Jump to content

ருசியியல் சில குறிப்புகள்


Recommended Posts

ருசியியல் சில குறிப்புகள் 23: வெண்ணெய் காபி!

 

 

 
 
 
samaiyal_3168811f.jpg
 
 
 

மதராசபட்டணத்தில் இருந்து புறப்பட்டு தெற்கே என்னவாவது ஒரு க்ஷேத்திரத்துக்குப் பேருந்தில் போனால், செங்கல்பட்டு தாண்டிய பிறகு வழியெங்கும் கிலோ மீட்டருக்கு ஒரு கும்பகோணம் டிகிரி காப்பிக் கடை கண்ணில் படுகிறது. முன்புறம் சரிந்த கூரையும் புளிக்குளியல் முடித்து எழுந்த பாய்லரும். இங்கே ஒரு பெஞ்சு, அங்கே சில ஸ்டூல்கள். ’அண்ணாக்கு ஒரு காப்பீஈஈஈ’ என்கிற அடித்தொண்டை உத்தரவு. எல்லாக் கடைகளிலும் எல்லா நேரத்திலும் வியாபாரம் ஜோராக நடக்கிறது.

முன்பெல்லாம் இப்படி இல்லை. வழக்கமான டீக்கடைகளும் நெடுஞ்சாலை நாராச உணவகங்களும் மட்டும்தான் நீக்கமற நிறைந்திருக்கும். சிங்கிள் டீ, பட்டர் பிஸ்கட் அல்லது க்ரூட் ஆயில் பரோட்டா, குருமா. இப்போது கொஞ்ச நாளாகத்தான் கும்பத்துக்கும் குளம்பிக்கும் மவுசு. திடீரென்று என்னவாயிற்று என்று புரியவில்லை. சமூகம் ஒழுங்காகத் தேநீர் குடித்து, பாட்டாளி வர்க்கத்தை வாழவைத்துக்கொண்டிருந்தது. காப்பி பணக்கார வர்க்கத்து பானம் அல்லவா? பருகிய வேகத்தில் பூர்ஷ்வாத்தனம் ரத்தத்தில் ஏறிவிடாதா?

எப்படியோ காப்பிக்கு ஒரு காலம் மீண்டும் வருவதில் எனக்கு மகிழ்ச்சியே. என்ன ஒன்று, மேற்படி நெடுஞ்சாலை காப்பிக் கடைகளில் கிடைக்கிற காப்பி, டிகிரியை முன்னால் போட்டுக்கொண்டாலும் பத்தாங்கிளாஸ் ஃபெயிலான தரத்தில்தான் இருக்கிறது. சீக்கிரம் எதாவது ஒரு டுடோரியல் காலேஜில் சேர்ந்து பயில வேண்டியது அவசியம்.

இந்த காப்பி போடுவது ஒரு பெரிய பேஜார் பிடித்த கலை. எத்தனை சீவி சிங்காரித்தாலும் அதற்கொரு கழுநீர்த்தனம் சேர்ந்துவிடும் அபாயம் எப்போதும் உண்டு. இதனாலேயே பெரும்பாலான ஜீவாத்மாக்கள் தேநீரில் அடைக்கலம் புகுந்துவிடுகிறார்கள். ஆனால், கொஞ்சம் மெனக்கெட்டால் நல்ல காப்பி சுலபமே. பார்த்துவிடலாமா?

கொட்டையில் தொடங்குகிறது வித்தை. ஆயிரக்கணக்கான காப்பி ரகங்கள் உலகில் உண்டு. ஆனால், நமக்குக் கிடைக்கிற ரகங்களைப் பொதுவாக மூன்றாகப் பிரிப்பார்கள். ஏ, பி மற்றும் ரொபஸ்டா. இதன் தாவரவியல் பகுப்பாய்வுகளெல்லாம் நமக்கு வேண்டாம். மூன்றில் சிறந்தது பி ரகம்தான் என்பதை மட்டும் தெரிந்துகொண்டால் போதுமானது.

பெரும்பாலான வீடுகளில் ஏ, பி ரகக் கொட்டைகள் இரண்டிலும் சரி பாதி சேர்த்து அரைத்து மேலுக்கு 50 கிராம் சிக்கிரியைக் கொட்டி காப்பிப் பொடி பயன்படுத்துவார்கள். இதன் காரணம், நமக்கு வாய்க்கிற பால் அத்தனை உன்னதமானதில்லை என்பதுதான். என் மனமே போல் சுத்தமான கறந்த பால் கிடைக்குமானால் இந்த காக்டெயில் கசுமாலமெல்லாம் அவசியமே இல்லை. நேரடியாக பி ரகக் கொட்டை வாங்கி அரைத்துவிடலாம்.

இன்னொன்று, இந்தக் காப்பிப் பொடியை அரிசி, பருப்பு வகையறாக்கள் மாதிரி மொத்தமாக வாங்கி ஸ்டாக் வைத்துக்கொள்வதும் ருசி பங்கம் உண்டாக்கக்கூடியது. தினசரி கொட்டை வறுத்துப் பொடி அரைப்பது நடைமுறை சாத்தியமில்லை என்றாலும் வாரம் ஒருமுறை புதிய பொடி என்றொரு வழக்கத்தை முயற்சி செய்யலாம்.

பொடி ஆச்சா? அடுத்தது டிகாஷன். டிகிரி காப்பிக்குப் பித்தளை ஃபில்டர் தேவை என்றெல்லாம் யாராவது சொன்னால் நம்பாதீர்கள். கும்பகோணத் தில் காப்பி புகழ்பெறத் தொடங்கிய அறுபதுகளில்தான் அங்கே பித்தளைப் பாத்திர வியாபாரமும் பிரபலமாகத் தொடங்கியது. எவர்சில்வரைவிடப் பித்தளைக்குக் கொஞ்சம் தளுக்கு மினுக்கு அதிகம் என்பதால் காப்பிக் கடையினர் அதைப் பயன்படுத்த ஆரம்பித்தார்களே தவிர, பித்தளை யிலெல்லாம் ஒன்றுமில்லை. நீங்கள் தங்க ஃபில்டரில் காப்பி போட்டாலும் கொட்டையின் தரம்தான் காப்பியின் ருசியைத் தீர்மானிக்கும்.

ஒரு நபருக்கு ஒரு தம்ளர் காப்பிக்கு கோபுர ஷேப்பில் இரண்டு ஸ்பூன் பொடி போதும் என்பது என் கணக்கு. இதற்குச் சேர்க்கவேண்டிய தண்ணீர் அரை தம்ளர். தர்மபத்தினிக்குச் சேர்த்து நீங்கள் காப்பி போடுவீர்கள் என்றால் நாலு ஸ்பூன் பொடியும் முக்கால் தம்ளருக்கு மூணு மில்லி மீட்டர் மேலே தண்ணீர் இருந்தால் போதும். இதில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய அதி முக்கிய சங்கதி ஒன்றே ஒன்றுதான். டிகாஷன் என்பது one time password மாதிரி. ஒருமுறை இறங்கிவிட்டால் பொடிச் சக்கையைத் தலையைச் சுற்றிக் கடாசிவிட வேண்டும். மீண்டும் தண்ணீர் ஊற்றி இரண்டாம் பந்தி டிக்காஷன் எடுத்தால் முடிந்தது கதை.

டிகிரி காப்பிக்கு சுத்தமான பசும்பால் வேண்டும் என்று பிறவிக் கும்பகோணத்தவர்கள் சொல்வார்கள். நாம் எங்கே போவது அதற்கு? எனவே, ஓர் எளிய மாற்றாக ஆவின்காரர்களே கொடுக்கும் ஆரஞ்சு வண்ண பாக்கெட்டில் அடைக்கப்பட்ட முழுக் கொழுப்புப் பாலைப் பயன்படுத்தலாம். சும்மா பேருக்குத்தான் முழுக் கொழுப்பெல்லாம். உள்ளே இருப்பது ஐந்தாறு சதவீதக் கொழுப்பு மட்டும்தான்.

இந்தப் பாலைக் காய்ச்சுவதிலும் ஒரு தொழில்நுட்பம் உள்ளது. பால் குக்கரைத் தவிர்த்துவிட்டு, பாத்திரத்தில் காய்ச்சிப் பாருங்கள். கூடுமானவரை சிம்மிலேயே அடுப்பை வைத்துக் காய்ச்ச வேண்டும். பால் பொங்குவதற்கு முந்தைய கணம் அடுப்பை அணைத்துவிட வேண்டும். பொங்கிய பால் ருசி மட்டு.

25 சதம் டிக்காஷன், 75 சதம் பால். இவ்வளவுதான் டிகிரி காப்பி.

பருகிப் பார்த்தால் பிரமாதமாக இருக்கும். ஆனால், நம் கை சும்மா இருக்குமா? என்னவாவது ஒன்றைச் செய்து அதைக் கொஞ்சம் கெடுத்தால்தான் நமக்குத் திருப்தி என்பதால் ஒன்றிரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்ப்போம். உண்மையில் காப்பிக்கு சர்க்கரை போடுவதென்பது அதை மானபங்கப்படுத்துவதற்குச் சமம். பாலிலேயே இயல்பாக உள்ள சர்க்கரை போதும். ஒரு நல்ல காப்பி என்பது அதன் உள்ளார்ந்த மென் கசப்பின் ருசியால் தீர்மானிக்கப்படுவது.

அடிப்படையில் நான் நல்ல காப்பியின் ரசிகன். ஆனால், ஒரு நாளைக்கு இரண்டு காப்பிக்குமேல் அருந்த மாட்டேன். அந்த இரண்டுமே சமரசமற்ற தரத்தில் இருக்கவேண்டும் என்பதுதான் முக்கியம். இதனாலேயே கூடியவரை உணவகங்களில் காப்பி குடிப்பதைத் தவிர்க்க விரும்புவேன். தருமமிகு சென்னையில் காப்பிக் கலைஞர்களைவிட, காப்பிக் கொலைஞர்கள்தாம் அதிகம்.

சுமார் ஓராண்டுக்கு முன்னர் பாலைத் தவிர்க்கலாம் என்று முடிவு செய்தபோது, வேறு வழியின்றிக் காப்பியை நிறுத்தினேன். கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் பழகிவிட்டது. இன்றுவரை அப்படித் தான். ஆனால் பால் சேர்க்காத கடுங்காப்பி அருந்துகிறேன். [இதிலும் சர்க்கரை கூடாது என்பது முக்கியம்.] அதே 25 சத டிக்காஷன். 75 சத பாலுக்கு பதில் வெந்நீர். அருந்திய கணத்தில் சட்டென்று ஏறும் சுறுசுறுப்பு எனக்கு மிக முக்கியம். கஃபைன், போதை, விஷம் என்றெல்லாம் யாராவது கதை சொன்னால் காதிலேயே போட்டுக்கொள்ளாதீர்கள்!

நிற்க. உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். காப்பியை நீங்கள் ஓர் உணவாகவும் எடுக்கலாம். ஆனால், காலையில் மட்டும்தான் இந்த உணவு சரிப்பட்டு வரும்.

மேலே சொன்ன மாதிரி ஒரு நல்ல காப்பி போட்டு எடுத்துக்கொண்டுவிட வேண்டியது. கொதிக்கக் கொதிக்க இருக்கும் அதனுள் 30 கிராம் அளவுக்கு வெண்ணெய் சேருங்கள். ஐயோ என்று அலறாமல் மேலுக்கு ஒரு ஒண்ணரை ஸ்பூன் தூய்மையான தேங்காய் எண்ணெயை ஊற்றுங்கள். இரண்டு நிமிடம் அப்படியே விட்டால் வெண்ணெயும் எண்ணெயும் காப்பியில் கரைந்துவிடும். அதற்குள் காப்பி சூடும் குடிக்கிற பதத்துக்கு வந்திருக்கும்.

சும்மா ஒருநாள் இந்த வெண்ணெய்க் காப்பியை அருந்திப் பாருங்கள். இதன் ருசிக்கு சொத்தையே எழுதி வைத்துவிடலாம் என்று தோன்றும்.

ருசிக்கலாம்… |

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-23-வெண்ணெய்-காபி/article9713861.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ருசியியல் சில குறிப்புகள் 24: காப்பி பரிசோதனைகள்

 

 
 
 
rusi_3171133f.jpg
 
 
 

போன வாரம் வெண்ணெய்க் காப்பி பற்றி நாலு வரி எழுதினாலும் எழுதினேன், காப்பி ரசிகர்கள் வீறு கொண்டு எழுந்துவிட்டார்கள். வரலாறு காணாத அளவுக்கு மின்னஞ்சல் விசாரணைகள். காப்பி எப்படி உணவாகும்? வெண்ணெய் சரி; அதற்குமேல் தேங்காய் எண்ணெயை வேறு ஊற்றினால் காப்பி கந்தரகோலமாகிவிடாதா? சர்க்கரை போடாமல் அதை எப்படிக் குடிப்பது? வயிற்றைப் புரட்டியெடுத்துவிடாதா? இதைக் காலையில்தான் குடிக்க வேண்டும் என்று வேறு சொல்லியிருக்கிறீர்களே, இதெல்லாம் நடக்கிற கதையா?

சந்தேகம் என்று வந்துவிட்டால் தீர்த்துவிட வேண்டும். இல்லாவிட்டால் தெய்வ குத்தமாகி விடும்.

வெண்ணெய்க் காப்பி என்பது உலகெங்கும் பல்வேறு தேசங்களில் புழக்கத்தில் இருக்கிற ஒன்றுதான். ஆபீஸுக்குக் கிளம்புகிற அவசரத்தில் சமைத்துக்கொண்டிருக்க முடியாது என்கிற பட்சத்தில் தாராளமாக இதனை முயற்சி செய்யலாம். கண்டிப்பாகப் பசி தாங்கும்.

எப்படி என்று பார்த்துவிடலாமா?

ஒரு நாளைக்கு நமக்கு சுமார் 2,000 கலோரிக்கு உள்ளே சரக்குப் போனால் போதும். இதை அவரவர் சவுகரியத்துக்கு இரண்டு வேளையாகவோ, மூன்று வேளையாகவோ, முப்பது வேளையாகவோ உண்ணலாம். இந்த 2,000 கலோரி என்பது உத்தமபுத்திரர் வாக்கு. நாம் அதையெல்லாம் கேட்கிற வழக்கம் இல்லை என்பதால் சுமார் 2,500 முதல் 3,000 கலோரி வரை உணவாக உட்கொள்கிறோம். முன்னொரு காலத் தில் நான் சுமார் 3,500 கலோரிக்குக் குறைவாகத் தின்றதே இல்லை என்பதை இந்தக் கலோரி அறிவெல்லாம் வந்த பிற்பாடு கணக்கிட்டு அறிந்துகொண்டேன்.

அது இருக்கட்டும். நாம் நமக்குப் போதுமான 2,000 கலோரி விவகாரத்தை முதலில் பார்த்துவிடுவோம்.

2,000 கலோரியை நாம் மூன்று வேளையாகப் பிரித்து உண்ணலாம் என்னும் பட்சத்தில் காலை உள்ளே போக வேண்டியது 500 கலோரி. மதியம் 600 முதல் 700. மிச்சம் உள்ளது ராத்திரிக்கு. இதன் பொருள் காலை 500 இட்லி சாப்பிட வேண்டுமென்பதும், மதியம் 600 ரூபாய்க்கு விருந்துண்ண வேண்டுமென்பதும், இரவு அண்டா நிறைய சப்ஜியுடன் டஜன் கணக்கில் சப்பாத்தி அல்லது பரோட்டாக்களைக் கபளீகரம் செய்ய வேண்டும் என்பதும் அல்ல.

நம் வீட்டில் அம்மா அல்லது பெண்டாட்டி இனத்தவர் நமக்குச் சுட்டுத்தரும் நாலு இட்லிகள் சுமாராக 250 கலோரி. இதற்குத் தொட்டுக்கொள்ள ஒரு கப் சாம்பாரோடு நீங்கள் நிறுத்துவீர்கள் என்றால் அது ஒரு முன்னூறு கலோரி. பத்தாது, ஒரு தேங்காய்ச் சட்னி கூடுதலாக வேண்டும் என்பீரானால் போடு ஒரு நூறு கலோரி. ஆக, இதுவே 650 கலோரி. மேற்கொண்டு உண்ணும் இட்லிகளைக் கணக்கிட்டு கலோரி பார்த்தால் இன்னும் கூடும்.

இவ்வளவும் சாப்பிட்டு ஆபீஸுக்குப் போய் ஒரு டீ அடித்துவிட்டு அதுவும் பத்தாமல் 12 மணிக்கு லேசாகக் கொஞ்சம் கொரித்துவிட்டு மதிய உணவுக்கு உட்காரும்போதும் பசியோடுதான் இருப்பீர்கள். கொலைப் பசியில் உண்டு முடித்த பின் உத்தியோகம் எங்கே பார்ப்பது? மப்பில் மல்லாக்கப் படுக்கத்தான் தோன்றும்.

ஆனால், நான் சொன்ன வெண்ணெய்க் காப்பி என்பது உங்களுடைய இயல்பான உற்சாகத்தையும் செயல்வேகத்தையும் இரு மடங்காக்கித் தரக்கூடிய ஒரு வஸ்து. தவிரவும் சாப்பிட்ட உணர்வே இருக்காது. பசியும் தெரியாது. வெண்ணெய் என்பது பயந்து ஓடவேண்டிய பேய் பிசாசு ரக உணவல்ல; அதில் உள்ளது முற்றிலும் நல்ல கொழுப்பு. ஹார்ட் அட்டாக் அபாயங் கள் ஏதும் கிடையாது. 50 கிராம் வெண்ணெய் எடுத்துக்கொண்டீர்கள் என்றால் அதில் சுமார் 350 கலோரிகள் இருக்கும். ஒரு கப் பாலில் (சுமார் 250 கிராம்) நூறு கலோரிகள். முடிந்ததா? எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு மட்டும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய். ருசிக்காகவும் இதைச் சேர்க்கலாம். என்னடா இது கொழுப்பு வஸ்து எப்படி எடையைக் குறைக் கும் என்பீர்களானால், நல்ல கொழுப்புதான் எடையைக் குறைக்கும். மாவாட்டிச் சீராட்டும் மசால் தோசை வர்க்கமல்ல.

வழக்கமான காப்பியில் இந்த வெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேரும்போது பாலுக்கு பீமபுஷ்டி உண்டாகும். அது உள்ளே போகும்போது அதே புஷ்டி நம் உடலுக்கு வந்து சேரும். அதாவது உள்ளே செல்லும் இந்த நல்ல கொழுப்பு அடி வயிற்றில் போய்த் தங்காமல் நேரடியாக சக்தியாக உருமாறும்.

இந்த வெண்ணெய்க் காப்பியைக் கொஞ்சம் அலங்கரித்தும் குடிக்கலாம். இரண்டு லவங்கம், ஒரு ஏலக்காய் தட்டிப் போட்டால் அது ஒரு ருசி. இரண்டு மிளகு, கொஞ்சம் இஞ்சி தட்டிப் போட்டால் அது வேறு ருசி. பெருமாள் கோயில் தீர்த்தப் பொடியைப் பற்றி இந்தப் பகுதியில் நான் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். அதில் இரண்டு சிட்டிகை எடுத்துப் போட்டுக் குடித்துப் பாருங்கள். பரம சொகுசாக இருக்கும்.

இதனை பிளாக் காப்பியிலும் கடைப் பிடிக்கலாம். பால் கலோரி குறையும் என்பது தவிர அதில் வேறு நஷ்டமில்லை. ருசி மற்றும் திடகாத்திரத்துக்கு வெண்ணெயே போதுமானது. பிளாக் காப்பியாக அருந்தும்போது ஒரு சிட்டிகை உப்புப் போட்டுக் குடித்தால் அதுவும் நன்றாக இருக்கும்.

விஷயம் என்னவென்றால், அடிப்படையில் நூதனமான ருசிகளைத் தேடி ஓட நமக்குப் பெரும்பாலும் நேரம் இருப்பதில்லை. நூற்றாண்டு காலமாக வழக்கத்தில் உள்ளவற்றோடு நம்மைப் பொருத்திக்கொண்டு விடுகிறோம். அதில் கொஞ்சம் மாற்றம் காட்டினால் உடனே, ’ஐயே உவ்வே…’ என்று சொல்லத் தோன்றிவிடுகிறது.

மேற்படி வெண்ணெய்க் காப்பி குறித்து முதல் முதலில் கேள்விப்பட்டபோது எனக்கும் ஒரு மாதிரி கசமுசவென்றுதான் இருந்தது. வெண்ணெய் கூட சகித்துக்கொள்ளலாம். அந்தத் தேங்காய் எண்ணெய் என்னத்துக்கு என்று தோன்றியது. உண்மையில் காப்பி ருசிக்குத் தேங்காய் எண்ணெயின் வாசனை ஆகப் பொருத்தமான மணப்பெண். இதை ஒருமுறை அருந்திப் பார்த்த பிறகுதான் உணர முடியும்.

வெண்ணெய்க் காப்பி போல வெண்ணெய் டீயும் போடலாம். செய்முறை எல்லாம் அதுவே தான். காப்பிக்கு பதில் டீ. சர்க்கரை சேர்க்காத கோக்கோ பொடி வாங்கி வைத்துக்கொண்டு வெண்ணெய் கோக்கோ பானமும் தயார் செய்து அருந்தலாம். இந்த ரகமான காலை உணவில் ஒரு விசேஷம் என்னவென்றால், இதில் நம் உடம்புக்குள் போகிற கார்போஹைடிரேடின் அளவு நம்ப முடியாத அளவுக்குச் சொற்பமானது. ஞானஸ்தர்கள் சொல்கிறபடி பார்த்தால் ஒரு நாளைக்கே நமக்கு நாற்பது முதல் ஐம்பது கிராம் கார்போஹைடிரேட் போதும். ஆனால் அது நாம் காலை உண்ணும் நாலு இட்லியிலேயே வந்துவிடுகிறது. அதற்கப்புறம் மத்தியானம் ரவுண்டு கட்டுவது, ராத்திரி கோர்ஸ் எல்லாம் சேர்த்தால் சர்வ பயங்கரம்.

சாப்பாட்டு விஷயத்தில் நாம் கவனிக்க வேண்டியது இரண்டு சங்கதிகள்தாம். உள்ளே போவது ஆரோக்கியமானதா? நாக்கில் படும்போது ருசிக்கிறதா? முடிந்தது.

சமீபத்தில் மூணார் சென்றிருந்தேன். அங்கே மசாலா காப்பிப் பொடி என்றொரு வஸ்துவைக் கண்டேன். ஆர்வம் மேலிட உள்ளடக்கம் என்னவென்று பார்த்தபோது ஜாதிக்காய், லவங்கம், பச்சைக் கற்பூரமெல்லாம் போட்டிருந்தது. காப்பிக்கு எதற்கு இதெல்லாம் என்று கேட்கப்படாது. மசாலா என்றாலே பட்டை லவங்கம் சோம்புதானா? இது ஒரு மாற்று மசாலா! முயற்சி செய்து பார்ப்பதில் தவறில்லையே?

என்ன ஒன்று, இம்மாதிரி பரிசோதனை கள் சமயத்தில் மக்கள் நலக் கூட்டணி மாதிரி ஊற்றி மூடும். அதனாலென்ன? வாழ்வின் ருசி என்பது பரிசோதனைகளில் அல்லவா உள்ளது?

ருசிக்கலாம்… |

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-24-காப்பி-பரிசோதனைகள்/article9718925.ece

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 25: எலுமிச்சை - கொத்தமல்லி சூப்!

 
 
 
rusi_3173650f.jpg
 
 
 

சமீபத்தில் என் நண்பர் சவடன் பாலசுந்தரன், எலுமிச்சை - கொத்தமல்லி சூப் என்றொரு நூதன ருசிமிகு திரவத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். அருந்தி முடித்ததுமே அடுத்த கப் ஆர்டர் செய்யலாமா என்று யோசிக்க வைத்த தரம். எளிய கிரியேடிவிடிதான். பிடி கொத்தமல்லியை அலசிப் போட்டுக் கொதிக்கவிட வேண்டியது. நாலு துண்டு வெள்ளரி, நாலு துண்டு கேரட் தவிர வேறு அலங்காரங்கள் ஏதும் கிடையாது. இருக்கவே இருக்கிறது மிளகு, சீரக சேர்மானங்கள். கொதி வந்து இறக்கியதும் தேவைக்கு எலுமிச்சை சாறு பிழிந்தால் முடிந்தது. கொத்தமல்லியின் ருசியோடு எலுமிச்சைப் புளிப்பு சேரும்போது கிடைக்கிற அனுபவமே இதனைக் குறிப்பிட வைக்கிறது.

பிரச்சினை என்னவென்றால் உணவகங்களில் இந்த சூப் வகையறாக்களில் கண்ணை மூடிக்கொண்டு சோள மாவைக் கொட்டிவிடுவார்கள். அது உடம்புக்கு அத்தனை நல்லதல்ல என்பது தவிர, ஒரு பானம் எதற்காக திடகாத்திரமாக இருக்க வேண்டும்?

கேட்டால், அதுதான் சமையல் குறிப்புகளில் உள்ளது என்று சொல்லிவிடுவார்கள் மகானுபாவர்கள். எல்லாம் வெள்ளைக்கார சதி.

அடிப்படையில் இந்த சூப் இனத்தின் ஆதி வடிவம் நமது ரசம்தான். மனித குலம் நெருப்பின் பயன்பாட்டைக் கண்டுபிடித்த சொற்ப காலத்துக்குள்ளாகவே ரசம் முயற்சி செய்யப்பட்டுவிட்டது. அதை ஒரு ருசிகர பானமாக்கியது அநேகமாக நாமாகத்தான் இருப்போம்.

எனக்கு ரசத்தின் ருசியைக் காட்டிலும் அது தயாராகும் போது எழும் வாசனை ரொம்பப் பிடிக்கும். இன்ஹேலர் அடிமைகளைப் போல் நான் ரச வாசனை அடிமை. ஒரு நல்ல ரசத்தின் வாசனையானது, உள்ளே அது கொதிக்கும்போது வீதியில் அடிக்க வேண்டும் என்பது இலக்கணம். எனது நல்லூழ் காரணமாக என் அம்மா மற்றும் மனைவி வைக்கிற ரசத்துக்கு அந்தக் குணம் உண்டு. இத்தனைக்கும் இவ்விரு பெண்குலத் திலகங்களும் அசகாய சேர்மானங்கள் ஏதும் பயன்படுத்த மாட்டார்கள். தாளிக்க ஒரு ஸ்பூன் நெய் என்பது தவிர, வேறெதுவுமே கூடுதலாக இராது.

சூட்சுமமானது, அந்தப் பொடியில் உள்ளது. மெஷினுக்கு எடுத்துச் சென்று அரைத்து வந்து டப்பாவில் வைத்துக் கொண்டு தினசரி நாலு ஸ்பூன் பயன் படுத்தும் பொடியானது அத்தனை சிலாக்கிய மானதல்ல. தனியா, மிளகாய், துவரம் பருப்பு, மிளகு, சீரக ரகங்களைக் கொஞ்சம் போல் வறுத்து, வறுத்த கையோடு இடித்துக் கொட்டினால்தான் ரசத்துக்கு சிங்காரம்.

இன்னொன்று, ரசமானது பாதி கொதிக்கும்போதே அடுப்பை அணைத்துவிட வேண்டும் என்பது. முழுக்கக் கொதித்து முடித்து, பொங்கும் தறுவாயில் இறக்கி வைத்தால் ருசி போய்விடும்.

ரொம்ப வருஷங்களுக்கு முன்னால் ஆம்பூரில் உள்ள என் நண்பர் நாகூர் ரூமியின் வீட்டுக்கு ஒருமுறை போயிருந்தேன். அவரது மனைவிக்குத் தாங்க முடியாத வருத்தம். ‘இத்தனை தூரம் பயணம் செய்து வந்திருக்கிறீர்களே, உங்களைப் பட்டினி போட்டு அனுப்புகிறேனே’ என்று சொல்லிச் சொல்லி மாய்ந்தார்.

சமாசாரம் என்னவென்றால் ஆம்பூர் வரை வந்தும், பிரியாணி தின்னாத ஜென்மமெல்லாம் அவர் கணக்கில் மனிதப் பிறவியே அல்ல. ஒரு தாவர உணவாளிக்கு உகந்த உணவைச் சமைப்பதென் பதும், அவனைப் பட்டினி போடுவதும் அவருக்கு ஒன்றே.

‘அம்மணி, நீங்கள் வருத்தப்படவே வேண்டாம். எனக்குத் தயிர் பிரியாணி இருந்தால் போதும்’ என்று சொல்லிப் பார்த்தும் கேளாமல் சாம்பார், ரசம், கேரட் பொரியல், கீரைக் கூட்டு என்று நானாவித ரகங்களைத் தயார் செய்து வைத்துக்கொண்டுதான் உண்ண அழைத்தார்.

