Jump to content

சிறுவர் வாய்மொழிப் பாடல்களின் கட்டமைப்பும் வகைகளும்


Recommended Posts

siragu-children2

நாட்டுப்புறப்பாடல்கள் வாய்மொழியாகவே மக்களிடத்தில் வழங்கி வருகின்றன. இவ்வாய்மொழி இலக்கியங்கள் தற்காலத்தில் பெருமுயற்சிகள் எடுத்து எழுத்துவடிவில் பதிவாக்கம் செய்யப்படுகின்றன. குறிப்பாக நாட்டுப்புற இலக்கிய வகைகளுள் ஒன்றான, சிறுவர் பாடல்கள் தற்காலத்தில் தேய்ந்து அருகி வருகின்றன. இதற்குக் காரணம் சிறுவர்கள் தம்விளையாட்டு எண்ணம் மறக்கப்பெற்று அவற்றிக்கு நேரமும் வாய்ப்பும் இல்லாமல் போனது என்பதே ஆகும். சிறுவர்கள்தம் விளையாட்டு எண்ணம் தொலைக்காட்சி, கணினி விளையாட்டு ஆகியவற்றால் கவரப்பெற்று விளையாட்டு, ஆடல், பாடல், விடுகதை போன்றவற்றிற்கு நேரம் இல்லாமல் போயிற்று. விளையாட்டைக் காண்பவர்களாக மட்டுமே இக்காலக் குழந்தைகள் வளர்ந்து வரும் இவ்வகை குறைவதற்கான காரணம் ஆகும்.

மேலும் பள்ளிகளில் நாட்டுப்புற மரபு சார்ந்த விளையாட்டுக்களுக்கு இடமில்லாமல் இருப்பதும் ஒரு பெருங்குறையாகும். பள்ளிகளில் உலகமயமாக்கப்படுதல் காரணமாக உலக அரங்கில் விளையாடப்படும் விளையாட்டுகள் விளையாடச் சொல்லித்தரப்பெறுகின்றன. இதன் காரணமாக கிராமப்புற விளையாட்டுகள் மறைந்துவருகின்றன. மேலும் கிராமப்புற விளையாட்டு சார்ந்த பாடல்களும் சிறுவர்களால் விளையாடப்படாத காரணத்தினால் அழிவுக்குள்ளாகி வருகின்றன. இருப்பினும் இவற்றில் இருந்துத் தப்பிக் கிடைக்கும் சிறுவர் பாடல்களைத் தொகுப்பது அவற்றை ஆராய்வது என்பது இக்காலத்திற்குத் தேவையான ஒன்றாகும். எதிர்கால சமுதாயத்திற்குத் தமிழகத்தின் மரபு சார் விளையாட்டுக்களை பதிவாக்கம் செய்யும் முயற்சியாகவும் இது விளங்கக் கூடும்.

சிறுவர்கள் பாடிவந்த வாய்மொழிப் பாடல்கள் அவர்களுக்குக் கல்வியறிவு, உலக அறிவு, சமுதாய இணக்கம், பண்பாட்டு அறிவு, பழகும் முறை ஆகியனவற்றைக் கற்றுத்தருவனவாக விளங்குகின்றன. இப்பாடல்கள் சொல், பொருள், தொடை அளவில் எளிமையும் இனிமையும் உடையனவாகும். இவற்றின் பொது அமைப்பு என்பது இவ்வியலின் வாயிலாக வெளிப்படுத்தப்படுகின்றது.

நாட்டுப்புற இலக்கியம் – பொது வரையறைகள்

siragu-children4

நாட்டுப்புறத்து இலக்கியம் நாட்டுப்புற இலக்கியம் ஆகின்றது. இதனைப் பற்றி ஆராயும் இயல் நாட்டுப்புறவியல் ஆகின்றது. தொழிலையும், மொழியையும், சமயத்தையும் பொதுவான அடிப்படைக் கூறுகளாகக் கொண்ட எந்த ஒரு குழுவும் கூட்டமும் நாட்டுப்புறம் (Folk) என்று அழைக்கப்படும் நாட்டுப்புறவியல் என்பது நாட்டுப்புற மக்களின் மரபு வழிப்பட்ட படைப்புகள் (Traditional creations) எனலாம். இவ்வியலுக்குள் இலக்கியம் கலை, பண்பாடு, பழக்க வழக்கங்கள் போன்றவை அடங்கும். நாட்டுப்புற இலக்கியத்தைப் பாடல், கதை, கதைப்பாடல் விடுகதை, பழமொழி என்று ஐந்து வகையாகப் பகுத்துக் கொள்ளலாம்   என்று நாட்டுப்புறத்துக்கும், நாட்டுப்புறவியலுக்கும் விளக்கம் தருகின்றார் சு. சண்முகசுந்தரம்.

ஒரு நாட்டு மக்களின் நாகரிகத்தை, பண்பாட்டை, பழக்க வழக்கங்களை, வரலாற்றை, நாட்டு நடப்பை உண்மையான முறையில் படம் பிடித்துக் காட்டுவதே நாட்டுப்புறவியல் அல்லது நாட்டார் வழக்காற்றியல் எனலாம்என நாட்டுப்புற இலக்கியத்திற்கு விளக்கம் தருகின்றார் எஸ். ஸ்ரீகுமார்.

புராணங்கள், மரபுக்கதைகள், கதைகள், பழமொழிகள், புதிர்கள், கூற்றுக்கள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், நாடகங்கள், தனிப்பாடல்கள், இசை, நடனம், கதைப்பாடல்கள், வழிபாடுகள், தெய்வங்கள், சடங்குகள், விழாக்கள், மாய மந்திர வித்தைகள், பில்லி, சூனியங்கள், கலை, கைத்தொழில் ஆகிய அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியப் பொதுச்சொல்லாக நாட்டுப்புற இலக்கியம் அமைகின்றதுஎன்று நாட்டுப்புற இலக்கியம் என்பதற்கான பொருளை வரையறை செய்கின்றனர் ஆய்வாளர்கள்.

கற்றாரைக் காமுறச் செய்யும் பாடல்கள் நிறைந்து நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் கொள்கலமாய் அமைந்ததுவே நாட்டுப்புற இலக்கியம்என்று நாட்டுப்புற இலக்கியத்திற்கு இலக்கணம் வகுக்கிறார் ச.வே. சுப்பிரமணியம்.

தமிழர்தம் பழம் இலக்கியங்கள் பற்றிக் கருத்துத் தெரிவித்துள்ள மு. வரதராசன் தமிழில் பழைய இலக்கியம் தமிழ்நாட்டில் நாட்டுப்புறப் பாடல்களிலிருந்து மலர்ந்த பாடல்கள். அந்தப் பாடல்களின் செய்யுள் வடிவமும், வேறு எந்த மொழியிலிருந்தும் கடன் வாங்கப்பட்டதன்று. அது மக்களிடையே வழங்கி வந்த நாட்டுப்புறப் பாடல்களிலிருந்து வடித்து அமைக்கப்பட்ட வடிவமே என்கிறார்.இக்கருத்தின் வழியாக தமிழக நாட்டுப்புறப்பாடல்கள் தமிழக மக்களின் சொந்த வடிவம் என்றதை அறிந்து கொள்ளமுடிகின்றது.

நாட்டுப்புறவியலின் தன்மை பற்றிய பின்வரும் கருத்து நாட்டுப்புறவியலை இன்னும் விளக்குவதாக உள்ளது. நாட்டுப்புற இலக்கியங்கள் வாய்மொழியாக வாழ்ந்து வருகின்றன. இதனால் எழுதப்பட்டனவாக இருந்தாலும் அவற்றில் நாட்டுப்புறக் கூறுகள்இருப்பின் அவையும் நாட்டுப்புற இலக்கியங்கள் என்றே கருதப்படும். நாட்டுப்புற மக்களுடைய வாழ்க்கையை, எண்ணத்தைப் பிரதிபலிக்கும் எதையும் நாட்டுப்புற மக்கள் ஏற்றுக்கொள்வர். ஏற்றுக் கொண்டால் அது பரவும். நாட்டுப்புற மக்களின் இலக்கியம் என்பது அது பரவும் தன்மையைக் கொண்டே முடிவு செய்யப்படுகின்றதுஎன்று நாட்டுப்புறவியல் என்பது பரவும் தன்மையானது என்பதை இக்கருத்தின் வழி அறியமுடிகின்றது.

நாட்டுப்புற இலக்கியம் தமிழில் எழுந்து வளர்ந்த காலச் சூழலை நாட்டுப்புறவியல் தமிழகத்தில் ஐம்பதுகளில் முகிழ்த்து, அறுபதுகளில் அரும்பி, எழுபதுகளில் போதாகி, எண்பதுகளில் மணம் பரப்பி வருகின்றதுஎன்று இனம் காட்டுவார் ஸ்ரீகுமார். எண்பதிற்குப் பிறகு நாட்டுப்புற ஆய்வுகள் எழுந்து இவ்வியலை வளப்படுத்தி வருகின்றது.

