Jump to content

பிலவுக்குடியிருப்பில் என்ன நடக்கும்?


Recommended Posts


பிலவுக்குடியிருப்பில் என்ன நடக்கும்?
 

article_1487582505-kwppa-new.jpg- கருணாகரன்  

“கேப்பாப்புலவு - பிலவுக்குடியிருப்பில் என்ன நடக்கப்போகிறது?”. இதுவே இன்றைய மிகப்பெரிய கேள்வி.  

ஏனென்றால், தங்களுக்கான தீர்வு கிடைக்கவில்லை என்றால், அடுத்ததாக படைமுகாம்களாக இருக்கும் காணிகளுக்குள் நுழையப்போவதாக, அங்கே போராடிக் கொண்டிருக்கின்ற மக்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இதை அவர்கள் செய்யும் நிலையே இன்றுள்ளது. எத்தனை நாட்களுக்குத்தான் அவர்கள், இப்படி வீதியில் இரவும் பகலும் காத்திருக்க முடியும்? ஆனால், அப்படி யாராவது காணிகளுக்குள் நுழைந்தால், அது பெரிய விபரீதமான விளைவுகளை உண்டாக்கும் என்று எச்சரித்திருக்கிறது படைத்தரப்பு.  

இப்போது, நிலைமையை அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உணராதுவிட்டாலும், வாசகர்களாகிய நீங்கள் நன்றாக உணர்ந்திருப்பீர்கள். கொதிப்பின் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, பிலவுக்குடியிருப்புப் போராட்டம்.  

article_1487582607-kep-new.jpg

அடுத்தாக என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. எதுவும் நடக்கலாம்.  

“எந்த முடிவுமில்லாமல் குழந்தை, குட்டிகளோடு தொடர்ந்து வீதியில் எத்தனை நாட்களுக்குத்தான் இருக்க முடியும்? இப்படியான ஒரு நிலையில் இருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள், அல்லது உங்களுக்கு எப்படி இருக்கும் என்று ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்” என்று கேட்கின்றார், இங்கே இருக்கின்ற வயதான பெண்ணொருவர். அவருடைய கேள்விக்கு யார் பதில் சொல்ல முடியும்?  

ஆகவே, எந்த முடிவுமில்லாமல், எந்தப் பதிலுமில்லாமல் இருக்க இருக்க, அவர்களுக்குள் கோபமும் வெறியும் கூடுகிறது. அது தர்மாவேசம். இந்தத் தர்மாவேசம், அடுத்த கணத்தில் எத்தகைய ஒரு வடிவத்தையும் எடுக்கும்.

அதிலும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் 95 வீதமானவர்கள், பெண்களும் குழந்தைகளுமே ஆவர். ஆகவே அவர்களுடைய கோபத்தின் உச்சக்கட்டம் என்பது, நிச்சயமாகத் தர்மாவேசத்தின் வெளிப்பாடுதான். அது மதுரையை எரித்த கண்ணகியின் கோபத்துக்கு நிகரானது, அல்லது அதனிலும் கூடியது.  

“வற்றாப்பளைக் கண்ணகி, கேப்பாப்புலவுவில் கோபம் கொண்டிருக்கிறாள்” என்கிறார், அகிலாண்டேஸ்வரி என்ற பெண். கேப்பாப்புலவுவில் இருந்து பார்த்தால், வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோவில் தெரியும். நந்திக்கடலின் ஓரத்திலேயே, வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் கோவிலும் இருக்கிறது.

நடந்து செல்லும் தூரத்திலேயே கேப்பாப்புலவு - பிலவுக்குடியிருப்பும் இருக்கிறது. ஆகவே கண்ணகியைப் பார்த்துப் பார்த்துத் தங்களுக்குள் அவளை, அவளுடைய கோபத்தை, அவர்கள் உருவகித்திருக்கிறார்கள். இப்போது அந்தக் கோபாவேசம், உருக்கொண்டு வருகிறது. 