அன்றைய அவரது சமையலில் எனக்கு அந்த ரசம் சற்று விநோதமாக இருந்தது. அது, புளித்தது. அது, இனிக்கவும் செய்தது. அது, சற்றே கசந்தது. காரசாரமாகவும் இருந்தது. தக்காளி தவிரவும் அதில் வேறு ஏதேதோ இருந்ததாகப் பட்டது. ஆனால், நிச்சயமாக சாம்பார் இல்லை. பிரும்மம்போல் ஓர் அறியஒண்ணாத் தத்துவத்தை எனக்கு போதிப்பதற்காகவே எம்பெருமான் என்னை அந்த ஆம்பூர் ரசத்தை அருந்த வைத்தான் என்று எண்ணிக்கொண்டேன்.

வீட்டுக்கு வந்து நெடுநாள் அந்த ரசத்தைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தேன். கர்நாடகத்துக்காரர்கள் ரசத்தில் வெல்லம் போடுவார்கள். அந்த அசட்டுத் தித்திப்பு என்னத்துக்கு என்று எனக்குப் புரியவே புரியாது. ஆனால், கொதித்து அடங்கிய ரசத்தில் தாளிப்புக்கு முன்னால் கால் ஸ்பூன் சர்க்கரை போட்டால் ருசி அள்ளும் என்று என் அம்மா சொல்லுவார்.

திருமதி ரூமி எனக்குப் பரிமாறிய ரசத்தில் வெல்லமோ, சர்க்கரையோ நிச்சயம் இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், எங்கிருந்து அந்த இனிப்பு சேர்ந்திருக்கும்? அதுவும் புளிப்பும் இனிப்பும் தனித்தனியே தெரிகிற மாதிரி எப்படி ஒரு ரசம் வைக்க முடியும்?

மிகப் பலகாலம் கழித்தே எனக்கு இந்த வினாவுக்கான விடை கிடைத்தது.

ஒரு நாவல் எழுதும் உத்தேசத்துடன் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்துக்குச் சென்று கொஞ்ச காலம் தங்கியிருந்தேன். எனக்குத் தெரிந்து தென்னிந்தியாவிலேயே மிக மலிவாகவும் மிகத் தரமாகவும் கிடைக்கிற உணவு என்பது அங்கே கிடைப்பதுதான் என்பது என் அபிப்பிராயம். என்னைப் போன்ற சுத்த சைவ ஜீவஜந்துக்களுக்கு உகந்த பிராந்தியம். பெரிய வெரைட்டி இருக்காதுதான். ஆனால், ஒவ்வொரு வேளையுமே உணவில் ஓர் உயர்தரம் கடைப்பிடிப்பார்கள். ஓட்டல்காரர்கள் மாதிரி பிசுநாறித்தனம் காட்டாமல் தாராளமாகப் பரிமாறுவார்கள்.

அங்கே ஒருநாள் எனக்கு ரசம் இனித்தது. மறுபுறம் அதே ரசம் புளிக்கவும் செய்தது. காரம் தனியே தெரிந்தது. மிக மெல்லிய கசப்புச் சுவையும் அடி நாக்கில் நின்றது. சட்டென்று எனக்குத் திருமதி ரூமியின் சமையல் நினைவுக்கு வந்துவிட்டது. ‘நாங்கள்லாம் ஸ்டிரிக்ட் நான்வெஜிடேரியன்ஸ்’என்பார் ரூமி. அந்தக் குடும்பத்துக் குலவிளக்கு வைத்த ரசம், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்து சுத்த சைவ ரசத்தோடு எப்படி ஒத்துப் போகும்?

ஆர்வம் தாங்கமாட்டாமல் கல்லா கனவானிடம் எழுந்து சென்று விசாரித்தேன். ஏற இறங்கப் பார்த்துவிட்டு ஒரு சப்ளையரோடு என்னை உள்ளே அனுப்பி மாஸ்டரிடம் பேசச் சொன்னார்.

பேசியதில் புரிந்த சூட்சுமம் இதுதான். புதிய புளியில் ரசம் வைக்கிறபோது அதில் தேங்காய் துருவிச் சேர்த்தால் புளிப்பும் இனிப்பும் தனித்தனியே தெரியும். இதுவே எலுமிச்சை ரசத்தில் தேங்காய் போட்டால், அதில் தக்காளியும் சேருகிற பட்சத்தில் இதே சுவை அதிலும் வரும்.

என்னைக் கேட்டால் ரசத்துக்குப் புதிய புளி ஆகாது என்பேன். நல்ல, கெட்டிப்பட்ட பழைய புளிதான் சரி. ஒரு குலோப் ஜாமூன் சைஸுக்கு உருட்டி எடுத்து உப்புப் போட்ட வெந்நீரில் கொஞ்ச நேரம் ஊறவைத்துக் கரைத்து ஊற்ற வேண்டும். சிலபேர் கடைசிக் கசண்டையும் சேர்த் துப் போட்டுக் கொதிக்கவிடுவார்கள். அது கூடாது. புளிச்சாறு மட்டும் போதும். அப்புறம் மேலே சொன்ன பொடியலங்காரம்.

ரொம்ப முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், இஞ்சி. இஞ்சியைத் தோல் சீவி வெறுமனே நறுக்கிப் போடுவது ரசத்துக்குச் செய்கிற அவமரியாதை. துருவிப் போட்டால் ருசி. நசுக்கிப் போட்டால்தான் அதிருசி.

இஷ்டமிருந்தால் ஒரு காரியம் செய்து பாருங்கள். பருப்பு சேர்க்காத மிளகு ரசம், சீரக ரசம் கொதிக்கிறபோது நாலு துண்டு வெள்ளரி நறுக்கிப் போட்டுக் கொதிக்கவிடுங்கள். ஆனால், அடுப்பை அணைப்பதற்கு முன்னால் நறுக்கிப் போட்ட வெள்ளரித் துண்டுகளை எடுத்துப் போட்டுவிட வேண்டும். ஒரு ஸ்பூன் நெய்யில் மிளகு வெடிக்கத் தாளித்துக் கொட்டி, கப்பென்று மூடி வைத்துவிட்டு பத்து நிமிஷம் கழித்து அந்த ரசத்தை எடுத்து அருந்திப் பாருங்கள்.

சூப் எல்லாம் சும்மா என்பீர்கள்!

 

- ருசிக்கலாம்… |

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-25-எலுமிச்சை-கொத்தமல்லி-சூப்/article9724088.ece

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 26: பாக்கெட் பாக்கெட்டாக பாதாம்!

 

 
 
badam_3176007f.jpg
 
 
 

ராஜமாணிக்கம் முதலியாரின் பேத்தி ராஜாத்தி வயசுக்கு வந்தபோது வீதி அடைத்துப் பந்தல் போட்டு மயில் ஜோடித்தார்கள். அன்றைக்கு முதலியார் வீட்டுக்குப் போயிருந்த அத்தனை பேருக்கும் பிளாஸ்டிக் தம்ளரில் பாதாம் கீர் கொடுத்தார்கள். பாதாம் கீர் என்ற பானத்தை வாழ்வில் முதன்முதலில் நான் அருந்திய தருணமாக அதுவே நினைவில் இருக்கிறது. நாக்கில் தட்டுப்பட்ட மெல்லிய நறநறப்பும் அடித்தொண்டை வரை இனித்த சர்க்கரையும். அது ருசியான பாதாம் கீராக இருந்ததா என்று இப்போது நினைவில்லை.

மிகப் பல வருடங்களுக்குப் பிறகு ‘அமுதசுரபி’யில் நான் உத்தியோகம் பார்த்த காலத்தில் ஆர்மேனியன் தெருவில் ஒரு சேட்டுக் கடையில் பாதாம் பானம் சாப்பிட்டிருக்கிறேன். அது பாதாம் கீரல்ல. பாலில் அரைத்துவிட்ட பாதாம், பிஸ்தா மற்றும் வெள்ளரி விதைகள் அடங்கிய ஒரு போதை வஸ்து. அருந்திய 10 நிமிடங்களுக்கு ஒரே மப்பாக இருக்கும். சென்னை நகரில் அந்நாட்களில் கடை விரித்திருந்த அத்தனை சேட்டு புண்ணியாத்மாக்களோடும் எனக்குப் பரிச்சயம் உண்டு. எந்தக் கடையில் என்ன ஸ்பெஷல் என்று தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் தவறின்றிச் சொல்லுவேன்.

பாதாம் இலையில் பாசம்

சைதாப்பேட்டையில் என் பாட்டி வீட்டின் பின்புறம் ஒரு பாதாம் மரம் இருந்தது. அவ்வப்போது விழும் கொட்டைகளை எடுத்து வைத்துக்கொண்டு உடைத்துத் தின்பது சிறு வயது நினைவாக எஞ்சியிருக்கிறது. ஆனால், அந்த மரம் தந்த பருப்புகளைவிட, இலைகள்தாம் எனக்கு மிகவும் நெருக்கம். பாட்டி பாதாம் இலைகளில்தான் அரிசி உப்புமா வைத்துத் தருவாள்.

திருமண விசேஷங்களில் அலங்காரத் தட்டுகளில் பாதாம் பருப்புகளைப் பார்த்துப் பெருமூச்சு விட்டிருக்கிறேன். இதற்காகவாவது நமக்கொரு கல்யாணமாகாதா என்று ஏங்கிய காலம் உண்டு. மற்றபடி ஒரு பள்ளிக்கூட வாத்தியார் வீட்டு வாரிசு எண்ணியபோதெல்லாம் விரும்பித் தின்னும் வகையறாவாக அது என்றுமே இருந்ததில்லை. இருக்க வாய்ப்பும் இல்லை என்றுதான் நினைத்திருந்தேன். காலம் யாரை எப்படி மாற்றும் என்று யாருக்குத் தெரியும்?

ஓராண்டுக்கு முன்னர் என் ஒரு வேளை உணவாகவே பாதாம் மாறிப்போனது.

பொதுவாக சத்துமிக்க உணவுகளில் ருசி கொஞ்சம் மட்டாக இருக்கும். அல்லது, சத்து முழுதாக உள்ளே போக வேண்டுமானால் ருசிகரமாகச் சமைப்பதை விடுத்து, மொட்டைப்பாட்டித்தனமாக உண்ண வேண்டியிருக்கும். இந்த விதியைப் பொடிப் பொடியாக்குகிற ஒரே உணவு பாதாம். தின்னத் தின்ன, தின்றுகொண்டே இருக்கலாம் என்று எண்ண வைக்கிற உணவு எனக்குத் தெரிந்து பாதாம் மட்டுமே.

சும்மா கமகம..

என்னடா இவன் பாதாம் பருப்பைப் போய் உணவென்று சொல்கிறானே என்று நினைக்காதீர். இந்தச் சப்பாத்தி, பரோட்டா, இட்லி, தோசை வகையறாக்களை ஒருநாள் ஒதுக்கி வைத்துவிட்டு ஒருவேளை உணவாக 100 பாதாம் பருப்புகளை நான் சொல்கிறபடி சாப்பிட்டுப் பாருங்கள். அதன்பின் வீட்டில் அரிசி, பருப்பு, மிளகாய், புளி, எண்ணெய் வாங்குகிற செலவு இருக்காது. என்னைப் போல் மொத்த பாதாம் கொள்முதலில் இறங்கிவிடுவீர்கள்.

பாதாம் பருப்பை முதலில் தண்ணீரில் நன்றாக அலச வேண்டும். அரிசி களைவது மாதிரிதான். சுத்தமாக அலசிக் கழுவிவிட்டு, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி அப்படியே ஒரு ராத்திரி முழுக்க மூடி வைத்து விடுங்கள். காலை எழுந்ததும் மீண்டும் ஒருமுறை அலசி ஊற்றிவிட்டு, திரும்பவும் தண்ணீர் ஊற்றி மூடிவிடவும். இம்முறை அதன் தலையில் அரைப்பிடி கல் உப்பு போட்டு மூடவேண்டும். மாலை வரை இப்படியே ஊறிக் கொண்டிருக்கட்டும்.

சுமார் 20 மணி நேரம் ஊறிய பிறகு பாதாம் நன்றாகப் பருத்து கொழுகொழு என்று காட்சியளிக்கும். அதை அப்படியே அள்ளி ஒரு மெல்லிய துணியில் கொட்டி நிழலில் உலர்த்தி வையுங்கள். ஒரு இரண்டு மூன்று மணி நேரம் இருந்தால் போதும். நன்றாகக் காய்ந்துவிடும்.

முடிந்ததா? இதன் பிறகு அடுப்பில் வாணலியைப் போட்டு, கொஞ்சம் சூடானதும் இந்த பாதாமை எடுத்துப் போட்டு வறுக்கத் தொடங்கவும். நெருப்பு மிகவும் மிதமாக இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் வறுக்கும்போது பாதாம் தீய்ந்துவிடும் அபாயம் உள்ளது.

15 நிமிடங்கள் வறுத்தால் போதும். பொன்னிறத்தில், சும்மா கமகமவென்று ஒரு வாசனையைக் கிளப்பிக்கொண்டு, உண்ணும் பதத்துக்கு பாதாம் தயாராகிவிடும். இறக்கி வைத்தபின்னர் அம்மிக் குழவி, கல் அல்லது மனைவிமார்களின் பிற ஆயுதங்களில் ஒன்றைப் பயன்படுத்தி வறுத்த பாதாமை லேசாக இடிக்கவும். பொலபொலவென்று உதிர்ந்து கொடுக்கும். இதை ஒரு கப்பில் எடுத்துப் போட்டு, அதன் தலையில் ஓரிரு ஸ்பூன் நெய்யை ஊற்றுங்கள். உப்பு, மிளகாய்ப் பொடி அல்லது மிளகுப் பொடி உங்கள் சவுகரியத்துக்கு.

நான் சில நாள் உப்புக்கு பதில் ஒரு சீஸ் க்யூபை உருக்கிச் சேர்ப்பேன். சீஸுக்கு உள்ள ருசியோடுகூட அதிலுள்ள உப்பே பாதாமுக்கும் போதுமானது. நன்றாகக் கலந்து எடுத்துச் சாப்பிட்டுப் பாருங்கள். சொத்தை எழுதி வைத்துவிடலாம் என்று தோன்றும்.

ரொம்பப் பணக்காரத்தனமாகத் தெரிகிறதே என்று நினைக்கவேண்டாம். ஒரு வேளை ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டால் என்ன செலவு ஆகுமோ அதுதான் ஒருவேளை உணவாக பாதாமை உண்பதற்கும் ஆகும். என்ன விசேஷம் என்றால், இப்படி 100 கிராம் பாதாமை ஒருவேளை சாப்பிடும்போது அலுங்காமல் குலுங்காமல் சுமார் 22 கிராம் ப்ரோட்டீன் நமக்கு அப்படியே கிடைக்கும். 50 கிராம் கொழுப்பு இருக்கிறது என்பதால் நாலு மசால் தோசை தின்ற பின்பும் பசியெடுப்பது போல இதில் நடக்காது. சொல்லப் போனால் உண்ட ஆறேழு மணி நேரங்களுக்குப் பசியே தெரியாது.

மனுஷனாகப் பிறந்தவனுக்கு ரொம்ப முக்கியத் தேவைகளான மெக்னீசியம், வைட்டமின் ஈ, பி2, பி3, பி9, கால்சியம், பொட்டாசியம் என்று என்னென்னமோ சங்கதிகள் இதில் ஏகத்துக்கு இருக்கிறது.

சமர்த்துக் கொழுப்பு

சத்தும் ருசியும் ஒன்று சேர்வதென்பது காங்கிரஸும் பாரதிய ஜனதாவும் இணைவது மாதிரி. நடக்கவே நடக்காத இதுவும் சமயத்தில் சில விஷயங்களில் சாத்தியமாகத்தான் செய்கிறது. பாதாம் அந்த ரகம். என்ன பிரச்சினை என்றால், பேரைச் சொன்னாலே ‘ஐயோ கொழுப்பு!’ என்று அலறச் சொல்லிக் கொடுத்துவிட்டது சமூகம். உண்மையில் பாதாமில் உள்ளது உடம்புக்கு நல்லது மட்டுமே பண்ணுகிற சமர்த்துக் கொழுப்புதான். ஒரு கணம் யோசித்துப் பார்க்கலாம். மனித உடலின் அதிமுக்கிய உள்ளுறுப்புகளான மூளையும் இதயமுமே இரண்டு பெரும் கொழுப்புப் பந்துகள்தாம். கொழுப்பு, கொழுப்பை வேண்டாம் என்று சொல்லுமா?

சமீபத்தில் நண்பர்களோடு கேரளத்துக்கு ஒரு சுற்றுப்பயணம் சென்றிருந்தேன். போன மாதம் இதே கேரளத்துக்குக் குடும்பத்தோடு சென்று கண்ணராவியான சாப்பாட்டில் கதி கலங்கித் திரும்பிய அனுபவம் இருந்தபடியால், இந்தமுறை ஜாக்கிரதையாக ஒரு காரியம் செய்தோம். போகும்போது கடையில் ரோஸ்டட் பாதாம் பாக்கெட்டுகள் சிலவற்றை வாங்கிக்கொண்டே வண்டி பிடித்தோம். குமுளியில் இறங்கி அங்கும் சில பாக்கெட்டுகள் கொள்முதல் செய்து கொண்டோம்.

கடைகளில் விற்கும் இந்த ரோஸ்டட் பாதாமை நான் சொன்னபடி அலசி ஊறப்போட்டு புராசஸ் செய்திருப்பார்களா என்பது சந்தேகமே. அப்படிச் செய்து சாப்பிடுவதுதான் தேக நலனுக்கு நல்லது. ஆனால், ஆத்திர அவசரத்துக்கு வேறு வழியில்லை அல்லவா?

இந்த பாதாம் பாக்கெட்டுகள் இம்முறை ரொம்ப வசதியாக இருந்தது. என்ன ஒன்று, பாக்கெட் பாக்கெட்டாக பாதாம் தின்பதைப் பார்க்கிறவர்களெல்லாம் இவன் நாளைக்கு செத்துவிடுவான் என்று நினைத்திருப்பார்கள். உண்மையில், ஆரோக்கிய வாழ்க்கை தினங்களை அதிகரித்துக்கொள்ள பாதாம் ஒரு சிறந்த சகாயம்.

- ருசிக்கலாம்… |

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-26-பாக்கெட்-பாக்கெட்டாக-பாதாம்/article9729115.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ருசியியல் சில குறிப்புகள் 27: வாழைக்காய் வரலாறு!

 

 
 
 
 
food_3181351f.jpg
 
 
 

குழந்தைகளுக்கு உருளைக்கிழங் கும் குழந்தை மனம் கொண்ட என்னைப் போன்ற வளர்ந்த குழந்தைகளுக்கு வாழைக்காயும் காய்கறி இனத்தில் ரொம்பப் பிடிக்கும்.

ஆண்டவன் நான் பிறக்கும்போதே என் பிராணனை வாழைக்காய்க்குள் கொண்டுபோய் வைத்திருந்தான். இப்போது யோசித்துப் பார்த்தாலும் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக் கிறது. ஒரு நாள் சாப்பாட்டில் வாழைக்காய் இருக்கிறது என்றால், அன்றைய தினமே எனக்குத் திருவிழா நாள் போலாகிவிடும். தனியே கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு குழம்பு, ரசம், மோர் என அனைத்து சாதங்களுக்கும் பிடிப்பிடி யாக அள்ளி அள்ளித் தொட்டு உண் பேன். அடுக்களையில் மிச்சம் மீதி இருந்தால் போக வர அள்ளிப் போட் டுக்கொண்டு போகிற வழக்கமும் இருந்தது.

நம் ஊரில் வாழைக்காயை இரு விதமாகச் சமைக்கிறார்கள். மசாலாவெல்லாம் போட்டு அதன் ஒரிஜினல் நிறம், மணம், குணமே தெரியாதபடிக்கு மாற்றி வைக்கிற சமையல் முறை ஒன்று. இன்னொன்று வெறுமனே வதக்கி, தாளித்துக் கொட்டி இறக்கி விடுவது. சில பயங்கரவாதப் பெண் மணிகள் வாழைக்காய் வேகும்போது அதன் தலையில் ஒரு கமர்க்கட் சைஸுக்குப் புளியைக் கரைத்துக் கொட்டியும் சமைப்பார்கள். அது அபார ருசியாக இருக்கும் என்று அவர்களே நற்சான்றிதழும் தந்துகொள்வதுதான் குரூர மனதின் உச்சம்.

காணாத அதிருசி

உண்மையில் நன்கு சமைக்கப்பட்ட வாழைக்காயின் ருசி என்பது நிகரே சொல்ல முடியாததொரு அற்புதம்! என் அம்மாவின் பல்வேறு சகோதரிகளுள் ஒருவர் பெயர் சுபத்திரா. சிறு வயதில் லீவு விட்டால் நான் இந்தச் சித்தி வீட்டுக் குப் போகத்தான் மிகவும் விரும்புவேன். காரணம், எங்கள் வம்சத்திலேயே காணாத அதிருசி இவரது சமையலில் மட்டும் எங்கிருந்தோ கூடிவரும் என்பதுதான். குறிப்பாக வாழைக்காய்.

சித்தியின் சமையலை நான் உண்டு எப்படியும் 35 வருடங்களுக்குமேல் ஆகி யிருக்கும். இன்னமும் அது அப்படியே நினைவில் இருப்பதுதான் வியப்பாக உள்ளது.

வாழைக்காயின் ருசிக்கு, காயின் பதம் ரொம்ப முக்கியம். ரொம்பக் கட்டையாகவோ, அல்லது ரொம்ப நெகிழ்ந்து கொடுக்கக் கூடியதாகவோ இருக்கக்கூடாது. தோலைச் சீவிவிட்டு இரண்டு நிமிடம் தண்ணீரில் ஊறப் போடுவது அவசியம். நறுக்கும்போது இரண்டு நேந்திரங்காய் சிப்ஸ் கனத்துக்கு மிகவே கூடாது. வேகும் நேரம் வரை காத்திருக்கப் பொறுமையற்ற புண்ணி யாத்மாக்கள் பெரும்பாலும் குக்கரிலோ, மைக்ரோவேவிலோ காயைக் கொஞ்ச நேரம் வைத்து எடுக்கிற வழக் கம் நாட்டில் நிறைய இருக் கிறது. ஆனால் அது தப்பு.

அள்ளும் சுவை

சித்தியானவர், வாணலி யிலேயேதான் வாழைக்காயை முழுதும் வேகவைத்துப் பார்த்த நினைவு. கொஞ்சம் தண்ணீர் தெளித்து ஒரு ஸ்பூன் நெய்விட்டு சில வினாடிகள் வாணலியை அப் படியே மூடி வைப்பார். திறந்தபின் மீண்டும் கொஞ்சம் தண்ணீர். இம்முறை நெய்க்கு பதில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய். மீண்டும் கொஞ்சம் மூடி வைத்துத் திறந்தபின் வழக்கமான அலங்கார விசேடங்கள். சிப்ஸுக்கும் வேகவைத்த காய்க்கும் இடைப்பட்ட பதம் ஒன்று உண்டு. ஓரங் கள் கரகரப்பாகவும் காயின் மையப்பகுதி கன்னம் போலவும் உள்ள பதம் அது. எனக்குத் தெரிந்து என் சித்தியின் சமைப்பில் மட்டும்தான் அந்தப் பதத்தைத் தவறாது கண்டிருக்கிறேன்.

வேலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு ஓட்டலில் ஒரு சமயம் சாப்பிடப் போனபோது வாழைக்காய் பொரியலில் வெங்காயத் தாள் நறுக்கிப் போட்டு சமைத்திருந்ததை ரசித்தேன். அந்த வாசனை புதிதாக இருந்தது. என் பேட்டையில் உள்ள ஓர் உணவகத்தில் மிளகாய்ப் பொடிக்கு பதில் மிளகுத் தூள் போட்டு வாழைக்காய் சமைப்பார்கள். இது நன்றாகத்தான் இருக்கும் என்றாலும் வாழைக்காயின் பிறவி ருசியை இது கெடுத்துவிடும்.

உண்மையில் வாழைக்காயின் மூலா தார ருசியை வெளியே கொண்டு வரும் வல்லமை தேங்காய் எண்ணெய்க்கே உண்டு. அதைத் தவிர வேறு எந்த எண் ணெயும் இதற்கு உகந்ததல்ல என்பது என் தீர்மானம். சமைத்து முடித்தபின் மேலே கொஞ்சம் தேங்கா யைத் தூவிவிட வேண்டும். சுவை அள்ளும்.

சென்னை மேற்கு மாம்பலம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டா லுக்கு ஒரு காலத்தில் நான் ஆயுள் சந்தா உறுப்பினர். அங்கே கிடைக்கிற வாழைக் காய் பஜ்ஜிக்கு நிகராகச் சொல்ல இன்னொரு பலகாரம் கிடையாது. நாலு பஜ்ஜி அங்கேயே சாப்பிட்டுவிட்டு, இன்னொரு நாலு பார்சல் வாங்கிப் போகிற அளவுக்கு வெறிகொண்டு அலைந்திருக்கிறேன். அந்த பஜ்ஜி மாவில் கொஞ்சம் பெருங்காயம் சேர்ப் பான் பாருங்கள், அதன் பெயர்தான் மனிதநேயம்!

வாழையின் பிரச்சினையே அதுதான். அது ஆஞ்சநேயரின் சகோதர ஜாதி. இடுப்பில், வயிற்றில், முதுகில், முழங் காலில் - எங்கே பிடிக்கும் என்று சொல்ல முடியாது. பிடித்தால் லேசில் விடவும் செய்யாது. இதனால் by default, வாழைக் காய் சமைக்கும்போது இஞ்சி, பெருங் காயம், மிளகு, சீரகம் நான்கையும் தாராள மாகச் சேர்த்துவிடுவது தேகத்துக்கு சொகுசு. தாளிப்பில் இருந்தால் போதும். மிளகு வெடிக்கும்வரை காத்திருந்து தாளித்துக் கொட்டினால் வாசனை ஊரைக் கூட்டும்.

இப்படியெல்லாம் ரசித்து ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்த வாழைக் காயை ஓராண்டுக்கு முன்பு கனத்த மனத்தோடு நான் விவாகரத்து செய்ய வேண்டி வந்தது. எடைக் குறைப்பு யாகம் தொடங்கியிருந்தேன் அல்லவா? அதில் மாவுச்சத்து அதிகமுள்ள அனைத்து உணவினங்களுக்கும் தடை போடப்பட்டிருந்தது. இந்நாட்களில் நான் அடிக்கடி வாழைக்காயை நினைத் துக்கொள்வேன். ஆனால் நெருங்கிய தில்லை. ஸ்திதப்ரக்ஞன் அப்படித்தான் இருப்பான்.

பழைய வாழைக்காயின் ருசி எங்கே?

அசோக் நகரில் ஒரு குழந்தை நல மருத்துவர் இருந்தார். அவர் பெயர் நிவாஸ். ரொம்ப வயதானவர். இப் போது அவர் பிராக்டீஸ் செய்வதில்லை. கர்நாடகத்தில் ஏதோ ஒரு மடத்தில் சேர்ந்து சமய சேவை செய்யப் போய் விட்டார். உடம்பு சரியில்லை என்று அவ ரிடம் குழந்தையை அழைத்துச் சென் றால் - குறிப்பாக எளிய வைரஸ் காய்ச்சல், ஜலதோஷ வகையறாக்கள் என்றால் மருந்து மாத்திரை சொல்வதற்கு முன்னால் ‘வாழைக்காய் சமைத்துக் கொடுங்கள்’ என்று சொல்லுவார்.

குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வழங்குவதில் வாழைக்காய்க்கு ரொம்ப முக்கிய இடம் உண்டு என்பதை அவரிடம் இருந்துதான் அறிந்தேன். எனக்குத் தெரிந்து வாழைக்காயில் ஏராளமாக பொட்டாசியம் உண்டு. 100 கிராம் வாழைக்காயில் 23 கிரா முக்கு மாவுச் சத்து. இது ஒன்றும் பிரமாத மில்லைதான். 100 கிராம் பாதாமிலும் இதே அளவு மாவுச் சத்து உண்டு. என்ன பிரச்சினை என்றால் வாழைக்காயை யாரும் 100 கிராமுக்குள் நிறுத்த முடியாது என்பதுதான்.

உலகம் மாறிவிட்டது

இதனாலேயே, கடந்த ஒரு வருடமாகச் சாப்பிடாதிருந்த வாழைக்காயைச் சமீபத்தில் வெறிகொண்டு மீண்டும் உண்ண ஆரம்பித்தேன். இந்த ஒரு வருடத்தில்தான் உலகம் எவ்வளவு மாறிவிட்டது! நானறிந்த பழைய வாழைக் காயின் ருசி எங்கே போனதென்றே தெரியவில்லை. ஓட்டல் பொரியலில் இந்தித் திணிப்பைப் போல் மசாலாத் திணிப்பு. வாழைக்காயோடு சேரவே சேராத பொருள் சோம்பு. அதைப் போய் கிலோ கணக்கில் கொட்டிக் கவிழ்க்கிறார்கள் பிரகஸ்பதிகள். சமூகத் துக்கு ரசனை என்பதே இல்லாது போய்விட்டது.

