Jump to content

கரையேற முடியாத துறைமுகம்


Recommended Posts

கரையேற முடியாத துறைமுகம்
 
 

article_1490529215-FH---12-new.jpg - முகம்மது தம்பி மரைக்கார்  

பொறுமையிழக்கும் நிலையில்தான் போராட்டங்கள் நிகழ்கின்றன. மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதபோது, பொறுப்புத்தாரிகளுக்கு எதிராக அவர்கள் வெகுண்டெழுகின்றனர்.   

அநேகமான போராட்டங்கள், நம்பிக்கையிழப்பின் கடைசிப் புள்ளியில்தான் தொடங்குகின்றன. அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து, கடந்த 14ஆம் திகதியன்று வீதி மறியல் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.   

தங்கள் தொழில் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தடையினை நீக்கித் தருமாறு, அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை காது கொடுத்து யாரும் கேட்கவில்லை என்கிற கோபமும் ஏமாற்றமும் அவர்களை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளின.   

அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியினை மறித்து, ஒலுவில் துறைமுகப் பாதைக்கு முன்பாக, அம்பாறை மாவட்டக் கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து, அந்த வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

தமது படகுகளில் ஒன்றினைக் கொண்டு வந்து, வீதியினை மறித்துப் போட்டு, அதன் மேல் ஏறி நின்று, அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமையினால், வாகனப் போக்குவரத்துகள் தடைப்பட்டன.   

வீதி மறியலில் ஈடுபடுவதைத் தவிர, அவர்களுக்கு வேறு தெரிவுகள் இருக்கவில்லை. அவர்களின் தொழில் நடவடிக்கைகள் பல மாதங்களாகத் தடைப்பட்டுப்போயுள்ளன.   

தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுத்தருமாறு, அதிகாரிகளிடமும் அவர்கள் சார்ந்த அரசியல்வாதிகளிடமும் கோரிக்கை விடுத்திருந்தும், எதுவும் நடக்கவில்லை என்பதனால்தான், அவர்கள் வீதிக்கு இறங்கினார்கள்.   

மீன்பிடி துறைமுகம்  

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில், தமது படகுகளை நிறுத்தி வைக்கும் கடற்றொழிலாளர்கள்தான் அந்த வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் 170 பெரிய படகுகளும் 200 சிறிய படகுகளும் தரித்து நின்று தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.   

உள்ளூர் கடற்றொழிலாளர்கள் மட்டுமன்றி, வெளி மாவட்டங்களிலிருந்து வருகின்ற படகுகளும் ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் தரித்து நின்று, தொழிலுக்குச் செல்கின்றன.  

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் படகுகள் தரித்து நிற்பதற்காக, துறைமுக நிருவாகம் கட்டணம் வசூலிக்கின்றது. படகுகளின் பருமனுக்கேற்ப கட்டணம் பெறப்படுகிறது.   

அந்தவகையில், படகு ஒன்றிடமிருந்து மாதமொன்றுக்கு 300 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தவிர, படகில் தொழில் செய்யும் ஒவ்வொரு நபருக்கும் 150 ரூபாய் வீதம், மாதக் கட்டணம் அறவிடப்படுகிறது. 

இந்தநிலையில், துறைமுகத்திலிருந்து படகுகள், சென்றுவரும் போக்குவரத்துப் பாதையில் அடிக்கடி மணல் வார்த்துப் போகும். அவ்வாறான வேளைகளில், படகுகளால் போக்குவரத்தில் ஈடுபட முடியாது. படகுப் பாதையானது, மணலினால் அடைபட்டுப் போகும் நிலை ஏற்படும்போது, அங்குள்ள கடற்றொழிலாளர்களின் தொழில் முற்றாகப் பாதிப்படைந்து விடும்.  

மண்ணால் மூடப்படும் பாதை  

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதை, கடந்த வருடம் இவ்வாறு மணலால் மூடப்பட்டது. இதன் காரணமாக, அங்குள்ள கடற்றொழிலாளர்கள் பல மாதங்களாகத் தமது தொழிலை இழந்தனர்.   

துறைமுகத்தின் படகுப் பாதையினை அடைத்துள்ள மணலை அகற்றித்தருமாறு, துறைமுக நிருவாகத்தினரிடம் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அதேவேளை, அப்பிராந்தியத்திலுள்ள அரசியல்வாதிகளிடமும் உதவி கோரினர். ஆனால், எந்தவிதத் தீர்வும் கிடைக்கவில்லை.   

