Jump to content

என்னருமை தோழி


Recommended Posts

என்னருமை தோழி...!- 24: எனக்கும் அரசியல் தெரியும்!

 

 
 
‘அடிமைப் பெண்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் அரசி ‘பவளவல்லி’யாக ஜெயலலிதா.
‘அடிமைப் பெண்’ படத்தில் எம்.ஜி.ஆருடன் அரசி ‘பவளவல்லி’யாக ஜெயலலிதா.
 
 

சந்திரபாபு வேடிக்கையான மனிதர். ‘அடிமைப் பெண்’ படத்தில் ஒரு காட்சியில் ‘‘வேங்கையா.. வேங்கையா! நீ எங்கய்யா போனே..?” என்று கத்தியபடி சந்திரபாபு பாலைவனத்தில் எம்.ஜி.ஆரைத் தேட வேண்டும். ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தி, செங்குத்தான மணல்மேட்டிலிருந்து சந்திரபாபு கீழே இறங்கி வருவதை படம் பிடிப்பதற்கு வசதியாக, கேமராவை நிலைப்படுத்தியிருந்தார்.

இயக்குநர் ‘ஆக் ஷன்’ என்று சொன்னதும் சந்திரபாபு மணல் மேட்டிலிருந்து ‘வேங்கையா… வேங்கையா!..’ என்று கத்தியவாறு கீழே இறங் கத் துவங்கினார். அவர் வேண்டும் என்று செய் தாரோ... அல்லது, இறங்கும்போது கால் இடறி யதோ, மணல்மேட்டிலிருந்து ஏழெட்டு குட்டிக் கரணங்களை போட்டு, கீழே விழுந்து, சுதாரித் துக்கொண்டு கேமராவைப் பார்த்தார். இதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர். எரிச்சலடைந்து விட் டார். ‘‘மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறி விட்டது’’ என்று இயக்குநரிடம் கூறினார். எம்.ஜி.ஆர் கோபத்துடன் இருப்பதை அறிந்த நீங்கள், நடந்ததைப் பற்றி சந்திரபாபுவிடம் கேட்டீர்கள்.

காட்சி தத்ரூபமாக அமையவேண்டும் என் பதற்காகவே, தான் அவ்வாறு விழுந்ததாக, சந்திர பாபு பின்னர் தங்களிடம் கூறினார். சந்திரபாபு விழுந்தது நகைச்சுவைக்கு பலம் சேர்த்தது என்றாலும், அவர் அம்மாதிரி விழப் போவதை இயக்குநருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் கூறி யிருக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் எண் ணம். இருப்பினும், காட்சியை நீக்காமல், ‘‘அவர் விழுவது போலவே இருக்கட்டும்’’ என்று கூறி விட்டார் எம்.ஜி.ஆர்.! இந்த விவகாரம் முடிந்தா லும் தொடர்ந்து சந்திரபாபுவால் பிரச்சினைகள் தோன்றிக்கொண்டுதான் இருந்தன.

என்னருமை தோழி…!

பாலைவனத்தில், எம்.ஜி.ஆர், சோ, சந்திரபாபுவுடன் உங்களுக்கு ஒரு காம்பினே ஷன் காட்சி. எம்.ஜி.ஆருக்கு மட்டும் ஒப்பனை யில் மாறுதல்கள் தேவைப்பட்டதால், அவர் ஒரு கூடாரத்தில் ஒப்பனை செய்துகொண் டிருந்தார். சோவும் நீங்களும் நாற்காலிகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தீர்கள். நீங்கள் இருவரும் சேர்ந்தால் அரசியலில் துவங்கி, இலக்கியம், சினிமா, ஆன்மிகம் என்று விவாதிப் பதற்கு விஷயங்கள் நிறைய இருக்கும். தங்களுடன் சந்திரபாபு வேறு சேர்ந்து கொண்டதால், சிரிப்பு வெடிகளாக சிதறின.

அப்போது ஒப்பனை முடித்து வந்த எம்.ஜி.ஆரை ஏற இறங்க பார்த்த, சந்திரபாபு, அவரது நேர்த்தியான ஒப்பனையில் லயித்துப் போனார். ‘‘வாத்யார்...லுக்ஸ் டாஷிங்...! ஹி லுக்ஸ் லைக் எ கிரீக் காட்..!’’ என்று கூற, சோவும், நீங்களும் லேசாக புன்னகைத்தீர்கள். ஆனால், எம்.ஜி.ஆருக்கு என்ன தோன்றியதோ, விருட் டென்று அங்கிருந்து சென்று விட்டார். ஒரு இறுக்கமான சூழ்நிலை அங்கு தோன்றியது.

நிலைமையை ஊகித்துக்கொண்ட நீங்கள், ‘‘பாபு...! நீங்க சொல்ல விரும்பியதை தமிழி லேயே சொல்லியிருக்கலாம்’’ என்று கூறினீர்கள். ‘‘அவர் கிரேக்க கடவுளைப் போல அழகா இருக்கிறதாத்தானே சொன்னேன்..’’என்று சந்திரபாபு கூறினாலும், சுற்றி இருந்தவர்களின் தூபமும் சேர அவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையே அத்தோடு ஒரு திரை விழுந்து விட்டது. இருவரிடையே இணக்கத்தை ஏற்படுத்தி சந்திரபாபுவின், ‘மாடி வீட்டு ஏழை’ படத்தை முடிக்க வேண்டும் என்ற உங்களது நல்லெண்ணம், பலிக்காமலே போய்விட்டது!

ஆனால், ‘அடிமைப் பெண்’ திரைப்படம், தமிழகம் கண்டிராத மாபெரும் வெற்றியைப் பெற்றது. உங்களுக்கும் மிகப்பெரிய பெயர் கிடைத்தது. ஒகேனக்கல் ஆற்றில் தாங்கள் எம்.ஜி.ஆருக்கு வாள்பயிற்சி அளிக்கும் காட்சி யில் விசில் சத்தம் கூரையைப் பிளந்தது. ‘அம்மா என்றால் அன்பு…’ பாட்டின் மூலம் தங்கள் இசை ஞானத்தையும், முரசு நடனத்தின் மூலம் உங்களது நாட்டிய திறமையையும் எம்.ஜி.ஆர். வெளிக்கொணர்ந்தார்!

ஜீவா பாத்திரத்தை காட்டிலும், எதிர்மறை யான குணாதிசயம் கொண்ட அரசி பவளவல்லி யின் பாத்திரம் சூப்பர் ஹிட் ஆனது. சுட்டு விர லால், கீழுதட்டினை மடித்து, பற்களால் கடித்து பிறகு அலட்சியத்துடன் இதழை விடுதலை செய் யும் தங்கள் ஸ்டைல் அனைவரையும் பெரிதும் கவர்ந்தது. அந்த கால மாணவிகளிடையே இந்த ஸ்டைல் மிகவும் பிரபலமானது. தளபதியாக வரும் ஆர்.எஸ்.மனோகரிடம் ஒரு காட்சியில் நீங்கள், ‘‘எனக்கும் அரசியல் தெரியும் தளபதியாரே..’’ என்று சவால் விடும்போது பின்னாளில் அந்தக் காட்சிக்கு உற்சாக வரவேற்பு! ‘அடிமைப் பெண்’ வசூலில் பெரும் சாதனைகளை புரிந்ததோடு, ஒரு வெள்ளிவிழா படமாகவும் அமைந்தது. சிறந்த படம் விருது, பிலிம் பேர் விருதுகள் வென்றது.

இதே வருடத்தில் சிவாஜி கணேசனுடன் நீங்கள் நடித்த இரண்டு படங்கள் வெளியாயின. ‘தெய்வ மகன்’ படத்தில் தந்தை, இருமகன் கள் வேடத்தில் நடித்த சிவாஜி கணேசனுக்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது. தாங்கள் முன்பே கூறியது போன்று, விருது கிடைத்ததில் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

‘தெய்வ மகன்’ படப்பிடிப்பில் ஒரு சுவை யான சம்பவம். தந்தை சிவாஜி கணேசனிடம் தன் காதலியான தங்களை அறிமுகம் செய்ய அழைத்து வருவார், இரண்டாவது மகனாகவும் நடிக்கும் சிவாஜி. தந்தையை கண்டதும், பயந்து நெளிந்து, அசைந்தாடி, நகத்தை கடித்துக்கொண்டே நிற்பார்.

படம் முழுவதும் இரண்டாவது மகன் பாத்திரத்தின் மேனரிசமாக இது இருக்கும். இதை கவனித்துக் கொண்டிருந்த நீங்கள், சிவாஜி கணேசனிடம், ‘‘நீங்கள்…யாரை இமிடேட் செய்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். அவரிடம் சொல்லி விடட்டுமா…’’என்று விளையாட் டாக பயமுறுத்திக் கொண்டே இருப்பீர்கள். சிவாஜியும்… ‘‘அம்மாடி..கண்டுக்காதே. மூன்று பாத்திரங்களை ஏற்று நடிக்கிக்கிறேன். வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற் காகவே அவரை காப்பி அடிக்கிறேன்…’’ என்று சிரிப்பார்.

‘தெய்வ மகன்’ படம் வெளியானதும், அனை வரும் கண்டுபிடித்துவிட்டார்கள். அவ்வாறு நகம் கடிப்பதும், நெளிவதும், இயக்குனர் தரின் மேனரிசம் என்று அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் அறிந்திருந்தார்கள், என் தந்தை ‘சித்ராலயா’ கோபு உட்பட! சிவாஜி கணேசனுடன் நீங்கள் நடித்த ‘குருதட்சிணை’ படம், சுமாராகத்தான் போனது. அதில் சிவாஜி கணேசன், பத்மினிக்கு ஈடு கொடுத்து நீங்கள் நடித்திருந்தீர்கள்.

‘அடிமைப் பெண்’ படப்பிடிப்பின்போது ஒரு நாள் உணவு இடைவேளையில் எம்.ஜி.ஆரிடம், ஒரு கதையைக் கூறினீர்கள். அந்தக் கதை ஏற்கனவே, நீங்களும், என்.டி. ராமாராவும் ஜோடியாக நடித்து, வெளிவந்த ‘கதாநாயகுடு’ படத்தின் கதை. எம்.ஜி.ஆருக்கு இந்தக் கதை மிகவும் பிடித்து போனது. முல்லபுடி வேங்கட ரமணா என்பவரின் கதை அது. அதை தமிழில் விஜயா இன்டர்நேஷனல் சார்பில் நாகிரெட்டி தயாரித்தார்.

படத்தில் தனக்கு பொருத்தமாக இருக்கும் படி சில மாற்றங்களைச் செய்த எம்.ஜி.ஆர்., படத்தில் தனது பாத்திரத்தின் பெயரையும் ‘துரை’ என்று வைத்தார். அண்ணாவின் மரணம் அவரை எவ்வளவு தூரம் பாதித்திருந்தது என் பதை இதிலிருந்து புரிந்து கொண்டீர்கள். அது மட் டுமா... எம்.ஜி.ஆர். மீது மக்கள் கொண்டி ருந்த அனுதாபம்தான் அலையாக எழுந்து 1967 தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தியது என்று நீங் கள் கூறியிருந்ததை இந்த படத்தின் மூலம் அவர் பரிசோதிக்க முடிவு செய்துவிட்டார் என்பதை யும் புரிந்து கொண்டீர்கள். அந்தப் படம்…

- தொடர்வேன்... |

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-24-எனக்கும்-அரசியல்-தெரியும்/article9516539.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

என்னருமை தோழி...! - 25: நடிகையின் கதை

 

 
‘சுமதி என் சுந்தரி’ படத்தில் ‘ஒரு ஆலயமாகும் மங்கை மனது...’ பாடல் காட்சியில் ஜெயலலிதா.
‘சுமதி என் சுந்தரி’ படத்தில் ‘ஒரு ஆலயமாகும் மங்கை மனது...’ பாடல் காட்சியில் ஜெயலலிதா.
 
 

தனக்கு உள்ள மக்கள் செல்வாக்கை சோதனை செய்து பார்க்க வெள்ளோட்டமாக எம்.ஜி.ஆர். அறிவித்த படம் ‘நம் நாடு’! எம்.ஜி.ஆரையும் உங்களையும் இணைத்தே ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். எம்.ஜி.ஆரின் கொள்கைகளுக்கேற்ப அரசியல் வசனங்களுடன், பெரும் பொருட்செலவில் பிரம்மாண்ட மாக தயாரிக்கப்பட்ட ‘நம் நாடு’ மிகப் பெரிய வெற்றி பெற்றது.

தியேட்டர்களுக்கு சென்று படத்துக்கு ரசிகர் களிடையே கிடைக்கும் ஆதரவை எம்.ஜி.ஆர். கவனித்து வந்தார். ‘வாங்கய்யா. வாத் தியாரய்யா...’ என்று தாங்கள் பாடி ஆடி எம்.ஜி.ஆரை வரவேற்கும் காட்சியை, குறிப் பாக சில தியேட்டர்களில் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் திரையிடச்செய்து பண நோட்டுகளை அள்ளி வீச, எம்.ஜி.ஆருக்கு பரம திருப்தி!

1970-ல் முரசொலி மாறன் தயாரித்த ‘எங்கள் தங்கம்’ படத்தில் நீங்களும், எம்.ஜி.ஆரும் ஊதியம் ஏதும் பெறாமல் நடித்துக் கொடுத்தீர் கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதுதான், உங்களுக்கு சில சந்தேகங்கள் எழுந்தன. படத்தின் கதை நகராமல், துண்டு துண்டு காட்சிகளாக படம் எடுக்கப்படுவதாக உங்களுக் குத் தோன்றியது. உங்களின் இந்த சந் தேகத்தை எம்.ஜி.ஆரிடமும் கூற, அவருக்கும் அது உண்மையென்று பட்டிருக்க வேண்டும். அவர் விசாரித்து பார்த்ததில், படத் தயாரிப் பாளர்களுக்கு திடீரென்று ஆர்வம் குறைந்து விட்டதை உணர்ந்தார்!

அதற்கான காரணம் என்ன என்பதை அறிந்த போது, எம்.ஜி.ஆருக்கு பெருத்த அதிர்ச்சி. கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க.முத்துவை திரைப்படத்துறையில் ஹீரோவாக்க வேண் டும் என்பதற்காக ‘பிள்ளையோ பிள்ளை’ என்ற படத்திற்கான கதை விவாதத்தில் தயாரிப்பாளர்கள் ஆழ்ந்திருந்தது தெரிந்தது.விரைவில் ‘எங்கள் தங்கம்’ படத்தை முடித்துக்கொள்ளும்படி எம்.ஜி.ஆர் கூறிவிட, படமும் அவசரமாக முடிக்கப்பட்டது.

இந்தப் படம்தான் அரசியலில் வருங் காலத்தில் நிகழ இருந்த பூகம்பத்துக்கும், பிளவுக்கும் அஸ்திவாரம் போட்டது. 1971-ல், ‘என் அண்ணன்’, ‘நீரும் நெருப்பும்’ மற்றும் ‘குமரிக் கோட்டம்’ போன்ற படங்களில் எம்.ஜி.ஆருட னும், ‘சவாலே சமாளி’, ‘சுமதி என் சுந்தரி’ போன்ற படங்களில் சிவாஜி யுடனும், ‘அன்னை வேளாங்கண்ணி’ மற்றும் ‘ஆதிபராசக்தி’ போன்ற பக்தி படங்களிலும் நடித்தீர்கள்.

‘சுமதி என் சுந்தரி’ படக்கதையை கேட்ட துமே நீங்கள் உடனே ஓ.கே. சொல்லி விட்டீர்கள். காரணம் அமைதியான குடும்பப் பெண்ணாக வாழ விரும்பும் ஒரு சினிமா நடிகையின் கதை அது. உண்மை வாழ்க்கை யிலும் அப்படித்தானே நீங்கள் வாழ வேண்டும் என்று நினைத்தீர்கள். ‘சுமதி என் சுந்தரி’ படத்தின் ஆரம்பத்தில் ரசிகர்களை குழப்பும் ஒரு சுவையான காட்சி...

படத்தைப் பார்க்கும் பொதுமக்களுக்கு குறிப்பாக சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கு முதல் காட்சி தூக்கிவாரிப்போடும். முதல் காட்சி ‘ஒரு ஆலயமாகும் மங்கை மனது...’ என்ற சுசீலாவின் இனிமையான குரலில் வரும் பாடலை நீங்கள் பாடியபடி வருவதில் இருந்து ஆரம்பிக்கும். படத்தில் நீங்கள் சிவாஜி கணேசனுக்கு ஜோடி. ஆனால், இந்தக் காட்சியில் ஒரு நடிகருக்கு நீங்கள் மனைவியாக வருவீர்கள். அப்படியானால், நீங்கள் அந்த நடிகரின் மனைவியா? சிவாஜி கணேசனுக்கு ஜோடி இல்லையா? என்றெல்லாம் தியேட் டரில் பரபரப்பு ஏற்படும்.

பாதிப் பாடலில்தான் அந்த மர்மம் விலகும். அந்த படத்தின் கதைப்படி நீங்கள் ஒரு நடிகை. பாடல் காட்சியில் நீங்கள் பாடிக் கொண்டிருக்கும்போதே, கேமரா லாங் ஷாட்டில் வரும்போதுதான், ஒரு படப்பிடிப்புக்காக அந்த நடிகருக்கு மனைவியாக நீங்கள் நடித்துக் கொண்டிருப்பது தெரியும். தியேட்டரில் மீண்டும் உற்சாகம்!