ஒழியட்டும் என்று ஒரு கிலோ நேந் திரம் சிப்ஸ் வாங்கி வந்து வைத்துக் கொண்டு இரண்டு நாள் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டேன். தேங்காய் எண்ணெய்தான் என்றாலும் கடைச் சரக்கில் டிரான்ஸ் ஃபேட் நிச்சயம் உண்டு. ஆனாலும், பரவாயில்லை என்று தின்று தீர்த்ததன் விளைவு மூன்றாம் நாள் காலை எடை பார்த்தபோது 400 கிராம் ஏறியிருந்தேன்.

பகீர் என்றாகிவிட்டது. உடனே வெறி கொண்டு வாரியர் வாரை இறுக்கிப் பிடித்து ஏறிய எடையைக் குறைத்ததும் தான் மூச்சு வந்தது.

பேஜார்தான். ஆனாலும் மோகினி கள்தாம் எத்தனை அழகாயிருக் கிறார்கள்!

- ருசிக்கலாம்… |

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-27-வாழைக்காய்-வரலாறு/article9744112.ece

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 28: நல்ல புளியோதரையின் தரம்!

 

rusi_3183941f.jpg
 
 
 

திடீரென்று ஒரு கிறுக்குத்தனம். தொடர்ச்சியாக இரண்டு நாள் சாப்பிடாமல் இருந்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. ஒன்றும் உயிர் போய்விடாது என்பது தெரியும். ஆனால், வயிற்றில் பசி இருந்தால் காரியம் சிதறும். வீரியம் குறையும். இது வேண்டாத வம்பு என்று உள்ளுணர்வு சொன்னது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். வெறும் இரண்டு நாள். ஒரு முயற்சி செய்து பார்த்தால்தான் என்ன? என்னதான் காரியம் சிதறி, கோட்டையே தரை மட்டமானாலும் திருப்பிக் கட்டவா முடியாது? எம்பெருமானே, என் பக்கம் இரு என்று உத்தரவு போட்டுவிட்டு களத்தில் இறங்கினேன்.

ஆனால், நானெல்லாம் குத்புதீன் ஐபக் வம்சத்தில் நாக்குக்குக் கப்பம் கட்டி வாழ்கிற ஜென்மம். அதனால் விரத காலத்தை ஒரு பெரும் விருந் தோடு ஆரம்பிப்பதே முறை என்று முடிவு செய்தேன். சென்ற வாரத் தில் ஒருநாள் இரவு 9 மணிக்கு மாயா பஜார் ரங்காராவைத் தோற்கடிக்கும் உத்தேசத்துடன் உண்ண அமர்ந்தேன்.

அன்றைய எனது மெனு வானது இவ்வாறு இருந்தது. நெய் யில் செய்த புளியோதரை, பலப்பல காய்கறிகளைப் போட்டுச் சமைத்த சாம்பார் சாதம், மாதுளம்பழம் போட்ட தயிர் சாதம், அப்பளம், ஊறுகாய். இதோடு நிறுத்துவது அடுக்குமா? இனிப்பு இல்லாமல் ஒரு விருந்தா? எனவே எடு ஒரு ஐஸ் க்ரீம்!

மேற்படி சமாசாரங்களெல்லாம் ஒரு காலத்தில் எனது தினசரி மெனுவில் வழக்கமாக இருந்தவைதான். ஆனால், கடந்த ஒரு வருடமாக உணவு மதமாற்றம் கண்டு, இம்மாதிரி மாவுச் சத்து மிக்க உணவுகளை அறவே தவிர்த்து வந்தேன். ஆனால், புரட்சி செய்தே தீருவது என்று முடிவு செய்துவிட்டால் அதையெல்லாம் பார்க்க முடியுமா? அப்புறம் சரித்திரத்தில் எங்ஙனம் ஏறி உட்கார்வது?

சரித்திரத்தில் ஏற வேண்டுமென் றால் முதலில் மண்டைக்குள் சாத்தான் ஏற வேண்டும். அவன் ஏறினால் இந்த மாதிரி என்னவாவது செய்யச் சொல் வான். எனவே செய்தேன். என் நோக் கம், இந்த திடீர் அதிர்ச்சியை உடம்பு இயந்திரத்துக்குக் கொடுப்பதன் மூலம் தடாலடியாகக் கொஞ்சம் எடை குறைக்க முடியுமா என்று பார்ப்பதுதான்.

இப்படி ஒரேயடியாக 2,000 கலோரி களுக்கு மேல் ஒருவேளை உணவு உட்கொண்ட பிறகு தொடர்ச்சியாக 48 மணி நேரம் உண்ணாதிருப்பது என்பது என் முடிவு. மீண்டும் அடுத்த சாப்பாட்டு முகூர்த்தத்தில் மாவுச் சத்து மிக மிகக் குறைந்த அளவே (சுமார் 40 கிராம்) சேரும் கொழுப்பு உணவை உண்பது.

ஒரு வாரம் முன்னதாகவே திட்டம் போட்டுத்தான் மேற்படி மெனுவைத் தயாரித்திருந்தேன். என் உடம்புக்கு என்னவெல்லாம் சேராதோ / சேரக் கூடாதோ அது எல்லாமே இருக்க வேண்டும் என்பதுதான் என் உயரிய நோக்கம். என் ரத்த சர்க்கரை அளவு இப்போதெல்லாம் என்ன சாப்பிட்டாலும் 100-ஐத் தாண் டாது. அதைக் குறைந்தபட்சம் 200 அளவுக்காவது உயர்த்தி மகிழ்விக்கிறபடியாக மெனுவை அமைத்துக்கொண் டேன்.

அன்றிரவு நான் உண்ட புளியோதரையானது அமிர்த ஜாதி. இந்தத் தொடரில் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலிலும் சிங்கப்பெருமாள் கோயிலிலும் மட்டுமே அத்தனை உயர்தரப் புளியோதரை கிடைக்கும். ருசியை மூக்கும் மணத்தை நாக்கும் உணரக்கூடிய ரகம் அது. உண்ண ஆரம்பித்தால் நிறுத்தாமல் அரை மணி நேரம் சாப்பிடலாம்.

ஒரு நல்ல புளியோதரையின் தரம் என்பது அதன் மூலப்பொருளான புளிக் காய்ச்சலின் தரத்தைச் சார்ந்தது. இது சாராயம் காய்ச்சுவதைக் காட்டிலும் கடினமான திருப்பணி. இன்றைக்கெல்லாம் யார் புளிக் காய்ச்சல் காய்ச்சுகிறார்கள்? கடையில் கிடைக்கிற பாட்டில் புளியோதரை மிக்ஸில் ஆத்மா சாந்தியடைந்துவிடுகிறது. அவன் நல்லெண்ணெயில்தான் செய்தானா, க்ரூடாயிலைக் கொட்டினானா என்று தெரியாது. எத்தனை நாள் பழைய சரக்கு என்று யாருக்கும் தெரியாது. புளிக் காய்ச்சலின் ஒரிஜினல் ருசியானது எவ்வாறு இருக்கும் என்றுகூடப் பெரும் பாலானோருக்குத் தெரிந்திருக்காது. என்ன செய்ய? பாவிகளின் கடைசிப் புகலிடம் பர்கராகும்போது ஆதி மாமி களின் அசகாயத் தயாரிப்பான புளிக் காய்ச்சல் போன்ற தொன்ம ருசி ரத் தினங்கள் தமது இருப்பை மறைத்துக் கொள்ளத்தான் வேண்டியதாகி விடுகிறது.

நிற்க. ஒரு நல்ல புளிக் காய்ச்சலின் அடிப்படை, அதன் சேர்மானப் பொருட் கள் அனைத்தும் சம அளவில் இருக்க வேண்டும் என்பது. 100 கிராம் புளி எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், க. பருப்பு, உ. பருப்பு மூன்றும்

அதே 100 கிராம் அளவுக்கு இருக்க வேண்டும். அதில் 10 சதவீத அளவுக்கு வெந்தயம் சேர வேண்டும். எண்ணெய் சுட்ட மறுவிநாடியே கடுகு, பருப்புகள், வெந்தயம், சீரகம், பெருங்காய வகை யறாக்களைப் போட்டு வறுத்துக் கொண்டு, அதிலேயே முந்திரிப் பருப்பை யும் அள்ளிப் போட்டு வறுத்துவிட வேண் டும். புளியைக் கரைத்துக் கொட்டுவது இதற்கு அப்புறம்தான்.

இரண்டு அல்லது இரண்டரை நிமிடங் கள் இந்தக் கரைசல் தளதளவென்று கொதிப்பதை வேடிக்கை பார்த்துவிட்டு, மஞ்சள் பொடி, உப்பு போட வேண்டும். ஓம் சாந்தி, ஓம் சாந்தி என்று 108 முறை ஜெபித்து முடிக்கிறபோது மேற்படி புளிக் கரைசலானது பாதி வடிந்து லேசாகக் கெட்டிப்படும். பழநி பஞ்சாமிர்த லெவலுக்கு வந்திருக்கிறதா என்று பார்த்து, கப்பென்று அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

எல்லாம் சரியாகத்தான் செய்திருக் கிறோமா என்று அறிய, அடுப்பை அணைக்கும்போது வருகிற வாசனை யைப் பரிசோதனை செய்வது ரொம்ப முக்கியம். பச்சைப் புளி வாசனை கொஞ்சம் வந்துவிட்டாலும் தீர்ந்தது விஷயம். காய்ச்சிய புளியின் வாசனையைப் பெருங்காய வாசனை தூக்கிச் சாப்பிடுவதே சரியான பதம்.

இவ்வாறெல்லாம் தாலாட்டி சீராட்டித் தயாரிக்கிற புளிக் காய்ச்சலைக் குறைந்தது 15 மணி நேரம் அப்படியே மூடி வைத்துவிட்டு, அதன்பின் எடுத்து சாதத்தில் கலந்தால் முக்கால்வாசி வேலை முடிந்தது. இதற்குப் பிறகு ஒரு 50 கிராம் மிளகைப் பொடி செய்து (மிளகுப் பொடியாக வாங்கிக் கலந்தால் ருசிக்காது) அதை இன்னொரு 50 கிராம் நல்லெண்ணெயில் கலந்து மேற்படி புளியோதரைக் கலவையின் தலையில் கொட்டிக் கிளற வேண்டும்.

கொஞ்சம் பேஜார்தான். ஆனால், இப்படிச் செய்தால்தான் நிஜமான புளியோதரையின் ருசியை அனுபவிக்க முடியும்.

நான் எட்டாம் கிளாஸ், ஒன்பதாம் கிளாஸ் படித்துக்கொண்டிருந்தபோது, என் வகுப்பில் அமுதன் என்றொரு பயல் வாரம் ஒருமுறை மதிய உணவுக்குப் புளியோதரை எடுத்து வருவான். அவன் டிபன் பாக்ஸைத் திறந்தால் பள்ளி முழுதும் மணக்கும். அவனது புளியோதரைக்கு ஆசிரியர்கள் அத் தனை பேரும் அடிமைகளாக இருந்தார் கள். ஒரு வாரம் அவன் எடுத்து வரவில்லை யென்றாலும் ஏன் என்று கேட்கிற அள வுக்கு உயர்தர அடிமைகள். தான் சாப் பிட்டு, ஆசிரியர்களுக்கு ருசி பார்க்கக் கொடுத்து மிச்சம் இருக்கும் புளியோத ரையை நண்பர்களுக்குப் பகிர்ந்தளிக் கும் பரோபகாரியாக அவன் இருந்தான்.

அவனது தாயை நான் கண்டதில்லை. ஆனால் அப்படியொரு மணக்கும் கரம் கொண்ட பெண்மணி இன்னொருவர் இருக்க முடியுமா என்பது இன்று வரை எனக்கு சந்தேகம்தான். ஒரு புளியோதரையில் தனது கலை மனத்தை வெளிப்படுத்தத் தெரிந்த பெண்மணி. அவர் புளியோதரைக்கு வேர்க்கடலை போட மாட்டார். மாறாக காராசேவைப் பொடி செய்து போட்டுக் கலந்தனுப்புவார்.

வறுத்த முந்திரியும் காராசேவுப் பொடியும் புளியோதரையோடு சேர்ந்து நெரிபடும்போது உண்டாகும் ருசிதான் அநேகமாக அமிர்த ருசியாக இருக்க வேண்டும்.

- ருசிக்கலாம்… |

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-28-நல்ல-புளியோதரையின்-தரம்/article9755111.ece

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 29: அவியலின் ஆதார ருசி

 
ww___3186334f.jpg
 
 
 

முன்னொரு காலத்தில் நிரம்ப சினிமாக் கிறுக்குப் பிடித்து அலைந்துகொண்டிருந்தேன். தேசத்தில் எங்கு திரைப்பட விழா நடந்தாலும் போய்விடுவேன். பொழுது விடிந்ததும் கர்ம சிரத்தையாகக் குளித்து முழுகி, வயிற்றுக்கு என்னவாவது போட்டுக்கொண்டு தியேட்டருக்குள் போய் உட்கார்ந்துவிட்டால், தொடர்ச்சியாக நாலைந்து படங்கள் பார்த்து முடித்த பிறகுதான் சுய உணர்வு மீளும். அதற்குள் மாலை அல்லது இரவு ஆகியிருக்கும். பசிக்க ஆரம்பிக்கும். களைப்பு கண்ணை அழுத்தும். மீண்டும் ஒரு குளியல். மீண்டும் வயிற்றுக்கு எதையாவது போட்டு அடக்கிவிட்டுப் படுக்கையில் விழுந்தால், மறுநாள் காலை கலைத் தாகம் எடுக்கிற வரைக் கும் உறக்கம்.

 

திருவனந்தபுரத்தில் அந்த வருஷத் திரைப்பட விழா நடந்தது. சர்வதேச விழா. எனக்கு கேரள சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை. ஜென்மாந்திரம் முழுதும் சுத்த சைவம் என்று முடிவெடுத்தவன், கேரளம் போன்ற பரம சுத்த அசைவப் பிராந்தியங்களில் ஓரிரு தினங்களுக்கு மேல் தாக்குப்பிடிப்பது கஷ்டம். ஆனால், கலை ஒரு இட்சிணி அல்லவா? பிடித்து ஆட்டு ஆட்டென்று ஆட்டிக் கடாசிவிடுமல்லவா? அத னால் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தேன்.

 

நாலு தினங்கள் கழிந்திருக்கும். எந்தவேளையும் சரியாக உண்ணாமல் பிஸ்கட், புட்டு என்று சமாளித்ததில் எனது பாரிய தேகமானது கேரள கம்யூனிஸ்ட்களைப் போல புரட்சிகர நடவடிக்கையில் இறங்க ஆரம்பித்தது. சொல்ல முடியாத அவஸ்தை. பக்கத்தில் இருந்து என்னைக் கவனித்துக் கொண்டே இருந்தார் ஒரு நண்பர். அவர் கலா கவுமுதியில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தவர். அந்த நாலு தினங்களாகத்தான் எனக்குப் பழக்கம். ‘‘ஏன் இப்படி நெளிந்துகொண்டே படம் பார்க்கிறீர்கள்?’’ என்று தாங்க முடியாமல் கேட்டுவிட்டார். என் உணவுப் பிரச்சினையைச் சொன்னதும் ரொம்ப வருத்தப்பட்டார். ‘‘சரி, இன்று மதியம் நாம் படம் பார்க்க வேண்டாம். என்னோடு வீட்டுக்கு வாருங்கள்’’ என்று அழைத்தார்.

 

‘‘ஐயா, நான் சுத்த சைவம்.’’

 

‘‘அது பிரச்சினை இல்லை. இன்று என் வீட்டிலும் சைவ உணவுதான்’’ என்று சொல்லி வற்புறுத்தி அழைத்துச் சென்றார்.

 

திருவனந்தபுரத்தில் இருந்து தும்பாவுக்குப் போகிற வழியில் ஏதோ ஒரு கிராமாந்திரம். நடந்தே போய்விடலாம் என்றார். எனக்கு இருந்த பசியில் நடப்பது மிகவும் சிரமமாக இருந்தது. அவரோ, ஜேஜே சில குறிப்புகளில் அப்பம் தின்பதற்காக பாலுவை அழைத்துச் சென்ற திருச்சூர் கோபாலன் நாயரைப் போல நாலு பக்கங்களுக்குப் பேசியபடியே போய்க்கொண்டிருந்தார். ஒருவழியாக அவர் வீட்டை நாங்கள் சென்றடைந்தபோது மணி பகல் 2 ஆகியிருந்தது.

 

எளிய அறிமுகம். உடனே இலை போட்டுவிட்டார்கள். சோறு, குழம்பு, சக்கைப் பொரியல், அவியல்.

 

அவியலைக் கண்டதும் எனக்குக் காதலாகிவிட்டது. சட்டென்று ஒருவாய் எடுத்துச் சாப்பிட்டுப் பார்த்தேன். தேங்காய் எண்ணெயின் வாசனை அவியலின் ருசியோடு இரண்டறக் கலந்து கிரங்கடித்தது. நுனி நாக்கில் இருந்து அடி வயிறு வரை வழியெங்கும் ருசித்தது. ஒரு கணம் யோசித்தேன்.

 

‘‘அம்மணி, இந்த அவியலை மட்டும் தனியே ஒரு கப்பில் நிறையத் தந்துவிட முடியுமா? எனக்கு சாப்பாடு வேண்டாம். இது மட்டும் போதும்.’’

 

அன்று அந்த இல்லத்தில் சுமார் அரைக் கிலோ அவியல் சாப்பிட்டிருப்பேன் என்று நினைக்கிறேன். முன்பின் அறிமுகம் இல்லாத அந்த நண்பரும் அவர் மனைவியும் என் கிறுக்குத்தனத்தை ரசித்தது நான் செய்த புண்ணியம்.

 

‘‘அவ்வளவு நன்றாக இருக்கிறதா?’’ என்று ஆர்வமுடன் கேட்டார் அந்த மங்கையர் குலத் திலகம்.

 

‘‘அவியலைக் கெடுப்பது சிரமம் அம்மா!’’ என்று பதில் சொன்னேன்.

 

வரலாற்று நோக்கில் அவியலின் பிறப்பு தெற்குக் கேரளமாகத்தான் இருக்க முடியும். வளமாகத் தென்னை விளையும் பிராந்தியம் தவிர வேறெங்கும் அப்படியொரு ருசிகர உணவு கண்டுபிடிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. தவிரவும், காய்கறிகளின் சேர்மானத்தைக் கணக்கில் எடுத்தால் மிக நிச்சயமாக இது வடவர்களுக்கு அந்நிய உணவு. அவர்கள் உருளைக் கிழங்கைத் தவிர ஒன்றும் அறியாதவர்கள்.

 

என்னைப் பொறுத்தவரை அவியல் என்பது மாபெரும் கலை வெளிப்பாடு! அந்தச் சேர்மானமும் பதமும்தான் முக்கியம். காய்கறிகளின் வேகும் பதம். அரைத்துச் சேர்க்கப்படும் தேங்காய்க்கும் மேலுக்கு ஊற்றப்படும் தேங்காய் எண்ணெய்க்கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தில் காட்டப்படுகிற மிக நுணுக்கமான வித்தியாசம் முக்கியம்.

 

அதைவிட முக்கியம், என்னென்ன காய்கள் அவியலுக்குச் சேர்க்கப்படுகின்றன என்பது. அவியலின் ஆதார ருசி என்பது அதில் சேர்க்கப்படுகிற வெள்ளைப் பூசணிக் காயால் உருவாக்கப்படுவது. இந்த வெள்ளைப் பூசணியோடு கேரட் சேராது என்பது பலபேருக்குத் தெரியாது. மெனக்கெட்டு நாலைந்து கேரட்டுகளைத் துண்டாக்கிப் போட்டுவைப்பார்கள். கேரட்டுக்கு என்று ஒரு ருசி உண்டு. அது ஒருவித அசட்டுத் தித்திப்பின் ஆதிக்கத்தில் உள்ள காய். அவியலுக்கு அது அநாவசியம். அப்படியொரு இனிப்புச் சுவையும் அதில் இருந்துதான் தீரவேண்டும் என்பீர்களானால் அவியலின் அடிப்படை ருசியை நீங்கள் அறியவில்லை என்று பொருள். உருளைக்கிழங்கு போடலாம். நாலு பீன்ஸ் போடலாம். அவரை சேராது. வாழைக்காய் முக்கியம். சேப்பங்கிழங்கு முக்கியம். கத்திரிக்காய் இருக்கலாம்.

 

எனக்கு உண்ண நேர்ந்த கேரளத்து அவியலில் எல்லாம் புளிப்பு ஏறாத மாங்காய் சேர்க்கப்பட்டிருந்ததை கவனித்திருக்கிறேன். பிரமாதமாக இருக்கும் அது. அவியலுக்குக் கண்டிப்பாகக் கூடாத காய்கள் இரண்டு. கொத்தவரங்காயும் வெண்டைக்காயும். இந்த இரண்டில் எது ஒன்று இருந்தாலும் அவியலின் பிராணன் போய்விடும்.

 

நம் ஊர் ஓட்டல்களில் அவியல் என்றால் இப்போதெல்லாம் ஒரு கட்டு முருங்கைக்காயை அப்படியே உடைத்துப் போட்டு சமைத்துவிடுகிறார்கள். இது ஒருவித உணவியல் வன்முறை. அவியலுக்கு முருங்கைக்காய் வேண்டாம். இருந்தே தீரவேண்டும் என்பீர்களானால் தனியே வேகவைத்து உரித்து, உள்ளே இருக்கிற சதைப் பகுதியை மட்டும் வழித்துப் போடுவதே சரி. பட்டாணியுடன்கூட அரைப்பிடி கொண்டைக்கடலை சேர்ப்பதும் ருசி கூட்டும். தேங்காய் அரைக்கும்போது நாலு வேர்க்கடலை சேர்த்து அரைத்துப் பாருங்கள். பிரமாதமாக இருக்கும்.

 

அவியல் ஒரு தனி உணவு. இதை எப்படி சமூகம் ஒரு சைடு டிஷ்ஷாக மாற்றி வைத்திருக்கிறது என்று எனக்குப் புரிவதே இல்லை. ஓட்டல்களில் அடை அவியல் என்கிறார்கள். அந்த காம்பினேஷன் எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. அடைக்கு மிளகாய்ப் பொடியும் நறநறக்கும் பதத்தில் மேலே ஊற்றப்படும் நெய்யும்தான் சரி. என் வீட்டில் நான் அவியலைத் தனி உணவாக எடுத்துக்கொள்வதுதான் வழக்கம். சுமார் அரைக் கிலோ அளவுக்கு அவியலை எடுத்து வைத்துக்கொண்டு, 50 கிராம் வெண்ணெயைத் தொட்டுக்கொண்டு உண்டால் மதிய உணவு முடிந்துவிடும். ருசிக்கு ருசி, சத்துக்கு சத்து.

 

அப்புறம் தயிர். பொதுவாக நம் ஊரில் அவியலில் தயிர் சேர்க்கிற வழக்கம் இருக்கிறது. அது ஒன்றும் கொலைபாதகம் இல்லை என்றாலும் அந்தத் தயிர் உலகத் தரத்தில் இல்லாவிட்டால் அது அவியலுக்கு அநாசாரமாகிவிடும் அபாயம் இருக்கிறது. சற்றும் புளிக்காத கெட்டித் தயிர் மட்டுமே அவியலுடன் சேரும். பதம் கொஞ்சம் நகர்ந்தாலும் அது பல்லை இளித்துவிடும். என்னைக் கேட்டால் அவியலுக்குத் தயிர் தேவையே இல்லை. அது தனித்து நின்று ஜெயிக்கும் உணவு.

 

- ருசிக்கலாம்…|

http://tamil.thehindu.com/opinion/blogs/ருசியியல்-சில-குறிப்புகள்-29-அவியலின்-ஆதார-ருசி/article9769368.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ருசியியல் சில குறிப்புகள் 30: சுவையான அவரை வடை

 

ALL1Relax01IMG1
ALL1Relax01IMG3
Rusiyiyal
ALL1Relax01IMG1

கா

ல் கிலோ அவரைக்காயை எடுத்துக்கொள்ளவும். நாரை உரித்துவிட்டு அப்படியே மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவில் உப்பு, மிளகாய்த்தூள் போட்டுக் கலந்து வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணெய் விட்டுக் காயவைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் அவரை மாவை உள்ளங்கையில் வைத்து தட்டித் தட்டி அதில் போட்டுப் பொரித்து எடுக்கவும். சுவையான அவரை வடை தயார்.

மேற்படி சமையல் குறிப்பை உங்கள் வாழ்நாளில் எங்குமே நீங்கள் பார்த்திருக்கவோ, கேட்டிருக்கவோ முடியாது. அவரை வடையா? கண்றாவி என்று முகம் சுளித்துவிட்டுப் போய்விடுவீர்கள். தவிர பருப்பு இல்லாமல் இது எப்படி வடையாகும்? இதெல்லாம் வாயில் வைக்க ’விளங்காது’ என்று தீர்ப்பெழுதிவிடுவீர்கள். ஆனால், வடையின் ஆதிகாலம் இங்கே இப்படித்தான் தொடங்கியிருக்கிறது என்றால் நம்புவீர்களா? அவரைக்காய் வடை, பீன்ஸ் வடை, கத்திரிக்காய் வடை, உருளைக்கிழங்கு வடை என்று காய்களை அரைத்து, எண்ணெயில் பொரித்து எடுக்கிற வழக்கம் தென்னிந்தியாவில் ஆதிகாலத்தில் இருந்தி ருக்கிறது. வடை என்பது பருப்பின் குழந்தை என்று சரியாகக் கண்டுபிடிக்கப்பட்ட காலம் துல்லியமாகத் தெரியவில்லையே தவிர, 10-ம் நூற்றாண்டுக்கு முன்புவரை பெரும்பாலும் வடையென்றால் காய்கறி சம்பந்தமுள்ளதுதான். இன்றைக்குப் புழக்கத்தில் உள்ள வாழைப்பூ வடை, முட்டைக்கோஸ் வடையெல்லாம் அதன் மிச்சசொச்சமே.

அது நிற்க. இன்று இந்த வடை புராணத்தை நான் நினைவுகூர ஒரு காரணம் இருக்கிறது. ஃபேஸ்புக்கில் சென்ற வருடம் இதே நாள் என்று பழைய படம் காட்டுகிற வழக்கம் ஒன்று உண்டல்லவா?

இன்று தற்செயலாக எனக்கு அப்படி அகப்பட்ட படம், சென்ற வருடம் இதே நாளில் நான் வடை சாப்பிட்ட படம். பெரிய பிரமாதமெல்லாம் ஒன்றும் இல்லை என்றாலும் வடை சாப்பிட்டதையும் வரலாற்றில் பதிவு செய்கிற கெட்ட வழக்கம் இருந்தபடியால் அப்போது அதைப் போட்டு வைத்திருக்கிறேன்.

ஓவல் வடிவக் கிண்ணத்தில் ஊற்றப்பட்ட சாம்பாரில் ஊறி, உப்பியிருந்த இரண்டு உளுந்து வடைகள். அதன்மீது கொஞ்சம் வெங்காயம், கேரட், கொத்துமல்லி தூவி அலங்கரிக்கப்பட்டிருந்தது. எந்த ஓட்டலில் போய்ச் சாப்பிட்டேன் என்று நினைவில்லை. அநேகமாக கோடம்பாக்கம் அட்சயாவாக இருக்கும். அவசரப் பசிக்கு அங்கேதான் அடிக்கடி போவேன். பெரும்பாலும் திராபையாகத்தான் இருக்கும் என்றாலும் தப்பித் தவறி சமயத்தில் சுவையாகவும் அமைந்துவிடும்.

விஷயம் அதுவல்ல. எப்போது வடை உண்ண நேர்ந்தாலும் நான் என் பெரியப்பாவை நினைத்துக்கொள்வது வழக்கம். அவருக்கு இப்போது 90 வயது. எனக்கு நினைவு தெரிந்த நாளாக, தான் சந்திக்கும் அத்தனைப் பெண்களிடமும் அவர் தவறாமல் ஒரு விஷயம் கேட்பார். ''உங்களால் நெய்யில் வடை செய்து தர முடியுமா?’’

