Jump to content

நன்மாறன்கோட்டை கதை


Recommended Posts

நன்மாறன்கோட்டை கதை

சிறுகதை: இமையம், ஓவியங்கள்: செந்தில்

 

``நல்ல ஊரு சார். இங்க வேலை செய்றவங்க எல்லாருமே நல்ல மாதிரியான ஆளுங்கதான். நல்லா கோஆபரேட் பண்ணுவாங்க. கட்சிக்காரங்க, அரசியல்வாதி, உள்ளூர்க்காரங்கனு யாரும் ஸ்கூலுக்குள்ள வர மாட்டாங்க. நான் இந்த ஸ்கூலுக்கு வந்து பத்து வருஷமாச்சு. எந்தத் தொந்தரவும் இல்லை. ரிட்டையர்ஆகிறவரைக்கும் நீங்களும் இந்த ஊர்லயே ஓட்டலாம் சார். நன்மாறன்கோட்டைங்கிற பேருக்கு ஏத்த மாதிரி ஊரு ஆளுங்களும் இருப்பாங்க’’ என உடற்கல்வி ஆசிரியர் தனவேல் சொன்னார்.

``அப்படியா?’’ என்று ராமன் கேட்டதோடு சரி.

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று, இன்று காலையில்தான் கடலூர் மாவட்டத்திலிருந்து வந்து புதிய பள்ளியில் ராமன் சேர்ந்திருக்கிறார். முதல் நாளே அதிகம் பேச வேண்டாம், கேள்விகள் கேட்க வேண்டாம், ஆசிரியர்கள் எப்படியோ ஊர் எப்படியோ என்ற யோசனையில் அதிகமாகப் பேசாமல் இருந்தார்.

காலையில் வந்ததிலிருந்து ராமனுக்கு அதிகமான வேலைகள் இருந்தன. வரிசையாக வந்து ஆசிரியர்கள் வேறு வாழ்த்து சொன்னார்கள்.

தான் பணியேற்ற விவரத்தை, உரிய அலுவலர் களுக்குத் தெரிவிப்பதற்கான கடிதங்களைத் தயார்செய்தார். மதியம் சாப்பிட்டார். உட்கார்ந்தே இருந்ததால் தூக்கம் வருவதுபோல இருந்தது. முதல் நாளே தூங்கினால் அசிங்கம் என நினைத்தார். கைக்கடிகாரத்தைப் பார்த்தார். இரண்டே கால்.

``ஒவ்வொரு க்ளாஸா பார்த்துட்டு வரலாமா சார்?’’ எனக் கேட்டார்.

p70b.jpg

எதிரே நாற்காலியில் உட்கார்ந்திருந்த தனவேல் மறுப்பு எதுவும் சொல்லாமல் ``போகலாம் சார்...’’ எனச் சொல்லிவிட்டு, போவதற்குத் தயாரான மாதிரி எழுந்து நின்றார். ராமனும் எழுந்து அறையைவிட்டு வெளியே வந்தார். அவருக்குப் பின்னாலேயே தனவேலுவும் வந்தார்.

``முதல்ல ஆறாம் வகுப்பைப் பார்த்துடலாம். எங்கே இருக்கு?’’

``வாங்க சார்’’ எனச் சொன்ன தனவேல், வராந்தாவில் ராமனுக்கு முன்னால் நடக்க ஆரம்பித்தார்.

ஆறாம் வகுப்புக்குள் தனவேல் நுழைந்தார். பின்னால் நுழைந்த ராமனைக் கண்டதும் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை, ``வாங்க சார்’’ எனச் சொன்னார். மாணவர்களையும் பிளாக்போர்டையும் ராமன் பார்த்தார்.

பிறகு, ``நீங்க நடத்துங்க’’ எனச் சொல்லிவிட்டு வகுப்பறையைவிட்டு வெளியே வந்தார். அடுத்தது ஏழாம் வகுப்புக்குள் போனார். அடுத்தடுத்து  என பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்புக்குள்ளும் நுழைந்து பார்த்துவிட்டு, ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு வெளியே வந்தார். எல்லா வகுப்புகளிலுமே ஆசிரியர்கள் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்கள். தனியார் பள்ளியின் அமைதியைவிட கூடுதல் அமைதியாக இருந்தது. புதிய தலைமை ஆசிரியரின் குணம் எப்படியோ, முதல் நாளே அவரிடம் கெட்டபெயர் வாங்க வேண்டாம் என எல்லா ஆசிரியர்களும் நினைத்திருக்கலாம் என எண்ணிய ராமன், பள்ளிக் கட்டடத்தைவிட்டு வெளியே வந்தார். மைதானத்தை ஒரு பார்வை பார்த்தார். என்ன தோன்றியதோ, மைதானத்தைச் சுற்றிப்பார்க்க ஆரம்பித்தார். அவருக்கு இணையாக தனவேல் நடந்துகொண்டிருந்தார். பள்ளிக் கட்டடத்துக்குச் சற்றுத் தள்ளி நேர்தெற்கே இருந்த கழிவறைக்கு வந்தார். உள்ளே நுழைந்து பார்த்தார். அது பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. மூக்கை மூடிக்கொண்டு வெளியே வந்து, ``இவ்வளவு மோசமா இருக்கே. புள்ளைங்க எங்கே போகும்?’’ எனக் கேட்டார்.

``சுவர் மறைவுலேயே போயிடும்ங்க சார்.’’

``டீச்சர்ஸுக்கு இருக்கா?’’

``ஹெச்.எம் ரூமுக்குப் பக்கத்திலேயே இருக்கு சார்.’’

``லேடி டீச்சர்ஸுக்குத் தனியா இருக்கா?’’

``இல்லை சார்.’’

``பின்ன அவங்க எங்கே போவாங்க?’’

``அந்த ஒரு ரூம்லதான் போகணும். யார் போனாலும் ரெண்டு ரெண்டு பேரா போவாங்க. ஒருத்தங்க உள்ளார இருந்தா, ஒருத்தங்க வெளியே காவலுக்கு நிப்பாங்க’’ எனச் சொன்ன தனவேல், லேசாகச் சிரித்தார்.

``நான் முன்னால வேலைபார்த்த ஸ்கூல்ல கழிவறை தனித்தனியா இருக்கும்... பெரிய ஸ்கூல்’’ என ராமன் சொன்னதற்கு, தனவேல் எந்தப் பதிலும் சொல்லவில்லை.

ராமன் பள்ளிக் கட்டடத்தையும் மைதானத்தையும் பார்த்தார். ஊருக்கு ஒதுக்குப்புறமாக, விஸ்தாரமான இடத்தில்தான் பள்ளி இருந்தது. மதில் சுவர் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் உண்டாயிற்று. மைதானம் முழுவதும் வெயில் படர்ந்திருந்தது, வெக்கையாக இருந்தது; வியர்த்தது. `ஜனவரி மாசத்துலேயே நல்ல வெயிலா இருக்கு’ எனச் சொல்ல நினைத்தார். ஆனால், சொல்லவில்லை. தனவேல் எப்படிப்பட்ட ஆளோ? முதல் நாளே அதிகமாகப் பேசி வம்பில் மாட்டிக்கொள்ள வேண்டாம் என்ற தயக்கம் ராமனுக்கு இருந்தது. அதுபோலவே தனவேலுக்கும் இருந்தது. பக்கத்திலிருந்த வேப்ப மரத்தைப் பார்த்ததும் ``வாங்க நிழலுக்குப் போவோம்’’ என ராமன் சொன்னார். இருவரும் நடந்து வேப்ப மர நிழலுக்கு வந்தனர். சுற்றும் முற்றும் பார்த்தார் ராமன். சாலையில் இருந்து பள்ளிக்கு வரும் வழியைப் பார்த்தார். பூண்டு செடிகள் மண்டிக் கிடந்தன. அவற்றைப் பிடுங்கச் சொல்ல வேண்டும் என நினைத்தார். அதே மாதிரி மைதானம் முழுவதும் ஆங்காங்கே நின்றுகொண்டிருந்த பூண்டு செடிகளையும் பிடுங்கச் சொல்ல வேண்டும் என நினைத்தார். இன்னிக்கே சொன்னால் அதிகாரம் செய்வதாக ஆகிவிடும் என்ற பயத்தில், நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்தார். அப்போதுதான் மனதில் தோன்றிய மாதிரி  ``ஏ.ஹெச்.எம் எப்படி?’’ என்று கேட்டார்.

``நல்ல மாதிரியான ஆளு சார். அவரால எந்தத் தொந்தரவும் வராது.’’

``அப்படியா?’’ எனக் கேட்டதோடு சரி.

