராக்கும் எனப் பல ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. கொஞ்சம் சுரப்புக் குறைவு உள்ளவர்கள் உணவைச் சமைத்து தாளிக்கையில், கடுகைப் போடக் கூடாது. கடுகுக் குடும்ப அட்டை உறுப்பினர்களான முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் சமாசாரங்களையும் கொஞ்சம் விலக்கி வைக்க வேண்டும். கடுகு குடும்பம், சுரந்த தைராக்சினைச் சிதைக்கும்.

தைராய்டு சுரப்புக் குறைவில், இன்னொரு தலையாய பிரச்னை அதில் வரும் குண்டு உடம்பை இளைக்க வைப்பது. இன்று ``சுரப்பு அளவு ரத்தத்தில் சரியாக வந்துடுச்சு.

ஆனா, பருத்த உடம்பு குறையலையே...’’ என ஏக்கம்கொள்வோர் பலர். குண்டாக இருக்கும் அநேகம் பேர் உளவியல்ரீதியாக சிக்கலில் இருக்கிறார்களாம் அல்லது உளவியல்ரீதியாக சிக்கல் உள்ளவர்களில் அதிகம் பேர் குண்டாக இருக்கிறார்களாம். அதுவும் தைராய்டு நோயில் கொஞ்சம் மாதவிடாய் சீர்கெட்டு இருக்கும் மகளிருக்கு, குண்டு பிரச்னையும் தாழ்வு மனப்பான்மையும் ஒன்றாக ஒட்டியே இருக்கிறது. முதலில் குண்டாக இருப்பதைக் கொலைக் குற்றமாகப் பார்க்கும் மனோபாவத்திலிருந்து வெளியே வாருங்கள். குதூகலமாக இருக்கும் குண்டுப் பெண்களுக்குக் குழந்தைப்பேறில் அதிகமாகச் சிக்கல் வருவதில்லை.

p32b.jpg

கூனிக்குறுகி, குமுறி அழும் குண்டுப் பெண்களுக்குத்தான் ஹார்மோன் வதையும் பின்னி எடுக்கிறது.

எடைக் குறைப்பை மகிழ்வாகச் செய்ய எத்தனிக்கும் பெண்களுக்கு, அதை ஒட்டிய ஹார்மோனும் ஒரே சமயத்தில் சீராகும்.  `டொக்... டொக்... டொக்... பருவமே புதிய பாடல் பாடு... இளமையின்...’’ எனக் காலை இளங்குளிரில் கூடவே வழிந்து வழிந்து ஓடிவர, காதலன் வேண்டுமானால் வரக்கூடும். கணவர்கள் கண்டிப்பாக வருவதில்லை. எப்போதுமே எதிர்த் திசை எண்ணத்தில் பயணிக்கும் அவரை எழுப்பி, பழைய ட்ராக் ஷூட்டை உதறி மாட்டிவிட்டு, எரிச்சலோடு கிளப்பிவிட வேண்டாம். ஒவ்வொரு ரவுண்டிலும் வீட்டு இஎம்ஐ-யில் ஆரம்பித்து, வீட்டிலுள்ள அவர் அம்மாவுக்கு நீங்கள் டிக்‌காஷன் குறைவாகக் கலந்து தந்த காபியையும் கொலைக்குற்றமாகப் பேசிக்கொண்டே வரும் அவர்களோடு நடப்பதைவிட, தனியே மௌனமாக நடப்பது உடல் பாரத்தையும் மன பாரத்தையும் சேர்த்துக் குறைக்கும்.

``தைராய்டுக்கு நீங்க என்ன மாத்திரை சாப்பிடுறீங்க?’’ எனக் கேட்கும்போது, பலரும் பர்ஸில் மடித்துவைத்திருக்கும் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் எழுதிய பழைய நைந்துபோன பிரிஸ்கிரிப்ஷனை உதறிக் காட்டுவார்கள். அநேகமாக அந்தப் பனை ஓலையைப் படிக்க, கீழடி கமிஷனரைப் போய்ப் பார்க்கவேண்டி வரும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை சோதித்து, சரியான தேவைக்கு ஏற்றாற்போல் மருந்தை உட்கொள்வது மிகமிக அவசியம். இதன் தேவை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது.

p32c.jpg

தைராய்டு சுரப்புக் குறைவாக உள்ள குழந்தைகள் கணக்குப் பரீட்சையில் ரொம்ப வீக்காயிருப்பார்களாம். அதேபோல் இந்தச் சுரப்பு குறைவாக உள்ள தம்பதியர் காதல் கணக்கிலும் அசமந்தமாயிருப்பார்கள். பரீட்சையிலோ படுக்கையிலோ கொஞ்சம் அசமந்தமாயிருந்தால், தைராய்டு சுரப்பை சீர்படுத்தியே ஆக வேண்டும்... கொஞ்சம் மாத்திரைகளோடு, நிறைய பயிற்சிகளோடு, நிரம்பி வழியும் காதலோடு!

- பிறப்போம்...

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நவீனன்...இந்தத் திரி மருத்துவம் சம்மந்தப்பட்டது அல்லவா! எதற்காக இங்கே கொண்டு இணைத்தீர்கள்?

Link to comment
Share on other sites

உயிர் மெய் - 7

 

 

மருத்துவர் கு.சிவராமன், படங்கள்: அருண் டைட்டன், உ.பாண்டி

 

நிலங்கள் வறண்டு வெடித்திருந்தபோதும், குளங்கள் வற்றிப்போய், தண்ணீருக்குப் போக குறுக்குப் பாதையான பின்னரும், கிராமங்கள் இன்னும் அழகாகவே இருக்கின்றன. இன்றும் ரயில் தண்டவாளத்தை அறுத்துத் தொங்கவிட்டுக்கட்டி, மணி அடித்து, குதூகலப்படுத்தும் அந்தக் கிராமத்து மேல் நிலைப்பள்ளி கூடுதல் அழகாகவே இருந்தது.

p31a.jpg

பரிசு வாங்க வரிசையாக, மேலாடையாக அண்ணனின் லூஸான சட்டையையும், கீழே கத்தரிப்பூ பாவாடையும் போட்ட பெண் குழந்தைகள்தான் அதிகம் நின்றனர். பையன்கள் ஆங்காங்கே கொஞ்சூண்டு மட்டுமே. அநேகமாக முதலிடங்கள் துளசிகளுக்கும் கோமதிகளுக்கும்தான். வழக்கமாகச் சென்னையில் தென்படும் பெண் குழந்தைகளையும் வரிசையாக வந்த கிராமத்துப் பெண் குழந்தைகளையும் மருத்துவனாக மனம் ஒப்பிட்டது. அநேகம் பேர் மெலிந்து, வற்றலாக, ஒட்டிய கன்னத்தோடும் வெளுத்த  கண்களோடும் நின்றுகொண்டிருந்தனர். நிறத்தில் கறுத்தும் உயரத்தில் சிறுத்தும் நின்ற அந்தப் பல குமரிகள் ஏன் இவ்வளவு மெலிவாக...? அந்தக் கண்களில், முகத்தில் ஏன் கொஞ்சம் கூடுதல் வெளுப்பு?

``4:30 மணிக்கெல்லாம் லாரி வரும் சார். அவங்க அப்பா, அம்மா கூலிக்கு அதில் ஏறணும் சார். இதுகளுக்கு பெரும்பாலும் காலை சாப்பாடு கிடையாது. நேரடியா மத்தியான சத்துணவுதான். சில நேரம் ஸ்கூலுக்குப் பக்கமா இருக்கிற அங்கன்வாடியில குடுக்கிற சத்து உருண்டையை தம்பி, தங்கச்சிக்கு வாங்கும்போது ஆளுக்கு ஒரு உருண்டை இவங்களுக்கும் கிடைக்கும் சார். அதுதான் இவங்க காலை சாப்பாடு. எப்பனாச்சும் கிடைக்கும் அந்த உருண்டையால எப்படி சார் எப்பவுமே சத்து கிடைக்கும்? சோகையையும், மாசவலி வர்றப்ப சுருண்டு படுத்து அழுவுறதையும் எங்க பிள்ளைங்ககிட்ட அடிக்கடி பார்க்கலாம்’’ என அக்கறையாகச் சொன்ன அந்த அரசுப் பள்ளியின் கனகா டீச்சரும் கொஞ்சம் கண்ணில் குழிவிழுந்து, மெலிந்துதான் இருந்தார்கள்.

விழா முடிந்து கிளம்புகையில், அந்த டீச்சர் கேட்ட கேள்வி இன்னமும் மனசுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ``காலை உணவாக பிள்ளைக்கு இட்லி, தோசைல்லாம் செஞ்சுதர முடியாது சார். ராத்திரி சமைக்கிறதுல காலையில சாப்பிடற மாதிரி எங்க பிள்ளைகளுக்கு என்னல்லாம் குடுக்கலாம்? கொஞ்சம் சொல்லுங்க...’’ என அந்த டீச்சர் கேட்ட கேள்வி  நான் சந்தித்த மிகக் கடினமான கேள்வி. `சாண்ட்விச் வேண்டாம், பர்கர், பீட்சா வேண்டாம்' என ஒருபக்கம் சொல்லித்திரியும் எனக்கு, கஞ்சியோ, கூழோகூட சரியாகக் கிடைக்காமல், `எல்லாம் மதியம் சத்துணவுல சேர்த்து சாப்பிட்டுக்கலாம்’ என்று இருக்கிற கணிசமான ஒரு குழந்தைகள் உலகம் (கிட்டத்தட்ட 20 லட்சத்துக்கும் மேல்) இருப்பது வலித்துக்கொண்டே இருக்கிறது. அவர்களில் 50 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள் ரத்தச்சோகையில் இருப்பவர்கள். இன்னமும் இந்தியக் கிராமங்களில் மிக அதிகமாக அலட்சியப்படுத்தும் நோய்க் கூட்டத்தில் முதலானது ரத்தச்சோகை.

இரும்புச்சத்து குறைவு என்பது, ரத்தச்சோகை முதல் உயிரையும் மெய்யையும் உருக்குலைக்க வைக்கும் நோய்கள் வரை நிறைய நோய்க் கூட்டங்களுக்கு அடித்தளம். இன்றைக்கும் இந்தியக் கிராமங்களில்,  கருத்தரிப்பு தாமதத்துக்கு மிக அடிப்படையான காரணம் காதல் குறைவோ, காமக் குறைவோ அல்ல. இரும்புச்சத்து குறைவும் ஊட்டச்சத்து குறைவும்தான்.

p31b.jpg

`தன் வயிறு பருக்காதா?' எனக் கண்ணீருடன் குழந்தைவரம் வேண்டி, எழிலைப்பாலை மரத்தில் தொட்டில் கட்டி, கல்லாய் இருக்கும் அந்த மரத்தடிச் சாமிக்கு, ஈரச் சேலையுடன் அங்கப் பிரதட்சணம் செய்து, மண்சோறு சாப்பிடுவதற்கு, அந்நாளில் வயிறாற  நித்தம் ஒரு வாய் சாப்பிடாமல் போனதுதான் முக்கியக் காரணம். நகர்ப்புறத்தில் உயிரை உருக்கும் Mall-nutrition (பீட்சா, பர்கர் சாப்பிடும் குண்டுக் குழந்தைகளுக்கு ஏற்படுவது) என்றால், இன்னமும் பல தமிழகக் கிராமங்களில் மெய்யை உருக்கும் Malnutrition (கஞ்சிக்கும் வழியில்லாமல் மெலிந்த குழந்தைகளின் நிலை) முக்கியக் காரணம். வலியின் ஒலி ஒன்றுதான்; மொழிதான் வேறு வேறு.

யூனிசெஃப்பின் அறிக்கையின்படி, இந்தியக் குழந்தைகளில் 45 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் ரத்தச்சோகையிலும் ஊட்டச்சத்துக் குறைவிலும் இன்னும் இருக்கிறார்கள். ரத்தச்சோகை தீர்க்கப் படாமல்  நீடித்து இருக்க இருக்க,  சினைப்பையில் சினைமுட்டையின் வளர்ச்சி (Ovulation) குறைவதும், கருப்பையின் உட்சுவர் (Endometrium) தடிப்பு குறைவதும் அதிகரிக்கும். சில நேரங்களில் உதிரப்போக்கை அதிகரிக்கவைக்கும். பல நேரங்களில் உதிரமே போகாமல், உடலை வீங்கவும் வைக்கும். கூடவே, இளமையில் தவறாமல் மாதவிடாய் வரும்போதெல்லாம் பிறக்கும் குத்துவலியையும் (Dysmenorrhea), திருமணமான பின்னர் குழந்தைக்காகக் காத்திருக்கையில், `சனியன் சரியாவே வந்துக்கிட்டு இருக்கு' எனக் கடும் மனவலியையும் தரக்கூடும் இந்தச் சோகை.

இதே ரத்தச்சோகை ஆணுக்கு வருகையில், விந்துவில் உயிரணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்.  அதன் தரத்தையும் சிதைக்கும் (Oligo-astheno-terato-zoospermia); உயிரணுக்களோடு உறவாடிவரும் பல சுரப்புகள் வற்றிப்போதல், உயிரணு நோஞ்சானாக, உடைந்து நொறுங்கி இருத்தல்... எனப் பல காரணங்களுக்கு சாதாரண ரத்தச்சோகை சதிசெய்யும்.

 சோகையினால் அதிக ரத்தப்போக்கு, பின்னர் அதிக ரத்தப்போக்கினால் தொடரும் சோகை... தமிழகக் கிராமத்துப் பெண்களில் பலருக்கும் தொடர் பிரச்னை. `எளிய கம்பங்கூழில் இரும்புச்சத்தை ஏராளம் பெற முடியும். அரிசியை விட கம்பில் எட்டு மடங்கு இரும்புச்சத்து உண்டு. சோளத்தில் இல்லாத புரதச்சத்தா? மாட்டுக்கு மட்டும் அதைப் போடணுமா? சோளப் பணியாரத்தையோ, புட்டையோ, தோசையையோ சாப்பிட்டுவிட்டு இந்தச் சோகையையும் புரதச் சத்துக் குறைவையும் தீர்க்க முடியாதா?' என்றெல்லாம் சத்தமாகப் பேசிக்கொண்டிருக்கையில், இடையிடையே விளிம்புநிலை மனிதனின் குரல், இதை மறுத்து ஒலிக்கிறது.

``சார்! சோளம், கம்பு, தினை எல்லாம் சரி! எவன் வாங்கித் திங்க முடியும்? என்ன விலை தெரியுமா சார் உங்களுக்கு? ரேஷன் கடையிலயா போடுறாங்க? பாலீஷ் செய்யப்பட்ட 20 கிலோ அரிசிதானே அங்கே இலவசமாகக் கிடைக்குது. அதைத்தான் திங்க முடியும்...’’ என்ற அந்தக் குரலில் உள்ள வலியை,  பெர்முடாஸ் போட்டுக் கொண்டு அண்ணா நகர் ஆர்கானிக் கடையில் ஏறிவந்து, ``இந்த மில்லட்ஸுக்கெல்லாம் ஆர்கானிக் சர்டிஃபிகேட் இருக்கா? ஆக்சுவலாவே இது ஆர்கானிக்கா என்ன... எப்படி நம்புறது?’’ எனக் கேட்கும் கணினிக் கணியன்களுக்கு சத்தியமாகத் தெரியாது. நைந்துபோய் நிற்கும் உழவன் மகனுக்கு ஏனோ தினையும் சாமையும் இப்பவும் கைக்கெட்டிய தூரத்தில் இல்லை. அதனால் மெய்யில் இப்போது இல்லாத ஊட்டம், பின்னாளில் உயிரணுவில் ஊட்டமில்லாமல் போக வழிவகுக்கிறது.

சோகையை அடுத்து நம் கிராமத்து ஏழைப் பெண்ணின் கருத்தரிப்புக்கு மிக முக்கியத் தடையாக இருப்பது, சிறுவயதில் ஏற்பட்ட, சரியாக மருத்துவம் செய்யப்படாத காசநோயும், அதனால் வரும் கருக்குழாய் அடைப்பும்தான்.

``உங்களுக்கு இன்னும் குழந்தை பிறக்காமல் இருப்பதற்குக் காரணம், சினைப்பைக் குழாய் அடைப்பு (Cornual block - bilateral); நீங்க சின்னப் புள்ளையில பிரைமரி காம்ப்ளெக்ஸுக்காக மருத்துவம் செய்திருக்கிறீர்களா?’’ போன்ற கேள்விகள் இப்போது கருத்தரிப்பு தாமதத்தில் மிக முக்கியமான பங்குவகிப்பவை.

p31c.jpg

பொதுவாகவே, இப்போது மிகத் துல்லியமாகத் தீர்க்கக்கூடிய மருத்துவமாக காசநோய் மருத்துவம் மாறிவிட்டாலும்கூட, இன்றைக்கும் இந்த நோய் சமூக அவமானமாகவே கருதப்படுகிறது. பெரும்பாலான டாக்டர்களும் ``அதெல்லாம் உங்களுக்கு இல்லை’’ என்பதும், ``எனக்கா இருக்கவே இருக்காது?’’ என நோயாளியும் வலிந்து சொல்வதும் இந்த நோய்த் தாக்கத்தில் அதிகம் நடக்கும். விளைவு? இன்னமும் இந்தியாவில் தலைவிரித்தாடும் நோயாகவே காசநோய் இருந்து சாதனை படைத்துவருகிறது. சரியாகத் தீர்க்கப்படாத காசநோயின் பல்வேறு பிரச்னைகளில், மிக முக்கியமானதுதான் காசநோயால் ஏற்படும் கருக்குழாய் அடைப்பு. உலகச் சுகாதார நிறுவன ஆய்வின்படி, கென்யா, செனகல் முதலிய நாடுகளின் பெண்களுக்கான கருக்குழாய் அடைப்புக்கு, திருமணத்துக்கு முந்தைய உடலுறவில் அந்தப் பெண்கள் பெறும் `கோனோகாக்கல்` (Gonococcal) பாலியல் நோய் காரணமாயிருக்க, நம் ஊரில் பெரும்பாலும் வறுமையில் ஊட்டச்சத்து குறைவில் பெறும் காசநோய்த்தொற்று காரணமாக இருக்கிறது.

நகரத்து மக்களின் கருத்தரிப்பு தாமதத்துக்கான காரணம், அவர்களின் அணுகுமுறை. அதன் வணிகம், அதன் அரசியல், அதன் கண்ணீர், அதன் வலி ஒருவிதம். அதுவே நம் கிராமத்தின் முகமற்ற கோடானுகோடிக் கூட்டத்தின் குழந்தைப்பேறு இன்மையின் வலி வேறுவிதம். முன்னதைக் காட்டிலும் மிகக் கொடூரமானது, ஆணாதிக்கத்தின் உச்சமும், அரளிவிதையின் மிச்சமும் நிறைந்தது. வீதியில் நிற்றலில் இருந்து, விளக்கேற்றுவது வரை அத்தனை சாதாரண நகர்வுகளில் இருந்தும் திருமணம், வளைகாப்பு முதலான அத்தனை சமூகச் சடங்குகளிலிருந்தும் ஒதுக்குவது வரையிலான காட்டுமிராண்டித்தனம் இன்னமும் இந்த நானோ யுகத்திலும் புரையோடிக்கொண்டுதான் இருக்கிறது. அரை மானிப்பிடி கம்பும், ஒரு கைப்பிடி எள்ளும், இரண்டு கட்டுக் கீரையும், இரு துண்டு மீனும் இளமையில் கிடைக்காத வறுமை, சில நேரங்களில் ஆணுக்கு வயிற்றுப் பிரச்னை மட்டுமே; பெண்ணுக்கு வாழ்நாள் பிரச்னை.

p31d.jpg

ஆம்! சோகை, காசநோய் இந்த இரண்டும் நம் ஊரில் தலைவிரித்தாட மிக முக்கியக் காரணம், வறுமையும் ஊட்டச்சத்துக் குறைவும்தான். எடைக்கு எடை துலாபாரத்தில் கோயிலுக்குப் புதுப்பத்து ரூபாய்க் காசு போடுபவர்கள், திருப்பதி உண்டியலுக்கு படியில் ஏறி புது இரண்டாயிரம் ரூபாய் கட்டைப் போடுபவர்கள், 60 அடி ஆஞ்சநேயருக்கு பசு வெண்ணெய் சார்த்தலாம் என நேர்ந்திருப்பவர்கள், நேர்த்திக்கடனை முடித்துவிட்டு, நேரே ஓர் எட்டு உங்கள் ஊர் அருகாமை கிராமத்து அங்கன்வாடிக்கு வாருங்கள். அந்த அங்கன்வாடியில், `தம்பிக்கு மட்டும் தரப்படும் சத்து உருண்டை... இன்றைக்கு எனக்கும் ஒன்று சேர்த்துத் தர மாட்டார்களா?' எனப் பசியோடு காத்திருக்கும் வரிசையை ஒரே ஒரு முறை பார்த்து வாருங்கள். `ஏன் இப்படி... இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?' என உங்களுக்குள் எழும் ஒரு சின்னக் கேள்வியில் எல்லா சாமிகளின் வயிறும் நிச்சயம் நிறையும். அந்தக் கேள்விக்குக் கிடைக்கும் பதிலில், அந்த வரிசையில் நிற்கும் ஏழைக் குழந்தையின் வயிறு நிறையும்; வருங்காலத்தில் அதன் திருமணத்துக்குப் பின்னர், அதே வயிறு எந்தச் சிரமமும் இன்றி வாரிசைச் சுமக்கும்.

- பிறப்போம்...


கருக்குழாய் அடைப்பு

கருக்குழாய் அடைத்துள்ளதா என அறிய Tube test (HSG Test) செய்வது இன்றைய கருத்தரிப்புக்கு உதவும் சிகிச்சையில் மிக முக்கிய சோதனை. அதில் ஒருவேளை அடைப்பு உள்ளது என முடிவு வந்தால், பதற வேண்டியதில்லை. வெளியிலிருந்து செலுத்தப்படும் சோதனைத் திரவத்தை ஏற்க மறுத்து, இறுகிக்கொள்ளும் இயல்பாகக்கூட அது இருக்கலாம். இயல்பான உடலுறவில் விந்து உள்ளே செல்கையில் அப்படி தசை இறுக்கம் ஏற்பட்டு அடைபடாமல் இருக்க நிறையவே வாய்ப்பு உண்டு. பெரும்பாலும் காசநோய்க்கான, பிற நோய்த்தொற்றுக்கான சிகிச்சையில் முழுமையாக அடைப்பு விலக நிச்சயம் வாய்ப்பு உண்டு. `Bilateral Tubal Block’ என சிகிச்சை முடிவு வந்த பின்னர், இயல்பாகக் குழந்தைப்பேறு அடைந்த மகளிர் நம்மிடையே நிறையப் பேர் உண்டு. கருக்குழாயை விரித்துவிட அறுவை சிகிச்சை மட்டுமல்ல, அன்புச் சிகிச்சையும்கூட உதவக்கூடும்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

 

உயிர் மெய் - 8

மருத்துவர் கு.சிவராமன்

 

``சளி பிடிச்சிருக்கு... நிமோனியாவானு எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கணும்; முதுகு எலும்பு இடைத்தட்டு நகர்ந்திருக்கானு தெரிஞ்சுக்க எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கணும்; தீராத தலைவலிக்குப் பின்னால மூளையில் பிழை இருக்கானு பார்க்கறதுக்கு சி.டி ஸ்கேன் எடுக்கணும்; இதயத்துல வலி, ரத்த ஓட்டம் ஒழுங்கா இருக்குதானு பார்க்க ஆஞ்சியோ எடுக்கணும்...’’ என நோயைக் கணிக்கச் செய்யப் படும் ஒவ்வொரு சோதனைக்குப் பின்னரும் சின்ன பயம், வலி வரும். அதற்கும், கருத்தரிப்புத் தாமதத்தில், தம்பதியர் செய்யும் சோதனைகளின் பயத்துக்கும் வலிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. முன்னது உயிர் பிழைக்க; பின்னது, உயிரை உருவாக்க. இதில் நடத்தப்படும் ஒவ்வொரு சோதனையின் முடிவிலும், ஒருவித சமூக ஒதுக்கல் ஒட்டியிருக்கும். ஆதலால், சோதனையில் உடல் வலியைக் காட்டிலும் உள்ளத்தில் ஏற்படும் வலி கொஞ்சம் கூடுதல்.

p30a.jpg

இருபது வருடங்களுக்கு முன்னர், ``மாப்ளை... நீ கூட வாடா. ஏதோ டெஸ்ட் எடுக்கணும்னு சொல்றாங்க’’ என நண்பன் ஒருவன் அழைக்க, அவனோடு  சோதனைச்சாலைக்குச் சென்றது இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. `இரண்டாண்டு களாகக் குழந்தை இல்லை; அதை ஒட்டி நிறைய மனக்கசப்பு’ எனச் சொல்லி, நகரின் பெரிய மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அந்தச் சோதனை அவனுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவனுக்குச் செய்யச் சொன்ன சோதனை `Penile Doppler testing’. சரியான, இயல்பான உடலுறவுக்கு, ஆணுறுப்பு இயல்புநிலையில் இருந்து குறிப்பிட்ட அளவுக்காவது விறைப்படைய வேண்டும். 12, 13 வயதுக்குப் பின்னர், மனதில் ஏற்படும் பாலியல் கிளர்ச்சியில் தொடங்கும் இந்த மாறுபாடுதான் இயல்பான உடலுறவில் மிக அடிப்படையான விஷயம். வியர்த்து, விறுவிறுத்து மிகுந்த மன வேதனையுடன் அவன் அந்தச் சோதனைக்கு வந்திருந்தான்.

சோதனை முடிவில், `போதிய ரத்த ஓட்டம் இல்லை’ என்று சான்றிதழ் பெற்று, அதனால் மணமுறிவும், அதன் பின்னர் நிறைய மனஅழுத்தமும் பெற்ற அவனுக்கு, தற்போது அடுத்த திருமணத்தில், ஆரோக்கியமான அழகான இரு குழந்தைகள். நெருக்கடியான அந்த ரத்த நாடியில் சரியாக ஓடாத ரத்தம் என்று அறிவியல் சொன்ன காரணத்தை அவனது பிந்தைய வாழ்வு பொய்யாக்கியது. பிரச்னை ரத்தத்தில் அல்ல; முத்தத்தில்தான். நெருக்கடியான வாழ்வில் சரியாக ஓடாத காதலும், அதில் பரிமாறப்படாத எதிர்பாராத முத்தங்களும்தான் காரணம் என்பது புரிய பல சமூக அவமானங்களைத் தாண்டி வரவேண்டியிருந்தது.

இன்று படித்த இளைஞர்கள் பலரும் இந்தச் சோதனைக்குத் தாமாக வருகின்றனர். குறிப்பாக கனிணித் துறையினர். சிலர் கருத்தரிப்புக்கான சிகிச்சையின் ஒரு கட்டமாக, மருத்துவரின் அறிவுறுத்தலில் வருகின்றனர். 100-க்கு 80 சதவிகிதம் பேருக்கு முடிவு, `இயல்பு’ என வருகிறது. ஆனால், சோதனைக்கு வரும் பலருக்கும் முடிவில் மனம் ஒப்புவதில்லை. ``இல்லை சார்! என்னால முடியலை. இந்த ரிசல்ட் சரியாக இருக்குமா?’’ என்று சந்தேகத்தோடும், ``போர்னோ பார்க்கும்போதும், சாலையில் கடக்கும் சில பெண்களைப் பார்க்கும்போதும் ஏற்படும் ஈர்ப்பும் எழுச்சியும் மனைவியிடம் இல்லை’’ என்று குற்ற உணர்வோடும் சொல்வது இன்று அதிகரித்து வருகிறது. மொத்தத்தில், இந்தச் சோதனை அளவிடுவது காதலையோ, அவன் மனம் லயிக்கும் ஈர்ப்பையோ, இவை இரண்டும் தூண்டும் எழுச்சியையோ அல்ல.

இயல்புநிலையில் அந்த உறுப்பினுள் எந்த அளவுக்கு ரத்தம் பாய்கிறது என்பதை முதலில் ஸ்கேனில் தெரிந்துகொள்வார்கள். பின்னர், `பப்பாவரின் அல்லது சிடல்ஃபின்’ மருந்தை, நுண்ணிய அளவில் விறைப்பை ஏற்படுத்தும் தசைப்பகுதியில் செலுத்தி, அந்த உறுப்பு இயல்பாக விறைப்படைகிறதா, அதனுள் ரத்தம் போதிய அளவில் உட்செல்கிறதா என்பதைச் சில நொடிகளில் அளவிட்டு, அந்த ஆணின் விறைப்புத் தன்மைக்குச் சான்றிதழ் கொடுப்பார்கள். (சமீபத்தில், விவாகரத்து வழக்குகளில்,  `தன் கணவனுக்கு ஆண்மைக்குறைவு’ என வாதிடும்போது, அம்மி மிதித்து அருந்ததி பார்த்தவர்களும், கும்மி அடித்துக் குதூகலமாகக் காதலித்தவர்களும் இந்தச் சோதனைச் சான்றிதழைத்தான் வழக்காடு மன்றங்களில் முக்கிய ஆவணமாகப் பயன்படுத்துகின்றனர்).

25 சி.சி-க்கும் குறைவாக அளவு வருகையில், ஆண்மைக்குறைவு அடையாளப்படுத்தப் படுகிறது. ``எதனால் உறுப்பு விறைக்கவில்லை? ஹார்மோன் குறைவா, சதையில், ரத்த நாளத்தில் தடையா, கட்டுப்படுத்தப்படாத சர்க்கரைநோயா, உயர் ரத்த அழுத்தத்தின் விளைவா, பிற நோய்களுக்காகச் சாப்பிடும் மருந்துகளின் விளைவா, இல்லை... மனத்தடை, மனஅழுத்தமா?’’ எனக் கேள்விகளை எழுப்பி, மருத்துவரை யோசிக்கச் செய்யத்தான் இந்த ஆய்வு முடிவே தவிர, சோதனைக்குட்பட்ட ஆண் `தகப்பனாக முடியாது; அல்லது தாம்பத்தியத்துக்குத் தகுதியானவன் அல்ல’ எனத் தீர்மானமாகச் சொல்ல அல்ல. அப்படிச் சொல்லவும் முடியாது.

இன்னும் சொல்லப்போனால், இந்தச் சோதனை காதலைக் கழற்றிக், கட்டிலுக்கடியில் வைத்துவிட்டு, காமத்தை மட்டும் கரன்ட் வோல்ட்டேஜில் அளக்கும் அறிவியல். அந்தத் தசைக்குள் செலுத்தப்படும் `பாப்பாவரின் இன்ஜெக்‌ஷன்',  `எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்; உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்’ என்று மூளைக்குள் எப்போதும் பாடாது. `அற்றைத் திங்கள் அந்நிலவில், நெற்றித்தரள நீர்வடிய கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா?’ என விசாரிக்காது. காதலில்லா குருதியை மட்டும் அந்தச் சதைக்குள் அவசரமாகக் கக்கும். கவியும் இசையும் இல்லாத வார்த்தைகளில் இலக்கணம் தேடும் தட்டையான ஆய்வு அது.

டாப்ளரில் அளக்க முடியாத குருதியை, ஆணுறுப்புக்குள் குதூகலித்துக் கொப்பளிக்க வைக்கத் தேவை, வைரமுத்துவின் பேனாவில் வழியும் அந்தக் காதலும், கரிசனமும்தான். இவை இரண்டும் கலந்து கிடைக்கிற கணப்பொழுதிலே, தன்னவளைப் பின்னிருந்து திடீரென அணைத்து, பின்னங்கழுத்தில் கொடுக்கும் முத்தத்துக்கு இணையான மருந்தும் சோதனையும் உலகில் இன்னும் பிறக்கவில்லை. அங்கு மட்டுமே காதலோடு குருதியும் உறுப்புக்குள் கணிசமாகப் பரிமாறப்படும். அதையும் தாண்டி அவதியுறும் சில நேரங்களில் மட்டுமே, கொஞ்சம் அறம் சார்ந்த மருத்துவம் அதற்கும் அவசியப்படலாம்.

ஆணுறுப்பு விறைப்பு குறைவாக இருக்கும்போது, மறைந்திருக்கும் இன்னொரு விஷயம் கருத்தரிப்பு சார்ந்தது மட்டுமல்ல; அதையும் தாண்டி முக்கியமானது. இங்கே ரத்தம் சரியாகப் போகாதபோது, இதய நாடிகளிலும் அதன் சீரான ஓட்டம் குறைந்திருக்க வாய்ப்பு உண்டு. குறிப்பாக 45 வயதினைத் தாண்டி, சர்க்கரைநோயிலோ அல்லது உயர் ரத்த அழுத்தத்திலோ இருந்துகொண்டு, இரு நோயும் சற்றும் கட்டுப்பாடில்லாமல் இருக்கும் பட்சத்தில், இதயத்துக்குள் ரத்த ஓட்டம் சரியாக உள்ளதா என்பதை இந்தக் குறை உள்ளவர்கள் ஒருமுறை பார்த்துக்கொள்வது நல்லது.

``கொஞ்சம் வலிக்கும். பயப்படக் கூடாது. கர்பப்பையின் வாய் வழியே அயோடின் திரவத்தை உள்ளே அனுப்பித்தான் இந்தச் சோதனை செய்வோம். கர்பப்பைக்குள்ளேயோ, அதோடு ஒட்டி, சினைப்பையில் இருந்து சினை முட்டையை அழைத்துவரும் பாதையிலோ தடை ஏதும் இருக்குதானு பார்க்கத்தான் இந்தச் சோதனை. வயிற்றுப்புண் இருக்கானு அந்தக் காலத்தில் பேரியம் மீல் எக்ஸ்ரே (Barium Meal  X-ray) எடுத்தது மாதிரி இதுவும் எக்ஸ் ரே சோதனைதான். பீரியட் முடிஞ்சு ரெண்டு, மூணு தினங்கள்ல எடுக்கலாம்.’’ – இந்த அறிவுறுத்தலை கருத்தரிப்புச் சிகிச்சைக்குச் செல்லும் அநேகமான பெண்கள் கேட்காமல் இருந்திருக்க முடியாது.

``ஏங்க நமக்கு மட்டும் இத்தனை சோதனை, வேதனை எல்லாம்? அதுதான் ஸ்கேன் பார்த்தாங்கல்ல... அதுல தெரியாதா? எனக்கு பயமாயிருக்குங்க’’ எனத் தலைகுனிந்து, வழியும் கண்ணீரை அடக்க முடியாமல் மருத்துவமனையின் வழுக்கும் தரையில் விழுந்து கண்ணீர் தெறிக்கும்போது, கணவனின் கரம் மட்டும்தான் ஆதரவாகப் பிடித்திருக்கும். உண்மையில், இந்தச் சோதனை மிகப்பெரிய தெளிவை நெடுநாளாக கருத்தரிப்புக்குக் காத்திருக்கும் அந்தப் பெண்ணுக்குத் தரும் வாய்ப்பு மட்டுமல்ல. மற்ற சோதனையில் எல்லாம் கிடைக்காத ஒரு சந்தோஷத்தை இந்தச் சோதனை சில நேரங்களில் தரக்கூடும். இந்தச் சோதனைக்குப் பின்னர், வேறு எந்த மருத்துவமும் இல்லாமல் கருத்தரிக்கும் வாய்ப்பு இதில் உண்டு. சோதனையில் அயோடின் திரவத்தை அனுப்பி அடைபாடுகளைக் கண்டறியும் முயற்சியில், ஒட்டியிருக்கும் குழல் பகுதி விரிவடையும் வாய்ப்பும் உண்டாம். எப்படி?

p30b.jpg

கிட்டத்தட்ட, குழாயில் தண்ணீர் வரவில்லை என்றாலோ, ஏர்-லாக் எனப்படும் காற்றடைப்பு இருந்தாலோ, தொட்டியைச் சுத்தம் செய்து, அழுத்தமாகத் தண்ணீரைப் பாய்ச்சினால் அடைப்பு எப்படி நீங்கி நீர் ஓட்டம் சீர்படுகிறதோ அதேபோல், சினைமுட்டை வரும் பாதை இந்தச் சோதனையில் சீராகுமாம். திடீரென பாலம் திறந்துவைக்க வரும் முதல்வரின் பாதையில், அக்கம்பக்கத்துக் கடையை எல்லாம் அகற்றி அன்றைக்கு மட்டும் பளபளவென புதுசாக்கும் கார்ப்பரேஷன் மாதிரி சினைக்குழல் பாதையும் இந்தச் சோதனையில், சிறு சிறு அடைபாடுகள் நீக்கிப் புதுப் பொலிவாகுமாம். அதற்குப் பின்னர் அடுத்தடுத்த நாள்களில் நடக்கும் உடலுறவில் அன்னநடை நடந்துவரும் சினைமுட்டையை, ஓட்டமாக முந்திவரும் உயிரணு ஒன்று, `அழகியே... ஏ அழகியே மேரி மீ! மேரி மீ!’ என அழகாக அரவணைத்துக் கொடுக்கும் ஓர் இறுக்கமான ஹக்-கில் ஒன்றாக இணையுமாம்.

ஏதேனும் தொற்றில் சினைக்குழலில் அடைப்பு உள்ளதா, சின்ன வயதில் வந்த அல்லது இப்போது சத்தமில்லாமல் இருந்துகொண்டிருக்கும் காசநோய்க் கிருமியில் ஒட்டிப் போய்விட்டதா, அல்லது தொற்றுக்கிருமியால் பாதையினுள் கரடு முரடாகக் காயங்கள் இருக்கின்றனவா என அறிய இந்தச் சோதனை உதவும். கர்ப்பப்பைக்குள் உட்சுவர் ஒன்று இருந்து கர்ப்பப்பை இரண்டு போர்ஷனாக உள்ளதா அல்லது கர்ப்பப்பைக்குள் நார்க்கட்டி, பாலிப் (Polyp) போன்ற வளர்ச்சிகள் இருக்கின்றனவா என அறியவும் இந்தச் சோதனை உதவும்.

சில நேரங்களில் வெளி அந்நியப் பொருளான திரவம் என்பதை, உடல் உணர்ந்து, அதை உள்ளே விடாமல், சினைப்பாதைக் குழல், தசைகளை இறுக்கிக்கொண்டு தற்காலிக அடைப்பை உருவாக்கும் தன்மையும் ஏற்படும். எப்படி, ஒரு தூசியை முகர்ந்தால், உடல் அனிச்சையாகத் தும்மி, அதை வெளியேற்ற முயல்கிறதோ, அதேபோல, அந்த அயோடின் கரைசலை வெளியேற்ற ஏதுவாக சினைக்குழல் பாதை மூடிக்கொள்வதை நோயாக நினைத்து `ஐயோ, எனக்கு டியூப் பிளாக்’ எனப் பதறிவிடக் கூடாது. அயோடினை அடித்துவிரட்டும் அந்தச் சதை, உயிரணுவை சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்று, அழகாகக் கருத்தரிக்க உதவிடவும் வாய்ப்பு உண்டு. சினைக்குழல் அடைப்புக்குக் காரணமாக காசநோய் இருக்கும் பட்சத்தில் மட்டும், நவீன மருத்துவம் பரிந்துரைக்கும் மருந்துகளை ஆறு மாதம் வரை மருத்துவர் ஆலோசனைப்படி உட்கொள்வது சினைப்பைக் குழல் அடைப்பைச் சரிசெய்யும். பிற தொற்று களுக்கு ஓரிரு மாத சிகிச்சையே போதுமானதாக இருக்கும்.

கர்ப்பப்பைக்குள் மருந்தை அனுப்பிச் சோதிப்பது என்பது இன்று நேற்றல்ல... சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளிலும், கர்ப்பப்பைக்குள் மருத்துவ எண்ணெய் மருத்துவ நெய்களை `பீச்சு’, `பஸ்தி’ என்ற சிகிச்சைகளின் வழி அதற்கென உள்ள சிறு சலாகை மூலம் உள்ளே அனுப்பி, கருத்தரிப்புக்கான மருத்துவம் செய்யும் முறை நெடுங்காலமாக நம்மிடம் இருந்துள்ளது. வெகு சமீபத்தில்கூட இப்படியான சிகிச்சைகளில் ஏற்பட்ட கருத்தரிப்பை ஆய்வுக்கட்டுரையாக வெளியிட்டுள்ளனர்.

அநேகமாக எல்லா நவீன மருத்துவச் சோதனை முடிவுகளுக்கும் ஓர் எல்லை உண்டு.  `நெகட்டிவ்’ என வரும் முடிவுக்குப் பின்னே பல பாசிட்டிவான விஷயங்கள் பரிமாறப்படாமலோ, புரியப்படாமலோ ஒளிந்திருக்கும். அப்படியான விசாலமான புரிதலோடு மட்டுமே எந்த முடிவையும் அணுக வேண்டும். இதய ரத்த நாள அடைப்பாக இருந்தாலும் சரி, சினைப்பைக் குழல் அடைப்பாக இருந்தாலும் சரி அல்லது ஆணுறுப்பு ரத்த நாடிச் சுருக்கமாக இருந்தாலும் சரி... தீவிர மருந்துகளைத் தாண்டி, தித்திக்கும் மனசால் சரியாகும் சாத்தியம் நிறையவே உண்டு.