நாட்டுப்புற இலக்கியம் வரலாற்றுச் சான்றாகவும் விளங்குவது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். தமிழ்ச் சமூகத்தின் முந்தைய இரண்டு நூற்றாண்டுகளின் சமூக வரலாற்றையும், கிராமத்து மண்ணின் இயல்பையும், உணர இந்தப் பாடல்கள் பெரிதும் உதவுகின்றனஎன்ற இந்தக் கருத்து நாட்டுபுற இலக்கியம் வரலாற்று ஆவணமாகத் திகழ்வது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.

இக்கருத்துக்களால் பின்வரும் முடிவுகளுக்கு வரமுடிகின்றது.

நாட்டுப்புறம் என்பது மொழி, இனம், பண்பாடு போன்றவற்றால் ஒருங்கிணைந்த ஒரு மக்கள் கூட்டத்தைக் குறிப்பது என்றும், அதன் வாய்மொழி இலக்கிய வெளிப்பாடு என்பது பாடல் வடிவில், பாடல் சார்ந்த கதை வடிவில், விடுகதைகள், சொலவடைகள் போன்றனவாக வெளிப்படலாம் என்றும் இவற்றை மொழியியல், உளவியல் போன்ற துறைகள் வழியாக ஆராய்வது என்பது நாட்டுப்புற இயல் ஆய்வு என்பன மேற்கண்ட கருத்துக்களின் அடிப்படையில் பெறப்படும் கருத்துக்களாகும். மேலும் நாட்டுப்புற இலக்கியம் பரவும் தன்மையைப் பெற்றது, அது வரலாற்று ஆவணமாகவும், வரலாற்றுப் பதிவாகவும் கருதும் பெருமைக்கு உரியது என்பதும் மேற்கருத்துகளின் வழிப் பெறப்படுகின்றது.

siragu-children5

நாட்டுப்புற இலக்கியத்தைப் பலவகைப்படுத்தலாம். நாட்டுப்புறப் பாடல்கள் என்பது நாட்டுப்புற இலக்கியத்தின் மிக முக்கியமான பகுப்பாகும். வாயில் பிறந்து, செவிகளில் உலவி, காற்றில் மிதந்து கருத்தில் இனிப்பவை. என்று பிறந்தது, எவரால் பிறந்தது என எடுத்துச் சொல்ல இயலாதது. கிராமத்து மக்களுடன் நெருங்கியத் தொடர்புடையது. நாட்டார் பாடல், பாமரர் பாடல், பரம்பரைப் பாடல், கிராமியப் பாடல், மக்கள் பாடல், என்றெல்லாம் அழைப்பர். நாட்டார் பாடல்கள்கிராமத்து மண்ணின் மணம் கமழ்பவை, காற்றில் மிதப்பவை. ஓசை வடிவில் நின்று கொண்டிருப்பவை. வாழையடி வாழையாக ஒருவர் பாட மற்றவர் கேட்க வந்தவை. இசை சிறகால் கலைவானில் பறந்து கொண்டிருப்பவை. இவற்றில் உணர்ச்சி இருக்கும், ஓசை தவழும், தாளக்கட்டு புரளும். ஆனால் இலக்கண வரம்பற்றவைஎன்று நாட்டுப்புறப்பாடல்களின் இயல்புகளை அறிஞர் சுட்டுவர்.

நாட்டுப்புற மக்களால் பாடப்படும் பாடல்கள் நாட்டுப்புறப்பாடல்கள் ஆகும். நாட்டுப்புறப்பாடல்கள் நாட்டுப்புற மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்துள்ளன. மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள நிகழ்வுகள் நாட்டுப்புறப்பாடலின் பொருளாகின்றனஎன்று நாட்டுப்புறப்பாடல்களுக்கு விளக்கம் அளிக்கின்றார் சு. சக்திவேல்.

கவிதை இலக்கியத்திற்கு என்றுள்ள சம்பிரதாயங்களைச் சற்றும் பொருட்படுத்தாமல் தானே எழுந்து, தான் விரும்பியவாறு வீசும் தென்றல் போலவும், தம் மனம் போல் பொங்கிச் சுரக்கும் தண்சுனை போலவும், சுற்றியிருக்கும் யாரையும் எண்ணாமல் ஏதோ பேசும் மழலைக் குழந்தை போலவும் இயல்பாகப் பொங்கிப் பெருகுவது நாடோடிப்பாடல்என்று நாடோடிப் பாடல்களாக நாட்டுப்புறப்பாடல்களைக் காண்கிறார் சண்முகசுந்தரம்.

நாட்டுப்புறப்பாடல்கள் நெகிழ்ந்த தொடரமைப்பைச் சார்ந்தவை ஆகும். எழுத்திலக்கியத்தைப் போன்று நாட்டுப்புறப்பாடல்களில் எதுகை, மோனை, இயைபு, இரட்டைக்கிளவி ஆகியவற்றைக் காணமுடிகின்றது. நாட்டுப்புறப் பாடல்களுக்கு அடிவரையறை இல்லை என்று நாட்டுப்புறப்பாடல்களின் தன்மைகளை ஆய்வாளர் எடுத்துக்காட்டுகின்றனர்.

இவை தவிர நாட்டுப்புறக் கதைகள், விளையாட்டுகள், விடுகதைகள், சொலவடைகள் போன்ற பல வகைகள் நாட்டுப்புற இலக்கியத்தின்பால் அமைந்துள்ளன.

பல்வேறு அறிஞர்கள் பகுத்த பகுப்புகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு அனைவரது கருத்துகளும் ஒருங்கே அமையுமாறு நாட்டுப்புற இலக்கிய வகைகளை ஆறு. இராமநாதன் பின்வருமாறு பிரித்துக் கட்டமைத்துள்ளார்.

நாட்டுப்புறப் பாடல்கள்

  1. தாலாட்டு
  2. குழந்தை வளர்ச்சி நிலைப்பாடல்கள்
  3. விளையாட்டுப் பாடல்கள்
  4. தொழிற்பாடல்கள்
  5. வழிபாட்டுப்பாடல்கள்
  6. இரத்தல் பாடல்கள்
  7. இழப்புப் பாடல்கள்

இவை மேலும் பகுப்பிற்கு உள்ளாகின்றன.

தாலாட்டின் வகைகள்

siragu-children6

  1. தாய் பாடுவது
  2. பாட்டி பாடுவது
  3. அத்தை பாடுவது
  4. சகோதரி பாடுவது
  5. செவிலி பாடுவது

குழந்தை வளர்ச்சிநிலைப் பாடல்கள்

  1. தவழல் பாடல்கள்
  2. உண்ணல் பாடல்கள்
  3. சாய்ந்தாடல்
  4. கை வீசல்
  5. கை தட்டல்
  6. அம்புலி
  7. நாப்பயிற்சி

விளையாட்டுப் பாடல்கள்

விளையாட்டுப் பாடல்கள் பொதுவாக இரு வகையில் பிரிக்கப்பட்டுள்ளது. அவை உடற்பயிற்சி விளையாட்டு, வாய்மொழி விளையாட்டு என்பனவாகும். அவற்றிற்கும் உள் பிரிவுகள் உண்டு.

உடற்பயிற்சிப் பாடல்கள்

siragu-children

  1. சடுகுடுப் பாடல்
  2. திம்பிப் பாடல்
  3. கண்ணாமூச்சிப் பாடல்
  4. வெயிலா நிழலாப் பாடல்
  5. ஏழாங்காய்ப் பாடல்
  6. கோலிப் பாடல்

வாய்மொழி விளையாட்டு

  1. வேடிக்கைப் பாடல்கள்
  2. வினா விடைப்பாடல்கள்

தொழிற்பாடல்கள்

தொழிற்பாடல்களிலும் இருவகைகள் உண்டு. அவை 1. வேளாண்மைத் தொழில்கள், வேளாண்மையில்லாத தொழில்கள் என்பனவாகும்.

வேளாண்மைத் தொழில்கள்

  1. ஏர்ப்பாடல்
  2. ஏற்றப்பாடல்
  3. நடவுப்பாடல்
  4. களைவெட்டும் பாடல்
  5. அறுவடைப் பாடல்
  6. பொலி பாடல்

வேளாண்மை இல்லாதத் தொழில்கள்

  1. நெல் குற்றும் பாடல்
  2. சுண்ணாம்பு இடிக்கும் பாடல்
  3. பாரஞ் சுமக்கும் பாடல்
  4. வண்டியோட்டும் பாடல்
  5. மீன்பிடிப்புப் பாடல்கள்

வழிபாட்டுப் பாடல்கள் என்பது அடுத்த வகையாகும். இதுவும் இருவகைப்படும். பெருந்தெய்வ வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு என இருவகைப்படுகின்றது. இவற்றுள் சிறு தெய்வ வழிபாட்டுப் பாடல்கள்

  1. பூசைப் பாடல்
  2. விளக்குக் கேள்விப் பாடல்
  3. நோன்புப் பாடல்

ஆகிய மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது.

