Jump to content

‘சின்ன கபாலி’ ராகவா லாரன்ஸ், 'காஞ்சனா' ஆவி கூட்டணி எப்படி? - 'சிவலிங்கா' விமர்சனம்


Recommended Posts

‘சின்ன கபாலி’ ராகவா லாரன்ஸ், 'காஞ்சனா' ஆவி கூட்டணி எப்படி? - 'சிவலிங்கா' விமர்சனம்

 
 

எத்தனை ஆவிகள் வந்தாலும், உடம்புக்குள் அட்மிட் செய்து நடிப்பதில் கெட்டிக்காரரான ராகவா லாரன்ஸின் மீண்டும் ஒரு ஹாரர் த்ரில்லர் படம் ‘சிவலிங்கா’. 

சிவலிங்கா

ரயில் தண்டவாளத்தில் இறந்த நிலையில் கிடக்கிறார் சக்தி. அது கொலையா தற்கொலையா என்று கண்டுபிடிக்கும் சிபிசிஐடி போலீஸ் தான் மொட்ட சிவா....  (ஐய்யோ.. அது போன படம்ல....) ஸாரி.. சிவலிங்கேஸ்வரன். இந்த விசாரணையில் கொலையாளியைக் கண்டுபிடிக்க ஒரு புறாவும், கொலை செய்யப்பட்டவரின் ஆவியுமே நேரடியாக வந்து உதவுகிறது. இதற்கு நடுவே ரித்திகாவிற்கு ஏன் பேய் பிடிக்கிறது,  அந்த புறாவுக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம், கொலையாளி யார் என்ற முடிச்சுகளையெல்லாம் சிஐடி ராகவா லாரன்ஸ் கண்டுபிடித்தாரா என்பதைச்சொல்லும் படம்தான் சிவசிவசிவ‘சிவலிங்கா’...!

ராகவா லாரன்ஸின் ஆடின காலும், பேய் புகுந்த உடம்பும் சும்மா இருக்காது போல. அறிமுக பாடலான ‘சின்ன கபாலி’ பாடலில் தொடங்கி ரெமான்டிக் பாடல்கள் வரையிலும் நடனத்தில் இவர் மட்டுமே தனித்துத் தெரிகிறார். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் ‘மக்கள் சூப்பர் ஸ்டாராக’ ஒளிர்ந்தவர், இந்தப் படத்தில் ‘கபாலி’ பட போஸ்டர் பின்னணியில் ‘சின்ன கபாலி’ பாடலுக்கு நடனமாடி மிரட்டுகிறார். ’தலைவனுக்கு பாம்புன்னா பயம், எனக்கு பேய்ன்னா படம்’ என்று ரஜினி ரெஃபரன்ஸில் ரசிகர்களைக் கவர்கிறார்.  

‘நான் சிபிசிஐடி போலீஸூன்னு எங்க அம்மாவைத் தவிர யாருக்குமே தெரியாது’னு மனைவி ரித்திகாவிடம் ரகசியமாக சொல்கிறார் ராகவா லாரன்ஸ். ஆனால் படத்தில் வரும் அனைத்துக் கேரக்டரிடமும் ‘நான் சிஐடி போலீஸ்’ என ஐடி கார்டை நீட்டுகிறார். மாமனார் ஜெயபிரகாஷூக்கு மட்டும் க்ளைமேஸில் தான் தெரிகிறது. ‘உங்க கிட்ட உண்மையை மறைச்சிருக்க கூடாது’னு, ஃபீலிங் வேறு. அட ஏன் ப்ரோ...? 

சிவலிங்கா

பாக்ஸர், டிவி ஆங்கர் ரித்திகா இதில் ஆர்பாட்டமில்லாத ஹவுஸ் வொய்ஃப். ஆர்பாட்டமில்லை என்றாலும் ஆட்டம் ஆட முயற்சித்திருக்கிறார்.  சந்திரமுகி ஜோதிகாவை சில இடங்களில் எக்ஸ்ப்ரஷன்களில் நினைவூட்டுகிறார்.  நடனத்திலும், நடிப்பிலும் ராகவா ஸ்கோர் செய்துவிடுவதால் ரித்திகா நடிப்பு எடுபடவில்லை. பீடி பிடித்துக்கொண்டே ராகவா லாரன்ஸை மிரட்டும் காட்சிகள், பேயாக மாறும் இடங்களில் நடிப்பை உள்வாங்கி நடித்தவிதம் என சில இடங்களில் தெரிகிறார் ரித்திகா.