- பிறப்போம்...


p30c.jpg

டலுறவின்போது ஆணுக்கு ஏற்படும் இயலாமைக்கு தடாலடி சிகிச்சை எப்போதும் கூடாது. இதற்கான மருந்துகள் கொஞ்சம் அடிமைப்படுத்தும்; மனசை நிறைய காயப்படுத்தும். முதல் தேவை, உங்களைத் தினம் துரத்தும் பணிச்சுமை, பயணச்சுமைகளில் இருந்து விலகி தூரமாக இருவரும் ஓடி, `மூங்கில் தோட்டம், மூலிகை வாசம், நிறைஞ்ச மௌனம் நீ பாடும் நேரம்...’ எனப் பாடி ஐந்தாறு நாள்கள் இருந்துவிட்டு வாருங்கள். அங்கே போய், ஆபீஸ் புரொமோஷன், அல்சேஷன் நாயின் லூஸ்மோஷன் பற்றியெல்லாம் பேசாதீர்கள். பிரேசிலியன் பாவ்லா கதை படியுங்கள்; ஹாலந்து வான்காவின் ஓவியம் ரசியுங்கள்; பண்ணைப்புரம் ராஜா இசையில் வடுகப்பட்டி வைரமுத்து வரிகளில் மூழ்குங்கள். முடிந்தால், அது உங்கள் இல்லத்தரசியின் மாதவிடாய் முடிந்து 12 நாட்களுக்குப் பிந்தைய ஐந்து-ஆறு நாளாக இருக்கட்டும். மருத்துவச் சோதனை, சமூக வேதனை, உறவுக்காரச் சிரிப்பு, டி.வி வில்லன்களின் போதனைகள் இல்லாத அந்த நாட்கள் அநேகமாக உங்கள் ஆளுமையை எந்த மருத்துவமும் இல்லாமல் அதிகரிக்கும். சத்தமில்லாமல் உள்ளே கருத்தரிக்கும்.


p30d.jpg

பூனைக்காலி பருப்பு

பெயர்தான் பூனையே தவிர, செய்கிற வேலை என்னவோ யானை மாதிரி. கிட்டத்தட்ட 13 வகையான பூனைக்காலி வித்துக்கள் இந்தியாவில் உள்ளன. `வெல்வெட் பீன்’ என்ற ஆங்கிலப் பெயர் கொண்ட இந்தப் பருப்பை வைத்து, சில ஆப்பிரிக்க நாடுகளில் சாம்பார், பருப்பு பூவா எல்லாம் செய்து சாப்பிடுகிறார்களாம். இந்த பூனைக்காலி நம் ஊர் பாரம்பர்ய வயாகரா பருப்பு. `அப்படியா... அப்போ உடனே அரை கிலோ வாங்கி பெசரட் தோசை பண்ணிடலாமா?’ என இறங்கிவிட வேண்டாம். இந்தப் பிரச்னை இருப்பவர்கள், `வாலிப, வயோதிக அன்பர்களே...’ எனும் அறைகூவலில் சிக்காமல், அருகில் அரசாங்கத்து பிரைமரி ஹெல்த் சென்டரில் உள்ள சித்த மருத்துவரிடம் ஆலோசித்து, அதனை மருந்தாகப் பெறலாம்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

உயிர் மெய் - 9

 

 

மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி, படங்கள்: அ.குரூஸ்தனம்

 

``அவ உட்கார்ந்து எந்திரிச்சுப் போனாலே அந்த இடம் கொதிக்குது. கையைப் பிடிச்சா, அடுப்புல போட்ட கரண்டி மாதிரி சுடுது. ஆனா காய்ச்சல் இல்லை...’’ என அந்த ஒல்லிப் பெண்ணின் அம்மா கரிசனத்துடன் பேசுகையில், அவள் தன் அம்மாவிடம் சைகையாக `அதைச் சொல்லும்மா’ எனச் சொல்வதுண்டு. இந்த விஷயத்தைப் பேச வெட்கப்படும் அந்த இளம் பெண்ணின் அம்மா, ``மாசம் பூராவும் வெள்ளைபடுதுங்குறா டாக்டர். கூடவே மாதவிடாய் நேரத்துல சுருண்டு படுத்து வலிக்கிதுங்குறா. பின்னாடி இதெல்லாம் ஏதாவது பிரச்னையாகுமா? வரன் வேற பார்த்துக்கிட்டு இருக்கோம். ரொம்ப பயமாயிருக்கு’’ என்பதுண்டு. ஒல்லி பெல்லியோடு ரொம்பவே சூடாகத் திரியும் கல்லூரிப் பெண்கள் பலருக்கு, இதே அம்மாக்களும், இதே கண்ணீரும், இதே பயமும் இருக்கின்றன.

இந்தக் கொடுமை இன்றைக்குநேற்று நடந்ததல்ல. ஜீரோ சைஸ் இடுப்புக்குக் கரிஷ்மா கபூர், காத்ரினா கைஃப் மட்டுமல்ல, ஔவையார் வரிந்துகட்டிக்கொண்டு பேசியிருக்கும் `உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு’ - எனும் வரியைப் படிக்கும்போதெல்லாம், `அது அழகு மெனக்கிடலா, ஆணாதிக்க உச்சமா?’ என எனக்குத் தோன்றும். ``ஹலோ! லேடீஸுக்கு இடுப்புச்சதை குறைவாக இருக்கணும். `பெல்விக்’ எலும்பு கர்ப்பத்தில் விரிய, அது வழிகுடுக்கும்னுதான் எங்க மூதாதையர் அப்படி அறிவியல்பூர்வமாகச் சொன்னாங்க’’ என்பது ‘அறிவியலா... ஆணாதிக்கமா?’ இன்னும் தெரியவில்லை. ஆனால், கல்லூரிப் பெண்களிடம் இந்த ஒல்லிபெல்லி வியாதி, கணிசமாக அதிகம்.

p44a.jpg

கன்னாபின்னாவென மெலிவதை காலேஜின் கர்மச் சிரத்தையாக்கி, மெல்லிடை அழகுக்காக மெனக்கிடும் பெண்கள் கூடவே கொஞ்சம் தம் கர்ப்பப்பையையும் காயப்படுவதை அறிந்திருப்பதில்லை. மெலிந்திருக்கும் பெண்கள் பலருக்கும் எகிறும் உடல் சூடும், அதில் தொடரும் வெள்ளைப்படுதலும் எப்போதுமே அலட்சியமாகக் கடக்கக் கூடியதில்லை. மாதவிடாய்க்கு முன்னரும் பின்னரும் ஏற்படும் சாதாரணத் திரவம் போன்ற வெளியேற்றம் நோய் அல்லதான். ஆனால், எல்லா நேரமும் அப்படியல்ல. பழுத்த சீழ்போலவோ, மஞ்சள் நிறத்துடனோ, துர்நாற்றத்துடனோ வரும் வெள்ளைப்படுதல் நோயாக இருக்கக்கூடும். சில நேரங்களில், பிறப்புறுப்பில் கொஞ்சம் அரிப்பையும் தந்து, மாதம் முழுமையுமோ அடிக்கடியோ வெள்ளைப்படுதல் நிகழ்வதுண்டு. இது கர்ப்பப்பையின் கழுத்து, உள்சுவர்ப் பகுதி அல்லது சினைக்குழலின் உள்பகுதியில் வரும் புண்ணாலோ, தொற்றுக்கிருமியாலோ ஏற்பட்டிருக்கக்கூடும். தொடர்ச்சியாக இப்படி ஏற்படும் சிரமம், சினைக்குழலில் அடைப்பை ஏற்படுத்தி, கருமுட்டை வரும் பாதையை அடைக்கலாம்; தடுக்கலாம். கரு உருவாகும்போது, கர்ப்பப்பையில் உட்காராமல், சினைக்குழல் பாதையில் சிக்கி, `Ectopic pregnancy’ எனும் தீவிரச் சிக்கலை உருவாக்கிவிடவும் காரணமாக அமையலாம். `போதும்...’ எனத் தோசையில் ஒன்றைக் குறைக்கும் விஷயம், வருங்காலத்தில் குழந்தையில் ஒன்றைக் குறைப்பதாக வந்து சேரலாம்.

ஆணோ, பெண்ணோ அதீத உடல் சூட்டோடு இருப்பது ஆரோக்கியத்தின் அடையாளம் அல்ல. சித்த மருத்துவம் அதைப் பித்தத்தின் உச்சமாகப் பார்க்கின்றது. பெண்ணுக்கு வெள்ளைப்படுதலைத் தரும் இந்த உடல்ச்சூடு, ஆணுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையைக் கொஞ்சம் குறைக்கவும் செய்யும். அதோடு உயிரணுக்களின் ஓட்டத்தையும் மந்தப்படுத்தும். உயிரணுக்களின் உற்பத்தி நடப்பது ஆணின் விதைப்பையில். அடுத்த தலைமுறையை உருவாக்கும் உடலியக்கத்தின் மிக முக்கியமான பகுதி, ஏன் இப்படிக் காலுக்கிடையே இசகுபிசகாகத் தொங்கிக்கொண்டு இருக்க வேண்டும் `மூளையைப் படு உறுதியான எலும்புக்குள்ளே பத்திரமாக வைத்த ஆண்டவன், இந்தப் பகுதிக்கு `சிறுநீரக வில்லா’விலோ, `கல்லீரல் காலனி’யிலோ இடம் ஒதுக்கியிருக்கலாம் அல்லவா... ஏன் இந்த ஓரவஞ்சனை’ எனச் சிலருக்குத் தோன்றலாம். இதற்கு ஒரே காரணம், உடலின் சூட்டில் உயிரணு உற்பத்தி குறைந்துவிடக் கூடாது என்பதுதான். கூடவே, சுற்றுப்புறத்தின் வெப்பம் தாக்கிவிடாதபடி விதைகளைச் சுற்றி மெல்லிய தசைகளையும் அதனிடையே மிக மெல்லிய நீரையும் இயற்கை படைத்திருக்கிறது. ஆணுக்கு எப்படி விதைப்பை அமைக்கப்பட்டதோ, கிட்டத்தட்ட அதேமாதிரிப் பெண்ணுறுப்பின் தசையின் லேபியம் (Labium) இதழ்களும் உருவாக்கப்பட்டன. பிறந்து 14 - 15 வயதுக்குப் பின்னர்தான் விதையின் வேலை முழுமைபெற்றாலும்கூடக் கரு உருவாகிய ஐந்தாம், ஆறாம் வாரத்தில் இந்த விதைப்பை அல்லது பெண்ணின் உறுப்பின் இதழ்கள் உருவாக ஆரம்பித்துவிடும்.

``சார்! விதைப்பை ரொம்பத் தளர்வாக இருக்கிறது. உள்ளே இருக்கும் இடது பக்க விதை கொஞ்சம் கீழிறங்கியும், மற்றொன்று கொஞ்சம் மேலேயும் இருப்பதுபோல் உள்ளன. ஏதாவது மேனுஃபேக்சரிங் டிஃபெக்டா?’’ எனப் பதற்றத்துடன் சில ஆண்மகன்கள் மருத்துவரிடம் போவதுண்டு. இயற்கையின் ஆச்சர்யமிக்க மிகமிக நுணுக்கமான வடிவமைப்பு அது. தூரத்தில் போகும் அழகியை சைக்கிளில் விரட்டிச் சென்று பார்க்கப் போகும்போதோ அங்கே அவளிடம் எக்குத்தப்பாக எங்காவது சில்மிஷம் பண்ணி, அவளது கிக் பாக்ஸிங்கில், `ணங்...’ என `அந்த இடத்தில்’ குத்துப்பட்டாலோ ஏதேனும் ஒரு விதை மட்டுமே அடிபடும்படி `இயற்கை பீனல் கோட்’ அதைக் குறைந்தபட்ச தண்டனையாக இன்னொரு விதை தப்பித்து, அவன் அப்பாவாகும் வாய்ப்பை விட்டுவைக்கத்தான் விதைகள் ஏற்ற இறக்கத்துடன் உருவாகியுள்ளதாம்.

 உடலுறவின்போதும், குளிர்ச்சியான தட்பவெப்பத்தின்போதும் விதைப்பை தளர்வுநிலையில் இருந்து சுருங்கி, தடித்து இருக்கும். பிற எல்லா நிலையிலும் தளர்ச்சியாக இருப்பதுதான் விதைக்கு நல்லது. சைக்கிள் ஓட்டுவது முதல் ஜிம்னாசியம் செய்வது வரை ஆண் செய்யும் அத்தனை அட்டகாசங்களிலும் உடலின் வயிற்றுத்தசையின் உள்ளுறுப்புகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகூட விதைகளுக்கு ஏற்படாதாம். ஆனால், இதே மாதிரி, பிரபுதேவா, கலா மாஸ்டர் டான்ஸ் கிளாஸுக்கெல்லாம் போகாத, திமிங்கலம், யானை போன்ற உயிரினங்களுக்கெல்லாம், விதைகள் பத்திரமாக வயிற்றுக்குள்ளேதான் வைக்கப்பட்டிருக்கும். `அப்படியானால், அதன் வயிற்றில் உள்ள சூடு யானைக்கு அதன் உயிரணு உற்பத்தியைக் குறைக்காதா?’ எனக் கேள்வி எழலாம். யானையின் விதையைச் சுற்றிச் சின்னதாக ஒரு பிரிட்ஜே அமைக்கப்பட்டிருக்கும். அவ்வளவு பாதுகாப்பாக உடலின் சூடு உயிரணுவின் உற்பத்தியைக் குறைத்துவிடக் கூடாது என அப்படி மெனக்கிடுகிறது இயற்கை. ஆனால்... நம்மிடம்?

குழந்தையை இடுப்பில் வைத்துத் தூக்கிக்கொண்டு போகும்போதே, டயப்பரை மாட்டி, அதற்கு வெளியே சூப்பர்மேன் மாதிரி இறுக்கமாக ஜட்டியைப் போட்டு, அதற்கும் வெளியே டெனிம் துணியில் ஜீன்ஸ் போட்டு, தூக்கிக்கொண்டு செல்லும் வழக்கம் எக்குத்தப்பாக இன்று பெருகிவருகிறது. குழந்தைகளுக்கு அப்படி என்றால், இளைஞர் கூட்டத்துக்கு எப்போதாவது ஜீன்ஸை பாம்பு, சட்டையை உரிப்பதுபோல உரித்து எறியும் பழக்கம் இருக்கிறது. இயற்கை காற்றோட்டமாக உடல் வெப்பத்தில் இரண்டு, மூன்று டிகிரி குறைவாக (உள்ளே உடலில் 98 டிகிரி ஃபாரன்ஹீட் என்றால், விதைப்பைக்குள் 95 டிகிரிதான் இருக்குமாம்) விதைகளை வைத்திருக்க, மழலையில் டயாப்பரும், இளமையில் ஜீன்ஸும் சேர்ந்து ஆணின் விதையை `பார்பிக்யூ’ பண்ணும் அட்டகாசத்தில், உள்ளே உசேன் போல்ட்டாக ஓடும் உயிரணு ஸ்ரீவில்லிபுத்தூர்த் தேராக நகரத் தொடங்கும். ஆம்! இன்று உயிரணுக்கள் ஓட்டத்தின் குறைவுக்கும், உற்பத்திக் குறைவுக்கும் விதைப்பைக்கு நாம் வைக்கும் சூடு ஒரு முக்கியக்காரணம்.

மடிக்கணினி நிறைய கணினியன்களின் சட்டை, பேன்ட் மாதிரி ஆகிவிட்டது. அலுவலகத்தில் இருந்து காலையில் டாய்லெட் போகும்வரை, இதை மடியில் வைத்துத் திரியும் புத்திசாலிகள் பலருக்கு மடியில் வைத்திருக்கும் மடிக்கணினி அடியில் சூட்டை அதிகரித்து, உயிரணுவைக் குறைக்கும் எனத் தெரியாது. அதேபோல் சட்டைப்பையில் செல்போன் இருந்தால் கிளாஸில் மாட்டிக்கொள்வோம் எனப் பேன்ட் பாக்கெட்டில் செல்போனைப் போட்டுக்கொண்டு திருட்டுத்தனமாக வறுக்கும் இளைஞருக்குப் புரிவதில்லை, தான் பதமாகக் கருகாமல் வறுத்துக் கொண்டிருப்பது `விதை’யையும் சேர்த்து என்று.

நமக்கு நாமே சொந்தச் செலவில் சூனியம் வைப்பது, சூடு வைப்பது தாண்டிப் பூமியே சூடாகிக் கொண்டிருப்பதும் இந்த அணுக்கள் உற்பத்தி இயக்கம் குறைய முக்கியக் காரணம். சளி பிடிக்கக்கூடாது என நாம் எப்போதும் சாம்பாரில் அமாக்ஸிசிலின் போடுவதில்லை. வெண்டைக்காய்தான் போடுகிறோம். ஆனால், பிராய்லர் கோழிக்கு மூன்று வேளையும் ஆன்ட்டிபயாட்டிக் பரிமாறல். அரையிடுக்கில் பூஞ்சையால் அரிப்புவரக் கூடாது என நாம் அங்கே கொஞ்சம் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்துவதில்லை; அதே பூஞ்சை, கத்திரிக்காய்க்கு வரக்கூடாதென்றால் மட்டும் கொடும் ரசாயனங்களைத் தெளித்து அந்தப் பூஞ்சையை அங்கே எரிக்கிறோம். வீட்டில், இரண்டு நிமிடத்தில் செய்து, நாலு நிமிடத்தில் நூடுல்ஸைத் தின்று தீர்க்கிறோம். அதே நூடுல்ஸின், வெளி உறையைப் பூமி தின்று தீர்க்க இருபத்தைந்தாயிரம் வருடங்கள் ஆகும். இப்படி நாம் இயற்கையில் செய்யும் அத்தனை அட்டூழியமும் `போதுமடா சாமி! இவன் கணக்கைக் கொஞ்சம் பூமியில் இருந்து குறைக்கலாம்’ எனப் பூமி கோபமாகப் போடும் சூடு, மொத்தமாக உலகெங்கும் ஆணின் உயிரணுக் குறைவை உருவாக்குகிறது. நம் சூட்டை மட்டுமல்ல; பூமியின் சூட்டையும் தணித்தே ஆக வேண்டும். பூமிக்கு, `ஐ.யூ.ஐ, ஐ.வி.எ.ஃப்’ பண்ண முடியாது. செவ்வாய் கிரகத்தில் `செரோகேட்’ பண்ணச் சில யுகங்கள் பிடிக்கும்.

- பிறப்போம்...


உடற்சூட்டைத்தணிக்கும் எண்ணெய்க் குளியல்!

அநேகமாக இப்போது பெருகிவரும் பல நோய்களுக்கும் மிக முக்கியக் காரணம், நாம் மொத்தமாக எண்ணெய்க் குளியலை மறந்ததுதான்! இடைக்காலத்தில் இங்கிலீஷ் மருத்துவர்கள் மொத்தமாக இதை எதிர்த்ததன் விளைவு, அத்தனை படித்த கூட்டமும் `வெளியில் தேய்க்கும் எண்ணெய் என்னங்க செய்யப்போகுது... தோலுக்கு உள்ளே எப்படிங்க போகும்?’ என முட்டாள்தனமாகக் கேள்வி கேட்டு அதை மறந்தும் மறுத்தும்விட்டனர்.

p44b.jpg

போதாக் குறைக்குத் தமிழ்ப்பட வில்லன்கள், காமெடி பீஸ்கள் மட்டுமே எண்ணெய் மசாஜ் செய்வதாகக் காண்பிக்கப்பட்டதும், `ஓ! இது காமெடியானது அல்லது வில்லத்தனம்’ எனத் தமிழ் அம்மாஞ்சிகள் புரிந்துகொண்டனர். விளைவு, எண்ணெய்க் குளியல் இட்லி மிளகாய்ப் பொடியோடு நின்றுவிட்டது.

வாரம் குறைந்தபட்சம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடல் சூட்டைத் தணித்து, ஆணுக்கு உயிரணுக்களை உயர்த்தவும் பெண்ணுக்குக் கர்ப்பச் சூட்டைத் தணிக்கவும் மிகமிக அவசியம். சித்த மருத்துவப் புரிதல்படி, `வியானன்’ எனும் உடல் முற்றும் பரவி இருக்கவேண்டிய வாயு ஆங்காங்கே தடைபடுவது பல நோய்களுக்கும் மிக முக்கியக் காரணம். எண்ணெய்க் குளியல் அதைச் சீர்செய்யும்.

உலகெங்கும் உள்ள மருத்துவ ஆய்வுத் துறைகள், எப்படி எண்ணெய்க் குளியல் ரத்தத்தில் பல நல்ல சுரப்புகளை ஊக்குவிக்கிறது எனப் பல மருத்துவக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. பிறந்த குழந்தைக்கு எண்ணெய்க் குளியல் செய்ய இங்கிலாந்து நர்ஸுகளுக்கு இப்போது சிறப்புப் பயிற்சியும் கொடுக்கப் படுகிறது.

p44c.jpg

`சைனசைடிஸ் இருக்கிறது; தோல் நோய் இருக்கிறது: நான் எந்த எண்ணெயை எப்படித் தேய்க்கணும்?’ என கூகுளில் தேடாமல், அருகாமையில் உள்ள மருத்துவரைத் தேடி ஆலோசனை பெற்றால், மூலிகைத் தைலங்களால் உடல் சூட்டையும் தணித்து, நோயையும் வெல்லலாம். மற்ற எல்லோருக்கும் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் மட்டுமே எண்ணெய்க் குளியலுக்கு ஏற்றது. உடம்பெங்கும் எண்ணெய் தேய்த்துப் பின்னர் ஒரு மணி நேரம் கழித்துப் பாசிப்பயறு தேய்த்துக் குளிக்க வேண்டும். அன்றைக்கு வெளியில் அலைந்து திரியக் கூடாது. அன்று மட்டும் உடலுறவும் கூடாது. அன்று மட்டும் ஸ்பெஷல் மெனுவாக உளுந்தஞ்சோறும் எள்ளுத் துவையலும் இருந்தால் இன்னும் நல்லது!


p44d.jpg

மேகச்சூட்டைத் தணிக்க...

வெள்ளைப் பூசணியை நிறையப் பேர் பூச்சாண்டிப் படம் வரைந்து கட்டட வாசலில் தொங்கவிடவும், சாலையில் போட்டுடைத்துப் போகிற வருகிற வாகன ஓட்டிகளைச் சறுக்கிவிழ வைக்கவுமே அதிகம் பயன்படுத்துகிறார்கள். பெண்ணின் மேகச்சூட்டுக்கு வெள்ளைப் பூசணி தரும் பயனை வேறெந்தத் தாவரமும் தராது. உடல் சூட்டைக் குறைத்து, வெள்ளைப்படுதலைக் குறைக்க, நேரடியாக ஜூஸாகவோ பாசிப்பயறு சேர்த்துக் கூட்டாகவோ, மோர்க்குழம்பில் மிதக்கும் காயாகவோ போட்டு வெள்ளைப்பூசணியைப் பயன்படுத்தலாம். பெண்களுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் இது அத்தனை அலாதி பயன்தரக்கூடியது. ஆண்களின் புராஸ்டேட் கோள வீக்கம், சிறுநீர்ப்பாதைத் தொற்று இவற்றுக்கும் நல்ல மருந்து. கூடுதல் சைடு எஃபெக்டாக அந்த விஷயத்தில் ஆர்வமும் ஆதிக்கமும் அதிகரிக்கும்!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

உயிர் மெய் - 10

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

மருத்துவர் கு.சிவராமன், படம்: மக்கா ஸ்டூடியோஸ், மாடல்: பவித்ரா, வெக்கி

 

மூளைக்குள்ளே பட்டாம்பூச்சி பறக்கணும்; மனசுக்குள்ளே மாடப்புறா றெக்கையைப் படபடனு அடிச்சுக்கணும்; கண்களை அகல விரிச்சு, மூக்கு சிவக்கப் பெருமூச்சு விடணும்; சொல்லவந்த வார்த்தை தொண்டைக்குள் தொலைஞ்சு போகணும்... இவையெல்லாம் காதல் வளர்ச்சியில் மட்டுமல்ல, கருமுட்டை வளர்ச்சியிலும் நடக்கும் விஷயம்!

பெண் சிசுவாகத் தாயின் வயிற்றில் ஜனித்தபோதே, 70 லட்சம் முட்டைகளை அவள் கொண்டிருந் தாலும், பருவ வயதை எட்டி, மாதவிடாய் தொடங்கும் 12-13 வயதில் அவை பத்தில் ஒன்றாகக் குறைந்துவிடும். அதிலும், 10-12 முட்டைகள் மட்டுமே மாதம்தோறும் வளர எத்தனிக்கும். அந்தப் பத்து பன்னிரண்டிலும் ஒன்றோ, இரண்டோதான் முழு வளர்ச்சிக்குக் கிட்டத்தட்ட எட்டும். அந்த இரண்டில் முழுதாக முந்தும் ஒன்றுதான், முழு கருமுட்டையாகி, கர்ப்பப்பைக் குழலுக்குள் காத்திருக்கும் தன் காதலனைத் தேடும் பயணத்தைத் தொடங்குகிறது.

p44a.jpg

தான் இருக்கும் சினைப்பையைத் தாண்டி, முட்டையின் வளர்ச்சிக்கு மூளையின் மெனக்கெடல்கள் நிறைய வேண்டும். மூளைக்குள்ளிருந்தும் துல்லியமான வழிகாட்டுதலும், அதனால் துளிர்க்கும் சிலிர்ப்பும், கூடவே சின்னதாகச் சில சொட்டு ஹார்மோன்களும் முட்டையைச் சரியாக வளர்க்க வந்து சேர வேண்டும். அந்தச் சிலிர்ப்பைத் தரவேண்டிய சுரப்புகள் ஏதோ சில காரணங்களால் பிழைபடும்போது, முட்டை வளர்வதுமில்லை; வெடிப்பதுமில்லை.

இது எவ்வளவு நுணுக்கமான செயலாக இருந்தாலும், இந்த முட்டை தன்னுள் வளர்வதை, வளர்ந்து வெடித்துக் கருக்குழல் பாதையில் கவ்வப்படுவதைப் பெண்களால் உணர இயலும். சின்னதாக ஒரு வலி (Mittelschmerz), தன்னுள் பரவும் ஒருவிதக் கிளர்ச்சி மணம், கூடவே கொஞ்சம் கூடுதலான காம உணர்வு இவற்றைக் கருமுட்டை வெடிப்பில் பெண்ணால் உணர முடியுமாம். இப்போது கருத்தரிக்க வேண்டுமா, தவிர்க்க வேண்டுமா என்பதை இந்த உடல்மொழியைக் கொண்டு முடிவுசெய்ய சிலரால் முடியும். ஆனால், பலரால் இந்த மொழியைச் சரியாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. கருமுட்டை வெடிப்பில் மட்டுமல்ல,  பல நோய்களில், இப்படியான உடலின் மொழியை நாம் ஒட்டுமொத்தமாக மறந்துவிட்டோம். இருமல், தும்மல், தூக்கம், வலி, வாசனை, வெப்பம், குளிர்ச்சி, வாய்வு... எனப் பல மொழிகளில் நமது உடல் தினம் தினம் நம்மிடம் பேசுவது உண்டு. நம்மைச் சுற்றி நடக்கும் ஆன்லைன் கூச்சலிலும், ஆஃப்லைன் பாய்ச்சலிலும் உடலின் மிக மென்மையான இந்தக் குரல் நமக்குக் கேட்பதில்லை. கேட்டாலும் ஒதுக்கி, உதாசீனப்படுத்தி விட்டு ஓடுகிறோம், லாப வெறியுடன். வணிகத்தில் மட்டுமல்ல... வாழ்விலும்.  

குறிப்புச்சீட்டு எழுதிப்போய் மருத்துவமனைகளில் தவமாய் தவமிருக்கும் நாம், பல குறிப்புகளை நமக்குச் சொல்லும் நம் உடம்புடன், தினமும் சில மணித்துளிகளேனும் பேச வேண்டும். நம் உடலோடு பேசுவது ஆவிகளோடு பேசுவதுபோல மாய, மந்திரமில்லை. கொஞ்சம் மணித்துளிகள், கொஞ்சம் தனிமை, கொஞ்சம் மௌனம், கொஞ்சம் காற்று, கொஞ்சம் உள்நோக்கிய சிந்தனை, கொஞ்சம் உடலை உற்றுக் கவனிக்கும் கூரான மனம் இத்தனையும் இருந்தால், உங்கள் உடல் உங்களோடு பேசும். அந்தப் பேச்சு, கட்டளையாகவோ, காதலாகவோ, காமமாகவோ, கண்ணீராகவோ, கிளர்ச்சியாகவோ இருக்கும்.

கருத்தரிக்க முயல்வோர் மாதவிடாய்த் தொடங்கிய 12 அல்லது 13-ம் நாள் இப்படி உடலுடன் பேச முயலுங்கள். அப்போது `ம்மா... நான் ரெடி’  என முறுக்கிக்கொண்டு, சற்றே லேசான வலியைக் கொடுத்து, உங்கள் கருமுட்டை உங்களோடு பேசும். கண்களில் காதலைக் கொப்பளிக்கும். போனஸாக, கன்னத்தில் அழகையும் கொட்டும். இது புனைவு அல்ல, உண்மைச் செய்தி. நவீன அறிவியல், `கருமுட்டை’ வெடிக்கும் சமயம், பெண்கள் கூடுதல் அழகாக இருப்பார்கள்’ என `Proceedings: Biological sciences’  நூலில் ஆய்ந்து அறிவிக்கிறது.

 கோழிமுட்டையில் உள்ள மஞ்சள் கருவை அடர் மஞ்சள் நிறத்தில் கொண்டுவர, பொன் மஞ்சள் நிறமுள்ள மக்காச் சோளத்தையோ, மஞ்சள் கொன்றையையோ, மேரிகோல்டு மலரிதழையோ கொஞ்சம் கூடுதலாக அதன் உணவில் சேர்ப்பார் களாம். `கோழி, குரங்கெல்லாம் ஏதோ ஒரு யுகத்தில் நம் ஓர்ப்படி, கொழுந்தியாவாக இருந்தவங்கதானே... அதனால், அதேபோல, பெண்ணின் கருமுட்டையை வலுவாக்கவும், வளர்த்துவிடவும் உணவில் எதையாவது சேர்க்க முடியாதா?’ எனும் தேடல் இன்றைக்கும் உலகின் பல மூலைகளில் நடந்துகொண்டிருக்கிறது. உணவு ஆய்வில் இன்னும் அந்த வெற்றி எட்டப்படவில்லை என்றாலும், 1960-களிலேயே `க்ளோமிஃபென்’ (Clomifene) எனும் வேதிப்பொருளை இதற்கெனப் படைத்துவிட்டனர் அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள். இன்றைக்கும் கருமுட்டையை வளர்க்கும் மருந்துகளில் கோலோச்சிக்கொண்டிருப்பது இந்த க்ளோமிஃபென் மருந்துதான். பல பில்லியன் டாலர் வர்த்தகத்தில் நடக்கும் இந்த மருந்தை இப்போது பெருமளவில் வணிகப்படுத்துவது சனோஃபி எனும் பிரெஞ்ச் பன்னாட்டு கம்பெனி. உலகின் முதல் ஐந்து பணக்கார மருந்து கம்பெனிகளில் சனோஃபி இருப்பதற்கு, இந்த முட்டை வளர்ச்சி மருந்தும் ஒரு முக்கியக் காரணம்.

``நல்லாத்தான் பீரியட் வருது... ஆனா கருத்தரிக்கலை” என்போருக்கும், ``எனக்கு `அது’ எப்போ வரும்னு சத்தியமா தெரியாது; அப்படியே வந்தாலும், எந்தப் பயனும் தராம, என்னைப் படுத்தி எடுக்குது’’ என ரொம்ப நாளாக மாதவிடாய்க்காகக் காத்திருந்து நொந்தவருக்கும், ``சினைப்பையில் நிறைய நீர்க்கட்டிகள். பாலிசிஸ்டிக் ஓவரி’’ எனக் கவலையோடும், கொஞ்சம் புஷ்டி உடம்போடும் காத்திருப் போருக்கும், அநேகமாக மகளிர் மருத்துவர் பரிந்துரைப்பது இந்த க்ளோமிஃபென்னைத்தான். ``பீரியட் முடிஞ்சவுடன், அதாவது உங்களோட நாலாம், ஐந்தாம் நாள் ஆரம்பிங்க... அஞ்சு நாளைக்குச் சாப்பிடுங்க’’ என இந்த மருந்து அத்தனை கருத்தரிப்புச் சிகிச்சையிலும் பெண்களுக்குப் பரிந்துரைக்கப்படும். ஆண்மைக்குறைவுக்காக சில நேரங்களில் ஆண்களுக்குக்கூட இது பரிந்துரைக்கப் படுவதுண்டு.

இந்த மருந்தைச் சாப்பிட்டவுடன், இது நேரே ஸ்பாட்டுக்குப் போய் கருமுட்டையைச் சோறூட்டி, பாலூட்டி, ஹார்லிக்ஸ் கொடுத்து புஷ்டியாக்காது. மாறாக, இந்த முட்டை வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோனை பிட்யூட்டரியிலிருந்து சுரக்கவைக்க, ஹைப்போதாலமஸைத் (Hypothalamus) தூண்டும். அது பிட்யூட்டரி சுரப்பியைப் போய் ``டேய்... ஒழுங்கா சுரந்து தொலைடா!’’ என அதன் தொடையில் கிள்ள, அது தேவையான ஹார்மோனைக் கொப்பளித்து, கருமுட்டையை வளர்க்கும். ``பாஸு... பிட்யூட்டரி, ஹைப்போதாலமஸ் இதுமாதிரி பயங்கரமான வார்த்தையைப் பார்த்தாலே பயமாயிருக்கு’’ எனப் பதற வேண்டாம். எல்லாமே மூளையில் உள்ள சுரப்பி சமாசாரங்கள்தாம். சுருக்கமாகச் சொன்னால், சினைப்பையின் முட்டை வளர, மூளை கொஞ்சம் சிலாகித்துச் சில துளி ஹார்மோன்களைச் சுரக்க வேண்டும். அந்தச் சுரப்புக்கு எனக் கொடுக்கப்படுவதுதான் க்ளோமிஃபென்.

உலகெங்கும், அதிகம் பயன்படுத்தப்படுவதால், க்ளோமிஃபென் ரொம்ப சமர்த்து மருந்து என்றெல்லாம் சொல்ல முடியாது. `ஏழெட்டு சுழற்சிக்கு மேல் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவது ஆபத்து’ என இதைப் படைத்த அந்த நிறுவனமே எச்சரிக்கிறது. அதிகமாகப் பயன்படுத்தி, ஒருவேளை கருத்தரிக்காமலேயே இருந்தால், அது சினைப்பை புற்றை உண்டாக்கிவிடுமோ எனும் அச்சம் சில ஆய்வுகளில் உண்டாகியிருக்கிறது. கூடவே இந்த மருந்து, உள்ளே இரண்டு மூன்று முட்டையை ஒரே சமயத்தில் வளர்த்து அனுப்பிவிட்டால், இரட்டைக் குழந்தை, மூன்று குழந்தை ஒரே பிரசவத்தில் பிறக்கும் வாய்ப்பும் மிக அதிகம்.

``ஒரு வாரமா உங்க முட்டையை ஸ்கேனில் ஃபாலோ பண்ணியாச்சு. கருமுட்டை கொஞ்சம் சின்னதா இருக்கு. இன்னும் பெரிசாகணும். அப்போதான் சரியா 14-ம் நாள் வெடிச்சு வாசலுக்கு வரும். அதனாலதான் கருத்தரிப்பு தாமதமாகுது’’ என மருத்துவர் சொல்வது மனதில் முள்ளாகத் தைக்கும். `முள்ளை முள்ளால் எடுப்பது’தானே நம் முன்னோர்கள் சொன்ன ஃபார்முலா. அந்த முள் குத்திய வலி போக, நெருஞ்சில் முள் வழிகாட்டும். `சாதாரணமாகக் கல்லடைப்புக்கும் மேகச்சூட்டுக்கும் சிறப்பான மருந்தாக இருந்த நெருஞ்சில் முள், கருமுட்டை வளர்ச்சிக்கும் பயன்படுகிறது’ என மிக நுணுக்கமான ஆய்வில் கண்டறிந்து அசத்திவிட்டனர் சீன விஞ்ஞானிகள்.

பெண்களுக்கு FSH (Follicle-stimulating hormone) சீராக்குவது, ஹைப்போதாலமஸில் இருந்து அவசியமான சுரப்பை அளவாகச் சுரக்கவைப்பது எனக் கருமுட்டை வளர்ச்சிக்கான அத்தனை தூண்டுதல்களையும் நெருஞ்சில் முள்ளும் அதன் இலையும் கொடுக்கின்றனவாம். இந்தக் கருத்தைப் படித்துக்கொண்டிருக்கையில் எப்போதோ நெருஞ்சில் குறித்துப் படித்த இன்னொரு செய்தியும் நினைவுக்கு வருகிறது. வயல் வெளியில் எலித்தொல்லை அதிகரிப்புக்கு அந்த வரப்பில் பெருகியிருக்கும் நெருஞ்சில்தான் காரணம். அந்த முள்ளையும் இலையையும் பந்தியில் கட்டும் இந்தப் பிள்ளையார் வாகனம், கட்டுக்கடங்காமல் குட்டி போடுகிறது. ``அந்த முள்ளில் என்ன இருக்கிறது என ஆய்ந்து சொல்லுங்கள்’’ என ஓர் ஆய்வு அறைகூவல்விட்டிருந்தது. ஆய்வு முடிவில், எலி அந்த விஷயத்தில் புலியாக இருப்பது நெருஞ்சிலால்தான் எனத் தெரிந்தது.

நெருஞ்சில் தவிர, கருமுட்டை வளர்ச்சிக்கு அதிகம் உதவும் இன்னொரு மூலிகை, நொச்சி. கொசுவை விரட்ட தோட்டத்திலும், மூக்கில் இருந்து சளியை விரட்ட ஆவி பிடிப்பதற்கும், மூட்டில் இருந்து வலியை விரட்ட ஒத்தட மருந்திலும் உபயோகிப்படும் நொச்சி, கருமுட்டையின் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்களை மூளையில் இருந்து சினைமுட்டைக்கு விரட்டவும் உதவிடுமாம். சுருங்கிய கண் உள்ள சப்பை மூக்கு தேசத்தார், அவர்களின் பாரம்பர்ய சீன மருத்துவத்தில் இருந்து இதுபோல ஏராளமாக ஆராய்ச்சிகள் செய்து, சீன பாரம்பர்ய மருந்துகளை உலகெங்கிலும் கோலோச்சி, கொண்டாட வைத்துக்கொண்டிருக்கிறார்கள். நாமோ, பெரிய திரை நகைச்சுவைக்கும், சின்னத்திரை அழுவாச்சி நாடகங்களுக்கும், நடுராத்திரி பொய் போதனைகளுக்கும் மூலிகைகளின் முகவரிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ``அய்யோ... இரண்டு வருஷம் ஆச்சா? நீங்க இன்னும் அவங்களைப் பார்க்கலையா? முட்டையை வளர்க்க மருந்து வந்தாச்சு; பதமாக அது வெடிக்க ஊசி இருக்கு; உயிரணுவை ஓட்டமா ஓடவைக்க ஒரு கோர்ஸ் மருந்தே போதும். உயிரணுவைப் பிடிச்சு முட்டைக்குப் பக்கத்து ஸீட்டுல உட்கார வைக்கலாம்.  ஒண்ணும் இல்லாட்டி, முட்டையை உறிஞ்சி வெளியே எடுத்து, சோதனைக்குழாயில் உயிரணுவோடு ஒன்றாகப் போட்டு, அங்கேயே வயாகரா வஸ்துகளைத் தெளிச்சு தேனிலவு நடத்தி, கருவை உருவாக்கி, கடைசியில் கர்ப்பப்பைக்குள் கொண்டு சொருகிடலாம்’’ என ஊரெங்கும் கூச்சல் அதிகமாகிவிட்டது. ஆட்டா மாவுக்கு வரும் விளம்பரத்துக்கு முன்னரும் பின்னரும் ``ஈ.எம்.ஐ வசதியுடன், உங்க பாப்பாவை இப்படி சுளுவா பெத்துக்கலாம். வாங்க  எங்க மையத்துக்கு’’ என எஃப்.எம் விளம்பரங்கள் ஓயாது கூவிக்கொண்டே இருக்கின்றன.

p44b.jpg

சிலருக்கு மட்டும் இவற்றில் ஏதோ ஒன்று தேவைப்படலாம். ஆனால், நிச்சயம் இது பலருக்குமானது அல்ல. பலருக்குமானதாக ஆகிவிடக் கூடாது என்றால், சில காதல் கரிசனங்கள் இனி கட்டாயமாக்கப்பட வேண்டும். ``வாஷிங் முடிஞ்சாச்சா..? கொஞ்சம் மெலிஞ்சு, இன்னும் இந்த நாளில் படு அழகாயிட்டே போ!’’ என மாதவிடாயின் முடிவில் கணவனின் கண்சிமிட்டலுடன்கூடிய கரம்பற்றுதல், அவளுள் அடுத்த சினைமுட்டையை முன்வரிசைக்குத் தள்ளும். ``டைனிங் டேபிளில் மாதுளை ஜூஸ் இருக்கு. ஒழுங்கா ரெண்டு அத்திப்பழத்தை கடிச்சிக்கிட்டு, கடகடனு ஜூஸைக் குடிச்சுட்டு ஆபீஸுக்குப் போ!’’ என்கிற அன்பு அதிகாரம், அந்த முட்டைக்கு மூளையில் இருந்து, ஹார்மோன் ஊட்டம் கொடுக்கும். ``அப்புறம் அவ்வளவுதானா... வேற எதுவும் கிடையாதா?’’ எனக் கன்னத்தைத் திருப்பிக்காட்டி அவள் கேட்கும் கேள்விக்குப் பதிலாக பரிமாறப்படும் முத்தத்தில் முட்டை வெடிக்கும்!

- பிறப்போம்...


p44c.jpg

`சீரான உடற்பயிற்சி, கருமுட்டை வளர்ச்சி வெடிப்பை (ஓவுலேஷனை) சீர்படுத்தப் பெரிதும் உதவும்’ எனப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. அதே சமயம், `ஒல்லி பெல்லியாகணும்’ என அநியாயத்துக்குக் கம்பு, கட்டை சுற்றி, ஒரே இடத்தில் ஓடும் மகளிருக்கு (கிட்டத்தட்ட தினமும் நான்கு மணி நேரத்துக்கு ஜிம்மில் பயிற்சி எடுப்பவர்கள்) ஓவுலேஷன் பாதிக்குமாம்.


p44d.jpg

``ஒவ்வொரு நாளும் நேர நெருக்கடியிலும் பணிச்சுமை அழுத்தத்திலும் பயணிக்கும் என்னால், என்னுள் ஏற்படும் உடல் வெம்மை, சின்ன வலி, சுரப்பு, கூடுதல் தேடல் எதையும் உணர இயலவில்லை. நான் கருமுட்டையைத் தயார்நிலையில் வளர்க்கிறேனா என்பதை எப்படி அறிய முடியும்?’’

``கருமுட்டை வெடிப்பை பாலிக்கிள் வளர்ச்சி சோதனை செய்துதான் கண்டறிய வேண்டும் என்பதில்லை. மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் தெர்மாமீட்டரில் உடல் வெப்பத்தை அளவிட்டுக் குறித்துவைத்து, பிறப்புறுப்பின் கசிவு, உலர்வுத் தன்மையையும் காலண்டரில் குறித்துவைத்து வாருங்கள். என்றைக்கு உடல் வெப்பம் 0.5 முதல் 1 டிகிரி ஃபாரன்ஹீட் கூடுதலாக இருந்து, அன்றைக்கு கசிவு உணரப்பட்டிருந்தால் ஓவுலேஷன் (Ovulation) நடந்திருப்பதை உணரலாம். அன்றைக்கு நடக்கும் உடலுறவு, கருத்தரிப்புக்கான அதிக சாத்தியம் தரும்.’’

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

உயிர்மெய் - 11

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

மருத்துவர் கு.சிவராமன்

 

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வீதிக்கு வீதி அந்த விளம்பரம் கண்ணில் தென்படும். அது, சிவப்பு முக்கோண அடையாளச் சின்னத்துடன் காட்சியளிக்கும் `நிரோத் உபயோகியுங்கள்’ என்கிற அரசாங்கத்தின் குடும்பக்கட்டுப்பாடு விளம்பரம். ``அது என்னதுப்பா?’’ எனக் கேட்டு பிடறியில் அடிவாங்கிய வலி இன்னும்கூட என் நினைவில் உண்டு. ஆனால், இன்றைக்கு நிலைமை தலைகீழ். பல மாநிலங்களில் மரண விகிதத்துக்கு இணையாகப் பிறப்பு விகிதம் இல்லை என்ற நிலைமைக்கு வந்தாகிவிட்டது. ``அதுவும் 50-60 வயதுகளில் நிகழும் வாழ்வியல் நோய் மரணங்களில் உலகில் நாம்தான் முதலிடம். 2015-ம் ஆண்டில் உலகில் நடந்த வாழ்வியல் நோய் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு நம் தேசத்தில்தாம்’’ என நம் விக்கெட் மளமளவெனச் சரியத் தொடங்கியதில், இருக்கிற இன்னிங்ஸைக் காப்பாற்றவும் களமிறங்கவும் புதிய பேட்ஸ்மேன்கள் குறைந்துகொண்டே வருகின்றனர்.