அடுத்த கேள்வியை ராமன் கேட்கவில்லை. தனவேலுவும் தானாக எதுவும் சொல்லவில்லை. இருவரும் சிறிது நேரம் பேசாமல், மைதானத்தைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தனர்.

``நீங்க ட்ரெஷரிக்குப் போய் உங்க புரொமோஷன் ஆர்டர் காப்பியைக் கொடுக்கணும்; மாதிரிக் கையெழுத்தும் போடணும் சார்.’’

``இன்னைக்கு முடியாது. நாளைக்குக் காலையில போகலாம்னு இருக்கேன். இங்கே ட்ரெஷரி எங்கே இருக்கு?’’

``ஒரத்தநாடு சார்.’’

``வாங்க... போய் ட்ரெஷரிக்கான தபாலை ரெடி பண்ணலாம்’’ எனச் சொல்லிவிட்டு ராமன் நடக்க ஆரம்பித்தார். அவருடன் தனவேலுவும் நடந்தார்.

தனது அறைக்கு வந்து நாற்காலியில் உட்கார்ந்தார். ``கிளார்க்கைக் கொஞ்சம் கூப்பிடுங்க சார்’’ என ராமன் சொன்னார். எழுந்து சென்ற தனவேல், பக்கத்து அறையில் இருந்து கிளார்க்கை அழைத்துக்கொண்டு வந்தார்.

``நான் நாளைக்கு ட்ரெஷரிக்குப் போகலாம்னு இருக்கேன். அதுக்கான தபால்களை ரெடி பண்ண முடியுமா சார்?’’ என ராமன் கேட்டார்.

``ரெடி பண்ணிக் கொண்டுவர்றேன் சார்’’ எனச் சொன்ன வேகத்திலேயே கிளார்க் தனது அறைக்குச் சென்றுவிட்டார். தனவேல் நின்றுகொண்டிருந்தார். அவரிடம் ராமன் எதுவும் பேசாததால், ``நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. அப்புறமா வர்றேன் சார்’’ எனச் சொல்லிவிட்டு வெளியே போனார். வெளியேபோன சிறிது நேரத்திலேயே உள்ளே வந்து, ``உங்களை ஒரு அம்மா பார்க்கணும்னு வந்திருக்காங்க சார்’’ எனச் சொன்னார்.

``என்னையவா?’’ எனச் சந்தேகப்பட்டது மாதிரி ராமன் கேட்டார்.

``ஆமாம் சார்.’’

``பசங்க பிரச்னையா இருந்தா நீங்களே என்னா, ஏதுன்னு விசாரிச்சு அனுப்பிடுங்க.

இந்த ஸ்கூலைப் பத்தி எனக்கு ஒண்ணும் தெரியாதே’’ எனச் சொன்னார் ராமன்.

``பார்க்கிறேன் சார்’’ எனச் சொல்லிவிட்டு தனவேல் வெளியே சென்றார்.

தனவேலிடம் பள்ளி நடைமுறைகள் பற்றி, ஆசிரியர்கள் பற்றிக் கேட்கலாமா என்று ராமன் யோசித்தார். முதல் நாளே எல்லா விஷயங்களைப் பற்றியும் கேட்டால் சரியாக இருக்குமா, ஒரு வாரம் கழித்து விசாரித்துக்கொள்ளலாமா, வந்த நாளிலேயே மற்றவர்களைப் பற்றி விசாரித்தால் தவறாக நினைக்கலாம். முதலில் தனவேல் எப்படிப்பட்ட ஆள் என்று தெரிந்துகொள்வோம் என்று நினைத்தார். இன்றிரவு பள்ளியிலேயே தங்கிவிட்டு, நாளை காலையிலே ட்ரெஷரிக்குச் சென்று பதவி உயர்வு ஆணையை, மாதிரிக் கையொப்பம் போட்ட கடிதத்தைக் கொடுத்துவிட்டு, மதியமே ஊருக்குப் போய்விடலாம். சனி, ஞாயிறு கழிந்து, திங்கள்கிழமை வந்து எங்கு தங்குவது என்பதை முடிவுசெய்யலாம் என நினைத்துக்கொண்டார். சுவரில் மாட்டியிருந்த காந்தி, அம்பேத்கர், பெரியார், நேதாஜி படங்களைப் பார்த்தார். பிறகு, முக்கியமான காரியத்தைச் செய்வதுபோல கைக்கடிகாரத்தைப் பார்த்தார். நேரத்தைத் தெரிந்துகொண்டதும் அவருடைய முகம் மாறியது. பாட்டிலை எடுத்துக் கொஞ்சம்போல தண்ணீர் குடித்தார். பிறகு ஆசிரியர் வருகைப் பதிவேட்டை எடுத்து, ஒவ்வோர் ஆசிரியர் பெயராகப் படிக்க ஆரம்பித்தார். அப்போது அறைக்குள் வந்த தனவேல், ``ஒரு அம்மா வந்து டி.சி கேட்குது. இப்ப தர முடியாதுன்னு சொன்னா கேட்க மாட்டேங்குது சார்’’ எனச் சொன்னார்.

``வரச் சொல்லுங்க.’’

வெளியே சென்ற தனவேல் ஒரு பெண்ணையும் மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு உள்ளே வந்தார். அந்தப் பெண்ணையும், அந்தப் பிள்ளைகளையும் சரியாகக்கூடப் பார்க்காமல் எடுத்த எடுப்பில், ``சொல்லுங்கம்மா’’ என்றார் ராமன்.

``இவன் பேரு தினேஷ்குமாரு, ஏழாவது படிக்கிறான். இவன் பேரு சந்தோஷ்குமாரு, ஆறாவது படிக்கிறான் சார்.’’

``எங்கே?’’

``இந்தப் பள்ளிக்கூடத்துலதான் சார்.’’

``எதுவும் பிரச்னையா, வாத்தியாருங்க யாராச்சும் அடிச்சுட்டாங்களா?’’

``இல்லை சார்.’’

``பின்ன எதுக்கு டி.சி கேட்டீங்களாம்?’’

``நாளைக்கு நாங்க ஊருக்குப் போறோம் சார்.’’

``போயிட்டு வாங்க. அதுக்கு எதுக்கு டி.சி.?’’

``திரும்பி வர மாட்டோம் சார்.’’

மாமியார், மருமகள் சண்டை நடந்திருக்கும். புருஷன் அடித்திருப்பான். அதற்காகக் கோபித்துக்கொண்டு பிள்ளைகளை அழைத்துக்கொண்டு பிறந்த வீட்டுக்குப் போகிற பெண்ணாக இருக்க வேண்டும். புருஷன்மீது இருக்கும் கோபத்தில் வந்து டி.சி கேட்கிறாளே. என்ன பெண்ணாக இருப்பாள்? `புருஷன் பெண்டாட்டிச் சண்டையில் பிள்ளைகளை எதற்காகச் சிரமப்படுத்துகிறாய்?’ எனக் கேட்க நினைத்தார். ஆனால், கேட்கவில்லை. ஊர்ப் பிரச்னை நமக்கு எதற்கு என இருந்துவிட்டார்.

``ஜூன் மாசத்துல வாங்க. வாங்கிக்கலாம்.’’

``எங்க அம்மா ஊருக்குப் போறோம் சார். இனிமே இந்த ஊருக்குத் திரும்பி வர மாட்டோம்.’’

``நான் சொல்றதைப் புரிஞ்சுக்கம்மா. ஜனவரி மாசத்துல டி.சி கொடுக்கக் கூடாது.

மீறிக் கொடுத்தா டி.இ.ஓ., சி.இ.ஓ-னு எல்லாரும் ஆயிரத்தெட்டுக் கேள்விகள் கேட்பாங்க. பதில் சொல்லி மாளாது. நீங்க போயிட்டு அப்புறமா வாங்க’’ - ராமன் நிதானமாகச் சொன்னார்.

அவர் சொன்னதை அந்தப் பெண் காதில் வாங்காத மாதிரி நின்றதுநின்றபடியே இருந்தாள். அவளுடைய பிள்ளைகளும் கைகளைக் கட்டியபடி அப்படியே நின்றுகொண்டிருந்தனர். ஆடாமல் அசையாமல், மல்லுக்கட்ட வந்ததுபோல் அவர்கள் நின்று கொண்டிருந்த விதம் ராமனுக்கு லேசாக எரிச்சலை உண்டாக்கியது. `தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று வந்த முதல் நாளே பிரச்னையா?’ என யோசித்தார்.