‘யூஸ் மி’ என்ற ஒற்றை வசனத்துடன் படம் முழுவதும் சுற்றிவருகிறார் வடிவேலு. நடிப்பில் ஆசம் என்றாலும் காமெடியில்.. கம்பேக் என்று சொல்ல முடியவில்லை. ஆனாலும் உடல்மொழி அவருக்குக் கைகொடுக்க, சில இடங்களில் சிரிக்கவைக்கிறார். பேய்க்கு பயப்படும் இடம் மற்றும் ராகவாவுடனான காமெடி ட்ராக் என்று அனைத்துமே அதே பழைய காமெடிகள். திரும்ப வந்தது ஹேப்பி வடிவேலுண்ணே.. ஆனா திரும்ப பழைய காமெடியோட வராம, புது காமெடியோட வாங்கண்ணே!  

ஊர்வசி, பானுப்பிரியா, சந்தானபாரதி, ராதாரவி, மதுவந்தி, என்று நிறைய கேரக்டர்கள் படத்தில் நிறைந்து இருக்கிறார்கள். படத்திற்கு எற்ற நடிப்பையும் கச்சிதமாக கொடுத்திருக்கிறார்கள்.

இடையிடையே ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் வந்தாலும், ரஹீம் கேரக்டரில் அப்படியே ஒன்றுகிறார் சக்தி. தன்னை கொன்றது யார் என்று தேடும் ஆவலும், பேயாக மிரட்டும் இடத்திலும் கச்சிதம். தந்தையின் படம் என்றாலும் கேரக்டர் ரோலில் அசத்தியதற்காகவே பாராட்டுகள் சக்திவாசுதேவன். 

குற்றவாளியைக் கண்டுபிடிக்க வழக்கில் சம்பந்தப் பட்டவர்களை அழைத்துவந்து, பேய் முன்னாடியே பேச்சுவார்த்தை நடத்தும் க்ளைமேக்ஸ் காட்சிகள், சந்திரமுகி க்ளைமேக்ஸில் ரஜினி நடத்திய சைக்கலாஜிக்கல் ட்ரீட்மென்டை நினைவுபடுத்துகிறது. இருந்தாலும் காட்சி அமைத்த விதத்தில் பக்கா. ஆனால் அசால்டாக ஆவியை ராகவா லாரன்ஸ் உடலில் வாங்கிகொள்வது மட்டும்... ‘வந்துட்டா காஞ்சனா... விடமாட்டா காஞ்சனா’... மொமென்ட்! 

ராகவா லாரன்ஸ், சக்தி, சிவலிங்கா

ஒரு புறா குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவுவது என்ற லைன் நச் என்றாலும் அதை செயல்படுத்திய விதத்தில் இன்னும் வித்தையைக் காட்டியிருக்லாம். படம் முழுவதும் வரும் தெலுங்கு, கன்னட படங்களின் சாயலை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். பேய்க்காக விசாரணை நடத்துவது, அதற்கு அந்த பேயே வந்து உதவி செய்வது, புறா காட்சிகள், ரித்திகாவிற்கு பேய் ஓட்டும் காட்சிகள், ராகவாவின் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சி என பல சுவாரஸ்யமான காட்சிகள் சிதறிக்கிடக்கிறது. சில இடங்களில் மட்டுமே சோர்வாக்கினாலும் நிச்சயம் விறுவிறுப்பான  த்ரில்லர் படம் தான் சிவலிங்கா. 

எஸ்.எஸ்.தமன் தொடர்ந்து தெலுங்கு படங்களில் இசையமைத்துவருவதால், பாடல்களிலும் தெலுங்கு வாசம். ‘ரங்குரக்கரா..’ பாடலும் ‘சிவலிங்கா..’ பாட்டுமே ரசிக்கவைக்கிறது. ஹாரர் படம் என்பதை பின்னணி இசை சில இடங்களில் நினைவுபடுத்தி பயமூட்டுகிறது.  சர்வேஸ் முரளியின் ஒளிப்பதிவும், சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பும் படத்திற்கு ப்ளஸ்.   