அந்தப் பாடல் காட்சியில் உங்களுக்கு கணவராக நடித்த அந்த நடிகர் சுதர்ஷன். தெலுங்கு நடிகரான அவரை உங்களுக்கு கணவர் வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தார், இயக்குநர். பின்னர், சுதர்ஷன் பல தமிழ் படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். ‘சுமதி என் சுந்தரி’ படம் வந்தபோது புதுமுக நடிகரான சுதர்ஷன் உங்களுடன் நடிக்க பயந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் நடித்து வந்த, தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் பெற்று வந்த புகழ் பெற்ற நடிகையான தங்களுடன் நடிக்க வேண்டும் என்றதும் அவர் பயந்து விட்டார்!

நீங்கள்தான் அவருக்கு தைரியம் சொல்லி நடிக்க வைத்தீர்கள். புதுமுக நடிகரான சுதர்ஷனுடன் தாங்கள் நடித்த, ‘ஒரு ஆலயமாகும் மங்கை மனது...’ பாடல் காட்சி எப்படி வந்திருக் கிறது என்று பார்க்க விரும்பினீர்கள். உங்களுக்காக பிரிவியூ தியேட்டரில் அந்தப் பாடல் காட்சி மட்டும் திரையில் ஓடியது.இதற்கு என் தந்தை ‘சித்ராலயா’ கோபு ஏற்பாடு செய் திருந்தார். காட்சி உங்களுக்கு திருப்தியாக அமைந்திருந்ததாக இயக்குநர் சி.வி.ராஜேந் திரனிடமும் பின்னர் தெரிவித்தீர்கள்.

இந்த சம்பவத்தைப் பற்றி ஒரு சமயம் நமது சந்திப்புகளின்போது உங்களிடம் நினைவு படுத்தினேன். அப்போது நீங்கள் கூறிய பதில், ‘சிறிய நடிகர்களோடு நடிக்க மாட்டேன்’ என்று நீங்கள் பிடிவாதம் பிடிப்பதாக உங்களை பற்றி நிலவிய தவறான கருத்துகளை உடைக்கும் விதமாக அமைந்திருந்தது...

‘‘எனக்கு நினைவு இருக்கிறது. பாவம்..அந்த ஆர்ட்டிஸ்ட். ‘ஒரு ஆலயமாகும் மங்கை மனது...’ பாடல் காட்சியில் என்னுடன் நடிக்கும் போது அவரது உடல் நடுங்கியது. நான் தான் தைரியம் கூறினேன். நான் குறிப்பிட்ட ஹீரோக்களுடன் தான் நடிப்பேன். சிலருடன் நான் நடிக்க மறுத்துவிட்டேன்...என்றெல்லாம், பின்னாளில் என்னைப் பற்றி வதந்திகள் கிளம்பின. நான் அப்படிப்பட்டவள் இல்லை என் பதற்கு ‘சுமதி என் சுந்தரி’ படத்தில் இடம்பெறும் இந்தக் காட்சி ஒரு உதாரணம்’’ என்றீர்கள்!

தியாகராயநகர் சிவஞானம் தெருவில் நீங்கள் அப்போது வசித்து வந்த வீட்டருகே இருந்த வானதி பதிப்பகத்தில் தமிழ் புத்தகங் களை வாங்குவது உங்களுக்கு வழக்கம். ஆங்கில புத்தகங்கள் வாங்குவதற்கு மவுன்ட் ரோடு ஹிக்கின் போதம்ஸ் செல்வீர்கள். உங்கள் வீட்டருகேதான் உங்கள் தோழியும் நடிகையுமான ஷீலா குடியிருந்தார். ‘அடிமைப் பெண்’ படத்துக்குப் பிறகு, புகழேணியின் உச்சத்தில் இருந்த நீங்கள் எங்கு சென்றாலும் கூட்டம் கூடி விடுகின்ற காரணத்தால், பர்தா ஒன்றை வாங்கி வைத்திருந்தீர்கள். நீங்களும் ஷீலாவும் பர்தாவை அணிந்துகொண்டு தியேட்டர்களுக்குச் சென்று படம் பார்ப்பதும், ஷாப்பிங் செல்வதும் வழக்கம். அவ்வாறு பார்த்த ஒரு படம்தான் ‘ரிக் ஷாக்காரன்’!

ஷீலாவும் நீங்களும் படம் பார்த்து விட்டு, புஹாரிஸ் ஹோட்டலுக்கு ஐஸ் கிரீம் சாப்பிடச் சென்றீர்கள். அப்போது நடிகை ஷீலா, தான் புதிய வீடு ஒன்று வாங்கும் உத்தேசத்தில் இருப்பதாகக் கூறினார். அப்போது திடீரென உங்கள் மனதில் ஒரு புதிய யோசனை...!

- தொடர்வேன்...

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-25-நடிகையின்-கதை/article9518884.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..! 26 - திக்குத் தெரியாத காட்டில்!

 

 
 
‘திக்குத் தெரியாத காட்டில்’ படத்தில் ஜெயலலிதா, முத்துராமன்.
‘திக்குத் தெரியாத காட்டில்’ படத்தில் ஜெயலலிதா, முத்துராமன்.
 
 

திக்குத் தெரியாத காட்டில்!

திரைப்பட உலகில் உங்களுக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்திக்கொண்ட நீங்கள் 1971-ம் ஆண்டு வரை மிக மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து வந்ததாக, நமது சந்திப்பின் போது ஒருமுறை கூறினீர்கள். பள்ளிப் படிப்பு மறுக்கப்பட்டு திரைவாழ்வு வலுக்கட்டாயமாக தங்கள் மீது திணிக்கப்பட்டது. வேண்டாவெறுப் பாக அதனை ஏற்றுக்கொண்ட நீங்கள், கொஞ்சம் கொஞ்சமாக திரை வாழ்வில் ஈடுபாடு கொண்டதை தாமதமாக புரிந்து கொண்டீர்கள்!

2008-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி, வியாழக்கிழமை. உங்கள் வேதா நிலையத் தில் இருந்து எனக்கு திடீர் அழைப்பு. அன் றைய தினம் உங்கள் முகத்தில் சற்றே சோகம். என்னிடம் வெகு நேரம் பேசிக்கொண்டிருந் தீர்கள். மாலை ஐந்தரை மணிக்கு வந்த நான், இரவு ஒன்பது மணிவரை உங்கள் இல்லத்தில் தான் இருந்தேன். உங்கள் பழைய நினைவு களை என்னுடன் பகிர்ந்து கொண்டீர்கள்.

அன்று நீங்கள் கூறிய சம்பவங்கள் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த எனது நெஞ்சை பிழிய வைத்தது. 1971-ல் தான் உங்கள் வாழ்வில் ‘ஆரண்ய காண்டம்’ ஆரம்பம். அதைப் பார்த்துவிட்டு பிறகு நீங்கள் அரசியல் பிரவேசம் செய்த ‘யுத்த காண்ட’த்துக்கு வருவோம்.

சிவாஜி கணேசனின் ராம்குமார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த ‘திக்குத் தெரியாத காட்டில்’ என்னும் படத்தின் போதுதான், ‘ஆரண்ய காண்டம்’ துவங்கியது. ஆரண்யம் என்றால் காடுதானே? பொருத்தமாக, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் காட்டின் மாசினகுடி பகுதியில் அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நேரத்தில் உங்களுக்கு பிரச்சினைகளும் தொடங்கின.

‘அடிமைப் பெண்’, ‘நம் நாடு’ படங்களில் எம்.ஜி.ஆர். உங்களுக்கு தந்திருந்த முக்கியத்துவத்தை விரும்பாத சிலர், இரு வருக்கும் இடையே பிரச்சினைகளை எழுப்ப முயன்று கொண்டிருந்த சமயம் அது. எம்.ஜி.ஆர். என்றவுடன் உடனடியாக ஜெயலலிதா என்ற தங்களது பெயர் ரசிகர்களால் உச்சரிக்கப்பட்டு வந்த நேரம் அது. உங்கள் கருத்துக்களுக்கு அவர் தந்த மதிப்பை பொறுக்க முடியாத அந்த சிலர், உங்கள் இருவரிடையே கல்திரை ஒன்றை எழுப்பிக் கொண்டிருந்தனர். தனிப்பட்ட வாழ்விலும் நீங்கள் பல பிரச்சினை களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவானதும் அப்போதுதான்.

தே 1971-ல்தான், இந்திய தேசத்தின் எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்தன. ‘சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு…’ என்பதுபோல், துயரங்கள் என்றால் என்ன என்பதே அறி யாமல், குதூகலத்துடன் திரிந்து கொண்டிருந்த உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சிக்கும் துன்பத் துக்கும் ஏற்பட்ட போரில் பல கசப்பான அனுபவங்கள்!

தங்கள் தாய் சந்தியா வெயில் மழையி லிருந்து தங்களை ஒரு குடை போன்று காத்து வந்தார். ஆனால் ‘சந்தியா காலம்’ முடிந்து உங்கள் வாழ்வில் தற்காலிகமாக இருள் சூழ்வதற்கான அறிகுறிகள் தோன்றத் துவங் கின. மொத்தத்தில் ‘திக்குத் தெரியாத காட்டில்’ தான் அந்த சமயத்தில் நீங்கள் இருந்தீர் கள். படத்தின் இயக்குநர் என்.சி. சக்கரவர்த்தி என்கிற ‘சக்கி’ தங்களுக்கு தூரத்து சொந்தம். எனது தந்தையின் நெருங்கிய நண்பர் அவர். விதி உங்களது எதிர்கால நிகழ்வுகளை தங்கள் திரைப்பட தலைப்புகளின் வாயிலாகவே கூறி வந்ததோ?

‘அடிமைப் பெண்’ணாக பிறரின் விருப்பு வெறுப்புகளுக்காகவே வாழத் துவங்கிவிட்ட உங்களுக்கு, ‘திக்குத் தெரியாத காட்டில்’ படப்பிடிப்பின்போதுதான், கண்ணைக் கட்டி காட்டில் விடப்பட்டதுபோல் உணர்ந்ததாகக் கூறினீர்கள்.

‘திக்குத் தெரியாத காட்டில்’ படத்தின் கதை காட்டில் தங்கள் குழந்தையை பிரிந்து அதைத் தேடும் தம்பதியைப் பற்றியது. நீங்களும், முத்துராமனும், பேபி சுமதியை தேடுவது போல் காட்சிகள் அமைந்திருந்தன. மாசினகுடி தங்களுக்கு மிகவும் பிடித்த பகுதி. 1971-ல் அங்கே தங்கும் வசதிகள் கிடையாது. மைசூர் ஹோட்டல் ஒன்றில் தங்கி அங்கிருந்து அன்றாடம், மாசினகுடி காட்டுக்கு விடியற்காலையே வந்துவிடுவது படப்பிடிப்பு குழுவினரின் வழக்கம்.

நீங்களும், நடிகை சச்சுவும் காலையிலேயே வந்துவிட, பத்து மணிக்கு பிறகு, தயாரிப்பு நிர்வாகி ஜம்பு மீண்டும் மைசூர் சென்று ஒரு காரில் உங்கள் தாயாரை அழைத்து வருவார். அன்றும் அப்படித்தான், உங்கள் தாயாரை மைசூரில் இருந்து காரில் அழைத்து வந்தனர். காரில் இருந்து உங்கள் தாயாருடன் இறங்கிய இரண்டு பெண்களைக் கண்டதும் நீங்கள் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தீர்கள். அவர்கள், உங்கள் தந்தை ஜெயராமனுடைய சகோதரிகள்! உற்சாகத்துடன் அவர்களை வரவேற்று உபசரித்து, அமர வைத்தீர்கள்..

‘மைசூர் வரை வந்து விட்டு எங்களை காண வராமல் இருப்பதா?’’ என்று உங்களை உரிமையுடன் கடிந்து கொண்டனர் உங்கள் அத்தைகள். வரமுடியாத சூழ்நிலையை விளக்கி, அவர்களை சமாதானப்படுத்திவிட்டு குடும்ப விஷயங்களை பேசிக் கொண்டிருந் தீர்கள்.

திடீரென அத்தைகளிடம் இருந்து அம்பாய் பாய்ந்தது அந்தக் கேள்வி…‘‘அம்மு ! எப்போது எங்களுக்கு கல்யாண சாப்பாடு போடப் போறே ?’’ உங்கள் தாய் சந்தியாவும் பதிலை எதிர்பார்த்து ஆவலோடு உங்கள் முகத்தை நோக்கினார். ‘‘அதற்கென்ன அவசரம்! அதற்குமுன் எனது வீட்டின் கிரகப்பிரவேச சாப்பாடு போடறேன். கட்டாயமாக, நீங்கள் எல்லோரும் வரவேண்டும்…’’ என்று நீங்கள் சிரித்தபடியே பதில் அளித்தாலும் அவர்கள் முகங்களில் ஏமாற்ற ரேகைகள்!

ஆமாம்…அப்போதுதான் அகில இந்திய அள வில் புகழ் பெறப்போகும் தலைவர் வசிக்க உள்ள வீடாக மாறப் போகிறது என்பது தெரியாமல், சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள தற்போதைய ‘வேதா நிலைய’த்தின் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பிற் காலத்தில் அன்னை தெரசா, ராஜிவ் காந்தி, அத்வானி, நரேந்திர மோடி என்று பெருந்தலை வர்கள், சமூக சேவகர்கள், புகழ் பெற்ற பிரபலங் கள் வந்த இடம். தமிழகம் மட்டுமல்லாமல், தேசிய அரசியலின் தலைவிதியையும் நிர்ண யித்த இடமான ‘வேதா நிலையம்’ அன்று சந்தியாவின் மேற்பார்வையில் கட்டப்பட்டு வந்தது! ‘வேதா நிலையம்’ என்று அப்போது பெயர் வைக்கப்படவில்லை. உங்கள் தாய் சந்தியா, மைசூரில் நீங்கள் வசித்த வீடான ‘ஜெயா நிவாஸ்’ பெயரைத்தான் இந்த வீட்டுக்கும் சூட்ட முடிவு செய்திருந்தார்.

ன்னருமை தோழி…!

அக்டோபர் 16, வியாழக்கிழமை அன்று மாலைதான் நமது சந்திப்பின் இடையே, போயஸ் கார்டன் மனையை வாங்கியது தொடர்பாக நிகழ்ந்த ஒரு சுவையான சம்பவத்தை எனக்கு தெரிவித்தீர்கள்!

அதற்கு முன்பாக, வேதா நிலைய இல்லத்தை, தங்கள் பூஜை அறை, டைனிங் ஹால், மாடிப் பகுதி, நூல் நிலையம் போன்ற பகுதிகளை எனக்கு சுற்றி காட்டியிருந்தீர்கள். ‘‘நேர்மறையான எண்ணங்களை தோற்று விக்கும் இடமாக தங்கள் இல்லம் திகழ்கிறது” என்று நான் கூறியபோது….

‘‘உண்மை நரசிம்மன். ஆனால்…’’ என்ற பீடிகையுடன் நீங்கள் கூறியதைக் கேட்ட எனக்கு வியப்பு…!

- தொடர்வேன்...

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-26-திக்குத்-தெரியாத-காட்டில்/article9520793.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..! 27- மனை மாட்சி!

 

 
 
 
 
j_3129240f.jpg
 
 
 

என்னை உங்கள் இல்லத்துக்கு 2008-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி அன்று அழைத்து, போயஸ் கார்டனில் ‘வேதா நிலையம்’ எழும்பிய மனையினை வாங்கிய பின்னணியைப் பற்றி என்னிடம் நீண்ட நேரம் பேசினீர்கள்.

நடிகை ஷீலா, தான் வீடு வாங்க போவதைத் தெரிவித்ததுமே உங்கள் மனதிலும் புதிய வீட்டுக்கான ஆசை விதை விழுந்துவிட்டது. அதை தங்கள் தாய் சந்தியாவிடம் தெரிவித்தீர் கள். புதிய மனை வாங்குவதைக் காட்டிலும் நீங்கள் ஏற்கனவே, 1967-ல் போயஸ் தோட்டத் தில் வாங்கியிருந்த மனையிலேயே புதிய வீடு கட்டும் யோசனைக்கு அவரும் செயல் வடிவம் தந்தார். பின்னர், உங்களைக் காண வந்த ஷீலா விடம் நீங்களும் வீடு கட்ட போவதாக பெருமை யுடன் கூற, அவர், தான் கட்டும் வீட்டில் நீரூற்று வைக்கப் போவதாகவும் கூறி, உங்கள் வீட்டிலும் அதே போல நீரூற்று ஒன்றை அமைக்க யோசனை கூறினார். அதற்கு, ‘‘எனக்கு அதெல்லாம் வேண்டாம். எனக்கு தேவை பெரிய லைப்ரரி..’’ என்று அறிவின் விசாலத்தை காட்டும் வகையில் அமைந்தது உங்கள் பதில்!