 குழந்தைப் பிறப்பு தள்ளிப்போவதற்கு இன்று மிக அதிகமாகச் சொல்லப்படும் காரணம் பிசிஓடி. அதாவது, `பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்’ (Polycystic ovarian disease or syndrome). தமிழில் சினைப்பை நீர்க்கட்டிகள். ``கல்யாணத்துக்கு முன்னாடி டாண்ணு மணியடிச்ச மாதிரி வரும் சார். இப்போ முழுசா ஒழுங்கீனமாப் போயிடுச்சு. எப்ப வரும், எப்படி வரும்னே தெரியலை’’ என்போரிடம் மண்டியிருக்கும் குழப்பம், தமிழ்நாட்டு அரசியலின் `அம்மாவுக்கு முன், அம்மாவுக்குப் பின்’னான குழப்பத்தைவிட அதிகமானது. `நீர்க்கட்டி பிரச்னையால் வரலையா... அன்னைக்கு நீர்த்தொட்டியில் எடக்கு மடக்காக ஆகிப்போச்சே... அதனால வரலையா?’ என்ற குழப்பத்தில் ‘அந்நியன்’ பிரகாஷ்ராஜ் மாதிரி சிரிக்கவா, அழவா எனக் கலவரத்தை உண்டாக்குபவை இந்தச் சினைப்பை நீர்க்கட்டிகள். ‘`அதுதான், 56 நாளாயிடுச்சே... மாதவிடாய் வரலை. நிச்சயம் கரு தங்கியிருக்கும் எனப் பயங்கர ஆர்வமாக, அலாதியான படபடப்போடு யூரின் டெஸ்ட்டை அதற்காகவே உள்ள கிட்டை வாங்கி வீட்டிலேயே சோதனை செய்துபார்த்தால், நெகட்டிவ் ரிசல்ட் வருகிறது’’ என வலியோடு வருத்தமாகச் சொல்லும் மகளிர் இப்போது இங்கு அதிகம்.

p30a.jpg

இன்னும் சிலரோ, ஒவ்வொரு முறையும் மாதவிடாய் சரியான நாளில் வராமல் தள்ளிப்போகும்போது, அடிக்கடி சிறுநீர் சோதனையை உற்றுப் பார்த்துப் பார்த்து, மனசெல்லாம், `அந்தச் சோதனைப் பெட்டியில் ரோஸ் கோடு, திக்கா இருக்காதா?’ என்கிற நினைப்பிலேயே தேடும்போது, உண்மையாகவே அந்தக் கோடு இருப்பது மாதிரியே அதில் தெரியவரும். கோடு தெரிவதுடன் கூடவே, அடிவயிற்றில் அவள் `மம்மி...’ எனச் சன்னமாகச் சொல்லி சின்னதாக ஒரு செல்லக்குத்து தரும் உணர்வும் கிடைக்கும், `அய்யோ! அதுதானா?’ எனக் குபீர் மகிழ்ச்சிக் கலவரம் பிறக்கும். இன்னும் சிலநாள் அடிவயிற்றைத் தடவிக்கொண்டே, `ஆமாம். நிச்சயம் இது கருதான். வயிறுகூட கொஞ்சம் விம்மியுள்ளது; மார்பு கனக்கிறது’ எனக் கூறத் தொடங்குவதும் உண்டு. கொஞ்சநாள் காத்திருந்து ரத்தச் சோதனை எடுத்துப் பார்க்கையில், `குழந்தை இல்லை; நீர்க்கட்டியாய் இருக்கும்’ என முடிவுவர, மளமளவென கண்ணீர் வருவதை ஆங்கிலத்தில் `Pseudocyesis’, அதாவது, `பொய்யான உளவியல் மாற்றத்தில் வரும் போலிப் பிரசவ உணர்வு’ என அழைக்கின்றனர். சினைப்பை நீர்க்கட்டியோடு, பிரசவித்திருக்கிறோமா, இல்லையா என்ற மனக்குமுறலுடன் மாதத்தைப் பார்க்கும் பல மகளிருக்கு இந்தப் போலிப் பிரசவ உணர்வும் ஏற்படுவது இப்போது அதிகம். 

 ஆம். தலைமுடி கொட்டுவதற்கும், உடல் எடைக்கும் அடுத்ததாக இன்று இளம் பெண்கள் அதிகம் கவலைப்படும் விஷயம் இந்தச் சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னைதான். ``அய்யோ, பிசிஓடியா... அப்போ பாப்பா பிறக்குறதுல சிக்கலா?’’ எனப் பதறுவோருக்கான முதல் செய்தி, இந்தச் சினைப்பை நீர்க்கட்டிகள் கொஞ்சம் கருத்தரிப்பைத் தாமதிக்கவைக்கக் கூடுமே தவிர, எப்போதும் நிரந்தரத் தடையாக இருக்காது. ஆனால், இன்று மிக அதிகமாகத் தவறாகவும் தாறுமாறாகவும் மருத்துவம் எடுக்கப்படுவதும், தாமதிக்கும் கருத்தரிப்புக்கும் குழந்தைப்பேறு இன்மைக்கும் படுவேகமாகக் குற்றம் சுமத்தப்பட்டு கருத்தரிப்புக்கான உதவிச் சிகிச்சைகளுக்கு (Assisted reproductive techniques) முக்கியக் காரணிப் பொருளாக ஆக்குவதும் சினைப்பை நீர்க்கட்டிகளைத்தான். நிறைய நேரங்களில், உணவுக்கட்டுப்பாடு, வாழ்வியல் மற்றும் உடற்பயிற்சிகள் மூலமே இந்த பிசிஓடியைச் சரிசெய்ய முடியும். தேவை கொஞ்சம் மெனக்கெடலும் அக்கறையும் மட்டுமே.

  குழந்தைப் பிறப்பு தாமதம், சமூக அவமானம் தரும் அவசரம், ஆணாதிக்கம் கொடுக்கும் அழுத்தம் என ஏராளமான காரணங்களால் உருவான சினைப்பை நீர்க்கட்டிகளை உணவுத் தேர்வின் மூலமாகவும் வாழ்வியல் மாற்றங்கள் மூலமாகவும் நீக்கப் பலர் முயல்வதில்லை. தடாலடியாக ஹார்மோன் சிகிச்சை, ஐயூஐ (IUI - Intrauterine Insemination), ஐவிஎஃப் (IVF - In vitro fertilisation) எனப் பல சிகிச்சைகளுக்கு அந்தப் பெண் தள்ளப்படுகிறாள்.

கிட்டத்தட்ட 30 சதவிகித கருத்தரிப்புத் தாமதத்துக்கு, சினைப்பை நீர்க்கட்டி காரணமாகச் சொல்லப்படுகிறது. முதலில், `எப்படி எனக்கு சினைப்பை நீர்க்கட்டி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வது?’ என்பதே பலர் மனதில் இருக்கும் கேள்வி. எல்லோருக்கும் மாதவிடாய் சுழற்சி சீரற்று இருக்கும் என்றில்லை. முகத்தில் கிருதா, தாடி, மீசை, கன்னாபின்னாவென முகப்பரு, `லைட்டா கொஞ்சூண்டுதாம்பா சாப்பிடுவேன்’ எனச் சொல்லிவிட்டு, வஞ்சகம் இல்லாமல் வளர்ந்(த்)த, போஷாக்கான, புஷ்டியான உடம்பு எனப் பல சமிக்ஞைகளை இந்த நீர்க்கட்டிகள் காட்டும். பரு-தாடி-மீசை எல்லாம் இருந்தும், மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கிறதெனில், அந்த நீர்க்கட்டிகளைப் பார்த்து அலறவேண்டியதில்லை. நீர்க்கட்டி தேமே என ஓர் ஓரமாக இருக்கும். தொடர்ச்சியான காதலுறவில் விளைந்த முட்டை ஹீரோயின், கருக்குழாயில் காத்திருக்கும் தன் காதலனைத் தேடி ஓடிவந்து `கருவாய் உருவாய்’ மாறிவிடும்.

 ஆனால், மாதவிடாய் சீரற்று இருக்கும் மகளிர், தம் முகத்தில் பருவைப் பார்த்ததும், `அய்யோ முகத்தில் பருவா... நீ எப்படி பார்ட்டிக்கு வருவே? இந்தா! இந்தக் களிம்பைப் பூசு’ என வரும் விளம்பரங்களைப் பார்த்து முகப்பருவுக்கு வண்டி வண்டியாகக் களிம்பை வாங்கிப் பூசுவது, அதேபோல தாடி மீசைக்கெல்லாம் பார்லரில் போய் வலிக்க வலிக்க முடியைப் பிடுங்குவது, கை கால் உரோமங்களையெல்லாம் ரசாயனம் வைத்து வழித்து எடுப்பது... என அத்தனையும் தற்காலிகமானது தான். சினைப்பை நீர்க்கட்டியை நீக்க முயற்சி எடுத்தால் மட்டுமே அத்தனையும் நிரந்தரமாக மாறும். என்ன செய்யலாம்?

பிசிஓடியை விரட்ட ரத்தத்தில் கட்டற்றுத் திரியும் இன்சுலினை செல்லுக்குள் செதுக்கி அனுப்ப வேண்டும். அந்த வேலையை உடற்பயிற்சியும் யோகாசனமும் அழகாகச் செய்யும். அதனால் தான் அடி பம்ப்பில்  தண்ணியடித்து, குடத்தைத் தூக்கி இடுப்பில் வைத்து, ஒன்றரை கிலோ மீட்டர் நடந்து வந்து, வீட்டுத் தண்ணீர்த் தவலையில் ஊற்றிவைத்து வாழும் கிராமத்து அக்காவுக்கு  இன்னும் பிசிஓடி பிரச்னை வரவில்லை.

உடற்பயிற்சிக்கு நேரம் இல்லை; யோகாவுக்கு மனம் இல்லை என பவுசாகத் திரிவோருக்கு சர்க்கரை நோய்க்காரருக்குக் கொடுக்கும் மெட்ஃபார்மின் பரிந்துரைக்கப் படுகிறது. அதே குண்டுப் பெண்ணுக்கு இந்த மாதவிடாய்ப் பிரச்னையைத் தொடர்ந்து கருத்தரிப்பு தாமதமாகும்போது, கடந்த வாரம் பேசிய `க்ளோமிஃபென்’ (Clomifene) எனும் ஹார்மோன் ஊக்குவிப்பான் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.

உடல் எடையைக் குறைக்க தினம் ஒரு மணி நேரம் நடை, 10 நிமிட மூச்சுப்பயிற்சி, 20 நிமிட ஆசனப்பயிற்சி போதும். இவற்றுக்கு அநேகமாக பெரும்பாலான சினைப்பை நீர்க்கட்டிகளை அடித்துச் சரியாக்கும் சாத்தியம் உண்டு. அவசரப்பட்டு மருந்துகளுக்குப் போவதற்கு முன்னர், சோம்பலின்றி உடலை வளைத்து மெனக்கெடுவது பின்னாளில் கருத்தரிப்புக்கு மிக மிக உதவியாக இருக்கும். ‘லோ கிளைசெமிக்’ உணவுகள் பிசிஓடிக்கான பிரத்யேக மெனு. ரத்தத்தில் சர்க்கரையை வேகமாகச் சேர்க்காத உணவுகளை ‘லோ கிளைசெமிக்’ உணவு என்கிறது நவீன உணவியல் உலகம்.

நிறைய நார்ச்சத்துள்ள காய்கறி, புரதம் அதிகமுள்ள மீன், வண்ண வண்ணமான பழங்கள் என உணவுத் திட்டம் இருக்க வேண்டும். சில்க்கி பாலீஷ் போட்ட வெள்ளை விஷ அரிசிகளை விலக்கிவிட்டு, கறுப்பு கவுனி காட்டுயானம், சிவப்பு மாப்பிள்ளைச் சம்பா எனப் பாரம்பர்ய அரிசியில் பருப்பு பூவாவோ, ஊன் சோறோ ஊட்ட வேண்டும். சிறுதானியங்களை மாவாக்காமல், கூழாக்காமல், சோறாக்கி, அடையாக்கிச் சாப்பிட்டாலும் ‘லோகிளைசெமிக்’ உணவாக அது கிடைக்கும். கசப்பு-துவர்ப்புச் சுவையுள்ள கறிவேப்பிலைத் துவையல், வெந்தயக் குழம்பு, ஆவாரைத் தேநீர் போன்றவை சினைப்பை நீர்க்கட்டிகளை  விரட்டியனுப்பும்.

p30b.jpg

சினைப்பை நீர்க்கட்டியுடன் இருக்கும் பல மகளிர் மன உளைச்சலுடன் இருப்பது உண்டு. கிட்டத்தட்ட சாதாரண நபர் மன உளைச்சலுக்கு ஆளாவதைவிட, இரு மடங்கு தாக்கம் சினைப்பை நீர்க்கட்டிகள் உள்ள மகளிருக்கு உள்ளது. தாடி, மீசையால் பெறும் சமூக அவமானமும், கருத்தரிப்பு தாமதித்ததால், வரும் மனஅழுத்தமும் சேர்ந்து நிறைய பேரை மனச்சோர்வில் தள்ளுகிறது. பெருகும் மனஅழுத்தம், ரத்தத்தில் கார்டிசான்கள் அளவை அதிகரிக்க, பிரச்னை மேலும் அதிகரிக்கிறது.

திருமணத்துக்கு முன்னரோ, பின்னரோ இந்த நீர்க்கட்டி அதிகமிருந்து மாதவிடாய் ஒழுங்கற்று இருக்கிறதா? முதல் தேர்வாகக் கால்களுக்குப் பொருத்தமான ஒரு கேன்வாஸ் ஷூ, வியர்வைக்கு ஏதுவான ஆடை வாங்கி அணிந்து, சூரியன் உதிக்கும் முன்னர் உள்ள வானத்தை ஓர் எட்டுப் பார்த்துவிட்டு, ஓடுங்கள். வெட்கித்து, முகம் சிவந்துவரும் கதிரவனும், அவன் முகம் கண்டு ஓடி ஒளியும் காதல் நிலவும் கண்ணில்படும்படி வியர்க்க வியர்க்க நடந்துவிட்டு வாருங்கள். `அட! எனக்கு முன்னாடி வாக்கிங் போயிட்டு வந்துட்டியா?’ எனப் பதறும் மிஸ்டர் புருஷ், வரும் மனைவிக்கு, இளஞ்சூட்டில் கறுப்புத் தேநீரும், இனிப்புக்குப் பதிலாக உங்கள் புன்னகையையும் பரிமாறுங்கள். அவள் வியர்வையில், சினைப்பையின் அடாவடி நீர்த்திவலைகளும் வெளியேறியிருக்கும். உங்கள் குசும்புப் புன்னகையில் `தள்ளிப் போகாதே... ஏனோ வானிலை மாறுதே...’ எனப் பாடல் வரும். `அய்ய... இப்பவா? ஆபீஸுக்கு நேரமாச்சு’ என அவள் தள்ளி(ட்டு)ப் போகக்கூடும். அடுத்த மாதத்தில் `அதுவும்’ தள்ளிப்போகும்... மகிழ்வாக!

- பிறப்போம்...

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

உயிர்மெய் - 12

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

 

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பாக்ஸ் ஆபீஸ் திரைப்படம் `மௌன ராகம்.’ ``கையை முதல்ல எடுக்கிறீங்களா, ப்ளீஸ்... நீங்க தொட்டா, கம்பளிப்பூச்சி ஊர்ற மாதிரி இருக்கு’’ என அந்தப் படத்தில் ரேவதி, மோகனிடம் மனசு முழுக்க வலியையும், முகம் முழுக்க வெறுப்பையும் சுமந்துகொண்டு சொல்லும் ஒரு காட்சி வரும். மோகனுக்கு மட்டுமல்ல, திரைப்படம் பார்த்த அத்தனை பேருக்கும் அந்தக் காட்சி வலியை ஏற்படுத்தியது. `சே... காதல்ல தோற்றுப்போன ரேவதி பாவமா அல்லது காதலை வெளிப்படுத்த இயலாத மோகன் பாவமா?’ எனப் பல நாள்கள் அந்த வலி மனதில் இருந்துகொண்டே இருந்தது; படமும் அந்த வலியைக் கவிதையாகச் சொன்னவிதத்தில் பல நாள்கள் ஓடியது. ஆனால், இன்று ஆசை ஆசையாகத் திருமணம் செய்த பலருக்குள்ளும் துரதிர்ஷ்டவசமாக மனதிலோ, உடம்பிலோ இப்படியான கம்பளிப்பூச்சிகள் கூட்டம் கூட்டமாக நிறைய ஊர்ந்துகொண்டிருக்கின்றன.

p30a.jpg

``அப்படி ஒண்ணும் பயலாஜிக்கல் பேபி எனக்கு வேணும்னு அவசியமில்லை டாக்டர். அதுல எந்தச் சிலிர்ப்பும் எனக்கு இல்லை. Surrogation-க்கு ஆகும் செலவை நினைச்சுத்தான் ஏதாவது ட்ரீட்மென்ட்ல முடியுமான்னு பார்க்க வந்திருக்கேன்’’ எனப் பேசிய நவீன பெண்ணொருத்தியைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறேன். பிறிதொரு நாளில்... ``பல் தேய்ச்சு, காபி குடிக்கிற மாதிரிதான் `அதுவும்’ இருக்கு சார். எனக்கு அதுல எந்த வித ஈர்ப்பும் சிலிர்ப்பும் சில காலமாக இல்லை. என்னன்னு தெரியலை. பட் ஐ’ம் ஸ்டில் இன் லவ் வித் ஹெர்’’ என்று சொன்ன ஒரு மடிக்கணினி மகராசனிடம் கொஞ்சம் கோபத்துடன் பேசியிருக்கிறேன். இரண்டு பேரும் `மௌன ராகம்’ ரேவதி - மோகன் மாதிரி பிரச்னையோடு வாழ்வைத் தொடங்கியவர்கள் இல்லை. வழியவழியக் காதல் பருகி, திருமணம் செய்து கொண்டவர்கள். இப்போது, கம்பளிப்பூச்சிகளைத் தேடிப்பிடித்துக் கொண்டுவந்து தத்தம் பர்முடாஸுக்குள்ளும் பட்டியாலாவுக்குள்ளும் போட்டுக்கொண்டவர்கள். ஏதேதோ காரணங்களால், குழந்தைப்பேறு தள்ளிப் போனவர்கள். ஆனால், `எதனால் தாமதம், என்ன பிரச்னை, எதை மறந்தோம்?’ என எந்தச் சிந்தனையும் சோதனையும் செய்யாமல், `இதுல என்னப்பா பரவசம் இருக்கு?’ என போலிச் சித்தாந்தம் பேசத் தொடங்கியதற்கு எது காரணம்? படிப்பா, பகுத்தறிவா, பன்னாட்டுப்பழக்கமா அல்லது எப்போதும் விரட்டும் மன அழுத்தமா? தெரியாது.

திருமணத்துக்குப் பின்னர் பல ஆண்டுகள் குழந்தைப்பேறு தள்ளிப் போவதாலும், அத்தோடு, அரக்கப்பரக்கவோ, முறையான கவனத்துடன் சிகிச்சையில்லாமல் போனதாலோ அல்லது சிகிச்சை பலனளிக்காமல் போனதாலோ, திருமணமாகி சில ஆண்டுகளிலேயே பலருக்கு உடலுறவின் மீதான ஈர்ப்பு குறைகிறது.

``ஒவ்வொரு தடவை சிகிச்சைக்குப் போகும்போதும், `பதினஞ்சாம் தேதி நீங்க கட்டாயம் பண்ணியாகணும்’னு சொல்றது வெறுப்பைத் தருது சார். என்னமோ `லாகின் செய்த மூணாவது நிமிடத்தில், நீங்க சரியா பாஸ்வேர்டு போடணும்; மூணு தடவை தப்பா பாஸ்வேர்டு போட்டா சிஸ்டம் மூடிக்கொள்ளும்’னு எங்க கம்பெனியில சொல்ற மாதிரி இருக்குது சார்’’ என்று ஒரு பெண் வருத்தப்பட்டதுண்டு. ``மத்த நாளில் வரும் காதலும் காமச் சுரப்பும்கூட அந்த நாள்ல வர்றது இல்லை சார். பரீட்சைக்கான தேதி நெருங்க நெருங்கப் படிச்சதெல்லாம் மறந்து போகும்ல, அது மாதிரி ஆகிடுது. பல சாமிகளைக் கும்பிட்டுட்டுவந்து பக்திப் பரவசமாகக் காத்திருக்கும் அவளைப் பார்க்குறப்போ, `சாமி’ படத்துல வரும் உக்கிரமான கடைசி சீன்தான் ஓடிவந்து மனசுல உட்காருது. மூளையில பல்பு எரியறதுக்குப் பதிலா மொத்தமா ஃபியூஸ் பிடுங்கின மாதிரி இருக்கு டாக்டர்” என்று சொல்லும் கணவனின் வார்த்தைகளில் வலி அதிகம். `` `குழந்தை பெத்துக்கிறதுக்கு, மாத்திரைகளைவிட மனசு முக்கியம். கொஞ்சம் கவித்துவமா காதல் பண்ணுங்க பாஸ். அது எவ்ளோ முக்கியம் தெரியுமா’னு  நீங்க சொல்ல வர்றதெல்லாம் நல்லாவே புரியுது. ஆனா, ஒரு சின்னப் பிரச்னை. கனவில் பார்த்த நாயகி மேலேயோ, கண்ணில் தென்படும் அழகிகள்கிட்டயோ உருவாகும் இந்த ஈர்ப்பு, மனைவிகிட்ட மட்டும் மிஸ் ஆகுதே ஏன்?’’ என்கிற கூட்டமும் இப்போது அதிகம். ஏன்? கொஞ்சம் உளவியல் சிக்கலும், நிறைய வாழ்வியல் சிக்கல்களும்தான் காரணம்.

காமம் என்பது, உடலுறுப்புகள் ஒன்றாகி நடத்தும் உயிரணு உமிழ்தல் அல்ல. சில மணி நேரமாவது கிளர்ச்சி தரும் நிகழ்வுகள் நடத்தும் உச்சத்தில் மலர்தல். மலர்தல் மறந்து போய், ஓவர் டைமில் உமிழ்வதில்தான் அதிகப் பலன் என ஆகிப்போனதில்தான் இப்படியான சிலிர்ப்பும் ஈர்ப்பும் இடம்பெயர்கின்றன. கடைசியாக எப்போது மனைவியை அரவணைத்தீர்கள்? கட்டிலில் அல்லாமல், கடைசியாக அவள் கரம் பற்றியது எப்போது? எல்லாம் நிகழ்ந்து களைத்த பின்னர், தடாலென எழுந்துபோய் மெயில் வந்திருக்கிறதா என ஐபோனை நோண்டாமல், உங்கள் மூச்சுக்காற்றை  நிதானமாக அவள் செவிக்குள் செலுத்தியது எப்போது?  ``அதெல்லாம் அந்த நேரத்து சமாசாரம். இதைப்போய் வெட்கமில்லாமல் கேட்கிறீர்களே? அதுவும் ஜாயின்ட் ஃபேமிலியாக அப்பா, அம்மா, மற்றவர்கள் உடன் இருக்கும்போது ஹாலில் கட்டிப்பிடிப்பது அசிங்கமாக இருக்காதா?’’ எனக் கேட்கும் கணவன்-மனைவியிடையே யதேச்சையாக மட்டுமே குழந்தைப்பேறு நிகழ்கிறது.

கரம் பற்றிக் கொடைக்கானல் மலையில்தான் நடந்து செல்ல வேண்டும் என்பதில்லை. காய்கறி வாங்கும்போதும்கூட நெருக்கடியான வீதியில், கரம் பற்றிப் போகலாம். ``அட! இன்றைக்கு என்ன அப்படி ஒரு அழகு?’’ எனக் கண்கள் வியந்து, அம்மாவோ அப்பாவோ பார்க்கும்போதும்கூட, கொஞ்சமும் கூச்சப்படாமல்,  மெல்லிய அரவணைப்போடு முத்தம் கொடுக்கலாம். இவை அத்தனையும் இன்று நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை. சின்ன வயது முதல் நாம் தொலைத்த தொடு உணர்ச்சிதான் இதற்கு மிக முக்கியக் காரணம்.

நம்மிடையே பண்பாட்டு ரீதியாகவே தொடுதல், அநேகமாக அசிங்கமாகவும் அநாகரிகமாகவும் ஆக்கப்பட்டுவிட்டது. `வெப்ப நாடுகளில் அரவணைப்பு வியர்வையைத்தான் தரும். குளிர் பிரதேசத்தில் அரவணைப்பு வெம்மையைத் தரும். அதனால்தான், நம் பண்பாட்டில் அரவணைப்புகள் அவ்வளவாக இல்லை. அவர்களுக்கு, அங்கு அது அவசியம்’ எனச் சொல்வோரும் உண்டு. இது மட்டும் அல்லாமல், நம் சமூகத்தின் மொத்தக் கூட்டமும் `அரவணைத்தல் என்பது, விளக்கை அணைத்த பின்னர் இருட்டில் நடக்கும் காம விளையாட்டின் முன் முகாந்திரச் செயல் மட்டுமே’ எனவும் போதித்துவிட்டுப் போய்விட்டது.

சமீபத்தில், வெளிநாட்டில் வகுப்புத் தோழன் ஒருவன் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, வரவேற்பறையில் அவனும் அவன் மனைவியும் இறுக அணைத்து முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் அழகிய போட்டோ ஒன்று இருந்தது. ``மச்சான்! எப்படா இதை எடுத்தே?’’ என  நான் கேட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தியப் புத்தியில் ``யாருடா இதை எடுத்தது?’’ எனக் கேட்டுவிட்டேன். ``என் பொண்ணுதான்’’ என்றான். ``ஏன்டா உனக்கு வெட்கமா இல்லையா? வளர்ந்த பொண்ணு முன்னாடி போய்...’’ எனக் கேட்டதற்கு, ``எவன்டா அப்படிச் சொன்னான்? எங்கள் அன்பின் உச்சம்டா அது! அந்த உணர்வை என் மகள் உணர்வது அற்புதமான வாழ்வியல் பாடம். இன்னும் நம்ம ஊரு மாறவேயில்லேல்ல?’’ எனக் கேட்டான்.

ஆம். நாம் இன்னும் மாறவில்லை. `கண்கள் சொல்லாததை, வார்த்தைகள் தெரிவிக்காததை, சின்னத் தொடுதல் தெரிவிக்கும்’ என ஆழமாக ஆய்ந்து உளவியல் மருத்துவம் உரக்கச் சொல்கிறது. செல்லமாக முதுகைத் தட்டுதல், வாஞ்சையாக முதுகைத் தடவிக்கொடுத்தல், கணவனின் மார்பில் சாய்ந்துகொண்டு, விரல்களால் அவன் நெஞ்சைத் தன் நீண்ட விரலால் மெலிதாக வருடி விலகுதல், மனைவியின் காதில் தொங்கும் அழகிய அணிகலனைத் தொட்டுப் பார்த்து, `அட!’ என வியக்கும்விதமாக அவள் காதின் மடலை நொடிப்பொழுது அநாயாசமாகத் தடவி நகர்தல், என ஒவ்வொரு தொடுதலும் கடத்தும் செய்திகள் ஏராளம். அவை ஒவ்வொன்றும் `நானிருக்கேன்டா’ எனச் சொல்லும், `நீ மட்டும்தான்டா’ என அழும் வார்த்தைகள் இல்லாத `அங்க இலக்கியங்கள்.’

கிழக்கு ஐரோப்பாவில் ஒருமுறை ஒரு நீண்ட ரயில் பயணம் செய்துகொண்டிருந்தேன். வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த சக பயணிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தபோது கண்ணில் தென்பட்டன பலவகையான தீண்டல்கள். விரசமில்லாமல் காதலும் பாசமும், அன்பும் நேசமும் கொப்பளிக்கும் தீண்டல்கள் யாருடைய கவனிப்புக்கும் ஆளாகாமல் ஒவ்வோர் இருக்கையிலும் நிகழ்ந்துகொண்டே இருந்தன. ஸ்ட்ரோலரில் உடகார்ந்திருந்த ஆஸ்திரியக் குழந்தை, அவள் அம்மாவின் கைகளைப் பற்றியபடி, தன் ஊதா நிறக் கருவிழியை விரித்தபடி, ஜன்னலில் கடந்து செல்லும் ஆல்ப்ஸ் மலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தது. அந்தப் பிஞ்சுக் குழந்தையின் கைகளைத் தாயின் கரங்கள் பற்றியிருக்க, அந்தக் குழந்தையின் விரல்கள் அடிக்கடி தன் அன்னையின் உள்ளங்கையை உரசியபடி, தான் பத்திரமாக இருப்பதை உறுதிசெய்துகொண்டே இருந்தது.

இன்னொரு பக்கம் தன் அப்பாவின் கழுத்தைச் சூழ்ந்து, கைகளைப் போட்டிருந்த நீள மூக்குள்ள  பிரெஞ்ச் மகளொருத்தி, அடிக்கடி அவருக்கு முத்தமொன்றும் கொடுத்துக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. அநேகமாக 50 வயதைக் கடந்திருந்த அந்த வெள்ளைக்காரர், தன் மடியில் இருந்த கிண்டிலில் புத்தகம் ஒன்றைப் படித்துக்கொண்டே மகள் கொடுத்த ஒவ்வொரு முத்தத்துக்கும் பதில் முத்தத்தையும், போனஸாகப் புன்னகையையும் கொடுத்துக்கொண்டே இருந்தார்.  

சில முத்தப் பரிமாறல்கள், சில முடி கோதல்கள், சில கரம் பற்றல்கள், சில மெல்லிய, சின்ன அழுத்தமும்கூட தராத அரவணைப்புகள், சில இறுக்கமாக அழுத்திய, காமத்துக்குக் காத்திருக்கும் ஏக்கங்கள்... என அநேகமாக எல்லாப் பக்கமும் அந்தத் தொடர் வண்டியில், தொடர் தொடுதல்களைப் பார்த்துக்கொண்டே இருக்க முடிந்தது. வண்டிக்குள் எங்கேயும், `ஏண்டி! வத்தக்குழம்புக்கு சரியா வெந்தயம் போட்டியா நீ?’ என்றோ அல்லது `மச்சான் டேய்... அநேகமா இரண்டு `சி’-க்கு முடியும்போல இருக்குடா. முடிஞ்சுட்டுதுனு வையீ... தலைக்கு நாலு லட்சம்’ எனச் சத்தமாக அலைபேசியில் அட்டூழியக் கதறல்களோ கேட்கவில்லை. சிலர் மௌனமாகப் புத்தகங்களோடு; சிலர் அன்பாக, காதலாகப் பயணித்துக்கொண்டிருந்தனர்.

p30c.jpg

பிள்ளைகளுக்கு `குட் டச், பேட் டச்’ - யார் அன்பில் தொடுகிறார்கள்... எது கெட்ட எண்ணத்தில் தொடுவது என்பதைக் கட்டாயம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற உந்துதல் இப்போது மிகப் பரவலாக எழுந்துள்ளது. அது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு ஆணோ, பெண்ணோ அன்பையும் ஆதரவையும் நேசத்தையும் சொல்லும்விதமான தொடுதலையும் நாம் கற்றுக் கொடுக்க வேண்டும். தொடுதல் மிக முக்கியமான ஓர் உணர்வைச் சொல்லும் ஊடகம் என்பதையும் குழந்தைப் பருவத்தில் இருந்தே உணர்த்தியாக வேண்டும்.

`நலமா, போய் வருகிறேன், அழகன்டா நீ, ஒண்ணும் ஆகாதுப்பா...’ எனும் ஏராளமான பொருளைச் சொல்லும் இதமான அரவணைப்பு தினம் தினம் வீட்டில் நிகழ வேண்டும். எந்த உடற்பயிற்சி செய்தாலும் போகாத ஒன்று, இந்த விரலில் சொடக்கு எடுத்தல். `ஏன்தான் இப்படிச் சொடக்கு அடிக்கடி வருது?’ எனச் சலித்துக்கொள்வோருக்கு ஒரு சின்னக் கைப்பக்குவம். உங்கள் கணவரோ அல்லது மனைவியோ சொடக்கு எடுக்கட்டும். மூட்டு நோகாமல், நொடிப்பொழுதில் எடுக்கும் சொடக்கில், மூளைக்குள் எண்டார்பின்கள் சுரக்கும். மனதுக்குள் செரடோனின்கள் பீய்ச்சும். வேறென்ன..? தொட்டுப் பழகுவோம். அன்று தொட்டால் தொடரும். இன்று தொட்டால் மட்டுமே எல்லாமே தொடரும்!

- பிறப்போம்.


p30b.jpg

ரவணைப்புகள் ஆனந்தம் மட்டும் தருவதில்லை. ஆரோக்கியமும் தருகின்றனவாம். மன உளைச்சலில் உள்ள ஒரு நபரைத் தினம் ஒருமுறை ஆற்றுப்படுத்தும்விதமாக அரவணைப்பது மெள்ள மெள்ள அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கும். இன்று இந்தியாவில், பத்தில் மூன்று பேர் மன அழுத்தத்தில் இருப்பதாக மருத்துவ உலகம் சொல்கிறது. கருத்தரிப்புக்காகக் காத்திருக்கும் பல பெண்களும் மன அழுத்தத்தில்தான் இருக்கிறார்கள். `14-ம் நாள் கட்டிப்பிடிக்கணும். 15-ம் நாள் கிளையன்ட் மீட்டிங். 16-ல் வெச்சுக்கலாமா?’ என  போர்டு மீட்டிங்குக்கு காலண்டரில் நாள் குறிப்பதுபோல் காதலுக்கு நாள் குறிக்காமல், தினமும் ஒருமுறை மெள்ள அரவணையுங்கள். யார் கண்டார்? அது மன அழுத்தம் குறைப்பதைத் தாண்டி, வேறு பல `நல்ல’ விஷயங்களையும் நடத்தலாம். பென்சில்வேனியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று ஓர் ஆய்வில் இறங்கியது. சளி பிடித்திருக்கும் ஒருவரை அவரது மூளையில் பல்பு எரிய வைக்கும் ஒருவர் கட்டிப் பிடிப்பதால், அவருக்கு  காய்ச்சல் வருவதற்கான வாய்ப்பு 35 சதவிகிதம் குறைகிறதாம். என்ன ஆனது அந்த வைரஸுக்கு என ஆராய்ந்து பார்த்ததில், உற்சாகத்தோடு, நோய் எதிர்ப்பாற்றல் எக்கச்சக்கமாகக் கூடிப்போனதில், வைரஸுக்கு வெட்கம் வந்து விலகியதைப் பதிவிட்டிருக்கிறார்கள். ஆதலினால் கட்டிப்பிடியுங்கள்!

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

உயிர்மெய் - 13

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

 

`உடல் மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ எனும் நன்னூல் நூற்பா நம் மொழிக்குப் புணர்ச்சி இலக்கணமாகச் சொன்னது, உயிர் மெய்ப் புணர்ச்சி இலக்கணத்துக்கும் பொருந்தும். ``ச்சீய்... இதையெல்லாம் இலக்கணமாகச் சொல்லித் தரணுமா? அது அது வயசு வந்தா, தெரியப் போகுது...’’ எனப் பாலியல் கல்வியைப் பாரபட்சமின்றிக் கற்றுத்தராமல், விலக்கிவைக்கத்ததாலேயே பாலியல் ஒழுக்கமும், அதை மலரவைக்கும் காதல் களவு ஒழுக்கங்களும் காணாமல்போய், பாலியல் விகாரங்களும், அவை தரும் வாழ்வியல் வலிகளும் பெருகிக்கொண்டே வருகின்றன. `ஆதி நீடல்; அடியகரம் ஐஆதல்; தன்னொற்று இரட்டல்; முன்னின்ற மெய் திரிதல்’ எனும் புணர்ச்சி இலக்கணப் படிப்பு செம்மொழிக்கு மட்டுமல்ல, உடல்மொழிக்கும் இனி அவசியமே.

``என்னோடு கூடி இருக்கையில்கூட, `வேறு பெண்ணோடு இருப்பதாகக் கற்பனை செய்யவேண்டியிருக்கிறது’ என்கிற அவனோடு எப்படி வாழ முடியும்?’’ என நெஞ்சம் குமுறும் வலியோடு கேட்கும் பெண்கள் பலர் நம் சக மனுஷிகளாக அருகில் இருக்கிறார்கள். ``நெஞ்சம் முட்டும் அன்பும் காதலும் நிறையவே உள்ளன. அவற்றைக் கூடிக்களிக்கையில், துளியும் உள்வாங்காத அவளோடு எப்படி முடியும்?’’ என நொறுங்கிப்போய் வேதனையில் நிற்கும் ஆண்களும் அவதிப்படுகிறார்கள். இந்த வலியும் வேதனையும் தீராமல், இயல்பாகக் கருத்தரிப்பு எப்படிச் சாத்தியம்?

p32a.jpg

பின்னாளில் இந்தக் கேள்விகள் பிறக்காத சமூகத்தைப் பிரசவிக்க வேண்டும் என்பதாலேயே, இங்கு கஜுராஹோ சிற்பங்களும், காமசூத்திரா கவிதைகளும் இந்தியச் சமூகத்தில் பிறந்தனபோலும் கூடல் வடிவங்களை கஜுராஹோ கோயில்களின் சிற்பங்களில் வடித்ததற்கும், `எப்படியெல்லாம் கூடலாம்?’ என விளக்கி, வாத்ஸாயனர் காம சாஸ்திரம் நூல் எழுதியதற்கும் பின்னணியில் இருந்தது நிச்சயம் காம விகாரங்களோ, முகம் சுளிக்கவைக்கும் விஷயங்களோ அல்ல. இந்தக் கோயிலும், நூலும் வெறும் `இதை’ மட்டும்கூடப் பேசவில்லை. கஜுராஹோ கோயிலில் 10 சதவிகிதச் சிற்பங்கள் மட்டுமே காமக்களிப்பின் வடிவங்களைக் கொண்டுள்ளன. வாத்ஸாயனர் வரிகளில் புணர்ச்சி வடிவங்களும் 20 - 30 சதவிகிதம் மட்டுமே.

இன்பம் குறித்த இலக்கணத்தை அதன் இயல்பை இளமையிலேயே சொல்ல வேண்டும் என்பதால்தான், இறைவனையும் இசையையும் பேசும் இடத்தில் இதற்கும் இடம் கொடுத்திருத்திருக்கிறார்கள். அழகாகக் கோக்கப்பட்டிருந்த இந்த வாழ்வியல் கலையை, இடைக்காலத்தில் மேற்கத்திய அவசர உலகு, புணர்ச்சி இன்பத்தின் வடிவமாக மட்டுமே, `பிட்டுப் படம் மாதிரி’ பிரித்து, பொறுக்கிச் சொன்னதன் விளைவுதான், `அய்யே... அசிங்கம். இதைப்போயி... இங்க வெச்சிக்கிட்டு...’ என நம் சமூகம் போலியாக அதிலிருந்து விலகி வந்தது.

புணர்ச்சி இலக்கணத்தின் முதல் சூத்திரம் முகமொழி. `குட்டிக்கூரா’ பௌடரிலோ, `லோரியல்’ லிப்ஸ்டிக்கிலோ, மெல்லிய மஸ்காராவிலோ பொலிவாகாத முகத்தை, இதழோர மெல்லியப் புன்னகையில், அந்தப் புன்னகைக்கு முகம் மெனக்கெடுகையில், இமைப்பொழுதில் குவிந்து மறையும் கன்னக்குழியில் கொடுக்க முடியும். அந்தப் புன்னகையைக் கவனிக்கத் தவறி அவசரமாகக் கடந்து சென்றுவிடாமல், கருத்தாகக் கவர்ந்து சொல்லும் பதில் புன்னகை மட்டுமே, பனிமலைச் சருக்கில் நீங்கள் வழுக்கிப் பாடப்போகும் தேசத்துக்குத் தரப்படும் அனுமதி விசா.

`பருவமழைக் காலங்களில், காட்டாற்று வெள்ளம்போல் காமம் கரைபுரண்டோடும் அவசர நேரங்கள் தவிர, கருத்தரிப்புக்கான மெனக்கெடல்களில், உடலுறவுக்கு முன்னதான குளியல் கொஞ்சம் அவசியமானதுதான்’ என்கின்றனர் நவீன மருத்துவ வாத்ஸாயனர்கள். கூடவே, சிலவகைத் தொற்றுநோய்களையும் தவிர்க்கச் செய்யும் வாய்ப்பும் இந்தக் குளியலில் உண்டாம். `உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ இதற்கும் பொருந்தும். ஆதலால், குளித்து முடித்து ஆலயம் செல்வீர்!

``சராசரியாக 3-7 நிமிடம் மட்டுமே உடலுறவு நிகழும். 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் அதிகபட்சம் இரண்டு நிமிடங்களில் இதை முடித்துக்கொள்கிறார்கள். சராசரியாக 5.4 நிமிடங்கள்தாம் அதற்கு’’ என்றெல்லாம் இது குறித்த பல தரவுகள் மருத்துவ உலகில் உலாவுவது உண்டு. ஆனால், இவை சந்திப்பிழை, உடம்படுமெய் போன்ற இலக்கணங்கள் எல்லாம் பார்த்த ஆய்வறிக்கை அல்ல. குத்துமதிப்பான தகவல்கள். ஒலிம்பிக்கில் ஓடுவதுபோல், ட்ராக்கில் நிற்கும்போது கடிகாரத்தைப் பார்க்கும் குசும்பெல்லாம் வேண்டாம். இங்கே ஓடுவது இலக்கை எட்ட அல்ல; இருவரும் இன்பத்தை எட்ட.

எந்த மருத்துவத் துறையும், `நீடித்த இன்பம் பெற, 20-30 நிமிடங்கள்’ என்றெல்லாம் சொன்னதே இல்லை. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற அப்படியான முயற்சியில் ஈடுபட்ட ஒரு நபருக்குக் கடைசியில் அறுவைசிகிச்சையில் `அதை’ நீக்கவேண்டி நேர்ந்த வரலாறு ஒன்றும் உண்டு என்பதை நினைவில்கொள்ளுங்கள். ஆதலால், `ரொம்ப நேரம் தேவையோ, இன்னும் அஞ்சாறு ஓவர் இருக்கும்போதே ஆல் அவுட்டா’ எனத் தீவிரவாத சிந்தனைக்குள் சிக்க வேண்டாம். ஐயன் வள்ளுவன் சொன்ன `மலரினும் மெல்லியது காமம்’ என்பதைக் கருத்தில் வைத்திருந்தால் போதும்.