இன்றுவரை அவரது ஆசை நிறைவேறவில்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில், ஒரு வாரம் முன்னால் சந்தித்தபோதுகூட அவருக்கு அந்த ஆசை மிச்சம் இருப்பதை அறிந்தேன். விரைவில் அந்த அவாவை நானே நிறைவேற்றி வைக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

பிரச்சினை என்னவென்றால் நெய்யால் ரொம்ப நேரம் அடுப்பில் சூடுபட்டுக்கொண்டிருக்க முடியாது. அதன் வாசனை மாறிவிடும். வடையும் நாறிவிடும். சூடு தாங்குவதற்காகவே எண்ணெய் இனங்களுக்கு ஹைட்ரஜனேற்றம் செய்யப்படுவதையெல்லாம் பெரியவருக்கு விளக்கிக்கொண்டிருக்கவும் முடியாது. ஆனால், வடையின் ருசியில் எத்தனை தோய்ந்திருந்தால் அதை மேலும் ருசிகரமாக்க நெய்யில் பொரித்தால் என்ன என்று ஒருவருக்குத் தோன்றும்!

நானும் வடை ரசிகனாக இருந்தவன்தான். ஆனால், எனக்கு மெதுவடை பிடிக்காது. கரகரப்பாக இருந்தால் அதன் தோலை மட்டும் பிய்த்துத் தின்பேனே தவிர, பூப்பந்து போலிருக்கும் அதன் உட்புறத்தையல்ல. எனக்கு மசால்வடை ரொம்பப் பிடிக்கும். ஒரு ரூபாய் நாணயத்தின் அளவுக்குத் தட்டப்பட்டு, ஒரே வாயில் உள்ளே போட்டு மெல்லத்தக்க விதத்தில் சுடப்படுகிற தள்ளுவண்டி மசால்வடைகள். சமூகமானது இந்த அற்புதமான சிற்றுண்டியை சாராயக் கடை சைட் டிஷ்ஷாக்கி அவமானப்படுத்திவிட்டது. அப்படி என்னத்துக்காவது ஒன்றுக்கு இதைத் தொட்டுக்கொண்டுதான் தின்று தீர்க்கவேண்டுமென்றால் அதற்குச் சில வழிகள் சொல்லுகிறேன்.

முதலாவது ராகி மால்ட்.

ராகி மால்ட்டில் ஊறிய மசால்வடைக்கு ஓர் அபாரமான ருசியுண்டு. டீயில் தோய்த்து உண்டாலும் நன்றாகவே இருக்கும் என்றாலும் நான் ருசி பார்த்த வரையில் வடைக்குச் சரியான காம்பினேஷன் ராகி மால்ட்தான்.

கல்லூரி நாட்களில் தனஞ்செயன் என்றொரு நண்பன் எனக்கிருந்தான். தள்ளுவண்டி மசால் வடைகளைப் பொட்டலமாக வாங்கிக்கொண்டு நேரே ஆவின் பூத்துக்குப் போய்விடுவான். அங்கே சிறிய பால்கோவா பாக்கெட் ஒன்று, குளிரூட்டப்பட்ட ஃப்ளேவர்ட் மில்க் ஒன்று வாங்குவான். இரண்டு வடைகளைப் பால்கோவாவுடன் சேர்த்துத் தின்றுவிட்டு, இன்னும் இரண்டு வடைகளை ஃப்ளேவர்ட் மில்க்கில் தோய்த்துச் சாப்பிடுவான்.

முதலில் எனக்கு இது விநோதமாக இருந்தது. ஆனால், ஒருமுறை ருசித்துப் பார்த்ததும் கிறுகிறுத்துப் போய்விட்டேன். குறிப்பாக மசால்வடையைப் பால்கோவாவுடன் சேர்த்து மெல்வது ஒரு நூதன அனுபவம். இரண்டுமே நல்ல தரத்து சரக்குகளாக இருக்கும்பட்சத்தில் பத்து இருபது வடைகளையும் கால் கிலோ பால்கோவாவையும் ஏழெட்டு நிமிடங்களில் கபளீகரம் பண்ணிவிட முடியும்.

இம்மாதிரி முயற்சிகளை நமது உணவகங்கள் ஏன் செய்து பார்ப்பதில்லை என்று தெரியவில்லை. திரும்பத் திரும்ப ஒரே சாம்பார் வடை, ஒரே ரச வடை, ஒரே தயிர் வடை. கடுப்பில் ஒரு நாள் ஸ்டிராபெரி ஐஸ் க்ரீமுக்கு மெதுவடை தொட்டுக்கொண்டு சாப்பிட்டுப் பார்த்தேன். டிரை குலோப் ஜாமூன் தொட்டுக்கொண்டு சாப்பிடுவதைக் காட்டிலும் அது ருசியாகவே இருந்தது.

அந்த ஃபேஸ்புக் போட்டோ விவகாரத்துக்கு வருகிறேன். அநேகமாக அதுதான் நான் சாப்பிட்ட கடைசி வடையாக இருக்கும் என்று நினைக்கிறேன். கடந்த ஒரு வருடகாலமாக வடையற்ற வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறேன். இந்த எண்ணம் தோன்றியதுமே ஒரு சுய பச்சாதாபம் பொங்கிவிட்டது. உடம்பைக் கெடுக்காத, சொய்யாவென்று ஓரிரு கிலோ ஏற்றித் தொலைக்காத ஒரு உத்தம வடையை நாமே கண்டுபிடித்தாலென்ன என்று தோன்றியது.

தேவை, ஒரு பிடி பாதாம் பருப்பு, கொஞ்சம் முட்டைக் கோஸ், வெங்காயம், பூண்டு, பாதாமை அரைத்துக்கொள்ள வேண்டியது. கோஸ், வெங்காயங்களை நறுக்கிக்கொள்ள வேண்டியது. சம்பிரதாய உப்பு, மிளகு விவகாரங்களைச் சேர்த்து வடை போல் தட்டிக்கொள்ள வேண்டியது. இதை மைக்ரோவேவில் அல்லது தோசைக் கல்லில் சுட்டு எடுத்து, சுடச்சுட உருக்கிய நெய்யில் இரண்டு நிமிடம் போட்டுப் புரட்டி ஊறவைத்துவிட வேண்டியது.

வடையாகிவிடாதா? பொரித்தால்தான் வடை, இதெல்லாம் வேறு ஜாதி என்பீரானால் உங்களிஷ்டம். இப்படி ஒரு பாதாம் வடை செய்து பார்க்கத் திட்டமிட்டிருக்கிறேன். ருசிக்காக மட்டும்தான். இதைச் சத்துணவு என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏனெனில், என்னதான் பாதாம் அதி சத்து உணவுப் பொருள் என்றாலும் அதனோடு வேறெதையும் சேர்த்துச் சாப்பிடுவது சரியல்ல. என்ன சேர்த்தாலும் அதன் பலத்தை அழித்துவிடுகிற வாலி வகையறா அது.

ஆனால் எண்ணெயில் பொரிக்கிற வடையைவிட ஒன்றும் இது மோசமாக இருக்காது என்று நினைக்கிறேன். கூடிய சீக்கிரம் பரிசோதனை செய்து பார்த்துவிடுவேன். நெய்வடை கோரிய எலியொன்று கைவசம் இருக்கிறது.

- ருசிக்கலாம்...

http://tamil.thehindu.com/opinion/blogs/article19383797.ece

Link to comment
Share on other sites

ருசியியல் 31: பிரச்சினை உணவில் அல்ல

 

ALL1Relax01IMG1
ALL1Relax01IMG3
ALL1Relax01IMG1

என் தந்தை இரு வாரங்களுக்கு முன்னர் காலமாகிப் போனார். நல்ல மனிதர். எனக்கு நிறைய செய்தவர். அதில் தலையாயது, என்னை முழுச் சுதந்திரத்துடன் வளரவிட்டது. யோசித்துப் பார்த்தால் நான் செய்த எதையுமே அவர் மறுத்ததோ, நிராகரித்ததோ இல்லை. இதைச் செய்யாதே என்று சொன்னதும் இல்லை. எத்தனை பேருக்கு அப்படியொரு அப்பா கிடைப்பார் என்று தெரியவில்லை. விடுங்கள், விஷயத்துக்கு வருகிறேன்.

அப்பா இறந்த அதிர்ச்சியை உள்வாங்கி ஜீரணித்து சற்று நிலைக்கு வந்த பிற்பாடு, எனக்கு அடுத்தவேளை உணவுகுறித்த கலவரம் உண்டானது. ‘நீ சாப்பிடக்கூடாது’ என்று யாராவது சொன்னால், ‘சரி…’ என்று என்னால் அதிகபட்சம் 50 மணி நேரங்கள் வரை தாக்குப் பிடிக்க முடியும். ஆனால், இன்று முதல் அடுத்த பத்துப் பன்னிரண்டு தினங்களுக்கு ‘நீ இதைத்தான் சாப்பிட வேண்டும்…’ என்று கழுத்தில் துண்டைப் போட்டு வளைத்தால் செத்தேன்.

பிரச்சினை உணவில் அல்ல; என் உணவு முறையில்! கடந்த ஓராண்டு காலமாக நான் அரிசியைத் தொடுவது இல்லை. அரிசி மட்டுமல்ல; பருப்பு உள்ளிட்ட பிற எந்த தானியமும் கிடையாது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் வகையறாக்கள் கிடையாது. உருளை, சேப்பங்கிழங்கு ரகங்கள் இல்லை. பீன்ஸ், அவரை, காராமணி இனங்கள் இல்லை. புளி கிடையாது. ரொம்ப முக்கியம், இனிப்பு அறவே கிடையாது.

இதெல்லாம் இல்லாமல் எந்த வீட்டில் காரியச் சமையல் நடக்கும்? ‘இதையெல்லாம் நான் சாப்பிட மாட்டேன்…’ என்று அம்மாவிடம் போய்ச் சொல்லவும் தயக்கமாக இருந்தது. ஒரு பேரிழப்பைவிட இது பெரிய விஷயமா என்று எனக்கே தோன்று கிறபோது அம்மாவுக்கு எப்படித் தோன்றாதிருக்கும்? இருந்தாலும் என்னிடம் ஓர் அஸ்திரம் இருந்தது. அதை ஒரே ஒருமுறை பிரயோகித்துப் பார்க்கலாம் என்று நினைத்தேன்.

அழுகையெல்லாம் சற்று வடிந்திருந்த தருணத்தில் மெல்லப் பேச்செடுத்தேன். ‘‘அம்மா, வாழ்நாளில் ஒருபோதும் அப்பா என் சுதந்திரத்தில் தலையிட்டதில்லை. என் உணவுமுறை என்பது என் சுயபுத்தியுடன் நானே தேர்ந்தெடுத்த ஒன்று. அப்பா நிச்சயமாக இதைத் தனக்காக மாற்றிக்கொள்ளச் சொல்லிக் கேட்க மாட்டார். உனக்கும் ஆட்சேபணை இல்லையென்றால் இந்தக் காரிய தினங்களிலும் நான் என் விரதம் கெடாமல் பார்த்துக்கொள்வேன்!’’ என்றேன்.

சொற்களில் வாழ்பவனால் இதுவா முடியாது? தவிரவும் சொல்லுகிற தொனி. உனக்கு இஷ்டமில்லையென்றால் செய்ய மாட்டேன் என்பதைச் சொல்லாமல் புரியவைக்கிற உத்தி. அது உதவும். வேலை செய்யும்.

செய்தது. ‘உன் இஷ்டம்’ என்று அம்மா சொல்லிவிட்டபடியால், ஒரு பிரச்சினை தீர்ந்தது என்று எண்ணிக்கொண்டேன். சமையல் பொறுப்பை ஏற்றிருந்தவரிடம் நான் உண்ணக்கூடிய காய்கறிகளின் பட்டியலை அளித்தேன். தினசரிச் சமையலில் இதில் ஏதாவது ஒன்று இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். தனியே அவசரமாக ஒரு பனீர் சமையல். கூடவே இந்தக் காய் இனத்தில் ஒன்றிரண்டு. கொஞ்சம் வெண்ணெய். கொஞ்சம் தயிர். முடிந்தது. வெங்காயம் கிடையாது, பூண்டு கிடையாது. அவ்வளவுதானே? அது ஒரு பிரச்சினையே இல்லை எனக்கு.

உறவினர்களும் நண்பர்களும் பந்தியில் அமருகிறபோதெல்லாம் இதை விநோதமாகப் பார்த்தார்கள். சரியாக ஒரு வருடம் கழித்து இலை போட்டுச் சாப்பிடுகிறேன். ஆனால், இலையில் சாதம் இல்லை. பருப்பு இல்லை. சாம்பார், ரசம் இல்லை. அபர காரிய பட்சணங்களான அதிரசம், சுய்யம், சொஜ்ஜியப்பம், பருப்புப் பாயசம் உள்ளிட்ட எதுவும் இல்லை.

‘‘சுவாமி, ஒரே ஒரு எள்ளுருண்டை மட்டும்...’’

அங்கே நான் விழுந்தேன்.

நான் இனிப்பு சாப்பிட்டுக்கொண்டிருந்த காலத்தில் மிகவும் விரும்பி உண்ட பொருட்களில் ஒன்று எள்ளுருண்டை. அதைப் போன்றதொரு ருசிமிக்க பட்சணத்தை எதற்காக திவசச் சடங்குகளுக்கு என்று கட்டம் கட்டி ரிசர்வ் தொகுதியில் நிற்க வைத்தார்கள் என்று எப்போதும் நினைப்பேன்.

பொதுவாகவே நமது வீடுகளில் மாதாந்திர மளிகைப் பட்டியலில் எள் இருக்காது. வாசமிகு கரங்கள் உடைய பெண்கள் மட்டும் மிளகாய்ப் பொடி அரைக்கும்போது பிடி எள்ளை வறுத்து அள்ளிக் கொட்டி அரைப்பார்கள். எள் சேர்த்த மிளகாய்ப் பொடியின் மணமும் ருசியும் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. மிளகாய்ப் பொடிக்கு சகாயம் செய்யப் போகும்போதே அத்தனை ருசிக்கிற வஸ்துவை, தனியே ஒரு பட்சணமாக்கினால் சும்மாவா இருக்கும்!

எள்ளுருண்டை என்பது இனிப்புகளில் தனி ரகம். எள்ளில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பதாலோ, அல்லது அதில் வைட்டமின் பி1, பி6, தையாமின், நியாஸின், கால்சியம், மெக்னீசியம் போன்ற எக்கச்சக்க சத்து இருப்பதாலோ, மற்ற இனிப்புப் பலகாரங்களுக்குக் கூடாத ஒரு பிரத்யேக ருசி எள்ளுருண்டைக்குச் சேரும்.

வெள்ளை எள்ளைக்காட்டிலும் கருப்பு எள்ளுக்கு ருசி அதிகம். கொஞ்சம் அலசி உலர்த்தி, கால்வாசி ஈரத்தோடே வாணலியில் போட்டு வறுத்து வெல்லப்பாகில் பிடித்து உருட்டினால் எள்ளுருண்டை தயார். கூடுதல் வாசனைக்குச் சற்று ஏலம். முடிந்தது.

ஒன்று தெரியுமா உங்களுக்கு? மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ஒரு பிரமாதமான மருந்து. தினசரி இரண்டு உருண்டைகள் சாப்பிட்டு வந்தால் பெரிய நிவாரணம் இருக்கும். (ரத்த சர்க்கரை அளவு ஏறிவிட்டது என்பீரானால் நான் பொறுப்பல்ல.) மாதவிடாய் வருகிற நேரம் சில பெண்களுக்கு மார்பக வலி இருக்கும். உடம்பு திடீரென்று கனமாகிவிட்டாற்போல இருக்கும். தலைவலி, முதுகுப்பக்க வலி, வயிறு உப்புசம் என்று என்னவாவது ஓர் இம்சை இருக்கும். இதற்கெல்லாம் எள்ளுருண்டை நல்ல மருந்து.

மருந்தோ என்னமோ; எனக்கு அது விருந்து. அதனால்தான் பரிமாற வந்தவர் ‘‘ஒரே ஒரு எள்ளுருண்டை’’ என்று எடுத்து நீட்டியபோது, ‘சரி’ என்று சொல்லிவிட்டேன்.

எள் ஒரு தானியம். எனவே எனக்கு அது கூடாது. அதனுள் இருக்கும் எண்ணெயும் எனக்குச் சேராது. அப்புறம் வெல்லம். என்னளவில் அந்த மூன்றுமே கெட்ட பொருள். இலையில் விழுந்த பிறகு என்னடா செய்யலாம் என்று சில விநாடிகள் தவித்தேன். இம்மாதிரி சமயங்களில்தான் சமயத்தைச் சகாயம் பண்ணிக்கொள்ள வேண்டும்.

எள் என்பது என்ன? விஷ்ணுவின் வியர்வையில் உதித்ததல்லவா அது? தவிரவும் லட்சுமி வாசம் புரிகிற தானியம். அந்தப் புனிதத்தைப் பேணத்தான் தினசரி சமையலில் அதைத் தவிர்க்கச் சொல்லி, இம்மாதிரியான தருணங்களுக்கு மட்டும் அனுமதிக்கிறார்கள். ஒன்று சாப்பிட்டால் ஒன்றும் தப்பில்லை என்று நினைத்துக்கொண்டு இரண்டு சாப்பிட்டேன்.

என்ன ருசி! எனக்குத் தெரிந்து ருசியை மூக்காலும் உணரவைக்கிற ஒரே தின்பண்டம் எள்ளுருண்டைதான். இதன் ருசியை இன்னுமே சற்றுக் கூட்ட முடியும். ஆனால், காரியச் சமையல்காரரிடம் அதைச் சொன்னால் அடிக்க வந்துவிடுவார்.

உருண்டைக்காக எள்ளை வறுக்கிறபோது கொஞ்சம் கொண்டைக்கடலை உடைத்துச் சேர்த்து வறுத்துப் பாருங்கள். பொட்டுக்கடலையும் போடலாம். ஆனால், கொண்டைக்கடலை அளவுக்கு ருசி கூடாது. அதே மாதிரி ஏலக்காயைப் பொடி செய்து சேர்க்கிறபோது கூடவே இரண்டு கிராம்பையும் இடித்துச் சேர்த்தால் சுவை அள்ளும்!

என் தந்தை 40 வருடங்களுக்கு மேலாக இனிப்பே தொடாமல் வாழ்ந்தவர். இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் அவரது சர்க்கரை அளவு 600. அதை நினைத்துக்கொண்டுதான் அந்த எள்ளுருண்டையைச் சாப்பிட்டேன்.

- ருசிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/article19433217.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் எள்ளுருண்டை மிகவும் பிடிக்கும்.... இப்ப அதையும் கச்சான் அல்வாபோல சதுரத் துண்டாக்கி மானபங்கம் செய்து விட்டார்கள்....!  tw_blush: 

Link to comment
Share on other sites

ருசியியல் 32- கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை

 

 
ALL1Relax01IMG3
ALL1Relax01IMG1

வசமாக மாட்டினீர்கள். இம்முறை நான் எந்த உணவைப் பற்றியும் எழுதப் போவதில்லை. கதறவைக்கும் ஒரு கண்ணீர்க் காவியத்துக்குத் தயாராக வேண்டியது உங்கள் ஊழ். எப்பப் பார் உணவைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் உண்பதைப் பற்றி வேறு எப்போது பேசுவது? அதுவும் எம்பெருமான் யாருக்கு, எந்த இடத்தில், எம்மாதிரியான தங்க ஆப்பு தயாரித்து வைப்பான் என்பது தெரியாது. இந்த, கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்பார்களே, அதைச் சொல்கிறேன்.

சரி, ஒரு கேள்வி. மனசாட்சிக்கு விரோதமின்றி உண்மையாக பதில் சொல்லுங்கள். உங்களில் எத்தனை பேருக்குப் பார்க்க லட்சணமாக பஃபே உண்ணத் தெரியும்? நமக்கு நாமே எல்லாம் மற்ற விஷயங்களில் சரி. சாப்பிடுகிற சமாச்சாரத்தில் இந்த பஃபே கலாச்சாரமென்பது ஒரு கொடுந்தண்டனை என்றே நினைக்கிறேன்.

ஒரு சமயம் சிங்கப்பூருக்குப் போயிருந்தேன். அழைத்த உத்தமர்கள் பெனின்சுலா என்ற பேர்கொண்ட ஓர் உயர்தர ஓட்டலில் மரியாதையாகத் தங்கவைத்தார்கள். உயர்தரம்தான் என்றாலும் அங்கே காலை உணவுக்குக் கையேந்தத்தான் வேண்டும். மகாப்பெரிய அரங்கம் ஒன்றில் வரிசையாக நூற்றுக்கணக்கான உணவு வகைகள் அணி வகுத்துக்கொண்டிருந்தன. பல நாட்டு வியாபார வேந்தர்கள் வந்து போகிற தலம் என்பதால் எல்லா தேசத்து உணவு வகையும் அங்கு இருந்தன. அடுப்பின்மீது அமர்ந்திருந்த ஒவ்வொரு பாத்திரத்துக்கு முன்பும் அந்த உணவின் பெயர் எழுதப்பட்டிருந்தது. யாருக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிடலாம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

நல்ல திட்டம்தான். விதவிதமாக ருசித்துப் பார்ப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்குப் பெரும் வேட்டை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் என் பிரச்சினை அங்கே வேறாக இருந்தது. எந்தப் பாத்திரத்தைத் திறந்தாலும் உள்ளே இருப்பது நண்டா, தேளா, நட்டுவாக்கிளியா என்று சந்தேகம் வந்தது. சேச்சே, பொழுது விடிகிற நேரத்தில் சமூகமானது இப்படி வளைத்துக்கட்டி அசைவம் உண்ண விரும்பாது என்று நினைத்தபடி திரும்பிப் பார்த்தால், யாரோ ஒரு சீனத்து ராஜ்கிரண் முழங்கை நீளத்துக்கு எலும்பை எடுத்துக் கடித்துக் களேபரம் பண்ணிக்கொண்டிருந்தார். ஈர்க்குச்சிக்கு இஸ்திரி போட்ட மாதிரி இருந்த சில பெண்கள் நிறம் மாறிய முழுக் கோழியை மேசைக்கு நடுவே வைத்து ஆளுக்கொரு பக்கம் கிள்ளிக் கிள்ளி உண்டு கொண்டிருந்தார்கள். கோழிதானா? அளவைப் பார்த்தால் கோழியாகத் தெரியவில்லை; ஒருவேளை ஆமையாக இருக்கலாம் என்று தோன்றியது.

எம்பெருமானே என்று அலறியது என் அந்தராத்மா. அன்றைக்கு ஒரு தட்டை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு உணவாகத் திறந்து பார்த்துக்கொண்டே இருந்தேனே தவிர, எதை எடுப்பது, எதை எடுக்காதிருப்பது என்றே புரியவில்லை. யாரையாவது கேட்டால் அவசியம் உதவியிருப்பார்கள். ஆனால் நாணத்தில் சாம்புதலுற்று நகர்ந்துவிட்டேன்.

அதற்காகச் சாப்பிடாமலே இருந்து விட முடியுமா. ஒருவாறு என்னைத் தேற்றிக்கொண்டு ஒரு வெண்ணுடை வேந்தனை அணுகி வெஜ் என்பது மட்டும் கேட்கிறபடியாகவும், பிற சொற்கள் எதுவும் அவருக்குப் புரியாத படியுமாக சேர்ந்தாற்போல் நாலைந்து வரிகள் பேசினேன். வெள்ளையரை வேறெப்படிப் பழிவாங்குவது? அவர் கைகாட்டிய திசையில் நாலைந்து முட்டை மலைகள் இருந்தன. வெள்ளை முட்டை. பிரவுன் நிற முட்டை. இளம் பச்சை நிறத்திலும் ஒரு முட்டை இருக்கிறது. ஒருவேளை காண்டாமிருக முட்டையோ என்னமோ. சாம்பல் நிற முட்டை. இளம் சிவப்பு முட்டைகள். இன்னும் என்னென்னமோ. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித அளவு. எல்லாமே கோள வடிவமல்ல. கோலி குண்டு போன்ற முட்டைகளையும் கண்டேன்.

நம் ஊரில் அசைவர்களுக்குக் கூட அத்தனை தினுசு சாத்தியமில்லை. உலகில் என்னவெல்லாம் உண்கிறார்கள்!

ஆனால், என் பிரச்சினை அதுவல்ல. நான் முட்டையும் உண்ணா வீர வெஜிடேரியன். எனக்குத் தேவை நான்கு இட்லிகள். அல்லது இரண்டு தோசை. பொங்கல் என்றால் சந்தோஷம். பூரி என்றால் கும்மாளம். ஒன்றுமே இல்லையா? ஒழிகிறது, பிரெட் எங்கே இருக்கிறது? அந்தச் சனியன் எனக்கு அசைவத்தைக் காட்டிலும் பெரும் விரோதி. இருந்தாலும் பாதகமில்லை என்றே நினைத்தேன். என் துரதிருஷ்டம், அத்தனை பெரிய அரங்கில் பிரட் எங்கே வைக்கப்பட்டிருந்தது என்பது எனக்குத் தெரிய வில்லை.

இறுதியில் தட்டு நிறைய அன்னாசிப் பழத் துண்டுகளையும் கொய்யாத் துண்டுகளையும் எடுத்துப் போட்டுக்கொண்டு வெண்ணெய் போல் இருந்த ஏதோ ஒன்றை நாலைந்து கரண்டிகள் அள்ளி அதன்மீது கொட்டிக்கொண்டு வந்து அமர்ந்தேன்.

ஆனால் சாப்பிட்டுப் பார்த்தால் அந்த வெள்ளைச் சரக்கு தோசை மாவு போலிருந்தது. நறநறப்பு இல்லையே தவிர அது நிச்சயமாக வெண்ணெய் இல்லை. இதற்குள் இரண்டாவதோ, மூன்றாவதோ ரவுண்டில் தனக்குரிய உணவை எடுத்துக்கொண்டு வந்து எதிரே அமர்ந்த யாரோ ஒரு நல்லவர், எதற்கு இத்தனை ஃப்ரெஷ் க்ரீம் என்று கேட்டார். வாழ்நாளில் அதற்குமுன் ஃப்ரெஷ் க்ரீம் என்றொரு வஸ்துவை நான் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. எனவே ஒரு மாதிரி ஆகிவிட்டது. 'இது அசைவமில்லையே' என்று மட்டும் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு, முன்வைத்த வாயைப் பின்வைக்காத வெறியுடன் அன்னாசிப் பழத்தை ஃப்ரெஷ் க்ரீமில் தோய்த்துத் தோய்த்து உண்ணத் தொடங்கினேன்.

அன்றைய எனது அனுபவத்தை வாழ்நாள் முழுதும் என்னால் மறக்க இயலாது. இனி எங்கு போனாலும் எனக்குரிய உணவை உரிமையுடன் கேட்டுத் தெரிந்துகொண்டுதான் களத்தில் இறங்கவேண்டும் என்று முடிவு செய்த நாள் அது.

இன்னொன்றும் தெரிந்துகொண்டேன். என்னால் ஒரு கையில் தட்டை வைத்துக்கொண்டு மறு கையால் எடுத்துப் போட்டுக்கொள்ள முடியாது என்பது. அன்னாசிப் பழத் துண்டுகள் நல்லவைதான். ஆனால் அந்த ஃப்ரெஷ் க்ரீம் தன் வேலையைக் காட்டி விட்டிருந்தது. அன்றைக்கு உண்டுகொண்டிருந்த நேரமெல்லாம் நான் உண்ணாதிருந்ததைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபடியால் ஃப்ரெஷ் க்ரீமானது எனக்குத் தெரியாமல் என் சட்டை முழுதும் சிந்திச் சீரழித்துவிட்டிருந்தது.

எப்படிப் பார்த்தாலும் ஒரு ஏழு நட்சத்திர ஓட்டல் என் ஒருவனைத் திருப்திப்படுத்துவதில் படுதோல்வி கண்ட தினம் அது. இருக்கட்டும், சிங்கப்பூர் சரித்திரத்தில் ஒரு கரும்புள்ளியாவது வேண்டாமா?

சென்னை திரும்பிய பின்பும் மேற்படி சம்பவத்தை நினைத்து நினைத்து மனத்துக்குள் மிகவும் வருந்திக்கொண்டிருந்தேன். என் வருத்தத்தைப் போக்கும் விதமாக வெகு சீக்கிரத்திலேயே வேறொரு விருந்துக்கு அழைப்பு வந்தது. இம்முறை உள்ளூர்தான். இதுவும் உயர்தர ஓட்டல்தான். அழைத்தவர் ஒரு பிரபல தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர். வெற்றிகரமாக முடிவடைந்திருந்த அவரது ஒரு நெடுந்தொடர்க் கலைஞர்களுக்கு விடைகொடுக்கும் விதமாகவும், அடுத்தத் தொடரை அலங்கரிக்கவிருந்தவர்களை வரவேற்கும் விதமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து. இந்த விருந்தில் ஒரு கை பார்த்துவிடுவது என்று கொலைவெறியுடன் புறப்பட்டேன். ஏ.சி அரங்கம். ஏராளமான பிரமுகர்கள். அன்பான நலன் விசாரிப்புகள். அப்புறம் உணவு. அதே வரிசை அணிவகுப்புகள். தமிழன் தன்னிகரற்றவன். இங்கே சைவம், அங்கே அசைவம் என்று பிரித்து வைத்திருந்தான். ஆகவே ஒரு சிக்கல் ஒழிந்தது. சிங்கப்பூரில் சாப்பிடாமல் விட்டதைச் சேர்த்து இங்கே ஒரு வழி பண்ணிவிடுவது என்று முடிவு செய்து களத்தில் இறங்கினேன்.