ராமனுக்காக வக்காலத்து வாங்குவது மாதிரி ``ஐயா சொல்றது புரியலையா? ஜூன் மாசம் வாங்க. வந்த உடனே வாங்கிட்டுப் போயிடலாம். இப்ப கிளம்புங்க’’ என தனவேல், அந்தப் பெண்ணைப் பார்த்துச் சொன்னார். அவர் சொன்னதை அந்தப் பெண் கேட்வில்லை; அவர் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. அதனால் தனவேலுவுக்குக் கோபம் உண்டாயிற்று.

``நாங்க சொல்றது புரியுதா... இல்லையா? இப்ப டி.சி தர முடியாது. கிளம்புங்க’’ என முன்பைவிடச் சத்தமாக தனவேலு சொன்னார். அப்போதும் அந்தப் பெண் அவர் சொன்னதைக் கேட்கவில்லை; அவர் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. தனவேலையும் அந்தப் பெண்ணையும் மாறிமாறிப் பார்த்த ராமன், ``நீங்க உட்காருங்க சார்’’ எனச் சொன்னார். தனவேல் ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு அந்தப் பெண்ணை முறைத்துப் பார்த்தார். அவளுடைய பார்வை கடைசி வரை அவர் பக்கம் திரும்பவே இல்லை.

``போயிட்டு ஜூன் மாசம் வாங்கம்மா’’ என ராமன் சொன்னார்.

ராமனுடைய குரலிலிருந்த அலுப்பையும் சலிப்பையும் பார்க்காமல் அந்தப் பெண் உறுதியான குரலில், ``எனக்கும் என் புள்ளைங்களுக்கும் இனி இந்த ஊரே வேண்டாம்னு போறோம் சார்’’ எனச் சொன்னாள்.

``நீ சொன்னதையே சொல்லிக் கிட்டிருக்க? நான் சொல்றதைப் புரிஞ்சுக்க மாட்டேன்கிற. இந்தச் சமயத்தில நான் டி.சி கொடுக்கக் கூடாது. மீறிக் கொடுத்தாலும் அதை எடுத்துக்கிட்டுப் போய் எந்தப் பள்ளிக்கூடத்துலேயும் சேரவும் முடியாது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நீதிபதியோட புள்ளைங்களை மட்டும்தான் சேர்ப்பாங்க... புரியுதாம்மா?’’ என ராமன் சொன்ன சமாதானத்தை, அந்தப் பெண் ஏற்றுக்கொண்ட மாதிரி தெரிய வில்லை. அதனால் `திமிர் பிடித்த பெண்ணாக இருப்பாளோ' என நினைத்தார்.

அப்போது டைப் செய்திருந்த இரண்டு காகிதங்களைக் கொண்டுவந்த கிளார்க் ராமன் முன்பாக வைத்தார். அந்த இரண்டு காகிதங்களையும் எடுத்து அவர் கவனமாகப் படித்தார். பிறகு, கையெழுத்துப் போட்டுக் காகிதங்களை எடுத்து கிளார்க்கிடம் கொடுத்து ``கவர் போட்டுடுங்க’’ எனச் சொன்னார். காகிதங்களை எடுத்துக்கொண்டு கிளார்க் வெளியே போனார்.

எதிரில் நின்றுகொண்டிருந்த பெண்ணையும் மூன்று பிள்ளைகளையும் ராமன் எரிச்சலுடன் பார்த்தார். `முதல் நாளிலேயே என்ன சனியனா இருக்கே’ என நினைத்தார். அவர்கள்மீது  கோபம் உண்டாயிற்று. கோபத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல், ``நின்னுக்கிட்டே இருந்து என்னைச் சங்கடப்படுத்தாதீங்க. போயிட்டு ஜூன் மாசம் வாங்கம்மா’’ எனச் சொன்னார். முன்னர் இருந்ததைவிட இப்போது அவருக்குப் பொறுமை குறைந்துவிட்டது என்பதை அவருடைய குரலே காட்டிக்கொடுத்தது. ராமன் சொன்னதற்குச் சம்பந்தம் இல்லாமல் அந்தப் பெண் சொன்னாள்... ``இந்த ஊர்ல இருக்க பயமா இருக்கு சார். அதனாலதான் கேட்கிறேன்.’’

``சொந்த ஊர்ல இருக்கிறதுக்கு என்னம்மா பயம்?’’ - நல்ல நகைச்சுவையைச் சொல்லிவிட்டது போல் ராமன் சிரித்தார்.

``இந்த ஊர்ல இருந்தா எங்களைக் கொன்னுடுவாங்க சார்.’’

``என்னம்மா சொல்ற?’’ எனக் கேட்ட ராமன் குழப்பத்துடன் தனவேலைப் பார்த்தார். அவர் தனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுபோல் உட்கார்ந்திருந்தார்.

``புருஷன் பொண்டாட்டி சண்டையா?’’ என்று ராமன் கேட்ட கேள்விக்கு, அந்தப் பெண் பதில் சொல்லவில்லை. அவளுக்கு வலது பக்கமாகக் கைகளைக் கட்டி நின்றுகொண்டிருந்த சந்தோஷ் குமார்தான் பதில் சொன்னான்...

``எங்க அப்பாவைச் சுளுக்கியால குத்திக் கொன்னுட்டாங்க சார்.’’

``என்னப்பா சொல்ற?’’ என ஆச்சர்யத்துடன் கேட்டார். அவருடைய முகமும் குரலும் மாறிவிட்டன. பையன் சொல்வது உண்மையா எனக் கேட்பது மாதிரி அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவளுடைய முகத்திலிருந்து எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை. அதிலிருந்த இறுக்கத்தை, களைப்பை அப்போதுதான் பார்த்தார். கழுத்தில் தாலி இல்லை. சாதாரண மணிகூட இல்லை. கைகளில் ரப்பர் வளையல்கூட இல்லை. பெரிய சுமையைத் தூக்கிக்
கொண்டிருப்பதுபோல நின்றுகொண்டிருந்தாள். மறுநொடியே பையனைப் பார்த்தார். பையனுக்கு மொட்டை அடிக்கப்பட்டு பத்து, இருபது நாள்கள்தான் ஆகியிருக்க வேண்டும்.

புதிதாக முளைத்த முடி முள்முள்ளாக நின்றுகொண்டிருந்தது. பக்கத்தில் நின்றுகொண்டிருந்த தினேஷ்குமாரின் தலையும் அப்படித்தான் இருந்தது. ஏழு, எட்டு வயது மதிக்கத்தக்கப் பெண் பிள்ளையைப் பார்த்தார். அந்தப்
பிள்ளை தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பதை, அப்போதுதான் பார்த்தார். அந்தப் பெண்ணின் முகத்தில் மட்டும் அல்ல, அவளின் பிள்ளைகளுடைய முகங்களிலும் உயிர்ப்பு இல்லை. மீண்டும் ஒவ்வொரு முகமாகப் பார்த்தார்.

நெடுநெடுவென உயரமாக இருந்த அந்தப் பெண், நல்ல கறுப்பாக இருந்தாள். கிளிப்பச்சை நிறத்தில் சேலை கட்டியிருந்தாள். முப்பத்தைந்து வயது தாண்டி இருக்காது. ஆனால், அறுபது வயது கிழவியின் முகம்போல இருந்தது. அவளின் உடலில் சதை என எங்கேயும் இல்லை. வந்ததில் இருந்து நட்டுவைத்த இரும்புக்கம்பி மாதிரி எப்படி ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்கிறாள்? அவள் மட்டும் அல்ல, மூன்று பிள்ளைகளுமே கை, கால்களை அசைக்காமல், இந்தப் பக்கம் அந்தப் பக்கம் எனப் பார்க்காமல், கால்மாற்றிக்கூட நிற்காமல், கட்டிய கைகளைக்கூடப் பிரிக்காமல், ஆடாமல் அசையாமல், கழுத்தைக்கூடத் திருப்பாமல் எப்படி ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்கின்றன? அவர்களுடைய முகத்தில் குழந்தைகளுக்கான அடையாளம் என எதுவுமே இல்லை. மீண்டும் அந்தப் பெண்ணையும் பிள்ளைகளையும் பார்த்தார். ``எதுவா இருந்தாலும் இப்ப டி.சி தர முடியாது. போயிட்டு வாங்க. ஐயாவைத் தொந்தரவு பண்ணாம கிளம்புங்க. உங்க குடும்பக் கதை பள்ளிக்கு அவசியம் இல்லாதது’’ என தனவேல் கறாராகச் சொன்னார். அவர் சொன்னதைப் பொருட்படுத்தாத மாதிரி, ராமனைப் பார்த்துத் தீர்மானமான குரலில் அந்தப் பெண் சொன்னாள்...

``நாங்க உசுரோட இருக்கணும்னா டி.சி-யைத் தாங்க சார்.’’