போயஸ் கார்டன் பகுதியில் மனை வாங்குவதற்கு முன்பாக, தி.நகரிலேயே வீடு கட்டுவதற்கு காலி மனை ஒன்றை உங்கள் தாய் சந்தியா தேடி வந்தார். காரணம், அப்போது சிவாஜி கணேசன் துவங்கி, பானுமதி, மனோரமா, தங்கவேலு, காஞ்சனா, ராஜ என்று பல முன்னணி நட்சத்திரங்களும் தி.நகரில்தான் வசித்தார்கள். டாக்டர் நாயர் ரோடு, பர்கிட் ரோடு போன்ற இடங்களில் நிறைய மனைகளை பார்த்தும், எதுவுமே அவருக்கு திருப்திகரமாக அமையவில்லை. ‘‘தி.நகரை தவிர்த்து அதிகம் சந்தடி இல்லாத, அமைதியான வேறு பகுதிகளில் மனையை வாங்கலாம்’’ என்று நீங்கள் வலியுறுத்தினீர்கள்.

அப்போதுதான்... போயஸ் கார்டன் பகுதியில் விற்பனைக்கு மனைகள் உள்ளதாக ஒரு புரோக்கர் மூலம் சந்தியா கேள்விப்பட்டார். உடனடியாக போயஸ் தோட்ட பகுதிக்கு போன அவருக்கு, மனை ஒன்று காண்பிக்கப்பட்டது. சந்தியாவுக்கு அந்த மனை மிகவும் பிடித்துப் போனது. தாங்கள் விரும்பியபடி அந்த பகுதி அமைதியாகவும், மரம், செடி, கொடிகள் நிறைந்து, ரம்மியமாகவும் காட்சி தந்தது. உடனே, உங்களையும் வரவழைத்து அந்த மனையைக் காண்பித்தார்.

உங்களுக்கு அந்த மனை பிடித்திருந்தது என்பதைவிட, போயஸ் கார்டன் பகுதி மிகவும் பிடித்து போனது. மனஅமைதிக்கு மிக உகந்த இடம் என்று கருதினீர்கள். மேலும், உங்கள் மேற்படிப்புக்கு ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி வாய்ப்பளித்திருந்தது. அந்த வாய்ப்பினை நிரா கரித்து விட்டோமே என்கிற மனவருத்தம் உங் களுக்கு நீண்ட காலமாகவே இருந்து வந்தது.

‘‘என் தாய் காட்டிய மனை, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரிக்கு பின்புறமாக அமைந்திருந்ததை கண்டதும் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது’’ என்று அதே மகிழ்ச்சி முகத்தில் தெறிக்க, சிறு குழந்தை போல குதூகலத்துடன் என்னிடம் சொன்னீர்கள்!

உங்கள் மனப்பூர்வமான சம்மதத்துடன் நல்ல நாளில், சந்தியா அந்த மனையை வாங்குவதற்கு முன்பணமும் கொடுத்து விட்டார். மனையின் விலை அந்தக் காலத்தில் ஒரு லட்சத்து முப்பத்தி இரண்டாயிரம் ரூபாய்!

‘காவல்காரன் படப்பிடிப்பின் இடைவேளை யில் எம்.ஜி.ஆருடன் பேசிக்கொண்டிருந்த போது, அவரிடம் இதுபற்றி கூறினீர்கள்!

‘‘போயஸ் கார்டன்... நல்ல ஏரியாவாச்சே...’’ என்று எம்.ஜி.ஆரும் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

‘‘வாங்களேன்..! நான் வாங்க உள்ள மனையைக் காட்டுகிறேன்’’ என்ற உங்களின் அழைப்பை ஏற்று எம்.ஜி.ஆரும் கிளம்பி வந்தார். உங்கள் தாயிடமும் விவரத்தைத் தெரிவித்து அவரையும் போயஸ் கார்டனுக்கு வரச் சொன்னீர்கள்.

அந்த மனை சதுரமாக, தெற்கு திசை நோக்கி அமைந்திருந்தது. எம்.ஜி.ஆர், வெகு நேரம் அந்த மனையை ஆராய்ந்து கொண்டிருந் தார். அதற்குள்ளாக, சந்தியாவும் அங்கே வந்து சேர்ந்தார். ‘‘மனையின் நுழைவாயில் அமைப்பு வாஸ்து முறைப்படி சரியில்லை. மனை வேறு தெற்கு திசை நோக்கி அமைந் திருக்கிறதே..’’ என்று எம்.ஜி.ஆர் தயக்கத்துடன் இழுத்தார்.

என்னருமை தோழி...!

இந்த விஷயத்தை நீங்கள் என்னிடம் சொன்னபோது, எனது முகத்தில் தென்பட்ட வியப்பையும், நம்பிக்கையின்மையையும் நீங்கள் கவனித்து விட்டிருக்க வேண்டும். அதனால்தான் பேசுவதை நிறுத்தி விட்டு, என்னை சிரிப்புடன் நோக்கினீர்கள்!

‘‘வாட் ஹேப்பண்ட்?’’... உங்களின் கேள்வி.

‘‘பகுத்தறிவு பேசும் கட்சியில் அப்போது முக்கிய பிரமுகராக இருந்த எம்.ஜி.ஆரா இப்படி...’’ என்று இழுத்தபடி நம்ப முடியாத வியப்புடன் எனது கேள்வியையே பதிலாக அளித்தேன்.

நீங்கள் மெல்ல சிரித்தபடி, ‘‘எம்.ஜி.ஆருக்கு சில நம்பிக்கைகள் உண்டு. கார் நம்பர், மனையின் அமைப்பு, கதாபாத்திரங்களின் பெயர்கள், படப்பிடிப்பு துவங்கும் நாள் போன்றவற்றில் நம்பிக்கைகளை பார்ப்பார். அவருக்கு ஏழாம் நம்பர் மிகவும் ராசியானதாக நம்பினார்’’ என்று எனக்கு விளக்கிய நீங்கள், தொடர்ந்தீர்கள்...

‘‘மனையின் வாஸ்து சரியில்லை. தெற்கு பார்த்து இருக்கிறதே...’’ என்று எம்.ஜி.ஆர் கூறியதும், உங்கள் தாய் சந்தியா சட்டென்று அவரை சமாதானப்படுத்தினார்... ‘‘எங்கள் வைணவர்களுக்கு இதில் நம்பிக்கை கிடையாது. தெற்கு திசை பரவாயில்லை.காரணம், எங்கள் சொந்த ஊர் திருவரங்கத்தில் அரங்கன், தென்திசை நோக்கித்தான் சயனம் செய்திருக்கிறான்...’’ என்று கூறினார்.

அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘இந்த நிலத்தின் வாஸ்து சரியில்லை. வேறு ஏதாவது மனை இந்தப் பகுதியிலேயே இருந்தால் பாருங்கள். மேலும், அம்மு எதிர்காலத்தில் மேன்மை பெற வேண்டும். அதற்கு தென் திசை ஒவ்வாது. வளர்ச்சிக்கு வடதிசையை நோக்கி மனை இருந்தால் நன்றாக இருக்கும்’’ என்று நல்லெண்ணத்துடன் கூறினார்.

அதோடு, உடனடியாக தன் கார் ஓட்டுநரை அனுப்பி அந்தப் பகுதியில் வசித்த தனக்குத் தெரிந்த ஒருவரை அழைத்து வரச் சொன்னார். எம்.ஜி.ஆருக்குத் தெரிந்த அந்த நபர் வந்ததும், ‘‘இந்த ஏரியாவில் வடக்கு பார்த்த மனைகள் ஏதாவது விற்பனைக்கு உள்ளதா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.

‘‘இருக்கிறதே..!’’ என்ற அந்த நபர் ஒரு மனையைக் காட்டினார்.

அந்த இடம்... ‘36 சேம்பர் ஆப் ஷோலின்’ போன்று அரசியல் எதிரிகளை சாதுர்யத்தால் நீங்கள் பந்தாட வியூகங்கள் வகுக்கப்பட்ட இடம்! அதே நேரம், ‘36 சவ்ரங்கீ லேன்’ படத்தின் கதாபாத்திரம் வயலட் ஸ்டோன்ஹாம் போல் தாங்கள் தனிமையில் வாடிய இடமும் கூட!

- தொடர்வேன்... |

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-27-மனை-மாட்சி/article9525752.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..! 28 - அம்மா என்றால் அன்பு!

 
விழா ஒன்றில் தனது தாய் சந்தியாவுடன் ஜெயலலிதா. | படம் உதவி: ஞானம்
விழா ஒன்றில் தனது தாய் சந்தியாவுடன் ஜெயலலிதா. | படம் உதவி: ஞானம்
 
 

உங்கள் தாய் சந்தியா, போயஸ் தோட்டத் தில் தெற்கு நோக்கி இருந்த மனை ஒன்றை தேர்ந்தேடுத்து அதற்கு முன் பணம் கொடுத்திருந்தார். மனையை காண வந்த எம்.ஜி.ஆரோ, அந்த மனையின் வாஸ்து சரியில்லை என்று வடக்கு நோக்கி அமைந்திருந்த மனை ஒன்றை காண்பித் தார். ஆனால், சந்தியாவுக்கு அந்த மனை பிடிக்கவில்லை. எம்.ஜி.ஆர் காண்பித்த அந்த மனையை பார்த்தவர், அந்த மனைக்கு எதிராக அமைந்திருந்த சிறு சந்தினை தயக்கத்துடன் பார்த்தார்.

‘‘இந்த மனைக்கு எதிராக ஒரு சந்து போகி றதே. இந்த மனை தெருக்குத்தாக உள்ளதே’’ என்றார். இதை எல்லாம் கவனித்துக் கொண் டிருந்த உங்களுக்கோ தர்மசங்கடம். யார் சொல்வதைக் கேட்பது என்று தெரியாமல் குழப்பத்துடன் இருவரையும் மாறி, மாறி பார்த்துக் கொண்டிருந்தீர்கள். உங்களுக்கு யாதுமாகி நின்ற தாய்க்கு தென் திசை நோக்கி இருக்கும் மனையை வாங்க வேண் டும் என்பதே விருப்பம். அர்ஜுனனுக்கு துரோணாச்சாரியார் வழி காட்டியது போன்று, உங்களுக்கு ஆசானாக விளங் கிய எம்.ஜி.ஆருக்கோ வடக்கு திசை நோக்கி அமைந்திருந்த மனையை நீங்கள் வாங்க வேண்டும் என்று எண்ணம்!

‘தாய் சொல்லைத் தட்டாதே’ என்று தனது படத் தலைப்பு மூலம் எம்.ஜி.ஆர். அறிவுறுத்தியிருந்தாலும், திரைப்படத் துறை யில் உங்களின் உன்னதமான உயர்வுக்கு காரணமாக இருந்தவராயிற்றே! அவர் நல்லதுதான் செய்வார் என்று உங்களுக்கு அழுத்தமான எண்ணம். அதனால்தான், எம்.ஜி.ஆரின் யோசனையை ஏற்று, வடக்கு பார்த்த மனையையே தேர்வு செய்தீர்கள்.

எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட மனையையே வாங்கிவிடலாம் என்று நீங்கள் கூறிய வுடன், சந்தியாவும் ஒப்புக்கொண்டு விட்டார். பழைய மனைக்கு ஏற்கெனவே தந்திருந்த முன்பணத்தை திரும்பப்பெற்று, எம்.ஜி.ஆர். சொன்ன மனைக்கு முன்பணம் கொடுத்தாகி விட்டது!

என்னருமை தோழி…!

இந்த சம்பவங்களைப் பற்றி என்னிடம் குறிப்பிடும்போது, இந்த இடத்தில் நீங்கள் ஒரு விஷயத்தைக் கூறினீர்கள்...

‘‘இந்த மனையை நான் வாங்கிய நேரத்தில் ஒரு வதந்தி கிளம்பியது. எம்.ஜி.ஆர்.தான் எனக்கு மனையை வாங்கிக் கொடுத்தார் என்பதுதான் அந்த வதந்தி. என் தாய் ஏற்கனவே பேசி முடித்திருந்த நிலத்தை நிராகரித்துவிட்டு, அதை வாங்க இருந்த பணத்தில்தான் எம்.ஜி.ஆர். சொன்ன மனையை வாங்கினேன். இந்த உண்மை தெரியாமல், எம்.ஜி.ஆர். எனக்கு போயஸ் தோட்ட மனையை வாங்கித் தந்ததாக வதந்தி கிளம்பியது. அந்த மனையை எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுத்தாரே தவிர, அதை வாங்க கொடுக்கப்பட்ட முழு பணமும் நான் படங் களில் நடித்து, உழைத்து சம்பாதித்தது’’ என்று ஆணித்தரமாக கூறினீர்கள்!

அப்போது நீங்கள் தெரிவித்த கருத்து, பெண்கள் சுயமாக உழைத்து முன்னேறினா லும் அங்கீகாரம் அளிக்காத, ஆணாதிக்கம் மிக்க இந்த சமுதாயத்தின் அவலத்தை சுட்டிக்காட்டுவதாக இருந்தது.

‘‘தனித்து வாழும் பெண்கள், வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைத்து தொடர்ந்து முன்னேறினால், அதைப் பொறுக்க முடியா மல், அந்த வளர்ச்சிக்குப் பின்னே ஒரு ஆணின் உதவிக்கரம் இருப்பதாக இந்த சமுதாயம் எளிதாக கூறிவிடும். இம்மாதிரி எனது சாதனைகள் பல, பிறரின் உதவியோடு நான் செய்ததாக சொல்லப்பட்டது’’ என்று சற்றே வருத்தத்துடன் கூறினீர்கள்!

போயஸ் கார்டனில் வாங்கிய மனையில் வீடு கட்டுவதற்கான பணிகள் 1971 -ல் மும்மர மாக நடைபெற்றன. அதே வருடத்தில் வீட்டின் கிரகப்பிரவேசத்தை முடித்துவிட வேண்டும் என்று சந்தியாவும் நீங்களும் தீர்மானித்திருந் தீர்கள். அந்தச் சமயத்தில்தான் ‘திக்குத் தெரியாத காட்டில்’ படப்பிடிப்பின்போது ‘‘எப்போ கல்யாண சாப்பாடு போடப் போறே?’’ என்று கேட்ட உங்கள் அத்தைகளிடம் இந்த வீட்டின் கிரகப்பிரவேச விருந்தைத்தான் முதலில் போடுவதாகக் கூறினீர்கள்!

எதிலும் உறுதிமிக்கவரான நீங்கள் வசிக் கப் போகும் வீட்டின் ஒவ்வொரு கல்லின் உறுதியும் சோதித்துப் பார்த்து கட்டப்பட்டது! சந்தியா தனது உடல்நிலையையும் பொருட் படுத்தாமல், தினமும் காலையிலேயே கட்டுமானப் பணிகள் நடக்கும் போயஸ் கார்டன் மனைக்கு வந்து விடுவார். ஒவ் வொரு வேலையும் தனது மேற்பார்வை யிலேயே நடக்கும்படி பார்த்துக் கொண் டார். நீங்கள் அப்போது வெளிப்புற படப்பிடிப்பு களில் மிகவும் ‘பிஸி’யாக இருந்த நேரம்.

உங்கள் ஆசைப்படியே முதல் மாடியில் பெரிய நூலகத்துக்கான வசதியும் ஏற்படுத்தப் பட்டது. மைசூரில் இருந்தபோது பொக்கிஷங்களாக போற்றி பாதுகாத்து வந்த குடும்ப புகைப்படங்கள் வைக்க ஒரு இடம் அமைக்கப்பட்டது.

உங்கள் பாட்டனார் நரசிம்மன் ரங்காச் சாரி, மைசூர் மன்னர் கிருஷ்ண சாமராஜ வாடியாருக்கு மருத்துவராக இருந் தவர். உங்கள் பாட்டனாரின் சிறப்பான மருத் துவ சேவைக்காக அவருக்கு மைசூர் மன்னர் அன்பளிப்பாக கொடுத்த காட்சி பொருட்களை வைப்பதற்கும் சந்தியா தகுந்த இடங்களை ஏற்படுத்தினார்.

மைசூர் மன்னர் பரிசளித்த வேலைப்பாடு கள் மிகுந்த ரத்தினக் கம்பளம் (தரை விரிப்பு) ஒன்று, வெகு காலம் உங்கள் பாட்டனார் வீட்டின் விசாலமான கூடத்தில் விரிக்கப்பட்டிருந்தது. மணமான புதிதில் சந்தியா அந்த தரை விரிப்பின் வேலைப்பாடு களைக் கண்டு மலைத்துப் போனார்!

போயஸ் கார்டன் மனையில் வீடு கட்டத் துவங்கியவுடன், அம்மாதிரி கம்பளம் ஒன்றை வாங்கி வீட்டின் வரவேற்பறையில் அலங்கரிக்க வேண்டும் என்று சந்தியா நினைத்தார். பாரிமுனை பகுதிக்குச் சென்று, அதே மாதிரியான கம்பளங்களை தேடினார்.

என்ன ஆச்சரியம்...!

மைசூரில் இருந்த அதே போன்ற தரை விரிப்புகள் இரண்டு அங்கே கிடைத்தன. ஒன்று சந்தன நிறத்தில் சிறந்த வேலைப்பாடுகளுடன் காணப்பட்டது. உங்கள் தாய்க்கு அது மிகவும் பிடித்து விட்டது. ஆனால், உங்களுக்குப் பிடித்த பசுமை நிறத்தில் மற்றொரு கம்பளமும் மிக அழகாக இருந்தது. சந்தியா அந்த கம்பளத்தையே வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்தார்.