ஆனால், எதிர்த்தரப்பில் உள்ளது படை. படைக்கு, பெண்களும் ஒன்றுதான், குழந்தைகளும் ஒன்றுதான், போராளிகளும் ஒன்றுதான். தமக்கு எதிராக யார் வந்தாலும் அவர்களை அது எதிர்க்கும். எதிராக நிற்போர், தமது இலக்கு என்று மட்டுமே அது பார்க்கும். இங்கும் இதுதான் நிலைமை.  

ஏற்கெனவே இதே நந்திக்கடலின் கிழக்குக் கரையில், மிக வலுவான விடுதலைப் புலிகள் இயக்கம், இதே படைகளால் தோற்கடிக்கப்பட்டது. அப்படி அந்தப் பெரிய அமைப்பின் போராட்டத்தைத் தோற்கடித்த படைகளுக்கு இப்போது இந்தப்போராட்டத்தை, அதே கடலோரத்தில் தோற்கடிப்பதில் என்ன தயக்கம் வரப்போகிறது என்று, அரசாங்கமோ வேறு தரப்புகளோ யோசிக்கலாம்.

ஆனால் அது, கையிலே ஆயுதத்தை வைத்திருந்த புலிகள். இதுவோ, கையிலே கோரிக்கைக் கடிதங்களை ஏந்தி வைத்திருக்கும் பெண்களும் சிறு பிள்ளைகளும். அடுத்ததாக எதைத் தன்னுடைய குறிப்பேட்டில் பதிவது என்று இங்கேதான் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது வரலாறு. 

article_1487582807-children-new.jpg

ஆனால், “பிலவுக்குடியிருப்பு மக்களின் காணியைத் தான் அபகரித்து வைத்திருக்கிறோம்” என்ற உணர்வு, படையிடம் இல்லை. அதற்கு, அதனுடைய நலனே முக்கியம். அதனுடைய கேந்திர நலன்களைப் பற்றியே அது சிந்திக்கும்.

அதற்குப் பிறகுதான் மற்றதெல்லாம் என்றபடியால்தான், இதுவரை இந்தப் பிரச்சினையில் படையினரின் நிலைப்பாட்டை மீறி அரசாங்கத்தினால் தீர்மானம் எடுக்க முடியாமல் இருக்கிறது.

இல்லையென்றால், ஜனவரி 25இல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கேப்பாப்புலவுவில் வைத்தே இந்த மக்களுடைய பிரச்சினையைத் தீர்த்திருக்க முடியும். அப்படித்தானே கேப்பாப்புலவு - பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்று வாக்குறுதியும் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அவருடைய அன்றைய பயணமே, பின்னர் இரத்துச் செய்யப்பட்டது. படைகளின் நிலைப்பாட்டை மீறி, அவரால் எதையும் செய்ய முடியவில்லை. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதிக்கும் காணப்படும் அவல நிலை இது.  

இதனால் நம்பிக்கை இழந்த மக்கள், நம்பி ஏமாந்த மக்கள், தங்களுக்கு ஏற்பட்ட அறச்சீற்றத்தின் வெளிப்பாடாக, தெருவிலேயே போராட்டத்தை ஆரம்பித்தனர். ஆகவே ஒரு வகையில் இந்தப்போராட்டத்தின் தொடக்கப்புள்ளி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான்.  

ஆனால், அவர் அதற்குப் பிறகு எத்தகைய அறிவித்தலையும் இது தொடர்பாக விடுக்கவில்லை. இந்தப் போராட்டத்தை அறிந்த பிறகு, இந்தக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு, படைத்தரப்புக்கு ஜனாதிபதி பணித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது.

article_1487582902-keppapilav-new.jpg

ஆனால், அதனைச் சரியாக உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அந்தத் தகவல் உண்மையாக இருந்தால், அதை பிலவுக்குடியிருப்பில் போராடிக்கொண்டிருக்கின்ற மக்களிடம்தான், ஜனாதிபதி முதலில் சொல்லியிருக்க வேண்டும்.