அந்தப் பெண்ணின் பேச்சில் திமிர்த்தனம் கலந்தது மாதிரி இருந்தது. ஆனால், அவளின் தோற்றமும் நின்றுகொண்டிருந்த விதமும் வேறாக இருந்தன. அவளை எப்படிப் புரிந்து கொள்வது என்று ராமன் குழம்பினார்.

``ஆகஸ்ட் மாசம் வரவேண்டிய புரொமோஷன், கோர்ட் வழக்குனு போய் ஆர்டர் வாங்கிட்டு வந்து, இன்னிக்குத்தான் ஜாயின் பண்ணியிருக்கேன்.  இந்த ஸ்கூலோட நிலைமை எனக்குத் தெரியாது. நான் விசாரிச்சுட்டுச் சொல்றேன். நீங்க போயிட்டு வாங்கம்மா. புள்ளைங் களை அழைச்சுட்டு எதுக்கு வந்தீங்க?’’ என்று ராமன் கேட்டார். அந்தப் பெண் சீக்கிரம் வெளியே போனால் போதும் என்று நினைத்தார். ஆனால், அந்தப் பெண்ணும் பிள்ளைகளும் வெளியே போகிற மாதிரி தெரியவில்லை. அதனால் ராமன் கேட்டார்...

``எப்படி ஆச்சு?’’

``வருசாவருஷம் நடக்கிற மாதிரிதான் இந்த வருஷமும் மாட்டுப் பொங்கல் அன்னிக்கு மாட்டுக்கு ஓட்டப்பந்தயம் வெச்சாங்க. பந்தயத்துல எங்க மாடு ஜெயிச்சுடுச்சு. அதனால மாட்டையும், எம் புருஷனையும் சுளுக்கியால குத்திக் கொன்னுட்டாங்க.’’

ராமன் எதுவும் பேசவில்லை. பேச வேண்டும் என்றும் தோன்றவில்லை. அந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தார்.

``நேத்துதான் கருமகாரியம் முடிஞ்சது. இன்னைக்கு சாயங்காலம் எங்க அம்மா ஊருக்குப் போறோம்.’’

ராமனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.  அந்தப் பெண் சொல்வது உண்மையா எனக் கேட்பதுபோல தனவேலைப் பார்த்தார். ராமன் எதற்காகத் தன்னைப் பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொண்டது மாதிரி, ``வருசாவருஷம் நடக்கிறது தான் சார்’’ எனச் சொன்னார். முன்பைவிட இப்போதுதான் ராமனுக்குக் கூடுதல் அதிர்ச்சியும் திகிலும் ஏற்பட்டன. பிறருக்குக் கேட்டுவிடப்போகிறது என்ற பயத்தில் கேட்பதுபோல, ``ஓட்டப் பந்தயத்துல மாடு ஜெயிக்கிறதுக்கும் மனுஷனை வெட்டுறதுக்கும் என்ன சம்பந்தம்?’’ எனக் கேட்டார். அதற்கு தனவேல் பதில் சொல்லவில்லை. அந்தப் பெண்தான் சொன்னாள்.

``மாட்ட வளர்த்தது அவுருதானே, மாடு அவரோடதுதானே?’’

``ஊரே கூடித்தானே பந்தயம் வெச்சிருப்பாங்க?’’

``எங்க மாடு ஜெயிக்கும்னு யாரும் எதிர்பார்க்கலை. அதான் பிரச்னையே.’’

``பந்தயத்தில யாரு மாடு ஜெயிச்சா என்ன...அதுக்குத்தானே போட்டி நடத்தியிருப்பாங்க?’’

``நாங்க காலனிக்காரங்க. எங்க மாடு காலனி மாடு.’’

ராமனுக்கு விஷயம் புரிந்த மாதிரி இருந்தது. ஆனாலும், குழப்பமாக இருந்தது.

``பந்தயம் எங்கே நடந்தது?’’

``மேலாயியம்மன் கோயில் முன்னால.’’

``அது எங்கே இருக்கு?’’

``அவங்க தெருவுல.’’

``நீங்க அந்தத் தெருவுல இல்லையா?’’

``நாங்க காலனித் தெரு.’’

``இத்தனை வருஷமா யாரோட மாடு ஜெயிச்சது?’’

``அவங்க மாடு.’’

``இத்தனை வருஷமா உங்க மாடு போட்டியில கலந்துக்கலையா?’’

``இதான் முதல் வருஷம். அவங்கதான் கூப்பிட்டாங்க. ஜெயிக்கணும்னு போகலை. வெடிபோட்டதுல கிராச்சிக்கிட்டு ஓடிப்போய் கோட்டைத் தாண்டிப்புடுச்சு.’’

``மாட்டுக்கு ஜெயிக்கணும்னு தெரியுமா?’’ என்று யாரிடம் என்று இல்லாமல் பொதுவாகக் கேட்டார் ராமன்.

அதற்கு தனவேலும் பதில் சொல்லவில்லை; அந்தப் பெண்ணும் பதில் சொல்லவில்லை. இருவருமே பதில் சொல்லாததால் ராமன், ``எதுக்கு வெடி போடுறாங்க?’’ என்று கேட்டார்.

``போடுவாங்க சார். போட்டியில கலந்துக் கிறவங்க எல்லாம் மாடுகளை ஓட்டியாந்து கோயிலுக்கு முன்னால நிறுத்திடுவாங்க. ரெண்டு பர்லாங் தூரத்துக்கு அடப்பு மாதிரி ரெண்டு பக்கமும் படலைக் கட்டிடுவாங்க. ஒரு இடத்தில கோட்டைக் கிழிச்சிடுவாங்க. மாடுங்க கூட்டமா நிற்கிற இடத்தில பெரிய பெரிய வெடியா வெச்சு வெடிக்கவிடுவாங்க. சத்தத்தில மிரண்டு மாடுங்க ஓடும். ஓடுற மாட்டுல எது முதல்ல கோட்டைத் தாண்டுதோ, அதுக்குப் பரிசு கொடுப்பாங்க. இதுக்காகவே மாட்டைப் பழக்குறவங்களும் இருக்காங்க.’’

``மாடு... பயத்திலதானே ஓடுது?”

ராமன் கேட்ட கேள்விக்குத் தனவேல் எந்தப் பதிலும் சொல்லவில்லை. அப்போதுதான் நினைவுக்கு வந்த மாதிரி அந்தப் பெண்ணிடம் ராமன் கேட்டார்...

``போலீஸ் கேஸ் எதுவும் ஆகலையாம்மா?’’

`` `மாடு முட்டி செத்துட்டான்’னு எழுதிட்டாங்க.”

``நீங்க ஒண்ணும் செய்யலையா?”

``ஊரே கூடி எழுதிக்கொடுத்தாங்க. நானும் கையெழுத்துப் போட்டுட்டேன் சார்.’’

அப்போது அந்தப் பெண் அழுவாள் என்று ராமன் எதிர்பார்த்தார். ஆனால், அழவில்லை. சிறு விசும்பல், தேம்பல் இல்லை. நெற்றியைச் சுருக்கவில்லை; முகத்தைச் சுளிக்கவில்லை; அசைந்து நிற்கவில்லை; அதிர்ந்து பேசவில்லை. ஒவ்வொரு வார்த்தையையும் எவ்வளவு நிதானமாகப் பேச முடியுமோ அவ்வளவு நிதானமாகப் பேசினாள். மனம் உடைந்த மாதிரியோ, இரக்கத்தைக் கோரும் விதமாகவோ பேசவில்லை. அறைக்குள் நுழையும்போது அவளுடைய முகம் எப்படி இறுகிப்போயிருந்ததோ அந்த இறுக்கம் துளிகூட மாறாமல் இருந்தது.

திடீரென நினைவுக்கு வந்த மாதிரி தனவேலிடம், ``உங்க ஊர் எங்கே இருக்கு?’’ என ராமன் கேட்டார்.

``பக்கத்துலதான். பத்து கிலோமீட்டர் தூரம் வரும் சார்.’’

``அங்கேயும் மாட்டுக்கு ஓட்டப்பந்தயம் நடக்குமா?’’

``நடக்கும் சார்’’ என தனவேல் சொன்னதும், அடுத்து எதுவும் கேட்க வேண்டாம் என்று முடிவு எடுத்ததுபோல் பேசாமல் இருந்தார். ரொம்பக் களைப்படைந்த மாதிரி தண்ணீர் குடித்தார். அந்தப் பெண்ணிடமும் தனவேலிடமும் நிறையக் கேள்விகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. மறுநொடியே கேட்கக் கூடாது, தவறாகிவிடும் என வாயை மூடிக்கொண்டார். அந்தப் பெண்ணை வெளியே அனுப்புவதற்கான வழிகளைப் பற்றி யோசித்தார். முன்பு சொன்னதுபோல ஒரே வார்த்தையில், ‘முடியாது போ’ எனச் சொல்ல, இப்போது அவருக்கு மனம் வரவில்லை. என்ன சொல்லி அனுப்பலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது, ஓர் ஆசிரியை உள்ளே வந்தார்.