தப்பான கண்ணோட்டத்தினாலும், எண்ணங்களாலும் எடுக்கும் முடிவு, நிச்சயம் மற்றவர்களைப் பாதிக்கும் என்ற ஒன்லைனை நச்சென பிடித்திருக்கும் இயக்குநர், திரைக்கதையில் நிறைய கதாபாத்திரங்களை நுழைய விட்டு குழப்பாமல், தெளிவு படுத்தியிருக்கலாம். எதிர்பார்த்த க்ளைமேக்ஸ் என்றாலும் புதிதாக ஏதாவது காட்சிப்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.  

 
 

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில், பி.வாசு இயக்கத்தில் கடந்தவருடம் வெளியாகி 75 நாட்களுக்கு மேல் ஓடி  செம ஹிட்டான படம் ‘சிவலிங்கா’. கன்னடத்தில் எடுத்ததை அப்படியே தமிழிலும் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் பி.வாசு. ஆனால் தமிழ் ஆடியன்ஸ் தொடர்ந்து பல வருடங்களாகப் பேய்ப்பட ஃபீவரிலேயே இருப்பதால், தமிழுக்கு ஏற்ற மாதிரி இன்னும் அப்டேட் செய்திருந்தால் நிச்சயம் சிவலிங்கா உச்சம் தொட்டிருக்கும். 

http://www.vikatan.com/cinema/movie-review/86453-shivalinga-movie-review.html

Link to comment
Share on other sites

சினிமா விமர்சனம்: சிவலிங்கா

கே. முரளிதரன்பிபிசி தமிழ்
 
சிவலிங்கா இசை: எஸ்.எஸ். தமன்
நடிகர்கள்: ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், சக்திவேல், வடிவேலு, பானுப்ரியா இயக்கம்: பி. வாசு.
ரித்திகா சிங், ராகவா லாரன்ஸ் Image captionரித்திகா சிங், ராகவா லாரன்ஸ்

கன்னடத்தில் சிவ ராஜ்குமார் - வேதிகா நடிக்க பி. வாசு இயக்கத்தில் வெளிவந்த சிவலிங்கா படத்தின் ரீ - மேக், கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றதால், அதனை தமிழில் ரீ-மேக் செய்திருக்கிறார் வாசு.

ரித்திகா சிங் Image captionரித்திகா சிங்

ஓடும் ரயிலிலிருந்து ரஹீம் என்ற இளைஞன் கீழே தள்ளிவிடப்பட்டு கொல்லப்படுகிறார். இந்த விவகாரத்தை தற்கொலை என நீதிமன்றம் முடிவுகட்டிவிட்டாலும், இந்த வழக்கு மீண்டும் திறக்கப்பட்டு சிபிசிஐடி அதிகாரியான சிவலிங்கா வசம் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கிடையில் கொல்லப்பட்ட ரஹீமின் ஆவி, சிவலிங்காவின் மனைவியின் மேல் புகுந்து, கொலையாளியைக் கண்டுபிடிக்க நெருக்கடி கொடுக்கிறது. மனைவியையும் காப்பாற்றி, கொலையாளியையும் எப்படிக் கண்டுபிடிக்கிறார் சிவலிங்கா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

ராகவா லாரனஸ் Image captionராகவா லாரனஸ்

படம் நெடுக துறுதுறுப்பாக வலம்வரும் ராகவா லாரன்ஸ், படத்தின் மிகப் பெரிய பலம். ரஜினி கட் - அவுட் பின்னணியில் 'சின்ன கபாலி' என்று தானே சொல்லிக்கொண்டாலும் படத்தில் தென்படும் உற்சாகத்திற்கு இவரே காரணம்.

பேய் பிடித்து ஆட்டும் மனைவியாக வரும் ரித்திகா சிங், பல காட்சிகளில் வேண்டா வெறுப்பாக வந்துபோவதைப் போல இருக்கிறார். முந்தைய படங்களான இறுதிச் சுற்று, ஆண்டவன் கட்டளை ஆகியவற்றில் தென்பட்ட பிரகாசம் இதில் மிஸ்ஸிங்.

