Jump to content

இதயம் தொட்ட இசை


Recommended Posts

26. இசை என்னும் கண்ணால் இதயம் தொட்ட ரவீந்த்ர ஜெய்ன்!

 

 
main_image
 

 

உடலில் ஏதேனும் குறைபாடு இருந்தால், ஒரு இசையமைப்பாளரை அது பாதிக்குமா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், பீத்தோவன் பற்றி அனைவருக்குமே தெரியும். இருபத்து ஆறு வயதில் இருந்தே சிறுகச்சிறுக அவரது கேட்கும் திறன் அவரை விட்டுப் போய்விட்டது. அவரது சிறந்த சிம்ஃபனிகளை (உதாரணம்-Ninth Symphony), காது அறவே கேட்கும் திறன் இழந்தபின்னர்தான் அவர் உருவாக்கினார். அவரைப்போலவே, புகழ்பெற்ற பாடகரான ரே சார்லஸ், ஏழு வயதில் இருந்தே பார்வையற்றவர். ஆனாலும் பல இசைக்கருவிகளைக் கற்றுக்கொண்டு, உலகம் முழுக்கப் பேசப்பட்ட இசைக்கலைஞராக மாறினார். அவரைப்பற்றிய திரைப்படமே உண்டு. இவர்கள் இருவரைப்போல், இன்னும் பலர் - ஜாங்கோ ரெய்ன்ஹார்ட், ஸ்டீவீ வொண்டர், ஹாங்க் வில்லியம்ஸ், ரிக் ஆலன் என்று ஒரு மிகப்பெரிய பட்டியலே உண்டு.

கண்பார்வையற்ற குழந்தையாக, 1944 ஃபிப்ரவரி 28ம் தேதி இந்த்ரமணி ஜெய்ன் மற்றும் கிரண் ஜெய்ன் ஆகிய தம்பதிகளுக்கு அலிகரில் பிறந்தவர் ரவீந்த்ர ஜெய்ன். சிறிய வயதில் இருந்தே இசையில் ஆர்வம் கொண்ட குழந்தை. இதனைக் கண்டபின்னர், ரவீந்த்ர ஜெய்னின் தந்தை, பண்டிட் ஜனார்த்தன் ஷர்மா, பண்டிட் நாதுராம் மற்றும் பண்டிட் ஜி.எல்.ஜெய்ன் ஆகியோரிடம் இசைப்பயிற்சிக்கு அனுப்ப, இசையையும் நன்கு கற்றுத் தேர்ந்தான் அந்தச் சிறுவன். அலிகரிலேயே, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பார்வையற்றோர் பள்ளியில் படித்தான் சிறுவன் ரவீந்த்ர ஜெய்ன். படித்துமுடித்த பின்னர், இசையையும் நன்கு கற்றுக்கொண்டபின்னர், அப்போதைய பம்பாய்க்கு வந்து, சிறிய குழுக்களில் பாட ஆரம்பித்தார். இதனால் அவருக்கு சிறுகச்சிறுகப் புகழ் கிடைக்க, அந்தப் புகழால் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. நௌஷாத் போன்ற ஜாம்பவான்களுக்கு இசையில் உதவி செய்ய வாய்ப்புகள் வந்தன. ஆனால் ரவீந்த்ர ஜெய்ன் எவற்றையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவற்றுக்குப் பதில், சொந்தமாகவே இசையமைக்கவேண்டும் என்ற உறுதியான எண்ணம் அவருக்கு இருந்தது.

ரவீந்த்ர ஜெய்னின் முதல் திரைப்படம் - ‘காஞ்ச் ஔர் ஹீரா’. இந்தப் படத்தில் முஹம்மது ரஃபி பாடிய ‘நஸர் ஆதீ நஹி மன்ஸில்’ என்பது இன்றும் பிரபலம். ஆனால் இதற்கு முன்னரே வேறொரு படத்தில் முஹம்மது ரஃபியை வைத்து இசையமைத்திருந்தாலும் (அந்தப் பாடல் இன்றுவரை வெளிவரவில்லை), இதுதான் அவரது முதல் படமாக அமைந்தது. இந்தப் படத்துக்குப் பின்னர், ‘சோர் மசாயே ஷோர்’ என்ற படம் 1974ல் வெளியானது. அந்தப் படத்தில் ‘லே ஜாயேங்கே ஜே ஜாயேங்கே தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ என்ற பாடல் சூப்பர்ஹிட் ஆனது (அதை வைத்து ஷா ருக் கான் நடித்த பிரபல DDLJ படத்துக்கும் அதே பெயர் வைக்கப்பட்டது). அதேபோல் ‘குங்ரூ கி தரா பஜ்தா ஹி ரஹா ஹூ மெய்ன்’ என்ற பாடல் இன்றும் கிஷோர் குமாருக்கு மறக்க இயலாத பாடலாக விளங்குகிறது. சசி கபூரும் மும்தாஜும் நடித்த இந்தப் படம் இன்றுவரை தொடர்ந்து பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியும் கொண்டிருக்கிறது. இதுதான் ரவீந்த்ர ஜெய்னின் முதல் சூப்பர்ஹிட் படம்.

இந்தப் படத்த்துக்கு முன்னரே, 1973ல் ‘சௌதாகர்’ என்ற திரைப்படத்துக்கு இசையமைத்துக்கொண்டிருந்தபோது ரவீந்த்ர ஜெய்னின் வாழ்க்கையில் ஒரு சோகம் நிகழ்ந்தது. அவரது இசைத்திறமையைக் கண்டுகொண்டு அவருக்கு இசையைப் பயிற்றுவித்த அவரது தந்தை மறைந்துவிட்டார். ஆனால், அந்தப் படத்தில் ‘தேரா மேரா சாத் ரஹே’ என்ற பாடலைப் பதிவுசெய்துகொண்டிருந்தபோது இந்தத் தகவல் தெரியவர, முழுப் பாடலின் ஒலிப்பதிவையும் முடித்துவிட்டுத்தான் ஸ்டுடியோவை விட்டே வெளியே வந்தார் ரவீந்த்ர ஜெய்ன். அதுதான் அவரது அர்ப்பணிப்பு. இசையின்மீது மிகுந்த மரியாதையும் பிரியமும் வைத்திருந்தவர் அவர்.

'சோர் மசாயே ஷோர்' படத்தைத் தொடர்ந்து, ‘கீத் காதா சல்’ (1975) என்ற படமும் ரவீந்த்ர ஜெய்னின் பெயரை உரக்கச்சொல்லிய படமாக அமைந்தது. அந்தப் படத்தில் சச்சின் தான் ஹீரோ. அப்போதைய காலகட்டத்தில் மிகப் பிரபலமாக விளங்கிய இளம் ஹீரோ அவர். இந்தப் படத்தைத் தயாரித்த ராஜ்ஷ்ரீ தயாரிப்பு நிறுவனம், அதைத்தொடர்ந்து அவர்களின் பல படங்களுக்கு ரவீந்த்ர ஜெய்னையே இசையமைக்க வைத்தது. அப்படங்கள் மிகவும் பிரபலமும் அடைந்தன.

கீத் காதா சல் படத்துக்குப் பிறகுதான் ரவீந்த்ர ஜெய்னின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம் நிகழ்ந்தது. தென்னிந்தியாவில் பாடிக்கொண்டிருந்த கே.ஜே. ஏசுதாஸ் என்ற பாடகரைக் கண்டுகொண்டு, அவரை ஹிந்திக்கு அழைத்துவந்தார் ரவீந்த்ர ஜெய்ன். இது ஒரு சாதாரணமான சம்பவமாகத் தோன்றலாம். ஆனால் அவருக்கும் யேசுதாஸுக்கும் இடையே உருவான உறவு என்பது இசை ரசிகர்களுக்குப் பல பொக்கிஷங்களை வழங்கியிருக்கிறது. போலவே, ரவீந்த்ர ஜெய்னுமே, ‘எனக்குப் பார்வை வரவேண்டும் என்று நான் விரும்புவதே, யேசுதாஸை ஒருமுறையேனும் பார்த்துவிடவேண்டும் என்பதற்காகத்தான்’ என்று சொல்லும் அளவு, யேசுதாஸின் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருந்தார். அதற்கேற்றவாறு, யேசுதாஸும் அற்புதமான பல பாடல்களை ரவீந்த்ர ஜெய்னின் இசையில் பாடினார். ‘சித் சோர்’ படம் வெளியானது 1975. அந்தப் படத்தில், ‘கோரி தேரா காவ் படா ப்யாரா’ பாடலை யேசுதாஸ் பாட, இந்தியாவே யேசுதாஸை அரவணைத்துக்கொண்டது. யேசுதாஸுக்கு ஹிந்திப்பாடலுக்கான தேசிய விருது அந்தப் பாடலுக்குக் கிடைத்தது. அப்படத்தை இயக்கியவர், பிரபல இயக்குநர் பாஸு சட்டர்ஜீ. இந்தியாவில் offbeat படங்கள் என்ற அற்புதமான வகையைப் பிரமாதமாக வழிநடத்திய சில இயக்குநர்களில் ஒருவர். இவர், பாஸு பட்டாச்சார்யா, ரிஷிகேஷ் முகர்ஜீ ஆகிய மூவரும் இந்தவகைப் படங்களுக்குச் செய்த சேவையைப்பற்றி அவசியம் ஒரு புத்தகம் எழுதமுடியும். அமோல் பாலேகர் மற்றும் ஸரீனா வஹாப் நடித்த சித் சோர், இந்தியா முழுதும் பேசப்பட்டது, பிரம்மாதமாக ஓடியது. ரவீந்த்ர ஜெய்ன் இந்தியா முழுக்கப் புகழடைந்தார். அந்தப் படத்தில் நான்கு பாடல்கள். நான்கையும் யேசுதாஸே பாடினார். ‘ஆஜ் செ பெஹ்லே.. ஆஜ் செ ஸ்யாதா’. ஜப் தீப் சலே ஆனா.. ஜப் ஷாம் டலே ஆனா’ மற்றும் து ஜோ மெரே சுர் மே’ என்ற மூன்று பாடல்களும், கோரி தேரா காவ் படா ப்யாரா பாடலுடன் சேர்ந்து இன்றும் பலராலும் நினைவு கூரப்படுகின்றன.

சித்சோர் படத்தைத் தொடர்ந்து, ஏராளமான படங்கள் இசையமைத்தார் ரவீந்த்ர ஜெய்ன். அத்தனையும் சூப்பர்ஹிட்கள். அவரது ‘பஹேலி’, ‘அகியோங்கே ஜரோகோ ஸே’, ‘நதியா கே பார்’, ‘பதி பத்னி ஔர் வோ’, ‘இன்ஸாஃப் கா தாராஸு’, ‘தபஸ்யா’, ‘விவாஹ்’, ‘சலாகேன்’, ‘தீவாங்கீ’, ‘சாசுரால்’ ஆகியவை அவரது சில பிரபல படங்கள்.

 

26. இசை என்னும் கண்ணால் இதயம் தொட்ட ரவீந்த்ர ஜெய்ன்!

எப்படி யேசுதாஸ் + ரவீந்த்ர ஜெய்ன் கூட்டணி மிகப் பிரபலமோ, அப்படியே ராஜ் கபூருடன் ரவீந்த்ர ஜெய்னின் கூட்டணியும் பிரபலம். ‘ராம் தேரி கங்கா மெய்லி’ படத்தின் பாடல்களை யாராலும் மறக்க இயலாது. இதன்பின் ‘தோ ஜாஸூஸ்’ மற்றும் ‘ஹென்னா’ படங்களுக்கும் ராஜ் கபூரின் தயாரிப்பில் ரவீந்த்ர ஜெய்ன் இசையமைத்தார். இதேபோல் கிஷோர் குமார் மற்றும் முஹம்மது ரஃபிக்கும் அவர் பல பிரம்மாதமான பாடல்கள் கொடுத்திருக்கிறார்.

ஒரு காலகட்டத்துக்குப் பிறகு தொலைக்காட்சிக்குள்ளும் நுழைந்து, அங்கும் பிரம்மாதமாக இசையமைத்தார். தூர்தர்ஷனில் வெளியான ராமானந்த் சாகரின் ‘ராமாயணம்’ இவரது இசைவண்ணம்தான். இதுமட்டும் இல்லாமல், பல்வேறு ஜெய்ன் பஜன் ஆல்பங்கள், இறை ஆல்பங்கள் என்று ரவீந்த்ர ஜெய்ன் இசையில் நுழைந்து பார்க்காத இடமே இல்லை.

 

ரவீந்த்ர ஜெய்ன் இசை எப்படிப்பட்டது? இந்திய க்ளாஸிகல் இசையின் பாதிப்பை இவரது பல பாடல்களில் கவனிக்க முடியும். சிறுவயதில் கற்றுக்கொண்ட ஹிந்துஸ்தானி சங்கீதத்தின் பாதிப்பு அது. இதனுடன், கேட்டாலே மனம் உருகும் வகையினால் ஆன அருமையான பஜன் வகையில் ஆன பாடல்கள் இவரது முத்திரை. பஜன் என்றதும் ஆன்மீகம் என்று நினைத்துவிடாதீர்கள். ‘கோரி தேரா காவ் படா ப்யாரா’ பாடலையே உதாரணமாக எடுத்துக்கொண்டால், அதன் ட்யூன் இப்படிப்பட்டதே. கேட்டாலே மனம் மயங்கும் பஜன் போன்ற ட்யூன். இதுவேதான் அவரது ‘அகியோங்கே ஜரோகோ ஸே’ பாடலுக்கும் பொருந்தும். இந்தப் பாடலையும், வெறும் ட்யூனை மட்டும் கேட்டால் ஒரு பஜன் என்று தயங்காமல் சொல்லிவிடலாம். எவ்வளவோ இனிமையான பாடல்களை அனாயாசமாக இப்படி இசையமைத்தவர் அவர். அதேபோல், தனது எல்லாப் பாடல்களுக்கும் இவரேதான் பாடல் வரிகளையும் எழுதினார். அதுவும் அவ்வளவும் ஆழமான வரிகள்.