``சொல்லுங்க டீச்சர்’’ என ராமன் கேட்டார்.

``நாளைக்கு நான் சி.எல் சார்’’ எனச் சொன்னதோடு விடுமுறைக்கான விண்ணப்பத்தையும் கொடுத்தாள். விண்ணப்பத்தை வாங்கிக்கொண்டு, ``அவசர வேலையாம்மா?’’ எனக் கேட்டார்.

``நாளைக்கு என் பொண்ணுக்கு பர்த் டே சார்.’’

``ஓ... அப்படியா? என்னோட வாழ்த்துகளைச் சொல்லுங்க.’’

``தேங்க்ஸ். வர்றேன் சார்.’’

``வாங்கம்மா.’’

அந்த ஆசிரியை வெளியே போகும்போதுதான் பார்த்தார். நல்ல குள்ளமாக, குண்டாக, நல்ல நிறமாக இருந்ததை. கழுத்தில் ஒரு கைப்பிடிச் சங்கிலி கிடந்ததையும் பார்த்தார். அந்த ஆசிரியையின் பெயர் என்ன என்று விடுமுறை விண்ணப்பத்தில் பார்த்தார். பரிமளம். கைக்கடிகாரத்தைப் பார்த்தார். மணி நான்கு. நேரத்தைப் பார்த்ததும் அவசரப்பட்ட மாதிரி எதிரில் நின்றுகொண்டிருந்த பெண்ணிடம்,

``சரி... போயிட்டு வாங்கம்மா’’ எனச் சொன்னார்.

``என்னால இந்த ஊர்ல இருக்க முடியலை சார்.’’

``நான் ஒரு தப்பும் பண்ணலைம்மா’’ எனச் சொல்லிவிட்டு லேசாகச் சிரிக்க முயன்றார் ராமன். `எப்படியாவது அந்தப் பெண்ணை வெளியே அனுப்பிவிட்டால் போதும்' என நினைத்தார். ஊர்ப் பிரச்னை நமக்கு எதற்கு என நினைத்தார். மே மாதம்வரை ஓட்டிவிட்டு சொந்த மாவட்டத்துக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிக்கொண்டு போய்விட வேண்டும். எத்தனை லட்ச ரூபாய் செலவானாலும் பரவாயில்லை. ஊர் ரொம்ப மோசம்போல் இருக்கிறது என நினைத்தார். அப்போது அந்தப் பெண் அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள்.

``எனக்கும் என் புள்ளைங்களுக்கும் இந்த ஊர் வேணாம் சார்.’’

``ஊரை விட்டுப்போயிட்டா சொத்துப்பத்து எல்லாம் என்னாகிறது?’’

``அப்படி ஒண்ணும் இல்லை சார். மாமனா, மாமியா செத்துட்டாங்க. மூணு நாத்தனாரும் கல்யாணம் கட்டிக்கிட்டுப் போயிட்டாங்க. வீடு ஒண்ணுதான். அதுவும் கூரை.’’

அந்தப் பெண்ணுக்கு என்ன பதில் சொல்வது என ராமனுக்குப் புரியவில்லை. சொன்னதையே சொல்கிறாள். தான் விரும்பியதையே சொல்கிறாள். அடுத்தவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்காத பெண்ணாக இருக்கிறாளே என்று நினைத்தாலும், அவளுடைய நிலையை நினைத்ததும் அவருக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் சொல்லலாமா என்று யோசித்தார். அந்தப் பெண்ணின் முகத்தைக் கவனமாகப் பார்த்தார். பல நாள்களாகத் தூங்காத மாதிரி இருந்தது. தொடர்ந்து அந்த முகத்தை அவரால் பார்க்க முடியவில்லை. அந்தப் பெண்ணிடம் ஏதாவது பேசி அனுப்ப வேண்டும் என்று நினைத்தார். என்ன பேசுவது என்பதுதான் புரியவில்லை. அதனால், ``பேர் என்ன?” என்று கேட்டார்.

p70a.jpg

``செல்வமணி.”

``உங்க வீட்டுக்காரர் பேரா?”

``அவர் பேரு முத்து.’’

``சரிம்மா... போயிட்டு வாங்க.’’

``என் புருஷனைச் சுளுக்கியால குத்திக் கொன்னவங்களை தினம்தினம் பார்த்துக்கிட்டு இந்த ஊர்ல என்னாலயும் எம் புள்ளைங்களாலயும் இருக்க முடியாது சார். இந்த மண்ணே வேணாம்னுதான் போறேன்.’’

``உங்க விருப்பப்படி செய்யுங்க. முழு ஆண்டு பரீட்சைகூட எழுத வேணாம். ஆறாவது ஏழாவதுதானே? நானே பாஸ் போட்டு எழுதிவெச்சிருக்கேன். ஜூன் மாசம் வந்து வாங்கிட்டுப் போங்க. அதான் என்னால செய்ய முடியும்.’’

அந்தப் பெண் ஐந்நூறு ரூபாய் நோட்டு ஒன்றை ராமனின் மேஜைமீது வைத்தாள். அதைப் பார்த்ததும் அவருக்குக் கண்மண் தெரியாத அளவுக்குக் கோபம் வந்துவிட்டது.

``என்னம்மா செய்ற? பணத்துக்காகத்தான் உன்னை அலைய விடுறேன்னு நினைச்சாயா? சட்டத்தில இடம் இருந்தா ஒரு நிமிஷத்தில கொடுத்திருப்பேன். முதல்ல பணத்தை எடு. என்னோட முப்பது வருஷ சர்வீஸ்ல பசங்ககிட்டே இருந்து ஒத்த பைசா வாங்கினவன் இல்லை, தெரியுமா? நாலு வார்த்தை கூடுதலா பேசினது தப்பாபோயிடுச்சு’’ எனச் சொல்லி ராமன் கத்தியதும், அந்தப் பெண் பணத்தை எடுத்துக்கொண்டாள். முகத்தைச் சுளித்துக்கொண்டே, ``போயிட்டு வாங்க’’ என்று சொன்னார். அந்தப் பெண் வெளியே போகவில்லை. பிள்ளைகளும் அசையவில்லை. எவ்வளவு சொல்லியும் அசைய மறுக்கிறார்களே என ஆச்சர்யப்பட்டு அந்தப் பெண்ணையும், அந்தப் பிள்ளைகளையும் பார்த்தார். நான்கு பேரின் தலைகளிலும் எண்ணெய் தடவாததால், அது அவர்களுடைய தோற்றத்தை மேலும் விகாரமாக்கியது. அதனால் மனம்மாறிய ராமன், ``நானும் மனுஷன்தான். செய்ய முடிஞ்சா செய்ய மாட்டேனா?” எனத் தனக்குத்தானே சொல்லிக்கொள்வது மாதிரி சொன்னார்.

``மாட்டைச் சாவடிச்சதோட விட்டிருக்கலாம்.

‘உன் மாடு எப்படி ஜெயிக்கலாம்?’னு கேட்டுக் கேட்டு, ஊரே கூடி, சுளுக்கியால குத்தினதை என் ரெண்டு கண்ணாலயும் நான் பார்த்தேன் சார். என் மூணு புள்ளைங்களும் பார்த்துச்சு.’’

``அந்தப் பேச்சை விடும்மா. அதுக்கும் பள்ளிக்கூடத்துக்கும் சம்பந்தம் இல்லை.’’

``பிணத்தை ஒரு நாள் வீட்டுல போட்டு எடுக்கக்கூட விடலை. ஆசை தீர பிணத்தைக் கட்டிப்புடிச்சு அழுதிருப்பேன்னு நினைக்கிறீங்க? உடனே பிணத்தை எடுத்துக் கொளுத்தச் சொல்லிட்டாங்க.’’

``கேட்கிறதுக்குக் கஷ்டமா இருக்கு.

2013-லையும் தமிழ்நாட்டுல இப்படி நடக்குதுன்னு சொன்னா, உலகத்துல யாருமே நம்ப மாட்டாங்க’’ என்று ரொம்பக் களைப்படைந்த மாதிரி ராமன் சொன்னார். பிறகு, ரொம்பவும் உடைந்துபோன குரலில் கேட்டார்...

``வயசு என்னா இருக்கும்?’’