ஆனால் இம்முறை பிரச்சினை வேறு விதத்தில் வந்தது. ம்ஹும். அதை இன்னும் இருபது சொற்களிலெல்லாம் சொல்லி முடிக்க இயலாது. அடுத்த வாரம் சொல்கிறேன். சொகுசை வேண்டுமானால் ஒரு கட்டுரையில் எழுதிவிடலாம். சோகத்தை இரு பாகங்களாகத்தான் விவரிக்க முடியும்.

- ருசிக்கும்…

http://tamil.thehindu.com/opinion/blogs/article19479411.ece

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 33: கையேந்தி விருந்துகள்

 

 
19chmbn%20%20venki%20padam

என்ன பேசிக்கொண்டிருந்தோம்? ஆம், அந்தக் கையேந்தி விருந்து.

ரசனை மிக்க அந்தத் தயாரிப்பாளர் அன்றைய விருந்தின் மெனுவை மிகச் சிறப்பாகத் திட்டமிட்டிருந்தார். எல்லா கையேந்தி பார்ட்டிகளிலும் எப்போதும் இடம் பிடிக்கும் ஐட்டங்களாக அல்லாமல் புதுவிதமாக அவர் யோசித்திருக்கிறார் என்பது புரிந்தது.

அன்று அங்கே சூப் இல்லை. மாறாக இரண்டு இஞ்ச் உயரம் உள்ள கண்ணாடிக் குப்பிகளில் பச்சை, ஆரஞ்சு, வெளிர் மஞ்சள் நிறங்களில் மூன்று பானங்கள் இருந்தன. அதில்தான் தொடங்கவேண்டும். ஒன்று கொத்துமல்லிச் சாறு. இன்னொன்று தக்காளிச் சாறு. அந்த மஞ்சள் நிற ஜூஸ் என்னவென்று இன்றுவரை எனக்குத் தெரியாது. ஆனால், அதில் இஞ்சி இருந்தது. அது நினைவிருக்கிறது.

நான் ஒரு பீங்கான் தட்டை எடுத்துக்கொண்டேன். அணிவகுப்பு வரிசையில் நின்றுகொண்டேன். எடுத்து உண்ண உதவும் கத்தி, கபடாக்களில் தலா ஒன்று எடுத்து வைத்துக்கொண்டேன். சூப்பை எதிர்பார்த்துப் போன இடத்தில் மேற்படி கண்ணாடிக் குப்பிகள் மூன்றை எடுத்துத் தட்டில் வைத்துவிட, அது கால்வாசி இடத்தை அடைத்துக்கொண்டது. என்ன செய்வதென்று புரியவில்லை. நகர்ந்து சென்று அதைக் குடித்து முடித்துவிட்டு மீண்டும் வந்து வரிசையில் நிற்கலாம் என்றால், வரிசை மிகவும் நீளமாக இருந்தது. பார்ட்டி வரிசைகளில் பொதுவாகத் துண்டு போட்டு இடம் பிடிப்பது நாகரிகமில்லை என்பதால் கைவிளக்கேந்திய காரிகை போல அந்தக் குப்பிகள் வைத்த தட்டை அலேக்காக ஏந்தியபடியே அடுத்த இடம் நகர்ந்தேன்.

சீருடைப் பணியாளர் சட்டென்று என் தட்டில் இரண்டு வீச்சு பரோட்டாக்களை எடுத்து வைத்தார். ஒரு காலத்தில் எனக்கு ரொம்பப் பிடித்த உணவு அது. வீச்சு பரோட்டாவுக்குக் குருமாவைக் காட்டிலும் புதினா சட்னி தான் சரியான ஜோடி. சட்னியில் அதை இரண்டு நிமிடம் ஊறவைத்து உண்டால் பிரமாதமாக இருக்கும். எனவே நண்பரே, இந்த மெனுவில் சட்னி இருக்கிறதா?

அதோ இருக்கிறது என்று அடுத்த மூலையைக் காட்டினார் அந்த வெண்ணுடை வேந்தர். சரி, வரிசையில் போயே எடுத்துக்கொள்ளலாம் என்று அங்கிருந்து அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்தேன்.

இங்கே ஒரே மாதிரி நிறத்தில் நான்கைந்து காய்கறி, கூட்டு வகையறாக்கள் இருந்தன. அவற்றில் எது குருமா என்று கேட்டு, அது வேண்டாம் என்று சொல்வதற்குள் சிப்பந்தி சிகாமணி அனைத்திலும் ஒரு கரண்டி எடுத்துத் தட்டில் வைத்துவிட்டார். இப்போது தட்டில் முக்கால்வாசி இடம் நிரம்பிவிட்டது. தட்டைப் பிடித்திருந்த இடது கை வலிக்க ஆரம்பித்தது. தவிரவும் அந்தக் குப்பிகள் விழுந்துவிடுமோ என்கிற அச்சம். தட்டுக்குள்ளேயே கவிழ்ந்தால் பிரச்னை இல்லை. வீச்சு பரோட்டாவுக்குக் கொத்துமல்லி ஜூஸ் தொட்டுக்கொண்டு சாப்பிட்டுவிடலாம். வெளியே சிந்தினால்தான் கலவரம்.

வரிசையில் எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்தவர் ஒரு பிரபல நடிகை. அவர் கையில் இருந்த தட்டில் மேற்படி குப்பிகள் இல்லாததைக் கவனித்தேன். ஒருவேளை குப்பியைக் கண்ட இடத்தில் குடித்துவிட்டு வைத்திருக்க வேண்டுமோ? தெரியாமல் நான் மட்டும்தான் எடுத்துத் தட்டில் வைத்துக் கொண்டுவிட்டேனோ?

சந்தேகம் வந்ததும் பின்புறம் இருந்தவரைத் திரும்பிப் பார்த்தேன். அவர் தட்டிலும் குப்பிகள் இல்லை. இது ஏதோ திட்டமிட்ட சதி போலத் தெரிந்தது. சரி, சமாளிப்போம் என்று மேலும் நகர்ந்தபோது மூடி வைத்திருந்த மாபெரும் எவர்சில்வர் கொள்கலனை தடாலென்று திறந்தார் அங்கிருந்த பணியாளர். வந்தது பாருங்கள் ஒரு வெஜ் பிரியாணி நெடி!

எனக்கு உடனே தும்மல் வந்துவிட்டது. அது வேண்டாம் என்று சொல்லுவதற்கு வாயெடுத்து, தும்மலாக வெளியிட்டதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. என் வலது கையில் உள்ள கத்தி கபடாக்களுடன் நான் குறுக்கே நீட்டித் தடுத்ததையும் பொருட்படுத்தாமல் இரு பெரும் கரண்டிகள் அள்ளிப் போட்டார். கனம் தாங்கமாட்டாமல் என் தட்டு நடனமாட ஆரம்பித்தது.

நான் அதை வேண்டாம் என்று சொல்ல நினைத்ததன் காரணம், வரிசையில் அடுத்து இருந்த ஐட்டம் எனக்கு மிகவும் பிடித்த புதினா சாதம். அதனருகே எலுமிச்சை சாதம், தேங்காய் சாதமும் இருந்ததைக் கண்டேன். தொட்டுக்கொள்ள பொரித்த அப்பளம், சிப்ஸ் வகையறாக்கள் தவிர, கேரம் போர்ட் ஸ்டைக்கர் அளவில் ஒரு தாம்பாளம் நிறைய மசால் வடைகளை வைத்திருந்ததில் தயாரிப்பாளரின் கலையுள்ளம் புரிந்தது.

பொதுவாக இம்மாதிரி கையேந்தி விருந்துகளில் கலவை சாதங்கள் அதிகம் இராது. சாஸ்திரத்துக்கு பிரியாணிக்கு அடுத்து ஒரு சாம்பார் சாதம் மட்டும்தான் இருக்கும். எவனும் எடுக்க மாட்டான் என்று உள்ளதிலேயே சின்ன பாத்திரத்தில் கொஞ்சம் தயிர் சாதம் வைப்பார்கள். ஆனால், இந்த விருந்தில் சற்றே மாறுதலுக்கு ரசம் சாதம் இருந்தது! கவனிக்கவும். ரசம் தனியே, சாதம் தனியே அல்ல. ரசம் சாதமே. அதுவும் அன்னாசிப் பழ ரசம். தவிரவும் எனக்குப் பிடித்த குழிப் பணியாரம், எனக்குப் பிடித்த ஆனியன் ஊத்தப்பம், எனக்குப் பிடித்த முந்திரி அல்வா, எனக்குப் பிடித்த ரசமலாய் - ரொம்ப முக்கியம் என் உயிரனைய இட்லி உப்புமா!

ஐயோ அதைப் பற்றித் தனியே ஒரு காவியமே எழுதலாம். எனக்குத் தொண்ணூற்றொன்பது வருஷ லீஸூக்குத் தன் பெண்ணைக் கொடுத்த பெண்மணி ஒரு மாபெரும் இட்லி உப்புமாக் கலைஞர். இட்லி மீந்தால் செய்வதல்ல அது. தனியே ஒரு பிரத்தியேகப் பதத்தில் இட்லி வார்த்துச் செய்வது. விட்டால் நான் அதை மட்டுமே கிலோ கணக்கில் சாப்பிடுவேன்.

ஆனால், என்ன துரதிருஷ்டம்? வரிசையில் அதை நெருங்குவதற்கு முன்னால் இப்படி வெஜிடபிள் பிரியாணியால் இடத்தை அடைத்துவிட்டானே புண்ணியவான்?

சரி, அடுத்த ரவுண்டில் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு அந்த ரவுண்டுக்கு மேலும் சில ஐட்டங்களுடன் வரிசையை விட்டு நகர்ந்து வந்தேன். பிரச்சினை இங்கே தான் ஆரம்பித்தது.

நான் வருவதற்குள் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டிருந்தன. பலபேர் பேசிக்கொண்டே நின்றபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். எனக்கோ தட்டைப் பிடிக்க ஒரு கை போதவில்லை. இரண்டு கைகளாலும் பிடித்தால் பிறகு எப்படிச் சாப்பிடுவது? பதற்றமாகிவிட்டேன். சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே இருந்தேன். யாராவது எழுந்தால் ஓடிப் போய் ஒரு நாற்காலியைப் பிடித்துவிடுகிற வெறி. ஆனால், யாரும் எழுந்துகொள்வதாகவே தெரியவில்லை.

இதற்கிடையில் நின்றவாக்கில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அத்தனை பேரின் தட்டுகளையும் கவனித்தேன். ஒருவர் தட்டிலும் அந்தக் குப்பிகள் இல்லை. சனியன், அதை முதலில் குடித்துக் கவிழ்த்துவிட வேண்டும் என்று எண்ணி முதல் குப்பியை எடுத்தேன். என்னமோ பெரிய ஆசாரசீலன் மாதிரி உதட்டில் படாமல் உயர்த்திக் கொட்டப் பார்க்க, விளிம்பற்ற அந்தக் குப்பி கால் வாசி ஜூஸை என் வாயிலும் முக்கால் வாசி ஜூஸை என் சட்டையிலும் கொண்டு சேர்த்தது. பதறிப் போனேன். அந்தப் பதற்றத்தில் கையில் இருந்த கனத்த தட்டு ஆட, மீதமிருந்த இரு குப்பிகளும் சிந்தின. தட்டே வண்ணமயமாகிவிட்டது. இப் போது இதைச் சாப்பிடுவதா வேண் டாமா?

அன்று நான் பெற்ற பாடங்கள் இரண்டு.

1. படு பங்கரைகள் கையேந்தி விருந்துகளைத் தவிர்த்துவிட வேண் டும்.

2. தவிர்க்க முடியாதபட்சத்தில் இரண்டு இட்லியாவது சாப்பிட்டுவிட்டு விருந்துக்குப் போகவேண்டும்.

- ருசிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/article19522854.ece

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 34: பிடிக்காத வடகறி

 

 
rusi

என் சிறு வயதுகளில் நான் மிக அதிகம் வெறுத்த பண்டமாக வடைகறி ஏன் இருந்தது என்பதைச் சொல்வதற்கு முன்னால், ராமசாமி ஐயங்கார் எனக்குச் செய்த துரோகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். இந்த ராமசாமி ஐயங்காரை உங்களுக்குத் தெரியாது.

20-ம் நூற்றாண்டின் 80-வது வருடங்கள் வரைக்கும் சென்னை சைதாப்பேட்டையில் இவர் ஒரு முக்கியப் புள்ளி. தொளதொளத்த ஜிப்பாவும் எப்போதும் தாளமிடும் விரல்களும் பட்டணம் பொடி வாசனையுமாகப் பெருமாள் கோயில் தெருவில் அவரைக் காணலாம். வீட்டு வாசலில் ஒரு சாய்வு நாற்காலி போட்டு அமர்ந்திருப்பார். போகிற வருகிறவர்களை எல்லாம் இழுத்து வைத்து உலக விஷயம் பேசுவார். பழங்கால நினைவுகளையெல்லாம் சுருக்கம் நீக்கி விரித்து வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் விவரித்துக்கொண்டிருப்பார். அப்படி அவர் சொன்ன கதைகளுள் எனக்கு இன்றும் மறக்காத ஒரு கதை, அவர் பாரதியாருக்கு பக்கோடா வாங்கிக் கொடுத்தது.பாரதியாரின் நண்பர் பரலி சு. நெல்லையப்பர் சைதாப்பேட்டைக்காரர். ராமசாமி ஐயங்காரின் இளவயதில் அவருக்கும் தெரிந்தவராக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதனாலேயே பாரதியாரையும் அவருக்குத் தெரிந்திருக்கும் என்று நம்ப எனக்குச் சிரமமாக இருந்தது.''டேய், நான் சத்தியம் பேசுறவண்டா! கவிஞர், நெல்லையப்பன பாக்க வருவாரு இங்க. அப்பத்தான் எனக்கும் பழக்கம். சீனன் கடை பக்கோடான்னா அவருக்கு ரொம்பப் பிடிக்கும். எத்தன தடவ நான் கூட்டிட்டுப் போய் வாங்கிக் குடுத்திருக்கேன் தெரியுமா? நெல்லையப்பன் இருந்தா சொல்லுவான். பாவி, அவனும் செத்துத் தொலைச்சிட்டான்!’’பாரதியாரும் செத்துப் போய், பரலி நெல்லையப்பரும் செத்துப் போய், ராமசாமி ஐயங்காரும் செத்துப் போய்விட்ட காலத்தில் இதை யாரிடம் போய் விசாரிப்பது? பாரதி சரித்திரம் எழுதிய வ.ராவோ, சீனி விசுவநாதனோ மேற்படி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவத்தை எங்கும் குறிப்பிட்டிருக்கவில்லை என்பதால் அதை ஒரு மாய யதார்த்தச் சம்பவம் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.ஆனால் ஒன்று சொல்லவேண்டும். அவர் பாரதியாருக்கு பக்கோடா வாங்கிக் கொடுத்தது வேண்டுமானால் சந்தேகத்துக்கிடமான விஷயமே தவிர, என் தம்பிக்கு வாரம்தோறும் வடைகறி வாங்கிக் கொடுத்தது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அவர் சைதாப்பேட்டை மாரி ஓட்டலுக்கு வாழ்நாள் சந்தா செலுத்தியிருந்த மனிதர். நினைத்துக்கொண்டால் கிளம்பிவிடுவார். காலைப் பொழுதென்றால் இரண்டு இட்லி வடைகறி. மாலை என்றால் ஆனியன் ரோஸ்ட், வடைகறி. இரவென்றால் சப்பாத்தி வடைகறி. மெயின் டிஷ் மாறுமே தவிர, சைடு டிஷ் மாறாது. அவரது ரத்தமானது சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் தவிர, வடைகறி அணுக்களாலும் ஆனது.நிற்க. அது இங்கே முக்கியமில்லை. என் தம்பிக்கு அவர் வடைகறி ருசியை ஊட்டியதும் முக்கியமில்லை. அவனைப் போலவே நானும் அவருக்கு ஒரு பேரன் என்றபோதும் ஒருநாளும் அவர் என்னை மாரி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று வடைகறி வாங்கித் தந்ததில்லை என்பதே முக்கியம்.

விரோதம் அகன்றது

ராமசாமி ஐயங்காருக்கு மொத்தமாக எட்டு வாரிசுகளும் சுமார் இருபது இருபத்தி ஐந்து பேரன் பேத்திகளும் உண்டு. ஆனால் என் தம்பிக்கு மட்டும்தான் வடைகறி யோகம் இருந்தது. மாரி ஓட்டல் வடைகறி. அதைச் சாப்பிட்டுவிட்டு வந்து அதன் ருசியைப் பற்றி அவன் விவரிக்கும்போதெல்லாம் எனக்கு ராமசாமி ஐயங்கார் மீது கட்டுக்கடங்காத வெறுப்பும் கோபமும் வரும். சகோதரர்களுக்கிடையே கேவலம் ஒரு வடைகறியை வைத்துப் பிரிவினை வளர்க்கிற மனிதர் என்றே அந்நாளில் அவரை நான் நினைத்தேன்.பிறகு புரிந்தது. அவரது பொருளாதார நிலைமைக்கு அன்று ஒரு பேரனை மகிழ்விக்கும் சக்தி மட்டுமே இருந்திருக்கிறது. உள்ளவர்களிலேயே சிறியவனாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இது புரிந்த பிறகுதான் எனக்கு என் தாத்தா மீதிருந்த கோபமும், வடைகறி மீதிருந்த விரோதமும் அகன்றன. ஏதோ ஒரு நல்ல நாளில் நானும் அந்த ஓட்டலுக்குச் சென்று வடைகறி ஆர்டர் செய்து உண்டு பார்த்தேன். சந்தேகமில்லை. ராமசாமி ஐயங்கார் ஒரு சிறந்த ரசனைக்காரர்தான். சென்னை நகரின் புராதன, பாரம்பரிய உணவினங்களுள் வடைகறியை அடித்துக்கொள்ள இன்னொன்றில்லை. குறிப்பாக மாரி ஓட்டல் வடைகறி.வடைகறி என்றால் மீந்த வடையில் செய்வது என்பது ரசனையற்றவர்களின் வழிமுறை. உண்மையில் வடைகறி என்பது வடையைக் காட்டிலும் அக்கறை கோரும் பதார்த்தம். கடலைப் பருப்பு மட்டுமல்ல; அதை அரைக்கும்போது பிடி பட்டாணி மாவு சேர்த்து அரைக்க வேண்டும். வடைகறியின் ஒரிஜினல் ருசி என்பது கடலை - பட்டாணி மாவுக் கலவைக்குள் அடங்கியிருப்பது. அந்த விகிதாசாரம் மிகச் சில சமையல் கலைஞர்களுக்கு மட்டுமே தெரிந்தது. திருப்பதி லட்டு ஃபார்முலா மாதிரி.

மகத்தான துரோகம்

இப்போதெல்லாம் உணவகங்களில் வடைகறிக்குப் பொரித்த வடை பயன்படுத்தப்படுவதில்லை. மாவை பக்கோடா பிடிப்பது போல வடிவற்ற உருண்டையாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுத்துவிடுகிறார்கள். பிறகு வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு வகையறாக்களைப் போட்டு வதக்கி, இதை அதன்மீது கொட்டிக் கவிழ்த்து சேர்த்துக் கிளறி, வாசனைக்கு சோம்பு, பட்டை, இலவங்கம் சேர்த்தால் முடிந்தது என்று சொல்லிவிடுகிறார்கள். இது மகா பாவம். சென்னையின் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான வடைகறிக்குச் செய்யும் மகத்தான துரோகம்.அரைத்த கடலைப் பருப்பு - பட்டாணி மாவுக் கலவையை சிறு சிறு போண்டாக்களாக எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுப்பதே உண்மையான வடைகறி பதத்துக்கு உதவும். முக்கால்வாசி வெந்ததுமே எடுத்துவிட வேண்டும் என்பது முக்கியம். அதே போல, இந்த முக்கால் வெந்த போண்டாக்களை மசாலாக் கலவையில் போட்டுக் கிளறும்போது, சோம்பு வாசனையை மீறி வடை வாசனையொன்று காற்று வழி நாசியில் சென்று ஏறும். அந்தக் கணத்தில் கிளறுவதை நிறுத்திவிட்டு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.நேற்றைய 'தி இந்து’ தமிழில் இந்த வடைகறியைப் பற்றி யாரோ ஒருவரி சொல்லியிருந்ததைக் கண்டதும் இந்த நினைப்பெல்லாம் அடக்க மாட்டாமல் பீறிட்டுவிட்டது.

நினைவோ ஒரு பறவை

இந்தக் கட்டுரையில் முதலில் குறிப்பிட்ட ராமசாமி ஐயங்கார் செத்துப் போய் பல வருடங்களாகிவிட்டன. சைதாப்பேட்டையோடு எனக்கிருந்த உறவு அதன்பின் மெல்ல மெல்ல நைந்துபோகத் தொடங்கியது. கடந்த பத்துப் பதினைந்து வருடங்களில் நாலைந்து முறை போயிருப்பேனோ என்னமோ. ஆனால் அந்த சைதாப்பேட்டை வடைகறி மட்டும் நினைவோடு இணைந்துவிட்ட ஒன்றாகிப் போனது.நான் புருஷ லட்சண உத்தியோகம் என்று ஒன்று பார்த்துக்கொண்டிருந்த காலத்தில் சைதாப்பேட்டையில் எனக்கு சம்பத் என்ற நண்பர் ஒருவர் இருந்தார். என்னோடு பணியாற்றிக்கொண்டிருந்தவர். அவரது புண்ணியத்தில் சில நாள் எனக்கு மாரி ஓட்டல் வடைகறி கிடைத்திருக்கிறது. மயிலாப்பூர் மாமி மெஸ்ஸில் இருந்து பொங்கல் வாங்கி வைத்துக்கொண்டு மாரி ஓட்டல் வடைகறியோடு சேர்த்து ருசித்திருக்கிறேன். ஒரு சமயம் ரத்னா கஃபே வடைகறிக்கும் சைதாப்பேட்டை வடைகறிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டறிய இரண்டையும் ஒன்றாக வாங்கி அடுத்தடுத்து உண்டு பார்த்து இரண்டு நாள் இந்திரியக் கதறல் உற்சவம் நடத்தியிருக்கிறேன்.காலப் போக்கில் என் ருசியும் ரசனைகளும் இடம் பெயர்ந்து எங்கெங்கோ நகர்ந்துவிட்டன. இப்போது வடைகறி மீது பெரிய பிரியமெல்லாம் இல்லை. ஆனால் நினைக்கும்போது நாவூறும் பண்டமாகத்தான் இன்னும் அது இருக்கிறது.

ருசிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/article19565548.ece

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 35: ‘சமைத்துப் பார்!’

02ChRELpaaraa%20aart

திடீரென்று ஒருநாள் சமைத்துப் பார்த்தால் என்னவென்று தோன்றியது. ருசி இயலில் சாப்பிடுவது என்ற ஒன்று மட்டுமே அதுவரை நான் அறிந்தது. சமைப்பது என்றொரு முன் தயாரிப்பு உண்டு என்று தெரியும். ஆனால், அதெல்லாம் கலைஞனின் பணியல்ல என்று சாய்ஸில் விட்டிருந்தேன். எம்பெருமான் என்ன நினைத்தானோ, போன வருஷம் இதே செப்டம்பரில் திருப்பூரில் நடைபெற்ற பேலியோ மாநாட்டுக்கு என்னை அழைத்துச் சென்று ஒருநாள் பூரா தங்கவைத்தான். அங்கே யாரும் எனக்கு சமைக்கச் சொல்லிக் கொடுக்கவில்லைதான். ஆனாலும் ‘சமைத்துப் பார்!’ என்று மானசீக மீனாட்சியம்மாள் உத்தரவிட்டதன்பேரில், திரும்பி வந்ததும் என் திருப்பணிகளை ஆரம்பித்தேன்.

 

வெளிப்பாட்டு வடிவம்

இந்த கவிதை எழுதுவது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆயிரம் பக்க அளவில் அல்லது ஆயிரம் ரூபாய் அளவில் ஹார்ட் பவுண்டு நாவல் ரிலீஸ் செய்வது, ஹார்பிக் போட்டு டாய்லெட் கழுவுவது, வீடு பெருக்கி சுத்தம் செய்வது, பாத்திரம் தேய்ப்பது, சுருக்கம் இல்லாமல் துணி மடிப்பது, பிழையில்லாமல் டைப் அடிப்பது, மேலே சிந்திக்கொள்ளாமல் காபி குடிப்பது, பிசிறில்லாமல், ரத்த சேதாரம் இல்லாமல் சவரம் செய்து கொள்வது, சொத்தை இல்லாமல் கறிகாய் வாங்குவது.. இதெல்லாம் கலையின் பல்வேறு எளிய வெளிப்பாட்டு வடிவங்கள். சமைப்பதும் இவற்றுள் ஒன்று.

ஆனால், நமது மங்கையர் திலகங்கள் அதை ஒரு ராக்கெட் விஞ்ஞானம் போன்ற சிரம சாத்திய சாதனையாகவே உணரவைத்து, அமைதி காக்க வைத்திருக்கிறார்கள். இது பல நூற்றாண்டுக் காலமாக நடந்து வருவது. வீட்டுச் சாப்பாட்டில் என்னவாவது ஒரு சிறு குறைபாடு சொல்லிப் பாருங்கள்! உடனே ஆழிப் பேரலை மாதிரி ஒரு தாக்குதல் எழுந்து வரும். ‘பண்ணித்தான் பாரேன். அப்பத் தெரியும் லச்சணம்!’

‘இது ஏதடா, முன்னப்பின்ன அறிமுகமில்லாத இட்சிணியிடம் சிக்கி நசுங்கிவிடப் போகிறோமே’ என்று பயந்து பதுங்கி, ‘நான் அதுக்கு சொல்லலம்மா..’ என்று ஆரம்பித்து சமரச சன்மார்க்க சங்கத்துக்கு சந்தா கட்டிவிடுவோம். ஆனால், அத்தனை அச்சப்படத் தேவையில்லை என்று தோன்றியது. இலக்கியத் தரமாக சமைப்பது ஒன்றும் அத்தனை பாடுபடுத்தாது என்று உள்ளுணர்வு சொன்னது. அட, படுதோல்வி கண்டால்தான் என்ன? மாபெரும் கலைஞர்களின் தோல்விப் படைப்புகளும் சரித்திரத்தில் தொடர்ந்து செருப்படி வாங்கியே சாகாவரம் பெறுவதில்லையா? சங்கதி என்னவெனில், சமைக்கக் கற்பது இரண்டாம் பட்சம். தொடங்குவதற்கு முன்னாலேயே நம்மை ஒரு கலைஞனாக உணரவேண்டும் என்பதே அடிப்படை.

நான் பிறப்பதற்கு ஏழரை நாள் முன்னாலிருந்தே அப்படித்தான் என்பதால் மேற்படி திடீர் முடிவும், விளைவான முயற்சிகளும் எனக்கு சிரமமாக இருக்கவில்லை.

 

தரிசனம் அவசியம்

ஒரு சமையல், சுமாருக்குச் சற்று மேம்பட்ட தரத்திலாவது அமைய வேண்டுமானால் அதற்குப் பின்வரும் குறைந்தபட்சத் தகுதிகள் கலைஞனுக்கு இருக்க வேண்டும்:

1. காய்கறிகளை ஒரு சென்டிமீட்டர் தொடங்கி, முக்கால் இன்ச் வரையிலான தேவைப்படும் அளவுகளில் சரியாக வெட்டத் தெரிந்திருப்பது. பீன்ஸை நீங்கள் பத்தை பத்தையாக நறுக்கினாலோ, முருங்கைக் காயைப் பொடிப்பொடியாகத் திருத்தினாலோ முடிந்தது கதை.

2. அடிப்படை தாளிப்புப் பொருட்கள் நான்கு வகைப்படும். அவையாவன: கடுகு, சீரகம், கடலை / உளுத்தம்பருப்பு, பெருங்காயம். எல்லா பதார்த்தங்களுக்கும் இந்த நான்கையும் கொட்டிக் கிளறுவது கூடாது. எதற்கு எது போதும், எவ்வளவு போதும் என்று உள்ளுணர்வுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

3. பச்சை மிளகாய், சிவப்பு குண்டு மிளகாய், இஞ்சி. இந்த மூன்றும்தான் காரத்தின் அதிதேவதைகள். இவற்றை, சம்சார வாழ்வைக் கையாள்வது போலவே லாகவமாகக் கையாளத் தெரிந்திருப்பது அவசியம்.