   சரியான உறவின் முடிவில், உள் நுழையும் விந்துக் கூட்டம் சரேலென வழுக்கிக்கொண்டு முன்னேறும்படியான விமான நிலைய ரன்வே மாதிரிதான் கருப்பையின் உட்சுவர் அமைக்கப்பட்டிருக்கும். மாதவிடாய்க்கு ஒருமுறை,  மாதமொருமுறை புதுப்பிக்கப்படும் அந்த ஓடுகளம். `சற்று முன்சாய்ந்து இருக்கும் கருப்பையினுள் (Antiverted uterus) விந்துக் கூட்டம் கணிசமாக முன்னேற, உடலுறவுக்குப் பின்னர் பெண் Left lateral leg raise position-ல் சில மணித்துளிகள் காத்திருக்கவேண்டியது கட்டாயம்’ என்கின்றனர் கருத்தரிப்புக்கு உதவும் மருத்துவர்கள்.

 Intrauterine insemination (IUI) - உயிரணுக்களைச் சேகரித்து, அதைக் கழுவி, சுறுசுறுப்பான உயிரணுக்களை மட்டும் தேர்ந்தெடுத்துப் பெண்ணுறுப்பு வழியே கருப்பைக்குள் செலுத்தும் உத்தி. மிகக் குறைவான உயிரணுக்கள்தாம் உள்ளன, அல்லது ஆணுறுப்பின் மூலம் நேர்த்தியாகச் செலுத்தும் வாய்ப்பு இல்லாமல் போயிருக்கிறது என்ற நிலையை இரண்டு மூன்று சோதனைகளுக்குப்பின் தெளிவாகத் தெரிந்துகொண்ட பின்னர், பல மருத்துவ முறைகள் பலனளிக்காதபோது மட்டுமே கடைப்பிடிக்கவேண்டிய உத்தி இது.

ஆனால், இன்று பல நேரங்களில் அறமற்ற மருத்துவம் கொடுக்கும் அறிவியல் நெருக்கடியாலும், புரிதலில்லாத சமூக அவசரம் தரும் அவமானங்களாலும் இந்த உத்தியைச் சகட்டுமேனிக்குப் பயன்படுத்துவது பெருகிவருகிறது. இந்த உத்தியில் பல சமயங்களில் கருமுட்டை வெடிப்பு இயல்பாக நிகழ்வதற்காகக் காத்திருக்காமல், ஹார்மோன்களை 13,14-ம் நாள் பெண்ணுக்குச் செலுத்தி வெடிக்கவைத்து, உயிரணுவை அன்றே ஊசிமூலம் அனுப்பி, கருத்தரிப்பை நிகழ்த்திவிட ஆசைப்படுகின்றனர்.

p32b.jpg

இயல்பான புணர்ச்சியில் நடக்கும் கருத்தரிப்பைவிட இந்தச் செயற்கை உத்திக்கு 2-4 சதவிகிதம் மட்டுமே சாத்தியங்கள் உண்டு. `குறைந்தபட்சம் 4-5 தடவைக்கு இந்த உத்தியைச் செய்ய நீங்க  தயராயிருக்கணும்’ என முதலிலேயே சொல்வது இங்கு வாடிக்கை. சரியான மருத்துவச் சிகிச்சையிலோ, தேர்ந்தெடுத்த உணவிலோ கணிசமாக உயிரணுக்கள் உயர்ந்து வருகையில், சினைமுட்டை வெடித்துவரும் நாள்களில் தொடர்ச்சியான உடலுறவிலேயே, பல நேரத்தில் ஐயூஐ (Intrauterine insemination - IUI) இல்லாமல் குழந்தைப்பேற்றை அடைய முடியும். தேவை இங்கு தொழில் நுட்பம் அல்ல, உறவு நுட்பம் மட்டும்தான்.

   `இதுதான்... இப்படித்தான்’ உறவின் உச்சபட்ச  மகிழ்வுக்கு  அல்லது  குழந்தைப்பேற்றுக்கு எனச் சத்தியமாக இலக்கணங்கள் எதுவும் கிடையாது. வாத்ஸ்யாயனர் 64 வகைகளாக அவர் ப்ரிஸ்கிரிப்ஷனில் பேசியுள்ளதாகச் சொல்கிறார்கள். ``அது என்ன வட நாட்டினருக்கு மட்டும்தான் அந்தக் காலத்தில் இந்த வித்தை தெரியுமா?’’ எனத் தமிழ் உள்ளங்கள் சங்கடப்பட்டு, வருத்தப்பட வேண்டியதில்லை. தமிழில் அழகாக இதற்கென `கொக்கோக சாஸ்திரம்’ எனும் நூல் உள்ளது. காம சாஸ்திரத்திலும் சரி, கொக்கோக சாஸ்திரத்திலும் சரி... எல்லாமே கவிகளாகத்தான் இருந்திருக்கின்றன. `நூல் எழுதப்பட்டு சில காலம் கழித்துதான், யாரோ குசும்பு எடிட்டர்கள் பட விளக்கம், லே அவுட்டெல்லாம் போட்டு, கூடுதல் உசுப்பேத்தியுள்ளனர்’ என நூல் வரலாறுகள் சொல்கின்றன.

  `எந்தப் புணர்ச்சி கவிதை படைக்கும், எது  இலக்கியம் எழுதும்?’ என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. சில கவிதைகளில் வரலாறு பிறக்கும்; சில இலக்கியங்கள் ஆசுவாசப்படுத்தும், அவ்வளவுதான். இளமையில் பலருக்கும் புதுக்கவிதை பிடிக்கும், முதுமையில் மரபுக்கவிதை பிடிக்கும் என்பது மாதிரி வயசுக்கேற்ற கவிதையை வாசிக்கலாம். மகிழ்விக்கும் எல்லா புதுக் கவிதைகளையும்விட, மரபுக்கவிதை ஏதோ ஓர் இடத்தில் விஞ்சி நிற்பதுபோல, `பிற நிலைகள் இல்லாமல் ஆண், பெண் மேலிருந்து உறவில் செலுத்தும் உயிரணுக் கூட்டம் கொஞ்சம் வேகமாகச் சென்று கருத்தரிக்கும் வாய்ப்பைக் கணிசமாக அதிகரிக்கும்’ என்கின்றன மருத்துவ அனுபவத் தரவுகள்.

 உறவின்போது முழு உயிரணுக் கூட்டமும் உள்ளே செல்லும் என எதிர்பார்ப்பது மடமை. புராஸ்டேட் கோள திரவம், ஃப்ரக்டோஸ் சத்துகள், இன்னும் சில சத்துகளுடன் ஒன்றாக வரும் விந்தணு, உடலுக்கு வெளியே வந்தவுடன் 15-20 நிமிடங்களில் முழுமையாக நீர்த்து, கர்ப்பப்பை கழுத்து வழி கர்ப்பப்பைக்குள் பிரவேசிக்கும். அந்தச் சமயம் 40-50 சதவிகிதம் திரவம் வெளியேறுவதில் தவறில்லை. `அப்படியானால், உயிரணுக்கள் போகாதே... அய்யய்யோ’ எனப் பதற்றமடையத் தேவையில்லை. அந்தச் சட்டசபைக்குள் 1/3 பங்கு கோரம் இருந்தாலே, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, `குவா குவா’ பிறக்கும்.

p32c.jpg

`தேனாம்பேட்டை வந்தாச்சு... இறங்கு!’ என ஏதோ கண்டக்டர் அவசரம் காட்டுவதுபோல் ‘அது’ முடிந்தவுடன், இறங்கிப்போய் வாட்ஸ்அப்பில் என்ன வந்திருக்கு எனப் பார்க்கப்போவதும்கூட குழந்தைப்பேறின்மையைக் கொண்டுவரும். ``எங்கள் சமூக வழக்கத்தில் அதற்கப்புறம் கண்டிப்பாக உடனே குளிக்க வேண்டும்’’ என நகர்வது களிப்புக்குச் சரியாயிருக்கக்கூடும்; நிச்சயமாகக் கரு துளிர்ப்புக்குச் சரியானது அல்ல. உடலுறவுக்குப் பிந்தைய கணங்கள் முக்கியமானவை. காத்திருக்கும் கருமுட்டையை நோக்கி விந்து நகர்வதானாலும் சரி, நாளைக்கு வரவிருக்கும் வழியிலேயே வாரி அரவணைக்கக் காத்திருக்க வழுக்கிச்செல்லும் விந்துப் பேரணிக்கும் சரி, மனம் நிறைவாக, அமைதியாக மலர்ந்திருத்தல் அவசியம்.

 `அவரின் உயிரணுக் கூட்டம் முழுவதும் உள்ளே சென்றிருக்குமா, இது கண்டிப்பாகக் கருத்தரிக்குமா, முட்டை வெடிச்சுச்சோ இல்லையோ?’ என பாகிஸ்தான் மேட்ச் பார்க்கும் பரபரப்போடு இருக்கத் தேவையில்லை. `மேட்ச்-கேட்ச் எல்லாமே திட்டமிட்டபடி நடக்கும்’ என்ற நம்பிக்கையில், ``ம்ம்ம்... வயசு 40 மாதிரியா தெரியுது?’’ என ஒருவரை ஒருவர் எள்ளி இணைந்து, உயிர்ப்புடன் எழுதும் வரிகளில் மட்டும்தான் கவிதை பிறக்கும்... உயிருடன்!

- பிறப்போம்...


p32d.jpg

சின்ன டெக்னிக்!

`யப்பா அது என்ன Left lateral leg raise position?’ என யாரும் பயப்பட வேண்டாம். அது சர்க்கஸில் மங்கோலிய அழகிகள் காட்டும் வித்தை மாதிரியெல்லாம் கஷ்டம் ஒன்றும் அல்ல. படுக்கையில், உறவின் முடிவுக்குப் பின்னர் பெண் தன் இடப்பக்கமாகத் திரும்பிப் படுத்துக்கொள்ள வேண்டும். தன் தொடைப்பகுதிக்குக் கீழ், படுக்கையில் சற்றுப் பருத்த தலையணையை வைத்திருந்தால், கால்கள் படுக்கையைவிட உயரே இருக்கும். இந்த பொசிஷன், விந்துக் கூட்டம் வழுக்கி உள்ளே செல்ல, இன்னும் சுளுவாக இருக்குமாம். உறவுக்குப் பின்னர், அத்தனை உயிரணுவும் வெளியேறியது போன்ற உணர்விருக்கும் தம்பதியர், இந்தச் சின்னத் தொழில்நுட்பத்தை முயலலாம்!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

உயிர்மெய் - 14

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

 

`எதைத் தின்றால் பித்தம் தெளியும்?’ என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். சமீபகாலமாகச் சிலருக்கு `எதைத் தின்றால் பித்தம் தலைக்கேறும்?’ எனவும் சொல்லவேண்டியிருக்கிறது. பித்தம், உயிர்மெய்யில் உசுப்பேற்றும் விஷயம் என்பதால், ஒரேயடியாகப் பித்தம் என்றால், `அந்த விஷயம்’ என்று மட்டும் நினைக்க வேண்டியதில்லை. ஆனால், `அந்த’ விஷயத்துக்கு, பித்தம் சற்றுத் தூக்கலாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்க வேண்டும் என்பதில் உண்மை உண்டு. `பித்தம்’ என்னும் சொல்லுக்கு அதைத் தாண்டி பல பொருள்கள் இந்திய மருத்துவத்தில் உள்ளன. பசித்தால் சுரக்கும் அமிலம், ருசித்ததை ஜீரணிக்கும் நொதி, பார்த்தால் ஏற்படும் பரவசம், பார்க்காததால் ஏற்படும் பசலை, மஜ்ஜையில் சுரக்கும் சிவப்பணு, மனதில் நினைக்கும்போதெல்லாம் உருகிச் சுரக்கும் ஹார்மோன், மனதுக்குப் பிடித்தவளின் ஆன்லைன் நடமாட்டத்தை வாட்ஸ்அப்பில் கண்டதும்  மூளைக்குள் பட்டாம்பூச்சியாகப் படபடக்கும் செரடோனின்... எனப் பித்தத்தின் போர்ட்ஃபோலியோ பெரிதினும் பெரிது!

p30a.jpg

வாதம், பித்தம், கபம் எனப்படும் தமிழ் மருத்துவத்தின் அடிப்படையில், கத்திச்சண்டை போட்டு உடலைக் காப்பாற்றுவதில் ஆரம்பித்து கண்ணீர் வடிப்பது, காதலாகிக் கசிந்துருகுவது... எனப் பித்தம், உடல்திரையின் நாயகன். காந்தி, லிங்கன், சே குவேரா ஆகிய உலகின் மிகப் பெரிய ஆளுமைகள் எல்லாம் கொஞ்சம் பித்த பெர்சனாலிட்டியாக இருந்திருக்கக்கூடுமோ என்ற யோசனையும் உண்டு. `பித்தமடங்கிப் போகில் பேசாதே போய்விடு’ என மரணக்குறியாகவே பித்தத்தை அன்று தமிழ் மருத்துவமும் இன்ன பிற இந்திய மருத்துவ முறைகளும் அடையாளம் காட்டியுள்ளன. `இந்தப் பித்தம் அழகான தாம்பத்யத்துக்கும் நித்தம் அதன் அளவில் தேவை’ என்றனர் நம் முன்னோர். `உதிரும் மயிரில் இருந்து ஆரம்பித்து, உடலின் அத்தனை உறுப்புகளின் உறுதிக்கும் உணவே மருந்தாச்சே... இந்தப் பித்தம் கொஞ்சநாளாக எனக்கு பிஸ்கோத்தாகப் போய்க்கொண்டிருக்கிறதே... இதை வலுப்படுத்த ஒரு டயட் சார்ட் கிடையாதா? பாக்யராஜின் முருங்கைக்காய் மாதிரி வேற ஏதாவது இல்லையா?’ என ஏங்குவோருக்குத்தான் இந்த வாரம்.

ஆண் உயிரணுவை வலுவாக உருவாக்கத் தலையாயது நாகச்சத்து. அதாவது Zinc. இன்னும் விரித்து, விசாலமாகப் பார்த்தால், இதை `இங்கிலீஷ் பித்தம்’ எனலாம். ரொம்ப நாளாக இந்தச் சத்து உடல் நோய் எதிர்ப்பாற்றலுக்கான கனிமச்சத்து என்று மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது, நாகம் என்பது வெறும் கனிமச்சத்து மட்டுமல்ல; உயிரணுக்கள் உற்பத்திக்கும், உடலுறவில் அவை உள் எறியப்பட்ட பின்னர், அதற்கான குளத்தில் சத்தாகத் திரியவும், நீந்தி முன்னேறவும்கூட உதவும் முக்கியச் சத்து என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த Zinc அளவு குறைந்தால், உயிரணுக்களின் உற்பத்திக்குத் தேவையான `Testosterone’ எனும் ஆண் ஹார்மோன் சத்தும் குறைவதைத் தெள்ளத்தெளிவாக நவீன உணவியலாளர்களும் மருத்துவர்களும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். நம் முன்னோரோ, `மேகம் கிளர்பேதி வெட்டையழலைத் தணிக்கும்’ என `வெட்டையழல் நோயில் விந்தணுக்குறைவு வரும்; அதைப் போக்கும் இந்த நாகச்சத்து’ என்கின்றனர். மொத்தத்தில், இந்த Zinc is king.

அவ்வளவு முக்கியமான இந்த `சிங்க்’-காரம் நம் அன்றாட உணவில் எங்கே உள்ளது? மலையளவு பயன் தரும் இந்தச் சங்கதி, நம் உணவிலேயே மிகச் சிறிதாக உள்ள எள்ளில்தான் ஏகப்பட்ட அளவில் இருக்கின்றதாம். நாகச்சத்துடன் இரும்புச்சத்தையும் சேர்த்து அளிக்கும் உணவுப்பொருளில் முதல் மதிப்பெண்ணைப் பெறுவது இந்த எள். கூடவே, Coenzyme Q10 (COQ10) என்னும் சத்தையும் சரமாரியாக வைத்திருப்பது இந்தச் சின்னஞ்சிறு எள். இன்றைக்கு, விந்தணுக்கள் வேகமாக ஓட நவீன மருத்துவத்தில் அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் சத்துதான் இந்த Coenzyme Q10. வெளிநாட்டில் மருத்துவச் சந்தையில் இப்போது இந்த COQ10-க்கு எக்கச்சக்க கிராக்கி. ``பாஸு! அதனாலதான் எள் ஒட்டிய வெளிநாட்டு பர்கரைச் சாப்பிடுறோம்’’ எனப் புறப்பட்டுவிட வேண்டாம். அதில் எள்ளைத் தவிர, அத்தனையும் அழிச்சாட்டியம் பண்ணக்கூடியவை. நீங்கள் சமர்த்தாக எள்ளுத் துவையலாகவோ, கருப்பட்டி சேர்த்து  எள் உருண்டையாகவோ   எள்ளுப்பொடியில் நல்லெண்ணெய் சேர்த்து அளவாகச் சாப்பிடுங்கள். அது, விந்தணுக் கூட்டத்தை உயர்த்தும். உள்ளூர் உழவனின் வாழ்வாதாரத்தையும் உயர்த்தும். `எள்ளோதனம்’ அல்லது `எள்ளோதரை’ எனும் எள்ளும் அரிசிச்சோறும் சேர்த்துச் செய்யப்படும் உணவு, உடற்சூட்டால் வரும் விந்தணுக் குறைவுக்கு நெடுங்காலமாகப் பரிந்துரைக்கப்பட்ட உணவு. அரிசிக்குப் பதில் தினை அரிசியில் சோறிட்டால், உயிர்மெய்க்கு இன்னும் ஸ்பெஷல். எள் அடிப்படையில் குளிர்ச்சியானது. ஆனால், சில சித்த மருந்துகளைச் சாப்பிடும்போது மட்டும் எள்ளைத் தவிர்க்க வேண்டும். பெண்களுக்கு அதிக எள், கருச்சிதைவை உண்டாக்கும்.

நிறையப்பேர் நினைப்பதுபோல் கொண்டைக்கடலை, வெறும் புரதச்சத்து மட்டும் தரும் பயிரல்ல. தினமும் சிறிதளவு காலை வேளையில் வெள்ளை அல்லது சிவப்பு கொண்டைக்கடலையை வேகவைத்துச் சாப்பிடுவது இதே நாகச்சத்தைச் சேர்த்துத் தரும். கொண்டைக் கடலையைச் சமைத்து, வேகவைத்துச் சாப்பிட்டாலும்கூட சில மணி நேரம் ஊறவைத்துப் பின்னர் சமைப்பது நல்லது. இந்த ஊறல் செய்கை, அந்தக் கடலையில் உள்ள கனிமங்களையும் சத்துகளையும் கசியவிடாமல் அதில் கட்டியிருக்கும் ஃபைட்டிக் அமிலத்தை (Phytic acid) உடைத்து, ஜீரணத்தை லகுவாக்கிட உதவும். முளைகட்டிச் சாப்பிட்டாலும் முழுதாக வேகவைத்துச் சாப்பிட்டாலும் கொஞ்சம் எள், மிளகு, சீரகம், வெந்தயம் சேர்த்து காம்போவாகச் சாப்பிட்டால், கொஞ்சம் காம போகமாகவும் செய்யும். கொண்டைக்கடலைப் போலவே பச்சைப்பட்டாணியும் நாகச்சத்து நிறைந்த பயறு.

`எல்லாமே மரக்கறிதானா? எங்களுக்கு..?’ எனும் புலால் பிரியர்களுக்கு, கடல் உணவுகளில் சிப்பிச்சதை (Oyster) மிகச் சிறந்த உணவு. நாகம் முதலான பல கனிமங்களை ஏராளமாகத் தரும் கடல் விருந்து இது. சீனர்களின் மிகப் பிரியமான உணவு இந்த சிப்பிச்சதை. நாமும் நெடுங்காலம் சாப்பிட்டவர்கள்தான். `சிப்பியை உப்போடு சேர்த்து வேகவைத்து, பின்னர் சதையை மிளகு சேர்த்து சமைத்து உண்டால், உடல் வலுப்பெறும்’ என்கிறது சித்த மருத்துவம். இன்றைய அறிவியல், இந்தச் சிப்பிச்சதையை நாகச்சத்தின் உச்சமாகச் சொல்கிறது. சிப்பிச்சதை மட்டுமல்லாமல், நத்தைச் சதை, நண்டுக்கறி அனைத்தும் சித்த மருத்துவத்தில் பித்தம் உயர்த்தும் பெருமாள்களாகப் பார்க்கப்பட்டவையே.

`Oyster’ எனும் சிப்பிச்சதை இன்றைக்கும் மேற்கத்திய சீன உணவுகளில் ஏகப் பிரசித்தியான உணவு. சீன இலக்கியங்களில் சிப்பி பெண்ணுறுப்புபோல் இருப்பதால், அது ஆணுக்கான உணவு எனச் சொல்லப்பட்டதாம். இதே மாதிரி கதையைச் சொல்லி ஆணுறுப்பைக் காண்டாமிருகக்கொம்போடு ஒப்பிட்டு, அதன் உறுதியான வடிவத்தில் கிளர்ந்து, `இது ஆண்மைப் பெருக்கி’ எனக் கதையைப் பரப்பி, கணிசமாகக் காண்டாமிருகங்களைக் காலிபண்ணியது ஒரு கூட்டம். சிப்பிகள் பரவாயில்லை. கடல் சூழல் மாசுபடுதலில் கொஞ்சம் குறைந்தாலும், இன்னமும் கணிசமாகக் கிடைக்கின்றன. நாம் இட்லி சாம்பார் சாப்பிடுகிற மாதிரி, இந்தச் சிப்பிச்சதையைச் சகட்டுமேனிக்குச் சாப்பிடும் பழக்கம் சீனர்களுக்கு உண்டாம். அதனால்தானோ என்னவோ, சீனாவின் மக்கள்தொகை எக்குத்தப்பாக ஏறியதுபோல. பல மேற்கத்திய கடற்கரை நாடுகளில், காதலை புரொபோஸ் பண்ணியதும் எதிர்ப்பக்கம் செருப்படி கிடைக்காமல் புன்னகை பூத்துவிட்டது என்றால், உடனே இருவரும் கிளம்பிப்போய் சிப்பிக்கறி சாப்பிடுவது மரபாம். அந்த ஊர்களில் பாட்டு, மியூஸிக், பரபரவெனத் திரிவது எல்லாம் கிடையாதுபோல. நேரே… ம்ம்!

``Oyster சாப்பிட ஒவ்வொரு நாளும் எங்கே போவது? கடையில் கிடைக்கும் Oyster sauce வாங்கிச் சாப்பிடவா?’’ என்போருக்கு ஓர் எச்சரிக்கை. அநேகமாக சீனர்கள் தயாரிக்கும் இந்த Oyster sauce-ல், `மோனோ சோடியம் குளூட்டமேட்’ எனும் சர்ச்சைக்குரிய உப்பைக் கணிசமாகக் கலக்கிறார்கள். ஒருபக்கம் ஹார்மோன் கிளம்பி, இன்னொரு பக்கம் இந்தச் சர்ச்சைக்குரிய உப்பால் மூளை மழுங்கிவிடவும் வாய்ப்பு உண்டு. எனவே, தப்பாகத் தேர்ந்தெடுத்துவிடக் கூடாது. 

விந்தணுக்களின் எண்ணிக்கையை விராட்கோஹ்லி மாதிரி `விரசலா’ அடித்து உயர்த்த, யாராவது இனி `உங்களுக்கு குலேபகாவலி கொண்டு வாரேன்; அதுக்கு நான் மகேந்திர பாகுபலிபோல பல மலை போய் பறிச்சிட்டு வரணும். கொஞ்சம் செலவாகும்’ எனச் சொல்லி, சொத்தை எழுதி வாங்க நினைத்தால், விரட்டி அனுப்புங்கள். `தினமும் கீரைச் சோறும், கீரை சூப்பும், கீரை நெய் பூவாவும் சாப்பிட்டால், அதிலிருந்து கிடைக்கும் ஃபோலேட் (Folate) சத்துகள் விந்தணுக்களின் எண்ணிக்கையை செமையாக உயர்த்திவிடும்’ என்கின்றன ஆய்வு முடிவுகள். எண்ணிக்கை மட்டுமல்ல, Premature ejaculation  மற்றும் Erectile dysfunction போன்ற ஆண்மைப் பிரச்னைகளுக்கும் அன்றைய ப்ரிஸ்கிரிப்ஷனில் முதலிடம் கீரைக்குத்தான்.

`அகத்தியர் குணவாகடம்’ எனும் பண்டைத்தமிழ் நூல், அன்றைக்குப் பிரசித்திப் பெற்ற சித்த மருத்துவ நூல். அந்த நூலில், கீரைக் கூட்டத்தில், சாதாரண அறுகீரை, பசலை, முருங்கை, தூதுவேளை, நறுந்தாளி என அத்தனையும் உடலுறவில் நல்ல நாட்டத்தை ஏற்படுத்தி, அதில் ஏற்படும் சிரமங்களையும் களையும் என்பதை

`தாளி முருங்கை தழைதூ தனம் பசலை
வானிலறு கீரையுநெய் வார்த்துண்ணி லாளியென
விஞ்சுவார் போகத்தில் வீம்புரைத்த பெண்களெல்லாங்
கெஞ்சுவார் பின்வாங்கிக் கேள்”


எனக் குசும்பு கொப்பளிக்கச் சொல்லியிருக்கிறார்கள். `யாளியென விஞ்சுவார் போகத்திலே’ எனும் பாடலில் வரும் யாளி எனும் விலங்கு யானையின் தலை, சிங்கத்தின் உடம்பு என்று கற்பனையில் செதுக்கப்பட்டு, அநேகமாக அனைத்து இந்துக் கோயில்களிலும் தூண்களில் இருக்கிறது. மிக வலிமையான விலங்காக இலக்கியங்களில் பேசப்பட்ட யாளி, ஒரு கற்பனை விலங்கே. `உடம்பே அவ்வளவு வலிமைன்னா, புணர்ச்சியில்..?’ என எசகுபிசகாகச் சிந்தித்து, `வாலிப வயோதிக அன்பர்களே! அந்த வலிமையைப் பெற கீரை சாப்பிடுங்கப்பா’ எனக் கொஞ்சம் லைட்டாக எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் சுதியேற்றிச் சொல்கிறார் அந்த சித்த நூலின் ஆசிரியர்.

`தாதுவை உண்டாக்கும்; தனி மேகத்தைத் தொலைக்கும்’ என்ற வரிகள் எதுகை மோனைக்காக எழுதப்பட்டவை அல்ல. தாது எனும் உயிரணுக்களை உயர்த்தும் ஓரிதழ் தாமரை இயல்பிலேயே, பிறப்பிலேயே சிறுத்து இருக்கும் ஆணின் விதையை (Low sized testicles) பருக்க வைக்கவும், விந்தணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் (Spermatogenesis) செய்வதை நவீன அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. மூலிகைகள் இருக்கட்டும். முருங்கை விதை, முருங்கைப்பூ என ஆரம்பித்து, ஜாதிக்காய், லவங்கப்பட்டை, வெந்தயம், பூண்டு, பாதாம், பிஸ்தா, சாரப் பருப்பு, பருத்திப்பால்... என நாம் அன்றாடம் அடுப்பங்கரையில் புழங்கும், கலவி இன்பத்தைக் கணிசமாகத் தரும் உணவுகளும் எளிய மூலிகைகளும் அன்று நிறையவே அடையாளம் காணப்பட்டுள்ளன. வாழ்வின் அவசியமான அந்தப் பித்த உயர்வைப் பற்றிப் பேச அதிகம் சங்கோஜப்பட்டதன் விளைவே, இந்தத் தளத்தில் கொடிகட்டிப் பறக்கும் போலி விளம்பரங்களும் அதில் நடக்கும் அறமற்ற வணிகமும்.

இன்னொரு முக்கிய விஷயம்... விலை உயர்ந்த மருந்து, அதிகம் படிக்கப்பட்ட அதிசயக்கத்தக்க மூலிகை இவையெல்லாம் தராத உயிரணு உயர்வை, ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகையில், அவன் கவனிக்காதபோது சிநேகமாகத் தன் தட்டில் இருந்து எடுத்து அவன் தட்டில் போடும்... அவன் விரும்பிச் சாப்பிடும் வெண்டைக்காய் பொரியலும், ``போதும் போதும்’’ என மறுத்து உண்ணும் அவன் கைகளை விலக்கி, ``ப்ளீஸ்! கொஞ்சூண்டுப்பா’’ என இதழ் குவித்துக் கட்டாயமாகப் பரிமாற, சட்டைப்பையில் தெறித்த அந்த மோர்க்குழம்பை ``ச்சோ!’’ எனப் பதறிக் கையாலேயே துடைத்து, அதை அவன் முன்னே அழகாக அருந்துவதும்கூட, கொஞ்சம் உயர்த்தக்கூடும்... பரிமாறியதில், சோற்றுக்கும் காய்க்கும் இடையே காதல் செருகி இருக்கும்போது!

- பிறப்போம்...


விந்தணுக்களின் உற்பத்திக்கும், அதன் வேகமான நகர்வுக்கும் நவீனம் சொல்லும் பிற மிக முக்கியச் சத்துக்கள்...

L-Carnitine, வைட்டமின் பி 12 மற்றும் வைட்டமின் சி.

p30b.jpg

L-Carnitine சத்து, நம்ம ஊர் வெண்டைக்காய் முதலான அநேகக் காய்கறிகளில், கீரை வகைகளில், பாதாம் முதலான வித்துக்களில் நிறைய உள்ளது.

p30e.jpgp30c.jpg

பி 12 நான்வெஜ்ஜில் மட்டுமே இருந்து கிடைக்கும் சமாசாரம். சிக்கன் லிவர், மீன்கள், கொஞ்சம் பால், முட்டையில் இருந்தும் பெறலாம்.

p30d.jpg

வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சோ, எலுமிச்சையோ ஏற்கெனவே பிழிந்து பாக்கெட்டில், புட்டியில் அடைக்கப்பட்ட பழச்சாற்றைத் தவிர்த்து, அவ்வப்போது பிழிந்து சாப்பிடுவதுதான் கணிசமாக இந்தச் சத்துகளை நார்ச்சத்தோடு சேர்த்தளிக்கும்.


p30e1.jpg

`புளிச்ச கீரை’ எனும் கோங்குரா, ஆந்திரா மெஸ்ஸின் ஓர் அசத்தல் உணவு. புளிப்பாகவும் சுவையாகவும் உள்ள இந்தக் கீரை `போகம் விளைவிக்கும் கீரை’ என்று பல ஆயிரம் வருடங்களாகப் பேசப்படும் கீரை. இங்கே மட்டுமல்ல, இதன் இனம் ஆப்பிரிக்க நாடுகளிலும் பர்மாவிலும்கூட பரிமாறப்படுகின்றதாம். ஃபோலிக் அமிலம், பல்வேறு கனிமங்கள், குர்சிட்டின் (Quercetin) முதலான பலவித மருத்துவ குணமுள்ள Flavanoids  நிறைந்த இந்தக் கீரை உயிரணுக்கள் உற்பத்திக்கு ஓர் ஊட்டக்கீரை. இதன் குடும்பத்தைச் சார்ந்த குடம் புளி (கோக்கம் புளி) மாதிரியே இந்தக் கீரை எடையைக் குறைக்கும் என்பது கூடுதல் நற்செய்தி.


p30f.jpg

காயகல்ப பயிற்சி

மன வளக்கலை வேதாத்ரி மகரிஷி கற்றுத்தந்த எளிய முறை யோகப் பயிற்சி இன்று கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பாடத்திட்டமாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்தப் பயிற்சிகளில் ஒன்று காயகல்ப பயிற்சி. மருந்து, மாத்திரை எனும் வட்டத்தில் சிக்காமல், விந்து நாதம் எனும் படைப்பின் மூலப் பொருள்களைத் தூய்மை செய்து, அவற்றின் வலுவையும் அளவையும் தரத்தையும் உயர்த்துவதாகப் புரியப்படும் இந்தப் பயிற்சியையும் உயிரணுக்களை உயர்த்த, அதன் இயக்கத்தைச் சீராக்கப் பயிற்சி செய்யலாம்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

உயிர்மெய் - 15

 

தீத இன்பமும் நிறைவும் எப்போதுமே சின்னதாக ஒரு பயத்துடன் சேர்ந்து நிற்கும். களவின் நெருக்கத்தில் பெறும் முத்தத்தில் இருந்து, காமக்கூடலில் வரும் சத்தம் வரை இன்பமும் பயமும் இணைந்துதான் இருக்கும். கருத்தரித்த முதல் கணத்திலும்கூட அப்படித்தான். அவனோ, அவளோ இன்னும் 10 மாதங்கள் உள்ளிருந்து தன் பிஞ்சுக்கால்களால் கொடுக்கப்போகும் உதையும், மேல் வயிற்றில் முட்டி, மெள்ள வயிற்றினுள் தான் கட்டி வைத்திருக்கும் குளத்தில் நீந்தப்போகும் அனுபவத்தையும் நினைக்கும் ஒவ்வொரு கணமும் மகிழ்வாக, கொஞ்சம் பயமாக ஒவ்வோர் இளம் தாய்க்கும் இருக்கும். 

நாள் தள்ளிப்போய், சிறுநீர் சோதனையில் பளிச் நிறம் கிடைத்து,  ``அய்யோ! பாப்பாவேதான்’’ எனக் குதூகலித்து, பரபரப்பாக மகளிர் மருத்துவரிடம் நிற்கும்போது, அவர் அல்ட்ராசவுண்ட் பார்த்து, ``கங்கிராட்ஸ். Sac தெரியுது. கண்டிப்பாகக் குழந்தைதான். ஆனாலும், ஹார்ட் பீட் இன்னும் சரியா கேட்கலை. எதுக்கும் இன்னும் ஒரு வாரம் போகட்டுமே’’ எனச் சொல்லும்போது,  அடுத்த ஏழு நாள்கள் வலியோடும் பரபரப்போடும், கொஞ்சம் அடிவயிற்றைத் தடவிப் பயந்தும், உள்ளூற மகிழ்ந்தும் கடக்கும் பொழுதுகள் சொல்லி மாளாதவை.

கருத்தரிப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர், முதல் 12 வாரங்கள் கொஞ்சம் கூடுதல் அக்கறை அவசியமே. அதுவும் `Precious baby’ என மருத்துவத் துறை செல்லமாகச் சொல்லும் அதிக மெனக்கெடலில் உருவான குழந்தையாக இருக்கும்பட்சத்தில், இந்தக் கூடுதல் பாதுகாப்பு கட்டாயம். `அதுக்காக ஒரு நல்ல ஆஸ்பத்திரியாகப் போய் அட்மிட் பண்ணிடணுமா?’ எனக் கேட்க வேண்டாம். வயிற்றுக்குள் வந்திருப்பது புது வியாதி அல்ல. புத்துயிர், புதுத் தளிர் என்ற புரிதல் முதலில் வேண்டும். எப்பவும் இந்தச் சமயத்தில் மரபு சொல்லும் சொல்லுக்கும் மருத்துவரின் பரிந்துரைப்புக்கும் கொஞ்சம் உரசல் உண்டாகும். ``அம்மா! நீ பேசாம இரு. டாக்டர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்னு சொல்லிட்டாரு’’ என மனைவியை, இப்போது கூடுதலாக அவளுள் வளரும் தன் ஆண் எனும் அங்கீகாரத்தையும் ஏற்றிக்கொண்டு, பைக்கில் பின்னால் வைத்துக்கொண்டு சுற்றுவதைக் குறைத்துத்தான் ஆக வேண்டும்.

32p1.jpg

கருத்தரித்துள்ள காலத்தில், முதல் மூன்று மாதங்களும் கடைசி மூன்று மாதங்களும்தான் கொஞ்சம் கூடுதல் அக்கறை தேவை. முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவைத் தடுக்க, கடைசி மூன்று மாதங்களில் குறைப்பிரசவத்தைத் தடுக்கவே இக்கரிசனம்.

பெரும்பாலான கருச்சிதைவுகள் முதல் மூன்று மாதத்தில்தான் நடைபெறுகின்றன. 12-13 வாரம் தாண்டிய பின்னர், சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்ள இயலும். 10-வது வாரம் அல்லது  11-வது வாரம் எதிர்பாராதவிதமாகக் கருச்சிதைவு நிகழ்ந்து, பெரும் மனவலியைக் கொடுக்கும்போது, ``Sac தெரியுதுனு சொன்னாங்களே... நான் எவ்வளவு அக்கறையாக இருந்தேன். பின் ஏன் இப்படி?’’ என்ற கதறல் இயல்புதான். இன்றைக்கு நடக்கும் கருச்சிதைவுகளில் 40 சதவிகிதத்துக்கும் மேல் ஏன் என்று காரணம் தெரியாமல் நிகழ்பவையே. `Unexplained abortion’ எனச் சொல்வர். தாயின் கர்ப்பப்பை, குழந்தை தங்கி வளர இடம் கொடுக்கும் ’ஹவுஸ் ஓனர்’ மட்டும் கிடையாது. குழந்தை வயிற்றுக்கு வெளியே வந்து, தன் முதல் அழுகையில் மூச்சை உள் இழுத்துத் தானாக சுவாசிக்கும்வரை அத்தனையும் வளர்ப்பது தாயின் ரத்தமும் மூச்சின் மூலமும்தான்.  இந்த அக்கறைப் பரிமாறலில், `ஏன் இப்படி அசம்பாவிதம்?’ என ஆராயும்போது, பல சிந்தனைகள் இன்றைய அறிவியலுக்குப் பிறக்கின்றன. வேகமாக செல்கள் வளர்ந்து வருகையில், ஏதோ ஒரு காரணத்தால் முதல் ஒரு சில வாரங்களில் பிழை ஏற்படுவதை உணர்ந்த கர்ப்பப்பையும், தாய்சேய் இணைப்புத் திசுவுமேகூட, இன்னும் இக்கரு வளர்வதில் தாய்க்கும் அந்தச் சிசுவுக்கும் பெரும் அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்து, இந்தச் சிதைவை ஏற்படுத்தலாம் என்னும் கருதுகோளும் ஆய்வாளர்களிடம் உண்டு.

பல அக்கறைகளுக்குப் பின்னரும் சிதைவு ஏற்படும்போது வரும் சொல்லொணா துயரத்தை, ஒரு கணம், ``ஒருவேளை இந்தக் கரு, பெருத்த நோய்க் கூட்டத்தோடு குழந்தையாக உருவாகி இருந்தால், எத்தனை சிரமம் அதற்கு ஏற்படும்? உண்மையில் அதற்குக் கூடுதல் வலியைக் கொடுக்காமல் காப்பாற்றியிருக்கிறோம். அடுத்த குழந்தை அப்படி இல்லாமல் இன்னும் ஆரோக்கியமாகப் பிறக்கட்டும்’’ என்ற நம்பிக்கையை விதைப்பதும் அந்தச் சூழலில் அவசியம். 

32p4.jpg

`இன்றைக்கு மிகச் சாதாரணமாக கருச்சிதைவுக்குக் காரணமாக இருப்பது, புரோஜெஸ்டிரான் (Progesterone) ஹார்மோன் கொஞ்சம் குறைவாக இருப்பது’ என்கிறார்கள் நவீன மருத்துவர்கள். 30 வயதைத் தாண்டிய கருத்தரிப்பு என்றாலோ, அல்லது முன்னர் கருச்சிதைவுகள் ஏற்பட்ட வரலாறு இருந்தாலோ, முதலில் அவர்கள் பரிந்துரைப்பது இந்த ஹார்மோனைத்தான். கருத்தரிப்பு உறுதியான முதல்நாள் முதலே இந்த ஹார்மோனைப் பரிந்துரைப்பது கூடுதல் பாதுகாப்பு என்பது அவர்கள் அனுமானம். `ஆனால், அந்த ஹார்மோனைப் பரிந்துரைக்கையில் சற்று நிதானம் தேவை. அவசியமில்லாமல் அது இன்றைக்கு அதிகம் பேருக்குப் பரிந்துரைக்கப்படுகிறது’ என்ற குற்றச்சாட்டும் நிறையவே உண்டு.

கருவளர்ச்சி என்பது, மிக மிக இயல்பான உடலின் இயக்கம். உடலின் பல்வேறு திசுக்களும் அணுக்களும் தினம் தினம் வளர்வதுபோல, தினம் தினம் எலும்புகள் தன்னைப் புதுப்பித்துக்கொள்வதுபோல, தினம் தினம் தோலின் கோடானு கோடி செல்கள் உதிர்ந்தும் மலர்ந்தும் வருவதுபோல கருவும் தானாக வளரும். அதற்கேற்ற தேவைகளை அழகாகத் தன் அன்னையின் ரத்தக்குழல் மூலம் பெற்றுக்கொள்ளும். `இதற்கு எதற்கு இந்த ஹார்மோன் மருந்துகள்?’ என வாதிடுவோரும் உண்டு. இந்த ஹார்மோன் தேவையா, வேண்டாமா என்பதை மருத்துவர் மட்டுமே முடிவுசெய்யலாம். மிக மிக எமோஷனலான நேரத்தில், அறிவியல் தரும் அன்பான அரவணைப்பும், அறமற்ற வணிகத்தின் இரும்புப்பிடியும் ஒன்றாக வருகையில், ஏராளமான கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் அப்பாவித் தம்பதிகள் எந்த முடிவும் எடுக்க இயலாது.

 `இது உனக்கு வேணாம்பா’ என்பதையோ `இது கட்டாயம் வேணும்பா’ என்பதையோ மருத்துவர் முகம் சுளிக்காமல், கூடுதல் பொறுமையுடன், `ஏன், எதற்காக உனக்குப் பரிந்துரைக்கிறேன்’ என விளக்கியாக வேண்டும். ``நீ டாக்டரா, நான் டாக்டரா? உனக்குக் குழந்தை நிக்கணுமா, வேண்டாமா?’’ என்ற கோபக் குரல்கள் நிறையவே இப்போது இந்த மருந்துகளைக் குறித்துச் சற்று அச்சத்தோடும் அக்கறையோடும் கேட்கும் பெண்ணிடம் வந்து விழுகின்றன. ஏழெட்டு வருடங்களாகத் தவமாய்த் தவமிருந்து, மூலிகைச் சாறோ, மிகத் துல்லியமான நவீன மருத்துவ முனைப்புகளோ ஏதேனும் ஒன்றில், ``குழந்தை நின்னுடுச்சு டாக்டர். நன்றி சொல்ல வார்த்தையில்லை’’ எனக் கைகூப்பி, கண்களில் நீர் மல்க முன் நிற்கும் அவர்களுக்கு அடுத்த 39 வாரங்களுக்குக் காவல்தெய்வமும் எல்லைச்சாமியும் மருத்துவரே. ஒவ்வொரு நகர்விலும் கர்ப்பிணித்தாய் தடுமாறிவிடாமல் இருக்க, கேள்விகளை ஊன்றிக்கொண்டு சந்தேகங்களைக் கேட்கும்போது, மருத்துவரின் அன்பான, தெளிவான பதிலும் வழிகாட்டு தலும்தான் அன்னைக்கு அடுத்தபடியாக அவளுக்கான அரவணைப்பு.