கொண்டாட்டப் படல்கள் என்பது சிறப்பு, பொது என இருவகைப்படுகின்றது.

சிறப்புக் கொண்டாட்டப் பாடல்கள்

  1. சமுதாயக் கொண்டாட்டம்
  2. குடும்பக் கொண்டாட்டம்

என இருவகைப்படுகின்றது.

                சமுதாயக் கொண்டாட்டம் என்ற வகையில்

                                1. சமயந் தொடர்பானவை

                                2.சமயந் தொடர்பற்றவை

என இருவகையாகவும்

                                சமயந்தொடர்பானவையில்

                                1.இந்து சமயம் தொடர்பானவை

                                2. பிற சமயந் தொடர்பானவை

என்று இருவகையாகவும்,

சமயம் தொடர்பற்றவை என்ற பகுப்பில்

  1. பிரச்சார, ஊர்வலப்பாடல்
  2. பிறந்தநாள் விழா ஊர்வலப்பாடல்

என இருவகைகளாகவும் பகுக்கப்படுகின்றன.

குடும்பக் கொண்டாட்டப் பாடல்களில்

  1. காதணிவிழாப் பாடல்
  2. மஞ்சள் நீராட்டு விழாப்பாடல்
  3. வளைகாப்பு விழாப் பாடல்
  4. மணவிழாப் பாடல்

என்ற நான்கு வகையாகவும். இந்நான்கில் மணவிழாப்பாடல் என்பது

  1. நலுங்குப்பாடல்
  2. ஊஞ்சல் பாடல்
  3. சம்பந்தப் பாடல்

என்ற மூவகை படுவதாகவும் பகுக்கப்பெறுகின்றது.

கொண்டாட்டப் பாடல்களில் மற்றொரு வகையான பொது என்ற பிரிவில்

  1. பொதுமக்கள் நிகழ்ச்சிகள்
  2. கலைஞர்களின் நிகழ்ச்சிகள்

என்ற இருவகைப்படுகின்றன.

பொது மக்கள் நிகழ்ச்சிகள் என்பதில்

  1. கும்மிப் பாடல்கள்
  2. கோலாட்டப் பாடல்கள்

ஆகியன அமைகின்றன.

கலைஞர்களின் நிகழ்ச்சிகள் என்ற பகுப்பில்

  1. கதைத்தொடர்பு நிகழ்ச்சிகள்
  2. கதைத் தொடர்பில்லா நிகழ்ச்சிகள்

ஆகிய இரண்டும் அமைகின்றன.

கதைத் தொடர்பு நிகழ்ச்சிகள் என்ற பகுப்பில்

  1. கதைப்பாடல்
  2. வில்லுப் பாடல்
  3. தெருக் கூத்துப்பாடல்
  4. தோல் பொம்மலாட்டப் பாடல்
  5. கொலைச் சிந்து

ஆகியன அமைகின்றன.

                இரத்தல் பாடல்கள் என்ற பகுப்பில்

  1. குடு குடுப்பைப்பாடல்
  2. குறிசொல்லிப் பாடல்
  3. உண்டிப்பிலிகாரர் முதலிய பிச்சைக்காரர் பாடல்

ஆகியன அமைகின்றன.

இழத்தல் பாடல்கள் பல்வேறு பகுப்புகளை உடையதாக உள்ளது. இதன் பொதுப் பிரிவுகள் இரண்டாகும். அவை உயிர் இழப்புப் பாடல்கள், பிற இழப்புப் பாடல்கள் ஆகியனவாகும்.

உயிர் இழப்புப் பாடல்கள் என்பன இருவகைப்படும்.

  1. மகளிர் பாடுவன (ஒப்பாரி)
  2. கலைஞர் பாடுவன

இவற்றில் கலைஞர் பாடுவன மேலும் இருவகைப்படுகின்றன.

  1. மாரடிப்பாடல்
  2. கைலாசப் பாடல்

ஆகியன அவ்விரு வகையினவாகும்.

பிற இழப்புப் பாடல்கள் என்ற பகுப்பில்

  1. உரிமை இழப்புப்பாடல்
  2. பொருள் இழப்புப் பாடல்
  3. மான இழப்புப் பாடல்
  4. உயிர் வாழும் நம்பிக்கை இழப்பு

ஆகிய பாடல்கள் அமைகின்றன.

இவ்வாறு பெருத்த அளவில் நாட்டுப்புறப்பாடல்களை வகைமை செய்து அளித்துள்ளார் ஆறு. இராமநாதன். இவற்றுள் ஒன்று சிறுவர் பாடல்கள் ஆகும். இச்சிறுவர் பாடல்கள் ஆறு.இராமநாதன் கருத்தின்படி குழந்தை வளர்ச்சி நிலைப்பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைவனவாகும்.

இவ்வகையில் நாட்டுப்புறப் பாடல்கள் என்பது விரிந்த வகைகள், விரிந்த களங்கள் கொண்டது ஆகும். ஒவ்வொரு நாட்டுப்புறத்தின் சிறந்த அடையாளங்கள் இந்நாட்டுப் புறப்பாடல்கள் ஆகும்

 

சிறுவர் பாடல்கள் பொது வரையறை

siragu-siruvar-vaaimozhi2

குழந்தைகளுக்காக எழுதப்பெறும் பாடல்கள், குழந்தைகள் தமக்குத் தாமே எழுதிக்கொள்ளும் பாடல்கள் ஆகிய இரு நிலைகளில் சிறுவர் பாடல்கள் அடிப்படையில் அமைகின்றன. சிறுவர்களுக்காக எழுதப்படும் மூத்தோரின் பாடல்களின் தன்மையைப் பின்வரும் கருத்துகள் எடுத்துக்காட்டுகின்றன.

சிறுவர் இலக்கியம் என்ற தொடரானது ‘Children literature‘ என்ற சொல்லின் மொழிப் பெயர்ப்பாக அமைகிறது. ‘Child’ என்பது சின்னஞ்சிறு குழந்தையைக் குறிப்பதால், குழந்தை எனும் சொல்லுக்குப் பதிலாக, சிறுவர் என்னும் சொல்லைக் கொண்டு இவ்வியலக்கியத்தைச் சிறுவர் இலக்கியம் என்று அழைத்தனர். சிறுமியர் என்ற சொல்லையும் உள்ளடக்கியதாகச் சிறுவர் இலக்கியம் கருதப்பட்டாலும் இது ஆண்பாலையே முதன்மைப்படுத்துவதாக அமைவதால் சிறுவர் இலக்கியம் எனும் தொடரை விடுத்துக் குழந்தை இலக்கியம் என்று குறிப்பதும் உண்டுஎன்று சிறுவர் இலக்கியம் என்பதற்கான பெயர்ப் பொருத்தத்தை ஆராய்கின்றனர் அறிஞர்கள்.

3 வயது முதல் சுமார் 16 வயது வரையிலான குழந்தைகளுக்காகப் படைக்கப்பெறுவது சிறுவர் இலக்கியம். அதாவது பள்ளிக்கல்வி முடியும் வரையிலான பருவத்தினருக்குரியது எனலாம்என்று சிறுவர் இலக்கியத்திற்கான வயது வரையை உறுதி செய்கின்றனர் ஆய்வாளர்கள்.

இக்கருத்துகளின் வழியாக சிறுவர் இலக்கியம் என்பது பள்ளிப் படிப்பை முடிக்கும் எல்லை வரையான காலத்தில் உள்ள சிறுவர் சிறுமியருக்காக எழுதப்பெறும் இலக்கியம் என்பதும், அவ்விலக்கியம் சிறுவர் சிறுமியருக்கு நன்னோக்கத்தை அளிப்பது என்பதும் தெரியவருகின்றன.

சிறுவர் இலக்கியம் என்பது குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் அவர்களது மனநிலைக்கும் வயதுக்கும் பொருந்தும் வகையில் கவிதை, கட்டுரை, நாடகம் முதலியவற்றைப் படைத்துத் தருவது. எளிமை, இனிமை, தெளிவு ஆகிய மூன்றும் கலந்த நடையில் அது அமையவேண்டும். சொற்களில் எளிமை, வாக்கியங்களில் இனிமை, பொருள் விளக்கத்தில் குழப்பம் ஏற்படுத்தாத தெளிவு இருக்க வேண்டும். இந்த மூன்றைக் காட்டிலும் மிக மிக இன்றியமையாத ஒன்று, குழந்தை மனதை மாசுறுத்தும் எதுவும் எள்ளளவும் இல்லாமல் இருத்தலாம்என்பது குழந்தை இலக்கியப் படைப்பாளி டாக்டர் பூவண்ணன் தரும் வரையறையாகும்என்ற கருத்து சிறுவர் இலக்கியத்தை உயர்ந்த நோக்கத்தை அறிவிப்பதாகும்.