இதனையடுத்து, படகுப் பாதையினை மூடியுள்ள மணலை, தாங்களே அகற்றுவதற்கு, அங்குள்ள கடற்றொழிலாளர்கள் தீர்மானித்தனர். 

இதற்கிணங்க, கடந்த வருடம் நவம்பர் மாதம் 23ஆம் திகதியன்று மணல் தோண்டும் இயந்திரமொன்றினைப் படகு உரிமையாளர்கள் வாடகை செலுத்திக் கொண்டுவந்தனர்.   

துறைமுக படகுப் பாதையினை அடைத்துள்ள மணலை அந்த இயந்திரத்தின் மூலம் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. தோண்டப்பட்ட இடத்தில் மீண்டும் மணல் அடைத்துக் கொண்டது.   

ஆயினும், படகு உரிமையாளர்கள் தமது முயற்சியினைக் கைவிடவில்லை. இரண்டு நாட்களுக்குப் பின்னர், நவம்பர் 25ஆம் திகதியன்றும் மணல் தோண்டும் இயந்திரத்தினைக் கொண்டு வந்து, படகுப் பாதையிலுள்ள மண்ணை அகற்றும் நடவடிக்கையினை மேற்கொண்டார்கள்.  

ஓரளவு தோண்டப்பட்ட வழி ஊடாக, சில படகுகளைக் கட்டியிழுத்து வெளியேற்றினார்கள். இரண்டு நாட்கள் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளுக்காக 65 ஆயிரம் ரூபாயினை படகு உரிமையாளர்கள் செலவிட்டனர். ஆனாலும், பின்னர் மீண்டும் துறைமுகத்தின் படகுப் பாதையை மணல் அடைத்துக் கொண்டது.  

உதவி   

இதனையடுத்து, தமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுத் தருமாறு கோரி, மீண்டும் அரசியல்வாதிகளை கடற்றொழிலாளர்கள் நாடினர். பிரதியமைச்சர் ஹரீஸின் உதவியுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்த கடற்றொழிலாளர்கள், தமது தொழில் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்துப் பேசினர்.   

இதனையடுத்து, ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையை மூடியுள்ள மணலை அகற்றித்தருமாறு, கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சரிடம், ரவூப் ஹக்கீம் கோரிக்கையொன்றினை முன்வைத்தார். இந்தக் கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட, கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர், அதற்காக நான்கு கோடி ரூபாயினை ஒதுக்கீடு செய்ததாக, அரச ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தன. 

கப்பல் வந்த கதை  

இதனைத் தொடர்ந்து, ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையை அடைத்துள்ள மணலை அகற்றுவதற்காக, ‘சயுறு’ எனும் கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது.   

இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான அந்தக் கப்பல், ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையை மூடியிருந்த மணலை அள்ளிச் சென்று கடலில் கொட்டியது. இந்த நடவடிக்கை சில நாட்கள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது.  

 பின்னர், மணலை அகற்றும் வேலையினை ‘சயுறு’ நிறுத்திக்கொண்டது. பின்னர், வேலைகள் எதிலும் ஈடுபடாமல், அந்தக் கப்பல் பல நாட்களாக ஒலுவில் துறைமுகத்தில் தரித்து நின்றது.   

‘சயுறு’வில் 20 பேர் பணியாற்றினார்கள். அவர்களின் பாவனைக்காக மூன்று நாட்களுக்கு ஒரு தடவை 7,000 லீற்றர் நீர் தேவைப்பட்டது. அதனை அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கம் வழங்கியது.  

அந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள், ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் தமது படகுகளை நிறுத்தி வைத்து, கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 

‘சயுறு’ கப்பலுக்குத் தேவையான நீரை வழங்குவதற்கு, தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் சாய்ந்தமருது அலுவலகத்துக்கு ஓர் இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்தினைத் தாம் செலுத்தியதாக, அந்தச் சங்கத்தின் தலைவர் எம்.எஸ். நசீர் தெரிவித்தார்.   

ஒலுவில் துறைமுகத்தில் ‘சயுறு’ கப்பல் கிட்டத்தட்ட 85 நாட்கள் தரித்து நின்றது. இதில் மிகக் குறைந்த நாட்கள் மட்டுமே, படகுப் பாதையை மூடியிருந்த மணலை அகற்றும் பணியில் அந்தக் கப்பல் ஈடுபட்டது.   