உடன் வந்த உறவினர் வியந்தார். ‘‘உனக்குத்தான் சந்தன நிறக் கம்பளம் பிடித்திருக்கிறது என்றாயே. எதற்கு பச்சை நிற தரை விரிப்பை வாங்குகிறாய்..?’’ என்று கேட்க, ‘‘அம்மு தனது சிறு கையால் சம் பாதித்து கட்டும் வீடு. படிப்பையும் தியாகம் செய்து, எங்களுக்காக உழைக்கிறாள். தரை விரிப்பு அவளது விருப்பப்படியே அமையட்டும்…’’ என்று கண்கலங்கினார் சந்தியா.

அந்த உறவினர் மூலம் உங்கள் தாயின் எண்ணத்தை அறிந்துகொண்ட நீங்கள், அந்த சந்தன நிற தரை விரிப்பையும் வாங்கி, அதை தாய்க்கு பரிசளித்தீர்கள். ‘‘இது உன் அறைக்கு’’ என்று நீங்கள் சொன்னபோது, உங்கள் தாயின் கண்களில் அன்பும், ஒருவித சோகமும் கலந்த கண்ணீர்!

போயஸ் கார்டன் வீடு வளர்ந்து வந்த அதே வேகத்தில், உங்கள் தாய் சந்தியாவின் மனபாரமும் வளர்ந்தது. ஒரு நாள் இரவு, சந்தியா உங்கள் பக்கத்தில் வந்து சொன் னார்… ‘‘ஒரு முக்கியமான விஷயம், அம்மு!’’

படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை கீழே வைத்துவிட்டு, தாயின் முகத்தை ஏறிட்டு பார்த்த உங்களுக்கு கடும் அதிர்ச்சி…!

- தொடர்வேன்... |

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-28-அம்மா-என்றால்-அன்பு/article9528422.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

என்னருமை தோழி..! 29 - திருமணப் பேச்சு!

 

 
 
‘வெண்ணிற ஆடை’ படத்தில் மணக்கோலத்தில் ஜெயலலிதா.
‘வெண்ணிற ஆடை’ படத்தில் மணக்கோலத்தில் ஜெயலலிதா.
 
 

போயஸ் தோட்ட மனையில் கட்டப்பட்டு வந்த வீட்டின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட அன்றாடம் உங் கள் தாய் செல்வது வழக்கம். சிமென்ட் மற்றும் பெயின்ட் நெடியில், தனது உடல்நிலையை வருத் திக்கொண்டு சந்தியா சென்று வந்து கொண்டிருந் தார். வீட்டுக்குத் தேவையான உபகரணங்கள், அலங்காரப் பொருட்களையும் அவரே தேடித் தேடி வாங்கி குவித்துக் கொண்டிருந்தார். தாங் களோ, படப்பிடிப்புகளில் மும்முரமாக இருந்து வந்ததால், தாயுடன் அதிக நேரம் கழிக்க முடியாத ஒரு சூழ்நிலை.

இந்த நிலையில்தான், ‘‘அம்மு ஒரு முக்கிய மான விஷயம்..’’ என்று ஒருநாள் இரவு சந்தியா உங்களிடம் கூறியபோது, அவர் முகத்தைப் பார்த்த நீங்கள் திடுக்கிட்டு போனீர்கள். உங் களைப் போன்றே தாய் சந்தியாவும் தைரிய மான பெண்தான். தந்தையின் வீட்டில் அரசியை போன்று சகோதரிகளுடன் வளர்ந்தவர். வேத வல்லி, அம்புஜவல்லி மற்றும் பத்மவல்லி என்கிற தனது மூன்று பெண்களையும் முப்பெருந்தேவி யர் என்றுதானே உங்கள் பாட்டனார் திருவரங் கத்து ரங்கசாமி பெருமிதத்தோடு அழைத்து வந்தார்.

அப்படி அருமையாக வளர்ந்த வேதவல்லி என்கிற சந்தியா, ஜெயராமன் அவர்களை மணந்து பலவித இன்னல்களை சந்தித்தார். உங்கள் தந்தை ஜெயராமனுக்கு ஜெயம்மாள் என்கிற முதல் மனைவி ஏற்கனவே இருந்தார். தான் இரண்டாம் தாரமாக அவருக்கு மனைவி யான வருத்தம் உங்கள் தாய்க்கு நிறையவே இருந்தது.

‘ஜெயா விலாஸ்’ இல்லத்தில் இருந்து மைசூரின் சரஸ்வதிபுரம் என்கிற பகுதியில் இருந்த ஒரு சிறு வீட்டுக்கு உங்கள் குடும்பம் மாற வேண்டிய சூழ்நிலை. காரணம்... உங்கள் பாட்டனாரும் மறைந்து விட, அவர் சேர்த்து வைத்திருந்த ஆஸ்திகளும் உங்கள் தந்தையின் போக்கினால் வேகமாக கரைந்து போனது. உங்களுக்கு இரண்டு வயதாகும் போது தந்தையும் காலமாகி விட்டார்.

வேறுவழியின்றி, பெங்களூரில் வசித்த தந்தையின் வீட்டுக்கு இடம் பெயர்ந்த சந்தியா, கர்நாடக அரசு தலைமைச் செயலகத் தில் ஒரு குமாஸ்தா வேலையில் தற்காலிக மாக சேர்ந்தார். இருப்பினும், உங்களை யும், அண்ணன் ஜெயகுமாரையும் சிறு கஷ்டம் கூட தெரியாமல்தான் வளர்த்தார். பிறகு சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியாமல்தான், சகோதரி வித்யாவதி (அம்புஜ வல்லி)யின் உதவியுடன் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார்.

விமான பணிப்பெண்ணாக திகழ்ந்து திரைப் படங்களில் நடித்து வந்தார் வித்யாவதி. ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி யின் மனைவியாக வந்து எம்.ஜி.ஆரை எதிர்த்து கொண்டு இருக்கும் பாத்திரத்தில் நடித்தவர் வித்யாவதி!

அப்படி உங்களுக்காகவும், அண்ணன் ஜெயகுமாருக்காகவும் தன்னையே வருத்திக் கொண்ட சந்தியாவின் மீது உயிரையே வைத் திருந்தீர்கள். எனவேதான், தாயின் சோர்ந்த முகம் தங்களை பதைபதைக்க வைத்தது. உங் களைப் போலவே உங்கள் தாய் சந்தியாவுக் கும் கம்பீரமான முக அமைப்பு. அவரது முகவெட்டு, புராண மற்றும் சரித்திர கதாபாத்திரங்களுக்கு மிகப் பொருத்தமாக இருந்தது. அக்காலத்தில் தயாரிக்கப்படும் படங்கள், புராணப் படங்களாகவோ அல்லது சரித்திரப் படங்களாகவோ இருந்தால், அவற்றில் சந்தியா நிச்சயம் இருப்பார்.

அத்தகைய கம்பீரமான முகத்தில் சோர்வு மிகுந்திருந்தது. இரு கண்களின் கீழேயும் கரு வளையங்கள் தோன்றியிருந்தன. பளிச்சென்று தோன்றும் அவரது முகம் சோகை பிடித் திருந்ததை போன்று காணப்பட்டது. நெற்றியில் வழக்கமாக பெரிய திலகம் ஒன்றை வைத்திருப்பார். அதற்கு பதிலாக அன்று ஒரு சிறு பொட்டு மட்டும் வைத்திருந்தார்.

என்னருமை தோழி...!

தாயிடம் ஏதோ சரியில்லை என்கிற உணர்வு உங்களுள் எழுந்ததாக என்னிடம் நீங்கள் கூறியபோது, இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் அந்த காட்சி உங்கள் மனத்திரையில் ஓடி, உங்களை வேதனையில் ஆழ்த்தியதை என்னால் உணரமுடிந்தது.

‘‘என்னம்மா விஷயம்..?’’என்று பதைப்புடன் நீங்கள் வினவ, சற்றே மூச்சிரைப்புடன் தங்கள் தாய் பேசினார். ‘‘அம்மு! படப்பிடிப்புகளில் நீ பரபரப்பாக இருந்ததால் உடனடியாக உன் னிடம் சொல்ல முடியவில்லை. ‘திக்குத் தெரியாத காட்டில்’ படப்பிடிப்பு மாசினகுடி காட்டில் நடை பெற்றபோது, உன்னை பார்க்க உன் அத்தை கள் வந்திருந்தார்களே... அவர்கள் காரில் என்னுடன் பேசியபடி வந்தார்கள். உனக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கிறதாம். பையனும் நமக்கு தூரத்து சொந்தம். அவர் யார் என்று தெரிந்தால் நீ திகைத்து போவாய். உனக்கு நன்கு அறிமுகம் ஆனவர்தான்...’’ என்று தாய் சந்தியா அந்தப் பையனின் பெயரை உங் களிடம் கூறினார். உண்மையிலேயே நீங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு போனீர்கள். ஏனென் றால், அவரும் உங்களுடன் ஏற்கெனவே கலகலப்பாகப் பழகி வந்தவர்தான்!

இருந்தாலும் ‘‘இப்போது என்ன அவசரம்..? முதலில் வீடு கட்டி முடிந்து கிரகப்பிரவேசம் நடக்கட்டும்...’’ என்று அம்மாவின் பேச்சை திசை திருப்ப முயன்றீர்கள். வழக்கமாக திருமண பேச்சு எழும்போதெல்லாம் ஆண்களும், பெண் களும் கூறும் அந்த வாடிக்கையான வசனத் தையே நீங்களும் அப்போது தாயிடம் கூறினீர்கள்.

ஆனால்... சந்தியாவோ தொடர்ந்து வற்புறுத் தத் தொடங்கினார். அவரது அந்த வற்புறுத் தல்தான் உங்களுக்கு அவர் உடல்நிலை குறித்து சில சந்தேகங்களை தோற்றுவித்ததாக கூறினீர்கள். எப்படியாவது உங்களுக்கு திரு மணத்தை முடித்துவிடும் தீவிரத்தில் அவர் இருந் ததை பார்த்தபோது, அவர் எது குறித்தோ கவலைப்படுவதை உணர்ந்தீர்கள். நடுநடுவே அவரிடம் எழுந்த இருமல்களும் அவரது உடல் நிலை குறித்த உங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தின.

இம்மாதிரி காட்சிகள் பலவற்றில் படங்களில் நீங்கள் நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் அக்காட்சி அரங்கேறும்போது துடித்துப் போகாமல் இருக்க முடியுமா என்ன? தான் நன்றாக இருக்கும்போதே உங்களுக்கு திருமணம் செய்து பார்த்துவிட வேண்டும் என்கிற எண்ணம்தான் உங்கள் தாய்க்கு அப்போது மிகுந்திருக்க வேண்டும்.

பாவம்... உங்கள் தாய் சந்தியா! திரைப்படத் துறையை ஒரு தாமரை பொய்கையாக எண்ணி விட்டார் போலும். வேண்டும் என்கிறபோது இறங்கி நன்னீராடிவிட்டு, பிறகு போதும் என் கிறபோது ஒரு முறை முழுக்கு போட்டு, கரையேறி விடும் பொய்கையா என்ன திரைப்படத்துறை. தங்கள் தாய் உணராத இந்த உண்மையை நீங்கள் அறிந்திருந்தீர்கள்.

உங்களுக்கு அப்போது திருமணப் பேச்சில் இருந்த ஆர்வத்தைவிட, தாய் சந்தியா இருந்த நிலைதான் பெரும் கவலையை உண்டு பண்ணியது. அப்போதுதான் உங்களுக்கு ஒரு உண்மை புரிந்தது. வீடு கட்டுவது தொடர்பான அத்தனை பணிகளையும் உங்கள் தாயே தனி ஒருவராக செய்து கொண்டு, தனது உடல்நிலையை அசட்டை செய்து விட்டார். நீங்களும் படப்பிடிப்பில் இருந்ததால் அவரை கவனிக்க முடியவில்லை என்பதை உணர்ந்து கொண்டீர்கள்.

‘‘முதலில் நாம் இருவரும் டாக்டர்கிட்டே போகலாம்... வாம்மா’’ என்று அவரை அழைத் தீர்கள். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் சந்தியா மீண்டும் மீண்டும் திருமண பேச்சை எழுப்பி கொண்டே இருந்தார். உங்கள் மனதில் ஓடுவதை தாயிடம், அதுவும் அவர் உடல் நலம் குன்றியிருக்கும் நிலையில் எப்படிச் சொல்வது? அப்படிச் சொன்னால் அவரால் அதை தாங்கிக் கொள்ள முடியுமா?

- தொடர்வேன்... |

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-29-திருமணப்-பேச்சு/article9531097.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

என்னருமை தோழி...!- 30: கரையேற முடியாத காட்டாறு!

 

 
நாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் காமராஜருடன் ஜெயலலிதா, சந்தியா, நடன ஆசிரியை கே.ஜே.சரசா (இடது ஓரம்) | படம் உதவி: ஞானம்
நாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் காமராஜருடன் ஜெயலலிதா, சந்தியா, நடன ஆசிரியை கே.ஜே.சரசா (இடது ஓரம்) | படம் உதவி: ஞானம்
 
 

உங்கள் தாய் சந்தியா வைத்த கோரிக் கையை கேட்டதும் திகைத்து போய் அமர்ந்திருந்தீர்கள். அவருக்கு என்ன பதில் கூறுவது என்று உங்களுக்குத் தவிப்பு. உங்களது குடும்பத்தின் சிரமமான காலகட்டத் தின்போது, விருப்பம் இல்லாமல்தான், நீங்கள் திரைப்படத்துறையில் நுழைந்தீர்கள்!

இப்போது, தன் கரத்தினை உங்கள் முன் நீட்டி, ‘‘என் கரம் பற்றி கரையேறு மகளே..! உனக்கு மணவாழ்வு காத்திருக்கிறது’’ என்று உங்கள் தாய் கூற, நீங்களோ விரக்தியுடன் அவரைப் பார்த்தீர்கள். அப்படி கரையேற முடி யாது என்கிற உண்மையை உங்கள் தாயிடம் அப்போதே கூறி விட வேண்டும் என்று தோன்றி னாலும், அவர் உடல் நிலை பலவீனமாக இருக்கும் நிலையில் தாங்கி கொள்ள முடி யுமா என்கிற பதைபதைப்பும் உங்களுக்கு இருந்தது. ஆனாலும் அப்போதைய சூழ்நிலை யில், எதார்த்தத்தை அவருக்கு புரிய வைக்க வேண்டும் என்று முடிவு செய்தீர்கள்.

திரைப்படத்துறை என்பது ஒரு காட்டாறு. அதில் இறங்கிய பெண்களால் எளிதில் கரையேற முடியாது என்பதை, உங்கள் தாயிடம் நிதானமாக, மிக அழகாக உங்கள் நிலையை விளக்கினீர்கள். ‘‘திரைப்படத்துறை யில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறும் வேளையில், ஒருவித சுழலில் சிக்கிவிட் டேன். இனி திசைமாறி நீந்துவது கடினம். ஆற் றின் பாதையிலேயே பயணிக்க வேண்டியது தான்’’ என்று நீங்கள் கூறியபோதுதான், உங்கள் தாய் உங்களது நிலைமையை உணர்ந்தார்.

மேற்படிப்பைத் தொடர விரும்பிய உங் களை நடிப்புத் தொழிலில் தள்ளியது, தான் செய்த மிகப்பெரிய தவறு என்பதை உணர்ந்து, அன்று அதை நினைத்து குமுறி அழுதார். அவரை சமாதானப்படுத்தினீர்கள். பலமான சுழலில் சிக்கிக்கொண்ட உங் களால் கரையேற முடியாது என்பதை நீங்களே உணர்ந்துகொண்ட பிறகு, யாரால் உங்களை கரையேற்றியிருக்க முடியும்? ஆற்றின் போக்கிலேயே சென்று கரடு முரடான பாதைகளில் இடிபட்டு பயணிப்பதை தவிர்க்க முடியாது என்பதை நீங்கள் அப்போதே புரிந்துகொண்டு விட்டீர்கள்.

‘‘அந்தக் காட்டாற்றின் போக்கிலேயே போய் அரசியல் என்னும் அதல பாதாளத்தை நோக்கிச் செல்லும் நீர்வீழ்ச்சியில் விழுவேன் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. நதி என்பது ஓடிக்கொண்டே இருக்க வேண்டியது. காடு, மேடு, சமவெளி, என்று பாராமல் ஓடுவதுதான் அதன் இயல்பு. சிலருக்கு அது புனிதமானது. சிலருக்கு அது வெறும் இயற்கை சூழலின் ஒரு அங்கம். சிலர் அந்த ஆற்றிலேயே மூழ்கி பாவங்களைக் கரைத்து, தாங்கள் புனிதமாகி விடுகின்றனர். குடகு தேசத்தில் பொன்னியாக பிறந்து, தமிழ் நாட்டில் காவிரியாக ஓடும் ஆற்றை போலவே, எனது வாழ்க்கையும் குடகு தேசத்தில் பிறந்து இங்கே ஓடிக்கொண்டிருக்கிறது. இதுதான் என் தலைவிதி போலும்...’’

என்னருமை தோழி...!

மிகவும் சோகத்துடன் நீங்கள் இந்த வார்த்தைகளை கூறிய நாள் 2008-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி. இதனைக் கேட்ட போது, நான் கலங்கிப் போனேன். ‘‘என் தந்தை இருந்திருந்தால் சினிமாவில் நுழைந் திருக்கமாட்டேன். என் தாய் இருந்திருந்தால் அரசியலில் நுழைந்திருக்கமாட்டேன்...’’ என்று அடிக்கடி கூறி வந்த நீங்கள், அன்று ஒரு படி மேலேபோய், ‘‘இறைவன் இருந்திருந்தால் இந்த துன்பமிக்க உலகில் நான் பிறந்திருக்க மாட்டேன்...’’என்று விரக்தியுடன் கூறுமளவுக்கு 1971-ம் வருடத்தின் நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையில் அரங்கேறின.

