Jump to content

திருப்புமுனை தருமா திருவண்ணாமலை பூஜை?


Recommended Posts

மிஸ்டர் கழுகு: திருப்புமுனை தருமா திருவண்ணாமலை பூஜை?

 

ழுகார் உள்ளே நுழைந்ததும் சூடான சூப் கொடுத்தோம். ‘‘வரவேற்பு பலமாக இருக்கிறதே?’’ என்றபடி சிரித்தார் கழுகார். நாமும் சிரித்தோம். சூப்பை அருந்தும்போது அவருக்கு இருமல் வந்தது. ‘‘யாரோ நினைக்கிறார்கள்” என்றோம். ‘‘உமக்கு முழுக் கதையும் தெரிந்திருக்கிறது” என்று சொல்லி மீண்டும் சிரித்தார். நாம் பதில் சொல்லவில்லை. சூப்பை முழுமையாக அருந்தி முடித்தப் பிறகு, ‘‘சுவை நன்றாகத்தான் இருக்கிறது” என்று சொல்லிக்கொண்டே செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார்.

‘‘திருவண்ணாமலையை அடுத்த ஒரந்தவாடி கிராமத்தில் இருக்கும் ஓரக்கண்டியம்மன் கோயிலுக்கு வந்து சென்ற மறுநாள் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக தினகரன் அறிவிக்கப்பட்டார்!”

‘‘தினகரனின் அரசியல் திருப்புமுனை திருவண்ணாமலையில்தான் தொடங்கியதோ?”

‘‘ஆமாம்! முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஆலோசனைப்படிதான், திருவண்ணாமலை ஓரக்கண்டியம்மன் கோயிலுக்கு தினகரன் வந்தார். பங்குனி மாதப் பிறப்பன்று காலையில், ஓரக்கண்டியம்மன் கோயில் யாக பூஜையில் அமர்ந்து பயபக்தியுடன் வணங்கினார். ‘இந்த அம்மனை வணங்கிவிட்டு வேறு எந்தக் கோயிலுக்கும் செல்லக்கூடாது. அப்போதுதான் நினைத்த காரியங்கள் நடக்கும்’ என்று அவரிடம் கூறியுள்ளனர். இந்த யாகத்தில் தினகரன் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகளை அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆட்கள் செய்துள்ளனர்!”

42p3.jpg

‘‘தினகரனும் கோயில் கோயிலாகச் செல்ல ஆரம்பித்துவிட்டாரா?”

‘‘ம்! பிரச்னைகள் வர வர, பிரார்த்தனைகளும் கூடத்தானே செய்யும். நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியைத் தற்கொலைக்குத் தூண்டிய  வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. பர்வதமலை அடிவாரத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கு வாரா வாரம் ஞாயிறன்று ராகு கால பூஜை செய்து வந்தார் கிருஷ்ணமூர்த்தி. கூடவே ஓரக்கண்டியம்மனுக்கும் பூஜைகள் செய்து வந்தார். வழக்குச் சிக்கல்களிலிருந்து தன்னை விடுவித்தது இந்த பூஜைகள்தான் என இவர் நம்பினார். சசிகலாவின் தீவிர ஆதரவாளரான இவருக்கு தினகரனும் நெருக்கம். தினகரனுக்கு இந்தக் கோயிலின் மகிமையைச் சொல்லி யாகத்துக்கு சம்மதம் வாங்கினாராம் அக்ரி. ஓரக்கண்டியம்மன் வழிபாட்டைத் தொடர்ந்தால் முதல்வர் ஆக வாய்ப்பும் கிடைக்கும் என நம்புகின்றனர் தினகரன் குடும்பத்தினர்!”42p2.jpg

‘‘ஆனால், வேட்பாளராக அவரை அறிவித்த கூட்டத்தில் பேசும்போது, ‘நான் முதலமைச்சர் ஆக மாட்டேன்’ என்று தினகரன் சொல்லி இருக்கிறாரே?”