அதற்குரியவாறு பொறுப்புமிக்க தலைவர்கள் யாரையும், போராடும் மக்களிடம் அவர் அனுப்பி வைத்திருக்கலாம். அதற்கே அவர் முன்வந்திருக்க வேண்டும், அல்லது அவரே பிலவுக்குடியிருப்புக்கு நேரில் செல்ல வேண்டும். அதுவே பொருத்தமானதும் சிறப்பானதுமாகும்.  

ஜனாதிபதி சிறிசேன, இப்படிச் சில அதிரடி வேலைகளை - விளையாட்டுகளைச் செய்வதுண்டு. கடந்தாண்டு, சுன்னாகத்திலுள்ள சபாபதிப்பிள்ளை முகாமுக்கு ஜனாதிபதி சென்றிருந்தார். அங்கிருந்த மக்களின் குடிசையில் இருந்து கொண்டு, தேநீர் பருகினார். அவர்களோடு சேர்ந்து புகைப்படங்களையும் எடுத்தார். 

கடந்த வாரத்தில், மலையகத்தில் உள்ள ஒரு லயமொன்றுக்குச் சென்று, அந்த மக்களுடன் சேர்ந்து கொண்டு, ரொட்டி சாப்பிட்டார். அப்போதெல்லாம் அந்த மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று சொல்லிச் சென்றார்.

ஆனால், அவர் சொன்னதைப்போல, இலகுவாக எந்தப் பிரச்சினைகளும் தீர்ந்து விடவில்லை. அப்படி ஒரே நாளில் அவை தீர்ந்தும் விடாது. எல்லாவற்றையும் ஒரு சுண்டு விரல் அசைப்பில் சீர்படுத்தி விடுவதாக ரஜினிகாந்தின் சினிமாக்களில் காட்டப்படுவதைப் போன்றதல்லவே, இலங்கையின் அரசியல் நிலைவரமும் களநிலைவரமும்.  

ஆனால், இந்தமாதிரியான இடங்களுக்கு ஜனாதிபதி சென்றமையே ஒரு மாற்றம்தான், ஒரு செய்திதான். இது அங்குள்ள மக்களுடைய பிரச்சினையைத் தீர்க்காது விட்டாலும், அவர்களுக்கு ஒரு தற்காலிக ஆறுதலே. “ஜனாதிபதியே நேரிலே எங்களிடம் வந்தார். எங்களோடு இருந்தார். எங்களோடு படம் எடுத்துக் கொண்டார்” என்று, அவர்கள் மகிழ்கின்றனர். 

இவ்வாறான இடங்களுக்குச் செல்வதும் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களைச் சந்தித்து, அவர்களுடன் நேரில் பேசுவதும் கூட நல்லதே. ஆனால், அதன் தொடர்ச்சியாக சில மாற்றங்களாவது நடக்க வேண்டும்.

இல்லையென்றால், இது வெறும், காட்சி காட்டும் அரசியலாகி விடும். வேண்டுமானால், அடுத்த தேர்தல் பிரசாரத்துக்கு, இந்தப் படங்கள் ஜனாதிபதிக்கு உதவக்கூடும். மற்றும்படி ஏதுமிருக்காது.  

article_1487583018-ke-new.jpg

இதனால் ஜனாதிபதியின் இந்த மாதிரியான வேலைகளை, சிலர் கடுமையாக விமர்சிக்கிறார்கள். “இதெல்லாம் போராடும் மக்களின் உணர்வைத் திசைதிருப்புகின்ற ஓர் உபாயம். அவர்களுடைய பிரச்சினை தீர்க்கப்படும் என்ற உணர்வை ஏற்படுத்தி, அவர்களுடைய போராடும் நிலையைத் தணித்து விடுகிற உத்தி” என இவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 

ஆகவே ஜனாதிபதி, இந்த மாதிரி விடயங்களில் இனியும் தாமதிக்கவும் கூடாது, படம் காட்டவும் முடியாது. இதையே இன்றைய பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

முன்னே எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினையை, கண்டும் காணாமலிருக்கும் பிடிவாதக்குணம். இது அகந்தையின் வெளிப்பாடு. அதிகாரத்தின் திமிர்த்தனம், ஜனநாயகத்துக்கு விரோதமானது.  