4. உப்பு. ருசியின் அதிதேவதை இது. மூக்குப்பொடி போடுகிறவர்களை இதற்கு முன்னுதாரணமாகக் கொள்ளவும். இரு விரல்களைப் பயன்படுத்தி அவர்கள் டப்பாவுக்குள் இருந்து எடுக்கிற அளவு ரொம்ப முக்கியம். பொடி போடுவதன் கலைத்தரம் என்பது லேசாகக் கண் கலங்குவதில் தெரியும். அதே மாதிரிதான் சமைக்கும்போது உப்பை எடுப்பதும். உங்களுக்கு ஸ்பூன் வசதியா, கையால் எடுப்பது வசதியா என்பது உங்கள் சவுகரியம். அது கையால் எழுதுவது, கம்ப்யூட்டரில் எழுதுவதைப் போன்றது தான். ஆனால், எடுக்கிற கணத்தில் அளவை மனமானது தீர்மானிக்க வேண்டும். இதற்கு கவனக் குவிப்பு அவசியம். தரிசனம் அவசியம். தியானம் முக்கியம். சொற்களைக் காதில் போட்டுத் தட்டிப்பார்த்து எழுதுவேன் என்று லா.ச.ரா. ஒரு சமயம் சொன்னார். அந்த மாதிரி உப்பை சிந்தனையில் இட்டு அளவு பார்த்த பின்பே கொதிபடு பொருளில் சேர்க்க வேண்டும். (இங்கேதான் கலைஞனுக்கு வேலை.)

5. சமைப்பதன் ஆகப்பெரிய சூட்சுமம், கரண்டி கையாள்வது. எதை எவ்வளவு கிளற வேண்டும், எத்தனை நேரம் வதக்க, வறுக்க வேண்டும் என்று அறிந்திருப்பது. ஒரு கத்திரிக்காய் பொரியலைப் போட்டுப் புரட்டிக்கொண்டே இருந்தால் அது முனியதரன் பொங்கல் பதத்துக்குப் போய் விடும். ரசம் வைக்கிறபோது கரண்டிப் பயன்பாடே இருக்கக்கூடாது. இதுவே ஒரு உப்புமாவையோ, கேசரியையோ போதிய அளவுக்குக் கிளறாது விட்டால் உண்ண நாராசமாக இருக்கும்.

6. ஆர்டரிங் அண்ட் ஃபார்மட்டிங். எதற்குப் பின் எது என்கிற சூட்சுமம். சப்ஜெக்ட் வாரியாகப் புத்தக அலமாரியை அடுக்கி ஒழுங்கு செய்வது போன்றது இது. எல்லா உணவுக்கும் உப்பு, காரம், புளிப்பு, வாசனை தேவைப்படும். இதற்கான சாமக்கிரியைகளை எந்த வரிசையில் சேர்ப்பது என்பது ரொம்ப முக்கியம்.

7. மேற்படி கலைக்கூறுகள் சற்று முன்னப்பின்ன இருக்குமானால், சமைத்து முடித்ததும் செய்கிற அலங்கார ஜோடனையில் அதை மறைத்துவிடுகிற திறமை வேண்டும்.

 

ருசி வேட்கை

மேற்படி ஏழு பொருத்தங்களும் எனக்கு ஏராளமாக இருப்பதாக என் உள்ளுணர்வு சொன்னபடியால், சமைக்கலாம் என்று முடிவு செய்து களத்தில் இறங்கினேன். இந்தத் தொடரின் ஆரம்ப அத்தியாயம் ஒன்றில் சொன்னபடி, கடைக்குப் போய் என் பிரத்யேகக் கத்தி கபடாக்களையும், இன்றுவரை என்றுமே அணியாத ஏப்ரன் என்கிற மேல் வஸ்திரத்தையும் வாங்கி வந்து வைத்துவிட்டு ஒரு நல்ல நாள் பார்த்து என் பரிசோதனைகளை ஆரம்பித்தேன்.

இந்தத் தொடரின் அடுத்த ஓரிரு அத்தியாயங்களில் என் சமையல் முயற்சிகளைச் சற்று விரிவாக விவரிக்க இருக்கிறேன். கொஞ்சம் களேபரமாக இருந்தாலும் ருசி வேட்கை ஒரு மனுஷனை எம்மாதிரியான இசகுபிசகு எல்லைகளுக்கு இட்டுச் செல்லும் என்பதைப் புரிந்துகொள்ள அது கொஞ்சம் உதவக்கூடும்.

உணவின் ருசி என்பது வாழ்வின் ருசியை நிகர்த்ததுதான். ஆனால், சமைப்பதன் ருசி அப்படியல்ல. அது வாழ்வின் குரூரமான கூறுகளை மட்டுமே தேடிப் பொறுக்கிக் கோக்கிற கோக்குமாக்குத்தனத்தை நிகர்த்தது.

இது சமைக்க ஆரம்பித்த பிறகுதான் எனக்குப் புரிந்தது!

- ருசிக்கலாம்…

http://tamil.thehindu.com/opinion/blogs/article19608095.ece

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 36: பனீரில் ஓர் எளிய உணவு

 

 
09ChRELRusiyiyal%2036

நீரும் நெருப்பும் இன்றிச் சமைப்பதில் வல்லவனாக அறியப்பட்ட நளன், தனது அடுத்தடுத்த பிறப்புகளில் என்னவாக இருந்தான் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஜான் லெனன் தனது உலகப் புகழ்பெற்ற ‘இமேஜின்’ ஆல்பத்தை வெளியிட்ட தினத்தன்று நிகழ்ந்த அவனது பிறப்பொன்றில் அவன் பா.ராகவனாக அறியப்படுவான் என்று சுவேத வராக கல்ப காலத் தொடக்கத்தில் செதுக்கப்பட்ட குகைக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது - என்றால் உடனே சிரிக்கப்படாது. இப்படியெல்லாம் நினைத்துக்கொண்டுதான் நான் சமையல் களத்தில் இறங்க ஆயத்தமானேன்.

சும்மா நானும் சமைத்தேன் என்று என்னத்தையாவது கிண்டிக் கிளறி வைப்பதில் என்ன பயன்? சராசரிகளின் உற்பத்திகளுக்கும் ஒரு கலைஞனின் படைப்புக்கும் குறைந்த பட்சம் ஐந்தரை வித்தியாசங்களாவது அவசியம் தேவை. இல்லாவிட்டால் சரித்திரத்தின் சமச்சீர் கல்விப் புத்தகங்களில்கூட இடம் கிடைக்காது போய்விடும்.

நான் சமைக்கிறேன் என்று சொன்னதும், எனது உள்துறை மற்றும் வீட்டுவசதித் துறை அமைச்சர் மிகவும் கலவரமானார். ‘சமையல் எத்தனை கண்ணராவியாக இருந்தாலும் பரவாயில்லை; ஆனால், கிச்சனை சர்வ நாசப்படுத்திவிடுவாயே’ என்கிற அவரது விசாரம் என்னைத் தீவிரமாகச் சீண்டியது. ஒரு பயிற்சிநிலைக் கலைஞனாகத்தான் நான் சமையல் கட்டுக்குள் நுழைய இருந்தேன் என்றபோதும், மகத்தான சாதனைகள் இதில் எனக்கு எளிதாகவே இருக்கும் என்று தோன்றியது. ஆர்மோனியம் வாசிப்பவனுக்கு சிந்தசைஸர் எளிது, பியானோ எளிது. புல்லாங்குழல்காரனுக்கு க்ளாரினட் எளிது. ஒரு மிருதங்க வித்வானால் ஒப்பேற்றும் அளவுக்கேனும் தபேலா வாசிக்க முடியாதா! கலை விரல் நுனியில் இருந்தால் தகர டப்பாவில்கூடத் தாளம் தப்பாது வாசித்துவிட முடியும்.

இப்படியெல்லாம் நினைத்துக்கொண்டேனே தவிர, சொல்லவில்லை. எனது முதல் முயற்சியின் மகத்தான வெற்றிக்குப் பிறகு பறைசாற்றிக்கொள்ள முடிவு செய்து வேலையை ஆரம்பித்தேன்.

நான் திட்டமிட்டிருந்தது பனீரில் ஓர் எளிய உணவு. மிக நீண்டதொரு இலக்கியப் பயணத்தை ஒரு பக்கச் சிறுகதையில் ஆரம்பிப்பதுபோல!

என் நோக்கம் இதுதான். ஒரு பொரியலைப் போன்ற தோற்றத்தில், சிறப்பான சிற்றுண்டித் தரத்தில், முழு உணவாக அது இருக்க வேண்டும். எடுத்த உடனே நாலைந்து ரகங்கள் காட்டி அச்சுறுத்த விரும்பாததன் காரணம், நமக்கு அத்தனை சாமர்த்தியம் கூடுமா என்கிற ஐயம் மட்டுமே. ஆனால் இதை வெளியே சொல்ல முடியாதல்லவா? எனவே நாலைந்து உணவின் தேவைகளை ஒரே உணவுக்குள் அடக்க, குறுகத் தரித்த குறள் வழியைப் பின்பற்ற முடிவு செய்தேன்.

பிளாஸ்டிக்கால் ஆன நீண்ட அட்டை ஒன்றை எடுத்து வைத்துக்கொண்டு அதில் ஒரு முழு வெங்காயம், தக்காளி, குடை மிளகாயை நறுக்கத் தொடங்கினேன்.

காய்கறிகளை நறுக்குவதில் வெளிப்படுகிற நேர்த்திதான் ஒரு தரமான சமையலின் முதல் வெற்றி சூத்திரமாகிறது என்பது என் எண்ணம். எனவே, ஒரு குகைச் சிற்ப வல்லுநரின் தீவிர நேர்த்தியுடன் நறுக்கத் தொடங்கினேன். ஆனால், வெங்காயம் ஒரு வில்லன். மேலுக்குத் தொட்டுப் பார்க்க மொழுங்கென்று கன்னம் போலிருந்தாலும் கத்தியை வைத்தாலே கந்தரகோலமாகிவிடுகிறது.

அடக்கடவுளே.. இதென்ன விபரீதம்! என்னால் ஏன் கத்தியை வெங்காயத்தின்மீது வைத்து ஸ்கேல் பிடித்த நேர்த்தியில் ஒரு கோடு போட முடியவில்லை? நாலைந்து தரம் இழுத்துப் பார்த்தும் கத்தியானது கோணிக்கொண்டு எங்கோ சென்றது. நான் நறுக்கிய லட்சணம் எனக்கே சகிக்கவில்லை.

என் மனைவி வெங்காயம் நறுக்கும்போது அருகே அமர்ந்து பார்த்திருக்கிறேன். அவரது பார்வை வெங்காயத்தின் மீது இருக்காது. எதிரே இருக்கும் என்னைத்தான் பார்ப்பார். பெரும்பாலும் குற்றப்பத்திரிகை வாசிக்கிற போலீஸ்காரப் பார்வையும் மொழியும்தான் அதில் தென்படும் என்றாலும், குற்றச்சாட்டுகளில் அவர் காட்டுகிற அழுத்தமும் தீர்மானமும் வெங்காயம் நறுக்கும் கரங்களிலும் இருக்கும். ‘வறக் வறக்’ என்று நறுக்கித் தள்ளும் வேகத்தில் வையம் தகளியாய், வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்கொளியாய் அவரது விழிகள் சுடர்விடும். எனது பிழைகளைச் சுட்டிக்காட்டி முடிப்பதற்கு முன்னால் வெங்காயமானது நறுக்கப்பட்டிருக்கும். ஒரு மில்லி மீட்டர் பிசகும் இல்லாமல் அனைத்து இழைகளும் ஒரே அளவில், ஒரே உயர அகலத்தில் வந்து விழுந்திருக்கும்.

ஒருவேளை யாரையாவது கரித்துக்கொட்டிக்கொண்டே நறுக்கினால்தான், நறுக்கல் பதம் நன்கு வரும்போலிருக்கிறது என்று எண்ணிய கணத்தில், தொலைக்காட்சியில் நான் அவ்வப்போது பார்க்க நேரிடும் வெங்கடேஷ் பட் நினைவுக்கு வந்தார்.

சமகாலத்தில் சமையல் கலையில் யாரையாவது எனது போட்டியாளராகக் கொள்ளவேண்டும் என்றால் அது அவராகத்தான் இருக்க வேண்டும் என்று எப்போதும் எண்ணிக்கொள்வேன்.

தோழர் வெங்கடேஷ் பட், காய் நறுக்கும் கலையில் என் மனைவியின் நேரெதிர் துருவவாசி. சும்மாவேனும் சிரித்துக்கொண்டு, ஏதாவது ஜோக்கடித்துக்கொண்டு, தன் கலை நேர்த்தியைத் தானே வியந்துகொண்டு, சர்வ அலட்சியமாக அவர் நறுக்கிக் கடாசும் வித்தையைக் கண்கொட்டாமல் பார்த்து ரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு.

நான் அவரைப் போலவும் முயற்சி செய்து பார்த்தேன். என்னால் கரித்துக்கொட்டவும் முடிந்தது, ஜோக்கடிக்கவும் முடிந்ததே தவிர, வெங்காயம் மட்டும் ஒழுங்காக நறுக்க வரவில்லை. சட்டென்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். ஒரு சிற்பியாக என்னை ஏன் நான் கருதிக்கொள்ள வேண்டும்? ஒரு நவீன ஓவியனின் லாகவத்தில் எனது வெளிப்பாட்டு முறையை அமைத்துக்கொள்வதே நல்லது என்று தோன்றியது.

அதுதான் தரிசனம் என்பது! அடுத்த கணம் எனது கரங்கள் களிநடம் புரியத் தொடங்கின. ஒரு கொத்து பரோட்டா மாஸ்டரின் லாகவத்தில் வெங்காயத்தைக் குத்திக் குதறி உருவற்ற பெருவெளியில் பிடித்துத் தள்ளினேன். பார்த்துக்கொண்டிருந்த என் பத்தினி தெய்வத்துக்கு பயம் வந்துவிட்டது. அந்த ஒரு வெங்காயத்துடன் நான் நிகழ்த்திய துவந்த யுத்தத்தின் இறுதியில் வெற்றி எனக்கே என்றாலும் என் தலைமுடி மூஞ்சியெல்லாம் எண் திசையும் சிதறி, கண்முழி வெளியே வந்து, நாக்கு தள்ளிவிட்டிருந்தது.

எனக்கு என்ன ஆகிவிட்டது என்று அவர் கேட்க வாயெடுத்த சமயம், நான் அடுத்து தக்காளியை எடுத்திருந்தேன். மென்மையும் வழவழப்பும் வாளிப்பும் மிக்க பழம். இதில் கத்தியை வைப்பது கலையாகுமா? ஒரு கலைஞன் அதைச் செய்வானா? அப்புறம் அவன் எப்படிக் கலைஞனாக இருக்க முடியும்? மென்மையை ஆராதிப்பதல்லவா கலை மனம் விரும்பக்கூடியது?

யோசித்தேன். ம்ஹும். நான் தக்காளியை நறுக்கப் போவதில்லை என்று அறிவித்தேன்.

பிறகு?

மனத்துக்குள் ஒரு திட்டம் உதித்திருந்தது. சரி, பார்க்கலாம் என்று குடை மிளகாயைக் கொஞ்சம் போல் கீறி, பற்பல துண்டுகளாக்கிக் கொண்டு அடுப்படிக்கு வந்தேன். தேவை ஒரு வாணலி. தாளிக்க நாலு சாமக்கிரியைகள். ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி அடுப்பில் ஏற்றினேன். அது கொதிக்கத் தொடங்கிய நேரம் தக்காளியைத் தூக்கி அதில் போட்டேன். அடுப்பின் இன்னொரு பிரிவில் வாணலியை ஏற்றி இரண்டு ஸ்பூன் நெய் விட்டேன். முன்னதாக ஃப்ரிட்ஜில் இருந்து பனீர் பாக்கெட்டை எடுத்து வெளியே வைத்திருந்தேன். தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் பெண்கள் எப்படித்தான் பனீரை அளந்த சதுரத் துண்டுகளாக வெட்டுகிறார்களோ தெரியவில்லை. அது என்ன மைதா மாவு கேக்கா? எதற்கு அங்கே ஒரு அலங்காரம்? ஒரு படைப்பில் அலங்காரம் என்பது இலைமறை காயாக இடைபோலத் தெரியவேண்டுமே தவிர, இந்தா பார் நான் இருக்கிறேன் என்று கழட்டிக் கடாசிக் காட்டக்கூடாது.

நிற்க. இது நீண்ட கதை. அந்தப் பகுதியை அடுத்த வாரம் சொல்கிறேன். காத்திருப்பது உமது தலைவிதி.

- ருசிக்கலாம்...

http://tamil.thehindu.com/opinion/blogs/article19649422.ece

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

**

37-ருசியியல் சில குறிப்புகள்!

taste_3108367d.jpg

ஒரு மனிதன் எதற்கெல்லாம் கவலைப்படுவான் என்பதற்குக் கணக்கே கிடையாது. ஒவ்வொருத்தனது பிரத்தியேகக் கவலையானது அடுத்தவருக்கு சமயத்தில் வினோதமாக இருக்கும். புரியாது. கிறுக்குப்பயல் என்று நினைத்துவிடுவார்கள். இதெல்லாம் கருதிக் கருதிக் கவலைப்படுகிற ஜென்மம் என்று சொல்லிவிட்டுக் கடந்துவிடுகிற கெட்ட பேருலகில் வசிக்கவே நாம் விதிக்கப்பட்டிருக்கிறோம். என்ன செய்ய? வாழ்ந்துதான் தீரவேண்டும்.

இந்தக் கவலையைக் கேளுங்கள். நான் எழுத்தூழியம் செய்கிற ஜாதி. இது உங்களுக்குத் தெரியும். என் தலைமுறையிலும் சரி, எனக்கு முந்தைய தலைமுறையிலும் சரி. இந்தத் துறையில் விற்பன்னர்களாக இருக்கும் பலபேர் சமைப்பதில் ஆர்வமும் தீவிரமும் திறமையும் கொண்டவர்கள். வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறவர்கள். ஒரு சாதாரண மாடர்ன் பிரெட்டில் என்னென்ன விதமான பலகாரங்கள் செய்ய முடியும் என்பது குறித்து ஜெயமோகன் ஒரு காவியமே எழுதியிருக்கிறார். சமைப்பது குறித்தும் சாப்பிடுவது குறித்தும் சாரு நிவேதிதா எழுதியிருக்கும் வியாசங்களைப் படித்தீர்களென்றால் நாமெல்லாம் எதற்கு வாழ்கிறோம் என்றே நினைக்கத் தோன்றிவிடும். அடை தெரியுமல்லவா? சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் ஓர் அடை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மிகத் துல்லியமான இலக்கணம் வகுத்தவர் மறைந்த மாபெரும் படைப்பாளி லா.ச. ராமாமிருதம். அவரது சிந்தா நதியில் ஓர் அத்தியாயத்தில் தரமிகு அடையைப் பற்றி விவரிப்பார் பாருங்கள், படிக்கும்போதே பத்து அடை சாப்பிட்ட உணர்வு வரும். பிறகு உண்ணக்கிடைக்கும் சுமார் ரக அடைகளை ஏறெடுத்தும் பார்க்கத் தோன்றாது.

நல்ல கலைஞன் சமைக்கப்படுவது அடுப்படியில்தானோ என்னமோ. நெருப்பிலிடாமல் புடம் போடுதலேது?

சமைக்கலாமென்று களமிறங்கிய முதல் நாள் எனக்கு மேற்படி உன்னதக் கலைஞர்களெல்லாம் நினைவுக்கு வந்தார்கள். படைப்பின் நேர்த்தி என்பது ஒன்றுதான். கலை வெற்றி என்பதும் ஒன்றேதான். அதன் ஸ்தூல, சூட்சும வடிவங்கள் வேறு வேறானாலும் ஆன்மா வேறு வேறல்ல.

பனீரைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். பக்கத்து அடுப்பில் கொதி நீரில் அந்தத் தக்காளி வேறு வெந்துகொண்டிருக்கிறது. பதம் பார்த்து இறக்கியாக வேண்டும். அன்றைய என் நோக்கம் என்னவென்றால், என் மனமே போன்ற தூய உணவுப் பொருளான பனீரில் வேகவைத்த தக்காளியொன்றை மசித்துப் போட்டுக் கலப்பதன்மூலம் அதற்கு இளஞ்சிவப்பு வண்ணமும் மெல்லிய புளிப்புச் சுவையும் தருவது. புளிப்புச் சுவைக்குப் புளியை அண்டுவது ரசனைக் குறைவு சார்ந்த நடவடிக்கை என்பது என் அபிப்பிராயம். தக்காளி அல்லது எலுமிச்சை போதும். தக்காளியிலும் நாட்டுத் தக்காளிக்குப் புளிப்புச் சுவை சற்று அதிகம்தான். ஆனாலும் அது விதைகள் உள்ளது. விதையுள்ள தக்காளி அத்தனை உத்தமமில்லை என்பதால் நான் பெங்களூர் தக்காளியையே தேர்ந்தெடுத்தேன்.

வாணலியில் நெய் விட்டுத் தாளித்த பிறகு பனீரை உதிர்த்துப் போட்டேன். ஒரு சிட்டிகை சீரகப் பொடி. ஒரு சிட்டிகை தனியாப் பொடி. கொஞ்சம் காஷ்மீரத்து மிளகாய்த் தூள். அடுத்தபடி உப்பு. ஒரு பாக்கெட் பனீருக்கு எவ்வளவு உப்புப் போட வேண்டும்? இதற்குத் தனியே எந்தக் கோனாரும் குறிப்பு எழுதி வைத்ததில்லை. சமையல் புஸ்தக மாமிகளெல்லாம் நைசாக நழுவியோடுகிற இடமும் இதுவே. உப்பு தேவைக்கேற்ப என்று சொல்லிவிடுவார்கள். அந்தத் தேவையின் அளவுதான் என்ன என்று கேட்டால் ஒரு பயல் பதில் சொல்ல மாட்டான்.

ஒரு வார்த்தை என் மனைவியிடம் கேட்டால் சொல்லிவிடுவார். அல்லது அவரே வந்து உப்பு மட்டும் போட்டுக் கொடுத்துவிட்டும் போவார். ஆனால் புரொபசரைப் பரீட்சை எழுத வைத்த வசூல்ராஜாவாக அல்லவா நான் சரித்திரத்தில் அறியப்பட வேண்டிவரும்?

அந்த அவமானத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்று தோன்றியது. யோசித்தேன். உப்பைத் தீர்மானிப்பது பண்டமல்ல. உள்ளுணர்வு என்று தோன்றியது. இது படைப்பின் கலையம்சத்தைத் தீர்மானிக்கும் காரணியைப் போன்றது. சூட்சும சங்கதி. ஸ்பூனால் எடுக்கவே கூடாத பண்டம் உப்புதான் என்று தீர்மானமாகப் பட்டது. விரல்கள்தாம் சரியான கருவி.

எனவே மூன்று விரல்களைப் பயன்படுத்தி உப்பை எடுத்தேன். வாணலியில் நிறைந்திருக்கும் பனீர்க் குவியலின் மேற்புறம் முழுதும் படுகிற வண்ணம் தூறல் போல் உப்பைத் தூவினேன். முப்பது பனீர் அணுக்களுக்கு ஓர் உப்பு அணு என்று என்னமோ ஒரு குத்துமதிப்புக் கணக்கு மனத்துக்குள் ஓடியது. சரியாக இருக்கும் என்றுதான் தோன்றியது. போட்டாயிற்று. இனிமேல் விதி விட்ட வழி.

மறுபுறம் நறுக்கி வைத்த வெங்காயத்தையும் குடை மிளகாயையும் அவற்றின் பச்சை வாசனை போகிறவரை வதக்கி எடுத்து இதன் தலையில் போட்டேன். மொத்தமாக ஒரு கிளறு. இப்போதுதான் வெந்த தக்காளி. அதைக் கரண்டியால் மசித்துக் கொஞ்சம் நீர் சேர்த்து தக்காளி சாஸ் போல ஆக்கினேன். திடீரென சந்தேகம் வந்துவிட்டது. தக்காளியில் தண்ணீர் சேர்த்துவிட்டால் புளிப்புச் சுவை குறைந்துவிடுமோ?

அதையும் பார்த்துவிடலாம் என்று மேற்படி தக்காளி சாஸைப் பனீரில் கொட்டிச் சேர்த்துக் கிளறத் தொடங்கினேன். பனீரானது தனது சகல சகாய பரிவாரங்களுடன் சேர்ந்து தளதளவென ஒரு நூதன உருமாற்றம் எய்திக்கொண்டிருந்தது.

இப்போது எனக்கு இன்னொரு கவலை வந்தது. தாளிப்பில் இஞ்சி சேர்த்திருந்தேன். வண்ணமயமான காஷ்மீரத்து மிளகாய்த் தூளையும் ஒரு ஸ்பூன் போட்டிருந்தேன். இதற்குமேல் பச்சை மிளகாய் என்கிற பொருளுக்கு இந்த உணவில் இடமுண்டா? அதையும் போட்டுத் தொலைத்தால் உண்ண முடியாத அளவுக்குக் காரமாகிவிட்டால் என்ன செய்வது?

யோசனையுடன் அடுப்படிக்கு மேலிருந்து அலமாரிகளை ஒரு நோட்டம் விட்டபோது நான் மறந்திருந்த இன்னொரு பொருள் கண்ணில் பட்டது. மஞ்சள் தூள். அடக்கடவுளே. இதை எப்போது சேர்க்கவேண்டும் அல்லது சேர்க்கத்தான் வேண்டுமா?

நான் பனீரைப் பார்த்தேன். அது இளஞ்சிவப்புக் கிச்சடி பதத்துக்கு வந்திருந்தது. இதற்குமேல் இதில் மஞ்சள் சேர்த்தால் இலக்கணப்படி அது இன்னும் அடர் சிவப்புக்குப் போகவேண்டும். அது வேண்டாம் என்று நினைத்தேன். மஞ்சளில்லாமல் செய்து பார்த்தால்தான் என்ன?

எனவே மஞ்சளைத் தவிர்த்தேன். ஒரு கேரட், அரை மூடி தேங்காயைத் துருவி வைத்துக்கொண்டேன். உப்புமா செய்கிறபோது கேரட், பீன்ஸ் வகையறாக்களையெல்லாம் நறுக்கிப் போடுகிற என் மனைவியின் பாணி உண்டாக்கியிருந்த தாக்கத்தின் விளைவு. அவரைப் போலவே நானும் நறுக்கிப் போட்டால் என் தனித்துவம் என்னாவது? அதனால்தான் பச்சையாகத் துருவிப் போடுதல். இதன்மூலம் ஒரு நூதன ருசி கிடைக்குமென்றால் அதை ஏன் மறுக்க வேண்டும்?

பனீரைத் தொட்டுப் பார்த்தேன். பதம் கூடி வந்துவிட்டதாகவே தோன்றியது. கொஞ்சம் கொத்துமல்லி, கருவேப்பிலை, புதினா மேற்படி கேரட், தேங்காய்த் துருவலுடன் உதிர்த்துப் போட்டேன். மேலுக்கு ஒரு ஸ்பூன் நெய்யையும் ஊற்றி, அடுப்பை அணைத்து கப்பென்று வாணலியை மூடி வைத்தேன். இதுதான். இவ்வளவுதான். இது பனீர் உப்புமா அல்ல. பனீர்க் கிச்சடியும் அல்ல. வேறெதுவும் அல்ல. புதிதாக இந்த உலகுக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் ஓர் உணவுக் குழந்தை. இன்னும் பெயரிடப்படாத குழந்தை.

ஒருவேளை நன்றாக இருந்துவிட்டால் என் படைப்பூக்கம் மேலும் வீரியம் கொள்ளும். விதவிதமாக யோசித்து, ரக ரகமாகச் செய்து பார்க்கலாம். ஆனால் இல்லத்து கநாசுவின் கணிப்பில் இது கலைத்தோல்வி எய்திவிட்டால் என்ன செய்வது? சிறு குழப்பத்தோடுதான் என் மனைவியை அழைத்தேன்.

ப்ரியே, நான் பாண்டத்தைச் செய்த குயவனல்லன். பண்டத்தைச் செய்த கலைஞன். வந்து பரிசோதித்துப் பார்.