அடிக்கடி நிகழும் கருச்சிதைவுக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக இன்றைக்குப் பார்க்கப்படுகிறது தன் எதிர்ப்பு நோய்களுள் (Auto immune disorder) ஒன்றான `Antiphospholipid syndrome’ எனும் நோய் நிலை. இங்கே ரத்தம் உறைதல் நிகழ்ந்துவிடும் வாய்ப்பு உள்ளது. கருவையும் தாயையும் இணைக்கும் குழலில் ரத்தப் பரிமாற்றம் உறைவதால் கருச்சிதைவு ஏற்படும். இப்போது ஆஸ்பிரின் மருந்துகளால் இதைக் கட்டுப்படுத்துகின்றனர். ஆஸ்பிரின் நவீன மருந்துகளில் மிகப் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ``அப்போ எல்லாம் குழந்தைப் பிறப்பு இப்படியா நடந்துச்சு? சமைஞ்சோமா, சங்கதி நடந்துச்சா, மசக்கை வந்துச்சா, அப்புறம் மடியில குழந்தையானு எப்படி சுளுவா இருந்துச்சு.  உனக்கு என்னாத்துக்கு இத்தனை டெஸ்டு, இவ்ளோ மாத்திரை...’’ எனப் பக்கத்து வீட்டுப் பாட்டியோ, தொன்மையை மட்டுமே தோளில் தொங்கப்போட்டுக் கொண்டிருப்போரோ கருத்தாகக் கேட்கக்கூடும். அவர்களுக்கான பதில், ``அன்றைக்கு இருந்த கருச்சிதைவில், சிசு மரணத்தில் இன்றைக்கு ஆயிரத்தில் ஒன்று இரண்டுதான் நடக்கிறது’’ என்பது மட்டும்தான். அப்படியானால், `மரபின் மெனக்கெடல்களில் இந்தக் கருச்சிதைவிலிருந்து காப்பாற்ற வழியில்லையா?’ என்போருக்கான பதில், `ஏன் இல்லை?’ என்பதுதான். ஆனால், மரபு சொல்லும் வழிமுறைகளை வலது கண்ணிலும், நவீனம் சொல்லும் அறிவியலை இடது கண்ணிலும் இருத்திக்கொண்டு வாழ்வை நகர்த்தவேண்டிய சூழலில்தான் நாம் இப்போது இருக்கிறோம்.

32p3.jpg

`பரராஜசேகரம்’ என்பது மிகப் பழைமையான ஒரு சித்த மருத்துவ நூல். `இலங்கையில் வெளியான தமிழ் மருத்துவ நூல்’ என்று இதைச் சொல்வார்கள். இந்த நூலில், பத்து மாதங்களும் கருச்சிதைவு ஏற்படாமல் இருப்பதற்காகவே எளிய மூலிகைகளைக் கொண்டும், உணவைக் கொண்டும் ஒவ்வொரு மாதமும் எதை, எப்படிச் சாப்பிட வேண்டும் என ஒரு பட்டியலைக் கொடுத்திருக்கிறார்கள். (பார்க்க பெட்டிச் செய்தி). அதேபோல், `அகத்தியர் பிண்டோற்பத்தி’ நூலில் கர்ப்பம் தரித்துள்ள பத்து மாதங்களும் `பாவன பஞ்சாங்குலத் தைலத்தை’ காலையில் 10 கிராம் அளவும், இரவில் ஐந்து கிராம் அளவும் கொடுத்துவர, பிறக்கும் குழந்தை கர்ப்பச்சூடும், நோயும் இன்றி, திடமாகவும், அழகாகவும், புத்திக் கூர்மையுடையதாகவும் இருக்கும் என்று கூறியிருக்கிறார்கள். தற்போது அனைத்து ஆரம்பச் சுகாதார நிலையங்களிலும் இந்தத் தைலம் கர்ப்பிணிப் பெண் பாதுகாப்புக்காக இலவசமாக வழங்கப்படுகிறது. நவீன மருத்துவம் பரிந்துரைக்கும் இரும்பு, கால்சியம் மற்றும் ஃபோலிக் அமிலச் சத்துபோல இந்தச் சத்து மருந்தையும் பெற்று உண்பது தாய்க்கும் குழந்தைக்கும் நலம்.

கருச்சிதைவுக்கு, சில நேரங்களில் கர்ப்பப்பையின் நடுவே பிறப்பிலேயே இருக்கும் தடுப்புச்சுவர் (Septum) காரணமாக இருக்கக்கூடும். சில நேரங்களில் கர்ப்பப்பையின் கழுத்துப்பகுதி பலவீனமாக இருக்க, குழந்தை வளரும்போது ரத்தப்போக்குடன் சிதைவு ஏற்படலாம். அதற்கெல்லாம் இப்போது கர்ப்பப்பையின் கழுத்துப் பகுதியில் ஒரு தையல் போடும் சிகிச்சை மிகப் பயனுள்ளதாக ஆகிவருகிறது. இவையில்லாமல், மரபணு காரணத்தால் வரும் கருச்சிதைவுகள் ஒரு சிலருக்கு ஏற்படும். தாய், தந்தை இருவரில் யாராவது ஒருவர் மரபணுவில் உள்ள சின்ன சிக்கலால், தொடர்ச்சியான கருச்சிதைவு ஏற்படுவது உண்டு. இருவருடைய ரத்தத்தையும் சோதித்துப் பார்த்து, என்ன காரணம் எனக் கண்டறிந்தாலும், சிகிச்சைக்கு மருத்துவ உலகம் கையைப் பிசைந்துகொண்டுதான் விழிக்கிறது.   

இயற்கையின் சூட்சுமத்தில் எல்லாவற்றையும் சில நேரங்களில் அறிந்துகொள்ளவும் முடியாது; புரிந்துகொள்ளவும் முடியாது. பிழையுடன் கருவை உருவாக்கிய கடவுள், `சிப்பியிருக்குது, முத்துமிருக்குது, திறந்து பார்க்க நேரமில்லடி ராசாத்தி’ என அவர் வீட்டம்மாவுடன் டூயட் பாடிக்கொண்டிருக்கையில், இங்கே முத்துகள் அழகாக சிப்பிக்குள் வளர்க்கப்படும்; பிழையின்றி. ஆம்! சில நேரங்களில், கரு உருவாக்க மரபணுவில் சில பிழைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்ட நபரும்கூட இயல்பாகக் கருத்தரித்து, ஆரோக்கியமாகக் கரு நின்று, மிக அழகான குழந்தை பெறுவதும் உண்டு. 

கருத்தரித்த சில வாரங்களுக்குப் பின்னர் லேசான ரத்தக்கசிவைக் கண்டால், அந்தக் கர்ப்பிணிப்பெண் பதறிப்போய் மருத்துவ மனைக்குப் பாய்வதுண்டு. பல நேரங்களில் அது இயல்பான ஒன்றுதான். தாய் சேய் இணைப்புத் திசு கீழிறங்கி இருந்தால், அல்லது வேறு சில காரணங்களால் எப்போதாவது ஒரு சில துளிகள் ரத்தம் வரலாம். அதைக்கண்டு துளியும் அஞ்சத் தேவையில்லை. தொடர்ச்சியான கசிவு, அது ரத்தப்போக்காக மாறும் இயல்பு இருந்தால் மட்டுமே சிதைவு குறித்த எச்சரிக்கையும் பயமும் வேண்டும்.

கருச்சிதைவுக்கு உடல் காரணத்தைத் தாண்டி, நமக்கே உரிய ஸ்பெஷல் தமிழ்க் காரணங்கள் இங்கே கொஞ்சம் உள்ளன. ``வளைகாப்புக்கு புது பட்டுப்புடவை உண்டுல்ல... மாப்பிள்ளை சீர் செய்வாங்களா... பிரசவச் செலவு அம்மா வீட்லதானே... அப்புறம் உங்க அக்காவுக்கு இன்னும் குழந்தையில்லை, அவங்க வந்து வளையல் போடுவாங்களா, கண்டிப்பா கூப்பிடணுமா?’’ எனச் சொல்லும் கூட்டத்தை, நீதிபதி குன்காவிடம் சொல்லி, மொத்தமாக அந்தமான் ஜெயிலுக்கு அனுப்பிவிடுங்கள். கருச்சிதைவு நிகழாமல் பாதுகாக்க மட்டுமல்ல.... வயிற்றுக்குள் வளரும் அந்தச் சிசுவுக்காவது இந்தக்  கூட்டம் வாழும் சமூகம்  இல்லாதிருக்கட்டும்.

- பிறப்போம்...


32p2.jpg

கருச்சிதைவைத் தடுக்கும் மூலிகை மருந்து!

முதல் மாதம் - தாமரைப் பூவின் காயும், நல்ல சந்தனமும் அரைத்து, பசும்பாலில் கலக்கி, காலை 15 – 30 மி.லி தர வேண்டும். தாமரைப்பூ காய் ஃபோலிக் அமிலம்கொண்டது   

2-ம் மாதம் -    நெய்தற்கிழங்கு, முத்தக்காசு, அதிமதுரம், இஞ்சி இவற்றை அரைத்து, பாலில் கலந்து தரவேண்டும். (ஒரு காலத்தில் கஞ்சாவையும் இதில் சேர்த்திருக்கிறார்கள்). இந்தக் காலத்தில் வரும் வாந்தியைப் போக்க இதிலுள்ள இஞ்சியும், Dehyration-க்கு அதிமதுரமும் உதவும்.   

3-ம் மாதம் - சந்தனம், தகரம், கோஷ்டம், தாமரை, அல்லி, சீந்தில் தண்டு இவற்றைக் குளிர்ந்த நீரில் அரைத்துத் தர வேண்டும்.   

4-ம் மாதம் - வயிற்றுவலி, குருதிப்போக்கு ஏற்பட்டால், நெய்தல் கிழங்கு, சீந்தில்தண்டு, நிலப்பனைக் கிழங்கு, நெருஞ்சிவேர் இவற்றைப் பாலில் அரைத்துத் தரலாம்.   

5-ம் மாதம் - சாரணைக்கிழங்கு, இலுப்பைப்பூ, அழிஞ்சில் விதை, தகரம், எள், நெய்தற்கிழங்கு இவற்றைப் பாலில் அரைத்துத் தர வேண்டும்.   

6-ம் மாதம் - நீர்ச்சுருக்கு, வயிற்று வலி ஏற்பட்டால் ஆரைக்கீரை, நெருஞ்சில் கஷாயம் தர வேண்டும்.   

7ம் மாதம் - கச்சோலம், ஆமணக்கு வேர், நெய்தற்கிழங்கு ஆகியவற்றை அரைத்து, நீரில் கலக்கி தேன் சேர்த்துத் தர வேண்டும்.   

8ம் மாதம் - உடல் சோர்வு, கை கால் வலி, பசியின்மை போன்றவற்றுக்கு அதிமதுரம், தாமரை வித்து, முத்தக்காசு, விளாம்பிஞ்சு, யானைத்திப்பிலி, நெய்தற்கிழங்கு இவற்றை அரைத்துப் பாலில் கலக்கித் தரலாம்.   

9ம் மாதம் - வட்டு விதையைப் பொடித்துத் தேனில் குழைத்துத் தரலாம்.   

10-ம் மாதம் - கர்ப்பப்பை சுருங்கி இறுகும் வலிக்கு முத்தக்காசு, திராட்சை, நெய்தற்தண்டு, சர்க்கரை இவற்றை அரைத்துத் தேனில் குழைத்துத் தர வேண்டும்.  

அட்டவணையில் குறிப்பிட்டுள்ளது நீண்ட அனுபவக் குறிப்பு. பல ஆயிரம் ஆண்டுகாலம் பழக்கப்பட்டு பதிவிடப்பட்டது. அதே சமயம் எல்லா கர்ப்பிணிப் பெண்ணுக்கும் பொதுவானதோ ஒரே அளவிலானதோ கிடையாது. மாறுபடக்கூடும். அருகில் உள்ள அரசு சித்த மருத்துவரை அணுகி  ஆலோசித்துப்  பயன்படுத்தவேண்டும்

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உயிர்மெய் - 16

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

மருத்துவர் கு.சிவராமன்

 

ருத்தரிப்புக்காக ஆண்டுக்கணக்காக ஏக்கத்துடன் காத்திருக்கும் நாள்களில் பெண்ணுக்கு எப்போதும் குழப்பத்தையும், வலியையும், பயத்தையும் ஒரே நேரத்தில் தரும் விஷயம், அதற்காக மேற்கொள்ளவேண்டிய சோதனைகள். ஆணின் வலி, பெரும்பாலும் விந்தணுக்களைச் சோதிக்க எடுக்கும் சோதனையோடு அநேகமாக முடிந்துவிடுகிறது.

சீரான மாதவிடாய், மகிழ்வான உடலுறவு என இருந்தும்,  இன்னும் புது உயிர் பிறக்கவில்லை என்னும்போது, மறுபடி மறுபடி ஆய்வுக்குள்ளாக்கப்படுவது அநேகமாகப் பெண்களே!. இன்னும் சொல்லப்போனால், கர்ப்பப்பையை எதிர்த்தரப்புக்குத் தள்ளிவிட்டுவிட்டதாலேயே நிறைய வலிகளைப் பெண்ணுக்குப் பிரத்யேகமாக ஆக்கிவிட்டது ஆணினம். இன்றைக்குக் கருத்தரிப்புக்கு உதவிசெய்யும் பல மருத்துவமனைகளுக்குள் நுழைந்தவுடன் கொடுக்கப்படும் முதல் வலி, ``மறுபடி முதல்லேர்ந்து அத்தனை சோதனையையும் பார்த்தாக வேண்டும்’’ என்கிற வணிகக் கண்ணிதான். 

p32a.jpg

``இவ்வளவு பெரிய ஃபைல் வெச்சிருக்கோம். இரண்டு வருஷமா செஞ்ச அத்தனை டெஸ்ட்டும் இருக்குதுங்க... இப்ப ஏன் புதுசா டெஸ்ட்?’’ எனக் கேட்டதும், ``இப்ப எப்படின்னு தெரியணும். மேல் (Male) பேக்கேஜ் இவ்வளவு... ஃபீமேல் பேக்கேஜ் இவ்வளவு... மொத்தமா கேஷ் கவுன்ட்டர்ல கட்டிடுங்க’’ என அழுத்தமாகச் சொல்லும் வரவேற்பாளினிகளைக் கொண்டவைதான் அநேக மருத்துவமனைகள். `ஒழுங்கா அன்னிக்கே காஷ்மீர் பேக்கேஜ், காங்க்டாக் பேக்கேஜ்னு எதுக்காச்சும் போயிருந்தாகூட இவ்வளவு செலவாகியிருக்காது. போனஸா பிள்ளைகூட இந்நேரம் பிறந்து, எல்.கே.ஜி. போயிருக்கும். ம்...’ என அவனுக்குத் தோன்றும். அந்த மைண்ட்வாய்ஸைக் கேட்ட அவனின் அம்மணி, திரும்பி லேசாக முறைத்து, ``ஏன் யோசிக்கிறீங்க... அத்தைதானே அனுப்பிச்சாங்க...அவங்க நாத்தனார் பேத்திக்கு இங்கேதானே கன்சீவ் ஆச்சாம். பே பண்ணுங்க’’ எனச் சொல்லி நகர, பேய் முழியுடன் பணத்தைக் கட்டியதும், சோதனைச்சாலை வேதனைகள் தொடங்கும்.

 ``இன்னைக்கு என்ன டேட்?’’ - இது அநேகமாக எல்லா மகளிடமும் கேட்கக்கூடிய முதல் கேள்வி. ஒரு பெண்ணுக்குப் பிரச்னைக்குரிய வலி தரக்கூடிய கேள்வி அநேகமாக இதுவாகத்தான் இருக்கும். எல்லோரையும்போல, `வருடத்துக்கு 12 மாதங்கள்; மாதத்துக்கு 30-31 நாள்கள்’ என்றுதான் அவளும் சொல்லியிருக்கக்கூடும்... ஒருவேளை, கருத்தரிப்பு மட்டும் கொஞ்ச வருடங்கள் தாமதிக்காது இருந்திருந்தால். என்றைக்கு இப்படிக் குழந்தை வரம் வேண்டி, அரசமரம் முதல் ஆஸ்பத்திரி உரம் வரை தேடித் திரிய ஆரம்பித்தார்களோ, அன்றிலிருந்து, ``இன்னைக்கு எத்தனையாவது நாள்?’’ என்றவுடன், ``போன மாசம் எப்போ வந்துச்சு?’’ என சில படித்த பெண்கள் புருவத்தை உயர்த்தி யோசிப்பார்கள். ஸ்மார்ட்போனிலேயே கம்பெனி, குடும்பம், குதூகலம் அத்தனையும் நடத்துவோர் மாதவிடாய்க் கணக்கீட்டு ஆப்-ஐ போனில் அவசரமாக நோண்டி, விரித்துப் பார்ப்பார்கள். கிராமத்துப் பெண், விரலை மடக்கி எண்ணி, ``இந்த மாசம் நிக்கலை. அப்படின்னா, தலைக்கு குளிச்சதிலிருந்து இன்னைக்கு எட்டாவது நாள்’’ என்பாள்.

இந்தக் கேள்வியை மருத்துவ உலகம் கேட்பதற்குக் காரணம், தற்போது எந்த ஹார்மோன் அவளின் கருத்தரிப்பு நிகழ்வுக்கென மெனக்கெட்டு வருகிறது என்பதைத் தோராயமாக அறியத்தான்.

p32c.jpg

பெண்ணின் ஹார்மோனைக் கணக்கிடுவதும், பெண்ணின் மனதைக் கணக்கிடுவது மாதிரி கடினமானதுதான். `எல்லாம் சரியாத்தானே நடக்குது...கருத்தரிப்பு தடைபட என்ன காரணம்?’ என தங்கமெடல் வாங்கிப் படித்த மருத்துவருக்குக்கூடத் தலைகால் புரியாமல் இருப்பது உண்டு. சினைமுட்டையின் அளவு, வளர்ச்சி, எண்ணிக்கை, அதன் நகர்வு என ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒவ்வொரு ஹார்மோன் உட்கார்ந்திருக்கும். அதை மிகச் சரியாகக் கணக்கிடுவதில் இன்றுவரை சில நுணுக்கங்கள் பிடிபடுவதில்லை. ``அதுக்குத்தான் நான் சொன்னேன்... இதெல்லாம் அரைவேக்காடு சயின்ஸ்; அந்த அமேஸான் காட்டுப்பழத்தையும், ஆண் கரடியின் வலது கால் நகத்தையும் எடுத்து வரணும். அதுக்கு ரெண்டரை லட்ச ரூபாயாகும்’’ எனச் சொல்லும் முழுவேக்காடுகளை முடிந்த வரை தள்ளிவைத்துவிட்டு, அறிவியலின் உண்மையையும் மரபின் அனுபவத்தையும் துளியும் குறைவுபடாத அறத்தோடு அணுகித்தான் ஆக வேண்டும்.

`ஆன்டி முல்லேரியன்’ (Anti-Mullerian) எனும் ஹார்மோன், கருத்தரிப்புக்கான சிகிச்சையில் மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்பு. சினைப்பையில் ஆயிரக்கணக்காக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும் உயிர் உருண்டைகள் கணிசமாக இருக்கின்றனவா, கருத்தரிக்க வாய்ப்புள்ளதா என்பதைச் சொல்லும் நவீன மருத்துவச் சோதனையில் மிக முக்கியமான ஆய்வு இது. நீண்ட நாள்களாகக் கருத்தரிப்புக்குக் காத்திருக்கும் 34-36 வயதுக்கு மேற்பட்ட மகளிரில் இந்தச் சோதனை சரியான வழிகாட்டுதலைக் கொடுக்கும். ரத்தத்தில் அளவிடப்படும் இந்தச் சோதனையில் `வங்கி இருப்பு எவ்வளவு?’ எனத் தெரிந்துகொள்வதுபோல, முட்டை இருப்பைக் கிட்டத்தட்ட அனுமானிக்கலாம்.

p32b.jpg

இந்தச் சோதனையிலும் சின்ன சிக்கல் உண்டு. சிறுவயதுப் பெண்களுக்கு இந்தச் சோதனை அவ்வளவாக அவசியமில்லை. 25-27 வயதில் எதுக்கும் இருக்கட்டும் என அதிகப்பிரசங்கியாக இதைச் சோதித்துப் பார்த்துவிட்டு, `ஹய்யா... முட்டை கையிருப்பு நிறைய’ எனச் சில நேரம் குதித்துவிட முடியாது. அதிகம் வளர்ச்சி பெறாத குட்டியூண்டு சினைமுட்டையின் கிரானுலோஸா செல்கள் மூலமாகத்தான் இந்த ஹார்மோன் சுரக்கும். நிறைய வளர்ச்சி பெறாத குட்டியூண்டு செல்கள் இருக்கும் பாலிசிஸ்டிக் ஓவரி எனும் சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னையில் இந்த ஹார்மோன் அளவு நிறைய இருக்கும். அங்கும் கருத்தரிப்பு தாமதிக்கும். அதனால், அங்கே அமைதியாக நாம் இருந்துவிட முடியாது. அந்த முட்டை வளரவிடாத இடையூறுகளான, உடல் எடை அதிகமாக இருப்பது, பசிக்கும்போதெல்லாம் பீட்சா தின்பது, சந்தோஷ் சுப்ரமணியத்தோடு நடு இரவில் ஐஸ்க்ரீம், குல்ஃபி என அடித்து முழக்குவது போன்ற களேபரங்களை விலக்கிவிட்டு, கருமுட்டைகளை முழுதாக வளரவிட வேண்டும்.

வயது அதிகமாக அதிகமாக, முட்டை இருப்புக் குறைவதை இந்த ஆன்டி முல்லேரியன் ஹார்மோன் சோதனை கொஞ்சம் சரியாகக் கொடுத்துவிடும். வயது 44-45ஐ எட்டுகிறது, இந்த ஹார்மோன் மிகக் குறைவாக (0.5-க்கும் கீழாக) இருக்கிறதென்றால், தேவையில்லாமல், மருந்தைக் கொடுத்து கர்ப்பப்பை சினைப்பையைப் பிழிந்து காயப்படுத்தக் கூடாது. முட்டையில்லாத அந்தப் பைகளில் முட்டி மோதும் ஹார்மோன் மருந்துகள் வேறு பக்கவிளைவுகளைக் கொடுத்துவிடக்கூடும்.

p32e.jpg

  ``எதுக்குத் தாமதிக்கிறீங்க? வாங்க, இக்சி பண்ணலாம். ஈ.எம்.ஐ. வசதி உண்டு’’ எனச் சொன்னாலும், ``அதெல்லாம் சுத்த வியாபாரம், முட்டையே இல்லாட்டி என்ன? என் 48 நாள் மருந்து சாப்பிடுங்க. குட்டிப் பாப்பாவை உண்டாக்கும் பாருங்க. என்ன... கொஞ்சம் செலவாகும்’’ எனும் வியாபாரமும் எட்ட நின்று எச்சரிக்கையாகப் பார்க்கப்படவேண்டியவை.

ஆன்டி முல்லேரியன் ஹார்மோன் உள்ளிட்ட சில ஹார்மோன்களை வைத்துக் கொஞ்சம் மேலே சொன்னவற்றில், `எந்த வழி என் வழி?’ எனக் கணக்கிட முடியும். ஆன்டி முல்லேரியன் ஹார்மோனை மாதத்தில் எந்த நாளும் கணக்கிடலாம். ஆனால்,வேறு சில ஹார்மோன்களை அப்படிக் கணக்கிட முடியாது. குறிப்பாக, சினைப்பையின் முட்டைகளைத் தூண்டும் ஹார்மோன் (Follicle stimulate hormone). மாதவிடாய் தொடங்கி, மூன்றில் இருந்து ஐந்தாவது நாளில் இதைக் கணக்கிடுகையில், இந்த ஹார்மோன் அளவு மிக அதிகமாக இருந்தாலும், நாம் மாதவிடாய் முடிவை நோக்கிச் செல்கிறோம் அல்லது, Premature ovarian failure என்றும் எடுத்துக்கொள்ளலாம். மிகக் குறைவாக இருப்பது, நீர்க்கட்டிகள் முதலான சில பிரச்னைகளை அடிக்காட்டும். `FSH கூடிருச்சா... அப்போ இனி எனக்குக் கருத்தரிக்க வாய்ப்பில்லையா? AMH குறைஞ்சிருச்சா... அப்படின்னா முட்டையில்லையா?’ என உடைந்துபோய்விட வேண்டியதில்லை. தடாலடியாக ஹார்மோன்கள் ஊசியைத் தூக்கவும் வேண்டியதில்லை.   

p32f.jpg

``பித்தக் குறைவு மேலோங்கி இருக்கிறது. கபம் சூழ்ந்துபோய் முட்டை வெடிக்கத் தேவையான பித்தம் கொழுந்துவிடாமல் தடுக்கிறது. தடையாக உள்ள வாயுவைச் சற்று விலக்கி, கூடியுள்ள கபத்தைக் குறைக்க கொஞ்சநாள் நெருஞ்சிலோ, நொச்சியோ, மலைவேம்போ, விஷ்ணு கிரந்தியோ, அசோகப்பட்டையோ பயன்படுத்திப் பார்க்கலாம். முட்டை வளரும். மறைந்துகிடக்கும் நுண்ணிய ஃபாலிக்கிள் உசுப்பேறி உற்சாகமாக மேலே வரும்’’ என மரபு சித்த மருத்துவன் சொல்லும்போது... ``என்ன இது? பட்டை, வேரு, தழைன்னு சொல்லிக்கிட்டு...’’ என நவீனம், பல நேரங்களில் மரபைத் துச்சமாக உதாசீனப்படுத்துகிறது. `அந்தப் பட்டைக்குள் ஈஸ்ட்ரோஜனை உசுப்பும் பீனால்கள் உள்ளன. அந்த முள்ளுக்குள் புரோஜெஸ்டிரானைப் புரட்டிப்போடும் ஹார்மோன்கள் பொதிந்துள்ளன. அந்த இலையிலும் தழையிலும் இன்னும் பெயரிடப்படாத  ஆனால், முட்டையை வளர்த்து நகர்த்தும் வேதிச்சரக்குகள் மிக நுண்ணிய அளவில் உள்ளன’ என நவீன மருத்துவ விஞ்ஞானியின் சித்தப்பனும் மாமனும்தான் அங்கிருந்து இந்தச் செய்தியையும் அறிந்து சொல்லிவருகிறார்கள். பல நேரங்களில் இந்தச் செய்திகளைத் துளியும் உள்வாங்காமல் நவீனம் உதாசீனப்படுத்துவது நம் நாட்டின் வேதனையின் உச்சம். சாதி ஒருமைப்பாடு, மத ஒருமைப்பாடு மாதிரி மருத்துவ ஒருமைப்பாடும் இங்கே இப்போது மிக அவசியம்.

p32d.jpg

உணவால் எந்த அளவு சரி செய்யலாம், உடற்பயிற்சியால் என்ன மாற்றம் கொண்டுவர முடியும், எளிய மூலிகை மருந்தால் என்ன நிகழும், எப்போது ஹார்மோன்களின் நேரடி உதவி தேவை, எப்போது மரபு மருத்துவமும் நவீன ரசாயனமும் இணைந்து செயலாற்ற வேண்டும், எப்போது மருந்துகளால் மட்டும் முடியாமல் உயிரணுவை நேரடியாக உட்செலுத்த வேண்டும், என்றிலிருந்து சோதனைக்குழாயில் மட்டுமே சாத்தியம் அல்லது பிறனிடமிருந்து பெற்ற முட்டை, உதவியாக வாங்கிய உயிரணு, வாடகைக்குக் கர்ப்பப்பையும் அன்னையும் வேண்டும்...என அத்தனை முடிவுக்கும் ஒருங்கிணைந்த மருத்துவப் பார்வைகள் அவசியம்.

ஹிப்போகிரேட்ஸின் கிரேக்க மகள் வீட்டுப் பேரனின் சொல்லுக்கும், புலிப்பாணியின் தமிழ் மகன் வீட்டுப் பேத்தியின் சொல்லுக்கும் மொழிதான் வேறுபாடே தவிர, இருவரின் புரிதலும், அறமும், பயனும் ஏறத்தாழ ஒன்றுதான். புலிப்பாணியும் ஹிப்போகிரேட்ஸும் அன்றைக்கு மோதிக்கொண்டதாகச் சரித்திரமே இல்லை. புலிப்பாணியிடம் இருந்து ஹிப்போகிரேட்ஸ் புரிந்துகொண்டது ஏராளம். போகரிடம் இருந்து புலிப்பாணி வரித்துக்கொண்டதும் ஏராளம். அன்று, கிரேக்கத்துக்கு முத்தும் பவளமும் மட்டும் இங்கிருந்து ஏற்றுமதியாகவில்லை. ஏராளமாகத் தத்துவமும் மருத்துவத் தரவுகளும் ஏற்றுமதியாயின. வெந்தயமும் குதிரையும் மட்டும் கிரேக்கத்திலிருந்து இங்கு இறக்குமதியாகவில்லை. கூடவே, பல கிரேக்கத்து மருத்துவப் புரிதலும் மருந்தும்கூட இந்தியத் தத்துவத்துக்குள் இறங்கியது. இன்றும் முல்லேரியன் ஹார்மோனையும், முட்டை தூண்டும் ஹார்மோனையும் மிக நுண்ணியச் சோதனைக்குழாயில் கணக்கிடும் ஒரு நவீன மருத்துவர், முள்ளுச்செடியில் முட்டை வளர்ச்சியை உற்றுப்பார்க்க ஆரம்பித்தால், நிறைய நேரம் ஈ.எம்.ஐ. மருத்துவம் தேவைப்படாது; `ஈவது விலக்கேலோடு’ இருக்கலாம்.

- பிறப்போம்...

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

உயிர்மெய் - 17

மருத்துவர் கு.சிவராமன்

 

``உன்னையெல்லாம் பெத்தாங்களா...  செஞ்சாங்களா?’’ என ஸ்கூலில் டீச்சர் கொஞ்சம் கோபத்தில் கேட்டால், இன்னும் கொஞ்ச காலத்தில், `யெஸ் டீச்சர்... குழாய் பாதி, கருப்பை மீதி கலந்து செய்த கலவை நான்’ என அவனோ, அவளோ பாடக்கூடும். கருத்தரிப்புக்கு ஏங்கும் பொழுதுகளில், சோதனைக்குழாய் குழந்தை என்பது மருத்துவ வரலாற்றின் மைல்கல் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஆனால், இன்றைக்கு அதன் தேவை பெருகிவரும் வேகத்தைப் பார்த்தால், தவறு வாழ்விலா, சூழலிலா, அதன் வணிகத்திலா எனக் கடுமையாக யோசிக்க வைக்கிறது.

கல்யாணத்துக்கு முன்னர்வரை, `அதையும் தாண்டிப் புனிதமானது’ என்றிருந்த காதல், கல்யாணத்துக்குப் பிறகு மறந்துபோன மளிகைச் சாமான் மாதிரி சட்டைப்பையின் துண்டுச் சீட்டில் மட்டுமே ஒளிந்திருப்பது அதிகமாகிவிட்டது. புணர்ச்சிக்கு மட்டுமல்ல, புத்துயிர் உருவாக்கத்தின் ஒவ்வொரு நிலைக்கும் காதல் அத்தியாவசியமானது என ஏனோ கற்றுக்கொடுக்கப்படவில்லை. மூளைக்குள் பல்பு எரிவதில் தொடங்கி, `செம்புலப் பெயனீர்’போல கலப்பதில் இருந்து, சினைமுட்டைக்குள் சொருகி, உயிரணு தன் சைட்டோபிளாசத்தைக் கலந்து, ஓர் உயிர் உருவாகுவதுவரை மூளையில் சுரக்கும் காதல் ரசாயனங்களின் பணி பெரிதினும் பெரிது.

32p4.jpg

200-க்கு 199.9 வாங்கிக் கல்லூரிக்குச் செல்லும் முதல் பெஞ்ச், `எந்திரன்’ வெர்ஷன் `2.0’-வும் சரி,``மச்சி, காம்பவுண்டு சுவர் கொஞ்சம் கட்டையா இருக்கிற மாதிரி ஒரு காலேஜ் சொல்லு’’ என விசாரிக்கும் கடைசி பெஞ்ச் நாயகர்களும் சரி... காதல் என்பது கல்யாணத்துக்கு முன்னர் எழுதும் கஷ்டமான, தமிழ்ப்பசங்க அநேகமாகத் தோற்றுப்போகும், சேட்டுப்பசங்களும் வெளியூர்காரனும் அள்ளிட்டுப்போகும் `நீட்’ எக்ஸாம் என்றே நினைக்கிறார்கள். இது ஆண்பாலுக்கு மட்டுமல்ல, பெண்பாலுக்கும் சாலப்பொருந்தும் சங்கதி. ஒருவழியாக முக்கி முனகி ப்ரொபோஸ் செய்து, பைக்கில் பின்னாடி உட்கார்ந்து முடி காற்றில் பறக்கப் பயணம்போன பத்து பதினைந்து நாள்களிலெல்லாம், காதலும் கொஞ்சம் கொஞ்சமாக முட்டி எலும்பு, முதுகு எலும்பு தேய்கிற மாதிரி தேயத் தொடங்குகிறது. கல்யாணம் ஆன ஐந்தாறு வருடங்களில் அநேகமாக `காதல் ஆர்த்தரைட்டிஸ்’ வந்துவிடுகிறது. என்ன... ஒரே பிரச்னை, வழக்கமான மூட்டு ஆர்த்தரைட்டிஸுக்கு மூட்டு மாற்று அறுவைசிகிச்சை செய்யலாம். காதலுக்கு அய்யோ பாவம். `தேய்ஞ்சிருச்சு மாத்திடலாம்’ என்றால், செருப்படிதான். ஒருவேளை அந்த ஐந்தாறு வருடங்களில் ஒரு விபத்தாகக் கரு உருவாகிவிட்டால், எதையோ சாதித்த சந்தோஷத்தில் இருவருமே ஆனந்தம் கொள்கின்றனர். அநேகமாக அந்தச் சந்தோஷம், `யார் டயப்பர் மாற்றுவது?’ என்கிற சண்டையின் போது தொடங்கி மொத்தமாக உடைந்துபோகும்.

நம்ம பிள்ளைகளுக்கு, கம்பஞ்சோற்றைவிட நூடுல்ஸ் பிடிக்கிற மாதிரி, பதநீரைவிட கோலாக்கள் பிடிக்கிற மாதிரி, காதலும் குறுக்குவழியில் மண்டைக்குள் குடித்தனம் வருவதுதான் இந்த மாதிரியான குறைந்தபட்ச ஆயுள்காலம் காதலுக்கு வருவதற்கும் முக்கியக் காரணம். கூழையோ, இளநீரையோ சுவைத்து ரசித்து, அதில் பிடித்தம் கிளர்ந்தெழுவது மாதிரி நூடுல்ஸ், கோலாக்களின் மீதான கிளர்ச்சித் தானாக உருவாகுவதில்லை. அதில் நடக்கும் ஜோடனைகளும், வணிகக் கூச்சலும் கிளர்ச்சியைக் குறுக்குவழியில் நம்முள் கிளப்புகின்றன; அதன் சுவை அறியாமல், தேவையை உணராமல். அதேதான் காதல் விஷயத்திலும். அப்பழுக்கற்ற எதிர்பார்ப்பில்லா அன்பால் அதன் படிநிலையாகக் காதல் பீறிட வேண்டும். ஆனால், அப்படிக் காதல் பலருக்குப் பீறிடுவதில்லை. இங்கே சினிமாக்களின் காமக்கூச்சல் காதல் என அடையாளப்படுத்தப் படுகிறது. பாலியல் கிளர்ச்சிக்கு வண்ண உறை சுற்றி, ரோஜா செருகிக் காதல் அடையாளம் சொல்லப்படுகிறது. விளைவு, டெஸ்ட் டியூபில் பேபி பிறப்பதுபோல், டெஸ்ட் டியூபில் மட்டுமே அநேக ரோமியோ ஜூலியட்டுக்கள் பிறக்கிறார்கள்.

32p1.jpg

உளவியல்ரீதியாக ஒரு விஷயத்தை நவீன உலகம் அழகாக அடையாளம் கண்டிருக்கிறது. அநேகமாக அம்மாவின் அன்பைத் துளித்துளியாக அசைபோட்ட ஆண் வயதுக்கு வந்ததும், அவனது ஹைப்போதாலமஸ் பாலியல் கிளர்ச்சியைத் தொடங்கும் பொழுதுகளில், தான் ரசித்த, பரவசமூட்டிய பெண்ணின்பால் செலுத்தி, காதல் வசப்படுகிறான். யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அவன் மீசையும், அவள் கெண்டை விழியும் மட்டும் முடிவு செய்யவில்லை. மூளையின் Nucleus accumbens-ம், அதுகாறும் அவன் பெற்ற அன்பைக் கூட்டிக் கழித்துப்போட்டு  முடிவுசெய்கிறது. அது அன்பின் அட்டகாசமான பரிணாம வளர்ச்சி. அதேபோல், தன் மனதின் முதல் ஹீரோவான ஆணான அப்பாவின் வசீகரத்தையும் அன்பையும் தான் பருவ மடைந்த பின்னர் எதிர்கொள்ளும் சிலாகிக்க வைக்கும் ஆணில் மையல் கொள்கிறாள். மொத்தத்தில் அன்பின் வழியதுதான் உயிர்நிலை. அப்படி, ஓர் எதிர்பார்ப்பில்லாத தூய அன்பை இளம் வயதை ஒட்டி ருசிக்கும் ஒருத்தன் ஒருத்தியில் விளையும் காதல், அன்பின் அடுத்த சேப்டர்; புதிய தொடர் அல்ல.

இனக்கவர்ச்சியாகவோ, இனம், சாதி சனம் பார்த்து அம்மி மிதித்தோ அல்லது அவள்(ன்) அப்பனை மிதித்தோ, நடக்கும் திருமணங்களில் அன்புக்கும் காதலுக்கும் ஆயுள்காலம் காம விபத்துகளில் கருகிப்போகிறது. அதனாலேயே இங்கே பெருகிவரும் புதிய நோய் ஆணுக்கும் பெண்ணுக்குமான உளவியல் காமக்குறைவு நோய். Mental Impotency!

யாரைப் பார்த்துப் பரவசப்படுவது, யாரிடம் மையல் கொள்வது, யாரிடம் வாழ்நாள் முழுவதும் புதைந்துகொள்வது என்பதை மூளையின் பெரும் ரசாயனக் கூட்டம் முடிவுசெய்கிறது. காதலுக்கும், காமத்துக்கும், கருத்தரிப்புக்குமான காமப் பரிமாறலுக்கும் இந்த ரசாயனக் கூட்டத்தின் சரிவிகித, சம காம்போ பரிமாறல் தேவை. பார்த்தால்  பரவசம் ஏற்பட, டெஸ்டோஸ்டி ரோன் தேவை. அது கொஞ்சம் குறைவாக இருந்தால், அடுத்த இருக்கையில் காஜல் அகர்வால் இருந்தாலும், அவன் பட்டினத்தார் பாடல் பற்றியோ, திருநாவுக்கரசர் பதியம் பற்றியோதான் பேசுவான். பரவசத்துக்கு அடுத்த நிலைதான் காதல் தேர்வு.  `இவள்தான்... இவள் மட்டும்தான்’ என உற்சாகமாகத் திரிவதற்கு, அந்த முதல்நிலை பிடித்தலுக்கு அட்ரினலினும் கார்டிசாலும் அளவாகத் தேவை. ``மச்சான் அவ ஓகே சொல்லிட்டாடா’’ என உற்சாகமாக, பயங்கரப் படபடப்போடு சொல்லும் காதலின் முதல் கட்டத்தாருக்கு, `முகத்தில் வேண்டுமானால் எது வேண்டுமானாலும் வழியலாம். ஆனால், ரத்தத்தில் கொஞ்சம் கார்டிசால் அளவு கூடுதலாக வழியும்’ என்கின்றனர் ஆய்வாளர்கள். இதே அட்ரினலினும், கார்டிசாலும்தான் நாய் துரத்தும்போதும் ரத்தத்தில் அதிகம் சுரக்கும் என்பது இந்தக் கட்டுரைக்கான ஒரு டிஸ்க்ளெய்மர் செய்தி.

``ஏன் எப்பவும் இப்படி அன்னை தெரசா மாதிரி அன்பைக் காட்டுறே... எண்பத்தேழுலேயே எங்க அண்ணன் கமல் எப்படி முத்தம் கொடுத்தார் தெரியுமா?’’ எனத் தூபம் போட்டு, காதலில் விளையாடித் திளைக்க, டோப்பமின் ரசாயனம் தெளிக்க வேண்டும். `கட்டிப்பிடி வைத்தியம் முதல் கண்டபடி முத்தம்’ வரை காதலில் நிகழ, இந்த டோப்பமின் மிக முக்கியம். 80-களில் கல்யாணம்வரை `சத்தம் மூச்’ என டோப்பமினை டப்பாவில் அடைத்து, பூட்டி வைத்திருந்தனர் காதலர்கள். இப்போது டோப்பமின் பீறி வழிகிறது. இன்னொரு விஷயம், வயதான காலத்தில் இந்த டோப்பமின் குறைவில் மட்டுமே பார்க்கின்சோனிசம் (Parkinsonism) எனும் நடுக்க வியாதி வருகிறது. ``எனக்கு என் காதலியைப் பார்த்தாலே கொஞ்சம் நடுங்குகிறதே... டோப்பமின் குறைவா?’’ எனக் கேட்கிறீர்களா? நல்ல டாக்டரை உடனடியாகப் பார்க்கவும்.

32p3.jpg

கடைசியாக, காதலில் நிலைகொள்வது, செரடோனின் சங்கதியால் மட்டும்தான். ``இவ்ளோ அழகா ஜூனியர்ஸ் வருவாங்கனு தெரிஞ்சிருந்தா, இப்படி கிளாஸ்மேட்டுகிட்ட சிக்கியிருக்க மாட்டேன்’’ என்றெல்லாம் உளறிக் கொட்டாமல், ஒரே காதலில் ஜீவ சமாதி அடையும் பல லட்சம் காதலர்களுக்கான கட்டிப்போடும் ஹார்மோன், செரடோனின்தான். அதன் சுரப்பில்தான் காதலுக்குப் பின்னர் அத்தனை அழகிகளும், அக்கா தங்கையாக மட்டுமே தெரிவர். கடைசியாக, திருமணத்துக்குப் பின்னர் கணவன் மனைவி பிணைப்பை உறுதிப்படுத்தும் ஹார்மோன் ஆக்ஸிடோசின். ஆங்கிலத்தில் இதனை `Cuddle hormone’ என்றே சொல்கின்றனர். ``என்னடி வசியம் வெச்சிருக்கே... அம்பது வயசானாலும் இப்படி வெக்கமே இல்லாம சுத்திச் சுத்தி வாரேனே?’’ என முதுமையிலும் காதலில்  மூச்சிரைக்க வைப்பது, இந்த ஆக்ஸிடோசின் எனும் சுரப்பினால்தான். அதிகம் அடிக்கடி புணரும் தம்பதியருக்கு இந்த ஆக்ஸிடோசின் அயிட்டம் கொஞ்சம் எப்பவும் மூளையில் தங்கியிருந்து, அவர்கள் காதல் வாழ்வைத்  தக்கவைத்துக் கொண்டே இருக்குமாம்.