‘உடலில் மட்டும்தான் குறைபாடு- மனதில் அல்ல’ என்று இறக்கும் வரை உறுதியாக நம்பி வாழ்ந்தவர் ரவீந்த்ர ஜெய்ன். அவரது இசை கேட்டவுடன் மனதை சாந்தப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இன்றும் இந்தியாவில் நினைவு கூரப்படும் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக ரவீந்த்ர ஜெய்ன் இருப்பதற்கு, அவரது இந்த உறுதியான இரும்பு மனமே காரணம்.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/idhayam-totta-isai/2017/jun/17/26-இசை-என்னும்-கண்ணால்-இதயம்-தொட்ட-ரவீந்த்ர-ஜெய்ன்-2721882--2.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

27. இசையில் தொடங்கும் இணைவு கமல்ஹாசன் & இளையராஜா

 

 
main_image

எனக்கு ஒரு எண்ணம், கடந்த பல வருடங்களாக இருந்து கொண்டே இருந்தது. அதனை இப்போது முற்றிலுமாக confirm செய்து, உணர்ந்துகொண்டே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். நான் எண்பதுகளின் திரைப்படங்களுக்கு – குறிப்பாக, சத்யராஜ், ரஜினி & கமல் நடித்தவை – ரசிகன் என்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல், அப்படங்களின் பாடல்களுக்கும் நான் ரசிகன். இதற்கு முதன்மையான காரணம், ’85லிருந்து, கிட்டத்தட்ட 2000 வரை, எனது தாய்மாமாவின் இசைத்தட்டு நூலகத்தில் 24 மணி நேரமும் நான் குடியிருந்ததே. ஆகவே, இயற்கையாகவே, இளையராஜாவின் அப்போதைய பல பாடல்களுக்கும் ரசிகன். தொண்ணூறுகளில் இளையராஜா ரிடையர் ஆக ஆரம்பித்தபின், மிகச் சில பாடல்களையே அந்தக் காலகட்டத்தில் நான் ரசித்திருக்கிறேன். காரணம், ரஹ்மானின் எழுச்சி. அதன்பின் ரஹ்மானின் ரசிகன் ஆனேன். ஆனால், 80-களில் இளையராஜா இசையமைத்த பல பாடல்களை எப்போதும் மறக்க முடியாது.

இந்தக் கட்டுரையை நான் எழுதக் காரணம், கடந்த பல  நாட்களில், 2000க்குப் பிறகு இளையராஜா இசையமைத்த பாடல்கள் பலவற்றை மறுபடி கேட்டதுதான். அதிலிருந்து, எனது பழைய எண்ணம் உறுதிப்பட்டது. அது என்ன எண்ணம்? அதற்கு முன், இளையராஜாவை அவரது capacity தெரிந்து, மிகத் துல்லியமாக, கனகச்சிதமாக உபயோகப்படுத்திக் கொண்ட இன்னொருவரைப் பற்றியும் பார்க்கவேண்டும்.

அவரது பெயர் கமல்ஹாசன்.

இதுவரை கமல்ஹாசன் தயாரித்துள்ள படங்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் ஐந்து படங்கள் நீங்கலாக (கடமை கண்ணியம் கட்டுப்பாடு – இளையராஜா இசையமைத்திருந்தாலும், பாடல்கள் இல்லை, பாசவலை – மரகதமணி, Chachi 420  – விஷால் பரத்வாஜ், நள தமயந்தி – ரமேஷ் விநாயகம், உன்னைப்போல் ஒருவன் – ஷ்ருதி ஹாசன்), மற்ற அத்தனை படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைத்திருக்கிறார். இவற்றில், 80கள் மற்றும் தொண்ணூறுகளில் வந்துள்ள படங்களை நாம் இப்போது கணக்கில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. மாறாக, 2000த்தில் வந்த ஒரு படத்தையும், 2004ல் வந்த மற்றொரு படத்தையும் எடுத்துக்கொண்டு, அவற்றில் இருந்து சில பாடல்களைப் பார்த்து, அதன்மூலம் நான் சொல்ல வந்த விஷயத்தை எழுதுவதே நோக்கம்.

தமிழ்த்திரையுலகைப் பொறுத்தவரை, பாடல்களின் முக்கியத்துவத்தை சொல்லவே வேண்டியதில்லை. குறிப்பிட்ட காட்சியின் அழுத்தத்தையும், உணர்வு சார்ந்த தாக்கத்தையும், படம் பார்க்கும் ஆடியன்ஸின் மனதில் புகுத்த, பாடல்கள் பெரிதும் பயன்படுகின்றன. உதாரணத்துக்கு, நாயகன் படத்தின் ‘தென்பாண்டிச் சீமையிலே’ பாடலை எடுத்துக் கொள்ளலாம். படத்தில், மூன்று விதமான இப்பாடலின் வடிவங்கள் உபயோகப்படுத்தப்படுவதைப் பார்க்கலாம். இளையராஜா பாடியுள்ள வடிவம், கமல்ஹாசன் பாடியுள்ள இசையில்லாத வடிவம், இசையுடன் கூடிய கமல்ஹாசனின் இறுதி வடிவம் ஆகியவை இவை. இந்த மூன்று பாடல்களுமே, மணிரத்னத்தால் கச்சிதமாகப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆடியன்ஸின் மனதை நெகிழவைக்கும் முக்கியமான தருணங்களில் எல்லாம் இப்பாடல்கள் ஒலிப்பதை மறக்கமுடியாது. அதேபோல், அபூர்வ சகோதரர்கள் படத்தின் புல்லாங்குழல் தீம் இசை. இதைப்போல் பல உதாரணங்கள் சொல்லமுடியும்.

அப்படி, கச்சிதமான பாடல்கள், முக்கியமான காட்சிகளின் பின்னணியில் உபயோகப்படுத்தப்பட்டால், காட்சிகளின் அழுத்தமும் தாக்கமும் மிக அதிகமாகவே கூடி, படம் பார்க்கும் ஆடியன்ஸை உன்மத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதைத் துல்லியமாக அறிந்து வைத்திருப்பவராக, நான் அறிந்தவரையில், கமல்ஹாசன் மட்டுமே இருந்து வருகிறார் (உன்மத்த நிலை என்பதை மனதில் வையுங்கள்). வேறு பலரும் இப்படிக் காட்சிகளை வைக்கும் போதிலும், கமல் வடிவமைக்கும் காட்சிகள், நான் இனிமேல் கூறப்போகும் உதாரணங்களில் தனித்துத் தெரிவதை நண்பர்கள் உணரமுடியும் என்று நம்புகிறேன்.

சரி. இப்போது, உதாரணங்களைப் பார்ப்போம்.

இரண்டே உதாரணங்கள் தான் பார்க்கப்போகிறோம். அதாவது, இரண்டு படங்கள். அவற்றில் முதல் படம், 2000ல் வெளிவந்த ஹே ராம். ஹேராம் திரைப்படம் சொல்ல வரும் கருத்து என்ன, அதில் கமல்ஹாசன் நமக்குப் புரியவைக்கும் விஷயம் என்ன என்பதெல்லாம் மறப்போம். ஒரே ஒரு சிச்சுவேஷனை மட்டும் நோக்குவோம்.

படத்தின் கதாநாயகன், தனது மனைவியுடன், தீபாவளி அன்று, ‘பாங்’ குடித்துவிட்டு, நேரம் செலவழிக்கிறான். அப்போது, பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்கிறது.

மதுவோ, பாங்கோ அடித்துவிட்டு, trance music கேட்டிருக்கும் எவருக்கும் இந்த இசையைக் கேட்டால், பைத்தியம் பிடிக்கும். இதில் சிறிது கூட அதிசயோக்தியாக சொல்லப்படவில்லை. இதை ஏன் சொன்னேன் என்றால், படத்தில் கதாநாயகன், பாங் அடித்துவிட்டு என்னென்ன மனப்பிறழ்வுகளை அனுபவிக்கிறானோ, அவற்றை, அந்தப் பாடலைக் கேட்பதன் மூலம், நாமும் அனுபவிக்கமுடியும். அதுதான் அப்பாடலின் விசேஷம். இளையராஜா இசையமைத்ததில், நாடி நரம்புகளை ஒரு ஆட்டு ஆட்டி, கேட்பவர்களை உன்மத்தம் கொள்ளவைக்கும் (வெகுசில) பாடல்களில், இப்பாடலும் ஒன்று.

இப்படியொரு பாடலை, தானாகவே இளையராஜா கொடுத்திருக்க மாட்டார். ஏனெனில், திரைப்பட ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும். ஹேராம்  படத்துக்கு ஆரம்பத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் எல். சுப்ரமண்யம். அத்தனை பாடல்களையும் இசையமைத்துக் கொடுத்துவிட்டு, பாடல்கள் படமாகவும் ஆக்கப்பட்டபின், கமலுக்கும் சுப்ரமண்யத்துக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு (அந்தக் காரணம் இப்போது வேண்டாம்) சுப்ரமணியத்தை நீக்கினார் கமல். அதன்பின் கமல் வந்தது, நேராக இளையராஜாவிடம். இசையமைக்கச் சம்மதித்த இளையராஜாவிடம், படத்தின் பாடல்கள் ஏற்கெனவே படமாக்கப்பட்ட விபரம் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், அந்தக் காட்சிகளைப் பார்த்த இளையராஜா, அவற்றுக்குத் தக்கவாறு கச்சிதமாக (ஸீன் சீக்வென்ஸுக்கு எந்தக் குந்தகமும் ஏற்படாதவாறு) இசையமைத்துக்கொடுத்த பாடல்கள்தான் ஹேராமின் இறுதியான பாடல்களாக வெளியிடப்பட்டன.

ஆக, கமலின் இன்புட்கள் இல்லாமல் இப்படிப்பட்ட ஒரு பாடல் வெளிவர சாத்தியமில்லை. எந்த இசையமைப்பாளராக இருந்தாலும், அவர்களின் படைப்பாற்றலின் அடியாழம் வரை அவர்களை விரட்டி, அவர்களின் அற்புதமான இசைத்திறமையை முழுதாக வெளிக்கொணர, அந்த ஆற்றல் உள்ள இயக்குனர்கள் தேவை. அந்தத் திறமை, கமலுக்கு வெகுவாகவே இருக்கிறது என்பதும் எனக்கு மிக நன்றாகவே தெரியும்.

அந்தப் பாடல்தான், அஜய் சக்ரவர்த்தியால் அற்புதமாகப் பாடப்பட்ட ‘இசையில் தொடங்குதம்மா’ என்ற அற்புதம். ஒருமுறை கேட்டாலே, கேட்பவர்கள் அத்தனைபேரையும் சந்நதம் கொண்டு ஆட வைக்கும் பாடல் இது.

அந்தப் பாடலை இங்கே காணலாம்.

 

காட்சிகளின் பின்னணியில்தான் இந்தப் பாடல் தொடங்குகிறது. ஆனால், போகப்போக, கதாநாயகன் பாங் அடித்த பின், பாடல் மெதுவாக முன்னணிக்கு வருகிறது. அப்போது ஒலிக்கும் பாடலின் இசையை கவனித்துப் பாருங்கள்.

 

கூடவே, இந்த அற்புதத்தை compliment செய்யும் காட்சிகளும் முக்கியமில்லையா? அவையும் கச்சிதமாக கமல்ஹாசனால் வடிவமைக்கப்பட்டிருக்கும் (பாங் அடித்தபின், க்ளோஸப்பில் காண்பிக்கப்படும் ஷெனாய், பிரம்மாண்டமான பொம்மை வீழ்த்தப்படுவது, மனைவியின் அருகாமை இத்யாதி). ஆக, என் தனிப்பட்ட கருத்தின்படி, பாடலும் சரி, இசையும் சரி, காட்சிகளும் சரி – கச்சிதமாகக் கலந்து, திரையில் காண்பிக்கப்பட்ட உன்மத்தம் கொள்ள வைக்கும் பாடல்களில், இது முதலிடம் பெறுகிறது.

இந்தப் பாடலை வைத்திருக்கும் நண்பர்கள், ஹெட்ஃபோன் அல்லது இயர்ஃபோன் அல்லது கார் ஸ்டீரியோ மூலமாக, அட்லீஸ்ட் ஒரு முறை, தனிமையில் நல்ல வால்யூமோடு கேட்டுப்பாருங்கள். மெய்மறப்பீர்கள் என்பது ஒரு understatement.

(பாடலின் ஆரம்ப கணம். தடால் தடாலென்று ஒலிக்கும் பேரிகை. அதன் பின்னணியில் தட்டப்படும் மற்றொரு சிறிய பேரிகை (என் பாஷையில் டமாரம்). முதல் செகண்டின் இறுதியில் இருந்து மூன்றாம் செகண்டின் பாதிவரை, ஐந்து முறை ‘தட் தட் தட் தட் தட்’ என்று பின்னணியில் தட்டப்படும் அந்த சிறிய டமார ஒலி, அதன்பின் பாடலின் எந்த கணத்திலும் அதே போன்ற தாளலயத்துடன் வரவே வராது. பாடலின் ஆரம்பத்தை ஒரு தூக்கு தூக்கும் அந்த ஒலி, அட்டகாசம்! பொதுவாக, இதைப்போன்ற சிறிய ஒலிகள், ரஹ்மானின் இசையில் பளிச்சிடும் (அவற்றைப் பற்றியும் ஸ்டடி செய்து வைத்திருக்கிறேன். முடிந்தால் விரைவில் எழுதுகிறேன்). சொல்லவந்த விஷயம், இளையராஜாவின் இசையில் அப்படிப்பட்ட டக்கரான பின்னணி ஒலிகள் கொஞ்சம் குறைவுதான். ஆனால், அந்த ஏக்கத்தை இப்பாடல் தீர்த்துவைத்துவிட்டது. அதேபோல், பாடலின் முதல் சரணத்துக்கு முன் வாசிக்கப்படும்  அந்த ஷெனாய் – Genius!! அந்த ஒலியில் வழிந்து ஓடும் தாபமும் ஏக்கமும், எழுத்தினால் சொல்ல முடியாதது. அதேபோல், இரண்டாவது சரணத்தில் வரும் வரிசையான, ஒரே சீரான டமார ஒலிகள். அதனைத் தொடர்ந்த ஸாரங்கி இசை. ‘பூந்து விளையாடுறது’ என்பது இதுதான்!)

இது முதல் உதாரணம். அடுத்த உதாரணமாக, 2004ல் வெளிவந்த மற்றொரு படம். அதன்பெயர் – விருமாண்டி.

படத்தில் ஒரு குறிப்பிட்ட சிச்சுவேஷன். கதாநாயகன், அவனது கிராமத்துச் சாமியான விருமாண்டியை, அவனது நண்பர்களுடன், விருமாண்டி கிணற்றில் நுழைந்து மூடப்பட்ட நாளில் வழிபடுகிறான். இந்த இடத்தில், பின்னணியில் ஒலிக்கிறது ஒரு பாடல்.

கர்ணகடூரமான குரலில், தடதடவென்ற இசையமைப்புடன், இப்பாடலைப் பாடியவர் இளையராஜாவே தான் என்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். ‘விருவிருமாண்டி விருமாண்டி’ என்ற இப்பாடல்தான் அந்தப் படத்திலேயே எனக்குப் பிடித்தமான இரண்டு பாடல்களில் ஒன்று (மற்றொரு பாடல் – கருமாத்தூர் காட்டுக்குள்ளே). இந்தப் பாடலையும், காட்சிக்குத் தேவையான வேகத்துடன் படமாக்கியிருப்பார் கமல்ஹாசன். ஆனால், இந்தப் பாடலின் முழு உபயோகமும், படத்தின் இரண்டாம் பாதியின் கடைசியில் – க்ளைமேக்ஸில்  தான் வருகிறது. அதைப்பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

க்ளைமேக்ஸ். கதாநாயகன் விருமாண்டி, சூப்ரின்டென்ட்டின் போலீஸ் உடையை அணிந்துகொண்டு வெளியேறுகிறான். காரணம்? கொத்தாளத் தேவனைத் தடுப்பதே. இந்த நேரத்தில், வெளியே கொலைவெறி பிடித்த பிற கைதிகள் தப்பித்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். விருமாண்டி வெளியேறுவதை படம் பார்க்கும் ஆடியன்ஸின் மனதில் பதியவைக்க என்ன செய்ய வேண்டும்?