‘‘அண்ணன் ஜெயகுமாருக்கு திருமணம் செய்து வையுங்கள். புது வீடு கட்டி கிரகப் பிரவேசத்தை விமரிசையாக செய்வோம். அனைவரும் புது வீட்டில் சந்தோஷமாக வசிப் போம்...’’ என்று உறுதியுடன் நீங்கள் கூற, உங்கள் தாய் சந்தியா அன்று முழுவதும் அழுதுகொண்டே இருந்தார். கிரகப்பிரவேசத் துக்கு நாளும் குறித்தாகி விட்டது.

ஒரு

நாள் படப்பிடிப்பில் இருந்த உங் களுக்கு ஒரு அவசரத் தகவல். ‘உங்கள் தாய் சந்தியாவின் உடல் நிலை மோசமடைந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.ஜே. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்’ என்பதுதான் அந்த தகவல். நேராக மருத்துவமனைக்கு விரைந்தீர்கள்.

நடிகை சச்சுவும் உடன் வந்தார். மருத்துவமனைக்கு நீங்கள் சென்றபோது, சந்தியாவின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. டாக்டர் ஜெகதீசன் உங்களை அழைத்து, சந்தியாவுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், கருப்பையில் புற்று நோய் முற்றிய நிலையில் இருப்பதாக தெரிவிக்க, நீங்களும் ‘‘உடனே அறுவை சிகிச்சை செய்து என் தாயைக் காப்பாற்றுங்கள்’’ என்று கலங்கினீர்கள்.

அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டன. அப்போது டாக்டரிடம் நீங்கள் ஒரு கோரிக்கையை முன்வைக்க, அவர் அதிர்ந்து போனார். ‘‘அறுவை சிகிச்சை நடை பெறும்போது பக்கத்திலேயே நானும் உடன் இருப்பேன்’’ என்ற தங்களது கோரிக்கைதான் டாக்டர் ஜெகதீசனை அதிர வைத்தது. ‘‘ஸாரி மேடம்! இட் இஸ் அகைன்ஸ்ட் அவர் ரூல்ஸ்..’’ (Sorry Madam! It’s against our rules) என்று அவர் மறுக்க, நீங்கள் தொடர்ந்து வற்புறுத்தினீர்கள்.

‘‘டாக்டர்! எனக்கு எல்லாம் என் அம்மாதான். நான் உடன் இருப்பதைத்தான் அவர் விரும்புவார். அவருக்கு ஒரு மனோரீதியான பலத்தை என்னால்தான் தர முடியும். ப்ளீஸ்...என்னை ஆபரேஷன் தியேட்டருக்குள் அனுமதியுங்கள்...’’ என்று கண்களில் நீர்மல்க நீங்கள் மன்றாடினீர்கள் .

உடன் இருந்த நடிகை சச்சு உங்களை சமாதானப்படுத்தினார். ‘‘ஒண்ணும் ஆகாது அம்மு! அம்மா நல்லபடியா வந்துடுவாங்க. ஆபரேஷன் தியேட்டர் உள்ளே எல்லாம் போகக் கூடாது’’ என்று அவர் கூற, நீங்கள் பிடிவாதமாக இருந்தீர்கள்.

அந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆரும், சின்னப்பா தேவரும் கே.ஜே மருத்துவமனைக்கு வந்தார் கள். டாக்டர் ஜெகதீசனுக்கும், உங்களுக்கும் வாக்குவாதம் நடைபெறுவதைக் கண்டதும் எம்.ஜி.ஆர். ‘‘என்ன விஷயம்?’’ என்று கேட்டார். ‘‘அம்மாவுக்கு ஆபரேஷன் நடக்கும்போது, நான் உள்ளே இருக்க வேண்டும் என்று கேட்டால், டாக்டர் அனுமதி தர மறுக்கிறார்’’ என நீங்கள் கண்ணீருடன் கூறியதைக் கேட்ட எம்.ஜி.ஆர். உங்களைப் பார்த்து பரிதாபப் பட்டார்.

இருந்தாலும் நிலைமையை விளக்கி அவரும் உங்களை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், நீங்கள் உங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தீர்கள். கடைசியில் டாக்டர் ஜெகதீசனிடம் எம்.ஜி.ஆர். ஒரு வேண்டுகோள் விடுத்தார். ‘‘டாக்டர்! அம்மு தைரியமான பெண்தான். தான் உள்ளே இருப்பதால், சந்தியாவுக்கு நல்லது நடக்கும் என்று அவர் நம்புகிறார். தயவுசெய்து, ஒரு ‘ஸ்பெஷல் கேஸ்’ என நினைத்து, அம்முவை ஆபரேஷன் தியேட்டருக்குள் அனுமதிக்க வேண்டும்...’’ என்று கேட்க, நீண்ட யோசனைக்கு பிறகு டாக்டர் ஜெகதீசனும் சம்மதித்தார்.

சந்தியாவை ஐ.சி.யூ. விலிருந்து ஆபரேஷன் தியேட்டருக்கு ஸ்ட்ரெச்சரில் தள்ளிச் செல்ல, பின்னால், அந்த அறைக்குள் செல்வோருக்கு உரிய உடைகளுடன் கண்கள் கலங்க, உங்கள் தாயை பின்தொடர்ந்து சென்றீர்கள். எம்.ஜி.ஆர், தேவர் மற்றும் நடிகை சச்சு ஆகியோர் ஆபரேஷன் தியேட்டர் வாயில்வரை வந்தனர்.

நீங்கள் உள்ளே சென்றதும், கதவுகள் மூடப்பட்டன.

- தொடர்வேன்...

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-30-கரையேற-முடியாத-காட்டாறு/article9533517.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

என்னருமை தோழி...!- 31: கிரகப்பிரவேசம்!

 

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டின் கிரகப்பிரவேச பத்திரிகை.
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டின் கிரகப்பிரவேச பத்திரிகை.
 
 

ஆபரேஷன் தியேட்டருக்குள் உங்கள் தாய் சந்தியாவுக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. இருபத்தி மூன்றே வயதை கடந்து கொண்டிருந்த உங்களுக்கு, ஒரு அறுவை சிகிச்சையை நேரில் காண்பதற்கு எவ்வளவு நெஞ்சுரம் இருந்திருக்க வேண்டும்! உங்களுக்கு தெரிந்த மந்திரங்களை ஜெபித்துக் கொண்டு, சந்தியாவை காப்பாற்றுவதற்காக, டாக்டர் ஜெகதீசன் தலைமையில் மருத்துவர்கள் போராடிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தீர்கள்.

அப்போது, இறைவனிடம் நீங்கள் வைத்த கோரிக்கை ஒன்றுதான். ‘பணம் வேண்டாம். புகழ் வேண்டாம். எதுவுமே வேண்டாம். எனது தாயை பத்திரமாக திருப்பித் தந்துவிடு. அவ ருடன் ஏதாவது ஒரு மூலையில் நிம்மதியாக வாழ்ந்து கொள்கிறேன்’ என்பது மட்டுமே உங்கள் பிரார்த்தனையாக இருந்தது.

ஆனால், பிற்காலத்தில் மிகப்பெரிய சோத னைக்கு ஆளாக நேரிடும். முதல் சோதனைக்கே துவண்டு விட்டால் எப்படி என்பதுபோல, உங்களைப் பக்குவப்படுத்துவதற்காக மிகப்பெரிய இழப்பை கொடுப்ப தாகவே இறைவனின் பதில் அமைந்திருந்தது.

டாக்டர்கள் தீவிர முயற்சி செய்தும் உங் கள் தாய் சந்தியாவின் உடல்நிலை மோச மடைந்து கொண்டே சென்றது. நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே தாயின் உடல்நிலை மெதுவாக அடங்கி வருவதை உணர்ந்தீர்கள். டாக்டர்கள் சற்றே பதற்றம் அடைந்து, உங்களை அப்பால் போகச் சொல்லியும், நீங்கள் பிடிவாதமாக தாயின் அருகிலேயே இருந்தீர்கள்.

இரண்டு முறை பந்தாக துள்ளிய அவரது உடல் அதன்பிறகு அடங்கிவிட்டது. நீங்கள் எது நடக்கக்கூடாது என்று பயந்தீர்களோ, அது நடந்து விட்டது. ‘சந்தியா காலம்’ முடிவடைந்து விட்டது. உங்கள் வாழ்வில் தற்காலிகமாக இருள் சூழ்ந்து விட்டது. ‘ஐ ஆம் ஸாரி...’ என்ற டாக்டரின் மூன்றே சொற்களின் மூலம் உங்களது எதிர்காலம் சூன்யமாகிவிட்டது என்பதை உணர்ந்து துக்கம் தொண்டையை அடைக்க நின்றீர்கள்.

உங்களது எதிர்கால நம்பிக்கைகள் தவிடு பொடியாகிவிட, இறந்த தாயின் முகத்தையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். ‘‘கிரகப்பிரவேசம் செய்து புதிய வீட்டில் உன்னை மகாராணியை போல வைத்துக் கொள்ள வேண் டும் என்று கூறிக்கொண்டிருந்தேனே. அதற் குள் உனக்கு என்னம்மா அவசரம்..?’’ என்று மனதுக்குள் கேட்டபடி சித்தப் பிரமை பிடித்தது போல அழக்கூட திராணியின்றி, சிலையாக நின்ற உங்களை எம்.ஜி.ஆர். தேற்றினார்.

உங்கள் நிலைமையை உணர்ந்து சந்தியாவின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர். செய்தார். சந்தியாவுக்கு இறுதி மரியாதை செலுத்த தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகமே திரண்டு வந்தது. நீங்களோ சோகப் பதுமையாய் இடிந்து போய் அமர்ந்திருந்தீர்கள். இறுதிச் சடங்கின்போது, தாயின் வாய்க்கு அரிசி போடும்போது அணை உடைந்த வெள்ளமாக மவுனம் உடைத்து கதறினீர்கள்.

உங்கள் தாயின் சிதை எரியும்போது, அத னுடன் உங்களது கனவுகள், எதிர்பார்ப்புகள், அபிலாஷைகள், எதிர்காலத் திட்டங்கள் எல்லா மும் சேர்ந்து சிதையில் எரிவதாகவே உணர்ந்தீர்கள். நீங்கள் மிக நெருக்கத்தில் கண்ட முதல் மரணம், தங்கள் தாயுடையதுதான். தந்தை ஜெயராமன் இறந்தபோது உங்களுக்கு இரண்டு வயது. மரணத்தின் சோகத்தினை உணர முடியாத வயது.

என்னருமை தோழி...!

பொதுவாக குடும்பத்தின் தூணாக இருந்த ஒருவர் மரணம் அடைந்துவிட்டால் அந்த வீட்டில் ‘இனி என்ன?’ என்று கேட்கப்படுவது வழக்கம். ஆனால் உங்கள் தாயின் மறைவுக் குப் பிறகு, ‘இனி ஒன்றுமே இல்லை’ என்பது மட்டுமே உங்களது தீர்மானமாக இருந்தது. ‘‘அம்மாதான் என்னை திரைப்பட உலகில் சேர்த்துவிட்டார். அவரே மறைந்துவிட்ட பிறகு, இனி நடிக்கத் தேவையில்லை என்ற தீர்மானத்துக்கு வந்துவிட்டேன்’’ என்று பிறகு கூறினீர்கள்.

ஆனால், அம்மாவின் மேற்பார்வையில் ஆசைக் கனவுகளோடு மிக அழகாக உருவாக் கப்பட்டு, பலவித அலங்கார பொருட்களையும், திரைச் சீலைகள், தரை விரிப்புகள் உட்பட எல்லாமே தயாராக வாங்கி வைக்கப்பட்டு, கிரகப் பிரவேசம் செய்யப்படுவதற்காக நாளும் குறிக்கப்பட்ட, போயஸ் கார்டன் வீட்டை என்ன செய்வது?

அந்த வீட்டுக்கு மைசூரில் தாங்கள் வசித்த வீடான ‘ஜெயா விலாஸ்’ என்ற பெயரையே சூட்ட சந்தியாவால் ஏற்கெனவே முடிவு செய்யப்பட் டிருந்தது. உறவினர்களும், நண்பர்களும், உங் களுக்கு ஆறுதல் சொன்னார்கள். ‘‘கவலைப் படாதே. நாங்கள் இருக்கிறோம்’’ என்று. பின் னாளில் ‘நாங்கள் இருக்கிறோம்’ என்கிற சொற் களே உங்களுக்கு ‘அலர்ஜி’யாக போய்விட்டது என்றீர்கள். எதிர்பார்ப்புகள் தந்த ஏமாற்றத்தின் விளைவு அது!

‘‘எனக்கு யாரும் வேண்டாம். என்னை நானே பார்த்து கொள்கிறேன்’’ என்று நீங்கள் கூறவேண் டிய காலகட்டமும் பின்னர் வந்தது. ஆனால் அன்று... 23 வயது மட்டுமே நிரம்பி, உங்களது வங்கிக் கணக்குகளின் இருப்புத்தொகை எவ்வளவு உள்ளது என்பதுகூட தெரியாமல், வீட்டின் அன்றாட செலவுகளுக்கு எவ்வளவு தேவை என்பது தெரியாமல் திணறி நின்றீர்கள். ஆறுதல் கூறியவர்களை எல்லாம் ஆத்மார்த்த உறவினர்களாக ஏற்றுக் கொண்டீர்கள்.

முதல் கட்டமாக, போயஸ் தோட்டத்து இல்லத்தின் கிரகப்பிரவேசத்தை நடத்தி முடிக்கத் தீர்மானித்தீர்கள். உங்கள் தாய் சந்தியா என்ற வேதவல்லியின் நினைவாக, வீட்டுக்கு ‘வேதா நிலையம்’ என்று பெயர் சூட்டும் முடிவை எடுத்தது நீங்கள்தான்!

1972-ம் ஆண்டு மே 15-ம் நாள் மிக எளிமை யாகவும் சாஸ்திர முறைப்படியும்,போயஸ் கார் டன் வீட்டுக்கு கிரகப்பிரவேசம் நடந்தேறியது. நெருங்கிய உறவினர்கள், தாயின் நண்பர்கள், ஆகியோர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். விழா நடந்த அன்று மாலை, ஏழு மணிக்கு வீணை சிட்டிபாபுவின் இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கிரகப்பிரவேசம் அன்று காலை சாஸ்திர முறைப்படி பசுமாடு ஒன்றை வீட்டினுள் கொண்டு சென்றால், வீடு புனிதமடையும் என்று கூறிய மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த தங்களது குடும்ப புரோகிதர் ஒருவர், அதற்கான ஏற்பாட்டினையும் செய்திருந்தார். உறவினர்கள் அனைவரும் கைகளில் மங்கல பொருட்களை தட்டுகளில் ஏந்தியபடி, அந்த பசுமாட்டினை தொடர்ந்து வந்து அதன் இருபுறமும் நின்றார்கள்.

அப்போது நிகழ்ந்த ஒரு சம்பவம், தாயின் மரணத்தினால் தீராத சோகத்தில் ஆழ்ந்திருந்த உங்களை மெய்மறந்து சிரிக்க வைத்து விட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் தாமரை முகம் மலர்ந்தது. கலகலவென்று சிரித்துக்கொண்டே இருந்தீர்கள்.

en_annan_3131238a.jpg

‘என் அண்ணன்’ படத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா.

- தொடர்வேன்...

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-31-கிரகப்பிரவேசம்/article9536083.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

என்னருமை தோழி...!- 32: நான் தமிழ்ப் பெண்!

 

 
மைசூரில் நடந்த ‘கங்கா கெளரி’ படப்பிடிப்பின்போது ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், இயக்குநர் பி.ஆர். பந்துலு, நடிகர் அசோகன் உள்ளிட்டோர்.
மைசூரில் நடந்த ‘கங்கா கெளரி’ படப்பிடிப்பின்போது ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், இயக்குநர் பி.ஆர். பந்துலு, நடிகர் அசோகன் உள்ளிட்டோர்.
 
 

வேதா நிலையம் வீட்டுக்குள் நுழைவதற்காக பசுமாடு ஒன்று கொண்டுவரப் பட்டது. அந்த மாடு வீட்டிற்குள் நுழைந்ததும் திடீரென மிரண்டு போய் நின்றது. சுற்றும்முற்றும் பார்த்து ‘அம்மா’ என்று இருமுறை கத்தியதாக கூறினீர்கள். ஒரு வேளை வருங்காலத்தில் இந்த இல்லத்திலிருந்து தமிழகத்தையே ‘அம்மா’வாக பரிபாலனம் செய்ய போகிறீர்கள் என்பதை சூசகமாக தெரிவித்ததோ என்னவோ!

சாதுவான அந்தப் பசுமாடு திடீரென்று தனது வாலை சுழற்றி, சாணத்தை நடு வீட்டில் இட்டது. அதன் பிறகுதான் அந்த மாடு வயிற்று உபாதை யினால் சிரமப்படுவது அனைவருக்கும் புரிந்தது. நீராக விழுந்த சாணம், அந்த மாட்டின் பின்னால் மங்கள பொருட்களை தட்டுகளில் ஏந்தி நின்ற பெண்களின் பட்டுச் சேலையை நாசம் செய்ய, அவர்கள் வீறிட்டு இங்குமங்கும் ஓட, அலறலைக் கேட்டு மாடு இன்னும் மிரள... ஒரே களேபரம்.