மேலே சொன்ன அத்தனை ஹார்மோன்களும் குப்பியில் அடைத்தும் குத்தூசியிலும் வந்திருக்கின்றன. ஆனால், `அது குதூகலமாக மூளை சுரக்கும்போது வருவதுபோல செயலாற்றுமா?’ எனக் கேட்டால், சத்தியமாகத் தெரியாது.  `இந்திரன் தோட்டத்து முந்திரியே, மன்மத நாட்டுக்கு மந்திரியே... கெட்டன இரவுகள்...சுட்டன கனவுகள்...இமைகளும் சுமையடி இளமயிலே...’ எனும் வரிகளைக் கேட்டாலோ, `ஒருபுறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி, மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி, முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி, முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி...’  எனக் கண்ணதாசன் வரிகளைப் பாடினாலோ எல்லா ஹார்மோனும் எழுந்து நின்று சுரக்கும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. `காஸ் தீட்டா, சைன் தீட்டாவை மொக்கையாக இருந்தாலும், படித்து மனனம் செய்யும் கூட்டம் இந்தக் காதல், காமம் தீர என்ன ஃபார்முலா எனப் படித்தே ஆக வேண்டும்.

நவீன விஞ்ஞானம் அத்தனை ஹார்மோன் களையும் புரதக்கற்றைகளாக அடையாளம் கண்டிருக்கிறது. அதன் இருப்பிடத்தை மூளையிலும், சினைப்பையிலும், விதைப்பையிலும் அதன் இண்டு இடுக்குகளின் நானோ துகள்களுக்கு நடுவே கண்டுபிடித்திருக் கிறது. உடலின் மாற்றத்தையும், உள்ளத்தின் குதூகலத்தையும் ரத்தத்தின் சுரப்பையும் கண்டறிந்த அவர்களால், வாழ்வின் சின்னச் சின்ன நுணுக்கங்கள் அந்த ரசாயனத்தின் சுரப்பையும் இருப்பையும் எப்படி ஆள்கின்றன என்பதை இன்னும்  முழுதாக அறிய முடியவில்லை. அதனாலேயே வாழ்வியலும் அதை ஒட்டிய மரபு அனுபவங்களும் புறந்தள்ளப் பட்டு, வேக வேகமாக நவீனக் குறுக்கீடுகள் காதலுக்கும் கரு உருவாக்கத்துக்கும் போதிக்கப் படுகின்றன.

``காலம் தாழ்த்தாதீர்கள்... 35 வயதைக் கடக்கிறீர்கள்...’’ எனும் ஒவ்வோர் அறிவுரைக்குப் பின்னரும் ஒளிந்திருப்பது  அறிவியல் மட்டுமல்ல, அறமற்ற வணிகமும்கூட. `குறைந்தபட்சம் ஐந்தாறு ஐ.யூ.ஐ. செய்தும் பலனளிக்காத பட்சத்தில் மட்டுமே இக்சியோ அல்லது ஐ.வி.எஃப்-வோ வேண்டும்’ என மருத்துவ நெறி சொன்னாலும், வழக்கத்தில் நேரடியாக ஐ.வி.எஃப்-புக்கான வணிகப் பரிந்துரைகள் மேலோங்குவதற்கு, மருத்துவமனைகளுக்கு இடையிலான  போட்டியும் லாபக்கணக்கும்கூட காரணம். இந்த அத்தனை கூச்சலையும், பதற்றத்தையும், அவசரங்களையும் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, அவசியப்பட்டால் நவீனத்தின் சில உயிர்ச்சத்து மாத்திரைகளையும், கருத்தரிப்பை உசிதமாக்கும் உன்னத உணவு களையும் சில காலம் சரியாகச் சாப்பிட்டுவிட்டு அன்பையும் காதலையும் மட்டும் கன்னா பின்னாவெனக் கட்டுக்கடங்காமல் கொள்ளுங்கள். கருத்தரிப்பு சாத்தியமாகக்கூடும்.

காதலைப் பிரசவிக்கும்முன்னே சொன்ன டெஸ்டோஸ்டிரோனும், கார்டிசாலும், வாசோ பிரசினும் (Vasopressin) ஆக்ஸிடோசினும்தான் இன்னொரு வழியில் கருத்தரிப்பையும் நிகழ்த்துகின்றன. முத்தம் கேட்கத் தூண்டும் ஹார்மோன்தான் முட்டை வளர்ச்சிக்கு உதவுகிறது. கட்டிப்பிடிக்கத் தூண்டும் ஹார்மோன்தான் சினைமுட்டை வெடிக்க வழிவகுக்கிறது. மூளைக்குள் பல்பு எரியவைக்கும் ரசாயனம்தான் உயிரணுவை உசேன் போல்ட்டாக ஓடவைக்கிறது. காதலும் கருவாக்கமும் வாழ்க்கை நாணயத்தின் இரு பக்கங்கள். காதலை முன்னிறுத்தி, அந்த நாணயத்தைச் சுண்டி விளையாடுங்கள். கீழிறங்குகையில் கரு வந்து நிற்கும். ஒருவேளை மாறினால்கூட, காதலேதான் எப்போதும் வந்து நிற்கும்!

- பிறப்போம்...


32p2.jpg

கீழ்க்கண்ட ஐந்தில் மூன்றைச் செய்தால், ஆக்ஸிடோசின் அளவளாவும்.

1. கட்டிப்பிடியுங்கள். கஷ்டப்பட்டாவது ரோஜா வாங்கித் தாருங்கள்.

2. வாட்ஸ்அப்பில் வசனம் எழுதாமல், அன்பாக ஒரு சொல் பேச அழையுங்கள்.

3. நடை, நீச்சல், உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி என எதையாவது தினமும் செய்யுங்கள்.

4. வாழைப்பழம் சாப்பிடுங்கள்.

5. இளையராஜாவையும் ஏ.ஆர்.ரஹ்மானையும் இரு காதுகளுக்கு வாடகைக்கு வையுங்கள். வைரமுத்துவை அடிக்கடி அங்கு வந்து போகச் சொல்லுங்கள். இசை, ஆக்ஸிடோசினை ஏராளமாகப் பெருக்கும்.


ட்ரினலின், கார்டிசால் எல்லாம் பரபரப்பான பரவசத்தில் மட்டுமே சுரக்கும் ஹார்மோன்கள். அதனால்தான் நாய் விரட்டினாலும் சரி, நாயகன் விரட்டினாலும் சரி... சுரக்கிறது. இந்த ஹார்மோன் இயல்பாகச் சுரக்க வழி, ஒரு சின்ன சர்ப்ரைஸ். ``வா... எல்லோருமா சேர்ந்துபோய் ஆடித்தள்ளுபடியில தீபாவளிக்குத் துணி எடுத்துக்கலாம்’’ எனக் கூட்டிப்போகும் புத்திசாலித்தனத்தை யாரும் மெச்சப் போவதில்லை. `நீ முதன்முதலா எனக்குக் கொடுத்த சாக்லேட் தாள் கலர்ல, நல்லியில, ஜூட் ஃபைபர் காட்டன்ல ஒரு சேலை பார்த்தேன். உன் ஞாபகம் வந்தது. வாங்கிட்டேன்டா’ எனச் சொல்லி, பின்னிரவில் ஒளித்துவைத்து எடுத்துக் கொடுங்கள். அட்ரினலின் அடிச்சுப் பறந்து சுரக்கும். அடுத்த எபிசோடில் பாப்பா பிறக்கும்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

உயிர்மெய் - 18

 

மருத்துவர் கு.சிவராமன்

 

டந்த வாரம், நமது பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் நடந்ததாக வெளியான ஒரு செய்தி அதிகம் உலுக்கிவிட்டது. ஓர் அரசு மருத்துவமனையில் அவசியமே இல்லாமல், அறுத்து எறியப்பட்ட கர்ப்பப்பைகள் குறித்த செய்தி அது. கர்நாடகாவின், மாண்டியா மாவட்டத்தில்  2005-2012-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், ஒரே மருத்துவர் 2,478 கர்ப்பப்பை  நீக்க அறுவைசிகிச்சைகளை, தான் பணியாற்றும் அரசு மருத்துவமனையில் செய்திருக்கிறாராம். எவ்வித முகாந்திரமும் இல்லாமல், ஸ்கேன், பயாப்ஸி உள்ளிட்ட அறுவைசிகிச்சையின் அவசியத்தை வலியுறுத்தும் எந்த அடிப்படைச் சோதனையும் செய்யாமல், பக்கத்திலேயே இருக்கும் மகளிர் மருத்துவரைக்கூட ஆலோசிக்காமல், அந்த மருத்துவர் கர்ப்பப்பைகளை அறுத்து எறிந்திருக்கிறார். நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணையில், ``ரொம்ப வலியில் கஷ்டப்பட்டாங்க. அதான் 10,000, 20,000 ரூபாய்னு வாங்கிட்டு விடுதலை கொடுத்தேன்” என்று சொன்னாராம் அந்த மருத்துவர். இப்போது அங்கிருக்கும் லோக் ஆயுக்தா நீதிமன்றம் அவரைத் தூக்கி உள்ளே போடச் சொல்லியிருக்கிறது.`அவர் கர்நாடகாவின் சிறையில் சகல வசதிகளோடு இருக்கிறாரா?’ என்பதை ரூபா மேடத்திடம்தான் ஒரு போன் போட்டுக் கேட்க வேண்டும்.

``ஆபரேஷன் செய்ற அளவுக்கு அப்படி என்ன வலி... மாதவிடாய் வலிக்கெல்லாம் ஆபரேஷனா? டி.வி-யில் சர்க்கஸ், ஜிம்னாஸியம்லாம் அந்த நேரத்தில் செய்ற மாதிரி காட்டுறானே!” என எல்லோரையும் கேட்டுவிட முடியாது. மாதவிடாய் சமயத்து வலி சில நேரங்களில் சாதாரண வெந்தயத்தில் சரியாகும். சில நேரங்களில் பழுத்து வெந்த ஈயக்கம்பியை வயிற்றில் செருகியது போன்ற வயிற்றுவலியைத் தோற்றுவிக்கும். மூன்று நான்கு நாள்கள் அந்த வலியைக் கடந்து செல்வதற்குள், கடும் சோர்வையும், வலியையும், மனச்சுமையையும், சில நேரத்தில் அதீத ரத்தப்போக்கையும் தந்து படுத்தி எடுத்துவிடும். இந்த நிகழ்வைத் தமிழ் மருத்துவம் `பெரும்பாடு’ என்றும், நவீன மருத்துவம்  `Dysmenorrhoea’ என்றும் சொல்கின்றன. 

30p1.jpg

சாதாரணமாக லேசான வலியுடன் மாதா மாதம் அது கடந்து போகாமல், இப்படித் தீவிர  வலி வர, `அடினோமையோசிஸ்’ (Adenomyosis) அல்லது `எண்டோமெட்ரியோசிஸ்’ (Endometriosis)  எனும் ஒரு கர்ப்பப்பை நோய் காரணமாக இருக்கலாம். கர்ப்பப்பைக்கு உள்ளே இருக்க வேண்டிய சவ்வான எண்டோமெட்ரியம்,  கர்ப்பப்பைச் சதைக்குள்ளும், வெளிப்புறத்திலும், சினைப்பையைச் சூழ்ந்தும் இருப்பதுதான் இந்த நோய்க்குக் காரணம். இன்னும் புரியும்படியாகச் சொல்லவேண்டுமென்றால், குழந்தை பிறந்த பின்னர் வெளியே குழந்தை அமைதியாகப் படுத்து உறங்க, அம்மா வீட்டில் ஒரு தூளி (தொட்டில்) கட்டுவாள். அதேபோல,  பூப்பெய்திய நாள் முதல், பின்னாளில் தான் கருத்தரித்து வளர்க்கப்போகும் குழந்தை, பத்து மாதங்கள் அமைதியாகவும், குட்டிக்கரணம் போட்டும், ஆடிப்பாடியும் தூங்க, அவள் தன் குருதியைச் சேர்த்துத் தடவி, கர்ப்பப்பைக்குள் கட்டும் தூளிதான் எண்டோமெட்ரியப் படலம். அந்தத் தொட்டிலில்தான் கருத்தரித்த கணத்தில் இருந்து  கருமுட்டை, தாயோடு தொப்புள்கொடியின் மூலம் ஒட்டி வளரும். இந்த அளவுக்கு முக்கியமான கர்ப்பப்பையின் உட்சுவரான படலம், ஏதோ ஒரு காரணத்தால் கட்டற்ற குறுக்கும் நெடுக்குமாக, உள்ளே வெளியே எனச் சீர்கெட்டு கட்டப்படுவதைத்தான் `எண்டோமெட்ரியோசிஸ்’ என்பார்கள். `இன்னும் புரியலையே’ எனச் சந்தேகம் வந்ததென்றால், டாக்டர் கூகுளைப் போய்க் கேட்காமல், உங்கள் குடும்ப டாக்டர் கோகுலையோ, கோகிலாவையோ கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அவர் ஒருவேளை நெர்வஸாகி, “நீங்க ஒரு தபா நீட் எழுதி, பாஸ் பண்ணி, டாக்டர் ஆகித்தான் முழுசா தெரிஞ்சுக்கணும்” எனக் கடிந்து சொல்லக்கூடும். புரிந்துகொள்ளவும் புரியும்படிச் சொல்லவும் அவ்வளவு கஷ்டமான, கடவுள் போட்ட சிலபஸ் அது.

`எப்போ ஃப்ரெண்ட்ஸுக்கெல்லாம் கண் சிமிட்டி, சாக்லேட் கொடுக்கலாம்?’ எனக் காத்திருக்கும்பொழுதில், ``உன் சினைப்பையில் இருப்பது சாதாரண நீர்க்கட்டி இல்லை. அது சாக்லேட் சிஸ்ட் (Chocolate Cyst)’’ எனச் சொல்கிறார்கள்.  `இவ்வளவு வலிக்கு `சாக்லேட்’ என இனிக்கிற பெயர் வைக்கிற ஒரே கூட்டம் நீங்கதான்’ என மருத்துவரைக் கடிந்துகொள்ளும் அந்தப் பெண்ணுக்குத் தெரியாது, அல்ட்ரா சவுண்ட் படத்தில் முட்டைகள் கோத்து அடுக்கிவைக்கப்பட்டிருக்க வேண்டிய  சினைப்பையில் குருதி தேங்கியிருக்கும் அந்தக் கட்டி, `எண்டோமெட்ரியோசிஸ் கட்டி’ என்று.

அதீத ரத்தப்போக்கைக் கொடுத்து, அதனால் ரத்தச்சோகையையும் (அனீமியா) கொசுறாகப் பெறும் இந்த எண்டோமெட்ரியோசிஸில் இன்னும் வருத்தப்படக்கூடிய விஷயம், இதற்கு  தற்காலிக வலி நிவாரணியைத் தாண்டி, நவீன மருத்துவத்தில் மருத்துவத் தீர்வு அநேகமாக இல்லை. அறுவைசிகிச்சை செய்து நீக்கிவிடுவது அல்லது  ஹார்மோன் அடங்கிய மருத்துவக் குப்பியைக் கர்ப்பப்பைக்குள்ளேயே செருகிவைப்பதுதான், தற்போதைய சாத்தியங்கள். இந்த இரண்டுமே குழந்தைப்பேற்றுக்குத் தடைபோடக்கூடியவை. 

நாற்பது வயதில் இந்தப் பிரச்னை வந்தால், இரண்டு  குழந்தைகளுடன் இருக்கும் அவள், மேலே சொன்ன இரு சிகிச்சைகளில் ஏதேனும் ஒன்றை முயற்சி செய்து, தொந்தரவில் இருந்து விடுபடலாம்தான். குழந்தைக்காக ஏங்கி உருகும் பெண்ணுக்கு இந்த முடிவு சாத்தியம் அல்ல. ஒவ்வொரு முறை வலி வரும்போதும்,  ``என் அழகுச் செல்லம் உறங்கி, கிறங்கி இருக்கப்போகும் தொட்டில் இந்தக் கர்ப்பப்பை.  அவள் ஆடிப்பாடி, தூங்கித் திளைத்து வளரப் போகும் இல்லம். ஏம்ப்பா இப்படிப் பாடாப் படுத்துறே?’’ என அந்த வலியில், ஒரு கண்ணில் குழந்தைக்காகவும் இன்னொரு கண்ணில் கர்ப்பப்பைக்காகவும் கண்ணீருடன் அவள் காத்திருப்பாள்.

ஒவ்வொருமுறை ஏற்படுகிற வலி மட்டும் அவளுக்குப் பிரச்னை அல்ல. மாதவிடாய் தொடங்கி,  சில நேரங்களில் 15-20  நாள்களுக்குத் தொடரும் ரத்தப்போக்கில், இரவில் அன்போடு உச்சிமுகர வரும் கணவனிடம் ``இன்னும் முடியலைங்க...  வந்துக்கிட்டுதாங்க  இருக்கு...’’ என அவன் மார்பில் புதைந்து `அதற்கு அடுத்த கட்டம் சாத்தியமில்லை’ என விளக்குவதன் கொடுமையில் ஒவ்வொரு நாளும் மனம் உடைந்துபோகும். பற்றாக்குறைக்கு, ``இன்றைக்கு டி 20 ஆயிடுச்சே... சேர்ந்தீங்களா?’’ எனக் கேட்கும் டாக்டரையும், டாக்டராகவே நினைத்துப் பேசித் திரியும் வீட்டின் சில பழைய ஜந்து பந்துக்களையும் மண்டையில் டி20 கடைசி ஓவரில் விளாசுவதுபோல விளாச வேண்டும் எனத் தோன்றும். `எப்போ வருவாரோ..?’ என இறைக்குக் காத்திருப்பது இன்பம். `எப்போ முடியுமோ?’ என இந்தச் சிறைக்கு வருந்தியிருப்பதன் வேதனை அவர்கள் யாருக்கும் தெரிவதில்லை என உரக்கக் கத்த வேண்டும்போலத் தோன்றும். ``இப்பதானே முடிஞ்சுது... அதுக்குள்ளேயா?” என அடுத்த வாரக் காலையில் எண்டோமெட்ரியோசிஸ் வலியுடன் கதறும் பெண்கள் இங்கே அதிகமாவதற்குக் காரணம் சரியாக, துல்லியமாகத் தெரியவில்லை.

30p2.jpg

`எண்டோமெட்ரியோசிஸின் சின்னத்தம்பி’ என அடினோமையோசிஸைச் சொல்லலாம். முதலாமவன், கர்ப்பப்பைக்கு வெளியே சேட்டை செய்பவன் என்றால், இரண்டாமவன், கர்ப்பப்பையின் சதைக்கு ஊடாகவே வளர்ந்து சேட்டை செய்பவன். தாமரை மொட்டில், வாழைப்பூவில், இதழ் இதழாக  இருப்பதுபோல், கர்ப்பப்பையின் சுவரும் மூன்று இதழ்களாக  இருக்கும். அப்படியான இதழ்களுக்கு இடையில் வாழைப்பூவில்  மகரந்தக்குழல்கள் இருப்பதுபோல், அடினோமையோசிஸ் அமைந்திருக்கும். மாதவிடாயின்போது, கர்ப்பப்பையின் மெல்லிய சுருக்கத்தில் உயிர்போகும் வலியை இந்த வளர்ச்சிதான் கொடுக்கும். 

இரண்டிலும், வயிற்றுக்குள்ளே சதைகளைப் பிடித்து இழுக்கும்படியான அந்த வலிக்கு, அடிக்கடி உட்கொள்ளும் வலி மாத்திரைகள் வயிற்றைப் புண்ணாக்கிவிட்டு, அதன் பின்னர் வயிற்றுப்புண்ணோடு வாந்தி உணர்வையும், பல உணவுகளைச் சாப்பிட முடியாத சூழலையும் கொடுக்கும். சரியான உணவுத் தேர்வு இல்லாமையால் அது சிலபல பலவீனங்களைத் தரும். எல்லாவற்றையும் தாண்டி, இப்படியான பிசைந்து பிழியும் வலியில் கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்தத்துக்குப் போகும் பெண்கள் இதில் அதிகம் பேர். எடுத்தெறிந்து பேசத் தூண்டும் கோபமும், ``கொஞ்ச நேரம் பேசாம இருக்கீங்களா? எங்கனாச்சும் எல்லாரும் தொலைஞ்சு போங்களேன்...’’ எனக் கத்தவிடும் மன அழுத்தமும் இந்த வலியின் மோசமான அம்சங்கள். போதுமான அளவுக்குச் சமைத்து வைப்பது மட்டுமல்ல... போதுமான அளவுக்கு நாப்கின் இருக்கிறதா என வாங்கி வைப்பதும்கூட இந்தக் காலகட்டத்தில் அவளுக்கு மருந்துகளைத் தாண்டிய அனுசரணைகள்.

இவ்வளவு வலிதரக்கூடிய எண்டோமெட்ரியோசிஸ் பிரச்னை முதலில் கருத்தரிப்புக்கு நேரடியாகத் தடை கொடுக்கும் விஷயமல்ல. ஆனாலும், மிக அதிகமாகச் சோதனைக்குழாய் குழந்தைகள், எண்டோமெட்ரியோசிஸ் பெண்களுக்குத்தான் அறிவுறுத்தப்படுகிறது. ``கருமுட்டை நல்லா அழகா, அளவா வளருது. சினைக்குழாயில் அடைப்போ, தடையோ இல்லை. அவரின் உயிரணுக்களும் ஏராளம். ஒரே பிரச்னை இந்த எண்டோமெட்ரியப் படலம்’’ என வருத்தத்துடன் நிற்கும் பெண்ணுக்கு, நல்ல வளர்ச்சியுற்ற முட்டை, சினைக்குழாய்க்குள் கவ்வப்படுகிறதா எனத் தெரியவில்லை. அப்படியே  உள்ளே வந்தாலும், கருத்தரித்து அம்மாவின் கர்ப்பப்பையில் ஒழுங்காக ஒட்டி வளருமா என்பதும் தெரியாது. `இதெல்லாம் நடக்குமா நடக்காதா... இன்னும் எவ்வளவு மாதங்களாகும்... அத்தனை ஆண்டுகள் ஒழுங்கான முட்டைகள் இருக்குமா?’ எனப் பல கேள்விகளை மருத்துவர் விதைக்க, அந்தப் பெண்ணுக்கு வியர்க்க ஆரம்பிக்கிறது. `ஃப்ரிட்ஜில் உள்ள முட்டை ராத்திரி எல்லோருக்கும் ஆம்லெட் போட போதுமா?’ என்பதைத் தாண்டி, அநேகமாக  முட்டை மேட்டரில், ஆண்கள் பல பேர் முட்டை கேஸ்தான். கருத்தரிக்கத் தாமதித்து நிற்கும் பெண்களுக்கு இந்த `முட்டை’ என்ற சொல்லே கண்ணீரை முட்டவைக்கும் வார்த்தை.

அறிவியலின் எல்லா நுணுக்கங்களையும் சூட்சுமங்களையும் புரிந்துகொள்வது மனிதனுக்கு அவ்வளவு எளிதான காரியமல்ல. இருப்பினும், தொடர்ச்சியான அறிவியலின் ஆய்வுக்கண்கள் பல முடிச்சுகளை அவிழ்த்திருக்கின்றன. அவிழ்க்க இயலாத இடியாப்பச் சிக்கல்கள் இருக்கும்போது, மொத்தமாக, முழுமையாக அதை அணுகுவது மட்டும்தான் புத்திசாலித்தனம். `கடைசி ஓவர்... இன்னும் இரண்டு பால்தான் இருக்கு’ என்றால், சிக்ஸருக்குத்தான் முயற்சி செய்ய வேண்டும். சைடில் தட்டிவிட்டுவிட்டு, ஒரு ரன் எடுத்தால் பிரயோசனமில்லை.ஆம்... எண்டோமெட்ரியோசிஸில், தொடர்ச்சியான கவித்துவமான காதலிலும், `கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள’ என நம் சங்ககால செக்ஸாலஜிஸ்ட் தாத்தா ஐயன் வள்ளுவர் சொன்ன காமத்திலும் கூடி மகிழ்வதில் எல்லாவற்றையும் தாண்டி இயல்பாகக் கருத்தரிக்க வாய்ப்பு நிச்சயம் உண்டு. `அப்படிக் கருத்தரிக்கும் கணத்தில் உருவாவது ஆர்ப்பரிக்கும் மகிழ்ச்சி மட்டுமல்ல... இத்தனை காலம் ஆட்டிப்படைத்து, அழவைத்த இந்த எண்டோமெட்ரியோசிஸ் பிரச்னைக்கும் இதனாலேயே முற்றுப்புள்ளி வைக்கப்படவும் வாய்ப்பு உண்டு’ என்கிறது நவீன மருத்துவம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அல்ல... இரண்டு மகிழ்ச்சி.  நோயையும்  வெல்லலாம்... தாலாட்டும் பாடலாம்!

- பிறப்போம்...


30p3.jpg

ப்படிப் பார்த்தாலும், எண்டோமெட்ரியோசிஸும் அடினோமையோசிஸும் தேவையற்ற வளர்ச்சி. எந்த ஒரு தேவையற்ற வளர்ச்சியையும் நிறுத்த, அதைச் சுருக்க உணவில் தேவையான சுவை துவர்ப்பு.

துவர்ப்புச் சுவை அநேக உணவுகளில் கிடையாது. கொஞ்சம் தேடிப்பிடிக்க வேண்டும். வாழைப்பூ, வாழைத்தண்டு, சுண்டைக்காய், பெரிய நெல்லி, மாதுளை, சில பிஞ்சுக்காய்கறிகளில் துவர்ப்புச் சுவை உண்டு. உணவில் இதைச் சேர்க்கச் சேர்க்க அதீத ரத்தப்போக்கு குறையும். இரும்புச்சத்தும் கிடைக்கும். வாழைப்பூவை பொரியல் செய்ய வலியுறுத்தினால், பக்கவிளைவாக `டைவர்ஸ்’ வரக்கூடும். அதை அமேசானில் ஆர்டர் பண்ணினாலும் கிடைக்காது. கொஞ்சம் கஷ்டமான காரியம் என்பதால், கணவனின் காதலோடுகூடிய உதவி, வாழைப்பூ பொரியல் செய்யக் கட்டாயம் தேவை.


30p4.jpg

``சரி... இந்தக் கருத்தரிப்புப் பிரச்னை நமக்கு மட்டும்தானா? ஆடு, மாடு, கோழிக்கெல்லாம் கிடையாதா?’’ எனக் கால்நடைத்துறை கைனகாலஜிஸ்ட் ஒருவரிடம் பேசினேன். ``எங்க பேஷன்ட் யாருக்கும் தண்ணி, தம்மு எதுவும் கிடையாது. அதனால், அநேகமாக யாருக்கும் அவ்வளவாக இந்தப் பிரச்னை கிடையாது’’ என ஒரு போடு போட்டார். ``சரி. அங்கே லேடீஸுங்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரி உண்டா?’’ எனக் கேட்டபோது, ``உண்டு. ஆனால், அநேகமாக எக்ஸாட்டிக் அனிமல்ஸ் (Exotic Animals) அதாவது, ஜெர்ஸி மாதிரி வெளிநாட்டு மாட்டுக்குத்தான் சினைப்பை நீர்க்கட்டி வியாதி உண்டு. உள்ளூர் மாட்டுக்கு பாலிசிஸ்டிக் ஓவரி எல்லாம் இல்லை. அதுவும் நம் எருமைக்கு இந்தப் பிரச்னை வர்றதே இல்லை. எல்லாம் வெளிநாட்டுப் பிராணிக்குத்தான்’’ என்றார். அநேகமாக எல்லா மாடுகளும் ஊசியில்தான் சினை பிடிக்கின்றன. ``ஆடு வகையெல்லாம் எப்படி?’’ எனக் கேட்டேன். ``இப்போதைக்கு அங்கும் உயிரணுக்கள், கருமுட்டை எல்லாம் கச்சிதம். விவசாயம் சார்ந்த சிக்கல் இருப்பதால், சரியான வைக்கோல், தாவர உணவு கிடைக்காமல், ஊட்டம் குறைவதால் மட்டும் கொஞ்சம் பிரச்னையே ஒழிய, இன்னும் அதிகமாக அவர்களுக்கு  ஐவிஃப், இக்சி கிளினிக் வரலை. முக்கியமாக டாஸ்மாக்குக்கு அவை போறதில்லை. அதனால்தான்” என்றார்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

உயிர்மெய் - 19

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

மருத்துவர் கு.சிவராமன்

 

ரு சின்னக் கரிசனத்தில்தான் அன்பு வளரும். ஒரு சின்ன மெனக்கெடலில்தான் நலம் வளரும். சின்னதாக இந்தக் கரிசனமும் மெனக்கெடலும் வளர, முதலில் விசாலமான புரிதல் மிக அவசியம். அதுவும் வணிகக் கூச்சலும் குழப்பமும் மருத்துவ உலகில்  நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகும் இந்தத் துரித உலகில், நலவாழ்வு குறித்த விசாலமான புரிதல் நம் ஒவ்வொருவருக்கும் மிக மிகக் கட்டாயம். குடும்ப டாக்டர் காணாமல் போய்விட்ட மருத்துவ உலகில், அக்டோபர் 1-ம் தேதிக்குப் பிறகு ஆதார் கார்டு இருந்தால்தான் செத்துப்போகவே முடியும்; மெடிக்கல் இன்சூரன்ஸ் கார்டு இருந்தால் மட்டும்தான் உயிர்வாழ முடியும் என்கிற சூழல். ஆனால், `ஓவியா ஏன் வெளியே போனாள்?’ என நடு இரவில் கதறக் கதற ஆலோசிக்கும் `பிக்-சர்வென்ட்’ குடும்பம், `ஒண்ணுக்கு ஏன் மஞ்சளாகப் போகுது?’ என யோசிப்பதே இல்லை. காய்ச்சல், தலைவலியிலிருந்து கருத்தரிப்பு நலம்வரை ஒவ்வொரு சாமானியனுக்கும் நலவாழ்வுப் புரிதல், அவன் என்ன படிப்பு படித்திருந்தாலும் ரொம்பவே அவசியம். நலம் என்பது எப்போதும் அடுக்குமாடி மருத்துவமனையின் அணுக்கத்திலோ, குவித்துவைத்துள்ள செல்வத்தின் இடுக்கு களிலோ இருப்பது அல்ல. சில நேரங்களில் அஞ்சறைப்பெட்டியின் கடுக்காய்ப் பொடியினுள்... சில நேரங்களில் ரோபோ கேமரா காட்டும் நானோ செல்லுக்குள்... சில நேரங்களில் உச்சி முத்தத்தோடு இறுக்கும் அரவணைப்பில்... என நலத்தின் பரப்பு விசாலமானது. இத்தனையையும் நாம் புரிந்து இருத்தலும், வாழ்வில் எப்போது எது தேவையோ அப்போது அதனைப் பொருத்தி நகர்தலும் மட்டுமே நம்முள் நலம் வளர்க்கும்.

காய்ச்சல், வைரஸால் வரும் என்பது நமக்குத் தெரியும். `கருத்தரிப்புத் தாமதப் பிரச்னை கள்கூட வைரஸால் வருமா?’ எனக் கேட்டால், `ஆமாம்’ என்கிறது மருத்துவ உலகம். ஆணுக்கு விந்தணுக்கள் குறைவில் அல்லது சுத்தமாக உயிரணுக்கள் இல்லாமல் போவதற்கு, பெண்ணுக்கு சினைமுட்டைகள் அற்றுப் போவதற்கு இளம் வயதில் அவர்களுக்கு வந்த `பொன்னுக்கு வீங்கி’ அம்மை நோய் காரணமாயிருக்கும். சற்றுக் குறைவாகவோ, சில நேரங்களில் 20-40 மில்லியன் இருக்கவேண்டிய உயிர் அணுக்களில், 1-2 மில்லியன் அணுக்கள்தாம் உள்ளன என்றாலும், எளிய மருத்துவ முறைகளில், சீரான உணவு அக்கறைகளில் ஆறு அல்லது ஏழு மாதங்களில் அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்திவிட முடியும். ஆனால், விதைப்பையில் `செர்டோலி செல்கள் முழுமையாகச் சிதைந்து விட்டன; அணுக்கள் சுத்தமாக இல்லை’ என்கிறபோது மருந்துகளால் பயன் கிடையாது. நிச்சயமாக ஐ.வி.எஃப். அல்லது இக்சி எனும் டெஸ்ட் டியூப் சிகிச்சைகளால் மட்டுமே சாத்தியமாகும்.

30p1.jpg

சின்ன வயதில் அம்மை போட்டிருந்தால், தனியே படுக்க வைத்திருந்து, வேப்பிலை, மஞ்சளை வைத்து மேலுக்குப் பூசிவிட்டு, அந்த அம்மை வைரஸின் தீவிரத்தைக் குறைப்பது இந்நாளும் உள்ள வீட்டு வழக்கம். வேம்பிலும் மஞ்சளிலும் அந்த வைரஸுக்கு எதிரான ஆற்றல் உள்ளது என்பதைப் பின்னாளில் அறிந்தோம். அதே சமயம். இந்த அம்மை நோய் வரும் குழந்தையைக் கொஞ்சம் உற்றுக் கவனிக்க வேண்டியதும் மிக அவசியம். அதுவும், கழுத்தைச் சுற்றி வீக்கம் தரும் பொன்னுக்கு வீங்கி, ஒருவேளை விதைப்பையில் வலி, வீக்கம் ஏற்படுத்தியிருந்தால், வீட்டு வைத்தியம் மட்டும் போதாது. மருத்துவமனைக்குச் சென்று அந்த வைரஸைப் படுவேகமாக விலக்க வேண்டும். `டாக்டர்கிட்ட போகக் கூடாது’ என எந்த அம்மனும் சொல்லாது. மடமையாக மருந்தைத் தவிர்த்தல், பின்னாளில் உயிரணுக்கள் உற்பத்தியை ஒட்டுமொத்தமாகச் சிதைத்துவிடும்.

அடுத்ததாக ஹெர்ப்பிஸ் (Herpes) கிருமி. அக்கி வரவழைக்கும் கிருமியின் வகை இது. நேரடியாக அல்லாமல், மறைமுகமாகக் கருத்தரிப்புக்குத் தாமதம் ஏற்படுத்தும் கிருமி. ஆணுறுப்பின் நுனியில் இருந்துகொண்டு கொப்பளங்களையும், கசிவையும், எரிச்சலையும் உண்டாக்கி  `எனக்கு உடலுறவு அவசியமா?’ என்ற சிந்தனையைக்கூட சமயத்தில் ஏற்படுத்தும். உடலுறவால் மட்டும் இந்தக் கிருமி உடலுக்குள் தொற்றுவதில்லை. இந்த வைரஸால் ஏற்கெனவே பாதிக்கப் பட்டோரை முத்தமிடுதலாலும், அவர்கள் லிப்ஸ்டிக், ஷேவிங் ரேசர், உணவுப் பாத்திரங்களைச் சரிவரக் கிருமி நீக்கம் செய்து சுத்தப்படுத்தாமல் பயன்படுத்துவதாலும் பரவக்கூடிய இயல்புடையது. இந்த வைரஸ், `HSV 1 & 2’ எனும் இரு பிரிவைக் கொண்டது. இந்த வைரஸ் உடம்புக்குள் இருந்தும் பலருக்கு ஆயுள்காலத்துக்கும் எந்தத் தொல்லையும் தராமல் இருக்கவும் கூடும். ஒரு சிலருக்கு அவ்வப்போது வாய்ப்புண்கள், ஆணுறுப்பு, பெண்ணுறுப்புக்களில், முத்து முத்தாகப் பருக்களை உருவாக்கி, சில நேரங்களில் தீவிர எரிச்சல், வலியைத் தரவும் கூடும். அவர்களுக்குத் தான் இப்படியான உளவியல் பிரச்னை.

உடலுறவு வழியாக அல்லாமல், கிருமி நீக்கம், தொற்று நீக்கம் செய்யப்படாத இன்னொருவர் பொருளைப் பயன்படுத்துவது மூலம்... அதாவது, பிறர் துவட்டும் துண்டை விபத்தாக, யதேச்சையாகப் பயன்படுத்தப்போய், இந்த ஹெர்ப்பிஸ் தொற்றைப் பெறும் நபருக்கு, திருமண வாழ்வில் குறிப்பாக, உடலுறவில் ஏற்படும் மனத்தடையும் மனஅழுத்தமும் சொல்லி மாளாதது. நம்மால், அவளுக்கு/அவருக்கு இந்த வைரஸ் போய்விடுமே என்கிற அச்சமும் வலியும் தினம் தினம் மனதில் வதைக்கும். இன்றளவில் இந்த வைரஸைக் குணப்படுத்த முடியாது. வாக்ஸினும் இல்லை. அதே சமயம் உடலுறவில் ஒருவரிடம் இருந்து பாதிப்பில்லாத அடுத்தவருக்கு இந்த வைரஸ் உள் நுழைந்தால்கூட இந்த வைரஸால், கருத்தரிக்கும் குழந்தைக்கும் எவ்விதப் பாதிப்பும் வராது. சில நேரங்களில் பெண்ணின் பிறப்புறுப்பில் அதிகம் இந்த வைரஸ் புண் இருக்கும்பட்சத்தில்,  சிசேரியன் வேண்டுமானால் தேவைப்படக்கூடும். தாய்க்கு வைரஸ் இருந்தால், குழந்தைக்குப் பிறப்பிலேயே அதன் எதிர்ப்பாற்றல் இருக்கும். சிசேரியன்கூடத் தேவையில்லை என இதற்கு மறுப்புச் சொல்வோரும் உண்டு. இருந்தபோதும், இந்த வைரஸ் பரிமாற்றம் புரிந்த பின்னர், பெரும் மனஅழுத்தமும் சில நேரங்களில் மணமுறிவும் ஏற்படுவது அதிகம்.  30p4.jpg

இன்னொரு விஷயம், ரொம்ப நாளாக இந்த வைரஸால் கருத்தரிப்புக்கு எவ்விதப் பிரச்னையும் இல்லை என்றுதான் மருத்துவ உலகம் நம்பிவந்தது. கடந்த ஆண்டு நடந்த ஓர் ஆய்வில், `என்ன காரணத்தால் தாமதமாகிறது?’ என அறிய முடியாத (Unexplained delay in pregnancy) பெண்களின் கர்ப்பப்பை உட்சுவரைச் சோதித்த போது, இந்த வைரஸின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. `Human herpes virus (HHV 6) எனப் பெயரிடப்பட்ட இந்த வைரஸுக்கு எதிராக நம் உடல் நடத்தும் போராட்டத்தில் கருத்தரிப்புத் தாமதம் நிகழ்வதை உறுதிப் படுத்தியுள்ளனர் ஆய்வாளர்கள். HHV வைரஸால், உடலுக்குள் பிரச்னை நிகழாமல் இருக்க, நம் உடல், சைட்டோகைன்களையும் (Cytokines), `நேச்சுரல் கில்லர் செல்கள்’ எனும் தற்காப்பு அணுக்களையும் அள்ளிவீச, வைரஸ் உடலுக்குள் வருவதைத் தடுக்கும் அதே சமயத்தில், கரு உருவாவதும் தடைபட்டுப் போகிறது. அதாவது அவர்கள் கருத்தரிக்கத்தான் செய்வார்கள். ஆனால், கருச்சிதைவை இந்த வைரஸுக்கு எதிரான அணுக்கள் ஏற்படுத்திவிடும்.

இத்தனை நாள் இந்த மாதிரியான வைரஸ்கள் உடலுக்குள் புகுந்துவிடாமல் தடுக்க, நம் பண்பாட்டுப் பழக்கமும்கூட பாதுகாப்பாக இருந்தது. காதலியே ஆனாலும், `முத்தம் முதல் மொத்தமும் அப்புறம்தான்’ என்றிருந்த மரபுப் பழக்கத்தை நவீனம் தெறிக்கவிட்டிருக்கிறது. `ஒரு முத்தம்கூடக் கொடுக்காமல், உன்னையெல்லாம்…அடச்சே!’ என சினிமா சாமிகளின் பக்தகோடிகள் பரவசமூட்டிப் பரவசமூட்டிக் காதலுக்கு சிவப்பு ரோசாவைத் தாண்டி `மார்னிங் பில் மாத்திரை’ தருவது இப்போது மரியாதை ஆகிவருகிறது. அப்புறம் கொஞ்சநாள் கழித்து, `கிளைமேட் சரியில்லை. டக்வொர்த் லூயிஸ் முடிவின்படி பிரேக்அப் ஆகிக்கலாம்’ எனக் காதல் கிரிக்கெட்டில் வெளியேறும் கூட்டம் இப்போது கணிசமாக அதிகம். அதில் கொஞ்சம் பேர், இது மாதிரி வைரஸ்களை, அகஸ்மாத்தாக நெருக்கமாக இருக்கையில் வாங்கி வரும்போது காலமெல்லாம் காதல் வேதனை கொடுக்கிறதோ இல்லையோ, இந்த வைரஸ் பிரச்னை கொடுக்கும்.

`வைரஸாகக் காதல் பரவுவது ஒருபக்கம்; காதலில் வைரஸ் பரவுவது இன்னொரு பக்கம்’. நாம் கொஞ்சம் உஷாராக உசுப்பேறாமல் இருந்தால், இரண்டு தொற்றுகளில் இருந்தும் தப்பித்து விடலாம். ஆனால், கொசுவின் முத்தத்தில் வரும் வைரஸை என்ன செய்வது என்றுதான் இன்றுவரை புரியவில்லை. `தெர்மோகோல் போட்டு ஏரியை மூட’ எடுத்த முயற்சி மாதிரி, கொசுவுக்கு மொத்தமாகக் கருத்தடை பண்ணுகிற முயற்சியும் நம் ஊரில் ஆராய்ச்சி அளவில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. சமீபத்திய கலவரமூட்டும் வைரஸான `ஜிகா வைரஸ்’ உயிர் மெய் படிக்கையில், கொஞ்சம் உரசிவிட்டுப் போகவேண்டிய ஒன்று. கொசுக்களின் முத்தத்தால் வரும் இந்த ஜிகா வைரஸ், கருச்சிதைவு, கருத்தடையெல்லாம் தராது. ஆனால், கருத்தரித்த பெண்ணுக்கு வருகையில் தாயிடம் இருந்து குழந்தைக்குப் போகும் வாய்ப்பு மிக மிக அதிகம். நிறைய தீவிரம் மிக்க மருந்துகள், பாதிப்பு தரும் தொற்றுகளை எல்லாம் தாய், தன் குழந்தைக்குத் தராமல் காப்பாற்றும் பிரமிக்க வைக்கும் காப்பை வைத்திருக்கிறாள். ஆனால், ஹெச்ஐவி, ஜிகா மாதிரி வைரஸில் அது சாத்தியப் படவில்லை.

முன்காலம்போல் அல்லாமல் வெளிநாடு பயணம் என்பது இப்போது `மச்சி டீ சொல்லு... சாயந்திரம் துபாய்ல இருந்து வந்துருவேன்’ என்கிற ரேஞ்சுக்கு ஆகி வருவதில், போக்குவரத்தில், இந்தச் சீக்குவரத்தும் கூடி இருக்கிறது. `வீட்ல, சார் எங்கேயாவது போய் வந்தபின்பு இங்கிலீஷ் படம் மாதிரி வாரி அணைச்சு முத்தா கொடுத்தால், ஜிகா வந்துரும் வாய்ப்பும் இருக்கிறது என்பதால், உட்கார வெச்சு ஆபீஸ் வேலையைத் தவிர என்ன வெல்லாம் நடந்துச்சு?’ என விசாரணை செய்யச் சொல்லி உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. ஆனால், நம் உலகப் பொது மறையில், நம் பிரின்ஸிபால் சார், `பிறன்மனை நோக்கா பேராண்மை’ என ஜிகா மட்டுமல்லாமல் எந்தச் சிக்கலுமே வராமல் இருக்க, 2,000 வருடங்களுக்கு முன்னரே வழி சொல்லியிருக்கிறார்.