இங்கேதான் ‘விருவிருமாண்டி விருமாண்டி’ பாடலின் ஹைஸ்பீட் வெர்ஷன் உதவுகிறது.

‘கர்ப்பக்கெரகம் விட்டு சாமி வெளியேறுது… இது நியாயத் தீர்ப்பு கூறும் நாளுடா.. தர்மம் பூட்டுப் போட்டா உள்ள அடங்காதுடா.. அத்த தடுக்குறவன் இப்ப ஆருடா’ என்று தொடங்கும் இப்பாடல், படத்தின் சிச்சுவேஷனோடு சேர்த்து, பார்ப்பவர்களை உடனடியாக வெறி கொள்ளவைப்பதில் பெருவெற்றி அடைகிறது. யோசித்துப் பாருங்கள். எங்கு பார்த்தாலும் கைதிகளின் வெறியாட்டம். திடீரென்று, பெரிய கம்பிக்கதவை தலைக்குமேல் தூக்கிக்கொண்டு விருமாண்டியும் பிற கைதிகளும் ஓடிவருகின்றனர். எல்லோருக்கும் முன்னால், அலறிக்கொண்டு ஓடிவருகிறான் விருமாண்டி. அவன் தோற்றமே பழைய விருமாண்டி சாமி போலவே இருக்கிறது. மிகச்சரியாக அந்த சூழ்நிலையை ஒரே கணத்தில் மனதில் பதியவைக்கக்கூடிய பாடலாக இது இருக்கிறது.

இதோ இந்த வீடியோவில், 2:16லிருந்து துவங்குகிறது அப்பாடல்.

(இதே படத்தில், கமலின் அறிமுகக்காட்சியில், ஆடியன்ஸின் கரகோஷமா அல்லது பாடலில் வரும் கரகோஷமா என்றே பிரித்தறிய முடியாதவாறு, கமல் வந்து குதிக்கும் ‘கொம்புல பூவச்சுத்தி’ பாடலையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளலாம்).

கமல்ஹாசன், பாடல்களின் முக்கியத்துவத்தையும், காட்சிகளின் பின்னணியில் அவை மக்களின் மனதில் விளைவிக்கும் மாற்றங்களையும் பற்றி நன்றாகத் தெரிந்தவராகவே இருக்கிறார் என்பதற்கு இவை சில உதாரணங்கள். திரைக்கதை அமைக்கும்போது, இப்படிப்பட்ட பாடல் – காட்சி ஒத்திசைவு, வெகுமுக்கியம்.

(தொடரும்)

http://www.dinamani.com/junction/idhayam-totta-isai/2017/jun/24/kamal-hasan-and-ilaiyaraja-musical-hits-2726503--2.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

28. அநிருத்  -அதிரும் இளமையின் குரல்..!  

 

 
main_image

 

தமிழ்த்திரைப்படங்களில் தற்போதைய இளைஞர்களுக்குப் பிடித்த இசையமைப்பாளர் யார்? யோசித்துப் பார்த்தால், அநிருத்தைத் தவிர வேறு யாரையும் சொல்ல இயலவில்லை. அநிருத் இசையமைத்திருக்கும் திரைப்படங்கள் அப்படிப்பட்டவை. இன்றுவரை அண்மைக்காலத்தில் தமிழின் பிரம்மாண்ட ஹிட்களில் பல, இவரது இசைதான். உலகமெல்லாம் சுற்றிய ‘வொய் திஸ் கொலவெறி கொலவெறி டி’ பாடலை இசையமைத்தபோது அநிருத்துக்கு 20-21 வயது இருக்கலாம். அப்போதில் இருந்து இன்றுவரை தமிழின் முதன்மையான இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். Chart topping numbers என்ற, கேட்டதும் பிடித்து விடும் ஹிட்களை ஒவ்வொரு படத்திலும் ஒன்றிரண்டு பாடல்களிலாவது கொடுத்து விடுகிறார். அநிருத்தின் மேல் இருக்கும் ஒரே குற்றச்சாட்டு – வெளிநாட்டுப் பாடல்களில் இருந்து சுடுவது. இருப்பினும் இதைத் தமிழின் கிட்டத்தட்ட அனைத்து இசையமைப்பாளர்களுமே செய்து வருவதால், இதில் அநிருத்தை மட்டும் குற்றம் சாட்டிவிட முடியாது.

’மூணு’ படம்தான் அநிருத்தின் முதல் படம். அதற்கு முன்னர், லயோலாவில் பி.காம் படித்துக்கொண்டிருந்தபோது, ஐஷ்வர்யா ரஜினிகாந்த்தின் பத்துப் பனிரண்டு குறும்படங்களூக்கு இசையமைத்துக் கொடுத்திருந்ததாக அநிருத் பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். இதனால்தான் மூணு படமும் அநிருத்துக்கு வாய்த்தது (அநிருத்தின் குடும்பமும் ரஜினி குடும்பமும் நெருங்கிய உறவினர்கள் என்பது உலகம் அறிந்தது). தனது பத்தாவது வயதில் இருந்தே கம்போஸ் செய்து வந்திருப்பதாக அநிருத் சொல்லியிருக்கிறார். தமிழின் பல இசையமைப்பாளர்கள் இசை கற்றுக்கொண்ட அதே லண்டன்  ட்ரினிடி இசைக்கல்லூரியில்தான் அநிருத்தும் பியானோ படித்திருக்கிறார். சிறுவயதில் இருந்தே இசையில் ஈடுபாடு இருந்ததால் அவரால் ஒரு வெற்றிகரமான இசையமைப்பாளராக வர முடிந்தது. இருப்பினும், அநிருத்தின் குடும்பப் பின்னணியுமே அவர் 21 வயதிலேயே இசையமைப்பாளராக ஆனதற்கும் காரணம் என்பதை மறுக்க முடியாது. அதேசமயம், அப்படி இசையமைப்பாளராக ஆனதற்குப் பிறகு, அவரது திறமையினால்தான் இத்தனை தூரம் பயணித்திருக்கிறார் என்பதும் உண்மையே.

 

மூணு படத்தின் பாடல்கள் அப்படம் வெளிவந்தபோது பெரிதாகப் பேசப்பட்டன. ‘கண்ணழகா’ பாடலும், ‘நீ பார்த்த விழிகள்’ பாடலும் அனைவருக்கும் பிடித்திருந்தன. அதேபோல் ‘போ நீ போ’ பாடலும். ஆனால் கொலவெறி பாடலே இவைகளை விடவும் உலகம் முழுக்கச் சுற்றியது. அதன் எளிமையான ட்யூனும், உடைந்த ஆங்கிலத்தில் அமைந்திருந்த வரிகளுமே காரணம். அந்தப் பாடல் அநிருத்தின் இசை வாழ்க்கையில் மறக்க முடியாத பாடலாக அமைந்தது.

இதற்குப் பின் அநிருத் இசையமைத்தது, துரை செந்தில்குமார் இயக்கிய ‘எதிர்நீச்சல்’. சிவகார்த்திகேயன் நடித்து, நன்றாக ஓடிய படங்களில் ஒன்று. இந்தப் படத்தின் ‘பூமி என்னை சுத்துதே’, ‘வெளிச்சப்பூவே’, ‘லோக்கல் பாய்ஸ்’, ‘நிஜமெல்லாம் மறந்துபோச்சு’ ஆகிய பாடல்கள் இன்றுமே தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. எதிர்நீச்சல் ஆல்பம் அநிருத்துக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது.

இதற்குப் பிறகு, ‘டேவிட்’ படத்தின் ‘கனவே கனவே’ பாடல் அநிருத்துக்குப் புகழ் சேர்த்தது. இளைஞர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமடைந்த பாடல் இது. அந்தப் பாடலை அநிருத்தே பாடியும் இருந்தார். அந்த ஒரு பாடல் மட்டுமேதான் அப்படத்தில் அவர் இசையமைத்த பாடலும் கூட. இப்படத்துக்குப் பின்னர் அவர் இசையமைத்த ‘வணக்கம் சென்னை’ படம் ஓடாமல் போனாலும் கூட, பாடல்களால் புகழடைந்தது. ‘ஓ பெண்ணே’ மற்றும் ‘ஒசாகா ஒசாகா’ ஆகியவை அநிருத்தின் இசையமைப்புக்கு உதாரணம். அதற்குப் பிற்கு, செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்து, படத்தின் பின்னணி இசையையும் அநிருத் கவனித்துக்கொண்டார்.

 

இதற்குப் பிறகு வந்த 2014 தான் அநிருத்தின் இசை வாழ்க்கையில் இன்றுவரை மறக்க முடியாத ஆண்டு என்று சொல்லலாம். ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மான் கராத்தே’, ‘கத்தி’, ‘காக்கி சட்டை’ ஆகிய நான்கு படங்களுக்கு அந்த வருடத்தில் அநிருத் இசையமைத்தார். இந்த நான்கு படங்களிலுமே பாடல்கள் சூப்பர்ஹிட்கள் ஆயின. குறிப்பாக, வேலையில்லா பட்டதாரி & கத்தி ஆகிய இரண்டு படங்களுமே பிரமாதமாகவும் ஓடின. அந்த வருடனம் முழுதும் ஒலித்துக் கொண்டிருந்த சூப்பர்ஹிட் பாடல்களான ‘போ இன்று நீயாக’, ‘வாட் எ கருவாட்’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாஞ்சா போட்டுதான்’, ‘டார்லிங் டம்பக்கு’, ‘உன் விழிகளில்’, ‘செல்ஃபி புள்ள’, ‘ஆத்தீ என்ன நீ’, ‘பாலம்’, ‘காதல் கண் கட்டுதே’ ஆகியவை அநிருத்தின் கைவண்ணமாக 2014 எங்கும் சக்கைப்போடு போட்டன. வேலையில்லா பட்டதாரியின் 'அம்மா அம்மா' பாடல், தமிழின் மிகச்சிறந்த அம்மா செண்டிமெண்ட் பாடல்களில் ஒன்றாகவும் மாறியது.

 

அதேபோல் 2015 ஆம் ஆண்டு, 2014ஐ விடவும் பிரம்மாண்டமான ஆண்டாக அநிருத்துக்கு அமைந்தது. அந்த வருடத்தின் முதல் படமே ‘மாரி’. படம் சரியாகப் போகாவிட்டாலும், அப்படத்தின் பாடல்கள் இன்றுமே சூப்பர்ஹிட்களே. அப்படத்தின் ‘டானு டானு டானு’, ‘மாரி’, ‘ஒரு வித ஆசை’ ஆகிய பாடல்கள் இன்ஸ்டண்ட் ஹிட்களாக மாறின. மாரி படத்துக்கு அடுத்து வெளியான ‘நானும் ரௌடிதான்’ படமோ சூப்பர்ஹிட்டாக மாறியது. அந்தப் படத்தின் அத்தனை பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்களாக மாறின. ‘தங்கமே உன்னத்தான்’, ‘என்னை மாற்றும் காதலே’, ‘கண்ணான கண்ணே’, ‘நானும் ரௌடிதான்’, ‘நீயும் நானும்’ ஆகிய பாடல்களை மறக்க முடியுமா? கண்ணான கண்ணே பாடலுக்குப் பின்னால் இருக்கும் கதை (விஜய் சேதுபதி ஒரு விழாவில் நயன் தாராவைக் கடத்த விரும்பியதாகச் சொன்னது - அதை வைத்து விக்னேஷ் சிவன் அந்தப் பாடலை எழுதியது) பலருக்கும் தெரிந்திருக்கும்.

 

 
 

அதே வருடத்தில் அஜீத்குமார் நடித்த ‘வேதாளம்’ படமும் அநிருத்துக்கு ஒரு ஹிட் படமாக அமைந்தது. மாரி & நானும் ரௌடிதான் அளவு அத்தனை பாடல்களும் ஹிட்டாக இல்லாவிட்டாலும், ‘ஆலுமா டோலுமா’ தமிழகத்தைக் கலக்கியது. வெறித்தன ஹிட் ஆகியது. அந்த வருடம் வெளியான ‘தங்க மகன்’ படம் தோல்வி. ஆனால் வழக்கப்படி பாடல்கள் ஹிட். ‘என்ன சொல்ல’ பாடல் மிகவும் இனிமையானது.

இதன்பிறகு ‘ரெமோ’, ‘ரம்’ ஆகிய இரண்டு படங்கள் இதுவரை வெளிவந்துள்ளன. தற்போது  ‘விவேகம்’ படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

 

அநிருத்துக்கு இப்போது வெறும் 26 வயதுதான் ஆகிறது. இதற்குள் தமிழின் முக்கியமான இசையமைப்பாளராக அவர் எப்படி ஆனார்? யோசித்துப் பார்த்தால், அநிருத் குறிவைப்பது இளைஞர்களை மட்டுமே என்பது தெரியும். இங்கு முதலிலிருந்து நான் குறிப்பிட்டிருக்கும் அத்தனை பாடல்களையும் அவர்களுக்காகவே இசையமைத்திருக்கிறார். கல்லூரிகளிலும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும், பார்ட்டிகளிலும் தொடர்ந்து இசைக்கப்படுபவை இந்தப் பாடல்களே. இதுதான் பிரதான காரணம். கூடவே, கேட்டதும் நம்மை ஆடவைக்கும் பாடல்கள் அநிருத்தின் விசேடம். அது மட்டும் இல்லாமல், அற்புதமான மெலடிக்களையும் இந்தக் குறுகிய காலகட்டத்தில் அவர் கொடுத்திருக்கிறார் என்பதை மறுக்கவே முடியாது. அதேபோல், அநிருத்தின் இன்னொரு விசேடம், EDM. எலக்ட்ரானிக் டான்ஸ் ம்யூஸிக் என்ற இந்த வகையான இசையைப் பரவலாக உபயோகிப்பதே இளைஞர்களுக்கு அது பிடித்திருப்பதற்குக் காரணம். பொதுவாக நட்சத்திர ஹோட்டல்களின் பார்ட்டிகளிலும் டான்ஸ் ஃப்ளோர்களிலுமே அதிகமாக உபயோகப்படுத்தப்படுவது இந்த EDM. மூணு படத்தில் இருந்தே இதை அநிருத் அதிகமாக உபயோகித்துக்கொண்டிருக்கிறார் (Come on Girls, Chennai City Gangsta, செஞ்சிட்டாளே, அள்ளாதே சிறகையே, ஆலுமா டோலுமா, Surviva, Don’t you mess with me ஆகியவை ஒரு சில உதாரணங்கள்).