அதுவரை தாயின் பிரிவை எண்ணி ஒரு மூலையில் சோகமாக நின்றிருந்த நீங்கள் இந்தக் காட்சியை கண்டதும், பீறிட்டு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் கலகலவென நகைக்கத் துவங்கினீர்கள். நீண்ட நாட்கள் கழித்து உங்கள் முகத்தில் சிரிப்பு!

உங்கள் வீட்டில் பணிபுரியும் வயது முதிர்ந்த பணிப்பெண், மாட்டுக்காரரை திட்டியதாகக் கூறினீர்கள். ‘‘ஏம்பா, வேற மாடே கிடைக் கலையா. இப்படியா.. புதுவீட்டுல பண்ணும்..?’’ என்று இரைந்தது உங்கள் சிரிப்பை அதிகரித்தது. இந்தக் களபேரத்துக்கும் உங்கள் மகிழ்ச்சிக்கும் இடையே கிரகப்பிரவேசம் மிக விமரிசையாக நடைபெற்றது.

அன்று மாலை வீணை சிட்டிபாபுவின் இன் னிசை கச்சேரிக்கு, எம்.ஜி.ஆர். உட்பட திரைப் படத் துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வந்திருந்து, உங்களை வாழ்த்தினர். உங்கள் தாய்க்கு மிகவும் பிரியமான சில ராகங்களை இசைக்க வேண்டும் என்று தாங்கள் சிட்டிபாபு விடம் வேண்டுகோள் விடுத்தீர்கள். ‘வேதா’ நிலை யம் என்று பெயரிடப்பட்ட அந்த இல்லத்தில் தனது வீணையில் சாம கானத்துடன் நிகழ்ச் சியை நிறைவு செய்தார் சிட்டிபாபு.

கிரகப்பிரவேசம் முடிந்த சில நாட்களில் குடும்பத்துடன் வேதா நிலையத்திற்குள் குடி புகுந்தீர்கள்.உங்கள் தாய் வாங்கியிருந்த தரை விரிப்புகள், திரைச் சீலைகள், மைசூர் மன்னரது அன்பளிப்பு பொருட்கள் ஆகி யவை அவர் விருப்பப்படியே வீட்டை அலங்கரித்தன.

தாய் இறந்து போனதும், அவரது பொறுப்புகள் எல்லாமே உங்கள் தலையில் தான் சுமத்தப்பட்டன. அண்ணன் ஜெயகுமாருக்கு தகுந்த பெண்ணைத் தேடி திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தபோது, உங்கள் தோழியான நடிகை ஷீலா தனக்கு தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் இருப்பதாகக் கூறியிருந்தார். அந்தக் குடும்பமும் தங்கள் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுவதாக ஷீலா தெரிவிக்க, அந்தக் குடும்பத்துடன் தொடங் கியது கல்யாணப் பேச்சு. ஷீலா, ஜெயக்குமார் இருவருடனும் நீங்களே பெண் பார்க்க சென்றீர்கள்.

பெண்ணின் பெயர் விஜயலட்சுமி. உங் களுக்கு பெண்ணை மிகவும் பிடித்துவிட, ஜெய குமாரும் தனது சம்மதத்தைத் தெரிவித்தார். தாங்களே முன்னின்று திருமணத்தை மிகவும் எளிய முறையில் நடத்தி வைத்தீர்கள். உங்கள் தரப்பில் உங்களது சித்திகளின் குடும்பங்களும், நடிகை ஷீலாவின் குடும்ப மும் மட்டுமே பங்கேற்றன.

அண்ணன், அண்ணியுடன் தாங்கள் வேதா நிலையத்தில் நிம்மதியாக வசிக்க தொடங்கினீர் கள். அண்ணனுக்கு ஒரு மகனும், மகளும் பிறக்க, அந்த குழந்தைகளுக்கு தீபா, தீபக் என்று பெயரிட்டு மகிழ்ந்தது நீங்கள்தான்! அந்தக் குழந்தைகளுடன் நேரம் போவது தெரியாமல் விளையாடிக் கொண்டிருப்பீர்கள்.

என்னருமை தோழி…!

இந்த காலகட்டத்தில் எம்.ஜி.ஆருடன் நீங்கள் நடிப்பது நின்று போனது. உங்களுக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே பிரச்சினைகளை ஏற்படுத்த நினைத்தவர்கள், 1970-ம் ஆண்டு முதலே அதற்கான வேலைகளை துவக்கி இருந்தனர். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் மூன்று கதாநாயகிகளில் நீங்களும் ஒருவர் என்று உறுதியாக நம்பினீர்கள். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடிக்க ஜப்பானுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக, உங்களுக்கு வந்த மற்ற படங்களின் வாய்ப்புகளையும் நிராகரித்து விட்டீர்கள்.

உங்களது பாஸ்போர்ட், டிக்கெட் எல்லாம் கூட தயார். ஆனால், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் விளம்பரம் வெளியானபோது உங் களுக்கு பதிலாக நடிகை சந்திரகலாவின் பெயர் தான் காணப்பட்டது. இதனால் சற்றே பாதிக்கப் பட்டாலும் உங்களுக்கும் எம்.ஜி.ஆருக் கும் இடையே பிளவை ஏற்படுத்த நினைப்பவர் களின் தற்காலிக வெற்றி இது என்று மனதைத் தேற்றிக் கொண்டீர்கள்.

‘அம்மாவே போய் விட்டார். இனி திரைப்பட வாய்ப்புகள் நழுவினால்தான் என்ன’ என்று எண்ணிக் கொண்டதோடு, இனிமேல் கதா நாயகிக்கு முக்கியத்துவம் தரப்படும் கதாபாத் திரங்களில் மட்டுமே நடிப்பதென்று அப் போதே ஒரு தீர்மானத்துக்கு வந்தீர்கள். இந்த சமயத்தில்தான் திமுக-வில் பிரச்சினை கள் தோன்றின. 1972 அக்டோபர் 10-ம் தேதி திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., அண்ணா திமுகவை தொடங்கினார். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் திரை யிடுவதற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டன. தமிழக அரசியல் சூழ்நிலையே பரபரப்படைந்திருந்த அந்த வேளையில், ‘வேதா நிலையம்’ இல்லத் தில் உங்களின் அமைதியான வாழ்க்கை தொடர்ந்தது.

‘கங்கா கௌரி’ படப்பிடிப்புக்காக, நீங்கள் மைசூர் சென்றிருந்தபோது, வாட்டாள் நாகரா ஜின் ஆதரவாளர்களால் சூழப்பட்டு, ‘கன்னடம் வாழ்க, தமிழ் ஒழிக…’ என்று கோஷமிடும்படி வற்புறுத்தப்பட்டீர்கள். நீங்கள் அதற்கு பிடிவாத மாக மறுத்து, ‘‘நான் தமிழ்ப் பெண். தமிழ் ஒழிக என்று கூற மாட்டேன்…’’ என்று குண்டர்களின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் உங்கள் உறுதியை வெளிப்படுத்தினீர்கள். படப்பிடிப்புக்கு வந் திருந்த பத்திரிகையாளர்கள்தான் கன்னட வெறியர்கள் உங்களைத் தாக்காமல் பாதுகாப்பு அளித்தார்கள். பின்னர், விஷயம் கேள்விப் பட்டு மைசூரில் வேறொரு படப்பிடிப்பில் இருந்த எம்.ஜி.ஆர்., ‘கங்கா கெளரி’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்து பார்த்து உங் களுக்கு ஆறுதலும் தைரியமும் சொன்னார்.

1973-ல் திடீரென்று உங்களுக்கு எம்.ஜி.ஆரிடம் இருந்து அழைப்பு. தன்னுடன் ‘பட்டிக்காட்டுப் பொன்னையா’ திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பினார். அந்த சமயத்தில் நீங்கள், ‘சூரியகாந்தி’, ‘பாக்தாத் பேரழகி’ மற்றும் ‘வந்தாளே மகராசி’ போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக் கும் கதைகளில் மட்டுமே நடித்து வந்தீர்கள். ‘‘இப்போதெல்லாம் நான் ஹீரோயின் சப்ஜெக்ட் களில்தான் நடிக்கிறேன்’’ என்று நீங்கள் கூறிவிட, பிறகு எம்.ஜி.ஆரே போன் செய்து, மீண்டும் தன்னுடன் நடிக்க அழைத்தார். அவரது கோரிக்கையை தட்ட முடியாமல் ஏற்றுக்கொண்டீர்கள். இந்தப் படமே நீங்கள் எம்.ஜி.ஆருடன் நடித்த கடைசிப் படம்!

அந்த வருடம் மே மாதம்... தமிழகத்தின் அரசியல் போக்கையே மாற்றி அமைத்த திண்டுக்கல் மக்களவைத் தொகுதி இடைத்தேர் தல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். நிறுத்திய அண்ணா திமுக வேட்பாளர் மாயத்தேவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் என்.எஸ்.வி. சித்தனை ஒரு லட்சத்து நாற்பத்து ஓராயிரத்துக்கும் அதிக மான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்திருந் தார். அங்கே போட்டியிட்ட ஆளும் திமுகவின் வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் சுமார் 93 ஆயிரம் வாக்குகள் பெற்று 3-வது இடத்தைப் பெற்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். அரசியலில் தீவிர கவனம் செலுத்தினார். நீங்களும் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டீர்கள்.

வெறுமையுடன் இருந்த உங்கள் மனதில் ஆனந்தத்தை ஏற்படுத்தியது அந்தச் செய்தி!

- தொடர்வேன்...

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-32-நான்-தமிழ்ப்-பெண்/article9540885.ece

Link to comment
Share on other sites

என்னருமை தோழி...!- 33: முந்திரி பகோடா!

 

 
 
கிருஷ்ணர் வேடத்தில் ஜெயலலிதா.
கிருஷ்ணர் வேடத்தில் ஜெயலலிதா.
 
 

என்.டி.ராமாராவுடன் 1972 -ல் நீங்கள் நடித்து வெளிவந்த ‘ஸ்ரீ கிருஷ்ண சத்யா’ என்ற தெலுங்கு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தங்களுக்கு ‘பிலிம் ஃபேர்’ விருது வழங்கப்பட்டது. அடுத்த வருடமே, ‘பட்டிக்காடா பட்டணமா’ மற்றும் ‘சூரியகாந்தி’ படங்களில் சிறப்பான நடிப்புக்காக இருமுறை ‘பிலிம் ஃபேர்’ விருதுகளை நீங்கள் வென்றது உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்தது. திரை உலகை விட்டு மெதுவாக நழுவி விட வேண்டும் என்கிற மனநிலையில் இருந்த உங்களுக்கு இது ஒரு எதிர்பாராத திருப்பமாக அமைந்தது!

‘‘I did not expect these awards on the twilight zone of my film career...’’ பின்னர் நடந்த நமது சந்திப்பின்போது இப்படிக் கூறினீர்கள். அப்போதைய உங்கள் மனநிலை குடும்பத்தாருடன் அமைதியாக வாழ வேண்டும் என்பதே. வேதா நிலை யத்திலேயே பெரும்பாலான நேரங்களில் முடங்கிக் கிடந்தீர்கள். அண்ணனின் குழந்தைகளுடன் விளையாடி பொழுதைக் கழித்தீர்கள்.

அந்த அனுபவங்களைப் பற்றி ‘‘I tried to reenact my childhood days in Mysore...’’ என்று பின்னர் கூறினீர்கள். குறிப்பாக, சிறு வயதில் மைசூரில் நீங்கள் வசித்த ‘ஜெயா’ மற்றும் ‘லலிதா’ விலாஸங்களில் உங்கள் குடும்பம் விமரிசை யாக கொண்டாடிய பண்டிகைகளை பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டீர்கள்.

கிருஷ்ண ஜெயந்தி மிகச் சிறப்பாக உங்கள் குடும்பத்தில் கொண்டாடப்பட்டு வந்தது. பண்டிகை நாட்களில் உங்க ளுக்குப் பிடித்தபடி பெரிய கோலங்களை போடுவீர்கள். உங்கள் சித்தி குழந்தை களும் சேர்ந்துவிட்டால் ஒரே கும்மாளம் தான். இதிகாச, புராண நாடகங்களை அவர்களுடன் சேர்ந்து நடித்துக் காட்டுவீர்கள்.

எழுபதுகளில், வேதா நிலையத்தில் அனைத்துப் பண்டிகைகளும் விமரிசை யாக கொண்டாடப்பட்டன. மைசூரில் வளர்ந்திருந்ததால், தசரா பண்டிகைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. படப் பிடிப்பு நாட்களில், நேரமின்மை காரண மாக, பெரிய அளவில் கொலு பொம்மை களை வைக்காவிட்டாலும், தசரா பூஜை உங்கள் இல்லத்தில் மிகச் சிறப்பாக செய்யப்படும். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அக்கம்பக்கத்து இல்லங்களில் இருந்து பெண்களை அழைத்து தசராவை கொண்டாடுவது உங்கள் வழக்கம்!

எல்லா கடவுள்களையும் நீங்கள் வழிபட்டாலும், கிருஷ்ணரிடம் உங்களுக்கு கூடுதல் ஈடுபாடு. சிறு வயதில் கிருஷ்ணர் வேடம் போட்டு கொள்வது என்றால் மிகவும் பிடிக்கும். ஒருமுறை, கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டத்தில் நடனமாட வேண்டி மாண்டியா பகுதிக்கு ரயிலில் சென்ற போது, காமிக்ஸ் புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்த உங்களை, நாட்டிய நிகழ்ச்சிக்கு ஒத்திகை செய்யாமல் புத்தகம் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து உங்கள் தாய் கண்டிக்க, ஓடும் ரயிலிலேயே நாட்டிய பயிற்சி செய்தவர் நீங்கள்!

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையின் போது, வேதா நிலைய வாயிலில் நீங்களே பெரிய கோலம் இடுவீர்கள். மேலும், கிருஷ்ணனின் சின்னஞ்சிறு பாதங்களை வாயிலில் இருந்து பூஜை அறை வரை கோலமாக வரைவது உங்கள் வழக்கம். சீடை, முறுக்கு, அதிரசம் என்று பண்டிகைக்கு உரித்தான அத்தனை தின்பண்டங்களும் தயார் செய்யப்பட்டாலும், உங்களுக்கு பிடித்த முந்திரி கேக் நிச்சயமாக மெனுவில் இருக்கும்படி தாய் சந்தியா பார்த்துக் கொள்வார். உங்களுக்கு முந்திரி தொடர்பான தின்பண்டங்கள் பிடித்ததுதான் என்றாலும், முந்திரி பகோடா என்றால் உயிர். போயஸ் கார்டன் அருகே இருந்த டிரைவ் இன் உட்லண்ட்ஸ் ஹோட்டலின் முந்திரி பகோடா மிகவும் பிரபலம். அதற்கு நீங்களும், பாடகர் பி.பி.னிவாஸும் நிரந்தர வாடிக்கை யாளர்கள். மாலைவேளைகளில் டிரைவ் இன் உட்லண்ட்ஸிலிருந்து உங்களுக் காக ஸ்பெஷலாக முந்திரி பகோடா தருவிக்கப்பட்டு வந்தது.

என்னருமை தோழி...!

2008-ம் ஆண்டில் நமது தொடர் சந்திப்புகளின்போது இதை தாங்கள் குறிப் பிட்டவுடன், நான் கூறிய பதிலை கேட்டு சிரிப்பு தாங்க முடியவில்லை உங்களுக்கு. ‘‘ஒருவேளை, முன்னாள் முதல் மந்திரிக்கு முந்திரி பகோடா கிடைக்கக் கூடாது என்பதற்காகத்தான் டிரைவ் இன் உட்லண்ட்ஸ் ஹோட்டலை இழுத்து மூடிவிட்டு, செம்மொழிப் பூங்கா வாக மாற்றி விட்டார்களோ என்னவோ..’’ என்று நான் அடித்த ஜோக்கை கேட்டு வெகு நேரம் ரசித்து சிரித்தீர்கள்.

‘‘உண்மையில் டிரைவ் இன் உட்லண்ட்ஸ் மூடப்பட்டபோது, நான் வருத்தப் பட்டேன். நடிகையாக இருந்த காலத்தில், படப்பிடிப்பு முடிந்து அகால நேரங்களில் கூட, டிரைவ் இன் உணவுகள் எனக்கு கைகொடுத்துள்ளன..’’ என்று கூறினீர்கள்.

கிருஷ்ண ஜெயந்தி உங்கள் வீட்டில் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும், தீபாவளி யன்று, புதுப் புடவை சரசரக்க, பட்டாசுகளை வெடிப்பது உங்களுக்குப் பிடிக்கும். சிறு வயதில் நீங்களும், உங்கள் அண்ணனும் சேர்ந்து பட்டாசுகளை வெடித்து தள்ளு வீர்கள். பள்ளி படிப்பு முடிந்து வெளியே வரும்போது, பட்டாசு வெடிப்பது சுற்றுச் சூழலை பாதிக்கும் என்ற உணர்வில், பட்டாசுகளை வெடிப்பதை நிறுத்தி விட்டீர்கள். ஆனால், அரசியலுக்கு வந்தபின், பட்டாசு தொழிற்சாலைகள் எத்தனையோ குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பதை உணர்ந்து, இவ்வளவு நாள் பட்டாசு வாங்கி வெடிக்காமல் இருந்ததற்கு வருத்தப்பட்டதாகக் கூறினீர்கள்.