அடுத்ததாக ரூபெல்லா (Rubella) வைரஸ். அடிக்கடி நடக்கும் கருச்சிதைவு, அதனால் குழந்தைப்பேறு தாமதிப்பதில் இந்த ரூபெல்லாவின் தேடல் நிறைய உண்டு. குழந்தைப் பருவத்தில் சின்ன, சிவந்த திட்டுத் திட்டான படையையும் காய்ச்சலையும் தரும் இந்த வைரஸ் தொற்று, ஒன்று முதல் மூன்று நாள் மட்டும் வரக்கூடிய வைரஸ். குழந்தைக்கு முகத்திலும் கழுத்திலும் முதலில் ஏற்பட்டு, அப்புறமாக உடல் முழுக்கப் பரவும் இந்தத் திட்டுக்களை வைத்து, `வந்திருப்பது ரூபெல்லா அக்காதான்’ என முடிவு செய்யலாம். இந்த வைரஸ் அநேகமாக ஒரு பிரச்னையும் செய்வதில்லை. ஆனால், பின்னாளில், கருத்தரித்த பெண்ணுக்கு இந்த வைரஸ் வருகையில் கருச்சிதைவையோ, அல்லது அவளுக்குப் பிறக்கும் குழந்தைக்குப் பிறப்பிலேயே `Congenital rubella syndrome’ எனும் சிக்கலையோ உருவாக்கிவிடும். உலக சுகாதார நிறுவனம் இந்த ரூபெல்லாவுக்கு எதிரான மிக அவசியமான தடுப்பூசியை வலியுறுத்துகிறது. இந்த வைரஸ் அநேகமாகப் பல வளர்ந்த நாடுகளில் இல்லாமல் போய்விட்டாலும், நம் ஊரில் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது.

`எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால், ஏனோ தாமதமாகிறது’ - எனும் காரணமறியா கருத்தரிப்புத் தாமதம் (Unexplained delay in pregnancy) இன்று கணிசமாகக் கூடிவருகிறது. அப்படிக் காரணம் தெரியாத இடத்தில் எழும் குழப்பத்தில், `எதுக்கு நீங்க லேட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க... எவ்வளவு நாளைக்கு மண்சோறு, மரத்துல தொட்டில் எல்லாம்... வாங்க, டெஸ்ட் டியூப் பேபியில் பெத்துக்கலாம்...’ என்ற அறைகூவல் அநியாயத்துக்கு ஊரெங்கும் உரக்கக் கேட்கிறது. `ஈ.எம்.ஐ. வசதி, 100 சதவிகிதம் மணி பேக் வசதி’ என மியூச்சுவல் ஃபண்ட், பாலிசி விற்பனை செய்வதுபோல விற்பனை கொடிகட்டுகிறது. `சினைமுட்டையே இல்லை; உயிரணுவே இல்லை’ என்ற சூழலிலும், `அதெல்லாம் பார்த்துக்கலாம்... நாங்க கொடுக்கிற பிளாட்டின பஸ்பத்துல, உள்ளே ஒட்டியிருக்கிற அணுவெல்லாம் பிச்சுக்கிட்டு வந்து அடுத்த ஆடியில தொட்டில் கட்டிடலாம். கொஞ்சம் செலவாகும்... அவ்வளவுதான்’ என்று மரபுக்கும் மருத்துவத்துக்கும் சம்பந்தமில்லாதவர்கள் போடும் கூச்சலும் இப்போது அதிகம். இந்த இரு கூச்சலையும் கடந்து, `எனக்கான சிகிச்சை எது?அதற்கான மெனக்கிடல் எது? எப்படி இந்தச் சிக்கலை வராமல் தவிர்ப்பது?’ என்பது ஏற்கெனவே வலியுடன் காத்திருக்கும் தம்பதிகள் மட்டுமல்ல, எதிர்காலத்தில் இந்தச் சிக்கலுக்குள் சிக்கிவிடாமல் இருப்பவர்களும் யோசிக்க வேண்டிய விஷயம். 

- பிறப்போம்...


30p2.jpg

`MMR’ எனும் முத்தடுப்பூசி மூலமாக, இந்த பொன்னுக்கு வீங்கி (Mumps), அம்மை (Measles), ரூபெல்லா (Rubella) மூன்றையும் தடுக்க இயலும் என உலக சுகாதார நிறுவனம் நிரூபித்திருக்கிறது. குழந்தைப்பருவத்தில் இந்தத் தடுப்பூசி, அவர்கள் உயிருக்கு மட்டுமல்ல பின்னாளில் அவர்களுக்குக் கருத்தரிப்புத் தொடர்பான பிரச்னை வராமல் இருக்கவும் அவசியம். குழந்தைப்பேறுக்குத் திட்டமிடுவதற்கு முன்னதாகவே இந்தத் தடுப்பூசியைப் போட வேண்டும். அதாவது, உடலுறவு வாழ்வியலுக்கு முன்னதாக. பின்னர் இதைப் போடுவதில் எவ்விதப் பிரயோசனமும் இல்லை. `தடுப்பூசியே வேணாம்; அதனால் அதிகமா ஆய் வரும்; ஆட்டிசம் வரும்; அப்புறம் அமெரிக்கா வந்துவிடும்’ என்கிற மாற்று அறிவியல், மாற்று மருத்துவம் பேசும் பலரும் சொல்லும் சர்ச்சையைப் பலமான, பாரபட்சமில்லாத மருத்துவ ஆய்வுகள் முற்றிலுமாக மறுத்துவிட்டன. ஏங்கல்ஸும் மார்க்ஸும் சொல்வது மாதிரி, `ஆதிக்க உலகில், எல்லா அறிவியலுக்குள்ளும், காதலுக்குள்ளும், கலைக்குள்ளும், பண்பாட்டுக்குள்ளும், உணவுக்குள்ளும் பணம், வணிகம் எனும் அரக்கப்பிடி மெள்ள நுழையும்’ என்பது உண்மைதான். அங்கே நம் போராட்டம், அந்தப் பகிர்தலில்லா பணத்துக்கும், அறமில்லா வணிகத்துக்கும் எதிராக இருக்க வேண்டுமே தவிர, அறம்சார் அறிவியலுக்கு எதிராக எப்போதும் இருக்கக் கூடாது. எம்எம்ஆர் தடுப்பூசி, காரணமில்லாத கருத்தரிப்புத் தாமதம் (Unexplained delay in pregnancy) நிகழாமல் இருக்கவும், கருச்சிதைவு (Miscarriage) நிகழாமல் இருக்கவும் மிக மிக அவசியம்.


30p3.jpg

``ஒன்பது பொருத்தம் சரியா இருக்கு. மண்டபத்துக்குச் சொல்லிடலாம்’’ என்போர், முக்கியமாக மாப்பிள்ளை, பெண்ணுக்கு நலப்பொருத்தம் பார்ப்பதுகூட நல்லது. இரு மனமும் புரிந்துள்ள பொழுதில், அவர்கள் இருவருமே அது குறித்த ஆலோசனையைச் செய்ய வேண்டும். நேற்றைய தாய் மாமன், நாளைய நாத்தனார் எல்லாம் இருவரின் டெஸ்ட் ரிப்போர்ட்டை வாங்கிக் கருத்துச் சொல்ல ஆரம்பித்தால், அது கூகுள் டாக்டரைவிட கோரமான அனுகூலத்தைக் கொடுத்துவிடும். ஹெப்படைட்டிஸ் பி, ஹெர்ப்பிஸ், ஹெச்.ஐ.வி. முதலான வைரஸுகளுக்கான சாத்தியம் உள்ள வாழ்வியல் இருப்போருக்கு இந்தச் சோதனை முடிவுகள் திருமணத்துக்கு முந்தைய பொழுதில், மதுப்பழக்கம், புகைப்பழக்கம் மாதிரி இருவரும் பரஸ்பரம் உண்மையாகப் பரிமாறிக்கொள்ள வேண்டிய சான்றுகள். `யதேச்சையாக நுழைந்த வைரஸைவிட, எங்கள் காதல் பலமானது’ என்ற முடிவோடு முன்னேறுகிறவர்களா? சபாஷ். பயம்கொள்ள வேண்டியதில்லை. மருத்துவ உலகம் உங்களுக்கு பல நம்பிக்கைகளைத் தரக் காத்திருக்கிறது.

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

உயிர்மெய் - 20

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

மருத்துவர் கு.சிவராமன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

 

முந்தைய நூற்றாண்டின் மிக உயர்ந்த கண்டுபிடிப்பு என்றால், அது `அலைபேசி’ எனலாம். `அலைபேசியின் வரவால் எச்சில் ஒட்டி அனுப்பிய இன்லேண்ட் கவர் தொலைந்த மாதிரி, இந்த டெஸ்ட் டியூப் குழந்தைப் பிறப்பில் முத்தம் ஒட்டிப் பிறந்த இயல்பு கருவாக்கமும் தொலைந்து போகுமோ?’ என யோசிக்கும் அளவுக்கு இந்தக் கண்டுபிடிப்பின் பயன் கன்னாபின்னாவென கூடிவருகிறது. `கடைசி பஸ் போயிருச்சுன்னா, ஆட்டோ பிடிச்சுக்கலாம்’ என இருந்த நம் கூட்டம் வீட்டில் கிளம்பிக்கொண்டிருக்ககும்போதே,  அலைபேசி ஆப்பில் தனக்கான சொகுசு வண்டியைச் சகாய வாடகைக்குப் பதிவுசெய்கிறது. அதைப்போல, இங்கே ஒரு பெருங்கூட்டம்  வியக்காமல், வியர்க்காமல், விறுவிறுக்காமல், கசங்காமல், காத்திருக்காமல், கொஞ்சமும் கலங்காமல் சோதனைக்குழாய் குழந்தைக்கும் ஆர்டர் செய்யத் தயாராவது கொஞ்சம் யோசிக்கவைக்கிறது. `முட்டையை அறுவடை செய்யும் நாள் வந்திருச்சு... வங்கியில் உள்ள விந்தை எடுத்துக்கலாமா? கொஞ்சம் எங்ககிட்ட ஸ்டாக் கருக்கள் குளிர்சாதனப்பெட்டியில் உறைஞ்சு இருக்கு.  உள்ளே எடுத்து வெச்சுடலாமா?’ போன்ற உரையாடல்கள் உரக்கப் பேசப்படும் பொழுதுகள் இப்போது அதிகம்.32p2.jpg

முதல் விஷயம் டெஸ்ட் டியூப் பேபி...  நவீன மருத்துவ விஞ்ஞானத்தின் உச்சபட்சக் கண்டுபிடிப்பு இது என்பதை மறுப்பதற்கில்லை. அது துடைத்த கண்ணீரும் தெளித்த மகிழ்வும் நிச்சயம் பெரிதுதான். `இனி  மரணம்தான்’ எனும் பொழுதுகளில், இறந்தவனின் கல்லீரலை எடுத்து, இறக்கும் தருவாயில் உள்ளவனின் சுருங்கிப்போன கல்லீரலில் ஒட்டி உயிர் தருவது, பல்லில் இருந்து திசு எடுத்துப் பார்வைத்திறன் பறிபோன கண்ணுக்கு மீண்டும் ஒளி தருவது, கால் நாளத்தை உருவி எடுத்து இதய நாடியில் சொருகி இதயப் பணியைச் சீராக்கியது மாதிரி நவீன மருத்துவத்தின் உச்சங்களில் ஒன்றுதான் டெஸ்ட் டியூப்  குழந்தையும்கூட.  அமிலமும் உப்பும் போட்டுக் கலக்கிக் காத்திருக்கும் 8-ம் வகுப்பு கெமிஸ்ட்ரி மாதிரியல்ல இந்த நிகழ்வு.

32p1.jpg

கொஞ்சம் சிக்கலான அறிவியல்தான். இங்கும் பாதியை மனிதனும், மீதியை இயற்கையும் முடிவு செய்கிறார்கள். நாற்றங்கால் உண்டாக்கி, நாள் பார்த்து நடவு செய்வது மாதிரி, நர்சரியில் போய்த் திசு வளர்ச்சியில் வளர்த்த கொய்யாக் கன்றைக் கொண்டுவந்து தோட்டத்தில் வைக்கிற மாதிரிதான் சோதனைக்குழாய் குழந்தையும். கருமுட்டை வரை ஆய்வகத்தில்; அதன் பின்னரே கர்ப்பப்பைக்குள் நடப்பட்டு வளர்க்கப்படுகிறது. இப்போதைய தொழில்நுட்பத்தில் முழுசாகப் பத்து மாதங்கள், கண்ணாடிக் குடுவைக்குள் வளர்க்கப்பட்டு, பத்தாவது மாதம் `ஹாய் மம்மி’ எனக் குதித்து பிள்ளை வெளியே வராது. உயிரணுவையும் சினைமுட்டையும் ஒன்றாக வைத்து, `ஒட்டிக்கோங்கோ ப்ளீஸ்’ என அத்தனை ஹார்மோன் ரசாயன சமாசாரங்களையும் பக்கத்தில் வைப்பது ஐவிஎஃப் (IVF) எனும் வழி. சினைமுட்டையை அறுவடை செய்துவந்து, உயிரணுவை முட்டைக்குள் சொருகி வைத்து, கருமுட்டை உருவாக்குவது இக்சி (ICSI) எனும் வழி. `சோதனைக்குழாய் குழந்தைகள்’ எனச் சுருக்கமாகச் சொல்வது இந்த இரண்டின் வழியே பிறக்கும் குழந்தைகளைத்தான். சோதனைக்குழாயில் பிறந்த பெண் குழந்தைக்கு, இன்றைக்கு இயல்பாகக் கருத்தரித்துக் குழந்தை பிறந்தாயிற்று. 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயனளிக்கும் பயிற்சிதான் இது.

இனி வரும் நாள்களில், `சார், ஆர்டர் பண்ணியிருந்தார்ல... அவர் ஆதார் கார்டையும் டி.என்.ஏ. கோடையும் செக் பண்ணிப் பார்த்துட்டு, அந்த எல்.கே.ஜி. சாஃப்ட்வேரையும் மறக்காமல் லோடு பண்ணி, அந்த மூணு வயசுப் பையனை டெலிவரி பண்ணிடுப்பா... நீங்க அப்படியே வீட்டில்போய் எட்டுமணி நேரம் அவங்க அம்மாகிட்ட சார்ஜ் போட்டிருங்க... அப்புறம் நீட், கேட் கோச்சிங் எல்லாம்கூட நாளைக்கே அனுப்பிடலாம்’ எனச் சொல்லும் அளவுக்கு மருத்துவத் தொழில்நுட்பம்  வரக்கூடும்.

32p3.jpg

ஆனால், இப்போதைய தொழில்நுட்பம் வணிகப்படுத்தப்படுவதின் உச்சம்தான் சற்று பயமுறுத்தல் தருகிறது. `இரண்டு ஐவிஎஃப் பண்ணினால், மூணாவது ஐவிஎஃப் இலவசம்’, `குவா குவா கேட்கவில்லை என்றால் முழுப் பணமும் வாபஸ்’  எனச் சத்தமாகச் சொல்லும் அவர்கள், நுண்ணிய எழுத்துகளில், சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது என்று மட்டும்தான் இன்னும் எழுதவில்லை. அந்த அளவுக்கு இந்தத் தொழில்நுட்பத்தில் வணிகம் தலைவிரித்தாடுகிறது. நிறைய நோய்களுக்கு, `விளம்பரப்படுத்தக் கூடாது’ என மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதல் உள்ளது. ஆனால், ஆடித்தள்ளுபடி ரேஞ்சில், கண்ணீருடன் குத்தவைத்திருக்கும் பெண்ணின் வீட்டுக்கு போன் செய்து, `உங்க முட்டை இன்னும் எங்க ஆஸ்பத்திரி ஃபிரிட்ஜில் காத்திருக்கிறது. நீங்க ஏன் இன்னும் வரலை? இந்த முறை ஆஃபர்ல சிகிச்சை தரப்போறோம். 60 பெர்சென்ட் செலவுதான். வாங்க வாங்க... வந்து அள்ளிட்டுப் போங்க’ எனச் சொல்வதும்.

 `மூணு முட்டை உங்களுது. இன்னும் வேற ஒருத்தரோட இரண்டு ஹெல்த்தியான நல்ல முட்டை இருக்கு. ஒண்ணா வைக்கலாம். எது கேட்ச் பண்ணுதோ பார்த்துக்கலாம். அப்பத்தான் சான்ஸ்கூட  இருக்கும்’ போன்ற சம்பாஷணைகள்  இங்கே கொஞ்சம் அதிகம்.  எதற்கெடுத்தாலும், `உலகத்தரமான சிகிச்சை’ என முரசு கொட்டும் மருத்துவ வணிகம், உலகத்தரமான மருத்துவ நெறிமுறைகளை மட்டும் வசதியாக விட்டுவிடுவது ஏன்? யாருக்கு ஐவிஎஃப், யாருக்கு இக்சி? என்பதற்கு மிகத் துல்லியமான வழிகாட்டுதல்கள் உள்ளன. உயிரணுக்கள் துளியும் இல்லை அல்லது  முட்டையை உடைத்து உள்புகும் ஆற்றல் இல்லை அல்லது உயிரணுவையே விதைப்பையில் இருந்து ஊசியில் சேகரிக்க வேண்டும் போன்ற நேரங்களில் இக்சியோ, ஐவிஎஃப்போ அவசியம்தான். இன்னும் ஒன்றிரண்டு சினைமுட்டைகள்தான் இருக்கின்றன; அதுவும் தானாக வெடித்து வர வாய்ப்பே இல்லை; கருக்குழாய் பாதை இரு பக்கமும் அடைபட்டு நிற்கிறது; இதையெல்லாம் தாண்டி 6-7 முறை விந்தணுக்களை ஊசி மூலம் செலுத்திக் (ஐயூஐ) காத்திருந்த பின்னரும் பலனில்லை, இனி ஐவிஎஃப்தான் எனப் பன்னாட்டு நெறிமுறையும் நம் நாட்டு நெறிமுறையும் தெளிவாகச் சொல்கிறது. ஆனால்,  இங்கே பலரும் உயிரணுக் குறைச்சலைவிட  உயிரை வாங்கும் மாமியாரின் வெந்நீர் வார்த்தைகளில்தான் ஐவிஎஃப்புக்குத் தயாராகிறார்கள். ``உன்கூடத்தான் அவளுக்கும் ஆச்சு; இப்போ பாரு... இரண்டாவது மகப்பேறுக்கு வந்தாச்சு. உனக்கு ஏன் இன்னும் புழு பூச்சி நிக்கலை... நாம கொடுத்து வெச்சது அவ்வளவுதானா?’ எனும் நச்சு அங்கலாய்ப்புக்களில், கருத்தரிப்புத் தாமதங்களுக்கான காரணங்கள் ஆராயப்படாமல், வளைகாப்பு நடத்த முடியாத வருத்தங்கள் மட்டுமே  ஐவிஎஃப்பை, இக்சியை நிர்ணயம் செய்கின்றன.

32p4.jpg

அவசியமில்லாமலும், அவசரங்களினாலும், நெறியில்லாமலும் அரங்கேறும் இந்தத் தொழில்நுட்பத்தில் அநேகமாக முழுமையாகப் பாதிக்கப்படுவது என்னவோ எப்போதும்போல் பெண்ணே. முதலில் இது நோயைக் குணப்படுத்தும் சிகிச்சை அல்ல... இருவரில் யாரோ ஒருவருக்கு அல்லது இருவருக்கும் உள்ள இடர்பாட்டினால் தாமதிக்கும் கருத்தரிப்பை, தொழில்நுட்பங்கள் மூலம் சற்றுக் குறைக்கும் நிகழ்வு. இது, உடலுள் இயல்பாக நிகழும் ஒருமிப்பைத் தனியே நிகழ்த்தி, பின் கர்ப்பப்பைக்குள் பொதிந்து வைக்கும் நுணுக்கம் மட்டுமே. `வயது வேகமாகக் கடக்கிறது, முட்டைகளின் அளவு குறைகிறது. உயிரணு மிகக் குறைவு’ எனத் தெரிய வருகையில், முட்டையை அவள் சினைப்பைக்குள் வளர்க்க, வெளியிருந்து ஹார்மோன்கள் கொடுக்கப்படும்.

சரியான தேதியில் முட்டை முழுமையாக வளர்ச்சி பெற்றதும், அது தன் மேலுறையை விலக்கி வெடிக்க, பிறிதொரு ரசாயனம் பீய்ச்சப்படும். அதன் பின்னர் முட்டைகளை மெள்ள நேரடியாகக் கவர்ந்து எடுக்க ஏதுவாக மருந்துகள்; எடுத்த முட்டை வெளியே ஆய்வகத்தில், அவர்தம் கணவரிடம் அல்லது கொடையாளரிடம் இருந்து பெறப்பட்ட உயிரணுவோடு புணரவைத்து அல்லது ஊசி மூலம் உறவாடவைத்து கருமுட்டையாக்கு வார்கள். அந்தக் கருமுட்டைகளில் ஒன்றோ இரண்டோ சில நேரங்களில் இரண்டுக்கும் மேலோ, கர்ப்பப்பைக்குள் விடப்படும். பின்னர் இயல்பாகக் கருத்தரித்தால் எந்த ஹார்மோன் சுரக்குமோ, அதை ஊசி வழியே பெண்ணுக்குள் செலுத்துவார்கள். ஓரிரு வாரங்களில் உள்ளே விடப்பட்ட கருமுட்டை, கர்ப்பப்பையின் சுவர் பற்றி வளர ஆரம்பிக்கும். அந்தப் பெண் தான் செயற்கைக் கருத்தரிப்பினால் தாயாகிவிட்டோம் என்பதை உணர்ந்து ஹார்மோன்கள் சுரக்கும்வரை, அத்தனை பாதுகாப்பு ரசாயனங்களும் அவளுக்குள் கொட்டப்படும்.

32p5.jpg

ஒவ்வொரு ரசாயன ஹார்மோனும், உடம்பில் இயல்பாக மூளையில் இருந்தும் சினைப்பையில் இருந்தும் பிதுங்கி வர வேண்டிய மிக நுண்ணிய அளவிலானவை. எதிர்பார்ப்பின்படி, குழந்தைப்பேறு நிகழ்ந்துவிட்டால், கணவர் இனிப்பு கொடுக்கவும், மாமியார் சீர்வரிசை பேசவும், நாத்தனார் `செயற்கையாகக் கருத்தரிச்சாக்கூட பிள்ளை அப்படியே என் அண்ணன் ஜாடைதான்... அவன் அணுக்கள்  வீரியம்தாம் போலிருக்கு’ எனச் சொல்லி  நகர்ந்துவிடுவார்கள். பல நேரங்களில், அடுத்த பல ஆண்டுகளை மௌனமாக, சற்றுக் கூடுதல் எடையுடன், `மூட்டு வலிக்கிறதே எதனால்...இன்னும் மார்புக்காம்பில் திரவம் கசிகிறதே எதனால்... மார்பகம் பருத்து வலித்துக் கொல்கிறதே எதனால்... ஒருவேளை புற்றாகிவிடுமோ?’ என்ற பயத்துக்கு அநேகமாகக் கணவனிடம் இருந்து பதில் வராது. ``உனக்கு எப்பவுமே பயம்தான்’’ எனச் சொல்லி புன்னகைப்பதில்கூட, ஏளனம் ஒளிந்திருக்கிறதோ எனத் தோன்றும்.

சினைமுட்டையை எடுக்க, கருமுட்டையைப் பொதிய, முட்டையைக் கருப்பைக்குள் ஒட்டவைக்க எடுக்கும் அத்தனை மெனக்கெடல்களிலும், துளியூண்டுகூட அதன் பின்னான துயரங்களில்  கடந்து செல்லும் வலி, காலம் முழுக்க அந்தப் பெண்ணுக்கு மட்டுமே பிரத்யேகமானது. இத்தனைக்கும் மருந்தாக அந்தக் குழந்தையின் சிரிப்பும் ஆர்ப்பரிக்கும் வளர்ச்சியும் இருந்துவிட்டால், மேற்சொன்ன வலிகளை அந்தப் பெண்ணால் கடந்துவிட முடியும். அதே சமயம் 70 சதவிகிதத்துக்கும் மேலாகத் தோல்வியில் முடியும் செயற்கைமுறைக் கருத்தரிப்பு முயற்சிக்குப் பின்னர் இந்த அத்தனை வலிகளையும் அவ்வளவு எளிதாகக் கடக்க முடியாது.

மொத்தத்தில், எப்படியாவது எனக்குக் குழந்தை வேண்டும். கடன்பட்டோ அல்லது என் வசதிக்கு இது ஒன்றும் பெரிதில்லை எனப் பெரிய தொகையைத் தூக்கி எறிந்தோ பெறும் இந்தச் செயற்கைக் கருத்தரிப்பில், சில நேரங்களில் மொத்தமுமே அவசியமின்றி, பெண்கள்மீது மௌனமாக நடத்தப்படும் வன்முறையாக மாறுவது வலியுடன் கூடிய உண்மை. மூலைக்கு மூலை பெருகிவரும் மையங்கள் இந்தச் சமூகச் சிக்கலை, காலகாலமாகப் பெண்மீது நடத்தப்படும் வன்முறை மாறாத சமூகத்தை, சற்று யோசித்துத் தன் வணிகப் பெருக்கத்துக்கான கூச்சலைப் போட  வேண்டும். `இந்தச் செயற்கைக் கருத்தரிப்பு  இப்போது அவசியமா? வேறு சாத்தியம் அறவே இல்லையா? இன்னும் சிலகாலம் இயல்பாகக் கருத்தரிக்க அத்தனை வழிகாட்டுதல்களையும் தெளிவாகச் சொல்லிக் காத்திருக்க அறிவுறுத்தலாமா அல்லது பிற மருத்துவத்துறையில் முயற்சிக்கலாமா? உயிரணுவை மூலிகை சிகிச்சையின்மூலம்  உயர்த்தி, பின்னர் ஊசி மூலம் அவற்றைக் கர்ப்பப்பைக்குள் செலுத்த சாத்தியம் இல்லையா? அந்த சாக்லேட்  நீர்க்கட்டியை மட்டும் நாம் ஊசியில் உறிஞ்சிக் கொள்ளலாமே... பிற முட்டையை இயல்பாக வெடிக்கவைக்க  ஊட்ட உணவோ பிற துறை  மருந்தோ எந்த அளவு சாத்தியம்?’ என்ற ஒருங்கிணைந்த பார்வை இந்தத் துறையில் மிக மிக அவசியம். அலோபதி, ஹோமியோபதி, நேச்சுரோபதி என எந்தப் பதியாக வேண்டுமானாலும் இருக்கட்டும்... ஒருங்கிணையும்போது, அங்கே வெங்கடாசலபதியும் அருள்புரியும் சாத்தியம் சற்றுக் கூடுதலே!

- பிறப்போம்...


எப்போது இக்சி / ஐவிஎஃப் முயற்சிக்கலாம்?

யிரணுக்கள் துளியும் இல்லை அல்லது மிகக் குறைவு. முட்டையை உடைத்து உள்புகும் ஆற்றல் இல்லை அல்லது உயிரணுவையே விதைப்பையில் இருந்து ஊசியின் மூலம் சேகரிக்க வேண்டும் என்ற நேரங்களில் இக்சியோ / ஐவிஎஃப்போ அவசியப்படலாம். வயது அதிகரித்துக்கொண்டே செல்கிறது, இன்னும் ஒன்றிரண்டு சினை முட்டைகள்தான் இருக்கின்றன. அவையும் தானாக வெடித்து வர வாய்ப்பே இல்லை. கருக்குழாய் பாதை இரு பக்கமும் அடைபட்டு நிற்கிறது. இதையெல்லாம் தாண்டி 6-7 முறை விந்தணுக்களை ஊசி மூலம் செலுத்தி (ஐயூஐ) காத்திருந்த பின்னரும் பலனில்லை போன்ற நேரங்களில் ஐவிஎஃப் / இக்சி-க்கு முயற்சிக்கலாம்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

உயிர்மெய் - 21

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

மருத்துவர் கு.சிவராமன்

 

`எதுக்கு இவ்வளவு மெனக்கெடணும், எதுக்கு இவ்வளவு சமூக அங்கீகாரமும், சமூக அவமானமும் குழந்தைப்பேற்றை முன்வைத்து நடத்தப்படுது, காய்ச்சல், தலைவலி மாதிரி கஷாயமோ, மாத்திரையோ சாப்பிட்டு இதைக் கடந்துபோக முடியாதா என்ன?’ போன்ற கேள்விகளுடன் கருத்தரிப்புக்காகக் காத்திருப்போர் சிலர் யோசிப்பது  உண்டு. குறிப்பாகக்  குழந்தைப்பேற்றுக்கான காத்திருப்பின் உச்சத்தில், பல ஆண்களுக்கு வரும் கேள்விகள் இவை. `இப்பல்லாம் சரியாகக்கூட மாதவிடாய் படுறதுல்ல’ எனச் சொல்லிக்கொண்டு, காதோரத்து முடியும் நரைத்ததில், காதலின் ஓரத்துக் காமமும் சற்றுக் குறைந்ததில் சில பெண்களும் `போதும் இந்த மாத்திரை ஊசி அழிச்சாட்டியங்கள்’ என விலகி, அதன் வெறுமையைப் பழக ஆரம்பிப்பார்கள்.  இதுபோன்ற சந்தர்ப்பங்களில், சற்று சங்கடத்துடன் ஆனால், `பேசிப் பார்த்தால் என்ன?’ என்கிற யோசனையுடன் அவர்களிடம் மெதுவாகக் கேட்கப்படும் கேள்வி, `நீங்கள் ஏன் ஒரு குழந்தையைத் தத்தெடுக்கக் கூடாது?’ என்பதுதான். 

`அந்த டாக்டரை ஏன் நீங்கள் போய்ப் பார்க்கக் கூடாது?’ என்ற கேள்வியில் தொடரும் ஆர்வமும் அக்கறையும், இன்னும் தத்து எடுத்தல் விஷயத்தில் அவ்வளவு பெரிதாக  வரவில்லை. `குழந்தைக்காக அவ்வளவு மெனக்கெடும் அந்தத் தம்பதிக்கு, ஏன் இந்த விஷயத்தில் அப்படி ஒரு தயக்கம்’ என்பது இன்னமுமே புரியாத புதிர். இரண்டாவது, மூன்றாவது ஐ.வி.எஃப். முயற்சி பொய்க்கும்போது மட்டுமே தத்தெடுத்தல் குறித்த சிந்தனை பெரும்பாலான தம்பதிகளுக்கு வலுக்கிறது. `அமுக்கரா சாப்பிடலாமா... ஐ.யூ.ஐ. பண்ணலாமா?’ என வலியுடனும் கண்ணீருடனும் குழம்பி நிற்கும் பலருக்கும் உயிரணுவே இல்லாதபோதும், கருக்குழாய் முற்றிலுமாக அடைபட்ட போதும், கருமுட்டைகள் இல்லை என்கிறபோதும் குளிர்சாதன அறையில் உறைந்து காத்திருக்கும் உயிர் முட்டைகளை அல்லது உயிர் அணுக்களைத் தத்தெடுக்கத் தயாராகும் மனம், தாய்ப்பால் இல்லாமல், தாதி வளர்க்கும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய சிசுக்களின் மீது சிந்தனை போவதில்லை.

32p1.jpg

இந்தியாவில் மட்டும்தான் கருத்தரிக்க வாய்ப்பில்லை என்ற சந்தர்ப்பத்தில்  தத்தெடுத்தல் என்பது தொடங்குகிறது. பிற நாடுகளில் அப்படி இல்லை. கிட்டத்தட்ட இந்தியக் குழந்தைகளில் நான்கு சதவிகிதம் பேர் பெற்றோரின்றி அனாதைகளாக உள்ள இந்த நாட்டில் உண்மையில், அவர்களில்  0.3 சதவிகிதம் பேர் மட்டுமே  பெற்றோர்களைப் பறிகொடுத்த வர்கள். மீதி 99.7 சதவிகிதம் குழந்தைகள் தவறவிடப்பட்டவர்களாகவோ, புறக்கணிக்கப் பட்டவர்களாகவோதான் இன்றும் இருக்கிறார்கள் என்பது மிக மிக வலி தரும் செய்தி.

தத்தெடுக்கலாம் என்ற முடிவோடு அதற்கான அமைப்புகளைத் தொடர்புகொள்ளும்போது அதிலுள்ள சட்டச் சிக்கல்கள், காத்திருப்புகள் முன்பைவிட இப்போது சற்றுக் குறைந்திருப்பதற்கு அரசின்  `Central Adaption Resource Authority (CARA)’, எனும் இணையதளம் ஒரு காரணம். இப்போது, இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும், எந்த மூலையில் இருக்கும் குழந்தையையும் எளிதாக ஆன்லைன் மூலம் தத்து எடுத்துக்கொள்ள இயலும். இந்தப் புதிய வசதியை நிறைய பேர் வரவேற்றாலும், சிலர் `இதென்ன அமேசானில் நடக்கும் அம்மா வியாபாரமா?’ எனக் கொதித்து சண்டை கட்டவும் செய்கின்றனர். ஆனால், உண்மையில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தன் அன்னைக்காக இந்த இணையதளத்தில் காத்திருக்கின்றனர். 7,500 தகுதி வாய்ந்த பெற்றோரும் காத்திருப்பதாக அந்த இணையதளம் சொல்கிறது. இறுக்கமான சட்டங்கள் இருப்பதாலோ அல்லது இன்னும் இறுக்கமான மனங்கள் இருப்பதாலோ, செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவ வணிகம் கொடிகட்டிப் பறப்பதாலோ 2000-ம் ஆண்டில் இருந்து தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது. 2011-12-க்கு இடைப்பட்ட காலத்தில் 4,294 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டிருக்கும்போது, கடந்த 2016-2017-க்கு இடைப்பட்ட காலத்தில் 3,600 குழந்தைகள் மட்டுமே தத்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

பல ஆயிரம் கோடி சொத்துகளுக்காகவும், `எனக்கப்புறம் இவன்தான் நாட்டை ஆளும் வாரிசு’ என முரசு கொட்டவும் தத்தெடுப்பது, அப்புறம் அவனை/அவளைத் தூக்கி ஜெயிலில் வைப்பது எனும் ஆதிக்க வரலாறுகள் அன்றைய ரோமப் பேரரசு முதல் இன்றைய போயஸ் பேரரசு வரை நடப்பவைதான். ஆனால்,  அன்புக்காக, அன்னைக் காக ஏங்கும் குழந்தையையும் தாய்மைக்காக ஏங்கும் பெற்றோரையும் இணைக்கும் இந்தத் தத்தெடுப்பின் பாதை கொஞ்சம் கடினமானது. குழந்தைப்பேறில்லா தம்பதி என்றல்ல... தனி ஆண் மகன் அல்லது தனிப்பெண்ணும்கூட தத்தெடுக்கலாம்.  தத்தெடுக்கப்படும் குழந்தைக்கும் பெற்றோருக்கும் குறைந்தபட்சம் 25 வருட இடைவெளி இருக்க வேண்டும். (முன்னர் அது 30 ஆக இருந்தது).

32p2.jpg

`எனக்குக் குழந்தை இல்லை. ஒரு நல்ல குழந்தை கிடைச்சா சொல்லி அனுப்புங்க’ என தர்மாஸ்பத்திரியில், பதிவற்ற அனாதை இல்லங்களில் சொல்லிவைப்பது பெரும் தண்டனைக்குரிய குற்றம். ஆஸ்பத்திரியில் காணாமல்போகும் குழந்தைகளில் பெரும் பகுதி, இப்படியான விற்பனைக்கும், குழந்தைப் பிச்சைக்காரர்களை உருவாக்கவும்தான் என்று ஆய்வுகள் சொல்கின்றன. தத்தெடுக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டால், இப்போது www.cara.nic.in எனும் இணையதளத்தின் மூலம் பதிவுசெய்து குழந்தையைத் தத்தெடுக்க முடியும்.  நீங்கள் தகுதியான பெற்றோரா எனச் சோதிக்க 6,000 ரூபாயும், குழந்தையின் பெயரில் ஒரு வைப்புத் தொகைக்காக 40,000 ரூபாய் மட்டும்தான் செலவு. உங்கள் வருமானச் சான்றிதழ், ஆதார் கார்டு, பேன் கார்டு முதலான  சின்னச் சின்னச் சான்றுகள் போதும். `எனக்கு நீலக் கருவிழியோட சிவப்புத் தோலுள்ள பெண் குழந்தை வேணும்’, `கிறிஸ்துவப் பையன் வேணும்’  என்றெல்லாம் ஆர்டர் செய்ய முடியாது. குழந்தையின் சாதி, மதப் பிறப்பு எல்லாம் முழுமையாக ரகசியமாகத்தான் எப்போதும் பாதுகாக்கப்படும். ஆனால், எந்த மாநிலக் குழந்தை வேண்டும் என்பதை நம்மால் தேர்வு செய்ய இயலும். மங்கோலிய முக ஜாடையுடன் உள்ள குழந்தைக்கு, `நான் எப்படி இந்த முகச் சாயலில்..?’ என  வளரும் பருவத்தில்  மனச்சங்கடம் வரக் கூடாது என்பதற்காக இதுபோன்ற சட்டங்கள் உள்ளன. பெற்றோருக்கு அப்படிப்பட்ட தேர்வுகள் இல்லாத பட்சத்தில் தமிழகப் பெற்றோர், மணிப்பூர் குழந்தையைத் தேர்வுசெய்ய இங்கே வசதி உண்டு. வெளிநாட்டில் வாழ்வோருக்குச் சட்ட இறுக்கங்கள் இன்னும் அதிகம். எந்தச் சூழலிலும் தத்தெடுக்கப்படும் குழந்தைகள் பாதிப்படைந்துவிடக் கூடாது என்பதற்குத்தான் இத்தனை சட்டங்கள். அதனாலேயே, `தனி ஆண் தத்தெடுக்கும்போது, ஒரு பெண் குழந்தையை ஒருபோதும் தத்தெடுக்க இயலாது’ என்கிறது சட்டம். மும்பையில் அப்படிப் பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து, பின்னாளில் பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய கேவல வரலாறு நம் நாட்டில் நடந்தேறியிருக்கிறது.  தத்தெடுத்த பின்னரும் இரண்டு ஆண்டுகளுக்கு அரசின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகள், குழந்தையையும் பெற்றோரையும் சோதிப்பதும் கண்காணிப்பதும் இதுபோன்ற பிரச்னைகளைத் தடுப்பதற்காகத்தான்.

`எங்க அக்கா பையனைத் தத்தெடுத்துக்கலாமா, ஒண்ணுவிட்ட பெரியப்பா பிள்ளையை?’ எனக் கேட்போருக்கு, அது சாத்தியமே.  ஆனால், அதை முறையாக, அரசு நீதிமன்றப் பதிவு மூலம் செய்ய வேண்டும்’ என்கிறது CARA-வின் அறிக்கை.  அம்மா, அப்பா அத்துடன் ஒருவேளை ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தை இருந்தால், அவர்கள் மூவரின் ஒப்புதல் மட்டும் குழந்தையைத் தத்தெடுக்கப் போதுமானது. ஆனால்,  இந்த விஷயத்தை வீட்டில் நடைமுறைப்படுத்தும்போது,  பெரும்பாலும் மனத்தடையாக இருப்பது முந்தைய தலைமுறைதான். `யார் வீட்டுப் பிள்ளையோ...என்ன சாதியோ?’ என விஷம் கக்கும் பாம்புகளாகப் பல நேரங்களில் வீட்டுப் பெரியோர்களும் ஒரு சில உறவுகளும் இருந்தால், அந்த விஷப் பாம்புகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க வேண்டியது தத்தெடுத்த பெற்றோரின் மிக முக்கிய, முதல் கடமை. எப்போதும் அவர்களுக்கு மகுடி ஊதிக்கொண்டே இருக்க முடியாத பட்சத்தில்  சாதி, இனம் பேசும் அந்தப் பாம்புகளை வண்டலூர் வன விலங்குக் காப்பகம் பக்கம் குடி வைப்பதில் அநேகமாகத் தவறில்லை. பிறந்தவுடன் சாதி, மத அடையாளம் அரசாலேயே அழிக்கப்படும் அந்தக் குழந்தைதான் உண்மையான இந்தியக் குழந்தை. எந்த மத அடையாளமும் இல்லாத கடவுளின் குழந்தை. `பயலாஜிகல் பேபி’ என மருத்துவத் துறை சொல்லும் பெற்றெடுத்த பிள்ளையைக் காட்டிலும், பிறப்பில் பெரும் உசத்தியைப் கொண்ட குழந்தை அவள்(ன்)தாம்.

32p3.jpg

`ஏதாச்சும் நோய் இருந்துச்சுன்னா?’ இது பெரும்பாலான தத்தெடுப்போர் முதலில் கேட்கும் ஒரு சுயநலக் கேள்வி. தத்தெடுப்பதற்கு முன்னர் ஹெச்.ஐ.வி முதலான பல சோதனைகளைச் செய்த பின்னரே, அந்த மருத்துவ முடிவுகளைச் சொல்லித்தான், குழந்தையை முன் நிறுத்துகிறார்கள். சில வேளைகளில் நாமும் சோதித்துக்கொள்ளலாம் என்கிற செய்தியும் வருகிறது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் ஆதித்யா எனும் வட நாட்டு இளைஞர், டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிப்புற்ற குழந்தையைத் தத்தெடுத்து, பல சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் தன் குழந்தையாகப் பதிவுசெய்தது நினைவிருக்கலாம். அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் அவர் திருமணமே செய்துகொண்டார். தன் திருமணத்துக்கு உறவினரை அழைக்காமல், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உறவற்ற அனாதை களை அழைத்து அசத்தியது மறக்க முடியாதது. அதற்குப் பிறகுதான் உலக அழகி சுஷ்மிதா சென் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து, உண்மையான அழகியாக ஆச்சர்யப் படுத்தினார்.