``முப்பத்தெட்டு. கறி எடுக்கிற அன்னிக்கி, மீன் எடுக்கிற அன்னிக்கி அவர்தான் குழம்பு வைப்பார். `கறி தின்னா, மீனு தின்னா கண்ணுல தண்ணி வரணும்’னு சொல்வார். அப்படித்தான் சாப்பிடுவார். புள்ளைங்களுக்கும் அப்படித்தான் தருவார்.’’

``நீ பிறந்த ஊர்லேயும் மாட்டு ஓட்டப்பந்தயம் நடக்குமா?”

``நடக்கும்.”

``சரிம்மா... நான் யோசிச்சுச் சொல்றேன். போயிட்டு வாங்க. பசங்க வேற நிற்கிறாங்க.’’

``கல்யாணமாகி வந்த பதினைஞ்சு வருஷத்துல அவர் இல்லாம நான் அந்த வீட்டுல ஒரு நாள்கூட படுத்திருந்ததில்லை சார்’’ என அந்தப் பெண் சொன்னாள். இப்போதாவது அந்தப் பெண் அழுகிறாளா என்று ராமன் பார்த்தார். அவள் அழவில்லை. ஒரு சொட்டுக் கண்ணீர்கூட இல்லை. தாயின் இரண்டு கால்களுக்கிடையே கைகளைக் கட்டியவாறு இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என்று தலையைக்கூட அசைக்காமல் நின்றது நின்றபடி நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்பிள்ளையைப் பார்த்தார். அந்தப் பிள்ளை, முகத்தில் வழிந்த வியர்வையைக்கூடத் துடைக்காமல் நின்றுகொண்டிருந்தது. மனதில் என்ன தோன்றியதோ, ``இங்கே வா” என்று கூப்பிட்டார். அந்தப் பிள்ளை ராமனுக்கு அருகில் வந்து நின்றது.

``பேரு என்ன?”

``மேலாயியம்மா.”

``எந்தச் சாமி கோயிலுக்கு முன்னால மாட்டுக்கான ஓட்டப்பந்தயம் நடந்தது?”

``மேலாயியம்மன்.”

``உங்க அப்பாவ எந்தக் கோயிலுக்கு முன்னால வெட்டுனாங்க?”

``மேலாயியம்மன் கோயிலுக்கு முன்னால சார்.’’

``ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை. போயிட்டு வாங்க” எனச் சொன்ன ராமன், சட்டென எழுந்து வெளியே போனார்.

ராமன் வெளியே போனது செல்வமணிக்கு எரிச்சலை உண்டாக்கியது. தான் வந்த காரியம் நடக்குமோ நடக்காதோ என்ற கவலை உண்டாயிற்று. என்ன சொன்னாலும் புரிந்துகொள்ள மறுக்கிறாரே என்ற வருத்தம் ஏற்பட்டது. என்ன சொன்னால் டி.சி-யைத் தருவார் என்று யோசித்தாள். எதைச் சொல்வது?

பொங்கல் அன்று பதினோரு மணிக்கு, கழுவுவதற்காக மாடுகளை ஆற்றங்கரைக்கு ஓட்டிக் கொண்டுபோகும்போது வழியில் முத்துவைப் பார்த்த ஊராட்சி மன்றத் தலைவரின் தம்பி அன்பரசன், ``பந்தயம் நடக்கப்போகுது. உன் மாட்டையும் ஓட்டிக்கிட்டுப் போய் விடு” எனச் சொன்னார்.

``ஊர் வம்பாகிடும்... வேண்டாங்க.”

``உன் மாடு ஜெயிக்கப்போகுதா? பார்க்கிறதுக்கே எலும்பும் தோலுமா அறுப்புக்கு விடுற மாடு மாதிரிதான் இருக்கு. அறுப்புக்கே எவனும் வாங்க மாட்டான்’’ எனச் சொல்லி அன்பரசன் சிரித்தார். அதற்கு முத்து எதுவும் சொல்லாமல் மாடுகளை ஓட்டிக்கொண்டு நடக்க முயன்றான்.

``கூட்டத்தோட கூட்டமாக நிற்கட்டும்... விடுடா’’ என்று சொல்லிக் கட்டாயப்படுத்தி முத்துவின் கையில் இருந்த மாட்டின் கயிறுகளைப் பிடுங்கி, பக்கத்திலிருந்த ஆளிடம் கொடுத்து ``ஓட்டிக்கிட்டு போ” எனச் சொன்னார். பக்கத்தில்தான் மாடுகளுக்கு நடக்கவிருந்த ஓட்டப்பந்தயத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.

``வேண்டாங்க... வேண்டாங்க...’’ எனக் கெஞ்சிய முத்துவின் குரல் அன்பரசனின் காதில் விழுந்த மாதிரி தெரியவில்லை. சிரித்துக்கொண்டே பந்தயம் நடக்கவிருந்த இடத்துக்குப் போனார். வேறு வழியின்றி முத்து அவருக்குப் பின்னால் போனான். உள்ளூர் ஆள்களும் சரி, வெளியூர் ஆள்களும் சரி, முத்து வந்ததற்காகவும், அவனுடைய மாடுகள் வந்ததற்காகவும் எவரும் ஒரு கேள்விகூடக் கேட்கவில்லை; விரட்டி அடிக்கவில்லை. அவனையும் அவனுடைய மாடுகளையும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவரவர் அவரவருடைய மாடுகளைத் தயார்செய்வதிலும், எப்படி ஜெயிக்கவைக்க வேண்டும் என்பதிலுமே கவனமாக இருந்தனர்.

மேலாயியம்மன் கோயிலிலிருந்து ஒரு பர்லாங் தூரம் வரை, இருபது அடி தூரம் இடைவெளி விட்டு இரண்டு பக்கமும் கழிகளால் தடுப்பு வேலி கட்டியிருந்தார்கள். தடுப்பு வேலியை ஒட்டி, ஆண்களும் பெண்களும் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். பல ஊர்க் கூட்டம்.

இருநூறு மாடுகளுக்கு மேல் இருக்கும். மேலாயியம்மன் கோயில் வாசலுக்கு முன் தடுப்புவேலிக்குள் ஓடும்விதமாக மாடுகளை நிறுத்திவைத்திருந்தார்கள். வெளியூர்களில் இருந்து பந்தயத்துக்கு மாடுகளை ஓட்டிவந்தவர்களும், பல ஊர் முக்கியஸ்தர்களும் எப்போது வெடிவைத்து மாடுகளை விரட்டலாம் என ஒன்றுகூடி முடிவெடுத்ததும், ஒரு கூட்டத்தினர் ஓடிப்போய் மாடுகள் நின்றுகொண்டிருந்த இடத்தில் பெரியபெரிய வெடிகளாகவும் சரம்சரமாகவும் வைத்து, வெடிக்கச் செய்ததுமே மிரண்டுபோன மாடுகள் ஓட ஆரம்பித்தன. காலில் ஏற்பட்ட வெடிக்காயத்துடன் ஓடிப்போய் முத்துவின் மாடு எல்லைக்கோட்டைத் தாண்டி ஓடிவிட்டது.

``யாரோட மாடு, யாரோட மாடு?” எனக் கேட்டு மொத்தக் கூட்டமும் கத்தியது. எந்த ஊர் மாடு? முத்துவுக்குத் தனது மாடு ஜெயித்துவிட்டது என்பதுகூடத் தெரியாமல், அதைத் தேடி அலைந்துகொண்டிருந்தான். மாடுகளைக் கண்டுபிடித்து, கயிறுகளைக் கையில் பிடித்து இழுத்தபோதுதான் ஏழு எட்டு பேர் ஓடிவந்து ``இது உன்னோட மாடா?” எனக் கேட்டனர்.

``ஆமாங்க.”

``இது எப்படிடா ஜெயிச்சது?’’ எனக் கேட்டபோதுதான் தனது மாடு ஜெயித்திருக்கிறது என்ற விஷயமே முத்துவுக்குத் தெரிந்தது. விஷயம் தெரிந்ததும் அவனுக்குக் கடுமையான கோபம் உண்டாயிற்று.

``எந்த மாடுங்க?’’ எனக் கேட்டான்.

``இந்த மாடுதான்” எனக் காலில் காயம்பட்டிருந்த மாட்டை ஒரு பையன் அடையாளம் காட்டினான். உடனே அந்த மாட்டை முத்து சாட்டையால் சக்கையாக அடிக்க ஆரம்பித்தான். தன் சினம் தீரும் மட்டும் எட்டி எட்டி உதைத்தான். கெட்டக்கெட்ட வார்த்தைகளைச் சொல்லித் திட்டினான். ``வா... உன்னை அப்புறம் வெச்சுக்கிறேன்’’ என மாடுகளை ஓட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். அவனைத் தொடர்ந்து ஏழு எட்டுப் பேர் பின்னால் வந்தனர். கோயில் பக்கம் இருந்து இன்னொரு கூட்டம் அவனை நோக்கி வந்து மறித்துக்கொண்டது. கூட்டத்தில் இருந்த பஞ்சாயத்துத் தலைவர் கேட்டார்...