ஒலுவில் துறைமுகத்தில் ‘சயுறு’ தரித்து நின்ற நாட்களில், அதற்குத் தேவையான மின்சாரம், ஒலுவில் துறைமுகத்திலிருந்து வழங்கப்பட்டது. அவ்வாறு கப்பலுக்கு வழங்கப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் சுமார் இரண்டு இலட்சத்து 87 ஆயிரம் ரூபாய் ஆகும். 

அந்தத் தொகையினைச் செலுத்துமாறு, ஒலுவில் துறைமுக முகாமையாளர், தம்மை எழுத்து மூலம் கோரியுள்ளதாக, அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் நசீர் நம்மிடம் கூறினார்.  

அரசாங்கத்தின் சிறுமை  

ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் அரசுக்குச் சொந்தமானது. அந்தத் துறைமுகத்தின் படகுப் பாதையினை மூடியுள்ள மணலை அகற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட கப்பலும் அரசாங்கத்துக்குரியது.   

இந்தநிலையில், துறைமுகத்தினைத் தோண்டுவதற்கு வந்திருந்த கப்பலுக்குரிய நீர் மற்றும் மின்சாரச் செலவுகளை அங்கு தொழில்புரியும் ஏழைத் தொழிலாளர்களிடமிருந்து அரசாங்கம் பெற்றுக்கொள்வது அநியாயமான செயற்பாடாகும்.  

இத்தனை நடந்த பிறகும், ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையை மூடியுள்ள மணல் முழுவதுமாக அகற்றப்படவில்லை. இவ்வளவு செலவுகளுக்குப் பின்னரும் மீனவர்களின் தொழிலில் ஏற்பட்டிருந்த பிரச்சினைக்குத் தீர்வு கிட்டவில்லை.   

இதனையடுத்து, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடத்தில் தமது தொழில் நடவடிக்கையில் ஏற்பட்டுள்ள தடையினை நீக்கித் தருமாறு மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தீர்வுகள் கிடைக்கவேயில்லை.   

இதன் பிறகுதான், தமது பிரச்சினை தொடர்பில் கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்றினை மேற்கொள்வதெனவும் அதன் பொருட்டு, வீதிக்கு இறங்கி மறியல் போராட்டமொன்றில் ஈடுபடுவதெனவும் கடற்றொழிலாளர்கள் தீர்மானித்தனர்.   

 

நிரந்தரத் தீர்வு  

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையை, இவ்வாறு மணல் மூடுகின்றமையானது தவிர்க்க முடியாத, இயற்கை நிகழ்வாகும். இதனைத் தடுக்க முடியாது எனக் கூறப்படுகிறது.   

அதேவேளை, இவ்வாறு படகுப் பாதையினை மூடுகின்ற மணலை ஒவ்வொரு தடவையும் இயந்திரங்களைக் கொண்டும், கப்பலைக் கொண்டும் அகற்றுவதென்பதும் அதிக செலவுடைய கடின காரியங்களாகும். எனவே, இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமானதொரு தீர்வினைக் காண வேண்டும் என்பதுதான் இங்குள்ள கடற்றொழிலாளர்களின் கோரிக்கையாகும்.   

“இவ்வாறான மணலை, குழாய்கள் மூலம் அகற்றும் இயந்திரங்கள், கிருந்த மற்றும் ஹிக்கடுவ ஆகிய பிரதேசங்களில் உள்ளன. குழாய் மூலம் மணலை அகற்றும் அவ்வாறான இயந்திரமொன்றினை ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் நிரந்தரமாக நிறுவ வேண்டும். அதுதான், ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய நிரந்தர வழியாக அமையும்” என்று, அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் நசீர் நம்மிடம் விவரித்தார்.  

நிராகரிக்கப்பட்ட கோரிக்கை  

மேற்படி ஆர்ப்பாட்டத்துக்கு கடற்றொழிலாளர் அழைப்பு விடுத்திருந்த வேளையில், குறித்த ஆர்ப்பாட்டத்தினை கைவிடுமாறு, கிழக்கு மாகாணசபையின் உறுப்பினர், ஆரிப் சம்சுதீன் கோரிக்கையொன்றினை விடுத்தார்.   

மீனவர்களை ஒலுவிலில் சந்தித்த ஆரிப் சம்சுதீன், பிரச்சினைக்கான தீர்வினை விரைவில் பெற்றுத் தருவதாகக் கூறினார். ஆயினும், ஆரிப் சம்சுதீனின் கோரிக்கையினை கடற்றொழிலாளர்கள் நிராகரித்தனர். திட்டமிட்டவாறு 14 ஆம் திகதியன்று பாரிய வீதி மறியல் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டார்கள்.   