இதனால்தான் போராடிக் கொண்டிருக்கின்ற மக்களை, இதுவரையில் அரசாங்கத்தின் பொறுப்புமிக்க எந்த நபரும் சென்று பார்க்கவில்லை. ஆறுதல் சொல்லவும் இல்லை. அவர்களைப் பற்றிப் பொருட்படுத்தாதன் விளைவன்றி, வேறு என்ன காரணம் இருக்க முடியும்?  

“எங்களுடைய காணியை, தயவுசெய்து தந்து விடுங்கள்” என்று கேட்டுக்கொண்டு, தாங்கள் குடியிருந்த அரை ஏக்கர் பரப்பளவுடைய வளமற்ற நிலத்துக்காக, இந்த நாட்டிலே ஒரு கிராமத்து மக்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக தெருவிலே நிற்கிறார்கள். அவர்களைப் பற்றி, அரசாங்கத்துக்கு அக்கறையில்லை என்றால், அதனுடைய அர்த்தம் என்ன?

“நல்லாட்சிக்கான அரசாங்கம்” என்ற மகுட வாசகத்தைப் பொறித்துக் கொண்டிருக்கும் ஓர் அரசாங்கமும் தலைவர்களும், இதைக்குறித்து என்ன சொல்கிறார்கள்?  

அரசாங்கத்தின் தவறு ஒரு பக்கமாக உள்ளது என்றால், மறு பக்கத்தில் இந்த மக்களைப் பிரதிநிதிப்படுத்தும் எதிர்க்கட்சிக்கும் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழரசுக் கட்சிக்கும்) இதைக்குறித்தும் இந்த மக்களைக்குறித்தும் அக்கறையில்லை.

அப்படியான ஓர் அக்கறை இருந்திருந்தால், இந்த மக்கள் இத்தனை நாட்களாக, இப்படித் தெருவிலே நிற்க வேண்டியிருக்காது. குழந்தைகள், சிறுவர்கள், முதியோர்கள், பெண்கள் என, கிராமமே எழுந்துவந்து, வீதியில் இரவு பகலாக நிற்கிறது.

மழையிலும் குளிரும், தெருவிலே இருக்கிறது. இந்த நிலையில், இவர்களிடம் வந்து ஆறுதல் சொல்வதற்கும் ஆதரவு தெரிவிக்கவும் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கவும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து அதன் தலைவர் சம்பந்தனோ, அடுத்த தலைவர்களாக இருக்கும் மாவை சேனாதிராஜா, சுமந்திரன் போன்றவர்களோ வரவில்லை.

இவ்வளவுக்குத்தான், இந்த மக்களைக்குறித்து நம்முடைய தலைவர்களுடைய அக்கறை இருக்கிறது என்று கடிந்து கொள்கின்றார் ஒரு முதியவர்.  

வடக்கின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இந்த மக்களைச் சென்று பார்த்திருக்கிறார். பின்னர், மாகாணசபை உறுப்பினர்களும் சென்றிருக்கிறார்கள். “தீர்வு கிடைக்கும்வரையில் தொடர்ந்து போராடுங்கள்” என்று எல்லோரும் சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

மக்களுடைய பிரச்சினைகளுக்காகப் போராடவேண்டியர்கள், மக்களைப் போராடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். மாகாணசபையின் மூலமாக, ஜனாதிபதிக்கு ஒரு கடிதமும் எழுதப்பட்டதாகத் தகவல். இதற்கப்பால் எதுவுமே நடக்கவில்லை.  

இப்போது (19ஆம் திகதி) கிடைக்கின்ற தகவல்களின்படி, எதிர்வரும் நாட்களில் அரச நிர்வாக முடக்கத்தைச் செய்வதற்கு தன்னார்வலர்களும் சில அரசியல் பிரதிநிதிகளும் முயன்று கொண்டிருக்கின்றனர். பாடசாலைகளிலும் அடையாளப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான அறிவிப்புகள் வரக்கூடிய நிலை உள்ளது.