``பரிசு, பணம் வாங்காம ஏன் கிளம்பிட்டே?’’

``அதெல்லாம் ஒண்ணும் வேணாங்க.’’

``நீ எப்படி இங்க வந்த, உன் மாடு எப்படி வந்துச்சு?’’ - தலைகால் புரியாத கோபத்தில் கேட்டார்.

``நான் ஆத்துக்குத்தான் போனேன். உங்க தம்பிதான் மாட்டை விடுடானு இழுத்துக்கிட்டுப் போனார். நான் முடியாதுனுதாங்க சொன்னேன்.’’

``அவனுங்க `சாவுடா’னு சொல்வானுங்க.

நீ சாவுவியா?” எனக் கேட்டபோது ஆத்திரத்தில் அவருக்கு உடல் நடுங்கியது.

``தப்பு நடந்துபோச்சுங்க” எனச் சொன்னான் முத்து. பிறகு, சாட்டையால் மாட்டை அடித்தான். அடியைத் தாங்க முடியாமல் ஓட முயன்றது மாடு. அதை ஓட்டிக்கொண்டு நடக்க முயன்றான். நடக்கவிடாமல் அவனையும் மாடுகளையும் மறித்துக்கொண்டு நின்றது கூட்டம்.

``பத்து ஊர் மாடு ஓடுற பந்தயத்துல உன்னோட மாடு ஜெயிச்சதுன்னு சொல்ல முடியுமா?

நீ ஜெயிக்கவா பந்தயம் நடத்தினோம்?’’

- ஆத்திரத்தில் கத்தினார் தலைவர்.

``தப்பு நடந்துபோச்சுங்க. வேணும்னு செய்யலை. ஊர் நடைமுறை எனக்குத் தெரியாதுங்களா? இப்பவே நேரா ஓட்டிக்கிட்டுப் போய் அறுப்புகாரன்கிட்ட தள்ளிவிட்டுட்டு வந்துடுறேன்” - பணிவுடன் சொன்னான் முத்து. அவனின் பேச்சைக் கேட்கும் நிலையில், அந்த இடத்தில் யாரும் இல்லை.

``நீ மாட்டை வித்துட்டாப்புல இன்னிக்கி பத்து ஊர்க்காரன் முன்னால பட்ட அசிங்கம் போயிடுமா?” - கோபமாகக் கேட்டார் தலைவர். நேரமாக நேரமாக அவரின் குரலிலும் முகத்திலும் வேகம் கூடிக்கொண்டிருந்தது. சுற்றியிருந்த வர்களும் கோபமாகக் கத்திக்கொண்டிருந்தனர். அதில் ஓர் ஆள், ``நாம எல்லாம் என்ன மாடுங்கடா வளர்த்தோம்? அதை எல்லாம் அறுத்துப்போட்டா என்ன?” எனக் கேட்டான். ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்காத தங்களுடைய மாடுகளைக் கெட்டவார்த்தைகள் சொல்லிப் பச்சைப் பச்சையாகத் திட்ட ஆரம்பித்தனர். வேகம் வந்த மாதிரி கூட்டத்தில் இருந்த ஒரு ஆள் சாட்டைக்குச்சியுடன் தனது மாட்டை அடித்து நொறுக்குவதற்காக ஓடினான்.

p70.jpg

``உங்க தெருவுலதான் யாருகிட்டேயும் மாடு இல்லையே. உனக்கு மட்டும் எப்படி வந்துச்சு?” - ஆத்திரத்தோடு தலைவர் கேட்டார்.

``மணல் லோடு அடிக்கலாம்னு போன வாரம்தாங்க வாங்கியாந்தேன்.”

``சரிதான்... அதனாலதான் மாட்டைப் பந்தயத்துக்கு ஓட்டியாரச் சொல்லியிருப்பான்.”

``தப்பு நடந்துபோச்சுங்க.’’

செல்வமணியும் அவளுடைய பிள்ளைகளும் ஓடிவந்தனர். பெரியகூட்டத்துக்கு நடுவில் முத்துவும் மாடுகளும் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துப் பதறினர். பதற்றத்தில் செல்வமணி அழ ஆரம்பித்தாள். கூட்டத்தில், என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. என்ன செய்வது எனத் தெரியவில்லை. செல்வமணியால் அழ மட்டுமே முடிந்தது. அவளைப் பார்த்து அவளுடைய பிள்ளைகளும் அழ ஆரம்பித்தனர். அப்போது பேன்ட்டும் டீ சர்ட்டும் போட்டிருந்த பையன் ஒருவன், ``இந்த மாட்டாலதானே அசிங்கமாகிடுச்சு?” எனச் சொல்லி முத்துவின் மாட்டை எட்டி உதைத்தான். அவனுக்குப் பக்கத்தில் இருந்த பையனுக்கு என்ன தோன்றியதோ, ``கண்ணு இருந்ததாலதானே வழியைப் பார்த்து ஓடின, இனிமே உனக்குக் கண்ணு வேண்டியது இல்லை” எனச் சொன்ன வேகத்திலேயே கையில் வைத்திருந்த தார்க்குச்சியால் மாட்டின் இரண்டு கண்களிலும் மாறிமாறிக் குத்தினான். கண்கள் இரண்டும் வெளியே வந்துவிட்டன. வலியைத் தாங்க முடியாமல் மிரண்டு ஓட முயன்ற மாட்டின் மூக்கணாங்கயிற்றை, மூன்று நான்கு பையன்கள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டனர்.

வலியில் மாடு இப்படியும் அப்படியுமாக உடம்பை அசைத்தபோது ஓர் ஆளின் காலை மிதித்துவிட்டது. வலியில் அந்த ஆள் ``வெட்டுங்கடா” எனக் கத்தியதுதான், ஏற்கெனவே தயாராக இருந்ததுபோல், ஓர் ஆள் மாட்டின் வயிற்றில் சுளுக்கியால் வெறிகொண்டது போல் குத்தினான். இரண்டாவது குத்திலேயே மாட்டின் குடல் கீழே சரிந்துவிட்டது.

``பிஞ்ச செருப்பு எல்லாம் எங்களை ஜெயிக்கிறதா?”

``இல்லை சாமி... இல்லை சாமி...’’

``புறம்போக்கு இடத்தில இருக்கிறவன் எல்லாம் எங்களை ஜெயிக்கிறதா?”

``இல்லை சாமி... இல்லை சாமி.’’

``பன்னிக் கறி, மாட்டுக் கறி திங்கிறவன் எல்லாம் எங்களை ஜெயிக்கிறதா?”

``இல்லை சாமி... இல்லை சாமி...”

தலைவர் ஆக்ரோஷத்தோடு கேட்கக் கேட்க, அழுதபடியும் கும்பிட்டபடியும் முத்துவும் செல்வமணியும் பதில் சொன்னார்கள்.

``இதோடு என்னை விட்டுடுங்க” எனச் சொல்லி முத்துவும் செல்வமணியும் கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவர் காலிலும் விழுந்து விழுந்து கும்பிட்டுக் கெஞ்சினர்; அழுதனர். தலைவரின் காலில் விழுந்து கும்பிடும்போது முத்துவின் முதுகில் சுளுக்கியால் யாரோ குத்தினார்கள். அடுத்த குத்து வயிற்றில் இறங்கியது.

மாடும் முத்துவும் பிணமானது தெரிந்ததும்தான் கூட்டம் அமைதியாகி, கோபம் தணிந்த மாதிரி இருந்தது. முத்துவையும் மாட்டையும் சுளுக்கியால் குத்திய மூன்று பையன்களிடமும் தலைவர் ஏதோ சொன்னார். அடுத்த நொடியே அந்தப் பையன்கள் கூட்டத்தில் இருந்து விலகி, வேகமாக நடக்க ஆரம்பித்தனர்.

முத்து செத்துவிட்டான் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு அவனுடைய தெருவில் இருந்தவர்கள் ஓடிவந்து கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்தனர். தலைவரும் ஊர்க்காரர்களும் சேர்ந்துகொண்டு மாடு முட்டிச் செத்துவிட்டதாகச் சொன்னார்கள். மாடு முட்டி முத்து செத்ததால்தான், ஆத்திரத்தில் மாட்டைக் கொன்றதாகச் சொன்னார்.