‘‘முதலில் அப்படித்தான் சொல்வார். `பன்னீர் நன்றாக ஆட்சி செய்கிறார். அவரே முதல்வராக தொடர்வார்’ என நடராசன் சொன்னார். என்ன நடந்தது. ‘நான்தான் முதலமைச்சர்’ என்று சொன்னால் இன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் ஆர்.கே.நகரில் தேர்தல் வேலை பார்ப்பார்களா? இப்போதே கட்சிக்குள் குழப்பங்கள் வந்துவிடாதா? அதனால்தான் தினகரன் அடக்கி வாசிக்கிறார். மெதுவாக காய் நகர்த்துவதுதான் தினகரன் பாணி. விரைவில் சில அமைச்சர்கள் ‘தினகரன் முதல்வராக வேண்டும்’ எனப் பேச ஆரம்பிப்பார்கள் பாரும்.”

‘‘தினகரன்தான் வேட்பாளர் என்று எப்போது முடிவானது?”

‘‘இரண்டு வாரங்களுக்கு முன் சசிகலாவைச் சிறையில் சந்திக்கச் சென்ற போதே தினகரன் தனது ஆசையைச் சொல்லிவிட்டார். சசிகலா அதற்கு மனப்பூர்வமான சம்மதமும் சொல்லவில்லை; அதற்காக மறுப்பும் தெரிவிக்கவில்லை. அமைதியாகக் கேட்டுக்கொண்டாராம். யார் தடுத்தாலும், தான் போட்டியிடுவது என்பதில் தினகரன் உறுதியாக இருந்தார். சும்மா இருந்த சசிகலாவை சீண்டிவிட்டு, ‘பொதுச்செயலாளர் ஆகுங்கள்’, ‘முதலமைச்சர் ஆகுங்கள்’ என்று அவசரப்படுத்தியது தினகரன்தான். அவரே இப்போது துடிப்பதற்குக் காரணம், இன்னொரு பன்னீர்செல்வத்தை உருவாக்கி விடக்கூடாது என்பதுதான். ‘அடுத்த தேர்தலில் ஜெயிப்போமா, மாட்டோமா... இந்த நான்காண்டுகளை விட்டுவிடக் கூடாது’ என்பதுதான் தினகரனின் ஆசை!”

42p1.jpg

‘‘இதற்கு எடப்பாடி பழனிசாமியின் ரியாக்‌ஷன் என்ன?”

‘‘இதை அவர் எதிர்பார்க்கவில்லை. ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியிட்டால் அடுத்து முதலமைச்சர் பதவியைத்தான் குறிவைப்பார் என்பதில் எடப்பாடிக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ‘யார் வேட்பாளர்? யார் வேட்பாளர்?’ என்று அவர் கேட்டுக்கொண்டே இருந்தாராம். முதலமைச்சர் சேலத்தில் இருக்கும் நேரமாகப் பார்த்து இந்த அறிவிப்பைச் செய்துவிட்டார்கள். ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில், ‘தினகரனை வேட்பாளராகத் தேர்வு செய்ததாக’ அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். செங்கோட்டையனுக்குத்தான் எவ்வளவு சந்தோஷம், எடப்பாடியை காலி செய்வதில். இருவருக்கும் ஆகாது என்பதால் சந்தோஷமாக அறிவித்தார்.”

‘‘தினகரனுக்கு முன்பு யார் யார் பெயர்களையோ சொன்னார்களே?”