மாற்று நடவடிக்கை  

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து படகுகள் மூலம் கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்களை நம்பி சுமார் ஐயாயிரம் குடும்பங்கள் உள்ளன. அவர்கள் தமக்குரிய வாழ்வாதாரத்தினை கடற்றொழிலில் இருந்து கிடைக்கும் வருமானம் மூலமாகவே பெறுகின்றனர்.   

இந்தநிலையில், பல மாதங்களாக இங்குள்ள மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை. அதனால், அவர்கள் பெரும் நட்டத்தினை எதிர்நோக்கியுள்ளனர். ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையை மணல் மூடியுள்ளமையினால், தற்போது அங்கு தரித்து வந்த படகுகளைத் தற்காலிகமாக அருகிலுள்ள கப்பல் துறைமுகத்தில் தரிக்கச் செய்துள்ளனர். 

ஒலுவிலிலுள்ள கப்பல் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்ட காலத்திலிருந்து, எந்தவொரு கப்பலும் அங்கு வந்து செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   

இதேவேளை, ஒலுவில் கப்பல் துறைமுகத்தில் படகுகளை நிறுத்தி வைப்பதற்கான வசதிகள் இல்லை எனக் கூறப்படுகிறது. அதனால், அங்கு நிறுத்தி வைக்கப்படும் மீன்பிடிப் படகுகள் அடிக்கடி சேதமடைவதாக கடற்றொழிலாளர்கள் முறையிடுகின்றனர். எனவே, மீன்பிடித் துறைமுகத்தில் தமது படகுகளை நிறுத்தி வைப்பதுதான் பாதுகாப்பானதானதாகும் என்று அவர்கள் கூறுகின்றனர்.   

இழுத்தடிப்பு  

இலங்கை துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சின் கீழ் ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. இந்தநிலையில், கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் கீழ், ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினைக் கொண்டு வருமாறு மிக நீண்ட காலமாக அங்குள்ள கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  

இதனையடுத்து, ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினை கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான அங்கிகாரத்தினைக் கடந்த வருடம் அமைச்சரவை வழங்கியது. இருந்தபோதும், குறித்த துறைமுகம், கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சிடம் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை.  

இவ்விடயம் தொடர்பில் கடந்த டிசெம்பர் மாதம், கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி டபிள்யூ.எம்.எம்.ஆர். அதிகாரியுடன் பேசியபோது, “ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினை கடற்றொழில் அமைச்சிடம் ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளபோதும், துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சிடமிருந்து இன்னும் உத்தியோகபூர்வமாக, தமது அமைச்சுக்கு ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் கையளிக்கப்படவில்லை” என்று அவர் கூறியிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.  

காலக்கெடு  

இந்தப் பிரச்சினை குறித்து, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளோ, இப்பிராந்தியத்திலுள்ள ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளோ இதுவரையில் தீர்க்கமான நடவடிக்கைகள் எவற்றினையும் மேற்கொள்ளவில்லை என்பது விசனத்துக்குரியதாகும்.   

எவ்வாறாயினும், கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்று அவசரமாகப் பெற்றுக் கொடுக்கப்படுதல் வேண்டும். ஆனாலும், அதிகாரிகளும் மக்களின் பிரதிநிதிகளும் இந்த விடயத்தில் அலட்சியமாக உள்ளனர் என்பது வேதனையானது. 

கடலின் அலைகளை எதிர்த்துப் போராடுவதையே தினமும் தொழிலாகக் கொண்ட மீனவர்களுக்கு, தமது விடயத்தில் அலட்சியமாக நடந்துகொள்வோரை எதிர்த்து நிற்பதென்பது கடினமானதொரு காரியமல்ல.  

“ஒலுலில் மீன்பிடித் துறைமுகத்தில் நாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு இன்னும் 10 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கவில்லையாயின், மீண்டும் போராட்டத்தில் குதிப்போம்” என்கிற கெடுவொன்றினை வைத்து விட்டுத்தான், வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றார்கள்.   

கெடு இன்றுடன் முடிகிறது.  

- See more at: http://www.tamilmirror.lk/193756/கர-ய-ற-ம-ட-ய-த-த-ற-ம-கம-#sthash.CoB3nFMi.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.