இக்கருத்தினால் குழந்தை இலக்கியம் படைக்கின்றபோது குழந்தை மனதை நேர்வழியில் செலுத்தும் கருத்துகளை மட்டுமே எடுத்துரைக்க வேண்டும் என்பது மிக நுண்ணிய வேறுபாடாக மற்ற இலக்கியங்களுக்கு இல்லாததாக இருப்பது அறியத்தக்கது.

சிறுவர் இலக்கியத்தின் தன்மைகளைப் பின்வரும் கருத்துகள் எடுத்துக்காட்டுகின்றன.

குழந்தைப் பாடல்களின் பாடற்பொருள் தெரிந்த பொருளாக இருக்கும். எளிய நடையில் மன நிலைக்கும், வயதிற்கேற்பவும் அமையும். சந்த நயத்தோடு குழந்தைகள் தாமே பாடி மகிழ்வனவாக இருக்கும். விரும்பும் பொருட்களை, காட்சிகளை, விளையாட்டைப் பற்றி இருப்பதோடு அறிவுக்கு ஏற்ற சொற்களையும், கருத்துக்களையும் சந்தங்களையும் பெற்றிருக்கும் என்பார் பூவண்ணன்.

எளிய சொற்கள், இனிய சந்தம், தெளிவான பொருள், நல்ல கற்பனை, சிறந்த உணர்ச்சி, உயர்ந்த விளக்கம் இவற்றைக் குழந்தைப் பாடல்களின் இலக்கணம் எனலாம்என்கிறார் ஸ்ரீகுமார்.

இக்கருத்துகள் வழியாகச் சிறுவர் இலக்கியம் என்பதன் பொதுத்தன்மைகள், வடிவ வரையறைகள் போன்றனவற்றை அறிந்து கொள்ள முடிகின்றது.

சிறுவர் இலக்கியத்தின் தேவை என்பது பற்றிய பூவண்ணன் பின்வரும் கருத்தும் சிறுவர் இலக்கியத்தின் தன்மையைச் சுட்டுவதாக உள்ளது.

பெரிய பெரிய இலக்கியங்களை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு முதலியவற்றைப் பிள்ளைகள் பெரியவரான பிறகு கற்கலாம். தொட்டில் குழந்தையாய் இருக்கும் காலம் தொடங்கி தொண்டு கிழவரான பிறகும் படிக்கலாம். இவற்றைப் படிக்கும் உணர்வு தொடர வேண்டுமானால் தம் வயதிற்கேற்ற நல்ல நல்ல நூல்களைப் பிள்ளைப் பருவத்திலேயே தொடங்கவேண்டும். சிறுவர் படிக்கத் தொடங்கும் முன்பே, படங்கள் நிறைந்த பாலர் நூல்களைப் பார்க்கவும், பிறகு படிக்கவும் வேண்டும்? அதற்காகவே சிறுவர் இலக்கியத்தை ஒவ்வொரு பொற்றோரும் அறிய வேண்டும், ஆதரிக்க வேண்டும். ஏன் ஆக்கவேண்டும்! தாமே உருவாக்கவும் வேண்டும் என்ற இக்கருத்துச் சிறுவர் இலக்கியத்தின் தன்மையையும், அதன் தேவையையும் அதனைப் பெருக்க பெற்றோர்கள் எடுக்க வேண்டிய முயற்சியையும் எடுத்துரைப்பதாக உள்ளது.

சிறுவர் இலக்கியத் தொன்மை

siragu-siruvar-vaaimozhi5

சிறுவர் இலக்கியத் தொன்மை நலம் வாய்ந்தது. தொல்காப்பியர் காலந்தொட்டே இது வளரத் தொடங்கிவிட்டது. பிசி, பொருள் மரபில்லா பொய்ம்மொழி ஆகிய இரண்டும் தொல்காப்பியம் காட்டும் குழந்தை இலக்கிய வகையாகும். பிசி என்பது விடுகதையே, பொருள் மரபில்லா பொய்ம்மொழி என்பது கதையேஎன்று இரண்டிற்கும் விளக்கம் தருகிறார் பூவண்ணன்.

தொல்காப்பியத்தில் விதைக்கப்பட்ட சிறுவர் பாடல்களின் விதை என்பது மெல்ல சங்க இலக்கியக் காலத்தில் வளர்ந்தது. பாரி மகளிர் பாடிய பாடல்கள் தந்தையைப் பற்றிய மகள்களின் மதிப்பீடாக விளங்குகின்றன. ‘குறு குறு நடந்து’என்று தொடங்கும் பாண்டியன் அறிவுடைநம்பியின் பாடல் குழந்தை பற்றிய மன்னனால் படைக்கப்பெற்ற சிறுவர் பாடலாகின்றது.

தொடர்ந்து ஒளவையார், பாரதியார் போன்றோர் சிறுவர்க்கான பாடல்களைப் படைத்தளித்தார்கள் என்றாலும் சிறுவர்களால் சிறுவர்க்கு அளிக்கப்பெற்ற இலக்கியம் என்பது இல்லாத நிலை என்றே கொள்ளலாம். இருப்பினும் நாட்டுப்புற வழக்கில் வழங்கும் சிறுவர் பாடல்களே உண்மையான சிறுவர் இலக்கியமாகும். சிறுவர்கள் தம் மன எழுச்சிக்கு ஏற்பப் பாடிய பாடல்கள் இவையாகும். இப்பாடல்கள் யாரால் எழுதப்பெற்றன என்பது அறியப்படாமலே சிறுவர்பாடல்களாக விளங்கி வருகின்றன.

தமிழகத்தின் பல பகுதிகளில் இப்பாடல்கள் கிடைத்து வருகின்றன. இவற்றைத் தமிழகம் அளவில் தொகுக்கும் முயற்சி நடைபெற்றால் அது மிகப்பெரிய நாட்டுப்புற சிறுவர் இலக்கியக் களஞ்சியமாக உருவெடுக்கும். அம்முயற்சியின் ஒரு பகுதியாக இவ்வாய்வேடும் அமைகின்றது.

தேவகோட்டை சார்ந்த பகுதிகளில் சிறுவர் பாடல்கள்

தேவகோட்டை வட்டாரம் என்பது சிவகங்கை மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். சிவகங்கை மாவட்டம் என்பது பழைய இராமநாதபுர மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பத்தைந்தாம் ஆண்டில் பழைய இராமநாதபுர மாவட்டத்தை சிவகங்கை மாவட்டம், விருதுநகர் மாவட்டம், இராமநாதபுர மாவட்டம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டது. இம்மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் மாவட்டம் எனவும், தேவர் திருமகன் மாவட்டம் எனவும் வழங்கப்பெற்றுத் தற்போது சிவகங்கை மாவட்டம் என அழைக்கப்பெற்று வருகின்றது.

இம்மாவட்டம் சிவகங்கை, தேவகோட்டை என்ற இரு வருவாய்க் கோட்டங்களைக் கொண்டுள்ளது.

  1. சிவகங்கை
  2. இளையான்குடி
  3. மானாமதுரை
  4. திருப்பத்தூர்
  5. காரைக்குடி
  6. தேவகோட்டை
  7. காளையார்கோயில்

ஆகிய வட்டங்களைக் கொண்டுள்ளது. இதில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றியங்கள் பன்னிரண்டு ஆகும். அவை,

  1. சிவகங்கை
  2. காளையார்கோயில்
  3. இளையான்குடி
  4. மானாமதுரை
  5. திருப்புவனம்
  6. எஸ். புதூர்
  7. சிங்கம்புணரி
  8. திருப்பத்தூர்
  9. கல்லல்
  10. சாக்கோட்டை
  11. தேவகோட்டை
  12. கண்ணங்குடி

ஆகியனவாகும்.

இம்மாவட்டத்தில் மூன்று நகராட்சிகள் உள்ளன. அவை பின்வருமாறு.

1. காரைக்குடி

2. சிவகங்கை நகராட்சி,

3. தேவகோட்டை நகராட்சி

ஆகியன அவையாகும்.