கொண்டாட்டத்துடன் கூடிய பிரம்மாண்டமான, நினைவு கொள்ளத்தக்க பாடல்கள் வேண்டும் என்றாலேயே ‘கூப்பிடு அநிருத்தை’ என்ற ட்ரெண்ட் இப்போதைய காலகட்டத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. உண்மையிலேயே பல்வேரு இசைக்கருவிகள், அவற்றில் ஒரு பிரம்மாண்டம்,மகிழ்ச்சியோடு கேட்டுவிட்டு ஆடுவது என்ற இளைஞர்களின் உலகத்தில் அநிருத் இன்றியமையாத அம்சமாக ஆகிவிட்டதற்கு இதுவே அடையாளம்.

 

அநிருத்தின் இன்னொரு சிறப்பம்சம் - அவரது குரல். அருமையான மெலடியாகை இருந்தாலும் சரி- தரை ரேட் குத்துப் பாடலாக இருந்தாலும் சரி - அவரது குரல், நன்றாக முதிர்ந்து, சிறப்பாகப் பொருந்திவிடக்கூடிய குரல். தனது இசையில் மட்டும் இல்லாமல், வேறு இசையமைப்பாளர்களின் இசையிலும் ஹிட் பாடல்களை அநிருத் பாடியிருக்கிறார். 'மெர்சலாயிட்டேன்' - ரஹ்மான் இசையில் ஒரு உதாரணம். 'ரோமியோ ஜூலியட்' படத்தில் டண்டணக்கா, 'ஜில் ஜங் சக் - ஷூட் த குருவி, 'சேதுபதி' - ஹேய் மாமா, 'போகன்' - டம்மாலு டும்மீலு ஆகியவை இன்னும் சில உதாரணங்கள்.

 

அறிமுகமாகிச் சில வருடங்களே ஆனாலும், அநிருத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் கொஞ்சநஞ்சம் இல்லை. பீப் சாங், போலி வீடியோ என்று ஏராளமான சர்ச்சைகள். இன்னும் முழுமையாக இவற்றில் இருந்து அவரால் வெளியே வர இயலவில்லை.

தனது இசையை ஒன்றிரண்டு விஷயங்களுக்குள் சுருக்கிக்கொள்ளாமல், வெளிநாட்டுப் பாடல்களிலிருந்து உருவாமல், ஒரிஜினாலிடியுடன் கூடிய நல்ல இசையை அநிருத் வழங்க வேண்டும் என்பது எனது ஆசை. அது அவரால் முடியும். யோசித்துப் பார்த்தால், 3, நானும் ரவுடிதான், எதிர்நீச்சல் ஆகிய படங்கள் போல, அவற்றையும் மிஞ்சிய இசையை அநிருத் கொடுக்கவேண்டிய காலகட்டம் நெருங்கிவிட்டது. அதேபோல், பாடல்களால் புகழடைந்த அளவு பின்னணி இசையால் அநிருத் இன்னும் பிரபலம் ஆகவில்லை. பாடல்கள்- பின்னணி இசை ஆகிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால், ஜிப்ரானே தமிழில் மிகப்பெரிய திறமைசாலி என்பது என் எண்ணம். ஆனால் அநிருத்துக்கு அமைந்த படங்கள் போல ஜிப்ரானுக்கு இளமையான, குறும்பான படங்கள் இன்னும் அமையவில்லை.

தனது இசையில் பல்வேறு பரிசோதனைகளை அநிருத் செய்வாரா என்பதைப் பொறுத்துப் பார்ப்போம்.

(தொடரும்) 

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

29. மோஸார்ட் - கரை காணா இசைச் சாகரம்..!  

 

 
main_image

 

இத்தனை வாரங்கள் இந்திய இசையைப் பற்றிக் கவனித்தோம். இந்த வாரம், உலக இசையில் ஒரு மிக முக்கியமான நபராகக் கருதப்படும் ஒருவரையும், அவரைப் பற்றிய திரைப்படம் ஒன்றையும் கவனிக்கலாம். இது ஏன் என்றால், இவரது பாதிப்பு இல்லாத இசையமைப்பாளர்களை விரல் விட்டு எண்ணி  விட முடியும். இவரது இசையை நீங்கள் கேட்டால் மெய்மறந்து போவது உறுதி. அது மட்டும் இல்லாமல், இசையைப் பற்றிய தொடரில், இவர் இடம்பெறாவிட்டால் அந்தத் தொடரே முழுமை பெறாமல் போய்விடும். இதனால்தான்.

வுல்ஃப்கேங் அமேடியுஸ் மோஸார்ட். இந்த முழுப்பெயரைச் சொன்னால் பலருக்கும் அவரை அடையாளம் தெரிவது கடினம், ஆனால், ‘மோஸார்ட்’ என்று சொன்னால், குறைந்தபட்சம் நமது ‘மோஸார்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்று அழைக்கப்படும் ரஹ்மானாவது நினைவில் வரும். உலக அளவில் இன்றும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர் இது. 250 வருடங்களாகக் கேட்கப்படும் இசை இவருடைய படைப்பு. இந்த உலகம் கண்ட ஜீனியஸ்களில் ஒருவர். மிகச்சிறிய வயதில் – 35 – இறந்த ஒரு மேதை. தனது ஐந்தாவது வயதில் இருந்து இசையமைக்க ஆரம்பித்தவர். இன்றும் பிரபலமான பல சிம்ஃபனிகளையும் ஓபராக்களையும் எழுதியவர் (நமது டைட்டன் விளம்பரத்தில் வந்த இசை கூட இவருடையதுதான்).

இத்தகைய உலக இசை மேதையைப் பற்றிய அற்புதமான படம், ‘Amadeus’ என்ற பெயரில் 1984ல் வெளிவந்திருக்கிறது. மிலோஸ் ஃபோர்மேன் இயக்கத்தில், எட்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய படம் இது. இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுகிறேன். படம் முழுக்க மோஸார்ட்டின் இசை பொங்கி வழியும். படம் பார்ப்பவர்களுக்கு அற்புதமான அனுபவத்தை அள்ளி வழங்கும் படம் இது. இதன் இயக்குநர் மிலோஸ் ஃபோர்மேன். One Flew Over a Cuckoo’s Nest’ படத்திற்காக ஆஸ்கர் வென்ற அதே இயக்குநர். இப்படத்துக்கும் ஆஸ்கர் வென்றார்

உலக இசையில், மோஸார்ட்டுக்கு மட்டும் அப்படி என்ன முக்கியத்துவம்? அவர் என்ன பெரிய கொம்பரா? போன்ற கேள்விகள் பல எழுப்பப்பட்டுள்ளன இதுவரையில். இதற்குப் பதில் தேடி நாம் பயணித்தால், பல அட்டகாசமான தகவல்கள் கிடைக்கின்றன. அத்தனையையும் இப்போது பார்ப்போம்.

தனது மிகச்சிறு வயதிலிருந்து இசையமைக்க ஆரம்பித்தவர் மோஸார்ட் என்று சரித்திரம் சொல்கிறது. சரியாகச் சொல்லப்போனால், ஐந்து வயதிலிருந்து. இவரது  தந்தை, ஒரு வயலின் கலைஞராக இருந்தவர். ஐரோப்பிய நகரமான சால்ஸ்பெர்க்கின் ஆர்ச் பிஷப்பின் ஆர்க்கெஸ்ட்ரா குழுவில் இருந்தவர். தனது மகனான மோஸார்ட்டுக்கு விளையாட்டாக இசை கற்றுக்கொடுக்க ஆரம்பித்த நிகழ்ச்சியிலிருந்து மோஸார்ட்டின் இசைப்பயணம் துவங்கியது எனலாம்.

நான்காவது வயதில் இவ்வாறு பியானோ வாசிக்கக் கற்றுக்கொள்ள ஆரம்பித்த மோஸார்ட், வெகுவிரைவிலேயே கற்றுக்கொடுக்கப்பட்டதைப் பிழைகளின்றி அப்படியே வாசிக்க ஆரம்பித்தார். அத்தோடு கூடவே, சிறிய இசைக் கோர்ப்புகளையும் சொந்தமாகவே வாசிக்க ஆரம்பித்தார். அவர் தனது ஐந்தாவது வயதில் எழுதிய இசைக்கோர்ப்புகள், இன்றும் காணக்கிடைக்கின்றன.

 

 

அன்றிலிருந்து, தனது தந்தையோடு அவர் மேற்கொண்ட உலகப்பயணங்கள் பல. உலகப்பயணங்கள் என்று சொன்னாலும், பெரும்பாலும் ஐரோப்பாவுக்குள்ளேயே அமைந்த பயணங்களே அவை. இந்தப் பயணங்களில், பல நாடுகளிலும் தனது திறமையை சிறுவன் மோஸார்ட் காட்ட, தங்களது ஏழ்மை நிலையை இதில் வந்த பணத்தின் மூலம், மோஸார்ட்டின் தந்தையால் சமாளிக்க முடிந்தது.

மோஸார்ட், தனது சிறுவயதில் சந்தித்த ஒரு முக்கியமான இசையமைப்பாளர், ஜொஹான் க்ரிஸ்டியன் பாக்ஹ். இவர், உலகம் முழுக்கத் தெரிந்த மிகப்பிரபலமான இசை விற்பன்னர் ஜொஹான் செபாஸ்டியன் பாக்ஹின் மகன். லண்டனில் இருந்த பாக்ஹை சிறுவன் மோஸார்ட் சந்தித்தது, அவனது வாழ்வின் ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக அமைந்தது.

தனது பதினைந்தாவது வயதில், ரோம் நகரத்தின் ஸிஸ்டைன் சேப்பலில் (மைக்கலாஞ்சலோ, நான்கு ஆண்டுகள் தொங்கிக்கொண்டே அதன் விதானத்தில் வரைந்த ஓவியங்கள், இன்றும் அப்படியே உள்ளன), வாடிகனின் இசையமைப்பாளராக இருந்த க்ரெகோரியோ அல்லெக்ரியின் ஒரு ஸிம்ஃபனியை ஒருமுறை கேட்க நேர்ந்த மோஸார்ட், அதனை அப்படியே அடித்தல் திருத்தல் இல்லாமல் முழுமையாக எழுதி, அதில் இருந்த சிறிய இசைப் பிழைகளையும் சரி செய்து கொடுத்த சம்பவம் நடந்திருக்கிறது. யோசித்துப் பாருங்கள். ஒரு பெரிய ஸிம்ஃபனி. ஒரு சிறுவன் ஒரே முறைதான் அதனைக் கேட்க நேர்கிறது. கேட்ட உடனேயே அதனை கடகடவென்று அவன் எழுதிக் கொடுத்தால், எப்படி இருக்கும்? வாடிகன் நிர்வாகிகள், அரண்டுவிட்டனர் என்று சொல்லப்படுகிறது.

 

 

இதே போன்ற ஒரு விஷயம், படத்திலும் வருகிறது. ஸாலியேரி, மோஸார்ட்டின் இசைக்கோர்ப்புகளைப் படித்துப் பார்க்கும்போது. ஒரு இடத்தில் கூட எங்குமே எந்த விதமான அடித்தல் திருத்தலும் இல்லாமல், மிக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும் அந்த இசையைப் படிக்கையிலேயே, கண்ணீர் அவரது கண்களிலிருந்து தாரை தாரையாகப் பெருகுகிறது. இசையின் உச்சத்தை அடைந்த ஒரு மனிதனின் பொக்கிஷத்தைக் கண்டேன் என்று ஸாலியேரியின் குரல், பின்னணியில் ஒலிக்கிறது. இசையை உள்ளபடி புரிந்துகொண்ட ஒரு மனிதனின் கதறல் அது.

 

 

இவரது கதை, அப்படியே நம்மிடை வாழும் ஒரு இசையமைப்பாளரின் கதையை ஒத்திருப்பதைக் கவனியுங்கள். மொஸார்ட் ஆஃப் மெட்ராஸ் என்றே பெயர் பெற்ற அவருக்கு, அந்தப் பெயர் வெறும் குருட்டாம்போக்கில் வைக்கப்படவில்லை என்பது, மோஸார்ட்டின் கதையைப் பார்க்கும்போது தெரிகிறது.

மொஸார்ட்டின் அருமையான, மனதை உருகவைக்கும் இசைக்கு ஒரு உதாரணமாக, இதோ இந்த இசைக்குறிப்பைக் கேட்டுப் பாருங்கள். இடையே வரும் ஒரு ஒலிக்குறிப்பு, எங்கேயோ கேட்டதுபோல் இருக்கிறதா? இது ஒரு மிகப்பிரபலமான இந்திய இசை. 1:50யிலிருந்து 2:20 வரை உன்னிப்பாகக் கேட்கவும்.

 

 

இவ்வளவு மேதையாக விளங்கிய மோஸார்ட் பார்ப்பதற்கு எப்படி இருந்தார்? ஒல்லியாக, குள்ளமாக, வெளுத்துப்போய், தெருவில் நாம் பார்க்கும் ஒரு சாதாரண ஆளாகத்தான் மோஸார்ட் இருந்திருக்கிறார். அவரது உருவத்தை மட்டும் பார்த்தால், இவர் ஒரு ஜீனியஸ் என்று யாராலும் கணிக்கவே முடியாது என்று இவரது காலத்தில் வாழ்ந்த சிலரது குறிப்புகள் கூறுகின்றன.

மோஸார்ட்டின் இசை எப்படிப்பட்டது? இதற்கு, அவர் வாழ்ந்த காலத்தையும் நாம் சற்றுக் கவனிக்க வேண்டும். பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பா. பெருமளவில் பழமையையும் பாரம்பரியத்தையும் கட்டிக்காத்து வந்த ஒரு பூமி. எப்பொழுதும், பழமையை எதிர்க்கும் ஒரு புதிய அலை அவ்வப்போது எழுமல்லவா? அக்காலத்தில் பொதுவாக வழங்கி வந்த இசை முறையானது, பரோக் (Baroque) என்ற வகை. இந்த பரோக்கை எதிர்த்து, கேலண்ட் (Galant) என்ற புதிய அலை மேலெழும்பிய நேரம். மோஸார்ட்டின் இசையோ, பழைய பரோக்கை மீண்டு எடுத்துவந்தது என்று விமர்சகர்கள் சொல்கின்றனர். ஆனால், இந்தப் பழைய இசையையே, மிகப் புதியதாக, தெளிவாக, பல நுணுக்கங்களுடன் மோஸார்ட்டால் வெளிக்கொணரமுடிந்தது.

 

 

மோஸார்ட்டின் சமுத்திரம் போன்ற இசையில் மிகச்சில அலைத் துணுக்குகளைத்தான் இதுவரை கேட்டிருக்கிறேன். ஆனால், அதிலேயே, சில விஷயங்களை என்னால் அவதானிக்க முடிந்தது. அவை சரியா தப்பா என்று இசை விமர்சகர்கள் தான் சொல்ல வேண்டும். மோஸார்ட்டின் இசையில், ஒரு துள்ளல் இருந்தது. புதுமை என்று சொல்ல, இசையை நன்கு படித்தவனாக நான் இருக்க வேண்டும். ஆனால், இசையைப் பற்றி ஒன்றும் தெரியாதவன் நான். எனவே, இனிமை, மகிழ்ச்சி, மனமார்ந்த நிம்மதி ஆகிய உணர்வுகள் எனக்குக் கிடைத்தன என்று மட்டும் சொல்லிவிடுகிறேன்.