தனியார் போக்குவரத்துச் சங்கங்களும் வணிகர் கழகங்களும், ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபடக்கூடும். போராடும் மக்களுக்கு உள்ளூர் மட்டத்திலுள்ள சில அமைப்புகளும் இடதுசாரிய அமைப்புகளும் இப்படி ஊக்கமாக இருக்கின்றன. ஒவ்வொரு நாளும், ஏதோ ஓர் அமைப்புச் சென்று, மக்களுடன் கூட இருக்கின்றது.  

article_1487583099-pilaku-new.jpg

ஆனால், இதைப் பரந்த அளவில் நாடெங்கும் விரித்துச் செல்வதற்கான முயற்சிகள் தேவை. ஏனென்றால், இது மக்களின் போராட்டம், அவர்களுடைய வாழிடத்துக்கான போராட்டம். யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இனியும் அந்த மக்கள் அகதிகளாக இருக்கத்தான் வேண்டுமா? அப்படித் தொடர்ந்தும் அகதிகளாக இருக்கத்தான் முடியுமா? அது அவசியமா? அது தேவையா? நீங்கள் யாரும் அப்படி இருக்கத் தயாரா? யுத்தம் முடிந்த பிறகான சூழலை நாடு அனுபவித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு குறிப்பிட்டளவு மக்கள் மட்டும், எதற்காக யுத்தகாலத் தண்டனையைத் தொடர்ந்தும் அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்?   

ஆகவே, பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு, ஆதரவு அதிகரித்துச் செல்ல வேண்டும். அதற்கமைய இந்தப் போராட்டம், பல தளங்களுக்கும் விரிந்து செல்வது அவசியம். குறிப்பாக, புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த மக்களுக்கான ஆதரவு அலைகள் உருவாக வேண்டும். நோர்வேயில் இதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏனைய நாடுகளுக்கும் இது விரிவடைவது சிறந்தது.  

ஆனால், இதனை அதிகார சக்திகள் எவையும் விரும்பாது. மக்களின் தன்னெழுச்சியான எந்தப் போராட்டத்தையும், எந்த அதிகார சக்திகளும் விரும்புவதில்லை. அதனால் அவை இந்தப் போராட்டத்தைச் செயலிழக்க வைக்கும், அல்லது முடக்க முனையும். இப்போது செயலிழக்க வைக்கும் முயற்சியே நடந்து கொண்டிருக்கிறது.

அதனால்தான் அவை, இந்தப்போராட்டத்தைப்பற்றி தாம் அக்கறைப்படவில்லை என்ற மாதிரி நடந்து கொள்கின்றன. இப்படிச் செய்வதன் மூலமாக, போராடும் மக்கள் ஒரு கட்டத்தில் களைப்படைந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கின்றன.

இல்லையென்றால் இதைப்போல ஒவ்வொரு விடயங்களுக்குமாக மக்கள் போராடத்தொடங்கி விடுவர். அது தமது இருப்புக்கும் அதிகாரத்துக்கும் எதிரானதாக மாறி விடும் என்று அதிகார அமைப்புகளுக்குத் தெரியும். எனவே மக்களைக் களைப்படைய வைப்பதையே குறியாகக் கொண்டிருக்கின்றன. இதையும் கடந்து மக்கள் எழுச்சியடைந்தால், அதை அடக்குவதற்கு படைத்தரப்பின் எச்சரிக்கை உள்ளது.  

ஆனால், மக்களின் கோபத்துக்கு முன்னால் படையின் எச்சரிக்கை எப்படி இருக்கும்? 

கண்ணகியின் கோபம், மதுரையை எரித்தது. அதே கண்ணகி கோயில் கொண்டிருக்கும் வற்றாப்பளை, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு, நந்திக்கடலோரத்தில் என்ன நடக்கக்கூடும். ஆமாம், பிலவுக்குடியிருப்பில் அடுத்து என்ன தான் நடக்கப்போகிறது?    

- See more at: http://www.tamilmirror.lk/191854/ப-லவ-க-க-ட-ய-ர-ப-ப-ல-என-ன-நடக-க-ம-#sthash.znXiYbUZ.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.