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 38: ஒரிசா ஓட்டல்

 

 
ruchi%20art%2007-10-17

சொன்னால் நம்ப வேண்டும். சமையல் துறையில் எனக்கு இருந்த ஒரே தேர்ச்சி, சாப்பிடுவது மட்டும்தான். தமிழக, கேரள, கர்நாடக, ஆந்திர பாணி சமையலானாலும் சரி, பெரிய வித்தியாசங்கள் இல்லாத வடக்கத்திய சமையலானாலும் சரி, அப்படிப் பொத்தாம்பொது ஆகாது; எங்களுக்கென்று தனித்துவம் உண்டு என்று காட்டிக்கொள்வதற்காகவே சகலமான காரப் பலகாரங்களிலும் கண்றாவியாக நாலு சிட்டிகை சர்க்கரையைச் சேர்த்து வைக் கிற குஜராத்தி, ராஜஸ் தானி ரகமானாலும் சரி. வஞ்சனையே இல்லா மல் உட்கார்ந்து திங்க நான் எப்போதும் தயார். ஒரு மாறுதலுக்குப் பரதேசிச் சமையல் என்றாலும் பாதகம் இல்லை. சைவ உணவாக இருக்கிற பட்சத்தில் எதையும் ருசி பார்க்க எப்போதும் ஒரு ராணுவ வீரனைப் போன்ற தயார் நிலையில்தான் இருப்பேன்.

ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. எப்போதோ ஒரு தேர்தல் சமயம், அப்போதைய ஒரிசாவில் செய்தி சேகரிக்கச் சுற்றிக்கொண்டிருந்தேன். அது கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள சாத்ரபூர் நகரம். ஜார்ஜ் பெர்னாண்டஸின் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு, களைத்துப் பசித்த பொழுதில் கண்ணில் பட்ட உணவகத்துக்குச் சென்று ‘‘வெஜிடேரி யன் உணவு என்ன இருக்கிறது?’’ என்று கேட்டேன். நல்லவன், ஒன்றுமில்லை என்று சொன்னான். தேடி னால் ஒரு சைவ உணவகம் கிடைக்காமல் போகாதுதான். ஆனால் எனக்கு நேரமில்லை. என்னத்தையா வது போட்டு அடைத்துக் கொண்டு போனால் போதும் என்று நினைத்துத்தான் அங்கே நுழைந்திருந்தேன். ஆனால் இல்லை என்கிறானே, என்ன செய்வது?

இருப்பதைக் கொண்டு என்னத்தையாவது தயார் செய்து தரமுடியுமா? நான் வெகுதூரம் போகவேண்டும். இங்கே ஓட்டல் தேடிக்கொண்டிருக்க முடியாது என்று பக்குவமாக எடுத்துச் சொன்னேன்.

 

கொஞ்சம் சர்க்கரை கிடைக்குமா?

சப்ளையருக்கு என்ன தோன்றியதோ, கொஞ்சம் காத்திருக்கச் சொல்லி விட்டு உள்ளே போனான். 10 நிமிடங்களில் ஒரு பிளேட்டில் என்னத்தையோ கொண்டு வந்து வைத்தான். அதில் சோளம் தென்பட்டது. கேரட் இருந்தது. பீன்ஸா, கொத்தவரங்காயா என்று நினைவில்லை. அப்படி ஒன்று இருந்தது. பெரிய சைஸ் கொண்டைக் கடலை இருந்தது. அனைத்தையும் புளி சேர்த்துக் கொதிக்கவைத்து, குழம்புக்கும் கூட்டுக்கும் இடைப்பட்ட தரத்தில் அது சமைக்கப்பட்டிருந்தது.

முட்டை, மீன், கறி வகையறாக்கள் எதுவும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டு ஸ்பூனால் கொஞ்சம் எடுத்து வாயில் வைத்தேன். படு பயங்கரக் காரமும் சகிக்கமுடியாத புளிப்புமாக இருந்தது. உண்டு தீர்த்தால் பசி போய்விடும்தான். ஆனால், வேறு ஏதேனும் சிக்கல் உண்டாகலாம் என்று தோன்றியது. என்ன செய்யலாம் என்று யோசித்து, கொஞ்சம் வெல்லம் கேட்டு வாங்கி அதன்மீது உதிர்த்துக் கலந்தேன். இப்போது உண்டு பார்த்தபோது இன்னும் கேவலமான சுவைக்கு அது இடம் பெயர்ந்துவிட்டதுபோலத் தோன்றியது.

 

கொல்லும் பசி

எனக்கோ, பசி கொன்றுகொண்டிருந்தது. எதையாவது தின்றே தீரவேண்டும். இத்தனை தூரம் மெனக்கெட்டுவிட்டு, சைவ ஓட்டல் எங்கே இருக்கிறது என்று அந்த சப்ளையரிடமே கேட்கச் சங்கடமாக இருந்தது. அவனைக் குறை சொல்லுவது அடுக்காது. ஒன்றுமில்லை எழுந்து போ என்று சொல்லாமல் ஏதோ ஒன்றைக் கொண்டு வைத்த உத்தமன் அல்லவா?

‘‘தயிர் இருக்கிறதா?’’ என்று கேட்டேன். கொஞ்சம் ஒரு மாதிரி பார்த்திருப்பானோ? இல்லை என்று சொன்னான். சுத்தம். பாலாவது இருக்கிறதா என்று கேட்டேன். பால் பவுடர் வேண்டுமானால் கிடைக்கும் என்றான்.

பொதுவாக நான் வெஜ் உணவகங்களில் டீ நன்றாக இருக்கும். சில இடங்களில் காப்பியும் பிரமாதமாக அமைந்துவிடும். ஆனால் இவன் பாலே இல்லை என்று சொல்கிறானே?

சரி ஒழிகிறது என்று அதைக் கொண்டுவரச் சொன்னேன். ஒரு தம்ளர் வெந்நீர் கேட்டு வாங்கி, அந்தப் பால் பவுடர் பாக்கெட்டை உரித்து அதில் கொட்டிக் கரைத்தேன். பிறகு அதை மேற்படி காய்கறிகளும் காரமும் வெல்லமும் கலந்த குழம்பில் ஊற்றிக் கலந்தேன். என்னை அவன் முழுப் பைத்தியம் என்றே எண்ணியிருக்க வேண்டும். கிறுக்குத்தனமில்லாத கலையுள்ளம் உண்டா உலகில்! ஒருவாய் சாப்பிட்டுப் பார்த்தேன். கொஞ்சம் சுமாராக இருக்கிறதோ? எதற்கும் இருக்கட்டும் என்று கொஞ்சம் சர்க்கரை கிடைக்குமா என்று கேட்டேன். அதையும் கொட்டு இதன் தலைமேல்.

அன்று நிகழ்ந்தது உண்மையிலேயே பேரதிசயம். புளிப்பும் காரமுமாக இருந்த அந்தப் பதார்த்தம் மெல்ல மெல்ல தன் சுபாவத்தை மாற்றிக்கொண்டு ஒரு காய்கறிப் பாயச பதத்தை எய்தியிருந்தது! அதில் இருந்த புளிப்பை மட்டும் தனியே உருவி எடுத்துவிட முடிந்தால் அது ஒரு நல்ல கண்டுபிடிப்பே என்று தோன்றியது. நான் அந்த நூதன கசுமால உணவை நக்கி நக்கித் தின்றதை அந்த சப்ளையர் ஏழேழு ஜென்மத்துக்கும் மறக்கமாட்டான் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

 

பதிலுக்கு காத்திருந்தேன்

எதற்குச் சொல்லுகிறேன் என்றால், சாப்பிடுவதில் எனக்கு பட்சபேதமே கிடையாது. கேவலமான உணவு என்றாலும் அதை நான் ருசி பார்த்துச் சொல்லவேண்டும் என்று நினைப்பேன். ஆனால், சமையல் அப்படி அல்ல. பழக்கமில்லை, முயற்சி செய்ததில்லை, அதற்கான தேவையும் இருந்தது இல்லை.

அப்படியாப்பட்ட பிரகஸ்பதி முதன்முதலில் சமையல் அறைக்குள் நுழைந்து ஒரு பெரும் கலைப் படைப்பை உருவாக்கியபோது எத்தனை பெரிய பரவசம் கூடியிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். இஷ்ட தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டு, நான் சமைத்திருந்த பனீர் வஸ்துவை ஒரு தட்டில் அழகாக எடுத்து வைத்து வட்ட வடிவில் செதுக்கினேன். மேலுக்கு அலங்காரமாக நாலு கொத்துமல்லி இலைகளைக் கிள்ளித் தூவினேன். ஆங்காங்கே ஒன்றிரண்டு கேரட் குச்சிகளை சொருகினேன். பார்க்க என் கண்ணே பட்டு விடும்போல் இருந்தது. இது மட்டும் ருசியாகவும் இருந்துவிட்டால் வெங்க டேஷ் பட் புறமுதுகிடுவது நிச்சயம் என்று எண்ணியபடியே எடுத்துச் சென்று அவள் முன்னால் வைத்தேன்.

காக்க காக்க கடாய் பனீர் காக்க. நோக்க நோக்க நெய் மிதப்பதை நோக்க.

ஒரு வாய் உண்டாள். ஒரு கணம் கண்மூடல். மறுவாய் உண்டாள்.

‘‘எப்படி இருக்கும்மா?” என்று ஆர்வம் தாங்கமாட்டாமல் என் மகள் கேட்டாள். பதில் வரவில்லை. நான் காத்திருந்தேன்.

அந்த முதலிரு வாய்களிலும் முகச் சுளிப்பு இல்லை என்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. எம் பெருமான் உப்பிலும் உறைப்பிலும் சொதப்பி வைக்காதிருந்திருக்கிறான். அந்தவரை அவன் நல்லவன்.

 

சுவரின் நெற்றியில் கடுகு பொட்டு

அவள் சாப்பிட்டு முடிக்கும்வரை அமைதியாக இருந்துவிட்டு, அதற்குமேல் முடியாமல் கேட்டுவிட்டேன். ‘‘ஓகேவா? நல்லாயிருந்ததா?”

அப்போதும் பதில் இல்லை. சாப்பிட்ட வுடன் தட்டை எடுத் துச் சென்று கழுவிக் கவிழ்த்துவிட்டு என்னை அழைத்தாள்.

‘‘இதென்ன வேலை?’’

அவள் சுட்டிக்காட்டிய கிச்சன் மேடை ஒரு போர்க்களக் கோலத்தில் இருந்ததை இப்போதுதான் கவனித்தேன். எங்கெங்கு காணினும் பனீர்ச் சிதறல். உருவியெடுத்த கருவேப்பிலைகள் பனீரில் அடைக்கலமாகியிருந்தாலும் காம்புகள் தரையில் விழுந்திருந்தன.

அடுப்பெல்லாம் உப்பு. அதன்மீது மிளகாய்ப்பொடிப் புள்ளிகள். தாளிப் பில் சிதறிய கடுகுகள் சுவருக்குப் பொட்டு வைத்திருந்தன. எதை எடுத்தாலும் பிசுக்கு. எல்லா பாத்திரங்களின் மீதும் பிசுக்கு.

‘‘சமையல்ன்றது க்ளீனிங்கும் சேர்ந்ததுதான்’’ என்றாள்.

‘‘அதைவிடு. சாப்பிட்டது எப்படி இருந்தது?’’

‘‘நீ அதைவிடு. இதையெல்லாம் இப்ப யார் க்ளீன் பண்றது?’’அன்று எனக்கு ஒன்று புரிந்துவிட்டது. எனக்கு சமையல் நன்றாக வரும். ஆனால், ஒருநாளும் அதை என் மனைவி ஒப்புக்கொள்ள மாட்டாள்!

- ருசிக்கலாம்...

http://tamil.thehindu.com/opinion/blogs/article19817852.ece

Link to comment
Share on other sites

ருசியியல் -39: கசப்பை ரசித்து ருசிப்பது ஓர் அனுபவம்!

 

 
Ruchi%20art%2013-07-17

காலம், கஷ்டகாலம். ஊர் உலகமெல்லாம் நிலவேம்புக் கஷாயத்தைக் குடித்துவிட்டு ‘உவ்வே உவ்வே’ என்று கசப்பின் கஷ்டத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறது. படாத பாடுபட்டு ஒரு தம்ளர் நிலவேம்பு குடித்துவிட்டேன்; ‘எனக்கு இந்த ஜென்மத்தில் இனிமேல் டெங்கு வராதில்லையா’ என்று அப்பாவித்தனமாகக் கேட்கிற பிரகஸ்பதிகளைப் பார்க்கிறேன். ஆறுதலாக அவர்களுக்கு என்னவாவது சொல்லலாம்தான். ஆனால், ‘நிலவேம்பின் கசப்பு உலகத்தர கசப்புகளுள் ஒன்று' என்று சொன்னால் புரியுமா?

டெங்கு கிடக்கட்டும். எனக்கு அந்த நிலவேம்பின் கசப்பின் மீது அப்படியொரு ஈர்ப்பு. நமக்கு எளிதில் கிடைக்கும் வெறும் வேம்பிலோ, பாகற்காயிலோ உள்ள கசப்பைக் காட்டிலும் நிலவேம்பு கசப்பில் ஒரு கவித்துவம் ஒட்டிக்கொண்டிருப்பதாக எனக்கு எப்போதும் தோன்றும். ஒரு கவர்ச்சிகரம். ருசி நரம்புகளின் மீது நர்த்தனமாடும் நாரீமணி அது. ஆடி முடித்து அரை மணி ஆன பின்பும் அரங்கம் அதிர்வதுபோல உணரச் செய்கிற ஆனந்தப் பெருந்தாண்டவம்!

ஆனால், ஏனோ நம்மில் பெரும்பாலானோருக்குக் கசப்பு பிடிப்பதில்லை. அநேகமாக யாரும் அதை விரும்புவதில்லை. அதை ஒரு சுவை என்று வகைப்படுத்தி மார்க்கெட் செய்து பார்த்தும் யாரும் மசியவில்லை. வேறு வழியில்லாத சூழலில் தலையெழுத்தே என்றுதான் கசப்பை உண்கிறோம். உணவானால் என்ன, வாழ்வானால் என்ன? நமக்கு எல்லாம் இனித்தாக வேண்டும்.

ஆனால், கசப்பை ரசித்து ருசிப்பது ஓர் அனுபவம்! விளையாட்டல்ல. அது தியானத்துக்குச் சமமான சங்கதி. சரேலென்று நரம்புகளுக்கு ஒரு புத்துணர்ச்சி தரத்தக்க ஒரே சுவை கசப்புதான் என்றால் நம்புவீர்களா? இனிப்பு திகட்டக்கூடியது. புளிப்பு கூச்சம் தரத்தக்கது. காரம் கண்ணீரைக் கொடுக்கும். இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்யும். துவர்ப்பு ஒரு தத்தி. அதை விட்டுவிடுவோம். என்னைப் பொறுத்தவரை கசப்பு தான் ரசனைக்கு உகந்த சுவை. இல்லாவிட்டால் காலை எழுந்த தும் முதல் பானமாகக் காப்பி யைக் கொள்வோமா? கஃபெய்ன் தருகிற தாற்காலிகப் புத்துணர்ச்சியெல்லாம் பிறகு. அதனை வேறு எந்த வடிவத்திலாவது பெற்றுவிடலாம். காப்பி யின் உள்ளார்ந்த கசப்புச் சுவையில் தொடங்குவதுதான் ஒரு விடியலை அழகூட்டும். இதுவரை இதை நீங்கள் உணர்ந்திராவிட்டாலும் இதுவே உண்மை.

நான் சர்க்கரை சாப்பிட்டுக்கொண்டிருந்த காலத்தில்கூட காப்பிக்கு அரை ஸ்பூனுக்கு மேல் சர்க்கரை சேர்க்க மாட்டேன். காப்பி என்றால் அடி நாக்கில் கசப்பு நிற்க வேண்டும். அருந்தி முடித்த பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஒரு தரம் சப்புக் கொட்டினால் அந்தக் கசப்பின் எச்சம் நெஞ்சில் இறங்க வேண்டும். அது ஓர் அனுபவம்; மகத்தான பேரனுபவம்! அரை ஸ்பூன் சர்க்கரை அதைக் கணிசமாகக் கெடுத்துவிடுகிறது என்பது புரிந்தபோது அதை அறவே நிறுத்தினேன். நேரடிச் சர்க்கரை இல்லாவிட்டாலும் பாலுக்குள் பரம்பொருளாக மறைந்திருக்கும் சர்க்கரையும் காப்பியின் புனிதத்துக்கு ஹானியுண்டாகுவதுதான் என்று தெரிந்தபோது அதையும் நிறுத்தினேன். இப்போதெல்லாம் என் காப்பி, கற்புள்ள காப்பி. கசப்பின் பூரணத்துவத்தை எய்திய காப்பி!

படு பயங்கர ஸ்டிராங்காக அரை டம்ளர் டிக்காஷன் எடுத்துக்கொள்ள வேண்டியது. அதில் காலே அரைக்கால் தம்ளர் வெந்நீரைச் சேர்த்தால் போதுமானது. இதுதான் காப்பி. உடனே எடுத்து அருந்திவிடாதீர்கள். இன்னும் இரண்டு காரியம் பாக்கி இருக்கிறது.

இந்தக் காப்பியில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்க வேண்டும். நாட்டு மருந்துக் கடைகளில் பெருமாள் கோயில் தீர்த்தப்பொடி என்று கேட்டீர்களானால் சின்ன டப்பாவில் ஒரு வஸ்து கிடைக்கும். ஜாதிக்காய், ஏலக்காய், மாசிக்காய், பச்சைக் கற்பூரம் உள்ளிட்ட ஜகஜ்ஜால வாசனாதி திரவியங்களைச் சேர்த்து இடித்த ஒரு நூதனப் பொடி அது. இந்தப் பொடியில் ஓரிரு சிட்டிகை எடுத்து மேற்படி காப்பியில் போட்டு ஒரு ஆற்று ஆற்றினால் முடிந்தது.

இதுதான் சரியான காப்பி. காப்பியின் ஒரிஜினல் வாசனையும் இந்த வாசனைப் பொடியின் அசாத்திய மணமும் இணைந்து ஒரு நூதனமான மணத்தை அந்த பானத்துக்கு அளிக்கும். முன்னதாகச் சேர்த்திருக்கும் ஒரு சிட்டிகை உப்பானது, காப்பியின் இயல்பான மென் கசப்புக்குச் சூட்டுகிற மணி மகுடம். கொதிக்கக் கொதிக்க இந்தக் காப்பியை சொட்டுச் சொட்டாக ருசித்து அருந்துவது ஒரு மகத்தான அனுபவம். அருந்தி முடித்த கணத்தில் உடலும் மனமும் பெறும் புத்துணர்ச்சியை விவரிக்கவே முடியாது.

ஆனால், இந்த உலகில் ஒரு வருக்கும் இந்த ருசி தெரியாது. அண்டா பாலைக் கொட்டி, அரைக் கிலோ சர்க்கரையைக் கொட்டி காப்பியைக் கண்றாவியாக்கிவிடுவார்கள். அதற்குப் பேசாமல் எழுந்ததும் ஒரு பானை பாயசம் வைத்துக் குடித்துவிட்டுப் போய்விடலாம்.

காப்பியைப் போலவே நமது ரசனைக் குறைவால் ருசிபங்கம் கண்ட இன்னொரு பொருள் சாக்லேட். இயல்பில் சாக்லேட்டின் தாயான கோக்கோ காப்பிக் கொட்டையைப் போலவே மென் கசப்புச் சுவை கொண்டதுதான். கோக்கோவின் அபா ரமான மணமும் அந்த ஒரிஜினல் கசப்புச் சுவையும் நமது நாவை கவுரவப்படுத்துபவை. ஆனால், எங்கே விடுகிறோம்? சாக்லெட் என்றாலே சர்க்கரைப் பாளம்தான்.

ஒருமுறை மூணார் சென்றிருந்தபோது அங்கே 80 பர்சண்ட் டார்க் சாக்லேட், 85 பர்சன்ட் டார்க் சாக்லேட் என்று நம்பர் குறித்த சாக்லேட்களைப் பார்த்தேன்.

‘நூறு சதவீத டார்க் சாக்லேட் என்பது இங்கே கிடையாது சார்’ என்று கடைக்காரர்கள் சொன்னார்கள். அதாவது பத்து பதினைந்து சதவீதத்துக்காவது சர்க்கரை சேர்த்தே தீருவார்கள். இல்லாவிட்டால் ஜனங்கள் வாங்க மாட்டார்கள் என்பது அவர்களுடைய லாஜிக்.

எனக்கென்னவோ, அவர்கள் நூறு சதவீத டார்க் சாக்லேட்டை விற்பனைக்கு வைத்து, மக்கள் ஒருமுறை ருசி பார்த்துவிட்டால் அதன்பின் சர்க்கரை போட்ட சாக்லேட்டுகளின் பக்கம்கூடத் திரும்பமாட்டார்கள் என்று தீர்மானமாகத் தோன்றியது. ஏனென்றால், 80 சதவீத டார்க் சாக்லேட்டை நான் அங்கே உண்டு பார்த்தேன். மெல்லிய அசட் டுத் தித்திப்பைத் தாண்டியும் அதன் வாளிப்பான கசப்புச் செழுமை கிறங்கடிக்கக் கூடியதாகவே இருந் தது.

ஒரு விஷயம். இந்த கோக்கோ கசப்பு என்பது நிலவேம்புக் கசப்பைப் போன்றதல்ல. காப்பியின் கசப்பு போன்றதுகூட இல்லை. ஒரு வகை யில் இது கசப்பே கூட இல்லை என்று சொல்லிவிடுவேன். அமெரிக்கா வில் இருந்து சமீபத்தில் இங்கே வந்திருந்த என் நண்பர் சிவராம் ஜெகதீசன் எனக்காகப் பிரத்தியேகமாக 100 சதவீத சாக்லேட் பவுடர் வாங்கி வந்திருந்தார். அதாவது சர்க்கரை சேர்மானமே இல்லாத பரிசுத்த கோக்கோ. அதை வெண்ணெயுடன் சேர்த்துக்கலந்து ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் டார்க் சாக்லேட் தயார்.

ஆனால், நான் அப்படிச் செய்யவில்லை. ஜம்மென்று இரண்டு ஸ்பூன் அந்தப் பொடியை வெந்நீரில் போட்டு அருந்திப் பார்த்தேன். பிரமாதமான சாக்லேட் பானம்! அடி நாக்குக்கும் மேல் தொண்டைக்கும் நடுவே ஒரு சிறு கசப்புப் பிரளயத்தை உண்டாக்கி, கணப் பொழுதில் அந்தச் சுவையின் மீது ஒரு மோக வெறியையே கிளப்பிவிடக்கூடிய பானமாக இருந்தது. பின்பொரு சமயம் அதை பானமாகக் கூட ஆக்காமல் வெறுமனே இரண்டு ஸ்பூன் பொடியாக அள்ளி எடுத்து உண்டு பார்த்தேன். அது இன்னும் பிரமாதமாக இருந்தது. சாக்லேட்டின் மென்மை உங்களுக்குத் தெரியும். அதன் இயல்பான கசப்புச் சுவையை, அந்த இயல்பான மென்மையுடன் சேர்த்து ருசிப்பது ஒரு பெரும் அனுபவம்.

தேவை, கசப்பை ரசிக்கும் மனம். இது இயல்பாக வராது. நமது வளர்ப்பு அப்படி. சொல்லித்தரப்பட்டிருப்பவை அப்படி. பழக்கத்தின் மூலம்தான் இந்த நிலையை அடைய முடியும். ஆனால் பழகிவிட்டால் கசப்பின் ருசிக்கு இனிப்பானது கால் தூசு பெறாது என்று தோன்றிவிடும்!

- ருசிக்கலாம்...

http://tamil.thehindu.com/opinion/blogs/article19859432.ece

Link to comment
Share on other sites

ருசியியல் சில குறிப்புகள் 40: ருசியோடு விளையாடு

 

Rusiyiyal%2040
21chmbn%20rusiyiyal%2040IMG
21chmbn%20rusiyiyal%2040IMG0
Rusiyiyal%2040
21chmbn%20rusiyiyal%2040IMG

கொஞ்ச நாள் முன்னால் இந்தப் பக்கத்தில் மேற்கு வங்காளத்து மிஷ்டி தோய் பற்றி எழுதியிருந்தேன் அல்லவா?

அந்த இனிப்புத் தயிரின் கொள்ளுத் தாத்தா எங்கிருந்து வந்தார் என்று சமீபத்தில் கண்டுபிடித்தேன். சுமார் இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னால் பிரேசில் பழங்குடிகளிடையே தயிர் ஒரு பணக்கார உணவாக இருந்திருக்கிறது. நல்ல கெட்டித் தயிரில் தேனை ஊற்றி, உலர்ந்த பழங்களைப் போட்டு ஊறவைத்து எடுத்து வைத்துவிடுவார்கள். விருந்தினர் கள் வந்தால் அதுதான் அங்கே ஸ்பெஷல். உள்ளே நுழைந்ததும் இந்தப் பழந்தயிர் கொடுத்து உபசரிப்பவர் கள் வீட்டில் பெண் எடுத்தால் சுபிட்சம் தழைக் கும் என்றொரு நம்பிக்கை அங்கே இருந்திருக்கிறது.

இதைப் படித்ததில் இருந்து எனக்குப் பழங்களைப் போட்டு ஊறவைத்த தயிரை ருசி பார்க்க வேண்டும் என்ற இச்சை பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியிருக்கிறது.

என் கணிப்பில் உலர்ந்த பப்பாளி, உலர்ந்த திராட்சை, அத்திப் பழம் போன்றவை இதற்குச் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. வாழைப்பழம், ஆரஞ்சு என்று போய்விட்டால் இனிப்புதான் பெரிதாக இருக்குமே தவிர, தயிரின் ஒரிஜினல் ருசி காணாமல் போய்விடும். நமது மகா ஜனங்களுக்கு ருசிக்கும் சுவைக்கும் பெரும்பாலும் வித்தியாசம் தெரிவது இல்லை.

இனிப்பு என்பது சுவை. ருசி என்பது அந்தச் சுவையைச் சரியான அளவில் பயன்படுத்தி, சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம்போல் தோன்றுகிற பதத்தில் ஒரு பண்டத்தை உருவாக்குவது.

 

ருசியோடு விளையாடு

நிற்க. தயிருக்கும் எனக்குமான உறவு என்பது எனக்கும் என் அப்பாவுக்கும் இருந்த உறவுக்கு நிகரானது. பிறகு எனக்கும் என் மனைவிக்குமான உறவைப் போல் பரிணாம வளர்ச்சி கண்டது. எனக்கு உணவில் என்ன இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரச்சினை இல்லை. பக்கத்தில் ஒரு கப் தயிர் வைத்துவிட்டால் போதுமானது. தயிர் ஒரு பரமாத்ம சொரூபம். எதனோடும் கலக்கும். ருசி மட்டாக உள்ள எந்த ஒரு உணவுப் பொருளுக்கும் தனது ருசியின் ஒரு பகுதியை வழங்கிக் கடைத்தேற்றும்.

சிக்கல் என்னவென்றால் நம்மில் பலருக்கு சரியான பதத்தில் தயிர் தோய்க்கவே வராது. குறிப்பாக, உணவகங்களில் வழங்கப்படும் தயிர் ஒரு மாபெரும் அவமரியாதை. இன்றுவரை ஒருநாளும் நான் ஒரு சிறந்த தயிரை எந்த உணவகத்திலும் பெற்றதில்லை. பாலைக் காய்ச்சி ஆறவைத்து, அதில் ஒரு கரண்டி தயிரைச் சேர்த்து மூடி வைத்தால் மறுநாள் தயிர் என்பது மட்டரகமான தயாரிப்பு முறை. இதில் கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.

காய்ச்சுவது என்ன பால்? பசும்பால், எருமைப்பால் என்ற பேதமெல்லாம் இன்று நம்மிடையே இல்லை. எல்லாம் பாக்கெட் பால்தான். அதனால் பாலில் தரம் பார்த்துக்கொண்டிருப்பது கஷ்டம். வேண்டுமானால் கொழுப்புள்ள பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால் என்று இரு ரகங்களில் ஒன்றைத் தேர்வு செய்யும் வசதி இருக்கிறது. அதைச் செய்யலாமே?

 

தயிர் நல்லது!

என் வீட்டில் தயிருக்குக் கொழுப்பு உள்ள பாலை மட்டுமே வாங்கு கிறோம். என்ன பெரிய கொழுப்பு? வழக்கமான நீலக் கலர் பாக்கெட் பாலில் உள்ளதைக் காட்டிலும் ஒன்றிரண்டு சதம் இதில் கொழுப்பு அதிகமே தவிர, முழுக் கொழுப்பெல்லாம் எந்தக் காலத்திலும் இதில் இருந்ததில்லை. சரி, ஒன்றுமில்லாததற்கு இதுவாவது இருக்கிறதே என்று திருப்தி கொள்ள வேண்டியதுதான்.

இந்தப் பாலைக் காய்ச்சும்போது பொங்கவிடக் கூடாது. அடுத்த வினாடி பொங்கப் போகிறது என்று தெரியும்போதே அடுப்பை அணைத்துவிட வேண்டும். அவ்வளவு காய்ந்தால் போதும். பால் நன்றாக ஆறிய பின்பு அதில் சேர்க்கும் தயிர் புளிக்காத தயிராக இருக்க வேண்டியது அவசியம். ஒரு ஸ்பூன் போதும். அதான் இருக்கிறதே என்று கரண்டி கரண்டி யாக அள்ளிக் கொட்டினால் தோயும் தயிரின் திடகாத்திரம் தளர்ந்துவிடும்.