மோஸார்ட் இறந்தது, அவரது முப்பத்தைந்தாம் வயதில். காரணம்? கடும் நோய். காய்ச்சல் என்று மட்டும் பரவலாக சொல்லப்படும் காரணத்தை விட, அவர் சதியால் கொல்லப்பட்டார் என்பதே எல்லா இடங்களிலும் பரவியிருக்கும் விஷயம். அது எவ்வளவு உண்மையோ தெரியாது. ஆனால், இந்த விஷயத்தை வைத்துத்தான் அமேடியஸ் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், இறக்கும் நேரத்தில், ஒரு ரெகீம் (Requiem – இரங்கல் இசை) அமைக்கும் வேலையில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்ததும் உண்மை. அவரால் முடிக்க முடியாமலே போன ஒரு அருமையான இசைக்கோர்ப்பு அது.

மோஸார்ட்டின் அருமையான பல இசைக்குறிப்புகள் இணையத்திலேயே கிடைக்கின்றன. அவற்றை உள்ளது உள்ளபடி கேட்டுப் பார்த்தீர்கள் என்றால், வாழ்க்கையின் மறக்க முடியாத பேரானந்தத்தை அனுபவிக்க இயலும் என்பதை, என் அனுபவத்தில் இருந்து என்னால் சொல்ல முடியும்.

இறந்து ஏராளமான வருடங்கள் ஆனாலும், இன்றும் உயிர்ப்புடன், கேட்பவர்களை வேறொரு உலகத்துக்கு அழைத்துச்செல்லக்கூடிய இசை மோஸார்ட்டினுடையது என்பதை, அவரது இசையைக் கேட்டதும் நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.

 

 

(தொடரும்)

http://www.dinamani.com/junction/idhayam-totta-isai/2017/jul/22/28-மோஸார்ட்---கரை-காணா-இசைச்-சாகரம்-2741674--2.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

30. இதயத்தைத் தொட்ட இசை கூட்டணி

 

 
621f040a6c4ffa46596360ba3c8b1d60

 

நதீம் ஷ்ரவண்: நதீம் அக்ஹ்தர் ஸைஃபி மற்றும் ஷ்ரவண் குமார் ரதோட் ஆகிய இருவரின் கூட்டணி.

ஹிந்தித் திரையுலகின் மாபெரும் இசையமைப்பாளர்களில் இவர்களை மறந்துவிடவே முடியாது. 1990 முதல் 1997 வரை அட்டகாசமான பல பாடல்களை அளித்திருக்கிறார்கள். பிரம்மாண்ட ஹிட் படங்கள் பலவற்றுக்கும் இசை அமைத்திருக்கிறார்கள். அந்தக் காலகட்டத்தில், இவர்களின் புகைப்படம் காஸெட்டில் இருந்தால் அந்தக் காஸெட் பல்லாயிரம் பிரதிகள் விற்பனை ஆகும் என்ற நிலையும் இருந்தது. குமார் சானு, உதித் நாராயண், அனுராதா பௌத்வால், அபிஜீத் , அல்கா யானிக் ஆகிய பாடகர்கள் இவர்களாலேயே பெரிதும் பிரபலம் அடைந்தார்கள். இவர்கள் இசையமைத்துப் பிரபலமடைந்த காலகட்டத்தில், வேறு எந்த இசையமைப்பாளருக்கும் இத்தனை ரசிகர்கள் சேர்ந்திருக்கவில்லை. அத்தனை பேரையும் அனாயாசமாக ஓரம் கட்டிவிட்டுப் புகழின் உச்சத்தில் பிரகாசித்தவர்கள் இவர்கள். ஆனால், எல்லாமே, ஒரு கொலைவழக்கில் நாசமாகப் போனது.

எண்பதுகளின் துவக்ககாலத்திலேயே ஹிந்திப் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்துவிட்ட கூட்டணி இது. 1982வில் இருந்து 1990 வரை இவர்கள் பிரபலம் அடையவில்லை. இந்தக் காலகட்டத்தில் பத்தொன்பது படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். அவை எதிலும் கிடைக்காத புகழ், இவர்களின் இருபதாவது படத்தில் இவர்களுக்குக் கிடைத்தது. அந்தப் படம் இந்தியாவெங்கும் வெற்றிகரமாக ஓடிய படமும் கூட. இசைக்காகவே பெரிதும் புகழடைந்த படம். ஆஷிகி (Aashiqui) நினைவிருக்கிறதா? இயக்குநர் மகேஷ் பட்டின் படம். அந்தப் படத்துக்காக ஃபிலிம்ஃபேர் விருதுகளும் நதீம் ஷ்ரவண் கூட்டணிக்குக் கிடைத்தது. இந்தப் படத்தில் இருந்து, இவர்களின் இறுதிப் படமான தோஸ்தி படம் வரை, மிக வெற்றிகரமான இசையமைப்பாளர்களாகவே திகழ்ந்தார்கள்.

 

ஆஷிகி படத்தில் மொத்தம் பனிரண்டு பாடல்கள். அத்தனை பாடல்களும் சூப்பர்ஹிட்கள். இவற்றின் பாடல்களை, ஒரு ஆல்பத்துக்காக நதீம் ஷ்ரவண் இசையமைத்து வைத்திருந்ததாகவும், அவற்றைத் தற்செயலாகக் கேட்ட மகேஷ் பட், அவற்றால் கவரப்பட்டு, பாடல்களை வைத்திருந்த குல்ஷன் குமாரிடம் கேட்டு வாங்கிப் பயன்படுத்தியதாகவும் ஆஷிகியின் இசை பற்றிய கதை உண்டு. ’சாசோங்கீ ஸரூரத் ஹை ஜைஸே’, ‘நஸர் கே சாம்னே’, ’தில் கா ஆலம்’, ’தீரே தீரே ஸே மெரி ஸிந்தகீ மே ஆனா’ ஆகிய பாடல்களை இன்றும் பல எஃப்.எம் சானல்களில் கேட்கலாம். தொலைக்காட்சிகள், ரேடியோ ஆகியவற்றில் இன்றுவரை தொடர்ந்து ஒலிக்கும் பாடல்கள் இவை. இக்காலகட்டத்தில் பள்ளி/கல்லூரிகளில் படித்தவர்களுக்கு ஆஷிகி நன்றாக நினைவிருக்கும். இசை மற்றும் பாடல்களுக்கான அத்தனை ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் 1991ல் ஆஷிகியே கைப்பற்றியது. ராஹுல் ராய் மற்றும் அனு அகர்வால் ஆகியோர் இந்த ஒரே படத்தில் இந்தியா முழுக்கப் பிரபலமானார்கள்.

ஆஷிகி படத்துக்கு அடுத்து நதீம் ஷ்ரவணின் வெற்றிப்படங்கள் பற்றி எழுத ஒரு கட்டுரை போதாது. எனவே, சுருக்கமாக, அவர்களின் படங்கள் பற்றியும் இசை பற்றியும் கவனிக்கலாம்.

 

ஆஷிகி வெற்றிக்குப் பின் நதீம் ஷ்ரவணுக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அவற்றில் மிகப் பிரபலமான அடுத்த படம் – தில் ஹை கி மான்தா நஹீன் (1991). ஆஷிகி படத்தின் வெற்றிக்கூட்டணியான தயாரிப்பாளர் குல்ஷன் குமார், இயக்குநர் மகேஷ் பட் ஆகியோர் மறுபடியும் இணைந்த படம். பிரபல ஹிந்தித் திரைப்படமான ‘It Happened One Night’ (1934) படத்தின் தழுவலான ‘சோரி சோரி’ (1956) படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. மகேஷ் பட்டின் மகளான பூஜா பட்தான் ஹீரோயின். ஆமீர் கான் ஹீரோ. இதுவும் ஒரு வெற்றிப்படமே. இப்படத்தின் பாடல்களுமே ஆஷிகியைப் போலவே சூப்பர்ஹிட் ஆயின. ‘தில் ஹை கி மான்தா நஹீன்’ என்ற இதன் பாடலை உங்களால் மறக்கவே முடியாது. ஆஷிகியில் பனிரண்டு பாடல்கள் என்றால், இதிலோ பதினான்கு பாடல்கள்! படத்தில் பெண் குரலாக அத்தனை பாடல்களையும் அனுராதா பௌத்வால் பாட, குமார் சானுவும் அபிஜீத்தும் ஆண் குரல் ஆனார்கள்.

 

அதே வருடத்தில் வெளியான ‘சாஜன்’ படத்தின் பாடல்களும் இந்தியாவெஙும் பிரபலம் அடைந்தன. சல்மான் கான், மாதுரி தீட்சித், சஞ்சய் தத் ஆகியவர்கள் நடித்த படம். பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்த படம். ’தும் ஸே மில்னே கி தமன்னா ஹை’, ’மேரா தில் பீ கித்னா பாகல் ஹை’, ’தேகா ஹை பெஹ்லீ பார்’, ’பஹுத் ப்யார் கர்தே ஹை’, ‘ஜியே தோ ஜியே கைஸே’, ‘தூ ஷாயர் ஹை.. மை தேரி ஷாயரி’ ஆகிய பாடல்களை மறக்கவே முடியாது. தமிழ்நாட்டில் ஹிந்திப் பாடல்கள் பரவிய தொண்ணூறுகளின் ஆரம்பகட்டத்தில், அதற்கு இப்படத்தின் பாடல்களும் ஒரு முக்கியமான காரணம். சாஜன் பாடல்களின் இன்னொரு விசேடம், எஸ்.பி. பாலசுப்ரமணியம் அதில் சில பாடல்களைப் பாடியதே. அக்காலகட்டத்தில், சல்மான் கானுக்கு எஸ்.பி.பியின் குரல்தான் பல படங்களில் இடம்பெற்றுக்கொண்டிருந்தது. அந்த வருடத்தின் ஃபிலிம்ஃபேர் விருதுகளில் இசை, சாஜனுக்கே கிடைத்தது.

 

 

இந்தக் காலகட்டத்திலேயே, சாத்தி, பூல் ஔர் காண்டே, சடக் (தமிழில் பிரசாந்த் நடிக்க அப்பு என்ற படம் வந்ததே.. அதன் ஒரிஜினல் படம்), தில் கா க்யா கஸூர், ஜான் தேரே நாம் (இதன் பாடல்களை அக்காலத்தில் தூர்தர்ஷனில் தொடர்ந்து ஒளிபரப்பிக்கொண்டே இருந்தனர்), தீவானா போன்ற படங்களை இசையமைத்து, ஹிந்தியின் நம்பர் ஒன் இசையமைப்பாளர்களாக விளங்கினர் இந்த ஜோடி. இவற்றில், தீவானா, மறுபடியும் சிறந்த இசையமைப்பாளர்களுக்கான ஃபிலிம்ஃபேர் விருதை இவர்களுக்குப் பெற்றுத் தந்தது. தீவானாதான் ஷா ருக் கானின் முதல் படமும் கூட.

 

தீம் ஷ்ரவணின் அடுத்த மிகப்பெரிய ஹிட், ஹம் ஹைன் ராஹி ப்யார் கே படம். 1993யில் வெளியானது. ஆமீர் கானும் ஜூஹி சாவ்லாவும் நடித்த படம். ஜூஹி சாவ்லாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும், சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் வாங்கிய படம். இயக்கியவர் அதே மகேஷ் பட்.

அடுத்து, ஏராளமான படங்கள். அவற்றில் தில்வாலே போன்ற சூப்பர்ஹிட்களும் அடக்கம். பர்ஸாத், ராஜா, ஜங், ஜீத் ஆகிய தொடர்ச்சியான ஹிட்கள். பின்னர் 1996ல் நதீம் ஷ்ரவணின் அடுத்த பிரம்மாண்ட ஹிட் வெளியானது. ராஜா ஹிந்துஸ்தானி. நதீம் ஷ்ரவணின் இசையின் விசேடம் என்ன தெரியுமா? வேறெந்த இசையமைப்பாளர்களின் பாடல்களையும் இன்றும் தொடர்ச்சியாக மக்கள் கேட்பதில்லை. வட இந்தியாவுக்கு நீங்கள் சென்றால் தெரியும். பல இடங்களில் நதீம் ஷ்ரவணின் இசைதான் பெரும்பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வீர்கள். அதுதான் ராஜா ஹிந்துஸ்தானிக்கும் நடந்தது. இன்றும் கேட்கப்படும் பாடல்கள் இதன் சிறப்பம்சம். அந்த வருடத்துக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளும் இவர்களுக்கே கிடைத்தது. இதன் பர்தேசி பர்தேசி பாடலைப் பற்றி, அப்பாடலில் கண்களில் ஒளிரும் தீ பற்றி, ஆனந்த விகடனில் அப்போது கட்டுரை ஒன்றும் வெளிவந்திருந்தது.

 

இதற்கு அடுத்து, நதீம் ஷ்ரவணின் மிகப்பெரிய ஹிட்டாக, 1997ன் ‘பர்தேஸ்’ படத்தையே சொல்லவேண்டும். சுபாஷ் கை எடுத்த படம். ஷா ருக் கான், மஹிமா சௌத்ரி ஆகியவர்கள் நடித்த படம். படத்தின் பாதிக்கதை யுனைடட் ஸ்டேட்ஸில் நடக்கும். இந்தப் படத்தின் இசையின் சிறப்பம்சம் என்ன தெரியுமா? அதுவரை ஹிந்துஸ்தானி இசை மற்றும் கஸல்களின் சாயலிலேயே இசையமைத்துக்கொண்டிருந்த நதீம் ஷ்ரவண், முதன்முறையாகப் பல்வேறு இசைவகைகளில் கவனம் செலுத்தியதுதான். இதில் ஆங்கிலப் பாடலும் ஒன்று உண்டு. பர்தேஸின் இசை மிகப்பெரிய ஹிட் ஆனது. அதில் இடம்பெற்ற ‘மேரி மெஹ்பூபா’, ‘திவானா தில்’, ‘தோ தில் மில்ரஹே ஹைன்’, ‘ஐ லவ் இண்டியா’ ஆகிய பாடல்கள் மறக்கவே முடியாதவை.

 

இந்த வருடத்தில்தான் இவர்களின் இசைவாழ்வில் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்தது. டி சீரீஸ் நிறுவனர் குல்ஷன் குமார் கொல்லப்பட்டார். அந்தக் கொலையில் நதீமுக்குத் தொடர்பிருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட, நதீம் லண்டன் தப்பிச்சென்றார். அதன்பின் பல வருடங்கள் அவர் இந்தியா வரவே இல்லை. அங்கிருந்துகொண்டே இசைக்குறிப்புகளை அவர் அனுப்ப, இந்தியாவில் இருந்த ஷ்ரவண் அக்குறிப்புகளை வைத்து இசைமைத்தார். அப்படி வெளியாகி, மறுபடியும் அத்தனை பாடல்களும் பெரிதாகப் பேசப்பட்ட படம் – தட்கன். மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது. ’தும் தில் கி தட்கன் மேய்ன்’, தில் நே யே கஹா ஹை தில்ஸே’, ’நா நா கர்தே ப்யார்’, ‘அக்ஸர் இஸ் துனியா மேய்ன்’, ‘தூல்ஹே கா செஹ்ரா சுஹானா லக்தா ஹை’ ஆகிய பாடல்களுக்காகவே இப்படம் பிரமாதமாக ஓடியது.