தந்தை இறந்த சூழலில், இளம் வயதில் தத்தெடுக்கப்பட்டு, பின்னாளில் உலகை உலுக்கிய ஆளுமைகள் அநேகம் பேர். ரோமப் பேரரசன்  சீஸர் முதல் உலகின் உண்மையான பேரழகன், கறுப்பின மக்களின் காவல் தெய்வம் நெல்சன் மண்டேலா வரை உள்ள இந்தப் பட்டியலில்,  அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனும் உண்டு. 40-45 வயது வரை தாமதித்துவிட்டு, `இனி எப்படி என்னால் மூணு மாதக் குழந்தையை வளர்க்க முடியும்?’ என மனம் முழுக்க ஆசையிருந்தும் தடுமாறும் பல தம்பதிகளை எனக்குத் தெரியும். `எல்லா குழந்தையும் நம் குழந்தைதான். எதற்கு நமக்கு தத்து?’ என 35 வயதில் பேசிவிட்டு, வயோதிகத்தில், `எனக்காக யாரும் இல்லை’ என்ற வெறுமையில் வருந்தும் முதியவரையும் எனக்குத் தெரியும். வலி மிகுந்த மருத்துவம், வணிகம் தலைவிரித்தாடும் செயற்கைக் கருத்தரிப்பு உதவிகள் இத்தனையையும் செய்து, பின்னாளில் இந்த மருத்துவத் தாலேயே ஏற்படும் சில பக்கவிளைவுகள் இவற்றை யெல்லாம்விட, `அம்மா... என்னை உங்ககூட கூட்டிட்டுப் போவீங்களா?’ எனக் கெஞ்சும் கண்களோடு தொட்டிலிலும் பள்ளியிலும் காத்திருக்கும் பிஞ்சுக்கைகளை ஒருமுறை பிடித்துப் பாருங்கள். அது மருத்துவரின் கைகளைவிட அன்பானது. அரவணைப்பது, உசத்தியானது!

- பிறப்போம்...


32p4.jpg

சினிமாவில் காட்டுகிற மாதிரி பிறந்த பச்சிளம் குழந்தையை ஒருவராலும் தத்தெடுக்க முடியாது. `Child welfare committee under juvenile justice’ மூலமாக `இந்தக் குழந்தை தத்துக் கொடுக்கச் சட்டபூர்வமான அங்கீகாரம் பெற்றது’ என்கிற சான்று வேண்டும். அதற்கு இரண்டு, மூன்று மாதங்கள் ஆகும்.

2. எப்போது குழந்தையிடம் அவர் தத்துக் குழந்தை (Adopted child) என்பதை அறிவிப்பது?

பெற்றோர்தான் முதலில் அந்தக் குழந்தைக்கு அதை அறிவிக்க வேண்டும். பிறர் சொல்லித் தெரியவருவது, உளவியல் ரீதியான வலியை அந்தக் குழந்தைக்கு ஏற்படுத்திவிடும். எவ்வளவு பக்குவமாக, அன்பாக இந்தச் செய்தியை எந்த வயதில் அறிவிக்க வேண்டும் என்பதை பெற்றோர்களே முடிவு செய்ய வேண்டும். இதற்கான உளவியல் நுணுக்கங்களை, உளவியல் நிபுணர்களை அணுகிக் கேட்டுக் கொள்ளலாம்.

3. பின்னாளில் ஏதோ ஒரு சூழலில் உண்மையான பெற்றோர் வந்தால்..?

இந்தக் கேள்வி தத்தெடுப்போர் மனதுள் அடிக்கடி கேட்கப்படும் ஒன்று. சட்டப்படி, குழந்தை தத்தெடுக்கப் பட்டுவிட்டால், எந்தச் சூழலிலும் உண்மையான பெற்றோருக்கு அந்த உரிமை கிடையாது.

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உயிர்மெய் - 22

 
இத்தொடரின் மற்ற பாகங்கள்:
 

மருத்துவர் கு.சிவராமன் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

 

ன்னும் அதே நிலவுதான், நெஞ்சுமுட்ட காதலைச் சொல்லி வானில் வலம் வருகிறது. இப்போதும் அதே கடற்கரையின் காலைக் கவ்வும் பேரலைதான், ஒட்டுமொத்த உடலிலும் உற்சாகத்தை அள்ளி எறிகிறது. இன்றைக்கும் இரவில் பெய்த அதே மழையில், எங்கோ தூரத்தில் கேட்கும் தவளையின் ஓசைதான், மனதின் ஓரத்தில் மண்டிக்கிடக்கும் வெறுமையை விலக்குகிறது. இப்போதும், அதிகாலை ஜன்னலோரத்துச் சாலைப் பயணத்தில், முகத்தில் அறைந்து வீசும் காற்றுதான், அத்தனை வலியையும் துடைத்து எறிகிறது. ஆனால், பலருக்கும்  இத்தனையிலும் தொலைந்துபோய்,  பின் கிளர்ந்துவர மனமும் அதற்கான பயிற்சியும் இல்லை. சிலருக்கு அப்படியான மனமும், அதற்கான பயிற்சியும், பழக்கமும் இருந்தும்கூட,  ஓடி ஓடி உழன்றுகொண்டிருக்கையில்,  அதற்கான நேரம் இல்லை. வயது எப்போதும் இவற்றையெல்லாம் தொலைப்பதில்லை. ஆனால், வாழ்க்கை இப்போது இவற்றை  வேகமாகத் தொலைத்துவிடுகிறது. அன்று அறுபதுகளில் தொலைந்த விஷயம், நேற்று நாற்பதுகளில் தொலைந்துபோனது. இன்று இருபதுகளில் தொலைக்கப்படுவதால்தான் திரும்பிய இடமெல்லாம் மன அழுத்தம்.

94p1.jpg

`குழந்தை இல்லையே...’ என்கிற ஏக்கத்தில் ஏற்படும் மன அழுத்தம் வேறு. பல வாழ்வியல் காரணங்களால் அல்லது காரணமே இல்லாமல் ஏற்படும் மன அழுத்தமே கருத்தரிப்புக்குத் தடையாக  இருப்பதைத்தான் இங்கே பேசுகிறோம். சைபீரியாவில் இருந்து வேடந்தாங்கலுக்கு வலசை வரும் பறவைக்கு மன அழுத்தம் வந்து, முட்டை போடாமல் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கோயம்புத்தூரில் இருந்து வேளச்சேரிக்கு வாழவந்த பெண்ணுக்கு முட்டை வளர்ச்சி அடைவதற்கு மன அழுத்தம் தடையாயிருக்கிறது. ``அஞ்சு மாசமா ஆன் சைட் வேலை; இந்த வாரம் பூராவும் கிளையன்ட் மீட்டிங். அதனால எங்களுக்குள்ள ஒண்ணுமே இல்லை’’,  ``டி-15 மிஸ் ஆகிடுச்சு... புராஜெக்ட் எதுவும் இல்லை. பெஞ்சுலே வெச்சிருக்கான். ஒருவேளை போகச் சொல்லிருவானோனு தெரியலை. இந்த சிச்சுவேஷனுக்கு எல்லாம் டூயட் சாங் போட முடியாது சார்’’ என்று ஒரு கூட்டம் மன அழுத்தங்களை சட்டை பாக்கெட்டில் அள்ளிப்போட்டுக்கொண்டு நிற்கிறது. இது பணிச்சுமை தரும் அழுத்தம். ``அப்படியே மோடி அடுத்தமுறை கொடியேத்திட்டு இவளுக்குத்தான் வீரப்பதக்கம் குத்தப்போறாரு. தினம் எட்டு மணி வரைக்கும் அப்படி என்ன வேலையோ?’’ எனும் அன்புக் கணவனின் வார்த்தைகள், ஆபீஸில் இருந்து சட்டையை ஹேங்கரில் போடும்போது, ``என் தங்கச்சி வீட்டுக்காரர் இரண்டாவது ஃபிளாட் புக் பண்ணியாச்சு’’ என்கிற மனைவியின் அசரீரி, இது புரிதலில்லா குடும்பம் தரும் அழுத்தம். ``வாடகைக்கு வீடுதானே கேட்டேன்... என்ன வேலை பார்க்கிறீங்கனு கேளுங்க... எதுக்கு எந்த ஜாதி, என்ன மதம்னு கேட்கிறீங்க?’’ எனும் கோபத்தில் சமூகம் கொடுக்கும் அழுத்தம் எனக் காதலை, காமத்தை, கருத்தரிப்பைச் சிதைக்கும் மன அழுத்தம் நம்மைச் சுற்றி நிறைய.

94p2.jpg

வயிற்றுக்கும் தொண்டைக்கும் நடுவே உருவமில்லா உருண்டை ஒன்று உருண்டு, உன்னிகிருஷ்ணன் குரலாக வந்த `காதல் அழுத்தம்’, பின்னாளில் இப்படிப் பல மன அழுத்தக் காரணங்களால் நிற்பதில்லை. சிலருக்குக் கல்யாணத் திருவிழாவிலேயே காணாமல் போய், அதே உருண்டை மனசுக்கும் மூளைக்கும் இடையே உருவமில்லாமல், உருளத் தொடங்கி, எக்குத்தப்பாக நோய்க்கூட்டத்தை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கிறது. அதிலும், சரக்கு - முறுக்கு - சங்கதி எல்லாம் சரியாக இருந்தும், கருத்தரிப்புக்காக வருந்தி நிற்போரில், நிறைய பேர் இன்று மன அழுத்தம் கொண்டவர்கள். `மன அழுத்தத்தில் சர்க்கரைநோய் கூடும்; உயர் ரத்த அழுத்தம் வரும்; மாரடைப்பு ஏற்படலாம் எனப் படித்திருக்கிறோம்... கருக்குழாய் அடைப்புமா?’ என்போருக்கு ஒரு செய்தி, `மன அழுத்தம் உருவாக்காத நோயே இல்லை’ என உரக்கச் சொல்லும் காலத்துக்கு நாம் வந்து நாள்கள் பல ஆகிவிட்டன. 94p5.jpg

நாற்பதுகளிலும் ஐம்பதுகளிலும் வரும் மன அழுத்தத்துக்குப் பணிச்சுமை, சில ஏமாற்றங்கள், உடல் தளர்ச்சி, கதவைத் தட்டும் நோய்க் கூட்டம்... எனப் பல காரணங்கள் இருக்கும். ஆனால், இளமையின் உச்சத்தில் 25-30-களில் வரும் மன அழுத்தத்துக்கு பெரும்பாலும் காரணங்கள் வாழ்வின் நுணுக்கங்களை முற்றிலுமாகப் புரிந்துகொள்ளாத கல்வியும் வளர்ப்புமே. ஒண்ணாங்கிளாஸில் `ஐயய்யோ... ஒரு மார்க் போயிருச்சா?’ என்பதை, `ஒண்ணுவிட்ட தம்பி போயிட்டானா’ என்கிற ரேஞ்சுக்குப் பதறி, கதறுவதில் இருந்தே அந்தப் பிள்ளைக்கு மன அழுத்தம்  மூளையில்  குடியேற  ஆரம்பித்துவிடுகிறது. வானவில்லைப் பார்த்து, ஒளிச்சிதறலைப் படிக்கும் ஒரே சமயத்தில், அதன் வண்ணங்களில் சிலாகிக்கும் மனதையும் கற்றுத்தராமல் போனது, கல்வியும் வாழ்வும் வேறு வேறு துருவங்களுக்குப் போனதன் முக்கியக் காரணம். ``அது எப்படிங்க சிலாகிப்பை எல்லாம் கத்துத் தர்றது? அவன் அவங்க அம்மா மாதிரி... வெண்ணெய்’’ என நொரநாட்டியம் சொல்லி நகரக் கூடாது. சிலாகிப்பும் கண்டிப்பாகக் கற்றுத்தர வேண்டிய விஷயம்தான்.

`முள்ளு மாறிடக் கூடாது’ என்பதால், அவர் மட்டுமே திருக அனுமதிகொண்ட, மர்ஃபி ரேடியோவில் ஒலிக்கும், `உங்கள் அப்துல் ஹமீதுடன்’ அன்று எங்கள் அம்மா உரக்கக் கேட்ட இலங்கை வானொலிப் பாடல்தான், இன்றைக்கு இளையராஜா கான்சர்ட்டுக்குப் போக, கிளினிக்கில் `வயிற்று வலி’ என்று பொய் லீவு சொல்லிவிட்டு, எங்களை வரிசையில் நிற்கவைக்கிறது. இளம் வயதில் எல்லா சிறு குழந்தைகளும் தன் பெற்றோரின் சிலாகிப்பை, சகோதரியின் கிளர்ச்சியை, நண்பனின் எள்ளல் இன்பத்தை, ஆசிரியனின் மயக்கம் தரும் வர்ணிப்பைக் கேட்டுப் பார்த்து, ரசித்துத்தான் தன் ஹார்மோன்களுக்குச் சோறூட்டுவார்கள்.  இப்போது அப்படியான `அப்பா, அம்மா, வாத்தி, சகோ, தல’  ஆகியோருக்கு ஏகத் தட்டுப்பாடு. 

94p3.jpg

பெரும்பாலான பெற்றோர்கள், தங்கள் மகன்/மகள் வாங்கும் கிரேடையும் மார்க்கையும் தவிர ஆபீஸ் புரொமோஷனில் மட்டுமே சிலாகிக்கின்றனர். சி.பி.எஸ்.சி-இல் படிக்கும் மூத்த சகோதரிக்கு, வண்ணதாசன் வரிகளைவிட, அமெரிக்க அட்மிஷன் மட்டுமே கிளர்ச்சி தருகிறது. நண்பன், மொஹாக் ஸ்டைலில் முடிவெட்டி,`அரை மண்டையனாக’த் திரிகிறானே ஒழிய, கையில் கவிதைப் புத்தகமோ, மனதில் காதல் அனுபவமோ அநேகமாக இல்லை. தமிழ் வாத்தியார், ` நடந்து செல்கையில், தலைவிக்கு அனிச்சம் பூ தொட்டு, அன்னப்பறவை இறகுபட்டு, பாதத்தில் முள்ளு குத்தின மாதிரி ஆயிடுச்சாம்’ என ஒரு திருக்குறளை விளக்கும்போது, `அவளுக்கு அவ்ளோ மென்மையான பாதம்டா. அப்படின்னா கொஞ்சம் யோசி... பாதமே அவ்ளோ மென்மைனா பார்த்துக்கோடா...’ எனக் கொஞ்சம் டைம் கேப்விட்டு நமுட்டுச் சிரிப்புச் சிரித்தபோது அவர் குறள் மட்டும் கற்றுத் தரவில்லை. அவர் நடத்திய ஹார்மோன் பாடம் தமிழ் சிலபஸில்கூட இல்லாதது. அங்கே குறள் வரிகளோடு, ஹார்மோன் உசுப்பலும் எப்படி என மனப்பாடம் ஆனது. இதெல்லாம் இல்லாமல் போனதில், இப்போது, அத்தனை சமத்துப் பையனும் பெண்ணும் பித்தகோரஸ் தியரம் மட்டுமே படித்துப் படித்து, பின்னாளில் பித்தம் கோரஸ் போட வேண்டிய இடத்தில் முழுதாகக் கோட்டை விடுகிறார்கள்.

அழ அழக் கொண்டுபோய், மூன்றாம் வகுப்புப் படிக்கும்போதே சேர்த்த டான்ஸ் கிளாஸும், டென்னிஸ் கிளாஸும் பின்னாளில், மறுபடி அழ அழ ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது நிறுத்தப்படும்.  `நீட், சேட், மேட்டு, காட்டு’ எனப் பல பரீட்சைகளுக்காக அவன்/அவள் டான்ஸ் கிளாஸிலும் டென்னிஸிலும் வைத்த அத்தனை கற்பனைகளும் மார்க் மந்திரம் அடித்து, காயடிக்கப்படும். எல்லா சடங்குகளும் முடிந்து,  சரியான அவன்/அவள் பால் டப்பாவாக மாறி, கல்லூரி அட்மிஷன் கார்டு கிடைத்துப் படித்து முடிக்கையிலேயே ஏதாவது கார்ப்பரேட் அவனை/அவளைக் கொத்தடிமையாகக் கொத்திக்கொண்டு போய்விட்டால், அது நல்ல சமர்த்துப்பிள்ளை. இந்தச் சமர்த்துப் பிள்ளைகளுக்கு `தோல்வி’ எனும் சுகானுபவம்  சுத்தமாக இராது. அந்தச் சமயம் கிடைக்கும் தோழனின் தோள் ஸ்பரிசமும் தெரியாது. ஏமாற்றம் எனும் உணர்வு, அந்த வலியை மறைக்க வீடு `நாங்க இருக்கோமடா’ எனக் கட்டற்ற அன்பு சொல்லி அரவணைத்த அனுபவம் கிடைத்திருக்காது. `பரவாயில்ல மாப்பிள்ளை. நீ வெச்சுக்கோடா’ எனத் தனக்குப் பிடித்ததை விட்டுக்கொடுத்த விலாசங்கள் தெரிந்திருக்காது. அழகு, பணம், பதவி, பொருள் அத்தனையும் தாண்டி, இந்த அனுபவங்கள் எதுவும் இல்லாமல் உற்பத்தி செய்யப்படும்  `மேக் இன் இந்தியா’க்கள்தாம், இப்போது திருமண வாழ்வில் மொக்கையாக நுழைகிறார்கள். இவர்கள் எதிலும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. பொய்யாகவாவது தோற்றுப்போக இவர்களுக்கு ஏனோ பிடிப்பதில்லை. மருந்தாகக் கொஞ்சம் அரவணைக்க அவர்கள் ஈகோ துளியும் இடம் தருவதில்லை.

94p4.jpg

பெரும்பாலான வீடுகளில் இன்று பிள்ளை வளர்ப்பதில்லை. குதிரை வளர்க்கிறார்கள். அத்தனையும் அரைவேக்காட்டுப் பந்தயக் குதிரைகள். இவர்கள் திருமணம் மூலம் இன்னொரு பந்தயக் குதிரையுடன் இணையும்போது, எப்போதும் இணையுடன் சேர்ந்து மெள்ளப் புல் மேய்வதில்லை. முகம்-முதுகு உரசி, சீண்டி விளையாடுவதில்லை. முழங்கால் மடங்கிக் காதல் சொல்வதில்லை. முன்னங்கால் தூக்கிப் பீறிட்டு எழுந்து ஓடுவதுமில்லை. வீட்டுச் சுவரில் மாட்டியிருக்கும் கடிகாரத்தில் நகரும் முட்கள் எழுப்பும் ஓசைகளை மட்டும் எப்போதும் கேட்கிறார்கள். அந்த ஓசையைப் பந்தயத்தில் சுடும் துப்பாக்கிக் குண்டுகளின் சத்தம்போல் நினைத்து, களத்தில் ஜெயிக்கப் படுவேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்; இவர்கள் ஓட்டத்துக்காக மட்டுமே தீனி கொடுத்து வளர்க்கப்படுபவர்கள். தன் முதுகில் ஏறியிருப்பவன் யாரென்ற அடையாளம் அவர்களுக்குத் தெரியாது. அவன் ஏன் தன் உடலை, பூட்ஸ் காலால் இறுக்குகிறான் எனத் தெரியாமல் மூச்சிரைக்க ஓடுவார்கள். ஒருவேளை ஒன்றுக்கும் பயன்படாதபோது, அதே கடிகாரத் துப்பாக்கியால் தன்னைக் கொல்லவும் கூடும் என்பதும் தெரியாமல் படுவேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஓட்டத்தின் இடையே,  பூட்டிய லாடத்துக்குள் போதைக்காகப் புணரும் அந்தப் பந்தயக் குதிரைகளின் வாழ்வில் காதல் எப்போதும் இருப்பதில்லை.

மன அழுத்தம் உள்ளவர்கள் அத்தனையும் நலமாயிருந்தும், கருத்தரிக்கத் தாமதம் ஏற்படுவதைப் பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும்போது, `உடல் ஏதோ ஆபத்தில் இருக்கிறது... குறிப்பாக உயிருக்கு ஆபத்தோ?’ என்ற பயம் மூளைக்கு ஏற்பட்டு, உடலைக் காப்பாற்ற விழையும் அத்தனை ஹார்மோன்களும் அதன் செய்கைகளும் முடுக்கிவிடப்படுகின்றன. `உடலை ஆபத்தில் இருந்து காப்பாற்றுவதுதானே இப்போதைக்கு முக்கியம்? கருத்தரித்து அடுத்த உயிரைக் கொண்டு வருவதை எல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என முடிவுசெய்வதுதான் மன அழுத்தம் உள்ளவருக்குக் கருத்தரிப்புத் தாமதம் ஏற்படுவதற்கான முக்கியக் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். கூடவே பணிச்சுமையில், பிற சுமையில் தீவிர மன அழுத்தம் வருகிறபோது, அவசியப்படும் பெரும்பாலான நவீன ரசாயன மருந்துகள் காதல் வேட்கையைக் குறைப்பதும், கருத்தரிப்பை ஒரங்கட்டுவதும் இன்னொரு வேதனை.

94p6.jpg

பிரமிப்பு, பரவசம், சிலாகிப்பு, எள்ளல், புன்முறுவல்... இவை எல்லாமே கவிதை டிக்‌ஷனரியில் வரும் வார்த்தைகள் அல்ல. வாழ்வின் நிறைய கணங்களில் பிரதிபலிக்கப்பட வேண்டிய உணர்வுகள். கல்வியும் பள்ளி வாழ்வும் கற்றுத்தர வேண்டிய விஷயங்கள். இவையெல்லாம் இல்லாமல் ஓடும் ஓட்டத்தில், சின்னதாக வரும் தோல்வியும் ஏமாற்றமும்தான் பலருக்கும் மன அழுத்தத்தை விதைக்கிறது. `என்றைக்கு வீசி எறியப்படுவோம்?’ என்ற பயத்தில் ஓடும் ஓட்டத்தில், தூக்கமின்மை, தூங்கி எழுந்தாலும் உற்சாகமின்மை, அடிக்கடி வரும் தலைவலி, அவசியமில்லாமல் வரும் கோபம், எப்போதும் பரபரப்பாயிருப்பது... இவையெல்லாம்தான் மன அழுத்தத்தின் ஆரம்ப அறிகுறிகள். எதிலும் பிடித்தமில்லாமல் இருப்பது, உற்சாகத்தை ஒட்டுமொத்தமாகத் தொலைத்திருப்பது, மகிழ்ந்து சிரிக்க மறப்பது, இதழை இறுக்கி, புன்முறுவலைக்கூட பூட்டி வைப்பது, பிடித்தவர் நேசமாகத் தொடுவதிலிருந்தும் அவசரமாக விலகி நகர்வது... எனப் பல அடையாளங்களை மன அழுத்தம் கொடுக்கும். இவற்றில் எது இருந்தாலும் வெளியே காதல் கசக்கும்; காமம் தவிர்க்கும். உள்ளே டோப்பமின் ஆக்ஸிடோசின் (Dopamine oxytocin) எல்லாம் சுணங்கும்; முட்டை சோம்பும்; உயிரணு உறங்கிப்போகும்.

மனம் ஒரு குரங்கு அல்ல; அழகிய பறவை அது. அதனை ஈன்ற பொழுதிலிருந்தே அடைகாத்து, இறகு உலர்த்தி, அழகாகப் பறக்கவிட்டு, நெல்லும் தானியமும் தேவைக்குத் தூவி, கொஞ்சம் சிட்டுக்குருவியாக விட்டுவிடுதலையாகவும், கொஞ்சம் ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்து பறக்கவும் கற்றுக்கொடுத்து வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. சொன்னதைச் சொல்லும் கூண்டுக்கிளிகளைக் காட்டிலும், வலசை செல்லும் பறவைகள்தாம் எவ்வித மன அழுத்தமுமின்றி கவித்துவமாக இனவிருத்தி செய்கின்றன.

- பிறப்போம்...

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உயிர்மெய் - 23

 

மருத்துவர் கு.சிவராமன்

 

றவின் உச்சத்துக்குப் பின்னரான கணங்கள் உசத்தியானவை. கோயிலின் படிக்கட்டில் அமர்ந்ததுபோல ஓர் அமைதியைத் தருபவை. அந்த வேளையில் அருகாமையில் மனைவி தன் விரல்களைப் பாந்தமாக நம் கை விரல்களோடு கோத்து, நம் முகம் பார்ப்பதுபோல நிறைவைத் தருவன. அதீதக் காதலின், அவசரத்தில் நிகழ்ந்து முடியும்போதுகூட அந்த உச்சத்தின் தருணமும் எப்போதும் குறைவானவை அல்ல. அது, கடற்கரையின் விளிம்பில் நிற்கும்போது, காலைக் கவ்விச்செல்லும் குளிர் நீர், வேகமாக மீண்டும் கடலுக்குள் திரும்பிச் செல்கையில், நம்மைப் புரட்டிப்போட எத்தனிக்கும் ஒரு மகிழ்ச்சியைத் தருவது. இப்படி இரண்டு மாதிரியுமே அல்லாமல், உச்சத்தின் மகிழ்வை ஒரு துளிகூட உணர்ந்து மகிழ முடியாமல், `வெடுக்’ என ஒரே கணத்தில் வீழ்ந்துபோகும் உணர்வைத் தரும் சிக்கலுக்கு, `விந்து முந்துதல்’ (Premature ejaculation - PME) என்று பெயர்.

எல்லாமே சரியாக இருந்து, சில நேரங்களில், எந்த ஒரு நோயுமாகவும் இல்லாமல், மனப் பரபரப்பின் ஒரு வெளிப்பாடாக மட்டுமே அமையும் இந்தச் சின்னப் பிரச்னை, பல குடும்பங்களின் பூதாகரப் பிரச்னையாவதும், வெகு சிலருக்கு அதனாலேயே குழந்தைப்பேறு தள்ளிப் போவதும் உயிர் மெய் விஷயத்தில் உதாசீனப்படுத்த முடியாத ஒன்று. விந்து முந்துதல் என்றால் என்ன? என்ன நிகழ்கிறது அங்கே? அப்படி என்ன மன அழுத்தத்தை இந்தப் பிரச்னை பல ஆண்களுக்கு விதைக்கிறது?

`கள்ளினும் காமம் பெரிது’ என வள்ளுவன் ஆழமாகச் சொன்னது, காமம் போதையின் வகையைச் சார்ந்தது அல்ல என்பதை உரக்கச் சொல்லத்தான். குறைந்த போதை, தெளியும்.  நிறைந்த காமம், தெளிவைத் தரும். இந்தப் புரிதல் இல்லாமல், காமத்தை அணுகும் ஆணுக்குத்தான்  அநேகமாக இந்த `விந்து விரையும் சிக்கல்’ அதிகம் வருகிறது. கூடவே, இயல்பாகச் சிலர் பரபரப்பான மனதைப் பாலகனாக இருக்கும்போதே பெறுவார்கள். அப்படி வளர்த்து எடுக்கும் மதிப்பெண் எந்திரங்கள் பின்னாளில், `எல்லாமே எனக்கு எண்கள்தாம்’ என எப்போதும் ரூபாய் நோட்டுகளை எண்ணிக்கொண்டே இருக்கும், எங்குமே இளைப்பாறத் தெரியாத இளசுகளுக்கும் இந்த முந்தல் வரக்கூடும்.

94p1.jpg

`ஐயய்யோ!’ எனும் சொல்லைத் தாங்கமுடியாத இழப்புக்குப் பயன்படுத்தலாம். `முருங்கைக்காய் வேகலை’ என்றால், `கருங்குளம் பஸ் கிளம்பிவிட்டது’ என்றால், `யூ.கே.ஜி. மிஸ் கையில் ஸ்டார் போட்டுவிடலை’ என்றால், இந்த `ஐயய்யோ’வைப் பயன்படுத்துவதுதான்  பரபரப்புக் கிருமியை வாழ்க்கைப் பரிசலில் ஏற்றுவதற்குக் காரணம். கூடவே பள்ளியில் வளர்த்தெடுக்கும் சாதனை வெறி. குறிக்கோளை நோக்கிப் பயணிப்பதற்கும், அதற்காக வெறிபிடித்து ஓடுவதற்கும் வித்தியாசம் உண்டு. இரண்டிலும் இலக்கு ஒன்றுதான் என்றாலும், அழகாக, கவித்துவமாகப் பயணிப்பவருக்கும் வெறிபிடித்து ஓடுவோருக்கும் வித்தியாசம் உண்டு. முதலாமவர் இலக்கை அடையும்போது, நிறைவும், மகிழ்ச்சியும், உறவும், அன்பு உள்ளங்களும் ஏராளமாக உடனிருக்கும். வெறிபிடித்து ஓடுகையில் இலக்குக் கையில் கிடைக்கும்போது, இவை எதுவுமில்லாமல், இர்ரிடபிள் பவல் சிண்ட்ரோம் (Irritable bowel syndrome) எனும் நோயும், கொஞ்சம் இந்த விந்து முந்துதல் நோயும் கால்சட்டையின் இரு பைகளுக்குள்ளும் ஏறி இருக்கும். உள்ளங்கை அநாவசியமாக வியர்த்தல், உள்ளங்கால் செருப்பு நனையும்படி வியர்த்தல், சாப்பிட்டவுடன் மலம் கழித்தல் போன்ற சங்கடங்களோடு வரும் இந்த `ஐ.பி.எஸ்.’ (இர்ரிடபிள் பவல் சிண்ட்ரோம்) மனப் பரபரப்பு நோயில், சிலருக்கு இந்த விந்து முந்துதலும் குடியேறிவிடும்.

எப்போதுமே இயல்பாக இருந்தும், மிகச்சரியான புரிதலும், பொங்கும் காதலும் இருந்தும், இந்த `விந்து முந்துதல்’ சில ஆண்களுக்கு ஏற்படுவதற்கு எப்போதுமில்லாமல், அந்தக் கணத்தில் மட்டுமே ஏற்படும் பரபரப்பும் ஒரு முக்கியக் காரணம். மூளையில் ஹார்மோன்கள் அடிக்கும் உச்சபட்சக் கும்மியில் கொஞ்சம் தடுமாறி, இரு உள்ளங்களும்  பரவச நிலைக்குத் தயாராகும் முன்னர், தடுமாறி உயிரணுக்கள் வெளிப்பட்டுவிடும். அதனால் உயிரணுக்களின் பயணம் கர்ப்பப்பை நோக்கிச் செல்வது தடைப்படுவதால், கருத்தரிப்பு தாமதமாகிக்கொண்டே இருக்கும். இந்த நிலைக்கு மனம் காரணம் அல்ல என்கிறபோது, சில சிகிச்சைகள் தேவைப்படலாம். பெரும்பாலும் தவறாகப் புரிந்துகொள்ளப்படும் சுயஇன்பம்கூட இந்தச் சிக்கலுக்கான சிகிச்சையாக, உடலுறவின் நடுவே செய்யும்படிப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆணுறுப்பை சற்றே மரத்துப் போகவைப்பதை நவீன மருத்துவம் பரிந்துரைக்கிறது. `நீடித்த இன்பம் பெற’ என்ற விளம்பரங்களுடன் வரும் ஆணுறைகள், இப்படியான மிக லேசான மரத்துப் போதலை, ஆணுறுப்பின் முன் பகுதியின் மேல்புறப் பகுதியில் தரும்போது, `குப்பென்று ஏறிய உற்சாகம்’ உச்சத்தை நோக்கி ஒரேயடியாகப் பயணிக்காது. மரத்துப்போக இட்ட மருந்து, சின்னத் தடையை ஏற்படுத்தும். அதனால்,  விந்து முந்துதல் நிகழாது. `பாஸு! நாங்க குழந்தைக்கு முயற்சி செய்யும்போது ஆணுறை எப்படி?’ என்போருக்கு எளிய சில பயிற்சிகள் பயனளிக்கும். (விளக்கம் பெட்டிச் செய்தியில்.)

 ஆணாதிக்க உலகில், முற்றிலுமாக இது குறித்துப் பேசுவதையே பெருத்த அவமானமாகக் கருதும் கூட்டம் இங்கு  உண்டு. நடு இரவுத் தொலைக்காட்சிப் பொய்ப் பிரசாரமும், மெடிக்கல் ஷாப்பில் போய், பிட்டுப் பட போஸ்டர் மாதிரி அட்டையில் போட்டிருக்கும் மாத்திரைகளை, அநியாய விலை கொடுத்து வாங்குவதும்தான் இவர்கள் வாடிக்கை. இந்த மாதிரி போலிகள் விற்கும் மருந்துகளிலும் அல்லது நேரடியாக விற்கப்படும் போலி மருந்துகளிலும் அன்று அபின், கஞ்சா சேர்க்கப்பட்டன. இன்று அறிவியல் வளர்ச்சியில், வயாகரா ரசாயனங்களை முறைகேடாகக் கலந்து விற்கிறார்கள். `சீக்கிரம் வந்துடுதே...’ என அங்கு ரகசியமாக மருந்து வாங்கி, பின்னாளில் அந்த மருந்துகளின் பக்கவிளைவால் நிரந்தரமாக, `ஐயோ வரவே மாட்டேங்குதே...’  எனும் நிலைக்கு இந்தப் போலிகள் தள்ளக்கூடும்.

94p2.jpg

`விளக்கொளியும் வேசையர் நட்பும்... நெய்யற்ற கண்ணும் அறுமே’ என்பதை நாலடியாரில் படிக்காத சிலருக்கு, விலைமாதரிடம் போய்வந்த தவறான அனுபவமும் அல்லது அதனால் பெற்ற அவமானமும் சேர்ந்து, ஒவ்வொருமுறை உடலுறவின்போதும் மூளையில் அது  குடியேறிக் குழப்பம் ஏற்படுத்துவதும் இந்தப் பிரச்னைக்குக் காரணம். சிறு வயதில் ஆண் பாலினச் சேர்க்கை முதலான Sexual abuse, மன அழுத்த நோய்கள் (Depression), தாழ்வு மனப்பான்மை, உடல் கட்டமைப்பு மெலிந்தோ அல்லது விருப்பம் தரும்படி இல்லாமலிருப்பதோ (Poor body image) கூட இந்தச் சிக்கலுக்குக் காரணமாக அமையலாம். முன்னர் ஒருமுறை இப்படி விரைந்து வெளியேறியதை நினைவில் வைத்துக்கொண்டு, `ஒவ்வொரு முறையும் இப்படி ஆகிவிடுமோ?’ எனப் பதறுவதுதான் மிக முக்கியமான காரணம்.

எல்லாவற்றையும்விட, ஏதோ ஒரு காரணத்தால் ஓரிரு முறை இப்படி விந்து முந்துதல் ஏற்பட்டு, மகிழ்வு தடைபட்ட பின்னர், அடுத்த முறை இந்த விஷயத்துக்குத் தயாராகும்போது மனைவி, `பார்த்து... இந்த முறை சரியா இருக்குமா?’ எனக் கேள்வி எழுப்புவது ஒட்டுமொத்தமாக அவனைப் பொசுங்கிப்போக வைத்துவிடுவது உண்டு. இந்த விஷயத்தில் வார்த்தைகளால் விமர்சிக்காமல், தன் அரவணைப்பால்  நம்பிக்கையைத் தர வேண்டியது மனைவிதான். அப்படியான அன்பைத் தர, நெஞ்சை முட்டும் காதல் குடியிருக்க வேண்டியதும், எதையும் எதிர்நோக்கா (Unconditional love) ரொம்பவே அவசியம். கார் ஓட்டும்போது, சைக்கிள்கூட சரியாக ஓட்டத் தெரியாத மனைவிகள் சிலர், பக்கத்து சீட்டில் உட்கார்ந்துகொண்டு, `பார்த்து, லெஃப்ட்ல பாருங்க... ரைட்ல ஒடிங்க’ எனச் சொல்வது உண்டு. எரிச்சலின் உச்சத்தில், வண்டியைவிட்டு இறங்கும்போது பெரும்பாலும் அது  டைவர்ஸ் வரைக்கும் போகும். அதே மாதிரி, உடலுறவின்போதும், தான் எந்த சீட்டில் இருந்தாலும் `சரி, தப்பு’ என யாரும் வழிகாட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. சில நேரங்களில், தப்பான பாதையில் போய்க்கூட இலக்கை அங்கே அடைய முடியும். ஏனென்றால், இந்தப் பயணத்தில், இருவருமே ஓட்டுநர்கள்; இருவருமே நடத்துநர்கள்.

இருவருக்குமிடையே உள்ள பல மனத்தடைகள், PME பிரச்னைக்கான இன்னொரு காரணம். ``ஆனாலும் உங்க அம்மா அப்படிப் பேசி இருக்கக் கூடாது. அவங்களுக்கு எங்க வீட்டைப் பார்த்தாலே பாகிஸ்தானைப் பார்கிற மாதிரிதான்’’ எனச் சாயங்கால வேளையில் ஆபீஸுக்கு போன் போட்டுச் சொன்னது, அநியாயத்துக்கு அந்த க்ளைமாக்ஸ் நேரத்தில் ஞாபகம் வந்து உடலுறவு உச்சம் பொசுக்கெனப் போவதும் உண்டு. இவர்களுக்கு மனைவியின் புன்னகையுடன்கூடிய முகமொழி மாத்திரை ஒன்றே போதும்... எல்லாம் சரியாகிக் குழந்தைப்பேறு நிகழ.

94p3.jpg

ஒவ்வொரு முறையும்( Lifelong PME) இப்படி விந்து முந்துதல் நடக்கிறதா அல்லது சில நேரங்களில் சரியாகவும் சில வேளைகளில் (Acquired Secondary PME) மட்டும் இந்தச் சிரமம் இருக்கிறதா என்பதைப் பொறுத்துத்தான் சிகிச்சையின் அவசியமே இருக்கும். சிலருக்கு, மூளையில் சுரக்கும் ஹார்மோன்கள் அல்லது நரம்பு ரசாயனக் கடத்திகளின் (Neurotransmitters) மாறுபாடும் இந்தச் சிக்கலுக்குக் காரணமாக இருக்கலாம். ஆண்களுக்கு மட்டுமே உள்ள புராஸ்டேட் கோளத்தில், (இதுதான் உச்சத்தில் விந்தைப் பீய்ச்சி அடிக்கும் கோளம்) வரும் தொற்று அல்லது அழற்சி, சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்று எனச் சிலவும் காரணமாக இருக்கலாம்.

‘விந்து முந்துது’ எனத் துண்டைத் தலையில் சுற்றிக்கொண்டு, கூனிக் குறுகிப் போலிகளிடம் போய்ச் சிக்காமல், மனம் திறந்து, குடும்ப மருத்துவரிடம் பேசுங்கள். உளவியல்ரீதியான இந்தச் சிக்கல் ஏற்படுகையில், மருத்துவரிடம் பேசி இதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதும், மருத்துவர் வார்த்தையில் கிடைக்கும்  Reassurance-மே நோயைச் சரியாக்கிவிடும் என அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். அங்கே தேவை அன்பான, அனுசரணையான உரையாடல் மட்டுமே; மருந்துகள் அல்ல. விந்து முந்துவதற்கு சித்த மருத்துவம் சொல்லும் மிக முக்கியக் காரணம் உடற்சூடு சார்ந்தது. `உடற்சூடு’ எனும் வார்த்தையை நவீனம் ஏற்றுக்கொள்வதில்லை. சித்தம் முதலான அத்தனை பாரம்பர்யத்துக்கும் இந்த `சூடு, குளிர்ச்சி’ எனும் சொற்களுக்குப் பின்னால் மாபெரும் மருத்துவ விளக்கம் இருக்கிறது. அதிக அளவிலான பித்தத்தில் விளையும் உடற்சூட்டில் புராஸ்டேட் கோளம் வேகமாக விந்தை வெளியேற்றுகிறது. `வெள்ளைக் குங்கிலியம்’ எனும் பிசினிலிருந்து (வேப்பம் பிசின் மாதிரிக் குங்கிலிய மரத்தில் விளையும் பிசின்) தயாரிக்கப்படும் குங்கிலியப் பஸ்பம் விந்து முந்துதல் நோய்க்கும் உடல் சூட்டைத் தணிக்கவும் சிறந்த மருந்து. அரசு சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று இதைப் பயன்படுத்தலாம்.வெள்ளைப் பூசணி (தடியங்காய்), நிலப்பூசணி எனும் பூமி சர்க்கரைக் கிழங்கு இவையெல்லாம் அதிகரிக்கும் உடற்சூட்டைத் தணித்து இயல்பாக விந்து முந்துதலைத் தணிக்கும் எளிய உணவும் மருந்துகளும்.

எண்ணெய்க் குளியல் உடற்சூட்டைத் தணித்து இந்தப் பிரச்னையில் இருந்து நிரந்தரமாக விடுபட எளிய வழி. அதற்காக, தமிழ் சினிமா கிராமத்து ஹீரோ மாதிரி, `வெந்நீர் வெச்சிட்டியா... இங்கே வந்து எண்ணெய் தேய்ச்சுவிடு’ என அதிகாரம் எல்லாம் பண்ணக் கூடாது. குழந்தைப்பேறு அல்ல, சோற்றுப்பேறுகூட கிடைக்காமல் போய்விடும். தேடலே இல்லாமல், அமேசானிலும் ஆண்ட்ராய்டிலுமே எல்லாவற்றையும் பெற்றுப் பழகும் கூட்டமாக நாம் வேகமாக மாறுகிறோம். அதேபோல், அகத்தின் தேடலே இல்லாமல், காதலையும் காமத்தையும் ஆன்லைனில் பெறுவோரும் பெருகிவருகின்றனர். காதலின் எந்தப் புரிதலும், காமத்தின் எந்த நுணுக்கமும்  தெரியாமல், அப்படி இணைந்தோர், பயன்படுத்துவோர் கையேடு (User manual) தேடுவதுதான் இங்கே வலி நிறைந்த வரலாறு. மலரினும் மெல்லியது காமம். அதனைச் செப்பச் செய்யும் சிலராக இருப்பது மட்டும்தான் குழந்தைப்பேறுக்கு மட்டுமல்ல... வாழ்க்கைப்பேறுக்கும் வழி.

- பிறப்போம்...


Pause squeeze technique. இது கணவன்-மனைவி இருவரும் இணைந்து செய்ய வேண்டிய பயிற்சி. ரொம்ப விளக்கமாக இதை எழுத இயலாது என்பதால், மருத்துவரிடம் கேட்டு இந்த எளிய பயிற்சியைக் கற்றுக்கொள்ளவும். இந்தப் பயிற்சியில் வலி இருந்தால், Stop-start பயிற்சியும் பலனளிக்கும். இரண்டு வருடப் பயிற்சி. பிறகு, ஆறு மாதம் அப்ரெண்டிஸ் எனப் பயப்பட வேண்டியதில்லை. இரண்டு, மூன்று வகுப்பில் உச்சம் உறுதி.


94p4.jpg

`கூபக தசைகள்’ எனும் உடலுறவின் செய்கைகளுக்கு வலுப்படுத்தும் Pelvic muscles- ஐ வலுப்படுத்தும் பயிற்சி இந்தப் பிரச்னைக்குத் தீர்வளிக்கும் என நிறுவி இருக்கிறார்கள். முஷ்டியை வலுவாக்கும் பயிற்சி மாதிரி கர்லா கட்டையைத் தூக்கி இதனை வலுப்படுத்த முடியாது. கொஞ்சம் கவனமாகப் படித்துச் செய்யவும். சிறுநீர் போகும்போது பாதியில் நிறுத்த நம்மால் முடியும். ஆபீஸில் இருக்கும்போது பிரிய நினைக்கும் வாயுவை வெளியே விடாமல் அடக்க முடியும். அதற்கு நாம் பயன்படுத்தும் தசையை மனதில் நினைத்துக்கொண்டு, சுருக்கி விரித்துச் செய்யும் பயிற்சிதான் ` Kegel excercises’ எனும் கூபக தசைப் பயிற்சி. தினமும் மூன்று முறை இதைச் செய்ய வேண்டும். விளக்கமாக இணையத்திலும் படித்துக்கொள்ளலாம். இந்தப் பயிற்சியில் விந்து முந்துதல் சிக்கல் தீரும்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.