ஒவ்வொரு தீபாவளியின்போதும் நெருக்கமானவர்களுக்கு இனிப்புகளை கொடுத்து அனுப்புவது உங்கள் வழக்கம். எனக்கும், ‘உன் குடும்பத்தாருக்கு மட்டும்’ என்கிற எச்சரிக்கையுடன் உங்களது உதவியாளர்கள் மூலமாக தீபாவளி இனிப்புகளை அனுப்பி இருக்கிறீர்கள். எனது சர்க்கரை பிரச்னையை தாங்கள் அறிந்திருந்ததால் இந்த எச்சரிக்கை!

கதையம்சம் மிக்க, கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் 1973 முதல் 1975 வரை நடித்து வந்தீர்கள். 1977-ல் ‘உன்னை சுற்றும் உலகம்’ என்ற படத்தின் கதையை கேட்டதும் தங்களது கண்கள் கலங்கின. குடும்பத்துக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ‘லட்சுமி’ என்ற பெண்ணைப் பற்றிய அந்தக் கதை ஏறக்குறைய உங்களது நிலையை பிரதிபலிப்பதாக தோன்ற, படத்தில் நடிப்பதற்கு உடனே சம்மதம் சொல்லி விட்டீர்கள்.

அமைதியாக சென்று கொண்டிருந்த உங்கள் வாழ்வில் திடீர் திருப்பம் உங்கள் அண்ணியால் ஏற்பட்டது. ‘‘என் குடும்பத் துடன் நான் தனியாக போகிறேன்’’ என்று உங்கள் அண்ணன் ஜெயக்குமார் திடீரென்று ஒரு நாள் உங்களிடம் வந்து சொல்ல, திடுக்கிட்டுப் போனீர்கள். அப்போதுதான், தன் குடும்பம் என்கிற வட்டத்தில் உங்களை அவர் சேர்க்க வில்லை என்பது உங்களுக்குப் புரிந்தது.

அண்ணனின் குடும்பத்துக்குத் தேவை யான பொருட்களை வேதா நிலையத் தில் இருந்து எடுத்துச் செல்ல அனு மதித்தீர்கள். அண்ணன் குடும்பத்துக்கு உதவுகிறோம் என்பதைவிட, அப்படிச் செய்தால் அம்மாவின் ஆத்மா குளிரும் என்கிற உந்துதல் உங்களுக்கு. பிறகு, உங்கள் தாய் விருப்பத்துடன் வாங்கிய தரை விரிப்புகளை, திரைச் சீலைகளை அண்ணன் குடும்பத்துக்கு கொடுத்துவிட்டு, நீங்கள் உங்களைச் சுற்றி ஒரு இரும்புத் திரையை அமைத்துக் கொண்டீர்கள்.

அந்தப் பெரிய வீட்டில் தனியாக வசிக்கத் தொடங்கினீர்கள். கூட்டுப் புழு தன்னை சுற்றி ஒரு கூட்டினை அமைத்து கொள்வது போல், நீங்களும் ஒரு புத்தகப் புழுவாக தங்கள் வீட்டு நூலகத்தில், தங்களை சுற்றி ஒரு கூட்டினை அமைத்துக்கொண்டீர்கள். அந்தக் கூட்டினுள் தன்னையே சிறைப்படுத்திக் கொள்ளும் புத்தகப் புழு, அந்தக் கூட்டை உடைத்துக் கொண்டு ஒரு இரும்பு வண்ணத்து பூச்சியாக எதிர்காலத்தில் வெளிவரும் என்று அப்போது யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்?

-தொடர்வேன்… |

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-33-முந்திரி-பகோடா/article9543636.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

என்னருமை தோழி...!- 34: புத்தகப் புழு!

 
 
போயஸ் கார்டனில் தனது வீட்டில் உள்ள நூலகத்தில் ஜெயலலிதா.
போயஸ் கார்டனில் தனது வீட்டில் உள்ள நூலகத்தில் ஜெயலலிதா.
 
 

‘இனிது.. இனிது ஏகாந்தம் இனிது’... என்ற அவ்வையாரின் கூற்றுப்படி, உங்களுக்கு நீங்களே விதித்துக் கொண்ட வனவாசத்தின்போது, வெளியுலகத் தொடர்பினை அடியோடு துண்டித்துக் கொண்டதாகக் கூறினீர்கள். அந்தக் காலம் உங்களுக்கு மிக இனிமையாகக் கழிந்தி ருக்கும். பின்னர், பொதுவாழ்வில் ஈடுபட்டு தமிழகத்தின் முதல்வராகி ஓயாமல் மக்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் அந்தத் தனிமை உங்களுக்குத் தேவைப்பட்டதோ என்னவோ!

வேதா நிலையத்தைச் சுற்றி இரும்புத்திரை ஒன்றை அமைத்துக்கொண்டு, தங்கள் இல்ல நூலகத்தில் ஒரு கூட்டுப் புழுவாக அரிய நூல்களை படித்துக் கொண்டிருந்தீர்கள். துயரங்களை மறக்க, புத்தகங்களின் நடுவே உங்களைப் புதைத்துக் கொண்டதாக பின்னர் கூறினீர்கள். காலையில் ஒரு புத்தகத்தை படிக்க தொடங்கினால், நண்பகலில் அதை முடித்துவிடுவீர்கள்.

பிறகு, அடுத்த புத்தகத்தை தொடங்கி இரவுக்குள் அதனை முடித்துவிடுவீர்கள். சமையல்கார பெண்மணி ஒருவர் மயிலை பகுதியிலிருந்து அன்றாடம் வந்து சமைத்து வைத்துவிட்டுப் போவார். பள்ளி நாட்களில் இருந்து தங்களுக்காக காரோட்டும் மாதவன் என்கிற ஓட்டுநர் மற்றும் வீட்டு பணிப்பெண் ஆகியோருடன் மட்டுமே உங்களது பேச்சு இருந்தது. தொலைபேசி அழைப்புகள் வந்தாலும் நீங்கள் அதனை தவிர்த்துவிடுவீர்கள்.

வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கும் பணியாளர்கள்தான் செல்வது வழக்கம். நீங்கள் வெளியே செல்ல நேரிட்டாலும், அது இரண்டு காரணங்களுக்காக மட்டுமே இருக்கும். உங்களுக்குப் பிரியமான, நீங்கள் வளர்த்து வந்த அரை டஜன் நாய்களுக்கு உணவு வாங்குவதற்கும் புத்தகங்கள் வாங்க ஹிக்கின் பாதம்ஸ் போவதற்கு மட்டுமே வெளியே செல்வீர்கள்.

பிரபலமான நீங்கள் வெளியே சென்றால் மக்கள் கூட்டம் கூடி அன்புத் தொல்லை கொடுக்கும் என்பதால் நீங்களும் உங்கள் தோழி ஷீலாவும் சினிமாவுக்கும் ஷாப்பிங் செல்லும்போதும் பர்தா அணிந்து செல்வது வழக்கம். ‘ரிக் ஷாக்காரன்’ உட்பட பல படங்களை பர்தா அணிந்து சென்று இரு வரும் திரையரங்கில் பார்த்திருக்கிறீர்கள். அதேபோலவே, நீங்கள் தனிமையாக இருந்தபோது ஷாப்பிங் செல்லும் நேரங்களில் பர்தா அணிந்தே செல்வீர்கள். அவசியம் இருந்தால் மட்டுமே முகத்திரையை உயர்த்தி கடை ஊழியர்களிடம் பேசுவீர்கள். உங்கள் முகத்தைப் பார்த்து, ‘நாம் காண்பது கனவா’ என்று அவர்கள் நம்ப முடியாமல் பிரமித்து போய் நிற்பார்கள்.

நீங்களாக விதித்துக்கொண்ட இந்த வனவாச காலத்தில்தான் நீங்கள் உலகத்தை கற்றுணர்ந்ததாக என்னிடம் கூறினீர்கள். படங்களில் நடிப்பதையும் பெருமளவில் குறைத்துவிட்டீர்கள். அந்த காலகட்டத்தில் உங்களுக்கு வாடகை மூலம் கிடைத்த மாத வருமானம் 40 ஆயிரம் ருபாய். அதில் 12 ஆயிரம் ரூபாயை உங்கள் செல்லப் பிராணிகளின் உணவுக்காக செலவு செய்து விட்டு, 4 ஆயிரம் ரூபாய்க்கு புதிய புத்தகங்களை வாங்கு வீர்கள். மீதி பணத்தை மட்டுமே வீட்டு செலவுகளுக்கு எடுத்துக் கொள்வீர்கள்.

உங்களது வாழ்க்கை அமைதியாக சென்றுகொண்டி ருந்தது. புத்தகங்களை படிப்ப தோடு நிறுத்திவிட மாட்டீர்கள். பாலையும் நீரையும் சேர்த்து பருகும் அன்னப் பறவை, பாலை விழுங்கிவிட்டு நீரை உமிழ்வது போல, நீங்களும் நல்ல விஷயங் களை கிரகித்துக் கொண்டு, தேவையற்ற விவரங்களை நிராக ரித்துவிடுவீர்கள். அறிவியல், அரசியல், வரலாறு, சமூகம், தத்துவம், ஆன்மிகம், பொருளா தாரம் என்று பல துறைகளில் உங்கள் வாசிப்பு ஆழமானது.

என்னருமை தோழி...!

கல்லூரிப் படிப்பு படிக்க வில்லையே என்ற ஏக்கம் உங் களுக்கு உண்டு. அதனாலோ என்னவோ கல்லூரிப் படிப்பைவிட ஆழமாக, பரந்துபட்ட பல துறைகளின் நூல்களை விரும்பிப் படித்து உங்கள் உலக அறிவை விசாலப்படுத்திக் கொண்டீர்கள். இந்த வாசிப்புதான் பிற்காலத்தில் அரசியலில் எந்த ஒரு துறை சம்பந்தப்பட்ட விஷயத்தையும் உடனடியாக புரிந்துகொள்ளவும் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவும் உங்களுக்கு உதவியது.

ஜேன் ஆஸ்டென்னின் 'பிரைட் அண்ட் பிரிஜூடிஸ்', 'எம்மா,' ரெய்னோல்ட்ஸ்ஸின் ‘கோர்ட் ஆஃப் லண்டன்', சோமர்செட் மாமின் ‘லிஜா ஆஃப் லம்பேத்’, ‘தி ரேசர்ஸ் எட்ஜ்’, ஆயின் ரெண்ட்டின் ‘அட்லாஸ் ஷ்ரக்ட்’, சாணக்ய நீதி, பகவத் கீதை போன்ற புத்தகங்களை மிகவும் ரசித்து படித்தீர்கள். எப்போது சுற்றுப் பயணம் செய்தாலும், எரிக் வோன் டானிக்கெனின் ‘சாரியாட் ஆஃப் தி காட்ஸ்’ என்கிற புத்தகத்தை எடுத்து வைக்குமாறு உதவியாளர்களிடம் சொல்வீர்கள். ‘யூ எப் ஓ’ என்கிற விண்வெளியில் பறக்கும் தட்டு களைப் பற்றி படிப்பதில் உங்களுக்கு மிகவும் ஆர்வம். இதை ஒரு பேட்டியிலும் தெரிவித்திருந்தீர்கள்.

மேரி எம் லூக்கின் ‘எ கிரவுன் ஃபார் எலிசபெத்’, ஜார்ஜ் ஆர்வெலின் ‘அனிமல் பார்ம்’ ஆகிய நாவல்கள் உங்களுக்கு அரசியல் ஆர்வத்தை ஏற்படுத் திய புத்தகங்கள் என்பதை என்னிடம் ஒருமுறை கூறினீர்கள். ஓய்வுக்காக கோட நாடுக்கு செல்லும் போது பெட்டி நிறையபுத்தகங்கள் உங்களுடன் வரும். நான் எழுதிய நாவலான ‘ரங்கராட்டின’த்தைப் படித்ததும், உங்களுக்கு ஒரு யோசனை தோன்றியதாகக் கூறினீர்கள். இதுகுறித்து அரசியல் சம்பந்தப்பட்ட ‘யுத்த காண்ட’த்தில் பின்னர் கூறுகிறேன்.

‘புத்தகங்களின் மீது இவ்வளவு காதல் கொண்டுள்ள ஜெயலலிதா ஏன் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எதிர்த்தார்..?’ என்று நிறைய வாசகர்கள், ‘என்னருமை தோழி’ தொடர் ஆரம்பித்த உடனேயே, என்னை மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் கேட்டனர்.

எனக்கும் இதுபற்றி மனதில் சந்தேகம் இருந்து வந்தது. துணிச்சலுடன் அவரிடம் பல்வேறு விஷயங்களைப் பேசியவன், என் மனதைக் குடைந்து கொண்டிருந்த இந்தக் கேள்வியை கேட்காமல் இருப்பேனா? அண்ணா நூற்றாண்டு நூலகம் பற்றி மட்டும் அல்ல; காலில் விழும் கலாச்சாரம், திமுக-அதிமுக தலைவர்களிடையே நிலவி வந்த தனிப்பட்ட விரோதம் போன்றவற்றைப் பற்றி அவரிடம் துணிவுடன் கேட்டு பதிலையும் பெற்றிருக்கிறேன்.

அவர் என் மீது வைத்திருந்த தனிப்பட்ட ஆன்மிக நட்பையும், நம்பிக்கையையும் பிரயோகித்து, ‘லைன் ஆஃப் கண்ட்ரோலை’ பலமுறை தாண்டியிருக்கிறேன். அவர் சிறிதும் எரிச்சலடையாமல் எனக்கு பதில் தந்திருக்கிறார்.

புத்தகப் புழுவான அவரிடம் வியப்புடன் கேட்டேன்… ‘‘சுமார் 40 ஆயிரம் புத்தகங்களை உங்கள் நூலகத்தில் வைத்திருக்கிறீர்கள். புதிது புதிதாக புத்தகங்களை வாங்கித் தள்ளு கிறீர்கள். அப்படிப்பட்ட நீங்கள், எப்படி, அண்ணா நூற்றாண்டு நூலகம் பற்றிய விஷயத்தில் விமர்சனங்களுக்கு உள்ளா னீர்கள்..?’’

அண்ணா நூற்றாண்டு நூலகம் குறித்து உங்களது மனதில் உள்ளதை நீங்கள் கொட்டியபோது நான் அசந்துதான் போனேன்!

- தொடர்வேன்… |

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-34-புத்தகப்-புழு/article9546135.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

என்னருமை தோழி...!- 35: தீர்க்கமான விளக்கம்!

 

 
போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா.
போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா.
 
 

புத்தகங்கள் படிப்பதில் உங்களுக்குள்ள ஆர்வம் அனைவரும் அறிந்ததே. சாப்பாடு இல்லாமல் இருந்தாலும் புத்தகங்கள் இல்லாமல் உங்களால் இருக்க முடியாது. இந்நிலையில், பலரைப் போல என் மனதில் உள்ள சந்தேகத்தை உங்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது கேட்டேன். ‘‘அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உங்கள் அரசு சரியாகப் பராமரிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுகின்றனவே. உண்மையில் புத்தகங்கங்களின் மீது அலாதி பிரியம் கொண்ட நீங்கள் இம்மாதிரி விமர்சனங்கள் எழுவதற்கு ஏன் இடம் கொடுத்தீர்கள்?”

இது என் கேள்வி.

உங்களின் நிழல் நண்பன் மற்றும் இலக்கியத்தில் நாட்டம் உள்ளவன் என்கிற உரிமையை அன்றுதான் எடுத்துக்கொண்டேன். ஏதோ மனதில் உள்ளதைக் கேட்டுவிட்டேனே தவிர, உங்களிடம் இதை நான் கேட்டிருக்கக் கூடாதோ என்ற எண்ணம் மனதில் ஓடியது. ஆனால், சிறிதும் கோபம் கொள்ளாமல் அதே நேரம், தீர்க்கமாக என்னைப் பார்த்த படி உறுதியான குரலில் நீண்ட பதில் அளித்தீர்கள். என் கேள்வியை எதிர்பார்த்தவர் போல தெளிவாக விளக்கம் கூறினீர்கள்.

‘‘நான் என்ன அலெக்ஸாண்ட்ரியாவின் லைப்ரரியை சீஸர் எரித்தது போல் நூலகத்தில் உள்ள புத்தகங்களை எரித்துவிட்டேனா?’’ சற்றே ஆதங்கமும் காட்டமும் கலந்த குரலில் இப்படிக் கேட்டீர்கள். மேற்கொண்டு நீங்களே பேச வழிவிட்டு அமைதியாக இருந்தேன். தொடர்ந்தீர்கள்…

‘‘இந்த நூலகம் குறித்து என்னைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் செய்கின்றனர். இப்படி அவதூறு பிரச்சாரம் செய்வதே, அந்த கட்டிடம் குறித்து மக்களை திசை திருப்பும் எண்ணத்துடன்தான் என்பதை நான் மட்டுமே அறிவேன். அந்த நூலகம் எழுப்பப்பட்டுள்ள 43 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக எனது அரசு திட்டம் தீட்டியது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக அரசு அந்த இடத்தில் நூலகத்தை கட்டியது. அண்ணா சாலை, ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள மரங்களை அகற்றி, தலைமைச் செயலகம் ஒன்றை திமுக அரசு கட்டியது.