``பொய்” எனச் சொல்லிக் கத்திய செல்வமணியின் வாயில் அன்பரசன் ஓங்கி அடித்து, ``உசுரு வேணுமா... வேணாமா?’’ எனக் கேட்டார். மொத்த ஊரும் அதே கேள்வியைத்தான் அவளிடம் கேட்டது.

``மாடு முட்டித்தான் செத்தான். பிணத்தை எடுத்துட்டுப் போங்க’’ எனத் தலைவர் சொன்னார். ``முடியாது’’ என முத்துவின் தெருக்காரர்கள் சொன்னதும், தலைவருக்கும் ஊர்க்காரர்களுக்கும் கோபம் வந்துவிட்டது.

``எப்பவும்போல ஊர் நல்லபடியா இருக்கணும்னா பிணத்தை எடுத்துட்டுப்போங்க. முடியாதுன்னா விவகாரம் பெருசாகிடும். உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன். நாங்க வேணும், ஊரு வேணும்னா நாங்க சொல்றதைச் செய்ங்க’’ எனத் தலைவர் சொன்னார். ஊரும் அதையே சொன்னது. செல்வமணியும் அவளுடைய தெருக்காரர்களும், ``முடியாதுங்க” எனச் சொன்னபோது சட்டென, ``உங்க தெரு இருக்கணுமா... வேணாமா?’’ என ஒரே வார்த்தையாகத் தலைவர் கேட்டார். அதையே அந்த இடத்தில் இருந்த கூட்டமும் கேட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைக்கட்டுக்காரர்கள் சொல்கிறார்கள், என்ன செய்வது என்று முத்துவின் தெருக்காரர்கள் யோசித்தார்கள். முத்துவுக்கு அண்ணன், தம்பி, மாமன், மச்சான், அப்பா, அம்மா என யாரும் இல்லாததால், அந்த இடத்தில் பெரிய அளவில் தகராறு செய்ய செல்வமணியால் முடியவில்லை.

``போலீஸு, கீலீஸுன்னு போகக் கூடாது. மாடு முட்டி செத்த கேஸ். நிற்காது. மாடு முட்டி பல ஊர்ல ஆளுங்க சாகிறது தெரிஞ்ச விஷயம்தான். மீறிப்போய் போலீஸை ஊருக்குள்ளார கொண்டாந்தா என்ன நடக்கும்னு உங்களுக்கே தெரியும்” எனத் தலைவர் மிரட்டியதும், முத்துவின் தெருக்காரர்கள் ராத்திரியில் வீட்டைக் கொளுத்திவிடுவார்களோ எனப் பயந்தனர். இரண்டாயிரம், மூவாயிரம் பேர் கூடி நிற்கிற இடத்தில், நூறு பேர் என்ன செய்ய முடியும்? சிலர், ``இவன் எதுக்கு மாட்டை ஓட்டப்பந்தயத்துக்கு ஓட்டிட்டுப்போனான்?” என செல்வமணியிடம் கேட்டனர். ஊர் வம்பைக் கொண்டுவந்துவிட்டானே என்று முத்துவைத் திட்டினார்கள். அவன் பொதுவாக அடாவடியான ஆள் இல்லை. ஊர் வம்புக்கு, சண்டைக்குப் போகாத ஆள். தான் உண்டு, தன் வேலை உண்டு என இருக்கிற ஆள். பந்தயத்துக்குத் தானாக மாடுகளை ஓட்டிக் கொண்டுபோயிருக்க மாட்டான் என எல்லாருக்கும் தெரியும். ஆனாலும், பந்தயத்துக்குப் போனது தவறு எனச் சொன்னார்கள். கூச்சலாக இருந்தது. ஆளாளுக்குப் பேசினார்கள்; கத்தினார்கள்; திட்டினார்கள். பதைபதைப்பில் யாருடைய பேச்சைக் கேட்பது, என்ன செய்வது எனத் தெரியாமல் செல்வமணி குழம்பிப்போனாள்.

``பிணத்தை எடுக்கிற செலவை நாங்க பார்த்துக்கிறோம். போலீஸுக்கான செலவையும் பார்த்துக்கிறோம். பிணத்தை உடனே எடுக்கணும்; புதைக்கக் கூடாது... எரிக்கணும்’’ எனத் தலைவர் சொன்னார். செல்வமணிக்கும் அவளுக்கு ஆதரவாகப் பேசியவர்களுக்கும் என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஓர் ஆளுக்காக ஊரை எதிர்க்கவும் பகைக்கவும் முடியுமா?

`` `ஓட்டப்பந்தயத்துல சிராச்சுக்கிட்டு ஓடும்போது மாடு முட்டிச் செத்துட்டான்’னு எழுதிக் கையெழுத்துப் போடுங்க’’ எனத் தலைவர் கேட்டார்; ஊரும் கேட்டது.

``சுளுக்கியால குத்துனதை என் ரெண்டு கண்ணாலையும் பார்த்தேன்’’ எனச் சொன்ன செல்வமணியின் கதறல் யாருடைய காதிலும் விழவில்லை. தலைவரும் ஊராரும், ``மாடு முட்டித்தான் முத்து செத்தான்’’ எனச் சொன்ன பேச்சுத்தான் எடுபட்டது. ஊர் கூடிவிட்டால், கூட்டம் கூடிவிட்டால் அதுதான் சட்டம்.

யாருக்கும் தெரியாமல் போலீஸுக்குப் போகலாமா என்ற எண்ணம் செல்வமணிக்கு உண்டானது. போலீஸுக்குப் போகலாம்; கேஸ் கொடுக்கலாம். சாட்சி சொல்ல யார் வருவார்கள் என்ற கேள்வி எழுந்தது. சாமி ஊர்வலத்தின்போது கும்பிட்டதற்காக நான்கு வருஷங்களுக்கு முன்பு ஜெயலட்சுமியின் கண்களைப் பிடுங்கிய ஊர். தேர் வடத்தைத் தொட்டுவிட்டாள் என ஒன்பது வயதுப்பிள்ளை என்றுகூடப் பார்க்காமல், இரண்டு வருஷங்களுக்கு முன்பு ரோஸியின் கையில் தீயைவைத்துக் கொளுத்திய ஊர். அப்படிப்பட்ட ஊரை எதிர்த்துக்கொண்டு போலீஸுக்குப் போக முடியுமா, போனாலும் ஜெயிக்க முடியுமா? ஊரைப் பகைத்துக்கொண்டு போலீஸுக்குப் போனதற்காக இரவில் வீட்டைக் கொளுத்தலாம்; தனியாக மாட்டிக்கொண்டால் மானபங்கம் செய்யலாம். வீட்டைக் கொளுத்தினால் நான்கு உயிர் போகும். மானபங்கம் நடக்கும். எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு போலீஸுக்குப் போகலாம் என்றால் தனக்கென்று யார் இருக்கிறார்கள்? தனக்கும் அண்ணன், தம்பிகள் இல்லை. முத்துவுக்கும் அண்ணன், தம்பிகள் என்று யாரும் இல்லை. முத்துவுக்காக யார் சண்டை போடுவார்கள்? சண்டை போட்டாலும் எத்தனை நாள் போடுவார்கள்? இரவும் பகலும் பிணத்துடன் தான் ஒருத்தி மட்டும்தானே இருக்க வேண்டும் என்று யோசித்த செல்வமணி, ``மாட்டுக்காக நடத்தப்பட்ட ஓட்டப்பந்தயத்தில் மாடு முட்டி முத்து இறந்துவிட்டான்’’ என எழுதிய பேப்பரில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாள். கையெழுத்துப் போடும்போது அவள் அழவில்லை. அவளுடைய கைகள் நடுங்கவில்லை.  

டந்த முழுக் கதையையும் சொன்னாலாவது டி.சி தருவாரா என்று யோசித்தாள் செல்வமணி. டி.சி-யை வாங்காமல் இந்த இடத்தைவிட்டுப் போகக் கூடாது என்பது மாதிரி செல்வமணியும் அவளுடைய பிள்ளைகளும் நின்ற இடத்திலேயே நின்றுகொண்டிருந்தனர்.

ராமன் உள்ளே வந்த வேகத்திலேயே ``கிளம்புங்கம்மா... மணி ஆகிடுச்சு’’ எனக் கடுப்பாகச் சொன்னார்.

``ஒரு உசுரு போயிடுச்சு. இந்த மூணு புள்ளைங்களோட உசுராவது எனக்கு வேணும். அதுக்காகவாவது டி.சி-யைத் தாங்க சார்’’ எனச் சொல்லிவிட்டுக் கையெடுத்துக் கும்பிட்டாள். அப்போதுதான் அவளுடைய கண்களில் இருந்து சரம்சரமாகக் கண்ணீர் வழிந்தது!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.