 

இப்படத்துக்குப் பின்னர் கஸூர், ஏக் தா ரிஷ்டா, ஹம் ஹோகயே ஆப்கே, ஹா மைனே பி ப்யார் கியா, ராஸ் தும் ஸே அச்சா கௌன் ஹை, தில் கா ரிஷ்டா, அந்தாஸ், கயாமத், தும்ஸா நஹி தேகா ஆகிய படங்கள் வெளிவந்தன. அவற்றில் பல பாடல்களும் ஹிட்கள் ஆயின. இருந்தாலும், இந்தப் புதிய காலகட்டத்தில் இந்தக் கூட்டணியின் (ஓரளவு பழகிவிட்ட) இசை எடுபடாமலேயே போய்விட்டது. இதன்பின் இந்தக் கூட்டணி பிரிந்தும் விட்டது.

 
 

இவர்களின் விசேடம், ஹிந்துஸ்தானி இசையோடு, கஸல்களின் மெட்டுகளில் ஆங்காங்கே சூஃபி சாயலில் இடம்பெற்ற மெட்டுக்களே. அதில் தப்லா, டோலக், ஷெனாய் ஆகிய கருவிகளின் அருமையான ஜுகல்பந்தியே. ஆனால் இவர்களின் இசை, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு மட்டுமே உரியது. தொண்ணூறுகளுக்கானது. ஏனெனில், இவர்கள் உச்சத்தில் இருக்கும்போதுதான் ரஹ்மான் ஹிந்தியில் நுழைகிறார். அவரது இசை, இவர்களின் இசையை அனாயாசமாகப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. போலவே, ஜதின் லலித் கூட்டணியின் இசையுமே இவர்களின் இசையைவிடவும் பிரபலம் அடையத் துவங்கி, குல்ஷன் குமாரின் கொலையோடு இவர்களின் சகாப்தம் பெரிதும் முடிவடைந்துவிட்டது.

இருப்பினும், ஹிந்தி இசையின் மிக முக்கியமான இசையமைப்பாளர்களில் இவர்களும் அடங்குவார்கள். தொண்ணூறுகளின் ரொமாண்டிக் ஹிந்திப் படங்கள் மக்களின் மனதில் இருக்கும்வரை நதீம் ஷ்ரவணின் இசையும் அவற்றுடன் கலந்தே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

 

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

31. இயக்குநர்களால் விரும்பித் தேடப்படும் இசையமைப்பாளர் - இமான் 

 

 

தமிழ்த் திரையுலகின் மிகவும் சீனியர் இசையமைப்பாளர்களில், தற்போது வேலை செய்துகொண்டிருப்பவர்களில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று யோசித்தால், இளையராஜாவே மிகவும் சீனியர். அடுத்ததாக, ரஹ்மான். பின்னர் யுவன் ஷங்கர் ராஜா. அடுத்து ஹேரிஸ் ஜெயராஜ் என்று வந்து, பின்னர் பிற இசையமைப்பாளர்களின் பெயரெல்லாம் பட்டியல் இடப்படும். ஆனால், இந்தப் பட்டியலில் ஒரே ஒரு பெயர் மட்டும் சில சமயங்களில் விடுபட்டாலும் பட்டுவிடும். நமக்கும் அது தெரியாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு. டி. இமான். 2002-இல் தமிழ்த்திரைப்படங்களில் அறிமுகமான நபர். கடந்த பதினைந்து வருடங்களாக இசையமைத்து வருகிறார். அண்மைக்காலங்களில் இயக்குநர்களால் மிகவும் தேடப்படும் இசையமைப்பாளராகவும் இருக்கிறார்.

திரைப்படங்களுக்குள் வருமுன்னரே தொலைக்காட்சித் தொடர்களில் வேலை செய்திருக்கிறார் இமான். கிருஷ்ணதாசி நினைவிருக்கிறதா? சன்டிவியில் 2000ல் மிகப் பிரபலமாக விளங்கிய தொடர். இதன் டைட்டில் பாடல் இன்றும் பலருக்கும் நினைவிருக்க வாய்ப்பு உண்டு. ‘சிகரம் பர்த்தாய்.. சிறகுகள் எங்கே..’ என்ற பாடலை, நித்யஸ்ரீயுடன் சேர்ந்து இமானே பாடியிருப்பார். இது மட்டும் அல்லாமல், இன்னும் பல சீரியல்களிலும் டைட்டில் பாடல் & பின்னணி இசையில் வேலை செய்திருக்கிறார் (மந்திர வாசல் ஒரு உதாரணம். கோலங்கள் இன்னொரு உதாரணம். மொத்தம் 70க்கும் மேற்பட்ட சீரியல்கள் மற்றும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட எபிஸொட்கள் என்று இமானே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். இது எல்லாமே 17-18 வயதில்!).

கிருஷ்ணதாசி போன்ற தொடர்களில் இமானின் திறமையைக் கண்டுதான் குட்டி பத்மினி எடுத்த ‘காதலே சுவாசம்’ (2002) திரைப்படத்தில் இசையமைப்பாளராக இமான் முதன்முறையாக அறிமுகமானார். அது அவரது பத்தொன்பதாம் வயது. ஆனால் அந்தத் திரைப்படம் வெளியாகவே இல்லை. இதைத் தொடர்ந்து, விஜய் நடித்த ‘தமிழன்’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். தமிழனின் பாடல்கள் நன்றாகவே பிரபலம் ஆயின. அதில்தான் பிரியங்கா சோப்ரா முதன்முதலில் அறிமுகம் ஆனார். அதில் அவரும் விஜய்யும் பாடிய பாடல் ஒன்றும் மிகவும் பிரபலம் (உள்ளத்தைக் கிள்ளாதே கிள்ளிவிட்டுச் செல்லாதே). அப்படத்தில் இடம்பெற்ற ‘மாட்டு மாட்டு நீ மாட்டேன்னா சொல்லப்போற’பாடல் அக்காலத்தில் எல்லாப்பக்கமும் பிரபலம் அடைந்தது. ‘ஹாட்டு பார்ட்டி’பாடலும்.

 

 

தமிழன் படத்துக்குப் பின்னர், அடுத்த வருடம் ‘விசில்’ வெளிவருகிறது. அதில் ‘அழகிய அசுரா’ பாடல் பிரபலம் அடைகிறது. பின்னர் அதற்கடுத்த வருடத்தில் ‘கிரி’ வெளியாகிறது.கிரியிலும் ஒரு சில பாடல்கள் பிரபலம் அடைகின்றன. அதன்பின்னர் குறிப்பிடத்தகுந்த படம் என்றால் அது மூன்று வருடங்கள் கழித்து2006ல் வெளியான ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படம்தான். அதன்பின்னர் ‘ரெண்டு’வெளியானது. பின்னர் ‘நான் அவனில்லை’, ‘மருதமலை’ என்று ஹிட்கள் வந்தாலும், இவற்றுக்கும் மூன்று வருடங்கள் கழித்து 2010ல் வெளியான ‘மைனா’ படம்தான் இமானுக்குத் திருப்புமுனை. அந்தப் படத்தின் அத்தனை பாடல்களும் பெரிதாகப் பேசப்பட்டன. அதன்பின்னர் வெளியான ‘மனம்கொத்திப் பறவை’, இமானை ஒரு முன்னணி இசையமைப்பாளராக முன்னிறுத்தியது. பிறகு, மறுபடியும் பிரபு சாலமன்& இமான் கூட்டணி, ‘கும்கி’ திரைப்படத்தை வெளியிட, கும்கியின் பாடல்களும் மிகுந்த பிரபலம் அடைகின்றன. உடனடியாக அடுத்த வருடமே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ வெளியாகி, இமானைப் புகழுச்சியில் நிறுத்துகிறது. பின்னர் மறுபடியும் விஜய் படமாக, ‘ஜில்லா’. இதன்பின் இன்றுவரை ஏராளமான படங்கள். இன்றைய தேதியில், தமிழ்நாடெங்கும் பிரபலமடையக்கூடிய ஜனரஞ்சகமான ட்யூன்கள் வேண்டும் என்றால் கூப்பிடு இமானை என்றுதான் இயக்குநர்கள் எண்ணுகின்றனர். அதேபோல் இமானின் கைபட்ட படங்களின் பாடல்கள் எல்லாப்பக்கங்களிலும் பிரபலம் அடையவே செய்கின்றன.

 

 

இமானின்கதை எப்படிப்பட்டது? சிறிய வயதிலேயே இசை கற்றுக்கொண்ட கதைதான். என்றாலும், பிற இசையமைப்பாளர்களிடம் இருந்து எங்கே மாறுபடுகிறார் என்றால், அவர்கள் பிற இசையமைப்பாளர்களிடம் வேலை செய்துவிட்டு நேரடியாகத் திரைப்படங்களில் வேலை செய்ய, இமானோ தொலைக்காட்சி சீரியல்கள் பக்கம் சென்றுவிட்டார்.பதினைந்து வயதில் மகேஷ் மற்றும் ஆதித்யனிடம் கீபோர்ட் ப்ரோக்ராமராக வேலை செய்துகொண்டிருந்தார் இமான். இந்தச் சமயத்தில்தான் தொலைக்காட்சி வாய்ப்புகள். பின்னர் திரைப்படம். ஒரு காலகட்டத்தில், கிட்டத்தட்ட ஒன்பது படங்களுக்கு, வரிசையாக ஒன்றிரண்டு பாடல்களை இசையமைத்துக்கொடுத்ததும் படப்பிடிப்பு நின்றுவிடும். இப்படியே தொடர்ந்துகொண்டிருக்க, பேசாமல் ஏதாவது இசையமைப்பாளரிடம் கீபோர்ட் ப்ரோக்ராமராகச் சென்று சேர்ந்துவிடலாமா என்றெல்லாம் யோசித்திருப்பதாக இமான் சொல்லியிருக்கிறார்.

இதன்பின்னர்தான் கிரி நிகழ்ந்தது. ‘ஏய் கைய வெச்சிகிட்டு சும்மா இருடா’ ஹிட் ஆனது. ஓரளவாவது தன் இசை பரவாயில்லை என்று இமானே தன்னைப்பற்றி நினைக்கத் துவங்கியது அதன்பின்னர்தான். இதன்பின்னர் அர்ஜுனோடும் சி.சுந்தரோடும் இமான் வேலை செய்த படங்களின் பாடல்கள் ஹிட் ஆயின. இமான் ஓரளவு நிமிர்ந்து அமர்கிறார்.

பின்னர்தான் மைனா நிகழ்கிறது.

பிரபு சாலமனிடம் இமானுக்குப் பிடித்தது அவரது இறைச்சிந்தனை என்று சொல்கிறார் இமான். ‘நாங்கள் இருவரும் உடனடியாக ஒன்றுசேர்ந்தது இந்த விஷயத்தால்தான்’ என்பது அவரது கருத்து. கூடவே, மைனாவின் பாடல்கள் எப்படி ஹிட் ஆயின? பிற இயக்குநர்கள், ஒரு பாடலின் சிச்சுவேஷன் மட்டுமே சொல்லிவிட்டு, பின்னர் பாடல் ஹிட் ஆகவேண்டும். அப்படிப் போட்டுக்கொடுங்கள் என்று சொல்வது வழக்கம். ஆனால் பிரபு சாலமனோ, பாடல் நிகழும் இடம், அங்கே இருக்கும் சூழல், யாரெல்லாம் பாடலில் வரப்போகிறார்கள் என்பதில் இருந்து, பாடலில் நிகழும் சம்பவங்கள், உணர்வுகள் வரை மிகத்தெளிவாக எல்லாவற்றையும் சொல்வது வழக்கம் என்கிறார் இமான். இது சமயத்தில் அதிகபட்சமான தகவலாக இருந்தாலும், பாடல்களைக் கவனித்து இசையமைக்க அது உதவியது என்பது அவர் கருத்து. இதனால்தான் மைனா இன்றும் அதன் பாடல்களுக்காகப் பேசப்படுகிறது.

 

 

 

மைனாவுக்குப் பிறகு இமானின் வாழ்க்கை மாறியது. அதிலிருந்து இன்றுவரை இமான் இசையமைத்த பாடல்களின் வீச்சுக்குத் தொலைக்காட்சியும் எஃப்.எம்மையும் கவனித்தாலே போதும். ஒவ்வொரு நாளும் அதிக அளவில் இமானின் பாடல்களே போடப்படுகின்றன என்பது என் கருத்து.

இமானின் இசை எப்படிப்பட்டது?

துவக்ககாலத்தில் இமான் இசையமைத்த தமிழன், விசில், கிரி, ரெண்டு போன்ற படங்களின் பாடல்களைக் கேட்டாலேயே, அவரது இப்போதைய மெலடிக்களின் சாயல் தெரியும். உதாரணமாக, ‘அழகிய அசுரா’ பாடலுக்கும் ‘செந்தூரா’ பாடலுக்கும் ஒருசில தொடர்புகள் உள்ளன. ‘மொபைலா மொபைலா’ பாடலுக்கும் ‘ஒம்மேல ஒரு கண்ணு’, ‘பார்க்காத என்னைப் பார்க்காத’பாடல்களுக்கும் கட்டாயம் சம்மந்தம் உண்டு. அப்போது போட்டுக்கொண்டிருந்த இசையின் மிகவும் refined வடிவம்தான் இப்போதைய இமானின் இசை என்று நினைக்கிறேன். அதேபோல், குத்துப் பாடல்கள் என்ற வகையிலுமே, ‘மாட்டு மாட்டுன்னு நீ’ பாடலையும், இப்போதைய ‘டண்டணக்கா’, ‘என்னம்மா இப்பிடிப் பண்றீங்களேம்மா’ பாடலையும் கேட்டுப்பாருங்கள். தனது பூர்வஜென்மத்தில் இசைக்கருவிகளின் அடர்த்தி இமானின் இசையில் சற்றே குறைவு. இப்போது அழகாக, பல்வேறு கருவிகளை உபயோகப்படுத்தி, அருமையான ஒரு medley இசையை இமானால் கொடுக்கமுடிகிறது.

 

 

கூடவே, மெலடியும் இல்லாமல் குத்தும் இல்லாமல், இடைப்பட்ட இடத்தில் நிகழும் பாடல்கள் இமானின் தனித்துவம். ‘ஊதாக் கலரு ரிப்பன்’, ‘குக்குரு குக்குரு’, ‘ஆவி பறக்கும் டீக்கட’, ‘அடியே இவளே’ போன்ற பாடல்களையே சொல்கிறேன். இத்தோடு சேர்ந்து, முழுக்க முழுக்கக் குத்துப் பாடல்களையும் சரமாரியாக அளிக்கிறார் இமான். அவையும் ஹிட்கள் ஆகின்றன.