திமுக அரசு கட்டிய கட்டிடங்கள் என்பதற்காக மட்டுமே நான் இவற்றை எதிர்த்தேன் என்றா நினைக்கிறீர்கள்? அந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டதில் சில சர்ச்சைகள் உள்ளன.

குறிப்பாக நூலகம்..! கட்டிடம் குறித்து நான் பிரச்சினை ஏற்படுத்துவேனோ என்கிற அச்சத்தில், நான் அந்த நூலகத்துக்கு எதிரானவள் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஒருநாள், உண்மைகள் வெளிவரும். அப்போது எனது நிலைப்பாடு மக்களுக்கு புரியவரும்.

நரசிம்மன்... நீங்கள் ஒரு உண்மையை தெரிந்துகொள்ள வேண்டும். திமுக ஆட்சி எழுப்பிய கட்டிடங்களை எல்லாம் நான் புறக்கணிக்கிறேன் என்றால், அன்றாடம் எனது வீடான வேதா நிலையத்திலிருந்து தலைமைச் செயலகம் போகும் வழியில் உள்ள, சவேரா ஹோட்டல் மேம்பாலத்தில் நான் எப்படி பயணிப்பேன்? அதன் இரு பக்கங்களிலும் கீழே உள்ள பாதையில் போகச் சொல்லி, எனது ஓட்டுநரை பணிக்க மாட்டேனா?

நகர் முழுவதும் திமுக ஆட்சியில் கட்டியுள்ள மேம்பாலங்களை நான் புறக்கணித்ததாக எங்காவது செய்திகள் வந்ததா? மேம்பாலங்களை உபயோகப்படுத்தும் நான், எனக்கு பிரியமான புத்தகங்களை புறக்கணிப்பேனா?

நான் கோட்டூர்புரம் பகுதியில் சட்டப்பேரவை வளாகம் கட்டுவதற்கான இடத்தை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் உண்டு. அதிகம் மக்கள் புழங்காத பகுதி அது. ஆளுநர் மாளிகையும் மிக அருகே உள்ளது. அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் நடமாட்டத்தால், மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே அந்த இடத்தை தேர்ந்தெடுத்தேன்.

தீர்க்க முடியாத பிரச்சினை ஒன்றை எதிர்கொள்ளும்போது, நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, புத்தகம் ஒன்றை படிப்பேன். அநேகமாக புத்தகத்தை முடிக்கும்போது, அந்தப் பிரச்சினைக்கான தீர்வு என்னுள் உதித்திருக்கும். அப்படி புத்தகங்களை நேசிக்கும் நான், எப்படி ஒரு நூலகத்தை புறக்கணிப்பேன்?’’ படபடவென்று சரவெடியாக வெடித்து, பிறகு உங்கள் மனதில் உள்ளதைகொட்டிவிட்ட திருப்தியுடன் அமைதியானீர்கள். தொடர்ந்து உங்களது வீட்டில் உள்ள நூலகத்தைப் பற்றி பெருமையுடன் பேசினீர்கள்.

‘‘இந்த நூலகத்தில் உட்கார்ந்துதான், பொழுதுபோவது தெரியாமல், புத்தகங்களை படித்துக் கொண்டிருப்பேன். பணியாளர்கள் வந்து அழைத்தால்தான் நான் உணவு உண்ணப் போவேன். ஹிட்லரின் ‘மெய்ன் காம்ப்’, மேரி எம் லுக்கின் ‘எ கிரவுன் ஃபார் எலிசபெத்’ போன்ற நூல்கள் எனக்கு அரசியல் ஆர்வத்தினை ஏற்படுத்தின’’ என்றெல்லாம் கூறினீர்கள்.

வெளியுலகத் தொடர்பினை துண்டித்துக் கொண்டு, உங்களது நூலகத்தில் கூட்டுப் புழு வாக மாறி, புத்தகங்களைப் படித்துக்கொண்டி ருந்த உங்களுக்கு திடீரென்று தோன்றியது ஒரு யோசனை... நாம் ஏன் ஒரு பத்திரிகையைத் தொடங்கக்கூடாது? இதுதான் உங்களுக்குத் தோன்றிய யோசனை.

விகடன், குமுதம், கலைமகள் வரிசையில் ஒரு பத்திரிகையை நடத்தி, இலக்கியப் பணி செய்தால் என்ன ? உடனேயே, உங்களது யோச னைக்கு செயல் வடிவம் கொடுக்க நினைத் தீர்கள். தங்களது நூலகத்தைவிட்டு வெளி நடந்த நீங்கள், தொலைபேசியை நோக்கி சென்றீர்கள். நீண்ட காலத்துக்குப் பிறகு, வேதா நிலைய இல்லத்தின் தொலைபேசியி லிருந்து ‘அவுட் கோயிங்’ அழைப்புகள் சென்றன.

இலக்கிய உலகில் கோலோச்சிக் கொண்டி ருந்த முக்கிய பெண் எழுத்தாளர்களின் வீட்டு தொலைபேசிகள் ஒலித்தன. முன்னணி பெண் எழுத்தாளர் ஒருவர், ‘‘நான் ஜெயலலிதா பேசறேன்..’’ என்று ஒலித்த உங்கள் குரலைக் கேட்டதும் மகிழ்ச்சியில் சிலையாகிப் போனார்.

பத்திரிகை என்னும் ஓடத்தை உரு வாக்கி, பேனா துடுப்புடன் இலக்கியக் கடலில் பயணம் செய்யும் தீர்மானத்துடன் இருந்தீர்கள். அந்த பத்திரிகைக்கு பெயர்கூட உங்கள் மனதில் உதித்தாகிவிட்டது. அப்போது...

- தொடர்வேன்… |

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி-35-தீர்க்கமான-விளக்கம்/article9548336.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

என்னருமை தோழி...!-36: துணிவுடன் எதிர்கொள்ளும் இதயம்

 

ஜெயலலிதாவை மலர் தூவி வாழ்த்துகிறாள் சிறுமி.
ஜெயலலிதாவை மலர் தூவி வாழ்த்துகிறாள் சிறுமி.
 
 

நீங்கள் துவங்க இருந்த பத்திரிகைக்கு உங்கள் தாயின் நினைவாக ‘சந்தியா’ என்ற பெயரைக் கூட தேர்வு செய்து விட்டீர்கள். அந்த சமயத்தில் உங்கள் நண்பர் சோ உங்களை பார்க்க வந்தார். பத்திரிகை துவங்க இருக்கும் முடிவை நீங்கள் அவரிடம் கூற, சோ சிரித்தபடி சொன்னார்...

‘‘நான் ஒருத்தன் பத்திரிகை ஆரம்பித்து விட்டு படற பாடு போதாதா? என் தலையை பார்த்துமா உங்களுக்கு இந்த ஆசை? பேசாம.. அந்த எண்ணத்தை மூட்டை கட்டி வச்சுட்டு, என்னோட ‘துக்ளக்’ பத்திரிகையில தொடர் ஏதாவது எழுதுங்கள்...’’ என்று உரிமையுடன் சொன்னார். அதோடு பத்திரிகை தொடங்கும் எண்ணத்தை கைவிட்டீர்கள். ‘துக்ளக்’கில் எழுதவும் முடிவு செய்து அந்த கட்டுரைகளுக்கு ‘எண்ணங்கள் சில...’ என்ற தலைப்பையும் நீங்களே கொடுத்தீர்கள். சோவும் அறிவிப்பு வெளியிட்டுவிட்டார்.

உடனே தமிழகம் எங்கும் பரபரப்பு. ‘என்னை பற்றி நான்’ என்ற பரபரப்பான தொடரை ‘குமுதம்’ பத்திரிகையில் எழுதி வந்த நீங்கள், திடீரென்று அதனை நிறுத்தி விட்டீர்கள். இப்போது மீண்டும் நீங்கள் ‘துக்ளக்’கில் எழுதப் போவதாக கூறப்பட்டதும், ஊரெங்கும் அதைப்பற்றியே பேச்சு.

‘எண்ணங்கள் சில...’ ஒரு வித்தியாசமான தொடர். இலக்கியம், அரசியல், சினிமா, ஆன்மிகம் என்று பல்வேறு விஷயங்களை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் எழுதி வந்தீர்கள்.

அந்த சமயத்தில்தான் பத்திரிகைகளுக்கு கதை எழுதத் துவங்கினீர்கள். ‘நெஞ்சிலே ஒரு கனல்’ ‘குமுத’த்தில் நீங்கள் எழுதிய முதல் நாவல் இது. ஏறக்குறைய உங்களது பால்ய நிகழ்வுகளை நினைவூட்டியது இந்தக் கதை. அதன் பின், ‘அவளுக்கு மட்டுமே சொந்தம்’ என்று நாவல் ஒன்றை எழுதி, அது பரபரப்புடன் விற்பனையானது.

கதை என்னவோ கற்பனைதான் என்றாலும் ‘இந்தப் பாத்திரம் யார்? அந்தச் சம்பவம் எப்போது நடந்தது?’ என்றெல்லாம் உங்களிடம் பலர் கேட்டார்கள். ஒரு விஷயம் உங்களுக்குப் புரிந்ததாகக் கூறினீர்கள். ‘ஒரு பெண், நடிகையாக பரிமளித்து விட்டால், பிறகு இலக்கியத்தில் ஈடுபட்டாலும், அரசியலில் ஈடுபட்டாலும், அவர் நடிகையாகத்தான் பார்க்கப்படுவார்’ என்பதை உணர்ந்தீர்கள். அரசியலில் நுழைந்த பின்னர் கூட, ‘சினிமா இமேஜை’த் தாண்டி அரசியல் தலைவராக நீங்கள் ஏற்கப்படுவதற்கு மிகவும் கடினமாக உழைக்கவேண்டி இருந்தது.

நீங்கள் எழுதிய ‘எண்ணங்கள் சில...’ கட்டுரைத் தொடருக்கு நல்ல வரவேற்பு. உங்கள் மீது எல்லை கடந்த அன்பு வைத்திருந்த சோவுக்கும் பரம திருப்தி. காரணம், அவசர நிலை பிரகடனத்தின்போது, அவருக்கு ஒரு பெரிய உதவி செய்திருந்தீர் கள். சோ-வை மிசா சட்டத்தின் கீழ் கைது செய்ய முடிவு செய்யப்பட்டது. ஒரு குறிப்பிட்ட நாளன்று அவரது அரசியல் நாடகம் ஒன்றைப் பார்க்க மத்திய அரசு அதிகாரிகள் ரகசியமாக வரப்போவதாகவும், நாடகம் முடிந்தவுடன், சோ-வை கைது செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் மத்திய அரசில் பணி புரிந்து வந்த உங்களது தூரத்து உறவினர் ஒருவர் மூலம் உங்களுக்கு தகவல் கிடைத்தது. நீங்கள் அபாய அறிவிப்பு கொடுத்தீர்கள்.

சோ உடனே, குடும்ப நகைச்சுவை நாடகம் ஒன்றை எனது தந்தை ‘சித்ராலயா’ கோபுவிடம் எழுதி வாங்கி, இரண்டே நாட்களில் தன்னுடைய ‘விவேக் பைன் ஆர்ட்ஸ்’ குழுவினருடன் பயிற்சி செய்து அரங்கேற்றினார். நாடகத்தை பார்த்த மத்திய அரசு அதிகாரிகள் குழம்பிப் போய், சோ-வை கைது செய்யாமல் சென்று விட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு, உங்கள் மீதான அன்பும் பாசமும் சோ-வுக்கு அதிகரித்தது.

நீங்கள் வெறுமையாக உணர்ந்த நேரத் தில், உங்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்றே, ‘எண்ணங்கள் சில...’ என்கிற கட்டுரைத் தொடரை எழுதச் சொன் னார். அது வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.

உங்களின் சமூக, அரசியல் பார்வைகளை அந்தக் கட்டுரைகள் மூலம் படித்த எம்.ஜி.ஆர்., உங்களுக்கு போன் செய்து அதிமுகவில் இணையும்படி அழைத்தார். அந்த தொலை பேசி அழைப்புதான், உங்கள் வாழ்க் கையை மாற்றிப் போட்டது. கூட்டை உடைத் துக்கொண்டு வெளிவந்த இரும்பு வண்ணத்து பூச்சியாக புதிய அரசியல் வாழ்வை நோக்கி பயணித்தீர்கள். 1982-ல் தங்களது அரசியல் பிரவேசத்திற்கு ஏற்பாடுகளை செய்தார், எம்.ஜி.ஆர்.!

பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற நடைமுறையின்படி, பழைய உறவுகள், பழைய நண்பர்கள் எல்லாரும் உங்கள் வாழ்வில் காணாமல் போனார்கள். முற்றிலும் புதிய உறவுகள், நண்பர்கள், அரசியல் பரபரப்பில், ‘அம்மு’ என்கிற அந்த நுண்ணிய உணர்வு படைத்த பெண்மணி காணாமல் போய், ‘அம்மா’ என்கிற மிடுக்கான பெண்மணி உதயமானார். அதன் பிறகு கரடு முரடான அரசியல் பாதையில் பயணம் செய்து சிகரம் தொட்டீர்கள்!

தேர்தலில் நிற்பன,

புகழுடன் அமர்வன,

சுற்றும் ஊர்வன,

எல்லை மீறி நடப்பன,

இறுதியில் பர(ற)ப்பன...

என்று உங்களது அரசியல் வாழ்க்கை முடிந்தது. ‘தர்மம் தலை காக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும்...’ என்று உங்களது அரசியல் ஆசான் பாடினார். நீங்கள் செய்த தர்மம் தக்க சமயத்தில் தங்களது உயிர் நீக்கி அவப்பெயரை நீங்கள் கேட்கும் கொடுமையில் இருந்து உங்களை விடுவித்தது!

இன்று

நீங்கள் ஒரு குற்றவாளி... என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது.

நமது பல்வேறு சந்திப்புகளின்போது, ‘‘என் தந்தை இருந்திருந்தால் நான் சினிமா வுக்கு வந்திருக்க மாட்டேன். என் தாய் இருந்திருந்தால் நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன்’’ என்று நீங்கள் அடிக்கடி கூறுவது வழக்கம். பாழாய் போன அரசியல் உங்களை எங்கோ எடுத்து சென்று விட்டது.

காவிரி தண்ணீருக்காக போராடியது, முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த போராடியது, சென்னை மக்களுக்கு வீராணம் குடிநீர் வழங்கியது, அம்மா உணவகம் என்று பல்வேறு சாதனைகளை புரிந்தாலும், பல்வேறு பிரச்சினைகளால் வாழ்வில் நிம்மதி இன்றி தவித்தீர்கள். எனவேதான், கடைசி இரண்டு வருடங்களில், மரணத்தைப் பற்றியே அதிகம் பேசி வந்தீர்கள். இறுதியில், திரைப்படத்துறை, இலக்கியத்துறை மற்றும் அரசியல்துறை ஆகியவை உங்களுக்குத் தந்த நிம்மதியின்மையை போக்கி, மரணம்தான் தங்களுக்கு அமைதியை வழங்கியது.

என்னருமை தோழி...!

இனிமேல், ‘சட்டப்பேரவையில் உங்கள் புகைப்படம் வைக்கப்படாது. தங்களது நினைவிடம் கட்டப்பட மாட்டாது’ என்றெல்லாம் கூறப்படுகிறது. வேடிக்கை என்னவென்றால், காலத்தின் சூழலில் வரலாறுதான் உங்களை துரத்திக் கொண்டிருந்தது.

1991, 2001, 2011-ம் ஆண்டுகளில் தேர்தலில் வென்று அரசியலில் எழுச்சி.

1996, 2006-ம் ஆண்டுகளில் வீழ்ச்சி. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்த நிலையில், 2016-ம் ஆண்டு தேர்தலுக்கு முன் என்னைக் கேட்டீர்கள்...

‘‘வாட் இஸ் இன் ஸ்டோர் ஃபார் மீ?’’ என்று கேட்டீர்கள்.

‘‘உடல்நிலையை கவனித்துக் கொள் ளுங்க...’’ என்றேன்.

‘‘தேர்தலில் இதுவரை எந்த அரசியல் கட்சியும் எடுக்காத முடிவை நான் எடுக்கப் போகிறேன். எல்லா தொகுதிகளிலும் தனித்தே எங்கள் கட்சி போட்டியிடும்...’’ என்றீர்கள்.

தனித்து நின்று வெற்றியும் பெற்றீர்கள். ஆறே மாதங்களில் எல்லோரையும் விட்டு தனியாகவும் சென்று விட்டீர்கள்! வாழ்வு உங்களுக்குத் தராத அமைதியை மரணம் உங்களுக்குக் கொடுத்துவிட்டது தோழி... நிம்மதியாக உறங்குங்கள்!

உங்கள் நினைவிடம் பிரம்மாண்டமாக அமைக்கப்படுமா... தெரியாது. அப்படி அமைந்தால், அதில் பொறிக்கப்பட வேண்டிய வாசகங்கள் என்ன என்பது மட்டும் சாமானியனுக்கும் தெரியும். அது..

‘எதையும் துணிவுடன் எதிர்கொண்ட இதயம் இங்கே உறங்குகிறது...’

விடை பெற்றார்...

http://tamil.thehindu.com/opinion/blogs/என்னருமை-தோழி36-துணிவுடன்-எதிர்கொள்ளும்-இதயம்/article9549801.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.