இவற்றுள் தேவகோட்டை வட்டாரம் தொன்னூற்றோரு சிற்றூர்களை அடக்கியுள்ளது. அவை பின்வருமாறு

  1. அனுமந்தக்குடி
  1. ஆந்தகுடி
  2. ஆறாவயல்
  3. இடைக்குடி
  4. இரவுச்சேரி
  5. இரும்புவயல்
  6. இருவனிவயல்
  7. இலக்கணிவயல்
  8. ஈகரை கோட்டைவயல்
  9. உஞ்சனை
  10. உடையாச்சி
  11. உருவாட்டி
  12. எழுவன்கோட்டை
  13. என் மணக்குடி
  14. ஒரசூர்
  15. ஒருமணியாந்தல்
  16. கடகம்பட்டி
  17. கண்டதேவி
  18. கண்டியூர்
  19. கண்ணன் கோட்டை
  20. கப்பலூர்
  21. கரை
  22. கலபன்குடி
  23. கள்ளன்குடி
  24. களத்தூர்
  25. கற்களத்தூர்
  26. கன்னங்குடி
  27. கிழமலை
  28. குமனி
  29. குரத்தனக்கோட்டை
  30. குரவராஜபாளையம்
  31. கொடிக்குளம்
  32. கோடகுடி
  33. கோடிக் கோட்டை
  34. சக்கந்தி
  35. சடைய மங்கலம்
  36. சத்திக் கோட்டை
  37. சருவனந்தல்
  38. சித்தனூர்
  39. சிறுகனூர்
  40. சிறுநல்லூர்
  41. சிறுமருதூர்
  42. சிறுவாத்தி
  43. சீரணி
  44. செலுகை
  45. செலுவத்தி
  46. தங்கன்குடி
  47. தச்சவயல்
  48. தளக்காவயல்
  49. தளையூர்
  50. தாளனேந்தல்
  51. திடக்கோட்டை
  52. திரளப்பூர்
  53. திருப்பாக்கோட்டை
  54. திருமணவயல்
  55. திருவேகம்பத்து
  56. தென்னீர் வயல்
  57. நல்லன்குடி
  58. நாக மங்களம்
  59. நாகமடை
  60. நாச்சங்குளம்
  61. நாரண மங்கலம்
  62. நீடோடை
  63. நெடுங்குளம்
  64. பூலாங்குடி
  65. பட்டூரணி
  66. பறையநந்தல்
  67. பனங்குளம்
  68. பாகையானி பிரண்டனி
  69. பிரட்டுக்கோட்டை
  70. புசல்குடி
  71. புதுக்கோட்டை
  72. பொற்குடி
  73. பொன்னைக் கோட்டை
  74. மஞ்ஞனி
  75. மதகோட்டை
  76. மறனி
  77. சருகனி
  78. மாவிடுதிக்கோட்டை
  79. மின்னாத்தன்குடி
  80. முப்பையூர்
  81. மேலசெம்பான்மாரி
  82. வசந்தானி
  83. வதிநன்னியூர்
  84. வாகைக்குடி
  85. விரிசூர்
  86. விளிமார்
  87. விஜயபுரம்
  88. வெங்களுர்
  89. வெள்ளிக்கட்டி
  90. வேட்டை ஆலங்குளம்

இந்தச் சிற்றூர்களில் குறிக்கத்தக்க ஒன்பது ஊர்களில் இருந்து திரட்டப்பெற்ற சிறுவர் பாடல்கள் இங்கு ஆய்விற்குக் கொள்ளப்படுகின்றன.

சிறுவர் பாடல்களின் கட்டமைப்பு

சிறுவர் நாட்டுப்புறப் பாடல்களுக்கென்று தனித்த கட்டமைப்புகள் என்று சில முக்கிய அமைப்புகளைக் குறிக்க இயலும். அவை பற்றிய அறிஞர்களின் கருத்துகள் பின்வருமாறு.

siragu-siruvar-vaaimozhi3

குழந்தைப் பாடல்களுக்கென்று சில அமைப்புகள் உள. அவை, உருவினில் ஒரு தாலாட்டையும், ஒப்பாரியையும், தெம்மாங்கையும்விட வேறுபட்டுத் தோன்றுகின்றன. பாடலைப் பார்த்ததும்- படித்ததும்- இது குழந்தைப் பாடல்களே என்று சொல்லும் வகையில் இனிய – எளிய அமைப்பினை அல்லது யாப்பினைக் கொண்டு விளங்குகின்றன. இக்குழந்தைப் பாடல்கள் கல்லில் வார்த்த அடைகள் அல்ல. ஒரே அளவாக ஒரே நிறமாக இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்க. வானில் பூத்த மலர்கள். காற்றில் மிதக்கும் கனிகள். இவை செய்யப்பட்டவை அல்ல. சிதறப்பட்டவைஎன்று இவற்றின் அமைப்பு பற்றிக் கருத்துரைக்கிறார் சண்முகசுந்தரம்.

குழந்தைப் பாடல்களுக்குப் பதவுரை, நயவுரை என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. பெரும்பாலான குழந்தைப் பாடல்களில் பொருளுள்ள பாடல்களைக் காணமுடியாது. ஓசை நிறைவுள்ள பாடல்களே அதிகம் காணப்படும். இப்பாடல்களை எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் எளிமையும் இனிமையும் இருக்கும். வட்டார வழக்குச் சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் அதிகம் காணலாம்என்ற சக்திவேலின் கருத்து குறிக்கத்தக்கது.

குழந்தைப் பாடல்களின் பொருளமைவு என்பது முக்கியமானது. அதன் பொருளமைவு பற்றியும் அறிஞர்கள் கருத்துரைத்துள்ளனர். இந்தப் பொருளைத் தான் பாடவேண்டும் என்ற கட்டாய நிலை குழந்தைப் பாடல்களில் இல்லை. அவர்கள் எதையெல்லாம் காண்கிறார்களோ, கேட்கின்றார்களோ, உணர்கிறார்களோ அதையெல்லாம் பாடற் பொருளாக ஆக்கிவிடுகின்றனர். இயற்கைப் பொருட்களும், செயற்கைப் பொருள்களும், விளையாட்டும், வேடிக்கையும் அவர்களின் சிறப்பான பாடற் பொருள்களாகின்றனஎன்று குழந்தைப்பாடல்களின் பொருளமைதி குறித்துக் கருத்துரைக்கிறார் சண்முக சுந்தரம்.

இக்கருத்துகள் வழியாகச் சிறுவர் பாடல்கள் என்பதன் தன்மைகளாகப் பின்வருவனற்றைக் குறிக்கலாம்.

  1. சிறுவர்கள் வயதிற்கு ஏற்ற வகையில் அவர்களின் வட்டாரச் சொற்கள், ஆங்கிலச் சொற்கள் ஆகியன கலந்து பாடப்படுவன சிறுவர் பாடல்கள்.
  2. சிறுவர்கள் கேட்டல், பார்த்தல், உணர்தல் போன்ற பல நிலைகளில் அறிந்த பொருள்கள் அனைத்தும் பாடலாகப் புனையும் பொருளமைதி சிறுவர் பாடல்களில் இருக்கும்.
  3. வெற்றுச் சொற்கள், பொருளற்ற சொற்கள் எதுகை மோனைக்காகச் சேர்க்கப்பெறும்.
  4. எளிமையான சொற்கள், இனிமையான ஓசை இவற்றோடு சிறுவர் பாடல்கள் பாடப்பெற்றிருக்கும்.
  5. சிறுவர் பாடல்களுக்கென்று தனித்த யாப்புநலம் உண்டு.
  6. சிறுவர் பாடல்கள் எளிமையானவையாக இருக்கும்.

இத்தன்மைகள் சிறுவர் பாடல்களின் பொதுத்தன்மைகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிறுவர் பாடல்களின் வகைகள்

சிறுவர் பாடல்களை பல நிலைகளில் பகுக்கின்றனர் ஆய்வாளர்கள். முன்னர் காட்டிய கருத்தின்படி ஆறு. இராமநாதன் குழந்தை வளர் நிலைப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள் என்று இருவகைப்படுத்தலாம்.

சு. சக்திவேல் சிறுவர் பாடல்களை நாப்பயிற்சிப்பாடல்கள், எண்ணுப் பயிற்சிப் பாடல்கள், அறிவு வளர்ச்சிப் பாடல்கள், நீதிப்பாடல்கள், பக்திப்பாடல்கள், பறவை மிருகங்களைப் பற்றிய பாடல்கள், விழாக்காலப் பாடல்கள், வேடிக்கைப்பாடல்கள், வினாவிடைப் பாடல்கள், விளையாட்டுப்பாடல்கள் எனப் பத்துவகையாகப்பிரிக்கின்றார்.

முன்னவரை விட இவரின் பகுப்பு இவ்வாய்விற்குப் பொருத்தமானதாக விளங்குகின்றது. ஆய்வுக்களத்தில் கிடைத்த பாடல்களின் தன்மைகளைக் கொண்டு இவ்வாறு முடிய முடிகின்றது.

இனி ஆய்வுக்களத்தில் கிடைத்த பாடல்களைக் கொண்டு அவற்றின் கட்டமைப்பு அமைந்துள்ள தன்மை பின்வருமாறு எடுத்துரைக்கப்பெறுகின்றது.