‘‘ஆமாம்! முதலில் ஆதிராஜாராம் பெயர் அடிபட்டது. அவர், அந்த வட்டாரத்து மக்களின் செல்வாக்கைப் பெற்றவர். தி.மு.க சார்பில் சிம்லா முத்துச்சோழன் நின்றால், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவை நிறுத்தலாம் என்றும் சொல்லப்பட்டது. சசிகலாவுக்கு மிகக் கடுமையான எதிர்ப்பு இருப்பதால் எம்.ஜி.ஆர் சென்டிமென்ட்டை பயன்படுத்த நினைத்தார்கள். எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயகுமாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று லாஜிக் சொல்லப்பட்டது. எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவின்போது அவரது நினைவிடத்துக்கு வந்த சுதா, ‘புரட்சித்தலைவரின் குடும்பத்துக்கு மரியாதை செய்வது இல்லை. யாருக்கும் பதவி தருவது இல்லை’ என்று தனது வருத்தத்தைப் பதிவு செய்தார். எனவே, ‘எம்.ஜி.ஆர். குடும்பத்துக்கு மரியாதை செய்வார்கள்’ என்றும் சொல்லப் பட்டது. ஆனால், தினகரன் யாருக்கும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. ‘தேர்தலில் நிற்பது, முதலமைச்சர் ஆவது’ என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.”

‘‘எடப்பாடி ஆட்கள் இப்போதே தங்கள் வேலைகளைத் தொடங்கி இருப்பார்களே?”

‘‘தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே கொங்கு வட்டாரத்து அ.தி.மு.க தலைகள் தனித்தனியாகப் பேச ஆரம்பித்து விட்டனர். இடைத்தேர்தலில் தினகரன் வென்று முதலமைச்சர் ஆகிவிட்டால், அடுத்த பிளவு அ.தி.மு.க-வில் உறுதி என்றே சொல்கிறார்கள்!”

‘‘அதுசரி! தினகரனுக்காக இந்தக் காரியங்களைக் கனகச்சிதமாகப் பார்ப்பது யார்?”

‘‘செங்கோட்டையனும் தளவாய் சுந்தரமும். ஐந்து ஆண்டுகளாக சசிகலா குடும்பத்தால் தட்டி வைக்கப்பட்டு இருந்தவர் செங்கோட்டையன். இப்போது தினகரன் தன்னிடம் ஆலோசனை கேட்பதை எல்லாம் தனக்கான இரண்டாவது இன்னிங்ஸாக செங்கோட்டையன் நினைக்கிறார். தளவாய் சுந்தரமும் தினகரனும் எப்போதும் நெருக்கமானவர்கள். இருவரும் எம்.பி-க்களாக இருந்த காலத்து நெருக்கம் அது. அதனால்தான் தளவாய் சுந்தரத்துக்கு டெல்லியில் தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதி பதவியைக் கொடுத்தார் தினகரன். இந்த இருவரும்தான் இப்போது தினகரனுக்கு எல்லாமும்!”

42p5.jpg

‘‘டெல்லி தலைமை தேர்தல் கமிஷனை நம்பித்தான் தினகரனின் அரசியல் எதிர்காலம் இருக்கிறதா?”

‘‘ஆமாம்! ‘அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லுமா, செல்லாதா?’ என்ற பிரச்னை, ‘இரட்டை இலை பன்னீர் அணிக்கா, சசிகலா அணிக்கா?’ என்று இப்போது மாறிவிட்டது. ‘பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லாது’ என்று தேர்தல் ஆணையம் அறிவித்தால், சசிகலாவால் துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்ட டி.டி.வி.தினகரனின் பதவியும் செல்லாது. சசிகலா அணியினரால் தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆட்சி மன்றக் குழுவும் கலைக்கப்பட்டுவிடும். மாறாக, ‘சசிகலா பொதுச்செயலாள ராகப் பதவி ஏற்றது செல்லும்’ என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பு அளிக்குமேயானால், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் அ.தி.மு.க-வுக்கும் இரட்டை இலை சின்னத்துக்கும் உரிமை கோரும் தகுதியை இழப்பார்கள். போட்டி அ.தி.மு.க என்ற இன்னொரு புதிய கட்சி உருவாகலாம். கட்சிகளின் தீர்மானங்களையும் சட்ட விதிகளையும் உற்றுநோக்கும் தேர்தல் ஆணையம், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டே தனது தீர்ப்பினை அளிக்கும் என்கிறார்கள்.”
42p61.jpg
‘‘விதிகள்தானே முக்கியம்?”