இப்போதைய தமிழ் இசையமைப்பாளர்களில், தமிழ் மக்களின் விருப்பத்துக்கேற்ற பாடல்களை மிகவும் அட்டகாசமாக அளிப்பவர்களில் இமானுக்கே முதலிடம் என்று தோன்றுகிறது. அவரது இசை அலுப்பதில்லை. நமது மனதுக்குத் தேவையான அற்புதமான உணர்வுகளைக் கிளப்புவதில் அவர் எப்போதும் முதலிடம் வகிக்கிறார் என்றேதோன்றுகிறது. எத்தனை பாடல்கள் இமானால் இறவாப்புகழ் அடைந்திருக்கின்றன என்று யோசித்துப் பாருங்கள்?‘மைனா மைனா’, ‘கையப்புடி’, ‘அய்யய்யோ ஆனந்தமே’, ‘சொல்லிட்டாளே’, ‘அம்மாடி அம்மாடி’, ‘பார்க்காத என்னைப் பார்க்காத’, ‘ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய்’, ‘எம்புட்டு இருக்குது ஆசை’, ‘கண்ணக் காட்டு போதும்’, ‘கண்ணம்மா கண்ணம்மா அழகுப் பூஞ்சிலை’, ‘அலுங்குறேன் குலுங்குறேன்’முதலிய பல பாடல்கள் உண்டு. அண்மைக்காலத்தில் எத்தனை இசையமைப்பாளர்களுக்கு இப்படிப்பட்ட ஹிட்கள் அமைந்திருக்கின்றன? இவையெல்லாம் மெலடிக்கள். குத்துகள் என்று கணக்கெடுத்தால் இன்னும் பல பாடல்களை எழுதலாம்.

 

 

மொத்தத்தில், இமானின் வாழ்க்கையில் அட்டகாசமான வசந்தகாலம் இன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அவருடன் சேர்ந்து நாமும் அதனை அனுபவித்து மகிழ்வோம்.

(தொடரும்)    

http://www.dinamani.com/junction/idhayam-totta-isai/2017/aug/19/31-இயக்குநர்களால்-விரும்பித்-தேடப்படும்-இசையமைப்பாளர்---இமான்-2757629--2.html

Link to comment
Share on other sites

32. குல்ஸார் - உணர்வுகளில் சஞ்சரிக்கும் பயணி

 

 

ஹிந்தித் திரையுலகில் மட்டுமல்லாமல், இந்தியத் திரையுலகிலேயே, மிகச்சிறந்த பாடலாசிரியர்களில் ஒருவர் குல்ஸார். பாடலாசிரியராக மட்டும் இல்லாமல், ஒரு கைதேர்ந்த இயக்குநராகவும் இருந்திருக்கிறார். பல்வேறு வித்தியாசமான களங்களில் பல படங்கள் எடுத்திருக்கிறார். வழக்கமான மசாலாக்களாக இல்லாமல், பார்வையாளனின் மனதில் மாற்றங்களைப் புரியக்கூடிய படங்கள் இவருடையது. குல்ஸாரின் விசேடம் என்னவென்றால், மனித மனத்தில் எழும் வெவ்வேறு உணர்வுகளின் அடியாழம் வரை பயணிக்கக்கூடிய திறமைதான். இதே திறமையால்தான் அவரது பாடல் வரிகள் எப்போது படித்தாலும் பல்வேறு சிந்தனைகளை நமக்குத் தரவல்லவையாக இருக்கின்றன. அப்படிப்பட்ட குல்ஸார் எழுதியிருக்கும் சில பாடல்களை இந்த வாரம் பார்க்கலாம். இவரது சூஃபி பாடல் வரிகளை இதே தொடரின் துவக்கத்தில் ரஹ்மானின் சூஃபி இசையைப் பற்றிய கட்டுரைகளில் கண்டிருக்கிறோம்.

சம்பூரண் சிங் கால்ரா என்பதே குல்ஸாரின் இயற்பெயர். பாகிஸ்தானின் ஜீலத்தில் 1934 ஆகஸ்ட் 18ல் பிறந்தவர். ‘பந்தினி’ (1963) படத்தில் பாடல்கள் எழுதத் துவங்கியவர். இதன்பின்னர் பல படங்களில் பாடல் எழுதி, பின்னர் திரைக்கதை வசனமும் எழுதி, அதன்பின்னர் படங்கள் இயக்கத் துவங்கி, பெரும் புகழ் அடைந்து, இப்போது மறுபடியும் பாடல்களின் பக்கம் வந்துவிட்டவர். குல்ஸாரின் உவமைகளுக்கு ஈடு இணையே இல்லை. இதுதான் அவரது மிகப்பெரிய பலம். ‘தில் ஸே’ படத்தில், சைய்ய சய்யா பாடலில், உர்தூ மொழியின் மிருதுவான தன்மைக்குக் காதலியின் வார்த்தைகளை ஒப்பிட்டிருப்பார். அந்தப் படத்தின் அத்தனை பாடல்களிலும் உவமைகளில் புகுந்து விளையாடியிருப்பார். ‘எவரின் தலை காதலில் நனைந்துள்ளதோ, அவரது பாதம் சொர்க்கத்தில் நிலைபெற்றிருக்கிறது’ என்று அதே பாடலில் அவர் எழுதிய வரிகள் மறக்கமுடியாதவை.

முதல் பாடலாக, ‘ஆந்தி’ (1975) என்ற படத்தின், ‘தேரே பினா ஸிந்தகி ஸே கோயி ஷிக்வா நஹி’ என்ற பாடலை எடுத்துக் கொள்வோம். இப்படத்தில், பிரிந்த இருவர், ஒன்பது வருடங்களுக்குப் பின் மறுபடியும் சந்தித்துக் கொள்வார்கள். ஆனால் என்ன பிரச்னை என்றால், அந்தப் பெண் இப்போது இந்திரா காந்தி போல நாடெங்கும் பெரும்புகழ் வாய்ந்த அரசியல்வாதி. ஒருநாள் எதேச்சையாக, ஒரு ஹோட்டலில் தங்க, அந்த ஹோட்டலை வைத்திருப்பவன் தன்னுடன் பல வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவன் என்று புரிந்துகொள்வாள். இருவரும் மறுபடியும் இழந்த காதலையும் வாழ்க்கையையும் எண்ணிப் பார்ப்பார்கள். இப்படம் குல்ஸாரே எழுதி இயக்கிய படம். நாடெங்கும் பெரும்புகழ் அடைந்தது. இதில், தேரே பினா பாடலில், இருவரும் உருகுவதை உணர்வுபூர்வமாக எழுதியிருப்பார்.

‘நீயில்லாமல் என் வாழ்க்கையில் எனக்குப் பிரச்னைகளே இல்லை...

ஆனால், நீ இல்லாத வாழ்க்கைஎன்பது வாழ்க்கையே இல்லை..

என்று துவங்கும் பாடலில்,

‘உன்னுடைய காலடித் தடங்களில் நமது பயணத்தை நாம் ஏன் மேற்கொள்ளக்கூடாது?

தொலைதூரத்தில் உள்ள ஏதோ ஒரு இடத்துக்குச் சென்றுவிடலாம்.

நீ என்னுடன் நடக்கையில் அப்படிப்படிப்பட்ட இடங்களுக்குப் பஞ்சமே இல்லை தெரியுமா?

உன்னுடனே இருந்துகொண்டு, உனது மடியில் என் கண்ணீர்த்துளிகளைச் சிந்த விரும்புகிறேன்..

உனது கண்களின் ஈரத்தில் அதே துளிகளைக் கண்டுகொள்கிறேன்..

நீ சொன்னால் இன்று இரவு நிலா அஸ்தமிக்காது. இந்த இரவு அப்படியே நின்றுவிடும்..

சொல். இந்த இரவை நீடித்து நிறுத்து..

இந்த இரவைப் பற்றிய விஷயங்கள் இவை.. இனி வாழ்க்கையில் வேறு எதுவும் பாக்கி இல்லை..

என்று பாடல் விரிந்து முடியும். பாடலைப் பார்த்தால், இவ்வரிகளின் உணர்ச்சிகள் உங்கள் மனதிலும் எழும்.இசையமைத்தவர் ஆர்.டி. பர்மன்.

 

 

ஒரு குழந்தை, திடீரென்று ஒருவனின் வாழ்க்கையில் நுழைகிறது. அவனுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் பிறந்த குழந்தை அது. தாய் இறந்ததால், வேறு வழியின்றி, இவனிடம் வந்து சேர்கிறது. மனைவியுடன் நிம்மதியாக வாழும் இவன் இதை எதிர்பார்க்கவில்லை. முதலில் குழந்தையை வெறுக்கிறான். பின்னர் அக்குழந்தையுடன் பழகத் துவங்குகிறான்.அப்படிப் பழகும்போது வரும் பாடல் இது. ‘மாசூம்’(1983) என்ற படத்தில் வரும் பாடல் இது. இயக்கியவர் ஷேகர் கபூர். இது அவரது முதல் படம். நஸ்ருதீன் ஷாவும் ஷபனா ஆஸ்மியும் பிரம்மாதமாக நடித்திருப்பார்கள். இப்படத்தின் திரைக்கதையும் பாடல்களும் குல்ஸாரே எழுதியவை. ‘துஜ் ஸே நாராஸ் நஹி ஹை ஸிந்தகி’ என்ற பாடல்.

‘வாழ்க்கையே.. உன்மீது எனக்குக் கோபம் இல்லை..

உனது அப்பாவித்தனமான கேள்விகள் என்னைக் குழம்ப மட்டுமே செய்கின்றன..

வாழ்க்கையை வாழ, வலிகளைப் பற்றிக்கொண்டே ஆகவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை..

ஒவ்வொரு புன்னகைக்கும், ஒவ்வொரு விலையை வாழ்க்கை நிர்ணயிக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை..

இப்போதெல்லாம் நான் சிரிக்க நினைக்கையில், தீராக் கடனில் எனது உதடுகள் அழுந்தியே இருக்கின்றன என்று உணர்கிறேன்..

வாழ்க்கையே.. நீ என்னை நோக்கி வீசும் ஒவ்வொரு துன்பத்திலும், உறவுகளைப் பற்றிப் புதிதாக அறிகிறேன்..

சுட்டெரிக்கும் வெய்யிலில்தான் வாழ்க்கையில் தேவைப்படும் நிழல்களைப் பற்றி அறிந்துகொண்டேன்..

இன்று என் கண்கள் கண்ணீரால் வீங்கியிருக்கின்றன..விரைவில் அவை வெடிக்கவும் செய்யலாம்..

ஆனால், நாளை, பழுதடைந்த என் கண்கள், புதிய காட்சிகளைக் காண ஏங்கக்கூடும் என்றே நினைக்கிறேன்..

என் கண்களில் இருந்து ஒரு கண்ணீர்த்துளியை மட்டும் பத்திரமாக எங்கோ வைத்திருந்தேன்..

அந்தத் துளி எங்கே?

 

 

 
  •  

 

‘இஜாஸத்’ என்று ஒரு படத்தை குல்ஸார் 1987ல் எழுதி இயக்கினார். ஒருவன், ஒரு பெண்ணை மணந்துகொள்கிறான். ஆனால் அதற்கு முன்னர் இன்னொரு பெண்ணை அவன் விரும்புகிறான். இதனாலேயே திருமணத்தையும் தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கிறான். இம்முறை திருமணம் நடந்து விடுகிறது. மனைவியை நேசிக்கத் துவங்குகிறான். ஆனால் காதலி திரும்ப வருகிறாள். இருவரும் சேர்ந்து வாழ்ந்த நினைவுகள் அவனைத் தாக்குகின்றன. காதலி தற்கொலைக்கு முயல்கிறாள். எப்படியாவது அவளைச் சமாதானப்படுத்தி, பேசி, அவளை மாற்றலாம் என்று மனைவியிடம் சொல்கிறான் காதலன். ஆனால் மனைவியோ முற்றிலும் இதை மறுக்கிறாள். காதலியினால் தன்னை இவன் ஏமாற்றுவதாக அழுகிறாள். சீறுகிறாள். ஆனாலும் காதலி எந்நேரமும் தற்கொலை செய்துகொண்டு இறக்கும் அபாயம் இருப்பதால் அவன் அவளைச் சந்திக்கக் கிளம்புகிறான். ஆனால் அங்கே அவள் இல்லை. திரும்ப வெறும் கையுடன் வருகிறான். ஆனால் வீட்டில் மனைவியும் இல்லை. திருமணத்தை முறித்துக்கொண்டு அவள் சென்றுவிடுகிறாள்.

அவன் என்ன செய்வான்? கடும் அதிர்ச்சியில் மாரடைப்பு வருகிறது. பழைய காதலி திரும்ப வருகிறாள். கவனித்துக்கொள்கிறாள். ஆனால் இவனுக்கு மனைவியின் நினைவுகள் எழுகின்றன. மனைவியைத்தான் இப்போது அவன் அதிகமாகக் காதலிப்பதை அவள் அறிகிறாள். அவனை விட்டுச் சென்றுவிடுகிறாள். ஆனால் அப்படிச் செல்லும் வழியில் இறந்துபோகிறாள்.

சில வருடங்கள் கழித்து, ஒரு ரயில் நிலையத்தில் பிரிந்த மனைவியைச் சந்திக்கிறான் அவன். சந்திக்கையில் பல சம்பவங்கள் நேர்கின்றன.

இதுதான் இஜாஸத். 'இஜாஸத்' என்ற வார்த்தைக்கு, அனுமதி என்று பொருள். அவனை விட்டுவிட்டுச் சென்றதற்கு மனைவி அவனிடம் அனுமதி இதுவரை கேட்கவில்லை. ஆனால் இறுதியில் அவனிடம் அந்த அனுமதியை வேண்டுகிறாள். இதுதான் கதை.

இப்படத்தில், ‘மேரா குச் சாமான்.. துமாரி பாஸ் படா ஹை’ என்று ஒரு பாடல். பாடலைப் பாடிய ஆஷா போஸ்லேவுக்குத் தேசிய விருதைப் பெற்றுத்தந்த பாடல். சிறந்த பாடலாசிரியருக்கான விருதை குல்ஸாருக்குக் கொடுத்த பாடல் இது.

‘எனது சில பொருட்கள் உனது வசம் இருக்கின்றன..

அந்த மழைக்காலத்தில் நனைந்து ஈரமான சில நாட்களும் உன்வசமே..

எனது கடிதத்தால் அரவணைக்கப்பட்ட அந்த இரவும் உன்னுடன் தான் இருக்கிறது..

அந்த இரவை மறையவை. என் பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிடு.

இலையுதிர்காலத்தில் உதிரும் இலைகளின் கிசுகிசுப்பு நினைவிருக்கிறதா?