சொல் அழகு

siragu-siruvar-vaaimozhi1சிறுவர் பாடல்கள் சொல்லளவில் எளிமையும், இசைத்தன்மையும் கொண்டு விளங்கும் என்பது பொதுவான வரையறை. மேலும் பொருளுள்ள சொற்கள், பொருளற்ற சொற்கள், ஆங்கிலச் சொற்கள், வட்டாரச் சொற்கள் ஆகிய கலந்துச் சிறுவர் பாடல்கள் பாடப்பெற்றிருக்கும்என்பதும் இப்போது வரையறைக்குள் அடங்கும்.

சொல் எளிமை

                ஒரே ஒரு தோப்பிலே

                ஒரு கொத்து பாவக்கா

                ஒரு கொத்து புளியங்கா

                கசக்குமோ புளிக்குமோ

                கலந்து கொட்டுங்க சக்கரைய

                கலக்கி விடுங்க உப்பையே

என்ற பாடலில் ஒரே, ஒரு, கொத்து, பாவக்கா, புளியங்கா, கசக்குமோ, புளியங்கா, சக்கரை, உப்பு, கலக்கி கொட்டுங்க போன்ற எளிமையான சொற்கள் இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகின்றது.

                சிட்டுக் குருவி சிட்டுக்குருவி

                சேட்ட பண்ணாத

                அறுவாமனை கீழிருக்கு

                அறுத்துக் கிடாதே

                குண்டாஞ் சட்டி மேலிருக்கு

                மோதிக்கிடாதே

                ஐயா வந்துப் பாத்துப்பிட்டா

                பந்தடிப்பாரே

என்ற இந்தப் பாடலில் எளிமையான வினைச்சொற்கள், பெயர்ச்சொற்கள் இடம்பெற்றிருப்பதைக் காணமுடிகின்றது.

ஐயா என்பது தேவகோட்டைப் பகுதியில் இருக்கும் தாத்தாவைக் குறிக்கும் வழக்காகும். அறுவாமனை என்பது காய்கறி அறுக்க உதவும் கருவியாகும். சேட்டை என்பது தேவகோட்டைப்பகுதியில் அடம் செய்யும் குழந்தையைச் சேட்டை செய்யும் குழந்தை என்பார்கள். இந்த அளவில் எளிமையான பெயர் சொற்கள், வினைச்சொற்கள் கலந்து இப்பாடல் பாடப்பெற்றிருப்பதை உணரமுடிகின்றது.

                மாமரத்து வண்டே

                மாமியாரும் மருமகளும் சண்ட

                மனசு வச்சு தாழ்ந்துபோனா

                ஏன் வருது சண்ட

என்ற பாடலில் உள்ள எளிமையான சொற்கள் பெரியவர்களுக்கு அறிவுரை சொல்வதாக அமைந்திருக்கிறது. பெரியவர் ஒருவர் சின்னப்பிள்ளைகளுக்குச் சொல்லித்தரும் பெரியவருக்கான அறிவுரைப் பாடலாக இது அமைந்திருக்கின்றது.

ஆங்கிலச்சொற்கள் கலப்பு

தற்காலக் கல்வி முறையில் ஆங்கில மொழியின் தேவை அதிகமாக இருப்பதைக் காணமுடிகின்றது. இதன் காரணமாக பல ஆங்கிலச்சொற்கள் சிறுவர் பாடல்களில் கலந்து காணப்படுகின்றன.

                ஐஸ் ஐஸ் ஐஸ்

                அஞ்சு பைசா ஐஸ்

                ஜுஸ் ஜுஸ் ஜுஸ்

                ஆப்பிள் பழ ஜுஸ்

                லூஸ் லூஸ் லூஸ்

                நீ சரியான லூஸ்

என்ற பாடலில் வரிக்கு வரி ஆங்கிலச் சொற்கள் கலந்து வந்திருப்பதைக் காணமுடிகின்றது. மேலும் இச்சொற்கள் இயைபாக வந்திருப்பதும் கருதத்தக்கது. மற்றொரு பாடலில் இயைபிற்காகவே தேவையற்ற பொருள் சேர்க்கை நடந்துள்ளதைக் காணமுடிகின்றது.

                பக்கத்து வீட்டு நிர்மலா

                உனக்கு என்ன நிர்மலா

               வாங்கித்தாரேன் விக்ஸ் – உன்

                கதவு நம்பர் சிக்ஸ்

என்ற இப்பாடலில் விக்ஸ், சிக்ஸ் ஆகியன பொருள் தொடர்பற்ற நிலையில் சேர்க்கப்பெற்ற சொல் சேர்க்கைகள் ஆகும். ஆனாலும் இதைப் பாடிய சிறுவனுக்கு விக்ஸ் சாப்பிடவேண்டிய அவசியம் யாதெனத் தெரிந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

இன்னும் பல பாடல்கள் இவ்வகையில் அமைந்துள்ளன.

அதோ பார் மைனா

                                ஆஸ்பத்திரிக்கு போனா

                                பாக்கெட் ஆச்சு பிளைனா

                                நான் போறேன் சைனா

என்ற இந்தப் பாடலில் கேரம் என்ற விளையாட்டின் தன்மை வெளிப்பட்டுள்ளது. பாக்கெட் ஆச்சுப் பிளைனா என்ற தொடரில் கேரம் போர்டில் பிளைனாக (நேராக) பாக்கெட், பைக்குள் விழுந்தது என்பது தேவையற்ற பொருள் சேர்க்கையாக ஆஸ்பத்திரியோடு இணைக்கப்பெற்றுள்ளது. அது போல் மைனா என்பது இங்கு மைனாவைக் குறிக்காமல், ஒரு பெண்ணைக் குறிப்பதாகக் கொள்ளவேண்டும். இது போன்ற உருவகங்களும் பாடலுக்கு அழகு சேர்ப்பன.

                                கோபத்திலே இடிச்சது நெஞ்சத்தான்

                                நெங்சுக்குள்ளே ஹார்ட் தான்

                                ஹார்ட் ரொம்ப வீக்குதான்

                                எம் பாடு போக்குதான்

இப்பாடலிலும் ஹார்ட், வீக் போன்ற சொற்கள் ஆங்கில மொழிச் சொற்கள் ஆகும்.

இவ்வாறு பல பாடல்களில் ஆங்கிலச் சொற்களின் தாக்கம் இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது. அதே நேரத்தில் ஆங்கிலச் சொற்கள் ஒரு ஓசையமைதி கருதி இணைக்கப்பெற்றுள்ளன என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டியுள்ளது.

ஓசைநயம்

சிறுவர்பாடல்களில் பயின்று வரும் ஓசை நயமே பாடலை நினைவில் கொள்வதற்கு ஏதுவாக உள்ளது.

                                வெள்ளரிக்கா பிஞ்சு

                                பிள்ளையின் நெஞ்சு

                                புலியக் கண்டு அஞ்சு

                                பாட்டி தலை பஞ்சு

                                பாம்பு பல்லு நஞ்சு

                                ஆள் அறிந்து கொஞ்சு

என்பதில் இயைபுத் தொடை வந்து ஓசைநயம் பெருக்குவதாக உள்ளது.

சில பாடல்கள் பாடலமைப்பில் அமைந்து ஓசைநயம், இசை நயம் உடையனவாக உள்ளன.

                                பூப்பறிக்க வருகிறோம்    வருகிறோம்

                                இந்த மாதத்தில்

                                எந்தப் பூக்கள் வேண்டுமோ? வேண்டுமோ?

                                இந்த மாதத்தில்!

                                கவிதா பூக்கள் வேண்டுமே வேண்டுமே

                              இந்த மாதத்தில்!

என்ற இந்தப்பாடலில் ஓசைநயம் பொருந்த வந்திருப்பதைக் காண முடிகின்றது.

                                யானைக்குப் பெரிய வயிறுண்டு

                                நீண்ட தும்பிக்கை ஒன்றுண்டு

                                குத்தும் கொம்புகள் இரண்டுண்டு

                                தடித்த காலுகள் நாலுண்டு

                                கம்பும் ஏந்தி நடப்பதற்கு

                                ஆனைப் பாகன் கூட உண்டு

என்ற பாடலில் உண்டு என்பது ஒவ்வொரு அடியின் நிறைவிலும் வந்து ஓசைநயம் கூட்டுகின்றது. இவ்வோசை நயம் பாடலை நினைவு கொள்ளவும், மற்றவர்களிடத்தில் பரவவும் ஏதுவாக அமைகின்றது.

சில பாடல்களில் ஓசைக்குறிப்புகளும் இடம்பெறுகின்றன. அவற்றிற்குப் பின்வரும் பாடல்கள் சான்றுகளாகும்.

                                வாவோ வாவாவோ

                                வாவோ வாவாவோ

                                தேனோ பாலலோ- நீ

                                தெவிட்டாத தெள்ளமுதோ

                                பாலோ பழமோ- நீ

                                பழுத்து வந்த கனிரசமோ

                                ஆம்பல் பூ போல நீ

                                அடிக்கடி வாய் திறந்து

                                தேம்பி அழாதே நீ

                              தெய்வம் தம்பி கண்ணுறங்கு

என்ற பாடலில் தாலாட்டுப் பாடலுக்கான இசையை வாவோ வாவாவோ, வாவோ வாவாவோ என்ற அசைகள் காட்டுகின்றன. இவ்வசை ஓசைகளின் வழியே பாடலும் நடைபெற்றுச் செல்லுகின்றது.