‘‘ஒரு விதி, ‘எந்த ஒரு தீர்மானத்தையும் செல்லத்தக்கதாக மாற்றவேண்டுமானால், அதனை பொதுக்குழுவுக்குக் கொண்டுவரலாம்’ என்று சொல்கிறது. ‘எல்லா விதிகளையும் மாற்றி அமைக்கும் முழு அதிகாரம் பொதுக்குழுவுக்கு உண்டென்றாலும்கூட, பொதுச்செயலாளர் நியமனத்தில் மட்டும், எந்த மாற்றமும் செய்ய முடியாது. அ.தி.மு.க-வின் அனைத்து அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த அடிப்படைக் கட்டமைப்பை எந்தக் காரணம் கொண்டும் மாற்ற முடியாது’ என்கிறது இன்னொரு விதி. ‘பொதுச்செயலாளர் பதவி ஏதாவதொரு காரணத்தால் காலியாகும் பட்சத்தில், முந்தைய பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட அவைத்   தலைவர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள்தான் கட்சியை வழிநடத்த முடியும்’ என்கிறது மற்றொரு விதி. ‘கட்சிப் பொறுப்புகளுக்கு வர விரும்புபவர்கள், ஏற்கெனவே ஐந்து வருடங்கள் கட்சி உறுப்பினராக முழுமையாக தொடர்ந்திருந்தால் மட்டுமே வரமுடியும்’ என்று கால நிர்ணயம் விதிக்கிறது மற்றொரு விதி. இவை எல்லாமே சசிகலாவுக்கு எதிராக இருக்கின்றன.”

‘‘ம்!”

‘‘அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று விதி தெளிவாகக் குறிப்பிடும்போது, ‘பொதுக்குழு உறுப்பினர்களால் தற்காலிகப் பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவதை தேர்தல் ஆணையம் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது’ என்பது பன்னீர் அணியினரின் வாதம். ‘புதிய பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுக்கும்வரை, கட்சியின் அவைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகள்தாம் கட்சியை வழிநடத்திச் செல்லமுடியும்’ என்ற சட்டவிதியைச் சுட்டிக்காட்டி அதன்படியே செயல்படவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தும் என்பதும் பன்னீர் அணியினரின் நம்பிக்கை!”
42p4.jpg
‘‘டெல்லி போனாரே பன்னீர்?”


‘‘தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளை, தனது பரிவாரங்களோடு சென்று சந்தித்தார் பன்னீர். அவர்களோடு சென்றது அ.தி.மு.க முன்னாள் எம்.பி-யான மனோஜ் பாண்டியன். அவர் சட்டப் புள்ளிவிவரங்களைத் தூவினாராம். ‘தேர்தல் கமிஷனுக்கு சசிகலா கொடுத்துள்ள பதிலில் பொதுக்குழுவால் நான் நியமிக்கப்பட்டுள்ளேன் என்றுதான் சொல்லி இருக்கிறார். இந்த நியமனம் சட்டப்படி செல்லாது என்பதுதான் எங்களது வாதம். அதைத்தான் சசிகலாவே சொல்லி இருக்கிறார்’ என்று மனோஜ் பாண்டியன் சொன்னபோது தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி உன்னிப்பாக கவனித்து குறித்துக் கொண்டாராம். விரைவில் முடிவு தெரியும்” என்ற கழுகாரிடம், ‘‘தி.மு.க வேட்பாளர் தேர்வு பற்றிய தகவலைச் சொல்லும்!” என்றோம்.