இருங்கள், அவசரப்படாதீர்கள். இன்னும் இருக்கிறது. ராத்திரி தோய்த்து வைத்த இந்தத் தயிரை அதிகாலை நாலு, நாலரை மணி வாக்கில் எடுத்து ஃப்ரிஜ்ஜில் வைப்பது ரொம்ப முக்கியம். அதற்குமேல் தயிர் அறை வெப்பத்தில் இருந்தால் புளிக்கத் தொடங்கிவிடும். தயிர் என்பதுதான் என்ன? பாலில் உள்ள புரோட்டீன் அணுக்களை இறுக வைப்பதற்காக நாம் சேர்க்கிற சிறு அமிலச் சத்து. அவ்வளவுதான். இதனை ஓரிரு சொட்டு கள் எலுமிச்சைச் சாறு கொண்டும் செய்யலாம். அதே ஓரிரு சொட்டுகள் வினிகர் சேர்த்தும் செய்யலாம். இப்படிச் செய்கிறபோது பாலில் உள்ள சர்க்கரைச் சத்து சற்றுக் குறையும். ரொம்பவெல்லாம் இல்லை. நூறு கிராம் பாலில் ஐந்து கிராம் கார்போஹைடிரேட் உள்ளதென்றால், அதே நூறு கிராம் தயிரில் சுமார் மூன்றரை கிராம் கார்ப். இது வேதிவினையின்போது நல்ல பாக்டீரியாக்கள் செய்கிற கைங்கர்யம். ஆக, பாலைவிடத் தயிர் நல்லது!

ஆனால், எனக்குத் தயிர் பிடிக்காது என்று சொல்லுகிற பிரகஸ்பதிகளே நாட்டில் அதிகம். எனக்கு இந்த லாஜிக் புரிவதே இல்லை. தயிர் சாப்பிட்டால் ஒத்துக்கொள்ளாது, சளி பிடிக்கும் என்று ஒரு கோஷ்டி கிளம்பும். தயிர் தலைவலி கொடுக்கும் என்று இன்னொரு கோஷ்டி பக்க வாத்தியம் வாசிக்கும். இரவில் தயிர் கூடாது என்று இன்னொரு கோஷ்டி அலறும்.

இதெல்லாமே அபத்தமான கருத்துகள். தயிரை எப்போதும் சாப்பிடலாம். எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஒன்றும் செய்யாது!

 

ஜிலேபி நழுவி தயிரில் விழுந்தது

சென்னை நந்தனத்தில் ஒரு தாபா இருக்கிறது. தாபா என்பது வடக்கத்தி உணவகம். இங்கே பணத்தைக் கட்டிவிட்டு பஃபே முறையில் இஷ்டத்துக்கு எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிடு கிற வசதி உண்டு. எனக்கு இந்த தாபாவில் ரொம்பப் பிடித்த விஷயம், இங்கு கிடைக்கிற ஜிலேபி. ஒரு காலத்தில் ஜிலேபிக்காகவே வாரம் ஒருமுறை நந்தன யாத்திரை மேற்கொள்வேன்.

அப்படிப் போயிருந்த ஒருநாள் நாலைந்து ஜிலேபிகளைத் தட்டில் எடுத்துப் போட்டுக்கொண்டு வந்து அமர்ந்தபோது தெரியாமல் தட்டிவிட்டு, அருகே இருந்த தயிர் ஜிலேபியின் மீதெல்லாம் கொட்டிவிட்டது. வீணாக்க மனமின்றி ஒரு ஜிலேபியை எடுத்துக் கடித்தேன். வழக்கத்தைவிட நன்றாக உள்ளது போலத் தோன்றியது. சட்டென்று இன்னொரு கப் தயிர் எடுத்து வந்து இம்முறை தெரிந்தே ஜிலேபிகளின் மீது கொட்டினேன். கத்தி கபடாக்களைக் கொண்டு அந்த ஜிலேபிகளைத் துண்டுகளாக்கி, தயிரில் ஊறவைத்தேன்.

நம்பமுடியாத ருசி! வாழ்நாளில் அப்படியொரு பண்டத்தை நான் உண்டதே இல்லை. ஜிலேபியின் மென் புளிப்பு, காட்டமான இனிப்பு, தவிரவும் சுடச்சுட இருக்கும் அதன் தலையில் தயிரைக் கொட்டும்போது உண்டாகும் மிருதுத் தன்மை அனைத்தும் சேர்ந்து அதை வேறு தளத்தில் கொண்டு நிறுத்தியிருந்தது.

இந்த அனுபவம் தந்த பரவசத்தில் இன்னொரு நாள் ஜாங்கிரியைத் தயிரில் முக்கி சாப்பிட்டுப் பார்த்தேன். அதுவும் பிரமாதமாக இருந்தது. அட, ஓர் ஆப்பிள் பழத்தை நறுக்கித் தயிரில் தோய்த்து உண்டு பாருங்கள். விடவே மாட்டீர்கள். தமிழன் காராபூந்தியைத் தவிர, வேறு எதையுமே தயிரோடு பரிசோதித்தது இல்லை என்பது ஒரு பெரிய கலாசார அவலம்.

 

நிறுத்துப்பா... நிறுத்து

இப்படியெல்லாம் என் வாழ்வோடு கலந்திருந்த தயிரை ஒருநாள் நிறுத்தியாகவேண்டும் என்றொரு நிலை வந்தது. தயிரை விட்டால் நீ இன்னும் வேகமாக இளைப்பாய் என்று அருள்வாக்கு சொல்லியிருந்தார் நண்பர் ஒருவர்.

தயிரை விடுவதா? நான் டயட்டை வேண்டுமானால் விடுகிறேன்; இது முடியாது என்று தீர்மானமாக மறுத்தேன். ஆனால் நிறுத்தித்தான் பார்ப்போமே என்று ஒரு கட்டத்தில் தோன்றி, நிறுத்தவும் செய்தேன்.

மறக்க முடியாத நாள் அது.

- ருசிக்கலாம்...

http://tamil.thehindu.com/opinion/blogs/article19894484.ece

Link to comment
Share on other sites

சனிக்கிழமை சமையல்: ருசியியல் 41- கீரை ஸ்மூத்தி

 

ALL1Relax01IMG3
ALL1Relax01IMG1
 
 

உலகத் தரத்தில் பொரித்தெடுக்கப்பட்ட ஒரு கீரை வடையை நான் முதன்முதலில் ருசி பார்த்த அன்று சென்னையை ஒரு கடும் புயல் தாக்கியிருந்தது. நகரமே சுருக்கம் கண்டாற்போல் ஈரத்தில் ஊறி ஒடுங்கியிருந்தது. ஆங்காங்கே நிறைய மரங்கள் விழுந்திருந்தன. சாலைகளில் வெள்ள நீர் பெருகி, சந்து பொந்தெல்லாம் குளங்களாகியிருந்தன. பேருந்துகள் நின்றுவிட்டன.

மின்சாரம், பேப்பர், பால் கிடையாது. மழை விட்டால்தான் உலகம் தன் பொந்துக்குள் இருந்து வெளியே வரும் என்று தெரிந்தது. என்றைக்கும் இல்லாத திருநாளாக அன்றைக்கு நான் கல்லூரியில் ஃப்ளூயிட் மெக்கானிக்ஸ் ஒர்க் ஷாப் வகுப்புக்குப் போகலாம் என எண்ணிப் போயிருந்தேன். என்னோடு சேர்த்து ஏழோ, எட்டோ மாணவர்கள்தான் வகுப்புக்கு வந்திருந்தார்கள். ஆனால், பேராசிரியர் வரவில்லை. ஒர்க் ஷாப் அட்டெண்டர் இருந்தார். ஆனால் பரிசோதனை ஏதும் செய்து பார்க்க வழியில்லை என்று சொன்னார். மின்சாரம் இல்லை. “இன்னும் கொஞ்ச நேரத்துல லீவு அனோன்ஸ் பண்ணிருவாங்க. வீட்டுக்குப் போங்க தம்பிகளா’’ என்று அக்கறையுடன் சொன்னார். வீட்டுக்குப் போக வழி இல்லாதபடியால் அப்படியே பொடி நடையாக நடந்து இந்திரா நகர் மார்க்கெட் பக்கம் போனோம்.

கடைகள் ஏதும் திறந்திருக்கவில்லை. தேடிக் கண்டுபிடித்த ஒரு டீக்கடையில்தான் அந்தக் கீரை வடையை தரிசித்தேன். மழைக்குப் பாலிதீன் படுதாக்களைத் தொங்கவிட்டு, உள்ளே அவர் வடை சுட்டுக்கொண்டிருந்தார். இன்னொரு அடுப்பில் டீ பாத்திரம் இருந்தது. இதனைக் காட்டிலும் ஒரு பெரிய மானுட சேவை இருக்க முடியுமா? குளிரில் விறைத்திருந்த பத்திருபது பேருக்கு அன்று அந்த டீக்கடை ஒரு பெரும் சரணாலயமாகத் தெரிந்தது. அந்தக் கீரை வடை சுமாராகவே இருந்திருக்கலாம். ஆனால் அந்தச் சூழ்நிலையில், வேறு எந்த உணவும் கிடைக்க வழியற்ற நிலையில் அது அமிர்தமாக ருசித்தது. இரண்டு வடைகள் சாப்பிட்டுவிட்டு கடைக்காரருக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துவிட்டு, வடையில் போட்டிருந்தது என்ன கீரை என்று கேட்டேன். பொதுவாகக் கீரை வடையென்றால் அரை / முளைக்கீரைகளைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துவார்கள். அன்று வேறெதுவும் கிடைக்காத சூழ்நிலை யில் அவர் பொன்னாங்கண்ணிக் கீரையில் வடை சுட்டிருந்தார். மணத்துக்கு சோம்பு போடுவதில்லை என்றும், இலவங்கத்தைப் பொடி செய்து போடுவதே வழக்கம் என்றும் சொன்னார்.

என்னோடு வடை சாப்பிட்ட நண்பர்கள் யாருக்கும் அது ஆர்வம் தூண்டக்கூடிய தகவலாகவோ, புதியதொரு சமையல் குறிப்பாகவோ தோன்றவில்லை. காசைக் கொடுத்துவிட்டு மழை விடும்வரை அங்கேயே நின்றிருந்துவிட்டுக் கிளம்பிவிட்டார்கள். நான் மட்டும் இரண்டு நாள் கழித்து மீண்டும் அந்தக் கடைக்குச் சென்று மீண்டும் ஒரு முறை கீரை வடை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தேன். அன்று அரைக் கீரைவடை. இலவங்கச் சேர்மானம் இல்லை. மாறாக ஒரு பிடி புதினா சேர்த்திருந்தார், அந்த வடைக் கலைஞர். கொத்துமல்லி, வெங்காயத் தாள், பசுமஞ்சள், தனியா என்று வடைக்கு வாரம் ஒரு மாறுபட்ட மணம் வழங்கத் தாம் பயன்படுத்தும் பொருள்களைக் குறித்தும் எடுத்துச் சொன்னார். அதிர்ஷ்டம் இருந்திருந்தால் ஏதாவது பெரிய நட்சத்திர உணவகத்தின் தலைமை விற்பன்னராகப் போயிருப்பார்.

விடுங்கள், நான் வடையைப் பற்றிச் சொல்ல வந்ததாகவா நினைத்தீர்கள்? நிச்சயம் இல்லை. ஆ, அந்தக் கீரை! ஒரு கீரையின் சமையல் சாத்தியங்கள் அனந்தமானவை. கூட்டு, பொரியல், வடை, குழம்பு தாண்டி நாம் அதைச் சிந்திப்பதே இல்லை. வேகவைத்த வேர்க்கடலையுடன் பிடி கீரை நறுக்கிப் போட்டு வாணலியில் ஒரு சுழற்று சுழற்றித் தாளித்து உண்டு பார்த்திருக்கிறீர்களா? அட்டகாசமாக இருக்கும்.

ஒரு சமயம் கொல்கத்தா சென்றிருந்தபோது மறைந்த மொழிபெயர்ப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் மதிய உணவு உட்கொண்டேன். அவரது மனைவி பாலக் கீரையையும் இஞ்சியையும் இடித்து பொடிமாஸ் மாதிரி ஒன்று சமைத்திருந்தார். அப்போது அது குறித்து அவரிடம் விசாரிக்க மறந்துவிட்டேன். ஆனால், இன்றைக்கு வரை அந்த பாலக் பொடிமாஸின் ருசியும் மணமும் நினைவில் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. கிருஷ்ணமூர்த்தியைப் பின்பொரு சமயம் சென்னையில் சந்தித்தபோது “வங்கத்தில் இருந்து தமிழுக்கு நீங்கள் கொண்டுவந்ததைக் காட்டிலும் உங்கள் மனைவி கொண்டுவந்த கீரை பொடிமாஸ் பிரமாதம்’’ என்று சொன்னது நினைவிருக்கிறது.

கீரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். என் சிறு வயதுகளில் நான் வாழ்ந்த கேளம்பாக்கத்தில் என் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய கீரைத் தோட்டம் உண்டு. பெரிய என்றால் ரொம்பப் பெரிய! பிரம்மாண்டமான கிணற்றில் இருந்து மாடு கட்டி நீரடித்து வளர்த்த தோட்டம். அதிகாலை ஐந்தரை, ஆறு மணிக்கு அங்கே போனால் கண்ணெதிரே கீரை பறித்து, பை நிறைய போட்டு கொடுப்பார்கள். ஒரு பை கீரை அப்போது நாலணா மட்டுமே. ஒரு பை என்பது குறைந்தது இன்றைய மூன்று கட்டுக் கீரைக்குச் சமம். என்னைப் போன்ற தாவர பட்சிணிகளுக்கு நுண் ஊட்டச் சத்து களுக்குக் கீரையை விட்டால் வேறு கதியே கிடையாது. இன்ன கீரை என்றில்லை. எது வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும்!

தினசரி உணவில் குறைந்தது 200 கிராம் அளவுக்குக் கீரை இருந்துவிட்டால் வைட்டமின் குறைபாடுகள் அநேகமாக வராது. பிரச்சினை என்னவென்றால் நாம் சமைக்கிறபோது கீரையின் சத்துகளை அதிகபட்சம் எவ்வளவு சாகடிக்க முடியும் என்று தேடித் தேடி வழி கண்டுபிடித்து சமைக்கிறோம். அதற்கு உதாரணம், கீரை வடை! பருப்பும் எண்ணெயும் பொரித்த நிலையும் ருசி கூட்டக்கூடியவைதான். ஆனால், கீரைக்கு அது அநாசாரம். கீரையின் புனிதம் அதன் பச்சைத்தன்மையில் உள்ளது. பச்சையாகவே அது உள்ளே போனால் நடக்கிற அற்புதங்கள் அநேகம். ஒரு காலைச் சிற்றுண்டி. இதனை முயற்சி செய்து பாருங்கள்.

ஒரு கட்டுக் கீரை எடுத்துக்கொள்ளுங்கள். ஏதோ ஒரு கீரை. என்னவாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. கொதித்த நீரில் அதை ஐந்து நிமிடங்கள் போட்டு, வடித்து எடுத்து விடுங்கள் (கீரையோடு சேர்த்துக் கொதிக்கவைக்கக்கூடாது) கொஞ்சம் புதினா. கொஞ்சம் கொத்துமல்லி. கொஞ்சம் கருவேப்பிலை. ஒரு இஞ்ச் இஞ்சி. ஒரு இஞ்ச் பசு மஞ்சள். ஒரு பிடி தேங்காய். ஒரு தக்காளிப் பழம். நாலு சிறு வெங்காயம். இரண்டு பல் பூண்டு. போதும்.

இவற்றை அப்படியே மிக்ஸியில் தூக்கிப் போடுங்கள். வெந்நீரில் ஐந்து நிமிடம் ஊறிய கீரையையும் எடுத்துப் போடுங்கள். அது கூழாகும்வரை மிக்ஸி ஓடட்டும். தண்ணீரெல்லாம் சேர்க்க வேண்டாம். நன்கு அரைந்ததும் அப்படியே எடுத்து அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து, உப்புப் போட்டுக் குடித்துவிடுங்கள்.

இந்த கீரை ஸ்மூத்தியை இரண்டு தம்ளர் அருந்திவிட்டு ஆபீஸுக்குப் போய்விடலாம். இட்லி வேண்டாம். தோசை வேண்டாம். இடியாப்பம் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். இது கனஜோராக நாலு மணி நேரம் பசி தாங்கும். மட்டுமின்றி, இனிமா கொடுத்த மாதிரி வயிற்றைச் சுத்தம் செய்வதும் நடக்கும்; ருசி கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கிறதே என்பீர்களானால் புளிக்காத தயிர் இரண்டு கரண்டி சேர்க்கலாம். ஆனால், ஒரிஜினல் கீரை ஸ்மூத்தியின் ருசியானது ஒன்றிரண்டு முயற்சிகளிலேயே நமக்குப் பிடித்துவிடும். வாரம் ஒரு முறை இதைக் காலை உணவாக்கிக் கொண்டால் வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள் பெரும்பாலும் அண்டாது.

- அடுத்த வாரம் நிறைவுறும்.

http://tamil.thehindu.com/opinion/blogs/article19937656.ece

Link to comment
Share on other sites

ருசியியல் 42: மழை என்றால் பஜ்ஜி

 

 
mazipng

இதனை எழுதத் தொடங்கும் இந்தக் கணத்தில் என் அறைக்கு வெளியே மிதமான வேகத்தில் மழை பெய்ய ஆரம்பிக்கிறது.

அதன் சத்தம் கேட்டு, எழுதுவதைச் சற்று ஒத்திப் போட்டுவிட்டு எழுந்து வெளியே வருகிறேன். பால்கனியில் நின்று சிறிது நேரம் மழையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். வெளியே காடென வளர்ந்திருக்கும் செவ்வரளிச் செடிகளின் இலைகளின்மீது மழைத்துளிகள் மோதித் தெறிக்கின்றன. சட்டென்று ஓர் இடிச் சத்தம். மழை மேலும் வலுக்கிறது. காற்றின் வேகம் அதிகரித்திருப்பது அரளிச் செடிகளின் ஆட்டத்தில் தெரிகிறது. அவை அசைந்து அசைந்து மழைக்காற்றை என்னை நோக்கித் திருப்பிவிடுகின்றன. என் கன்னங்கள் குளிர்ந்து போகின்றன. காதுகளுக்குள் காற்று நுழைந்து கரங்கள் பூரிக்கின்றன. கணப் பொழுதில் குளிர்ச்சி உடலெங்கும் பரவி, பாதங்களில் சென்று நிறைகிறது.  

என்ன ஒரு தருணம்! சிறு வயதுகளில் மழை என்றால் விடுமுறை என் மகிழ்ச்சியல்ல. மழை தொடங்கிய அரை மணி நேரத்துக்குள் சுடச்சுடத் தட்டில் வந்து எதிரே அமரும் வெங்காய பஜ்ஜியே என் மகிழ்ச்சி. அப்போது வீட்டில் அது ஒரு கட்டாயச் சடங்காகவே இருந்தது. மழை என்றால் பஜ்ஜி. பஜ்ஜியில் மனம் தோயத் தொடங்கிவிட்டால் மழை மறந்துவிடும். அது ஏன் ஒரு மசால்வடையாகவோ, மைசூர் போண்டாவாகவோ என்றைக்குமே இருந்ததில்லை என்று பின்னாள்களில் பல சமயம் நினைத்துப் பார்த்திருக்கிறேன். மழைக்கு பஜ்ஜி என்று தீர்மானித்த பிரகஸ்பதிதான், பெண் பார்க்கப் போகும் இடங்களிலும் அதுவே என்று தீர்மானித்திருக்கிறான். எப்படியானாலும் இயற்கைப் பேரிடர்களின் தொடக்கம் பஜ்ஜியுடன் அமைந்துவிடுகிறது. 

என் மனைவியைக் கேட்டேன். அவளது சிறு வயதில் மழைக்குச் சகாயமான சிற்றுண்டியாக அவளது அம்மா என்ன செய்து தருவார்? 

கேழ்வரகு அடை என்று பதில் சொன்னாள்.  

கேழ்வரகு மாவில் வெல்லத்தை உதிர்த்துப் போட்டு, போளி மாவு பதத்தில் எண்ணெய் விட்டுப் பிசைந்துகொள்ள வேண்டியது. நாலு ஏலக்காய், எட்டு முந்திரி தட்டிப் போட்டு, நெய் தடவிய வாழையிலையில் வடிவம் கொடுத்து எடுத்து தோசைக்கல்லில் இட்டுச் சுட்டால் இனிப்பான கேழ்வரகு அடை தயாராகிவிடும். 

நான் இதை உண்டு பார்த்ததில்லை. ஆனால் அவள் சொன்னபோது உணர்ந்து பார்க்க முடிந்தது. பஜ்ஜியின் மிதமான காரமும் சூடும் மழைக்குச் சரியான எதிரிடை என்றால், இந்த வெல்ல அடையை மென்றபடி மழையை ரசிக்கிறபோது அப்போதைக்குச் சுமாரான கவிதையோ, எதிர்காலத்தில் என்னைப் போன்ற ஒரு சிறந்த புருஷனோ அவசியம் கிட்டும். 

ஆனால் ஒரு கணம் யோசித்துப் பார்க்கலாம். 

வெயிலடிக்கும் நாள்களில் நாம் உண்ணாமல் இல்லை. பருகாமல் இல்லை. ஆனால் மழை ஏதோ விதத்தில் உடனடியாக எதையாவது தேடச் சொல்கிறது. பசி இருக்கிறதா, வயிற்றில் இடம் இருக்கிறதா என்பதுகூடப் பொருட்டில்லை. மழை வந்தால் கொண்டாடிவிட வேண்டும். கொண்டாட்டம் என்பது உணவில் பூர்த்தியாவது. 

இப்போது ஞாபகம் வருகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு வர்தா புயல் சென்னையைத் தாக்கிய தினத்தில் ஒரு மசக்கைக்காரியின் தீவிரத்துடன் மசால் தோசை தின்ன முடிவு செய்தேன். வீட்டை விட்டு வெளியே எங்கும் இறங்கவே முடியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்திருந்த தினம். மின்சாரம் கிடையாது. பால் கிடையாது. பேப்பர் கிடையாது. எதுவுமே கிடையாது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் அன்று உருளைக்கிழங்கும் வெங்காயமும் இருந்தன. தோசை மாவு இருந்தது. அரிசி அல்லது வேறெந்த தானியத்தையும் மொத்தமாகத் தவிர்த்துவிட்டு பாதாமும் பனீரும் மட்டுமே உண்ண ஆரம்பித்து அப்போது சுமார் ஆறு மாதங்கள் ஆயிருந்தன. உடல் இயந்திரத்துக்கு ஓர் அதிர்ச்சியளித்துப் பார்க்கலாம் என்று அத்தனை பெரிய இடைவெளிக்குப் பிறகு அன்று மசால் தோசை சாப்பிடுவது என்று முடிவெடுத்திருந்தேன். திட்டமிட்டபடி மூன்று முறுகல் மசால் தோசைகளைச் சாப்பிடவும் செய்தேன்.  

என்னால் அன்று அதை உண்ணவே முடியவில்லை. தோசைத் துண்டுகள் தொண்டையைத் தாண்டி இறங்க மறுத்தன. தண்ணீர் குடித்துக் குடித்து உள்ளே தள்ள வேண்டியிருந்தது. இது எனக்கு மிகப்பெரிய வியப்பாக இருந்தது. ஏனென்றால் ஓட்டலுக்குப் போய் தோசை சாப்பிட்டால்கூட இரட்டைப்படையில்தான் ஆர்டர் செய்வேன். இரண்டு மசால் தோசை, இரண்டு ப்ளேட் பஜ்ஜி, இரண்டு காப்பி.  

ஆனால் இன்று என்ன ஆகிவிட்டது? உயிருடன் கலந்த உணவுகூட உள்ளே போக மறுக்குமா? நம்ப முடியவில்லை. 

பிறகு யோசிக்கும்போது புரிந்தது. நாவின் விருப்பம் என்பது மனத்தின் விருப்பத்தைப் பிரதிபலிப்பதுதான். நெஞ்சுக் குழிக்கு அப்பால் ருசி என்ற ஒன்றில்லை. அது சிந்தனையில் தோன்றி, நாவை நிறைத்து மறைவது. என் தேவைகள் மாறியபோது என் விருப்பங்கள் மாறிப் போயின. புதிய ருசிகளைக் கண்டடைய விரும்பி விதவிதமான பரிசோதனைகளை மேற்கொள்ளத் தொடங்கினேன். அரிசி, கோதுமை, மைதா இனங்களை அகற்றி, பாதாம், காய்கறி, பனீர் என்று அடிப்படை உணவுப் பொருள்களை வேறாக்கி வைத்துக்கொண்டு அதில் புதிய ருசிகளைத் தேடத் தொடங்கினேன். 

இந்தத் தொடரை ஆரம்பம் முதல் வாசித்து வரும் பல நண்பர்கள் ஒவ்வொரு வாரமும் எனக்கு மின்னஞ்சலில் எழுதிக் கேட்கும் சந்தேகம் ஒன்றுதான். ஒரே கொழுப்பு கொழுப்பாகச் சொல்கிறீர்களே, ஹார்ட் அட்டாக் வந்துவிடாதா? 

வராது என்பதுதான் பதில். கொழுப்பு ஓர் எரிபொருள். கார்போஹைடிரேட் ஓர் எரிபொருள். இரண்டையும் கலந்தால்தான் சிக்கல். வெறும் கொழுப்பு, நல்ல கொழுப்பு ஒருநாளும் உங்கள் இதயத்தைக் கசக்கிப் பிழியாது.  

துரதிருஷ்டவசமாக ருசியென்பது தேகநலத்துடன் சம்பந்தப்பட்ட ஒன்றாகவே அமைந்துவிட்டது. நாக்கு விரும்பும் எதையும் உடம்பு விரும்பாது என்று என் பாட்டி சொல்லுவாள். அப்படி ஒரேயடியாக முடிவுசெய்துவிட முடியாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. பயன்பாடு என்று ஒன்று உள்ளது. என்னத்தைத் தின்றாலும் போதிய உடலுழைப்பைக் கொடுத்துவிட முடியுமானால் ஸ்தூல சரீரம் தாக்குப் பிடிக்கும். ஆனால் என்னைப் போலொரு அசையாப் பிள்ளையார், தின்னவும் திளைக்கவும்தான் தயங்காதே தவிர, ஓடவும் உழைக்கவும் எப்போதும் யோசிக்கும். நேரமில்லை என்பதெல்லாம் எளிய தப்பிக்கும் வழி. அடிப்படையில் சோம்பேறியாக இருக்கிறவர்களுக்கு இது எக்காலத்துக்குமான பிரச்னைதான். அதனால்தான் நான் கொழுப்புணவுக்கு மாறினேன். இது ருசியை அல்ல; பசியை வெல்லும் வழி. ஒரு நாளைக்கு ஒரே வேளை உணவு. அரை மணி உட்கார்ந்து நிறுத்தி நிதானமாகச் சாப்பிட்டு முடித்துவிட்டால் போதும். நாளெல்லாம் பசி உணர்வே இல்லாமல் போய் பரம சுகமாக வேலை பார்க்க முடிகிறது இப்போது. 

இதோ, மழை இன்னும் விட்டபாடில்லை. மீண்டுமொருமுறை எழுந்துபோய் நின்று பார்க்கிறேன். சிறு வயதில் உண்ட பஜ்ஜிகளும் பக்கோடாவும் மீண்டும் நினைவில் திரண்டு எழத்தான் செய்கின்றன. ஆனாலும் இப்போது மீண்டும் உண்ணத் தோன்றவில்லை. நான் உணவு உட்கொண்டு பன்னிரண்டு மணி நேரம்தான் ஆகிறது. அடுத்த உணவுக்கு இன்னும் பன்னிரண்டு மணி நேரம் இருக்கிறது. எந்த பஜ்ஜி மோகினியாலும் அதைச் சீர்குலைக்க முடியாது. 

ஏனெனில் பசிக்கும் நேரத்தில் மட்டுமே என் ருசிமொட்டுகள் அவிழும்படியாகப் பழக்கி வைத்திருக்கிறேன். 

[நிறைந்தது]

http://tamil.thehindu.com/opinion/blogs/article19980370.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நகைச்சுவையுடன் பலவித உணவு வகையறாக்களையும் சொல்லும் பதார்த்தமான பதிவு......தொடரை தொய்வின்றி தொடர்சியாக வழங்கியமைக்கு நன்றி நவீனன் ......!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.