வடிவேலு, ராகவா லாரன்ஸ் Image captionவடிவேலு, ராகவா லாரன்ஸ்

நீண்ட நாட்களுக்குப் பிறகு மறுபிரவேசம் செய்திருக்கும் வடிவேலு, சில காட்சிகளில் மட்டும் சிரிப்பு மூட்டுகிறார். ரஹீமாக நடித்திருக்கும் சக்திக்கு இது முக்கியமான படமாக இருக்கும் (கன்னடப் படத்திலும் இவரே ரஹீம்).

தமிழ் சினிமாவில் பேய் அலை சற்றே ஓய்ந்து, மீண்டும் ஆவேசமாக அடிக்க ஆரம்பித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இரு வாரங்களுக்கு முன்பாக நயன்தாரா நடித்த டோரா. இப்போது சிவலிங்கா.

ரித்திகா சிங்

சிவலிங்கா பேய்ப் படம் என்றாலும் திகில் படம் அல்ல. ஹீரோயிசம், பாடல்கள், சண்டைகள், காமெடி என எல்லாம் கலந்த ஒரு மசாலாப் படத்தையே கொடுக்க முயற்சித்திருக்கிறார் பி. வாசு. ஆனால், 80களில் வந்த மசாலாப் படம் போல இருக்கிறது.

எம்.ஜி.ஆர். படங்களில், தான் ஒரு காவல்துறை அதிகாரி என்பதையே சொல்லாமல் திருமணம் செய்துகொள்வதைப் போல ராகவா லாரன்ஸும் இந்தப் படத்தில் நாயகியை திருமணம் செய்துகொள்கிறார். படத்தில் வரும் காவல்துறை அலுவலகங்கள் எல்லாம் தகவல்தொழில்நுட்பத் துறை அலுவலகங்களைப் போல பிரகாசிக்கின்றன.

ஏற்கனவே வெற்றி பெற்ற படத்தின் ரீ-மேக் என்பதாலோ என்னவோ திரைக்கதையில் இயக்குனர் பெரிதாக மெனக்கெடவில்லை. பல காட்சிகள் துண்டுதுண்டாக நிற்கின்றன. படத்தின் கடைசி அரை மணி நேரத்தில் உண்மையான குற்றவாளியை சிவலிங்கா அடையாளம் காட்டும்போது பல்வேறு புள்ளிகளை இணைத்து, குற்றவாளியை அடையாளம் காட்டுகிறார். ஆனால், அவர் எப்படி இவ்வளவையும் கண்டுபிடித்தார் என்பது போகிறபோக்கில் சொல்லப்படுகிறது.

ராகவா லாரன்ஸ்

அதேபோல, தான் எதற்காகக் கொல்லப்பட்டோம் என்பதை அறிந்துகொள்ள விரும்பும் பேய், நாயகனுக்கு பெரிதாக எந்த உதவியும் செய்வதில்லை, அவ்வப்போது பீடி புகைப்பதோடு சரி.

அகாதா கிறிஸ்டியின் கதைகளில், இறுதிக் காட்சியில் கொலையோடு சம்பந்தம் இருக்கக்கூடும் என சந்தேகத்திற்குள்ளானவர்கள் எல்லாம் ஓரே இடத்தில் கூடியிருக்க, கொலையாளி யார் என்பதை டிடெக்டிவான பொய்ரோ வெளிப்படுத்துவார். அதே போன்ற ஒரு க்ளைமாக்ஸை முயன்றிருக்கிறார் வாசு. இந்தக் காட்சியில் படத்தில் நடித்திருக்கும் எல்லோரையும் ஓரிடத்தில் கூட்டுகிறார் நாயகன். சுவாரஸ்யமாக இருந்தாலும் அந்தக் காட்சியிலிருக்கும் பலருக்கும் அந்தக் கொலைக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வியெழுகிறது.

சந்திரமுகி போன்ற ஒரு படத்தை எடுத்த பி. வாசு, இன்னும் சிறப்பாக இந்தப் படத்தை செய்திருக்க முடியும்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-39601126

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.