‘‘தி.மு.க வேட்பாளராக வக்கீல் மருது கணேஷ் அறிவிக்கப்பட்டதை யாருமே எதிர்பார்க்கவில்லை. முன்பு ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன்தான் மறுபடியும் போட்டியிடுவார் என்றே நினைத்தார்கள். இதனால் பலருக்கும் அதிர்ச்சி. ‘சிம்லா முத்துச்சோழனை அறிவிக்கத்தான் ஸ்டாலின் நினைத்தார். ஆனால், அவரது மனைவி துர்க்காதான் அதைத் தடுத்துவிட்டார்’ என்று வடசென்னை கட்சிக்காரர்கள் சொல்கிறார்கள். ‘யாரை வேண்டுமானாலும் வேட்பாளராக ஆக்குங்கள், சிம்லா கூடாது’ என்றாராம் துர்க்கா. காமராஜரின் பேத்தியான மயூரி என்பவரும் விருப்பமனு தாக்கல் செய்தார். ‘தினகரன் நிற்கிறார்’ என்று அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் மருது கணேஷ் பெயர் அறிவிக்கப்பட்டது. ‘தினகரனுக்கு ஈடு கொடுக்கும் வேட்பாளர் அல்ல இவர்’ என்று கட்சிக்காரர்கள் முதல்  வார்த்தையே நெகடிவ்வாகச் சொன்னார்கள். ‘ஜெயலலிதாவுக்கு எதிராக சாதாரண சுகவனத்தை 1996 தேர்தலில் நிறுத்தி ஜெயிக்கவில்லையா?’ என்று சிலர் கேட்கிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் சிம்லா முத்துச்சோழனை நிறுத்தியிருந்தால் மட்டுமே கட்சி பலமான போட்டி கொடுத்ததாக இருக்கும் என்று முன்னணியினர் அனைவரும் நினைக்கிறார்கள்!”

‘‘அப்படியா?”

‘‘சிம்லாவுக்கு இல்லை என்பதை ஸ்டாலினே சொல்லி இருக்கிறார். ‘அடுத்தத் தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்’ என்றும் சொல்லி இருக்கிறார். கண்கள் கலங்கிவிட்டதாம் அவருக்கு. காரில் அழுதபடியே வீட்டுக்குச் சென்றதாகச் சொல்கிறார்கள். 17 பேர் விருப்ப மனு தாக்கல் செய்து இருந்தார்கள். மருது கணேஷை எந்த அடிப்படையில் தேர்வு செய்தார்கள் என்பது கட்சிக்காரர்கள் மத்தியில் குழப்பமாக இருக்கிறது. பொதுவாக காசு இல்லாத வேட்பாளரை மாவட்டச் செயலாளர்களுக்குப் பிடிக்காது. அதையும் மீறி இவரை ஆதரிக்கிறார்கள் என்றால், அதற்கு உள்காரணம் இருக்கிறது. கட்சியில் செல்வாக்கான ஆட்களை வேட்பாளராகப்போட்டு அவர் ஜெயித்தால், அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வரும்போது, அவர் அமைச்சர் பதவிக்கு அடிபடும் மனிதராக ஆகிவிடுவார். டம்மியான ஆளை வைத்துக் கொண்டால்தான் நல்லது என்று வடசென்னை வி.ஐ.பி-கள் சிலர் சேர்ந்து திட்டம் போட்டார்களாம். அவர்கள் உருவாக்கியதுதான் இந்த வேட்பாளர் என்கிறார்கள். இது இன்னொரு பக்கத்தில் ‘தினகரனைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட முடிவு’ என்ற ரீதியிலும் தி.மு.க-வுக்கு நெகடிவ்வாகச் சொல்லப்படுகிறது” என்றபடி பறக்கத் தயாரான கழுகாரிடம், ‘‘வந்ததும் ஆரம்பித்த சூப் கதையைச் சொல்லாமல் போகிறீரே?” என்றோம்!

‘‘ஆர்.கே.நகர் பகுதி தி.மு.க-வில் கேளும்” என்று கண்ணடித்தபடி பறந்தார் கழுகார்!

படம்: கே.ஜெரோம்

அட்டை ஓவியம்: பிரேம் டாவின்சி


42p8.jpg

தினகரனை சமாளிப்பாரா மதுசூதனன்?