அந்தக் கிசுகிசுப்புகளை மறுபடியும் நான் என்னுடனே கொண்டுவந்துவிட்டேன்..

ஆனால், இலைகள் உதிர்ந்த மரத்தின் அந்தக் கிளை மட்டும் இன்னும் நடுங்கிக்கொண்டுதான் இருக்கிறது..

அந்தக் கிளையை வெட்டிவிடு. எனது பொருட்களைத் திருப்பிக்கொடுத்து விடு.

ஒரு குடையின் கீழ், மழையில் நாம் இருவரும் பாதிப்பாதி நனைந்தோமே..

 

அந்த நனைதலின் உலர்ந்த பகுதியை நான் எடுத்துவந்துவிட்டேன்..

நனைதலின் ஈரமான பகுதி, எனது இதயம். அது நமது படுக்கையின் அருகே இருக்கக்கூடும்..

அதை மட்டும் தயவுசெய்து என்னிடம் திருப்பிஅனுப்பிவிடு..

நிலவின் பல்வேறு இரவுகள்.. உனது தோளில் இருக்கும் மச்சம்..

ஈரமான மருதாணியின் மணம்.. நாம் போலியாக சண்டையிட்டுக்கொண்ட கணங்கள்..

அந்தப் போலியான சத்தியங்களை நான் நினைவு படுத்த விரும்புகிறேன்..

உன்னுடன் இருக்கும் எனது அத்தனையையும் தயவுசெய்து திருப்பி அனுப்பி விடு..

எனது ஒரே ஒரு ஆசையை மட்டும் நிறைவேற்றிவிடு..

நீ அனுப்பியவைகளையெல்லாம் நான் ஆழமாகப் புதைக்கையில்..

எனது இறுதி மூச்சை நான் விட்டுவிடவேண்டும்..

 

 

எத்தனை அருமையான வரிகள்? இவையெல்லாம் ஒரு பெண் பாடுகையில் எப்படி இருக்கும்? உள்ளத்தை உருகவைத்துவிடும். அதுதான் இப்பாடலின் சிறப்பு.

குல்ஸாரின் கவிஞானத்துக்கு இவையெல்லாம் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. இன்னும் குல்ஸார் பற்றி ஏராளமாக எழுத முடியும். அவரது பாடல்களையும் கவிதைகளையும் படித்துப் பாருங்கள். அவசியம் நமது மனம் நனைவதை நம்மால் உணரமுடியும்.

(தொடரும்)  

 
  •  

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

33. இருபத்தெட்டு வருடங்களில் ஆறு படங்கள்; தளராத ஒரு இசைப்பயணம்..!

 

 

 

தமிழ்த் திரைப்படங்களில் மிகக்குறைவான பாடல்களுக்கு இசையமைத்திருந்தாலும், அந்தப் பாடல்களின் தரத்தால் இன்றும் பலரது நினைவுகளிலும் இருந்து கொண்டிருக்கும் மிகச்சிலரில் ரமேஷ் விநாயகம் முக்கியமானவர். தமிழில் ’ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’, ‘நள தமயந்தி’, ’அழகிய தீயே’, ‘ஜெர்ரி’, ‘ராமானுஜன்’ மற்றும் ‘மொசக்குட்டி’ ஆகிய படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்கிறார். இருப்பினும், இவரது பாடல்களை அவ்வப்போது நாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். எங்காவது நமது காதுகளில் இவரது பாடல்கள் ஒலிக்காமல் இருந்ததே இல்லை.

இசையைப் பொறுத்தவரையில் எப்போதோ – 1986லேயே – ரமேஷ் விநாயகத்தின் முதல் தொகுப்பு வெளியாகிவிட்டது. ப்ரதித்வனி என்ற பெயரில். கடவுட்களைப் பற்றிய பாடல்களின் தொகுப்பு. இதன்பின் இயக்குநர் மௌலியின் ‘பைலா பட்சிசு’ என்ற தெலுங்குப் படத்தில் முதல் அறிமுகம் (1989). சிறுவயதில் கிரிக்கெட்டின் மீது அதிகப் பற்றுள்ளவராகவே ரமேஷ் விநாயகம் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால் ஒரு ஆசிரியர் அந்தக் கனவுக்கு வேட்டு வைத்த பின், இசையின் மீது ஆசை உருவானது என்று சொல்லியிருக்கிறார். அவர் படித்த ஏ.எம்.ஜெயின் கல்லூரியில், நண்பர்களுக்கு மத்தியில் பாடல்களைப் பாடிப் பிரபலம் ஆகியிருக்கிறார். இந்தப் பாடல்கள் இவரது சொந்தப் பாடல்கள். ஆனால் அவைகளைத் திரைப்படப் பாடல்கள் என்று சொல்லி நம்பவும் வைத்திருக்கிறார். ஆனால் அதையே நம்பியும் இருக்க இயலாது என்பதால், தந்தையின் நண்பரின் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். ஒருநாள், அவரது மேஜையில் அமர்ந்து, ஒரு குறிப்பிட்ட இசைக்குறிப்பை எழுதிக்கொண்டிருக்கையில், பத்து நிமிடங்களுக்கும் மேலாக வந்து எதிரில் அமர்ந்து கொண்டிருந்த நபரை திடீரென்று பார்க்க நேர்கிறது. ’அப்போதுதான் இசையைப் பற்றிய தீவிரமான ஆசை மனதில் உதித்தது’ என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் ரமேஷ் விநாயகம்.

இதன்பின்னர்தான் அவரது முதல் ஆல்பமான ‘பிரதித்வனி’ நிகழ்கிறது. எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு ட்ராக் பாடும் பாடகராக இசையுலகில் அறிமுகமாகிறார். பிரதித்வனியில் பத்துப் பாடல்களும் எஸ்.பி. பாலசுப்ரமணியமே பாடுகிறார். அதன்பின் அவருடன் ரமேஷ் விநாயகம் மொத்தமாக நான்கு ஆல்பங்கள் வெளியிட்டாயிற்று. எல்லாமே தெய்வீகப் பாடல்கள். கூடவே, பல தொலைக்காட்சி சீரியல்களுக்கும் க்ரேஸி மோகனுடன் வேலை செய்திருக்கிறார்.

அதன்பின்புதான் இயக்குநர் மௌலியின் தெலுங்குப் படத்தில் முதன்முதலில் அறிமுகம். பின்னர் 1995ல் ‘ஆண்ட்டி’ என்ற மௌலியின் படம். அதில் இருந்து ‘ஆண்ட்டி ரமேஷ்’ என்று மாறுகிறார்.

அதன்பின்னர் பலரிடம் வாய்ப்பு தேடியிருக்கிறார். ஆனால் பலனில்லை. ஒரு நாள் க்ரேஸி க்ரியேஷன்ஸைச் சேர்ந்த காந்தன் (பிந்நாட்களில் ஜெர்ரி படம் இயக்கியவர். ஜெர்ரிக்கும் இசை ரமேஷ் விநாயகமே) சொல்லி, இயக்குநர் வஸந்த்தின் அலுவலகம் சென்றிருக்கிறார். அங்கே தினமும் ஒரு ட்யூனை கம்போஸ் செய்து, வீடு திரும்புவார். இப்படி ஒரு மாதம் சென்றபின்னர், ஒரு நாள் வஸந்த் இவரை அழைத்து, ஐந்து இசையமைப்பாளர்களைத் தனது அடுத்த படத்தில் அறிமுகம் செய்யப்போவதாகச் சொல்ல, அப்படித்தான் ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே’ படத்தில் ‘தொட்டுத் தொட்டுத் தொட்டுச் செல்லும் ஐஸ் காற்றிலே’ பாடலுக்கு இசையமைக்கும் வாய்ப்பு ரமேஷ் விநாயகத்துக்கு வருகிறது. அந்தப் பாடல் மிகவும் பிரபலமும் அடைகிறது. அந்தப் பாடலை ரமேஷே பாடியிருந்தார்.

 

 

இதன்பின்னர் ‘யூனிவர்ஸிடி’ திரைப்படத்துக்கு இசையமைக்கிறார் ரமேஷ் விநாயகம். ஜீவன் அறிமுகமான படம். அந்தப் படத்தின் ‘நெஞ்சே துள்ளிப்போ’ பாடல் அப்போது மிகவும் பிரபலம். பாடியிருந்தது கார்த்திக். படம் ஓடாவிட்டாலும், பாடல்கள் பிரபலம் அடைந்ததால் ரமேஷ் விநாயகத்தின் பெயர் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. உடனடியாக, கமல்ஹாஸனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘நள தமயந்தி’ திரைப்படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு தேடி வருகிறது. இன்றுவரை நள தமயந்தியின் பாடல்கள் பிரபலம். அந்தப் படத்தின் அத்தனை பாடல்களும் நன்றாக இருந்தாலும், குறிப்பாக இரண்டு பாடல்கள் பற்றி எழுதவேண்டும். முதல் பாடல் – ‘என்ன இது என்ன இது என்னைக் கொல்வது’. இப்போதுவரை பல எஃப்.எம். சேனல்களில் இப்பாடலை நீங்கள் கேட்க முடியும். படம் வந்ததில் இருந்து இன்று வரை இந்தப் பாடலை அடிக்கடி கேட்கும் பலரையும் எனக்குத் தெரியும். எனக்கு மிகப்பிடித்தமான பாடல்களில் இதுவும் ஒன்று. ரமேஷ் விநாயகமே பாடியிருக்கும் பாடல். உடன் சேர்ந்து பாடியிருப்பவர் சின்மயி. தமிழில் வெளியான அற்புதமான மெலடிக்களில் இதுவும் ஒன்று என்பது பாடலைக் கேட்டதும் தெரிந்துவிடும். இந்தப் பாடலில் வரும் இசைக்கருவிகள், பாடலில் ஆங்காங்கே இழையும் மௌனம்,  இசைக்கருவிகளின் இசையைத் தழுவிச்செல்லும் கிறங்கிய குரல்கள் என்று முதலில் இருந்து இறுதி வரையிலும் மிக இனிமையான இசையை வழங்கும் பாடல் இது. கேட்டதும் பிடிக்கும் தன்மை உடையது.

 

 

 
  •  

 

அடுத்த பாடல், ‘Stranded on the Streets’ என்ற ஆங்கிலப் பாடல். ‘கல்யாண சமையல் சாதம்’ பாடலின் ட்யூனில் அமைந்த பாடல் இது. பாடியிருப்பவர் கமல்ஹாஸன். முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் கமல்ஹாஸனாலேயே எழுதப்பட்ட பாடல். ஒரு பாடகராகக் கமல்ஹாஸன் பற்றி ஒரு விரிவான கட்டுரை எழுதவேண்டும் என்ற எண்ணம் உடையவன் நான். அவரது குரல் மிகவும் வித்தியாசமானது. ஓரளவு இளையராஜாவின் குரலோடு ஒத்தது. இயல்பாகவே நன்றாக இருந்தாலும், வேண்டுமென்றே அந்தக் குரலை மாற்றி மாற்றிக் கஷ்டப்படுத்துவதால் ஒருசில பாடல்கள் மோசமாக மாறிவிட்டாலும், இந்தக் குறிப்பிட்ட பாடலில் அற்புதமாக ஆங்கிலத்தில் பாடியிருப்பார் கமல். பாடல் ஹிட் ஆகவில்லை என்றாலும், கேட்டுப் பார்த்தால் உங்களுக்கும் பிடிக்கக்கூடும். படத்தில் இதன் தமிழ் வடிவமே உபயோகப்படுத்தப்பட்டது.

 

 

நள தமயந்தியின் இசை ஹிட் ஆனதுமே, ரமேஷ் விநாயகம் இசையமைத்தது ராதாமோகனின் ‘அழகிய தீயே’. இந்தப் படத்தின் ‘விழிகளின் அருகினில் வானம்’ பாடல் காதலர்களின் தேசிய கீதமாகவே இருந்தது. இப்போதும் எண்ணற்ற முறைகள் அவ்வப்போது ஒலிபரப்பப்படும் பாடல் இது. தமிழில் மறக்கமுடியாத இன்னொரு பாடல். இதையும் ரமேஷ் விநாயகமே பாடியிருக்கிறார். அதன்பின் காந்தன் இயக்கத்தில் ‘ஜெர்ரி’ படம் ரமேஷ் விநாயகத்துக்கு அமைகிறது. இப்படத்தின் ‘என் சுவாசத்தில் காதலின் வாசம்’ பாடல் ஹிட் ஆகிறது. மது பாலகிருஷ்ணன் மற்றும் கல்யாணி பாடிய பாடல் இது.

 

 

இதன் பின்னர் சில வருடங்கள் கழித்து, ‘ராமாநுஜன்’ படம் ரமேஷ் விநாயகத்துக்கு அமைகிறது. அந்தப் படத்தின் பாடல்கள் பெரிய கவனம் எதுவும் பெறவில்லை என்றாலும், அத்தனை பாடல்களும் இனிமையானவையே. அவசியம் அவை பெரிதும் மக்களிடம் சேர்ந்திருக்கவேண்டும். ஆனால் படம் துளிக்கூட ஓடாமல் போனதால் அவரது பாடல்கள் பிரபலம் அடையவில்லை. உதாரணமாக, ரமேஷ் விநாயகமும் வினயாவும் பாடியிருக்கும் ‘துளித்துளியாய்.. பனித்துளியாய்’ பாடலைக் கேட்டுப் பாருங்கள். ராமாநுஜன் பாடல்களில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் அத்தனை இசைக்கருவிகளுமே அக்காலத்தியவை. இந்தப் பாடலில் அவை கொடுக்கும் அனுபவம், கேட்டுப் பார்த்தால் தெரியும். இதே பாடலை, கௌஷிகி சக்ரவர்த்தியுடனும் ரமேஷ் விநாயகம் பாடியிருக்கிறார். அதேபோல், உன்னிகிருஷ்ணன் நீண்ட இடைவெளிக்குப் பின் பாடியிருக்கும் ‘விண்கடந்த ஜோதியாய்’ என்ற பாடலின் பின்னணி இசையைக் கவனித்துப் பாருங்கள். இதே போல் சில இசைக்குறிப்புகளும் படத்தின் இசையில் உண்டு. என்னைப் பொறுத்தவரையில் ராமாநுஜன் ஒரு குறிப்பிடத்தகுந்த ஆல்பம்தான். அவசியம் பிரபலம் அடைந்திருக்கவேண்டிய உழைப்பு இதில் உண்டு.

 

 

அறிமுகமாகிக் கிட்டத்தட்ட இருபத்தெட்டு ஆண்டுகள் ஆனாலும் ரமேஷ் விநாயகத்துக்கு உரிய புகழ் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு. ஆனால், துளிக்கூட இளைப்பாறிவிடாமல் இன்னும் அதிகமான முயற்சிகளை அவர் செய்துகொண்டேதான் இருக்கிறார். அந்த உழைப்புக்கான பலன் அவசியம் அவருக்குக் கிடைக்கும் என்பதிலும் எனக்குச் சந்தேகம் இல்லவே இல்லை.

 

 

(தொடரும்)

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.