ஓசையமைதியைக் கொண்டே அசைகளைப் பகுத்து ஒரு யாப்பு வடிவத்தையும் கட்டமைக்க இயலும்.

பெரும்பாலும் ஆய்வுக்களத்தில் கிடைத்த பாடல்களின ஈரசைச் சொற்கள் இரண்டோ மூன்றோ இணைந்து வருவதாக பாடலடிகள்பாடப்பெற்றுள்ளன. இதன் காரணமாக எளிய பாடல் வடிவம் சிறுவர்களுக்குக் கிடைத்துவிடுகின்றது.

                                மழை வருதே மழை வருதே

                                பச்ச கண்ணாடி

                                பல்லில்லாத கிழவனுக்கு

                                டபுள் பொண்டாட்டி

என்ற பாடலில்

                                நிரை நேர்நேர் நிரை நேர்நேர்

                                நேர்நேர்நேர்நேர் நேர்

                                நேர்நேர் நேர்நேர் நிரைநிரைநேர்

               நிரைநேர் நேர்நேர்

என்ற நிலைப்பாட்டில் ஈரசைச் சீர் நிறைய வருவதைக் காணமுடிகின்றது.

                இன்ஸ்பெக்டர் வந்தாரு

                இஞ்சித் தண்ணிய குடிச்சாரு

                ஆலமரத்தில் ஏறினாரு

                அடிச்சுப் புடிச்சு விழுந்தாரு

இப்பாடலிலும்

நேர்நேர்நேர் நேர்நேர்நேர்

நேர்நேர் நேர்நேர் நிரைநேர்நேர்

நேர்நிரைநேர் நிரைநேர்நேர்

நிரைநேர் நிரைநேர் நிரைநேர்நேர்

என்ற பாடலில் மூவசைச் சீர்களும் ஈரைச் சீர்களும் கலந்து வந்துள்ளன.

இவ்வாறு மூவசைச்சீர்களும், ஈரசைச்சீர்களும் கலந்து எளிமையான பாடல்களாக சிறுவர் பாடல்கள் அமைந்து சிறக்கின்றன. ஒலிநயம் பற்றிப் பின்வரும் இயலிலும் விரித்துரைக்கப்பெற்றுள்ளது.

பொருளற்ற சொற்களை இணைத்தல்

பொருளில்லாத சொற்களையும் இணைத்துப் பாடல் புனையும் திறன் சிறுவர் பாடல்களில் காணப்படுகின்றது. இதுவும் அதன் வடிவ அழகுகளுள் ஒன்றாகும்.

                                ஆக் பாக் வெத்தில பாக்கு

                                டாம் டூம் கொய்யா

                               அஸ்த லக்கடி பால சுந்தரம்

                                எம்பெயர் சோமசுந்தரம்

என்ற பாடலில் ஆக், பாக், டாம், டூம், அஸ்த,லக்கடி போன்ற சொற்கள் பொருளற்ற வெற்றுச்சொற்கள். இருந்தாலும் இந்தப் பாடல்களை நீக்கிவிட்டால் இந்த பாடலில் உள்ள ஈர்ப்பு நீங்கிவிடும். ஆகவே இப்பாடலின் ஈர்ப்புத் தன்மைக்கு இந்தப் பொருளற்ற சொற்களே காரணமாக அமைகின்றன.

                இதே சாயலில் மற்றொரு பாடல்

                                டிஸ் டிஸ் டோனா

                                மாமி எங்கப் போனா

                                சாமி காணப் போனா

                                கப்பல் காரன் வந்தான்

                                காசு மாலைய போட்டான்

                                கடத்திக்கிட்டுப் போனான்

என்ற இந்தப்பாடலில் இடம்பெற்றுள்ள டிஸ், டிஸ், டோனா என்ற சொற்கள் பொருளற்ற சொற்கள். இருப்பினும் இவையே பாடலின் தொடக்கத்தில் அமைந்து பாடலை துவக்கி வைக்கின்றது. இவ்வடி இல்லாமல் இருந்தால் பாடலின் அழகும் குறைய ஆரம்பிக்கும்.

                                தக்தக்க பித்தக்க தவளக்குட்டி

                                தண்ணீல விழுந்தா பேத்தக்குட்டி

                                ஒன்,டூ,திரி

என்ற இந்தப்பாடலில் தத்தக்க பித்தக்க என்ற சொற்கள் தவளையின் நடையின் ஒலிக்குறிப்பாக அமைகின்றன. இந்த ஒலிக்குறிப்புகள் தவளையைக் கண்முன் சிறுவர்கள் முன் நிறுத்தும். அத்தவளைபோன்று நடிக்கவும் ஊக்கமூட்டும். இவ்வகையில் பொருளற்ற சொற்களும் சிறுவர் பாடல்களில் தவிர்க்கமுடியாத அங்கமாக விளங்குவதை உணரமுடிகின்றது.

வடிவ அழகு

நாட்டுப்புறச் சிறுவர் பாடல்கள் தனக்கென தனித்த வடிவ அமைதியைப் பெற்றுத் திகழ்கின்றன. குறிப்பாக அந்தாதி அமைப்பு முறை, வினா விடை அமைப்பு முறை, உரையாடல் அமைப்புமுறை ஆகியனவற்றைச் சிறுவர்பாடல்களின் வடிவச் சிறப்புகள் என்று கொள்ளலாம்.

அந்தாதித் தன்மை

அந்தமே ஆதியாக முடிவது அந்தாதி எனப்படும். ஓர் அடியின் இறுதிப் பகுதி அடுத்த அடியின் தொடக்கப்பகுதியாக அமைவது அந்தாதியாகும். இது செய்யுள் தொடைகளுள் ஒன்றாகக் கருதத்தக்கது.

                ஈறு முதலாத் தொடுப்பது அந்தாதியென்று

                ஓதினர் மாதோ உணர்ந்திசினோரே

என்று அந்தாதிக்கு இலக்கணம் உரைக்கும் யாப்பெருங்கலம். இவ்வழியில் இத்தொடை நலம் நாட்டுப்புறப்பாடல்களில் இடம்பெற்றுள்ளது.

                                பணம் பணம்

                                பணத்திற்கு இல்லை குணம்

                                குணத்திற்கு இல்லை மணம்

                                மணம் என்றால் பூ தானே

                                பூ என்றால் கட்டுவோமே

                                கட்டுவது என்றால் பசுதானே

                                பசு என்றால் கறப்போமே

                                கறப்பது என்றால் பால் தானே

                                பால் என்றால் புளிக்குமே

                                புளிக்கும் என்றால் புளிதானே

                                புளி என்றால் தொங்குமே

                                தொங்குவது என்றால் பாம்புதானே

                                பாம்பு என்றால் கொத்துமே

                                கொத்துவது என்றால் கோழி தானே

                                கோழி என்றால் கூவுமே

                                கூவும் என்றால் நரிதானே

                                நரி என்றால் அதோடு சரி

என்ற பாடல் அந்தாதித்தொடை வரப் பாடியமைக்கு நல்ல சான்றாக அமைகின்றது. முதலடியில் முடியும் பணம், குணம்,மணம், பூ, கட்டுதல், பசு, கறத்தல், பால், புளித்தல், புளி, தொங்கல், பாம்பு, கொத்துதல், கோழி, நரி. சரி என்று வரும் நிறைநிலைப் பகுதிகள் அடுத்த அடிக்குத் தொடக்கமாக அமைகின்றன. இதன் காரணமாக பாடல் அந்தாதியின் அழகினைப் பெறுகின்றது.

                பாலாஜி பிரிஜ்

                பிரிஜ் குள்ள ஐஸ்

                ஐஸ் குள்ள தண்ணி

                தண்ணிக்குள்ள கப்பல்

                கப்பலுக் குள்ள ஆளு

                ஆளு பேரு துரை

                அவன் விட்டான் பாரு அறை

என்ற இந்தப்பாடலில் நிறையடியைத் தவிர மற்றஅடிகள் அந்தர்தியில் உள்ளன. நிறைவு வரி நகைச்சுவை கலப்பதற்காகச் சற்று மாற்றிப் பாடப்பெற்றுள்ளது.

மற்றொரு பாடலிலும் அந்தாதித்தொடை ஆங்கிலம்,தமிழ் எனக் கலந்து வருவதாக அமைந்துள்ளது.