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் வேட்பாளராக மதுசூதனன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பி, முன்னாள் போலீஸ் அதிகாரி திலகவதி சில நாள்களுக்கு முன்பு ஓ.பி.எஸ் அணியில் சேர்ந்தார். தீபா, கோகுல இந்திரா, சிம்லா முத்துச்சோழன் என பெண்களே களத்தில் நின்றால், திலகவதியை வேட்பாளர் ஆக்கலாம் என திட்டம் இருந்தது. ஆனால், தினகரன் களத்தில் இறங்கியதும், அவரை சமாளிக்கும் தகுதி படைத்தவராக மதுசூதனனை நினைத்தது ஓ.பி.எஸ் தரப்பு. கடந்த 91-ம் ஆண்டு கடைசியாக இங்கு நின்று ஜெயித்த மதுசூதனன், 26 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு களம் காண்கிறார்.

பொதுவாக தேர்தல்களில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மட்டுமே முக்கியத்துவம் பெறுவார்கள். இதைத் தாண்டி கவனம் பெற வேண்டும் என்றால், தனிப்பட்ட செல்வாக்கும் தேவைப்படும். டி.டி.வி.தினகரன், தி.மு.க-வின் மருது கணேஷ், தீபா என வலுக்கும் போட்டியில் மதுசூதனன் சமாளிப்பாரா? ‘‘இரண்டு முறை ஜெயலலிதா இங்கு நின்றபோது, அவருக்கு மாற்று வேட்பாளராக இருந்தவர் மதுசூதனன். அதனால், ஆர்.கே.நகர் தொகுதியைப் பொறுத்தவரை, ‘தான் இல்லாவிட்டால் மதுசூதனன்தான் தனது சாய்ஸ்’ என ஜெயலலிதாவே வெளிப்படுத்தி இருக்கிறார். இது அம்மாவின் விசுவாசிக்கும் சசிகலாவின் விசுவாசிக்கும் நடக்கும் போட்டி என்றுதான் பிரசாரம் செய்ய இருக்கிறோம்’’ என்கிறார்கள் மதுசூதனன் ஆதரவாளர்கள். மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் கேட்டு, வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையத்தில் மனு செய்துள்ளனர். ஓ.பி.எஸ், மதுசூதனன் இருவரும் இதில் கையெழுத்து போட்டுள்ளனர்.

‘அ.தி.மு.க ஓட்டுகள் சிதறக்கூடாது. எனவே, தீபாவுக்கு ஆதரவு அளியுங்கள்’ என்று தீபா பேரவை சார்பில் ஓ.பி.எஸ் அணிக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். இதேபோல, மதுசூதனனை ஆதரிக்கச் சொல்லி தீபாவிடமும் கேட்டு இருக்கிறார்கள். இதன் முடிவைப் பொறுத்து, ஆர்.கே.நகர் களம் இன்னும் விறுவிறுப்பாகலாம்!


42p9.jpg

வெளியாகிறது வரலாறு!

‘தி.மு.க வரலாறு’ என்ற நூலை, திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு எழுதியுள்ளார். மூன்று தொகுதிகள் அடங்கிய இந்த நூல், மார்ச் 25 சனிக்கிழமை வெளியிடப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிடவுள்ளார். தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன், கொள்கைப் பரப்பு செயலாளர் ஆ.ராசா, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிறுவனர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் நூலைத் திறனாய்வு செய்கிறார்கள்.


மின்வாரிய நியமனத்தில் ஊழல்?