                எங்கப்பா ஓட்டுவது காரு

                                காரு போவது ரோடு

                                ரோட்டு மேல காரு

                                காருக்குள்ள யாரு

                                நம்ம மாமா நேரு

                                நேரு என்ன தந்தாரு

                                ரோசாப் பூவுதான்

இந்தப் பாடலில் நிறைவு அடி வரை அந்தாதி பின்பற்றப்பெற்றுள்ளது. அந்தாதியாகப் பாடுவதால் அடி மாறாமல் நினைவிற்குப் பாடல்கள் வருகின்றன. ஆகவே அந்தாதி நயம் என்பது சிறுவர்களின் நினைவாற்றலையும் வளர்க்க உதவுகின்றது.

இவ்வாறு அந்தாதித்தொடை நயம் அமையப்பாடுவது என்பது நாட்டுப்புறப்பாடல்களுக்கு ஒருவகை வடிவ அழகைத் தருவதாக உள்ளது.

வினாவிடை அமைப்பு முறை

வினாவிடை அமைப்பு முறையிலும் சிறுவர் பாடல்கள் பெற்று அதற்கான வடிவழகைப் பெற்று விளங்குகின்றன. பின்வரும் பாடல்கள் வினா விடை அமைப்பு முறைக்குச் சான்றாவன.

                என்ன பிஸ்கட்

                ஜாம் பிஸ்கட்

                என்ன ஜாம்

                கோ ஜாம்

                என்ன கோ

                வீட்டுக் கோ

                என்ன வீடு

                மாடி வீடு

                என்ன மாடி

                மொட்ட மாடி

                என்ன மொட்ட

                திருப்பதி மொட்ட

                என்ன திருப்பதி

                வட திருப்பதி

                என்ன வட

                ஆம வட

                என்ன ஆம

                குளத்து ஆம

                என்ன குளம்

                திரி குளம்

                என்ன திரி

                விளக்குத் திரி

                என்ன விளக்கு

                குத்து விளக்கு

                என்ன குத்து

                கும்மா குத்து

இந்த நெடிய பாடல் வினாவிடை அமைப்பிலேயே பாடப்பெற்றுள்ளது. மிக நெடிய பாடல் என்றாலும் முதல் அடிக்கு அடுத்த அடி பதில் சொல்வதால் அக்கேள்வியும் மறப்பதில்லை. பதிலும் மறப்பதில்லை. இதில் சிறுவர்கள் காணும் எல்லாம் பொருள்களும் இடம்பெற்றிருப்பதைக் காண முடிகின்றது.

பால் பால்

                என்ன பால்

                ஆட்டுப் பால்

                என்ன ஆடு

                வேலி ஆடு

                என்ன வேலி

                திருநெல்வேலி

                என்ன திரு

                தேங்காய் திரு

                என்ன தேங்காய்

                நெய் தேங்காய்

                என்ன நெய்

                பாம்பு நெய்

                என்ன பாம்பு

                மல பாம்ப

                என்ன மல

                திருவண்ணாமல

மேற்கண்ட பாடலிலும் வினா விடை அமைப்பு முறையைக் காணமுடிகின்றது. இப்பாடலும் நெடிய பாடலாகும். இது ஒரு விளையாட்டுப் பாடல் என்பதும் நினைவில் கொள்ள வேண்டியதாகும். இருவர் விளையாடும் விளையாட்டுப்பாடல்களில் இத்தகைய வினா விடை உரையாடல் முறையைக் காணமுடிகின்றது.

                எங்கே போற

                ஊருக்குப் போறேன்

                எந்த ஊரு

                மயிலாப்பூரு

                என்ன மயிலு

                காட்டு மயிலு

                என்ன காடு

               ஆற்காடு

                என்ன ஆறு

                பாலாறு

                என்ன பாலு

                கள்ளிப் பாலு

                என்ன கள்ளி

                இலைக் கள்ளி

                என்ன இலை

                வாழை இலை

                என்ன வாழை

                கற்பூர வாழை

                என்ன கற்பூரம்

                ரச கற்பூரம்

                என்ன ரசம்

                மிளகு ரசம்

                என்ன மிளகு

                வால் மிளகு

                என்ன வால்

                நாய் வால்

                என்ன நாய்

                மர நாய்

                என்ன மரம்?

                பலா மரம்

                என்ன பலா

                வேர்ப்பலா

                என்ன வேர்

                வெட்டி வேர்

                என்ன வெட்டி

                பனை வெட்டி

                என்ன பனை

                தாளிப் பனை

                என்ன தாளி

                விருந்தாளி

                என்ன விருந்து

                மணவிருந்து

                என்ன மணம்

பூமணம்

என்ன பூ

மாம் பூ

என்ன மா

அம்மா

இதில் அம்மா என முடியும் நிறைவுப் பகுதிவரை வினா விடை அமைப்பினால் நிரம்பியுள்ளதைக் காணமுடிகின்றது.  இதே வினாவிடை அமைப்பில் அமைந்து மற்றொரு பாடலும் பின்வருமாறு

                                நாடா நாடா எங்கே போன

                                பாட்டு பாட நான் போனேன்

                                என்ன கிடைச்சுது?

                                அம்பும் வில்லும் கிடைச்சுது

                                அம்பையும் வில்லையும் என்ன செய்த

                                வேடனிட்ட கொடுத்தேன்

                                வேடன் என்ன தந்தான்

                                ஒரு பழக்குலை தந்தான்

                                பழக்குலையை என்ன செய்த

                                கடையிலே வித்தேன்

                                வித்தப்ப என்ன கிடைச்சுது

                                பணம் கிடைச்சுது

                                பணத்த என்ன செய்த

                                பத்தாயத்தில் போட்டேன்

                                பத்தாயம் என்ன தந்தது

                                பூட்டும் தார்க்கோலும் தந்தது

                                பூட்டையும் தார்க்கோலையும் என்ன செய்த

                                வீட்ட பூட்டி தார்க்கோல் எடுத்தேன்

                                தார்க்கோல் எங்கே

                                தொலைஞ்சு போச்சு

இவ்வகையில் நாட்டுப்புறம் சார்ந்த சிறுவர் பாடல்களில் விளையாட்டுப்பாடல்கள் வினாவிடை அமைப்பில் பாடப்படுவது ஒரு வடிவமாகக் கொள்ளத்தக்கது. இப்பாடல்களில் முதல் நான்கு பாடல்கள் என்ன ஒரு கேள்வி அமைப்பைக் கொண்டிருப்பதைக் காணமுடிகின்றது. கேள்விகளிலும் எளிமையை நாட்டுப்புறப்பாடல்கள் பெற்றுள்ளன என்பதையும் இதன்வழி அறிந்து கொள்ள முடிகின்றது.

உரையாடல் அமைப்பு முறை

ஒருவரோடு ஒருவர் உரையாடும் நாடகப் பாங்கில் சில பாடல்கள் அமைவது உண்டு. எதிராளியின் கூற்றுக்கு ஏற்ப உரையாடல் வளரும் அல்லது நிறைவு பெறும். இவ்வகையில் அமைந்த சில பாடல்கள் இங்குச் சான்றுகளாகக் காட்டப்பெறுகின்றன.

                                டிங் டிங்

                                யாரது

                                கள்ளன்

                                என்ன வேணும்

                                நகை வேணும்

                                என்ன நகை

                                கலர் நகை

                                என்ன கலர்

                                மஞ்சள்

என்ற இந்தப் பாடல் உரையாடல் சார்ந்து அமைந்த பாடலாகும். இருப்பினும் இவற்றிலும் வினாவிடை கலந்தும் வந்துள்ளது காணத்தக்கது.

                     ஆட்டுக் குட்டிய கண்டாயா?

                                ஆமா

                               எங்க

                                கூட்டுக்குள்ள

                                வரலாமா

                                வரக்கூடாது

                                மதில் எட்டிச் சாடுவேன்

                                கால முறிப்பேன்

                                இது என்ன சங்கிலி

                                தங்கச் சங்கிலி

                                இது என்ன சங்கிலி

                                வெள்ளிச் சங்கிலி

                                இது என்ன சங்கிலி

                                பித்தள சங்கிலி

                                இது என்ன சங்கிலி

                     இரும்புச் சங்கிலி

என்ற இந்தப் பாடலில் உரையாடல் போக்கு காணப்படுகின்றது. குழுப் பாடல்களாக விளையாட்டுப்பாடல்கள் அமைகின்றபோது உரையாடல்கலந்து வினாவிடைப் பாடல்கள் பாடப்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

இவ்வகையில் சிறுவர் பாடல்கள் தனக்கென தனித்த கட்டமைப்பினைப் பெற்றுத் திகழ்கின்றன. இக்கட்டமைப்பு என்பது நெகிழ்வுத் தன்மை வாய்ந்தது. இவ்வாறுதான் சிறுவர் பாடல்கள் அமையவேண்டும் என்ற வரையறை இல்லை. இருந்தாலும் இவற்றின் பொதுத்தன்மை கருதி சில வரையறைகளை அமைத்துக்கொள்ள முடிகின்றது என்பது தெளிவு.

http://siragu.com/?p=24212

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.