தமிழ்நாடு மின்வாரிய உதவிப் பொறியாளர் நியமனத்துக்கு இருபது லட்சம் ரூபாய் வரை ரேட் பேசப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மொத்தம் 375 பதவிகள் அவை. எழுத்துத் தேர்வு எழுதிய அனைவரும் வாங்கிய மதிப்பெண்களை வெளிப்படையாக வெளியிட்டு இருக்க வேண்டும். இந்தப் பதவிகளை இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்ப வேண்டும். பொதுவாக அரசுத் துறை பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு, அரசு அலுவலகங்களில்தான் நடக்கும். ஆனால், இந்தப் பதவிக்கு தனியார் ஹோட்டலில் நேர்காணல் நடத்தினார்கள். இதைக் கண்டித்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ‘‘அரும்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற இருந்த நேர்காணல், வண்டலூர் ஜி.எஸ்.டி சாலையில் உள்ள ஹோட்டலுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. மின் வாரியத் தலைமை அலுவலகத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்ட அறையில் நேர்காணல் நடத்துவதை விடுத்து, தனியார் நட்சத்திர விடுதியில் நடத்துவதன் நோக்கம், நேர்காணலுக்கு வருபவர்களிடம் அங்கேயே பேரம் பேசுவதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?’’ என்று கேட்டு இருந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ‘‘இந்தத் தேர்வு நடைமுறைகள் அனைத்தையும் மூடுமந்திரமாக வைத்திருந்தனர்’’ என்று சொன்னார்.

ஆனால், ‘‘வெளியூர்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கு வசதியாகத்தான் முதலில் கோயம்பேடு அருகே உள்ள ஹோட்டலில் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போதைய சூழ்நிலையில் சென்னை நகரில் நேர்காணல் நடத்த முடியாது என்பதால், இடத்தை மாற்றி இருக்கிறோம். நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் அடிப்படையில்தான் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அரசியல் காரணங்களுக்காக சிலர் இந்தத் தேர்வு மற்றும் நியமனம் குறித்து தெரிவிப்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு’’ என்று அமைச்சர் தங்கமணி சொல்கிறார்.

ஆனால், ‘‘எழுத்துத் தேர்வுக்கு 100 மதிப்பெண்; நேர்முகத் தேர்வுக்கு 15 மதிப்பெண்.  அண்ணா பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பில் எழுத்துத் தேர்வு நடந்தது. இதில் பெற்ற கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் இருவரும், மின்வாரியம் சார்பில் ஒருவரும் என்று மூன்று பேர் நேர்காணலை நடத்தி இருக்கிறார்கள். வேண்டியவர்களுக்கு மதிப்பெண்ணை கூட்டிப் போடுகிறார்கள்’’ என்கிறார்கள் புகார் சொல்பவர்கள். ‘‘நேர்காணல் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகள் எதுவும் இல்லை’’ என்று மின் வாரியம் தரப்பில் சொல்கிறார்கள்.


42p7.jpg

அர்ச்சனா ரெடி!

தமிழக போலீஸின் தலைமைப் பதவியான டி.ஜி.பி (சட்டம்-ஒழுங்கு) நாற்காலிக்கு நடக்கும் போட்டியில் அர்ச்சனா ராமசுந்தரமும் இருப்பதை கடந்த இதழில் கழுகார் சொல்லியிருந்தார். கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசுப் பணிக்குச் சென்று, சி.பி.ஐ கூடுதல் இயக்குநர் ஆனார் அர்ச்சனா. இதனால் தமிழக அரசு அவரை சஸ்பெண்ட் செய்தது. இதை எதிர்த்து நீதிமன்றம் போனார் அர்ச்சனா. மத்திய உள்துறை, அவரது சஸ்பெண்டை ஏற்க மறுத்தது. இதற்கிடையே தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்த்து, மத்திய அரசுப்பணியாளர் தீர்ப்பாயத்தில் வழக்கு போட்டார் அர்ச்சனா. ஆனாலும், தமிழக அரசு பிடிவாதமாக இருந்தது. இந்தச் சூழலில், அவரது சஸ்பெண்டை ரத்து செய்வதாக தமிழக அரசு இப்போது அறிவித்துள்ளது. எனவே, அர்ச்சனா தமிழக டி.ஜி.பி (சட்டம்-ஒழுங்கு) பதவியில் அமரும் வாய்ப்பு பிரகாசம் ஆகியுள்ளது.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெறுப்புமுனைதான் கிடக்கு!!

டிஸ்கி :

எல்லாத்தையும் அண்ணாமலையார் பார்த்துப்பார்

அண்ணாமலையாரே அரோகரா !!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.